Tag: இஸ்ரேல்

  • ஈரான் – இஸ்ரேல் போரின் பரிமாணங்கள்

    ஈரான் – இஸ்ரேல் போரின் பரிமாணங்கள்

    அண்ணாகண்ணன்

    இப்போது ஈரான் வசம் அணு ஆயுதங்கள் மட்டும் இருந்திருந்தால், அமெரிக்காவுக்கும் இஸ்ரேலுக்கும் அதைத் தாக்கும் துணிச்சல் வந்திருக்காது. அண்மையில் தாக்கப்பட்ட உக்ரேன், பாலஸ்தீனம், ஈராக், ஆப்கானிஸ்தான் ஆகிய அனைத்தும் அணு ஆயுதம் இல்லாத நாடுகள்.

    ஈரான் மீதான தாக்குதலின் இன்னொரு பரிமாணம், அணு ஆயுதங்களின் அவசியத் தேவை. இன்றைய சூழலில் அணு ஆயுதம் இல்லாத நாடுகள், முழுமையான சுதந்திர நாடுகள் எனக் கொள்ள முடியாது. அவை, அணு ஆயுத நாடுகளின் கட்டுப்பாட்டில் தான் இருந்தாக வேண்டும். அவற்றின் வார்த்தையை மீறி ஏதும் செய்ய முடியாது. தங்கள் நாடுகளின் முடிவுகளைத் தன்னிச்சையாக எடுக்க இயலாது. அவற்றின் வளங்களும் அவர்களுக்கே சொந்தம் எனக் கொள்ள இயலாது.

    நாளை ஈரான் வெற்றி கொள்ளப்பட்டால், அதன் எண்ணெய் வளம் முழுவதும் கொள்ளை போகும். அவர்கள் தலைநிமிர்ந்து நடப்பதற்கும் தன்மானத்துடன் வாழ்வதற்கும் வாய்ப்பு மறுக்கப்படும். காரணம், அவர்களின் எதிரிகளிடம் அணு ஆயுதங்கள் இருக்கின்றன.

    உலகில் அணு ஆயுதங்களை முற்றாக ஒழிக்க வேண்டும். அல்லது அவற்றை வைத்திருக்கும் உரிமையை அனைத்து நாடுகளுக்கும் வழங்க வேண்டும். அனைவருக்கும் ஒரே நீதி, ஒரே விதிகள் இருக்க வேண்டும். நாங்கள் வைத்திருப்போம். வேறு யாரும் வைத்திருக்கக் கூடாது என்பது ஒரு புதிய ஒடுக்குமுறை.

    இந்தச் சூழலில் சீனா, வட கொரியா போன்ற அணு ஆயுத நாடுகள் மனம் வைத்தால் மட்டுமே ஈரான் பிழைக்க முடியும். மேலும் அமெரிக்க ஆதரவு அணு ஆயுத நாடுகள், அமெரிக்க எதிர்ப்பு அணு ஆயுத நாடுகள் என்பவற்றை இரு அணிகளாகவே பார்க்க வேண்டும். அமெரிக்க எதிர்ப்பு அணு ஆயுத நாடுகள், தங்கள் சார்பு நாடுகளைப் பாதுகாக்க வேண்டும். அவற்றுக்குக் கூட்டாக அணு ஆயுத வல்லமை அளிக்க வேண்டும். இதன் மூலம், உலக வரைபடத்தில் புதிய எல்லைக் கோடுகள் வரையப்படும். உலக நாடுகளின் நிதியில் பெருமளவைத் தங்கள் நாடுகளின் பாதுகாப்புக்காக ஒதுக்க வேண்டும். இது ஆயுத வியாபாரிகளுக்கே நன்மை தரும்.

    இதன் இன்னொரு பரிமாணம், நம் இன்றைய தலைமுறை மட்டுமின்றி, எதிர்காலத் தலைமுறைகளின் வாழ்க்கையும் ஆபத்தில் இருக்கிறது. அவர்கள் தங்கள் வாழ்க்கை முழுவதும் அச்சுறுத்தலின் நடுவே தான் வாழ வேண்டும். தங்கள் உழைப்பின், உற்பத்தியின் பெரும் பகுதியைத் தங்கள் நாடுகளின் பாதுகாப்புக்கே செலவிட வேண்டும். எந்த நாடாவது தங்கள் முயற்சியால் அதிகம் வளர்ந்தால், இன்னொரு நாட்டால் ஒரே கட்டளையில் அதை நிர்மூலம் ஆக்க முடியும். ஏதேனும் ஒரு முட்டாள் முதல் அணுகுண்டை வீசிவிட்டால், அதன் பிறகு ஒட்டுமொத்த பூமியும் அதற்கு விலை கொடுக்க வேண்டும். அதன் பிறகு மனிதன் மட்டுமின்றி, பூமியின் கடைசி உயிரும் துடித்து அடங்குவதற்கு அதிக காலம் பிடிக்காது.

    Share
  • இஸ்ரேலின் தொடரும் ஆக்கிரமிப்பு

    இஸ்ரேலின் தொடரும் ஆக்கிரமிப்பு

    நாகேஸ்வரி அண்ணாமலை

    இஸ்ரேலில் ஏப்ரலில் ஒன்றும் செப்டம்பரில் ஒன்றுமாக இரண்டு தேர்தல்கள் நடந்தன. முதல் தேர்தலில் நேத்தன்யாஹுவின் கட்சிக்கு 35 இடங்களும் முந்தைய ராணுவத் தளபதி கேன்ட்ஸுக்கு 34 இடங்களும் கிடைத்தன. இருவருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் மற்றக் கட்சிகளோடு சேர்ந்து அரசு அமைக்க முயன்றனர்.  இவர்களோடு சேர்வதற்கு மற்ற எந்தக் கட்சியும் ஒத்துக்கொள்ளவில்லை. இவர்கள் இருவரும் சேர்ந்து அரசு அமைப்பதற்கு இருவரும் இசையவில்லை.

    அதனால் செப்டம்பர் மாதம் இரண்டாவது தடவையாக தேர்தல் நடந்தது.  அதிலும் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. நேத்தன்யாஹுவின் கட்சிக்கு முதல் தேர்தலில் கிடைத்ததைவிட ஒரு இடம் குறைவாகத்தான் கிடைத்தது. கேன்ட்ஸுக்கு அதே எண்ணிக்கையில் இடங்கள் கிடைத்தன. மறுபடி மற்ற எந்தக் கட்சிகளும் இவர்களோடு அரசு அமைக்க ஒப்புக்கொள்ளவில்லையாதலால் இரண்டாவது தேர்தல் முடிவுகளுக்கும் அர்த்தமில்லாமல் போனது.

    இஸ்ரேல் ஜனாதிபதி டிசம்பர் 11-ஆம் தேதிக்குள் அரசு அமைக்கப்பட வேண்டும் என்றும் அதற்கு சாத்தியம் இல்லையென்றால் மறுபடி தேர்தல் நடத்த வேண்டும் என்றும் கூறியிருக்கிறார். இஸ்ரேல் சமூகம் கிட்டத்தட்ட இரண்டு பகுதிகளாகப் பிளவுபட்டிருக்கிறது.  பாலஸ்தீனர்களுக்குத் தனி நாடு கொடுக்க வேண்டுமா என்று கேட்டால் இஸ்ரேல் மக்கள் அனைவரும் – ஒரு சிலரைத் தவிர – தேவையில்லை என்றுதான் கூறுவார்கள்.

    ஆனாலும் பாலஸ்தீனர்களுக்கு எந்த உரிமைகளும் தேவையில்லை என்று நினைக்கும் பழமைவாத, சுயநலமிக்க யூதர்கள் ஒரு பக்கமும் ஏதோ சில உரிமைகள் கொடுக்கலாம் என்று கூறும் இஸ்ரேலியர்கள் இன்னொரு பக்கமும் இருப்பதால் நாடு பிளவுபட்டிருக்கிறது. இந்த இரண்டு பக்கத்தினரிடையேயும் ஒற்றுமை இல்லாததால்  யாருக்கும் பெரும்பான்மை இல்லாமல் அரசியல் கட்சிகள் ஆட்சி அமைக்க முடியாத நிலை இருந்து வருகிறது.

    நேத்தன்யாஹு மேல் பலவித ஊழல் குற்றச்சாட்டுகள் இருக்கின்றன. அவரும் அவருடைய மனைவியும் பெரும் பணக்காரர்களிடமிருந்து விலையுயர்ந்த பரிசுகள் வாங்கியதாக ஒரு குற்றச்சாட்டு. அவருடைய மனைவி மேல் அடிக்கடி பிரதமர் மாளிகைக்கு வெளியிலிருந்து உணவு தருவித்ததாகத் தனியாக ஒரு குற்றச்சாட்டு இருந்தது. வழக்கு நடந்து குற்றம் நிரூபிக்கப்பட்டுத் தண்டனை கிடைப்பதாக இருந்த சமயத்தில் அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டு 75,000 டாலர் அரசுக்குக் கொடுத்து அந்த வழக்கிலிருந்து விடுதலை பெற்றார். இஸ்ரேலில் இருக்கும் இரண்டு பத்திரிக்கைகளில் ஒன்றிற்கு லஞ்சம் கொடுத்துத் தன்னைப் பற்றி புகழ்ந்து எழுதுமாறு செய்தார்.

    இவருடைய அமைச்சரவையில் இருந்தவர்கள் ஜெர்மனியிலிருந்து நீர்மூழ்கிக் கப்பல்கள் வாங்கியபோது கையூட்டு வாங்கயதாகக் குற்றம் சுமத்தப்பட்டார்கள். இன்னும் சில சிறிய குற்றங்களும் நேத்தன்யாஹு மேல் இருக்கின்றன.  இந்தக் குற்றச்சாட்டுகள் எல்லாம் விசாரணைக்குத் தகுந்தவை என்று முடிவு செய்யப்பட்டிருக்கிறது. இதனால் இவர் அமைச்சரவையில் எந்தத் துறைப் பொறுப்பையும் எடுத்துக்கொள்ளக் கூடாது என்றும் பிரதம மந்திரி பதவியை மட்டும் வகிக்கலாம் என்றும் ஜனாதிபதி ஆணையிட்டிருக்கிறார்.

    இந்தக் குற்றங்கள் எல்லாம் நிரூபிக்கப்பட்டு இவருக்குத் தண்டனை கிடைத்தால் தேர்தலில் ஜெயித்து பிரதமராக இருந்தாலும் இவர் பதவி விலக வேண்டும் என்பது இப்போதைய சட்டம். பிரதம மந்திரியாகி எப்படியாவது அந்தச் சட்டத்தைத் திருத்தி பிரதம மந்திரிக்கு அந்த விதியிலிருந்து விலக்களிக்க இவர் முயன்று வருகிறார்.  ஆனால் இரண்டு தடவை நடந்த தேர்தல்களிலும் இவருடைய கட்சிக்குப் பெரும்பான்மை கிடைக்கவில்லை.

    ஏப்ரல் தேர்தலுக்கு முன் சிரியாவில் ஆக்கிரமித்திருக்கும் கோலன் ஹைட்ஸை இஸ்ரேலுடன் இணைத்துக்கொண்டார். அதற்கு அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பின் அங்கீகாரம் கிடைத்தது.  அதனால் எப்படியும் தேர்தலில் ஜெயித்துவிடலாம் என்று நினைத்தார்.  அப்படி நடக்கவில்லை.

    மறுபடி செப்டம்பர் தேர்தலுக்கு முன் வெஸ்ட் பேங்கில் ஆக்கிரமித்திருக்கும் இடங்களை இஸ்ரேலோடு சேர்த்துக்கொண்டார். அதற்கு உலகம் முழுவதிலும் கண்டனம் எழுந்தாலும் இஸ்ரேல் மக்களிடம் ஆதரவு இருக்கும், அதனால் தேர்தலில் ஜெயித்துவிடலாம் என்று நினைத்தார். ஆனால், முதல் தேர்தலைவிட இதில் ஒரு இடம் குறைவாகத்தான் கிடைத்தது. இப்போது அடுத்த முறை தேர்தல் வந்தால் எப்படிப் பிரதம மந்திரியாகலாம் என்று திட்டம் போட்டுக்கொண்டிருக்கிறார். அப்படி நடந்தால் பிரதம மந்திரி பதவியும் கிடைத்துவிடும், குற்றங்களிலிருந்தும் விடுதலை கிடைக்கும்.

    இஸ்ரேல் மக்கள் இவரைப் போன்று அரசியலில் ஊழல் செய்தவர்களைச் சும்மா விடக்கூடாது. இவர் எப்படியும் தேர்தலில் தோற்றுப் பிரதம மந்திரியாகும் வாய்ப்பை இழப்பதோடு சிறைக்கும் செல்ல வேண்டும். இவர் பாலஸ்தீனர்களுக்கு எதிராக எத்தனையோ அநியாயங்கள் புரிந்திருக்கிறார்.

    ஆஸ்லோ ஒப்பந்தம் முழுவதுமாக முறிந்து போனதற்கு இவர்தான் முழுக் காரணம். அதை அன்றைய அரசு உண்மையாக நிறைவேற்றியிருந்தால் பாலஸ்தீனர்களுக்கு ஓரளவு நியாயம் கிடைத்திருக்கும். இவர் தொடர்ந்து பிரதம மந்திரி பதவி வகித்து அவர்களுக்குப் பல அநீதிகளை ஒவ்வொன்றாக இழைத்தார்.  பாலஸ்தீனர்களுக்குத் தனி நாடு கிடைக்கும் என்ற அவர்களுடைய கனவையே முழுவதுமாகக் குலைத்துவிட்டார்.

    இவரைப் போன்றவர்களுக்குத் தண்டனை கிடைக்காவிட்டால் உலகில் நீதி செத்துவிட்டதாகத்தான் அர்த்தம்.

    Share
  • கடவுள் யார் பக்கம் இருக்கிறார்?

    கடவுள் யார் பக்கம் இருக்கிறார்?

    -நாகேஸ்வரி அண்ணாமலை

    இஸ்ரேல் கடவுளின் பக்கம் இருப்பதாக இஸ்ரேலில் இருக்கும் அமெரிக்கத் தூதர் டேவிட் ப்ரீட்மேன் கூறியிருக்கிறார். கடவுள் இஸ்ரேலின் பக்கம் இருப்பதாகச் சொல்வதற்குப் பதில் இப்படிச் சொல்கிறார் போலும். இஸ்ரேல் கடவுளின் பக்கம் இருப்பதாகச் சொல்வதால் இஸ்ரேல் செய்வதெல்லாம் சரியென்று சொல்கிறாரா? இஸ்ரேல்-பாலஸ்தீனப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு அமெரிக்கக் கொள்கையை வகுப்பதில் முக்கிய பங்கு வகிப்பவர் இவர்.

    பைபிளை அப்படியே நம்பும் அமெரிக்கக் கிறிஸ்தவர்கள் (Evangelical Christians) அமெரிக்கா தன்னுடைய தூதரகத்தை டெல் அவிவிலிருந்து ஜெருசலேமுக்கு மாற்றி ஒரு வருஷம் ஆனதைக் கொண்டாடும் ஒரு விழாவில் அவர் இப்படிப் பேசியிருக்கிறார். (யேசுவைக் கொன்றவர்கள் என்ற கோபம் யூதர்கள் மேல் இவர்களுக்கு சென்ற நூற்றாண்டுவரை இருந்தது. பல ஐரோப்பிய நாடுகளில் யூதர்கள் வாழ்ந்து வந்தபோது யேசு உயிர்தெழுந்த நாளான ஈஸ்டர் அன்று கிறிஸ்தவர்கள் யூதர்களுக்குத் தீங்கு விளைவிக்கலாம் என்று யூதர்கள் வெளியில் வர மாட்டார்களாம். இப்போது யூதர்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையே பாலஸ்தீனத்தில் மோதல் ஏற்பட்ட பிறகு கிறிஸ்தவர்கள் யூதர்கள் பக்கம் சாய்ந்துவிட்டனர். உலகம் முழுவதும் முஸ்லீம்களுக்கு எதிராக எதிர்ப்பு கிளம்பியது ஒரு காரணம். கிறிஸ்தவர்களும் முஸ்லீம்களை எதிர்க்க, வெறுக்க ஆரம்பித்தனர். இரண்டாவது, பெத்லஹேமில் பிறந்த இயேசு மாண்டது ஜெருசலேமில். ஜெருசலேம் இஸ்ரேலின் ஆதிக்கத்தில் இருந்தால்தான் தாங்கள் அங்கு இடையூறின்றிப் போய்வரலாம் என்று கிறிஸ்தவர்கள் நம்புகிறார்கள். இது தவறான நம்பிக்கை என்று நான் சொல்வேன்.) இப்போது அமெரிக்காவுடனான இஸ்ரேலின் உறவு வலுப்பட்டிருப்பதாலும் இஸ்ரேல் கடவுளின் பக்கம் இருப்பதாலும் இஸ்ரேல் மிகவும் பலமுள்ளதாக ஆகிவருவதாக அவர் கூறியிருக்கிறார்.

    அமெரிக்காவும் இஸ்ரேலும் நெருங்கிய உறவு கொண்டிருப்பதாக அவர் கூறியதாலேயே அமெரிக்கா இஸ்ரேலுக்கு சாதகமாக ஒருதலைப் பட்சமாக நடந்து வருகிறது என்று சொல்லலாம். இதற்கு நிறைய உதாரணங்கள். அமெரிக்கத் தூதரகத்தை டெல் அவிவிலிருந்து ஜெருசலேமுக்கு மாற்றியிருப்பது; பாலஸ்தீன அகதிகளுக்கு ஐ.நா. அளித்து வரும் உதவியில் தன் பங்கைக் குறைத்திருப்பது; வெஸ்ட் பேங்கை இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதி என்று கூறுவதை நிறுத்திவிட்டது; வாஷிங்டனில் இருந்த பாலஸ்தீனத்தின் அமெரிக்க உறவு அலுவலகத்தை மூடிவிட்டது; ஜெருசலேமில் இருந்த பாலஸ்தீனர்களுக்கான துணைத் தூதரகத்தை இஸ்ரேலுக்கான தூதரகத்தோடு இணைத்துவிட்டது. இப்படிப் பல. ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாக ஆன நாளிலிருந்தே பாலஸ்தீனர்களுக்கு இருந்த உரிமைகளைப் பறிப்பதும் இஸ்ரேலுக்கு புதிய சலுகைகள் வழங்குவதும் அமெரிக்காவின் வழக்கமாயிற்று.

    ப்ரீட்மேனின் இந்தக் கருத்தைப் பாலஸ்தீனர்கள் மட்டுமல்ல இஸ்ரேலில் ப்ரீட்மேனுக்கு முன்னால் அமெரிக்காவின் தூதராக இருந்த டேனியல் குர்ட்ஸெர்கூட வரவேற்கவில்லை. இவர் குடியரசுக் கட்சி, ஜனநாயகக் கட்சி ஆகிய இரண்டு கட்சிகளின் காலத்திலும் அமெரிக்காவின் இஸ்ரேல் தூதராக இருந்திருக்கிறார். ‘அமெரிக்க அரசுக்கும் அதன் மக்களுக்கும் தூதரான இவர் தன் பணிக்குப் பொருத்தமில்லாத விஷயங்களாகக் கூறிவருகிறார்’ என்றார். பாலஸ்தீனர்களுக்கு ப்ரீட்மேன் கூறியது மிகுந்த கோபத்தைக் கொடுத்தது. அமெரிக்கத் தூதரான இவர், அமெரிக்கர்களின் நலன்களைவிட இஸ்ரேலின் நலன்களில்தான் அதிக அக்கறை செலுத்துகிறார் என்று விமர்சித்துள்ளனர்.

    பாலஸ்தீன விடுதலை அமைப்பின் (PLO) அதிகாரிகளில் ஒருவர், ‘ப்ரீட்மேன் இப்படிக் கூறியிருப்பதால், ‘பாலஸ்தீனர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் முஸ்லீம்களுக்கும் எதிராகக் கடவுள் செயல்படுகிறார் என்று சொல்லாமல் சொல்கிறார். ஒருபோதும் அமெரிக்கா அப்படி நினைத்ததில்லை’ என்று ட்விட்டரில் கூறியிருக்கிறார்.

    இந்தப் பதவிக்கு ட்ரம்ப்பால் நியமிக்கப்படுவதற்கு முன் ப்ரீட்மேன், ட்ரம்ப்பின் திவால் வழக்கறிஞராக இருந்தார்; பாலஸ்தீனர்களுக்குக் கொடுக்கப்பட்ட இடமான வெஸ்ட் பேங்கில் இஸ்ரேல் குடியிருப்புகளைக் கட்டியபோது அதை வெகுவாக ஆதரித்ததோடு நன்கொடைகளும் வழங்கியவர் இவர். இஸ்ரேல் இப்படிக் குடியிருப்புகளைக் கட்டியது, அகில உலக சட்டத்திற்குப் புறம்பானது என்று பல நாடுகள் கருத்துத் தெரிவித்தன. சட்டம் படித்த இவர், இதைக் கண்டுகொள்ளவே இல்லை.

    ஓராண்டுக்கு முன் அமெரிக்கத் தூதரகத்தை ஜெருசலேமுக்கு மாற்றியபோது இருபது பேர்களைத் தவிர பாலஸ்தீனர்கள் வேறு யாரும் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றும் அன்று ஜெருசலேம் ஓட்டல்களில் தாங்கள் சாப்பிட்ட உணவு அவ்வளவு நன்றாக இல்லை என்று பேசினார்களேயொழிய தூதரகத்தை மாற்றியது பற்றி யாரும் பேசவில்லை என்றும் வாய்கூசாமல் கூறுகிறார். அன்று இதை எதிர்த்து காஸாவில் கலவரம் நடந்து 60 பேர் கொல்லப்பட்டது உண்மை என்றாலும், நடந்த கலவரங்களுக்கும் தூதரகம் திறக்கப்பட்டதற்கும் எந்தவிதச் சம்பந்தமும் இல்லை என்கிறார். எப்படிப் பொய் சொல்கிறார்! திறப்புவிழா நிகழ்ச்சிகளை இருட்டடிப்பதற்காகத்தான் காஸாவில் வன்முறை நிகழ்ந்தது என்பதே உண்மை.

    இப்படிப் பொய்களாகச் சொல்லிக்கொண்டிருக்கும் இவர் தன்னால் முடியுமென்றால் பாலஸ்தீனர்களை இன்னும் ஒடுக்குவாராம். இன்னொரு மனித இனத்திற்கு அநீதி இழைத்துக்கொண்டிருக்கும் இஸ்ரேலைப் பாராட்டிக்கொண்டிருக்கும் இவர் எப்படி இஸ்ரேல் கடவுள் பக்கம் இருக்கிறது என்று சொல்லலாம். கடவுள் என்று இவர் யாரைச் சொல்கிறார்? கடவுள் படைத்த மனித இனங்களில் ஒன்றைத் தீர்த்துக் கட்டுவதென்று முடிவு எடுத்திருக்கும் இவருக்குக் கடவுள் பெயரைச் சொல்லக்கூட அருகதை இல்லை.

    Share
  • இஸ்ரேல் தேர்தல்: அரேபியர்களே, கண்டிப்பாக வாக்களியுங்கள்

    நாகேஸ்வரி அண்ணாமலை

    வரும் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 9, 2019) அன்று இஸ்ரேலில் பார்லிமென்ட் (இஸ்ரேலில் இதற்குப் பெயர் க்னெசட்) தேர்தல்கள் நடக்கவிருக்கின்றன. தேர்தலுக்குச் சில தினங்கள் முன்பு இஸ்ரேல் சிரியாவின் ஹோலன் ஹைட்ஸை ஆக்கிரமித்திருப்பதை அங்கீகரிக்கும்படி இப்போதைய இஸ்ரேல் பிரதம மந்திரி நேத்தன்யாஹு அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பைக் கேட்டுக்கொண்டார். ட்ரம்ப்பும் நேத்தன்யாஹுவும் கூட்டாளிகள்;நயவஞ்சகக் கயவர்கள். அதனால்தான் இருவருக்கும் ஒத்துப்போகிறது. ஹோலன் ஹைட்ஸை ஆக்கிரமித்திருப்பதற்கு ட்ரம்ப் இஸ்ரேலுக்கு அமெரிக்காவின் அங்கீகாரத்தைக் கொடுத்திருப்பதால் ட்ரம்ப்பின்ஆசீர்வாதத்தால் தேர்தலில் தான்ஜெயித்துவிடலாம் என்று நேத்தன்யாஹு மனக்கோட்டை கட்டுகிறார்.

    இஸ்ரேலில் வாழும் பாலஸ்தீனர்களில் சிலர்– இஸ்ரேல் ஜனத்தொகையில் இவர்களின் எண்ணிக்கை ஐந்தில் ஒரு பங்கு – இந்தத் தேர்தலில் பங்குகொள்வதா வேண்டாமா என்பது பற்றி வெகுவாக யோசித்துவருகிறார்களாம்.அப்படி நினைப்பவர்கள் தாங்கள் வாக்களிப்பதால் என்ன பயன் என்று நினைக்கிறார்கள். இவர்களின் மனதை மாற்றுவதற்காக டேமர் நஃபர் (Tamer Nafar) என்னும் ஹிப் ஹாப் பாடகர் ஒரு வீடியோ வெளியிட்டிருக்கிறார். ‘டேமர் கண்டிப்பாக ஓட்டுப் போட வேண்டும்’என்று ஆங்கிலத்தில் பெயரிடப்பட்டிருக்கும்,அரேபிய மொழியில் தயாரிக்கப்பட்டிருக்கும் இந்த வீடியோசமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. ஒரு பெரிய விவாதத்தை எல்லோரிடமும் உண்டாக்கியிருக்கிறது. டேமர் இஸ்ரேலில் வாழும் பாலஸ்தீனர், இஸ்ரேல் குடிமகன். இந்த வீடியோவில் ஓட்டுப் போட வேண்டாம் என்பவராகவும் போட வேண்டும் என்பவராகவும் தானே நடித்துக் கடைசியில் கண்டிப்பாக ஓட்டுப் போட வேண்டும் என்ற முடிவுக்கு வருவதாக இருக்கிறது. சென்ற சில வாரங்களாக அவருக்குள்ளே நடந்த விவாதத்தின் விளைவு இது.

    ஓட்டுப் போட வேண்டாம் என்னும் வாதத்தை வெகுவாக எதிர்த்து,‘உங்கள் ஓட்டுக்களை வீணடித்துவிடாதீர்கள். நீங்கள் ஓட்டுப் போடுவதால் நேத்தன்யாஹுவைப் பதவியிலிருந்து விலக்குவதோடு சிறைக்கே அனுப்ப முடியும்’என்று கூறுகிறார்.

    ஓட்டுப் போட வேண்டாம் என்பவரை நஃபர் 1 என்றும், போட வேண்டும் என்பவரை நஃபர் 2 என்றும் குறிப்பிடுகிறேன்.

    நஃபர் 1:‘இந்த மண் நமக்கு (அரேபியர்களுக்கு) சொந்தமானது, ஆனால் நாடு அவர்களுடையது ( யூதர்களது). இஸ்ரேல் பாராளுமன்றம் எனக்குரியதல்ல’.

    நஃபர் 2:‘செக்கல் (இஸ்ரேல் நாணயம்) இஸ்ரேலுக்குரியதுதான். ஆனால் நாம் அதை உபயோகிக்கிறோம்.அந்தப்பணத்தில்தான் வரி கட்டுகிறோம். அது இஸ்ரேல் ராணுவத்துக்குப் போகிறது. வீட்டுத் தோட்டத்தில் தேயிலை வளருங்கள். வரி கட்ட த் தேவை வராது. அப்போது காஸாவில் போடும் குண்டுகளுக்கு உங்கள் பணம் போகத் தேவையில்லை’ என்றுஅவருக்குப் பதிலடி கொடுக்கிறார்.

    நஃபர் 1:‘இஸ்ரேலில் வாழும் பாலஸ்தீனர்கள் தேர்தலில் ஓட்டுப் போடுவதால் அவர்களுக்கு யூதர்களோடு சம உரிமைகள் இருப்பதாக மேலைநாடுகளுக்குக் காட்டிக்கொள்ள இஸ்ரேலுக்கு வசதியாக இருக்கிறது. மேலும் என்னுடைய ஓட்டு எதையும் மாற்றப் போவதில்லை. ஏவுகணைகள் உபயோகப்படுத்தப்படும் போரில் நான் கத்தி வைத்துக்கொண்டு சண்டை போடுவதுபோல் இருக்கிறது. பீரங்கிகளை வைத்துக்கொண்டு அவர்கள் சண்டை போடும்போது என்னிடம் கல் மட்டுமே இருக்கிறது’.

    நஃபர் 2:‘நாம் பாலஸ்தீனத்தை விடுவிக்கப் போவதில்லை என்பது நிஜம்தான். ஆனால் நம் ஓட்டுக்கள் லிபெர்மேனை (இஸ்ரேலின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சராக இருந்தவர்) ஒழிக்கலாம். அதோடு நேத்தன்யாஹுவைச் சிறைக்கு அனுப்பலாம் என்னும்போது நான் ஓட்டளிக்கத் தயார்’

    பாராளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு அந்தத் தொகுதியில் ஓட்டுப் போட்டவர்களின் எண்ணிக்கையில் ஒரு குறிப்பிட்ட சதவிகிதம் பெற்றிருக்கும் கட்சிக்குத்தான் அங்கீகாரம் உண்டு. அரேபியர்கள்நிறையப் பேர் ஓட்டுப்போடமுன்வந்தால் அந்த சதவிகிதம் கூடிவிடும். அப்போது குறைந்த வாக்குகள் பெறும் லிபெர்மேன் கட்சி தோற்றுவிடும்.

    இந்த லிபெர்மேன்தான் 2015-இல் நடந்த தேர்தலில் அரேபியர்களின் கட்சிகள் பாராளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்படுவதைத் தவிர்ப்பதற்காகக் குறைந்தபட்ச சதவிகிதத்தைக் கூட்டினார். ஆனால் அரேபியக் கட்சிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து ‘கூட்டுக் கட்சிகள்’ என்ற அமைப்பை உருவாக்கி தேர்தலில் ஜெயித்து பாராளுமன்றத்தில் 13 இடங்களைப் பெற்றனர். இந்தத் தேர்தலில் போன தேர்தலைவிட நிறைய அரேபியர்கள் பங்கெடுத்துக்கொள்வார்கள் என்று கருத்துக் கணிப்பு கூறுகிறது. அரேபியர்களுக்கு எதிராகச் செயல்படும் நேத்தன்யாஹுவின்மேல் இவர்களுக்கு ரொம்பக் கோபம் இருக்கிறது. ஓட்டுப் போட வேண்டாம் என்று அரேபியர்களிடம் கூறினால் அரேபிய அரசியல் கட்சித் தலைவர்களின் இந்த நம்பிக்கை வீணாகிவிடும்.

    அதிக எண்ணிக்கையில் அரேபியர்கள் ஓட்டுப் போடும் வாய்ப்பு இன்னும் இருப்பதாகத் தான் நம்புவதாகவும் அப்படி நடக்கும் பட்சத்தில் அது தர்மத்தின் வெற்றியாக (poetic justice) இருக்கும் என்றும்நஃபர் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். நேத்தன்யாஹுவுக்கு எதிராகப் போட்டியிடும் மாஜி ராணுவ அதிகாரி பென்னி கேன்ட்ஸுக்கும் நேத்தன்யாஹுவுக்கும் வெற்றி வாய்ப்புகள் சமமாக இருப்பதாகக் கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன. நஃபர் பென்னி கேன்ட்ஸ் ஜெயிக்க வேண்டும் என்கிறார். (காஸாவில் எத்தனை பயங்கரவாதிகளை, அதாவது பாலஸ்தீனர்களைக் கொன்றேன் என்று பென்னி கேன்ட்ஸ் மார்தட்டிக்கொண்டதால் சில பாலஸ்தீனர்கள் அவருக்கு ஓட்டுப்போட விரும்பவில்லையாம்.) நேத்தன்யாஹுவின் மேலுள்ள குற்றச்சாட்டுக்கள் ஊழலுக்காக இருப்பதற்குப் பதிலாக போர்க் குற்றங்களுக்காக இருக்கக் கூடாதா என்று தான் விரும்புவதாக நஃபர் மேலும் கூறுகிறார்.

    நஃபர் பாலஸ்தீனர்களின் மகனாகப் பிறந்தவர். 2000-இல் இரண்டாவது பாலஸ்தீனப் புரட்சி ஏற்பட்டபோது அரசியல் கலந்த பாட்டுக்களாகப் பாட ஆரம்பித்தார். 2016-இல் இவர் தயாரித்த சுயசரிதைப் படமான ‘ஜங்ஷன் 48’ மிகவும் பிரபலமானது. பரிசு பெற்ற படங்களுக்கான ஒரு விழாவில் நஃபர் பங்கெடுத்துக்கொண்டிருந்தபோது கலாசார மந்திரி மிரி ரெஜிவ் கூட்டத்திலிருந்து வெளியேறினார்; இவருடைய படங்களைத் தடைசெய்ய முயன்றார்.

    போன தேர்தலில் அரேபியர்களின் ‘கூட்டுக் கட்சி’க்கு ஓட்டளித்த நஃபர் இப்போது அது உடைந்துவிட்டதாகவும் கப்பல் மூழ்கிவிட்டதாகவும் கூறுகிறார்.

    நஃபர் 2 கடைசியாகக் கூறுகிறார்: எனக்கிருக்கும் ஒரே ஆயுதம் ஓட்டுரிமைதான். இதை நான் பயன்படுத்தியே ஆக வேண்டும். இஸ்ரேல் அரசியலில் சில தீவிர வலதுசாரிகள் இருக்கிறார்கள். இவர்கள் பாலஸ்தீனர்களை இஸ்ரேலை விட்டே வெளியேற்ற வேண்டும் என்கிறார்கள். அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்துகொள்ளட்டும். என்னுடைய ஓட்டுரிமையைப் பயன்படுத்தி, இஸ்ரேல் எங்களை வெளியே அனுப்பும் லாரிகளில் என் சக அரேபியர்களோடு பேசிக்கொண்டிருப்பதற்குப் பதில் இஸ்ரேலிலேயே இருந்துகொண்டு அவர்களுக்குப் பாடிக்கொண்டிருக்கும் என் உரிமையை விட மாட்டேன்.

    இஸ்ரேலில் வாழும் பாலஸ்தீனர்களை வெளியேற்றி (இவர்களுக்கு இஸ்ரேல் குடியுரிமை உண்டு) இஸ்ரேல் நாட்டை யூதர்களுக்கு மட்டுமே உரிய நாடாக ஆக்க வேண்டும் என்ற ஒரு திட்டம் சில தீவிர வலதுசாரிகளிடம் இருக்கிறது.

    Share