Tag: கனம் கோர்ட்டார் அவர்களே!

  • கனம் கோர்ட்டார் அவர்களே! – 18

     

    இன்னம்பூரான்

     

    யாமொன்று நினைக்க…

     

    அக்காலத்து உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி திரு.எம்.பதஞ்சலி சாஸ்திரி பற்றி எழுத நினைத்தேன். சதாசிவம் வந்து விட்டார். ஈரோடு மாவட்டம்: கடப்பநல்லூர் கிராமம். விவசாயகுடும்பம். அதில் முதல் பட்டதாரி. கிராமத்திலேயே முதலாக வழக்கறிஞர் சன்னது பெற்றவர். 1996லேயே இளம்வயதில் சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி; பொதுவாக, உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவி உயர்ந்தவர்களுக்குத் தான் உச்சநீதிமன்றத்துக்கு உயர்வு கிடைப்பது வழக்கம். இவருக்கு டபிள் ப்ரமோஷன். 2007ல் நேராக உச்ச நீதிமன்றம். ஜூலை 19 அன்று உச்சநீதி மன்றத்து தலைமை நீதிபதியாக பதவி ஏற்கப்போகும் இந்த தமிழ்மகனை வாழ்த்துவோம்.

    இவருடைய முக்கியமான தீர்ப்புகளில் சில: ரத்ன சுருக்கமாக:

    • ஒரு ரிலையன்ஸ் முட்டல் வழக்கில் அவர் கூறியது: இயற்கை வளங்களை அரசு வாரியங்களுக்கு மட்டுமே கொடுப்பது நலம். நம் தேசீய குடியரசில், அவை மக்களுக்கு சொந்தம். அரசு அவர்களுக்காக, அவற்றை பேணவேண்டும்.
    • அநேகருக்கு ஒடிஷாவில் கிரஹாம் ஸ்டைன்ஸ் என்ற பாதிரியும் அவரது மகன்கள் காரில் வைத்துக் கொளுத்தப்பட்டது நினைவில் இருக்கலாம். அந்த வழக்கில் மஹாத்மா காந்தியின் சர்வமத சம்மதம் இந்தியாவில் பரவவேண்டும் என்ற நம்பிக்கைத் தெரிவித்தார்.
    • மாயாவதி மீது சீபீஐ போட்ட வழக்கு தர்மம் அல்ல என்று புறக்கணித்து விட்டார்.
    • சஞ்சய் தத்துக்கு ஐந்து வருட சிறை தண்டனை கொடுத்ததும் இவரே.
    • பெண்கள்/குழந்தைகள் மீது பலாத்காரம் செய்தவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும் என்பது இவரது கொள்கை.

    இன்னம்பூரான்

    30 06 2013

    உசாத்துணை:

    http://www.thehindu.com/news/national/justice-sathasivam-first-judge-from-tamil-nadu-to-become-cji/article4863744.ece?homepage=true

     

    Share
  • கனம் கோர்ட்டார் அவர்களே! – 17

    இன்னம்பூரான்


    சில செய்திகளைப் பார்த்தால் வாளாவிருக்கமுடியவில்லை. அது என்னுடைய பலவீனம். ‘வல்லமை’க்கு அது வலிமை தரும் என்ற பகற்கனவு வேறே. இன்று உலகளவில் ஊடகங்களில் பெரிதும் பேசப்படும் ‘நோவார்ட்டீஸ்’ வழக்கில் இந்திய உச்ச நீதிமன்றம் ஏப்ரல் 1, 2013 அன்று  அளித்த தீர்வு ‘சாலமன்’ ஜட்ஜ்மெண்ட்டுக்கு இணையானது என்று சொன்னால் அது மிகையல்ல. அது என்ன ‘சாலமன்’ ஜட்ஜ்மெண்ட்? சாலமன் சக்கிரவர்த்தி அதி மேதாவி. ஒரு வழக்கு. இரு பெண்மணிகள் ஒரு குழந்தையை ‘தனது’ என்று வாதாடுகிறார்கள், அவர் முன்னிலையில். இக்கட்டான நிலை. இரு தரப்பும் பலத்த சாட்சியங்கள். அதனால் என்ன? குழந்தையை சரி பாதியாக வெட்டி, ஆளுக்குப் பாதி என்று தீர்ப்பு அளிக்க, ஒருவள் கதறினாளாம், ‘ஐயோ வேண்டாம். அவளே வைத்துக்கொள்ளட்டும்’ என்று. அவள் தான் உண்மையான அன்னை என்று கூறி அவளிடம் குழந்தையை ஒப்படைத்தாராம்.  அது நினைவுக்கு வந்தது.

    திடீர் குபேரனாக வேண்டுமானால் ஒன்று கள்ளுக்கடை வைக்கவேண்டும்; அல்லது மருந்து வியாபாரம் செய்யவேண்டும். முதலில் ஒரு கசப்பான அனுபவத்தைப் பகிர்ந்து கொள்கிறேன். 1977: தீவிரமான வியாதி, எம் குடும்பத்தில்.  ஒரு மருந்து கொடுத்து, தினம் மூன்று மாத்திரை. சிங்கப்பூரிலிருந்து வரவழைக்க வேண்டும் என்றார்கள். ஒரு மாத்திரையின் விலை ரூபாய் 200/-. தவித்துப்போய்விட்டோம். சில வசதிகள் இருந்ததால், வழி பிறந்தது. எங்கள் சொந்தப் பிரச்னை தணிந்தது. ஆனால், சமுதாயப் பிரச்சனை மேருமலை அளவு என்றும் புரிந்தது. வியாதியின் தீவிரம், பாதிப்பு, ஏழை மக்கள் பாடு ஆகியவற்றைப் பற்றி விவரங்களை சேகரித்துக்கொண்டு, Drug Controller இடம் சென்று, இந்தியாவில் இந்த மருந்து தயாரிக்க வேண்டும், விலையும் குறைய வேண்டும் என்று பரிந்துரை செய்தேன். அவர் விழித்துக்கொண்டு சிரிக்கவில்லை. அது தான் பாக்கி. ‘இதெல்லாம் நடக்கற காரியம் இல்லை. போய் வா, மகனே’ என்று அவர் ஆசீர்வதித்தார். நானும் விடாக்கொண்டன் ஆச்சே. மேலிடங்கள் சென்று வாதிட்டேன். ஸ்க்ரூவை முடுக்கினேன். பத்து வருடங்களுக்குள் அதை இந்தியாவில் தயாரித்து, மூன்றாவது வருடம் அதன் விலை ரூபாய் 5/-. ஆனால், அதற்குள் ஒரு அசம்பாவிதம் நடந்து விட்டது. எங்கள் வீட்டில், அதை நிறுத்தச்சொல்லி அறிவுரை வந்ததால், கையில் இருந்ததை ஒரு ஏழை நோயாளிக்குக் கொடுத்தோம். சில மாதங்கள் தாக்குப்பிடித்தாலும், சில உதவிகள் பெறமுடிந்தாலும், கட்டுபடி ஆகவில்லை. நாங்களும் வேறு ஊருக்கு மாறி போய்விட்டோம். அந்தப்  பெண்மணி அகால மரணமடைந்தார்.

    அத்தகைய துர்பாக்கியம் ஏற்படுவதைத் தடுக்கிறது, இந்தத் தீர்வு. மருந்து தயாரிக்கும் கம்பெனிகள் ஆய்வு செய்ய செலவு அதிகம் செய்கிறார்கள். அதை மீட்க விரும்புவது நியாயம். அதனால் காப்புரிமை பெற்று, கணிசமாக யானை விலை/குதிரை விலையேற்றம் செய்கிறார்கள். அத்துடன் திருப்தி அடையாமல், முலாம் பூசும் (evergreening) சித்து வித்தை செய்து மறுபடியும் காப்புரிமை பெற்று, வெளுத்து வாங்குகிறார்கள். நோவார்ட்டீஸ் என்ற பிரபல கம்பெனி புற்று நோய் தணிக்கும் க்ளைவக் (Glivec or Gleevec,) என்ற மருந்துக்கு 1996ல் பெற்ற காப்புரிமை காலாவதி யாகும் வேளையில், சின்ன மாறுதல் ஒன்று செய்து, தங்களுடைய ஏகபோகத்தை நிலை நாட்ட முயன்றார்கள். அந்த மருந்து ஆயுசு பரியந்தம் சாப்பிட வேண்டும். மாதம் ரூ. 1.20 லக்ஷம் ஆகும். ஒரு இந்திய கம்பெனி அதே மருந்தை மாதம் எட்டாயிரம் ரூபாயில் தருகிறது. அதைத் தடுக்க நோவார்ட்டீஸ் போட்ட வழக்கை, உச்ச நீதி மன்றம் தள்ளுபடி செய்து விட்டது. இந்த தீர்வு 300 ஆயிரம் நோயாளிகளுக்கு பேருதவி.

    தீர்வின் மைய கருத்து: “…புதியது என்று சொல்லப்படும் இமாடினிப் மெஸைலேட் புதியது அல்ல. 1996ல் காப்புரிமை வாங்கிய ஜிம்மர்மென் பேடண்டிற்கும், இதற்கும் வித்தியாசமில்லை. நோவர்ட்டிஸின் விண்ணப்பத்திலேயே இது ஒப்புக்கொள்ளப்பட்டிருக்கிறது. அதனால் சென்னை காப்புரிமை அலுவலகமும், அதனுடைய அப்பீல் அலுவலகமும், இந்த விண்ணப்பத்தை நிராகரித்தது சரியே…”.

    பின்னணி என்று பார்க்கப்போனால், ஃபைனான்சியல் டைம்ஸ் என்ற இங்கிலாந்து இதழ் சொன்ன மாதிரி, இந்தியாவின் காப்புரிமை அணுகுமுறை, சர்வதேச வணிக மன்றத்தின் கட்டுப்பாடுகளுக்கு ஒத்துப்போனாலும், மருந்து கம்பெனிகளால் வெறுக்கப்பட்டது. இப்போது கூட நோவர்ட்டீஸ், இந்தத் தீர்வு நோயாளிகளுக்கு உபத்ரவம்; நாங்கள் புதிய மருந்துகளை இந்தியாவில் விற்பனை செய்யப்போவதில்லை என்பதால் என்கிறது. அதனுடைய விண்ணப்பத்தில் உள்ள முரண், வாசாலகம் பற்றியெல்லாம் காஷ்டமெளனம். இது இங்கிலாந்தின் பிரபல சட்டம் சார்ந்த பேராசிரியர் டாக்டர் த்விஜேன் ரங்கனேகரின் கருத்து.

    இன்றைய (ஏப்ரல் 6, 2013) அப்டேட்: மெர்க் ஷார்ப் அண்ட் டோஹ்ம் என்ற பிரபல அமெரிக்க கம்பெனி தன்னுடைய நீரழிவு நோய் மருந்துகளின் காப்புரிமையை ஒரு இந்திய கம்பெனி மீறுகிறது என்ற வழக்கை டில்லி உயர் நீதி மன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை.

    சிக்கலான/ நுட்பமான செய்திகளை நான் விவரிக்க வில்லை. இதுவே அலுத்துப்போய்விடுகிறது அல்லவா!

    சித்திரத்துக்கு நன்றி:

    http://2.bp.blogspot.com/-RVUgUWAEfY4/T6Idc2X4PTI/AAAAAAAAAhc/rhE-vQNOd7A/s1600/medicine.jpg

    Share
  • கனம் கோர்ட்டார் அவர்களே! – 16

     

    இன்னம்பூரான்

    கனம் கோர்ட்டார் அவர்களே ~14

    http://www.ecotippingpoints.org/our-stories/indepth/india-rajasthan-rainwater-harvest-restoration-groundwater-johad/Village-elder.jp

     

    எறும்பூர கல்லும் தேயும் என்பார்கள். மதம் பிடித்த யானை ஏறி, ஏறி மிதித்தாலோ, முதலையின் பல்லிடுக்கில் அகப்பட்டுக்கொண்டாலோ, என்ன ஆவது? இந்த பாரத தேசவாசிகள் அத்தகைய பேராபத்தில் சிக்கிக்கொண்ட வேளையிலும், வாதப்பிரதிவாதங்களில், பட்டிமன்றங்களிலே, அரட்டைக்கச்சேரியிலே, குடலாடி (மடலாடலில் ஒரு வகை!) மகிழும்போது, மலையை தடவிப்பார்க்கிறார்கள், ஊர்ந்த எறும்பு நகர்ந்த பின்!

    என்.ஹெச்.சசிதல் என்ற அரசு ஊழியர் மீது அதீதமாக ரூ.33.44 லக்ஷம் சொத்து சேர்த்ததாக வழக்கு தொடர்ந்து 27 வருடங்கள் ஆயின. அக்காலத்தில், இது ஒரு கணிசமான தொகை. அவரோ, அலுத்துப்போய், வழக்கை வாபஸ் வாங்கக் கோரியுள்ளார். தற்காலிக பதவி நீக்கம், கீர்த்தி நாசம், வாழ்வியல் பாதிப்பு எல்லாம் தன்னை மிகவும் பாதித்து விட்டதாக, அவருடைய பிராது. அதை நிராகரித்த உச்ச நீதிமன்ற வாசகங்கள் (obiter dicta):

    “லஞ்சலாவண்யம் மக்களுக்கு ஒரு மந்திரமாகிவிடுமோ என்ற கவலை…தற்காலம் நம் தேசத்தின் குடலுருவி, நீக்கமற நிறைந்துள்ளது லஞ்சம். தம்பிடியோ, தங்கக்கட்டியோ, குற்றம் குற்றமே…இப்பெல்லாம் கோடிக்கணக்கில்… பதவி துஷ்பிரயோகம் செய்து சலுகைகள் காட்டுவது சமூக விரோதம்; மக்களை இழிவு படுத்துவது; சட்டத்தைத் துச்சமென கடாசுவது ஆகும்…அரசு நிறுவனங்கள் மீது நம்பிக்கை இல்லையெனில் ஆட்சி நன்றாக அமையாது…பதவி துஷ்பிரயோகம் பெருவாரி வியாதியாக எங்கும் பரவி விட்டது. லஞ்சம் கொடுத்தால் தான் வேலை நடக்கும் என்ற எண்ணம் வலுத்து வருகிறது…லஞ்சப்பேய், ~குட்டிச்சாத்தான், கொள்ளிவாய் பிசாசு எதாக இருந்தாலும்…அந்த கூளி குழப்பம் விளைவித்து, சமுதாய முன்னேற்றத்தில் குண்டு வீசி, ரவுடிகளின் கொம்பு சீவி, மனசாட்சியை கொன்று, சமுதாய மையங்களை குலைத்து, தேசத்தின் செல்வத்தை சூறையாடி, நல்லிணக்கத்தைத் தொலைத்து, அரசாளுமையின் புற்று நோயாக அமைந்து, சர்வநாசினி என்க…கன்னாபின்னாவென்று, முறைகேடாக, சொத்து சேர்ப்பதின் முதல் பலிகடா, மக்களின் நம்பிக்கை இழப்பு…பொது வாழ்வில் யோக்கியதை இல்லையென்றால், அடி வாங்குவது, மக்கள்…இது தான் தீர்ப்பின் பின்னணி.

    தீர்ப்பு: என்.ஹெச்.சசிதலின் மனு நிராகரிக்கப்படது. தாமதம் மோசம் தான். அந்த சால்ஜாப்பைச் சொல்லி, லஞ்ச வழக்குகளை வாபஸ் செய்தால், அது ‘தடியெடுத்தவன் தண்டல்காரன்’ என்ற போக்கில் கயவாளிகள் கொள்ளையடிக்க வழி வகுக்கும்.

    இதை எங்க கிராமத்துப் பெரிசு ஆறுமுகம் சேர்வையிடம் சொன்னேன். ‘இப்போ மட்டும் என்ன வாழுது?’ என்று கேட்டார். மயக்கம் வருமளவுக்கு, ஹூடாவின் ஹூடா, அப்பாவின் தாதுபுஷ்டி சப்பைக்கட்டு, நீர்மூழ்கியானாலும், பறக்கும் தட்டு ஆனாலும் ‘அடிடா கமிஷன்’ மந்திரம், மலை முழுங்கி தந்திரம், மணல் அள்ளும் யந்திரம் என்று அனுமார் வால் போல ஒரு நீண்ட பட்டியலை வாசித்தார். அந்த அளவுக்கு ல.லா. அபகீர்த்தி துர்வாசனை அடிக்கிறது.

    அவருக்கு மூச்சு வாங்கியதை சாக்காக வைத்துக்கொண்டு, விடை, மத்திய அரசு அசோக் சவான் வழக்கில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாணபத்திரத்தில் இருக்கிறதே என்றேன். அவர் தான் மூச்சுமுட்ட எல்லா ஊடக செய்திகளை படிச்சுட்டாரே.  நான் சொன்னால், கேட்கமாட்டீர்கள். அவரே சொன்னார். கேளும், ஐயாமாரே! அம்மாமாரே!

    பெரிசு ஆறுமுகம் சேர்வை: 

    ராஜூ! என்னமோ காலேசிலே போய் படிச்சுட்டோம், ஜனநாயகம், தேசாபிமானம், தியாகம், அரசியல் சாஸனம், தேர்தல், பிரதிநிதி, அது, இது என்று உளறிக்கொட்டி, கிளறி மூடிரீங்க. என்ன தான் இருந்தாலும், வெள்ளைக்காரன் இப்படி வயத்திலே மண்ணடிக்கல்லை. அசோக் சவான் என்ற பிரதிநிதி சாமான்ய ஆசாமி இல்லை. முதல் மந்திரியாக்கும். அவர் மேலே ஆதர்ஷ் ஊழலிலும் பிராது கொடுத்தாங்க. தேர்தலில், பணத்தை வாரி இழைத்ததாகவும், ஊடகங்களில் காசு கொடுத்து, தற்புகழ்ச்சியை செய்தியாக போட்டு, வாக்கு என்று கொக்கின் தலை மேல் வெண்ணெய் வைத்ததாகவும், தேர்தல் கமிஷனுக்கு உண்மைக்குப் புறம்பான பிரமாணம் தாக்கல் செய்ததாக பேசறாங்க. இப்போ போய் தேர்தல் கமிஷனுக்கு அது பற்றி விசாரிச்சு, அவர் பதவிக்கு லாயாக்கா, இல்லையா என்று சொல்ல உரிமை இல்லை என்று மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாணபத்திரத்தில் அடிச்சுப்பேசறது. கணக்குக்கொடுக்காவிட்டால் தான் அவர்கள் தலையிடலாமாம். பொய்யும், புனைசுரட்டும் பேசினாக்க, தேர்தலில் நிற்க தகுதி இல்லை என்று சொல்லலாமா? அந்த தகுதி தேர்தல் கமிஷனுக்கு இல்லை என்று ராசாங்கம் சொல்லுது, அப்பா, கொஞ்சம் கூட வெட்கம் இல்லாமல். இத்தனைக்கும், இந்த ‘அப்புராணை’ பிரமாணம் ஒரு உச்சநீதி மன்ற தீர்ப்புக்கு எதிர்மறை. (பல வருஷங்க முன்னாலெ அப்பு.) உனக்குத்தான் தெரியுமே, ராசாங்கத்தின் “ஆடிட்டர் ஜெனெரல் ஒழிக” அப்டிங்கிற கண்ணியம்! என்று சொல்லி விட்டு, புகையிலை துண்டு ஒண்ணை வாயில் அடக்கிக்கிட்டு, கொள்ளை சிரிப்புச் சிரித்தார், யாகாவா முனிவர் மாதிரி.

    ஓசை அடங்கின பின், ‘தணிக்கைத்துறை சமாச்சாரம் நிறைய இருக்கு, மாமு’ என்றதற்கு ஒரு நமுட்டுச்சிரிப்பு தான் பதில். முத்தாய்ப்பா, சொன்னேன், ‘மாமு! சேதி தெரியுமா? இதே அசோக் சவான் மீது அவரிடம் ‘தோத்துப்போனவர்’ ஒருவர் போட்ட வழக்கில், “ ‘ கொடுக்கப்பட்ட தகவல்களை வைத்துக்கொண்டு, அவரை பதவியிலிருந்து நீக்கணும்’ என்ற மனுவை ஜனவரியிலேயே உச்ச நீதி மன்றம் நிராகரித்து விட்டது.” என்றேன். நான் பேசியது குட்டிச்சுவருடன். அவர் எழுந்து போய்விட்டார், மாட்டுக்குத் தண்ணி காட்ட.

    (தொடரும்)

     

    சித்திரத்துக்கு நன்றி: http://www.ecotippingpoints.org/our-stories/indepth/india-rajasthan-rainwater-harvest-restoration-groundwater-johad/Village-elder.jpg

    Share
  • கனம் கோர்ட்டார் அவர்களே! – 15

    இன்னம்பூரான்

    புதிய தொடர் ~ 1

    சில வருடங்களுக்கு முன்னால் ஒரு விபத்தினால் ஆஸ்பத்திரியில் இறந்த ஒரே மகனின் உடலுறுப்புகளை அவனுடைய பெற்றோர்கள் தங்கள் துயரத்தை அடக்கிக்கொண்டு, தானம் செய்தார்கள். 20 நிமிடங்களுக்குள் மற்றொரு ஆஸ்பத்திரிக்கு அவனுடைய இதயத்தை எடுத்துச் சென்றால் தான், மற்றொருவர் உயிர் பிழைக்கலாம். சென்னை வீதிகள், போக்குவரத்துச்சிக்கல்கள்படி இந்த இதயப்பயணம் இரண்டு மணி நேரம் பிடிக்கும். முன்னும் பின்னும் அலறும் சங்குகளும், ஒளி வீசும் சிவப்பு விளக்கு வண்டிகள் கட்டியம் கூற, சென்னை போலீஸ் டிரைவர்களில் திறன் மிக்கவர் ஒருவர் 19 நிமிடங்களில் நின்று போன இதயத்தை ஓடோடிச் சேர்ப்பித்தார். அது ஒரு சாதனை மட்டுமல்ல. சிவப்பு விளக்கும், சங்கொலியும் இட்ட பணியை செவ்வனே செய்தன. அவருக்கு சலாம். சிவப்பு விளக்குக்கும் சங்கொலிக்கும் சலாம். சலாம்.

    சிவப்பு விளக்கும், சங்கொலியும் கன்னாபின்னாவென்று அதிகார துஷ்பிரயோகமாக, மானிடப்பதர்களுக்குக் கூட கட்டியம் கூறுவது அன்றாடக்காட்சி, பாரத தேசம் என்னும் பெயரை தாங்கி வரும் இந்தியாவிலே.  அது மட்டுமல்ல. பெண்களுக்கு உரிய பாதுகாப்புத் தர இயலாத போலீஸ் படை, உருப்படாத மனித ஜன்மங்களுக்குக் கூட, பல வகை துப்பாக்கிகள் ஏந்தி பந்தோபஸ்து அளிக்கிறது. கோடிக்கணக்கான ரூபாய் இந்த  ‘குட்டிச்சுவர்’ கைங்கர்யத்தில் விரயமாகிறது.

    ஒரு மனுதாரர் இதை குறை கூறி, நிவாரணம் நாடி உச்சநீதி மன்றத்தை அணுகினார். அவர் தமிழ்நாட்டில் இருந்து ஒரு உதாரணத்தை முன் வைத்தார். கட்டபொம்மன் முதற்கொண்டு பலர் பட்ட இன்னல்களுக்குக்காரணம், கும்பினிக்காரனிடன் அந்தக்காலத்து ஆற்க்காட்டு நவாப் பட்ட அபரிமிதமான கடனே. செலவாளியும், கடனாளியும் ஆன அந்தக்காலத்து ஆற்க்காட்டு நவாப், நிலம், புலன், மானம், மரியாதை எல்லாவற்றையும் பரங்கிக்காரனிடன் அடகு வைத்தார். மக்களுக்கு அவர் மீது ஏகப்பட்ட வருத்தம். அதனால் அவருக்கு ஆபத்து ஏற்படக்கூடாது என்று கும்பினிக்காரன் அவருக்குக் கொடுத்த ரக்ஷணை, இன்று மக்களுடன், பண்புடனும், நேசமுடனும் பழங்கி வந்து, அவர்களின் நன்மதிப்பைப் பெற்ற இன்றைய ஆற்காட்டு நவாப் அவர்களுக்கு எதற்கு? சிவப்பு விளக்கும், சங்கொலியும் எதற்கு? அது மட்டுமல்ல. கிரிமினல் பின்னணி உடைய மண்டை வீங்கிகளுக்கும் கூட இந்த மரியாதை சாங்கோபாங்கமாக அளிக்கப்படுவதை நீதிபதிகள் ஜி.எஸ். சிங்வி அவர்களும், ஹெ.எல். கோகலே அவர்களும் கண்டித்திருக்கிறார்கள். மனுதாரர் ஹரீஷ் ஸால்வே அவர்கள் பிரபல வழக்கறிஞர். ‘இந்த ‘சிவப்பு விளக்கு/ சங்கொலி’ கலாச்சாரம் ஒரு தொத்து வியாதியாகி விட்டது என்று அங்கலாய்த்தார். இது பொதுஜனவைரியாகி விட்டது என்றார். வர, வர, நமது ராஸ்தாக்கள் பெரும்புள்ளிகளின் பயணத்துக்கு ஆபத்து ஆகிவிட்டன என்ற சால்ஜாப்புக்கு, நீதிபதி. ஜி.எஸ். சிங்வி அவர்கள் சாட்டையடியாக ஒரு கருத்துத் தெரிவித்தார். அதை மட்டும் சொல்லி, இன்றைய கட்டுரையை முடித்து விடுகிறேன். கனம் கோர்ட்டார், லேசுபாசு அரசு மந்தகதி, ஊழலுலகம், தணிக்கை தடாலடி எல்லாம் பற்றி சொல்ல விஷயம் நிறைய இருக்கிறது. வாசகர்களுக்கு ஆர்வமிருந்தால், இது தொடரும். இல்லையெனில் இது முற்றுப்புள்ளி.

    “ மக்களுக்கு இந்த ராஸ்தாக்கள் பாதுகாப்பாற்றவை என்றால், அமைச்சருக்கும் அப்படியே தான் இருக்கவேண்டும். அவர் உசத்தி ஒன்றுமில்லை.” ~ நீதிபதி. ஜி.எஸ். சிங்வி.

    இன்னம்பூரான்

    15 02 2013

    Share
  • கனம் கோர்ட்டார் அவர்களே! – 14

    இன்னம்பூரான்

    அவ்வப்பொழுது மற்ற நாட்டு நடப்புகளைப் பற்றி அறிந்து கொள்வது நல்லதே. இன்று (அக்டோபர் 5, 2012) இங்கிலாந்தில் பல வருடங்களாக நிலுவையிலிருந்த வழக்கு ஒன்றில் இறுதி தீர்ப்பு வழங்கப்பட்டது. அந்த தீர்ப்பு இங்கு அலசப்படவில்லை. அந்த வழக்கின் போக்கும், தீர்ப்பின் தன்மையும் மட்டுமே அலசப்படுகின்றன, நமக்குப் பல படிப்பினைகள் இருப்பதால். மனித உரிமையின் சிக்கலான, பல பரிமாணங்களை முன்னெடுத்து வைக்கும் இந்த வழக்கில் விண்ணப்பதாரர்கள் ஐவர். அமெரிக்காவுக்கும், இங்கிலாந்துக்கும் இடையே உள்ள உடன்பாட்டுக்கிணங்க, இவர்களை, அங்கு நீதி மன்றம் முன் நிறுத்த வேண்டி, அமெரிக்காவுக்கு அனுப்ப வேண்டும் என்று அமெரிக்க நீதித்துறையின் சார்பாக ஒரு வேண்டுகோள். மனித உரிமை பறி போகிறது. எங்களை அங்கு அனுப்பக்கூடாது என்று ஐவரின் தனித்தனி விண்ணப்பங்கள். ஒரு வழக்கு 14 வருடமாக நடக்கிறது; மற்றொன்று 13 வருடங்களாக. சாற்றப்பட்ட குற்றங்கள் தீவிரமானவை: 1. கிழக்காப்பிரிக்காவில் இரு அமெரிக்கத் தூதரகங்கள் மீது நடந்த தாக்குதலில் 200 பேர் மரணம்;4500 பேர் காயம். 2. யேமன் நாட்டில் சிலரை அபகரிப்பது, அமெரிக்காவின் ஆரகன் மாநிலத்தில் ஒரு பயங்கரவாதி மையம் அமைப்பது போன்ற செயல்கள். 3. அமெரிக்காவிலும், இங்கிலாந்திலும் இணைய தளங்கள் மூலமாக பயங்கர வாதத்திற்கு நிதி திரட்டுவது. அது எல்லாம் ஒருபுறமிருக்க, மனித உரிமைக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது கண்கூடு.

    பதினான்கு பக்கங்களுக்குள் எழுதப்பட்ட இந்தத் தீர்ப்பின் சாராம்சம், வழக்குகளின் வரலாறு, மனித உரிமை பற்றி இங்கிலாந்து கோர்ட்டுகளிலும், ஐரோப்பிய உயர்நீதி மன்றத்திலும், அமெரிக்க கோர்ட்டுகளிலும் நடைபெற்ற விவரங்கள், தீர்ப்புக்கள், சாட்சியம், மனித உரிமை நிலைப்பாடுகள் எல்லாவற்றையும் தெளிந்தோடும் பளிங்கு நீர் போல், துல்லியமாக அலசியதைப் பாராட்டாமல் இருக்க முடியாது.

    ஐந்து விண்ணப்பங்களும் நிராகரிக்கப்பட்டன. ஏன் என்பது விளக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கையும், தீர்ப்பையும், இன்று நான் எடுத்துக்கொண்டதின் காரணம், ‘அவ்வப்பொழுது மற்ற நாட்டு நடப்புகளைப் பற்றி அறிந்து கொள்வது நல்லதே’ என்ற கருத்து.
    *

    தீர்ப்பின் நகலைப் படிக்க…

     

    புகைப்படத்துக்கு நன்றி:

    http://rpmedia.ask.com/ts?u=/wikipedia/commons/thumb/1/1a/Royal_Coat_of_Arms_of_the_United_Kingdom_(HM_Government).svg/115px-Royal_Coat_of_Arms_of_the_United_Kingdom_(HM_Government).svg.png

     

    Share