கனம் கோர்ட்டார் அவர்களே! – 14
இன்னம்பூரான்
அவ்வப்பொழுது மற்ற நாட்டு நடப்புகளைப் பற்றி அறிந்து கொள்வது நல்லதே. இன்று (அக்டோபர் 5, 2012) இங்கிலாந்தில் பல வருடங்களாக நிலுவையிலிருந்த வழக்கு ஒன்றில் இறுதி தீர்ப்பு வழங்கப்பட்டது. அந்த தீர்ப்பு இங்கு அலசப்படவில்லை. அந்த வழக்கின் போக்கும், தீர்ப்பின் தன்மையும் மட்டுமே அலசப்படுகின்றன, நமக்குப் பல படிப்பினைகள் இருப்பதால். மனித உரிமையின் சிக்கலான, பல பரிமாணங்களை முன்னெடுத்து வைக்கும் இந்த வழக்கில் விண்ணப்பதாரர்கள் ஐவர். அமெரிக்காவுக்கும், இங்கிலாந்துக்கும் இடையே உள்ள உடன்பாட்டுக்கிணங்க, இவர்களை, அங்கு நீதி மன்றம் முன் நிறுத்த வேண்டி, அமெரிக்காவுக்கு அனுப்ப வேண்டும் என்று அமெரிக்க நீதித்துறையின் சார்பாக ஒரு வேண்டுகோள். மனித உரிமை பறி போகிறது. எங்களை அங்கு அனுப்பக்கூடாது என்று ஐவரின் தனித்தனி விண்ணப்பங்கள். ஒரு வழக்கு 14 வருடமாக நடக்கிறது; மற்றொன்று 13 வருடங்களாக. சாற்றப்பட்ட குற்றங்கள் தீவிரமானவை: 1. கிழக்காப்பிரிக்காவில் இரு அமெரிக்கத் தூதரகங்கள் மீது நடந்த தாக்குதலில் 200 பேர் மரணம்;4500 பேர் காயம். 2. யேமன் நாட்டில் சிலரை அபகரிப்பது, அமெரிக்காவின் ஆரகன் மாநிலத்தில் ஒரு பயங்கரவாதி மையம் அமைப்பது போன்ற செயல்கள். 3. அமெரிக்காவிலும், இங்கிலாந்திலும் இணைய தளங்கள் மூலமாக பயங்கர வாதத்திற்கு நிதி திரட்டுவது. அது எல்லாம் ஒருபுறமிருக்க, மனித உரிமைக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது கண்கூடு.
பதினான்கு பக்கங்களுக்குள் எழுதப்பட்ட இந்தத் தீர்ப்பின் சாராம்சம், வழக்குகளின் வரலாறு, மனித உரிமை பற்றி இங்கிலாந்து கோர்ட்டுகளிலும், ஐரோப்பிய உயர்நீதி மன்றத்திலும், அமெரிக்க கோர்ட்டுகளிலும் நடைபெற்ற விவரங்கள், தீர்ப்புக்கள், சாட்சியம், மனித உரிமை நிலைப்பாடுகள் எல்லாவற்றையும் தெளிந்தோடும் பளிங்கு நீர் போல், துல்லியமாக அலசியதைப் பாராட்டாமல் இருக்க முடியாது.
ஐந்து விண்ணப்பங்களும் நிராகரிக்கப்பட்டன. ஏன் என்பது விளக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கையும், தீர்ப்பையும், இன்று நான் எடுத்துக்கொண்டதின் காரணம், ‘அவ்வப்பொழுது மற்ற நாட்டு நடப்புகளைப் பற்றி அறிந்து கொள்வது நல்லதே’ என்ற கருத்து.
*
புகைப்படத்துக்கு நன்றி: