Tag: இரங்கல்

  • ஒரிசா பாலு மறைந்தார்

    ஒரிசா பாலு மறைந்தார்

    அண்ணாகண்ணன்

    வங்காள விரிகுடாவில் சுமார் இரண்டரை மணி நேரம் வலம் வரும் வாய்ப்பு, 2010 ஜூ்லை 16 அன்று கிட்டியது. இதுவே கடலில் நான் மேற்கொண்ட முதல் பயணம். தமிழ்ப் பெருங்கடல் ஆய்வு மையத்தின் சார்பில் கடலியல் வல்லுனரான ஒரிசா பாலு (உறையூர் சிவஞானம் பாலசுப்பிரமணி) (பாலசுப்பிரமணியம் B+), இதற்கு ஏற்பாடு செய்திருந்தார். ‘நெய்தலோடு ஒரு பொழுது’ என்பது, இந்தப் பயணத்திற்கு அவர் சூட்டிய பெயர்.

    தமிழர் வரலாற்றைக் கடலுக்கடியில் தேட வேண்டும் என்ற அவர் குரல், தனித்த ஒற்றைக் குரல். வேறு எவருக்கும் இதைச் சொல்லும் துணிவும் வரலாற்றுப் பார்வையும் அனுபவமும் இருந்ததில்லை. கடலுக்கடியில் நீந்துவோருக்கு வழிகாட்டியாக, பாலு இருந்திருக்கிறார். அந்த அனுபவத்தின் அடிப்படையில், மறைந்த குமரிக் கண்டத்தைக் கடலுக்கடியில் தேட வேண்டும் என அவர் துணிவுடன் கூறினார்.

    ஆமையைப் பின்தொடர்ந்து தமிழன் கடல்வழிப் பயணம் மேற்கொண்டான் என்ற கருத்துருவை அவர் தொடர்ந்து முன்வைத்து வந்தார். இது குறித்து நான் விமரிசித்து எழுதியிருக்கிறேன். எனினும் என் கருத்துகளை அவர் ஆக்கப்பூர்வமாகவே எடுத்துக்கொண்டார்.

    உலகம் முழுதும் தமிழில் அமைந்துள்ள ஊர்ப் பெயர் விவரங்களைத் தேடித் திரட்டினார். இங்கெல்லாம் தமிழர்கள் சென்று வாழ்ந்திருக்கிறார்கள். அதனால் தான் இவ்வாறு பெயர்கள் அமைந்துள்ளன என்ற கருத்தை முன்வைத்தார். இதற்காகக் கடுமையாக உழைத்தார். தமிழர் வரலாற்றைக் கற்பனைக் கதையாக இல்லாமல், தக்க சான்றுகளுடன் நிறுவ வேண்டும் என்ற முனைப்பு அவரிடம் இருந்தது.

    பாலசுப்பிரமணியம் B+ என்றே அவர் பெயரை எப்போதும் எழுதி வந்தார். ஏன் இப்படி எழுதுகிறீர்கள் எனக் கேட்டேன். B+ என்பது என் குருதி வகை. யாருக்கேனும் இந்தக் குருதி தேவையெனில் என்னை அணுகலாம். அவர்களுக்கு இது உடனே ஞாபகம் வர வேண்டும். அதற்காகவே என் பெயருடன் இதைச் சேர்த்து எழுதுகிறேன் என்றார். முதலெழுத்துகளை நாம் அத்தனைப் பேரும் எழுதும்போது, குருதி வகையை எழுதி, சிறந்த முன்மாதிரியாக விளங்கினார். மேலும், இது குருதிக் கொடை விழிப்புணர்வையும் ஏற்படுத்தியது.

    நேற்று மாலை, அவருடன் பேஸ்புக் மெசெஞ்சரில் உரையாடினேன். எப்போது வந்து பார்க்கலாம் என்று கேட்டேன். மாலை 4 – 6 வரலாம் என்றார். இன்று மாலை அவரைப் பார்க்கக் கிளம்பினேன். இடைவழியில் அவரை அழைத்தேன். 4.15க்கு அவர் மறைந்துவிட்டதாக அவர் மகன் தெரிவித்தார்.

    ஒரிசா பாலுவுடன் அவரது அலைபுரளும் மனக்கடலும் ஓய்ந்தது. அவரது உந்திச் செலுத்தும் ஊக்கமும் அயராத உழைப்பும் பரபரக்கும் ஆர்வமும் துடிப்பும் கூடவே ஓய்ந்தன. அவரது ஏராளமான திட்டங்களுள் சிலவற்றைத் தக்கவர்கள் யாரேனும் எடுத்துச் செய்யலாம். அவர் அரூபமாகக் கூடவே நின்று உதவுவார்.

    நற்பணிகள் பல புரிந்த நண்பர் ஒரிசா பாலுவின் ஆன்மா, அமைதி பெறுக.

    Share
  • அமரர் வானவன் ஏகாம்பரம் – வானளந்த மாண்பு

    அமரர் வானவன் ஏகாம்பரம் – வானளந்த மாண்பு

    ஒளவை அருள்

    டாக்டர் வானவன் ஏகாம்பரம் (4.12.1953 – 19.12.2022)

    நிலவியல் முது அறிவியல் மாணவராகச் சென்னை மாநிலக் கல்லூரியில் மாநிலத்திலேயே முதலாவதாகத் தேர்ந்தவராவார்.

    இவர் என் அம்மாவிற்குக் குதியுந்து (scooter) ஓட்டும் கலையைக் கற்றுத் தந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    அம்மா வாயிலாக நாங்கள் மூவரும் குதியுந்து ஓட்ட ஊக்கம் பெற்றோம்.

    இவர் அமெரிக்காவில் அணுசக்தி பற்றி ஆராய்ந்து முனைவர் பட்டமும் பெற்றுள்ளார்.

    டென்வரிலுள்ள உட்வேர்டு கிளைடு நிறுவனத்திலும் மற்றும் பல நிறுவனங்களிலும் சுற்றுப்புறச் சூழல் விஞ்ஞானியாகப் பணியாற்றிய பெருமை வாய்ந்தவர்.

    இவர், சென்னை திரு. கே. செல்வராசப் பிள்ளையின் புதல்வி ஆனந்தியை குசலாம்பிகை மண்டபத்தில் 3.9.1981 அன்று திருமணம் செய்துகொண்ட பொழுது, பள்ளி மாணவர்கள் நாங்கள் மணவிழாவில் கலந்து கொண்டது பசுமையாக நினைவில் உள்ளது.

    இவர்களுக்கு இரு ஆண்மக்கள், மனோஜ் மற்றும் மகேஷ் ஆவர்.

    செல்வன் மனோஜ், தற்போது ஜப்பானிய மருந்தியல் நிறுவனமான ‘NS Pharma’ நிறுவனத்தில் வழக்குரைஞராகப் பணியாற்றி வருகிறார்.

    செல்வன் மகேஷ், மருத்துவப் படிப்பு நிறைவு செய்து கள மருத்துவராக ஃபுளோரிடாவில் பணியாற்றி வருகிறார்.

    சென்னைப் பல்கலைக்கழகத்தில் முதுகலை தமிழ் இலக்கியத்தில் பட்டம் பெற்ற பிறகு, முதுநிலை ஆய்வாக 1990களில் அமெரிக்காவிற்குச் சென்று பயில வேண்டும் என்பது என் தணியாத ஆர்வமாகும். அதற்கு ஊன்றுகோலாகவும் தூண்டுகோலாகவும் வான் மாமா மிளிர்ந்தார்.

    அங்குள்ள பல பல்கலைக்கழகங்களில் ஒப்பியல் இலக்கியப் பேராசிரியர்களுடன் அவரே பேசி விண்ணப்பங்களைப் பெற்று நிறைவு செய்து உதவியதை இன்றும் நினைந்து உருகுகிறேன்.

    வான் எனும் சொல்லுக்கு ‘நேர்மை, ஒழுக்கம்’ என்றும் பொருளுண்டு என்று எந்தையார் என் அண்ணன் கண்ணனிடம் சொன்னதை நினைவுகூர்கிறேன்.

    1999ஆம் ஆண்டில் என் இனிய நண்பர் மலேசியா குமாருடன் திருச்சியில் மின் திட்டக் கூட்டத்தில் இருந்த பொழுது அமெரிக்காவிலிருந்து வருகை புரிந்த பொறிஞர் சேகர் நடராஜன் என்னிடம் திரு.வானவனின் கீர்த்தியை நண்பர்கள் பலர் மத்தியில் சொன்ன பொழுது எல்லையில்லாத மகிழ்ச்சியில் திளைத்து, என் பெற்றோர்களிடம் சொல்லி மகிழ்ந்த நினைவலைகள் இப்பொழுது வந்து செல்கின்றன.

    நோய்கள் பல தொடர்ந்து அவரை வாட்டினாலும் கலங்காமல் எதிர்த்து வென்று காட்டிய வான் மாமாவின் திறம் அளப்பரியதாகும்.

    அண்மையில் 23.08.2022 அன்று தொலைபேசியில் என்னிடம் நீண்ட நேரம் பேசிய பொழுது, தன் மாமியார் எழுதிய பக்திப் பனுவல்களைத் தொகுத்து நூலாக்கம் செய்து தர வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

    எந்தையாரைக் குறித்து எப்பொழுதும் பெருமிதமாகப் போற்றிப் பேசுவார்.

    அப்பா மறைவதற்கு முன்பே வான் மாமா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.

    இன்முகத் திலகம் ஏகாம்பர மாமாவின் நூற்றாண்டு நிறைவின் பொழுது வான் மாமா வானில் கலப்பது துயரம் மிகுந்தாகும்.

    ஆற்றொணாத் துயருடன்
    ஒளவை அருள்

    Share
  • தமிழறிஞர் ஒளவை நடராசன் மறைந்தார்

    தமிழறிஞர் ஒளவை நடராசன் மறைந்தார்

    தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர், சிறந்த சொற்பொழிவாளர், தமிழறிஞர் ஒளவை நடராசன், 2022 நவம்பர் 21 அன்று சென்னையில் மறைந்தார். இது குறித்து அவர் மகன்கள் கண்ணன், அருள், பரதன் ஆகியோர் இணைந்து விடுத்துள்ள செய்தி:

    எந்தையும் இலமே !

    ஆக்கமும் – ஊக்கமுமாக இருந்த எந்தையார் வையம் போற்றும் பத்மஸ்ரீ முனைவர்
    ஒளவை நடராசன். ( 24 – 4 – 1936 ) எங்களை தத்தளிக்க விட்டு (21.11.2022)
    வானில் கலந்தார் ! இனி என்ன செய்வோம்!

    எந்தையே !
    நந்தா விளக்கனைய நாயகனே !!
    உங்கள் பிரிவு தாங்கொணாப் பிரிவாகும் …

    எப்பாரும் எப்பதமும் எங்ஙனமும்
    நாங்கள் சென்று உங்கள்
    திருப்பெயரை நவின்றே வளர்ந்தோம் – வளர்வோம் !

    அப்பா – நாங்கள் கேட்டு அருள் புரிதல் வேண்டும்

    ஆற்றொணாத் துயருடன்
    கண்ணன்
    அருள்
    பரதன்.
    21.11.2022 திங்கட்கிழமை.
    மாலை 7.50 மணிக்கு

    ஒளவை நடராசன் மறைவுக்கு அண்ணாகண்ணன் இரங்கல்:

    மேடையிலே வீசிய மெல்லிய பூங்காற்று எங்கே சென்றது? அறிஞர் ஒளவை நடராசன், அழகுத் தமிழால், மதுர மொழியால், நயம் கூட்டிய நாவரசர். அலட்டாமல், அதிர்ந்து பேசாமல், அரங்கை நிமிர வைத்த அன்பாளர். மக்கள் மனங்களை ஆண்ட மாண்பாளர். ராஜா ராஜா என என்னையும் இளையோர் பலரையும் வாயார அழைத்தவர். என் மேல் அன்பைப் பொழிந்தவர். ஆழ்ந்த இரங்கல். ஓம் சாந்தி.

    ஒளவை நடராசன் அவர்களின் மறைவுக்கு வல்லமை மின்னிதழ், தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது.

    Share
  • சிகரம் சாய்ந்தது!

    சிகரம் சாய்ந்தது!

    முனைவர் ஔவை நடராசன்

    நான் சென்னைக்கு வந்த 1955ஆம் ஆண்டிலிருந்து எங்கள் குடும்பத்துக்கு நெருக்கமாகத் தெரிந்த கொள்கைக் கோமான் – நீதி வேந்தர் – பு.ரா.கோகுலகிருஷ்ணன் அவர்களின் மறைவைப் பழுத்த கனி உதிர்ந்தது போலத்தான் என்று எழுதிவிட முடியாது.
     
    பழுத்த அந்த மாமரம், ஆயிரம் கனிகளைத் தந்த பயன்மரமாகும். ஏ.எல்.முதலியார் குடும்பத்தை உலகம் காணாத இரட்டையர் குடும்பம் என்பார்கள் ஆனால் தமிழினத்தில் மூன்று கிளைகளாகப் பூத்துக் கனிந்த அறிவார்ந்த புகழ்ச் செல்வங்கள் என்ற பெருமை நீதி வேந்தர் குடும்பத்தைத்தான் சாரும்.
     
    பேரறிஞர் அண்ணாவின் மனங்கனிந்த மூவராக – மருத்துவ மேதை பாலகிருஷ்ணன், பொறியியல் திலகம் இராதாகிருஷ்ணன், நீதிச் சிகரம் கோகுலகிருஷ்ணன் ஒளிர்ந்தார்கள் .
     
    நாம் கண்ணாரக் காண வாய்த்த மூவேந்தர்கள் எனலாம். தமிழ்க்கடல் பள்ளியகரம் நீ.க. அவர்களின் மருகர் தான் டாக்டர் பாலகிருஷ்ணன். பள்ளியகரம் பிள்ளை அவர்கள், நீதியரசர் கோகுலகிருஷ்ணனைப் புகழ்ந்து பேசாத நாளில்லை. மூவரும் ஒரே இல்லத்தில் ஜெனரல் பேட்டர்ஸ் சாலையிலும் பிறகு அடையாற்று வளமனையிலும் வாழ்ந்த காலங்கள் நம் இமைகளை நனைக்கின்றன.
     
    அந்த வளமனைக்கு வராத தலைவர்கள் இல்லை. தந்தை பெரியார் முதல், தமிழ்ப்புலவர் அனைவரும் வந்து விருந்தருந்தியதை நான் பலமுறை கண்டிருக்கிறேன்.
     
    சௌந்தரம் அம்மையார் அவர்களின் வளர்ப்பு மகன் போல நான் இருந்த போது, நீதியரசர் என்னைத் தழுவி, “அம்மாவுக்குப் பிடித்த பிள்ளை” என்ற சொல்லை எந்த நாளும் காக்க வேண்டும் என்று ஒரு முறை சொன்னார்.
     
    அம்மாவோ “மகனே!  இவர் என் தம்பி” என்று நீதியரசரைச் சுட்டிக் காட்டினார். நீதியரசர் இனமானம் காக்கும் நெடுந்தூணாக நின்று இலக்கியம், இசை, கலை, கல்வி, பண்பாடு ஆகிய பல்வேறு நிலைகளில் மாபெரும் பணிகளை வெற்றியோடு நிறைவேற்றினார்.
     
    இனிமையான குரலில் – கவினார்ந்த தமிழை – கடல்மடை திறந்தது போல் உரையாற்றுவார்.
     
    அவரால் தொடங்கப்பட்டதே “மணவழகர் மன்றம்.” ,அவர் வெகுண்டு எவரும் பார்த்ததில்லை. பரிவின் பிழம்பாக வாழ்ந்தார். அவர் விரல் பிடித்து என்னை மணவழகர் மன்றப் படியில் நடக்க வைத்தார். கல்லூரிப் படிப்பை நான் முடித்தபோதே “சென்னை பல்கலைக்கழகத்தில் உன்னைச் சேர்த்து விடுகிறேன் – உன் மாமனாரும் – வருங்கால மனைவியும் எனக்கு மிக வேண்டியவர்கள். நான் பிள்ளை வீட்டுக்காரனா – பெண் வீட்டுக்காரனா என்று தெரியவில்லை” என்று பேசியதை நினைத்தால் இன்றும் என் கண்கள் கலங்குகின்றன .
     
    நான் அப்போலோவில் இதய மருத்துவத்தில் இருந்த போது, தொலைபேசியில் என்னை வினவியதை மறப்பதில்லை. ஆண்டுதோறும் தமிழிசைச் சங்க விழாவில் நான் அவரைக் காண்பது வழக்கம்.
     
    மருத்துவர் இராம்குமார் இல்ல அழைப்பிதழ் என் எதிரில் இருக்கிறது. நீதியரசர் திருப்பெயரைக் கண்டு அவ்வளவு மகிழ்ந்தேன்.
     
    எப்படி ஆறுதல் கொள்வது!
     
    மூவர் வாழ்வும் முடிந்துவிட்டது.
    மூவேந்தரால் வளர்ந்தது தானே முத்தமிழ்!
    Share
  • நூற்றாண்டு கண்ட பூரணி மறைவு

    ஒரு நூற்றாண்டுக் காலம், நம்முடன் வாழ்ந்து, தமிழ் இலக்கியத்திற்குத் தொடர்ந்து பங்களித்து வந்த கவிதாயினி பூரணி அவர்களின் மறைவுக்கு வல்லமை தன் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது.

    “பூரணி”

    (தோற்றம் 17-10-1913 – மறைவு-17-11-2013)

    3

    கிருஷாங்கினி

    1913ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் ஒன்றாம் தேதி, ஒன்பதாவது குழந்தையாகப் பிறந்தார், சம்பூரணமென்கிற, எழுத்தாளர் பூரணி. அவர்கள் பெற்றோருக்கு மொத்தம் பத்துக் குழந்தைகள். அப்பா ராமசாமி அய்யர், தமிழ்ப் பண்டிதர். பழநியில் 20 ஆண்டுகள் ஆண்கள் பள்ளியைத் தன் சொந்தப் பணத்தில் ஆரம்பித்து நடத்தி வந்தார். பின் சொத்துகள் அழிந்துவிட்ட நிலையில் அந்தப் பள்ளியை அன்னிபெசண்டிடம் ஒப்படைத்துவிட்டார். தாயார் சீதாலட்சுமி அம்மாள். கணவனின் தமிழைக் கேட்டுக் கேட்டுத் தமிழ் செய்யுள்களுக்குப் பொருள் கூறும் அளவுக்குப் புலமை பெற்றவர்.

    ராமசாமி அய்யர் (1864இல் பிறந்தவர் இவர்) எழுதிய தொல்காப்பியத்திற்கான எளிய உரை எங்கள் வீட்டில் 1964 வரை இருந்தது, அப்போது எனக்கு வயது 14, அந்தச் சமயம் நாங்கள் கணியூரில் வசித்து வந்தோம், கையெழுத்துப் பிரதியாக இருந்தது. என் அம்மா சம்பூர்ண அம்மாவுக்கோ அதை நூலாகக் கொண்டுவர விருப்பம். அக்காலங்களில் அது பெரிய விஷயம். தாத்தாவை நான் பார்த்ததில்லை. ஆனாலும் அவரைப் பற்றி நிறையக் கேட்டிருக்கிறேன். ‘மடித்து வைத்த துணி மடி, வீழ்த்துப் போட்ட துணி விழுப்பு’ என்பாராம். கோவில்களுக்கு வேண்டிக்கொள்ளுதல், இறைவனிடம் லஞ்சம் கொடுத்துக் காரியம் சாதித்துக் கொள்ளுதல் போன்றவை தாத்தா காலத்திலிருந்தே எங்கள் வீட்டில் கிடையாது. பூரணி அம்மாவின் கொள்கைகளும் கருத்துகளும் இதை ஒட்டியேதான் இருந்தன.

    1927இல் தனக்குக் கிடைத்த ஓய்வு நேரத்தைத் தமிழில் கவிதை எழுத உபயோகித்தார் அம்மா. நாங்கள் ஒன்பது குழந்தைகள் அம்மாவுக்கு. ஓய்வு நேரம் எப்படிக் கிடைத்ததோ தெரியாது. அப்போது ஆரம்பித்த வாசிப்பும் எழுத்துப் பதிவும் இன்று வரை தொடர்கிறது. 85 ஆண்டுகளாக ஏறக்குறைய எல்லா நிகழ்வுகளையும் தனக்குத் தோன்றிய வடிவில் கவிதையாகவோ, கட்டுரையாகவோ, சிறுகதையாகவோ கண்டவை, கேட்டவை, எனப் பதிவு செய்துள்ளார். நாட்டுப் பற்று, சுதந்திரப் போராட்டம், காந்தி வந்தது, பெண் கல்விக்காக மெனக்கெட்டது, பெண்களுக்காக மாதர் சங்கம் நடத்தியது என்று தொடர்ந்து இயங்கி வந்து கொண்டிருக்கிறார். பாரதி கலைக் கழகத்தில் இணைந்து தன் மகன் கே.வி. ராமசாமியுடன் வீட்டில் கூட்டங்கள் நடத்தியது என, கவிதைப் பரிசு வாங்கியது என நிறைய நிகழ்வுகள். நவீன இலக்கியவாதிகளாக இருக்கும் இன்றைய எழுத்தாளர்கள் பலரையும் அம்மாவுக்குத் தெரியும், அவர்களின் எழுத்துப் பதிவுகளின் கருத்துகளையும் உள்ளடக்கியதாக. நேர்ப் பேச்சும் உண்டு.

    ‘ஸ்பேரோ’ (sparrow) அமைப்புக்காக அம்மாவை ‘அம்பை’ நேர்காணல் செய்ய வந்திருந்தார். ‘அம்பை’ அம்மாவின் பேச்சிலும், எழுத்திலும் ஒரு பொறியைக் கண்டார். தனது நூல், காலச்சுவடு பதிப்பகம் மூலம்தான் முதலில் வர வேண்டும் என்று அம்மா விரும்பினார். ஏற்கனெவே, எஸ்.வி.ராமகிருஷ்ணன் மூலம், சுந்தர ராமசாமியைக் கேட்கச் சொல்லியிருந்தார். ஆனால் அது நடக்கவில்லை. ‘அம்பை’யின் முயற்சியாலும், முன்னுரையாலும், அம்மாவின் முதல் புத்தகம் (அம்பை, அம்மாவின் தன் வரலாறு போடலாம் என்றார். ஆனால் அம்மாவோ தன் கவிதைத் தொகுதி, காலச்சுவடு மூலம் வெளிவர வேண்டுமென்று விரும்பினார்.) அவரது 90ஆவது வயதில் – 2003ஆம் ஆண்டு – “பூரணி கவிதைகள்” நூல், ‘காலச்சுவடு’ வெளியீடாக வந்தது. அம்மாவும் நானும், இன்றுவரை அதை நன்றியுடன் நினைவு கூர்ந்து கொண்டிருக்கிறோம். அந்த நூல், பரவலான கவனத்தையும் அதற்கான பணத்தையும் ‘காலச்சுவடு’ மூலமாக நிறையவே பெற்றுத் தந்தது. (அதுவே ஒரு தவறான புரிதலுக்கும் காரணமாயிற்று மற்ற உறவினருக்கு. இப்படித்தான் நிறையப் பணம் கிடைக்கிறது இலக்கியம் மூலமாக என்ற எண்ணமும் ஏற்பட்டுவிட்டது.) அதற்கு முன்னதாகவே நானும் என் கணவர் நாகராஜனும் அச்சிலும், இண்டெர்நெட் குழுமங்களிலும் அம்மாவின் படைப்புகளைத் தொடர்ந்து வெளியிட்டுக்கொண்டிருந்தோம்.

    “பூரணி நினைவலைகள்” (அவரது தன்வரலாறு), எங்கள் சதுரம் பதிப்பகத்தின் மூலம் கொண்டு வந்தோம். (2005) பின் சில காரணங்களினால், மணிவாசகர் பதிப்பகம் மூலம் அம்மாவின் சிறுகதைத் தொகுப்பு ‘பூரணி சிறுகதைகள்” (2009) என்னும் தலைப்பில் வெளிவந்தது. அம்மா, தன் பாட்டிகளிடம் கேட்ட சிறுவர் கதைகளையும், தான் வடிவமைத்து, தன் குழந்தைகளுக்கும் பெயரர்களுக்கும் சொல்லிய கதைகளையும் இணைத்து என்னிடம் 2008ஆம் (200 பக்கங்களுக்கு) ஆண்டு நோட்டில் எழுதிக் கொடுத்தார். அண்மையில் வசந்தா பதிப்பகம் மூலம் அம்மாவின் “செவிவழிக் கதைகள்” நூல் வெளியாகி உள்ளது. அவர் தனது எல்லாப் படைப்புக்களையும் கால வரிசைப்படி தொகுத்து நோட்டுகளில் பதிவு செய்து வைத்துள்ளார். 1937இல் பழனியிலிருந்து வெளிவந்து கொண்டிருந்த ‘சித்தன்’ இதழ்களிலும், கோவையிலிருந்து வெளிவந்துகொண்டிருந்த ‘பாரத ஜோதி’ இதழ்களிலும் அம்மாவின் சிறுகதைகள் வெளியாகி உள்ளன.

    அக்காலத் திருமணப் பாடல்களைத் தன் சொந்த வடிவத்தில் பாட்டுகளாக இயற்றி, தொடங்கி இருக்கிறார் தன் கவிதை வெளிப்பாட்டை. பின் அதே பாடல்களில் தேசியத்தைக் கருப்பொருளாக்கினார். 1936-38களில் மகளிருக்கு ஹிந்தி சொல்லிக் கொடுத்திருக்கிறார். தொடர்ந்து ஹிந்தியில் படித்துக் கொண்டும் இருந்தார். சில ஆண்டுகளுக்கு முன், வாஜ்பேயின் கவிதைத் தொகுதியை வாங்கிக் கொண்டுவந்து கொடுத்தேன். படித்துவிட்டு, அந்தக் கவிதைகளை மொழிமாற்றம் செய்து கொடுத்தார். வாஜ்பேயின் கவிதைகள் மரபு சார்ந்தவை. எனவே அதை மரபுக் கவிதைகளில்தான் மொழிமாற்றம் செய்ய வேண்டும் என்று அழகாகச் செய்தார். அம்மாவுக்கு மறதி என்பதே கிடையாது. இன்று அவரின் ஒரு நோட்டு தொலைந்துவிட்டது என்று சொன்னால் அந்த நோட்டில் இருந்தவற்றை வரிசை தப்பாது அனைத்துக் கவிதைகளையும் மறுபடியும் எழுதிக் கொடுத்துவிடுவார். அதனால், தன் படைப்புகளில் பத்திரிகை ஆசிரியர்கள் சிறு மாற்றம் செய்திருந்தாலும் உடனே சொல்லிவிடுவார். அந்தச் சொல்லைத் தான் உபயோகித்ததற்கான காரணத்தையும் கூறுவார். ‘சென்னை சங்கமம்’ நிகழ்ச்சி 4இல் தானும் கலந்துகொள்ள ஆசைப்பட்டார். மேடையேறி கவிதையும் வாசித்தார்.

    2004ஆம் ஆண்டு திருப்பூர் சக்தி இலக்கிய விருதும், 2007ஆம் ஆண்டு பொற்றாமரை கலை இலக்கிய ஆய்வரங்கம் ஆண்டுவிழாவில் வழங்கிய தங்கப் பதக்கமும் இலக்கிய சேவைக்கான பாராட்டும் பெற்றார். எழுத்தாளர் ஜ.ரா.சுந்தரேசனின் இலக்கிய கூட்டமான ‘அக்கறை’யிலும் பங்கு பெற்று, பாராட்டையும் பெற்றிருக்கிறார். கணையாழி, புதிய பார்வை, படித்துறை, அணி என்று இலக்கிய இதழ்களில் பலவற்றிலும் இலக்கியப் பங்களிப்பு செய்திருக்கிறார். ‘திண்ணை’ இன்டெர்நெட் இதழ்களிலும் அவரது படைப்புகள் இடம் பெற்றுள்ளன.

    நாட்டுப் பற்றும், காந்தி மீது மரியாதையும் விவேகானந்தர், ராமகிருஷ்ண பரமஹம்சர் போன்றோர் மீது பக்தியும் கொண்டவர். எங்களை விவேகானந்தரின் படத்தின் முன்னால் நின்று ‘பொய் சொல்லவில்லை, நான் சொல்வது உண்மைதான்’ என்று சொல்லச் சொல்லுவார். பொய் சொல்லியிருந்தால் நாங்கள் திரும்பவும் உண்மையை மட்டுமே கூறுவோம். அந்தப் படங்கள் மீது அவ்வளவு பக்தியும் மரியாதையும் எங்களுக்கு உண்டாக்கி இருந்தார்.

    2013 நவம்பர் 17 அன்று அதிகாலை 2 மணி அளவில், நிறைவாழ்வு வாழ்ந்த ‘பூரணி’ என்னும் சம்பூர்ணம் அம்மாள் கயிலாயப் பதவி அடைந்தார்.

    Share