இஸ்ரேல் தேர்தல்: அரேபியர்களே, கண்டிப்பாக வாக்களியுங்கள்

0

நாகேஸ்வரி அண்ணாமலை

வரும் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 9, 2019) அன்று இஸ்ரேலில் பார்லிமென்ட் (இஸ்ரேலில் இதற்குப் பெயர் க்னெசட்) தேர்தல்கள் நடக்கவிருக்கின்றன. தேர்தலுக்குச் சில தினங்கள் முன்பு இஸ்ரேல் சிரியாவின் ஹோலன் ஹைட்ஸை ஆக்கிரமித்திருப்பதை அங்கீகரிக்கும்படி இப்போதைய இஸ்ரேல் பிரதம மந்திரி நேத்தன்யாஹு அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பைக் கேட்டுக்கொண்டார். ட்ரம்ப்பும் நேத்தன்யாஹுவும் கூட்டாளிகள்;நயவஞ்சகக் கயவர்கள். அதனால்தான் இருவருக்கும் ஒத்துப்போகிறது. ஹோலன் ஹைட்ஸை ஆக்கிரமித்திருப்பதற்கு ட்ரம்ப் இஸ்ரேலுக்கு அமெரிக்காவின் அங்கீகாரத்தைக் கொடுத்திருப்பதால் ட்ரம்ப்பின்ஆசீர்வாதத்தால் தேர்தலில் தான்ஜெயித்துவிடலாம் என்று நேத்தன்யாஹு மனக்கோட்டை கட்டுகிறார்.

இஸ்ரேலில் வாழும் பாலஸ்தீனர்களில் சிலர்– இஸ்ரேல் ஜனத்தொகையில் இவர்களின் எண்ணிக்கை ஐந்தில் ஒரு பங்கு – இந்தத் தேர்தலில் பங்குகொள்வதா வேண்டாமா என்பது பற்றி வெகுவாக யோசித்துவருகிறார்களாம்.அப்படி நினைப்பவர்கள் தாங்கள் வாக்களிப்பதால் என்ன பயன் என்று நினைக்கிறார்கள். இவர்களின் மனதை மாற்றுவதற்காக டேமர் நஃபர் (Tamer Nafar) என்னும் ஹிப் ஹாப் பாடகர் ஒரு வீடியோ வெளியிட்டிருக்கிறார். ‘டேமர் கண்டிப்பாக ஓட்டுப் போட வேண்டும்’என்று ஆங்கிலத்தில் பெயரிடப்பட்டிருக்கும்,அரேபிய மொழியில் தயாரிக்கப்பட்டிருக்கும் இந்த வீடியோசமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. ஒரு பெரிய விவாதத்தை எல்லோரிடமும் உண்டாக்கியிருக்கிறது. டேமர் இஸ்ரேலில் வாழும் பாலஸ்தீனர், இஸ்ரேல் குடிமகன். இந்த வீடியோவில் ஓட்டுப் போட வேண்டாம் என்பவராகவும் போட வேண்டும் என்பவராகவும் தானே நடித்துக் கடைசியில் கண்டிப்பாக ஓட்டுப் போட வேண்டும் என்ற முடிவுக்கு வருவதாக இருக்கிறது. சென்ற சில வாரங்களாக அவருக்குள்ளே நடந்த விவாதத்தின் விளைவு இது.

ஓட்டுப் போட வேண்டாம் என்னும் வாதத்தை வெகுவாக எதிர்த்து,‘உங்கள் ஓட்டுக்களை வீணடித்துவிடாதீர்கள். நீங்கள் ஓட்டுப் போடுவதால் நேத்தன்யாஹுவைப் பதவியிலிருந்து விலக்குவதோடு சிறைக்கே அனுப்ப முடியும்’என்று கூறுகிறார்.

ஓட்டுப் போட வேண்டாம் என்பவரை நஃபர் 1 என்றும், போட வேண்டும் என்பவரை நஃபர் 2 என்றும் குறிப்பிடுகிறேன்.

நஃபர் 1:‘இந்த மண் நமக்கு (அரேபியர்களுக்கு) சொந்தமானது, ஆனால் நாடு அவர்களுடையது ( யூதர்களது). இஸ்ரேல் பாராளுமன்றம் எனக்குரியதல்ல’.

நஃபர் 2:‘செக்கல் (இஸ்ரேல் நாணயம்) இஸ்ரேலுக்குரியதுதான். ஆனால் நாம் அதை உபயோகிக்கிறோம்.அந்தப்பணத்தில்தான் வரி கட்டுகிறோம். அது இஸ்ரேல் ராணுவத்துக்குப் போகிறது. வீட்டுத் தோட்டத்தில் தேயிலை வளருங்கள். வரி கட்ட த் தேவை வராது. அப்போது காஸாவில் போடும் குண்டுகளுக்கு உங்கள் பணம் போகத் தேவையில்லை’ என்றுஅவருக்குப் பதிலடி கொடுக்கிறார்.

நஃபர் 1:‘இஸ்ரேலில் வாழும் பாலஸ்தீனர்கள் தேர்தலில் ஓட்டுப் போடுவதால் அவர்களுக்கு யூதர்களோடு சம உரிமைகள் இருப்பதாக மேலைநாடுகளுக்குக் காட்டிக்கொள்ள இஸ்ரேலுக்கு வசதியாக இருக்கிறது. மேலும் என்னுடைய ஓட்டு எதையும் மாற்றப் போவதில்லை. ஏவுகணைகள் உபயோகப்படுத்தப்படும் போரில் நான் கத்தி வைத்துக்கொண்டு சண்டை போடுவதுபோல் இருக்கிறது. பீரங்கிகளை வைத்துக்கொண்டு அவர்கள் சண்டை போடும்போது என்னிடம் கல் மட்டுமே இருக்கிறது’.

நஃபர் 2:‘நாம் பாலஸ்தீனத்தை விடுவிக்கப் போவதில்லை என்பது நிஜம்தான். ஆனால் நம் ஓட்டுக்கள் லிபெர்மேனை (இஸ்ரேலின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சராக இருந்தவர்) ஒழிக்கலாம். அதோடு நேத்தன்யாஹுவைச் சிறைக்கு அனுப்பலாம் என்னும்போது நான் ஓட்டளிக்கத் தயார்’

பாராளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு அந்தத் தொகுதியில் ஓட்டுப் போட்டவர்களின் எண்ணிக்கையில் ஒரு குறிப்பிட்ட சதவிகிதம் பெற்றிருக்கும் கட்சிக்குத்தான் அங்கீகாரம் உண்டு. அரேபியர்கள்நிறையப் பேர் ஓட்டுப்போடமுன்வந்தால் அந்த சதவிகிதம் கூடிவிடும். அப்போது குறைந்த வாக்குகள் பெறும் லிபெர்மேன் கட்சி தோற்றுவிடும்.

இந்த லிபெர்மேன்தான் 2015-இல் நடந்த தேர்தலில் அரேபியர்களின் கட்சிகள் பாராளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்படுவதைத் தவிர்ப்பதற்காகக் குறைந்தபட்ச சதவிகிதத்தைக் கூட்டினார். ஆனால் அரேபியக் கட்சிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து ‘கூட்டுக் கட்சிகள்’ என்ற அமைப்பை உருவாக்கி தேர்தலில் ஜெயித்து பாராளுமன்றத்தில் 13 இடங்களைப் பெற்றனர். இந்தத் தேர்தலில் போன தேர்தலைவிட நிறைய அரேபியர்கள் பங்கெடுத்துக்கொள்வார்கள் என்று கருத்துக் கணிப்பு கூறுகிறது. அரேபியர்களுக்கு எதிராகச் செயல்படும் நேத்தன்யாஹுவின்மேல் இவர்களுக்கு ரொம்பக் கோபம் இருக்கிறது. ஓட்டுப் போட வேண்டாம் என்று அரேபியர்களிடம் கூறினால் அரேபிய அரசியல் கட்சித் தலைவர்களின் இந்த நம்பிக்கை வீணாகிவிடும்.

அதிக எண்ணிக்கையில் அரேபியர்கள் ஓட்டுப் போடும் வாய்ப்பு இன்னும் இருப்பதாகத் தான் நம்புவதாகவும் அப்படி நடக்கும் பட்சத்தில் அது தர்மத்தின் வெற்றியாக (poetic justice) இருக்கும் என்றும்நஃபர் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். நேத்தன்யாஹுவுக்கு எதிராகப் போட்டியிடும் மாஜி ராணுவ அதிகாரி பென்னி கேன்ட்ஸுக்கும் நேத்தன்யாஹுவுக்கும் வெற்றி வாய்ப்புகள் சமமாக இருப்பதாகக் கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன. நஃபர் பென்னி கேன்ட்ஸ் ஜெயிக்க வேண்டும் என்கிறார். (காஸாவில் எத்தனை பயங்கரவாதிகளை, அதாவது பாலஸ்தீனர்களைக் கொன்றேன் என்று பென்னி கேன்ட்ஸ் மார்தட்டிக்கொண்டதால் சில பாலஸ்தீனர்கள் அவருக்கு ஓட்டுப்போட விரும்பவில்லையாம்.) நேத்தன்யாஹுவின் மேலுள்ள குற்றச்சாட்டுக்கள் ஊழலுக்காக இருப்பதற்குப் பதிலாக போர்க் குற்றங்களுக்காக இருக்கக் கூடாதா என்று தான் விரும்புவதாக நஃபர் மேலும் கூறுகிறார்.

நஃபர் பாலஸ்தீனர்களின் மகனாகப் பிறந்தவர். 2000-இல் இரண்டாவது பாலஸ்தீனப் புரட்சி ஏற்பட்டபோது அரசியல் கலந்த பாட்டுக்களாகப் பாட ஆரம்பித்தார். 2016-இல் இவர் தயாரித்த சுயசரிதைப் படமான ‘ஜங்ஷன் 48’ மிகவும் பிரபலமானது. பரிசு பெற்ற படங்களுக்கான ஒரு விழாவில் நஃபர் பங்கெடுத்துக்கொண்டிருந்தபோது கலாசார மந்திரி மிரி ரெஜிவ் கூட்டத்திலிருந்து வெளியேறினார்; இவருடைய படங்களைத் தடைசெய்ய முயன்றார்.

போன தேர்தலில் அரேபியர்களின் ‘கூட்டுக் கட்சி’க்கு ஓட்டளித்த நஃபர் இப்போது அது உடைந்துவிட்டதாகவும் கப்பல் மூழ்கிவிட்டதாகவும் கூறுகிறார்.

நஃபர் 2 கடைசியாகக் கூறுகிறார்: எனக்கிருக்கும் ஒரே ஆயுதம் ஓட்டுரிமைதான். இதை நான் பயன்படுத்தியே ஆக வேண்டும். இஸ்ரேல் அரசியலில் சில தீவிர வலதுசாரிகள் இருக்கிறார்கள். இவர்கள் பாலஸ்தீனர்களை இஸ்ரேலை விட்டே வெளியேற்ற வேண்டும் என்கிறார்கள். அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்துகொள்ளட்டும். என்னுடைய ஓட்டுரிமையைப் பயன்படுத்தி, இஸ்ரேல் எங்களை வெளியே அனுப்பும் லாரிகளில் என் சக அரேபியர்களோடு பேசிக்கொண்டிருப்பதற்குப் பதில் இஸ்ரேலிலேயே இருந்துகொண்டு அவர்களுக்குப் பாடிக்கொண்டிருக்கும் என் உரிமையை விட மாட்டேன்.

இஸ்ரேலில் வாழும் பாலஸ்தீனர்களை வெளியேற்றி (இவர்களுக்கு இஸ்ரேல் குடியுரிமை உண்டு) இஸ்ரேல் நாட்டை யூதர்களுக்கு மட்டுமே உரிய நாடாக ஆக்க வேண்டும் என்ற ஒரு திட்டம் சில தீவிர வலதுசாரிகளிடம் இருக்கிறது.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *