Tag: சுலோச்சனா

  • அன்புத் தோழி மணிமொழிக்கு

    சுலோச்சனா

    அன்புள்ள மணிமொழிக்கு நட்பிற்கும், நம்பிக்கைக்கும் உரிய தோழி,

    தொலைபேசி வாயிலாக உன்னைத் தொல்லை செய்யாமல் விஷயத்தை ஓரிரண்டு வரிகளில் சொல்லிவிடாமல் – “இதென்ன வள வளவென்று கடிதம் எழுதிக்கொண்டு” என்று நினைக்கின்றாயா?

    மணிமொழி வளவள கடிதமல்ல வளமான கடிதம் எழுதுதல் ஒரு கனவு என்பதை நினைவூட்டும் நெகிழ்வான கடிதமாக்கும்.

    நேற்று ஓவியக் கண்காட்சிக்கு சென்றிருந்தேன். அங்குள்ள படங்களை பார்த்துக்கொண்டே வந்தபொழுது ஒரு அழகிய படத்தைப் பார்த்தேன். அது என்ன படம் எனில் “சாகுந்தலம் கதையின் நாயகி சகுந்தலை தன் அன்பிற்குரிய துஷ்யந்தனுக்கு கடிதம் எழுதும் காட்சி அழகிய ஓவியமாக வரையப்பட்டிருந்தது. தன் எண்ணங்களை கடிதத்தில்தான் எளிதாகவும், தெளிவாகவும் வெளிப்படுத்த முடியும் என்ற உண்மை சகுந்தலைக்கும் தெரிந்துள்ளது பார்த்தாயா? அரசர்கள்கூட தங்கள் எண்ணத்தை லிகிதமாக எழுதி புறாவின் மூலம் அனுப்பினார்கள். அதுமட்டுமன்றி கடிதம் கொண்டுவரும் தூதுவருக்கு தனி மரியாதை. பகைவனுக்கும் கூட கடிதம் அனுப்பலாம் கொண்டு செல்பவர் எந்த ஆபத்தும் இன்றி திரும்பி வந்துவிடுவர். கடிதத்திற்கும், தூது வருபவருக்கும் அவ்வளவு மரியாதை. ‘புவன சுந்தர’ என கிருஷ்ணனை அழைத்து ருக்மணி எழுதிய காதல் மடல் ருக்மணி தன் சரணாகதியை கடித்தத்தில் அன்றி வேறு எந்த வழியில் கிருஷ்ணன் பகவானிடம் சமர்ப்பிக்க இயலும்?

    மனித மனத்தின் பாகங்களை நேசங்களை அறிஞர் பெருமக்களின் அறிவுரைகளை வெளியிட கடிதம் எத்தனை பெரிய, அரிய ஒரு மொழி. பண்டித ஜவஹர்லால் நேரு அவர்கள் சுதந்திரப் போராட்டத்தில் சிறையில் இருந்தபொழுது தன்னுடைய ஒரே அன்பு மகள் “இந்திராவிற்கு கடிதங்கள் மூலமே தன் அன்பை தெரியப்படுத்தினார். அதில் தந்தையின் ‘பாச’ வெளிப்பாடு மட்டுமன்றி உலக வரலாறும் மகளுக்கு போதிக்கப்பட்டது அல்லவா? மகாத்மா காந்தியும் வினோபாபாவேயும் எழுதிக்கொண்ட கடிதங்களில் ஆன்மீகமும் அரசியலும் எவ்வளவு நகைச்சுவை உணர்வோடு வெளிப்பட்டது எவ்வளவு தூய இலக்கியம்.

    தமிழ் அறிஞர் மு. வரதராசனார் அவர்கள் அண்ணனுக்கு, தம்பிக்கு, தங்கைக்கு, நண்பர்களுக்கு என்று பல தலைப்பில் எழுதிய கடிதங்களில் அறிவுரைகள் மட்டுமா வெளிப்பட்டன. தமிழ் பண்பாடும் பழக்க வழக்கங்களும் எவ்வளவு துல்லியமாக அறியக் கிடைத்தன.

    அன்பு மணிமொழி,

    தொலைபேசியில் உன் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்திருக்கலாம் ஆனாலும் ஏனோ ஓரிரு நிமிட அளவளாவளில் திருப்தி இலை. மனதோடு மனம் பேச ஆவலாக இருக்கிறது. அந்த ஆவலைத் தணிப்பதற்கு கடிதம் எழுதுவது ஒரு கருவியாக உள்ளது. உன் வயதில் ஒன்று கூடும்போது அறிவும், அன்பும் பல மடங்கு கூடட்டும். உடல் வளர்ச்சியோடு உயரிய எண்ணங்களும் வளரட்டும்.

    புதுமைப் பெண்ணிவள் சொல்லும் செய்கையும் பொய்மை கொண்ட கலிக்கும் புதிது என்ற பாரதியார் வாக்கிற்கேற்ப நீ வளர வேண்டும் என வாழ்த்துகிறேன். வீட்டில் அனைவருக்கும் என் அன்பு, உன் அன்பான பதில் கடிதத்தையே ஆவலோடு எதிர்நோக்கும் அன்புத் தோழி,

    உன் தேன்மொழி.

    Share
  • இந்தியப் பெண்மணிகள் – புத்தக மதிப்புரை

    சுலோச்சனா

    புத்தகத்தின் பெயர் : இந்தியப் பெண்மணிகள்

    எழுதியவர் : ஸ்வாமி விவேகானந்தர்

    அச்சிட்டோர் : ஸ்ரீ ராம கிருஷ்ணமடம் அச்சகம்
    மயிலாப்பூர், சென்னை-4.

    வெளியிடுபவர் : தலைவர்
    ஸ்ரீ ராம கிருஷ்ண மடம்,
    மயிலாப்பூர், சென்னை-4.

    தமிழ் மொழிபெயர்ப்பு

    விலை ரூ.25

    பக்கங்கள் -114

    ‘யத்ர ஸ்த்ரியாக பூஜிந்தே
    தத்ர தேவதாக ரமயந்தே”

    ‘எங்கு பெண்கள் மதிக்கப்படுகிறார்களோ
    அங்கு தேவர்கள் மகிழ்கின்றார்கள்

    அப்படி பூஜிக்கப்படுவதற்குத் தக்கவளாக பெண்
    புனிதமானவளாக இருத்தல் வேண்டும்”

    swami

    இந்தியப் பெண்கள்

    என்ற இந்தப் புத்தகத்தை எழுதியவர் நம் நாட்டில் உதயமாகி உலகெல்லாம் -ஞான ஒளிமயம் பரப்பிய ஞான ஒளியான ஸ்வாமி விவேகானந்தர் ஆவார். இந்த புத்தகத்தை வாசிக்க வாசிக்க நம் மனதில் முதலில் தோன்றுவது ஓர் உண்மைத் துறவியான இவரின் மனதிலும் வற்றாத ஊற்றாக சுரந்து கொண்டே இருக்கும் தாய் நாட்டுப் பற்றும், அவரின் நாட்டில் வாழும் இந்திய சகோதர, சகோதரிகள் நலனில் அவர் கொண்டிருந்த அக்கரையுமே.

    வீடு பேறும் வேண்டா விறலியர் என்று தமிழகத்தில் சில மகான்கள் போற்றப்படுவார்கள் மக்களுக்குச் சேவை செய்வதற்காகவே தன் முக்திக்காகத் தவம் புரிந்த துறவி விவேகானந்தர். தாய் நாடான இந்தியா, அதில் வாழும் மக்களின் நிலை குறிப்பாக அவர்களுள் பெண்களின் வாழ்வு நிலை என்று கண்டு கண் கலங்கி கண்ணீர் சிந்தி சிந்திக்கின்றார். அவர்களைப் பற்றி இரண்டு உண்மைகள் தெள்ளத்தெளிவாக அவர் தெரிந்து கொண்டதை இந்தியப் பெண்மணிகள் என்ற இந்த புத்தகத்தின் மூலம் நாமும் அறிந்து கொள்கின்றோம்.

    இந்துக்களுக்குள்ளேயே ஜாதி, பேத பிரச்சனைகள் பிற்படுத்தப்பட்ட பெரும்பான்மையான மக்கள் அவர்களின் உழைப்பை உறிஞ்சிக் கொண்டும் அவர்களைத் தங்கள் காலடியில் நசுக்கிக் கொண்டிருக்கும் ‘உயர்ந்த ஜாதி” என்று தங்களை அழைத்துக்கொள்ளும் சகோதரத்துவம் இன்றி சர்வாதிகாரத்துவம் கொண்டவர்கள்.

    எந்த ஜாதியில் பிறந்தாலும் ‘பெண்” என்கிற ஜாதியில் பிறந்துவிட்டதால் அவளுக்கு மறுக்கப்படும் பல உரிமைகள் இவ்வளவிற்கும் அவள் ‘சமுதாயம்” என்ற கட்டிட அமைப்பின் கண்ணிற்குத் தெரியாத அஸ்திவாரமாக விளங்குகிறாள்.

    சுவாமிஜியின் அபிப்பிராயமாகும் இந்த நூலின் மூலம் நமக்கும் தெரிய வருகின்றது.

    இந்த நூலின் முதல் இரண்டு அத்தியாயங்கள் பெண்களின் வாழ்க்கை நிலையை விளக்குகின்றது. சுவாமிஜியின் காலத்திய இந்தியாவை அதில் பலதரப்பட்ட மக்களின் வாழ்வு நிலையை தெளிவாக விளக்கப்படுகின்றது. உண்மையில் முதல் அத்தியாயம் என்பது சிறந்த காலக் கண்ணாடியாக விளங்குகின்றது.

    அத்தியாயத்தின் ஆரம்பக் காலத்தில் வேதங்களில் பெண்களின் உயரிய நிலையை விவரிக்கின்றது. வேதங்களில் கூறப்பட்டுள்ளவை நமக்கு அறிமுகப்படுத்தப்படுகிறது.

    வேதங்கள் ஒரு வேளை ‘பால்டிக்” கடற்கரை நாடுகளிலோ, மத்ய ஆசியாவிலோ எழுத்து வடிவில் எழுதப்பட்டிருக்கலாம் என்ற தன் ஊகத்தைக் கூறுகிறார் சுவாமிஜி

    வேதத்தின் பழைய பகுதிகளில் ‘ரிஷிகள்” தேவர்களைத் துதித்த துதிப்பாடல்கள் உள்ளன. இதில் ஒரு பெண் ரிஷியும் இடம் பெறுகிறார் என்ற ‘உண்மை” உரைக்கப்படுகின்றது. இந்த பெண் ரிஷியின் பாடல் ரிக் வேதத்தின் பத்தாம் அத்தியாயத்தில் 125வது துதிப் பாடலாக இருக்கின்றது.

    வேத காலத்தில் பெண்கள் ஆணுக்கு சரிநிகர் சமானமாக வாழ்ந்ததை வேதத்தின் பல இடங்களை ஆதாரத்துடன் சுட்டிக்காட்டி நிரூபிக்கிறார் ஸ்வாமிஜி.

    அவைகளில் பெண்கள் புரோகிதர்களாக இருந்தது சுட்டப்படுகிறது. ‘ஜனகரின்” சபையில் ‘ஞானமுனி, யாக்ஞ வல்கீயரோடு பெண் ரிஷி, ஆன்மஞானம், பற்றி விவாதிப்பதையும் காண்கிறோம்.

    பெண்கள் தங்கள் விருப்பம் போல் சுயம்வரம் நடத்தி தங்கள் மணமகனை தேர்ந்தெடுக்கும் உரிமை பெற்றிருந்தனர்.

    இக்காலத்தில் மருத்துவர்கள், தாய்வழியிலோ தந்தை வழியிலோ நெருங்கிய உறவினர் மணம் செய்வதைத் தடை கூறுவது போல் அக்காலத்தில் உறவில் திருமணம் மறுக்கப்பட்டிருந்திருக்கிறது. கொடிய வியாதி உள்ள குடும்பத்தில் மணம் வைத்துக்கொள்வதும், மறுக்கப்படுகின்றது. ஆனால் இவையெல்லாம். காலப்போக்கில் கழன்றுபோய் பெண் என்பவள் ஆணுக்கு அடுத்த நிலைக்கு வருபவளாக ஆணின் ஆளுகைக்கு உட்பட்டவளாக இருப்பதோடு உறவின் முறைகளில் மாமியாருக்கு நாத்தனாருக்கு என்றும் அடங்கியே வாழ்வதைக் குறிக்கின்றனர். சுவாமிஜியின் தாயார் புவனேஸ்வரி தேவியே மதிய உணவை அனைவருக்கும் படைத்துவிட்டு எவ்வளவு தாமதமாக உண்பார் என்பதைக் குறிப்பிடுகிறார்.

    பெண் என்பவள் ‘தாயாக” அந்த ஸ்தானத்திலேயே இந்தியாவில் மதிக்கப் பெறுகிறாள். குடும்பத்தில் கூட மருமகளாக வருபவள் ‘தாய்மை” அடைந்த பிறகே வீட்டின் எஜமானியாக கருதப்படுகிறாள். பெண்ணுக்குக் கல்வி மறுக்கப்பட்டது பற்றி சுவாமிஜி வருந்துகின்றார். இல்லறத்திலும் அவர்களின் அடிமைத் தனம் அவரை வருத்துகின்றது.

    புராணங்களில் வரும் சீதாதேவி-சாவித்திரி, நாளாயினி போன்றவர்களின் தியாகத்தையும், தீரத்தையும் போற்றும் ‘பழமை பிரியரான”; சுவாமிஜி சரித்திர காலத்தின் ‘ஜான்சிராணி, லட்சுமிபாய்” போன்ற வீராங்கனைகளைப் பற்றி போற்றி குறிப்பிடும்பொழுது நமக்கு தமிழ்நாட்டின் ராணி மங்கம்மாள், வீரமங்கை வேலுநாச்சியார் போன்ற வீர மங்கைகள் நினைவிற்கு வருகின்றனர்.

    இந்தியாவின் மங்கையர் இருந்த நிலையை சுவாமிஜி விரும்பவில்லை எனினும் அதற்காகக் ‘கல்வி” கேள்விகளில் சிறந்து இருந்தாலும், எவ்வளவுதான் சுய முன்னேற்றத்தாலும் ‘அவள்” அதாவது ஒரு இந்தியப் பெண்மணி ‘சுயநலவாதியாக” தன் இன்பத்திற்கே வாழ்பவளாக இருப்பதை அவர் சிறிதும் விரும்பவில்லை.

    தியாகமும், நேசமும் கருணையும் கொண்டவளாக ‘வீரப் புதல்வர்களை ஈன்று அவர்களை சான்றோனாக்கும் ‘தெய்வத்தாயாகவே இந்தியப் பெண்ணை தரிசிக்க விரும்புகின்றார் சுவாமிஜி.

    இவ்வாறு தாயாகும் தகுதி என்றும் தந்தையாகும் தகுதி என்றும் கூறும் ஸவாமி ‘இன்ப” விழைவு காரணமாக பிறக்கும் குழந்தை சிறந்தவனாக-ஆரியனாக ஆகமாட்டான். ‘நன்மக்கள் பேற்றிற்”காகத் தாயும் தந்தையும் வேண்டிப் பிறக்கும் குழந்தையே சான்றோனாக ஆரியனாக ஆவான் என்கிறார்.

    இந்நூலை படிக்கையில் நேர்மையும், வைராக்கியமுமே வடிவமான சுவாமி விவேகானந்தரின் பார்வையில் இந்தியப் பெண்ணும் – ஆணும் பார்க்கப்படுகின்றனர்.

    அவர், வர்ணிக்கும் ‘பெண்” சராசரிப் பெண்களில் இல்லை. சராசரிப் பெண்ணின் உள்ளுணர்வு தூண்டப்பெற்று தன சுகத்தை மறந்து புறந்தள்ளி வீட்டிற்கும் சமுதாயத்திற்கும் உதவுபவளாக நாட்டின் நலனுக்காக ஏன் உலகின் நலனுக்காகவே தியாகம் செய்பவளாக இருக்கவேண்டும்.

    பெண்ணிடம் அறிவிற்குச் சமமாக அன்பும் உயர்கல்விக்குச் சமமாக ஒழுக்கமும் இருக்கவேண்டும்.

    விதவைத் திருமணம் என்பது மறுக்கப்பட்டுவிடாவிட்டாலும், ஊக்குவிக்கப்படவும் இல்லை.

    இன்பத்திற்காகத் திருமணம் என்பதே பலவீனர்களின் செயல் என்கின்றார், சுவாமிஜி

    தாய் திருநாட்டின் இந்தியாவைப் பற்றி இந்தியரைப் பற்றி அவரது கருத்து இந்தியரின் வித்தியாசமானவர்கள். இயல்பாகவே ஆன்மீகத் தாக்கம் கொண்டவர்கள் தொழில் வளர்ச்சி சொல்லின் செழுமை இவற்றோடு எப்பொழுது வேண்டுமானாலும், அவன் மனம் ஆன்மீகத்தின் பக்கம் திரும்பிவிடும் இது இந்தியர்களின் இயல்புத் தன்மை என்கிறார், சுவாமிஜி.

    ‘இந்தியப் பெண்கள் என்ற இந்தப் புத்தகத்தின் மதிப்புரையில் எதை மதிப்பிட மறந்தாலும் நீண்ட காலமாக ‘பெண்களைப் பற்றி சுவாமிஜியின்” நேர்மையான பதிலை மதித்துப் போற்றாமல் இருக்க இயலாது.

    ‘ பெண் என்பவள் மாயை – ஆணின் முக்திக்கு அவள் பெரும் தடையாக இருப்பவள் என்ற கருத்து பன்னெடுங்காலமாக பழக்கத்தில் உள்ளது. இதற்கு சுவாமிஜியின் பதில்: இந்த புத்தகத்தில்
    “பெண்ணின் புற அழகில் மயங்கி நிற்கும் பலவீனனே ‘மாயை” எனும் உணர்வில் மதி மயங்கலாம், ஆனால் பெண்ணின் ‘அக” அழகில் ஈடுபாடு கொள்பவன் அறிவிலோங்கி யோகி என்னும் உயர்நிலையை அடைவான்”.

    எங்கு பெண் துன்பப்படுகிறளோ, அங்கு தெய்வம் மகிழாது.

    பெண் மகிழ்வாக இருந்தாலே வீடும், நாடும் நலம் பெறுகிறது என்பதை வேதவாக்காக சுவாமிஜி சொல்கிறார்.

    இந்தப் புத்தகத்தின் மூலம் சுவாமிஜியின் இறுதி மற்றும் முடிவான கருத்து என்பது பெண்ணை உயர்ந்த நிலையிலும், தியாக உருவாகவும் சுவாமிஜி சித்தரிக்கின்றார்.

    பி.கு. உண்மையில் மதிப்பிற்குரிய மகான்களின் கருத்துகள் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவை என்றாலும் அவருடைய உயர்ந்த கருத்துகள் உலகில் பரவ வேண்டும் என்பதற்காகவே விமர்சனம் என்ற செயலுக்கும் துணிகிறோம். இவ்வரிய கருத்துகளை அவரவர் தகுதிக்கேற்ப மேலும் அதிகமாகவும் புரிந்து கொள்ளலாம் என்பதே சத்தியம்.

    Share
  • வேற்றுமையில் ஒற்றுமை

    சுலோச்சனா

    மனிதன் பிறப்பால் அங்க அமைப்புகளினால் அவைகளின் செயல் பாடுகளினால் ஒன்றுபட்டவனாக இருக்கின்றான்.ஆனால் சிந்தனைகளில் அதன் விளைவான செயல்களில் பழக்க வழக்கங்களில் வேறு பட்டவனாக இருக்கின்றான்.

    நல்லவன்,தீயவன் செல்வந்தன் ஏழை என இரு பிரிவாகப் பொதுவாகப் பிரித்தாலும் மதம் முதல் மனப்போக்கு வரை உட்பிரிவுகள் கொள்கைப் பிரிவுகளெனவும் பல உட்பிரிவுகள்.ஆனால் அனைவருக்கும் பொதுவானவை பின்பற்ற வேண்டியவை என சில குண நலன்கள் சான்றோர்களால் குறிப்பிடபட்டுள்ளன.

    யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
    அதனின் அதனின் இலன்.(குறள் : 341)

    மற்றவர் உடமைக்கு ஆசை படாதிருத்தல் ஆசைப்படுவதோடு நில்லாமல் வலிய அதைஅடைய முயலுதல் போன்றவைகளால் ச்மூக நலனுக்கு ஊறு நேர்கின்றது.இது வன்றி இறை நம்பிக்கை உடையவர்கள் உள்ளனர்.அது இல்லாமல் அப்படி ஒரு சக்தி  உண்டு என்பதில் மறுப்பு உணர்வு உள்ளவர்களும் உள்ளனர். மனித இனத்தில் இதுவும் ஒரு பிரிவே எனக் கூறலாம்.ஆத்திகம் பேசுபவர்கள் நாத்திகம் பேசுபவர்கள் இரு பிரிவாக இருப்பினும் , ந்ற்செயல்கள் நல்லொழுக்கம் ச்மூக நலனுக்காக் பாடுபடுதல் என செயல்படும்பொழுது “மனித நேயம் “ எனும் மாண்பில் ஒன்றாகவே மதிக்கப்படுகின்றார்.

    இதுவும்-அதுவும் கலப்படமாக “பகுத்தறிவுவாதிகள்” எனும் பண்பாளர்களும் மூட பழக்கவழக்கங்களுக்கு எதிராக பேசியும் செயல்பட்டும் அவறறை முறியடிக்க முயற்சிக்கின்றனர்.

                              “பகுத்தறிவு இல்லாத பக்தி மூடத்தனம்

                              பக்தி இல்லாத பகுத்தறிவு அரக்கத்தனம்”

    என்பது திரு.வி.க அவர்களின் பொன் போன்ற திருவாக்கு.ஆனால் எத்தனையோ வேற்றுமைகளில் ஊடே ஓர் ஒற்றுமை ஊடாக ஊடுருவி நிற்கின்றது.ஒரே மருந்து அருமருந்து

    சுய நலம் இன்மை – அள்வோடு ஆசைகொளல்

    பொதுவாக எதன் மீதும் அதீத பற்றின்றி வாழ்தல் அடுத்து உலகத்தையே ஒரு குடை கீழ் கொண்டுவரும் ஓர் மாபெரும் சக்தி அதை வேதம் முதலிய  நூல்கள் பிரம்மம் என்கின்றனர்.பலர் உண்மை என்கின்றனர். சிலர் சத்யம் என்கின்றனர்.

    பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
    பற்றுக பற்று விடற்கு. (குறள் : 350)

    என்பது ஐயன் வாக்கு.

    எப்படி அழைக்கப்பட்டாலும் ஆத்திகன் நாத்திகன் பகுத்தறிவு வாதி அனைவரும் வணங்கி நின்று ஒன்று பட வேண்டிய ஒரே சக்தி “சத்தியம் என்ற உண்மையே ஆகும்.”

    தட்டச்சு உதவி :  உமா சண்முகம்     

    Share
  • திருமூலத் தேவரின் சமத்துவ நெறி

     

    சுலோச்சனா

    யாவர்க்குமாம் இறைவர்க்கோர் பச்சிலை
    யாவர்க்குமாம் பசுவிற்கோர் கையுறை
    யாவர்க்குமாம் உண்ணும் போது ஓர் கைப்பிடி
    யாவர்க்குமாம் பிறர்க்கு இன்னுரைதானே

    இந்தப் பூவுலகில் பிறந்து சராசரியான மக்களாக சாதாரண வாழ்க்கை வாழும் எண்ணற்ற மக்களின் பொருட்டும் ஏன் மாக்களின் பொருட்டும் மகான்கள் மண்ணுலகிற்கு வருகை தருகின்றனர்.

    இந்த சராசரியான உயிர்கள் உய்யும் பொருட்டு நல்லுரைகள் பல புகல்கின்றனர். மனித மனத்தினிடையே அவைகள் புகுந்து மந்திரம் போல் வேலை செய்கின்றன.
       
                மனிதன் தான் தள்ள வேண்டிய விஷயங்கள் என்ன? கொள்ளவேண்டிய விஷயங்கள் என்ன? என்று தெளிவுபட சிந்தித்து வாழும் வழி முறைகளை வகுத்துக் கொள்ள மகான்கள் அருளும் மந்திரங்கள் போன்ற உபதேசங்கள் பெரிதும் உதவுகின்றன.அப்படிப்பட்ட நூல்களில் ஒன்று திருமூலர் எனும் ரிஷியின் திரு மந்திரம் ஆகும்.

                   பசுக்களின் துயர் தீர்க்க “மூலன்” எனும் இடையனின் உடலில் நுழைந்தவர் அவர்தம் பெயரிலேயே அழைக்கப்பட்டவர்.அவர் அருளிய “திரு மந்திரம்” எனும் நூலில் கையாளப்படாத விஷயங்களே இல்லை எனலாம் இந்த “திரு மந்திரம்” எனும் நூல் ‘சைவத் திருமுறைகளில்’ பத்தாம் திரு முறையாக வைக்கப்பட்டுள்ளது. ஆயிரக் கணக்கான ஆண்டுகளைக் கடந்து நிலைத்து நிற்கும் இந்நூல் “ஒன்றே குலமும் ஒருவனே தேவன் என்று உலகம் தழுவிய உயர் கருத்தை எக்காலத்திற்கும் எவ்விடத்திற்கும் பொருந்துமறு கூறும் நூலாகும். நாம் எடுத்துக் கொண்டுள்ள பாடலும் யாவருக்கும் மற்றும் எக்காலத்திற்கும் பொருந்தும் கருத்தாகவும் இருக்கின்றது. முதல் வரியான,

    யாவர்க்குமாம் இறைவர்க்கோர் பச்சிலை எனும் வார்த்தைகளின் உள்ளே பொதிந்துள்ள பொருள் ஆழ்ந்த நோக்குடையதாம்.

              ‘பார்க்கும் இடம் எங்கனும் நீக்கமற நிறைந்திருக்கும் பரம்பொருளை யாவரும் வழிபட வேண்டும் என்பது பொருள், இன்னொரு பொருள், உள்ளுறையும் பொருள் யாவராயினும் சரி இறை வழிபாட்டைக் கொண்டவர்களாக இருத்தல் வேண்டும் என்பது மண்ணாளும் மன்னவனானாலும் சரி மண் குடிசையில் வாழ்பவன் ஆயினும் சரி இரு நிலையில் நிற்பவர்க்கும் நடுநாயகமாக பொதுவில் இருப்பது இறைவழிபாடாகும் மன்னவனின் அபிஷேக ஆராதனைகளும் சரி ஏழை அர்ப்பணிக்கும் ,ஒரு துளசி இலையோ வில்வமோ இரண்டும் ஒரே நிறையாகும். இதன் மூலம் சமத்துவம் எனும்  தத்துவத்தை புரிந்து கொள்ள முடிகின்றது.

                  அடுத்த “யாவர்க்கு ஆயினும் பசுவிற்கோர் கையுறை” என்பது.இவ்விடத்தில் பசு என்பது நமக்கு பால் தரும் பசு என்பதோடு விலங்கினங்களோ – பறவைகளோ அல்லது மனிதனை விட குறைந்த அறிவுள்ள அனைத்து உயிரினங்களுக்குமாக என்று புரிந்து கொள்ளலாம்.

                 ஓர் கைப்பிடி அளவு ஏதோ ஒரு உணவு அளிப்பது என்பது உயர் அறிவுள்ள மனிதனின் கடமையாக நினைக்கின்றார் தவயோகி .தனவந்த்ர் தாராளமாக அனைத்து உயிர்களுக்குமே அளவின்றி அன்னமிட்டு பெரும் பிணியான தீராப் பிணியான பசிப்பிணியை போக்கலாம் எனில் எளியவனான ஏழை தன் கையில் ஓர் பிடி அளவாவது தருமம் செய்வது சாலச் சிறந்ததுதானே. தன்னிலையில் இருந்து குறைந்த அறிவுள்ள ஜீவனுக்கு  கருணை புரிய வேண்டும் என்பது கடமை. “வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடவில்லையா?” நம் வள்ளல் பெருமானார், இராமலிங்க அடிகளார்.

                       யாவர்க்காயினும் உண்ணும் போது ஓர் கைப்பிடி”

    புரட்சிக் கவிஞர் பாரதி தாசனின் பிறர் உண்ண தான் உண்ணுதல் வேண்டும்
    பிறர் உடுத்த தான் உடுத்துதல்  வேண்டும்.

    எனும் சம நீதிக் கருத்தை அன்றே கூறிய வரிகள் இவையாகும்.வாழ்வின் அடித்தட்டில் உள்ளவனுக்கான-அவனுக்கும் சாத்தியமாகக் கூடிய எளிதாகக் கடைபிடிக்கக் கூடிய வழியைக் கூறும் வரியாகும். ஒரு நாளைக்கு ஒரே வேளை உண்ணுபவன் கூட தன் முன் வைக்கப்பட்டிருக்கும் உணவில் இருந்து ஒரு கைப்பிடியேனும் பசித்தவனோடு பகிர்ந்து உண்பது என்பது தியாகத்தின் திடத்தையும் சகோதரத்துவத்தையும் ஊட்டுவதாக இருக்கின்றது. இந்த சிந்தனைக்கு இடம் கொடுத்துவிட்டால் உலகில் யாரும் யாருக்கும் “பகை” என்பதே இல்லாத இனிய உல்கமாக அல்லவா மாறுகின்றது.

                                 “யாவர்க்குமாம் பிறர்க்கு இன்னுரைதானே”

    இனிய உளவாக இன்னாத கூறல்  இனிய கனி இருக்க காயை சுவைப்பது போன்றது என்கிறார் தெய்வப் புலவர் திருவள்ளுவர் “பிறர்க்கு” என்கிறார் திரு மூலதேவர் தனக்குச் சுற்றமாகவோ- நட்பாகவோ இல்லாத தன்னோடு சம்பந்தம் இல்லாத ஒருவருக்கு ‘இனிய வாய்ச்சொல் அருளல்., ஒருவருக்கு எவ்வளவு ஆறுதலைத் தரும்! கடுஞ்சொல் யாரிடமும் பேசுதல் கூடாது. என்ற கட்டளை போன்ற நீதியும் இதன் மூலம் அறிகின்றோம்.

                பகைவனுக்கும் அருள்வாய் நன்னெஞ்சே” என்ற பாரதியின் பாடல் நம் நினைவிற்கு வருகிறது. எந்த தானமும் தர்மமும் செய்ய இயலாதவர்கள் கூட, ஆண்டவன் அளித்துள்ள பேசும் திறமையை நல்ல விதமாக பயன்படுத்தி இனிய சொற்களைக் கூறி தளர்ச்சியுற்றவனைக் கூட எழுந்து நின்று செயலாற்றும் திறமையை உண்டு பண்ணும் புனித சேவையைச் செய்யலாமே.

                  உலகெங்கும் நன்னெறிகளும் நன் மணிகளாக நிறைந்து கிடக்கின்றன. அனைத்து மகான்களும் சாதி மதபேதமின்றி நற்சிந்தனைகளை நமக்குத் தருகின்றன. நாம்தான் அவைகளை நமதாக்கிக் கொள்வது மட்டுமன்றி அடுத்த தலைமுறைக்கும், கொண்டு சேர்ப்பது நம் தலையாய் கடமையாகும். இளம் தலைமுறையினருக்கு இதைவிட சிறந்த செல்வம் எதுவாக இருக்கும்.

         திருமூலத் தேவரின் தவ நெறிகள் உலகிற்கே உகந்தது. அதனால் உலகம் முழுவதற்கும் உரியது.

    தட்டச்சு உதவி : திருமதி உமா சண்முகம்

    படத்திற்கு நன்றி :

    http://tamilnanbargal.com/tamil-kavithaigal/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D

    Share