Tag: கி. ரேவதி

  • குறுந்தொகையில் பண்பாட்டுக் கூறுகள்

    -கி. ரேவதி

    உலகின் உன்னத மொழிகளுள் முதன்மையானது தமிழ்மொழி. தமிழில் பல இலக்கியங்கள் தோன்றியிருந்தாலும் ‘சங்க இலக்கியங்கள்’ தனிச்சிறப்புடையன. இவ்விலக்கியங்கள் காதலையும், போரையும் பெரும்பான்மையாக மொழிவன. சங்க இலக்கியங்களில் கி.பி. 2-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ் மக்களின் பண்பாடு பற்றிய பல சான்றுகள் உள்ளன. அவற்றில் குறுந்தொகையில் உள்ள பண்பாட்டுக் கூறுகளைத் தேடித் தொகுப்பதில் தனியின்பம் இருக்கிறது.

    பண்பாடு – விளக்கம்

    பண்படுவது பண்பாடு, மனித இனத்தைப் பிற உயிரினங்களிலிருந்து வேறுபடுத்தி தமக்குரிய செம்மையையும், உயர்வையும் எடுத்தியம்பும் சிந்தனை வெளிப்பாடாக இலங்குகிறது.

    “பண்பெனப்படுவது பாடறிந்து ஒழுகல்” (கலி.)

    கலாசாரம் என்ற சொல்லையும் பண்பாட்டோடு தொடர்புபடுத்த முடிகிறது. பண்பாடு என்பது அறிவு, நம்பிக்கை, கலை, ஒழுக்க நெறிகள், சட்டம், வழக்கம் முதலானவையும், மனிதன் சமுதாயத்தில் ஓர் உறுப்பினராக இருந்து கற்கும் பிற திறமைகளும், பழக்க வழக்கங்களும் அடங்கிய முழுமைத் தொகுதியாகும் என்று பக்தவத்சல பாரதி கூறுகிறார்.

    மறுபிறவியில் நம்பிக்கை

    இப்பிறவி மட்டுமல்லாமல் மறு பிறப்பும் உண்டு என்ற நம்பிக்கை பழங்காலத் தமிழர்களிடம் இருந்தது. இம்மையில் மட்டுமல்லாது மறுமையிலும் தான் மணந்த தலைவனே தனக்கு கணவனாக அமைதல் வேண்டும். ஆவன் நெஞ்சு நேர்பவளாகத் தான் மட்டும் அமைதல் வேண்டும் என்பதை,

    “இம்மை மாறி மறுமை ஆயினும்
    நீ ஆகியர் எம் கணவனை
    யான் ஆகியர் நின்நெஞ்சு நேர்பவளே” (குறு -49) என்ற அடிகளால் அறியமுடிகிறது.

    தொழில்கள்

    சங்க காலத்தில் பல தொழில்கள் சமுதாய மேம்பாட்டிற்குக் காரணமாக இருந்தன. அக்காலத்தில் கழைக் கூத்தாடிகளின் தொழில் முறையை,

    “ஆரியர்
    கயிறு ஆடு பறையின் கால்பொரக் கலங்கி”    (குறு-7)

    மூங்கிலின் மேலே கயிறு கட்டி ஏறி ஆடும் போது ஒலிக்கின்ற பறை என்ற வரிகளில் அறியமுடிகிறது.

    “சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம் அதனால்
    உழந்தும் உழவே தலை”     
    (குறள்-1031)

    என்ற குறளுக்கேற்ப சங்க காலத்தில் உழவுத் தொழில் சிறப்புற்று இருந்தது என்பதை,

    தரிசாகக் கிடந்த நிலத்தை உழுததனாலாகிய நிறைந்த மகிழ்ச்சியையுடைய உழவர் காலையில் விதைப்பதற்காகச் சிறிய கூடைகளில் விதைகளை எடுத்துச் சென்றனர் என்ற செய்தியும், “உழவர் வாங்கிய” (குறு-10) என்ற வரிகளில் உழவர்கள் பற்றியும், சங்கினை அறுத்து வளையல் செய்கின்ற பொற்கொல்லர் தொழில் முறையும் கூறப்படுகிறது. மேலும்,

    “உலைக்கல் அன்ன பாறை ஏறி” (குறு-12)

    என்ற செய்தியில் இரும்புக் கொல்லன் தொழில் முறையும் காட்டப்படுகிறது.

    “உமணர் சேர்ந்து கழிந்த மருங்கின்” (குறு-124)

    இப்பாடலில் அக்காலத்தில் உமணர்கள் உப்பு வணிகத்தில் ஈடுபட்டதை அறியமுடிகிறது.

    தெய்வ நம்பிக்கை

    சங்க காலம் முதற்கொண்டே தமிழர்களிடம் தெய்வ நம்பிக்கை குடி கொண்டிருந்தது. உலகம் கடவுளால் காக்கப்படுகிறது என்ற உண்மையை,

    “சேவல் அம் கொடியோன் காப்ப
    ஏம வைகல் எய்தின்றால் உலகே”
    (குறு-1)

    என்று குறுந்தொகையின் முதல் பாடலே கடவுள் வாழ்த்தோடு தொடங்குகிறது. தலைவன் களவுக் காலத்தில் சூளுரை செய்தல்(குறு-25), தலைவிக்கு வரும் காதல் நோய்க்கு கடவுள் காரணம் என்று நம்புதல், தெய்வங்களின் உறைவிடம் மலை (குறு-105), போன்ற செய்திகளின் மூலம் அக்கால மக்களின் தெய்வ நம்பிக்கையை அறியலாம். மேலும்,

    “மன்ற மராஅத்த பேஎம் முதிர் கடவுள்
    கொடியோர்த் தெறூஉம்” (குறு-87)

    என்ற பாடலில் தெய்வமானது கொடியவரை வருத்தும் என்ற செய்தியும் சொல்லப்படுகிறது.

    பழக்க வழக்கங்கள்

    சூழ்நிலையின் தேவைக்கேற்ப தனிமனிதனிடம் வேர்விடுகின்ற செயல்பாடுகளே பழக்கம் எனப்படும். பல தனி மனிதர்களின் பழக்கங்கள் ஒரு குழுவின் இனத்தின் சமுதாயத்தின் தொடர் பழக்கங்களாக வளர்ந்து வழக்கம் என்ற நிலைக்கு உயர்கிறது.

    அக்காலப் பெண்கள் கூந்தலில் இட்டு, நீராடுவதற்காக எருமண்ணை பயன்படுத்தியுள்ளனர் என்பதை,

    “கூழைக்கு எருமணம் கொணர்கம் சேறும்
    ஆண்டும் வருகுவள் பெரும் பேதையே”
    (குறு-113)

    என்ற பாடல் தெரிவிக்கிறது. மேலும் தினையில் கிளிகளை விரட்ட தலைவி செல்கிறாள். சுனையில் மலர்ந்த பூக்களைப் பறித்து அவற்றை மாலையாகக் கட்டி செல்கிறாள். சுனையில் மலர்ந்த பூக்களைப் பறித்து அவற்றை மாலையாகக் கட்டி தினைப்புனத்தில் கதிரை உண்ணவரும் கிளிகளை ஓட்டுகின்ற பழக்கம் உண்டு என்ற செய்தி,

    புனக்கிளி கடியும்’ (குறு-142), ‘படுகிளி கடிகம்’ (குறு-198) ‘தினைகிளி கடிதலின்’ (குறு-217) என்ற பாடல்கள் முன் வைக்கின்றன.

    தலைவி காதலுற்றபோது அதனைச் செவிலி உடல் நோய் எனக் கருதி வெறியாட்டு நிகழ்த்தும் பழக்கமும் அக்கால மக்களிடம் காணப்பட்டது.

    “மென்தோள் நெகிழ்ந்த செல்லல், வேலன்
    வென்றி நெடுவெள்”
    (குறு-110)

    அக்கால மகளிர் முல்லை, குவளை, காவி, வேங்கை போன்ற மலர்களைச் சூடுவதையும், அணிகலன் அணிவதையும் வழக்கமாகக் கொண்டிருந்தனர் என்பதை பல பாடல்கள் பறைசாற்றுகின்றன. தயிர் உறை ஊற்றும் வழக்கம் (குறு-167) கட்டுவிச்சியிடம் குறி கேட்டல் (குறு-26), பெண்கேட்டல் (குறு-146) போன்ற பழக்கங்கள் காணப்பட்டன. ஆய மகளிர் தலைவியுடன் கடல் நீராடி மலர்பறித்து மாலை தொடுத்து, வண்டல் அயர்ந்து விளையாடும் பழக்கமும் இருந்தது எனலாம்.

    பழந்தமிழ் மக்களின் வாழ்நிலைப் பண்பட்டு மேன்மை நிலையில் இருந்ததைப் பழந்தமிழ் இலக்கியங்களான சங்க இலக்கியங்கள் மெய்ப்பிக்கின்றன.

    “பண்புடையார் பட்டுண்டு உலகம் அது இன்றேல்
    மண்புக்கு மாய்வது மண்”
    (குறள்-996)

    என்ற குறளுக்கேற்ப பண்பாடு என்பது ஒரு சமூகத்தின் மதிப்பினை அளந்தறிய உதவும் கருவியாகத் திகழ்கிறது. அத்தகைய பண்பாட்டு நிலையில் தனிச்சிறப்புடையவர்களாகவும், தன்னிகரற்றவர்களாகவும் திகழ்ந்தவர்கள் நம் தமிழர்களே என்பதில் எவ்வித ஐயமுமில்லை.

    பார்வை நூல்கள்

    1. க.கோ. வேங்கடராமன், தமிழ் இலக்கிய வரலாறு, கலையக வெளியீடு, 275டீ5, பாலாஜி நகர், பரமத்திவேலூர், நமக்கல், நான்காம் பதிப்பு, சூன், 2006.
    2. பக்தவத்சல பாரதி, பண்பாட்டு மானிடவியல், மெய்யப்பன் பதிப்பகம், 4-ம் பதிப்பு, 2009.
    3. முனைவர் அ.மா. பரிமணம், முனைவர் கு.வெ. பாலசுப்பிரமணியன், (பதி) கலித்தொகை, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், 41-வி, சிட்போ இண்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை, மூன்றாம் அச்சு.2007.
    4. பதிப்பக ஆசிரியர் குழு, திருக்குறள், சூப்பர் ஸ்டார் பதிப்பம், சென்னை.

    *****

    கட்டுரையாளர் – உதவிப் பேராசிரியர்,
    தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரி, (தன்னாட்சி),
    விழுப்புரம்.
    revathikrish201990@gmail.com

     

    Share
  • கீதாரி நாவலில் விளிம்புநிலை மக்கள்

    -கி. ரேவதி

    முன்னுரை:

    இடையர் சமூகப் பிரிவின் ஓர் இனக் குழுவைக் கதையாடலாகக் கொண்ட இந்நாவல் சாதாரண சம்பவ விவரிப்புகளின் ஊடாக இனத்திற்குரிய அடையாளங்களான நாடோடியம், இருப்பிடம், தொழில்முறை, பழமொழி கதை, பாடல் போன்ற வழக்காறுகள், அவர்களுக்குரிய நம்பிக்கை, சடங்கு, தெய்வம், வாழ்க்கை முறைமைகளான திருமணமுறை, பழக்க வழக்கங்கள், உணவு முறைமை போன்றவை குறித்த அழுத்தமான பதிவாக வாசிப்பை முன்நகர்த்துகிறது.

    விளிம்புநிலை மக்கள்:-

    பெண்கள், உழைக்கும் களங்கள், இயற்கைத் தொடர்பு இவற்றை வட்டார மொழி நடையில் யதார்த்தத்துடன் கீதாரி நாவல் அமைத்துள்ளது. ஒரு சமூகப் பிரிவினரின் வாழ்வியல் முறைமைகளை வட்டார மொழி நடையில் தொடர்ந்து அடையாளப்படுத்தும் ஆளுமையாக விளங்குபவர் சு. தமிழ்ச்செல்வி. கீழைத் தஞ்சை வட்டார மொழி நடையில் அமைந்தன அவர் படைப்புகள். ‘இடையர் தலைவன்’ என்பது வட மாவட்டங்களில் இருந்து தென்பகுதிகளுக்குப் புலம்பெயர்ந்து நாடோடியாக வாழும்முறையை நடத்தும் விளிம்புநிலை இடையர் சங்கத்தைக் கதைப் பொருளாகக் கொண்டுள்ளது.

    விளிம்பு நிலையிலுள்ள ஒவ்வொரு சமூகப் பிரிவினரும் நிலையான வாழ்க்கை முறைமையுடன் கூடிய நிலவுடைமை, பொருளாதாரம், சமூக மதிப்பீடு போன்ற புறக்காரணிகளின் அடிப்படையில் தங்களை மேல்நிலையாக்கம் செய்யும் முயற்சியில் ஈடுபடுவது இன்றளவில் காணப்படுகிறது.

    சமுதாய நிலை:-

    ஒவ்வோர் இனக்குழுவிற்கும் சமூகப்பிரிவு, வாழிடம், தொழில்முறை, இயற்கையோடு உள்ள தொடர்பு ஆகியவை சார்ந்து நம்பிக்கைகளும், சடங்குகளும் வெவ்வேறானவையாக இருக்கும். இடையர்குல இனக்குழுவிடம் தொழில்முறை சார்ந்து சில நம்பிக்கைகள் இருப்பதை இந்நாவல் பதிவு செய்கிறது. ஆடுகள் மேய்க்கும்பொழுது முயல் சிதறி ஓடுவது தீய சகுனமாக நம்பப்படுகிறது. (ப-127)

    சடங்குகள்:-

    பொங்கலன்று ஆடுகளைப் பெட்டை கிடா என்று தனித்தனியாக அலங்கரித்து பின் தளுவை போடும் இடத்தில் தெப்பம் கட்டி ஆட்டுக்குட்டியின் காதை அறுத்துச் சடங்கு செய்வது (ப-114) போன்ற சடங்கு முறைமைகளும் கதையோட்டத்தின் ஊடே நிகழ்த்தப்பட்டுள்ளன. இந்த நம்பிக்கைகள் சடங்குகள் நிறுவனமயமாக்கப்பட்ட சமயப் பின்புலத்தில் இல்லாமல் இனத்திற்கேயுரிய, இயற்கையோடு இயைந்த, நாட்டார் தன்மைக் கொண்டனவாக உள்ளன. உணவுமுறையைப் பார்க்கும் பொழுது நெல்லரிசி சோறு, குழம்பு, புலம்பெயர் இடத்தில் கிடைக்கக்கூடிய தானிய வகைகள் போன்றவையும் ஆடுகள் இறந்தால் அதன் கறியை வற்றல் போட்டு வைத்துக் கொண்டு உண்பதும், மிளகாய் சாந்து அரைத்து வைத்துக் கொள்வதுமான உணவுமுறைகள் கூறப்படுகின்றன. புழங்கு பொருட்கள் பெரும்பாலும் மண்ணாலான பானை, சட்டிகள், தொழில்முறை நாடோடியாக சார்ந்து அம்மி முதலிய கல்லாலான புழங்கு பொருட்கள் விலக்கப்படுவதையும் (ப-119) இந்நாவல் பதிவு செய்கிறது.

    திருமணச் சடங்கு:

    திருமண முறையைப் பார்க்கும்போது சித்தப்பா முறையில் திருமணம் செய்துகொள்ளுதல் (ப-98), அண்ணன் இறந்தால் அவன் மனைவியைத் தம்பி திருமணம் செய்துகொள்ளும் முறையும் (ப-134) திருமணச் சடங்கில் மாப்பிள்ளைக்குப் பதிலாக அவன் ஆடு மேய்த்த தடிக்கம்பை வைத்து திருமணம் செய்யும் போக்கையும் (ப-101) திருமணத்திற்குச் சீதனமாக ஆடுகளும் (ப-52) பாத்திரப் பண்டங்களுடன் மாளிகை சாமான்களையும் சீதனமாய்க் கொடுப்பதும் ஆட்டுக்கார இடையர்களின் வழக்கமாயிருந்தன என்பதை இந்நாவல் விளக்குகிறது. இது தொழிலையும் வாழ்க்கையையும் ஒன்றாக இணைக்கும் தன்மையைக் காட்டுகிறது.

    இறை நம்பிக்கை:-

    இடையர்கள் வணங்கும் தெய்வங்களாக நல்லமுனி, நெறஞ்சாயி, மகமாயி, மாரியம்மன் போன்ற நாட்டார் மரபுசார்ந்த தெய்வங்கள் கூறுகின்றன. இவை மட்டுமல்லாமல் திருச்செந்தூர் முருகனை வணங்குவது நிறுவனமயமாக்கப்பட்ட ஸ்கந்தன் மரபும் நாட்டார் தெய்வம் சார்ந்த வேலன் மரபும் கலந்த நிலையைக் காட்டுகிறது.

    தொழில்:-

    இடையர் சமூகத்தை அடையாளப்படுத்தும் இந்நாவல் அச்சமூகத்தின் தொழில்முறை குறித்த நாட்டார் வழக்காற்றுக் கதையாடல் ஒன்றை முன்வைக்கிறது. இக்கதையில் இடையர்கள் ஆடுமேய்த்து நாடோடிகளாகப் பிழைப்பதற்கான வழக்காற்றுக் கதையாடல் கூறப்படுகிறது. தொழில்களாக ஆடு மேய்த்தல், இடை கட்டுதல் போன்றவை கூறப்பட்டுள்ளன. தொழில் முறையில் ஆண், பெண் வேறுபாடில்லை. ஆடு இல்லாத இடையர்கள் ஆடு வைத்திருப்பவர்களிடம் வாடகைக்கு (ஓராண்டிற்குப் பிறகு ஓர் ஆட்டிற்கு இரண்டு ஆடாகத் திருப்பித் தருவதாகக் கூறி) வாங்கி அதன் புழுக்கைகளை விற்று பிழைப்பை நடத்துகின்றனர்.

    இவற்றைத் தவிர வேறு தொழில் செய்வதில்லை. கேட்டாலும் தெரியாது என்பது மாதிரியான விடைகள்தாம் வரும் (பக்.165) இவர்கள் தொழில் ரீதியாக நிலவுடைமைச் சமூகத்தினரை அண்டி ஆதரவுச் சமூகமாகத் தங்களுடைய வாழ்வை முன்நகர்த்தக் கூடியவர்களாக உள்ளனர். வழக்காறுகளாகப் பழமொழி, கதை, பாடல் போன்றவை பதிவு செய்யப்பட்டுள்ளன. நாவல்முழுக்கத் தங்கள் சாதியம் குறித்த பழமொழிகள் (ப.132) பொதுவான வாழ்முறை குறித்த பழமொழிகள் (பக்.137) எனப் பல்வேறு பழமொழிகள் கூறப்பட்டுள்ளன. கிடைகட்டும் பொழுது தூக்கம் வராமல் இருக்கப் பாடும் தெம்மாங்குப் பாடல் (பக்.208) சக்களத்தி சார்ந்த பாடல்களும் இயல்பாக இடம் பெற்றுள்ளன. இவற்றை அவர்களுடைய கலையாகவோ பொழுதுபோக்காகவோ கொள்ள முடியாது.

    இடையர்களின் கதை:-

    இடையர்கள் ஏன் மழையிலும் தண்ணீரிலும் கிடந்து வருத்தப்படுகிறார்கள் என்பது இந்நாவலின் வழியாக அறிய முடிகின்றது. அவர்களின் கதையை கரிச்சா வாயிலாக வெள்ளைச்சாமி அறிந்து கொள்கிறான். மழைபெய்து வெள்ளம் வர ஆரம்பிக்கும்போது ஓர் ஆட்டுக்காரன் மட்டும் தனியாக காட்டிற்குள் தங்கியிருந்தான். ஆட்டிற்குத் தண்ணீரிலேயே கிடையைப் போட்டு வேலியில் படர்ந்து இருந்த பிரண்டை கொடிகளை எடுத்து மெத்தையாக விரித்துக் கொண்டான்.

    தென்னைக் கீற்றால் பின்னிய கீற்றை மேலே வைத்துச் சுகமாகத் தூங்கியிருக்கிறான். அவ்வாறு தூங்கும்போது என்ன சுகமாக இருக்கிறது. தன் மனத்திற்குள் நினைத்துக் கொண்டான். இந்த சுகமானது ஆண்டவனுக்குக் கூட கிடைத்திருக்காது என்று எண்ணும்போது பார்வதியும் பரமசிவமும் படி அளப்பதற்காக வரும்போது அவன் கூறியதை கேட்ட இவர்கள் நம்மைவிட நன்றாக இருக்கும் ஒருவனுக்கு நம்மால் என்னசெய்ய முடியும் என்று எண்ணி அவனை பார்க்காமல் நீ இப்படியே இரு என்று வரம் கொடுத்தார்களாம். அதனால் தான் ஆடு மேய்ப்பவர்கள் இன்னும் மழையிலும் தண்ணீரிலும் இருந்து வேதனைப்படுகிறார்கள். ஆடு மேய்ப்பவர்களின் கதையானது பழைய மரபுபோல் பின்பற்றப்படுகிறது. இன்றளவும் அவர்களின் நம்பிக்கையாகவும் உள்ளது.

    இடையர்களின் பிரிவுகள்:-

    தமிழ்ச் சமூகத்தில் நாடோடி வாழ்முறை சங்ககாலம் தொட்டுத் தொடர்ந்த ஒன்றாக, காலச் சூழ்நிலைக்கேற்ப வெவ்வேறு நிலைகளில் தம்மைத் தகவமைத்துக் கொள்பவையாக உள்ளன.

    “நிலையான ஆதரவுச் சமூகங்களுக்கிடையில் இடம்விட்டு இடம் செல்லும் நாடோடிச் சமூகமானது வெவ்வேறு பங்கு பணியாற்றும் மிதவைச் சமூகமாக இணைப்புச் சமூகமாக இயங்கி வருகின்றது”என்ற பக்தவத்சல பாரதியின் நாடோடிச் சமூகம் குறித்த கருத்தும் நினைவுகூறத் தக்கது.

    தற்காலத்திற்கேற்ப தன்னைத் தகவமைத்துக்கொண்ட இடையர் சமூக ஒரு பிரிவினரின் வாழ்வியலை இயல்பாகப் பதிவுசெய்யும் இந்நாவல் அவர்களுக்கென நிலையான இருப்பிடம் எதையும் பதிவு செய்யவில்லை ‘மேமங்கலம்’ என்ற ஊர் சொந்த ஊராக இருந்தாலும் தொழில்முறை சார்ந்து புலம்பெயர் வாழ்க்கையே மேற்கொள்கின்றனர். மாவட்டங்கள் விட்டு மாவட்டங்களுக்கும் மாவட்டத்திலே ஊர்விட்டு ஊர்களுக்கும் சென்று நிலையான இருப்பிடம் இல்லாமல் வாழிடம் சார்ந்து கூண்டோ, வளசையையோ அமைத்துக் கொண்டு வாழ்கின்றனர். நிலம் வாங்கி வீடு கட்டுவதற்கான எண்ணம் நிலவுவதையும் நாவல் பதிவுசெய்கிறது. இவை காலச்சூழல் பொருளாதாரம் இவற்றின் பின்புலத்தில் நடுத்தர வர்க்கச் சிந்தனை தோற்றம் கொள்வதை உணர்த்துகின்றது. (பக்.120)

    இடையர்கள் கோனார், நைனார், நம்பியார், பிள்ளை, மந்திரி, கரையாளர், யாதவர் எனப் பல பெயர்களில் வழங்கப்படுகின்றனர். இப்பெயர்கள் குலப்பிரிவு, வட்டாரம், பொருளாதாரம், சமூக மதிப்பீடு சார்ந்து உருவானவையாகக் கொள்ளலாம். இடையர் சமூகத்தில் பெரும்பாலான பிரிவுகள் இரட்டைத் தொழில்முறை கொண்ட நிலவுடைமைச் சமூகமாக, வைணவ சமயத்துடன் தங்களை இணைத்துக் கொண்டவர்களாக, யாதவர்களாக அடையாளப்படுத்திக் கொள்கின்றனர்.

    ஆடு மேய்ப்பவர்களின் சிக்கல்கள்:-

    ஊர்விட்டு ஊர்வந்து நாடோடிகள் போலப் பிழைப்பு நடத்தும் ஆடு மேய்ப்பவர்களின் நிலையானது ஊமைகளாகவெ எங்கும் இருக்கிறார்கள். கோபம் அவமானம் என்பதையெல்லாம் இவர்கள் ஒருபோதும் நினைப்பதேயில்லை. கூலியைக் கூப்பிட்டு இவர்களை எவ்வளவுதான் அடித்து உதைத்தாலும் ஏனென்று கேட்கமாட்டார்கள். எவ்வளவு கீழ்த்தரமாக திட்டினாலும் பொறுமையாகக் கேட்டுக்கொண்டு வாய்திறக்காமல் போகும் இயல்புடையவர்களாகவும் இவர்களின் இந்தப் பரிதாபமான நிலையைக் கண்டு இரக்கப்பட்டு யாராவது இவர்களிடம் விசாரித்தால் அதற்கு இவர்கள் சொல்லும் பதில் இன்னும் பரிதாபமாக இருக்கும். “யாரும் எங்கள சும்மா அடிக்க மாட்டாக போன வருசம் மொத வருசத்துல அவுக கொல்ல பயிறு பச்சியில எங்க ஆடுக மேஞ்சிருக்கும். அந்த கோவத்துல அடிக்கிறாக. அவுக அடிக்கிறது ஞாயந்தானே? நம்மமேல தப்புருக்கு, பட்டுக்கிட்டுத்தானே போவனும்” (கீ.ப.111)

    என்று மிக இயல்பாக பதில் கூறுவார்கள் இவ்வாறு இடையர்களின் வாழ்க்கை நிலையானது படம்பிடித்து காட்டப்படுகிறது.

    முடிவுரை:

    விளிம்புநிலை இடையர் சமூகத்தினருள் ஒரு குழுவை மட்டும் அடையாளப்படுத்தும் இந்நாவல், அவர்களின் சமூக உறவுகள், மதிப்பீடுகள் பண்பாட்டு அசைவியக்கங்கள் சதா தங்கள் வாழ்வைத் தேடி ஓடிக்கொண்டே இருக்கும் தொழில் முறைமைகள், நம்பிக்கை, சடங்குகள், பழக்க வழக்கங்கள் ஆகியவற்றை கீழைத் தஞ்சை வட்டார மொழி நடையில் சாதாரணச் சம்பவ விவரிப்புகளின் ஊடாக வலி, துயரம், மரணம் இவற்றின் பின்னணியில் பதிவு செய்கிறது.

    துணை நூல்கள்:-

    1. எனது படைப்பு மொழியும் அனுபவங்களும், ப.24 கவிதாசரன் இதழ் டிசம்பர் -2006.
    2. தமிழ்ச்செல்வி.சு கீதாரி நியு சென்சுரி புக் ஹவுஸ் சென்னை 2010

    *****

    கட்டுரையாளர் – தமிழ் உதவிப்பேராசிரியர்,
    தெய்வானை அம்மாள் மகளிர்க் கல்லூரி (தன்னாட்சி),
    விழுப்புரம்.

     

    Share
  • சங்க இலக்கியத்தில் நிகழ்த்துக்கலைகள்

    -கி. ரேவதி

    தமிழர்களின் வாழ்க்கையோடு பின்னிப்பிணைந்தவை கிராமியக் கலைகள். கிராமங்களில் வசிக்கும் மக்களின் வாழ்க்கையில் இருக்கும் இன்ப துன்பங்களில் முதன்மையானவையாக இருப்பது கிராமியக் கலைகள். இதனை நாட்டுப்புறக்கலைகள் என்றும் அழைக்கின்றோம். வழிபாட்டுச் சடங்குகளின் ஒரு பகுதியாகவோ, பொழுதுபோக்கிற்காகவோ மக்களால் உருவாக்கப்படும் அல்லது நிகழ்த்தப்படும் மரபுவழிக் கலைகள் நாட்டுப்புறக் கலைகள் எனலாம்.

    நாட்டுப்புற கலைகள்

    பழந்தமிழகத்தில் கிராமங்களே மிகுதியாக இருந்தன. கிராம மக்களின் உயிரோடும் உணர்வோடும் ஓங்கி வளர்ந்தவை கிராமியக் கலைகளாகும். நாட்டுப்புறக்கலை என்பது வளர்ந்து கொண்டேயிருப்பது. மனித உள்ளத்தில் சிந்தனை வளம் இருக்கும் வரை கலைகள் இருந்துக்கொண்டேயிருக்கும். நாட்டுப்புறக்கலைகள் தொடந்து வளர்ந்து கொண்டே போவதற்கு அடிப்படைக்காரணம் அக்கலைகளுடன் பழகும் மனிதனது உணர்ச்சியே ஆகும்.

    கூத்துக்கலை

    தமிழர் போற்றி வளர்த்த கலைகளில் கூத்தும் ஒன்றாகும். இசைக் கலையோடு இணைந்து வளர்ந்த கலை இதுவாகும். விழாக்களின்போது மக்களைத் தம் ஆடல்பாடல்களால் மகிழ்வித்தனர். பண்டையக் காலத்தில் கூத்து நடத்தியவர்கள், கூத்தர், பொருநர், விறலியர், கோடியர் எனப்பெயர் பெற்றனர்.

    வள்ளிக்கூத்து

    பண்டைய மக்கள் ஆடிய ஆடல்களில் வள்ளிக்கூத்து என்பதும் ஒன்று. நாட்டுக்கு வளமும், வெற்றியும் பெற்றுத்தந்த வள்ளிக்கொடியின் பெருமையைப்பாடி ஆடுவது ஆகும்.

    “வாடா வள்ளியின் வளம்பல தருஉம்
      நாடுபல கழிந்த பின்றை”     (பெரும்.பாண்.370- 371)

    என்ற பாடல்வரிகள் இக்கூத்துப் பற்றி விளக்குகின்றன. இக்கூத்தினை ஆடவரும், பெண்டிரும் ஆடுவர்.

    குரவைக்கூத்து

    பண்டைய கலைகளின் நினைவுச் சின்னங்களில் ஒன்றாகக் குரவைக்கூத்து விளங்குகின்றது. சிறுபறையைக் கொண்டு மகிழ்வோடு ஆடியது இக்கூத்தாகும்.

    ”பரதவர் மகளிர் குரவையொடு ஒலிப்ப    (மதுரைக்காஞ்சி 96-97) என்னும் அடியின் மூலம் குரவை ஆடினர் என்ற செய்தியை அறிய முடிகின்றது.

    துணங்கை ஆட்டம்

    துணங்கை என்பது மற்றொரு வகைக் கூத்தாகும். பண்டைய மக்கள் விழாக்களின் போது துணங்கை ஆடினர். இதனை,

    ”விழவு நின்ற வியன் மறுகில்
    துணங்கை
             (மதுரைக்காஞ்சி 327 – 329) என்ற பாடல் அடிகள் உறுதிப்படுத்துகின்றன. துணங்கைக் கூத்தில் ஆண்கள், பெண்கள் எனக் குடிமக்களும் அரசரும் கலந்து கொண்டனர்.

    துடிக்கூத்து

    வெட்சித்திணையில் இடம்பெறும் கூத்துகளில் துடிநிலையும் ஒன்றாகும்.

    ”மறங்கடை கூட்டிய துடிநிலை சிறந்த
    கொற்றவை
    நிலையும் அகத்திணைப்புறனே  (தொல்.பொருள்.புறத்.நு.4)

    தங்களின் விருப்ப தெய்வமாகிய குலதெய்வத்தை வணங்கித் தாங்கள் நிகழ்த்தவிருக்கும் போரினை வெற்றிமுகமாகச் செய்யுமாறு வேண்டுதல்  நிகழ்த்துவர். போர் மறவர்கள் துடி என்னும் இரு முகப்பறையை முழக்கிக் கொற்றவையை வணங்குதலே துடிநிலை எனப்படும்.

    போர்க்காலங்களில் போருக்கு முன் வெற்றி பெறவேண்டும் என்று கொற்றவையை வணங்கித் துடியை இயக்கிக்கொண்டு ஆடியதால் இக்கூத்து எனப்பெயர் பெற்றது. மிகுந்த வெறியுடன் ஆடப்பட்டதாக இருந்திருக்க வேண்டும். துடிக்கூத்து போர் மறவர்களால் மட்டுமின்றி முருகனாலும் ஆடப்பட்டுள்ளதாகப் பத்துப்பாட்டு பதிவு செய்துள்ளது.

    முருகன் திருச்சீரலைவாய்க் கடலில் சூரபதுமனை அழித்ததான். அவனது ஆறு முகங்களில் ஐந்தாவது முகம் இச்செயலைச் செய்துள்ளது என்பதைச்,

    ”செறுநர்த் தேயத்துச் செல்லும் முருக்கி
    கறுவுகொள்
    நெஞ்சமொடு களம் வேட்டன்றே ஒருமுகம்”  (திரு.99-100)

    என்னும் திருமுருகாற்றுப்படை அடிகள் கூறுகின்றன. கடலில் மரமாக நின்ற சூரபதுமனை அழிக்க அன்னை பார்வதியிடம் வேல் வாங்கிச் சென்றவன். கெட்டவனை அழிக்கக் கொற்றவையிடம் வேலை வாங்கிச் சென்றான். போரில் எதிர்க்கும் எதிரிகளை வேலால் குத்தி வீசித் துடியடித்து அவன் அன்னை கொற்றவையைப் பரவினான். திருப்பரங்குன்றத்து இயல்புகளைப் பேசும் பரிபாடலில்,

    ”துடியின் அடி பெயர்த்து தோளசைத்து தூக்கி
    அடுநறா மகிழ்தடப ஆடுவான் தகைமையின்” (பரி.21)

    என்னும் அடிகள் முருகன் ஆடிய துடிக் கூத்தையே குறிப்பதாகப் பண்டைய தமிழ்ச் சமூகத்தில் நாடகம் என்னும் நூலில் காணலாம்.

    துடியின் ஓசை

    துடியின் ஓசை மிகக் கடுமையுடையதாக இருக்கும் என்பதைப் பல சங்கப் பாடல்கள் எடுத்துரைக்கின்றன.

    உருள்துடி மகுளியின் பொருள்தெரிந்து இசைக்கும்
    கடுங்குரற்
    குடிஞையநெடும் பெருங்குன்றம்” (அகம்.19)

    என்றும்,
    இழிபிறப் பாளன் கருங்கை வன்கண் கடுந்துடி
    புலிதுஞ்சு
    நெடுவரைக் குடிஞையோடு இரட்டும்” (புறம்.170)

    என்றும்,
    கடுந்தடித் தூங்கும் கணைக் காற் பந்தர்”              (பெரு.124)
    என்றும்,
    கோள் தெங்கின் குலை வாழை
    கொழுங்காந்தள்
    மலர் நாகத்து
    துடிக்
    குடிஞைக் குடிப் பாக்கத்து”                    (பொரு.208)

    என்றும் இலக்கியங்கள் பதிவு செய்துள்ளன.

    துடியன்

    துடியை இயக்குபவர் துடியன் என்று அழைக்கப்பட்டுள்ளனர்.

    உவலைக் கண்ணித் துடியன் வந்தென” (புறம்.269-6)
    துடியன் கையறு வேலே அடிபுணர்” (புறம்.285-2)

    துடியர்கள் போர்க்காலங்களில் மட்டும் துடியை இசைக்கும் கலைஞர்களாகப் பதிவு பெற்றுள்ளனர்.

    துடியன் எனப்படுபவன் பலப்பல மலர்களால் ஆன மாலைகளைச் சூடிக்கொண்டு போரைத் தொடங்குவதற்கான துடியை முழங்குவான். துடியின் கடுமையான ஒலியால் எதிரிகள் மிரண்டு செல்வர். அவ்வாறு மிரண்டு ஓடும்போது கடுமையான ஒலியை எழுப்பி வீரர்கள் துடியை இசைத்துள்ளனர். இதனை,

    அருமுனை அலைந்த பெரும்புகல் வலத்தார்
    கனைகுரற்
    கடுந்துடிப் பாணி தூங்கி” (அகம்.159-8-9)

    என்றும்,

    வில்லோர் குறும்பில் ததும்பும்
    வல்வாய்க்
    கடுந்துடிப் பாணியும் கேட்டே” ( அகம்.261 14-15)

    என்றும் அகப்பாடல்கள் பதிவு செய்துள்ளன.

    தொகுப்புரை

    நாட்டுப்புற ஆடல்களில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. இந்த மாற்றங்கள் மரபு சார்ந்த கலைகளை அடுத்த தலைமுறையினருக்கு எடுத்துச் செல்ல வேண்டும்.

    அடிக்குறிப்பு:

    1.வையாபுரிப்பிள்ளை, சங்க இலக்கியம், பாரிநிலையம், சென்னை,2004.

    2.நாகராசன். வி, குறுந்தொகை, நியூசெஞ்சுரி புத்தக நிலையம், சென்னை, 2004.

    3.நாகராசன். வி, புறநானூறு, திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற் பதிப்புக்கழகம், சென்னை, 2002.

    4.நாகராசன். வி, அகநானூறு, நியூசெஞ்சுரி புத்தக நிலையம், சென்னை, 2004.

    5.நாகராசன். வி, பத்துப்பாட்டு, நியூசெஞ்சுரி புத்தக நிலையம், சென்னை, 2004.

    *****

    கட்டுரையாளர் – உதவிப் பேராசிரியர்,
    தெய்வானை  அம்மாள்  மகளிர்க்  கல்லூரி, (தன்னாட்சி), விழுப்புரம்.

     

    Share
  • பொருநராற்றுப்படையில் மெய்ப்பாடுகள்

    -கி. ரேவதி                                                              

    முன்னுரை

     தமிழில் இலக்கண இலக்கியப் படைப்புகள் ஒன்றிலிருந்து ஒன்று பிரிக்க இயலாத பிணைப்புகளாய் மெய்ப்பாடுகள் அமைந்துள்ளன. இலக்கணங்களுக்குச் சான்றுகளாய் இலக்கியங்களும், இலக்கியங்களின் இலக்கணங்களை கூறுபவையாக இலக்கணங்களும் அமைந்துள்ளன. இவ்வகையில் தொல்காப்பியம் என்பது இலக்கணம். ஆற்றுப்படை என்பது ஓர் இலக்கிய வகை. தொல்காப்பியத்தில் கூறப்படும் இலக்கணங்களில் ஒன்றான மெய்ப்பாடுகள் ஒவ்வொரு படைப்பிலும் வெளிப்படும். இவ்வகையில் பத்துப்பாட்டு ஆற்றுப்படை இலக்கியங்களில் பொருநராற்றுப்படையில் தொல்காப்பிய எண்வகை மெய்ப்பாடுகளைக் கோட்பாடாகக் கொண்டு அவற்றில் பொருத்தி பார்ப்பதே நோக்கமாகும்.

    தறுகண்ணால் ஏற்படும் பெருமிதம்:

    தறுகண் என்பது ஒருவர் வளர்த்துக் கொண்ட தனித் தகுதி (அல்லது) திறமையைக் குறிக்கும். ஒருவரின் தனித்திறனை, சிறப்பை எடுத்துக் கூறும்போது கூறுபவருக்கும், கேட்பவருக்கும் பெருமிதம் உண்டாகும். பொருநர் ஆற்றுப்படையில்,

    கோடியர் தலைவ கொண்டது அறிந
    அறியாமையின் நெறிதிரிந்து ஓராஅது
    ஆற்றுஎதிர் படுதலும் நோற்றதன் பயனே
    போற்றிக் கேண்மதி புகழ்மேம் படுந!1     (பொருந.57-60)

    என்ற வரிகளில் கூத்தர்களுக்குத் தலைவனே! நீ மிடற்றுப் பாடலைப் பாடுதலில் வல்லமை உடையாய்! அந்த இருவகைப்பட்ட இசைக்கும் ஒப்பக் கூத்து ஆடவும் நீ வல்லாய்! பாட்டிசையும், யாழிசையும், கூத்தாட்டமும் தம்முள் ஒத்து இருக்கும் காட்சி மூவேந்தரும் ஒருங்கே இருக்கும் காட்சியை ஒத்த இன்பம் தருகின்றது.

    பிறர் தம் மனத்தில் கொண்ட கருத்தினைக் குறிப்பால் அறிய வல்லவனே! நீ வழி அறியாமையால் வேறு வழி போகாமல் இவ்வழியே வந்து என்னை இவ்வழியிடத்தே காண்பதும் நீ முற்பிறவியில் செய்த நலிவினையின் பயனே காண்பாயாக! புகழால் மேம்பட்டவனே! பிறர் புகழை அரசவையில் மேம்படுத்துபவனே! என்று பாணனின் தறுகண்ணைக் குறிப்பிட்டு நான் கூறுவதைக் கேட்பாயாக என்று பெருமித்தோடு உரைக்கிறான் பரிசில் பெற்ற பாணன்.

    புதுமையில் தோன்றும் மருட்கை

    கட்புலனாகும் எந்தப் பொருளுக்கும் கவர்ந்திழுக்கும் புதுமைப் பொலிவு உண்டு. ஆனால் அதன் நிலைப்புத் தன்மை நீடித்திருப்பது அரிது. எனவே புதுமைக்குத்தான் இளமைப் பொலிவு இருக்க முடியும். புதுமை பற்றி அறியும்போது அதன் விரிவு மேலும் பெரியதாய் விரிய விரிய அதுவே புதிதுபுதிதாய்ப் பொலிவதை அறிகின்ற பொழுது வியப்பு எழுகிறது; இதுவே புதுமையாகும்.

    இக்காலத்தில் கடவுளைக் காண்பதும், கொடை செய்வாரைக் (அரசன்) காண்பதும் புதுமையாகும். கொடையால் உயர்ந்த நிலையை அடைவதும் புதுமையாகும். இதுவரை அனுபவிக்காத செல்வ நுகர்ச்சியை அணுபவிக்கும்போது மனத்தில் நடப்பதெல்லாம் கனவோ என மருட்கையாகிய வியப்புத் தோன்றும். கரிகாலனின் உபசரிப்பால் பெரும் செல்வ நுகர்ச்சியை பெற்ற பொருநன்,

    ”………………………………………………………………காலைக்
    கண்டோர் மருளும் வண்டுசூழ் நிலையும்
    கனவுஎன மருண்டஎன் நெஞ்சு ஏமாப்ப
    வல்அஞர் பொத்திய மனம்மகிழ் சிறப்ப
    கல்லா இளைஞர் சொல்லிக் காட்ட”2 (பொருந.96-100)

    என்ற பாடல் வரிகளில் கரிகாலனைக் கண்ட அன்றைய காலை என்னைக் கண்டவர் நேற்று வந்தவன் இவன் அல்லன் என்று மருண்டு கூறுதற்குக் காரணமான என் தோற்றப்பொலிவான நிலையினையும் கண்டேன். அன்று விடியலில் நிரம்ப உண்ட கள்ளின் மணம் என்னை விட்டு நீங்காதிருந்தமையால் வண்டுகள் இடையறாது என்னை மொய்த்து கொண்டிருந்தன.

    இப்பொலிவு கனவிற்கண்ட காட்சிதானோ என்று என் மனம் மருண்டது. என் பக்கத்தில் அரசனுடைய ஏவல் இளைஞர்கள் நின்றுகொண்டிந்தனர். அவர்கள் இது கனவு இல்லாமைக்குரிய காரணங்களை எடுத்துக்காட்டினர் என்று பரிசில் பெற்ற பொருநன் பரிசில் பெறாப் பொருநனிடம் தாம்பெற்ற விருந்தின் நுகர்ச்சியைக் கனவோ என்று வியப்பை அடைந்த நிலையை கூறுகின்றான்.

    உவகை மெய்ப்பாடு

    உவகையானது மனமகிழ்ச்சியை குறிக்கும். மனமகிழ்ச்சியே ஒருவனின் மன அழுத்தத்தைக் குறைத்து தன் கவலைகளை மறக்கடிக்கும் மருந்தாகும். இம்மகிழ்ச்சி ஒருவனின் வாழ்வில் இல்லையெனில் அவன் தன் வாழ்வின் பிடிமானத்தைவிட்டு மனத் தளர்ச்சி அடைவான். எனவே மகிழ்ச்சியே மனிதனை வாழ வைக்கும் ஆயுதமாகும். இவ்வுவகை செல்வ நுகர்ச்சி, ஐம்புல நுகர்ச்சி, காம நுகர்ச்சி, விளையாட்டு ஆகிய நான்கு சூழலில் தோன்றும்.

    செல்வ நுகர்ச்சியால் ஏற்படும் உவகை

    செல்வம் என்பது மனித வாழ்வின் தேவைகளில் ஒன்றாய் உள்ளது. செல்வத்தை நோக்கியே மக்கள் பயணிக்கின்றனர். செல்வம் அளவோடு இருந்தால் மன நிம்மதியும் மகிழ்ச்சியும் இருக்கும். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சாகும் என்பர். இப்பழமொழி செல்வத்திற்கும் பொருந்தும். இதனைக் கருதியே அரசர்களும் செல்வத்தைக் கொடையாக வழங்கி மகிழ்ச்சி அடைந்தனர். அவற்றைப் பெறும் கலைஞர்களும் பகிர்ந்துண்டு வஞ்சகம், குரோதம் முதலியவை இல்லாமல் மன மகிழ்ச்சியோடு வாழ்ந்தனர்.

    செல்வத்தை கொடுப்பதால் ஏற்படும் உவகை எனில் பெறுபவரும் எய்தும் பேரின்பத்தை திருவள்ளுவர்,

    “இகழ்ந்தெள்ளாது ஈவாரைக் காணின் மகிழ்ந்துள்ளம்
    உள்ளுள் உவப்பது உடைத்து”3       (திருக்.1051)

    என்கிறார். இவ்வாறான மகிழ்ச்சியை ஆற்றுப்படைப் பாடல்வரிகளிலும் காணலாம். பொருநராற்றுப்படையில் பொருநனை உபசரிக்கும் கரிகால் பெருவளத்தான் கன்னிப் பெண்களிடம் கள்ளினைக் கொடுத்து அருந்தும்படிச் செய்தான். அப்பெண்களின் தோற்றத்தை காட்சிப்படுத்த வந்த பொருநன் அம்மகளிர் தங்கியுள்ள செல்வத்தால் நிறைந்த மாளிகையினை,

    “மழையென மருளும் மகிழ்செய்மாடத்து”4 (பொருந.84)

    என்று உரைக்கிறார். இதன் வழி மகிழ்ச்சி தரும் மேனிலை மாடத்தே உறைவார் என மகளிர் தங்கியுள்ள இடத்தின் தன்மையை அறியலாம். மகிழ்செய் பதம் என்பது மகிழ்ச்சி செய்விக்கும் இடம் என்று பொருள் மேலும் கரிகாலனின் உபசரிப்பை சிறப்பித்துக் கூற வந்த பொருநன் அவர்களின் ஒருத்தியாகிய விறலியர் மன்னனைக் களிப்பூட்டினர் என்றும் கள்ளின் நுகர்ச்சியில் பல நாள் கழித்த பின் கரிச்சோறு உண்டதாக உரைகிறான் இதனை,

    மண்அமை முழவின் பண்அமை சீறியாழ்
    ஒண்நுதல் விறலியர் பாணி தூங்க
    மகிழ்பதம் பல்நாள் கழிப்பி ஒருநாள்
    அவிழ்ப்பதம் கொள்க என்று இரப்ப5 (பொருந.109-112)

    என்ற பாடல் வரிகளின் மூலம் அறியலாம். மகிழ் பதம் என்பதற்கு மகிழ்தற்கு உரிய மகிழ்ச்சியை உடைய கள் என்று பொருள்படும் செல்வத்து பயன் ஈதல் அதனால் கொள்வோரும் கொடுப்போரும் எய்தும் இன்பம். இது செல்வத்தால் ஏற்படும் இன்ப நுகர்ச்சியாகும்.

    புலன்களால் ஏற்படும் உவகை

    உவப்பாவது கல்விப் பயனாகிய அறிவுடைமையில் கனிந்து தோன்றுவது. புலமையால் ஏற்படும் அறிவுமுதிர்ச்சியால் புலப்படுவது ஆகும். புலன் என்பது ஐம்புலன்களையும் குறிக்கும். ஒருவன் தன் ஐம்புலன்களைக் கொண்டும். இன்ப நுகர்ச்சியை பெறுவான்.

    அறிவுடையார் கூறும் சொற்களை செவிகளின் வழி கேட்கும்போது மட்டுமின்றி கலைஞரின் கலை நுட்பங்களால் உருவான கலைச்சிற்பங்களை கண்களின் வழி காணும் போதும் உள்ளம் ஓர்வித பரவசம் (அ) மகிழ்ச்சி அடைகிறது.

    பரிசில் பெற்ற பொருநன் விறலியின் கேசாதி பாத வருணனையைக் கூறுமிடத்து விறலியின் பேச்சும் வாயும் பற்றிக் கூறுகிறான். விறலியின் பேச்சும் ஓசையானும் பொருளாலும் கேட்போர்க்கு இன்பம் தரும் சொல் என்று உரைக்கிறான் இதனை,

    அறல்போல் கூந்தல் பிறைபோல் திருநுதல்
    கொலைவில் புருவத்துக் கொழுங்கடை மழைக்கண்
    இலவுஇதழ் புரையும் இன்மொழித் துவர்வாய்6    (பொருந.25-27) என்ற பாடல் வழி அறியலாம். ஐம்புலன்களில் ஒன்றாகிய செவிகளின் வழிப் பெரும் இன்ப நுகர்ச்சியை குறிக்கும் சொல்லாக இன்மொழி என்ற சொல் அமைந்துள்ளது.

    முடிவுரை:

    பாணர்களின் வாழ்வானது இன்பமும் துன்பமும் கலந்தது என்பதை பிரதிபலிப்பவையாக இவை அமைந்துள்ளன. பாணர்களின் வாழ்வில் ஒருவரின் நிலைகண்டு எள்ளி நகையாடல் என்பது கிடையாது. என்பதால் நகை தோன்றுவது அரிதாகும். ஒவ்வொரு மனிதரிடமும் நகை முதலா உவகை ஈராக உள்ள எண்வகை மெய்ப்பாடுகளும் தோன்றுதல் இயல்பாகும்.

    அடிக்குறிப்புகள்

    1. மாணிக்கவாசகன்.ஞ (உ.ஆ), பத்துப்பாட்டு(தொகு), பொருந. பா.அ.56-60-ப.58
    2. மேலது – பா.அ. 109-112 – ப.64
    3. மேலது – பா.அ. 25-27 ப.54
    4. மேலது – பொருந> பா.அ. 54-56 – ப.59
    5. கோ.சேதுபதி – திருக். 1050
    6. மேலது – பொருந – பா.அ. 48-50 – ப.57

    *****

    கட்டுரையாளர் – உதவிப் பேராசிரியர்
    தெய்வானை அம்மாள் மகளிர்க் கல்லூரி (தன்னாட்சி) விழுப்புரம்

     

     

    Share
  • சங்கத் தமிழரின் நிமித்தம் சார்ந்த நம்பிக்கைகள்

    -கி. ரேவதி 

    முன்னுரை

    நம்பிக்கைகளும், பழக்க வழக்கங்களும் மக்களைச் சுற்றிப் படர்ந்திருப்பவை. நம்பிக்கை என்பது நம் நாட்டில் மட்டும் அல்லாமல் ஒவ்வொரு நாட்டிலும் பன்னெடுங்காலமாக வேரூன்றிக் கிடக்கின்றது. நம் தமிழர்களின் பண்பாடு சார்ந்த நம்பிக்கைகளைச் சங்க இலக்கியங்கள் பதிவு செய்திருக்கின்றன.

    நிமித்தம்

    நிமித்தம் என்ற சொல்லிற்குக் காரணம், பொருட்டு அடையாளம் என்ற பல பொருள்கள் உண்டு.

    “வேண்டிய பொருளின் விளைவுநன்கு அறிதற்கு                                ஈண்டுஇருள் மாலைச் சொல்ஓர்த் தன்று” (புற.பொருள்.ப.17)

    நம்பிக்கை அடிப்படையில் நிமித்தத்தினை நோக்கும்போது சகுனம் பார்த்தல் என்ற பொருளைத் தந்து சிறப்பிக்கின்றது.

    சகுனம் அறிவிப்போரையும் சகுனத்தின் பயன்களைக்  கூறுவோரையும் நிமித்திகர்கள் என்று கூறுவர். அறிஞர்கள் கருத்துக்கேற்ப நிமித்தம் என்பது நல்ல, தீய சகுணங்களைப் பார்த்தல் என்பது புலனாகின்றது.

    தெய்வ நம்பிக்கை

    சங்க காலம் முதற்கொண்டே தமிழர்களிடம் தெய்வ நம்பிக்கை உள்ளது. உலகம் கடவுளால் காக்கப்படுகிறது என்ற உண்மையை,

    “சேவல் அம்கொடியோன் காப்ப
    ஏம வைகல் எய்தின்றால் உலகே” (குறுந்.1)

    என்று குறுந்தொகையின் முதல்பாடலே கடவுள் வாழ்த்தோடு தொடங்குகிறது.

    தலைவன் களவுக் காலத்தில் சூளுரை செய்தல், தலைவிக்கு வரும் காதல் நோய்க்கு கடவுள் காரணம் என்று நம்புதல், தெய்வங்களின் உறைவிடம் மலை போன்ற செய்திகளின் மூலம் அக்கால மக்களின் தெய்வ நம்பிக்கையை அறியலாம். மேலும்,

    “மன்ற மராஅத்த பேஎம் முதிர் கடவுள்
    கொடியோர்த் தெறூஉம்”    
    (குறுந்.87)

    என்ற பாடலில் தெய்வமானது கொடியவரை வருத்தும் என்ற செய்தியும் கூறப்படுகிறது.

    விண்ணியல்

    பண்டைய நாளில் தூரத்தில் இயங்கும் கோளையும், விண்மீன்களையும் கண்டு உணர்ந்து அவைகளின் இயக்கத்திற்கும் மண்ணில் வாழும் மனிதனுக்கும் உள்ள தொடர்பு என்ன என்பதைக் கண்டறிந்துள்ளனர்.

    நற்றிணையில் விண்மீனைக் கைதொழுது வணங்கி வந்தனர் என்பதை,

    “மையற விளங்கிய மணிநிற விசும்பின்
    கைதொழுது மரபின் எழுமீன் போலப்”   (நற்.231)

    என்ற அடிகள் முனிவரின் தோற்றமாகிய ஏழு விண்மீனை மக்கள் தொழுதனர். எனவே விண்மீனையும் தெய்வமாகத் தொழும் பழக்கம் மக்களிடம் இருந்துள்ளது என்பதை அறியமுடிகின்றது.

    பண்டைக்காலத்தில் வாழ்ந்த மக்கள் நட்சத்திரத்தைக் கூட்டம் கூட்டமாக வகுத்து அவை இன்ன இன்ன உருவம் என்று பிரித்தனர். புறநானூற்றில் வெள்ளிமீன் தெற்குத்திசை தோன்றினால் மழை பொய்த்துவிடும் என்ற செய்தியை,

    “அலங்கு கதிர்க் கனலி நால்வயின் தோன்றினும்
    இலங்கு கதிர் வெள்ளி தென்புலம் படரினும்”      (புறம்.35)

    என்ற அடிகள் உணர்த்துகின்றன.

    பட்டினப்பாலையில் மகம் என்னும் வெண்ணிற விண்மீன் பற்றிக் கூறப்பட்டுள்ளது.

    மழை நீங்கிய மாவிசும்பில்
    மதி சேர்ந்த மகவெண்மீன்
    உரு கெழு திறல் உயர் கோட்டத்து
    ”            (பட்டின.34-36)

    என்ற வரிகள் நிலவுடன் சேர்ந்து விளங்கும் விண்மீன்களை மக்கள் தொழுது வணங்கினர்.

    பறவைகளின் நிமித்தம்

    தனிமனிதப் பழக்கவழக்கங்களும், நம்பிக்கைகளும் காலப்போக்கில் உணர்ச்சிப் பெருக்கால் மாறும் தன்மையுடையன. ஆனால் ஒரு சமுதாயத்தின் பழக்கவழக்கங்களும், நம்பிக்கைகளும் எளிதில் மாற்றத்திற்கு உட்படா.

    நற்றிணையில் பறவை நிமித்தத்தை கூறும் தலைவன் நம் வருகையைக் காக்கை முதலிய புள்ளினங்கள் அவருக்கு அறிவுறித்தினவோ என்று கூறுவதாகப் பாடலொன்று அமைகின்றது.

    தோள்வழி யாப்ப ஈண்டுநம் வரவினைப்
    புள்அறி வுறீஇயின கொள்ளோ தௌளிதின்
    ”        (நற்.161)

    என்ற வரிகள் பறவை நிமித்தத்தை உணர்த்துகின்றன.

    காகம் கரைதல்

    சங்க காலத்து மகளிர் நம்பிக்கையுடன் வாழ்ந்தனர். காகம் தம் இல்லத்தருகில் கரைந்தால் விருந்தினர் வருவர் என்ற நம்பிக்கை இருந்தது.

    பெருந்தோள் நெகிழ்ந்த செல்வதற்கு
    விருந்துவரக் கரைந்த காக்கையது பலியே”         (குறுந்.210)

    காகம் கரைந்தால் விருந்தினர் வருவர் என்ற நம்பிக்கையும் அக்காலத்தில் இருந்தமையை அறிய முடிகிறது. இன்றும் இந்த நம்பிக்கையை மக்கள் பின்பற்றுகின்றன.

    விலங்குகளின் சகுனம்

    பழந்தமிழர் விலங்குகள் வாயிலாகவும் சகுனம் பார்த்து வந்துள்ளனர். பல்லி, ஓணான், கூகை போன்ற உயிரினங்கள் எழுப்பும் ஓசைக்கும் பலன் உண்டு என்பதை அறிந்துள்ளனர்.

    பல்லிச்சகுனம்

    சங்க இலக்கியத்தில் தலைவனைப் பிரிந்து வாடும் தலைவி தலைவன் வரும் நாளை ஆவலோடு எதிர்பார்த்து நல்ல பலனை எதிர்நோக்கும் போது பல்லியும் ஓசை எழுப்பி அதற்கு இணக்கமான நல்ல நிமித்தத்தை ஒலிக்கின்றது.

    “முன்னியது முடித்தனம் ஆயின் நன்னுதல்
    வருவம் என்னும் பருவரல் தீரப்
    படும்கொல் வாழி நெடுஞ்சுவர்ப் பல்லி”      (நற்.பா.169-வரி.1-3)

    வினைமுற்றி மீளும் தலைவன் தன் வருகையை பல்லி தலைவிக்கு அறிவிக்குமெனத் தன் நெஞ்சுக்கு அறிவுறுத்துகிறான். அஃறிணை உயிரும் அஃறிணையான பல்லியின் சகுனத்தைப் பார்க்கின்றது.

    பன்றியும் பல்லிச் சகுனம் பார்த்துத் தனக்கு இடையூறு நேரும் என்று குகையில் பதுங்குவதை நற்றிணையில் 98-ம் பாடலும், 169, 246 பாடலும், அகநானூற்றில் 9, 88, 151, 289, 351 பாடலும் சகுனத்தை உணர்த்துவதாக அமைகின்றன.

    குறுந்தொகையில் ஆண் பல்லி தன் துணையை அழைக்க ஒலி எழுப்பிய செய்தியும் குறிப்பிடப்படுகின்றது.

    “உகிர்நுதி புரட்டும் ஓசை போல
    செங்காற் பல்லி தன்துணை பயிரும்
    அம்காற் கள்ளி அம்காடு இறந்தோரே”        (குறுந்.16)

    கட்டுவிச்சி

    குறி கேட்கும் வழக்கம் பண்டைத்தமிழ்  மக்களிடம்  இருந்து இன்று வரை வழக்கில்  இருந்து கொண்டிருக்கின்றது. குறி கூறுகின்றவர்கள் தெய்வத்தின் உதவியினால் உண்மையை அறிந்து உரைக்கின்றனர் என நம்பி  வந்தனர். குறி கூறும்போது  குலதெய்வத்தை வழிபட்டுக் கூறுகின்றமுறை  இருந்திருக்கின்றது.

    குறுந்தொகையில் குறி கூறுகின்ற பெண்டிரைக் கட்டுவிச்சி என்று கூறுகின்ற  மரபு இருந்திருக்கின்றது.

    “அகவன் மகளே! அகவன் மகளே!
    மனக் கோப்பு  அன்ன நல்நெடுங் கூந்தல்
    அகவன் மகளே! பாடுக பாட்டே”   (குறுந்.23)

    என்ற அடிகள் தெய்வத்தை அழைத்துப் பாடுகின்ற கட்டுவிச்சி என்ற கருத்தைக் கூறுகின்றது.

    கண்துடித்தல்

    பெண்களுக்கு இடதுகண் துடிப்பதைச் சங்க இலக்கியங்கள்  நல்நிமித்தமாகக் கொண்டுள்ளன. கண் துடித்தல் தலைவன் வருகையை உணர்த்தும் நற்குறியாக அமைந்துள்ளது.

    நுண்ணோர் புருவத்த கண்ணும் ஆடும்
    மயில்வார் முன்கை வளையும் செறுஉம்”      (ஐங்.218)

    என்று ஐங்குறுநூற்றுப் பாடல் விளக்குகின்றது.

    சொர்க்கம் – நரகம்

    சொர்க்கம் நரகம் என்ற நம்பிக்கைகள் மக்களிடம் அதிகமாகக் காணப்படுகின்றன. நன்மை செய்தால் சொர்க்கத்திற்குச் செல்லலாம். தீமை செய்தால் நகரத்திற்குச் செல்வார் என்ற ஆழ்ந்த நம்பிக்கை பழந்தமிழரிடம் இருந்ததை இலக்கியங்கள்வழி தெரிந்துக்கொள்ள முடிகின்றது.

    தமிழர்கள் மட்டுமின்றி அமெரிக்கர், ஜப்பானியர் போன்ற நாட்டினருக்கும் சொர்க்கம் நரகம்மீது ஆழ்ந்த நம்பிக்கை இருந்துள்ளது. போர்க்களத்தில் வீரர்கள் விழுப்புண்பெற்று மாண்டுபோனாலும் அவர்கள் தேவர்கள் உலகத்திற்குச் செல்வர் என்றும் அதுதான் அவர்களுக்குப் புகழ் என்றும் மதிக்கப்பட்டது. வடமோதங்கிழார் இதனைக்,

    “கையகத்து உயர்ந்த கன்றுடைப் பல்லான்
    நிரையொடு வந்த உரையான் ஆகி
    உரிகளை அரவ மானத் தானே
    அரிது செல் உலகில் சென்றனன் உடம்பே
    கானச் சிற்றியாற்று அருங்கரைக் கால் உற்று”      (புறம்.260)

    என்கிறார். மேலும் யானைப்படையையுடைய நெடுமாவளவன் தேவர் உலகத்தை அடைந்தான். ஆதலால் வீரமரணமும் சொர்க்கத்தை அடையும் ஒரு வழியாக உள்ளது.

    கொடி நுடங்கு யானை நெடுமாவளவன்
    தேவர் உலகம் எய்தினன் ஆதலின்”      (புறம்.228)

    என்ற புறநானூற்றுப் பாடலும் தேவர் உலகம் பற்றிய செய்தியைக் கூறுகின்றது.

    தேவர் உலகம் என்பது சொர்க்கம் ஆகும். தேவர்கள் அமுதம் உண்டு வாழ்பவர்கள் என்றதால் குறுந்தொகையில் தோழி தலைவியிடம் கூறும்போது செவிலித்தாய் தலைவன் வரைவோடு வருவான் என்று கூறுகிறாள். எனவே இந்த நற்சொல்லைக் கூறிய அவள் பெறுதற்கு அரிய அமுதமே உண்ணும் உணவாகக் கொண்ட தேவர்கள் வாழ்கின்ற பெரும் உலகத்தை அடையப் பெறுவாளாக! என வாழ்த்துகிறாள்.

    முடிவுரை

    மனிதனின் தன்னல உணர்வும் சமுதாய உணர்வுமே நம்பிக்கைகளை வளர்த்துவிடுகின்றன. நம்பிக்கையை மூடநம்பிக்கை என்று சொன்னாலும் அது விளக்க இயலாத தன்மைபெற்று விளங்குகிறது. திருமணச் சடங்குகளும், இறப்பு பற்றிய சடங்குகளும் தமிழரின் வாழ்வியல் சடங்குகளும் பெரும்பாலும் அக்கால மக்களின் நம்பிக்கை சார்ந்தே அமைந்துள்ளதைக் காணமுடிகின்றது.

    அடிக்குறிப்பு

    1.ஐயனாரிதனார்., – புறப்பொருள் வெண்பாமாலை,கழக வெளியீடு, சென்னை,2002.

    2.நாகராசன்.வி, (ப.ஆ) குறுந்தொகை, நியூசெஞ்சுரி புத்தக நிலையம், சென்னை, 2004.

    3.மேலது

    4.நாகராசன்.வி;, (ப.ஆ)  நற்றிணை, நியூசெஞ்சுரி புத்தக நிலையம், சென்னை, 2009

    5.நாகராசன்.வி;, (ப.ஆ)  புறநானூறு, நியூசெஞ்சுரி புத்தக நிலையம், சென்னை, 2009

    6.இராசமாணிக்கனார்.ம, பத்துப்பாட்டுஆராய்ச்சி, சென்னைப்பல்கலைக்கழகம்,2010.

    7.நாகராசன்.வி;, (ப.ஆ)  நற்றிணை, நியூசெஞ்சுரி புத்தக நிலையம், சென்னை, 2009

    8.நாகராசன்.வி, (ப.ஆ) குறுந்தொகை, நியூசெஞ்சுரி புத்தக நிலையம், சென்னை, 2004

    9.நாகராசன்.வி;, (ப.ஆ)  நற்றிணை, நியூசெஞ்சுரி புத்தக நிலையம், சென்னை, 2009

    10.நாகராசன்.வி, (ப.ஆ) குறுந்தொகை, நியூசெஞ்சுரி புத்தக நிலையம், சென்னை, 2004.

    11.மேலது

    12.மாணாக்கனார்.ஆ, (உரை) ஐங்குறுநூறு, சாரதா பதிப்பகம், சென்னை, 2009

    13.நாகராசன்.வி;, (ப.ஆ)  புறநானூறு, நியூசெஞ்சுரி புத்தக நிலையம், சென்னை, 2009

    14.நாகராசன்.வி;, (ப.ஆ)  புறநானூறு, நியூசெஞ்சுரி புத்தக நிலையம், சென்னை, 2009

    *****

    கட்டுரையாளர் – உதவிப் பேராசிரியர்,
    தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரி, (தன்னாட்சி),
    விழுப்புரம்.

     

    Share
  • ஆற்றுப்படைகளில் துன்பவியல் மெய்ப்பாடுகள்

    -கி. ரேவதி

    அகவுணர்வு மெய்த்தோற்றம் கொள்ளுதலை மெய்ப்பாடு என அறியலாம் அது காதல் உணர்வை மட்டுமல்லாமல் வாழ்வின் நிகழ்வுகளைக் காணும் தோறும் உள்ளுக்குள் எழும் உணர்வுகளை மெய் பிரதிபலிக்கின்றது. அதனைக் காண்பார்க்குக் காட்சியளிக்கின்றது. தமிழர் பண்பாட்டில் காணப்பட்டுவந்த ஒவ்வொரு நிகழ்வும் அக்கால இலக்கியங்கள், கல்வெட்டுகள், சுவடிகள் முதலியவற்றில் மெய்ப்பாடுகள் குறித்த பதிவுகளாக அதிக அளவில் காணப்படுகின்றன என்று துணியலாம்.

    பரிசில் பெறாதவரின் வறுமை நிலை

    வறுமை என்பது வெறுமையைக் குறிக்கும். ஒருவனிடம் பொருள், கல்வி, அறிவு இவைகள் இல்லையென்றால் அவன் வறியவன் ஆவான். கொடியது வறுமை. வறுமைக்கு உவமை சொல்ல வந்த வள்ளுவருக்கு வறுமையே உவமையானது வறுமையின் அழுத்தச் சித்திரம்.

    ‘இன்மையின் இன்னாதது யாதெனின் இன்மையின்
    இன்மையே இன்னாதது’1
    (திருக்.1041)

    என்கிறார் திருவள்ளுவர். இத்தகைய வறுமைநிலையை விளக்குமுகத்தான் பொருநராற்றுப்படையில் மன்னனிடம் பரிசில் பெறாதவரின் வறுமை நிலையும், பரிசில் பெற்றவரின் முன்னர் வறுமைநிலையும் சித்தரிக்கப்படுகிறது.

    ‘ஆடுபசி உழந்தநின் இரும்பேர் ஒக்கலொடு
    நீடுபசி ஓராஅல் வேண்டின், நீடு இன்று
    …………………………………………………

    இருசீர்ப் பாணிக்கு ஏற்ப, விரிகதிர்
    வெள்ளி முளைத்த நள்இருள் விடியல்
    ஒன்றுயான் பெட்டா அளவையின்’2
    (பொருந.61-74)

    என்ற பாடல் வரிகளின் மூலம் மிகுந்த புகழுடைய நான் கூறுவதைக் கேள்! கொல்லுகின்ற பசித்துயரால் வருந்துகின்ற உன் சுற்றத்தாருடைய நீண்டநாள் பசியைத் தீர்க்க நீ விருப்பம் உடையவனானால் இன்றே புறப்படு! ஏழிசை யாழ் நரம்புக்கு உரிமையுடையனே உடனே செல்!

    பழுத்த பழமரங்களை விரும்பித் தேடிச்செல்லும் பறவைபோல நானும் முன்பு உன்னைப் போல வறுமையுற்றிருந்தபோது இழுமென்னும் ஓசையுடன்  முரசொலித்துக் கொண்டிருக்கும் கரிகாற்பெருவளத்தானை அணுகித் தன் வறுமைதீர உண்பதாகப் பரிசில்பெற்ற பொருநன் தன் வறுமை நிலையையும் பரிசில்பெறாப் பொருநன் வறுமை நிலையையும் உரைப்பதை அறியலாம். வறுமை மிகும்போது அழுகை மெய்ப்பாடு தோன்றியுள்ளது. பெரும்பாணாற்றுப்படையில் பரிசில்பெறாப் பெரும்பாணனின் வறுமை நிலையினை,

    ‘வெந்தெறற் கனலியொடு மதிவலம் திரிதரும்
    தண்கடல் வரைப்பில், தாங்குநர்ப் பெறாது
    பொழிமழை துறந்த புகைவேய் குன்றத்துப்
    பழுமரம் தேரும் பறவை போல,
    கல்லென் சுற்றமொடு கால்கிளர்ந்து திரித்தரும்
    புல்லென் யாக்கைப் புலவுவாய்ப் பாண’3
    (பெரும்.17-22)

    என்ற பாடல் வரிகளில் ஞாயிறும் திங்களும் வலம் வருகின்ற கடல்சூழ் உலகில், மழை வறந்தமையால் புகை எழுகின்ற மலையின்கண், நின்னைப் புரப்பாரைப் பெறாமையால், பழுத்த மரத்தை நாடித்திரியும் பறவைபோன்று, அழுது புலம்பும் சுற்றத்தினருடன், ஓரிடத்து இல்லாமல் பயனின்றி ஓடித் திரிகின்ற பொலிவிழந்த வடிவினையும், கற்ற கல்வியை வெறுத்துப் பேசுகின்ற வாயினையும் உடைய பாணனே! என்று பாணனின் வறுமையைக் கூறி அவனை விளிக்கிறான். வறுமை வருமிடத்து அழுகை என்பது இயல்பாக தோன்றுகிறது.

    வழி நடந்த சோர்வால் அடைந்த வருத்தம்

    ஒவ்வொரு மனிதனுக்கும் துன்பம் வரும் பொழுது தான் வருத்தப்படுவான். மனிதன் வறுமையால் வருத்தம் அடைகின்றான், வழி நடந்த சோர்வால் வருத்தம் அடைகின்றான். இவ்வருத்தம் பொருநர் ஆற்றுப்படையில் ஓரிடத்திலும், சிறுபாணாற்றுப்படையில் இரு இடங்களிலும் இடம் பெறுகின்றது.

    பொருநராற்றுப்படையில் காடுறை தெய்வங்களை வணங்கி, கடன்செய்து செல்லுங்கள் என்று கூறவந்த பொருநன் பாடினி பாடின தாளத்திற்கு பொருந்துமாறு, நாள்தோறும் வழி செல் வருத்தம் தாங்கி இருப்பவன் என்று பொருநனை உரைக்கிறான். ஆறு என்பது வழியை குறிக்கும். தினந்தோறும் நடந்த வருத்தத்தை குறிக்கும் இதனை,

    ‘பாடின பாணிக்கு ஏற்ப, நாள்தோறும்
    …………………………………………
    இலைஇல் மராஅத்து, எவ்வம் தாங்கி’4
    (பொருந.48-50)

    என்ற பாடல் வரிகளின் வழி அறியலாம்.

    சிறுபாணாற்றுப்படையில் விறலியரையும் பாணரையும் விளிக்க, விறலியர்க்கு வருணனை அளித்த பாணன் வறுமை ஆற்றுப்படுத்தலால், வழி நடந்த வருத்தம் தீர்ந்திருந்த அறிவு வளர்த்தற்கு உரிய தொழிலினையுடைய இரவலனே! என்கிறான் இவ்வருத்தம் என்பது பாடலில் பயின்று வந்துள்ளது இதனை,

    ‘துனிகூர் எவ்வமொடு துயர்ஆற்றுப் படுப்ப
    முனிவு இகந்திருந்த முதுவாய் இரவல’5
    (பொருந.39-40)

    என்ற பாடல் வரிகளின் மூலம் அறியலாம். மேலும் சிறுபாணன் தன் வருத்தம் போக்கிய வன்மை சிறப்பிர் வருத்த நிலையை

    ‘……………இந்நாள்
    திறவாக் கண்ண சாய்செவிக் குருளை
    கறவாப் பால்முலை கவர்தல் நோனாது

    ……………………………………………
    ஒல்குபசி உழந்த ஒடுங்கு நுண் மருங்குல்
    வளைக்கை, கிணைமகள் வள்உகிர்க் குறைத்த
    குப்பை வேளை உப்புஇலி வெந்ததை
    மடவோர் காட்சி நாணி, கடைஅடைந்து
    இரும்பேர் ஒக்கலொடு ஒருங்குஉடன் மிசையும்
    அழிபசி வருத்தம் வீட……………………
    …………………………………………………….
    பால் அவன் நின்றும் வருதும்’6
      (சிறுபாண்.129-140)

    என்ற வரிகளில் விழிக்காத கண்ணையும், சாய்ந்த செவிகளையும் உடைய குட்டிகள், பிறரால் கறக்கப்படாத பாலினை உடைய முலையை உண்ணுதலைத் தன் பசிமிகுதியால் பொறுக்க இயலாது. அண்மையில் ஈன்ற நாய் குரைக்கின்ற, கழிகள் கட்டற்று வீழ்ந்து கிடக்கும் பழைய சுவர், அச்சுவரில் தோன்றிய கறையான் அரித்துச் சேர்த்த புழுதியிடத்துக் காளான் பூத்துவியங்கும் அட்டில், இத்தகைய நல்குரவினால், இளைத்த உடலை உடைய நுண்மருங்குல் கிணைமகள் கடும்பசிக்கு ஆற்றாது குப்பையில் நின்ற வேளைக் கீரையை நகத்தால் கிள்ளி வந்தாள். சுவை பயத்தற்கு இடும் உப்பும் இல்லாத வறுமை, உப்பின்றி அட்டிலிலே பக்குவம்செய்து கீரையைப் புறங்கூறுவோர் காணுவதை நாணித் தலைவாசற் கதவை அடைத்து எம் சுற்றத்தோடு பகிர்ந்து உண்போம், இத்தகைய வறுமை என்னை விட்டு அகலவும் அறிவு முதலியன அழிதற்குக் காரணமாகிய பசியால் உளதாகிய வருத்தங்கள் அறவே ஒழிந்தது என்று உரைக்கிறான்.

    பொருநனின் வழிநடை வருத்தம்

    மென்மை என்பது வலிமையின்மை ஆகும். வலிமை இல்லாத ஒருவன் செயல்கள் (வேலை) செய்வது கடினமான ஒன்றாகும். பொருநர் ஆற்றப்படையில் அரசனின் விருந்தோம்பல் சிறப்பினைக் கூறவந்த பொருநனின் வழிநடை வருத்தம் போகும்படி கள்ளினைப் பருகி மன வருத்தம் நீங்கும்படி அரசன் இருந்தான் என்று உரைக்கிறான் அதனை,

    ‘வாங்குபு தரத்தர வருத்தம் வீட
    ஆர உண்டு பேரஞர் போக்கி’7
       (பொருந.87-89)

    என்ற வரிகளின் வழி அறியலாம். வருத்தம் என்பதற்கு வழிநடையாலும் பசியாலும் உண்டான துன்பம் என்பது பொருள். இது வலிமையின்மையின் ஏற்பட்ட துன்பம் ஆகும்.

    இளந்திரையினது காவல் சிறப்பு

    விலங்கு என்பது ஐந்தறிவு உயிரினம், விலங்கு மனிதனாகிய விலங்கைக் கண்டு அச்சம் கொண்டு அவனை தாக்கும் போது அவன் விலங்கின் மீது அச்சம் கொள்கிறான். பெரும்பாணாற்றுப்படையில் இளந்திரையினது காவல் சிறப்பினைக் கூறுமிடத்து விலங்குகளால் ஏற்படும் அச்சம் குறித்து இடம்பெறுகிறது.

    ‘உருமும் உரறாது அரவும் தப்பா
    காட்டு மாவும் உறுகண் செய்யா’8
    (பெரும்பாண்.42-43)

    என்ற வரிகளின் மூலம் பாம்புகளும் கொல்லும் தொழிலைச் செய்யா; காட்டு விலங்குகள் கூட யாருக்கும் வருத்தம் செய்யமாட்டா. ஆதலால் அவ்வறம் நிகழும் நாட்டில், விரும்பிய இடத்து அச்சமின்றிச் செல்லலாம் என்று உரைக்கிறான் பெரும்பாணன் என்பதை அறியலாம். சங்க காலத்தில் காட்டு வழியினைக் கடந்தே செல்ல வேண்டும் புதியதோர் இடத்திற்கு செல்லும் பாணன் அச்சம் கொள்வது இயல்பு.

    கரிகாலனது கொடைச்சிறப்பு

    கொலை என்பது அறிவு முதலானவற்றைக் கொல்லுதல் என்பது பொருளாகும். மனிதர்கள் மட்டுமல்ல, விலங்குகளும், பறவைகளும்கூட இந்த உணர்ச்சிக்கு ஆளாவதை பார்க்கின்றோம். நகைச்சுவை மனிதர்களுக்கு மட்டுமே சொந்தம். இந்தக் கோபம் செடிகொடிகளுக்கும்கூட உண்டாம். நம்மைத் துன்புறுத்துபவர்கள் அருகில் வந்தால் அவை கூடக் கோபத்தோடு விலகிக் கொள்கின்றனவாம்.

    விலங்காகிய கொலைத் தொழிலைச் செய்யக்கூடிய யானை வெளியுடையது என்று பொருநராற்றுப்படையில்,

    ‘வெருவரு செலவின் வெகுளி வேழம்’  11(பொருந.172)

    என்ற வரியில் கரிகாலனது கொடைச்சிறப்பினை கூறவந்த பொருநன் கரிகாலன் அளித்த பொருட்களை அதன் பண்புகளோடும் வருணனையோடும் கூறுவதாக அமைந்துள்ளது. இவ்வகையில் கரிகாலன் அளித்த யானையின் சிறப்பை அச்சம் தரும் பறைகள் முழங்கி செல்லும் செலவினையுடய பரிய பெரிய வனைந்த கையினையும் வெகுளியையும் உடைய நல்ல பல யானைகளையும் தரும் தொழிலை உடையவன் என்று உரைக்கிறான். யானையின் இயல்புகளில் ஒன்றாக வெகுளியை உரைக்கிறான்.

    தொகுப்புரை

    பத்துப்பாட்டு ஆற்றுப்படைகளில் சிறுபாண், பெரும்பாண் ஆகியவற்றில் தொல்காப்பிய எண்வகை மெய்ப்பாடுகளில் அழுகை, இளிவரல், பெருமிதம், மருட்கை, அச்சம், உவகை, வெகுளி ஆகிய ஏழு வகையான மெய்ப்பாடுகள்  விளக்கப்பட்டுள்ளன; இன்பமும் துன்பமும் சேர்ந்ததே மனித வாழ்வு என்பதை இவை குறிக்கின்றன என்பதை அறியலாம்.

    அடிக்குறிப்புகள்

    1. மாணிக்கவாசகன்.ஞ(உ.ஆ), பத்துப்பாட்டு(தொகு), பொருந. பா.அ,61-74,ப.59
    2. மேலது, பெரும், பா.அ. 17-22, ப.120
    3. மேலது, பொருந, பா.அ. 48-50, ப.57
    4. மேலது, பா.அ. 39-40 ப.56
    5. மேலது, சிறுபாண், பா.அ. 129-140, பக்.100-101
    6. மேலது, பொருந, பா.அ. 87-88, ப.61
    7. மேலது, பெரும், பா.அ. 42-43, ப.124
    8. மேலது, பொருந. பா.அடி,131,ப.66
    9. மேலது, பா.அடி,168,ப.71
    10. மேலது, பா.அடி,172,ப.71

    *****

    கட்டுரையாளர் – உதவிப் பேராசிரியர்,
    தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரி (தன்னாட்சி),
    விழுப்புரம்.

     

    Share