ஆண்மீக இச்சை..! (இது எழுத்துப் பிழை அல்ல….மனத்துப் பிழை…)
சகுனமே சரியில்லையே….என்று எண்ணிக் கொண்டே புள்ளி வைத்துக் கோடு இழுக்க…கோலம் வராமல், கோடுகள் எங்கேயோ போய் நின்று வரமாட்டேன் என்று அடம் பிடித்தது.
அழித்து…அழித்து மனதில் உள்ள கோலம் விரலிடுக்கில் அடங்காமல் அழிச்சாட்டியம் செய்ய….கூடவே நகரும் மேகங்களாக மனம்..எண்ணத்தில் மாறிக் கொண்டே…கை கோலத்தைக் அவசரத்தில் கிறுக்கிவிட்டு .இன்று ஞாயிற்றுக் கிழமை தானே….அவசர அவசரமாப் பறக்க வேண்டாம்…என்று எண்ணியபடியே நிமிர்ந்தவள்… “அம்மா..நேற்று ..எல்லாம் தான் படிச்சேன்..இப்போ ஒண்ணுமே ஞாபகத்துக்கு வரலைம்மா…” என்ற பிரவீன் தன் கவலையை பயத்துடன் சொல்கிறான்.
என்னடா பிரவீன் ?…இப்பப் போய் இப்படிச் சொல்றே….இது க்வாடர்லி எக்ஸாம்ஸ் ….நீ சரியா எழுதணும்..கண்ணா…..இன்னும் நேரம் இருக்கு..நாளைக்குத் தானே பரீட்சை….பயப்படாமல் .போய் உட்கார்ந்து நிதானமாப் படி…எல்லாம் மனசில் ஏறும் ….என்று சொல்லிக் கொண்டே பாலை அடுப்பில் ஏற்ற….எண்ணம் பின்னோக்கிச் சென்று கால் வழுக்கலில் சென்று நின்றது..! இடரின காலே இடரும்….! எனக்கு என்னாகுமோ…? மனசுக்குள் வழக்கம் போல கறுப்புப் பூனை எழுந்து நடக்க ஆரம்பித்தது…சந்திராவுக்கு.
நல்ல வேளை….நான் கீழே விழலை…பிரவீனுக்குப் பரீட்சை நேரம்..இப்பப் .பார்த்து எனக்கு எதுவும் ஆனால்..அவ்ளோ தான்..!நினைத்துக் கொண்டிருக்கும்போதே…பால்…”புஸ்” என்று பொங்கிப் படமெடுத்தது.
டேய்..பிரவீன்….சித்தியை எழுப்பி சொல்லித் தரச் சொல்லேன்….என்று குரல் கொடுத்தவள்….சித்ரா…சித்ரா பிரவீனுக்கு கொஞ்சம் கணக்குச் சொல்லித் தாயேன்…ஒண்ணுமே தெரியலைன்னு சொல்றான்.பாவம்…பயப்படறான்…..நீதான் மாத்ஸ் ஜீனியஸ் ஆச்சே … என்றவள்….பையன் நல்லபடியாப் பரிட்சைக்குப் போகணும்..இன்னிக்கு உனக்கு லீவு தானே…? என்று சொல்லிக் கொண்டே காலில் சக்கரத்தைக் மாட்டிக் கொண்டு வேலையில் மூழ்கினாள்.
படுக்கையை விட்டு எழுந்து நெளிந்த சித்ரா….என்னக்கா…பிரவீன் அஞ்சாவது தானே படிக்கறான்? …என்ன ஐ.ஏ.எஸ்’க்கா படிக்கிறான்..நீ..என்னமோ .இவ்ளோ அலுத்துக்கறே….டேய்..பிரவீன் நோட்புக் எடுத்துண்டு வாடான்னு கொட்டாவி விட்டபடியே…சோம்பல் முறித்து வாயருகில் சொடக்குப் போட்டபடியே சொல்கிறாள்..
“ம்ம்ம்…உனக்கும் இந்த சொகுசெல்லாம் இந்த மாசத்தோட கடைசி…. அடுத்த மாசமே…நீயும் கால்ல சக்கரம் தான் கட்டிக்கணும்…சந்தோஷ் உன் கழுத்தில் மூணு முடிச்சுப் போடற வரைக்கும் தான்…நீ இந்த வீட்டு மகாராணி..அப்புறம் நீயும்…என்னை மாதிரியே…கௌரவ வேலைக்காரி, தெரிஞ்சுக்கோ….” சொல்லிக் கொண்டே.
நம்ம வீட்டு வேலையை நாம பண்றதுக்கு வேலைக்காரின்னு ஏன் நினைச்சுண்டு பண்ணனும்…உரிமையா…அன்பாப் பண்ண வேண்டியது தானேக்கா….நம்ப அம்மா…பாட்டி பண்ணாததையா நீ பண்றே…?.என்று சித்ரா விடாமல் சந்திராவை வம்புக்கு இழுக்கிறாள்.
“ஏன்னா…..இங்க கொஞ்சம் வரேளா….இந்த பீன்சைக் கொஞ்சம் பொடிப் பொடியா நறுக்கித் தந்தா ஆகாதா…? என்று காப்பியைக் கலக்க ஆரம்பித்தாள்.
இதோ பாருடா….வேலைக்காரி வீட்டுக்காரரை…வேலை வாங்கறதை…என்று கிண்டலடித்துச் சிரிக்கிறாள் சித்ரா.
என்ன சந்திரா…இப்போ தான் நியூஸ் பேப்பர் படிக்க ஆரம்பித்தேன்… அதுக்குள்ளே உன் மூக்கு வியர்க்குதா….? அட….இங்க பாரேன்…நம்ம ரவீந்திர பாரதியில். இன்னைக்கு சாயங்காலம் ..உனக்குப் பிடிச்ச சுதா ரகுநாதனின் சங்கீதக் கச்சேரி இருக்காம்.. ரெண்டு பாஸ் அன்னிக்கே போஸ்ட்ல வந்துதே….இன்னைக்குப் போலாம்’ன்னு நினைக்கிறேன் ? வரியா ? சுதா ரொம்ப நன்னாப் பாடுவா.. .என்றவர்.. தூரத்தில் பாடம் சொல்லிக் கொடுக்கும் சித்ராவைப் பார்த்தார் ! கண்கள் சந்திராவை நோக்கவில்லை. ! மனசு …நீ வரமாட்டே…எனக்கேத் தெரியும் என்றது.,
நானா….? என்ன விளையாட்டா…பிரவீனுக்கு நாளையிலிருந்து கால் பரீட்சை ஆரம்பம்… நானும் வந்துட்டா அவனுக்கு யார் சொல்லித் தருவா…? நான் எங்கேயும் வரலை…நீங்க போறதுன்னாப் போய்ட்டு வாங்கோ…நான் வேண்டாம்னு சொல்லலை..என்றவள்…பீன்ஸையும் கத்தியும் கொண்டு வந்து “டொக்கென்று” வைத்தாள்.
ஒ.. ..பரிட்சை இருக்கா….சரி. நான் மட்டும் தனியா எப்படிப் போறது ? அப்போ …. நான்…. சித்ரா சும்மாத் தானே வீட்லே இருப்பா..?அவளை அழைச்சுண்டு போறேன்…அவளும் வீட்டிலயே அடைந்து கெடக்கா பாவம்…என்றவர்…கண்கள் மச்சினி சித்ராவைத் தேடியது.
சந்திராவுக்கு நெஞ்சு திக்கென்றது ! என்ன சித்ராவா ? அவள் கல்யாணப் பெண், என் கணவனோடு பாட்டுக் கச்சேரிக்குப் போவதா ? இதென்ன அல்பமான ஆசை….இவருக்கு..! இந்த வயசில் இந்த ஆசை ரொம்பத் தேவை…இவருக்கு….கஷ்டம்…கஷ்டம்…என்றது அவளின் மனது.
கல்யாணம் ஆகப் போறவள்….இப்போதான்.நிச்சயம் ஆயிருக்கு…இப்ப வெளியில்…கச்சேரிக்கெல்லாம் அழைச்சுண்டு போறது அவ்வளவு சரியில்லை..யாராவது பார்த்தால் தப்பா நினைப்பா..நீங்க மட்டும் போய்ட்டு வந்தால் ஆகாதா?
அடிப் போடி..நீ தான் சுத்த கர்நாடகம்…எந்தக் காலத்தில் இருக்கே இன்னும் நீ…?..எதுக்கெடுத்தாலும்….எப்பப் பாரு…சகுனம்…நாலுபேரு….அது இதுன்னு…சொல்லி பொழுதைப் போக்குவ..சித்ரா இதுக்கெல்லாம் நேர்மாறு. நீயே பாரேன்….நான் வான்னு கூப்பிட்டால் உடனே சரி வரேன் அத்திம்பேர்ன்னு சொல்வா…நீ வேற எதையும் சொல்லி அவள் மனசையும் கெடுக்காமல் இருக்கணும்…ஆமா….கொடு…கொடு…பீன்ஸை நறுக்கி வைக்கிறேன்…என்று அவசரப்பட்டார்…சபாபதி.
சித்ரா செதுக்கி வைத்த சிலை. பளிங்குப் பதுமை ! பேரழகி ! சந்திரா முகத்தில் .. தேமல் மேடு பள்ளங்கள்.
சந்திராவுக்குக் கோபம் பொங்கியது. எப்படியோ அடக்கிக் கொண்டாள். சரி நான் பாட்டுக் கச்சேரிக்கு வரேன். சித்ரா வேண்டாம். கல்யாணப் பெண் உங்களோடு போவதை நான் விரும்ப வில்லை.
ஒருதரம் நான் அவளோடு வெளியே உலாவப் போகணும்’ன்னு எனக்கு ஆசை சந்திரா. நீ வர வேண்டாம், அவள் வரட்டும். தப்பா நினைக்காதே !
என்னவோ செய்யுங்கோ …நீங்களாச்சு…உங்க மாடர்ன் மச்சினியாச்சு.. நான் ஏன் அவள் மனசைக் கெடுக்கப் போறேன்?…நீங்க உங்க மனசை பத்திரமாப் பார்த்துக்கோங்கோ…அது போதும் நேக்கு, என்று சிலேடையாகச் சொல்லிவிட்டு சிரித்துக் கொண்டே நகர்ந்தாள் சந்திரா. உள்ளுக்குள்ளே அவளின் மனம் அழுதது. கண்ணாடியைப் பார்த்தாள்….கன்னமெல்லாம் வடுக்கள்…இந்த அம்மிக்கல்லு முகத்தை எனக்கே பிடிக்கலை…பாவம்..அவர்…! தன்னோட மனைவி அம்சமா இருக்கணும்னு கனவு கண்டிருப்பார்…விதி…என் லக்ஷணத்தில் அவருக்கு வாய்ச்சிருக்கு….என்று சொல்லிக் கொண்டே கண்ணாடியை விட்டு நகர்ந்தாள்.
பீன்ஸை நறுக்கிக் கொண்டே…அப்போ…இன்னைக்கு சித்ராவுடன் மோட்டர் பைக்கில் தனியாகப் போகப் போறேன்….என்ற மிதப்பில் கிறங்கியபடியே..”பார்த்த முதல்நாளே….உன்னைப் பார்த்த முதல் நாளே…” என்று சீட்டியடித்தபடியே…மனமெல்லாம் சித்ரா வர சம்மதிப்பாளா…? என்று யோசனையில் ஆழ்ந்தார் சபாபதி.
என்னதான் இருந்தாலும்…ஆண்மனம் சபலம் அடையும், மரத்துக்கு மரம் தாவும். கையில் கொய்யாப் பழமிருக்க மரத்தில் தொங்கும் மாங்கனிக்கு ஏங்கும் ! பல சமயங்களில் தன்னை மீறி அலைபாயும்..இது தவறு…இது சரி.. என்ற எல்லைக் கோட்டைத் தாண்டுவதில் மகிழும். ஷண நேர சந்தோஷத்தில் கூத்தாடும். விதி விலக்குகள் இருந்தாலும். பெரும்பான்மை யானவர்களின் வரிசையில் தான் சித்ராவின் அத்திம்பேரும் நின்றார், பெண் குழந்தைகளுக்குத் தகப்பனாயிருந்திருந்தால் கொஞ்சம் பொறுப்பு வந்திருக்கும். அதற்கும் வழியில்லை இப்போது. நாற்பது வயதை நெருங்கும் சமயம் இளமை அவருக்கு ஊஞ்சல் ஆடுகிறது. வாலிப முறுக்கு திரும்பிய எண்ணம் அவருக்கு.
கண்ணருகில்….இளவயதில்….மெழுகு பொம்மை நடமாடிக் கொண்டிருந்தால்…அலைபாயும் மனசோடு அலையும் ஆண்மகனுக்குக் கேட்கவா வேண்டும்.? வயது என்ற சாக்குப் போக்கெல்லாம் அங்கே செல்லாது. குடும்பத்தின் தலைவனாகவே இருப்பினும் உள்ளுக்குள்ளே ஒரு கண்சித்ராவையே தொட்டு விட வட்டமிடும்.
சித்ராவுக்கு “ஹை-டெக்” சிட்டியில் வேலைக் கிடைத்ததும்…அக்கா சந்திராவின் வீடு தான் இருக்கே…அங்கேயே தங்கி வேலை பார்க்கலாம்.என்ற எண்ணத்தில்….சென்னையிலிருந்து ஹைதராபாத்துக்கு தைரியமாக வந்திறங்கினாள் பெற்றோருடன்.. சந்திரா….இவள் ஒரு ரெண்டு மூணு மாசம் இங்க இருக்கட்டும்… கொஞ்சம் பார்த்துக்கோ..தெரியாத ஊர், புரியாத பாஷை வேற…அதற்குள் இவளுக்கும் சீக்கிரமா ஒரு வரனைப் பார்க்கிறோம்…என்று .சித்ராவை விட்டுட்டு சொல்லிச் சென்றவர்கள் முழுமூச்சாக வரன் பார்த்ததில் ஒரே மாசத்தில் இங்கேயே ஆக்சிஸ் பாங்கில் வேலை பார்க்கும் சந்தோஷுக்கு நிச்சயம் செய்து விட்டு நிம்மதியானார்கள்.
அடுத்த மாசம் சித்ராவின் கல்யாணம். அதற்கான ஏற்பாட்டில் சந்திராவும் மும்முரமானாள்…சித்ராவும் இதே ஊரில் வந்து வாழப் போவதில் அவளுக்கு பரம சந்தோஷம்.
டிபன் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் சித்ராவைப் பார்த்து, அப்பறம்… சந்தோஷ் உனக்கு ஃபோன் பண்ணி பேசினாரா? என்று சந்தடிசாக்கில் சந்திரா கேட்க.
இல்லக்கா…அவரோட அம்மா…சொன்னாளாம்…அடிக்கடி ஃ போன் பண்ணிப் பேசி, அவாளுக்குத் தெரியாமல் வெளில போறது…இதெல்லாம் செய்யக் கூடாதுன்னு. அவங்க கொஞ்சம் ஸ்ட்ரிக்டாம். என்னவோ… பெரிசா….இந்தக் காலத்திலும் இப்படியெல்லாம் இருக்காங்க பாரேன்க்கா. இவரும்…அவங்க சொல்றதைக் கேட்டுட்டு எனக்கு ஒரு தரம் ஃபோனில் சொன்னார்..அவ்ளோ தான். நானும்..என்ன சீப்பா…? சரி. இனிமேல் ஃபோன் பண்ணாதீங்க…கல்யாண மேடையில் சந்திக்கலாம்னு சொல்லிட்டு வெச்சிட்டேன். மனசுக்குள்ளே….இவருக்கும் எனக்கும் ஒத்துப் போகுமா? பிரச்சனை வருமான்னு ஒரே கவலையாத் தான் இருக்கு. ஆனால் இப்போ என்ன பண்ண முடியும்.? அதான் அவசர அவசரமா நிச்சயம் ஆயாச்சே… எல்லாம் தலைவிதிப் படி தான் நடக்கும்.என்று அலுத்துக் கொண்டாள் சித்ரா.
அக்கா…உன் கணவர் உனக்கு ரொம்ப நல்லபடியா அமைஞ்சுட்டார்… பாரேன்… எனக்குத் தான் சரியான தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை.!..”என் அம்மா சொல்லிட்டாங்க…..” என்று வக்களித்துக் காட்டியபடியே….இவரை நான் தான் அங்கே போய் மாற்றி என் வழிக்குக் கொண்டு வரணும்….அதுக்கு நான் என்னெல்லாம் பண்ண வேண்டி வருமோ…?என்றாள் சித்ரா.
அப்படியெல்லாம் சொல்லாதே சித்ரா..அவங்க கண்ணோட்டத்தில் அவங்க சொல்றது தான் நிஜம். கல்யாணத்துக்கு முன்னாடியே அங்கே..இங்கே..சுத்திட்டு அந்த நேரத்தில் ரெண்டு பேருமே தங்களைப் போல நல்லவங்க இல்லைன்னு ஒரு அபிப்பிராயத்தை ஒருவருக் கொருவர் ஏற்படுத்திக் கொண்டு…அப்பறம்..யதார்த்தமான வாழ்கைச் சூழ்நிலைக்கு திரும்பும்போது, அது கொஞ்சம் முரணாத் தெரியும்.. அப்போதான் பிரச்சனை வரும்.அதற்கு கல்யாணம்’னு ஆனபின்பு ஒருத்தரை ஒருத்தர் சரியாப் புரிஞ்சுண்டு வாழ ஆரம்பித்தால்…எந்த பகட்டும் இல்லாமல் யதார்த்தமாக வாழலாம் இல்லையா? இது மாதிரி நிறைய விஷயங்கள் இருக்கும்..பெரியவர்கள் எதையும் தெரியாமல் சொல்ல மாட்டா.
அதுவும் சந்தோஷ் அவர்களுக்கு ஒரே பிள்ளை.அதனால் கூட அவரோட அம்மா நிறைய செல்லம் கொடுத்து வளர்த்திருக்கலாம். நிச்சயம் நீ போனபிறகு அவர்கள் உன்னையும் மகளாகத் தான் பார்ப்பார்கள். பெண் குழந்தைகள் இல்லாத வீட்டில் மருமகளை மகளாகத் தான் நினைச்சுப் பார்ப்பா…நீயாக எதையும் மனதில் போட்டுக் குழப்பிக்காதே..அவர்களைப் பார்த்தால் ரொம்ப நல்ல மாதிரியா தான் தெரிகிறார்கள். யாருமே.. மருமகளை துவேஷமாக நினைப்பதில்லை. அதே சமயம் வந்த பெண்….அவர்களது மகனை உரிமை அது இதுன்னு யோசிச்சு பெற்றவர்களிடம் இருந்து ஒரேயடியாப் பிரிக்க முயலும்போது தான்….அவர்களால் தாங்க முடியாது…எப்பவும் ரெண்டு பக்கமும் பார்க்கணும்.
ஆனாலும்..ஒண்ணு சொல்றேன் கேட்டுக்கோ..நாம எப்போ..நம்ம கணவரோட..குடும்பம் தனின்னு பிரிச்சுப் பார்க்காமல் அந்தக் குடும்பத்தில் உன்னையும் ஒருத்தியா மனதோட இணைத்துப் புகுத்திக் கொள்கிறாயோ.. அப்போது தான் அவர்களுக்கும் நம்ம குடும்பத்தின் மேலயும் உன் மேலயும் ஒரு பற்றும்..பாசமும்…மதிப்பும் உண்டாகும். எப்பவுமே…உரிமைகளை யாருமே இந்தா… எடுத்துக்கோன்னு கூப்பிட்டுக் கையில் தருவதில்லை…அதை நாம் தான் யாருக்கும் மனம் வருத்தப் படும்படியாக நடந்து கொள்ளாமல் உரிமையோடு எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு குடும்பத்தில் மருமகளாக இருப்பது கூட கம்பி மேல் நடப்பது போலத் தான். அதே போல ஒரு மாமியாராக பொறுப்பு எடுப்பதும் ரொம்ப கஷ்டம் தான். தெரியுமா…? இதெல்லாம் ஆண்களுக்கு அவ்வளவா பிரச்சனையாக இருப்பதில்லை.
அக்கா…போதும்…உன் “சந்திரோபதேசம்….”. இப்படியெல்லாம் சொல்லி என்னை இன்னும் பயமுறுத்தாதே..ப்ளீஸ். ஞாயிற்றுக் கிழமையும் அதுவுமா..நன்னா வீட்டில் ரெஸ்ட் எடுக்கணும்..சாயங்கால வேளையில் எங்கேயாவது வெளியில் போகணும்..ஹோட்டல்ல டின்னர் சாப்பிடணும்…வந்து அக்கடான்னு படுத்து நிம்மதியாத் தூங்கணும்.அப்போ தான் அடுத்த ஒரு வாரத்துக்கு சரியா வேலை பார்க்க முடியும்.
ஆமாம்மாம்…வேலைக்குப் போகும் உங்களுக்கென்ன சண்டே ரெஸ்ட் டே…என்னை மாதிரி “அகழியிலிருக்கும் முதலைக்கு அதுவே வைகுண்டம் போல”…இருக்கறவளுக்கு ஏது ரெஸ்ட் டே..! கேட்டால்..வருஷம் முழுதும் உங்களுக்கு ரெஸ்ட் தானேன்னு சொல்வேள்..எங்களுக்குத் தானே தெரியும்…ஒரு நாள் நாங்க ரெஸ்ட் எடுத்தால்…எப்படி உங்க டப்பா….டான்ஸ் ஆடும்னு…!
சித்ரா…இன்னைக்கு இவர் ரவீந்திர பாரதியில் சுதா ரகுநாதனோட பாட்டுக் கச்சேரிக்குப் போறாராம்…உன்னையும் அழைச்சிண்டு…போயிட்டு வா.
என்னக்கா…நீ போறது தானே…? நான் என்னத்துக்கு…? நான் அத்திம்பேரோட எங்கியும் போகலை.
பிரவீனுக்கு நாளைக்கு பரீட்சை ஆரம்பம்…நான் தான் கூட உட்கார்ந்து சொல்லித் தரணும். இல்லாட்ட படிக்க மாட்டான். அத்திம்பேர் என்ன உன்னை கடிச்சா முழுங்கப் போறார்….? அவரே சொன்னார்…சித்ராவை அழைச்சுண்டு போறேன்னு…போயிட்டு வாயேன். அப்படியே நல்ல ஹோட்டல்ல நீ சொன்ன மாதிரி டின்னர் சாப்பிட்டுட்டு வா,.எனக்கும் வேலை மிச்சம்.
ஐயய்யோ… இது என்ன? இல்லக்கா….நான் இவரோட தனியால்லாம் போகலை…சரிப்பட்டு வராது.
எது சரிப்பட்டு வராது……? நீயா ஏன் எப்படியெல்லாமோ நினைக்கறே. உன் அத்திம்பேர் என்னடான்னா…சித்ரா ரொம்ப மாடர்ன், பிராட் மைன்டெட் அப்டீன்னு பெருமை பேசறார்…நீ இப்படி சொல்றே…நானே போயிட்டு வான்னு சொல்றேன்..உனக்கும் ஒரு அவுட்டிங். ஏதோ உன்னையும் அழைச்சுண்டு போகணும்னு அவருக்கு ஒரு ஆசை…இனிமேல் உனக்கு கல்யாணம் ஆயாச்சுன்னா முடியுமா? சுதா ரகுநாத்தின் கச்சேரி…ரொம்ப நன்னாருக்கும்…மிஸ் பண்ணாதே. இல்லாட்டி நீ பிரவீனுக்கு கணக்குச் சொல்லிக் கொடு..நான் போய்ட்டு வரேன்…என்று சந்திரா சொன்னதும்..
அம்மாடி…அந்த பனிஷ்மென்ட் எனக்கு வேண்டாம்…நானே போறேன்…. நீயே உன் வாழை மட்டைக்குப் பாடம் எடு…அது உன்னால் மட்டும் தான் முடியும்..என்று கையைக் கூப்புகிறாள்.
நேரம் ஆக ஆக…சித்ரா…போகணுமா..வேண்டாமா..? என்ற குழப்பத்தில் இருந்தாள். அதே சமயம் கச்சேரியை விடவும் மனசு இல்லை.சரி.. அத்திம்பேர் தானே…போய்ட்டு வரலாம்…என்று கிளம்பத் தயாரானாள் சித்ரா.
அவளுக்கும் முன்னால் சபாபதி கிளம்பி மைனர் மாதிரி சென்ட்…மணக்க தயாரா வந்து நின்றபோது சந்திராவே அசந்து மயங்கிப் போனாள்.
என்ன அத்திம்பேர்…அசத்தலா கிளம்பிட்டேள்…சுதா ரகுநாதன்னா…. அவ்ளோ இஷ்டமா?…அவங்க மேடையில் கச்சேரி பண்ண வராங்க…நினைவு வெச்சுக்கோங்க…என்று கிண்டல் செய்தாள் சித்ரா.
இவரும் சிரித்துக் கொண்டே…மனசுக்குள்….அடி அசட்டுப் பெண்ணே….”மனசுலோனி மர்மம்….தெலுசுகோ…..” என்று ராகம் இழுத்தார்..
ஒரு வழியாக கிளம்பி மோட்டர் பைக்கில் இருவரும் ஏறியாச்சு…!
முன்புற கண்ணாடியை சரி செய்தவர்…அப்போ…போலாமா..என்று கண்ணாடி வழியாகவே இவளைப் பார்த்துச் சிரித்தபடியே கேட்க,
இவளும்…கண்ணாடியைப் பார்த்தே…”ம்ம்ம்…ம்ம்ம்” என்று பதில் சொன்னாள் சித்ரா.”சிரிப்பைப் பாரு…” என்று அவரை இவள் மனம் ஏளனம் செய்தது.
ஏனோ மனதிற்குள் ஊசியாகக் குத்த புது மாதிரியாக இன்ப வேதனையை உணர்ந்தாள். “சே…சே…என்று மனசைக் கட்டுப் படுத்தி பார்வையை வேறு புறம் திருப்பி..”நல்லதும்..கெட்டதும் …நெஞ்சுக்குள்ளே. .” அதை மீறி வெளியே வரவேண்டும்…என்று மனசுக்குள் சொல்லிக் கொண்டாள். இருந்தும்…சித்ராவின் “யௌவன கர்வம்” பார்ப்பவர்கள் எல்லாம் தவறுபவனாகவே….ஆள்காட்டிக் கொண்டிருந்தது.
அங்கங்கே…சிக்னலில் நிறுத்தும் போது போடும் ப்ரேக்கில்…சர்வ ஜாக்கிரதையாக தன்னை ஒடுக்கிக் கொண்டு இறுக்கமாக பின்னால் நகர்ந்து தள்ளிக் கொண்டவள்……..இதுல…இந்தப் பிரச்சனை எல்லாம் வேற இருக்கா…அட பகவானே…தெரியாமல் போச்சே….என்று தடுமாறி எண்ணியவள்…
அடிக்கடி கண்ணாடியைப் பார்க்கும் சாக்கில் அவரது கண்கள் தன்னைத் தொட்டுச் செல்வது போலவே உணந்தாள் சித்ரா.
நான் வர வேண்டாம்னு தான் நினைச்சேன்…இந்த சந்திரா கேட்டால் தானே…போயிட்டு வா….போயிட்டு வான்னு…கட்டாயப் படுத்தி அனுப்பினாள்…இருக்கட்டும் அவளை…வீட்டுக்கு போய் கவனிச்சுக்கறேன்….என்று மனசுக்குள் சிடு சிடுத்தவள்….
அத்திம்பேர்….உங்களுக்கு தான் சிரமம்….இத்தனை தூரம்…ரவீந்திர பாரதி…”சலங்கை ஒலி ” சினிமாவில் கமலஹாசன்..ஷைலஜா…டான்ஸ் ஆடுவதைப் பார்க்க வரும் இடம் இது தானே…என்று கேட்க..
ஆமாம்…அதே தான் சித்ரா…அந்தப் படம் பாதி இங்கே தான் ஷூட்டிங் ஆச்சு. அப்போ…நான்…என்று ஏதேதோ பேசிக் கொண்டே வந்தவர்….இதோ வந்தாச்சு…பிடிச்சுக்கோ….என்று “விர்ரென்று” அந்த ஏற்றத்தில் ஏற்றும் போது…அந்த செங்குத்தான ஏற்றத்தில் பைக் ஜோராகச் சென்றது.
சித்ராவின் மனசுக்குள்….சந்தோஷிடம் சொல்லி இப்படித் தானும், அவரும் பைக்கில் வெளியில் செல்ல வேண்டும் என்ற ஆவலைத் தூண்டியது. இதுவே இன்று அவரோடு வந்திருந்தால் எவ்வளவு இனிமையாக இருந்திருக்கும்….என்றும் எண்ணிக் கொண்டாள்.
உள்ளே சென்று மூன்றாவது வரிசையில் இடம் பிடித்து அமர்ந்ததும்…அந்த பிரம்மாண்டமான ஹாலில் “ஜில்லென்ற” குளிரில்…மெத்து மெத்தென்ற இருக்கையில் அமர்ந்தபடியே….அதன் அழகை ரசித்துக் ஆச்சரியத்துடன் ரசித்துக் கொண்டிருந்தவளுக்கு அந்த நிமிடங்கள் வேறெந்த நினைவுமின்றி இன்பமாகக் கரைந்து கொண்டிருந்தது.
திடீரென கோரஸாக குரல்கள்….ஏய்…சித்ரா….”ஏன்ட்டி….நூவு…இக்கட….! இதநேனா….நீ காப்போயே… வாரு..”
(என்ன…நீ… இங்க…! இவரா…உனக்கு வரப் போறவர்…?) என்று அருகில் அமர்ந்திருந்த சபாபதியைப் பார்த்து…சிரித்தபடியே கேட்க…..அவர்கள் கேள்வி இவளை உலுக்க..திடுக்கிட்டுத் திரும்பினாள்.
(இதைக் கேட்டதும் சபாபதி…கண்களில் சந்தோஷத்தோடு முகத்தை எங்கேயோ திருப்பிக் கொண்டு பார்த்தாலும் மனம் முழுதும் ஏதோ பரவசமாக உணர்ந்தார்….அவருக்கு மனசுக்குள் ஆஹா…என்று இச்சையை அதிகமாக்கியது….)
அவர்கள் கண்களில் குறும்பு…ஹேய்…நோ…நோ…நோ..நோ….ஹி இஸ் மை சிஸ்டர்’ஸ் ஹஸ்பெண்ட்” என்று அவசரமாக சொல்ல…!
சாரி…சாரி….வெரி சாரி….ஏமி அனுகக்கு… (ஒன்றும் நினைச்சுக்காதே…) என்று கலைந்து போனார்கள்.
சித்ராவின் தர்ம சங்கடமான நிலைமை இப்போது சபாபதியையும் தாக்க…! என்ன சித்ரா…..தப்பா நினைக்காதே…தெரியாமல் கேட்டிருப்பா….உன் கொல்லீகா…? என்று பேச்சை மாற்றப் பார்த்தார்.
இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே….சந்தோஷின் அப்பாவும்..அம்மாவும் உள்ளே நுழைந்து அரங்கை ஒரு பார்வை பார்த்துக் கொண்டிருக்கும் போதே..பளிச்சென்று அவர்கள் கண்ணில் பட்டார்கள் இவர்கள் இருவரும்..
அந்த இடத்தில் அப்படியே நின்ற சந்தோஷின் அம்மா….என்னன்னா…. அங்கே பாருங்கோ…அவள் நம்ம கல்யாணப் பெண் சித்ரா மாதிரி இருக்காளே….சித்ரா தானே..? என்று சந்தேகத்தை கேட்க..
அட…ஆமாம்…சித்ராவே தான்…அவர்….அவர்….ஏய்…அவர் சபாபதிடி….அவாளும் குடும்பத்தோட கச்சேரிக்கு வந்திருக்கா போல..!
இல்லையேன்னா ..சந்திராவைக் காணோம்…இவா ரெண்டு பேரும் மட்டும் தனியா வந்திருக்கா மாதிரி தெரியறது…!
என்ன பழக்கம் இதெல்லாம்…! நாம் சரியா இந்தக் குடும்பத்தைப் பத்தி விசாரிக்காமல் தெரியாமல் தப்பு பண்ணிட்டோமோ…?
நம்ம பையனுக்கு நிச்சயமான பெண்ணை இவர் வெளில அழைச்சுண்டு வரதாவது..? கொஞ்சம் கூட நன்னாயில்லைன்னா..நன்னா விசாரிச்சு பெண்ணை நிச்சயம் பண்ணியிருக்கணும்….தப்புப் பண்ணிட்டோமோ…வெறும் அழகையும், வேலையையும் மட்டும் பார்த்து…என்று புலம்ப ஆரம்பித்த சந்தோஷின் அம்மாவைப் பார்த்து அவர்.
என்ன இது கற்பகம்?….கண்ணால் காண்பதுவும் பொய்…காதால் கேட்பதுவும் பொய். .கொஞ்சம் அமைதியா இரேன்..டக்கு டக்குன்னு நீயா ஒரு முடிவுக்கு வராதேன்னு எத்தனை தடவை சொல்லியிருக்கேன். சித்ராவை நமக்குத் தெரியாதா என்ன..? கொஞ்சம் பொறுமையா இரு,,,,பாப்போம்..என்றதும்..
எனக்கு மூட் போச்சு…கிளம்புங்கோ…ஆத்துக்குப் போவோம்…கச்சேரியும் வேண்டாம்..கிச்சேரியும் வேண்டாம்….என்று கற்பகம் கிளம்பத் தயாராகத திரும்பவும்..
வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த சித்ரா…இவர்களை கவனிக்கவும்….. .மனசுக்குள் ஏக மகிழ்ச்சியில் டக்கென்று சீட்டை விட்டு எழுந்து, வேகமாக நடந்து போய் அவர்களது கையைப் பிடித்து…..சந்தோஷமாக பேச…அங்கிருந்த மூவரும்…சபாபதியை நோக்கி வர……!
சந்தோஷின் அப்பா…தான் மனைவியைப் பார்த்துக் கண்களால்….” இப்போப் பார்த்தியா? அவசரக் குடுக்கை….”என்று சீண்டியது.
இவரும் எழுந்து…கைகுலுக்கி….நானும் உங்களை இங்கே சந்திப்பேன்னு நினைக்கவே இல்லை…சர்ப்ரைஸ்…! என்று சிரிக்க.
சந்திரா வரலையா..?
பையனுக்கு பரிட்சை சார்… சித்ரா தான் வீட்டில் போர் அடிக்கறதுன்னு சொன்னா…நான் தமிழ் சங்கத்தில் மெம்பர் பாஸ் வீணாக்க வேண்டாமேன்னு…வந்தோம்…
குட்…நாங்களும்…அதே தான். சந்தோஷ் தான் டிவீயில் கிரிகெட் மாட்ச் பார்த்துண்டு இருக்கான்…அதான் நாங்க மட்டும் கிளம்பி வந்தோம்…!
சித்ரா வந்திருக்காள்னு தெரிந்தால் அவனும் உடனே கிளம்பி வந்துடுவான்…என்று மாமி சந்தோஷமாகச் சிரித்தபடியே சொல்ல…
கூப்பிடலாமா அவனையும்…என்று சந்தோஷின் அப்பாவும் கேட்க..
அதற்குள்…நிகழ்ச்சியின் ஆரம்பிக்கும் அறிகுறிகள் தென்படுமாறு திரை…விலக..பளீரென்ற அரங்க மேடையின் அலங்காரம் கண்களைப் பறிக்க…அனைவரும் ஒருவித எதிர்பார்ப்பில் அமைதியாகிறார்கள்.
அம்மா…நீங்க இங்கே வந்து உட்காருங்கோ என்று சித்ரா தனக்கு அருகில் இருக்கும் இருக்கையில் அழைக்க, சபாபதி சந்தோஷின் அப்பாவின் அருகில் சென்று அமருகிறார்.
சபாபதிக்கு அவரது இச்சையெல்லாம் அடங்கிப் போயிருந்தது. பேசாமல் சந்திராவையே அழைச்சுண்டு வந்திருக்கலாம்…அவளுக்கும் சுதாவின் பாட்டுப் பிடிக்கும்…என்று நினைத்துக் கொண்டார்.
மேடையில் நிகழ்ச்சி ஜோராக ஆரம்பமாகிறது. இடையிடையில் கிடைத்த நேரத்தில் சந்தோஷின் அம்மா சித்ராவிடம் பேச்சுக் கொடுக்கவும்…சித்ராவும் அவர்களோடு ரொம்ப அன்பாகவும், மதிப்போடு பேசிக் கொள்ள அங்கே அவர்களுக்குள் ஒரு “புரிதல்” ஆரம்பமாகிக் கொண்டிருந்தது.
இடையில் கிடைத்த சிறு இடைவேளையின் போது…சித்ரா தனது கைபேசியை எடுத்து….”உரிமைகளை யாரும் கையில் எடுத்துத் தர மாட்டார்கள்…நாம் தான் எடுத்துக்கணும்…” என்ற சந்திராவின் குரல் உள்ளுக்குள் எதிரொலிக்க,
“அம்மா…நான் சந்தோஷுக்கு ஃபோன் பண்ணி, நானும் உங்களோடத் தான் இருக்கேன்னு சொல்லட்டுமாம்மா…” என்று பணிவோடு கேட்கிறாள்.
“சொல்லேன்….அவனும் சந்தோஷப் படுவான்….” என்கிறாள் அம்மா.
இவளும் விஷயத்தை சுருக்கமாகச் சொல்லிவிட்டு வைக்கிறாள்.. அம்மா…நீங்கள் சொன்னா மாதிரி அவருக்கும் ரொம்ப சந்தோஷம்…என்று முகமெல்லாம் வெட்கத்தோடு சொல்லும் சித்ராவைப் பார்த்து…அம்மா… அவளது கன்னத்தைத் செல்லமாகத் தட்டுகிறாள்.
தன்னுடைய வருங்கால மருமகள்..பெரியவர்களுக்குத் தரும் மதிப்பையும், மரியாதையையும் கண்டு நிறைந்த மனதோடு கச்சேரியை ரசித்துக் கொண்டிருக்கிறார்கள்..இருவரும்.
ஆர்வத்தை அடக்க முடியாமல்…சித்ரா, சந்திராவுக்கும் போன் செய்து “அக்கா..நான் கச்சேரிக்கு வந்தது நல்லதாச்சு….இங்கே யார் வந்திருக்கா…தெரியுமா? அவரோட அம்மாவும், அப்பாவும்…இதோ என் பக்கத்தில் தான்…இருக்கா…பேசறியா…இரு தரேன்..என்று சொல்லி…”அம்மா…சந்திரா….லைன்ல இருக்கா…பேசுங்கோ…” என்று கைபேசியை தரவும்.
“கச்சேரி ரொம்ப பிரமாதமா இருக்கு சந்திரா….கேட்கிறதா? சித்ரா வந்தது எங்களுக்கு ரொம்ப சந்தோசம்..” என்று சொல்லி ஃபோனை வைக்கிறாள், அம்மா.
குடும்பத்துக்குள் இறுகி இருக்கும் சில முடிச்சுகள் மெல்ல மெல்ல அவிழ்ந்தது போல…இறுக்கம் தளர்ந்தது போலிருந்தது சித்ராவுக்கு.
சுதா ரகுநாதனின்…வெண்கலக் குரல்…அரங்கம் முழுதும் நிரம்பி அத்தனை இதயங்களையும் கட்டிப் போட்டு வைத்தது.
“நீ….ரஜ…ரமணீ….ய கிருஷ்ணா……தேஹி…..ஜெய…ஜெயா……மாம்பாஹி….”
கணீரென்று அம்ருத வர்ஷிணியாய் இசை மழை பொழிந்து கொண்டிருந்தது.,
ஆயிரம் பேர்கள் அந்த ஒரு இசைக் குரலுக்குக் கட்டுப் பட்டு மகுடிக்கு ஆடும் பாம்பு போல் தனை மறந்து ஐக்கியமாகி இருந்தனர்.
சந்தோஷின் அப்பா..அவ்வபோது சபாபதி பக்கம் திரும்பி…பரஸ்பரமாகப் பேசிக் கொள்கிறார்கள்.
இரண்டு மனங்களோ….இரண்டு குணங்களோ…சில வேளைகளில் உறவுகள் பலப்பட இது போன்ற ஒரு நிகழ்வு…அவசியம் தேவை என்று சொல்லாமல் சொன்னது.
சித்ராவுக்கு தான் மனதுக்குள் இருந்த இனம் புரியாத கல்யாண பயம் விலகி….தெளிவானது.
சந்தோஷின் அம்மாவும்..அப்பாவும்…கூட சித்ராவின் எளிமையான, இனிமையான குணமும்…அவளின் அக்கா தங்கையின் ஒட்டுதலைப் புரிந்து கொள்ள முடிந்தது.
சந்திராவின் கணவருக்கும்…தனது உறவின் பங்கும்…பதவியும் விளங்கியது போலிருந்தது. பயிருக்கு தான் வேலியாக மட்டும் தான் இருக்க வேண்டும் என்ற உண்மை ஆழமாகப் புரிந்தது.
நிகழ்ச்சி முடிந்து அரங்கம் கலைந்ததும்…வெளியில் வந்து புறப்படத் தயாரானவர்கள்…”அம்மா…அப்பா…நாங்க போயிட்டு வரோம்” …என்று சொல்லவும்.
எங்கம்மாக் கிளம்பறே…இரு…இரு….எல்லோரும் சேர்ந்து டின்னர் சாப்ட்டுட்டு போகலாம்…சரியா..என்றனர்.
சபாபதியிடம்…எங்க போகலாம் டின்னருக்கு..?..என்று பேசிக் கொண்டிருக்கும் அப்பாவும்… இப்போது அவன் அம்மாவே…”சித்ரா…நீ வேணா..சந்தோஷைக் கூப்பிடேன்…வந்தாலும் வருவான்…கிரிகெட் முடிஞ்சிருக்கும்..” என்று சொல்லவும்..
அதற்காகவே காத்திருந்தவள், அவசர அவசரமாய் தன் கைபேசியை எடுத்து சந்தோஷுக்கு இடத்தைச் சொல்லிவிட்டு வரச் சொன்னவள்.. இன்னும் சற்று நேரத்தில் அவனது வருகைக்காக இப்போதிருந்தே இவளது மனம் சந்தோஷ மயக்கத்தில் காத்திருந்தது.
தான் நினைத்தது ஒன்று…நடந்து கொண்டிருப்பது வேறொன்றாக இருந்தாலும்….சந்திராவின் கணவன் சபாபதிக்கு இந்தப் பொழுதுகள் மிகவும் பிடித்திருந்தது., எல்லோரிடமும் தான்…மிகவும் பொறுப்புள்ளவனாக வெளிக்காட்டிக் கொண்ட தருணமாக அமைத்துக் கொண்டு அவர்களிடம் தன்னை பற்றி ஒரு உயர்ந்த அபிப்ராயத்தை உருவாக்கி அவர்கள் மனதில் இடம் பிடித்து விட்ட திருப்தியில் இருந்தார். இன்னும் அதை தக்க வைத்துக் கொள்ள சந்திராவுக்கு போன் செய்து…அவளுக்கு என்ன வேண்டும் ? என்று கேட்டுப் பேசி….சந்தோஷ் வந்ததும், அவனுடனும் சிரித்துப் பேசி…தன்னுடைய சுய கௌரவத்தை அழகாகக் காப்பாற்றிக் கொண்டிருந்தார் சபாபதி.
இரவு டின்னர் “கிராண்ட் மினர்வா”வில் பேசியபடியே…இரவோடு சேர்ந்து நகர்ந்து கொண்டிருந்தது. நேரம் போவதே தெரியாமல் சிரிப்பும்… மகிழ்வுமாக.
வீட்டில் பிரவீன் படித்து முடித்த களைப்பில் உறங்கிப் போனான்…சந்திரா, கணவனின் வருகைக்காகக் காத்திருந்தாள்.
இவர்கள் வீட்டை விட்டுப் புறப்பட்ட நிமிஷத்திலிருந்து மனக் குழப்பத்தினூடே…குழம்பித் தவிக்க…என்னைக்கும் இல்லாத திருநாளா…இன்னைக்கு இவர் போனில் சிரித்து சிரித்துப் பேசுகிறார்…..என்னவாயிருக்கும்…இவ்வளவு சந்தோஷப் படும் படியாக?
“சித்ரா போக மாட்டேன் என்று எவ்வளவு சொன்னாள்..!.நான் தானே அவள் பேச்சைக் கேட்காமல்..அனுப்பி வைத்தேன்… இவர் ஏதாவது அவளிடம் ஏடாக் கூடமாக பேசி இருப்பாரோ…? அவளுக்குக் கோபம் வந்திருக்குமோ…? அப்படி என்ன இவருக்கு அவளோட ஊர் சுத்த ஆசை…? இப்போ அவளோட மாமியார், மாமனார் இப்படிப் பார்த்து தப்பா நினைக்க ஆரம்பிச்சா என்னாவது…? நானே சித்ராவுக்கு கெடுதல் செய்வது போலத் தானே…. இன்னைக்கு கார்த்தால …கால் இடறியது…”இடறிய கால் இடரும்” ன்னு சொல்லியிருக்கு…அப்போ இன்னைக்கு என்னவெல்லாம் நடக்கப் போறதோ…? இன்னும் வரலையே…இத்தனை லேட்டாகிறதே….இன்னைக்கு சகுனமே சரியில்லையே….என்றெல்லாம் கவலைப் பட்டவள்…
வாசலுக்கு வந்து நின்று காலையில் தான் போட்ட தப்புக் கோலங்களைப் பார்வையிட்டாள்
தெருவிளக்கின் ஒளியில் கூட காலையில் அவள் அழித்து அழித்துப் போட்ட தப்புக் கோலத் தடயங்கள் அப்படியே இருந்தாலும் அதையும் மீறி அவள் இழுத்த கோடுகள்….போல…..பளிச்சென “நட்சத்திரமாக” மின்னி “நல்லதே நடக்கும்” என்று சொல்வது போலிருந்தது.
அத்தனை நேரம் அவள் மனசுக்குள் குறுக்கும் நெடுக்குமாக ஓடிக் கொண்டிருந்த கறுப்புப் பூனை எல்லா சகுனங்களையும் புறந்தள்ளி விட்டு வெளியேறியது. அவள் அந்த நட்சத்திரக் கோலத்தைப் பார்த்தபடியே நின்றிருந்தாள்.
குற்ற உணர்வில், தப்புக் கோலங்கள் போட்டது நானா அல்லது கணவனா என்று தராசில் சற்று நிறுத்துப் பார்த்தாள் சந்திரா ! தன் கணவனின் ஆண்மீக இச்சையால் சித்ராவுக்குத் திருமணம் நின்று போகாமல் தப்பிய தாளங்களை ஊழ்விதி எப்படியோ சரி செய்து விட்டது இவர்கள் அறியாமலே.

