நெல்லைத் தமிழில் திருக்குறள்- 86

நாங்குநேரி வாசஸ்ரீ
86. இகல்
குறள் 851:
இகலென்ப எல்லா உயிர்க்கும் பகலென்னும்
பண்பின்மை பாரிக்கும் நோய்
எல்லா உசிருங்களையும் மனசு பொருந்தாம இருக்கச்செய்யுத தீய கொணத்த வளக்குத நோய நாம மனவேறுபாடு ங்குதோம்.
குறள் 852:
பகல்கருதிப் பற்றா செயினும் இகல்கருதி
இன்னாசெய் யாமை தலை
நம்ம கூட இணங்க ஏலாம ஒருத்தன் நமக்கு எடஞ்சல் செஞ்சாலும் அவன பகையாளியா நெனச்சி தீம செய்யாம இருக்கது நல்லது.
குறள் 853:
இகலென்னும் எவ்வநோய் நீக்கின் தவலில்லாத்
தாவில் விளக்கம் தரும்
ஒருத்தன் மன மாறுபாடுங்குத துன்பம் தருத நோய மனசுலேந்து நீக்கிட்டாம்னா அவனுக்கு அழியாத நெலச்ச புகழ் உண்டாவும்.
குறள் 854:
இன்பத்துள் இன்பம் பயக்கும் இகலென்னும்
துன்பத்துள் துன்பங் கெடின்
துன்பத்துல பெருந்துன்பம் மனவேறுபாடு. அது இல்லாமப் போச்சுதுன்னா சந்தோசத்துலயும் சிறந்த சந்தோசம் கெடைக்கும்.
குறள் 855:
இகலெதிர் சாய்ந்தொழுக வல்லாரை யாரே
மிகலூக்கும் தன்மை யவர்
மனவேறுபாடு தோணும்போது அத ஏத்துக்கிடாம வெலக்குதவங்கள எதித்து நிக்குத வலிம யாருக்கு உண்டு.
குறள் 856:
இகலின் மிகலினி தென்பவன் வாழ்க்கை
தவலும் கெடலும் நணித்து
மனவேறுபாட்ட வளக்கது நல்லதுனு நெனைக்கவனோட வாழ்க்க வெரசலா தடம்மாறிப் போய் அழிஞ்சு போவும்.
குறள் 857:
மிகல்மேவல் மெய்ப்பொருள் காணார் இகல்மேவல்
இன்னா அறிவி னவர்
பகைய மனசுல வச்சிருக்க கெட்டபுத்தி உள்ளவுக வாழ்க்கையில செயிக்க ஒதவுத உண்மப் பொருள அறியமாட்டாங்க.
குறள் 858:
இகலிற் கெதிர்சாய்தல் ஆக்கம் அதனை
மிகலூக்கின் ஊக்குமாங் கேடு
மனவேறுபாடு தோணும்போது அத ஏத்துக்கிடாம இருக்கது ஒருத்தனுக்கு சொத்துகணக்கா. ஏத்துக்கிட்டா கெடுதல் தான் வெளையும்.
குறள் 859:
இகல்காணான் ஆக்கம் வருங்கால் அதனை
மிகல்காணும் கேடு தரற்கு
ஒருத்தன் நன்ம வரும்போது மாறுபாட்டை நெனைக்க மாட்டான். தனக்குத்தானே கெடுதல தேடிக்கிடுதவன் மாறுபாட்ட பெரிசுபடுத்தி நெனைப்பான்.
குறள் 860:
இகலானாம் இன்னாத எல்லாம் நகலானாம்
நன்னயம் என்னும் செருக்கு
மனமாறுபாடு காட்டி பகையாளியா இருக்கவுகள எல்லாத் துன்பமும் அண்டும். சேக்காளியா இருக்க நெனயுதவுகளுக்கு நெறய சந்தோசம் கெடைக்கும்.