கல்வெட்டு வெளிப்படுத்தும் வரலாற்று உண்மை

1
1

சேசாத்திரி ஸ்ரீதரன்

தமிழகத்தில் சற்றொப்ப 60,000 கல்வெட்டுகள் உள்ளதாக அறியப்பட்டாலும் அவற்றின் பொருள் அறிந்து படிப்பவர் மிகக் குறைவு, தொல்லியலார் தவிர. அதனால் கல்வெட்டு தெரிவிக்கும் சமூக, வரலாற்று செய்திகளை இக்கால மக்கள் அறிய முடியாமல் போகிறது. அந்த குறையை போக்க தமிழ் பிராமி கல்வெட்டு 103 ம், இடைக்கால கல்வெட்டு 70 – 80 வரைக்கும் விளக்கம் அளித்துள்ளேன். இது அதில் ஒரு பகுதி. முதலில் கொடுக்கப்பட்டுள்ள விளக்கத்தை படித்துவிட்டு பின் கல்வெட்டு  பாடத்தை படித்தால் நன்றாக புரிந்து கொள்ளலாம்.

வரலாறு அறியாதவர் அரசியல் மேடையிலும் எழுத்திலும் சமூக ஏற்றத் தாழ்விற்கும் வேற்றுமைக்கும் மதம் தான், பிராமணர் தான் காரணம் என்று வெறுக்கத்தக்க முறையில் பொய்யான செய்திகளை பரப்பி மக்களை முட்டாள் ஆக்கிவிட்டுள்ளனர். ஆனால் அதற்கு மாறாகத் தான் கல்வெட்டு தரும் உண்மைச் செய்தி உள்ளது. மன்னராட்சிக் கால ஆட்சியாளர்கள் விருப்பமுள்ள மக்கள் தமது வசதிக்கு தக்கவாறு நல்லது தீயது நிகழ்வுகளை நடத்திக் கொள்ளலாம் என்று பொதுப்பட வைக்காமல் சாதிக்கு தக்கவாறு சலுகைகளையும் உரிமைகளையும் (விருது) வழங்கியதால் பிணக்கு ஏற்பட்டது என்பதை கல்வெட்டுகள் காட்டுகின்றன. மக்கள் தமது முன்னோரின் மெய்யான வரலாற்றை அறிவது மக்களிடம் தன்னம்பிக்கையை வளர்க்கும் மேலும், பெருமை உணர்வை ஊட்டும். ஆனால் இன்று வரலாற்றை ஆய்வோர் தமது சாதி ஆண்ட பாரம்பரையா இல்லையா என்பதை நிறுவுவதற்கே கல்வெட்டை துழாவுகின்றனர் உண்மையை அறிவதற்கு அல்ல. மக்கள் அரசியலாளர் கூறும் பொய் வரலாற்றை புறக்கணித்து கல்வெட்டுச் செய்திகளையே முழுதாக நம்ப வேண்டும். அப்போது தான் பொய்மையும் வெறுப்பும் ஒழியும். இனி கீழே கல்வெட்டு விளக்கத்துடன்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் வட்டம் மருதங்கிணறு கண்மாய் தூண் 10 வரிக் கல்வெட்டு.

  1. சோணாடு வ
  2. ழங்கியருளிய  சு
  3. ந்தர பாண்டி
  4. ய தேவற்கு யாண்டு 7 வது 
  5. வியாகக் கு
  6. டி ஊற் பறையரில் கண
  7. வதி பொதுவ
  8. னான காராண்மை பறையன் 
  9. நாட்டின அ 
  10. ணை (த)றி      

காராண்மை – மழைநீர் சேமிப்பு மேலாண்மை; அணை- நீர்க்கரை; தறி – தூண்.

விளக்கம்:  இக்கல்வெட்டு மாறவர்மன் சுந்தர பாண்டியனின் 7 ஆம் ஆட்சி (பொ.ஆ. 13) ஆண்டில், 1223 இல் வெட்டப்பட்டுள்ளது. ஏரியில் மழைநீர் சேமிப்பு மேற்கொள்ளும் கணவதி பறையன் என்பவன் நீர் அளவை அறியும் பொருட்டு நீர்க்கரையில் தூண் ஒன்றை நாட்டினான் என்பதே செய்தி.

பார்வை நூல்: ஆவணம் 30, 2019, பக். 30

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டம் தா. வேலூரில் உள்ள வேடியப்பன் கோவிலில் உள்ள 10 வரிக் கல்வெட்டு.

ஸ்வஸ்தி ஸ்ரீ / மதிரை கொண்ட கோப்பர  / கேசரி பன்மற்கு யாண்டு பதினைந்தா / வது பராந்தகப் பல்லவரையனாள மீ / கொன்றை நாட்டுப் பெருவேளூர் நாட்டுப் பா  /  லை ஏரியில்லழிவு கண்டு கற்றூம்பி / டுவித்து  அதற்குத் தேவதானமு/ மேரிப்பட்டியு மூர்ப்புறமு / மூராரும் பாலைப் பறையன் சாத்தன்னு  /  மு(மா)க அட்டினார் . இது வழியப்பண்ணி / ணவர்  நரகத்துக்குக் கீழா நரகம் புகுவார்.

அழிவு – உடைப்பு; கல் தூம்பு – கல்லில்ஆன மதக்குத் துளை; இடுவித்து – அமைத்து; தேவதானம் – கோவிலுக்கு கொடையாக கொடுத்த நிலம்; ஏரிப்பட்டி – ஏரியைப் பேண விட்ட நிலம்; ஊர்ப்புறம் – வெட்டவெளி நிலம்;

விளக்கம்:  இக்கல்வெட்டு முதலாம் பராந்தக சோழனின் 15 ஆம் ஆட்சி ஆண்டில், 922 இல் பராந்தகப் பல்லவரையன் ஆளும் போது மீகொன்றை நாட்டின் பெருவேளூர் நாட்டுப் பிரிவில் அடங்கிய பாலை ஊர் ஏரியில் உடைப்பு ஏற்பட்ட போது அதற்கு கல்லில் மதகுத் துளை அமைத்து அதற்கு கொடையாக அங்கத்து கோவிலுக்கு நிலம், ஏரி பேண நிலம், வெட்ட வெளி நிலம் ஆகியவற்றை ஊராரும் பாலை ஊர் பறையன் சாத்தனும் நீர்வார்த்துக் கொடுத்தனர். இதை அழிப்பவர் நரகம் புகுவார் என்று சபித்து முடிகிறது கல்வெட்டு. இந்த மதகுத் துளை கட்டுமானத்தில் பறையன் சாத்தன் பங்கு அதிகம் இருக்க வேண்டும் என்பதை அவன் பெயர் குறிப்பு காட்டுகிறது. அவனிடம் நன்கொடை அளிக்கும் அளவுக்கு சொந்தமாக நிலம் இருந்துள்ளது. அவர்ணரான பறையரிடமே நிலம் இருந்தது என்றால் நாலாம் வர்ண சூத்திரரிடமும் நிலம் இருந்திருக்க வேண்டும் அல்லோ!!!!  ஆனால் மனுஸ்மிருதி சொல்வதை மட்டுமே கருத்தில் கொண்டு அம்பேத்கர் சூத்திரருக்கு  சொத்து உரிமை இல்லை என்று சொன்னது பொய் அன்றோ?

பார்வை நூல்: ஆவணம் இதழ் 23, 2012    பக். 28

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் வட்டம் ஸ்ரீ வாசிநாதர் கோவில் 3 வரிக்  கல்வெட்டு

கீழைக்குறிச்சி ஊராளிகளில் / அழகன் கோனாட்டுப்  பரைய / ன் ஆதி  தன்மம். 

விளக்கம்:  இக்கல்வெட்டு 16-17 ஆம் நூற்றாண்டினது. வாசிநாதர் கோவில் திருச்சுற்று (பிரகாரம்) வாயிலின் வலது புறம் நடுகல்லாக நடப்பட்டுள்ளது. அதன் ஒரு பக்கத்தில் கழுத்தை தானே வெட்டிக்கொள்ளும் ஒருவருடைய புடைப்புச் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. பின்பக்கம் கல்வெட்டு பொறிப்பு உள்ளது. கீழைக் குறிச்சி ஊரில் வாழும் அழகன் கோனாட்டு பறையன் ஆதி என்பான் தன் தலையை வெட்டி உயிர் பலி செய்ததைத் தான் தர்மம் என்கிறது கல்வெட்டு. எதற்காக தலையை வெட்டிக் கொண்டான் என்ற குறிப்பு மட்டும் அதில்  இல்லை. தனது முதலாளி உடல் நன்றாகும் பொருட்டு இது போல் தலையை வெட்டி உயிர் பலி கொடுக்கும் வழக்கம் பிற கல்வெட்டுகளில் காணப்படுவதில் இருந்து இதை அப்படியாக ஊகிக்கலாம்.

இதில் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய செய்தி என்னவென்றால் ஒரு பறையருடைய நடுகல் கோவில் திருச்சுற்றில் காணப்படுவது தான். தன் தலையை வெட்டிக் கொள்ளும் முன் பறையன் ஆதி கோவிலுள் சென்று சாமி கும்பிட்ட பின் இதை செய்தார் என்றால் 16-17 ஆம் நூற்றாண்டுகளில் பறையர் ஒடுக்கப்படவுமில்லை தீண்டாமைக்கு ஆட்படவுமில்லை என்றல்லவா உறுதி ஆகிறது? பறையர் தீண்டாமை கடந்த 300-350 ஆண்டுகளாக நாயக்கர் ஆட்சியில் ஏற்பட்ட சமூக பிரச்சனை தான். அதற்கு முன் பறையர் கோவிலுள் சென்று சந்தி விளக்கு ஏற்றிய கல்வெட்டு செய்திகள் சில உள. கடந்த 2,000 ஆண்டுகளாக ஒடுக்கப்பட்ட மக்கள் ஊரில், கோவிலில் நுழையவிடாமல் தடுக்கப்பட்டனர் என்ற தலித்திய, திராவிடவியல் பொய் பரப்புரையை கிழித்தெறிவதாக உள்ளதன்றோ இக்கல்வெட்டு?

பார்வை நூல்: ஆவணம் இதழ் 22, 2011 பக்.128

கிருஷ்ணகிரி மாவட்டம் கோடிப்பள்ளி பஞ்சாயத்து குட்டப்பள்ளி கிராமத்தில் உள்ள பெருமாளப்பன் கோவில் அருகே உள்ள 14 வரி சர்வ மானியக் கல்வெட்டு.

சறுவதான்ய வருஷத்து மா / சி மாதம் பதின்னஞ்சாதி புதுப் / பற்று வல்லேரிபள்ளியில் / பறைஆண்டியேன், நாட்டு மாட்டை இராய நாயக்கர் பிடிச்சு போ / கையில் முத்தையூரிலே சென்று தலை / ப்பட்டு பூசலில் இராகுத்தனுட்டு குதி / ரையையூங் குத்தி தானும் பட்டா . இவனுக் /கு சறுவ மானியமாக பெரிய ஏரியி[ல்] / கீழ்ழேரிலே கல்ல_ _ _ தர்  கண்ட / க கழனியும் இருக்கை கொல்லை மு / பட்டிலே விட்டேன் மனைக்கு [மா]ட்டுக்கு / தலைக்கு. இவை சறுவ மானியமாக  விட்டோம். / நம் வர்க்கத்தாரும்  நம் மக்கள் அவன் மக்கள் மானியம். 

புதுப்பற்று – புதிய உரிமை நிலம், புறவு நிலம்; உட்டு – உட்பட; தலைப்பட்டு – தடுத்து நிற்க, தோன்றி; பூசலில் – மீட்பு சண்டையில், skirmish; இராகுத்தன்  – குதிரை வீரன்; பட்டில் – வீராசாவில்;சறுவமானியம் – முழுமையும் வரி நீக்கி; கல்லதர் – பருக்கை கல்லிட்ட சிறுவழி; கண்டக – மண் தடுப்பு; கழனி – போரடிக்கும் களமுள்ள நிலம்;இருக்கை – குடியிருப்பு; கொல்லை – புதர் மண்டிய நிலம்; தலை – தரை.

விளக்கம்:  சர்வதானிய ஆண்டு கி.பி. 1408 இல் மாசி மாதம் 15 ஆம் தேதியில் புதுப்பற்று வல்லேரிப்பள்ளியில் வாழும் பறைஆண்டியேன் நான் சொல்வது யாதெனில், “ஊர் மாட்டை இராய நாயக்கர் கவர்ந்து கொண்டு போன போது இந்த நடுகல் வீரன் அவரது வீரர்களை விரட்டிச் சென்று முத்தையூரில் தடுத்து நிறுத்தி அங்கு ஏற்பட்ட மீட்பு போரில் குதிரைவீரன் உட்பட குதிரையையும் குத்திக் கொன்று தானும் வீர சாவடைந்தான்.  இவனுக்கு முழுவதும் வரி நீக்கி பெரிய ஏரியின் கிழக்கு மேட்டில் தரையிட்ட சிறுவழியொடு மண் தடுப்பு கொண்ட போரடிக்கும் களம் உள்ள வயலும் குடியிருக்கக் கொல்லையும் இந்த வீராசாவிற்காக கொடுத்தேன். இந்த கொல்லையை வீடு கட்டவும், மாடு கட்டவும், வெறும் தரை இடமாகவும் பயன்படுத்தலாம். இதை என் உறவினரும் என் பிள்ளைகளும் அவன் பிள்ளைகளுக்கு அளித்த வரி நீக்கிய நிலம் என்று கருத வேண்டும் என்கிறார்.

இந்த நடுகல் வீரன் பறைஆண்டியின் கட்டளைக்கு கட்டுப்பட்ட  வீரன் என்று தெரிகிறது. அப்படியானால் பறைஆண்டியை ஒரு படைத்தலைவர் என்றே கொள்ள வேண்டும். அதனால் பறைஆண்டியிடம் மிகுந்த சொத்து இருந்ததை அறிய முடிகிறது. ஆகையால் தான் நடுகல் வீரனுக்கு கொடை கொடுக்க முடிந்துள்ளது.

பார்வை நூல்: ஆவணம் 32, 2021 பக். 117 & 118

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் வட்டம் விரையாச்சிலை மேல வயலில் பலகை கல்லில்  உள்ள 13 ஆம் நூற்றாண்டு 5 வரிக்  கல்வெட்டு.

  1. ஸ்வஸ்தி  ஸ்ரீ வதையாத
  2.  கண்டப் பரையன் 
  3. செய்யுங் கிணறும். 
  4. செவ்வலூரார் பேரயர்
  5. கட கண்டன் வயக்கல் 

வதை – கொல், துன்புறு; பேரயர் – படைத்தலைவர்; கட – பெரிய, மூத்த; வயக்கல் – எல்லை குறிப்பிட்டு பெயரிட்டு கொடையாக கொடுத்த வயல்.

விளக்கம்:  போரில் கொல்லப்படாமல் தப்பிய கண்டப் பறையன் தான் தப்பிப் பிழைத்தமைக்கு அற உணர்வு மேலிட தனது வயலையும் கிணற்றையும் செவ்வலூராருக்கு கொடையாக கொடுத்தார். எல்லை குறிப்பிட்ட அந்த வயலுக்கு படைத்தலைவன் கட கண்டப் பறையன் வயக்கல் என்று பெயர் சூட்டினர் செவ்வலூரர். வயக்கல் புதுக்கோட்டை, இராமநாதபுரம் வட்டார வழக்குச் சொல்.

கண்டப் பறையன் நன்கொடை வழங்கும் அளவிற்கு சொத்துகள் வைத்திருந்தது ஒன்றும் வியப்பல்ல ஏனெனில் அவன் படைத்தலைவன். அவர்ணரான பறையரே சொத்தும் பதவியும் பெற்றிருப்பது சூத்திரனுக்கு பதவியோ சொத்தோ இருக்கக் கூடாது என்ற அம்பேதுக்கரின் மனுஸ்மிருதி அடிப்படையிலான குற்றச்சாட்டை இக்கல்வெட்டு பொய் ஆக்கி இருக்கிறது அன்றோ?

பார்வை நூல்: ஆவணம் 15, 2004.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டம் வாய்விடாந் தாங்கல் கிராமத்தால் காட்டுப் பகுதியில் உள்ள 27 வரிக் கல்வெட்டு.

ஸ்வஸ்தி ஸ்ரீ  சீறிமனு மகா மண்டலிசுர /  விபாடன் பாஷைக்குத்  தப்புவராய கண்டன் / ஸ்ரீ வீர பொக்கண்ண உடையார் குமாரர் ஸ்ரீ கம்பண்ண உடையார்க்கு பிரி / திவி ராச்சியம் பண்ணி அருளா நின்ற சகாற்த்தம் 1290 இதன் / மேல் செல்லா நின்ற பிரமாதி வருஷத்து சி[ம்ஹ] ஞாயிற்று அமரபக்ஷ / த்து  யேகாதெசியும் திங்கட்கிழமையும் பெற்ற புணர்பூசத்து நா / ள் ஜயங்கொண்ட சோழமண்டலத்து ஆடையூர் நாடு கீழ்ப்பற்றில் யணி அ(ண்) ணாமலை உடையார் – – –  யினார் தேவதானம் / வாயுளான் ஏந்தலில் யெல்லையிலே பொன்னப் பரையன் – – – / அணி அண்ணாமலை பரையன் ஏந்தலென்று  நத்தமும் கண்டு குடியும் ஏற்றி ஏரியும் / கண்டு கிணறு ஆழ – – – மான் தனைக் காடு / வெட்டி கழனி – – – பெருவிலையாகக் கொண்டு கணி / – – – அணி அண்ணாமலை உடைய / நயினார் திருப்பணிக்கு குடுத்த – – – நிலத்திலே நூறு குழி இறையிலியாக / கல்லுவெட்டி – – – குடுத்த யேந்தல் – – – நஞ்சை புன்சைக்கு / – – – ற்றுடையான் நிலத்துக்கு கிழக்கு கருங்கடி காட்டு வடக்குவெல்லை /  – – – அரசுடையான் ஏந்தல் பழைய வழிக்குத் தெற்கு – – –  இன்னான்கெல்லைக்கு உள்பட்ட / நஞ்சையும் புன்சையும்  நத்தமும் காணியாட்சியாக தந்த – – – /  யும் அணி – – – யித்துப் போகவும் – – – நஞ்சை புன்சை நிலம் / வெட்டிக் – – – கெல்லை தடுத்தாத கொல்லையும் நத்தமும் வடக்கு பனியம் தொண்டி புஞ்சல்லாக / ன்ற இவன் திருத்திய நத்தமும் ஏந்தலும் / ந – – – புன்சை நாற்பாற்கெல்லையும் /  ஏற்றப் பரிக்கிறமங்களும் தான தன்மங்களும் / உரித்திரத்தக்கதாகவும் பழைய ஏரில் நீர் தான கிணறு / நிலத்துக்கு பாக்கி கொள்ளவும். இப்படிக்கு கல்லு வெட்டிக் கு / டுத்தேன் ஆடை நாயனனேன். இவை நாற்பத்தெண்ணா / யிர நம்பி எழுத்து.

அமரபக்ஷம் – தேய்பிறை; தேவதானம் – கோவிலுக்கு கொடையாக விட்ட நிலம்; ஏந்தல் – உட்கிடை சிற்றூர், பிடாகை, hamlet, தேக்கம்; நத்தம் – வீடு கட்ட விட்ட நிலம்;  தனை காடு –  ; காணியாட்சி – பரம்பரை நில உரிமை; தடுத்தாத  – தட்டி வேலியிடாத; பனியம் தொண்டி – பனியத் தாவரம் வளர்ந்த தோட்டம்; பாக்கி – பகிர்.

விளக்கம்:  இக்கல்வெட்டு விசயநகர வேந்தர் புக்கண்ண ராயரின் மகன் குமார கம்பண்ணரின் வெற்றியை அடுத்து 1368 ஆண்டு பிரமாதி வருடம் சிம்ம ராசி கூடிய ஞாயிற்றுக்கிழமை அன்று தேய்பிறையில் ஏகாதசியும் திங்கட்கிழமையும் கூடிய புனர் பூச நாளில் செயங்கொண்ட சோழ மண்டலத்தில் அடங்கிய ஆடையூர் நாட்டு கிழக்கு வயல் புற ஊரில் இறைவன் அணி அண்ணாமலையார்க்கு நிலக் கொடையாக வாயுளான் சிற்றூர் எல்லையில் வாழும் பொன்னப் பறையன் என்பான் அணி அண்ணாமலைப் பறையன் சிற்றூர் எனப் பெயரிட்டு ஒரு சிற்றூரை ஏற்படுத்தினான். அதில் வீட்டு மனையும் ஏற்படுத்தி மக்களையும் குடியேற்றி அங்கே ஏரியும் எழுப்பி கிணறு ஆழப்படுத்தி காடு வெட்டினான். பெருத்த விலைக்கு வயலை வாங்கி அணி அண்ணாமலை இறைவன் திருப்பணிக்கு கொடையாக கொடுத்த நிலத்தில் நூறு குழியை வரியற்ற நிலமாகக் கொடுத்து கல்வெட்டிக் கொடுத்துள்ளான். இந்த புதிய சிற்றூரின் நஞ்செய் புஞ்செய் ஆகியன _ _ _ ற்றுடையான் நிலத்துக்கு கிழக்கிலும் கருங்கடிக் காட்டை வட எல்லையாகவும் _ _ _  அரசுடையான் ஏந்தலுக்கு போகும் பழைய வழியை தெற்காகவும் உடைய நான்கு எல்லைகளை கொண்டது. இந்த அணி அண்ணாமலைச் சிற்றூரின் நஞ்செய் புஞ்செய் மற்றும் வீட்டு அடிமனை ஆகியவற்றை பரம்பரை நில உரிமையாக அனுபவித்துக் கொள்ளலாம் என்கிறான். இந்த நஞ்சை புஞ்சை நிலத்தை வெட்டி அதற்கு நான்கு எல்லையும் ஏற்படுத்தி தட்டி வேலியிடாத புதர் மண்டிய நிலமும் (கொல்லை) வீட்டு மனையும் கொடுத்தது எப்படியெனில் வடக்கில் பனியம் தோட்டம் புஞ்சல் ஆகியவற்றை அகற்றி இவன் ஏற்படுத்தியதாகும்.  வீட்டு மனையும் ஏரியும் நஞ்சை புஞ்சை நாற்பக்க எல்லையும் தக்க செய்முறைக்கும் தான தர்மங்களும் உரித்தாக்குக என்கிறான். பழைய ஏரியில் அமைந்த நீர் தானக் கிணற்றை நிலத்திற்கும் பகிர்ந்து கொள்க என்று இப்படி வழிகாட்டுநெறியை (பிடிபாடு) தந்தான். இதை நன்கொடையை பற்றி ஆடை நாயன் என்ற ஆசாரி கல்வெட்டில் வடித்தார். இக்கொடை  பெற்றுக்கொள்ளப்பட்டது என்பதற்கு பிராமணர்  நாற்பத்தெண்ணாயிர நம்பி ஒப்புதல் கையெழுத்திட்டார்.

பொன்னப் பறையன் ஒரு சிறு  ஊரையே ஏற்படுத்தி அதில் மக்களை குடியேற்றி ஏரிஎழுப்பி நஞ்சை புஞ்சை நிலங்களை கொடை அளிக்கும் அளவிற்கு பெருஞ் செல்வராக இருந்துள்ளார் என்றால் அவர் ஒரு படைத் தலைவராகவோ அல்லது ஆடையூர் நாட்டின் கீழராகவோ இருந்திருத்தல் வேண்டும். அப்படி எனில் அவர் கல்வி கற்றவராகவும் இருந்திருக்க வேண்டும் என்று தெரிகிறது. படைத்துறை சார்ந்தவர் மேலிடத்திற்கு அவ்வப்போது ஓலை எழுதி அனுப்ப வேண்டும் தனக்கு வந்த மேலிட ஆணை ஓலையை படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். ஆக உயர் படைப் பொறுப்பில்  இருப்பவர் கட்டாயம் கல்வி கற்றவராக இருக்க வேண்டும்.

[சூத்திரன் அறிவைப் பெறக்கூடாது. அவனுக்குக் கல்வி போதிப்பது ஒரு பாவம்; ஒரு குற்றச் செயல். ஒரு சூத்திரன்  சொத்து சேர்க்கக்  கூடாது. ஒரு பிராமணன் அவனது சொத்துக்களை தன் விருப்பப்படி எடுத்துக் கொள்ளலாம். சூத்திரன் அரசாங்க பதவியில்  இருக்கக் கூடாது.  சூத்திரன் கொத்தடிமையாகவே பிறந்தவன்; எப்போதும் கொத்தடிமையாகவே வைக்கப்பட வேண்டியவன்.

(ஆதாரம். சூத்திரர் யார் ? அவர்கள் எவ்வாறு நான்காம் வர்ணத்தவராயினர், ஆசிரியர் டாக்டர். B.R. அம்பேத்கர்)]

அம்பேத்காரின் மேற்கண்ட கூற்றுக்கு இக்கல்வெட்டு சிரிப்பாய் சிரிக்கிறது. ஏனெனில் அதில் உண்மை துளியும் இல்லை.

பார்வை நூல்: ஆவணம் இதழ் 30, 2020  பக். 64-65

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி வட்டம் மதவீர விநாயகர் கோவில் முகப்பு மண்டப நடு உத்திரத்தில் உள்ள 6 வரிக் கல்வெட்டு.

விகுறுதி வருஷம் பங்குனி மாதம் 6 ஆம் தேதி கானனாட்டுப் படை பத்து இலம்பங்குடியில் பள்ளற்கும் பறையற்கும் விருது சண்டையாக காஞ்சிபுரத்துக்குப்  போய் கல்வெட்டுப் பாத்து வந்தபடி காஞ்சிபுர சுவாமி யேகாம்பரரைய்யன்  காமாட்சியம்மன் கோவில் தானம் மாயேசுரர் சகல / குண சம்பன்னரான பல்லவராயன் பண்டாரத்தின் மனிசர் வேங்கடம் நாயக்கர் இலம்பங்குடி ஊரவற்கும் சகல பாக்கியமும் உண்டாக வேனுமென்று ஆதரித்து வரவிட வேண்டின ஆசிறு பாகம். கானனாட்டு படைப்பற்று இலம்பங்குடியில் பறையற்கும் பள்ளற்கும் சண்டை வளக்குத்தாரமாக  முத்திரை மனுசன் திருவம் / பலய்யனையும் கூட்டி பறையன் உலகங்காத்த சாம்பானும் பள்ளன் ஞானிகாத்தானும் வராக்காட்டினா(ர்)கள். அப்படியே சாதனப்படி பறையர் வலங்கையா இருக்கும் பள்ளர் இடங்கையா யிருக்கும். அவடத்திலே / பறையர் வலங்கைக்கு செல்லுகிறதெல்லாம் நடத்தவும் பள்ளர் இடங்கைக்கு செல்லுகிறதெல்லாம் நடத்தவும் . பள்ளனுக்கு தவுலும் சேமக் / கலம் அஞ்சு பந்தக்காலும், பறையற்கு  கொட்டு மேழதாழம்  பறையருட்டுன கோயில் கிடாத்தரம் பறையருட்டுன மொந்தைக் கள்ளு பறையருட்டுன பன்னிரண்டு பந்தகால் பறையருட்டுனே _ _ _ தங்களை ஏகாம்பரய்யன் காமாட்சியம்மன் ஆதரித்துக் கொண்டருளவும் வேணும், ஆசிறுபாகம். / இப்படிக்கு பாண்டிதிராயர்  பச்சைப் பெருமா எளுத்து. இந்தக் கல்வெட்டு விசுவ முத்திக்காத்தவன் எழுத்து.  சதா சேர்வை  

படைப்பற்று – படை வீரர்களின் ஊர் அல்லது நிலம், cantonment; விருது – பட்டம், சிறப்பு சலுகை, உரிமை; தானம் – பொறுப்பு அதிகாரி,  ஸ்தானம்; மாகேசுரர் – அறங்காவலர்; பண்டாரம் -கருவூலக் கணக்கு; (ஆசு + இறு) ஆசிறு பாகம் – குற்றம் நீங்கி பக்குவமடைக;  சதானப்படி/சாசனப்படி – எழுத்துச் சான்றுபடி; சேமக்கலம் – ஒரு தட்டை கட்டையால் அடித்து ஒளி எழுப்புதல்; கிடாத்தரம் – ஆட்டின் தலையாக இருக்கலாம்; சதா சேர்வை – எப்போதும் வணங்கி நிற்கும்.

விளக்கம்:  இது 16 ஆம் நூற்றாண்டில் 1530 அல்லது 1590 இல் விக்ருதி ஆண்டு பங்குனி மாதம் 6 ஆம் தேதி வெட்டப்பட்ட  கல்வெட்டு. கானநாட்டுப் படை ஊரில் வாழும் பறையருக்கும் பள்ளருக்கும் சிறப்பு சலுகை, உரிமை (விருது) காரணமாக பிணக்கு ஏற்பட்டு சண்டை எழுந்தது. அதை தீர்க்க காஞ்சிபுரம் சென்று கல்வெட்டு பார்த்து தெளிந்து வந்தனர். அதை விவரிப்பதே இக்கல்வெட்டு. காஞ்சிபுரம் ஏகாம்பர ஈசுவரன், காமாட்சியம்மன் கோவில்களின் பொறுப்பு அதிகாரி எல்லா குணமும் நிரம்பிய பல்லவராயன் ஆவணக் கருவூல கணக்கர் வேங்கடம் நாயக்கர் இளம்பங்குடி ஊராருக்கு எல்லா நலமும் உண்டாக வேண்டும் என்று ஆசீர்வாத மொழி பேசி வரவழைத்து உமது குற்றம் நீங்கி பக்குவமடைவதாக என வாழ்த்தினார். கானநாட்டுப்  படை ஊர் பறையருக்கும் பள்ளருக்கும் ஏற்பட்ட சண்டை வழக்கு தொடர்பாக முத்திரை மனிதர் திருவம்பலய்யனையும் உடன் அழைத்து வந்து பறையன் உலகங்காத்த சாம்பனையும் பள்ளன் ஞானிகாத்தானையும் ஒருசேர வரவழைத்தார்கள். ஆவண எழுத்தின்படி பறையர் வலங்கையாய் இருப்பர்; பள்ளர் இடங்கையாய் இருப்பர். அப்படியான நிலையில் பறையர் வலங்கைக்கு உண்டானதெல்லாம் நடத்திக் கொள்ளலாம், பள்ளர் இடங்கைக்கு உண்டானதெல்லாம் நடத்திக் கொள்ளலாம். பள்ளர் தவிலும், சேமக்கலனும் முழக்கலாம், ஐந்து பந்தக்கால் நடலாம். பறையருக்கு கொட்டு மேளதாளம், பறையருக்கு உண்டான கோவிலில் பலியிடப்படும் ஆட்டின் தலை, மொந்தைக் கள், 12 பந்தக்கால் நடுதல் ஆகிய உரிமைகளை சலுகைகளை (விருது) அனுபவிக்கலாம் என்று சொல்லி உங்களை ஏகாம்பர ஈசனும் காமாட்சி அம்மனும் ஆசீர்வதித்து அருளவேண்டும், குற்றம் நீங்கி பக்குவமடைக என்று வாழ்த்தி அனுப்பினர். இப்படியாக நடந்து கொள்க என்று பாண்டித்திராயர் பச்சைப் பெருமாள் ஆணை ஓலை தந்தார். இதை விசுவ முத்திகாத்தவன் என்ற ஆசாரி கல்வெட்டாக வடித்தான். எப்போதும் வணங்கி நிற்கும் என முடிகிறது.

பள்ளரும் பறையரும் போரில் ஈடுபட்டதால் தான் அவருக்கென்று தனிப் படைஊர் ஏற்படுத்தி அதில் குடியேற்றும் நடைமுறை இருந்துள்ளது என்பது இக்கல்வெட்டால் உறுதி ஆகிறது. பள்ளரைவிட பறையருக்கு அதிக சலுகையும் உரிமையும் இருந்ததால் அது பிடிக்காத பள்ளர் அதை எதிர்த்தனர், தடுத்தனர். இவ்வாறான பிணக்கு மன்னராட்சியில் அரசர்களின் ஒரு தலைச் சார்பான உரிமை வழங்கல் காரணமாகவே எழுந்தது என்று தெளிவாகிறது. ஆனால் எல்லா சமூக வேற்றுமைக்கும் ஏற்றத் தாழ்விற்கும் இந்து மதம் தான் காரணம், பிராமணர் தான் காரணம் என்று பொய் உரைக்கின்றனரே அறியா மூடர்? உண்மையில் இன்றைய சமூக வேற்றுமை, ஏற்றத் தாழ்விற்கு இந்த ஆட்சியாளர்கள் தான் பொறுப்பு எனில் அவர் வழிவந்த ஆண்ட பரம்பரை, அடக்கி ஆண்டவர், பார் ஆண்டவர், மண் ஆண்டவர் என மார்தட்டிக் கொள்ளும் நிலவுடைமைச் சாதிகளை தானே இன்றைய வேற்றுமைக்கு ஏற்றத் தாழ்விற்கு பொறுப்பாக்க வேண்டும்?

பார்வை நூல்: ஆவணம் இதழ் 15, 2004  பக். 32

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வட்டம் கோவிலூர் சிவன் கோவிலில் உள்ள 3 வரிக் கல்வெட்டு

  1. கோனேரின்மை கொண்டான் தலையூர் நாடு, வெங்கால நாடு, அரைய நாடு, இடைபுளுகி நாடு, வடகரை நாடு, மணலூர் நாடு, தட்டையூர் நாடு, கிழங்கநாடு உள்ளிட்ட பற்றில் கண்மாளர்க்கு பதினஞ்சாவது ஆடி மாதம் முதல் தங்களுக்கு 
  2. நன்மை தீமைக்கு இரட்டைச் சங்கும்  ஊதி பேரிகை யுள்ளிட்டன கொட்டுவித்துக் கொள்ளவும்  தாங்கள் புறப்பட வேண்டும் இடங்களுக்கு பாதரக்ஷை கோர்த்து கொள்ளவும் தாங்கள் வீடுகளுக்கு சாந்திட்டுக் கொள்ளவும் சொன்னோ
  3. ம் இப்படிக்கு இவ்வோலை பிடிபாடாகக் கொண்டு அசந்திராதித்தவத் செல்வதாகத் தங்களுக்கு வேண்டின இடங்களிலே கல்லிலும் செப்பிலும் வெட்டிக் கொள்க.  

பிடிபாடு – வழிகாட்டுநெறி, guidelines; சாந்து – சுண்ணாம்பு அடித்தல்

விளக்கம்:  இக்கல்வெட்டு கொங்கு சோழன் வீர ராசேந்திரனின் 15 ஆம் ஆட்சி ஆண்டில், 1222 இல் வெட்டப்பட்டது. தலையூர் நாடு, வெங்கால நாடு, அரைய நாடு, இடைபுளுகி நாடு, வடகரை நாடு, மணலூர் நாடு, தட்டையூர் நாடு, கிழங்க நாடு ஆகிய நாடுகளில் வாழும் ஐந்து தொழில் கம்மாளர்கள் தமது வீட்டு நல்லது, கேட்டது நிகழ்ச்சிகளுக்கு இதற்கு முன் இல்லாத உரிமையான (விருது) இரட்டை சங்கு ஊதுதல், பேரிகை கொட்டுதல் ஆகிய உரிமைகள் (privileges) ஆடி மாதம் முதல் வழங்கப்பட்டதுடன் வெளியே ஊர் செல்லும் போது கால்களில் செருப்பு அணியும் உரிமையும் தரப்பட்டது.  தமது வீடுகளுக்கு சுண்ணாம்பு சாந்து அடித்துக் கொள்ள அனுமதி இல்லாததை ரத்து செய்து புதிதாக வீர ராசேந்திரன் ஆட்சிக் காலத்தில் அதற்கு  அனுமதி தரப்பட்டது. இந்த ஓலை உரிமையை வழிகாட்டு நெறியாகக் கொண்டு சந்திர சூரியன் நிலைக்கும் காலம் வரை இது செல்வதாக உரிமை  தரப்பட்டது. சுதந்திரமாக மக்கள் தம் விருப்பப்படி, இயலுமைப்படி வாழ முடியாமல் சமூக ஏற்றத் தாழ்வுடன்  வாழ்க்கை வாழ்ந்ததற்கு ஆட்சியாளர்களே முழுக் காரணம் என்பதை இக்கல்வெட்டு தெள்ளத் தெளிவாக காட்டுகிறது. ஆனால் இந்து மதம், பிராமணர் தான் சம உரிமை மறுப்பிற்கு காரணம் என்று அரசியல் மேடையிலும் எழுத்திலும் பொய் பரப்பப்படுவது நோக்குக.

பார்வை நூல்: ஆவணம் இதழ் 19, 2008, பக். 8

விழுப்புரம் மாவட்டம் திருவாமாத்தூர் அபிராமீசுரர் கோயில் இரண்டாம் திருச்சுற்று திருகு சுவரில் உள்ள 11 வரிக் கல்வெட்டு .

பரா(ப)வ ஆண்டு புரட்டாசி மாதம் 3 நாள் ஸ்ரீ மன் மகா மண்டலேசுரன்  சதாசிவ தேவ மகாராயர்  காரியத்துக்கு கத்தரான நாயகர் / சூரப்ப நாயக்கரய்யன் பார்வத்தம்மான திருவதி ராச்சி(ய)த்தில் கைக்கோளர் பூறுவத்தில் / திருவதி வில்லியநல்லூர் பூறுவத்தில் கல்வெட்டை நா(ட்)டில்  இலை வாணியர் அழிக்கயில் / எங்களை அவதாரமும் கொண்டு எங்கள் விருது பகடை ஒழிய / நாங்கள் இல்லாத விருது சொல்ல கடவோம்  அல்லாகவும் சொன்னதே / உண்டானால் ஆயக்கனையும்பட்டு ஆயிரத்து அஞ்நூறு பொன் இறுக்க (க)டவோம்  ஆக /  வும் . இப்படி சம்மதித்து கல்வெட்டி குடுத்தோம் நாட்டு கைக்கோள(ர்)க்கு  / நாட்டில் இலை வாணியர்  _ _ _ .  இப்படிக்கு கல்வெட்டு திருவதி சிராபட்ட ஆசாரி . இப்படி அறிவோம் ஆண்ட நாயக்க பட்டர்  / திருவதி சந்திரன்.  

பூர்வம் – முன்னொரு காலம்; திருவதி – சிறப்பு அடைமொழி, ஊர்ப்பெயர்; அவதாரம் -கீழ்மைப்படுத்தி;  விருது – பட்டம், சிறப்பு சலுகை உரிமை; பகடை – பெருமை என்னும் பக(ட்)டு, ஆயக்கன் – வரி, தண்டனை ; இறுக்க – கட்ட, பொன் – வெள்ளிக் காசு.

விளக்கம்:  இக்கல்வெட்டு விசயநகர வேந்தர் சதாசிவ தேவ மகாராயரின் ஆட்சியில் பிரபவ ஆண்டு 1547 இல் புரட்டாசி மாதம் 3 ஆம் நாளில் வெட்டப்பட்டது. சதாசிவ தேவ மகாராயரின் செயல் அலுவலர் சூரப்ப நாயக்கரய்யன் மேற்பார்வையில் உள்ள திருவதி ராச்சியத்தில் கைக்கோளர் (செங்குந்தர்) முன்னொரு காலத்தில் அவர் வாழ்ந்த வில்லியநல்லூரில் முன்னொரு காலத்தில் அவ்வூரில் இருந்த கல்வெட்டை இலை வாணியர் அழித்து, எம்மை தரக்குறைவாகத் திட்டி, எமது சலுகை, உரிமை, பெருமை அழிய “நாங்கள் இல்லாத சலுகையை உரிமையை (விருது) கொண்டாடுவதாகவும் குற்றம் சாட்டினர். அப்படி அல்லாமல் நாங்கள் சொன்னதே உண்மையாகுமானால் தண்டனைப்பட்டு அதற்கு 1,500 வெள்ளி காசு கட்டுவோம்” என்று இலை வாணியர் ஊர் கைக்கோளர்க்கு கல்வெட்டு பொறிக்க ஒப்புதல் கொடுத்தனர். இதை கல்லில் வெட்டியவர் திருவதி வாழ் சிராபட்ட  ஆசாரி. இதற்கு திருவதி வாழ் ஆண்ட நாயக்க பட்டர் சந்திரன் சாட்சியாக ஒப்பம் இட்டார்.

கைக்கோளருக்கு இருந்த சலுகையும் உரிமையும் தமக்கு இல்லாமையால் தான் பொறாமை கொண்ட இலை வாணியர் சிலர் வில்லியநல்லூர் கைக்கோளர் கல்வெட்டை முன்பு சிதைத்துவிட்டார். இது கடந்த கால மன்னர்கள் சமத்துவப்  பார்வை இன்றி செய்த செயலின் எதிர்வினை ஆகும். ஏனெனில் கைக்கோளர், சேனைக்கு கடையார், வாணியர் என்போர் முன்பு போர்த் தொழில் செய்யும் பட்டடைக் குடியாக, இதாவது போர்க் குடியாக இருந்தவர். இரண்டாம்  குலோத்துங்கன் ஆட்சியில் பெரிய புராணம் தொகுக்கப் பெற்று அதனால் ஏற்பட்ட சைவ சமய எழுச்சியால் இந்த போர்க் குடிகளுக்கு போர்த் தொழில் கொலைத்தொழில் என்று கருத்தேற்றப்பட்டு அதை விட்டு நீங்க வணிகத் தொழில் உரிமை வழங்கப்பட்டது. அதன்படி கைக்கோளர் தறித் துணி விற்கவும், வாணியர் வெற்றிலை,கயிறு விற்கவும், சேனைக் கடையார் செக்கு எண்ணெய் விற்கவும் உரிமை தரப்பட்டது. அதன் விளைவு போர் புரியும் குடிகள் வெகுவாக குறைந்ததால் சோழப் பேரரசு அடுத்த ஒரே நூற்றாண்டில் விழுந்தது. அதுமுதல் தமிழகம் 650 ஆண்டுகளாக அயலவர் ஆட்சிக்கு அடிமைப்பட்டது. இன்று வரை அதிலிருந்து மீளவே இல்லை. வந்தேறிய அயலவர் விளைநிலத்தை கவர்ந்து கொண்டனர் அதனால் தமிழர் வாழ்வுரிமை இழந்து ஒடுக்கப்பட்டனர். இது சைவர் தமிழகத்திற்கு ஆற்றிய திருத்தொண்டு என்று நகையாட்டாக சொல்ல வேண்டியுள்ளது.

பார்வை நூல்: விழுப்புரம் மாவட்ட கல்வெட்டுகள் தொகுதி III, பக். 191&192, தமிழ்நாடு தொல்லியல் துறை வெளியீடு.

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் வட்டம் அரமலை ஊர் பாறை 4 வரிக் கல்வெட்டு

  1. சாகாத்தம் 1469 மேல் செல்லா நின்ற ஆனந்த வருஷம் சித்திரை 5 நாள் அரச மீகாமன் நிலை ஊராக அ
  2. மைந்த  ஊரவரோம் . மேற்படியூர் வலவற்கு நின்றையும் இட்டபடிக்கு சவம் அடக்கிறதும் துறை ஆற்றுகிறதும் 
  3. மியானக் கரைக்கு சுழுந்து இடவேண்டாம் என்று சட்டன் இட்டுக்குடுத்தபடிக்கு அரச மீகா
  4. மன் நிலை ஊரவர் சொற்படிக்கு வாழைக்குறிச்சி தொண்டைமானார் _ _ _ பெருமாள் எழுத்து.

மீகாமன் – கப்பல் செலுத்துபவன், படையை வழிநடத்துபவன், guide; நிலை – தங்குமிடம்; வலவர் – முத்தரைய வலைஞர், மீனவர்; நின்றை – தீர்மானம், நிலையான அறிவுறுத்தல், standing instruction; துறைஆற்று – இடம் ஏற்பாடு செய்தல், proper  arrangement; சுழுந்து – சுளுந்து எனும் பிணஎரி விறகு  மேடை,சட்டன்  – சட்டம்.

விளக்கம்:  இக்கல்வெட்டு 1547 இல் நாயக்கர் ஆட்சி காலத்தில் சித்திரை 5 ஆம் நாள் வெட்டப்பட்டது. “அரச படையை  வழிநடுத்துபவன் நிலைத்து தங்கும் அரமலை ஊரவரோம்; இவ்வூரில் வாழும் முத்தரைய மீனவர்க்கு நிலையான அறிவுறுத்தல் வைத்தது யாதெனில் இவ்வூரில் பிணஅடக்கம், அதற்கான இட ஏற்பாடு, பிண எரிமேடைக்கு விறகு இடுதல் ஆகிய மூன்று வேலைகளை செய்யக்கூடாது” என்ற கட்டளையை சட்டமாக ஆக்கி வாழைக்குறிச்சி தொண்டைமான் _ _ பெருமாள் அரச படையை வழிநடுத்துபவன் நிலைத்து தங்குகின்ற அரமலை ஊரார் கேட்டுக் கொண்டபடி ஆணை ஓலையை எழுதிக் கொடுத்தார்.

மீனவ முத்தரையர் சிலர் பிழைப்பிற்கு வேறு வழியின்றி இடுகாட்டில் பிணம் கையாளும் தொழிலை மேற் கொள்ளத் தொடங்கினர். இத்தொழிலின் இழிவு கருதி இதனால் வரும் குல இழிவு கருதி அதே மீனவ வகுப்பினர் இந்த இழிவை முளையிலேயே கிள்ளி எறியும் பொருட்டு நாடாளும் வாழைக்குறிச்சி தொண்டைமானிடம் தடை சட்டம் பெற்றது ஒரு வகைஒடுக்குமுறை ஆகும். இதே போன்ற தடை ஆணை, கட்டுப்பாடு மூலம் தான் இன்றைய ஒடுக்கப்பட்ட, தீண்டாமை சாதிகள் 17 ஆம் நூற்றாண்டில் உருவாயின. அதற்கு முன் அவர்கள் படை வீரர்கள்.

பார்வை நூல்: ஆவணம் இதழ் 8, 1997, பக். 4

முற்றும் 

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “கல்வெட்டு வெளிப்படுத்தும் வரலாற்று உண்மை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.