செண்பக ஜெகதீசன்

குறளின் கதிர்களாய்...(338)

மனத்தி னமையா தவரை யெனைத்தொன்றுஞ்
சொல்லினால் தேறற்பாற் றன்று.

– திருக்குறள் – 825 (கூடா நட்பு)

புதுக் கவிதையில்...

மனதினால் நம்மோடு
ஒன்றி அமையாத
ஒருவரை,
அவர் சொல்லும்
சொற்களை வைத்து
யாதொரு செயலிலும்
தேர்ந்து தெளிதல்
முறையானதல்ல…!

குறும்பாவில்...

மனதால் ஒன்றா ஒருவரை
அவர்பேசும் பேச்சை வைத்துச் செயலெதிலும்
தேர்ந்து தெளிதல் முறையன்று…!

மரபுக் கவிதையில்...

மனதது பொருந்த வரும்நட்பே
மன்னும் என்றும் வாழ்வினிலே,
நினைவில் கொண்டிடு மனமொன்றாய்
நெருங்கா நிலையில் ஒருவர்தன்
இனிதாய்ப் பேசிடும் பேச்சினிலே
ஈர்ப்பது கொண்டே அதைநம்பி
இனியவர் செயலில் தேர்ந்துதெளிதல்
இன்னா தருவதால் முறையிலையே…!

லிமரைக்கூ..

மனம்பொருந்தல் நட்பில் நிறை,
அதிலாதொருவர் பேச்சால் செயலில் தேர்ந்தெடுத்தல்
ஆக்கமிலாததால் ஆகாது முறை…!

கிராமிய பாணியில்...

பொருந்தணும் பொருந்தணும்
மனமது பொருந்தணும்,
நல்ல நட்புக்கு
மனமது பொருந்திவரணும்..

நண்பனத் தேர்தெடுக்கையில
மனசு பொருந்தி வராதபோது
ஒருவன
அவன் பேச்சமட்டும் வச்சி
அவன நம்பிச்
செயல்படத் தேர்ந்தெடுத்தா
அது மொறயே இல்ல,
கெடுதல்தான் வரும்..

அதால
பொருந்தணும் பொருந்தணும்
மனமது பொருந்தணும்,
நல்ல நட்புக்கு
மனமது பொருந்திவரணும்…!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.