Author: ஜெயஸ்ரீ ஷங்கர்

  • “வான்புகழ் கொண்ட பாரத ரத்தினம்”– கர்மவீரர் காமராசர்!

    — ஜெயஸ்ரீ ஷங்கர்.

    kamarajar2

    பகைவர்களும் மதிக்கும் பண்பாளரான காமராசரின் தலைமையில் தமிழகம் கண்ட வெற்றிகரமான நல்லாட்சி ‘பொற்குடத்தில்’ வைத்துப் பாதுகாப்பதைப் போல இணையத்தில் கல்மேல் எழுத்துக்களாக காலத்துக்கும் மாறாமல் இருக்குமாறு பதிவுகளாகி உள்ளன. ஆடம்பரமில்லா எளியவாழ்கை வாழ்ந்தவரை வெறும் ஆயிரம் வார்த்தைகளுக்குள் எளிமையாகவே எழுதத்தான் இயலுமா?

    விருதுப்பட்டியில் குமாரசாமி நாடார்,சிவகாமி அம்மாள் தம்பதியர்க்கு, ஜூலை 15-ஆம் தேதி 1903 ஆம் ஆண்டில் உதித்த ‘வரலாற்று நாயகன்’. தன் தமிழகத்திற்குத் தாரை வார்த்துக் கொடுக்கவென்றே, ‘சிப்பிக்கு- நித்திலமாக, குலதெய்வம் அன்னை ‘காமாட்சி’யின் அருளால் ‘காமராசர்’ வந்து பிறந்திருக்கிறார் என்று அந்த அன்னை சிவகாமியம்மாள் அப்போது நினைத்திருக்க மாட்டார்.

    ஆறாம் வகுப்பிற்கு மேல் தன்னால் படிக்கமுடியாமல் போயிற்றே என்கின்ற தீராத வருத்தம் அவரது ஆழ்மனத்தை வாட்டியது. அதனாலேயே உலக விஷயங்களைக் கற்றுக்கொள்ளத் தவறாமல், ஓய்வு நேரங்களில் பற்பல பத்திரிகைச் செய்திகளைப் படித்து நாட்டு நடப்பை நன்கு அறிந்திருந்தார். இளவயதில் அவர் கேட்ட பொதுக்கூட்டங்களே பிற்காலத்தில் அவரை சுதந்திரப் போராட்ட வீரராக மாற்றியது,

    அந்நியர்களின் ஆட்சியில் இந்தியா அடிமைபட்டுக் கிடந்த காலகட்டம். ‘வந்தேமாதரம்’ ஒன்றே வீரர்களின் சுவாசமாக, உயிரின் வேதமந்திரமாகக் கொண்ட சுதந்திரப்போராட்ட இயக்கங்களில் காமராசரும் கலந்துகொண்டு காந்தியத்தைப் பரப்பினார்.

    ஜாலியன் வாலாபாக் படுகொலை பற்றிய செய்தி அறிந்தவர், மனம் கலங்கினார். தனது அரசியல் வழிகாட்டியாக தலைவர் ‘சத்தியமூர்த்தி’யின் தொண்டராகி காங்கிரஸ் பேரியக்க உறுப்பினராகி முழுநேர தேசப்பணிக்குத் தன்னையே அர்ப்பணித்தார். கள்ளுக்கடை மறியல்,அந்நியத்துணிகள் பகிஷ்காரம், கொடிப் போராட்டம், சைமன் கமிஷன் எதிர்ப்பு என பல போராட்டங்களில் கலந்து கொண்டு கிட்டத்தட்ட ஒன்பதரை ஆண்டுகள் சிறைவாசம் பெற்றார்.

    சிறையிலிருந்த நேரங்களில் , மனத்தையும் அறிவையும் மேன்மையுறச் செய்யும் பல இலக்கிய நூல்களையும் பல மொழிகளையும் கற்றுத் தேர்ந்தார். அன்னபட்சி முத்தை உண்பதைப்போல் காமராசர் தான் படித்த இலக்கியங்களில் வாழ்வியல் வழிமுறைகளை விழுங்கி அதை வழுவாது வாழ்விலும் கடைபிடித்தார்.

    இந்தியா விடுதலை அடைவதற்கு முன்பே, சத்தியமூர்த்தி அவர்கள் இறந்துவிட்டதால், காமராசர் இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, முதலில் தலைவர் சத்தியமூர்த்தி வீட்டிற்குச் சென்று தேசியக்கொடியை ஏற்றினார்.

    பல சோதனைகளையும் வேதனைகளையும் கடந்து தான் நமக்கு விடுதலைக் கிடைத்ததென்பதை தனது சொந்த அனுபவத்தால் கண்ட காமராசர், சுதந்திரத்தின் அருமையை நன்கு உணர்ந்தவர் ,அதைப் பேணிக் காக்க வழிவகுத்தார்.

    “ஒன்றைச் செய்ய விரும்புகிறபோது அதை செய்வதற்காகவே இருக்கிறோம் என எண்ண வேண்டும்” எனும் தொலைநோக்குச் சிந்தனையோடு காமராசர் திருமணமே செய்து கொள்ளாமல் நாட்டுக்காக தன்னையே அர்ப்பணித்தார்.

    அன்பு, கருணை, உண்மை, நேர்மை, பொறுமை, சமயோசிதம், விவேகம், நியாயம், துணிவு, தியாகம் என்ற மனிதாபிமான நற்பண்புகள் நிறைந்தவராகத் திகழ்ந்தார். காலத்தை உயிர் போல மதித்தவர். நேரம் வீணாகக் கூடாது, காசு விரயமாக்கக் கூடாது என்ற கொள்கைகளைக் கொண்டவர்.

    அண்ணல் காந்தியடிகளின் ‘செய் அல்லது செத்து மடி’ எனும் தாரக மந்திரத்தையும், தனக்குப் பிடித்த பாரதியாரின் கனவை நனவாக்கவும் , திருக்குறளின் அறத்தையும், தாகூர் அவர்களின் வீரத்தையும், விவேகானந்தரின் விவேகத்தையும், ஔவையார், நாலடியாரில் நல்லன எல்லாமுமாக காமராசரின் மனசாட்சி மேலோங்கி ஆட்சிபுரிந்ததால் தமிழகத்தில் அவரது ஆட்சி ‘பொற்கால ஆட்சியாக’ அமையப் பெற்றது.

    காமராசர் தமிழக முதலமைச்சராக பதவி ஏற்பதற்கு முன், தலைவர் சத்தியமூர்த்தியின் வீட்டுக்குச் சென்று அவருடைய படத்திற்கு மாலை அணிவித்து வணங்கி, தன்னுடைய பணியைத் தொடர்ந்தார். அவர் , தன்னுடைய அமைச்சரவையை மிகவும் வித்தியாசமாகவும் வியக்கும்படியும்,தன்னை எதிர்த்து போட்டியிட்டவர்களையே அமைச்சராக்கினார்.

    கடுமையான உழைப்பே மக்களை வறுமையில் இருந்து மீட்கும் என்றும் சமதர்ம சமுதாயம் மலர, கல்வியும், உழைப்புமே கண்கள் போன்றது எனவும் தீர்மானித்தார்.

    பொருளாதாரத்தில் பின்தங்கியிருந்த தமிழகத்தை உயர்த்த அவருக்கு ஏராளமான வாய்ப்புகளும் காத்திருந்தது. அதைச் சரியாக பயன்படுத்திக் கொண்டு தான் கொண்ட கொள்கையில் வெற்றி பெற அயராது உழைத்தார். நேர்மையும் எளிமையும் அவரைக் கவசமாகவே காத்தது.

    தன்னலமற்ற தலைவர் காமராசருக்கு பின்தங்கியவர்கள் , ஏழைகள் , படிக்காத பாமரர்களின் மேல் அளவு கடந்த பாசம் கொண்டவர். அந்த அன்பை வார்த்தைகளில் சொல்லாமல் செயலில் காட்டினார். இலவசத் திட்டங்கள் எதையும் ஏழைகளுக்கு கொடுக்காமல் அவர்கள் குடும்பம் மற்றும் சமூகம் முன்னேற என்ன வழியோ அதை தனது ஆட்சியில் செய்தார்.

    முதல்வரான பின்னர், தன்னுடைய முதல் பணியாக ராஜாஜி கொண்டுவந்த குலக்கல்வித் திட்டத்தினை கைவிட்டு, அவரால் மூடப்பட்ட 6000 பள்ளிகளைத் திறந்தார் . மேலும், 17000த்திற்கும் மேற்பட்ட பள்ளிகளைத் திறந்தோடு மட்டுமல்லாமல், பள்ளிக்குழந்தைகளுக்கு “இலவச மதிய உணவு திட்டத்தினை” ஏற்படுத்தி, இலவச சீருடையும் கொடுத்து,ஏழை எளிய மக்களின் கல்வியில் பெரும் முன்னேற்றத்தினை ஏற்படுத்தினார். இந்திய அரசியலில் தலைசிறந்த பணியாகக் கருதப்பட்ட இந்தத் திட்டம், உலக அளவில் பாராட்டப்படும் திட்டமாகவும் அமைந்தது.

    குஜராத் பல்கலைக் கழகம் கல்வித்துறையில் செயற்கரிய சாதனைகள் செய்தமைக்காக “டாக்டர்” பட்டம் தர காமராசரைத் தேடி வந்தார்கள்.
    ” டாக்டர் பட்டமா? எனக்கா? என்ன பெரிய சாதனை செஞ்சுட்டேன்னு இந்த முடிவெடுத்தீங்க. நாட்டில் எத்தனையோ விஞ்ஞானிகள், மேதாவிகள் இருக்கிறாங்க… அவுங்களை தேடிப்புடுச்சு இந்த பட்டத்தை குடுங்க. எனக்கு வேண்டாம்… நான் ஒத்துக்கொள்ளவே மாட்டேன்… போய்வாங்க” என்று சொல்லி அனுப்பிவிட்டார். டாக்டர்.ஐன்ஸ்டீன் ” இப்படிப்பட்ட ஒரு மாமனிதர் இந்த நிலவுலகத்தில் ஊனோடும் உதிரத்தோடும் உலவினார் என்பதை வருங்காலச் சந்ததியினர் நம்பவே மறுப்பர்” என்றார்.

    “இருக்கு, இல்லைங்கிறதைப்பத்தி எனக்கு எந்தக்கவலையும் கிடையாதுன்னேன். நாம செய்றது நல்ல காரியமா இருந்தா போதும். பக்தனா இருக்கறதைவிட யோக்கியனா இருக்கணும். அயோக்கியத்தனம் ஆயிரம் பண்ணிகிட்டு கோயிலுக்குக் கும்பாபிஷேகம் பண்ணிட்டா சரியாப்போச்சா…?” அடுத்த மனுஷன் நல்லாருக்கணும்கிறது தான் வழிபாடு. ஏழைகளுக்கு நம்மாலான உதவிகளைச் செய்யணும்கிறது தான் பிரார்த்தனை. இதுல நாம சரியா இருந்தா… தெய்வம்னு ஒண்ணு இருந்தா அது நம்மள வாழ்த்தும்னேன்…!” அதுதான் அவரது இறை நம்பிக்கை.

    “வடக்கு வாழ்கிறது! தெற்கு தேய்கிறது” என்று தி.மு.கழகத்தினர் பிரசாரம் செய்தனர். அதிலும் உண்மை இருப்பதை காமராஜரும் உணர்ந்துகொண்டார். எனவே, தமிழ்நாட்டில் பெரிய தொழிற்சாலைகளையும், அணைகளையும் அமைக்க வேண்டும் என்று முடிவு எடுத்தார். மத்திய அரசிடம் வற்புறுத்தி, ஐந்தாண்டு திட்டங்களில் தமிழகத்திற்கு அதற்கான நிதியை ஒதுக்கும்படி செய்தார்.

    காமராசர் கல்வித் துறையில் மட்டுமல்லாமல், தொழில்துறை, நீர்பாசனத் திட்டங்கள், மின் திட்டங்கள் போன்றவற்றிலும் முன்னேற்றத்தை ஏற்படுத்தினார். தமிழகத்தில் தொழில்துறைகளை வளர்ப்பதை குறிக்கோளாகக் கொண்டு, பல்வேறு நடவடிக்கைகளை செயல்படுத்தி வேலை வாய்ப்பை உயர்த்தினார்.

    ‘நெய்வேலி நிலக்கரித் திட்டம்’, ‘பெரம்பூர் ரயில் பெட்டி தொழிற்சாலை’, ‘திருச்சி பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ்’, ‘கல்பாக்கம் அணு மின்நிலையம்’, ‘ஊட்டி கச்சா ஃபிலிம் தொழிற்சாலை’, ‘கிண்டி டெலிபிரிண்டர் தொழிற்சாலை’, ‘மேட்டூர் காகிதத் தொழிற்சாலை’, ‘சேலம் இரும்பு உருக்கு ஆலை’, ‘பாரத மிகு மின் நிறுவனம்’, ‘இரயில் பெட்டித் தொழிற்சாலை’, ‘நிலக்கரி புகைப்படச் சுருள் தொழிற்சாலை’ என மேலும் பல தொழிற்சாலைகள் காமராஜரால் உருவாக்கப்பட்டன. இதைத் தவிர, ‘மேட்டூர் கால்வாய்த்திட்டம்’, ‘பவானி திட்டம்’, ‘காவேரி டெல்டா வடிகால் அபிவிருத்தி திட்டம்’, ‘மணிமுத்தாறு, அமராவதி, வைகை, சாத்தனூர், கிருஷ்ணகிரி, ஆரணியாறு போன்ற நீர்பாசன திட்டங்களையும்’ ஏற்படுத்தினார். காமராசர் ஆட்சியின் இறுதியில், தமிழகம் தொழில் வளத்தில் இரண்டாம் இடத்தைப் பிடித்தது.

    தமிழ்நாட்டின் இரட்சகர், கல்வி வள்ளல் என்று தந்தை பெரியாரால் பாராட்டப் பட்ட பெருந்தலைவர் காமராசர், மக்களாட்சியின் மாண்பிற்குச் சிறந்த எடுத்துக் காட்டாக விளங்கினார். தமிழகத்தில் பஞ்சம் இல்லையெனும் அன்னக்கொடியை பறக்கவைத்தார் பெருந்தலைவர்.

    ‘முதல்வர் இட ஒதுக்கீடு’ என்ற பிரிவில் மருத்துவ கல்லூரியில் 5 இடங்களுக்கு 50க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்திருந்த நிலையில், பெற்றோர் கையெழுத்து இருந்த இடத்தில ‘கைநாட்டு’ வைத்திருந்த விண்ணப்பங்களை தேர்வுசெய்து படிக்காத பாமரர்களின் பிள்ளைகள் மருத்துவம் படித்து முன்னேறட்டும், அப்போதுதான் எதிர்காலத்தில் அவர்களின் வாரிசுகள் படிப்பறிவு பெறுவர். இதுபோல் ஒவ்வொரு குடும்பமும் முன்னேறினால் நாடே முன்னேறும் என்றார்.

    மூன்று முறை தமிழக முதலமைச்சராக தேர்தெடுக்கப்பட்ட காமராசர் அவர்கள், பதவியை விட தேசப்பணியும், கட்சிப்பணியுமே முக்கியம் என கருதி “கே-ப்ளான் ” எனப்படும் திட்டத்தினை” கொண்டுவந்தார். அதன்படி, கட்சியின் மூத்த தலைவர்கள் பதவிகளை, இளைஞர்களிடம் ஒப்படைத்துவிட்டு, கட்சிப் பணியாற்ற வேண்டும் என்பதே நோக்கமாகும். அதன் பேரில் முதலமைச்சர் பதவியைத் துறந்த காமராசர் பொறுப்பினை பக்தவத்சலத்திடம் ஒப்படைத்துவிட்டு, தில்லிக்குச் சென்றார்.

    பிரதமர் நேரு,உயிரோடு இருப்பவர்களின் சிலையைத் திறந்து வைப்பது சரியல்ல என்ற கருத்தைக் கொண்டிருந்தாலும்,பெருஞ்சாதனையாளரைப் பொறுத்தமட்டில், விதிவிலகில்லை என்பதால் , காமராசரின் சிலையைத் திறந்து வைக்கிறேன்’ என்று காமராசரைப் புகழ்ந்தார். விழாவில் காமராசரும் கலந்துகொண்டார்.

    ஒன்பதரை ஆண்டுகள் முதலமைச்சராகச் விளங்கிய காமராசர், அப்பதவியைத் புளியம்பழம் ஓட்டில் ஒட்டாதது போல் உதறிவிட்டார். நேரு மறைந்தபோது, லால்பகதூர் சாஸ்திரியை பிரதமராக்கி அவரும் மறைந்தபோது, திருமதி இந்திராகாந்தியை பிரதமராக்கி, ‘கிங் மேக்கர்’ என்ற பெருமையடைந்தார்.

    காமராசர் ரஷியப் பயணத்தின் போது மாஸ்கோ வரவேற்பில்,பாரதியின் ‘ஆகா வென்றெழுந்துது பார் யுகப் புரட்சி’ என்ற பாடலைப் பாடி ரஷிய மக்களின் பாராட்டுக்களைப் பெற்றார்.

    இந்திய காங்கிரசு தலைவர்களுள்ளே, சிறந்த இராஜதந்திரி காமராசர் என்று பாரதம் முழுவதும் பாராட்டும் புகழ்நிலைக்கு உயர்ந்த முதல் தமிழர் காமராசரே ஆவார்.

    “எந்த நேரத்திலும் எந்த நிலையுலும் நான் ஒரு ஏழை இந்தியனாகவே இருக்க விரும்புகிறேன்” என்று கூறி அதன்படி ஆடம்பரம் இல்லா எளியவாழ்க்கை வாழ்ந்தவர் காமராசர். கர்மவீரர், புடம்போட்ட தங்கமல்ல.தன்னைத்தானே பட்டை தீட்டிக்கொண்ட நல்வைரம்.

    தமிழகத்தில் ‘கள்ளுக்கடை’யைக் கண்ட காமராசர் கண்ணீர் விட்டழுதார், நாடு இப்படி நாசமாப்போச்சே என்று மனமுடைந்தார்.

    .உண்மையை உரக்கப் பேசியவர், 1975 ஆம் ஆண்டு காந்தி ஜெயந்தியன்று காமராசர் என்கின்ற பெரும் தூண் தான் வந்த வேலை முடிந்ததென்று எண்ணித்தானோ , இறுதியாக ‘விளக்கை அணைத்துவிட்டுப் போ’ என்று சொல்லிப் படுக்கையில் சாய்ந்தவர் பின்பு எழுந்திருக்கவேயில்லை.

    இந்திய அரசின் மிக உயரிய விருதான “பாரத ரத்னா” விருது மத்திய அரசால் அவரது அழியாத ஆன்மாவுக்கு வழங்கப்பட்டது.

    காமராசரின் கொள்கைகளைப் பின்பற்றியே அவருக்கு நிகரான டாக்டர். அப்துல்கலாம் சமீபத்தில் நம்மை மீளாத்துயரில் ஆழ்த்தி மறைந்தார்.

    இப்போது தமிழகத் தராசு தனது இரண்டு தட்டுக்களையும் இழந்த சோகத்தில், நீதிமுள்ளும் சாயுமோ?

    இளையசமுதாயமே, இவர்களைப் படித்தாவது வாழப்பழகுங்கள்..!

     

    Share
  • அம்மாவை வணங்காது உயர்வில்லையே…!

    -ஜெயஸ்ரீ ஷங்கர்

    பெற்றவள் நீ எனக்கென்றும்
    நேரில் கிடைத்திட்ட தெய்வ தரிசனம்
    நினைவு தெரிந்த நாளாய்
    என்னுள் உறைந்து உணர்த்தும் பரப்பிரம்மம்!

    கோபுரத்துக் கலசம் போலுயர்ந்த
    உந்தன் நிலை எனக்கெட்டாத அதிசயம் 
    ஆயிரம் ஜென்மங்கள் தொடர்ந்து 
    செய்திட்ட மாதவமே உன்னோடு எந்தன் சம்பந்தம்!

    பெற்ற குழந்தைகள் அத்தனைக்கும்
    சூரியகிரணமாய்ப் பகிர்ந்தளிக்கும் உந்தன் பக்குவம்
    அன்பையும் கண்டிப்பையும் ஒருங்கெனவே
    காட்டி அம்மையப்பனாக மாறும் சாத்தியம்!

    பசியையும் துன்பத்தையும் காணவிடாது
    உனக்குள் அழுத்திக் கொண்ட தியாகச்சின்னம்
    கஷ்டத்திலும் சிரித்த முகம் மாறாமல்
    நல்லதையே போதித்த இன்னொரு போதிமரம்!

    நாங்கள்  வண்ண ஆடையில் வலம்வர
    உந்தன் எண்ணம்  எங்களோடு  உலாவரும்
    ஆனந்தமோ ஆர்ப்பரிப்போ ஏதுமின்றிக்
    கிடைத்ததை ஏற்று வாழும் நீயே வெற்றியின் வடிவம்!

    பருவகாலங்கள் கடந்து செல்ல எங்களின்
    நிகழ்கால மாற்றங்களைத் தாங்கும் நீ அன்புமேகம்
    பார்த்திருந்தபோதே தலையுயர்ந்து நின்றபோதிலும்
    குழந்தையாய் எண்ணி நேசிப்பது நீ மாத்திரம்!

    கூட்டைவிட்டு  நாங்கள் ஆனந்தமாய்ப் பறந்திடத்
    தனிமையில் அழுமே ஏக்கத்தில் உன்னிதயம்
    அன்போடு சோறூட்டியே  பழக்கப்பட்ட நீ 
    ஊட்டிவிட எவருமின்றிச் சோர்வாய் பாவம்! 

    இன்றாவது  இவள்  வருவாள்  என்று வழிமேல்
    வைத்த விழியாய்க் காலம் நோக்கும் கர்மயோகம்
    கைபேசி என்றொரு மந்திரப்பாவை
    இல்லையேல் நான்  வெறும்  நடமாடும் எந்திரம்!

    வாழைபோல் உந்தன்  இயல்பு இனி
    யார் பெறுவார் இதுபோல் அருமருந்து?
    தாயெனும் சொல்லுக்குள் இத்தரணியே
    அடங்கிடும் அதிசய ஆகர்ஷண மந்திரம்!

    வளர்ந்த பின்னே பிரிந்திட்டாலும்
    எண்ணத்தில் எந்நாளும் வாழவாழ்த்தும் இருதயம்
    என்பெயர் அழைத்தே மறந்து போனதுன்  
    பெயரை நீயறியாது அழைக்கும்  எனதுள் மண்டபம்!

    மூப்பும் திரையும் உன்னை மென்று விழுங்கினாலும்
    உந்தன் குரல் சொல்வதெல்லாம் அனுபவ வேதாந்தம்
    கற்க வேண்டும் நான் கூடுவிட்டுக் கூடுபாய,
    ககன மார்க்கத் தந்திரங்கள் உனக்காக மாத்திரம்!

    அம்மா அம்மா எனவே காகமெனக் கரையும்
    மனமிங்கு தேடுது வாழ்வின் ஜீவாதாரம்
    இமைக்கும் விழிக்குமான தூரம் நமது
    இருந்தும் காணத் தடுக்குது இகபரம்!

    காலத்தால் நானும் ஓர் தாய் ஆயினும்
    உள்ளத்தில் உன் காலடியில் உருகும் மனம்
    உருளும் பூமியில் மாறிவரும் பிறவிகளில்
    மறுபடி உனக்குள்ளே எடுப்பேன் தேகம்!
    தோன்றியதை எழுதியதில் ஆணித்தரம்
    சரியென்றால் நீ தருவாய் தலையசைப்பில் சம்மதம்!
     

    Share
  • அம்மா எனும் அதிசய காந்தம்!

    -ஜெயஸ்ரீ ஷங்கர்

    நான் பிறந்ததும்
    எனக்குத் தெரியாது
    என் ஊரும்
    பெயரும் தெரியாது!

    ஏதோவொரு கதகதப்பு
    அதன்  பாதுகாப்பு
    அன்பின் உணர்வு
    அது தான் அன்று நீயெனக்கு!

    நானோ உனதாகி
    உன்னோடு  ஒட்டிக்கொண்டேன்
    நீயோ எனக்குத் தாயாய்
    எனைக் காத்தாய்!

    ஆடும் கோழியும்
    பசுவும் காகமும்
    நீ சொல்லித்தான்
    நான் தெரிந்து கொண்டேன்!

    மேகமும் நிலவும் அதோ
    பாரெனச் சுட்டிக் காட்டிப்
    பசிக்கும் முன்னே
    வயிறு நிறைத்தாய்!

    தத்தித்தத்தி என்னோடு
    நடையில் நீயும் பிள்ளையாய்
    நடந்தபோதும் நினைவில்லை
    எனக்கு நீ  அம்மா என்று!

    உறவு சொல்லிக்
    கிளிப்பிள்ளையாய்ப்
    பழக்கி முத்தமிட்டு
    உச்சி முகர்ந்தாய்!

    சீராட்டி அலங்கரித்து
    நீ மகிழ்ந்த போதும்
    புரியவில்லை நீயே
    தெய்வத்தின் கருணை என்று!

    உன்னோடு பின்னிப்
    பிணைந்தது நம் பந்தம்
    எனக்கு  உலகைக்
    காட்டிய நிர்ப்பந்தம்!

    நீயே  உலகமாய்
    நான் நினைக்க…
    என்னையே உலகமாய்
    நீ நினைத்தாய்!

    தியாகமும் கருணையும்
    உனக்கே சொந்தம் அதுபோல்
    என்னுள் தாய்மையை
    விதைத்த தாய் நீ!

    உன் அனுபவச் சொல்லை
    அவ்வபோது மீறினால்
    தொல்லை எனநான்
    ஏசியும் நீ எனை நேசித்தாய்!

    நீ சொல்லித்தந்த
    எதையும் நான்
    ஏற்கவில்லை மாறாகச்
    செய்தாலும் நீ ஆதரித்தாய்!

    நீ நடந்த பாதை வேறு
    நான் நடக்கும் பாதை
    வேறானாலும் நீயென்
    ஆணிவேர் நான் மறுக்கவில்லை!

    வாழ்க்கை சொல்லித்
    தராத  பாடங்களை
    வார்த்தையால் கற்றுக்
    கொடுத்த அனுபவப்பள்ளி நீ!

    நான் புகுந்தவீடு
    வந்தபின்பும் பிறந்த
    வீட்டின் நினைவுகள்
    உயிரெனச் சுமப்பவள்!

    தென்றலும் புயலுமாய்க்
    கடந்து வந்த பின்பும்
    வாழ்வென்று உண்டாயின்
    அங்கும் நீ தான்!

    மரம் கொடுத்த விழுதோ நான்
    விழுதுகள் தாங்கும்
    விருட்சமாய்  நீ
    ஏங்கும் தாய்மை
    எங்கும் நிழலாய்த் தொடருமோ?

    சுழலும் வாழ்க்கைச் சக்கரத்தில்
    தாய்மையே  வெல்லும் தரணியில்
    தாய்மையே  இதயங்கள் ஈர்க்கும்
    அதிசய காந்தம்…என் அம்மா
    நீ நீடூழி வாழ்கவே!

     

    Share
  • மனதில் நிறைந்த மக்கள் திலகம்

    — ஜெயஸ்ரீ ஷங்கர்.

    யோகத்தின் முகவரிகள்:
    நாங்கல்லாம் எம்.ஜி.ஆர் கட்சி. நீ யார் கட்சி? எனது பள்ளி நாட்களில் இந்த ஒரு கேள்வி மிகவும் சகஜமாக எனது தோழிகளிடையில் ஒருவருக்கொருவரைப் பார்த்துக் கேட்டுக் கொள்ளும் கேள்வியாகவே இருந்தது. அதை வைத்துத் தான் எங்களுக்குள் நட்பு வட்டமும் அமையும். அது போன்றதொரு காலமது. அப்போது எனக்கு பத்து வயது இருக்கும்.. எனக்குப் பிடித்த தோழிக்காக, நானும் எம்.ஜி.ஆர் கட்சி தான் என்று சொல்லி அவளோடு சேர்ந்து கொண்டேன். எம்.ஜி.ஆர் பாடல்கள் தான் எங்கள் நட்புக்கு வித்தாகி, உரமாகி, மரங்களாகி நந்தவனமாகியது. அதையும் கடந்து, இள நெஞ்சங்களுள் அவரால் ஏற்படுத்தப்பட்ட தாக்கத்தின் ஆதிக்கம் அபாரமானது என்றே சொல்ல வேண்டும்…

    இந்த உலகில் பிறந்த ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒரு யோகம் கைதூக்கி விட்டு கடைசி வரையில் கூட வரும் என்றும் சொல்வார்கள். அந்த விதத்தில் பரிபூரணமா அமைந்த ‘யோக ஜாதகம்’ அவருடையது தான். அப்பேர்பட்ட யோகக்காரருக்கு தனது உயர்ந்த பண்பால், செல்வமும், பெரும்புகழும், அழிவில்லாத மக்கள் செல்வாக்கும் வாழ்வின் எல்லை வரை அமையப் பெற்றால் அவர் மனிதருள் மாணிக்கமாவர் .

    இந்நிலையில் தான் ஒரு நாள் நம்ப ஊருக்கு எம்.ஜி.ஆர் வருகிறார் என்ற செய்தி ‘காட்டுத் தீ’ போலப் பரவியது. எந்தவித தொலைத் தொடர்பும் அதிகரித்திராத காலம். மதுரையில் அவருக்கு ரசிகர்கள் கடலளவு என்பதை உணர்த்திய அனுபவம் எனக்கு அதுதான். திரையில் பார்த்திருந்த ஒரு மனிதனை நேரில் பார்க்கும் அந்த சந்தர்ப்பம் மிகவும் பிரமாண்டமானது என்று தான் சொல்ல வேண்டும். அத்தனை பிரமிப்பு மனத்துள். நேரமாக நேரமாக மக்கள் வெள்ளம் அலைமோதத் தொடங்கியது. அந்த ரசிகர் கூட்டத்தின் மத்தியில் நானும் எனது தோழியின் வீட்டு மொட்டைமாடியில் நின்றபடி அவரைக் காணும் ஆவலுடன் நின்றிருந்தேன். அவர் நடித்த திரைப்படப் பாடல்கள் ஒலிபெருக்கியில் தொடர்ந்து ஒலித்த வண்ணம் இருந்தது.

    “நீங்க நல்லாயிருக்கோணும் நாடு முன்னேற இந்த
    நாட்டில் உள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற
    என்றும் நல்லவங்க எல்லாரும் ஒங்க பின்னாலே நீங்க
    நெனச்சதெல்லாம் நடக்குமுங்க கண்ணு முன்னாலே”

    அத்தோடு கூடவே இன்னொரு பாடலாக …

    “வாங்கய்யா வாத்தியாரையா
    வரவேற்க வந்தோமைய்யா “

    இந்தப் பாடலும் திரும்பத் திரும்ப ஒலித்த வண்ணம் இருந்தது. மதுரையின் தெருக்கள் முழுதும் அவருக்காக அலங்கரிக்கப் பட்டு அத்தனை இதயங்களுக்குள்ளும் அவரைப் பார்த்துவிட வேண்டும் என்ற ‘ஒரே எண்ணம் ‘ நிறைந்ததாக இருந்ததைக் உணரவும் முடிந்தது. அத்தனை அன்புக்கும் சொந்தக்காரர் ‘அமாவாசை வானில் எழுந்த முழு நிலவாக’ வசீகரமான தோற்றப் பொலிவோடு வெண்பஞ்சுத் தொப்பியும், கறுப்புக் கண்ணாடியும், வெள்ளை அங்கியும் கழுத்தைச் சுற்றிய ஷாலோடு , கூப்பிய கரங்களில் ஒரு வாகனத்தில் நின்று அனைவரையும் பார்த்து கையசைத்த வண்ணம் எங்களைக் கடந்து சென்றார். வானுலக தேவனே வந்து எழுந்தருளியது போன்ற ஒரு நிம்மதி அவரைக் கண்டுவிட்ட முகங்களில் தெரிந்தது. கூட்டத்தில் பெருத்த ஆரவாரம். அந்த ஆனந்த அலை ஓயாது நீண்ட நேரம் ஒலித்தவண்ணம் இருந்தது. இன்றும் கூட நான் முதன் முதலாகக் கண்ட அந்த மாபெரும் பிரம்மாண்டமான மக்கள் திரள் கண்ணுள் நிறைந்து வழிகிறது. அன்றிலிருந்து எனது மனத்துள் அவரை ஒரு அதிசயப் பிறவியாகவே எண்ண ஆரம்பித்தது.

    பள்ளியில் மாறுவேடப் போட்டியில் அநேகமாக அத்தனை தாய்மார்களும் தங்கள் குழந்தைகளுக்கு ‘எம்.ஜி.ஆர்” வேடமிட்டு ‘என் ரத்தத்தின் ரத்தமே ‘ என்ற அவர் மேடையில் பேச ஆரம்பிக்கும் போது, பொது மக்களிடையே தனக்கு இருக்கும் பந்தத்தை உறுதி செய்யுமுகமாக உபயோகப் படுத்தும் அந்த சக்திப் பிரயோக வாக்கியத்தையே வசனமாகச் சொல்ல வைத்து அப்படியே மெய் சிலிர்த்துப் போவார்கள். அத்தனை ஈடுபாடும், அன்பும், பக்தியும் கொண்ட தாய்குலங்கள் அவரை ஒரு அவதார புருஷராகவே எண்ணியிருந்தனர் . அவர் மக்கள் இதயத்தின் தாரக மந்திரம்.

    வெள்ளித் திரை நடிகர் என்பதையும் மீறிய ஒரு பிணைப்பும், ஆளுமையும் அவர் மீது பொது மக்களிடையில் இருப்பதை காணும் போதெல்லாம் ‘இது எப்படி சாத்தியம்’ என்ற கேள்விக்கே இடமில்லாமல் அத்தனை பேர்களின் உள்ளத்தையும் ஈர்த்த வினோத காந்தமாக அவரது எளிமையும், காருண்யமும் இருந்தது தான் அந்த உயர்ந்த ஆன்மாவின் உன்னத சாட்சி. அவரைச் சந்திக்கும் எவரையும் அவரது ரசிகனாகவே மாற்றிவிடும் இரகசியம் தெரிந்தவர். அவர் பிறந்ததும், வாழ்ந்ததும், வெள்ளித் திரையில் சாதனைகள் புரிந்ததும், அரசியலில் தனக்கென ஒரு நிரந்திர இடத்தை பற்றி பொது மக்களின் நலனுக்காக சேவைகள் பல புரிந்ததும் அறியாதவர் யாருமே தமிழ் நாட்டில் இருக்க முடியாது. எம்.ஜி.ஆர் என்ற இந்தப் பெயரில் தான் எத்தனை ஆணித்தரமான நம்பிக்கை மக்களிடத்தில் இருந்திருக்க வேண்டும்.

    செல்வம்:
    இந்நிலையில் அவர் நடித்து வெளிவந்த படங்களும், கருத்துமிக்கப் பாடல்களும், பட்டிதொட்டி எங்கும் அவர் புகழ் பரப்பும் ஏணியாகி, அவரைத் தமிழக மக்களின் மத்தியில் ஓர் அரிய மேதையாக,மங்காத புகழ் தாங்கி நிற்கும் ‘மக்கள் திலகமாக’ மாற்றக் காரணமாயிருந்தது.. அவரை ‘ரத்தத்தின் ரத்தமாக’ அவர் நடித்த நடிப்பு வளர்த்ததா, அவரது சமூக சிந்தனை வளர்த்ததா, மக்கள் மீது அவர் வைத்திருந்த அன்பு வளர்த்ததா என்றெல்லாம் ஆராய இயலாத குறுகிய காலக்கட்டம், அவர் பெயரை எம்.ஜி.ஆர் என்று சொல்லும் போதே ஒரு மிகப்பெரிய கடலுக்கு முன்னால் கம்பீரமாக எழுந்து நிற்கும் கலங்கரை விளக்கம் போன்றதொரு பாதுகாப்பு அவரிடத்தில் நமக்கு ஏற்பட்டதில் எந்த வியப்பும் இல்லை எனலாம். அத்தனை இறைவனும் அவர் பக்கம் நின்று ஒன்றாக ஆசீர்வதித்திருக்க வேண்டும். ஒரு சாமானிய மனிதனால் அசாதாரண உயரத்தில் ஒவ்வொரு இதயத்திலும் கோலோட்சி செய்தவர் நமது எம்.ஜி.ஆர் அவர்கள் மட்டும் தான் என்றாலும் அது மிகையில்லை.

    ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று கூறி பரந்த மனப்பான்மையை நெஞ்சில் விதைத்தவர் திருமூலர். அந்த உயர்ந்த கருத்தை பட்டி தொட்டி எங்கும் பரப்பி மனித நேயத்தை வளர்த்தவர் நம் புரட்சித்தலைவர். அவருக்காகவே கவிஞர்கள் இதயத்தில் சுரக்கும் அமிர்த சஞ்சீவியாக கவிதை வரிகள் பொங்கி எழும். அதை எம்.ஜி.ஆர். பாடும்போது, ரசிகர்களின் நெஞ்சம் பெருமையில் பூரித்துப் போகும். சாமான்ய மக்களையும் அவரது திரையிசைப் பாடல்களால் வாழ்வியல் முறைகளை எளிமையாகக் கற்றுக் கொள்ள வைக்கும். எத்தனையோ பேர்களின் உந்து சக்தி அவரது பாடல்களாகவே இருந்திருக்கிறது. தன்னம்பிக்கையின் அஸ்திவாரத்தை அதன் மூலமாகவே மக்களிடம் எழுப்பி இருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.

    எந்த உயரமும் ஒரே நாளில் ஏற்பட்டு விட முடியாது என்பது நியதி. இருப்பினும், அவரது அரசியல் உயரம் ஆரம்பித்த போதே பிரம்மாண்டமாக வளர்ந்து உயர்ந்த நிலையில் தான் உருவானது என்பதற்கு பல ஆதாரங்கள் உண்டு. இருந்தாலும், ஒரு சராசரி மனிதன் தனது சொந்த வாழ்வில் படும் அத்தனை அவஸ்தைகளையும் சந்தித்தவர் தான் எதிரிகளின் சூழ்ச்சி வலையில் சிக்கித் தவித்தவர் தான். இதிலிருந்தெல்லாம் அவர் வெளிவர அவருக்குள் வெகுண்டு வெளிவந்த தைரியமும், தீர்க்கமான அறிவும், பகட்டே அறியாத தூய அன்பும் நல்ல மனமும் மட்டும் தான் துணையாக இருந்தது. அங்கிருந்து நாடே போற்ற அந்த மனிதர் மாமனிதர் ஆனார். வயது வித்தியாசமில்லாமல் சகலமானவர்களும் போற்றும் உயர்ந்த பொக்கிஷமாக கருதப்பட்டார். அவரைச் சுற்றி தமிழ்நாட்டு மக்கள் அனைவருமே பாதுகாப்பு வளையமாக வலம் வந்தார்கள். ஒரு நாட்டின் அத்தனை இதயங்களுக்கும் ஒரே ‘ஏகாந்தம்’ அவராகவே திகழ்ந்தார், அவரது புகழ் உயர்ந்தாலும், அவர் வந்த பாதையை மறக்காமல் , ஏழை எளிய மக்களுக்கு அவரது உதவும் கரங்களை நீட்டிக் கொண்டே இருந்தார். அவருக்கு வாழ்க்கை தந்த திரை உலகத்தையும், அவரால் மக்களுக்கு வாழ்க்கை தர முடிந்த அரசியல் உலகத்தையும் தனது இரண்டு கண்களாகவே போற்றியவர் தனது அரசியல் சின்னத்திற்கு ‘இரட்டை இலையை ‘ அடையாளமாக்கி அதையே என்றென்றும் அரசியல் செல்வத்தின் முத்திரையாகப் பதித்தவர்..

    பெரும்புகழ்:
    பள்ளிக் கூட கல்வி என்பது அவரது வாழ்வில் எட்டாத கனியாகி இருந்தாலும், தமிழகக் குழந்தைகள் கல்வி கற்க வேண்டிய அவசியத்தை ஒவ்வொரு குடும்பத்திற்கும் உணர்த்தி அவர்களது வளர்ச்சிக்கு உதவும் வண்ணம் பள்ளிகளில் ‘மதிய உணவு திட்டத்தை ‘ ஏற்படுத்தி அதன் மூலம் வருங்கால சந்ததியினரின் அறிவுக்கும் உணவு ஊட்டி அழகு பார்த்தார்.. இது ஒரு சமுதாயப் புரட்சியாகவே மக்களிடையில் பெருமையாகப் பேசப்பட்டது. நல்லதொரு தலைவன் நம் நாட்டைக் காக்கிறான் என்னும் நம்பிக்கையில் மக்கள் கவலைகளற்று இருந்த நேரம். மக்கள் திலகம் எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்களின் வார்த்தைகளும் எளிமையானவை. வாழ்க்கையும் எளிமையானவை தான். காலம் அவருக்கான செயல்களை மிகவும் சிறப்பாகவே செய்தது. அதே போல்,

    தமிழக மக்கள் அவர் மீது வைத்திருந்த நம்பிக்கையின் அளவை வேறு எதனாலும் அளவிட்டுக் குறித்து விட முடியாததாகும். அவரையே தன்னுயிராக பாவித்து வாழ்ந்தவர்கள், அவருக்கு ஒன்றென்றால் தனது உயிரையும் துச்சமாக எண்ணி உயிர் கொடுத்து உயிர் காக்கக் கடமை பட்டவர்களாகவே பெரும்பாலான அவரது ரசிகர்கள் இருந்தார்கள் என்பது கண்கூடு. அப்படித்தான் ஒருமுறை ‘எம்.ஜி.ஆர் அவர்களின் திடீர் மரணச் செய்தி ‘ கொண்ட பொய்யான தகவல் காற்றுவாக்கில் பரவத் தொடங்கியதும், மக்களின் வேதனை கரை மீறியது. அந்த மாலை வேளையில் ஊரே ஸ்தம்பித்து ஆக்ரோஷித்தது. அந்தச் செய்தியை ஜீரணிக்க இயலாத பல ரசிகர்கள் தங்களையே எமனுக்குத் தாரை வார்த்துக் கொண்டார்கள். தமிழ் நாட்டின் அந்தக் கொந்தளிப்பை அடக்க, அந்தச் செய்தி பொய்யான வதந்தி என்ற செய்தியால் மட்டுமே முடிந்தது. அவர் சம்பாதித்து சேர்த்து வைத்திருந்த ரசிகர்களின் நெஞ்சங்களின் வலிமையை அனைவரும் உணர்ந்து கொள்ள அந்த ஒரு நிகழ்வு போதுமாயிருந்தது.

    மனிதன் என்று பிறந்தானோ மரணமும் அவனோடு சேர்ந்தே பிறந்து விடும் என்னும் உண்மையைப் பொய்யாக்கி எம்.ஜி.ஆர் அவர்களை சிரஞ்சீவியாக வாழவைக்க வழி தேடியது அவரது ரசிக மனங்கள். அதன் வெளிப்பாடும் தெரியப் படுத்தும் விதமாக அந்த நாளும் வந்தது.

    அழிவில்லாத மக்கள் செல்வாக்கு:
    அவர் உடல்நிலை சரியில்லாமல் இருந்த நேரம் தான் அது. ஒரு நாட்டையே உலுக்கி எடுத்த நாட்கள் அவை. கூட்டுப் பிரார்த்தனை இல்லை. நாட்டுப் பிரார்த்தை அது. எங்கள் எம்.ஜி.ஆர். மீண்டும் நலம் பெற வேண்டும் என்ற ஒரே பிரார்த்தனை. தொடர்ந்த பிரார்த்தனையாக அவர் நடித்த படப்பாடலே எங்கும் ஒலித்து பிரபஞ்ச சக்தியை கெஞ்சிக் கொண்டிருந்தது.

    இறைவா உன் மாளிகையில்
    எத்தனையோ மணி விளக்கு
    தலைவா உன் காலடியில்
    என் நம்பிக்கையின் ஒளிவிளக்கு…!

    இதன் அடுத்த வரி நம் அனைத்து இதயத்துள்ளும் ஒலித்துக் கொண்டே இருக்கும் பிரார்த்தனை வரிகள் தான்..நம்பிக்கையோடு பல்லாயிரக் கணக்கான இதயங்களின், ஒரே ஒரு மனிதனின் இதயத்துடிப்பின் தொடர்ச்சிக்காக இசையால் கையேந்திக் கதறிய நாட்கள் அவை. இந்த நாட்டுப் பிரார்த்தனை எந்தக் காலக்கட்டத்திலும் நடந்திராத ஒரு உலகளாவிய அதிசயம் தான். அதன் முன்பும், அதன் பின்பும் யாருக்காகவும் நடந்திருப்பதாக சரித்திர வரலாறு கூட இல்லை எனலாம்.. ஒரு உயிரின் மீது லட்சோப லட்ச மக்களின் ஆளுமையும் அன்பும் கரை புரள அதைத் தாங்கிய புரட்சித் தலைவர் எனும் அந்தப் பொன்மனச் செம்மலை மட்டுமே சேரும். பிரபஞ்சம் விடை சொன்னது. அவரை மீட்டுக் கொடுத்தது. மக்களின் மனத்துள் பால் வார்த்தது. இந்த நாடே அவர் ஒருவருக்காகவே உருவானதோ என்று எண்ணும் அளவுக்கு அவரது செல்வாக்கும் புகழும் ஓங்கி உலகளந்தது .

    ஒரு தனி மனிதனின் புகழ் என்பது காலப்போக்கில் மாறும் இயல்புடையது. அனால் அதையும் முறியடித்தது அவர் வாழ்ந்த வரலாறு காணாத ஒரு தனி மனித சகாப்தம். இல்லையில்லை, அந்தக் கீர்த்தியை சத்திய உலகின் பிரதிநிதி என்றே சொல்லவேண்டும். எம்.ஜி.ஆர் அவர்களை எத்தனையோ புகழாரங்கள் சரணடைந்திருக்கலாம். அத்தனைக்கும் தலை வணங்கிய அவரது தலை செருக்கில் நிமிராது தாழ்ந்திருந்தமையால் தான் தரணியில் அவருக்கென்ற தனியிடம் நிரந்தரமானது. கோடியில் ஒரு நட்சத்திரமாக தமிழகத்தில் ஒளிவிட்டு மங்காத சரித்திரதை உருவாக்கி என்றென்றும் ‘சிரஞ்சீவி’ யாகவே இன்றும் மனத்தில் நிறைந்து நிற்பவர் நம் மக்கள் திலகம் மட்டும் தான். எந்தக் காலத்திலும் தமிழ் மக்களின் இதயங்கள் தான் அவர் வாழும் உறைவிடம்.

    Share
  • தாய்மை (2)

    ஜெயஸ்ரீ ஷங்கர்

    lfopy_199381

    தாய்மை தாங்கும் அச்சாணி
    வெறும் கவிதைக்குள்
    அடங்கி விடுமா தாய்மை…?

    உதிரம் பகிர்ந்த உறவுகளின்
    உணர்வை ஆணிவேராக
    இதயம் புகுந்து ஊன்றி
    விழுதுகள் மண் தொடும்
    நங்கூரம் தாய்மை..!

    இளமையில் இனிமையானது
    முதுமையில் தனிமையானது
    கடமையில் மேன்மையானது
    பொறுமையில் பூமியானது
    தூய்மையான கருணையே தாயானது..!

    சுழலும் பூமிக்கு அச்சாணி
    தவிக்கும் இதயத்தின் தோணி
    இலக்கில் உயர்த்தும் ஏணி..
    குடும்பத்தைக் காக்கும் ஜீவ ஊருணி..!

    மேன்மை கண்ட தாய்மை
    மென்மை கொண்ட பதுமை
    வறுமை இடத்தும் பெருமை
    கொள்ளும் அவள் அருமை
    மங்கை கொண்ட மகுடம் தாய்மை ..!

    கொட்டிக் கொடுத்தாலும்
    கிட்டாத சிம்ஹாசனம்
    அடையாளம் இல்லாத
    ஆத்மீக ரகசியம்..தாய்மை ..!

    வெடித்த பாறையில் பச்சிலை போல்
    விரிந்த வானத்தின் கார்மேகம் போல்
    பொங்கும் கடலின் தொடர் அலைபோல்
    இறைவன் தந்த சீதனம்..தாய்மை..!

    உன்னதத்தை உன்னதத்தால் உன்னதமாக்கும்
    உருவுக்குள் அடங்கி விடாது
    உணர்வுக்குள் முடங்கி விடாது
    கவிதைக்குள் வீழ்ந்து விடாது…தாய்மை ..!

    உயிருக்குள் உயிராக
    உலகுக்கே உயிராக
    பெருஞ்ஜோதியின் வரமான
    பெருங்கருணையல்லவா..தாய்மை ..!

    Share
  • தாய்மை

    ஜெயஸ்ரீ ஷங்கர்

    24653
    மன்மதன் கரந்தனில்
    தாய்மையின் வில்
    ரதிதேவி வரமிட்டாள்
    தாய்மையே வெல்..!

    தாயுமானவன் அவன்
    விதைத்த வித்துக்கள்
    புவியெங்கும் பூ
    மரங்களாகி விதை தூவி
    தாய்மைக்கனி தாங்கி
    புவிதாங்கும் சுமைதாங்கி..!

    கார்மேகம் தாங்கும் மழைநீராக
    மங்கையரின் மனந்தனில்
    தாய்மை உறங்கும்..!

    பெற்றெடுத்துத் தாயான
    நிமிடம் முதலாய் தியாகத்தின்
    உறைவிடமே தாய்மை..!

    பெண்மையின் பூரணம்
    தாய்மையே தலையாயம்
    தேசம் கடந்தும்
    புரியும் தாய்மொழி ..!

    அன்பின் முகவரி
    அன்னையே
    தராசு முள்ளென
    தாய்மைக்கு
    ஆண் பெண்
    பேதங்களில்லையே..!

    ஏங்கும் மனமெங்கும்
    தாய்மையின் சங்கமம்
    பெண்ணவளின் கடமைகளுள்
    தாய்மையே குங்குமம்..!

    தன் பசி துறந்து
    பெற்ற மக்களின் வயிறு
    நிறைக்கும் அட்சய பாத்திரம்..!

    ஆயிரம் ஜென்மங்களும்
    நீயே எந்தன் தாயாக வேண்டும்
    வேண்டும் மனம் தான்
    தாய்மையின் வெற்றி…!

    இறைவனின் பிரதிநிதியாகி
    வீட்டுக்கு வீடு
    வாழும் காமதேனு..!

    தாய்மைக்கில்லை
    வேலியும் விலங்கும்
    நஞ்சையும் அமுதையும்
    சமமாக்கி நிறுத்தும்
    துலாக்கோல் தாய்மையே ..!

    பூலோகப் உயிரினங்களுக்கு
    இறைவன் கொடுத்த
    உயிர் உரம் தாய்மை….!

    தாய்மை ஒரு வரம்
    அதுவே மங்கையரின்
    சிந்தாமணி மகுடம்..!

    ஏழ்மையிலும் தாய்மை
    பெருமையையே தாங்கும்
    ஊமை நெஞ்சங்களும்
    தாய்மைக்கே ஏங்கும்..!

    உருவைத் தாங்கி உணர்வில் ஏங்கி
    உயிரை வைத்து உயிரைப் பிரித்து
    வாழும் அதிசய அன்னம்….அம்மா..!

    ஆயிரம் கோடி யுகங்கள்
    பிறந்தாலும் அழிந்திடாது
    வளரும் உறவு தொப்புள்கொடி..!

    ஜனன மரண கணக்குக்குள்
    விடையாக விதையாகி
    மறைந்து மலரும்
    தாய்மைக் கிளைகள்..!

    காந்தம் மட்டும் ஈர்ப்பதில்லை இரும்பை
    தாய்மையின் காந்தமும்
    இளக்கும் இரும்பு மனத்தை..!

    தாய்மை என்றொரு பிம்பம்
    மனித இதயங்களின் பிரதிநிதியாய்
    பேதங்களின்றி அழகு காட்டும்
    மாயக் கண்ணாடி..!

    தாய்….அன்பின் ஆதிக்கத்தால்
    உள்ளம் நிறைத்து
    அள்ளிக் கொடுக்கும்
    அன்புச் சுரங்கம்…!
    இதயங்கள் ஒட்டி
    உறவாடும் நந்தவனம்..!

    எல்லையில்லா அன்பு கொண்டு
    அன்னையாய் நிற்பவள்
    தாய்மையின் வாஞ்சையால்
    பிரபஞ்சத்தையும் வசமாக்குவாள்
    பராசக்தி வடிவானவள்
    இப்பரத்தில் தாய்மையே வெல்லும்….!

    ஜெயஸ்ரீ ஷங்கர்
    ஹைதராபாத்

    Share
  • கண்கள் பார்க்கட்டும்…

    ஜெயஸ்ரீ ஷங்கர் 
    வையகமே ஒரு
    வண்ண வானம்
    கதிரொளி செய்யும்
    மாயாஜாலம்

    உயர்மலை பனியருவி
    நீள் நதி நீலக் கடல்
    வேடிக்கை காட்டும்
    பொன் மேகங்கள்

    பச்சயத் தட்டுக்கள் உயர்த்தும்
    வண்ண மலரினங்கள்
    கருவண்டுகள் சுற்றும்
    தாமரைக் குளங்கள்

    மலரிணை இறகு கொண்ட
    ஓவிய ஆடை கட்டி
    தேனுக்கு அலையும்
    பட்டான பூச்சிகள்

    உயர்ந்தும் படர்ந்தும்
    தென்றலோடு
    ஒய்யாரமாடும்
    தாவர சங்கமங்கள்

    விண்ணையும் மண்ணையும்
    வண்ணங்களால் மேகங்கள்
    அளக்கும் வானவில்லின்
    கம்பீர ஜாலங்கள்

    நாளெல்லாம் நடந்து
    களைத்த கதிரவன்
    கடல்குளிக்க சந்தியாகால
    வெட்கச் சிவப்புகள்

    பூமியெங்கும் கருமையை
    இறைத்த இருளரசனை
    விடியும்வரை எதிர்த்து நின்ற
    வெண்ணிலவின் சிரித்தமுகம்

    சோகம் சுமந்த மனங்கள்
    சுகம் பெறவே இயற்கை
    அன்னையென ஓடிவந்து
    அணைக்கும் பூமியிது

    கருவிழிகள் காணும் லோகம்
    ஏதுமறியா வெண்ணிலா விழிகள்
    பார்வை அறியா பரிதாப முகங்கள்
    இருளோடு அலைபாயும்
    மௌனப் பட்டாம்பூச்சிகள்….!

    தன்முகம் தானறியா முகம்
    பார்க்கும் கண்ணாடிகள்…!
    நொறுங்கும் இதயத்துள்
    இருளின் ரீங்காரங்கள்

    செவியும் குரலும்
    ஜீவனுக்கு ஒளியாக
    வழி சொல்லும்
    இரண்டு கண்கள்…!

    ஆதாரக் கண்கள்
    மூடிக் கிடந்தாலும்
    சேதாரம் ஏதுமில்லை
    ஆதரவுக் கரங்கள்
    திறந்து கொண்டால்
    ஆதரவு உத்திரவாதமுண்டு..

    வீழ்ந்த மரத்தின் விதையெடுத்து
    மீண்டும் மண் புதைத்து
    முளைவிடக் காத்திருக்கும்
    ஈர மனங்களே…!

    கண்களைச் சாம்பலாக்கிடாது
    சவாலாக்கி மீண்டும் காணவிடு ..!
    மறைந்த பின்னும் நீ பிறந்த
    அடையாளமாய் இன்னொரு
    முகத்தில் உனது அறிமுகம்!

    பார்வை பெற்ற புதியவன்
    காணும் உலகெங்கும்
    நிறைந்த இறைவனாய்
    உன்னையும் நினைப்பது …!

     

     

     

    Share
  • என் பார்வையில் கண்ணதாசன் – ஆயிரத்தில் ஒருவன்

    -ஜெயஸ்ரீ ஷங்கர் kannadasan - jayasri

     

    முன்னுரை

    கவியரசர் கண்ணதாசனைப் பற்றி எழுத எனக்கு என்ன தகுதி இருக்கிறது?  என்று நான் என்னையே கேட்டுக் கொள்கிறேன். ‘இல்லை’ என்ற பதிலே என்னுள்ளிருந்து வந்தாலும், அவரது எழுத்தின் பரம ரசிகை என்ற அந்த ஒரு தகுதி  போதாதா, என்று என்னையே நான் தேற்றிக் கொள்கிறேன். ஊர்க் குருவி ஒன்று உயரப் பறக்கும் பருந்தானதாக எண்ணம் கொண்டு சின்னஞ் சிறிய சிறகுகளை  விரித்து வானத்தைப் பார்க்கிறேன். சரி…எழுதலாம்.

    எனது தந்தை திரு. பேரை. சுப்ரமணியன் அவர்கள் கண்ணதாசனின் நண்பராம். ஒரு சமயம், மதராஸில்  இருந்து 1965-இல் கவிஞர் செகந்திராபாத் வந்திருந்த போது எங்கள் வீட்டுக்கும் நண்பர் எனும் முறையில்  எனது தந்தையைக் காண வந்திருந்தார். அப்போது நான் சிறுமி.  கவியரசர் எங்கள் இல்லம் வந்திருந்த அந்த நாளை இன்றும் நினைத்துப் பார்க்கிறேன்.

    ‘அவன் அருளாலே அவன் தாள் பணிந்து’ என்று மானசீகமாகக் கவியரசர் கண்ணதாசன் அவர்களையே வணங்கிக்கொண்டு எனது பார்வையில்  அவர்களின் பன்முகங்களைப் பற்றி எண்ணிப் பார்க்கிறேன்.

    வானவில் ஒன்றுதான் அதில் வண்ணங்கள் ஏழு; ஸ்வரங்கள் ஏழுதான் அதனுள் பிறப்பது எத்தனை ராகங்கள்? அது போலத்தான் கவியரசருக்குள் பல மனங்கள்.

    அவர் தனது வாழ்நாளில் பல அவதாரங்கள்  எடுத்து வாழ்ந்திருப்பது கவிஞரின் வாழ்வில் ஒரு வரப்பிரசாதம் ஆகும். என்னைப் பொறுத்தமட்டில், கண்ணதாசன் என்னும் அந்தக் கோடிப் புண்ணியம் செய்த ஆன்மா, வெறும் மானிடன் அல்லன்! அதையும் தாண்டித் தனது பிறப்பைப் பல்லாண்டு காலங்கள் உயிர்ப்புடன் இருக்க வரம் கொண்டு வந்த கர்மயோகி!

    கலியுகத்துக் கண்ணனின் மற்றுமொரு அவதார புருஷராகவும் அவரை எடுத்துக் கொள்ளலாம். கண்ணன்பால் அவர் கொண்ட அன்புக்கும், சரணாகதிக்கும் அவரின் எழுத்துகளே சாட்சி. கண்ணனைச் சாமான்ய மக்களுக்குக் காட்டிக் கொடுத்தவர் அவர்தான்.

    கண்ணன் வந்தான் அங்கே கண்ணன் வந்தான்
    ஏழைக்
    கண்ணீரைக் கண்டதும் கண்ணன் வந்தான்…”

    என்ற பாடல் ஒலிக்காத மனங்களும் உண்டா?

    ஒரு சராசரி மனிதன்,  எண்ணங்களையே அஸ்திவாரமாகக்  கொண்டு, எண்ணங்களையே  வண்ண வானவில்லாக மாற்றி வானம்தொட்ட அவரது இலக்கையும் கடந்து நின்றது சத்தியமே. எந்த முகத் திரையும் இன்றி, தனக்குள் இருந்த நல்லவனும், தன்னை வழி நடத்தும் தீயவனும் எல்லாம் நானே என்று பகிரங்கமாகத் தன்னைத் தானே விமரிசித்துக் கொண்ட புனிதன் அவர்.

    எல்லோரும், ’ஊரே  தன்னை நல்லவன் ’என்று போற்றி மதிக்க  வேண்டும் என நினைக்கும் மனிதர்களிடையே,  “எப்படி எல்லாம் வாழக் கூடாதோ அப்படியெல்லாம் வாழ்ந்திருக்கிறேன்; ஆகவே இப்படித்தான் வாழவேண்டும் என்று புத்தி சொல்லக் கூடிய யோக்கியதை எனக்கு உண்டு” என இத்தனை ஆணித்தரமாகத் தனது அனுபவத்தை மற்றவர்க்கு அனுபவப் பாடமாக  எடுத்துச் சொல்லும் தைரியம் எத்தனை மனங்களுக்கு கைவல்யமாகும்? சிந்தித்துப் பார்க்கிறேன்.

    ’எனது பார்வையில் கண்ணதாசன்’ என்பவர் யார்? அவர் ஒரு சிறந்த படைப்பாளி என்பதைத் தவிர,  ஒரு இலக்கியவாதி, சிந்தனையாளன் என்பதையும் மீறி, மனிதனுக்குள் இருக்கும் தேவையற்ற ‘நெஞ்சத்து நஞ்சாகிய’  தீய குணங்களை மனத்திற்கு வெளியே நிறுத்தி வைத்ததால், அவருக்குள்  இறைவனே குடி கொண்டார்!

    ஆம். அவரது எண்ணங்களே வளைந்து  வில்லானது; வில்லிலிருந்து சீறிய அம்பானது; உருவிய வாளானது; சுழலும்  பம்பரமானது; சாட்டையடியானது; பறக்கும் பட்டமானது; உயர்த்தும் ஏணியானது;  கரை சேர்க்கும் தோணியானது; பாதை உணர்த்தும் கைவிளக்கானது; கொட்டும் அருவியானது; காட்டாற்று வேகமானது; மகுடிக்கு ஆடும் பாம்பானது; துடித்த மனத்திற்கு மயிலிறகானது; எழுத்துகள் எல்லாம் அவருக்கு அடிமை பூதமானது!

    ஒரு எண்ணத்தின் அவதாரம் அத்தனை வடிவங்கள் பெறும்போது, அந்த எண்ணங்கள் கைவரப் பெற்றவர் எத்தனை பக்குவம் பெற்றவறாயிருந்திடல் வேண்டும்?  அப்பேர்ப்பட்ட அவரது எழுத்துகளைப்  படிக்கப் படிக்க ஆனந்தம் மனத்தை ஆளுகிறது!

    நான் படைப்பதனால் என் பேர் இறைவன்

    என்று சொன்னவர் தான் அவர். ஆனால், படைப்பது மட்டுமா செய்தார்? அவரது திரையிசைப் பாடல்கள் எத்தனையோ நெஞ்சங்களை வாழ வைத்துக் காத்து இரட்சித்திருக்கிறது. அவரது சிந்தனை எத்தனையோ நெஞ்சங்களில் ஊடுருவிச் சென்று அதனுள் கிடந்த நஞ்சுகளை வெளியேற்றி அழித்திருக்கிறது. இன்றும் காலத்தைக் கடந்து  அதன் செயல்பாடு நடந்து கொண்டே இருப்பதால், கண்ணதாசன் மும்மூர்த்திகளின் பிரதிநிதியாகவே தமிழ் நெஞ்சங்களில் வாழ்ந்து வருகிறார் என்று சொன்னாலும், அது மிகையாகாது.

    அவரது எண்ணப்  பொக்கிஷங்கள் நல்ல நல்ல புத்தகங்களாக மாறி , அவரே அவற்றையெல்லாம்  பாரி போல வாரி வாரி வழங்கி இருக்கிறார்.

    கோபத்தையும், பொறாமையையும், பேராசையையும் ஒருவர் தன்  இதயத்தின் வெளியில் நிறுத்தினால், அவரின் நெஞ்சம் முழுதும் அன்பு, பாசம், காருண்யம், அமைதி, ஆனந்தம், வீரம், செல்வம், நகைச்சுவை, அழகு  என்று மும்மடங்கு பலன் குடி கொள்ளுமாம். இதைச் சிறப்பாக வாழ்க்கையில் வாழ்ந்து காட்டி அனுபவ ஏட்டில் பொறித்து நமக்குத் தந்த காலத்தைக் கடந்து வாழும் சித்தர் அவர்.

    சாதாரணமாக, புதிய பாடல்கள் பிறந்ததும் பழைய பாடல்கள் மறக்கப்பட்டு   விடும். ஆனால் கவியரசரின் பாடல்கள் இன்றளவும் நிலைத்து நிற்பதற்கு அவரது கவிதை நயமும், உணர்வுப் பிரயோகமும் தான் காரணம் ஆகும்.

    கவியரசர்  தமது  வாழ்க்கையில் அனுபவித்து உணர்ந்த நிகழ்வுகளைப் பல்வேறு சூழ்நிலையில் திணித்துப் பாடலாக வடித்தார். அது எந்தவொரு  சராசரி மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்துடனும்  இணைந்துவிட்டதால், ஒவ்வொரு பாடலும் ரசிகர்களாகிய நம் மனதை விட்டு இன்றளவும் நீங்காது பதிந்து விட்டது.

    காதலையும், தத்துவத்தையும் கண்ணதாசனைப்  போல் சொல்ல அவரே மீண்டும் பிறந்து வந்தால் தான் உண்டு. அதற்கும் வழியிருக்காது…எத்தனை உயர்ந்த தர்மங்கள் செய்தவர், பிறவிப் பிணியிலிருந்து விடுதலை பெற்றிருப்பார்.  எனக்கான நிறைவு என்னவென்றால், அவர் வாழ்ந்திருந்த காலத்தில் நானும் வாழ்ந்து வந்தேன் என்பது தான்!

    காதலும், கண்ணதாசனும் கடலும் அலையும் போல ஒன்றிணைந்தவர்கள் என்பது நாமறிந்ததே. காதலையே உயிர்த் துடிப்பென கொண்டவர் கவியரசர். காதலின் அத்தனை பரிமாணத்தையும் ரசித்து, உணர்ந்து, தேன்கூடாகக் கட்டி வைத்தவர். காதலென்ற மாய உணர்வுக்கு இதயத்துக்கு இதயம் உருக்கொடுத்த பிரம்மன்! அவர் எழுதிய வரிகளில் இல்லாதவை எதுவும் காதலிலேயே இல்லை எனலாம். காதலின் கர்ப்பக்கிரகம்வரை சென்று வந்து எழுதியவர்  நமது கண்ணதாசன்!

    ’யாரது சொல்லாமல் நெஞ்சள்ளிப் போவது…?’

    இந்த ஒரு வரியில், காதல் நுழைந்த இதயத்தின் முதல் துடிப்பை  இதைவிட அழகாக யாராலும் சொல்லிவிட முடியாது.

    உடலுக்குள் குருதிக்கு பதிலாக எண்ணங்களே ஓடத் தமது எழுதுகோலுக்குள் உணர்வுகளை நிரப்பி அத்தனை உணர்வுகளையும்  அருவியெனக்  கொட்டித் தீர்த்தவர் அவர். அவரது ஒவ்வொரு படைப்பிலும் சமூகச் சிந்தனை நிறைந்திருக்கும். சோர்ந்த இதயங்களைத்  தமது   எழுத்தைக் கொண்டே உற்சாகப்படுத்துவார்.  எவரது கற்பனைக்கும் எட்டாத வார்த்தைகள் கூட அவருக்கு கிட்டும்!

    அவரது திரையிசைப் பாடலுலகில்  பல்லாயிரக்கணக்கான பாடல்களுள் எதை எடுப்பது எதை விடுப்பது என்ற நிலை உருவாகும் போது,

    உங்களுக்காக நானே சொல்வேன், உங்களுக்காக நானே கேட்பேன்,
    தெய்வங்கள்
    கல்லாய்ப் போனால் பூசாரி இல்லையா?
    உள்ளத்தில் நல்லோர் தானே உயர்ந்தவர் இல்லையா?”

    இந்த வரிகளில் திரையிசையையும் மீறி, ஒரு தவிப்பு… மாற்றுத்திறனாளிகளுக்கு ஒவ்வொருவரும் உதவ வேண்டும் என்ற  கோரிக்கையாக வைப்பார்  கவிஞர்.

    சொல்லென்றும் மொழியென்றும் பொருளென்றும் இல்லை
    சொல்லாத
    சொல்லுக்கு விலையேதும் இல்லை

    அனைவருக்குமான பொக்கிஷம்  இந்தப் பாடல். ‘சொல்லாத சொல்லுக்கு விலையேதும் இல்லை’ எனும் போது, சில சமயங்களின் பேசும் மௌனங்கள்  விலை மதிப்பில்லாதது, மேலும்  பெருந்தன்மை என்ற குணத்துக்கும் மகுடம் சூட்டி வார்த்தைகளால் விளையாடி இருக்கிறார் கவியரசர்.

    கடைசியாகக் கவியரசர் எழுதிய ‘கண்ணே கலைமானே’ பாடல் அவர் தமது ஆழ் மனக் கடலிலிருந்து நமக்கு எடுத்துத் தந்த வலம்புரிமுத்து.

    அந்திப்  பகல் உன்னை நான் பார்க்கிறேன்
    ஆண்டவனை
      இதைத் தான் கேட்கிறேன்

    இந்த வரிகளில் மனம் சொக்கும் இதமான தாலாட்டு தொனிக்கிறது. இன்றும் நம் ஒவ்வொரு இதயத்திலும் இந்தப் பாடல் ஒலித்துக் கொண்டேதான் இருக்கிறது.

    கொட்டித் தீர்க்கும் அருவியாய், காட்டாற்று வேகமாய், தெளிந்த நீரோடையாய் அவரது வாழ்வில் தான் எத்தனை சுருதிகள்…நல்ல எழுத்தென்பது அறிவை உழுவதற்குச் சமம். தமது காலம் முடிவதற்குள், அவர் நமக்குத் தந்திருக்கும் பொக்கிஷங்கள் கணக்கிலடங்காதவை. தன்னையே உருக்கி ஒளி தரும் மெழுகுத்திரியாகி  இரவும் பகலுமாக எழுதியெழுதித்  ‘தானம்’ செய்த பரந்தாமன்.

    இப்போது திரைக்குப் பாடல் எழுதக்கூட இங்கே கவிஞர் தட்டுப்பாடு. ஒரு பெரிய இலக்கிய ராஜவீதியிலிருந்து மெல்ல மெல்ல நகர்த்தப்பட்டுவிட்டோம். இதன் முடிவு…நல்ல பாடல் கேட்கும் வாய்ப்பை இன்றைய இளைஞர்கள் இழந்து விட்டனர். பொருள் பொதிந்த பாடல்கள், சிந்தையைச் சீர் செய்யும் நளினங்கள் எதுவுமின்றிக் கேட்கப்படும் இசைக்குள் தொலைந்து போகிறார்கள். ஒரு சமுதாயச் சீர்கேடு மெல்ல உருவாகி வருகிறது. பாசத்தைப் பக்குவமாகச் சமைத்து விருந்து படைத்துக்கொண்டிருந்த ‘அன்னபூரணியை’ நாம் இழந்து விட்டோம். ‘அவனை எழுப்பாதீர்; அப்படியே தூங்கட்டும்!’.

    அவரோ பெரிய விழுதுகள் தாங்கிய ஆலமரம். இன்றோ, நாம் அந்த மரத்தின் மகாத்மியத்தைப் பற்றிப் பேசிச் சிலிர்க்கிறோம்.

    அர்த்தமுள்ள இந்துமதம்: ஒரு மதத்தின் தன்மையை, புனிதத்தை ஆராய்ந்து அவரவரின் கடமைகளை வகுத்துச் சொன்னது.

    குடும்ப சூத்திரம்: அந்தரங்கம் பற்றிய தொகுப்பு; குடும்பத்துக்கு வழி சொல்லியது.

    அனுபவ மொழிகள்: சிந்தையைத் தூண்டும் ஆரோக்கிய பானம்.

    பகவத் கீதை: இறைவனுக்கும் நமக்கும் இடையே இருந்த இடைவெளியை நீக்கியது.

    மனவாசம் , வனவாசம்: கவிஞரின் மனத்தை, வாழ்க்கையை அரசியல், பொது மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையை நமக்குக் காட்டிய சரித்திரம்.

    கடைசிப் பக்கம்: வாழ்வியலை நடைமுறைக்கு எளிமையாய்ச் சொல்லித் தருவது.

    ஜாதி, மத பேதமின்றி குரான், இயேசு காவியம்  என்று அவர் தொட்டுச் செல்லாத இலக்கியப் படைப்புகள் இல்லையே. அவரது படைப்புகளுக்கு நிகர் அவரே.

    முடிவுரை

    அவரைப் பற்றி எழுதும் போதே இதயம் புல்லரிக்கிறது.  ’கங்கை வெள்ளம் சங்குக்குள்ளே அடங்கி விடாது’;  எனது பார்வையில் கண்ணதாசன் ஆயிரத்தில் ஒருவனாக, கடையெழு வள்ளலைப்போல் ‘கலியுக வள்ளல்’ என்பேன்.

     

    Share
  • ஸ்ரீ விட்டல், பண்டரிபுரம்

    ஜெயஸ்ரீ ஷங்கர்

    pandaripuram1

    சமீபத்தில் பண்டரிபுரம் சென்று ஸ்ரீவிட்டல், ஸ்ரீருக்மிணிதேவியைச் சேவிக்கும் அற்புதமான  மஹாராஷ்டிர யாத்திரை எங்களுக்கு அமைந்தது.

    பண்டர்பூர் ஒரு சின்ன கிராமம்தான். அந்தப் பழமையான கோயில்தான் பிரதானம். பண்டரி யாத்திரை ஆத்ம சுகத்தை அளிக்கும் என்று நாமதேவர் கூறுகிறார். ”பரப்ரஹ்ம ஸ்வரூபமே பாண்டுரங்கன்…அவனைப் பாடுங்கள்!” என்கிறார் ஆதிசங்கரர். சந்த் ஞானேஸ்வர் முதல் துக்காரம் வரைப் பல பக்தர்கள் பாடிய ஆயிரக்கணக்கான அபங்கங்கள் பக்தியில் நம்மைத் திளைக்க வைக்கின்றன. தினமும் 24 மணிநேரமும் பகவான் நாம சங்கீர்த்தனம் ஒலித்துக் கொண்டே இருக்கும் ஒரே புண்ணியக்ஷேத்திரம் பண்டரிபுரம்.

    “ஜெய் ஜெய் ராமகிருஷ்ண ஹரி” என்ற ஒரே நாமம் எங்கும் ஒலித்தபடியே இருக்கும் பண்டரிபுரத்தில், பக்தர்கள் ஒவ்வொருவரும் தனது பாதக் கமலங்களைத் தொட்டு வந்தனம் செய்யும் பாக்கியத்தை அருளும் ஸ்ரீவிட்டலும் மாதா ஸ்ரீருக்மிணியும் (ஸ்ரீ ரகுமாயி) இங்கு சந்த்ரபாகா நதிக்கரையில் கோயில் கொண்டுள்ளார்கள்.

    ஸ்ரீகிருஷ்ணன் தனது பட்டத்து ராணி மாதா ஸ்ரீருக்மிணிதேவியுடன் வந்து அங்கேயே நிரந்தரமாகத் தங்கிவிட்ட புண்ணிய பூமியாம் இது. அதற்குச் சாட்சியாகப் பல விஷயங்கள், பல இடங்கள், பொக்கிஷங்களாகப் பாதுகாக்கப் பட்டு வைக்கப்பட்டிருக்கும் பொருள்கள் என்று எங்கு சென்றாலும் ஸ்ரீ கிருஷ்ணனின் புகழ்தான் அங்கு பாடப்படுகிறது. அதைத் தெரிந்துகொண்டுப் பார்க்கப் பார்க்க  நம்மையும் மீறி ஒரு பரவசம் நம்மைச் சூழ்ந்து கொள்ளும்.

    ’பூலோக வைகுண்டம்’ என்று அழைக்கப்படும் பண்டரிபுரத்தை தமது வாழ்நாளில் ஒரு முறையாவது சென்று சந்த்ரபாகா நதியில் நீராடி, ஸ்ரீ விட்டலைத்  தரிசனம், பிரதஷிணம், நாம சங்கீர்த்தனம் செய்வதால் நமது பிறவிப்  பயன் அடைகிறது என்று பக்த துக்காராம் கூறுகிறார் என்றாலும், தற்போது சந்த்ரபாகா நதி (கங்கைக்கும் பழையது – மிகவும் புராதனமானது என்று சொல்லப்படுகிறது.) நீராடும் நிலையில் இல்லை என்பதால், மிகவும் கவனமாக ஆற்றின் நடுப்பகுதி வரை நடந்து சென்று சிறிதளவு தீர்த்தம் எடுத்து வந்தோம்.

    இனி இந்தப் புண்ணிய க்ஷேத்ரத்தின் தல வரலாறு, அதன் மகிமை என்று சொல்லிக் கொண்டே போகலாம் என்றாலும், அதையே ’வீடு தேடி வருவான் விட்டலன்’ என்னும் நிகழ்ச்சியில் ஸ்ரீ ஸ்ரீமுரளிதரன் சுவாமிகள் வாரா வாரம் ஞாயிற்றுக் கிழமையில் ’விஜய் டிவி’யில் தொடர்ந்து சொல்லிக் கொண்டே வருவதைப் பலர் கேட்டிருக்கக் கூடும் என்பதாலும், அந்தப் புராணம் மிகவும் பெரிதாக இருக்கும் காரணத்தாலும், இதில் அத்தனை விபரங்களும் சொல்லாமல், ஒரே வார்த்தையில் சொல்வதென்றால் “தன்னை ஈன்ற பெற்றோர்களை யாரொருவர் மதித்து அன்புடனும் கருணையுடனும் பாதுகாக்கிறார்களோ அவர்களுக்கு பிரத்யக்ஷமாக உடனிருந்து காப்பான் விட்டலன்” என்னும் ஐதீகம் அங்கு நிலவுகிறது. அதற்குச் சாட்சியாக பல புராணக் கதைகளும் சொல்லப்படுகிறது. அந்தக் கதைகளைக் கேட்டால், ஒரு காலத்தில் நாம் கண்ட ‘தியாகராஜ பாகவதர் நடித்த சிவகவி’ என்னும் படம்தான் நினைவுக்கு வருகிறது. ஒருவேளை அந்தப் படத்தை இந்தப் புராணத்தைத் தழுவி எடுத்திருக்கலாம். சில லீலைகளைப் படித்தால் கேரளத்து குருவாயூர் அற்புதங்களைப் போன்றே இருக்கிறது. பரந்தாமன்  ஸ்ரீ கிருஷ்ணனுக்கு மாநிலம் ஏது?

    முடிந்த வரையில் சிறியதாக்கிச் சொல்ல முயற்சி செய்கிறேன்…

    ஆடி மாதம் (ஜுலை) வரும் ஏகாதசியை மஹராஷ்டரத்தில் ’ஆஷாட ஏகாதசி’ என்று மிகச் சிறப்பாகக் கொண்டாடுவார்கள். காவடிபோல் தோளில் இருபக்கமும் பால் அல்லது தயிர் எடுத்துக்கொண்டு பண்டரிபுரம் சென்று பகவான் விட்டலைத் தரிசனம் செய்துவிட்டு வருவார்கள். பண்டரிபுரம் வரைப் பொடி நடைதான். நடு நடுவே சில பிரபுக்கள் பெரிய பந்தல் போட்டு அவர்களுக்கு வயிற்றுக்கு உணவும் படைப்பார்கள். சிறுவர்களும் இதில் கூட்டம் கூட்டமாகப் போவார்கள். அவர்கள் வாயில் ”பாண்டுரங்க விட்டலா பண்டரிநாத விட்டலா ” என்றும் ”விட்டல் விட்டல் ஜய ஜய விட்டல்” என்றும் விடாமல் நாமஜபம் வந்து கொண்டிருக்கும். அந்த நாமம் கேட்டாலே உடலெல்லாம் புல்லரிக்கும். இப்போது அந்த விட்டல் எப்படி வந்தார் என்ற கதையைப் பார்ப்போம்

    லோக தண்டம் என்ற காட்டில் ஜன்னு என்ற முனிவர் வாழ்ந்து வந்தார். அவர் மனைவியின் பெயர் சாத்தகி. அவர்களுக்குப் பலவருடங்கள் கழித்து ஒரு மகன் பிறந்தான். அவன் பெயர் புண்டரீகன். அவன் பிறந்ததும் ஏன் பிறந்தான் என்று அவர்களுக்கு ஆகிவிட்டது. எதைப் பார்த்தாலும் அழிப்பான், துன்புறுத்துவான். நாய்மேல் கல் வீசுவான்; முயலின் காதைத் திருகுவான். இப்படி முரடாகவே வளர்ந்து பெற்றோர் பேச்சைக் கேட்காமல் பதிலுக்கு எதிர்த்துப் பேசவும் துணிந்தான். அவனுக்குத் திருமணம் செய்தால் வழிக்கு வருவான் என்று எண்ணிப் புண்டரீகனுக்கு அவன் தந்தை ஒரு நல்ல பெண்ணாகப் பார்த்துத் திருமணம் செய்து வைத்தார். ஆனாலும் அவன் செயலில் மாறுதல் இல்லை. வீட்டில் மனைவி இருக்கும்போதே வெளியில் இன்பம் தேடினான். அவன் தந்தை மனம் ஒடிந்து வருந்தி அவனுக்குப் புத்தி கூறினார். அதற்கு அவன், “அப்பா நான் என் இஷ்டப்படி தான் இருப்பேன். இந்த வீட்டில் எனக்குச் சுதந்திரமில்லை… ஆகையால் நான் வீட்டைவிட்டுப் போகிறேன்” என்று கத்தித் தன் மனைவியுடன் வீட்டைவிட்டு வெளியேறினான். அவன் பெற்றோர் மனமுடைந்துப் போனார்கள். பலநாட்களுக்குப் பிறகு அவர்கள் ஒரு குழுவுடன் காசி யாத்திரைக்குக் கிளம்பினார்கள்.

    ’தமக்கு ஒரே  மகன் இருந்தும் விதி இப்படி ஆகி விட்டதே!’ என்று வருந்தி எல்லாவற்றையும் கடவுளுக்கே அர்ப்பணம் செய்து விட்டார்கள். அதே நேரத்தில் தன் தந்தை தாய் காசிக்குக் கிளம்பியதை அறிந்து புண்டரீகனும் ஒரு குதிரையின்மேல் தன் மனைவியுடன் காசிக்குக் கிளம்பினான். வழியில் அவன் மனைவி தன் மாமனார் மாமியார் தள்ளாமல் காலில் செருப்புமில்லாமல் நடந்து வருவதைக் கவனித்துத் தன் கணவரிடம் அவர்களுக்கு உதவும்படிக் கூறினாள். ஆனால் அவன் “வாயை மூடிக்கொண்டு வா! அவர்கள் கிழங்கள்…வந்தால் நமக்குத்தான் கஷ்டம்” என்றான் இரக்கமில்லாமல்.

    அங்கு ஒரு சத்திரம் தென்பட்டது. அங்குப் போய் சிறிது நேரம் களைப்பாறிவிட்டுச் செல்லலாம் என்று மனைவியுடன் அங்கு போனான். அதனருகில் ஒரு முனிவரின் ஆஸ்ரமம் இருந்தது. அங்கு குக்கூடக முனிவர் என்று ஒருவர் இருந்தார். பொழுது போகாமல் அங்கு என்ன நடக்கிறது என்று பார்த்தான் புண்டரீகன். அங்கு ஒரு முனிவர் தென்பட்டார். உடனே அவரிடம் போய், ”காசி க்ஷேத்திரம் எங்கு உள்ளது?” என்று கேட்டான். “காசியா? எனக்குத் தெரியாதே“ என்றார் அவர்.  “இது கூடத் தெரியாமல் நீங்கள் என்ன முனிவர்?” என்று சீறிய புண்டரீகனிடம், “காசி என்ற இடத்திற்கு நல்ல பண்புள்ளவர்கள் தான் போக வேண்டும்! நீ போகவேண்டும் என்கிறாயே!!” என்றார் கேலியாக.

    அதைக் கேட்டுக் கோபம் கொண்டு திரும்பவும் தன் இடத்திற்கு வந்து விட்டான் புண்டரீகன். இரவு தூக்கம் வராமல் வெளியில் பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில், மூன்று பெண்கள் ஆஸ்ரமத்துள் நுழைந்தனர். மூன்று பேரும் மிகவும் கருப்பாகவும், அழுக்குடன், கோரமாகவும் இருந்தனர். அந்த ஆஸ்ரமத்தில் நுழைந்த அவர்கள் பல வேலைகள் செய்தனர். ஒருத்தி வீடு கூட்டினாள்; மற்றொருத்தி வீட்டைத் துப்புரவாகத் துடைத்து அழகான கோலம் இட்டாள். அந்த முனிவரின் பாதத்தை நீரால் கழுவித் துடைத்து வணங்கினாள்; பின்பு அவர்கள் வெளியே வந்தனர். என்ன ஆச்சரியம்! மூன்று பேரும் மிகவும் அழகாகச் சுந்தரிகளாக வந்தனர்.

    ”இது என்ன மாயை! போகும் போது சகிக்க முடியாமல் இருந்தார்கள், இப்போது எப்படி இது?” என்று வியந்துபோன புண்டரீகன் அவர்களிடம் ஓடினான். “சுந்தரிகளே! நீங்கள் யார்? சொல்லுங்கள்!” என்று கேட்டபடி ஒருத்தியின் கையைப் பற்றினான். அவள் மிகவும் கோபம் கொண்டு கையை உதறிப் பின் சொன்னாள். “நாங்கள் கங்கை, யமுனை, சரஸ்வதி நதிகள். தினமும் பலர் குளிப்பதால் பாபம் சேர்ந்து, அந்தப் பாபத்தைக் கழுவ இங்கு வந்து சேவை செய்கிறோம். இந்தக் குக்கூட முனிவருக்குச் சேவை செய்து எங்கள் பாபத்தைப் போக்கிக் கொள்கிறோம். பாபம் எங்களிடம் சேரச் சேர அவலட்சணமாக மாறுவோம். இங்குத் தினமும் வந்து அதைப் போக்கிக் கொள்கிறோம். போன ஜன்ம புண்ணியத்தினால்தான் நீ எங்களைப் பார்த்திருக்கிறாய். இனியாவது திருந்தி உன் பெற்றோருக்குச் சேவை செய்! நீ இத்தனை நாட்கள் செய்த பாபத்தைப் போக்கிக் கொள்! உன் துர்க்குணத்தை மாற்றிக் கொள்! தாய் தந்தைதான் உனக்குத் தெய்வம் அவர்களை வணங்கு!” என்று கூறிவிட்டுச் சென்றனர்.

    புண்டரீகன் ஏதோ மந்திரச் சக்திக்குக் கட்டுப்பட்டதுபோல் மனம் மாறினான். தான் செய்த தவறுகளுக்கு வருந்தினான். பின் கங்காதேவியிடம் கேட்டான், “இந்த முனிவர் யார்? இவரைத் தொழுதால் எப்படி பாவங்கள் விலகுகின்றன?” கங்கை சொன்னாள், ”அப்பா புண்டரீகா! இவர் கோவிலுக்குப் போனதில்லை; யாகம் செய்ததில்லை, தான தருமம் செய்ததில்லை. ஆனால் விடாமல் பெற்றோருக்குப் பணிவிடை செய்து வருகிறார். அவர்களே இவரின் தெய்வம். பாபம் செய்தவர்கள் இவர் பாதத்தைத் தொட்டாலே போதும்…பாபங்கள் கரைந்து போகும்!”

    புண்டரீகன் மனம் நெகிழ்ந்து…”தாயே நான் என் பெற்றோருக்குப் பல அநீதிகளை இழைத்து விட்டேன். இப்போது திருந்தி விட்டேன்; இதோ இப்போதே போகிறேன்! அவர்களுக்கு மனம் உவந்து சேவை செய்வேன்” என்றான். காலையில் குக்கூட முனிவரைத் தரிசித்து அவர் பாதங்களைக் கழுவி மன்னிப்பும் கேட்டுக் கொண்டு பல சேவைகள் செய்தான், ஆசியும் பெற்றான். பின் தன் பெற்றோரைத் தேடிக் கண்ணீரால் அவர்தம் பாதங்களைக் கழுவினான். அதன்பின் அவன் உலகமே அவன் தாய் தந்தைதான்! அவனுக்கு வேறு ஒரு சிந்தனையும் இல்லை.

    இதெல்லாம் பார்த்த கிருஷ்ணர் அவன் சேவையை மெச்சி அவனைப் பார்க்க பூலோகத்திற்கு வந்தார். அவன் வீட்டு வாசலில் வந்து கதவைத் தட்டினார், ”புண்டரீகா புண்டரீகா!” வெளியிலிருந்து ஒலித்த குரல்கேட்ட புண்டரீகன், “யார்? யாராயிருந்தாலும் அங்கேயே நில்லுங்கள்! நான் பெற்றோரின் சேவையில் ஈடுபட்டுள்ளேன்” என்று ஒரு செங்கல்லைக் கதவைத் திறந்து வீசிப் போட்டான். அந்த மாயக்கண்ணன் பக்தனுக்காக அந்தச் செங்கல்மேல் நின்று இரண்டு கைகளையும் இடுப்பில் வைத்துக் கொண்டு அப்படியே நின்றிருந்தான்.

    வெகு நேரம் கழித்துப் புண்டரீகன் கதவைத் திறந்தான்; பார்த்தான் கண்ணனை. தன்னை மறந்தான்; அப்படியே சாஷ்டாங்கமாக வணங்கினான். “இந்தப் பாபச் செயலுக்கு மன்னியுங்கள்! தங்களுக்குப் போய் செங்கல்லைப் போட்டு அதில் நிற்கவும் சொன்னேனே!” என்று வருந்தினான். “புண்டரீகா! உன் சேவையை மெச்சினேன்! ஏதாவது வரம் கேள்!” என்ற கண்ணபிரானிடம், “உங்கள் அருள் இருந்தாலே போதுமானது ஸ்வாமி!” என்றான் புண்டரீகன். ”புண்டரீகா! உன் சேவையினால் புகழ்பெற்ற இந்த இடம் இனிப் ’பண்டரிபுரம்’ என்று நிலைக்கட்டும்! நீ இங்கிருந்து எல்லோருக்கும் ஆசி வழங்கி வருவாய்! உன்னை எல்லோரும் ’விட்டல்’ என்று அழைத்து என்னையே உன்னிடம் காண்பார்கள்!” என்றான் கண்ணன். ஆடிமாதம் இந்த விட்டல் வந்ததால் அந்த ஏகாதசி அன்று மிகச் சிறப்பாக விரதம் இருந்து மராட்டியர்கள் கொண்டாடுகிறார்கள்.

    பண்டரிபுரம் கோவிலின் உள்ளே செல்லச் செல்ல அழகான சிற்பங்கள் நிறைந்த கருங்கல் தூண்கள் காட்சியளிக்கின்றன. ஆண்டுகள் பல கடந்த கையெழுத்துப் படியில் எழுதப்பட்ட மஹாபாரதக் காவியத்தை  கண்ணாடிப் பெட்டியில் பொக்கிஷமாக வைத்திருக்கிறார்கள். ஸ்ரீ விட்டலின் அருகில் சென்று அவரது திருப்பாதங்களில் நமது சிரசை வைத்து வணங்க அனுமதிக்கிறார்கள்.

    சாளக்கிராமத்தில் அமைந்த, அழகாக இரண்டு கைகளையும் இடுப்பில் வைத்துக் கொண்டு கம்பீரமாகச் சிரிக்கும் விட்டலன் நம்மைப் பார்த்து ”வந்துவிட்டாயா?” என்று கேட்பது போலவே இருப்பது வியப்பு. துளசியும், சந்தனமும் மணக்க மணக்கத் தெய்வீகம் நிறைந்த கோவில் இது. தரிசனம் கண்டபின்பு ஏற்படும் பரவசத்திற்கு அளவேயில்லை.

    கோவிலைச் சுற்றி ஏகப்பட்ட கடைகள், துளசிமணி மாலைகள், பஜனைக்குரிய பொருட்கள், சந்தனக் கட்டைகள், வீர சிவாஜியின் படங்கள், ஸ்ரீவிட்டலனின் படங்கள் என்று யாத்திரிகர்களைக் கவரும் வகையில் கொட்டிக் கிடக்கின்றன. தயிரும், பாலும், லஸ்ஸியும் மிகவும் தரமும் சுவையுமாக வழி நெடுகக் கிடைக்கின்றன. மற்றபடி உணவுக்குச் சப்பாத்தியும், சோள ரொட்டியும்தான். ஒரு நாள் வாடகையாக ரூபாய் ஆயிரத்தில் தங்கும் விடுதிகளும் நிறைய இருக்கின்றன.

    எங்கும் பக்தியும், விட்டல் மீதான பிரேமையும் மட்டுமே பிரதானமாக இருக்கும் இந்தக் கோவிலைச் சென்று காணவேண்டும் என்ற ஆவல் நிச்சயம் இந்தக் கட்டுரையைப் படிக்கும் பலரின் மனத்தில் ஏற்பட்டு விட்டல் பக்தியை வளர்க்கும் என்பது திண்ணம்.

    Share
  • சித்திரைத் திருவிழா

    — ஜெயஸ்ரீ ஷங்கர்

     

    சித்திரைத் திருவிழா

    Tamil-Daily-News-Paper_46213495732

    சித்திரை வந்ததும் நமது சிந்தையில் தோன்றுவது, மதுரையில் நிகழும் திருவிழாக் கோலம்தான். வாழ்வில் ஒரே ஒரு முறை அங்கு சென்று அந்தச் சித்திரை மாதத்து திருவிழாக்களில் கலந்து கொண்டு, அந்த வரலாற்றுச் சிறப்பினை உணர்ந்து அனுபவிப்பது ஒருவர் பெற்ற பேறு என்றுதான் சொல்ல வேண்டும். ஒரு வழக்கு உண்டு, மதுரையில் பிறந்தாலே முக்தி என்று. சிதம்பரத்தில் வாழ்ந்தால் முக்தி என்றும் ஒரு வழக்கு உண்டு. அது எத்தனை நிஜம் என்று தெரியாத போதிலும், மதுரையோ, திருவண்ணாமலையோ , சிதம்பரமோ, அந்தக் கோவிலின் சாநித்தியம் சொல்லி விடும். அந்தத் திருவிழாக்களில் பக்தர்களின் அலைமோதும் ஆர்ப்பரிக்கும் கூட்டம்.

    மதுரைச் சித்திரைத்திருவிழாவில், பெரிய பெரிய தேர்கள் நான்மாடக் கூடலின் நான்கு வீதிகளிலும் ஆடியாடி உலா வரும் காட்சியும், கிருஷ்ண பொம்மைகள் பூச்சொரியும் காட்சியும், திருவிளையாடல் காட்சிகள் ஒவ்வொரு நாளாக நடைபெற்று, தினம் தினம் திருவிழாவாக பிரம்மாண்டமாக இன்று வரை நடைபெற்று வருவதைக் காணும் போது , நான் எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து இன்று வரை ஒவ்வொரு வருடமும் அந்தப் புண்ணிய பூமியின் திருவிழாக் கோலத்தைக் கண்டே வளர்ந்தவள் என்ற ஒரு ஏகாந்தம் மனதில் நிறைய உண்டு. திருக்கல்யாணமாகட்டும் , நவராத்திரி உற்ச்சவமாகட்டும் மதுரையில் மிகவும் சிறப்பாக நடைபெறும்.

    வழி நெடுக தண்ணீர் பந்தல் என்ற பெயரில் பெரிய பெரிய அளவில் நீர் மோர், பானகம், என்று அந்த அடிக்கும் வெய்யிலுக்கு தாக சாந்திக்காக அங்குள்ளவர்கள் வாரி வாரி வழுங்கும் நிகழ்ச்சி மனதைக் குளிரச் செய்யும். பனையோலை விசிறிகளைப் பரிசாகத் தருவர் பலர். மதுரை மீனாக்ஷி திருக்கல்யாணத்தில் மஞ்சள் தாலிச் சரடும், விரளி மஞ்சளும், தாழம்பூ, குங்குமமும், வந்தவர்களுக்கெல்லாம் கருணையோடு அள்ளித் தந்து ஆசீர்வாதம் செய்வாள் அன்னை மீனாக்ஷி. அன்னையின் திருக் கல்யாணம் முடிந்த கையோடு கள்ளழகர் புறப்பாடு. இந்த வெகு விமரிசையான புறப்பாட்டில், அத்தனை மண்டபப் படிகளும் கடந்து ராமராயர் மண்டபம் சேர்ந்து அழகர் பச்சைப் பட்டுடுத்திக் கொண்டு, தங்கக் குதிரையில் குலுங்கிக் குலுங்கி ஆடி வந்து, வைகையாற்றில் இறங்கும் அற்புதக் காட்சியைக் காண கண் இரண்டு போதாது.

    வருடத்திற்கு வருடம் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துக் கொண்டே வருவதை கண்கூடாகக் காணலாம். பக்தர்கள் வெள்ளம், அலையலையாக கிட்டத் தட்ட 18 கிலோமீட்டர் தூரம் நடந்தே அழகர் கோவிலிலிருந்து மதுரை வைகை ஆற்றங்கரை வரையில் வந்து அழகரின் ‘ஆற்றில் இறங்கும் “வைபவத்தைப் பார்த்து விட்டுத் திரும்பும் பக்தர்கள். விடிய விடிய மக்கள் திரள் திரளாக நடந்து வரும் அழகு, வழியெங்கிலும் அன்னதானம் நடைபெறும். எந்த ஒரு பக்தரும் பசியோ தாகமோ அறியாத வண்ணம், வித விதமான சித்ரான்னங்களும், நீர்மோர், பானகம் என்று சிறிது கூட முகம் சுளிக்காமல் வாரி வழங்கும் மதுரை மக்கள். எங்கிருந்து, எப்படி இத்தனை மனித அலைகள் வந்து கொண்டே இருக்கிறது என்று எண்ணும் போது ஆச்சரியம் மேலிடும். சித்திரா பௌர்ணமி அன்று அன்னதானம் அளித்தாலும், கள்ளழகர் தரிசனம் கண்டாலும் பல கோடி புண்ணியம், அந்த ஆண்டு மிகவும் சிறப்பாக அமையும் என்ற மதுரை வாழ் மக்களின் நம்பிக்கை கண்கூடாக காட்சி தரும் நன்னாள் அது, விஞ்ஞானம் எத்தனை வளர்ச்சி அடைந்தாலும் என்ன..? இந்த மெய்ஞானத்தின் முன்னே விஞ்ஞானம் பொய்த்துப் போவது போல ஒரு அபார ஆன்மீக நம்பிக்கை உருவாவதை காண முடிகிறது.

    காலின் சதங்கை, தலையில் கிரீடம், சிவப்பில் ஆடைகள், தண்ணீர் பையை முதுகில் கட்டிக் கொண்டு, காண்பவர் முகத்தில் தண்ணீர் பீய்ச்சி அடித்தபடி வருவோரை அழகராகவே எண்ணி வழிபடுவது வழக்கம். எத்தனை நம்பிக்கைகள் காலத்தால் சிறிதும் சிதையாமல் காக்கப் பட்டு வந்துள்ளது என்பதற்கு, நான் கூட சாட்சி தான். எனது குழந்தைப் பருவத்திலிருந்து (அதற்கும் பல காலங்கள் முன்பிருந்து வருவதை எனது பாட்டி கதை கதையாகச் சொல்லுவார் ) தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருக்கும் இந்த வரலாற்றுத் திருவிழாக்கள் இந்த பூலோகம் உள்ள காலம் வரையில் ஆன்மீக பக்தர்களுக்கு மதுரை போன்ற திருத்தலங்கள் ஒரு வரப்பிரசாதம் தான்.

     

     

     

     

    Share
  • என் மனம் நிறைந்த மணிமொழிக்கு!…

    ஜெயஸ்ரீ ஷங்கர்

    என் மனம் நிறைந்த மணிமொழிக்கு,

    ஆச்சரியப்படாதே…நான் தான்…!

    உனது விழிகள் விரிவதை நானும் பார்க்கிறேன். கள்ளி….! மொதல்ல இதைப் படியேன்.

    இது மாதிரி ஒரு கடிதத்தை நீ என்கிட்டேர்ந்து எதிர்பார்த்திருக்கவே மாட்டேல்ல. அது தான் ‘நாம்’.

    மாறுதல் மட்டுமே சமயத்தில் மனசுல ஒரு புத்துணர்வைக் கொண்டு தரும்னு நான் தான் அடிக்கடி உன்கிட்ட சொல்லுவேனே. அதான்
    ‘ ஒரு கைபேசி கடிதமாய் கைக்குள் மாறியது’ . எப்பப்பாரு என் குரலைக் கேட்கிற உன் காதுக்கு இன்னிக்கி மட்டும் ரெஸ்ட்.

    இந்த லெட்டரை நீ ரசிச்சுப் படிச்சா கண்டிப்பா ஏதாவது ஒரு பரிசை அனுப்பி வை.. பின்னே…..’சும்மா கிடைக்குமா சந்தோஷம் ?’ உன்னோட இந்த நேரம் கண்டிப்பா உன்னை கொஞ்ச நிமிஷம் நாம பழகின அந்தக் நாட்களுக்கு ‘விசா இல்லாமே இலவசமா’ கூட்டீட்டு போகுமே. அதுக்கு தான் நான் கேட்கிறேன் பரிசு.

    இதுக்கெல்லாமா பரிசுன்னு முணுமுணுக்காத. ! கஞ்சூஸ்….! இணையத்துல போயி பாரு…இதுக்கெல்லாம் தான் ஆயிரம் ரூபாயைப் பரிசா அள்ளித் தராங்களாம்.

    அதுக்குன்னு இந்த லெட்டரை அப்படியே ஜெராக்ஸ் பண்ணி அவுங்களுக்கு அனுப்பி வெச்சுடாதே . இது நமக்கே நமக்கு மட்டும்.
    பரிசுப் பணத்தை விட பெரிசு…. இல்லையா? நமது நட்பு.

    எனக்குப் பரிசெல்லாம் ஒண்ணும் வேண்டாம் மணிமொழி….இப்போ நீ மகிழ்வா இருந்தா அதுவே போதும். என்னைப் பத்தி உனக்குத் தெரியாதா என்ன?

    ம்ம்ம்…தலைய தலைய ஆட்டு…! ஆமாம்….ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பிரச்சனையைப் பத்திப் பேசிப் பேசி நாமளும் தான் நாளைத் தள்ளறோம். இன்னிக்காவது எந்தப் பிரச்சனையைப் பத்தியும் நினைக்காமே இப்படியே சந்தோஷமா நீயும் நானுமா கொஞ்ச நேரம் ‘போவோமா…..ஊர்கோலம்…..’ ன்னு ஊர் சுத்தலாம் வா..மணிமொழி.

    ஹையா…நான் ரெடி…!

    நீ ரெடியா….. அப்ப ஜூட்…..கதவைச் சார்த்து…நல்ல திண்டுக்கல் பூட்டாப் போட்டு வீட்டைப் பூட்டிட்டு ‘சிறகை’ எடுத்து மாட்டு.. !

    ‘இரு மனம் அன்பாலே ஒன்றானது
    நேசத்திலே உள்ளம் பண்பாடுது

    பறவைகள் போலே பறந்திடுவோம்
    மகிழ்வுடன் வாழ்வோம் எந்நாளுமே

    இனி வாழ்வில் நீதான் என் சொந்தமே
    இதோ….இதோ என் நெஞ்சிலே ஒரே பாடல்….

    அதோ..அதோ..என் பாட்டில் ஒரே ராகம்…
    கொடி நீ கிளை நான்

    மலர் போல் வாழ்வோம்
    துணை…நீ…..ஈ ஈ ஈ ஈ !

    பார்த்தியா….பார்த்தியா…..மணிமொழி…..நமக்காகவே ரேடியோல கூட நம்ம பாட்டையே போடறான் கேளு…!

    ஏய்…..இந்த ஆலமரம் எப்பிடி சூப்பரா இருக்கு பாரேன் ஜெயா …..! கொஞ்ச நேரம் இங்கயே உட்கார்லாம்டி.

    அந்த விழுது பாவம்டி…பச்சைப் புள்ளயாட்டம்….அதுல போயி இந்தத் தொங்கு தொங்குறே..நம்ம சைஸுக்கெல்லாம் இந்த ஆசை வரலாமா…?.விழுதுகள் கையை வாரி விட்டா, நமக்கு இடுப்பு எலும்பு நகுந்து போகும்…ஜாக்கிரதை…!

    கனவு தானே…..சும்மா நீ கண்ணை மூடு…! கண்டுக்காத…!
    “ஓடமும் நீரின்றி ஓடாதம்மா
    நீ சொல்லும் வழி நானே வருவேனம்மா

    தோழமை உறவுக்கு ஈடேதம்மா
    நீ சொன்ன மொழி நானே கேட்பேனம்மா”………

    என்னமா….பாடல் வரி எழுதிருக்கார்ல….சரி இங்கயே இப்படி உட்காரலாம்.

    சரி…கொஞ்ச நேரம் நீ பேசாமே இருப்பியாம்….நான் மட்டும் கடிதத்தைப் படிப்பேனாம் …முடிஞ்சா நீ “ம்ம்ம்..” கொட்டு….! இல்லாட்டியும் பரவால்ல.
    ஆனாத் தூங்கிடாதடி….என்னாலெல்லாம் உன்னைத் தூக்கிட்டுப் போக முடியாது. தாஜ்மகால் சைஸ்ஸுக்கு இருக்கே. பார்க்குறவுங்க என்ன சொல்லுவாங்க தெரியுமா?

    மிலிட்டரி டிரக்குல தாஜ்மகால் திருட்டுப் போகுதுன்னு சொல்லுவாங்க…! ஹ் ஹ் ஹஹஹா ..!

    சரி..நீ சிரிச்சது போதும்..இடி சத்தமா…கேக்குது .மழை வரும் போலிருக்கே…..? நீ .சீக்கிரமா மேல படிடி. பையன் காலேஜுலேர்ந்து வர்ற நேரம்.

    போச்சுடா……ஆரம்பிச்சுட்டியா…! அந்த இடத்தை கொஞ்சம் விட்டுட்டு வரமாட்டியே….! இரு..! க் க்க்க்க் கும்..!

    மணிமொழி…இதைக் கேளேன்…!

    நாம் சந்தித்துக் கொண்டு நான்கு வருடங்கள் கழிந்து விட்டதை என்னால் நம்பவே முடியவில்லை. எல்லாம் நேற்று நடந்தது போலிருக்கிறது. ஏதோ நேற்று தான் இரயில் ஏறி “காசி யாத்திரைக்கு” கூட்டத்தோட கூட்டமாப் புறப்பட்டது போலிருக்கிறது எனக்கு. நான்கு வருடங்களுக்கு முன்பு மணிமொழி என்ற உந்தன் பெயர் கூட எனக்கு அந்நியம் தான். ஆனால் இன்று அப்படியா ….? கால்கள் இல்லாமல் ஓடும் காலத்துடன் யாரும் போட்டி போட முடியாது. ஆறு ஆண்டுகளை ஓரந்தள்ளி ஓடிக் கொண்டிருக்கிறது காலம். இருப்பினும்,என் மனம் மட்டும் ஐம்பது வயதை விழுங்கி வெறும் நாலு வயதாகப் பொய்க் கணக்கு சொல்லிச் சமாளிக்கிறது தெரியுமா உனக்கு?

    ஹி ஹி ஹி ஹி ஹி ஹி …..!

    சிரிக்காதே. அது தான் நிஜம்.

    நாம் சந்தித்ததும் பிரிந்ததும் இரயிலில் தான். இடைப்பட்ட பதினைந்தே நாட்களில்,’ஆன்மீக சுற்றுலா’ என்று எண்ணிக் கொண்டு நூறு பேர்களில் ஒருத்தியாக கலந்து கொண்ட நாம் மட்டும் நம்மில் வளர்த்துக் கொண்ட நட்பு தான் நாம் வாழ்ந்த காலங்களுக்கு ஈடானது. இல்லையா?

    “ஓடுது ரயில் பாதை மனம் போலவே
    பாடுது குயில் அங்கே தினம் போலவே
    மா மரம் பூ பூத்து விளையாடுது
    காடெங்கும் புது வாசம் பரந்தோடுது
    பார்த்தது எல்லாம் பரவசம் ஆகும்
    புதுமைகள் காண்போம் என்னாளுமே
    இனி வாழ்வில் நீதான் என் சொந்தமே”

    ஷ்….ஷ்….ஷ்….! கொஞ்சம். லெட்டரைப் படிக்க விடேன்.

    அன்று,இரயிலில் உனது ஊர் வந்துவிடும் அவசரத்தில் எனது கைகளை இறுக்கிப் பற்றிய வண்ணம் ….”இன்னும் இரண்டு நிமிடங்களில் நான் ‘கடலூரில் ‘இறங்கிடுவேன்…நீ உன் வீட்டுக்குப் போனதும் என்னை மறந்துடாதே….நினைவு வெச்சுக்கோ ஜெயா..என்ன..இந்த காசியாத்திரை பயணத்துல உனது நட்பும் பாசமும் தான் இறைவன் தந்தது “இறைவன் இதயங்களை இணைப்பதில் இணையற்றவன்…” நீ கடைசியாகச் சொல்லிச் சென்ற வாக்கியம் இன்னும் முற்றுப்புள்ளி இன்றி உனது அடுத்த வாக்கியத்திற்காக காத்திருக்கிறது மணிமொழி.

    ‘திருப்பாதிரிபுலியூர்” மஞ்சள் நிறத்தில் கறுப்பு வண்ண எழுத்துக்கள் என் கண்களை மறைத்தது. நீ இரயிலை விட்டு இறங்கியதும் உன் கலங்கிய கண்கள் என்னைப் பார்த்துத் திரும்பவும், உனது குழந்தைகளும் கணவரும் ஓடி வந்து உன்னைக் கட்டிக் கொண்டதும், அதைப் பார்த்த என் மனம் ஆனந்தம் அடைந்ததும், ஏதோ நினைவுக்கு வந்து மறந்ததைச் சொல்ல வந்தவளாக நீ திரும்பும்போது தண்டவாளத்தை விட்டு ஊர்ந்து வேகம் பிடித்தது ரயில்..என்ன சொல்ல நினைத்து திரும்பியிருப்பாள்? . விடை தெரியாத கேள்விகள் என்னுள் இன்றுவரையில்.

    நீ இறங்கிச் சென்றபின், நீ அமர்ந்த இருக்கை காலியாகி எனக்குள் எதையோ உணர்த்தியது. முகத்தைத் ஜன்னல் பக்கமாகத் திருப்பிக் கொண்டேன். அருகில் இருந்த சக பயணி அம்மையார் என் கவனத்தைக் கலைத்து , நீங்க ரெண்டு பேரும் அக்கா தங்கச்சிங்க இல்லையா…..? நான் அப்படில்ல நினைச்சேன்..அவுங்க அங்கிட்டு எறங்கிப் போறாங்க….நீங்க எங்கிட்டு போகணும் …? என்று கேட்கவும், ….எனக்குள் பெருமை பொங்கியது.

    நாங்க இதே இரயிலில் பதினைந்து நாட்கள் முன்பு காசி யாத்திரைக்காக போனோம்.. அவங்க ரயில் சினேகிதி தான் . ஆனால் பதினைந்து நாட்கள் கூடவே வந்தவங்க…என்றேன். மனம் ஏனோ துணுக்குற்றது.

    கண்ணாடியில் என்னைப் பார்த்துக் கொள்ளும் போதெல்லாம் என்னால் உன்னை நினைக்காமல் இருக்க முடியாது. நீயும் சொல்லிக் கொள்வாயே….அதெப்படி….பிரம்மன் ஒரே அச்சை பயன்படுத்தி .என்னையும் உன்னையும் அடுத்தடுத்துப் படைச்சாராடி….?
    என்று கேட்டு என் பதிலுக்காக ஆவலாகக் காத்திருப்பாய்.

    பதில் சொல்லத் தெரியாத நானும், அதை விட அதிசயம்…..உன்னையும் என்னையும் இப்படி இரயில் சினேகிதமாக்கி திருவிளையாடல் பண்றாரே அதை என்னன்னு சொல்வது? என்பேன்.

    நாம் சிரித்துக் கொள்வோம். வாழ்வின் அதிசயத்திற்கு அளவேயில்லை மணிமொழி என்பேன். நீயும் “தலையை ஆட்டி ஆமாமாமாம்’ என்று ஆமோதிப்பாய்.

    இன்னும் சிதம்பரம் சென்று சேர ஒரு மணி நேரம் இருக்கும். கண்கள் ஜன்னலின் வழியாக வெளியே நோக்கியது. பூமி தனது பச்சைப் பட்டுப் புடவையை வெய்யிலில் காய வைத்திருப்பது போல பசுமை கண்களைத் தாலாட்டியது. இளந்தென்றல் முகத்தைத் தடவிச் சென்றது. கனத்த மனம் இலவம் பஞ்சானது..

    ஆச்சு…..இன்னியோடு யாத்திரை முடிந்து வீட்டுக்குச் சென்று பழையபடி அதே..சமையல் பாத்திரத்தைக் கையிலெடுக்க வேண்டியது தான்…நானும் வீட்டைக் கூட்டிக் கழித்துப் பெருக்கி வகுத்து விடை தெரியாத வீட்டுக் கணக்கைப் போட்டுப் போட்டு அழிக்க வேண்டும். இத்தனை நாட்கள் கூடவே நடந்து வந்த உனக்கும் அங்கே உன் வீட்டில் அதே நிலை தான். எனக்கும் தெரியும்..

    ஆனால் என்ன, ஒவ்வொரு நாளும் நாம் நினைத்து நினைத்து புளங்காகிதம் அடைய இந்தப் பதினைந்து நாட்களில் எத்தனை விஷயங்கள் விஸ்வரூபமாய்….வாழ்கையை, உயிரை, அன்பை பாசத்தை, வாழ வேண்டும் என்ற வெறியை, உயிர் மீது மரியாதையை , மரண பயத்தை, நாம் அனுபவிக்கும் சுகமான வாழ்வை….ஏழ்மையை இயற்கையை,இயற்கையின் சீற்றத்தை, அதன் ஆளுமையை நமக்கு நாம் வாழும் உலகத்தில் மறு பகுதியை நம் கண் முன்னே அனுபவமாய் உணர்வு பூர்வமாக காண்பித்து புத்தி சொன்னது. இந்த அனுபவம் நமக்கு இந்த யாத்திரை சென்றிராவிட்டால் என்றைக்குமே கிடைத்திருக்காது.இல்லையா மணிமொழி.

    நடந்ததெல்லாம் கடந்து போய் பல வருடங்களானாலும் என்னுள் அந்த நினைவுகள் இன்று வரை அகலாமல் இருப்பதை நீ இந்தக் கடிதம் மூலம் படிக்கும் போது, எனது நினைவுப் படுகையுள் புகுந்திருக்கும் அத்தனை நிஜங்களும் உனக்குள்ளும் பதிவாகியிருக்கும் அல்லவா அதனால் தானோ என்னவோ உன்னைப் பற்றிய எண்ணம் வரும்போதெல்லாம் நாம் சேர்ந்து கடந்த அந்த நிழல் நாட்களும் நம்முடன் நினைவுகளாக மீண்டும் பயணிக்குமே என்பதால் இதையெல்லாம் இப்போது இங்கே எழுதுகிறேன்.

    எதிரெதிரே உட்கார்ந்திருந்தும் நாம் ஓரிரு முறைகள் மட்டும் பார்வைகள் பரிமாற்றத்துடன் ஒருவருக்கொருவர் சம்மந்தமே இல்லாமல் அமர்ந்திருந்தோம். அதை இப்போது நினைத்தாலும் சிரிப்பு தான் வருகிறது. நீ தான் முதலில் பேசினாய் “அந்த புத்தகத்தைத் தரீங்களா கொஞ்சம்..பார்த்துட்டு தரேன்” கொடுத்ததும் வாங்கிப் புரட்டிப் பார்த்துவிட்டு திருப்பி கொடுத்து விட்டாய்.

    ஏன்….? என் மௌனமான கேள்வி உனக்குக் கேட்டிருக்க வாய்ப்பில்லை.

    அந்தப் புத்தகத்தில் ஒன்றும் இல்லை….என்றாய்.

    என்ன எதிர்பார்க்கிறீங்க? என்றேன்.

    காசிக்குப் போறமே…ஏதாச்சும் தேவாரம்..திருவாசகம்…என்று அடுக்கியவளை….இந்தாங்க….தேவாரம்…! என்று என் கைப்பையிலிருந்து எடுத்துக் கொடுத்தேன்.

    சிரித்துக் கொண்டே வாங்கியவள்..உங்க பேரு ? என்றதும்….நமக்குள் பரஸ்பர பரிமாற்றம். கேள்வியும் பதிலுமாய் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள அந்த சில நொடிகள் போதுமானதாக இருந்ததே.

    ரயிலின் தாளஜதி காதோடு பேசிக் கொண்டே இருந்தது. எனது கண்கள் ஜன்னல் வெளியே தூரத்து மேகங்களை அளவெடுத்தது. திடீரென்று உனது கைபேசி பாட ஆரம்பித்தது.
    ‘யாரோ யாருக்குள் இங்கு யாரோ
    யார் என்று கண்டு யார் சொல்வாரோ

    கடல் கொண்ட மழை நீரை
    இனம் காண முடியாது

    உண்ணும் சோறு நூறாகும்
    ஒன்றுக்கொன்று வேறாகும்

    உப்பில்லாமல் என்னாகும்
    உப்பைப்போல
    நட்பை எண்ணுவோம்”
    நான் சிரித்ததை நீ பார்த்துவிட, என்னாச்சு? என்ற உனது கேள்விக்கு…கொஞ்ச நேரம் முன்னாடி ‘தேவாரம்’ கேட்டதை நினைச்சேன்….சிரிச்சேன். என்றேன்.

    ‘தேவாரம்’ படிச்சா இந்தப் பாட்டு கேட்கக் கூடாதாக்கும்…நீங்க போட்ட சட்டமா? என்று கூலாகக் நீ கேட்டதும்.
    அட….இது நன்னாருக்கே…..! என்ற நான்…ஆமாம்…நான் சட்டம் போட்டா நீ கேட்டுடப் போறியாக்கும்…என்றேன் உரிமையோடு.

    அதன் பின்பு நமக்குள் ஒரு புரிதலும் கூடவே நடந்ததை நமது பேச்சுவார்த்தைகள் பிரமாணம் செய்து கொண்டே வந்தது.

    இரயிலில் சள சள வென்று பலரும் பேசிக் கொண்டே வந்தார்கள். நீயும் நானும் மட்டும் பல வேளைகளில் ஒன்றும் பேசாமல்…! மௌனம் நம்மைச் சுற்றி வேடிக்கை பார்த்தது. இரவு ஓடிப் போனது. வாரணாசியில் சென்று நம்மை இறக்கி விட்ட இரயிலைத் தட்டி நன்றி சொல்லிவிட்டுக் கிளம்பினோம்.

    நூறு பேர்களோடு இருந்தாலும் கூட…அதில் நாம் இருவர் மட்டும் தனியாகிப் போனோம். ‘மந்தைகளோடு சேராத ஆடுகளா நீங்க ரெண்டு பேரும்’ என்று நம் குழுமத் தலைவர் கேலி செய்ததும் நீ அவரைப் பிலு பிலு வெனப் பிடித்துக் கொண்டதும், இதோ இவ இருக்கா மாமா…ஹிந்தி தெரியுமாம்….பார்த்துப்பா…ச்சே..இங்கயும் நமக்கு சுதந்திரமே இல்லையா …என்றதும் அவர் ‘துண்டைக் காணோம்….ரகத்தில் ‘அம்மா…மணிமொழி, உங்க ரெண்டு பேர் வம்புக்கே நான் வரலை….பத்திரமா வந்து சேருங்க என்று சொல்லிவிட்டு நம்ம திசைக்கே கும்புடு போட்டுட்டுப் போனதை இப்போ நினைத்தால் கூட சிரிப்பு வருகிறது.

    நம்மைக் ஏன் என்று கேட்க ஆளில்லை என்ற தைரியத்தில் விடியும் முன்னமே கிளம்பி கங்கைக் கரைப் படித்துறைக்குச் சென்று அமர்ந்து கொண்டோம். உன் கைபேசியில் மெல்லிய புல்லாங்குழல் இசைக்க, மூடிய கண்களுக்குள் கிருஷ்ண பகவான் எங்கேயோ குழலூதுவது போல கற்பனை செய்ய வைத்தது. குளிர் காற்று மெல்ல வீச, இருள் விலக விலக கண்முன்னே பரந்து விரிந்த கங்கை மெல்ல மெல்ல கண்விழிப்பது போல அலையலையாய் ஒளிக்குள் சிக்கிக் கொள்ளும் இனிமையை கண்கள் இரண்டும் நிழற்படம் எடுத்துக் கொண்டது.
    ஆங்காங்கே படகுகள் ஆயத்தமாக நாமும் அந்த இளங்காலைப் பொழுதில் படகு சவாரி செய்தோமே…நினைத்தே பார்த்திராத திவ்ய தருணம் அது. அதிகாலை நேரத்தில் கங்கையில் படகு சவாரி நினைத்த போதேல்லாம் கிடைத்து விடுமா என்ன?

    எனக்கு மிகவும் பிடித்தமான
    “கங்கே……
    துடியில் உணரும் த்ரிபுட கேட்டு
    துயிலுணர்னு வா…..டி எண்டே…..
    நடன மண்டபம் துறந்து வா…..
    கங்கே…..கங்கே……!

    பாடகர் ஜேசுதாஸ் அவர்களின் மந்திரக் குரலில் வடக்குநாதன் படப்பாடலை மானசிகமாக மனதுக்குள் இசைத்து லயிக்கிறேன்..

    எத்தனை அருமை….எத்தனை இனிமை…என்று அமைதியை உள்வாங்கிக் கொள்ளும்போது தானே வாழ்வின் அர்த்தம் புரிகிறது.
    அரைமணிநேரப் படகு சவாரி அதுவும் இயற்கைச் சூழலோடு இனிமையான இசையோடு அன்றைய பொழுதின் ஊக்கபானம் நமக்கு.
    மெல்ல இறங்கி அப்படியே கங்கையில் முழுக்குப் போட்டுவிட்டு நாம் தங்கியிருந்த இடத்தை நோக்கி நடையைக் கட்டினோமே ஞாபகம் வருதா?

    காலையில் காசி விஸ்வநாதர் தரிசனம் என்று நம் எல்லோரையும் அழைத்துச் செல்ல, சின்ன சந்துகள், முட்டுச் சந்துகளை கடந்து தெருக்களைத் தாண்டி நடந்தே சென்றதும் ஒரே கால்வலி நாம இங்கேர்ந்து ஒரு சைக்கிள் ரிக்சா வெச்சுண்டு போயிடலாம் என்று சொன்னதும், இருவரும் ஒரு சைக்கிள் ரிக்சாவில் ஏறி ‘மந்திர் ஜானா ஹை ‘ என்று ஏறி உட்கார…அவனும் மெல்ல ரிக்சாவில் ஏறி உட்கார்ந்தவன் ‘அந்த நாள் முதல் இந்த நாள் வரை வானம் மாறவில்லை ” எனும் ஸ்டைலில் மெல்ல ஓட்ட …..பொறுமை இழந்தவளாக “ஜல்தி ஜானா ஹை ….தோடா ஜல்தி சலோ..” என்று அவசரப்படுத்த…அவன் வேகமாக சந்து சந்தாகச் சுற்றிக் கொண்டு வந்து நம்மை இறக்கி விட்டு விட்டு “பீஸ் தேதோ….என்றான்.

    இருபது ரூபாயாம்…என்று கொடுத்துவிட்டு இறங்கினதும் அவன் ஏனோ தலை தப்பியது என்பது போல விருட்டென்று பறந்தான். பிறகு தான் தெரிந்தது நாம் இருவரும் எங்கு ஏறினோமோ அதே இடத்திலேயே வந்து இறங்கினோம் என்று. கண்முன்னே….சிறு சந்து..அதன் உள்ளே தான் கோயில்.என்ற விஷயம் புரிந்ததும் நம் இருவர் முகத்திலும் ஈயாடலை. அரைமணிநேரம் வேஸ்ட் என்று சொல்லி என்னை அடிக்க வந்தாயே….உன்னை நம்பினேன் பாரு…..ஹிந்தி தெரிஞ்சுமா உன்னை ஏமாத்தினான்…என்று நீ கேட்டதும். இல்ல பக்கத்தில நீ இருந்ததால தான் ஏமாத்தினான் என்று நானும் சால்ஜாப்பு சொல்லிக் கொண்டேன்.

    டீ …ஏமாத்துறாங்க…ஏமாந்துடாதே….ஜாக்கிரதை….இப்படிச் சொல்லிக் கொண்டே நாம் ஏமாந்த இடங்கள் தான் ஜாஸ்தி…!

    ஹரித்வாரில், பதஞ்சலி ராம்தேவ் பாபா ஆஷ்ரம் சென்று பார்த்துவிட்டு அங்கிருந்த கடையில் இரண்டு பாட்டிலைத் தூக்கிக் கொண்டு வரும் என்னைப் பார்த்து, அது என்ன என்று துளைத்தெடுத்தாய். உனக்கு மட்டும் கேட்கும் குரலில் “கோமியம்” என்றேனே..உடனே நீ அடிப்பாவி அதை ஏண்டி பணத்தைக் கொடுத்து வாங்கறே நம்ம ஊரு தெருவுலயே ஒரு நாளைக்கு ஓசிலயே ஒன்பது லிட்டர் பிடிச்சுக்கலாமேடி என்று நீ சொன்னதும் நம் அருகில் கூட இருந்த அத்தனை பேருமே சிரித்த சிரிப்பும் என் முகம் போன போக்கும் இன்னைக்கும் உனக்கு நினைவு இருக்கும் தானே?

    ரிஷிகேஷில் சென்று லக்ஷ்மன் ஜூலாவில் ஆடி ஆடி நடந்து சென்று அந்தக் கடைசியில் செருப்பைக் கழட்டி வைத்துவிட்டு பின்பு அதை அப்படியே மறந்து போய் திரும்பி வந்தபின் செருப்பின் நினைவு வர அந்தத் தொங்கு பாலத்தைப் பார்த்து மீண்டும் அது வரை சென்று வர பயந்து செருப்பையே நினைத்துக் கொண்டு வெறுங்காலில் ரிஷிகேஷ் முழுக்க நடக்க நடக்க…..”உனக்குப் புண்ணியந்தாண்டி …..” என்று நீ உசுப்பேத்தி விட்டு வேடிக்கை பார்க்க….எத்தனை மறக்க முடியாத நிகழ்ச்சியை நாம அனுபவிச்சிருக்கோம் இல்லையா மணிமொழி?

    நம்ம ரஜனிகாந்த் அவர்கள் வழக்கமாகத் தங்கும் அறையை நீ உனது கைபேசியில் படம் பிடித்துக் கொண்டு ஊருக்குப் போனதும் உனக்கொரு காப்பி தரேன்ன்னு சொல்லிவிட்டு இத்தனை வருஷமா நீ தரவேயில்லை…..என்று உன்னிடம் கேட்டுக் கொண்டே இருப்பேனே நினைவு இருக்கா…மொதல்ல ஒரு காப்பி போட்டு வை..! நரசுஸ் காப்பி இல்லடி….நன்னாக் காதுல வாங்கிக்கோ. ஃபோட்டோ காப்பி…அது..!

    ரிஷிகேஷ் மேலே சஹஸ்ராரம் என்ற ஒரு இடத்திற்குப் போனதையும், அங்கிருந்த நீர்வீழ்ச்சியைப் பார்த்து விட்டு அந்த ஸ்படிக நீரை பாட்டிலில் பிடித்துக் கொண்டு நாம் வருவதற்குள் நம்மை விட்டுவிட்டு பஸ் கிளம்பிவிட ரெண்டு பேரும் தனித்து விடப் பட்டு தவித்துப் போனோமே….அந்த சில நிமிடங்கள்…உனது கைபேசியில் சார்ஜ் தீர்ந்து விட, அந்தி மயங்கி இருள் சூழ, மழை கொட்டோ கொட்டுன்னு கொட்ட…நீ என்னை திட்டோ திட்டு திட்ட…நான் அழாத குறையா, ரஜனி ஸ்டைல்ல ‘கடவுளே…கடவுளே….கடவுளே….’ என்று படபடக்க…
    எப்படி வந்து சேர்ந்தோம் என்றே இன்னும் புரியவில்லை..எல்லாம் அந்த ஈசன் செயல் தான். என்ன சொல்ற? திரும்பி வந்து ஆளுயர ஸ்படிக இலிங்கத்துக்கு அந்த சஹஸ்ராரத்தில் பிடித்த நீரை விட்டு வழிபட்டதும் பட்ட துன்பம் சட்டென மறந்து போனதே….!

    பத்ரிநாத் பார்க்க கிளம்பியாச்சு. நூறு பேரும் இரண்டு சொகுசு பஸ்ஸில் பிரிந்து கல கலப்பாக ஏறி அமர்ந்ததும் ஒன்றன் பின் ஒன்றாக பஸ் கிளம்பியது. வெளியில் ஒரே மழை..குளிர்…அதிகமாக ரிஷ்கேஷில் மினெரல் வாட்டர் பிஸினெஸ் தான் இருந்தது . தண்ணீர் பாட்டில் ரெண்டு வாங்கிக் கொண்டோம்.அப்போது தெரியாது அந்தத் தண்ணீர் பாட்டிலின் எப்படி உதவும் என்பது..

    நான்கு மணிநேரம் இமயத்தின் மலையில் பஸ் வளைந்து நெளிந்து நம்மை இழுத்துக்கொண்டு செல்ல ஆரம்பித்தது. அதள பாதாளத்தில் கங்கை கரை புரண்டு ஓடுகிறாள். காசியில் பார்த்த அமைதியான கங்கை ஆற்றிற்கும், ஹரித்வாரில் பார்த்த கங்கை நதிக்கும் எந்த சம்பந்தமும் இல்லாத காட்டாற்று வெள்ளமாகக் கரை புரண்டு ஓடியது ரிஷிகேஷ் மலையில்.

    நம்மோடு வந்த ஒரு டாக்டர் அனைவரிடமும் சொல்லுகிறார்….”நான் இங்க ஒரு டாக்டர்…இந்த பஸ்ஸுல உங்களோட வரதுல உங்களுக்கெல்லாம் ஒரு சௌகரியம்…என்னன்னா…என்கிட்டே எல்லா விதமான மாத்திரைகளும், மருந்தும் இருக்கு…உங்க யாருக்காவது ஏதாவது ஒண்ணுன்னா உடனே என்கிட்டே சொல்லுங்கோ…” வாமிட் , தலை சுற்றல், மயக்கம்..என்று அடுக்கிக் கொண்டே போனார். கூடவே பெருமை பொங்கப் பார்த்தார் அவரது மனைவி.

    நல்லவேளையா….நம் பஸ்ஸில் ஒரு டாக்டர் இருக்கார் இல்லையா? என்று நிம்மதியானோம். இமயம்…….வானளாவ உயர்ந்த மலை..பல இடங்களில் மலையைப் பார்த்தால் பயமாகவே இருந்தது. மேலே ஏற ஏற…..காதை அடைத்துக் கொண்டோமே….திடீரென்று நம் பஸ்ஸின் முன்னே ஒரு பெரிய பாறாங்கல் பெருத்த ஒலியோடு வந்து விழுந்து வழிமறித்தது. ஊஊஊஊஒஈஈஈ..என்ற சத்தம் நாம் எல்லோருமே ஒரு கணம் பயந்து வீரிட்டோம் இல்லையா? அந்த பயம் இது வரை வந்ததில்லை. பஸ் அதே இடத்தில் சத்தியாகிரகம் செய்தது. பஸ் உள்ளிருந்து ஒவொருவராக இறங்கி எப்படியாவது அந்த பாறையை உருட்டி தள்ளி விடலாம் என்று பிரயத்தனம் செய்தார்களே..மழை வேறு விடாமல் பெய்தது. அடுத்தது வேற பாறை எதாச்சும் வந்து விழுமோ….? தலையில் பாறாங்கல்லைப் போட்டார் என்று சொல்லுவோமே….என்றெல்லாம் வாய்க்கு வந்ததைப் பேசிக் கொண்டிருந்தோம்.

    முப்பது பேர்களின் முயற்சியால் கூட அந்தப் பாறையை நகர்த்த முடியவில்லை. சிறிது நேரத்தில் ஒரு கிரேன் வந்து தனது இரும்புக் கையால் அலாக்காகத் தூக்கி அந்தப் பக்கமாக எறிந்ததே….பஸ் மீண்டும் விடாக் கண்டனாக மேலே கிளம்பியது. இன்னும் ஏழே கிலோமீட்டர் தூரம் தான். கௌரி குண்ட் வருவதற்கு. அப்பாடா என்று பெருமூச்சு விடும்போது…வண்டி இனிமேல் போகாது என்று சொல்லி நிறுத்தி விட்டானே.

    அத்தனை பேரின் என்னாச்சு? என்ற கோரஸான ஆவலும்….அதோ மலையிலிருந்து சரிவு…..விழுகிறது….அவன் சொன்ன இடத்தில் செக்கச் செவேல் என்று செம்மண் குழம்பு அருவியாக வழிந்து விழுந்து கொண்டிருந்தது. அதில் ஒரு டையர் ஏறினாலும் அவ்ளோ தானாம்….பஸ் வழுக்கிக் கொண்டு அதள பாதாளத்தில் விழுந்து விடுமாம். அவன் சொல்லிவிட்டு எல்லாரும் ஜன்னலை இழுத்து மூடிக்கங்க . இனிமேல் நாளைக்கு காலை தான் வண்டி திரும்பும்..மேற்கொண்டு போகாது. பத்ரியும் இல்லை கேதாரும் இல்லை…என்று சொல்லிவிட்டான்.

    அத்தனை மனங்களும் இருளில் மூழ்க பயத்தின் உச்சத்தில்…..மெல்ல மெல்ல சூழ்நிலையைப் புரிந்து கொள்ள எத்தனை சிரமப் பட்டோம் இல்லையா?

    நாம் ஏறிவந்த பஸ்ஸில் இருந்த ஒவ்வொருவரும் முதலில் சள சல வென்று பேசினார்கள்…பின்பு மெல்ல மெல்ல பேச்சு அடங்கியது…மௌனம்…..அமைதி….பயம்…..பல ஆயிரம் அடிகள் உயரத்தில் இமய மலை உச்சியில் ஒரே ஒரு பஸ் மட்டும் போகும் அளவுக்கு இருக்கும் இடத்தில் பஸ் நின்றுவிட, ஒரு பக்கம் உயர்ந்த மலை இந்தப் பக்கம் படு பாதாளம்….கீழே கரை புரண்டு ஓடும் நதி…எப்போ வேண்டுமானாலும் மேலிருந்து பாறை பெயர்ந்து பஸ் மீது விழலாம்…நிலச் சரிவு உண்டாகலாம்…..எதுவும் நடக்கலாம். உயிருக்கு உத்திரவாதம் இல்லை.

    முதல்லயே கைபேசி எல்லாம் உயிர் விட்டது. உண்மையின் சாரம் நமக்குப் புரிந்த போது பயம் பற்றிக் கொண்டதே….நீயும் நானும்…..
    கைகளைப் பற்றிக் கொண்டோம்….நான் என் குடும்பத்தையும், நீ உன் குடும்பத்தையும் மனசுக்குள் நினைக்க ஆரம்பித்தோம். இங்கெல்லாம் வந்திருக்கவே வேண்டாமோ…..என்று கூட முனுமுணுத்தோம் . அதற்குள் தானே அது நடந்தது..

    அந்த டாக்டரின் மனைவி வீல் என்று கத்திக் கதற ……அய்யய்யோ…..என்னாச்சுன்னா….என்று சொல்லி அழ ஆரம்பித்தாள் ….அவருக்கு உடல் முழுதும் வியர்த்து விட, மூச்சுத் திணறல் எடுக்க…..மயக்கம் வர..மைல்ட் ஹார்ட் அட்டாக் வந்ததன் அறிகுறி அனைத்தும் தெரிய வந்தது. அத்தனை பேருமே நடுங்கிப் போனோமே…உடனே விஷ்ணு சஹஸ்ரநாமம் சொல்ல ஆரம்பித்தோம்….மறுபடியும் மறுபடியும் சொன்னோமே…அத்தனை பேரின் பெட்டிகளும் அடுத்த பஸ்ஸில் வர, நாம் மட்டும் இங்கே மாட்டிக் கொள்ள…அந்த மாமி..இவரோட மாத்திரைகள் எல்லாம் அந்த பஸ்ல மாட்டிண்டுடுத்து….இப்ப நான் என்ன செய்வேன்..? .என்று கதற, ஒரு வழியா அவரை அப்படியே பஸ்சுக்கு உள்ளயே தரையில் படுக்க வைத்து, நாம் கொண்டு போன தண்ணீரை அவர் மேல் தெளித்துக் குடிக்க வைத்து சிறிது நேரத்தில் அவர் மெல்லக் கண் விழித்தார்..அவருக்கு உயிர் வந்ததோ இல்லையே நமக்கெல்லாம் உயிர் வந்தது…இல்லையா…? ஆனாலும் ஒருத்தர் முகத்தில் சிரிப்புக்கான அறிகுறி கூட இல்லையே…..பின்னே…எப்படி? நம்ம உயிரே இங்க பெரிய கேள்விக்குறி மாதிரி இருக்கே…எப்படிச் சிரிக்கறது.

    மணிமொழி…..!

    ஜெயா….!

    நமது குரல்கள் மட்டுமே நம்மை இங்கு இருக்கிறோம் என்று அடையாளம் தெரிந்து கொள்வதற்கு…..!
    எங்கும் இருள் சூழ்ந்து விட்டது. மலை, மரங்கள்.வானம்,பள்ளம்,ஆறு,பஸ்…என்று எதுவுமே அடையாளம் இல்லாத ஒரே கும்மிருட்டு…அசுரக் காற்று பஸ்ஸை அசைத்துப் பார்த்தது…..! காற்றுத் தோற்றுப் போனதில் நமக்கு கொஞ்சம் சந்தோஷம். பசி…..தாகம்….பயம்……கவலை…என்னென்னவோ கற்பனைகள், சிந்தனைகள்…..இன்றோடு இப்படம் கடைசிடி……! என்று சொன்னதற்கு…..அத்தனை பேரிடமும் நன்கு வாங்கிக் கட்டிக் கொண்டேன். நினைவிருக்கா…..?

    ஐயோ….மணிமொழி…..வாழ்க்கையில் இந்த நிலை வேற யாருக்குமே வந்துடக் கூடாதுடி….பஸ் மேலே பாறை உருண்டு விழுமா? பஸ்ஸே மலைச் சரிவுல உருண்டு விழுமா….? எப்போ எது நடக்குமோ? என்ற கவலையில்…..வெறும் சப்தத்தை மட்டும் வைத்து திகிலோடு தூங்காமல் விடிய விடிய உட்கார்ந்திருந்தோமே நினைவிருக்கு இல்லையா?

    பின்னே…மறக்க முடியுமா…?

    நமக்கு பத்ரியும் வேண்டாம் கேதாரும் வேண்டாம்….வீட்டுக்குப் போனால் போதும்….! அதுவாவது நடக்குமா?

    மழை விடாமல் பெய்தது…..! அருகில் அப்பப்போ டப்டப டப் டப என்று சத்தம் கேட்கும்…பாறைகள் எங்கோ உருளும் சப்தம்…நாம் திகிலுடன் கைகளைப் பற்றிக் கொள்வோம்…கண்களுக்குள் ‘ கமலும் ரேகாவும்’ “என்ன சத்தம் இந்த நேரம்” பாடிவிட்டு பயந்த நிமிடத்தை நினைவுக்கு கொண்டு வந்து நீட்டும். சீ…..போ….என்று துரத்தினாலும் மீண்டும் …ஒன் …டூ…த்ரீ….என்று காதுக்குள் கேட்கும்.

    மணிமொழி…நெஜம்மா பயம்மா இருக்குடி….!

    எனக்கும் தாண்டி…ஜெயா…!

    அந்த நேரத்திலும் ஒரு பாட்டு…..சட்டி சுட்டதடா…கை விட்டதடா…..புத்தி கெட்டதடா நெஞ்சைத் தொட்டதடா…..! போனால் போகட்டும் போடா….!

    என்னடி…..இந்த மாதிரி பாட்டெல்லாம் பாடறே….! வேண்டாம் ஜெயா…..பயமா இருக்கு….என்று எனது கைவிரல்களை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு நடுங்கினியே. அதை உணர்ந்ததும், நானும்….அச்சமில்லை….அச்சமில்லை….அச்சமென்பதில்லையே…உச்சி மீது இமயம் வந்து கல் சொரிந்த போதிலும்…அச்சமில்லை…அச்சமில்லை……என்று எனது நடுங்கும் குரலில் …….நா…நா….நான்….ப் ப் ப் ப் பா ட ….!

    அப்படியே…கண்ணை மூடித் தூங்கிருவோம்….பொழைச்சுக் கிடந்தா நாளைக்குப் பார்ப்போம்…என்றபடி .பஸ்ஸுக்குள் நம்மையும் மீறி உறங்கிப் போனோம்…காலையில் கண்விழித்தபோது…..நாம் அனைவரும் உயிருடன்…இருக்கிறோம் !

    எத்தனை சந்தோஷம் நம்முள்..!…மலைகளும், மரங்களும், பளிச்சென்று வண்ணப் படங்களாகத் தெரிந்தது.மழை சுத்தமாக நின்று விட்டிருந்தது..

    இன்று பிழைத்தது இறைவன் நமக்குப் போட்ட உயிர் பிச்சை தான். நேற்று இரவு எதுவும் நடந்திருக்கலாம்….நமக்கு ! அது தான் நிஜம். இல்லையா?

    ஒரு நாள் தூக்கம், ஒரு நாள் பசி, ஒரு நாள் எங்கும் இறங்கி நடக்க இடமில்லாமல்……..கண்ணாடி வழியாக ஒரே மலையைப் பயந்தபடி பார்த்துக்கொண்டு……”அந்த ஒருநாள் பீதியில் உறைந்தோம்…..இன்று நினைத்தால் என்னென்ன பயமோ”
    பாதி விழிகள் மூடிக் கிடந்தே….நடுங்கும் வேளையிலே…நீ சாட்சியடி மணிமொழியே ….! அன்றொருநாள்….இமய மலையில்….
    நீ இருந்தாய் என் அருகே…!

    அந்தப் பொழுதிலும் நான் பாட….அதை நீ ரசிக்க…இன்னும் நாம மலை இறங்கலை நினைவு வெச்சுக்க…என்று நீ சொன்னது இன்னும் என்
    நெஞ்சுக்குள் திக் திக் திக்..!

    மீண்டும் ரிஷிகேஷ்…அங்கு ஒரு ஆஷ்ரம் அருகே….ஒரு பெரிய மரம்…இது நினைவு இருக்கா மணிமொழி…!
    இந்த மரம் தான் ருத்திராட்ச மரம் என்று நாம் நினைத்துக் கொண்டு அதை தொட்டுத் தொழவும், இன்னும் பலர் வேக வேகமாக வந்து அந்த மரத்தை கட்டித் தழுவி, அதற்கு நமஸ்காரம் செய்து, கண்ணில் ஒத்திக் கொண்டு …”இதுவா..இதுவா…ஹேய்…இது ருத்திராட்ச மரமாம்…” என்று இன்னும் சிலரை அழைக்க… நம் கண்கள் வேறு திசையில் பார்த்ததும், அங்கு சுற்றிலும் இரும்பு வலை போட்டு அதனுள்ளே ஒரு மரம்….’ருத்ராட்ச மரம்’ என்று ஹிந்தியில் எழுதி இருந்தது. அப்போ இந்த மரம் என்று நாம் தலையை உசத்திப் பார்க்கையில்…இது ஒரு காட்டு மரம்…என்று தெரியவர…..நாம் இருவரும் விழுந்து விழுந்து சிரித்தோமே. அதற்குள்..”நாம எத்தனை புண்ணியம் பண்ணிருக்கோம்..தெரியுமா….இப்படி ஒரு ருத்திராட்ச மரத்தையே கட்டிப்பிடிக்க…!” என்று பில்ட் அப் வேற..

    ஹேய்….மணிமொழி….என்னாச்சு…இப்படிக் கொறட்டை விடறே…! ஹேய்…இப்பவே தூங்கிட்டியா? பாதி லெட்டர் தான் படிச்சேன்…இன்னும் எவ்ளோ இருக்கு தெரியுமா? அதுக்குள்ளே இப்டி தூங்கிட்டியே !….கண்டிப்பா…..என்னால.இந்தத் தாஜ்மகாலைத் தூக்க முடியாதுடி….என்று சொல்லிச் சிரித்தபடி தண்ணீரை எடுத்து மணிமொழி மீது தெளித்து எழுப்புகிறேன்..

    “ஐயய்யோ …இடி….மழை…” என்று நாகேஷ் ஸ்டைலில் துள்ளி எழுந்து பேந்தப் பேந்த விழிக்கிறாள் மணிமொழி.

    ஜெயா…மனியாச்சுடி….பையன் காலேஜ்லேர்ந்து வர நேரம்…என்றவள்…வீட்டுக்குப் போகணும்…..என்று சிறகை விரித்துச் சிட்டாகப் பறந்தாள் மணிமொழி. அவளது கைகளுக்குள் கடிதமும் பத்திரமாக.

    மணிமொழி….கடைசி ஒரு வரியை வீட்டுக்குப் போய் படி….என்ன….?

    எனது ஐம்பது வருட கால வாழ்வில் ஒரு பதினைந்தே நாட்கள் என் இதயத்தை விட்டு அகலாமல் பச்சைக் குத்திக் கொண்டது அந்த நாட்கள். உனக்குள்ளும் அந்தத் தாக்கம் ஏற்பட்டு இன்னும் அப்படியே இருக்கும் என்ற என் நம்பிக்கையை நீ புறந்தள்ள மாட்டாய் என்றறிவேன். இனிமேல் அடுத்த ஆன்மீகச் சுற்றுலா…..!

    வாயை மூடு…நாம எங்கயும் இனிமேல் இப்படிப் போகவேண்டாம்……!

    சரி…சரி…மணிமொழி…இந்தக் கடிதம் உன் கண்ணை நிறைத்தால் கண்டிப்பாக என் மனம் நிறைக்க பதில் போடுவாய் என்று நம்புகிறேன்.

    என்றும் உனது நினைவாக,

    ஜெயா….

    Share
  • சுதந்திர மகளிர் தினம்..!

    ஜெயஸ்ரீ ஷங்கர்

    unnamed

    மகளிர் தினம் …! கேட்பதற்கு நிறைவான வார்த்தையாக இருந்தாலும் சிறிது முரண்பாடாகத் தான் தோன்றுகிறது. அறிவுப்பூர்வமாகப் பார்த்தால் இதில் ஒரு விசேஷமும் இருப்பதாகத் தெரிவதில்லை. இது சும்மா மனதை மயக்கும் மாய வார்த்தை. அழும் பள்ளி சிறுமிகளுக்கு சாக்லேட் கொடுப்பது போலத் தான். ஒரு விதமான ஈசல் சந்தோஷம். தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்ளும் வித்தை. அப்படி என்ன தான் இருக்கிறது இந்த மகளிர் தினத்தில்?  வருடத்தின் ஒருநாள் மகளிர் தினம் என்றால் மீதம் உள்ள நாட்கள் மகளிருக்கு இல்லையா? அதன் குறிக்கோள் தான் என்ன? மகளிர் தினம் கொண்டாட ஆரம்பித்து பல ஆண்டுகள் ஆகிறது என்று சொல்லிக்கொள்கிறோம். இத்தனை வருடங்களாகியும் மாறாத சூழல் இனி வரும் காலங்களில் மாறிவிடுமா?

    சர்வதேச அளவில் கூட  இத்தனை ஆண்டுகள் கழிந்தும் இன்னும் பூரண சுதந்திரம் மகளிருக்கு கிடைத்து விட்டதா என்பது கேள்விக் குறி தான். இது போன்ற எண்ணங்களை நாம் பரவலாக கேட்க முடிகிறது.

    செய்தித் தாளைத் திறந்தால் கூடவே நாள் ஒன்றுக்கு குறைந்த பட்சம் 2 சிறுமிகள் பாலியல் பலாத்காரம் , 2 பெண்கள் கொலை, 5 பெண்கள் வன்முறையால் மானபங்கம் என்று பெண்கள் மீதான வன்முறைத் தாக்குதல் நீண்டு கொண்டே போகிறது. நாட்டில், ரோட்டில், வீட்டில், பள்ளியில், கல்லூரியில், மருத்துவமனையில் என்று அதிகப்படியான பெண்கள் தங்களின் வாழ்க்கையை நிம்மதியாக நடத்த மிகவும் சிரமப் படவேண்டியிருப்பது தான் நிதர்சன உண்மை. நாளுக்கு நாள் பெரும்பாலான பெண்கள் மனதாலும், உடலாலும் கஷ்டப் படுகிறார்கள். இன்றைய பெண்களுக்கு பாதுகாப்பு என்பது  துளியும் இல்லை என்பது தான் கண்கூடு. இதற்காக இந்த மகளிர் தினம் என்ன செய்யப் போகிறது. அது என்ன ஒரு அமைப்பா..? ஒரு திருநாள். நித்தம் திருவிழா கொண்டாட நினைக்கும் ஒரு வர்க்கத்தினருக்கு மட்டும் இது பொருந்தும். சமுதாயத்தில் உயர்ந்த இலட்சியங்கள் கொண்ட எத்தனையோ பெண்கள் எதுவும் செய்ய இயலாமல் சமூக விலங்குகளால் கைகள், கால்கள், கழுத்து , வாய் என்று பூட்டப்பட்டு இறுகிய நிலையில் இருக்கிறார்களே….அவர்கள் மகளிர் இல்லையா?

    அவலை நினைத்து உரலை இடித்த கதையாக, அவர்கள் இந்த மாய மான் தோற்றத்தில் மயங்கி ‘மகளிர் கொடியை உயர்த்திப் பிடித்தால் தெரியும் ‘அவளை அடித்து உரலில் கட்டிப் போட்டு’ விடுவார்கள்.

    சமத்துவம் ஒங்க வேண்டும். சமுதாயச் சீர்கேடுகள் அழிக்கப் பட வேண்டும். ஆண்களைப் பெண்கள் வாழ விட வேண்டும். பெண்களை ஆண்கள் வாழ விட வேண்டும். இதற்கெல்லாம் சட்டங்களும், திட்டங்களும் கொண்டு வரப்படல் வேண்டும். திருமணச் சந்தையில் பெண்ணைப் பெற்றவர்களுக்கும், பிள்ளையைப் பெற்றவர்களுக்கும் ஒரே சமமான நிலையில் பார்க்கப் பட வேண்டும். இது ஒரு சில இடங்களில் மாறி இருந்தாலும், இன்னும் சில கிராமப் பகுதிகளிலும், சின்ன டவுன், மற்றும் பல ஊர்களிலும் பழைய சம்பிரதாயப் படி தான் உயர்வு, தாழ்வு என்னும் கண்ணோட்டத்தோடு நடத்தப் படுவது தவிர்க்கப் பட வேண்டும்.இதற்கும் நாட்டில்  சட்டம் வர வேண்டும்.

    கண்டிப்பாக வரதட்ஷணை முற்றிலுமாக அழிக்கப் பட வேண்டும்.

    பெண்கள் தங்கத்தைத் தவிர்த்திடல் வேண்டும். பல அபாயங்களில் இருந்து அது அவர்களைக் காப்பாற்றும் என்ற மனப்பான்மையை ஒவ்வொரு மகளிரும் உணர வேண்டும்.

    சமுதாயத்தில் உயர் தட்டு பெண்டிருக்கு மட்டுமே இந்த மகளிர் தினம் ரோஜாப்பூவாக இருக்கும். மீதமுள்ள நடுத்தர வர்க்கப் பெண்களும் கீழ்தட்டு பெண்களும் அதனருகில் இருக்கும் முட்களாகத் தான் இந்த தினத்தை விமரிசிக்கிறார்கள். மாற வேண்டும். இந்த நிலை முற்றிலும் மாற வேண்டும். ஒரு பெண்ணைப் பெற்றவர், தன் பாசமுள்ள மகள் வீட்டை விட்டு வெளியே சென்ற பின்பு அவள் வீட்டுக்கு பத்திரமாக வந்து சேரும் வரையில் வயிற்றில் புளி கரைத்து கொண்டு தான் உட்கார்ந்திருப்பார்.வெளியில் சென்ற மனைவியோ, மகளோ, பேத்தியோ, வீடு வந்து சேரும் வரை ரோட்டில் அவளுக்கு பாதுகாப்பு என்பது குறைவு என்ற நினைவு அவருள் ஓடிக் கொண்டு தானே இருக்கும். இந்தியாவின் பல பகுதிகளில் இதே நிலைமை தான் தொடர்கிறது.

    சமத்துவம் பேசுவதெல்லாம் இங்கே சும்மா.பெண்களின் அதிகப்படியான சுதந்திரத்தை நிர்ணயம் செய்வது அவள் சம்பாதிக்கும் அதிகமான பணம் மட்டும் தான் காரணம்.இதற்கு நிறைய உதாரணங்கள் உங்களுக்கே தெரியும். இருதலைக் கொள்ளி  எறும்பின் நிலை தான் என்றும் பெண்டிரின் நிலை. தான் பிறந்த வீடும் தனக்கு சொந்தமில்லை. தான் புகுந்த வீடும் அவளுக்கு சொந்தமில்லை…என்று எப்போதும் மனதுக்குள் ஒரு பாதுகாப்பு இல்லாத நிலையில் தான் அவளது வாழ்வு ஆரம்பிக்கப் படுகிறது.

    எத்தனையோ பேர்கள் உடனிருந்து  மிகவும் கஷ்டப்பட்டு பெண்ணுக்கு அளிக்கப்படும் கொடுமையிலும் கொடுமையான ‘சதி’யை  நீக்கினார்கள். பெண் கல்விக்கு கைகொடுத்தனர். முன்னேற்றப் பாதை வகுத்து காண்பித்தனர். பெண்களுக்கு வழி விட்ட நல்லவர் அனைவருக்கும்  இந்த நாளில் நன்றி சொல்லலாம். இன்னும் ஒழிக்க வேண்டியது எவ்வளவோ இருக்கிறது .

    மகளிர் சுதந்திரம் எனும் பெயரில் பெண்கள் செய்யும்  முறைகேடுகளும் கொஞ்ச நஞ்சமல்ல. பெரிய பெரிய நகரங்களில் அவர்களின் அதி மிகுதியான சுதந்திரப் போக்கால் ஏற்படும் குடும்ப இழப்புகள் நீதிமன்றங்களில் கோப்புக் குவியல்கள் சொல்லும்.

    இந்த உலகில் இருப்பது இரண்டு வர்க்கம். ஒருவரைச் சார்ந்து ஒருவர் என்று வாழும் போது ‘அன்பாக’ அச்சாணி இருந்தால் போதும்.

    அந்த பரஸ்பர நம்பிக்கையை ஒருவருக்கொருவர் அளித்துக் கொண்டால் குடும்பத்தில் அமைதி நிலவும்.இதை உணர்ந்து உணரச் செய்யுங்கள்.

    மகளிர் தினத்தில் முக்கியமாக  இன்றைய , இளைஞர்  சமுதாயத்தில் பெண்களுக்கும் ஆண்களுக்கும் பாதை மாறிப் போகிறார்கள். இவர்களுக்கு வாழ்வியல் நியதிகளை கற்றுத் தருவது நமது கடமையும் பொறுப்பும்.நாளைய இந்தியா சிறப்புற இன்றே இவர்களைக் காக்க வேண்டும்.விஞ்ஞானி அப்துல் கலாம் அன்று சொன்னதை மீண்டும் மீண்டும் மீள்பதிவு செய்வித்து நல்ல விஷயங்களை மூளைச் சலவை செய்த வண்ணம் இருந்தாலும் தவறில்லை. ஆரோக்கியமான இந்தியா இளைய சமுதாயத்தினரிடமிருந்து  உருவாக இன்றைய மகளிர் ஒவ்வொருவரும் ஆவன செய்யவேண்டும். இந்தியாவிலிருந்து மதுவும், புகையும் அடியோடு ஒழிக்க மகளிர் அனைவரும் மனிதச் சங்கிலியாய் ஒன்று திரள வேண்டும். அது ஒன்று இல்லாவிட்டால் போதும், எத்தனையோ குடும்பங்கள் புத்துணர்வு பெற்று சுவாசிக்கும்.

    நாளைய இந்தியா, கிராமப் பகுதிகளில் கூட பெண்கள் சுதந்திரமாக தனது கருத்துக்களை வெளியிடும் தைரியத்தோடு இருக்க வேண்டும்.

    சொல்வது போல சமூகத்தில் பல வகையான மனிதர்களை நான்கு பிரிவாகப் பிரித்துக் காட்டியிருக்கிறார்கள் பெரியவர்கள்.

    தன்னிடம் இருப்பதை பகிர்ந்து கொண்டு மகிழ்வோடு இருப்பவர்.

    தன்னிடம் மட்டும் இருக்க வேண்டும் இருந்தால் போதும் என்று மகிழ்வில் திளைப்பவர்

    அடுத்தவர் மட்டும் மகிழ்வோடு இருந்தால் போதும் என்றும் நினைப்பவர்

    தானும் சரி, அடுத்தவரும் சரி….மகிழ்வாக இருப்பதையே பிடிக்காதவர். இந்த பிரச்சனை பார்ட்டி.

    இதற்குப்  பின்னால் கதை கூட உண்டு. இதில் நாலாவது வகை முழுதும் முதல் வகையாக மாறி “மகளிர் தினம்” “மானுட தினமாக” மாறி விடும். அதன் பின் யாருக்கும் ‘எந்தத் தினம்மும்” தேவையில்லை. தினம் தினம் ‘திருவிழா’ தானே.

    ‘அக்ஷய திருதியை’ எட்டிப் பார்த்தது. தலையை மட்டும் நுழைத்தது, கைகளைக் குலுக்கியது, சென்ற வருடம் வரையில் ஏதோ ஆண்டாண்டு காலமாய் கூடவே வந்ததைப் போல சம்மணமிட்டு உட்கார்ந்து கொண்டது. விற்காத குந்துமணி தங்கம் கூட விற்றுப் போனது. பெண்களைக் குறி வைத்துக் காயடித்ததாலோ ஏனோ , மந்தை மந்தையாய் சந்தையில் கத்திரிக்காய் வாங்குவது போல தங்கம் விற்றுப் போனது. இது ஒரு சின்ன உதாரணம் மட்டும் தான். இது போல எட்டிப் பார்த்த பலவற்றிற்கும் இப்போது அடிமையாய் இருப்பது கண்கூடு.

    மகளிர் தினமும் அப்படி உள்ளே நுழைந்தது தான்.அப்படி நுழைந்த இந்த நாள் ஒட்டுமொத்த மகளிருக்கும்  என்றாவது

    சுதந்திர மனப்பாங்கைப் பரவலாகத்  தந்தால் அன்று  தான் ‘மகளிர் தினம்’.அதுவரை அவளது முகத்திரை தான் அவளுக்கு  முத்திரை.

    Share
  • மணிக்கொடி – புத்தக மதிப்புரை

    மணிக்கொடி  

    எழுதியவர் : ஜோதிர்லதா கிரிஜா 

     

    “கல்கி” பொன்விழாப் போட்டியில் முதல் பரிசு பெற்ற வரலாற்று நாவல்.

    ராஜா சர் அண்ணாமலைச் செட்டியார் இலக்கிய பரிசும் விருதும் பெற்ற வரலாற்றுப் புதினம்.

    வல்லமையில் புத்தக மதிப்புரைப் போட்டிக்கான நூல் மதிப்புரை

    கலந்து கொள்பவர் : ஜெயஸ்ரீ சங்கர்.

    ஆசிரியர் குறிப்பு:                                                                                            

    நாவல் சிற்பி :ஜோதிர்லதா கிரிஜா,

    சொந்த ஊர் : வத்தலக்குண்டு .

    jeyashree

    பள்ளிப் பருவத்தில் ரா.கி.ரங்கராஜன் அவர்களால் குழந்தை எழுத்தாளராக அறிமுகம் ஆனவர்.. தமிழ்வாணன், அழ.வள்ளியப்பா, ஆர்.வி.ஆகியோரால் ஊக்குவிக்கப் பட்டதன் பின், 1968 இல் கலப்புமணம் பற்றிய சர்ச்சைக்குரிய குறுநாவல் வாயிலாக ஆனந்தவிகடனில் பெரியோர்க்கான எழுத்தாளராக அறிமுகம் கிடைத்தது.

    jeyaஎழுதியுள்ளவை : 600க்கும் மேற்பட்ட சிறுகதைகள், 20 க்கும் மேற்பட்ட புதினங்கள், 60 க்கும் மேற்பட்ட குறும் புதினங்கள் , 60 க்கும் மேற்பட்ட சமுதாயப் பிரச்சனைகள் சார்ந்த கட்டுரைகள், 3 நெடிய நாடகங்கள், சில வசன கவிதைகள், நகைச்சுவை துணுக்கு எழுத்தாளராகவும் ஆனந்த விகடனில் 1987 இல் அறிமுகமாகப் பெற்றவர்.

    பெற்ற பரிசுகள்: தினமணி கதிர் நாவல் போட்டி, கல்கி பொன்விழா வரலாற்று நாவல் போட்டி, லிலி தேவசிகாமணி அறக்கட்டளையின் சிறுகதைத் தொகுதிக்கான பரிசு. அமுதசுரபி நாவல் போட்டி, ராஜா சர் அண்ணாமலைச் செட்டியார் விருது, திருப்பூர் கலை இலக்கியப் பேரவையின் சமுதாய நாவல் பரிசு, தமிழக அரசின் மிகச் சிறந்த நாவலுக்கான பரிசு ஆகியன. ‘நம் நாடு’ எனும் சிறுவர் நாவல் தேர்ந்தெடுக்கப்பட்டு அதன் யுக்ரெயின் மொழியாக்கம் 1987 இல் மாஸ்கோவில் நடந்த இந்தியக் கலைவிழாவில் வெளியிடப்பெற்றது.

    ஆங்கிலத்தில் 1975 இல் ஃ பெமினாவின் வாயிலாக அறிமுகம். 25 சிறுகதைகள், ஒரு மினி நாவல். ஆங்கில மரபுக் கவிதை  இராமாயணம் (1789 பாடல்கள்) , திருக்குறள்,  காந்தியடிகளின் வாழ்க்கை நிகழ்வுகள்,  நபிகள் நாயகத்தின் பொன்மொழிகள் ,  சத்தியசாயி பாபாவின் வரலாறு  ஆகியவை டாக்டர் கிருஷ்ண ஸ்ரீநிவாஸ் நடத்தும் “தி போயட் ” இல் தொடர்களாக வந்துள்ளன.

    விம்ன்ஸ் எரா , தி ஹிந்து, துக்ளக், மற்றும் இணையத்தில் திண்ணையிலும் தனது இன்றைய எண்ணங்களை எழுதிக் கொண்டு வருகிறார்கள்.

    சமீபத்தில் “செங்கமலத் தாயார் கல்வி அறக்கட்டளை மகளிர் கல்லூரி, மன்னார்குடி, சமூக அமைப்பு இவரை “2012 க்கான சிறந்த பன்முக  எழுத்தாளராகத் தேர்ந்தெடுத்து அதற்கான பரிசும் , விருதும் , கேடயமும் அளித்து  கௌரவித்துப் பெருமை சேர்த்துக் கொண்டது குறிப்பிடத் தக்கது.

    இந்த ஆண்டு 2013இல் ஈரோட்டில் நடைபெற்ற புத்தகக் கண்காட்சியில் பெண் எழுத்தாளர்களை கௌரவிக்கும் பொருட்டு இவருக்கும் ‘விருது’ வழங்கப்பட்டது.

    அண்மையில் கம்பன் கழகத்தின் ‘சிவசங்கரி விருது’ம்  கிடைக்கப் பெற்றார்.

    மணிக்கொடி சென்னை வானொலியிலும் தொடர்ந்து 10 மாதங்கள் காலம் ஒலிபரப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது. .

     “மணிக்கொடிநூல் வெளியான ஆண்டு :

    முதற் பதிப்பு : டிசம்பர் , 1995

    வானதி பதிப்பகம், சென்னை.

    இரண்டாம் பதிப்பு : டிசம்பர் 2013

    உரிமை : ஆசிரியைக்கு

    பக்கங்கள் : 900

    விலை : ரூ.500/-

    பதிப்பகத்தார் முகவரி :

    சேது அலமி பிரசுரம்

    நி -7, அரவிந்த் நரேன் என்கிளேவ்,

    8, மாசிலாமணி தெரு,

    பாண்டி பஜார், தியாகராய நகர்,

    சென்னை – 600 017.

    ——————————————————————————————————————–

     

     

     

    முன்னுரை :

    மணிக்கொடிஎன்ற இந்த வரலாற்றுப் புதினம் உருவாகக் காரணம்:  

    நமது நாட்டை அந்நிய ஆட்சியிலிருந்து மீட்பதற்காக நம் முன்னோர்கள் பட்ட துன்பங்களும், செய்த தியாகங்களும் தக்க ஆதாரங்களுடன் எழுதப்பட்டு அந்தக் காலகட்டத்தை, தேசப் பற்றை காட்டக்கூடிய கண்ணாடியாக, காலம் போட்ட கையெழுத்தென   ‘இந்திய வரலாற்றுச் சுதந்திரம்’ என்ற ரசவாதத்தை மையமாகக் கலந்து, பெற்ற சுதந்திரத்தைப் பேணிக் காக்கும் தலையாயப் பொறுப்பு நமது நாட்டின் இளைய சந்ததியினருக்கு என்றென்றும் உண்டு என்பதை எடுத்துக்காட்டி உருவானதே ‘மணிக்கொடியின்’ தலையாய நோக்கமாகும்.

    “எண்ணிய எண்ணியாங்கு எய்துவர் ; எண்ணியார்

      திண்ணிய ராகப் பெறின் “

    என்ற வாக்கின்படி அவர்களின் உறுதியும், நம்பிக்கையும், உழைப்புமே அவர்களுக்கு  நாட்டைப்  பெற்றுக் கொடுத்தன. அதே உறுதியும், நம்பிக்கையும், உழைப்பும் ‘ஆசிரியர் .ஜோதிர்லதா கிரிஜா’ அவர்களுக்குள்ளும் இருந்ததை அவருடைய இந்தப் புதினத்தில் பக்கத்துக்குப் பக்கம் நாம் காணலாம்.

    “மணிமிடை பவளம்” என்பார்கள். அதைப்போல கதையோடு இணைந்து தேசிய உணர்வும் நிறைந்ததாக  இந்நூல் உள்ளது.  இது வெறும் கதையல்ல…நமது பாரத தேசத்துச் சுதந்திரப் போராட்டத்தின் வீர வரலாறு.

    முன்னோட்டம் :

    “கிருஷ்ணா இத பாரு. எனக்கு என்ன வயசு?”

      இதற்கும் நான் பதில் சொல்லவில்லை.

      “நான் பிறந்தது 1905-ஆம் வருஷம். அக்டோபர் மாசம், பதினாறாந்தேதி. அன்னிக்குத்தான் வெள்ளைக்காரன் பெங்காலை ரெண்டா உடைச்சான்!” எதைச் சொன்னாலும் முடிந்த அளவுக்கு அதில் சரித்திர நிகழ்ச்சியைக் கலக்காமல் பேசப் பெரியப்பாவுக்குத் தெரியாது.

    “இன்னிக்கு என்ன தேதி? டிசம்பர் பதினெட்டு,1985; காங்கிரஸ் கட்சி நூற்றாண்டு கொண்டாடிண்டிருக்கிற வருஷம், அப்ப எனக்கென்ன வயசு இப்ப? எண்பது முடிஞ்சுடுத்து. இத்தனை வயசுக்கு மேலயும் நான் இந்த உலகத்துல – இன்னும் சொல்லணும்னா – இந்த நாட்டில – நான் வாழணுமா?”

    “இந்த நாட்டிலே’ என்கிற இரண்டு சொற்களில் பெரியப்பாவின் ஏமாற்றம் முழுவதும் வெளிப்பட்டது எனலாம். ஆனால் இப்போது தமது இறுதி நாளில் படுகிடையாய்ப் படுத்துக்கொண்டு அவர் சொன்ன அந்த வாக்கியம்”.

    “சுதந்திரம் அடையறதுக்காக அந்தக் காலத்துல எத்தனை மனுஷா எப்படி எப்படியெல்லாம் கஷ்டப்பட்டா?, எப்படி எப்படியெல்லாம் தியாகங்கள் பண்ணினா? என்பதெல்லாம் இந்தக் காலத்துப் பசங்களுக்கு சுத்தமாத் தெரியல்லே. ஸ்கூல் பாடத்திலேர்ந்து இண்டியன் ஹிஸ்டரிங்கிற சப்ஜெக்டையே கம்ப்ளீட்டா எடுத்துட்டான். அரையுங்குறையுமா ஏதோ சொல்றான்!”

    இப்படியாக , “கதை உருவாக பெரியப்பா ஊன்றிய விதை”.

    1995 ஆம் ஆண்டு இறுதிக் கட்டத்தில், மரணப் படுக்கையில் தமது  இறுதி நாட்களைக் கடத்தும் வேளையில் , தனது பெரியப்பா தன்னை அருகில் அழைத்து பரணிலிருந்த1920 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ச்சியாக நமது இந்தியா சுதந்திரம் அடையும் வரைக்குமான அவரது   அனுபவங்களை , ரத்தம், சத்தம், சிரிப்பு, வெறுப்பு, சோகம்..காதல், மோகம், பாசம், மோசம், வேஷம்…கோஷம்…!  இப்படி நவரசங்களும் கலந்த டயரி குறிப்புகளை, காலம் விட்டு விட்டு நடந்து சென்ற நிகழ்வுகளை அப்படியே வரலாற்று மதிப்பு மாறாமல் ஒரு நாவலாக மாற்றச் சொன்னார்.

    பெரியப்பாவின் கடைசி ஆசையாய் அவரது அன்புக் கட்டளையை பூர்த்தி செய்யும் விதமாக அவரின் டயரிக் குறிப்புகள் அனைத்தும் சேர்ந்து  அப்படியே ஒரு நவரச நாவலாக மாறி மலர்ச்சி அடைந்த விதம் அருமையாக இருக்கிறது.

    பாரத மக்களின் ‘ஜெய் ஹிந்த் ‘ என்ற வீரக் கோஷத்தோடு கண்களில் மின்னல் தெறிக்க மிதந்தது ‘சுதந்திர மணிக்கொடி’. இப்பேர்ப்பட்ட ‘மணிக்கொடி’யை வெறும் தலைப்பாக மட்டும் தங்கவிடாமல் உலகத்தைப் பின்னோக்கி நகரச் செய்த புத்தகமாக அமர்க்களமான கதைக்களத்துடன் ஆக்கியுள்ளார். அதற்கு  ஆதார சுருதியாக  ஆங்கிலேயர் ஆட்சியின் கீழிருந்து நமது இந்தியா  அடிமைத் தளையை அறுத்தெறிந்து விடுதலையைப் பெற அனுபவித்த பல இன்னல்களையும், போராட்டங்களையும் களிநடனம் புரிகின்ற இனிய தமிழில் கடின உழைப்பிற்கு பின்னால் உருவாக்கி அதற்கு ‘மணிக்கொடி’ என்று  பெயரிட்டுள்ளார் நூலாசிரியர் ஜோதிர்லதா கிரிஜா.

    அவர்களது  இலக்கிய வாகைக்கு இந்த ‘மணிக்கொடி’ நாவல்  ஒரு மணிமகுடமாகும். ‘மணிக்கொடி’ என்று  பெயரிட்டுள்ளார் நூலாசிரியர் ஜோதிர்லதா கிரிஜா. அவர்களது  இலக்கிய வாகைக்கு இந்த ‘மணிக்கொடி’ நாவல்  ஒரு மணிமகுடமாகும்.

    சூழ்ந்துள்ள இருளை பழித்துக் கொண்டே இருப்பதை விட, ஒரு சிறு சுடர் விளக்காவது ஏற்றி வைக்க முற்படுவதே உன்னதம் என்பது போல  ஆயிரமாயிரம் தலைமுறைக்குப் பாயிரமாக, ஒரு நல்ல சரித்திர நாவல் வெறும் எழுத்துக்களாலோ சொற்றொடர்களாலோ மட்டும் அமைந்து விடாமல்,பல மலர்களிலிருந்து சேமித்த தேன் துளியை ஒரு தேன்கூட்டில் அடைக்கும்  தேனீயைப் போல மாதக் கணக்கில் பல புத்தகங்களைப் படித்து ஆராய்ந்து தனது விடா முயற்சியும், தேசப்பற்றும் கலந்து உருவாக்கிய சுதந்திர வரலாற்றுச் ‘சுடர்மணி சகாப்தம்’ தான் இந்த ‘மணிக்கொடி’ என்றாலும், அது மிகையாகாது.

    மணிக்கொடிஎன்னும் நவரச நாவலின் கதைச் சுருக்கம்:

    பெரியப்பாவின் டைரிக் குறிப்புகளே நாவலின் உட்கருவாக உள்ளது.  மற்றும் அம்மா, அப்பா,கொடுத்த சில முக்கியமான விவரங்கள், மற்றும் பெரியப்பா குறிப்பிட்டிருந்த சிலர் கொடுத்த தகவலாலும் மற்றும் ஆதாரங்களுக்காக சில புத்தகங்கள் கொடுத்த தகவல்களாலும் குறிப்புகளை இணைக்கும் உண்மை வரலாற்று நிகழ்ச்சிள் கதைக்குள் எடுத்தாளப் பட்டுள்ளன.

    கதையை ஆரம்பிக்கும் போது, பெரியப்பாவின் நாற்காலி நிரந்தரமாய்க் காலியாகிக் காட்சிப் பொருளாய் ஆனதோடு, அதே நாற்காலியில் அவரது டயரிகளை எடுத்து வைத்த போது, அவரது மடியில் வைத்தே நாவலை ஆரம்பித்த உணர்வும் வாசகர்களைத் தொற்றிக் கொள்கிறது.

    ‘மணிக்கொடி’,  தேசபக்தி நிறைந்த இரண்டு குடும்பங்களைப்  பின்னணியாக அமைத்து எழுதப் பட்ட புதினம்.

    தேசபக்தரும், பள்ளிக்கூட ஆசிரியருமான காங்கிரஸ்காரர் ராமசாமி, அவரது மனைவி குஞ்சம்மாள், இவர்களது ஐந்து வயதான மகன் கங்காதரன்,சிறு வயதிலேயே கணவனை இழந்த ராமசாமியின் சகோதரி  விசாலம், என அன்பும், பாசமும் நிறைந்த எளிமையானதொரு  குடும்பத்தை மிகவும் யதார்த்தமாகச் சித்திரித்து அந்தக் குடும்பத்தில் நடக்கும் நிகழ்வுகளை, ராமசாமியின் குடும்பத்துள் சென்று அமர்ந்து கொண்டது போன்ற பிரமையை ஏற்படுத்தும் விதமாக எழுதியிருப்பது, அருமையான ஆரம்பம்.

    வக்கீல் ராஜாராமன், அவரது மனைவி பாமா, லண்டனில் படித்தபடியே இந்திய தேசபக்த இயக்கத்தில் ரகசியமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கும்  மூத்தமகன் அருணாச்சலம் எனும் அருண், மகள் தேசபக்தை அஞ்சனாதேவி, கல்லூரியில் படிக்கும் இளைய மகள் அமராவதி என்று இவர்கள் குடும்பமும் தேசபக்தி நிறைந்த குடும்பமாக வாசகர்களின் கண்களில் காட்சி விரிவது போன்ற பிரமையுடன்

    இரண்டாவது குடும்பத்தை அறிமுகப்படுத்தி கதையை நகர்த்தியிருக்கும் விதம் சிறப்பு.

    லண்டனில் இருந்து அண்ணன் அருண் அனுப்பிய ‘மதன்லால் திங்ரா’ தூக்கிலிடப் படும் முன்னர் எழுதிய கடைசி வாக்குமூலத்தை எடுத்து வந்த அஞ்சனாதேவி, காங்கிரஸ்காரர் ராமசாமியை சந்தித்து அவரிடம் அதைக்  கொடுத்து, இதை ரகசியமாக அச்சடித்து மக்களிடம் விநியோகம் செய்ய வேண்டும் என்ற தனது அண்ணனின் கோரிக்கையை முன்வைகிறாள். அதற்குள் திடீரென போலீஸ்காரர் ராமசாமியின் வீட்டை சோதனை போடுவதற்காக நுழைய, அவர் கேட்டுக் கொண்டிருக்கும்போதே, அஞ்சனாதேவி தன்  கையிலிருந்த காகிதக் கற்றையை அடுப்பிலிட்டு எரித்துச் சாம்பலாக்கி ‘தேச விரோத நடவடிக்கைக்கான சர்ச் வாரண்ட்’ டுடன் வந்த போலீஸ்காரர்களை ஏமாற்றத்துடன் திரும்ப வைக்கும் காட்சியும், அந்தக் கடிதத்தின் தடயத்தை அழித்ததன் மூலமாக  ராமசாமியைக் காப்பாற்றிய விதமும் தத்ரூபமாக மனதில் பதிக்கும் வண்ணம் சித்திரிக்கப் பட்டிருக்கின்றன.

    கதை முழுதும் சீரியஸாக கொண்டு செல்லாமல், இந்த போலீஸ் களேபரத்திற்குப்  பிறகு வீட்டில் ராமசாமியின் 5 வயது மகன் கங்காதரன் செய்யும், குறும்புகளும், விளையாட்டுக்களும் ஒரு பாசமுள்ள குடும்பத்திற்குள் நம்மை அழைத்துச் சென்ற பிரமையை ஏற்படுத்தி ,அத்தோடு குஞ்சம்மாளும் , விசாலமும் வந்த பெண் அஞ்சனா தேவியின் சாதியைப் பற்றிப் பேசிக்கொள்ளும் சம்பாஷணைகள் மனம் விட்டுச் சிரிக்கும்படியாக ஹாஸ்யமுடன் எழுதப் பட்டிருக்கிறது.

    ராஜாஜாமனின் மகன் அருணின் நண்பனான  இந்திரநாத் பானர்ஜியின் சகோதரனான .நரேந்தரநாத் பானர்ஜி எனும் நரேன்.வக்கீல் ராஜாராமனின் வீட்டிற்கு வந்து, அவரது மகன் அருணைப் பற்றி புதிரான தகவல்களைச் தெரியப் படுத்துவது போல, கதையில் நரேனின் அறிமுகம் விறுவிறுப்பான உரையாடலுடன்  நகருகிறது..நரேன், வங்காளி வகுப்பைச் சேர்ந்தவர். தேசபக்தி இயக்கத்தில் இரண்டு முறை இரண்டு வெள்ளைக் காரர்களை சந்தர்ப்பவசத்தால் கொலை செய்து விட்டு தூக்குக் கைதியாக தலைமறைவாகி, போலீஸால் தேடப் படுபவர்.இதற்கான நிறைய நிகழ்வுகளை இந்திய விடுதலைக்காகப் பாடுபடும் பயங்கரவாதிகள் என அழைக்கப்படும் தீவிரவாதிகள் பற்றிய  உண்மை சம்பவங்களோடு இணைத்து கதை புனையப் பட்டிருக்கும் விதம் புதுமை.ஒரு ஆபத்திலிருந்து அமராவதியை தக்க தருணத்தில் காப்பாற்றியவன்.அதைத் தெரிந்து கொண்டதும் ராஜாராமன் நரேனைத் தன் மகனாகவே பாவிக்கிறார்.

    அருணாசலத்தைப் பற்றிக் கிடைக்கும் புதிரான தகவல்களை, அவ்வபோது நரேன்,ராஜாஜாமன் வீட்டில் தெரியப் படுத்தி வருகிறான்.பிறகு,ராஜாராமன் வீட்டிலேயே அடைக்கலமாக வந்து மீண்டும் தங்கிக் கொள்கிறான். இளைஞர் இயக்கத்தின் போராட்டத்தைப் பற்றியும், அவர்களது பணத் தேவைகளுக்கு அரசாங்க கஜானாவைத் தேவை இருப்பின் கொள்ளை அடிப்பதுவும், அவசியமானால் கொலை செய்வதும் பற்றி ராஜாராமனுக்கும்,.அஞ்சனாவுக்கும், அமராவதிக்கும்,விளக்கும்போது, அவரைத் தேடி செர்ச் வாரண்ட்டுடன் போலீஸ் வருகிறது. அதையறிந்ததும் ,நரேன் அங்கிருந்து போலீசுக்குத் தெரியாமல் அவர்களின் வீட்டை விட்டு வெளியேறுகிறான். ஆனால் அன்று இரவே ஒரு நீண்ட கடிதத்தில் தான் எந்த சந்தர்ப்பத்தினால்  ஆங்கிலயர்கள்  இரண்டு பேரைக் கொலை செய்ய நேர்ந்தது  என்பதையும்  விவரமாக ஒரு காகிதத்தில் எழுதி அதைச் சுருட்டி ராஜாராமனின் அறையில் தூக்கிப் போட்டுவிட்டு சென்று விடுகிறான்.

    நம் நாட்டுப்  புரட்சி இயக்கத்தினருக்குத்  திருட்டுத்தனமாகக்  கைத்துப்பாக்கிகள்,வெடிகுண்டுகள் போன்றவற்றை லண்டனிலிருந்து தருவித்து உதவும் இந்தியா ஹவுஸில் வாழும் நம் தேச பக்தர்கள், விநாயக் தாமோதர் சாவர்க்கர், அரவிந்த கோஷ், குதிராம் போஸ், கன்னயாலால் மற்றும் பல புரட்சியாளர்களைப் பற்றி நரேந்திரநாத் பானர்ஜி சொல்லும் தகவல்கள் மனம் பதைக்கச் செய்கின்றன.

    வக்கீல் ராஜாராமனின் நண்பர் லண்டனிலிருந்து திரும்பி வரும்போது அவருக்காக  எடுத்து வரப்பட்டு கொடுத்த பொட்டலத்தைச் சுற்றி வந்த பழைய லண்டன் நாளிதழில் தன் மகன் அருணின் புகைப்படத்தோடு அவன் சுட்டுக் கொல்லப் பட்ட செய்தியையும் படித்த ராஜாராமன் மனம் கலங்குகிறார். மகள்கள் அஞ்சனாவிடமும், அமராவதியிடமும் மட்டும் தனது சோகத்தை ரகசியமாகப் பகிர்ந்து கொள்கிறார். மனைவி பாமாவுக்குத் தெரியப் படுத்த வேண்டாம், மேலும் மனைவியை சமாதானப் படுத்த, அருண் இன்னும் இரண்டு வருடங்கள் மேல்படிப்பு படித்து விட்டுத் தான்  திரும்புவான் என்றும் தற்போது லண்டனிலிருந்து எந்தக் கடிதப் போக்குவரத்தும் தடை செய்யப் பட்டிருப்பதாகவும் தெரிவித்து விடுகிறார். அதற்குள் மீண்டும் நரேன் வந்து இவர்கள் வீட்டில் அடைக்கலமாகத் தங்குகிறான். ரகசிய  புரட்சிக் கும்பலில் ஈடுபட்டிருக்கும் நரேந்திரநாத் பானர்ஜிக்கும், அமராவதிக்கும்  இடையே  மெதுவாகத் காதல் அரும்புகிறது.

    அதே நேரத்தில் நரேனுக்கு,ரகசிய புரட்சி இயக்கத்தின் தலைவரிடமிருந்து கல்கத்தா வரச்சொல்லி ‘அழைப்பு வருகிறது. நரேன்  உடனே கல்கத்தா கிளம்பத் தயாராகிறான். அவனது  நீள் பிரிவை எதிர்கொள்ளும் முன்னர்  அமராவதி பின் விளைவுகளைப் பற்றி எண்ணாமல் நரேனை சந்தித்துப் பேசித்  தன்னை இழக்கிறாள். இவ்வாறாக கதை திரும்புகிறது. கல்கத்தா சென்று விட்ட நரேன் அமராவதிக்கு கடிதங்கள் எழுதி தொடர்பில் இருக்கிறான். அமராவதி கர்பவதியாகிறாள்.

    இவ்வாறிருக்க , ராஜாராமனின் மனைவி  பாமா ஏதோ படிக்க கதைப் புத்தகத்தை எடுக்கும்போது அதிலிருந்து தற்செயலாக விழுந்த அந்தச் செய்தித்தாளில் தனது மகனின் புகைப்படத்தையும் பார்த்து தன் மகன் அருண் சுட்டுக் கொலை செய்யப பட்டதை அறிந்து கொண்டதும் தாயின் மனம் சிதைந்து பைத்தியமாகி விடுவதால் நிரந்தரமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு விடுகிறாள்.

    சுவாரசியமாகச் செல்லும் கதையில் அஞ்சனாதேவி, ராமசாமியின் மீது அவர் திருமணமானவர் என்று அறிந்தும், ஒத்த கருத்துகள் அவர் மீது அவளுக்கு இருவருக்குமிடையே ஈர்ப்பை உண்டுபண்ண, அதை எடுத்துக் காட்டிய விதத்தையும், அஞ்சனாதேவிக்கு ராமசாமி மீது காதல் அரும்பும் காட்சியும், அதை அவரிடம் மறைமுகமாக சொல்லும்போது, அவருக்கும் அஞ்சனாவைப் பிடித்திருந்தாலும்,ஏகபத்தினி விரதனான அவருக்கு அப்படி ஓர் எண்ணம் வரவே இல்லை.. என்பதை  மிகவும்  நளினமாக கையாளப்பட்டு கதையோடு பிணைக்கப் பட்டிருக்கின்றன..

    இதன் நடுவில், அஞ்சனா கார் ஓட்டுவதையும், குஞ்சம்மாள் அஞ்சனாதேவியின் சாதியைப் பற்றி ராமசாமியிடம் கேட்டதால் வீட்டில் ஏற்படும் சண்டைப் பூசலும் காரசாரமான விவாதங்களும் ரசிக்கும் படியாக எழுதி, கதை ஒரே பாதையில் சென்று விடாமல் நவரசங்களும் அங்கங்கே அளவோடு எடுத்தாளப் பட்டிருப்பது குறிப்பிடத் தக்கது.

    பள்ளியில் நடந்த கூட்டத்தில் திடீரென கலகம் வந்துவிடவே, ராமசாமியும், அஞ்சனாதேவியும் ஓர்  இருட்டு அறையில் ஒளிந்து கொள்ள நேரிடுகிறது. அந்த விஷயம் வெளியில் வேறு விதமாகப் பரவியதால் ராமசாமியின் வீட்டிலும் புகைகிறது. அஞ்சனாதேவி மீது தான் வைத்திருந்த கண்ணியமான நட்பை மனைவி குஞ்சம்மாளுக்குப்  புரிய வைக்க விவேகத்துடன் முயலுகிறார் ராமசாமி.

    தன் மனைவி குஞ்சம்மாளுக்கு  இருக்கும் தாழ்வு மனப்பான்மை விலக ராமசாமி அவளுக்கு ஆங்கிலம் பேசக் கற்றுக் கொடுக்கிறார். குஞ்சம்மாளை குஞ்சனா தேவியாகச் மாற்றி விடுகிறேன் என்று கேலி செய்கிறார்.  இதற்கிடையில், ஐந்து வருடங்கள் கழித்து குஞ்சம்மாள் மீண்டும் கருத்தரிக்கிறாள். அந்நிலையில் அவளுக்கு தன் கணவனைப் பற்றிய ஒரு மொட்டைக் கடிதம் வருகிறது. அதை எடுத்துக் கொண்டு வக்கீல் ராஜாராமன் வீட்டுக்குச் சென்று கடிதத்தைக் காண்பித்து படிக்கச் சொல்லி, அவரது மகளைக் காப்பாற்றிக் கொள்ளுமாறு சொல்லிவிட்டு வருகிறாள் குஞ்சம்மாள். இந்த விஷயத்தை ராமசாமியிடம் மறைத்தாலும் தற்செயலாய்க் கண்டுபிடிக்கப்பட்ட பின், குற்ற உணர்வு காரணமாக உடனே ராமசாமியிடம் சொல்லிவிடுகிறாள்.இதே குழப்பத்தில் இரண்டாவதாக கங்காதரன் போலவே ஒரு மகனைப் பெற்றெடுத்த கையோடு இறந்து விடுகிறாள் குஞ்சம்மாள்.

    அஞ்சனாவை மறுமணம் செய்து கொள்ள வற்புறுத்தும் தனது சகோதரி விசாலத்திடம், அதை மறுத்துச் சொல்கிறார் ராமசாமி. நீண்ட நாட்கள் கழிந்து மீண்டும் அஞ்சனா ராமசாமியை நேரில் வந்து சந்தித்து, அமராவதிக்கு நரேன் மூலமாக பெண் குழந்தை பிறந்துள்ளத விஷயத்தையும், அந்தக் குழந்தைக்கு ‘ பவித்ரா’ என்று பெயரிட்டிருப்பதையும் சொல்லி விட்டுப் போக அவர்கள் வீடு தேடி வருகிறாள்.

    அப்போது ஆறு வயது மகன் கங்காதரன், தனது பள்ளித் தோழனின் அப்பா இரண்டாவது கல்யாணம் செய்து கொண்டிருப்பதாகவும், தனக்கு அஞ்சனா மாமியைப் பிடித்திருப்பதாகவும், அப்பாவைக் அவர்களைக் கல்யாணம் பண்ணிக்கச் சொல்லி குழந்தைத் தனமாகச் சொல்லும் போது , வக்கீல் ராஜாராமனின் குடும்பத்தில் சமீபத்தில் நடக்கும் விஷயங்களை கருத்தில் கொண்டு, அதில் தனக்கு உடன்பாடு சிறிதும் இல்லாததால் தனது தம்பி ராமசாமிக்கும், அஞ்சனா தேவிக்கும் முன்னிலையில் குழந்தை கங்காதரனின் முதுகில் ஓங்கி அறைந்து தனது எதிர்ப்பைத் தெரிவிக்கிறாள் விசாலம்.

    இதைக் கண்ட ராமசாமி அதிர்ச்சி அடைந்து குழந்தையிடம், குஞ்சம்மாள் மட்டும் தான் அவனுக்கு அம்மா என்றும்,  வேறு யாரும் அவனுக்கு அம்மாவாக முடியாது என்று எடுத்துச் சொல்கிறார். இதைக் கேட்டதும் அஞ்சனாதேவி புரிந்து கொண்டு விடை பெற்றுச் செல்கிறாள்.

    சென்னைத் துறைமுகத்தில் நின்று கொண்டிருந்த  எஸ்.எஸ்.மகாராஜா எனும் கப்பலில்  கைதிகளுக்கென்று ஒதுக்கப்பட்ட சிற்றறையில் அந்தமான் சிறைக்குக் கொண்டு செல்லுமுன், குண்டு வெடிப்பினால் தனது இடது கையை இழந்த நிலையில் நரேந்திரநாத் பானர்ஜி பதினேழு ஆண்டுகள் கழித்து சென்னையைப் பார்ப்பதால் தனக்குத் தெரிந்தவர் யாரேனும் கண்ணில் அகப்பட மாட்டார்களா எனும் ஆவலும், ஏக்கமுமாக குறிப்பாக அமராவதியை நினைத்தபடியே தனது எதிர்பார்ப்பை தனது நண்பரிடம் விவரிக்கும் காட்சியாக ‘மணிக்கொடி’யின் இரண்டாவது  பாகம் ஆரம்பமாகி  உள்ளத்தை நெகிழச் செய்கிறது.

    அதே நேரத்தில் கல்லூரி மாணவ மாணவர்களாக கப்பலைச் சுற்றிப் பார்க்க அங்கு வந்திருந்த பவித்ராவும்,கங்காதரனும்  கைதிகளின் சிற்றறையை எட்டிப்பார்க்க, அங்கு ‘இடது கையை இழந்த அடையாளங்களுடன் இருந்த நரேனைக் கண்டதும் பவித்ரா தன்னைத் அவருக்கு அடையாளம் சொல்லித் தனது தாய் அமராவதி தான் என்றும் அவரிடம் பேசும் தருணங்களை தந்தை, மகளின் உணர்வுகளை எழுத்தால் செதுக்கி இருப்பதைக் காண முடிகிறது. உடனே,பவித்ரா அவருக்கு கங்காதரனை  செய்து விட்டு, வீட்டுக்கு தொலைபேசி மூலமாகத் தகவல் சொன்னதும், அடுத்த அரை மணி நேரத்தில் அமராவதியும், ராஜாராமனும், அஞ்சனாதேவியும் நரேனைப் பார்க்க கப்பலுக்குள் இருக்கிறார்கள். அந்த நெருக்கடியான நேரங்களை நெகிழ்ச்சியுடன் சொல்லப் பட்டுள்ளது.

    ராஜாராமனுக்கு நரேன் எழுதிய பல கடிதங்களில் சுதந்திரப் போராட்டத்தின் பல நிகழ்வுகளை எழுதியிருப்பதாகவும், அந்தக் கடிதங்களை அவரும் அஞ்சனாதேவியும் படிப்பது போலச் சொல்லப்பட்டதால், பல உண்மை வரலாற்று  நிகழ்வுகள், அதன் சாரம் மாறாமல் படிக்கும் போது நாமும் அந்தக் காலத்துக்குள் மனசளவில் பிரவேசிப்பது தவிர்க்க முடியாததாகிறது. அதையும் மீறி கதையாசிரியர் தன்னையே அந்தக் காலத்துக்குள் புகுத்தி, ஒவ்வொரு கதா பாத்திரதிற்குள்ளும் புகுந்து கொண்டு பேசுவது போல வசனங்களைத் உயிரோட்டமாக எழுதியிருப்பது அவரது அபாரமான திறமையை எண்ணி வியக்கும்படி செய்கிறது.

    கங்காதரன், தான் பவித்ராவோடு கப்பலைப் பார்க்கச் சென்றிருந்த போது, கப்பலுள்  அரசியல் கைதியாக நரேந்திரநாத் பானர்ஜி அந்தமான் சிறைக்குக் கொண்டு செல்வதை பார்க்க நேரிட்டதை தனது தந்தை ராமசாமியிடம் விவரிகிறான். பவித்ராவுக்கு தனது தந்தையை அடையாளம் தெரிந்து கொண்டு, உடனே தனது அம்மா அமராவதியையும், தாத்தா ராஜாராமனையும் பெரியம்மா அஞ்சனாதேவியையும் அங்கு வரவழைத்ததைப் பற்றியும் சொல்கிறான். இதைக் கேட்ட ராமசாமியின் சகோதரி விசாலம், கங்காதரனும், பவித்ராவிடம் காதல் வயப்பட்டு விடுவானோ என்ற பயத்தில் பாமர சிந்தனையோடு கங்காதரனை ராஜாராமன் வீட்டுக்கு செல்வதைத் தடுக்கிறாள். அஞ்சனாவைப் பற்றியும், அமராவதியைப் பற்றியும் அவதூறாகப் பேசுகிறாள். ராமசாமிக்கு இதைக் கேட்டதும் கோபம் வருகிறது. இரண்டு நாட்கள் முன்னமே, கங்காதரன் பவித்ராவிடம் தனது காதலைச் சொல்லி மனம் திறக்கிறான். பவித்ராவும் கங்காதரனை நேசிப்பதாகச் சொல்கிறாள். இதை நினைத்த கங்காதரன், தன் அத்தை அவனைச் சரியாகத் தான் கணக்குப் போட்டிருக்கிறாள் என்று பாராட்டி வியக்கிறான்.

    கங்காதரனின் தம்பி ரமணி பள்ளி முடிந்து வந்ததும், அவனது பள்ளிக் காம்பவுண்டு சுவற்றில் “வெள்ளைக்காரங்க எல்லாம் கொள்ளைக்காரங்க” என்று யாரோ எழுதியிருந்ததை கண்டு, எழுதியவரைக் கண்டுபிடிக்க போலீஸ் வந்ததாகவும், வெள்ளைக்காரனுக்கு எதிரா ஸ்லோகன்ஸ் எழுதுபவன் யார் என்று தெரிந்தால் கடுமையான நடவடிக்கையும், வேறு எந்தப் பள்ளியிலும் சேர விடாமல் செய்து விடுவதாகவும் சொல்லி மிரட்டியதாக ராமசாமியிடம் சொல்லுகிறான். அதைக் கேட்டதும் ராமசாமி, ஆலிவர் ஸ்மித் என்ற ஆங்கில புரொபசர், இந்தியர்களுக்கு இலக்கியமே தெரியாது என்று இழிவாகப் பேசியதும் ராமச்சந்திரன் என்பவருக்கு கோபம் வந்து வாக்குவாதம் எழவும்,புரொபசர் இவனை அடிக்கப் போக, இவனும் புரொபரசரை அடித்து விடுகிறான்.அப்படியே, தனது தாய்நாட்டைப் பற்றித் தரக்குறைவாகப் பேசியதற்கு தான் அடித்து விட்டதாகவும், அதே சமயம், குரு ஸ்தானத்தில் இருப்பவரை அடித்து விட்டதற்காக அவரை நமஸ்காரம் பண்ணிவிட்டு அந்த கல்கத்தா யூனிவெர்சிட்டியை விட்டே வெளியேறினான், கல்கத்தா ராமச்சந்திரய்யர்.என்று அந்த  நிகழ்வைச் சொல்கிறார்.

    அதைக் கேட்டதும் ரமணி, இது போன்ற ஒரு எழுச்சி தான் நாட்டுக்குத் தேவை.. தீவிரவாதத்துல தான் நம்ம நாட்டுக்கு சுதந்திரம் வரப் போறது…வெள்ளைக்காரன் பின்னால் கெஞ்சிக் கொண்டு போகக் கூடாது என்றும் சொல்கிறான்.  காந்திஜி சொல்வது போல அகிம்சா இயக்கத்தால் நம் நாடு சுதந்திரம் அடையாது என்றும் சொல்கிறான். அதைக் கேட்ட ராமசாமி, காந்திஜியின் சம்பரான் விவகாரம் பற்றிச் சொல்லி, அகிம்சா போராட்டத்திலும் வெற்றி கிட்டும் என்றும், தென் ஆப்பிரிக்காவில் சில போராட்டங்களை நடத்தி வந்த காந்தி அங்கிருக்கும் வெள்ளைக்கார அரசாங்கத்தைப் பணிய வைத்தது போல இங்கும் அவருக்கு மக்களிடத்தில் செல்வாக்கு பெருகிடும் என்ற பயமும் வெள்ளைக்காரனிடத்தில் பயம் இருக்கிறது….என்று அந்த நிகழ்ச்சியை விளக்கிச் சொல்லி மகன் ரமணிக்குப் புரிய வைக்கிறார் என்றார்.

    யாரை வேணா, எப்ப வேணா அரெஸ்ட் வாரண்ட் இல்லாமையே கைது செய்து சிறையில் வைக்கலாம் என்ற ஒரு சட்டத்தை ரௌலட் என்கிறவரின் தலைமையில் இங்கிலாந்திலிருந்து வந்ததை எதிர்த்து நாடு முழுக்க கூட்டங்கள் நடந்ததையும், அப்படி கைது பண்ணப் படும் ஆளுக்கு வக்கீல் வெச்சு வாதாடும் உரிமையும் கிடையாது என்ற ரௌலட் சட்டத்துக்கு எதிரா ஒரு சித்தியாகிரகம் செய்து இந்தியா முழுக்கக் கடையடைப்பு நடந்ததையும், அந்த சந்தர்ப்பத்தில் தான் ஜாலியன்வாலா பாக் படுகொலை நடந்தது…என்று அந்த நிகழ்வை மிகவும் விரிவாகச் சொன்ன ராமசாமியைப் பார்த்து ,…இப்படிப் பட்ட ராட்சசங்கிட்ட அகிம்சையும் அன்பும் எடுபடுமாப்பா …என்று ரமணி கேட்கிறான்.  ஈடுபட்டால் அது காந்தியோட மகிமை தான் என்று சொன்ன ராமசாமி, ஒரு குறிப்பிட்ட தெருவழியா இந்தியன் போகும்போது, அவர்கள் படுத்துக் கொண்டு தனது வயிற்றாலும் காலாலும் தவழ்ந்து தான் செல்லவேண்டும் என்ற சட்டமும் இருந்தது. என்று அவர் சொல்லும்  போதே ரமணியின் இள இரத்தம் கொதித்தது. அவனுக்குள் இருந்த தேசபற்று கொழுந்து விட்டு எரிந்தது. ஒரு நாள் ரமணி வீட்டை விட்டு யாருக்கும் சொல்லிக் கொள்ளாமல் தந்தை ராமசாமிக்கு வங்காளத்தில் இருக்கும் சிட்டகாங் செல்வதாகக் கடிதம் எழுதி வைத்து விட்டு வீட்டை விட்டு வெளியேறுகிறான். ஆனால் செல்லும் வழியில் ரயிலில் பணத்துக்காக சிலரால் அடிக்கப்பட்டு கால் முறிந்த நிலையில் விஜயவாடாவில் இறங்கி அங்கு ஒருவர் வீட்டிலிருந்து ராமசாமிக்குத் தந்தி அனுப்புகிறான். ராமசாமி வந்து ரமணியை கால் முறிந்த நிலையில் வீட்டுக்கு அழைத்துச் செல்கிறார்.

    அந்தமான் சிறையில் நரேந்திரநாத் பானர்ஜி அவரது மற்ற நண்பர்களோடு இருக்கையில் , விநாயக் தாமோதர் சர்வார்க்கர் இருந்த சிறையறை பற்றிய விஷயங்களையும், நிறைய இந்திய அரசியல் கைதிகள் தற்கொலை செய்து கொண்டதையும், நிறைய பேருக்குப் பைத்தியம் பிடித்துள்ள விஷயங்களையும் கண்களில் நீர் நிறைய  படுகின்றனர். அதே சிறையில் நரேந்திரநாத் பானர்ஜி சிறை மேற்பார்வையாளனால்  நடத்தப்பட்ட விதத்தைப் படிக்கும் போது நம் கண்களிலும் நீர் நிறையும் என்பதில் சந்தேகமே இல்லை.

    வீர வாஞ்சி தனது கர்ப்பவதியான  இளம் மனைவியை வாழ முடியாதவளாக விட்டு விட்டு இறந்து போன அவலத்தை அறிந்த கங்காதரன், சுதந்திரப் போராட்டக் களத்தில் சேரப் போகும் தனக்கும் ஏதேனும் அசம்பாவிதம் நேர்ந்தால் தான் காதலித்து மணக்கும் பவித்ராவின் நிலை என்னவாகும் என்றெண்ணித் தன் மனதிலிருந்த காதலை நசுக்கிவிட்டதாகவும், இனி நாம் நல்ல நண்பர்களாக மட்டும் இருப்போம் என்றும் தன்னை மன்னித்து விடுமாறும் கடிதம் வாயிலாகப் பவித்ராவிடம் தெரியப் படுத்துகிறான்.

    பவித்ராவும், காதல் எனும் உணர்வு அப்படியெல்லாம் இலேசில் அழிக்கக்கூடிய உணர்வு இல்லை என்றும்,சுதந்திரப் போர்க்களத்தில் குதித்த பின் ஒருவேளை நம்மிருவருக்கும் தொடர்பு அறவே விட்டுப் போகவும் கூடும் என்றும், அதற்காக என்னைத் தடை செய்ய நீங்கள் யார்? உங்களைக் காதலிப்பது எனது சுதந்திரம் என்று நீண்ட பதிலை கங்காவுக்கு எழுதுகிறாள்.

    ராஜாராமனும், அமராவதியும், அஞ்சனாவும், பவித்ராவும், கங்காதரனுடன் அவர்கள் வீட்டில் ஒன்று கூடி சைமன் கமிஷன் பற்றியும், காந்திஜி பற்றியும், நேருஜி, சுபாஷ் சந்திர போஸ் பற்றியும் ஆனந்த மோகன் போஸ் பற்றியும் விவரமாகப் பேசி விவாதித்துக் கொண்டிருப்பது நம் கண் முன்னே நடப்பது போன்ற ஒரு பிரமையை ஏற்படுத்தும் எழுத்துக்கள்.

    இந்நிலையில் பவித்ராவும், அவள் வீட்டில் வேலை பார்க்கும் தங்கம் என்பவளின் வற்புறுத்தலினால் தனது துணைக்கு அவளையும் அழைத்துக் கொண்டு கடிதம் எழுதி வைத்துவிட்டு விடுதலை இயக்கத்தில் சேருவதற்காக வீட்டை விட்டு வெளியேறுகிறாள்.

    கங்காதரனும் இயக்கத்தில் சேருவதற்காக புரட்சிக் கும்பலோடு சேர்ந்து கொண்டு டெல்லி செல்கிறான். அப்போது லாகூரில் நடந்த காங்கிரஸ் மாநாட்டுக்கு ஜவஹர்லால் நேரு தலைமை தாங்கினார்.அவரது தலைமையுரை இந்திய இளைஞர்களுக்கு அகிம்சையின் மகத்துவத்தை வலியுறுத்தியதோடு, வெள்ளைக்காரனுக்கு எதிராக அணி திரண்டு அனைவரும் போராட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.முழுச் சுதந்திரமே காங்கிரஸின் குறிக்கோள் என்கிற அவரது அறைகூவல் பலத்த ஆரவாரத்துடன் ஏற்கப்பட்டது.இம்சை வழியில் தனக்கு நம்பிக்கை இல்லை என்றும் நிலையான பயன்களை அகிசைவழியால் தான் நாம் பெற முடியும் என்றும் அவர் கருத்துத் தெரிவித்தார். காந்தியின் மீது சற்றே அவநம்பிக்கை கொண்டிருந்தவர்களும் கூட இளைய நேருவின் கனல் பரந்த பேச்சைக் கேட்டு வேகம் கொண்டனர். அவ்வாண்டு டிசம்பர் 31 ஆம் நாளில், ரவி நதித்திடல் நோக்கி மாபெரும் ஊர்வலத்தை நேரு சென்றார். நதிக்கரையில் மூவண்ணக்கொடி ஏற்றப்பட்டு, பூரண சுதந்திரமே இந்தியாவின் குறிக்கோள் என்பதற்கான சூளுறவு அங்கு குழுமியிருந்த மூன்று இலட்சம் மக்களால் மேற்கொண்டு உரைக்கப்பட்டது.மதுவிலக்கு மாநாடும், அந்நியத் துணி மறுப்புப் போராட்டமும் ராஜாஜியின் தலைமையில் நடந்தது.நாடு தழுவிய உப்பு சத்தியாகிரகம் நடந்து முடிந்தது.

    கூடிய விரைவில் இந்தியா முழுவதும் பேசப்படப்போகும் ஒரு பெரிய காரியத்தை நாங்கள் செய்யப் போகிறோம் என்று பவித்திரா தனது தாய் அமராவதிக்கு கடிதம் எழுதித் தெரியப்படுத்தினாள். இதனிடையில், மோதிலால் நேரு காலமானார் .பகத்சிங் தூக்கிலிடப்பட்டார்.இந்து-முஸ்லிம் கலவரத்தில் முடிந்தது, காந்திஜி இந்தப் பிரிவினையில் மனம் கலங்கினார். இது போன்ற எண்ணற்ற வேதனை சம்பவங்களைக் கண்கூடான காட்சியாக கதையில் சித்தரிக்கப் பட்டிருக்கிறது.

    வீட்டை விட்டு வெளியேறிய கங்காதரனும், பவித்ராவும், துணைக்குச் சென்ற தங்கமும் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொண்டார்களா? போராட்டத்தில் என்னவானார்கள்? நரேந்திரநாத் பானர்ஜியின் நிலைமை என்னவாயிற்று…? இவையனைத்தையும் பக்கத்துக்குப் பக்கம் நெஞ்சைப் பதற வைக்கும் நிகழ்வுகளோடு நீங்களும் அறிந்து கொள்ள ‘மணிக்கொடி’யைத் தேடுங்களேன்.

    இத்தனை விஷயங்களையும் ஒன்றாகக் கோர்த்துக் கதையோடு சேர்த்து வாசகர்களுக்கு கதையைத் தாண்டியும் ‘சுதந்திரம் பெறுவதற்காக நமது முன்னோர்கள் கொண்ட இன்னல்களை இம்மியும் விடாது சொல்லி ‘இந்தியன்’ என்ற உன்னத உணர்வை ஒவ்வொருவருக்குள்ளும் ஏற்படுத்த எழுத்தாளர் மேற்கொண்ட பெரும் சமூக சேவை என்றே சொல்லலாம். இந்தியா சுதந்திரம் வாங்கும் முன்பு இருந்த அத்தனை நிகழ்வுகளையும் தக்க ஆதாரங்களுடன் திரட்டிய வரலாற்றுச் சின்னமாகப் படைத்திருக்கும் இந்தப் புதினத்தை ஒரு இலக்கியக் காவியப் படைப்பாக்கி ஒவ்வொருவரின் வீட்டிலும், பள்ளியிலும் அவசியம் வாசித்துத்   தெரிந்து கொண்டால் மட்டுமே நமது  தாய்நாட்டின் மீது நமக்குப் பற்று உண்டாகும்.

    வெள்ளைக்காரர்களிடமிருந்து விடுதலை பெற்ற நமது இந்தியா தற்போது திரை உலகின்  பிடியில் மாட்டிக்கொண்டு அவஸ்தைப் படுகிறது. ‘தேசபக்தி’ என்ற எண்ணமே இல்லாமல், இன்றைய இளைய சமுதாயத்தைத் திரைப்படங்கள் ஆக்கிரமித்து விட்ட வேளையிலும், சுதந்திரம் கிடைத்து ஆண்டுகள் பல கடந்து விட்ட நிலையிலும், மாணவர்களிடம் தேசப் பற்று மறைந்து கொண்டு வருவது கண்கூடு. இந்த நேரத்தில் இப்பேர்பட்ட சுதந்திரத்தை தங்களுக்கு வாங்கித்தர நம் முன்னோர்கள் எப்படியெல்லாம் தியாகங்கள் புரிந்திருக்கிறார்கள் என்பதை விளக்கிச் சொல்லும் தேசபக்தி நிறைந்த இந்த “மணிக்கொடி” அவர்களின் கண்பட்டு மனதில் பறந்தால் மட்டுமே கண்டிப்பாக நமது தாய்நாடு தப்பிக்கும்.

    கதைக்குள் முக்கியமான வரலாற்று நிகழ்வுகளின் சில அலைகள்:

    “இண்டியா ஆபீஸ்ல போன வருஷம் ஜூலை மாசம் நடந்த ஒரு விழாவப்ப ‘மதன்லால் திங்ரா’ங்கிற ஒரு இருபத்திரண்டு வயசு மாணவன் சர் கர்ஸான் வில்லிங்கிற வெள்ளைக்கார அதிகாரியைச் சுட்டுக்கொன்ன செய்தியும், அவன் அதற்குத் தண்டனையாத் தூக்கில்  போடப்பட்டபோது அவனுடைய கடைசி வாகுமுலத்தை விவரமாக எழுதி இருந்ததை அப்படியே மொழிபெயர்க்கப் பட்டதாக இருப்பதால், படிக்கும் போதே பல விஷயங்களை நமக்கு விளக்கச் செய்வதோடு ‘மதன்லால் திங்ரா’ கடைசியில் தூக்கில் இடப்படுவதற்கு முன்னதாக உணர்ச்சியுடன் விடுத்த அறிக்கையில் “என் இந்தியத் தாய்க்கு அளிக்க எனது இரத்தத்தைத் தவிர வேறு எந்த விலைஉயர்ந்த பொருளும் என்னிடம் இல்லை” என்று நெஞ்சுரத்துடனும், தைரியத்துடனும் குறிப்பிட்டிருப்பது அவரது தேசபக்தியை நமக்கு உணர்த்தி நம்மை மெய் சிலிர்க்க வைக்கிறது.

    ‘மதன்லால் திங்ரா’வுடைய கடைசி அறிக்கையை ‘தேசபக்தியைக் குறிக்கிற மிகச்சிறந்த சொற்கள்’ அப்படின்னு தம்மையும் மறந்து பாராட்டி இருக்கார். “இங்கிலாந்து மந்திரிசபையில ஃபினான்ஸ் மினிஸ்டரா இருக்கிற லாயிட்ஜார்ஜ்  – என்பதன் மூலம் வெள்ளைக்காரங்கள்ளயும் நல்லவங்க இருக்காங்க, என்ற அபிப்ராயத்தையும் சொல்லியிருந்த விதம் சிறப்பு..

    வீர சாவர்க்கர், 1857ஆம் வருஷத்துச் சிப்பாய்க் கலகத்தைப் பத்தி ‘எரிமலை’ங்கிற தலைப்பில ஒரு புத்தகம் எழுதி  இருக்கார்.

    அதனோட இங்கிலீஷ் எடிஷன் ஹாலண்ட்ல பப்ளிஷ் ஆனது.” அந்தப் புத்தகந்தான் மதன்லால் திங்ராவுக்கு இன்ஸ்பிரேஷனாம், அதைப் படிச்சுட்டுத்தான்  அவன் தேசபக்தனாயிட்டானாம்.” அந்த வீர சாவர்க்கர், மதன்லால் திங்ராவின் உடலைத் தங்கிட்ட ஒப்படைக்கச் சொல்லி விடுத்த வேண்டுகோளுக்கும் ஆங்கிலேயர்கள் செவிசாய்க்கவில்லை என்பதைப் படிக்கும் போது, படிப்பவரின் மனம் கண்டிப்பாக வருத்தமடையும்.

    இந்த விடுதலைப் போராட்டத்தில் பெண்களும் பங்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற தனது அபிப்ராயத்தை அஞ்சனாதேவி தெரிவித்ததும், ராமசாமியும் அவரது நண்பரும் மறுத்துச் சொன்ன போது ,”குடும்பம்கிற  அமைப்பை  ஆணும்பெண்ணும் சேர்ந்து நடத்தற மாதிரிதானே இதுவும்! நாட்டு நடப்பிலயும் ஆணும் பெண்ணும் இணைஞ்சு வேலை செய்யணும். அப்பதான் சீக்கிரம் சுதந்திரம் கிடைக்கும். பெண்கள்கூட இந்தப் போராட்டத்துல  பங்கெடுக்க  முன்வர்றான்னா, அது வெள்ளைக்காரனைக் கொஞ்சமாவது சிந்திக்க வைக்கும். இப்ப மேடம் பிக்காஜி காமா,சர்தார் சிங்க் ராணா இல்லையா? 1907 இலே ஸ்டட்கார்ட் நகரத்துல நடந்த இண்டர்நேஷனல் சோஷலிஸ்ட் காங்கிரஸ் மகாநாட்டுல இவங்க ரெண்டு பேரும் இந்தியாவோட பிரதிநிதிகளாக் கலந்து கொண்டார்கள்.

    “இங்கேலீஷ்காரன் கண்ணுல மண்ணைத் தூவற இந்த வேலையை முதல்ல ஆரம்பிச்சு வெச்சது நம்ம பாரதியார் தான். இப்ப அவரை அரவிந்த கோஷ் முதக்கொண்டு ஃ பாலோ பண்ணத் தொடங்கிட்டாங்க பாரும்.  வெறுமனே சந்திப்பு, பேச்சு, எழுத்துன்னு மட்டும் போயிட்டிருந்தா எந்த ஜென்மத்துலேங்க்காணும் இந்தியா சுதந்திரம் அடையிறது? முதல்ல ஜனங்களுக்கு, நாம அடிமைகளா இருக்கோம்கிறது புரிஞ்சு அவங்களுக்கு வெள்ளைக்காரன் மேல தாங்க முடியாத ஆத்திரம் வரணம். அதுக்கு அப்புறந்தான் புரட்சி வெடிக்கும்.

    1908 ல திலகர் வேற நாடுகடத்தப்பட்டு இப்ப பர்மா ஜெயிலில் இருந்திட்டிருக்காரு. ஆறு வருஷம் கழிச்சு 1914 ஆம் வருஷம் தான் திரும்பி வரணும். பாவம்..! அம்பத்திரண்டு வயசுல நாடு கடத்தல், என்ன அயோக்கியத்தனம்! பம்பாயில அவரைத் திலக் மகராஜ்னு தான் சொல்லுவாங்களாம். கோர்ட்ல மூச்சு விடாம இருபத்தொரு மணி நேரம் தன கேசைத் தானே வாதாடிப் பேசி இருக்காரே….வெள்ளைக் காரங்க அசந்து போயிட்டாங்களாம்.திலகர் மாதிரி ஒரு பெரிய தலைவர் பர்மா மாண்டலே ஜெயில்ல இருக்குறதுங்கிறது எவ்வளவு பெரிய துரதிருஷ்டம்.

    பத்திரிகையில நம்ம கருத்துக்களை வெளியிடற சுதந்திரத்தை தடை செய்யற அடக்குமுறைச் சட்டத்தை எதிர்த்துக் கேசரி பத்திரிகையை நடத்திட்டிருந்த திலகர் அதுல எழுதாம இருப்பாரா? நம்ம நாட்டுல வந்து உக்காந்துக்கிட்டு, நம்ம பத்திரிகை சுதந்திரத்துல தலையிட்றதா ? ராமசாமி நண்பர் மனவாளரிடம் பேசும்போது திலகருக்காக கொந்தளித்துப் பேசுவது அந்த இடத்துக்கே நம்மையும் அழைத்துச் சென்று விடுகிறது.

    கப்பல் மாலுமிகளைக் கைக்குள் போட்டுக்கொண்டு இந்தியா ஹவுஸில் வாழும் நம் நாட்டு தேசபக்த வாலிபர்கள் லண்டனிலிருந்து  கைத்துப்பாக்கிகள் ,  வெடிகுண்டுகள்போன்றவற்றைத் திருட்டுத்தனமாக நம் நாட்டுப் புரட்சி இயக்கத்தினர் அடைய உதவி வருகின்றனர். அவர்கள் மூலம் நம் நாட்டின் பல பகுதிகளிலும் தீவிரவாத நடவடிக்கைகள் வலுத்து வருகின்றன. அயல் நாட்டினருடன் நாங்கள் இடைவிடாத தொடர்பு கொண்டு மிஸஸ் கென்னடி என்கிற வெள்ளைக்காரப் பெண்மணியையும் அவள் மகளையும் சுட்டுக்கொன்ற குதிராம் போஸ் தூக்கில் இடப்பட்டபோது கல்கத்தா நகரம் முழுவதும் அமளி துமளிப்பட்டது. எங்கு பார்த்தாலும் குதிராம் போஸ் பற்றியே மக்கள்பேசினார்கள். கண் கலங்கினார்கள். மனம் கொதித்து வெள்ளைக்காரன் மீது வெறுப்பை உமிழ்ந்தார்கள்.

    “இந்தப்பாரபட்சமானநீதிவழங்கலால்மனக்கசப்புற்றவர்களில் பரீந்திரகுமார் கோஷின் அனுசீலன் சமிதிக்காரர்கள் சிலர். இவ்வாறு பாரபட்சமாக நீதி வழங்கிய ஒரு மாஜிஸ்டிரேட்டைக் கொலை  செய்துவிடவேண்டும்  என்று  இந்த  அமைப்பு முடிவெடுத்தது. அதன்படி,  பிரபுல்லா  சக்கி,  குதிராம்போஸ் எனும் இரண்டு இளைஞர்கள் அந்த மாஜிஸ்டிரேட்டின் ஊரான முசபர்பூருக்குப் போனார்கள். கென்னடி எனும் வெள்ளைக்காரர் தம் மனைவி, மகள் ஆகியோருடன் பயணம் செய்துகொண்டிருந்த கோச்சு வண்டியை அந்த மாஜிஸ்டிரேட்டினுடையது என்று தவறாக எண்ணிவிட்ட இருவரும் அதன் மீது ஒரு குண்டை வீச, அதன் விளைவாக அந்த வெள்ளையரின் மனைவியும் மகளும் மாண்டுபோனார்கள். இரண்டு புரட்சிக்காரர்களும் உடனே அங்கேயே கைது செய்யப்பட்டார்கள். பிரபுல்லா சக்கி தன்னைத்தானே சுட்டுக்கொண்டு இறந்துபோனான். குதிராம் போஸ் தூக்கில் இடப்பட்டான். அவர்களது இரகசிய அலுவலகம் கண்டுபிடிக்கப்பட்டது. நிறைய புரட்சிக்காரர்கள் பிடிபட்டனர். பரீந்திரகுமார் கோஷ், அவர் அண்ணன் அரவிந்தகோஷ் ஆகிய இருவரும்கூடப் பிடிபட்டனர்.

    குதிரோம் போஸைப் பிடித்துக் கைது செய்த நந்தலால் எனும் இந்திய சப் இன்ஸ்பெக்டர் கொலை செய்யப்பட்டான். குதிராம்

    போஸைத் தூக்கில் போட்ட பிறகு அவனது நினைவாகப் பள்ளிகள் இரண்டு நாள் விடுமுறையை அனுஷ்டித்தன. எங்கு பார்த்தாலும் அவனது புகைப்படம் கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டு அவை ஆயிரக்கணக்கில் விற்பனை ஆயின! பரீந்திரகோஷின் கும்பலைச் சேர்ந்த நரேந்திரகோசேங் என்பவன்  துரோகியாக  மாறி,  காட்டிக்கொடுத்ததால்தான் வெள்ளைக்காரர்களால் அவர்களது இரகசிய அலுவலகம், கடிதப்  போக்குவரத்து  பற்றிய  தகவல்கள்,  திட்டங்கள் போன்றவற்றை அறிய முடிந்தது. “குதிராம் போஸ், பிரபுல்லா சக்கி ஆகிய இருவரும் கென்னடி குடும்பத்தினரைக் கொலை செய்த வழக்கு நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருக்கும் போதே, கோர்ட்டிலேயே வைத்து பப்ளிக் பிராசிக்யூட்டரும், டெபுடி சூப்பரின்டென்டென்ட் ஆஃப் போலீஸும் சில பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.

    “தேசபக்தர்களைக் காட்டிக்கொடுத்த நரேந்திர கோசேங்யை கன்னயாலால் தத்தா என்பவனும் சத்தியன் போஸ் என்பவனும் சிறைச்சாலச்   சுற்றுச்   சுவரினுள்ளேயே சுட்டுக்கொன்றுவிட்டார்கள். கன்னயாலால் கூடத் தூக்கிலிடப்பட்டான். மாவீரனாய்க் கருதப்பட்ட அவனது சவ ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டார்கள். என்று நரேந்த்ரநாத் ராஜாராமனிடம் சொல்லும்போது அவர்களின் அராஜகம் மனக்கண் முன்னே காட்சியாய் விரிகிறது.

    சிப்பாய்க் கலகம் என்று ஆங்கிலேயர் அழைத்து வந்த 1857 புரட்சிக்கு முதல் சுதந்திரப் போர் என்று பெயரிட்ட வீர சாவர்க்கர் மீது ஆங்கிலேயரை எதிர்த்துப் போராட இந்தியர்களைத் தூண்டியது, பயங்கரவாதிகளுக்கு இரகசியமாய்த் துப்பாக்கிகள் அனுப்பியது ஆகிய குற்றச்சாட்டுக்களை சுமத்தியது. நாசிக் கலெக்டர் ஜாக்சனின் கொலைக்கும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டு தண்டனையாக அந்தமானுக்கு நாடு கடத்தப் பட்டு ஆயுள் முழுதும் அந்தச் சிறையில் இருக்க வேண்டும் என்றும் தீர்ப்பு வழங்கப்பட்டது.

    இன்னும், ஜாலியன் வாலாபாக் படுகொலை, மற்றும் பல போராட்டங்களின் விபரங்களோடு, காங்கிரஸ் பிளவு, இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்குமான மதச் சண்டைகள் எனவும் பல இயக்கங்களைப் பற்றிய விரிவான தகவலையும் தருகிறார் ஆசிரியர்.

    க்விட் இண்டியா மூவ்மெண்ட்ல கலந்து கொண்ட பதினெட்டு வயது நிரம்பிய ஹேமூ காலாணி என்னும் சிந்திப்பையன் பிரிட்டனுக்கு எதிரா நிறைய அறிக்கைகளையும் புத்தகங்களையும் விநியோகித்தும், சுக்கூர் வழியாக ஸ்பெஷல் ட்ரெயின் பிரிட்டிஷ் ஜவாங்கலையும் வெடி மருந்துகளையும் ஏத்திண்டு வரப்போவதாக தனக்குக் கிடைத்த தகவலின்படி அதைத் தடுக்க தண்டவாளத்திலிருந்து ஃபிஷ்ப்ப்ளேட்சை அப்புறப்படுத்தும் போது , தான் கூட உதவிய நண்பர்களைத் தப்பிக்க விட்டு தான் மட்டும் மாட்டிக்கொண்டான். அந்த நண்பர்களின் விலாசங்களைக் கொடுத்துவிட்டு அப்ரூவராக இவன் மாறினால் அவனை விட்டுவிடுவதாக பிரிட்டிஷ்காரன் சொன்னபோதும், “நண்பர்களைக் காட்டிக் கொடுப்பதை விட நான் சாவேன்” என்றவன் 1943, ஜனவரியில் தூக்கில் போடப்பட்டான். அவனை இறுதியாகப் பார்க்க வந்த அவனது அம்மாவுக்கு அவன் கூறிய ஆறுதல், ” அம்மா…ஆத்மாவுக்கு அழிவில்லைன்னு பகவத் கீதையில் சொல்லி இருக்குன்னு நீ தானே அடிக்கடி சொல்லுவே..! அதனால நீ அழக்கூடாது ” என்றவனின் நெஞ்சுரமும் தீரமும் அவனது தேசப்பற்றை படிக்கும் போதே, மனம் கலங்குகிறது.

    நம்ம திருப்பூர் குமரன் போலவே, வங்காளத்தைச் சேர்ந்த  மாதங்கினின்னு ஒரு வயதான பெண்மணி 1929 இல் தனி ஆளாக கவர்னருக்குக் கறுப்புக் கொடி காண்பித்ததற்க்காக ஆறு மாத காலம் சிறை சென்று திரும்பி, மறுபடியும் நடந்த போராட்டத்தில் 1942இல் போலீசால் சுடப்பட்டு இறந்தார். இறக்கும் நேரத்திலும், இறந்த பின்பும் கூட கையில் பிடித்திருந்த கொடியை விடவே இல்லையாம். இதற்குப் பேரும் வீரம் தானே.

    அஸ்ஸாம்ல கனகலதான்னு ஒரு பெண் 1942 செப்டெம்பரில் “வெள்ளையனே வெளியேறு” என்று கோஷமிட்டபடி ஒரு பெண்கள் ஊர்வலத்தைத் தலைமை தாங்கிய படி போலீஸ் ஸ்டேஷன் கட்டடத்துல தேசியக் கொடியை ஏத்தவேண்டும் என்ற எண்ணத்தில் சென்றவர்களை போலீஸ்காரர்கள் தடுத்து நிறுத்தவும், “கொடியை ஏத்திவிட்டு சென்று விடுவோம்”என்று அவர்கள் கூறியதையும் பொருட்படுத்தாமல் தடுக்கவே, ” உங்களால் எங்க உடம்புகளைத்தான் கொல்ல முடியும், எங்க உணர்வுகளைக் கொல்ல முடியாது” என்று சொல்லியிருக்கிறாள். அந்த வாக்கியம் தான் அவள் பேசிய கடைசி பேச்சாக இருந்தது. அதற்குள் அவள் மேல் குண்டு பாய்ந்து அவள் இறந்து விட்டாள்…இது போன்ற உயிரைப் பணயம் வைத்த வீராங்கனைகளை இந்நூல் அடையாளம் காட்டுகிறது.

    அன்னியத்துணிகள் இருந்த டிரக்குக்கு முன்னால் நின்று மறியல் செய்ததற்காக, 1930 இல் சையது பாபு கேணு என்கிற மகாராஷ்டிர வாலிபனை வேண்டுமென்றே வெள்ளைக்கார சார்ஜெண்டு டிரக்கை அவன் மேல் ஏற்றிக் கொன்று விட்டான். இதைப் படிக்கும் போது எத்தனை அராஜகத்துக்கு அவர்கள் பலியானார்கள் என்று திடுக்கிட வைக்கிறது மனம்.

    கோதாவரி ஜில்லாவில் அல்லூரி சீதாராமராஜு என்பவர் பழங்குடி மக்களை வைத்துப் படை திரட்டி வெள்ளைக்காரப் போலீசையே பலதரம் அச்சுறுத்தினார். கடைசியில் பழங்குடி மக்களுக்கு வெள்ளைக்காரன் கொடுத்த தொல்லை தாங்க மாட்டாமல் தானாகவே சரணடைந்ததும் அவர்கள் அவரைச் சுட்டுத் தள்ளிவிட்டார்கள்.

    இது போல நாடு முழுவதும் எல்லா ராஜாதானிகளிளிருந்தும் சுதந்திரத்திற்காக பொங்கி எழுவது என்பது சாமான்ய விஷயமில்லையே.

    இதைப் போன்ற இன்னும் ஏராளமான நிகழ்வுகள், உண்மையை அடிப்படையாகக் கொண்டு தகவல் களஞ்சியமாக ‘மணிக்கொடி’ விளங்குவதால், அந்தப் புதினத்தை முழுவதும் படிப்பதால் மட்டுமே முழுமையை உணர முடியும் என்பது எனது தாழ்மையான கருத்து.

    பட்ட துன்பங்களுக்கும், செய்த போராட்டங்களுக்கும் வெற்றியாக…!

    சுதந்திர நாளுக்குரிய கோலாகலத்துடன் தில்லி விழாக்கோலம் பூண்டிருந்தது. வெள்ளைக்காரர்கள் நிறைய பேர் ஆங்காங்கு சுறுசுறுப்பாகத் தெருக்களில், கடைகளில், ரெயில்வே நிலையத்தில், விமான தளத்தில் என்று கும்பல் கும்பலாய்க் குடும்பங்களுடன் காணப்பட்டார்கள். இந்தியாவை விட்டுக் கிளம்ப நேர்ந்து விட்டதில் அவர்களுக்கெல்லாம் வருத்தம் தான் என்று சோர்ந்த அவர்களின் முகங்களைப் பார்த்து கங்காவும், நரேந்திரநாத் பானர்ஜியும், ரமணியும் நினைத்தார்கள்.

    பதினான்காம் நாள் இரவிலிருந்தே மக்கள் தெருக்களில் சாரிசாரியாக நடந்து அமைச்சர்கள் ஊர்வலம் செல்ல இருந்த வீதிகளில் இரு மருங்கிலும் கூடத் தொடங்கினார்கள். இந்திய வரலாற்றில் சிறப்பு மிக்க அத்திருப்பம் அன்றிரவு சரியாக மணி பன்னிரண்டு அடித்ததும் தொடங்கியது. பதினைந்தாம் நாளின் விடியல் நோக்கி உலகம் புறப்படத் தொடங்கிய அந்த இருண்ட நேரத்தில் இந்தியா ஒளி பெற்றது.

    சுதந்திர நாளைத் தொடங்கி வைத்த ஜவகர்லால் நேரு பேசலானார்…என்று  அவர் பேசிய அருமையான பேச்சை எழுதிவிட்டு,

    மவுண்ட் பேட்டன் சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர்- ஜெனரலாக நியமனம் பெற்றதைத் தொடர்ந்து மக்களின் ஆரவாரத்துடன், நன்றியுரையாக ராஜேந்திர பிரசாத் கூறியதை ” நாம் அடைந்துள்ள வெற்றிக்கு நம் தியாகங்களும், நாம் பட்ட துன்பங்களும் பெருமளவுக்குக் காரணங்களானாலும் , உலகத்துச் சக்திகளும் நிகழ்ச்சிகளின் போக்கும் நமக்கு உதவியுள்ளன என்பதும் உண்மையாகும். பிரிட்டிஷ் மக்களின் ஜனநாயகக் கோட்பாடுகளுடையவும், வரலாற்று மரபுகளுடையவும் உச்ச நிலையே நமது சுதந்திரத்தில் முடிந்தது ”  என்று பதவியேர்புப் பிரமாணம் முடிந்தபின் அமைச்சர்களின் ஊர்வலம் நடைபெற்றது

    என்றும், அதைத் தொடர்ந்து கூட்டம் மெல்லக் கலையவும் கரையவும் தொடங்கினாலும், காந்திஜியைப் பொறுத்தவரை

    இந்தியாவின் வரலாற்றில் இந்த ஆகஸ்ட் 15 ஒரு துக்க நாள். அவர் கனவு கண்ட ஏக இந்தியா, இந்துக்களும்,முஸ்லிம்களும் இணைந்திருக்க சம்மதிக்காததால் அமையவில்லை. என்றும் பேசிக் கொண்டனர்.

    நமது இந்தியா வன்முறையும் அகிம்சையும் சேர்ந்ததால் தான் சுதந்திரம் கிடைத்தது என்னும் கருத்தை வலியுறுத்தி மேலும் பல விஷயங்களை விவாதித்தபடியே கங்காவும், நரேந்திரநாத்தும், ரமணியுடன் பேசிக் கொண்டே ” உலக அபிப்பிராயங்களுக்கு மதிப்புக் கொடுத்தும் இனிமேல் இங்கே இருப்பது அசிங்கம் என்பதை நம் எதிர்ப்புப் போராட்டங்களிலிருந்து புரிந்து கொண்டும் கவுரவத்துடன் பிரிட்டன் விலகியது பெரிது தான்…அதில் துளியும் சந்தேகமில்லை என்று கங்காதரன் முடிக்கிறான்.

    “சாரே ஜஹாங்சே அச்சா ஹிந்துஸ்தான் ஹமாரா ” என்ற இனிய பாடலுடன் கதையின் நிறைவை நேரில் காண்பது போலவே எழுதி இருக்கிறார்.

    ‘ஒரு பானைச் சோற்றுக்கு சில பருக்கைகள்’ பதம் என்பது போல, முதல் பகுதியின் முக்கியமான பல நிகழ்வுகள் எழுதப் பட்டிருந்தாலும் அதிலும் ஒரு சிறிய பாகத்தை மட்டும் இங்கே எடுத்து எழுதியுள்ளேன். கதையைப் படித்து முடித்ததும், தேசத்தின் மீது ‘பற்று’ நம்மையும் மீறி பற்றிக் கொள்கிறது. மஹா சமுத்திரம் முன்பு நின்று பார்த்தால் அலைகள் அடித்துப் பெருகி வருவது போல ‘நிகழ்வுகள்’ தொடர்ச்சியாக வந்து கொண்டே இருக்கிறது. கண்டிப்பாக இந்தக் கட்டுரையைப் படிக்கும் ஒவ்வொருவருக்கும் இந்தப் புதினத்தை வாங்கிப் படித்துப் பாதுகாக்கும் ஆவல் உருவானால், அதன்மூலம்  நான் எடுத்துக் கொண்ட இந்த முயற்சியும்  வீண் போகவில்லை என்று

    முடிவுரை:

    மனித மனங்களின் உணர்வுகளையும், நாவலைப் படிக்க ஆரம்பிக்கும் போதே நாமும் கதாபாத்திரங்களோடு சேர்ந்து பயணிப்பது போன்ற பிரமையை ஏற்படுத்திய விதமும், ஆசிரியரின் எழுத்தின் பலம் நாவல் முழுவதும் வியாபித்திருப்பதை நம்மால் உணர்ந்து கொள்ள முடிகிறது.எத்தனை விஷயங்கள்….! எத்தனை விவரங்கள்..! படிக்கப் படிக்க ஆச்சரியம் நெஞ்சம் முழுதும் வியாபிப்பது தான் நிஜம்.

    பயங்கரவாதத்தால் எதையும் சாதிக்க முடியாது. அப்படி சாதிக்க முடிந்தாலும் அது தற்காலிகமானதாகத் தானிருக்கும். நிரந்தரமான வெற்றி, அது காந்தி வழி அகிம்ஸா கொள்கையின் மூலமாகத் தான் பெற முடியும் என்பதை வலியுறுத்தி பல வாக்குவாதங்களை சொல்லியிருந்தாலும், இந்தியா முழுக்க முழுக்க அகிம்சை வழியில்தான் சுதந்திரம் பெற்றது என்று சொல்லிவிட முடியாது. சுதந்திரம் பெரும் போராட்டத்தில் மனிதர்கள் அவ்வபோது இரத்தம் சிந்த வேண்டிய நிர்பந்தமும், உயிர்த் தியாகம் செய்யும்படியான கட்டாயமும் உண்டாகிறது. காந்தியடிகளின் அகிம்சையை பின்பற்றினாலும், தீவிரவாதத்திற்கும் முக்கிய பங்கு உண்டு என்பது வலியுறுத்தும்படி கதையின் போக்கு அமைந்துள்ளது. பல வரலாற்று முக்கியத்துவம் சார்ந்த நிகழ்வுகளை கதையோடு பின்னியிருப்பது கதையின் விறுவிறுப்புக்கு மேலும் காரணமாயிருக்கிறது.

    ராபர்ட் ப்ராஸ்ட் அவர்களின் ‘இன்னும் போக வேண்டிய தூரம் அதிகம்’ என்னும் சொற்றொடருக்கேற்ப ஆண்டுகள் பல கடந்து கொண்டிருக்கையில், ஆயுட்காலம் முழுதும் நாட்டுக்கே தன்னை அர்ப்பணித்து வாழ்ந்த தியாகசீலர்கள் மீட்டுத் தந்த சுதந்திர இந்தியாவை….அறுபத்து ஏழு ஆண்டுகள் கடந்துவிட ‘பழைமை’ என்ற எண்ணம் மேலோங்கியபடி வளரும் ‘புதுமைத் தலைமுறையினருக்கு’ இந்தியாவின் அருமையையும் தேசப் பற்றின் பெருமையையும் உணரச் செய்ய மீண்டும் ‘மணிக்கொடி’ புதுப் பொலிவோடு பட்டுடுத்தி 2013இல்  இரண்டாம் பதிப்பாக ‘சேது அலமி பதிப்பகம்’ மூலமாக வெளிவருகிறாள் என்று மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன். உறங்கிக் கிடக்கும் விழிகளும், மனமும், இது போன்ற நல்ல நூல்களால்  தட்டித் திறக்கபடட்டும்.

    ஆங்கிலேய ஆட்சியில் அடிமை பட்டுக் கிடந்த இந்திய அரசியல் சூழ்நிலையைப் பற்றி இன்றைய இளைய தலைமுறையினருக்கு நடந்த உண்மை வரலாறுகள் பற்றி அதிகம் அறிந்திருக்க வாய்ப்பில்லை.தெரிந்து கொள்ளும் ஆவலும்,  முதலில் தமிழ் கூட சிறிதும் அறியாத இளைய தலைமுறையினரும் இருப்பதைக் கருத்தில் கொண்டு ‘மணிக்கொடி’ ஆங்கிலத்திலும் மொழி பெயர்க்கப் பட்டு பிரசுரத்திற்கு தயாரான நிலையில் இருக்கிறது.

    எனது சிறிய வேண்டுகோள்:

    இந்த வரலாற்று நாவலைப் பற்றிய மதிப்புரை எழுத வேண்டும் என்று நினைத்து, ‘மணிக்கொடி’யைப் முழுதுமாகப்  பல தடவைகள் படித்துப் பார்த்ததும், அத்தனை நிகழ்வுகளையும் சொல்லிவிட வேண்டும் என்று நினைத்தாலும், என்னால் ஆசிரியை எழுதி இருக்கும் நிகழ்வுகள் அனைத்தையும் இங்கு மேற்கோளாகக் கூட சொல்ல முடியவில்லை. அது கடலுக்கு அருகில் நின்று ‘வேடிக்கைப் பார்க்கும்’ மன நிலையை மட்டும் தான் எனக்குள் உண்டுபண்ணுகிறது. புதினம் அவ்வளவு பிரம்மாண்டம். அதைப் படித்தால் மட்டுமே தெரிந்து கொள்ள இயலும். ஆதலால், ‘மணிக்கொடி’ என்ற இந்திய வரலாற்றுக் களஞ்சியத்தை உங்களுக்கே ‘சொந்தமாக்கிக் கொள்வதே’ உகந்தது என்பது எனது அன்பான வேண்டுகோள்.

    அதே சமயம். நமது நாடு சுதந்திரம் அடைந்து, பிறகு இன்று வரையில்  நடந்து கொண்டிருக்கும் ஒவ்வொரு நிகழ்வுகளும் கூட வரலாற்றில் இடம் பெறத் தகுதியானவை தான். அதையும் தக்க ஆதாரங்களுடன் “மணிக்கொடி” யின் தொடராக வர வேண்டும் அதையும் ஆசிரியை எழுத முன்வரவேண்டுமாய்க் கேட்டுக் கொண்டு எனது  கோரிக்கையை இத்துடன் வைத்து எனது இந்த கட்டுரையை நிறைவு செய்கிறேன். ஜெய்ஹிந்த்.

              வந்தே மாதரம்.! வந்தே மாதரம்.!வந்தே மாதரம்

    Share
  • தேரில் ஏறும் முன்னம் ..!

    ஜெயஸ்ரீ ஷங்கர்

    த்ரீஃபோர்த் ஜீன்ஸும், ஸ்லீவ்லெஸ் டீ ஷர்டும், காதிலிருந்து  கழுத்துவரை தொங்கியபடி ஊஞ்சலாடியது தங்கச் சங்கிலி. பச்சை ஜேட் ஜெம் மாலை கழுத்தைப் பிடித்து இழுக்காத குறையாக கனத்தது.  தலை முடியை மொத்தமாகத் தூக்கி பனானா கிளிப் போட்டும் சில முடிகளை உதிரியாக பறக்க விட்டும் புதுமையான ஹேர் ஸ்டைலில் அம்சமாக இருந்தாள் ப்ரீத்தி. மஞ்சள் முகத்தில் இரண்டு கரு வண்டுகளும் ஒரு ஸ்ட்ராபெர்ரிக்கு குறி வைத்துக் காத்திருப்பது போல முகமே சொன்னது.  ‘விளம்பர மாடல்’ அழகியாகக் அலங்காரம் செய்து கொண்டு கண்ணாடி முன் நின்று டச் அப் செய்து கொண்டேஅதன் வழியாக ரேனுவைப் பார்த்தவளின் கண்களில் குறும்பும், வெட்கமும் ஒன்று சேர,

    என்னடி ப்ரீத்தி….’சண்டே’யும் அதுவுமா இன்னைக்கு இவ்ளோ ஸ்பெஷல்..? இப்படிக் கிளாமரா எங்கடி கிளம்புற? சம்திங் ராங்… என்கிட்ட சொல்லேன்….சந்தோஷப் பட்டுட்டுப் போறேன்…ப்ரீத்தியைப் பார்த்து புன்சிரிப்புடன் கேட்கிறாள் ரேணுகா.

    ‘டேட்டிங்’……என்று சொல்லிவிட்டு உதட்டைக் குவித்து மெல்லிய விசிலடித்தபடியே கஷ்டப்பட்டுத் திரும்பிப் பின் அழகையும் பார்த்து திருப்திப் புன்னகை தவழ ரேணுகாவை நோக்கி புயலென வந்தவள் தொப்பென்று அவளருகில் உட்கார்ந்து கொள்கிறாள் ப்ரீத்தி.

    யாருடி.அது?..புதுக்கதையா இருக்கு…உங்க வீட்டுல தெரிஞ்சா…’டின்னு’ கட்டிடுவாங்க, தெரியுமொன்னோ? “ஊரு விட்டு ஊரு வந்து…..காதல் கீதல் பண்ணாதடீ …பேரு கெட்டுப் போகும்படி…ஆப்பு உனக்கே வைக்காதடி…” என்று கட்டைத் தொண்டையில் பாடிக் காண்பிக்கிறாள் ரேணு.

    சீ….லூஸு  லூஸு …..உன் தகர ‘வாயை வெச்சுகிட்டு சும்மா இருடி’….! என்று பதிலுக்கு ராகம் பாடிவிட்டு, ரேணுவின் அவளது தோளில் கையைப் போட்டுக் கொண்டு….” விஷ்ணு, அதான் அந்த ‘மலையாள மம்மூட்டி’…..இந்த சண்டே டேட்டிங் போகலாம் வரியான்னு கூப்பிட்டான்….அவனுக்கு என் மேலே ஒரு கண்ணு இருந்ததை விட எனக்கு அவன் மேலே ரெண்டு கண்ணும் மனசும் இருந்தது….அதான்.. சும்மாப் போய் அப்படி என்ன தான் இருக்கு இந்த டேட்டிங்குலன்னு பார்த்துட்டு வந்துடலாம்னு போறேன்.

    எங்க போகப் போறே..? சொல்லித் தொலைச்சிட்டுப் போ….! ஆனா….நீ இப்படிப் பண்றது எனக்குப் பிடிக்கலை. அவனே ஒரு அம்மாஞ்சி மாதிரி இருப்பான்….உனக்கும் அவனுக்கும் செட்டே ஆவாது…விட்ரு. போயும் போயும் நீ தான் அந்த ட்யூப் லைட்ட….சைட் அடிக்கிறே…!
    வம்புக்கிழுத்தாள் ரேணு.

    போதும்….உன்னோட ஜோசியம்…! உனக்கு பொறாமை வந்திருச்சு…? ப்ரீத்தி சிரித்துக் கொண்டே சொல்கிறாள்..

    அதெல்லாம் ஒரு மண்ணும் கெடையாது…..நீ எவன் கூட வேணா டேட்டிங்,போட்டிங் எங்க வேணாப்  போ….உங்க வீட்டுல தெரிஞ்சி உன்னை ஷூட்டிங் பண்ணினா அதுக்கு  நான் பொறுப்பில்ல…! என்னை நம்பி அனுப்பிச்சிருக்காங்க ஞாபகம் இருக்கட்டும், என்ற ரேணுகா தலையணையைக் கட்டிக் கொண்டு நான் இன்னிக்குப் பூரா நல்லாப் படுத்துத்  தூங்கப் போறேனே…என்னைக் கடிக்கிற எறும்பு இன்னிக்கு ஊர்கோலம் போகப்போவுதாம்…. என்று கவிழ்ந்து படுத்துக் கொள்கிறாள். ப்ரீத்தி கிளம்பத் தயாராகிறாள்.

    ஏய்….ரேணு….உன் ‘கைனியை’ எடுத்துட்டுப் போவா…என்று அவளது ‘கைனெடிக் ஹோண்டா’ வின் சாவியை எடுக்கப் போனதும், துள்ளிக் குதித்து எழுந்த ரேணு….அதத் தொட்டீன்னா பாரு…..! ஏன்…விஷ்ணுவுக்கு வாகனம் ஒண்ணும் இல்லியா? வெச்சிருப்பானே…..ஒரு தகர டப்பா …! அதை உருட்டிட்டு வரச்சொல்லி  வந்து கூட்டீட்டு போய்ட்டு கொண்டு வந்து விடச் சொல்லு…சுத்த மக்காயிருக்கியே..நேத்துத் தான் நான் என் வண்டிக்கு  ‘டாங்க் ஃபுல்’ பண்ணினேன்….அம்மாடி…! நீ எடுத்துட்டு போய் மொத்த சிட்டியை சுத்தி உரிஞ்சிட்டு கடைசீல காய்ஞ்ச கூடா கொண்டு வந்து நிப்பாடிடுவ…..அனுபவம் பேசுதும்மா ..அனுபவம் பேசுது..! என்று விவேக் ஸ்டைலில் சொல்லிவிட்டு சாவியை எடுத்துத் தலையணை அடியில் வைத்துக் கொள்கிறாள் ரேணுகா.

    அல்பம்…அல்பம்…..என்று திட்டிய ப்ரீத்தி…..நாளைக்கு ப்ராஜெக்ட்ல ‘இது டௌட்டு’ன்னு என்கிட்டே வருவேல்ல …அப்புடு சூடு…! என்று ஷூவில் காலை நுழைத்துக் கொண்டே…..”பை..டி அல்பம்….என் வண்டியவே எடுத்துட்டுப் போறேன்….என்ன..! அதுக்கும் என்னை மாதிரியே பிரேக் இல்லை…!…எங்கியாச்சும் முட்டி…..என்று ப்ரீத்தி முடிக்கவில்லை….

    இந்தா…..தொலை….மனசு கேட்கலை….என்று சாவியைத் தூக்கி ப்ரீத்தியிடம் வீச, அவள் லபக் கென்று பிடித்தவள்….உன்கிட்ட  செண்டிமெண்ட் பிட்டு தான் வொர்க் அவுட் ஆகுது…! நல்லபடியாக் கேட்டால்…..கொடுக்க மாட்டே…அனாவசியமா இன்னிக்கு என்னைப் பொய் சொல்ல வெச்சுட்டே…ம்ம்ம்..எனிவே ….. பை…என்று கதவைச் சார்த்தி விட்டு மறைந்தாள் ப்ரீத்தி.

    னா …ன …னா ….ன …ன ன ன் னா ….னா…ன ….னா …னா …ப்ரீத்தி,  பாடிக் கொண்டே வண்டியை ஸ்டார்ட் பண்ணியது ரேணுவுக்கும் கேட்டது.அதைத் தொடர்ந்து கைனி  உறுமிவிட்டு மறைந்தது.

    அறை திடீரென வெறிச்சோடியது போலிருந்தது ரேணுவுக்கு. ப்ரீத்தியும் ரேணுவும் பல வருடப் பழக்கம். ஒரே பள்ளி, ஒரே காலேஜ் என சேர்ந்து கும்மி அடித்து விட்டு…கேம்பஸ் இண்டர்வியூல  ரெண்டு பேரும் சேர்ந்து செலெக்ட்  ஆன விஷயம் தெரிஞ்சதும்…ஆகாசத்துக்கும் பூமிக்கும் குதித்துக் கொண்டாடி….சென்னையிலிருந்து பெங்களூருக்கு வேலைக்கு வந்தவர்கள். ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்துத் தங்கிக் கொண்டு வேலைக்குப் போய் வந்து கொண்டிருந்தார்கள்.

    எட்டு மாதங்கள் ஒழுங்கா ஓடின வண்டி….இப்பத் தான் தடம் மாற ஆரம்பிச்சுருக்கு…அதுவும் ப்ரீத்திக்கு. அவங்க வீட்டுல அவளுக்கு மும்முரமாக வரன் பார்த்துக் கொண்டிருக்கும் விஷயம் ரேணுவுக்கும் தெரியும்.இதெல்லாம் எங்க கொண்டு போய் விடப் போகுதோ? என்று எண்ணியவள், “சீக்கிரமா வந்து சேரு”. என்று ப்ரீத்திக்கு ஒரு மெசேஜ், அடித்து அனுப்பி விட்டு, எழுந்து அறையைப் பூட்டி விட்டு உறங்கிப் போனாள் .

    தூக்கம் ரேணுகாவை கனவுலகத்திற்கு அழைத்துச் சென்றது.வித விதமான ஆடையில் ப்ரீத்தி விஷ்ணுவுடன் ஆடியபடி கூடவே கொஞ்சம் கூடப் பொருத்தமில்லாத பாடலும் ஒலித்துக் கொண்டிருந்தது. எத்தனை மணி நேரம் தூங்கினாளோ, புரண்டு படுத்தவளை சாம்சங் ”
    “அய்யய்யய்யோ ஆனந்தமே
    நெஞ்சுக்குள்ளே ஆரம்பமே
    நூறு கோடி வானவில் மாறி மாறி சேருதே… ” என்று அழைத்தது…

    மின்னிய கைபேசியை எடுத்து…..ராட்ஷசி ….வந்துட்டா போலிருக்கு….நினைத்துக் கொண்டே….எழுந்து கைபேசியை மூடி வைத்துவிட்டு கதவைத் திறக்கிறாள்.

    காலையில் பனிமலர் போலப் போனவள் ப்ரீத்தி வரும்போது அலைந்து திரிந்து அலுத்துப் போய் கசங்கிய காகிதமாய் நின்றிருந்தாள் .

    அவளது அந்தக் திருக்கோலத்தைப் பார்த்த ரேணுகா….னா …ன …னா ….ன …ன ன ன் னா ….னா…ன ….னா …னா….என்று பாடியவள்,,
    வா…வா… ப்ரீத்தி….ஒரே நாள்ல இப்படித் தேய்ஞ்சு போய் வந்திருக்கே….என்னாச்சுடி ? ரேணுவின்  அதிர்ச்சி  அவள் குரலாக பேசியது.

    ஹப்பாடி…..! என்ற ப்ரீத்தி அப்படியே கட்டிலில் சாய்ந்தாள் . கனவெல்லாம் கலைஞ்சு போச்சு…ஆனால் ரொம்ப நிம்மதியா இருக்கு என்று சொல்லிக் கொண்டே, அத்தனை நேரம் அடக்கி வைத்திருந்த சிரிப்பை மனம் விட்டு, வாய் விட்டு கல கலவென்று பெரிதாகச் சிரித்தாள்

    என்ன ஒரே நாள்ல இப்படி மந்திரிச்சி விட்டுட்டானே அவன்…? படுக்குறா…புரளுறா …..சிரிக்கிறா….இவள் நினைத்துக் கொண்டிருக்கும் போதே…ப்ரீத்தி சத்தமாகப் பாடினாள்.

    என்னாச்சுடி உனக்கு? காதல் கிறுக்கு பிடிச்சிருச்சா? போச்சு போ..நீ விழுந்துட்டே…இனிமேல் அவ்ளோதான். இத்தனை நேரமா எங்கெல்லாம் போனீங்க?

    நேரா பானர்கட்டா ரோட்ல இருக்குற ‘கோபாலன் இன்னோவேஷன் மால்’ தான் போனோம்….விஷுக்கு அங்க போகணும்னு ரொம்ப நாளா ஆசையாம். எனக்கும் பார்க்கணும்னு தான் இருந்துச்சு, சொல்லிக் கொண்டே எழுந்து உட்கார்ந்து கொண்டாள்.

    ஒரே நாள்ல விஷ்ணு உனக்கு விஷுவாகிப் போனானா? சரி..அந்த ‘ஜெயதேவா ஃப்ளை ஓவர்’ பக்கத்துல இருக்கே அதுவா..? வாய் பிளந்தவள், அங்கெல்லாம் போனா நம்ம சொத்தை எழுதி வாங்கி நடுத்தெருவுல விட்டுருவாங்கடி…அவ்ளோ டெம்ப்டிங்கா இருக்குமே…..நானும் வந்திருப்பேன்…என்று அலுத்த குரலில் மெல்லச் சொல்கிறாள் ரேணுகா.

    நடந்து நடந்து செருப்பு ரெண்டு இன்ச் தேஞ்சு போச்சு.  ‘கார்டை’ இழுத்து இழுத்து ‘கத்தையும்’ கரைஞ்சு போச்சுடி …! ‘ஸ்வைப் பண்ணும்போது மஜாவா இருந்துச்சு…..வெளில வந்து மனசுக்குள்ள கணக்குப் போட்டதும், ‘பகீர்’ னுச்சு .

    க்ரெடிட்டா ….டெபிட்டா …?

    ஆத்திரத்தை  மூட்டாதடி….நானே……ஹி ……ஹி ……ஹி …….ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி …!

    என்னடிது  பிரகாஷ் ராஜ் ஸ்டைல்ல…..சிரிக்கிற…? அவரு தான் டென்ஷன் வந்தா இந்த மாதிரி சிரிப்பாரு…உனக்கும் அது தொத்திக்கிச்சா என்ன..? கட்டிப்புடி வைத்தியம் தான் பண்ணணுமா …..? இல்ல பண்ணியாச்சா..?

    தேவுடா…தேவுடா…எழுமல தேவுடா…சூடுடா..சூடுடா…இந்தப் பக்கம் சூடுடா…! கட்டை தொண்டையில் பாடியபடியே  ரேணு…இன்டக்ஷனை  ஆன் பண்ணி பாலைச் சூடு செய்தாள். ” காலேல ஒன்பது மணிக்குப் போன பொண்ணு இப்படி ராத்திரி பத்தரைக்கு வந்து நின்னு,,பைத்தியமட்டமா சிரிச்சா….நான் எங்கிட்டுப் போவேன்…டீ …..பயமுறுத்தாதடி …பொழுது விடிஞ்சா டூட்டிக்கு போகணும். இப்படிச் சிரிச்சு கூத்தடிக்கும்படிக்கு அப்படி என்ன தான் ஆச்சு உன் டேட்டிங்கு…? கேள்வி கேட்டா இந்தச் சிரிப்பு சிரிக்கிற…?

    ஆஃபீஸ்ல அந்த விஷ்ணு உன்னை லோ லோன்னு  ஃபாலோ  பண்றான்னு எனக்கும் தெரியும்….நீயும் கண்டும் காணாத மாதிரி மனசுக்குள்ள ‘பல்பை’ எரியவிட்டுட்டு ரெக்கையெல்லாம் கட்டிக்கிட்டுப் பறந்து பறந்து உள்ளுக்குள்ளே புழுங்குறதும் எனக்குத் தெரியும்.அவன் சரியான ‘ட்யூப்’ டி. ப்ரீத்தி..! ஆமா…ஷாப்பிங் பண்ணினியே ஒரு கவரையும் காணோம்….எங்கியாச்சும் சிரிச்சுட்டே விட்டுட்டு வந்துட்டியா என்ன? என்னெல்லாம் வாங்கித் தந்தான் உன் விஷ்ணு?

    இதைக் கேட்டதும்…மறுபடியும் ஹி ஹி ஹி ஹி ஹி  என்று விட்டு நிறுத்தியவள்…..’உட்லண்ட்ஸ் ஷூ’… ‘ரெய்ட் & டேலர்’ல ரெண்டு செட் ஃபார்மல்ஸ் , கோபாலன் சினிமாஸ்ல போய்  ‘நோ ப்ராளம்” ஹிந்தி மூவி பார்த்துட்டு, ‘சாய் சிவ சாகர்ல’ ‘சவுத்  இந்தியன் ஃபுட்’ ஒரு கட்டு கட்டிட்டு , ‘பாஸ்கின் ராபின்ஸ்ல’ டெசெர்ட்….ம்ம்ம்…அமேசிங்….என்று ரேணுகாவின் வயிற்றில் நெய்யை ஊற்றினாள் ப்ரீத்தி.

    அடடா….அடடா…..என்று பாலை ஆத்திக்கொண்டே… எங்கே ஷூவைக் காமி..பாக்கறேன் ..! நீ ரொம்ப லக்கிடி..ப்ரீத்தி. சந்திச்ச முதல் நாள்லயே…லக்கி ப்ரைஸ் அடிச்சாப்பல இத்தனை வாங்கிட்டு வந்திருக்கே..? விஷ்ணு ரொம்ப நல்ல ஆள்டி …அவனை  கை நழுவ விட்டுடாதே. இந்தக் காலத்துல ஹஸ்பண்ட் எல்லாம் வொய்ஃ ப்புக்கு எது வாங்கணும்னாலும் கணக்குப் பார்க்குறாங்களாம். எங்க அண்ணி சொல்லி வருத்தப்பட்டுச்சு. சரி நீங்க என்னென்ன பேசினீங்க…சொல்ல விருப்பப்பட்டா சொல்லு இல்லாட்டி வேண்டாம்…எனக்குத் தூக்கம் வருது….பிகு  பண்ணிக் கொண்ட ரேணுகா ”ய்ஷ்ஷ் ஷ் ஷ் ‘என்று டம்ப்ளரை உதட்டோடு வைத்து க் கொண்டு முகத்தை உயர்த்திக் கடைசி சொட்டுப் பாலை உறிஞ்சிக் குடித்தாள் .

    பேசினோம்….நிறைய….பேசினோம்….!அதாவது, அவங்களுக்கு கேரளாவுல திரிச்சூர் பக்கத்துல ‘சாலக்குடி’ ல ஒரு ஒட்டு வீடு சொந்தமா இருக்காம். கூடவே ரெண்டு தங்கச்சிகளாம். அப்பா இல்லியாம்…அம்மா மட்டும் தானாம். அம்மா ஒரு ஹார்ட் பேஷன்டாம்…தங்கச்சி ரெண்டு பேருக்கும் படிப்பு வராமால் பத்தாவதோட நிப்பாட்டி இப்போ வரன் பார்த்துண்டு இருக்காங்களாம்.வீட்டுல ரெண்டு பலா மரம், நாலு மாமரம், ஆறு தென்ன மரம், ஒரு சந்தன மரம் கூட இருக்காம்…!

    ரெண்டு நாய்….ஒரு டஜன் பூனை, பாம்பு….தேளு …இதெல்லாம் இருக்கறதா சொல்லவே இல்லியா…? இடைமறித்த ரேணு…நான் தான் சொன்னேன்ல….அவன் ஒத்து வரமாட்டான்னு….நீ சொல்றதைக் கேட்கும்போதே ஆஸ்பத்திரி வாடை வருது…பேசாமே கழண்டுக்க…!
    நீ அவுங்க வீட்டுக்குப் போனேன்னு வெய்யி…உன்னியும் சந்தன மரம் கணக்காத் தான் பார்ப்பானுங்க…அப்டியா விஷயம்….ஆளு நல்லா எடை போட்டுத் தான் வெரட்டிருக்கான்.

    கொஞ்சம் உன் ஸ்பீக்கரை மூட்றியா ?  அவன் அவனோட குடும்பத்தைப் பத்தி உண்மையைத் தான சொன்னான்….அப்படி இப்படின்னு பொளந்து கட்டி அளந்து பொய் சொல்லலியே. அந்த நேர்மை எனக்குப் பிடிச்சிருந்தது.

    போச்சுடா…….! நீ கண்டிப்பா அக்மார்க் லூஸு தான்னு அவன் நினைச்சிருப்பான்டி .

    அப்பறம்?

    ம்ம்ம்ம்..என் குடும்பத்தைப் பத்திக் கேட்டான்..

    ஹோஹோ…..நீயும் சொல்லிருப்பியே…எங்கப்பா பெரிய டாக்டர், அம்மா ஒரு காலேஜ்ல பிரின்சிபால், நான் என் ஆத்துல ஒரே பொண்ணு,சென்னையில சொந்தமா போரூர்ல ரெண்டு பங்களா இருக்கு. பத்தாததுக்கு அப்பாவுக்கு ஒரு நர்சிங் ஹோம் வேற இருக்கு, நான் எஸ் ஆர் எம் காலேஜுல  என்ஜினீயரிங் ஐ.டி  முடிச்சுட்டு நேரா இங்க வேலைக்கு சேர்ந்தாச்சு…எடுத்த எடுப்புல முப்பதாயிரம் சம்பளம்…நீயும் இப்படில்லாம் ‘பீலா’ விட்டியா?.அப்டியே என்னைப் பத்தியும் சொல்லி வெச்சியா?

    போடி…இப்படியெல்லாம் சொன்னால் நான் ஏதோ என்னைப் பத்திப் பீத்திக்கிறேன்னு நினைச்சிட மாட்டானா..? அதனால அதெல்லாம் ஒண்ணுமே  சொல்லலை.

    அப்பறம்..?

    நானும் சாதாரண குடும்பத்துலேர்ந்து தான் வரேன்னு சொல்லி வெச்சேன்.

    இப்பத் தான் நீ புத்திசாலியா யோசிச்சிருக்கே..அவன் நினைச்சா மாதிரி நீ வசதியா இருக்கலைன்னு நினைச்சி இப்ப ஐயா கழண்டுக்கப் பார்த்திருப்பானே.

    அது தான் இல்லை…..”அம்மா….ரொம்ப நல்லதாப் போச்சு”ன்னு மட்டும் சொன்னான்.

    அப்பறம் என்ன தாண்டி நடந்துச்சு….?

    ரெண்டு பேருமா மூவி போனோமா, அங்கே ….

    அங்கே….?

    உன் மூஞ்சி….நெனைப்பைப் பாரு…இவ்ளோ கியூரியஸா…?

    படம் ‘ரொம்ப போர்’ன்னு சொன்னான். உடனே நானும், சரி…வா போகலாம்…எனக்கும் பிடிக்லைன்னு படத்துல பாதீலயே  கிளம்பிட்டோம். வெளிய வந்ததும், ஆயிரம் ரூபாய் தண்டம்…ன்னு சொல்லிண்டான். நானும் நினைச்சேன்..என்னோட ஒரு நாள் சம்பளம் கோவிந்தா….ன்னு. என்றாள்  ப்ரீத்தி.

    அவனோட காசு தானே..போட்டும்…இப்பவே நீ ஏன் கவலைப் படறே? .விடு.

    கடுப்பக் கிளப்பற பார்த்தியா….அம்புட்டும் என் துட்டுடி….! அவன்  பர்ஸையே தொறக்கலை. உன்னை மாதிரியே அவனும் அல்பம்…!

    சொல்ல மாட்டே…என் வண்டில பெட்ரோல் கீதா….இல்ல எம்டியா? அல்பத்துக்கே ஆப்பு வெய்க்கிறவ நீ..! சரி இது கிடக்கட்டும் நீ சொல்லு…நம்ம ஹீரோ பத்தி.

    அதான் சொன்னேனே…சுத்த ஜீரோ ன்னு..! அவன் ஷாப்பிங்ல ஒண்ணுமே வாங்கலை. இருந்தும் நான் தான் உனக்கு இது நல்லா இருக்கும்னு சொல்லி  இதை வாங்கிக்க….அதை வாங்கிக்க…ன்னு வாங்கினேன்…! விஷு வேண்டவே  வேண்டாம்னு தான் சொன்னான்.

    நீ…சுத்த ஏமாளி டீ …என்ன ஒரு பத்தாயிரத்தைப் பந்தாடியிருப்பியா?

    பாக்கியை யாரு ஆடுவா….? மொத்தம் இருபதாயிரம் ஆச்சு…!

    இந்த மாசம் வாடகையை முழுசும் நீயே கட்டிடு….! என்று வம்புக்கு இழுத்தாள் ரேணுகா..!

    எலி ஏரோப்பிளேன் ஓட்டச் சொல்லுதாக்கும்…? ப்ரீத்தி ரேணுகாவைப் பார்த்து கிளியின் குரலில் பேசினாள்.

    கேக்குறவ கேனையா இருந்தா, எலி கூட எலிகாஃப்டர் ஒட்டிச்சுன்னு சொல்லலாம்னு  தான் சொல்லுவாங்க…ம்ம்..அப்பறம் என்னாச்சுடி….எனக்குத் தூக்கம் வருது. சீக்கிரம் போன கதையைச் சொல்லி முடி.

    ரேணு……எப்படியும் எங்க வீட்ல எனக்கு ரொம்ப மும்முரமா மாப்பிள்ளை பார்க்குறாங்க, இல்லையா, இந்த நேரத்துல நானே விஷ்ணுவைப் பத்தி எங்க ஆஃபீஸ்ல வேலை பார்க்கிறான்னு சொல்லி விஷயத்தைச் சொன்னால் , எங்க வீட்ல அப்பா, அம்மா, பெரிசா எதிர்ப்பு ஒண்ணும் சொல்ல மாட்டாங்க. கல்யாணத்துக்கு நாள் பார்க்க ஆரம்பிச்சுடுவாங்க.சரிதானே நான் சொல்லுறது?

    ஆமாம்…..கரெக்ட் தான்…ஆனால் நீ இப்படி ஊரைச் சுத்தினா….?

    வீட்ல பார்க்குற மாப்பிள்ளை கிட்டக் கூட கொஞ்சம் தனியாப் பேச அனுமதி கொடுப்பாங்க. அந்த நிமிஷத்துல நம்மால அவரைப் பத்தி என்னத்தப்  பெரிசா கண்டு பிடிச்சிட முடியும்?  அதனால தான் நானே விஷ்ணுவைத் தெரிந்தெடுத்தேன், ஆனாலும் எனக்கொரு டௌட்.
    அவனோட கொஞ்ச நாள் பழகிப் புரிஞ்சுண்டா நாளைக்கே ஃபியூச்சர்ல எந்தப்  ப்ராப்ளம் வந்தாலும் அதுக்கு நானே பொறுப்புன்னு சொல்லிக்கலாம்.அதனால தான் இந்த டேட்டிங்க்கு நானும் சரின்னு கிளம்பினேன்.

    ஆனா…

    விஷு எதுக்குமே ஒரு காசு கூட செலவு செய்யலைடி …ஒரு கிஃப்ட் கூட வாங்கி இந்தான்னு தரத் தோணலை. என்னைப் பத்தி எதுவுமே சரியாக் கேட்டுத் தெரிஞ்சுக்கலை. பூரா பூரா அவன் வீட்டுப் புராணம் தான். நான் அப்பவே முடிவு பண்ணிட்டேன்…இவன் நமக்கு சரிப்பட்டு வரமாட்டான்னு.  இதுல ஒரு ஜோக் என்ன தெரியுமா?

    ம்ம்ம்……என்ன?

    கிளம்பும்போது சொல்றான்….’என் தங்கையோட ஷாப்பிங் வந்த ஒரு ஹாப்பினெஸ் இருக்குன்னு’ அப்படியே,  தாங்கியூ  ஃபார் யுவர் கிஃப்ட்ஸ்…ன்னு சொல்லிட்டு கிளம்பினான்.

    அடப்பாவி…! ரேணுகா திறந்த வாயை மூடாமல் நின்றாள். வெச்சானா உனக்கு சரியான ‘ஆப்பு’.

    நல்ல வேளை ……விஷுவைப் பத்திப் புரிஞ்சுண்டேன்….இல்லாட்டி அவன் பாக்குறான்…பாக்குறான்னு …ஒரு ‘இது’ வை டெவெலப் பண்ணிக்கிட்டு பிரச்சனையில் விழறதுக்கு முந்தி,  நல்லவேளை தப்பிச்சேன். இப்பக் கூட அவனைப் பாக்கும்போது அவன் கடைசில சொன்ன வார்த்தை மட்டும் தான் மனசுல நிக்கும்…சொல்லிக் கொண்டே….. னா …ன …னா ….ன …ன ன ன் னா ….னா…ன ….னா …னா..என்று சந்தோஷமாகப் பாடும் ப்ரீத்தியுடன் இணைந்து ரேணுவும் பாடுகிறாள்.

    தனது அறையை நோக்கி வண்டியில் சென்று  கொண்டிருகந்த விஷ்ணுவுக்கு மனசுக்குள் மிகவும் நிம்மதியாக இருந்தது.
    “எத்தர தான் நன்னாயிட்டுச் சம்பாதிச்சாலும், இப்படியா செலவு செய்வா? பணத்தைப் பத்தின ஒரு பிரக்ஞையே இல்லாமே கண்டதெல்லாம் வாங்கி பணத்தை தண்ணியா செலவு செய்து, அம்மா, தங்கைகள், நான் கூட இப்படி எல்லாரும் நம்மாத்தில் ஒருமிச்சு ரொம்ப சிக்கனமா இருக்கச்சே.இவள் மாத்ரம்  இப்படி ‘தூம்தாம்’ பண்ணினா, கண்டிப்பா பிற்பாடு பல பிரச்சனை தானாத் தேடி வரும்.நல்லவேளையா, ரூம்மேட் ராகுல் கொடுத்த ஐடியாப் படி ‘இந்த முதல் சந்திப்புலயே’ டீசண்டா கழண்டுக்க முடிஞ்சது. ரூமுக்குப் போனதும் அம்மாவுக்கு கடுதாசி, சிக்கனமா இருக்கத் தெரிஞ்ச ஒரு பொண்ணைச் சீக்கிரமாப் பார்த்து கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணச் சொல்லி  எழுதி வைக்கணம், என்று தனக்குள் நினைத்துக் கொள்கிறான்.

    ஜெயஸ்ரீ ஷங்கர்

    Share
  • பாதை மறந்த பருந்து …!

    ​ஜெயஸ்ரீ ஷங்கர்

    எங்கடீ அந்தப் பயல்?

    போய்ட்டான்…..

    போயிட்டானா…..? ஆத்த விட்டே போயிட்டானா அவன்..?

    ம்ம்ம்ம்

    அவ்வளவு பெரிய மனுஷனாயிட்டானா அவன்..? அவன் என்னைக் கண்டிக்கலாம்…நான் அவனைக் கண்டிக்கப்டாதோ..?

    அ ….ஹாங் …..அது….வேறொண்ணுமில்லடீ …..கிளிக்கு ரெக்கை முளைச்சுடுத்து…..ஆத்தவிட்டேப்  பறந்து போயிடுத்தூ ……..!

    பாலூட்டி வளர்த்த கிளி

    பழம் கொடுத்து பார்த்த கிளி…..

    நான் வளர்த்த பச்சைக் கிளி..

    நாளை வரும் கச்சேரிக்கு…..

    செல்லம்மா…எந்தன் செல்லம்மா…..!

    திடுமென மின்வெட்டானதால் தொலைகாட்சி கண்ணை மூடி திடீர் சாமியாரானது.

    அதனால் என்ன…?  வீட்டுக்குள்ள தான் கதையும் பாட்டும் நடந்து கொண்டே இருக்கிறதே. அந்த கௌரவப் பாட்டு போனால் என்ன… இருக்கவே இருக்கிறது… வருத்தப்படாத வாலிபர் சங்கத்துக் விதை…..!

    இட்டிலித் தட்டிலிருந்து ஒவ்வொரு இட்டிலியாகப் பெயர்த்து ஹாட் பாக்ஸில் போட்டு வைத்த சாரதா, பஞ்சு பஞ்சாக வெள்ளை வெளேரென்று மல்லியப் பூக் கணக்கா இருந்த இட்டிலிகளைப் பார்த்து, ஆஹா…எம்புட்டு அழகா இருக்கு…பார்க்கும்போதே திங்கச் சொல்லி நாக்கு நம நமங்குதே…. சாரதா… இட்டிலில உன்னை அடிச்சுக்க ஆளே இல்லடீ…. என்று  இல்லாத காலரை இழுத்து விட்டுக் கொண்டு தனக்குத் தானே தட்டிக் கொண்ட சாரதா, சடக் கென்று திரும்பிப் பார்த்தபோது… அங்கே கைகள் இரண்டையும் கதவில் முட்டுக் கொடுத்தபடி மகன் சிவராமன்  நின்று இவளையே முறைத்து பார்த்துக் கொண்டிருந்தான்.

    “என்னடா சிவராமா… எப்ப வந்தே… யார் மேலே என்ன கோபம்?….அதான்…கோபம் கண்ணுல கொப்பளிக்குதே… அப்படி என்ன ஆச்சு உனக்கு?”

    “இன்னும் என்ன ஆகணும்….? சைக்கிள் பஞ்சர்… நான் பிளஸ் டூ படிக்கேல ‘அரசு மூலமா அம்மா’ கொடுத்த சைக்கிள் இது. இம்புட்டு நாள் ஓடிச்சே அதே பெருசு… என் கையில பஞ்சர் ஓட்டக் கூட காசு இல்ல… இனிமேட்டு நான் அதைத் தொட மாட்டேன்… அதான்.. அப்படியே காயலான் கடையில வித்துட்டேன்.”

    “எம்புட்டுக்கு? அந்தக் ரூபாயை என்ன செஞ்சே? இங்கிட்டு தா என் கையில.”

    “ஆமா… துருப்பிடிச்ச சைக்கிளுக்கு கட்டு கட்டாத் தூக்கிக் கொடுத்தாங்க. நான் அதை தோல் பையில எடுத்தாந்திருக்கேன். நூறு ரூபாய் கூட தர மாட்டேன்னு சொல்லிட்டான்… நீ என்ன பண்ணுவியோ எனக்குத் தெரியாது. எனக்கு நாளைக்கே புதுசா ‘ஹோண்டா’ பைக் வேணும். வாங்கித் தாங்க. இல்லாட்டி வீட்டுப் பக்கமே வரமாட்டேன்.”

    “டேய்.. சிவா… ஒரு வேலையை பிடிச்சுக்கடா… பெறவு உனக்கு என்ன வேணுமோ அத நீயே உன் சொந்த பணத்துல வாங்கிக்கிறலாம். அப்பா இந்த வீட்டை லோன் போட்டு வாங்கியிருக்காரு… மாசா மாசம் ஹவுசிங் லோனும் வட்டியுமே அவரோட கையைக் கடிக்குது. நாளைக்கே ‘ஹோண்டா’ பைக்கைக் கொண்டான்னு கேட்டா எப்புடி, உங்கப்பா என்ன ராக்கொள்ளையா அடிக்கப் போறாரு..?” இட்டிலிக்குத் தோதாகத் தொட்டுக் கொள்ள கொத்தமல்லிச் சட்னி அரைத்து எடுத்து கிண்ணத்துக்குள்  வைத்தபடியே அவனைப் பார்க்கிறாள் சாரதா.

    “நீ தலை எடுத்தாத் தான் நாங்க நிமிர முடியும். நீ தெனம் ஏதாச்சும் ஒண்ணு சொல்லிட்டு வரே. படிச்சு முடிச்சு ஒரு வருஷமாகப் போவுது.. இன்னும் நீ உட்கார்ந்த இடத்துலயே இருந்தீன்னா….எப்புடி.? நெனச்சுப் பாரு. உனக்குன்னு குடும்பம் ஆக வேணாமா?

    வேலை இருந்தாத்தான மேல்கொண்டு நடக்கும்..? உன் நெலம புரிஞ்சு யோசிடா தம்பி.”

    “எல்லாம் என் நெலம புரிஞ்சுதான் நான் இருக்குறேன். இந்தத் தீவாளிக்கு ஏதாச்சும் கேட்டனா..? நீயே சொல்லு… நல்ல துணி மணி வாங்கித்தரச் சொன்னா… நீ வேலைக்கிப் போற பவுசுக்கு புதுசு கேட்குதோ..?ன்னு நொண்டிடியடிப்பீங்க.

    வெடி வாங்கித் தரச் சொன்னா, நான் கஷ்டப்பட்டு சம்பாரிச்ச பணத்த நீ புஸ்வாணம் விடத் தேவையில்லன்னு சாக்கு சொல்லுவீங்க. இதெல்லாம் எதுக்குண்டு தான் நான் வாயைப் பொத்திகினு இருக்கேன். நான் என்னா இப்ப உன்னிய எனக்குக் கலியாணம் முடிச்சு வெய்யினா கேட்டேன்.. ஒரு பைக்கு தானே கேட்டேன்… அதுக்கு ஏன் இப்படி நொய்யி நோய்யின்னு பேச வைக்கிறே?

    ஆனாலும் இன்னாம்மா நீ….எப்பப் பாரு ‘இல்லே பாட்டுப் பாடி’ அழுதுக்கிட்டு. என் ப்ரெண்ட்ஸ் எல்லாரும் எப்பிடி இருக்கானுவுங்க தெரியுமா? நான் ஒருத்தன் மட்டும் தான் பஞ்சத்துக்கு பெறந்த பரதேசி. ம்ஹும்…..அதெல்லாம் எனக்குத் தெரியாது. எனக்கு நாளைக்கு புது பைக் வேணும். அம்புட்டுத் தான். அந்தாள லோன் போடச் சொல்லு…இல்லாட்டி நீ உன் நகையை வித்து எனக்கு பைக் வாங்கிக் கொடு…நான் சம்பாதிச்சு உனக்கு நகை பண்ணிப் போடறேன்.”

    “போடா உன் வேலையைப் பார்த்துட்டு… நகையை விக்கணுமாம்? தங்கம் என்ன தெருவிலயா போட்டுக் கூவி கூவி விக்கிறாங்க. இவன் வாங்கித் தருவானாம்… நான் நம்பி… நல்ல கதையா இருக்குது? அப்பா காதுல விழுந்துச்சுன்னா அம்புட்டுத்தேன். போ இங்கிட்டிருந்து.. வேற வேலை எதுனா இருந்திச்சின்னாப் போய்ப் பாரு.”

    “எம்மா…..அவரு இருக்காரா.? வந்தாச்சா?”

    “யார்ரா….அவுரு…?”

    “அதான் உன் புருஷன்….!”

    “வாயை மூடு…! அப்பான்னு மருவாதியாக் கூப்பிடு  …! அவரு அப்பமே வந்துட்டாரு.”

    “இப்ப எங்க? யார்கிட்ட போன்ல என்னியபத்தி குத்தம் குறை சொல்லி பாரதம் படிக்கிறாரா?”

    “ரூம்ல…..க்ரானிகல் நியூஸ் பேப்பர்ல க்ராஸ் வார்ட் வருமே..அத்த எடுத்து வெச்சுக்கிட்டு  மண்டையைப் போட்டுக் குழப்பிட்டு இருப்பாரு..!”

    “அவுரு அதுக்குக் கூட சரிப்பட்டு வர மாட்டாரு.”

    “அவரு பாட்டுக்கு என்னத்த செஞ்சாலும் நீ ஏண்டா… தப்பாவே நினைக்கிறே ? பெத்தவங்களை, பெரியவங்களை வாய்க்கு வந்தபடில்லாம்  பேசிடக் கூடாது சிவராமா… எம்புட்டு வாட்டி சொல்லுறது. மரியாதையாப் பேசக் கத்துக்கண்டு. அம்மா எப்பவும் நல்லது தான் சொல்லுவா. நான் சொல்லுறதையாச்சும் நீ கேளுப்பா.”

    “அவரு மட்டும் என்னிக்காச்சும் யாருக்காச்சும் மரியாதை கொடுத்து பேசிருக்காரா?அட்லீஸ்ட் உனக்காச்சும்….! நீயே கேட்டுப் பாரு. அது… வேறொண்ணுமில்லம்மா… தான் தான் சம்பாதிக்கிறோம்னு மண்டை கர்வம்… திமிர்… கொழுப்பு… அந்தாளுக்கு…! இவரப்  போயி யார்மா உன் தலைல கட்டி வெச்சது..! சுயநலம் பிடிச்ச ஆளு.”

    “வாயை மூடுடா…!”

    “ஏன்…உன் புருஷனைச் சொன்னா உனக்குக் கோவம் பொத்துக்கிட்டு வருது? காலைல ஒரு நூறு ரூபாய் கேட்டதுக்கு, நாக்கைப் பிடுங்கறாப்பல எம்புட்டு கேள்வி கேட்குறாரு. நீயும் கேட்டுக்கிட்டு தானே வாயை மூடிட்டு இருந்தே. எனக்கு இப்ப நீங்க என்ன பண்ணுவீங்களோ தெரியாது. நாளைக்கு எனக்கு புது பைக் கண்டிப்பா வேணும்.”

    “இப்ப நீ உன் பேருக்குப் பின்னாடி ஒரு வாலைக் ஒட்ட வெச்சிருக்கியே, பிஏ டிகிரி வாலு…! அது மட்டும் என்ன சும்மா வந்து தர்மத்துக்கு ஒட்டிக்கிச்சா. அவரில்லாமல் உன் பேருக்கு பின்னாடி பட்டம் பறக்குமா? நெனெச்சுப் பாரு.. அன்னிக்கு ஆயிரமாயிரமா  உன் படிப்பு செலவுக்குக் கொட்டினவர் தான்… இப்பத் தான் நூறு ரூபாய்க்கு கணக்கு கேட்குறாரு… எதுக்குன்னு விஷயத்தைச் சொல்லி வாங்கிட்டு போறது தானே நீ..? உனக்கென்னாத்துக்கு அம்புட்டு ரோஷம்?”

    “சரி…சரி….இப்ப நீயே அவுரு காதுல போட்டு வெய்யி, எனக்கு ஹோண்டா பைக்கு வேணுமின்னு..சொல்றியா?”

    “திடுதிப்புன்னு பைக் வேணுமுன்னா துட்டுக்கு எங்கிட்டுப் போறது. நீ கேக்குறதும் அநியாயமால்ல இருக்குது.”

    “நீ அந்தாளுக்கு வக்காலத்துக்கு வரே பாரு….! ஒழுங்கா இருக்குறவனையும் கிரிமினல் பண்ணிடுவீங்க ரெண்டு பேருமா சேர்ந்து…! நான் போறேன்.”

    “இந்தாடா… கையைக் அலம்பிட்டு வா… சூடா இட்டிலியும், மல்லி சட்னியும் செஞ்சிருக்கேன்… போட்டுத் தரேன்… தின்னுட்டு தொலை.. என் கோபத்தைக் கிளறாத. வீட்டை விட உனக்கு உன்னோட உருப்படாத ஃப்ரெண்ட்ஸ் தான் முக்கியமா போயிட்டாங்க இல்லே…? பசிக்குமில்ல… இந்தா இட்டிலி,  தட்டையாச்சும் கையால வாங்கு.”

    “அதென்னமோ நீங்களே தின்னுங்க….நான் போறேன்…!”

    “டேய்….இப்ப இந்தத் தட்டை நீ வாங்கப்போறியா இல்லியா..? இப்பிடி யார் மேலயாச்சும் எப்பப்பாரு கோபப்பட்டுக்கினு சாப்பிடாமப் போனே… பெறவு சோத்துக்காக தெருநாய் கணக்கா அலைய வேண்டியது தான். நெனப்பிருக்கட்டும்.” எச்சரிக்கும் குரலில் எரிச்சலோடு அம்மா நீட்டிய தட்டை வெடுக்கெண்டு பிடுங்கிய சிவராமன் நேரே வாசலுக்கு நடக்கிறான்.

    “சிவராமா…எங்கடா….போறே…!”

    “ம்ம்ம்….தெருநாய் கணக்கா அலையப் போறேண்டு  சாபம் கொடுத்தீல்ல, அதான்… எப்படின்னு பார்க்கப் போறேன். என்ன இந்த உலகத்துல நீங்க ரெண்டு பேரும் மட்டும் தான் இருக்கறதா உங்களுக்கு நினைப்பா… உங்களுக்குத் தான் என்னிய விட்டா யாருமில்லை. அதைத் தெரிஞ்சுக்கங்க  முதல்ல. எனக்கு ஏகப்பட்ட ஃப்ரெண்ட்ஸ். என் பேரைச் சொன்னால் உசுரக் கூடக் கொடுப்பாங்க. தெருநாய் மாதிரி அலையப் போறேனாம்… நெனப்பப் பாரு.” கோபத்துடன் கத்திக் கொண்டே வாசல் படியில் கையில் தட்டோடு இறங்கி நிற்கவும்,

    எங்கிருந்தோ ஓடி வந்த தெருநாய் இவன் முன்னே வாலாட்டிக் கொண்டு நின்று நிமிர்ந்து இவன் கண்களை நேருக்கு நேராகப் பார்த்தது,

    “அண்ணே…ரொம்பப் பசிக்குது…ஏதாச்சும் இருந்தா நீயாச்சும் போட மாட்டியா”  அந்தக் கண்களின் பாஷையைப் புரிந்து கொண்ட சிவராமன் சற்றும் யோசிக்காமல் தட்டிலிருந்த இட்டிலிகளை அந்த நாய்க்கு வைத்தான்.

    அவனை நன்றியோடு நிமிர்ந்து ஒரு பார்வை பார்த்துவிட்டு, குனிந்து கொண்டு வாலாட்டியபடியே ஒரு இட்டிலியை கவ்விக் கொண்டது.

    “எம்புட்டுத் திமிரு இருந்தா நீ இந்தக் காரியம் செய்வே…? விலைவாசி விக்கிற விலையில, நாய்க்கு இட்டிலி கேக்குதோ? எம்புட்டு தகிரியம் திங்கக் கொடுத்தா அப்பிடியே தெருவுல நாய்க்குப் போட ..!  உனக்கு இனிமேட்டு இங்க  சோறு கிடைக்காது. எந்த நாய் உனக்குச் சோறு போடுதுன்னு நானும் பார்க்கறேன்” உள்ளிருந்து தான் கண்ட காட்சியில் கோபப்பட்டுக் கொண்டு ஓடிவந்த சாரதா. ஏதோ தன் மகன் செய்யக் கூடாத காரியத்தை செய்து விட்டது மாதிரி கத்தித் தீர்த்தாள் .

    “இன்னொருவாட்டி உனக்கு யாரு இப்படி இட்டிலியைப் போட்டு கையில நீட்டப் போறாங்க… இப்படியே பட்டினி கெட..அப்பவாச்சும் புத்தி வருதாப் பாப்போம்.”

    “யாருக்கு வேணும்…?  இந்தா இட்டிலி தட்டைப் பிடி.

    போம்மா… நீயும் உன் இட்டிலியும் வீணாப்போன சட்டினியும்..! யாருக்கு வேணும்..?” கனன்று கொண்டிருந்த மொத்த கோபத்தையும்  கதவில் காண்பித்து விட்டு, விடு விடென்று வாசல் கேட்டை ஓங்கி அடித்துச் சார்த்திவிட்டு மறைகிறான் சிவராமன்.

    துர்வாசர் புனர்ஜென்மம் எடுத்து … அப்படியே இவன் மூக்கு மேலே அட்டென்ஷன்ல நிக்கிறாரு போல. வயசுப் பிள்ளைக்கு இத்தனை கோபம் ஆகாதுப்பா. அலுத்துக் கொண்டே காலித்தட்டை எடுத்துக் கொண்டு சமையலறை நோக்கிப் போகிறாள்.

    பாவம் சிவராமன்… அவன் மட்டும் என்ன செய்வான். ‘வெறும் பி.ஏ  வுக்கு இங்க வேலையில்லைப்பா’… என்று சொல்லி அவனை ஓவ்வொரு கம்பெனியும் நிராகரிக்கும்போதேல்லாம்… ‘சார்… இது உப்புப் போட்டு தின்ன பி.ஏ ஸார் ‘ என்று உரக்க கத்திவிட்டு வரவேண்டும் போலத் தானிருக்கும்.

    சாரதாவுக்கு  தாகம் தொண்டையை அடைக்க, ஃப்ரிட்ஜைத் திறந்து தண்ணீர் பாட்டில் எடுக்கக் குனிந்து பார்க்கும் போது தான் தெரிந்தது.. பேருக்கு ஒரு பாட்டில் கூட அங்கு இல்லை…

    ‘கஷ்டம் கஷ்டம்….ஒரு பாட்டில் தண்ணீர்  கூட பிடிச்சு வைக்க ஒரு மனுஷன் கிடையாது இங்கே… எல்லாம் நானே தான் செய்ய வேண்டியிருக்கு. நான் தண்ணியப்  பிடிச்சு ஃப்ரிட்ஜ்ல வெச்சா மாத்திரம், ஒரு மணி நேரத்தில் அத்தனை பாட்டிலையும் காலி பண்ணி உருட்டி விடத் தெரியும். அங்க பாரு… ஏதோ பறக்கும் தட்டு வி​ளையாடினாப்போல மூலைக்கு மூலை காலி பாட்டிலும், காப்பி டம்பளரும் சிதறிக் கிடக்கறத. இந்த லட்சணத்துல இவிங்களுக்கு  கோபத்துக்கு ஒண்ணும் குறைச்சலில்லை.’ முனகியபடியே குடத்துத்திலிருந்து ஒரு  சொம்பில் தண்ணீரை மொண்டு எடுத்து கட கடவென்று குடித்ததும்… உடம்பு முழுதும் புத்துணர்ச்சி பரவியது போலிருந்தது அவளுக்கு.

    “சாரதா” உள்ளிருந்து கணவரின் குரல்….!

    “இதோ….வந்துட்டேங்க!” இவளின் பதிலும்.

    “உன் சீமந்தப் புத்திரன் வந்தாச்சா….இல்லை இன்னும் பொறுக்கிட்டு தான் இருக்கானா?”

    “நானா கண்டேன்….என்னிய ஏன் இப்ப வேண்டாத வம்புக்கு இழுக்கறீங்க ? நீங்களாச்சு உங்க புள்ளயாச்சு..”

    “இப்படி விட்டேத்தியா பதில் சொல்ல எப்பக் கத்துகிட்டே..? யார் சொல்லிக் கொடுக்கிறாங்க… அந்தப் பொறம்போக்கா …?” என்று கேட்டபடியே உள்ளிருந்து வரும் கணவரைப் பார்க்கப் பார்க்க எதிர்த்துப் பேச நாக்குத் துடித்தது. அடக்கிக் கொண்டாள். ‘இப்ப நான் என்ன சொன்னாலும் இவர் கிட்ட எடுபடாது….வீணா சண்டை வளரும்… வேண்டாம்’ என்று மனதை அடக்கி வைத்தாள்.

    “என்ன பண்ணிருக்கே….போடு. தின்னுட்டு தூங்கறேன். நான் ஒருத்தன் அதுக்கு மட்டும் தானே இருக்கேன்னு உங்க ரெண்டு பேருக்கும் நினைப்பு.”

    “என்ன க்ராஸ் வார்ட்ல வார்த்தைங்க  ஒண்ணும் சரியா வந்து விழலையா? அதான் இங்க வந்து கொட்டறீங்களா..? நமக்கு இருக்கறதே ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணுன்னு கருவேப்பலை கொத்தாட்டம் ஒத்தப் பிள்ளை… அத்தப் போயி நீங்களே பொறம்போக்குன்னு சொன்னா எப்பிடிங்க?” இட்டிலியை எடுத்துக் கொண்டு ஹாலுக்கு வந்தவள் அதை அப்படியே டைனிங் டேபிள் மீது வைத்து விட்டு, எமெர்ஜென்சி கைவிளக்கை எடுத்து வர மீண்டும் சமையலறைக்குள் நுழையும்போது போன மின்சாரம் ரீங்காரமாய் வந்தது.

    ஊதா…..ஊதா…..

    ஊதாக் கலரு ரிப்பன் உனக்கு யாரு அப்பன்

    நீ சொல்லடி அவனுக்கு நான் சலாம் போடணும்….

    நீ சொல்லடி அவனுக்கு நான் சலாம் போடணும்…

    ரோஜா……ரோஜா…..கலரு பொம்மி…

    உனக்கு யாரு  மம்மி…..!

    ஏய் நில்லடி அவளுக்கு நான் சபாஷ் போடணும்…!

    ஏய் நில்லடி அவளுக்கு நான் சபாஷ் போடணும்…!

    ஊதா……ஊதா…..!

    தொலைக்காட்சிப் பெட்டியில் வருத்தப் படாத வாலிபர்கள் ஆடிக் கொண்டிருக்க… சாரதாவுக்கு எரிச்சல் வந்தது.

    உன் தலையில் அம்மிக் கல்லைத் தூக்கிப் போடணும்.. பாட்டைப் பாரு பாட்டை…..டொக்கென்று  டிவியை  அணைத்து விட்டு, கரையான்கள் மாதிரி சினிமா உலகத்துக்குள்ளார நுழைஞ்சுட்டானுங்க.. இவனுங்களாலத் தான் வளருற புள்ளைங்க கெட்டுக் குட்டிச் சுவராப் போறாய்ங்க. ஏற்கனவே நாடு தள்ளாடுது… இனிமேட்டு ஒரு ‘கௌரவமும்’ பார்க்க முடியாது….எல்லாம் டண்டனக்கா தான். அம்புட்டு  சானல்லயும் இதேப்  பாட்டைப் போட்டு மோசம் செய்யுது.

    “சாரதா… பார்த்தீல்ல உலகத்த… அதான் சொல்றேன்.. அந்தக் கருவேப்பலைக் கொத்து நாளைக்கு உன்னோட சாவிக்கொத்தைப் பிடுங்கிட்டு ஓடும் போது தான் உனக்கு மண்டேல ஏறும்… அது வரைக்கும் பாசம் கண்ணை மறைக்கும்.”

    “அப்ப நீங்க உங்கம்மா அப்பாகிட்ட அப்படித்தான் செஞ்சீங்களா…? நீங்க அவுங்க இருக்குற வரைக்கும் அவுங்களை உங்க உள்ளங்கையில வெச்சுத் தானே தாங்கு தாங்குன்னு தாங்கினீங்க..? உங்க ரத்தம் தான அங்கிட்டும் ஓடுது… உங்க பிள்ளையும் உங்கள மாதிரி தான இருப்பான். பார்த்துக்கிட்டே இருங்க. என் வாக்குத் தான் பலிக்கப் போவுது.”

    “கிளிச்சுச்சு. நீ கனவு காணுற அந்தக் காலமெல்லாம் மலையேறிப் போச்சுடி… நீ இன்னும் புரியாதவளா இருக்கே. நாலு இடம் போனாத் தான் உலகம் தெரியும். நீ கிணத்துத் தவளை. உன்னோட உலகம் சமையல்கட்டும் எச்சப்  பாத்திரமும் மட்டும் தான். அக்கம் பக்கம் வம்படிக்கக் கூட  ஒஞ்ஜோட்டு புள்ளைங்க இங்கன யாரும் கிடையாது. எல்லாருமே ரெண்டு சம்பாத்தியக் குடும்பமாப் போச்சு. ஞாயித்துக் கிழமை தவுற மத்த நாள்ல பூட்டு தானே வீட்டை காக்குது. எங்க ஆபீஸ் அக்கவுண்டண்ட் பார்த்தசாரதி இருக்காரில்ல…?”

    “ஆமா… அவருக்கு என்னாச்சு? ஹார்ட் அட்டாக்கா..? அல்லது அவுரு வீட்டாண்ட திருட்டுப் போயிரிச்சா..?”

    “ஏண்டி…உனக்கு நல்லதே தோணாதா?”

    “இப்பல்லாம் நல்லதே நடக்க மாட்டேங்குதே. எங்கிட்டுப் பார்த்தாலும் இப்படித் தான இருக்குது…அதான்..நீங்க சொல்லுங்க.

    அப்ப அவுருக்கு என்னாச்சு?”

    “ஹார்ட் அட்டாக் தானா தான் வருமா என்ன..? பெத்ததுங்க நெஞ்சுல ஓங்கிக் குத்தாமல் செய்கையால குத்தினாலும் வலி  வரும்… அவரோட பையன் ரெண்டு மூணு நாளா வீட்டுக்கே வரலையாம். ஆபீசுக்கும் போகலையாம். திடீர்னு நேத்து வந்து மாலையும் கழுத்துமா வீட்டு வாசல்ல வந்து நின்னானாம்.”

    “அடப் பாவமே…..! ஓடிப் போயி கல்யாணம் தான் கட்டிகிட்டானா…?”

    “நானே சீரியஸ் விஷயம் சொல்ல வாரேன். உனக்கென்ன  இப்ப ராகத்தோட பாட்டுக் கேட்குது..? நீயும் இப்பல்லாம் இந்தப் பாளா போற டிவி யைப் பார்த்து ரொம்பவே கேட்டுப் போயிட்டே. எப்பப்பாரு…..ஏதாச்சும் பாடிக்கிட்டு….!”

    “ம்ம்ம்… சரி, சாரி… சொல்லுங்க…சொல்லுங்க என்னாச்சு? அவரு ஏத்துக்கிட்டாரா.? பார்த்தசாரதி பக்கா அய்யங்காரு குடும்பம்… அந்த மைதிலி மாமி செய்யுற புளியோதரை தொட்டாலே கை மணக்கும்… இல்லீங்க.”

    “ஆமாங்க…!” என்று தன் குரலை பெண் குரல் போல மாற்றிச் சொல்லிக் காட்டியவர், “என்னை முழுசா சொல்ல விட மாட்டியே… சரி ஒண்ணும் வேண்டாம்… உன் மரமண்டைக்கு தீனியை தவிர  வேற ஒண்ணும் ஏறாதுன்னு தெரிஞ்சு போச்சு. இட்டிலியைப் போடு.”

    “என்னங்க நீங்க….அப்படி என்னத்த சொல்லிப்புட்டேன்னு இம்புட்டு கோபம் உங்களுக்கு…? மேல சொல்லுங்க..இட்டிலி எடுத்து வெக்கிறேன்.”

    “கூட வேலை பார்குற ஒரு தெலுங்குக்கார பிள்ளைய . கல்யாணம் கட்டி கூட்டிட்டு வந்திருக்கான். இவரு பெத்த பிள்ளையின்னு கூட நினைக்காம, போடா வெளிலன்னு துரத்தி விட்டுட்டு இத்தோட முடிஞ்சி போச்சுன்னு சொல்லி ரெண்டு பக்கெட் தண்ணியை தலயில் கொட்டிக்கிட்டாராம்.”

    “அதனால ஜலதோஷமில்ல பிடிச்சிருக்கும். இப்பக் கிடந்து வருத்தப் பட்டு என்ன பிரயோஜனம்.? ஆரம்பத்திலிருந்து கண்டிச்சு வெச்சிருந்தா இப்ப இந்த நிலை வராதில்ல. இப்ப என்னாச்சு..? பெத்தத தொரத்திட்டு ரெண்டு பெருசும் அழுதுகிட்டு  நிக்கிறாங்களா?  பாவம்ங்க…அவுங்க.”

    “அதான் சாரதா …நானும் சொல்றேன்….இன்னைக்கு அவருக்கு,  நாளைக்கு நமக்குன்னு ஆயிடக் கூடாதில்லையா..?”

    “அதெல்லாம் ஒண்ணும் ஆகாதுங்க..நம்ம பையன் தங்கக்குடம். அந்த வளிக்கெல்லாம் போயிறமாட்டான்.”

    “ஆமா..உன்கிட்ட வந்து சொன்னான்… இப்படியே அவனைத் தலையில ஏத்தி வெச்சுக் கெரகமாடிக் கொண்டாடு. அவன் அப்படியே உன்னை நசுக்கிட்டு உருளப் போறான். உன் பாசம் உன் கண்ணை,  காதை,வாயை அடைச்சிடுத்து.. என்ன செய்யறது. உனக்கெல்லாம் பட்டாக் கூடத் தெரியாது..”

    “வயசுப் பசங்க கொஞ்சம் அப்படி இப்படித் தான் இருக்குங்க, நாம பெரியவங்க அவங்களை கொஞ்சமாச்சும் நம்பணும். எல்லாத்தையும் ஒரே மாதிரி பார்த்தால் கஷ்டமில்லையா. இதோ… இப்ப இட்டிலி கூட திங்காமல் தெருநாய்க்கு போட்டுட்டு கோபத்தோட வெளிய கெளம்பிட்டான். நீங்க எப்பப்பாரு நீங்க அவனை எதாச்சும் சொல்லி அவன் மனசை வேதனை செய்யுறத மொதல்ல கொஞ்சம் நிப்பாட்டுங்க. உலகம் தெரியாத பிள்ள அவன். இப்பத்தான் அவனுக்கு நல்லது கேட்டது விளங்குது.”

    “அவனுக்காடி உலகம் தெரியாது. உலகத்தைக் கூறு போட்டு வித்துப்புடுவாங்குங்கடி. அவனும் அவன் கூட்டாளிங்களும். அவன் முழியப் பார்த்தாலே எனக்கு அவன் ஏதோ தகிடுதத்தம் பண்ணிட்டு வந்த மாதிரியே இருக்கும். என்னியப் பார்த்தாலே திருட்டு முழி முழிக்கிறான். அவனை எப்படி நம்பச் சொல்றே நீ?”

    “ஹலோ…!” என்று இழுத்த சாரதா “நம்ம முழில கொஞ்சமாச்சும் அவனுக்கும் இருக்குமில்ல. என்னமோ நம்ம ராஜபார்வை பார்க்கிறாப்பல, அவனை என்ன வேணா உங்க இஷ்டத்துக்கு சொல்லிக்கிருங்க. ஆனா அவனைத் திருடு, கொறடுன்னு மட்டும் எதாச்சும் சொன்னீங்கன்னா எனக்குக் கெட்ட கோபம் வரும், இப்பமே சொல்லிட்டேன்… ஆமா.”

    “அவனைச் சொன்னா உனக்கு பாசம் பொத்துக்கிட்டு வந்துடுமே. எப்டியோ நீ அவனுக்கு அசாத்தியச் செல்லம் கொடுத்து, அவனும்   கெட்டு குட்டிச்சுவரா போயாச்சு. இனிமேட்டு சாண் போனா என்ன முழம் போனா எனக்கென்ன? நேத்திக்கி நான் ஆபீஸ் விட்டு வீட்டுக்கு வரும்போது வழக்கமா வர வழில வராமல் தீபாவளிக் கூட்டமா இருந்திச்சேன்னு  கொஞ்சம் சுத்தி வந்தேன் பாரு… வரக்குள்ள அங்கன  ஒரு பெட்டிக்கடையில நம்ம அய்யா செம ஸ்டைலா நிக்கிறாரு… சாம்பிராணிப் பொகை  போடுற சாயுபு கணக்கா. ஊதி ஊதி புகையை விட்டுக்கிட்டு… கூடவே இன்னும் ரெண்டு தத்தாரிப் பசங்க, இவனுக்கு ஜால்ரா போட. அப்டியே… வண்டியை விட்டு எறங்கி ரெண்டு சாத்து சாத்தினா என்னன்னு தோணிச்சு. இருந்தும் கட்டுப் படுத்திகிட்டேன். எதுக்குத் தெரியுமா?”

    “அச்சச்சோ…..என்னது…! .சிகரெட் பிடிக்கிறானா..? எதுக்கு சாத்தாம விட்டீங்க..?”

    “என் மானம் போயிறக் கூடாது பாரு….அதுக்காண்டி தான், கண்டுக்கிடாம விட்டுட்டேன். அதான் இன்னிக்கி காலீல நூறு ரூபாய் கேட்டான் பாரு… அப்ப சேர்த்து வெச்சு நான் கொடுத்த டோசுல, இனிமேட்டு வாயில கொள்ளிக்கட்டையை செருகும்போது அவனுக்கு நான் சொன்ன நெனப்பு தான் வரும் பாரு..! “புலம்பிக் கொண்டே இட்டிலியை சாப்பிட்டு முடித்தவர் எழுந்து கையலம்பிவிட்டு பெரிதாக ஒரு ஏப்பம் விட்டுவிட்டு படுக்கையை நோக்கி கொட்டாவி விட்டுக் கொண்டே போனார்.

    “என்னங்க நீங்க…இப்படி ஒரு குண்டைத் தூக்கி போட்டுட்டு போறீங்க. நம்ம சிவராமனா சிகரெட் பிடிக்கிறான் ..? எனக்குத் தெரியவே தெரியாது. ஆச்சரியமா இருக்குதே. நம்பவே முடியலீங்க.”

    “சிவராமன்னு பேரு வெச்சா சிகரெட்டெல்லாம் பிடிக்க மாட்டான்னு நினைச்சியாக்கும்? இதுக்கெல்லாம் அவன் ஊருக்கும் உனக்கும் பத்திரிகை வெச்சுட்டுத் தான் ஆரம்பிப்பானா என்ன..? ஹ ஹா….நம்பவே முடியலியாம். இப்படிப் பிள்ளையை நம்பினா, மத்ததெல்லாம் எப்புடி நம்ப முடியும்? சொல்லுறவங்களக் கூட நம்ப முடியாது. எப்பிடியோ போ, எனக்குத் தூக்கம் வருது.”

    “இருங்க…..அவன் வரட்டும் இன்னிக்கு. நான் ரெண்டுல ஒண்ணு பார்த்துப்புடறேன். அவன….!” கடைசி இட்டிலி தொண்டைக்குள் இறங்காமல் அடைக்கவும், சாரதா  தட்டை எடுத்துக் கொண்டு எழுந்தவள்… ‘இன்னும் இவனால என்னவெல்லாம் பிரச்சனைகள் வரப்போகுதோ…? முருகா…..அந்தப் பிள்ளைக்கு நல்ல புத்தியைக் கொடுத்து ஒரு நல்ல வேலையையும்  கொடுத்து உட்கார வெச்சிடேன், உனக்குப் பழனிக்கு வந்து பாலாபிஷேகம் செய்யறேன்.’

    அதற்குள் வாசல் கேட்டுத் திறக்கும் சப்தம் கேட்டு எட்டிப் பார்த்த சாரதாவுக்கு , சிவராமனின் முகத்தைப் பார்த்ததும் கொஞ்சம் ஆறுதலாகவும் நிறைய கோபமும் சேர்த்தே வந்தது.

    அவன் உள்ளே வரக் காத்திருந்தவள் போல…

    “வர வர உன் போக்குவரத்தே சரியில்லை….ஆமா…நீ சிகரெட் பிடிக்கிறியா?  எங்க ஊது… பார்க்கலாம். அம்புட்டுப் பெரியவனாயிட்டியா  நீ? அப்பா…அன்னிக்கி  உன்னிய தெருவுல சிகரெட்டு பிடிக்கிறதைப் பார்த்துபுட்டு வந்து இங்க குதி குதின்னு குதிக்கிறாரு….என்னமோ நான் தான் உன் கையில திணிச்சு புகை விடுடா மகனேண்டு  சொன்ன மாதிரியும்.. அதான் நீ கேட்ட ரூபாயைக் கூட தராம உன்னை காலீல திட்டினாராம். ஏன் தான் இப்படியெல்லாம் செய்யுறியோ?”

    “நீங்க பாட்டுக்கு யாரையோ பார்த்துட்டு நான் தான்னு சொன்னால், அதுக்கெல்லாம் நான் பொறுப்பு ஏத்துக்கிட முடியாது.” கோபத்துடன் கத்திவிட்டு சாப்பிடாமல்,  டிவியைப் போட்டவன் அதை  இன்னும் சற்றுப் பெரிதாக வைத்துக் கொண்டு அதைத் தீவிரமாகப் பார்ப்பது போல சோபாவில் சாய்ந்து உட்கார்ந்து கொண்டான் சிவராமன்.

    “இப்பவாச்சும்…வந்து சாப்பிடு வா…!” பாசம் மேலிட்டது சாரதாவுக்கு.

    “நான் சாப்பிட்டாச்சு.”

    “சமைச்சது அம்புட்டும் வீணாப் போகுதில்ல….உன் கோபத்தை சாப்பாட்டு மேல ஏன் காமிக்கிறே?”

    “அதான் வாசல்ல நாய் இருக்கே,இனிமேட்டு அதுக்குப் போடு….நன்றியாவாச்சும் இருக்கும்…அதான வேணும் உங்களுக்கு..!”

    “ஏண்டா இப்படில்லாம் பேசறே..? என்னாச்சுடா உனக்கு…..மூஞ்சியே சரியில்லை..வெளில எதாச்சும் பிரச்சனையா? மூஞ்சியே பேய் அரைஞ்சாப்பல இருக்குது….?”

    “காசில்லாம சுத்தினா மூஞ்சி பேயறைஞ்சாப்பல தான்மா இருக்கும். எனக்கு வெளில ஒரு பிரச்சனையும் இல்ல…அம்புட்டும் வீட்டுக்குள்ளாற தான். அதான் பைக் வாங்கித் தரச் சொல்லிருக்கேன். சொன்னியா அவுருகிட்ட. என்ன சொன்னாரு.”

    “ம்ம்ம்…சொல்றேன்….சொல்றேன்….” என்று நகர்ந்தவள்,

    இவனோட இப்பப் பேசினா சண்டை வளரும், ஊகித்தபடி “டேய்..சிவராமா ,கதவை சார்த்தி பூட்டு….நான் படுக்கப் போறேன். பசிச்சா எடுத்துப் போட்டு சாப்பிடு. ஐயோ ராமா…இந்த இடுப்பு இந்த வலி வலிக்கிதே…அயோடெக்ஸ் எங்கிட்டு இருக்கோ..தேடணும்” சொல்லிக் கொண்டே அறைக்குள் சென்று மறைந்தாள் சாரதா.

    “யாரை நம்பி நான் பொறந்தேன்..

    போங்கடாப் போங்க…
    என் காலம் வெல்லும்,
    வென்ற பின்னே வாங்கடா வாங்க…
    குளத்திலே தண்ணியில்லே
    கொக்கும் இல்லே மீனும் இல்லே
    பெட்டியிலே பணமில்லே
    பெத்த புள்ளே சொந்தமில்லே…
    தென்னைய பெத்தா இளநீரு
    பிள்ளைய பெத்தா கண்ணீரு
    பெத்தவன் மனமே பித்தம்மா
    பிள்ளையின் மனமே கல்லம்மா…

    “ஆமா…..இவனுங்க வேற…கல்லு…மண்ணுன்னு… சொல்ல வந்திட்டாய்ங்க” அவசரமாக டிவியை அணைத்தான் சிவராமன்.

    அறைக்குள் அப்பாவும் அம்மாவும் காரசாரமாய் பேசிக் கொண்டிருக்கும் சத்தம் ஹால் வரைக்கும் கேட்டது.

    இவனுக்கும் கேட்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் அவர்களும் உரக்கப் பேசிக்கொண்டிருந்தார்கள்.

    “இவனெல்லாம் உருப்பட மாட்டாண்டி…..இவனுக்கெல்லாம் நீ வக்காலத்து வாங்கிட்டு வராத….பைக்கும் கிடையாது…அவனுக்கு எந்த சோக்கும் கிடையாது.உருப்படாத பய…. நடந்து போகச்சொல்லு. அப்பத்தான் சொகத்தோட அருமை தெரியும். நம்ம நிம்மதியைக் கெடுக்கறதே அவனுக்குப் பொளப்பு. எத்தனை பசங்க படிச்சமா வேலைக்குப் போனமான்னு இருக்குறாங்க…நமக்குன்னு…என் கர்மம்….!நாட்டுல என்ன வேலையா இல்லே….? இவனுக்கு சொகுசா உட்கார்ந்து தண்டச் சோறு தின்னக் கேக்குது.

    நீ பேசாம படுடி….பிள்ளைக்கு பைக்கு வேணுமாம் பைக்கு…. அவனுக்கு இன்னைக்கு பைக்கு வேணும்பான் ..நாளைக்கு புதுசா செல்ஃபோன் வேணும்பான். அவன் கேக்குறத பறிச்சுக் கொடுக்க எல்லாம் மரத்துலயா முளைச்சு நிக்குது. பெத்தவங்க கஷ்டம் தெரியாத பயபுள்ள… நடுத்தெருவுல நிப்பாட்டினாத்தான் வெவரம் வெளங்கும். நானும் இவன் வயசைத் தாண்டி வந்தவன் தான..ம்க்க்க்க்க்க்க்க்…” என்று செருமிய சத்தம் கேட்டதும்…சிவராமனின் கன்னத்தில் அறைந்தது போலிருந்தது அந்த வார்த்தைகள்.

    ‘இதுக்கெல்லாம் நான் வருத்தப் படமாட்டேன்…இவிங்களுக்கும் நான் யாருன்னு காமிக்கணும்….இது போல உருப்படாத அப்பன்களுக்கு  உணர்த்தணும். எப்பயும் நான் என்ன இப்பிடியேவா இருந்துடப் போறேன்..? என்னவோ சொல்லுவாங்களே..ஒரு பானை சோத்துக்கு ஒரு சோறு பதம்னு.இவங்க இப்படித் தான். திருந்தாதவிங்க. எப்பப் பாரு கேள்வி கேட்டு கொடஞ்செடுத்து உசுர வாங்கிருவாய்ங்க. இவிங்களுக்கு சம்பாதிச்சாப் போதும்…அது எப்பிடியிருந்தா என்ன?’ சடக்கென்று எழுந்திருந்த சிவராமன் தனக்கு தேவையானதை எடுத்து ஒரு பையில் திணித்துக் கொண்டு கிளம்பினான்.

    ‘இப்படிப்பட்ட அப்பா,அம்மா இருக்கிறதாலத் தான் நாட்டுல கொலை, கொள்ளை, செயின் ஸ்னாட்ச்சிங், ஜேப்படி எல்லாம் சர்வ சாதாரணமா நடக்குது. இங்கன இருந்தாத் திட்டியே கொன்னுருவாய்ங்க.’

    ‘வீட்டை விட்டே ஓடிறலாமா..? ஓடிறலாம் ..அப்பத்தான் இவிங்க ரெண்டு பேத்துக்கும் என்னோட அருமையும் புரியும்.’

    டிவி ஸ்க்ரீனில் ஒரு வெள்ளைத் தாளை ஒட்டியவன்,

    “நான் உருப்படுவதற்காக போகிறேன்

    ஒரு வீட்டு நாய்த் தெருநாயாகிறது

    நிம்மதியாக இருங்கள்.”

    சிவப்பு ஸ்கெட்ச் பேனாவால் அதன் மேல் கொட்டை எழுத்தில்  எழுதிவிட்டு விளக்கை அணைத்துவிட்டு, மெல்லக் கதவைச் சார்த்திவிட்டு  வீட்டை விட்டு வெளியேறுகிறான்.

    வீடு இருளில் மூழ்கிப் போகிறது.

    வாசற்படி கடந்து தெருவுக்கு வந்ததும், அங்கு ஓரமாகப் படுத்திருந்த தெருநாய் இவனைப் பார்த்ததும் வேகமாக எழுந்து நின்று சோம்பல் முறித்து விட்டு தலையை நிமிர்த்திக் கொண்டு இவனைப் பார்த்து, “இந்நேரத்துக்கு இங்கிட்டுப் புறப்பட்ட…’?… விடாமல் குறைக்க ஆரமபித்தது. வீட்டை விட்டு நடக்க நடக்க…நாயும் தொடர்ந்து குரைத்துக் கொண்டே வந்தது.

    முதல் முறையாக வீட்டை விட்டு வெளியேறிப் போகிறோம் என்றதும், அவனையும் அறியாமல் ஒரு பயம் வந்து அவனை சூழ்ந்து கொண்டது. நாம சொன்னது போலவே திருடனாகி விடுவோமோ? போலீஸ் லத்தியால் முட்டிக்கி முட்டி அடி வாங்கிக் கம்பி எண்ணுவோமோ? காசு கிரிமினல் ஆக்கிடும்… யாரும் தட்டிக் கேட்க ஆளில்லையின்னா நல்லவன் கூட கிரிமினல் ஆயிறுவானே. நான் செய்யுறது மட்டும் சரியா? நான் இப்போ எங்கிட்டுப் போவேன்?

    கால்கள் வீட்டைக் கடந்து நடக்க நடக்க, மனம் நொண்டியடித்தது. உள்ளிருந்து பொங்கி வந்த எண்ணங்கள்  வீட்டுக்குள் அவனை இழுத்தது. மனசாட்சி சாட்டையை உருவியது. ‘அம்மா பாவம்….அப்பாவும் பாவம்..!’ தன்னை உணர்ந்ததும் பாசம் மேலிட்டது.

    “பெத்தவன் மனமே பித்தம்மா
    பிள்ளையின் மனமே கல்லம்மா.”.

    காதுக்குள் பாடல் வரிகள் மீண்டும் ஒலித்தது. சரியாகத் தான் சொல்லியிருக்காங்க. நான் தான் புரிஞ்சுக்கலை.

    சிவராமன் அந்த நாயைப் பார்க்கிறான். அதுவும் உடனே நின்று இவனைப் பார்க்கிறது .

    எனக்குத் தெரிஞ்சு நான் உனக்கு இன்னிக்கு மட்டும் தான் இட்டிலி வெச்சேன். அதுக்கே நீ  இப்படி வாலாட்டிக்கிட்டு பின்னாடியே வாரியா …இல்லே… நான் இங்கன இல்லாத போனா உனக்கு நாளைக்கி சோறு கிடைக்காதேன்னு குரைக்கிரியா …சீ …போ….! துரத்திப் பார்க்கிறான்.

    ச்சே….நானும் ஏன் உன்னைத் துரத்தோணம்?

    அதுவும் வாலை ஆட்டியபடியே குரைத்துக்  கொண்டே கூட வருகிறது.

    தெரு முழுதும் கடந்திருப்பான். சிவராமன்… நாய்க்குக் கூட நன்றியும், கடமை உணர்வும் இருக்கு… எனக்கில்லையே..? அப்பா சொல்வதிலும் நியாயம் இருக்கு. அவர் சரி தான். நான் தான் மாறணும் .தெரு திரும்புவதற்குள் அவன் மனம் திரும்பிவிட்டது. சிவராமன்  வீட்டை நோக்கித் திரும்புகிறான்.

    தான் எழுந்த வேலை முடித்துவிட்டு ஓடிச்சென்று வாலைச் சுருட்டிக் கொண்டு மீண்டும் ஓரமாகப் போய்ப்  படுத்துக் கொள்கிறது அந்த நாய்.

    பூனை போல மறுபடியும் வீட்டுக்குள் நுழைந்து கொண்டு கதவைச் சார்த்திக் கொள்கிறான் சிவராமன்.

    நுழைந்ததும், முதல் வேலையாக ,அவன் எழுதி ஒட்டிய வெள்ளைத் தாளை டீவி ஸ்க்ரீனிலிருந்து பிய்த்து, ‘ஒரு தெருநாய் என்னை உருப்பட வெச்சிருச்சு’ என்று சொல்லிக் கொண்டே அதைத்  துண்டு துண்டாக கிழித்து ஜன்னல் வழியாக வீசுகிறான்.

    Share