Tag: ஜெயஸ்ரீ ஷங்கர்

  • சின்னச் சின்னதாய்

     

    ஜெயஸ்ரீ ஷங்கர்              

                                                                                                                                                                           

    நாணத்தினால்
    தாமரை…
    வண்டுகள் வரவு..!

    நீ சூடிய மல்லிகை..!
    நறுமணம்…
    எனைத்தேடி..!

    விற்கும் வரை மட்டுமே..
    ஒய்யாரமாய்..அணிவகுப்பு..!
    செருப்பு…!

    வளைந்த வில்லும்
    நீந்தும் கெண்டையும்..
    உன் முகத்தில்..!

    நிறைகுடத்தை
    சுமக்கிறாள்
    கர்ப்பிணி..!

    கால் வலிக்காதா..
    சோர்வே வராதா,,..?
    கடலலைகள்.

    கனல் கொண்டு பறக்கும்
    புதுமைப் பெண்..
    மின்மினி…!

    சொன்ன வாக்கு பலிக்குது…
    வீட்டுக்குள்ளே.. குடுகுடுப்பைக்காரன்..
    கதவிடுக்கில் பல்லிச் சத்தம்..!

    மூடிய விழிகளுக்குள்
    வண்ணச் சித்திரம்..
    கனவு..!

    கட்டித்தொங்கப் போட்டாலும்
    சுதந்திரமாய்ப்.. பறக்கும் ஓர்நாள்
    சுதந்திர தினத்தில் தேசியக் கொடி..!

    சருகாகும் மலர்களே…
    வரம் வாங்கி வந்தீர்களா..
    சந்ததி வேண்டாம் என்று..!

    கண்டெடுத்தேன்..
    புதையலை..
    உன் மனம்..!

    மௌனமாய்…
    உயிர் போராட்டம்..
    எறும்புகள்..!

    உடலுக்குள்ளே…
    என்றும் குழந்தையாய்..
    மனம்..!

    திருமணம்..
    இருமனக் கனவின்..
    அரிச்சுவடி..!

    கர்ப்பத்தை கலைகாதீர்..
    விதையோடு பழங்கள்..!
    வயிற்றிலா விதைப்பது..?

    பாதத்திற்கு பாதுகாப்பு
    கைகளுக்கும் தற்காப்பு
    செருப்பு..!

    நாளைய நெல்லுக்கு..!
    நாற்று நடவு…இன்று..
    பட்டினியோடு..!

    உதிர்ந்த பூக்களை
    வாரி அணைக்க
    தென்னங்குச்சிகள்..!

    முகம் காட்டும் கண்ணாடியே..
    என்ன கோவம்..என்மேல்..?
    எங்கே ஒளித்தாய் என் இளமுகத்தை….!

    உடலுக்குள்ளே..
    விஷமருந்து ..
    உயிரோடிருந்தது..
    பட்டாசு..!

    Share
  • காதல் கீதை …!

    ஜெயஸ்ரீ ஷங்கர், சிதம்பரம்

    வீட்டை விட்டு இறங்கி பாதி வழி வந்ததும் காற்றும் கூடவே துரத்த மழை வருமோ என்று வானம் பார்க்கிறார் கல்யாண ராமன். எதற்கும் இருக்கட்டும் என்று கையோடு  கொண்டு வந்த குடை….”நானிருக்கேன் …கவலைப் படாதே .! என்றது. இந்தக் காற்றையெல்லாம் உன்னால தாக்குப் பிடிக்க முடியாது …..நீ பேருக்குத் தான் குடை…உன்னை  அது  இழுக்கும் ஒரே இழுப்பிலே  நீ என்னை விட்டு பறந்து போய்டுவே…உன்னை பற்றி நேக்குத் தெரியாதா..? எத்தனை குடைகள் உன்ன மாதிரி என்கிட்டே சொல்லிட்டு காற்றோடு விடை பெற்று ஓடிப் போயிருக்கும்.

    அதற்குள் சட சட வென்று மழை கொட்ட ஆரம்பித்தது….குடையை விரித்ததும்…அசுரக் காற்று குடையை மேலிழுத்துக்  கொண்டது. குடையின் கைப்பிடியை கெட்டியாகப் பிடித்துகொண்டு தொங்கிய கல்யாண ராமன் குடையோடு சேர்ந்து தானும் பறந்து விடாமல் இருக்கணுமே என்ற பயத்தில் சற்று இறுக்கமாக கீழ் நோக்கி இழுக்கிறார். இடுப்பு வேஷ்டி…’இதோ அவிழ்ந்து விடுவேன் ‘ என்று பயமுறுத்த ‘மானமா..?..குடையா….?என்று மனசு பட்டிமன்றம் எதுவும் நடத்தாமல் தொலைஞ்சு போ என்று கைப்பிடியைத் தளர்த்த குடை  சுதந்திரமாகப் பாடிப் பறந்து சென்றது.

    கைகள் இரண்டும் விருட்டென அவிழத் துடிக்கும் வேஷ்டியை இறுக்கிப் பிடிக்க..காற்றும் மழையும் கண்ணா மூச்சி விளையாடியது.
    குடை போச்சே…..என்று வருத்தப் பட்ட கல்யாண சுந்தரம் அருகில் இருந்த ஒரு பஸ்சுக்காக இருந்த  நிழற் குடையின் உள்ளே தஞ்சம் புகுந்தார். மழை நின்ன பிறகு  போனால் போதும். உட்கார இடம் இருக்குமா ? என்று திரும்பிப் பார்த்தவர்  முகம் சுளித்தார். ஏதோ ஒரு மட்டரக சினிமா போஸ்டர் வரிசையாக விளம்பரப் படுத்த ஒட்டியிருந்தது. ஓரங்களில் எல்லாம் வெத்தலையை மென்று துப்பிய கரை…..மனசுக்குப் பிடிக்காத குடலைப் பிரட்டும் நாற்றம் வேறு. வேற வழியே இல்லாமல் சுற்றுப்புறத்தை சகித்துக் கொண்டு நின்றிருந்தார் கல்யாண ராமன்.

    அடுத்த சில நொடிகளில் ஒரு பெண் ஓடி வந்து அந்த சிறிய இடத்துக்குள் நுழைந்து கொண்டாள் . ஸ்கூலில் இருந்து நேரே வந்ததற்கான அடையாளமாய் யூனிஃபாரமில் இருந்தாள்.  ரெட்டைச் சடை மடித்துக்  கட்டி அதன் வழியே வாடிய  மல்லிகைப்பூ சரம் தொங்கிக் கொண்டிருந்தது. ஏதோ ஒரு வித பயம் முகத்தை மேக் அப் போட்டு விட்டிருந்தது.  அவளது முகத்தின் வியர்வையை மழை நீர் துடைத்து துடைத்து தோற்றுப் போனது. கையில் பெயருக்கு  ரெண்டு  நோட்டுக்கள் . முதுகில் கவசமாக புத்தகப்பை வேறு. அவளது கண்கள் ஒரே திக்கை பார்த்த வண்ணம் இருந்தது. அதில் யாரையோ  எதிர்பார்த்து தூரத்தில் தேடிக் கொண்டிருந்த தவிப்பும் தெரிந்தது.

    கல்யாண ராமன் அவளையே பார்த்த வண்ணம் நிற்கிறார். சின்னப் பெண்..மிஞ்சி மிஞ்சிப் போனால்..என்ன வயதிருக்கும்..? ஒரு பதினாறோ பதினேழோ தான்  இவளுக்கு. பெரிய பிரமாதமான அழகின்னு சொல்ல முடியாது..ஆனாலும் அந்த வயதுக்கு உண்டான கவர்ச்சி, கண்களில் மருட்சி, யாராவது பார்த்து விட்டார்களோ என்ற உணர்வோடு ஒரு பருவத்தின் அச்சம், மடம், நாணம் பயிர்ப்பு என்று நான்கும்  எட்டி எட்டிப் பார்த்தது.

    இதற்குள் ஓரக் கண்ணால் இவர் தன்னைப் பார்க்கிறாரா என்று பார்த்து விட்டு தன துப்பட்டாவை எடுத்து முகத்தை, தலையைத் துடைத்துக் கொள்கிறாள் .  திடீரென ஒரு பாடல் ஓசை…செல் போனில் !

    தீயே தீயே ராதீயே இனி தீயே….!.
    தீண்ட தீண்ட தீர்ந்தியே.
    தீயே தீயே ராதீயே இரு தீயே…!.
    தீர தீர சேர்ந்தியே…

    அவளது புத்தகப் பைக்குள் இருந்து வந்து கொண்டிருந்ததை கைபேசியை வெளியே எடுத்து சட்டென அதன் வாயை மூடினாள் .
    .

    அதன் பின்பு அவள் குசு குசு வென்று தனக்கும் கேட்காமல் எதையோ பேசிவிட்டு மீண்டும் புத்தகப் பைக்குள் போட்டு விட்டு மீண்டும் ஓரக் கண்ணால் கல்யாண ராமனை ஒரு பார்வை. அதன் பின்பு அலட்சியமாக ஒரு திரும்பல்.

    அதற்குள்….

    வேகமாக ஒரு பைக் வந்து ஓரமாக நிறுத்தி அதிலிருந்து ஒய்யாரமாக ஒரு காலேஜ் ஸ்டுடென்ட்  இறங்கி வருகிறான்…

    அவன் உள்ளே நுழையவும் அங்கிருந்த பெண்ணின்  முகத்தில் ஆயிரம் வாட்ஸ்  பல்பு எரிகிறது. ஊரெல்லாம் பவர் கட் இருந்தாலும் இந்த பெண்கள் முகத்தில் மட்டும் எப்போதும் மின்சாரம் தடையில்லாத சப்ளை இருக்கும் போல…என்று எண்ணிக் கொண்டவர் மெல்ல அங்கே நடக்கப் போகும் நாடகத்தை தன ஓரக் கண்ணால் பார்க்க முடிவு செய்தவராக கண்ணையும் காதையும் தீட்டிக் கொண்டு வேறு பக்கமாகத் திரும்பி  நின்றார்.

    இப்படி மழை வரும்னு நான் எதிர்பார்க்கலை…நீ ஸ்கூலேர்ந்து கிளம்பி இருக்க மாட்டேன்னு நினைச்சேன். நீ ஏன் இந்த  மழைல புறப்பட்டு வந்தே…? .இப்போ பாரு நாம இங்க வந்து மாட்டிக்கிட்டோம்.

    மதியம் இப்போ மூணு பீரியட் அதுல ரெண்டு பீரியட் மாத்ஸ்…கட் பண்ணிட்டேன். நான் பாதி நடந்து வந்தபின்னாடி தான் இப்படி மழை பிடிக்க ஆரம்பிச்சது. என்னால நீயும் இப்படி மழையில் நனைஞ்சுட்டியே….என் கிட்ட சொல்லியிருக்கலாம் இல்ல…நான் இப்ப வரலைன்னு…அவள் தனது துப்பட்டாவை இழுத்து அவன் முகத்தையும் தலையையும் துடைக்கிறாள்…’சாரிடா  அபி ‘ என்கிறாள்.

    இட்ஸ் ஆல் ரைட் …விடு… என்று விலகிக் கொண்டவன்…இதெல்லாம் எனக்கு ஜுஜிபி……நீ தனியா இங்க நிற்கறேன்னு சொன்னதும் தான் நான் கிளம்பி வந்துட்டேன்.

    அதற்குள் அந்தப் பையனின் கண்கள் அந்த சினிமா போஸ்டரை பல தடவைகள் பார்த்து பார்த்து, பின்பு அங்கேயே ஒரு சிகரட்டை எடுத்து பற்ற வைத்தான்……….! ஒரே குளிர்…நீ கூப்பிடும் போது  நான் நெட் சென்டரில் தான் இருந்தேன். நான் இன்னைக்கு காலேஜுக்கே போகலை…. எப்படியும் நம்ம ப்ளான் படி மதியம் வெளில போகணும்..அதான் இங்கயே பக்கத்தில் இருக்கலாம்னு சும்மா வெட்டியா சாட் பண்ணிட்டு இருந்தேன்.  அவன் ஸ்டைலாக புகை விட்டுக் கொண்டிருந்தான். அவள் அதைப் பார்த்து ரசித்து கொண்டு அருகில் அவனிருக்க வானுலகில் மிதந்து  கொண்டிருந்தான்.

    இத்தனை நாளா பெய்யாமல் இன்னிக்குன்னு பார்த்து சேர்த்து வெச்சு கொட்டுது இந்த மழை இப்போ நிற்கும்னு எனக்குத் தோணலை….அடுத்து என்ன செய்யலாம்..? அவள் மெல்லக் கேட்கிறாள்.

    வரியா…எங்காவது சினிமாத் தியேட்டரில் போய் உட்காரலாம்.”காதல் ஜோடி” ன்னு புதுப்படம் நமக்காகவே  தயாரிக்கப்பட்டது போல எடுத்திருக்காராம்…அதுக்கு வேணாப் போகலாமா? .

    அய்யயோ….நான் வரலை அபி….யாராவது பார்த்தா வம்பாயிடும். இப்பவே பயம்மா இருக்கு….மெல்ல அவன் முதுகுப்பக்கமா தலையை மறைத்துக் கொள்கிறாள்.

    அங்கிருந்த ஒரு கம்பி மேல் இருவரும் எம்பிக்  குதித்து  அருகருகில் உட்கார்ந்து கொள்கிறார்கள். தனிமையும்,, உடற் கணப்பும், தைரியமும்  நெருக்கமும் இருவருக்கும் ஒரு தைரியத்தைக் கொடுத்து வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்றது.

    சந்தியா நீ என்ன சாப்பிட்டே..?

    இன்னும் ஒன்னும் சாப்பிடலை….அப்படியே கொண்டு வந்துட்டேன்…உனக்குப் பிடிக்குமே…..மிளகாய்ப் பொடி  தடவின இட்லி. என்று ஸ்கூல் பையிலிருந்து டிபன் பாக்சை வெளியே எடுக்கிறாள்.

    அவன் தன விரல்களுக்கிடை இருந்த சிகரெட்டுக்கு விடை கொடுத்து கையை மழை நீரால் அலம்பிக் கொண்டு எடு..எடு….என்று சொல்லி ஒரு இட்லியை பிய்ச்சு ‘இந்தா என்று அவளது வாயருகே கொண்டு செல்லவும்’

    முதல்ல நீ சாப்பிடு என்று அவள் முகத்தைப் பின்னுக்குத் தள்ளிக் கொள்கிறாள்.

    பார்த்து…பார்த்து…எங்கியாவது விழுந்து வைக்கப் போறே…! அவனது பதட்டம் குரலில்…

    இருவரும் சிரிக்கிறார்கள், குசு குசுவென்று மொபைலுக்குள் தலையை விட்டுக் குனிந்து கொண்டு ரகசியம் பேசிக் கொள்கிறார்கள்.அப்பப்போ தலையை நிமிர்த்தி இவரையும் ஒரு பார்வை பார்த்துக் கொள்கிறார்கள்.

    காசு கொடுக்காமல், இந்தக் காதல் நாடகத்தைப்  பார்த்து ரசித்துக் கொண்டிருந்த கல்யாண ராமனுக்கு சிரிப்பு வந்தது பைத்தியக்காரத் தனமாக கூடத் தெரிந்தது . அதே சமயம் பொறாமையாகக் கூட இருந்தது.

    அவர்களின் அன்பின் பரிமாற்றம் கல்யாண ராமனின்  மனதிற்குள் என்னவோ செய்தது…ஒரு பெண் செலுத்தும் அன்பு சுகமானது…அலாதியானது தான்

    ஆனால் அவரது அனுபவத்தில் அந்தப் பையனைப் பார்க்கும் போது  அவருக்குப் பிடிக்கவே இல்லை. இவன் நிச்சயமா இவளை ஏமாத்திடுவான் என்றே தோன்றியது. உடற் கவர்ச்சியில் உண்டான காதலுக்கு ஆயுள் அறுபது நாட்கள் தானே..?

    மழை இன்னும் விட்டபாடில்லை. மின்வெட்டு ஆகி வானம் கருத்து வெளிச்சம் மங்கிய பொழுதாக அந்தப் பகல் பொழுது இருண்டு கிடந்தது.

    திடீரென கல்யாண ராமனுக்கு ஒரு யோசனை தோன்றியது….நேராக அந்த இருவர் இருக்கும் பக்கம் சென்று….அந்தப் பெண்ணின்  அருகில் சிறிது தள்ளி அமர்ந்து கொள்கிறார்.

    பயந்து போன  இருவரும்…டக்கென கம்பியிலிருந்து கீழே குதித்து…’சந்தியா..வா போயிறலாம்…இங்க இன்னும் நாம நிக்க வேணாம்…அவன் சொல்கிறான்.

    வேண்டாம் அபி..இந்தக் கொட்டற மழையில எங்க போறது…? இன்னும் ஜஸ்ட் அஞ்சு நிமிஷம் பார்க்கலாம்…இது அவள்.

    கல்யாண ராமன் தொண்டையைக் கனைத்துக் கொண்ட படி…சொல்கிறார்…” காலம் கெட்டுக் கிடக்கு, இப்படி தனியா வராதேம்மா..யாரை நம்பியும்…..கிளாஸ் கட் பண்ணிட்டு இப்படி வந்து பொழுதைப் போக்கற  விஷயம் உங்க டீச்சருக்கோ, உங்க பேரெண்ட்ஸுக்குத்  தெரிஞ்சால் அவ்ளோதான்… முதல்ல .படிப்பு…!  அதுதான் முக்கியம் ! ..!

    இவர் பேசப் பேச அந்த பையனின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்கிறது….’இதைச் சொல்ல நீ யாரு? ‘ அவன் கண்கள் கேள்வி கேட்டது. கண்களாலேயே இவரது கன்னத்தில் அறைவது போலப் பார்த்தான்…அவன்.

    வருத்தமோடு கல்யாண் ராமன் வானைப் பார்த்துப் பேசினார்

    போன வாரம் நடந்த எங்க சோகக் கதையைக் கேளுங்க….என் மகளுக்கு   ,உன் வயசு தான் இருக்கும் அவளுக்கும்,. ஸ்கூலுக்குப் போற நேரத்தில் கிளாசைக்  கட் பண்ணிட்டு எங்கியோ அவளோடு பாய்  ஃப்ரெண்டோட ஊர் சுத்தப் போயிருக்கா…இது வீட்டுக்குத தெரியாது. ஆனால் திடீர்னு ஏதோ விரோதம்…முன்பகை காரணமா அந்தப் பையனை  நாலு பேர் சேர்ந்து கட்டிப் போட்டு என் மகளைச் சீரழித்து  கத்தியால குத்தி …இரத்த வெள்ளத்தில் போட்டுட்டு போய்ட்டாங்க ஸ்கூலுக்குப் போனவள் இன்னும்  இவ்வளவு லேட்டாகியும் வரலையேன்னு  தேடிப்  போனா…. வெளில என்னவெல்லாமோ நடந்து போச்சு. போலீஸ்  ஸ்டேஷனுக்கும்… ஹாஸ்பிடலுக்கும் நடையா நடக்கிறேன்…இப்போ கூட அங்கே  தான் போறேன்….என் மகளைப் பார்க்க. உன்னைப் பார்த்ததும் எனக்கு அவள் ஞாபகம் தான் வந்தது. கூடா நட்பு வேதனை தரும்னு சும்மாவா சொல்லியிருக்கு. அதான் சொல்றேன்….இன்னும் என் மகள் ஆஸ்பத்திரியில் தான் இருக்காள் நா தழுவி தழுக்க சொல்லும்போதே…அந்தப் பையனின் கைபேசி பாடி அழைத்தது.

    எடுத்துப் பார்த்தவன்…கைபேசியை அணைத்து  விட்டு தனது ஜீன்ஸ் பாக்கெட்டில் உள்ளே நுழைந்து கொண்டான். அவன் முகத்தில் கலவரம் தெரிந்தது. அவனுக்குள் ஒரு அமைதியின்மை…அந்த இடத்தை விட்டு செல்ல வேண்டும் என்ற துடிப்பும் தெரிந்தது.

    யார்ட்ட இருந்து போன் அபி? அவள் கேட்கிறாள். அவன் பதில் சொல்லாமல்…..அவரைப் பார்த்து…இப்ப உங்க டாட்டர் எப்படி இருக்காங்க..? அவன் இவரைப் பார்த்து அசால்டாகக்  கேட்கிறான்.அவன் மனசுக்குள் போன வாரம் தனது சிநேகிதன் ராகுல் ஒருத்தியை கத்தியால் குத்திவிட்டு இப்போது ஜெயிலில் இருப்பது நினைவுக்கு வந்தது. ஒருவேளை அந்தக் கேஸு  இவரது மகளோ என்னவோ..?

    குத்தியது யாரு சார்..?.கேட்க நினைத்தவன்..வாயை மூடிக் கொண்டான்…காரணம் மீண்டும் இவனது கைபேசி பாடி அழைத்தது.

    கல்யாண ராமன் அந்தப் பெண்ணிடம் பேசிக் கொண்டிருந்தார். “அதனால தான்மா சொல்றேன்…யாரையும் நம்பாதே…படிக்க வேண்டிய வயசில் படிப்பில் மட்டும் கவனம் செலுத்துங்க….வாழ்க்கை  நீண்டது….உங்களுக்குக் கிடைக்க வேண்டிய அனைத்தும் உங்கள் வாழ்வில் தானே கிடைத்து விடும்..அதற்காக அவசரப் படக் கூடாது. ஆண்கள் எளிதாக மனதை மாற்றிக் கொள்வார்கள். ஆனால் நீங்கள் இளம் வயதில் பாதை தவறிப் போய்  திக்குத் தெரியாமல் வாழ்நாள் முழுதும் அதை நினைத்து மனசுக்குள் புழுங்குவீங்க…இதுல அந்தக் காலம் இந்தக் காலம் என்றெல்லாம் ஒன்றுமே இல்லை. அடிப்படை  உணர்வுக்கு காலமோ, விஞ்ஞான வளர்ச்சியோ தடையாக இருக்காது. முதலில் நன்கு படி.  நன்னாக் கை நிறைய சம்பாதி ,சொந்தக் காலில் நின்ன பிறகு தான் காதலும், கல்யாணமும்….என்று தீர்மானமாகச் சொன்னவர் உங்கள் வீட்டிலும் இதெல்லாம் சொல்வார்கள் தானே. அம்மா அப்பா பேச்சைக் கேட்டு பிறகு மனசு பேசறதைக் கேட்கலாம்.பெற்று வளர்த்தவர்களையும் கொஞ்சம் யோசிக்கணும். அவர்களை ஏமாற்றாதீங்க. ஏமாற்றினால் பாதிப்பு பெண்ணுக்குத் தான்…  !  பசங்களுக்கென்ன….நீ இல்லையின்னா இன்னொருத்தின்னு தேடிட்டு போய் கிட்டே இருப்பாங்க..ஆனால் உன்னால அப்படிச் செய்ய முடியுமா? யோசித்துப் பாரு…  உன் கனவுகள் எல்லாம் பாழாய்ப் போகும்.பிறகு காலம் பூரா கண்ணைக் கசக்கிக் கொண்டு நிக்க வேண்டியது தான்.

    அவள் கேட்பது போல முகத்தை அவர் பக்கம் திரும்பி வைத்துக் கொண்டிருந்தாலும் காது அவன் போனில் என்ன பேசுகிறான்? என்றே கேட்டுக் கொண்டிருந்தது.

    அதிலிருந்து வந்த பெண் குரல்…இவன் பேசும் அமைதியான தொனி …இரண்டும்..அவளுக்கு கற்பனையை வளர்த்தது. யாராயிருக்கும் அந்தப்  பெண்?

    கேள்விக் குறி இவளது மனதில் விஸ்வரூபமெடுத்தது.

    கொட்டித் தீர்த்த வானம்….பூமியை நீர்காடாக ஓடவிட்டு வானம் நிர்மலமாக பளிச்சென்று இருந்தது.

    சரி…கிளம்பு…கிளம்பு….நீ கிளாசுக்குப்  போ…எனக்கு வேற வேலை இருக்கு நாளைக்குப் பார்க்கலாம்..சாரி….நான் பிறகு ஃபோன்  பண்றேன்…இப்போ அவசரமாப் போறேன்….என்று இங்கிருந்து தப்பித்தால் போதும் என்ற தோரணையில் அவளை ‘அம்போன்னு ‘  விட்டுவிட்டு பைக்கை ஸ்டார்ட் செய்து இவளைப் பார்க்காமலே, பை சொல்லாமலே விட்டு  பறக்கிறான்.

    அபி தன மனதுக்குள் ” இந்த சந்தியா சப்ப மேட்டர்…! ஒரு நாள் பஸ் ஸ்டான்டில்  பார்த்து சிரித்துவிட்டு மொபைல் இருக்கான்னு கேட்டதுமே..நம்பரைத் தூக்கிக் கொடுத்த பார்ட்டி. எப்ப வேணா வந்து சாரி சொன்னா சரின்னு தலையாட்டிடும்..ஃ போனே செய்ததும் போகலைன்னா அந்தப் அனுஷா வெய்ட் பண்ணாமல் ஓடிடுவா….காஜல் மாதிரி
    ஃபிகரை   அங்க காக்க வெச்சுட்டு இந்தக் குள்ளக் கத்திரிக்காய்  கிட்ட வந்து நல்லா மாட்டிகிட்டு டைம் வேஸ்ட் பண்ணிட்டேன்…இப்ப இவளை கழட்டி விட்டுட்டு ஓடிடலாம்….

    இவள் நில் போகாதே.. .என்று சொன்னதையோ….நானும் வரேன் என்று சொன்னதையோ….அவன் சிறிதும் காதில் வாங்காதது போல பறந்து சென்றது  அவளுக்கு பெருத்த ஏமாற்றத்தைத் தந்தது. கோபம் குமுறிக் கொப்பளித்தது.

    இதை கவனித்த கல்யாணராமன், “காதல் நாடகம் முடிந்தது பாப்பா .. நீ ஒரு ஆட்டோ பிடிச்சு ஸ்கூலுக்குப் போம்மா..”  என்றவர்…..உன்னைப் பெற்றவர்களை நம்பு…..உனக்கு வேண்டியதை அவர்கள் தான் செய்வார்கள்….”இவனை எல்லாம் நம்பாதே …காவாலிப் பயல்…நானும் பார்த்துக்கிட்டே தானே இருந்தேன்…எப்படி ஓடறான் பார்… ” என்று ஒரு சந்தேக விதையை அவளது இதயத்தில் ஊன்றி வைத்து விட்டு…..நிம்மதியாக அந்த இடத்தை விட்டு இறங்கி நடக்கிறார்.

    அவர் மனத்தில்….”யாரு பெத்த பெண்ணோ…..ஒரு வஞ்சகனிடம் இருந்து காப்பாற்றியாச்சு…..மழையே உனக்குகே கோடி நமஸ்காரம்…என்று கைகூப்பியபடி வானத்தைப்  பார்க்கிறார்….உள்ளிருந்து மனசாட்சி கேட்டது…உனக்குத் தான் கல்யாணமே ஆகலையே கல்யாண ராமா..? பின்ன எப்படி ஒரு கத்திக் குத்து கதை விட்டே…? என்று கேலி செய்து சிரித்தது.

    நல்லதுக்குப் பொய் சொல்லலாம்.  இல்லையா ?  ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணத்தை நடத்துன்னு சொல்லிருக்கா…..நான் சமயோஜிதமா ஒரே ஒரு  பொய் சொன்னேன்…அந்தப் பெண்ணுக்கு நல்ல இடத்தில் கல்யாணம் ஆகணும்னு. அந்த இளம் பெண்ணுக்கு  புத்தி மாறினாச் சரி.

    அவளின்  பிஞ்சு மனத்தில் கனன்று கொண்டிருந்த தணலில்  சந்தேக  விதை விழுந்து கொழுந்து விட்டு ஏரிய அவள் இதயத்தின் காதல் அப்போதே தகனம் ஆகிப் புகையாகி ஆவியாகிறது.. அவள் மனசு ஐயோ அடுத்த பீரியர்டுக்குள்ள கிளாசுக்குள் போய்டணுமே என்று படபடத்தது.

    எதிர்பாராமல் தனக்கெனவே மழை பெய்து  அந்த கிருஷ்ண பரமாத்மாவே மழைக்கு ஒதுங்கி கீதை ஓதியதாக எண்ணி  வணக்கம் செய்தாள் .சந்தியா.. !

    ============================================================

    Share
  • ஜோதிர்லதா கிரிஜாவின் நந்தவனத்து நறுமலர்கள் – 1

    தொடுப்பவர் : ஜெயஸ்ரீ ஷங்கர்,
     சிதம்பரம்.

    எழுத்தாளரைப் பற்றிய விபரங்கள் :

    குறுநாவல் சிற்பி :ஜோதிர்லதா கிரிஜா,

    சொந்த ஊர் : வத்தலக்குண்டு .

    பள்ளிப் பருவத்தில் ரா.கி.ரங்கராஜன் அவர்களால் குழந்தை எழுத்தாளராக அறிமுகம் ஆனவர்.. தமிழ்வாணன், அழ.வள்ளியப்பா, ஆர்.வி.ஆகியோரால் ஊக்குவிக்கப் பட்டதன் பின், 1968 இல் கலப்புமணம் பற்றிய சர்ச்சைக்குரிய குறுநாவல் வாயிலாக ஆனந்தவிகடனில் பெரியோர்க்கான எழுத்தாளராக அறிமுகம் கிடைத்தது.

    எழுதியுள்ளவை : 600க்கும் மேற்பட்ட சிறுகதைகள், 20 க்கும் மேற்பட்ட புதினங்கள், 60 க்கும் மேற்பட்ட குறும் புதினங்கள் , 60 க்கும் மேற்பட்ட சமுதாயப் பிரச்சனைகள் சார்ந்த கட்டுரைகள், 3 நெடிய நாடகங்கள், சில வசன கவிதைகள், நகைச்சுவை துணுக்கு எழுத்தாளராகவும் ஆனந்த விகடனில் 1987 இல் அறிமுகமாகப் பெற்றவர்.

    பெற்ற பரிசுகள்: தினமணி கதிர் நாவல் போட்டி, கல்கி பொன்விழா வரலாற்று நாவல் போட்டி, லிலி தேவசிகாமணி அறக்கட்டளையின் சிறுகதைத் தொகுதிக்கான பரிசு. அமுதசுரபி நாவல் போட்டி, ராஜா சர் அண்ணாமலைச் செட்டியார் விருது, திருப்பூர் கலை இலக்கியப் பேரவையின் சமுதாய நாவல் பரிசு, தமிழக அரசின் மிகச் சிறந்த நாவலுக்கான பரிசு ஆகியன். ‘நம் நாடு’ எனும் சிறுவர் நாவல் தேர்ந்தெடுக்கப்பட்டு அதன் யுக்ரெயின் மொழியாக்கம் 1987 இல் மாஸ்கோவில் நடந்த இந்தியக் கலைவிழாவில் வெளியிடப்பெற்றது.

    ஆங்கிலத்தில் 1975 இல் ஃ பெமினாவின் வாயிலாக அறிமுகம். 25 சிறுகதைகள், ஒரு மினி நாவல். ஆங்கில மரபுக் கவிதை  இராமாயணம் (1789 பாடல்கள்) , திருக்குறள், (Voice of Valluvar) காந்தியடிகளின் வாழ்க்கை நிகழ்வுகள் (Gandhi Episodes),  நபிகள் நாயகத்தின் பொன்மொழிகள் (Pearls from the Prophet),  சத்தியசாயி பாபாவின் வரலாறு (The Living God at Puttaparthi )  ஆகியவை டாக்டர் கிருஷ்ண ஸ்ரீநிவாஸ் நடத்தும் POET  இல் தொடர்களாக வந்துள்ளன.

    விம்ன்ஸ் எரா , தி ஹிந்து, துக்ளக், மற்றும் இணையத்தில் திண்ணையிலும் தனது இன்றைய எண்ணங்களை எழுதிக் கொண்டு வருகிறார்கள்.

    சமீபத்தில் “செங்கமலத் தாயார் கல்வி அறக்கட்டளை மகளிர் கல்லூரி,  மன்னார்குடி” இந்த சமூக அமைப்பு இவரை “2012 க்கான சிறந்த பன்முக  எழுத்தாளராகத் தேர்ந்தெடுத்து அதற்கான பரிசும் , விருதும் , கேடயமும் அளித்து  கெளரவித்துப் பெருமை சேர்த்துக் கொண்டது குறிப்பிடத் தக்கது.

    1. அரியும் சிவனும் ஒண்ணு …!

    குறுநாவல்  எழுதியவர்:  ஜோதிர்லதா கிரிஜா.
    வெளியான வருடம்:  1968.

    முதல் மலராக நறுமணம் வீசும் இந்த “அரியும்  சிவனும் ஒண்ணு ” என்கிற இந்த மலரை கையில் எடுக்கிறேன்.

    கதை கிட்டத்தட்ட 45 வருடங்கள் முன்பு மலர்ந்து இன்னும் சிறுகதை உலகில் தாழம்பூவைப் போல் நறுமணம் பரப்பிக் கொண்டிருக்கிறது.

    மலரின் ஐந்து இதழ்களைப் போலவே இதில் பாத்திரப் படைப்புகளும் கச்சிதமாக ஐந்து இதழ்களாக  சேர்ந்து  மலரின் மணத்தையும் எழிலையும் தென்றலோடு கலந்து பரப்புகிறது.

    ஆயிரம் சிக்கலைத் தண்ணீருக்கடியில் வைத்துக் கொண்டு தடாகத்தின் மேலே சிரிக்கும் தாமரையாக காதல் கலையுடன் கொள்ளை அழகு தான்….! இருந்தாலும், அன்பை மட்டும் அச்சாணியாகக் கையில் எடுத்துக் கொண்டு ஆன்மாவுக்குள் எழும் போராட்டங்களை, ஒரு குடும்பத்திற்குள் நிகழும் சம்பவங்களை ஒவ்வொரு  இதயத்தின் எண்ணங்களின் வலிமையை, வழியை, வலியைத்  திறம்படக் குறுநாவலாக  எழுதி அதற்கு அந்தந்த காலக் கட்டத்திற்கு ஏற்ப தீர்வுகளைத் தந்து சிறப்பான, சுவையான  கதைகளைத்  தருபவர் எழுத்தாளக் கதையரசி ஜோதிர்லதா கிரிஜா.

    வருடங்கள் பல கடந்தாலும், அன்றும் இன்றும் என்றும் “காதல்” என்ற உணர்வு வீட்டுக்குள் நுழைந்து விட்டால் காதல் வயப்பட்டவருக்குக் “கதவைச் சாத்தடி” என்பது தான்  வாய்ப்பாடு, நிலைப்பாடு, எதிர்ப்பாடு ! அவரைத்  தவிர ஏனையோரின் மன நிலை எப்படி இக்கட்டுக்குள் தள்ளப்படும். அதில் தியாகம் எப்படி பெரும் பங்கை தனக்கென எடுத்துக் கொள்ளும்.. சில நேரங்களில் சம்பந்தமே இல்லாத ஒருவர் என நாம் நினைத்திருப்பவர் கூட தன்னைத் தியாகம் செய்து அந்தக் காதலை வாழ வைக்க தவிப்பர்.

    இந்தக் கதையில் ஐந்து  இதழ்களாக  மீனா, அவளது அப்பா சுப்பராமன், அம்மா அலமேலு , மீனாவின் காதலனாக ராகவன், அந்த வீட்டில் சமையல் செய்து வரும் சொர்ணம்.  மகரந்தமாகக் ‘காதல்’.

    கதையின் துன்பியல் கரு :

    ஒரு ஐயர் வீட்டு படித்த பெண், ஐயங்கார் வீட்டுப் பையனைக் காதலித்து அவனைத் தான் கல்யாணம் செய்து கொள்வேன் என்று அடம் பிடிக்கிறாள். அவளது படித்த பண்டிதரான தந்தை அதை எதிர்க்கிறார். தாய் தந்தையின் பேச்சுக்கு மறு பேச்சு பேச முடியாமலும், மகள் ஆசையை நிறைவேற்ற முடியாமலும் தவிக்கிறாள். ஆனால் அந்த வீட்டு சமையல்காரர் அவர்கள் போடும் திட்டத்தைத் தடுத்து எடுத்துச் சொன்னாலும் இறுதியில் பாசத்துக்கும் , நியாயத்துக்கும் கட்டுப்படுகிறார்   .பெண்ணின் பெற்றோர்களுக்குத் தெரியாமல் அவளுக்கும் அவளது காதலனுக்கும் இடையே கடிதத் தூதாகச் சென்று அவர்களது கல்யாணத் திட்டத்தை செயலாக்குகிறார்.

    அவர்களின் விருப்பப்படி பெண்ணை அவளது காதலனின் தங்கை  வீட்டுக்கு பழனிக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்கிறார். அவளது காதலன் மட்டும் தான் அதே ஊரில் இருந்து கொண்டு தனக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று நம்ப வைப்பதற்காக அங்கேயே இருக்கிறான்…..ஒரு மாதம் பெற்றவர்களை தவிக்க வைத்தால் ஒருவேளை இந்தக் கல்யாணத்திற்கு அவர்கள் சம்மதிக்கக் கூடும் என்ற எண்ணத்தில் போடும் நாடகமாக இவர்கள் போட்ட திட்டத்துக்கு துணை போக  அவர்களுக்கு உதவுகிறார் சமையல்காரர்.

    பிடித்த ஒருவனோட வாழ்வதைத் தடுக்கும் பெற்றோர்கள் தாம்     குறிப்பிடுபவரைத் திருமணம் செய்ய மாட்டேன் அதற்கு பதிலாக கிணற்றில் விழுவேன் என்று சொல்லும் தான் வளர்த்த மகளின் மனசைப் புரிந்து கொண்டு அவர்கள் திட்டப் படி பெற்றவர்களுக்கு உணவில் தூக்க மாத்திரை கொடுத்து உறங்கச் செய்து பெண் விட்டு வீட்டை விட்டு வெளியேற உதவி செய்கிறார் சமையல்காரர்.

    தான் வீட்டை விட்டு  ஓடிவிட்டால் ஒருவேளை அப்பாவின் மனசு மாறலாம் என்று மகள் போடும் திட்டத்திற்கு சொர்ணம் (சமையல் காரர் ) கூட இருந்து உதவி செய்தாலும்..இத்தனை கால நம்பிக்கையை முறித்து, உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்து விட்டோமே…தான் செய்தது ..நம்பிக்கை துரோகம் அல்லவா?  என்று தன் மனசாட்சியின் கேள்விக்கு பதில் சொல்ல இயலாத அவர்  அந்த குற்ற உணர்வில் நடந்த அனைத்து உண்மைகளையும் எழுதி வைத்து விட்டு , வீட்டு எஜமானிக்கு எந்த பாதிப்பும் வராமல் தன வயிற்று வலியால் தான் தற்கொலை செய்து கொள்வதாக தனியாக போலீசுக்கும் இன்னொரு  கடிதம் எழுதி வைத்து விடுகிறார்.  தனது இறுதி ஆசையாக, வேண்டு கோளாக, “பெண்ணுக்கு அவள்  காதலித்தவனையே மணம் முடித்து வையுங்கள் ‘ என்று கேட்டுக் கொள்கிறார்.  சமையல்காரர் தற்கொலை செய்து கொண்டதை கடிதம் வாயிலாகக் காட்டி முடிக்கப் படுகிறது கதை.

    கதையின் எழில் நடை:

    கொஞ்சம் கூட தொய்வில்லாத ராஜ நடை… ஒவ்வொருவரும் அவரவர் பாத்திரத்தை பத்திரமாக கையாண்டுள்ள விதம் பாராட்டுதலுக்கு உரியது. உணர்வுகளின் கொந்தளிப்பும் அந்தக் காலத்தில் எஸ் எஸ் எல் சி படித்துவிட்டு காலேஜூக்குப் போகும் பெண்களை வைத்துக் கொண்டிருக்கும் பெற்றோர்கள் “எங்கே தன்  பெண் பெற்றோரை மீறிப் போய்விடுவாளோ ‘ என்ற பயம் உள்ளுக்குள் ஆரம்பித்ததை உணர்த்திய விதம்… இன்றைய  பெற்றோர்களின் மனநிலை…அதையும் தாண்டிய விபரீத பயங்களில் ‘வெளியில் படிக்கப் போன பெண் ‘பத்திரமாகத் திரும்பி வர வேண்டுமே என்று ஒவ்வொரு நாளும் கவலைப்படும் இன்றைய காலக் கட்டம் அன்று இல்லை..என்பதைக் கதை நன்கு உணர்த்துகிறது.

    மலரைப் பன்னீரால் அலசும்போது :

    “மீனா என்ன பண்ணிண்டு  இருக்கா?” என்ற கேள்வியோடு ஆரம்பிக்கிறது கதை.  கேட்கும் போதே ஒரு ஆச்சாரமான பிராமண குடும்பத்தை கண்முன்னே கொண்டு நிறுத்துகிறார் கதாசிரியர்.

    “அழுது அழுது முகமெல்லாம் கோவைப் பழமாக சிவந்து கெடக்கு”  சொல்லும்போது அந்த வீட்டின் பிரச்சனையே  அவளால் தான் என்று முதல் அட்சதை விழுவதில் புரிகிறது.

    அதைப் பொருட்படுத்தாக தந்தை….” அந்தப்  பயல் இந்தப் பக்கம் வராம கவனிச்சுக்கோ ” – இது அவரது எதிர்ப்பை காண்பிக்கிறது.

    “அப்போ அந்த ஐயங்கார் பையனைத் தான் பண்ணிக்குவாளாக்கும் ” – இதுவும் அப்பா தான்.

    இப்படி ஒரே பக்கத்திலேயே வந்து விழுந்த நாலு வரியில் அந்தக் கதையைப் பற்றி நம்மால் முழுதும் ஊகிக்க முடிகிறது. ஒரு அய்யர் வீட்டுப் பெண் அய்யங்கார் வீட்டுப் பிள்ளையை திருமணம் செய்வது கூட அந்த காலத்தில் சிக்கல் தரும் விஷயமாகும் என்பதை தெரியப் படுத்துகிறது இந்தக் கதை.

    அதற்கேற்றவாறு கதையின் தலைப்பும் “அரியும் சிவனும் ஒண்ணு …!”  என்று அழுத்தமாக சாம்பலை திருமண்ணோடு  கலந்தது போல தலைப்பைக் கதையோடு பிணைத்து வைத்த விதம் பெருமை.

    கதம்ப மாலை :

    தந்தை சுப்பராமன் :

    சமஸ்கிருதம் படித்தவர் “கௌரி சரித்திரம்”  படித்து குழந்தைகளுக்கு போதிப்பவர், “அரியும் சிவனும் ஒண்ணு : அதையறியாதவன் வாயிலே மண்ணு’ன்னு ” ஊருக்குச் சொல்லிக் கொடுத்தாலும் தன்  வீடு என்று வரும்போது சர்வ ஜாக்கிரதையாக அரியும் சிவனும் வேறடா..எல்லாம் அறிந்தவன் நானடா ” .என்றும்  படிச்சவன் ஏட்டைக் கெடுத்தான் என்ற மொழிக்கு ஏற்ப சித்தரிக்கப் பட்ட அப்பா….ஆணாதிக்கமும், அடக்கு முறையும் ,சமயத்தில் மனைவியை குத்திப் பேசுபவராக, எல்லோரையும் எடுத்தெறிந்து பேசுபவராக இருந்தாலும் அப்படிப் பட்டவருக்கும் இதயத்தில் ஈரம் இறுதியாய் சுரக்கிறது என்பதைக் காட்டிய விதம் கதைக்கு அழகு செய்கிறது.

    அதே சமயம்…ஒரு குடும்பத் தலைவனின் பொறுப்பைக் கயிறு மேல் நடப்பதைப் போல உணர வைத்திருக்கும் விதம். கோபத்தில் ஏதோ சொல்லிவிட்டாலும்….”ச்சே.ச்சே…விளையாட்டுக்கு ஏதோ சொன்னா. அதை விபரீதமா எடுத்துண்டுட்டியே ” என்று மனைவியை சமாதானப் படுத்தும் மனசை மிகவும் கண்ணியமாகச் செதுக்கி இருக்கிறார் ஆசிரியர்  .கோபம் இருக்கும் இடத்தில் தான் குணம் இருக்கும் என்பதற்குச் சரியான உதாரணம் இந்த அப்பா சுப்பராமன்.

    தாய் அலமேலு :

    அந்தக் காலத்தில் வெறும் அஞ்சாவது வரை படித்தவள் .இருந்தாலும் சமயோஜித புத்தி நிறைந்த, கணவன் சொல்லே  மந்திரம் என்று பணிவோடு சித்தரித்த தாய்…”மனைவிக்கும் ஒரு அபிப்ராயம் இருக்கும் என்னும் நினைவே அற்றவராய் கணவன் வாய்த்திருந்தாலும் அவரை அனுசரித்துப் போகும் பெண்மை கொண்ட தாய்மையை சித்தரித்த விதம் அழகு. ஒரு பக்கம் கட்டியவர்…இன்னொரு பக்கம் தான்  பெற்றவள் என்று பாசத்தின் நடுவில் தத்தளிக்கும் விதம் பெண்மையைப்  பெருமைப் படுத்துகிறது. கதையில் வாயில்லாப் பூச்சியாக வளைய வரும் அம்மா அலமேலு.

    அந்த காலத்து ஆணாதிக்கம் நிறைந்த வீடுகளில் இருக்கும் பெண்களின் நிலை’வெயிட்லெஸ்ஸாக’ காலிப் பெருங்காய டப்பாக்களாக
    அடுப்படியில் வெறும் தராசுத் தட்டுக்களாக காற்றிலாடும்  நிலையையும் கூடவே நம்மால்  உணரவும் முடிகிறது.

    “ஒரு பொண்ணு வெறும் வெளி அழகைப் பார்த்துட்டு மட்டுமே ஆசைப் படுவாள்னு நினைக்காதீங்கோ…” தன் மகளின் உணர்வுகளை மதித்த தாயாக சித்தரிக்கப்  பட்டிருக்கிறார் .

    மகளாக மீனா:

    காலேஜ் படிக்கும் இளங்குமரி . துணிச்சலும், பிடிவாதமும் கொண்டவள்… காதலில் விழுந்ததால் வைராக்கியமும் கூடவே எழுந்து…

    நியாய அநியாயம் பேசும் மன உறுதி அவள் “கௌரி சரித்திரம்” புத்தகத்தைக் கிழித்து தன அப்பாவின் கருத்தை எதிர்க்கும் விதத்தில் புரிந்து கொள்ள முடிகிறது. சமையல்காரர் மீது பரிவும், பாசமும், அம்மா மீதும், அப்பா மீதும்…தன்னைப் புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்களே  என்ற வருத்தமும் நிறைந்து…இவர்களின் பிடிவாதத்தால் தனது காதலை விடத் துணியாத மனோபலமும் கொண்டவளாக மீனா. எப்படியாவது தனது பெற்றோர்களின் சம்மதம் வாங்க வேண்டும் என்ற குறிக்கோளில், தன காதலன் ராகவன் மீது கொண்ட நம்பிக்கையில் வீட்டை விட்டு ஓடிப் போகவும் துணிந்த  துணிச்சல்காரியாக மீனா காட்டப் படுகிறாள்..

    “அப்பா அம்மா பார்த்துப் பண்ணி வைக்கப் போறதும் எவனோ ஒருத்தன் தானே? அவன் மட்டும்என்னைக் கைவிட மாட்டான்னு என்ன நிச்சயம்? அவனை நம்பி அப்பா அம்மாவை விட்டுட்டுக் கிளம்புற ஒரு பொண்ணு கல் மனசுக்காரி இல்லேனா, தானே தேடிண்ட ஒருத்தனோட கிளம்பிப் போயிடற பொண்ணு மட்டும் கல்மனசுக்காரி ஆயிடு வாளா?”…மீனாவின் அனல் பறக்கும் வார்த்தைகள், தான் செய்யத் துணிந்த காரியத்திற்கு நியாயம் சொல்வது போலிருக்கிறது.

    காதலனாக ராகவன்:

    மிகவும் யதார்த்தமாக சித்தரிக்கப்பட்ட பாத்திரமாக ராகவன்… .”படிப்புக்கும் காதலுக்கும் சம்பந்தமில்லை” என்றும்… தான் நேசிக்கும் பெண்ணே  தனக்கு  துணைவியாக வர வேண்டும் என்ற உந்துதலில்  “ஒரு பெண்ணை வற்புறுத்தி இன்னொருத்தனுக்குக் கட்டிக் கொடுக்கிற வழக்கம் என்னிக்குத் தான் நிக்குமோ, தெரியல்லே..ஊருக்கு ஒரு பாரதியார் பிறக்கணும் போல இருக்கு ” என்று தன்  ஆற்றாமையை சொல்லும் இடத்திலும் , தனது கண்ணியத்தை ஊர்ஜிதம் செய்ய “அதோ , என் மேஜை மேலே இருக்கிற சுவாமி விவேகானந்தர் படத்தை சாட்சியா வெச்சு நான் உங்களுக்கு வாக்குறுதி குடுக்கிறேன்..மீனாவுக்கு சிறு தீங்கும் நேராது ” என்று சொர்ணத்திடம் சொல்லும் போது  நேசத்தின் நிஜம் உணர முடிகிறது. கடிதம் விடு தூது , தூக்க மாத்திரை திட்டம்…எல்லாம் நினைத்தபடி நிறைவேற்றிக் கொள்கிறார் ராகவன்.

    “ஒரு பொண்ணு மேலே ஒரு ஆணுக்கு ஏற்படற அன்பை உம்ம வாழ்க்கையிலே ஒரு முறையாவது நீர் உணர்ந்திருந்தா எங்க ஏமாற்றம் உமக்குப் புரியும்…நீ பிரும்மச்சாரியாவே உம்ம காலத்தை கழிச்சுட்டீர்.”  என்று சொர்ணத்தின் மனசுக்குள் அமிழ்ந்திருக்கும் சோகத்தை சுகமாக வெளிப் படுத்தக் காரணாமாக இருந்த ராகவன் “நீங்களே எங்க திட்டத்துக்கு உதவி செய்யலேன்னா வேற எப்படி நாங்க எங்க காரியத்தைச் சாதிக்கிறது?” என்று கொக்கி போட்டு தன பக்கம் இழுத்த விதம் அருமை. நினைத்ததை முடிப்பவனாக  ராகவன்.

    சமையல்காரராக சொர்ணம் :

    இவர் தான் இந்தக்  கதையைத் தாங்கும் கோபுரத் தூண் என்று அழுத்திச் சொல்லலாம். முப்பத்தி ரெண்டு வருஷமா ஒரே வீட்டில் சமையல் செய்து அந்த வீட்டில் ஒருவராகவே வளைய வரும் சொர்ணம். மீனாவைத்  தன் மகளாக பாவித்து வளர்த்து வந்த பாசம் பல இடங்களில் வெளிப் படுகிறது. நிறைய படித்திருந்தும் இவர்கள் வீட்டோடு இருக்கும் விசுவாசம், மகளது காதலை எதிர்க்கும் தந்தையைத் தானும் எடுத்துச் சொல்லி அவர் சம்மதிக்க வேண்டுமே என்ற நப்பாசையில் தான் வாங்கிக் கட்டிக் கொள்வது, எப்படியாவது அம்மா, அப்பா மனம் கோணாமல் நடந்து கொள்ள மீனா விடம்  எடுத்துச் சொல்லும் விதம், அவளது காதலன் ராகவனிடம் “இவராவது கேட்க மாட்டாரா “என்று அவர் மனதை மாற்ற ஒரு சந்தர்ப்பமா மீனா கொடுத்த கடிதத்தை எடுத்துக் கொண்டு தூது போவது. அங்கு ராகவன் தன மனதை மாற்றி திருப்பி அனுப்பும் போது  மீனாவிடம் வாதாடுவது கதைக்குப் புத்துயிர் ஊட்டுகிறது.  சிறு கதா பாத்திரமும் செயற்கரிய செயல் செய்து கதைக்கு மெருகூட்ட முடிகிறது.

    அதே நேரத்தில் பல ஆண்டுகளுக்கு முன் பார்த்த ‘தியாக பூமி’ படமும், அதைத் தொடர்ந்து ‘நானும் பார்த்தாலும் பார்த்தேன் அம்மா மேலே கேஸ் போட்ற அப்பாவை இப்பத் தான் பார்த்தேன்..” என்று குழந்தை சாரு  கோர்டில் சொன்னதும் சொர்ணம் நினைவுக்குக் கொண்டு வந்து, ‘கடவுளே..! அப்பாவும், பெண்ணும் ஒருவர் மீதொருவர் கேஸ் போடும் காலமா இது “?  என்று வியந்து காலத்தின் படிமத்தைச் சொல்கிறார்.

    அதிலும் மீனாவின் அன்பு தான் வெல்கிறது. இறுதியாய், உறுதியாய் அவர்களது நல்ல வாழ்வுக்குத் தன்னால்  உதவ முடியுமோ, அவர்கள் சொன்ன படி இரவு உணவில் தூக்க மாத்திரைகளை சுப்பராமனுக்கும், அலமேலு அம்மாவுக்கும் தெரியாமல் கலந்து கொடுத்து உறங்கச் செய்து விட்டு மணப்பெண் மீனாவை ராகவன் சொன்னபடி அவரது தங்கை வீட்டுக்கு, பழனிக்கு அனுப்பி வைக்கறார்.

    ஒரு விதத்தில் மீனாவின் காதலை சேர்த்து வைத்த நிம்மதி இருந்தாலும், இத்தனை காலம் உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்து விட்டோமே என்ற குற்ற உணர்வு மேலோங்கி தான் ஒரு கடிதம் எழுதி விட்டு சமையல்காரர் தற்கொலை செய்து கொள்வது உள்ளத்தைத் தொடுகிறது..

    யாரையும்  காட்டிக் கொடுக்காமல் போலீசுக்கும் வேறு மாதிரியாக ஒரு கடிதம் “தனது தற்கொலைக்கு தனது வயிற்று வலி தான் காரணம் ” என்று சொர்ணம் பொய் சொல்லுவதை நாம் மன்னித்து விடலாம்.

    தன்  உயிரை விடத் துணிந்தவர் தனது இறுதி வேண்டுகோளாக “மீனாவை விரைவில் அழைத்து வந்து அந்தப் பையன் ராகவனுக்கே அவளை மணமுடித்து வையுங்கள் “என்று  ஆசீர்வாதமாக எழுதியதைப் படித்ததும் கண்களைக் கண்ணீர் மறைக்க சுப்பராமன் நாற்காலியில் தொப்பென்று விழுவது சொர்ணத்தின் குறிக்கோள் வெற்றியைக் காட்டுகிறது. .

    இந்த முடிவு அவர்கள் வீட்டில் விரைவில் ஒரு புரட்சிகரமான திருமணம் வெற்றிகரமாக நடக்கப் போகுது என்பதைச் சொல்வதாக இருக்கிறது.

    இந்தச்  சிறு கதையில், பெண்கல்வி,காதலைத் தொடர்ந்து, மன உறுதி, துணிச்சல், முடிவெடுக்கும்  தீர்க்கம், மனவேதனை, காதல் தோல்வி, மகள் மீது கொண்ட நம்பிக்கை, காதலன் மீது கொண்ட நம்பிக்கை, சாதி வெறி, ஆணாதிக்கம், ஏக்கம், தியாகம்..இன்ப முடிவுஎன்று கதை முழுமை அடைகிறது.  ஒரு நிறைவைத் தந்த சிறுகதை.  கதை முழுவதும் நிழலாய், ஆரத்தின் நூலாய் வரும் சொர்ணம்..முடிவில் ஒளிவீசுகிறார்.   உயிர்த் தியாகம் என்ற போது மன வருத்தத்தைத் தந்தாலும் “அரியும் சிவனும் ஒண்ணு” என்பதைச் சொர்ணம் மூலம்  நிலைநாட்டிக் காட்டுகிறார் கதாசிரியர்..  கதையில் வினையூக்கி சிறுபாத்திரம் சொர்ணமே.

    ஒரு உயிரின் அழிவில் தான் இன்னொருவரின் வாழ்க்கை ஆரம்பம் என்று அறிந்ததும் ராகவனும், மீனாவும் அவசரப் பட்டிருக்க வேண்டாமோ என்று தோன்றியது. ஆஹா…..இந்தத் தாக்கம்  எல்லாம் தான் கதையின் வெற்றி அல்லவா..!


    இந்தக் கதையை சமீபத்தில் படிக்கும் வாய்ப்புக் கிடைத்ததும் என்னுள் எழுந்த எண்ணங்களைத்  தான் இப்போது பகிர்ந்து கொள்கிறேன். நாற்பத்தி ஐந்து வருடங்கள் பின்நோக்கிச் சென்று படித்து விட்டு நிகழ் காலத்திற்கு வந்த போது  புரிகிறது.  காலங்களில் ஏற்பட்ட மாற்றங்கள் விஞ்ஞான தொடர்புத் துறையில் முன்னேறி இருப்பது போல, மனித மனங்கள் எத்தனையோ விஷயங்களில் பின்நோக்கிச் சென்று விட்டது தான் நிஜம்.

    பெண் கல்வி நன்கு வளர்ந்து முன்னேறிவிட்ட நிலையில், காதல் ஜாதியைத் தாண்டி மதத்தையும் தாண்டி குதித்துக் கொண்டு முன்னேறி விட்டது. ஒரு பிரச்சனைக்குத் தீர்வாக ஒரு உயிர்த் தியாகம் செய்வ தெல்லாம் அந்தக் காலத்தில் நடந்திருப்பதை எண்ணினால்….இப்போது ஒரு பிரச்சனைக்குத் தீர்வாக ஒரு உயிரை எடுப்பதில் முன்னேறி இருப்பது தெரிகிறது.

    அந்தக் காலத்துக் காதல் தூதுவர்களை அதாவது கடிதம் எழுதி கொடுத்து அனுப்பிவிட்டு பதிலுக்காகக் காத்திருப்பது, தோற்றுப் போவோம் என்று தெரிந்ததும் தூக்க மாத்திரையைத் தேடுவது.என்று மீண்டும் நீண்ட காலங்கள் கழித்து இவர்களை சந்திக்கும்  ஒரு வாய்ப்பு கிடைத்தது.

    இப்போது பெற்றோர்களின் சம்மதம் என்பது தேவையற்றதாகத் அவர்களுக்குத் தோன்ற…நான்கு நண்பர்கள் சாட்சிக்கு இருந்தால் ஒரு கல்யாணம் என்ற நிலை கூட பரவி வருகிறது.

    முதலில் முப்பத்தைந்து வருடம் ஒரே வீட்டில் வேலை செய்யும் நல்ல உள்ளங்கள் இன்றைய கால கட்டத்தில் காண்பது அரிது. தியாகம், பாசம், அன்பு , உண்ட வீட்டுக்கு ரெண்டகம் என்று உயிரை விடவும் துணிவது இதெல்லாம் தற்போது இப்படிக் கதைகளில் படித்தால் தான் உண்டு.

    பெரிய திரைப் படங்கள் சுருங்கி சின்னத் திரையாகி விட்டது போல பரந்திருந்த மனிதர்களின் உறவுகளும், உணர்வுகளும் கூட சுருங்கிப் போய் சுயநலத்தின் காப்சூல் ஹார்ட்டாகப்  மாறிக்   கொண்டிருப்பதால் இது போன்ற மனித மனங்களை மேம்படுத்தும் கதைகளைப் படித்தாவது நமது மனத்திற்கு உணர்வுகளுக்கான உரமிடலாம்.

    அருமையான தமிழில் நல்ல கற்பனை வளத்தில் எழுதிய சொல்லாடல்களைக் சேர்த்துக் கட்டிய அந்தக் காலத்தின் சிறப்பைச் சொல்லும் முகமாக என்றென்றும் ஏட்டில் நிலைத்துவிட்ட ஒரு யதார்த்தமான  இந்த சிறுகதை இலக்கியத்தை  அவசியம் அனைவரும் படிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

    புத்தகத்தின் தலைப்பு: “வித்தியாசமானவர்கள்”

    மிக்க நன்றி.

    =========================================================================================================================

    Share
  • நவராத்திரி….முப்பெரும் சக்தியில் புவனபுரி..!

    ஜெயஸ்ரீ ஷங்கர்

    பொதுவாக நவராத்திரி  தீபாவாளிக்கு முன்னம்  கொண்டாடப்படும் இந்துப் பண்டிகை. நவராத்திரம் என்னும் வடமொழிச்  சொல் , தமிழில் நவராத்திரி என்று மருவி வழங்குகிறது. இது ஒன்பது இரவைக் குறிக்கும். துன்பத்தைத் துடைத்து, அச்சத்தைப் போக்கி, இன்பத்தையும் மகிழ்ச்சியையும் நல்ல வாழ்வையும் அருளச்  செய்த தேவியை வழிபடும் காலமாக நவராத்திரியின் ஒன்பது இரவுகளும் இருக்கிறது.

    நவராத்திரி வந்தாலே போதும்…பெண் குழந்தைகள் இருக்கும் வீட்டில் ஏக குஷியும்  கொண்டாட்டமும்  தான். வித விதமாக  பட்டுப் பாவாடை உடுத்திக் கொண்டு பூத் தைத்து , கழுத்து நிறைய ஜொலிக்கும்  நகைகளும் போட்டுக்  கொண்டு அசல்  அம்மனாகவே தங்களையும் அலங்கரித்துக் கொண்டு  கோவிலுக்குச் செல்வார்.   அங்கும் அலங்கார தேவிகளைக் கண்டு தொழுது  வீட்டுக்கு கை நிறைய சுண்டல் கொண்டு வரும் மகிழ்ச்சி…..வேறு எந்த விழாவில்  கிடைக்கும்.?  ஒன்பது நாட்களும் பெண் குழந்தைகளை தெய்வ அம்சமாகவே பாவித்து..பாட்டும், சிரிப்பும், சிலிர்ப்பும்…வேறு எந்த பண்டிகையும் இத்தனை நிறைவைத் தருவதில்லை. பத்துப் பதினைந்து குழந்தைகள் ஒன்றாகக் கூடி கோல்களை எடுத்துக் கொண்டு கொலு வைத்திருக்கும் வீட்டுக்குச் சென்று அங்கு கோலாட்டாம் ஆடி….மகிழ்ந்தபடியே…இறுதியாக  தமது வீட்டுக்குள் நுழையும் போது  கை கொள்ளாது…எடுத்துச் செல்லும் பையும்  கொள்ளாது… அவ்வளவு தாம்பூலம்…சுண்டல்…குங்குமச் சிமிழ்…கண்ணாடி என்று மனதும் நிறையும். இதெல்லாம் நாற்பது வருடங்கள் முன்பாக நியதியாக இருந்தாலும் இன்றும்  இது போன்ற சம்பிரதாயங்கள் கடைப்பிடிக்கப் படுவது, தொடர்வது மனதுக்கு இதமாக இருக்கிறது.  இதற்கு தொலைக்காட்சியும் முக்கிய காரணம் என்பதை நாம் மறுக்க முடியாது.

     நவராத்திரி என்னும் பெருவிழாவானது  புரட்டாசியில் வரும் மாதப் பிரதமை முதல் நவமி வரை ஆக… ஒன்பது  நாட்கள் காலமாகும். படைத்தல், காத்தல், அழித்தல் அனைத்திற்கும் மூலமாக இருப்பவள் அன்னை பராசக்தியே.முத்தொழில் புரியும் முமூர்த்திகளான பிரம்மா, விஷ்ணு, சிவன் மூவரும் வணங்கும் பரம்பொருள் அன்னை பராசக்தி அம்பிகையே.

    நாம் அனுதினமும் அம்பிகையைத் தொழுதாலும் இந்த நவராத்திரி சமயங்களில் ஒன்பது மடங்கு அதிகமாக பூஜிக்க வேண்டும். ஒரு வருடத்தில் நான்கு நவராத்திரி வந்தாலும் அனைவரும் தெரிந்து கொண்டாடுவது சாரதா நவராத்திரிக்கு மட்டும் சிறப்புகள் அதிகம்.

    இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி  ஆகிய மூவரும் மகிஷாசுர  மர்த்தினி  சக்தியாக உருவெடுத்து மகிஷனை வதம் செய்து அழித்ததையே  “சாரதா நவராத்திரியாக” இன்றும் சிறப்பாக கொண்டாடப் படுகிறது.

    நவராத்திரி காலம் முழுதும் பெண்களை சக்தி ஸ்வரூபங்களாகவே பாவனை செய்து மகிழ்விப்பது தேவியை ஆராதிப்பதற்கு ஒப்பானது.  அதுவும் பெண் குழந்தைகளை “கன்னிப் பெண்கள்” பாலா திரிபுர சுந்தரியாகவே பாவனை செய்தலும் கன்னியா பூஜை  செய்வதும் மிகுந்த நற்பயனையும் இகபர சுகத்தையும் தரும். அதே போல  இந்த ஒன்பது நாட்களிலும் அன்னதானம் செய்விப்பது தேவியை குளிர்வித்து சகல நன்மைகள் பெற வழி வகுக்கும்.

    சில இக்கட்டான சூழ்நிலையால் நவராத்திரிக்கு ஒன்பது நாட்களும் பூஜிக்க இயலாத நிலை வந்த போதும் 8 வது நாளான அஷ்டமி,அன்று ஒரு நாள் மட்டும் மனதார அம்பாளை வேண்டிக் கொண்டு ஆராதனை செய்தால் கூடப் போதும்;  அவள் அருளைப் பெற்றிடலாம். இந்த ஒருநாளில் கூட சுமங்கலிகளுக்கும், கன்னிப் பெண்களுக்கும் தாம்பூலம்  தந்து சகல சௌபாக்கியங்களையும் பெறலாம். நவராத்திரி அத்துணை விசேஷமானது.

    இந்தியா முழுவதும் இந்த நவராத்திரி பெரிய அளவில் விமரிசையாகக் கொண்டாடப் படுகிறது.

    கர்நாடகாவிலும், வங்காளத்திலும்  வெகு பிரமாண்டமாகக் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகைகள் தசரா என்னும் நவராத்திரி தான்.மஹாராஷ்டிரா  பகுதியில் தசரா சமயங்களில்  “தாண்டியா ரஸ் ..” என்னும்  நமது கோலாட்டத்தை மிகவும் உற்சாகமாக பெண்களும் ஆண்களும் தாளத்தோடு ஆடிப் பாடுவது மிகவும் இனிமையாகவும், ரசிக்கும் படியாக இருக்கும்.

    ஆந்திராவில் ஒரு பழக்கம் உண்டு.சிலரது வீடுகளில் சுமங்கலிப் பெண்கள் இந்த ஒன்பது நாட்களும் மௌன விரதத்தை அனுஷ்டித்து ஒரு தனி பூஜை அறையில் அமர்ந்திருப்பார்கள். மிகவும் கஷ்டமான ஆசார அனுஷ்டானத்தை மேற்கொண்டு “ஒக்கப்போது ” என்னும் ஒரு நாளைக்கு ஒரே வேளை  மட்டும் உணவு.  அதுவும் உப்பு, காரம், புளி ,அரிசி  என்று  இதை எதுவும் சேர்க்காமல் உண்பதைக் கடைபிடிப்பார்கள். அதை விடச் சிறப்பான விஷயம் என்னவென்றால்…, “ஒக்க லக்ஷ  பசுப்பு..” அதாவது அந்தப் பெண்கள் தங்களின் முன்பு மலை போல புத்தம் புதிய அல்லது காய்ந்த வரளி  மஞ்சள் இவற்றை மலை போலக் குவித்து வைத்துக் கொண்டு அவர்களைப் பார்க்க வரும் சுமங்கலிகளுக்கு அவர்களது புடைவைத் தலைப்பில் தனது  இரு கைகளின்  முழங்கை வரைக்கும் எடுத்து,  மஞ்சள் கிழங்குகளை அள்ளி தாராளமாக எடுத்து மூன்று முறை நிரப்புவார்கள். அதே போலத் தான் சுத்தமான குங்குமமும்…அள்ளி அள்ளித் தருவார்கள்.

    இந்த ஒன்பது நாட்களுள் மூன்று லக்ஷம் மஞ்சள் கிழங்குகள் வரைக்கும் கூட அள்ளிக் கொடுப்பார்கள் சிலர். இது ஒரு சிறப்பான வேண்டுதல் ஆகும். இதைக் கொடுக்கும் வீட்டின் முன்பு எப்போதும் பெண்களின் கூட்டம் நிறைந்திருக்கும் . இந்த முறையைப் பின் பற்றி தருபவருக்கும் பெறுபவருக்கும் சகல சௌபாக்கியங்களும் வந்து சேரும் என்பது ஐதீகம்
    அதே போல விடியற்காலையில்  நான்கு மணியிலிருந்து அடுத்த நாள் இரவு ஒரு மணி வரைக்கும் கூட நீண்ட வரிசையில் இந்த மஞ்சள் வாங்கிக் கொள்ளப் பெண்கள் வரிசையில் காத்திருந்தபடியே “லலிதா சஹஸ்ரநாமத்தைப்” பாராயணம் செய்து கொண்டே இருப்பார்கள். எனக்கும் இந்த சுகமான அனுபவம் கிடைத்ததை நான் பெற்ற வரமாகவே நினைக்கிறேன்.

    தமிழகத்தில் எப்படி “கொலு” வைத்திருக்கும் வீடுகளுக்குச் சென்று “கொலு பார்க்க வந்திருக்கோம்” என்று சென்று கொலுவைப் பார்த்துவிட்டு தாம்பூலமும் சுண்டலும் வாங்கிச் செல்வார்களோ…அதே போல ஆந்திராவிலும் “லட்சப் பசுப்பு” என்று எழுதி வைத்திருக்கும் வீட்டின் முன்பு பெண்களின் கூட்டம் அலைமோதும்.

    மதுரையிலும்  சம்பிரதாயம் எதுவும் மாறாமல் ஒன்பது படிகள் கொலு வைத்து பெண் குழந்தைகளை அழைத்து “கோலாட்டம்” வைத்துக் கொண்டு ஆடியும்…அந்தந்த நாளுக்கான ராகத்தைப் ..பாடிக்கொண்டே கும்மியடித்தும் அம்பாளை சந்தோஷப் படுத்துவார்கள்.ஒன்பது நாட்களும்    வந்து பாடிவிட்டு மகிழ்வோடு தாம்பூலம் வாங்கிக் கொண்டு செல்வதைக் காணும்போது தான் கொலு வைத்தவர் மனதில் அந்த அம்பிகையே…பராசக்தியே நேரில் வந்திருந்து ஆசீர்வாதம் செய்த திருப்தி இருக்கும்.

    அத்தனை கோயில்களிலும் கூட ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விசேஷ அலங்காரமும் ஆராதனையும் நடக்கும். கோயில்களில் கொலு பார்க்க வேண்டியே தினமும்  வரும் கூட்டம் கட்டுக்கு அடங்காது.  மீனாக்ஷி அம்மன் கோவிலில் அம்பிகையைக்  கொலு  மண்டபத்தில் நவ வித பூஜையோடு நவ வித அலங்காரத்தோடு வீற்றிருக்கும்  அன்னையைக் காண ஜென்ம பலன் கிட்டும். மண்டபத்தின் வழியெங்கும் இருபக்கமும் ஆறடி உயரத்தில் வெள்ளியில் தங்க முலாம்  பூசப்பட்ட…யானை,மயில்,கிளி,அன்னம்,காமதேனு,கருடன்,சிம்மம்,மூஞ்சூறு,கடோத்கஜன்,நந்தி ..ஆகிய வாகனங்கள்  தக தகவென்று மின்னிக் கொண்டு நிறுத்த வைக்கப் பட்டிருக்கும் அழகு அபாரமானது.
    ஒரு முறை கண்டால் போதும்…என்றென்றும் நெஞ்சத்தை விட்டு அகலாது. பொற்றாமரைக் குளம் முழுதும் விளக்கொளியில் அலங்கரிக்கப் பட்டு ஜக ஜோதியாக மின்னிக் கொண்டிருக்கும் அழகு. சித்திரைத் திருவிழாவைப்  போலவே “நவராத்திரிக்கும்” மதுரையே  ஜே…ஜே.. என்று மல்லிகை, பிச்சி,ஜாதி முல்லை,தாழம்பூ,பன்னீர் ரோஜா ஆகிய சுகந்த மலர்களின் இனிய மணத்தை  தாங்கி மணத்துக்  கொட்டும்.இதுவரை ஒரு முறை கூட கண்டிராதவர்கள் அவசியம் ஒரு முறையேனும் கண்டு வரவேண்டும். அந்த சுகமே அலாதியானது.தேவி பாகவதத்தில் கூறப் பட்டுள்ள படியே இந்த நவராத்திரி பூஜை சிறப்பாக கொண்டாடும் மற்றோர் இடம் சிதம்பரம் ஆகும். கோயிலின் பிரகாரத்தின் உள்ளே பிரம்மாண்டமான முறையில் பொம்மைக் கொலு…! நீளத்திலும் அகலத்திலும் அந்தப் பிரகாரத்தையே சிறப்பிப்பதாக அமையும் வகையில் இருக்கும். ஆயிரக் கணக்கில் மிகவும் புராதனக் களிமண் பொம்மைகள் கூட வீற்றிருக்கும்.நித்தம் சாஸ்திர சம்பிரதாயப் படியே ஹோமங்களும், நித்தியா அன்னதானமும், சுவாசினி பூஜையும், 1008 கன்னியா பூஜை மற்றும் ஒரு லட்சத்தியெட்டு ரவிக்கைத் துண்டுகள்,   ஒன்பது வண்ணங்களில் அர்ச்சனை  செய்வித்து பாலாம்பிகையை வணங்கும் விதத்தைக் காண மனம் நெகிழும்.
    இந்த ஒன்பது நாள் பூஜையின் இறுதியில் மகா சண்டி யாகம் நூற்றி எட்டு குருக்கள் இணைந்து கலந்து கொண்டு வேத கோஷம் முழங்க பூர்ணாகுதி நடக்கும் போது அம்பிகையே நேரில் வந்து ஆசீர்வதிப்பது  போல இருக்கும்.

    விஜயதசமி அன்று நடராஜர் முன்பு இருக்கும்  மண்டபத்தில் பரதம் அறிந்த  குழந்தைகளும் , பெரியவர்களும்  பரதம் ஆடுவார்கள். அன்று பல கோயில்களில் அக்ஷராப்பியாசம்..என்னும் முதன் முதலில் குழந்தைகளுக்கு எழுதக்   கற்றுத்  தருவது வழக்கம். இந்த நாளில் செய்யும் அனைத்துக் காரியமும் நம்மை வெற்றியோடு விளங்கச் செய்யும் என்ற நம்பிக்கை என்றும் உண்டு. புதிதாக வீடு கட்ட ப் போவதன் முன்பு வாஸ்து பூஜையும் இந்த நல்ல நாளில் செய்தால் எவ்விதத் தடங்கலும் இன்றி ஜெயம் உண்டாகும் என்பதும் வழக்கத்தில் உள்ளது.

    கும்பகோணம் அருகில் தமிழ்நாட்டில் இருக்கும் சரஸ்வதிக்கென்று தனிக் கோயில் பூந்தோட்டத்தில் இருக்கிறது.ஒட்டக்கூத்தருக்கு அன்னை அருள் பாலித்த திருத்தலம் அதனால் கூத்தனூர் சரஸ்வதி  என்றே அழைக்கப் படுகிறாள். செல்வம் அழிந்தாலும் கற்ற வித்தை அழியாது எனபதை உணர்த்தும் வண்ணம் அன்னை கலைகளுக்கரசி…வீணையோடு வீற்றிருக்கும் எழிலைக் காண கண் கோடி வேண்டும். இத்தகைய ஞான சக்தி வழிபாடு நமது  நமது அறியாமையை அகற்றி அறிவையும், சத்துவ குணத்தையும் வளர்க்கிறது. கூத்தனூர் சரஸ்வதி கோயிலில் சிலேட்டு, நோட்டுப் புத்தகம்,பேனா பென்சில் இவற்றை அம்மனின் காலடியில் சமர்ப்பித்து எடுத்து வருவது நல்லது . குழந்தைகளுக்கு கொல்லூர் மூக்காம்பிகை கோயிலில் மற்றும் கேரளக் கோவிலில் நடை பெறுவது போலவே இங்கும் அக்ஷராப்யாசம் வெகு விமரிசையாக நடை பெரும்.

    பூந்தோட்டதிலிருந்து  ஒரு ஐந்து கிலோமீட்டர் தூரத்தில் இருப்பது திருமீயச்சூர்..இங்கு அன்னை லலிதாம்பிகை அருள்பாலிக்கிறார். தேவியின் லலிதா சஹஸ்ரநாமம் தேவியே சொல்ல இங்கு தான் அகஸ்த்தியரால் பாடப் பெற்றது. அமைதியும், எழிலும், கலைவண்ணமும் கொண்ட திருக்கோவில். அம்பாளைக் காண மனம் குளிரும்.
    ஒவ்வொரு நவராத்திரி சமயத்திலும் வேறு எங்குமே இல்லாத வகையில் இங்கு தான் அம்பாளின் முன்பு சர்க்கரைப் பொங்கலைப்பரப்பி பள்ளம்  வெட்டி , அது நிறைய ததும்ப  ததும்ப நெய்யை ஊற்றி அதில் லலிதாம்பிகாவின் பிம்பம் உருகிய நெய்யில் விழும்  காட்சியை  சேவிப்பார்கள். நெய்விளக்கின் ஒளியில் அம்பாளின் உருவம் கண்ணாடியாக மின்னும்…அழகே அழகு. வருடத்தில் ஒருமுறை மட்டுமே காணக் கிடைக்கும் அற்புதக் காட்சியாகும். மாதா ஜெயா ஓம் லாலிதாம்பிகையே …என்ற நவரத்னா மாலையில் பாடுவது போல “காணக் கிடையா கதியானவளே ..” என்ற வரியை உணர்த்தும் அனுபவம்..நிச்சயம் கிடைக்கப் பெறும்.

    நவராத்திரியில் நவாட்சரி மந்திரம் செய்வது 24 அக்ஷரங்கள் கொண்ட நவாட்சரி காயத்ரிக்கு ஈடான மகாமந்திரமாகும். சகல காரிய சித்திக்கும் அற்புத மந்திரம். இந்த மந்திரத்திற்கு மகா லட்சுமியும்  , மகா சரஸ்வதியும் சக்தி தேவியர்களாக  அருள் பாலிக்கிறார்கள். “நவாட்சரி மகாமந்திர ஜபம் கரிஷ்யே என்று கூறி “ஓம் ஐம் ஹ்ரீம் க்லீம் சாமுண்டாயை விச்சே” என்று 108 முறை ஜபம் செய்து பால் பாயசம் நைவேத்யம் செய்தால் தேவியின் அருள் நிலைத்திருக்கும்.

    இச்சா சக்தி அதாவது துர்க்கை வீரத்தின் தெய்வம், சிவப் பிரியை, வெற்றியின் தேவதை, எருது உருவம் கொண்ட மகிஷன் எனும் அரக்கனை  ஒன்பது இரவுகள் போரிட்டு வெற்றி கண்டவள். அவனை வதம் செய்த நாளே  “விஜயதசமி”. மகிஷனை வதைத்ததால் “மகிஷாசுர  மர்த்தினி” . நவ துர்க்கை வழிபாடு நவராத்திரியில் சிறப்பானது.கொல்லூர் செல்லும் வழியில் தான் கட்டில் வன துர்க்கை (துர்கா பரமேஸ்வரி ) அருள் பாலிக்கிறாள். மிகவும் சாநித்யம் படைத்த கட்டில் துர்க்கைக்கு நிமிஷா நிமிஷம் சூட்டைத் தணிக்க இளநீர் அபிஷேகம் செய்வதைக் கண்கூடாகக் காணலாம் .

    கிரியா சக்தி செல்வத் திருமகள், லட்சுமி. மலரையொத்த மென்மையான அழகு நிரம்பியவள். செல்வத்தின் உறைவிடமே இவளின் இருப்பிடம், விஷ்ணுப் ப்ரியை, பாற்கடலில் அமுதத்துடன் உதித்தவள். சமுத்ரராஜனின் குமாரி. செந்தாமரையில் வீற்றிருப்பவள். திருச்சானூர் நாயகி. நவராத்திரியில் நான்காவது நாளிலிருந்து ஆறாம் நாள் வரை அஷ்டலக்ஷ்மிகளின் தரிசனம் அனைத்து கடாக்ஷத்தையும் நல்கும்.

    ஞான சக்தி, ஆயக் கலைகளுக்கும் சகல கல்விக்கும் அதிபதி சரஸ்வதி..!  பிரகாசம் கொண்ட ஸ்படிகம் போன்ற அறிவின் தன்மையைக் கொண்டவள். பிரம்மாவின் பிரியை.அஷ்ட சரஸ்வதியின் தரிசனம் பெற்று கடைசி மூன்று நாட்களும் வழிபட்டால்…கலைமகளின் பூரண கடாக்ஷத்தைப் பெறலாம்.

    கூத்தனூர் சரஸ்வதியைத் தவிர ஆந்திராவில் இரண்டு இடங்களில், பாசார் மற்றும் பாசரா என்ற இடங்களில் மலை மீது சரஸ்வதிக்கு கோயில் இருக்கிறது. கொல்லூர் மூகாம்பிகையும், சிருங்கேரி சாரதாம்பிகையும், கூட சரஸ்வதி தான். நவராத்திரியில்  நீல சரஸ்வதியைத் தொழுதால் ஞானம் பெறலாம்.

    கலைகளைத் தரும் தேவிக்கு சிலைகள்  பஞ்சலோகத்தில் மூர்த்தம் வடிக்கும்  சில்பிகளைச் சந்திக்கும் வாய்ப்பு சமீபத்தில் கிட்டியது. அத்தனை நேர்த்தியான வேளைகளில்….மெய்மறந்து ரசித்துக் கொண்டே நின்றவள்..அவர்களிடம் கேட்ட கேள்வி…எப்படீங்க எல்லாம் ஒரே மாதிரி அச்சில் வார்த்தாலும்..மேற்கொண்டு உளியில் செதுக்கியும்…அதே நயத்தோடு வருகிறது..ஒவ்வொன்றும் ஒன்றை விட இன்னொன்று என்று கச்சிதமாக சிலா ரூபம் எடுக்கிறது என்று ஆவல் மேலிடக் கேட்டேன். அவர்கள் சொன்ன பதில்…” எல்லாம் அந்த சரஸ்வதி தேவியின் அருள் கடாக்ஷம் தாங்க….”என்று பதிலாகக் கேட்டதும்….”ஆம்..அவளின்று எது கலை…?” இதோ எழுத ஆரம்பிக்கும் போது  அவள் நினைவால் தொடங்கினேன்..எண்ணமெல்லாம் எழுத்தாக அவளே முடிவு வரை நடக்கிறாள்.

    வீரமும், கல்வியும், செல்வமும் ஆக இந்த முப்பெரும் சக்திகள் தான் இந்த புவனத்தையே ஆளுகிறது…அதற்காக வருடத்தில்  ஒன்பது இரவுகள் இந்த மூன்று தேவிகளை ஒவ்வொரு நவராத்திரியிலும் மனம் நிறைந்த பக்தியோடும் கருணையோடும் துதித்து வரம் பெறுவோம்.

     படத்துக்கு நன்றி

     

    Share
  • ஆண்மீக இச்சை..! (இது எழுத்துப் பிழை அல்ல….மனத்துப் பிழை…)

     
     
    ஜெயஸ்ரீ ஷங்கர், தில்லை.
     
    வாசல் தெளித்துக் கோலம் போட வாளியில் தண்ணீரோடு சென்ற சந்திராவுக்கு நிலைப்படி தடுக்கி த்ண்ணீர் தளும்பி விழவும் … மேலும் அதிலேயே அவளது காலடி தடுக்கி வழுக்க……  சுதாரித்தவள், என்னாச்சு இன்னைக்கு காலங்கார்த்தாலே இப்படி ஒரு தடைச்சகுனம்  இன்றைய நாள் எந்தப் பிரச்சனையும் இல்லாமல் சுமுகமாப் போகணுமே”
     

    சகுனமே சரியில்லையே….என்று எண்ணிக் கொண்டே புள்ளி வைத்துக் கோடு இழுக்க…கோலம் வராமல், கோடுகள் எங்கேயோ போய் நின்று வரமாட்டேன் என்று அடம் பிடித்தது.

    அழித்து…அழித்து மனதில் உள்ள கோலம் விரலிடுக்கில் அடங்காமல் அழிச்சாட்டியம் செய்ய….கூடவே நகரும் மேகங்களாக மனம்..எண்ணத்தில் மாறிக் கொண்டே…கை கோலத்தைக் அவசரத்தில் கிறுக்கிவிட்டு .இன்று ஞாயிற்றுக் கிழமை தானே….அவசர அவசரமாப் பறக்க வேண்டாம்…என்று எண்ணியபடியே நிமிர்ந்தவள்… “அம்மா..நேற்று ..எல்லாம் தான் படிச்சேன்..இப்போ ஒண்ணுமே ஞாபகத்துக்கு வரலைம்மா…” என்ற பிரவீன் தன் கவலையை பயத்துடன்  சொல்கிறான்.

    என்னடா பிரவீன் ?…இப்பப் போய் இப்படிச் சொல்றே….இது க்வாடர்லி எக்ஸாம்ஸ் ….நீ சரியா எழுதணும்..கண்ணா…..இன்னும் நேரம் இருக்கு..நாளைக்குத் தானே பரீட்சை….பயப்படாமல் .போய் உட்கார்ந்து நிதானமாப்  படி…எல்லாம் மனசில் ஏறும் ….என்று சொல்லிக் கொண்டே பாலை அடுப்பில் ஏற்ற….எண்ணம் பின்னோக்கிச் சென்று கால் வழுக்கலில் சென்று நின்றது..! இடரின காலே இடரும்….! எனக்கு என்னாகுமோ…? மனசுக்குள் வழக்கம் போல கறுப்புப் பூனை எழுந்து  நடக்க ஆரம்பித்தது…சந்திராவுக்கு.

    நல்ல வேளை….நான் கீழே விழலை…பிரவீனுக்குப் பரீட்சை நேரம்..இப்பப் .பார்த்து எனக்கு எதுவும் ஆனால்..அவ்ளோ தான்..!நினைத்துக் கொண்டிருக்கும்போதே…பால்…”புஸ்” என்று பொங்கிப்  படமெடுத்தது.

    டேய்..பிரவீன்….சித்தியை எழுப்பி சொல்லித் தரச் சொல்லேன்….என்று குரல் கொடுத்தவள்….சித்ரா…சித்ரா பிரவீனுக்கு கொஞ்சம் கணக்குச் சொல்லித் தாயேன்…ஒண்ணுமே தெரியலைன்னு சொல்றான்.பாவம்…பயப்படறான்…..நீதான் மாத்ஸ் ஜீனியஸ் ஆச்சே … என்றவள்….பையன் நல்லபடியாப் பரிட்சைக்குப் போகணும்..இன்னிக்கு உனக்கு லீவு தானே…? என்று சொல்லிக் கொண்டே காலில் சக்கரத்தைக் மாட்டிக் கொண்டு வேலையில் மூழ்கினாள்.

    படுக்கையை விட்டு எழுந்து நெளிந்த சித்ரா….என்னக்கா…பிரவீன் அஞ்சாவது தானே படிக்கறான்? …என்ன ஐ.ஏ.எஸ்’க்கா படிக்கிறான்..நீ..என்னமோ .இவ்ளோ அலுத்துக்கறே….டேய்..பிரவீன் நோட்புக் எடுத்துண்டு வாடான்னு கொட்டாவி விட்டபடியே…சோம்பல் முறித்து வாயருகில் சொடக்குப் போட்டபடியே சொல்கிறாள்..

    “ம்ம்ம்…உனக்கும் இந்த சொகுசெல்லாம்  இந்த மாசத்தோட கடைசி…. அடுத்த மாசமே…நீயும் கால்ல சக்கரம் தான் கட்டிக்கணும்…சந்தோஷ் உன் கழுத்தில் மூணு முடிச்சுப் போடற வரைக்கும் தான்…நீ இந்த வீட்டு மகாராணி..அப்புறம் நீயும்…என்னை மாதிரியே…கௌரவ வேலைக்காரி, தெரிஞ்சுக்கோ….” சொல்லிக் கொண்டே.

    நம்ம வீட்டு வேலையை நாம பண்றதுக்கு வேலைக்காரின்னு ஏன் நினைச்சுண்டு பண்ணனும்…உரிமையா…அன்பாப் பண்ண வேண்டியது தானேக்கா….நம்ப அம்மா…பாட்டி பண்ணாததையா நீ பண்றே…?.என்று சித்ரா விடாமல் சந்திராவை வம்புக்கு இழுக்கிறாள்.

    “ஏன்னா…..இங்க கொஞ்சம் வரேளா….இந்த பீன்சைக் கொஞ்சம் பொடிப் பொடியா நறுக்கித் தந்தா ஆகாதா…? என்று காப்பியைக் கலக்க ஆரம்பித்தாள்.

    இதோ பாருடா….வேலைக்காரி வீட்டுக்காரரை…வேலை வாங்கறதை…என்று கிண்டலடித்துச் சிரிக்கிறாள் சித்ரா.

    என்ன சந்திரா…இப்போ தான் நியூஸ் பேப்பர் படிக்க ஆரம்பித்தேன்… அதுக்குள்ளே உன் மூக்கு வியர்க்குதா….? அட….இங்க பாரேன்…நம்ம ரவீந்திர பாரதியில். இன்னைக்கு சாயங்காலம் ..உனக்குப் பிடிச்ச சுதா ரகுநாதனின் சங்கீதக் கச்சேரி இருக்காம்..  ரெண்டு பாஸ் அன்னிக்கே போஸ்ட்ல வந்துதே….இன்னைக்குப் போலாம்’ன்னு நினைக்கிறேன் ?   வரியா ? சுதா ரொம்ப நன்னாப் பாடுவா.. .என்றவர்.. தூரத்தில் பாடம் சொல்லிக் கொடுக்கும் சித்ராவைப் பார்த்தார் !   கண்கள் சந்திராவை நோக்கவில்லை.  ! மனசு …நீ வரமாட்டே…எனக்கேத் தெரியும் என்றது.,

    நானா….? என்ன விளையாட்டா…பிரவீனுக்கு நாளையிலிருந்து  கால் பரீட்சை ஆரம்பம்… நானும் வந்துட்டா அவனுக்கு யார் சொல்லித் தருவா…? நான் எங்கேயும்  வரலை…நீங்க போறதுன்னாப் போய்ட்டு வாங்கோ…நான் வேண்டாம்னு சொல்லலை..என்றவள்…பீன்ஸையும் கத்தியும்  கொண்டு வந்து “டொக்கென்று”  வைத்தாள்.

    ஒ.. ..பரிட்சை இருக்கா….சரி.  நான் மட்டும் தனியா எப்படிப் போறது ?  அப்போ …. நான்….   சித்ரா சும்மாத் தானே வீட்லே இருப்பா..?அவளை அழைச்சுண்டு போறேன்…அவளும் வீட்டிலயே அடைந்து கெடக்கா பாவம்…என்றவர்…கண்கள் மச்சினி சித்ராவைத் தேடியது.

    சந்திராவுக்கு நெஞ்சு  திக்கென்றது  !  என்ன சித்ராவா ?   அவள் கல்யாணப் பெண்,  என் கணவனோடு பாட்டுக் கச்சேரிக்குப் போவதா ?  இதென்ன அல்பமான  ஆசை….இவருக்கு..! இந்த வயசில் இந்த ஆசை ரொம்பத் தேவை…இவருக்கு….கஷ்டம்…கஷ்டம்…என்றது  அவளின் மனது.

    கல்யாணம் ஆகப் போறவள்….இப்போதான்.நிச்சயம் ஆயிருக்கு…இப்ப வெளியில்…கச்சேரிக்கெல்லாம் அழைச்சுண்டு போறது அவ்வளவு சரியில்லை..யாராவது பார்த்தால் தப்பா நினைப்பா..நீங்க மட்டும் போய்ட்டு வந்தால் ஆகாதா?

    அடிப் போடி..நீ தான் சுத்த கர்நாடகம்…எந்தக் காலத்தில் இருக்கே இன்னும் நீ…?..எதுக்கெடுத்தாலும்….எப்பப் பாரு…சகுனம்…நாலுபேரு….அது இதுன்னு…சொல்லி பொழுதைப் போக்குவ..சித்ரா  இதுக்கெல்லாம் நேர்மாறு. நீயே பாரேன்….நான் வான்னு கூப்பிட்டால் உடனே சரி வரேன் அத்திம்பேர்ன்னு சொல்வா…நீ வேற எதையும் சொல்லி அவள் மனசையும் கெடுக்காமல் இருக்கணும்…ஆமா….கொடு…கொடு…பீன்ஸை நறுக்கி வைக்கிறேன்…என்று அவசரப்பட்டார்…சபாபதி.

    சித்ரா செதுக்கி வைத்த சிலை.  பளிங்குப் பதுமை !  பேரழகி !  சந்திரா முகத்தில் .. தேமல் மேடு பள்ளங்கள்.  

    சந்திராவுக்குக் கோபம் பொங்கியது.  எப்படியோ அடக்கிக் கொண்டாள். சரி நான் பாட்டுக் கச்சேரிக்கு வரேன்.   சித்ரா வேண்டாம்.  கல்யாணப் பெண் உங்களோடு போவதை நான் விரும்ப வில்லை.

    ஒருதரம் நான் அவளோடு வெளியே உலாவப் போகணும்’ன்னு எனக்கு ஆசை சந்திரா.  நீ வர வேண்டாம், அவள் வரட்டும்.  தப்பா நினைக்காதே !

    என்னவோ செய்யுங்கோ …நீங்களாச்சு…உங்க மாடர்ன் மச்சினியாச்சு.. நான் ஏன் அவள் மனசைக் கெடுக்கப் போறேன்?…நீங்க உங்க மனசை பத்திரமாப் பார்த்துக்கோங்கோ…அது போதும் நேக்கு, என்று சிலேடையாகச்  சொல்லிவிட்டு சிரித்துக் கொண்டே நகர்ந்தாள் சந்திரா. உள்ளுக்குள்ளே அவளின் மனம் அழுதது. கண்ணாடியைப் பார்த்தாள்….கன்னமெல்லாம் வடுக்கள்…இந்த அம்மிக்கல்லு முகத்தை எனக்கே பிடிக்கலை…பாவம்..அவர்…! தன்னோட மனைவி அம்சமா இருக்கணும்னு கனவு கண்டிருப்பார்…விதி…என் லக்ஷணத்தில் அவருக்கு வாய்ச்சிருக்கு….என்று சொல்லிக் கொண்டே கண்ணாடியை விட்டு நகர்ந்தாள்.

    பீன்ஸை நறுக்கிக் கொண்டே…அப்போ…இன்னைக்கு சித்ராவுடன் மோட்டர் பைக்கில் தனியாகப் போகப் போறேன்….என்ற மிதப்பில் கிறங்கியபடியே..”பார்த்த முதல்நாளே….உன்னைப் பார்த்த முதல் நாளே…” என்று சீட்டியடித்தபடியே…மனமெல்லாம்  சித்ரா வர சம்மதிப்பாளா…? என்று யோசனையில் ஆழ்ந்தார் சபாபதி.

    என்னதான் இருந்தாலும்…ஆண்மனம் சபலம் அடையும்,  மரத்துக்கு மரம் தாவும்.  கையில் கொய்யாப் பழமிருக்க  மரத்தில் தொங்கும் மாங்கனிக்கு ஏங்கும் !  பல சமயங்களில் தன்னை மீறி அலைபாயும்..இது தவறு…இது சரி.. என்ற எல்லைக் கோட்டைத் தாண்டுவதில் மகிழும். ஷண நேர சந்தோஷத்தில் கூத்தாடும். விதி விலக்குகள் இருந்தாலும். பெரும்பான்மை யானவர்களின் வரிசையில் தான் சித்ராவின் அத்திம்பேரும்  நின்றார், பெண் குழந்தைகளுக்குத் தகப்பனாயிருந்திருந்தால்  கொஞ்சம் பொறுப்பு வந்திருக்கும். அதற்கும் வழியில்லை இப்போது. நாற்பது வயதை நெருங்கும் சமயம் இளமை அவருக்கு ஊஞ்சல் ஆடுகிறது.  வாலிப முறுக்கு திரும்பிய எண்ணம் அவருக்கு.

    கண்ணருகில்….இளவயதில்….மெழுகு பொம்மை நடமாடிக் கொண்டிருந்தால்…அலைபாயும் மனசோடு அலையும் ஆண்மகனுக்குக் கேட்கவா வேண்டும்.? வயது என்ற சாக்குப் போக்கெல்லாம் அங்கே செல்லாது. குடும்பத்தின் தலைவனாகவே இருப்பினும் உள்ளுக்குள்ளே  ஒரு கண்சித்ராவையே தொட்டு  விட வட்டமிடும்.

    சித்ராவுக்கு “ஹை-டெக்” சிட்டியில் வேலைக் கிடைத்ததும்…அக்கா சந்திராவின் வீடு தான் இருக்கே…அங்கேயே தங்கி வேலை பார்க்கலாம்.என்ற எண்ணத்தில்….சென்னையிலிருந்து ஹைதராபாத்துக்கு தைரியமாக வந்திறங்கினாள் பெற்றோருடன்.. சந்திரா….இவள்  ஒரு ரெண்டு மூணு மாசம் இங்க இருக்கட்டும்… கொஞ்சம் பார்த்துக்கோ..தெரியாத ஊர், புரியாத பாஷை வேற…அதற்குள் இவளுக்கும் சீக்கிரமா ஒரு வரனைப் பார்க்கிறோம்…என்று .சித்ராவை விட்டுட்டு சொல்லிச் சென்றவர்கள்  முழுமூச்சாக வரன் பார்த்ததில் ஒரே மாசத்தில் இங்கேயே ஆக்சிஸ் பாங்கில் வேலை பார்க்கும் சந்தோஷுக்கு நிச்சயம் செய்து விட்டு நிம்மதியானார்கள்.

    அடுத்த மாசம் சித்ராவின் கல்யாணம். அதற்கான ஏற்பாட்டில் சந்திராவும் மும்முரமானாள்…சித்ராவும் இதே ஊரில் வந்து வாழப் போவதில் அவளுக்கு பரம  சந்தோஷம்.  

    டிபன் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் சித்ராவைப் பார்த்து, அப்பறம்… சந்தோஷ் உனக்கு ஃபோன் பண்ணி பேசினாரா? என்று சந்தடிசாக்கில் சந்திரா கேட்க.

    இல்லக்கா…அவரோட அம்மா…சொன்னாளாம்…அடிக்கடி ஃ போன் பண்ணிப் பேசி, அவாளுக்குத் தெரியாமல் வெளில போறது…இதெல்லாம் செய்யக் கூடாதுன்னு. அவங்க கொஞ்சம் ஸ்ட்ரிக்டாம்.  என்னவோ… பெரிசா….இந்தக் காலத்திலும் இப்படியெல்லாம் இருக்காங்க பாரேன்க்கா.  இவரும்…அவங்க சொல்றதைக் கேட்டுட்டு எனக்கு ஒரு தரம் ஃபோனில் சொன்னார்..அவ்ளோ தான். நானும்..என்ன சீப்பா…? சரி. இனிமேல் ஃபோன் பண்ணாதீங்க…கல்யாண மேடையில் சந்திக்கலாம்னு சொல்லிட்டு வெச்சிட்டேன். மனசுக்குள்ளே….இவருக்கும் எனக்கும் ஒத்துப் போகுமா? பிரச்சனை வருமான்னு ஒரே கவலையாத் தான் இருக்கு. ஆனால் இப்போ என்ன பண்ண முடியும்.? அதான் அவசர அவசரமா நிச்சயம் ஆயாச்சே… எல்லாம் தலைவிதிப் படி தான் நடக்கும்.என்று அலுத்துக் கொண்டாள் சித்ரா.

    அக்கா…உன் கணவர் உனக்கு ரொம்ப நல்லபடியா அமைஞ்சுட்டார்… பாரேன்… எனக்குத்  தான் சரியான தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை.!..”என் அம்மா சொல்லிட்டாங்க…..” என்று வக்களித்துக் காட்டியபடியே….இவரை நான் தான் அங்கே போய் மாற்றி என் வழிக்குக் கொண்டு வரணும்….அதுக்கு நான் என்னெல்லாம் பண்ண வேண்டி வருமோ…?என்றாள் சித்ரா.

    அப்படியெல்லாம்  சொல்லாதே சித்ரா..அவங்க கண்ணோட்டத்தில் அவங்க சொல்றது தான் நிஜம். கல்யாணத்துக்கு முன்னாடியே அங்கே..இங்கே..சுத்திட்டு அந்த நேரத்தில் ரெண்டு பேருமே தங்களைப் போல நல்லவங்க இல்லைன்னு ஒரு அபிப்பிராயத்தை ஒருவருக் கொருவர் ஏற்படுத்திக் கொண்டு…அப்பறம்..யதார்த்தமான வாழ்கைச் சூழ்நிலைக்கு திரும்பும்போது, அது கொஞ்சம் முரணாத் தெரியும்.. அப்போதான் பிரச்சனை வரும்.அதற்கு கல்யாணம்’னு ஆனபின்பு ஒருத்தரை ஒருத்தர் சரியாப் புரிஞ்சுண்டு வாழ ஆரம்பித்தால்…எந்த பகட்டும் இல்லாமல் யதார்த்தமாக வாழலாம் இல்லையா? இது மாதிரி நிறைய விஷயங்கள் இருக்கும்..பெரியவர்கள் எதையும் தெரியாமல்  சொல்ல மாட்டா.

    அதுவும் சந்தோஷ் அவர்களுக்கு ஒரே பிள்ளை.அதனால் கூட அவரோட அம்மா நிறைய செல்லம் கொடுத்து வளர்த்திருக்கலாம். நிச்சயம் நீ போனபிறகு அவர்கள் உன்னையும் மகளாகத் தான் பார்ப்பார்கள். பெண் குழந்தைகள் இல்லாத வீட்டில் மருமகளை மகளாகத் தான் நினைச்சுப் பார்ப்பா…நீயாக எதையும் மனதில் போட்டுக் குழப்பிக்காதே..அவர்களைப் பார்த்தால் ரொம்ப நல்ல மாதிரியா தான் தெரிகிறார்கள். யாருமே.. மருமகளை துவேஷமாக நினைப்பதில்லை. அதே சமயம் வந்த பெண்….அவர்களது மகனை உரிமை அது இதுன்னு யோசிச்சு பெற்றவர்களிடம் இருந்து ஒரேயடியாப் பிரிக்க முயலும்போது தான்….அவர்களால்  தாங்க முடியாது…எப்பவும் ரெண்டு பக்கமும் பார்க்கணும்.

    ஆனாலும்..ஒண்ணு சொல்றேன் கேட்டுக்கோ..நாம எப்போ..நம்ம கணவரோட..குடும்பம் தனின்னு பிரிச்சுப் பார்க்காமல் அந்தக் குடும்பத்தில் உன்னையும் ஒருத்தியா மனதோட இணைத்துப் புகுத்திக் கொள்கிறாயோ..  அப்போது தான் அவர்களுக்கும் நம்ம குடும்பத்தின் மேலயும் உன் மேலயும்  ஒரு பற்றும்..பாசமும்…மதிப்பும் உண்டாகும்.  எப்பவுமே…உரிமைகளை யாருமே இந்தா… எடுத்துக்கோன்னு கூப்பிட்டுக் கையில்  தருவதில்லை…அதை நாம் தான் யாருக்கும் மனம் வருத்தப் படும்படியாக நடந்து கொள்ளாமல் உரிமையோடு  எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு குடும்பத்தில் மருமகளாக இருப்பது கூட கம்பி மேல் நடப்பது போலத் தான். அதே போல ஒரு மாமியாராக பொறுப்பு எடுப்பதும் ரொம்ப கஷ்டம் தான். தெரியுமா…?  இதெல்லாம் ஆண்களுக்கு அவ்வளவா பிரச்சனையாக இருப்பதில்லை.

    அக்கா…போதும்…உன் “சந்திரோபதேசம்….”. இப்படியெல்லாம் சொல்லி என்னை இன்னும் பயமுறுத்தாதே..ப்ளீஸ். ஞாயிற்றுக் கிழமையும்  அதுவுமா..நன்னா வீட்டில் ரெஸ்ட் எடுக்கணும்..சாயங்கால வேளையில் எங்கேயாவது வெளியில் போகணும்..ஹோட்டல்ல டின்னர் சாப்பிடணும்…வந்து அக்கடான்னு படுத்து நிம்மதியாத் தூங்கணும்.அப்போ தான் அடுத்த ஒரு வாரத்துக்கு சரியா வேலை பார்க்க முடியும்.

    ஆமாம்மாம்…வேலைக்குப் போகும் உங்களுக்கென்ன சண்டே ரெஸ்ட் டே…என்னை மாதிரி “அகழியிலிருக்கும் முதலைக்கு அதுவே வைகுண்டம் போல”…இருக்கறவளுக்கு ஏது ரெஸ்ட் டே..! கேட்டால்..வருஷம் முழுதும் உங்களுக்கு ரெஸ்ட் தானேன்னு சொல்வேள்..எங்களுக்குத் தானே தெரியும்…ஒரு நாள் நாங்க ரெஸ்ட் எடுத்தால்…எப்படி உங்க டப்பா….டான்ஸ் ஆடும்னு…!

    சித்ரா…இன்னைக்கு இவர் ரவீந்திர பாரதியில் சுதா ரகுநாதனோட பாட்டுக் கச்சேரிக்குப் போறாராம்…உன்னையும் அழைச்சிண்டு…போயிட்டு வா.

    என்னக்கா…நீ போறது தானே…? நான் என்னத்துக்கு…? நான் அத்திம்பேரோட  எங்கியும் போகலை.

    பிரவீனுக்கு நாளைக்கு பரீட்சை ஆரம்பம்…நான் தான் கூட உட்கார்ந்து சொல்லித் தரணும். இல்லாட்ட படிக்க மாட்டான். அத்திம்பேர் என்ன உன்னை கடிச்சா முழுங்கப் போறார்….?  அவரே சொன்னார்…சித்ராவை அழைச்சுண்டு போறேன்னு…போயிட்டு  வாயேன். அப்படியே நல்ல ஹோட்டல்ல நீ சொன்ன மாதிரி டின்னர் சாப்பிட்டுட்டு வா,.எனக்கும் வேலை மிச்சம்.

    ஐயய்யோ… இது என்ன? இல்லக்கா….நான் இவரோட தனியால்லாம் போகலை…சரிப்பட்டு வராது.

    எது சரிப்பட்டு வராது……? நீயா ஏன் எப்படியெல்லாமோ நினைக்கறே. உன் அத்திம்பேர் என்னடான்னா…சித்ரா ரொம்ப மாடர்ன், பிராட் மைன்டெட்  அப்டீன்னு பெருமை பேசறார்…நீ இப்படி சொல்றே…நானே போயிட்டு  வான்னு சொல்றேன்..உனக்கும் ஒரு அவுட்டிங். ஏதோ உன்னையும் அழைச்சுண்டு போகணும்னு அவருக்கு ஒரு ஆசை…இனிமேல் உனக்கு கல்யாணம் ஆயாச்சுன்னா முடியுமா? சுதா ரகுநாத்தின் கச்சேரி…ரொம்ப நன்னாருக்கும்…மிஸ் பண்ணாதே. இல்லாட்டி நீ பிரவீனுக்கு கணக்குச் சொல்லிக் கொடு..நான் போய்ட்டு வரேன்…என்று சந்திரா சொன்னதும்..

    அம்மாடி…அந்த பனிஷ்மென்ட் எனக்கு வேண்டாம்…நானே போறேன்…. நீயே உன் வாழை மட்டைக்குப் பாடம் எடு…அது உன்னால் மட்டும் தான் முடியும்..என்று கையைக் கூப்புகிறாள்.

    நேரம் ஆக ஆக…சித்ரா…போகணுமா..வேண்டாமா..? என்ற குழப்பத்தில் இருந்தாள். அதே சமயம் கச்சேரியை விடவும் மனசு இல்லை.சரி.. அத்திம்பேர் தானே…போய்ட்டு வரலாம்…என்று கிளம்பத் தயாரானாள் சித்ரா.

    அவளுக்கும் முன்னால் சபாபதி கிளம்பி மைனர் மாதிரி சென்ட்…மணக்க தயாரா வந்து நின்றபோது  சந்திராவே  அசந்து மயங்கிப் போனாள்.

    என்ன அத்திம்பேர்…அசத்தலா கிளம்பிட்டேள்…சுதா ரகுநாதன்னா…. அவ்ளோ இஷ்டமா?…அவங்க மேடையில் கச்சேரி பண்ண வராங்க…நினைவு வெச்சுக்கோங்க…என்று கிண்டல் செய்தாள் சித்ரா.

    இவரும் சிரித்துக் கொண்டே…மனசுக்குள்….அடி அசட்டுப் பெண்ணே….”மனசுலோனி மர்மம்….தெலுசுகோ…..” என்று ராகம் இழுத்தார்..

    ஒரு வழியாக கிளம்பி மோட்டர் பைக்கில் இருவரும்  ஏறியாச்சு…!

    முன்புற கண்ணாடியை சரி செய்தவர்…அப்போ…போலாமா..என்று கண்ணாடி வழியாகவே இவளைப் பார்த்துச் சிரித்தபடியே  கேட்க,

    இவளும்…கண்ணாடியைப் பார்த்தே…”ம்ம்ம்…ம்ம்ம்” என்று பதில் சொன்னாள் சித்ரா.”சிரிப்பைப் பாரு…” என்று அவரை இவள் மனம் ஏளனம் செய்தது.

    ஏனோ மனதிற்குள் ஊசியாகக் குத்த புது மாதிரியாக இன்ப வேதனையை உணர்ந்தாள். “சே…சே…என்று மனசைக் கட்டுப் படுத்தி பார்வையை வேறு புறம் திருப்பி..”நல்லதும்..கெட்டதும் …நெஞ்சுக்குள்ளே. .” அதை மீறி வெளியே வரவேண்டும்…என்று மனசுக்குள் சொல்லிக் கொண்டாள். இருந்தும்…சித்ராவின் “யௌவன கர்வம்” பார்ப்பவர்கள்  எல்லாம் தவறுபவனாகவே….ஆள்காட்டிக் கொண்டிருந்தது.

    அங்கங்கே…சிக்னலில் நிறுத்தும் போது போடும் ப்ரேக்கில்…சர்வ ஜாக்கிரதையாக தன்னை ஒடுக்கிக் கொண்டு இறுக்கமாக பின்னால் நகர்ந்து தள்ளிக் கொண்டவள்……..இதுல…இந்தப் பிரச்சனை எல்லாம் வேற இருக்கா…அட பகவானே…தெரியாமல் போச்சே….என்று தடுமாறி  எண்ணியவள்…

    அடிக்கடி கண்ணாடியைப் பார்க்கும் சாக்கில்  அவரது கண்கள் தன்னைத் தொட்டுச் செல்வது போலவே உணந்தாள் சித்ரா.

    நான் வர வேண்டாம்னு தான் நினைச்சேன்…இந்த சந்திரா கேட்டால் தானே…போயிட்டு வா….போயிட்டு வான்னு…கட்டாயப் படுத்தி அனுப்பினாள்…இருக்கட்டும் அவளை…வீட்டுக்கு போய் கவனிச்சுக்கறேன்….என்று மனசுக்குள் சிடு சிடுத்தவள்….

    அத்திம்பேர்….உங்களுக்கு தான் சிரமம்….இத்தனை தூரம்…ரவீந்திர பாரதி…”சலங்கை ஒலி ” சினிமாவில் கமலஹாசன்..ஷைலஜா…டான்ஸ் ஆடுவதைப் பார்க்க வரும் இடம் இது தானே…என்று கேட்க..

    ஆமாம்…அதே தான் சித்ரா…அந்தப் படம் பாதி இங்கே தான் ஷூட்டிங் ஆச்சு. அப்போ…நான்…என்று ஏதேதோ பேசிக் கொண்டே வந்தவர்….இதோ வந்தாச்சு…பிடிச்சுக்கோ….என்று “விர்ரென்று” அந்த ஏற்றத்தில் ஏற்றும் போது…அந்த செங்குத்தான ஏற்றத்தில் பைக் ஜோராகச் சென்றது.

    சித்ராவின் மனசுக்குள்….சந்தோஷிடம் சொல்லி இப்படித் தானும், அவரும்  பைக்கில் வெளியில் செல்ல வேண்டும் என்ற ஆவலைத் தூண்டியது. இதுவே இன்று அவரோடு வந்திருந்தால் எவ்வளவு இனிமையாக இருந்திருக்கும்….என்றும் எண்ணிக் கொண்டாள்.

    உள்ளே சென்று மூன்றாவது வரிசையில் இடம் பிடித்து அமர்ந்ததும்…அந்த பிரம்மாண்டமான ஹாலில் “ஜில்லென்ற” குளிரில்…மெத்து மெத்தென்ற இருக்கையில் அமர்ந்தபடியே….அதன் அழகை ரசித்துக் ஆச்சரியத்துடன் ரசித்துக் கொண்டிருந்தவளுக்கு அந்த நிமிடங்கள் வேறெந்த நினைவுமின்றி  இன்பமாகக் கரைந்து கொண்டிருந்தது.

    திடீரென கோரஸாக  குரல்கள்….ஏய்…சித்ரா….”ஏன்ட்டி….நூவு…இக்கட….! இதநேனா….நீ காப்போயே… வாரு..”
    (என்ன…நீ… இங்க…! இவரா…உனக்கு வரப் போறவர்…?) என்று அருகில் அமர்ந்திருந்த  சபாபதியைப் பார்த்து…சிரித்தபடியே  கேட்க…..அவர்கள் கேள்வி இவளை உலுக்க..திடுக்கிட்டுத் திரும்பினாள்.

    (இதைக் கேட்டதும் சபாபதி…கண்களில் சந்தோஷத்தோடு முகத்தை எங்கேயோ திருப்பிக் கொண்டு பார்த்தாலும் மனம் முழுதும் ஏதோ பரவசமாக உணர்ந்தார்….அவருக்கு மனசுக்குள் ஆஹா…என்று இச்சையை அதிகமாக்கியது….)

    அவர்கள் கண்களில் குறும்பு…ஹேய்…நோ…நோ…நோ..நோ….ஹி இஸ் மை சிஸ்டர்’ஸ் ஹஸ்பெண்ட்” என்று அவசரமாக சொல்ல…!

    சாரி…சாரி….வெரி சாரி….ஏமி அனுகக்கு… (ஒன்றும் நினைச்சுக்காதே…) என்று கலைந்து போனார்கள்.

    சித்ராவின் தர்ம சங்கடமான நிலைமை இப்போது சபாபதியையும் தாக்க…! என்ன சித்ரா…..தப்பா நினைக்காதே…தெரியாமல் கேட்டிருப்பா….உன் கொல்லீகா…? என்று பேச்சை மாற்றப் பார்த்தார்.

    இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே….சந்தோஷின் அப்பாவும்..அம்மாவும் உள்ளே நுழைந்து அரங்கை ஒரு பார்வை பார்த்துக் கொண்டிருக்கும் போதே..பளிச்சென்று அவர்கள் கண்ணில் பட்டார்கள் இவர்கள் இருவரும்..

    அந்த இடத்தில் அப்படியே நின்ற சந்தோஷின் அம்மா….என்னன்னா…. அங்கே பாருங்கோ…அவள் நம்ம கல்யாணப் பெண் சித்ரா மாதிரி இருக்காளே….சித்ரா தானே..? என்று சந்தேகத்தை கேட்க..

    அட…ஆமாம்…சித்ராவே தான்…அவர்….அவர்….ஏய்…அவர் சபாபதிடி….அவாளும் குடும்பத்தோட கச்சேரிக்கு வந்திருக்கா போல..!

    இல்லையேன்னா ..சந்திராவைக் காணோம்…இவா ரெண்டு பேரும் மட்டும் தனியா வந்திருக்கா மாதிரி தெரியறது…!
    என்ன பழக்கம் இதெல்லாம்…! நாம் சரியா இந்தக் குடும்பத்தைப் பத்தி விசாரிக்காமல்  தெரியாமல் தப்பு பண்ணிட்டோமோ…?

    நம்ம பையனுக்கு நிச்சயமான பெண்ணை இவர் வெளில அழைச்சுண்டு வரதாவது..? கொஞ்சம் கூட நன்னாயில்லைன்னா..நன்னா விசாரிச்சு பெண்ணை நிச்சயம் பண்ணியிருக்கணும்….தப்புப் பண்ணிட்டோமோ…வெறும் அழகையும், வேலையையும் மட்டும் பார்த்து…என்று புலம்ப ஆரம்பித்த சந்தோஷின் அம்மாவைப் பார்த்து அவர்.

    என்ன இது கற்பகம்?….கண்ணால் காண்பதுவும் பொய்…காதால் கேட்பதுவும் பொய். .கொஞ்சம் அமைதியா இரேன்..டக்கு டக்குன்னு நீயா ஒரு முடிவுக்கு வராதேன்னு எத்தனை தடவை சொல்லியிருக்கேன். சித்ராவை நமக்குத் தெரியாதா என்ன..? கொஞ்சம் பொறுமையா இரு,,,,பாப்போம்..என்றதும்..

    எனக்கு மூட் போச்சு…கிளம்புங்கோ…ஆத்துக்குப் போவோம்…கச்சேரியும் வேண்டாம்..கிச்சேரியும் வேண்டாம்….என்று கற்பகம் கிளம்பத் தயாராகத திரும்பவும்..

    வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த சித்ரா…இவர்களை கவனிக்கவும்….. .மனசுக்குள் ஏக மகிழ்ச்சியில் டக்கென்று சீட்டை விட்டு எழுந்து, வேகமாக நடந்து போய் அவர்களது கையைப் பிடித்து…..சந்தோஷமாக பேச…அங்கிருந்த மூவரும்…சபாபதியை நோக்கி வர……!

    சந்தோஷின் அப்பா…தான் மனைவியைப் பார்த்துக் கண்களால்….” இப்போப் பார்த்தியா? அவசரக் குடுக்கை….”என்று சீண்டியது.

    இவரும் எழுந்து…கைகுலுக்கி….நானும் உங்களை இங்கே சந்திப்பேன்னு நினைக்கவே இல்லை…சர்ப்ரைஸ்…! என்று சிரிக்க.

    சந்திரா வரலையா..?

    பையனுக்கு பரிட்சை சார்… சித்ரா தான் வீட்டில் போர் அடிக்கறதுன்னு சொன்னா…நான் தமிழ் சங்கத்தில் மெம்பர் பாஸ் வீணாக்க வேண்டாமேன்னு…வந்தோம்…

    குட்…நாங்களும்…அதே தான். சந்தோஷ் தான் டிவீயில் கிரிகெட் மாட்ச் பார்த்துண்டு இருக்கான்…அதான் நாங்க மட்டும் கிளம்பி வந்தோம்…!

    சித்ரா வந்திருக்காள்னு தெரிந்தால் அவனும் உடனே கிளம்பி வந்துடுவான்…என்று மாமி சந்தோஷமாகச் சிரித்தபடியே சொல்ல…

    கூப்பிடலாமா அவனையும்…என்று சந்தோஷின் அப்பாவும் கேட்க..

    அதற்குள்…நிகழ்ச்சியின் ஆரம்பிக்கும் அறிகுறிகள் தென்படுமாறு திரை…விலக..பளீரென்ற அரங்க மேடையின் அலங்காரம் கண்களைப் பறிக்க…அனைவரும் ஒருவித எதிர்பார்ப்பில் அமைதியாகிறார்கள்.

    அம்மா…நீங்க இங்கே வந்து உட்காருங்கோ என்று சித்ரா தனக்கு அருகில் இருக்கும் இருக்கையில் அழைக்க, சபாபதி சந்தோஷின் அப்பாவின் அருகில் சென்று அமருகிறார்.

    சபாபதிக்கு அவரது இச்சையெல்லாம் அடங்கிப் போயிருந்தது. பேசாமல் சந்திராவையே அழைச்சுண்டு வந்திருக்கலாம்…அவளுக்கும் சுதாவின் பாட்டுப் பிடிக்கும்…என்று நினைத்துக் கொண்டார்.

    மேடையில் நிகழ்ச்சி ஜோராக ஆரம்பமாகிறது. இடையிடையில் கிடைத்த நேரத்தில் சந்தோஷின் அம்மா சித்ராவிடம் பேச்சுக் கொடுக்கவும்…சித்ராவும் அவர்களோடு ரொம்ப அன்பாகவும், மதிப்போடு பேசிக் கொள்ள அங்கே அவர்களுக்குள் ஒரு “புரிதல்” ஆரம்பமாகிக் கொண்டிருந்தது.

    இடையில் கிடைத்த சிறு இடைவேளையின் போது…சித்ரா தனது கைபேசியை எடுத்து….”உரிமைகளை யாரும் கையில் எடுத்துத் தர மாட்டார்கள்…நாம் தான் எடுத்துக்கணும்…” என்ற சந்திராவின் குரல் உள்ளுக்குள் எதிரொலிக்க,
    “அம்மா…நான் சந்தோஷுக்கு ஃபோன் பண்ணி, நானும் உங்களோடத் தான் இருக்கேன்னு சொல்லட்டுமாம்மா…” என்று பணிவோடு கேட்கிறாள்.

    “சொல்லேன்….அவனும் சந்தோஷப் படுவான்….” என்கிறாள் அம்மா.

    இவளும் விஷயத்தை சுருக்கமாகச் சொல்லிவிட்டு வைக்கிறாள்.. அம்மா…நீங்கள் சொன்னா மாதிரி அவருக்கும் ரொம்ப சந்தோஷம்…என்று முகமெல்லாம் வெட்கத்தோடு சொல்லும் சித்ராவைப் பார்த்து…அம்மா… அவளது கன்னத்தைத் செல்லமாகத் தட்டுகிறாள்.

    தன்னுடைய வருங்கால மருமகள்..பெரியவர்களுக்குத் தரும் மதிப்பையும், மரியாதையையும் கண்டு  நிறைந்த மனதோடு கச்சேரியை ரசித்துக் கொண்டிருக்கிறார்கள்..இருவரும்.

    ஆர்வத்தை அடக்க முடியாமல்…சித்ரா, சந்திராவுக்கும்  போன் செய்து “அக்கா..நான் கச்சேரிக்கு வந்தது நல்லதாச்சு….இங்கே யார் வந்திருக்கா…தெரியுமா? அவரோட அம்மாவும், அப்பாவும்…இதோ என் பக்கத்தில் தான்…இருக்கா…பேசறியா…இரு தரேன்..என்று சொல்லி…”அம்மா…சந்திரா….லைன்ல இருக்கா…பேசுங்கோ…” என்று கைபேசியை தரவும்.

    “கச்சேரி ரொம்ப பிரமாதமா இருக்கு சந்திரா….கேட்கிறதா? சித்ரா வந்தது எங்களுக்கு ரொம்ப சந்தோசம்..” என்று சொல்லி ஃபோனை வைக்கிறாள், அம்மா.

    குடும்பத்துக்குள் இறுகி இருக்கும் சில முடிச்சுகள் மெல்ல மெல்ல அவிழ்ந்தது போல…இறுக்கம் தளர்ந்தது போலிருந்தது சித்ராவுக்கு.

    சுதா ரகுநாதனின்…வெண்கலக் குரல்…அரங்கம் முழுதும் நிரம்பி அத்தனை இதயங்களையும் கட்டிப் போட்டு வைத்தது.

    “நீ….ரஜ…ரமணீ….ய  கிருஷ்ணா……தேஹி…..ஜெய…ஜெயா……மாம்பாஹி….”

    கணீரென்று அம்ருத வர்ஷிணியாய் இசை மழை பொழிந்து கொண்டிருந்தது.,

    ஆயிரம் பேர்கள் அந்த ஒரு இசைக் குரலுக்குக் கட்டுப் பட்டு மகுடிக்கு ஆடும் பாம்பு போல் தனை மறந்து ஐக்கியமாகி இருந்தனர்.

    சந்தோஷின் அப்பா..அவ்வபோது சபாபதி பக்கம் திரும்பி…பரஸ்பரமாகப் பேசிக் கொள்கிறார்கள்.

    இரண்டு மனங்களோ….இரண்டு குணங்களோ…சில வேளைகளில் உறவுகள் பலப்பட இது போன்ற ஒரு நிகழ்வு…அவசியம் தேவை என்று சொல்லாமல் சொன்னது.

    சித்ராவுக்கு தான் மனதுக்குள் இருந்த இனம் புரியாத கல்யாண பயம் விலகி….தெளிவானது.

    சந்தோஷின் அம்மாவும்..அப்பாவும்…கூட சித்ராவின் எளிமையான, இனிமையான குணமும்…அவளின் அக்கா தங்கையின் ஒட்டுதலைப் புரிந்து கொள்ள முடிந்தது.

    சந்திராவின் கணவருக்கும்…தனது உறவின் பங்கும்…பதவியும் விளங்கியது போலிருந்தது. பயிருக்கு தான் வேலியாக மட்டும் தான் இருக்க வேண்டும் என்ற உண்மை ஆழமாகப் புரிந்தது.

    நிகழ்ச்சி முடிந்து அரங்கம்  கலைந்ததும்…வெளியில் வந்து புறப்படத் தயாரானவர்கள்…”அம்மா…அப்பா…நாங்க போயிட்டு வரோம்” …என்று சொல்லவும்.

    எங்கம்மாக் கிளம்பறே…இரு…இரு….எல்லோரும் சேர்ந்து டின்னர் சாப்ட்டுட்டு போகலாம்…சரியா..என்றனர்.

    சபாபதியிடம்…எங்க போகலாம் டின்னருக்கு..?..என்று பேசிக் கொண்டிருக்கும் அப்பாவும்… இப்போது அவன் அம்மாவே…”சித்ரா…நீ வேணா..சந்தோஷைக் கூப்பிடேன்…வந்தாலும் வருவான்…கிரிகெட் முடிஞ்சிருக்கும்..” என்று சொல்லவும்..

    அதற்காகவே காத்திருந்தவள், அவசர அவசரமாய் தன் கைபேசியை எடுத்து சந்தோஷுக்கு இடத்தைச் சொல்லிவிட்டு வரச் சொன்னவள்.. இன்னும் சற்று நேரத்தில் அவனது  வருகைக்காக இப்போதிருந்தே இவளது மனம் சந்தோஷ மயக்கத்தில் காத்திருந்தது.

    தான் நினைத்தது ஒன்று…நடந்து கொண்டிருப்பது வேறொன்றாக இருந்தாலும்….சந்திராவின் கணவன் சபாபதிக்கு இந்தப் பொழுதுகள்  மிகவும் பிடித்திருந்தது., எல்லோரிடமும் தான்…மிகவும் பொறுப்புள்ளவனாக வெளிக்காட்டிக் கொண்ட தருணமாக அமைத்துக் கொண்டு அவர்களிடம் தன்னை பற்றி ஒரு உயர்ந்த  அபிப்ராயத்தை உருவாக்கி  அவர்கள் மனதில் இடம் பிடித்து விட்ட திருப்தியில் இருந்தார். இன்னும்  அதை தக்க வைத்துக் கொள்ள சந்திராவுக்கு  போன் செய்து…அவளுக்கு என்ன வேண்டும் ? என்று கேட்டுப் பேசி….சந்தோஷ் வந்ததும், அவனுடனும் சிரித்துப் பேசி…தன்னுடைய  சுய கௌரவத்தை அழகாகக் காப்பாற்றிக் கொண்டிருந்தார் சபாபதி.

    இரவு டின்னர் “கிராண்ட் மினர்வா”வில்  பேசியபடியே…இரவோடு சேர்ந்து நகர்ந்து கொண்டிருந்தது. நேரம் போவதே தெரியாமல்  சிரிப்பும்… மகிழ்வுமாக.

    வீட்டில் பிரவீன் படித்து முடித்த களைப்பில் உறங்கிப் போனான்…சந்திரா,  கணவனின் வருகைக்காகக் காத்திருந்தாள்.

    இவர்கள் வீட்டை விட்டுப் புறப்பட்ட நிமிஷத்திலிருந்து மனக் குழப்பத்தினூடே…குழம்பித் தவிக்க…என்னைக்கும் இல்லாத திருநாளா…இன்னைக்கு இவர் போனில் சிரித்து சிரித்துப் பேசுகிறார்…..என்னவாயிருக்கும்…இவ்வளவு சந்தோஷப் படும் படியாக?

    “சித்ரா போக மாட்டேன் என்று எவ்வளவு சொன்னாள்..!.நான் தானே அவள் பேச்சைக் கேட்காமல்..அனுப்பி வைத்தேன்… இவர் ஏதாவது அவளிடம் ஏடாக்  கூடமாக பேசி இருப்பாரோ…? அவளுக்குக் கோபம் வந்திருக்குமோ…? அப்படி என்ன இவருக்கு அவளோட ஊர் சுத்த ஆசை…? இப்போ அவளோட மாமியார், மாமனார் இப்படிப் பார்த்து  தப்பா நினைக்க ஆரம்பிச்சா என்னாவது…? நானே சித்ராவுக்கு கெடுதல் செய்வது போலத் தானே…. இன்னைக்கு கார்த்தால …கால் இடறியது…”இடறிய கால் இடரும்” ன்னு சொல்லியிருக்கு…அப்போ இன்னைக்கு என்னவெல்லாம் நடக்கப்  போறதோ…? இன்னும் வரலையே…இத்தனை லேட்டாகிறதே….இன்னைக்கு சகுனமே சரியில்லையே….என்றெல்லாம் கவலைப் பட்டவள்…

    வாசலுக்கு வந்து நின்று காலையில் தான் போட்ட தப்புக் கோலங்களைப் பார்வையிட்டாள்

    தெருவிளக்கின் ஒளியில் கூட காலையில் அவள் அழித்து அழித்துப் போட்ட தப்புக் கோலத்  தடயங்கள் அப்படியே இருந்தாலும் அதையும் மீறி அவள் இழுத்த கோடுகள்….போல…..பளிச்சென “நட்சத்திரமாக”  மின்னி “நல்லதே நடக்கும்” என்று சொல்வது போலிருந்தது.

    அத்தனை நேரம் அவள் மனசுக்குள் குறுக்கும் நெடுக்குமாக ஓடிக் கொண்டிருந்த கறுப்புப் பூனை  எல்லா சகுனங்களையும்  புறந்தள்ளி விட்டு வெளியேறியது. அவள் அந்த நட்சத்திரக் கோலத்தைப் பார்த்தபடியே நின்றிருந்தாள்.

    குற்ற உணர்வில், தப்புக் கோலங்கள் போட்டது நானா அல்லது கணவனா என்று தராசில் சற்று நிறுத்துப் பார்த்தாள் சந்திரா !  தன் கணவனின் ஆண்மீக இச்சையால் சித்ராவுக்குத் திருமணம் நின்று போகாமல் தப்பிய தாளங்களை ஊழ்விதி  எப்படியோ சரி செய்து விட்டது இவர்கள் அறியாமலே.

    Share