மருத்துவமனை இயங்கிய கோவில்கள்

சேசாத்திரி ஸ்ரீதரன்
ஒரு நோயாளி தங்கிப் பண்டுவம் மேற்கொள்ளும் இடம் தான் ஆதுலர் சாலை என்பது. ஆதுலர் என்றால் நோயாளி சாலை என்றால் ஆதரவு விடுதி எனப் பொருள். முடியாட்சியின் போது கோவில் மண்டபங்களே இத்தகு மருத்துவமனைகளாக இருந்தன. இப்படியான மருத்துவமனைகள் பல ஊர்களில் செயற்பட்டன. அதற்கான கல்வெட்டுச் சான்றுகள் நமக்கு சில கோவில்களில் காணக் கிடைக்கின்றன. கோவில்கள் பண்டு வழிபாட்டு இடம் என்பதோடு அல்லாமல் ஆடல் பாடல் இசைக் களமாக, வேதக் கல்விக் கூடமாக, சரசுவதி பண்டாரம் எனும் நூலகமாக, மருத்துவகமாக செயற்படும்படியாக வேந்தர், மன்னர், அரைசர், கிழார்களின் பெரும் நிதி ஆதரவினால் கட்டியெழுப்பப்பட்டன. இத்தகு மருத்துவகங்களில் சமஸ்கிருதம் அறிந்த பிராமணர் ஆயுர்வேத மருத்துவத்தையும், மங்கலக் குலத்தார் என்ற அம்பட்டர் தமிழ் மருத்துவத்தையும், அறுவை மருத்துவத்தையும் மேற்கொண்டனர். இங்கு சமூகத்தின் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் பாகுபாடின்றி இலவசமாகவே மருத்துவம் அளிக்கப்பட்டது. அந்நாளில் பிணம் கையாளும் வெட்டியான்கள் தவிர்த்து வேறு எவரும் தீண்டாமைக்கு ஆட்படவில்லை. மருத்துவத்தில் ஈடுபட்டோருக்கு வைத்தியபோகம், மருத்துவக்காணி என்ற பெயரில் விளை நிலமும் வீட்டு மனையும் மானியமாகப் பலரால், ஊர்ச்சபையால் வழங்கப்பட்டன. இது பற்றிய கொடையாளர் பெயர்கள், மானியம் பெற்ற மருத்துவர் பெயர்கள் போன்றன கல்வெட்டாகப் பொறிக்கப்பட்டுள்ளன. அக்கால மருத்துவர் தமக்கு கொடையாக விளைநிலமும், வீட்டு மனையும் பெற்றுக் கொண்டு வாழ்க்கை முழுவதும் கட்டணம் பெறாமல் அனைவருக்கும் இலவச மருத்துவம் செய்து மக்கள் தொண்டு புரிந்தனர். ஆனால் இன்று மருத்துவம் பணம் கொழிக்கும் ஒரு முதலாளியத் தொழிலாகவே ஆகிவிட்டது. மக்கள் தம் பிள்ளைகளை பணம் சம்பாதிப்பதற்காகவே மருத்துவம் படிக்கச் வைக்கின்றனர்.
திருத்துறைப்பூண்டி > கீரக்களூர், திருவரங்கம், திருவாவடுதுறை, கும்பகோணம் > வேம்பத்தூர், நன்னிலம் > திருப்புகலூர், பழனி > அம்பிலிகை, கோயில் தேவராயன் பேட்டை > கும்பகோணம், திருப்பத்தூர், கூகூர், கடத்தூர், குன்றத்தூர், சிறுவாக்கம், சிதம்பரம், தஞ்சாவூர் ஆகிய ஊர்களில் ஆதுரர் சாலை பற்றிய கல்வெட்டுகள் உள்ளன. திருமுக்கூடல் கல்வெட்டு மருத்துவப் பணியாளருக்கு வழங்கப்பட வேண்டிய நாள் கூலி, அதன் செயற்பாட்டை பற்றி விவரமாக பதிவு செய்கின்றது. அவற்றில் சில கல்வெட்டுகள் கீழே விளக்கப்பட்டுள்ளன.
நங்கை எட்டிக்கூறு “காஸ்யபன் அரையன் அரைசான ராஜகேஸரி மங்கலப் பெரையன்” உடைய மருத்துவம் செய்வதற்காக அளிக்கப்பட்ட ‘வைத்தியக் காணி’ நிலம் தவறானது எனவே காணி நிலமும், வீடும் செல்லாது எனச் சபையோரால் அறிவிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டு மீண்டும் அவனுக்கு மாற்றீடாக நிலம் கிடைக்க நடந்த வழக்கைப் பற்றி திருத்துறைப்பூண்டி கீரக்களூர் கிராம அகத்தீஸ்வரர் கோயிலுள்ள இரண்டாம் இராசேந்திரனின் 11-ஆம் ஆண்டு ஆட்சிக்காலக் கல்வெட்டு குறிப்பிடுகிறது. பண்டு பறையரே ஊரில் மங்கல, அமங்கல நிகழ்வுகளுக்கு நாகஸ்வரம், தவில் இசைத்தனர். இதனால் மங்கலப் பறையன் எனப்பட்டனர். இவர்கள் மயிர் மழிக்கும் தொழிலுக்கு கத்தியைக் கையாள்வதால் அறுவை மருத்துவமும் செய்தனர். நங்கை எட்டிக்கூறில் வாழ்பவனும் காசியபன் எனும் பிராமண அறுவை மருத்துவனின் (அரைசு) அறுவைமனைக் கூடமான ‘ராஜகேசரி’யில் பயின்றவனுமான மங்கலப் பறையன் என்பதே இக்கல்வெட்டுத் தொடருக்கான சரியான பொருள். இதை விளக்கியோர் தப்பும் தவறுமாக படித்துப் பொருள் கூறி உள்ளனர். இதில் புழங்கும் அரையன் என்ற சொல்லை அரச பட்டமாகத் தவறாகப் பொருள் கொண்டதால் பெறையன் என படிக்க வேண்டிய இடத்தில் பே(ர)ரையன் என்று படித்துவிட்டனர். பேரரையன் என்ற சொல் அரைசனை விட பதவியில் உயர்ந்த மன்னனைக் குறிப்பது. மன்னன் இப்படி மெய்க்காவல், மருத்துவப் பணி செய்வானா? என்று சிந்திக்கவில்லை. சோழர் கால எழுத்தில் ஏகார ஓகார நெடில் குறிகளுக்கு இப்போது உள்ளது போல் இரட்டைக் கொம்பு முன் துணைக் குறி கிடையாது. அதனால் பெறையன் என்பதை பேரையன் என்று படித்துள்ளனர். இக்கல்வெட்டுக் குறிப்பு பறையர் ஊரிலும், கோவிலிலும் தீண்டாமைத் தடை ஏதுமின்றிப் போய் வந்ததற்கு ஒரு சான்று.
கோவில்களில் இப்படிப் பல்எண்ணிக்கையில் பிராமணர்களை போற்றியதால் தான் வருணாசிரமத்தில் பிராமணர் என்ற பிரிவே உண்டாகியது. இப் பிரிவையும் மற்ற மூன்று வருணப் பிரிவையும் உண்டாக்கியவர்கள் அதிகாரமும், பெரும் படையும், செல்வக் குவையும் பெற்ற ஆட்சியாளர்களே அன்றி பிராமணர் அல்லர் என்பதில் தவறு ஒன்றும் இல்லை. ஆனால் நால் வருணாத்தை பிராமணரே உருவாக்கியதாக ஆங்கிலர் ஆட்சியில் பொய்ப் பரப்புரை செய்யப்பட்டு இன்று வரை பரவலாக நம்பப்பட்டு வருகின்றது. ஆனால் கல்வெட்டுச் சான்றுகள் அந்தக் கருத்தை உடைத்து எறிந்து நமக்கு உண்மையைத் தெளிவிக்கின்றன.
சோழர், பாண்டியர் ஆட்சியில் கல்வெட்டு செப்பேடு எழுதும் ஆசாரிகள், தமிழ் மருத்துவர்கள், ஜோசியர்கள், வணிகர்கள், வரி மதிப்பீடு செய்பவர்கள் ஆகியோர் தம் தொழிலை மேற்கொள்ள எழுத்தறிவு பெற்றிருந்தனர் என்ற வகையில் தமிழகத்தில் கல்வி கற்றோர் எண்ணிக்கை, வாழ்க்கைத்தரம் தமிழ் வேந்தர் ஆட்சியில் மிகுந்து இருந்தது. ஆனால் பிற்பட்டு வந்த நாயக்கர் ஆட்சியில் இதன் விழுக்காடு குறைந்தது என்றால் அதற்கு தெலுங்கு ஆட்சியாளர் தானே பொறுப்பு? ஆனால் பிராமணர் தான் பிறர் கல்வி கற்பதை தடுத்துவிட்டனர் என்று பொய் பரப்பினர். இப் பொய்களையும் கல்வெட்டுகள் பொய்யாக்கின.
காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் வட்டம் திருமுக்கூடல் வேங்கடேச பெருமாள் கோவில் 55 வரிக் கல்வெட்டு.
ஸ்வஸ்தி ஸ்ரீ (மெய்க்கீர்த்தி உள்ளது)
வீரத்தனிக்கொடி தியாகக்கொடி மேற்பவர் வருகென்று நிற்ப கோத்தொழிலுரிமையிநெய்தி அரைசு வீற்றிருந்து மேவருமனுநெறி விளக்கிய கோவி ராஜகேசரிவர்மரான முடையார் ஸ்ரீ வீரராஜேந்திர தேவர்க்கு யாண்டு அஞ்சாவது கங்கைகொண்ட சோழபுரத்துச் சோழகேரளத் திருமாளிகையில் ராஜேந்திரசோழ மாவலி வாணராஜநில் எழுந்தருளியிருந்து ஜயங்கொண்ட
சோழ மண்டலத்துக் களத்தூர்க் கோட்டத்துத் தனியூர் ஸ்ரீ மதுராந்தக சதுர்வேதி மங்கலத்துத் திருமுக்கூடல் மஹாவிஷ்ணுக்கள் தேவதானமாய் வருகின்ற காலியூர்க் கோட்டத்துத் தேரோடு பருவூர் நாட்டு வயலைக்காவூர(க)கள் சாலைக் கிறுத்து வருகின்ற பொந் எழுபத்தைங் கழஞ்சும் இச்சாலைக்குச் சாலபோகமாய் வருகின்றபடி (இதன் பின் இரண்டு திருவிழாவும் ஒரு வேதபாடசாலை அதன் விடுதியும் பற்றிய 7 பக்கத்திற்கு நீண்ட கல்வெட்டு இடம்பெறுகின்றது)
_ _ _ ஆதுல சாலைக்கு வேண்டுங் கலமிருங் குசவனுக்கு நாளொன்றுக்கு நெல் குறுணியுங் ஆழ்வாற்குப் பரிசட்டமுஞ் ஜனனாதன் மண்டபத்திலோது _ _ _ _ ஓத்துக் கேட்பாற்கும் ஆதுலற்கும் ஒலிக்கும் ஈரங்கொல்லிக்கு(ம்) நாளொன்றுக்கு நெல் நானாழியும், ஜனனாதன் மண்டபமும் ஆதுலசாலையும் நிமந்த _ _ _ _ குந் திருமெய்காவலே திருமுக்கூடற் பெறையனுக்கு நாளொன்றுக்கு நெல் நானாழியுங் காசொன்றும், திருச்சுற்று மாளிகை புதுக்குப்புறத்துக்கு நெல் நாற்பதின் கலமுஞ்ச _ _ _
இம்மண்டபத் துண்ணுஞ் சாத்திரர்க்குங் கிடைகளுக்கும் பணி செய்யும் பெண்டுக(ளிருவர்க்கு)ப் பேரால் நெல்லு நாநாழியாக நாளொன்றுக்கு நெல் குறுணியும் பேறாற் காசொன்றாகக் காசிரண்டும் சாத்திரர்குங் கிடைகளுக்கும் ஆதுலர்க்கும் கிடக்கப் பாயெழுபத்தைந்துக்குக் காசிரண்டும் கிடைகளுக்குஞ் சாத்திரர்க்கும் தலைக்கட்டச் சனியொன்றுக் கெண்ணெயிரு நாழியாக ஆண்டொன்றிற் சனி ஐம்பத்தொன்றுக் (கெண்ணை) னூற்றிரு நாழிக்கும் ஜநநாதன் மண்டபத்தோத்துக் கேட்பார்க்கு இராயெரியும் விளக்கொன்றுக் கெண்ணை உழக்காக ஆண்டொன்றுக் கெண்ணை தொண்ணூற்று நாழியும் இவ்வெண்ணை நூற்றுத் தொண்ணூற்றிரு நாழிக்குக் காசொன்றுக் கெண்ணை யிருபதி நாழியாக காசொன்பதைரையே யரைக்காலு ஜந நாதன் மண்டபத்(துக்கு) புதுக்குப் புறத்துக்கு நெல் நாற்பதின் க(லமு)ம்
ஆது(ல)ர் சாலை வீரசோழநில் வ்யாதிபட்டுக் கிடப்பார் பதிநைவர்க்குப் பேராலரிசி நாழியாக அரிசி குறுணியெழு நாழிக்கு நெல் (தூணி ஐ) ஞ் ஞாழியுரியும் வ்யாதிபட்டுக் கிடப்பார்க்கும் பலபணி நிவந்தகாறர்க்கும் கிடைகளுக்குஞ் சாத்திரர்க்கும் வைத்தியஞ் சொல்லக் காணியாகத் தநக்குந் தந் வர்க்கத்தார்க்கும் பெற்றுடைய ஆலப்பாக்கத்து சவர்ண்ணந் கோதண்டராமந் அஸ்வத்தாம பட்டனுக்கு நாள் ஒன்றுக்கு நெல் முக்குறுணியும் காசெட்டும் சல்லியக்கிரியை பண்ணுவா(னொருவ)னுக்கு நாளொன்றுக்கு நெல் குறுணியும் ஆதுலர்க்கு மருந்துகளுக்கு வேண்டும் மருந்து பறித்தும் விறகிட்டும் பரியாரம் பண்ணுவா ரிரு(வரு)க்குப் (பேரால்) நாளொன்றுக்கு நெல் குறுணியாக நெல் பதக்கும் பேரால் காசொன்றாகக் காசிரண்டும் ஆதுலர்க்கு வேண்டும் பரியாரம் பண்ணி மருந்தடும் பெண்டுகளிருவர்க்குப் பேரால(ரிசி நா) நாழியாக நாளொன்றுக்கு நெல் குறுணியும் பேறாற் காசரையாகக் காசொன்றும் ஆதுலர்க்குங் கிடைகளுக்குஞ் சாத்திரர்க்கும் வேண்டும் பணி செய்(யும் நா)விசனொருவனுக்கு நாளொன்றுக்கு நெல் நா நாழியும்
ஆதுரசாலை வீரசோழனில் ஆண்டொன்றில்லிடு(ம்) மருந்து பிராம்யம் கடும்பூரி யொன்றும், கருங்காய் நீங்க இப்படி _ _ _ டும், வாசா ஹரீதகிப் படியிரண்டும், தசமூல ஹரீதகி படியொன்றும், பல்லாத ஹரீதகி படியொன்றும், கண்டீரம் (படி) யொன்றும், பலாகேரண்ட தைலந் தூணியும், லஸுநாகயேரண்ட தைலந் தூணியும், உத்தம கர்ணாதி தைலந் தூணியும், உ_ _ _(ப)தக்குஞ் சுக்_ _ _சா க்ருதம் பதக்கு(ம்), பில்வாதி க்ருதம் பதக்கும், மண்டூ(க)ர வடகம் இரண்டாயிரமும், த்ரவத்தி நாழியும், விமலை இரண்டாயிரமும், சுனெற்றி யிரண்டாயிரமும், தம்ராதி யிரண்டாயிரமும், வஜ்ர கல்பந் தூணிப் பதக்கும், கல்யாண லவணந் தூணிப் பதக்கும், இவை யடுகைக்கு வேண்டும் மருத்(து)களுக்கு நெ_ __(ரையும்) தெ_ _ _யும் உள்ளிட்டன கொள்ளவும் ஆண்டுதோறும் புராணசர்ப்பி புதைக்கப் பசுவி(ந்) நெய் பதக்கும் கொள்ளவும்(க்) காசு நாற்பதும்
ஆதுரசாலையில் இராயெரியும் விளக்கொன்றுக் கெண்ணை யாழாக்காக நாள் முந்னூற்றறுபதுக் கெண்ணை நாற்பத்தைஞ் ஞாழிக்கு காசிரண்டே காலும் ஜந நாதன் ம_ _ _ன்பில் தன்_ _யனுக்குப் பங்குனியுத்திரந் துடங்கிப் புரட்டாதிந் திருவோணத் தளவும் பரம்பாலூறத் தண்ணீர் கொடுவந்து வை(த்துச் சாய்ப்)பான் ஒருவனுக்கு நாள் ஒன்றுக்கு நெல் குறுணியாக நாள் நூற்றென்பதுக்கு நெல் பதிநைங் கலமும் ஏலத்துக்கும் இலாமச்சத்துக்கும் நெல்லிரு_ _ _ பதக்கும் த_ _ _ _ண்யாகம் பண்ணின பிராமணர்க்குத் தக்ஷிணைக்கும் வெற்றிலை வெறுங்காய்க்கும் நெல் கலநே தூணியிரு நாழி முழக்(கே முச்)செவிடும் வயலைக்காவூர் காணியுடைய மாதவன் தாமயன் வர்க்கத்தார்க்குப் புரட்டாதித் திருவோணத் திநால் குடுக்கும் பரிசட்டம் இர(ண்டு)க்குக் காசொன்றெ யெழுமா _ _ _மூவாயிரத்திரு நூற்று நாற்பத்து முக்கலனே யிரு தூணிப்பதக்கரு நாழியுழக்கே முச்செவிட்டுக்கும் காசிருனூற் றொருபத்தரையே யிரண்டு மாவுக்கும் இக்காசுதராவிடில் காசொன்றுத் தண்டவாணியோ டொக்கும் பொன் காசு நிறைக்கால் இடுவதாகவும்
இப்படி யாண்டு ஆறாவது நிமந்தஞ் செய்தபடி இன் – – – – – லுமிடத்து சாத்திரக் கண்காணியோடும் கிடைக் கண்காணியோடும் செல்லக்கடவதாக நிவந்தம் செய்தபடிக்கு கல்லு வெட்டுவித்தார் இன்நாடு கூறு செய்த ஆதிகாரிகள் சோழமண்டலத்து விஜைய ராஜேந்த்ர வளநாட்டு இடையள நாட்டு மீனற்குடையான்
பசுவதி திருவரங்க தேவநாரான ராஜேந்த்ர மூவேந்த வேளார். பாண – – – – – ஏவக் கல்லு வெட்டுவித்தான் ஜயங்கொண்ட சோழ மண்டலத்துப் புழற் கோட்டத் தாகுடிநாட்டு அயண்டம் பாக்கத்து இறைவேட்டிந் குமரபாசூர்க்கத்தநான வீரராஜேந்த்ர செம்பியதரையன். இந்த தந்மம் செய்வித்த தாமயனார் மகன் தாமயன் கங்கை கொண்ட சோழனான சேனாதிபதிகள் கங்கைகொண்ட சோழ தன்மபாலற்க்கும், இவர் தம்பியார் தா – – – – – – நான சேனாதிபதிகள் வீரராஜேந்திர தன்மபாலற்குமாய். இது கல்லுவெட்டுவித்தான் ஜயங்கொண்ட சோழமண்டலத்து புழல் கோட்டத்து – – – – – நாட்டு ஸதுவேதி மங்கலத்து பிராமணன் மாங்களூர் நமச்சிவாய தேவன் மகன் தழுவக் குழைந்தானான அபிமான மேரு பிரம்ம மாராயன். இ தர்மம் ஸ்ரீ மதுராந்தகச் சதுர்வேதி மங்கலத்து மஹாசபையார் ரக்ஷை ஸ்ரீ.
சாலாபோகம் – உணவுச் சாலைக்கு கொடுத்த நிலம்; ஆதுலர் – நோயாளி, வறியவர்; ஆதுலர் சாலை – உணவும் தங்கும் வசதியும் கொடுத்து பண்டுவம் செய்யும் மருத்துவகம்; பரிசட்டம் – சிலைக்கு சாற்றும் ஆடை; ஓத்து கேள் – வேதபாடம் கேள்; ஒலிக்கும் – துப்புரவாக்கும்; ஈரங்கொல்லி – வண்ணான்; நிமந்த – செலவு திட்டம்; புதுக்குப்புறம் – கட்டடம் புதுப்பிக்க வைத்த நிலம்; சாத்திரர் – வேதம் முதலான வடமொழிக் கல்வி ஆசிரியர்; கிடைகள் – வேதம் பயிலும் மாணவர் குழாம்; கிடக்கப் பாய் – உறங்கப் பாய்; தலைகட்ட – நீராட; நிவந்தக்காரர் – கோவில் ஊழியரில் அவரவர்க்கு உரிய பணிகொண்டோர்; சவர்ணன் – எல்லா மருத்துவப் பிரிவிலும் வல்லவன், பெரு மருத்துவன், medical expert; சல்லியக் கிரியை – கூர் ஆயுத காயத்தை ஆற்றும் மருத்துவம்; பரியாரம் – நோய்விடுபாடு, relief; நாவிதன் – மயிர் திருத்துவோன்; சாய்ப்பான் – ஊற்றுவான், இடுவான்; வர்க்கத்தார் – சார்ந்தோர், வழிவந்தோர்; முச்செவிட்டு – ஒரு முகத்தல் அளவை; தண்டவாணி – பொன்னின் மாற்று அறியும் ஆணி; கூறு செய் – வேலையை வகை செய்து நிர்வகி; மஹாசபை – பிராமண ஊர்களில் சபையின் முழுக் கூட்டம்; ரக்ஷை – பாதுகாப்பு.
விளக்கம்: இக்கல்வெட்டு வீரராசேந்திரனின் 5-ம் ஆட்சி ஆண்டில் (1068 AD) வெட்டப்பட்டது. மதுராந்தகச் சதுர்வேதி மங்கலத்தில் அடங்கிய திருமுக்கூடல் பெருமாளுக்கு தேவதானமாய் காலியூர்க் கோட்டத்தின் வயலைக்காவூரார் உணவுச் சாலைக்கு தேவதானமாய் கொடுத்து வந்த 75 கழஞ்சு பொன்னை வீரராசேந்திரனின் இரண்டாம் ஆட்சி ஆண்டு முதல் கொடுக்காமல் போகவே தன் 5 – ம் ஆட்சி ஆண்டு முதல் 75 கழஞ்சு பொன்னையும் இவ்வூரால் வந்த வரியையும் இறையிலியாக வீரராசேந்திரன் வழங்கினான். இதன் மதிப்பு 147 கழஞ்சும் 216 -1/2 காசும் 2 மாவும் ஆகும். இது கோவிலின் பல்வேறு பணிகளுக்கும், ஆவணியில் ஒரு திருவிழாவும் கார்த்திகையில் ஒரு திருவிழாவும் கொண்டாடுதற்கும், கோவிலில் உண்டு உறைவிட வேத பாடசாலையை நடத்தவும், கோவிலின் ஜனநாதன் மண்டபத்தில் 15 படுக்கையுடன் செயற்பட்டு வந்த மருத்துவமனையை தடையின்றி நடத்திச் செல்லவும் தரப்பட்டது. வேத பாடசாலையில் 14 ஆசிரியரும் 50 மாணவரும் இருந்துள்ளனர். அவர்களுக்கு அன்றாடப் படியாக தரவேண்டிய நெல்லின் அளவு குறிக்கப்பட்டுள்ளது.
இம் மருத்துவமனைக்கு தேவையான கலம் வணையும் இரு குயவருக்கு நாள் ஒன்றுக்கு ஒரு குறுணி நெல்லும், சிலையின் உடுப்பை, ஜனனாதன் மண்டபத்தில் வேதபாடம் கேட்கும் மாணவர், நோயாளிகள் துணியை துவைக்கும் வண்ணானுக்கு நாள் ஒன்றுக்கு நெல் நான்கு நாழியும், ஜனனாதன் மண்டபத்துக்கும், அதில் இயங்கும் மருத்துவமனைக்கும், கோவிலில் திட்டச் செலவை மேற்கொள்வோருக்கும் மெய்க்காவல் புரியும் திருமுக்கூடல் பறையனுக்கு நாள் ஒன்றுக்கு நெல் நான்கு நாழியும் ஒரு காசும் தரப்பட வேண்டும். இதுகாறும் பறையர்கள் கடந்த ஈராயிரம் ஆண்டுகளாக ஊருக்குள்ளும் கோவிலுக்குள்ளும் செல்ல முடியாமல் தீண்டாமை பாராட்டி தடுத்து வைக்கப் பட்டனர் என்ற தலித்திய, பெரியாரியப் பொய்க் கூற்றை இந்தக் கல்வெட்டுவரி தகர்த்துத் தவிடு பொடியாய் ஆக்கிவிடுகின்றது. பாடிகாவல் எனும் ஊர்காவல் பணியை மேற்கொண்டோர் பெரும்பாலும் பறையரே. ஊரினுள் நுழையாமல் இப்பணியை மேற்கொள்ள இயலாது. தமிழகத்தில் சோழர், பாண்டியர் ஆட்சியில் தீண்டாமை நிலவவில்லை. அது நாயக்கர் ஆட்சியில் புதிதாக ஏற்பட்ட சமூகச் சீர்கேடு ஆகும். ஆனால் தெலுங்கர் இதற்கு பொறுப்பு ஏற்காமல் பழியை தமிழ் பிராமணர் மீது சாற்றுகின்றனர்.
கோவிலின் திருச்சுற்றை புதுப்பித்துக் கட்ட நெல் 40 கலம் ஒதுக்கப்பட வேண்டும். இந்த மண்டபத்தில் உண்ணும் வேத ஆசிரியர்க்கும், வேதம் பயிலும் மாணவருக்கும், பணிப் பெண்கள் இருவருக்கும் ஆள் ஒருவருக்கு நெல் நான்கு நாழியாக நாள் ஒன்றுக்கு குறுணி அளவும் இருவருக்கும் ஒரு காசு என்ற வகையில் இரு காசும் தரப்பட வேண்டும். வேத ஆசிரியர், மாணவர், நோயாளிகள் படுத்து உறங்கப் பாய் 75 ஐ வாங்க 2 காசும், வேத ஆசிரியர், மாணவர் தலைக்கு தேய்க்க ஒவ்வொரு சனிக் கிழமையும் எண்ணெய் இரு நாழி என்ற கணக்கில் ஒரு ஆண்டிற்கு 51 சனிக் கிழமைக்கும் நூற்றியிரு நாழியும், ஜனனாதன் மண்டபத்தில் வேதம் கேட்கும் மாணவர்க்கு இரவில் எரியும் விளக்கு ஒன்றுக்கு எண்ணெய் உழக்கு அளவு ஆண்டு ஒன்றுக்கு 90 நாழியும், இந்த எண்ணெய் 192 நாழிக்கு ஒரு காசிற்கு 20 நாழி என்ற மேனியில் 9-1/2 1/8 காசும், ஜனனாதன் மண்டபத்தை புதுப்பித்துக் கட்ட 40 கலம் நெல்லும் ஒதுக்கப்பட வேண்டும்.
இம் மருத்துவமனைக்கு வீரசோழன் எனப் பெயர். இதில் நோயுற்றுக் கிடக்கும் 15 நோயாளிகளுக்கு தலைக்கு அரிசி நாழியாக குறுணி ஏழு நாழிக்கு நெல் தூணி ஐந்து நாழியும் உரியும் நோயுற்றார்க்கும், பலபணி கோவில் பணியாளருக்கும், மாணவர்க்கும், வேத ஆசிரியருக்கும், மருத்துவம் செய்யக் காணியாக தனக்கும் தன் வழிவந்தோருக்கும் பெறுவதற்கு ஆலப்பாக்கத்து பெரு மருத்துவன் கோதண்ட ராமன் அஸ்வத்தாம பட்டனுக்கு நாள் ஒன்றுக்கு நெல் முக்குறுணியும் 8 காசும், ஒரு அறுவை சிகிச்சை செய்பவனுக்கு நாள் ஒன்றுக்கு குறுணி நெல்லும், நோயாளியர் மருந்துகளுக்கு தேவையான பச்சிலைகளை பறித்து வந்து அடுப்பெரித்து மருந்து ஆக்கி நோய்விடுபட இருவருக்கு தலைக்கு நாள் ஒன்றுக்கு நெல் குறுணியாக நெல் பதக்கு அளவும் தலைக்கு ஒரு காசு என இரு காசும் தரப்பட வேண்டும். நோயாளியர்க்கு தேவைப்படும் நோய்விடுபாடு மருந்திடும் இரு செவிலிப் பெண்களுக்கு தலைக்கு நான்கு நாழியாக நாள் ஒன்றுக்கு குறுணி நெல்லும் தலைக்கு 1/2 காசு என்ற மேனியில் ஒரு காசும், வேத ஆசிரியர் மாணவர்க்கு மழித்துவிடும் நாவிதனுக்கு நாள் ஒன்றுக்கு நான்கு நாழி நெல்லும் தரப்பட வேண்டும்.
வீரசோழன் மருத்துவமனையில் ஆண்டு ஒன்றில் இடும் மருந்தின் அளவு 1) பிராமியம் கடும்பூரி – 1 எண்ணம் 2) வாசா ஹரீதகி -2 படி 3) தச மூல ஹரீதகி – 1 படி 4) பல்லாதக ஹரீதகி – 1 படி 5) கண்டீரம் – 1 படி 6) பலாகேரண்ட தைலம் – 1 தூணி 7) லசுநாக ஏரண்ட தைலம் – 1 தூணி 8) உத்தம கர்ணாதி தைலம் – 1 தூணி 9) _ _ _ கிருதம் – 1 பதக்கு 10) பில்வாதி கிருதம் – 1 பதக்கு 11) மண்டூகர வடகம் – 2000 எண்ணம் 12) திரவத்தி – 1 நாழி 13) விமலை – 2000 எண்ணம் 14) சுனெற்றி – 2000 எண்ணம் 15) தம்ராதி – 2000 எண்ணம் 16) வஜ்ர கல்பம் – 1 தூணி 1 பதக்கு 17) கல்யாண லவணம் – 1 தூணி 1 பதக்கு தவிர இவற்றின் மேல் பூச்சு மருந்திற்கும் தேவையானவை வாங்கவும், ஆண்டுதோறும் புராண சர்ப்பி புதைப்பதற்கு பசுநெய் பதக்கு அளவு வாங்க 40 காசும் மருத்துவமனையில் இரவில் எரியும் விளக்கு ஒன்றினுக்கு எண்ணெய் ஆழாக்கு என்ற மேனி 360 நாளுக்கு எண்ணெய் 45 நாழிக்கு காசு 2-1/4 தரவேண்டும். ஜனனாதன் மண்டபத்தில் பங்குனி உத்திரம் தொடங்கி புரட்டாசித் திருவோணம் வரை பரம்பால் ஊறுவதற்கு தண்ணீர் கொண்டு வந்து ஊற்றும் ஒருவனுக்கு நாள் ஒன்றுக்கு குறுணி நெல் என்ற அளவில் 49 நாளுக்கு 15 கலம் நெல்லும், ஏலக்காய்க்கும் இலாமச்ச வேருக்கும் நெல் இரண்டு பதக்கும், த_ _ண்யாகம் செய்த பிராமணர் தட்சணையாக வெற்றிலை பாக்கிற்கு நெல் ஒரு கலனும் தூணி இரு நாழி முழக்கு மூன்று செவிடு வயலைக்காவூரில் பரம்பரை நிலம் (முதுசொம்) உள்ள மாதவன் தாமயன் வழிவந்தோர்க்கு புரட்டாசி திருவோணத்து நாளில் கொடுக்கின்ற இறைவன் ஆடைக்கு 2 காசு 7 மா _ _ _ _ 3243 கலன் 2 தூணிப் பதக்கு 6 நாழி உழக்கு 3 செவிட்டுக்கும் 210 -1/2 இரண்டு மாவிற்கு தரவேண்டும். இக் காசைத் தராவிடில் காசு ஒன்றுக்கு பொன்னின் மாற்று அறியும் ஆணியை ஒத்த அளவிற்கு பொற்காசை எடைபோட்டுத் தருவதாக ஒத்துக் கொண்டோம்.
இப்படியே 6-ம் ஆண்டும் செலவுத் திட்டம் வகுத்தபடி செய்து _ _ _ வேதஆசிரியக் கண்காணியுடனும், மாணவர் கண்காணியுடனும் செல்வதாக கோவில் நிர்வாகத் திட்டம் செய்தவாறு கல்வெட்டு வெட்டுவித்தார் இந்நாட்டு வேலையை பகுத்து நிர்வகிக்கும் அதிகாரியான சோழமண்டலத்து விஜய ராஜேந்திர வளநாட்டின் இடையள நாடனான மீனக்குடையான் பசுபதி திருவரங்க தேவனார் ராஜேந்திர மூவேந்த வேளார். _ _ _ ஏவல் ஏற்று கல்லில் வெட்டி வைத்தான் ஜெயங் கொண்ட சோழமண்டலத்து புழற் கோட்டத்தை சேர்ந்த தாகுடி நாட்டின் அயண்டம் பாக்கத்தின் இறைவேட்டின் குமரபாசூர்க் கத்தன் வீரராஜேந்திர செம்பியதரையன். இந்த அறத்தை செய்வித்த தாமயனார் மகன் தாமயன் கங்கை கொண்ட சோழனான சேனாதிபதிகள் கங்கை கொண்ட சோழ தர்மபாலர், இவன் தம்பி தாமயனார் மகன் சேனாதிபதிகள் வீரராஜேந்திர தர்மபாலர் சார்பில் இதைக் கல்லில் எழுதினான் ஜெயங்கொண்ட சோழ மண்டலத்தின் புழல் கோட்டத்து _ _ _ நாட்டு சதுர்வேதி மங்கலத்து பிராமணன் மாங்களூர் நமச்சிவாய தேவன் மகன் தழுவக் குழைந்தானான அபிமான மேரு பிரம்ம மாராயன். இவ் அறம் மதுராந்தகச் சதுர்வேதி மங்கலத்து ஊர் சபையோரின் பாதுகாப்பிற்கு உட்பட்டது.
பெரு மருத்துவர் அஸ்வத்தாம பட்டன் தனது மாணவர், உறவுகள் போன்றோருடன் பணியாற்றுவதால் அவருக்கு நெல் முக்குறுணியும் 8 காசும் தரப்படுகின்றது. அறுவை மருத்துவன் சேவை சிலருக்கு மட்டுமே தேவைப்படும் என்பதால் ஒரு குறுணி நெல்லும், மருந்து ஆக்குவோருக்கு நெல் குறுணியாக ஒரு பதக்கும் ஒரு காசும் தரப்படுகின்றது. செவிலிகள் ஒரு குறுணி நெல்லும் 1/2 காசும் பெறுவது ஆகியன அவரவர் வேலைக்கு தக்கபடியே ஆகும். இதில் பாகுபாடு ஒன்றும் இல்லை.
(பார்வை நூல் Select Inscriptions of Tamil Nadu p. (137 – 152), Tamilnadu State Dept of Archaeology, 2006)
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் வட்டம் கோயில் தேவராயன் பேட்டை மச்சபுரீசுவரர் கோவில் 23 வரிக் கல்வெட்டு.
- ஸ்வஸ்தி ஸ்ரீ திருமன்னிவளர இருநிலமடந்தையும் பொற்ச் செயற் பாவையும் சீர்த்தனிச் செல்வியும் _ _ _ (மெய்கீர்த்தி முழுதும் உள்ளது)
- கோப்பரகேசரி பர்ம்மராகிய ஸ்ரீ இராசேந்திர சோழ தேவற்கு
- யாண்டு ஏழாவது ஆழ்வார் ஸ்ரீபராந்தகன் ஸ்ரீகுந்தவைப் பிராட்டியார் அருளிச்செய்த திருமுகத்தின் வாசகமாவது அருளிச் செய்க நித்தவினோத வளநாட்டு நல்லூர்நாட்டு பிரம்மதேயம் ராசகேசரி சதுர்வேதி மங்கலத்து சவையார்க்கு தஞ்சாவூர் கூற்றத்து தஞ்சாவூர் சுந்தரசோழ விண்ணகர ஆதுலர் சாலைக்கு வைத்தியஞ் செய்ய முன்பு இவ்வாதுலர் சாலையில் நிவந்தஞ் செய்த நிவந்தம் இராசகேசரியால் நெல்லுப் பதக்கு நானாழியும் ஆண்டுவரை
- பொன் நாற்கழஞ்சும் பற்றாவிட இவை ஜயபோகத்துக்கு பற்றும் வண்ணம்
- இந்த ராசகேசரி சதுர்வேதி
- மங்கலத்து கலகரச்சேரி
- இராயூர் எச்சபோக கிரமவித்தநேன்
- ஆழ்வார் ஸ்ரீபாதம்
- தாங்கிகள் குந்தவைப் பிராட்டியார்
- பக்கல் காசுக் கொண்டு
- வைத்திய போகத்துக்கு மனையாக இவ்வாண்டே விற்றுக்குடுத்த மனையாவது
- இவ்வூர் ஸ்ரீகண்டச்சேரி மேற்கு நின்றும் எட்டாம் சட்டத்துக்குத்
- தெற்கு நின்றும் அஞ்சாமனையில் வடக்கடைய அரையமனையும்
- ஆறாம் மனையில் தெற்கடைய முக்கால்
- மனையும் விற்றுக் குடுத்தேன் எச்சக்கிரமவித்தனேன். ஆழ்வார்
- ஸ்ரீபராந்தகன் ஸ்ரீ குந்தவைப் பிராட்டியார்_ _ _ கோயிலில் மாளிகை
- ஆதிபூமியில் எழுந்தருளி இருந்து நம் ராசகேசரி சதுர்வேதி மங்கலத்து தன்மத்துக்கு வைத்தியபோகம் வைக்க கொண்ட நிலம்
- ஒன்பது மாவும் ஒன்றேகால் மனையும் சத்திரிய சிகாமணி வளநாட்டு மருகல்நாட்டு மருகல் ஸவர்ணன் அரையன் மதுராந்தகனுக்கும் இவன்
- அனுவயத்தாற்கும் ராசேந்திர சோழர்க்கு யாண்டு மூன்றாவது முதல் இறையிலியே சந்திராதித்தல் வரை வைத்தியபோக காணியாகக் குடுத்தோம்
- என்று அருளிச் செய்யப் பெற்றான் என்று அரையன் அம்பலநான நெழுத்திநால் அரையன் மதுராந்தகனுக்கும் இவன் அன்வயத்தாற்க்கும்
- நாம் குடுத்தபடியும் நம்முடைய பிராமணப் படிகளும் கெல் மேல் வெட்டிவிக்க என்று அருளிச்செய்து ஆழ்வார் ஸ்ரீமுகம் வந்தமையில்
- கல்வெட்டுவிச்சோம் ராசகேசரி சதுர்வேதி மங்கலத்து மஹாசபையோம். பணியால் இச்சாதனம் வெட்டினேன்
- மதுராந்தகப் பெருந்தச்சனேன். இவை என் எழுத்து.
திருமுகம் – அரசாணை; பற்றாகவிட – உரிமையாக அனுபவிக்க; ஜயபோகத்துக்கு – ; எச்சபோகம் – முதுசொம், சந்ததியாக அனுபவி, ancestral property; வைத்தியபோகம் – மருத்துவம் செய்பவருக்கு ஒதுக்கப்பட்ட மானிய நிலம்; சட்டம் – ; அருளிச் செய்- மனம்இரங்கிக் கொடு; ஆழ்வார் – இறைப் பற்றாளரை குறிக்கும் மதிப்புச் சொல்; மாளிகை ஆதிபூமியில் – கருவறை முதற் தளம்; மருகல் – குடியோன், செல்வம்; அரையன் – அறுவை மருத்துவன்; அனுவயத்தார் – பின்வரும் கால்வழியர்; பக்கல் – இடத்து, 7ஆம் வேற்றுமையான கண்; படிகள் – நாட்செலவு பொருள்கள்; பணி -கட்டளை; சாசனம் – கல்வெட்டு ஆவணம்.
விளக்கம்: இது முதலாம் இராசேந்திரச் சோழனின் ஏழாம் ஆட்சிஆண்டில் (1020 AD) வெட்டப்பட்ட கல்வெட்டு. இங்கு இராசராசன் தமக்கை குந்தவைப் பிராட்டியார் தந்தை இரண்டாம் பராந்தகன் பெயரை முன்னொட்டாக பெற்று குறிக்கப்படுகிறார். குந்தவை மனம் இரங்கிக் கொடுத்த போது சொன்ன சொல் யாதெனில், “நித்தவினோத வளநாட்டின் நல்லூர் நாட்டில் அமைந்த பிரம்மதேயமான இராசகேசரி சதுர்வேதி மங்கலத்தின் ஊர் சபையோர்க்கு தரும் செய்தியாவது, தஞ்சாவூர் கூற்றத்தில் உள்ள தஞ்சாவூர் சுந்தரச்சோழ விண்ணகரத்தில் அமைந்த மருத்துவகத்தில் மருத்துவம் செய்வதற்கு கூலியாக முன்பு இந்த மருத்துவகத்தில் ஏற்பாடான திட்டப்படி ‘இராசகேசரி’ என்னும் அளவையால் நாள்தோறும் நெல் பதக்கு நானாழி அளவும் ஆண்டிற்கு பொன் நான்கு கழஞ்சும் உரிமையாக அனுபவிக்கத் தரப்பட்டிருந்தது. இவை இப்போது ஜெயபோகத்திற்கு உரிமையாகும் வண்ணம் விடப்பட்டதால் அதற்கு மாற்றீடாக, “இந்த இராசகேசரி சதுர்வேதி மங்கலத்தின் கலகரச்சேரி இராயூரில் முதுசொம் உள்ள கிரமவித்தன் என்பான் இறைவனடி பற்றும் இறையடியாரான ஆழ்வார் குந்தவை பிராட்டியிடம் காசு பெற்றுக் கொண்டு மருத்துவர் காலம் முழுதும் ஆண்டு அனுபவித்தற் பொருட்டு இவ்வாண்டு விற்ற மனையானது இந்த ஊர் ஸ்ரீ கண்டச்சேரிக்கு மேற்கில் இருந்து எட்டாவது சட்டத்துக்கு தெற்கில் இருந்து ஐந்தாம் மனையில் வடக்கே அரை மனையும், ஆறாம் மனையில் தெற்கில் முக்கால் மனையும் விற்றுள்ளான் இந்த எச்சக் கிரவித்தன் என்ற பிராமணன்”. இறையடியாரான குந்தவை பிராட்டியார் கோயிலின் கருவறைக்கு முன்னுள்ள முதல் தளத்தில் வந்திருந்து நம் இராசகேசரி சதுர்வேதி மங்கலத்தின் அறக்கொடையாக மருத்துவரின் உரிமையாகத் தருவதற்கு வாங்கிக் கொண்ட நிலம் ஒன்பது மாவையும் (1/2 + 3/4 =1-1/4) ஒன்றேகால் மனையையும், சத்திரிய சிகாமணி வளநாட்டின் மருகல் நாட்டுச் செல்வமான பெரு மருத்துவன் அரையன் மதுராந்தகனுக்கும் இவன் வழிவந்தோருக்கும் இராசேந்திரச் சோழனின் மூன்றாம் ஆட்சிஆண்டு (1016 AD) முதற்கொண்டே இறையிலியாக நிலவும் ஞாயிறும் நின்று நிலைக்கும் காலம் வரை மருத்துவர் உரிமைக் காணியாக மனமிரங்கிக் கொடுத்தேன் என்று சொல்லி கொடுக்கப்பட்டான் என்று அரையன் அம்பலன் ஓலை எழுத்தினால் அறுவை மருத்துவன் மதுராந்தகனுக்கும் அவன் வழிவருவோருக்கும் கொடுக்கப்பட்டது. அதோடு பிராமணர்களுக்கு கொடுத்த நாட்செலவுப் பொருள்கள் பற்றியும் கல்மேல் கல்வெட்டு ஆக்கி வைக்க வேண்டும் என்று இறையடியார் குந்தவைப் பிராட்டியாரிடம் இருந்து ஆணை வந்தமையால் கல்வெட்டாக்கி வைத்தோம் இராசகேசரி சதுர்வேதி மங்கலத்தின் ஊர்ச் சபையோம். கட்டளைக் கடமைக்கு இந்த ஆவணத்தை வெட்டுவித்தேன் மதுராந்தகப் பெருந்தச்சன். இது என் கையொப்பம். ஊர்ச் சபையோர் வேண்டுகோள் விடுத்ததால் இந்த மருத்துவர் கொடையை குந்தவை பிராட்டியார் தந்திருக்க வேண்டும். அதனால் கல்வெட்டில் ஊர்ச்சபையோர் குறிக்கப்படுகின்றனர். அப்போது குந்தவைக்கு 75 அகவை கடந்திருக்கும் என ஊகிக்க முடிகின்றது.
இதே போல் குந்தவையார் 1016 A.D. இல் சவர்ணன் அரையன் சந்திரசேகரன் ஆன பாரத்துவாசி அரையன் சண்டேசுவர கருணாகர உத்தம சோழ அசலண் என்ற பெருமருத்துவனுக்கு வீடும், மருத்துவக் காணியும் கொடையாக நல்கிய செய்தி திருவாவடுதுறை கோமுக்தீசுவரர் கோவிலின் வடக்கு சுவரில் பொறிக்கப்பட்டுள்ளது. (காண்க ARIEp 1923 B No 112)
பார்வை நூல்: தமிழ் கல்வெட்டுகள் வெளிச்சமிடுகின்ற அரிய உண்மைகள் (பொ.ஆ. 300 – 1800), பக்.287- 288. ஆசிரியர் முனைவர் வஞ்சியூர் க. பன்னீர் செல்வம். (ARIEp 1923, B No 249).
திருச்சிராப்பள்ளி மாவட்டம் திருவரங்கம் கோயிலில் நாலாம் திருச்சுற்றில் உள்ள தந்வந்திரி கோயில் முன் உள்ள கற்பலகையில் உள்ள 118 வரிக் கல்வெட்டு.
ஸ்வஸ்தி ஸ்ரீ ஸகாப்தம் 1415 ந் மேல் செல்லா நின்ற ப்ரமாதி ஸம்வத்ஸரத்து ருஷப நாயற்று பூறுவ பக்ஷத்து பஞ்சமியும் ஸோம வாரமும் பெற்ற பூசத்து நாள் திருவரங்கன் திருப்பதி இறந்த காலம் எடுத்த பெருமாள் கூடல் சக்ரவாள நம்பி ஆன உத்தமநம்பி பிள்ளை காலத்திலே பட்டாள் கொத்து அழகிய மணவாள மங்களாதராயர் புத்ரந் ஸ்ரீ நிவாஸந் ஆன ஸ்ரீரங்க கருடவாஹன பட்டர் கயிங்கரியம் ஆக ஸ்ரீ சந்த்ரபுஷ்கரணிக்கு மேல்புறமாக முன்னாள் ப்ரதாப சக்ரவத்தி காலம் துடங்கி இவருடைய பூர்வாள் கருடவாஹந பட்டர் நடத்தி வந்த ஆரோக்ய ஸாலை வாணத்திலே பிலமாகையில். இப்பொழுது ஆரோக்ய ஸாலையும் சமைப்பித்து தந்வந்தரி எம்பெருமானையும் ஏறி அருளப்பண்ணுகையில் நாள்தோறும் பெருமாள் குடினீர்அமுது செய்தருளுகிற கட்டளைக்கும் தந்வந்தரி எம்பெருமான் திருவாராதந கட்டளைக்கும் நடக்கும்படி முன்னாள் கருடவாஹந பட்டர் பெருமாளுக்கு ரங்கபோஷனை ப்ரபந்தம் பண்ணி பெருமாள் திருவுள்ளம் உகந்து திருக்கை வழக்கம் ஆகப் பல்லக்கு மான்னியம்மாகத் திருவுள்ளம் பற்றின திருமுகப்படியிலே அனுபவித்து வந்த தென்கரை திருவிடை ஆட்டம் (பா)ண்ட மங்கலத்து இராஜவிபாடன் நிலம் இருவேலியும் நாளது பெருமாளுக்கு விண்ணப்பஞ் செய்து தந்வந்தரி எம்பெருமானுக்கு திருவிடை ஆட்டமாக ஸமர்ப்பிக்கையில் இந்த நிலம் இருவேலியும் தந்வந்தரி எம்பெருமானுக்கு திருவாராதநக் கட்டளைக்கும் குடினீர் அமுதுக்கும் கருடவாஹன பட்டர் அதிஷ்டானம் ஆக புத்ர பௌத்ர பரம்பரையாக ஆசாஞ்ரார்க்கு ஸ்தாயி ஆக நடத்தக் கடவதாவும் இந்த தர்ம்மத்துக்கு அஹிதம் நினைத்தவர்கள் கங்கைக் கரையில் கபிலயை வதைத்தவர்கள் பாபத்திலே போகக் கடவர்களாகவும் ஸுபமஸ்து.
ஆரோக்கிய சாலை – மருத்துவகம்; கொத்து – ஊழியர் தொகுதி; கைங்கர்யம் – அறத்தொண்டு, தர்ம சேவை, இறைத் தொண்டு; பூர்வாள் – முன்னோன்; வாணம் – தீ, வேட்டு; பிலம் – குகை போல் பள்ளம்; சமைப்பித்து – உண்டாக்கி; ஏறிஅருள- எழுந்தருள, பிரதிஷ்டை செய்; குடிநீர் அமுது – மூலிகை நீர், தீர்த்தம்; கட்டளை – கோயில் சிறப்பு நடைமுறை, பூசை ஏற்பாடு; திருமுகம் – ஆணைஓலை; அதிஷ்டானம் – நிலைக்களம், location; ஆசாஞ்சரார் – வந்து போவோர்; ஸ்தாயி – விடுதி; சுபமஸ்து – நன்மையே உண்டாகுக.
விளக்கம்: சக ஆண்டு 1415 (1493 AD) பிரமாதி ஆண்டில் திருவரங்கன் திருவரங்கத்தில் இறந்த காலம் எடுத்த பெருமாள் கூடல் சக்ரவாள நம்பி எனும் உத்தமநம்பி நிர்வகிக்கும் காலத்தில் பட்டர்களின் ஊழியர் குழுவைச் சேர்ந்த ஒருவரான அழகிய மணவாள மங்களாதராயர் மகன் சீறினிவாசன் எனும் ஸ்ரீரங்க கருடவாகன பட்டரின் அறத்தொண்டாக சந்திரன் எனப் பெயரிட்ட தாமரைக் குளத்திற்கு மேற்கே முன்னாளில் போசளன் சோமேசுவரனின் இரண்டாம் மகன் பிரதாப சக்ரவர்த்தியான வீரராமநாதன் ஆட்சிக் காலம் முதல் இவருடைய முன்னோன் கருடவாகன பட்டர் வழிவந்தோர் நடத்தி வந்த மருத்துவகம் பின்னாளில் தீக்கோளினால் பள்ளமாகி அழிந்தது. இப்பொழுது மீண்டும் இந்த ஸ்ரீரங்க கருடவாகன பட்டர் ஒரு மருத்துவகத்தை உண்டாக்கி அதில் தந்வந்தரி பெருமானை எழுந்தருளச் செய்து நாள்தோறும் பெருமாளுக்கு மஞ்சனநீரை உருவாக்குகிற கோயில் நடைமுறைக்கும், தந்வந்தரி பெருமான் பூசையை நடத்துவதற்கும், முன்னாளில் கருடவாகன பட்டர் பெருமாளுக்கு ரங்கபோஷனை பிரபந்தம் செய்து பெருமாளின் திருவுள்ளத்தை மகிழ்வித்து பிரசாதமாக, பல்லக்கு மானியமாக கொடுத்தாற் போல இறைவன் உள்ளத்தை பிடித்த போது கிடைத்த ஆணையால் தான் அனுபவித்து வந்த தென்கரையில் அமைந்த வைணவக் கோயில் மானிய நிலம் உள்ள பாண்ட மங்கலத்து இராசவிபாடன் நிலம் இரண்டு வேலியை இன்று பெருமாளுக்கு வேண்டுதல் வைத்து தந்வந்தரி பெருமானுக்கு திருவிடையாட்டமாக விட்டார். இந்நிலம் இரண்டு வேலியைக் கொண்டு தந்வந்தரி பெருமானின் பூசை நடைமுறைக்கும், தீர்த்தத்திற்கும், கருடவாகன பட்டர் நிலையென அறியப்பட்டு அவர் பிள்ளை, பேரப்பிள்ளை பரம்பரையோர் மற்றும் வந்துபோவோர்க்கு தங்கும் விடுதியாக நடத்திச் செல்லவேண்டும். இந்த அறத்தை அழிக்க நினைப்போர் கங்கைக் கரையில் காராம் பசுவைக் கொன்றவர் அடைந்த பாவத்தை அடைவதாகுக. நன்மை உண்டாகட்டும்.
ஸ்ரீரங்க கருடவாகன பட்டர் தொழிலால் அர்ச்சகர் தான் மருத்துவர் அல்லர். ஆனால் மூதாதை கருடவாகன பட்டர் மீது கொண்ட மதிப்பால் மீண்டும் மருத்துவகம் இயங்கச் செய்கிறார். போசளன் வீரராமனாதன் (1253-1295) 3-ம் ஆட்சி ஆண்டில் அவன் படைத் தலைவன் சிங்கதேவ சிங்கண்ணன் ஒரு மருத்துவகத்தை இக்கோயிலில் உண்டாக்கி 1100 வராகன் பொன் கொடுத்து விளைநிலத்தை வாங்க வைத்து அதில் மருத்துவர் கூலி, மருந்து செலவுகளை கவனித்துக் கொள்ள வேண்டும் என்று சொல்கிறான். தனக்கு மருத்துவரும் இந்த மருத்துவகத்தின் தலைவருமான மூதாதை கருடவாகன பட்டருக்கும் பிறருக்கும் தர வேண்டிய கூலி பற்றியும் குறிப்பிடுகிறான். கொடையளிக்கும் வேந்தர் நேரடியாகத் தனது பெயரை குறிப்பிடும் மரபை கடைபிடிக்காததால் படைத்தலைவரை பணித்து இவ்வாறு நன்கொடை வழங்கச் சொல்வதை மரபாகக் கடைபிடித்தனர். பூலாங்குறிச்சி கல்வெட்டு இதற்கு ஒரு சான்று. இச் செய்தி S.I.I. 24 பக்.286-288 எண். 266 ம் கல்வெட்டில் உள்ளது. இரண்டு கருடவாகன பட்டருக்கும் உள்ள கால இடைவெளி 238 ஆண்டுகள் எனத் தெரிகின்றது.
பார்வை நூல்: தென்னிந்தியக் கல்வெட்டுகள் – 24, பக். 352-353 எண். 353
நாமக்கல் மாவட்டம் நாமக்கல் வட்டம் கோட்டை முனியப்பன் கோவில் பரந்த பாறையில் பொறிக்கப்பட்ட இரு கல்வெட்டுகள். முதல் கல்வெட்டு 15 வரியும் இரண்டாம் கல்வெட்டு 8 வரியும் கொண்டவை.
ஸ்வஸ்திஸ்ரீ த்ரிபுவனநச் சக்ரவத்தி கோனேரின்மை கொண்டான் அங்கவைத்யரில் ஸவனந் பா / ரா ஸ்ரீயன் ஆதித்ததேவன் திருவம்பலப் பெருமாளான வைத்யபுரந்தரற்கு வ / ட கொங்கு ஏழூர்நாட்டு வானவன் மாதேவி நான்கெல்லைக்குட்பட்ட நஞ்(சை) புன்செயும் / நத்தமும் நத்தப்பாடும் வாஸ்துவும் வாஸ்துஷேமமு(ம்) குளமும் குளப்பரிப்பும் தோட்டமும் தோ / ட்டக்கூறும் ஆற்றங்காலும் துரவும் காடும் மலையு(ம்) மற்ரு மெப்பெற்பட்ட ஸமஸ்த ப்ரா / ப்திகளிலும் (ப)ழந் தேவதானந் திருவிடையாட்டம் பள்ளிச்சந்தம் பட்டர் களிறையி(லி) நீ / க்கியுள்ள ஸம(ஸ்த ப்ரா)ப்திகளும் எட்டாவது புரட்டாதி மாதமுதல் உதகப்பூர்வ்வ தர்மதாந இரையிலியா / கத் தந்தோம். இத்தால் வரும் கடமை, பொந் வரி, கற்பூர வினியோகம், மரவடை, புன் பயிர், தறி இறை,செக்கிறை, தட் / டொலி, தட்டார்ப் பாட்டம், ஏர் வரி, இனவரி, இடைவரி, எரிமீன் பாட்டம், காணிக்கை, காத்திகைப்பட்டை நல்லெத்து, / நற்பசுப், பஞ்சு பிலி, ஓலை எழுத்து வினியோகம், வாசல்பேறு, இலாஞ்சினைப்பேறு, வெட்டி ஆள் தேவை, தச்சுத் தே / வை ஆனைச்சாலை, குதிரைப்பந்தி மற்றும் எப்பேர்ப்பட்ட இறைகளும் இன்னாள்முதல் வரியிலார் கணக் / கிலும் கழித்து முன்னுடையாரையும் பழம்பேரையும் முதலறத் தவிர்த்துத் தமக்கு முதலடங்கலும் / இறையிலி ஆகவும் தாநாயமந விக்கிரயங்களுக் குரித்தாகவும் தந்தோம். இப்படிக்கு சந்திராதித்தவற் செல்வதாகக் / கல்லிலும் செம்பிலும் வெட்டிக்கொண்டு அனுபவித்துக் கொள்ளவும் பார்க்க. இவை இலைநல்லூருடையான் / எழுத்து. இவை சுந்தர பாண்டியப் பல்லவராயன் எழுத்து அளவு 16.
ஸ்வஸ்திஸ்ரீ ஏழூர்நாட்டு ஸபையாரும் நாட்டாரும் நகரத்தாரும் நாங்கூர் ஸவர்ண்ணந் / பாராஸ்ரீயன் ஆதித்ததேவன் திருவம்பல பெருமாளான வைத்ய புரந்தரர்க்கு எங்கள் / நாட்டு வானவன்மாதேவி நான்கெல்லைக்குள்பட்ட ஸகல ப்ராப்திகளும் எட்டாவது / புரட்டாதி மாதமுதல் பண்டுடைய்யாரையும் பழம் பேரையும் முதலறத் தவிர்த்து இவ்வூர் ஸகல / ப்ராப்திகளும் தமக்கு உதகபூர்வ்வ தர்ம்மதானமாக ஸர்வ்வ மாந்யமும் இறையிலி ஆகப் பெருமாள் / சுந்தரபாண்டிய தேவர் தந்தருளின திருமுகப்படியே நாங்களும் தமக்கு உதகம் பண்ணி / இறையிலி ஆகத் தந்தோம். இப்படிக்குப் பணியால் நாட்டுக்கணக்குச் (சூரிய) தேவன் / எழுத்து.
அங்கம் – வெட்டுகை, chopping; சவர்ணன் – பெரு மருத்துவன்; பிராப்தி – உரிமை; வைத்தியபுரந்தரன்- மருத்துவரில் இந்திரன் போன்றவன்; திருமுகம் -வேந்தனின் ஆணை.
விளக்கம்: வேந்தன் சுந்தர பாண்டியனின் ஆணைப்படி அவனது எட்டாம் ஆட்சி ஆண்டில் அவனிடம் பணிபுரியும் அறுவை மருத்துவர்களில் ஒருவரான நாங்கூரைச் சேர்ந்த பெருமருத்துவன் பராசர கோத்திரத்தவன் ஆதித்த தேவன் திருவம்பலப் பெருமாளான மருத்துவரில் இந்திரன் போன்றவனுக்கு வடகொங்கின் ஏழூர் நாடான இன்றைய நாமக்கல் நகரமாம் வானவன்மாதேவியில் வைணவ, சைவ, சமண கோவில்களின் கொடைநிலங்கள், பிராமண பட்டர்கள் பெற்றுள்ள இறையிலி நிலங்கள் மற்றும் ஏற்கனவே நிலம் உடையோர், பழைய ஆள்கள் ஆகியோர் பெயரைத் தவிர்த்து பிற எல்லா நிலத்தின் உரிமையையும் தர்ம தானம் செய்யத்தக்க இறையிலியாக நீரட்டித் தந்தோம். இந்த நிலங்களில் இருந்துவரும் எல்லா வகை வரிகளும் அரசருக்கு தரவேண்டாத இறையிலியாக வரியிலார் கணக்கில் கழித்துத் தந்தோம். இதை கல்லிலும் செப்பிலும் வெட்டிக்கொள்க என்று ஊர்சபையாரும், ஊராரும், நகரத்தாரும் ஒப்புக்கொள்ள ஊர்க்கணக்கன் இந்த ஆணையை கையெழுத்திட்டான்.
ஒரு அறுவை மருத்துவனுக்கு ஒரு ஊரும், ஊரின் வரிவருவாயும் இறையிலியாக கொடுக்கப்படுகிறது என்றால் ஆதித்த தேவன் செய்யும் சேவை, தொண்டு மிகப் பெரியதாகவே இருக்க வேண்டும் என்று ஊகிக்க முடிகின்றது. யானைச் சாலை, குதிரைப்பந்தி ஆகிய சொற்களை நோக்க இவ்வூரில் சுந்தர பாண்டியனின் நிலைப் படை (reserve army) நிலை கொண்டிருந்திருக்க வேண்டும் என்று தெரிகின்றது. இந்த படையினருக்கும் படை விலங்குகளுக்கும் போரில், போர்ப் பயிற்சியில் காயமுறும் போது சிதைந்த உறுப்புகளை வெட்டிஅகற்ற, தைக்க ஆதித்த தேவன் அறுவை மருத்துவம் செய்யவேண்டி இருப்பதால் இப்பெருங்கொடை பெற்றான் எனத் தெரிக்கின்றது. பொது மக்களை விட படைப்பிரிவில் தான் அறுவை மருத்துவரின் சேவை அதிகம் தேவை.
பார்வை நூல்: சேலம் நாமக்கல் மாவட்டக் கல்வெட்டுகள், தஞ்சைப் தமிழ்ப் பல்கலை வெளியீடு, ஆசிரியர் அ. கிருஷ்ணன், எண். 250-251, பக். 198-200
மயிலாடுதுறை மாவட்டம் திருவாவடுதுறை கோமுக்தீசுவரர் கோவில் மூன்றாம் திருச்சுற்றில் தென் சுவரில் உள்ள 14 வரிக் கல்வெட்டு.
I III. ஸ்வஸ்திஸ்ரீ [||*] பூமாலைமிடைந்து பொன் மாலைத் [திகழப் பாமாலை] மலிந்த படுமணித்திரள் புயத்திரு நிலமடந்தையொடு ஜயமகள்ளிருப்ப கநவரை மாரவன்தன[ப்பெற்]றுத் திருமகள்ளொடு தநி இருப்ப கலை மகள் சொற்றிறம் புணந்து கற்பினளாகி விருப்பொடு நாவக[த் திருப்ப திசை] தொறும் திகிரி யொடு[ஞ்] செங்கொல் நடப்ப அகில புவனமுழுதுங் கவிப்பதொரு புதுமதி போல வெண்குடை[அடி]மிசை நிழற்றக் கருங்கலி
யொளித்து வந்பிலத்திடைக் கிடப்ப குளத்திடைத் தெலுங்க விமனநடு விலங்கல் மிசை எறவும் கலிங்க பூமியைக் கநன எரிபருகவும் ஐம்படைப் பருவத்து வெம்படை-
2.தாங்கி வேங்கை மண்டலத் தாங்கிநிதிருந்து வடதிசை யடிப்படுத்த[ருளி]… ழமும்… தானமுந்தழைத்து வேதமும் மெய்மை… லைசிறப்ப தநித் தநி சிற[ந்]து வந்தருளி வெற்கரும் பொற்புலி ஆனைபா… … முறைமையில் சூடி மந்நூயிர்க்கெல்லாம் மிந்நுயித்தாய் போலத் தந்நொளி பரப்பித் தநித்து நிபரந்து மண்முழுதுங்கவிப்ப மநு நெறி வளரத் தன் கோயில் கொற்றவாசல்ப் புறத்து மணிநாவொடுங்க முரைசுகள் முழங்க விஜயமும் புகழும் மேல்மேலோங்க செழியர் வெஞ்சுரம் புக சேரலர் கடல் புக வழி தரு சி-
3.ங்கணரஞ்சி கங்கர் திறையிட கந்நடர் வெழ்கிட கொங்கர் பொது… தந்துமககரனெ …றஞ்சி தொல்லை எழுலகுந் தொழுதெழத் தோன்றி முல்லை வா…..சங்கர இமையத்திருந்தெனப் பொருந்தி உடநிருப்பக் கங்கையொப்பாகிய தெரிவயர் திலதந தியாகபதாகை புரிகுழல் மடந்தை புநிதகுணவநிதை திருபுவனமுடையா… வரு திருவிளத்திருள்ள முழுதுமுடையாள் உடநிருப்பச் செம்பொற் வீரஸிம்ஹாஸனத்து முக்கோக்கிழாநடிகளொ
4.டும் விற்றிருந்தருளிய கோப்பரகேசரி பற்மரான த்ரிபுவநச் சக்கிரவத்திகள் ………… ஆவது த 4 நு நாயற்று சுவ……..ரியும் த்ரயோத 3 ஸியும் திங்கட்கிழமையும் பெற்ற மூலத்து நாள் விருதராஜ [பயங்கரவளநாட்டு] மண்ணிநாட்டுப் ப் 3 ரதே 3 யம்விருதராஜபயங்கர சருப்பேதி மங்கலத்து மஹா ஸஹையோம் நம்மூர்த் திருப்பாற்கடலாழ்வார் கோயிலிலே தன்மி செய்து கூட்டங்குறைவறக் கூடி இருந்து உய்யக் கொண்டார் வளநாட்டு திரைமூர்நாட்டு உடையார் திருவாவடுதுறை உடையார் மூலப்ருத்தியராகிய ஆதி சண்டேச் 0 வரவர தேவர்க்-
5.கு நாங்கள் இறையிலி செய்து குடுத்த நிலமாவது இவ்விருத ராஜபயங்கர சதுர்… … குடியில் உய்யக்கொண்டார் … …[சே] நாபதிகள் இளங்கா… … இளங்காரி[க்குடையாந்] சங்கரந் அம்பலங் கோயில் கொண்டாநான அனந்தபாலர் நம்மூர்க் குடிமக்கள் பக்கல் விலை கொண்டுடையராய் இவருதாயிருந்த நிலம் சளுக்கி குலகால வாய்க்காலுக்கு மேற்கும் வடக்கு நின்றும் மூன்றாங் கண்ணாற்று திருவுலகளந்தருளினபடி நீறா 2 ப 1 ம் நாலாங் கண்ணாற்றுத் திருவுலகளந்தருளினபடி நீ2 ப 2 ம் ஐஞ்சாங் கண்ணாற்றுத் திருவுலகளந்தருளினபடி நீ 2 ம .. ஆக திரு
6. வுலகளதெருளினபடி நீ 5 4 ப இந்நிலம் ஐஞ்செய் நாந்மாவரைக்கும் கிழ்பாற்…க்காலுக்கு மேற்க்கும் தென்பாற்கெல்லை ஆறாங்….. ற்கெல்லை திரு….முடையார் த…. நிலத்துக்கும் துவேதை கோமபுரத்துத்து மாதவபட்டந் நிலத்துக்கும் கழுமலவாய் நீரோடு காலுக்குக் கிழக்கும் வடபாற்கெல்லை செந்திறத்து காளிதாஸ பட்டந் நிலத்துக்கும் சேஞலூர்க் கவணியந் திருவரங்கதேவன் சிவந் நிலத்துக்கு தெற்கும் ஆன இவ்விசைந்த பெருநாந்கெல்லையுள் நடுபட்ட திருவுலகளதெருளினபடி நீ …… ஆக நிலம் ஐஞ்செய் நா-
7.ன்மாவரையும் இந்நிலம் … … வாரவும் பெறுவதாகவும் இந்நிலத்துக்கு வந்த … … ரி யெச்சோறு கூற்[றரிசி] வெள்ளாந்வெட்டி வெலா… மற்றும் திருவாசலில் போந்த குடிமை எப்பேர்ப்பட்டதும் செய்ய … … ஸம்மதித்து இந்நிலம் இறையிலி செய்து குடுத்துக் கொள்வதான எம்மிலிசைந்த விலைப் பொருளன்றாடு நற்காசு 425 இக்காசு நாநூற்றிறுபத்தை
8. ஞ்சுங்கொண்டு இந்நிலம் ஐஞ்… … காசு கொள்ளா இறையிலியாக இறையிலி செய்து குடுத்[தோம்] உடையார் திருவாவடுதுறை உடையார் மூலலவரத்துராகிய ஆதிசண்டேச் 0 வர தேவக்கு மஹாஸபை 4 யார் இன்நிலத்தில் உய்யக்கொண்டார் வளநாட்டு திரைமூர்நாட்டு உடையார் திருவாவடுறையுடையார் கோயிலில் சிவலோக நாயகன் திருவாசலின் [முன்பால்ச்] சங்கர தேவந் அறச்சாலை ப் 3 ராஹ்மணர்க்கும் தவஸியற்க்கும் அநாதி கிரிசர்க்கும் வயிஜ்யா சா 0 ஸ்த்ரமும் ப்3ரஹடமும் ச் 0 ரகமும் வ்யாகரணமும் உருபாவதாரமும் படிப்பாக்குச் சோ[றிடவும்] திருநா-
9. ளில் சோறிடவும் மடப்புறமாக இறையிலி செய்த நீ 34 இந்நிலம் முன்றே நா…………டக்குத் திருச்சாக்காட்டுப்பிச்சர் எடுப்பித்த அம்பலங்கோயில் கொண்டான் அனந்தபாலர் மடத்துக்கும் மடப்புறமாக இறையிலி செய்த நீ2 லி இன்நிலம் இருவேலியும் ஆக நீ5 4 பஇ இந்நிலம் ஐஞ்சே நாந்மாவரையு மிகிதிக்குறைவுள்ளடங்க இக்காசுநானூற்று இருபத்தைஞ்சுங் கொண்டு காசுகொள்ளா இறையிலியாகச் சந்த்ராதி 3 த்யவர் சா 0 ச் 0 வதிகமாக.. திகமாகச் செம்பிலுங் கல்லிலும் எழுத்து வெட்டிக் கொள்ளப் பெறுவராக இறையிலி செ-
10.ய்து குடுத்தோம் உடையார் திருவாவடுதுறை யுடையார் முலவ்ருத்யராகிய ஆதி … … … ஸபை 4 யோம்.. இப்படி ஸபை 4 யுள்ளிருந்து பணி[த்தாந்] பிராந்தகர்சீராம பட்டர் பணியாலும் வங்கிப்புறத்துக் கோவிந்த பட்டர் பணியாலும் செந்திறத்து காலாதிர பட்[ட*]ர் பணியாலும் திருக்கடவூர் காச் 0 யபந் ஸ்ரீவைகுந்தன் திருக்கதவ பட்[ட*]ர் பணியாலும் கிராஞ்சிகிள்ளை போந்த திருநம்பிபட்[டர்*]பணியாலும் செந்திறத்து கருணாகர பட்[ட*][ர்*] பணியாலும் ஆபசரிச் சீராம பட்டர் பணியாலும் குண்டுர் முத்த ஸ்ரீபல தேவர் பட்டர் பணியாலும் குண்டூர்த் தாமோதிர பட்டர்
11. பணியாலும் துவேதை கோவிந்த சீராமபட்டர் பணியாலும் நட[லூ]ர் திருச்சிற்ற … … … யாலும் துவேதை கொந்த அக்கிதவ பட்டர் பணியாலும் துவேதை கொதைமாத கொந்த அக்கிதவபட்டர் பணியாலும் துவேதை கோதைமாதவ பட்டர் பணியாலும் குண்டுர் இளய ஸ்ரீவாஸக தேவ பட்டர் பணியாலும் சாந்தூர் திருநம்பி பட்டர் பணியாலும் சிராஞ்சி ஸ்ரீதின் காபோந்த இளைய திருநம்பி பட்டர் பணியாலும் காரம்பிச் சேட்டு இளைய நாராயண பட்டர் பணியாலும் பணிப்பணியால் பணிகேட்டு இவ்விறையிலிப் பிராமணம் எழுதிநேன் இவ்வூர்
கரணத்தான் கஞ்சனூருடையாந் சக்கர-
12. க்கைய்யன் சிரீளங்கோவிநேன். இவை என்நெழுத்து இப்படிக்கு இவை … …நெழுத்து இப்படிக்கு இவைகுண்டூர் ஸ்ரீவாஸுதேவ பட்டநெழுத்து. இப்படிக்கு இவை இப்படிக்கு இவை சி….தை கோமபுறத்து நாராயணபட்டன் நெழுத்து. இப்படிக்கு இவை திருக்கடவூர் காசிபன் ஸ்ரீவைய்குந்தம் திருக்கதவபட்டநேன், இவை என்நெழுத்து. இப்படிக்கு இவை குண்டுர் ஸ்ரீ வாஸுதெவபட்டன் நெழுத்து. இப்படிக்கு இவை நடாதூர்த் திரிச் சிற்றம்பல பட்டன் நெழுத்து. இப்படிக்கு அறிவேந் துவேதை கோமபுறத்து…..ம பட்டநேன். இப்படிக்கு
13. இவை துவேதை கோமபுறத்து அங்ஙிதவபட்டநேந். இப்படிக்கு அறிவேன் வங்கி … … றத்து தாமோதிரபட்டந் ஸயிஞ்ஞையாதமைக்கு
14. [இவை] கருவூருடையாந்நெழுத்து. இப்படிக்கு கிராஞ்சி இளைய திருநம்பிபட்ட … … … மோதிர பட்டநெழுத்து. இது நடாதூர் சீராம பட்டர் ஸயிஞ்ஞையாதாமைக்கு இவை கருவூருடையாந் எழுத்து. செந்திறத்து காளாதிருபட்டர் ஸ்யிஞ்ஞையாதாமைக்கு துவேதை கோமபுறத்து சீராமபட்டநெழுத்து||-
விளக்கம்: விக்கிரம சோழனின் மெய்க்கீர்த்தி முதல் மூன்று வரிகளில் இடம்பெறுகிறது. விக்கிரம சோழனின் 3 ம் ஆட்சி ஆண்டில் விருதராஜபயங்கர சருப்பேதி மங்கலத்து ஊர் சபையர் அவ்வூர் திருப்பாற்கடலாழ்வார் கோயிலில் கூடி இருந்து உய்யக் கொண்டார் வளநாட்டு திரைமூர்நாட்டு உடையார் திருவாவடுதுறை உடையார் மூலவரான ஆதி சண்டேச்வர தேவர்க்கு இறையிலி செய்து கொடுத்த நிலமாவது, “உய்யக் கொண்டார் வளநாட்டு சேனாபதி இளங்காரிக்குடியான் சங்கரன் அம்பலன் கோயில்கொண்டான் ஆன அனந்தபாலன் முன்னம் இவ்வூர் குடிமக்களிடம் வாங்கியிருந்த 5 செய் 4 மாவரை நிலத்தின் நான்கு எல்லைகள் குறிக்கப்படுகின்றன. இந்நிலத்திற்கான வரியை நீக்கி இறையிலியாக்கி அதற்கு விலையாக அன்றாட்டு நற்காசு 425 பெற்றுக்கொள்ளப்பட்டது. இனி இந்நிலத்தில் வரும் வருவாயைக் கொண்டு திருவாவடுதுறை இறைவன் கோயிலில் சிவலோக நாயகன் திருவாசலின் முன்புள்ள சங்கர தேவன் அறச்சாலை பிராமணருக்கும், தவசியருக்கும், அநாதி கிரிசர்க்கும் (கவனிப்பாரற்ற இழிந்தோர்), இவர் தவிர வைத்திய சாஸ்திரமும் பிரகடமும் சரகமும் இலக்கணமும் உருபாவதாரமும் படிக்கும் மருத்துவ மாணவருக்குச் சோறிடவும், இதுதவிர திருநாளில் சோறிடவும் மடப்புறமாக இறையிலி நிலம் மூன்றே நாலுமா நிலம் கொடுக்கப்பட்டது. இந்நிலம் முன்றே நாலுமாவொடு திருச்சாக்காட்டுப் பிச்சர் எடுப்பித்த அம்பலங்கோயில் கொண்டான் அனந்தபாலர் மடத்துக்கும் மடப்புறமாக இறையிலி செய்த நிலம் 2 வேலி. இந்நிலம் இருவேலியும் சேர்த்து ஆக நிலம் 5 செய் 4 மாவரை ஆகும். இந்நிலம் ஐஞ்சே நாந் மாவரையும் மிகுதிக் குறைவுள்ளடங்க அன்றாட்டு காசு நானூற்று இருபத்தை பெற்றுக் கொண்டு காசுகொள்ளா இறையிலியாகவே நிலவும் ஞாயிறும் உள்ள அளவும் நிலைப்பதாக செம்பிலும் கல்லிலும் எழுத்து வெட்டிக் கொள்க” என்று பலர் கையொப்பமிட்டது குறிக்கப்பட்டுள்ளது. ஆக அனந்தபாலர் தந்த கொடை சோறிடுவதற்கும் அனந்தபாலர் மடத்திற்குமாக இரண்டு பகுப்பாக பிரிக்கப்பட்டுள்ளது. இறையிலிக்கு இழப்பீடாக 425 அன்றாட்டு நற்காசு பெறப்பட்டது ஏன் என்றால் சில ஆண்டுகளுக்கான வரி வருவாயை முன்கூட்டியே பெற்று அதற்கு வட்டி கணக்கிட்டால் வரிவருவாய் இழப்பு ஈடு செய்யப்பட்டதாகிறது.
பிரகடம், சரகம், உருபாவதாரம் ஆகியன ஆயுர்வேத மருத்துவ நூல்கள் ஆகும். இதன் மூலம் திருவாவடுதுறையின் இக்கோவிலில் ஒரு ஆயுர்வேத மருத்துவமனையும் மருத்துவக் கல்விக்கூடமும் இயங்கிய செய்தி புலனாகிறது.
பார்வை நூல்: Annual report of Indian epigraphy 159 of 1925.
இக்கல்வெட்டின் மைப்படியை தந்த இந்தியத் தொல்லியல் அளவீட்டுத் துறையின் மைசூர்க் கிளை தொல்லெழுத் துறைக்கும், கல்வெட்டை படித்து சரிபார்த்துத் தந்த திரு. இராஜகோபால் சுப்பையாவிற்கும் நன்றிகள் பல.