Tag: திருவள்ளுவர்

  • குறளின் கதிர்களாய் – 278

    செண்பக ஜெகதீசன்

    சிறுமை பலசெய்து சீரழிக்குஞ் சூதின்

    வறுமை தருவதொன் றில்.

                                         – திருக்குறள் -934 (சூது)

     

    புதுக் கவிதையில்…

    இதனை விரும்பி

    ஏற்றுக் கொள்வோர்க்கு,

    இதுவரை இல்லாத

    இன்னலெல்லாம் தந்து

    இருக்கும் பெருமையையெல்லாம்

    இல்லாததாக்கும்

    இந்தச் சூதினைப்போல்

    வறுமை கொடுப்பது

    வேறொன்றுமில்லை…!

     

    குறும்பாவில்…

    விரும்பி ஏற்றிடுவோர்க்குத் துன்பந்தந்து,

    இருந்த பெருமையும் அழித்திடும் சூதினைப்போல

    வறுமை தரவல்லது வேறில்லை…!

     

    மரபுக் கவிதையில்…

    விரும்பியே யிதனை மேற்கொள்வோர்

    விரும்பா வகையில் பற்பலவாய்

    வருந்தச் செய்யும் துன்பமதை

    வழங்கிக் கெடுத்தே யிதுவரையில்

    இருந்த பெருமை யாவையுமே

    இலாம லாக்கும் சூதினைப்போல்

    திருவிலாத் தீதாம் வறுமையதைத்

    தந்திட வல்லது வேறிலையே…!

     

    லிமரைக்கூ..

    ஈடுபடில் இன்பமழிக்கும் ஈது,

    இருக்கும் பெருமையெல்லாம் அழித்துவிடும்

    இல்லாத வறுமையேதரும் சூது…!

     

    கிராமிய பாணியில்…

    ஆடாத ஆடாத

    சூதாட்டம் ஆடாத,

    சோகத்தக் கொடுக்கும்

    சூதாட்டம் ஆடாத..

    விரும்பி அதுல

    ஈடுபடுபவுனுக்கு

    இதுவர இல்லாத

    துன்பமெல்லாம் சேந்துவரும்,

    இருந்த பெருமயெல்லாம்

    இல்லாம அழிஞ்சிபோவும்..

    இந்தச் சூதுபோல

    வறுமயத் தாறது

    வேற எதுவுமேயில்ல..

    அதால

    ஆடாத ஆடாத

    சூதாட்டம் ஆடாத,

    சோகத்தக் கொடுக்கும்

    சூதாட்டம் ஆடாத…!

     

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள்- 84

    நெல்லைத் தமிழில் திருக்குறள்- 84

    நாங்குநேரி வாசஸ்ரீ

    84. பேதைமை

    குறள் 831:

    பேதைமை என்பதொன் றியாதெனின் ஏதங்கொண்
    டூதியம் போக விடல்

    பேதைமைங்கது என்னன்னு கேட்டா நமக்கு நல்லது செய்யுதத விட்டுப்போட்டு தீம தருதத ஏத்துக்கிடதுதான்.

    குறள் 832:

    பேதைமையுள் எல்லாம் பேதைமை காதன்மை
    கையல்ல தன்கண் செயல்

    பேதைமையிலெல்லாம் பெரிய பேதைமை னு சொல்லப்படுதது தன்னால ஏலாத தனக்கு நன்ம தராத காரியத்த ஆசப்பட்டு செய்யுதது தான்.

    குறள் 833:

    நாணாமை நாடாமை நாரின்மை யாதொன்றும்
    பேணாமை பேதை தொழில்

    வெக்கப்பட வேண்டிய நேரத்துல வெக்கங்கெட்டு அலையுததும், தேடிப் பெற வேண்டியதுல நாட்டமில்லாம இருக்கதும், நேசம் காட்ட வேண்டிய எடத்துல நேசமில்லாமயும் , காக்க வேண்டியத காவாம இருக்கதும் புத்திகெட்ட பேதைங்களோட கொணம்.

    குறள் 834:

    ஓதி உணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்காப்
    பேதையிற் பேதையார் இல்

    படிச்சுப்போட்டு தான் படிச்சத உணந்து பொறத்தியாருக்கு எடுத்துச்சொல்லி இருக்கவங்க தங்க வாழ்க்கையில அத கடைபிடிக்காம உட்டாகன்னா அவுகளப் போல கூறுகெட்ட பேதையர் இருக்க முடியாது.

    குறள் 835:

    ஒருமைச் செயலாற்றும் பேதை எழுமையும்
    தான்புக் கழுந்தும் அளறு

    புத்திகெட்டவன் தன்னோட ஒரு பொறப்புலயே அடுத்தடுத்து ஏழு பொறப்புலயும் பொறந்து அனுவிக்குத அளவு நரக வேதனய அனுவிப்பான்.

    குறள் 836:

    பொய்படும் ஒள்றோ புனைபூணும் கையறியாப்
    பேதை வினைமேற் கொளின்

    நேர்மையான பாத தெரியாத கூறுகெட்டவன் தொடங்கின காரியத்த முடிக்க ஏலாம காரியத்தையும் கெடுத்து தானும் கெட்டு அழிவான்.

    குறள் 837:

    ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதை
    பெருஞ்செல்வம் உற்றக் கடை

    புத்திகெட்டவன்கிட்ட பணம் குவிஞ்சிச்சின்னா அத அயல் மனுசங்க சுருட்டிக்கிட்டுப் போவாகளே தவித்து அவன்கிட்ட பாசமா இருக்க சொந்தபந்தம் பசியால தான் வாடும்.

    குறள் 838:

    மையல் ஒருவன் களித்தற்றாற் பேதைதன்
    கையொன் றுடைமை பெறின்

    நல்லதுகெட்டது தெரியாத பேதைகிட்ட பொருள் கெடச்சிச்சின்னா அது கோட்டிக்காரன் கள் குடிச்சு மயங்குதது கணக்கா ஆவும்.

    குறள் 839:

    பெரிதினிது பேதையார் கேண்மை பிரிவின்கண்
    பீழை தருவதொன் றில்

    புத்திகெட்ட பேதைகிட்ட வச்சிருக்க சேக்க ரொம்ப இனிமை. ஏம்னு கேட்டா அவுககிட்டேந்து பிரிஞ்சு போகுத நேரம் வெசனப்பட வேண்டியதில்ல.

    குறள் 840:

    கழாஅக்கால் பள்ளியுள் வைத்தற்றாற் சான்றோர்
    குழாஅத்துப் பேதை புகல்

    படிச்ச புத்திசாலி பெரிய மனுசங்க இருக்க சபையில கூறுகெட்ட பேதை நொழையுதது ஒருத்தன் கழுவாத கால படுக்க மேல வச்சது கணக்கா ஆவும்.

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள்- 78

    நெல்லைத் தமிழில் திருக்குறள்- 78

    -நாங்குநேரி வாசஸ்ரீ

    நெல்லைத் தமிழில் திருக்குறள்

    78. படைச் செருக்கு

    குறள் 771:

    என்னைமுன் நில்லன்மின் தெவ்விர் பலரென்னை
    முன்னின்று கல்நின் றவர்

    போர்க்களத்துல ஒரு வீரன் சொல்லுதான். எங்க தலைவர எதித்து நில்லாதீக. நின்னவனெல்லாம் செத்து இப்பம் நடுகல்லா நட்டமா நிக்கான்.

    குறள் 772:

    கான முயலெய்த அம்பினில் யானை
    பிழைத்தவேல் ஏந்தல் இனிது

    காட்டுல ஓடுத முயல் மேல குறி தப்பாம எய்து கொன்ன அம்ப கையில வைக்கதவிட, வெட்ட வெளில நிக்க யான மேல குறி தப்பி வீசின வேலக் கையில பிடிக்கது ஒசந்தது.

    குறள் 773:

    பேராண்மை என்ப தறுகனொன் றுற்றக்கால்
    ஊராண்மை மற்றதன் எஃகு

    பகையாளிக்கு பயப்படாம இருக்க வீரத்த ஆண்மை ங்குதோம். அந்தப் பகையாளிக்கு துன்பம் வருதப்போ ஒதவுதத ஆண்மையின் உச்சம் ங்குதோம்.

    குறள் 774:

    கைவேல் களிற்றொடு போக்கி வருபவன்
    மெய்வேல் பறியா நகும்

    போர்க்களத்துல கையில வச்சிருந்த வேலை யானை மேல எறிஞ்சு தொரத்தி உட்டுப்போட்டு இன்னொரு வேலத் தேடிக்கிட்டு வாரவன், தன் நெஞ்சுமேல பாஞ்ச வேலப் பாத்து சந்தோசப்பட்டு அதப் புடுங்கி சண்டபோடுவான்.

    குறள் 775:

    விழித்தகண் வேல்கொண் டெறிய அழித்திமைப்பின்
    ஓட்டன்றோ வன்க ணவர்க்கு

    எதிருல இருக்க பகையாளிய கோவமா பாத்துக்கிட்டிருக்குத கண்ணு அவன் வேல எறிஞ்ச சமயம் இமைச்சிதுனா அது தோத்துப் போகல்ல செய்யும்.

    குறள் 776:

    விழுப்புண் படாதநாள் எல்லாம் வழுக்கினுள்
    வைக்குந்தன் நாளை எடுத்து

    ஒரு வீரன் தான் வாழ்ந்த நாளக் கணக்குபோட்டுப் பாத்து, போரால தன் ஒடம்புல தழும்பு விழாத நாளயெல்லாம் வீணான நாள்னு வெறுத்து ஒதுக்கிப்போடுவான்.

    குறள் 777:

    சுழலும் இசைவேண்டி வேண்டா உயிரார்
    கழல்யாப்புக் காரிகை நீர்த்து

    உசிரப்பத்திக் கவலப்படாம தன்னயச் சுத்தி பரவி இருக்க புகழ மட்டுமே விரும்புத வீரன் காலுல கட்டுத வீரக்கழல் தனி பெரும கொண்டது.

    குறள் 778:

    உறினுயிர் அஞ்சா மறவர் இறைவன்
    செறினுஞ்சீர் குன்றல் இலர்

    போர்க்களத்துல உசிரப்பத்தி கவலப்படாம சண்டபோடுத வீர மறவன், ராசா கோவப்பட்டு வேண்டாம்னு தடுத்தாலும் தன் வீரத்துல கொறைய மாட்டான்.

    குறள் 779:

    இழைத்த திகவாமைச் சாவாரை யாரே
    பிழைத்த தொறுக்கிற் பவர்

    சபதம் செஞ்சதுக்குத் தக்கன போர்ல சாவுததுக்கு துணிஞ்ச வீரன யாராச்சும் எளக்காரமா பேச முடியுமா?

    குறள் 780:

    புரந்தார்கண் நீர்மல்கச் சாகிற்பின் சாக்கா
    டிரந்துகோட் டக்க துடைத்து

    தன்னய நல்ல மொறையில பாத்துக்கிட்ட தலைவன் தனக்காக கண்ணீர் உடுததுகணக்கா சாவு வந்துச்சின்னா அந்தச் சாவுத வாய்ப்பு கேட்டுப்பெறுத அளவுக்கு சிறப்பானது.

    (அடுத்தாப்லையும் வரும்…) 

    Share
  • திருவள்ளுவர் யார்?

    திருவள்ளுவர் யார்?

    மாலன் நாராயணன்

    “புகையை நம்பி உணவை வெறுக்கும் மனிதர்களை இந்த ஒரு விஷயத்தில்தானா பார்க்கிறோம்?”
    – பாரதியார் (சுதேசமித்ரன் 25.11.1915)

    திருவள்ளுவர் பற்றிய சர்ச்சைகளைப் படிக்கும் போது இந்த வரிகள்தான் என் நினைவுக்கு வருகின்றன.

    திருக்குறளில் பேசப்பட்டிருக்கும் செய்திகள் அது எழுதப்பட்ட காலத்தில் (கி.பி. 500-550 என்கிறார் கமில் ஸ்வெலபில்) வேறு எந்த நூலிலும் எழுதப்பட்டதில்லை. எந்த மொழிக்கும், எந்த மதத்திற்கும், எந்த ஜாதிக்கும், எந்தக் காலத்திற்கும், எந்தத் தொழிலுக்கும் ஏற்புடைய செய்திகள் அவை. அதில் ஏதேனும் பத்துக் குறளையேனும் பின்பற்றியிருந்தால் தமிழ்ச் சமூகம் உருப்பட்டிருக்கும். ஆனால் அதை உருப்போடுவதோடு நாம் நின்றுவிட்டோம்

    ஆனால் வள்ளுவரையும் குறளையும் பற்றிய சர்ச்சைகளைக் காலம் காலமாய் வளர்த்து வருகிறோம்

    அவர் இந்துவா? சமணரா?
    அவர் என்ன ஜாதி? பூணூல் போட்டிருந்தாரா இல்லையா?
    திருக்குறளை எழுதியவர் ஒருவரா? பலரா?
    அவருக்குத் தாடி இருந்ததா? தலையில் சடையா? மொட்டையா?
    வள்ளுவர் வடக்கே இருந்து வந்தவரா?
    திருக்குறள் மனுஸ்மிருதியைத் தழுவி எழுதப்பட்டதா?
    திருக்குறள் பகவத் கீதையைச் சார்ந்து எழுதப்பட்டதா?

    இந்தச் சர்ச்சைகளால் தமிழருக்கு ஏதேனும் பயன் உண்டா?

    திருக்குறளை எழுதியது யார் என்ற கேள்விக்கு ஒரு பதில்தான் உண்டு.

    திருக்குறளை எழுதியது ஒரு தமிழன்!

    தன்னை ஒரு சிமிழுக்குள் சிறை வைத்துக்கொள்ள மறுத்த ஒரு தமிழன்.

    வாழ்வின் அடிப்படை அறம் என்று நம்பிய ஒரு தமிழன்.

    அவ்வளவுதான். முற்றும். Dot. Period. The end.

    அபத்த சர்ச்சைகளை நிறுத்துங்கள், ஆயாசமாக இருக்கிறது.

    ஆனால் இவர்கள் ஓயமாட்டார்கள்.

    ஒட்டகத்திற்கு ஒரு இடத்திலா கோணல்? தமிழ்நாட்டிற்கு ஒரு வழியிலா துன்பம்?

    (இதுவும் பாரதி சொன்னதுதான்)

    Share
  • குறளின் கதிர்களாய்…(245)

     – செண்பக ஜெகதீசன்

    உள்ளற்க வுள்ளஞ் சிறுகுவ கொள்ளற்க

    அல்லற்க ணாற்றறுப்பார் நட்பு

    (குறள் – 798) (நட்பாராய்தல்)

     

    புதுக் கவிதையில்…

     

    ஊக்கம் குறையவைக்கும்

    செயல் பற்றி

    உள்ளுதலே வேண்டாம்..

    அதுபோல

    துன்பம் வரும்போது

    துணை வராமல் கைவிட்டு,

    தூர விலகிடுவார்

    நட்பையும்

    ஏற்றிடவே வேண்டாம்…!

     

    குறும்பாவில்…

     

    ஊக்கம் குறைக்கும் செயலையென்றும் நினைக்காதே,

    உறுதுணையாயின்றி துன்பம் வரும்போது விட்டுச்செல்லும்

    நட்பினை ஏற்காமல் தவிர்த்திடுக…!

     

    மரபுக் கவிதையில்…

     

    ஊக்கம் குறைய வகைசெய்யும்

    உதவாச் செயலது வாழ்வினிலே

    ஆக்கம் எதையும் தருவதில்லை

    அதனால் வேண்டாம் அதன்நினைவே,

    தாக்கும் துன்பம் வரும்போது

    துணையாய் நின்றே உதவாமல்

    போக்குக் காட்டியே ஓடிவிடும்

    புல்லர் நட்பினை ஏற்காதே…!

     

    லிமரைக்கூ..

     

    வேண்டாம் ஊக்கந்தரா செயலின் எண்ணம்,

    ஏற்றிடாதே துன்பத்தில்நமைக் கைவிட்டோர் நட்பை,

    இனியுமவர் நமைத்தொடரா வண்ணம்…!

     

    கிராமிய பாணியில்…

     

    நட்புகொள்ளு நட்புகொள்ளு

    நல்லவனாப் பாத்து நட்புகொள்ளு,

    நல்லா ஆராஞ்சி நட்புகொள்ளு..

     

    நெனைக்கவேண்டாம் நெனைக்கவேண்டாம்

    நமக்கு ஊக்கந்தராத செயலெதயும்

    நெனைக்கவேண்டாம் நெனைக்கவேவேண்டாம்..

     

    அதுபோல

    துன்பத்தில தொணநிக்காம

    கைவுட்டுப் போறவன் நட்ப

    கடுகளவும் ஏத்துக்காத,

    கண்டிப்பா ஏத்துக்காத..

     

    அதால,

    நட்புகொள்ளு நட்புகொள்ளு

    நல்லவனாப் பாத்து நட்புகொள்ளு,

    நல்லா ஆராஞ்சி நட்புகொள்ளு…!

     

     

    Share