Tag: உமா மோகன்

  • கவிழ்ந்திருக்கும்….

     

    -உமாமோகன்

     

    பார்த்த கணத்திலிருந்து
    என் அடிவயிற்றைப் பிசைகிறது
    அந்தப்படம்

    அழுது வடியும்
    விளக்குக் கம்பம் ஒன்றின்கீழ்
    தலைகவிழ்ந்து
    அமர்ந்திருக்கிறாள் அச்சிறுமி

    பசியில் குறுகியோ
    சீண்டலில் சாம்பியோ
    தனிமையில் வெம்பியோ
    அங்கே அமர்ந்திருப்பதாக
    விளக்கம் தராதீர்கள்

    தயவு செய்து
    உங்கள் படத்தை
    சற்றே திருத்துங்கள்
    அந்த விளக்குக் கம்பத்திற்கு
    சற்றுத் தள்ளி
    அரையிருளில்
    பாத்திரம் தேய்க்கும் ஒரு அம்மா
    இல்லை
    நீர் சுமக்கும் அக்கா
    வெறுமையாய்ப் பார்க்கும் அப்பா
    பண்டம் கவர்ந்த தம்பி
    அட
    எதுவும் வேண்டாம்
    ஒரு சோகைப் பூனையோ,நாயோ
    கூடப்போதும்

    கோபத்திலோ பிடிவாதத்திலோ
    கவிழ்ந்த அவள் தலை
    எல்லாம் மறந்து
    புன்னகையுடன் நிமிரும் காட்சியை
    நானே கற்பனை செய்து உறங்கிவிடுவேன்

    Share
  • சார்த்திய கதவு

    -உமா மோகன்

    இருகரமும் விரித்து நடந்தேன்
    எல்லோரையும் தழுவிக் கொள்ளவும்
    ஆதுரமாய்த் தலைகோதவும்
    பாராட்டி வழித்துத் திருஷ்டி கழிக்கவும்  Hand held beam balance scale
    ஆறுதலாய்க் கன்னம் தட்டவும்
    முதுகு தடவிப் பாரம் இறக்கவும்
    தோதாக இருக்கட்டுமென
    இருகரமும் விரித்துதான் நடந்தேன்…

    என் கையில் தராசு வந்தது எப்போது ?
    சல்லிசாய்க் கிடைக்கும் வம்புகளும்
    சரமாய்த் தொடரும் அம்புகளும்
    நாணயக் குறைவான நாணயங்களும்
    வாசனை நோட்டுகளும்
    வசதியான எடைக்கற்களும்
    மாறி மாறி உட்கார்ந்திருக்கும்
    இந்தத் தராசே என் கையாகிப்போன
    நொடி எது…

    நிறுத்தலே வாழ்க்கையா ?

     

    Share
  • உறைந்த காலம்

    உமா மோகன்

    uraintha

    உதிர்த்த சொற்களில்

    நீ நின்றாய் ..

    உரைக்காத சொல்லில் நான்…

    என் உச்சரிப்பு குறித்து

    கிளர்ச்சியோடு பகிர்கிறாய்…

    மௌனத்தில் நடமிட்ட

    பொழிவை கோர்க்க இயலவில்லை

    என்னால் …

    வண்ணத்துப் பூச்சியின்

    சிறகு படிந்த மகரந்தமென ரசிக்கிறாய்

    கூட்டுப் புழுவின் வரிகள்

    என்னாயின ..

    ஒருமுறை கேட்டிருக்கலாமோ

     

    Share
  • எங்கே நீயோ

    உமா மோகன் 

    friends 2

    –பிரியம் சொல்லில் தளும்பல்

    உன் ப்ரியம்

    கருணை கண்ணில் வழிவது

    பார்வைக்கு அழகு

    பார்ப்பவர்க்கு அழகா ..?

    என் ஆன்மாவை

    துடைத்துத் தூபம் காட்டி

    இறுகப் பூட்டிவிட்டேன்

    புற அழுக்கு குறித்த அச்சமென்றாய் ..

     

    அழுக்கு தின்று மூச்சு விடும்

    மீன் அது என்பதை அறியாயோ

    அகவிழி திறந்து ஆன்மாவை

    உலவவிடு…

    தடாகம் முழுக்க துள்ளிப் புரண்டு

    நீந்தும்போதில்

    நீயும் கற்பாய் பிரியமும் கருணையும்

    விரல் வழியும் வழியும் என்பதை…

     

    Share