Tag: சேசாத்திரி ஸ்ரீதரன்

  • முதலாம் பரமேஸ்வர வர்மனின் கூரம் செப்பேடு விளக்கம்

    முதலாம் பரமேஸ்வர வர்மனின் கூரம் செப்பேடு விளக்கம்

    சேசாத்திரி ஸ்ரீதரன்

    கூரம் கிராமத்து தர்ம கர்த்தாவிடம் இருந்து Hultzsch என்னும் தலைமை தொல்லெழுத்தாளரால் இந்த மெல்லிய செப்பேட்டு தொகுதி பெறப்பட்டது. கூரம் ஆகிய இந்த கிராமம் காஞ்சிபுரம் அரக்கோணம் சாலையில் காஞ்சிபுரத்தில் இருந்து 11.4 கிலோ மீட்டர் தொலைவில் திருமால்பூருக்கு முன்னதாக அமைந்துள்ளது. மொத்தம் 95 வரிகள் கொண்ட  7 மெல்லிய செப்பேடுகளின் 14 பக்கங்களில்  57 முதல் 88 ஆம் வரிகள் வரை தமிழில் உள்ள இவை கி.பி. 679 இல் பல்லவ வேந்தன் முதலாம் பரமேஸ்வர வர்மன் எடுப்பித்த கோவில் விச்சா வினீத பல்லவ பரமேஸ்வர கிருஹம் பற்றி விவரிக்கிறது. இதன் முதல் 4 1/2 பக்கங்கள் சமஸ்கிருத மொழியில் கிரந்த எழுத்தில் எழுதப்பட்டுள்ளன. இதில் பல்லவர் முன்னோர்கள் தொடக்கம் கூறப்படுகிறது. பரமேஸ்வர வர்மனின் பாட்டன் முதலாம் நரசிம்ம வர்மன் பெற்ற வெற்றிகளை 12 ஆம் வரி விவரிக்கிறது. 17 ஆம் வரி இவன் தந்தை இரண்டாம் மகேந்திர வர்மன் பற்றி கூறுகிறது. அதே 17 ஆம் வரி தான் சாதிச் சட்டங்கள் அதன்  நடைமுறைகளை பல்லவன் முதலாம் பரமேஸ்வரன் வழக்காற்று படுத்தினான் என்கிறது. தென்னிந்திய கல்வெட்டுகள் மடலம் 7, எண்  865 இல் செக்கில் எண்ணெய் பிழிவோர் மேற்கொள்ள வேண்டிய வாழ்க்கை நடைமுறை என்ன என்பதை காஞ்சி மாநகர் செப்பேட்டின் படி  முடிவு எடுத்த சித்திரமேழி சாசனம் என திருக்கோவிலூர் வட்டம் கீழூர் வீரட்டானேசுவரர் திருக்கோவில் தென் சுவர் கல்வெட்டு ஒன்று குறிப்பது இந்த செய்தியை  தானோ? ஆனால் பல்லவர் செய்த சட்டத்தை சோழர் மீது ஏற்றி சோழரை தூற்றுகின்றனரே திராவிடத்தார்!! தலித்தியர் இந்து மதம், பிராமணர் தான் சாதி உண்டாகக் காரணம் என்கின்றனரே!! அந்த காஞ்சிநகர் செப்பேடும் கிடைத்தால் பொய் உரைகள் ஒழித்து வரலாறு திருத்தி எழுதப்படும். இதன் 19 ஆம் வரி  முதலாம் பரமேஸ்வர வர்மன் பற்றி உரைக்கிறது. 23 ஆம் வரி அவன் பாதாமி சாளுக்கியன் முதலாம் விக்கிரமாதித்யனையும் அவன் படைகளையும் புறமுதுகிட்டு ஓடச் செய்தான் என்றும் விக்கிரமாதித்தன் கிழிந்த ஆடையோடு நின்றான் என்கிறது. இதன் 47 ஆம் வரியில் இந்த வெற்றியின் நினைவாகவோ என்னவோ  நால் வேதம் கற்ற 108 குடும்பங்களை உடைய  கிராமமாம் கூரத்து இறைவன் பினாகபாணிக்கு (சிவன்) இவன் செய்த நிவந்தம் பற்றி குறிக்கப்படுகிறது. இதன் நிறைவேற்று ஆணையாளர்  உத்தரகாரணிகையை சேர்ந்த மஹாசேன தத்தர்  ஆவர் என்கிறது 49 ஆவது வரி. இனி செப்பேட்டின் தமிழ் பகுதியை மட்டும் காண்போம். 

    “ஊற்றுக்காட்டுக் கோட்டத்து நீர்வேளூர் நாட்டுக் கூரமும் ஞம்மனம் பாக்கமும் – – – (ஞங்கணத)  – – ட  விச்சா விநீதப் பல்லவரசன் விலைக்காணங்  கெயிக் கொடுத்து _ _ சிராவணே செய்து ஆயிரத்திரு நூற்றுக் குழிப்படியால் விற்றுக் கொண்ட நிலம் தளி எடுப்பதற்கு. ஓடு சுடக் கொண்ட நிலம் தலேப்பாடகத்துள் சூளேமேட்டுப் பட்டியும் ஊருள் மண்டகம் எடுத்த நிலத்தோடுங் கூட அயிந்தேகால் பட்டி நிலமும் விற்றுக்கொண்டு விச்சா விநீத பல்லவ பரமேச்சுரகரம் எடுத்து, ஏரி தோண்டி, இத்தளி  வழிபாடு செயிவார்க்கு  இருக்கும் மநேயும் மநேப்படப்பும் வகுத்து இதநுள் மிக்க நிலம் ஒழுக்கவிக்கு விளே நிலமாகவும்  இன் நிலத்துக்கு கீழ்பாலெல்லை மூதுகாட்டு வழியின் மேற்கும். தென் பாலெல்லை ஊர் புகு வழியின் வடக்கும். மேல் பாலெல்லை  ஊர் புகு வழி நின்றும் வடக்கு நோக்கி நாட்டுக்காலுக்கே போன வழியின் கிழக்கும். வட பாலெல்லை நாட்டுக்காலிந் தெற்கும். இன் நான்கெல்லை அகத்தும் தளியும் எரியும் வழிபாடு செயிவார்க்கு மநையும்  மநைப் படப்புன் நீக்கி மிக்க நிலமும் சூளைமேட்டுப்  பட்டியும் ஒழுக்கவிக்கு விளை நிலமாக கொடுத்தது . இத் தளிக்கு வேண்டுந்  தேவகரும நவகருமஞ் செயிவதற்கும்  இருபதின்மர் சதுர்ப்பேதிகளுக்குப் பிரமதேயங் கொடுப்பதற்கும் மணயிற் கோட்டத்துப் பன்மா நாட்டுப் பரமேச்சுர மங்கலத்துள் அகப்பட்ட வளேயில் சுற்று நிலம்  அத்தநையும் இருபத்தெயிந்து பங்காயி இதனுள் மூன்று  பங்கும் கூரத்துத் தளிக்கு தேவகரும நவகருமஞ்  செய்வதாகவும் மண்டகத்துக்கு தண்ணீருக்குந்  தீக்கும் ஒரு பங்காகவும், இம்மண்டகத்தே பாரதம் வாசிப்பதற்கு ஒரு பங்காகவும் நின்ற இருபது பங்கும் இருபதின்மர் சதுர்ப் பேதிகளுக்கு பிரமதேயமாக கொடுத்து. இவ்வூர் மநையும் மநைப் படப்பும்  ஊறாள்ச்சியும் செக்கும் தறியும் கூலமும் தரமும் கத்திக் காணமும் மற்றும் பொதுவிநால்லுள்ள தெல்லாம் இப்பங்கு இருபத்தைன்தின்  வழியாலே பங்கிட்டுண்பார்ராகவும்.  இவ்வூர் பரமேச்சுர தடாகத்துக்கு பாலாற்று நின்றும் தோண்டின பெரும்பிடுகு காலிந் புழுதிபாடும் நீர்ரீந்த வழியாலே தலேவாயும் தலேப்பேழையும்  ஊற்றுக் காலும் தோண்டின நிலமெல்லாம் பரமேசுவர மங்கலத்து நிலமாக. இக்காலுள் குற்றேத்த _ _ _ மையும் நாடாழ்ச்சியுன்  நாட்டுப்பபண்ணிக்கெயும் _ _  தானங் கொடுத்த மூன்று பங்குநுளும்  ஒன்றரை பங்கு _ _ நார்  அனந்த சிவ ஆசாரியர் மக்கள் மக்கள்  மருமக்கள் _ _ _ புறம் கொண்டு வழிபாடு செயிது பலி போசன _ _ ம் கொண்டு புல்ல சருமர் மக்கள் மக்கள் வகருமமும் இவ்விருவர் மக்கள் மக்கள் _ _ _ தேவதமாகா நின்ற ஸப்பபட்டார கருங்கா _ _ க்காத்து கொடுக்க.”     

    வேதனை விசாரம் > விச்சா விநீத – கவலை களையும்; Vi-nita, mfn. led or taken away, removed Sec . ; stretched, extended (Moniter williams dictionary), சிராவண  – பெருமைப்படுத்தியது, காணம் – நாணயம்; குழி – 877; தலைபாடகம் – வேளாண் நிலம்; மூதுகாடு  – பிணக்காடு, சாக்காடு; அகரம் – பிராமண குடியிருப்பு, அக்ரஹாரம்; வழிபாடு – பூசனை; படப்பு – வீட்டுத்தோட்டம், கொல்லைப் புறம்; ஒழுக்கவி – படையல் சோற்று உணவு; நவகரும – புதுப்பித்தல்; வளே – சூழப்பட்ட இடம்; தீ – தீவட்டி;  ஊரால்சி – ஊராட்சி வரி; தரம் – நிலவரி; கத்தி – வெட்டு கத்திகள் வரி ; ஈந்த – பங்கிட்டு; தலைவாய் – வாய்க்கால் தொடங்கும் நிலம்; தலை பேழை – வாய்க்கால் முடியும் கடைமடை; ஊற்றுக்கால் – வயல் முதலியவைகளில் நீர்வடியும் கால்வாய், water channel in fields;          

    விளக்கம்: ஊற்றுக்காட்டுக்  கோட்டத்தில் அடங்கிய நீர்வேளூர் நாட்டின் கூரமும் நம்மனம் பாக்கமும் என்பதோடு சிதைந்துள்ளது. இது அந்நாளைய கூரம் கிராமத்தின் இருப்பிடத்தை குறிக்கிறது. கவலைகளையும் பல்லவ அரசன் விலைப் பணத்தை கையில் கொடுத்து ஆயிரத்து இருநூறு குழி நிலம் வாங்கிக் கொண்டார். இது கோவில் (தளி) எழுப்புவதற்கு. ஓடு, செங்கல் சுடுவதற்கு வாங்கிய வேளாண் நிலம் சூளைமேட்டுப் பட்டிக்காகவும் ஊரில் மண்டபம் கட்டுவிக்க வாங்கிய நிலம் என்று ஐந்தேகால் பட்டி நிலம் விலைக்கு வாங்கப்பட்டது. விற்றவர் யார் என்ற குறிப்பு இல்லை. இந்நிலத்தை கொண்டு விச்சா வினீத பல்லவ பரமேஸ்வர அக்ரஹாரம் அமைக்க ஏரி தோண்டுவித்து, பூசனை செய் அர்ச்சகர்க்கு வீடும் வீட்டுக் கொல்லைப்புறமும் வகுத்து ஒதுக்கி பின் இதில் எஞ்சிய நிலத்தை படையல் சோற்றுக்கு வேண்டிய கூலங்களை விளைவிக்கும் நிலமாக விடப்பட்டது. இந்த நிலத்திற்கு கிழக்கு எல்லை சுடுகாட்டிற்கு மேற்காகவும் தென்பகுதி எல்லை ஊருள் நுழையும் வழிக்கு வடக்கிலும் மேற்குபகுதி எல்லை ஊர் புகும் வழியில் இருந்து வடக்காக ஊர் வாய்க்காலுக்கு போகும் வழிக்கு கிழக்கிலும் வடபகுதி எல்லை ஊர் வாய்க்காலுக்கு தெற்கிலும் ஆக இந்த நான்கு எல்லைக்கு உள்ளே அடங்கிய நிலத்தில் கோவில், ஏரி, அர்ச்சகர்க்கு வீடும் வீட்டுக் கொல்லையும் போக எஞ்சிய நிலமும் தற்காலிகமாக சூளை மேடாக (furnace) உள்ள நிலமும் வேலை முடிந்த பின் படையல் சோற்று கூலத்தை விளைக்கும் நிலமாக்குக என்று கொடுக்கப்பட்டது. 

    இக்கோவிலுக்கு தேவையான தெய்வ காரியம், புதுப்பித்தல் வினைகளுக்கும் நால் வேதம் கற்ற இருபது பிராமணருக்கு பிரமதேய நிலம் கொடுப்பதற்கு கூரம் அருகில் 4 கி.மீ வடகிழக்கில் இற்றை மணவூரான மணவில் கோட்டத்தில் அடங்கிய பன்மா நாட்டின் பரமேஸ்வர மங்கலத்தின் ஊர் வட்டத்தில் சுற்றி இருந்த அத்தனை நிலத்தையும் இருபத்தைந்து பாகமாக பிரித்து அதில் மூன்று பங்கை கூரத்தின் தெய்வ கருமம், புதுப்பித்தல் வினை செய்வதற்கும் மண்டபத்தில் தண்ணீர் இடவும், தீவட்டி கொளுத்தி வைக்கவும் ஒரு பங்காகவும் அதில் மகாபாரத சொற்பொழிவு நடத்த ஒரு பங்கும் என்று ஐந்து பங்கு ஒதுக்கி எஞ்சிய இருபது பங்கை நால்வேதம் கற்ற பிராமணர் இருபது பேருக்கு கொடுக்கப்பட்டது. பரமேஸ்வர மங்கல வீடு, வீட்டுக் கொல்லை வரி, ஊராட்சி வரி, செக்கு வரி, தறி வரி, கூல வரி, செய்யப்படும் கத்திகள் வரி, நிலவரி, மற்றபடி பொதுவில் உள்ள எல்லா வகை வரி வருவாய்களும் இந்த இருபத்தைந்து பங்கு பிரிக்கப்பட்ட விதத்திலேயே பங்கிட்டு (சம்பளமாக) உண்ணக் கடவது. இந்த ஊரின் பரமேசுவர ஏரிக்கு பாலாற்றில் இருந்து தோண்டி கொணரப்பட்ட பெரும்பிடுகு என்னும் கால்வாயின் புழுதி புரளும் நீர் பங்கிட்டு முறையில் வாய்க்கால் தொடக்கம் முதல் வாய்க்கால் பின்னடையும் வரை நீர்வடியும் வயல் கால் தோண்டிய நிலம் எல்லாம் இனி பரமேஸ்வர மங்கலத்து நிலமாக அறியப்படட்டும். தானம் கொடுத்த மூன்று பங்குள் ஒன்றரை பங்கு அனந்த சிவாசாரியார் பிள்ளை பேரர் வழியினரும் மருமக்கள் பேரர் வழியினரும் அனுபவித்து வரட்டும். இன்னொரு ஒன்றரை பங்கு பூசனை செய்து பலி சோறு உரிமையும் கொண்டு புல்ல சருமர் பிள்ளை பேரர் வழியினரும் மருமக்கள் பேரர் வழியினரும் அனுபவித்து வரட்டும். இதன்மேல் வரும் எழுத்து வரிகள் அதிகம் சிதைந்து விட்டன பொருள் அறிய முடியவில்லை.      

    பின் குறிப்பு: தென்னிந்திய கல்வெட்டுகள் தொகுதி ஒன்றில் வித்யா வினீத என தவறாக கொள்ளப்பட்டுள்ளது. இதற்கு கல்வியை களைந்த என்ற தவறான பொருள் விளைந்துவிடும். எனவே இது பல்லவ வேந்தன் பரமேஸ்வர வர்மனை புகழ்ந்துரைக்கும் ஒரு பட்டம் ஆகும். மேலும் இதை பரமேஸ்வர வர்மனுக்கு அடங்கிய சிற்றரசனின் பெயர் என்றும் பிழைபட விளக்கப்பட்டுள்ளது. அப்படி யாரும் இல்லை, அது நேரடியாக பல்லவ வேந்தனைத் தான் குறிக்கிறது என்பது மீண்டும் இதே சொற் பயன்பாட்டில் பரமேஸ்வரனின் பெயர் இடம் பெறுவதில் இருந்து தெரிந்து கொள்ள முடிகிறது. இவ்வூர் ஏற்கனவே இருந்துள்ளது, அதில் 108 பிராமண குடும்பங்கள் இருந்துள்ளன. எனவே சிலர் கருதுவது போல புதிதாக நகரம் ஏதும் இங்கு அமைக்கப்படவில்லை. மேலும் தளி என்று கோவில் கட்டுதலையும் ஓடு சுடும் சூளைமேடும் குறிக்கப்படுவதில் இருந்து இது மங்களூர், கேரள பாணியில் ஓடு வேய்ந்த கோவிலாக இருக்க வேண்டும் போல உணர முடிகிறது. எனவே இது பாறையால் கட்டப்படும் கற்றளி அல்ல. அப்படி குறிக்கப்படவும் இல்லை. சிலர் இதை தமிழ்நாட்டின் முதல் கற்றளி என்று தவறாக குறித்துள்ளனர் என்பது கவனத்தில் கொள்ளத் தக்கது. இக்கோவிலில் காணப்படும் தூண் கல்வெட்டுகள் மூன்றாம் நந்திவர்மன் காலம் முதல் தோன்றுவதால் இக்கோவில் அவன் காலத்தை ஒட்டி கற்றளியாக ஆக்கப் பட்டிருக்கலாம். காஞ்சி கைலாசநாதர் கோவில், மாமல்லபுரம் கடற்கரை கோவில்கள் இக்கோவிலுக்கு பின்பு தான் கட்டப்பட்டுள்ளன எனும் போது கூரம் பரமேஸ்வரன் கோவில் ஒரு செங்கல், சுதைக்  கோவிலாகவே கட்டப்பட்டிருக்க வேண்டும் என்று கொள்வதே சரி.

    பண்டு ஒரு பொருளை விலைக்கு கொடுப்பதற்கும் விலை, விற்று என்ற சொல் தான் பயன்பட்டுள்ளது வாங்குவதற்கும் அதே சொல் தான் பயன்பட்டுள்ளது என்று அறிக. செப்பேட்டில் கெயி, தலெ, வளே ஆகிய பேச்சு வழக்குச் சொற்கள் கருநாடக தாக்கம் பெற்றிருக்குமோ?  தக்கோலம் அருகில் உருவாகும் கூவம் பண்டு பாலாறு எனப்பட்டது. அதில் இருந்து பெரும்பிடுகு கால்வாய் 5 கிலோ மீட்டர் நீளத்திற்கு மேல் நீண்டால் தான் இந்த பரமேஸ்வர மங்கலத்திற்கு நீர் கொண்டு வர முடியும் என்று உணர்க. கூரத்தில் நீர் பாசன வசதி இல்லாததால் இந்த பிராமணருக்கு குறுக்கு வழியாக வடகிழக்கில் 4 கி.மீ தொலைவில் இருந்த பரமேஸ்வர மங்கலத்தில் விளைநிலங்கள் பிரமதேயமாக கொடுக்கப்பட்டனவோ? அல்லது ஏற்கனவே கூரத்தில் 108 பிராமண குடும்பங்கள் இருப்பதால் அங்கே ஒதுக்கீடு கொடுக்க வேண்டும் என்றால் அவர்களை வேறு இடத்தில் குடியமர்த்த நேரிடும் என்பதாலோ இங்கு கொடுக்கப்பட்டது? இந்த செப்பேடு பல்லவர் வரலாற்று பேழையாக மட்டுமல்லாமல் பரமேஸ்வர வர்மன் வெற்றிச் சிறப்பையும் கூறுவதாக இருப்பதோடு பல்லவ வேந்தர் கோவில் மற்றும் பிராமணரை  போற்றியதற்கும் சான்றாக உள்ளது.

    பார்வை நூல்: SII VOL I, NO 151, pg 144 – 154  

    Share
  • தெய்வம் நிறைவேற்றிய வேண்டுதல் பற்றிய கல்வெட்டு

    தெய்வம் நிறைவேற்றிய வேண்டுதல் பற்றிய கல்வெட்டு

    சேசாத்திரி ஸ்ரீதரன்

    உலகில் கடவுள் இல்லவே இல்லை என்போர் சிறு தொகையராகவே இருந்து வந்துள்ளனர். ஆன்மீக பூமியான தமிழகத்தில் தோன்றிய ஆசீவக முதன்மை ஆசான்களான மகங்கலி புத்திரர் என்ற மற்கலி கோசாலரும் நந்த வாச்சா என்ற மாங்குளக் கல்வெட்டு கணி நந்தாசிரியரும் கிசசாங்கிசா என்னும் வெண் காசிபரும் நாத்திக மதத்தை பரப்பினர். இவர்களின் சமகாலத்தவரான மகாவீரர் இன்னொரு நாத்திக மதமான சமணத்தை வடநாட்டில் வழிநடத்தினார். புத்தர் கடவுள் இருப்பை பேசவும் இல்லை மறுக்கவும் இல்லை. இப்படி இந்தியாவில் 2,500 ஆண்டுகள் முன் தோன்றிய இந்த நாத்திக மதங்கள் அடுத்த ஆயிரம் ஆண்டுகளில் அசோகா வேந்தனின் வெறுப்பு, உள்முரணான (intra contradiction) பிரிவுகள் ஆகியவற்றால் அழிந்து குலைந்து போயின.

    இந்த நாத்திக மதங்கள் அழிந்த காலத்தில் தான் நாதர் வழிபாட்டுநெறி (Natha cult) என்ற சித்தர் மதம் மச்சேந்திர நாதரால் வட இந்தியாவில் தோன்றி இந்தியாவெங்கும் பரவலுற்றது. இதே காலகட்டத்தில் தோன்றிய வியாசர் 18 புராணங்களை  புண்ணியம், பாவம் ஆகியவற்றின் அடிப்படையில் எழுதினார், “அஷ்டா தஸ புராணேஷு வியாஸஸ்ய வசநத்வயம் பரோபகாராய புண்யாய பாபாய பர பீடனம்” இதாவது, பிறர்க்கு நன்மை செய்வது புண்ணியம், பாவம் என்பது பிறர்க்கு தீங்கு இழைப்பது ஆகும் என்பதே. நல்வினைக்கு புண்ணியம் என்றும் தீவினைக்கு பாவம் என்றும் இவர் பெயர் வைத்தார். இவரது நான்கு கைகள் கொண்ட  புராண நாயகர்களே தமிழகத்தில் தெய்வங்களாக ஏற்கபட்டு சிவ, விண்ணவ மதங்களாக இந்தியாவெங்கும் பரவக் காரணமானது. இதற்கு ஆழ்வார்கள், நாயன்மார்கள் இயக்கமே முதன்மைக் காரணம்  ஆகும். இது 7- 8 ஆம் நூற்றாண்டில் நிகழ்ந்தது. இந்த புராண மதங்களின் வளர்ச்சிக்கு பல்லவர்கள் பெரும்பங்கு ஆற்றியுள்ளனர். குறிப்பாக, தெய்வச் சிலைகளை செதுக்கிப் பதித்து கோவில் எழுப்பினர், நிவந்தங்கள் பல தந்து பிரமதேயங்களை உருவாக்கி கோவில் இயக்கத்தை போற்றி வளர்த்தனர்.

    இந்த கோவில், உருவ வழிபாட்டை ஏளனம் செய்து தான் சிவவாக்கியர் பாடல் 520 இல் ஓக சித்தர் சிவவாக்கியர் “நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்”  என்று பாடினார். இவர் உருவ வழிபாட்டை எதிர்த்த தந்திர யோகி ஆவார். வரையறை இல்லாக் கடவுள் வரையறை உள்ள கல்லிலோ செப்புச் சிலையிலோ இல்லை எனவே பூசைகள் பயன்தரா என்றார் அவர். இறைவன் உன் எண்ணமாவே உள்ளான் என்பதே அவர் கூறவரும் செய்தி. எனவே கடவுளை சிந்தையால் ஏற்க வேண்டுமே அன்றி பூசனையால் அல்ல. இது பெரிய கடவுள் (GOD) எனப்படும் நிற்குண பிரம்மத்தை ஒட்டி வந்த கருத்து. நிற்குணம் என்பது தன்னையன்றி இன்னொரு இரண்டாவது பொருளை உணராதது என்பதால் தான் தந்திர யோகிகள் கடவுள் ஒன்று தான் இரண்டல்ல என்றனர்.  ஆனால் இந்தியாவில் பண்டுதொட்டே மக்கள் இயற்கை உள்ளிட்ட பல தெய்வங்களை வணங்குபவராக உள்ளனர். அவை ஒவ்வொன்றும் குணத்தால், ஆற்றலால் ஒன்றற்கொன்று மாறுபட்டவை. நிற்குண பிரம்மம் இரண்டாவது ஒரு பொருளை உணராததால் அது எந்த வேண்டுதலுக்கும் செவிமடுப்பதில்லை என்பதே உண்மை. அதனாலேயே அதை நன்மை, தீமை எதற்கும் எதிர்வினை ஆற்றாத அனைத்திற்கும் ஒரு காணும் பொருளாக (witnessing entity) உள்ளதாக யோகிகள் கருதுகின்றனர். சரி, கல் கடவுள் ஆகாது, உருவம் கடவுள் ஆகாது என்றால் மக்கள் ஏன் பன்னெடுங்காலம் தொட்டே இன்றளவும்  கற்கடவுள்களை வணங்குகின்றனர்? மக்கள் தம் பலகுறை தீர வேண்டிக் கொண்டு அதற்காக பல நேர்த்திக் கடன்களை வேண்டுதல் நிறைவேறிய பின் செலுத்துவது இன்று மட்டுமல்ல பண்டைக்கால  கல்வெட்டிலும் காணப்படுகிறது. நோயுற்றும் போரில் காயமுற்றும் உடல் நன்றாக வேண்டி வேந்தர், மன்னர், அரையர், படைத்தலைவர் உள்ளிட்ட பலர் கோவில்களுக்கு நிவந்தங்கள் அளித்த செய்தி பல கல்வெட்டுகளில் பதிவாகி உள்ளன. ஆனால் நோய் தீர்ந்ததா என்ற குறிப்பு மட்டும் அவற்றில் இல்லை.

    நட்ட கல் பேசாது, செயலாற்றாது என்றால் மக்கள் வேண்டுதலை உண்மையில் நிறைவேற்றுவது யார் என்ற அடுத்த கேள்வி நம்முள் எழும் அல்லவா? அப்படியானால் அந்த வேண்டுதல் யாரால் நிறைவேறுகிறது என்பதை பற்றித் தெளிவோம் இனி. நிற்குணம் என்ற பெரிய கடவுள் (GOD) போல் இல்லாமல் சகுணப் பிரம்மம் என்ற பல சிறிய தெய்வங்கள் (gods) உள்ளன. GOD, god (demi god) இரண்டுக்கும் வேறுபாடு உண்டு. யோக தியானப்  பயிற்சியால் உயரிய சித்துகளை அடைந்தவர் சப்தரிஷி எனப்படுகின்றனர். கலாவதாரம், கண்டாவதாரம், அம்ஸாவதாரம் என  இப்படி  சப்தரிஷிகளில் 16 படிநிலைகள் உள்ளன. எல்லோரும் 16 படிநிலைகளை ஒரே பிறவியில் எய்திவிட முடியாது. இந்த சப்தரிஷி நிலையை எய்தியவர் இறந்த பின்பு மோட்சம் அடையாமல் ஆவி (luminous body) ஆகிவிடுகிறார். ஆய்+வி= ஆவி, தமிழில் ஆய் என்றால் ஒளி. எனவே, மென்மேலும் ஆன்மீக முன்னேற்றம் அடையவதற்காக வேண்டி இந்த சித்தர் ஆவிகள்தாம் மக்களுக்கு வேண்டிய தொண்டுகளைச் செய்து ஆன்மீக முன்னேற்றம் அடைய முயல்கின்றன. இதற்காக மக்கள் கூடிவழிபடும் கோவில் இடங்களை தம் வயப்படுத்தி அருவமாக மக்களுக்கு அருள்புரிவதால் தான் மக்கள் வேண்டுதல் நிறைவேறுகின்றது, இன்னல் தீருகின்றது. உருவமுள்ள தெய்வம், உருவமில்லாத கடவுள், நடுகல் சிலை என இப்படி எப்பேர்பட்ட தெய்வத்தை வேண்டி வணங்கினாலும் அதை இந்த சித்தர் ஆவிகள் தாம் நிறைவேற்றுகின்றன. இவ்வாறு செய்வதால் அந்த ஆவிகளுக்கு அடுத்தடுத்த சப்தரிஷி நிலை கிட்டுகிறது. இது மோட்சம் என்ற வீடுபேறு கிட்டும்  வரை அல்லது அடுத்த பிறவி கிட்டும் வரை நடக்கிறது. மோட்சம் என்பது நிற்குண பிரம்மத்தில் ஒன்று கலப்பது ஆகும். மறுபிறவி எடுக்க முடியாமலும் மோட்சம் எய்த முடியாமலும் உள்ள இந்த சகுண பிரம்ம நிலை தான் முக்திநிலை எனப்படுகிறது. ஆக இப்படியும் இல்லாமல் அப்படியும் இல்லாமல் உள்ள இந்த அந்தரமான நிலை சித்தர் ஆவிகளுக்கு ஒரு துன்ப நிலை ஆகும். எனவே, இந்த ஆன்மீக முன்னேற்றத்திற்காகத் தான் புகழ்மிக்க கோவில்கள் இந்த சித்தர் ஆவிகளால் ஆட்கொள்ளப்படுகின்றன என்பதை அறிக. இந்த உண்மைகளை ஆன்மீகத்தில் உள்ள பெரியோர் வெளிப்படையாகச் சொல்லுவது கிடையாது. ஏனென்றால் அப்படி சொல்லிவிட்டால் மக்கள் தம் பிறவித் தளையை அறுக்க முயலாமல், நிற்குண பிரம்ம நிலையை எய்த முயலாமல் சிறு தெய்வங்களான சகுணப் பிரம்மத்தை சிறிய உலகியல் நோக்கங்களுக்காக வணங்கி ஆறுதல் அடைந்துவிடுவர், மோட்சம் என்ற வீடுபேற்றை மறந்துவிடுவர் என்பதால் தான். மக்களுக்கு இறைவன் பற்றிய எண்ணம் துன்பம், எதிர்பார்ப்பு ஆகியவற்றால் தான் ஏற்படுகிறது இல்லாவிடில் எல்லோரும் ஒருவகையில் நாத்திகரே. சகுண பிரம்மம் மோட்சம் அடையாததால் அவற்றால் மக்களுக்கு ஒருபோதும் மோட்சத்தை மட்டும் தரவியலாது. மாறாக, அந்த மோட்சத்திற்காகத்தான் அவை இந்த மக்கள் குறையை போக்கும் தொண்டில் ஈடுபட்டுள்ளன என்பதே உண்மை. ஆகையால் சித்துகளை அடைவது மட்டுமே ஆன்மீகம் ஆகிவிடாது மோட்சம் அடைவதே ஆன்மிகம் என்று தெளிக. இந்த சப்தரிஷிகள் தாம் இந்த பூமிப் பந்துக்கு எந்தக் கேடும் நேராமல் காப்பதாக சப்தரிஷி நிலை எய்திய பிரபாத்து ரஞ்சன் சர்க்கார் சொல்கிறார். ஜீவ சமாதி, சீரடி சாயிபாபா வழிபாடு இதற்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டு ஆகும். எளியவரான ஆழ்வார்கள், நாயன்மார்கள் நிகழ்த்திய சித்துக்கள் அனைத்தும் உண்மையில் இந்த சித்தர்கள் நிகழ்த்தியவையே என்கிறார் இன்னொரு சப்தரிஷியான பழனிமலை ஈசுவர பட்டர். அதனால்தான் வியாசரால் பாவ, புண்ணியத்தை விளக்க கதையாக சொல்லப்பட்ட நான்கு கை தெய்வங்கள் சக்தி மிக்கவையாக ஆக்கப்பட்டு வணங்கப்படுகின்றன. ஏரணப்படி (logically) இந்த குற்றத்திற்கு முழு பொறுப்பு சித்துகள் நிகழ்த்திய இந்த சித்தர்களையே சாரும். இது போல எந்த சித்தும் நிகழ்த்தி இருக்காவிட்டால் புராணங்கள் கதைகளாகவே ஏட்டில் பதிந்து இருந்திருக்கும். இசுலாமிய படையெடுப்பின் போது இந்த சித்தர்கள் மக்கள் இறை நம்பிக்கை குலையும் வண்ணம் வாளாயிருந்தனர் சித்து ஏதும் செய்யவில்லை, விளைவு பெரும் நாசம். மக்கள் நெஞ்சங்களில் அவர்கள் கட்டி எழுப்பிய இறை நம்பிக்கையை அவர்கள் தானே காக்கவேண்டும்? காக்க வில்லையே! ஆதலால் அந்நேரத்தில் இறைவன் உண்டு என்பது பொய் ஆகிப்போனது. எனவே இதன் உண்மைக் குற்றவாளிகள் அந்நேரத்தே செயல்படாத இந்த சகுண பிரம்மங்களே, சப்த ரிஷிகளே. சகுண பிரம்மம், சப்தரிஷி என்பது ஒரு பொருட் பன்மொழி. இதை ஏற்பதற்கு மக்களுக்கும் மதவாதிகளுக்கும் மனம் ஒவ்வாது என்பது பேருண்மை.

    நாத்திகர் கேட்கின்றார் கடவுள் இருந்தால் மக்களிடம் ஏன் இவ்வளவு துயரம்? ஏன் இத்தனை ஏற்றத் தாழ்வு, வேறுபாடு என்று. ஆதலால் கடவுள் என்பதே இல்லை என முழங்குகின்றார். இயற்கை காற்றாக, மழையாக, வெய்யிலாக பொதுவாகத் தான் செயற்படுகின்றது. அங்கே மனிதன் – விலங்கு, ஏழை – பணக்காரன், முதியவர் – இளையோர் என்று இயற்கை பாகுபாடு பார்ப்பதில்லை. இந்த துயரமும் வேறுபாடும் மனித அறிவால், சிலர் மட்டும் ஒத்துகூடி செயற்படும் முயற்சியில் பலர் வெளியே நிறுத்தப்படுவதால் நேர்ந்தவை. ஆனால் இயற்கை எனும் தெய்வத்தின் இந்தப் பொதுவான தன்மையை மனிதன் தன்னுடைய திறமை என்று சொல்லி மூடி மறைத்தும், மறந்தும் விடுகிறான். எனவே துயரமும் ஏற்றத் தாழ்வும் கடவுளால் அல்ல மாறாக மனித அறிவால், செயற்பாட்டால் உண்டானவை என்று தெளிக. ஆதலால் மனிதன் தன்னலத்தை உதறி விட்டு கூட்டுறவாக (co-operative), கூட்டிணைவாக (co-ordinate) செயற்பட்டால் இந்த துயரத்தையும் ஏற்றத் தாழ்வையும் பேரளவு குறைக்க முடியும். இயற்கையில் மனிதன் விலங்குகளைப் போலத் தான் தாயிடம் பிறக்கிறான் ஆனால் அந்த விலங்குகளிடம் ஏமாற்றுதல் இல்லை, ஏற்றத் தாழ்வு இல்லை, வறுமை இல்லை என்பதை ஆராய்ந்தால் மனிதரிடம் உள்ள ஏற்றத் தாழ்வும் வறுமையும் அவனது அறிவால், சிலர் ஒத்து கூடி தன்னலத்தோடு செயற்படுவதால் தான் உண்டானவை என்பது புரியும். செல்வ நிலையும் ஏழ்மை நிலையும் மனிதர் உருவாக்கியவை. இங்கே கடவுளின் குற்றம் எங்குள்ளது? இன்னுமொரு கேள்வி நாகரிக மனிதரிடம் உள்ள கவலையும் துன்பமும் ஏற்றத் தாழ்வும் இதே பூமியில் வாழும் பழங்குடிகளிடம் இல்லையே அங்கு மட்டும் கடவுள் அந்த மனிதருக்கு சாதகமாக செயற்படுகிறானா? இல்லை. எனவே தன்னல மனித தவற்றுக்கு கடவுள் இல்லை என்று சொல்லி கடவுள் மீது பழிபோடுவது நாத்திகரின் குற்றம். அண்மைக் காலத்தில் வாழ்ந்து மறைந்த பெருஞ் சித்தர் சப்தரிஷி நிலை எய்திய பிரபாத்து ரஞ்சன் சர்க்கார் நாத்திகரின் இந்த குழப்பமான பேச்சுக்கு இதாவது, வறுமையும் ஏற்றத் தாழ்வும் மனித தன்னலம் ஏற்படுத்திய குற்றம் என்று விடை இறுத்துகிறார். எனவே இதை கடவுள் இல்லை என்பதற்கு கேள்வியாக வைக்கக் கூடாது. சிந்தனை இல்லா மக்கள் வேண்டுமானால் இதற்கு பலியாகிடலாம், ஆனால் உண்மையான ஆன்மீகவாதிகள் இதை கேட்டு நகுவர்.

    மேற்சொன்னவற்றால் நாத்திகவாதிகள், உருவமில்லாமல் ஒற்றை இறைவனை வணங்குவதாக மார்தட்டும் ஆத்திகர் என யாரொருவரும் உருவ வழிபாட்டை விமர்சிக்கும் தகுதி துளியும் இல்லாதவர் என்பது புலனாகும். ஒரு சிறு வேலை நிகழ ஆட்சியர் அலுவலக பணியாளரால் முடியும் போது அதை ஆட்சியரே நேரடியாக வந்து நிறைவேற்ற வேண்டும் என்பது மூடமை. ஆதலால் பன்மைத்தன்மை கொண்ட சகுணப் பிரம்மத்தால் இயன்றதை அவற்றிடம் பெற விழையாமல் அந்த ஒற்றை நிற்குணத்தையே எல்லாவற்றுக்கும் நாடுவது முறையோ? நாத்திகவாதம் ஒரு பொய் பித்தலாட்டம் என்பதை உணர  அரசன் முதல் ஆண்டி வரையான மக்கள் வேண்டுதலை நிறைவேற்றிய இறைவன் பற்றிய கல்வெட்டுகளை  இனிக் காண்போம். இப்போதும் இக்கோயில்களில் இந்த வேண்டுதலை நிறைவேற்றும் ஆற்றல் உண்டு என்று நம்பலாம்.

    கோயம்பத்தூர் மாவட்டம் உடுமலை வட்டம் கடத்தூர் மருதீசர் கோயில் மகாமண்டபத்தின் கிழக்கு சுவர் இடப்புற வாசலில் உள்ள 17 வரிக் கல்வெட்டு

    1. ஸ்வஸ்திஸ்ரீ விக்கிரம சோழ தேவற்கு யாண்டு 29 வது விக்கிரம சோழ திருபுவன சிங்க
    2. னேன். கடற்றூர் ஆளுடையார் திருமருதுடையார் எனக்கு ப்ரமேகம் தீர்ந்தமையால்  இந்நாயனா
    3. ர் திருவொத்த சாமத்துக்கு நாள் ஒன்றுக்கு அரிசி குறுணிக்கு நான் நீர்வார்த்து விட்ட நிலமாவது  _ _ _ _ கரை
    4.  ர வழிநாட்டுக் கண்ணாடிப் புத்தூர் வடகரையில் உதயாதிச்ச தேவந்  துரோகியாய்  வடகொங்கில்
    5. ப் போனமையில் அவந் நிலம் அறுகலமும் எனக்கும் என் தம்பி சோழசிங்க தேவற்கும் இவ்விருவ
    6. _ _ _ _ இக்காணியாக்கினேன் என்று திருமுகம் தந்தமையில் இதில் என்னோபாதி மன்றாட்டு வி
    7. _ _ _ கலமும் இந்நாயனார்குத் திருவ _ _ _ ரப்படிக்கு நீர்வாத்துக்  குடுத்த இந்நெல் முக்கலத்துக்கும்
    8. _ _ _ வது வடகரையில் பூலுவப்பற்றில் விதை அறுகலத்தில்  என்னோ பாதி விதை முக்கலத்
    9. _ _ _ ல்லையாவது இக்கிழைக்கு வடக்கும் உதையாதித்த தேவந்  நிலத்துக்கு  மேற்கும் அதியமான் _ _
    10. _ _ {சோ}ழீஸ்வரமுடையார் தேவதானத்துக்கு கிழக்கும் அழகாண்டார் செய்க்குத் தெற்கும் இந்நான்
    11. கெல்லைக்குட்பட்ட நெல்விதை இருக்கலனே வீரசோழீஸ்வரமுடையார் தேவத்தானத்துக்கு வடக்கும் மேல் _ _ _
    12. _ _ னத்துக்கு கிழக்கும் அழகாண்டார் செய்க்கு மேற்கு இந்நிலத்திற்குப் பாய்கிற கவருக்குத்  தெற்கெ
    13. ல்லைக்குட்பட்ட  நெல் விதை கலனே முக்குறுணியில் நெல் விதை கலமும் ஆக நெல்வி
    14. தை முக்கலமும் இறையிலி முற்றூட்டாக எனக்கும் என் மக்களுக்கும் விலையொற்றி _ _ _
    15. ஸ்த்ரீதனத்துக்குரிதாவுவதாக நாயனார் திருவுள்ளம் செய்தபடியே ஆளுடையார்
    16. மருதுடையாற்கு கல்வெட்டிக் குடுத்தேன் விக்கிரம சோழ திருபுவன சிங்க தேவனேன். இது தி
    17. ருபுவன சிங்க தேவனேன் எழுத்து. இவை கொத்தப்பி  சோழன் எழுத்து பன்மாஹேஸ்வர ரக்ஷை

    பிரமேகம் – நீரிழிவு, சக்கரை நோய், diabetes; திருஒத்த சாம பூசை  – பின்னிரவு ஒரு பூசை; திருமுகம் – அரசாணை; மன்றாட்டு – வேண்டிப்பெற்று, கால்நடை மேய்ச்சல் நிலம்; கவர் – ஆற்றுக்காலில் பிரிகிற கால்வாய்; விலை ஒற்றி – விலை நீக்கி, இலவசமாக;  ஸ்ரீதனம் – பெண் பிள்ளை சொத்து; திருவிள்ளம் – இசைந்து

    விளக்கம்: மூன்றாம் கொங்கு விக்கிரம சோழனின் 29 ஆம் ஆண்டு (1302)  ஆட்சியின் போது விக்கிரம சோழ திருபுவன சிங்கன் கூறியது. கடற்றூர் இறைவன் திருமருதுடையாரை வேண்டி எனக்கு பிரமேகம் என்னும் நீரிழிவு நோய் தீர்ந்தமையால் பின்னிரவு ஒரு பூசைக்கு ஒவ்வொரு நாளும் ஆகும் அரிசியை குறுணி அளவிற்கு வழங்க நான் நீர்வார்த்து தானமாக விட்ட நிலம் கரைவழி நாட்டில் உள்ள கண்ணாடிப் புத்தூரின் வடகரையில் வாழ்ந்த உதயாதித்த தேவன் நாட்டுத் துரோகியாகி, இராசதுரோகியாகி வடகொங்கில் தஞ்சம் போய்விட்டபடியால் அவனது நிலமும் அதில் வரும் ஆறு கலமும் எனக்கும் என் தம்பி சோழசிங்க தேவனுக்கும் ஆக இவ்விருவருக்கும் உரிய காணியாக்கினேன் என்று வேந்தரிடம் இருந்து வந்த ஆணையால் இதில் வந்த என்னோட பங்கு பாதியை வேண்டிப்பெற்று நெல் மூன்று கலமும் இந்த இறைவனுக்கு திருப்படிக்கு நீர்வார்த்து தானமாக விட்டேன். இந்நெல் முக்கலமும் வடகரையில் உள்ள பூலுவப்பற்றில் விதை நெல் ஆறு கலத்தில் என்னோட பாதி விதையான முக்கலத்துக்கு எல்லையாவது இந்த கிழக்கு வடக்கு உதயாதித்த தேவன் நிலத்திற்கு மேற்கும் அதியமான்  _ _ _ சோழிஈஸ்வரமுடையார் தேவதானத்துக்கு கிழக்கும் அழகாண்டார் வயலுக்கு தெற்கும் ஆக இந்நான்கு எல்லைக்கு உட்பட்ட நிலத்தில் நெல் இரு கலனும், வீரசோழீஸ்வரமுடையார்  தேவதானத்துக்கு வடக்கும் மேல் _ _ _ (நந்தவ)னத்துக்கு கிழக்கும் அழகாண்டார் வயலுக்கு மேற்கே இந்நிலத்திற்கு பாய்கிற ஆற்றுக்காலில் பிரிகிற கால்வாயின் தெற்கு எல்லைக்கு உட்பட நிலத்தில் வரும் நெல் விதை ஒரு கலன் முக்குறுணியில் நெல் விதை ஒரு கலனும் ஆக மூன்று கலன் நெல்லும் இறையிலி முற்றூட்டாக எனக்கும் என் பிள்ளைகளுக்கும் விலை நீக்கி தந்ததை நான்  பெண்பிள்ளை சொத்தாக வேந்தர் ஆணை தந்தபடியே அதை நான் இசைந்தபடி மருதீசருக்கு தானமாகக் கல்வெட்டிக் கொடுத்தேன் விக்கிரம சோழ திருபுவன சிங்க தேவன். இது திருபுவன சிங்க தேவன் ஒப்புதல் கையெழுத்து. இவை கொத்தப்பி சோழன் ஒப்புதல் கையெழுத்து. இது சிவனடியார் காப்பு.

    இக்கல்வெட்டு ஆங்காங்கே பொறிந்து போனதால் நிலம் குறித்த விவரம் தெளிவாகத் தெரியவில்லை.  நிலத்தின் அளவை குறிக்காமல் நெல் அளவுக் குறிப்பு குழப்புகிறது. அரசத் துரோகி உதயாதித்த தேவன் நிலத்தை கொங்கு சோழன் திருபுவன சிங்க தேவனுக்கும் அவன் தம்பிக்கும் இலவசமாக கொடுத்ததை பார்த்தால் இவர்கள் வேந்தனுக்கு செய்த அருந்தொண்டிற்காக வேந்தன் பரிசாக கொடுத்திருக்கலாம் என்று தோன்றுகிறது.

    பார்வை நூல்: கல்வெட்டு இதழ் 75, பக்கம் 45 & கோயம்பத்தூர் மாவட்டக் கல்வெட்டுகள் தொகுதி I, பக்கம் 225

    விழுப்புரம் மாவட்டம் திருக்கோயிலூர் வட்டம் சித்தலிங்கமடம் ஊரில் வியாக்ரபாதீஸ்வரர் கோயில் முன் மண்டபம் தெற்கு சுவர் 6 வரிக் கல்வெட்டு

    1. ஸ்வஸ்திஸ்ரீ த்ரிபுவனச் சக்ரவத்திகள் ஸ்ரீ கொலோத்துங்க சோழ தேவர்க்கு யாண்டு நாற்பத்தொன்பதா
    2. வது மலாடாகிய ஜனநாத வளநாட்டுக் குறுக்கைக் கூற்றத்து ப்ரஹ்மதேயஞ் சிற்றிங்கூர் ஆளுடையார்
    3. திருப்புலிப்பகவ தேவர்க்கு. இக்கோயிலில் சிவப்ராஹ்மணந் பாரத்வாஜி பஞ்சனதி பெரியாந் இத்தேவர்க்கு ப்ரார்
    4. தித்து ஆண்பிள்ளை பெற்று வைத்த திருநந்தா விளக்கு ஒந்றுக்கு பசு முப்பத்திரண்டுக்காக இக்கோயிலில் சிவ
    5. ப்ராஹ்மணரோம். எங்களுபையத்தால் கொண்ட அந்றாடு நற்காசு பத்து. இக்காசு பத்தும் கைக்கொண்டு இத்தேவர்
    6. க்குத் திருநந்தா விளக்கொன்றும் சந்த்ராதித்தவற் எரிக்கக் கடவோமாக சம்மதித்தோம் இக்கோயில் சிவப்ராஹ்மணரோம். இது பந்மாஹேஸ்வர ரக்ஷை.

    எங்கள் உபையம் – எமது இரு கைகள்

    விளக்கம்: முதலாம் குலோத்துங்க சோழனின் 49 ஆவது ஆட்சி ஆண்டு 1118 இல் மலாடு என்னும் ஜனநாத வளநாட்டின் குறுக்கை கூற்றத்தின் பிரம்மதேயமான சிற்றிங்கூர் இறைவன் திருபுலிப்பகவ ஈசுவரன் கோயிலில் பணிசெய்யும் சிவபிராமணன் பாரத்வாச கோத்திரத்தான் பஞ்சநதி பெரியான் என்பவன் இந்த ஈசுவரனிடத்தில் வேண்டி ஆண்பிள்ளை ஒன்று பெற்றுக் கொண்டான். அந்த நிறைவேறிய வேண்டுதலுக்காக அவன் வைத்த திருநுந்தா விளக்கு ஒன்றினுக்கு முப்பத்திரண்டு பசுக்களை வாங்க இக்கோயில் சிவபிராமணரிடம் அன்றாட்டு நற்காசு பத்து கழஞ்சு  கொடுத்தான். எமது இருகைகளால் இந்த பத்து கழஞ்சு காசை வாங்கிக்கொண்ட சிவபிராமணராகிய நாம் இந்த இறைவனுக்கு சந்திர சூரியர் நிலைக்கும் காலம் வரை அந்த ஒரு நுந்தா விளக்கு எரிப்போம் என்று இசைவளித்தோம். இது சிவனடியார் காப்பு.

    ஆண் பிள்ளை வேண்டுவது தமது உரிமைகளும் கடமைகளும் தடையின்றி அடுத்த தலைமுறைக்கு செல்ல வேண்டும் மற்றும் மத நம்பிக்கை ஆகியவற்றால் நிகழ்ந்திருக்கலாம்.

    பார்வை நூல்: விழுப்புரம் மாவட்டக் கல்வெட்டுகள் தொகுதி I, பக். 119, தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறை வெளியீடு. SII Vol 26 No 392 pg 255

    விழுப்புரம் மாவட்டம் திருக்கோயிலூர் வட்டம் திருவெண்ணைநல்லூர் ஊரில் வைகுந்த பெருமாள் கோயில் அர்த்த மண்டபம் வடக்குப் பட்டி  2 வரிக் கல்வெட்டு

    1. ஸ்வஸ்திஸ்ரீ த்ரிபுவ  லை திருவெண்ணெய் நல்லூர் ஸ்ரீவைகுந்தத் தெம்பெருமான் கோயில் தாநத்தார் கண்டு விடை தந்ததாவது  இக்கோயிலில்
    2. நமக்கு புத்ரார்த்தன கூடி அருள பண்ணின திருவைகுந்தத் தாழ்வார்க்கு திருவிடையாட்டமாக ஏமப்பேறூர்  _ _ _ சிறுபாக நல்லூரில் இவ்வூர் காணியாளர் பக்கல் நா_ _ _  (சிதைந்துவிட்டது)

    விடை – விட்டுக் கொடுத்த தானம்; புத்ரார்த்தம் – ஆண் பிள்ளைச் செல்வம்; கூடி – வாய்த்து; திருவிடையாட்டம் – திருமால் கோவிலுக்கு கொடுக்கும் தானம்; பக்கல் – இருந்து

    விளக்கம்:  இது காடவராயர் கோப்பெருஞ்சிங்கர் காலத்து கல்வெட்டு என்று தெரிகின்றது. திருபுவனச் சக்கரவர்த்திகள் ஓலை. திருவெண்ணை நல்லூர் திரு வைகுந்தப் பெருமாள் கோயில் பொறுப்பாளர் பார்வைக்கு. நாம் தந்த தானமானது இக்கோயிலில் வேண்டிக் கொண்டு நமக்கு ஆண்பிள்ளைச் செல்வம் கூடியதால் அதற்கு அருள்வித்த திருவைகுந்தப் பெருமாளுக்கு தானமாக ஏமப்பேறூர் நாட்டில் அடங்கிய சிறுபாக நல்லூரில், இந்த ஊரில் காணி உரிமை பெற்றவரிடம் இருந்து நாம் விலை கொடுத்து வாங்கிய நிலத்தை தானமாக தந்தேன். திருவாய்க்குலத்து ஆழ்வார் கண்ணனை எழுந்தருளுவித்து அபிஷேகம் செய்வித்து என்று நடுவண் தொல்லியல் துறை ஆண்டு அறிக்கை 485/1921 இல் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த மைப்படியில் கூடுதல் வரிகள் படியெடுக்கப்பட்டதாக தெரிகின்றது. இக்கல்வெட்டு இன்னும் நூலாக அத்துறையால் வெளியிடப்படவில்லை. ஆனால் தமிழ்நாடு தொல்லியல் துறை படியெடுத்தபோது 2 வரிகளுக்கு பின் இருந்த வரிகள் சிதைந்துவிட்டன போலும்.

    நாடாளும் மன்னவனும் இறுதியில் தனது வேண்டுதலுக்கு இறைவனுடைய அடியைத் தான் தொழுகிறான். வேறு வழியில்லை என்ன செய்வது. மன்னவர் பொதுவாக அதிகப் பெண் தொடர்புடையவர். ஆதலின் அவர் குருதியில் பித்தம் அதிகமாகி ஆண் குழந்தை பிறப்பிற்கு தேவைப்படும் Y குரோமோசோம் உற்பத்தியை பாதித்திருக்கும். அதனால் ஆண் பிள்ளை வாய்க்காது. பித்தம் குறைய எண்ணத்தாலும் கனவாலும் காம  நினைப்பை தவிர்க்க வேண்டும்.

    பார்வை நூல்: விழுப்புரம் மாவட்டக் கல்வெட்டுகள் தொகுதி I, பக். 237, தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறை வெளியீடு.

    விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் வட்டம் சோழபுரம் அருள்மிகி விக்கிரம பாண்டீஸ்வரமுடையார் கோவில் நடராஜர் மண்டபத் முன்னுள்ள கல்தூண் மண்டபம் கல்வெட்டுகள் இரண்டு

    1

    1. ஸ்வஸ்திஸ்ரீ கோணா
    2. ங்கூருடையான் பட்டன் தே
    3. வனவன் தனபாலன்
    4. உடம் பிறப்பழகி
    5. யானைப் பெற ப்ர்ரார்
    6. த்தித்து நாட்டின
    7. க் கல்  ஸ்வஸ்திஸ்ரீ

    2

    1. ஸ்வஸ்திஸ்ரீ சோள நா
    2. ங்கூர் உடையா
    3. ன் ஆமன் தேவ
    4. ன் தேன்மொ
    5. ழியாகனேன்
    6. தனபாலன் உ
    7. டப் பிறப்பழகி
    8. யா யழகியானைப் ப்ர
    9. ஸாதித்து நாட்டின கல்.

    பிரசாதித்து / prajaati – பிள்ளை பெறு, procreative power; பட்டன் – படைத்தலைவன்

    விளக்கம்: ஒரே செய்தியுடன் தொடர்புடைய 13 ஆம் நூற்றாண்டு பேரரசுப் பாண்டியர்க் கால இரு தூண் கல்வெட்டுகள். கோநாங்கூரைச் சேர்ந்த படைத்தலைவன் தேவன் என்னும் தனபாலன் தனக்கு ஆண் பிள்ளை பிறக்க வேண்டிக்கொண்டு அதற்கு தூண் ஒன்றை மண்டபத்திற்கு செய்தளிப்பதாக வேண்டித் தூண் ஒன்றை செதுக்குவித்து நிறுத்தினான். அக்குழந்தை பிறப்பதற்கு முன்பே உடம் பிறப்பழகியான் என்று அதற்கு பெயரும் இட்டுவிட்டான் என்கிறது முதற் கல்வெட்டு.

    இரண்டாம் கல்வெட்டில் சோள நாங்கூரைச் சேர்ந்தவன் என்று இந்த சோழபுரத்தைத் தான் குறித்தானோ? இவன் பெயரை இன்னும் விரிவாக ஆமன்தேவன் தேன்மொழியான தனபாலன் என்று குறித்து உடம்பிறப்பழகியாள், உடம்பிறப்பழகியான் ஆகிய இரு குழந்தைகளை பெற்றெடுத்தேன் அதனால் இந்த இரண்டாவது தூணை நிறுவினேன் என்று ஒரு குழந்தைக்கு இரு குழந்தையாக தந்ததனால் பின்னர் இன்னொரு தூணையும் நாட்டி, இரு தூண்கள் நிறுவி கல்வெட்டி உள்ளான் இந்த படைத்தலைவன். வீரர்கள் போருக்கு வேண்டி ஆண் பிள்ளைகளையே நாடுவது இயல்பு.

    பார்வை நூல்: விருதுநகர் மாவட்டக் கல்வெட்டுகள் தொகுதி II, பக் – 129 & 130, த நா தொ து வெளியீடு எழும்பூர்

    புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் வட்டம், மலையடிப்பட்டி வாகீசுவரர் கோவிலின் குடிபோக கோவிலின் வட புறச் சுவரில் உள்ள 47 வரிக் கல்வெட்டு

    பஹு தாநிய / ஆண்டு தயி மாதம் 11 நாள் / வாகீ[ஸ்வர ஸ்வா] மி யாரு / க்கும் வடிவுள்ள மங் / கைக்கும் பூச்சிக்குடியில் யி / க்குனாம்  ஆவுடையா தேவ / ர் திருநெடுங்கோள / ம் தேவடியாள் வீ / ட்டுக்கு போயிருக்கச்சே ம / றுபடி ஒரு பிராமண / னை அழைச்சு வீட்டுலே இருந்தபடியினாலே  னா / ன் அவற்கள் ரெண்டு பே / ரையும் வெட்டிப் போட்டு / மலையடி வந்துவிட / திலே ரெண்டு கண்ணு / ம் தெரியாதே போன / படியினாலே இத்தோ / ஷம் போக / வாஹீஸ்வர / ஸ்வாமிக்கு என்னு / ட  வயல் கல்லு / ப் போட்டு குடுக்கு / றோம் என்று வேண்டி கொண் / டு எனக்கு கண் தெ / ரிஞ்சபடியினா / லே என்னுடை / ய காணியாந ஆவுடையான் குடி[க்][கா] / டு  னாங்[கெ]ல்லை உள் / பட்ட நிலமும் கல்ப் / போட்டு குடுத்தேன். இ / ந் / நிலம் ஸ்வாமி ஸந்நதி / இ ஸிலாசாதனமும் / எழுதி குடுதேன். இ / ந்த நீலதில் யா / தாமொருவன்  பெச / கு பண்ணினால் வா / ஹீஸ்வர ஸ்வாமி  ச / ன்னதி தொ / றோகீயாக போவன். கெங்கைக் / கரையில் காரா / ம்பசுவை கொண் / ண தோஷதிலே / போவன்.

    பிசகு – கலன், வில்லங்கம், விலக்கம்.

    விளக்கம்: இதன் எழுத்தமைதியால் 15 ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டு எனக் கொள்ளப்படுகிறது. அந்நூற்றாண்டில் கி.பி. 1418 மற்றும் கி.பி. 1478 ஆகிய ஆண்டுகளில் வந்த பகுதானிய ஆண்டு ஏதேனும் ஒன்றில் இக்கல்வெட்டு வெட்டப்பட்டிருக்கலாம். கிழமை குறிக்காமல் தை மாதம் 11 ஆம் நாள் என்று மட்டும் குறிக்கப்பட்டுள்ளது.

    இறைவன் வாகீஸ்வரருக்கும் இறைவி வடிவுள்ள மங்கைக்கும், பூச்சிக்குடியில் இருக்கும் ஆவுடையா தேவனான நாம் திருநெடுங்கோளத்தில் உள்ள தேவடியாள் வீட்டுக்கு போயிருந்த போது அவளை ஏற்கனவே எச்சரித்திருந்தும் மீண்டும் அவள் இன்னொரு பிராமணனை அழைத்து வந்து வீட்டில் இருந்தபடியால் ஆத்திரத்தில் நான் அவ் இருவரையும் வெட்டிக்கொன்று போட்டு மலையடிக்கு வந்துவிட்ட போது என் இரு கண்களும் பார்வை இழந்தன. எனவே இக் கொலைத் தோஷம் போக வாகீஸ்வர இறைவனுக்கு எனக்கு உரிமையான வயலை எல்லைக் கல் நாட்டி தானம் கொடுக்கிறேன் என்று வேண்டிய போது எனக்கு மீண்டும் பார்வை கிட்டியது. அதனால் என்னுடைய உரிமை நிலமான ஆவுடையான் குடிக்காடு நான்கு எல்லைகளையும் குறித்து அந்நான்கு இடத்திலும் எல்லைக் கல் நிறுத்தி தானம் கொடுத்தேன். இந்நில விவரத்தை இறைவன் திருமுன் கல்வெட்டும் எழுதி வைத்தேன். இந்நிலத்தில் ஏதேனும் ஒரு விலக்கம் நேர்ந்தால் அவன் வாகீஸ்வரனுடைய சிவத்துரோகி ஆகிடுவான். கங்கை கரையில் காராம்பசுவைக் கொன்ற தோஷத்தில் இறப்பான்.

    காசுக்கு தன் உடலை விற்பவள் தான் தேவடியாள் என்ற விலைமகள், பொது மகள். பொழுதிற்கு ஏதோ ஒரு ஆணிடம் இருப்பது தான் அவள் தொழில். இதனை மறந்த ஆவுடையாத் தேவர் அவள் என்னவோ தான் தாலி கட்டிய மனைவி போல எண்ணி அவளை மனைவி போல நடந்து  கொள்ள எதிர்பார்த்தார். அப்படி இல்லாதது கண்டு அவள் மேல் கோவம் கொண்டு அவளை மட்டுமல்லாது உடன் இருந்த பிராமணனையும் சேர்த்து கொன்று போட்டார். இது ஒரு அடாத செயல் அதன் விளைவை உடனே அனுபவித்தார். ஒரு பிராமணன் ஒழுக்கக்கேட்டில் ஈடுபடாமல் இருக்கச் செய்வது பிராமண சமூகத்தின் கடமை. ஒழுக்கக்கேட்டை தடுக்காவிட்டால் அது ஒட்டுமொத்தமாக அச்சமூகத்தின் மீது தான் பழியாய் விழும்.

    வீட்டிற்கு தெரியாமல் கள்ளத்தனமாக மீன் உண்ணும் ஒரு தமிழ் பிராமணனை நோக்கி “இப்படி மீன் தின்பதால் நீ பிராமணனே இல்லை என்று சொன்ன போது, ஏன் பிற சாதிமார் இவ்வாறு ஒழுக்கக்கேடு செய்தாலும் அந்தந்த சாதிக்காராகத் தானே அழைக்கப்படுகிறார்” அது போல ஒழுக்கம் கெட்டாலும் நானும் ஒரு பிராமணன் தான் என்றார். அவர் சொல்லுவது போல பிராமணர் என்பது ஒரு சாதியும் அல்ல, வர்ணமும் அல்ல. அது சாதியாகவும் வர்ணமாவும் பின்னீடு தான் ஆக்கப்பட்டது. விப்பிர என்பது தான் வர்ணம். அதன் பொருள் கற்றோன், அறிஞன் என்பது. வரலாற்றுபடி கற்றோரான வெள்ளாளரும் விப்ரர் என்பதில் தான் வருவர். ஆனால் இப்போது அது வேறாகிவிட்டது. பொய், கொலை, களவு, முறையற்ற காமம், புலால் – மது ஆகியன தவிர்த்த தந்திரயோக (தியான) வாழ்க்கை நெறியை பின்பற்றும் ஒரு தனிமதம் தான்; வேத மதம் – தந்திரயோக மதம் ஆகியவற்றின் கலப்பு மதம் தான் பிராமணிய மதம். இந்த ஐந்து ஒழுக்கங்களைக் கைக்கொண்டால் தான் யோக சித்தி எளிதில் விரைந்து கைக்கூடும் என்பதற்காகவே பிராமணர் இந்த ஐந்து ஒழுக்கத்தையும் பேணுவதற்காகவே பிறரோடு ஒன்று கலவாமல் இருந்து தனிமைப் பேணினார்கள் பண்டு. பின்பு வந்த புத்த, சமணம் ஆகிய இந்திய நாத்திக மதங்களும் இந்த ஐந்து ஒழுக்கத்தையும் தமதாக ஏற்று தம் பின்பற்றிகளை கடைபிடிக்க வலுயுறுத்துகின்றன. ஏனென்றால் அவையும் தந்திர யோகத்தை பின்பற்றுபவை என்பதால். சிலர் மயிர் மழித்தும் இன்னும் சிலர் மயிர் நீட்டி சடை வளர்த்தும் துறவு பூண்ட பின் இந்த பஞ்சமா பாதகத்தை ஒழிக்கத் தலைப்படுகின்றனர், இது தேவையற்றது. உலகோர் பழிக்கின்ற இந்த ஐந்து பாதகங்களை ஒழித்தாலே போதும் இதற்காக துறவு பூணத் தேவை இல்லை என்கிறார் வள்ளுவர் “மழிதலும் நீட்டலும் வேண்டா” என்ற குறளில். ஏனெனில் ஒழுக்கம் துறவாளருக்கு மட்டுமானது அல்ல மக்கள் அனைவருக்கும் பொதுவானது. ஆனால் வள்ளுவம் எனது சமயம் என்று மார்தட்டி விட்டு மேடையை விட்டு இறங்கியதும் புலால், மது என வாழ்பவரே மிகுதியாக உள்ளனர். தமிழ் நாட்டில் தான் இத்தகு வேடிக்கையாளர் நிறையபேர் இருக்கின்றார்.

    1400 ஆண்டுகள் முன் கிபி 7 ஆம் நூற்றாண்டில் புராண தெய்வங்களை வழிபாட்டு தெய்வமாக பிராமணர் ஏற்றுக்கொண்ட போது தான் பிராமணருக்கும் பிறருக்கும் ஒரு பொதுத் தன்மை ஏற்பட்டது. ஏனென்றால் பிறரும் அந்தப் புராண தெய்வங்களை ஏற்று  வழிபடத் தொடங்கினர் என்பதே. ஆக புராண மதம் தான் பல்வேறு சாதிகளையும் பிரிவுகளையும் அக்காலத்தே  ஒன்றாக இணைத்தது. இந்த இணைப்பு இசுலாமிய படையெடுப்பின் போது ஒற்றுமை உணர்வை தந்தது. இல்லாவிடில் இன்று இந்தியா ஒரு இசுலாமிய நாடு என்றாகி இருக்கும். இந்த புராண மதம் தான் வெவ்வேறு நெறிகள், கோட்பாடுகள், துணை மதங்களை இணைத்தது என்பதே வரலாற்று உண்மை. புராணங்களின் தந்தை மீனவ குலத்தில் பிறந்த வியாசர் என்பவர் ஆவார். அவருக்கு பின்பு தோன்றிய ஆதி சங்கரர் அதை மேலும் ஆறு சமயமாக வகைப்படுத்தி குறுக்கினார் என்பர். இதுவும் பல மதங்களின் கலப்பு மதம் தான். அதுவே இன்றைய இந்து மதம். இது பேரரசுப் பல்லவர் காலத்தில் நிகழ்ந்தது. ஆனால் தலித்தியர், திராவிடர் இந்த வரலாற்றை திரித்து பிராமண வெறுப்பு ஏற்படும்படியாகப் பேசுகின்றனர். இந்த ஒழுக்கக்கேடு பஞ்சமா பாதகத்தில் அடங்கியது. இந்த ஐப்பெரும் ஒழுக்கத்தைக் கைக் கொள்ளாதவர் தந்திர யோகப் (தியானம்) பயிற்சிக்கு சிறிதும் தகுதியற்றவர். தமிழகத்தில்  ஒழுக்கத்தை பிராமணரல்லாத வள்ளலார், பட்டினத்தார் போன்ற பிற சாதி துறவிகளோ, ஆன்மீகவாதிகளோ வலியுறுத்துகின்ற போது அதற்கு ஆரவாரத்தோடு ஆதரவு தரும் தமிழன் ஒழுக்கத்தை ஒரு பிராமணன் வலியுறுத்தினால் மட்டும் அங்கே ஏளனம், வசை தான் விஞ்சுகிறது. எனவே இது தமிழரிடம் உள்ள பிளவுபட்ட ஆன்மீகத்தின் வெளிப்பாடு ஆகும்.  ஒழுக்கம் என்பது அனைவர்க்கும் பொது அதை யாரும் எவருக்கும் எங்கும் முன்மொழியலாம். ஆனால் அதை முதலில் முன்மொழிபவர் பின்பற்றவேண்டும். கம்யூனித்துகளை பார்த்து செருமானிய மார்க்சிடம் இருந்து கருத்துகளை திருடிக் கொண்டனர் என்று எவரேனும்  சொல்லமுடியுமா? அவர்களும் அக் கருத்தால் மார்க்சு போல் அல்லவா ஆகிவிட்டனர். இதில் திருட்டு எங்கே வந்தது. தான் செய்தால் சரி அதையே அடுத்தவன் சொன்னாலோ செய்தாலோ அது தன்னுடைய கருத்தின் திருட்டு என்பது தவறான பரப்பல் ஆகும். தெய்வ வழிபாடு, மருத்துவம், இசை, ஜோசியம் எல்லாவற்றையும் ஆரியர் நம்மிடம் இருந்து தான் திருடிக் கொண்டனர் என்போரை கவனித்தால் இது தெளிவாகப் புரியும். இதற்கு எந்த சான்றையும் இவர்கள் முன் வைப்பதில்லை. ஆஃப்கான் முதல் இந்தோனேசியா வரை; காசுமீர் முதல் குமரி வரை பரவி வாழ்ந்த பெருந்தொகை பிராமணருக்கு தமிழ்நாட்டு சிறுபான்மை வள்ளுவ மக்கள் தான் ஆசான் என்பது போல இவர் பேசுவர். ஆதலால் இவர்கள் தான் உண்மைப் பார்ப்பனர் என்றும் பிராமணரை வேஷப் பார்ப்பனர் என்றும் வேடிக்கையாக (fun) பேசுவர். ஒரு சிறு பரப்பில் வாழும் ஒரு சிறு குழு (1.35 லட்சம் பேர்) பெரும் பரப்பில் வாழும் கூட்டத்தாருக்கு (5 கோடி பேர்) எப்படி ஆசானாக முடியும்? என்று தமிழர் யாரும் இதை இன உணர்வு காரணமாக கேள்விப்படுத்துவது இல்லை. கேட்டதும் சிரிக்க மட்டுமே செய்கின்றனர். சிறுபான்மை வள்ளுவ மக்களுக்கு உரித்தான சிறப்பையும் நற்பெயரையும் மொத்த பறையர் சமூகத்திற்கும் சொந்தமானதாகக் காட்டுவது மட்டும் வேஷம் இல்லையா? Edgar Thurston இருவருக்கும் என்ன வேறுபாடு காட்டுகின்றார் என்று பார்த்தல் இந்த கேள்வி நியாயமானதாகத் தெரியும். இதனால் தமிழர் சிந்தனைத் திறன் இவ்வளவு தானா என்ற கேள்விக்கு இடமாகிறது. முதலில் அயோத்திதாசரின் இந்த கருத்து தமிழர் அனைவரையும் வேடிக்கை (making fun of tamils) ஆக்குவது ஆகும் என்ற புரிதல் தமிழருக்கு ஏற்பட வேண்டும். Fun என்றால் இங்கே நகைப்பு, இழிவு, முட்டாள்தனம் ஆகியவற்றின் கலவை ஆகும். மேற்சொன்னபடி எத்தனையோ பிழையான, தவறான கருத்துகள் வெறுப்பைப் பரப்ப கடந்த 150 ஆண்டுகளாக தமிழகத்தில், தமிழர் நெஞ்சங்களில் திணிக்கப்பட்டுவிட்டன. அவற்றை திருத்திக் கொள்ளவே இந்த கல்வெட்டு வாசிப்பு, விளக்கம் யாவும். பிழையை திருத்திக் கொள்ளாவிடில் எங்கெங்கோ அலைந்து தேடிப்பிடித்து கொண்டுவந்து தட்டச்சு செய்து மேற்கொள்ளும் இந்த கல்வெட்டு வாசிப்பு முயற்சி அனைத்தும் ஒரு நேர வீணடிப்பு என்பதாகத் தான் இதை படிபவருக்கும் அமையும். பிழையான கருத்துகளை இன்னும் எவ்வளவு காலம் தமிழ்நாட்டில் உலாவ விடுவது? எனவே தமிழருக்கு அறிவின் விழிப்பு மிக அவசியமாகிறது. தமிழன் கொஞ்சமானா சிந்திக்க வேண்டாமா இனி!!!

    பார்வை நூல்: Inscriptions of the Pudukkottai state arranged according to dynasties, எண்: 904, பக். 595 & 596

    வட ஆர்க்காடு  மாவட்டம் திருவண்ணாமலை வட்டம் அருணாச்சலேசுவரர் கோவில் முதல் திருச்சுற்றின் வடக்கு சுவர் 5 வரிக் கல்வெட்டு

    1. ஸ்வஸ்திஸ்ரீ திரிபுவனச் சக்கரவர்த்திகள் ஸ்ரீ இராஜஇராஜ தேவற்க்கு யாண்டு 18 வது காத்தியை மாதம் பிறந்த பதினேழான் தியதி{யா}ன நாயற்றுக்கிழமையும் ரேவதியும் தஸமியும் பெற்ற
    2. இன்று சென்ன(த்)திக் கானையான யாதவராயர் முதலிகளில் நின்றையில் குளத்துழான் திருக்காளத்தி உடையானான வில்லவராயர் மகளார் யச்சிய பாடியில் கலிச்சித்தன் திருவேகம்பமுடையா
    3. ர்க்குப் புக்க  கோமளவல்லியேன் உடையார் திருவண்ணாமலை உடைய நாயநா{ர்}க்கு வைத்த  திருநுந்தா விளக்கு ஒன்றுக்கு விட்ட சாவா மூவா வாடு னூறு இ{வ்}வாடு னூறுன் திருவிளக்கு மன்றாடி வ
    4. சம் விட்டுச் சந்திராதித்தவரை செல்வதாக விட்டேன் கோமளவல்லியேன். இது பன்மாஹேஸ்வர ரக்ஷை . பின்பு விட்ட ஆடு இருபதும் ஆக ஆடு நூற்று இருபது. இவ்வாடு கோடந்தை மருமகன் நங்கைகோன் வசம் விட்டது.

    நின்றையில் (நின்ற + அயில்) – பிடித்த வேல்; முதலி – படைத்தலைவன்; புக்க – மணமாகி கணவன் வீடு புக;

    விளக்கம்: இக்கல்வெட்டு மூன்றாம் இராசராச சோழனின் 18 ஆம் ஆட்சி ஆண்டு கி.பி.1234 இல் கார்த்திகை மாதம் 10 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை ரேவதி நட்சத்திரம் கூடிய நாளில் வெட்டப்பட்டது. சித்தூர் பகுதியை ஆண்ட சென்னத்தி கானை யாதவராயர்க்கு படைத்தலைவராக அமைந்த குளத்துழான் திருக்காளத்தி உடையான் வில்லவராயன் என்பவருடைய மகள் கோமளவல்லி யச்சியபாடியில் வாழும் கலிச்சித்தன் திருவேகம்பமுடையான் என்பவனை மணந்து கணவன் வீடு சென்றதால் தன் திருமண வேண்டுதலை நிறைவேற்ற திரு அண்ணாமலை இறைவனுக்கு ஒரு நுந்தா விளக்கு எரிக்க 100 ஆடுகள் கொடுத்துள்ளாள். பின்னொரு போது மேலும் 20 ஆடுகள் கொடுத்துள்ளாள். இவை 120 ம் கோடந்தையின் மருமகன் நங்கைகோனிடம் அன்றாடம் நெய் வழங்க ஒப்படைக்கப்பட்டன.

    இக்கல்வெட்டில் திருமணம்  நடக்க வேண்டிக்கொண்ட வேண்டுதல் பற்றிய குறிப்பு ஏதும் இல்லை. அந்நாளில் பெண்கள் 13-14 வயதில் மணம் முடித்தனர். எனவே இது காதல் திருமணமாக இருக்காது. பெற்றோர் தம் மகளுக்கு நல்ல இடத்தில் நல்ல மாப்பிள்ளை அமைய வேண்டும் அப்படி அமைந்து திருமணமாகி மகள் கணவன் வீட்டிற்கு சென்றால் நுந்தா விளக்கு எரிப்பதாக வேண்டிக்கொண்டு அவ் வேண்டுதலைத் தம் மகள் பெயரில் நிறைவேற்றுவர். இதே போல “புக்க” என்ற சொல்லாட்சி பெற்ற திருமணக் கல்வெட்டு SII தொகுதி 7, எண் 831 இல் உள்ளது. அது திண்டிவனம் திண்டீசுவரர் கோவிலில் தியமங்கலமுடையான் கண்டராபரணன் குணசீலன் மகள் சோழமண்டலத் தென்கரை நாட்டு கொற்றமங்கலமுடையான் வேளாண் சந்திரசேகர இராசராச விழிஞத் தரையனை மணந்து கணவன் வீடு சென்றதற்காக உடையநங்கை என்ற பெயருடைய அவள் நுந்தா விளக்கு எரிக்க 30 பசு கொடுத்துள்ளாள் என்று உள்ளது. கும்பகோணம் திருவிடை மருதூர் கோவிலில் தஞ்சை மராட்டிய மன்னர் பிரதாப சிங்கின் (கிபி 1775) மாமன் மகள் அம்முனு அம்மணி தன் பொன்னான மனதில் அவனையே கணவனாகக் கொள்ள எண்ணி ஏற்ற விரதத்தை முடித்து இலட்ச தீபம் ஏற்றியதற்கு அடையாளமாக  தன் உருவம் ஒத்த பாவை விளக்கை செய்து நிரந்தரமாக கோவிலில்  நிறுத்தினாள். அவள் மன்னனை மணந்தாளா என்ற குறிப்பு அந்த பாவை விளக்கின் பீடத்தில் குறிக்கப்பட வில்லை (காண்க ஆவணம் இதழ் 29, 2018 பக். 189). எனவே திருமணம் ஆக இறைவனிடம் வேண்டுவது ஒரு வகை வேண்டுதல் ஆகும். இப்படி வேண்டுதல் இல்லாவிடினும் பெண்ணுக்குத் திருமணம் கட்டாயம் நடக்கும். ஆனால் படைச் சாதியார் தான் இப்படி வேண்டுவது செய்யும் கல்வெட்டு பொறிப்புகள் கிடைக்கின்றன என்பது அவர்கள் அந்தஸ்தை பேணுவதற்கே வேண்டுகின்றனர் என்று புரிகிறது.

    பார்வை நூல்: தென்னிந்திய கல்வெட்டுகள் தொகுதி 8, எண்: 84 பக். 46, இந்தியத் தொல்லியல் அளவீட்டுத் துறை வெளியீடு

    விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் வட்டம் திருவெண்ணைநல்லூர் கிருபாபுரீஸ்வரர் முன்மண்டப கிழக்கு சுவர் 17 வரிக்கல்வெட்டு

    ஸ்வஸ்திஸ்ரீ ருத்ரோதிகாரி ஆண்டு வைகாசி மாதம் 22 தியதி பெருமாள் / ஆலால சுந்தரம் பெருமாள்  திருவாய் மொழிந்தருளினபடிக்கு திருவெண்ணைநல் / லூர்  கைக்கோளரில் திருப்புவனமுடையார் இலங்கேசுவர தேவனுக்குரிய முறி. / இவந் வரும் சித்திரை மாதம் பதி எட்டு ஐஞ்சாந்திருமுறை ஆட்கொண்டருளிய  சித்திரைத் திருநாள் திருவுலா செய்தருளுகையில் ந / __ _ _ / _ _ _ தேவ _ _ _ ய்ய நாட்டு _ _ _ _ கையில் _ _ _ _ _ / _ _ _ வீரமாயேசுவரர் இருந்த தெருவில் _ _ _ _ / யில் _ _ _ முன்பு பொ _ _ _ ம் என்றும் சொன்னபடிஆலே இந்த _ _ _ த்ருமடைவிளாக வதி _ _ _ / _ _ _ முடையாரிலே வீரமாயேசுவர _ _ _ _ / இந்த திருபுவனமுடைய _ _ _ / மாணிக்கத்தில் மனைக்குக் கீழ்பார்க்கெல்லை பொன்மேந்த சோழப் பல்லவரையர் மனை / க்கு மேற்கு மேற்படியார் பக்கல் கொண்டுடைய _ _ _ மனை ^ ம் பொன் மேய்ந்த சோழன் நாமத்தில் மனையில் கட்டளையில் _ _ _ / மத்தின் விட்ட _ _ _  ஆக தடி _ _ _ னால் பன்னீரடிக் கோலால் குடி _ _ _ / _ _ _ வெட்டி _ _ _ முதல் ஒடுக்குலே பற்றுனால் _ _ _ _ காணி கூட _ _ _

    முறி – ஓலை எழுத்து ஆவணம்

    விளக்கம்: இக் கல்வெட்டு எழுத்தமைதியால் 12-13 நூற்றாண்டினதாகக் கொள்ளப்படுகிறது. வேந்தர் ஆட்சி ஆண்டுக்கு குறிப்பு ஏதும் இல்லை. திருவெண்ணெய்நல்லூரில் வாழும் கைகோளர்களில் (செங்குந்தர்) திருபுவனமுடையார் இலங்கேசுவர தேவன் சித்திரை மாதம் 18 ஆம் நாள் சித்திரைத் திருவிழாவில் தேவாரத்தின் ஐந்தாம் திருமுறையை உலாவின்போது பாடிக்கொண்டு நேரே தன் வழியில் சென்று கொண்டிருந்த வேளையில் அவ் வழியில் ஏதோ கலவரம் நடக்க அதில் அவர் தவறுதலாக கொல்லப்படுகிறார். அவருக்கு திருமடைவிளாகத்தில் பொன்மேந்த சோழபல்லவரையன் பெயரில் அமைந்த வீட்டை அந்த சோழப்பல்லவரையனிடம் இருந்து வாங்கி அந்த வீடும் காணியும் தரப்பட்டதற்கான ஓலை ஆவணம் இது. இந்த ஆவணம் சித்திரைக்கு அடுத்த வைகாசி மாதம் 22 ஆம் தியதி இக்கோவில் இறைவன் ஆலால சுந்தர பெருமானின் கட்டளைப்படி இலங்கேஸ்வர தேவன் இறப்பிற்கு ஒரு மாதம் பின்பு தரப்பட்டது. இக்கல்வெட்டு மாநில தொல்லியல் துறை படிஎடுத்த போது அதிகம் சிதைந்து விட்டதால் மத்திய தொல்லியல் துரையின் ஆண்டறிக்கை 437/1921 இல் இருந்து குறிப்பு எடுக்கப்பட்டது.

    பார்வை நூல்: தமிழ்நாட்டு கல்வெட்டுகள் தொகுதி 15 (விழுப்புரம் மாவட்டக் கல்வெட்டுகள் தொகுதி II), பக். 38-39, தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறை வெளியீடு.

    விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் வட்டம் திருவெண்ணைநல்லூர் கிருபாபுரீஸ்வரர் கோவில் நுழைவுவாயில் வலதுபுறச் சுவர் 21 வரிக்கல்வெட்டு

    விபவ வருஷம் தை _  15 நாள் பெருமாள் ஆலா / ல சுந்தரப்பெருமாள் திருவாய்மொழிந்தருளின / படி நம்மை ஆண்ட தடுத்தாட் கொண்டருளிய  தம் / பிரானார் திருவாய்மொழி மல(ர்)ந்து இராவுத்தநல்லூரில் இருக் / கும் கன்னட பிராமணரில் சவுண்டரசர் மகன் (சோமரா) / சற்கு (கடி)யார  க்ஷேத்திறத்து _ _ _ _ (வி)த்துக் குடுத்த இ / துக்கு குருவி மூலை முதல் தரத்தில் இவற்கு சீவிதமா  / கச்  சேத்துக் குடுத்த பிறஸாதம் இருநாழி இதுக்கு வடக்கு / போய் திருவீதிக்கு தென்சிறகு _ _ _ _ / _ _ _ த்துக்கு மேற்கு முன்னா _ _ _ (பண்டாரத்துக்கு) திருமு / னைப்பாடி நம்பி கொண்ட மனை வடக்கு _ _ _ / கிழக்கு (சோமாசி) _ _ _ விட்ட மனை ஒன்று _ _ _ /  இந்த மனை ஒன்றும் இந்த பிறஸாதமும் இத்த / (ருமம் செய்தாரும்) இவற் வர்க்கத்தில் உண்டானவர்களும் / _ _ _ _ அனுபவித்து _ _ _  வித கிறையத்துக்கு / யோக்கியமாக ஆ(சந்த்ராதித்தவரை)யாக அனுபவித்து /  (திறி)ஸத்தியம் _ _ _ யாரா _ _ _ தம் கற்பித்து / கத்திலே இருக்கவும் இப்படி ஆலால சுந்தரப் / பெருமாள் திருவாய்மொழிந்தருளியபடி(க்கு) / இவை திருமந்திர ஓலை திருமுனைப்பாடி நம்பி / _ _ _ _

    கடியார சேத்திரம் – நேரம் அறிவிக்கும் நிலம்; க்ஷேத்ரம் – வயல்வெளி; திருவாய்மொழி – கட்டளை,

    விளக்கம்: இக்கல்வெட்டு 15-16 ஆம் நூற்றாண்டினதாக கொள்ளப்படுகிறது. வேந்தர் ஆட்சி ஆண்டு குறிப்பு ஏதும் இல்லை. திருவெண்ணை நல்லூர்க் கோவில் இறைவன் ஆலால சுந்தரனின் கட்டளைப்படி இராவுத்த நல்லூரில் வாழும் கன்னட பிராமணர் சவுண்டராசரின் மகன் சோமராசனுக்கு நேரம் அறிவிக்கும் வயல்புறத்தில் பிழைப்பு நிலமாக  2 மாவும், அளவீடு பிரசாதமாக இரு நாழி நெல்லும், ஒரு வீடும் திருமந்திர ஓலை நம்பியால் இவரது வங்கிசத்தார் உள்ளவரை அனுபவித்துவர எழுதி தரப்பட்டது.  இக்கல்வெட்டு ஆங்காங்கே சிதைந்துள்ளதால் மத்திய தொல்லியல் துறையின் ஆண்டறிக்கை 460/1921 இல் இருந்து குறிப்பு எடுக்கப்பட்டது. மேல் உள்ள இரண்டு கல்வெட்டிலும் இறைவன் ஆலால சுந்தரனே நேரடியாகக் கட்டளை இட்டது என்பது சப்தரிஷி நிலை எய்திய சித்தர் ஒருவரின் சித்து வேலை தான் இது என்று அறிய முடிகிறது.

    பார்வை நூல்: தமிழ்நாட்டு கல்வெட்டுகள் தொகுதி 15 (விழுப்புரம் மாவட்டக் கல்வெட்டுகள் தொகுதி II), பக். 155-156, தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறை வெளியீடு.

    தஞ்சாவூர் மாவட்டம்  48 வரி வல்லம் செப்பேடு

    ஆனந்த ஸ்ரீ கார்த்திகை மாதம் 13. வல்லத்து / க்கு தாசா ஒரு பாதையில் வான வாச / மான காட்டுப் பாதையில் தஞ்சாவூர்  ரு / யிந்து வல்லத்துக் பக்கிர சா போ / கச்சே ஒரு பிராமணதிம்மாள் வல்ல / த்தியிருந்து தஞ்சாவூர்க்கு போனாள். / அப்போ கள்ளர் வந்து பிறாமநித்தியே பரி / க்க வந்தா அப்போ ஓடி வந்து பக்கிரி சா / ய்பு காலுலே விளுந்தாள். பக்கிரி சா / ய்பு யிருந்து கொண்டு யிந்த பிறாமணத்தி / உங்கள்க்கு தெயிவமது வாரி அ / வளே தொட வேண்டா மென்று சொ / ன்னாற் சொன்னவிடத்திலே பக்கிரி சாய / பே குத்தினார்கள்.  அந்த பிறாமணத்தி  / எனக் கோசர அல்லோ பக்கிரி சாய / பே குத்தி போட்டார்கள் யென்று அவள் / நாக்கே பிடிங்கிக் கொண்டு செத்துப் போனா / ள்  கள்ளருக்கு யெல்லாம் கன்னு தெரி / யாமல் போச்சுது னாலு சாமத் / துக்கும் கன்னு தெரியாமல் போச் / சுது. அப்போ கல்லர் யிருந்து கொண்டு  / நாங்கள் அறிஞ்சி அறியாமல் செ / ய்து  போட்டோம் யெங்கள்க்கு  / கன்னு வெளிச்சம் தந்திகளே / ஆனா உங்களுக்கு கோவில் கட்டி கொ / னரும் வெட்டிவிச்சு கொளமும் வெட்டிவிக்குறோம். யிந்த சேதி / விசைய ரெகுநாத னாயக்கர் / னாலையிலே யிதுக்கு மானிய நிலம் / 1500 குளி மானியம் நஞ்சை  நி / லவிட்டு  குடுத்தகர்கள், நாயக்கர் கல்லும் / காவேரி பில்லும் பூமி வரைக்கும்  நட / ப்பிவிச்சார்கள். யிந்தப் பாதை கா / சி  றாமேசுரத்துப் பாதை மக்கா மதி / னத்துப் பாதை. துலுக்கநாகப்பட்டவன் / யிந்த மானியத்துக்கு மரிச்சால் ப / ன்னியே அருத்து தின்னான் சூத்திர / ன்னானவன்  மரிச்சால் கெங்கை / கரையில் பசுவே கழுத்தை அரு / த்தான். யிந்த தற்மம் காய்கரி ம / ரவேடை பிரவேடை  அனுபோ / விச்சு கொண்டு போகவும்  யிந்த / தற்ம  அழிவில்லாமல் அனுபோ / விச்சு கொண்டுவரவும் இந்த ப / டிக்கு விசைய ரெகு னாயக்கி னா / னையிலே நடப்பிவிச்சு நடந் / து கொள்ளுகிற தந்மம் யிது / க்கு  மரிக்க தேவையில்லை.  

    தாசா –  போகும் வழி; பக்கிரி சாயுபு – fakir sahib, பிச்சை கொண்டு வாழும் இசுலாமிய துறவி; கள்ளர் – கள்வர், வழிப்பறி கொள்ளையர்; சாமம் – 3 மணி நேரம்; 1500 குழி – நாலரை ஏக்கருக்கு கூடுதல்; மறி – தடு, தடை; வேடை – பயிர் தொழில்;  

    விளக்கம்: வல்லம் தஞ்சைக்கு இடையே 12 கி.மி. தொலைவு  இடைவெளி உள்ளது. இங்கே தஞ்சை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் இச் செப்பேடு குறிக்கும் பிராமணப் பெண்ணின் நினைவுச் சின்னமும் குளமும் கிணறும் உள்ளது.  இச்செப்பேடு தஞ்சை நாயக்கர் ஆட்சியின் போது கி.பி. 1614 இல் ஆனந்த வருடம் திருக் கார்த்திகை மாதம் 13 நாள் வெளியிடப்பட்டது. வல்லத்திற்கு போகும் வழிகளில் ஒரு பாதையில் வனாந்திரமான காட்டுப் பாதை ஊடே தஞ்சாவூரில் இருந்து வல்லத்திற்கு வரும் பிச்சை எடுத்து வாழும் இசுலாமிய துறவியான பக்கிரி (fakir) சாயபு போகையில் எதிரே ஒரு பிராமணப் பெண் வல்லத்தில் இருந்து தஞ்சாவூருக்கு போய்க் கொண்டிருந்தாள். அப்போது வழிப்பறி செய்யும் கள்வர் அப் பிராமணத்தியை பின் தொடர்ந்து வந்து உடைமைகளை பறிக்க வந்தனர். அப்போது அவள் ஓடிச்சென்று பக்கிரி சாயபுவின் காலில் விழுந்து தன்னைக் காப்பாற்றும்படி தஞ்சம் வேண்டி நின்றாள். பக்கிரி சாயிபு அவளை தன் அருகே அழைத்துக் கொண்டு “இந்த பிராமணத்தி அம்மாள்  உங்களுக்கு தெய்வம் மாதிரி அவளைத் தொட வேண்டாம்” என்று எச்சரித்தார். கள்வர்கள் உடனேயே கத்தியை உருவி அந்த இடத்திலேயே பக்கிரி சாயிபுவை குத்திக் கொன்றார்கள். உடனே அந்த பிராமணத்தி அறச்சிந்தனை மேலீட்டால் என்னைக் காப்பதற்காக அன்றோ இவர் கொலையுண்டார் ஆதலால் இவர் சாவிற்கு நானே பொறுப்பாவேன் என்று பதறி அவள் தனது நாவைப் பிடுங்கிப் போட்டு அந்த இடத்திலேயே செத்துப் போனாள். அவளது துயர எண்ணம் கள்வர்களின் பார்வையை பறித்தது. அவர்களும் குருடராகிப்போயினர். இப்படி நாலு சாமம் (அரை நாள்) கண் குருடாக இருந்த கள்வர்கள் நாங்கள் அறிந்தும் அறியாது செய்த பிழையை மன்னித்து எங்களுக்கு கண் பார்வையை மீட்டுத் தந்தால் உங்களுக்கு நினைவுக் கோவில் கட்டி  கிணறும் வெட்டி குளமும் வெட்டுவிக்கிறோம் என்று வேண்டினர். இங்கே நாலு சாமத்திற்கு கண் தெரியவில்லை என்றால் அதன் பின் பார்வை தெரிந்தது என்று தானே பொருள்? ஏனென்றால் செப்பேட்டில் பார்வை வந்தது போல நேரடிக் குறிப்பு ஏதும் இல்லை.

    இந்த அதிசயச் செய்தி மன்னர் விசைய ரகுநாத நாயக்கர் காதுகளுக்கு எட்டியது. அவர் நாளையில் இருந்து இதுக்கு மானியமாக நஞ்சை நிலம் 1500 குழி தானமாக கொடுத்தேன் என்று அறிவித்தார். அதை கொடுக்கின்ற போது நாயக்கர் கல்லும் காவேரியும் புல்லும் பூமியும் உள்ள வரை இது செல்வதாகட்டும் என்று சொன்னார். இந்த தர்ம தானப் பாதை காசி இராமேசுவரம் போன்ற தர்மப் பாதை ஆகும்; மக்கா மதீனா போன்ற புனிதப் பாதையாகும். யாரேனும் ஒரு துலுக்கன் இந்த தர்ம மானியத்தை தடுத்தால் அவன் பன்றியை அறுத்துத் தின்றவன் ஆவான். யாரேனும் சூத்திரன் ஒருவன் தடுத்தால் அவன் கங்கைக் கரையில் பசுவின் கழுத்தை அறுத்தவன் ஆவான். இந்த தர்ம நிலத்தில் காய்கறி, பழ மரங்கள் நடல், பிற வேலைகள் ஆகியவற்றை செய்து அனுபவித்துக் கொண்டு போகவேண்டும் என்று இந்த இடத்தைப் பாதுகாக்கும் பணியாளருக்கு உரிமையாக தருகின்றார். இந்த தர்மம் நின்று விடாமல் தொடர்ந்து நடத்த வேண்டும். இது மன்னன் விசைய இரகுநாத நாயக்கன் ஆணையில் நடத்துவிக்கிற நடந்து கொள்கிற தர்மம் ஆகும். இதை யாரும் தடுக்க வேண்டியதில்லை என்று ஆணையிட்டார் இரகுநாத நாயக்கர். செங்குட்டுவன் பத்தினி தெய்வத்திற்கு கடும் முயற்சியில் இயமத்தின் கல் கொண்டு கண்ணகிக் கோட்டம் எடுத்தது போலல்லாமல் இது தஞ்சை மன்னரின் ஒரு மிகச் சிறு தர்மம் ஆகும்.

    வழிப்போக்கரான இசுலாமிய பக்கீரும், பிராமணப் பெண்ணும் எந்த ஊர் என்ற முகவரி அறியப்படாததால் அவர்தம் பெயர் இச் செப்பேட்டில்  குறிக்கப்படவில்லை எனத் தெரிகிறது. எனவே இறந்தவர் குடும்பங்களுக்கு இழப்பீடு ஏதும் தந்திருக்க வாய்ப்பில்லை. பிராமணத்தி அம்மாள் என்ற சொல்லாட்சி அவள் நடுவயதினள் என்பதைச் சுட்டுகிறது. இந்த  பிராமணப் பெண்ணின் தெய்வீக ஆற்றலுக்காகத் தான் மன்னர் விசய ரகுநாத நாயக்கர் அவராகத் தாமே முன்வந்து பிராமணப் பெண்ணின் நினைவுக் கோவிலைப் பேண 1500 குழி நிலம் தானமாகத் தந்தார். செப்பேடு பேச்சு வழக்குத் தமிழில் உள்ளது என்றாலும் பல சொற் பிழைகளுடனும் பல எழுத்துப் பிழைகளுடனும் இலக்கணப் பிழைகளுடனும்  எழுதப்பட்டுள்ளது. இது தமிழ்ப் படிப்பு செப்பேடு எழுதுவோரிடம் குறைந்து வந்ததோ என்ற ஐயத்தை எழுப்புகிறது. அப்படியானால் நாயக்கர் ஆட்சி தான் தமிழ், தமிழ் பண்பாட்டிற்கு வீழ்ச்சி தந்த ஆட்சி. தமிழகத்தின் இருண்ட காலம் எனலாம். இசுலாமியரிடம் இருந்து மீட்பு என்பது பொய். 

    தமிழ் வேந்தர் ஆட்சிக் கல்வெட்டுகளில் எந்த ஒரு சாதியும் சூத்திரர் என்று குறிக்கப்படவில்லை. இதே காலத்து சேதுபதி மன்னர் கல்வெட்டுகளில் கூட சூத்திரன் என்ற சொல்லாட்சி இல்லை என்பது சிந்திக்கத்தக்கது. ஆந்திரத்தை ஆண்ட காகதீய அரசர்கள் தம்மை சூத்திரர் என்று கல்வெட்டு பொறித்தார்கள். அதன் பின் இசுலாமிய ஆட்சியை ஆந்திரத்தில் ஒன்றுகூடி ஒழித்த நாயக்கர்களில் சில ரெட்டிமார் ஆட்சியாளர் இசுலாமியர் ஆக்கிரமிப்பு, ஆட்சி  ஒழிப்பு எல்லாம் சத்திரியர் இருந்து செய்யவேண்டிய வேலை. அவர்கள் இப்போது இல்லாததால் சூத்திராகிய தாம் அதை செய்ததாக தம்மைச் சூத்திரர் என்று கல்வெட்டு பொறித்தார்கள். இப்படி ஆட்சியாளரே தம்மை சூத்திரர் என கூறிக்கொள்வதன் உள்நோக்கம் என்ன என்று ஆராய்ந்தால் “நானே ஒரு  சூத்திரன் என்றால் எனக்கு கீழ்படிந்த சிற்றசர், அவரைச் சார்ந்த படைத்தலைவர், படை ஆள்கள், பணி ஆள்கள், பொது மக்கள் எல்லோருமே சூத்திரர் (அடிமை) தான்” என்று எல்லோருக்கும் சூத்திர பட்டத்தை கட்டி இடையில் சத்திரியர், வைசியர் என்போர் இல்லாதபடி உளவியல் ரீதியாக அவர்கள் மேன்மை உணர்வு கொள்ளாதபடி செய்வதே ஆகும். அந்த ஆந்திர ஆட்சியாளரின் வழிவந்தவனல்லவா இந்த தஞ்சையை ஆண்ட மன்னன் விசய ரகுநாத நாயக்கன்? ஆகையால், தான் நேரடியாக வெளியிட்ட ஆணைச் செப்பேட்டில் பிராமணரல்லாதாரை சூத்திரர் என்று குறிப்பிடுகின்றான் என்பது இந்த செப்பேட்டில் முக்கியமாக கவனிக்க வேண்டிய வரலாற்றுச் செய்தி ஆகும். தமிழரின் சூத்திரப் பட்டத்திற்கு யார் உண்மைக்கு காரணம் என்பதற்கு இச்செப்பேடு ஒரு நல்ல சான்று ஆகும். இவருக்கு முன்னோனான சேவப்ப நாயக்கருக்கு தொடர்புள்ள கி.பி.1550 கால தஞ்சாவூர் இரயில் நிலைய வடக்கில் உள்ள மசூதி கல்வெட்டிலும் இப்படி சூத்திரன் என்ற சொல்லாட்சி உள்ளது (காண்க ஆவணம் இதழ் 4, 1994, பக். 102 &103). தமிழனை சூத்திரன் ஆக்கிவிட்டால் அவன்  செல்வத்தையும் கல்வியையும் நோகாமல் பறித்துவிட முடியும். இப்படி தெலுங்கு ஆட்சியாளரால் தமிழர் மீது திணிக்கப்பட்ட இந்த சூத்திரப் பட்டத்திற்கு எதிராகத் தான் அதே தெலுங்கு சாதியில் பிறந்த ஈரோட்டுக்காரர் திராவிடத்தின் பெயரால் சுயமரியாதை இயக்கம் கட்டினார். சூத்திரன் என்றால் அடிமை என்ற உண்மைப் பொருளை மறைத்து வேறு ஒரு பொருத்தமற்ற சொல்லால் பரத்தை மகன் என்று எழுத்திலும் பேச்சிலும் அவரால் தமிழன் இழிவு செய்யப்பட்டான் என்பது வரலாற்று வேடிக்கை. இதற்கு தமிழன் இதுவரை எந்த எதிர்வினையும் ஆற்றவில்லை மாறாக அவ் விடத்திலேயே அடைக்கலம் ஆனான். தமிழர் மீதான இந்த சூத்திர பட்டத் திணிப்பு தஞ்சை நாயக்கர் தொடங்கி தமிழகம் முழுமைக்கும் பரவியதற்கு தெலுங்கு நிலவுடைமை ஆண்ட பரம்பரை படைச் சாதியாரே காரணம் என்பது வரலாறு. இதற்கும் இந்து மதத்திற்கும் எள்ளளவும் தொடர்பில்லை என்று தெளிக. இது தெலுங்கு திராவிடத்தாரின் குற்றம் என்பதால் இந்த செப்பேட்டைப் பற்றி திராவிடம் ஒருபோதும் மேடையில் பேசத் துணியாது. பார்க்கலாம் இனியாவது இந்த நிலவுடைமைச் சாதிகளைக் குற்றம் சாட்டும் துணிவுள்ளவர் வேறு யார் என்று. ஆனால் தமிழக கம்யூனிசமும் தலித்தியமும் இதை பேச முன் வரலாமே. எப்போதுமே திராவிடப் பொய்களைப் பிடித்துக்கொண்டு தான் ஊர்ந்து போக வேண்டும் என்ற கட்டாயம் ஒன்றும் இவர்களுக்கு இல்லையே!! மேடையும் உமது, ஒலிவாங்கியும் உமது, முன் நிற்கும் மக்களும் உமது கருத்தியல் மக்கள் தானே பின் என்ன தயக்கம்? இதற்கு முதலில் உண்மையின் மீது நாட்டமும், குற்றம் யார் செய்யினும் குற்றமே என்ற அறத் துணிவும் (moral courage) வேண்டும். அதை வளர்த்துக் கொள்ளல் வேண்டும்.

    பார்வை நூல்: வரலாற்றில் வல்லம், ச. கிருஷ்ணமூர்த்தி, பக். 108 – 109 

    சிவகங்கை மாவட்டம் படமாத்தூர் ஊராட்சி சித்தாலங்குடி கிராமம் வல்லப சுவாமி 9 வரிக் கல்வெட்டு

    1. 1861 (1000 800 60 1) சதுர்தசி கரியான தமிள துன்மதி ஆண்டு
    2. வையாசி  மாதம். 26 நாள். மகாராஜா  ச
    3. த்திரபதி போதகுரு மகாராஜா அவற்கள்  பி
    4. ரான் மலைக்கி வேங்கைப்புலி வேட்டைக்கி ச
    5. வாரி விஜயமாகும் போது படமாதூரிலிருக்கும்
    6. யிஷ்ட குல தெய்வமாய வல்லப ஸ்வாமிக்கி செ
    7. யிது கொண்ட பிரார்த்தனைப்படிக்கி புலி
    8. யை சுட்டுக் குத்தினதுனாலேயும் யிந்
    9. த திருமதிலக் கட்டினது

    கரியான – கிருஷ்ணபக்ஷமான; சவாரி – குதிரை மீது ஊர்ந்து;

    விளக்கம்: ஆங்கிலர் ஆட்சித் தாக்கம் காரணமாக கல்வெட்டில் கிரிகேரியன் ஆண்டும் குறிக்கப்படுகிறது. தமிழ் துன்மதி ஆண்டு வைகாசி மாதம் 26 ஆம் நாள் சதுர்தசி கிருஷ்ணபக்ஷம் அன்று (07/06/1861, வெள்ளிக்கிழமை) சிவகங்கை அரச மரபில் வந்த மகாராஜா சத்திரபதி போதகுரு மகாராஜா பிரான்மலைக்கு வேங்கைப்புலி வேட்டையாடக் குதிரைமீது செல்லும்போது அதற்கு முன் படமாத்தூரில் இருக்கும் தன் குலத்து இஷ்ட தெய்வமான வல்லப சாமியை வேண்டி வணங்கி வேட்டையில் புலியைச் சுட்டுக் குத்திக் கொன்றபடியால் இந்த மதிலை தன் வேண்டுதல்படியே கட்டுவித்தார் என்கிறது கல்வெட்டு.

    புலி வேட்டையில் தனக்கும் தன் பணியாட்களுக்கும் புலியால் எந்த ஊறும் நேராமல் புலியை விரைந்து கண்டு சுட்டுக் கொன்று விட்டால் மதில் கட்டுவதாக வேண்டி இருக்கலாம். உயிர் அச்சம் யாரை விட்டது அதனால் இப்படி குல தெய்வத்தை துணைக்கு அழைப்பது ஒன்றும் புதிதல்ல. வேண்டுதலில் பாதுகாப்பு வேண்டுவதும் ஒரு வகையே.

    பார்வை நூல்:  2021 ஆம் ஆண்டு மார்ச்சு மாத நாளேட்டுச் செய்தி

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர் பேட்டை வட்டம் பக்தஜனேஸ்வரர் கோயில் திருநாவலூர் மண்டபத்தின் கிழக்கு சுவரில் உள்ள 7 வரிக் கல்வெட்டு

    1. ஸ்வஸ்திஸ்ரீ உடையார் திருத் தொண்
    2. டீஸ்வரமுடைய நாயநார் ரேவ(ல்)லாலே 
    3. இவ்வூர் வியாபாரி வேளூர் கிழவந்
    4. பள்ளி பட்டணசுவாமி பெரியா
    5. ன் இத்திருமண்டபம் இரண்டும்
    6. செய்த்து கீழைத் திருவாசலுந் திற
    7. ந்து அத்திருவாசலும் செய்வித்தாந்

     திருவாசல் – கதவு, வாயில், doorway

    விளக்கம்: இதன் காலம் தெரியவில்லை மன்னர் ஆட்சிஆண்டு குறிப்பு இக்கல்வெட்டில் இல்லை. இந்த திருத்தொண்டீஸ்வரம் கோவில் இறைவன் ஏவலால் (கனவிலோ அல்லது மனக்குரலாகவோ / inner voice கேட்டு) இந்த ஊரைச் சேர்ந்த வணிகன் வேளூர் கிழவன் பள்ளியான பட்டணசுவாமி பெரியான் என்பவன் இந்த திருமண்டபம் இரண்டையும் செய்ததோடு கிழக்கில் வாசலைத் திறந்து அதற்கு கதவும் செய்து வைத்தான்.

    பார்வை நூல்: தென்னிந்திய கல்வெட்டுகள் தொகுதி 7, எண் 1002 ARE NO 372 of 1902 பக். 477

    தஞ்சை மாவட்டம் திருவாரூர் வட்டம் தியாகராஜர் திருக்கோவில் இரண்டாம் பிரகாரம் தெற்கு பிரகாரம் வடபுறச் சுவர் 8 வரி நெடிய கல்வெட்டு 

    1. ஸ்வஸ்திஸ்ரீ பூமாலை மிடைந்து _____ தலை
    2. த்தலை சிறப்ப _______ ஒப்பாகி தெரிவையர்
    3. திலதன் தியாகப் ______ கோப்பரகேசரி வன்மரான திருபுவன சக்ரவத்திகள் ஸ்ரீ விக்கிரம சோழ தேவர்க்கு யாண்டு அஞ்சாவது மிதுன ஞாயிற்று பூர்வ பட்சத்து சப்தமியும் ஞாயிற்றுக் கிழமையும் அத்தமமான நாள் முன்னூற்று நாற்பதினால் கேயமாணிக்க வளநாட்டு   திருவாவூர் கூற்றத்து திருவாரூருடையார் வீதி விடங்கர் சித்திரைத் திங்கள் திருநாளில் சதய _ _ _ சி தேவர் ஸ்ரீ _ _ _  திருக்காவணத்தில் சிம்மாசனத்து எழுந்தருளியிருந்து  பதியிலாளர் தியாக விநோதத் (தலைக் கோலியை ஆட்டகொண்டருளா நிற்ப ஸ்ரீகாரியம் சுப்பிர
    4. மங்கலமுடையான் மாதவன் ரவியான மானாலாய மூவேந்த வேளார் விண்ணப்பத்தினால் பதிபாத மூலப் பட்டுடை பஞ்சாட்சரிய தேவ கன்மிகளுக்கும் கோயிலங்  _ _ _ யார்க்கும் திருவாய் மொழிந்தருளினபடி நம் ஏவலால் பூலோக ராஜ்யம் செகிற  சூரியபுத்திரன்மனு தன் புத்திரன் ஏறிவருகிற தேரில் பசுவின் கன்று அகப்பட்டு  பிரமாதப்பட அதின் மாதாவான சுரபி கண்டு துக்கித்து மனுவின் வாசலில் மணியை எறிய அது  கேட்டு மனு தன் மந்திரி இங்க நாட்டுப் பாலையூருடையான் உபயகுலாமனைப் பார்த்து நீ சென்று இதனை அறிந்து _ _ _ _ வாயிற்புறத்து ஒரு பசு மணியெறியா நின்றது என்று சொல்ல அது கேட்டு மனு புறப்பட்டு பசுவையும் பட்டுக் கிடந்த _ _ _ _ படி வினவ தன புத்திரன் ஏறின தேரி
    5. லே பட்டமை அறிந்து அக்கன்றுக்கு நேராக தன புத்திரன் பிரிய விருத்தனை தேரிலே ஊர்ந்து கொடுக்க வென்று உபய குலாமனுக்குச் சொல்ல அவன்  சதோபத்தோடும் புறப்பட்டு தன செவிகளை தரையிலே குடைந்து கோடுபட்டது கண்டு துவாரபாலகன் புகுந்தது உபயகுலாமன் தன் செவிகளை குடைந்து கொண்டு _ _ _ _  தும்மிதனாய் மனுதானே புறப்பட்டு தன் புத்திரனை தானே தேரிலே ஊர்ந்து  கொடுக்க அப்போதே நாம் அவனை அனுக்கிரகித்து கன்றுக்கும் மந்திரிக்கும் மனு புத்திரனுக்கும் ஜீவன் கொடுக்க அது கண்டு மன சந்தோஷித்து கன்றினை எடுத்துக் கொண்டு பசுவிற்கு காட்டிக் குடு _ _ _ டாபிஷேகம் பண்ணி இவனுக்கு உபயகுலாமலன் மகன் சூரியனை மந்திரியாக்கி இவனுக்கு தன் புத்திரன் மாளிகை _ _ _ மங்கல _ _ _ _  மூரும் கொடுத்து மனுவும் உ
    6. பயகுலாமலனும் தவசினை தலை நின்றமையில்  பாலையூருடையான் உபயகுலாமலன் வம்சத்தானாகிய பாலையூருடையார் சந்திரசேகரன் ஆதி விடங்கனான குலோத்துங்க சோழ மகாபலி வான(திராயர்) வம்சாதி ஆக வருகிற மாளிகை மனை பழையபடி மாளிகையாக எடுத்து எடுத்து குடி வைப்பிப்பதாக நாம் சொல்ல _ _ _ _  இதிலே நித்தமும் நம் அடியார்க்கு சோறு இடப்பெற வேணுமென்று  இவன் நமக்கு சொன்னமையில் காட்டிப் பெறுவதாகவும் இம்மாளிகை வம்சாதிஆக ஸ்வயமாய் வரு _ _ _ மாளிகையிலே எழுத்துவெட்டுபித்து கொடுக்க வென்று இப்படிக்கு வெட்டிக்கொடுக்க வென்றும் திருவாய் மொழிந்தருள திரும _ _ _ தியாக விநோத பிரம்ம மகாராஜன் எழுத்தினால் புகுந்த திருமுக _ _ _ _
    7. பாலையூருடையான் சந்திரசேகரன் ஆதி விடங்கனான குலோத்துங்க சோழ மகாபலி வானாதி ராஜனுக்கும் மனுவுக்கு மந்திரியானவன் தன் வம்சத்தில் பாலையூருடைய உபயகுலாமலன் மனுவின் பக்கம் பெற்றுடைய மாளிகை மனை தனக்கும் _ _ _ _ நாம் காணியாகத் தந்தோம்.  இம்மாளிகை பழ _ _ _ப _ _ _  மனை நிலத்துக்கு கீழ்ப்பார்க்கெல்லை தாது _ _ _ _  முடுக்குக்கு மேற்கும் தென்பார்க்கெல்லை _ _ _ வடக்கும் மேல்பாற்க்கெல்லை அரு மொழீஸ்வரமுடையார் தளிச்சேரி பால் நத்தத்துக்கு கிழக்கும் வடபார்க்கெல்லை பாலையூருடையான் மாளிகைத் தெரு
    8. வுக்கு தெற்கும் இவ்விசைந்த பெரு நான்கெல்லை நடுவுபட்ட மாளிகை மனை குழி நூற்றிருபதும் பாலையூருடையான் சந்திரசேகரன் ஆதிவிடங்கனான குலோத்துங்க சோ மகாபலி வாணராஜனுக்கு வம்சாதியாக ஸவமானப்படி ஸ்ரீ மாகேஸ்வரருக்கும் பதிபாத மூலுப் பட்டுடை பஞ்சாட்சரிய தேவர் கன்மிகளுக்கும்  _ _ _ ர்க்கும் உடையார் வீதிவிடங்க தேவர் திருவாய்மொழி _ _ _ _ தச்சரில் _  _ ந்தமுடைய தச்சன் கோபூம்பன்  அ _ – _ போக் கோயில் ஆசாரியன் கல்வெட்டியது.  இது பன் மாகேஸ்வர _ _ _

    மிதுன ஞாயிறு – ஆனி; பூர்வபக்ஷம் – வளர்பிறை; திருக்காவணம் – பந்தல், மண்டபம்; பிரமாதப்பட – கொல்லப்பட; எறிய – அடித்தல், உதைத்தல்; சதோபம் – செருக்கு; குடை – அராவி; கோடு – நடுநிலை தவறி;  தும்மிதன் – வெகுண்டவன்;

    விளக்கம்: விக்கிரம சோழனின் 5 ஆம் ஆட்சி ஆண்டு கிபி. 1123 இல் வெட்டப்பட்ட கல்வெட்டு இது. முதல் இரண்டு வரிகளில் விக்கிரம சோழனின் மெய்க்கீர்த்தி இடம் பெறுகிறது. அவனது 5 ஆம் ஆட்சி ஆண்டு ஆனி மாதம் வளர்பிறை 7 ஆம் நாள் ஞாயிற்று கிழமை அஸ்த நட்சத்திர கூடிய நாள் 340 ஆம் நாள் கேயமாணிக்க வளநாட்டுப் பிரிவில் அடங்கிய திருவாரூர் கூற்றத்தின் திருவாரூருடைய கோவில் வீதி விடங்கர் சித்திரைத் மாத திருநாளின் போது சதய நட்சத்திரம் கூடிய அன்று வேந்தர் திரு விக்கிரம சோழர் பந்தலின் கீழ் அரியணையிட்டு அமர்ந்திருக்க அப்போது பதியிலார் தியாகவிநோதத் தலைக்கோலி ஆடுவதை பார்த்துக் கொண்டிருந்தார். அரச அலுவலன் சுப்பிரமணிய மங்கலம்முடையான் மாதவன் ரவியான மானாலாய மூவேந்த வேளார் வேண்டிக்கொள்ள பதிபாதமூலப் பட்டுடை பஞ்சாட்சரிய தேவ கன்மிகளுக்கும் கோயிலங்காடியார்க்கும் சோழன் கட்டளையாகச் சொன்னது. (இங்கே இறைவன் சொல்லுவது போல) நம்முடைய திட்டப்படியான நிகழ்வின்படி மண்ணுலகில் அரசாள்கிற சூரிய புத்திரன் மனுவின் மகன் (இளவரசன்) ஏறிவரும் தேரின் சக்கரத்தில் பசுவின் கன்று ஒன்று அகப்பட்டு கொல்லப்பட அதன் தாய்ப் பசு அதைக் கண்டு வருந்தியது. உடனே மனுவின் அரண்மனை வாயிலில் கட்டப்பட்டிருந்த மணியை அடித்து ஒலியெழுப்பியது. அதை செவியுற்ற மனு தன் அமைச்சன் இங்கநாட்டின் பாலையூருடையானான உபயகுலாமலனை நோக்கி ‘நீ சென்று என்ன காரணம் என்று அறிந்து வா’ என்று அனுப்பினான். அங்கே வாயிற் புறத்தில் ஒரு பசு மணியை அடித்தபடி இருந்தது. அதை சொன்ன போது மனு தானே நேரில் சென்று பசுவையும் தேரில் இறந்த கன்றையும் பார்த்தான். இதற்கான காரணத்தை வினவிய போது தனது மகன் ஏறிய தேர் சக்கரத்தில் அடிபட்டு கன்று இறந்துவிட்டது என்று அறிந்து கொண்டான்.

    இதனால் அரசன் சூரியபுத்திரன் மனு, அக்கன்றுக்கு நேராகத் தன் மகன் பிரியவிருத்தனை படுக்கவைத்து தேரை ஏற்றிக் கொல்க என்று அமைச்சன் உபயகுலாமலனுக்கு ஆணையிட்டான். அவனும் அரச கட்டளையை நிறைவேற்றும் செருக்கோடு நடந்துசென்றான். அப்போது இந்த இக்கட்டான நிலையைத் தடுக்க அமைச்சன் தன் காதுகளைக் குடைந்து அறுத்து எறிந்து நடுநிலை தவறி உயிர்விட்டதை பார்த்த வாயிற்காவலன் அரசனிடம் சென்று உபயகுலாமலன் தன்  காதுகளை அறுத்தெறிந்து இறந்ததைக் கூறுகிறான். உடனே வெகுண்டெழுந்த மனு தானே சென்று தன் மகன் பிரிய விருத்தனைப் படுக்க வைத்து தேரை அவன் மேல் ஓட்டிக் கொன்றான். உடனே நாம் (இறைவன்) அவனுக்கு அருள்புரிந்து அமைச்சனுக்கும் கன்றுக்கும் இளவரசனுக்கும் உயிர் கொடுத்து எழுப்ப அது கண்டு மகிழ்ந்த அரசன் சூரியபுத்திரன் மனு கன்றைக் கையில் ஏந்தி பசுவிடம் கொண்டு விட்டான். தன் மகன் பிரிய விருத்தனுக்கு பட்டாபிஷேகமாம் மணிமுடி சூட்டி இவனுக்கு அமைச்சன் உபயகுலாமனின் மகன் சூரியனை அமைச்சனாக்கி அவனுக்கு தன் மாளிகையில் அலுவல் கொடுத்து மங்கல _ _ _  ஊரும் கொடுத்து விட்டு சூரியபுத்திரன் மனுவும் அமைச்சன் உபயகுலாமலனும் தவ வாழ்க்கை ஏற்று துறவு பூண்டமையால் பாலையூருடையான் உபயகுலாமலன் வழிவந்த பாலையூருடையான் சந்திரசேகரன் ஆதி விடங்கனான குலோத்துங்க சோழ மகாபலி வாணாதிராயர் வங்கிசத்தில் வழிவழியாய் வருகிறவர் மாளிகை மனையை பழைய படியே மாளிகையாக கட்டிக்  குடிபுகலாம் என்று நாம் (உத்தம சோழன்) உரிமை கொடுத்தோம். இந்த மாளிகையில் எப்போதும் நம்முடைய அடியார்களுக்கு சோறு இட வேண்டுமென்று அமைச்சன் வாணாதராயன் நம்மிடம் கோரிக்கை வைக்க அவ்விதமே ஆகட்டும் என்றும் இனி இம்மாளிகை இவன் வமிசத்தாருடையதாக வருவதாக மாளிகையில் எழுத்து வெட்டுவித்து கொடுக்க வேண்டி இப்படியாக வெட்டிக்கொடுக்க என்று வேந்தன் கட்டளையிட திருமந்திர ஓலை தியாக வினோத பிரம்மா மகாராஜன் எழுத்தினால் ஏற்பட்ட வேந்தன் ஆணை இது.

    பாலையூருடையான் சந்திரசேகரன் ஆதி விடங்கனான குலோத்துங்க சோழ மகாபலி வாணாதிராஜனுக்கு மனுவுக்கு அமைச்சனானவன் தன்  வம்சத்தில் பாலையூருடைய உபயகுலாமலன் என்பவன் மனுவிடம் இருந்து பெற்ற மாளிகை, மனை ஆகியவற்றை நாம் உரிமையாகத் தந்தோம். இந்த மாளிகை இருக்கும் இடம் கல்வெட்டில் குறிப்பிடப்படுகிறது ஆனால் அந்த இடம் கல்வெட்டில் சிதைந்ததால் தெளிவாகப் புரியவில்லை. இது மாகேஸ்வரருக்கும் பதிபாத மூலப்பட்டுடை பஞ்சாட்சரிய தேவ கன்மிகளுக்கும் இறைவன் வீதிவிடங்க தேவர் சொல்லால்  அறிவிக்கப்படுகிறது. இதை கோவில் ஆசாரி கல்லில் வெட்டினான். வீதி  விடங்க தேவர் பெயரில் யாரோ ஒரு சப்தரிஷி இந்த உயிர்ப்பிக்கும் சித்தை நிகழ்த்தியுள்ளார் என்று உணர முடிகிறது.

    இக்கல்வெட்டு பெரிய புராண மனுநீதிச் சோழன் கதைக்கு அடிப்படையாக அமைந்த கல்வெட்டாகும். காலத்தால் அந்நூலுக்கு சற்று முற்பட்டது. அது உத்தம சோழன் காலத்தில் எழுதப்பட்டது என்றால் இந்த நிகழ்வு முதற் குலோத்துங்க சோழன் காலத்தில் நடந்திருக்கும் என்று தெரிகிறது. இது தான் கல்வெட்டிலும் சுட்டிக் காட்டப்படுகிறது. சூரிய புத்திரன் மனு திருவாரூரின் அரையன் / சிற்றரசன் அரசன் என்று தெரிகின்றது. ஆனால் இவன் சோழர் குடியைச் சேர்ந்தவன் என்பதற்கு எந்த குறிப்பும் கல்வெட்டில் இல்லை. இவனது அமைச்சன் வாணர் குலத்தை சேர்ந்தவன் என்று தெரிகின்றது.

    பார்வை நூல்: திருவாரூர்க் கோயில், கல்வெட்டு எண் 27, பக் 351 – 354, குடவாயில் பாலசுப்ரமணியம் & தென்னிந்திய கல்வெட்டுகள் தொகுதி 5 எண் 456

    காஞ்சிபுரம் மாவட்டம்  ஆரப்பாக்கம் திருவாலீஸ்வரர் கோவில் முதன்மைக் கோவிலின் தென் சுவரில் உள்ள 62 வரிக் கல்வெட்டு

    ஸ்வஸ்திஸ்ரீ /(இரண்டாம் இராசாதிராச சோழன் மெய்க்கீர்த்தி) யாண்டு ஐஞ்சாவது ஈழப்படை பாண்டிமண்ட / லத்தை கைக்கொண்டு மதுரையிலே யிருந்தராஜா குலசே / கரனை போகத் துரத்திப் பின்பு மஹாராஜா ஸ்ரீ ராஜாதிராஜ தேவ / ஸாமந்தரோடே பூசல் போரத் துடங்கி தொண்டி பாசி பிரதேச / த்திலே பூசலுண்டாய் அபாயத்திலே ஈழப்படை ஜயித்த / வாறே சோழமண்டலத்திலும் மற்றுள்ள னாட்டுக்களிலு முள் / ள ஜநங்களெல்லாம் பயப்பட்டமையைக் கேட்டு எதிரி / சோழச் சம்புவராயநேந் இநக்கு யிது எங்ங நேயாமோவென்று விசா / ரந் தோன்றி ஸ்வாமிதேவர் ஸ்ரீபாதத்தேறச் செந்று இப்படி புகுந்த / து ஈழப்படையாகிறது சாலப்பாப கர்ம்மாக்கள் அவர்கள் சோழ மண்ட / லத்தெல்லையிலே புகுதில் ஸ்ரீமஹாதேவர் கோயிலுள்ளிட்ட தேவர்க / ள் கோயிலுக்கும் ப்ராஹ்மணர்க்கும் ராஷ்ட்ரத்துக்கு மடங்க விரோதமுண்டா / யிதுக்குப் பரிஹாரமாக ஜபஹோமார்ச்சநங்களாலெல்லாப்படியாலு / ம் அபூஷ்ட்ரமதம்  பண்ணியருள வேணுமென்று விண்ணப்பஞ் செய்ய தே / வர் அருளிச் செய்தருளுகிறார் ஈழப்படையாகிற இது சாலப் பாபிஷ்டருமாய்  துர்ஜநருமாய் திருவிராமீஸ்வரத்தில் தேவர் கோயிலைத் திருக்காப்புக் கொண் / டு பூசை முட்டப்பண்ணி அங்குள்ள ஸ்ரீபண்டார மெல்லாம் கைக்கொண்டு / ஸிவத்ரோஹிக ளெந்நு மிடம் மறித்தோம் அவர்கள் பூசலிலே அறப்பட்டு / துரப்புண்டு போம்படிக்கு அத்ருஷ்ட முகத்தாலே வேண்டும் ய / த்நம் பன்ணுகிறோமென்றருளிச் செய்து  இருபத்தெட்டு நாள் அஹோர / ஸுபூஜை பண்ணியருளிநார். இதுக்குப் பிந்பு பிள்ளை பல்லவராயர் / பாடு நின்று மிநக்கு ஓலை கொண்டு தூதர் வந்தார்கள். அதில் ஜயத்ரத தண்ட நாயக் / கநும் லங்காபுரி தண்ட நாயக்கநு முள்ளிட்ட ப்ரதாநிகளும் படையுமட / ங்கப்பட்டு ஓடிப் போசது மென்று சொல்லி வந்தது. இப்பட்டாங்கை தேவர் ஸ்ரீ பாதத்திலே ஸம்ப்ரமத்துச் சொ _ _ _ _ நான் தேவர் செய்தருளிந அத்ருஷ்ட யத்நமாய் / இப்படி பலித்ததென்று விண்ணப்பஞ் செய்து “தேவர் ஸ்ரீ பாதபூஜையாக னான் தரு / வேநென்று விண்ணப்பஞ் செய்ய” நீர் நமக்கு முன்பேதேநும் குறையாகச் செய்ததுண்டோ /   அவஸ்யமேதேநும் தரவேணு மென்றிருந்ததாகில் ஆல் பாக்கமாகிற ஊரைச் செம்பிலும் / கல்லிலும் வெட்டித்தருவ தென்றருளிச் செய்ய ஜயங்கொண்ட சோழமண்டல / த்து எயிற் கோட்டத்து மாகறல் நாட்டு ஆல் பாக்கத்துப் புஞ்சை நஞ்சை அகப்பட விளை நில / ம் நூற்றறுபத்தேழு வேலியும் எரிகோளும் நத்தமும் குட்டமும் கிணறும் மேநோக்கிந மரமு மகப் / பட நாற்பாற்கெல்லை உள்பட நிலம் வெள்ளைவாரி பண்ணிக்கக் கூலி தறி யிறை தட்டார் / பாட்ட மந்தராயம்பாட்ட முட்பட ஆயமெல்லா மகப்பட்ட ஏகபோக இறையிலியாக கௌ / ட தேசத்து தக்ஷிணராடத்து கங்கோலி ஸாவர்ண்ண கோத்ர மஹா மஹேஸ்வர ஸ்ருதி ஸ்ம்ர்தி சிந்தி /த கார்ஹஸ் தந்மாஸ்ரித உமாபதி தேவராந ஞாநஸிவ தேவற்கு நீர்வார்த்து ஸூர்ய்ய சந்த்ரர் களுள்ள தி / நையும் செல்வதாகக் கல்லிலும் செம்பிலும் வெட்டிக் குடுத்தேன் எதிரிலி சோழச்சம்புவ_ _ _ /  த்யநம் ஈழப்படை சோழமண்டலத்தில் புகுதாமைக்கும் பூசலிலே பட்டு ஓடிப்போகைக்கு மீ / ளயாவர் சிலர் சோழராஜ்யத்துக்கு ராஜாவாநார் அவர்கள் பரிபாலிப்பது. எங்கள் வம்ஸத்து / தர்ம்மம் பரிபாலித்து யாவநொருவ நிந்த தர்ம்மம் பரிபாலியாதொழி கிறாந்  அவந் கங் _ _ _ பித்ருபதமும் மாத்ருபதமும் பிராம்மணி பதமும் ஸிவத்துரோஹமும்  பண்ணினார் பட்ட  _ _ / சம்புவராயர் அருளிச் செய்ய கல்லிலே எழுத்து வெட்டிநேந் பொருளாசாரியநே _ _ _ ( எஞ்சியவை சமசுகிருதத்தில் உள்ளன)

    பாசி – மீன்பிடிப்பு பகுதி; சாமந்தர் – உயர் படைத் தலைவர்;  பூசல் – வலுச்சண்டை, skirmish; விசாரம் – கவலை; சுவாமி தேவர் – வேந்தனின் ஆசான், அரசகுரு; அறப்பட்டு – முழுவதும் வீழ்ந்து; துரப்புண்டு – துரத்தப்பட்டு; அத்ருஷ்ட முகம் – கண்கட்டி; யத்நம் – வேள்வி; அகோர – ஒரு மாத; பாடு – பால் இருந்து; போசது – போச்சுது; இனக்கு – எனக்கு; பட்டாங்கு – நடப்பு உண்மை, யதார்த்தம்; ஸம்ப்ரம – தெளிவாக சொல்லி; வெள்ளை வாரி – நீரட்டி;

    விளக்கம்: இரண்டாம் இராசாதிராஜா சோழனின் 5 ஆம் ஆட்சி ஆண்டு 1171 இல் வெட்டிய கல்வெட்டு இது. பராக்கிரம பாண்டியன் மதுரையையும் குலசேகர பாண்டியன் நெல்லையையும் ஆண்டு கொண்டிருந்தனர். குலசேகரன் மதுரையை முற்றுகையிட்ட போது இலங்கை வேந்தன் பராக்கிரம பாகுவின் துணையை நாடினான் பராக்கிரம பாண்டியன். அதற்குள் பராக்கிரம பாண்டியன் கொல்லப்பட்டு குலசேகரன் மதுரையை கைப்பற்றினான். அப்போது இலங்கை வேந்தன் பராக்கிரமபாகுவின் படை ஜயத்ரத தண்டநாயக்கன், இலங்காபுரி தண்டநாயக்கன் தலைமையில் பாண்டிய மண்டலத்தை கைப்பற்றி குலசேகரனைத் துரத்தி விட்டது. பின்பு சோழன் இராராதிராசன் போர்படைத் தளபதிகளுடன் தொண்டி மீன்பிடி பகுதியில் போர்த் தொடங்கியது. தொடக்கத்தில் சோழப்படை பின்னடைவைச் சந்தித்தது. வெற்றிகொண்ட ஈழப்படை சோழமண்டலத்திலும் புகுந்து அட்டூழியம் செய்தது. இச்செய்தி எதிரிலிச்சோழ சம்புவராயரின் செவிகளுக்கு எட்டியது. இதனால் கவலையுற்ற சம்புவராயர் இராசாதிராசனின் அரசகுருவிடம் ஈழப்படை அட்டூழியம் செய்து சிவன் கோவில், பிராமணர், நாட்டிற்கு அழிவு செய்கிறது இதற்கு ஜெப ஓம பரிகாரங்களை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைக்க ஈழப்படை இராமேஸ்வரம் கோவிலை கைப்பற்றி பூசைகளை நிறுத்தி கருவூலத்தை கொள்ளையிட்டது என்று சொல்லியபோது அரசகுருவும் அப்படியே ஆகட்டும் என்று சொல்லி கண்காணாத முகத்தாலே யக்ஞம் செய்து எதிரிப்படை முழுவதும் வீழ்ந்து துரத்தப்படும் வேள்வி செய்வதாக ஒப்புக்கொண்டார். 28 நாள் தொடர்ச்சியாக ஒரு மாதம் அந்த வேள்வியை செய்து முடித்த பின்னர் பிள்ளை பல்லவராயர் பால் இருந்து எனக்கு  தூதுவர்கள் ஓலை கொண்டுவந்து தந்தார்கள். அதில் ஈழப்படை அடக்கப்பட்டு ஓடிப்போனதாகச் செய்தி இருந்தது. இந்த உண்மைநடப்பை அரசகுருவிடம் தெளிவாகச் சொல்லி அவர் செய்த வேள்வியால் தான் இப்படி நிகழ்தேறியது என்று சொல்லி இதற்கு நான் உமக்கு நன்மதிப்பு தருவேன் என்று சொன்ன போது அவர், “நமக்கு முன்னர் ஏதும் குறைவாக செய்ததில்லை எனவே தேவைப்படாது”, ஆயினும் கட்டாயம் தர வேண்டும் என்று இருந்தால் ஆல்பாக்கம் என்ற ஊரை இறையிலித் தானமாக கல்லிலும் செம்பிலும் வெட்டித்தருக என்று சொன்னார். எனவே மாகறல் நாட்டில் அமைந்த ஆல்பாக்கத்தில் நஞ்செய், புஞ்செய் விளை நிலம் 167 வேலி எல்லா வரியும் நீக்கி இறையிலியாக நீரட்டிக் கொடுத்தேன் வங்காளத்து தக்ஷிண ராஷ்டிரத்து கங்கொலி சாவர்ண்ண கோத்திரத்து மகேசுவர சுருதிஸ்ம்ரிதி சிந்தித உமாபதி தேவரான ஞான சிவதேவர்க்கு என்கிறான் எதிரிலி சோழ சம்புவராயன். இது ஈழப்படையை துரத்தி மீண்டவர், சோழ வேந்தர் காக்க வேண்டும், எமது வங்கிசத்தார் ஆகியோர் பாதுகாக்க வேண்டும் என்று மேலும் சில வரிகள் சமசுகிருதத்தில் முடிகின்றன. பாண்டியர் படை இரு அணியாகளாகப் பிளந்து ஒரு அணி சிங்களப் படைப் பக்கம் சாய்ந்ததால் குலசேகரன் படையால் சிங்களப் படையை எதிர்கொள்ள முடியாது போனது போலும். எனினும் இதில் சோழர் படையின் வலுவும் குன்றிய அறிகுறி பின்னாளில் கோப்பெருஞ்சிங்கர், பாண்டியர், போசளரும் எதிர்க்கும் துணிவை தந்துவிட்டது எனலாம். இந்த ஈழப்படை யெடுப்பு தொடர்பான இன்னொரு கல்வெட்டை பக். 42 – 44  Select Inscriptions of Tamilnadu நூலில் காண்க.

    வேள்வி, வேட்டல் என்பது தந்திர யோகம் போல் அல்லாத முற்றும் ஒரு மாறுபட்ட வழிபாட்டுமுறை ஆகும். இதில் பல தெய்வங்கள் இருந்தாலும் அவற்றுக்கு உருவம் கிடையாது, உருவ வழிபாடும் கிடையாது. அந்தந்த தேவதைகளைப் பெயரிட்டுக் கூப்பிடும் போது அந்த தேவதைகள் ஓமகுண்டத்தில் வந்துவிட்டதாக எண்ணி கைகூப்பிக் கொள்ள வேண்டியது தான். இது ஒரு உருவமில்லா வழிபாடு. எனில் ரிக்கு வேதத்தில் 1,500 ஆண்டு வியாசரின் நான்கு தலைப் பிரம்மன் எப்படி இடம் பெற முடியும் என்று கேள்வி கேட்டு அதை ஒரு இடைச்செருகல் என்று முடிவு கட்டுபவர் தான் அறிவாளி. அவர் தான் பிரபாத்து ரஞ்சன் சர்க்கார். இல்லை வெள்ளைக்காரன் சொன்னதே உண்மை என்பவர் அறிவுக் கடன்வாங்கி. தமிழக அரசியலில் அறிவுக் கடன்வாங்கிகளே அதிகம் உள்ளனர். நான்கு  தலை புராண பிரம்மன் வேறு, உருவமில்லா பரப்பிரம்மம் வேறு. உருவம் இல்லா பிரம்மத்திற்கு தலை, தோள், வயிறு, தொடை என்று ஏதும் இல்லை. இல்லாத உறுப்பில் இருந்து யாரும் பிறக்க முடியாது என்ற அறிவு வேண்டும். வேள்வியில் வேதப் பாடலைச் சிலர் பாடி வேள்வியை நிறைவேற்றுவர். அவர்களை வைதிகர் என்பர். இந்த வைதிகரில் உயிர் பலி கொடுக்கும் வைதிகர் என்றும், பரப்பிரம்மக் கருத்தை ஏற்று வேள்வியில் உயிர் பலி தவிர்த்த தந்திர யோகம் பயின்ற வைதிகரான பிராமணர் என இரு பிரிவு உண்டானது. உயிர் பலியிடுவோரை ஒப்பிட வேள்வியில் உயிர் பலி தவிர்த்த பிராமணர் ஒழுக்கத்தால் பஞ்ச மாபாதகத்தை விடுத்த செழுமிய பண்பாளர் (highly refined) ஆவர். இவர்கள் மேற்கொண்ட தந்திர யோக தவ வாழ்க்கையால் மக்களிடம் பிராமணர்க்கு  மதிப்பு கூடியது. ஆயினும் மக்களுக்கு உயிர் பலி கொடுக்கும் வைதிகருக்கும் தவ பிராமணருக்கும் வேறுபாடு தெரியாமல் இருந்தது. இதனால் 1,300 ஆண்டுகள் முன் பிரயாகையில் கூடிய பிராமணர் மாநாட்டில் மீன், புலால், மது தவிர்க்காத வைதிகர் பிராமணரே அல்லர் என்று அறிவிக்கப்பட்டு தென்னகத்தில் ஐந்து பிரதேச பிராமணர் மட்டுமே திராவிட பிராமணர் என்றும் வடக்கில் ஐந்து பிரதேச பிராமணர் மட்டுமே பஞ்ச கௌட பிராமணர் என்றும் அறிவிக்கப்பட்டு மற்ற பீகார், வங்காள பிரதேசத்தில் மீன் உண்ணும் வைதிகர் பிராமண சாதியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டதாக, பிராமணர் இவருடன் தொடர்பு கொள்ளக் கூடாது என்று அறிவிக்கப்பட்டது. இன்றைய சமத்துவ விரும்பிகள் எவரும் தம்மை ஒழுக்கத்தால் மேம்படுத்திக் கொள்ள விரும்பாமல், முயலாமல் பிராமணர் பழையபடி புலால் உண்ணும் வைதிகர் போல் ஆகிவிட்டால் சமத்துவம் நிறுவப்பட்டுவிடும் என்று அறிவுத்துகின்றனர். “நான் குடிப்பதை நீ கேலி செய்கிறாயா இரு உன்னையும் நான் குடிக்க வைக்கிறேன்” என்ற உத்தி தான் இது. நான் புலால் உண்டாலும் நாய்க் கறி, பன்றிக் கறி, மாட்டுக் கறி, குதிரைக் கறி மட்டும் உண்ண மாட்டேன் என்பதும் ஒருவகை கட்டுப்பாடு தானே அது போலத் தானே எல்லா வகைப் புலாலையும் ஒதுக்குவதும் என்று புரிந்தால் இப்படியான இழிந்த நாத்திகரின் சிந்தனை எழாது. இப்படி ஒரு ஒழுக்கம் ஒழிந்த சமத்துவம் தேவையே இல்லை. ஒழுக்கம் எல்லாரிடமும் மேம்பட்டு ஒரு சமத்துவம் ஏற்படுமே அந்த சமத்துவ நிலையே தேவை. உணவு ஒழுக்கத்தால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வங்காள பிராமணரே சோழ வேந்தர்களின் அரசகுருவாக ஏற்கபட்டது வேள்வியில் உயிர் பலியை ஆதரிப்பதற்காகவா என்று தெரியவில்லை. கொங்கணி, கேரள  நம்பூதிரிகள் இந்த வங்காளி வைதிகர் வழிவந்தோர் என்பதால் பஞ்ச திராவிட பிராமணரில் இவர்கள் ஏற்கபடவில்லை. இந்த கடும் ஒழுக்க நடவடிக்கை காரணமாக பின்னாளில் அவர்கள் உயிர் பலி, புலால் தவிர்த்திருக்கலாம் என்று தோன்றுகிறது. பல்லவர்கள் அசுவமேத யாகம் உள்ளிட்ட பல யாகம் செய்தவர்கள். எனவே பல்லவர் வழிவந்த இந்த சம்புவராயர் போர் வெற்றிக்காக வேள்வி இயற்றியது ஒன்றும் வியப்பில்லை.

    பார்வை நூல்:தென்னிந்திய கல்வெட்டுகள் தொகுதி 6, எண்: 456, பக். 188-190 & Select Inscriptions of Tamilnadu  pg 96 -98

    Share
  • வரலாறு சிரிக்கும் மன்னர் மாண்பு

    வரலாறு சிரிக்கும் மன்னர் மாண்பு

    சேசாத்திரி ஸ்ரீதரன்

    பண்டைக் காலப் படை என்றதுமே நமக்கு நினைவில் வருவது தேர்ப்படை, யானைப்படை,  குதிரைப்படை, கால் ஆட்படை இவையே. இதற்கு மேல் படை குறித்து நமக்கு ஒன்றும் தெரியாது. நாற்படைகள் இருந்தாலும் படை வீரர் அத்தனை பேரும் ஒரே சமமான அந்தஸ்தில் இருந்தனரா என்றால் இல்லை என்பதே விடை. தேர்ப்படை, யானைப் படைகள் பெரும்பாலும் வேந்தர், மன்னர், அரையர், படைத் தளபதிகள் போன்றோரால் செலுத்தப்பட்டன. அடுத்ததாக குதிரைப்படை. இதில் தகுந்த பயிற்சி உடைய போர் வீரர்கள் மட்டுமே குதிரை ஏறிப் போர் புரிந்தனர். எல்லா வீரரும் குதிரை ஏற முடியாது. இந்தியாவில் குதிரைகள் அரேபியாவில் இருந்து அதிக விலை கொடுத்து இறக்குமதி செய்யப்பட்டன. இங்கே குதிரை இனப்பெருக்கச் சூழல் இல்லை என்பதே இதற்கு காரணம். இந்த குதிரைப் படை வீரர்களை விட மிக எளியோர் காலாட் படைவீரர்கள். இவர்கள் ஈட்டி, வேல், வாள், கோடாலி ஏந்திப் போரிட்டனர். இவர்கள் தான் போர்க்களத்தில் தேர், யானை, குதிரை வீரர்களுக்கு சூழ்காவலாய் இருந்தவர்கள் என்ற போதும் அந்தஸ்தில் அவர்களைவிட தாழ்ந்தவர்கள். இன்றும் கூட படையில் மேல் பதவிகள் கீழ்ப் பதவிகள் என்று இருப்பதை அறியலாம். இந்த அந்தஸ்து படையின் செயற்பாட்டிற்கும் மதிப்பிற்கும் தக்கவாறு அமைந்தது. இந்த அந்தஸ்து பிறப்பின் அடிப்படையில் அல்லாமல் தொழிலுக்கு தரப்பட்ட முக்கியத்துவ அடிப்படையில் அமைந்தது. படையில் இருந்த இந்த அந்தஸ்து நிலை தான் பின்னாளில் இந்தியச் சமூக நிலையிலும் மெல்ல பிரதிபலிக்கத் தொடங்கியது.

    இப்படி படையில் சேர்ந்து போர்க்களத்தில் நேரடியாகப் போரில் பங்குபெறுவோர் என்று இல்லாமல் படைக்கு தேவையான சில துணைத் தொழில்களும் இருந்தன. காட்டாக, ஆயுதம் செய்யும் கம்மியத் தொழிலான உலைக்களப் பணி, குதிரைச் சேணம், அம்பாரி செய்யும் பணி, தேர் செதுக்கும் பணி என்று சில துணைத் தொழில்களும் இருந்தன. இது போக படை மக்களுக்குத் சமையல் செய்வோர், நீர் மொண்டு வருவோர், பாதையில் குறுக்கிடும் புல், பூண்டு, செடி, கொடிகளை அகற்றுவோர், குதிரை இலத்தி யானை இலண்டம் அள்ளுவோர், குதிரை யானைகளுக்கு புல், தழை இடுவோர், போரில் காயமுற்றோர் இறந்தோரை களத்தில் இருந்து அகற்றுவோர், வீரர்கள், குதிரைகள், யானைகளின் போர்க் காயம் ஆற்ற மருத்துவர்கள், மூலிகை பறிப்போர் எனப் பல பணியாளர்கள் இருந்தனர். இவர்கள் போரிடாவிட்டாலும் படைக்கு மிக இன்றியமையாதவர்கள். இவர் இல்லாவிடின் படையை நடத்துவதோ பேணுவதோ மிகக் கடினம். ஆனாலும் போரில் உயிர் துறக்கும், வெற்றி தேடித் தரும் வீரர்களை விட குறைவாகவே இவர்கள் மதிக்கப்பட்டனர். மன்னர்களும், படைத் தளபதிகளும் இவர்கள் பணியைக் குறைவாகவே மதிப்பிட்டனர். ஒரு படை வீரனும் காவல் காப்போனும் தகுதியால், மதிப்பால் ஒன்றல்ல என்பதையே கல்வெட்டுகள் காட்டுகின்றன. காவல் காப்போரிலும் வாயில் காப்போர், சிறைக் காப்போர், அரண்மனை உட் காவலர் ஆகியோரில் தகுதியும் மதிப்பும் வேறுபட்டிருந்தன. அரண்மனைக் காவலர் உயர்குடியினராக நம்பிக்கைக்கு உரிய தம் சாதி மக்களாகவே தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதனால் வாயில் காப்போருக்கு குறைவான மதிப்பே இருந்தது.

    இந்நாளில் ஒரு தொழிலகத்தில் பணிபுரியும் மேலாளர், பணியாளர் பதவியால் பொறுப்பால் வேறுபட்டாலும் பணி முடிந்த பின் இருவரும் ஒரே நாட்டின் சம அந்தஸ்துள்ள குடிமக்கள் என்று கருதி நடத்தப்படுகின்றனர். ஆனால் அந்நாளில் இப்படியான நிலை இருக்கவில்லை. பணி முடிந்த பின்னும் ஒரு கீழ்நிலைப் பணியாளர் மேல்நிலை அதிகாரிக்கு எந்நேரமும் கட்டுப்பட்டவர். இதற்கு வேலைநேர வரம்பு இன்மையே முகமைக் காரணம் ஆகும். பணியாளர் மட்டுமல்ல அவன் குடும்பத்தாரும் அதிகாரிக்கு கட்டுப்பட்டவர் என்ற நிலை தான் இருந்தது.

    ஒரு அரசன் தன் குடிமகன் என்ற அளவிலாவது தன் படை, காவல் கீழ்நிலைப் பணியாளரை நல்ல முறையில் நடத்த வேண்டும், நல்ல கருத்து கொண்டிருக்க வேண்டும். அப்படித்தான் பல்லவர் காலத்திலும், பேரரசுச் சோழர் காலத்திலும் பார்க்கப்பட்டது. ஆனால் 13 ஆம் நூற்றாண்டளவில் மூன்றாம் குலோத்துங்கன் காலத்தில் நடுநாடு எனப்படும் வாணகோப்பாடியை ஆண்ட வாணகோவரையரும் கிளியூரில் இருந்து ஆண்ட மலையமான்களும் தம் படையினரில் கீழ்நிலைப்பணியாளரை தரக்குறைவாக எண்ணியதும் நடத்தியதும் அவர்களுடைய புனிதமான கோவில்களில் கல்வெட்டாக பதிவாகி உள்ளன என்பது அவர்களது அதிகாரத் திமிரையும் ஆணவத்தையும் வெளிச்சமிட்டு காட்டுகின்றன. படைப் பணியாளருக்கே இப்படியானால் இன்னும் உள்ள படைச்சாரா பணியாளரை அவர்கள் எப்படி நடத்தியிருப்பர்? இத்தகு தரக்குறைவான கல்வெட்டுகள் நடுநாடு தவிர்த்து தொண்டை நாட்டிலோ கொங்கு நாட்டிலோ சோழ நாட்டிலோ அல்லது பாண்டிய நாட்டிலோ காண்பதற்கு அரிதாகவே உள்ளன. மன்னர்கள், அரையர்களின் இத்தகு நடக்கை உடனே அடுத்த நிலை அதிகாரத்தவர், படைத் தளபதிகளுக்கும் பரவி உள்ளது. பின்பு அது மெல்ல சமூகத்தில் புலையர், வெட்டியான், பறையருக்கு இழிவான அந்தஸ்தை ஏற்படுத்தியது. படைத்துறையில் கீழ்நிலைப்பணி அதனால் தான் இந்த இழிவு என்றால் சமூகத்திற்கு அதனால் என்ன பாதிப்பு வந்தது? ஏன் அந்த இழி கருத்தை சமூகமும் சுமக்க வேண்டும் என்ற கேள்வி எழுகிறது. இந்த இழி கருத்து அடுத்தடுத்த நூற்றாண்டில் மேலும் வலுப்பெற்று தமிழ்நாட்டின் மூலை முடுக்கெல்லாம் பரவி ஆளும் அதிகாரத்தாரால் அடக்குமுறை, ஒடுக்குமுறை என்று வளர்ந்த போது இந்த சமூகத்தால் அதை எதிர்க்க முடியாமல் போனது. இறுதியில் அது தீண்டாமையாக 16 – 17 ஆம் நூற்றாண்டில் அயல் மொழியார் ஆட்சியில் வடிவம் கொண்டது. அதற்கு முன் இவர்களுக்கு தீண்டாமைக் கொடுமை இல்லை. எந்த மன்னராட்சியிலும் சமத்துவம் இருந்ததில்லை. வேட்டைச் சமூகத்தோடு சமத்துவம் ஒழிந்துவிட்டது. ஆனால் தமிழ்நாட்டில் புரட்டி உருட்டுவது என்னவோ மதமும் மதசுயநலவாதிகளும் தான் வேற்றுமையை விதைத்தனர் என்பர் நிலவுடமை சாதியார்.

    அண்மைக் காலத்தில் வாழ்ந்து மறைந்த முக்காலமும் அறிந்த சப்தரிஷிகளான பிரபாது ரஞ்சன் சர்க்கார், ஈசுவர பட்டர் ஆகியோர் இன்றைய எல்லா சமூக ஏற்றத் தாழ்விற்கும் நாடாண்ட மன்னவர்களே காரணம் என்றனர். கீழ் உள்ள கல்வெட்டுகளையும் விளக்கத்தையும் தெளிவாகப் புரிந்து கொள்ள ஒரு முகவுரையாகவே மேற்கண்ட தெளிவுரை வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் தமிழர் தமிழ்க் கல்வெட்டுகளைப் படித்து விளங்கிக் கொள்ள முடியாவிட்டால அதை விட அவமானம் வேறு இல்லை. அயல் மொழியாரின் பொய்களுக்கு காலம் எல்லாம் கட்டுண்டு கிடக்க வேண்டியது தான். இனி கல்வெட்டுகள்

    வட ஆர்க்காடு மாவட்டம் திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோவில் முதல் திருச்சுற்றில் வடக்கு சுவரில் உள்ள 11 வரிக் கல்வெட்டு

    1. ஸ்வஸ்திஸ்ரீ திரிபுவனச் சக்கரவத்திகள் மதிரையும் ஈழமும் கருவூரும் பாண்டியன் முடித்தலையும் கொண்டருளியன ஸ்ரீ குலோத்துங்க சோழ தேவற்கு யாண்டு 27 வது பாண்டியநாடு கொண்டானான சம்புவராயநும்
    2. செங்கேணி அத்திமல்லந் வீராண்டானாந எதிரிலி சோழச் சம்புவராயநும் அத்திமல்லந் பல்லவாண்டானான குலோத்துங்க சோழச் சம்புவராயனும் கிளியூர் மலையமான் பெரியுடையானான  இராசராசச் சேதிராயநும் கிளி
    3. யூர் மலையமான் ஆகாரசூரந்நான இராசகம்பீரச் சேதிராயனும் குந்தந் நம்பூரலான இராசராச நீலகங்கரையனும் அம்மைஅப்பந் மருந்தந்நான  இராசராச மூவேந்தரையனும் பாவந்தீத்தாநான இராஜேந்திர சோழச் சம்புவராயன் மலையன் நரசிங்க பந்மனான கரிகாலசோழ ஆடையூர் நாடாழ்வானும்
    4. சோமன் திருவெண்ணாமலை உடையானான குலோத்துங்க சோழ பிருதிகங்கநும் சோமந் வரந்தருவானான சோளேந்திரசிங்கப் பிருதிகங்கனும் இவ்வனைவோம் எங்களில் இசைந்து கல்வெட்டினபடியாவது நாங்கள் ஒருகாலமும் இராஜகாரியத்துக்குத்  தப்பாமே நின்று சேதிராய தேவர் அருளிச் செய்தபடியே பணி
    5. செய்யக்கடவோமாகவும் இப்படி செய்யும் இடத்து மகதை நாடாழ்வானான வாணகோவரையனும் குலோத்துங்க சோழ வாணகோவரையனும் பக்கல் ஆளாதல் ஓலையாதல் போகக் காட்டுத்தல் உறவுபண்ணுதல் அறுதிசெய்தல் செய்யக்கடவோ மல்லாதோமாகவும் இவர்கள் அநுதாரத்துள்ளார் ப
    6. க்கல் ஆளாதல் ஓலையாதல் போகக்காட்டி சில காரியம் பார்த்தல் உறவு அறுதி செய்தல் செய்யக் கடவோமல்லாதோமாகவும் இவர்களும் யிவர்கள் ளநுதாரத்துள்ளார் பக்கலி நின்றும் ஆளாதல் ஓலையாதல் வந்த துண்டாகில் தேவர் சீபாதத்திலே போகக் காட்டக் கடவோமாகவும் இராசராச சேதிராயர் பக்கல் இரா
    7. சகாரியத்துக்கும் சேதிராயதேவர் கருமங் எங்களில் ஒருவர் காரியத்துக்கு விரோதமாயிருப்பன சொல்லி ஆளாதல் ஓலையாதல் போகவிடக்கடவோ மல்லாதோமாகவும் இவரும் அனுதாரத்துள்ளார் பாடு நின்றும் இப்படி சொல்லி வந்ததுண்டாகில் இப்படிக்கு இசையாதே சேதிராயதேவர் _ _ _ ட்டக்கடவோ
    8. மாகவும் நாங்கள் அனைவரும் எங்களில் ஒருகாலமும் ஒருவர் வேறுபடாதே இராஜகாரியத்துக்கு தப்பாதே நின்று சேதிராயதேவர் அருளிச்செய்தபடி பணி செய்யக்கடவோமாகவும் எங்களில் ஒருவர் வேறுபட நின்று இராஜகாரியத்துக்கும் சேதிராயதேவர் காரியத்துக்கும் எங்கள் காரியத்துக்கும் விரோதமாகச்  சில காரியம் பார்த்தாருண்டாகில் _ _ _
    9. ய்து தேவரும் நாங்களும் இவனை அறச்செய்யக்கடவோமாகவும் எங்களிலே ஒருவரை வாணகோவரையனாதல் குலோதுங்க சோழ வாணகோவரையனாதல் இராசராச காடவராயனாதல் வினை செய்தாருண்டாகில் படையுங் குதிரையும் முதலுக்கு நேராகக்கொண்டு _ _ _ _
    10. தக்கடவோமாகவும் இப்படிக்கு ஒருகாலமும் தப்பாதே நின்று செய்யக்கடவோமாகவும் இப்படி செய்திலோமாகில் வாணகோவரையனுக்கு கடை கா _ _ _ பறையற்க்கு செருப்பு எடுக்கிறோம். இப்படி சம்மதித்து
    11.  உடையார் திருவண்ணாமலை உடைய னாயனார் கோயிலிலே கல்வெட்டிக் குடுத்தோம் இவ்வனைவோம்.

    தப்பாமே – பிசகாமல்; அருளிச்செய் – சொல்லி ஏற்படுத்திய; பக்கல் – பக்கம் சாய்தல்; அனுதாரம் – பின்பற்றிகள், followers; அற – இல்லாமல் போ; வினை – போர்; கடைகாக்கும் – வாயில் காக்கும்

    விளக்கம்: மதுரையும் ஈழமும் கருவூரும் ஆள்பவரை வென்று பாண்டியன் மணிமுடியும் கைப்பற்றி மன்னித்து அருளின மூன்றாம் குலோத்துங்கனின் 27 ஆம் ஆட்சி ஆண்டு1205 இல் பாண்டியநாடு கொண்டனான சம்புவராயனும் செங்கேணி அத்திமல்ல எதிரிலிச் சோழச் சம்புவராயனும் அத்திமல்லன் பல்லவாண்டனான குலோத்துங்க சோழ சம்புவராயனும் கிளியூர் மலையமான் பெரியுடையானான இராசராச சேதிராயனும் கிளியூர் மலையமான் ஆகாரச்சூரண் இராஜகம்பீரச் சேதிராயனும் குந்தன் நம்பூராலான இராசராச நீலகங்கரையனும் அம்மையப்ப மருந்தனான இராசராச மூவேந்தரையனும் பாவம் தீர்த்தானான இராசேந்திர சோழ சம்புவராயனும் மலையன் நரசிங்கபன்மனான கரிகால சோழ ஆடையூர் நாடாழ்வானும் சோமன் திருவாண்ணாமலை உடையானான குலோத்துங்க சோழ பிரிதிகங்கனும் சோமன் வரம்தருவானான சோழேந்திரசிங்க பிரிதிகங்கனும் ஆக 11 அரச குலத்தோர் ஒன்றுகூடி இந்த அனைவரும் கருத்தொற்றுமையுடன் கல்வெட்டிக்கொண்டது யாதெனில், “நாங்கள் ஒருகாலமும் மன்னனது அரசியல் செயற்பாட்டிற்கு பிசகாமல் உறுதியாகத் துணை இருந்து சேதிராயர் ஏற்படுத்தியபடி வேலையாற்றுவோம் இப்படி பணியாற்றும் போது மகதை ஆளும் வாணகோவரையன் குலோத்துங்க சோழ வாணகோவரையன் பக்கம் சேராமல், ஓலை அனுப்பாமல், போய்வருதல், நன்மை தீமைகளுக்கு உறவு காட்டுதல், திருமணம் உறுதி செய்தல் ஆகியன செய்யமாட்டோம். வாணகோவரையரை பின்பற்றுவோர், நன்மதிப்பை விரும்புவோர் பக்கமும் சேராமல், ஓலை அனுப்பாமல், போய்வருதல், சில வேலைகள் செய்து கொடுத்தல், திருமணம் உறுதி செய்தல் ஆகியன செய்யமாட்டோம். இவர்களுக்கு மட்டுமல்லாது இந்த பின்பற்றிகளின் பின்பற்றிகளாவோர், நன்மதிப்பு கொண்டோர் பக்கத்தில் இருந்து நம் பக்கம் சேருவதற்கோ, ஓலை பெறவோ சமயம் உண்டானால் சேதிராயர் திருக் கால்களில் போகும்படி காட்டுவோம். இராசராச சேதிராயரிடம் இருந்து அரசு காரியம் செய்வது சேதிராயர் வேலை, எங்களில் ஒருவரது வேலைக்கு பகையாய் இருப்பதைச் சொல்லி பக்கம் சேரல், ஓலை அனுப்பல் செய்யவிட மாட்டோம். இவர்களும் தம் பின்பற்றிகள் பக்கம் நின்று அதற்கு ஆதரவாக சொல்லிவருவது உண்டானால் அவ்வண்ணம் செய்யாதே சேதிராயரிடம் போகும்படி காட்டுவோம். நாங்கள் ஒருபோதும் கருத்து வேறுபடமால் இருந்து அரச காரியத்தில் பிசகாமல் இருந்து சேதிராயர் காரியத்திற்கு எங்கள் காரியத்திற்கும் எதிராக சிலர் வேலை செய்தால் சேதிராயரும் நாங்களும் இவரை இல்லாமல் அழிப்போம். எங்களில் ஒருவரை மகதை வாணகோவரையனோ அல்லது குலோத்துங்க சோழ வாணகோவரையனோ அல்லது இராசராச காடவராயனோ போருக்கு அழைத்தால் படை, குதிரையைக் கொண்டு நேராக போர் தொடுப்போம். இதை ஒருகாலமும் பிசகாமல் செய்வோம். இப்படி செய்யாமல் போனோமானால் மகதை வாணகோவரையனின் அரண்மனை வாயிலைக் காக்கும் பறைய காவலருக்கு காலில் அணிந்து கொள்ள செருப்பு தூக்குவோம். இதற்கு ஒப்புக்கொண்டு திருவண்ணாமலை இறைவன் கோவிலில் கல்வெட்டுவித்தோம் இந்த அனைவரும் என்று சூளுரைத்தனர்.

    இதில் எந்த சேதிராயன் சார்பாக இவர்கள் இருக்கின்றனர் என்பதை பெயர் சொல்லித் தெளிவாகக் கல்வெட்டில் குறிப்பிடவில்லை. இவர்கள் வாயிற்காவல் பறையருக்கு செருப்பு தாங்குகிறேன் என்றதன் மூலம் பறையரை இழிக்கின்றனர் இன்பத்தை உணர முடிகிறது. சேதிராயனுக்கும் வாணகோவரையனுக்கும் ஏதோ பகை உள்ளதை இந்த கல்வெட்டின் மூலம் அறிய முடிகிறது. அதனால் இவர்கள் இன்றைய NATO படை அமைப்பு போல போர்ப் படை ஒப்பந்தம் போட்டுவிட்டனர்.

    அரண்மனை என்பது பல நாட்டவர், பண்டிதர், தூதுவர், அரச பிரதிநிதிகள் என பலரும் வந்து போகும் ராஜ வீதியில் அமைந்திருக்கும். அது காட்டிலோ அல்லது ஒதுக்குபுரத்திலோ அமைந்திருப்பதல்ல நகரத்தின் நடுவே அமைந்திருக்கும். எனில் அந்த அரண்மனையின்  வாயில் காக்கும் பறையர் தாமும் அதே ராஜவீதி வழியாகவே வந்தாக வேண்டும். இது 13 ஆம் நூற்றாண்டில் பறையர் தீண்டாமை இருந்ததில்லை என்பதற்கு வலுவான சான்றாகிறது. ஆனாலும் சாதிமுறையாக அல்லாமல் தொழில்முறையாக பறையர் இழிவு அரசர்களால் 13 ஆம் நூற்றாண்டில் ஏற்படுத்தப்பட்டுவிட்டது என்பதை இக்கல்வெட்டு குறிக்கின்றது.

    பார்வை நூல்: தென்னிந்திய கல்வெட்டுகள் தொகுதி 8, எண் 106 (Ariep 516 of 1902)

    சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் ஆறகளூர் திருக்காமீசுவரர் கோவில் கருவறையின் முன்புற மண்டபத்தின் கிழக்குபுறச் சுவரில் உள்ள 11 வரிக் கல்வெட்டு

    1. ஸ்வஸ்திஸ்ரீ திருபுவனச் சக்கரவத்திகள் குலோத்துங்க சோழ தேவற்கு யாண்டு 35 வது ஐய்யர்
    2. பொன்பரப்பின வாணகோவரையர்க்கும் ஐய்யர் குலோத்துங்க சோழ வாணகோவரையர்க்கும்
    3. மைச்சுனனார் காடவராயர்க்கும் செங்கேணி அம்மைஅப்பன் அழகிய சோழனான எதிரிலி சோழச் ச
    4. ம்புவராயநேன் ஆறகளூரில் திருக்காமீசுரமுடையார் கோயிலிலே தப்பாமைக்கு அடர்முறைமை சொல்
    5. லிக் கல்லு வெட்டிக்குடித்த பரிசாவது என்னக்கும் என் த_ _ _ றைக்கும் இவர்கள் விரோதமாய்த் தப்பின் ஒழி
    6. ய்தல் செய்வித்தல் செய்யாதேய் என்னை நோக்கக் கடவர்களாகவும், இவர்களுக்கு நான் உள்ளதனையு
    7. ம் ஒருநாளும் தப்பாதே இருக்க கடவேனாகவும் தப்பினேநாகில் எங்களுக்கு இன்னாதாராய் வ
    8. ருகிற மும்மலராயர்களுக்கும் மற்றும் என் சத்துருக்களாயிருப்பார்க்கும் செருப்பும் தம்பலமு
    9. ம் எடுத்தேநாகிறேன். பல்லவரையன் சத்தியமேய் இப்படி தப்பினேநாகில்  அப்பாண் 
    10. டார்க்கு பிறந்திலேநாகிறேன். இப்படிக்கு கல்லு வெட்டிக்குடுத்தேன் எதிரிலி சோழச் சம்
    11. புவராயனேன்.

    தப்பாமை – பிசகாமை; அடர்முறைமை –  மாறாமை, பிடிப்பு; பரிசு – ஏற்பாடு; இன்னாதார் – பகைவர்;

    விளக்கம்: மூன்றாம் குலோத்துங்க சோழனின் 35 ஆம் ஆட்சி ஆண்டு 1213 இல் பொன்பரப்பின வாணகோவரையனுக்கும் குலோத்துங்க சோழ வாணகோவரையனுக்கும் இவர் மைத்துனர் காடவராயருக்கும் செங்கேணி அம்மையப்பன் அழகிய சோழனான எதிரிலி சோழ சம்புவராயன் அறகளூரில் உள்ள திருக்காமீஸ்வரர் கோவிலில் செய்து கொடுத்த சூளுரை இது. கொண்டநிலை பிசகாமல் மாறாதிருக்கும் முறையை அறிவித்து இக் கல்வெட்டுவித்த ஏற்பாடு யாதெனில் எனக்கும் என் தலைமுறைக்கும் இவர்கள் எதிராக திறம்பி அழிக்காமல் என்னை நட்புடன் பார்க்க வேண்டும். இவர்களுக்கு நான் உயிருடன் உள்ள வரை ஒருநாளும் பிசகாமல் உண்மையாய் இருப்பேன். அப்படி பிசகினேனாயின் எமக்கு பகைவராய் உள்ள மும்மல ராயர்களுக்கும் என் பகைவர்களுக்கும் காலில் அணிய செருப்பும் வாயில் மெல்ல வெற்றிலையும் எடுத்துக் கொடுத்தவன் ஆவேன். இது பல்லவராயன் சத்தியம் நடக்கும். இப்படி செய்யாமல் போனால் நான் என் தந்தைக்கு பிறவாமல் வேறு ஒருவனுக்கு பிறந்தவன் ஆவேன் என்று கல்வெட்டிக் கொடுத்தேன் எதிரிலி சோழ சம்புவராயன். முதல் கல்வெட்டில் சம்புவராயர்கள் சேதிராயனுக்கு ஆதரவாக வாணகோவரையனுக்கு எதிராக இருந்ததைக் கண்டோம். ஆனால் அந்த குடும்பத்தைச் சேர்ந்த சம்புவராயன் இன்னொருவன் வாணகோவரையனை ஆதரிப்பதை இந்த கல்வெட்டில் காண்கிறோம். அணி மாறுவது தான் மன்னராட்சி அரசியல்.

    பார்வை நூல்: பொன்பரப்பின வாணகோவரையன், ஆசிரியர் வில்லியனூர் ந. வெங்கடேசன், பக்.66 & AR No  453 of 1913; சேலம் நாமக்கல் மாவட்டக் கல்வெட்டுகள் பக்.34

    வட ஆர்க்காடு மாவட்டம் திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோவில் முதல் திருச்சுற்றில் வடக்கு சுவரில் உள்ள 7 வரிக் கல்வெட்டு

    1. ஸ்வஸ்திஸ்ரீ திருபுவனச் சக்கரவத்திகள் ஸ்ரீ இராஜராஜ தேவற்கு யாண்டு 17 வது ஆறகளூருடைய தெம்பையாழ்வான் இராஜராஜ தேவன் வாணகோவரையனேன்
    2. உடையார் திருவண்ணாமலை உடைய நாயனாற்க்குத் திருமடைப்பள்ளிப்புறமாக நாயநார் பொன்பரப்பின பெருமாளுக்கு நன்றாக பொன்பரப்பின பெருமாள் ச
    3. ந்திக்கும் எடுத்ததுவல்ல பெருமாள் திருநாளைக்கும் முடலாக விட்ட ராஜராஜ வளனாட்டு வாணகோப்பாடி பெண்ணை தென்கரை மேல் குந்றாநாட்டு கூவனூர் நா
    4. ற்பா லெல்லைக்குள்ளும் ஏந்தல் தாங்கல் உட்பட்ட நன்சை நிலமும் மேனோக்கின மரமுங் கீழ்நோக்கின கிணறுந் தரியிறை தட்டார்பாட்டம் ஆள்அமஞ்சி  யெற்சோறு
    5. குற்றத்தெண்டம் பட்டிதெண்டமும் மற்றும் எப்பேற்பட்ட பல்லாயங்களும் உட்பட உடைய நாயநாற்கு தேவதானமாக சன்திராதித்தவரை செல்வதாக விட்டேன்
    6. வாணகோவரையனேன். மாறுவான் சிவத்துரோகியுமாய் மோவாய் புக்கு முலை யெழுன்தானுமா யொருவனுக்கும் யொருத்திக்கும் பிறன்தானு மல்லாதானாய் கோமாங்கிசத்தை 
    7. பூஜிப் பானுமாய் கெங்கையிடை குமரியிடை குரால்பசு கொன்றான் பாவம் கொழ்வான் . இது பன்மாஹேஸ்வர ரக்ஷை.

    பெருமாள் – மன்னன், வேந்தன்; உடலாக – மூலதனமாக; விட்ட – கொடுத்த; ஏந்தல் – ஆழமில்லா ஏரி, முலை எழுந்தான் –  அலி;  கோமாங்கிசம்  – ஆவின் புலால்;

    விளக்கம்: மூன்றாம் இராசராச சோழனின் 17 ஆம் ஆட்சி ஆண்டு 1233 இல் ஆறகளூருடைய தெம்பையாழ்வான் இராசராச தேவ வாணகோவரையன் இறைவன் திருவண்ணாமலை உடைய அப்பனுக்கு திருமடைப்பள்ளி அன்றாட்டுக்கு தலைவர் பொன்பரப்பின மன்னனுக்கு உடல்நலம் நன்றாகும் பொருட்டு பொன்பரப்பின மன்னர் பெயரில் அமைந்த சந்தி பூசைக்கும் எடுத்ததுவல்ல மன்னன் பெயரில் அமைந்த திருநாளுக்கும் மூலதனமாகக் கொடுத்த ராஜராஜ வளநாட்டு வாணகோப்பாடி வடபெண்ணையாற்று தென்கரையில் உள்ள மேற்கு குன்றானாட்டு கூவனூரின் நான்கு பக்க எல்லைக்குள்ளே ஆழமில்லா ஏரி, தேக்கம் உட்பட நஞ்செய் நிலமும் அதில் மேல் நோக்கிய மரம் கீழ்நோக்கிய கிணறு தறியால் வந்த வரி, தட்டார் தந்த வரி, நீர்நிலை பேணும் கட்டாய ஊழியம் (ஆளமஞ்சி), பொது ஊழியருக்கு பகலில் கொடுக்கும் சோறு (எச்சோறு), குற்றத்தால் வரும் தண்டத் தொகை, பசுக் கொட்டில் வரி, இன்னும் எப்பேர்பட்ட பல வரிகளும் உட்பட இறைவருக்கு தேவதானமாகச் சந்திர சூரியர் உள்ள காலம் வரை இருக்கக் கொடுத்தேன் வாணராயன். இதை இல்லாமல் செய்பவன் சிவத்துரோகி ஆவான். வாயுள் புகும் முலை எழும்பிய அலி ஆவான். முறையாக ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் பிறவாத பரத்தை மகன் ஆவான். ஆவின் புலாலைப் பூசனை செய்பவன் ஆவான்.  கங்கைக்கும் குமரிக்கும் இடையே குரால் பசுவைக் கொன்ற பாவம் கொள்வான். இதை சிவனடியார் காக்க வேண்டும்.

    இந்த மன்னன் அலியை இகழ்கிறான். அலிக்கு பாலுணர்வு ஏற்படும் போது முலை எழும் என்று குறிப்பதை வைத்து இவனது அரண்மனையில் அலிகள் இருந்துள்ளனர் என்று தெளிவாவதோடு அரசர் அலிகளுடன் பாலுறவு கொள்பவர் என்றும் தெரிகிறது. அரசர் என்போர் இப்படித்தான் நடத்தை கெட்டவராய், ஒழுக்கம் கெட்டவராய் (debauch) இருந்தனர். ஒருவரது சிந்தையும் செயலுமே ஒருவரது பேச்சில் வெளிப்படும் என்பது இந்த மன்னனது ஏச்சில் இருந்து வெளிப்பட்டுள்ளது.

    பார்வை நூல்: தென்னிந்திய கல்வெட்டுகள் தொகுதி 8, எண் 80, AR No  490 of 1902

    திரு சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் ஆறகளூர் திருக்காமீசுவரர் கோவில் இரண்டாம் பிரகாரம் நடுவிடம் 8 வரிக் கல்வெட்டு

    1. 13 வது ஆறகளூருடைய இராசராச தேவன் பொன்பரப்பினான குலோத்துங்க சோழ வாணகோவரையணயற்குத் திருக்கோவலூருடைய கிளியூர் மலையமான் எ
    2. ங்களில் நாடு நிற்குமிடத்து ஆழ்வினையாற்றுக்குத் தெற்கு இவற்கு நிற்கவும் இவ்வாற்றுக்கு வடக்கு எனக்கு நிற்கக் கடவதாகவும் கிழக்கு நாடு நிற்குமிடத்துக் கல்லியா
    3. டவதாகவும் எங்களிலிருவோமும் நாங்களுள்ளதனையும் பிழையாதே நின்று இராசகாரியஞ் செய்யினும் வன்னியஞ் செய்யினுங் கூடவே செய்யக் க
    4. டவோமாகவும். இவற்கு வினையுண்டாகுல் என் முதலிகளும் படையுங் குதிரையும் புகவிட்டு என் வினையாக ஏறட்டுக் கொண்டு நோக்கக் கடவேனாகவும் இ_
    5. வனாகவும் எனக்கு வினையுண்டா _ _ கில் இவருந் தம் முதலிகளும்  ப_ _ குதவிட்டுத்  தம் வினையாக ஏறட்டுக் கொண்டு நோக்கக் கடவராகவும். இத்தாலும்  நோ _ _
    6. ழ மலையகுலராயன் வினையிடைப்பாட்டம் என்னுடனே கூட நோக்கித்தகடவராகவும் என் _ _ மென்று  சொன்னாரை முதல்மையாக்கி  பரிசரிக்கக் _ _  
    7. காமையானுக்கு என் பெண்டுகளைக் குடுத்தேனாவேன். இப்படிக்கு ஆறகளூரில் உடையார் திருக்காமீசுரமுடைய கோயிலிலே கல்வெட்டுக் கு _ _ _
    8. குலராயன் எழுத்து

    நிற்க – எல்லையாகக் கொண்டு ஆள; பிழையாதே – பிழறாது; வினை – போர்; முதலிகள் – படைத்தலைவர்கள்; ஏறட்டு – பொறுப்பு ஏற்று, முன்வந்து; முதல்மையாக்கி – முன்னிலைப்படுத்தி; பரி – குதிரை; சருக்க / sarga  – குதிரை இலத்தி (சாணம்), ஸர்க என்பது  சமசுகிருத சொல்.

    விளக்கம்: மூன்றாம் குலோத்துங்க சோழனுக்கு 13 ஆம் ஆட்சி ஆண்டு 1191 இல் ஆறகளூருடைய இராசராச தேவன் பொன்பரப்பின குலோத்துங்க சோழ வாணகோவரையருக்கும் திருக்கோவலூருடைய கிளியூர் மலையமானுக்கும் இடையே ஏற்பட்ட உடன்படிக்கை அறிக்கை இது. எங்களுடைய ஆளுகையானது அழ்வினை யாற்றுக்கு (தென்பெண்ணை) தெற்கே மலையமானுக்கு செல்லவும் இந்த ஆற்றுக்கு வடக்கே எனக்கு செல்வதாகவும் இருக்கட்டும். கிழக்கு நாடு எல்லையாகும் இடத்தே கல் பாவிய பாதை அமைப்பதாகவும் ஒப்புக்கொண்டோம். எங்களில் ஒவ்வொருவரும் நாங்கள் உயிருடன் உள்ள வரை பிழறாது எங்கள் பகுதியிலேயே இருந்து அரச வேலை செய்யும் போதும், ஆட்சி செய்யும் போதும் ஒன்று சேர்ந்தே செய்வோமாக உறுதி பூண்டோம். இவர் ஆளுகையில் போர் உண்டானால் என் படைத் தலைவர்களும் படையையும் குதிரையையும் போர்க்களத்தில் புகவிட்டு அதை எனது போர் போலவே ஏற்றுக்கொண்டு பார்ப்பேன். அதே நேரம் என் மீது போர் உண்டானால் மலையமானும் இவருடைய படைத்தலைவர்களும் படையையும் குதிரையையும் போர்க் களத்தில் புகவிட்டு அதை தம் போராகவே ஏற்றுக் கொண்டு பார்க்க வேண்டும். இத்தோடு மலையமான் போர்ச்செய்யக் கொள்ளும் வரியையும் என்னோடு உடன் இருந்து கவனிக்கவேண்டும். என் சொல்லை நான் தவறினால் என்னை இகழ்பவரை முன்னிறுத்தி என் மனைவிமாரை குதிரை இலத்தி அள்ளும் காமையானுக்கு கொடுத்தவன் ஆவேன் என்கிறான் வாணகோவரையன். இப்படியாக ஆறகளூருடைய காமீசுவரர் கோவிலில் கல்வெட்டிக் கொடுத்தேன். இது (வாண) குலராயன் எழுத்து. இது NATO உடன்பாடு போல ஒரு போர் ஒற்றுமை ஒப்பந்தம் ஆகும். பாகூர் புலவர் செ  குப்புசாமியின் “வரலாற்று வடிவங்கள்” என்ற நூலில் பக். 147 இல் எலவானாசூர் சிவன் கோவில் கல்வெட்டு எண் 46 இல் குலோத்துங்க சோழனின் 13 ஆம் ஆட்சி ஆண்டில் ஏற்பட்ட இதே படை உடன்படிக்கையை காண முடிகிறது. அதில் மலையமான் சூரிய தேவர் நீரேற்றானும் பொன்பரப்பின குலோத்துங்க சோழ வாணகோவரையனும் தமது நாடு எல்லை இது என்று வரையறுக்கின்றனர். ஆனால் தந்தையர் காலத்தில் ஏற்பட்ட இந்த உடன்படிக்கை மலையமான் மகன்கள் ஆட்சியில் தகர்ந்து போனதை முதலில் விளக்கப்பட்டுள்ள கல்வெட்டில் அறிந்து கொள்ள முடியும்.

    இங்கே குதிரை சாணம் அள்ளும் காமையான் எந்த சாதி என்பதை அறிய முடியாமல் கல்வெட்டு சிதைந்துள்ளது. அதை பிற கல்வெட்டுகளைப் பார்த்து ஊகிக்கலாம்.

    பார்வை நூல்: பொன்பரப்பின வாணகோவரையன், பக். 67, வில்லியனூர்  ந. வெங்கடேசன் AR No 440 of 1913 & சேலம் நாமக்கல் மாவட்டக் கல்வெட்டுகள், பக். 49, எண் 38, அ. கிருட்டினன்

    தென்னார்க்காடு மாவட்டம் திருக்கோவிலூர் வட்டம் கீழுர் வீரட்டானேசுவரர் கோவில் வடக்கு சுவர் 13 வரிக்கல்வெட்டு

    1. ஸ்வஸ்திஸ்ரீ த்ரிபுவநச் சக்கரவத்திகள் சீ குலோத்துங்
    2. க சோழ தேவற்கு யாண்டு 33 வது ஆற்றூர் கூ
    3. ற்றத்து ஆறகளூருடைய மகதேசந் இராசராச தேவந்
    4. பொந்பரப்பிநாந் வாணகோவரையந்நேந் உடையார்
    5. திருவீரட்டாநமுடைய  நாயநாற்கு திருமேற்ப்பூச்சுக்கும் திருப்ப
    6. ரி சட்டத்துக்கும் திருக்கோயிலுக்கும் திருமடை விளாகத்திலும் உள்ள குற்ற
    7. தெண்டமும் தறியிறை காசும் கடையிறையும் கந்நாரிறையும் ஆசு
    8. வி காசும் படித்தெண்டமும் திருநாளில் சீ பாதம் தாங்க வாரா
    9. த ஆட் தெண்டமும்  விளக்காள் தெண்டமும் உடையாற்கு விட்
    10. டு கல்வெட்டிநேன் வாணகோவரையநேன் இது இறங்குவா
    11. ந் குரால் பசுத் திந்றார் பாவமும் கொண்டு நாந் ஏறுகிற குதிரைக்கு பு
    12. ல் போடுகிற பறையநுக்கு தந் மணாட்டியை குடுப்பாந் இக்
    13. _ _ _ _ ஸ்வர ரக்ஷை.

    பரிசட்டம் – இறைவனுக்கு உடுத்தும் ஆடை; இறக்குவான் – அழிப்பான்; மணாட்டி – மனைவி

    விளக்கம்: மூன்றாம் குலோத்துங்க சோழனின் 33 ஆம் ஆட்சி ஆண்டு 2011 இல் ஆற்றூர் கூற்றத்தில் உள்ள ஆறகளூரில் இருந்து ஆளும் மகதேசன் இராசராச தேவன் பொன்பரப்பினான் வாணகோவரையன் இறைவன் திருவீரட்டானமுடைய அப்பனுக்கு திருமேனியில் பூசவும், ஆடை சாற்றவும், திருக்கோவிலுக்கும் திருமடைவிளாகத்தில் வாழ்வோரிடம் திரட்டப்படும் குற்ற தண்டனைக் காசு, தறி வரியும், கடை வரியும், கல்நார் வரியும், ஊர்காவல் ஆசுவிகள் கொள்ளும் காசும், படிக்கடப்போர் செலுத்தும் தண்டம், ஊரில் விளக்கு ஏற்றி அணையாமல் காப்போர் கட்டணம் ஆகியவற்றைத் தானமாகக் கொடுத்துக் கல்வெட்டுவித்தேன் வாணகோவரையனேன். இதை அழிப்பவர் குரால் பசு தின்றவன் கொள்ளும் பாவத்தைக் கொள்வதோடு நான் ஏறுகிற குதிரைக்குப்  புல் போடுகிற பறையனுக்குத் தன்னுடைய மனைவியை கலவிக்கு கொடுப்பான் ஆவான். இது சிவனடியார் காப்பு.

    மன்னன் கூறும் இந்த பறையர் இழிவு பிறந்த சாதியால் வந்த இழிவல்ல மாறாக அவர் செய்யும் கடைநிலைத் தொழிலால் வந்த இழிவு ஆகும். பிற்காலத்தில் இதுவே மேட்டுக்குடிப் படைசாதிகளால் சாதிப்பிறப்பு இழிவாக ஆக்கப்பட்டது. ஆனால் வாளோ வேலோ ஏந்தாத பிராமணர் படை நடத்தி வந்து தமிழகத்து புத்த மக்களை இந்துக்களாக மாற்றியதாகவும் ஆனால் இந்துவாக மாறாமல் புத்த மதத்தவராகவே இருந்த பறையரை தீண்டாமைக்கு உட்படுத்தி சேரியில் தள்ளிவிட்டனர் என்றும் அசோக மௌரியர் ஆட்சி தமிழகத்தில் பரவாததால் இங்கு பரவாத புத்த மதம் பரவி இருந்ததாக கற்பனையாக எழுதி பிராமணர் வெறுப்பை வளர்த்தும் தம் இனத்தார் கிருத்துவ மதத்தை தழுவவும் தவறாக வழிநடத்திச் சமூகக் கேடு (social disservice) செய்தவர் கற்பனை எழுத்தாளர் அயோத்திதாசர். இவரது கற்பனைக்கு கல்வெட்டு, செப்பேடு சான்று ஏதும் இல்லை என்பதே உண்மை. இப்படி தம் இனத்தாரை தவறாக வழிநடத்தியதால் பட்டியலின மக்கள் நடத்திய போராட்டங்கள் அனைத்தும் வீண் விரையம் ஆயின, பொன்னான காலம் பாழாய்ப் போனது. உண்மையாக பறையர் தாழ்விற்கு படைச்சாதி ஆண்ட பரம்பரை நிலவுடமை சாதியே காரணம் என்று சொல்லி இருந்தால் போராட்டம் அவர்களை எதிர்த்து நடந்திருக்கும். இதனால் இன்னும் பல கீழ்வெண்மணி நிகழ்வுகள் நடந்திருத்தாலும் வெற்றி உறுதி என்ற இலக்கை நோக்கி நகர்ந்திருக்க முடியும். இதை நடக்க விடாமல் செய்தார் அவர். தமிழ்நாட்டு கம்யூனிஸ்டுகளுக்கு சொந்த சிந்தனை ஏதும் கிடையாது. திராவிடவிய, தலித்திய கருத்தியல் கற்பனைக் கதைகளைக் கடன் பெற்றுத் தான் அரசியல் பேசியும் எழுதியும் வருகின்றனர். இந்த கல்வெட்டுகளைப் படித்தாவது கற்பனையை விட்டு உண்மையின் பக்கம் வருகின்றாரா என்று பார்க்கலாம். பழி ஒரு பக்கம் குற்றம் ஒரு பக்கம் என்பதை இவர்கள் உணரட்டும்.

    click https://www.facebook.com/reel/1505189110410648

    பார்வை நூல்: தென்னிந்திய கல்வெட்டுகள் தொகுதி 7, எண் 912, AR 288 of 1902

    பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் அயன்பேரையூர் முக்குடீஸ்வரர் கோவில் தென்புறச்சுவர் 23 வரிக் கல்வெட்டு

    1. ஸ்வஸ்திஸ்ரீ திரிபுவனச் சக்கரவத்திகள் ஸ்ரீ
    2. இராஜராஜ தேவற்கு யாண்டு 25 வது 100 நூ
    3. று அபர பக்ஷத்துப் புதன் கிழமையும் பெற்ற திருவோ
    4. ணத்து நாள் ஸ்வஸ்திஸ்ரீமநு மஹாப்ரதானி
    5. குமரதேவண்ண தண்ட நாயக்கநேன் வ
    6. ன்னாட்டு பேரவூருடையார் திருமுக்கூடலு
    7. டைய நாயனார் தேவதாநம் நன்செய் புன்
    8. சை செம்பை இராஜராஜ தேவனான வாண
    9. கோவரையன் விட்டப
    10. டியே 25 ஆவது ஆனி மாதம் முதல் சந்
    11. திராதித்தவரையும் செல்லக் கடவதாக
    12. இறையிலியாக விட்டோம். இந்தச் சிவகா
    13. ரியத்துக்கு விக்நம் நிநைத்தாருண்டாகி
    14. ல் சிவத்துரோகியும் நாட்டுத்துரோகியு
    15. மாய் என் குதிரைக்குப் புல்லிடும் பறைய
    16. னுக்குத் தன் மினாட்டியை குடுப்பான்
    17. இப்படிக்கு _ _ _ _
    18. தேவதானம் கல்வெட்டிக் குடுத்தே
    19. ன் குமார தேவண்ண தெண்டநாயக்
    20. கநேன். இது ஸ்ரீ மாஹேஸ்வர ரக்ஷை.
    21. சிவமஸ்து. அறஞ்செய்தான் செய்தா
    22. ன் அறங்காத்தான் பாதடி திறம்பாம
    23. ல் சென்னிமேல் வைத்து. ஸிவமஸ்து.

    அபரபக்ஷம் – தேய்பிறை; விக்கினம் – தடை

    விளக்கம்: மூன்றாம் இராசராச சோழனின் 25 ஆம் ஆட்சி ஆண்டு 1241 இல் நாள் நூறு தேய்பிறை புதன்கிழமை அன்று திருவோண நாளில் படைத்தலைவர் குமார தேவண்ண தண்ட நாயக்கன் வன்னாட்டு பேரவூருடைய இறைவன் வெள்ளாறு, கல்லாறு, உப்பாறு கூடும் திருமுக்கூடலூருடைய அப்பனுக்கு தேவதானமாக நஞ்செய், புஞ்சை நிலங்களை செம்பை இராசராச தேவனான வாணகோவரையன் கொடுத்தபடியே இராசராச சோழனின் 25 ஆம் ஆண்டு ஆனி மாதம் சந்திராதித்த வரை தொடரட்டும் என்று இறையிலியாக கொடுத்தோம். இந்த சிவகாரியத்திற்கு எவரேனும் தடை ஏற்படுத்த நினைத்தால் அவர் சிவத்துரோகியும் ஊர்த்துரோகியும் ஆவார். என் குதிரைக்கு புல் போடும் பறையனுக்குத் தன் மனைவியை புணர்வதற்கு அனுப்புவான் ஆவார். இப்படியாக தேவதானத்தை கல்வெட்டிக் கொடுத்தேன் குமார தேவண்ண தண்ட நாயக்கனேன். இது சிவனடியார் பாதுகாப்பு. சிவமாகுக. இந்த அறம் செய்தானே தக்கது செய்தவன். இந்த அறங்காத்தன் பாதஅடியை பிழறாமல் என் தலைமேல் வைத்துக் கொள்வேன். சிவமாகுக.

    கன்னடப் படைத் தளபதியும் பறையரை இழிவு செய்கிறார்.

    பார்வை நூல்: பெரம்பலுர் மாவட்டக் கல்வெட்டுக்கள், செப்பேடுகள், இல. தியாகராஜன், பக். 44

    பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் வாலிகண்டபுரம் சிவன் கோயில் மகாமண்டப வடக்குச் சுவர் 9 வரிக் கல்வெட்டு

    1. ஸ்வஸ்திஸ்ரீ திரிபுவநச் சக்கரவத்திகள் ஸ்ரீ இராசராச தேவற்கு யாண்டு இருப
    2. த்தேழாவது வாணகோவரையன் செம்பை இராஜராஜ தேவனேன் கல்
    3. வெட்டிக் குடுத்த பரிசாவது வாலிகண்டபுரத்து உடையார் திருவா
    4. லீஸ்வரமுடைய நாயனாற்கு திருநாமத்துக் காணி இறையிலியாக
    5. ப்ரஹ்மதேசம் நன்செய் புன்செய் நான்கெல்லையும் சந்திராதி
    6. த்தவரையும் செல்வதாக கல்வெட்டிக் குடுத்தேன் செம்பை இராஜராஜ தே
    7. வனேன் இது மாறுவான் ஏழாநரகத்துக் கீழா நரகம் புகுவான் எ
    8. ன் குதிரைக்குப் புல்லிடுகிற பன்மையானுக்கு தன் மிணாட்டியைக்
    9. குடுப்பான். இது வல்லவரையன் சத்தியம். இப்படி மாஹேஸ்வர ரக்ஷை.

    பரிசு – ஏற்பாடு, வகை, விதம்; திருநாமத்து காணி – நேரடியாக இறைவன் பெயரில் நிலம்; பன்மையான் – பருத்தவன், தடியன்

    விளக்கம்: மூன்றாம் இராசராச  சோழனின் 27 ஆம் ஆட்சி ஆண்டு 1243 இல் செம்பை (ஜம்பை) இராசராச தேவ வாணகோவரையன் கல்வெட்டிக் செய்து கொடுத்த ஏற்பாடாவது வாலிகண்டபுரத்து இறைவர் திருவாலீசுவரமுடைய அப்பனுக்கு அவர் பெயரில் நிலத்தை இறையிலியாக பிரம்மதேசம் என்னும் ஊரில் நஞ்செய், புஞ்சை நிலங்கள் நான்கு எல்லையும் சுட்டினேன். இது சந்திர சூரியர் உள்ள காலம் வரை போவதாகக் கல்வெட்டிக் கொடுத்தேன் செம்பை இராசராச தேவன். இதை மாற்றுபவன் ஏழாம் நரகத்திற்கும் கீழான நரகத்திற்கு போவான். மேலும் என் குதிரைக்கு புல் போடுகிற தடியனுக்கு தன்னுடைய மனைவியை கூட்டிக் கொடுப்பான் ஆவான். இது வல்லவரையன் சத்தியமாக நடக்கும். இதை சிவனடியார் கூட்டம் காக்க வேண்டும். தடியன் எந்த சாதி என்ற குறிப்பு கல்வெட்டில்  இல்லை.

    பார்வை நூல்: பெரம்பலுர் மாவட்டக் கல்வெட்டுக்கள், செப்பேடுகள், இல. தியாகராஜன், பக். 234

    பெரம்பலூர் மாவட்டம் திருவாலந்துறையார் கோயில் கருவறை வடக்கு மேற்கு குமுத பீடம், அர்த்த மண்டப வடக்கு சுவர் குமுத பீடம் 5 வரிக் கல்வெட்டு

    1. ஸ்வஸ்திஸ்ரீ திருபுவனச் சக்கரவத்திகள் ஸ்ரீ குலோத்துங்க சோழ தேவற்கு யாண்டு ஏழாவது மேஷநாயற்று பூர்வ பக்ஷத்து பஞ்சமியும் திங்கள் கிழமையும் பெற்ற சோதி நாள் வடகரை கரிகால கன்ன வளநாட்டு மேல்கரை நாட்டு உடையார் திருஆலந்துறையுறை உடைய நாயனார்ச் சித்திரைத் திருநாள் எழுந்தருளுகையில் இரா(ஜ)ரா(ஜ) தேவன் வாணகோவரையனேன் கும்பிட்டு திருவோலக்க மண்றபத்தே வினோ
    2. தேவாசிரியன் திருவுறைக்கூட வாசலாலே ஒரு சற்பம் திருவோலக்க மண்டபத்தே புகுந்து இதுக்குப் பட்டர்களை அழைத்து ப்ராயச்சித்தங் கேட்க உடையாற்க்கு சில தேவதானமும் மஹாயேசுரற்க்குச் சில பூமிதானமும் பண்ணவேணுமென்று விதிக்கையில் உள்ளூர்த் தேவதான இறையிலியாகையாலே மேல்கரை நாட்டவரை அழைத்து உங்கள் நாட்டு நாயனார் திருஆலந்துறை உடைய னாயனாருக்கு உங்களூர்கள்
    3. கற்பூண்டி, கிளிஞலூர், மாம்பூண்டி, தென்கரை மாம்பூண்டி, விசாலூர், சிற்றூர்_ _ _  புன்செயிலும் நன்செ குழி இருநூறும் இறைஇலியாக கு
    4. டுத்தோம் இராராதேவரான வாணகோவரையனேன். இவ்வூர் (தந்மத்துக்கு யாதாமொருவன் அகிதம் செய்தால் என்) குதிரைக்கு புல்லிடும் வெட்டியானுக்குத் தன் பெண்டாட்டியைக் குடுத்தவனாவான். இது பன்மாஹேச்வர ரக்ஷை.
    5. இவை வாணகோவரையன் எழுத்து. ஸ்வஸ்திஸ்ரீ

    மேழ நாயாற்று  – சித்திரை மாதம்; பூர்வபக்ஷம் – வளர்பிறை;  சோதி நாள் – சுவாதி நட்சித்திரம்; பட்டர் – குருக்கள்;

    விளக்கம்: மூன்றாம் குலோத்துங்கனின் 7 ஆம் ஆட்சி ஆண்டு 1185 இல் சித்திரை மாதம் வளர்பிறை ஐந்தாம் நாள் திங்கட்கிழமை சுவாதி நட்சத்திரத்து அன்று வடகரை கன்னவளநாட்டில் மேல்கரை நாட்டின் இறைவர் திருவாலந்துறையில் இருக்கும் அப்பன் சித்திரைத் திருநாளில் எழுந்தருளிய போது இராசராச தேவன் குலோத்துங்க சோழ வாணகோவரையன் இறைவனை கும்பிட்டு வந்த போது திருவோலக்க மண்டபத்தே வினோ தேவாசிரியன் திருவுறைக் கூட வாயிலில் ஒரு பாம்பு திருவோலக்க மண்டபத்தே புகுந்து போனது. இதற்கு குருக்களிடம் கழுவாய் என்ன என்று கேட்ட போது இறைவனுக்கு சில ஊர் தானமும் மகேசுவரர்களுக்கு பூமி தானமும் கொடுக்க வேண்டும் என்று சொல்லினர். இது உள்ளூரில் கொடுக்க வேண்டிய தேவதான இறையிலி ஆவதால் மேல்கரை நாட்டவரை வரவழைத்து உங்கள் நாட்டின் இறைவன் திருவாலந்துறை ஈசனுக்கு உமது ஊர்கள் கற்பூண்டி, கிளிஞலூர், மாம்பூண்டி, தென்கரை மாம்பூண்டி, விசாலூர், சிற்றூர் ஆகிய ஊர்களில் புஞ்சை நஞ்சை நிலங்களில் 200 குழி வாங்கி இறையிலி தானமாக கொடுத்தேன் இராசராச தேவ வாணகோவரையன். இந்த கொடைக்கு யாரேனும் ஒருவன் கேடு செய்தால் என் குதிரைக்கு புல் போடும் வெட்டியானுக்கு தன் மனைவியை புணரக் கொடுத்தான் ஆவான். இதை சிவனடியார் காக்கவேண்டும். இது வாணகோவரையன் நேரடி எழுத்து. நன்மங்கலம் உண்டாகட்டும்.

    இந்த கல்வெட்டில் வெட்டியான் அகப்பட்டுக் கொண்டான். எத்தனையோ பல சாதிகள் இருக்க புலையர், பறையர், வெட்டியான் போன்றோர் மட்டும் இவ்வாறு இழிவு படக் காரணம் என்ன? ஆரியக் குதிரைக்கு புல் போட்டதே காரணம். இவர்கள் இதில் இருந்து தப்பி இருந்தால் வேறு ஏதோ ஒரு சாதிமார் குதிரைக்கு புல் போட்டு இவ்வாறு அகப்பட்டிருப்பர். நாடாண்ட மன்னனை ஞாயத்திற்கு உட்படுத்தாமல் அவன் வீரத்தையும் கொடையையும் புகழ்ந்துவிட்டு மதத்தையும் பார்ப்பானையுமா கேள்வி கேட்பது? இது தமிழர்க்கு  அறிவுடைமையா?

    பார்வை நூல்: ஆவணம் இதழ் 4, பக். 12 & பெரம்பலூர் மாவட்டக் கல்வெட்டுகள் செப்பேடுகள்,பக். 128/129 இல. தியாகராஜன்

    நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் வட்டம் ஆலந்தூர் நகர் வௌவால்கரட்டின் மேல் பாறையில் உள்ள 16 வரிக்கல்வெட்டு

    1. ஸ்வஸ்திஸ்ரீ நன் மங்கல
    2. ம் சிறக்க திரிபுவனச் சக்கரவர்திகள்
    3. திரு வீரராஜேந்திர சோழ தேவற்கு
    4. யாண்டு ஆறாவது சேல நாட்டு
    5. பொன்பரப்பியில் நக்க சோழங்க தேவர்
    6. முதலிகளில் நங்கள்மரான சோழகோனே
    7. ன் ஆலந்தூரில் ஈசான தேவர் நாயனாற்கு
    8.  என்னேரியில் கழனியிலே பத்துக் கழனி
    9. நாயனாற்கு விட்டேன் சோழங்க தேவர்
    10. திருமேனிக்கு நன்றாக விட்டேன். இத்தன்ம
    11. ம் இறங்காமே கொண்டு பெருகுமவன்
    12. அவன் சீ பாத மிரண்டும் என் தலைமேல்
    13. யித்தன்ம மிறங்கப் படுத்துவனுக்கு
    14. என் குதிரைக்கு புல் சுமக்கும் 
    15. பறையனுக்கு தன் மிணாட்டியைக்
    16. குடுப்பான்  

    முதலி – படைத்தலைவன்; பெருகு – வாழ், வளர்;

    விளக்கம்: கொங்கு சோழன் வீரராஜேந்திரன் கோநேரின்மை கொண்டான் என்ற பட்டம் உடையவன் ஆதலால் இந்த வீரராசேந்திரன் மூன்றாம் குலோத்துங்கனையே குறிக்கிறது எனக் கொள்ளப்படுகிறது. அவனது ஆறாம் ஆட்சி ஆண்டு 1184 இல் சேலம் நாட்டில் பொன்பரப்பியில் நக்கசோழங்க தேவர் என்ற அரையனுக்கு படைத்தலைவர்களாக உள்ளவர்களில் நங்கள்மரான சோழகோன் என்பவர் ஆலத்தூரில் ஈசானதேவ இறைவனுக்கு அவரது ஏரியில் அமைந்த கழனியில் பத்து கழனி நிலம் இறைவனுக்கு தானமாகக் கொடுத்தார். இதை தன் அரையன் சோழங்க தேவன் உடல்நலம் தேறும் பொருட்டு கொடுத்தார். இந்த கொடையை அழிக்காமல் வாழ்பவன் திருப்பாதம் இரண்டும் என் தலைமேல் வைப்பேன். இதை அழிப்பவன் என் குதிரைக்கு புல் சுமந்து வரும் பறையனுக்கு தன் மனைவியை புணரக் கொடுக்கட்டும் என்று சபிக்கிறான்.

    இக்கல்வெட்டில் ஒரு படைத்தலைவன் தன் குதிரையை பேணுபவன் மீது கொண்ட இழிவுக் கருத்து வெளிப்பட்டுள்ளதானது பொதுவாகவே படை மேல்மட்டத்தாரிடம் தொழில் ஏற்றத்தாழ்வு எண்ணம் இருந்துள்ளதை அறிய முடிகிறது. இந்த படையினர் பிள்ளைகள் குதிரை பேணுபவர் பிள்ளைகளை இதே முறையில் தானே ஏளனம் செய்வர்? இந்த தொழில்முறை இழிவு தான் பிறப்புவழி இழிவாக காலப்போக்கில் 13 ஆம் நூற்றாண்டிற்கு பின் மாறியது. ஆனால் சனாதனம், மனுதர்மம் தான் பிறப்பு இழிவை  ஏற்படுத்தியதாக ஆதாரம் இன்றி பொய் உரைக்கின்றனர். இந்த பொய் எழுந்த தமிழ்நாட்டிலேயே இந்த பொய்க்கு கல்வெட்டுகள் சம்மட்டி அடி கொடுக்கின்றன என்பது பிரகிருதியின் விளையாட்டு தானே.

    பார்வை நூல்: சேலம் நாமக்கல் மாவட்டக் கல்வெட்டுகள், பக். 30, எண் 17, அ. கிருட்டினன்

    பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் வாலிகண்டபுரத்து திருவாலீசுவரர் கோவில் மகாமண்டபத் தென்பகுதி மேற்கு சுவரில் (1008 லிங்கம் உள்ள அறை) பொறிக்கப்பட்ட 9 வரிக் கல்வெட்டு

    1. ஸ்வஸ்திஸ்ரீ  போசள வீரசோமீஸ்வர தேவரைசர் ஓலை வன்னாட்டு வா
    2. லிகண்டபுரத்து உடையார் திருவாலீஸ்வரமுடைய நாயனார் கோயில் தா
    3. னத்தார் கண்டு திரிபுவனச் சக்கரவத்திகள் ஸ்ரீ இராசராச தேவற்கு 27
    4. வதில் தாதி பதுமவ்வை நமக்கு நன்றாக ஒரு சந்தி அமுது செய இன் நா
    5. ச்சியார் ஸ்ரீ கத்தத்து நீர்வாத்து இந்நாட்டு சிறுகூடல் ஏரிகீழ் நஞ்செய் நில
    6. த்து தேவதான இறையிலியாக இட்ட நிலம் அரை. இந்நிலம் அரை
    7. க்கும் திருச்சூல தாபனம்பண்ணித் திருக்கற்றளியிலே நம் சாதனப்
    8. ட்டி கல்வெட்டி கொள்வதே. இதுமாறுவான் தந் மிணாட்டியை பு
    9. லையற்கு குடுப்பாந். இது ஸ்ரீ மாஹேஸ்வர ரக்ஷை.

    கண்டு – பார்வைக்கு; தானத்தார் – கோவில் பொறுப்பாளர்; தாதி – வைப்பாட்டி; ஸ்ரீ கத்த – கெண்டி; சாதனப்படி – ஆவணப்படி; மாகேஸ்வரர் – சிவனடியார்

    விளக்கம்: போசள வேந்தன் வீர சோமேஸ்வரனின் நேரடி ஓலை ஆணை இது. வன்னாட்டில் அமைந்த வாலிகண்டபுரத்து ஈசர் திருவாலீஸ்வரமுடைய நாயனார் கோவில் பொறுப்பாளர் பார்வைக்கு வைப்பது யாதெனில் மூன்றாம் இராசராச தேவரின் 27 ஆம் ஆட்சி ஆண்டு 1243 இல் சொல்லியது. என் வைப்பாட்டி பதுமவ்வை என் உடல் நன்றாக ஒரு சந்திக்கு அமுது படைக்க வேண்டி இவளது கெண்டியால் நீர்வார்த்து இந்நாட்டில் சிறுகூடல் ஏரியின் கிழக்கே நஞ்செய் நிலத்தை தேவதான இறையிலியாக கொடுத்த நிலம் அரை மாவா? என்று தெளிவாகக் குறிப்பிடவில்லை. இந்த அரை நிலத்துக்கும் திருசூலக் கல்நாட்டி கோவிலிலே என் ஆவண ஓலைப்படி கல்வெட்டிக் கொள்க. இந்த ஏற்பாட்டில் இருந்து திறம்புபவன் தன் மனைவியை புலையர்களுடன் கலவி கொள்ள அனுப்புபவன் ஆவான். இது சிவனடியார் பாதுகாப்பு.

    நலிந்து போன சோழப் பேரரசு போசள வேந்தனால் முட்டுக் கொடுத்து நிறுத்தப்பட்ட இரட்டை ஆட்சிக் காலம் இது. இங்கே கன்னட போசள வேந்தன் புலையரை இழித்து பேசுகிறான். இதே நூலில் பக்கம் 233 – 234 இல் இடம் பெறும் கல்வெட்டு எண்: 293 இல் “அழித்தாருண்டாகில் எங்கள் குதிரைக்கு புல்லிடும் புலையர்க்கு தங்கள் மினாட்டிகளை குடுப்பார்களாகவும்” என்று உள்ளது. இது புலையர் படைக் குதிரையைப் பேணியதைச் சுட்டுகிறது.

    பார்வை நூல்: பெரம்பலூர் மாவட்டக் கல்வெட்டுக்கள், செப்பேடுகள்; இல. தியாகராஜன், பக். 235

    பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் வரகுபாடி காசி விசுவநாதர் கோயில் முன் கிடக்கும் கல் பலகையில் உள்ள 15 வரிக் கல்வெட்டு

    1. ஸ்வஸ்திஸ்ரீ திரிபுவனச் சக்கரவத்திகள் ஸ்ரீ ராஜராஜ தேவற்கு யாண்டு 2 வது திருப்பழனத்து உடையார்
    2. தொண்டைமானார் பூசற் செய்ய விட்டு கிடு இருந்து இடத்து இராவினையாக பாண்
    3. டியராயன் வந்து வளைந்தவிடத்து ஒளியன் பெற்றாந் ஆரியனை வெட்டிப்
    4. பிடித்து கிடு வந்து தொண்டைமானாரோடுங் கூட குலோத்துங்க வாணக வ
    5. ரையர்  சீ பாதத்தேய்  கண்டா இடத்து இவனுக்கு தண்டேறு வரிசையுங் குடுக்கப் புக்
    6. க இடத்து இவ் ஒளியின் பெற்றான் தெண்டனிட்டு அடியேனுக்கு இவை
    7. வேண்டாம் தண்டலையிற் பொய்கை ஈசுவரமுடைய நாயனார் கோ
    8. யில் திருக்கற்றளிச் சாத்த அன் நாயநாற் திருநாமத்துக் காணியில் பண்
    9. டாரத்துக் கிறுக்கிற சீகாரியப் பேறும் தூதவரி அடியேனுக்குத் தந்தருள
    10. வேண்டுமென்று விண்ணப்பஞ் செய்ய அப்போதேய் புரவரி முதலிகள் நால்வரு
    11. ம் எழிதிய எழுத்திட்டு திருவெழுத்துஞ் சாத்தி திருமுகப் பிரசாதம் பெற்று விடை கொ
    12. ண்டு போந்தேன் ஒளியன் பெற்றாநேன் இந்த திருநாமத்துக் காணிக்கு ந
    13. ன்செய் புன்செய் நத்தம் இதுக்கு விலங்கல் சொல்லுவான் தங்களம்மைக்கு
    14. த் தாநே மிணாளன் தன் உடன் பிறந்தாள் முந்தானை பிடிச்சாநாவான் இதுக்கு வி
    15. லங்கல் சொல்லாதவன் சீபாத மென் தலைமேலய்

    பூசல் – போர்; உடையார் – மன்னர்; கிடு – படைக்கலப் பாசறை; இராவினை – இரவுப்போர்; வளைந்த – சூழ்ந்த; தண்டு ஏறு – படை கடத்தல், படைக்குள் புகல்; திருச்சுற்றளி – பிரகாரம்; திருநாமத்துக் காணி – இறைவன் பெயரில் வழங்கிய நிலம்; விலங்கல் – இடர், இன்மை

    விளக்கம்: மூன்றாம் இராசராச சோழனின் இரண்டாம் ஆட்சி ஆண்டு 1218 இல் திருப்பழனத்து மன்னன் தொண்டைமான் என்வன் பாண்டியப் படையெடுப்பை எதிர்த்துப் போர் புரிகிறான். அவன் தன் படையினரை போர் செய்யவிட்டு படைக்கலப் பாசறையில் ஓய்வு கொண்ட போது இரவுப்போரில் பாண்டியன் அப்பாசறையை வளைத்து சூழ அப்போது ஒளியின் பெற்றான் என்ற படைத்தலைவன் பாண்டியப் படை ஆரியனை வெட்டிச் சிறைபிடித்து படைக்கலப் பாசறைக்கு பிடித்துவந்து தொண்டைமானோடு கூட குலோத்துங்க வாணராயரையும் பாதம் தொழுது நின்ற நேரத்தில் இவனுக்கு படையை கடந்ததற்கு பரிசு கொடுக்கப் போகும் நேரத்தில் இந்த ஒளியன் பெற்றான் தலைதாழ்த்தி அடியேனுக்கு இவை வேண்டாம் மாறாக தண்டலையில் (வரகுபாடி) உள்ள பொய்கை ஈசுவரமுடைய இறைவன் கோவிலில் பிரகாரம் கட்ட அந்த இறைவனுடைய திருநாமத்துக் காணியில் இருந்து கருவூலத்திற்கு செலுத்துகிற திருக்காரிய கட்டணமும், தூதவரியும் எனக்கு ஒதுக்கித்தர வேண்டும் என்று வேண்டீடு செய்த போது அப்போதே அரசாங்க வரித்துறை அதிகாரிகள் நால்வர் எழுதிக் கையெழுத்திட்ட ஓலையில் மன்னர் கையெழுத்தும் இட்டு மன்னனின் வாழ்த்தும் பெற்றுக் கொண்டு விடை பெற்று வந்தேன் என்கிறான் ஒளியன் பெற்றான். இந்த திருநாமத்துக் காணியில் அடங்கும் நஞ்செய் புஞ்செய் நத்த நிலங்களுக்கு இடர் ஏற்படுத்துபவன் தன் தாயைத் தானே புணர்ந்தவன் ஆவான். தன் அக்காள் தங்கையின் முத்தானையை உருவியவன் ஆவான். இந்த அறத்திற்கு தடை சொல்லாதவன் திருப்பாதம் என் தலைமேல் வைக்கப்படும். ஒரு படைத்தலைவன் இவ்வாறு நாக்கூசும்படி சொல்வது படை உயரடுக்கில் ஏற்பட்டிருந்த எண்ணக் கேட்டையே வெளிப்படுத்துகிறது.

    பார்வை நூல்: பெரம்பலூர் மாவட்டக் கல்வெட்டுகள் செப்பேடுகள், பக். 183/184, இல. தியாகராஜன்

    வட ஆர்க்காடு மாவட்டம் திருவண்ணாமலை அருணாச்சலேசுவரர் கோவில் கோபுர இடது நுழை வாயிலில் உள்ள 3 வரிக் கல்வெட்டு.

    1. ஸ்வஸ்திஸ்ரீ திரிபுவனச் சக்கரவத்திகள் ஸ்ரீ குலோத்துங்க சோழ தேவற்க்கு யாண்டு 20 உடையார் திருவண்ணாமலை உடைய நாயனாற்கு
    2. ஆறகளூர் சதிரன் வாணராயனேன் தேவதானமாக விட்ட பெண்ணை வடகரைச் செங்குன்ற நாட்டு கங்க நல்லூர் நாற்பாற்க்கெல்லைக் குள்ளும் நஞ்
    3. சை புஞ்சை யகப்பட விட்டேன் சதிரன் வாணராயனேன். இது மாறுவான் மிணாட்டியை பறையனுக்குக் குடுப்பான். இது பந்மாஹேஸ்வர ரக்ஷை.

    அகப்பட – உட்பட, include; மாறுவான் – திறம்புபவன்

    விளக்கம்: மூன்றாம் குலோத்துங்க சோழனின் 20 ஆம் ஆட்சி ஆண்டு 1198 இல் இறைவன் திருவண்ணாமலை நாயகனுக்கு ஆறகளூர் சதிரன் வாணராயன் தேவதானமாக பெண்ணை ஆற்றின் வடகரையில் அமைந்த செங்குன்ற நாட்டின் கங்க நல்லூரில் நாற்பால் எல்லைக் உள்ளே நஞ்செய், புஞ்செய் நிலங்களை கொடுத்தேன் இந்த சதிரன் வாணராயன் என்கிறான். இதை திறம்புபவன் தன் மனைவியை பறையன் கலவி கொள்ளக் கொடுப்பவன் ஆவான். இதை சிவனடியார் காக்கவேண்டும் என்கிறான். இந்த வாணன் பறையர் குறித்து இழிவான கருத்து கொண்டிருந்தால் மட்டுமே இப்படி கூற முடியும். இது இவனது நேரடிக் கல்வெட்டு.

    பார்வை நூல்: தென்னிந்திய கல்வெட்டுகள் தொகுதி 8, எண் 139, AR No 548 of 1902

    எலவானாசூர்ச் சிவன் கோவில் வெளிப்பிரகாரத்து மேற்கு சுவர் 6 வரிக் கல்வெட்டு

    1. ஸ்வஸ்திஸ்ரீ இராஜராஜ மலையகுலராயநான நீரேற்ற பெருமாளான எதிரிகள் நாயநுக்கு
    2. இவ்வேளக்காறியான தேவப்பெருமாளேன், எதிரிகள் நாயனுக்குப் பின்பு இருந்தேநாகில் என் மாடு ஓட்டிமாற்கு  மண்டைய்யுமிட்டு இ
    3. வர்களுக்கு நீருங்குடுத்து இவர்கள் கலச் சோற்றையும் உண்கிறேன். என் மிணாளன் ஒடு என்னைச் சாவவேண்டாமென்பார் என் மி
    4. ணாளன் ஏறுகிற குதிரைக்குப் புல்லு இடும் காமிகந் எதிரிகன் நாயக முதுமையானுக்கு தன் மிணாட்டியையுங் குடுப்பான். நா
    5. ந் செயாதிருந்தேநாகில் என்னை நெருப்பில் கட்டி புகடுதல் கொல்லுதல் செய்தவன் தன் னோட்டயாற்கு தந் மிணாட்டியையுங்  குடுத்து என் 
    6. மிணாளன் ஏறுகிற குதிரைக்கு புல்லு இடுகிற காமிகநான எதிரிகள் நாயக முதுமையானுக்கு தன் மிணாட்டியை குடுப்பான் என்னைக் கண்டால் கொல்லாதான்.

    வேளக்காரி – காவற் பெண்டு; மண்டையிட்டு – தலையால் பாதம் தொட்டு; ஓட்டையார் – மாடு அல்லது குதிரை ஓட்டி, driver; புகடுதல் – புகுத்துதல்;

    விளக்கம்: மூன்றாம் குலோத்துங்கன் காலத்தில் கிளியூர் மலையமான் சூரியன் நீரேற்றானான எதிரிகள் நாயனான இராஜராஜ மலையகுலராயனின் காவல் பணிக்கு சேர்ந்த தேவப்பெருமாள் என்ற பெண் உறுதி ஏற்கும் போது எதிரிகள் நாயன் இறந்த  பின்னும் நான் உயிர் வாழ்வேனாயின் எனது வேலைக்காரர்களான என் மாடு ஓட்டிமார்க்கு மண்டியிட்டு வணங்கி அவர்கள் கைகால் கழுவ நீர் மொண்டு கொடுப்பேன். அவர்கள் எச்சில்பட உண்ட கலத்தில் மிகுந்து எஞ்சிய சோற்றை உண்பேன். இதே காவல் பணியில் சேர்ந்த அவள் கணவனோடு தானும் சாவேன் என்று உறுதிமொழி தருமிடத்து என்னை அவ்வாறு சாகவிடாமல் தடுப்பவர் தம் மனைவியை என் கணவன் ஏறும் குதிரைக்கு புல் போடுகிற காமிகன் எதிரிகள் நாயன் முதுமையானுடன் கலவி கொள்ள தன் மனைவியை அனுப்பினவன் ஆவான். நான் அவ்வாறு சாகாது இருந்தேன் என்றால் என்னைக் கட்டி நெருப்பில் புகவிட்டுக் கொல்பவன் தன் மனைவியை தன் வண்டி ஓட்டிமார் கலவி கொள்ள அனுப்பினவன் ஆவான். என்னை உயிருடன் கண்டால் கொல்லாமல் விட்டுச் செல்லுகிறவன் தன் மனைவியை என் கணவன் ஏறுகிற குதிரைக்கு புல் போடும் காமிகன் எதிரிகள் நாயன் முதுமையானுக்கு கலவி துய்க்க அனுப்பினவன் ஆவான்.

    இந்த காவற்பெண்டு நெருப்பில் இட்டு கொன்றாலும் திட்டுகிறாள் கொல்லாமல் விட்டாலும் திட்டுகிறாள். இங்கு தான் குழப்பம் உண்டாகிறது. அப்படியானால் தன்னைக் குத்தியோ வெட்டியோ சட்டென்று கொன்றுவிட வேண்டும் நெருப்பில் மட்டும் இட்டால் அது பெருந் துன்பம் என்ற யாரோ ஒருவரது உடன்கட்டை ஏறிய துன்பத்தைப் பார்த்த அனுபவத்தில் இப்படி சொல்லி இருக்கலாம். தூங்குதலை கல்வெட்டுகளில் தன் தலைவன் இறந்தால் வீரன் தானும் சூளுரைத்தபடியே தலையை அரிந்து சாகிறான். அதே போல இந்த வேளக்காரப் பணிக்கும் தம்  மன்னன் இறந்தால் இந்த அந்தரங்க காவல் பணிமக்களும் இறக்க வேண்டும் அதுவே நம்பிக்கைக்கு உரிய செயல் என்பதால் இப்படி உறுதி ஏற்கின்றனர் என்று தெரிகின்றது. ஒரு காவல் பெண்டு தன் பணியைவிட மாட்டு வண்டி ஓட்டும் பணியும் குதிரைக்கு புல்லிடும் பணியும் மிகத் தாழ்வானது என்பதை இங்கே உணர்த்துகிறாள். தானே ஒரு பெண்ணாக இருந்து கொண்டு ஒரு குற்றமும் புரியாத இன்னொருத்தன் மனைவியை அடுத்தவனுடன் கலவி கொள்வாள் என்று இவள் உரைப்பது இவளுக்கு ஞாய உணர்வு இல்லை என்பதையே உணர்த்துகிறது. ஒரு காவல் பெண்டே இப்படி என்றால் இதற்கும் மேல் பணியில் உள்ளோர், மன்னர், அரையரும் இப்படி தான் தாழ்வாக எண்ணி இருப்பார்கள் என்றே உணர்த்துகிறது இக்கல்வெட்டு. இது சாதிவழி வந்த இழிவு அல்ல மாறாக கீழ்மைத் தொழில் வழி வந்த இழிவு. இதை தான் மேட்டிமை மனநிலை என்பது. இந்த மேட்டிமையை மதமும் பிராமணருமா வளர்த்தனர்? இல்லையே. இது படை – காவல் (rank and file)  ஏற்றத் தாழ்வு மேட்டிமை மனநிலை அன்றோ?

    பார்வை நூல்: வரலாற்று வடிவங்கள், கல்வெட்டு 54  பக். 153, ஆசிரியர் புலவர் சு. குப்புசுவாமி & A.R. 156 of  1906

    எலவானாசூர்ச் சிவன் கோவில் வெளிப்பிரகாரத்து மேற்கு சுவர் 4 வரிக் கல்வெட்டு

    1. எதிரிகள் நாயன் வேளக்காறன் திரிகை உடையான் எதிரிகள் நாயனுக்கு பி
    2. ன்பிருப்பான் தங்களமைக்குத் தாநே மிணாளன் எதிரிகள் ணாயனை தவிர
    3. என்னை சேவகங் கொள்வாந் தம் மிணாட்டிக்கு என்னை மிணாளநாக கொ
    4. ள்வான்

    வேளக்காரன் – காவல் மகன்; மிணாளன் – கணவனைக் குறித்தாலும் இங்கு தவறான உறவு உள்ளவர் என்ற பொருள்; திரிகை – சக்கரம்

    விளக்கம்: மலையமான் எதிரிகள் நாயனுடைய வேளக்காரன் திரிகை உடையான் எடுத்த உறுதி மொழி, “மலையமான் எதிரிகள் நாயன் சாவுக்குப் பின் சாகாமல் உயிருடன் இருப்பவன் தன் தாயுடன் கலவி கொண்டவனாவான். எதிரிகள் நாயனைத் தவிர்த்து என்னை வேறு ஒருவருன் பணியாளாகக் கொள்வானாயின் அவன் தன் மனைவியை என்னிடம் கலவிக்கு அனுப்பியவன் ஆவான்”.

    ஒரு அகராதி வேளக்காரப்படை என்பது சோழரின் ஒரு படைப் பிரிவு என்கிறது. செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகர முதலி அரசர்கள் போரில் அடிமை கொண்டு சிறைப்படுத்திய பகை நாட்டு அரசகுல பெண்டிரை காவல் காப்பவர் என்கிறது. இந்த கல்வெட்டிற்கு அரசனது அரண்மனை அல்லது அந்தரங்க இடத்து காவல் பெண், காவல் மகன் என்று கொள்வதே பொருத்தமானது.

    பார்வை நூல்: வரலாற்று வடிவங்கள், கல்வெட்டு 50,  பக். 151, ஆசிரியர் புலவர் சு. குப்புசுவாமி & A.R. 156 of 1906

    எலவானாசூர்ச் சிவன் கோவில் வெளிப்பிரகாரத்து மேற்கு சுவர் 4 வரிக் கல்வெட்டு

    1. ஸ்வஸ்திஸ்ரீ எதிரிகள் நாயனுக்கு மொட்டயராய் வேளை புக்கு சாவாதே
    2. போவார். மிணாட்டி மிணாளந் தேவப்பிள்ளை எதிரிகள்
    3. நாயனுக்கு பிந்பு  இருந்தேன்நாகில் எங்கள் அம்மைக்கு னானே
    4.  மணாளன் 

    மொட்டையர் – மணமாகாதார் அல்லது ஆண்மை நீக்கியவர். மொட்டை என்றால் பொட்டை. ஆண் குறியும் விதையும்  மழுக்கப் பட்ட அலி.

    விளக்கம்: “மலையமான் எதிரிகள் நாயனுக்கு ஆண்மை நீக்கியவராக காவல் பணிக்கு போகிற அலிகள் அவன் இறந்த பின்னும் சாகாமல் உயிர் வாழ்வார். ஆனால் மனைவி கொண்ட கணவனாக தேவப்பிள்ளை நானோ எதிரிகள் நாயனுக்கு பின்னர் சாகாமல் உயிர் வாழ்ந்தால் என் தாயிடம் நானே கலவி செய்தவன் ஆவேன்” என்று உறுதி ஏற்கிறான்.

    இப்படியான உறுதிமொழி அக்காலத்தே கட்டாயம் போலும். அதற்காக இப்படி நாக்கூசும் சொல்லாட்சி தேவையற்றது. மேலே உறுதி ஏற்கும் பெண்ணின் கணவன் இவன் என்று தெரிகிறது. அதோடு மன்னவர் அந்தப்புரத்தில் அலிகள் காவலுக்கு இருந்தனர் என்பதை இக்கல்வெட்டால் தெரிந்து கொள்ள முடிகிறது. இங்கே தேவப்பிள்ளை என்பவன் நான் அலிகளைப் போல் அல்லாமல் தற்கொலை செய்து கொண்டு சாவேன் என்று அலிகளை மட்டம் தட்டுகிறான். அரண்மனைகளில் அலிகள் காவல்புரிவது முதன்முதலாக மேலை ஆசிய சுமேரியாவில் இருந்ததாகப் பதிவுள்ளது. காவலில் அலிகளை இந்தியாவிலும் தமிழகத்திலும் அறிமுகப்படுத்தியோர் மேலை ஆசிய வந்தேறி ஆட்சியாளர்களே என்பதில் ஐயம் இல்லை. கண்ணன் வழிகாட்டலில் அகத்தியருடன் தென்னகம் வந்த வேளிரில் மலையமான்களும் உண்டோ?

    மீசை இல்லாதவரை பறையர்தாம் பெரும்பாலும் பொட்டை என்று திட்டுவர். ஒரு மீசையா வீரத்தையும் ஆண்மையையும் தீர்மானிக்கிறது, அதிலும் பிள்ளை பெற்றவனை பொட்டை எனத் திட்டுவது என்றால் இல்லை உயரமும் எடையும் தான் தீர்மானிக்கிறதே அன்றி மீசை அல்ல வீரத்தைத் தீர்மானிப்பது என்று சொல்லிவிட முடியும். என்றால் இப்படி மீசை இன்மையை இழித்துப் பழித்துப் பொட்டை என்று வாயாடுதல் அறிவுக்குறை அன்றோ? ஆம்! அது அறிவுமந்தம் தான். ஆயினும் ஒரு மூலம் இல்லாமல் இத்தனை ஆண்டுகளாக பொட்டை என இழிக்கும் வழக்கம் பறையர்களிடம் தலைமுறை தலைமுறையாக வந்திருக்காது அல்லவா? மூலத்தை ஆராயுங்கால் இந்த வேளக்கார அலிகள் பறையரைத் தொழிலால் தாழ்த்தி இழுவுபடுத்தியதன் காரணமாகவே அந்த அலி வேளக்காரர்களை பதிலுக்கு பறையர் பொட்டை என்று இழிவுபடுத்துவாராயினர் எனக் கொள்ளமுடிகிறது. இப்படித் தான் பொட்டை என்று திட்டும் வழக்கம் அவர்களிடம் வழிவழியாக வேரூன்றி உள்ளது. இன்று அந்த அரண்மனைகள் இல்லை அதே நேரம் அலிகள் வேளக்காரராய் அல்லாமல் பிச்சைக்காரராய் உள்ளனர். எனவே பறையரின் இந்த அறிவுக் குறையை போக்க எவரேனும் அறிவுரை கூற முன் வரவேண்டும். அவர்களை இதில் தெளிவுபடுத்த வேண்டும்.

    மீசை இல்லா அலெக்சாண்டர் படை மூன்று கண்டங்களில் தடுப்பார் இன்றி வெற்றிக் கொடி நாட்டியது. அதேபோல மீசையில்லா மங்கோலிய இன சப்பானியர் வீரத்தை யாரும் கேள்விக்கு உட்படுத்த முடியாது. தமிழ்நாட்டில் மட்டும் தான் முட்டாள்தனமாக “மீசை உள்ளவன் ஆம்பள, மீசை இல்லாதவன் பொட்டை” என்று வம்பு பேசி திரிகின்றனர். மீசை ஒன்றும் கிழிக்காது. நரம்பு வலுவும் தசை வலுவமே வீரனுக்கு காப்பு.

    பார்வை நூல்: வரலாற்று வடிவங்கள், கல்வெட்டு எண் 51, பக். 151, ஆசிரியர் புலவர் சு. குப்புசுவாமி & A.R. 156 of 1906

    எலவானாசூர் சிவன் கோவில் வெளிப்பிரகாரத்து மேற்கு சுவர் 4 வரிக் கல்வெட்டு

    1. எதிரிக னாயனுக்கு வேளைபுக்கு எதிரிக னாயனுக்கு பிந்பு  இ
    2. ருக்கும் வேளைக்காற மிணாட்டி மிணாளந் ஆள்ளுடையாந்நேன்
    3. நானும் எதிரிக நாயகநுக்கு பிந்பு இருந்தேநாகில் எந்நுடப் பிறந்
    4. தாளுக்கு நாநே மிணாளந்மொட்டையாய் கல்லு வெட்டி _ _ _ திருக்  _ _ _ (கல்வெட்டு சிதைந்து விட்டது)

    விளக்கம்: மலையமான் எதிரிக நாயனுக்கு காவல் பணியாகப் போய் எதிரிக நாயன் சாவிற்கு பின்பும் உயிரோடு இருக்கும் காவல் பணி மனைவி, கணவன்மார்களே ஆளுடையான் நான் சொல்வதைக் கேளுங்கள், நானும் உறுதி மொழி ஏற்கிறேன் “எதிரிக நாயன் மாண்ட பின்பு உயிரோடு இருந்தேனாகில் நான் என் உடன் பிறந்தாளோடு கலவி செய்தவனாவேன். நான் விதைகளும் தண்டும் மழித்து அலி ஆகிடுவேன் என்று கல்வெட்டி (கொடுத்தேன்) என்பதோடு கல்வெட்டு சிதைந்து விட்டதால் மேலும் செய்தியை அறிய முடியவில்லை. இந்த உறுதிமொழியை இறவாத காவல் பணி இணையர் முன்பு ஆளுடையபிள்ளை மேற்கொண்டதாகத் தெரிகிறது.  இவனும் அலியை இகழ்கிறான். பெண்மை இல்லாதவனை நங்கை என்ற பெண்ணைக் குறிக்கும் சொல்லால் திருநங்கை என்று குறிப்பது தவறு. திருநங்கை என்ற சொல்லாக்கம் தவறு. அலியே போதும்.

    பார்வை நூல்: வரலாற்று வடிவங்கள், கல்வெட்டு எண் 52,  பக். 152, ஆசிரியர் புலவர் சு. குப்புசுவாமி & A.R. 156 of 1906

    எலவானாசூர்ச் சிவன் கோவில் வெளிப்பிரகாரத்து மேற்கு சுவர் 4 வரிக் கல்வெட்டு

    1. எதிரிகள் நாயநுக்கு  வேளைபுக்கு எதிரி நாயநுக்கு பிந்பு இருக்கும்
    2. வேளைக்காறர் மிணாளந் சூரியநேன் நானும் எதிரிக நா
    3. யகனுக்கு பிந்பு இருந்தேனாகில் எந்
    4. உடன் பிறந்தாளுக்கு நாநே மிணாளன்  

    புக்கு – போகும், சேரும்

    விளக்கம்: மலையமான் எதிரிக நாயனுக்கு காவல் பணிக்கு போகும் எதிரிக நாயன் சாவுக்கு பின்னும் வாழப்போகும் வேளக்காரர்காள் நான் சொல்வது கேளுங்கள், “ஒரு பெண்ணுக்கு கணவனான சூரியன் எனும் பெயருடைய நான் எதிரிக நாயன் இறந்த பின் நான் உயிர் வாழ்வேனாகில் என் உடன் பிறந்தாளுடன் நான் கலவி கொண்டவனாவேன்” என்று உறுதிமொழி ஏற்கிறான்.

    பார்வை நூல்: வரலாற்று வடிவங்கள், எண் 53, பக்.153, புலவர் சு. குப்புசாமி

    திருகோவிலூர் வட்டத்தில் வசந்தகிருஷ்ணபுரம் மேட்டுக்கொல்லைப் பாறை 5 வரிக் கல்வெட்டு

    1. உய்யக்கொண்டி வேளைக்காற தொண்ட
    2. மாற் படைச்சந் இவனுக்கு பின் இருப்பேனாகில்
    3. தம்மைக்குத்  தாநேய்  மிணாளன்
    4. கொண்டி வேளக்காறந் வாளி தொண்டமாந்
    5. இவநுக்கு பின்பு இருப்பார் தங்களம்மைக்கு மிணாளர்

    கொண்டி – சிறப்பான, அடங்காத; படைச்சன் – படையாள்

    விளக்கம்: மன்னர் பெயரும் ஆண்டுக் குறிப்பும் இல்லாத 13 ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டு இது. உய்யக்கொண்டி என்னும் அடங்காத, சிறப்புடைய காவல் பணிக் குழுவை நடத்தும் தொண்டமானின் படையாள் இந்த தொண்டமான் இறப்பிற்கு பின் தான் உயிர் வாழ்ந்தேனாயின் என் தாயை நானே புணர்ந்தவன் ஆவேன் என்று சூளுரைக்கிறான். அடங்காத சிறப்புடைய காவல் பணிக்குழுவை நடத்தும் வாளி தொண்டைமான் இறந்தபின் உயிருடன் இருப்பவர் அவர் தம் அம்மைக்கு தாமே கலவியாளர் ஆவார். இங்கே தொண்டைமான் என்பவர் அரசன் அல்லன் ஆனால் ஏதோ ஒரு மன்னனின் காவல்பணிக் குழுவிற்கு தலைவன் ஆவான். அவன் மீது புதிதாய் சேரும் காவலர் சத்தியம் செய்கின்றனர். இரண்டு செய்திகளும் வெவ்வேறு காலத்தில் பொறித்தன போல உள்ளன.

    பார்வை நூல்: ஆவணம் இதழ் 4, பக். 21

    வட ஆர்க்காடு மாவட்டம் திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோவில் தென் பக்கத்தில் உள்ள முதல் பிரகாரத்தில் தரையில் பதித்த பலகைக் கல்லில் உள்ள 7 வரிக் கல்வெட்டு

    1. ஸ்வஸ்திஸ்ரீ கோவிராசகேசரி பந்மற்கி யாண்டு 13
    2. ஆவது வாணகோவரையர் குணமந்தன் குறும்ப கோ
    3. லாலன் வயிரமேகனார் கொடுக்கன் சிற்றண்புலியூர்
    4. நாடன் திருவண்ணா நாட்டு தேவதாநப் பிரமதேயம் புலி
    5. யூர் நாடி ஸதுர்வ்வேதி மங்கலத்து ஏரிக்கு அறமாக குடு
    6. த்த பொன் முதல் இருபதின் கழஞ்சு துளைபொன் காற் ப
    7. லிசையால் ஆட்டு ஐங்கழஞ்சு பொன் பங்கினி பட்ட தலையா _ _

    குணமந்தன் – குணக்குன்று; கொடுக்கன் – மகன்;

    விளக்கம்: சோழன் முதலாம் ஆதித்தனின் பதின்மூன்றாம் ஆட்சி ஆண்டு 884 இல் வாணகோவரையர் குணம் நிறைந்தவன் குறும்பர் தம் தலைமைக் செங்கோலைக் கொண்டவன் வாணகோப்பாடி மன்னன் வயிரமேக வாணரைசன் மகன் சிற்றண்புலியூர் நாடன் திருவண்ணா நாட்டின் தேவதானப் பிரம்மதேச ஊர் நாடி சதுர்வேதி மங்கலத்தில் உள்ள ஏரியைப் பேண தர்மமாகக் கொடுத்த பொன் மூலதனம் 20 கழஞ்சு துளைப் பொன்னாகும். அதற்கு ஆண்டுக்கு கால் பொன் வட்டியாக ஐந்து கழஞ்சு பொன் பங்கு  என்பதுடன் கல்வெட்டு சிதைந்துவிட்டது. அதனால் முழு விவரம் தெரியவில்லை.

    இக்கல்வெட்டு முகமையாக தெரிவிக்கும் செய்தி வாணர் ஆடு மேய்க்கும் குறும்பர் இனத்தவர் என்பதே. வாணர் கோலாரைத் தலைமை இடமாகக் கொண்டு ஆண்ட கன்னடர் ஆவர். தமிழகத்தில் பல்லவர், முத்தரையர் கன்னியாகுமரி வரை பரவி ஆண்டது போல பரவி ஆண்டவர் வாணர்.

    பார்வை நூல்: தென்னிந்திய கல்வெட்டுகள் தொகுதி 8, எண் 65, பக். 32

    இன்னும் சில கல்வெட்டுகளை காண click  https://groups.google.com/g/vallamai/c/I8OUSI1Ipa8/m/3-GYDO4tAQAJ

    Share
  • சங்கம் வைத்து நாடாண்ட மன்னவர்

    சங்கம் வைத்து நாடாண்ட மன்னவர்

    சேசாத்திரி ஸ்ரீதரன்

    ஒரு அரசன் தனது ஆட்சி தன்னை விட்டுப் போகாமல் இருக்கத் தன் சுற்றம், நட்பு ஆகியோரைக் கொண்டு ஒரு பாதுகாப்பு வளையம் / அரண்   அமைத்திருப்பான். இந்த வட்டத்துள் வருவோர் மட்டுமே படைத் தலைவர்களாக அமைச்சர்களாக தூதுவர்களாக கருவூலக் காப்பாளர்களாக இன்னும் பிற பதவிகளில் அமர்த்தப்படுவர். அப்போது தான் மன்னவனின் படையும், செல்வமும் (கூழ்), குடிகளும் (நாடும்) அவனுடையதாக இருக்கும். அல்லாவிடில் அவன் உடனே அரசாட்சியை இழந்து விடுவான்.

    படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும்

    உடையான் அரசருள் ஏறு  (குறள் 381; இறைமாட்சி)

    ஒரு மன்னன் ஆளும் நாட்டின் பரப்பு எத்தகு விரிந்ததாக இருந்தாலும் மன்னன் விடுக்கும் செய்தி அவனது கீழ்நிலைச் சேவகர், பணியாளருக்கு உடனடியாகச் சென்றடைய வேண்டும். அதே போல நாட்டின் மூலை முடுக்குகளில் நடந்தேறும் நிகழ்வுகள் குறித்த செய்தி மன்னனின் காதுகளுக்கும், கவனத்திற்கும் விரைந்து எட்ட வேண்டும். இந்த பின்னல்வலை (network) சீராக நடைபெற்றால் தான் அவன் ஆட்சிக்கு கேடு ஏதும் வராது. இதில் எங்கேனும் சுணக்கம், தொய்வு ஏற்படுமானால் அது சீரற்ற ஆட்சியாகவே கருதப்படும். இப்படி மேலிருந்து கீழாகவும் கீழிருந்து மேலாகவும் செய்தியைப் பரிமாற நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் ஆங்காங்கே இவர்கள் கூடிப் பேசுவதற்கு என்று இடங்கள் ஏற்படுத்தப்பட்டதற்கு சான்றாக சில ஊர் பெயர்கள் உள்ளன. இதற்கு “கூடல்” என்று பெயர். மதுரைக்கு கூடல் என்று ஒரு பெயர் உண்டு. கூடல் என்றால் சங்கம், சங்கமம் ஆகும். கல்வெட்டுகளில் கூடல் என்று குறிக்கப்பட்ட இவ்விடங்கள் இன்று கூடலூர் எனப்படுகின்றன. கருநாடகம் அசன் மாவட்டத்தில் காவேரி ஆற்றுக்கு வடக்கே ஆறகலகூடு 7000 என்ற ஊரை வெற்றிப் பரிசாக முதலாம்இராசராசன் பஞ்சவன் மாராயன் என்ற படைத்தலைவனுக்கு ஈந்தான். இங்கும் கூடு என்பது ஆறு அகன்ற இடத்தில் 7000 பேர் கூடுவதைக் குறிக்கிறது. தகடூர் > தகு + அடு + ஊர். தகு என்றால் பொருந்து, கூடு என்று பொருள். அடு என்றால் செய்கை. இதாவது கூடிச் செயற்படும் இடம் (assembling point). கல்வெட்டில் இடம்பெறும் மிலட்டூர், மிலட்டுநிலை, மிழலைநாடு ஆகிய பெயர்கள் சேரும் இடம், தங்கும் இடம், திரளும் நாடு எனும் பொருள் கொண்டவை.

    மில் என்றால் பொருந்துதல், சந்தித்தல், நெருங்குதல் என்ற கருத்துடையது. தமிழில் கணவனைக் குறிக்க மிணாளன் என்ற சொல்லும் மனைவியைக் குறிக்க மிணாட்டி என்ற சொல்லு கல்வெட்டுகளில் காணப்படுகின்றன. இது மில் > மிள் > மிண் என்று சொல்லாய்வில் விரியும். இன்றும் இந்தி மொழியில் மிலானா என்ற சொல் பொருந்துதல், கூடுதல் என்ற பொருளில் பயன்பாட்டில் உள்ளது. இடத்தைப் போலவே மக்கள் கூடிச் செயற்படுவதற்கும் மில் என்ற வேரைக் கொண்டு மில் + ஆடு = மிலாடு என்ற சொல் மலையமான்களால் கூட்டப்படும் சங்கத்திற்கு வைக்கப்பட்டுள்ளது. மில் > மல் > மண்டு என்றால் நிறைதல் ஆகும். இந்த மிலாடு > மலாடு என்றும் கல்வெட்டில் குறிக்கப்பட்டுள்ளது. மலாடு என்பதும் பொருந்துதல், கூடுதல் கருத்து கொண்டதே. ஒரு அரசனின் செய்தியை கீழ்நிலைக்கு கொண்டு சேர்க்கவும் கீழ்நிலை நடப்புகளை மேலே கொண்டு சேர்க்கவும் நம்பிக்கைக்குரிய ஆள்கள் தேவை. இதற்கு ஏதோ ஒரு இன உணர்வு அடிப்படையாக அமைகிறது. இந்த மிலாடர்கள் மலையமான்களின் கோத்திரத்தவராக இருந்துள்ளனர். இந்த ஆள்கள் அவ்வப்போது கூடி ஆலோசித்து செயற்பட்ட செய்தி இரண்டாம் இராசராசனின் 11 ஆம் ஆட்சி ஆண்டு கி.பி. 1161 இல் கள்ளக்குறிச்சி வட்டம் வலஞ்சுரம் பசுபதீஸ்வரர் கோயிலில் வெட்டப்பட்ட கல்வெட்டு ஒன்றில் 79 நாட்டு மிலாடு (சங்கம்) என்று குறிப்பிடுகிறது. இந்த மிலாட்டில் தருமபுரி, வேலூர், ஈரோடு, தஞ்சை பகுதி நாட்டு மிலாடர்களும் கலந்து கொண்டுள்ளனர் (பார்க்க ஆவணம் 11, பக்.32). இந்த பகுதிகள் அனைத்துமே மலையமான் நாடு அல்ல என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். பின் எப்படி மிலாடு என்பது மலைநாட்டைக் குறிக்கும்? ஆனால் மலைநாடு என்பதையே மிலாடு, மலாடு என்று திரித்து கல்வெட்டில் குறிக்கப்பட்டுள்ளதாக Ephigraphia Indica வில் தவறாக குறித்துவிட்டனர். இதே தவறான கருத்தை அகராதிகளிலும் ஏற்றியுள்ளனர். இதனால பெரும் சர்ச்சை உண்டாகிறது. எனவே கல்வெட்டுச் சான்றுகளுடன் மிலாடு, மலாடு என்பது மலைநாடு அல்ல அது சங்கத்தை, சங்கமத்தை தான் குறிக்கிறது என்று காட்டுவதே இந்த கல்வெட்டு விளக்கத்தின் நோக்கம்.

    திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டம் வீரணம் என்ற ஊரில் உள்ள 23 வரி நடுகல் கல்வெட்டு

    1. ஸ்வஸ்திஸ்ரீ கோவிசைய கம்ப போத்தரையர்க்கு யாண்டு பதினாலாவது
    2. வாண கோவரையர் வயிர மேகனார் வாண கோப்பாடி, மலா
    3. டு, மிலாடைப் பாடியுஞ் சோழ நாட்டு காவேரியின்
    4. வடகரை எல்லாமாளா நின்ற காலத்து வேணாட்டு முன்னூ
    5. று மெயின நாடை
    6. ந்நூறும் ஆண்
    7. ட நந்தி பெருமா
    8. னார் மகன் அக்கழி
    9. மல்லனார் மேற்
    10. கோவலூர் நாட்டு
    11. வென்னாமுஞ் சா
    12. த்தனூரும் ஆளா
    13. நிற்கப் பங்கள
    14. நாட்டுடைய மாதே
    15. வர் படை சாத்த
    16. னூர் எறிய வே
    17. ன்னாட்டு நி
    18. ன்று சென்று பி
    19. ன்பு சென்று
    20. பிணங்கி வே
    21. னாட்டல்லை
    22. க் காராச்சங்க
    23. ன்ப் பட்டான் கல்

     எறிய – அழிக்க; பட்டான் – வீர சாவடைந்தான்; கல் – நினைவுக் கல்

    விளக்கம்: பல்லவன் கம்ப வர்மனின் 14 ஆவது ஆட்சி ஆண்டில் 877 இல் வாணகோவரையர் வயிரமேக வாண அரசன் தென் பெண்ணையின்  வடக்கே திருமுனைப்பாடி, செங்கம் முதலான வாணகோப்பாடி நாட்டையும், திருக்கோவிலூர் – உளுந்தூர் பேட்டையை உள்ளடக்கிய மலாடு நாட்டையும், பெரம்பலூர் – சேலம் ஆத்தூர், வாழைப்பாடி ஆகியவற்றை உள்ளடக்கிய மிலாடு நாட்டுப் பாடியையும், சோழநாட்டின் காவேரி வடகரையான அரியலூரையும் ஒன்று சேர ஆண்டு வந்த காலத்தில் வேணாடு முந்நூற்றையும் (செங்கம்), எயில் நாடு ஐந்நூற்றையும் (கிருஷ்ணகிரி) ஆண்ட நந்திப் பெருமகன் போரில் இறந்துவிட அவரது ஆட்சிப் பகுதி சுருங்கி அவரது மகன் அக்கழிமல்லன் மேற்கு கோவலூர் நாட்டின் வெண்ணத்தையும் சாத்தனூரையும் ஆளும் நிலைக்கு தள்ளப்பட்டார். அப்போது வேலூர் பக்கம் உள்ள பங்கள நாட்டை ஆளுகின்ற மாதேவரின் படை சாத்தனூரைத் தாக்கி அழிக்க வெண்ணத்தையில் இருந்து சென்று பகைவரைத் துரத்தி பின்பு சென்று சண்டையிட்டு வெண்ணத்தை எல்லையில் வீரச்சாவடைந்தான் காரச் சங்கன் என்ற வீரன். அவன் நினைவில் நிறுத்திய கல் இது.

    வயிர மேக வாணரைசர் நான்கு நாட்டுப் பகுதிகளையும் ஒருங்கே ஆண்ட குறிப்பை வைத்துப் பார்க்கும் போது அவர் வேந்தர் என்று கருதப்படுவதற்கு ஈடாக ஒரு பெரு நிலப் பகுதியையே ஆண்டுள்ளார் என்று தெரிகின்றது. இந்நாடுகளை அவரது முன்னோர்கள் போரில் வென்று அந்த ஆட்சியாளர்களை தமது கட்டுப்பாட்டில் கொண்டு வந்து இருக்கலாம் என்று ஊகிக்க முடிகிறது. இவரது மகள் தான் செம்பியன் மாதேவியான கண்டராதித்த சோழன் மனைவி. இக்கல்வெட்டில் மிலாடு என்று தனியாகவும் மலாடு என்று தனியாகவும் குறிக்கப்பட்டுள்ளது காண்க. அவை இருவேறு நாடுகள் என்று தெளிவாகிறது. எனவே வடக்கே இருந்த கன்னட வாணர் மலையமான்களை வென்று தம் நாட்டின் ஆட்சிப் பரப்பை தெற்கே விரித்துள்ளனர் என்று ஊகிக்க முடிகிறது. இந்த இரண்டு சொல்லாட்சியால் மிலாடு > மலாடு என்பன மலைநாடு என்பதன் திரிப்படைந்த சொல்  என்ற வாதம் தகர்ந்து போகின்றது. மல் > மண்டுதல் என்றால் திரளுதல், நெருக்குதல், நிரம்புதல் என்ற சேர்க்கைக் கருத்து கொண்டது. மில் > மிணாளன், மிணாட்டி என்பவை கூடுகைக் கருத்தில் கணவன் மனைவியை குறிப்பவை என்பதை நோக்கினால் மிலாடு என்ற சொல்லும் சங்கம், கூடிச் செயற்படுவது ஆகிய பொருள்களை உடையது என்று விளங்கும்.

    பார்வை நூல்: நடுகல் கல்வெட்டுகளும் சிற்பங்களும், ச. கிருஷ்ணமூர்த்தி, பக். 212; செங்கம் நடுகற்கள் 46 -1971

    சேலம் வாழப்பாடி வட்டம் பேளூர் கிராமம் தான்தோன்றீஸ்வரர் வெளிப்புற கல்லில் வெட்டிய 21 வரிக் கல்வெட்டு

    1. ஸ்வஸ்தி ஸ்ரீ
    2. வீரபாண்டிய
    3. ன் றலை கொண்
    4. ட கோப் பரகேசரி
    5. பன்மற்கு யாண்டு 3
    6. ஆவது பார்க்கவ கோ
    7. த்ரத்து மிலாடுடையா
    8. ன் அகலங்கன் ம
    9. லையராதித்தனான செ
    10. ம்பியன் மிலாடுடை
    11. யானேன் துறிவி நா
    12. ட்டுராளிகளை ஊராளித்திறை
    13. நாற்கழஞ்சே காலே கொ
    14. ள்வதாக பூவிலை செய்
    15. து குடுத்தேன் செம்பி
    16. யன் மிலாடுடையா
    17. னேன்.
    18. இது மா
    19. ற்றுவான்
    20. ஏழா நரக
    21. ம் புகுவான்.

    கோத்திரத்து – கோத்திரத்தாரின்; மிலாடு – சங்கம், சங்கமம், assembly, association, federation; மலையர் ஆதித்தன்– மலையர்குலத் தலைவன்; ஊராளிகள் – ஊர், கிராம  நாட்டாமை செய்வோர்; பூ விலை – நில வரி; திறை – கப்பம், tribute

    விளக்கம்: ஆதித்த கரிகாலனின் மூன்றாம் ஆட்சி ஆண்டு 969 இல் வெட்டப்பட்ட கல்வெட்டு இது. பார்க்கவ கோத்திரத்தாரது சங்கத்தின் தலைமை உடையவனான அகலங்கன் மலையராதித்தனான செம்பியன் மிலாடுடையன் சொல்வது யாதெனில் “துறவி நாட்டின் கிராம  ஊராட்சி செய்வோர் ஊராளிகள் செலுத்த வேண்டிய வரியாக நான்கு கழஞ்சே கால் கொடுத்தல் போதும் என்று நில வரி நிர்ணயம் செய்தேன் செம்பியன் மிலாடுடையானேன்” என்று ஆணையிடுகிறான். இதை மாற்றிக் கெடுப்பவன் ஏழாம் நரகத்திற்கு போவான். ஒரு நாட்டுப் பிரிவில் 10 – 15 கிராமங்கள் மேல் இருக்கும். அங்குள்ள வரித் திரட்டுவோரைத்தான் இவன் ஊராளிகள் என்கிறான்.

    ஆதித்த கரிகாலனின் இரண்டாம் ஆட்சி ஆண்டில் 968 இல் இந்த செம்பியன் மிலாடுடையான் திருக்கோவலூர் கீழுர் வீரட்டானமுடைய ஈசன் கோவிலுக்கு இரண்டு நொந்தா விளக்கு எரிக்க 192 ஆடுகள் கொடுத்த செய்தி தென்னிந்திய கல்வெட்டுகள் தொகுதி 7 எண்: 900 இல் இடம் பெற்றுள்ளது. அதிலும் மிலாடுடையார் அகளங்கன் மலையராதித்தனாகிய செம்பியன் மிலாடுடையார் என்று குறிக்கப்பட்டுள்ளது. இதில் முதல் மிலாடுடையார் என்பது சங்கத் தலைவன் என்பதையும் பெயருக்கு பின்னுள்ள மிலாடுடையார் சோழன், சேரன், பாண்டியன் போல பட்டப் பெயராகவும் ஆளப்பட்டுள்ளது. இக்கல்வெட்டுகள் “மிலாடு” என்பது மலைநாடு அல்ல அது சாதி சங்கம் தான் என்பதற்கு போதுமான ஆதாரமாக உள்ளன. இல்லாவிடில் பார்க்கவ கோத்திரத்தை மிலாடிற்கு முன் ஏன் குறிப்பிட வேண்டும்? பார்க்கவ கோத்திரத்தில் உட்பட்ட மலையமான்கள் மிலாட குலத்தவர் எனப்பட்டனர்.

    பார்வை நூல்: சேலம் நாமக்கல் மாவட்டக் கல்வெட்டுகள், எண்: 289, பக். 228, தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக வெளியீடு.

    திருக்கோவிலூர் திரிவிக்கிரம பெருமாள் கோவில் 9 வரிக் கல்வெட்டு

    1. ஸ்வஸ்திஸ்ரீ நரஸிம்ஹ வன்ம நிர்பதி ஸ்ரீ கோவலூரே பஜன் வாஸம் விஸ்வ ஜகன்நிவாஸ வபுஷ ஸ்ரீ வாமனஸ்ய கரோத் ஸைலம் ஸும்பித ஸாதகும்ப விலஸத் கும்பம் ம
    2. ஹா மண்டபம் பிரகாரம் பரமாலிகா விலஸிதம் முக்தாமயீஞ் ச ப்ரபாம் கோயில் ஸ்ரீ வைஷ்ணவர் ரக்ஷை. ஸ்வஸ்திஸ்ரீ திருமகள் மருவிய செங்கோல் வளரத் தன் திருத்தமையனொடும் போ
    3. ய் இரட்டப்பாடி ஏழரையிலக்கமுங் கொண்டு கொல்லாபுரத்து ஜயஸ்தம்ப நாட்டி மீண்டு போந்து பேராற்றங்கரைக் கொப்பத்து ஆஹவமல்லனை யஞ்சுவித்து ஆங்கவன் ஆனையும் குதிரையும் பெ
    4. ண்டிர் பண்டாரமுங் கைக்கொண்டு விஜயாபிஷேகஞ்  செய்து வீரசிம்ஹாசனத்து வீற்றிருந்தருளிய கோப்பரகேசரி பன்மரான உடையார் ஸ்ரீ இராஜேந்திர  தேவர்க்கு யாண்டு ஆறாவது மிலாடான ஜனநாத வளநாட்டுக் குறு
    5. க்கைக் கூற்றத்துப் பிரமதேயம் திருக்கோவலூரான ஸ்ரீ மதுராந்தக சதுர்வேதி மங்கலத்துத் திருவிடைக்கழி ஆழ்வார் ஸ்ரீ விமானம் முன்பு இட்டிகைப் படையாய்ப் பலகைப் பிளந்தமை கண்டு பார்க்கவ வம்ஸத்து மிலாடு உடை
    6. யார் இரணகேசரி இராமரான நரசிங்கவன்மர் கோயிலை இழிச்சிக் கருங்கல்லை கொண்டு ஸ்ரீ விமானமும் மண்டபமும் எடுப்பித்துப் பூரண பொற்குடம் அஞ்சு வைப்பித்துத் திருச்சுற்று மாளிகையும் முன்பில் மண்டப
    7. மும் எடுப்பித்து முத்துப் பந்தலுங் கொடுத்து முன்பு கல்வெட்டுப்படியுள்ள நிமந்தங்கள் எல்லாம் இந்த ஸ்ரீ விமானத்தே கல்லும் வெட்டுவித்தார் நரசிங்க வன்மர் என்று அபிஷேகம் பண்
    8. ணி முடிகவித்து மிலாடு இரண்டாயிரம் பூமியும் ஆண்ட மிலாடுடையார் நரசிங்க வன்மர். நரசிங்கவன்மர் சந்திராதித்தவல் எரிக்க வைத்த திருநுந்தா விளக்கு இரண்டு. இவ
    9. ற்றுக்கு விளக்கு எரிக்க குடுத்த சாவாமூவாப் பெரும் பசு அறுபத்து நாலு. இவற்றால் நிசதம் விளக்கு இரண்டினிற்கு நெய் உறி. இப்பரிசுக் கைக்கொண்டு _ _

    நிர்பதி > நரபதி – மக்கள் தலைவன்; பஜன் – வணங்கத்தக்க; படை – கல் அடுக்கு; இரணகேசரி – போர்க்களச் சிங்கம்; இழிச்சி – இடித்து வீழ்த்தி; நிவந்தம் – பூசைத் திட்டம்; அபிஷேகம் – மஞ்ச நீராட்டு; நிசதம் – ஏற்பாட்டு அளவு;

    விளக்கம்: தொடக்க வரி சமசுகிருத சுலோகத்தில் உள்ளது. மனிதர் தலைவன் நரசிம்ம வர்மரான மன்னவர்க்கு நன்மங்கலம் சிறக்கட்டும். திருக்கோவலூரில் வணங்கத்தக்க வீடு இது. பேராளாவிய அண்டத்தோன் வாழும் அழகுடையது. வாமனரால் உருவாக்கம உடையது. விரும்பி செய்த கலசம் ஒளிரும் கலசம் மகா மண்டபம் திருச்சுற்று பிரமிப்பான அற்புதமான முத்தால் ஆன ஒளிரும் கோயில். இதை வைணவர் பாதுகாக்க வேண்டும்.

    இரண்டாம் இராசேந்திர சோழனின் மெய்க்கீர்த்தியை குறிப்பிட்டு அவனது 6 ஆம் ஆட்சி ஆண்டில் 1056 இல் குறுக்கைக் கூற்றத்து பிரம்மதேயம் திருக்கோவலூர் என்னும் மதுராந்தக சதுர்வேதி மங்கலத்து உலகளந்த பெருமாளின் கோவில் விமானம் முன்பு செங்கல் அடுக்கிய கட்டடமாக இருந்தது. அதன் மேல்தட்டு பிளந்து இருந்ததைப் பார்த்த பார்க்கவ வமிசத்தாரின் சங்கத்தை (மிலாடு) உடைய, இதாவது தன் தலைமையில் கட்டுப்படுத்துகின்ற இரணகேசரி இராமன் என்னும் நரசிங்க வர்மன் அந்த செங்கல் கோவிலை இடித்து வீழ்த்தி கருங்கல்லைக் கொண்டு திருவிமானமும் மண்டபமும் எழுப்பி பூரண பொற்குடம் ஐந்தும் வைத்து திருச்சுற்றுப் பிரகாரமும் முன்னே மண்டபமும் கட்டி அதற்கு முத்துப் பந்தலும் செய்து கொடுத்து கோவில் இடிப்பிற்கு முன் இருந்த கல்வெட்டுகளின்படி பூசைத் திட்டம் அத்தனையும் செய்வித்து. இந்த விமானத்தின் கீழ் கல்வெட்டுவித்தார் நரசிங்க வர்மர். அங்கே அவருக்கு மஞ்ச நீராட்டி மணிமுடி கவித்து மிலாடு என்னும் சங்க உறுப்பினர் 2,000 பேருடைய கவனிப்பில் உள்ள நிலத்தை ஆண்டவர் மிலாடுடையார் நரசிங்க வர்மர். இதோடு நரசிங்க வர்மர் சந்திர சூரியர் உள்ள கால அளவும் எரிப்பதற்காக இரண்டு நுந்தா விளக்குகளை கொடுத்தார். இவற்றை எரிக்க அவர் கொடுத்த சாவாமூவாப் பெரும் பசுக்கள் 64 ஆகும். இதற்கு ஏற்படுத்திய இரண்டு விளக்குகளின் நெய்க்கு அளவு உறி அளவு ஆகும். இந்த திட்டத்தை கையில் ஏற்று என்பதோடு கல்வெட்டு செய்தி நின்றுவிட்டது. 2000 பூமியும் ஆண்ட என்ற சொற்றொடர் நரசிம்ம வர்மன் இறந்த பின் அவன் வெட்டிய முதற் கல்வெட்டை அகற்றி இரண்டாம் முறையாக விரிவாக இக்கல்வெட்டை கோபுரத்தின் கீழ் வெட்டி இருக்க வேண்டும் என்று தெரிகிறது.

    சி.வை. சதாசிவ பண்டாரத்தார் கூறுவது போல இங்கு மிலாடு 2,000 என்பதை நிலத்தின் அளவாகக் கொள்வது தவறு. ஏனெனில் மிலாடு என்னும் சங்கத்தில் வேலூர் வரையான 79 நாடுகளைச் சேர்ந்தவர் அடங்குவர். 79 நாடு என்பது தொண்டை மண்டலத்தின் 79 நாடுகளை குறிப்பதாக அவரே கூறுகிறார். தொண்டைநாடு முழுவதும் மலைநாடு அல்ல அதன் மேற்கில் தான் கிழக்கு தொடர்ச்சி மலைகள் உள்ளன கிழக்கில் அல்ல என்பதை ஈண்டு கவனத்தில் கொள்க. எனவே மிலாடுடையான் என்பது மலைநாடுடையான் என்று பொருள்படாது மாறாக சங்கத் தலைவன் என்றே பொருள்படும் என்று உணர்க. இதனால் பல்லவர் ஆட்சி வீழ்ச்சிக்குப் பின் தொண்டை மண்டல ஆட்சிப் பொறுப்பை சோழர் மலையமான்களிடம் வழங்கி இருக்கலாம் என்று ஊகிக்க முடிகிறது.

    பார்வை நூல்: கல்வெட்டுகள் கூறும் உண்மைகள், பக். 12, தி. வை. சதாசிவம் பண்டாரத்தார் & Epigraphia Indica Vol 7, pg 145, K; Areip 123 of 1900

    கடலூர் மாவட்டம் வேப்பூர் வட்டம் பெரிய நசலூர் கிராமம் மங்கைமுத்தாயி அம்மன் கோயில் கொற்றவை சிலையின் எருமைத்தலையின் வலப்புறம் உள்ள 6 வரிக் கல்வெட்டு

    1. ஸ்ரீ மு
    2. க்கு
    3. ல மல
    4. யமான்
    5. சாதன் ஸ்ரீ
    6.  _ _

    முக்குலம் – மூன்று பட்டமுடைய சாதி

    விளக்கம்:  இக்கல்வெட்டு பல்லவர் ஆட்சி குலைந்த 9 ஆம் நூற்றாண்டு காலத்தது என்று கணிக்கப்பட்டுள்ளது. “முக்குல மலயமான்” என்பது பார்க்கவ கோத்திரத்தாரான மலையர் என்னும் நயினார், சுருதிமான் என்னும் மூப்பனார், நந்தமர் என்னும் உடையார் ஆகிய 3 சாதிமாருக்கு தலைவனான சா(த்)தன் என்று பொருள்படும். இவன் இந்த கொற்றவையை வணங்கியுள்ளான் அல்லது சிலையை நிறுவினான் என்று கொள்ளலாம். பெரிய நசலூரில் கிடைத்த 3 கல்வெட்டுகளில் இதுவும் ஒன்று என்று நாளேட்டு செய்தி கூறினாலும் மற்ற இரண்டு கல்வெட்டுகளை அச்சேற்றிய ஆவணம் இதழ் வெளியீட்டார் இதை அச்சிடாமல் விட்டுவிட்டனர். மிலாடு என்ற மேட்டுக்குடி பார்க்கவ சாதி சங்கமத்திற்கு இது ஒரு அருமையான சான்றாகும்.

    பார்வை நூல்: 12 ஏப்ரல் 2019 நாளேடுகளில் வெளியான செய்தி

    தென்னார்க்காடு மாவட்டம் திருக்கோவிலூர் புற ஊரான கீழுர் வீரட்டானேஸ்வரர் கோவில் தென் சுவரில் உள்ள 6 வரிக் கல்வெட்டு

    1. ஸ்வஸ்திஸ்ரீ காந்தளூர்சாலை கலமறுத்த கோவிராஜராஜகேசரி(ய்) பந்மக்கி யாண்டு 11 ஆவது மலா
    2. ட்டு குறுக்கைக் கூற்றத்து திருக்கோவலூர் திருவீரட்டான(ம்)முடையாற்கு மிலாடு உடையான் இராமன் நாட்டடிகள் வைத்த நொந்தா வி
    3. ளக்கு ஒன்றுக்கும் திருவுண்ணாழிகை ஸபையார் வஸம் சந்த்ராதித்தவல் விளக்கெரிப்பதற்க்கு குடு
    4. த்த பொன் பன்னிரு கழஞ்சு. பன்மாஹேஸ்வர ரக்ஷை. இறைவ நரும்பாக்கமெல்லைக் கற்குட்டம்
    5. முறைசேர் கோவல் முழைசுனை பிறைநுதலாய் வெண்மாறங்கெல்லை மேல்பால் கறடி வடா
    6. வாறு கீழ்பால் கண்ணத்தம்பாடியாங் காண்.

    நாட்டடிகள் – நாட்டரசன்; திருவுண்ணாழிகை சபையோர் – கருவறை பிராமணர்; கற்குட்டம் – கருங்கல் குளம்; முறைசேர் – வகையாய் அமைந்த,

    விளக்கம்: இராசராச சோழனின் 11 ஆம் ஆட்சி ஆண்டு 996 இல் மலாட்டில் அடங்கிய குறிக்கைக் கூற்றத்து திருக்கோவலூர் வீரட்டானமுடைய ஈஸ்வரருக்கு மிலாடு என்னும் சங்கம் உடையான் இராமன் என்னும் நாட்டரசன் வைத்த ஒரு நுந்தா விளக்கிற்கு கருவறை பணி செய்யும் பிராமணரிடம் சந்திர சூரியர் நிலைக்கும் காலத்தளவும் விளக்கு எரிப்பதற்காக கொடுத்த பொன்னின் அளவு 12 கழஞ்சு. இதற்கு  சிவனடியார் கூட்டத்தினர் பாதுகாப்பு தரவேண்டும். அடுத்து பாடல் வரியில் இறைவனுக்கு அரும்பாக்கம் எல்லையில் கருங்கல் குளமும் வகையாய் அமைந்த கோவலூரில் குகை நீரூற்றும் பிறை நெற்றிபோல ஓடும் வெள்ளை நீரை எல்லையாகவும் மேற்கே கரடி வட ஆறும்  கிழக்கே கண்ணத்தம்பாடி இருப்பதையும் காண்க என்று கோவிலின் எல்லை கூறுகிறது. கல்வெட்டு செய்திக்கும் இதற்கும் என்ன தொடர்பு என்று புரியவில்லை. திருக்கோவலூர் பகுதியை மிலாடு என்று குறிக்காமல் மலாடு என்று குறிப்பதை நோக்குக. ஆனால் சங்கம் என்று வரும்போது மிலாடு என்று குறிப்பதை நோக்குக.

    கல்வெட்டு எழுதறிஞர் ச. கிருஷ்ணமூர்த்தி கல்வெட்டு எழுதும் சிற்பிகள் மிலாடு என்பதை மலாடு என்று தவறாக கொட்டி இருக்கலாம் என்று கருதுகிறார். ஆனால் ஏதோ ஒரு கல்வெட்டில் அத்தகு பிழை நேரலாம் பல கல்வெட்டுகளில் சில நூற்றாண்டுகளாக மலாடு என்று குறிக்கப்படுவதை பிழை என்று கொள்ள முடியாது. மிலாடு என்னும் சங்க உறுப்பினர் கண்காணித்து வாழும் நாடு என்ற அடிப்படையில் நாட்டிற்கும் மிலாடு என்றே குறித்துள்ளனர். ஏதோ வேறுபாடு காட்ட வேண்டும் என்று கருதியே மலாடு என்று குறிக்கத் தலைப்பட்டுள்ளனர் என்று தோன்றுகிறது. மலையமான் நாடு என்பதே மலாடு என்று சிதைத்து குறிக்கப்படுவதாக கூறுவதை சொல்லாய்வின்படி ஏற்பதற்கு இல்லை. கம்ப வர்மன் காலத்திற்கும் முந்தையதாக நடுகற்களில் இனிமேல் மிலாடு, மலாடு குறிப்பு புதிதாக கண்டுபிடிக்கப்பட்டால் இதில் புதிய திசை கிட்டும்.

    பார்வை நூல்: தென்னிந்திய கல்வெட்டுகள் தொகுதி 7 எண்:  857 (AR N0  230 – 1902) பக். 431

    விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் வட்டம் சித்தலிங்கமடம் வியாக்ரபாதீஸ்வரர் கோயில் முன்மண்டப வடக்கு சுவர் 4 வரிக் கல்வெட்டு

    1. ஸ்வஸ்திஸ்ரீ கோவிராஜகேசரி ப
    2. ந்மற்க்கு யாண்டு மூன்றாவது திருப்புலிப் பகவர்க்கு மிலாடுடையார் நாட்டா
    3. ன் சித்தவடவநேன் ஆட்டால் வைத்த திரு நந்தாவிளக்கு ஒன்று. ஒன்றும்
    4. பந்மாஹேஸ்வர ரக்ஷை.

    நாட்டான் – அரசன்;

    விளக்கம்: இது 10 நூற்றாண்டுக் கல்வெட்டு. கோவிராஜகேசரி பன்மரின் மூன்றாம் ஆட்சி ஆண்டில் சித்தலிங்க மடத்தில் வீற்றிருக்கும் வியாக்கிரபாதர் என்னும் திருப்புலிப் பகவர்க்கு மிலாடு என்னும் சங்க முடையாரின் நாட்டரசன் சித்தவடவன் ஆடு கொடுத்து வைத்த திருநுந்தா விளக்கு ஒன்று. அந்த ஒரு விளக்கும் சிவனடியார் கூட்டத்தினர் காக்க வேண்டும். எத்தனை ஆடு கொடுக்கப்பட்டது என்ற குறிப்பு இல்லை.

    பார்வை நூல்: தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் தொகுதி 14 இல் விழுப்புரம் மாவட்டக் கல்வெட்டுகள் தொகுதி 1, பக். 109, த நா தொ து வெளியீடு

    விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் வட்டம் சித்தலிங்கமடம் வியாக்ரபாதீஸ்வரர் கோயில் முன்மண்டப கிழக்குச் சுவர் 1 வரிக் கல்வெட்டு

    1. ஸ்வஸ்திஸ்ரீ மதுரைகொண்ட கோப்பரகேசரி பந்மர்க்கு திரு நந்தா விளக்கு இரண்டுக்கு இவ்வூர் சிவ ப்ராஹ்மணர் பக்கல் குடுத்த பொன் பதிந்_ _ க்கு சந்திவிளக்கு இரண்டிநால் நிறை நூற்றுப்பலம். நூற்றுப்பலமும் இவை மலாடுடையான் நாட்டான் சித்த வடவநேன். இரண்டும் ஊனமுந் தேய்வும் நீக்க குடுத்த பொன் கழஞ்சுங் குடுத்தேன். இது பந்மாகேஸ்வர ரக்ஷை.

    ஊனமும் தேய்வும் – வளைவு ஓட்டை ஆகிய குறையும் தேய்வும்

    விளக்கம்: முதற் பராந்தகனின் 7 ஆம் ஆட்சி ஆண்டு 913-14 கல்வெட்டு என்று குறிக்கிறது இந்நூல். ஏதோ தட்டச்சு பிழையால் கல்வெட்டு பாடத்தில் ஆண்டு விடுபட்டு போய் உள்ளது. திருநுந்தா விளக்கு இரண்டு எரிக்க இந்த கோவில் சிவபிராமணரிடம் கொடுத்த பொன் பதின் _ _ . சந்திவிளக்கு இரண்டிற்கு நிறை நூறு பலம் கொடுத்தார் மலாடுடையான் நாட்டரசன் சித்த வடவன். இந்த நுந்தா விளக்கு, சந்தி விளக்கு ஆகியவற்றில் எதிர்காலத்தில் ஏற்படும் குறையும் தேய்வும் நீக்க கழஞ்சு பொன் கொடுத்தேன் என்கிறான் இந்த மலையமான். இதை சிவனடியார் திருக்கூட்டம் காக்க வேண்டும் என்கிறான்.

    மேலுள்ள கல்வெட்டுகளில் நாட்டான், நாட்டடிகள் ஆகிய சொல்லாட்சிகள் ஆய்விற்கு உரியன. இவற்றின் பொருள் நாடு ஆள்பவன் என்பதே. மிலாடுடையான் / மலாடுடையான்  என்பதற்கு மலைநாடுடையான் என்பதே பொருள் என்றால் பின்பு  நாட்டான் என்று தனியாகக் குறிப்பது எதைக் குறிக்கிறது? நாட்டான் என்பதும் நாட்டரசன் என்பதைத் தானே குறிக்கிறது? இலக்கணப் பொருட்பாட்டின்படி மிலாடு, நாடு இரண்டும் அடுத்தடுத்து வந்தால் ஒரே பொருள் தர முடியாது. அப்படி தருவது பிழை ஆகும். ஆதலால் இங்கு தெள்ளத் தெளிவாக மிலாடு / மலாடு என்பதற்கு சாதிச் சங்கம் என்று பொருள் கொண்டால் தான் நாட்டான் என்பதன் பொருள் இந்த சாதி சங்கத்தவர் வாழும் நாட்டிற்கு அரசன் என்று தெளிவாகப் பொருள் கொள்ள முடியும் அன்றோ?

    ஆக கடந்த 150 ஆண்டுகளாகத் தமிழகத்தில் தலித்தியம், திராவிடவியம், கம்யூனிசம் என்ற பெயரால் அரசியல் மேடையிலும் எழுத்திலும் புராண இந்து மதம் தான் சாதியை உருவாக்கியது. மத சுயநலவாதிகள், பிராமணர்கள் தான் சாதியை உருவாக்கி சமூகத்தை பலவாகக் கூறுபோட்டு ஆட்சி செய்து சுரண்டிக் கொழுத்தனர் என்ற பொய்யுரை இடிந்து தரைமட்டம் ஆகிவிட்டது அன்றோ? உண்மையில் தம் அரசாட்சி நலன் கருதி சாதி சங்கத்தை உருவாக்கி நாடாண்டவர் மன்னர்களே, மலையமான்களே என்று இக்கல்வெட்டுகளால் புரிகின்றது அன்றோ?  தட்டிக்கேட்பார் இல்லாவிடின் யாரும் எதையும் உரைக்கலாம் மக்கள் முட்டாள்கள் என்பது தானே இவர்கள் மனநிலை.

    பார்வை நூல்: தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் தொகுதி 14 இல் விழுப்புரம் மாவட்டக் கல்வெட்டுகள் தொகுதி 1, பக். 160, த நா தொ து வெளியீடு

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் திருநாமநல்லூர் பக்தஜனேஸ்வர சிவன் கோவில் 4 வரிக் கல்வெட்டு

    1. ஸ்வஸ்திஸ்ரீ. ஸ்ரீ கன்னரதேவற்க்கு யாண்டு பதினேழாவது முனைப்பாடித் திருநாவலூர்த் திருதொண்டீஸ்வரத்து மஹாதேவர்க்கு ஸ்வஸ்தி சுக்ரான்வய உதயாசல ஆதித்ய சக்திநாத சிம்ஹத்வஜ சிகி மகரலாஞ்சன மலையகுலோ
    2. த்பவ மலையகுல சூளாமணி ஸ்ரீமத் நரசிம்ஹ வர்ம; மிலாடுடைய நாட்டான் சித்தவடவனாகிய நரசிம்ம வன்மன் வைத்த நொந்தா விளக்கொன்றினுக்கு வைத்த பொன் பதின் கழஞ்சு. இப்பொன் பதின் பழஞ்சுங் கொண்டு வெண்
    3. ணைநல்லூர் நாட்டுச் செவலை சபையோமும் ஊரோமும் ஆட்டு நூற்று நாழி நெய் கொண்டு வந்து மாதேவியாலை சந்த்ராதித்யவல் அட்டுவோம் ஆனோம் செவலை சபை ஊரோம். ஈழ விளக்கு ஒன்று. இது பன்மாகேஸ்வர
    4. ரக்ஷை

    சபை – கோவில் அலுவலர்

    விளக்கம்: இராட்டிரகூட வேந்தன் மூன்றாம் கிருஷ்ணனின் 17 ஆம் ஆட்சி ஆண்டு 956 இல் திருமுனைப்பாடித் திருநாவலூர் திருத்தொண்டீஸ்வரர் கோவில் ஈசுவரனுக்கு. நன்மங்கலம் உண்டாகுக! பிருகுவின் மகனான சுக்கிராச்சாரியாரின் வழிவந்தவனும் கிழக்குமலைச் சூரியனும் ஆற்றலுடைய சிவனும் சிங்கக் கொடியோனும் முடியில் மயிலும் மகரமும் குறியீடாகக் கொண்டவனும் மலையர்குலத்தில் தோன்றிய மலையர்குல முடிமணியானவனும் புகழ்மிக்கவனுமான நரசிம்ம வர்மன் என்று சமசுகிருதத்தில் கீர்த்தி பாடுகிறது.

    சங்கமுடைய (மிலாடு) நாட்டரசன் சித்தவடவனாகிய நரசிம்ம வர்மன் வைத்த நுந்தா விளக்கு ஒன்றுக்கு கொடுத்த பொன் 10 கழஞ்சை வெண்ணைநல்லூர் நாட்டின் செவலை ஊரவர் வாங்கிக் கொண்டனர். ஆண்டுக்கு ஆட்டின் நெய் நூறு நாழி அளவு கொண்டு வந்து மாதேவி ஆலயத்தில் கொடுப்போம் செவலை ஊரவரோம் என்று உறுதி கூறினர். இவர்கள் இடையர் என்று தெரிகிறது. மன்னன் ஈழ விளக்கு ஒன்றும் கொடுத்தான். இந்த இரு விளக்கு எரிப்பும் சிவனடியார் கூட்டத்தாரின் பாதுகாப்பு என்று முடிகிறது. இங்கு மிலாடுடைய நாட்டான் என்று பிரித்து காட்டி இருப்பது மிலாட்டை மலைநாட்டான் என்ற பொருளில் குறிப்பதல்ல அல்ல என்பது தெளிவு. அது சங்கமுடைய நாட்டரசன் என்று பொருள்படும்.

    முதற் பராந்தகன் காலத்து சித்தவடவனும் இந்த நரசிம்ம வர்ம சித்தவடவனும் ஒரே ஆள் அல்ல. பிருகு ரிஷி என்ற பார்கவருடைய மகன் சுக்கிராச்சாரி தான் அசுரர்களின் ஆசான் (குரு) ஆவான். அசுரர்கள் என்போர் ஈரானின் அசீரிய நாட்டு மக்கள் ஆவர். எனவே அசுரர் இருந்த நாட்டில் சுக்கிரன் இருந்து வழிகாட்டியதால் அவன் ஈரான் நாட்டினன் என்று கருதுவதில் தவறு ஒன்றும் இல்லை. அப்படியானால் மலையமான்கள் ஈரானில் இருந்து வந்தோர் என்று கொள்ளலாமா? இதற்கு விடை கூற கைபர், போலன் இந்தியாவிற்கு திறந்த வாசல் என்பவரைத் தான் கூப்பிட வேண்டும்.

    பார்வை நூல்: Epigraphia Indica Vol 7, pg 135, C; Areip 362 of 1902

    கள்ளக்குறிச்சி வட்டம் சித்தலூர் மணிமுத்தாற்றில் உள்ள சிறிய பாறையில் பொறிக்கப்பட்டுள்ள 7 வரிக் கல்வெட்டு

    1. (கோ)விராசகேசரி பன்மற்கு யாண்டு 3 ஆவது மிலாடு
    2. _ _ வேடபுரத்து பொன்னாலமந்தாளுக்கு உத்தம சோழ மிலாடுடையார்
    3. க்கு கலனை செய்கின்ற கலனை யேர் பொன்னாலமந்தாளுக்கு நொந்தா
    4. விளக்கு ஒன்றுக்கு வைத்த ஆடு தொண்ணூற்றாறாடும் சாவாமூவாப் பேராடு
    5. ம் நிசதி உழக்கு நெய்யால் நிசதி ஒரு நொந்தா விளக்கு எரிக்கக் கடவேன் இ
    6. ப்பிடாரி கோயிலுடை கால்வனெழுவானாகிய _ _ _ ச கான
    7. _ _ _ பேருவச்சனேன். இது பன்மாஹேஸ்வர ரக்ஷை

    கலனை – சேணம், saddle; நிசதி – ஏற்பாட்டின்படி; பிடாரி – துர்க்கை; உவச்சன் – பூசகன்; பொன்னால – மேனியை சுற்றிலும் மஞ்சள் பூசிய; மந்தாள் – கருத்தவள்; மிலாடுடையர் – சங்கத் தலைவர்;

    விளக்கம்: முதலாம் இராசராச சோழனுக்கு 3 ஆம் ஆட்சி ஆண்டில் 988 இல் மிலாடில் அடங்கிய வேடபுரத்து மஞ்சள் பூசிய கருத்த அம்மனுக்கு உத்தம சோழ மிலாடுடையாருக்கு குதிரைச் சேணம் செய்கின்றவன் குதிரைச் சேணத்தில் ஏற்றுகின்றவன் (பெயர் குறிப்பு இல்லை) மஞ்சள் பூசிய இந்த கருத்த அம்மனுக்கு ஒரு நுந்தா விளக்கு எரிக்க கொடுத்த ஆடு 96 ஆடும் சாவாத முதியாத இளம் ஆடுகளாகும். இதற்கு ஏற்பாட்டின்படி உழக்கு நெய் கொண்டு ஏற்பாட்டின்படி நுந்தாவிளக்கு எரிப்பேன் இந்த பிடாரி கோவிலின் கால்வனெழுவானாகிய  _ _  கான _ _ _ பேர் உவச்சன் என்று உறுதி கூறுகிறான் பூசகன். இதை சிவனடியார் கூட்டத்தவர் பாதுகாக்க வேண்டும் என்று முடிகிறது.

    உத்தம சோழ மிலாடன் தன் குதிரைச் சேவகனை அனுப்பி இந்த நுந்தா விளக்கு தந்துள்ளான் என்று புரிந்து கொள்ள முடிகிறது. இங்கே கல்வெட்டில் மிலாடு என்பது வேடபுரத்தின் முன் வருவதால் இங்கு மிலாடு என்பது நாட்டின் பெயராகவும் குறிக்கப்படுகிறது. இப்படி சில கல்வெட்டுகளில் இச்சொல் ஆளப்படுகிறது. இது 79 நாட்டு மிலாடு இதாவது, சங்கத்தின் உறுப்பு நாடு என்று கொள்ளலாம்.

    இந்த உத்தம சோழன் பற்றிய கல்வெட்டு குறிப்பு எலவானாசூர் சிவன் கோவில் பற்றிய “வரலாற்று வடிவங்கள்” என்ற தமது நூலில் புலவர் சு. குப்புசாமி கொடுத்துள்ள 80 கல்வெட்டுகளில் முதல் கல்வெட்டாக கோபுர வாயிலில் உள்ள கற்பலகையில் வெட்டப்பட்டுள்ளது, பக்கம் 85 இல் இடம்பெறுகிறது. இது இராசராச சோழனுக்கு 7 ஆம் ஆட்சி ஆண்டில் 992 இல் உத்தம சோழனுடைய 15 ஆம் ஆட்சி ஆண்டில் 977இல் இறையானூர் கோவில் அலுவலருக்கு இராம தேவன் சித்தவடவன் என்னும் விக்கிரம சோழ மிலாடுடையார் செம்பியன் மாதேவி சதுப்பேதி மங்கலத்தை உருவாக்கினான் என்கிறது. அதே நேரம் சித்தவடவன் அகம்படனான உத்தம சோழ மிலாடுடையான் உருவாக்கிய அரண் கலக்கி சதுர்வேதி மங்கலம் என்ற இரண்டு சதுர்வேதி மங்கலமும் உடையார் செம்பியன் மாதேவியார்க்கும் அவள் மகன் வேந்தன் உத்தம சோழ தேவனுக்கும் என்பதோடு கல்வெட்டு உடைந்து  விட்டது. மேலும் செய்தியை அறிய முடியவில்லை. இந்த இரு சித்தவடவனும் மன்னன் உத்தம சோழனுடைய பிள்ளைகளாக இருத்தல் வேண்டும். இதே நூலில் 3 ஆம் கல்வெட்டாக பக். 88-90 இல் இடம்பெறும் 24 வரிக் கல்வெட்டு இதே கோவிலின் முதல் பிரகாரத்தின் வடக்கு சுவரில் வெட்டப்பட்டுள்ளது. அது சோழ கேரளன் என்று குறிப்பிட்டு முதல்  இராசேந்திரனின் 3 ஆம் ஆட்சி ஆண்டு கி.பி.1015 இல் இக்கல்வெட்டில் மலாடுடையார் பார்க்கவ கோத்திரத்து பராந்தகந் இயாதவ வீமநாந உத்தம சோழ மலாடுடையார் என்ற பெயரில் நிவந்தம் செய்த செய்தி உள்ளது. இங்கே மலாடுடையார் என்று முதலில் குறிப்பிட்டுவிட்டு மீண்டும் உத்தம சோழ மிலாடுடையார் என்று ஏன் வரவேண்டும்? இரண்டு இடத்திலும் இதன் மாறுபட்ட பொருள் என்ன? இந்த யாதவ வீமன் பிடாரிக்கு விளக்கு எரித்த கல்வெட்டில் வரும் உத்தம சோழ மிலாடுடையானாக இருக்க வேண்டும். ஏனெனில் அவன் பெயரில் கண்டராதித்தன், உத்தமன் ஆகிய சமகால சோழ வேந்தர் பெயர்கள் இடம் பெறுகின்றன. அப்படியாகின் இவன் 977 – 1015 வரை 38 ஆண்டுகள் ஆண்டுகள் ஆட்சி புரிந்து உள்ளான் எனத் தெரிகிறது.

    பார்வை நூல்: ஆவணம் இதழ் 2, 1992 பக். 19

    பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் வெள்ளுவாடி கிராமம் வெள்ளாற்றங்கரை ஓரம் உள்ள முனியப்ப கோயில் அருகே உள்ள கொல்லையில் உள்ள கற்பலகையில் உள்ள 12 வரிக் கல்வெட்டு

    1. ஸ்ரீமத் பூமி தேவி புத்தி(ர) சித்
    2. திர மேழி சாசனம்ப
    3. டிக்கு வச்ச நியாய பரிபா(லன)
    4. ப் பிள்ளையார்க்கு நியாய(த்)
    5. தோம் நாம் வைச்சுக் குடுத்த
    6. தன்மத்துக்கு அழிவு செய்
    7. தாருண்டாகில் எழுபத்தொ
    8. ன்பது நாட்டுக்கும் பதிநெட்
    9. டிராச்சியத்தில் வளைஞய(ரோ)
    10. மும் குதிரை னாயக குத்
    11. துல் ஆளை வெட்டுதல்
    12. தானா நில

    நியாயத்தோம் – தீர்ப்பு கூறுவோர்;

    விளக்கம்: 12-13 நூற்றாண்டினதாக இக்கல்வெட்டு இருக்கலாம். வேந்தன் பெயர், ஆட்சி ஆண்டுக் குறிப்பு ஏதும்  இல்லை. இதில் சித்திரமேழி, பெரிய நாட்டார், 18 விஷய வணிகக் குழுவினரின் குறியீடுகள் செதுக்கப்பட்டுள்ளன. ஆதலின் இது அவர்கள் தொடர்பானது.

    பூதேவி மக்களான சித்திரமேழி சாதியர் சாசனத்தின்படி நியாயம் வழங்கும் பிள்ளையாருக்கு தீர்ப்பு கூறும் நியாயதோர் வைத்து கொடுத்த நில தான அறத்திற்கு எவரேனும் அழிவு செய்ய முற்பட்டால் 79 நாட்டுக்கு சாதி சங்கத்தாருக்கும் 18 இராச்சியத்தை சேர்ந்த வளைஞர் என்னும் ஆயிரத்து ஐந்நூற்றுவ வணிகருக்கும் செய்த கேடாகக் கருதி அத்தகையோரை குதிரைப்படைத் தளபதி குத்தியும் வாளால் வெட்டியும் பிள்ளையாருக்கு கொடுத்த இந்த தான நிலத்தை நிலைநிறுத்த வேண்டும் என்கிறது கல்வெட்டு. சித்திரமேழியாரும் திசை ஆயிரத்து ஐந்நூற்றுவரும் ஒரே இன மக்கள் என்பதற்கு இது சான்று.

    வாலிகண்டபுரம் இரண்டாம் இராசராசன் 11 ஆம் ஆட்சி ஆண்டுக் கல்வெட்டு 1161 இல் இன்றைய உடையார்களான நந்தமர்களை சித்திரமேழிப் பெரிய நாடான யாதவர் குலத் தலைவரான நத்தமக்கள் என்கிறது. எனவே 79 நாட்டார், சித்திரமேழி பெரியார் நாட்டார் ஆகியோர் ஒரே மக்களே ஆவர். இந்த சித்திரமேழியர் பற்றிய கல்வெட்டுகள் விழுப்புரம், வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் ஆகிய இடங்களில் அதிகமாக கிடைக்கின்றன. இவை மலையமான்களின் மிலாட்டுப் பகுதி என்பதை நினைவில்  கொள்ள வேண்டும். உலகின் எந்த நாடானாலும் நியாயம், நியதி (rule), ஏற்பாடு, அறம் எதுவாயினும் ஆயுத வலுவால் தான் நடைமுறைப் படுத்தப்பட்டு வருகின்றன, நிலைநிறுத்தப் படுகின்றன. இன்று வரை இதுவே பொது நடைமுறையாக உள்ளது. அதை தான் மேலுள்ள கல்வெட்டும் வெளிப்படுத்துகிறது. அதில் தவறு ஏதும் இல்லை. தவறு எது என்றால் பழைய நூல்கள் சமசுகிருதத்தில் தான் உள்ளன அந்த சமசுகிருதத்தை பிராமணர் அறிந்தவர் என்ற ஒரே காரணத்தை முன் வைத்து சாதியும், வர்ணாசிரமும் பிராமணரால் தான் உருவாக்கி நடைமுறைப் படுத்தப்பட்டன என்ற கருத்து சிந்திக்கக் கூடிய மக்களை முட்டாள் ஆக்கும் பொய்யே ஆகும். ஆயுதம் ஏந்தாத பிராமணர் தம் பாதுகாப்பிற்கே அடுத்தவரை சார்ந்திருக்க வேண்டிய நிலையில் அரசர்தம் ஆயுதத்தால் நிலைநிறுத்தப்பட்ட சாதி, வருணாசிரம நியதியை அவர்கள் தான் செய்தனர்; சாதிக்கு ஒரு நீதி வருணத்திற்கு ஒரு நீதி என்று ஏற்படுத்தினர் என்பது அறிவிற்கு ஏற்புடையதன்று. தமிழனின் 150 ஆண்டு கால முட்டாள் தனத்தை நீக்கி அறிவொளி ஊட்டுவது இது போன்ற கல்வெட்டுகளே.

    பார்வை நூல்: பெரம்பலூர் மாவட்டக் கல்வெட்டுக்கள், செப்பேடுகள், இல. தியாகராஜன், பக். 263 – 265

    பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் வாலிகண்டபுரம் சிவன் கோவில் மகாமண்டப கிழக்கு சுவரில் உள்ள 11 வரிக் கல்வெட்டு

    1. ஸ்வஸ்திஸ்ரீ திரிபுவனச்  சக்கரவத்திகள் இராசராச தேவற்கு
    2. யாண்டு 11 வது வடகரை வன்நாட்டு
    3. வாலீஸ்வரமுடைய நாயனார் திருக்கோயிலில் இடங்கை தொண்ணூற்றெ
    4. ட்டுக் கலனையும் நிறைவற நிறைந்து குறைவறக் கூடிக் கல்வெட்டினபடி
    5. யாவது பல மண்டலங்களில் பிராமணரும் ஆரியரும் சித்திரமேழிப் பெரிய
    6. னாடான யாதவகுலத் தலைவரான நத்தமக்களும் சதிரமுடித் தலைவரான மலை
    7. யமான்களும் காயாங்குடிக் கண்ணுடை அந்தணரும் சம்புவர் குலபதிப் பன்னா
    8. ட்டாரும் பதினெண் விஷயத்து வாணிய நகரங்களும் பொற் கோயிற் கைக்கோ
    9. ளரும் யிடங்கை தொண்ணூற்றெட்டுக் கலனைகளுக்கும் ஒருவற்கு வந்த நன்மைத் தீமை
    10. அனைவற்கும் ஆவதாகவும். யிப்படி விலங்கினோமாகில் மாறு சாதிக்குங் கீழ் சாதிக்
    11. கும் தாழ்வு செய்தோ மிதனை யிப்படி ஒரு காலாவதும் யிருகாலாவதும் முக்காலாவதும் (முற்றுப் பெறவில்லை)

    கலனை – கூட்டு உறுப்பு சாதி; கண் – பாதுகாவலர், caretaker

    விளக்கம்: இரண்டாம் இராசராச சோழனின் 11 ஆம் ஆட்சி ஆண்டு 1161 இல் வெட்டிய கல்வெட்டு இது. வடகரை வன்நாட்டின் வாலீஸ்வரமுடைய இறைவன் திருக்கோவிலில் இடங்கைப் பிரிவைச் சேர்ந்த 98 கூட்டு உறுப்பு சாதியாரும் நிறைந்து கூடி கல்வெட்டிய காரணமாவது பல மண்டலங்களில் வாழும் பிராமணரும், ஆரியர் என்னும் வெள்ளாளரும், சித்திரமேழிப் பெரிய நாடான இயாதவக் குலத் தலைவரான நந்தமர்களும், சதிரமுடித் தலைவரான மலையமான்களும், காசாங்குடியினர் குடும்பத்தை பாதுகாக்கிற அந்தணரும் (துறவி),  சம்புவர் குலபதியான பன்னாட்டார் என்னும் வன்னியரும், பதினெண் விஷயத்து வாணிய நகரங்களும், பொற்கோயிற் கூரையை காக்கும் கைக்கோளரும் உள்ளிட்ட இடங்கை 98 கூட்டு உறுப்பு சாதிகளும் மேற்கொண்ட உறுதிமொழியாவது யாதெனில் இதன் எந்த ஒரு சாதிக்கும் வரும் நன்மை தீமை அனைத்து சாதிகளுக்கும் பொதுவாக வந்ததாகக்  கொள்வோம். இந்த ஒற்றுமை உணர்வில் இருந்து விலகினோமாயின் வேற்று சாதிக்கும் கீழ் சாதிக்கும் தாழ்வு செய்தோம் என்று ஆகும். இதை இப்படியாக ஒரு தடவையோ, இரு தடவையோ, மூன்று தடவையோ (முற்றுப்பெறவில்லை)

    இதில் இடம்பெறும் யாதவ குல நந்த மக்கள் என்னும் உடையார், மலையமான்கள் (நயினார்) மிலாட்டை விட மிகப் பெரிய ஒரு சாதி சங்க வட்டத்தை உருவாக்குகின்றனர் என்று தெரிகின்றது. இதே போல இரண்டாம் இராசராசனின் 11 ஆம் ஆட்சி ஆண்டு 1161 இல் 79 நாட்டு பார்க்கவ கோத்திரத்து மலையமான்களும், நந்தமர்களும் இடங்கைப் பிரிவில் சேர்ந்த இன்னொரு கல்வெட்டு கள்ளக்குறிச்சி வட்டம் திருவலஞ்சுரம் பசுபதீஸ்வர் கோவிலில் உள்ளது. (பார்க்க ஆவணம் 11, பக். 32)

    பார்வை நூல்: பெரம்பலூர் மாவட்டக் கல்வெட்டுக்கள், செப்பேடுகள், இல. தியாகராஜன், பக். 231- 232

    தென்னார்க்காடு மாவட்டம், திட்டைக்குடி வட்டம் சுகாசின பெருமாள் கோவில் மேற்கு சுவரில் உள்ள 9 வரிக் கல்வெட்டு

    1.  ஸ்வஸ்திஸ்ரீ த்ரிபுவனச் சக்ரவத்திகள் ஸ்ரீ ராஜாதிராஜ தேவற்கு யாண்டு 4 வது ஸிம்ஹ நாயற்று பூர்வ்வ பக்ஷத்து த்ரயோதஸியும் திங்கள் கிழமையும் பெற்ற சதயத்து நாள் ஸ்ரீமற் பூமிபுத்ரஸ்ய சதுர்வ்வண்ணஸ்ய
    2. குலோற்பவம் ஸர்வ்வ லோகஹிதார்த்தாய சித்ர மேளஸ்ய ஸாஸனம். எழுபத்தொன்பது நாட்டு உத்தமநீதி உயர்பெரும்கீத்தி முத்தமிழ்மாலை மும்மையும் நிறைந்த சித்திரமேழிப் பெரிய நாட்டோமும் நான்கு தி
    3. சை பதினெண்பூமி தேசி திசை விளங்கு திசை ஆயிரத்தை ஞூற்றுவரோமும் வடகரை விருதராஜ பயங்கர வளநாட்டு மேற்காநாட்டு ப்ரஹ்மதேயம் திட்டை குடியான திருச்சிற்றம்பல சதுரவ்வேதி மங்கலத்து
    4. திருமேலைக் கோயிலான எழுபத்தொன்பது நாட்டு விண்ணகர் எம்பெருமான் திருமுற்றத்து நாநூற்றுவன் திருமண்டபத்திலே நிறைவற நிறைன்து குறைவறக் கூடி இருன்து இத்திருமுற்றத்திலே ஸ்ரீ பூமிப் பிராட்டியை
    5. எழுன்தருளிவித்து மேழித் தோரணமும் சாத்தி நாட்டுக்கும் நகரத்துக்கும் தர்ம்மமான இவ் வெம்பெருமாநுக்கு அமுதுபடி சாத்துப்படிகளுக்கும் திருப்பணிகளுக்கும் திருநாள்
    6. தேவைகளுக்கும் உடலாக வைத்துக் குடுத்தபடி ஆட்டைக்கு ஏரால் பதக்கு நெல்லும் ஆளால் குறுணி நெல்லும் மாலை கட்டி பரிமாறுவார் ஆளுக்கு ஐஞ்சு காசும் இடக் கடவர்களாகவும்
    7. நங்கீழ் பணிமக்கள் ஆட்டைக்கு இரண்டு காசு இடக் கடவர்களாகவும் நம் ஊர் கோபாலர் குடியால் ஆட்டைக்கு நாநாழி நெய்யளக்கக் கடவர்களாகவும் இப்படி வைத்துக் குடுத்தமையி
    8. ல் இது தண்டுவாருக்கு புக்க ஊரில் வெள்ளை அரிசி தூணிப் பதக்கும் பூரிஅரிசி கலமும் ஐம்பது பாக்கும் வெற்றிலைபற்று இரண்டும் உப்பு நாநாழியும் மிளகு உரியும் எள்ளெண்ணெய் நாழியும் குடு
    9. க்கவும். இப்படி இவை தண்டுமிடத்து வெண்கலம் பறித்தும் மட்கலம் தகத்தும் கொள்ளக் கடவர்களாகவும். இத்திருமுற்றத்து திருவிடையாட்டங்கள் அழி பிழை அந்நியாயம் செய்தார் நாட் (எஞ்சியவை  சுவற்றில்  மறைந்துள்ளன)

    சிம்ம நாயற்று – ஆவணி மாதம்; ஸ்ரீமத் – புகழ்மிக்க; சாத்துபடி – பூ, மாலை முதலிய சாற்றுவது; உடலாக – மூலதனமாக; தண்டு – வாங்கு, collect; திருமுற்றம் – கோவில் வளாகம்;

    விளக்கம்: இரண்டாம் இராதிராஜனின் 4 ஆம் ஆட்சி ஆண்டு 1170 இல் ஆவணி மாதம் முதல் பாதி வளர்பிறை 13 ஆம் நாளில் திங்கட் கிழமை அன்று சதய நட்சத்திரம் கூடிய நன்நாளில் “புகழ்மிக்க பூமி மக்களின் நால்வருணத்து குலத்தில் பிறந்து உலக நன்மைக்கும் பொருட் தேவைக்கும் இயங்குகின்ற சித்திரமேழியர் கல்வெட்டு ஆவணம் இது” என்று மெய்கீர்த்தி பாடுகிறது. பார்க்கவ கோத்திரத்து 79 நாட்டவரின் உயர்ந்த நீதியும், உயர் பெருங் கீர்த்தியும், முத்தமிழ் மாலை என்ற மூன்று சிறப்பும் நிறைந்த சித்திர மேழிப் பெரிய நாட்டவரும் நான்கு திசைகளிலும் பயணித்து 18 பூமி தேசி திசை அறிந்த திசை ஆயிரத்து ஐந்நூற்றுவர் வணிகக் குழுவினரும் வடகரை விருதராஜ பயங்கர வளநாட்டு மேற்காநாட்டின் பிரம்மதேயமான திட்டைகுடி திருச்சிற்றம்பல சதுர்வேதி மங்கலத்தின் திருமேலைக் கோயிலான 79 நாட்டவரின் திருமால் கோவிலில் எம்பெருமான் திருமுற்றத்தில் நாநூற்றுவன் திருமண்டபத்தில் நிறைந்து கூடி இந்த திருமுற்றத்தில் பூமா தேவியின் சிலையை எழுந்தருளிவித்து அங்கே கலப்பைத் தோரணமும் கட்டி நாட்டிற்கும் நகரத்திற்கும் அறமான இந்த எம்பெருமானுக்கு அன்றாட அமுதுபடிக்கும் பூ, மாலை அலங்காரத்திற்கும் தெய்வத் திருப்பணிகளுக்கும் உற்சவ தேவைகளுக்கும் மூலதனமாக இருப்பதற்கு என்று செய்து கொடுத்த ஏற்பாட்டின்படி ஒவ்வொரு ஆண்டும் ஒரு ஏருக்கு பதக்கு நெல், ஆளுக்கு குறுணி நெல் என்ற மேனியில் கொடுப்போம். மாலை கட்டித் தருபவர் ஆள் ஒருவருக்கு 5 காசும் கொடுக்க வேண்டும். நம் கீழே பணி மக்களாக வேலை செய்பவரும் ஆண்டு ஒன்றுக்கு 2 காசும் கொடுக்க வேண்டும். நமது ஊர் இடையர் குடும்பம் ஒவ்வொன்றும் ஆண்டுக்கு நான்கு நாழி அளவு நெய் கொடுக்க வேண்டும். இப்படி ஏற்பாடு செய்து கொடுத்தமையில் இதை வசூலிப்பவருக்கு புக்க ஊரில் வெள்ளை அரிசி தூணிப் பதக்கு அளவும், பூரி அரிசி கலம் அளவும், 50 பாக்கும், வெற்றிலைப் பற்று இரண்டும், உப்பு 4 நாழி அளவும், மிளகு உரி அளவும், எண்ணெய் நாழி அளவும் கொடுக்க வேண்டும். இவ்வாறு வசூலிக்கின்ற போது வெண்கலத்தைப் பிடித்தும் பானையை தகர்த்தும் வாங்கிட வேண்டும். இது என்ன மூட நம்பிக்கையோ தெரியவில்லை!! வெண்கலம் செல்வத்தின் குறியீடு மட்கலம் ஏழ்மையின் குறியீடு. இந்த திருமுற்றத்தில் அழிபிழைகள் அநியாயங்கள் செய்தவர் நாட்டில் என்ற அளவில் கல்வெட்டு சுவற்றில் மறைந்த உள்ளதால் மேலும் ஏதும் அறிந்து கொள்ள முடியவில்லை.

    சித்திர மேழியர், வணிகர் திசை ஆயிரத்து ஐந்நூற்றுவர், இடையர் ஆகியோர் உபயமாகப் பொருள் கொடுக்க வேண்டும் என்ற இந்த உடன்பாட்டை கூர்ந்து கவனித்தால் இம்மூவரும் பார்க்கவ கோத்திரத்தார் என்று புரிகிறது. இதை 79 நாட்டவர் விண்ணகர் என்னும் சொல்லாட்சி உறுதிப்படுத்துகிறது. தொடக்கத்தில் ஆடு, மாடு மேய்த்தும் பின்பு நாகரீக வளர்ச்சியில் உழவுத் தொழிலை மேற்கொண்டும் அதன்பின்பு தம் விளைபொருளை விற்க வணிகத் தொழிலையும் ஏற்றுள்ளனர். இன உணர்வு இல்லாவிடில் யாரும் இவ்வாறான உடன்படிக்கைக்கு உடன்படமாட்டார் என்பது தெளிவு. இன உணர்வால் அன்றி மதத்தால், பிராமணரால் சாதியை உருவாக்க முடியாது என்பதை திராவிட அரசியல் மறைக்கின்றது. உண்மையை விடுத்து பொய் உரைக்கின்றது. மதத்தை, பிராமணரை அழித்துவிட்டால் எல்லாம் சரி ஆகிவிடும் என்று வெறுப்பை பரப்புகின்றது. அறிவு மயக்கமுற்ற தமிழர் தான் இதில் தெளிவடைய வேண்டும். மதமோ பிராமணரோ கால்நடை மேய்த்த நத்தமக்களை உழவில் ஈடுபடச் சொல்லவில்லை. அப்படி உழவிற்கு மாறியவரை மதமோ பிராமணரோ வணிகத்தில் ஈடுபட அறிவுறுத்தவில்லை. இந்த தொழில் மாற்றம் நாகரிக வளர்ச்சியால் உண்டானது. அற்றை நாளில் சாதியே உந்து விசையாக (driving force) இருந்தது என்பதை இக் கல்வெட்டு தெளிவாக்குகிறது. மேலும் இது ஒரு சாதி ஆணைக் கல்வெட்டு. ஊர்ச் சாதிமார் அத்தனை பேரும் இதற்கு கட்டுப்பட்டவர்.

    பார்வை நூல்: தென்னிந்திய கல்வெட்டுகள் தொகுதி 8, எண் 291 (A.R. No 21 of 1903)

    விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் வட்டம் பழங்கூர் ஏரி பழைய மதகின் தூண் ஒன்றில் உள்ள 11 வரிக் கல்வெட்டு

    1. ஸ்வஸ்திஸ்ரீ இ
    2. த் தூம்பு திட்
    3. டிட்டு வெ
    4. ன்றான். இது
    5. இடுவித்தா
    6. ன் மலையந்
    7. மலையநாந
    8. குலோத்து
    9. ங்க சோழக்
    10. கோவலராஜ
    11. ன்

    தூம்பு – மதகு; திட்டு – மேடு; வெல் – மேம்படுத்து, இடுவி  – செய்வி, கோவலராஜன் – திருக்கோவிலூர் அரசன்.

    விளக்கம்: இது 12 ஆம் நூற்றாண்டு கல்வெட்டு. இங்கு மலையமான் குலோத்துங்க சோழன் என்று பெயர் கொண்டுள்ளான். முதல், இரண்டாம், மூன்றாம் குலோத்துங்க சோழர் மூவரும் 12 ஆம் நூற்றாண்டினர் எனவே இவன் 12 ஆம் நூற்றாண்டினன் என்று கொள்ளலாம். இந்த மதகும் கரைமேடும் மேம்பட செய்வித்தான் மலையர்குடி மலையமானான குலோத்துங்க சோழ திருக்கோவிலூர் அரசன். இங்கு மிலாடு – மலாடு ஆகிய சொற்கள் தவிர்க்கப்பட்டு மலையன் என்று குறித்திருப்பது இவருக்கு மிலாடு என்னும் சங்கத்தை கூட்டும் பொறுப்பு இல்லையோ என்று எண்ணத் தோன்றுகிறது. மலையமான்கள் வெவ்வேறு பிரிவாக ஆண்டதும் இதற்கு காரணம் ஆகலாம். கோவல என்றால் இடையன் என்று பொருள். கோவலூர் பின்னீடு கோவிலூர் என்று தவறாக வழங்குகிறது. எனவே கோவலராசன் என்றால் இடையர்க்கு அரசன் என்பதே நேர் பொருள். இயாதவ வீமன் உத்தம சோழன் என்ற பெயரில் இருந்து இது தெளிவாகிறது. தொடக்கத்தில் மலையமான்கள் இடையராக இருந்து பின்பு மருத நில மக்களாகி அதன் பின் அந்த மருதநில மக்களே சித்திரமேழிப் பெருநாட்டு வணிகராகவும் உருவெடுத்துள்ளனர் என்று தெரிகின்றது. மேலும் கிளியூர் மலையமான்கள் காலம் முதல் மிலாடுடையான் என்ற சொல் கல்வெட்டில் அவர் பெயருடன் இடம்பெறுவதில்லை என்பதை நோக்க மிலாடு கூட்டும் உரிமையை சோழ வேந்தனால் மலையமான்கள் இழந்திருப்பரோ என்று எண்ணம் எழுகிறது. எனவே இந்த கல்வெட்டும் மிலாடு > மலாடு என்பது மலைநாடு என்பதன் திரிபு என்பதை நொறுக்குகிறது.

    பார்வை நூல்: ஆவணம் இதழ் 1, பக். 26,

    தென்னார்க்காடு மாவட்டம் திட்டக்குடி வட்டத்தில் உள்ள ம. புடவூர் திருவனந்தீசுவரர் கோயில் மகாமண்டப வடசுவர் மேற்குப் பக்க முப்பட்டைக் குமுதப் பகுதியில் உள்ள 3 வரிக் கல்வெட்டு

    1. ஸ்வஸ்திஸ்ரீ திருபுவன சக்கரவத்திகள் ஸ்ரீ இராசாதிராச தேவற்க்கு யாண்டு 8 ஆவது இருங்கோளப்பாடி நாட்டு வேட்ப்பூருடையான் பெரியான் திருவனான இராசராச  மிலாட
    2. குலராயனேன் மிலாடாகிய செனனாத வளநாட்டுக் கீழ்நரையூர் கூற்றத்துப் புடவூரில் நான் எழுந்தருளிவித்த உடையார் திருவனந்தீச்வரமுடைய நாயநார் திருநாமத்துக்
    3. காணி ஆக நான் காணியாக நீர்வார்த்துக் குடுத்தேன் வேட்ப்பூருடையான் பெரியாந் திருவனான இராசராச மிலாடகுலராயனேன்

    திருநாமத்துக் காணி – கடவுள் பெயரில் நில உரிமை

    விளக்கம்: இரண்டாம் இராசாதிராச சோழனின் 8 ஆம் ஆட்சி ஆண்டில் 1174 இல் இருங்கோளப்பாடி நாட்டின் வேட்ப்பூரில் வாழும் பெரியான் திருவனான இராசராச மிலாடகுலராயன் மலையமான்களின் ஆட்சிப்பகுதி மிலாடாகிய செனனாத வளநாட்டின் கீழ்நரையூர் கூற்றத்தில் அடங்கிய புடவூரில் நான் எழுந்தருளுவித்த இறைவன் திருவநந்தீஸ்வர நாயனாருக்கு அவர் பெயரில் நீர்வார்த்து காணி கொடை கொடுத்தேன் வேட்பூர் வாழ் பெரியான் திருவனான இராசராச மிலாடகுலராயன் என்கிறான். இங்கு மிலாடகுலம் என்பது பார்க்கவகுலம், மலையர்குலம் என்று பொருள்படும். இவன் மலையர் நாட்டில் வாழாதவன் ஆயினும் மலையர்நாட்டில் ஒரு கோவில் கட்டுவித்து அதில் லிங்கத்தை நிறுத்து உள்ளான். இவன் அரசன் அல்லன் ஆயினும் மலையர் குடியில் பிறந்தவன் என்று தெரிகின்றது. இப்படி மிலாடு என்ற சொல் பலவாறாக பயன்படுத்தப் பட்டுள்ளது. மேலும் மலையமான்கள் மன்னர் என்ற நிலைக்கும் கீழே அரையர், கிழார் நிலையிலும் ஆண்டுள்ளனர். காட்டாக,  வாலிகண்டபுரம் வன்நாடு என்னும் சிறு நாட்டுப் பகுதியில் அடங்கியது. முதற் பராந்தகன் காலத்தில் அவனது 4 ஆம் ஆட்சி ஆண்டில் 911 இல் வீரசோழ மிலாடுடையான் என்று ஒருவன் ஆண்டுள்ளான். இவன் மனைவியானவள் வன்னாடுடையார் அக்கோப்புகழறையார் மகளார் நாட்டடிகளார் வைத்த விளக்கிற்கு பொன் 7 கழஞ்சு கொடுத்துள்ளாள் என்கிறது வாலிகண்டபுரம் கல்வெட்டு. இவள் தந்தை அக்கோப்புகழறையார் ஒரு கிழார் நிலை ஆட்சியாளர். எனில் வீரசோழ மிலாடுடையான் கிழான் அல்லது அரையன் என்று புரியும். இதே காலகட்டத்தில் மன்னனாக சித்தவடவன் என்பவன் பராந்தகனின் 7 ஆம் ஆட்சி ஆண்டில் 914 இல் ஆண்டுள்ளான்.

    பார்வை நூல்: ஆவணம் 3, 1993, பக். 2

    Share
  • சமணர் கல்வெட்டுகள்

    சமணர் கல்வெட்டுகள்

    சேசாத்திரி ஸ்ரீதரன்

    இந்திய மதங்கள் யாவும் தந்திர யோகத்தை அடிப்டையாகக் கொண்டவையே. ஆசீவகம், புத்தம், சமணம், சீக்கியம் ஆகிய மதங்கள் தந்திர யோகிகளால் தோற்றுவிக்கப் பட்டவையே. தந்திர யோகத்தை மேற்கொண்ட வேத வேள்வியரே பின்னாளில் பிராமணர் எனப்பட்டனர். பிராமணர் தோற்றுவித்தது தான் இந்த பிச்சை எடுத்து வாழும் துறவு வாழ்க்கை முறை. பிராமணரிடம் இருந்து தான் இந்த பிச்சைத் துறவு நெறியை ஆசீவக, சமண, புத்த நெறிகள் ஏற்றுக்கொண்டன. தந்திர யோகம் தனிமனித ஒழுக்கத்தை பெரிதும்  வற்புறுத்துகிறது. பிரம்மச்சரியம், கள் உண்ணாமை, புலால் மறுப்பு ஆகியன தந்திர யோகத்தின் அடிப்படை ஒழுக்கமாகும். 2,600 ஆண்டுகள் முன்பு சமணம் வட இந்தியாவில் தோன்றியது என்ற போதும் இம்மதம் வணிகரிடையே மிகுந்த செல்வாக்கு பெற்றதால் தென்னகத்தில் மௌரியர் ஆட்சிக்கு முன்பேயே பரவியிருந்தது என்பதற்கு “யாற்றூர் செங்காயபனுக்கு தாவனூர் பின்அன் கூற்றன் அறுத்த அதிட்டானம் ” என்ற புகளூர் தமிழி கல்வெட்டே சான்றாகின்றது. வணிகப் படைகளின் எண்ணிக்கை குறைந்ததால் தமிழ் வேந்தர் ஆட்சி வீழ்ந்த பின் தமிழகத்தில் சமணம் சரிந்து மறைவுற்று இன்று சிறு வடிவாக மட்டுமே காணப்படுகிறது. கல்விப் புலத்திலும் இலக்கியப் புலத்திலும் சமணம் தமிழகத்தில் பெருந் தொண்டாற்றியதற்கு கல்வெட்டுச் சான்றுகளும் இலக்கியச் சான்றுகளும் உள்ளன. ஆனால் தமிழகத்தில் புத்த மதத்திற்கு அரச ஆதரவோ வணிகர் ஆதரவோ பெரிதாகக் கிட்டாததால் தமிழகத்தில் அதன் பரவல் மிக குறைவாகவே இருந்தது. எனவே சமணம் போல் அல்லாமல் அரிதாகவே புத்த மதக் கல்வெட்டுகள் தமிழகத்தில் காணப்படுகின்றன. எனினும் வரலாற்றைத் தவறான போக்கில் நடத்தும் வகையில் இலக்கியம் குறிப்பிடும் “முக்கோல் பகவர்” என்பது புத்த மதத் துறவிகளைத் தான் குறிப்பதாக தமிழில் குறு நூலே வெளியிட்டுள்ளனர். ஏதோ புத்தம் தமிழகத்தில் எல்லா இடத்திலும் பரவலாகப் பரவி இருந்தது போலவும் பின்னர் புத்த மக்களை ஊருக்கு வெளியே துரத்தி ஒதுக்கியது போலவும் காட்ட முயல்கின்றனர். மதமே இல்லாத போது எப்படி ஊருக்கு வெளியே துரத்தி இருக்க முடியும்? புத்தத் துறவு நெறிப்படி ஒருவர் தாமே சமைத்த உணவை உட்கொள்ளக் கூடாது பிறர் சமைத்த உணவைத் தான் பிச்சை எடுத்து உண்ண வேண்டும் என்பதே. பின் எப்படி “முக்கோல் பகவர்” என்பதை புத்த துறவி என்று கொள்ள முடியும். இதற்கு முரணாக முதுமையில் யோக தந்திரத்தைப் பின்பற்றி வாழ்ந்த அந்தணர் / பிராமணர் அரிசி, பருப்பு, காய் போன்றவற்றைப் பிச்சையாகப் பெற்று தாமே சமைத்து உண்டனர். இதனால் வெங்காயம், பூண்டு போன்ற துறவுக்கு ஒவ்வாத பொருளை தவிர்க்க இயலும். புத்த துறவிகள் பிறர் சமையலில் வெங்காயம், பூண்டு இவற்றை தவிர்க்க முடியாது. எனவே முக்கோல் பகவர் என்பது பிராமணரைக் குறிப்பதே. இங்கு கீழே சில சமணக் கல்வெட்டுகள் விளக்கப்பட்டுள்ள்ளன. ஈற்றாக ஒரு புத்தக் கல்வெட்டும்  விளக்கப்பட்டுள்ளது.

    காஞ்சிபுரம் மாவட்டம் தாம்பரம் வட்டம் ஆலந்தூரில் உள்ள சிவசுப்ரமணிய சுவாமி கோவில் நுழைவாயிலில் உள்ள 3 வரி கற்பலகைக் கல்வெட்டு

    1. ஸ்ரீ கோவிசைய கம்ப விக்கிரம வர்மற்கு யாண்டைந்தாவதின் சித்திரை முதலாகப் புலியூர்க் கோட்டத்து மாங்காடு நாட்டு மாங்காட்டு திருவராந்தானத்துக்கு [ஆர்க்]  
    2. காட்டுக் கூற்றத்து பரிபண்டத்துறை பரிசை கிழார் அமர்நிலையார் மகளார் இப்பள்ளி உடைய அநந்தவீரக் குரவர் மாணாக்கியார் கு _ _ _ அடிகள் திருவமுதுக்கு வைத்த நெல்லறுபதின் 
    3. [குறுணி] முந்நாழி நெல்லால் விக்கட்டுவோமானோம். அவிச்சொரியுந்தால் முப்பதின் பலத்தாவிட்டார். இதுக்கு முட்டாமைச் _ _ _ _  

    அராந்தானம் – சமண பள்ளி, அருகன் (ஸ்)தானம்; பரிபண்டத்துறை – வரிக் கருவூலம்; பரிசை – காவல்; திருவமுது – படையல், நைவேத்தியம்; விக்கட்டு – பகுத்து; நாழி – காற்படி; அவிச்சொரி – சோறு வைத்தல்; பலம் – 35 கிராம் நிறை; முட்டாமை – நில்லாமை

    விளக்கம் : இக்கல்வெட்டு கம்ப விக்கிரம பல்லவனுக்கு 5 ஆம் ஆட்சி ஆண்டு 874 இல் வெட்டப்பட்டது. சித்திரை மாத தொடக்கம் முதலே புலியூர் கோட்டத்தில் அடங்கிய மாங்காடு நாட்டின் மாங்காட்டு ஊரில் அமைந்த அருகன் கோவிலுக்கு  தஞ்சையின் கண்டியூருக்கு அருகே அமைந்த ஆர்க்காட்டு கூற்றத்தின் வரிக் கருவூலக் காவல் தலைவர் அமர்நிலையாரின் மகளும் இந்த சமண கோவிலின் அனந்தவீரக் குரவரின் மாணவியுமான கு_ _ _ அடிகள் கோவில் திருவமுத்துக்கு கொடுத்த நெல் அறுபது குறுணியை மூன்று காற்படியாகப் பிரித்து சோறு வடிக்கையில் முப்பது பலமாக அளவிட்டு வடிக்கச் சொன்னார். இது இடைநில்லாமல் பார்த்துக் கொள்வோம் என்று உறுதி கூறினர் கோவிலார்.

    புலியூர் என்பது இன்று சென்னைக் கோடம்பாக்கத்தின் ஒரு பகுதியாக உள்ளது. இன்றைய மாங்காடு காமாட்சி அம்மன் கோவில் அருகில் இந்த சமண பள்ளி இருந்திருக்கலாம். தஞ்சை ஆர்க்காட்டை சேர்ந்த கருவூலக் காவல்தலைவர் மகள் பெயர் சிதைந்துள்ளது. அடிகள் என்பது துறவாட்டி என்று பொருள்படுகிறது. இவள் தஞ்சை சோழ நாட்டில் இருந்து பல்லவரின் தொண்டை நாட்டில் அமைந்த மாங்காட்டிற்கு வந்து அனந்தவீரரிடம் சமண சித்தாந்தத்தை கற்றுள்ளாள். பின் அங்கேயே துறவாட்டியாகி கோவிலின் அன்றாட படையலுக்கு 60 குறுணி நெல் வழங்கியுள்ளாள் என்பதும் அதன் அன்றாட படையல் அளவு 30 பலம் என்பதும் வட்டியாக கணக்கிடப்பட்டதாகத் புரிந்து கொள்ள வேண்டியுள்ளது. இல்லாவிடில் இடைநில்லாமல் என்ற சொற் பயன்பாடு இங்கு பொருள் தராது. இந்த மாங்காட்டுக் கல்வெட்டு சமண கோவில் சிதிலமடைந்த பின் பிற்காலத்தில் அங்கிருந்து கொண்டு வரப்பட்டு ஆலந்தூர் சிவசுப்பிரமணிய சுவாமி கோவிலில் அடிக் கல்லாக இடப்பட்டுள்ளது.

    பார்வை நூல்: கல்வெட்டு காலாண்டு இதழ் 63, சூலை 2004, பக். 7

    விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை வட்டாரத்தில் உள்ள பந்தல்குடி கிராமத்தில் திர்த்தங்கரர் சிற்ப பீடத்தின் மீது பொறிக்கப்பட்டுள்ள 6 வரிக் கல்வெட்டு

    1. ஸ்ரீ இராசராச தேவர்க்கு யாண்டு இருபத்திரண்டாவது வெண்பு னாட்டு நா
    2. லூ ரவிசேரி பள்ளிக்கு இவ்வூர் மாறஞ்சடையன் மகன் சங்கையன் ம
    3. கன் சங்கையஞ் சடையன் மகள் சடைய நற்சக்கி(யை) இந்நாட்டு “வெண்புரை திணை
    4.  வழுவிலி மகன் வழுவிலி சாத்தன்” பெற்ற சடைய நற்சக்கி மகன் சாத்
    5. தம் புகழ் மகன் புகழ் சடையேன் எம் மூத்தப்பன் வழுவிலி சாத்த
    6. னையும் எம் மூத்தம்மை சடையன் நற் சக்கியையுஞ் சாத்தி இட்ட கற்திருமேனி  

    திணை – ஒழுக்கம், நெறி, நோன்பு, விரதம்; வழுவிலி – பிழறாத; வெண்புரை – வெள்ளைப்பிறை, மூத்தப்பன் – கொள்ளுப் பாட்டன்

    விளக்கம் : முதலாம் இராசராசனின் 22 ஆம் ஆட்சி ஆண்டு கி.பி. 1007 இல் வெண்பு நாட்டில் அடங்கிய நாலூ ரவிசேரியில் உள்ள சமண பள்ளிக்கு இந்த ஊரில் வாழும் மாறஞ்சடையன் மகன் சடைய சங்கனுடைய மகன் சங்கை சடையனான பேரனின் மகள் சடைய நற்சக்கியை மணந்த இந்த நாட்டின் வெள்ளைப்பிறை நோன்பு பிறழாதவன் என்பதைக் குறிக்க “வெண்புரை திணை வழுவிலி எனப்படுவானின் மகன் வழுவிலி சாத்தன் பெற்றெடுத்த சடைய நற்சக்கியின் மகன் சாத்தன்புகழ் என்பானின் மகன் புகழ்சடையன்  எனும் நான் எமது கொள்ளுத் தாத்தா வழுவிலி சாத்தனையும் அவர் மனைவியான எமது கொள்ளுப் பாட்டி  நற்சக்கியையும் நினைவில் இருத்தி இந்த தீர்த்தங்கரர் சிலையை வடிப்பித்து நிறுத்தினேன் என்கிறான்.

    இதில் கொள்ளுப்பேரன் புகழ் சடையன் தனக்கு முன்பு வாழ்ந்த மூன்று தலைமுறையை குறிப்பிடும் முன் தன் கொள்ளுப் பாட்டிக்கு முற்பட்ட புகழ்மிக்க மூன்று தலைமுறையை குறிப்பிடுகிறான். கொள்ளுப் பாட்டியின் வம்சம் பாண்டியர் வழிவந்தாற்  போலத் தெரிகிறது. ஆக இக்கல்வெட்டில் ஏழு தலைமுறைப் பெயர்கள் குறிக்கப்படுகின்றன. Chaumasi chaudas – ஆடிப் பௌர்ணமி முதல் கார்த்திகை பௌர்ணமி வரை கடைபிடிக்கப்படும் நான்கு மாத விரத காலம் (சாதுர்மாஸ்ய விரதம்) சமணரும் சிறப்பானது. இதைத்தான் இக்கல்வெட்டு “வெண்புரை விரதம் பிறழாத” என்று குறிக்கிறதோ? தெரியவில்லை.

    பார்வை நூல்: கல்வெட்டு காலாண்டு இதழ் 96, 2015, பக். 3

    திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி வட்டம் வேடல் ஆண்டார்மடம் 21 வரிக்கல்வெட்டு

    1.   ஸ்வஸ்திஸ்ரீ கோவிராச கேசரி பர்ம[ர்]க்கு யாண்டு பதிநாலாவது சி 
    2.  ங்கபுர நாட்டுக் கீழ்வழி விடால் மாதேவி ஆராந்தி மங்கல 
    3.    முடைய குணகீர்த்தி படாரார்வழி  மாணாக்கியார் கனகவீர[க்  கு]ரத்தி 
    4.   யாரையும் மவர்வழி மாணாக்கியாரையும் தாபிஸி[க]ள் நாநூற்றுவர்க்கும் 
    5. கொள்ளாதமையில் இக்[கோயி]ற் பிள்ளைகளைந் நூற்றுவர்க்கும் வழி இலாருங் 
    6.   காத்தூட்டுவோமானோம். எங்களு[டை]ய ஸ்வரக்ஷை. இது இரஷிப்பாரடி நி[லை எ]ங்கள் 
    7. [த]லைமேலன மாதேவி அராந்[தி] மங்கலமுடைய  [கன]கவீரக் குரத்தியார்  
    8. த் தங்க _ _ ர் மகளாதனமையில் _ _  _ 
    9.  முக்கியருமிது [கா]ப்பர் அவர்கள் ஸ்வரக்ஷை. இதனை இரக்ஷிப்பார 
    10.  டிநி[லை] என் தலைமேலன  
    11.   _ _ _ டறுங்  காழாறு[ம்] மு  
    12. தலாகிய மாதேவி ஆ 
    13.  ராந்தி மங்கலமுடைய 
    14.  கநக வீரக் குரத்தியார் தங் 
    15. கள் மகளாராதிநமையில்  
    16.  இதுவெல்லாந் தங்  
    17. கள் காவல். இதனை தீங்  
    18. கு நினைத்தாந் கங்கை இடைக் குமரி இடை
    19.  எழு நூற்று காதமுஞ்ச செய்த பாவ  
    20. ங் கொள்வார். காவலனுக்கு [பிழை]த்தா 
    21. ராவார்  

    கொள்ளா – ஏற்காதமை, ஒவ்வாமை; படாரர் – துறவி, கோயில் அதிகாரி;-   குரத்தி – ஆசிரியை ; தாபிசி – தவசிகள்; ஊட்டு – சோறளி; காழார் – யானைப்படை வீரர்; பிழைத்தார் – குற்றம் செய்தவர்.

    விளக்கம் : முதலாம் ஆதித்த சோழனின் 14 ஆம் ஆட்சி ஆண்டு 885 இல் விடால் எனப்பட்ட இன்றைய வேடலில் வெட்டப்பட்ட கல்வெட்டு இது. சிங்கபுரநாட்டின் கிழக்கு வழியில் அமைந்த விடால் ஊரான ஆராந்த மங்கலமுடைய சமண பள்ளித் துறவி குணகீர்த்தியிடம் பாடம் பயின்ற மாணாக்கியான கனகவீர குரத்தி என்ற ஆசிரியையும் அவரிடம் பாடம் பயிலும் மாணவிகளையும் தவமியற்றும் துறவியர் 400 பேருக்கும் ஒவ்வாமையால் இந்த சமண பள்ளியில் பயிலும் அந்த பெண் பிள்ளைகள் ஐநூற்றுவரையும் அங்கிருந்து வெளியேற்றி விடுகின்றனர். அதனால் போக்கிடம் இன்றி தவித்த இவர்களுக்கு இடமளித்து சோறு கொடுத்தோம் என்கின்றனர் இந்த ஊரார். இது நாங்கள் தரும் பாதுகாப்பு என்கின்றனர். இதை காப்பவர் பாதம் எமது தலைமேல் ஏற்போம் என்றும் மாதேவி ஆராந்தி மங்கலமுடைய சமண பள்ளியின் கனகவீரக் குரத்தியார் தமது மகளானபடியால் _ _ _ ஊர் முக்கியரும் இதை காக்க வேண்டும் என்கின்றனர். இது அவர்களின் நற்காப்பு ஆகும் என்கின்றனர். இதனைக் காப்பவரின் அடிப்பாதம் எனது தலைமேல் இடக் கடவது _ _ _ , யானைப்படை வீரர் முதலாகிய ஆராந்த மங்கலம் வாழ்வோர்க்கு சொல்வது யாதெனில் கனகவீரக் குரத்தியார் உமக்கு மகளென ஆவதால் இது உமது காவலாகும். இதற்கு கேடு நினைப்பார் கங்கைக்கும் குமரிக்கும் இடையே 700 காத நிலப்பரப்பில் வாழ்வார் செய்யும் பாவங்களை அடைவர். அரசனுக்கு குற்றம் இழைத்தவராவார்.

    இதில் 500 மாணாக்கியர் என்பது துறவிகள் அல்லாத வெவ்வேறு சமூக பிரிவில் அடங்கிய மாணவியர் என்று கொள்ளலாம். குரத்தியரில் மணவாழ்வு கொண்டோரும் துறவாட்டியாக இருப்பாரும் உண்டு என்பதற்கு கழுமலைக் கல்வெட்டு எண்: 336 “இவன் மணவாட்டி சேந்தன் குரத்தி (ஏற்படுத்திய) திருமேனி”  என்பது ஓர் அரிய சான்று ஆகும். இந்த மாணவிகளின் வாழ்க்கை நெறி தம் துறவு நெறிக்கு ஏற்புடையதல்ல என்பதால் 400 துறவிகள் இவர்களைச் சமணப் பள்ளியில் இருந்து வெளியேற்றி விட்டனர் போலும். ஊராரிடம் தஞ்சம் புகுந்த இவர்களுக்கு ஊரார் அடைக்கலம் அளித்தனர் என்றே கொள்ளலாம். மேலும் இந்த மாணவிகள் அண்டை அயல் கிராமங்களில் வாழ்பவராக இருத்தல் வேண்டும். இல்லாவிடில் இத்தனை பேருக்கும் கிராமத்தாரால் அன்றாடம் சோறிட முடியாது. இது பெண் கல்வி அந்நாளில் மக்களால் ஊக்குவிக்கப்பட்டதற்கு அடையாளம். பெண்கள் வேதம் கற்கலாகாது என்று தான் சொல்லப்பட்டதே ஒழிய உலகியல் கல்வி கற்க தடை ஏதும் இருந்தது இல்லை என்பதால் மத வேற்றுமை பாராமல் பெண்கள் சமண பள்ளிகளில் சேர்ந்து கல்வி கற்றுள்ளனர். எனவே பண்டு சமூகத்தில் பெண் கல்வி சமணத்தால் ஓரளவு ஊக்குவிக்கப்பட்டு பரவியிருந்தது என்பது தெரிகிறது. ஆனால் தென்னிந்திய சமூக நிலையை தமது நாட் குறிப்பில் எழுதிய ஆங்கிலேயர் நடன மகளிரான தேவரடியாரைத் தவிர்த்து பிற பெண்கள் எவரும் கல்வி கற்கவில்லை என்ற குறிப்பு இசுலாமிய படையெடுப்பிற்கு பின் வந்த ஆட்சியாளரின் தவறான முடிவினால் பெண் கல்வி தடைபட்டிருக்க வேண்டும் என்றே எண்ண முடிகிறது. அரசியல் மேடையிலும் எழுதிலும் சொல்வது போல பெண் கல்வித் தடைக்கு இந்து மதமோ பிராமணரோ காரணம் அல்ல என்பதற்கு இக்கல்வெட்டு முகாமையான சான்றாகின்றது.

    பார்வை நூல்: தென்னிந்திய கல்வெட்டுகள் தொகுதி 3 ல் பகுதி 3 & 4 பக். 224 – 225

    திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை வட்டம் மதுரை – திண்டுக்கல் சாலையில் அமைந்த ஊர் வடுக்கப்பட்டி 17 வரிக் கல்வெட்டு.

    1.  ஸ்வஸ்திஸ்ரீ பாகனூர்க் கூற்ற 
    2. த்து மானசித்தநல்லூராயின மா  
    3. லைக் குளத்து தான சாலையும் குளமும் அத்தா 
    4. ணிகள் பேராயி(ன)மை(யி)லி வ்வூர்க்கு மி 
    5. வ்வறத்துக்கு தீயார் நமக்குப் பகைவ்வரா(ய்) 
    6. யுங் கூலிச் சேவகரொருவர் நிற்கிலு மிவ் 
    7. வறத்துக்கு வருங் குற்றங் காப்பதாகவும் 
    8. பெருநிரவி யிரு நங்கைய் வாசனை கொள்ள 
    9. எல்க்கை வாசனை கொண்டு கல்லு நாட்டி 
    10. நப் பெருவாரியன் வேம்பன் வயிரி 
    11. (யும் தி)கையாயிரத்து அறுகை வாணிகன் 
    12. (மாணிக்) கூ(த்தனுமெ) திகைவாரியன் யிர 
    13. சாழனும் திகை வாரியன் கட்டாணை ராமனும் 
    14. ஆச்சவீர அத்தாணிகள் முனிவர் சி 
    15.  ம்புளு கலிக்கோட்டை விடங்கனும் 
    16.  அவர்கள் இது காளிப் 
    17. பேடு 

    வாசனை – நல்ஆதரவு, அருள்; அத்தாணி – அரச ஆதரவு பெற்ற வணிகர் குழு; அறுகை – அறுந்த கை; வாரியன் – மேற்பார்வையாளன்; பேடு – அச்சம்

    விளக்கம் : இது 11 ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டு. பாகனூர் கூற்றத்தில் அடங்கிய மானசித்த நல்லூர் என்னும் மாலைக்குளத்தின் தானசாலையையும் அதன் நீர் வழங்கும் குளத்தையும் அத்தாணிகள் என்ற வணிகக் குழுவினரின் தம் பெயரை வைத்து, இந்த ஊருக்கும் இந்த அறத்திற்கும் கேடு செய்பவர் நமக்கும் பகைவராக கருதப்படுவார் என்று அறிவிக்கின்றனர். கூலிச் சேவகர் ஒருவர் நிலையாக நின்று இந்த அறச்சாலையில் ஏற்படும் குற்றத்தை தடுத்துக் காக்க ஏற்படுத்தப்பட்டார். பெருநிரவி எனும் வணிகர் கூட்டத்தின் இரண்டு பெண் தெய்வங்கள் (அம்மன்) நல்ஆதரவும் அருளும் கொண்டும் எல்லை தெய்வத்தின் (அம்மன்) நல்ஆதரவும் அருளும் கொண்டும் எல்லைக் கல் நாட்டியோர் பெரிய மேற்பார்வையாளன் வேம்பன் வயிரியும், திசைஆயிரத்து அறுபட்ட கை உடைய வாணியன் மாணிக்க கூத்தனும், திசைஆயிரத்து மேற்பார்வையாளன் வீர சோழனும், திசை ஆயிரத்து மேற் பார்வையாளன் கட்டாணை இராமனும், திசை ஆயிரத்து வீரர்கள் அரச ஆதரவு வணிகரான அத்தாணிகள், சமண முனிவர் சிம்புளுவின் ஆதரவு பெற்ற கலிக்கோட்டை விடங்கனும் ஆவர் என்று ஆறு வணிகரின் பெயர்கள் குறிக்கப்படுகின்றன. அவர்களுடைய அச்சம் தரும் காளியும் காவலுக்கு நிறுத்தப்பட்டது.

    சமணரில் பெரும்பாலார் வணிகர் என்பதற்கு வணிகரின் இந்த சமணக் கொடையே சான்று. தமிழ் வேந்தராட்சி நீங்கி அயலவர் ஆட்சியில் தமிழ் வணிகர் கீழ்நிலை எய்தியதால் வணிகர் ஆதரவு குன்றி சமண சமயம் தமிழகத்தில் ஒழிந்தது.

    பார்வை நூல்: பாண்டிய நாட்டில் சமணம் பக். 446

    திருப்பூர் மாவட்டம் அவிநாசி வட்டம் ஆலத்தூர் யாளிக் கல் 8 வரி வட்டெழுத்துக் கல்வெட்டு

    1. ஸ்வஸ்தி ஸ்ரீ சிந்தரையன் மகளார் நம்
    2. பிராட்டியார் வானவன் மாதே
    3. வியார் சிற்றாச்சர் வடிக்க மணவா
    4. ட்டி _ _ _ ந்து தவப்பட்டு ஆலந்தூர
    5. டிகள் பள்ளி ஆளாநின்ற காலத்து வீர சங்
    6. காதப் பெரும்பள்ளி என்று பெருமாநடிக
    7. ள் நாமத்திலே உள்ளோசஞ்யுஞ் செயிவித்து பு
    8. துக்குவித்தார்   

    சிற்றாச்சர் – சின்னம்மை, சித்தி; தவப்பட்டு – தவமியற்றி; பெருமானடிகள் – வேந்தன்; சஞ்யு –  ஒலிக்கும் மணி

    விளக்கம் : இக்கல்வெட்டு கொடும்பாளூர் இளவரசியும் முதலாம் இராசராசனின் பட்டத்து அரசியுமான வானவன் மாதேவியை குறிப்பதால் இது 10 ஆம் நூற்றாண்டு கல்வெட்டு எனத் தெரிகிறது. சிந்தரையன் மகளும் இளவரசியும் ஆன, வேந்தன் இராசராச சோழனின் பட்டத்து அரசி வானவன் மாதேவிக்கு சித்தியுமான வடிக்க மணவாட்டி இங்கு வந்து தவம் செய்த சமண பள்ளியை, ஆலந்தூர் அடிகள் இந்த சமண பள்ளியின் அதிகாரியாக இருக்கின்ற போது இச் சமண பள்ளியைப் புதுப்பித்து மனவெழுச்சி தரும் ஒரு மணியும் செய்வித்து அதற்கு வீர சங்காதப் பெரும் பள்ளி என்று தன் கணவனான வேந்தனின் (கொங்கு சோழன் வீரசோழ பராந்தகன்) பெயரை சூட்டுவித்தாள். இதன் மூலம் கொங்கு சோழருக்கும் தஞ்சை சோழருக்கும் உள்ள உறவு வெளிப்படுகிறது.

    சிந்து தேச அரசன் தெற்கே யாத்திரை வந்த போதோ அல்லது வடிக்க மணவாட்டியின் பாட்டன் வீட்டார் வடக்கே யாத்திரை சென்ற போதோ வானவன் மாதேவியின் பாட்டியை மணந்துள்ளான் என்று கொள்ளலாம். இதன் மூலம் வானவன் மாதேவியின் பாட்டன் சிந்து தேச அரசன் என்று தெரிகிறது. அரச குடும்பத்தவர் இப்படி இனம், மொழி, பண்பாடு கடந்து இன்னொரு அரச குடும்பத்துடன் உறவு கொள்வது ஒன்றும் புதிதல்ல. ஆனால் இதில் வேடிக்கை என்ன என்றால் இந்த தமிழக அரச குடும்பத்தவர் ஆரிய வெண் தோலும் குருதியும் உள்ளவர் என்ற போதும் இந்த நிலவுடைமை ஆண்ட பரம்பரை மார்தட்டிகளை மட்டும் ஏனோ ஆரியர் என்று அடையாளப் படுத்தாமல் ஏமாளியான கருத்த பார்ப்பானை மட்டும் ஆரியனாக அடையாளப்படுத்துவதானது தமிழரை முட்டாள் ஆக்கும் உத்தி ஆகும். தமிழர் தான் இந்த முட்டாள் தனத்தை உதறித் தள்ள வேண்டும். இக்கல்வெட்டால் இராசராசன் வேந்தனாக பட்டம் சூட்டப்படும் முன்பே அவன் பட்டத்து அரசி வானவன் மாதேவி இங்கு சிறப்பு அடையாளமாக குறிக்கப்படுகிறாள் என்றால் இராசராசன் புகழ் வேந்தனாகும் முன்பே தென்னகத்தில் விரிந்து பரவி இருந்தது என்று தானே பொருள்?

    பார்வை நூல்: கொங்கு நாட்டுச் சமணக் கல்வெட்டுகள், புலவர் செ இராசு, பக். 253

    திருப்பூர் மாவட்டம் அவிநாசி வட்டம் ஆலத்தூர் சமண பள்ளி முன் மண்டப நிலையில் உள்ள 9 வரி வட்டெழுத்துக் கல்வெட்டு

    1. ஸ்வஸ்தி  ஸ்ரீ கோநாட்டானேன் வீ
    2. ரசோழப் பெருமானடிகளுக்குத் திரு
    3. வெழுத்திட்டுச் செல்லாநின்ற யாண்டு முப்
    4. பத்தேழாவது ஆனித் திங்கள் முதல் _ _ 
    5. ஆலந்தூர் வீரசங்காதப் பெரும்பள்ளியில் 
    6. இவ்வருக தேவர் _ _ _ வயிற்று 
    7. நிலன் _ _ நாலெல்லை ஆக 
    8.  _ _ _ _ _ 
    9. வழி ஏழச்சம் ஒழியாமல் அறுவான்.

    செல்லாநின்ற – நடப்பாண்டு, current year; பெருமானடிகள் – வேந்தர்; திருவெழுத்திட்டு – முடிசூடி; வயிற்று – உணவு; ஏழு அச்சம் – ஏழு தலைமுறை; ஒழியாமல் – தங்காமல்

    விளக்கம் : கொங்கு சோழன் வீரசோழ பராந்தகனுக்கு  முடிசூட்டி 37 ஆம் ஆண்டு (கிபி 979) ஆகையால் ஆனி  மாதம் முதலாக ஆலந்தூரில் உள்ள வீரசங்காதப்  பெரும்பள்ளியாம் இந்த சமண கோவில் அருகருக்கு அன்றாடம் அமுதூட்ட  கோநாட்டவனால் நிலக்கொடை வழங்கப்பட்டு அதன் நான்கு எல்லையாக கை _ _ _ _ _ _ என்று எல்லை குறிப்பிட்ட இடம் சிதைந்து விட்டது. இந்த ஏற்பாட்டை அழிப்பவன் வழியினர் ஏழு தலைமுறைக்கு தங்காமல் அழிந்து போவான். ஒரு தலைமுறை அழிந்தாலே அடுத்த தலைமுறை தொடராது பின் எப்படி ஏழு தலைமுறை செல்லுமோ? புரியவில்லை.

    இதற்கு மேலுள்ள வடிக்க மணவாட்டி கல்வெட்டின் காலத்தை கணிக்க இக்கல்வெட்டு பெரிதும் உதவுகிறது. இக்கல்வெட்டில் அவள் குறிப்பிடும் வீரசங்காதப் பெரும்புள்ளி என்ற பெயர் இடம் பெறுவதால் 979 க்கு முன் அக்கல்வெட்டு வெட்டப்பட்டிருக்க வேண்டும் என்று தெரிகிறது. 980 தோடு வீரசோழன் பராந்தகன் ஆட்சி முடிந்து விடுவதால் இவனது உடல்நலம் தேற வேண்டி நோன்பு இருந்து இக்கோவிலை புதுப்பித்துள்ளாள் வடிக்க மணவாட்டி என்று கொள்ள முடிகிறது.

    பார்வை நூல்: கொங்கு நாட்டுச் சமணக் கல்வெட்டுகள், புலவர் செ இராசு, பக். 253

    திண்டுக்கல் மாவட்டம் பழனி வட்டம் ஐவர்மலை (ஐயம் பாளையம்) குகைத்தளத்தின் மேல் உள்ள 7 வரி வட்டெழுத்துக் கல்வெட்டு

    1. சகரையாண்டு எழுநூற்றுத் தொண்ணூற்றிரண்டு
    2. போந்தன. வரகுணற்கு யாண்டு எட்டு. குணவீரக் கு
    3. ரவடிகள் மாணாக்கர் காழத்து சாந்திவீரக் 
    4. குரவர், திருவயிரை பாரீஸ்வ படாரரையு மியக்
    5. கி அவ்வைகளையும் புதுக்கி இரண்டுக்கு முட்
    6. டாவவியு மோரடிகளுக்கு சோறாக அமைந்தன 
    7. பொன் ஐந்நூற்றைந்து காணம் 

    அவ்வு – கூடும் இடம், assembly hall; போந்தன – போயின; காழத்து – மியான்மர் நாட்டு; முட்டாவ – முடிதல்; அவி – அவை, மாண்டபம்; ஓராடி – சேர்ந்து உழைப்பவர், உழைப்பாளர்.

    விளக்கம் : சக ஆண்டு 870 கழிய இரண்டாம் வரகுணவர்மப் பாண்டியனுக்கு 8 ஆம் ஆட்சி ஆண்டில் 870 இல் குணவீரக் குவரடிகளின் மாணவரான மியான்மர் நாட்டைச் சேர்ந்த சாந்திவீரக் குரவரையும் திருவயிரையின் பாரீஸ்வ கோயில் அதிகாரியையும் இணைத்து இயக்கி இங்கத்து பழுதுபட்ட கூடங்களை புதுப்பித்து அவை இரண்டையும் கட்டி முடிக்கவும் கூடம் கட்டும் உழைப்பாளிகளுக்கு சோறிடவும் மொத்தம்  505 காணம் பொன் முதலிடப்பட்டது என்று கணக்கு காட்டப்பட்டுள்ளது.

    சமண அற நூல்களைக் கற்க பர்மாவில் இருந்தும் மாணவர் தமிழகம் வந்தது இதன் மூலம் தெரிகின்றது. கல்வெட்டில் வரகுண பாண்டியன் ஆட்சி ஆண்டும் சக ஆண்டும் ஒருங்கே குறிக்கப்பட்டது காலக் கணிப்பிற்கு பெரிதும் உதவுகின்றது. பாண்டியர் ஆட்சி கொங்கில் சில காலம் இருந்துள்ளதால் கொங்கில் அது சமண பரவலுக்கு [பெரிதும் ஆதரவாயிற்று என்று கொள்ளலாம்.

    பார்வை நூல்: கொங்கு நாட்டுச் சமணக் கல்வெட்டுகள், புலவர் செ இராசு, பக். 253

    திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி வட்டம் சாத்தமங்கலம் ஊரில் சந்திரசுவாமி கோயில் அருகே உள்ள பெருமாள் பாறை என்னும் இடத்தில் உள்ள 8 வரிக்  கல்வெட்டு

    1. ஸ்வஸ்திஸ்ரீ கம்ப பன்மற்கு யாண்
    2. டாறாவது காடகதிரையர் ம
    3. ணவாட்டி மாதவி யித்திருக்கோ
    4. யில் புதுக்கி முகமண்டக மெ
    5. டுப்பித்து பாழி புதுக்கி யக்
    6. கா படாரி திருக்கோயில் லெடு
    7. ப்பித்து இப்பள்ளிக்கு கிட்ட 
    8. பெரு மணி ஒன்று ஊட்டு(வி)த்தாள் 

    பாழி – சமண முனிவர் தங்கும் இடம்; படாரி – அம்மன்; கிட்ட – செம்பு; ஊட்டு – விருந்து

    விளக்கம் : பல்லவன் கம்ப வர்மனின் 6 ஆவது ஆட்சி ஆண்டு 875 இல் காடகதிரையர் என்ற வணிகருக்கு மனைவியான மாதவி என்பவள் இந்த சமணத் திருக்கோவிலை புதுப்பித்து அதில் முக மண்டபம் கட்டியும், சமண முனிவர் தங்கும் இடத்தைப்  புதுப்பித்தும், யக்ஷிக்கு புதிதாக ஒரு கோயில் கட்டியும், இந்த சமண கோவிலுக்கு செம்பினால் ஆன பெரிய மணி ஒன்றைக் கட்டியும் மக்களுக்கு விருந்து கொடுத்தாள்.

    காடகதிரையர் என்ற சொல் இவர் காட்டுவழியில் வரித் தண்டல் உரிமை பெற்ற வணிகப் படைத்தலைவர் என்று விளங்குகிறது. திருவண்ணாமலை மாவட்டம் சிறந்த சமணர் ஊர்களை கொண்ட மாவட்டம் என்பதற்கு இங்கு அமைந்த சமண தளங்களே சான்று. இதற்கு இந்த மாவட்டம் அதிகமாக சமணத்தை பின்பற்றிய கங்கர், நுளம்பர், வாணர் படையெடுப்பிற்கு ஆட்பட்டதே காரணம் எனலாம்.

    பார்வை நூல்: தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் தொகுதி 13, அதில் திருவண்ணாமலை மாவட்டக் கல்வெட்டுகள் தொகுதி 2, பக். 104 த நா தொ து வெளியீடு.

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வட்டம் கழுகுமலைப் பேரூராட்சி கழுகுமலை வேட்டுவன் கோவில் 7 வரிக் கல்வெட்டு.

    1. ஸ்ரீ திரும[லை]க்  
    2. குறத்திகள் 
    3. மாணாக்கன் ஏ
    4. னாதி குத்த
    5. னஞ் சாத்திச்  
    6. செய்வித்த ப
    7. டிமம் 

    ஏனாதி – வில்வீரர் படைத்தலைவன்; படிமம் – கற்சிலை; குரத்தி – ஆசிரியை

    விளக்கம் : திருவண்ணாமலை மாவட்டம் போளூர் வட்டத்தில் உள்ள திருமலையின் சமண பள்ளியைச் சேர்ந்த ஆசிரியைகளிடம் பாடம் பயின்ற மாணாக்கன் ஏனாதி குப்தன் என்பவன் தன் முன்னோரை நினைந்து செய்வித்த தீர்த்தங்கரர் சிற்பம் இது.

    இவனது ஊர் திருமலை என்று கொள்ளும்படியாக இவன் இளவயதில் இங்கத்து ஆசிரியைகளிடம் பாடம் பெற்றுள்ளான். ஆசிரியைகள் ஆண் மாணவருக்கும் பாடம் புகட்டியுள்ளனர் என்பது இதனால் தெரிகிறது. இவனது இயற்பெயர் குறிக்கப்படவில்லை. குப்தன் என்பது வணிகருக்குள்ள வர்ணப் பட்டம் ஆகும். அதன் தமிழ் வடிவம் தான் குத்தன். அதே நேரம் இவன் விற்படைத் தலைவனாகவும் இருந்துள்ளான் என்பது ஏனாதி பட்டத்தால் விளங்குகிறது. இக்கல்வெட்டு சமணத்திற்கு வணிகரே ஆதரவளித்தனர் என்பதற்கு பெருஞ் சான்றாகிறது. ஏனெனில் மகாவீரரும் இதே வணிகர் குலத்தில் பிறந்த படைக் குடும்பத்தவர் என்பதே ஆகும். சமணத்தின் விரிந்த பரவல் சாதி உணர்வாலேயே ஏற்பட்டது. வணிகர் பலர் சமணத்தைக்  கைவிட்டதால் பிற்காலத்தில் சமணம் தமிழகத்தில் வீழ்ந்தது.

    பார்வை நூல்: தென்னிந்திய கல்வெட்டுகள் தொகுதி 5 பக் 129 எண்:370

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வட்டம் கழுகுமலைப் பேரூராட்சி கழுகுமலை வேட்டுவன் கோவில் 7 வரிக் கல்வெட்டு.

    1.  ஸ்ரீ திருநேற்சுறத்து அரைம
    2. லை ஆழ்வாற்குத் திருப்ப
    3. ணி செய்கிற பட்டன் சுந்தர
    4. னான நேற்சுறநாட்டுப் பெ
    5. ருங் கொல்லனுக்கு கரு
    6. ஞ்செய் கால் சந்த்ராதித்த[வல்]
    7. நிற்கச் சேத்து      

    அரை – நடு; ஆழ்வார் – தீர்த்தங்கரர்; கருஞ்செய் – குடைந்து செய்த; கால் – அடிப்பாகம், basement; சேத்து – செய்தான்

    விளக்கம் : திருநேர்சுரம் என்ற கழுகுமலையின் நடுமலையில் தீர்த்தங்கரருக்கு பூசை செய்யும் சமண பிராமணன் சந்திர சூரியர் நிலைக்கும் காலம் வரையில் நிலைக்கும்படியாக சுந்தரன் என்ற பெயருடைய நேற்சுரநாட்டின் பெருங் கொல்லனிடம் (சிற்பி) கருங்கல்லைக் குடைந்து அடித்தளம் செதுக்கச் செய்தான்.

    காலம் குறிப்பிடாத கழுமலைச் சமணக் குடைவறைக் கோவில் கல்வெட்டுகளிலேயே இது பழமையானதாக இருக்கலாம். ஏனெனில் இது அடித்தளம் அமைத்ததை பற்றிக் குறிக்கிறது. ஒரு கோவிலுக்கு அடித்தளமே முதலாகும். பிற பின்னர் தான் ஏற்படும்.

    பார்வை நூல்: தென்னிந்திய கல்வெட்டுகள் தொகுதி 5 பக் 127 எண்: 357

    வேலூர் மாவட்டம் வேலூர் வட்டம் சின்னபாலம் பாக்கம் சரக்குமலை உச்சியின் குகை மேற்கூரையில் செவ்வகக் கட்டத்தில் வெட்டியுள்ள 6 வரிக் கல்வெட்டு.

    1. ஸ்வஸ்திஸ்ரீ கோவிசைய நிருபதுங்கு 
    2. ற்கு யாண்டு பத்தொன்பதாவது பெ
    3. ரிய பெண்ணாகடத்து ஸிம்ஹ நந்தி படாரர்
    4. க்கு பங்கள நாடுடையார் கொடுக்கர் வீரத்
    5. தொழிலர் பேராற் பங்கள நாடுடையார்த் த
    6. (ள)கள் சிறிய நங்கையார் செய்வித்த ஸ்ரீ கோயில்  

    கொடுக்கன் – மகன்; வீரத்தொழிலர் – சத்திரியர்; நங்கை – அம்மையார்; தளகள் – தளவாட வீரர்கள்

    விளக்கம் : பல்லவன் நிருபதுங்க வர்மனின் 19 ஆம்  ஆட்சி ஆண்டு 888 இல் பெரிய பெண்ணாகடத்தின் சமண கோயில் அதிகாரி சிம்மநந்திக்கு பங்காளநாடு ஆளும் அரையன் மகனும் சத்திரியரும் ஆனவர் பெயரால் பங்கள நாட்டின் படை தளத் தலைவர் நினைவில் சிறிய அன்னை கட்டுவித்த திருக்கோவில் இது. இந்த பெண்ணாகடம் சித்தூர் அருகில் இருந்திருக்கலாம்.

    பார்வை நூல்: ஆவணம் இதழ் 7, 1996, பக். 17-18

    திருவண்ணாமலை மாவட்டம் போளூர் வட்டம் திருமலையில் சுவரோவியம் தீட்டிய குகைக்கு இடப்புற முல்லா பாறையில் வெட்டி உள்ள 8 வரிக் கல்வெட்டு

    1. ஸ்வஸ்திஸ்ரீ கச்சியும் தஞ்சையங்கொண்ட ஸ்ரீ கன்
    2. னர தேவர்க்கு யாண்டு பத்தொன்பதாவது 
    3. கன்னரதேவ ப்ரித்வி கங்கரயர் தேவியார் கங்க மாதேவி 
    4. யார் கன்மி பொக்கிலிரு பிரிதியங்கரையர் மண
    5. வாட்டியார் பெற்றாள் நங்கையார் வை
    6. காவூர்த் திருமலை யக்ஷ படாரர்க்
    7. குத் துஞ்சா விளக்கொன்று சந்தி
    8. ராதித்தருள்ளவளவும் வைத்தார். 

    பொக்கு – கருவூலம்; கன்மி – அனுக்கர், attendar;

    விளக்கம் : காஞ்சியையும் தஞ்சையையும் கைப்பற்றிய இராட்டிரகூட வேந்தன் மூன்றாம் கிருஷ்ணனான கன்னரதேவனின் 19 ஆம் ஆட்சி ஆண்டு 953 இல் திருவண்ணாமலையை ஆண்டு கொண்டிருந்த மன்னர் கன்னரதேவ (கிருஷ்ணதேவ) பிரிதிவி கங்கரையரின் பட்டத்து அரசியான கங்க மாதேவியாரின் சார்பாக அவளது அனுக்கியான கருவூலக் காப்பாளராக இருக்கும் பிரிதியங்கரையருடைய மனைவியான பெற்றாள் நங்கை என்பவள் இந்த வைகாவூரில் உள்ள திருமலை யக்ஷ படாரர் சிலை முன்பாக அணையா விளக்கு ஒன்றை சந்திர சூரியர் உள்ள காலத்தளவும் எரியும்படி வைத்தாள்.

    இராட்டிரகூடன் கன்னரதேவனின் மேலாண்மையை ஏற்றதால் திருவண்ணாமலை மன்னன் பிரிதிவி கங்கரையன் தன் பெயர் முன்பாக கிருஷ்ணன் என்ற வேந்தன் பெயரை இணைத்துக் கொண்டான் என்று தெரிகிறது. அரசியின் அனுக்கி பிரிதியங்கரையன் மனைவி என்பதில் இருந்து இருவரும் ஏதோ வகையில் உறவினர் என்று புரிந்து கொள்ள முடிகிறது. அதனால் தான் பிரிதியங்கரயன் கருவூலக் காப்பாளனாக இருக்க முடிந்தது. முக்கிய பதவிகளில் அரச குடும்பத்தவரே அந்நாளில் அமர்த்தப்பட்டனர் என்பதற்கு இது சான்றாகிறது.

    பார்வை நூல்: தென்னிந்திய கல்வெட்டுகள் தொகுதி 23, எண் 65, பக். 41

    திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை வட்டம் திருமூர்த்திமலை பாறையில் உள்ள 12 வரிக் கல்வெட்டு

    1.  பரிதாபி வருடம் கார்த்திகை மாதம் 1 தி இம்முப்பட்டத்துக் கணக்காண்ட
    2. எத்துலப்ப னாயக்கரவர்கள் நாளையில் போட்ட கல்வெட்டு. அமணே சுர சுவாமியுட 
    3. பூமி அமண சமுத்திரஞ் சீர்மையில் யாதாமொருத்தன் துரைத்தனத்துக்கு வந்தா 
    4.  லும் அவருட பெண்பிள்ளை கலியாணஞ் செய்தால் அந்தப் பிள்ளைக்கு 
    5.  நால் பொன்னுக்குள்ளாக கடமை போதவும் மாடுகள் சீதனங்குடுக்கவும் யிந்த தலத்துக் 
    6. கு முறையாருக்குப் பிள்ளை குடுத்துத் தலத்திலேயும் யிருந்தால் நாலுபேர் துரைமக்கள் வைத் 
    7.  த மானியம் விட்டு நடப்பிக்கவும், இதுக்கு மிகை யாதாமொருவன் பிள்ளைப் பிரியத்துக்கு எத்தா 
    8. யுடமை போட்டாலுங் கோபாதமத்தனை பூமி சீதனங் குடுத்தாலுமவன் கங்கைக் கரையிலே 
    9. காராம் பசுவை கொண்ண தோஷத்திலே போவான். அதிகாரத்தில் சிறிது திரவியமெச்சாக
    10.  ச் சம்பாதிச்ச பாகத்திலேயுங் கூட அ_ _ செய்து தானதர்மஞ் செய்து தீர்க்கமா 
    11. ய் நடந்துகொண்டவனுக்குக் காசியில் தீர்த்தமாடின பலன் உண்டு. யி_ _  ப்படி மே 
    12. னி கண்டிருந்து மீதி நடப்பிக்க இராமே _ _ த்தமனுக்கு 

    பட்டம் – நாற்றங்கால் பகுதி, ஆட்சி; கணக்கு – ஒழுங்கு சீல ஏற்பாடு, system; கடமை – மாப்பிள்ளை வீட்டார் மணப் பெண் வீட்டாருக்கு கொடுக்கும் வரதட்சணை; நாளை – வரும் காலம்; சீர்மை – நாட்டுப்பகுதி; துரை – வரி அதிகாரி; முறையார் – உறவினர், சொந்தம்

    விளக்கம் : இது பரிதாபி ஆண்டு கார்த்திகை மாதம் 1 நாள் 1792 இல் வெட்டப்பட்ட கல்வெட்டு. எத்துலப்ப நாயக்கர் என்ற பெயர் இவரை தெலுங்கர் என்று சுட்டுகிறது. இவர் தளி பாளையக்காரர் குடும்பத்தவர் ஆவார். இந்த மூன்று பாசன நிலப்பகுதியின் ஒழுக்க சீலத்தை ஆள்கின்ற எத்துலப்ப நாயக்கர் எதிர்காலத்தில் நடந்துகொள்ள வேண்டி நிறுத்திய ஒழுக்கக் கல்வெட்டு. இது அமணேசுவர சுவாமியின் (அருகன்) நிலப்பகுதி எனவே இங்கு அநியாயம் நடக்கக் கூடாது. இந்த அமணசமுத்திர நாட்டுப் பகுதியில் எவரேனும் ஒருவன் வரி அதிகாரி பதவிக்கு வந்தால் அவருடைய பெண் பிள்ளைக்குக் கலியாணம் செய்யும் போது மாப்பிளை வீட்டாரிடம் அந்த பெண்ணுக்கு நான்கு பொன்னுக்கும் குறைவாகத் தான் வரசட்சணை வாங்க வேண்டும். பெண் வீட்டாருக்கு மாடுகளையும் சீதனமாகக் கொடுக்கலாம். இந்த தலத்திலேயே வாழும் உறவினருக்குப் வரி அதிகாரி பெண் கொடுத்து அவர்கள் இந்த தலத்திலேயே வாழ்ந்தால் நான்கு பேருக்கு வரி அதிகாரியின் ஆள்கள் மானியம் கொடுத்து நடந்துகொள்ள வேண்டும். இதற்கு மேலாக எவரேனும் ஒருவன் பெண் பிள்ளையை மணம் செய்து கொடுத்துப் பிரிவதற்கு எவ்வளவு வரதட்சணை போட்டாலும் இதாவது, பசுவின் குளம்படி அளவு நிலத்தைக் கூட வரதட்சணையாக பெற்றாலும் கங்கைக் கரையில் காராம் பசுவைக் கொன்ற பாவத்தை கொள்வான். அதிகாரத்தில் சற்றே கூடுதலாக பொருள் அதிகமாக சம்பாதித்தாலும் அந்த அதிக உபரி பணத்தை தான தர்மம் செய்து நேரிய வழியில் நடந்து கொண்டவனுக்கு காசியில் குளித்த பயன் உண்டாகும். இப்படியாக மேற்படி உள்ளபடி நடக்கச் செய்வது இராமே _ _ த்தமனுக்கு கடமை ஆகிறது.

    வேலூர் விரிஞ்சிபுரத்து படைவீட்டு பிராமணர்கள் பெண் வீட்டாருக்கு கன்யாசுல்கம் என்ற வரதட்சணை கொடுக்க முடியாமல் தம் மகனுக்கு திருமணம் நடத்த முடியாமல் துன்புற்ற போது அதற்கு எதிராக ஆணை பிறப்பிக்கப்பட்டது. அதே போன்றே இந்த அமணசமுத்திரத்தில் வரி அதிகாரிகள் வீட்டில் பெண் எடுத்தவர்கள் வரதட்சணை கொடுமைக்கு ஆளாகி எத்துலப்ப நாயக்கரிடம் முறையிட அந்த வரதட்சணைக் கொடுமைக்கு அவர் வரம்பிட்டுப் பிறப்பித்த ஆணைக் கல்வெட்டே இது. எத்துலப்பர் ஒரு உண்மையான ஆட்சியாளராக தகுந்த நடவடிக்கை எடுத்துள்ளார் என்று தான் கூற வேண்டும். உள்நாட்டு ஆட்சி நீங்குவதற்கு முன் உள்நாட்டு ஆட்சியாளரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு என்ற வகையில் இது சிறப்பானது. 1801 க்கு பின் ஆங்கிலேயர் இவருள்ளிட்ட சில பாளையக்காரர் பாளையங்களை ஒழித்து தமது பிரிட்டிசு ஆட்சியை முழுமையாகத் தமிழகத்தில் நிறுவினர் என்று ஆவணச் சான்றுகள் தெரிவிக்கின்றன.

    பார்வை நூல்: கொங்கு நாட்டுச் சமணக் கல்வெட்டுகள், புலவர் செ இராசு, பக். 260

    கோயம்பத்தூர் மாவட்டம் அவிநாசி வட்டம் ஆலத்தூர் சமணப் பள்ளி கருவறை நிலைக்காலில் உள்ள 12 வரி தமிழ் எழுத்துக் கல்வெட்டு

    1. பொங்கல் 
    2. லூர் வண்ணா 
    3. ன் நீலஞ் 
    4. செல்லன் 
    5. மணவாட்டி 
    6. காவஞ் சாத்தி 
    7. யையும் ம
    8. கள் செல்ல ப 
    9. ணத்தியை 
    10. யும் சாத்தி 
    11. நாட்டுவித்த 
    12. ல் நிலை  

    சாத்தி – நினைவில் கொண்டு பெயரிட்டு

    விளக்கம் : இதன் காலம் குறிக்கப்படவில்லை எனினும் தமிழ் எழுத்தில் உள்ளதால் சோழர் ஆட்சி ஏற்பட்ட காலத்தது என்று கொள்ளலாம். இது வணிகர் அல்லதா எளியோர் சமணத்தை பின்பற்றியதற்கு அடையாளமாக உள்ள கல்வெட்டு. பொங்கலூரில் வாழும் வண்ணான் நீலன் செல்லன் என்பவன் இறந்த தன் மனைவி காவன் சாத்தியையும் மகள் செல்லப் பணத்தியையும் நினைவில் வைத்து நிறுத்திய கல் வாயில் நிலை என்று உள்ளது.

    வணிகரின் வீரதாவளத்தில் துணி துவைத்திருந்தால் அந்த சமண வணிகரின் தொடர்பால் வண்ணார் சமண சமயத்தை தழுவி இருக்கலாம் என்பதில் வியப்பு ஒன்றும் இல்லை.

    பார்வை நூல்: கொங்கு நாட்டுச் சமணக் கல்வெட்டுகள், புலவர் செ இராசு, பக். 256

    திருச்சி மாவட்டம் பொன்மலை கீழ்க்குறிச்சி பௌத்தப்பள்ளி கல்வெட்டு

    ஸ்வஸ்திஸ்ரீ வீரத்தாவளத்தில் பௌத்தப் பள்ளிக்கு இந்த செந்தாமரைக் கண்ணநல்லூர் முதலடங்க இறையிலியான பள்ளிச் சந்தம். 

    வீரதாவளம் – வணிகப்படை வீரர் ஓய்வாக தங்கும் ஊர்; பள்ளிச் சந்தம் – பௌத்தப் பள்ளிக்கு வழங்கும் கொடை

    விளக்கம் : இந்த கல்வெட்டு அருகே 11 ஆம் நூற்றாண்டு புத்தர் சிற்பம் ஒன்று பத்மாசனத்தில் அமர்ந்து தியான நிலையில் தலை இழந்து காணப்படுகிறது. வணிகரின் படை ஆள்கள் ஓய்விற்கு தங்கும் இடமான இந்த செந்தாமரைக் கண்ணநல்லூர் என்னும் கீழ்க்குறிச்சியில் அமைந்த பௌத்த பள்ளிக்கு இவ்வூரின் பொருள் வரியையும் சேர்த்து இறையிலியாக பள்ளிக்கொடை வழங்கினர் வணிகர் என்கிறது இக் கல்வெட்டு.

    இக்கல்வெட்டின் மூலம் தென்னகத்தில் காலூன்றாத புத்த மதம் வணிகரின் ஆதரவால் சில இடங்களில் தலை தூக்கி நின்றது என்பது விளங்குகிறது. இது ஒரு அரிதான புத்த மதக் கல்வெட்டு. சில வட நாட்டு வணிகரோ அல்லது ஈழ வணிகரோ இங்கு வந்து தங்குவதால் அவரோடு நல்லுறவு பேணும் எண்ணத்தில் இங்கு புத்தர் கோவிலை வணிகர் கட்டி இருக்கலாம்.

    பார்வை நூல்: கல்வெட்டு காலாண்டு இதழ் 57, 2002, பக். 15

    Share
  • தூங்குதலை கல்வெட்டு

    தூங்குதலை கல்வெட்டு

    சேசாத்திரி ஸ்ரீதரன்

    உடலில் உயிர் என்னும் இயக்கம் இருந்தால் தான் இந்த உலகில் ஒருவருடைய பெயர், அறிவு, சொத்து, சொந்தம், அதிகாரம் எல்லாம் அவருக்கு உரியதாக இருக்கும். அந்த விலை மதிக்க முடியாத உயிர் ஒட்டியிருந்த கூட்டை விட்டுப் போனால் உடலோடு எல்லாம் போய்விடும். உலகுடனான அவரது உடம்பியல் தொடர்பு (physical relationship) முற்றாக அற்றுப் போகும். அத்தகு உயிரை சிலர் தாமே தம் விருப்பில் தமது தலைவன் உடல்நலம் தேற வேண்டியும், தலைவனுக்கு போரில் வெற்றி கிட்ட வேண்டியும், மேற்கொள்ளப்பட்ட  ஒரு செயலில் தடை நீங்கி அச்செயல் நல்லமுறையில் நடந்தேறவும் தெய்வத்திடம் நோந்து வேண்டிக் கொண்டு அந்த வேண்டுதல் நிறைவேறுகையில் தம் தலையை வெட்டி தம் நோற்றலை நிறைவேற்றினர். இதற்கு தூங்கு தலை, நவகண்டம் என்று பெயர். தலையை வெட்டும் போது சிலருக்கு உடனே உயிர் போகும் அப்போது தலை உடலோடு ஒட்டித் தொங்கிக் கொண்டிருக்கும் என்பதை வைத்து இப்படி அழைத்திருக்கலாம். இத்தகு தலை அறுப்பு காளி, துர்க்கை கோவில் முன்பாகவே பெரும்பாலும் நடந்தன. இப்படி தலையை அறுத்துக் கொண்டு உயிர் துறப்பவர் செயலை மெச்சி அவரது குடும்பத்திற்கு போரில் இறக்கும் வீரருக்கு ஒப்பாகக் கருதி நெய்த்தோர்பட்டி நிலம் தானமாக வழங்கப்பட்டது. போரில் இறப்பதும் தலைவன் நலம், வெற்றி வேண்டி உயிர் பலி கொடுப்பதும் ஒன்று தான் என்ற கருத்து நிலவியதால் இந்த உயிர் பலி மேற்கொள்ளப்பட்டு இருக்கலாம். இப்படி இறந்தோர் பெரும்பாலும் கீழ்நிலைப் படைவீரர் அல்லது எளியோர் என்பதை கல்வெட்டுகள் மூலம் அறிய முடிகிறது. நெல்லூர் மாவட்டம் கூடூர் வட்டம் மல்லாம் கிராமத்தில் கம்ப வர்மனுடைய 20 ஆம் ஆட்சி ஆண்டில் 883 இல் ஒக்கொண்ட நாகன் ஒக்க திந்தன் என்ற பறை அடிப்பவன் நவகண்டமாக தன் தலையை அறுத்து துர்க்கைக்கு படையலிட்டான். அவன் குடும்பத்தவருக்கு ஊரார் தொறுப்பட்டி கொடுத்தார்கள். 10 ஆம் நூற்றாண்டில் விருதுநகர் துலுக்கர்பட்டி அருகில் உள்ள மன்னார்கோட்டை சிவன் கோயிலில் உள்ள கல்வெட்டு தன் தலைவன் தன்மசெட்டி நலம் பெற வேண்டி கோன் என்பவன் நோன்பு நோற்று தன் தலையை அரிந்து கொண்டு உயிர் பலி கொடுத்தான் என்கிறது.

    யோக சித்தர்கள் தமது யோக வலிமையால் உடலை ஒன்பது கூராகப் பிய்த்து மரத்தில் தொங்கவிடுவது, அங்கும் இங்கும் சிதற விட்டிருப்பது போன்ற யோகப் பயிற்சியில் ஈடுபட்டு பின் பிய்த்த உடலை தம் யோக வலிமையால் ஒன்று சேர்ப்பர். இது தான் உண்மையான நவ கண்டம். ஆனால் வீரர் நோன்பிருந்து தலை அரிந்து பலியிடல் அதனினும் மாறுபட்டது. ஆயினும் பொருத்தமின்றி அதையும் நவகண்டம் என்றே குறிப்பிட்டனர். பெண்கள் இவ்வாறு தலை அறுத்து வேண்டுதல் நிறைவேற்றியதாக சிற்பமோ அல்லது கல்வெட்டோ இல்லை. இது ஆடவர் மட்டுமே மேற்கொண்ட சடங்காகத் தெரிகிறது. தமிழகத்தில் பல தலைவெட்டுச் சிற்பங்கள் கல்வெட்டு ஏதும் இன்றி சிற்பமாக மட்டுமே உள்ளன. மிகச் சில சிற்பங்களில் மட்டுமே கல்வெட்டுகள் காணப்படுகின்றன. கீழே அந்த கல்வெட்டுகள் விளக்கப்பட்டுள்ளன.

    விழுப்புரம் மாவட்டம் திருக்கோயிலூர் வட்டம் பெண்ணையாற்றின் வடபுறம் அரக்கண்ட நல்லூர் ஒப்பிலாமணி ஈசுவரர் கோயில் நாட்டிய மண்டபத்தில் பொறிக்கப்பட்டுள்ள 12 வரிக் கல்வெட்டு
    1. கோமாற பன்மர் திருபுவனச் சக்கரவர்த்திகள் ஸ்ரீ சுந்தர 
    2. பாண்டிய தேவர்க்கு யாண்டு பத்தாவது இந்தத் திருமண்டப
    3. ம் தட்டோடு இட்ட இதுக்கு இவ்வாண்டை திருவைகாசித் திருநாளில் 
    4. இவூர் தேவரடியாரில் பொந்நாண்டை மகன் இளவெண் 
    5. மதிசூடினான் தலைஅரிந்து கொள்ளுகெயில் இவனுக்கு உதிரப்பட்
    6. டியாக எல்லைக் காலில் தென்னகோன் தரங்குழி குரம்பில் 
    7. சண்டேசுர நாயனார்கு கொடுத்தருளின குழி ஐநூறும், இப்பற்றில்
    8.  நாட்டவர் இவூரில் குடிப்பற்றில் குடுத்த குழி ஐநூறும் ஆககுழி ஆயிர
    9. மும் சந்திராதித்தவரை இவன் வழி உள்ளவர் அனுபவித்துக்  
    10. கொள்ளக் கடவார்கள். பன்மாகேசுரலக்சை. 
    11. இதுக்கு இலங்கணம் சொன்னவன்
    12.  தாய்க்குத் தானே மணவாளன். 

    தட்டோடு – இடிந்ததால், அழிந்து சேதமாதல்; குரம்பு – வரப்பு, எல்லை, அணை; காலில் – காட்டில், வயலில்; உத்திரப்பட்டி – உயிர் பலிக்கு ஈடாக கொடுக்கும் நிலம்; பன் மாகேசுவரர் – சிவனடியார் கூட்டம்; இலங்கனம் – இடர் 

    விளக்கம் : சட வர்ம சுந்தர பாண்டியனின் 10 ஆவது ஆட்சி ஆண்டில் 1260 இல் இந்த ஆடல் திருமண்டபம் கட்டுகையில் ஒரு பகுதி இடிந்து சேதமானது. அதை மீண்டும் உண்டாக்க இந்த ஆண்டு வைகாசி நன்னாளில் இந்த ஊர் தேவரடியாள் பொந்நாண்டையின் மகன் இள வெண்மதிசூடி என்பவன் தடையேதும் இன்றி மண்டபப் பணி முடிவடைய வேண்டிக் கொண்டு தன் தலையை அறுத்து உயிர் பாலி கொடுத்தான். இதற்கு உதிரப்பட்டியாக எல்லைக் காட்டில் தென்னகோன் பண்பட்ட விளைநில வரப்பில் சண்டேசுவர நாயனாருக்கு நன்கொடையாக வந்த ஐநூறு குழி நிலமும் இந்த பற்றில் வாழும் சித்திரமேழி நாட்டவர் இவ்வூரில் குடியிருப்பு நிலத்தில் கொடுத்த ஐநூறு குழி நிலமும் ஆக மொத்தம் ஆயிரம் குழி நிலம் சந்திர சூரியன் நிலைக்கின்ற காலம் வரை இவன் வழிவந்தோர் அனுபவித்துக் கொள்ளட்டும் என்று நிலதானம் வழங்கினர். இதை சிவனடியார்க் கூட்டம் காப்பதாக. இதை இடராக்கி குறை கூறுபவன் தன் தாய்க்கு தானே கணவன் ஆனவன்.

    கோவில் தேரடியார்கள் மற்றவர் போலவே மணந்து பிள்ளை பெற்று குடும்பம் கொண்டிருந்தனர் என்பதை இக்கல்வெட்டால் அறிய முடிகிறது. 12 ஆம் நூற்றாண்டு முதல் கல்வெட்டின் இறுதியில் இவ்வாறு கொச்சையாகத்  திட்டும் வழக்கம் பதிவேறியது.    

    பார்வை நூல்: கல்வெட்டுக் கலை, பக் 139, பொ இராசேந்திரன் & சொ சாந்தலிங்கம்

    வேலூர் மாவட்டம் வாலாசாப்பேட்டை வட்டம் திருமலைச்சேரி பொன்னியம்மன் கோயில் எதிரில் உள்ள 5 வரிக் கல்வெட்டு

    1. தூங்குதலை குடு
    2. த்தாந் வீரசோழ
    3. னை கல் செய்வி
    4. த்தார் நல்லூர் நம்
    5. பி 

    தூங்குதலை – தொங்குகின்ற தலை என்ற தலைவெட்டு நேர்த்திக் கடன் 

    விளக்கம் : வேந்தன் பெயரோ காலக் குறிப்போ இல்லாத கல்வெட்டு. வீரசோழன் என்ற வீரன் தன் வேண்டுதலை நிறைவேற்றும் வகையில் தன் தலையை வெட்டி வைத்தான். அவன் நினைவைப் போற்றும் வண்ணம் இக்கல் நட்டுவித்தன் நல்லூர் நம்பி என்ற தலைவன்.

    பார்வை நூல்: ஆவணம் 24, 2013, பக். 53

    திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி வட்டம் திருவாலங்காடு இரயில் நிலையம் அருகில் உள்ள பாகசாலை மூலஸ்தான ஈசுவரர் கோயில் கற்பலகையில் உள்ள 13 வரிக் கல்வெட்டு

    1.  யாண்டு இருபத்தேழாவது க
    2. ந்நர தேவற்கு பாசாலி கிழவ[ந்)
    3. நாகன் சேந்தமானுக் கு
    4. ன்றில்
    5.  _ _ _ வென்று பிடாரிக்கு இவர் பி[ள்]
    6. ளை கையிலாந் மகந் சரதேவன் தலை 
    7. த[ந்]தான். இவனுக்கு அர்ச்சனா போக
    8. மாக மு
    9. ற்குண்டில் ஆட்புளிக் கழுவலின் கீழை குண்
    10. டில் நிலம் அரைக்கால் இவ்வரைக்
    11. கால்
    12.  நிலம்
    13.  இதுவே.    

    கிழவன் – ஊர்த்தலைவன்; மகன் – கீழ் நிலைப்  போர் வீரன், soldier; அர்ச்சனா போகம் – கோயில் பூசை செலவிற்கு விடும் நிலம்; கழுவில் – மழைநீர் வடிந்தோடும் நிலம்; குண்டில் – சிறு வயல் 

    விளக்கம் : இராட்டிரகூடன் மூன்றாம் கிருஷ்ணனின் 27 ஆம் ஆட்சி ஆண்டில், கி.பி. 966 இல் இன்றைய பாகசாலையான அன்றைய பாசாலியின் ஊர்க் கிழவன் நாகன் சேந்தமான் குன்றில் நடந்த போரில் வென்றதால் தன் வேண்டுதலை நிறைவேற்ற இவரது பிள்ளை கயிலானின் படைஆள் சரதேவன் என்பவன் துர்க்கைக்கு தன் தலையை வெட்டி பலி கொடுத்தான். இவன் சார்பாக அம்மனுக்கு பூசை நடத்தும் செலவிற்கு முற்குண்டில் ஆட்புளி மழைநீர் வடிநிலத்தின் கிழக்கு சிறு வயலில் உள்ள நிலத்தில் அரைக்கால் அளவு ஒதுக்கப்பட்டது. இந்த அரைக்கால் நிலம் இதுவென்று கல்வெட்டு உள்ள நிலத்தை குறிக்கிறது.  

    பார்வை நூல்: ஆவணம் 15, 2004, பக். 14

    அரியலூர் மாவட்டம் பெரிய திருக்கோணம் மகாமண்டப வடக்குச்சுவர் படிக்கையில் உள்ள 4 வரிக்  கல்வெட்டு

    1. ஸ்வஸ்திஸ்ரீ திருபவனச் சக்கரவத்திகள் ஸ்ரீ ராஜேந்திர சோழதேவற்கு யாண்டு 18 வது மேஷ நாயற்று அபரபக்ஷத்து துவாதஸியும் புதன் கிழமையும் பெற்ற சதையத்து நாள் விக்கிரம சோழ வளநாட்டு மண்ணை கொண்ட சோழ வளநாட்டு மதுராந்தகபுரத்து நகரத்தோம். எம்மூர் உடையார் ஸ்ரீ 
    2. மதுராந்தக ஈஸ்வரமுடையார்க்கு இறையிலி செய்து குடுத்த பரிசாவது இந்நாயனார் சித்திரைத் திருநாள் திருவெழுச்சியும் உய்யவாடுவர் எழுந்தளிப் புறப்பட்டருளினவாறே இக்கோயிற் தேவரடியாரில் ஆவுடை நாச்சி மகன் பஞ்சணேசுவரன் தலை அரிந்து கொள்கையில் இவனும் இக்கோயில் தானத்தாரும் இ _ _ _ யக் கூனை 
    3. திரு _ _ _ நாயனார் ஸந்தி அமுது செய்தருளவும் என்று இவர்கள் கையில் கொள்கையில் நாம் இசைந்து நம்மூர் மூன்றாங் கட்டளை இராஜராஜ வதிக்கு கிழக்கு சோழகேரளன் வாய்காலுக்கு வடக்கு மூன்றாங் கண்ணாற்று மூன்றாஞ் சதிரத்து தெற்கடைய நிலம் 5 வில் கிழக்கடையவும் 15 மை 
    4. _ _  _ _ _ இந்நாயனார்க்கு முன்னாள் திருநாமத்து இறுப்புக் காணியாக குடுத்த நிலம் வ ப மி இந்நிலம் ஆறுமாக்காணியும் (பஞ்சோபாதியும்) _ _ _ _ த்துக்கு இந்நாள் முதல் ஸந்த்ராதித்தவற் இறையிலி செய்து குடுத்தோம் மதுராந்தகபுரத்து நகரத்தோம். 

    பரிசு – ஏற்பாடு; திருவெழுச்சி – திருவிழா; உய்யவாடுவார் ( உய்ய + ஆடுவார்) – காலைத்தூக்கி ஆடும் இறைவன்; வதி – வடிகால்; கண்ணாறு – பாசன வாய்க்கால்; சதிரம் – நான்கு சமபக்கம் கொண்ட நிலம்; இறுப்பு – செலுத்துகை, ஆவண ஓலை;

    விளக்கம் : மூன்றாம் இராசேந்திரச் சோழனின் 18 ஆவது ஆட்சி ஆண்டு கி.பி. 1264 இல் மேழ ராசியான தேய்பிறை 12 ஆம் நாள் புதன் கிழமை அன்று சதய நட்சத்திரம் கூடிய நாளில் விக்கிரம சோழ வளநாட்டு மண்ணைக் கொண்ட சோழ வளநாட்டு மதுராந்தகபுரத்து நகரத்தவர் சொல்வது. “எமது ஊர் ஈசர் மதுராந்தக ஈசுவரருக்கு இறையிலி நன்கொடை ஏற்பாடு செய்து கொடுத்தது யாதெனில் இந்த இறைவர் சித்திரைத் திருநாள் திருவிழாவில் உய்ய ஆடுவார் எழுந்தருளி உலா புறப்பட்டபடி இருக்கையில் இக்கோவிலின் தேவரடியார் ஆவுடை நாச்சியின் மகன் பஞ்சணேசுவரன்தன் தலை வெட்டி பலி கொடுத்ததனால் இவனும்  இக்கோவில் பொறுப்பாளரும் இறையிலியாகத் திருமதுராந்தக ஈசுவரர் சந்தி அமுது செய்தருள்வதற்காக இவர்கள் கையில் வாங்கிக்கொள்ளும் போது நகரத்தவர் நாம் விரும்பி நம்மூரில் மூன்றாம் கட்டளையில் அமைந்த இராஜராஜ வடிகாலுக்கு கிழக்கே சோழகேரளன் வாய்க்காலுக்கு வடக்கில் மூன்றாம் பாசன வாய்க்காலுக்கு மூன்றாம் சதிரத்தில் இருந்து தெற்கே செல்ல நிலம் 5க்கு கிழக்கை அடைந்ததும் 15 _ _ _  இந்த இறைவற்கு முன்னாளிலே ஆவண ஓலைக் காணியாக கொடுத்த நிலம் _ _ இந்த நிலம் ஆறு மாக்காணியும் _ _ _ இந்நாள் முதலாக சந்திராதித்த காலம் வரை இறையிலியாக செய்து கொடுத்தோம் இந்த மதுராந்தகபுரத்து நகரத்தார். கல்வெட்டு ஆங்காங்கே சிதைந்துள்ளதால் நிலம் குறித்து தெளிவாகச் செய்தியை அறிய முடியவில்லை.

    பார்வை நூல்: அரியலூர் மாவட்டக் கல்வெட்டுக்கள், செப்பேடுகள், தொகுதி I, பக் 242 ஆசிரியர்: இல. தியாகராஜன்
    சிவகங்கை மாவட்டம் காளையார் கோயில் வட்டம்  மல்லல் சிதைந்த நவகண்ட கல்வெட்டு

    1.  ஸ்வஸ்தி ஸ்ரீ கொலோத்து 
    2. ங்க சோழ தேவர்க்கு யா 
    3. ண்டு 11 ஆவது வடிந் 
    4. _ உதாரனான கொலோத் 
    5. துங்க சோழ மூவரைய 
    6. னுக்கு வியாதி தொற்ற 
    7. _ தூங்குதலை நோத்த  
    8. _ தூங்குதலை குடுத் _ 
    9. _ அம்பலக் கூத்த _ 
    10. _ சாத்தி குடுத்த ந
    11. _ _ _ து குழிச் செய்ய _ _ _     

    சாத்தி – நினைந்து; நோத்த – நோன்பு மேற்கொண்ட

    விளக்கம் : முதல் குலோத்துங்க சோழனின் 11 ஆம் ஆட்சி ஆண்டு 1081 இல் தரும சிந்தனை உள்ள குலோத்துங்க சோழ மூவரையன் என்ற தலைவன் நோயில் வீழ்ந்தான். அவன் குணமானால் தன் தலையை வெட்டி உயிர் பலி தருவதாக வேண்டிக் கொண்டான் அவனது ஏவலன் அம்பலக் கூத்தன். அவ்வண்ணமே நோய் தீர்ந்ததால் தன் தலையை வெட்டிக் கொடுத்த அவனது நினைவைப் போற்றி அவன் குடும்பத்தவருக்கு நத்தப்பட்டி நிலம் தரப்பட்டது. எவ்வளவு குழி என்று அறிய முடியாத படி கல்வெட்டு சிதைத்து விட்டது.

    பார்வை நூல்: திரு சரவண மணியன் வலைப் பதிவு

    வேலூர் மாவட்டம் வாலாசாப்பேட்டை வட்டம் சோளிங்கர் அருகே உள்ள மோட்டூர் கிராமம் திருவாத்தம்மன் கோவிலுக்கு எதிரே நட்டுள்ள பலகைக் கல்லில் உள்ள 5 வரிக் கல்வெட்டு

    1. தொண்டைமான் 
    2. மகன் கங்கவிக்
    3. கரன் _ _ _  க்காவளோ
    4. ன் தலை யரிந்தா
    5. ன் 

    மகன் – கீழ்நிலைப் படை வீரன் 

    விளக்கம் : 12-13 நூற்றாண்டு கல்வெட்டு. ஆசனமிட்டு அமர்ந்து தலையில் கொண்டையுடன் உள்ள வீரன் தன் கழுத்திற்கு நேரே இரு கைகளால் கத்தியை பிடித்து கத்தியால் கழுத்தை அழுத்துவது போல சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. தொண்டைமானிடம் கீழ்நிலைப் போர் வீரனாக இருந்த கங்கவிக்கரன்  என்னும் காவலோன் தலையை அறுத்துக் கொண்டான் என்று உள்ளது. இவன் தொண்டைமானுக்காக உயிர் பலி கொடுத்துள்ளான் என்று தெரிகிறது.

    பார்வை நூல்: ஆவணம் 24, 2013, பக். 57

    வேலூர் மாவட்டம் வாலாசாப்பேட்டை வட்டம் சோளிங்கர் அருகே உள்ள மோட்டூர் கிராமம் திருவாத்தம்மன் கோவிலுக்கு எதிரே நட்டுள்ள பலகைக் கல்லில் உள்ள 2 வரிக் கல்வெட்டு

    1. பரி விருதுக்காற 
    2. ன் கணவதி 

    பரி – குதிரை, பற்று; விருது – நோன்பு, வீரன்; 

    விளக்கம் : மேலுள்ள சிற்பத்திற்கு அருகே உள்ள இன்னொரு தலைவெட்டு கல்வெட்டுச் சிற்பம். பற்றினால் நோன்பு நோற்றவன் அல்லது குதிரை வீரன் கணபதி என்பவன் இரு கைகளால் கத்தியை பிடித்து கழுத்தில் கத்தியை வைத்து தலையை அறுத்துக் கொள்வது போல சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. இந்த வீரன் விரும்பி நோன்பு நோற்று தலை அரிந்து கொண்டுள்ளான். யார் பொருட்டு என்ற குறிப்பு இல்லை.  

    பார்வை நூல்: ஆவணம் 24, 2013, பக். 58

    சிவகங்கை மாவட்டம் திருபுவனம் வட்டம் மடப்புரம் கிராமம் அடைக்கலம் காத்த ஐயனார் கோவில் காளியம்மன் கோவில். இதில் ஐயனார் கோவில் வாயில் இருபுறமும் கல்வெட்டு காணப்படுகின்றன.

    வலப்புறம் இரண்டு வரிக் கல்வெட்டு

    1. தூங்குதலை  குடுத்தான் 
    2. சித்திர சரிதன் 

    விளக்கம் : 10 ஆம் நூற்றாண்டு தமிழ் எழுத்து கல்வெட்டு. வீரன் ஒருவன் இடது காலை மண்டியிட்டு வலது முழங் காலைத் தரையில் வைத்து இடக் கையால் தன் குடுமியை பிடித்து வலக் கையில் பிடித்துள்ள கத்தியால் தன் தலையை கொய்வதாக சிற்பம் உள்ளது. இதில் சித்திர சரிதன் தன் தலையை அரிந்து தன்னை பலி கொடுத்தான். காரணம் எதற்கு என்ற குறிப்பு இல்லை.

    இடப்புறம் இரு வரிக் கல்வெட்டு
    1. தூங்கு தலை குடுத்தான் _ _ _ 
    2. வல்லபன் 
    விளக்கம் : 8 ஆம் நூற்றாண்டு வட்டெழுத்துக் கல்வெட்டு. வீரன் ஒருவன் வலது காலை மண்டியிட்டு இடது முழங் காலை தரையில் வைத்து இடக் கையால் தன் குடுமியை பிடித்து வலக் கையில் பிடித்துள்ள கத்தியால் தன் தலையை கொய்வதாக சிற்பம் வடிக்கப் பட்டுள்ளது. வல்லபன் என்பவன் தன் தலையை தானே கொய்து தன்னை பலி கொடுத்துள்ளான். எதற்காக தலை அரிந்தான் என்று குறிப்பிடவில்லை.
    பார்வை நூல்: கல்வெட்டு காலாண்டு இதழ் 21, 1984, பக். 1 – 3, த நா தொ து வெளியீடு

     

    Share
  • தீர்ப்பு, ஆணைக் கல்வெட்டுகள்

    தீர்ப்பு, ஆணைக் கல்வெட்டுகள்

    சேசாத்திரி ஸ்ரீதரன்

    சட்டம் இன்று போல அன்றும் வலியோர் பக்கமே சாய்வதாக இருந்துள்ளது. வேந்தர், மன்னர் நேரடியாக தலையிட்டால் மட்டுமே தீர்ப்பு நேரியதாக இருந்தது. அக்காலத்தே நாடு முழுமைக்கும் ஒரே சட்டம் (codified) என்று எங்குமே இருந்ததில்லை. மேல் சாதி, படைச் சாதி என்றால் தண்டனையில் விலக்குகள் இருந்தன. ஆட் கொலைக்கு ஏதேனும் ஒரு கோவிலில் சந்தி விளக்கு அல்லது நந்தா விளக்கு ஏற்றினால் போதும் என்பதே தண்டனையாக இருந்தது. ஆண் கொல்லப்பட்டால் செல்வர் ஏற்றும் நுந்தா விளக்கு அதுவே பெண் கொல்லப்பட்டால் எளியோர் ஏற்றும் சந்தி விளக்கு என்று ஆண் கொலையை விட பெண் கொலைக்கு குறைந்த தண்டனையாக இருந்தது. இரண்டாம் குலோத்துங்க சோழனின் மூன்றாம் ஆட்சி ஆண்டில் வாணகோப்பாடி நாட்டில் கீழ்க் கொன்றை நாட்டு பள்ளிச்சேரி முடியனூரில் வாழும் அடியநம்பி கோவலராயன் என்ற படைத் தலைவன் (பேரையன்) எய்த அம்பு குறி தவறி தன்னோடு உடன் வந்த வெள்ளாளன் குன்றன் சீருடையானைத் தைத்துக் கொல்ல அதற்கு நீதி வேண்டி பார்க்கவ கோத்திர மலையமார் போலவே தாமும் தமிழகத்தின் 79 நாட்டினரைச் சங்கமாகக் கொண்ட சித்திரமேழி பெரியநாடு என்ற சாதி அமைப்பு கோவலராயனைப் பழி சுமத்தி வற்புறுத்தியதன் காரணமாக கொலைக்குத்  தண்டனையாக இரண்டு நுந்தா விளக்கு எரிக்க 64 பசுக்களை கோவிலுக்கு விட்டான் கோவலராயன்.

    ஒரு ஊரில் உள்ளோர் தமக்கு இவ்வாறான சட்டம் வேண்டும் என்று கோரி அதை அணையாக கிழாரிடம்  இருந்தோ அல்லது  அரையரிடம் இருந்தோ ஒப்புதல் பெற்று வந்தனர். அந்த சட்டம் அந்த ஊர் அளவே செல்லுபடியாக இருந்தது. அது பிற இடங்களுக்கு பொருந்தாது. அக்காலத்தே தலை கொய்யும் தண்டனை, கசையடி தண்டனை, தண்டத் தொகை கட்டும் தண்டனை பற்றிய பதிவுகள் கல்வெட்டுகளில் காணப்படுகின்றன. பிராமண ஊர்ச் சபைகள் ஆணை பிறப்பிக்கும் அளவிற்கு தனி அதிகாரம் பெற்றிருந்தன என்பதற்கு குடவோலைக் கல்வெட்டுகள் சான்றாக உள்ளன. அவற்றுள் சில கீழே விளக்கப்பட்டுள்ளன.

    கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டிணம் பெண்ணேஸ்வரம் மடம் ஈசுவரன் கோவில் தெற்கு திருச்சுற்று பீடத்தில் உள்ள 8 வரிக் கல்வெட்டு

    1. ஸ்ரீ மத் _ _ ஸ்வக்ர  _ _ த்தி போ[சள] ஸ்ரீ  வீரராமநாத தேவரீஸர்க்கு யாண்டு நாற்பத்தொன்றாவது உடையார்  பெண்ணையாண்டார் மட
    2. த்திலும் பெண்ணை நாயனார் தேவதானமான [ஊ]ர்களிலும் ஒரு அதிகாரியாதல், கணக்கர் காரியஞ் செய்வார்களாதல், கூசராதல் ஆரேனு
    3. மொருவர் வந்துவிட்டது விடாம[ல்] சோறு வேண்டுதல் மற்றேதேனுமொரு நலிவுகள் செய்குதல் செய்யாதாருண்டாகில் தாங்களே அவர்களைத் தலை
    4. யை அறுத்துவிடவும். அப்படி செய்திலர்களாதல் தங்கள் தலைகளோடே போகுமென்னும்படி றேயப்புத்த பண்ணி, இதுவே சாதன
    5. மாகக் [கொ]ண்டு ஆங்கு வந்து நலிந்தவர்களைத் தாங்களே ஆஞை பண்ணிக்கொள்ளவும். சீ காரியமாகத் 
    6. தாங்க _ _ த _ _ போதும் போன அமுதுபடிக் குடலாக ஸர்வ மாணியமாகக் குடுத்தோம் அனைத்தாயமும் வி 
    7. ட்டுக் கு _ _. கூசர் உள்ளிட்டார் பையூரிலே இருக்கவும் சொன்னோம். இப்படி_ _ தே இதுக்கு வில
    8. ங்கனம் பன்னினவன் கெங்கைக் கரையில் குராற் பசுவைக் கொன்றான் பாவத்தைக் கொள்வான்     

    கூசர் – இராக் காவல் கூக்குரல் இடுவோர்; நலிவு – குற்றம், தீமை, இழிவு; றேயப் புத்தம் – கடும் எச்சரிக்கை; விலங்கனம் – சிக்கல், இடக்கு; ஆஞை – ஆணை

    விளக்கம் : போசள வீரராமனாதனின் 41 ஆம் ஆட்சி ஆண்டு கி.பி. 1295 ஆம் ஆண்டு கல்வெட்டு. பெண்ணேசுவரம் மடம் ஈசுவரன் கோவிலிலும் அதன் தேவதான ஊர்களிலும் அதிகாரியாகவோ கணக்கராகவோ இராக்காவல் கூவுநராகவோ இருப்பவர் யாரகிலும் சரி ஊரில் எவரேனும் ஒருவர் வந்து தொடர்ந்து விடாமல் சோறு போடக் கேட்டாலோ அல்லது ஏதேனும் கேடு செய்தாலோ அப்படி கேடு செய்தவரை நீங்களே தலையை அறுத்துக் கொன்று விடுங்கள். அப்படி நீங்கள் செய்யாதவராய் இருந்தால் உமது தலையும் சேர்த்தே கொய்யப்படும் என்று கடுமையாக எச்சரிதோம். இந்த சட்ட ஆவணத்தையே கையேடாகக் கொண்டு அங்கு வந்த கேடர்களை ஆணையிட்டு கொல்க. கோவில் செயற்பாட்டிற்காக போனக அமுதுபடிக்கு மூலமாக இருக்க முழு மானியமாக எல்லா வரிகளையும் விட்டுக் கொடுத்தோம். இராக்காவல் கூச்சலிடுவோர் உட்பட அரச பணியாளர்கள் யாவரும் பையூரிலேயே இருக்க வேண்டும். அதன் எல்லை தாண்டி உள்ளே வர வேண்டாம். இப்படி செய்யாமல் இதற்கு இழிவு உண்டாக்குபவர் கங்கைக் கரையில் குறால் பசுவை கொன்றவன் அடையும் பாவத்தை அடைவார்.

    இது வீர இராமநாதன் அரச பணியாளருக்கு நேரடியாக வழங்கிய ஆணையாகத் தெரிகிறது. பையூரிலேயே தங்க வேண்டும் என்றால் ஊரில் தல யாத்திரை வருவோரை எப்படிக் கண்காணிக்க முடியும்? இவருள் எவரேனும் சோறு வேண்டினாலோ, திருடு, கொலை, கற்பழிப்பு செயலில் ஈடுபட்டாலோ எப்படிப் பிடிக்க முடியும்? இதனால் வேந்தன் இராமநாதனுக்கு அரச பணியாளர் நடத்தையில் ஐயம் இருப்பது போலல்லவா இந்த ஆணை உள்ளது. எனினும் இது ஊரார் வேண்டுதலால் இப்படி ஒரு ஆணை வெளியிடப்பட்டிருக்கலாம்.

    பார்வை நூல்: கிருஷ்ணகிரி மாவட்டக் கல்வெட்டுகள்  பக். 101 & 102 ஆசிரியர்: தமிழ்நாடு தொல்லியல் துறை வெளியீடு

    ஈரோடு மாவட்டம் ஈரோடு வட்டம் சாத்தம்பூர் வல்லாள ஈசுவரன் கோயில் அம்மன் சன்னதி நிலைக் கல்லில் பொறிக்கப்பட்ட 13 வரிக் கல்வெட்டு

    1. ஸ்வஸ்தி ஸ்ரீ நன்மங்கலஞ் சிறக்க ஸ்ரீ 
    2. குலோத்துங்க சோழ தேவர்க்கு யாண்டு 
    3. 9 வது பூந்துறை நாட்டோம். சாத்தனூர்க் 
    4. கெங்களில் அமைவு குடுத்த பரிசாவது 
    5. “எங்களஞ் சாத்தனூரோ டொத்த வூராவ
    6. தாகவும் எங்களொ பாதி சாரிகையும் 
    7. மற்றும் பெறுநவ பெறுவராகவும் 
    8. இவர்களை அழிபிழை அநியாயஞ் செய்தாரை 
    9. வெட்டுதல் குத்துதல் செய்தால் அவனுக்குத் 
    10. தண்டந் தலைவிலை யில்லையாக”. இப்படிக் கமைந் 
    11. திக் கல் வெட்டிக் கொடுத்தோம் நாட்டோஞ்.
    12. சாத்தனூர்க்குளே யழிவு செய்தவன் தன் 
    13. வழியே ழெச்சம்  அறுவான்.        

    அமைவு – இருப்பிடம்; பரிசாவது – சலுகை, உரிமை; பாதிசாரிகை – பாதி வரிசை; அழிபிழை – குலைத்து கேடு செய்தல்; எச்சம் – தலைமுறை, பிள்ளை.

    விளக்கம் : ஸ்வஸ்த்தி ஸ்ரீ என்பதன் தமிழ் இணையான நன்மங்கலம் சிறக்க என்பதையும் இங்கே குறித்து கல்வெட்டு தொடங்குகிறது. ஏன் இப்படி இரட்டை குறிப்பு தமிழருக்கு? இது அன்று தொட்டு இன்று வரை தொடரும் பிழையாக தமிழரிடம் உள்ளது. முதற் குலோத்துங்க சோழனின் 9 ஆம் ஆட்சி ஆண்டில் (கி.பி. 1079) பூந்துறை நாட்டவரான எங்களுக்கு சாத்தனூரில் இருக்க அனுமதி கொடுத்ததால் அதற்கு பகரமாக நாங்கள் கொடுத்த சலுகை, உரிமை யாதெனில், எங்களுக்கு சாத்தனூர் எமது ஊரோடு ஒத்த ஊர் போல  ஆவதால் எங்களோடு பாதிவரிசையும் அதோடு வேறு என்ன நாங்கள் பெற்றாலும் அதை சாத்தனூராரும்  பெறுவதாகவும், இவருக்குள்ளேயே இவர்களுக்கு குலைவு கேடு, அநியாயம் செய்தாரை வெட்டியும் குத்தியும் கொன்றால் அவருக்கு தலை கொய்யும் தண்டனையை நாம் தரமாட்டோம். இப்படியாக அமைதி உடன்பாட்டுக் கல் வெட்டுவித்தோம் பூந்துறை நாட்டோம். சாத்தனூருள் அழிவை ஏற்படுத்தியவன் தனக்கு பின் ஏழு தலைமுறை இல்லாது ஒழிவானாக.

    பூந்துறை நாட்டவர் சாத்தனூராரிடம் புகலிடம் கேட்ட போது தம் ஊர் மக்கள் யாரையும் பூந்துறையார் கொல்லக் கூடாது என்று முன் நிபந்தனை வைத்திருக்கலாம் அதனால் இந்த அமைதி உடன்பாட்டை சாத்தனூராருக்கு பூந்துறைக் குடியேறிகள் தந்துள்ளனர் எனத் தெரிகிறது.

    பார்வை நூல்: தேனோலை 1976 பக். 15 ஆசிரியர்: கொடுமுடி சண்முகம்

    காஞ்சிபுரம் மாவட்டம் வாலாசாபாத்து வட்டம் தென்னேரி சிவன்கோயில் கருவறை தென் சுவர் 7 வரிக் கல்வெட்டு

    1. ஸ்வஸ்தி ஸ்ரீ சாலைகலமறுத்த கோவிராஜராஜ கேஸரி பந்மற்க்கி  யாண்டு 11 ஆவது நாள் 220
    2. ஊற்றுக் காட்டுக் கோட்டத்து ஸ்ரீ உத்தம சோழ சதுர் வேதி மங்கலத்து பெருங்குறி ஸபையோம் 
    3. செய்த விவஸ்தையாவது நம்மூரில் ப்ரமஸ்வங் கொண்டாரும் மேல்படு 
    4. குற்றமுடையாரும் நம்மூர் வாரியஞ் செய்யவும் ஸபா மாற்றஞ் சொல்லவும் 
    5. பெறாதாராகவும் இக்குற்றங்களுடையார் வாரியஞ் செய்தாரும் ஸபா மாற்றஞ் சொன்னாரும் 
    6. கணக்கர் இருபாடு காட்டினாரும் திருவாணை மறுத்தார்படும் தண்டப்படுவாராக இப்பரிசு வ்யவஸ்தை 
    7. செய்தோம் பெருங்குறி ஸபையோம். பணியால் திருவிதண்ணகர் ஆசாரியன் என் எழுத்து.       

    பெருங்குறி – பிராமண ஊர் சபை கூட்ட உறுபினர்கள்; விவஸ்தை – ஏற்பாடு; ஸ்வங் – கேலி, ஏளனம், போலி; இருபாடு – இருவேறு வகை; பரிசு – வகை, விவரம் திருவாணை – அரசாணை

    விளக்கம் : இராசராசனின் 11 ஆவது ஆட்சி ஆண்டில் கி.பி 996, 220 ஆம் நாளில் ஊற்றுக்காட்டின் உத்தம சோழ சதுர்வேதி மங்கலத்தின் பிராமண ஊர் சபைக் கூட்ட உறுப்பினர் செய்த ஏற்பாடு என்னவெனில் “நம்மூரில் பிராமண கேலி புரிவாரும் அதிகுற்றம் புரிந்தவரும் இனி நம்மூர் வாரிய உறுப்பினராக இருந்து செயல் மேற்கொள்ள முடியாது, சபைக்கு மாற்று கருத்து (ஆலோசனை) சொல்லவும் முடியாது. இக் குற்றங்களுடன் வாரியப் பணி செய்தவரும் சபைக்கு மாற்று கருத்து சொன்னவரும் கணக்கு புத்தகத்தில் இருவேறாக பொய்க் கணக்கு எழுதியவர்களும் இனி அரசாணையை மீறியவர் படும் தண்டனையை அனுபவிக்க நேரிடும் வகையில் ஏற்பாடு செய்தோம் பிராமண ஊர் சபை உறுப்பினர்களோம். பணிக் கடமையால் இதை கல்லில் எழுதினேன் திருவிதண்  நகர் ஆசாரி.

    இதன் மூலம் பிராமணருள் குற்றம் புரிவோர் உண்டு என்று தெரிகிறது. அதை தக்க முறையில் தடுக்க ஊர் சபையோர் மேற்கொண்ட நடவடிக்கை வரவேற்க தக்கது. குற்றவாளி பிராமணரே ஆனாலும் பிராமணரே அந்த குற்றத்தை தட்டிக் கேட்டு கல்வெட்டி தடை  செய்துள்ளனர்.

    பார்வை நூல்: ஆவணம் 25, 2014 பக். 31

    தஞ்சாவூர் மாவட்டம் மாயவரம் வட்டம் கீழையூர் வேதபுரீஸ்வரர் கோயில் கருவறை தெற்கு சுவர் 3 வரிக் கல்வெட்டு

    1. ஸ்வஸ்தி ஸ்ரீ திரிபுவனச் சக்கரவத்திகள் மதுரையும் யீழமும் பாண்டியனை முடித்தலையும் கொண்டருளின ஸ்ரீ குலோத்துங்க சோழ தேவற்கு யாண்டு 20 தாவது வரை திருநாமத்துக் காணியாகக் கொண்ட கொல்லை நிலங்களுக்கும் விளை நிலங்களுக்கும்  தானம் பெற்ற நிலங்களுக்கும்  ப்ரமாணப்படிக்கு கல்வெட்டு [1] இத்தேவற்கு ஏழாவது இஷப நாயற்று  பூர்வபக்ஷத்து சப்த திதியும் செவ்வாய்க் கிழமையும் பெற்ற ஆயில்லிய நாள் வீர ராஜேசந்திர வளநாட்டுத் திருவழந்தூர் நாட்டு ப்ரஹ்ம தேசம் திருவழந்தூர் சபைக்கு சமைஞ்ச ஊர் வாரியம் மண்டையந் பொந்மலை ஆயனும் யவறுன் சற்வதேவன் திருவரங்கமுடையானும் இவ்விருவோம் சபை விலைப் பிரமாணம் ப்ரஸாதஞ் செய்தருளின திருமுகப்படி இவ்வூர் ஏழாவது தரமிடுகிற இடத்து, இவ்வூரில் திம்பாக இருப்பன திரண்டு எற்றச் சுருக்கம் பண்ணி கடமையும் இறாதே இராக் களவிலே வீடுகள் சுட்டும் மஹாயேச்வர வதிஷ்ணமாகச் சில வார்த்தைகளும் சொல்லி இவூர்த் திருக்கதவுடை ஆழ்வார் திருநாள் எழுந்தருளுகிற இடத்து முன்பிலாண்டுகள் செய்து வாராதிருக்கச்சிலே பச்சைக் குருதையாகச்  செய்து திருமங்கை ஆழ்வாரை ஏற்றியும் திருவாய்மொழி  பாடுவாரிலே ஒருவன் மேழியாகச் செய்து கழுத்திலே இட்டு வொள்ளானரைத் திரட்டி மணக்கேடுகளாய் யிருப்பன செய்தார்கள்ளென்றும் மாணக்கயன் நமக்குச் சொன்னவாறே இவ்வூர் கோயில் னுதாரங்களிலும் இப்படி செய்தாரை இருபதிநாயிரம் காசு தென்டமாகக் கொள்ளவும்.  இக்காசு ஒடுக்காதார் ருண்டாகில் இவர்கள் காணியை அசல்பிளந்து சபை விலையாக விற்றுக் காசு ஒடுக்கவும் இப்படி செய்யுமிடத்து நம் செய்தார் உண்டாகில் ப்ராஹ்மணரைச் சுடும்படி _ _ 
    2. கடவதாகவும் இது  சுட்டித் தண்டாளருக்கு பிழையாக கடவுதல்லாதுதாகவும் சொன்னோ. மிவ்வூர்ப் ப்ராஹ்மணரிலும் வெள்ளாளரிலும் கோயில் அனுதாரங்களிலும் மனைக் கேடுகளாகச் செய்தாரைத் தெண்டமாகக் கொள்ளச் சொன்னாக் காசு இருபதினாயிரம் விசையபாலன் நிச்சயித்தபடியே தண்டிவரக் காட்டி வாணாதராயன் அடைப்பான் தண்டலிலே ஒடுக்கப் பண்ணுவதென்று ப்ரஸாதம் செய்தருளின திருமுகம் வந்தமையில் இவ்வூர் கவுணியன் ஸ்ரீ கபாடன் ஸ்ரீ கிருஷ்ணனுடன் பெரியாண்டானும் கலக்கம் பண்ணியும் இராக் களவில் ப்ராஹ்மணந் அரிநாராயணன் அகம் வெந்த யிதுக்குப் பாடிகாப்பரும் சபையாரும் அகத்த பேரில் உள்ளூர் பட்ட பேராகையாலும் இவர்களை உடையார்  விசையபாலரும் சபையாரும் தெண்டமாகக் கொள்ள நிச்சையித்த கவுணியன் ஸ்ரீ கபாடன் ஸ்ரீ கிருஷ்ணனைக் கொள்ள நிச்சையித்த காசு அறுநூறும் ஸ்ரீ கபாடன் பெரியாண்டானைக்  கொள்ள நிச்சையித்த காசு நானூறும் ஆக காசு ஆயிரத்துக்கு வாரம் பின்வாசி, தரவு கூலி, திருமுகச் சம்படம், சிதார்ப்படி, எற்றிக்காசு ஆயிரத்து அறுபதும் இவர்கள் முன்நிந்று  ஒடுக்காமையாலும் இன் நிலத்துக்கு அசலானவர்களை தாங்களும் குறைவராயிருக்கையாலும் மாற்றுக் கொள்வாரிலாமையில் ப்ரஸாதஞ் செய்தருளின திருமுகப்படி காசு ஒடுக்க வேண்டுவதாய் உடையார் திருமடமுடையார் கோயில் ஆதி சண்டேசுரப் பொருளாக இக்கோயில் மாயேசுரக் கண்காணி செய்வார்களுக்கும் சிரிகாரியம் செய்வார்களுக்கும் தேவகன்மி கோயிற் கணக்கனுக்கும் தேவர் குடிமை நாமத்தால் _ _ _ யால் வந்த கடமையும் இறுத்து குடிமையுஞ் செய்யக் கடவதாக விற்று திரிபுவன தேவிவதிக்கு மேற்கு இராஜேந்திர சோழ வாக்காலுக்கு தெற்கு மூன்றாங் கண்ணுற்று மூன்றாஞ் சதிரத்தும் நாலாஞ் சதிரத்தும் ஸபை விலையாக விற்கிற புந்சைத் தோட்டத்துக்கு கீழ்ப்பாற்கெல்லை யழுந்தூர் வாய்க்காலுக்கு மேற்கும் இவ்வாற் _ _ _ க் கதவன் அழகிய மணவாள குளமும் கரைக்குங் _ _ _ 
    3. னும் ஸ்ரீ கபாடன் பெரியாண்டானும் உள்ளிட்டார் விளை நிலத்துக்கு தெற்குமாக இசைந்த பெருநான்கெல்லை உள்நடுவுபட்ட புன்செய்குழி  950 த்துச் சின்நம் இக்குழி தொளாயிரத்து ஐய்ம்பத்துச் சின்னமும் ஸபை விலையாக விலை மதித்த காசு 1060 இக்காசு ஆயிரத்து அறுபது ஆவணக்களிலேயே காட்டெற்றிக் கைச்செலவறக் கொண்டு விற்று ஸபை விலை ப்ரமாணம் பண்ணிக் குடுத்தோம்             

    திருநாமத்துக்காணி – இறைவன் பெயரில் கொடையாக தந்த நிலம்;  ப்ரமாணப்படி – ஆவணப்படி; பிரசாதம் –  அரசன் அறிவுறுத்தல்; திருமுகப்படி – அரசானை ஓலைப்படி; திம்பாக – திமிராக; எற்ற சுருக்கம் – உதைத்து சிறுமைப்படுத்தி; களவு – கலகம், புறம்பான செயல், unlawful act; ஒள்ளான் – மறைந்து இருப்பவன்; மாணக்கயன் – மாணவர் தலைவன்; நுதாரம் – நீராடும் துறை; அசல்பிளந்து – விற்றுமாற்றி, transfer; நம் செய் – பூசை செய்; சுடு – துன்புறுத்து, அழி; தண்டாளர் – தண்டிப்போர்; அனுதாரம் – பொறுப்பு; அடைப்பான் தண்டல் – கட்டணச் சாவடி, கருவூலம், pay counter; தரம் – மேல்மதிப்பு; சிதார்படி – சீலைக்காசு; தரவு கூலி – அளப்போன் கூலி; ஏற்றிக்காசு – அடித்தல் காசு; குடிமை – உழுகுடி வரி; வதி – வடிகால்; சின்னம் – துண்டு நிலம், piece of land;

    விளக்கம் : மூன்றாம் குலோத்துங்கனின் 20 ஆம் ஆட்சி ஆண்டில் 1198 இல் 20 ஆம் ஆண்டு வரை இறைவன் பெயரில் இருந்த கொல்லை நிலங்கள், விளை நிலங்கள், தான நிலங்கள் ஆவணப்படி இருந்த நிலங்கள் குலோத்துங்கனுக்கு 20 ஆம் ஆண்டு ஏழாம் நாள் இடப ராசி பூர்வ பட்சத்து 7 ஆம் நாள் செவ்வாய்க் கிழமை ஆயில்ய நட்சத்திரம் கூடிய நாளில் வீர ராசேந்திர வளநாட்டுத் திருவழந்தூர் நாட்டின் பிரம்மதேசமான திருவழந்தூர் சபைக்கு அமைந்த ஊர் வாரியத்தார் மண்டையன் பொன்மலை ஆயன், யவறுன் சர்வதேவன் திருவரங்கமுடையான் ஆகிய நாம் இருவரும் ஊர் சபை விலை ஆவணமாக அறிவுறுத்திய ஆணைப்படி இவ்வூரில் ஏழாவது தரத்தில் (நிலப் பிரிவில்) இருக்கின்ற இடத்தில் இவ்வூரில் திமிராக இருக்கின்ற அணி சேர்ந்து கொண்டு உதைத்து சிறுமைப்படுத்தி வரியும் செலுத்தாமல், இரவுக் கலவரத்தில் வீடுகளை எரித்து, மகேஸ்வரரை நிந்திக்கும் வகையில் சில சொற்களை பேசி, இவ்வூரின் திருக்கதவுடை ஆழ்வார் எழுத்தருளுகிற இடத்தில் முன்னை ஆண்டுகள் செய்து வாராதிருக்கையில் இப்போது பச்சைக் குதிரையாக செய்து திருமங்கை ஆழ்வாரை அதில் ஏற்றியும்; திருவாய்மொழி பாடுவோரில் ஒருவன் கலப்பை செய்து தோளில் வைத்து வரும் வேளையில் மறைந்து இருப்பவரை ஒன்று திரட்டி மனக்கேடுகள் செய்தனர் என்று மாணக்கர் தலைவன் நம்மிடம் சொன்னபடியே இவ்வூரின் கோயில் நீராடு துறைகளிலும் இவ்வாறே செய்தவரிடம் இருபதினாயிரம் காசு தண்டத் தொகையாகக் கொள்க. இந்த தண்டத்  தொகையை கட்டாதவர் இருப்பின் இவர்களது விளை நிலத்தை அண்டையாரிடம் விற்று சபை தீர்மானித்த விலையை கட்டுக. இவ்வாறு செய்கின்ற போது அவருள் பூசை செய்யும் பிராமணர் இருந்தால் அந்த பிராமணரை துன்புறுத்தம் மட்டும் செய்யட்டும் அவர் நிலத்தை விற்க வேண்டாம். இதை கருத்தாக குறிப்பிட்டு தண்டாளர் (punisher) இதில் பிழை ஏதும் செய்யாதிருக்க சொன்னோம். இவ்வூர் பிராமணரில் வெள்ளாளரில் கோயில் பொறுப்புள்ளோரின் வீடுகளுக்கு தீ வைத்து கேடு உண்டாக்கினவரையும் தண்டம் கட்டக் சொன்ன காசு இருபதினாயிரத்தை அரசர் விசைய பாலன் தீர்மானித்தபடியே தண்டத் தொகையை திரட்டி வாணாதராயனின் கட்டணக் கருவூலத்தில் கட்டிவிடுவதென்று ஊர்சபை அறிவுறுத்திய ஆணை வந்தபோது இவ்வூர் கவுண்டின்ய கோத்திரத்தான்  ஸ்ரீ கபாடன் ஸ்ரீ கிருஷ்ணனுடன் வெள்ளாளன் பெரியாண்டானும் சேர்ந்து கொண்டு கலவரத்தில் ஈடுபட்டு இரவுக் கலவரத்தில் பிராமணர் அரிநாராயணனின் வீட்டை  தீயில் கொளுத்திய வினைக்கு பாடிகாப்பாளரும் சபையோரும் பொறுப்பு கூற வேண்டிய நிலையில் உள்ளூர் தொடர்பானது என்பதாலும் இவர்களிடம் அரசர் விசையபாலரும் சபையோரும் தண்டத் தொகையாக பெறத் தீர்மானித்த  காசு கவுணியன் ஸ்ரீ கபாடன் ஸ்ரீ கிருஷ்ணனிடம் பெறத் தீர்மானித்த காசு அறுநூறும், ஸ்ரீ கபாடன் பெரியாண்டானிடம் பெற நினைத்த காசு நானூறும் ஆக காசு ஆயிரத்தையும் வாரம் பின்வாசி, அளப்போன் கூலி, திருமுகச் சம்படம் (ஆணை ஓலைக் கட்டணம்), சீலைக் காசு, அடித்தல் காசு என சேர்த்து ஆயிரத்து அறுபதும் இவர்கள் முன்வந்து செலுத்தாமையால் இவர் நிலங்களுக்கு பக்கத்தில் இருப்போர் குறைவாய் இருப்பதாலும் இந்நிலங்களை தம் பெயருக்கு மாற்று கொள்ளவர் இல்லாததாலும் அரசர் அறிவுறுத்திய ஆணையின்படி 20,000 காசு கட்ட வேண்டியுள்ளதால் இறைவன் திருமடமுடையர் கோவில் ஆதிசண்டேசுவரர்க்கு பொருளாக வரும் வரி, இக்கோயில் மாயேசுவர கண்காணி செய்பவர்களுக்கும், கோயில் பணி செய்பவர்களுக்கும், தெய்வப்பணி செய்பவர்களுக்கும், கோயில் கணக்கனுக்கும் கொடுக்கின்ற இறைவனுக்கு உழுகுடி வரிப் பெயரால் வரும் காசு, _ _ _  வந்த  கடமை வரியையும் எடுத்துக் கருவூலத்தில் செலுத்தினோம். குடிகள் மீது வரி திரட்டிக் கொள்ளலாம் என்று விற்ற நிலம் திரிபுவன தேவி வடிகாலுக்கு மேற்கிலும் இராசேந்திர சோழ வாய்க்காலுக்கு தெற்கிலும் மூன்றாங்கண் ஊற்று மூன்றாம் சதிரத்தும் நாலாம் சதிரத்தும் ஊர் சபை விலையாக புஞ்சை தோட்டத்திற்கு கீழ்ப்பகுதி எல்லை அழுந்தூர் வாய்க்காலுக்கு மேற்கிலும் தென் பக்க எல்லை இப்படியாக _ _ _ க்கதவன் அழகிய மணவாள குளமும் கரைக்குங் _ _ _ னும் ஸ்ரீ கபாடன், பெரியாண்டானும் உள்ளிட்டார் விளை நிலத்திற்கு தெற்கில் அமைந்த பெரிய நான்கு எல்லைகுள் நடுவுபட்ட புஞ்செய் குழி 950 த்துச் சின்னம் (குழி தொள்ளாயிரத்து ஐம்பத்து சின்னத்தையும்) ஊர் சபை விலையாக விலை நிர்ணயித்த 1060 காசை அடைக்க ஆவணங்களில் காட்டி எற்றி, எங்களுக்கு கைச் செலவு ஏதும் ஏற்படாமல் விற்று சபையின் தண்ட விலைக்கு ஆவணம் செய்தளித்தோம் என்கின்றனர் ஊர் வாரியத்தார் இருவரும்.

    இக்கல்வெட்டு மூலம் குற்றவாளிகள் தண்டம் கட்டாவிடில் அவரது நிலங்கள் பறிமுதல் செய்யப்பட்டு ஏலத்தில் விடப்படும் என்று தெரிகிறது. நிலம் ஏலம் போகவில்லை என்றாலும் தண்டத் தொகையை கட்டியாக வேண்டிய பொறுப்பால் வருங்காலத்தில் குடிகள் மீது வரியை திரட்டிக் கொள்ளலாம் என்று தீர்மானித்து தற்காலிகமாக கோவிலுக்கு வந்த வருவாயை கொண்டு தண்டத் தொகையை கட்டியுள்ளனர். இது ஏற்புடையது அல்ல. நிலத்தை விற்க முடியாத தமது இயலாமையை அரசருக்கு தெரிவித்து அங்கிருந்து வரும் அறிவுரைப்படி நடந்திருக்க வேண்டும். வீணே ஊழியர் சம்பளத்தை எடுத்துக் கட்டி மக்கள் மேல் இன்னும் வரி விதிப்பது மக்களுக்குத் தான் வரிச் சுமையை அதிகரிக்கும். இப்படி ஊர் சபை நடந்தால் விரைந்து திவாலாகிவிடும். எனினும் கல்வெட்டில் சில இடங்களில் சிதைந்து உள்ளதால் உறுதியான கருத்தை கூற முடியவில்லை.

    பார்வை நூல்: ஆவணம் 21, 2010 பக். 35

    அரியலூர் மாவட்டம் திருமானூர் வட்டம் காண்டராதித்தத்தில் உள்ள சொக்கநாதர் கோயில் கருவறை தென் சுவரில் உள்ள 23 வரிக் கல்வெட்டு.

    1. ஸ்வஸ்தி ஸ்ரீ பூமேவுவளர் திருப்பொன் மாது புணர நாமேவு கலைமகள் பெரிதும் சிறப்ப விசைய மாமகள் வெல்புயத் திருப்ப இசையுஞ் செ
    2. ல்வி எண்டிசை வளர நிருபர் வந்திறைஞ்ச நீணில மடந்தையைத் திருமணம் புணர்ந்து திருவளர் திருமாமணி முடி கவித்தென மணிமுடிசூடி மல்லை ஞாலத்துப் பல்லுயிர்க் கெல்லாம் எல்லையில் இன்பம் இயல்பினில் எய்த வெண்குடை நிழற்ற செங்கோ
    3. லோச்சி  வாழி பல்லூழி வாழி நடப்பச் செம்பொன் வீர ஸிங்ஹாதனத்துப் புவந முழுதுடையாளொ
    4. டும் வீற்றிருந்தருளிய  கோவி ராஜகேசரிப் பந்மராந திரிபுவந சக்கரவத்திகள் ஸ்ரீ குலோத்துங்க சோழ தேவற்கு  யாண்
    5. டு 11 ஆவது வடகரைப் புவநமுழுதுடை வளநாட்டு பொய்கை நாட்டு ப்ரஹ்மதேயம் ஸ்ரீ கண்டராதித்தச் சது
    6. வேதி மங்கலத்து உடையார்  சிவலோகமுடையார் இந்நாடு மணற்குடி நாட்டு கிரந்தங்குடி இருக்கும் வெள்
    7. ளாளந் மாங்குடையாந் நெய்யாடியேந் தியாகஸமித்ரத் தெரிந்த வில்லி(களில்) சொற் மணவாளந் மணவாட்டியைச் சில எற்றாந் சூழ்ச்சிப் புகுந்த
    8.  இடத்து இவள் மேல் லேவ எந் கைப்பட்டு இவளுக்கு மரணம் உண்டாச்சு. உண்டானயிடத்து 
    9. உடையார் காங்கையராயர் பட்டகளை வைச்சுக் கொடி (கூடி) இருந்து வினவி இவன் வெள்ளாளந் ஆதலா(ல்) இவந்னுக்கு வதை இல்லை என்
    10. று பட்டன் விதிக்கவும் இந்நியாயத்தில் உள்ளாக ஸமாதாநத்தால்லு
    11. ம் இத்தேவர் கோயிலில் வைக்க கடவதாந சந்தி விளக்கு 1. இ வி
    12. ளக்கு ஒந்றுக்கும் விட்ட பசு நாலும் இக்கோயிலில் காணி உடை
    13. ய சிவபிராமணந் காச்சபந் திருச்சிற்றம்பல உடையாந் பசி தா
    14. ங்கி கைக்கொண்ட பசு இரண்டும் இக்குடி தழுவக் குழைந்தாந் திருச்சிற்ற
    15. ம்பலம் உடையான் கைக்கொண்ட பசு விரண்டும் ஆக பசு நாலும் கை 
    16. கொண்டு இச்சந்தி விளக்கு னாலுமாக. இவ்வூர் ஸ்ரீ  இந்திராவதாரச் சேரி மணலூர் பாரதாயந்
    17. ஆளவந்தாந் _ _ _ கண்டாந் ப்ராஹ்மணி இச்சேரி புள்ளமங்கலத்து சாவாந்தி 
    18. வெண்காடு தேவந் சிவலோகத்து நாயக நம்பி மகள் அருந்தவஞ் செய்தாள் பக்கலும் இக்
    19. காசு கொண்டு உப(ய)மாக சம்மதித்து எரிக்க கடவோமாக ஸந்தி விளக்கு ஒந்றும் இத்
    20. திருவிளக்கு இரண்டும் யாவர் ஜீவம் சந்திராதித்தவர் எரிக்க கடவோமாக சம்மதித்து இக்கல்லி
    21.  ல் இத்தேவர் கோயிலில் வெட்டி கல்வெட்டிவித்து கொண்டோம் இ(கோயில்க் குச்சியும் அலகும்) கொண்டு படி கட
    22. புக்காக எரிக்க கடவாராக இ வுபயம் கொண்டோம். இக்காசவந் திருச்சிற்றம்பல முடையாந் பசிதாங்கியேந். இவை எழுதிய
    23. படி இவை தழுவக் குழைந்த இசாந திருச்சிற்றம்பல முடையாநேந் இது எந் எழுத்து. இப்படிக்கு இவை பந்மாகேஸ்வர ரக்ஷை. 

    எற்றாந் சூழ்ச்சி – அடித்து துணி துவைக்கும் வண்ணார் சூழ்ந்த இடம்; ஏவ – மறைந்து பாய; உடையார் – சிற்றரசர்; பட்டர்கள் – சாஸ்திர பண்டிதர்; வதை – கசையடி; சமாதானம் – அமைதி, சாந்தி    

    விளக்கம் : இரண்டாம் குலோத்துங்க சோழனின் மெய்க்கீர்த்தியோடு இக்கல்வெட்டு தொடங்குகிறது. இதில் 3 மூவர் ஏற்றிய 3 சந்தி விளக்கு பற்றிய செய்தி உள்ளது. முதல் சந்தி விளக்கு “குலோத்துங்கனின் 11 ஆம் ஆட்சி ஆண்டில் கி.பி 1144 இல் வடகரைப் புவனமுழுதுடை வளநாட்டு பொய்கை நாட்டு பிரம்மதேசம் ஸ்ரீ  கண்டராதித்த சதுர்வேதி மங்கல இறைவன் சிவலோகமுடையார் கோயில் கொண்ட இந்நாட்டு மணற்குடி நாட்டு கிரந்தங்குடியில் வாழும் வெள்ளாளன் மாங்குடையான் நெய்யாடியான நான் தியாகசமுத்திரத்து வாழும் தெரிந்தெடுத்த வில்லாளியான சொல் மணவாளன் மனைவியை சில அடித்து துணி துவைக்கும் வண்ணார் சூழ்ந்த இடத்திற்கு போன போது கொடிகளில் உலர்த்திய துணிகளின்  மறைவில் இருந்து கொண்டு இவளைக் கட்டி அணைக்க  இவள் மேல் பாயும் போது என் கை பட்டு இவள் அந்த இடத்திலேயே இறந்து போனாள். இறப்பு உண்டான இடத்தின் ஆட்சியாளர் காங்கையராயர் சாஸ்திர பண்டிதர்களை கலந்து பேசி என்ன தண்டனை தரலாம் என்று வினாவிய போது இவன் வெள்ளாளன் (பிள்ளைமார்) என்பதால் இவனுக்கு கசையடி தண்டனை ஏதும் இல்லை என்று சாஸ்திர பண்டிதன் கூற இந்த வழக்கின் தீர்ப்பாக அமைதி ஏற்படுத்தும் வண்ணம் இந்த இறைவன் கோயிலில் ஒரு சந்தி விளக்கு ஏற்றினால் போதும் இந்த விளக்கு அன்றாடம் எரிவதற்குத் தேவையான நெய்க்கு நாலு பசுவை தானம் அளிக்க வேண்டும் என்றனர். அதில் இரண்டு பசுவை இந்த கோவிலில் பணிபுரியும் காணி உரிமை உள்ள சிவபிராமணன் காசியபன் திருச்சிற்றம்பல உடையான் பசிதாங்கியிடமும் இன்னொரு சிவபிராமணன் தழுவக் குழைந்தான் திருச்சிற்றம்பலம் உடையானிடம் மற்ற இரண்டு பசுவும் தரப்பட்டன”. மேலும், இந்த ஊர் இந்திராவதாரச் சேரி மணலூர் பாரதாயன் (பாரத்துவாஜ கோத்திரத்தான்) ஆளவந்தான் _ _  கண்டான் மனைவியிடமும் இந்த சேரியின் புள்ளமங்கலத்து சாவாந்தி (சாவு + அந்தி = சாவந்தி > சவுண்டி) வெண்காடு தேவன் சிவலோகத்து நாயக நம்பியின் மகள் அருந்தவஞ் செய்தாள் சார்பாகவும் காசு பெற்று அதற்கு உபயமாக விளக்கு ஏற்றக் கடவோம் என்று ஒரு சந்தி விளக்கும் ஆக இத் திருவிளக்கு இரண்டும் சந்திராதித்தவர் உள்ள வரை செல்வதாக ஒப்புக் கொண்டு இந்த கல்லில் இந்த இறைவர் கோயிலில் எழுதி கல்வெட்டினோம் இக்கோயிலில் குச்சிச்சியும் அலகும் கொண்டு கருவறை புகும் வண்ணம் படிக் கடப்பில் எரிப்போம் என்று இந்த உபயம் பெற்றுக் கொண்டோம் என்று காசபன் திருச்சிற்றம்பல முடையான் பசிதங்கி சொல்கிறான். இவற்றில் எழுதிய படியே தழுவக் குழைந்தான் ஈசான திருச்சிற்றம்பல முடையான் நடப்பதாக உறுதி கூறுகிறான். இது என் எழுத்து. இப்படிக்கு இவை பன்மாகேசுவரர் பாதுகாப்பதாக.

    பண்டு தனியே செல்லும் பெண்களுக்கு பொது வெளியில் பாதுகாப்பு குறைவு என்பதை இக்கல்வெட்டால் அறிய முடிகிறது. தண்டனை என்று வந்தால் சாதிக்கு ஒரு நீதி என்ற முறையே பண்டு நிலவியது என்று தெரிகிறது. கோவிலில் விளக்கு ஏற்றுவதால் குற்றவாளி திருந்தப் போவதில்லை. அதற்கு மாறாக நான்கு அறநூல்களைப் படித்து பாட்டாக ஒப்பிக்க வேண்டும், அதை விளக்க வேண்டும் என்ற தண்டனை குற்றவாளியின் மனதில் மாற்றத்தை ஏற்படுத்தும். இந்த சிந்தனை அந்நாளில் யாருக்கும் தோன்றவில்லை போலும்.

    பார்வை நூல்: அரியலூர் மாவட்டக் கல்வெட்டுக்கள், செப்பேடுகள் தொகுதி I,பக். 114-115 இல. தியாகராஜன்

    பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் வாலிகண்டபுரம் திருவாலீசுவரர் கோயில் 4 வரிக் கல்வெட்டு

    1. கோவி ராசகேசரி பன்மற்கி யாண்டு 8 வது வன்னாட்டு வாலிகண்டபுரத்து திருவாலீஸ்வரத்து மாதேவற்க்கு வன்னாட்டுத் திசையாயிரத்தைஞ்ஞூ ற்றுவரோம் கற்கார்டூ
    2. ர் இருக்கும் வளஞ்சியன் ஐயாற்றிகளைக் கிலாச்ச வனமாம்பாடியுடைய வடுகன் சடையனைப் படக் குத்தி பட்ட பலமண்டல வீர வளஞ்சியரைக் சாத்
    3. திய் வைத்த நொந்தா விளக்கு இரண்டு. இவ்விளக்கு இரண்டினால் _ _ _ இப்பொன் பதின்ஐங் கழஞ்சினால் பலிசை நிசதம் நெயெண்ணை  அட்டக் கடவது உரி நாராயத்தா
    4. ல். இவ்விளக்கிரண்டினால் பொன்  மணிக்கிராமத்தார் வசமும் சேனையார் வசமும் சந்திராதித்தவல். இது பந்மாஹேஸ்வர ரக்ஷை. 

    கிலாச்ச – கலவரம், மோதல், clash என்ற ஆங்கில சொல்லுக்கு ஊற்று இச்சொல்; பட – விழ, சாக; பட்ட – வீரச்சாவடைந்த; பலிசை – வட்டி; நிசதம் – ஏற்பாடு; அட்டு – ஊற்று; நாராயம் – அளவுப் படி,     

    விளக்கம் : இது 10 ஆம் நூற்றாண்டு கல்வெட்டு. வேந்தன் யார் என்று தெளிவாக அறிய முடியவில்லை. ஆனால் அவனது 8 ஆவது ஆட்சி ஆண்டில் வன்னாட்டு வாலிகண்டபுரத்து வாலீசுவரர் கோயில் இறைவருக்கு வன்னாட்டின் திசையாயிரத்து ஐந்நூற்றுவ வணிகக் குழுவினர் கற்காட்டூரில் வாழும் வளஞ்சியன் ஐயாற்றிகள் தன்னை வலுச் சண்டைக்கு இழுத்த வனமாம்பாடியைச் சேர்ந்த வடுகன் சடையனை செத்து விழுமாறு குத்தினான். அதன் பொருட்டும் இன்னும் பல மண்டலங்களில் வீரசாவடைந்த வளைஞ்சியரை நினைவில் நினைந்தும் இரண்டு நுந்தா விளக்கு வைக்க முடிவு செய்தனர். இந்த இரண்டு விளக்கிற்கு தேவைப்படும் நெய்க்கு உரி அளவுப்படியால் நெய் ஊற்ற பதினைங்கழஞ்சு பொன் கொடுத்து அதை வட்டிக்கு விட்டு அதில் வரும் வருவாயில் இருந்து நெய் ஊற்றம் ஏற்பாட்டை செய்தனர். இதற்கு பொன் மணிக்கிராம வணிகரும் சேனை வணிகரும் பொறுப்பாக இருந்து சந்திர சூரியர் உள்ள காலம் வரை தடையின்றி இது செல்வதைக் கவனிக்க வேண்டும். இதை கோயில் பன்மாகேசுவரர் காக்க வேண்டும் என்று கல்வெட்டியுள்ளனர்.

    வணிகர் குழு இங்கு தன் செல்வாக்கை செலுத்தி ஐயாற்றிகள் தண்டனை ஏதும் பெறாமல் நுந்தா விளக்கு ஏற்ற ஏற்பாடு செய்துவிட்டது என்று தான் கூற வேண்டும். ஐயாற்றி என்பது இயற்பெயர் அல்ல. அது தலைமை ஏற்று வழி நடத்துவோனைக் குறிக்கிறது.

    பார்வை நூல்: பெரம்பலூர் மாவட்டக் கல்வெட்டுக்கள், செப்பேடுகள், பக். 213 ஆசிரியர்: இல. தியாகராஜன்

    கடலூர் மாவட்டம் கடலூர் வட்டம் திருப்பாதிரிப்புலியூர் பாடலீசுவரர் கோயில் முதல் திருச்சுற்றில் உள்ள முற்றத்தின் அடித் தளத்தில் உள்ள 7 வரிக் கல்வெட்டு

    1. உடையார் திருபாதிரிப்புலியூருடைய நாயனார் கோயில் தேவகன்மி, கோயில் கணக்கர்க்கு சிறுமுறி திருப்பாதிரிப் புலியூர் நத்தமும் விளை நிலமும் புன்செய் நிலமும் இவ்வூர் பிடாகைகளில் திருநாமத்துக் காணியாக அனுபவித்துப் போதுகையில் பெருமாள் விக்கிரம பாண்டிய தேவற்கு மூன்றாவது நாளில் விக்கிரம பாண்டியக் காலிங்கராயர் இக்கோயிலிலே சுப்பிரம(ண்)ணியப் பிள்ளையாரை ஏறியருளப் பண்ணி  இப்பிள்ளையார்க்கு இரண்டு மா நிலம் சண்டேசுரப் பெருவிலை கொண்டு கல்லும் வெட்டின அளவிலே இவ்வூரிலே இருக்கும் பிராமணர் இவ்வூர் எங்கள் ப்ரம்மக்ஷேத்ரம் என்றும் சண்டேசுரப் பெருவிலை  கொள்ளக் கடவதல்ல என்றும், எங்கள் காணி என்று அனுசயம் பண்ணினபடியாலே மாஹேஸ்வரர் திருக்கூட்டமாக இருந்து ஒரு திருமேனி  தீயிலும் விழுந்தபடியாலே பெருமாள் திருமுன்பே 
    2. கேழ்வியாய் [பி]ள்ளை பல்லவராயரையும் பிள்ளை அழகிய மணவாளப் பெருமாளையும் நீங்கள் நாட்டிலே போன அளவிலே இவ்வூர் மருங்கு சூழ்ந்த இடத்து நாட்டாரை அழைத்துக் கேட்டுக் காணி உடைய இவர்களுக்கு விடுவித்துக் குடுப்பதென்று திருவாய்மொழிந் தருளினபடியாலே நாலாவது ஐப்பசி மாதம் ஐஞ்சாந் தியதி சோழகுல வல்லிநல்லூர் அம்பலத்திலே எங்களையும் கூடக் கொண்டு கேட்ட இடத்துப் பிராமணரை உங்கள் காணியானபடிக்குச் சாதனங் காட்டுங்கோ ளென்று சொன்ன இடத்து இந்தப் பிராமணர்  ப்ரம்ம க்ஷேத்ரம் என்று சொல்லுகையாலே உங்கள் ப்ரம்ம க்ஷேத்ரமாகில்  நீங்கள் உழுது இறுக்கை இன்றியே வெள்ளாழர், அளவர், பள்ளிகள், பரம்பர் உட்பட உழுது இறுத்து ஆண்டு மாறி இவர்கள் உடனுங்கூடக் கரைஇட்டு உழுது போந்தபடியாலே காணி ஆ
    3. ட்சி அல்ல என்றும் அனுபோகத்தால் சொல்ல ஒண்ணா தென்றும் நீங்கள் இன்னாள் வரையாக இத்திருக் கோயிலிலே காணிநில முதலாகத் திருநாமத்துக்காணியாக நீங்கள் குடுத்துக் கல்வெட்டிக் கிடப்பதுண்டோ என்று கேட்ட இடத்து இப்படிக்கு ஒரு மூலம் எங்களால் காட்ட ஒண்ணா தென்றும் தன்னில்தான் விற்றும் ஒற்றி வைய்த்தும் போதுவோ மென்றும் இவர்கள் சில சாதனங் காட்டின இடத்து உங்களில் நீங்கள் ஒற்றி வைய்த்தும் விற்றும் செய்தவை ஒன்றல்ல என்றும் இவர்களைக் கேட்(ட்)டு விட்டுக் கோயில் தானத்தாரை அழைத்து  திருநாமத்துக் காணியானபடிக்குச் சாதனங் காட்டுங்கோள் என்று கேட்ட இடத்து இக்காணி என்று சொல்லுகிற பிராமணர் ஆண்டுதோறும் திருநாமத்துக் காணி பேசி நிலக் கூலிக்கும் விதை முதலுக்கும் எதிரடை ஓலை காட்டினபடியாலும் கோப்பெருஞ்சிங்கர் நாளிலும் 
    4. நிலக்கூலி தண்டிப் போந்த படிக்குக் கோயில் பரிமாற்றங் காட்டின படியாலும் பெருமாள் விக்கிர ம பாண்டிய தேவர் இத்திருப்பாதிரிப் புலியூர்  உடலடங்க இறையிலியாக ஐஞ்சாவது நாளில் எழுதின திருமுகத்திலே திருநாமத்துக் காணி படத் திருமுகம் எழுதித் திருவெழுத்துச் சாத்தின இத்திருமுகங் கொண்டு திருவீதி வலமாக இப்பிராமணர் உடனுங்கூட அலங்கரித்துக் கல்லும் வெட்டி இன்னாள் வரையும் அனுபவித்துப் போந்து இருக்க இப்பொழுது சொல்லக் கடவதல்ல  என்று முத[லி]களு[ம்] அருளச்செய்து நாங்களும் சொல்லிவிட்டது “இது திருநாமத்துக் காணி என்னும்படி கேட்டு அற்றுவிட்டபடிக்கு இத்திருக்கோயிலிலே கல்லுவெட்டிக் கொள்வது. இப்படிக்கு இவை திருபுவன மாதேவிச் சறுப்பேதி மங்கலத்துச் சாத்த மங்கலத்துக் குலசேகரப் ப்ரம்ம ராயன் எழுத்து. இப்படிக்கு இவை திட்டைச்சேரி சுந்தரபாண்டியப் ப்ரம்ம 
    5. ராயன் எழுத்து. இப்படி _ _ _     
    6. இப்படிக்கு இவை னந்தி  _ _ _ 
    7. இப்படிக்கு இவை பல்ல_ _ _ _          

    பெருமாள் – வேந்தர்; பிடாகை – உட்கிடையூர், backyard hamlet; உடையார் – சிற்றரசர்; மாகேசுவரர் – திருமேனி – தெய்வச்சிலை; திருவாய்மொழி – ஆணை இசைவு; சாதனம் (சாசனம்) – ஆவணம்; இறுக்கை – செல்லுதல், நடத்தல்; கரை – வரப்பு  

    விளக்கம் : 13 ஆம் நூற்றாண்டு இறுதியில் அல்லது 14 ஆம் நூற்றாண்டு தொடக்கத்தில் வீர பாண்டியனுக்கு முன் வட தமிழகத்தை ஆண்ட பராக்கிரம பாண்டியன் ஆட்சியில் நிகழ்ந்த நிகழ்வு. திருப்பாதிரிப்  புலியூர் இறைவன் கோவியில் இறை பணியாளர்களுக்கும் கோவில் கணக்கருக்கும் வந்த சிறு முறி (ஓலை). திருப்பாதிரி புலியூர் விளையா நத்த நிலமும், விளைநிலமும், புஞ்சைநிலமும் அதே போல் உட்கிடை ஊர்களில் (பிடாகை)  விளையா  நிலமும், விளைநிலமும், புஞ்சைநிலமும் இறைவன் பெயரில் உரிமையாக (திருநாமத்து காணி) வந்து அனுபவித்து கொண்டிருக்கும் வேளையில் வேந்தர்  விக்கிரமபாண்டிய தேவர்க்கு பட்டம் ஏற்ற மூன்றாவது நாளில் சிற்றரசர் விக்கிரமபாண்டிய காளிங்கராயர் இக்கோவிலில் சுப்பிரமணிய பிள்ளையாரை எழுந்தருளச் செய்து இந்த பிள்ளைக்கு இரண்டு மா அளவு நிலத்தை சண்டேசுவரப் பெரு விலையாக வாங்கி கல்வெட்டு பொறித்த போது இவ்வூரில் வாழும் பிராமணர் இவ்வூர் எமது பிரம்ம சேத்திரம் (பிராமணர் ஊர்) எனவே சண்டேசுவர பெருவிலை வாங்கக் கூடாது இது எமக்கான உரிமை நிலம் என்று தொல்லை செய்த  வேளையில்; அப்போது மாகேசுவரர் (சிவனடியார்கள்) திருக்கூட்டமாக இருந்த நேரத்தில்  ஒரு சாமி சிலை தீயில் விழுந்ததால் அதை அரசர் காலிங்கராயர் திருமுன்பாகச் சொல்ல அவர் பிள்ளை பல்லவராயரையும், பிள்ளை அழகிய மணவாள பெருமாளையும் நீங்கள் நாட்டிலே , ஊரிலே சென்று இந்த ஊரை சூழ்ந்த ஊராரை விசாரித்து காணியுடைய பிராமணர்களுக்கு நிலத்தை விடுவித்து கொடுக்க ஆணைக்கு இசைந்ததால் முடிசூட்டிய  நாலாம் நாளில் ஐப்பசி மாதம் ஐந்தாம் தேதி அன்று சோழகுலவல்லி நல்லூர் நீதிமன்றம் அல்லது கோவிலில் எங்களையும் (பிராமணரையும்) கூட அழைத்து சென்று கேட்ட நேரத்தில் பிராமணர்களே  உங்கள் காணி என்பதற்கு ஆவணங்களை காட்டுங்கள் என்று சொன்ன போது இந்த பிராமணர் இது பிரம்ம சேத்திரம் என்று சொல்லும் போதும் இது உங்கள் பிரம்ம சேத்திரம் என்றால் இதில் நீங்கள் உழாமல் வெள்ளாளர், அளவர், பள்ளிகள், பரம்பர் உட்பட்டோர் உழுது ஆண்டுகள் பல கடந்து இவர்கள் அந் நிலத்திற்கு வரப்பும் அமைத்து உழுது காலம் போனதால் இது உமது நில உரிமை அல்ல, எனவே  அனுபோகத்தால் (by possession) உமது நிலம் என  சொல்ல முடியாது என்று சொல்லி  நீங்கள் இதுநாள்வரை இக்கோவிலில் காணி நிலமாக பெற்ற  இறைவன் பெயரில் நிலங்களாக கொடுத்த கல்வெட்டி ஏதேனும் இருக்கிறதா என்று கேட்ட போது இப்படி ஒரு மூல ஆவணம் எம்மால் காட்ட இயலாது அவரவர் விருப்பப்படி விற்றும் ஒத்தி (அடமானம்) வைத்தும்  போவோமென்று இவர்கள் சில ஆவணம் காட்டிய போது நீங்கள் உங்களுக்குள்ளேயே ஒத்தியும் விற்றும் செய்தவை ஒன்றல்ல என்றும் இவர்களிடம் சொல்லிய  போது கோவில் நிருவாகிகளை அழைத்து இது  திருநாமத்து காணி என்பதற்கு ஆவணம் காட்டுங்கள் என்று கேட்டபோது இக்காணி எமது என்று சொல்லுகிற இப்பிராமணர்  ஆண்டுதோறும் திருநாமத்து காணி  என்று சொல்லி நிலக் கூலிக்கும் விதை முதலுக்கும் எதிரடை (சான்றாக) ஓலை காட்டியதால் காடவப் பல்லவ வேந்தன் கோப்பெருஞ்சிங்கன் காலம் முதலே நிலக்கூலி வாங்கியதற்கு கோவில் பரிமாற்றங்களைக்  (transaction) காட்டியதால் வேந்தர் விக்கிரம பாண்டியத்  தேவர் திருப்பாதிரிப்புலியூர் மூல நிலமும் அடங்க இறையிலியாக தான் முடிசூடிய ஐந்தாவது நாளில் எழுதிய திருமுகத்தில் (அரசாணையில்) இது இறைவன் நிலம் என்று தெளிவாக ஆணையிட்டு கையெழுத்து இட்ட படியால் இத்திருவெழுத்தை இப்பிராமணர் வீதிவலமாக எடுத்துச்சென்று கல்லு வெட்டிக் கொண்டனர். இதை இதுநாள் வரை நீங்கள் அனுபவித்து கொண்டு இருக்க அதை இனி மீண்டும் சொல்லத் தேவை இல்லை என்று முதலிகளும் ஒப்புதல் அளித்து நாங்களும் சொன்னது என்ன என்றால் “இது திருநாமத்துக்காணி  எனும்படி சொல்லக் கேட்டு எமக்கு முழுவதும் கைவந்தபடியாலே ( அற்றுவிட்டபடியாலே > அத்துபடி)  இத்திருக்கோவிலில் அதை கல்வெட்டிக் கொள்ளலாம் என்று ஒப்புதல் அளித்தோம். இப்படிக்கு திருபுவன மாதேவி சருப்பேதி மங்கலத்துச்   சாத்த மங்கலத்துக்  குலசேகர பிரம்மராயன் எழுத்து. இவை திட்டைச்சேரி சுந்தர பாண்டிய பிரம்மராயன் எழுத்து. இப்படிக்கு இவை நந்தி (வர்மன் எழுத்து). இப்படிக்கு இவை பல்ல(வராயன் எழுத்து)

    வேந்தர் வெள்ளாளர், பரம்பர், பள்ளி ஆகியோரை tenants under tenants/ sub tenants என்று கருதியதால் பிராமணரே உண்மையான வாடகையாளர் என்று கூறிவிடுகிறார். அதற்கு பிராமணர் கோப்பெருஞ்சிங்கன் காலம் முதலே கட்டிய நில வாடகை விதை முதல் ஆவணங்களை ஏற்றுக்கொள்கிறார்.

    பார்வை நூல்: தென்னிந்திய கல்வெட்டுக்கள் தொகுதி 7 எண்: 759 பக். 385

    தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் வட்டம் திருவிடைமருதூர் கல்வெட்டு

    சுபமஸ்து ஸ்வஸ்தி ஸ்ரீமந் மஹா மண்டலேஸ்வர சதுசமுத்திராதிபதி  ஸ்ரீமந் சதாசிவ தேவ மஹாராயர் பிருதுவிராச்சியம் பண்ணியருளா நின்ற சகாத்தம் 1466 ன் மேற்செல்லா நின்ற குரோதி சம்வத்ஸரத்து மீன ஞாயற்றுப் பூருவ பட்சத்து உத்துவாநத் துவாதசியும் சோமவாரமும் பெட்ரா உத்திரட்டாதி நட்சத்திரத்து நாள் வீரப் பிரதாப ஸ்ரீமது மஹா மண்டலேஸ்வர இராமராஜ விட்டல தேவ மகா இராஜர். சோழ மண்டலத்து காவேரி தீரத்து தென்கால் உய்யக்கொண்டசோழ வளநாட்டுத் திரைமூர் நாட்டுத் திருவிடைமருதூர். திருவிடை மருதூருடைய தம்பிரானாற்க்கு தற்மசிலா சாஸனம் பண்ணிக் குடித்தபடி மருதப்பர் திருநாமத்துக் காணியாய் பூறுவம் நடந்த புத்துஆற்றுக்கு வடக்கு ஆவணமும், சிற்றாடியும் இந்த இரண்டு கிறாமமும் பூறுவம்  கோயிற்பற்றாக  நடக்கயிலே அன்னாளிலே பண்டாரா வாடைக்காரர் கட்டிக் கொண்டு பண்டாரவாடை ஆகப் போகையில் இப்பொழுது இது காரியமாக திருவிடை மருதூருடைய தம்பிரானார் திருக்கோயில் தேவகன்மிகளில் திருச்சிற்றம்பல பட்டர் மங்காமந் காத்தார் இன்னயினார் கோயிற் பற்று என்று நமக்கு விண்ணப்பம் செய்து நாம் திருவடி பேரிலே தண்டு வந்த பொழுது  நம்முடனே கூட தெற்கு அனந்தசயனம் வடக்கு முதுகல்லு ஸஹிதமாகத் தண்டுப் பண்ணி பூறுவம் கோயிற்பற்று என்று பலகாலும் நமக்கு விண்ணப்பம் செய்து நாமும் அந்தக் கிறாமங்களிலே மருதப்பர் முத்திரை எல்லைக் கல்லு நிற்கிறது உண்டோ என்று நம்முடைய முத்திரை வாங்கி, இலிங்கயர் மனுஷரையும் தூளி நயினாரையும் நாம் முதுகல்லிலே இருந்து திருச்சிற்றம்பல பட்டர் சொன்னாப் போல எல்லைக் கல்லு நிற்கிறதோ என்று பார்க அனுப்பி வரக்காட்டி விசாரித்து பூருவம் கோயிற்பற்று என்கிறதுக்கு இரண்டு ஊரிலும் கல்லு நிற்குது என்று பார்த்து வந்து நமக்கு விண்ணப்பம் செய்கையில் நாமும் அந்தப் படிக்கு இராயஸமும் வாங்கிக் குடுத்து சங்கிரம புண்ணிய காலத்திலே திருச்சிற்றம்பல பட்டர் கையிலே உதகம் பணிக்கு குடுத்து  நம்முட இராயஸமும் _ _ __.  

    தர்ம சிலா சாசனம் – நீதி நிலைநிறுத்தும் கல்வெட்டு; பண்டாரவாடைக்காரர் – வரி தண்டும் கருவூல அதிகாரி; தண்டு – படை,  வருத்தம்; இலிங்கயர் – குறி செதுக்குவோர்; தூளி – குதிரை; இராயசம் – அரசாணை;

    விளக்கம்: இக்கல்வெட்டில் இடம்பெறும் இராமராச விட்டல தேவ மகாராயர் கிருஷ்ணதேவராயரின் மருமகனாவார். இவர் சதாசிவராயர் இளமையிலேயே வேந்தராக முடிசூட்டிக் கொண்ட காரணத்தால் அவரது மேற்பார்வையாளராக இருந்து பின்புலத்தில் இருந்தபடி உண்மையாகவே இவரே ஆட்சி செலுத்தியவர் என்பதால் மகாமண்டலேசுவர தேவ மகாராயர் என்று கல்வெட்டில் குறிப்பிடப்படுகிறார். கி.பி. 1565 இல் தக்காண சுல்தான்களோடு நடந்த தலைக்கோட்டைப் போரில் இவரது தலை கொய்யப்பட்டு வைக்கோல் அடைத்துக் காட்சிப்படுத்தப்பட்டது.

    மலபார், கொங்கணம், சோழமண்டலம், உத்கலம் என்ற நான்கு கடற்கரைக்கும் அதிபதியாக சதாசிவ தேவராயர் மண்ணுலகு ஆண்டு அருளுகின்ற சக ஆண்டு 1466 (கி.பி.1544) குரோதி ஆண்டில் மீன ராசி முற்பகுதியில் கார்த்திகை மாத சுக்லபட்ச துவாதசியான   (உத்துவான துவாதசி) திங்கட்கிழமை உத்திரட்டாதி நட்சத்திரம் கூட நாளில் வீரபிராதப மகா மண்டலேசுவரர் இராமராச வித்தல தேவ பேரரசர் சோழமண்டலத்த்தில் அடங்கிய காவேரிக்கரை தென்கரையில் அமைந்த உய்யக்கொண்ட சோழ வளநாட்டு திரைமூர் நாட்டுத் திருவிடைமருதூர். இந்த திருவிடைமருதூருடைய இறைவர்க்கு நீதி நிலைநிறுத்தும் கல்வெட்டு செய்து கொடுத்தது யாதெனில், இறைவன் மருதப்பர் பெயர்க் காணியாக முன்னொரு காலம் புத்து ஆற்றுக்கு வடக்கில் ஆவணம், சிற்றாடி ஆகிய இரு கிராமமும் கோயில் உரிமை நிலமாக இருந்த நிலையில் அக்காலத்தே கருவூல அதிகாரி அவற்றில் இடம் கட்டிக்கொண்டு அவருக்குரியதாக ஆக்கிக் கொண்டார். இப்பொழுது இதன் தொடர்பில் திருவிடைமருதூருடைய இறைவன் கோயில் இறைப்  பணியாளர்களில் ஒருவரான திருச்சிற்றம்பல பட்டர் மங்காமன் காத்தார் இவை இக்கோயில் இறைவன் உரிமை நிலம் என்று என்னிடம் முறைப்பாடு செய்தார். நான் திருவடிகள் நாடான திருவனந்தபுரம் மேல் படைநடத்தி வந்த போது என்னுடனே கூட தெற்கில் உள்ள பத்மநாப சுவாமி கோயில் அனந்தபுரத்தில் இருந்து வடக்கே முதுகல் (குல்பர்கா) வரை தம்மை வருத்திக் கொண்டு  கூடவே வந்து முன்னொரு போது இவை கோயில் உரிமை நிலம் என்று என்னிடம் பலமுறை வேண்டீடு செய்தார். நானும் அந்த கிராமங்களில் மருதீசர் முத்திரை பொறித்த எல்லைக் கல் நிறுத்தப்பட்டுள்ளனவா என்று என்னுடைய முத்திரை பெறும் அதிகாரி, குறி செதுக்குவோர் ஆகியோரையும் குதிரைப்படை தலைவனையும் நான் முதுகல்லில் இருந்தபோது சிற்றம்பல பட்டர் சொன்ன ஊர்களில் எல்லைக் கல் நிறுத்தப்பட்டுள்ளதா என்று பார்த்து வரச்சொல்லி அனுப்பி விசாரித்ததில் முன்னம் அவை கோயில் நிலம் என்பதற்கு சான்றாக இரு ஊர்களிலும் கல் நிறுத்தப்பட்டுள்ளது என்று பார்த்து வந்து எனக்கு வேண்டுகோள் வைத்தமையில் நானும் அதன்படி அரசாணையும் வாங்கிக் கொடுத்தேன். போர் நடக்கும் புண்ணிய காலத்திலே திருச்சிற்றம்பல பட்டர் கைகளில் நீரட்டி என்னுடைய ஆணையையும் கொடுத்தேன் என்ற மட்டில் கல்வெட்டு சிதைந்துள்ளது.

    பண்டாரவாடைக்காரர் யார் என்ற பெயர்க் குறிப்பு கல்வெட்டில் இல்லை. இது போல அரசு அதிகாரிகள் பல ஊர்களில் நடந்து கொள்ள வாய்ப்புள்ளது. ஏதோ சிற்றம்பல பட்டரின் விடாமுயற்சி கோயில் நிலம் மீண்டும் கோவிலுக்கே மீண்டது.

    பார்வை நூல்: தொல்லியல் புதையல், பக். 54 – 55 ஆசிரியர்: நடன. காசிநாதன் & திருவிடைமருதூர் கல்வெட்டுகள், 1960 பக். 25 – 29, வெளியீடு:ஸ்ரீ மகாலிங்க சுவாமி தேவஸ்தானம்.

    Share
  • கல்வெட்டில் பண்டைய சமூகப் பதிவு

    கல்வெட்டில் பண்டைய சமூகப் பதிவு

    சேசாத்திரி ஸ்ரீதரன்

    தனி மனிதர்கள் பலர், ஒன்றுபடச் சேர்ந்ததே சமூகம் எனச் சமூகத்திற்குத் தவறான விளக்கம் தரப்படுகிறது. 1,000 பிச்சைக்காரர்கள் ஒன்று கூடினாலும், அவ்வாறே 1,000 துறவிகள் ஒன்று கூடினாலும் அது சமூகம் ஆகாது. ஏனெனில் இந்த ஆயிரம் பேருக்கும் குடும்பப் பொறுப்பு என ஏதும் கிடையாது. என்றால் கூட்டமாகச் சேர்ந்திருப்பது சமூகம் ஆகாது. ஒரு இரயில் நின்றதும் 1,000 பேர் அதில் இருந்து இறங்கி தம் வழியே செல்கின்றனர் இது சமூகம் ஆகாது. ஒரு ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழும் குடும்ப அமைப்பில் தான் குடும்பப் பொறுப்பு ஏற்படுகிறது. ஏனெனில் அவர்தம் குடும்பப் பொறுப்பானது இறக்கும் காலம் வரை 3-4 தலைமுறைக்கு நீள்கிறது. குடும்பத்தவர் தாம் உலகில் நிலைக்கப் பொருளைக் கொடுத்தும் கொண்டும் வாழப் பொருள் உற்பத்தியில் ஈடுபடுகின்றனர். இதனால் வெவ்வேறு மாற்றுத் தொழில் செய்வோரிடம் கூட்டுச் சமூகப் பொறுப்பு கட்டமைக்கப்பட்டு சமூகம் என்பது நாம் கண்கூடாகக் காணும் பொருள் போல உண்டாகிறது. தனிமனிதர்களான துறவிகள், பிச்சைக்காரர்கள் கூட்டமாக கூடினாலும் இப்படியான பொறுப்பை கொண்டிராததால் அவர்களை சமூகம் என்று அழைக்க முடியாது. ஆனால் இவர்கள்  சமூகத்தைச் சார்ந்து வாழ்பவர்கள். இந்த வெவ்வேறு மாற்று தொழில் செய்யும் குடும்பங்களால் தான் ஊர் என்பதே உண்டாகிறது. ஒரு குடும்பத்திற்கு அடுத்ததாக ஊர் என்பதே பெரிய சமூகம் ஆகும். அதுவே பல ஊர்களை உள்ளடக்கி நாடு என்று விரிகிறது. பல நாடுகள் இணைந்ததே தேசமென்ற பெரும் சமூகக் கட்டமைப்பு ஆகும். குடும்பம் சிதைந்து தனிமனித நலன் மேலோங்கினால் (ஆண் ஆணோடும், பெண் பெண்ணோடும், திருமணமில்லா இருபாலார் கூட்டு வாழ்க்கை ஆகியவற்றால்) சமூக அமைப்பு, ஊரமைப்பு, நாட்டமைப்பு ஆகியன சிதைந்து விடும். ஊர்ச் சமூகம் நாடாக விரியும் போது நிர்வாகம், பாதுகாப்பு, பணம் போன்ற சமூக முறைமைகள் தேவைப்படுகின்றன. இந்த முறைமை வந்த பின் ஆட்சி அதிகாரத்தில் இருந்தோர் தமக்கென தனியே படையைப் பேணி மண உறவால், படை சூழ்ந்த உறவுகளால் படைச்சாதி என்ற படைச் சமூகத்தை உண்டாக்கி இந்த சமூக இயங்கியலை கட்டுப்படுத்தினர். இந்த கட்டுப்பாட்டால் சில சமூகத்தவர் ஏற்றம் பெற்று எல்லா வசதிகளையும் உரிமைகளையும் அனுபவித்தனர். பலர் அதற்கு வெளியே வைக்கப்பட்டு உரிமை மறுக்கப்பட்டதால் சமூகத்தில் ஏற்றத் தாழ்வு உண்டானது. அது எவ்வாறு கல்வெட்டில் வெளிப்படுகிறது என்று பார்ப்பதே இந்தப் பார்வை.

    சேலம் மாவட்டம் சேலம் வட்டம் பேளூருக்குத் தென்கிழக்கில் சின்ன ஏரிக்கரையில் உள்ள இரு கல்வெட்டுகள்

    1. ஸ்வஸ்திஸ்ரீ 
    2. மிலாடாந
    3. ஜனனாத வள
    4. நாட்டுத் துரவி நா
    5. ட்டு வெளியூர் வண்
    6. ணாத்தி தாழி வடுகி 
    7. இட்ட தூம்பு   

    வெளியூர் – இன்றைய பேளூர்; தூம்பு – மதகு; மிலாடு – ஒன்றுகூடும் இடம்; தாழி – பருத்த, குண்டான

    விளக்கம் : முதலாம் இராசராசன் சிறப்புப் பெயரான சனநாதன் பெயரில் அமைந்த நாடு என்பதை கொண்டு இதன் காலம் முதற் குலோத்துங்கன் காலம் என்று தீர்மானிக்கப்பட்டது. இராசராசன் வெற்றிக்கு பின் ஒன்றுகூடும் இடம் சனநாதன் வளநாடு என்று பெயரிடப்பட்ட நாட்டில் அமைந்த துரவி நாட்டின் திறந்த வெளியூரில் (பேளுர்) வாழும் வண்ணாத்தி குண்டு வடுகி என்பவள் இந்த ஏரிக்கு மதகு ஒன்று அமைத்துக் கொடுத்தாள். இந்த ஏரியின் நீரில் தான் அவள் நாள்தோறும் ஊரார் துணிகளைத் துவைத்துக் காயவைத்துக் கொடுத்து பிழைப்பு நடத்தி வந்தாள். இந்த மதகால் ஏரி நீர் பாசனத்திற்கு அளவோடு வெளியேறும் அல்லாவிடில் முன்பு போல கால்வாய் மூலம் அதிக நீர் வெளியேறி ஏரி நீர் விரைந்து வற்றும் என்பதே காரணம்.

    பார்வை நூல்: கொங்கு இதழ் பிப்ரவரி 1974 பக். 39

    1. ஸ்வஸ்திஸ்ரீ கொலோத்துங்க சோ
    2. ழ தேவற்கு யாண்டு 41 வது 
    3. மிலாடாகிய ஜநநாத வளநாட்டு 
    4. த் துறவிநாட்டு வெளியூரா
    5. ன ஏரியில் ஏறி
    6. வீரபட்டணத்து வண்ணான் பி
    7. ச்சன் சொக்கன்
    8.  இடுவுத்த தூம்பு.

    எறிவீரபட்டணம் – வணிகர் படை ஊர்; இடுவித்த – கட்டி நிறுத்திய

    விளக்கம் : முதலாம் குலோத்துங்க சோழனின் 41 ஆம் ஆட்சி ஆண்டு கிபி.1111 இல் சனநாத வளநாட்டில் அடங்கிய துறவிநாட்டில் உள்ள திறந்த வெளியூரில் (பேளூர்), வணிகர் தம் எறிவீரபட்டணத்தில் வாழும் வண்ணான் பிச்சன் சொக்கன் என்பவன் ஏரிக்கு மதகு கட்டினான்.

    மேல் உள்ள முதல் கல்வெட்டு போல் அல்லாமல் இதில் வேந்தனின் ஆண்டுக் குறிப்பும் பெயரும் உள்ளது. இதைக்  கொண்டு அந்த மதகும் கல்வெட்டும் இதே ஆண்டினது எனக் கொள்ளலாம். வண்ணாத்தி தாழி வடுகியும் வண்ணான் பிச்சன் சொக்கணும் உறவினர் ஆதல் வேண்டும். மிக அரிதாக வண்ணார் செய்த சமூகப் பங்களிப்பு இக்கல்வெட்டு மூலம் வெளிப்படுகிறது.

    பார்வை நூல்: கொங்கு இதழ் மார்ச்சு 1974 பக். 68

    அரியலூர் மாவட்டம் திருமானூர் வட்டம் கண்டராதித்தம் ஊரில் உள்ள இலட்சுமி நாராயணப் பெருமாள் கோயில் கருவறை தெற்குச்சுவர் பீடத்தில் உள்ள 12 வரிக் கல்வெட்டு.

    1. கோற்சடை பன்மர் திருபுவனச் சக்கர 
    2. வத்திகள் ஸ்ரீ பராக்கிரம பாண்டி
    3. ய தேவர்க்கு யாண்டு 9 ஆவது ஆனி மாதம் 10 தில் 
    4. நாலாயிர நாடாழ்வானேன் என் 
    5. மனையான அஞ்சாந் தெருவில் 
    6. மேற் சிறகில் தெற்
    7. கொரு மனை விட்டு உ 
    8. ள்ளில் மனை ஒன்று 
    9. காரிமகன் சிவநாய
    10. னுக்கு விற்றேன். 
    11. இப்படிக்கு ஊரக 
    12. ம் கற்பகத்து அறிவேந்     

    சிறகில் – குறுக்கு தெரு, cross street; உள்ளில் – உள் வீடு; ஊரகம் – ஊர் அதிகாரி; கல் பகத்து – பகுத்து விலை கூறல், கல்பெயர்த்து வை

    விளக்கம் : “முதலாம் ஜடாவர்ம பராக்கிரம பாண்டியனின் 9 ஆவது ஆட்சி ஆண்டு கி. பி. 1324 ஆனி மாதம் 10 ஆம் நாளில் நாலாயிர நாடாழ்வானான நான் இவ்வூரில் ஐந்தாம் தெருவில் மேற்கே உள்ள குறுக்கு தெருவின் தெற்கே ஒரு வீடு தள்ளி உள் இருந்த மனை ஒன்றை காரியின் மகன் சிவனாயனுக்கு விற்றுவிட்டேன்”. இப்படி விற்ற வீட்டை கல் பெயர்த்து நாட்டியதை அறிவேன் என்று ஊர் அதிகாரி கையொப்பம் இட்டார்.

    இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது என்ன என்றால் நாலாயிர நாடாழ்வான், காரி மகன் சிவனாயன் ஆகிய பெயர்களை உற்று நோக்குங்கள் இவர் இருவரும் அரச குடும்ப வழி மணம் புரிந்த படைத்தளபதி சாதியர் என்று தெளிவாகிறது. ஐந்தாம் தெரு வடக்கு தெற்காக நீண்டிருந்தால் தான் அதன் மேற்கில் குறுக்கு தெரு அமைய முடியும். அதில் இரண்டாம் வீடு நீண்டு தென்புற புழைக்கடையில் இன்னொரு வீட்டை கொண்டு இருந்துள்ளது. கோவிலுக்கு சற்றும் தொடர்பில்லாத இரண்டு தனி ஆள்களின் கொடுக்கல் வாங்கல் செய்தி ஏன்? எப்படி? இந்த கோவிலில் பதியப்பட்டு ஆவணமானது என்பது ஒரு கேள்வி.

    பார்வை நூல்: அரியலூர் மாவட்டக் கல்வெட்டுக்கள், செப்பேடுகள் தொகுதி I பக். 122 ஆசிரியர்: இல. தியாகராஜன்

    அரியலூர் மாவட்டம் திருமானூர் வட்டம் கண்டராதித்தம் ஊரில் உள்ள இலட்சுமி நாராயணப் பெருமாள் கோயில் கருவறை தெற்குச்சுவர் பீடத்தில் உள்ள 10 வரிக் கல்வெட்டு.

    1. கோற்சடை பன்மரான திருபுவன
    2. ச் சக்கரவத்திகள் ஸ்ரீ பராக்கிறம பாண்
    3. டிய தேவற்கு யாண்டு 10 ஆவது ஆனி
    4. மாதம் 22ந் தியதி நான்று தென் பத்தரா
    5. யனேன் யென் மனையான இரண்டான் தெரு
    6. வின் மேல் சிறகில் தலைமனையில் மனை
    7. ச பணியிருக்கும் அண்ணாமலைய் மகன் நாழி
    8. ப் பிள்ளைக்கு விற்றேன். இப்படிக்கு இவை 
    9. அறிவோ
    10. ம் 

    ஞான்று – போது; தியதி – நாள்; மனை எச்ச – வீட்டு வேலை; தலைமனை – வளமனை, bungalow

    விளக்கம் : “முதலாம் ஜடாவர்ம பராக்கிரம பாண்டியனின் 10 ஆவது ஆட்சி ஆண்டு கி. பி. 1325 ஆனி மாதம் 22 ஆம் நாளின் போது தென் பத்தராயனான நான் என்னுடைய வீடான இரண்டாம் தெருவிற்கு மேற்கு வரிசையில் உள்ள பெரிய வீட்டில் வேலை செய்யும் அண்ணாமலை என்பவர் மகன் நாழிப்பிள்ளைக்கு விற்றேன். இப்படிக்கு இந்த விவரத்தை அறிவோம் என்று கையெழுத்து இட்டுள்ளனர். இதில் எதை, எந்த வீட்டை விற்றார் என்ற குறிப்பு தெளிவாக இல்லை. பத்தராயன் தன் இன்னொரு வீட்டை விற்றார் என்று கொள்வதே சரியாக இருக்கும். ஏனெனில் பெரிய வீட்டை வாங்கும் அளவிற்கு பணியாளுக்கு பணம் இருந்திருக்குமா? பத்தராயன் பெயர் அவரை அரச குடும்பத்தவர் என்று காட்டுகிறது. எனவே தான் அவருக்கு வளமனை இருந்துள்ளது.

    பார்வை நூல்: அரியலூர் மாவட்டக் கல்வெட்டுக்கள், செப்பேடுகள் தொகுதி I பக். 123 ஆசிரியர்: இல. தியாகராஜன்

    தென் ஆர்க்காடு மாவட்டம் கள்ளக்குறிச்சி வட்டம் வலஞ்சுரம் பசுபதீசுவரர் கோயில் 9 வரிக் கல்வெட்டு

    1. ஸ்வஸ்திஸ்ரீ திரிபுவனச் சக்கரவற்திகள் ஸ்ரீ இராச தேவற்கு யாண்டு 11 வது உத்தம (நீ)திய்யா
    2. பெருங் கீத்தி முத்தமிழாலையாமும் மையு நிறைந்தோர் எழுபத்தொன்பது நாட்டு மில
    3. டாகிய ஜனநாதவள நாட்டு மேலாராற்றூர் கூற்றத்து திருவலஞ்சுரத்தில் இருங்கோ
    4. ளப்பாடி நாட்டோமுங் குந்றக் கூற்ற நாட்டோமும் துண்ட நட்டோமுந் திருமுனைப்பாடி
    5. நாட்டோமுஞ் செங்குந்ற நாட்டோமும் வாணகப்பாடி நாட்டோமும் ஆண்டய் நாட்டோ
    6. மும் பங்கள நாட்டோமும் மேல்கரை நட்டோமும் கங்கப்பாடி நட்டோமும் பரணூற்(று) நா
    7. ட்டோமும் எம்மிலிசைந்து உடையார் திருவலஞ்சர உடையநார் கோயில் கல்வெட்டியதாவது இந்
    8. நாட்டு மலையமார்களும் நத்த மக்களும் இடங்கைத்திலே பாவாடை ஏறினோம். இடங்கைக்கு 
    9. கண்ணுங் கையுமாய் புல்லும் பூமியுள்ளவு நிற்க கடவோம். இதில் பிழங்கில் மாறுசாதிக்கு தாழ்வு 
    10. செய்தோமானோம்.

    இசைந்து – விரும்பி; மலையமார் நத்த மக்கள் – பார்க்கவ குல சாதியில் நயினார், உடையார் பட்டம் உள்ளவர்; பாவாடை – இறைவன் திருமேனி முன் உறுதி கொள்; பிழங்கில் – தவறினால்; மிலாடாகிய – ஒன்று கூடும் இடம், assembling point; மில் – சேர்க்கை, நெருங்குதற் கருத்து. இந்தியில் இன்றும் சந்திப்பு என்பது மிலா எனப்படுகிறது

    விளக்கம் : இரண்டாம் இராசராசன் 11 ஆவது ஆட்சி ஆண்டு கி.பி.1161இல் உடையார்களின் மெய்கீர்த்தியை கூறித் தொடங்கும் இக்கல்வெட்டு ” 79 நாட்டவர் ஒன்றுகூடும் ஜனநாத வளநாட்டின் மேலாராற்றூர் கூற்றத்தில் உள்ள திருவலஞ்சுரத்தில் இருங்கோளப்பாடி நாட்டு (விருத்தாச்சலம் பெண்ணாடம்), குன்றக் கூற்ற நாட்டு (பெரும்பழுவூர்), துண்ட நாட்டு (பெரம்பலூர்), திருமுனைப்பாடி நாட்டு (சேந்தமங்கலம்), செங்குன்ற நாட்டு , வாணகப்பாடி நாட்டு (விழுப்புரம் சங்கராபுரம்), ஆண்டை நாட்டு, பங்களநாட்டு (வேலூர் – திருப்பத்தூர்), மேல்கரைநாட்டு (ஈரோடு), கங்கப்பாடி நாட்டு (தருமபுரி), பரணூற்று நாட்டு என 11 நாட்டின் பார்கவ குலத்தவர் நாமே விரும்பி திருவலஞ்சுர ஈசன் கோவிலில் கல்வெட்டுவித்தது யாதெனில், இந்த நாடுகள் அனைத்தின் மலையமார், நத்த மக்கள் ஆகியோர் இடங்கைப் பிரிவிலே சேர்ந்தோம். இனி இடங்கைப் பிரிவிற்கு கண்ணும் கையுமாய் புல்லும் பூமியும் உள்ளளவும் இருப்போம் என்று உறுதி கூறுகிறோம். இதில் தவறினால் வேற்று சாதியை தாழ்வாக நடத்திவிட்டோம் என்றாகும்”.

    இக்கல்வெட்டு மூலம் பண்டு தமிழகத்தில் 79 நாடுகளுக்கு மேல் இருந்துள்ளன என்று அறிந்து கொள்ளலாம். காலம் எப்போதும் போல மாறாமல் இருந்தால் இந்த உறுதிமொழியை அப்படியே காப்பாற்ற முடியும். ஆனால் 50 ஆண்டுகள் கழித்து காலம் மாறியது பிற சாதிகளுக்கு காணி விற்க கூடாது என்று முடிவுகொண்டு இவர்களே இந்த உறுதிமொழியை தகர்ப்பதை கீழ் உள்ள கல்வெட்டுகளை படித்து விளங்கிக் கொண்டால் புரியும்.

    பார்வை நூல்: ஆவணம் 11, 2000 பக். 32

    திருச்சி மாவட்டம் முசிறி  வட்டம் கரட்டாம்பட்டி நடுகல்

    ஸ்வஸ்தி ஸ்ரீ மதிரை கொண்ட கோப் பரகேசரி பர்மருக்கி யாண்டு 35 ஆவது. இவ்வாண்டு மியமானாட்டு வள்ளுவப்பாடி, விரியூர் ஆட்டை ஊற்றத்தூர் நாட்டுப் பாடாவூர் ரெஞ் சுருனிமான்கள்  நிரை கொண்டு போக நிரைப் பின்பு சென்று ஆடு ஈடு கொண்டு பட்ட நாகன் வீரன் மகளுக்கு ஓர் (ரோ)ரால்  இறையிலி வைத்து குடுத்தோம் விரியூர் ஊராரோம்   

    சுருனி > சுருதி – கேட்டல்; நிரை – மந்தை; ஈடு – இழந்தவற்றுக்கு மாற்றாக; ஓர் ஓர் – ஒரே நினைப்பாக, இரண்டாம் கருத்து இல்லாமல், no second thought; இறையிலி – அரசனுக்கு வரி செலுத்த வேண்டாத நிலம்

    விளக்கம் : மதுரையை கைப்பற்றி ஆண்ட முதற் பராந்தகனின் 35 ஆவது ஆட்சி ஆண்டு கி.பி 942 நிகழ்ச்சி. இந்த ஆண்டில் மியமாநாட்டில் அடங்கிய வள்ளுவப்பாடி, விரியூர் ஆகிய ஊர்களின் ஆடுகளை ஊற்றத்தூர் நாட்டின் பாடாவூ(லூ)ரைச் சேர்ந்த மூப்பனார் மறவர்களான ஐந்து நாட்டு சுருதிமான்கள் மந்தையாக கொள்ளை கொண்டு போயினர். கொள்ளை கொண்ட ஆட்டு மந்தையின் பின்னே தொடர்ந்து சென்று இழந்த ஆடுகளுக்கு மாற்று ஆடுடன் மீண்டு திரும்பிய பின் வீரசாவடைந்தான் நாகன் என்பவன். அந்த வீரன் மகளுக்கு இரண்டாவது மாற்று கருத்து ஏதும் இல்லாமல் அனைவரும் ஒரே சிந்தனையுடன் முடிவெடுத்து இறையிலி நிலக்கொடை கொடுத்தோம் விரியூர் ஊராரோம் என்று கல்வெட்டு தெரிவிக்கிறது.

    ஐந்து நாடு என்பது ஊட்டத்தூர், திருப்பிடவூர், பாச்சில், திருவெள்ளறை, சென்னிவலக் கூற்றம் என்னும் ஐந்து நாடுகள் கொடுக்கப்பட்டு குடியேறியதால் ஐந்து நாட்டு சுருதிமான்கள், அஞ்சுநாட்டார் என்று குறிக்கப்பட்டனர். இவர்கள் இன்றைய பார்கவ குல சுருதிமான் அல்லது மூப்பனார் குல மக்கள் ஆவர்.

    பார்வை நூல்: வரலாற்று குழு வலைத்தளப் பக்கம்.

    திருச்சிராப்பள்ளி மாவட்டம் பெரம்பலூர் வட்டம் பெரிய குறுக்கை அகரம் இலட்சுமி நாராயண பெருமாள் சிதிலமடைந்த கோவிலில் கண்டெடுத்த 12 வரிக் கல்வெட்டு

    1. ஸ்வஸ்தி ஸ்ரீ 
    2. குறுக்கைத் 
    3. திருச்சிற்றம்ப
    4. லச் சதுர்வே
    5. தி மங்கலத்
    6. துத் திருமுற்ற
    7. ங்களும் இந்
    8. த அகரமும் ஐ
    9. ஞ்சு நாட்டு
    10. ச் சுருதிமா
    11. ந்கள் கா
    12. வல்   

    முற்றம் – ஊரின் வெளியிடம், அகரம் – பிராமணர் குடியிருப்பு; சுருதிமான் – மூப்பனார் சாதி படை மறவர்.

    விளக்கம் : இவ்வூரின் மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலின் மூன்றாம் இராசராசனின் 24 ஆம் ஆட்சி ஆண்டுக் (கி.பி. 1240) கல்வெட்டு இவ்வூரை “குறுக்கை திருச்சிற்றம்பலத்து சதுர்வேதி மங்கலம்” என்கிறது. சுருதிமான்கள் இடங்கைப்பிரிவினர். உழு தொழில் செய்பவர் என்கிறது ஊற்றத்தூர் மூன்றாம் குலோத்துங்க சோழனின் கல்வெட்டு. இந்த ஊரின் கோவில்களைச் சுற்றியுள்ள வெளியிடங்களும் பிராமணர் அக்கிரகாரமும் ஐந்து நாட்டு சுருதிமான்களான மூப்பனார்களின் காவலுக்கு உட்பட்டவை என்கிறது இக்கல்வெட்டு. இதில் இருந்து மூப்பனார் போர் புரிபவர் குடியினர் என்று உணர முடிகிறது. போர்க்குடி என்றால் அரச குடியுடன் மணஉறவு ஏற்பட்டிருக்க வாய்ப்பு உண்டு. அந்த வகையில்  சுருதி மான்கள் படைத் தலைவர்களாக அரையர்களாக கிழார்களாக இருந்துள்ளனர்.

    பார்வை நூல்: கல்வெட்டு காலாண்டு இதழ் 17, பக். 8-9, த நா தொ து வெளியீடு

    பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் பிரம்மதேசம் ஊர்த்தெருவில் நடப்பட்ட கற்பலகையில் பொறித்த 67 வரிக் கல்வெட்டு

    ஸ்வஸ்தி ஸ்ரீ / கொலோத்துங்க சோழ / தேவற்கு யாண்டு 10  ஆவது / வடகரை கரிகாலகந்ந வள / (நா)ட்டு வந்நாட்டு பிரிதிசூர சது / (ப்)பேதி மங்கலமாந பிரம / தேசத்தை எங்களய்யந் ராஜரா / ஜ  வந்நாடுடையார் இவூரை / வல்லுவந் புலியநாந  இருப / த்து நால்ப்   பேரரையந் உ / ள்ளிட்ட பள்ளிகளுக்கு காணி / செய்து குடுத்தார். ஸ்ரீ ரா / ஜராஜ தேவற்கு யாண்டு 6  / ஆவது திருவையாறுடையா / ந் கரிகால சோழநான  சனநாத / வந்நாடுடையாநும் நந்தம / ரில்  நாந _ _ _ வந்நாடுடை / யாநும் இவ்வனைவோமும்  பி / ரமதேசமுடைய பள்ளிகள் / நாட்டரையநுக்கும் புலியந் / மாதநாந மகதை நாட்டு / பேரையநுக்கும் புலியந் / பெரியாநாந வந்நாட்டு நா / டாழ்வாநுக் / கும் புலியந் / நாந திக்கும் சா / த்தந் பெரியா / நுக்கும் சோ / மந் புலிய நு / க்கும் இவர்கள் / வங்குசத்துக் / கல்லது மற் / று பிராமண / ர் வெள்ளாளருள் /ளிட்டாருக்கும் / பள்ளிக்கும் வி / ற்க கடவதல் / லவாகவும் / சந்திராத்த / வல்  முள்ளத / னையும்  எங்க / ள் வங்குசம் / __ _ / _ _ _ / _ _ _ / _ _ _ / _ _ வாலிகண்டபுரத்து _ டின் முக்கூட்டு மொக்க எழு / கும் தென்பாற்கெல்லை / க்கு வடக்கும் மேற்பாற் கெல் / லை அனுக்கூர் எல்லைக்கு கிழக் / கும் வடபாற்கெல்லை சிறுவி / சலூர் எல்லைக்கு தெற்கும் இந்த நாலெல்லைக்குப் / பட்ட நிலம் இவர்கள் இ _ _ _ / க்கு வேண்டுவநவு / ஞ் செய்து சோப்பை _ – / த்து கொடு இருந்தமை _ _ _ ம / கதை நாட்டு பேரையந்  / புலியந் பெரியாநாந வந்நாட்டு  நாடாழ்வாநும் / _ _ _ _ / ணநாத வந்நாடுடையாநும் / இராசராச வந் நாடுடையா  / னும் விருபேரமுப் / _ _ _ _ / ன் வல்லவரையன் சத்தி / யம்                

    ஐயன் – தந்தை; பேரையன் – படைத்தலைவன்; நந்தமர்  – உடையார் சாதி; வங்குசம் – வம்சம்; பள்ளிகள் – வன்னியரில் ஒரு பிரிவினர், மொக்க – முழுவதுமாக; எழுகும் – பரவும், தோன்றும்; சொப்ப – செப்பமாக, neatly; கொடு – தீங்கு

    விளக்கம் : சோழ வேந்தன் மூன்றாம் குலோத்துங்கனின் 10 ஆம் ஆட்சி ஆண்டில் (கி.பி.1188), வடகரை கரிகாலக்கன்ன வளநாட்டு வந்நாட்டின் ஊரான பிரிதிசூர சதுர்வேதி மங்கலமான பிரம்மதேசத்தை எங்கள் தந்தை ராஜராஜ வந்நாடு உடையார் என்னும் அரசர் அல்லது கிழார் வள்ளுவன் புலியனான இருபத்தினால் பேரரையன் உள்ளிட்ட பள்ளிகளுக்கு காணி (உரிமை நிலம்) செய்து கொடுத்தார் என்று வல்லவரையன் கூறுகிறான். இந்த வல்லவரையன் தூண்டுதலில் 34ஆண்டுகள் கழித்து இப்போது சோழ வேந்தன் மூன்றாம் இராசராசனின் 6 ஆம் ஆட்சி ஆண்டில் (கி.பி. 1222) திருவையாறுடையான், கரிகாலச் சோழனான ஜனநாத வந்நாடுடையான், உடையார் சாதி நந்தமரில் நாந_ _ _ வந்நாடுடையான் ஆகியோர் வல்லவரையனுடன் ஒன்றாக சேர்ந்து எடுத்த முடிவு யாதெனில், “பிரம்மதேசத்தினுடைய பள்ளிகளான நாட்டரையனுக்கும், புலியன் மாதனான மகதை நாட்டு படைத் தலைவனுக்கும், புலியன் பெரியானான வந்நாட்டு நாடாழ்வானுக்கும், புலியானான திக்கும் சாத்தன் பெரியானுக்கும், சோமன் புலியனுக்கும் ஆகிய  இவர்கள் ஐந்து வம்சத்தை சேர்ந்த பள்ளிகள் தவிர்த்து வேறு எந்த பிராமணருக்கோ, வெள்ளாளருக்கோ அல்லது பள்ளிகளுக்கோ விளை நிலத்தை விற்ககூடாது. இதை  சந்திரனும் ஞாயிறும் உள்ள வரை எங்கள் வம்சத்தார் கடைபிடிக்க வேண்டும். இந்நிலம் வாலிகண்டபுரத்தின் _ _ _ டின் முக்கூட்டு இருந்து முழுவதும் பரவியுள்ள தென்பகுதி எல்லைக்கு வடக்கிலும் மேற்குப்பகுதி எல்லை அனுக்கூர் எல்லைக்கு கிழக்கும் வடபகுதி எல்லையில் சிறுவிசலூர் எல்லைக்கு தெற்கும் ஆக இந்த நான்கு எல்லைக்கும் உட்பட்ட நிலம் ஆகும்” என்று எல்லை சுட்டப்பட்டுள்ளது. இது நிறைவேற இவர்கள் வேண்டிய நடவடிக்கை எடுத்து செப்பமாக (fully, neatly) அதில் தீங்கில்லாமல் இருக்க வேண்டும். மகதை நாட்டு பேரையன், புலியன் பெரியானான வந்நாட்டு நாடாழ்வான், _ _ ஜனநாத வந்நாட்டுடையான், இராசராச வந்நாடுடையான், விருபேரமுப்_ _ _ ஆகியோர் ஐவரும் இவ்வாறு நடப்பதாக வல்லவரையனுக்கு சத்தியம் செய்து கொடுத்தனர்.

    வல்லவரையன் ஒரு குறுநில அரசன் அல்லது கிழான் என்று தெரிகிறது. இவன் தூண்டுதலால் 1222 இல் இந்த காணி விற்பனைத் தடை நடவடிக்கையை நந்தமரோடு (உடையார் சாதி) சேர்ந்து கொண்டு மேற்கொள்ளக் காரணம் எதுவாக இருக்கும் என்று எண்ணுங்கால் இது சமூக பாதுகாப்பு நடவடிக்கை அல்ல என்று மட்டும் புரிகிறது. ஏனெனில் பிராமணரோ பிள்ளைமாரோ பள்ளிகளோ இவர்களுக்கு அச்சமூட்டுபவர் அல்லர். எனவே இதை ஒரு ஒடுக்குமுறையின், அடக்குமுறையின் முதல்படியாக கொள்ள வேண்டி உள்ளது. இவர்களுக்கு தமது உழு நிலத்தை விற்றால் இவர்கள் அந்த ஊரில் வந்து குடியேறுவர். அத்தோடு நில்லாமல் இந்த அரசகுடி மண உறவுடைய படைச் சாதியார் போலவே தாமும் எல்லா உரிமைகளையும் பெற உரிமை கோருவர். அப்படி உரிமை கொடுத்தால் இந்த படைச் சாதிக்கும் புதிதாக உரிமை பெற்ற சாதியாருக்கும் வேறுபாடு இல்லாமல் போகும். முன்பு இடுப்பில் கச்சை கட்டிக் கொண்டு தம் முன் குனிந்து கைகட்டி நின்றவர் இனி அச்சமின்றி நிமிர்ந்து செல்வர். தமக்கு எந்த மதிப்பும் இனி இருக்காது  என்ற அச்ச எண்ணமே இதற்கு காரணமாக எனலாம். இதே காலகட்டத்தில் தான் கொங்கு நாட்டில் கொங்கு சோழன் வீரராசேந்திரனின் ஆட்சியில் அதற்கு முன் இல்லாத சில உரிமைகள் கோவில் பணி மக்களான கம்மாளர், சிவப்பிராமணர், தேவரடியார், கைக்கோளர், உவச்சர் ஆகியோர் தம் வீட்டு நன்மை தீமைகளுக்கு இரட்டை சங்கு, பேரிகை கொட்டலாம், வீட்டுச்  சுவருக்கு சுண்ணாம்புப் பூசலாம், வாயிலுக்கு இரட்டை கதவு வைக்கலாம், காலுக்கு செருப்பு அணியலாம், குதிரை ஏறுதல் போன்ற சலுகைகள் உரிமைகள் தரப்பட்டன என்பதை அங்கத்து கல்வெட்டுகள் உறுதி செய்கின்றன. எனவே இந்த வல்லவரையனின் கல்வெட்டின் மூலம் உண்மையாகவே இந்த சமூகத்தில் ஏற்றத் தாழ்வுகளை இந்த படைச் சாதியார் தான் அதிகாரத்தில் இருந்து கொண்டு நடப்பித்தனர் என்று உறுதியாகிறது. இந்த படைச் சாதியர் தான் இன்று தமிழகம் முழுவதும் நிலவுடைமை சாதிகளாக உள்ளனர். இவர்களில் வெள்ளைத் தோல் ஆரியர் அதிகம் உண்டு என்பது அரசகுடிக் கலப்பால் அது ஏற்பட்டது என்பதை உணர்க. இதாவது, அரசகுடிக்கு பெண் கொடுத்து அரசகுடிப் பெண்ணைக் கொண்டதால் இப்படி நேர்ந்தது எனலாம். அதனால் தான் பார் ஆண்டவர், மண் ஆண்டவர், அடக்கி ஆண்டவர், ஆண்ட பரம்பரை என்று இவர்கள் மார்த் தட்டுகின்றனர்.  இந்த கல்வெட்டின் மூலம் இக்கல்வெட்டு கூறும் உண்மைக்கு எதிர்மாறாக தான் கடந்த 150 ஆண்டுகளாக வெள்ளையர் முதற்கொண்டு தலித்தியர், திராவிடவியலர், கம்யூனித்துகள் போன்றோர் சமூகத்தில் உள்ள எல்லா ஏற்றத் தாழ்வையும் இந்து மதம் தான், சனாதன தர்மம் தான், பிராமணர் தான் ஏற்படுத்தினர் என்ற பேச்செல்லாம் பொய்ப் புனைவுகள் என்றாகிவிட்டன அன்றோ !! தமிழ்நாட்டின் 60,000 தமிழ்க் கல்வெட்டுகளும் முழுவதுமாக படிக்கப்பட்டு அச்சேறினால் வரலாற்றில் நடந்த உண்மைகள் அத்தனையும் ஆய்வின் வெளிச்சத்திற்கு வரும். பொய்கள் தகரும்.

    பார்வை நூல்: பெரம்பலூர் மாவட்ட கல்வெட்டுக்கள் செப்பேடுகள் பக். 154-156 ஆசிரியர்: இல. தியாகராஜன் & ஆவணம் 23, பக்.58 – 59

    அரியலூர் மாவட்டம் வாரணவாசி மருதமுத்துக் கவுண்டர் கொல்லையில் நடப்பட்டுள்ள 44 வரிக்  கற்பலகைக் கல்வெட்டு

    திருபுவனச் சக்க / ரவத்திகள் இராச / ராச தேவற்க்கு / யாண்டு 21 வதின் எதிராமா / ண்டு உடையார் திருவாலந்து / றை நாயனார் / தேவதாந / ங் கீழ்ச் சார் / ஆந வாரணவாசி / யில் காணி இ / வாரணவாசி / உடையாந் / வந்தவர் வி / ற்றல்  ஒற்றி வை / க்குதல் / செய்வார் தந் சா / தியாற்கு / விற்பது த / ன் சாதி த / விர விற்றார் / உண்டாகி / ல் நாயிலு(ம்) / பந்றியிலு(ம்) / கடையா / க குத்தி நூ / ர கடவதாக / வும் கீழ்ச்சா / ர் ஆந ஐஞ் / சு நாட்டுக லூற்கு / விலங் / கல் உண்டாகில் நா /ங்கள் / ளே ஏறட்டு / கொண்டு தீ / த்துக் குடுப் / போம் ஆக க / ல் வெட்டி நா / ட்டி குடுத்தோ / ம் அஞ்சு / நாட்டோம்.     

    எதிர் – அடுத்த , successive; காணி – விளை நிலம்; வந்தவர் – புதிதாக குடியேறியவர்; ஒற்றி – அடமானம்; கடையாக – கீழாக; நூர – அழிய; விலங்கல் – குறுக்காக, இடைஞ்சலாக; ஏறட்டு – பொறுப்பு ஏற்று, முன்வந்து; தீத்து – கழித்து, இல்லாதாதல், விலக்கு, முடித்தல்; அஞ்சு நாட்டோம் – சுருதிமான்கள் என்னும் மூப்பனார்கள்

    விளக்கம் : மூன்றாம் இராசராச சோழனின் 22 ஆம் ஆட்சி ஆண்டில் (கி.பி. 1238) திருவாலந்துறை இறைவனுக்கு தேவதானமாக கொடுக்கப்பட்ட கீழ்சாரான வாரணவாசியில் உள்ள விளை நிலத்தை இந்த வாரணவாசியில் வாழ்பவர் புதிதாக வருபவருக்கு விற்றாலோ அடமானம் வைத்தாலோ அது தன் சாதியாருக்கு மட்டுமே விற்பதாகவே இருக்க வேண்டும். தன் சாதியார் தவிர மாற்று சாதியாருக்கு விற்பாரானால் அவரை நாயை விட, பன்றியை விட கேவலமாகக் கருதி குத்திக் கொல்லுக.  கீழ்ச்சாரான ஐந்து நாட்டு ஊர்களுக்கு இடைஞ்சலாக ஏதேனும் நடக்குமானால் நாங்களே முன்வந்து அச்சிக்கலை முடித்து வைப்போம் என்று கல்வெட்டி புதைத்து நிறுத்தினோம் ஐந்து நாட்டு சுருதிமான்களான மூப்பனார்களோம் என்று மூப்பனார்கள் ஆணை வெளியிட்டுள்ளனர்.

    இந்த கல்வெட்டு மூலம் பிற சாதியார் தம் ஊர்களில் குடியேறுவதை தடுக்கும் ஒரு உத்தியாகவே இந்த நடவடிக்கையை படைச் சாதியாரான மூப்பனார்கள் மேற்கொள்கின்றனர் என்பது தெளிவு. இது ஏனெனில் உழு நிலம் வாங்குபவர் இந்த ஊரில் வந்து நிரந்தரமாக குடியேறுவார். பின் இந்த படைச்சாதி மூப்பனார்களைப் போல தாமும் எல்லா உரிமைகளையும் பெற கோரிக்கை வைப்பர். அதனால் அரசகுலத்துடன் மணவுறவு உள்ள படைச் சாதியாரான தமது கௌரவம் கெடும் என்ற அச்சம் தான் காரணம். இதே காலகட்டத்தில் கொங்கு  நாட்டில் வீரராசேந்திரனின் ஆட்சியில் கம்மாளர், சிவ பிராமணர், தேவரடியார், கைக்கோளர், உவச்சர் ஆகியோருக்கு முன்பு இல்லாத உரிமைகளான வீட்டு நன்மை தீமைகளுக்கு இரட்டை சங்கு, பேரிகை கொட்டல், வீட்டிற்கு சுண்ணாம்பு பூசல், இரட்டைக் கதவு வைத்தல், காலுக்கு செருப்பு அணிதல், குதிரை ஏறுதல் போன்ற சலுகைகள் தரப்பட்டன. அப்படி ஒரு உரிமைக் கொடுப்பு ஏதும் இவர்களது ஊரில் நிகழக் கூடாது என்ற கருத்தே இந்த நடவடிக்கைக்கு காரணம் என்பது மேலுள்ள சில கல்வெட்டுகளால் வெளிப்படுகிறது.

    பார்வை நூல்: அரியலூர் மாவட்டக் கல்வெட்டுக்கள், செப்பேடுகள் தொகுதி I பக். 267 – 269 ஆசிரியர்: இல. தியாகராஜன்

    திருச்சி மாவட்டம் அரியலூர் வட்டம் ஏறகுடி 20 வரிக் கல்வெட்டு

    1.  ஸ்வஸ்தி ஸ்ரீ  கொர்சடைய பன்மர் திருபுவனச் ச
    2. க்ரவத்திகள் ஸ்ரீ வீரபாண்டி தேவ 
    3. ற்க்கு யாண்டு 25 வது ஆவணி மாதம் 5 தி 
    4. நாள்  பழுவூர்பற்று திரணி நாட்டவரும் கண்
    5. டராதித்தன்  பிடாகைத் திரணி நாட்டவரும் இ
    6. றைக் குடியில் பெரியநாடான ஆலடியில் 
    7. (டியில்) நிறைவற நிறைந்து குறைவறக் கூ
    8. டி எங்களில் இசைந்து ஒருமைப் பிடிபா
    9. டு பண்ணின பரிசாவது பழுவூர் பற்றினா
    10. லும்  கண்டராதித்தன் பிடாகையிலும் பல பற்றி
    11.  லும் நாங்கள் கொண்டுடை வோமாய் நா 
    12. ங்கள் ஆண்டு போதுகிற நிலக் காணிகளும் 
    13. நத்தக் காவல் காணிகளும் காப்புக் காணி 
    14. களும் மற்றும் எப்பேற்பட்ட உரிமைகளும் 
    15. எங்கள் ஆண் மக்களே இந்தக் காணி ஆள
    16.  _ _ வும். இப்படி இசைந்து ஒரு
    17.  மைப் பிடிபாடு பண்ணினோம் பழுவூர்ப்பற்று ஐ
    18. ஞ்சு நாட்டவரும் கண்டராதித்தன்  பிடாகை ஐ
    19. ஞ்சு நாட்டவரும் இவ்வானைவரோம்.
    20.  இப்படிக்கு இவை சொக்கனார் எழுத்து.

    பிடாகை – உட்கிடையூர்; பிடிபாடு – வழிகாட்டு நெறி, guidelines; பரிசாவது – ஏற்பாடாவது; பற்று – ஒதுக்கிய நிலம்; ஆண்டு – கட்டுப்பாட்டில் அனுபவி; நத்தக் காவல் – வீட்டு மனைப் பிரிவு காவலர்; காப்புக் காணி – காவலுக்கு உட்பட விளை நிலம்

    விளக்கம் : ஜடாவர்ம வீரபாண்டியனின் 25 ஆவது ஆட்சி ஆண்டு (கி.பி.1278) ஆவணி மாதம் 5 ஆம் நாள் பழுவூர் பற்று திரணி நாட்டாரும் கண்டராதித்தன் உட்கிடையூர் திரணி நாட்டாரும் இறைக் குடியில் பெரிய நாடான ஆலடியில் பெருங் கூட்டமாகக் கூடி எங்களுக்கு நாங்களாகவே விரும்பி ஒரேகருத்துள் வழிகாட்டு நெறியை செய்து மேற்கொண்ட ஏற்பாடு யாதெனில், பழுவூர் பற்றிலும் கண்டராதித்தன் உட்கிடையூரிலும் இன்னும் பல பற்றிலும் நாங்கள் உரிமை கொண்டுள்ள நாங்கள் கட்டுப்படுத்தி அனுபவிக்கின்ற  உரிமை நிலங்களும், வீட்டுமனைக் காவலர் நிலங்களும் காவலுக்கு உட்பட்ட நிலங்களும் வேறு எந்த வகைத் தான உரிமைகளும் எமது ஆண் பிள்ளைகளே, அவர் வழியினரே இந்த உரிமை நிலங்களை ஆண்டு அனுபவிக்க வேண்டும். இப்படியாக விரும்பி ஒரேகருத்துள் வழிகாட்டு நெறியை செய்தோம் பழுவூர் பற்றில் வாழும் மூப்பனார் சாதி ஐந்து நாட்டவரும் கண்டராதித்தன் பிடாகை மூப்பனார் சாதி ஐந்து நாட்டவருமான இந்த அனைவரும். இப்படியாக இவை எல்லாம் சொக்கனார் எழுத்து.

    மேல் கல்வெட்டில் சொன்னபடியே என்ன தான் கடுமையாகப் பிற சாதிமாருக்கு நிலங்களை விற்க கூடாது என்று முடிவெடுத்து நடைமுறைப் படுத்தினாலும் பெண் வழியாகப் பிரித்துக் கொடுத்த நிலங்களை மாப்பிள்ளைகளும் பெண் வழிப் பேரர்களும் பிற சாதிமாருக்கு விற்பதால் தமது சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த முடியவில்லை. ஏனெனில் மாப்பிள்ளை, பேரர்களுக்கு  அவரது ஊர்களிலேயே தந்தை வழி நிலம் உள்ளதால் பெண் வீட்டார் நிலம் தேவைப்படாது. இந்த அனுபவத்தால் அடுத்த கட்ட நடவடிக்கையாக பெண்களுக்கு எந்த சொத்து உரிமையும் இல்லை என்ற முறையே சரியானது அப்போது தான் மாப்பிள்ளைகள் சொத்தை பிராமணருக்கோ பிள்ளைமாருக்கோ பள்ளிகளுக்கோ விற்கமுடியாது என்று கருதி பெண்ணுக்கு சொத்துரிமை ஏதும் இல்லை என்று அறிவித்து நடைமுறைப்படுத்தினர். இக்கல்வெட்டு மூலம் பெண்ணுக்கு சொத்துரிமை இந்துமதத்தால், மனுநெரியால், பிராமணர்களால் தடை செய்யப்படவில்லை அதை படைச் சாதியினர் தான் தடை செய்தனர் என்று தெளிவாகிறது அன்றோ!!

    பார்வை நூல்: ஆவணம் 6, 1995, பக். 33

    விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் சமணர் கோயில் கற்பலகை 13 வரிக் கல்வெட்டு

    1. ஸ்வஸ்திஸ்ரீ 
    2. சகலலோகச் 
    3. சக்கரவத்தி 
    4. இராசநாராயணன்
    5. மனுநெறி தப்பாத
    6. மல்லிநாதன். பெருந்தேவ
    7. ந் செட்டித் தெருவில் 
    8. வேற்று மனிதர் இருக்க
    9. கடவதல்ல வென்றும்,
    10. பரிசாம் விடுவரல்ல 
    11. வென்றும் சொ
    12. ன்னோம். இப்ப
    13. டி செய்க.     

    பரிசாம் – காசு, வாடகை

    விளக்கம் : இரண்டாம் இராசநாராயண சம்புவராயனான மல்லிநாதன் ஆட்சியில் வெட்டப்பட்ட ஆண்டுக்குறிப்பு ஏதும் இல்லாத கல்வெட்டு இது. இவனை மனுநெறி தப்பாதவன் என்று கூறி,” இவ்வூர் பெருந்தேவன் செட்டித் தெருவில் சமணர் அல்லாத வேற்று சாதியார், மதத்தார் எவரும் குடியிருக்கக் கூடாது என்றும், சமணர் எவரும் வேற்றாருக்கு வீட்டை வாடகைக்கு விடக்கூடாது என்றும் ஆணையிட்டான். அவ்வாறே நடந்து கொள்க”  என்று கல்வெட்டு தெரிவிக்கிறது.

    கல்வெட்டில் குறிக்கப்படும் செட்டித் தெருவில் வாழும் சமணர் தொழிலால் வணிகர், உணவால் சைவர் என்பதால் அவர்களாகவே வேந்தனிடம் கோரிக்கை வைத்து இந்த ஆணையை பெற்று வந்துள்ளனர். மேலும் வர்ண கோட்பாடு என்பது சிவ, விண்ணவ மதத்திற்கு மட்டும் என்று இல்லாமல் சமண, புத்த மதத்தவரையும் சேர்த்து சமூக முறைமையாகவே கட்டுப்படுத்தியுள்ளது அல்லது மதம் கடந்து அனைவரையும் உள்ளடக்கியது என்று தெரிகின்றது. வாடகை என்ற சொல் அப்போது இல்லை என்பதால் பரிசாம் என்ற சொல் ஆளப்பட்டுள்ளது. வேந்தனும், சமணரும் கூட சாதி ஆதரவாளராகவே இருந்துள்ளனர் என்பதற்கு இக்கல்வெட்டு பெரும் சான்று ஆகிறது.

    பார்வை நூல்: ஆவணம் இதழ் 17, பக். 132 ஆண்டு: 2006

    விழுப்புரம் மாவட்டம் திருக்கோவில் தென் சுவர் 4 வரிக் கல்வெட்டு

    1. ஸ்ரீமத் பூமிதேவி புத்ரஸ்ய சாதுர்வண்ண குலோத்பவம் சர்வலோகஹிதார்த்தாய சித்ரமேளஸ்ய 
    2. சாஸனம். திரிபுவனச் சக்ரவர்த்தி ஸ்ரீ ராஜராஜ தேவர்க்கு யாண்டு அஞ்சாவது நாடும் நகரமும் கூடி
    3. இருந்து காஞ்சிமாநகரில் செப்பேட்டுப்படி செக்கார் செய்யக் கடவ முறைமை எண்ணையு _ _ _
    4. வையிலே கூறி விற்க கடவந். இவனுக்கு உகச்சும் பறையும் கொட்டக் கடவதல்லன். ஒரு துறையில் நீருண்ணக் கடவனல்லன். தந்  மனையில் சேந்த வடக்கு திருவாசலுக்குப் புறம்பே _ _ _ துக்கு குடுக்ககடவ _ _ _ தல்லந். _ _ _ ல்லா தெற்றஞ் செய்யக் கடவதல்லந். வாஸ்துவுக்கும் _ _ _ ம்பி _ _ _  ம வெற்றிலையும் _ _ _  ந்து விற்கக்  கடவன். எண்ணை, விறகு மல்லாதும் _ _ _  கடவந்.     

    சித்ரமேள – சித்திரமேழி நாட்டார் வணிகக் குழு சபை; சாசனம் – சட்ட ஆவணம்; செக்கார் – எண்ணை வணிகர்; உ(வ)கச்சு – மத்தளம், தவில்; தெற்றம் – தவறு, பிழை; ஸ்ரீமத் – எங்கும் நிறைந்த இறைவன் திருவருளால்

    விளக்கம் : எங்கும் நிறைந்த இறைவன் திருவருளால் பூமியின் மைந்தர்களின், நால்வர்ணக் குலத்தில் பிறந்த, உலகமனைத்தின் நன்மைக்கும் பொருட் தேவைக்கும் வாழும் சித்திரமேழிநாட்டு வணிகக் குழுவின் சட்ட வரைவு என்று கல்வெட்டு சித்திரமேழியாரின்  மெய்க்கீர்த்தியுடன் தொடங்குகிறது. மூன்றாம் இராசராசனின் ஐந்தாம் ஆட்சி ஆண்டு 1219 இல் நாட்டுச் செட்டிகளும் நகரத்துச்  செட்டிகளும் ஒன்று கூடி இருந்து காஞ்சிமாநகரில் உள்ள செப்பேட்டின்படி செக்கில் எண்ணை பிழிவோர் செய்ய வேண்டிய வாழ்க்கை முறை என்று அறிவித்தது யாதெனில், “எண்ணையை _ _ விலை கூறி விற்க வேண்டும். (எப்படி விலை கூற வேண்டும் என்ற வரி சிதைந்து விட்டது). செக்கருக்கு வீட்டு நன்மை தீமைகளில் மத்தளமும் பறையும் கொட்ட உரிமை இல்லை. ஒரே நீர்த்துறையில் மேல் சாதியாரோடு நீர் மொண்டு, பருகக் கூடாது. தன் வீட்டு வடக்கு திருவாயிலுக்கு வெளியே _ _ _ கொடுக்கக் கூடாது. (எதை கொடுக்க என்ற வரி சிதைந்து விட்டது). _ _ பிழையாக செய்யக்கூடாது. (எதை என்பது சிதைந்து விட்டது). வாஸ்துவுக்கும் _ _ _ வெற்றிலை _ _ _ விற்கலாம். (இன்னொரு பொருள் எது என்பது சிதைந்து விட்டது. எண்ணை, விறகு அல்லாதது தவிர்த்து இவற்றை மட்டும் விற்கலாம் என்று வரையறை சொல்கிறது.

    படைப்பற்றுப் பள்ளருக்கும் பறையருக்கும் தமது உரிமை குறித்து பிணக்கு ஏற்பட்டு காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் கல்வெட்டை பார்த்து வந்ததில் ‘பள்ளருக்கு தவிலும் சேமக்கலமும் முழங்கலாம், ஐந்து பந்தர்கால் நடலாம்’ என்றும் பறையருக்கு ‘கொட்டு மேளதாளம்,12 பந்தர் கால் உரிமை உள்ளதையும்’ உறுதி செய்தனர் என்பதை புதுக்கோட்டை ஆலங்குடி கல்வெட்டு (ஆவணம் இதழ் 15, பக். 32) தெரிவிக்கிறது. இவர்களுக்கு கொடுத்த உரிமை கூட எண்ணை வணிகருக்கு, செக்கருக்குக்  கொடுக்கவில்லை என்பது கேள்விக்கு உரியதாக உள்ளது. இந்த வணிக சபையோர் தான் இதை அறிவிப்பதால் அவர்களையே இதற்கு முழு பொறுப்பு ஆக்குவதா அல்லது பின்னிருந்து இயக்கிய ஆட்சியாளர்களை காரணகர் ஆக்குவதா என்று தெரியவில்லை. ஆனால் இதே கால கட்டத்தில் தான் கோவில் பணி மக்களுக்கும் படைப்பற்று சாதிமாருக்கு சில உரிமைகள் கூடுதலாக தரப்பட்டதை வைத்து பார்க்கும் போது இந்த செக்கர்களும் தமக்கும் அது போல உரிமையை எதிர்பார்த்து கோரிக்கை வைத்திருக்க வேண்டும் என்று ஊகிக்க முடிகிறது. அந்த கோரிக்கையில் எண்ணை மட்டும் இன்றி சில கூடுதல் பொருள்களை காட்டாக வெற்றிலை, விறகு விற்பது ஆகிய உரிமைகள் தரப்பட்டு பழைய அதே சமூகக் கட்டுப்பாடுகள் தொடர்ந்தன என்ற முடிவிற்கு வரவேண்டியுள்ளது. கல்வெட்டில் குறிக்கப்படும் காஞ்சிபுரம் செப்பேடு கிடைத்தால் அது யார் ஆட்சியில் எழுதப்பட்டது, நால் வர்ணத்தை எப்படி சாதியாகப் பிரித்தார்கள். இதனால் படைச் சாதி அடைந்த பயன் என்ன? அத்தனையும் தெரிந்து விடும். ஆனால் திரு. நாகசாமி இது இந்த கோவிலுக்கு அமர்த்தப்பட்ட செக்கருக்கு மட்டுமான விதி என்கிறார். பின் ஏன் சித்திரமேழி சபை இதை அறிவிக்க வேண்டும்? கோவில் நிர்வாகத்தர் அல்லவா அறிவிக்க வேண்டும்?

    பார்வை நூல்: தென்னிந்திய கல்வெட்டுகள் மடல் 7 எண்: 865 & கல்வெட்டு காலாண்டு இதழ் 8 பக். 23 த நா தொ து வெளியீடு. 

    Share
  • கல்வெட்டு, இலக்கியப் புனைவு இல்லை

    கல்வெட்டு, இலக்கியப் புனைவு இல்லை

    சேசாத்திரி ஸ்ரீதரன்

    இனக்காப்பிற்காக, பிற இனத்தாரோடு போர் செய்த பழங்குடி நிலை முற்றாக மாறி, வேந்தர், மன்னர், அரையர், கிழார்-கோன்  ஆகிய  நாலடுக்கு அதிகார ஆட்சியாளர் தமது ஆட்சி நிலைக்கவும் நாடு விரிக்கவும் பழங்குடிகள் முதல் எளிய அப்பாவி மக்கள் வரை தமது உயிரை ஈகம் செய்தும் குடும்ப வாழ்வை அழித்தும் வாழ்கிற போரில் தள்ளினர். இதற்காகத் தேர்ந்த பயிற்சி உடைய வீரராகவும் உளவாளியாவும் அவர்களை மாற்றினர். இத்தகு நெறி கொண்ட போர் எளிய மக்களின் உலக வாழ்க்கையை, சமூக வாழ்க்கையை, சமய நம்பிக்கையை அடியோடு மாற்றிப் போட்டது என்பதே  வரலாறு. போரில் இறந்த வீரன் தெய்வமாக வணங்கப்பட்டான் குருதி சிந்தினமைக்காக அவன் குடும்பத்தாருக்கு நெய்த்தோர்பட்டி நிலம் வழங்கப்பட்டது என்பதே ஆறுதல் செய்தி. இவற்றுக்குச் சான்றாக இங்குச் சில நடுகல் கல்வெட்டுகளை விளங்கிக் கொள்ளலாம்.

    ஒரு முறை அமெரிக்கப் பெண் ஒருத்தி இந்தியா ஒரு ஆன்மீக பூமி என்கின்றீர் பின் ஏன் மக்கள் காமவயப்பட்டு இவ்வளவு அதிகப் பிள்ளை பெற்று இந்தியா மக்கள் தொகைப் பெருக்க நாடாக உள்ளது எனக் கேட்டாள். அதற்கு அவளுக்கு, இந்தியா ஆன்மீக பூமி தான் என்பதில் ஐயம் இல்லை. ஆனால் இந்திய மக்கள் எல்லோரும் யோக ஆன்மீக  வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்கவில்லை. எனவே இந்தியாவில் குறைந்த அளவு மக்கள் தான் உண்மையான ஆன்மீகத்தை நாடுபவராக உள்ளனர் என்று விடை கூறப்பட்டது. இந்தியாவில் தோன்றிய தந்திர யோகம், வேத மதம், சமணம், புத்தம்  ஆகியன புலால் கூடாது என்று உணவுக் கட்டுப்பாடு வைத்தன. பொய், களவு கூடாது என்றன. பெண் பித்து கூடாது என்றன. ஆனால் இவற்றை மக்கள் கடைப்பிடிக்க விடாதபடி தனது வெற்றி ஒன்றே குறியாகக் கொண்டு வேந்தர், மன்னர், அரசர், கோன் போன்ற ஆட்சியாளர்கள் போரில் ஈடுபடும் வீரருக்குப் புலால் விருந்தும், கள் விருந்தும் கொடுத்துப் போருக்கு அனுப்பினர். வலுவான படை அமைக்க, தம்முள்ளே வலுவான உறவு நீடிக்க ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களை மணந்தனர். அதைத் தான் எளிய போர் வீரனும் கடைப்பிடித்தான். விளைவு இரு குடும்பங்களைப் பேண முடியாமல் வறுமையில் உழலும் சூழல் ஏற்பட்டது. கல்விப் பரவல், கீழ்த்தட்டு குடிகளிடம் இல்லாமல் போனது. ஆதலால் மக்களிடம் ஒழுக்கக் குறைபாட்டால் ஆன்மீகம் மிகச் சிலருக்கு மட்டுமே வாய்த்ததாக அமைந்துவிட்டது.

    குமரி மாவட்டம் தோவாளை வட்டம் ஆரம்போலி(ஆரல்வாய்மொழி)யில் கிடைத்த 17 வரி நடுகல் கல்வெட்டு. இப்போது பத்மநாபபுரம் அரண்மனையில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

    1. ஸ்ரீ கோமாறஞ் சடையர்க்கு இ
    2. ருபத்தேழாமாண்டு சேரமா
    3. னார்  படை விழிஞத்து புறத்து 
    4. விட்டுழக்கக் கரைக்கோட்டை அழி
    5. ப்பான் வர பெருமானடிகளுள
    6. ன்பு மீக்குள இரண கீர்த்தி[யு] 
    7. ம் அமர்க்கழியும் உள் வீ
    8. ட்டினொற்றைச்  சேவகர் கோட்
    9. டை அழியாமை காத்தெறி
    10. ந்து  பலரும் பட்ட இ
    11. டத்து இரணகீர்த்தி உள் 
    12. வீட்டுச் சேவகன் கொழுவூ
    13. ர்க் கூற்றத்துப் பெருமூர்
    14. த் தாதம் பெருந்திளை [அ]
    15. த்திரத்தாற் பலரோடுங் 
    16. குத்திப் பட்டான் இரு
    17. பது கமாளி சேவகன்   

    விடு – திரிந்து; உழக்க  – அழிக்க; ஒற்றை – ஒற்றர் படை; தாதம் – மூலப்படை; திளை – போர்ப்படை, அத்திரம் – அம்பு; இருபது  – பதுங்கு படை, மறைந்து தாக்கும் படை, Ambush; கமாளி – பிரிவு, Division (கமர்  – நிலப்பிளவு. எனவே கம் என்றால் பிரிவு. கம் + ஆளி  = கமாளி – பிரிவினன்; சேவகன் – படைத்தலைவன்  

    விளக்கம் : நடுகல்லின் முன் பக்கம் வீரன் உருவம்  பொறிக்கப்பட்டுள்ளது. பின்புறம் கல்வெட்டுச் செய்தி உள்ளது.  இக்கல்வெட்டு கி.பி. 792இல் பராந்தக நெடுஞ்சடையன் என்னும் வரகுணனுக்கு 27ஆம் ஆட்சி ஆண்டில் வெட்டப்பட்டது. விழிஞம் திருவனந்தபுரத்திற்கு மேற்கே கடற்கரையில் அமைந்துள்ளது. ஏற்கெனவே மாறஞ்சடையன் சேரனிடம் இருந்து கைப்பற்றிய அவனது சில ஆட்சிப் பகுதிகளை மீட்கச் சேரமான் படை விழிஞத்தின் புறநகர்ப் பகுதியை அழித்தபடி, கரைக்கோட்டையை அழிக்க வந்தது. அப்போது பெருமானடிகள் பாண்டியனிடத்து மிக்க அன்பு கொண்ட இரணகீர்த்தி, அமர்கழி, அரண்மனை உள்வீட்டு ஒற்றர்படைத் தலைவன் ஆகியோர் கோட்டை அழிந்துவிடாமல் காத்து, பகைவரை அழித்து ஒழித்தனர். அதில் பலர் வீரச் சாவடைந்த இடத்தில் இரண கீர்த்தி, உள்மனை படைத்தலைவன், கொழுவூர் கூற்றத்தில் உள்ள பெருமூர் மூலப் படையின் பெரும்படைப் பிரிவு ஆகிய பலரோடும் சேர்ந்து பகைவர் பலரைக் குத்திக் கொன்று  வீரச்சாவடைந்தான் கோட்டைப் பதுங்கு படைப் பிரிவின் தலைவன். இவனது இயற்பெயர் குறிக்கப்படவில்லை. பட்டான் என்ற ஒருமைச் சொல் இரணகீர்த்தியையோ உள்மனை ஒற்றனையோ குறிக்கவில்லை என்பது தெளிவு. ஆரல்வாய்மொழி அவன் ஊர் என்பதால் இந்த நடுகல் அங்கே சுற்றத்தாரால் நிறுத்தப்பட்டது. இக்கல்வெட்டு பலரால் தவறாக விளக்கப்பட்டுள்ளது.

    பார்வை நூல்: கல்வெட்டு காலாண்டு இதழ் 72, பக்.9-10, ஆண்டு 2006, தமிழ்நாடு தொல்லியல் துறை வெளியீடு.

    தருமபுரி மாவட்டம் அகழ்வைப்பகத்தில் வைக்கப்பட்டுள்ள 12 வரி நடுகல் கல்வெட்டு

    1. ஸ்வஸ்திஸ்ரீ  அரிமிதைய மாவலி வாணராயர் 
    2. கங்கநாடும் புறமலைநாடும் கோயினூர்நாடும்
    3.  கோவூர்நாடும் தாயனூர்நாடும் பற்றநாடும் ம _ _ _ 
    4. அவர்க்குத் தாநாகிப் பிள்ளைய் கொண்டுள்
    5. புகுந்து வஞ்சித்து நாடு கொண்டானுளம்பன்.
    6. அவர் போரிற் றுஞ்சின பின்னைத் தேவிமார்
    7. கருப்பிணியருளராக அவகளைக் காத்திருந்
    8. தாண் பிள்ளைப் பெறுவதுந் தகடூர் புகுந்து
    9. நுளம்பன் பலத்தோடே துணிந்து நாடு பாவி
    10. நார்  சங்கரகுட்டியார் . அவரோடுடன்
    11. புகுந்து தகடூரில் பட்டார் நாகந்தை 
    12. சிறு குட்டியார். கல்நாடு    

    தாநாகி – அத்தானாகி; பலத்தோடு – படையுடன்; நாடுபாவி – நாடுவிரித்து, ஆக்கிரமித்து; பட்டான் – வீரசாவடைந்தான்; கல்நாடு – நெய்தோர்பட்டி, உதிரப்பட்டி

    விளக்கம் : இந்நடுகல் கல்வெட்டு 8-9ஆம் நூற்றாண்டினதாகக் கருதப்படுகிறது. இதில் எந்த வேந்தர் பெயரும் குறிப்பிடாதது அரிமிறைய மாவலி வாணராயர் சுதந்திர ஆட்சியை நடத்தினர் என்று கொள்ள வேண்டியுள்ளது. அவர் கங்க நாடு (தகடூர்), புறமலைநாடு (அரூர்), கோயினூர்நாடு, கோவூர்நாடு (ஊத்தங்கரை), தாயனூர்நாடு, பற்றநாடு என்று மிக பெரிய நிலப் பரப்பை ஆண்டுள்ளார். இவரது வாணர் குடும்பத்திற்கும் நுளம்பர் குடும்பத்திற்கும் இடையே முன்னம் திருமணம் நிகழ்ந்து நுளம்பன் இவருக்கு அத்தான் உறவாகிப் போனான். அந்த நுளம்பன் அரிமிறைய வாணன் குடும்பத்தில் பெண் எடுத்து மாப்பிள்ளை ஆகிப் போனான். அந்த உரிமையில் அரிமிறைய வாணனை வஞ்சித்து அவனது நாட்டின் ஒரு பகுதியைத் தனதாக்கிக் கொண்டான் நுளம்பன். இதனால் இருவருக்கும் நிகழ்ந்த போரில் அரிமிறைய வாணன் போரில் இறந்து விடுகிறான். இவனுடைய மனைவியர் அதன் பின் கருவுற்றிருப்பதை அறிய வர அதற்காக அவர்களைக் காத்து அதில்  ஒருத்தி ஆண் பிள்ளை பெற்றவுடன் படையுடன் தகடூரில் புகுந்து நுளம்பன் படையுடன் துணிந்து மோதி இழந்த நாட்டைக் கைப்பற்றினார் படைத்தலைவர் சங்கரக் குட்டியார். அவருடன் இணைந்து தகடூரில் படையோடு புகுந்து வீரச்சாவடைந்தார் நாகந்தை சிறு குட்டியார். இந்நடுகல் அவர் நினைவில் நடப்பட்டு அவரது குடும்பத்திற்கு நெய்த்தோர்பட்டி நிலம் தரப்பட்டது.

    முதலாம் மகேந்திர நுளம்பன் தான் அரிமிறைய வாணனை வஞ்சித்து நாடு கவர்ந்தான் என்று கொள்ளப்படுகிறது. வாணரும் நுளம்பரும் கன்னடர் ஆவர். தமிழகத்தில் இவர்களது அதிகாரம் பல்லவரால் ஏற்பட்டது.

    பார்வை நூல்: கல்வெட்டியல் 132, த நா தொ து வெளியீடு.

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் வட்டம் திண்டிவனம் அருகே கிடைத்த 3 வரி நடுகல் கல்வெட்டு

    1. கம்பப் பெருமாள் ஆனையாடின
    2. கொந்தளத்து இவ்வூர் அழிந்த நாள்
    3. பட்டான் இவ்வூர் கோதுபத்தி  மாத்ரகன்.

    கொந்தளத்து – அமளிகுமளி, turmoil; கோதுபத்தி (கோடு+பத்தி) – குலையாகப் பிரித்த படையணிப் பிரிவு, army division; divide as a battalion; மாத்ரகன் – அளவிடுபவன், surveyor, assessor

    விளக்கம் : 9ஆம் நூற்றாண்டில் வேந்தன் கம்ப வர்மப் பல்லவனே திண்டிவனம் அருகே யானைப் படையுடன் சென்று போர் புரிந்த போது இந்த ஊரே அமளி குமளியாக அழிந்த நாளில் இவ்வூரின் படைப்பிரிவில் அளப்போனாக உள்ள வீரன் இப்போரில் வீரச்சாவடைந்தான். அவன் இயற்பெயர் குறிப்பிடப்படவில்லை. இறந்த வீரன் எந்த அரசன் சார்பாக போரிட்டான் என்றும்   தெரியவில்லை. ஆண்டுக் குறிப்பும் இல்லை. இந்த ஊர், சிறு படைத் தளமாக இருந்ததாலே வேந்தனால் அழிக்கப்பட்டது. கம்ப வர்மன் நிருபதுங்கன், அபராஜித்தன் பதவி சண்டையில் யார் பக்கம் இருந்தான் என்று தெரியவில்லை. அப்படியானால் இது பல்லவர் இடையே நடந்த போராகக் கொள்ள முடியுமா?

    கல்வெட்டின்படி ஒவ்வொரு படையெடுப்பின் போதும் ஊரும் சேர்ந்தே அழிக்கப்படுகிறது என்பதை இக்கல்வெட்டு சுட்டுகிறது. இங்கே ஊர் என்பது படைவீரர் ஊர் என்று கொள்வதே சரியாகும்.

    பார்வை நூல்: கல்வெட்டியல் 131, த நா தொ து வெளியீடு.

    திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டம் கருங்காலிப்பாடி ஊரில் கண்ட 5 வரி நடுகல் கல்வெட்டு.

    1. தென் வேணாட்டு மேலைக் கரு
    2. ங்காலிப்பாடி சிலகில் காவேட்டுவைய
    3. ன் அடியேன் பறையன் பளியனேன் 
    4. ஊரழியப் போகே
    5. னென்று  பட்டான்  

    சிலகில் – பிளவில், இருமலைக்கு நடுவே; போகேன் – விடமாட்டேன்

    விளக்கம் : மன்னன் பெயரோ ஆண்டோ இல்லாத கல்வெட்டு இது. வேணாட்டின் தெற்கே உள்ள கருங்காலிப்பாடியின் மலை இடுக்கில் வாழும் காட்டின்  வேட்டுவத் தலைவனுக்கு அடியவனான பறையன் பளியன் என்பவன் இவ்வூரை பகைவர் அழிக்க விடமாட்டேன் என்று சூளுரைத்து, போரில் வீரச் சாவடைந்தான்.

    பளியர் என்போர் தமிழகப் பழங்குடி மக்கள் ஆவர். இன்று திண்டுக்கல், தென்காசிப் பகுதிகளில் மட்டும் சிறு தொகையில் வாழ்கின்றனர். ஆனால் இக்கல்வெட்டு அவர்கள் தமிழகத்தின் வட பகுதியான திருவண்ணாமலையிலும் வாழ்ந்ததைத் தெரிவிக்கிறது. மன்னர்கள் அமைதியாக வாழும் பழங்குடிகளையும் விட்டுவைக்கவில்லை. அவர்களையும் போரிலும் உளவிலும்  ஈடுபடுத்தினர். மேலும் இது போன்ற பழங்குடிகளே பின்னாளில் பறையர் என்ற சாதி தோன்றக் காரணமாக இருந்துள்ளனர் என்பதற்கு இக்கல்வெட்டு சான்று. ஆனால் இந்துமதம் தான், பிராமணர் தான் பட்டியலின மக்களை உருவாக்கினர் என்று அரசியல் மேடையிலும் எழுத்திலும் பொய்யுரைத்து வரலாற்றையே புனைவாகச் செய்துள்ளனர். இக்கல்வெட்டு அதைத் தகர்க்கிறது. தமிழ்நாடு தொல்லியல் துறை பன்றயன் புளியனேன் என்று தவறாகப் படித்து அச்சேற்றி ‘கல்வெட்டியல்’ என்ற நூலில் கடைசிப் பகுதியில் வெளியிட்டுள்ளது. இப்படித் தப்பும் தவறுமாக படித்து நூல் வெளியிட்டால் உண்மை தான் மறைக்கப்பட்டுவிடும்.

    பார்வை நூல்:  நடுகல் கல்வெட்டுகளும் சிற்பங்களும் தொகுதி I, பக். 341, ஆசிரியர் ச. கிருஷ்ணமூர்த்தி

    தருமபுரி மாவட்டம் ஊத்தங்கரை வட்டம் ஒட்டம்பட்டி 6 வரி நடுகல் கல்வெட்டு

    1. சிவமார பருமர்க்கு யாண்டு யிருபத்
    2. திரண்டாவது மாவலி வாணராயர் க
    3. ங்க நாடாள இந்திரன் தகடூ
    4. ர் மேல்வந்த ஞான்று மறவனா
    5. ர் சேவகன் கண்ணனூருடை கமிய
    6. த் தழமன் பட்டான்.  

    கம்மிய – கருமார் (அ) கைவினைஞன், blacksmith / craftsman; தழமன் – தழல் என்றால் நெருப்பு. எனவே உலைக்கு நெருப்பைப் பேணுபவன்; சேவகன் – படைத்தலைவன் 

    விளக்கம் :  நுளம்ப வேந்தன் சிவமாறனின் 22ஆம் ஆட்சி ஆண்டில் அவனுக்கு அடங்கிய வாண மன்னன் மாவலி வாணராயன் கங்க நாட்டை (தகடூர்) ஆண்டுகொண்டிருக்கையில் வைடும்ப அல்லது தெலுங்குச் சோழன் மன்னன் இந்திரன் தகடூர் மேல் படை கொண்டு வந்த போது இந்த வாணனுக்கு அடிபணிந்த ஆட்சியாளன் மறவனுடைய படைத்தலைவனாக உள்ள கண்ணனூருடைய கருமான் உலைக்கு நெருப்பு எரிப்பவன் வீரச் சாவடைந்தான். இவன் இயற்பெயர் தெரியவில்லை. இவன் போர்க்கருவி செய்பவனாய் இருந்திருப்பான் எனத் தெரிகிறது. இதன் மூலம் ஒவ்வொரு படையும் தனியே தனக்கென கருமாரை வைத்திருந்தன என்று தெரிகிறது. அதே நேரம் படையெடுத்து வருபவன் முதலில் அழிப்பது ஆயுதம் செய்பவரை ஆயுத சாலையைத் தான் என்பதை இக்கல்வெட்டு நமக்கு சுட்டுகிறது.

    பார்வை நூல்:  நடுகல் கல்வெட்டுகளும் சிற்பங்களும் தொகுதி I, பக். 348, ஆசிரியர் ச. கிருஷ்ணமூர்த்தி

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வட்டம் அங்குத்திசுனை  7 வரி வட்டெழுத்து நடுகல் கல்வெட்டு.

    1. ஸ்வஸ்திஸ்ரீ  நுளம்பன் மகன் 
    2. சிவமாறன் வூறளிய்க் ஆழுடைய 
    3. போயையந் மகந் துட்டப்பநுக்கு  
    4. தம்பி முளித்தயந் செய்வித்தாந். 
    5. தச்சான் வெந்றி 
    6. சிரியன் நாட்டி
    7. னக் கல்      

    ஆளுடைய – தலைமை செய்யும்; போ ஐயன் – வில் வேடுவர் தலைவன், bowman.  போ + அன் = போவன் அல்லது போயன் என் ஆகும். போ என்பது வளைந்த வில்லை குறித்தது. ஆங்கிலச் சொல் Bow உடன் தொடர்புடையது. 

    விளக்கம் : மேலுள்ள ஒட்டம்பட்டி கல்வெட்டுக்கு முற்பட்ட 8ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டு இது. மாவலி வாணனைச் சிவமாற நுளம்பன் வென்று ஆட்படுத்துவதற்கு முன் நிகழ்ந்தது எனக் கொள்ளலாம். சிவமாறன் ஊத்தங்கரை மேல் படையெடுத்து ஊரை அழித்த போது போயர் தலைவனுக்கு மூத்த மகன் துட்டப்பன் அதில் வீரச்சாவடைந்தான். அவன் தம்பி முழித்தயன் இந்த நடுகல்லைச் செய்வித்தான். சிற்பி வென்றி சிரியன் இந்தக் கல்லையும் எழுத்தையும் செதுக்கி நிறுத்தினான். இதில் மான் வேட்டையாடுவது போன்ற உருவப் பொறிப்பு போயர் வேட்டுவர் என்று சுட்டுகிறது. இவர்கள் போர்த் தொழிலை ஏற்றவர்கள். இந்தப் பழங்குடிகள் பின்னாளில் தருமபுரியில் குடியேறிய தெலுங்கு ஒட்டருடன் கலந்துவிட்டனரோ? ஏனெனில் இவர் பெயரை இன்று ஒட்டர்கள் பயன்படுத்துவதாகத் தெரிகிறது.  

    பார்வை நூல்: கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்றுப் பேரவை காணொளி

    இராமநாதபுரம் மாவட்டம், முதுகுடி ஊர் அருகில் உள்ள கருங்குளம் ஏரி 16 வரிக் கல்வெட்டு

    1. ____ 
    2. குலைசேகர தேவ
    3. ர்க்கு யாண்டு 34 வ
    4. துக் கருங்குளத்திர்க் 
    5. கு ஒரு பழி உண்
    6. டானபடியாலே, 
    7. இப்பழிக்கு இவ்வூர் 
    8. குடும்பரில் பெரிய 
    9. தேவப் பள்ளன் அணை 
    10. வெட்டிப் போகையா
    11. லே இவன் மகளுக்கு 
    12. ஊரார்களிட்ட உதி
    13. ரப்பட்டி குடுத்தபடி தபான
    14. வ  நிலம் அரை மா  அணை 
    15. நிலம் சந்திராதித்தவன் 
    16. மானி போவிப்பர் 
    17. கா _ _ _   

    பழி – தீவினை; அணை – கரை; தபானவ – வறண்ட புஞ்சை; மானி – மதித்து; போவி – செல்வதாக   

    விளக்கம் : மாறவர்மன் குலசேகரப் பாண்டியனின் 34ஆவது ஆட்சி ஆண்டு 1302 இல் இராமநாதபுரம் முதுகுடி ஊருக்கு அருகில் உள்ள கருங்குளத்தில் கரை உடைந்துவிட்டது. இந்த உடைப்பை இந்த ஊர் குடும்பரில் பெரிய தேவப் பள்ளன் கரைவெட்டி தடுத்தான். அதில் அவன் இறந்துவிடுகிறான். இதனால் பரிவுற்ற ஊர் மக்கள் அவன் மகளுக்கு நெய்த்தோர்பட்டியாக குளக்கரைக்கு ஒட்டி அரைமா வறண்ட புஞ்சை நிலத்தைக் கொடுத்தனர். இதைச் சந்திரன் சூரியன் உள்ள கால அளவும் மதித்துச் செல்ல வேண்டும் என்று குறித்தனர். நெய்தோர்பட்டி என்ற குறிப்பு பெரிய தேவ பள்ளன் இந்தக் கரையைப் பாதுகாப்பதில் எடுத்துக்கொண்ட உயிர்ச் சேதத்திற்காகக் கொடுத்திருக்கலாம்.       

    பார்வை நூல்: கொங்கு இதழ் 25. செ இராசு, திசம்பர் 1972

    வேலூர் மாவட்டம், குடியாத்தம் வட்டம், சின்னத்தாமல்செறு கிராமத்தில் கற்பலகையில் செதுக்கிய நடுகல்லில் உள்ள 8 வரிக் கல்வெட்டு.

    1. செல்(லை)ளை
    2.  வூரர் அடியக
    3. ன் பம்மான்
    4. டை மகன்  ஆ
    5. னை கொன்
    6. றும் நத்தம்
    7. கொண்டா 
    8. ந்  

    அடியகன் – ஏவலன், தொண்டன்; பம்மாண்டி – பறை அடிப்பவன்;  நத்தம் – நெய்த்தோர்பட்டி நிலம்

    விளக்கம் : மன்னன் பெயரோ ஆண்டுக் குறிப்போ இல்லாத தனி நடுகல் கல்வெட்டு. வீரன் இடக்கையில் கேடயமும் வலக்கையில் குறுவாளும் ஏந்தியுள்ளான். செல்லைவூரரின் ஏவலன் பறையடிப்பவனின் அடியாள் வீரன் ஊரில் அட்டகாசம் செய்த யானையைக் கொன்று தானும் வீரச்சாவடைந்து விடுகிறான். அதற்காக அவன் வீட்டாருக்கு நெய்தோர்பட்டி நிலம் ஊராரால் கொடுக்கப்பட்டது. வீரன் பெயர்க் குறிப்பு இல்லை. பம்மாண்டை பெயரும் இல்லை.

    பார்வை நூல்: நடுகல் கல்வெட்டுகளும் சிற்பங்களும் தொகுதி II, பக்.130, ஆசிரியர் ச. கிருஷ்ணமூர்த்தி

    சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன் பாளையம் 7 வரி நடுகல் எருது பிடி கல்வெட்டு

    1. கோவுரிச் சங்கன் 
    2. கருவந் துறையி
    3. லே எருது விளை
    4. யாடி பட்டான். 
    5. சங்கன் மகன் பெ
    6. ரிய பயலு நட்ட க
    7. ல்லு 

    எருது விளையாடி – காளை அடக்கி; கோ – ஆனேறு, நூல் கோற்றல்; உரி – களைதல், கழற்றுதல் 

    விளக்கம் : மன்னன் பெயர், ஆண்டுக் குறிப்பு, விளையாடிய காரணம் ஏதும் இல்லாத நடுகல் கல்வெட்டு. ஆத்தூர் கருமந்துறையில் 400 ஆண்டுகள் முன் நடந்த எருது பிடித்து, கழுத்தில் கட்டியதை உருவும் போட்டியில் விளையாடிய போது அந்த எருது முட்டி சங்கன் சாவடைந்தான். இவனது மூத்த மகன் இதன் நினைவாக நடுகல் நட்டான். இதே விளையாட்டாக இருந்ததாலோ என்னவோ அவன் “கோவுரி” என்ற அடையுடன் அழைக்கப்படுகிறான். இன்றைய சல்லிக்கட்டு அக்காலத்தே கொங்கில் கோவுரி எனப்பட்டது.

    பார்வை நூல்: கல்வெட்டு காலாண்டு இதழ் 15, பக். 14 த நா தொ து வெளியீடு

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் வட்டம் குலசேகரபுரம் ஊரில் கிட்டிய இறுதி 6 வரிக் கல்வெட்டு

    1. _ _ _ ஆற்றுந பெருமகன் உய
    2. ர் பிரம்மதாய்ய பெற்றமை தெருட்டு
    3. கொல்லாறு விட நடந்து கொண்
    4. டார் மணற்குடி பார்ப்பார் சா
    5. ன்றார். வடக்குஇருக்கை அறி நாட்டா
    6. த் தெல்லையாக நட்ட கல் 

    தெருட்டு – அறிவிப்பு; கொல்லாறு – ஏச்சு பேச்சு, ஏளனம் (அ) தீங்கான பேச்சு, கொல் குறும்பு, act of teasing; இருக்கை – குடியிருப்பு; நாட்டாத்து – ஊர்;

    விளக்கம் : கடைசி ஆறு வரிகள் தவிர்த்து மேல் இருந்த கல்வெட்டு வரிகள் உடைந்து சிதைந்துவிட்டன. எனவே முழுச் செய்தியும் அறிய முடியவில்லை.  _ _ _ ஆற்றுந பெருமகன் உயர்ந்த  பிரம்மதாயம் / பிரம்ம தேயம் பெற்றதை அறிவித்தவுடன் மணற்குடி பார்ப்பாரச் சான்றோர் தம் ஏச்சு பேச்சுகளை விட்டு நல்லமுறையில் நடந்து கொண்டனர். இந்தப் பிரம்மதேயத்தின் வடக்குக் குடியிருப்பை அறிந்துகொள்ள ஊர் எல்லையாக நடப்பட்ட கல் இது. பெருமகன் என்பது ஆட்சியாளனைக் குறிக்கிறது. அவன் மணற்குடி பார்ப்பாரச் சான்றோரரான பிராமணருக்கு இறையிலி நிலக்கொடை அறிவித்துள்ளான். அதன் வடக்கு எல்லை இது என்று கல்வெட்டு அறிவிக்கின்றது. இதன் மூலம் பார்ப்பாரச் சான்றார் என்பது பிராமணரைக் குறிப்பது தான் நாடார் குலத்தவரை குறிப்பதல்ல என்பது தெளிவு. சிலர் இதற்கு நாடாருள் பார்ப்பர் என்று தவறாகக் கருத்துத் தெரிவிக்கின்றனர். பிரம்மதேயம் பிராமணருக்கு மட்டும் கொடுக்கப்படுவது என்பதைக் கருதவேண்டும். கல்வெட்டில் இ, ய, த, ட எழுத்துகள் பழமையானவை. இக்கல்வெட்டில் குறில் எழுத்துகளும் மெய் எழுத்துகளும் புள்ளியிடப்பட்டுள்ளதால் இது  7ஆம் நூற்றாண்டினது என்று தெரிகிறது. இதே போல மதுரை மேலூரின் பெருமாள் மலை அருகே 13ஆம் நூற்றாண்டின் “நாயனார் திருமுகப்படி திருமுகூர்  நாட்டு தேவதானம் பட்டூர்க்கு எல்லை” எல்லைக் கல்வெட்டு கிட்டியது ஒப்பு நோக்கத் தக்கது.

    பார்வை நூல்:  நடுகல் கல்வெட்டுகளும் சிற்பங்களும் தொகுதி II, பக். 176, ஆசிரியர் ச. கிருஷ்ணமூர்த்தி. கல்வெட்டு காலாண்டு இதழ் 11 பக்.33

    திண்டுக்கல் மாவட்டம்  ஒட்டன்சத்திரம் வட்டம் கப்பலூர்ப்பட்டியில் உள்ள 23 வரி கல்வெட்டு

    ஸ்ரீ கோக்கண்டன் மாந்தரனுக்குச் செல்லா நின்ற யாண்டு அ (8). இவ்வாண்டு (பெரு)மாள் கீழ்  வாழ்ந்து மழநாட்டான் மூர்க் கூற்றத்துக் கீழ்க்கூற்றில் எதகம்பாடி வெள்ளான் கூத்தன் காடி நிருத்தியான நெருப்பறையாசாரிகள் மக னிருத்தி  விரதி (சூரன்) றந்தையாரையுந் தாயாரையுஞ் சாத்திச் செய்வித்த கிணறும் வட்டும்.    

    பெருமாள் – மன்னன்; காடிக்காரம்  – நெருப்புக்கல், ஆயக்கல், silver nitrate acid; நிருத்தி – தேய்க்கும், அழிக்கும்; நெருப்பு அறை – நெருப்புக் கல்; வட்டு – நீர் முகக்கும் கலன்     

    விளக்கம் : மன்னன் கோக்கண்டன் மாந்தரனின் எட்டாம் ஆட்சி ஆண்டுக் கல்வெட்டு. இவன் களப்பிர மன்னன் என்றும் சேரன் என்றும் இரு வேறு கருத்து நிலவுகிறது. இந்த மன்னன் கீழ் நேரடியாகப் பணி செய்து வாழ்பவனான மழநாட்டான்மூர் கூற்றத்தின் கிழக்கில் எதகம்பாடி ஊரைச் சேர்ந்த நெருப்புக்கல் உரைக்கும் நெருப்புக் கல் ஆசாரி வெள்ளான் கூத்தனுடைய மகன் விரதி சூரன் என்பவன் தன் தந்தையையும் (வெள்ளான் கூத்தன்) தாயையும் நினைவில் கொண்டு பொது மக்கள் பயனுற கிணறும் நீர்க்கலனும் செய்தான். இவனும் இவன் தந்தையும் உலோகப் பணியோடு (metallurgy) தொடர்புடையவர் போலும்.

    பார்வை நூல்:  கல்வெட்டு காலாண்டு இதழ் 85, ஆண்டு: 2011 பக்.4 & இதழ் 66 பக். 42, ஆண்டு: 2005

    குமரி மாவட்டம் கல்குளம் வட்டம் புலியூர்க் குறிச்சி கிராமத்தில் உள்ள உதயகிரிக் கோட்டை 13 வரி கிருத்துவர் கல்லறைக்  கல்வெட்டு

    1. லோகத்திலே பரதேசி கிறிஸ்துவனே 
    2. நில்லு நினையுங்கோ 
    3. இவ்விடத்திலே யிருக்கிற 
    4. வலிய காப்பிதாருட மகன் செரிய கப்பித்தான் 
    5. யுவான் யஸ்தாக்கியோ வென்தொ தெலுனுவ  9(00)
    6. 2(0)1 ஆண்டு ஆவணி மாதம் 12 நாள் செவாயி  கிளமைக்கு பிற
    7. ந்து  9(00)4(0) ஆண்டு சித்திரை மாதம் 2(0)2 நாள் திங்கள் கிள
    8. மைக்கு களக்காட்டுச் சண்டையிலே காயப்பட்டு 
    9. 9(00)4(0)1 ஆண்டு புரட்டாசி மாதம் 9 நாள் சரீரம் 
    10. விழுந்து போகவும் செய்து அவருடைய 
    11. ஆற்பனாவுக்கு உதவியாக சறு 
    12. வேசுரனோட வேண்டி
    13. க் கொள்ளவும் ஆமென். 

    பரதேசி – வெளிநாட்டு; நினை – அஞ்சலி; வலிய – பெரிய; கப்பித்தான் – படையணி தலைவன், captain; செரிய – சிறிய; ஆற்பனா – ஆத்மா;      

    விளக்கம் : திருவிதாங்கூர் அரசர் மார்த்தாண்ட வர்மாவின் படைத்தளபதி தச்சு வீரர் திலெனாய் (Euastachius Benedictus de  Lannoy (1715 – 1777). இவருடைய மகன் சிறிய கப்பித்தான் யுவான் யஸ்தாக்கி யோவென் தொ தெலுனு (Yuvan Euastace Johannes de Lannoy) கொல்லம் ஆண்டு 921 (1745) இல் ஆவணி மாதம் 12 நாள் செவ்வாய்க் கிழமையில் பிறந்தவர். இவர் தமது 19 வயதில் கொல்லம் ஆண்டு 940 (1764) இல் சித்திரை மாதம் 22 நாளில் திங்கட்கிழமை அன்று களக்காட்டுப் போரில் காயமடைந்தார். பின் 8 மாதம் 17 நாள் கழித்து 941 (1765) இல் புரட்டாசி மாதம் 9 ஆம்  நாளில் 20 ஆம் வயதில் உடலை விட்டு ஆவி பிரிந்தது. அவருடைய ஆன்மாவுக்கு ஆறுதலாக உலகத்தில் வாழும் வெள்ளை நாட்டவரே இங்கு நின்று நினைத்து எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்க . ஆமென்!! இவர் தமிழகத்தில் குடி இருந்ததால் உரோமன் கத்தோலிக்க முறைப்படி புதைக்கப்பட்டாலும் இவரது பிறப்பும் இறப்பும் தமிழில் எழுதப்பட்டது. இவருக்கு பின்னர் இறந்த தந்தை திலெனொய் மகனுக்கு அருகேயே புதைக்கப்பட்டு அவரது கல்லறை ஆவணம் (epithet) தமிழ், இலத்தின் மொழிகளில் எழுதப்பட்டுள்ளது.

    பார்வை நூல்: கல்வெட்டு  காலாண்டு இதழ் 72, பக்.9 ஆண்டு 2006

    மயிலாடுதுறை மாவட்டம் திருவீழிமிழலை (திருவிந்தளூர் செப்பேடு, பக்கம். 186)

    நமக்கு யாண்டு முப்பத்தஞ்சாவது நாள் நூற்றிருபத்தொன்றினால் வரியிலிட்டுக் குடுத்தபடியும் நமக்கு யாண்டு முப்பத்தஞ்சாவது நாள் நூற்றினால் கங்கைகொண்ட சோழபுரத்தில் நம் வீடு முடிகொண்டசோழநில் தெற்கில் மறைவிடக் கூடத்தில் நாம் கூறை உடா நிற்க விக்கிரம சோழபாண்டியந் நமக்குச் சொல்லி நூற்று முப்பத்தின்மர் சதுர்வேதி பட்டர்களுக்கு ப்ரஹ்மதேய இறையிலியாக குடுப்பித்த சோழகுல நாராயணச் சதுர்வேதி மங்கலம் _ _ _   

    வரியிலிட்டு – எழுதிக் கொடுத்த; வீடு – அரண்மனை; கூறை உடா  – ஆடை உடுத்தாமல் 

    விளக்கம் : முதலாம் இராசேந்திர சோழனின் மகன் வேந்தன் இராசாதிராசனுக்கு 35ஆம் ஆட்சி ஆண்டில் 121 ஆம் நாளில் எழுத்தில் எழுதிக் கொடுத்த அறிவிப்பு ஆணை யாதெனில், எனக்கு 35ஆம் ஆட்சி ஆண்டில் நாள் 100 அன்று கங்கைகொண்ட சோழபுரத்தில் என் அரண்மனை முடிகொண்ட சோழனில் தெற்குத் திசையில் இருந்த மறைவிடக் கூடத்தில் நான் ஆடை ஏதும் உடுத்தாமல் (இலங்கோடுடன்) நின்றிருக்க, விக்கிரம சோழபாண்டியன் என்னிடம் சொல்லியதால் 130 சதுர்வேதம் கற்ற பிராமணர்களுக்கு பிரம்மதேய இறையிலிக் கொடையாக கொடுக்கப்பட்ட  ஊர் சோழகுல நாராயணச் சதுர்வேதி மங்கலம் ஆகும்.

    வேந்தன் எண்ணெய்க் குளியலாட எண்ணெய் பூசி இருந்ததால் ஆடை உடுத்தாமல் இருந்திருக்கலாம். மேலும் அமைச்சன் அல்லது அணுக்கச் செயலன் விக்கிரம சோழபாண்டியன் இப்படி மறைவிடம் செல்லும் வகையில் வேந்தனுக்கு நெருங்கிய குருதி உறவினனாக இருத்தல் வேண்டும். முதலாம் இராசேந்திரன் தனது மகனை மதுரைக்கு ஆட்சியாளனாக அமர்த்திய போது அவனுக்குச் சோழ பாண்டியன் என்று பட்டம் சூட்டினான் என்பதில் இருந்து இது உறுதியாகிறது. இராசாதிராசன் 100 ஆம் நாளில் இந்தக் கொடைக்கு ஒப்புதல் அளித்தாலும் ஓலை ஆணை என்னவோ 21 நாள் கழித்துத் தான் எழுதி வழங்கப்பட்டது. ஆக அதன் ஏற்பாட்டிற்கு இத்தனை நாள் ஆகியுள்ளது.

    பார்வை நூல்: கங்கைகொண்ட சோழபுரம் கல்வெட்டுகள், பக். 101, இல. தியாகராஜன்.

    சதிகல் கல்வெட்டு (இடம் கொங்கின் வடமேற்கு பகுதியாக இருக்கலாம். ஊர்ப் பெயர் தெரியவில்லை)

    வீரபிரதாப ஸ்ரீ  _ _ _ _ ராயமகாராயர்  பிருத்விராச்சசியம் செய்திருக்க சக வருஷம் 1339 ஆவது ஹேவிளம்பி சம்வத்சரத்து பாத்திரபதசுத்த பஞ்சமி  ஸ்ரீ சகலாட்சபுரத்தும்  ரெ _ _ மகன் புக்கரன் ஸ்வரக்கத்தன் ஆனதில் அவன் பெண்டாட்டியர் மூவர் தோளும் கையும் கொடுத்த கம்பம் 

    சொர்க்கத்தன் – இறந்து சொர்க்கம் புகுந்தவன் 

    விளக்கம் : விசயநகர வேந்தன் வீர விஜயராய மகாராயர் மண்ணுலகு ஆண்டு கொண்டிருந்த சக ஆண்டு 1339 (கி.பி.1417) இல் ஏவிளம்பி ஆண்டில் பாத்திரபத சுத்த பஞ்சமி அன்று ஸ்ரீ சகலாட்ச புரத்தும்  ரெ _ _  மகன் புக்கரன் இறந்து சொர்க்கம் ஏகினபடியால் அவனது மூன்று மனைவியரும் உடன்கட்டை ஏறி மாண்டதன் நினைவாகத் தோளும் கையும் கொடுத்த கம்பம்  நாட்டப்பட்டது.

    இறந்த பெண்டிரின் நினைவாக இவ்வாறான சிற்பம் அல்லது சதிக்கல் கல்வெட்டுகளுடன் இருப்பது தமிழகத்தில் மிக அரிது. சதிக்கல் கருநாடகத்தில் அதிகமாக காணப்படுகிறது.  

    பார்வை நூல்: செந்தமிழ் தொகுதி 3 & தென்னிந்திய வீரக் கற்கள், பக். 379-380, வெ. கேசவராஜ்

    Share
  • இறந்த மன்னனோடு உயிருடன் புதைக்கப்பட்ட எளியோர் கல்வெட்டு

    இறந்த மன்னனோடு உயிருடன் புதைக்கப்பட்ட எளியோர் கல்வெட்டு

    சேசாத்திரி ஸ்ரீதரன்

    பண்டைய கால மன்னர் தம் ஆட்சி, அதிகாரம் நிலைப்பதிலேயே குறியாக இருந்ததால் பொது மக்கள் உரிமைகள், நலன்களை அடியோடு புறந்தள்ளினர். மன்னர்கள் தம் நலன், நம்பிக்கை ஆகியவற்றுக்காக பல சடங்கு, சம்பிரதாயங்களை கடைபிடித்தனர். காட்டாக, சதி என்னும் உடன்கட்டை, உடன் பள்ளிகொள்ளல் என்னும் கீழ்கொண்டி முறையில் எளியோரை உயிர் பலி கொடுத்தல் ஆகியவற்றை இறப்பிற்கு பிற்பட்ட வாழ்க்கை, சொர்க்கம் என்னும் நம்பிக்கையில் செய்தனர். உடன் பள்ளி என்னும் உயிர் பலி பண்டு பல்வேறு நாகரிகங்களில் கடைபிடிக்கப்பட்டது தொல்லியல் ஆய்வுகள் மூலம் அறியப்பட்டுள்ளன. இந்த இறப்பின் பிற்பட்ட வாழ்க்கை, சொர்க்கம் ஆகிய நம்பிக்கைகள் மேலை ஆசியாவில் தோன்றி அங்கிருந்து இங்கு வந்தேறிய வேளிர்களால் இந்தியாவிலும் பரவியதாக கருதலாம். திருவண்ணாமலை தாமரைப் பாக்கத்தில் அக்னீசுவரர் கோவிலில் பாடும் பெண்டிர் மூவர் இறந்த பிருதிகங்க மன்னனுடன் உயிருடன் புதைக்கப்பட்ட செய்தி கூறும் தொடர்புடைய மூன்று கல்வெட்டுகள் உள்ளன. இதே போல மன்னனுடன் எளியோர் புதைக்கப்பட்ட கல்வெட்டுகள் கருநாடகம், ஆந்திரத்தில் கீள்கொண்டி என்ற குறிப்புடன் அறியப்படுவதோடு இதை ஒப்பிடலாம்.

    மன்னர்களான கங்கர், நொளம்பர், பிருதிகங்கர், அதியமான், வாணர் போன்றோர் சங்கப் புலவர் கபிலரால்  குறிப்பிடப்படும் 12 வேளிராக கருத இடமுள்ளது. காரணம் இவர்கள் சுமேரிய நாகரிக வழக்கமான இறந்தோருடன் உயிருடன் இருப்பவரை புதைக்கும் வழக்கத்தை கடைபிடித்ததே ஆகும். ஏதோ ஒரு இடத்தில் வழங்கிய வழக்கத்தை தம் முன்னோர் வழக்கமாக தாம் சென்ற இடங்களில் எல்லாம் வழிவழியாக பின்பற்றி இந்நாட்டின் சமூக வழக்கமாவே பரவிடச் செய்துள்ளனர். மன்னர்கள் செய்த சதி என்னும் உடன்கட்டை குற்றத்துக்கு இந்து மதம், சனாதன தர்மம், பிராமணர் தான் காரணம் என்று பழி சுமத்துவது வெறுப்பில் தானே ஒழிய சான்றினால் அல்ல. மனுஸ்மிருதியில் எங்குமே உடன்கட்டை பற்றி கூறப்படவில்லை.   இந்தியாவில் பிராமணர் உள்ளிட்ட பிற பொதுமக்கள் அனைவரும் திறந்தவெளியில் தான் மலம், மூத்திரம் கழித்தனர்.   ஆனால் அரச குடும்பத்தவர் மட்டும் பாதுகாப்பு, அந்தஸ்து கருதி தமக்கென தனியே கழிப்பறை கட்டிக்கொண்டு மலம் கழித்தனர். கழித்த அந்த மலத்தை மனிதரை கொண்டு அகற்றினர். இதை பிற்காலத்தில் நகரங்களில் வாழ்ந்த செல்வர்களும் பின்பற்றினர். இதனால் மலம் அகற்றுவதற்கு என்றே  ஆந்திரத்து ஒடுக்கப்பட்ட சாதியாரை பணிக்கு அமர்த்தினர். ஆனால் இதை சனாதன தர்மம் தான் ஏற்படுத்தியது, பிராமணர் ஏற்படுத்தினர் என்று புனைகின்றனர். ஏன் ஆண்ட பரம்பரை பெருமை பேசுபவரை யாரும் இதற்காக பழிப்பதில்லை? முக்காலமும் உணர்ந்த மகான் பிரபாத்து ரஞ்சன் சர்க்கார், பழனி ஈசுவர பட்டர் போன்றோர் இன்றைய சமூக கேடுகளுக்கு மன்னராட்சியில் அதிகாரத்தில் இருந்த வேந்தர் (emperor), மன்னர் (king),  அரையர் (Duke), கிழார்கள் (knight) தான் முழுக் காரணம் என்கின்றனர். வேந்தனுக்கு கீழ்நிலை ஆட்சியாளர்கள் ஒரே வேந்தன் கீழ் இருந்தும் தமக்கென தனிப்படை பேணி அடுத்த நாட்டை பாவிட போரிட்டு இருநாட்டு மக்களுக்கும் உயிர் சேதம் பொருள் சேதம் ஏற்படுத்தி தம் ஆடம்பர வாழ்விற்கும் படை பேணலுக்கும் மக்கள் மீது பல்வேறு வரிகளை சுமத்தினர் என்பதை கல்வெட்டுகளால் அறிய முடிகிறது.

    திருவண்ணாமலை மாவட்டம், தாமரைப்பாக்கம்  அக்னீசுவரர் கோயில் முன்மண்டப கிழக்கு சுவர் மற்றும் அரைத்தூணில் உள்ள 14 வரிக் கல்வெட்டு.

    1. ஸ்வஸ்தி ஸ்ரீ திரிபுவநச் சக்ரவத்திகள் ஸ்ரீ குலோத்துங்க சோழ தேவற்கு யாண்டு 10 வது சோமனான பிருதி 
    2.  கங்கனேன் எங்களய்யர் கூத்தாடுந் தேவரான பிருதிகங்கர் உடன் பள்ளிகொண்ட பாடும் பெண்
    3. டிருக்கும் மனக்கேதம் தீர்த்தமைக்கும் சந்தா[ந சா]மமாக பதினறு சாண் கோலால் விட்ட நிலம்  ஒரு வேலியும்  
    4. வர்கள்  வங்கிசமுள்ளதனையும் செல்வதாக விட்ட நிலத்துக்கு  நம் வங்கிசத்து இதுக்கு இலங்கனம் சொல்லுவா
    5. ர் ‘மதுராந்தக வேளான் கால்கழுவின நீருங் குடிச்சுக் கலச்சோறும்  தின்பாந்‘, கெங்கையிடைக்  குமரியிடைச் செய்
    6. தார்  செய்த பாவங்கள் கொள்வார் . பள்ளமுணோக்கி  கு 406, குமிலி  148, புலையக்கள்  193, கிணற்றின் கீழ்ப்பட்டி 
    7. நூறு உட்கழனியில் தடி 3, சிங்கன் த[டி] 484, சேரியான் பட்டி 190, பொன்
    8. னராயந்  
    9. ண்டில்  84 
    10. சஈத்தி 188
    11. நடு 
    12. வில் கழுவ
    13. ல் வடதலை 
    14. 55

    ஐயன் / ஐயர் – தந்தை; பள்ளிகொண்ட – பிணத்தோடு உயிருடன் புதைக்கப்பட்ட; கேதம் / கேது – இழவுத்  துன்பம், துயரம்; சாமம் – இன்மை; வங்கிசம் – வமிசம்; இலங்கனம் – வில்லங்கம், செல்லாது; கால்கழுவின – குண்டிகழுவிய; கலச்சோறு – எச்சிற் கலச் சோறு;

    விளக்கம்: மூன்றாம் குலோத்துங்கனின் 10 ஆம் ஆட்சி ஆண்டு கி.பி. 1188 இல் அரசன் (duke) பிருதிகங்க சோமநாதன் இந்த கல்வெட்டை வெட்டினான். இதில் தமது இறந்த தந்தை அரசன் கூத்தாடும் தேவ பிருதிகங்கனுடன் புதைகுழியில் உயிருடன் புதைக்கப்பட்ட பாடும் பெண்டிர் மூவர் குடும்பத்தாருக்கு இழவு வருத்தம் தீர்த்ததற்காகவும், பிள்ளைகள் இன்றி போனதற்காகவும் இழப்பீடாக பதினாறு சாண் கோலால் அளந்து விட்ட நிலம் ஒரு வேலியை இவர்கள் வம்சம் உள்ளவரையில் இவர்கள் உரிமையாக இருக்கும் என்றும்  கொடையாக கொடுத்ததை தன் வம்சத்தார் வில்லங்கம் செய்தால் அவர்கள் “மதுராந்தக வேளான் குண்டி கழுவிய பீத் தண்ணீரை குடித்து எச்சில் கலத்தில் சோறு உண்டவராவார்” என வசை பாடுகிறான். மேலும் கங்கைக்கும் குமரிக்கும் இடையே வாழும் மக்கள் செய்த பாவங்களை கொள்வார் என்று சபிக்கிறான். இந்த ஒரு வேலி தவிர மேலும் நிலம் கொடுத்தானா அல்லது இந்த ஒரு வேலியை வெவ்வேறு இடங்களில் குழி கணக்கில் கொடுத்தனா என்று தெரியவில்லை. கணக்கு முரண்படுவது தான் இதற்கு காரணம். 40 குழி ஒரு சென்டு என்றால்  நூறு சென்டு ஒரு ஏக்கர் என்றால் 6.17 ஏக்கர் கொண்ட ஒரு வேலிக்கு எத்தனை குழி?  ஆனால் மொத்தம் 5000க்கு குறைவான அளவுள்ள குழி கொடுத்துள்ளான் என்று தெரிகிறது. அவை பள்ளமுனோக்கியில் 406, குமுலியில் 148, புலையக்களில் 193, கிணற்றின் கீழ்ப்பட்டியில் 100, உட்கழனியில் தடி 3, சிங்கன் தடியில்  484, சேரியான் பட்டி 190, பொன்னராயன் தண்டில் 84, சஈத்தி 188, நடுவில்கழுவல் வடதலையில் 55 = 1851.

    மதுராந்த வேளான் அரசன் சோமநாத பிருதிகங்கனுக்கு அணுக்க செயலன் போலத் தோன்றுகிறது. அதனால் தான் அவனைக்  குறிப்பாகச் சுட்டி அவனுக்கு வந்த அறிவு தன் சொந்தங்களுக்கும் வரட்டும் என்ற  எண்ணத்தில் நாக் கூசும்படியான வசவுச் சொல்லை பயன்படுத்துகிறான். இப்படியான ஆணவப் பேச்சு வசவுச் சொற்கள் 12 ஆம் நூற்றாண்டு முதல் தான் கல்வெட்டுகளில் இடம் பெறத் தொடங்கின. “குதிரைக்கு புல்லிடும் பறையனுக்கு என் மனைவியை மிணாட்டி ஆக்கியவன் ஆவேன்” என்று ஒரு வாணகோ உரைக்கிறான். இப்படியான இழிவழக்கைத் தமிழகத்தில் ஊன்றியவர் தமிழரல்லாத அரசரே ஆவார். இது அவர்கள் தம் கீழ்படிந்த பணியாளர்களை அவ்வப்போது எப்படி நடத்தி இருப்பர் என்பதை நினைக்க அறுவறுப்பாக உள்ளது. இந்த ஆணவப் பேச்சை புனிதமான கோவிலில் கல்வெட்டாய் பொறித்தானே அவன் இறையுணர்வை ஐயப்பட வேண்டியுள்ளது.

    பார்வை நூல்: த நா தொ து வெளியீடு, தாமரைப்பாக்கம் கல்வெட்டுகள், பக்கம் 50 – 51. எண்; 27

     

    திருவண்ணாமலை மாவட்டம், தாமரைப்பாக்கம் அக்னீசுவரர் கோயில் முன் மண்டபக் கிழக்குச் சுவரில் உள்ள 4 வரிக் கல்வெட்டு.

    1. [ஸ்வஸ்திஸ்ரீ திரிபுவனச் சக்கரவத்திகள் ஸ்ரீ  கொலோத்துங்க சோழ தேவற்கு யாண்டு 10 வது சோமனான பிருதிகங்க[நேந்]
    2. எங்களய்யர்  கூத்தாடுந் தேவரான பிருதிகங்கருடன் பள்ளிகொண்ட ஆடும் ஆழ்வார்க்கும்சதுர நடை
    3. ப்பெருமாள்க்கும்நிறைதவந்  சேதாளுக்கும் சந்தானச் சா[]மாக விட்ட நிலம் பதினறு சாண் கோலா
    4. லே     

    விளக்கம்: மூன்றாம் குலோத்துங்கனின் 10 ஆம் ஆட்சி ஆண்டு கி.பி. 1188 இல் அரசன் சோமநாத பிருதிகங்கன் தமது இறந்த தந்தை அரசன் கூத்தாடும் தேவ பிருதிகங்கனோடு சவக்குழியில் உயிருடன் புதைக்கப்பட்ட ஆடும் ஆழ்வார், சதுரநடைப் பெருமாள், நிறைத்தவம் சேதாள் ஆகிய மூன்று பாடும் பெண்களான தேவரடியார் குலப்  பெண்களுக்கு குடும்பத்தில் பிள்ளை இன்றி போனதற்கு இழப்பீடாக விட்ட நிலம் பதினாறு கோலால் அளந்து தரப்பட்டது என்று கூறுகிறான். மேலுள்ள கல்வெட்டில் உயிருடன் இறந்தவர் பெயர் குறிப்பிடாததை இதில் குறிக்கிறான்.

    பார்வை நூல்:த நா தொ து வெளியீடு, தாமரைப்பாக்கம் கல்வெட்டுகள் பக்கம்: 52, எண்: 28.

    திருவண்ணாமலை மாவட்டம், தாமரைப்பாக்கம் அக்னீசுவரர் கோயில் முன் மண்டபத் தென்புறச் சுவரில் உள்ள 5 வரிக் கல்வெட்டு.

    1. ஸ்வஸ்தி ஸ்ரீ  திரிபுவன சக்கரவத்திகள் ஸ்ரீ குலோத்துங்க சோழ தேவற்கு யாண்டு 10 வது 
    2. ஆடும் ஆழ்வாரும், சதுரநடைப் பெருமாளும், நிறை தவஞ் செய்தாரும் சந்தாந சாமத்தில் உ
    3. டையார் திருவ[ங்]கீசுரமுடைய நாயநார்]க்கு _ _ _  [பாடிசையா]க ஐஞ்சு தேவரடியாற்கு பதிநறு 
    4. சாண் கோலால் ஆயிரங் குழி விட்டேன் சோமநாத தேவனேன். இது விலக்குவாந் கெங்கை இ
    5. டைக் குமரி இடைப் பாவங் கொள்வான்.        

    பாடிசை – வருத்த இணக்கம்; விலக்கு – இல்லாது செய்

    விளக்கம்: சோழன் மூன்றாம் குலோத்துங்கனின் 10 ஆவது ஆட்சி ஆண்டில் கி.பி 1188 இல் ஆடும் ஆழ்வார், சதுரநடைப்பெருமாள், நிறைதவஞ்சேதாள் ஆகிய மூன்று பாடும் தேவரடியார் குல பெண்களின் வீட்டில் பிள்ளை இல்லாமல் போனதற்காக திருவங்கீசுவரமுடைய நாயனார் கோவில் தேவரடியார் ஐவருக்கு இத்துயர உடன்பாட்டிற்காக பதினாறு சாண் கோலால் ஆயிரம் மேற்பட்ட குழி நிலத்தை பிருதிகங்க அரசன் சோமநாத தேவன் கொடுத்தான். இது இல்லாமல் செய்பவன் கங்கைக்கும் குமரிக்கும் இடையே வாழும் மக்கள் செய்யும் பாவத்தை கொள்வான் என்று நிலம் யாருக்கு கொடுக்கப்பட்டது என்று முந்தைய கல்வெட்டுகளில் கூறாமல் விட்டதை இதில் குறிப்பிடுகிறான். ஆனால் இங்கு அந்த தேவரடியார் ஐவர் பெயரைக் குறிக்கவில்லை. 13 ஆம் நூற்றாண்டில் வேற்று மொழி அரசர்களுக்கு தேவரடியார் என்றால் இளக்காரம் தான் போலும். தமிழ் வேந்தர்கள் செய்ததற்கு மாறாக அல்லவா இது உள்ளது.

    பார்வை நூல்: த நா தொ து வெளியீடு, தாமரைப்பாக்கம் கல்வெட்டுகள், பக்கம்: 44 – 45, எண்: 24

    மைசூர் மாவட்டம், திருமகூட்லு நரசிபுர வட்டம் தொட்ட ஹூண்டி கிராமத்தின் குளத்தில் இருந்த 24 வரி கல்வெட்டு.

    ஸ்வஸ்தி நீதி மார்க்க கொங்குணி வர்ம்ம தர்ம்ம மஹா / ராஜாதி ராஜ  கோவளாபுரவரரேஸ்வர நந்த / கிரிநாத ஸ்ரீமத் பெம்மானடிகள  ஸ்வர்க்கமேற்   / எறுதொட பெம்மானடிகள மனேமகர்த்தி  அக /ரய்யன்  நீதி மார்க்க பெம்மனடிகே கீள்குண்டேயாதம்  பெம்ம / னடிகள ஸுபுத்ர ஸத்யவாக்ய  பெமானடிகள் குண்ட கல்லின பக்கதல்லி  / ரிதிய / கல்நாடு / கொட்டது  க  / ப்பஹள்ளி  / பரிஹார / இதனரிம்   /தோ வாராணா  / சிய வரி / தம்  / இதக்கெ  கம்ம / ளி  நகெயர / ல்ல கும்மண்ட / கதங்கே ஸிகே  /  துவஸ்தரு கு / ளவேடம / ண்டு இதனசிதோம பா / தகன்   

    விளக்கம்: மேலை கங்க வேந்தன் ஸ்ரீ புருஷனின் மகன் இரணவிக்ரமன் ஆன முதலாம் எரிகங்க நீதிமார்கன் 869 இல் சமணத்தின் சல்லேகனம் என்னும் உடல்மெலிதல் நெறியில் உயிர் துறந்துள்ளான். அவனை கோவளால நகரத்து இருந்து ஆளும் நந்தகிரியின் தலைவன், நீதிமார்க்க கொங்குணிவர்மன், அறங்காக்கும் பேரரசன் என விவரித்து பெருமானடிகள் சொர்க்கம் எய்தினார் என்கிறது கல்வெட்டு. அவரோடு  பெருமானடிகளின் உள்மனைப் பணியாள் (அகம்படி) அகரய்யன் கீழ்க்கொண்டியாகி (பள்ளி கொண்டான் ஆகி) உயிருடன் புதைக்கப்பட்டு இறந்தான். பெருமானடிகளின் மூத்த நன்மகன் சத்யவாக்ய பெருமானடிகளின் நடுகல்லின் பக்கத்தில் அமைந்த கப்பஹள்ளி என்னும் ஊரில் இறையிலி நிலம் (கல்நாடு) கொடுத்தான். இதனை அழித்தோர் வாரணாசியை அழித்தவராவார். இதனை அழித்தோன் பாதகன் ஆவான்.

    பார்வை நூல்: Epigraphia Carnatica Vol 3, Part I, Inscriptions in Mysore Dist., page 287 number TN 91.

    பெல்லாரி  மாவட்டம் இராயதுர்க வட்டம் கலுகோடு கிராமத்திற்கு தெற்கே உ ள்ள  பலகையில் வெட்டிய 25 வரி கன்னட  கல்வெட்டு.

    ஸ்வஸ்தி ஸகரிப ஸகாலாதித்த ஸம் / ம்பத்ஸர ஸதங்களேண்டு நூற தொம்ப / த்தொம்பத்தநய வருஷம் ப்ரவர்த்திஸ / ஸ்வஸ்தி  ஸமதிகத பஞ்ச மஹா ஸ / ப்த பல்லவாந்வய ஸ்ரீ  ப்ருதுவீவ / ல்லப   பல்லவகொலதீலக/ ஸ்ரீமந்  மய்தம்மரஸப்  ப்ரதுவீ ராஜ்யங்கெய்து ப / ரகொரொ ளிர  எறேகங்கய்ய ஸக்க ம்மேறிதொடே களுநேநர / ஸர மகம் மய்தம்ம கீள்கொண்டேயாகி ஸத்தொன்டே காம / ராராதித்ய நந்திகாஸ்ரயநப்ப அய்யப்ப தேவந கொட்டு  / து கல்னாடுரகு வெந்து நெலதநேஸருள்ளின  ஸாஸன / – – – விதுரரி – – – – வா சந்த்ரார்கமிதம் ஸலிப்ரது. இதன / ரிரதோன்  வாரணாசியும் ஸாஸிர  கவிலேயும் ஸாஸி / ர்வ்யர்ப்பார்வ்யரும் ஸாஸிவ்யர்ப்பஸிர்ப் பெண்டிரும்  / ஸாயிர கெறேயு  மனரேதோன லோகக்கே ஸல்கு / அய்யப்ப தேவநக்கர விக்ரமாதித்யநக்கர இயுக ப – – – /  ர அய்யப்ப / சோள ( கொ) / ட்டுது. இத / வ் பெஸகெய்தோ  / க்ரித யுகசோ  / ள  / யிதாசாரி  

    ப்ரவர்த்தி – நடக்கையில்; ஸமதிகத – நெருங்கிய; ஸக்க – சொர்க்கம்;  காமர் ஆராதித்ய  – நட்பும் சுற்றமும் போற்றும்; நெலத நேஸரு – நிலவும் சூரியனும்; சந்திரார்கமிதம் – நிலவும் ஞாயிறும் உள்ளளவும்; ஸாஸிர – பரிவுக்குரிய, கருணைக்குரிய, leniency; அக்கர – அக்ஷர, எழுத்து     

    விளக்கம்: இக்கல்வெட்டு சக ஆண்டின் காலவரிசை ஆண்டுகளின் நூற்றாண்டு எ(ண்)ட்டு நூற்று தொன்னூற்று ஒன்பதாம் (கி.பி.977) ஆண்டு நடக்கையில். ஐம்பெரும் ஒலியை நெருங்கிய பல்லவர் வழி வந்த திரு பிருதிவி வல்லப பல்லவகுல திலக நோலம்ப பல்லவன் மய்த்தம்மரசன் பருகூரில் இருந்து மண்ணாண்டு கொண்டிருந்த போது எறெகங்கய்ய சொர்க்கம் எய்திய போது களுநெநரசரின் கீழ்நிலைப் படை வீரன் மய்தம்ம என்பவன் கீழ்க் கொண்டியாகி (பள்ளி கொண்டியாகி) இறந்ததால் உற்றார்  போற்றும் நந்திகாசிரயனப்ப ஐயப்ப தேவன் அவனுக்கு உரித்தாகுகவென்று கொடுத்த இறையிலி நிலம் நிலவும் ஞாயிறும் உள்ளளவும் நிற்கும் ஆவணம் _ _ _ நிலவும் ஞாயிறும் உள்ளவரை செல்வதாக. இதனை அழித்தோன் வாரணாசியையும், பரிவுக்குரிய (கவிலை) குறால் பசுவையும், பரிவுக்குரிய உடல் மெலிந்தோரையும், பரிவுக்குரிய மெலிந்து வறுமையுற்ற பெண்டிரையும் கொல்வோர் செல்லும் அனல் (நரக) உலகிற்கு செல்க. ஐயப்ப தேவன் எழுத்து, விக்கிரமாதித்தியன் எழுத்து. இக்கல்வெட்டை கொட்டுவித்தவன் ஐயப்ப தேவன். இதை கல்வெட்டாய் வெட்டியவன் கிரிதயுகசோழ _ _ யிதாசாரி என்பவன்.

    நுளம்பன் மய்தம்மரசன் மன்னன் என்றால் எறிகங்கன் அவனுக்கு கட்டுப்பட்ட கங்கர் கிளை மரபு அரையன் என்று தோன்றுகிறது. நந்திகாசிரிய ஐயப்ப தேவன் எறிகங்கன் மகன் ஆதல் வேண்டும். களுநேநரசன் அவன் படைத் தளபதி ஆவான். தென்னிந்திய கல்வெட்டு குறிப்பது போல எறிகங்கன் போரில் இறக்கவில்லை. சொர்க்கம் ஏகினான் என்பதை வைத்து அவனும் சமண சல்லேகனம் இருந்து இறந்தானா? வீரன் மய்தம்மன் அவனுடன் உயிருடன்  புதைக்கப்பட்டு இறந்தானா? தெரியவில்லை. இதே போல நுளம்ப மன்னன் இரிவ நுளம்பன் இறந்த போதும் இதே போன்ற கிழ்கொண்டி முறையில் ஒருவன் புதைக்கப்பட்ட செய்தி உண்டு.

    பார்வை நூல்: South Indian Inscription Vol IX, No 40, ARN 442 of 1923, பக்கம் 23

    Share
  • வணிகர் வீரம் உரைக்கும் கல்வெட்டுகள்

    வணிகர் வீரம் உரைக்கும் கல்வெட்டுகள்

    சேசாத்திரி ஸ்ரீதரன்

    பண்டைய காலத்தில் எல்லாப் பொருளும் ஒரே இடத்தில் கிடைப்பதில்லை என்பதால் செல்வர்களும் அரசர்களும் பொருள் கிடைக்கும் இடத்திற்கு ஆளை அனுப்பி பொருளை தருவித்துக் கொண்டனர். பொருள் கொண்டு வந்து கொடுக்கும் ஆளை  “அர்ஈதன்” இதாவது, பொருள் கொண்டு போய் கொடுப்பவன் (delivery man) என்றனர். இந்த அர்ஈதன்கள் (அர் – பொருள்; ஈதன் – கொடுப்பவன்) கால ஓட்டத்தில் தாமே பொருள்களை கிடைக்கும் இடத்தில் வாங்கி தேவைப்படுவோருக்கு இன்னொரு பொருளுக்கு மாற்றாக விற்று வந்தனர். இவ்வாறான வினையில் ஈடுபட்டோர் இதனால் வணிகர் எனப்பட்டனர். தமிழ் பிராமி கல்வெட்டுகள் “அரிதன்” என்று குறிப்பது பொருள் கொண்டு போய் கொடுப்பவர்களையே ஆகும். இந்த வணிகரால் செல்வர், அரசர் மட்டும் இன்றி இனி எளிய மக்களும் தொலைவில் கிடைக்கும் பொருள்களை எளிதில் வாங்கி நுகர முடிந்தது. இப்படி ஒரு இடை மனிதராக (middle man) உருவானவரே வணிகர். அர்ஈதனாக இருந்த போது கொண்டு கொடுப்பதற்கு கூலி மட்டுமே பெற முடிந்தது ஆனால் வணிகர் ஆன போது செல்வச் செழிப்பில் மிதந்தனர். வாழ்க்கைத் தரம் உயர்ந்தது. ஆனால் அவர் தொழிலுக்கு கேடாக ஆறலைக் (ஆறு – வழி, அலை – திரியும்) கள்வர் என்னும் வடிவில் நாட்டுக் கிழார்கள் (knight), வேள் (duke) என்னும் அரசர்கள் வணிகரைக் கொன்று அவர் பொருளைக் கவர்ந்து கொண்டனர். இதனால் தம் உயிரையும் பொருளையும் காக்க வணிகர் குழுவாக செயற்பட்டு தமக்கென ஒரு தனி படையையே (private army) கட்டிப் பேணினர். இதற்கு ஆகும் செலவை வணிகர் குழுக்கள் பகிர்ந்து கொண்டன. இதற்கு சான்றாக வணிகர் பலர் போர் வீரராக உயிர் நீத்த வரலாறு கல்வெட்டுகளில் பதிவாகி உள்ளன. இத்தகைய வணிகர் படையை வேந்தர்களும் அவ்வப்போது கூலிப்படையாக துணை கொண்டுள்ளனர். இப்படி வணிக வீரர் ஈட்டித் தந்த வெற்றிக்கு கைமாறாக எட்டி, காவிதி ஆகிய பட்டங்களை வேந்தர் வணிகருக்கு வழங்கினர். எட்டி என்ற உயர்ந்தோன் என்ற சொல் பின்பு சகர முன்மிகை பெற்று “செட்டி” ஆனது. இனி வணிகர் குறித்த கல்வெட்டுகளுக்கு விளக்கம்.

    திருப்பூர் மாவட்டம் ஆலங்காயம் வட்டம் ஏழுமலை என்னும் ஏலகிரி குண்ட்ரெட்டியூர் மலைச்சரிவில் உள்ள தென்னந்தோப்பில் காணப்படும் 6 வரி & 16 வரி நடுகல் கல்வெட்டுகள்

    1. சகரை யாண்டு தொள்ளாயிர தொ
    2. ன்றாவதில் மிலாட்டு பாகனூருடைய ப 
    3. கழன் சாத்த பிரானாகி காவூர் செட்டி 
    4. எருமைத் தொறுக்  கொள பூ 
    5.  _ _ _  கைக்க
    6. ளன் பட்டார் 

    சாத்த பிரான் – வணிகர் தலைவன்; தொறு – மந்தை;

    விளக்கம்: 10 ஆம் நூற்றாண்டு 979 இல் வெட்டப்பட்ட கல்வெட்டு. மேலை கங்கர் – சோழரிடையே போரின் காரணமாக இப்பகுதி அவ்வப்போது ஆட்சி மாறி இருக்க வேண்டும் போல தோன்றுகிறது. இதனால் வேந்தர் பெயர் குறிக்காமல் சக ஆண்டு 901 என்று குறிக்கப்பட்டது. மிலாடு நாட்டின் பாகனூருடைய புகழன் வணிகர் தலைவனாகிட (சாத்த பிரான்) அவனது ஆள் காவூரில் வாழும் செட்டி எருமை மந்தையை கொள்ளையிட அப்போது நடந்த பூசலில் கைக்களன் வீர சாவடைந்தான்.  அவனுக்கு இந்நடுகல் நடப்பட்டது. தொடக்கத்தில் தமக்கென படை பேணிய செட்டிகள் பின்பு இடையில் அரசர் நிதி உதவியின்மையால் பிறர் செல்வங்களைக் கவர ஆறலை கள்வர்கள் போல செயற்பட்டது இதில்  தெரிகிறது.    

    ஸ்ரீ சகர யா / ண்டு தொள் / ளாயிர / த்து ஒன்றா / வது எயிலு / டைய மாணிக் / க சட்டன் துக்/ கையனாகி   பி / ருதி ராமசெட் / டி தம்பி  குண / ராமனாகிய  எரி / யும் வீரசெட்டி ஐ / யம் புழுகூர் நாட் / டு எருமை தொறுக் / கொள்ள _ __ / ம் மெதிச்சுமாந்  

    விளக்கம்: 10 ஆம் நூற்றாண்டு 979 இல் வெட்டப்பட்ட கல்வெட்டு. மேலை கங்கர் – சோழரிடையே போரின் காரணமாக இப்பகுதி அவ்வப்போது ஆட்சி மாறி இருக்க வேண்டும் போல தோன்றுகிறது. இதனால் வேந்தர் பெயர் குறிக்காமல் சக ஆண்டு 901 என்று குறிக்கப்பட்டது. எயில் நாட்டு மாணிக்கச் சட்டன் துக்கையனாகிய போது பிருதி ராம செட்டியின் தம்பி குணராமனாகிய சினம் கொண்ட (எரியும்) வீர செட்டி ஐம்புழுகூர் நாட்டின் (வாணியன்பாடி) எருமை மந்தையைக்  கொள்ளையிட மெதிச்சுமான் என்பவன் வீர சாவடைந்துள்ளான். 

    பார்வை நூல்: நடுகல் கல்வெட்டுகளும் சிற்பங்களும், தொகுதி I  பக்கம் 286 & 287. ஆசிரியர்: ச. கிருஷ்ணமூர்த்தி. வெளியீடு: மெய்யப்பன் பதிப்பகம்

    கிருஷ்ணகிரி மாவட்டம் சென்ன சமுத்திரம் மலையடிவாரத்தில் உள்ள மலையதிம்மன் கோயில் 9 வரிக் கல்வெட்டு

    1. சுவஸ்திஸிரி மனை_ _ _ த்த _ _ _ [கை]  
    2. சுரப்பாலமரசர் மகந் துக்கமரசர்கள் 
    3. உலோக்கமாணிக்க செட்டி கூ _ _ _ 
    4. முக்கித் தட்ட மினயர்த் தம்பி உலோ 
    5. க்கமாணிக்க செட்டி தன் அள பூசல் 
    6. போகி அளவை காத்து அமை
    7. கிலந் திரிகிலந்  முனைகிலந்
    8. அணிகிலந் இ[வீர]ங் கவா 
    9. லை 

    கூ(டு கு)முக்கி – மூங்கில் கூட்டை உடைத்து; தட்ட – கவர; அள – உப்பு; அமைகில் – அமராமல்; திரிகில் – நடமாடாமல்; முனைகில் – முயலாமல்; அணிகில் – மாற்று உடை பூணாமல்; கவா – இரண்டு குன்றுகள் கூடும் கவடு; ஆலை – கோவில் 

    விளக்கம்: 14 ஆம் நூற்றாண்டு கல்வெட்டு. அரசர் பற்றிய குறிப்பு ஏதும் இல்லை. கைசுரப்பாலமரசர் மகன், துக்கமரசர்கள் ஆகியோர் உலோக மாணிக்க செட்டியின் உப்பு சேமித்த மூங்கில் கூடையை உடைத்து உப்பைக் கவர்ந்து கொண்டு போக  மீனவர்த் தம்பி  உலோகமாணிக்க செட்டி தன் உப்பை மீட்க சண்டையில் போய் உப்பை மீட்டுக் காத்து தனக்கு மருத்துவம் கூட மேற்கொள்ளாமல் உட்காராமல், எங்கும் நகராமல், முனைப்பு ஏதும் காட்டாமல், மாற்று உடை அணியாமல் அப்படியே இருந்தபடி இருந்து இறந்து போனான். இந்த வீரனுக்கு மலை கூடும் இடத்தில் ஆலயம் அமைக்கப்பட்டது.

    “மீனவர் தம்பி” என்பது  மினயைர்த் தம்பி என்று பிழையாக தட்டச்சு செய்யப்பட்டுள்ளது. அச்சாகும் முன் இன்னொருவரை கொண்டு பிழை சரிபார்த்த பின் அச்சுக்கு அனுப்ப வேண்டும். உப்பு வணிகம் மீனவரே மேற்கொள்வது என்பதை வைத்து பிழையை ஊகிக்க முடிந்தது. உலோக மாணிக்கம் மீனவச் செட்டியார் ஆவான். உப்பு வணிகர் கடற்கரையில் இருந்து நெடுந்தொலைவு சென்று கிருஷ்ணகிரியில் உப்பு விற்றதற்கு இக்கல்வெட்டு சான்றாகிறது.

    பார்வை நூல்: த நா தொ து வெளியீடு, கிருஷ்ணகிரி மாவட்ட கல்வெட்டுகள், பக்கம்  48

    தருமபுரி மாவட்டம் அரூர் வட்டம் கணப்பனூர் 7 வரி நடுகல் கல்வெட்டு

    1. ஸ்ரீ சிவமார பருமற்கு யாண்டு நாற்பத்தே 
    2. ழாவது கந்த வாணதி அரைசரு புறமலை நாடா
    3. ள அவர் மகனார் தெளிய நி[ஒ]ஆர் சேவகர் வாணிக
    4. ச்  சடைனார் வெட்டக்கியார் கூடல் [வந்துவிட] அவர் 
    5. மே ஆனயா
    6. டி நின்று செ
    7. ன்று பட்டார்   

    சேவகர் – படைத் தலைவர்;  ஆடி – போரிட்டு; நின்று – நிறுத்திவிட்டு

    விளக்கம்: மேலை கங்க வேந்தன் முதலாம் சிவமாரனின் 47 ஆம் ஆட்சி ஆண்டு கி.பி. 726 இல் அவருக்கு அடங்கி புறமலை நாட்டை கந்த வாண அரசர் ஆண்டு கொண்டிருந்த போது அவரது மகன் தெளிய நி[ஒ]ஆரின் படைத் தலைவர் வாணிகச் சடையனார் அரசன் வெட்டக்கியார் கூடல் ஊர் மீது படையெடுத்து வந்துவிட அவர் மேல் யானை மீது போர் புரிந்து நிறுத்திவிட்டு இளைப்பாறி பின் மீண்டும் போருக்கு சென்று வீரச்சாவடைந்தான் வாணிகச் சடையன். படைத் தலைவரான வணிகர்  சடையனார் வாணர் சார்பில் யானை மீது ஏறி போரிட்டுள்ளார் என்பது அவர் யானை ஏற்றப் போரில் நல்ல பயிற்சி பெற்றவர் என்பதை உணர்த்துகிறது.

    பார்வை நூல்: த நா தொ து வெளியீடு, தருமபுரி கல்வெட்டுகள் தொகுதி I, பக்கம் 7. எண் 1973 /  47

    திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வட்டம் எல்காம் வலசு என்னும் ஊரில் கிட்டிய 13 வரிக் கல்வெட்டு இப்போது கோவை அகழ்வைப்பகத்தில் உள்ளது.

    1. ஸ்வஸ்திஸ்ரீ  தெந் க
    2. ரை நாட்டு நீலம்
    3.  பேரூர் னானாதேசி 
    4. திசை மடி எறி
    5.  யூர் எறிவீரபட்ட
    6. ணக் கல். அஞ்சு 
    7. கரை நாடும் 
    8. அடிக்கீழ் தளமு
    9. ம்  பதினெண்  வி
    10. ஷயமும் எம்மி
    11. லிசைந்தபடி மீதளத்தில்  நாலுவாசலி 
    12. ல் பட்டயார் வசம் நாலு காலும் சிங்காத
    13. னமும் உடையாராக 

    எறிவீர பட்டணம் – காவல் வீரருக்கு சிறப்பு உரிமை தந்து தங்குவதற்கான மனை கொண்ட வணிகர் ஊர்; மீதளம் – மேல் தளம், கண்காணிக்கும் கோபுரம்; நான்கு கால் – நான்கு சாவடி; பட்டாயர் – படை நோட்டகர்;  

    விளக்கம்: 14 ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டு என கருதப்படுகிறது. அரசர் ஆட்சி ஆண்டு குறிப்பு ஏதும் இல்லாத வணிகர் உடன்படிக்கைக் கல்வெட்டு. தென்கரை நாட்டு (தாராபுரம்) நீலம் பேரூரில் உள்ள நானா தேசிக வணிகரும் திசை ஆயிரத்து  ஐந்நூற்றுவரும் மடிஎறியூரில் நிறுத்திய காவல் வீரருக்கான தங்கும் மனையின் உடன்படிக்கைக்  கல்வெட்டு. ஐந்துக்கரை நாட்டு வணிகரும் அடிக்கீழ்த்தள வணிகரும் பதினெண் விஷயக் குழு வணிகரும் ஏற்படுத்திக் கொண்ட உடன்பாட்டின்படி கண்காணிப்பு கோபுரத்தில் நான்கு வாசலில் நிற்கும் படை நோட்டகர் வசம் நான்கு சாவடியும் சிம்மாசனத்தையும் கண்காணிக்கும் பொறுப்பை ஒப்படைப்பதாக உடன்பட்டனர். பல வணிகர் குழுக்கள் நிதி பங்களிப்பதால் இந்த உடன்பாடு தேவைப்பட்டது போலும்.

    பார்வை நூல்: த நா தொ து வெளியீடு, திருப்பூர் மாவட்ட கல்வெட்டுகள், பக்: 142 – 143

    கோயம்புத்தூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை வட்டம் கடத்தூர் ஊரில் அமைந்த மருதீசர் கோவில் கோபுர வாசல் இடது நிலைக் காலில் உள்ள 11 வரிக் கல்வெட்டு

    1. ஸ்வஸ்தி ஸ்ரீ  வீர 
    2. ராஜேந்திர தேவற்கு 
    3. யாண்டு பத்தாவ
    4. து கடற்றூர் வெ
    5. ள்ளாந் கள்ளந் ப
    6. றையந் நரவீரகே
    7. ரழச் சிலை செட்டி 
    8. இட்ட திருநிலை வாய் 
    9. முகவணை உ
    10. த்தரமும் திருக்க
    11. தவும் இட்டேந்   

    திருநிலை – கதவு நிலை; முகவணை – முகப்பு; உத்தரம் – விட்டம்  

    விளக்கம்: கொங்குச் சோழன் வீரராசேந்திரனின் 10 ஆம் ஆட்சி  ஆண்டு கி.பி. 1217 இல் கடத்தூர் மருதீசர் கோவில் நுழைவாயிலுக்கு கதவுத்  திருநிலைகள், வாயில் முகப்பு, விட்டம், கதவு ஆகியனவற்றை வெள்ளாளன், கள்ளன், பறையன், நர வீரகேரள சிலை செட்டி ஆகிய நால்வரும் செய்வதற்கு வேண்டிய பெரும் பொருள் உதவியும் பண உதவியும் நல்கினர். நான் அவற்றை செதுக்கிப் பொருத்தினேன் என்கிறார் சிற்பி. வெள்ளாளன், பறையன், கள்ளன், செட்டி ஆகிய நால்வரும் வணிகருடைய தனிப் படையில் (private army) இருந்ததால் நால்வரும் சேர்ந்து இந்த திருவாசலை கட்டியுள்ளனர். கட்டி முடிந்த பின் கோவில் உள்ளே சென்று சாமி கும்பிட்டுள்ளனர். இதனால் பறையர் தீண்டாமை அப்போது இருந்திருக்க வாய்ப்பில்லை என்பதை உணர முடிகிறது. மனுஸ்மிரிதிப்படி போர்த் தொழில் சத்திரியருக்கு மட்டுமே உரியது. ஆனால் அதை மீறி வணிகர் போரில் ஈடுபட்டதோடு அல்லாமல் அவர்ணரான பறையரையும் போரில் ஈடுபடுத்தி மனுஸ்மிருதியை அவமதித்துள்ளனர். அதே போல தமக்கு தராத உரிமையை மீறிப் போர்த்  தொழிலில் ஈடுபட்டு பறையரும் மனுஸ்மிருதியை அவமதிதுள்ளனர். அட என்ன இது இங்கே மனுஸ்மிருதியையே  வர்ணாசிரமத்தையே காணோமே? எங்கே ஓயாமல் மனுஸ்மிருதியை வசைபாடும் இந்த தலித்தியர், திராவிடர், கம்யூனிஸ்டுகள் இந்த விதிமீறலுக்கு விடைசொல்ல வருவாரா?

    பார்வை நூல்: த நா தொ து வெளியீடு, கோயம்புத்தூர் மாவட்ட கல்வெட்டுகள் தொகுதி -I, பக்கம் 190

    தருமபுரி மாவட்டம் அரூர் வட்டம் சுல்தானிப்பாடி (நரிப்பள்ளி) ஊரில் தனியார் கொள்ளையில் உள்ள 13 வரி நடுகல்

     _ _ _ / னார் மீய் / கொன்றை நாட்டு / மைற்றம்பள்ளி / மாம்கோடு பெரு / மக்கள் பறைகட் / டியாரு  பாப்பம் / பாடி எறிந் / து தொறு கொண்ட ஞான்று  / வாண இரவஞ்சி / பட்டான் / கொற்றன் காடன் / (நடுவித்த) கல்  

    விளக்கம்:  பல்லவன் சிம்மவிஷ்ணுவின் மூன்றாம் ஆட்சி ஆண்டு கி.பி. 557 இல் (தருமபுரி கல்வெட்டுகள் தொகுதி  I எண் 1974/63 பக். 19 இதே செய்தியை கூறுவதில் இருந்து அறிந்தது). மேல் கொன்றை நாட்டின் மைற்றம்பள்ளி மாங்கோடு ஊரில் உள்ள பறை கட்டியார் பாப்பம்பாடியை அழித்து கால்நடை மந்தையை கவர்ந்து சென்ற போது அப்போரில் வாண இரவஞ்சி என்பவன் வீர சாவடைந்தான். அவனுக்கு கொற்றன் காடன் நடுகல் நட்டுவித்தான். கட்டி என்பது கங்கருடைய பட்டப்பெயர். அதை ஊர் தலைவனான பறையன் ஒருவன் இங்கே தாங்கி உள்ளான். மேற்கண்ட கல்வெட்டிற்கு சான்றாக பறையர் தொறு பூசலில், போரில் பங்கு கொண்டது.

    பார்வை நூல்: பண்டைய தமிழ்ச் செவ்விலக்கியங்களும் நடுகற்களும், ர. பூங்குன்றன், பக்கம் 180 செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவன வெளியீடு.  

    தருமபுரி மாவட்டம் பால்வாடி ஊரின் கிழக்கேயுள்ள வேடியப்பன் கோயில் 2 வரிக் கல்வெட்டு

    ஸ்ரீ தகடூர் படையு ளெறிந்து /  பட்டார் பரைகளியனார் கல்  

    விளக்கம்:  இது வேந்தன் பெயர் குறிப்பில்லாத 8 ஆம் நூற்றாண்டு நடுகல் கல்வெட்டு. இது கால்நடைகளை கொள்ளையிட்ட சண்டை அல்ல, மாறாக தகடூர் படையுள் சீறிப்பாய்ந்து பகைவரை வெட்டி வீரசாவடைந்த பறையன் களியனின் நினைவில் நட்டுவித்த கல். பறையர் போரில் பங்குகொண்ட பதிவுடைய அரியதான கல்வெட்டுகளில் இதுவும் ஒன்று. 

    பார்வை நூல்: த நா தொ து வெளியீடு, தருமபுரி  மாவட்ட கல்வெட்டுகள், எண் 1973/127

    மன்னராட்சி என்றாலே பாகுபாடு (discrimination) தான். ஒரே படைத் துறையில் பணியாற்றிய பறையருக்கு பள்ளரைக் காட்டிலும் கூடுதல் சலுகைகள், சமூக உரிமைகள். இதனால் சில நூற்றாண்டுகள் கழித்து பறையருக்கும் பள்ளருக்கும் இடையே பிணக்கு, சச்சரவு மேலெழுந்தது. அதை காஞ்சிபுரத்திற்கு போய் கல்வெட்டு பார்த்து தெளிவுபடுத்திக் கொண்டனர். அதே போல பட்டடை (படைக்) குடிகளான கைக்கோளர், வாணியர் இடையே இந்த சலுகைகள், சமூக உரிமை குறித்து சர்ச்சை எழுந்தது. வாணியர் உடைத்த சலுகைக் கல்வெட்டை கைக்கோளர் மீண்டும் கல்வெட்டாக வெட்டிக் கொண்டனர். இது ஏனென்றால் அவரவர் இயலுமைக்கு தக்கபடி வாழலாம் என்று மன்னர்கள் உரிமை தரவில்லை என்பதால் தான். மன்னர்கள் இப்படி ஏற்படுத்திய படைத்துறைப் பாகுபாடு மன்னராட்சி ஒழிந்த பின்னும் சமூகத்தில் ஏற்றத் தாழ்வை நிலைப்படுத்தி விட்டது. நிலவுடைமை சாதிகளுக்கும் ஒடுக்கப்பட்ட சாதிகளுக்கும் இடையே நிலவும் இன்றைய சாதி ஏற்றத் தாழ்வுகளுக்கு மன்னராட்சியில் இருந்த பாகுபடுத்திய சலுகைகளே, சமூக உரிமைகளே காரணமாக உள்ளன. ஆனால் மன்னர்கள் ஏற்படுத்திய இந்த ஏற்றத் தாழ்வை இந்து மதம் தான் ஏற்படுத்தியது, சனாதன தர்மம் தான் ஏற்படுத்தியது, வர்ணாசிரம  மனுஸ்மிருதி தான் ஏற்படுத்தியது, பிராமணர் தான் ஏற்படுத்தினர் என்று அரசியலார் பொய் புகட்டி வெறுப்பை வளர்த்துவிட்டுள்ளனர் குறிப்பாக திராவிடர், தலித்தியர், கம்யூனிஸ்ட்டுகள் போன்றோர். இவர்கள் ஏன் ஆண்ட பரம்பரை என்போரை இதற்கு பொறுப்பாக்கவில்லை? கொங்குநாட்டில் இந்த தனி சலுகைகள், உரிமைகள் குறித்த கல்வெட்டுகள் ஆங்காங்கே அறியப்பட்டுள்ளன. கீழே அத்தகையதோர் கல்வெட்டு.
    https://www.vallamai.com/?p=90405

    https://www.vallamai.com/?p=109402

    கோயம்புத்தூர் மாவட்டம் அவிநாசி வட்டம் அவிநாசியில் கருணாம்பிகை  கோயில் அர்த்த மண்டப வடக்கு சுவரில் உள்ள  19 வரிக் கல்வெட்டு 

    1. ஸ்வஸ்திஸ்ரீ  திரிபுவந சக்கரவர்த்தி கோநேரிந்மை  கொண்
    2. டாந்  வட பரிசார நாட்டிற் பாப்பார் சாந்றாற்கு நம்மோலை குடு
    3. த்தபடியாவது இவர்கள்  நம் சரக்குக்குப் பொருள் வைத்தமை
    4. யில் இவர்களுக்கு நாம் குடுத்த வரிசையாவது மேலே
    5. ற்றமுந் துலாகமுங் கிழேற்றங் குதிரையிந் தழையுஞ் 
    6. சீனக்குடையுஞ் சேகண்டியும் பெற்று வருவார்களாக 
    7. வும்  மைச்சுக்கு சாந்திடப் பெறுவார்களாகவும் இரட்டை
    8. த்தலைக் கடைக்குக் கோற்  கட்டிக் கொள்ளப் பெறுவார்
    9. களாகவும்  படைக் கணிக்கு ஆரம் பூணப் பெறுவார்களாகவு
    10. ம் பச்சைப்பிடாம் போர்க்கப் பெறுவார்களாகவும் தங்
    11. கள்  மக்களுக்குப் பொந்நிந்  காறைக் கட்டப் பெறுவார்களா
    12. கவும் கல்லியாணத்துக்கு கட்டணங் கட்டி ஏறி ஊர்  
    13. சூழப்  பெறுவார்களாகவும். இவ்வரிசைகள்  இவர்கள் மக்கள் 
    14. மக்களுக்கு சந்திராதித்தவரை  செல்வதாகவும் இப்படி 
    15. செம்பிலுஞ் சிலையிலும் வெட்டிக் கொள்ளப் பெறுவார்களா
    16. கவும் நம்மோலை குடுத்தோம். இவை எல்லாம் வல்ல சோ
    17. ழ  மூவேந்த வேளாந் எழுத்து. யாண்டு பதிநஞ்சாவது  
    18. நாள் முந்நூற்றிருபத்திரண்டில். இப்படிக்கு வாண
    19. ராய தேவந் எழுத்து.          

    சான்றார் – அறவோர்; சரக்கு – கருவூலம்; வரிசை – சலுகை, உரிமை; மேலேற்றம் – மேலே சாயும்;  துலாகம் – ஏற்ற ஏணி, picotah; கிழ்ஏற்ற குதிரை – சேணத்தில் ஏறாத குதிரை; தழை – மயில்தோகை விசிறி; மைச்சு – சுவர்; கடைக்கோல் – இணைக்கும் கோல்; படைக்கணி – படுக்கும் கட்டிலின் கால், தலை தடுப்பு பலகைக்கு அழகிய பித்தளை,மரச் செதுக்கலை அணிவிக்கலாம்; பச்சைப்பிடாம் – போர்வை ; பொன் காறை – பொன் கழுத்தணி; கட்டணம் – சுமந்திடும் தோளி (doolie)

    விளக்கம்: கொங்குச் சோழன் வீர ராசேந்திரனின் 15 ஆம் ஆட்சி ஆண்டு கி.பி. 1222 இல் 322 ஆம் நாளில் இக்கல்வெட்டு வெட்டப்பட்டது. வடபரிசார நாட்டுப் (அவிநாசி) பார்ப்பனரான சான்றோர்க்கு சலுகைகள், உரிமைகள் அளிப்பதை இது சுட்டுகிறது. “இந்த பார்ப்பனர் என் கருவூலத்திற்கு பொருளாக வரி கட்டியதால் இவர்கள் பாசனத்திற்கு மேலாக சாயும் ஏற்ற ஏணியையும் (picotah), சேணத்தில் உட்காராத ஆனால் வண்டி இழுக்கும் குதிரையையும், பீலிவிசிறியும் சீனப்பட்டுக் குடையும், நன்மை தீமைகளுக்கு சேகண்டி இசையும் பயன்படுத்தலாம். சுவற்றுக்கு சுண்ணம் பூசிக்  கொள்ளலாம். இரட்டைக் கதவு வைத்து அதற்கு அடைக்கும் கோல் இடலாம். படுக்கும் கட்டிலில் தலைப்புறம் கால் புறம் உள்ள தடுப்பில் ஒப்பணையான பித்தளை, மர வடிப்புகளை பொருத்திக் கொள்ளலாம். பச்சைப்  போர்வை போர்த்திக் கொள்ளலாம். தம் பிள்ளைகளுக்கு பொன் கழுத்தணி அணிவிக்கலாம். திருமணத்தின் போது தோளி (doolie) கட்டி ஏறி ஊர்வலம் வரலாம். இந்த சலுகைகள், உரிமைகள் யாவும் இவர்தம் பிள்ளை, பேரப் பிள்ளை என்று தலைமுறை தலைமுறையாக சந்திர சூரியன் நிலைக்கும் காலம் வரை அனுபவிக்கலாம் என்பதை கல்வெட்டிலும் செப்பேட்டிலும் ஆவணமாக எழுதிக் கொள்ளலாம்” என்று ஆணை ஓலை கொடுத்தேன். இவை அனைத்தும் வல்ல சோழ மூவேந்த வேளாண் ஒப்புதல் எழுத்து. இப்படிக்கு வாணதேவ ராயன் ஒப்புதல் எழுத்து.

    இதன் மூலம் இந்த உரிமைகள் இதற்கு முன் பிராமணர்களுக்கு  வழங்கப்பட்டிருக்கவில்லை என்று அறிய முடிகிறது. இந்த உரிமைகள் படைத்தலைவர்கள், அரசர்கள் குடும்பத்தாருக்கு மட்டுமே இருந்து மெல்ல மெல்ல பிற சாதிகளுக்கு வழங்கப்பட்டு பொது மக்களுக்கு பரவலாக்கப்பட்டதை உணர முடிகிறது.  இப்படி வரி கட்டுவோருக்கு மட்டுமே சலுகை, உரிமை அப்படி காட்டாதவருக்கு ஏதும் இல்லை என்பது ஒரே சாதியில் ஏற்றத் தாழ்வை ஏற்படுத்தும் அல்லவா? வரி கட்டாதவரால் இந்த ஏற்பாட்டில் இயன்ற சிறு சலுகையை கூட அனுபவிக்க முடியாது. இதனால் Military rank order இல் உள்ள ஏற்ற தாழ்வை அப்படியே சமூகத்திலும் பரவவிட்டு விட்டது இந்த சலுகை என்ற முடிவிற்கே வரமுடிகிறது. கொங்கு நாட்டில் தான் இந்த நிலை என்று இல்லை சேர, சோழ, பாண்டிய நாடுகளிலும் இதே சமூக ஏற்ற தாழ்வு தான் நிலவி இருந்திருக்க வேண்டும். கொங்கு நாட்டை பல்லவர், மேலை கங்கர் ஆகியோர் கொங்கு சோழருக்கு முன் ஆண்டுள்ளனர். அவர் நாட்டில் இந்த உரிமைகள் முன்னமே இருந்திருந்தால் கொங்கு நாட்டிலும் இந்த உரிமையை அவர் ஆட்சியிலேயே வழங்கி இருப்பர். எனவே தொண்டை நாட்டிலும் கன்னட நாட்டிலும் கூட இந்த சலுகைகள் உரிமைகள் மக்களுக்கு இருந்திருக்கவில்லை.

    பார்வை நூல்: த நா தொ து வெளியீடு, கோயம்பத்தூர் மாவட்டக் கல்வெட்டுகள் தொகுதி-I, பக்: 5 – 6.

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டம் வேப்பூர் வாகீசுவரர் கோவில் தென் சுவர் 6 வரிக் கல்வெட்டு

    1. ஸ்வஸ்திஸ்ரீ ஸகல லோகச்சக்ரவத்தி இராசநாராயணன் வேப்பூர் உடையார்  வாகீஸ்வரம்  உடைய நாயனார் கோவில்த் தானத்தார்க்கு இன்னாயநார்க்கு ஆறாவது  
    2. ஆடி மாதம் முதல் திருமடை விளாகமாக சக்கிலி வாய்க்காலுக்கு வடக்கு மேற்பாற்கெல்லை  இவ்வாய்க்காலுக்கு கிழக்கும் வடபாற்கெல்லை  ஐய்யனுக்கு வாய்த்த விழுப்பரையன் வீடும் இத்தெரு
    3. வும் விட்ட கீழ்பாற்கு எல்லை பிடாரி கோயிலுக்கு மேற்கு இந்த நான்கு எல்லைக்கு  வுட்பட்ட நிலத்தில் ஏறும் பல காசாயக்குடி ஆன செட்டிகள், கைக்கோளர், வாணிகர், சேனையங்காடிகள், கோயிலங்காடிகள் செக்குக்குடி மக்கள் [மக்]கள்  மற்றும் ஏறும் பல 
    4. குடிகளுக்கும் செட்டிகள், கைக்கோளர்,  வாணிகர், சேனையங்காடிகள், கோயிலங்காடி, செக்குக்குடி மக்கள் இவர்கள் பேரால் பேர்க்கடமை, செக்குக்கடமை, தறிக்கடமை, நூலாயம், பட்டடை ஆயம், கற்றவட ஆயம் திருவிளக்கு மன்றாடிகள் பேர்க்கடமை,  பள்ளிகள் பேரால் விலைப்பண
    5. ம்  மற்றும் இப்பற்றில் கொள்ளும் ஆயமும் பல வரிகளும் சூல வரியும் பல உபாதியும் உட்பட ஸர்வ மாந்ய இறைஇலி ஆக சந்த்ராதித்தவரையும்  செல்ல பூசைக்கும் திருப்பணிக்கும் குடிஏற்றிக்  கொண்டு இன்னான்கு எல்லைக்கும் திரிச்சூல ஸ்தாபநம் பண்ணி கல்லிலும் செம்பிலும் 
    6. வெட்டிக் கொள்ளச் சொன்னோம். இன்னாள் முதல் இப்படி செய்து  ஸ்ரீ மாஹேஸ்வர ரக்ஷை  

    விளக்கம்: 14 ஆம் நூற்றாண்டு வண வேந்தர் இராசநாராயண சம்புவராயர் ஆட்சியில் வேப்பூர் வாகீசுவரர் கோவில் பொறுப்பாளர்களுக்கு நேரடியாக வேந்தனால் வழங்கப்பட இறையிலி அறிவிக்கை. வேப்பூர் வாகீசுவரருக்கு ஆடி மதம் ஆறாம் நாள் முதல் கோவிலை சூழ்ந்து குடியிருப்பு இடமாக ஆக்கிட சக்கிலி வாய்க்காலுக்கு வடமேற்கு பக்க எல்லையில் இந்த வாய்க்காலுக்கு கிழக்கும் வட பக்க எல்லையில் இறைவனுக்கு வாய்த்த விழுப்பரையனுக்கு வீட்டையும் அந்த தெருவைக்க கடந்து கிழக்கு பக்க எல்லையில் உள்ள பிடாரி கோவிலுக்கு மேற்கு வரையான இந்த நான்கு எல்லைக்கு உட்பட்ட நிலத்தில் குடியேறும் பல்வகை காசாக வரி செலுத்தும் குடிகளான செட்டிகள், கைக்கோளர், வாணிகர், சேனையங்காடிகள், கோயிலங்காடி, செக்குக்குடி மக்கள் குடியேறும் பல பிற மக்களில் செட்டிகள், கைக்கோளர், வாணிகர், சேனையங்காடிகள், கோயிலங்காடி, செக்குக்குடி மக்கள்  தரும் குடும்ப வரி, செக்கு வரி, தறிவரி, நூல் வரி, படை வரி, தென்னங்கயிறு வரி, கோயிலுக்கு நெய் தரும் இடையர் குடும்ப வரி, உழவர் குடும்ப விலைப்பணம், மேலும் இந்த ஊரில் வரும் பல வரிகள், சூலவரி, உபாதியும் சேர்த்து முழு மானிய இறையிலி ஆக சந்திர சூரியன் நிலைக்கும் வரை தொடர கோவில் பூசைக்கும்  விழாக்களுக்குக்கும் வேண்டி குடியேற்றிக்கொண்டு இந்த நான்கு  எல்லைக்கும் திரிசூலக்கல் நாட்டி இந்த ஆணையை கல்லிலும் செம்பிலும் வெட்டிக்கொள்ளலாம். இந்த நாள் முதல் இதை செய்து காப்பது மாகேசுவரர் கடமை ஆகும். இக்கல்வெட்டால் வேப்பூரில் செட்டியார்களின் குடியேற்ற ஊர் அமைந்ததை அறிந்து கொள்ள முடிகிறது.

    பார்வை நூல்: த நா தொ து வெளியீடு, தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் XXI வேலூர் மாவட்டக் கல்வெட்டுகள் தொகுதி III பக். 54 – 55

    நாமக்கல்  மாவட்டம் ராசிபுரம் பெருமாள் கோவில் முன்னுள்ள 22 வரிக் கல்வெட்டு

    ஸ்வஸ்தி ஸ்ரீ சகலகு / லம் வை / த்த கோ / இராஜ இரா / ச தேவற் / கு 14 வது / ஐப்பசி மாதம் 13 திய / தி  பல மண்டலத்து வீ / ர பெரு நிரவியாரோம் / இராசிபுரத்து ஊர் மன் / றத்து இவ்வூர் நகரத்தா / கு சமஸ்த சகல / சந்திராத்தித்தியம் உரித்தா / வதாக  வீரப்பட்டின / க்கல்ந் நாட்டிக்கு / டுத்தோம் பல / மண்டலத்து வீ / ர பெருநிரவியோ / ரோம் இது பல ம / ண்டலத்து நிர / வியார் /ரக்ஷை  

    விளக்கம்: எல்லாக் குலமும் வாழ வைத்த மூன்றாம் இராசராச சோழனின் 14 ஆவது ஆட்சி ஆண்டு 1230 இல் வெட்டிய கல்வெட்டு இது. ஐப்பசி  13 ஆம் தியதி பல மண்டலத்து வீர வணிகர் பெருங் குழுவினர் (நிரவி – merchant guild) இராசிபுரத்தில் ஒன்று கூடி இந்த ஊர் நகரத்தார்க்கு எல்லாமும் யாதும் ஆன முத்துக்குடை (சந்திராதித்யம்) உரித்தாகட்டும் என்று வேண்டி வீரப்பட்டினத்திற்கு கல் நாட்டிக் கொடுத்தோம் பல மண்டலத்தைச் சேர்ந்த வீர பெரும் வணிகர் குழுவினரோம். இதை பல மண்டலத்து வணிகர் குழுவின் பாதுகாப்பில் விடுகிறோம்.

    இராசிபுரத்தில் புதிதாக வணிக வீரருக்கான தங்கும் மனைகள்  கொண்ட ஊரை (வீரப்பட்டினம்) நிறுவி கல் நாட்டுவித்த செய்தியை குறிக்கிறது. முத்துக்குடை (சந்திராதித்யம்) என்பது சமணரின் முக்குடைகளில் ஒன்று என்பது இந்த வணிகக் குழுவில் சமணர் பலர் இருந்துள்ளனர் என்பதை உணர்த்துகின்றது.

    பார்வை நூல்: கல் சொல்லும் கதைகள், பக். 41- 42, ஆசிரியர்: சந்தியூர் கோவிந்தன்.

    ஈரோடு மாவட்டம் பவானி வட்டம்  வேம்பத்தி வேட்டுவன் தோட்டத்துள் இருந்த இப்போது ஈரோடு கலைமகள் பள்ளி அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்படும் 47 வரிக் கல்வெட்டு.

    ஸ்வஸ்தி ஶ்ரீ கோவி ராசகேசரிபன் /மராகிய ஶ்ரீ ராஜேந்திர சோழ தேவர் க்குத் திரு / வெழுத்திட்டுச் செல்லா நின்ற யாண்டு நா / லாவது சையமுரி நாடாழ்வார் நாட்டு வ / டகரை விக்ரம பல்லவபுரத்து நகரத்து / வளஞ்சிகர்க்கு வீரபட்டணம் செய்து குடு / த்தோம் நாடாழ்வாரை வெட்டின மதிரை/ இருக்கும் பிராந்தக தேவனான கொங்கு ம / ண்டலம் உய்யக்கொண்டானும் முசிறியான  / மும்முடிச்சோழபுரத்தில் சுந்தர சோழ முத்தர / யனை வெட்டின எறியும் விடங்க செட் / டியும் பாண்டிய நாட்டில் கல்லக நாட்டில்/ காக்கையான துளகோதை சோலையான் படை / நாயனை வெட்டின வீரகள் மதலையும் / பருதிப்பள்ளி நிரந்த ராஜேந்திர சோழப்பெருநிரவி / வீரமாணிக்கச் செட்டியும் சேந்தன் அதிருக்குரவாழ் நானாதேசியக் கவரை 6 வுவிடங்க  / ஞ்சாத்தன் பாலையான  திசையாயி / ரத்தைஞ்ஞூற்றுவப்பிள்ளை கண்டழியும் அரையம் மாயிலட்/ டியான வீரகள் மதலையும் சிங்க / முரனான அஞ்ஞூற்றுவ வேளானு / ம் அஞ்சுகரை  நாட்டுக் கவரை விடங் / கனும்  கவரைகள்மார் வத்துமாலையு / ம் வீரபுத்திரனும் முனிவர் சிங்கமு / ம் வலங்கைமார் வத்துமாலையு / ங் கவரைகள் உய்யக்கொண்டானும் / பிள்ளை சித்திரவாளியும் பிள்ளைப் / பத்திரவானும்  எறியும் விடங்கர் செட் / டியும் இவ்வூர் பகுதியும் இவ்வூர் மாதேவ/ ர்க்குக் குடுத்த தர்மமும் இவ்வூர் வீர / சாசனம் செய்தோம் இவ்வனைவோ / மும் உள்ளிட்ட வீரப் பெரு நிரவியாரோ / ம். இத்தன்ம மிறக்கினான் கெங் / கையிடை குமரியிடை எழுநூற்றுக்   /  காவத்துள்ளார் செயித பாவ / ம் கொள்வார் நோக் கொண்டாநேல்_ _வீர / புரமாவதாகவும். இப்பரிசே வீர / பட்டணம் செய்தோம் இவ்வனைவோமுள்ளி / ட்ட வீரப் பெருனிரவியோம். அறம் மறவற்க அறமல்லது துணையில்லை.

    மதலை – வலுவான இளையோர் படை; வத்த மாலை – வெட்பாலை அல்லது மல்லி மாலை

    விளக்கம்: முதற் குலோத்துங்கனின் நாலாவது ஆட்சி ஆண்டு 1074 இல் வெட்டப்பட்ட வணிகர் கல்வெட்டு என்கிறார் செ. இராசு. சையமுரி நாடாழ் வாரை வெட்டிய மதுரை பிராந்தக தேவன்,  கொங்கு மண்டல உய்யக்கொண்டான், முசிறி  சோழபுரத்தில்  சுந்தர சோழ முத்தரையனை  வெட்டிய எறி படை விடங்கச்செட்டி, பாண்டிய நாட்டின் கல்லக நாட்டு காக்கையான் துளகோதை சோலையான் படைக்குத் தலைவனை வெட்டிய வீரகளின் வலுவான இளையோர் அணி, பருத்திபள்ளி நிரந்த ராஜேந்திர சோழர் பெரு  வணிகர் குழுவின்  வீர மாணிக்க செட்டி, சேந்தன் அதிருககுரவாழ் நானாதேசியத்தின் கவரை விடங்கன் சாத்தன், பாலையான திசை ஆயிரத்து ஐநூற்றுவ பிள்ளை, கண்டழியும் அரையத்தின் மாயிலெட்டியான வீரகளின் வலுவான இளையோர் அணி, சிங்கமுரனான ஐந்நூற்றுவ வேளாண், அஞ்சுகரை நாட்டு கவரை விடங்கன் ஆகியோர் சையமுரி நாடாழ்வான் நாட்டு வடகரை விக்கிரம பல்லவ புரத்து நகரத்து வளஞ்சிய வணிகருக்கு வீரர் ஓய்வெடுக்கத் தங்கு மனைகள் உள்ள ஊரை, வீர பட்டணத்தை ஏற்படுத்திக் கொடுத்தோம் என்கின்றனர். கவரைமார் வத்துமாலை, வீரபுத்திரன் சிலை, முனிவர் சிங்காசனமும் கொடுத்தனர். அதே போல வலங்கைமார் வத்துமாலையும் கவரைகள் உய்யக்கொண்டான் பிள்ளை, பிள்ளை சித்திரவாளி, பிள்ளை பத்திரவான், எறிபடை விடங்கர் செட்டி ஆகியோர் இவ்வூருக்கு கொடுத்த நிலத்தையும் இவ்வூர் ஈசனுக்கு கொடுத்த கொடையையும் இவ்வூருக்கே ஆவணம் செய்து கொடுத்தோம் இந்த அனைவரையும் உள்ளடக்கிய வீரபெரு வணிகக் குழுவினரோம். இந்த கொடையை அழிப்பவர் 700 காவதம் வரையான கங்கை இடை குமரி இடை வாழ்வோர் செய்கின்ற பாவத்தை அடைவர். துன்புறுத்தி கவர்ந்தால் சாவதாக. இந்த திட்டப்படி வீர பட்டணம் அமைத்தோம் இந்த அனைத்து வீரபெரு வணிகக் குழுவினரும். செய்த அறத்தை மறக்க லாகாது அறத்தை விட வேறு துணை இல்லை.

    இவ்வாறாக பல வணிகக் குழுக்கள் ஒத்துழைப்பில் தான் வணிக வீரர் படைகள் இயங்கின. வணிகர் படை பேணுவதில் அதிக கவனம் செலுததினர் என்பதை வீர பட்டணக் கல்வெட்டுகள் உணர்த்துகின்றன. இது தான் மன்னராட்சியின் அவலம்.

    பார்வை நூல்: கலைமகள் கலைக்கூடம் , பக். 79 – 80, ஆசிரியர்: செ. இராசு.  

    Share
  • கல்வெட்டில் வரலாற்றின் சுவடுகள்

    கல்வெட்டில் வரலாற்றின் சுவடுகள்

    தமிழ்நாடு மாநிலத் தொல்லியல் துறை வெளியிட்டுள்ள தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் தொகுதி XIX & XXII ஆகியவற்றில் இருந்து சில கல்வெட்டுகள்.

    வேலூர் மாவட்டம் திருப்பத்தூர்  ஊத்தங்கரை சாலையில் உள்ள கொரட்டி கிராமம் மாரியம்மன் கோவில் அருகில் உள்ள 7 வரிக் கற்பலகைக் கல்வெட்டு. 

    1. ஸ்வஸ்தி ஸ்ரீ வலியடக்கியார்க் கேழாவது. 
    2. வலியடக்கியார் போவூர் நாடைந்நூறு பூமி 
    3. யுமாள காடு வெட்டிப்படை ஆறு[கு]ழுகூர் மேல் 
    4. வந்தெறிந்த ஞான்று வலியடக்கியார் கோ 
    5. [யி]ற்றமன் வாணிக வாணிளவரையன் இரண்டு 
    6. குதிரையும் மேலாரையும் குத்திப்பட்டான் நெ
    7. த்தோர்பட்டி   

    ஞான்று  – பொழுது; எறிந்த – அழித்த; கோயிற்றமன் – அரண்மனைப் பணியாள், சேவகன்; மேலார் – இராகுத்தான். குதிரை வீரர்.

    விளக்கம்: மன்னர் வலியடக்கியார் போவூர்நாடு ஐந்நூறு நிலப்பரப்பை ஆண்டு கொண்டிருந்த போது அவனது 7ஆம் ஆட்சி ஆண்டில் காடுவெட்டி மன்னனின் படை ஆறுகுழுமூர் ஊர் மீது வந்து அழித்த போது வலியடக்கியாரின் அரண்மனைப் பணியாள் வாணிக வாணிளவரையன் இரண்டு குதிரையைக் குத்திக் கொன்று அவற்றின் இராகுத்தன்களையும் கொன்று தானும் வீரச் சாவடைந்தான். அதற்காக அவன் குடும்பத்தாருக்கு குருதி சிந்தி உயிர் விடுவோருக்குத்  தரப்படும் நெய்த்தோர் பட்டி நிலம் கொடையாக வழங்கப்பட்டது.

    வாணிக என்ற சொல் இவன் வணிகர் குடியைச் சேர்ந்தவன் என்பதைக் காட்டுகிறது. அதே நேரம் வாணிளவரையன் என்பது இவன் வாணர் அரசர் குலத்தைச் சேர்ந்தவன் என்பதையும் குறிக்கிறது. இதாவது, பண்டு ஆறலைக் கள்வர் தம் பண்டங்களையும் உடைமைகளையும் கொள்ளையிடாமல் காத்தற் பொருட்டு வணிகர் தமக்கென தனியே ஒரு பாதுகாப்புப் படையைப் பேணினர். அப்படை சில வேளைகளில் மன்னனின் வேண்டுகோளுக்கிணங்க, எதிரிப் படையோடு போரிட்டு விரட்டியதால் மன்னன் வணிகரை சிறப்பித்து “எட்டி” என்ற பட்டம் வழங்கினான். இதுவே பின்னாளில் சகர முன் மெய் பெற்று ‘செட்டி’ ஆனது. அப்படிப்பட்ட  நிகழ்வுகளில் மன்னன் வணிகருக்குத் தன் பெண்ணைக் கொடுப்பதும் வணிகரிடம் பெண் எடுப்பதும் நிகழ்ந்தது. அப்படியான ஒரு உறவில் தோன்றியவன் தான் இந்த வாணிக  வாணிளவரையன் என்று புரிந்து கொள்ளலாம். இதாவது, வாண அரசன் வணிகனுக்கு மணம் முடித்த தன் மகள் வயிற்றுப் பேரனைத் தத்தெடுத்து இளவரசனாக ஆக்கி இருக்கிறான் என்பதே. மனுதர்மம் வணிகர்நெறி பொருள் விற்பது தான் என்று குறித்துள்ளது. ஆனால் இப்படி படை பேணுவதும் போரிடுவதும் சத்திரியர் நெறி என்று மனுஸ்மிருதி குறித்ததை வணிகர் செய்யலாமோ?  இது விதி மீறல் அல்லவோ? இந்த மேற்கண்ட செயல் மனுதர்மம் தமிழகத்தில் பின்பற்றப்படவில்லை என்பதைத்தானே காட்டுகிறது? ஆனால் அரசியல் மேடையிலும்  எழுத்திலும் மக்களை முட்டாள் ஆக்கும் விதமாக அல்லவா பேசுகின்றனர், எழுதுகின்றனர். ஆறு என்றால் ஓய்வு; குழுமூர் என்றால் கூடும் ஊர். இதாவது, படையினர் ஓய்விற்காக கூடும் ஊர் என்பது இதன் பொருள்.

    பார்வை நூல்: தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் XIX & ஆவணம் 12, 2001 பக்கம் 5.

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேவர் முக்குளம் கிராமம் பள்ளிகொண்ட பெருமாள் கோவில் கூரையில் இருந்த 44 வரி வணிகக் கல்வெட்டு

    ஸ்வஸ்திஸ்ரீ  ராஜேந்திர / சோழ தேவற்கியாண்டு பதி / நெட்டாவதிற் / ஸ்வஸ்திஸ்ரீ  தேவதேவந் த்ரி / _ _ வாணி அமரகன்யாச்சி தந் / வந்த தந்மோத புஜ / _ _ _   / ண் நாதந் ஸ்பஷ்ட நிர்ம்மித மஹாராசாதி / மர்த்தந ஸகல பராஸர / _ _ ரிய சாமுண்டேஸ்வரி / _ _ _ / வீரஸாஸன  மஹா / புவந வீரர்க _ மஹா / வீர  ஸ்ரீவி _ புத _ _ தி / ஐநூற்றுவரும் இ / வர் மக்களாந ஸ்ரீநா _ / வீரபுத்ரரோம் மாப்பந் புளியுமநை / க் கொன்ற பணிய் மக்கள்  மண்டலங் / காக்கும் கண்டழியும் மண்டலங்கா / க்கும் கவறை செட்டியையும் ஐஞ் / ஞூற்றுவந்  _ _ /  (பின்பக்கம்) ல்கிந்ற பணிசை ம / கந்  திடாவூரிருக்கும் ப்ரா / ஹ்மணந் அஞ்ஞூற்றுவாண்டா / நும்  அருமொழிதேவ முநிவர் சி / ங்கமும் எதிராந சிங்கமும் சிறு / திடாவூரிருக்கும்  கலியுக கண்டழி / யும் துறகலூர் எறியும் விடங்க / ச்செட்டியும்  சத்துருகண்ட மாயி / லெட்டியும்  பாதாளதூசியும் நாட்டுப் / பெருவாரியந்  நாட்டுச்செட்டியும் / மேற்பாடி மூத்தநும்  பாண்டி ஞாட்டைஞ் ஞூற்றுவாண்டாநும் வா / ளையூரைஞ் ஞூற்றுவாண்டாநு / ம்  இவர்களோடும் வந்த பல்வ / கை வீரரும் ஸமையமும் இருக்க ந / ம்  மகந், வீரகள் புத்திரனைக் கொற்ற / குலைப்பகையந் மாளனைக் குத்தி / க் கைதறித்து சமையத்துக் கிட / சோமையந் மகந் சாமுண்டந் பணி /கண்டு நாநாதேசிய  வீர திருவடியாயிரு / ந்து இவனுக்கு வீர பட்டணஞ் செய்து / குடுத்து _ _ ணிக்கச் செட்டுங் கட்டி / _ யம்ப _ _ _                        

    மக்களான – படைவீரரான; பணிசை – பணிசெய்; கண்டழி – துணை நிற்கும் படை; எறி – தங்கும்  அல்லது காக்கும்; மாயிலெட்டி – எண்ணெய் வணிகன்; பெரு ஆரியன் – பெருந் தலைவன்; ஸமயம் –  படையின் ஒரு பிரிவுப் பெயர்; கொற்ற – அச்சுறுத்திய; தறித்து – வெட்டி; கிட – ஆயுத சாலை;  வீரபட்டணம் – வீரர் ஓய்வு கொள்ளும் மனைகள், rest house; கட்டி – அகமகிழ்ந்து; இயம்ப – சொல்ல

    விளக்கம்: இந்த வணிகப் படைக் கல்வெட்டு முதலாம் இராசேந்திரனின் 18 ஆம்  ஆட்சி ஆண்டு 1030 இல் வெட்டப்பட்டது. 3 ஆம் வரி முதல் 14 ஆம் வரி வரை வணிகர் தம் மெய்க்கீர்த்தியே இடம் பெற்றுள்ளது. 15 ஆம் வரியில் தான் செய்தி தொடங்குகிறது. திசை ஐந்நூற்றுவரும்  இவருடைய படை வீரர்களான ஸ்ரீ நா _ _ வீரமக்களும் மாப்பன் புளியுமனை கொன்ற பணிமக்களும், இம்மண்டலம் காக்கும் துணை நிற்கும் படையும் இம்மண்டலம் காக்கும் கவறை செட்டியும், ஐந்நூற்றுவன் _ _ _ நில்கின்ற பணிசெய் மகனும், திடாவூரில்  வாழும் பிராமணன் ஐந்நூற்றுவாண்டானும், அருமொழித்தேவ முனிவர் சிங்கமும் எதிரான (தம்பி) சிங்கமும், சிறுத்திடாவூரில் இருக்கும் கலியுகத் துணை நிற்கும் படையும், துறகலூரில் இருக்கும் விடங்கச் செட்டியும், சத்துருகண்ட மாயிலெட்டியும், பாதாளத்தூசியும், நாட்டுப்  படையின் பெரு ஆரியனான நாட்டுச் செட்டியும், மேல்பாடி மூத்தனும், பாண்டி நாட்டு ஐந்நூற்றுவாண்டானும், வாளையூர் ஐந்நூற்றுவாண்டானும், இவர்களோடு வந்த இவர்தம் பல்வகை வீரரும், சமையப் படையும் சூழ்ந்து இருக்க, “நம் மகனையும் வீரர்கள் மகனையும் அச்சுறுத்திய குலப்பகைவன்  மாளனைக் கத்தியால் குத்திக் கையை வெட்டிய சமையப் படையின் ஆயுதக் கிடங்கு சோமையன் மகன் சாமுண்டனின் செயல்திறன் கண்டு சாமுண்டனை நாநாதேசிய வணிகரின் வீரத்திருவடியாய் இருக்கவும் இவனுடைய படை ஆள்கள் ஓய்வுகொள்ள, தங்கில் (வீரபட்டணம்) செய்து குடுத்து வசதி செய்யவும்” மாணிக்கச்செட்டி அகமகிழ்ந்து ஆணை இட்டார். குலப் பகைவன் எனக் குறிக்கப்படும் மாளனும் வணிகனாகவே இருக்க வேண்டும்.

    பாலக்காடு அட்டப்பாடி வணிகக் கல்வெட்டும் இதே போல வீரபட்டணம் செய்து கொடுத்ததைத் தெரிவிக்கிறது. ஐகுந்தம் வணிகக் கல்வெட்டும் இதே போல வணிகர்கள் மாபெரும் படையைப் பேணியதைக் குறிக்கிறது.

    பார்வை நூல்: ஒன்றியத் தொல்லியல்  துறையால் 1926இல் முன்பக்கம்  மட்டும்  பதிவு செய்யப்பட்டுள்ளது. பின்பக்கக் கல்வெட்டு அண்மையில் தான் அறியப்பட்டு நாளேட்டில் வெளியானது. முழுமையாக இன்னும் எந்த நூலிலும் அச்சேறவில்லை.

    வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் வட்டம் நத்தம் கிராமம் திருப்பழனமுடைய நாயனார் கோவில் தெற்குச் சுவரில் உள்ள 10 வரிக் கல்வெட்டு.

    1. ஸ்வஸ்திஸ்ரீ  திருபுவனச்  சக்கரவர்த்திகள் ஸ்ரீ குலோத்துங்க _ _ 
    2. [ழ] தேவற்கு யாண்டு 30 [ஆ]வது நிகரிலி சோழமண்டலத்து 
    3. _ _ ட்டு தகடூர் நா[ட்டு எ]யில்னாட்டுக்  கலி[ஞ்சி]றைப் பற்றுக் [கா] _ 
    4. கெயின்கறையில் வீடுடையார் திருபழனமுடைய  நாய[னா] _
    5. [ர்]த் திருக்கோவலூர் உடையார் திருவீரட்டானமுடையார் கோ[யி]
    6. ல் தேவரடியாரில் ககையாழ்வி மகள் ஆளுடையனாச்சியார்  
    7. _ _ _ க்குத்  திருப்பள்ளியறை நாச்
    8. சியாரை  எழுந்தருளிவித்து இன்னாச்சியார் 
    9. திருவத்தசாமத்துக்கு அமுதூட்டுக் குடுத்துவிட்ட
    10. குட்டையூர் திருத்தி விட்ட நிலம் நாற்     

    பழனம் – வயல், பொய்கை ;  நாயனார் – இறைவன்; 

    விளக்கம்: இந்தக் கல்வெட்டு 1208இல் மூன்றாம் குலோத்துங்கச் சோழனின் 30ஆம் ஆட்சி ஆண்டில் வெட்டப்பட்டது. நிகரிலி சோழ மண்டலத்தில் அடங்கிய தகடூர் நாட்டின் எயில் நாட்டு கலிஞ்சிறைப் பற்றில் காகைகறையில் கோவில் கொண்ட திருப்பழனமுடைய  நாயனார்க்குத் திருக்கோவிலூரில் கோவில் கொண்ட திருவீரட்டானம் ஈசுவரர் கோவில் தேவரடியாரில் ககையாழ்வியின் மகள் ஆளுடைய நாச்சியார் இங்கத்து திருபள்ளியறை இறைவியை எழுந்தருளச் செய்து  இத்தேவிக்குத் திருஅர்த்த சாம பூசைக்கு அமுதூட்ட, குட்டையூரில் காடு திருத்தி, சாகுபடிக்குக் கொண்டு வந்த நிலத்தில் நாற்பது அளவு நிலத்தைக் கொடையாகக் கொடுத்தனர். கல்வெட்டு அதற்கு மேல் சிதைந்துவிட்டது. ஆளுடையநாச்சியாரின் தாய்ப் பெயர் ககையாழ்வி என்பதும் காகைகறை என்பதும் ஒலித் தொடர்பு கொண்டுள்ளதால் இவள் தன் தாய் ஊர் இது என்று  வந்தனளோ?  ககை, காகை இரண்டில்  ஒன்றில் ஏதோ எழுத்துப் பிழை உள்ளது?

    பார்வை நூல்: தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் XIX, பக்கம் 238

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் வட்டம் ஒலக்கூர் கிராமம் அகத்தீசுவரர் கோயில் கருவறை தென்புற ஜகதி மற்றும் பட்டிகையில் உள்ள 6 வரிக் கல்வெட்டு.

    1. ஸ்வஸ்தி ஸ்ரீ கடல் சூழ்ந்த பார்  மாதருங் கலை மாதருங் சீர்மாதருங் போர்மாதரும்  வந்து வாழ  நாற்கடல் சூழ் புவி ஏழும் பாற்கடல் சூழ் புகழ் பரப்பச் சோதிமணிமுடி  புனைந்தருளி அறு சமயமு மைம்பூதமு  நெறியில் வந்து பாரிப்பத்  தென்னவருஞ் சேரலருந்  சிங்களரு முதலாய 
    2. மன்னவர்  வந்திறை சூழ்த்து சேவிப்ப  ஊழி  ஊழி ஒரு செங்கோலேழு  பாருமினி  தளிப்பச் செம்பொன் வீரஸிம்மாஸனத்து உலகுடை முக்கோக் கீழாநடிகளோடும்  வீற்றிருந்தருளிய கோ ராஜகேசரிபந்மரான  திரிபுவனச்சக்ரவத்திகள்  ஸ்ரீ இராஜாதிராஜா தேவர்க்கு யாண்டு  நாலாவது  ஐயங்கொண்
    3. ட சோழ மண்டலத்து  ஒய்மா நாடான   விஜையராஜேந்த்ர வளநாட்டு எயில் நெடுங்கல் நாட்டு நெடியத்துக் குடிப்பள்ளி  அப்பன் சாத்தநும் வெண்குன்றக் கோட்டத்து உரத்தி நாட்டு உரத்தி ஒரளி உதையன் பெருமாளும் பரிவேட்டை போன இடத்தில் ஒரளி உதையன்  பெருமாள் புல்வாயை எய்த அம்பு பிழைத்து இவ்
    4. வப்பன் சாத்தனை அம்புபட்டு பட்டமையில் இதுக்குப் பெருமக்களும் பெரிய நாட்டாரும் பன்னாட்டாரும் கூடி இருந்து பிராயச்சித்தம் விதித்தபடி  இம்மண்டலத்து  உலக்கை ஊராந ராஜேந்த்ர நல்லூர்த் திருவகத்தீஸ்வர முடைய மஹாதேவர் கோயிலில் வாதாபி விடங்கர்க்கு இ(வ்)வப்பன் சாத்
    5. தனுக்காகப் பகைநீங்க இவ்வொ(ர)ளி உதையன் பெருமாளேன் வைத்த திருநுந்தா விளக்கு ஒன்றுக்கு இக்கோயில் திருவுண்ணாழிகை ஸபையோம் உபையமாகக் கைக்கொண்ட  பசு முப்பத்திரண்டும் இஷபம் ஒன்றுங் கைக்கொண்டு  இத்திரு நுந்தா விளக்கு ஒன்றுஞ் சந்திராதித்த வரை எரிக்கக் கடவோம் ஆகச் சம்ம
    6. தித்தோம்  திருவு(ள்)ணாழிகைச் ஸபையோம்.            

    பரிவேட்டை – வேட்டைச் சுற்று; புல்வாய் – கலைமான்; பெருமக்கள் – பிரமாண ஊர் மன்ற உறுப்பினர்; பெரிய நாட்டார் – நாட்டாண்மை தலைவர்; பிழைத்து – தவறுதலாக;  பன்னாட்டார் – பல்குழு வணிகராக இருக்குமோ?;  வாதாபி விடங்கர் – உளியால் செதுக்கப்படாத லிங்கம்; உண்ணாழிகை – கருவறை 

    விளக்கம்: இந்தக் கல்வெட்டு இரண்டாம் இராசாதிராசன் மெய்க் கீர்த்தியுடன் தொடங்குகிறது. இது அவனது 4 ஆம் ஆட்சி ஆண்டு 1170இல் வெட்டப்பட்டது. தொண்டைநாடு என்னும்  செயங்கொண்ட சோழ மண்டலத்தில் அடங்கிய ஓய்மா நாடெனும் விசய ராசேந்திர வளநாட்டு எயில்நெடுங்கல் நாட்டில் உள்ள நெடியம் கிராமத்தில் வாழும் பள்ளியான அப்பன் சாத்தனும் வெண்குன்றக் கோட்டத்தில் அடங்கிய உரத்தி நாட்டு உரத்தி ஒரளி உதையன் பெருமாளும் சுற்று வேட்டைக்குப் போன இடத்தில் ஒரளி உதையன் பெருமாள் கலைமானை நோக்கி விட்ட அம்பு தவறுதலாக அப்பன் சாத்தனைத் தைத்து அவன் இறந்து போகிறான். இதன் காரணமாகப் பிராமண ஊர் மன்றத்தாரும், பெரிய நாட்டரும், பன்னாட்டு வணிகரும் ஒன்று கூடி, கொன்ற பாவத்திற்குக் கழுவாய் விதித்து இம்மண்டலத்தில் உள்ள உலக்கை ஊரான இராசேந்திர நல்லூர் என்னும் இன்றைய ஒலக்கூரில் உள்ள அகத்தீசுவரர் கோவிலில் உள்ள வாதாபி விடங்கர் சிவலிங்கத்திற்கு, இறந்த அப்பன் சாத்தன் கொலைப் பழிநீங்க இந்த ஒரளி உதையன் பெருமாள் ஏற்படுத்திய நந்தா விளக்கு எரிப்பு ஒன்றுக்கு இக்கோயில் கருவறை பிராமணர் நன்கொடையாக முப்பத்திரண்டு பசுவும் ஒரு காளையும் பெற்றுக்கொண்டு இத்திரு நந்தா விளக்கை ஞாயிறும் நிலவும் நின்று நிலைக்கும் காலம் வரை எரிப்போம் என்று உறுதி கூறி, கல்வெட்டினர் கருவறைப் பணி செய்யும் பிராமணர்கள்.

    இங்கு நியாயத்தாரின் நீதிமன்றம் தவிர்க்கப்பட்டதோ? எல்லாம் மிரட்டல் தானோ என்று எண்ணத் தோன்றுகிறது. உதையன் பெருமாள் நந்தா விளக்கு எரிக்கும் அளவிற்குச் செல்வ செழிப்புள்ள குடியில் பிறந்தவன் என்பதை அவன் சுற்று வேட்டையால் விளங்கிக்கொள்ள முடிகிறது. உரத்தி ஓர் ஊர் பெயர். ஒரளி ஊராளி என்பதன் கொச்சைத் திரிபா எனத் தெரியவில்லை.

    பார்வை நூல்: தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் XXII, பக்கம் 8

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் வட்டம் உப்புவேலூர் கிராமம் திருவிருத்தப் பெருமாள் கோயில் வாசலில் உள்ள 2 வரிக் கல்வெட்டு

    1. இக்கோயில் திருவாசல்
    2.  பறயன் திருவாசல்

    விளக்கம்: இந்தக் கல்வெட்டு 14 ஆம் நூற்றாண்டினது எனக் கருதப்படுகிறது. இந்தக் கோவிலின் தெய்வீக வாசல் ஒரு பறையனால் செய்விக்கப்பட்டதனால் அவன் பெயரில் பறையன் திருவாசல் எனக் குறிக்கப்பட்டது.

    பறையர்கள் கோவிலுக்குச் சந்தி விளக்கு ஏற்றிய கல்வெட்டுகள் பல உள. ஆனால் இது சந்தி விளக்கை விட அதிகச் செலவாகும் திருப்பணி என்பது இப்பறையன் செல்வச் செழுமையும் பதவியும் பெற்று வாழ்ந்திருக்க வேண்டும் என்று காட்டுகிறது. உண்மை இப்படி இருக்க, தலித்தியர் தம்மை இச்சமூகம் 2,000 ஆண்டுகளாக ஊரில் வரவிடாமல் ஒடுக்கியதாக பொய்யை  நம்பிப் பழிக்கின்றனர். எல்லாக் கோயிலும் ஊர் நடுவே தான் அமைந்துள்ளன. ஒருவர் கோவிலுக்குச் செல்ல வேண்டுமெனில் பிராமணர் வாழும் தெருவைக் கடந்து தான் கோவிலுக்குச் செல்ல முடியும். இத்திருவாசல் அமைத்த பறையன் ஊருக்குள் வந்து தானே இதைச் செய்திருக்க முடியும்? திருவாசல் செய்தவன் கோவிலில் சாமி கும்பிடாமலா இத்திருப்பணியைச் செய்திருப்பான்? எனவே பறையர் ஒடுக்குமுறை என்பது 16-17 ஆம் நூற்றாண்டில் தெலுங்கு நாயக்கர் ஆட்சியில் நிகழ்ந்த நிர்வாக ஒடுக்கு முறை ஆகும். நிர்வாக ஒடுக்குமுறைக்கும் மதத்திற்கும் மனுதர்மத்திற்கும் எந்தத் தொடர்புமில்லை. விசயநகர ஆட்சிக்கு முன் பறையர் ஒடுக்கு முறை இருந்ததில்லை என்பதே உண்மை.

    பார்வை நூல்: தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் XXII, பக்கம் 153.

    திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டம் பெரிய கோளாப்பாடியில் உள்ள 8 வரி நடுகல் கல்வெட்டு.

    1. கோவிசைய மயேந்திர பருமற்கு 
    2. யாண்டு பதினொன்றாவது கீழ் வேணாட்
    3. டுத் துடரி மேல் விலக்குமிறை
    4. யார் வந்த ஞான்று பெரும்பா
    5. ண்ணரையர் மருமக்கள் அம்கோ
    6. ட்டையர் சேவகன் சாக்கை ப
    7. றையனார் இளமகன் ஏறன்
    8. எறிந்து பட்டான். 

    ஞான்று – போது; மருமக்கள் – பெண் கொடுத்த உறவால் வந்த உறவினர்; சேவகன் – படைத்தலைவன்; இளமகன் – பயிற்சி பெறும் கன்னி வீரன்; எறிந்து – வென்று; பட்டான் – வீரச் சாவடைந்தான்.   

    விளக்கம்: இந்தக் கல்வெட்டு பல்லவன் முதலாம் மகேந்திர வர்மனின் 11ஆம் ஆட்சி ஆண்டு 601இல் வெட்டப்பட்டது. கிழக்கு வேணாட்டு துடரி மீது விலக்குமிரையார் படையெடுத்து வந்த போது பெரும்பாண அரசர் மருமக்களான அம்கோட்டையர்க்குப் படைத்தலைவன் சாக்கைப் பறையனிடம் பயிற்சி பெரும் கன்னி வீரன் ஏறன் என்பவன் எதிரிப் படையை வென்று வீரச் சாவடைந்தான்.

    துடரி இன்றைய பெரிய கோளப்பாடியாக இருக்கலாம். பறையர்கள் போர்வீரர்களாக, தொன்முது காலம் முதல் இருந்து வந்துள்ளனர். அவர்கள் தம் இன மக்களைத் திரட்டிப் பயிற்சி தந்து போரிட்டதால் அப்படைக்குத் தளபதிகளாகவும் இருந்துள்ளனர். சாக்கைப் பறையன் ஆடவும் தெரிந்தவனோ? ஏறு என்றால் காளை ஏறன் என்றால் காளையன். இப்படித்தான் அக்கால மக்கள்  தமிழில் பெயர் வைத்தனர்.

    பார்வை நூல்: செங்கம் நடுகற்கள் க.எண் 1971/96

       

    திண்டுக்கல் மாவட்டம் உடும்பகுடி வேட்டைக்காரசாமி கோவில் 13 வரி நடுகல் கல்வெட்டு

    1. ஸ்ரீ 
    2. இரணசிங்க 
    3. த் துவராவதி வெள்ளார்
    4. பளி 
    5. நாயகன் கா
    6. ரி சாத்தன்   
    7. உடும்பகு
    8. டி நிரை கொள்ள 
    9. பின்பு சென்று 
    10. எறிந்து பட்டான் 
    11. பள்ளி வே
    12. ளா(ந்) சாரிகன் சி
    13. ய்    

    வெள்ளார் / வெள்ளாளர் – வெள்ளைத் தோல் ஆரியர்; பள்ளி – வன்னியர்; நிரை – கால்நடை கூட்டம்; கொள்ள – கொள்ளையிட; எறிந்து – வென்று; வேளாண் – அரசகுடி உறவினன், அரசகுடி ஆள்; சிய் – சேய், மகன்.

          

    விளக்கம்: இந்தக் கல்வெட்டு 9ஆம் நூற்றாண்டினதாகக் கொள்ளப்படுகிறது. இதில் வேந்தர் பெயர் ஏதும் குறிக்காமல் அங்கத்துக் குறுநில அரசன் பெயர் குறிக்கப்படுவது பல்லவர் ஆட்சிக் குலைவின் காரணமாக இருக்கலாம். இரணசிங்க துவராபதி வெள்ளாளர்க்குப் படைத் தலைவனான சேவகன், பள்ளிசாதித் தலைவன் காரி சாத்தன் என்பவன் உடும்பகுடி கால்நடைகளைக் கொள்ளையிட்ட போது அதைத் தடுக்கப் பின்தொடர்ந்து துரத்திச் சென்று போரில் வென்று வீரச் சாவடைந்தான் பள்ளி வேளாண் சாரிகன் என்ற அரசகுடி உறவினன். அவன் மகன் இந்நினைவுக்கல் எடுப்பித்தான். இன்று இது வேட்டைக்காரச் சாமியாக வணங்கப்படுகிறது.

    வெள்ளாளர் என்பவர் வெள்ளைத்தோல் ஆரியர் என்பதால் தான் வெள்ளாளர் என்று குறிக்கப்பட்டனர். தொண்டை மண்டலத்தில் இருந்து கைக்கோளர், பறையர் ஆகியோர் படைவீரர்களாகத் தெற்கே சென்று தனியே படைப்பற்று குடியிருப்பு அமைத்தது போலவே பள்ளி என்னும் வன்னியரும் தெற்கே சென்று திண்டுக்கல்லில் படைப்பற்று அமைத்து வாழ்ந்ததற்குச் சில நடுகற்கள் சான்றாக உள்ளன. இது அதில் ஒன்று.

    பார்வை நூல்: இது வரலாற்றுத் தேடல் குழுவால் புதிதாக அறியப்பட்ட நடுகல் கல்வெட்டு. இன்னும் நூலில் அச்சேறவில்லை.

    மதுரை பழங்காநத்தம் மேற்கே உள்ள மாடக்குளம் ஊர் குளத்தின் வடக்கு மடைத்தூண் 12 விரிக்க கல்வெட்டு.

    1. விறோதி வருஷம் 
    2. ஆவணி மாத
    3.  ம் 29 தேதி திருவா
    4. லைவாயன் ம
    5. டைக் கல்லு 
    6. எடுத்து நாட்டி 
    7. வித்தான் திரு
    8. வாலை வாச்சி 
    9. அதிகாரி மகன் 
    10. ஆரியர் புத்திர
    11. கணக்கு நாய
    12. ன் பிள்ளை.   

    விளக்கம்: இந்தக் கல்வெட்டு விரோதி ஆண்டு 1709 அல்லது 1769இல் ஆவணி மாதம் 29ஆம் தேதி வெட்டப்பட்டது எனக் கணிக்கப்பட்டுள்ளது. மதுரை மாடக்குளம் ஊர்க்குளத்தின் திருவாலைவாயன் எனும் மடைக்கல் சாய்ந்து சரிந்து கிடந்ததைத் தூக்கி அதே இடத்தில் நிறுத்தினான் திருவாலை மன்ற அதிகாரி மகன் ஆரியர் புத்திரக் கணக்கு நாயன் பிள்ளை என்பவன். 18ஆம் நூற்றாண்டு வரை ஆரியர், இதாவது உயர்ந்தோன் என்ற பட்டத்தைத் தாங்கியவர் வெள்ளாளர் ஆவர். ஆனால் அடுத்த 19 ஆம்  நூற்றண்டில் அதைப் பிராமணர் பக்கம் திரும்பிவிட்டனர் அதே வெள்ளாளர்.

    பார்வை நூல்: ஆவணம் 15, 2004, பக்கம் 120

    Share
  • பண்டு பெண்களுக்கு சொத்துரிமை பற்றிய கல்வெட்டுகள்

    பண்டு பெண்களுக்கு சொத்துரிமை பற்றிய கல்வெட்டுகள்

    சேசாத்திரி ஸ்ரீதரன்

    கல்வெட்டில் அரசகுடிப் பெண்களும் தேவரடியாரும் கோவில்களுக்கு பல நிவந்தங்கள் செய்த குறிப்புகள் உள்ளன. இவை அக்காலத்தே உயர் குடிப்பெண்களுக்கு சொத்துரிமை இருந்ததை உறுதி செய்கின்றன. அதே நேரம் எளிய குடிப் பெண்கள் கோவிலில் நுந்தா விளக்கு எரித்தது, கொடைகள் வழங்கியது பற்றிய கல்வெட்டுகளும் சில உள. ஆக எளிய வீட்டார் பெண்களும் அக்காலத்தே சொத்து உரிமை பெற்றிருந்தனர் எனத் தெரிகிறது. கீழே உள்ள கல்வெட்டுகள் “பெண் அடிமை என்பதற்கு உள்ள காரணங்கள் பலவற்றில் சொத்துரிமை இல்லாததுவே முக்கியமான காரணம்” என்ற ஈ.வே.ரா. கருத்தை உடைத்தெறிகின்றன. தமிழ் வேந்தர் காலத்தில் பெண்கள் சொத்துரிமை பெற்றிருந்தனர் என்பதை கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. இது தமிழகத்தில் தமிழர் ஆட்சி ஒழிந்து தெலுங்கு நாயக்கர் ஆட்சியில் பெண்கள் சொத்துரிமை இழந்திருப்பாரோ? என்ற ஐயத்தையும் எழுப்புகிறது.

    காஞ்சிபுரம் மாவட்டம் சென்னை வேளச்சேரியில் உள்ள யோக நரசிம்மர் கோயில் தெற்கு குமுதம் இரு வரியில் பொறிக்கப்பட்ட 11 ஆம் நூற்றாண்டு கல்வெட்டு.

    1. ஸ்வஸ்திஸ்ரீ வெளிச்சேரி பத்தங்கி தேவநாத பட்டன் பாரியை நங்கைச் சாணி இச்சிங்கப் பெருமாள் கோயில் செயைத்த தச்சுக் கூலிக்கு உடலாக குடுத்த தோட்டம் ஆவூரான் நூ
    2. ற்று முப்பதுக்குழி _ _ _ ஏழும், இவந் பத்தங்கி ஆராவமுது (து) பட்டனுக்கு இருபது பழங் காசுக்கு  விற்று. இப்பழங்காசு இருபதும் இக்கோயில் செய்த தச்ச(ர்)க்கு பணிக்கு உடலாக குடுத்தது.

    உடலாக – முன்பணமாக, அச்சாரம்; சாணி – இந்நாளில் திருமதி என்பது போல அந்நாளில் மணமான பிராமணப் பெண்ணை குறிக்க அடையாக பயன்பட்ட சொல்; இவன் – இவற்றை

    விளக்கம்:  வெளிச்சேரி வாழ் பத்தங்கி தேவநாத பட்டருடைய மனைவியான நங்கை சாணி என்ற பிராமணப் பெண் இந்த யோக நரசிம்ம பெருமாள் கோயிலை கட்டுவதற்காக சிற்பிகளுக்கு கூலி அச்சாரமாக தனது ஆவூரான் தோட்டம் என்னும் நூற்று முப்பது குழி நிலத்தையும் _ _ ஏழும் சேர்ந்த இவற்றை பத்தங்கி ஆராவமுது பட்டனுக்கு இருபது பழங்காசுக்கு விற்று அந்த இருபது பழங் காசை சிற்ப பணிக்கு முன்பணமாக கொடுத்தாள்.

    இக்கல்வெட்டு மூலம் நங்கை சாணிக்கு நூற்று முப்பது குழி நிலம் சொத்தாக இருந்ததை அறிய முடிகிறது. ஆராவமுது பட்டன் பத்தங்கி என்ற முன்னொட்டால் குறிக்கப்படுவதை பார்த்தால் தேவநாத பட்டனுக்கு உறவினனாக இருந்திருக்க வேண்டும் எனத் தெரிகிறது. இச்சிறு கோவில் கட்டப்  பாறை வாங்கி அதை கொணர்தல் செலவு, செதுக்கும் செலவு ஆகியவற்றை ஆசாரிக்கு தர வேண்டும்.  இன்று இக்கோவில் புதுப்பிக்கப்பட்டதால்  பழைய கட்டட அமைப்பு அழிக்கப்பட்டு விட்டது.

    பார்வை நூல்: தமிழ்நாட்டு கல்வெட்டுகள் தொகுதி IX, காஞ்சி மாவட்ட கல்வெட்டுகள் 5, பக். 210

    காஞ்சிபுரம் மாவட்டம் சென்னை வேளச்சேரியில் உள்ள தண்டீசுவரர் கோவில் தெற்கு சுவரில் உள்ள 17 வரிக் கல்வெட்டு.

    ஸ்வஸ்திஸ்ரீ திருமன்னிவளர இருநிலை மடந்தையும் / போர்ச்செயற் பாவையுந் சீர்தனி செவ்வியுந் தன் / பெருந் தேவியேற்கி இன்புற நெடிதியல்யுழியில் இடை /  துறைநாடுந் துடர்வன வேலிபடர் வநவாசியுஞ்  சுள்ளிசூழ் / மதில் கொள்ளப் பாக்கையும் நண்ணற் கருமுரண் மண்ணைக் கடக்கமும் / பொருகடல் லீழத்தரைய தம் முடியும் ஆங்கவர் தேவியர் ஓங்கெழில்  / முடியும் முன்நவர்  பக்கல் தென்னவர் வைத்த சுந்தர முடியும் இந் / திர  நாரமும் தெண்டிறை ஈழமண்டலம் முழுவதும் எறிபடை கேரளர் / முறைமையிற் சூடும் குலதனம் பலர்புகழ் முடியும் / _ _ _ சங்கதிர் வேலையுழ் தொல்பெருங் காவல் பல்பழந் / தீவும் மாப்பொரு தண்டாற் கொண்ட கோப்பர கேசரி பந்மராந ஸ்ரீ ராஜேந்த்ர / சோழ தேவற்கு யாண்டு 6 வது ஜயங்கொண்ட சோழ மண்டலத்து புலி / யூர் கோட்டத்து   ப்ரஹ்மதேயம் வெளிச்சேரி யாளுங்கணத்தாருட் கோமப / க் கண்ணபிரான் ஸர்வாதித்தர் ப்ராஹ்மநி நங்கை சாணி இவ்வூ / ர்  திருதண்டீஸ்வரமுடைய மஹாதேவற்க்கு சந்த்ராதித்யவர்  ஒரு நந்தா வி / ளக்கு  எரிப்பதற்கு வைத்த சாவாமூவா பேராடு 90. இத்தர்ம்மம் / பந்மாஹேஸ்வர  ரக்க்ஷை.

    ஆளும் கணத்தாருள் – நிர்வாக சபையாருள், administrative body; சாவாமூவா பேராடு – தொடர்ந்து குட்டி போட்டு இனம் பெருக்குவதால் இறப்பாலும் முதுமையாலும் எண்ணிக்கை சிறிதும் குறையாத ஆட்டு மந்தை.

    விளக்கம்:  முதலாம் இராசேந்திர சோழனின் 6 ஆம் ஆட்சி ஆண்டில் கிபி 1018 இல் வெட்டப்பட்ட 17 வரிக் கல்வெட்டு. செயம்கொண்ட சோழ மண்டலத்தில் அடங்கிய புலியூர் கோட்டத்தின் வெளிச்சேரி பிரம்மதேய ஊரை நிர்வகிக்கும் சபை உறுப்பினரான கோமபக் கண்ணபிரான் சர்வாதித்தர்  என்பவரது பிராமண மனைவி நங்கை சாணி இவ்வூரின் திருத் தண்டீசுவரமுடைய சிவனுக்கு சந்திரன் சூரியன் நிலைக்கும் முடிவில்லா காலம் வரை ஒரு நந்தா விளக்கு எரிப்பதற்கு 90 ஆடு அடங்கிய மந்தையை கொடையாக வழங்கினாள். 90 ஆடு என்பது பெருஞ் செலவு கொண்டது. அப்படியெனில் 90 ஆட்டை விலைக்கு வாங்கும் அளவிற்கு அவளிடம் சொத்தோ பணமோ இருந்துள்ளது தெரிகிறது.

    இதே போல இதே ஊரில் உள்ள வேத நாராயணப் பெருமாள் கோவிலில் முதலாம் இராசேந்திர சோழன் காலத்து சிதிலமடைந்த 29 வரிக் கல்வெட்டு ஒன்று ஆவூர் திருமேற்றளி கோவிலில் நந்தா விளக்கு எரிக்க சாணி நங்கை என்ற பார்ப்பனள் சாவாமூவா பேராடு தானம் கொடுத்துள்ளாள்.

    பார்வை நூல்: தமிழ்நாட்டு கல்வெட்டுகள் தொகுதி IX, காஞ்சி மாவட்ட கல்வெட்டுகள் 5, பக். 208

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோயில் ஓமாப் புலியூர்  வியாக்ரபுரீசுவரர் கோயில் கருவறை தெற்கு சுவறில் பொறிக்கப்பட்ட 9 வரிக் கல்வெட்டு.

    1. ஸ்வஸ்திஸ்ரீ சகல (புவனச் சக்)கரவர்த்திக(ள் ஸ்ரீ) கோப்பெருஞ் சிங்க தேவர்க்கு  யாண்டு 14 ஆவது மீனநாயற்று பூர்வபக்ஷத்து  ப்ரதமையும் நாயற்றுக் கிழமையும் பெற்ற அஸ்வ
    2. தி நாள் வடகரை விருத(ராஜ பயங்)கர வளநாட்டு மேற்கானாட்டு ப்ரஹ்மதேயம் ஸ்ரீ உலகளந்த சோழச் சதுர்வேதி மங்கலத்து பெருமருதூர் கருணாகர நம்பியை முதுகண்ணாக உடைய இவர்
    3. மகள் பாலாஸ்ரீயன் திருமாலிருஞ் சோலை  நம்பி ப்ராஹ்மணி ஆளப்பிறந்தாள் சானி பக்கல் உடையார் உடையவன் வடதளிஉடைய நாயனார்க்கு திருநாமத்துக்காணி (யாக)  அழிசு
    4. பாக்கமுடையார் திருவலஞ்சுழியுடை(யார்) இச்சி(ப்)பெற்றாயர் உடையார் திருநாமத்து விலை கொண்டு குடுத்த திருச்சிற்றம்பலவதிக்கு மேற்கு ராஜேந்தர சோழ வாய்க்கா
    5. லுக்கு தெற்க்கு இரண்டாங் கண்ணாற்(று) மூன்றாஞ்சதிரத்து வடக்கடைய நிலம் ஒரு மாமுக்காணியும், இத(ந்) தென்மே(ர்க்கு)ச்சார் பட்டம்பாழ் நிலம்  காணி முந்திரிகையும்
    6. ஆக நிலம் இ(ரண்டுமா) முந்திரிகையும், இந் நிலத்துக்குடலாய் கீழ்கரையில் தெற்கடைய மனையில் ஒரு பாதியும் இச்சிப்பெற்றாயர் ஆதிசண்டேசுவர தேவர்
    7. கன்மிகள் பேரால்  கொண்டு குடுத்தார். ப்ரமாணம் எழுதினான் இவ்வூர் ஊர்கணக்கு மூவலூருடையான் முன்னூற்றுப்பிரியன் எழுத்தென்றும் இவருக்கு மு
    8. துகண்பட்டு விற்ற பெருமருதூர் கருணாகர நம்பி எழுத்து என்றும். அறிவுக்கு எழுத்திட்ட இப்படி அறிவேன் கோவிந்தன் சீவில்லிபுத்தூர் கவுணியன், ஸ்ரீ க்ருஷ்ண  பட்டன், பாலாஸ்ரீயன்
    9. திருவெண்காடுபட்டர் , பாலாஸ்ரீயன் தில்லை வாழந்தண நம்பி,  சிறுகோட்டையூர் ஸுப்ரஹ்மண்யபட்ட ஸோமையாஜியார்.

    முதுகண்  – கண்காணி, காவலர், caretaker, supervisor, power of attorney;  பக்கல் – இடம் இருந்து; வதி – சிறு கால்வாய்; சதிரம் – நான்கு சமபக்கம் கொண்ட வயல்;  கன்மிகள் – கோவில் செயலர்; பட்டன் – வேத, சமசுகிருத வல்லுநர்.

    விளக்கம்:  பல்லவன் இரண்டாம் கோப்பெருஞ் சிங்கனின் 14 ஆம் ஆட்சி ஆண்டில் 1257 இல் மீன ராசி ஞாயிறு, வெண்பிறை முதல்நாள் ஞாயிற்றுக்கிழமை அசுவினி நட்சத்திரம் கூடிய நன்னாளில் விருதராஜ பயங்கர வளநாட்டில் அடங்கிய மேற்காநாட்டு பிரம்மதேயமான உலகளந்த சோழ சதுர்வேதில் வாழும் பெருமருதூர் கருணாகர நம்பியான தன் தந்தையை காவலராக பெற்றவள் ஆளப்பிறந்தாள் சாணி என்ற பிராமணப் பெண். இவள் கணவன் பாலாசிரியன் திருமாலிருஞ்சோலை நம்பி என்பவன். இவளிடம் இருந்து இறைவன் வடதளி நாயனார் பெயரில் நிலக்கொடை வழங்க விலை கொடுத்து வாங்கினார் அழிசுபாக்கமுடையார் திருவலஞ்சுழியுடையார் இச்சிச்பெற்றாயர். இந்நிலம் சிற்றம்பல சிறுகால்வாய்க்கால் மேற்கிலும் ராஜேந்திர சோழ வாய்க்காலுக்கு தெற்கிலும் இரண்டாம் சிறுகால்வாய்க்கு பக்கத்தே மூன்றாம் சதுர நிலத்துக்கு வடக்கே சென்றால் ஒரு மாமுக்காணி நிலமும் இதன் தென்மேற்கை ஒட்டி பயிரில்லாத நிலம் காணி முந்திரிகையும் ஆக நிலம் இரண்டு மா அளவும் இதற்கு மூலமாக கிழக்குக்கரையில் தெற்கே சென்றால் வீடுகட்டும் இடத்தில் ஒரு பாதியும் இச்சிப்பெற்றாயர்  ஆதிசண்டேசுவர தேவரின்  செயலர் பெயரைச்   சொல்லி  வாங்கிக் கொடுத்தார். இதற்கு ஆவணம் எழுதினான் இவ்வூர் ஊர்க்கணக்கன் மூவலூருடையான் முன்னூறுவப் பிரியன். பாதுகாவல் தந்தை பெருமருதூர் கருணாகர நம்பி கையெழுத்திட்டார். இதற்கு சாட்சியாக கோவிந்தன் சீவில்லிபுத்தூர் நம்பி, கவுணியன் ஸ்ரீ கிருஷ்ண பட்டன், பாலாசிரியன் திருவெண்காடு பட்டன், பாலாசிரியன் தில்லை வாழ்அந்தணன், சிறுகோட்டையூர் சுப்பிரமணிய சோமயாஜி ஆகியோர் கையெழுத்திட்டனர்.

    ஆளப்பிறந்தாள் மணமான பின்னும் பருவமெய்தாப் பிள்ளையாய் தந்தையின் மேற்பார்வையில் இருந்ததால் அவளது நில விற்பில் அவள் சார்பில் கருணாகர நம்பி கையெழுத்திட்டுள்ளார்.

    பார்வை நூல்: தமிழ்நாட்டு கல்வெட்டு தொகுதி V, கடலூர் மாவட்ட கல்வெட்டுகள் தொகுதி I, பக்கம் 109 – 110.

    உடையார்குடி ஆனந்தீஸ்வரர் கோயில் கருவறை மேற்கு சுவரில் பொறிக்கப்பட்டுள்ள முதலாம் இராசராசனின் 2 ஆம் ஆண்டு கல்வெட்டு.

    “ஸ்வஸ்தி ஸ்ரீ கோ ராஜகேசரிவர்மர்க்கு யாண்டு 2 ஆவது வடகரை பிரமதேயம் ஸ்ரீ வீரநாராயண சதுர்வேதி மங்கலத்து பெருங்குறி பெருமக்களுக்கு சக்கரவர்த்தி ஸ்ரீமுகம் பாண்டியனைத் தலைகொண்ட கரிகால சோழனைக் கொன்று துரோகிகளான சோமன்……………………………………….. தம்பி ரவிதாசனான பஞ்சவன் பிரம்மாதிராஜனும் இவன்றம்பி பரமேஸ்வரன் ஆன இருமுடிச் சோழ பிரம்மாதிராஜனும் இவர்கள் உடப்பிறந்த மலையனூரானும் இவர்கள் தம்பிமாரும் இவர்கள் மக்களிடும் இவர் பிரமாணிமார், பெற்றாளும் இ……………………ராமத்தம் பேரப்பன் மாரிடும் இவர்கள் மக்களிடம் இவர்களுக்குப் பிள்ளை குடுத்த மாமன்மாரிடும் தாயோடுடப் பிறந்த மாமன் மாமன்மாரிடும் இவர்கள் உடபிறந்த பெண்களை வேட்டாரினவும் இவர்கள் மக்களை வேட்டாரினவும் ஆக இவ்வனைவர் (முடமை)யும் நம் ஆணைக்குரியவாறு கோட்டயூர் பிரம்ம ஸ்ரீ ராஜனும் புள்ளமங்கலத்து சந்திரசேகர பட்டனையும் பெறத் தந்தோம். தாங்களும், இவர்கள் கண்காணியோடும் இவர்கள் சொன்னவாறு நம் ஆணைக்குரியவாறு குடியோடு குடிபெறும் விலைக்கு விற்றுத்தலத்திடுக. இவை குருகாடிக்கிழான் எழுத்து என்று இப்பரிசுவர இ ஸ்ரீமுகத்தின் மேற்பட்ட மலையனூரான் ஆன பாப்பனச்சேரி ரேவதாச கிரமவித்தனும் இவன் மகனும் இவன்றாய் பெரிய நங்கைச் சாணியும் இம்மூவரிதும் ஆன நிலம் ஸ்ரீ வீரநாராயன சதுர்வேதி மங்கலத்து மிப்பிடாகை தேவமங்கலம் ஆன பட்டில நிலம் ஸ்ரீவீரநாராயண சதுர்வேதி மங்கலத்து சபையார் பக்கல் வெண்ணையூர் நாட்டு வெண்ணையூருடையான் நக்கன் அரவணையானான பல்லவ முத்தரைய மகன் பரதனான வியாழ கஜமல்லப் பல்லவரையனேன். இந்நிலம் பழம்படி இரண்டே முக்காலே ஒருமாவும் அகமனை ஆறும் ஆக இந்நிலமும் இம்மனையும் நூற்றொருபத்தி ருகழஞ்சு பொன் குடுத்து விலைகொண் டிவ்வூர் திருவனந்தீஸ்வரத்து பட்டாரகர் கோயிலிலே இவ்வாட்டை மேஷநாயற்று நாயற்றுக்கிழமை பெற்ற புரட்டாசி ஞான்று சந்திராதித்தவர் ஆழ்வார் கோயில் முன்பு மூவாயிரத்தரு நூற்றுவனான நிலையம்பலத்து தண்ணீர் அட்டும் பிராமணன் ஒருவனுக்கு நிசதம்படி நாழி நெல்லும் ஆட்டை வட்டம் ஒரு காகம் நிசதம் பதினைவர் பிராமணர் உண்பதற்கு ஆக பதினாறு இவறுள் ஐவர் சிவயோகிகள் உண்ணவும் வைத்தேன் அரையன் பரதன் ஆன வியாழ கஜமல்ல பல்லவரையனேன். இதர்மம் ரஷிகின்ற மகாசபையார் ஸ்ரீபாதங்கள் என் தலை மேலன”

    பெருங்குறி பெருமக்கள் –   பிராமண ஊர்சபை உறுப்பினர்; ஸ்ரீ முகம் – வாழ்த்து செய்தி, அரசாணை;  பிரமாணிமார் – பிராமணர் மனைவியர்; பெற்றாளும் – தாயும், குடியோடு குடிபெறும் விலை – சாதாரண மக்கள் பெறும் விலை; பிடாகை – உள்அமைந்த சிறுகிராமம்; அகமனை – குடியிருக்கும் சொந்த மனை; நிசதம் – ஏற்பாடு

    விளக்கம்: கடலூர் மாவட்டம் சிதம்பரம் வட்டத்தில் உள்ள உடையார் குடியில் ஆனத்தீஸ்வரர் கோயில் கருவறை மேற்கு சுவரில் பொறிக்கப்பட்டுள்ள முதலாம் இராசராசனின் 2 ஆம் ஆண்டு ஆட்சியில் கி.பி.987 இல் வெண்ணையூர் நாட்டு வெண்ணையூருடையானான நக்கன் அரவணையானான பல்லவ முத்தரைய மகன் பரதனான வியாழ கஜமல்லப் பல்லவரையன்  6 சொந்த வீடுகளையும், இரண்டு வேலி 16 மா நிலத்தையும் 112 பொற்காசுகளுக்கு வாங்கி கோயிலுக்கு விட்டான். அதைக் கொண்டு வீரநாராயண சதுர்வேதி மங்கலத்து திருக்கோயிலில் தண்ணீர் சொரியும் மூவாயிரத்தறு நூற்றுவன் என்ற நிலையம்பலத்து தண்ணீர் அட்டும் பிராமணன் ஒருவனுக்கு ஏற்பாடுப்படி நாழி நெல்லும் ஆண்டு முடிவில் ஒரு காகம். அதே நேரம் ஏற்படுப்படி 15 பிராமணர் உண்பதற்கும் ஆக பதினாறு 16 பிராமணர்களுக்கு, இவருள் ஐவர் சிவயோகிகள் உண்ணவும் வேண்டும் என்று கொடுத்தான் அரையன் பரதன் ஆன வியாழ கஜமல்ல பல்லவரையன். இத்தர்மம் காக்கின்ற மகாசபையார் திருப்பாதங்கள் என் தலை மேலன என்று குறித்தான்.

    இவன் வாங்கிய 6 வீடும் நிலமும் இரண்டாம் ஆதித்த கரிகாலரை கி.பி. 965 இல் வஞ்சகமாகக் கொன்ற வீரநாராயண சதுர்வேதி மங்கலத்து பிராமணர்களில் ஒரே குடும்பத்தை சேர்ந்த சோமன், இவன் தம்பி இரவிதாசனான பஞ்சவன் பிரமாதிராஜன், இவன் தம்பி பரமேஸ்வரன் ஆன இருமுடிச் சோழ பிரமாதிராஜன். இவர்தம் தம்பி மலையனூரன் பஞ்சவன் பிரமாதிராஜன் ஆகிய நான்கு பேர்களும் ஆவர். இவருள் ஒருவர் இரண்டாம் ஆதித்த கரிகாலனை வஞ்சகமாகக் கொலை செய்த இராசதுரோகி ஆவர். இவர்ளுக்கு தண்டனை வழங்கப்பட்ட செய்தி தான் இராசராசனின் 2 ஆம் ஆண்டு ஆட்சியில் (கி.பி.987) பதிவாகி உள்ளது. தண்டனை வழங்கப்பட்டபோது இராச துரோகிகள் நால்வரது பிள்ளைகள், மனைவியர், பெற்ற தாய், பேரப்பன்மார் இவர்களுக்கு பெண் கொடுத்த மாமனார்களும், தாயுடன் பிறந்த மாமன்மார்களும், இவருடன் பிறந்த பெண் மக்களும் இனி பிராமணர் அல்லாத வேற்றவர், வேற்று சாதியார் ஆவர். இவர் தம் பிள்ளைகளும் வேற்று சாதியார் என சமூகம் கருத வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. இவர்களது உடைமைகள் பறிமுதல் செய்யப்பட்டு ஆணைப்படி கோட்டையூர் பிரம்ம ஸ்ரீராஜன், புள்ளமங்கலத்து சந்திரசேகர பட்டன் ஆகியோர் பொறுப்பில் விடப்பட்டது. இந்த இருவரும் இவர்கள் கண்காணியோடும் இவர்கள் சொன்னவாறு ஆணைப்படி குடியோடு குடிபெறும் விலைக்கு விற்றுத் கருவூலத்தில் சேர்க்க வேண்டும் என்று குருகாடிக்கிழான் ஆணைஓலை தந்தான். ஏனென்றால் இந்த ஆணைஓலையில் மேற்படி குறித்த இராஜ துரோகிகளின் தம்பி மலையனூரான் ஆன பாப்பனச்சேரி ரேவதாச கிரமவித்தனும், இவன் மகனும், இவன் தாய் பெரிய நங்கைச் சாணியும் ஆகிய இம்மூவருடைய நிலம் ஸ்ரீ வீரநாராயண சதுர்வேதி மங்கலத்து பிடாகையான தேவமங்கலத்தில் அமைந்த பட்டில நிலம் தான் அந்த இரண்டுவேலி 16 மா நிலம் என்பது. ரேவதாசன் கிரமவித்தன் தாய் பெரிய நங்கை சாணிக்கு  சொத்து இருந்தது இதன் மூலம் உறுதியாகிறது.

    Share
  • கல்வெட்டு வெளிப்படுத்தும் வரலாற்று உண்மை

    கல்வெட்டு வெளிப்படுத்தும் வரலாற்று உண்மை

    சேசாத்திரி ஸ்ரீதரன்

    தமிழகத்தில் சற்றொப்ப 60,000 கல்வெட்டுகள் உள்ளதாக அறியப்பட்டாலும் அவற்றின் பொருள் அறிந்து படிப்பவர் மிகக் குறைவு, தொல்லியலார் தவிர. அதனால் கல்வெட்டு தெரிவிக்கும் சமூக, வரலாற்று செய்திகளை இக்கால மக்கள் அறிய முடியாமல் போகிறது. அந்த குறையை போக்க தமிழ் பிராமி கல்வெட்டு 103 ம், இடைக்கால கல்வெட்டு 70 – 80 வரைக்கும் விளக்கம் அளித்துள்ளேன். இது அதில் ஒரு பகுதி. முதலில் கொடுக்கப்பட்டுள்ள விளக்கத்தை படித்துவிட்டு பின் கல்வெட்டு  பாடத்தை படித்தால் நன்றாக புரிந்து கொள்ளலாம்.

    வரலாறு அறியாதவர் அரசியல் மேடையிலும் எழுத்திலும் சமூக ஏற்றத் தாழ்விற்கும் வேற்றுமைக்கும் மதம் தான், பிராமணர் தான் காரணம் என்று வெறுக்கத்தக்க முறையில் பொய்யான செய்திகளை பரப்பி மக்களை முட்டாள் ஆக்கிவிட்டுள்ளனர். ஆனால் அதற்கு மாறாகத் தான் கல்வெட்டு தரும் உண்மைச் செய்தி உள்ளது. மன்னராட்சிக் கால ஆட்சியாளர்கள் விருப்பமுள்ள மக்கள் தமது வசதிக்கு தக்கவாறு நல்லது தீயது நிகழ்வுகளை நடத்திக் கொள்ளலாம் என்று பொதுப்பட வைக்காமல் சாதிக்கு தக்கவாறு சலுகைகளையும் உரிமைகளையும் (விருது) வழங்கியதால் பிணக்கு ஏற்பட்டது என்பதை கல்வெட்டுகள் காட்டுகின்றன. மக்கள் தமது முன்னோரின் மெய்யான வரலாற்றை அறிவது மக்களிடம் தன்னம்பிக்கையை வளர்க்கும் மேலும், பெருமை உணர்வை ஊட்டும். ஆனால் இன்று வரலாற்றை ஆய்வோர் தமது சாதி ஆண்ட பாரம்பரையா இல்லையா என்பதை நிறுவுவதற்கே கல்வெட்டை துழாவுகின்றனர் உண்மையை அறிவதற்கு அல்ல. மக்கள் அரசியலாளர் கூறும் பொய் வரலாற்றை புறக்கணித்து கல்வெட்டுச் செய்திகளையே முழுதாக நம்ப வேண்டும். அப்போது தான் பொய்மையும் வெறுப்பும் ஒழியும். இனி கீழே கல்வெட்டு விளக்கத்துடன்.

    தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் வட்டம் மருதங்கிணறு கண்மாய் தூண் 10 வரிக் கல்வெட்டு.

    1. சோணாடு வ
    2. ழங்கியருளிய  சு
    3. ந்தர பாண்டி
    4. ய தேவற்கு யாண்டு 7 வது 
    5. வியாகக் கு
    6. டி ஊற் பறையரில் கண
    7. வதி பொதுவ
    8. னான காராண்மை பறையன் 
    9. நாட்டின அ 
    10. ணை (த)றி      

    காராண்மை – மழைநீர் சேமிப்பு மேலாண்மை; அணை- நீர்க்கரை; தறி – தூண்.

    விளக்கம்:  இக்கல்வெட்டு மாறவர்மன் சுந்தர பாண்டியனின் 7 ஆம் ஆட்சி (பொ.ஆ. 13) ஆண்டில், 1223 இல் வெட்டப்பட்டுள்ளது. ஏரியில் மழைநீர் சேமிப்பு மேற்கொள்ளும் கணவதி பறையன் என்பவன் நீர் அளவை அறியும் பொருட்டு நீர்க்கரையில் தூண் ஒன்றை நாட்டினான் என்பதே செய்தி.

    பார்வை நூல்: ஆவணம் 30, 2019, பக். 30

    திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டம் தா. வேலூரில் உள்ள வேடியப்பன் கோவிலில் உள்ள 10 வரிக் கல்வெட்டு.

    ஸ்வஸ்தி ஸ்ரீ / மதிரை கொண்ட கோப்பர  / கேசரி பன்மற்கு யாண்டு பதினைந்தா / வது பராந்தகப் பல்லவரையனாள மீ / கொன்றை நாட்டுப் பெருவேளூர் நாட்டுப் பா  /  லை ஏரியில்லழிவு கண்டு கற்றூம்பி / டுவித்து  அதற்குத் தேவதானமு/ மேரிப்பட்டியு மூர்ப்புறமு / மூராரும் பாலைப் பறையன் சாத்தன்னு  /  மு(மா)க அட்டினார் . இது வழியப்பண்ணி / ணவர்  நரகத்துக்குக் கீழா நரகம் புகுவார்.

    அழிவு – உடைப்பு; கல் தூம்பு – கல்லில்ஆன மதக்குத் துளை; இடுவித்து – அமைத்து; தேவதானம் – கோவிலுக்கு கொடையாக கொடுத்த நிலம்; ஏரிப்பட்டி – ஏரியைப் பேண விட்ட நிலம்; ஊர்ப்புறம் – வெட்டவெளி நிலம்;

    விளக்கம்:  இக்கல்வெட்டு முதலாம் பராந்தக சோழனின் 15 ஆம் ஆட்சி ஆண்டில், 922 இல் பராந்தகப் பல்லவரையன் ஆளும் போது மீகொன்றை நாட்டின் பெருவேளூர் நாட்டுப் பிரிவில் அடங்கிய பாலை ஊர் ஏரியில் உடைப்பு ஏற்பட்ட போது அதற்கு கல்லில் மதகுத் துளை அமைத்து அதற்கு கொடையாக அங்கத்து கோவிலுக்கு நிலம், ஏரி பேண நிலம், வெட்ட வெளி நிலம் ஆகியவற்றை ஊராரும் பாலை ஊர் பறையன் சாத்தனும் நீர்வார்த்துக் கொடுத்தனர். இதை அழிப்பவர் நரகம் புகுவார் என்று சபித்து முடிகிறது கல்வெட்டு. இந்த மதகுத் துளை கட்டுமானத்தில் பறையன் சாத்தன் பங்கு அதிகம் இருக்க வேண்டும் என்பதை அவன் பெயர் குறிப்பு காட்டுகிறது. அவனிடம் நன்கொடை அளிக்கும் அளவுக்கு சொந்தமாக நிலம் இருந்துள்ளது. அவர்ணரான பறையரிடமே நிலம் இருந்தது என்றால் நாலாம் வர்ண சூத்திரரிடமும் நிலம் இருந்திருக்க வேண்டும் அல்லோ!!!!  ஆனால் மனுஸ்மிருதி சொல்வதை மட்டுமே கருத்தில் கொண்டு அம்பேத்கர் சூத்திரருக்கு  சொத்து உரிமை இல்லை என்று சொன்னது பொய் அன்றோ?

    பார்வை நூல்: ஆவணம் இதழ் 23, 2012    பக். 28

    புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் வட்டம் ஸ்ரீ வாசிநாதர் கோவில் 3 வரிக்  கல்வெட்டு

    கீழைக்குறிச்சி ஊராளிகளில் / அழகன் கோனாட்டுப்  பரைய / ன் ஆதி  தன்மம். 

    விளக்கம்:  இக்கல்வெட்டு 16-17 ஆம் நூற்றாண்டினது. வாசிநாதர் கோவில் திருச்சுற்று (பிரகாரம்) வாயிலின் வலது புறம் நடுகல்லாக நடப்பட்டுள்ளது. அதன் ஒரு பக்கத்தில் கழுத்தை தானே வெட்டிக்கொள்ளும் ஒருவருடைய புடைப்புச் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. பின்பக்கம் கல்வெட்டு பொறிப்பு உள்ளது. கீழைக் குறிச்சி ஊரில் வாழும் அழகன் கோனாட்டு பறையன் ஆதி என்பான் தன் தலையை வெட்டி உயிர் பலி செய்ததைத் தான் தர்மம் என்கிறது கல்வெட்டு. எதற்காக தலையை வெட்டிக் கொண்டான் என்ற குறிப்பு மட்டும் அதில்  இல்லை. தனது முதலாளி உடல் நன்றாகும் பொருட்டு இது போல் தலையை வெட்டி உயிர் பலி கொடுக்கும் வழக்கம் பிற கல்வெட்டுகளில் காணப்படுவதில் இருந்து இதை அப்படியாக ஊகிக்கலாம்.

    இதில் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய செய்தி என்னவென்றால் ஒரு பறையருடைய நடுகல் கோவில் திருச்சுற்றில் காணப்படுவது தான். தன் தலையை வெட்டிக் கொள்ளும் முன் பறையன் ஆதி கோவிலுள் சென்று சாமி கும்பிட்ட பின் இதை செய்தார் என்றால் 16-17 ஆம் நூற்றாண்டுகளில் பறையர் ஒடுக்கப்படவுமில்லை தீண்டாமைக்கு ஆட்படவுமில்லை என்றல்லவா உறுதி ஆகிறது? பறையர் தீண்டாமை கடந்த 300-350 ஆண்டுகளாக நாயக்கர் ஆட்சியில் ஏற்பட்ட சமூக பிரச்சனை தான். அதற்கு முன் பறையர் கோவிலுள் சென்று சந்தி விளக்கு ஏற்றிய கல்வெட்டு செய்திகள் சில உள. கடந்த 2,000 ஆண்டுகளாக ஒடுக்கப்பட்ட மக்கள் ஊரில், கோவிலில் நுழையவிடாமல் தடுக்கப்பட்டனர் என்ற தலித்திய, திராவிடவியல் பொய் பரப்புரையை கிழித்தெறிவதாக உள்ளதன்றோ இக்கல்வெட்டு?

    பார்வை நூல்: ஆவணம் இதழ் 22, 2011 பக்.128

    கிருஷ்ணகிரி மாவட்டம் கோடிப்பள்ளி பஞ்சாயத்து குட்டப்பள்ளி கிராமத்தில் உள்ள பெருமாளப்பன் கோவில் அருகே உள்ள 14 வரி சர்வ மானியக் கல்வெட்டு.

    சறுவதான்ய வருஷத்து மா / சி மாதம் பதின்னஞ்சாதி புதுப் / பற்று வல்லேரிபள்ளியில் / பறைஆண்டியேன், நாட்டு மாட்டை இராய நாயக்கர் பிடிச்சு போ / கையில் முத்தையூரிலே சென்று தலை / ப்பட்டு பூசலில் இராகுத்தனுட்டு குதி / ரையையூங் குத்தி தானும் பட்டா . இவனுக் /கு சறுவ மானியமாக பெரிய ஏரியி[ல்] / கீழ்ழேரிலே கல்ல_ _ _ தர்  கண்ட / க கழனியும் இருக்கை கொல்லை மு / பட்டிலே விட்டேன் மனைக்கு [மா]ட்டுக்கு / தலைக்கு. இவை சறுவ மானியமாக  விட்டோம். / நம் வர்க்கத்தாரும்  நம் மக்கள் அவன் மக்கள் மானியம். 

    புதுப்பற்று – புதிய உரிமை நிலம், புறவு நிலம்; உட்டு – உட்பட; தலைப்பட்டு – தடுத்து நிற்க, தோன்றி; பூசலில் – மீட்பு சண்டையில், skirmish; இராகுத்தன்  – குதிரை வீரன்; பட்டில் – வீராசாவில்;சறுவமானியம் – முழுமையும் வரி நீக்கி; கல்லதர் – பருக்கை கல்லிட்ட சிறுவழி; கண்டக – மண் தடுப்பு; கழனி – போரடிக்கும் களமுள்ள நிலம்;இருக்கை – குடியிருப்பு; கொல்லை – புதர் மண்டிய நிலம்; தலை – தரை.

    விளக்கம்:  சர்வதானிய ஆண்டு கி.பி. 1408 இல் மாசி மாதம் 15 ஆம் தேதியில் புதுப்பற்று வல்லேரிப்பள்ளியில் வாழும் பறைஆண்டியேன் நான் சொல்வது யாதெனில், “ஊர் மாட்டை இராய நாயக்கர் கவர்ந்து கொண்டு போன போது இந்த நடுகல் வீரன் அவரது வீரர்களை விரட்டிச் சென்று முத்தையூரில் தடுத்து நிறுத்தி அங்கு ஏற்பட்ட மீட்பு போரில் குதிரைவீரன் உட்பட குதிரையையும் குத்திக் கொன்று தானும் வீர சாவடைந்தான்.  இவனுக்கு முழுவதும் வரி நீக்கி பெரிய ஏரியின் கிழக்கு மேட்டில் தரையிட்ட சிறுவழியொடு மண் தடுப்பு கொண்ட போரடிக்கும் களம் உள்ள வயலும் குடியிருக்கக் கொல்லையும் இந்த வீராசாவிற்காக கொடுத்தேன். இந்த கொல்லையை வீடு கட்டவும், மாடு கட்டவும், வெறும் தரை இடமாகவும் பயன்படுத்தலாம். இதை என் உறவினரும் என் பிள்ளைகளும் அவன் பிள்ளைகளுக்கு அளித்த வரி நீக்கிய நிலம் என்று கருத வேண்டும் என்கிறார்.

    இந்த நடுகல் வீரன் பறைஆண்டியின் கட்டளைக்கு கட்டுப்பட்ட  வீரன் என்று தெரிகிறது. அப்படியானால் பறைஆண்டியை ஒரு படைத்தலைவர் என்றே கொள்ள வேண்டும். அதனால் பறைஆண்டியிடம் மிகுந்த சொத்து இருந்ததை அறிய முடிகிறது. ஆகையால் தான் நடுகல் வீரனுக்கு கொடை கொடுக்க முடிந்துள்ளது.

    பார்வை நூல்: ஆவணம் 32, 2021 பக். 117 & 118

    புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் வட்டம் விரையாச்சிலை மேல வயலில் பலகை கல்லில்  உள்ள 13 ஆம் நூற்றாண்டு 5 வரிக்  கல்வெட்டு.

    1. ஸ்வஸ்தி  ஸ்ரீ வதையாத
    2.  கண்டப் பரையன் 
    3. செய்யுங் கிணறும். 
    4. செவ்வலூரார் பேரயர்
    5. கட கண்டன் வயக்கல் 

    வதை – கொல், துன்புறு; பேரயர் – படைத்தலைவர்; கட – பெரிய, மூத்த; வயக்கல் – எல்லை குறிப்பிட்டு பெயரிட்டு கொடையாக கொடுத்த வயல்.

    விளக்கம்:  போரில் கொல்லப்படாமல் தப்பிய கண்டப் பறையன் தான் தப்பிப் பிழைத்தமைக்கு அற உணர்வு மேலிட தனது வயலையும் கிணற்றையும் செவ்வலூராருக்கு கொடையாக கொடுத்தார். எல்லை குறிப்பிட்ட அந்த வயலுக்கு படைத்தலைவன் கட கண்டப் பறையன் வயக்கல் என்று பெயர் சூட்டினர் செவ்வலூரர். வயக்கல் புதுக்கோட்டை, இராமநாதபுரம் வட்டார வழக்குச் சொல்.

    கண்டப் பறையன் நன்கொடை வழங்கும் அளவிற்கு சொத்துகள் வைத்திருந்தது ஒன்றும் வியப்பல்ல ஏனெனில் அவன் படைத்தலைவன். அவர்ணரான பறையரே சொத்தும் பதவியும் பெற்றிருப்பது சூத்திரனுக்கு பதவியோ சொத்தோ இருக்கக் கூடாது என்ற அம்பேதுக்கரின் மனுஸ்மிருதி அடிப்படையிலான குற்றச்சாட்டை இக்கல்வெட்டு பொய் ஆக்கி இருக்கிறது அன்றோ?

    பார்வை நூல்: ஆவணம் 15, 2004.

    திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டம் வாய்விடாந் தாங்கல் கிராமத்தால் காட்டுப் பகுதியில் உள்ள 27 வரிக் கல்வெட்டு.

    ஸ்வஸ்தி ஸ்ரீ  சீறிமனு மகா மண்டலிசுர /  விபாடன் பாஷைக்குத்  தப்புவராய கண்டன் / ஸ்ரீ வீர பொக்கண்ண உடையார் குமாரர் ஸ்ரீ கம்பண்ண உடையார்க்கு பிரி / திவி ராச்சியம் பண்ணி அருளா நின்ற சகாற்த்தம் 1290 இதன் / மேல் செல்லா நின்ற பிரமாதி வருஷத்து சி[ம்ஹ] ஞாயிற்று அமரபக்ஷ / த்து  யேகாதெசியும் திங்கட்கிழமையும் பெற்ற புணர்பூசத்து நா / ள் ஜயங்கொண்ட சோழமண்டலத்து ஆடையூர் நாடு கீழ்ப்பற்றில் யணி அ(ண்) ணாமலை உடையார் – – –  யினார் தேவதானம் / வாயுளான் ஏந்தலில் யெல்லையிலே பொன்னப் பரையன் – – – / அணி அண்ணாமலை பரையன் ஏந்தலென்று  நத்தமும் கண்டு குடியும் ஏற்றி ஏரியும் / கண்டு கிணறு ஆழ – – – மான் தனைக் காடு / வெட்டி கழனி – – – பெருவிலையாகக் கொண்டு கணி / – – – அணி அண்ணாமலை உடைய / நயினார் திருப்பணிக்கு குடுத்த – – – நிலத்திலே நூறு குழி இறையிலியாக / கல்லுவெட்டி – – – குடுத்த யேந்தல் – – – நஞ்சை புன்சைக்கு / – – – ற்றுடையான் நிலத்துக்கு கிழக்கு கருங்கடி காட்டு வடக்குவெல்லை /  – – – அரசுடையான் ஏந்தல் பழைய வழிக்குத் தெற்கு – – –  இன்னான்கெல்லைக்கு உள்பட்ட / நஞ்சையும் புன்சையும்  நத்தமும் காணியாட்சியாக தந்த – – – /  யும் அணி – – – யித்துப் போகவும் – – – நஞ்சை புன்சை நிலம் / வெட்டிக் – – – கெல்லை தடுத்தாத கொல்லையும் நத்தமும் வடக்கு பனியம் தொண்டி புஞ்சல்லாக / ன்ற இவன் திருத்திய நத்தமும் ஏந்தலும் / ந – – – புன்சை நாற்பாற்கெல்லையும் /  ஏற்றப் பரிக்கிறமங்களும் தான தன்மங்களும் / உரித்திரத்தக்கதாகவும் பழைய ஏரில் நீர் தான கிணறு / நிலத்துக்கு பாக்கி கொள்ளவும். இப்படிக்கு கல்லு வெட்டிக் கு / டுத்தேன் ஆடை நாயனனேன். இவை நாற்பத்தெண்ணா / யிர நம்பி எழுத்து.

    அமரபக்ஷம் – தேய்பிறை; தேவதானம் – கோவிலுக்கு கொடையாக விட்ட நிலம்; ஏந்தல் – உட்கிடை சிற்றூர், பிடாகை, hamlet, தேக்கம்; நத்தம் – வீடு கட்ட விட்ட நிலம்;  தனை காடு –  ; காணியாட்சி – பரம்பரை நில உரிமை; தடுத்தாத  – தட்டி வேலியிடாத; பனியம் தொண்டி – பனியத் தாவரம் வளர்ந்த தோட்டம்; பாக்கி – பகிர்.

    விளக்கம்:  இக்கல்வெட்டு விசயநகர வேந்தர் புக்கண்ண ராயரின் மகன் குமார கம்பண்ணரின் வெற்றியை அடுத்து 1368 ஆண்டு பிரமாதி வருடம் சிம்ம ராசி கூடிய ஞாயிற்றுக்கிழமை அன்று தேய்பிறையில் ஏகாதசியும் திங்கட்கிழமையும் கூடிய புனர் பூச நாளில் செயங்கொண்ட சோழ மண்டலத்தில் அடங்கிய ஆடையூர் நாட்டு கிழக்கு வயல் புற ஊரில் இறைவன் அணி அண்ணாமலையார்க்கு நிலக் கொடையாக வாயுளான் சிற்றூர் எல்லையில் வாழும் பொன்னப் பறையன் என்பான் அணி அண்ணாமலைப் பறையன் சிற்றூர் எனப் பெயரிட்டு ஒரு சிற்றூரை ஏற்படுத்தினான். அதில் வீட்டு மனையும் ஏற்படுத்தி மக்களையும் குடியேற்றி அங்கே ஏரியும் எழுப்பி கிணறு ஆழப்படுத்தி காடு வெட்டினான். பெருத்த விலைக்கு வயலை வாங்கி அணி அண்ணாமலை இறைவன் திருப்பணிக்கு கொடையாக கொடுத்த நிலத்தில் நூறு குழியை வரியற்ற நிலமாகக் கொடுத்து கல்வெட்டிக் கொடுத்துள்ளான். இந்த புதிய சிற்றூரின் நஞ்செய் புஞ்செய் ஆகியன _ _ _ ற்றுடையான் நிலத்துக்கு கிழக்கிலும் கருங்கடிக் காட்டை வட எல்லையாகவும் _ _ _  அரசுடையான் ஏந்தலுக்கு போகும் பழைய வழியை தெற்காகவும் உடைய நான்கு எல்லைகளை கொண்டது. இந்த அணி அண்ணாமலைச் சிற்றூரின் நஞ்செய் புஞ்செய் மற்றும் வீட்டு அடிமனை ஆகியவற்றை பரம்பரை நில உரிமையாக அனுபவித்துக் கொள்ளலாம் என்கிறான். இந்த நஞ்சை புஞ்சை நிலத்தை வெட்டி அதற்கு நான்கு எல்லையும் ஏற்படுத்தி தட்டி வேலியிடாத புதர் மண்டிய நிலமும் (கொல்லை) வீட்டு மனையும் கொடுத்தது எப்படியெனில் வடக்கில் பனியம் தோட்டம் புஞ்சல் ஆகியவற்றை அகற்றி இவன் ஏற்படுத்தியதாகும்.  வீட்டு மனையும் ஏரியும் நஞ்சை புஞ்சை நாற்பக்க எல்லையும் தக்க செய்முறைக்கும் தான தர்மங்களும் உரித்தாக்குக என்கிறான். பழைய ஏரியில் அமைந்த நீர் தானக் கிணற்றை நிலத்திற்கும் பகிர்ந்து கொள்க என்று இப்படி வழிகாட்டுநெறியை (பிடிபாடு) தந்தான். இதை நன்கொடையை பற்றி ஆடை நாயன் என்ற ஆசாரி கல்வெட்டில் வடித்தார். இக்கொடை  பெற்றுக்கொள்ளப்பட்டது என்பதற்கு பிராமணர்  நாற்பத்தெண்ணாயிர நம்பி ஒப்புதல் கையெழுத்திட்டார்.

    பொன்னப் பறையன் ஒரு சிறு  ஊரையே ஏற்படுத்தி அதில் மக்களை குடியேற்றி ஏரிஎழுப்பி நஞ்சை புஞ்சை நிலங்களை கொடை அளிக்கும் அளவிற்கு பெருஞ் செல்வராக இருந்துள்ளார் என்றால் அவர் ஒரு படைத் தலைவராகவோ அல்லது ஆடையூர் நாட்டின் கீழராகவோ இருந்திருத்தல் வேண்டும். அப்படி எனில் அவர் கல்வி கற்றவராகவும் இருந்திருக்க வேண்டும் என்று தெரிகிறது. படைத்துறை சார்ந்தவர் மேலிடத்திற்கு அவ்வப்போது ஓலை எழுதி அனுப்ப வேண்டும் தனக்கு வந்த மேலிட ஆணை ஓலையை படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். ஆக உயர் படைப் பொறுப்பில்  இருப்பவர் கட்டாயம் கல்வி கற்றவராக இருக்க வேண்டும்.

    [சூத்திரன் அறிவைப் பெறக்கூடாது. அவனுக்குக் கல்வி போதிப்பது ஒரு பாவம்; ஒரு குற்றச் செயல். ஒரு சூத்திரன்  சொத்து சேர்க்கக்  கூடாது. ஒரு பிராமணன் அவனது சொத்துக்களை தன் விருப்பப்படி எடுத்துக் கொள்ளலாம். சூத்திரன் அரசாங்க பதவியில்  இருக்கக் கூடாது.  சூத்திரன் கொத்தடிமையாகவே பிறந்தவன்; எப்போதும் கொத்தடிமையாகவே வைக்கப்பட வேண்டியவன்.

    (ஆதாரம். சூத்திரர் யார் ? அவர்கள் எவ்வாறு நான்காம் வர்ணத்தவராயினர், ஆசிரியர் டாக்டர். B.R. அம்பேத்கர்)]

    அம்பேத்காரின் மேற்கண்ட கூற்றுக்கு இக்கல்வெட்டு சிரிப்பாய் சிரிக்கிறது. ஏனெனில் அதில் உண்மை துளியும் இல்லை.

    பார்வை நூல்: ஆவணம் இதழ் 30, 2020  பக். 64-65

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி வட்டம் மதவீர விநாயகர் கோவில் முகப்பு மண்டப நடு உத்திரத்தில் உள்ள 6 வரிக் கல்வெட்டு.

    விகுறுதி வருஷம் பங்குனி மாதம் 6 ஆம் தேதி கானனாட்டுப் படை பத்து இலம்பங்குடியில் பள்ளற்கும் பறையற்கும் விருது சண்டையாக காஞ்சிபுரத்துக்குப்  போய் கல்வெட்டுப் பாத்து வந்தபடி காஞ்சிபுர சுவாமி யேகாம்பரரைய்யன்  காமாட்சியம்மன் கோவில் தானம் மாயேசுரர் சகல / குண சம்பன்னரான பல்லவராயன் பண்டாரத்தின் மனிசர் வேங்கடம் நாயக்கர் இலம்பங்குடி ஊரவற்கும் சகல பாக்கியமும் உண்டாக வேனுமென்று ஆதரித்து வரவிட வேண்டின ஆசிறு பாகம். கானனாட்டு படைப்பற்று இலம்பங்குடியில் பறையற்கும் பள்ளற்கும் சண்டை வளக்குத்தாரமாக  முத்திரை மனுசன் திருவம் / பலய்யனையும் கூட்டி பறையன் உலகங்காத்த சாம்பானும் பள்ளன் ஞானிகாத்தானும் வராக்காட்டினா(ர்)கள். அப்படியே சாதனப்படி பறையர் வலங்கையா இருக்கும் பள்ளர் இடங்கையா யிருக்கும். அவடத்திலே / பறையர் வலங்கைக்கு செல்லுகிறதெல்லாம் நடத்தவும் பள்ளர் இடங்கைக்கு செல்லுகிறதெல்லாம் நடத்தவும் . பள்ளனுக்கு தவுலும் சேமக் / கலம் அஞ்சு பந்தக்காலும், பறையற்கு  கொட்டு மேழதாழம்  பறையருட்டுன கோயில் கிடாத்தரம் பறையருட்டுன மொந்தைக் கள்ளு பறையருட்டுன பன்னிரண்டு பந்தகால் பறையருட்டுனே _ _ _ தங்களை ஏகாம்பரய்யன் காமாட்சியம்மன் ஆதரித்துக் கொண்டருளவும் வேணும், ஆசிறுபாகம். / இப்படிக்கு பாண்டிதிராயர்  பச்சைப் பெருமா எளுத்து. இந்தக் கல்வெட்டு விசுவ முத்திக்காத்தவன் எழுத்து.  சதா சேர்வை  

    படைப்பற்று – படை வீரர்களின் ஊர் அல்லது நிலம், cantonment; விருது – பட்டம், சிறப்பு சலுகை, உரிமை; தானம் – பொறுப்பு அதிகாரி,  ஸ்தானம்; மாகேசுரர் – அறங்காவலர்; பண்டாரம் -கருவூலக் கணக்கு; (ஆசு + இறு) ஆசிறு பாகம் – குற்றம் நீங்கி பக்குவமடைக;  சதானப்படி/சாசனப்படி – எழுத்துச் சான்றுபடி; சேமக்கலம் – ஒரு தட்டை கட்டையால் அடித்து ஒளி எழுப்புதல்; கிடாத்தரம் – ஆட்டின் தலையாக இருக்கலாம்; சதா சேர்வை – எப்போதும் வணங்கி நிற்கும்.

    விளக்கம்:  இது 16 ஆம் நூற்றாண்டில் 1530 அல்லது 1590 இல் விக்ருதி ஆண்டு பங்குனி மாதம் 6 ஆம் தேதி வெட்டப்பட்ட  கல்வெட்டு. கானநாட்டுப் படை ஊரில் வாழும் பறையருக்கும் பள்ளருக்கும் சிறப்பு சலுகை, உரிமை (விருது) காரணமாக பிணக்கு ஏற்பட்டு சண்டை எழுந்தது. அதை தீர்க்க காஞ்சிபுரம் சென்று கல்வெட்டு பார்த்து தெளிந்து வந்தனர். அதை விவரிப்பதே இக்கல்வெட்டு. காஞ்சிபுரம் ஏகாம்பர ஈசுவரன், காமாட்சியம்மன் கோவில்களின் பொறுப்பு அதிகாரி எல்லா குணமும் நிரம்பிய பல்லவராயன் ஆவணக் கருவூல கணக்கர் வேங்கடம் நாயக்கர் இளம்பங்குடி ஊராருக்கு எல்லா நலமும் உண்டாக வேண்டும் என்று ஆசீர்வாத மொழி பேசி வரவழைத்து உமது குற்றம் நீங்கி பக்குவமடைவதாக என வாழ்த்தினார். கானநாட்டுப்  படை ஊர் பறையருக்கும் பள்ளருக்கும் ஏற்பட்ட சண்டை வழக்கு தொடர்பாக முத்திரை மனிதர் திருவம்பலய்யனையும் உடன் அழைத்து வந்து பறையன் உலகங்காத்த சாம்பனையும் பள்ளன் ஞானிகாத்தானையும் ஒருசேர வரவழைத்தார்கள். ஆவண எழுத்தின்படி பறையர் வலங்கையாய் இருப்பர்; பள்ளர் இடங்கையாய் இருப்பர். அப்படியான நிலையில் பறையர் வலங்கைக்கு உண்டானதெல்லாம் நடத்திக் கொள்ளலாம், பள்ளர் இடங்கைக்கு உண்டானதெல்லாம் நடத்திக் கொள்ளலாம். பள்ளர் தவிலும், சேமக்கலனும் முழக்கலாம், ஐந்து பந்தக்கால் நடலாம். பறையருக்கு கொட்டு மேளதாளம், பறையருக்கு உண்டான கோவிலில் பலியிடப்படும் ஆட்டின் தலை, மொந்தைக் கள், 12 பந்தக்கால் நடுதல் ஆகிய உரிமைகளை சலுகைகளை (விருது) அனுபவிக்கலாம் என்று சொல்லி உங்களை ஏகாம்பர ஈசனும் காமாட்சி அம்மனும் ஆசீர்வதித்து அருளவேண்டும், குற்றம் நீங்கி பக்குவமடைக என்று வாழ்த்தி அனுப்பினர். இப்படியாக நடந்து கொள்க என்று பாண்டித்திராயர் பச்சைப் பெருமாள் ஆணை ஓலை தந்தார். இதை விசுவ முத்திகாத்தவன் என்ற ஆசாரி கல்வெட்டாக வடித்தான். எப்போதும் வணங்கி நிற்கும் என முடிகிறது.

    பள்ளரும் பறையரும் போரில் ஈடுபட்டதால் தான் அவருக்கென்று தனிப் படைஊர் ஏற்படுத்தி அதில் குடியேற்றும் நடைமுறை இருந்துள்ளது என்பது இக்கல்வெட்டால் உறுதி ஆகிறது. பள்ளரைவிட பறையருக்கு அதிக சலுகையும் உரிமையும் இருந்ததால் அது பிடிக்காத பள்ளர் அதை எதிர்த்தனர், தடுத்தனர். இவ்வாறான பிணக்கு மன்னராட்சியில் அரசர்களின் ஒரு தலைச் சார்பான உரிமை வழங்கல் காரணமாகவே எழுந்தது என்று தெளிவாகிறது. ஆனால் எல்லா சமூக வேற்றுமைக்கும் ஏற்றத் தாழ்விற்கும் இந்து மதம் தான் காரணம், பிராமணர் தான் காரணம் என்று பொய் உரைக்கின்றனரே அறியா மூடர்? உண்மையில் இன்றைய சமூக வேற்றுமை, ஏற்றத் தாழ்விற்கு இந்த ஆட்சியாளர்கள் தான் பொறுப்பு எனில் அவர் வழிவந்த ஆண்ட பரம்பரை, அடக்கி ஆண்டவர், பார் ஆண்டவர், மண் ஆண்டவர் என மார்தட்டிக் கொள்ளும் நிலவுடைமைச் சாதிகளை தானே இன்றைய வேற்றுமைக்கு ஏற்றத் தாழ்விற்கு பொறுப்பாக்க வேண்டும்?

    பார்வை நூல்: ஆவணம் இதழ் 15, 2004  பக். 32

    திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வட்டம் கோவிலூர் சிவன் கோவிலில் உள்ள 3 வரிக் கல்வெட்டு

    1. கோனேரின்மை கொண்டான் தலையூர் நாடு, வெங்கால நாடு, அரைய நாடு, இடைபுளுகி நாடு, வடகரை நாடு, மணலூர் நாடு, தட்டையூர் நாடு, கிழங்கநாடு உள்ளிட்ட பற்றில் கண்மாளர்க்கு பதினஞ்சாவது ஆடி மாதம் முதல் தங்களுக்கு 
    2. நன்மை தீமைக்கு இரட்டைச் சங்கும்  ஊதி பேரிகை யுள்ளிட்டன கொட்டுவித்துக் கொள்ளவும்  தாங்கள் புறப்பட வேண்டும் இடங்களுக்கு பாதரக்ஷை கோர்த்து கொள்ளவும் தாங்கள் வீடுகளுக்கு சாந்திட்டுக் கொள்ளவும் சொன்னோ
    3. ம் இப்படிக்கு இவ்வோலை பிடிபாடாகக் கொண்டு அசந்திராதித்தவத் செல்வதாகத் தங்களுக்கு வேண்டின இடங்களிலே கல்லிலும் செப்பிலும் வெட்டிக் கொள்க.  

    பிடிபாடு – வழிகாட்டுநெறி, guidelines; சாந்து – சுண்ணாம்பு அடித்தல்

    விளக்கம்:  இக்கல்வெட்டு கொங்கு சோழன் வீர ராசேந்திரனின் 15 ஆம் ஆட்சி ஆண்டில், 1222 இல் வெட்டப்பட்டது. தலையூர் நாடு, வெங்கால நாடு, அரைய நாடு, இடைபுளுகி நாடு, வடகரை நாடு, மணலூர் நாடு, தட்டையூர் நாடு, கிழங்க நாடு ஆகிய நாடுகளில் வாழும் ஐந்து தொழில் கம்மாளர்கள் தமது வீட்டு நல்லது, கேட்டது நிகழ்ச்சிகளுக்கு இதற்கு முன் இல்லாத உரிமையான (விருது) இரட்டை சங்கு ஊதுதல், பேரிகை கொட்டுதல் ஆகிய உரிமைகள் (privileges) ஆடி மாதம் முதல் வழங்கப்பட்டதுடன் வெளியே ஊர் செல்லும் போது கால்களில் செருப்பு அணியும் உரிமையும் தரப்பட்டது.  தமது வீடுகளுக்கு சுண்ணாம்பு சாந்து அடித்துக் கொள்ள அனுமதி இல்லாததை ரத்து செய்து புதிதாக வீர ராசேந்திரன் ஆட்சிக் காலத்தில் அதற்கு  அனுமதி தரப்பட்டது. இந்த ஓலை உரிமையை வழிகாட்டு நெறியாகக் கொண்டு சந்திர சூரியன் நிலைக்கும் காலம் வரை இது செல்வதாக உரிமை  தரப்பட்டது. சுதந்திரமாக மக்கள் தம் விருப்பப்படி, இயலுமைப்படி வாழ முடியாமல் சமூக ஏற்றத் தாழ்வுடன்  வாழ்க்கை வாழ்ந்ததற்கு ஆட்சியாளர்களே முழுக் காரணம் என்பதை இக்கல்வெட்டு தெள்ளத் தெளிவாக காட்டுகிறது. ஆனால் இந்து மதம், பிராமணர் தான் சம உரிமை மறுப்பிற்கு காரணம் என்று அரசியல் மேடையிலும் எழுத்திலும் பொய் பரப்பப்படுவது நோக்குக.

    பார்வை நூல்: ஆவணம் இதழ் 19, 2008, பக். 8

    விழுப்புரம் மாவட்டம் திருவாமாத்தூர் அபிராமீசுரர் கோயில் இரண்டாம் திருச்சுற்று திருகு சுவரில் உள்ள 11 வரிக் கல்வெட்டு .

    பரா(ப)வ ஆண்டு புரட்டாசி மாதம் 3 நாள் ஸ்ரீ மன் மகா மண்டலேசுரன்  சதாசிவ தேவ மகாராயர்  காரியத்துக்கு கத்தரான நாயகர் / சூரப்ப நாயக்கரய்யன் பார்வத்தம்மான திருவதி ராச்சி(ய)த்தில் கைக்கோளர் பூறுவத்தில் / திருவதி வில்லியநல்லூர் பூறுவத்தில் கல்வெட்டை நா(ட்)டில்  இலை வாணியர் அழிக்கயில் / எங்களை அவதாரமும் கொண்டு எங்கள் விருது பகடை ஒழிய / நாங்கள் இல்லாத விருது சொல்ல கடவோம்  அல்லாகவும் சொன்னதே / உண்டானால் ஆயக்கனையும்பட்டு ஆயிரத்து அஞ்நூறு பொன் இறுக்க (க)டவோம்  ஆக /  வும் . இப்படி சம்மதித்து கல்வெட்டி குடுத்தோம் நாட்டு கைக்கோள(ர்)க்கு  / நாட்டில் இலை வாணியர்  _ _ _ .  இப்படிக்கு கல்வெட்டு திருவதி சிராபட்ட ஆசாரி . இப்படி அறிவோம் ஆண்ட நாயக்க பட்டர்  / திருவதி சந்திரன்.  

    பூர்வம் – முன்னொரு காலம்; திருவதி – சிறப்பு அடைமொழி, ஊர்ப்பெயர்; அவதாரம் -கீழ்மைப்படுத்தி;  விருது – பட்டம், சிறப்பு சலுகை உரிமை; பகடை – பெருமை என்னும் பக(ட்)டு, ஆயக்கன் – வரி, தண்டனை ; இறுக்க – கட்ட, பொன் – வெள்ளிக் காசு.

    விளக்கம்:  இக்கல்வெட்டு விசயநகர வேந்தர் சதாசிவ தேவ மகாராயரின் ஆட்சியில் பிரபவ ஆண்டு 1547 இல் புரட்டாசி மாதம் 3 ஆம் நாளில் வெட்டப்பட்டது. சதாசிவ தேவ மகாராயரின் செயல் அலுவலர் சூரப்ப நாயக்கரய்யன் மேற்பார்வையில் உள்ள திருவதி ராச்சியத்தில் கைக்கோளர் (செங்குந்தர்) முன்னொரு காலத்தில் அவர் வாழ்ந்த வில்லியநல்லூரில் முன்னொரு காலத்தில் அவ்வூரில் இருந்த கல்வெட்டை இலை வாணியர் அழித்து, எம்மை தரக்குறைவாகத் திட்டி, எமது சலுகை, உரிமை, பெருமை அழிய “நாங்கள் இல்லாத சலுகையை உரிமையை (விருது) கொண்டாடுவதாகவும் குற்றம் சாட்டினர். அப்படி அல்லாமல் நாங்கள் சொன்னதே உண்மையாகுமானால் தண்டனைப்பட்டு அதற்கு 1,500 வெள்ளி காசு கட்டுவோம்” என்று இலை வாணியர் ஊர் கைக்கோளர்க்கு கல்வெட்டு பொறிக்க ஒப்புதல் கொடுத்தனர். இதை கல்லில் வெட்டியவர் திருவதி வாழ் சிராபட்ட  ஆசாரி. இதற்கு திருவதி வாழ் ஆண்ட நாயக்க பட்டர் சந்திரன் சாட்சியாக ஒப்பம் இட்டார்.

    கைக்கோளருக்கு இருந்த சலுகையும் உரிமையும் தமக்கு இல்லாமையால் தான் பொறாமை கொண்ட இலை வாணியர் சிலர் வில்லியநல்லூர் கைக்கோளர் கல்வெட்டை முன்பு சிதைத்துவிட்டார். இது கடந்த கால மன்னர்கள் சமத்துவப்  பார்வை இன்றி செய்த செயலின் எதிர்வினை ஆகும். ஏனெனில் கைக்கோளர், சேனைக்கு கடையார், வாணியர் என்போர் முன்பு போர்த் தொழில் செய்யும் பட்டடைக் குடியாக, இதாவது போர்க் குடியாக இருந்தவர். இரண்டாம்  குலோத்துங்கன் ஆட்சியில் பெரிய புராணம் தொகுக்கப் பெற்று அதனால் ஏற்பட்ட சைவ சமய எழுச்சியால் இந்த போர்க் குடிகளுக்கு போர்த் தொழில் கொலைத்தொழில் என்று கருத்தேற்றப்பட்டு அதை விட்டு நீங்க வணிகத் தொழில் உரிமை வழங்கப்பட்டது. அதன்படி கைக்கோளர் தறித் துணி விற்கவும், வாணியர் வெற்றிலை,கயிறு விற்கவும், சேனைக் கடையார் செக்கு எண்ணெய் விற்கவும் உரிமை தரப்பட்டது. அதன் விளைவு போர் புரியும் குடிகள் வெகுவாக குறைந்ததால் சோழப் பேரரசு அடுத்த ஒரே நூற்றாண்டில் விழுந்தது. அதுமுதல் தமிழகம் 650 ஆண்டுகளாக அயலவர் ஆட்சிக்கு அடிமைப்பட்டது. இன்று வரை அதிலிருந்து மீளவே இல்லை. வந்தேறிய அயலவர் விளைநிலத்தை கவர்ந்து கொண்டனர் அதனால் தமிழர் வாழ்வுரிமை இழந்து ஒடுக்கப்பட்டனர். இது சைவர் தமிழகத்திற்கு ஆற்றிய திருத்தொண்டு என்று நகையாட்டாக சொல்ல வேண்டியுள்ளது.

    பார்வை நூல்: விழுப்புரம் மாவட்ட கல்வெட்டுகள் தொகுதி III, பக். 191&192, தமிழ்நாடு தொல்லியல் துறை வெளியீடு.

    புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் வட்டம் அரமலை ஊர் பாறை 4 வரிக் கல்வெட்டு

    1. சாகாத்தம் 1469 மேல் செல்லா நின்ற ஆனந்த வருஷம் சித்திரை 5 நாள் அரச மீகாமன் நிலை ஊராக அ
    2. மைந்த  ஊரவரோம் . மேற்படியூர் வலவற்கு நின்றையும் இட்டபடிக்கு சவம் அடக்கிறதும் துறை ஆற்றுகிறதும் 
    3. மியானக் கரைக்கு சுழுந்து இடவேண்டாம் என்று சட்டன் இட்டுக்குடுத்தபடிக்கு அரச மீகா
    4. மன் நிலை ஊரவர் சொற்படிக்கு வாழைக்குறிச்சி தொண்டைமானார் _ _ _ பெருமாள் எழுத்து.

    மீகாமன் – கப்பல் செலுத்துபவன், படையை வழிநடத்துபவன், guide; நிலை – தங்குமிடம்; வலவர் – முத்தரைய வலைஞர், மீனவர்; நின்றை – தீர்மானம், நிலையான அறிவுறுத்தல், standing instruction; துறைஆற்று – இடம் ஏற்பாடு செய்தல், proper  arrangement; சுழுந்து – சுளுந்து எனும் பிணஎரி விறகு  மேடை,சட்டன்  – சட்டம்.

    விளக்கம்:  இக்கல்வெட்டு 1547 இல் நாயக்கர் ஆட்சி காலத்தில் சித்திரை 5 ஆம் நாள் வெட்டப்பட்டது. “அரச படையை  வழிநடுத்துபவன் நிலைத்து தங்கும் அரமலை ஊரவரோம்; இவ்வூரில் வாழும் முத்தரைய மீனவர்க்கு நிலையான அறிவுறுத்தல் வைத்தது யாதெனில் இவ்வூரில் பிணஅடக்கம், அதற்கான இட ஏற்பாடு, பிண எரிமேடைக்கு விறகு இடுதல் ஆகிய மூன்று வேலைகளை செய்யக்கூடாது” என்ற கட்டளையை சட்டமாக ஆக்கி வாழைக்குறிச்சி தொண்டைமான் _ _ பெருமாள் அரச படையை வழிநடுத்துபவன் நிலைத்து தங்குகின்ற அரமலை ஊரார் கேட்டுக் கொண்டபடி ஆணை ஓலையை எழுதிக் கொடுத்தார்.

    மீனவ முத்தரையர் சிலர் பிழைப்பிற்கு வேறு வழியின்றி இடுகாட்டில் பிணம் கையாளும் தொழிலை மேற் கொள்ளத் தொடங்கினர். இத்தொழிலின் இழிவு கருதி இதனால் வரும் குல இழிவு கருதி அதே மீனவ வகுப்பினர் இந்த இழிவை முளையிலேயே கிள்ளி எறியும் பொருட்டு நாடாளும் வாழைக்குறிச்சி தொண்டைமானிடம் தடை சட்டம் பெற்றது ஒரு வகைஒடுக்குமுறை ஆகும். இதே போன்ற தடை ஆணை, கட்டுப்பாடு மூலம் தான் இன்றைய ஒடுக்கப்பட்ட, தீண்டாமை சாதிகள் 17 ஆம் நூற்றாண்டில் உருவாயின. அதற்கு முன் அவர்கள் படை வீரர்கள்.

    பார்வை நூல்: ஆவணம் இதழ் 8, 1997, பக். 4

    முற்றும் 

    Share
  • தமிழ் பிராமி கல்வெட்டு விளக்கம்

    தமிழ் பிராமி கல்வெட்டு விளக்கம்

    சேசாத்திரி ஸ்ரீதரன்

    தமிழ் பிராமி கல்வெட்டுகள் சற்றொப்ப 38 ஊர்களில் மலை சார்ந்த குகைத் தளங்களிலும் திறந்தவெளியிலும் கண்டறியப்பட்டு உள்ளன. இம் 38 இடங்களில் சற்றொப்ப 100 கல்வெட்டுகள் அறியப்பட்டுள்ளன. ஒரே இடத்தில் குறைந்தது 1 முதல் அதிகமாக 12 கல்வெட்டுகள் வரை என இம் 38 இடங்களில் காணப்படுகின்றன. தமிழ் பிராமி கல்வெட்டுகள் தமிழ் மொழியின் தொன்மைக்கும் தமிழ் எழுத்து வட்டெழுத்தாகி அடுத்து சோழர் கால எழுத்தாகி பின் இந்நாள் எழுத்தாக  உருத்திரிந்ததற்கு சான்றாக உள்ளன. திரு. ஐராவதம் மகாதேவன் பெருமுயற்சி எடுத்து இவற்றை எல்லாம் அடர்வு செய்து தென்னகத்திற்கு சமணர் வச்சிர நந்தி தலைமையில்  வடக்கே இருந்து வந்ததை ஒட்டி தமிழகத்தில் மதுரையைச்  சுற்றியுள்ள இடங்களில் அமைந்த தமிழி கல்வெட்டுகள் கி.மு. 2 ம் நூற்றாண்டு முதல் கி.பி. 2 ம் நூற்றாண்டு வரையான காலத்தன என்று காலவரையறை செய்தார். எனினும் புதுக்கோட்டை த் தமிழ் பிராமி நடுகல் கல்வெட்டு கங்கரை குறிப்பது 5 -ம் நூற்றாண்டு வரை தமிழ் பிராமியின் பயன்பட்டை உறுதி செய்கின்றது.  இக்கல்வெட்டுகள் உள்ள தளங்களை சமண துறவிகளின் படுக்கை என்று ஐராவதம் மகாதேவன்  கூறினாலும் மேட்டுப்பட்டி தமிழி கல்வெட்டு  “அமணன்  மதிரை அத்திரன் உறை உதயனஸ” என்பதிலும், புகளூர்  தமிழி கல்வெட்டு  “மூதா   அமண்ணன்” என்பதிலும் தான் சமணர் பற்றிய தெளிந்த குறிப்பு உள்ளது மற்றவற்றில் அவ்வாறு தெளிவாக இல்லை. இதனால் இவற்றை  ஆசீவகர் படுக்கைகள் என்று பேரா. க. நெடுஞ்செழியன் கூறுகிறார். ஆனால் அதற்கும் தெளிவான கல்வெட்டுக் குறிப்பு ஏதும் இல்லை. இக்குன்றுகளின் இருப்பிடத்தில்  பிற்காலத்தே சமண புடைப்பு சிற்பங்கள் அமைந்ததாலும் ஐயனார் கோவில்கள் அமைந்ததாலும் இக் கல்வெட்டுகள் சமணர்க்குரியன ஆசீவகர்க்குரியன என்பது தவறு. இக்கல்வெட்டு விளக்கம் அந்த தவற்றை வெளிப்படுத்தவே அமைந்ததாகும். இக்குகைகளில் அமைந்த கற்படுக்கைகள் மருத்துவம் மேற்கொள்ளப்பட்ட நோயாளிகளுக்கான படுக்கைகள் என்றே எண்ணத் தோன்றுகின்றன.  ஏனென்றால் முற்றும் துறந்த சமண, ஆசீவக முனிவர் ஒரே இடத்தில் நிலையாகத் தங்கப்போவதில்லை. இடைவிடாமல் இடம்பெயர்வது தான் முற்றத் துறந்தவரின் பண்பு.

    அண்மையில் கிடைத்த கொங்கப்பட்டி கல்வெட்டுத் தொடரைக் கருத்தில் கொண்டு பிற பிராமிக் கல்வெட்டுகளை மீள்பார்வை செய்த போது இக் கல்வெட்டுகளில் இடம்பெறும் அந்தை, உபசன் ஆகிய பெயர்ச் சொற்கள், அவற்றின் பொருள் பிராமணர் தொடர்புடையவை என்று தெரிவிக்கின்றன.  இவ்வாறு  சற்றொப்ப 20 கல்வெட்டுகள் உள்ளன. இவை தமிழகத்தில் தமிழ் பிராமணர் இருப்பை 2,000 ஆண்டுகளுக்கும்  மேலாக  எடுத்துச் செல்கின்றன.  இதனால் தமிழ்ப் பிராமணரை ஆரியர், யூத பிராமணர், நாடற்றவர், மொழியற்றவர் என்று சிலர் சொல்வது வல்லடிவழக்கு (unreasonable insistence) என்று தெரிகிறது. பிராமணரை இவ்வாறு கூறுவது அறிவின்மை ஆகும். தமிழ் பிராமணரைத் தமிழ் மண்ணின் மைந்தராக  ஆதிக்குடியாக அடையாளப்படுத்தும், முகவரி தரும் இப்படியான கல்வெட்டுச் சான்று வேறு எவருக்கும் இல்லை என்பதே உண்மை.

    வியாசரின் புராண மதம் கி.பி. 6 ம் நூற்றாண்டில் அறிமுகமாவதற்கு முன்பு பிராமணர் வேள்வி மதத்தையும் தந்திர யோக  மதத்தையும் பின்பற்றி வாழ்ந்தனர். எனவே அவர்களில் இரந்து வாழும் தவசிகள் மருத்துவத் தொண்டு புரிய கற்படுக்கைகளை ஏற்படுத்தச் செய்தனர். இதற்கு மாங்குளம், மேட்டுப்பட்டி, நெகனூர்பட்டி கல்வெட்டுகள்  சான்றாகும். மக்கள் இத்தகு இரந்து வாழும் சமண, ஆசீவக, பிராமண  முனிவர்களை தமது உடல் நலம், மனநலம் கருதி நாடிச் சென்று பார்த்தனர், எதிர்காலம் பற்றி அறிய குறிகேட்கவும் சென்றனர். இம்மக்களில் அரசர், வணிகர், பிராமணர், ஊரார், எளியோர் அடங்குவர். இவர்கள் தாம் இந்த குகைத்தள படுக்கைகளும் கல்வெட்டுகளும் உருவாகக் காரணமானவர். இக்கல்வெட்டுகள் மூலம் அக்காலத் தவசிகள் மீது மக்கள் கொண்டிருந்த நன்மதிப்பை விளங்கிக்கொள்ள முடிகின்றது. மாங்குளம், மாமண்டூர், புகளூர், நெகனூர்பட்டி ஆகிய இடத்து கல்வெட்டுகளில் துறவு பிராமணத் தாய், தந்தையருடைய பிள்ளைகளும் குறிக்கப்படுவது பிராமணர் வாழ்வின் முற்பகுதியில் இல்லறத்தையும் முதுமையில் அந்தணர் எனப்படும் இரந்து வாழும் துறவறத்தையும் கடைபிடித்து வாழ்ந்தது பிரம்மச்சரியம், இல்லறம், காடுறை அறம், துறவறம் என்னும்  நால்வர்க்க வாழ்க்கையைக் கடைபிடித்து வாழ்ந்தனர் என்று உணர்த்துகின்றது. ஆனால் புத்த, சமண, ஆசீவகம் மதத்திற் உள்ளது போல் இந்த துறவு பிராமணர் முற்றும் துறந்தவர் (complete renunciate) அல்லர். துறவு வாழ்விலும் இவர்தம் உறவினர் அவ்வப்போது வந்து பார்த்துச் செல்வதை வழக்கமாக கொண்டிருந்திருந்தனர் என்று தெரிகின்றது. “துவிஜ” எனப்படும் இருபிறப்பாளர் என்ற சொற்பொருள் தியானத்தவ வாழ்க்கையை ஏற்ற பின் இரண்டாவது பிறப்பெடுத்தவர் என்ற பொருளில் பிராமணரைக் குறிக்க வழங்குவது ஈண்டு நோக்கத்தக்கது. இந்த தவவாழ்வினால் முக்கால அறிவு, சித்துக்கள் கிடைக்கப்பெற்றவராக இந்த துறவு பிராமணர் இருந்ததால் மக்களால் அதிகமாக மதிக்கப்பட்டனர். பின்பு பிராமணர் கி.பி. 6 ம் நூற்றாண்டு அளவில் வியாசர் தோற்றுவித்த புராண மதத்தை தழுவிய இந்த தந்திர யோகத்தை அடியோடு கைவிட்டதனால் முக்கால அறிவு, சித்துக்கள் அற்றவராக ஆகிப்போனதால் மக்களிடம் தமக்கு இருந்த தொழத்தக்க  மதிப்பை இழந்தனர் என்று தெரிகின்றது.

    இத்தமிழி கல்வெட்டுகளில் புழங்கும் சொல்லாட்சி அக்காலப் பேச்சு வழக்குத் தமிழ் என்பது புலனாகின்றது. இவற்றில் புழங்கும் தமிழ் அல்லாத சொற்களும் பெயர்ச் சொற்களும் பிராகிருத மொழிக்கானவை, காட்டாக தம்மம், தன்மன், உதயனஸ ஆகியன. கல்வெட்டு எழுத்துகளில் நெடில் குறிலாகவும், ஒற்றெழுத்து இன்றியும் எழுதப்பட்டுள்ளன. சில கல்வெட்டுகளில் ஆண்பால் ஈறு “அன்” தனித்தே எழுதப்பட்டுள்ளது. இகர ஈற்றை அடுத்து யகர மெய் இடப்பட்டுள்ளதானது அக்கால எழுத்து நடையை காட்டுகின்றது. இகரம் எகரமாக குறிக்கப்பட்டுள்ளது. இக்காலத்திற்கும் பயன்படும் பல அரிய தனித்தமிழ்ச் சொற்கள் இக்கல்வெட்டுகளில் உள்ளன. மாங்குளம் முதல் நெற்றம்பாக்கம் வரை பொதுமக்கள் கல்வெட்டுகளுக்கும் கிண்ணிமங்கலம் முதல் புதுக்கோட்டை வரை நடுகல் வகை கல்வெட்டுகளும் ஊர்வாரியாக விளக்கப்பட்டுள்ளன.

    மாங்குளம்: மதுரைக்கு வடக்கில் மேலூர் போகும் தேசிய நெடுஞ்சாலையில் கத்தப்பட்டி என்ற கிராமத்தில் பிரிந்து வடமேற்கில்  சென்றால் மாங்குளத்தை அடையலாம். இவ் ஊரினை அண்டிய மீனாட்சிபுரம் என்ற ஊரை ஒட்டி தெற்கு வடக்காக  ‘ஓவாமலை’  என்றும் ‘கழுகுமலை’ என்றும் மக்களால் அழைக்கப்படும் இரு குன்றுகள் உள்ளன. இதன் உச்சியில் கிழக்குப் பகுதியில் கிழக்கு முகமாய் ஐந்து குகைகள் இயற்கையாய் அமைந்துள்ளன. இவற்றில் கற்படுகைகளும், நீர்வடி விளிம்புகளும் வெட்டப்பட்டு வதிவிடங்களாக மாற்றி அமைத்துள்ளனர். இதில் நான்கில் பட்டிப்புரோலு எழுத்து முறையில் ஆறு கலவெட்டுகள் பொறிக்கப்பட்டுள்ளன.

    கல்வெட்டு 1:1  > மாங்குளம் மலை ஏறியதும் உள்ள முதல் குகைத் தளத்தில் இரு கல்வெட்டுகள் பொறிக்கப்பட்டுள்ளன. அவை பாறை முகப்பில் அமைந்த நீர்வடி விளிம்பின் கீழே உள்ளன. முதற்கல்வெட்டு ஒரு வரியில் உள்ளது.

    கணிய் நந்த அஸிரிய்இ  குவ்அன்கே தம்மம் இத்தாஅ நெடுஞ்சழியன் பணஅன் கடல்அன் வழுத்திய் கொட்டுபித்தஅ பளிஇய்

    கணி – தியானத்தில் உயர்நிலை எய்திய பிச்சை எடுத்து வாழும் முனிவர்க்கு உரிய பட்டம், title for attainment of higher state in meditation by an  ascetic ; குவ்வன்  – பாடம் சொல்பவன், தீர்ப்பு சொல்பவன்; ஈத்தான் — கொடுத்தான்; பணவன் – மணிக்கல் சுரங்க பொறுப்பாளர், precious stone mine in-charge; கொட்டுபித்த –  கொடுத்த, பள்ளி  – கற்படுக்கை.

    விளக்கம்: கணி நந்த ஆசிரியர் நடத்திய கல்விச் சாலையில் வேத பாடம் சொல்வானுக்கு தருமமாய் நெடுஞ் செழியனின் மணிக்கல் சுரங்கப் பொறுப்பாளன் கடலன் வழுதி என்பான் இக் கற்படுக்கையை உருவாக்கித் தந்தான் என்பது இதன் பொருள். இக்கல்வெட்டில் “அன்” ஆண்பால் ஒருமை ஈறு பணவன், கடலன் என தனியே பிரித்துக் காட்டப்பட்டுள்ளன.

    கல்வெட்டு 1:2 > முதற் கல்வெட்டு உள்ள இடத்திலேயே இக்கல்வெட்டும்  உள்ளது.

    கணிய் நத்திய் கொடிய்அவன்

    விளக்கம்:  இக்கற்படுக்கையை கணி நத்தி என்பவன் ஏற்படுத்தி கொடுத்தான். டகர மெய் சேர்த்து கொட்டியவன் என படிக்க வேண்டும். நத்தி இன்னொரு தியானத் துறவி ஆவார். இவரும் கணி என்ற பட்டத்தை அடைந்தவர்.

    கலவெட்டு 1:3 > முன் இரு கல்வெட்டுகளின் குகைக்கு வடக்கே கீழ்ப்புறம் உள்ள குகையின் வெளிப்புற பாறைச் சுவரில் ஒரே வரியில் நீளமாக பொறிக்கப்பட்டுள்ளது.

    கணிய் நந்தஸிரிய் குஅன் தமம் ஈதா நெடுஞ்சழியன் ஸாலகன் இளஞ்சடிகன் தந்தைய் சடிகன் சேஇய் பளிய்

    சாலகன் – வேட்டன்,  மனைவிவழி உறவினன்

    விளக்கம்: கணி நந்த ஆசிரியரின் கல்விச் சாலையில் வேத பாடம் சொல்லிக் கொடுப்பவனுக்கு நெடுஞ்சழியனின் மனைவிவழி  உறவினான இளஞ்சடிகனின் தந்தை சடிகன் தர்மமாக கற்படுக்கை அமைத்துக் கொடுத்தான் என்பது இதன் பொருள்.

    கல்வெட்டு 1:4 > மேற்கண்ட குகைத்தளத்தின் மேல் மற்றொரு குகைத்தளத்தில் காணப்படும் ஒரு வரி நீண்ட கல்வெட்டு இது.

    கணிஇ நதஸிரிய் குவ[ன்] — — வெள்அறைய் நிகமது காவதிஇய் காழிதிக அந்தை அஸுதன் பிணஉ கொடுபிதோன்

    நிகமத்து – ஊரின்; காவிதி – பெண் துறவி, meditator; காழி – உடலுழைப்பு துன்பம், திக்கர்  – தவிர்த்தவர்  காழிதிக்கர் – உடலுழைப்பு தவிர்த்து பிச்சையெடுத்து வாழ்பவர்; அந்தை – பிச்சையெடுக்கும் அந்தணத் துறவி, பிராமணர்; பிணவு – தங்கிடம்

    விளக்கம்: வெள்ளறை என்னும் ஊரில் உள்ள பெண் துறவாட்டியான பிச்சைக்கார அந்தணப் பெண்ணின் மூத்த மகன் கணி நந்த ஆசிரியரின் த கல்விச் சாலையில் வேத பாடம் சொல்லும் பணியாளுக்கு தங்கிடம் செய்து கொடுத்தான் என்பதே இதன் பொருள். ககர மெய் சேர்த்தால் திக்க என்றாகும். இதில் குவ்வன், காவிதி அந்தை, அவள் மூத்த மகன் ஆகிய மூவருமே பிராமணர். நந்தாசிரியர் வேத பாடம் சொல்பவனுக்கு ஆதரவளிப்பதை வைத்து அவரும் பிராம்மணக் குடியில் பிறந்திருக்க வேண்டும் என்று கருதலாம். கணி என்ற பட்டம் ஆசீவகர், பிராமணர் என எவரும் கொள்ளும் பட்டம் தான். இனம் இனத்தோடு சேரும் என்ற முதுமொழிப்படி பிராமணர் வேதக் கல்விக்கு ஆதரவு தருவது இயல்பு. பெண் துறவாட்டியின் மூத்த மகன் குறிக்கப்படுவதைப் பார்த்தால் அவள்  நால்வர்க்கு வாழ்க்கை முறைப்படி இளமையில் இல்லறமும் முதுமையில் துறவும் மேற்கொண்டவள் எனத் தெரிகிறது.

    கல்வெட்டு 1:5 > நான்காவது கல்வெட்டு உள்ள குகைத்தளத்திற்கு தெற்கே இரு சிறிய கல்வெட்டுகள் உள்ளன. அதில் இது முதலது.

    சந்தரிதன் கொடுபிதோன்

    சந்தை – அதிக அளவு; அர் – பொருள்; ஈத்தன் – கொடுப்பவன்.  அரிதன் என்றால் நாட்டுப் பிரிவின் எல்லையை கடந்து ஓரிடத்தில் இருந்து மற்றோரிடத்திற்கு பொருளைக் கொண்டு போய் கொடுப்பவன் (delivery man).

    விளக்கம்:  அதிக அளவு பொருளை கொண்டு கொடுக்கும் சந்தரிதன்  இந்த கற்படுக்கையை ஏற்படுத்தி கொடுத்தான் எனப் பொருள். டகர மெய் சேர்த்து கொட்டுபித்தோன் என படிக்க வேண்டும். செதுக்கி அமைத்தவன் எனவும் பொருள் கொள்ளலாம்.

    கல்வெட்டு 1:6 > 1:5 கல்வெட்டு அமைந்த குகைத் தளத்திலேயே இக்கல்வெட்டும் அமைந்துள்ளது.

    வெள்அறை நிகமதோர் கொடிஓர்

    விளக்கம்: வெள்ளறை ஊரார்  இக்குகையின் கற்படுக்கையை அமைத்துக் கொடுத்தனர் என்பது இதன் பொருள்.  தகர மெய் சேர்த்து நிகமத்தோர் என்றும் டகர மெய் சேர்த்து கொட்டியோர் என்றும் படிக்க வேணடும். நிகமத்தோர் இங்கு வணிகரைக் குறிக்காது

    ________________________

    அரிட்டாபட்டி: மதுரைக்கு வடக்கில் 20 கி. மீ. தொலைவில் மேலூர் செல்லும் வழியில் சாலையை விட்டு சற்று விலகி அரிட்டாபட்டி உள்ளது. அவ் ஊரில் உள்ள கழிஞ்ச மலையின் அடிவாரத்தில் இயற்கையான குகை ஒன்றில் கற்படுகைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மழைநீர் உட்புகாமல் இருக்க நீர்வடி விளிம்பு குகையின் நெற்றிப்புறத்தில் வெட்டப்பட்டு உள்ளது. அதன் கீழ் ஒன்றும் மேல் ஒன்றும் என இரு கல்வெட்டுகள் பொறிக்கப்பட்டு உள்ளன.

    கல்வெட்டு 2:1 > நீர்வடி விளிம்பின் கீழ் முதல் கல்வெட்டு உள்ளது. 1971 ல் இது கண்டு அறியப்பட்டது.

    நெல்வெளிஈய் சிழிவன் அதினன் வெளியன் முழாகை கொடுபிதோன்

    சிழிவன் – துணிவணிகன்; முழாகை – கற்படுக்கை, flat stone.

    விளக்கம்: நெல்வெளியைச் சேர்ந்த துணி வணிகன் அதினன் வெளியன் என்பான் இக் கற்படுக்கையை அமைத்துக் கொடுத்தான் எனப் பொருள். ஒற்று எழுத்து சேர்த்து கொட்டுப்பித்தோன் எனப் படிக்க வேண்டும்.

    கல்வெட்டு 2:2 > நீர்வடி விளிம்பின் மேல் ஒரே வரியில் இக்கல்வெட்டு காணப்படுகிறது. இது 2003 ல் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையினரால் கண்டறியப்பட்டது. மிக மங்கலாகவும் தேய்ந்தும் உள்ளது.

    இலஞ்சிய் எளம் பேராஅதன் மகன் எமயவன் இவ் முழ உகைய் கொடுபிதவன்

    விளக்கம்: இலஞ்சி என்னும் ஊரைச் சேர்ந்த  இளம் பேர்அதன் மகன் இமயவன் என்பவன் இக் கற்படுகையை உருவாக்கிக் கொடுத்தான் என்பது பொருள். ஒற்று சேர்த்து கொட்டுபித்தவன் எனப் படிக்க வேண்டும்.

    கல்வெட்டு 2:3 > செப். 15, 2003 ல் இந்து நாளேடு வெளியிட்ட புதிதாக கண்டறியப்பட்ட மூன்றாவது அரிட்டாபட்டி தமிழி கல்வெட்டு இது.  மெல்லிய கோடுகளால் தெளிவின்றி காணப்படும் இக்கல்வெட்டு 33 எழுத்துகளுடன் 3.10 மீட்டர் நீளத்தில் பொறிக்கப்பட்டு உள்ளது.

    இலஞ்சிய் வேள் மாப்பரவன் மகன் எமயவன் நல்முழாஉகை கொடுபிதவன்  

    விளக்கம்: இலஞ்சி எனும் ஊரின் வேள் ஆன (அரையன்) மாப்பரவன் மகன் இமயவன் நல்ல கற்படுகையை உருவாக்கிக் கொடுத்தான் என்பது இதன் பொருள். மாப்பரவன் என்றால் மீனவர் தலைவன். முன்னைய கல்வெட்டில் இவன் பெயர் இளம் பேராதன் என்று குறிக்கப்பட்டுள்ளது. ஒரே செய்தி இரு இடங்களில் கல்வெட்டாக பொறிக்கப்பட்டுள்ளது. ஒற்று சேர்த்து கொட்டுப்பித்தவன் எனப் படிக்க வேண்டும்.

    _____________________________

    திருவாதவூர்: மேலூர் வட்டத்திற்கு உட்பட்ட இவ் ஊர் மதுரையில் இருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இவ் ஊரின் புறத்தில் உவா மலை என்றொரு குன்றில் உள்ள குகைத் தளப் புருவப் பகுதியில் இரு கல்வெட்டுகள் காணப்படு கின்றன.

    கல்வெட்டு 3:1 கீழ் உள்ள குகையின் புருவத்தில் நீர்வடி விளிம்பின் மேல் பகுதியில் ஒரே வரியில் பொறிக்கப்பட்ட கல்வெட்டு.

    பாங்காட அர்இதன் கொட்டுபிதோன் 

    பாங்கு + ஆடை – ஒருவகை சல்லடை ஆடை, a type of perforated cloth;  அரிதன் –  அர் + ஈதன் > அர் என்றால் பொருள், ஈதன் என்றால் கொடுப்பவன், delivery  man like courier, Amazon, zomato, Dunzo

    விளக்கம்: பாங்கு என்னும் ஒரு வகை துளையிட்ட ஆடையை வேற்றிடத்திற்கு கடத்த உதவுபவன் இக்குகைத் தளத்தைச் செய்து கொடுத்தான் என்பது இதன் பொருள். காட்டாக, பாங்கு ஆடை சிந்துவெளி பூசசக அரசன் பொம்மைத் தோளில் போர்த்திய துண்டில் உள்ள பூவேலைத் துளையைப் போன்றது. விலையுயர்ந்த இவ்வாடையை அரசர் துறவிகளுக்கு சிறப்பு செய்யும் முகமாக கொடுத்தனர்.

    கல்வெட்டு 3:2   நீர்வடி விளிம்பின் கீழ்  பகுதியில் ஒரே வரியில் பொறிக்கப்பட்ட கல்வெட்டு.

    உபசன் பர்அசு உறை கொட்டுபிதோன்

    உபசன் – உபாசனை செய்யும், குறி சொல்லும் பிராமணப் பூசகன்; பரசு – மூங்கில் ; உறை – வதிவிடம்.

    விளக்கம்: பூசகரைக் குறிக்கும் உவச்சர் என்ற சொல்லின் திரிபு தான் உபசன் என்பது.  ஒற்றை தெய்வத்தை உபாசனை செய்யும் பூசகன் எனவும் கொள்ளலாம். உவா + அச்சன் = உவச்சன்.  உவா என்றால் நிலவு. தலைவாவு அமாவாசையிலும் முழு நிலவிலும் குறிசொல்பவன் என்பதை வைத்தே உவச்சன் என்ற சொல் உருவாக்கப்பட்டது. கல்வெட்டில் பிராமண பூசகன் மூங்கில் சூழ்ந்த அல்லது மூங்கிலில் அமைத்த வதிவிடம் கொடுப்பித்தான் என்று கூறுகிறது.
    _____________________________

    கீழவளுவு:  மதுரையில் இருந்து 38 கி.மீ தொலைவில் மேலூர் வட்டத்தில் மேலூர் – திருப்பத்தூர் சாலையில் கீழவளவு அமைந்திருக்கிறது. இவ் ஊரின் சற்று முன்பாக இயற்கையாக உள்ள குன்றின் அடிவாரத்திலும் நடுவிலும் குகைத்தளத்தில் பல கற்படுக்கைகள் உள்ளன. பஞ்ச பாண்டவர் மலை என அழைக்கப்படும் குன்றின் நடுவில் உள்ள குகைத்தளம் ஒன்றன் முகப்பு பகுதியில் நீர்வடி விளிம்பின் கீழாக வலம் இடமாக பொறிக்கப்பட்ட ஒரு கல்வெட்டு உள்ளது.

    கல்வெட்டு 4:1>   உப[ச]அன் தொண்டி[ல]வோன் கொடு பளிஇ 

    விளக்கம்: பிராமணப் பூசகன் தொண்டிலவோன் கொடுத்த கற்படுக்கை இது எனப் பொருள்.
    _____________________________

    கொங்கர்புளியங்குளம்:  மதுரை திருமங்கலம்  வட்டத்தில் மதுரை- தேனி நெடுஞ்சாலையில் மதுரை காமராசர் பல்கலைக்கும் செக்கானூரணிக்கும் இடையில் கொங்கர்புளியங்குளம் உள்ளது. இந்த ஊர் அருகில் பெருமாள் கோவில்  மலையில் இயற்கையான குகைத்தளத்தில் 50 க்கும் மேற்பட்ட கற்படுகைகளும் மூன்று தமிழி கல்வெட்டுகளும் உள்ளன.

    கல்வெட்டு 5:1> குகையின்முகப்பு நெற்றிப் பாறைக்கு சற்று தள்ளி வெட்டப்பட்டு உள்ள கல்வெட்டுகளில் இது முதலாவதாக உள்ளது.

    குற கொடுபிதவன்  உபசஅன் உபறுவ(ன்)

    விளக்கம்: உபறுவன் என்னும் பெயருடைய பிராமணப் பூசகனால் இக் குகைத்தளம் அமைக்கப்பட்டது என்பதே இதன் பொருள்.

    கல்வெட்டு 5:2>  இக்கல்வெட்டு மூன்று கல்வெட்டுகளுள் நடுவே உள்ளது.

    குறு கொடல்கு ஈத்தவன் செற்அதன் ஓன்

    குறு – குகை; கொடல்கு – ஆழ் குளம்

    குகைத்தள கற்படுகையும், ஆழ்குளமும் குடைவிப்பதற்கு வெள்ளிக்காசு ஈந்தவன் செற்அதன் என்பது இதன் பொருள்.

    கல்வெட்டு 5:3>  இது இறுதியில் பொறிக்கப்பட்டுள்ள மூன்றாம் கல்வெட்டு.

    பாகன் ஊர் பே(ர)தன் பிடன் இத்த வெபொன்

    பேராதன் – பெருஞ்செல்வன்; ஈத்த – கொடுத்த; வெ – வெள்ளி; பொன் – காசு.

    விளக்கம்: பாகனூரைச் சேர்ந்த பெருஞ்செல்வன் பிட்டன் என்பவனால் குகைத் தளம் அமைக்க வெள்ளிக்காசு வழங்கப்பட்ட சேதியைக் குறிக்கிறது.
    _____________________________

    மறுகால்தலை: நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டைக்கு வடகிழக்கில் 9 கி.மீ தொலைவில் சீவலப்பேரி என்ற ஊருக்கு அருகில் மறுகால்தலை உள்ளது. இவ் ஊரின் பூவிலுடையார் மலையின் மேற்குப் பகுதியில் பஞ்சபாண்டவர் படுக்கை எனப்படும் இயற்கையான குகைத்தளத்தில் சில கற்படுக்கைகள் அமைந்துள்ளன.

    கல்வெட்டு 6:1> குகைத்தள நெற்றிப் பகுதியில் ஒரே வரியில் பெரிய எழுத்துகளில் இக்கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது.

    வெண்காஸிபன் கொடுபித கல் கஞ்சனம்

    விளக்கம்: வெண்காசிபன் என்பவன் கற்படுக்கை அல்லது கற்கட்டடம் அமைத்துக் கொடுத்தான் என்பதே இதன் பொருள். மெய் சேர்த்து கொட்டுப்பித்த எனப்  படிக்க வேண்டும்.
    _____________________________

    வரிச்சியூர்: மதுரை வடக்கு வட்டத்தில் சிவகங்கை செல்லும் சாலையில் வரிச்சியூர்  உள்ளது. இங்குள்ள உதயகிரி எனப்படும் சுப்பிரமணிய மலையில் மூன்று தமிழி கல்வெட்டுகள் உள்ளன. வடக்கு நோக்கிய சிறிய குகைத்தளத்தின் புருவப் பகுதியிலும், கிழக்கு நோக்கி உள்ள குகைத்தளத்தின் புருவப் பகுதியில் வெட்டப்பட்ட நீர்வடி விளிம்பின் மேலும் கீழும் ஆக மூன்று கல்வெட்டுகள் உள்ளன.

    கல்வெட்டு 7:1 >  இது வடக்கு நோக்கிய சிறுகுகையின் நெற்றிப் பாறை முகப்பில் பொறிக்கப்பட்டு உள்ளது.

    ப(ளி)ய் கொடுபி – – – —

    விளக்கம்: இக் கற்படுக்கையை ஈந்தவர் பெயர் குறிக்கப்பட்டாலும் அது சிதைந்து போனதால் கொடையாளியின் பெயர் தெரிந்திலது.

    கல்வெட்டு 7:2 > இது கிழக்கு நோக்கிய பெரிய குகைத்தளத்தின் நெற்றிப்பாறையின் நீர்வடி விளிம்பின் மேல் பொறிக்கப்பட்டுள்ளது.

    அடா- – – றை ஈதா வைக – – – ஒன்  நூறு கலநெல் — – –

    விளக்கம்: இக் குகைத்தளம் அமைக்க ஒரு நூறு கலம் நெல் வழங்கப்பட்ட செய்தியைக் குறிக்கிறது. கொடை வழங்கினவர் பெயர் சிதைந்து உள்ளது.

    கல்வெட்டு 7:3 > இக் கல்வெட்டு கிழக்கு நோக்கிய பெரிய குகையின் நெற்றிப் பாறை நீர்வடி விளிம்பின் கீழ்ப் பகுதியில் பொறிக்கப்பட்டு உள்ளது.

    இளநதன் கருஇய நல் முழஉகை

    கருவிய – செய்த.  செயலை குறிக்கும் கருமம் என்ற சொல்லை நோக்குக.

    விளக்கம்: இக் கற்படுகையை செய்து கொடுத்தவன் இள நத்தன் என்பான் என்பது இதன் பொருள். தகர மெய் சேர்த்து இள நத்தன் எனப் படிக்க வேண்டும்.
    _____________________________

    விக்கிரமங்கலம்:  மதுரை உசிலம்பட்டி வட்டத்தில் மதுரைக்கு  மேற்கே  விக்கிரமங்கலம் அமைந்து உள்ளது. இங்கு உண்டாங்கல் என்ற சிறு குன்று அமைந்து உள்ளது. இங்கு ஆறு தமிழி கல்வெட்டுகள் உள்ளன.

    கல்வெட்டு 8:1> ஒரு சிறு தனிப்பாறையின் கீழ் அமைந்த சின்னஞ்சிறு குகைத் தளத்தின் விதானத்தில் இக் கல்வெட்டு பொறிக்கப்பட்டு உள்ளது.

    எஇய்ல் அர்இய்தன் சேவித்ஓன்

    விளக்கம்: பொருளை அரண்மனைக் கோட்டைக்கு வெளியேயும் உள்ளேயும் கொண்டு செல்பவன் செய்வித்த கற்படுக்கை இது என்பதே இதன் பொருள்.

    கல்வெட்டு 8:2> இரண்டாம் கல்வெட்டு இங்குள்ள பெரிய குகைத்தளத்தின் நெற்றியில் வெட்டப்பட்டு உள்ளது.

    எம்ஊர் சிழிவன் அதன்தியன்

    சிழிவன் – துணி வணிகன்

    விளக்கம்: எம்மூரினது துணி வணிகன் அதன் திய்யனால் இக்கொடை நல்கப்பட்டது என்பதே இதன் பொருள். தியன்- யகர ஒற்று சேர்த்து திய்யன் எனப்  படிக்க வேண்டும்.

    கல்வெட்டு 8:3>  இக்கல்வெட்டு பெரிய குகைத் தளத்தில் உள்ள கற்படுக்கை ஒன்றன் தலைப்பகுதியில் வெட்டப்பட்டு உள்ளது.

    அந்தைய் பிகன் மகன் வெந்அதன்

    விளக்கம்: பிச்சை கொண்டு வாழும் பிராமணத் துறவி பிக்கனின் மகன் வெண்அதன் என்பானால் கொடையாக நல்கப் பட்டது என்பதைக் குறிக்கிறது. பிகன் – க் என்ற ஒற்றெழுத்து சேர்க்க வேண்டும்.

    கல்வெட்டு 8:4> இன்னொரு  கற்படுக்கையின் தலைப்பகுதியில் வெட்டப்பட்டு உள்ளது.

    பேதலை குவிரன்

    விளக்கம்: பேதலை எனும் ஊரைச் சேர்ந்த குவிரன் இப்படுக்கையை அமைத்தான் என்பது இதன் பொருள்.

    கல்வெட்டு 8:5> இன்னொரு கற்படுக்கையில் இக்கல்வெட்டு பொறிக்கப்பட்டு உள்ளது.

    செங்குவிரன்

    விளக்கம்: செங்குவிரன் என்பான் இப்படுக்கையை அமைத்தான் என்பது இதன் பொருள்.

    கல்வெட்டு 8:6> மற்றொரு கற்படுக்கையில் இக்கல்வெட்டு பொறிக்கப்பட்டு உள்ளது.

    கு (வி)ரதன்

    விளக்கம்: குவிரதன் இப்படுக்கையை அமைத்தான் என்பது இதன் பொருள்.
    _____________________________

    மேட்டுப்பட்டி: மதுரைக்கு மேற்கில் 40 கி.மீ. தொலைவில் பேரணைப் பகுதியில் மேட்டுப் பட்டி அமைந்திருக்கின்றது. இவ்வூரின் வைகையாற்றுத் தென் கரையில் சித்தர் மலை, மகாலிங்க மலை என்றும் அழைக்கப்படும் மலை உள்ளது. மலை உச்சயில் மகாலிங்க சுவாமி கோவிலுக்குப் போகும்  வழியில் பஞ்சபாண்டவர் குகை எனப்படும் இயற்கையான நீண்ட பெருங் குகைத் தளம் ஒன்று உள்ளது. இதன் நெற்றிப் பாறை  விளிம்பின் அடியிலும் கற்படுக்கையின் தலைப் பகுதியிலும் பத்து தமிழி கல்வெட்டுகள் பொறிக்கப்பட்டுள்ளன.

    கல்வெட்டு 9:1> குகைத்தள முகப்புப்  பாறையின் தென்புறம் இக்கல்வெட்டு உள்ளது. ஒரு மீட்டர் நீளத்தில் ஐந்து சொற்களைக் கொண்டுள்ளது.

    அமணன் மதிரை அத்திரன் உறை உதயனஸ

    விளக்கம்: மதுரையைச் சேர்ந்த சமண முனிவன் (அமணன்) அத்திரன் என்பானுக்குரிய உறைவிடம், இது உதயனுடைய கொடை எனப் பொருள்.  மதுரை இக்கல்வெட்டில் மதிரை என சரியாகக் குறிக்கப்பட்டு உள்ளது.

    கல்வெட்டு 9:2> குகைத்தள கற்படுக்கைகளில் இடப்புறம் அமைந்த முதற் கற்படுக்கையில் வெட்டப்பட்டு உள்ள கல்வெட்டு இது.

    அந்தை அரிய்தி

    விளக்கம்: இரந்து வாழும் பிராமணன் அரிதிக்கு உரிய கற்படுக்கை எனப் பொருள்.

    கல்வெட்டு 9:3> மேல் வரிசையில் அமைந்த மற்றொரு  கற்படுக்கையில் பொறிக்கப்பட்டு உள்ள கல்வெட்டு இது.

    அந்தை இராவதன்

    விளக்கம்: இரந்து வாழும் பிராமணன்  இராவதன் என்பானுக்கு உரிய கற்படுக்கை எனப் பொருள்.

    கல்வெட்டு 9:4> மேல் வரிசைக் கற்படுக்கை ஒன்றில் உள்ள கல்வெட்டு இது.

    (ம)திர அந்தை (வி)ஸுவன்

    விளக்கம்: மதுரைச் சேர்ந்த இரந்து வாழும்  பிராமணன் விசுவனுக்கு அமைத்த கற்படுக்கை எனப் பொருள்.

    கல்வெட்டு 9:5> மேல் வரிசையில் நான்காம்  கற்படுக்கையில் வெட்டப்பட்ட கல்வெட்டு இது.

    அந்தை சேந்தன் அதன்

    விளக்கம்: இரந்து வாழும் பிராமணன் சேந்தன் அதனுக்கு  அமைத்துக் கொடுத்த கற்படுக்கை எனப் பொருள்.

    கல்வெட்டு 9:6> மேல் வரிசையில் உள்ள ஐந்தாம் படுக்கையில் வெட்டப்பட்ட  கல்வெட்டு இது.

    சந்தந்தை சந்தன்

    விளக்கம்: இரந்து வாழும் முனிவனுக்கு சந்தன் இப்படுக்கையை செய்தான் எனப்பொருள்.

    கல்வெட்டு 9:7> கீழ்வரிசை கற்படுக்கை ஒன்றை ஒட்டி வெட்டப்பட்ட கல்வெட்டு இது.

    பதின் ( ஊர்) அதை

    அதை – கல்

    விளக்கம்: பதின் ஊரார் செய்த கற்படுக்கை எனப் பொருள்.

    கல்வெட்டு 9:8> கீழ்வரிசைப் கற் படுக்கையில் பொறிக்கப்பட்டு உள்ளது.

    குவிர அ(ந்தை) சேய் அதன்

    விளக்கம்: குவிரந்தை என்னும் துறவிக்கு சேய் அதன் என்பவன் கற்படுக்கை செய்தளித்தான் என்று பொருள்.

    கல்வெட்டு 9:9> கீழ்வரிசைக் கற்படுக்கை ஒன்றன் தலைப் பகுதியில் வெட்டப்பட்ட  கல்வெட்டு இது.

    குவிரந்தை வேள் அதன்

    விளக்கம்: குவிரந்தை என்னும் துறவிக்கு வேள் அதன் செய்த படுக்கை எனப் பொருள்.

    கல்வெட்டு 9:10> கீழ்வரிசைப் படுக்கையில் உள்ளது.

    திடிஇல் அதன்

    விளக்கம்: திடியில் அதன் என்பானால் அமைக்கப்பட்ட கற் படுக்கை என்பது இதன் பொருள். இப்போது திடியன் என்ற பெயரில் இவ் ஊர் மேட்டுப்பட்டிக்கு தென்கிழக்கில் உசிலம்பட்டி வட்டத்தில் உள்ளது என்பர்.
    _____________________________

    கருங்காலக்குடி: மதுரை மேலூர் வட்டத்தில் மேலூர் – திருச்சி செல்லும் வழியில் உள்ள ஊர் இது. இந்த கிராமத்தில் பஞ்சபாண்டவர் குட்டு எனும் சிறு குன்று உள்ளது. இக்குன்றின் இயற்கையான குகைத் தளத்தில் பல படுக்கைகள் உள்ளன.

    கல்வெட்டு 10:1 > குகையின் முகப்புப் நெற்றிப்பாறை நீர்வடி  விளிம்பில் ஒரு கல்வெட்டு உளளது.

    எழைய் ஊர் அரிதின்  பளி

    விளக்கம்: எழையூரைச் சேர்ந்த நாட்டு எல்லையை கடந்து பொருளை மாற்றிடத்திற்கு கடத்த  உதவுபவன் அளித்த கற்படுக்கை எனப் பொருள். ளகர மெய் சேர்த்து பள்ளி எனப் படிக்க வேண்டும்.
    ____________________________

    முதலைக்குளம்: மதுரை உசிலம்பட்டி வட்டத்தில் மதுரைக்கு மேற்காக விக்கிரமங்கலம் அருகில் முதலைக்குளம் உள்ளது. விக்கிரமங்கலம் உண்டாங்கல்லு மலை இதன் அருகே உள்ளது.

    கல்வெட்டு 11:1> சின்ன உண்டாங்கல்லு மலையில் இராக்கிப்புடவு  என்ற குகையின் புருவத்தில் 164 செ.மீ. நீளத்தில் இக் கல்வெட்டு உள்ளது.

    வேம்பிற்ஊர் பேர் அய்அம் சேதவர்

    விளக்கம்: அயம் > சுனை, குளம் ஆகியவற்றை குறிக்கும் சொல். இந்தப் பெருங்குளம் வேம்பிற்றூராரால் வெட்டப்பட்டது என்பது இதன் பொருள். அவ்வூரில் 2 கி. மீ. சுற்றளவில் ஒரு பெருங்குளம் உள்ளது. சேதவர் என்பதை செய்தவர் எனக் கொள்ளலாம்.
    _____________________________

    அழகர்மலை: வைணவர் திருத்தலமான அழகர்கோவில் மதுரைக்கு வடக்கே 24 கி.மீ. தொலைவில் உள்ளது. அழகர் கோவிலை சுற்றி உள்ள கோட்டையின் முகப்பு வாயிலுக்கு வெளியே கிழக்கு நோக்கி மேலூர் போகும் சாலையில் மலைத் தொடரின் அடிவாரத்தில் சுந்தரராசன்பட்டி, கிடாரிப்பட்டி என்ற ஊர்கள் உள்ளன. அவற்றின் அருகில் மலைத்தொடர் குன்றின் சற்று உயரமான பகுதியில் இயற்கையான குகைத்தளமும் ஒரு சுனையும் உள்ளன. இக்குகைத் தளத்தில் செதுக்கிய கற்படுகை ஒன்றிலும் நெற்றிப் பகுதியில் வெட்டப்பட்டுள்ள நீர்வடி விளிம்பின் மேலும் கீழுமாக தமிழ் பிராமி கலவெட்டுகள் உள்ளன. இங்கு வணிகர்கள் கொடைகொடுத்த செய்தியே அதிகம் உள்ளது. சமண பொதுமக்களில் அதிகமானோர் வணிகரே என்பது கருதத்தக்கது. ஒரு இனம் தன் இனத்திற்கு ஆதரவாக இருப்பது தொன்றுதொட்ட உலக வழக்கு.

    கல்வெட்டு 12:1> குகைத்தள முகப்புப் பாறையின் நெற்றிப் பகுதியில் நீர்வடி விளிம்பின் கீழே இக் கல்வெட்டு உள்ளது.

    மதிரை பொன் கொல்வன் அதன் அதன்

    விளக்கம்: மதுரையைச் சேர்ந்த பொற்கொல்லன் அதன் அதன் இக்கொடை ஈந்தான் என்பது பொருள்.

    கலவெட்டு 12:2> முதற் கல்வெட்டின் அருகிலேயே உள்ளது. முன்னும் பின்னும் எழுத்துகள் சிதைவுற்றுள்ளன.

    – – – அ னாகன் த – – –

    விளக்கம்: நாகன் என்ற பெயர் மட்டும் தெளிவாக உள்ளது.

    கல்வெட்டு 12:3> இரண்டாம் கல்வெட்டை அடுத்து நெற்றிப் பாறையில் இக்கல்வெட்டு நீண்ட வரியாக வெட்டப்பட்டு உள்ளது.

    மத்திரைகே உபு வாணிகன் வியக்கன் கணதிகன்

    விளக்கம்: உபு என்பதில் ப் என்ற ஒற்றெழுத்தை சேர்க்கவேண்டும். மத்திரை என்பது மதுரையைக் குறித்தது, இதாவது மதுரையைச் சேர்ந்த வியக்கன் கணதிக்கன் என்ற உப்பு வணிகன் கற்படுக்கையை ஏற்படுத்தினான் என்பது இதன் பொருள்.

    கல்வெட்டு 12:4> மேல் உள்ள கல்வெட்டினைத் தொடர்ந்து அதே போல் நீண்ட வரியில் இக்கல்வெட்டு உள்ளது.

    கணக அதன் மகன் அதன் அதன்

    விளக்கம்: கணக அதன் மகன் அதன் அதன் இக் கற்படுக்கையை செய்தளித்தான் என்பது பொருள். இறுதியில் இவர் தந்த காசின் மதிப்பு பொறிக்கப்பட்டுள்ளது.

    கல்வெட்டு 12:5> முன் கல்வெட்டு உள்ள  நீண்ட வரியில் நான்காம் பகுதியாக இக் கல்வெட்டு உள்ளது.

    சபமிதா  இன பமித்தி

    விளக்கம்: தகர மெய் சேர்த்து சபமித்தா எனப் படிக்க வேண்டும். சபமித்தா இனத்தவள் பமித்தி, இதாவது ஒரே ஊர் அல்லது ஒரே நாட்டினள் எனக் கொள்ளலாம். இந்த இரு பெண் துறவாட்டிகளும் கற்படுக்கை அமைத்தனர் என்பது பொருள். பெயரை வைத்து இருவரும் சமணர் என்கின்றனர்.

    கல்வெட்டு 12:6> முன் உள்ள கல்வெட்டுகளின் நெடுவரிசையில் இக்கல்வெட்டு 5 ஆம் வரிசையில் உள்ளது.

    பாணித வாணிகன் நெடுமலன்

    பாணித – கை வைத்த சட்டை வணிகன்

    விளக்கம்: கைவைத்த சட்டை வணிகன் நெடுமல்லன் கற்படுக்கை செய்தளித்தான். மகர மெய் சேர்த்து நெடுமல்லன் என படிக்க வேண்டும்.

    கல்வெட்டு 12:7> இக்கல்வெட்டு 6 ஆவதாக  உள்ளது.

    கொழு வணிகன் எள சந்தன்

    விளக்கம்: ஏர்கலப்பையின் கூர் பகுதியான கொழுவை விற்கும் இள சந்தன் கற்படுக்கை செய்தளித்தான் என பொருள்படும். எள என்பது இள என்பதன் கொச்சைத் திரிபு.

    கல்வெட்டு 12:8> முகப்புப் புருவ நீர்வடி விளிம்பின் கீழ் ஏழாவதாக உள்ளது. கல்வட்டின் தொடக்கப் பகுதி சிதைந்துள்ளது.

    (ஞ்)சி கழு மாற நதன் தாரஅணிஇ கொடுபிதஅவன்

    கழு – கல்லினால் ஆன கூர் கருவி (spike). மரக்கட்டையில் நார் அல்லது கயிறால் பிணைத்து கோடாரியாக பயன்படுத்தப்படுவது தான் கழு. மாறன் – பொருளுக்கு பொருள் மாற்றும் வினையை செய்பவன் என்ற பொருளில் வணிகனைக் குறிக்கும்.

    விளக்கம்:  கழு வணிகன் நத்தன் மழைநீர் தடுப்பு வசதியை செய்துகொடுத்தான் என்பதே கல்வெட்டின் பொருள்.

    கலவெட்டு 12:9> இக்கல்வெட்டுகளின் நெடுவரிசையில் இறுதியது.

    தன்ம(ன்), கஸபன் அவ்(விரு) அ அர்உம் குடுபிதோ

    விளக்கம்: தர்மன், கஸபன் என அவ் இருவரும் கொடை அளித்தோர் எனப் பொருள்படும். இருவரும் என்பது தப்பும் தவறுமாகப்  பொறிக்கப்பட்டு உள்ளது.

    கல்வெட்டு 12:10> 12:3 கல்வெட்டின் கீழ் இக் கல்வெட்டு ப் பொறிப்பு உள்ளது.

    வெண்ப(ளி)இ அறுவை வணிகன் எளஅ அடன்

    அறுவை – ஆக்கப் பொருள், finished product

    விளக்கம்: வெண்பள்ளி என்ற ஊரின் ஆக்கப்பொருளை விற்கும் வணிகனான இளைய அட்டன் இக்கொடை அளித்தான் என்பது இதன் பொருள். இளய > இளைய என்பது எளஅ என பேச்சு வழக்கில் பொறிக்கப்பட்டுள்ளது. அடன் டகர மெய் சேர்த்து அட்டன் என்று படிக்க வேண்டும்.

    கல்வெட்டு 12:11>12:10 கல்வெட்டிற்கு அடுத்ததாக உள்ளது

    தியன் சந்தன்

    விளக்கம்: யகர மெய் இட்டு திய்யன் என படிக்கவேண்டும். திய்யன் என்பான் சந்தன் என்னும் துறவிக்கு இக்கொடையை நல்கினான் என்பதே  இதன் பொருள்.

    கல்வெட்டு 12:12 > குகைத் தளத்தின் உள்ளே ஒரு கற்படுகையின் தலைமாட்டில் இக் கல்வெட்டு வெட்டப்பட்டுள்ளது.

    கணிநாகன் கணிநதன் இருவர் அமகல்

    விளக்கம்: கணி நாகன், கணி நத்தன் என இருவர் சேர்ந்து ஏற்படுத்திய (அமைத்த) படுக்கைக் கல். நதன் நத்தன் என ஒற்றெழுத்து சேர்த்து படிக்கவேண்டும். கணி என்பது தியானத்தால் அடைந்த தகுநிலையை குறிக்கும் சிறப்பு பட்டம்.
    _____________________________

    சித்தன்னவாசல்: புதுக்கோட்டை  இலுப்பூர்  வட்டத்தில் புகழ்மிக்க பாண்டியர் கால ஓவியங்களைக் கொண்ட சித்தன்னவாசல் உள்ளது. இவ்வூர் மலையின் கிழக்குப்புறத்தில் மக்களால் ஏழடிபாட்டம் எனப்படும் குகைத்தளம் உள்ளது.

    கல்வெட்டு 13:1> அகலமான கற்படுக்கையின் பக்கவாட்டிலும், தலைப் பகுதியிலும் வெட்டப்பட்ட தமிழி கல்வெட்டு ஒன்று உள்ளது.

    எருமிநாடு குமுழ்ஊர் பிறந்த காவடிஈ தென்கு சிறுபோசில் இளயர் செய்த அதிட்அனம்

    விளக்கம்: எருமிநாட்டுக் குமிழுரில் பிறந்த பெண்துறவிக்கு தெற்கு சிறுபோசில் நாட்டைச்  சேர்ந்த  போர்ப்பயிற்சி பெறும் கன்னி வீரர் செய்து கொடுத்த இருப்பிடம் என்பது இதன் பொருள்.

    _____________________________

    ஐயர் மலை: கரூர் குளித்தலை வட்டத்தில் சத்திய மங்கலத்தில் ஐயர் மலை என்னும் ஊர் உள்ளது. இங்கத்து இரத்தினகிரீசுவரர் மலையில்  இயற்கையான குகைத்தளத்தில் கற்படுக்கையுடன் தமிழி கல்வெட்டு உள்ளது.

    கல்வெட்டு 14:1> பனைதுறை வெஸன் அதட் அனம்

    விளக்கம்: பனைத்துறை என்னும் ஊரினைச் சேர்ந்தவர் வெசனுக்கு  ஏற்படுத்தித் தந்த இருப்பிடம் என்பது இதன் பொருள். இதில் றை என்ற எழுத்து முதலில் வெட்டாது விடுபட்டு பின்பு இடைச் செருகலாக சிறிய அளவில் எழுதப்பட்டு  உள்ளது.

    _________________________

    திருமலை: சிவகங்கை வட்டம் திருமலையில் அமைந்து உள்ள குடைவரைக் கோயிலுக்கு மேல் பகுதியில் மலை மீது பழங்கால ஓவியங்களுடன் இரு தமிழி கல்வெட்டுகள் உள்ளன.

    கல்வெட்டு 15:1> மலை மீது வடபுறத்தில் மேலே அமைந்துள்ள குகைத்தளத்தின் முகப்புப் பாறையில் பொறிக்கப்பட்டு உள்ளது. முன் பகுதி எழுத்துகள் சிதைந்து உள்ளன.

    – – – – வ கரண்டை

    விளக்கம்: முனிவர் வாழிடம், குகைத்தளம் என்பது மட்டுமே உள்ளது. முன்னே இருந்த எழுத்துகள் சிதைந்து போயின.

    கல்வெட்டு 15:2> மலையின் மீது வடதிசை நோக்கிய பகுதியில் கீழப்புறம் அமைந்த சிறு குகைததளத்தின் நெற்றிப் பகுதியில் மிக மெல்லிதாக பொறிக்கப்பட்டு உள்ளது.

    எருகாடு ஊரு காவிதி கோன் கொறிய பளிய்

    விளக்கம்: எருகாட்டூரைச் சேர்ந்த பெண் துறவிக்கு அவ்வூர் ஆட்சியாளன் (கோன்) செய்து கொடுத்த கற்படுக்கை என்பது இதன் பொருள். கொறிய  என்பதில் ஒற்றெழுத்து சேர்த்து கொற்றிய எனப் படிக்கவேண்டும். பழங்காலத்தே ஒற்றோடு வரும் றகரம் டகரமாகவே பலுக்கப்பட்டது. அந்த வகையில் கொற்றிய என்பதை கொட்டிய என்று தான் பலுக்கவேண்டும். இதன் பொருள் கொடுத்த என்பது. இன்றும் தெலுங்கில் பற்று – பட்டு என்றும், நாற்று > நாட்டு என்றும் டகராமாகவே பலுக்கப்படுகிறது.
    _____________________________

    திருப்பரங்குன்றம்: மதுரை மாநகருக்குத் ஐந்து கிலோ மீட்டர் தெற்கில் உள்ளது இத் திருத்தலம். இக்குன்றின் மேற்கில் உயரமான இடத்தில் இயற்கையான குகைத்தளம் உள்ளது. இதில் உள்ள கற்படுக்கைகளில் தலைப் பகுதியிலும, பக்கவாட்டிலும் கல்வெட்டுகள் பொறிக்கப்பட்டு உள்ளன.

    கல்வெட்டு 16:1> வலம் இருந்து இடமாகவும் எழுத்துகள் தலைகீழாகவும் கற்படுக்கை ஒன்றன் தலைப்பகுதியில் இக் கல்வெட்டு பொறிக்கப்பட்டு உள்ளது.

    அந்துவன் கொடுபிதவன்

    விளக்கம்: இக் கற்படுக்கையை ஏற்படுத்திக் கொடுத்தவன் அந்துவன் என்பான் என்பது இதன் பொருள். மெய் சேர்த்து கொட்டுபித்தவன் எனப் படிக்க வேண்டும்.

    கல்வெட்டு 16:2> இரு கற்படுக்கைகளின்  பக்கவாட்டுப் பகுதியில் இரு பிரிவுகளாக இக்கல்வெட்டு பொறிக்கப்பட்டு உள்ளது.

    மாராயது கய(ம்)

    விளக்கம்: அரசர் ஏற்படுத்திக் கொடுத்த குளம் என்று பொருள்.

    கல்வெட்டு 16:3> வரிசையாய் அமைந்த கற்படுக்கைகளின் தலைப் பகுதிகளுக்குப் பின் புறம் உள்ள பாறையில் நீளமாக வெட்டப்பட்டு உள்ளது.

    எருகாடுர் இழகுடும்பிகன் போலாலயன் செய்தா ஆய்சயன் நெடுசாதன்

    இழ குடும்பிகன் – வறிய குழுத்தலைவன் , ஆய்சயன்  – கற்படுக்கை வடிக்கும் வினைஞன்

    விளக்கம்: கற்படுக்கை வடிக்கும் (ஆய்சயன்) நெடுசாத்தனைக் கொண்டு எருகாட்டூரைச் சேர்ந்த வறிய குழுத் தலைவன் போலாலயன் கற்படுக்கை செய்தான் என்பது இதன் பொருள்.

    கல்வெட்டு 16:4 > 2013ல் பிப்ரவரியில் புதிதாக உயர்த்தே உள்ள காசி விசுவநாதர் கோவில் அருகே உள்ள குளத்திற்கு செல்லும் படிகள் உள்ள தரையில் இருவரியில் தமிழி கல்வெட்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது .

    மூ நகர  / மூ சக்தி 

    விளக்கம்: பழைய நகரான மதுரையின் மூன்று ஆற்றலர்.
    _____________________________

    முத்துப்பட்டி: மதுரை தெற்கு வட்டத்தில் வடபழஞ்சி என்னும் ஊருக்கு அருகில் முத்துப்பட்டி உள்ளது. முத்துப்பட்டியில் பெருமாள் மலை எனவும் கரடிப்பட்டி மலை எனவும் அழைக்கப்படும் 220 மீட்டர் உயரமுள்ள மலையின் தென்பகுதியில் இயற்கையான குகைத்தளத்தில் மூன்று தமிழி கல்வெட்டுகள் உள்ளன. குகைத்தள மழைநீர்வடி முகப்பிலும், படுக்கையின் அருகிலும், சிறுகுகைத்தளத்தின் தனிக் கல்லிலுமாக இவை உள்ளன.

    கல்வெட்டு 17:1 > சிறுகுகைத்தளத்தின் சிறு பாறை ஒன்று வழவழப்பாக செதுக்கப்பட்டு உள்ளது. இச்சிறுபாறையின் உட்புறம் செதுக்கப்படாமல் மேடும்  பள்ளமுமாக  உள்ள பகுதியில் வலம் இடமாக தலைகீழாக இக்  கல்வெட்டு வெட்டப்பட்டு உள்ளது.

    நாகபேரூதைய் முசிறி கோடன் எளமகன்

    விளக்கம்: நாகபேரூதை ஊரைச் சேர்ந்த முசிறி கோடன் என்னும் போர்ப்பயிற்சி பெறும் கன்னிவீரன் கற்படுகை ஏற்படுத்தித் தந்தான் என்பது இதன் பொருள்.

    கல்வெட்டு 17:2> இடையன் தருமம் எனப்படும் பெரிய குகைத்தளத்தின் முகப்பு நெற்றியில் மூன்று பகுதிகளாக பொறிக்கப்பட்டு உள்ளது.

    சைய்அளன் விந்தைஊர் கவிய்

    கவி – கற்படுக்கை, flat stone.

    விளக்கம்: சைய்அள்ளன் என்பான்  விந்தையூரில் கற்படுக்கை அமைத்தான் என்பது இதன் பொருள். விந்தையூர் முத்துப்பட்டியின் பழம்பெயர் எனத் தெரிகின்றது.

    கல்வெட்டு 17:3> பெரிய குகைத்தளக் கற்படுக்கையில் பொறிக்கப்பட்டு உள்ளது. கல்வெட்டின் நடுவே சிதைந்து உள்ளது.

    திடிக் காத்தான் (ம)  _ _  னம் எய்_ _ 

    விளக்கம்: டகர மெய்  சேர்த்து திட்டி என படிக்க வேண்டும். திட்டி எனும் ஊரைச் சேர்ந்த  காத்தான் அமைத்துக் கொடுத்த கற்படுக்கை என்பது இதன் பொருள்.
    _____________________________

    ஜம்பை: விழுப்பரம் மாவட்ட திருக்கோவிலூருக்கு  அருகில் தென் பெண்ணை ஆற்றின் வடகரையில் இவ்வூர் அமைந்து உள்ளது. இங்கு உள்ள ஆளுருட்டி மலையில் மக்களால் தாசிமடம் எனப்பெறும் இரு இயற்கைக் குகைத் தளங்களில் ஒன்றன் உட்புறத்தில் பின்புறமாக நிற்கும் பாறையில் ஒரு கல்வெட்டு பொறிக்கப்பட்டு உள்ளது.

    கல்வெட்டு 18:1> ஸதியபுதோ அதியந் நெடுமாந்  அஞ்சி ஈத்த பளி

    விளக்கம்: அதியன் நெடுமான் அஞ்சி செய்து அளித்த கற்படுக்கை என்பது இதன் பொருள். அசோகன் கல்வெட்டில் குறிப்பிட்டுள்ள சதியபுதோ என்பதன் பொருட்  புதிரை இக் கல்வெட்டு தீர்த்து வைத்து உள்ளது. சதிய புத்திரன் என்பதன் பிராகிருத சிதைவு வடிவச் சொல் தான் சதியபுதோ என்பது. அசோகன் கல்வெட்டில் சதியபுதோ என்ற சொல் அதியமான்களைக் குறிக்கின்றது. அதிய என்பது சகர முன்னொட்டு பெற்று சதிய என்றாகி உள்ளது. மகன் > மான் என்பது புத்தோ என பிராகிருதத்தில் மொழி பெயர்க்கப்பட்டு உள்ளது. பளி யில் ளகர மெய் சேர்த்து பள்ளி எனப் படிக்க வேண்டும்.
    _____________________________

    ஆனைமலை: மதுரை வடக்கு வட்டத்தில் மதுரை மேலூர் சாலையில் இருந்து மூன்று கி.மீ. தொலைவில் உள்ள ஒத்தைக் கடை என்னும் ஊரில் இருந்து கிழக்காகச் சென்றால் நரசிங்கம் என்னும் ஊரை அடையலாம். அங்கு யானை போல் தோற்றமுடைய மலை ஒன்று உள்ளது. அதனால் அது ஆனைமலை எனப்படுகிறது. யானைத் தலையை ஒத்த மலைப் பகுதியின் மேற்பரப்பில் ஓர் இயற்கையான குகைத்தளம் உள்ளது.

    கல்வெட்டு 19:1> குகையின் நெற்றப்புறத்தில் மழைநீர் விளிம்பின் கீழ் இக்கல்வெட்டு பொறிக்கப்பட்டு உள்ளது. இரு வரிகளில் அமைந்த கல்வெட்டு இது.

    இவகுன்றது உறையுள் பா தந்தான் ஏரி ஆரிதன் / அத்துவாயி அரட்டகாயிபன்

    பா – கற்படுக்கை, flat stone;   ஏரி ஆரிதன் – ஏரியை அண்டி வாழ்பவன்.

    விளக்கம்: தகர மெய் சேர்த்து குன்றத்து என படிக்க வேண்டும். இக்குன்றில் அமைந்த தங்கிடத்தில் உள்ள கற்படுக்கையை ஏரியை அண்டி வாழ்பவன் அத்துவாயி, அரட்டகாயிபன் ஆகிய இரு துறவியர்க்குச் செய்தளித்தான் என்பது பொருள்.
    _____________________________

    புகளூர்: சேலத்தில் இருந்து கரூர் போகும் வழியில் 15 ஆவது கிலோ மீட்டரில் காவிரிக்கரையில் இவ்வூர் அமைந்து உள்ளது. வேலாயுதபாளையம் என இக்கால் அறியப்படுகின்ற பகுதியே இவ்வூர். இங்கு புகழியூர் முருகன் கோவில் அமைந்த ஆறுநாட்டார் மலை உச்சிக்கு சற்றே இறக்கமாக  வடக்கிலும் தெற்கிலும் இயற்கையான குகைத் தளங்கள் உள்ளன. வடதிசை குகைத் தளத்தில் உள்ள கற்படுக்கையிலும், தென்திசை குகைத்தள நெற்றி முகப்பிலும், சுவர்களிலும், அதன் கற்படுக்கைகளிலும் என 12 தமிழி கல்வெட்டுகள் காணப்பட்டு உள்ளன. பதிற்றுப்பத்தில் 7, 8, 9 ஆம் பத்துகளில் சிறப்பிக்கப்படும் சேர அரசர்கள் குறித்த பொறிப்புகள் இங்கு இடம் பெற்று உள்ளன.

    கல்வெட்டு 20:1> தென்திசையில் அமைந்த குகைத்தள நெற்றி முகப்பில் வெட்டப்பட்ட இரு கல்வெட்டுகளில் இரண்டாவதாக உள்ளது.  கீழிலிருந்து மேலாக முதல் கல்வெட்டு எழுத்துகள் தேய்ந்து காணப்படுகின்றன. ஒரே வரிசையாய் அல்லாமல் இடச் சுருக்கம் கருதி நான்கு வரிகளில் பொறிக்கப்பட்டு உள்ளது.

    முதா அமண்ணன் யாற்றூர் செங்காயபன் உறைய் / கோ ஆதன்  செல்லிரும் பொறை மகன் / பெருங்கடுங்கோன் மகன்   ளங் கடுங்கோ  / ளங்கோ ஆக அறுத்த கல்

    விளக்கம்: சேர வேந்தன் ஆதன் செல்லிரும் பொறையின் மகன் பெருங்கடுக்கோனின் மகன், இதாவது, வேந்தனின் பேரன் இளங் கடுங்கோ இளவரசனாகப் பட்டம் ஏற்றபோது அதற்காக யாற்றுரைச் சேர்ந்த  மூத்த சமணத் துறவி செங்காயபனுக்கு அமைத்த உறைவிடத்தில் அமைத்துக் கொடுத்த கற்படுக்கை எனப் பொருள்படும். இக்கல்வெட்டில் இள என்பதில் இகரம் எழுதாமல் விடப்பட்டுள்ளது.

    கல்வெட்டு 20:2 > முதற் கல்வெட்டிற்கு மேலாக பொறிக்கப்பட்டு உள்ளது. எழுத்துகள் தேய்ந்தும் இரண்டாம் வரியில் பாறை சிதைத்ததால் எழுத்துகள் பெயர்ந்து போயும் உள்ளன. நான்கு வரியில் பொறிக்கப்பட்டு உள்ளது.

    மூதாமண்ணன் யாற்று செங்காயபன் உறைய் /   கோ ஆ- – – ல்லிரும்புறை மகன் பெருங் / கடுங்கோன் மகன்  கடுங்கோன் ளங்கடுங் / கோ ளங்கோ ஆக அறுபித கல் 

    விளக்கம்: முதற் கல்வெட்டுச் செய்தியே இதிலும் எழுதப்பட்டு உள்ளது. முதற் கல்வெட்டில் முதா என்பது இக்கல்வெட்டில் மூதா என உள்ளதால் மூத்த என பொருள் கொள்ள வேண்டும். யாற்றூரில் ஊர் என்ற சொல் இக் கல்வெட்டில் குறிப்பிடப்படவில்லை. முதற் கல்வெட்டில் போல் இகரம் எழுதப்படவில்லை எனினும் இக்கல்வெட்டில் கடுங்கோன் இளங்கடுங்கோ என “கடுங்கோன்” என்ற சொல் கூடுதலாக சேர்க்கப்பட்டு உள்ளது. இது முதற் கல்வெட்டில் இல்லை. அறுபித என்பதில் தகர மெய்யை சேர்த்து அறுப்பித்த என்று படிக்க வேண்டும். பொறை இக்கல்வெட்டில் புறை எனப் பொறிக்கப்பட்டு உள்ளது.

    கல்வெட்டு 20:3> குகைத்தள கற்படுக்கை ஒன்றில் பொறிக்கப்பட்டு உள்ளது.  மூன்று வரிகளில் மிகத் தேய்ந்த நிலையில் உள்ளது.

    யாற்றூர் செங்காயபன் / தாவன் ஊர்ப் பின்அன் குற்றன் / ன் அறுபித்த அதிட்டானம்.

    விளக்கம்: சமணத்துறவி யாற்றூர் செங்காயபனுக்கு தாவனூரைச் சேர்ந்த பின்னன் கூற்றன் செதுக்கி அளித்த இருக்கை என்பது கல்வெட்டின் பொருள்.

    கல்வெட்டு 20:4 >  குகைத்தளத்தில் வலப்புறம் அமைந்து உள்ள கற்படுக்கையில் சிதைந்த நிலையில் இறுதிச் சொல் மட்டும் காண்பதற்குத் தெளிவாக உள்ளது.

    – – – – – அதி ட்டான்னம்

    விளக்கம்: இருக்கையைக் குறிக்கும் அதிட்டானம் என்ற சொல் கூடுதலாக ஒரு னகர மெய்யை ஒற்றாகப் பெற்று உள்ளது. முன்னே இருந்த எழுத்துகள் சிதைந்து விட்டன.

    கல்வெட்டு 20:5 > தென்திசையை நோக்கி உள்ள குகைத்தளத்தின் கிழக்கே சிறு குகை ஒன்று அமைந்து உள்ளது. அதன் செதுக்கிச் சீர்படுத்தாத  தரையில் இரு வரிகளில் இக் கல்வெட்டு  வெட்டப்பட்டு உள்ளது.

    நலி (ய்) ஊர் ஆ பிடன் குறும்மகள் / கீரன் கொறி செயிபித பளி

    ஆ – அவ்விடத்து என்னும் இடச்சுட்டு, சேர்ந்த; பள்ளி – படுக்கை; பிட்டன் – கருத்தவன்.

    விளக்கம்: நல்லியூரைச் சேர்ந்த பிட்டன் உடைய இளைய மகள் கீரன் கொற்றி என்பாள் செய்வித்து அளித்த கற்படுக்கை என்பது இதன் பொருள். நலி யில் லகர மெய்யும், பிடனில் டகர மெய்யும், கொறியில் றகர மெய்யும், செய்பித என்பதில் தகர மெய்யும், பளி இல் ளகர மெய்யும் சேர்க்க வேண்டும்.

    கல்வெட்டு 20:6 > மேற்சொன்ன குகையில் உள்ள கற்படுக்கையின் மேல் இக்கல்வெட்டு ஒரு வரியில் பொறிக்கப்பட்டு உள்ளது.

    நல்லி(ய்) ஊர் ஆ பிடந்தை மகள் கீரன் கொற்றி அதிடானம் 

    பிட்டந்தை – கருத்த அந்தணத் துறவி; அதிஷ்டானம் – location, நிலைத்தளம்.

    விளக்கம்: முன்னைக் கல்வெட்டுச் செய்தியே சில  மாற்றுச் சொல் கொண்டு இதில் பொறிக்கப்பட்டு உள்ளது. நல்லியூரைச் சேர்ந்த கருத்த பிராமணத் துறவியின் மகள் கீரன் கொற்றி என்பாள் செய்வித்த இருப்பிடம் எனப் பொருள்படும். வாழ்வின் முற்பகுதியில் இல்லறத்தை கடைபிடித்த பிட்டன் பிற்பகுதியில் துறவு மேற்கொண்டதனால் அவருக்கு அவரது மகள் இருப்பிடம் அமைத்துக் கொடுத்தாள் என்பது நால்வர்க்க வாழ்க்கை முறைக்கு ஒரு சான்றாகிறது.

    கல்வெட்டு 20:7 > தென்திசையை நோக்கியபடி உள்ள பகுதயின் மேற்புறம் உள்ள குகையின் முதல் படுக்கையில் இரு வரியில் பொறிக்கப்பட்டு உள்ளது.

    கொற்றந்தை ளஎன்  / முன்று

    கொற்றம் – அச்சமற்ற,  அந்தை – பிச்சையெடுத்து வாழும் அந்தணன்; இளையன் – போர்ப்பயிற்சி பெறும் கன்னி வீரன்; முன்று – குகை.

    விளக்கம்: அச்சமற்ற பிராமணத் துறவிக்கு கன்னி வீரன் ஏற்படுத்திய குகை என்பது இதன் பொருள். இளையன் ளஎன்  என பேச்சு வழக்கில் பொறிக்கப்பட்டு உள்ளது. கொற்ற என்ற முன்னொட்டு இங்கு துறவிகளின் பெயரில் பின்னொட்டாக ஆனந்தா, சரசுவதி, பாதர் வருவது போல உள்ளதால் கொற்ற என்பது தனிப்பிரிவு துறவு கூட்டத்தாரை குறிப்பதாகலாம்.

    கல்வெட்டு 20:8 > மேற்சொன்ன குகையின் மற்றொரு கற்படுக்கையில் பொறிக்கப்பட்டு உள்ளது. இறுதிச் சொல் தவிர ஏனைய சிதைந்து  உள்ளன.

      _  _  _ அதிட்டானம்

    விளக்கம்: இருப்பிடம் என்பது மட்டுமே தெளிவாக உள்ளது. முன்னே இருந்த சொற்கள் சிதைந்து விட்டன.

    கல்வெட்டு 20:9 > மேற்சொன்ன குகையின்  மூன்றாம் படுக்கையில் இரு வரிகளில் வெட்டப்பட்டு உள்ளது.

    கருஊர் பொன் வாணிகன் /   நத்தி அதிட்டானம்

    விளக்கம்: கரூர் வாழ் பொன் வணிகன் நத்தி என்பான் ஏற்படுத்திய இருப்பிடம் என்பது இதன் பொருள்.

    கல்வெட்டு 20:10 > மேற்சொன்ன குகையின் நான்காம் படுக்கையில் இரு வரிகளில் வெட்டப் பட்டு உள்ளது.

    எண்ணை வாண்ணிக  /  ன் வெநி ஆதன் அதிட்டானம்

    விளக்கம்: எண்ணெய் வணிகன் வெந்நி/வென்னி ஆதன் என்பான் ஏற்படுத்திய இருப்பிடம் என்பது இதன் பொருள். வாணிகனில் ணகர மெய் தேவை இன்றி பொறிக்கப்பட்டு உள்ளது. வெநியில் னகர மெய் சேர்த்து வென்னி என படிக்க வேண்டும்.

    கல்வெட்டு 20:11 > மேற்சொன்ன குகையின் ஐந்தாம் படுக்கையில் ஐந்து வரிகளில் பொறிக்கப்பட்டு வலப்பக்க எழுத்துகள் சிதைந்து போய் உள்ள கல்வெட்டு இது.

     – — – -வ / பெ – – –   / கன் – — – /  மக – – – –  /  ளவா –  –  –

    பொருள் அறியமுடியாத படி கல்வெட்டு சிதைந்து உள்ளது.

    கல்வெட்டு 20:12 > ஆறுநாட்டார் மலையின் வடதிசையில் சூளாமணி எனப்படும் குகையில் இக்கல்வெட்டு உள்ளது.

    ணாகன் மகன் பெருங்கீரன்

    விளக்கம்: நாகன் என்பான் மகன் பெருங்கீரன் ஏற்படுத்தியது என்பது இதன் பொருள்.
    _____________________________

    மாமண்டூர்: இவ்வூர் காஞ்சிபுரத்தில் இருந்து 12 கிலோ மீட்டர் தொலைவில் வந்தவாசி செல்லும் சாலையில் திருவண்ணாமலை மாவட்டத்தின் செய்யாறு வட்டத்தில் தூசி என்ற ஊர் அருகே உள்ளதால் தூசி மாமண்டூர் எனப் பொதுவாக அழைக்கின்றனர்.

    கல்வெட்டு 21:1> இங்குள்ள மலையில் அமைந்துள்ள பல்லவர் குடவரைக் கோயில்களுக்கு வடதிசையில் உள்ள சிறிய குன்றின் இயற்கையான குகைத்தளத்தின் முகப்பில் பந்தல் அமைக்க கொம்புகளைச் செருகுவதற்காக அகழப்பட்ட இரு துளைகளுக்குக் கீழே இக்கல்வெட்டு நான்கு வரிகளில் பொறிக்கப்பட்டு உள்ளது.

    கணி மான்  / தேனூர் தந்த கோன் குன்று ஆசி / செயிதான். தசன் சிறு /  – – – – வன்.

    முன் – first born child, தலைச்சன் பிள்ளை; ஆசி – ஆசீர்வதி, வரமளி.

    விளக்கம்: கணிமான் என படித்தது தவறு. அதில் ‘மா’ என்ற பிராமி எழுத்தே இல்லை மாறாக பேரா இரா. மதிவாணன் வாசிப்புப்படி ‘மு’ என்ற சிந்து எழுத்து தான் உள்ளது. எனவே அதை முன் என்றே படிக்க வேண்டும். பெயர் குறிப்பிடப்படாத  தியானத்தினால் கணி என்ற பட்டம் பெற்ற பிராமணத் தவ முனிவரின் முதல் மகன் தேனூரைக் கொடையாகத்  தந்த ஆட்சியாளனுக்கு இக்குன்றில் ஆசியை (வரத்தை) தந்தான். தச்சன் சிறு – – – – வன் என்பவன் இதைக் கல்லில் வடித்தான். சகர மெய் சேர்த்து தச்சன் என படிக்க வேண்டும். கணி என்னும் பட்டத்தை எய்திய பிராமணத் துறவி தம் வாழ்வின் முற்பகுதியில் இல்லறத்தவராக இருந்து வாழ்வின் பிற்பகுதியில் பிச்சை எடுக்கும் துறவி ஆனார் என்று தெரிகின்றது. இது நால்வர்க்க வாழ்க்கை முறைக்கு ஒரு சான்று.
    _____________________________

    குன்னக்குடி: புகழ்மிக்க முருகன் கோவில் அமைந்துள்ள இவ் ஊர் காரைக்குடி திருப்பத்தூர் சாலையில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ளது. இக்குன்றின் மேல் அமைந்துள்ள ஞானியார் மடம் என்ற குகையின் நீர்வடி விளிம்பில் இரு தமிழி கல்வெட்டுகள் பொறிக்கப்பட்டு உள்ளன.

    கல்வெட்டு 22:1 > தலைமாறாகவும் கீழ் மேலாகவும் மாற்றி எழுதப்பட்டு உள்ளன.

    காபிஊர் ஆதன் சாத்தன்

    விளக்கம்: காப்பியூர் வாழ் ஆதன் சாத்தன் என்பான் கற்படுக்கை ஏற்படுத்தித் தந்தான் என்பது கல்வெட்டின் பொருள்.  பகர மெய் சேர்த்து காப்பி எனப் படிக்க வேண்டும்.

    கல்வெட்டு 22:2 > இக்கல்வெட்டும் தலைமாறாகவும், கீழ் மேலாகவும் நீர்வடி விளிம்பின் மறுபுறம் பொறிக்கப்பட்டு உள்ளது. முதல் மூன்று எழுத்துகள் தெரிகின்றன ஏனைய கட்டடக் கட்டுமானத்தில் மறைந்து உள்ளன. முன் கல்வெட்டுச் செய்தியுடன் தொடர்புடையதாகக் கருதப்படுகின்றது.

    ஊறு து

    விளக்கம்: றகர மெய் சேர்த்து ஊற்று என்று படிக்கவேண்டும்.  நீர் ஊற்றை காப்பி ஊர் ஆதன் சாத்தன்  ஏற்படுத்திய செய்தியைக் குறிப்பதாகலாம் என அறிஞர் கருதுகின்றனர். ஏனெனில் குகைக்குப் போகும் வழியில் சதுரவடிவில் ஒரு சுனை வெட்டப்பட்டு அதில் இன்றளவும் நீர்த் தேங்கி பயன்பட்டுக் கொண்டு உள்ளது.
    _____________________________

    தொண்டூர்: விழுப்புரம் மாவட்டத்தில் செஞ்சிக்கு 22 கிலோ மீட்டர் வடகிழக்கே இவ்வூர் அமைந்துள்ளது. இந்த ஊருக்குத் தெற்கே உள்ள குன்றில் பஞ்சனார்படி என்ற இயற்கையான குகைத்தளத்தில் தமிழி கல்வெட்டு ஒன்று உள்ளது.

    கல்வெட்டு 23:1> குகையின் வெளியே உள்ள தரையில் இரு வரிகளில் பொறிக்கப்பட்டு உள்ளது இக்கல்வெட்டு.

    (இ)ளங் காயிபன் ஏவ அகழ்ஊரறம் / மோசி செயித அதிடானம்

    அறம் – தீர்ப்பாளர், judge

    விளக்கம்: இளங்காயிபன் என்ற துறவியின் சொற்படி அகழுரைச் சேர்ந்த  தீர்ப்பாளர் மோசி என்பவர் இந்த இருப்பிடம் செய்தார் என்பது இக்  கல்வெட்டின் செய்தி.
    _____________________________

    குடுமியான்மலை: புகழ்மிக்க இசைக் கல்வெட்டும், குடைவரைக் கோவிலும் கொண்ட இவ்வூர் புதுக்கோட்டையில் இருந்து 16 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இம்மலையின் தென்மேற்குப் பகுதியில் பாறைச் சரிவில் உள்ள குகைத்தளத்தில் இக் கல்வெட்டு காணப்படுகின்றது.
    கல்வெட்டு 24:1 > குகையில் அமைந்த கற்படுக்கையில் வெட்டப்பட்ட இக்கல்வெட்டு எழுத்துகள் தெளிவின்றி உள்ளன.

    நாழள் கொற்றந்தய் ப(ளி)ய்

    விளக்கம்: நாழள் எனும் ஊரின் அச்சமற்ற அந்தணனுக்கு  (கொற்றந்தை) ஏற்படுத்திய கற்படுக்கை என்பது இதன் பொருள்.  துறவிகளின் பெயரில் பின்னொட்டாக ஆனந்தா, சரசுவதி, பாதர் வருவது போல கொற்ற என்ற முன்னொட்டு இங்கு தனிப்பிரிவு துறவு கூட்டத்தாரை குறிப்பதாகலாம்
    _____________________________

    திருச்சிராப்பள்ளி: திருச்சி மலைக்கோட்டை மலையின் மேற்கு திசையில் உள்ள இயற்கையான குகைத்தளத்தில் ஒரு  தமிழி கல்வெட்டு அறியப்பட்டது.

     –  – –  பன் கே 

    விளக்கம்: இம் மூன்று எழுத்துகள் மட்டும் படிக்கக் கிடைக்கின்றன.
    _____________________________

    எடக்கல்: கேரளத்தின் வயநாடு மாவட்டத்தில் கணபதி வட்டம் என்ற ஊருக்கு தென்மேற்கில் 6 கிலோ மீட்டர் தொலைவில் எடக்கல் மலை உள்ளது. இம்மலையின் உச்சியில் மேற்கு திசைச்சரிவில் இயற்கையான குகைத்தளம் உள்ளது. அங்கு ஐந்து தமிழி கல்வெட்டுகள் உள்ளன.

    கல்வெட்டு 26:1> குகையில் வடக்கு சுவர் மேல் பொறிக்கப்பட்டு உள்ளது.

    ஒபனப விரஅ

    விளக்கம்: ஒப்பனப்ப வீரன் என்ற ஆள் பெயர் பொறிக்கப்பட்டு உள்ளது. பகர மெய் சேர்த்து ஒப்பனப்ப என்றும் விர என்பதை நெடிலாக்கி வீர என்றும் படிக்கவேண்டும்.

    கல்வெட்டு 26:2> அதே வடதிசைச் சுவரில்  பொறிக்கப்பட்ட மற்றொரு கல்வெட்டு.

    கடும்மி புத சேர கோ

    விளக்கம்: கடு உம்மி  பூத  சேர கோ என்பது ஒரு சேர மன்னனது பெயர். புத என்பதை மகன் என்னும் பிராகிருத சொல்லொடு பொருத்துவர் அறிஞர். எனினும் அதை நெடிலாக்கி பூத எனப்படிப்பதே சரி. கோ என்ற சொல் பிந்து  கால சிந்து  எழுத்தில் எழுதப்பட்டு உள்ளது. அதை பேரா. இரா. மதிவாணன் கோ  என படித்து உள்ளார்.

    கல்வெட்டு 26:3> அதே வடதிசைச் சுவரில் மூன்றாவதாகப் பொறிக்கப்பட்டு உள்ளது. பழைய மைப்படி கொண்டு படிக்கப்பட்டு உள்ளது.

    கோ பூதி விர

    விளக்கம்: அரசனான பூதி வீரன் என்று பொருள். பூதன் என்ற பெயர் இகர ஈறு பெற்று பூதி ஆகி உள்ளது. எனினும் இதை பிராகிருதச் சொல்லாகக் கொள்கின்றனர்.

    கல்வெட்டு 26:4> கோ(வா)தான்

    விளக்கம்: ஆதன் எனும் பெயர் கொண்ட அரசன் என்பது இதன் பொருள்.

    கல்வெட்டு 26:5> 2012 ல் அம்புக்குத்தி மலையில் உள்ள எடக்கல் குகையில் ஐந்தாவதாக புதியதாக இப் பிராமி கல்வெட்டு கண்டறியப்பட்டது.

    சிவஸ்வாமி 

    விளக்கம்: சிவஸ்வாமி என்ற பெயர் மட்டுமே பொறிக்கப்பட்டுள்ளது. இக்கல்வெட்டை  கண்டறிந்த இராகவ வாரியார் “ஸ்ரீ வழுமி” என்று படித்தார்.  ஐராவதம் மகாதேவன் இதை “ஈ பழம” இதாவது இந்தப் பழமையான என்று பொருள்படப் படித்தார். அதன் பயனாய் மலையாளம் செம்மொழி என அறிவிக்கப்பட்டது. இதை தொல்லியல் அறிஞர் இரா. நாகசாமி தான் “சிவஸ்வாமி” என்று சரியாகப் படித்தார்.
    _____________________________

    நெகனூர்ப்பட்டி:  வடதமிழ்நாட்டில் செஞ்சி  வட்டத்தில் நெகனூர்பட்டி உள்ளது.  இங்கு அடுக்கன் கல் என்ற இயற்கைக் குகைத்தளம் உண்டு. இதன் வெளிப்புறத்தில் தென்திசை நோக்கிய பாறையில்  தமிழி கல்வெட்டு ஒன்று உள்ளது.

    கல்வெட்டு 27:1> சுற்றிலும் சதுரக்கட்டம் வெட்டப்பட்டு நான்கு வரிகளில் அமைந்து உள்ளது. எல்லா மெய் எழுத்துகளும் புள்ளி பெற்று உள்ளன.

    பெரும் பொகழ்  / சேக்கந்தி தாயியரு  / சேக்கந்தண்ணி செ  / யி வித்த பள்ளி 

    சேக்கு – கன்னக் குடுமி, காதுக்கு மேற் பக்கமாக முடிக்கும் குடுமியை ‘கன்னக் குடுமி‘ என்பார் ஈழத்தார்; அந்தணி – பிச்சையெடுத்து வாழும் கிழத் துறவாட்டி, அந்தணன் என்பதன் பெண் பால்; சேக்கு + அந்தி – இளையவள், அக்காள்.

    விளக்கம்: பெரும் புகழ் எய்திய கன்னக் குடுமி அக்காளின் தாயார் கன்னக் குடுமி பிராமணத் துறவிக்கு செய்வித்த கற்படுக்கை என்பது இதன் பொருள். இவர்கள் குறி சொல்லி இப்படி பெரும் புகழ் பெற்றிருக்கலாம்.
    _____________________________

    அம்மன்கோவில்பட்டி:  சேலம் ஓமலூர் வட்டத்தில் தாரமங்கலம் ஓமலூர் வழியல் அமைந்த பெரியேரிப்பட்டி எனும் ஊரின் ஒரு பகுதியாக அம்மன் கோவில்பட்டி திகழ்கிறது. இந்த ஊரில் ஓடும் உப்பாற்றின் வட கரையில் அமைந்த பெருமாள் கோயில் பாறையின்  “தேப்பாலி” என்ற சுனையின் அருகில் ஒரு தமிழி கல்வெட்டு உள்ளது.

    கல்வெட்டு 28:1> நீரோட்டத்தால் தேய்ந்து உள்ள இக்கல்வெட்டு இரு வரிகளில் வெட்டப் பட்டு உள்ளது.

    பரம்பன்  கோகூர் கிழார் மகன் வியக்கன் /  கோபன் கணதேவன் தொட சுனை 

    பரம்பன் – பரம்பு நாட்டவன்; தொட்ட – தோண்டிய, சுனை – ஆழமான குளம்.

    விளக்கம்: பரம்பு நாட்டின் கோகூர் கிழவருடைய மகன்கள் வியக்கன், கோபன், கண்ணதேவன் ஆகியோர் தோண்டிய சுனை இது என்பது இதன் பொருள். ணகர மெய் சேர்த்து கண்ணதேவன் என்றும், டகர மெய் சேர்த்து தொட்ட எனவும் படிக்க வேண்டும்.
    _____________________________

    அரச்சலூர்:  காங்கேயம் ஈரோடு   வழித்தடத்தில்  அரச்சலுர் உள்ளது. இந்த ஊருக்கு அண்மையில் உள்ள நாகமலையில் ஆண்டிப் பாறை எனப்படும் இடத்தில் இயற்கையான குகையும் அதில் கற்படுக்கைகளும் உள்ளன.

    கல்வெட்டு 29:1> கற்படுக்கைகளுக்கு இடையே இருவரிகளில் சில எழுத்துகள் உடைந்த நிலையில் இக் கல்வெட்டு உள்ளது.

    எழுத்தும் புணருத்தான் மலைய் வண்ணக்கன் / தேவன் சாத்தன்   

    வண்ணக்கன் – கல்லை உருவமாக வடிப்பவன், சிற்பி; புணருத்தான் – எழுதினான்.

    விளக்கம்: மலையில் வாழும் கல்வடிக்கும் சிற்பி தேவன் சாத்தன் என்பவன் கற்படுக்கைகளை வடித்ததோடு அல்லாமல் இக்கல்வெட்டுச்  செய்தியையும் எழுதினான்  என்பது இதன் பொருள். பண்டு திரிகை, அம்மி, குழவி, உரல், ஆட்டுக்கல் வடிப்பவரே கற்படுக்கைகளையும்  கல்வெட்டுகளையும் வடித்தது ஒன்றும் வியப்பில்லை. கல்லில் உருவம் வடிக்கும் முன் அதை ஓவியமாய் வரைவதை வைத்து இச்சொல் சிற்பிக்கு உண்டாகியிருக்கலாம்.

    கல்வெடடு 29:2> முன்  உள்ள  கல்வெட்டிற்கு இடப்புறமாக ஐந்து  வரிகளில் வெட்டப்பட்டு உள்ளது.

    த தை தா தை த / தை தா தே தா  தை  /  தா தே தை தே தா  / தை  தா தே தா  தை  / த தை தா தை த

    விளக்கம்: மேலிருந்து கீழாக அல்லது இடமிருந்து வலமாகப் படிக்க ஒருவகை இசை ஒலிகளை உணர்த்துகின்றது.

    கல்வெட்டு 29:3 > முதல் கல்வெட்டின் வலப்புறம் வெட்டப்பட்டு உள்ளது. பல எழுத்துகள் சிதைந்து போனதால் இரண்டாம் கல்வெட்டின் அடிப்படையில் ஊகமாக படித்து உள்ளனர்.
    கை த தை த கை  / த (கை)  (த) (கை) (த) / தை த கை த (தை)  / த  கை (த) (கை) (த)  / (கை) (த) (கை) த (கை)
    விளக்கம்: இரண்டாம் கல்வெட்டு போலவே அமைக்கப்பட்டு உள்ளது.
    _____________________________

    மன்னார் கோவில்:  திருநெல்வேலி அம்பாசமுத்திரத்தில் இருந்து 6 கிலோ மீட்டர் வடமேற்காக ஐய்யனார்குளம் அமைந்து  உள்ளது. இவ்வூர் பொதிகை மலையின் பின்புலத்தில் உள்ள பல குன்றுகளில் இராசாப் பாறை, நிலப்பாறை ஆகிய குன்றுகளில் இரு தமிழி  கல்வெட்டுகள் உள்ளன.

    கல்வெட்டு 30:1> இராசப் பாறைக் குகையில் நீர்வடி விளிம்பும் இரு கற்படுகைகளும் உள்ளன. இங்கு இக்கல்வெட்டு உட்கூரையில் மூன்று வரிகளில் பொறிக்கப்பட்டு உள்ளது.

    பள்ளி செய்வித்தான்  / கடிகை (கோ) வின் மகன்  / பெருங்கூற்றன்

    விளக்கம்: கோ ஊகித்துக் கொள்ளப்பட்ட எழுத்து. கடிகைக் கோவிற்கு மகனான பெருங்கூற்றன் என்பான் இந்த கற்படுக்கையை செய்வித்தான் என்பது இதன் பொருள்.

    கல்வெட்டு.30:2> நிலாப் பாறையின் திறந்த வெளிப் பகுதியில்  வெட்டப்பட்ட கற்படுக்கையின் தலைப்பாகத்தில் இரு வரிகளில்  இக்கல்வெட்டு பொறிக்கப்பட்டு உள்ளது.

    குணாவின் ளங்கோ  / செய்பித பளிஇ

    விளக்கம்: குணா என்னும் ஊரின் இளங்கோ (இளவரசன்) செய்வித்த கற்படுக்கை என்பது இதன் பொருள். பெயரில் முதல் எழுத்தான உயிர் எழுத்து இகரம் எழுதப்படவில்லை ஆதலின் இகரம் இட்டு இளங்கோ எனப் படிக்க வேண்டும். தகர மெய் சேர்த்து செய்பித்த எனப்  படிக்க வேணடும்.
    _____________________________

    சமணர்மலை: மதுரை அருகே முத்துப்பட்டி, கொங்கர்புளியன்குளம் மலைகளை ஒட்டி அமைந்த கீழ்க்குயில்குடி சமணர்மலையில் ஒரு கல்வெட்டு 2012 ல் கண்டறியப்பட்டது

    கல்வெட்டு: பாறையின் நீர்வடி விளிம்பின் கீழ் இக்கல்வெட்டு வெட்டப்பட்டுள்ளது

    பெருதேரூர் குழித்தை அய்அம் 

    விளக்கம்: பெருந்தேரூரில் வாழும் குழுவினர் குளம் ஏற்படுத்தினர் என்பது இதன் பொருள். குழித்தை என்றால் குழு, team.
    _____________________________

    கரதுக்கம்: கேரளம் காசர்கோடு மாவட்டம் கரதுக்கத்தில் அரசு கட்டுப்பாட்டில் உள்ள காட்டுப் பகுதியில் கால்வாய் அருகே உள்ள செம்புரை மண் (laterite) தரையில் 14 எழுத்தில் இக்கல்வெட்டு பொறிக்கப்பட்டிருந்தது. இது மார்ச்சு 2014 ல் கண்டறியப்பட்டது.

    கல்வெட்டு: கழ கோற பட்டன் மகன் சரும

    கழல் – கால்; கோறர்  – கள்ளர்குடி பட்டப் பெயர்; கழ கோற – கள்ளர் காலாட்படை; பட்டன் – படைத் தலைவன், commander; மகன் – கீழ்ப்படிந்த படைவீரன், low rank subordinate warrior

    விளக்கம்: கள்ளர் காலாட்படைத் தலைவனின் படையாள் “சரும” என்பவன் குறிக்கப்படுகிறான். மலையாளம் செம்மொழி தகுதி பெறவேண்டும் என்பதற்காக பொய்யாக இக்கல்வெட்டை திராவிட பிராமி, தென் பிராமி ஆகிய பெயர்களால் சுட்டினாலும் இக்கல்வெட்டில் வட்டெழுத்தின் தொடக்க கால எழுத்துகள் இடம்பெறுவதால் இதை கி.பி. 6 ஆம் நூற்றாண்டினது எனக் கொள்ளலாம்.  இது கள்ளர் சார்த்த கல்வெட்டு.
    _____________________________

    நெற்றம்பாக்கம்: மதுராந்தகம் நெற்றம்பாக்கத்தில் உள்ள  நந்தீசுவரர் கோவிலில் மறுசீரமைப்பின் போது லிங்கத்தின் சதுரவடிவ ஆவுடையில் பிராமி கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டது.

    கல்வெட்டு: சே நருமான் 

    விளக்கம்: ஆட்சியாளன் “நருமான்” என்ற பெயர் பொறிக்கப்பட்டுள்ளது. சே என்றால் தலைவன்.
    _____________________________

    கிண்ணிமங்கலம்: மதுரையில் இருந்து 20 கி.மீ தொலைவில்  மதுரை – தேனி சாலையில் மதுரை காமராசர் பல்கலைக்கழகம் எதிரில் கிண்ணிமங்கலம் என்னும் கிராமம் உள்ளது. இங்குள்ள ஏகநாதன் மடத்தில் புதையுண்ட சிதைந்த ஏகமுக லிங்கத்தில் இருவரியில் பிராமி கல்வெட்டு ஒன்று கண்டறியப்பட்டது.

    கல்வெட்டு: ஏகன் ஆதன் / கோட்டம் .   

    விளக்கம்: ஏகன் என்ற தலைவனுடைய மதில் கொண்ட கோவில் என்பது பொருள். இது பள்ளிப்படை கோவில் என்று பிற்கால வட்டெழுத்துக்  கல்வெட்டு ஒன்று குறிப்பிடுகிறது.
    _____________________________

    கொங்கப்பட்டி: உசிலம்பட்டியில் இருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ள கொங்கப்பட்டியில் சீலைக்காரி அம்மன் கோவிலின் முன்பாக ஊர் மந்தையில் பழமையான தொம்பரைக் கல்லில் தமிழி எழுத்து பொறிப்பில் இக்கல்வெட்டு திசம்பர் 2021 இல் கண்டறியப்பட்டது

    “_ _ததேள் இரங இட்டார் பேரார் அ /  _ _ ப பத்தான் பார்ப்பான் தவதந்தை /  _  இளங்கண்ணஅன்” 

    இரங இட்டார் – இரங்கல் இதாவது, நினைவுக் கல் வைத்தார்; பேரார் (பெயர் +ஆர்)  – புகழ்மிக்க பெரிய மனிதர்; அ  – இன்பம் துனபம் என எல்லாக் காலத்தும் முதன்மை பெறும்; பார்ப்பான்- வேதம், தியானம், பூசனை கற்றுக்கொடுப்பவர்; தவ தந்தை – தவத்தில் உயர்ந்தவர். பத்தான் – கூட்டம் இதாவது, பின்பற்றிகள் (followers) என கொள்ளலாம்.

    விளக்கம்: உயிர் நீத்த படைத்தலைவனுக்கு எல்லாக் காலத்திலும்முதன்மை பெறும் புகழ்மிக்க பெரிய மனிதரும், வேதம், தியான யோகம் முதலியன கற்றுக்கொடுப்பவரும், தவத்தில் உயர்ந்தவரும் ஆன இளங்கண்ணன் நினைவுக்கல் வைத்தார் என்பது பொருள். கல்வெட்டு இளங்கண்ணனின் பெருமைகளையே அதிகம் பேசுகிறது. முதல் வரியிலும் இரண்டாவது வரியிலும் முன்னே சில எழுத்துகள் சிதைந்து உள்ளதால் இந்த அளவே பொருள் கொள்ள முடிந்தது. மீண்டும் சீராக படியெடுத்தால் கல்வெட்டின் பொருளை இன்னும் தெளிவாக அறியமுடியும். அதுவரை இது தற்காலிகமானது தான்.
    _____________________________

    தாதப்பட்டி: தஞ்சைத் தமிழிப் பல்கலைக்கழக தொல்எழுத்தியல்  மற்றும் தொல்லியல் துறையால் 2006 ஆம் ஆண்டில் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை வட்டத்தில் வத்தலகுண்டிற்கு 16 கீலோ மீட்டர் தெற்கே வைகை ஆற்றின் தென்கரையில் அமைந்த  தாதப்பட்டி  என்னும் ஊரில் தமிழி எழுத்து பொறிக்கப்பட்ட கற்பதுகை ஒன்று அறியப்பட்டது. ஈமப்புதைப்பு நடுகல்லில் தமிழி எழுத்து அறியப்பட்டது அதுவே முதல் முறை. இவ்வூர் இதே போல் மூன்று நடுகற்கள் அறியப்பட்ட புலிமான் கோம்பைக்கு அருகே உள்ளது குறிப்பிடத்தக்கது.

    கல்வெட்டு: இதன் உயரம்  200 செ.மீ. இருந்திருக்கலாம் என ஊகிக்கப்பட்டுள்ளது. இதில் சில முன் எழுத்துகள் சிதைந்தது போக ஒரே வரியில் எஞ்சிய 13 எழுத்துகள் தெளிவாகக் காணப்படுகின்றன.

    ன் அடிஓன் பாகல் பாளிய் கல்

    அடியோன் – ஏவலன், servant; பாகல் – வளைவாக வெட்டி உடைத்த, பகு > பகல் > பாகல்; பாழி – நினைவு கல்.

    விளக்கம்: சிலர் ‘த’ என்ற எழுந்து முதலில் உள்ளதாக கூறுகின்றனர். எனவே அது “தன்” என்று முடியும் ஒரு ஆடவன் பெயர் என குறித்துள்ளனர். அது அவ்வாறு ஆயின் என்னுடைய கருத்து அடியோன் என்பது அவருடைய ஏவலன் என்பதைக் குறிக்கின்றது. பாகல் பாளி என்பது வளைவாக வெட்டி உடைத்த நினைவுக் கல் என்பது இதன் பொருள்.
    _____________________________

    புலிமான்கோம்பை நடுகற்கள்: புலிமான்கோம்பையில்  தமிழி கல்வெட்டுள்ள நடுகற்கள்  மூன்று கிட்டியது. இவ்வூர் தேனி மாவட்டம் வத்தலகுண்டில் இருந்து 15 கி.மீ. தொலைவில் வைகை ஆற்றின் தென்கரையில் ஆண்டிப்பட்டி வட்டத்தில் அமைந்து உள்ளது

    வேள் ஊர் / அவ்வன்  பதவன்

    பதவன் – கல்லை வடிப்போன், சிற்பி, one who shapes a stone. பதக்கம் என்ற சொல்லின் வேரை பதவனோடு பொருத்திப் நோக்குக.

    விளக்கம்: இருவரி கொண்ட கல்வெட்டு இது. வேளூரைச் சேர்ந்த அவ்வன் எனும் இயற்பெயர் கொண்ட கல்வடிக்கும் சிற்பி என்பது இதன் பொருள்.

     – – அன் ஊர் அதன் / – – — ன் அன் கல் 

    விளக்கம்: இரு வரிகளில் எழுதப்பட்ட கல்வெட்டு. நடுகல்லின் இடைப் பகுதி உடைந்து உள்ளது. அதன் என்பவன் ஊர் குறிக்கப்படுகிறது. பின்பு எழுத்து சிதைந்த ஒருவன் பெயரை குறிப்பிட்டு அவனது கல் என்கிறது.

    கல் / பேடு தீயன். அந்தவன் / கூடல் ஊர் ஆகோள்.

    அந்தவன் – அந்த + அவன் எனப் பிரிக்க வேண்டும், that person; ஆ கோள் – மதிப்புள்ள ஆடு, மாடு இவற்றை களவாடுதல்.

    விளக்கம்: மூன்று வரிக்கல்வெட்டு இது. இக்கல் பேடுதீய்யனுக்கு உரியது. அந்த அவன் கூடலூரின் மதிப்புள்ள பொருளை களவாடியவன் (ஆ கோள்) என்பது இதன் பொருள்.
    _____________________________

    புதுக்கோட்டை: பொற்பனைக்கோட்டை புதுக்கோட்டைக்கு கிழக்கே சுமார் 6 கி.மீ தொலைவில் உள்ள முற்றிலும் சிதிலமடைந்த செங்கல் கோட்டையாகும்.  2012 – ம் ஆண்டு இக் கோட்டையில் உள்ள குளக்கரையில் முக்கோண வடிவிலான 5 வரித் தமிழி நடுகல் கல்வெட்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.

    கல்வெட்டு: கோவென் கட்டிற் நெதிர / ணறு பொன் கொங்கர் விண்ணகோன் / ஆ எறிஇத்து ஏவ அதவ்வனரு / அங்கபடைத் தாணையன் கணங், / குமரன் கல். 

    நறு பொன் – பொற்காசு; ஆ எறித்து – செல்வத்தை கவர; ஏவ – ஏவிவிட; அங்கப்படை – வெட்டும் படை; தாணையன் – முன்னணி மறவன்

    விளக்கம்: கோவன் கட்டி என்ற கங்க அரசனுக்கு எதிராகப் போரிட  தன் பெயரில் பொற்காசு வெளியிட்ட கொங்கர் இன அரசன் விண்ணகோன் மதிப்புள்ள பொருளைக் கவர்ந்துவர கட்டளையிட படைத்தலைவன் அதவன் உடைய வெட்டும்படையின் முன்னணிப் போர்வீரன் கணன் குமரன் அதன்போது  வீரசாவடைந்தான். அவனது நினைவுக் கல் இது என்பது பொருள். மதிப்புள்ள பொருளை  குறிக்கும் “ஆ” என்பது  ஆ கோள் எனும் புளிமான் கோம்பை நடுகல்லிலும் ஆட்சி பெற்றுள்ளது. ஆ கோள் என்பதும் ஆ எறித்து என்பதும் ஒன்றே.

    மேற்சொன்ன தமிழி  கல்வெட்டுகள் தமிழ்நாடு தொல்லியல் துறை வெளியிட்ட தமிழ் பிராமி கல்வெட்டுகள் எனும் நூலை மேற்கோளாகக் கொண்டது.

    Share