Tag: திருவள்ளுவர்

  • குறளின் கதிர்களாய்… (472)

    குறளின் கதிர்களாய்… (472)

    செண்பக ஜெகதீசன்

    கரப்பிடும்பை இல்லாரைக் காணின் நிரப்பிடும்பை
    எல்லாம் ஒருங்கு கெடும்.
    – திருக்குறள் -1056 (இரவு)

    புதுக் கவிதையில்…

    இருப்பதை
    இல்லையென மறைக்கும்
    துன்பநிலை
    இல்லாதவரைக் கண்டால்,
    இல்லாமை என்னும்
    வறுமைத் துன்பம்
    எல்லாம் ஒருசேர
    இல்லாமல் அழிந்துபோகும்…!

    குறும்பாவில்…

    உள்ளதை ஒளிக்கும் துன்பம்
    இல்லாரைக் கண்டால் இரப்பவரின் வறுமைநோய்
    இல்லாமல் மொத்தமாய் அழிந்துபோகும்…!

    மரபுக் கவிதையில்…

    இருப்பாய்க் கையில் உள்ளதையே
    இல்லை என்றே மறைத்திருக்கும்
    பெருத்த துன்பம் அதுதன்னைப்
    பெறாதோர் தம்மைப் பார்த்தாலே,
    வருந்தி இரப்போர் தாம்கொண்ட
    வறுமை என்னும் நோயதுவும்
    இருந்த இடமே தெரியாமல்
    எல்லாம் சேர்ந்தே அழிந்திடுமே…!

    லிமரைக்கூ…

    இல்லையெனும் துன்ப நிலையே
    இல்லாரைப பார்த்தாலே இரப்போர் கொண்ட
    வறுமைத் துன்பமேதும் இலையே…!

    கிராமிய பாணியில்…

    குடுத்து வாழணும் குடுத்து வாழணும்
    எரக்கிறவங்களுக்குக் குடுத்து வாழணும்,
    இருக்கிறத இல்லங்காமக்
    குடுத்து வாழணும் குடுத்து வாழணும்..
    தனக்கிட்ட இருக்கிறத
    இல்லண்ணு மறைக்கிற
    துன்பநெல இல்லாதவங்களப் பாத்தா,
    எரப்பவங்ககிட்ட இருக்கிற
    வறுமத் துன்பம்
    இருந்த எடந்தெரியாம
    எல்லாம் ஒண்ணாப் போயிடுமே..
    அதால
    குடுத்து வாழணும் குடுத்து வாழணும்
    எரக்கிறவங்களுக்குக் குடுத்து வாழணும்,
    இருக்கிறத இல்லங்காமக்
    குடுத்து வாழணும் குடுத்து வாழணும்…!

    Share
  • குறளின் கதிர்களாய்… (470)

    குறளின் கதிர்களாய்… (470)

    செண்பக ஜெகதீசன்

    இரவார் இரப்பார்க்கு ஒன்றீவர் கரவாது
    கைசெய்தூண் மாலை யவர்.
    -திருக்குறள் -1035 (உழவு)

    புதுக் கவிதையில்…

    தம் கைகளால்
    உழவுத் தொழில் செய்து
    உணவு உண்ணும்
    இயல்புடையோர்
    இரவார் பிறரிடம் சென்று,
    இரக்கத் தம்மிடம் வருவோர்க்கு
    இல்லையெனச் சொல்லாமல்
    ஈந்திடும் குணமுள்ளோர் அவரே…!

    குறும்பாவில்…

    தம்கையால் உழுதுண்டு வாழ்வோர்
    பிறரிடம் சென்றே இரவார், தம்மிடம்
    இரப்போர்க்கு இல்லையெனாது ஈவர்…!

    மரபுக் கவிதையில்…

    தமது கையால் உழுதுண்ணும்
    தன்மை கொண்டோர் வாழ்வினிலே
    தமக்கே வறுமை வந்தாலும்
    தடுக்க இரவார் பிறரிடமே,
    நமராய் எண்ணி இரந்திடவே
    நாடி வருவோர்க்கு இலையெனாதே
    சுமக்கும் அளவில் கொடுத்தனுப்பும்
    சொந்தக் குணமாம் அவருக்கே…!

    லிமரைக்கூ…

    தம்கையால் உழுதே உண்பார்
    தாழ்விலும் பிறரிடம் இரவார், இரப்போர்க்கு
    இலையெனாது ஈந்திடும் பண்பார்…!

    கிராமிய பாணியில்…

    ஒசந்தது ஒசந்தது
    தொழிலுல ஒசந்தது,
    ஒலகத்துக்கு ஒணவுதருற
    ஒழவுத்தொழிலே ஒசந்தது..
    சொந்தக் கையால வயலுல
    ஒழச்சிச் சாப்புடுற
    கொணம் உள்ளவுங்க
    ஒருநாளும் அடுதவங்ககிட்ட
    எரந்து சாப்புடமாட்டாங்க,
    அவுங்ககிட்ட வந்து
    எரக்கிறவங்களுக்கு
    இல்லண்ணு சொல்லாமக்
    குடுத்தனுப்புற
    கொணந்தான் அவுங்களுக்கு..
    அதால
    ஒசந்தது ஒசந்தது
    தொழிலுல ஒசந்தது,
    ஒலகத்துக்கு ஒணவுதருற
    ஒழவுத்தொழிலே ஒசந்தது…!

    Share
  • குறளின் கதிர்களாய்…(469)

    குறளின் கதிர்களாய்…(469)

    செண்பக ஜெகதீசன்

    எச்சமென்று என்ணெண்ணுங் கொல்லோ ஒருவரால்
    நச்சப் படாஅ தவன்
    -திருக்குறள் -1004 (நன்றியில் செல்வம்)

    புதுக் கவிதையில்…

    வாழ்வில் பிறர்க்கேதும்
    வழங்கி உதவாத காரணத்தால்
    ஒருவராலும்
    விரும்பப்படாதவன்,
    தன் மரணத்துக்குப்பின்
    தன்னை
    நினைவுபடுத்தி நிற்கப்போவது
    என்று
    எதனை எண்ணுவானோ…!

    குறும்பாவில்…

    பிறர்க்கொன்றும் ஈயாததால் ஒருவராலும்
    விரும்பப்படாதவன், சாவுக்குப்பின் தன்னை நினைவுபடுத்தி
    நிற்பதென எண்ண எதுவுமில்லை…!

    மரபுக் கவிதையில்…

    உதவி வேண்டி வருமெவர்க்கும்
    உதவி யேதும் செயாதவனை
    அதனால் யாரும் விரும்பாரே,
    அவனின் காலம் முடிந்தபின்னே
    எதனா லேனும் இவ்வுலகோர்
    எண்ணி யவனை நினைத்திடவே
    அதற்கே தக்க தானதேதும்
    அவனுக் கில்லை எண்ணிடவே…!

    லிமரைக்கூ…

    ஈயாதவன்மீது கொள்வதில்லை விருப்பம்
    இவ்வுலகில், அவன்காலம் முடிந்ததுமவனை நினைவுகொள்ளத்
    தக்கதேது மிலாததே திருப்பம்…!

    கிராமிய பாணியில்…

    ஒதவணும் ஒதவணும்
    அடுத்தவங்களுக்கு ஒதவணும்,
    ஒதவின்னு கேக்கிறதக்
    குடுத்து ஒதவணும்..
    அடுத்தவங்களுக்குக்
    குடுத்து ஒதவாததால
    ஒருத்தராலயும் விரும்பப்படாதவன்,
    தனக்க மரணத்துக்குப் பெறகு
    தன்ன நெனவுல வச்சிக்கிறதுக்கு
    என்ன இருக்குண்ணு
    நெனச்சிப் பாக்க மாட்டானோ..
    அதால
    ஒதவணும் ஒதவணும்
    அடுத்தவங்களுக்கு ஒதவணும்,
    ஒதவிண்ணு கேக்கிறதக்
    குடுத்து ஒதவணும்…!

    Share
  • குறளின் கதிர்களாய்… (468)

    குறளின் கதிர்களாய்… (468)

    செண்பக ஜெகதீசன்

    இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால்
    என்ன பயத்ததோ சால்பு.
    -திருக்குறள் -987 (சான்றாண்மை)

    புதுக் கவிதையில்…

    தமக்குத்
    துன்பம் தருவனவற்றைச் செய்தவர்க்கும்
    சான்றாண்மை மிக்கவர்
    தாம் இன்பம் தருவனவற்றைச்
    செய்யாது போவாரானால்,
    அவரது சால்பு
    வேறென்ன பயனைத்
    தர வல்லது…!

    குறும்பாவில்…

    துன்பம் தமக்குத் தந்தவர்க்கும்
    சால்புடையோர் இனியன செய்யாதுபோனால் அவரது
    சால்பினால் எந்தப் பயனுமில்லை…!

    மரபுக் கவிதையில்…

    துன்பம் தமக்குச் செய்தவர்க்கும்
    தூய தான சால்புடையோர்
    இன்பம் தன்னைத் தருகின்ற
    இனிய வற்றைச் செயாதிருந்தால்,
    அன்னார் வசமா யுள்ளதுவாம்
    அரிய பொருளாம் சால்பதுதான்
    என்ன வேறு பயனதைத்தான்
    எடுத்துக் கொடுக்கப் போகிறதோ…!

    லிமரைக்கூ…

    தந்தாலும் பிறர்தமக்குத் துன்பம்,
    சால்புடையோர் சால்பினால் பயனேது மில்லை
    செயாவிடிலவர் பெற்றிட இன்பம்…!

    கிராமிய பாணியில்…

    வேணும் வேணும் சான்றாண்ம,
    ஓசந்த கொணமாம் சான்றாண்ம..
    தனக்குத் துன்பம் செஞ்சவனுக்கும்
    அவன் இன்பமடய
    சான்றாண்ம உள்ளவரு
    நல்லது செய்யாம இருந்தா
    அவருகிட்ட இருக்கிற
    சான்றாண்மயால யாருக்கும்
    எந்தப் பயனுமில்ல..
    அதால
    வேணும் வேணும் சான்றாண்ம,
    ஓசந்த கொணமாம் சான்றாண்ம…!

    Share
  • குறளின் கதிர்களாய்…(467)

    குறளின் கதிர்களாய்…(467)

    செண்பக ஜெகதீசன்

    அற்றம் மறைக்கும் பெருமை சிறுமைதான்
    குற்றமே கூறி விடும்.
    -திருக்குறள் 980 (பெருமை)

    புதுக் கவிதையில்…

    மற்றவர் குறைகளை
    மறைத்தே அவர்தம்
    பெருமைகளைப்
    பெரிதாய்ப் பேசுவர்
    பெருமைப் பண்புடையோர்,
    சிறுமைப் பண்பு கொண்டோர்
    பிறர் பெருமையை
    மறைத்துக்
    குறைகளைப் பெரிதாய்க்
    கூறுவர்…!

    குறும்பாவில்…

    பிறர் குறைகளை மறைத்துப்
    பெருமையைப் பேசுவது பெருமைப் பண்பு,
    நிறைமறைத்துக் குறைசொல்வது சிறுமை…!

    மரபுக் கவிதையில்…

    மற்றவர் குறைகளை மறைத்து வைத்தே
    மாசிலாப் பெருமையைப் பேசுவது
    சற்றுமே குறைவிலாப் பெருமையாளர்
    சார்ந்திடும் பெருமையின் பண்பதுவே,
    முற்றிலும் பண்பிலாச் சிறுமையாளர்
    முழுவதும் பெருமையை மறைத்துவிட்டே
    குற்றமே பார்த்தவர் கொண்டுள்ள
    குறைகளை மட்டுமே பேசுவரே…!

    லிமரைக்கூ…

    மறைத்து மற்றவர் குறைகளை
    பெருமையைப் பேசுவர் பெருமையாளர், குறைபேசும்
    சிறுமையாளர் மறைத்திடுவர் நிறைகளை…!

    கிராமிய பாணியில்…

    வேணும் வேணும்
    பெரும வேணும்,
    ஒலக வாழ்க்கயில
    பெரும வேணும்..
    அடுத்தவன் கொறய
    மறச்சி அவனோட
    பெருமய மட்டும்
    பெருசாப் பேசுறதுதான்
    பெருமக் கொணம்,
    கொறய மட்டும்
    காட்டிப் பேசுறது
    சிறுமக் கொணம்..
    அதால
    வேணும் வேணும்
    பெரும வேணும்,
    ஒலக வாழ்க்கயில
    பெரும வேணும்…!

    Share
  • இடுக்கண் கண்டு அஞ்சாது மிடுக்காய் வாழ்வோம்!

    இடுக்கண் கண்டு அஞ்சாது மிடுக்காய் வாழ்வோம்!

    -மேகலா இராமமூர்த்தி

    ஒரு நாணயத்திற்குத் தலை, பூவென இரு பக்கங்கள் இருப்பதுபோல் மானுட வாழ்க்கையும் இன்பம் துன்பம் எனும் இரு பக்கங்களைக் கொண்டதாகும். இவற்றில் எது எப்போது வரும் என்பது ஊகிக்க இயலாத ஒன்றாகும்.

    2019ஆம் ஆண்டின் இறுதியில் சீனாவில் தொடங்கி உலகையே ஆட்டிப்படைத்த கொரோனா கொடுந்தொற்றுகாலச் சூழலை இதற்குத் தக்கதோர் சான்றாய் எடுத்துக் காட்டலாம். இயல்பாய்ச் சென்றுகொண்டிருந்த மனித வாழ்க்கை திடீரென்று முடங்கி, அனைவரும் வீடடங்கி இருக்கும் நிலையை ஒரு தீநுண்மி ஏற்படுத்தும் என்று யாரும் கனவிலும் கருதவில்லை; ஆனால், அப்படியொரு சூழல் ஏற்பட்டது.

    அத்தொற்றின்மீது ஏற்பட்ட அச்சத்தினாலும், அதனைக் கையாளுவது எப்படி என்பது தெரியாத காரணத்தினாலும் சில காலம் செய்வதறியாது திகைத்துப்போயிருந்த மாந்த இனம், அத்தொற்றைத் தடுக்கும் தடுப்பூசிகள் கண்டறியப்பட்டுப் பயன்பாட்டுக்கு வந்ததினால் அதிலிருந்து மீண்டுவருவதைக் காண்கின்றோம்.

    இவ்வாறு வாழ்வில் நேரிடும் எதிர்பாராத இன்னல்களையும் அவற்றால் ஏற்படும் இழப்புகளையும் கையாளுவதற்கும், அவற்றிலிருந்து மீண்டெழுவதற்கும் மக்களுக்குச் சில அடிப்படைப் பண்புகள் அவசியமாகின்றன. அவற்றை நம் சங்கப் பாடல்களும், வான்புகழ் வள்ளுவரின் வள்ளுவமும் விளக்கி மக்களுக்கு வழிகாட்டியிருக்கின்றன.

    பக்குடுக்கை நன்கணியார் என்ற சங்கப்புலவர் ஒரு தெருவின் வழியாய்ச் சென்றுகொண்டிருந்தார். அங்கே ஒரு வீட்டில் சாவு நிகழ்ந்ததற்கு அடையாளமாய் நெய்தல் பறை ஒலித்துக்கொண்டிருந்ததனைக் கேட்டார். இன்னும் சற்றுத் தொலைவு சென்றார்; மற்றொரு வீட்டில் திருமணத்திற்குரிய மங்கல முழவு ஒலித்துக்கொண்டிருந்தது.

    கணவனோடு மகிழ்ந்திருக்கும் பெண்கள் மலரணிந்து மங்கலமாய்க் காட்சியளிப்பதையும், கணவனைப் பிரிந்த பெண்கள் தங்கள் மைதீட்டிய கண்களில் நீர்பெருக வருந்தியிருப்பதையும் கண்டார் புலவர். ஒருபுறம் இன்பம் மறுபுறம் துன்பம் எனக் கலந்திருக்கும் வகையில் இவ்வுலகைப் படைத்து, சிலரை அழுது அரற்றவும் வேறுசிலரை மகிழ்ச்சியில் திளைக்கவும் வைத்தவன் பண்பிலாக் கொடியவனாய்த் தோன்றினான் புலவருக்கு.

    இந்த முரண்பட்ட நிலைக்கு என்ன தீர்வு என்று ஆழ்ந்து சிந்தித்தவர், உலகத்தின் இயற்கை இதுதான்; இதனை மனிதர்களால் மாற்றிவிட முடியாது எனும் உண்மையை உணர்ந்தார். ஆதலால், இவ்வுலகில் வாழ்பவர்கள் இன்னாத தன்மை கொண்ட அதன் இயல்புணர்ந்து, அதற்கிடையிலும் இன்பமாய் வாழ்வதொன்றே அதற்கான தீர்வாய் இருக்க முடியும் என்ற முடிவுக்கு வந்தார். அதனைத் தம் பாடலிலும் பதிவுசெய்தார்.

    ஓரில் நெய்தல் கறங்க ஓரில்
    ஈர்ந்தண் முழவின் பாணி ததும்பப்
    புணர்ந்தோர் பூவணி அணியப் பிரிந்தோர்
    பைதல் உண்கண் பனிவார்பு உறைப்பப்
    படைத்தோன் மன்றஅப் பண்பி லாளன்
    இன்னாது அம்மஇவ் வுலகம்
    இனிய காண்கஇதன் இயல்புணர்ந் தோரே. (புறம் – 194)

    வாழ்வில் இடுக்கண்ணும் இன்னலும் ஏற்படும்போது அவற்றை எதிர்கொண்டு வெல்வதெப்படி என்பதனை விளக்கி வள்ளுவப் பேராசான் ‘இடுக்கண் அழியாமை’ என்றோர் அதிகாரத்தையே படைத்துள்ளார்.

    ”தடை நேர்கின்ற இடங்களிலெல்லாம் அதற்காகச் சோர்ந்துவிடாமல் வண்டியை விடாமுயற்சியோடு இழுத்துச்செல்லும் எருதைப்போல், துன்பம் வந்த காலத்தில் அதற்காகத் துவண்டுவிடாமல் தொடர்ந்து முயல்பவனுடைய துன்பமானது துன்பமடைவது உறுதி” என்கிறார் வள்ளுவர்.

    மடுத்தவா யெல்லாம் பகடன்னான் உற்ற
    இடுக்கண் இடர்ப்பா டுடைத்து.
    (குறள்: 624)

    ”செல்வம் வந்தபோது அதன்மீது பற்றுக்கொண்டு அதனைக் காத்தறியாதவர்கள், அச்செல்வம் தம்மைவிட்டு நீங்கித் தாம் வறுமையுற்றபோது ’செல்வத்தை இழந்தோமே’ என்று அல்லற்படுவரோ?” என்று வினவி நம்மைச் சிந்திக்க வைக்கின்றார் மற்றொரு குறளில்.

    அற்றேமென்று அல்லற் படுபவோ பெற்றேமென்று
    ஓம்புதல் தேற்றா தவர்.
    (குறள்: 626)

    ’செல்வத்தின் இயல்பு சகடக்கால் போல் உருண்டு செல்வதாகும். அஃது ஓரிடத்தில் நிலைத்து நில்லாது’ என்கின்ற நாலடியார் பாடலையும் இங்கே நாம் இணைத்துப் பார்க்கலாம்.

    அகடுற யார்மாட்டும் நில்லாது செல்வம்
    சகடக்கால் போல வரும்.
    (நாலடி – 2)

    இடுக்கண் வந்துற்றபோது நாம் உறுதியிழக்காமல் வாழ்வதற்குக் கைக்கொள்ள வேண்டிய மற்றொரு பண்பையும் வலியுறுத்துகின்றார் வள்ளுவர். அதுதான் இன்பத்தை விரும்பாது, இடும்பை மானுட வாழ்வின் இயல்பு என்றுணர்ந்து அதனை ஏற்றுக்கொள்ளும் மனப் பக்குவம்.

    இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான்
    துன்பம் உறுதல் இலன்.
    (குறள் – 628)

    இன்பநாட்டமே மானுட இயல்பென்பதனால் இடும்பையை வாழ்வின் பகுதியாக ஏற்றுக்கொள்ளும் பண்பென்பது எல்லோர்க்கும் எளிதில் வாய்த்துவிடாது. எனினும், அறிவிலும் வாழ்வியல் அனுபவத்திலும் தேர்ந்தவரான ஐயன் வள்ளுவர் உரைக்கும் இவ்வுயர் பண்பை நாம் வளர்த்துக்கொள்ள முயல்வது நமக்கு நன்மை பயக்கும்.

    உலக வாழ்வில் ஈடுபட்டாலும், தாமரையிலை நீர்போல் அதில் ஒட்டாமல் வாழ்வோர் துன்பப்படுவதில்லை; துயருறுவதில்லை. இதையே ’ஸ்திதப் பிரக்ஞ’ மனநிலை என்றுரைக்கின்றது பகவத் கீதை.

    எனவே, எதிர்பாராத இடுக்கண்ணும் இழப்பும் ஏற்படும்போது, பெறுவதைப் போலவே இழப்பதும் மனித வாழ்வின் இயல்பே எனும் பக்குவத்தையும், தோல்விகள் ஏற்படும்போது துவளாது, பகடுபோல் அவற்றை எதிர்கொண்டு, வெல்லும் ஊக்கத்தையும் பெற்றோமென்றால் கலக்கமுற்றிராது வாழலாம்; மற்றையோர்க்கும் நல்வழிகாட்டியாய்த் திகழலாம்.

    Share
  • ஜஸ்வந்த் சிங் – தமிழ் வளர்க்கும் பஞ்சாபி

    ஜஸ்வந்த் சிங் – தமிழ் வளர்க்கும் பஞ்சாபி

    பஞ்சாபியான ஜஸ்வந்த் சிங், தமிழில் கலக்குகிறார். திருக்குறளின் 1330 குறட்பாக்களையும் எழுத்தாணியைக் கொண்டு, ஓலைச்சுவடியில் எழுதியுள்ளார். திருக்குறளை அதன் பொருளுடன் சொல்கிறார். உலகின் முதல் மொழி தமிழே என்கிறார். தமிழ் இலக்கியங்களைப் போற்றுகிறார். இந்தித் திணிப்பை எதிர்க்கிறார். இவரைச் சென்னைப் புத்தகக் காட்சியில் சந்தித்தேன். பைந்தமிழராக மாறிவிட்ட இந்தப் பஞ்சாபியின் சிங்கத் தமிழைக் கேளுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • குறளின் கதிர்களாய்…(411)

    குறளின் கதிர்களாய்…(411)

    செண்பக ஜெகதீசன்

    ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை விழுக்கத்தின்
    எய்துவர் எய்தாப் பழி.
    -திருக்குறள் -137 (ஒழுக்கமுடைமை)

    புதுக்கவிதையில்…

    ஒழுக்கத்தில் நல்லதாய்
    ஒழுகுவோர் பெறுவர்
    ஒப்பிலா மேன்மை
    உலக வாழ்வினிலே,
    ஒழுக்கம் தவறுவோர்
    பெறுதற்குத் தகாத
    பெரும்பழியே பெறுவர்…!

    குறும்பாவில்…

    ஒழுக்கமுடையோன் பெறுவான் வாழ்வில்
    ஒப்பிலா மேன்மை, இல்லாதான் எய்துவான்
    ஒன்றுமிலாப் பொல்லாப் பழியே…!

    மரபுக் கவிதையில்…

    நிலத்தில் மனித வாழ்வினிலே
    நித்தம் தேவை நல்லொழுக்கம்,
    நலமே பெறுவர் அதனாலே
    நன்மை யோடு மேன்மைசேரும்,
    பலமாம் இதனைப் பேணாதார்
    பயனே இல்லா மாந்தராகிப்
    பலனே இல்லா அழிவுதரும்
    பழியை மட்டும் பெறுவரே…!

    லிமரைக்கூ…

    மேன்மைதரும் நல்லொழுக்க வழியே,
    மேதினி வாழ்வில் இதைப்பேணார் பெற்றிடுவர்
    மிகவும் அழிவுதரும் பழியே…!

    கிராமிய பாணியில்…

    வேணும் வேணும்
    ஒழுக்கம் வேணும்,
    வாழ்க்கயில நல்ல
    ஒழுக்கம் வேணும்..

    ஒழுக்கத்தோட வாழுறவுங்களுக்கு
    வாழ்க்கயில நல்ல
    மேன்ம கெடைக்கும்,
    ஒழுக்கமில்லாதவங்களுக்கு
    ஒரு பயனுமில்லாத
    பழிதான் வருமே..

    அதால
    வேணும் வேணும்
    ஒழுக்கம் வேணும்,
    வாழ்க்கயில நல்ல
    ஒழுக்கம் வேணும்…!

    Share
  • குறளின் கதிர்களாய் – 410

    குறளின் கதிர்களாய் – 410

    செண்பக ஜெகதீசன்

    காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம்
    அதனினூஉங் கில்லை உயிர்க்கு.
    – திருக்குறள் -122 (அடக்கமுடைமை)

    புதுக் கவிதையில்…

    அவனி வாழ்வில்
    அடக்கத்தை
    அரும்பொருளாய் எண்ணிப்
    பாதுகாக்க வேண்டும்,
    அதனைவிட மதிப்பில்
    உயர்ந்த செல்வம்
    உலகத்தில் வேறில்லை…!

    குறும்பாவில்…

    அடக்கத்தை வாழ்வில் நாம்
    அரும்பொருளாய்ப் பேணிப் பாதுகாக்கவேண்டும்,
    அதைவிட நற்செல்வம் எதுவுமில்லை…!

    மரபுக் கவிதையில்…

    அடக்கம் என்னும் நல்லறத்தை
    அவனி வாழ்வில் அரும்பொருளாய்க்
    கடமை என்றே காத்திடுவாய்
    கண்ணாய் அதையே போற்றிடுவாய்,
    கிடைக்கும் செல்வம் பலதிலுமே
    கீர்த்தி மிக்க வேறெதுவும்
    கிடைப்ப தில்லை இதுபோலே,
    கிட்டாச் செல்வம் அடக்கமாமே…!

    லிமரைக்கூ…

    என்றும் காத்திட வாராய்
    அடக்கத்தை வாழ்வில் அரும்பொருளாய், அதனிலும்
    உயர்செல்வம் வேறிலை பாராய்…!

    கிராமிய பாணியில்…

    செல்வம் செல்வம் பெருஞ்செல்வம்
    ஒலக வாழ்க்கயில
    ஒசந்த செல்வம்,
    அடக்கமுங்கிற அற்புதச் செல்வம்..
    ஒலக வாழ்க்கயில அடக்கமுங்கிற
    ஒழுக்கத்த பெரிய செல்வமா
    நல்ல மொறயில
    காப்பாத்தி வெச்சுக்கோ,
    அதவிட மதிப்புல
    ஒசந்த செல்வம்
    ஒலகத்தில
    வேற எதுவுமேயில்ல..
    தெரிஞ்சிக்கோ
    செல்வம் செல்வம் பெருஞ்செல்வம்
    ஒலக வாழ்க்கயில
    ஒசந்த செல்வம்,
    அடக்கமுங்கிற அற்புதச் செல்வம்…!

    Share
  • குறளின் கதிர்களாய்…(409)

    குறளின் கதிர்களாய்…(409)

    செண்பக ஜெகதீசன்

    கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக்
    கோடாமை சான்றோர்க்கு அணி.

    – திருக்குறள் -115 (நடுவு நிலைமை)

    புதுக்கவிதையில்…

    வாழ்க்கையில் தீவினையால்
    வந்திடும் துன்பமும்,
    நல்வினையால்
    நாடிவரும் வளவாழ்வும்
    எல்லோர்க்கும் உள்ளதுதான்
    என்பதை உணர்ந்தே
    அதற்காக
    நல்லறமாம்
    நடுவு நிலைமையில்
    நெஞ்சம் தடுமாறாமல்
    நேராயிருப்பதே
    மேலானவர்களுக்கு
    மேலும் அழகே…!

    குறும்பாவில்…

    வருமிடரும் வளவாழ்வும் எல்லோர்க்கும்
    உள்ளதுதானென உணர்ந்தே நடுநிலை மாறா
    நற்பண்பே மேலானவர்களுக்கு அழகு…!

    மரபுக் கவிதையில்…

    வாழ்வினில் செய்த தீவினையால்
    வந்திடும் இடர்கள் பலவுடனே
    தாழ்விலா நல்ல செயலெல்லாம்
    தந்திடும் வளங்கள் பெருகியேநல்
    வாழ்வதும் எல்லா மக்கட்கும்
    வருமென நன்றாய் உணர்ந்தறிந்தே
    தாழ்ந்திடா நடுவு நிலைமாறாத்
    தன்மையே அழகு சான்றோர்க்கே…!

    லிமரைக்கூ…

    இன்பமும் துன்பமும் வருமே
    எல்லோர்க்கும் என்பதுணர்ந்தே நடுநிலை மாறாதிருத்தல்
    சான்றோர்க்கு அழகைத் தருமே…!

    கிராமிய பாணியில்…

    மாறாத மாறாத
    நடுவுநெலய மாறாத
    நீதி நெலைக்க வாழ்வு செறக்க
    நடுவுநெலய மாறாத..
    எல்லாருக்கும் வரும் வாழ்க்கயில
    எறக்கமாத் துன்பமும்,
    ஏத்தமாச் செல்வப் பெருக்கும்..
    இதயெல்லாம் நல்லா ஒணர்ந்து
    இதுனால
    நடுவுநெலயில மாறாமயிருக்கும்
    நல்ல கொணமே
    பெரியவங்களுக்கு அழகு
    பெரும எல்லாமே..
    அதால
    மாறாத மாறாத
    நடுவுநெலய மாறாத
    நீதி நெலைக்க வாழ்வு செறக்க
    நடுவுநெலய மாறாத…!

     

    Share
  • பேரறிஞர் அண்ணா உரை – 2 | திருவள்ளுவர் படத்திறப்பு விழா

    பேரறிஞர் அண்ணா உரை – 2 | திருவள்ளுவர் படத்திறப்பு விழா

    1967இல் கூட்டுறவு வங்கி சார்பில் நடைபெற்ற திருவள்ளுவர் படத்திறப்பு விழாவில், வள்ளுவர் படத்தைத் திறந்து வைத்து, பேரறிஞர் அண்ணா ஆற்றிய சமத்காரமான உரை இங்கே. நண்பர்கள் கேட்டு மகிழுங்கள். நல்ல சமயமிது, நழுவவிடக் கூடாது.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • திருவள்ளுவர் யார்? – 5

    திருவள்ளுவர் யார்? – 5

    புதுக்கோட்டை பத்மநாபன்

    திருவள்ளுவருடைய பெயரைக் காரணம் காட்டி அவர் தாழ்ந்த குலத்தைச் சேர்ந்தவர் என்று சிலர் கூறுகிறார்கள். அவர்களுடைய கருத்து மிக மிகத் தவறானது.

    திருவள்ளுவருக்குத் திருவள்ளுவர் என்ற பெயரைத் தவிர நாயனார், தேவர், முதற்பாவலர், தெய்வப் புலவர், நான்முகனார், மாதானுபங்கி, செந்நாப்போதார், பெருநாவலர் என்ற பெயர்களும் உண்டு. “திருவள்ளுவர்” என்ற அவருடைய பிரபலமான பெயரே “திருவல்லவன்” என்ற பெயரின் மருவிய வடிவம்தான். பிங்கல நிகண்டிலும் சூடாமணி நிகண்டிலும் கணவனைக் குறிக்கும் பெயர்களின் வரிசையில் “வல்லவன்” என்ற பெயரும் இடம் பெற்றுள்ளது. “திருவல்லவன்” என்றால் திருமகளின் கணவனான திருமால் என்று பொருள். ஆகவே “திருவல்லவன்” என்பது திருமாலின் பெயர்.

    ‘குறள்’ என்றால் குட்டையான என்று பொருள். திருமால் குறள் வடிவெடுத்து வந்து தன் திருவடிகளால் உலகங்களை அளந்தார். இவரும் குட்டையான குறள் வெண்பாக்களால் அறிவுலகை அளந்தார். அதனால் இவருக்குத் “திருவல்லவன்” என்ற பெயர் பொருத்தமானதுதான். இந்தத் “திருவல்லவன்” என்ற பெயர்தான் நாளைடைவில் “திருவள்ளுவன்” என்று மருவிவிட்டது. ஆகவே இவரது பெயரை வைத்து இவரைத் தாழ்ந்த குலத்தவர் என்று கூறுவது பரம அபத்தமாகும். நீதிநூல் என்பது மனித சமூஹத்திற்கான சட்டம். அதை அரசனுக்கு அறிவுரை கூறும் ஸ்தானத்தில் இருப்போரால் தான் எழுத முடியும்.

    இதுதவிர, அவரது படைப்பான திருக்குறளே அவர் யார் என்பதை நமக்குத் தெளிவாகக் காட்டுகிறது. எந்த ஒரு வர்ணத்தவனும் தன் வர்ணத்தைப் பற்றிய குறை நிறைகளைப் பற்றித்தான் சிந்திப்பானேயொழிய மற்ற வர்ணத்தைப் பற்றிக் கவலைப்படமாட்டான். ஒழுக்கம் எல்லோருக்கும் பொதுவானது என்றாலும் ஒழுக்கத்தைப் பற்றிக் கூறவந்த இடத்தில் மற்ற வர்ணத்தவரைப் பற்றிப் பேசாமல் அந்தணரின் ஒழுக்கம் பற்றிப் பேசுகிறார் திருவள்ளுவர். அதுவும் அந்தணனின் பிறப்பு, உயர்ந்த பிறப்பு என்கிறார். கீழ்க்குலத்தைச் சேர்ந்தவனால் இப்படிக் கூற முடியுமா?

    மேலும் எல்லா உயிர்களிடத்தும் செந்தண்மை பூண்டு ஒழுகுவதால் அந்தணர் அறவோர் எனப்படுகின்றனர் என்று அந்தணருக்கு ஓர் இலக்கணத்தைக் கூறுகிறார். அந்த இலக்கணப்படி வாழ்ந்த அந்தணராக அவர் இருந்ததால் தான் கொல்லாமை பற்றி அவரால் எழுத முடிந்தது. மாட்டுக்கறி தின்னும் ஒரு மனிதனால் கொல்லாமை பற்றியும் புலால் மறுத்தல் பற்றியும் மதுப் பழக்கத்தைக் கண்டித்தும் எழுத முடியுமா? அதனால் திருவள்ளுவர் அந்தணர் குலத்தைச் சேர்ந்தவர்தான். அதற்கு அவர் எழுதிய திருக்குறளே சாட்சி.

    திருவள்ளுவர் தனது நூலில் வேதத்தையும் வைதிக வேள்விகளையும் வைதிக அந்தணர்களையும் வர்ண தர்மங்களையும் ஆதரித்துப் பேசியிருக்கிறார் என்பதை இதுவரை விரிவாகப் பார்த்தோம். இனி அவர் எந்தச் சமயத்தைச் சார்ந்தவர் என்பது பற்றிப் பார்ப்போம்.

    திருவள்ளுவரின் சமயம்

    திருவள்ளுவர் ஸநாதன வைதிக சமயத்தில் சொல்லப்படும் மனித வாழ்வின் அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கு இலக்குகளைப் பற்றியும் கல்வி, இல்வாழ்க்கை, விலகல், துறவு என்ற நான்கு ஆஶ்ரம தர்மங்களைப் பற்றியும் தனக்கே உரிய முறையில் தனது நூலில் எழுதியிருக்கிறார். இதுதவிர தெய்வங்கள் என்று எடுத்துக்கொண்டால் திருமால், இந்திரன், லக்ஷ்மி, பிரஹ்மா, பித்ருக்கள், யமன் என்ற வைதிக தெய்வங்களைப் பற்றிய குறிப்புகள் தான் திருக்குறளில் காணப்படுகின்றன.

    திருமாலை இரண்டு (610, 1103) குறட்பாக்களிலும் திருமகளை ஐந்து (84, 179, 519, 617, 920) குறட்பாக்களிலும் நேரடியாகவே குறிப்பிடுகிறார். யமனை ஐந்து (269, 326, 765, 1083,1085) குறட்பாக்களில் குறிப்பிடுகிறார். பிரஹ்மாவைப் பற்றி 1062ஆம் குறளிலும், இந்திரனைபற்றி 25ஆம் குறளிலும் பித்ருக்களைப் பற்றி 43ஆம் குறளிலும் குறிப்பிடுகிறார். இவற்றையெல்லாம் வைத்துப் பார்க்கின்ற போது திருவள்ளுவர் ஒரு ஸநாதன வைதிக மதத்தைச் சேர்ந்தவர் என்பது தான் புலப்படுகிறது.

    ஸநாதன வைதிக சமயம் தான் திருவள்ளுவர் காலத்திலும் அவருக்கு முற்பட்ட சங்க காலத்திலும் தமிழ்நாட்டில் நிலவி வந்த ஒரே சமயம். ஸநாதன வைதிக சமயத்தில் பரம்பொருளாகச் சொல்லப்படும் கடவுள் திருமால்தான். வேதத்தை அடிப்படையாகக்கொண்ட வேள்வி மூலமான வழிபாடே திருமாலைக் குறித்த வழிபாடுதான்.

    “கெடு இல் கேள்வியுள் நடு ஆகுதலும்”, “வேதத்து மறை நீ”, “விறல் மிகு விழுச்சீர் அந்தணர் காக்கும் அறனும் நீ”, “கேள்வியுள் கிளந்த ஆசான் உரையும் படி நிலை வேள்வியுள் பற்றி ஆடு கொளலும், புகழ் இயைந்து இசை மறை உறு கனல் முறை மூட்டி, திகழ் ஒளி ஒண்சுடர் வளப்பாடு கொளலும், நின் உருபுடன் உண்டி பிறர் உடம்படுவரா, நின்னொடு புரைய அந்தணர் காணும் வரவு” , “ஏந்தல் சான்ற இடனுடை வேள்வி, ஆக்கிய பொழுதின் அறத்துறை போகி, மாயவண்ணனை மனன் உறப்பெற்று” முதலிய சங்க இலக்கிய வரிகள் வேதத்தில் சொல்லப்படும் பரம்பொருளும் வேள்வியால் ஆராதிக்கப்படும் பரமனும் திருமாலே என்பதைத் தெளிவாக முழங்குகின்றன.

    சங்கத் தமிழர்கள் தாங்கள் வாழ்ந்த நிலப் பகுதிக்குத் தக்கவாறு நான்கு தெய்வங்களையும் மற்றும் சில சிறு தெய்வங்களையும் வழிபட்டிருந்தாலும் அவர்கள் பரம்பொருளாகக் கருதிய ஒரே தெய்வம் திருமால்தான். வேறு தெய்வங்களை அவர்கள் பரம்பொருளாகக் கருதவில்லை. இவ்விஷயம் சங்க இலக்கியங்களில் தெளிவாக உள்ளது. ”அருள் குடையாக அறம் கோலாக இருநிழல் படாமை மூவேழுலகமும் ஒரு நிழலாக்கிய ஏமத்தை” என்று தமிழகம் மட்டுமல்லாது அகில உலகிற்கும் திருமாலே பரம்பொருள் என்று கூறியிருக்கிறார்கள் சங்கத் தமிழர்கள்.

    வேள்வி வழிபாட்டின் நீட்சியாக ஆலய வழிபாடு தோன்றிய காலத்திலும் நம் நாட்டில் முதலில் தோன்றிய ஆலயங்கள் திருமாலுக்குரிய ஆலயங்களே. காலத்தால் முற்பட்ட சங்க இலக்கியங்களில் திருவரங்கம், திருவேங்கடம், திருவெஃகா, திருவனந்தபுரம் முதலிய திருமாலின் திவ்ய தேசங்களைப் பற்றிய செய்திகள் வருகின்றனவே ஓழியத் தற்காலத்தில் பிரபலமாகவுள்ள மற்ற தெய்வக் கோயில்களைப் பற்றிய ஒரு சிறு குறிப்புக்கூடக் காணப்படவில்லை.

    மேலும் பகவானுடைய அவதாரப் பெருமைகளும் பரத்வமும் ஸ்ரீவைஷ்ணவ ஸிந்தாந்தக் கோட்பாடுகளும் பாஞ்சராத்ர ஆகமக் குறிப்புகளும் சங்க இலக்கியங்களில் கொட்டிக் கிடக்கின்றன. இதனால் தொல்பழம் வைதிக சமயமான ஸ்ரீவைஷ்ணவ மதம் தான் பழம் தமிழரின் மதம் என்பது தெள்ளத் தெளிவாக விளங்குகிறது. பழந்தமிழரான திருவள்ளுவரின் மதமும் அந்த மதம் தான் என்பதை அவரது நூலான திருக்குறளே தெளிவாகக் காட்டுகிறது. எப்படியென்று பார்ப்போம்.

    – தொடரும்

    Share
  • திருவள்ளுவர் யார்? – 4

    திருவள்ளுவர் யார்? – 4

    புதுக்கோட்டை பத்மநாபன்

    திருவள்ளுவர் கூறும் ஒழுக்கம் என்பது, அவரவரின் வர்ணத்திற்குரிய ஒழுக்கம்தான்.

    “மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்
    பிறப்பொழுக்கம் குன்றக் கெடும்”

    இந்தக் குறட்பா, ஓர் அந்தணனுக்கு அறிவுரை சொல்வதுபோல் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஓதல் முதலிய ஆறு தொழில்களே அந்தணருக்கு உரியவை. திருவள்ளுவர் வாழ்ந்த காலத்தில் அந்தணர்களில் சிலர் தங்களது அறுதொழிலை விட்டுவிட்டு, அத்தொழில்களுக்கு அடிப்படையான வேதத்தையும் மறந்துவிட்டு, வேறு தொழில்களை நாடிச் சென்றிருக்கின்றனர். வேள்வி முதலிய வைதிக கர்மங்களை விட்டுவிட்டு வேறு தொழில் செய்பவர்களை ‘வேளாப் பார்ப்பான்’ என்று அழைக்கும் வழக்கம் இருந்ததாகச் சங்க இலக்கியங்களில் சொல்லப்படுகிறது. அந்த வகை அந்தணர்களை நோக்கித்தான் இந்தக் குறட்பாவின் மூலம் திருவள்ளுவர் அறிவுரை கூறுகிறார்.

    வேதத்தை அந்தணர் மறக்கலாகாது. அந்தணர்களின் அறு தொழில்களுக்கு அடிப்படையே வேதம்தான். வேதம் மறந்து போய்விட்டால் அவர்கள் தங்களது தொழிலைச் செய்ய முடியாது. வேதம் நினைவில் இருக்க வேண்டுமானால் தங்களது அறுதொழில்களையும் அவர்கள் செய்து கொண்டிருக்க வேண்டும். தங்கள் தொழிலைச் செய்ய முடியாத நிலையில் ஜீவனத்துக்காக அவர்கள் வேறு தொழிலை நாட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுவிடுகிறது. அப்படி வேறு தொழிலை நாடிச் செல்லும் அந்தணர்களை நோக்கித்தான் திருவள்ளுவர், இக்குறட்பாவின் மூலம் அறிவுரை கூறுகிறார். அதாவது, “நீங்கள் வேதத்தை மறந்து விட்டாலும் மறுபடி கற்றுக்கொள்ளலாம். ஆனால் வேதம் மறந்து போய்விட்டது என்பதற்காக நீங்கள் வேறு தொழிலை நாடிச் சென்றால் அத்தொழிலுக்கு உரிய பழக்க வழக்கங்கள் உங்களைப் பற்றிக் கொண்டுவிடும். உங்களது ஒழுக்கம் போய்விடும். அதனால் உங்கள் உயர்வு கெட்டுப் போய்விடும். பிறப்பால் அமைந்த உங்களது சிறப்பை இழந்துவிடுவீர்கள். ஆகவே வேறு தொழிலை நாடிச் செல்லாதீர்கள்”என்று கூறுகிறார் திருவள்ளுவர்.

    எல்லாக் காலங்களிலுமே அறுதொழில் செய்யும் அந்தணரை சமூஹம் உயர்ந்த இடத்தில் வைத்துத்தான் மதித்திருக்கிறது. அறுதொழில் செய்யும் அந்தணரை அரசனே வணங்கியிருக்கிறான் என்று சங்க இலக்கியம் சொல்கிறது. ஆனால் ஜீவனத்துக்காகத் தன் தொழிலை விட்டுவிட்டுத் தாழ்ந்த தொழிலைச் செய்யும் அந்தணருக்கு அவரது பிறவிக்குரிய மரியாதை கிடைப்பதில்லை. வேள்வி செய்யும் பார்ப்பானுக்குக் கிடைக்கும் மரியாதை, சங்கறுத்து வளையல் வியாபாரம் செய்யும் பார்ப்பானுக்குக் கிடைக்காது. வேறு தொழிலை நாடிச் சென்றாலும் தன் பிறவிக்குத் தாழ்வு ஏற்படுத்தும் தொழிலை நாடி ஓர் அந்தணன் செல்லக் கூடாது. தான் பிறருக்கு அறிவுரை கூறும் அளவிற்குத் தலைமைத் தன்மை உள்ள தொழிலைத்தான் அந்தணன் எப்போதும் செய்யவேண்டும். தன் தகுதிக்குத் தாழ்ந்த தொழிலைச் செய்தால் அத்தொழிலுக்குரிய தாழ்ந்த ஒழுக்கங்கள் அவனைப் பற்றிக்கொண்டு அவனது அந்தணத் தன்மையைப் போக்கிவிடும். இந்தக் குறட்பாமூலம் வர்ண தர்மத்தை சிறப்பாக ஆதரிக்கிறார் திருவள்ளுவர்.

    அந்தணர்கள் வேதத்தை ஏன் மறக்கிறார்கள் என்றால் அதற்கும் திருவள்ளுவரே காரணம் கூறுகிறார். ‘ஆபயன் குன்றும்’ என்ற குறட்பாவில் அரசன் நல்லாட்சி புரியாத நாட்டில், அந்தணர்கள் வேதத்தை மறந்துவிடுவார்கள் என்று கூறுகிறார். அதாவது ஓர் அரசன், அந்தணர்களுக்கு உணவு, உடை, உறைவிடம் முதலிய சௌகர்யங்களை ஏற்படுத்திக் கொடுத்து அவர்களை மதித்து ஆதரித்துப் பாதுகாக்க வேண்டும். அப்படி அரசனால் கௌரவிக்கப்படும் அந்தணர்கள், தங்களுக்குரிய அறுதொழில்களைச் செய்துகொண்டு ஜீவனம் செய்வார்கள். அரசன் அவர்களை இம்முறையில் ஆதரிக்கவில்லை என்றால் அவர்கள் தங்கள் தொழிலை விட்டுவிட்டு ஜீவனத்துக்காக வேறு தொழிலை நாடவேண்டிய சூழ்நிலை தான் ஏற்படும். வேறு தொழிலில் வேதத்தின் தேவை இல்லாததால் கொஞ்சம் கொஞ்சமாக வேதத்தை அவர்கள் மறந்துவிடுவார்கள். அதனால்தான், ‘காவலன் காவான் எனின் அறுதொழிலோர் நூல் மறப்பர்’ என்கிறார். எனவே தான் அந்தணர்களைப் பாதுகாப்பது அரசனுடைய கடமை என்கிறார்.

    அந்தணரின் அறுதொழிலின் சிறப்பையும் அவர்களது பண்பட்ட வாழ்க்கை முறையின் சிறப்பையும் எடுத்துக் காட்டத்தான் மற்றவர்களின் தொழில்களைப் பற்றி எல்லாம் பேசாமல், நல்லாட்சியில்லாத நாட்டில் அந்தணர்கள் தங்கள் தொழிலை விட்டுவிடுவார்கள் என்று கூறினார். அரசன் எல்லோரையும் பாதுகாக்க வேண்டியவன் என்றாலும் குறிப்பாக அந்தணரை அவன் பாதுகாக்க வேண்டும் என்று சொன்னது அந்தணரின் பெருமை கருதியே.

    திருவள்ளுவர் தன் வாழ்நாளில் ஒரு கொடுங்கோல் அரசனையும் சந்திக்க வேண்டி இருந்திருக்கிறது என்பதை இதனால் புரிந்துகொள்ள முடிகிறது. அந்தக் கொடுங்கோலனின் ஆட்சிக் காலத்தில் இருந்த அந்தணர்கள், தங்களை அரசன் முறைப்படி ஆதரிக்காததால் தங்கள் தொழிலை விட்டுவிட்டனர். அதனால் அவர்களுக்கு வேதம் மறந்துபோய்விட்டது. அந்த நிலையில் அவர்கள் வேறுதொழிலை நாடிச் செல்ல நினைத்த போதுதான் அவர்களுக்குக் கூறும் அறிவுரையாக ‘மறப்பினும் ஓத்துக்கொளலாகும்’ என்ற குறட்பாவை எழுதினார் திருவள்ளுவர்.

    “அந்தணர்களே! அரசன் உங்களை ஆதரிக்காததால் உங்கள் தொழிலைக் கைவிட்ட நீங்கள் அத்தொழிலுக்கு ஆதாரமான வேதத்தையும் மறந்து விட்டீர்கள். நீங்கள் கற்ற வேதத்தை மறந்துவிட்டாலும் திரும்பக் கற்றுக் கொள்ளலாம். மறந்து போய்விட்டதே என்று கவலைகொள்ள வேண்டாம். அந்த வேதம் உங்களுக்கு என்றும் பாதுகாப்புத் தரும். ஆனால் ஜீவனம் போய்விட்டதே என்பதற்காக வேறு தொழிலுக்குப் போய்விடாதீர்கள். வேறு தொழிலுக்கு நீங்கள் சென்றால் அத்தொழிலுக்குரிய பழக்கவழக்கங்களால் ஈர்க்கப்பட்டு உங்கள் வர்ண ஒழுக்கம் குறைந்துவிடும். அதனால் உங்களது உயர்வு கெட்டுப் போய்விடும்” என்பதுதான் திருவள்ளுவர் அந்தணர்களுக்கு கூறும் அறிவுரை.

    ஜீவனத்துக்காக அந்தணர்கள் எந்தச் சூழ்நிலையிலும் தங்கள் தகுதிக்குப் பொருந்தாத தொழிலைச் செய்யக்கூடாது என்பதும், தங்களது பெருமைக்குக் குறைவு ஏற்படுத்தாத தொழிலைத்தான் எப்போதும் அவர்கள் செய்யவேண்டும் என்பதும் இதனால் தெளிவாகிறது. ”சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமையான்”என்ற இடத்தில் தொழில்களில் உயர்வு தாழ்வு உண்டு என்பதையும் காட்டிவிட்டார் திருவள்ளுவர். அதனால் திருவள்ளுவர், வர்ண தர்மத்தை முழுக்க முழுக்க ஆதரித்த ஒரு வைதிகர் என்பது தெளிவாகிறது.

    உயர்ந்த குலத்தில் பிறந்த ஒருவனிடம் உயர்ந்த குணம்தான் இருக்க வேண்டும். ஆனால் சில இடங்களில் இவ்விஷயம் மாறுபட்டுக் காணப்படுகிறது. அதாவது நடைமுறையில் சில இடங்களில் உயர்ந்த குலத்தில் பிறந்தவனிடம் இழிவான குணங்களும் தாழ்ந்த குலத்தில் பிறந்தவனிடம் உயர்ந்த குணங்களும் காணப்படுகின்றன. இவ்விஷயம் குறித்தும் விளக்குகிறார் திருவள்ளுவர்.

    “மேல்பிறந்தார் ஆயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும்
    கற்றார் அனைத்திலர் பாடு”

    “மேலிருந்தும் மேலல்லார் மேலல்லர் கீழிருந்தும்
    கீழல்லார் கீழ்அல் லவர்”

    என்ற குறட்பாக்கள் மூலம் கல்வி ஞானம், ஒழுக்கம், நற்பண்பு இவையெல்லாம் மேற்குலத்தில் பிறந்தவனிடம் இல்லையென்றால் அவன் மேற்குலத்தில் பிறந்தவனாகக் கருதப்படமாட்டான் என்றும் மேற்படி விஷயங்கள் கீழ்க்குலத்தில் பிறந்தவனிடம் காணப்பட்டால், அவன் கீழ்குலத்தில் பிறந்தவனாகக் கருதப்படமாட்டான் என்றும் கூறுகிறார் திருவள்ளுவர். மேற்குலத்தில் பிறந்தவனிடம் கல்வி, ஞானம் முதலிய நற்பண்புகள் இல்லாமற் போவதற்கும் கீழ்க்குலத்தில் பிறந்தவனிடம் அந்த நற்பண்புகள் காணப்படுவதற்கும் என்ன காரணம் என்றால் அதற்கும் அவரே பதிலளிக்கிறார். குடிமை என்ற அதிகாரத்தில்,

    “நலத்தின்கண் நாரின்மை தோன்றின் அவனைக்
    குலத்தின்கண் ஐயப் படும்”

    என்று ஒரு குறட்பா இடம்பெறுகிறது. உயர்ந்த குலத்தில் பிறந்த ஒருவனிடம் நற்பண்பு காணப்படாவிட்டால் அவனது பிறப்பு சந்தேகத்துக்குரியது என்பது இக்குறட்பாவின் கருத்து.

    “நிலத்தில் கிடந்தமை கால்காட்டும் காட்டும்
    குலத்தில் பிறந்தார்வாய்ச் சொல்.”

    என்பது அதற்கு அடுத்த குறட்பா. நிலத்தின் தன்மையை அந்நிலத்தில் முளைத்து வரும் முளையை வைத்து நாம் அறிந்துகொள்வது போல ஒருவன் உயர்குலத்தில் பிறந்தவன் என்பதை அவனது வாய்ச்சொல் காட்டிவிடும் என்பது இக்குறட்பாவின் கருத்து. அதாவது நல்ல நிலத்தில் நல்ல விதையை விதைத்தால் நல்ல பயிர் உருவாகும். கெட்ட நிலத்தில் நல்ல விதையையோ நல்ல நிலத்தில் கெட்ட விதையையோ விதைத்தால் விளையும் பயிர் நல்ல பயிராக இருக்காது. இதுதான் திருவள்ளுவர் சொல்ல வரும் விஷயம்.

    மஹாபாரதம் வனபர்வத்தில் தர்மராஜரான யுதிஷ்டிரருக்கும் ஒரு மலைப் பாம்புக்கும் இடையில் நடந்த ஓர் உரையாடல் சொல்லப்படுகிறது. அவ்வுரையாடலில் தர்மராஜர் “அந்தணனாகப் பிறந்த ஒருவனிடம் நான்காம் வருணத்தவனுக்குரிய குணங்களும் பழக்கவழக்கங்களும் காணப்பட்டால் அவன் அந்தணனாகமாட்டான். நான்காம் வர்ணத்தில் பிறந்த ஒருவனிடம் அந்தணனுக்கு உரிய குணங்களும் நடவடிக்கைகளும் காணப்பட்டால் அவன் நான்காம் வர்ணத்தவன் ஆகமாட்டான்” என்று கூறுகிறார். அதைக் கேட்ட அந்த மலைப்பாம்பு “ஒழுக்கத்தினால் தான் ஒருவன் அந்தணன் என்று சொல்லப்படுவான் என்றால் அந்தணனுக்குரிய ஒழுக்கம் இல்லாதபோது ஜாதி பயனற்றதாகிவிடுமே” என்று கேட்டது. அதற்கு தர்மராஜர், “ஆம், இந்த மானிட ஜாதியில் தற்காலத்தில் வர்ணபேதமின்றி ஆண்களும் பெண்களும் உறவு வைத்துக்கொள்வதால் அதற்குத் தக்கபடி அவர்களுக்குக் குழந்தைகளும் பிறக்கின்றன. ஆகவே, வர்ணக் கலப்பு ஏற்படுவதால் எல்லாவிதத்திலும் ஜாதி ஆய்வு செய்யத்தகாது என்பது என் கருத்து. இவ்விஷயத்தில் ஆசாரத்தையே (ஒழுக்கம்) பிரதானமாகக் கொள்ளவேண்டும் என்று தத்துவமறிந்தோர் கூறுகின்றனர்” என்று பதிலளிக்கிறார்.

    கல்வி ஞானமும் உயர்ந்த ஒழுக்கங்களும் இல்லாத ஒருவன் உயர்ந்த குலத்தில் பிறப்பதற்கும் கல்வி ஞானமும் உயர்ந்த ஒழுக்கங்களும் உள்ள ஒருவன் தாழ்ந்த குலத்தில் பிறப்பதற்கும் குலக் கலப்பே காரணமென்கிறார் தர்மராஜர். இதைத்தான் “நிலத்தில் கிடந்தமை கால் காட்டும்” என்ற குறட்பா மூலம் திருவள்ளுவரும் சொல்கிறார். உயர்ந்த குலத்தவனான ஓர் அந்தணனுக்கு மூடனும் துர்புத்தி உள்ளவனுமான ஒரு பிள்ளை பிறப்பதற்கும், தாழ்ந்த குலத்தவனுக்கு நற்பண்புகளும் கல்வி ஞானமும் நிறைந்த ஒரு பிள்ளை பிறப்பதற்கும் நிலம், விதை இவற்றின் தன்மைதான் காரணம் என்று திருவள்ளுவரும் தர்மராஜரும் சொல்கிறார்கள். இவ்விடத்தில்,

    वाङ्मैथुनमथो जन्म मरणम् च समम् नृणाम् (வாங்மைதுநமதோ ஜந்ம மரணம் ச ஸமம் ந்ருணாம்) என்று தர்மராஜர் சொன்னதையே திருவள்ளுவர் “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்கிறார். ஆகவே சில அம்சங்களில் பிறப்பு எல்லோருக்கும் பொதுவானதாக இருந்தாலும், ஒருவனுடைய உயர்வுக்கும் தாழ்வுக்கும் அவனுடய பிறப்பே காரணமாகிறது என்று கூறுவதால் திருவள்ளுவர், வர்ணக் கலப்பை ஆதரிக்காத ஸநாதன வைதிகர் என்பது தெள்ளத் தெளிவாக விளங்குகிறது.

    -தொடரும்

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள்- 86

    நெல்லைத் தமிழில் திருக்குறள்- 86

    நாங்குநேரி வாசஸ்ரீ

    86. இகல்

    குறள் 851:

    இகலென்ப எல்லா உயிர்க்கும் பகலென்னும்
    பண்பின்மை பாரிக்கும் நோய்

    எல்லா உசிருங்களையும் மனசு பொருந்தாம இருக்கச்செய்யுத தீய கொணத்த வளக்குத நோய நாம மனவேறுபாடு ங்குதோம்.

    குறள் 852:

    பகல்கருதிப் பற்றா செயினும் இகல்கருதி
    இன்னாசெய் யாமை தலை

    நம்ம கூட இணங்க ஏலாம ஒருத்தன் நமக்கு எடஞ்சல் செஞ்சாலும் அவன பகையாளியா நெனச்சி தீம செய்யாம இருக்கது நல்லது.

    குறள் 853:

    இகலென்னும் எவ்வநோய் நீக்கின் தவலில்லாத்
    தாவில் விளக்கம் தரும்

    ஒருத்தன் மன மாறுபாடுங்குத துன்பம் தருத நோய மனசுலேந்து நீக்கிட்டாம்னா அவனுக்கு அழியாத நெலச்ச புகழ் உண்டாவும்.

    குறள் 854:

    இன்பத்துள் இன்பம் பயக்கும் இகலென்னும்
    துன்பத்துள் துன்பங் கெடின்

    துன்பத்துல பெருந்துன்பம் மனவேறுபாடு. அது இல்லாமப் போச்சுதுன்னா சந்தோசத்துலயும் சிறந்த சந்தோசம் கெடைக்கும்.

    குறள் 855:

    இகலெதிர் சாய்ந்தொழுக வல்லாரை யாரே
    மிகலூக்கும் தன்மை யவர்

    மனவேறுபாடு தோணும்போது அத ஏத்துக்கிடாம வெலக்குதவங்கள எதித்து நிக்குத வலிம யாருக்கு உண்டு.

    குறள் 856:

    இகலின் மிகலினி தென்பவன் வாழ்க்கை
    தவலும் கெடலும் நணித்து

    மனவேறுபாட்ட வளக்கது நல்லதுனு நெனைக்கவனோட வாழ்க்க வெரசலா தடம்மாறிப் போய் அழிஞ்சு போவும்.

    குறள் 857:

    மிகல்மேவல் மெய்ப்பொருள் காணார் இகல்மேவல்
    இன்னா அறிவி னவர்

    பகைய மனசுல வச்சிருக்க கெட்டபுத்தி உள்ளவுக வாழ்க்கையில செயிக்க ஒதவுத உண்மப் பொருள அறியமாட்டாங்க.

    குறள் 858:

    இகலிற் கெதிர்சாய்தல் ஆக்கம் அதனை
    மிகலூக்கின் ஊக்குமாங் கேடு

    மனவேறுபாடு தோணும்போது அத ஏத்துக்கிடாம இருக்கது ஒருத்தனுக்கு சொத்துகணக்கா. ஏத்துக்கிட்டா கெடுதல் தான் வெளையும்.

    குறள் 859:

    இகல்காணான் ஆக்கம் வருங்கால் அதனை
    மிகல்காணும் கேடு தரற்கு

    ஒருத்தன் நன்ம வரும்போது மாறுபாட்டை நெனைக்க மாட்டான். தனக்குத்தானே கெடுதல தேடிக்கிடுதவன் மாறுபாட்ட பெரிசுபடுத்தி நெனைப்பான்.

    குறள் 860:

    இகலானாம் இன்னாத எல்லாம் நகலானாம்
    நன்னயம் என்னும் செருக்கு

    மனமாறுபாடு காட்டி பகையாளியா இருக்கவுகள எல்லாத் துன்பமும் அண்டும். சேக்காளியா இருக்க நெனயுதவுகளுக்கு நெறய சந்தோசம் கெடைக்கும்.

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள்- 85

    நெல்லைத் தமிழில் திருக்குறள்- 85

    நாங்குநேரி வாசஸ்ரீ

    85. புல்லறிவாண்மை

    குறள் 841:

    அறிவின்மை அன்மையுள் இன்மை பிறிதின்மை
    இன்மையா வையா துலகு

    புத்தியில்லாம போவுததுதான் கொடும் பஞ்சம். மத்த பஞ்சத்தையெல்லாம் பெரிசா எடுத்திக்கிடமாட்டாக ஒலகத்து பெரிய மனுசங்க.

    குறள் 842:

    அறிவிலான் நெஞ்சுவந் தீதல் பிறிதியாதும்
    இல்லை பெறுவான் தவம்

    கூறுகெட்டவன் ஒரு பொருளக் கொடுத்தாம்னா அதுக்குக் காரணம் அத வாங்கிக்கிடுதவங்க செஞ்ச நல்லகாரியந்தான்னு நெனச்சிக்கிடணும்.

    குறள் 843:

    அறிவிலார் தாந்தம்மைப் பீழிக்கும் பீழை
    செறுவார்க்கும் செய்தல் அரிது

    பகையாளியால கூட செய்ய ஏலாத அளவு எடஞ்சல கூறுகெட்டவன் தனக்குத்தானே செஞ்சிக்கிடுவான்.

    குறள் 844:

    வெண்மை எனப்படுவ தியாதெனின் ஒண்மை
    உடையம்யாம் என்னும் செருக்கு

    அறியாமைங்கது என்னன்னா ஒருத்தன் தன்னயத்தானே அறிவாளினு நெனச்சி அகராதி புடிச்சு அலயுததுதான்.

    குறள் 845:

    கல்லாத மேற்கொண் டொழுகல் கசடற
    வல்லதூஉம் ஐயம் தரும்

    புத்தியில்லாதவன் தான் படிக்காத நூலையும் படிச்சாமாரி பேசிக்கிட்டுத் திரிஞ்சாம்னா அவன் நெசமாவே படிச்சு தெரிஞ்சுக்கிட்டது மேலயும் மத்தவங்களுக்கு  சந்தேகம் வரும்.

    குறள் 846:

    அற்ற மறைத்தலோ புல்லறிவு தம்வயின்
    குற்றம் மறையா வழி

    தங்கிட்ட  இருக்க குத்தங்கொறைய களையாம ஒடம்ப மறைக்க உடுப்பு உடுக்க நெனயுததும் புத்திகெட்ட காரியந்தான்.

    குறள் 847:

    அருமறை சோரும் அறிவிலான் செய்யும்
    பெருமிறை தானே தனக்கு

    நல்ல புத்திமதிகளக் கேட்டு அதுகணக்கா நடந்துக்கிடாதவக தனக்குத்தானே பெரிய தீங்க செஞ்சுக்கிடுவாக.

    குறள் 848:

    ஏவவுஞ் செய்கலான் தான்தேறான் அவ்வுயிர்
    போஒம் அளவுமோர் நோய்

    சொந்தபுத்தியும் இல்லாம சொல்புத்தியும் கேக்காம இருக்கவங்களுக்கு அதுவே அவுக ஆயுசுக்கும் நோயா வந்துமுடியும்.

    குறள் 849:

    காணாதான் காட்டுவான் தான்காணான் காணாதான்
    கண்டானாம் தான்கண்ட வாறு

    கூறுகெட்டவன புத்திசாலியாக்க நெனச்சி பேசுதவன் அவன் முன்ன புத்திகெட்டவனாத்தான் நெனக்கப்படுவான். ஏம்னா கூறுகெட்டவன் தனக்குத் தெரிஞ்சத வச்சிக்கிட்டு தான் பெரிய புத்திசாலினு காட்டிக்கிடுதது தான் காரணம்.

    குறள் 850:

    உலகத்தார் உண்டென்ப தில்லென்பான் வையத்
    தலகையா வைக்கப் படும்

    இருக்குனு ஒலகத்து பெரியமனுசங்க சொன்ன விசயத்த வேணும்னே இல்லன்னு எதித்துப் பேசுதவன பேயா நெனச்சி வெலக்கி வச்சிடுவாக ஒலகத்து மனுசங்க.

    Share