இறந்த மன்னனோடு உயிருடன் புதைக்கப்பட்ட எளியோர் கல்வெட்டு

0
image (5)

சேசாத்திரி ஸ்ரீதரன்

பண்டைய கால மன்னர் தம் ஆட்சி, அதிகாரம் நிலைப்பதிலேயே குறியாக இருந்ததால் பொது மக்கள் உரிமைகள், நலன்களை அடியோடு புறந்தள்ளினர். மன்னர்கள் தம் நலன், நம்பிக்கை ஆகியவற்றுக்காக பல சடங்கு, சம்பிரதாயங்களை கடைபிடித்தனர். காட்டாக, சதி என்னும் உடன்கட்டை, உடன் பள்ளிகொள்ளல் என்னும் கீழ்கொண்டி முறையில் எளியோரை உயிர் பலி கொடுத்தல் ஆகியவற்றை இறப்பிற்கு பிற்பட்ட வாழ்க்கை, சொர்க்கம் என்னும் நம்பிக்கையில் செய்தனர். உடன் பள்ளி என்னும் உயிர் பலி பண்டு பல்வேறு நாகரிகங்களில் கடைபிடிக்கப்பட்டது தொல்லியல் ஆய்வுகள் மூலம் அறியப்பட்டுள்ளன. இந்த இறப்பின் பிற்பட்ட வாழ்க்கை, சொர்க்கம் ஆகிய நம்பிக்கைகள் மேலை ஆசியாவில் தோன்றி அங்கிருந்து இங்கு வந்தேறிய வேளிர்களால் இந்தியாவிலும் பரவியதாக கருதலாம். திருவண்ணாமலை தாமரைப் பாக்கத்தில் அக்னீசுவரர் கோவிலில் பாடும் பெண்டிர் மூவர் இறந்த பிருதிகங்க மன்னனுடன் உயிருடன் புதைக்கப்பட்ட செய்தி கூறும் தொடர்புடைய மூன்று கல்வெட்டுகள் உள்ளன. இதே போல மன்னனுடன் எளியோர் புதைக்கப்பட்ட கல்வெட்டுகள் கருநாடகம், ஆந்திரத்தில் கீள்கொண்டி என்ற குறிப்புடன் அறியப்படுவதோடு இதை ஒப்பிடலாம்.

மன்னர்களான கங்கர், நொளம்பர், பிருதிகங்கர், அதியமான், வாணர் போன்றோர் சங்கப் புலவர் கபிலரால்  குறிப்பிடப்படும் 12 வேளிராக கருத இடமுள்ளது. காரணம் இவர்கள் சுமேரிய நாகரிக வழக்கமான இறந்தோருடன் உயிருடன் இருப்பவரை புதைக்கும் வழக்கத்தை கடைபிடித்ததே ஆகும். ஏதோ ஒரு இடத்தில் வழங்கிய வழக்கத்தை தம் முன்னோர் வழக்கமாக தாம் சென்ற இடங்களில் எல்லாம் வழிவழியாக பின்பற்றி இந்நாட்டின் சமூக வழக்கமாவே பரவிடச் செய்துள்ளனர். மன்னர்கள் செய்த சதி என்னும் உடன்கட்டை குற்றத்துக்கு இந்து மதம், சனாதன தர்மம், பிராமணர் தான் காரணம் என்று பழி சுமத்துவது வெறுப்பில் தானே ஒழிய சான்றினால் அல்ல. மனுஸ்மிருதியில் எங்குமே உடன்கட்டை பற்றி கூறப்படவில்லை.   இந்தியாவில் பிராமணர் உள்ளிட்ட பிற பொதுமக்கள் அனைவரும் திறந்தவெளியில் தான் மலம், மூத்திரம் கழித்தனர்.   ஆனால் அரச குடும்பத்தவர் மட்டும் பாதுகாப்பு, அந்தஸ்து கருதி தமக்கென தனியே கழிப்பறை கட்டிக்கொண்டு மலம் கழித்தனர். கழித்த அந்த மலத்தை மனிதரை கொண்டு அகற்றினர். இதை பிற்காலத்தில் நகரங்களில் வாழ்ந்த செல்வர்களும் பின்பற்றினர். இதனால் மலம் அகற்றுவதற்கு என்றே  ஆந்திரத்து ஒடுக்கப்பட்ட சாதியாரை பணிக்கு அமர்த்தினர். ஆனால் இதை சனாதன தர்மம் தான் ஏற்படுத்தியது, பிராமணர் ஏற்படுத்தினர் என்று புனைகின்றனர். ஏன் ஆண்ட பரம்பரை பெருமை பேசுபவரை யாரும் இதற்காக பழிப்பதில்லை? முக்காலமும் உணர்ந்த மகான் பிரபாத்து ரஞ்சன் சர்க்கார், பழனி ஈசுவர பட்டர் போன்றோர் இன்றைய சமூக கேடுகளுக்கு மன்னராட்சியில் அதிகாரத்தில் இருந்த வேந்தர் (emperor), மன்னர் (king),  அரையர் (Duke), கிழார்கள் (knight) தான் முழுக் காரணம் என்கின்றனர். வேந்தனுக்கு கீழ்நிலை ஆட்சியாளர்கள் ஒரே வேந்தன் கீழ் இருந்தும் தமக்கென தனிப்படை பேணி அடுத்த நாட்டை பாவிட போரிட்டு இருநாட்டு மக்களுக்கும் உயிர் சேதம் பொருள் சேதம் ஏற்படுத்தி தம் ஆடம்பர வாழ்விற்கும் படை பேணலுக்கும் மக்கள் மீது பல்வேறு வரிகளை சுமத்தினர் என்பதை கல்வெட்டுகளால் அறிய முடிகிறது.

திருவண்ணாமலை மாவட்டம், தாமரைப்பாக்கம்  அக்னீசுவரர் கோயில் முன்மண்டப கிழக்கு சுவர் மற்றும் அரைத்தூணில் உள்ள 14 வரிக் கல்வெட்டு.

  1. ஸ்வஸ்தி ஸ்ரீ திரிபுவநச் சக்ரவத்திகள் ஸ்ரீ குலோத்துங்க சோழ தேவற்கு யாண்டு 10 வது சோமனான பிருதி 
  2.  கங்கனேன் எங்களய்யர் கூத்தாடுந் தேவரான பிருதிகங்கர் உடன் பள்ளிகொண்ட பாடும் பெண்
  3. டிருக்கும் மனக்கேதம் தீர்த்தமைக்கும் சந்தா[ந சா]மமாக பதினறு சாண் கோலால் விட்ட நிலம்  ஒரு வேலியும்  
  4. வர்கள்  வங்கிசமுள்ளதனையும் செல்வதாக விட்ட நிலத்துக்கு  நம் வங்கிசத்து இதுக்கு இலங்கனம் சொல்லுவா
  5. ர் ‘மதுராந்தக வேளான் கால்கழுவின நீருங் குடிச்சுக் கலச்சோறும்  தின்பாந்‘, கெங்கையிடைக்  குமரியிடைச் செய்
  6. தார்  செய்த பாவங்கள் கொள்வார் . பள்ளமுணோக்கி  கு 406, குமிலி  148, புலையக்கள்  193, கிணற்றின் கீழ்ப்பட்டி 
  7. நூறு உட்கழனியில் தடி 3, சிங்கன் த[டி] 484, சேரியான் பட்டி 190, பொன்
  8. னராயந்  
  9. ண்டில்  84 
  10. சஈத்தி 188
  11. நடு 
  12. வில் கழுவ
  13. ல் வடதலை 
  14. 55

ஐயன் / ஐயர் – தந்தை; பள்ளிகொண்ட – பிணத்தோடு உயிருடன் புதைக்கப்பட்ட; கேதம் / கேது – இழவுத்  துன்பம், துயரம்; சாமம் – இன்மை; வங்கிசம் – வமிசம்; இலங்கனம் – வில்லங்கம், செல்லாது; கால்கழுவின – குண்டிகழுவிய; கலச்சோறு – எச்சிற் கலச் சோறு;

விளக்கம்: மூன்றாம் குலோத்துங்கனின் 10 ஆம் ஆட்சி ஆண்டு கி.பி. 1188 இல் அரசன் (duke) பிருதிகங்க சோமநாதன் இந்த கல்வெட்டை வெட்டினான். இதில் தமது இறந்த தந்தை அரசன் கூத்தாடும் தேவ பிருதிகங்கனுடன் புதைகுழியில் உயிருடன் புதைக்கப்பட்ட பாடும் பெண்டிர் மூவர் குடும்பத்தாருக்கு இழவு வருத்தம் தீர்த்ததற்காகவும், பிள்ளைகள் இன்றி போனதற்காகவும் இழப்பீடாக பதினாறு சாண் கோலால் அளந்து விட்ட நிலம் ஒரு வேலியை இவர்கள் வம்சம் உள்ளவரையில் இவர்கள் உரிமையாக இருக்கும் என்றும்  கொடையாக கொடுத்ததை தன் வம்சத்தார் வில்லங்கம் செய்தால் அவர்கள் “மதுராந்தக வேளான் குண்டி கழுவிய பீத் தண்ணீரை குடித்து எச்சில் கலத்தில் சோறு உண்டவராவார்” என வசை பாடுகிறான். மேலும் கங்கைக்கும் குமரிக்கும் இடையே வாழும் மக்கள் செய்த பாவங்களை கொள்வார் என்று சபிக்கிறான். இந்த ஒரு வேலி தவிர மேலும் நிலம் கொடுத்தானா அல்லது இந்த ஒரு வேலியை வெவ்வேறு இடங்களில் குழி கணக்கில் கொடுத்தனா என்று தெரியவில்லை. கணக்கு முரண்படுவது தான் இதற்கு காரணம். 40 குழி ஒரு சென்டு என்றால்  நூறு சென்டு ஒரு ஏக்கர் என்றால் 6.17 ஏக்கர் கொண்ட ஒரு வேலிக்கு எத்தனை குழி?  ஆனால் மொத்தம் 5000க்கு குறைவான அளவுள்ள குழி கொடுத்துள்ளான் என்று தெரிகிறது. அவை பள்ளமுனோக்கியில் 406, குமுலியில் 148, புலையக்களில் 193, கிணற்றின் கீழ்ப்பட்டியில் 100, உட்கழனியில் தடி 3, சிங்கன் தடியில்  484, சேரியான் பட்டி 190, பொன்னராயன் தண்டில் 84, சஈத்தி 188, நடுவில்கழுவல் வடதலையில் 55 = 1851.

மதுராந்த வேளான் அரசன் சோமநாத பிருதிகங்கனுக்கு அணுக்க செயலன் போலத் தோன்றுகிறது. அதனால் தான் அவனைக்  குறிப்பாகச் சுட்டி அவனுக்கு வந்த அறிவு தன் சொந்தங்களுக்கும் வரட்டும் என்ற  எண்ணத்தில் நாக் கூசும்படியான வசவுச் சொல்லை பயன்படுத்துகிறான். இப்படியான ஆணவப் பேச்சு வசவுச் சொற்கள் 12 ஆம் நூற்றாண்டு முதல் தான் கல்வெட்டுகளில் இடம் பெறத் தொடங்கின. “குதிரைக்கு புல்லிடும் பறையனுக்கு என் மனைவியை மிணாட்டி ஆக்கியவன் ஆவேன்” என்று ஒரு வாணகோ உரைக்கிறான். இப்படியான இழிவழக்கைத் தமிழகத்தில் ஊன்றியவர் தமிழரல்லாத அரசரே ஆவார். இது அவர்கள் தம் கீழ்படிந்த பணியாளர்களை அவ்வப்போது எப்படி நடத்தி இருப்பர் என்பதை நினைக்க அறுவறுப்பாக உள்ளது. இந்த ஆணவப் பேச்சை புனிதமான கோவிலில் கல்வெட்டாய் பொறித்தானே அவன் இறையுணர்வை ஐயப்பட வேண்டியுள்ளது.

பார்வை நூல்: த நா தொ து வெளியீடு, தாமரைப்பாக்கம் கல்வெட்டுகள், பக்கம் 50 – 51. எண்; 27

 

திருவண்ணாமலை மாவட்டம், தாமரைப்பாக்கம் அக்னீசுவரர் கோயில் முன் மண்டபக் கிழக்குச் சுவரில் உள்ள 4 வரிக் கல்வெட்டு.

  1. [ஸ்வஸ்திஸ்ரீ திரிபுவனச் சக்கரவத்திகள் ஸ்ரீ  கொலோத்துங்க சோழ தேவற்கு யாண்டு 10 வது சோமனான பிருதிகங்க[நேந்]
  2. எங்களய்யர்  கூத்தாடுந் தேவரான பிருதிகங்கருடன் பள்ளிகொண்ட ஆடும் ஆழ்வார்க்கும்சதுர நடை
  3. ப்பெருமாள்க்கும்நிறைதவந்  சேதாளுக்கும் சந்தானச் சா[]மாக விட்ட நிலம் பதினறு சாண் கோலா
  4. லே     

விளக்கம்: மூன்றாம் குலோத்துங்கனின் 10 ஆம் ஆட்சி ஆண்டு கி.பி. 1188 இல் அரசன் சோமநாத பிருதிகங்கன் தமது இறந்த தந்தை அரசன் கூத்தாடும் தேவ பிருதிகங்கனோடு சவக்குழியில் உயிருடன் புதைக்கப்பட்ட ஆடும் ஆழ்வார், சதுரநடைப் பெருமாள், நிறைத்தவம் சேதாள் ஆகிய மூன்று பாடும் பெண்களான தேவரடியார் குலப்  பெண்களுக்கு குடும்பத்தில் பிள்ளை இன்றி போனதற்கு இழப்பீடாக விட்ட நிலம் பதினாறு கோலால் அளந்து தரப்பட்டது என்று கூறுகிறான். மேலுள்ள கல்வெட்டில் உயிருடன் இறந்தவர் பெயர் குறிப்பிடாததை இதில் குறிக்கிறான்.

பார்வை நூல்:த நா தொ து வெளியீடு, தாமரைப்பாக்கம் கல்வெட்டுகள் பக்கம்: 52, எண்: 28.

திருவண்ணாமலை மாவட்டம், தாமரைப்பாக்கம் அக்னீசுவரர் கோயில் முன் மண்டபத் தென்புறச் சுவரில் உள்ள 5 வரிக் கல்வெட்டு.

  1. ஸ்வஸ்தி ஸ்ரீ  திரிபுவன சக்கரவத்திகள் ஸ்ரீ குலோத்துங்க சோழ தேவற்கு யாண்டு 10 வது 
  2. ஆடும் ஆழ்வாரும், சதுரநடைப் பெருமாளும், நிறை தவஞ் செய்தாரும் சந்தாந சாமத்தில் உ
  3. டையார் திருவ[ங்]கீசுரமுடைய நாயநார்]க்கு _ _ _  [பாடிசையா]க ஐஞ்சு தேவரடியாற்கு பதிநறு 
  4. சாண் கோலால் ஆயிரங் குழி விட்டேன் சோமநாத தேவனேன். இது விலக்குவாந் கெங்கை இ
  5. டைக் குமரி இடைப் பாவங் கொள்வான்.        

பாடிசை – வருத்த இணக்கம்; விலக்கு – இல்லாது செய்

விளக்கம்: சோழன் மூன்றாம் குலோத்துங்கனின் 10 ஆவது ஆட்சி ஆண்டில் கி.பி 1188 இல் ஆடும் ஆழ்வார், சதுரநடைப்பெருமாள், நிறைதவஞ்சேதாள் ஆகிய மூன்று பாடும் தேவரடியார் குல பெண்களின் வீட்டில் பிள்ளை இல்லாமல் போனதற்காக திருவங்கீசுவரமுடைய நாயனார் கோவில் தேவரடியார் ஐவருக்கு இத்துயர உடன்பாட்டிற்காக பதினாறு சாண் கோலால் ஆயிரம் மேற்பட்ட குழி நிலத்தை பிருதிகங்க அரசன் சோமநாத தேவன் கொடுத்தான். இது இல்லாமல் செய்பவன் கங்கைக்கும் குமரிக்கும் இடையே வாழும் மக்கள் செய்யும் பாவத்தை கொள்வான் என்று நிலம் யாருக்கு கொடுக்கப்பட்டது என்று முந்தைய கல்வெட்டுகளில் கூறாமல் விட்டதை இதில் குறிப்பிடுகிறான். ஆனால் இங்கு அந்த தேவரடியார் ஐவர் பெயரைக் குறிக்கவில்லை. 13 ஆம் நூற்றாண்டில் வேற்று மொழி அரசர்களுக்கு தேவரடியார் என்றால் இளக்காரம் தான் போலும். தமிழ் வேந்தர்கள் செய்ததற்கு மாறாக அல்லவா இது உள்ளது.

பார்வை நூல்: த நா தொ து வெளியீடு, தாமரைப்பாக்கம் கல்வெட்டுகள், பக்கம்: 44 – 45, எண்: 24

மைசூர் மாவட்டம், திருமகூட்லு நரசிபுர வட்டம் தொட்ட ஹூண்டி கிராமத்தின் குளத்தில் இருந்த 24 வரி கல்வெட்டு.

ஸ்வஸ்தி நீதி மார்க்க கொங்குணி வர்ம்ம தர்ம்ம மஹா / ராஜாதி ராஜ  கோவளாபுரவரரேஸ்வர நந்த / கிரிநாத ஸ்ரீமத் பெம்மானடிகள  ஸ்வர்க்கமேற்   / எறுதொட பெம்மானடிகள மனேமகர்த்தி  அக /ரய்யன்  நீதி மார்க்க பெம்மனடிகே கீள்குண்டேயாதம்  பெம்ம / னடிகள ஸுபுத்ர ஸத்யவாக்ய  பெமானடிகள் குண்ட கல்லின பக்கதல்லி  / ரிதிய / கல்நாடு / கொட்டது  க  / ப்பஹள்ளி  / பரிஹார / இதனரிம்   /தோ வாராணா  / சிய வரி / தம்  / இதக்கெ  கம்ம / ளி  நகெயர / ல்ல கும்மண்ட / கதங்கே ஸிகே  /  துவஸ்தரு கு / ளவேடம / ண்டு இதனசிதோம பா / தகன்   

விளக்கம்: மேலை கங்க வேந்தன் ஸ்ரீ புருஷனின் மகன் இரணவிக்ரமன் ஆன முதலாம் எரிகங்க நீதிமார்கன் 869 இல் சமணத்தின் சல்லேகனம் என்னும் உடல்மெலிதல் நெறியில் உயிர் துறந்துள்ளான். அவனை கோவளால நகரத்து இருந்து ஆளும் நந்தகிரியின் தலைவன், நீதிமார்க்க கொங்குணிவர்மன், அறங்காக்கும் பேரரசன் என விவரித்து பெருமானடிகள் சொர்க்கம் எய்தினார் என்கிறது கல்வெட்டு. அவரோடு  பெருமானடிகளின் உள்மனைப் பணியாள் (அகம்படி) அகரய்யன் கீழ்க்கொண்டியாகி (பள்ளி கொண்டான் ஆகி) உயிருடன் புதைக்கப்பட்டு இறந்தான். பெருமானடிகளின் மூத்த நன்மகன் சத்யவாக்ய பெருமானடிகளின் நடுகல்லின் பக்கத்தில் அமைந்த கப்பஹள்ளி என்னும் ஊரில் இறையிலி நிலம் (கல்நாடு) கொடுத்தான். இதனை அழித்தோர் வாரணாசியை அழித்தவராவார். இதனை அழித்தோன் பாதகன் ஆவான்.

பார்வை நூல்: Epigraphia Carnatica Vol 3, Part I, Inscriptions in Mysore Dist., page 287 number TN 91.

பெல்லாரி  மாவட்டம் இராயதுர்க வட்டம் கலுகோடு கிராமத்திற்கு தெற்கே உ ள்ள  பலகையில் வெட்டிய 25 வரி கன்னட  கல்வெட்டு.

ஸ்வஸ்தி ஸகரிப ஸகாலாதித்த ஸம் / ம்பத்ஸர ஸதங்களேண்டு நூற தொம்ப / த்தொம்பத்தநய வருஷம் ப்ரவர்த்திஸ / ஸ்வஸ்தி  ஸமதிகத பஞ்ச மஹா ஸ / ப்த பல்லவாந்வய ஸ்ரீ  ப்ருதுவீவ / ல்லப   பல்லவகொலதீலக/ ஸ்ரீமந்  மய்தம்மரஸப்  ப்ரதுவீ ராஜ்யங்கெய்து ப / ரகொரொ ளிர  எறேகங்கய்ய ஸக்க ம்மேறிதொடே களுநேநர / ஸர மகம் மய்தம்ம கீள்கொண்டேயாகி ஸத்தொன்டே காம / ராராதித்ய நந்திகாஸ்ரயநப்ப அய்யப்ப தேவந கொட்டு  / து கல்னாடுரகு வெந்து நெலதநேஸருள்ளின  ஸாஸன / – – – விதுரரி – – – – வா சந்த்ரார்கமிதம் ஸலிப்ரது. இதன / ரிரதோன்  வாரணாசியும் ஸாஸிர  கவிலேயும் ஸாஸி / ர்வ்யர்ப்பார்வ்யரும் ஸாஸிவ்யர்ப்பஸிர்ப் பெண்டிரும்  / ஸாயிர கெறேயு  மனரேதோன லோகக்கே ஸல்கு / அய்யப்ப தேவநக்கர விக்ரமாதித்யநக்கர இயுக ப – – – /  ர அய்யப்ப / சோள ( கொ) / ட்டுது. இத / வ் பெஸகெய்தோ  / க்ரித யுகசோ  / ள  / யிதாசாரி  

ப்ரவர்த்தி – நடக்கையில்; ஸமதிகத – நெருங்கிய; ஸக்க – சொர்க்கம்;  காமர் ஆராதித்ய  – நட்பும் சுற்றமும் போற்றும்; நெலத நேஸரு – நிலவும் சூரியனும்; சந்திரார்கமிதம் – நிலவும் ஞாயிறும் உள்ளளவும்; ஸாஸிர – பரிவுக்குரிய, கருணைக்குரிய, leniency; அக்கர – அக்ஷர, எழுத்து     

விளக்கம்: இக்கல்வெட்டு சக ஆண்டின் காலவரிசை ஆண்டுகளின் நூற்றாண்டு எ(ண்)ட்டு நூற்று தொன்னூற்று ஒன்பதாம் (கி.பி.977) ஆண்டு நடக்கையில். ஐம்பெரும் ஒலியை நெருங்கிய பல்லவர் வழி வந்த திரு பிருதிவி வல்லப பல்லவகுல திலக நோலம்ப பல்லவன் மய்த்தம்மரசன் பருகூரில் இருந்து மண்ணாண்டு கொண்டிருந்த போது எறெகங்கய்ய சொர்க்கம் எய்திய போது களுநெநரசரின் கீழ்நிலைப் படை வீரன் மய்தம்ம என்பவன் கீழ்க் கொண்டியாகி (பள்ளி கொண்டியாகி) இறந்ததால் உற்றார்  போற்றும் நந்திகாசிரயனப்ப ஐயப்ப தேவன் அவனுக்கு உரித்தாகுகவென்று கொடுத்த இறையிலி நிலம் நிலவும் ஞாயிறும் உள்ளளவும் நிற்கும் ஆவணம் _ _ _ நிலவும் ஞாயிறும் உள்ளவரை செல்வதாக. இதனை அழித்தோன் வாரணாசியையும், பரிவுக்குரிய (கவிலை) குறால் பசுவையும், பரிவுக்குரிய உடல் மெலிந்தோரையும், பரிவுக்குரிய மெலிந்து வறுமையுற்ற பெண்டிரையும் கொல்வோர் செல்லும் அனல் (நரக) உலகிற்கு செல்க. ஐயப்ப தேவன் எழுத்து, விக்கிரமாதித்தியன் எழுத்து. இக்கல்வெட்டை கொட்டுவித்தவன் ஐயப்ப தேவன். இதை கல்வெட்டாய் வெட்டியவன் கிரிதயுகசோழ _ _ யிதாசாரி என்பவன்.

நுளம்பன் மய்தம்மரசன் மன்னன் என்றால் எறிகங்கன் அவனுக்கு கட்டுப்பட்ட கங்கர் கிளை மரபு அரையன் என்று தோன்றுகிறது. நந்திகாசிரிய ஐயப்ப தேவன் எறிகங்கன் மகன் ஆதல் வேண்டும். களுநேநரசன் அவன் படைத் தளபதி ஆவான். தென்னிந்திய கல்வெட்டு குறிப்பது போல எறிகங்கன் போரில் இறக்கவில்லை. சொர்க்கம் ஏகினான் என்பதை வைத்து அவனும் சமண சல்லேகனம் இருந்து இறந்தானா? வீரன் மய்தம்மன் அவனுடன் உயிருடன்  புதைக்கப்பட்டு இறந்தானா? தெரியவில்லை. இதே போல நுளம்ப மன்னன் இரிவ நுளம்பன் இறந்த போதும் இதே போன்ற கிழ்கொண்டி முறையில் ஒருவன் புதைக்கப்பட்ட செய்தி உண்டு.

பார்வை நூல்: South Indian Inscription Vol IX, No 40, ARN 442 of 1923, பக்கம் 23

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.