Tag: டாக்டர் வே. விக்னேசு

  • (Peer Reviewed) நச்சினார்க்கினியரின் உரைமரபுகள்

    (Peer Reviewed) நச்சினார்க்கினியரின் உரைமரபுகள்

    டாக்டர். வே. விக்னேசு,
    தமிழ்  உதவிப்பேராசிரியர்,
    பூ. சா. கோ. கலை அறிவியல் கல்லூரி,
    கோயம்புத்தூர்641014.
    vignesh@psgcas.ac.in

    தோற்றுவாய்:

    தமிழ்த்திருநாட்டிற்கு வற்றாத வளனாய்க் குன்றாத மணி விளக்காய் வாய்ந்தொளிர்வது தொல்காப்பியம் என்னும் முழுமுதல் இலக்கணப் பெருநூலாம். இந்நூல்  பல்லாயிரம் யாண்டுகட்கு முன்னர் தமிழகத்தில் தோன்றி, யாண்டு பலகடந்தும் வேரூன்றி நிற்பதற்குக் காரணம் உரையாசிரியப்பெருமக்களின் உரைகள் என்னும் கவசத்தால் வழிவழியாகப் போற்றிப் பாதுகாக்கபட்டமையேயாம். இங்ஙனம் அமைந்த தொல்காப்பிய உரைகளுள் உச்சிமேற் புலவர் கொள் நச்சினார்க்கினியரின்  உரைப்போக்கையும் உரைமரபுகளையும் இக்கட்டுரை சுருங்க விளக்க முற்படுகின்றது.

    தொல்காப்பிய உரையாசிரியர்கள் :

    தொன்மைத் தமிழிலக்கண நூலான தொல்காப்பியத்திற்குக் கிட்டிய பழையவுரைகளுள் இளம்பூரணருரையே பழமையானது; நூல் முழுமைக்கும் கிடைத்துளது. நச்சினார்க்கினியருரை எழுத்து, சொல், பொருளில் முன்னுள்ள அகத்திணை, புறத்திணை, களவு, கற்பு, பொருள் என்னும் ஐந்தியல்களுக்கு மட்டுமே கிடைத்துளது. எஞ்சிய பொருட் பகுதியாகிய மெய்ப்பாடு, உவமம், செய்யுள், மரபு என்னும் நான்கியல்கட்குப் பேராசிரியருரையே கிடைத்துளது. மற்றைய பகுதிகட்குப் பேராசிரியருரை கிடைத்திலது. அன்றியும், நச்சினார்க்கினியருரையும், பேராசிரியருரையும் இயைந்து ஒருவருரையாகத் தொல்காப்பியப் பொருளதிகாரம் முழுமைக்கும் அமைந்துள்ளது. அங்ஙனமே, நடுநின்ற சொல்லதிகாரத்திற்கு முன் சுட்டிய அறுவருரைகள் கிடைத்துள.

    தமிழிலக்கிய இலக்கணங்களுள் உரை பலவாக வாய்க்கப்பெற்ற நூல்களுள் தொல்காப்பியமும் ஒன்றாம். தொல்காப்பியரின் உளக்கிடக்கையை உணர்ந்து உலகிற்குணர்த்தச் சான்றோர் பெருமக்கள் பலரும் காலந்தோறும் முயன்றதன் விளைவே தொல்காப்பியத்தின் உரைப்பெருக்கத்திற்குக் காரணமாம். இவ்வகையில், ’தொல்காப்பியமும் சங்க நூல்களும் கி.பி. நான்காம் நூற்றாண்டுக்குப் பின் தமிழகத்தில் ஏற்பட்ட அரசியல் மாற்றத்தால் கல்வியுலகிற் பரவாதிருந்தன’ என்றும், ’கி.பி. 11-ஆம் நூற்றாண்டுக்குப் பின் தொல்காப்பிய இயக்கமும் சங்கவிலக்கிய மறுமலர்ச்சியும் தோன்றின’ என்றும் உரைக்கும் வ. சுப. மாணிக்கனார், தொல்காப்பிய இயக்கம் பற்றியும், தொல்காப்பியக் கல்வி பரவியமை பற்றியும் கூறும் கருத்துக்கள் இவண் நோக்கத்தக்கனவாம். அவர் கூறுமாறு:

    இவ்வியக்கத்தின் தலைவர் இளம்பூரணர்; உரையாசிரியர் என்ற கீர்த்தியைத் தமக்கே உரிமை கொண்டவர். நேராப் புகழ்மைப் பேராசிரியரும், ஆனாப் பெருமைச் சேனாவரையரும், மெய்யுரை கண்ட தெய்வச்சிலையாரும், உச்சிமேற்புலவர் நச்சினார்க்கினியரும், சொல்லுரைகண்ட கல்லாடனாரும் இவ்வியக்கத்தின் படையாளர்கள். இப்பேரியக்கம் மூன்று நான்கு நூற்றாண்டுகள் தொல்காப்பியக் கல்வியைக் கற்றாரிடைப் பரப்பியது (தொல்காப்பியக்கடல், ப. 264) என்பது அவர் கருத்தாம்.

    இன்னவகையில், தொல்காப்பிய நிலைபேற்றுக்கும், தொல்காப்பியக் கல்வி பரவலுக்கும் உரையாசிரியர்களின் உரைகளும் அன்னோர் மேற்கொண்ட உரைமுறைகளும் பெருங்காரணமாம்.

    நச்சினார்க்கினியர்:

    தமிழிலக்கிய, இலக்கண நூல்களுக்கு உரையெழுதிய உரையாசிரியர்களுள் மேலோங்கி நிற்பவர் நச்சினார்க்கினியராவர்.

    பாரத்தொல் காப்பியமும் பத்துப்பாட் டுங்கலியும்
    ஆரக் குறுந்தொகையுள் ஐந்நான்கும் – சாரத்
    திருத்தகு மாமுனிசெய் சீந்தா மணியும்
    விருத்திநச்சி னார்க்கினிய மே.

    எனவரும் பழம்பாடலானது இவர் உரைகண்ட நூல்களைக் குறிப்பிடுகின்றது. இவற்றுள், குறுந்தொகையுரை கிடைத்திலது.

    தொல்காப்பியம் முழுமைக்கும் இவர் காண்டிகையுரை எழுதியுள்ளாராயினும், பொருளதிகாரத்தின், மெய்ப்பாட்டியல், உவமவியல், மரபியல் என்ற இயல்களுக்கு இவர் வரைந்த உரை கிடைத்திலது. தொல்காப்பியம், கலித்தொகை, பத்துப்பாட்டு, சீவகசிந்தாமணி என்பவற்றிற்கு இவர் வரைந்த உரைகள் சிறப்பிற்குரியன.

    இவரின் புலமையை வியந்து “உச்சிமேற் புலவர் கொள் நச்சினார்க்கினியர்” என்று இலக்கணக்கொத்து ஆசிரியரும், அமிழ்தினும் இனிய தமிழ்மடவரல் செய் அருந்தவத்தின் பெரும்பயனாக அவதரித்து அருளியவர்” என்று உ.வே. சாமிநாதையரும், பன்னூலறிந்த செந்நெறிப்புலவர்” என்று அரசஞ்சண்முகனாரும் “செந்தமிழ் மாமுகில் வள்ளல்” என்று மறைமலையடிகளாரும் புகழ்ந்துரைக்கின்றனர். அன்றியும், தமிழில் நல்ல புலமை அடைய விரும்புவர்கள் நச்சினார்க்கினியருடைய உரைகளில் தோய்ந்தாலன்றிப் புலமை நிரம்பாது என்று கூறுகின்ற அளவிற்கு உரையாசிரியர்களுள் தலைநின்ற சிறப்புக்குரியவர் நச்சினார்க்கினியர்” (தொல். சொல். உரைக்கொத்து- ப.109) என்று பண்டித வித்துவான். தி.வே.கோபாலையரவர்கள் உவந்து போற்றுதலும் ஈண்டுச் சுட்டத்தக்கதாம்.

    பாற்கடற் போல பரந்த நன்னெறி…” எனத்தொடங்கும் உரைச் சிறப்புப்பாயிர அகவற்பா, நச்சினார்க்கினியரின் பெருமைகளைப் பறைசாற்றுகிறது. இப்பாயிரத்தால் இவர்தம் வரலாற்றையும் ஒருவாற்றான் அறியவியலுகிறது.

    காலமும் சமயமும் :

    பதினான்காம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்த இவர், மதுரையில் அந்தணர் குலத்தில் பாரத்துவாச கோத்திரத்தில் பிறந்தவர் என்றும், போதகாசிரியராக வாழ்ந்தவர் என்றும், தூய ஞானம் நிறைந்த சிவச்சுடர் என்றும் பாயிரம் இவரைப் போற்றுகிறது.

    இவரின் பெயர் சிவபெருமானின் திருப்பெயர்களுள் ஒன்றாம். இவர் சிவபெருமானையே பரம்பொருளாக வழிபட்ட சைவசமயத்தினரென்பது இவரின் பெயராலும் இவர் தம் உரையில் திருவாசகம், திருக்கோவையார் இன்னோரன்ன நூல்களிலிலிருந்து மேற்கோள்களை எடுத்துக்காட்டி இருத்தலானும் அறியவியலுகின்றது. அங்ஙனமே, திருமுருகாற்றுப்படையின் அடிகளைப் பலவிடங்களில் இவர் எடுத்துக்காட்டுவதிலிருந்து அந்நூலில் இவர்க்குள்ள ஈடுபாடு பெரிதெனத் தெரிகிறது.

    இவர் சிவநேயச் செல்வராயினும் பிற சமயங்களையும் போற்றும் சமயப்பொறை யுடையராகவே இவர் விளங்கியமை தொல். சிறப்புப்பாயிரவுரை, மொழிமரபு – 13, அகத்திணையியல்- 32, புறத்திணையியல் – 21 என்றின்னவற்றிற்குரிய இவருரையான் புலனாகின்றது.

    பல்துறைப் புலமை :

    தமிழ் மொழியில் உள்ள பல்வகை நூல்களிலும் மிகுந்த பாண்டித்தியம் உடையவர் இவர். வடமொழியில் காவிய நாடக அலங்காரங்களுக்கு உரைகண்ட திரு. மல்லிநாதசூரி என்னும் புலவரைப் போல் தமிழ்மொழிக்கு வாய்த்தவர் இவர் என்று ஆன்றோர்கள் போற்றுவர்.

    தொல்காப்பியவுரை முதலியவற்றில் வேதம், வேதாங்கம் முதலிய பல நூல்களிலிருந்தும் அவற்றின் உரைகளிலிருந்தும் பற்பல அரிய விஷயங்களை ஆங்காங்கு எடுத்துக்காட்டி நன்கு விளக்கிப் போகின்றமையாலும் பிறவாற்றாலும் இவரை வடமொழியிற் பலவகையான கலைகளிலும் மிக்க பயிற்சியுள்ளவரென்று சொல்லுதற்கிடமுண்டு” (சீவகசிந்தாமணி- ப. 33) என்று புகழ்வர் உ.வே. சாமிநாதையரவர்கள்.

    பன்னூற் பயிற்சியோடு பல்வேறு கலைகளையும் கற்றுத்தேர்ந்தவர் இவர். இசை, நாடகம், தத்துவம், வானியல், சோதிடம், மருத்துவம், கட்டடக்கலை முதலான கலைகளில் மிகுதிறம் கொண்டவர் என்பதை இவரின் உரைக் குறிப்புக்களிலிருந்து அறியவியலுகிறது.

    தமிழ்மொழிப் பற்று :

    இவரின் தமிழ்மொழிப் பற்றினை வெளிப்படுத்தும் இடங்களாக,

    அகரம் முதல் ஆரியத்திற்கும் ஒக்குமேனும் ஈண்டுத் தமிழெழுத்தே கூறுகின்றார்” “இவை தமிழெழுத்து என்பது அறிவித்தற்குப் பின்னர் வைத்தார்” (நூ.1)

    தமிழ்ச் சொல்லெல்லாம் ஒருதலையாகப் பொருளுணர்த்தும்” (பெய.1)

    காலம் உலகம் என்பன வடசொல் அன்று” (கிளவி. 58)

    என்றின்னவற்றைக் காட்டலாம்.

    உரைப்போக்கு :

    நச்சினார்க்கினியருரை தெளிவும், விளக்கமும், புலமைநலனும் உடையதாம். சொற்செறிவும் பொருட்செறிவும் மிக்கதும், இலக்கிய இலக்கணத் தோய்வுடையதுமாம்.

    இவர்தம் தொல்காப்பிய உரையைப் பொதுவகையில் நோக்குழி, இவருரையமைப்பு, பாயிரவுரை, அதிகாரவுரை, இயல் உரை, நூற்பா உரை என்னும் நான்கு பகுதிகளை உடையதாக அமைந்துள்ளது.

    மேற்கோளாக எடுத்துக்காட்டும் நூலின் பெயரையும், நூலாசிரியர் பெயரையும் இவர் பெரும்பாலும் குறிப்பிடுவதில்லை.

    இவர் சிலவிடங்களில் செய்யுட்களை உரைநடையாக எழுதிச்செல்வதுண்டு. உரை வகுக்குங்கால், இவர் முன்னோர்தம் உரைநெறிகளைப் பின்பற்றிடினும்,   நூற்பா கிடந்தாங்கே ஆற்றொழுக்காகப் பொருள் விரித்தலின்றிக் கொண்டுகூட்டிப் பல்வேறிடங்களில் பொருள் கூறியுள்ளார். இதுபற்றி, மறைமலையடிகளார், வ.சுப. மாணிக்கனார், க. வெள்ளைவாரணனார் போன்ற பேராசிரியர்கள் தம் நூல்களில் இவரைக் கடிந்துரைத்துள்ளனர்.

    எழுத்ததிகார உரையமைப்பு :

    நச்சினார்க்கினியரின் எழுத்ததிகாரவுரை பாயிர உரை, அதிகார உரை, இயல் உரை, நூற்பா உரை என நான்கு பகுதிகளை உடையது.

    பாயிர உரையைப் பொதுப்பாயிரம், சிறப்புப்பாயிரம் என இரு வகையாகப் பிரித்துக்கொண்டு உரை செய்திருக்கின்றார் நச்சினார்க்கினியர். பாயிர உரை இளம்பூரணருரையை ஏற்றதாகும். அதில் இளம்பூரணரின் பெயரை மனமுவந்து குறிப்பிடுகின்றார். பொதுவகையில் இப்பாயிர உரை இவரின் உவமை நலத்தைச் சாற்றுவதாக அமைகின்றது.

    பாயிர உரையினையடுத்து அதிகார உரை அமைகிறது. அதிகார உரையும் தனித்துக் கூறப்படவில்லை. முதல் நூற்பாவினை யடுத்தே கூறப்பட்டுள்ளது. இவ்வதிகாரம் என்ன பெயர்த்தோவெனின்” என வினாவெழுப்பி அதிகாரத்தில் கூறப்படும் கருத்துக்களைத் தொகுத்து முன்னுரையாகக் கூறுகின்றார்.

    எழுத்ததிகார  நூற்பாவுரை கருத்து, பொருள், காட்டு, விளக்கம் என அமைகின்றது, ஆயின், இந்த அமைப்பும் அனைத்து நூற்பாக்களிலும் பின்பற்றப்படவில்லை.

    சில நூற்பாக்களில் கருத்துரையையடுத்து, விளக்கவுரையும் அதனையடுத்து எடுத்துக்காட்டும் என முன்னும் பின்னுமாக மாறி அமைந்திருக்கின்றன.

    மொழிமரபு 31-ஆம் நூற்பாவுரையில் பொருளுரை முதலிலும், அடுத்துக் கருத்துரையும், அதனையடுத்து எடுத்துக்காட்டும், இறுதியாக விளக்கவுரையும் என்ற  நிலையில் உரையமைப்பு உள்ளது. பொதுவாகக் கருத்துரை தொடக்கமாக அமைவதுண்டு. ஆயின், இந்நூற்பாவில் அம்முறை மாறியுள்ளது.

    பெரும்பான்மையாக “இது” அல்லது “இஃது” எனத் தொடங்கி உணர்த்துதல் “நுதலிற்று”  என ஈற்றில் முடித்துக் கருத்துரை கூறுவார். ஆயினும் சில இடங்களில், ‘உணர்த்துகின்றது’, ‘கூறுகின்றது’. ‘கொள்கின்றது’, ‘என்கின்றது’, ‘விளக்குகின்றது’, ‘அகற்றியது’ என்றும் ஈற்றில் முடித்தலும் உண்டு. நூற்பாவில் “இதன் பொருள்” எனக் குறியிட்டுப் பதவுரையாக எழுதுகின்றார்.

    பொதுவகையில் நோக்கின். இவரின் எழுத்ததிகார உரையமைப்பானது இளம்பூரணரின் எழுத்ததிகார வுரையமைப்பினை ஒட்டியே செல்கின்றது என்ற அளவில் நிறுத்தி, இனி இவரின் சொல்லதிகார உரையமைப்பினை ஆய்வோம்.

    சொல்லதிகார உரையமைப்பு :

    சொல்லதிகார நச்சினார்க்கினியருரை அதிகாரவிளக்கம், இயல்விளக்கம், கருத்துரை, பொருளுரை, எடுத்துக்காட்டு, விளக்கம் என்னும் அமைப்பினைக் கொண்டது.

    இளம்பூரணர், சேனாவரையர் இவ்விருவரும் சொல்லதிகார உரையில் அதிகார விளக்கத்தைக் கிளவியாக்கத்தின் முதல் நூற்பாவினை அடுத்துக்கூறியதனைப் போன்றே இவரும் கூறியுள்ளார். இவ்வதிகாரம் என்ன பெயர்த்தோ எனின்” என வினவி அதிகார விளக்கம் தருகின்றார். அதிகார விளக்கத்தில் ஒன்பது இயல்களின் கருத்துக்களையும் தொகுப்புரையாகத் தந்துள்ளார். இயல் பற்றிய விளக்கத்தினை இயலின் முதல் நூற்பாவினை அடுத்து வழங்கியுள்ளார். முதல் இயலுக்குரிய இயல் விளக்கத்தினை மட்டும் அதிகார உரையுனை அடுத்து அமைத்துள்ளார்.

    கருத்துரை வழங்குங்கால், எழுத்ததிகாரத்தில் கூறியாங்கே, ‘இது’ அல்லது ‘இஃது’ எனத் தொடங்கிக் கருத்துரை கூறுகின்றார். ஆயினும், நுதலிற்று”  என ஈற்றில் எங்கும் முடித்தாரில்லை. ‘பகுக்கின்றது’, ‘அமைக்கின்றது’, ‘ஆராய்கின்றது’, ‘கூறுகின்றது’, ‘முடிக்கின்றது’ முதலிய சொற்களைக் கொண்டே முடிக்கின்றார்.

    சில இடங்களில் தொடர்புடைய நூற்பாவாக இருப்பின்,  ‘இதுவும் அது’ என்று மட்டுமே குறியிட்டு, அந்நூற்பாவிற்குக் கருத்துரை வழங்காது விடுதலுமுண்டு.

    நூற்பா உரையினையடுத்து எடுத்துக்காட்டும் அதனையடுத்து மேற்கோள் விளக்கமும் காணப்படுகின்றது. ஆயினும், இவ்வமைப்பு முறையே சொல்லதிகார அனைத்து இயல்களிலும் உள்ளதா எனில், ஒரோவிடங்களில் இவ்வமைப்பு முறை முறையாகப் பின்பற்றப்படவில்லை.

    இனி, பொருளதிகார நச்சினார்க்கினியர் உரையமைப்பு பற்றிய ஆய்வினைத் தொடர்வாம்.

    பொருளதிகார உரையமைப்பு :

    பொருளதிகார நச்சினார்க்கினியருரை அதிகார முன்னுரை, இயல் விளக்கம்,  நூற்பா உரை என்ற மூன்று பகுதிகளை உடையதாக அமைகின்றது.

    எழுத்து, சொல் அதிகாரங்களைப் போன்றே பொருளதிகாரத்திற்கும் அதிகார முன்னுரையினைத் தனித்துக் கூறவில்லை. முதல் நூற்பாவினை அடுத்துக் கூறுகின்றார். எழுத்து, சொல் அதிகாரங்களுக்கு அதிகார முன்னுரை கூறுங்கால், இவ்வதிகாரம் என்ன பெயர்த்தோ எனின்” என்று வினா எழுப்பிக் கூறிய இவர், இவ்வதிகாரத்தில் அங்ஙனம் கூறவில்லை.

    நூற்பாவிற்குரிய உரையானது கருத்துரை, பதவுரை, எடுத்துக்காட்டு, விளக்கவுரை, மேற்கோள்களைப் பொருத்திக் காட்டுதல் என்னும் முறையில் அமைந்து செல்கின்றது. ஆயினும், இவ்வமைப்பு முறையே அதிகாரம் முழுவதும் பின்பற்றப்படவில்லை சில இடங்களில் மாறுவதுமுண்டு. களவியலுக்கு இவர் வரைந்துள்ள இயல் விளக்கம் குறிப்பிடத்தக்கது.

    கருத்துரையானது ‘இது’ அல்லது ‘இஃது’ எனத் தொடங்கி ‘உணர்த்துதல் நுதலிற்று’ என ஈற்றில் முடித்து அமைகிறது.

    இவ்வகையில் பொருளதிகார உரையமைப்பானது ஏனைய உரையமைப்பினின்றும் வேறுபட்டு நிற்கிறது.

    சிறப்பு உரைநெறி :

    அதிகார இயைபு, இயல் இயைபு, நூற்பா இயைபு ஆகியன கூறல். வினாவிடை நெறி,  நூற்பாவை நிலைப்படுத்தல், மிகையினாலும் இலேசினாலும் சொல், சொற்றொடர்களை நிலைப்படுத்தல், நூற்பாவின் இன்றியமையாமையை உறுதிப்படுத்தல், இலக்கணக்குறிப்பு, இலக்கணமுடிபு கூறுதல் இன்னோரன்னவை இவரின் சிறப்பான உரை நெறிகளாகச் சுட்டத்தக்கனவாம்.

    மாணாக்கருக்கு உய்த்துணர வைத்தல் :

    மாணாக்கருக்கு ஆராய்ச்சியறிவு மிகுதலுக்காக அவர்கள் தம் அறிவைச் செலுத்த வாய்ப்பளித்தல் இளம்பூரணர், சேனாவரையர் ஆகியோர் இயல்பாம். இதனை, மாணாக்கர்க்கு உணர்வு பெருகல் வேண்டி வெளிப்படக் கூறாது உய்த்துணர வைத்தல் அவர்க்கியல்பு” (சொல்.சேனா.நூ.1) எனச் சேனாவரையர் கூறுமாற்றானும், அவ்விருவர் உரைகளானும் அறியவியலுகிறது. ஆயின், நச்சினார்க்கினியரோ, ‘மாணாக்கருக்கு உய்த்துணர்வு இன்று’ என்னும் கருத்தினர். இதனை, மாணாக்கர்க்கு உய்த்துணரும் உணர்வு இன்று” (சொல்.நச்சி.நூ.203) என இவர் கூறியவதனால் அறியவியலும். இதுபற்றியே இவர் எதனையும் விளக்கியே கூறுவார் என்பது ஈண்டுச் சுட்டத்தக்கதாம்.

    சிறப்பாக உரை வரையும் நூற்பாக்கள் :

    பல்லாற்றானும் சிறப்புடையது இவருரை என்பதை எடுத்துக்காட்டுதற்குப் பல இடங்களைச் சான்றாகக் கூற இயலும். ஆயினும், சுருக்கங்கருதி இவர் சிறப்பாக உரை வரையும் நூற்பா எண்களை மட்டும் ஈண்டுக் குறிப்பிடுவாம்.

    அவை : எழுத்ததிகாரம் – மொழி.13, 18, புணர்.38,17 சொல்லதிகாரம் – நூ. 37, 50, 51, 71, 83, 95, 113, 171, 222, 360, 399, 400, 410, 441 பொருளதிகாரம் – அகத்.5,6,8 புறத்.17, களவு.1 முதலியனவாம்.

    சொற்பொருள் விளக்கம் :

    இவர் நல்கும் சொற்பொருள் விளக்கங்கள் பன்முறையும் படித்தின்புறத்தக்கன. சான்றுக்காகச் சிலவற்றை எடுத்துக்காட்டுதும்.

    குடிமை ஆண்மை இளமை…” எனவரும் சொல்லதிகார நூற்பாவிற்கு உரைகூறும் இவர் “குடிமையாவது குடிப்பிறப்பிற்கு ஏற்ற ஒழுக்கம்”, “ஆண்மையாவது ஆளுந்தன்மை”, “இளமையாவது காமச் செவ்வி நிகழ்வதோர் காலம்”, “வன்மையாவது ஒரு தொழிலை வல்லுதல்”, “பெண்ணையாவது கட்புலன் ஆயதோர் அமைதித் தன்மை” என்றெல்லாம் வனப்புற விளக்குகின்றார்.

    ‘அகம்’ என்பதற்கு இவர் கூறும் விளக்கம் அறிந்து போற்றத்தக்கது. அவ்விளக்கம் வருமாறு:

    ஒத்த அன்பான் ஒருவனும் ஒருத்தியும் கூடுகின்ற காலத்துப் பிறந்த பேரின்பம், அக்கூட்டத்தின் பின்னர் அவ்விருவரும் ஒருவருக்கொருவர் தத்தமக்குப் புலனாக இவ்வாறிருந்தது எனக் கூறப்பட முடியாததாய், யாண்டும் உள்ளத்து உணர்வே நுகர்ந்து இன்பம் உறுவதோர் பொருளாதலின் அதனை அகம் என்றார்”

    என்பது இவரின் நயமான விளக்கம்.

    மறுப்பு நலன் :

    தமக்கு முன்னுள்ள உரையாசிரியர்களின் கருத்துக்கள் ஏற்புடையதாயின், மனமுவந்து குறிப்பிடும் நச்சினார்க்கினியர், தன் கருத்துக்கு ஒவ்வாத கருத்துக்களாயின் மறுத்துச் செல்கின்றார்.

    அவ்வாறு மறுக்கின்ற பொழுது “பொருள் கூறினாரால் உரையாசிரியர் எனின் கூறியது கூறல் ஆம். ஆகலின் அது பொருந்தாது”, “என்றாரால் உரையாசிரியர் எனின் பொருந்தாமை யுணர்க”, “ஈண்டுச் சேனாவரையர் கூறிய பொருட்கு விடையின்மை உணர்க” என்பது போன்று இளம்பூரணர், சேனாவரையர் இருவர் பெயர்களையும் குறிப்பிட்டு மறுத்தலும், மாறுகொளக் கூறல் என்னும் குற்றம் தங்கும்”, “வடசொல்லென மறுக்க”, “ஆசிரியர்க்குக் கருத்தன்மை உணர்க”, “ஆசிரியர்க்கு அங்ஙனம் பொருள் கூறுதல் கருத்தன்மை அறிக”, “அவ்வாறு கூறுதல் பொருளன்மை உணர்க” என்றெல்லாம் அவர்களுடைய பெயர்களைக் குறிப்பிடாமலேயே மறுத்தலும் உண்டு.

    இன்னும் சிலவிடங்களில் இளம்பூரணருரையைச் சேனாவரையர் மறுக்கினும், இவர் இளம்பூரணருரையையே தழுவி, சேனாவரையரின்  மறுப்பிற்கு மறுப்பு வழங்காமலும், தாம் ஏற்றுக்கொண்ட இளம்பூரணர் கருத்துக்கள் ஏற்புடையன என்பதற்குக் காரணம் காட்டாமல் போதலும் உண்டு. இன்னும் பல இடங்களில் இளம்பூரணர், சேனாவரையர் ஆகியோர் கூறாத உரைகளை வகுத்தலும் உண்டு.

    பேராசிரியர் உரையைப் பெரும்பாலும் ஏற்று உரையெழுதும் இவர், செய்யுளியலில் சில இடங்களில் அவருரையை மறுத்துச் செல்கின்றார்.

    இவ்வகையில், நன்மை கண்டவிடத்து ஏற்றுப் போற்றலும், பிழை கண்டவிடத்துக் கடிந்து ஒதுக்கலும் இவரின் மறுப்புநலனாம்.

    முடிபுகள் :

    இதுகாறுங் கூறியவற்றைத் தொகுத்து நோக்கின்,

    • தொல்காப்பிய நிலைபேற்றுக்கும், தொல்காப்பியக் கல்வி பரவலுக்கும் உரையாசிரியர்களின் உரைகளும் அன்னோர் மேற்கொண்ட உரைமுறைகளும் பெருங்காரணமாம்.
    • அவ்வுரையாசிரியப் பெருமக்களுள் நச்சினார்க்கினியரின் உரைப்போக்கும் அவர் கொண்ட உரைமரபுகளும் தனிச்சிறப்புடையனவாய் இலங்குகின்றன.
    • ஆசிரியர் தொல்காப்பியனாரின் உளக்கிடக்கைப் பலவிடங்களில் இவருரைப்பகுதிகளான் இனிது விளங்குகின்றமையே இவருரைத் திறனின் சால்பினைக் காட்டவல்லதாம்
    • அன்றியும், தொல்காப்பியம் முழுமைக்கும் இவர் காண்டிகையுரை எழுதியுள்ளாராயினும், பொருளதிகாரத்தின், மெய்ப்பாட்டியல், உவமவியல், மரபியல் என்னும் இயல்களுக்கு இவருரைதானும் கிட்டாமற் போயினமை தொல்காப்பிய ஆய்வுலகிற்குப் பேரிழப்பேயாம்.

    என்பன இக்கட்டுரையின் முடிபுகளாம்.

    துணை நின்ற நூல்கள் :

    தொல்காப்பியம், எழுத்ததிகாரம், இளம்பூரணருரை,  (ஞா. தேவநேயப்பாவாணர்  விளக்கவுரையுடன்)  சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1955.

    தொல்காப்பியம், எழுத்ததிகாரம், இளம்பூரணருரை,  (அடிகளாசிரியர் பதிப்பு)      காவேரி கலர் அச்சகம், கும்பகோணம், 1969

    தொல்காப்பியம், எழுத்ததிகாரம், இளம்பூரணருரை,  (கு. சுந்தரமூர்த்தியவர்கள் விளக்கவுரையுடன்)  அண்ணாமலைப் பல்கலைக்கழகம், 1969.

    தொல்காப்பியம், சொல்லதிகாரம், இளம்பூரணருரை, (கு. சுந்தரமூர்த்தியவர்கள் விளக்கவுரையுடன்) சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை.- 1973.

    தொல்காப்பியம், சொல்லதிகாரம், சேனாவரையருரை, (ஞா. தேவநேயப்பாவாணர் மற்றும் ஆ. பூவராகம்பிள்ளை விளக்கவுரையுடன்)  சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை. – 1970.

    தொல்காப்பியம், சொல்லதிகாரம், சேனாவரையருரை, (கு. சுந்தரமூர்த்தியவர்கள் விளக்கவுரையுடன்)  அண்ணாமலைப் பல்கலைக்கழகம  – 1981.

    தொல்காப்பியம், சொல்லதிகாரம், சேனாவரையருரை, சி. கணேசையர் பதிப்பு, வடஇலங்கைத் தமிழ்நூற் பதிப்பகம், சுன்னாகம், இலங்கை, 1978.

    தொல்காப்பியம், சொல்லதிகாரம், நச்சினார்க்கினியருரை,(கு. சுந்தரமூர்த்தியவர்கள் விளக்கவுரையுடன்) சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை.- 1962.

    தொல்காப்பியம், சொல்லதிகாரம், நச்சினார்க்கினியருரை, இராமகோவிந்தசாமிப் பிள்ளை பதிப்பு,  சரசுவதி மகால் நூலகம், தஞ்சாவூர், 1997.

    தொல்காப்பியம், சொல்லதிகாரம், நச்சினார்க்கினியருரை,  (கு. சுந்தரமூர்த்தியவர்கள் விளக்கவுரையுடன்)  சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை. – 1962.

    தொல்காப்பியம், சொல்லதிகாரம், தெய்வச்சிலையாருரை,  கரந்தைத் தமிழ்ச்சங்கப் பதிப்பின் நிழற்படப் பதிப்பு,  தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர், 2010.

    தொல்காப்பியம், சொல்லதிகாரம்,  தெய்வச்சிலையாருரை, (கு. சுந்தரமூர்த்தியவர்கள் விளக்கவுரையுடன்)  சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, – 1963.

    தொல்காப்பியம், சொல்லதிகாரம், கல்லாடனார் விருத்தியுரையும் பழையவுரையும், (கு. சுந்தரமூர்த்தியவர்கள் விளக்கவுரையுடன்)  சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, – 1964.

    தொல்காப்பியச் சொல்லதிகாரக் குறிப்பு, பி.சா. சுப்பிரமணிய சாத்திரியார்,                                  38, பாண்டியன் சந்து, தெப்பக்குளம், திருச்சி.  முதற்பதிப்பு – 1930

    தொல்காப்பியம், பொருளதிகாரம், இளம்பூரணருரை, (கு. சுந்தரமூர்த்தியவர்கள் விளக்கவுரையுடன்)  சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை.- 1969.

    தொல்காப்பியம், பொருளதிகாரம்,  பின்னான்கியல்கள் -பேராசிரியருரை,                   (கு. சுந்தரமூர்த்தியவர்கள் விளக்கவுரையுடன்) அண்ணாமலைப் பல்கலைக்கழகம் – 1985.

    தொல்காப்பியம், பொருளதிகாரம்,  முன்னைந்தியல்கள் – நச்சினார்க்கினியருரை,சி. கணேசையர் பதிப்பு, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை. 2007

    தொல்காப்பியம், பொருளதிகாரம்,  பின்னான்கியல்கள் -பேராசிரியருரை, சி. கணேசையர் பதிப்பு, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை. 2007

    தொல்காப்பியம்- உரைவளம், ஆ.சிவலிங்கனார், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை

    தொல்காப்பியம் – கிளவியாக்கம் – உரைக்கொத்து, தி.வே.கோபாலையர், சரசுவதிமகால் நூலகம் (2007) தொல்காப்பியம் – எழுத்து, சொல், பொருள்

    தொல்காப்பியம், ஆராய்ச்சிக் காண்டிகையுரை, பாவலரேறு. ச. பாலசுந்தரனார்- தாமரை வெளியீட்டகம், தஞ்சை,

    தொல்காப்பியம் எழுத்ததிகாரம் நுன்மரபும் மொழிமரபும் மாணிக்கவுரை, வ.சுப. மாணிக்கனார்,  தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் (1989).

    மாணிக்கனார், வ,சுப. – தொல்காப்பியக்கடல், தொல்காப்பியத்திறன் மணிவாசகர் பதிப்பகம், சென்னை.


    ஆய்வறிஞர் கருத்துரை (Peer Review):

    ‘நச்சினார்க்கினியரின் உரைமரபுகள்” என்னுந் தலைப்பில் அமைந்த இக்கட்டுரையைப் பலமுறை பயின்று கட்டுரையின் அனைத்துக் கூறுகளையும் உள்வாங்கி ‘வல்லமை’ முன்மதிப்பீட்டு விதிகளை முழுமையாகக் கருத்திற் கொண்டு செய்யப்படும் மதிப்பீடும் பரிந்துரையும்.

    v தமிழ்த்துறையினராலும் தமிழ் அறிஞர்களாலும் திட்டமிட்டு மறைக்கப்பட்டு அல்லது காண மறுக்குந்துறை உரையாசிரியர் கண்ட ‘உரைத்துறை’யாகும். அவ்வுலகத்தின் முடிசூடா மன்னராகிய நச்சினார்க்கினியரைத் தற்கால பேராசிரிய இளைஞர் ஒருவர் அறிமுகம் செய்திருப்பதே பெரிதும் போற்றுதற்கு உரியதாகும்.

    v  நச்சினார்க்கினியரின் உரைப்போக்குகள் பற்றிய சில எடுத்துக்காட்டுகளைக் கட்டுரையாசிரியர் தந்திருக்கிறார். அவை நச்சினார்க்கினியரின் உரைப் பேருருவைக் காட்டப் போதுமானதாக அமைந்திருக்கின்றனவா என்பது சிந்திக்க வேண்டியதிருக்கிறது.

    v “சேனாவரையரோடு மாறுபட்டு இளம்பூரணரை வழிமொழியும் நச்சர், அதற்கான காரணத்தைச் சொல்லாமல் போய்விடுகிறார்” என்பது கட்டுரையில் ஒரு நுண்ணியம்.

    v நச்சினார்க்கினியரின் உரைமரபுகள் எனப் பொதுவான தலைப்பிட்டுத் தொல்காப்பிய உரைகளை மட்டும் கட்டுரைப் பொருளாகக் கொண்டிருப்பது கட்டுரையின் அளவு கருதித் தவிர்க்க இயலாது எனினும் “நச்சினார்க்கினியரின் உரைமரபுகள் (தொல்காப்பியம்)” எனத் தலைப்பிட்டிருக்கலாம்.

    v  கட்டுரையின் முதல் நான்கு துணைத்தலைப்புக்கள் நச்சினார்ககினியரை அறிமுகம் செய்திருக்கின்றன. இதனைத் தவிர்த்து அவருடைய உரையாழத்துக்கான சான்றுகளைக் கூடுதலாகக் காட்டியிருக்கலாம்.

    v  கட்டுரைகளில் காட்டப்படுபவை நச்சினார்க்கினியத்தில் கண்ட முத்துகள் எனச் சொலல முடியாவிட்டாலும் அவை சிப்பிகள் அல்ல என்று துணிந்து கூறலாம்.

    “‘உரையாசிரியர் காலம்’ என்னும் தமிழின் வல்லாண்மைப் பகுதியின்  தனிப்பெரும் தலைவனாக வலம் வந்த மாபெரும் புலமைத் தேக்கம் நச்சினார்க்கினியரை அறிமுகம் செய்துள்ள வகையில் இந்தக் கட்டுரை ஆய்வுக் கூறுகளைக் கொண்டிலது எனினும் ஒரு பொதுக் கட்டுரையாகக் கருதி, வல்லமையில் வெளியிடுகிறோம்”

    Share
  • (Peer Reviewed) தொல்காப்பியச் சொல்லதிகாரக் கல்லாடனாருரையின் உரைப்போக்கும் உரைநலனும்

    (Peer Reviewed) தொல்காப்பியச் சொல்லதிகாரக் கல்லாடனாருரையின் உரைப்போக்கும் உரைநலனும்

    டாக்டர். வே. விக்னேசு,
    தமிழ்  உதவிப்பேராசிரியர்,
    பூ. சா. கோ. கலை அறிவியல் கல்லூரி,
    கோயம்புத்தூர்641014.
    vignesh@psgcas.ac.in
    9597203214.

    தோற்றுவாய் :

    தொன்மைத் தமிழிலக்கண நூலான தொல்காப்பியத்திற்குப் பழையவுரைகளென  இளம்பூரணர், சேனாவரையர், நச்சினார்க்கினியர், தெய்வச்சிலையார், கல்லாடனார், பெயரறியப்படாத பழையவுரைகாரர் ஒருவர் ஆகிய அறுவருரைகளே கிட்டியுள. ஆசிரியர் தொல்காப்பியனாரின் உளக்கிடக்கையை உணர்ந்து உலகிற்குணர்த்தச் சான்றோர் பெருமக்கள் பலரும் காலந்தோறும் முயன்றதன் விளைவே தொல்காப்பியத்தின் உரைப்பெருக்கத்திற்குக் காரணமாம். தொல்காப்பிய நிலைபேற்றுக்கும், தொல்காப்பியக் கல்வி பரவலுக்கும் உரையாசிரியர்களின் உரைகளும் அன்னோர் மேற்கொண்ட உரைமுறைகளும் பெருங்காரணமாம். இவ்வுரையாசிரியப் பெருமக்களுள் சொல்லதிகாரத்திற்கு விருத்தியுரைகண்ட கல்லாடனார்தம் உரைப்போக்கு, அவர் மேற்கொண்ட உரைமரபுகள், அவருரையின் தனிச்சிறப்புக்கள் என்றின்னவற்றை ஆய்தலே இக்கட்டுரை ஆராயக்கொண்ட ஆய்பொருளாம்.

    சொல்லுரைகண்ட கல்லாடனார் :

    தொல்காப்பியச் சொல்லதிகாரத்திற்குக் கிட்டியுள்ள உரைகளுள் கல்லாடனார் விருத்தியுரையும் ஒன்றாம்.  அவ்வுரையும் இடையியல் பத்தாம் நூற்பா வரையிலேயே கிட்டியுளது.

    பேராசிரியர் ஆபிரகாம் அருளப்பன், பேராசிரியர் வி.ஐ. சுப்பிரமணியம் ஆகிய இருவரும் இணைந்து தொல்காப்பியச் சொல்லதிகாரத்திற்கு உள்ள உரைகளையெல்லாம் தொகுத்து, தொல்காப்பியம் – சொல்லதிகாரம் – உரைக்கோவை என்னும் பெயரில் வெளியிட்ட சொல்லதிகார உரைவளப் பதிப்பில் இவ்வுரை முதன்முதலில் வெளிப்போந்தது. இவ்வுரைவளப் பதிப்பிலும் கிளவியாக்கம் முதலாக விளிமரபு ஈறாக நான்கு இயல்களைக் கொண்ட முதற்பாகம் மட்டுமே வெளிவந்துள்ளதாகலின், இவ்வுரையும் அந்நான்கு இயல்கள் மட்டுமே கொண்டு பதிப்பிக்கப்பட்டுள்ளது.

    அடுத்து, இவ்வுரை பேராசிரியர் கு. சுந்தரமூர்த்தி அவர்களைப் பதிப்பாசிரியராகக் கொண்டு 1964 -ஆம் ஆண்டில் கழகவழி வெளிவந்தது. பின்னர், குருதேவர் தெ. பொ. மீனாட்சி சுந்தரனார் அவர்கள் பதிப்பித்துத் தமிழ்நாடு அரசினர் கீழ்த்திசைச் சுவடி நூலக வெளியீடாகத் தொல்காப்பியம் – சொல்லதிகாரம் – கல்லாடனார் விருத்தி என்னுந் தலைப்பில் இவ்வுரை 1971 -இல் வெளிவந்தது. இந்நூல் தெ.பொ. மீ. அவர்களின் விரிவான ஆராய்ச்சி முன்னுரையுடன் கூடியதாம்.

    உரைப்போக்கு :

    கல்லாடனார் உரை விருத்தியுரை என்று வழங்கப்படுகிறது. இவருரை இளம்பூரணர், நச்சினார்க்கினியர் உரைகளைத் தழுவிச் செல்வதாகும். எனினும், அவ்விருவர் உரைகளிலும் சேனாவரையர் உரையிலும் காணப்படாதனவாகிய  பல அரிய கருத்துக்கள் இவருரையில் காணலாகின்றன. இயல்களின் முறைவைப்பினை இவர் விரிவாக ஆராய்கின்றார். அங்ஙனமே, இவர்தம் நடை இளம்பூரணர், நச்சினார்க்கினியர் ஆகியோர்தம் நடையை ஒட்டிச் செல்கின்றது. அன்றியும், விருத்தியுரை என்பதற்கு ஏற்ப பல புதிய விளக்கங்கள் இவருரையில் காணப்படுகின்றன.

    உரைநலன் :

              இவர்தம் உரைநலத்திற்குச் சான்றுகள் சிலவற்றைக் காட்டுதும் :-

    • சொல்லதிகார அதிகார விளக்கம் நுவலுங்கால், இளம்பூரணர், சேனாவரையர், நச்சினார்க்கினியர் ஆகிய மூவரினுஞ் சற்று விரிவாகக் கல்லாடனார், இவ்வதிகாரம் என்னுதலி எடுத்துக்கொள்ளப்பட்டதோவெனின், அதிகாரம் நுதலியதூஉம் அதிகாரத்தினது பெயர் உரைப்பவே விளங்கும். இவ்வதிகாரம் என்ன பெயர்த்தோவெனின், சொல்லதிகாரம் என்னும் பெயர்த்து. அஃது இடுகுறியோ காரணக்குறியோ எனின், காரணக்குறி. என்னை காரணம் எனின், சொல் உணர்த்தினமை காரணத்தின் என்பது. என்னை? கிளவியாக்கம் எழுவாயாக எச்சவியல் இறுதியாகக் கிடந்த ஒன்பது ஓத்துக்களுள்ளும் சொல்லின்கண் கிடந்த விகற்பம் எல்லாம் ஆராய்ந்தான் எனக் கொள்க (சொல். கல். நூ.1) என்று விரிவான விளக்கந் தருகின்றார். மாணாக்கர் நன்கு உளங்கொண்டு விளங்குதற் பொருட்டே இவர் இங்ஙனம் விரித்துரைக்கிறார்.
    • சொல் என்பதற்குப் பொருள் ஓசை எனக்கொள்ளும் கல்லாடனார், ஓசை என்று கூறியதால் கடலொலியும், காரொலியும், சங்கொலியும், விண்ணொலியும் சொல்லாகுமா? என்ற வினாவை எழுப்பிக் கொண்டு, ஓசையெனினும், அரவம் எனினும், இசையெனினும், ஒலியெனினும் எழுத்தானாம் ஓசைக்கும் எழுத்து அல் ஓசைக்கும் பொது. கிளவியெனினும், மாற்றம் எனினும் மொழியெனினும் இவையெல்லாம் எழுத்தொடு புணர்ந்து பொருளறிவுறுக்கும் ஓசைமேல் நிற்கும் (சொல். கல். நூ. 1) என்று விடை கூறுகின்றார். அங்ஙனமே, எழுத்தொடு புணராது பொருளறிவுறுக்கும் ஓசையும் உளவோ வெனின்? என வினவிக்கொண்டு, உள. அவை முற்கும் வீளையும், இலதையும், அணுகரணமும் என்றித் தொடக்கத்தன. அவை சொல் எனப்படா. பொருளறிவுறுக்கும் எழுத்தொடு புணராவோசை மேலதன்றாராச்சி (சொல். கல். நூ. 1) என விடையிறுக்கும் இவர், எழுத்தல் ஓசையும், எழுத்தொடு புணராது பொருளையறிவிக்கும் ஓசையும், எழுத்தொடு புணர்ந்து பொருளையறிவிக்கும் ஓசையும், எழுத்தொடு புணர்ந்தே பொருளையறிவுறுத்தாது இறிஞி, மிறிஞி என்றாற்போல் வரும் ஓசையும் (சொல். கல். நூ. 1) என ஓசையை நான்கு வகைப்படுத்தி, இந்நான்கனுள்ளும் பின்னின்ற இரண்டும் இவ்வதிகாரத்து ஆராயப்படுகின்றன என விரிவான விளக்கந்தருகின்றார். அன்றியும், ஏனைய ஓசைகள் சொல்லாகா என்று நச்சினார்க்கினியர் கூறியதனை உட்கொண்டே இவர் இங்ஙனம் விரிவாக உரைத்துள்ளார்.
    • ‘வினைப்பெயர் இடமாகத் தோன்றும் பாலறிவிக்கும் சொற்களும் ஏனைய பொருட் பெயரிடமாகத் தோன்றும் பாலறிவிக்கும் சொற்களும் ஒன்றனொடு ஒன்று தொடரும்பொழுது மயங்குதல் கூடாது; அவை தத்தம் இலக்கணத்தவேயாம்’ என்னுங் கருத்துடைய,

    “வினையிற் றோன்றும் பாலறி கிளவியும்
    பெயரிற் றோன்றும் பாலறி கிளவியும்
    மயங்கல் கூடா தம்மரபினவே(சொல். கிளவி. நூ. 11)

    எனவரும் நூற்பாவிற்கு உரைபகரும் இவர், எழுவகை வழுக்களுடைய பெயரும் முறையும் தொகையும் தனிமுறையில் ஆசிரியர் எச்சூத்திரத்திலும் கூறவில்லை; உரைகளிலேயே கூறப்பட்டுள்ளன என்றுரைத்து, ”எழுவகை வினாவிற்கும் இஃதோர் பொது விதி கூறியது” எனவும், சிறப்பு விதி வேறு வேறு கூறிற்று எனவும் உரைத்து, ஏனைய வழுக்களும் அவ்வவ்சூத்திரத்திற்குரிய இடங்களில் விளக்கம் பெறுகின்றன என்றும் கூறி, ஒழிந்த திணைபால் இடங்கட்கு விதி னஃகான் ஒற்று முதலிய சூத்திரங்களால் கூறிற்றெனவுணர்க. இவ்வாறு நூல் நயமாதல் இச்சூத்திரத்துரையிட் கண்டுகொள்க (சொல். கல். நூ. 11) என்பதனால் தொல்காப்பிய நூன் நயத்தைத் தெளிவிக்கின்றார்.

    • முற்படக் கிளத்தல் செய்யுளுள் உரித்தே(சொல். கிளவி. நூ. 39)

    என்ற நூற்பா, ’சுட்டுப்பெயரை முற்படக் கூறுதல் செய்யுளுள் உரித்தாகும்’ என, மேற்சூத்திரத்தில் கூறிய விதிக்குப் பிறிதொரு விதி வகுக்கிறது. இந்நூற்பாவிற்கு, அவனணங்கு நோய் செய்தான் ஆயிழாய்! வேலன் எனத் தொடங்கும் பாடலொன்றை உரையாளர் யாவரும் மேற்கோளாகக்காட்டி, இதனுள் ’சேந்தன்’ என்பது இயற்பெயர்; அவன் என்பது சுட்டு என்பதால் இயற்பெயருக்கு முன் விரவுப்பெயர் கூறப்படினும் இது செய்யுளென்பதால் ஏற்கப்படும் என்று உரையாளர் யாவரும் ஒருமுகமாக உரைக்கின்றனர். கல்லாடனார் மட்டும் முன்கூறல்…நேர்ந்தவாறு ஆயிற்று… (சொல். கல். நூ. 39) என்பதால் முற்படக் கூறலாகாது எனப்பட்ட சுட்டுப்பெயர் செய்யுளில் முற்படக்  கூறப்படினும் மொழிமாற்றிப் பொருள் கொள்ளப்படும். ஆகலின், செய்யுளில் முற்படக்கூறல் ஏற்றுக்கொள்ளப்பட்டது என்று சிறப்புப் பொருள் உரைத்துள்ளமை ஈண்டுக் குறிக்கத்தக்கது.

    • கிளவியாக்கத்திற்குப் பின் வேற்றுமையியல் வைக்கப்பட்டதற்கான முறைவைப்பைக் கூறுங்கால், இளம்பூரணர் கருத்தைத் தழுவி இவ்வியலின் இயைபு கூறும் கல்லாடனார், மேலோத்தினோடு இவ்வோத்து இயைபு என்னையோவெனின் என வினவிக்கொண்டு, “மேல் ஓத்தினுள் நான்கு வகைப்பட்ட சொற்களையும் பொருள்கண்மேலாமாறு சொல்லிப் போந்தார். அவற்றுள் முதலாவது பெயர்ச்சொல் அதற்கிலக்கணம் உணர்த்திய எடுத்துக்கொண்டார் என்பது. யாங்ஙனம் உணர்த்தினாரோவெனின், எல்லாப் பெயர்களும் எழுவாயாகியப் பயனிலை கோடலும், ஒருவழி எழுவாயாகாது வேறோர் நிலைமையவாய் நிற்றலும், காலந்தோன்றாமை நிற்றலும், ஒருவழித் தொழிற்பொருளொடு கூறியக்கால் காலந்தோன்றி நிற்றலும், விளியேற்று நிற்றலும், சிலபெயர் விளியேலாது நிற்றலும் இன்னோரன்ன பிறவும் பெயரது இலக்கணம் எனவுணர்த்தினாரென்பது (சொல். கல். நூ. 63) எனப் பெயரின் இலக்கணம் ஆசிரியரான் உணர்த்தப்பட்ட பான்மையை நன்கு தெளிவித்ததுடன் “பொது இலக்கணமேயன்றி உருபிலக்கணம் உணர்த்தினாரால் எனின், அவ்வாராய்ச்சியும் பெயரது இலக்கணமாய் விடுதலுடைமையின் அமையுமென்பது என்று நுண்ணிதின் விளக்கியுள்ளமை ஏனையுரையாளரினும் வேறுபட்டதாம்.
    • ’வேற்றுமை மயங்கியல்’ என அவ்வியல் பெயர் பெற்றதற்குக் கல்லாடனார் கூறும் காரண விளக்கம் சிறப்புடையதாம். அவர் கூறுவதைக் கேண்மின் :-

    ”இவ்வோத்து என்ன பெயர்த்தோ வெனின் உருபும் பொருளும் உடன் மயங்குதலும், ஒருவழி யுருபே மயங்குதலும், ஒன்றற்குரியதனோடு ஒன்று மயங்குதலும், இரண்டும் ஒத்து மயங்குதலும், ஒரு பொருண்மை ஒன்றற்கே யுரியதாகாது பலவற்றோடு மயங்குதலும், ஓர் உருபு பலவுருபோடு மயங்குதலும், ஒன்றனது ஒரு  பொருளோடு ஒன்று மயங்குதலும், ஒன்றனது பல பொருளோடு ஒன்று மயங்குதலும், ஒன்றற்குரிமை பூண்டு எடுத்தோதின பொருள்வழி மயங்குதலும், ஓதாத பொருள்வழி மயங்குதலும், ஒன்றதன் மரபாய் மயங்குதலும், இலக்கண வழிக்குள்வழி மயங்குதலும், இலக்கண மல்வழி மயங்குதலும், மயக்க வகையான் மயங்குதலும், சொல்லுதல் வகையான் மயங்குதலும், ஒன்றனோடு பொருள் முடிந்து தொடர்ந்தடுக்கி மயங்குதலும், ஒன்றனோடு பொருள் முடியாது தொடர்ந்தடுக்கி மயங்குதலும், தொகையுள் மயங்குதலும், தொகையில் மயங்குதலும், உருபு வேற்றுமையால் மயங்குதலும், உருபும் உருபும் மயங்குதலும் என்று இன்னோரன்ன பல மயக்கங்கள் கூறலின் வேற்றுமை மயங்கிய லென்னும் பெயர்த்தாயிற்று (சொல். கல். நூ. 86) என்பது இவர் கூறும் விரிவான விளக்கமாகும்.

    • இயற்பெயர், சினைப்பெயர், சினைமுதற்பெயர், முறைப்பெயர் என்பவற்றைக் ’கள்’ விகுதி சேர்த்துப் பன்மையாற் கூறல் வேண்டும். ஆயின், தொல்காப்பியனார் ஒருமையாற் கூறியது என்னை? என்பதை விளக்கும் கல்லாடனார், இயற்பெயர் முதலாக முறைப்பெயர் ஈறாக ஓதினவெல்லாம் பலவெனினும் ஞாபக வகையான் ஒன்றெனப்பட்டன (சொல்.  கல். நூ.177) என்பதனான், ஞாபகப்படுத்தல் என்னும் உத்தியால் ஒருமையிற் கூறினார் என அமைதி காட்டி ஆசிரியர் கருத்தே வலியுடைத்து என நிறுவும் பகுதி ஏனைய உரைகளிற் காணாத்தாம்.
    • ’அகரமும் ஆகாரமும் வகர உயிர்மெய்யுமாகிய ஈற்றையுடைய அக்கூற்று மூன்று சொல்லும் அஃறிணைப் பன்மைப் படர்க்கை வினையாம்’ என்பதனை விளக்கும்,

    ”அ ஆ வவென  வரூஉ மிறுதி
    அப்பான் மூன்றே பலவற்றுப் படர்க்கை(சொல். வினை. நூ. 18)

    எனவரும் சூத்திரத்திற்கு உரைபகரும் கல்லாடனார், அஃறிணை வினைதான் ஒருமைவினையும் பன்மைவினையும் என இருவகைத்து; அவற்றுள் பன்மை வினையை இந்நூற்பாவான் உணர்த்துகிறார் ஆசிரியர் எனக் கூறி, ஒருமையே முன்னையது. எனில், அஃறிணைப் பன்மை வினைமுற்று ஒருமை வினைமுற்றின் முன் கூறப்பட்டதன் ஏது என்னை? என்பதனை விளக்கும் வகையில், யாண்டும் ஒருமையை முன்கூறின் அதற்கோர் சிறப்புண்டுகொல் என்பது படும் என்று முந்து மொழிந்ததன் தலை தடுமாற்று என்பதோர் தந்திரவுத்தியும் உண்டாதலான் இவ்வாறு கூறினான் என்க (சொல். கல். நூ.218) எனக் காரணங்கூறுகிறார். அஃதாவது, ஒருமையையே யாண்டும் முற்கூறுவதனால் அதற்குத் தனிச்சிறப்புண்டு  எனக் கருதப்படுமாகலான் அஃறிணைப் பன்மை வினைமுற்று முற்கூறப்பட்டது என்பதாம். அங்ஙனமே, இதனை, இவர் முந்து மொழிந்ததன் தலை தடுமாற்று என்னுந் தந்திரவுத்தியுளடக்குகின்றார் இவர் என்பதும் சுட்டத்தக்கதாம்.

    • ”இடையெனப் படுப பெயரொடும் வினையொடும்

    நடைபெற் றியலுந் தமக்கியல் பிலவே” (சொல். இடை. நூ. 1)

    எனவரும் நூற்பாவிற்குக் கல்லாடனார் வழங்கிய சிறப்புரை ஈண்டு நோக்கத்தக்கதாம். அவ்வுரை வருமாறு :

    ”இச்சூத்திரத்தின் பொருண்மையும் இலேசின் பொருண்மையும் இடைச்சொற் கிளவியும் உரிச்சொற் கிளவியும்என்ற சூத்திரத்துள்ளும் அதன் இலேசினுள்ளும் அடங்குமால் எனின், அது நிரல் நிறை வாய்பாட்டதாக பாற் பெயரெனப்பட்டு வரும் என்றும் வினையொடு உரிவரும் என்றும் கொள்ளக் கிடந்தமையின், இடையும் இரண்டொடும் வரும் என்றற்குக் கூறினார் என்பது (சொல். கல். நூ.251) மேலுங்கூறுவாராய், இனி அவ்விலேசு நிரனிறைச் சூத்திரத்த தாகலாற் புறத்து வழி வருதல் இடைச்சொற்காகவும் உள்வழி வருதல் உரிச்சொற்காகவும் கொள்ளக் கிடக்கும் என்பது கருதி, ஈண்டும் இருவகையானும் இடைவரும் என்பதற்கு இலேசு கூறினார் போலும் என நன்கு துணிதற்கியலாது ஐயுற்றுரைக்கின்றார்.

    போலும் வாய்பாடு :

    முன்னைய உரையாளர்கள் குறிப்பிடாத பல ஆய்வுகளை ஆராய்தற்கு எடுத்துக்கொண்ட இவர், அங்ஙனம் ஆராயுங்கால் உறுதியாக இன்னது என்று துணிதற்கியலாதவற்றை; ஐயப்பாடுடையனவற்றைப் போலும் என்னும் வாய்பாட்டால் குறிப்பிடுகின்றார். இங்ஙனம், இவர் துணிதற்கியலாது கூறிய இடங்களாக இவருரையில் ஏறத்தாழ 40 இடங்கள் உள. இப்பகுதிகளான் இவர்தம் சால்பு ஒருவாற்றான் வெளிப்படுகின்றது.
    இன்னும், இவர் இரு கருத்துக்களைக் கூறி, இரண்டனுள் நல்லது தெரிந்து உரைக்க(சொல். 210) என்றும், தமக்கு உறுதியாகத் தெரிந்த காரணத்தை மட்டும் உரைத்துப் பிறிதுகாரணம் உண்டாயினும் அறிந்திலம் (சொல். 222) என்றும் அருகி உரைத்தலும் உண்டு என்பதும் ஈங்குக் குறிப்பிடற்பாலதாம்.

    முடிபுகள் :

              இதுகாறுங் கூறியவற்றைத் தொகுத்து நோக்கின்,

    • தொல்காப்பியத் தொண்டர்கள் எனத்தகும் உரையாசிரியர்கள், ஆசிரியர் தொல்காப்பியனாரின் உளக்குறிப்பை உய்த்துணர்ந்து தெளிய அறிவிக்கும் நுண்ணறிவுடையோர்.
    • தொல்காப்பிய நிலைபேற்றுக்கும், தொல்காப்பியக் கல்வி பரவலுக்கும் உரையாளர்களின் உரைகளும் அன்னோர் மேற்கொண்ட உரைமுறைகளும் பெருங்காரணமாம்
    • தொல்காப்பியத்தின் மூன்றதிகாரங்களுள் சொல்லதிகாரம் ஒன்றே அறுபெறும் உரையாளர்களின் உரைகளைக் கொண்டது; இது சொல்லதிகாரத்திற்கே வாய்த்த பேறாகும்
    • இளம்பூரணர், நச்சினார்க்கினியர் உரைகளைத் தழுவிச் செல்வதாய் கல்லாடனாருரை தோன்றிடினும் அவ்விருவர் உரைகளிலும் சேனாவரையர் உரையிலும் காணப்படாதனவாகிய பல அரிய கருத்துக்கள் இவருரையில் காணலாகின்றன.
    • விருத்தியுரை என்பதற்கு ஏற்ப பல புதிய விளக்கங்களை இவ்வுரை கொண்டுள்ளது.
    • தாம் ஆராயப்புக்க இடங்களிற் நன்கு துணிதற்கியலாதனவற்றை போலும் என்னும் வாய்பாட்டால் இவர் குறிப்பிடுமாற்றான் இவர்தம் சால்பு ஒருவாற்றான் வெளிப்படுகின்றது.
    • இவருரையால் முன்னைய உரையாளர்களின் கருத்துக்கள் நன்கு தெளிவுறுகின்றனவாம்.
    • அன்றியும், இடையியல் பத்தாம் நூற்பாவிற்குப் பின்னுள்ள பகுதிகட்கு இவ்வுரைதானும் கிட்டாமற் போயினமை தொல்காப்பிய ஆய்வுலகிற்குப் பேரிழப்பேயாம்.

    என்னும் முடிபுகள் இக்கட்டுரையான் பெறலாகின்றன எனக்கூறி நிறைவு செய்வாம்.

    துணை நின்ற நூல்கள்:

    1. தொல்காப்பியம், சொல்லதிகாரம், இளம்பூரணம், (கு. சுந்தரமூர்த்தியவர்கள் விளக்கவுரையுடன்) சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை. மறுபதிப்பு – 1973.

    2. தொல்காப்பியம், சொல்லதிகாரம், சேனாவரையம், (ஞா. தேவநேயப்பாவாணர் மற்றும் ஆ. பூவராகம்பிள்ளை விளக்கவுரையுடன்), சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை. மறுபதிப்பு – 1970.

    3. தொல்காப்பியம், சொல்லதிகாரம், சேனாவரையம், (கு. சுந்தரமூர்த்தியவர்கள் விளக்கவுரையுடன்) அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணாமலை நகர், முதற்பதிப்பு – 1981.

    4. தொல்காப்பியம், சொல்லதிகாரம், சேனாவரையம், சி. கணேசையர் பதிப்பு, வடஇலங்கைத் தமிழ்நூற் பதிப்பகம், சுன்னாகம், இலங்கை, முதற்பதிப்பு – 1978.

    5. தொல்காப்பியம், சொல்லதிகாரம், நச்சினார்க்கினியம், இராமகோவிந்தசாமிப் பிள்ளை பதிப்பு, சரசுவதி மகால் நூலகம், தஞ்சாவூர், முதற்பதிப்பு – 1997.

    6. தொல்காப்பியம், சொல்லதிகாரம், நச்சினார்க்கினியம், (கு. சுந்தரமூர்த்தியவர்கள் விளக்கவுரையுடன்) சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை. மறுபதிப்பு – 1962.

    7. தொல்காப்பியம், சொல்லதிகாரம், தெய்வச்சிலையம், கரந்தைத் தமிழ்ச்சங்கப் பதிப்பின் நிழற்படப் பதிப்பு, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர், மறுபதிப்பு – 2010.

    8. தொல்காப்பியம், சொல்லதிகாரம், தெய்வச்சிலையம், (கு. சுந்தரமூர்த்தியவர்கள் விளக்கவுரையுடன்) சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, முதற்பதிப்பு – 1963.

    9. தொல்காப்பியச் சொல்லதிகாரக் குறிப்பு, பி.சா. சுப்பிரமணிய சாத்திரியார் விளக்கவுரை 38, பாண்டியன் சந்து, தெப்பக்குளம், திருச்சி. முதற்பதிப்பு – 1930.

    10. தொல்காப்பியம் – சொல்லதிகாரம் – உரைக்கொத்து (தொகுதி-1), தி.வே. கோபாலையர். (ப.ஆ.) சரசுவதி மகால் நூலகம், தஞ்சாவூர்,  முதற் பதிப்பு – 2007.

    11. தொல்காப்பியம் – சொல்லதிகாரம் -ஆராய்ச்சிக் காண்டிகையுரை, ச. பாலசுந்தரம். (உ.ஆ.), பெரியார் பல்கலைக்கழகம், சேலம், முதற்பதிப்பு – 2012.

    12. மாணிக்கம். வ.சுப., தொல்காப்பியக்கடல், மணிவாசகர் பதிப்பகம், சென்னை, முதற்பதிப்பு – 1987.


    ஆய்வறிஞர் கருத்துரை (Peer Review):

    “தொல்காப்பியச் சொல்லதிகாரக் கல்லாடனாருரையின் உரைப்போக்கும் உரைநலனும்’ என்னும்  தலைப்பில் அமைந்த இக்கட்டுரையைப் பலமுறை பயின்று கட்டுரையின் அனைத்துக் கூறுகளையும் உள்வாங்கி ‘வல்லமை’ முன்மதிப்பீட்டு விதிகளைக் முழுமையாகக் கருத்திற்கொண்டு செய்யப்படும் மதிப்பீடு

    • ஆசிரியர் கல்லாடனார் உரைச்சிறப்புப் பற்றிய இவ்வாய்வுக் கட்டுரை முழுமையாக ஆய்வுப் பொருளை உள்வாங்கி ஆய்வுநெறிப்படி அமைக்கப்பட்டுள்ளது.
    • சொல்லதிகார முதல் நான்கு இயல்களுக்கே அன்னார் உரை கிட்டியிருப்பதால் ஆய்வுத் திறனை நன்கு வெளிப்படுத்தற்கு ஏதுவாக ஆய்வுக்களத்தைச் சுருக்கமாகவும் ஆழமாகும் அமைத்துக் கொள்கிறார்.
    • வேற்றுமை மயக்கம் என்பதற்கு உரையாசிரியர் தரும் மயக்கங்களை உள்ளவாறே நிரல்படுத்திக் காட்டியிருப்பது கட்டுரையைக் கற்பாருக்கு ஓர் இலக்கியச் சுவையை நல்குவதாக அமைந்திருக்கிறது.
    • இடைச்சொல் இலக்கணத்தை நூற்பா ஒன்றின் இலேசினால் பெறவிருக்க, பின்னும் கூறியதற்கு உரையாசிரியர் கூறும் காரணமும், பன்மையை ஆசிரியர் தொல்காப்பியர் முன்னெடுத்ததற்கு உரையாசிரியர் கூறும் காரணமும் கட்டுரையாசிரியரால் நன்கு விளக்கப்பட்டுள்ளன.
    • ”முற்படக் கிளத்தல் செய்யுளுள் உரித்தே” என்னும் நூற்பாவிற்கு ஏனைய உரையாசிரியர்களிடமிருந்து தாம்  மாறுபடுவதற்கான சூழலைக் கல்லாடனார் விளக்கியுரைத்ததை நயம்பட எடுத்துக் கூறுகிறார்.
    • ‘ஓசை’ என்பதற்கான நால்வகை விளக்கங்களையும் தானும் புரிந்து, பிறரையும் புரிந்துகொள்ள வைக்கும் கட்டுரையாசிரியரின் தனித்திறன் போற்றுதற்குரியது.
    • ‘ஆய்தலே இக்கட்டுரை ஆராயக்கொண்ட ஆய்பொருளாம்.’ என்னும் தொடரில் ஆய்தல் என்னும் தொழிற்பெயர், பொருளாம் என்னும் பெயரோடு இயையாமை நோக்குதற்குரியது.
    • ‘எழுவாயாகியப் பயனிலை கோடலும், “ஏனைய உரைகளிற் காணாத்தாம்’ எனத் தொடர்களில் அமைந்துள்ள அச்சுப் பிழைகள் நீக்குதற்குரியன. கணிப்பொறி காலத்தில் தட்டச்சுப்பிழை ‘தலைப்பிழை’ என்பதை உணர்தல் வேண்டும். ஆய்வில் சகித்துக்கொள்ள முடியாதது எழுத்துப்பிழை.
    • ”இயற்பெயர் முதலாக முறைப்பெயர் ஈறாக ஓதினவெல்லாம் பலவெனினும் ஞாபக வகையான் ஒன்றெனப்பட்டன” என்னும் பகுதியில் ‘ஞாபகம்’ என்னும் உத்தி எடுத்துக்காட்டுடன் விளக்கப்பட்டிருக்க வேண்டும்.
    • உரைப்போக்கும் உரைநலனும் என்பதே கட்டுரையின் மையப்பொருளாயினும் ஒப்பீட்டு முறைத் திறனாய்வே இத்தகைய கட்டுரைகளின் பொருள் விளக்கத்திற்கு ஏற்றது என்பதை அறிதல் வேண்டும். பொதுவாக ‘மாறுபடுகிறார்’ என்பதனின் குறிப்பிட்டுச் சொல்வது கட்டுரைக்கு வலுச்சேர்க்கக் கூடும்.
    • “இளம்பூரணர், நச்சினார்க்கினியர் உரைகளைத் தழுவிச் செல்வதாகும். எனினும், அவ்விருவர் உரைகளிலும் சேனாவரையர் உரையிலும் காணப்படாதனவாகிய  பல அரிய கருத்துகள் இவருரையில் காணலாகின்றன. என்பதற்கு எடுத்துக்காட்டுகள் வேண்டாமா?
    • விளக்கப்படும் நூற்பாக்களின் பொருண்மைக்கேற்ப கட்டுரையில்  துணைத்தலைப்புகள் இடம் பெற்றிருந்தால்  ஆய்வுப் பொருண்மையும் அளவும் இன்னும் தெளிவாகியிருக்கக்கூடும்.
    • இலக்கிய ஆய்வு என்றால் நாளேடுகளின் மொழிநடை’ என்றும் ‘கிழமை இதழ்களின் நான்கு வரிக் கவிதைகள்’ என்றும் ஆகிவிட்ட தமிழாய்வு பெரும்பரப்பில் இத்தகைய கட்டுரைகள் பெரிதும் போற்றுதற்குரியன. இவை கட்டுரையாசிரியரின் தனிப்போக்கு என்பதும் தனிச்சிந்தனை என்பதும் தெளிவாகத் தெரிகின்றன. .
    • ‘என்வழி தனிவழி’ எனத் தற்காலத் தமிழ்ப் பேராசிரியர் ஒருவர் செவ்வியல் இலக்கியங்களிலும் இலக்கணங்களிலும் தடம் பதிக்க முயல்கிறார் என்பது இக்கட்டுரையால் தெளிவாகிறது. வாழ்த்துகள்!

    Share
  • (Peer Reviewed) மெய்யுரைகண்ட தெய்வச்சிலையாரின் உரைமரபுகள்

    (Peer Reviewed) மெய்யுரைகண்ட தெய்வச்சிலையாரின் உரைமரபுகள்

    டாக்டர்.  வே.விக்னேசு
    தமிழ்  உதவிப்பேராசிரியர்,
    பூ. சா. கோ. கலை அறிவியல் கல்லூரி,
    கோயம்புத்தூர்641014.
    vignesh@psgcas.ac.in
    9597203214.

    தோற்றுவாய் :

    உயர்தனிச் செம்மொழியான தமிழ்மொழி இலக்கிய வளமும் இலக்கண வரம்பும் உடையதாம். தமிழ்மொழிக்கு இலக்கண வரம்புரைக்கும் நூல்களுள்ளும் தலைமைசான்றது தொல்காப்பியமேயாம். எழுத்து, சொல், பொருள் என்னும் மூன்றதிகாரப் பகுப்பொடு தொல்காப்பியரால் இயற்றப்பெற்ற இவ்வரிய நூலின் இடையதிகாரமாம் சொல்லதிகாரத்திற்கு உரைகண்ட உரையாசிரியர் பலராவர். அவருள்ளும் இற்றைக்கு அச்சிற்பதிப்பிக்கப்பட்ட பழையவுரைகளென இளம்பூரணர், சேனாவரையர், நச்சினார்க்கினியர், தெய்வச்சிலையார், கல்லாடனார், பெயரறியப்படாத பழையவுரைகாரர் ஒருவர் ஆகிய அறுவருரைகளே கிட்டியுள. அவ்வகையில், உரையெழுதுதல் வழியாக மூலநூலைப் போற்றிக்காத்த இவ்வுரையாசிரியப் பெருமக்களுள் தொல்காப்பியச் சொல்லதிகாரத்திற்கு மட்டுமே உரைகண்ட தெய்வச்சிலையாரின் உரைப்போக்கையும் உரைமரபுகளையும் இக்கட்டுரை சுருங்க விளக்க முற்படுகின்றது.

    தொல்காப்பிய உரையாசிரியர்கள் :

    தொன்மைத் தமிழிலக்கண நூலான தொல்காப்பியத்திற்குக் கிட்டிய பழையவுரைகளுள் இளம்பூரணருரையே பழமையானது; நூல் முழுமைக்கும் கிடைத்துளது. நச்சினார்க்கினியருரை எழுத்து, சொல், பொருளில் முன்னுள்ள அகத்திணை, புறத்திணை, களவு, கற்பு, பொருள் என்னும் ஐந்தியல்களுக்கு மட்டுமே கிடைத்துளது. எஞ்சிய பொருட் பகுதியாகிய மெய்ப்பாடு, உவமம், செய்யுள், மரபு என்னும் நான்கியல்கட்குப் பேராசிரியருரையே கிடைத்துளது. மற்றைய பகுதிகட்குப் பேராசிரியருரை கிடைத்திலது. அன்றியும், நச்சினார்க்கினியருரையும், பேராசிரியருரையும் இயைந்து ஒருவருரையாகத் தொல்காப்பியப் பொருளதிகாரம் முழுமைக்கும் அமைந்துள்ளது. அங்ஙனமே, நடுநின்ற சொல்லதிகாரத்திற்கு முன் சுட்டிய அறுவருரைகள் கிடைத்துள.

    தமிழிலக்கிய இலக்கணங்களுள் உரை பலவாக வாய்க்கப்பெற்ற நூல்களுள் தொல்காப்பியமும் ஒன்றாம். தொல்காப்பியரின் உளக்கிடக்கையை உணர்ந்து உலகிற்குணர்த்தச் சான்றோர் பெருமக்கள் பலரும் காலந்தோறும் முயன்றதன் விளைவே தொல்காப்பியத்தின் உரைப்பெருக்கத்திற்குக் காரணமாம். இவ்வகையில், ’தொல்காப்பியமும் சங்க நூல்களும் கி.பி. நான்காம் நூற்றாண்டுக்குப் பின் தமிழகத்தில் ஏற்பட்ட அரசியல் மாற்றத்தால் கல்வியுலகிற் பரவாதிருந்தன’ என்றும், ’கி.பி. 11-ஆம் நூற்றாண்டுக்குப் பின் தொல்காப்பிய இயக்கமும் சங்கவிலக்கிய மறுமலர்ச்சியும் தோன்றின’ என்றும் உரைக்கும் வ. சுப. மாணிக்கனார், தொல்காப்பிய இயக்கம் பற்றியும், தொல்காப்பியக் கல்வி பரவியமை பற்றியும் கூறும் கருத்துக்கள் இவண் நோக்கத்தக்கனவாம். அவர் கூறுமாறு:

    இவ்வியக்கத்தின் தலைவர் இளம்பூரணர்; உரையாசிரியர் என்ற கீர்த்தியைத் தமக்கே உரிமை கொண்டவர். நேராப் புகழ்மைப் பேராசிரியரும், ஆனாப் பெருமைச் சேனாவரையரும், மெய்யுரை கண்ட தெய்வச்சிலையாரும், உச்சிமேற்புலவர் நச்சினார்க்கினியரும், சொல்லுரைகண்ட கல்லாடனாரும் இவ்வியக்கத்தின் படையாளர்கள். இப்பேரியக்கம் மூன்று நான்கு நூற்றாண்டுகள் தொல்காப்பியக் கல்வியைக் கற்றாரிடைப் பரப்பியது (தொல்காப்பியக்கடல், ப. 264) என்பது அவர் கருத்தாம்.

    இன்னவகையில், தொல்காப்பிய நிலைபேற்றுக்கும், தொல்காப்பியக் கல்வி பரவலுக்கும் உரையாசிரியர்களின் உரைகளும் அன்னோர் மேற்கொண்ட உரைமுறைகளும் பெருங்காரணமாம்.

    சொல்லதிகாரத்திற்கு வாய்த்த பேறு :

    எழுத்து, சொல், பொருள் என நிற்கும் தொல்காப்பியத்தில் நடுநின்ற சொல்லதிகாரத்திற்கு மட்டும் பழையவுரைகளென மேற்சுட்டிய அறுவருரைகள் உள. அஃதேல், எழுத்து, பொருள் என்பவற்றினும் இடையதிகாரமாம் சொல்லதிகாரத்திற்கு மட்டும் உரைகள் பல தோன்றியது என்னை? என்ற வினா எழுகின்றது. எழுத்ததிகாரத்தினும், பொருளதிகாரத்தினும் விட இலக்கணங் கற்போர்க்குச் சொல்லதிகாரம் இன்றியமையாதது ஆதலானும், அதற்கு விரிவான விளக்கமும் வேண்டப்பட்டதாலும், ’சொல்’ பற்றிய கருத்து வேற்றுமை மிக்கிருத்தலானும் உரையாசிரியர் பலர் இச்சொல்லதிகாரத்திற்குத் தனித்தனியே உரை வரைந்தனர் எனல் தகும். இப்பேறு சொல்லதிகாரத்திற்கே வாய்த்த பேறாகும்.

    தொல்காப்பியச் சொல்லதிகார ஆராய்ச்சி இடைக்காலத்துச் சிறப்புற்று விளங்கியமை போன்றே, பதினேழாம் நூற்றாண்டில் மீண்டும் அவ்வாராய்ச்சித் தொடங்கியது. இவ்வகையில், பின்னங்குடி. சா. சுப்பிரமணிய சாத்திரியார் சொல்லதிகாரப் பழையவுரையாசிரியர்களின்  உரைக்குறிப்புக்களையும் தம் ஆய்வு முடிபுகளையும் கொண்ட, தொல்காப்பியச் சொல்லதிகாரக் குறிப்பு என்னும் பெயரிய நூலை 1930-இல் வெளியிட்டார். சொல்லதிகார மூலத்தையும் உரைகளையும் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தார் பதிப்பித்தபொழுது, இளவழகனார், ஞா. தேவநேயப்பாவாணர், ஆ. பூவராகம்பிள்ளை, கு. சுந்தரமூர்த்தி போன்றோரின் குறிப்புரைகளுடனும் விளக்கவுரைகளுடனும் பதிப்பித்து வெளியிட்டனர்.

    தொல்காப்பியச் சொல்லதிகாரம் மேற்சுட்டிய அறுவருரைகளுடன் உரைவளப் பதிப்பு என்னும் முறையில் பல பதிப்புகள் வெளிவந்துள. ஆபிரகாம் அருளப்பன், வி.ஐ. சுப்பிரமணியம் ஆகிய இருவரும் இணைந்து பதிப்பித்தத் ‘தொல்காப்பியம்-சொல்லதிகாரம், உரைக்கோவை (1963) என்னும் நூல் இவ்வகையில் முன்னோடியாகும். இவ்வுரைக்கோவையிலும் கிளவியாக்கம் முதலாக விளிமரபு ஈறாக நான்கு இயல்களைக் கொண்ட முதற்பாகம் மட்டுமே வெளிவந்துளது. தொல்காப்பிய நூல் வெளியீட்டுத் திட்டத்தின் மூலம் சொல்லதிகார அறுவருரைகளையும் சேர்த்தும், ஆ. சிவலிங்கனாரின் ஆய்வுரையுடனும் உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட ‘தொல்காப்பியம்-சொல்லதிகாரம் உரைவளமும் தி.வே. கோபாலையரின் விளக்கவுரையுடன் தஞ்சை சரசுவதி மகால் நூலகத்தராலும், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தாராலும் வெளியிடப்பட்ட தொல்காப்பியம் சொல்லதிகாரம் உரைக்கொத்துஎனும் உரைவளப்பதிப்பும் இவ்வகையில் சுட்டத்தக்கதாம்.

    தொல்காப்பியச் சொல்லதிகாரத்தையும் நன்னூல் சொல்லதிகாரத்தையும் ஒப்பிட்டு, பல விளக்கங்களையும், குறிப்புக்களையும் சேர்த்து, தொல்காப்பியம்-நன்னூல்- சொல்லதிகாரம் (1971) என்ற தலைப்பில் க. வெள்ளைவாரணர் இயற்றிய நூலும் தொல்காப்பியம் முழுமைக்கும் ஆராய்ச்சிக்காண்டிகையுரை வரைந்து ச.பாலசுந்தரனார் வெளியிட்ட தொல்காப்பியச் சொல்லதிகார ஆராய்ச்சிக்காண்டிகையுரை’ நூலும் தொல்காப்பியச் சொல்லதிகாரத்திற்கு அ.கு. ஆதித்தர் தெளிவுரையெழுதி வெளியிட்ட தொல்காப்பியம்-சொல்லதிகாரம்-ஆதித்யம் (1977) என்ற நூலும் தொல்காப்பியச் சொல்லதிகார ஆராய்ச்சியின் தொடர் பணிகளெனச் சுட்டத்தக்கனவாம். இவற்றையடுத்தும் பல எளிய உரைகள் தொடர்ந்து வெளிவந்து கொண்டுள்ளன.

    இனித் தொல்காப்பியச் சொல்லதிகாரத்திற்கு உரைபகன்ற தெய்வச்சிலையாரின் உரைப்போக்கும் உரைமரபுகளும் ஆய்ந்துரைக்கப் பெறுகின்றன.

    மெய்யுரைகண்ட தெய்வச்சிலையார் :

    தொல்காப்பியச் சொல்லதிகாரத்திற்கு உரைகண்ட சான்றோருள் ஒருவர் தெய்வச்சிலையாராவர். இவ்வுரையாசிரியர் சொல்லதிகாரத்திற்கு மட்டுமே உரை செய்தவராவர்.  இளம்பூரணர், சேனாவரையர், நச்சினார்க்கினியர் இம்மூவர் காலத்திற்குப் பிற்பட்டவரிவர்.  பாண்டிநாட்டில் தோன்றியவர்.

    பதிப்பு வரலாறு :

    தொல்காப்பியச் சொல்லதிகாரத் தெய்வச்சிலையாருரை முதன்முதலாக, கரந்தைத் தமிழ்ச்சங்கத்துச் சார்பில், கரந்தைக் கவியரசு அரங்க. வேங்கடாசலம்பிள்ளை அவர்களால் அரிதின் முயன்று பதிப்பிக்கப்பட்டு விரிவான பிற்சேர்க்கையுடன் 1929-ஆம் ஆண்டில் வெளியிடப்பெற்றது.

    கரந்தைக் கவியரசு அவர்கட்கு முதலில் ஓர் ஏடு கிடைக்க, அவ்வேட்டின் இறுதியில் ஆத்திரேய கோத் என்னுஞ் சொற்கள் இருந்தன என்பதால் இது ஆத்திரேய கோத்திரத்துப் பேராசிரியர் உரையென்று பேரறிஞர் சிலர் எழுதியுளது பற்றி, முதலில் இந்நூலுக்குப் பேராசிரியர் உரையெனும் பெயர் தந்திட்டதுடன் அதுகொண்டே நூல் முழுவதும் பதிப்பித்து விட்டார்கள். பின், உ.வே. சாமிநாதையரவர்களிடம் இவ்வுரையேடொன்று இருப்பது அறிந்து அதனை வேண்டிப் பெற்று, அவ்வேட்டில் கண்ட வேறுபாடுகளையெல்லாம் பிற்சேர்க்கையாக இணைத்து, நூலின் பெயரையும் உ.வே. சாமிநாதையரவர்கள் தந்த ஏட்டின் முன்னும் பின்னும் கண்டாங்கு தெய்வச்சிலையார் உரை எனக் கொண்டு பதிப்பித்துள்ளார்கள். இவ்வுரையேடு அச்சிட்ட வரலாற்றினைக் கரந்தைக்கவியரசு அவர்கள் பதிப்புரையின்கண் விரிவாகக் கூறியுள்ளார்கள். அதனைக் கேண்மின்:-

    இதன்கண் பல்வகையான பிழைகளும் மலிந்திருத்தல் கூடுமென யான் உணரேனல்லேன்; உணர்ந்தஞ்சேனல்லேன்; அஞ்சி அஞ்சியும் அச்சிட்டது, ஒன்றே ஒன்றைக் கருதியதாகும். அஃதாவது, இதில் என் மனமாரச் செய்த ஆக்கல், அழித்தல், திரித்தல் முதலாய செய்கைகள் இலவாகலின், நாளும் நாளும் பழுது பட்டொழிந்துவரும் இவ்வேட்டின் ஒருநேர் பிரதியாக இது நின்று, பிற்காலத்து அச்சிடும் பெரியார்கட்கு ஒருவாறு உதவி செய்யும் என்று எண்ணியதொன்றேயாகும். ஒரு பெரிய நூலை அச்சிட்டதொரு பிழையினை இது பற்றியேனும் தமிழுலகம் பொறுத்திடுவதாக (சொல். தெய். பதிப்புரை. ப.10) என்ற அரும் பண்பு நடையால் இந்நூலை அச்சிடுதற்கு அப்பெருமகனார் அஞ்சியதும் அறியலாகின்றது. அன்றியும், அவர் கூறியாங்கே, தெய்வச்சிலையாருரையைப் பிற்காலத்து அச்சிட்ட பெரியவர்கட்கு இப்பதிப்பே ஒருநேர் பிரதியாக நின்றுதவியது என்பதும் ஈங்குக் குறிப்பிடத்தக்கதாம்.

    பின்னர், இவ்வுரை சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தாரால் கு. சுந்தரமூர்த்தி அவர்களின் விளக்கவுரையுடன் 1963-ஆம் ஆண்டில் வெளியிடப்பெற்றது. பின்னர், கரந்தைத் தமிழ்ச்சங்கப் பதிப்பின் தெய்வச்சிலையாருரை, நிழற்படப் பதிப்பாகத் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தாரால் 1984-ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது. இந்நூலின் மறு அச்சு 2010-இல் வெளிவந்துளது.

    உரைநலம் :

    தெய்வச்சிலையாருரை ஏனையுரைகளினும் பல்வேறு சிறப்புக்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது. இவ்வுரை சொல்லழகும் பொருளழகும் திட்ப நுட்பமும் வாய்ந்ததாம். பிறவுரைகளிற் காணப்படாத பல அருஞ் செய்திகள் இவ்வுரையில் காணலாகின்றன.

    கிளவியாக்கத்தின் தொடக்கத்தில் சொல்லதிகாரத்தின் ஒவ்வோர் இயலுக்குமுள்ள இயைபைக் கூறும் முறையாலும், தகுதியும் வழக்கும் (சொல். 17), உருபென மொழியினும் (சொல். 24), தன்மை சுட்டலும் (சொல். 25) என்பனபோன்ற நூற்பாக்களின் உரைகளானும், பத்துவகை எச்சங்களுக்கு இவர் வரைந்துள்ள உரையானும் இவ்வுரையாசிரியர் நுண்ணிய அறிவுடையவர் என்பது புலனாகின்றதாம்.

    எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பதினெண்கீழ்க்கணக்கு, சிலப்பதிகாரம், மணிமேகலை, சூளாமணி ஆகிய நூல்களிலிருந்து பல மேற்கோள்களை இவர் எடுத்துக்காட்டுவதனின்று,  இந்நூல்களில் இவருக்கிருந்த இலக்கியப்புலமை நன்கறியலாகின்றது. சேனாவரையரையொப்ப இவ்வுரையாசிரியரும் வடமொழி இலக்கியங்களிலும் வல்லவரென்பது சொல் 66, 68, 81, 87, 106, 408, 410 ஆகிய நூற்பாக்களுக்கு இவர் வரைந்துள்ள உரைகளான் தெளிவாகின்றது.

    சமயச் சார்பான எடுத்துக்காட்டுகளைத் தருதல் :

    இவ்வுரையாசிரியர், மன்னாப் பொருளும் அன்ன இயற்றே (சொல். 34) என்னும் நூற்பாவிற்கு எடுத்துக்காட்டு வழங்குங்கால், ”வேதாகமத் துணிவு ஒருவர்க்கு உணர்த்துமிடத்து உலகும் உயிரும் பரமும் அனாதி; பதியும் பசுவும் பாசமும் அனாதி எனவரும் உலகும் உயிரும் பரமும் பசுவும் பொருந்தும் பொருள் ஆனவாறும், பாசமும் பதியும் இவற்றொடு பொருந்தாத பொருள் ஆனவாறும் காண்க என்று குறிப்பிடுகின்றார். இதனான் இவரின் சைவசித்தாந்தச் சாத்திர அறிவு புலனாகின்றது.

    அங்ஙனமே, பெயர்நிலைக் கிளவியின் ஆஅகுநவும் (சொல். 438) எனவரும் நூற்பாவில் மந்திரப் பொருள்வயின் ஆஅகுநவும் என்ற பகுதிக்கு எடுத்துக்காட்டாக, மண்ணைச் சுமந்தவன் தானும் வரதராசன் மகன்தானும், எண்ணிய வரகாலி மூன்றும், இரண்டு மரமும், ஓர்யாறும் திண்ணம் அறிய வல்லார்க்குச் சிவகதியதனைப் பெறலாமேஎன்ற திருவைந்தெழுத்தைப் பொருண்மையாக உடைய பாடலைக் காட்டி, இதனுள் மண்ணைச் சுமந்தவன் – ந, வரதராசன் மகன் – ம, வரகாலிமூன்று – சி, இரண்டு மரம் – வா, ஓர்யாறு – ய எனக் கூற நமச்சிவாய எனப் பொருளாயிற்று என்று விளக்கியுள்ளார். இஃது, சிவபெருமான்பால் இவர் கொண்ட பற்றினை விளக்குவதாம்.

    உரைப்போக்கு :

    இளம்பூரணர் முதலானோர் உரைப்போக்கினின்றும் தெய்வச்சிலையார் உரைப்போக்கு வேறானதாம். இவருரை அதிகார விளக்கம், இயல்விளக்கம், இயல் இயைபு, கருத்துரை, பொருளுரை, எடுத்துக்காட்டு, விளக்கம் என்னும் அமைப்பினது. இவர் அதிகார விளக்கங் கூறுங்கால் தனியே கூறினாரல்லர்; கிளவியாக்க முதல் நூற்பாவினையடுத்தே கூறுகின்றார். ஒவ்வோரியலிற்கும் உள்ள இயைபினைப் புலப்படுத்துகின்றார். கருத்துரை வழங்குங்கால் இளம்பூரணரைப் போன்று இச்சூத்திரம் என்னுதலிற்றோ வெனின் என வினா எழுப்பிக் கூறாமல், நூற்பா நுதலியதை மட்டும் கூறி நுதலிற்று என முடிக்கின்றார்.

    கிளவியாக்க முதல் நூற்பாவிற்குக் கடாவிடை யுள்ளுறுத்து உரைவிரிக்கும் இவர், அந்நூற்பா உரையின் நிறைவில், இனி இச்சூத்திரத்திற்குப் பிறவாற்றானும் கடாவிடை யுள்ளுறுத்து உரைப்பிற் பெருகும் என அமைகின்றார். அங்ஙனமே, இவர் ஒவ்வோரியலின் நிறைவிலும் உரையினது அளவைக் கிரந்த வகையால் இவ்வளவு என்று கணக்கிட்டு உரைக்கின்றார்.

    மறுப்புநலம் :

    இவ்வுரையாசிரியர் எவர் பெயரையும் எவ்விடத்தும் கூறினாரல்லர். அங்ஙனமே, இவர் பெயரையும் பிறவுரையாளர்கள் குறிப்பிடவில்லை. இவர், தம் கொள்கையைக் கூறிச் செல்லும் இயல்பினரே அன்றிப் பிறர் கொள்கையைக் கூறி அவர்களைப் பெயர் சுட்டி மறுத்துரைக்கும் இயல்பினரல்லர். இவர் பிறரை மறுக்கும் இடங்கள் சொல். நூ. 1,32, 87, 100, 441, 62, 404 என்னும் ஏழிடங்களேயாம். இவற்றுள் முதல் இரு இடங்கள் இளம்பூரணரையும், அடுத்த மூவிடங்கள் இளம்பூரணரைத் தவிர ஏனையுரைகளை மறுத்துரைத்தனவாம். எஞ்சியுள்ள மறுப்புக்கள் இன்றுள்ள சொல்லதிகார உரைகள் எவற்றுக்கும் பொருந்துவனவாய் இல்லை. இங்ஙனமாக, பிறர் கொள்கையை மறுத்த இடங்களில் எவர் பெயரையும் குறிப்பிடாமல் இவர் மறுத்துச் செல்லும் மறுப்புநலம் இவரின் தனிச் சிறப்பாம்.

    நூற்பாக்களின் அமைப்பு :

    இளம்பூரணர், சேனாவரையர், நச்சினார்க்கினியர் ஆகிய மூவரும் கொண்ட நூற்பாக்களின் பாடம், அடிகள், முறைவைப்புக்கும் இவருரைக்கும் பலவிடங்களில் வேறுபாடுகள் காணலாகின்றன. அம்மூவரும் கொண்ட நூற்பா அமைப்பினையும் இவர் மாற்றியுள்ளார். அஃதாவது, நூற்பாக்களை ஒன்றாக்கல், பலவாக்கல், நூற்பாவினை இடம் மாற்றியமைத்தல் என்பனவாம். ஒரு நூற்பாவை இரண்டாக்கியும், சில நூற்பாக்களை இணைத்து ஒரே நூற்பாவாக்கியும் உரை செய்துள்ளார். இங்ஙனம் இணைத்தும் பகுத்தும் உரைகாண்பது மட்டுமன்றி,  சில நூற்பாக்களை இவர் இடமாற்றியும் அமைத்துள்ளார்.

    இவர் செய்த நூற்பா இடப்பெயர்வுகளுள் சிலவற்றைக் கூறுவல் :

    எச்சவியலிலுள்ள இறப்பின் நிகழ்வின் (எச்ச.31) எவ்வயின் வினையும் (எச்ச.32), அவைதாந், தத்தங்கிளவி (எச்ச.33) என்னும் மூன்று நூற்பாக்களும் முற்று வினைச் சொல்லின் இலக்கணம் கூறுபவை. ஆயின், இவற்றைத் தெய்வச்சிலையார் வினையிலக்கணமாதல் ஒப்புமை பற்றி வினையியலிறுதியில் 242, 243, 244 -ஆம் நூற்பாக்களாக வைத்து உரையெழுதியுள்ளார். இங்ஙனம் மாற்றியமைத்ததற்குத் தக்க காரணமும் 241-ஆம் நூற்பா உரையின் இறுதியில் கூறுகின்றார். அவ்வுரையுள், வினைக்கு இன்றியமையாத முற்றினை ஒழிபியல் கூறுகின்றுழிக் கூறிய அதனாற் பெற்ற தென்னை எனின், அஃது எமக்குப் புலனாயிற்றன்று என்று இவர் உரைத்துள்ளமையும் கருதத்தக்கதாம்.

    இங்ஙனமே, எச்சவியலிலுள்ள இசைநிறை எனத் தொடங்கும் 15-ஆம் நூற்பாவை 26-ஆம் நூற்பாவாகவும், வேற்றுமை மயங்கியலில் அதுவென் வேற்றுமை எனத் தொடங்கும் 11-ஆம் நூற்பாவையும், ஆறன் மருங்கின் எனத் தொடங்கும் 15-ஆம் நூற்பாவையும் இடப்பெயர்வு செய்து அச்சக்கிளவிக் எனத் தொடங்கும் நூற்பாவினை அடுத்து ஒன்றன்பின் ஒன்றாக 15,16-ஆம் நூற்பாக்களாக வைத்து உரை செய்துள்ளார் என்பதும் இவண் சுட்டத்தக்கதாம்.

    முடிபுகள் :

               இதுகாறுங் கூறியவற்றைத் தொகுத்து நோக்கின்,

    • தொல்காப்பியத் தொண்டர்கள் எனத்தகும் உரையாசிரியர்கள், ஆசிரியர் தொல்காப்பியனாரின் உளக்குறிப்பை உய்த்துணர்ந்து தெளிய அறிவிக்கும் நுண்ணறிவுடையோர்.
    • தொல்காப்பிய நிலைபேற்றுக்கும், தொல்காப்பியக் கல்வி பரவலுக்கும் உரையாளர்களின் உரைகளும் அன்னோர் மேற்கொண்ட உரைமுறைகளும் பெருங்காரணமாம்
    • தொல்காப்பியத்தின் மூன்றதிகாரங்களுள் சொல்லதிகாரம் ஒன்றே அறுபெறும் உரையாளர்களின் உரைகளைக் கொண்டது; இஃது சொல்லதிகாரத்திற்கே வாய்த்த பேறாகும்
    • அன்றியும், தொல்காப்பியச் சொல்லதிகாரத் தெய்வச்சிலையாருரை ஏனையுரைகளினும் பல்வேறு சிறப்புக்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது.
    • இவ்வுரையாசிரியரின் பரந்துபட்ட இலக்கண இலக்கிய ஆராய்ச்சிநலமும் வடமொழிப்புலமையும் பிறவுரைகளிற் காணாதனவாய் இவர் வரைந்த சிறப்புரைகளான் தெள்ளிதிற் புலனாம்.
    • சமயச்சார்பான எடுத்துக்காட்டுக்களை இவர் காட்டியுள்ள பான்மையை நோக்குழி, இவர்தம் சமயப்பற்றும் வேண்டுழியெல்லாம் அதனை வெளிப்படுத்தும் நுண்மையும் நேரிதின் விளங்குகின்றதாம்.
    • பிறவுரைகளைப் பெயர்சுட்டி மறுக்காத அரும்பண்புடைய மறுப்புநலனும் ஆசிரியர் ஓதிய சூத்திரங்களைத் தான் இடப்பெயர்வு செய்தமைக்கு இவர் பகன்றுள்ள ஏதுக்கள்தாமும் பல்வேறு மேலாய்வுகளுக்கு இட்டுச் செல்வனவாம்.

    என்னும் முடிபுகள் இக்கட்டுரையான் பெறலாகின்றன எனக்கூறி நிறைவு செய்வாம்.

    துணை நின்ற நூல்கள் :

    1. தொல்காப்பியம், சொல்லதிகாரம், இளம்பூரணம், (கு. சுந்தரமூர்த்தியவர்கள் விளக்கவுரையுடன்) சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை. மறுபதிப்பு – 1973.
    1. தொல்காப்பியம், சொல்லதிகாரம், சேனாவரையம், (ஞா. தேவநேயப்பாவாணர் மற்றும் ஆ. பூவராகம்பிள்ளை விளக்கவுரையுடன்) சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை. மறுபதிப்பு – 1970.
    1. தொல்காப்பியம், சொல்லதிகாரம், சேனாவரையம், (கு. சுந்தரமூர்த்தியவர்கள் விளக்கவுரையுடன்) அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணாமலை நகர், முதற்பதிப்பு – 1981.
    1. தொல்காப்பியம், சொல்லதிகாரம், சேனாவரையம், சி. கணேசையர் பதிப்பு, வடஇலங்கைத் தமிழ்நூற் பதிப்பகம், சுன்னாகம், இலங்கை, முதற்பதிப்பு – 1978.
    1. தொல்காப்பியம், சொல்லதிகாரம், நச்சினார்க்கினியம், இராமகோவிந்தசாமிப் பிள்ளை பதிப்பு, சரசுவதி மகால் நூலகம், தஞ்சாவூர், முதற்பதிப்பு – 1997.
    1. தொல்காப்பியம், சொல்லதிகாரம், நச்சினார்க்கினியம், (கு. சுந்தரமூர்த்தியவர்கள் விளக்கவுரையுடன்) சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை. மறுபதிப்பு – 1962.
    1. தொல்காப்பியம், சொல்லதிகாரம், தெய்வச்சிலையம், கரந்தைத் தமிழ்ச்சங்கப் பதிப்பின் நிழற்படப் பதிப்பு, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர், மறுபதிப்பு – 2010.
    1. தொல்காப்பியம், சொல்லதிகாரம், தெய்வச்சிலையம், (கு. சுந்தரமூர்த்தியவர்கள் விளக்கவுரையுடன்) சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, முதற்பதிப்பு – 1963.
    1. தொல்காப்பியச் சொல்லதிகாரக் குறிப்பு பி.சா. சுப்பிரமணிய சாத்திரியார் விளக்கவுரை 38, பாண்டியன் சந்து, தெப்பக்குளம், திருச்சி. முதற்பதிப்பு – 1930.
    1. தொல்காப்பியம் – சொல்லதிகாரம் – உரைக்கொத்து (தொகுதி-1),  தி.வே. கோபாலையர். (ப.ஆ.) சரசுவதி மகால் நூலகம், தஞ்சாவூர்,  முதற் பதிப்பு – 2007.
    1. தொல்காப்பியம் – சொல்லதிகாரம் -ஆராய்ச்சிக் காண்டிகையுரை, ச. பாலசுந்தரம். (உ.ஆ.), பெரியார் பல்கலைக்கழகம், சேலம், முதற்பதிப்பு – 2012.
    1. மாணிக்கம். வ.சுப., தொல்காப்பியக்கடல், மணிவாசகர் பதிப்பகம், சென்னை, முதற்பதிப்பு – 1987.

    ஆய்வறிஞர் கருத்துரை (Peer Review):

    ‘மெய்யுரை கண்ட தெய்வச்சிலையாரின் உரைமரபுகள்’ என்னும்  தலைப்பில் அமைந்த இக்கட்டுரையைப் பலமுறை பயின்று கட்டுரையின் அனைத்துக் கூறுகளையும் உள்வாங்கி ‘வல்லமை’ முன்மதிப்பீட்டு விதிகளைக் முழுமையாகக் கருத்திற்கொண்டு செய்யப்படும் முன் மதிப்பீடு

    1. தெய்வச்சிலையாரின் உரைச்சிறப்புப் பற்றிய இவ்வாய்வுக்கட்டுரை முழுமையாக ஆய்வுப் பொருளை உள்வாங்கி அமைக்கப்பட்டுள்ளது. 
    1. ‘உரைமரபுகள்’ என்பதே கட்டுரையின் மையப் பொருளாயினும் அது தொடர்பாக ஆய்வாளர் எடுத்து மொழிந்திருக்கும் ஏனைய உரையாசிரியர்கள், சொல்லதிகார உரைகள், அவற்றின் வரலாறு, சொல்லதிகார உரைப்பதிப்புகள் முதலியன கட்டுரைக்குக் கூடுதல் அடர்த்தியை அளிக்கின்றன. 
    1. பொருண்மைகளுக்குப் பொருத்தமாகக் கட்டுரையின் துணைத்தலைப்புக்கள் அமைந்திருப்பது ஆய்வுப் பொருளை  தெளிவாக அணுகத் துணைசெய்கிறது..
    1. பழந்தமிழ்த் தேட்டங்களைத் தேடியும் கண்டும் தொகுத்தும் வகுத்தும் பகுத்தும் செய்யும் ஆய்வுகள் அருகிய தற்காலத்தில் இத்தகைய கட்டுரைகள் பெரிதும் போற்றுதற்குரியன. 
    1. கட்டுரையில் குறிப்பிட வேண்டியது பொருண்மைக்கேற்ற மொழி நடை. எளிமை என்ற பெயரில் பொருண்மையை நீர்த்துப் போகச் செய்யும் மொழிநடை தவிர்த்து செப்பமான மொழிநடையைக் கடடுரையாசிரியர் பின்பற்றியிருப்பது குறிப்பிடத்தக்கது. 
    1. ‘தெய்வச் சிலையாரின் உரைமரபுகள்’ என்பதே ஆய்வுப் பொருண்மையாயிருக்க, ‘மெய்யுரை கண்ட தெய்வச் சிலையார்’ என  அடைமொழி அளித்திருப்பது முடிவுக்குப் பின் ஆய்வோ என்னும் மயக்கத்தைத் தருகிறது. 
    1. தொல்காப்பியச் செய்யுளியலுக்கான ஆசிரியர் நச்சினார்க்கினியர் உரை, கழகம் மற்றும் தமிழ்மண் பதிப்பகத்தில் அண்மையில் மீண்டும் பதிப்பிக்கப்பட்டு உள்ளது என்பது சுட்டப்படுகிறது. 
    1. ‘உரைமரபுகள் என்னும் தலைப்புக்கேற்ப ஒரு குறிப்பிட்ட நூற்பாவின் உரையைப் பெருமதிப்பு வாய்ந்த சேனாவரையர் உள்ளிட்ட உரையாசிரியர்தம் உரை மரபுகளோடும் உரைப்பகுதியோடும் ஒப்பிட்டு நோக்கியிருந்தால் கட்டுரை இன்னும் சிறந்திருக்கக் கூடும். 
    1. ‘பதிப்பித்தத் தொல்காப்பியம்’ ‘ஒப்பிட்டு பல’ என்னும் இடங்களில் உள்ள ஒற்றுப்பிழைகள் நீக்குதற்குரியன. பெயரெச்செங்களில் வல்லினம் மிகாது.

    தேவை, தெளிவு, சுருக்கம், அடர்த்தி, செம்மை ஆகிய பண்புகளைக் கொண்டு, ஆய்வு நெறிப்படி இந்தக் கட்டுரை அமைக்கப்பட்டுள்ளது. ஆய்வாளருக்குப் பாராட்டுகள்.


    Share
  • மாண்புள்ள மு.வ. போற்றிய நல்லாசான் முருகைய முதலியார்

    மாண்புள்ள மு.வ. போற்றிய நல்லாசான் முருகைய முதலியார்

    டாக்டர் வே. விக்னேசு,
    தமிழ் உதவிப்பேராசிரியர்,
    பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி,
    கோயம்புத்தூர் –
    14.
    9597203214.
    vigneshrathinam432@gmail.com

     

    ********* 

    பறந்துபோய் மலையுச்சியை அடைவோம் என்று சொல்கின்றவர்களைப் பார்த்து ஏங்கி நிற்பது வீண். படிப்படியாக நடந்து ஏறி மலையுச்சியை அடைகின்றவர்களைப் பார்த்து பின்பற்றுவதே கடமை.– (காந்தி அண்ணல் – மு.வ. – ப. 8)

    தோற்றுவாய் :

        எளிய குடும்பத்தில் பிறந்து உழைப்பால் உயர்ந்து சிந்தனைச் சிறப்பாலும் தொண்டாலும் உலகத்தோர் நெஞ்சில் நிறைந்து வாழும் சான்றோர் உயர்திரு. டாக்டர் மு.வரதராசனார் அவர்களாவார். தம் வாழ்வைப் பிறர்கற்றுப் பயன்பெறுமாறு எடுத்துக்காட்டான வாழ்வினராய் வாழ்வாங்கு வாழ்ந்த மு.வ. அவர்களின் உயரிய வாழ்வில் இருபெருஞ் சான்றோருக்குச் சீரிய இடமுண்டு. ஒருவர் தமிழ்முனிவர் திரு.வி.க. அவர்கள். மற்றுமொருவர் மு.வ. அவர்களைத் தமிழ் படிக்கத்தூண்டி மாலை வேளைகளில் முருகன் கோயில் முன்றிலில் சில நூல்களைக் கற்பித்து, அவரை நன்கு உருவாக்கிய சான்றோரான முருகைய முதலியார் அவர்களாவார். இச்சான்றோர் பெருந்தகையால் ஊன்றப்பெற்ற தமிழ்வித்தே மு.வ. அவர்களைத் தாமே தமிழ்பயிலச் செய்து தமிழ்ச்சான்றோராக்கியது எனல் தகும்.

    மு.வ.வின் ஆசிரியப்பெருமக்கள் :

    தமிழகத்தின் வடபகுதியிலமைந்த வடார்க்காடு மாவட்டத்திலமைந்த வாலாஜாப்பேட்டை நகர இரயில் நிலையத்திற்கு அருகிலமைந்துள்ள வேலம் என்னும் அழகிய சிற்றூரே மு.வ. அவர்களின் சொந்த ஊராம். திருப்பத்தூரே மு.வ.அவர்களின் பிறந்த ஊராம். மு.வ. அவர்கள் தொடக்கப்பள்ளிக் கல்வியை வேலத்திலும் உயர்நிலைப்பள்ளிக் கல்வியைத் திருப்பத்தூரிலும் பெற்றார்கள். ஆசிரியர் போற்றும் நன்மாணாக்கராகத் திகழ்ந்து ஆசிரியரின் அன்பிற்கும் பாராட்டிற்கும் உரியவராக விளங்கிய மு.வ. அவர்கள் பெரிதும் மதித்துப்போற்றிய ஆசிரியப்பெருமக்கள் மூவர். அவருள் தொடக்கப்பள்ளியில் மு.வ.வின் ஆசிரியராக விளங்கியவர் அமைதியே உருவான பாலப்பிள்ளை அவர்கள். மு.வ.வைச் சிறந்த மாணாக்கனாக உருவாக்கிய பெருமை இவருக்கு உண்டு.

    மு.வ.வின் ஆசிரியர்களுள்  மற்றுமொருவர் திருவேங்கடத்தையங்கார் என்பார். மு.வ.வின் மீது மிகுந்த அன்பு கொண்ட இவர் கணித ஆசிரியராவார். கற்பித்தப் பாடம் தமிழிலக்கணம். தம் ஆசிரியப்பற்றி அவரின் மாணவரான மு.வ. கூறுகின்றார்:-

    “யான் ஆறாம் வகுப்பில் கற்றபோது எனக்குத் தமிழ் இலக்கணம் கற்பித்தவர் கணக்கு ஆசிரியர். அவர் தமிழ் கற்றுத் தேர்ந்தவர் அல்லர்; வடமொழியைப் பாடமாகக்கொண்டு தேர்ந்து கணக்கு ஆசிரியராக வந்தவர். ஆயினும், தமிழ் வகுப்பு அவரைத் தமிழ் கற்கத் தூண்டியது. அவர் நடத்திய வகுப்பில் இலக்கணப் பகுதி வரும்போதெல்லாம் மாணவர்க்குப் பேரச்சம் ஏற்படும். ‘இலக்கணக் கேள்விகளுக்கு நன்றாக விடை எழுதுவோர்க்கு நல்ல மார்க்குத் தருவேன். அப்படித்தான் இவன் என்னிடம் 60,65 என மார்க்கு வாங்குகிறான்’ என்று மற்ற மாணவரிடம் கூறுவார். ஆனால் யான் தவறு செய்யும் போதெல்லாம் தண்டனையும் இரட்டிப்பாகத் தருவது அவர் வழக்கம்… அவர் 60,65 என உயர்ந்த எண்களும், தவறியபோது இரட்டிப்புத் தண்டனையும் கொடுத்த கொடையே என்னை இன்று தமிழ்க்கடலுள் திளைக்கச் செய்துள்ளது என நினைந்து நன்றியுடையேனாகும் போது என் உள்ளம் குளிர்கின்றது” (மொழியியற் கட்டுரைகள் – மு.வ.-பக். 35,36) மு.வ.வைத் தமிழ்ச்சான்றோராக மாற்றுவதற்கு உரமிட்டத் திருவேங்கடத்தையங்காருக்கு நாமும் நன்றிபாராட்டுங் கடப்பாடுடையோம்.

    மு.வ. தமிழ்ப்பேராசிரியராகக் காரணமாக அமைந்தவர் அவருக்கு உயர்நிலைப்பள்ளியில் தமிழாசிரியராக அமைந்த முருகைய முதலியார் என்பார். மு.வ.வின் மீது  மிகுந்த அன்பு கொண்ட இவரின்பால் மு.வ.விற்கு அளப்பரிய அன்புண்டு. தம் தமிழாசிரியப்பெருமானின் அருங்குணங்களை உன்ன உன்ன உள்ளம் உருகும் மு.வ., தம் ஆசிரியரைப்பற்றி உவகைபெருகக் கூறுகின்றார். அவர் கூறுமாறு:-

    “ஆறு மாதத் தேர்வு முடிவு வந்தது; விடுமுறையும் கழிந்தது; பள்ளிக்கூடம் திறந்த நாள் அது. மாணவர்கள் மகிழ்ச்சியோடு ஒருவரை ஒருவர் கண்டு அளவளாவினார்கள். மணி அடித்தது. எட்டாம் வகுப்பில் நானும் மற்றவர்களும் விரைந்து போய் ‘இடம்பிடித்து’ இருந்தோம். தமிழ்ஆசிரியர் வந்தார். உயர்ந்த பண்புகளுக்கெல்லாம் உறைவிடமான அவரைக் கண்டதும் எங்கள் மகிழ்ச்சி தெய்வத்தன்மை பெற்றுவிட்டது. வழக்கம்போல் முன்னுரையாக இன்மொழி பேசித் தமிழமுது ஊட்டினார்(மொழியியற் கட்டுரைகள் -மு.வ.-ப. 118) இவ்வகையில், இம்மூன்று ஆசிரியப் பெருந்தகைகளே மு.வ.வை நன்கு உருவாக்கியதில் குறிப்பிடத்தக்கவர்களாவர்.

    முருகைய முதலியார்:

          மேற்குறித்த மூன்று ஆசிரியர்களுள் மு.வ. அவர்கள் பேரன்பு கொண்டு மதித்துப் போற்றிய நல்லாசான் மு.வ.வின் தமிழாசிரியரான முருகைய முதலியார் ஆவார். இவர் தாமே தமிழ்பயின்று 1912-விரோதிகிருது தைமாதம் 9,10,11ஆகிய நாள்களில் மதுரைத் தமிழ்ச்சங்கத்தார் நடத்திய தனித்தமிழ் தேர்வில் சிறப்புறத் தேர்ந்தவர். திருப்பத்தூர் நகராண்மைக்கழக உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றியவர். எவ்வித ஊதியமும் எதிர்பாராமல் ஆர்வமுள்ள மாணவர்களுக்கு வகுப்பிலே மட்டுமின்றி, இல்லத்திலும் வெளிப்புறங்களிலும் கல்விச்செல்வத்தை வாரி வழங்கும் வள்ளலாகத் திகழ்ந்தவர். இப்பெருந்தகையிடமிருந்து மு.வ. சமயநூல்களையும் நால்வர் நான்மணிமாலை முதலான சில நூல்களையும் பாடங்கேட்டார். பள்ளியிறுதித் தேர்வில் சிறப்புறத் தேர்ந்த மு.வ., திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் எழுத்தர் பணியை ஏற்றார். மிக்க பணிச் சுமையாலும் ஈளைநோயாலும்  அவதிப்பட்டு, வேலையைவிட்டு ஓய்வாக வேலத்திலிருந்த காலத்தில் மு.வ.வை அழைத்து ‘தம்பி நீ தமிழ் வித்துவான் கல்வி பயிலலாமே? நான் சொல்லித்தருகின்றேன் என்று அன்போடு இச்சான்றோர் பெருந்தகை கற்பித்தக் கல்வியே மு.வ.வை வித்துவான் தேர்வில் முதல்வகுப்பில் முதலாவதாகத் தேறி, திருப்பனந்தாள் காசிமடத்தினர் தமிழ் முதன்மைக்கு வழங்கிய 1000 ரூபா பரிசு பெறச்செய்தது எனல் மிகையன்றாம்.

    பள்ளியாசிரியர் மு.வ. :

      தாமே கற்றுத் தனிமுதன்மை பெற்ற மு.வ.விற்குத் தமிழாசிரியப்பணியும் தேடி வந்தது. ஆம்! தம் உள்ளங்கவர்ந்த தமிழய்யா முருகைய முதலியாரவர்கள் தாம் ஓய்வு பெற்றபோது அப்பணிக்கு மு.வ.வை அழைத்து அவரைத் தமிழாசிரியராக்கினார். எந்தப்  பள்ளியில் முருகைய முதலியாரிடம் உருகி உருகிப் பாடங் கேட்டாரோ அதே திருப்பத்தூர் நகராண்மை உயர்நிலைப் பள்ளியில் தாம் பெரிதும் மதித்துப் போற்றிய தம்முடைய தமிழாசிரியர் வகித்த அப்பணியினை ஏற்ற மு.வ. அவர்களின் உள்ளம் எத்துணைப் பூரிப்படைந்திருக்கும் என்று இயம்பவும் வேண்டுமோ!

    அழியா வாழ்வு :

         பொழுதுபோக்கிற்காக நாவல்களைப் படித்து வந்த நிலைமையை மாற்றி, சிந்தனையும் கற்பனையும் வளரும் வகையில், அறம் புகட்டும் வகையிலான நாவல்களைப் படைத்த குறிக்கோளுடைய நாவலாசிரியராக மிளிர்ந்தவர் மு.வ. ஆவார். வாழ்வைப் பற்றிய அவருடைய பார்வை, தத்துவம் என்றின்னவை இளைஞர்களாலும் பொதுமக்களாலும் பெரிதும் போற்றப்பட்டன; பின்பற்றப்பட்டன. இவரின் நாவல்கள் யாவும் குறிக்கோளுடைய கருத்தமைவு நாவல்களாகும். அன்றியும் கருத்தமைவு நாவல்களில் பாத்திரப் பண்பிற்கு அதிக முக்கியத்துவம் உண்டு. அவ்வகையில் மு.வ.வின் நாவல்களில் இடம்பெறும் பாத்திரங்களுள் பெரும்பான்மையான அவர்தம் கண்ணுக்குமுன் நடமாடியவர்களிடமிருந்து பிறந்துள்ளனவாம். தவிர, இவரின் நாவல்களில் முருகையா, சான்றோர் மெய்கண்டார், பேராசிரியர் நரேந்திரர், கமலக்கண்ணர் போன்ற அறச்சிந்தனையாளர்கள் சிலர், மனிதசிந்தனையின் பிரதிநிதிகளாகத் திகழ்கின்றனர். இவர்கள் யாவரும் மு.வ. தாம் பெரிதும் மதித்துப் போற்றிய தாம் நேரிற் கண்டு பழகிய சான்றோர்களாவர். இவ்வகையில், தமக்குத் தமிழ்ச் செல்வத்தை வாரி வழங்கிய வள்ளலாகவும் தமக்கெனவாழாப் பிறர்க்குரியாளராய்ப் பிறர்க்கு எடுத்துக்காட்டான வாழ்வினராய்த் தமக்குக் காட்சி வழங்கிய ஆசிரியர் முருகைய முதலியாரவர்களைத் தாம்படைத்த கள்ளோ? காவியமோ? வாடாமலர் என்னும் இரு நாவல்களில் முருகையா என்னும் பெருமகனாராகப் படைத்து அச்சான்றோர் பெருந்தகைக்கு அழியா வாழ்வு கொடுத்து உள்ளம் நிறைவு கொண்டார் மு.வ.

    முருகையா–முருகய்யா:

         தம் நெஞ்சை கவர்ந்த தம்முடைய ஆசிரியரான முருகைய முதலியாரின் நிழலுருவப் பாத்திரமாக மு.வ.வினால் படைக்கப்பட்ட முருகையா எனும் ஆசிரியர், கள்ளோ? காவியமோ?-வில் முருகையா’ என்றும் வாடாமலரில் ‘முருகய்யா’ என்றும் பெயர் மாற்றத்தோடு குறிப்பிடப்படுகின்றார். அன்றியும், முருகையா உயர்நிலைப் பள்ளியாசிரியர்; வயது முதிர்ந்தவர். முருகய்யா இளம் பருவத்தினர்; பள்ளிக்கூட ஆசிரியர்.

    முருகையா:

         கள்ளோ? காவியமோ? நாவலில் இடம்பெறும் ஆசிரியர் முருகையாகாலமறிந்து தம் கடமைகளைச் செய்யும் வழக்கம் கொண்டவர். மங்கை – அருளப்பன் ஆகியோர் திருமணத்தை எளிய, பொருத்தமான முறையில் நடத்தி வைக்கும் இவர், அவ் இணையரின் வாழ்க்கையில் ஏற்பட்ட பிணக்குத் தொடர்பாக அவர் கூறும் கருத்துக்கள் யாவரும் போற்றிப் பின்பற்றத்தக்கதாம். அவர் கூறுகின்றார்:-   

         “காதல் வாழ்க்கையில் ஒருவகைக் கண்மூடி வாழ்வு வேண்டும். குழந்தை போல் வாழ வேண்டும். தொடக்கத்தில்தான் ஆராய்ச்சி வேண்டும். பிறகு ஆயுள்வரைக்கும் ஆராய்ச்சியும் கூடாது; அறிவு மிகுதியாகக் கூடாது. ஒருவர் குற்றம் ஒருவருக்கு தெரியாத அன்பு வாழ்வு – கண்மூடி வாழ்வு – வேண்டும்.” (கள்ளோ? காவியமோ?-மு.வ.-ப.100) என்றுரைக்கும் அவர்,

    “நீ இப்போது அறிவை நம்புவதுதான் தப்பு. எல்லாம் படித்தும்,
    எல்லாம்தெரிந்தும் சிறுபிள்ளைபோல் நடக்கிறாய். இப்படித்தான்|வாழ்க்கை. ஒவ்வொரு வேளைஅன்புக்குச் சோதனைக்காலம் நடக்கும்.அப்போது அறிவைத்  தொலைவில் வைத்துவிட வேண்டும். கூர்ந்த அறிவெல்லாம் கொள்ளை கொடுக்க வேண்டும் என்று தாயுமானவர் சொன்னது கடவுளன்பரின் வாழ்க்கைக்கு மட்டும் அல்ல. காதலர் வாழ்க்கைக்கும் முழுவதும் பொருந்தும்” (கள்ளோ? காவியமோ? – மு.வ.- ப.103) என்பதனான், இல்வாழ்க்கையில் அன்பு இருக்க வேண்டுமேயன்றி, அறிவு இடம்பெறுதற் கூடாது. அறிவு பயனற்றது; அன்பு ஒன்றே பிணைக்க வல்லது என்னும் இவரின் அரிய கருத்துக்கள் இல்வாழ்க்கையில் பிணக்கு ஏற்படாமல் காக்கவல்லனவாம். இவ்வகையில், ஆசிரியர் முருகையாவின் அரும்பண்பு நலம் வெளிப்படுகின்றனதாம்.

    முருகய்யா :

    வாடாமலர் நாவலில் இடம்பெறும் ஆசிரியர் முருகய்யா இந்நாவலின் முதன்மைப் பாத்திரமான தானப்பனின் தங்கையான சுடர்விழியின் கணவர். மிக நல்லவர். தேவைகளை எவ்வளவு குறைக்கிறோமோ அவ்வளவுக்கு வாழ்க்கையில் சிக்கல் குறையும்; துன்பம் குறையும் என்னும் உயரிய கொள்கையினர். தேவைகளைக் குறைத்துக் கொண்டு நாட்டிலேயே வாழும் இந்தக் காலத்துத் தவ வாழ்வினர்.  செடியிலிருந்து பூப்பறிப்பதும் ஒரு குற்றம் என்று எண்ணுவது முருகய்யாவின் மனம். நன்மையே விளைவதானாலும் தப்பான வழி வேண்டாம். காலப்போக்கில் உண்மை வழியே காப்பாற்றும் என்னும் உயர் நெறியினர்.

    தானப்பனின் திருமணத்தில் கலந்து கொள்ளும் ஆசிரியர் முருகய்யா, தம் வாழ்க்கையைப் பற்றிய சில செய்திகளைக் குழந்தைவேலுவிடம் வெளிப்படுத்துகின்றார். எளிமையைப் போற்றி, எளிய ஆடைகளை விரும்பி, உடுத்தியபோது தம்மைப் பைத்தியக்காரர் என்று ஊரார் எள்ளி நகையாடிதையும் நாள் செல்லச் செல்லப் பலரும் தம்மை ஒப்பித் தம்மை அணுகி அறிவுரை கேட்பதாகவும் அவர் கூறுகின்றார். அன்றியும், எளிமை என்றால் உடலை மட்டுமல்லாமல் பதவி முதலிய எதற்கும் ஆசைப்படாமல் தேவையைக் குறைத்துக் கொண்டு வாழ்ந்தால் சுற்றுப்புறம் நம்புகிறது என்றும் மற்றவர்களைவிட ஒரு சிறப்பும் வேண்டாம், வாழ்க்கைக்குத் தேவையான எளிய உடை, எளிய உணவு, எளிய வீடு என்பவற்றைமட்டும் தேடிக்கொண்டு வாழ்ந்தால், சுற்றுப்புறம் நாளடைவில் நம்பி போற்ற முன்வருகிறது. நல்ல துறவிகளை நம்புவது போல் எளிய வாழ்க்கை வாழ்வோரையும் சமுதாயம் நம்புகிறது என்றும் தாமாக நன்மை தீமையை எண்ணிப்பார்த்து வாழ்கிறவர்கள் மிகச் சிலரே. அதனால் பலரைத் திருத்த முடியாமற் போகிறது. ஆனால், அதற்காகச் சோர்வு அடையக்கூடாது. நம் கடமையைச் செய்து விட்டுப் போக வேண்டும் என்றும் அவர் கூறுவதனின்றும் ஆசிரியர் முருகய்யாவின் உயரிய உள்ளமும் ஒரு நெறியான எளிய, தூய வாழ்வும் நன்கு புலனாகின்றதாம்.

    இறுவாய் :

          இன்னவகையான் கண்ணற்றுநோக்கில், எளிமையை ஓர் அறமாகப் போற்றியவரும் பலருக்கும் பயன்பட்ட தூய வாழ்வினரும், எளிமையைப் பின்பற்றுவதால் இன்று பயன் குறைவாகவே இருப்பதைப் பற்றிக் கவலைப்படாமல் கடமையைச் செய்து வருவோம்; செய்ய முடியாவிட்டால் சொல்லி வருவோம்; காலம் வரும்போது பயன்படும் என்றாங்குப் பயன் கருதாது பணிசெய்த முருகைய முதலியாரவர்களின் தூய வாழ்வும் அரும்பண்புகளுமே மாண்புள்ள மு.வ. படைத்த இரு நாவல்களில் ஆசிரியர் முருகையாவாக அழியா வாழ்வு பெற்றுள்ளது என்பது இனிதின் விளங்குகின்றதாம்.

    முதன்மைச் சான்று முலம் :
    1. வரதராசனார். டாக்டர் மு. – கள்ளோ? காவியமோ? – பாரி நிலையம்,சென்னை-8  (2008).
    2. வரதராசனார். டாக்டர் மு. – வாடாமலர், பாரி நிலையம், சென்னை-8 (2008).

     

     

    Share