Tag: பயன்மிகு இணையவழிச் சேவைகள்

  • பயன்மிகு இணையவழிச் சேவைகள் கட்டுரைப் போட்டி முடிவு

    அன்பினிய நண்பர்களே,

    Audacity-image-600x337

    சென்ற மாத (செப்டம்பர், 2015)  பயன்மிகு இணையவழிச் சேவைகள் கட்டுரைப் போட்டியில் திரு சிவானந்தம் கனகராஜ் அவர்களின் இணையவழி குரல் பதிவு மற்றும் ஒலிக் கோப்புகள் உருவாக்கத்திற்கான தளங்கள்  குறித்த கட்டுரை பரிசுக்குரியதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாக நடுவர் திரு ஐயப்பன்  அறிவித்திருக்கிறார். வாழ்த்துகள் நண்பரே.

    தொடர்ந்து போட்டிக்கான ஆக்கப்பூர்வமான கட்டுரைகளை வரவேற்கிறோம். நன்றி.

    Share
  • பயன்மிகு இணையவழிச் சேவைகள் – கட்டுரைப் போட்டி முடிவுகள்

    அன்பினிய நண்பர்களே,

    வணக்கம். சென்ற [ஆகஸ்ட், 2015] மாதத்திற்கான, பயன்மிகு இணையவழிச் சேவைகள்’ கட்டுரைப் போட்டிக்கான, நடுவர் திரு ஐயப்பன் கிருஷ்ணன் அவர்களின் முடிவை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறோம். பரிசு பெற்ற நித்திய லஷ்மிக்கு வாழ்த்துகள். இந்த மாத போட்டிக்குத் தயாராகிவிட்டீர்களா? விரைவில் தங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டுகிறோம். வாழ்த்துகள்.

    Google_Appliance

    ஐயப்பன் கிருஷ்ணன்

    கட்டுரையாளர் தந்திருக்கும் தகவல் மிக முக்கியமானது. தினசரி பயன்பாட்டில் நாம் தவறுதலாக இழக்கும் கோப்புகளைத் திரும்பப் பெற இந்தக் கட்டுரையில் சொல்லப் பட்டிருக்கும் மென்பொருட்கள் உதவும். நல்லதொரு கட்டுரை வழங்கிய எஸ்.நித்திய லக்ஷ்மிக்கு வாழ்த்துகள்.

    Share
  • பயன்மிகு இணையவழிச் சேவைகள் – கட்டுரைப் போட்டி முடிவுகள்

    அன்பினிய நண்பர்களே,

    வணக்கம். சென்ற [ஜூலை, 2015] மாதத்திற்கான, பயன்மிகு இணையவழிச் சேவைகள்’ கட்டுரைப் போட்டிக்கான, நடுவர் திரு ஐயப்பன் கிருஷ்ணன் அவர்களின் முடிவை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறோம். பரிசு பெற்றவர்களுக்கு வாழ்த்துகள். இந்த மாத போட்டிக்குத் தயாராகிவிட்டீர்களா? விரைவில் தங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டுகிறோம். வாழ்த்துகள்.

    Google_Appliance

    ஐயப்பன் கிருஷ்ணன்

    மூன்று கட்டுரைகளில் இரண்டின் பேசு பொருள் ஒன்றாக இருக்கிறது.

    திருமதி. சிவானந்தம் கனகராஜ். மற்றும் ​– எஸ். நித்யலக்ஷ்மி. இருவரும் இணையத்தில் ஆவண சேமிப்பு மற்றும் பகிர்தல் குறித்து தங்கள் பார்வையை வைத்திருக்கிறார்கள். இதில் திருமதி சிவானந்தம் கனகராஜ் தெளிவாக பல இணையத் தளங்களைக் குறித்து விளக்கமான பார்வையை வைத்திருப்பது சிறப்பு.

    இதையும் தவிர்த்த மிக முக்கியமான தளங்கள் உள்ளன. அவற்றையும் கட்டுரைகளில் கொண்டு வந்திருக்கலாம்.

    நித்தியலக்ஷ்மி தன்னுடைய இன்னொரு கட்டுரையில் தேடுபொறியின் நுட்பங்களை விவரித்துச் சென்றிருப்பது மிகுந்த பயனளிக்கும் ஒன்றாகும்.

    நித்தியலக்ஷ்மி மற்றும் திருமதி. சிவானந்தம் கனகராஜ். இருவரின் கட்டுரைகளுமே பயனுடையவை. ஆகவே இவ்விருவருக்கும் இந்த வெற்றியை சமமாக பகிர்ந்து அளிக்க விரும்புகிறேன்.

    வாழ்த்துகள்.

    Share
  • பயன்மிகு இணையவழிச் சேவைகள் ஏப்ரல் மாத கட்டுரைப் போட்டி முடிவு

    பவள சங்கரி

    அன்பினிய நண்பர்களுக்கு,

    Google_Appliance

    வணக்கம். சென்ற மார்ச் மாதம் (1, 2015)  ‘பயன்மிகு இணையவழிச் சேவைகள்’ என்ற போட்டியை அறிவித்திருந்தோம். சிறந்த கட்டுரை படைப்பவர்களில் மாதம் ஒருவருக்கு பரிசு வழங்குவதாக அறிவித்திருந்தோம். இந்த முறை திருமிகு பி. தமிழ்முகில் நீலமேகம் மற்றும் சுரேஜமீ எழுதிய இரு கட்டுரைகள் மட்டுமே வந்துள்ளது. இப்போட்டியின் நடுவர் திரு ஐயப்பன் அவர்களுக்கு பரிசீலனைக்காக அனுப்பியதில் அவர் இக்கட்டுரைகள் குறித்த தம் கருத்துகளை அளித்திருக்கிறார். திருமிகு தமிழ்முகில் நீலமேகம் அவர்களை இந்த மாத வெற்றியாளராக அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறோம். வருகிற மாதங்களில் இன்னும் பல பயனுள்ள கட்டுரைகள் வரும் என்று நம்புகிறோம்.

    திரு ஐயப்பன் அவர்களின் போட்டி முடிவு

     

    அன்பிக்கினிய அனைவருக்கும் வணக்கம்.

    வெளிநாடு சென்றிருந்த காரணத்தால் முடிவு அறிவிக்க நாளானது, மன்னிக்கவும்.

    இணையத்தின் பயன்பாடுகள் சேவைகள் என பல விஷயங்கள் இருக்கின்றன. அதில் முக்கியமான இரு சேவைகள் குறித்த கட்டுரைகள் வல்லமைக்கு வந்திருக்கின்றன.

    முதலாவதாக இணையத்தில் கிடைக்கும் இலவச புத்தகங்கள், நூலகங்கள், குறித்து திருமதி. தமிழ்முகில் நீலமேகம் தந்திருக்கும் விவரங்கள். அருமையான பல விவரங்களை தொகுத்து அளித்திருக்கிறார்.

    அடுத்த கட்டுரை இணையத்தில் சமூக வலைதளங்கள், அதில் இருக்கும் சாதக பாதங்கள், பாதுகாப்பு முறை என விரிந்து செல்லும் கட்டுரை. அருமையான தொகுப்பு சுரேஜமி. தொடர்ந்து எழுத என்னுடைய வாழ்த்துகள்.

    இரண்டுமே முக்கியமான கட்டுரைகள். இருந்தும் பலருக்குத் தெரியாமல் இருக்கும், இளைய தலைமுறைக்கு உந்துகோலாக, வாசிப்பைத் தூண்டவும், அறிவை விசாலமாக்கவும், பள்ளி, கல்லூரி, ஆய்வுகள் என அனைத்து வகையினருக்கும் உதவும் இணைய புத்தகங்களும் நூலகங்களும் குறித்த கட்டுரை என்னளவில் வெற்றி பெற்ற கட்டுரையாகிறது. வாழ்த்துகள் திருமதி தமிழ்முகில்

    Iyappan Krishnan

    உலகம் யாவையும் தாம் உளவாக்கலும்.
    நிலைபெறுத்தலும். நீக்கலும். நீங்கலா
    அலகு இலா விளையாட்டு உடையார்-அவர்
    தலைவர்; அன்னவர்க்கே சரண் நாங்களே.

    Share
  • பயன்மிகு இணையவழிச் சேவைகள் – தகவல் தொடர்பு முறைகள்

    சுரேஜமீ.

    முகங்கள் பார்த்து கதைகள் பேசிக் களித்த காலங்கள் கடந்து, நாம் வெகுதூரம் வந்ததற்கான சாட்சியே, நாம் இன்றைக்கு இணையத்தை, உற்ற தோழனாகவும்; தொடர்பாகவும் கொண்டுள்ள காட்சி எனலாம்!   காலம் தன் வேகத்தைக் கூட்டவுமில்லை; குறைக்கவுமில்லை! ஏனோ நாம் மட்டும் இன்னமும், காலம் ஓடுகிறது என்ற சொல்லை; நம் இயல்புக்குத் தகுந்தவாறு பயன்படுத்தத் தவறுவதில்லை.  மனிதத் தொடர்புகள்  தூரமாகும்போது, அதனை நம் அருகே கொணரத் துணை புரியும் இணையத் தொடர்பு சாதனங்களையும், அதைக் கையாளும் முறைகளையும், சற்று உங்கள் மனதில் பதிய வைப்பதுதான், இந்தக் கட்டுரையின் நோக்கம்!

     

    இந்தக் கட்டுரையில் மூன்று முக்கியத் தகவல் தொடர்பு முறைகளைப் பற்றியும்; அதனைக் கையாளும் வழிகள் பற்றியும் குறிப்பிட முனைகிறேன்;

    1. முகநூல் (Facebook)
    2. ஏகிநிற்பது என்ன? (Whatsapp – இதற்குத் தமிழாக்கம் என் சொந்த முயற்சி; இணையான வார்த்தைகள் வரவேற்கப் படுகின்றன; அதே சமயம் இச்சொல்லே பழக்கத்திற்கு வந்தால் அதன் பெருமை என் தமிழ்த்தாய் தந்த எண்ணத்திற்கு)
    3. குறியீட்டுச் செய்தி (Twitter) – இத் தமிழாக்கமும் என் சொத்த முயற்சியே! குறியீடுகள் அதிகம் பயன்படுத்தப்படுவதால், ‘குறியீட்டுச் செய்தி’ எனப் பெயரிட்டுள்ளேன்.

     

    முகநூல் (Facebook):

    ஹார்வர்டு பல்கலைக்கழக மாணவர்களுள் ஒருவரான மார்க் சுக்கெர்பெர்க் என்பவரால், தன் சக மாணவர்களோடு ஒரு தொடர்பினை ஏற்படுத்த செய்யப்பட்ட ஒரு முயற்சி, இன்று உலகத்தையே தன் தொடர்பில் வைத்திருப்பதோடு, உலக அளவில் ஒரு ஒப்பற்ற தகவல் தொடர்பு ஊடகமாகவும், மொத்த இந்தியாவின் மக்கள் தொகையை விஞ்சும் அளவிற்கு, சற்றேறக் குறைய 130 கோடிக்கும் மேலான பயனாளிகளைக் கொண்டதாகவும், சுமார் 21 ஆயிரம் கோடிக்கும் அதிகமான வருவாய் ஈட்டுவதாகவும் வளர்ந்திருக்கிறதென்று சொன்னால், அதன் வளர்ச்சியை உங்களின் மனக்கண் முன் கொண்டு வருவதில் மட்டற்ற மகிழ்ச்சி எனக்கு!

    முகநூலின் பயன்

    இற்றைக் காலங்களில், உலகம் ஒரு சின்ன உள்ளங்கைக்குள் அடங்குவது போன்று சுருங்கிவிட்டது.  சிறுவனாக இருந்த பொழுது, முகவையிலிருந்து சென்னை பெருந்தூரமாகத் தெரிந்தது என் போன்றோர்க்கு; ஆனால், இன்று படித்த குடும்பங்களில், வீட்டுக்கு ஒரு பிள்ளை வெளிநாட்டில் பணி செய்யும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறது என்று சொன்னால், ஆச்சரியம் ஏதுமில்லை.  இத்தகைய சூழலில், தொலைவில் இருப்பவர்களோடு, அடிக்கடித் தொடர்பில் இருப்பதற்கு, நாம் தொலைபேசியையோ, அலை பேசியையோ உபயோகப் படுத்தினால், மிகவும் அதிகமான செலவு பிடிக்கும்.  அதே வேளையில், நமக்கு ஒரு முகநூல் கணக்கு இருந்தால், நம்மால், சுலபமாக நம் உறவுகளை அவர்களின் முகநூல் கணக்கோடு இணைத்து, தினமும் செய்திகளப் பகிர்ந்துகொள்ள ஏதுவாக இருக்கும்!  சரிதானே?

     எப்படித் துவங்குவது?

    படித்தவர்களே சில நேரங்களில், முதன் முதலாக ஒரு செயலைச் செய்யும்போது, ஒரு தயக்கம்; ஒரு சிறிய அச்சம் அல்லது ஏன்? எதற்கு என்னும் கேள்வியால், அச் செயலைக் காலம் தாழ்த்துவதோ அல்லது தவிர்ப்பதோ உண்டு! அவர்களுக்கான ஐயப்பாடுகளை நீக்குவதும், என்ன செய்யவேண்டும் எனப் பகர்வதும்தான், இணைத்துள்ள நிழற்படமும் அதற்கான விளக்கமும்!

    சுரேஜமீ

    இணைத்துள்ள படத்தில் எண் வரிசைப் படி, நாம் கொடுக்கவேண்டிய தகவல்களைப் பார்க்கலாம்;

    1. தாங்கள் பெயர்.  இங்கே உங்களின் பயன்பாட்டுக்கேற்றவாறு, நீங்கள் தகவல்களைப் பகிரலாம்.  பயன்பாடு என்று சொல்லும்போது, கீழ்க்காணும் ஏதேனும் ஒன்றுக்கு ஏற்ப, உங்களின் சுய தகவல் பரிமாற்றம் இருக்க வேண்டும்;
    • குடும்ப உறவுகள் மற்றும் துறை சார்ந்த நண்பர்கள் மட்டும்
    • நட்பு வளைய மேம்பாடு மற்றும் பொழுது போக்கு
    • திறன் வெளிப்படுத்தல்
    • இன்ன பிற

    இங்கு நீங்கள் கவனிக்க வேண்டிய முக்கியக் காரணியே, உண்மைத் தகவல் பகிர்வதா? அல்லது புனைப் பெயர் மற்றும் வெற்றுத் தகவல் பகிர்வதா என்பதே!

    1. இது தங்களின்  முதல் தகவலைத் தழுவியது.
    2. உங்களின் உண்மையான மின்னஞ்சல் கணக்கு ஒன்றைப் பகிர்தல் அவசியம். முகநூல் கணக்கு துவங்கிய பின், துவங்கிய நபரைச் சரி பார்க்கும் அஞ்சல், இந்த முகவரிக்கு அனுப்பப்படும் என்பதை நினைவில் கொள்க!

    இதே தகவலை, இதற்கு அடுத்த தகவல் நிலையிலும் திரும்பப் பதிவிடுங்கள்

    1. உள் நுழை பாதுகாப்பு சொல்.
      1. தாங்கள் எளிதில் நினைவில் வைக்கத் தக்க ஒரு சொல்லைப் பயன்படுத்துதலும்;
      2. அச்சொல்லில்
        1. ஒரு தலைச் சொல்லும்(Capital Letter);
        2. ஒரு எண்ணும் (Number);
    • ஒரு அனுமதிக்கப்பட்ட சிறப்புக் குறியீட்டுச் சொல்லும் (Special Character) இருந்தால் நல்லது!
    1. இது தங்களின் முதல் தகவலைத் தழுவியது.  ஆனால், கண்டிப்பாக ஒரு தகவலைப் பதிதல் அவசியம்!
    2. இதுவும் தங்களின் முதல் தகவலைத் தழுவியது.  ஆனால், கண்டிப்பாக ஒரு தகவலைப் பதிதல் அவசியம்!

    மேற்கூறிய தகவல்கள் நிலையிட்ட பின், “Sign Up” அழுத்த, உங்களின் முகநூல் கணக்கு துவங்கப்பட்டு, கணக்கு உங்களுடையதுதானா எனச் சரி பார்க்கும் மின்னஞ்சல் உங்களுக்கு அனுப்பப்படும்.  மின்னஞ்லில் குறிப்பிட்டுள்ள தொடர்பானைச் சொடுக்க, உங்கள் முகநூல் பக்கத்திற்கு அழைத்துச் செல்லப்படுவீர்கள்!

    என்ன முகநூல் கணக்குத் துவங்கலாமா?  இந்தியாவில் இதுவரை 10 கோடிக்கும், அதிகமானவர்கள், முகநூல் கணக்கு வைத்திருப்பதாக ஒரு செய்தி சொல்கிறது  கணக்குத் துவங்குவது சம்பந்தமாக, மேலதிகத் தகவலுக்கு, கீழே கொடுக்கப்பட்டுள்ள, இணைப்பானைச் சொடுக்கவும்!

    http://www.wikihow.com/Set-up-a-Facebook-Account

    குறைந்த பட்ச பாதுகாப்பு

    முகநூல் கணக்கு வைத்திருப்பதன் நோக்கமே, நாம் நினைக்கும் செய்திகளைத் தன் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்வதுதான்.  அத்தகைய சூழலில், நாம் பகிரும் தகவல்களில், பெரும்பாலும், நம்முடைய அல்லது குடும்பத்தாருடைய நிழற்படங்கள்; காணொளிக் காட்சிகள், பிற ஆவணங்கள் என நிரம்பி இருக்கலாம்!  ஆனால், மேற்கூறிய அனைத்தும், ஏதோ ஒரு வகையில், இன்றைக்கு இருக்கக் கூடிய விஞ்ஞான வளர்ச்சியில், திரித்துப் பகிரக் கூடிய வாய்ப்பு இருப்பதை நாம் அறிந்திருத்தல் அவசியம்!

    அதற்கான சில பாதுகாப்பு குறித்த தகவலைப் பார்ப்போமா?

    1. உங்கள் சுய குறிப்புகளின் பாதுகாப்பு குறித்து, நீங்கள் முடிவு எடுக்க ஏதுவாக, எது மற்றவர்களுக்குத் தெரியவேண்டும்? எது தெரிய வேண்டுவது இல்லை என்பதைத் தீர்மானித்து, அதற்கேற்றார் போல, உங்கள் சுயதகவல் பரிமாற்றம் செய்யலாம். இதோ அதற்கான புரிதல் படம்;

    சுரேஜமீ1

    1. நிழற்படங்களை யாருடன் நாம் பகிரவேண்டும் என்பதையும்; அதன் பாதுகாப்பை எப்படி உறுதிப்படுத்துவது என்பதையும் விளங்கிக் கொள்ள, கீழுள்ள படத்தைப் பார்க்க;

    சுரேஜமீ2

    பெரும்பாலும், நிழற்படத்தின் வலதுமுனையில், பூமிப் பந்து போன்ற உருண்டைச் சின்னத்தில், சொடுக்க, அது மேற்காணும் தகவல்களைப் பகிரும்!  அதற்கேற்றவாறு, உங்களின் நிழற்படம், யார் பார்க்க வேண்டும் என்பதை நீங்கள் தீர்மானிக்கலாம்.  குறிப்பாக, சில படங்களை நாம் சேமிப்பில் வைக்கவும் முகநூலை உபயோகிக்கலாம்.  அத்தகைய சூழலில், நிழற்படங்களை நாம் மட்டுமே பார்க்கக் கூடிய வகையில், பூட்டு சின்னம் (Only Me) அமைப்பில் சொடுக்க, அப்படம் மிகுந்த பாதுகாப்போடு, நாம் மட்டும் பார்க்க ஏதுவாக அமையும்.

    என்ன உபயோகமான தகவல்தானே?

    1. அடுத்து, நம்மை யார் தொடுப்புச் செய்வது; நம் நிலைத்தகவலில் அடுத்தவரை தகவல் பதிய அனுமதிப்பதா? வேண்டாமா?

    சுரேஜமீ3

    1. நமக்கு யார் நட்பு விண்ணப்பம் அனுப்புவது என, ஒவ்வொன்றையும், நேர்த்தியாக, நாமே தீர்மானிக்க முடியும்; அதற்கான விளக்கப் படம் கீழே கொடுக்கப் பட்டுள்ளது!

     

    சுரேஜமீ4

     

    1. சிலவேளைகளில், நாம் நல்லவர் என நட்பு விண்ணப்பங்கள் வரவேற்கும்போது, போகப் போக, அவர் பகிரும் தகவல்கள், நமக்கு சில சங்கடங்களையோ, அல்லது கருத்து ஒவ்வாமையையோ ஏற்படுத்தலாம். அத்தகைய வேளையில், நீங்கள் அவருடனான தொடர்பைத் துண்டிக்க நினைக்கலாம்.  அதை எவ்வாறு செய்வது என்பதை விளக்கும் சுட்டி, இதோ உங்களின் பார்வைக்கு;

    சுரேஜமீ5

    மேற்கூறிய இந்த ஐந்து தகவல்களும், உங்கள் முகநூல் கணக்கை நிச்சயம் ஒரு பாதுகாப்பாக வைத்திருக்கத் தேவையான மிக முக்கியக் கூறுகளாக இருக்கும் என நம்புகிறேன்!  மேலும் அதிகத் தகவல்களுக்கு, முகநூல் பக்கத்தில் உள்ள பாதுகாப்பு குறித்த விளக்கங்களைப் பார்க்கவும்!

     

    ஏகிநிற்பது என்ன? (Whatsapp):

    அடுத்து நாம் காண இருப்பது ஏகிநிற்பது என்ன? (Whatsapp) என்ற தகவல் தொடர்பு முறை

    இன்றைய அலைபேசி உலகில், அவரவர் கைகளை அலங்கரிப்பதில், நவீன கைப்பேசிகளின் பங்கை யாராலும் மறுக்க முடியாது.  அவற்றுள் இரு முக்கிய மென்பொருள்கள் உலகளாவி இருக்கின்றன.  அவை முறையே ஆன்ராய்டு மற்றும் ஆப்பிள் இயக்கிகள்!  இவற்றுள் ஆன்ராய்டு இயக்கி மிக எளிமையாக, அனைத்து பயன்பாட்டுக்கும் சாதகமாக இருப்பதாக எண்ணுகிறேன்.  சமீப காலமாக, “ஏகிநிற்பது என்ன” எனும் பயன்பாட்டில், ஆன்ராய்டு இயக்கி மூலமாக, ஒருவருக்கொருவர் பேசவும் முடிவதாக அறிகிறேன்.

    மிகக் குறுகிய காலத்தில், மிகப் பரவலாக்கப் பட்ட மகத்தான ஒரு தகவல் தொடர்பு முறை ஏகிநிற்பது என்ன? (Whatsapp) என்று சொன்னால் மிகையாகாது.  இது முதன் முதலில் புழக்கத்திற்கு வந்தது 2009ம் ஆண்டு.  கடந்த ஐந்து ஆண்டுகளில், இதன் அபரிமித வளர்ச்சி கண்டு, முகநூல் நிறுவனத்தார், இந்த தொடர்பு முறையை, அதன் உரிமையாளர்களிடமிருந்து, சற்றேறக்குறைய ரூபாய் இரண்டாயிரம் கோடிக்கு வாங்கியிருக்கிறார்கள், என்றால், இதன் வளர்ச்சி, எத்தகையது என்பதை வாசகர்களாகிய நீங்கள் முடிவு செய்து கொள்ளுங்கள்!

    கடந்த ஜனவரி 2015 வரை, சுமார் 70 கோடி உபயோகிப்பாளர்கள் இருப்பதாக ஒரு தகவல் கூறுகிறது! அதில், சுமார் 7 கோடி உபயோகிப்பாளர்கள் இருப்பதாகவும் சொல்கின்றனர். (http://en.wikipedia.org/wiki/WhatsApp)

    இன்று ஒவ்வொரு அமைப்பு சார்ந்த குழுமங்களும் பெரும்பாலும், தன் அங்கத்தினர்களுடனானத் தொடர்புக்கு, ஏகிநிற்பது என்ன? (Whatsapp) என்ற முறையைத் தான் பயன்படுத்துகின்றன.

    அவை பற்றிச் சில குறிப்புகள்!

    1. இதில் கணக்குத் துவங்குவதற்கு அடிப்படைத் தேவை ஒரு நவீன கைப்பேசி.
    2. ஏகிநிற்பது என்ன? (Whatsapp) என்ற பயன்பாட்டுத் தளத்தின் மூலம், நாம் செய்திகள், நிழற்படங்கள் மற்றும் காணொளிக் காட்சிகளை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ள முடியும்.

    குறைந்த பட்ச பாதுகாப்பு முறைகள்

    1. பல நேரங்களில், நம்முடைய கவனக் குறைவின் காரணங்களால், மிகுந்த கன அளவுடைய காணொளிக் காட்சிகள் மற்றும் நிழற்படங்கள், தானியங்கிப் பதிவிறக்கம் (Auto download) செய்யப்படுகின்றன. அதனால் நமக்கு ஏற்படும் பொருட்செலவு மிகுதியாகும். இதைத் தடுப்பதற்கு, கீழ்காணும் சுட்டியைக் கவனிக்கவும்.

    சுரேஜமீ6

    2. நம்முடைய பயனீட்டு அளவுகளை அவ்வப்போது கண்காணிப்பது எப்படி என்பதை விளக்கும் சுட்டி

    சுரேஜமீ7

    3. சில வேளைகளில், விரும்பத்தகாத செய்திகளும், காணொளிப் படங்களும் வரும்போது, அத்தகைய செய்தி அனுப்பும் நபர்களைத் தடை செய்வது எப்படி என்பதை விளக்கும் படம்.

    சுரேஜமீ8

     

    4. பலருடைய அனுபவமே, நாம் விரும்பும்பொழுது, நம்முடைய கைப்பேசியில், தேவையான நிழற்படமோ, காணொளியோ எடுக்கப் போதுமான இடவசதி இல்லாமல் இருக்கும்.  இதற்குக் காரணம், நாம் அவ்வப்பொழுது அழிக்காமல் வைத்திருக்கும் சேமிப்புச் செய்திகளும்; படங்களுமே!  அதனை எவ்வாறு சுத்தப்படுத்தி கைப்பேசிக்கான சேமிப்புப் பகுதியை தகுதிப்படுத்துவது என்பதை விளக்கும் படம்.

    சுரேஜமீ9

    பெரும்பாலும் நாம் அறிந்த செய்திகளாகவே இருந்தாலும், சில வேளைகளில் அனைத்தும் ஒருங்கிணைத்து ஒரு தொகுப்பாகப் பார்க்கும்போது அது நம் மனதில் எளிதில் தங்கிவிட ஏதுவாக இருப்பதால், நிச்சயம் உங்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன்.

     

    குறியீட்டுச் செய்தி  (Twitter):

    தகவல் பரப்பும் களமாக ஒரு குறுகிய காலத்தில் அசுர வேகத்தில் வளர்ந்ததுதான் இந்தக் குறியீட்டுச் செய்தி(Twitter) என்று சொன்னால் மிகையாகாது.  2006ம் ஆண்டில் நான்கு நபர்கள் ஒன்று சேர்ந்து உருவாக்கிய இந்தத் தகவல் பரிமாற்ற முறை, இன்று உலகில் ஏறக்குறைய 28 கோடி பயனீட்டாளர்களைக் கொண்டதாக உள்ளதாக ஒரு இணையச் செய்தி கூறுகிறது. (http://en.wikipedia.org/wiki/Twitter)

    அவை பற்றிச் சில குறிப்புகள்!

    • இது பெரும்பாலும் செய்தியைத் துரிதமாக அனுப்புவதற்கு உதவுகிறது.
    • மிக அதிக பட்சமாக 140 எழுத்துக்கள் மட்டுமே உபயோகிக்க முடியும்.
    • மிக அதிகபட்ச வாசகர்களைச் சென்றடையும் வல்லமை பெற்றது.
    • வணிக உபயோகத்திற்கு ஏற்ற உன்னதமான தகவல் பரிமாற்ற முறை!

     

    முடிவுரை

    இதுவரை நாம் பார்த்த இந்த மூன்று விதமான தகவல் பரிமாற்றக் களங்களையும், அதற்கேற்ற செயல் வடிவத்தில் பயன்படுத்த கீழ்க்காணும் விதத்தில் பிரிக்க முற்படுகிறேன்.

    1. உறவுகளோடு ஒட்டி இருக்க ‘முகநூல்’ (Facebook)
    2. குறுஞ்செய்திகள் மற்றும் காணொளிப் பரிமாற்றத்திற்கு ‘ஏகி நிற்பது என்ன? (Whatsapp)
    3. வணிக மற்றும் வாடிக்கையாளர் சேவைக்கு ‘குறியீட்டுச் செய்திகள்’ (Twitter)

    ஆக, நம் வாழ்வில் அன்றாடம் பயன்பாட்டில் உள்ள மிக முக்கிய மூன்று தகவல் பரிமாற்று வழிமுறைகளைப் பற்றி எனக்குத் தெரிந்த வகையில், உங்களின் சிந்தனைக்குப் பகிர்ந்த இந்த விடயங்கள், உங்களுக்கு உபயோகமாக இருந்திருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

    Share
  • பயன்மிகு இணையவழிச் சேவைகள் – இணைய நூலகங்கள்

    பி. தமிழ் முகில்.

     

    பயன்மிகு இணையவழிச் சேவைகள்

    இணைய நூலகங்கள்

     நூலகங்கள் நம் எண்ணங்கள், கனவுகள்,திறன்கள் என அனைத்தையும் தன்னுள் காத்து வைத்திருக்கும் பொக்கிஷ கிடங்கு. ஒவ்வொரு தனி மனிதரின் ஆர்வத்திற்கும், தேடல்களுக்கும் வடிகாலாக விளங்குபவை நூலகங்கள்.

    இணையத்தின் வாயிலாக பல நூலகங்கள்  நூல்களை தரவிறக்கம் செய்யும் வசதியுடனுன், இலாப நோக்கின்றி புத்தகங்களை தரவேற்றும் தனிநபர்கள் பலரின் வலைப்பூக்களும்   நமக்கு இலவசமாக கிடைக்கின்றன.அத்தகைய நூலகங்கள் மற்றும் வலைப்பூக்கள் குறித்து இக்கட்டுரையில் காணலாம்.

     

    இணைய ஆவணகம்( Internet Archive : Digital Library )

    Internet Archive எனப்படும் இணைய ஆவணகம், இணையத்தில் செயல்படும் இலாப நோக்கற்ற எண்ணிம நூலகம் ( Digital Library ) ஆகும். இந்நூலகத்தில் பத்து இலட்சத்திற்கும் மேற்பட்ட நூல்கள், திரைப்படங்கள், மென்பொருட்கள், பத்திரிகைகள், பாடல்கள்,லிப்ரி வாக்ஸ் ( LibriVox)  ஒலி நூல்களின் தொகுப்பு, நுண் படங்கள் ( Micro film)என அனைத்தும் கிடைக்கின்றன.

     இந்நூலகத்தில் உலகில் உள்ள பல இணைய நூலகங்களின் தொகுப்பும் கிடைக்கின்றன. எடுத்துக்காட்டாக, அமெரிக்க நூலகங்கள், கனேடிய நூலகங்கள், ஐரோப்பிய நூலகங்கள்,நாசா புகைப்படங்கள், மருத்துவ பாரம்பரிய நூலகத்தின் ( The Medical Heritage Library ) நூற்தொகுப்பு, இறையியல் நூற்தொகுப்பு , சீன நூல்கள், இஸ்லாமிய புத்தகங்களின் தொகுப்பு என பல வகையான நூல்களின் தொகுப்பு இந்த இணைய ஆவணகத்தில் கிடைக்கின்றது.

    இந்நூலகத்தை கீழ்காணும் சுட்டியில்  பயன்படுத்தலாம்.

    https://archive.org/

     இந்நூலகத்தில் இருக்கும் நூல்களை பல வடிவங்களில் ( format ) பெறலாம். Pdf, zip file, torrent, epub  என பல வடிவங்களில் தரவிறக்கம் செய்யும் வசதியும் கிடைக்கிறது.

     

    திறந்த நூலகம் ( Open Library )

    Open Library  என்றழைக்கப்படும் திறந்த நூலகம் பல பொது தளங்கள் மற்றும் இப்போது அச்சில் இல்லாத பல பழைய நூல்களையும் இணையத்தில் படிக்க வாய்ப்பினை ஏற்படுத்தித் தருகின்றது.

    திறந்த நூலகம் அனைவருக்கும் பொதுவானது, இலவசமானது.  யார் வேண்டுமானாலும் இந்நூலகத்திலுள்ள நூல்களின் விபரங்களை மாற்றி அமைக்கலாம். இந்நூலாகத் திட்டத்தின் முக்கிய நோக்கமே, இதுவரை வெளியாகியுள்ள அனைத்து நூல்களுக்கும், ஒரு நூலுக்கு ஒரு வலைப்பக்கம் வீதம் உருவாக்குவதே ஆகும்.

    இந்நூலகத்தில் உள்ள நூல்களில் ஏதேனும் தட்டச்சுப் பிழைகள் இருப்பின், அவற்றை திருத்தலாம், புதிதாக புத்தகங்களை பதிவேற்றலாம், தவறாக குறிப்புகள் இருப்பின் அவற்றை திருத்தலாம்.புதிய தகவல்களுடன் கூடிய நிரல்பலகை ( widget ) சேர்க்கலாம்.

    திறந்த நூலகம் 23 மில்லியனுக்கும் மேலான நூல்களின் விபரங்களை தருகிறது. இந்நூலகத்தில் இருக்கும் நூல்கள் பயனர்களின் தேவைக்கேற்ப பல கோப்பு வடிவங்களில் ( file formats ) கிடைக்கிறது.

    PDF, Plain text, ePub, DjVu, Kindle, DAISY ஆகிய கோப்பு வடிவங்களில் நூல்கள் கிடைக்கின்றன. இதில் DAISY என்பது Digital Accessible Information SYstem என்பதைக் குறிக்கின்றது. எண்ணிம ஒலி  நூல்கள், வார மற்றும் மாத பத்திரிகைகள் இவற்றை வாசிக்க இம் மென்பொருள் பயன்படுகிறது. DAISY அச்சுப் பிரதிகளுக்கு மாற்றாக கிடைக்கும் ஒலிக் கோப்புகள் ஆகும். இது பார்வையற்றோர், பார்வைக் குறைபாடு உள்ளவர்கள் என அனைவரும் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் கிடைக்கிறது.

    இந்நூலகத்தினை கீழ்க்காணும் இணைய முகவரியில் பயன்படுத்தலாம்.

    http://www.openlibrary.org/

     

    சென்னை  நூலகம்  

    திரு.கோ.சந்திரசேகரன் என்பவரின் தனிப்பட்ட முயற்சியால் உருவான நூலகம் ஆகும். இந்நூலகம் வணிக நோக்கில் இயங்கும் நூலகம் ஆகும். இந்நூலகம் கெளதம் இணைய சேவைகள் ( Gowtham Web Services ) நிறுவனத்தினரால் நடத்தப்படும் இணையதளம் ஆகும். இந்நூலகத்தில் பழந்தமிழ் இலக்கியங்கள் முதல் தற்கால இலக்கியங்கள் வரை கிடைக்கின்றன. உறுப்பினர்களாக இணைவோருக்கு இந்நூலகத்தில் தரவேற்றம் செய்யப்பட்டுள்ள நூல்களை pdf கோப்புகளாக தரவிறக்கம் செய்து கொள்ளும் வசதியையும், கெளதம் பதிப்பகத்தாரால் வெளியிடப்படும் நூல்களை  20 % சலுகை விலையில் பெறும் வாய்ப்பும் வழங்கப்படுகிறது.

    இந்நூலகத்தில் இலவசமாக கிடைக்கும் மின்னூல்களை கீழ்காணும் வலைப்பக்கத்தில் பார்த்துக் கொள்ளலாம்.

     http://www.chennailibrary.com/ebooks/ebooks.html

    இந்நூலகத்தின் இணையதள முகவரி

     http://www.chennailibrary.com

     

    நூலகம் திட்டம்  (noolaham.org) :

    நூலகம் திட்டம் ஈழத்து தமிழ் நூல்களையும் எழுத்து ஆவணங்களையும் மின்வடிவில் இணையத்தில் பேணி பாதுகாத்து வைப்பதற்கான இலாப நோக்கில்லா தன்னார்வ கூட்டுழைப்பாகும்.

    இத்திட்டத்தில் பங்களிக்க விரும்புவோர் எவர் வேன்டுமானாலும், எந்த நூலை வேண்டுமானாலும் மின்னூலாக்கம் செய்யலாம். குறிப்பாக,  மின்னூலாக்கம் செய்யப்படும் நூல் ஈழத்து எழுத்தாளரால் எழுதப் பட்டதாக இருக்க வேண்டும்.

    இந்நூலகத்தில் கிட்டத்தட்ட ஐயாயிரம் ஈழத்து நூல்கள், ஆறாயிரத்துக்கும் மேலான இதழ்கள், இரண்டாயிரத்துக்கும் மேலான பத்திரிகைகள் கிடைக்கின்றன.

    இந்நூலகத்தினை கீழ்காணும் இணையதளத்தில் பயன்படுத்தலாம்.

    http://www.noolaham.org

     

    மதுரை தமிழ் இலக்கிய மின்தொகுப்பு  திட்டம் ( Project Madurai ):

    உலகளாவிய தமிழர்கள் இணையத்தின் வாயிலாக ஒன்று கூடி தமிழ் இலக்கியங்களின் மின்பதிப்புகளை உருவாக்கி, உலகில் உள்ள எவர் வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ள இலவசமாக வழங்கும் சேவை முயற்சியே மதுரை தமிழ் இலக்கிய மின்தொகுப்பு திட்டம் ஆகும்.

    இத்திட்டத்தில் எவர் வேண்டுமானாலும் தங்களது பங்களிப்பை வழங்கலாம். தமிழ் நூல்களை மின்னூலாக்கம் செய்து தரவேற்றலாம். புதிதாக தரவேற்றப்பட்டுள்ள நூல்களை ஒப்பச்சு ( Proof Read ) செய்தும் நம் பங்களிப்பை இந்நூலகத்துக்கு வழங்கலாம்.

     இத்திட்டத்தின் வாயிலாக பல இலக்கண இலக்கிய நூல்களையும் நாம் தரவிறக்கி பயன்படுத்திக் கொள்ளலாம்.

    இத்திட்டத்தினை  கீழ்காணும் இணையதளத்தில் பெறலாம்.

    http://www.projectmadurai.org/index.en.html

    இத்திட்டத்தின் கீழ் கிடைக்கும் புத்தகங்களின் பட்டியலை இங்கு காணலாம்.

    http://www.projectmadurai.org/pmworks.html

    புத்தகங்களை  pdf   கோப்புகளாகவும், Unicode, TSCII  எழுத்துருக்களிலும் பெற்றுக் கொள்ளும் வசதியும் கிடைக்கிறது.

     

    தமிழ் இணைய கல்விக்கழகம் ( Tamil Virtual University) :

    தமிழ் இணைய கல்விக் கழகத்தின் மின் நூலகம் தமிழ் இலக்கண, இலக்கிய நூல்கள், சங்க இலக்கிய நூல்கள், காப்பியங்கள், சமய இலக்கியங்கள், சிற்றிலக்கியங்கள்,நெறி நூல்கள், நாட்டுப்புற இலக்கியங்கள், பாரதியார், பாரதிதாசன் கவிதைகள், கவிமணி தேசிக விநாயகம் கவிதைகள், கவிஞர் கண்ணதாசன் படைப்புகள் என்று பலவகையான நூல்களும் கிடைக்கின்றன.

     சங்க இலக்கிய நூல்களுக்கான உரைகளும் இந்நூலகத்தில் கிடைக்கின்றன. ஒரு நூலினுள் நமக்குத் தேவையானவற்றை குறிச்சொற்களின் உதவியுடன் தேடும் வசதியும் கிடைக்கிறது.

    இந்நூலகத்தில் பால்ஸ் அகராதி (Pal’s dictionary ), ஆங்கிலம் தமிழ் அகராதி,சென்னை பல்கலைக்கழக ஆங்கில தமிழ் அகராதி, தமிழ் தமிழ் அகரமுதலி, தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் உச்சரிப்புடன் கூடிய மின் அகராதி, சங்க இலக்கிய அகராதி என்று பல அகராதிகள் கிடைக்கின்றன.

    நூல்கள், அகராதிகள், நிகண்டுகள், கலைச்சொற்கள், சுவடிக் காட்சியகம், பண்பாட்டுக் காட்சியகம் என்று பல சேவைகள் இந்நூலகத்தில் கிடைக்கின்றன.

    இணைய கல்விக் கழகத்தின் நூலகத்தினை கீழ்க்காணும் இணைய பக்கத்தில் பெறலாம்.

    http://tamilvu.org

    செய்யுட் பாடல்கள், பாடல்களுக்கான உரைகள் என அனைத்தும் தெளிவாக, பயனாளர்கள் எளிதாக பெற்றுக் கொள்ளும் வகையில் கிடைக்கிறது.

     

    திறந்த வாசிப்பகம் ( Open Reading Room):

      தமிழ் இலக்கியங்களின் தொகுப்பாக இணையத்தில் செயல்படும் நூலகம் திறந்த வாசிப்பகம் ஆகும். இங்குள்ள நூல்கள் அனைத்தும் பயனாளர்களுக்கு இலவசமாக கிடைக்கிறது. நாளும் புதிதாக நூல்கள் பலவும் தரவேற்றம் செய்யப் படுகிறது.

    இத்திட்டம் சிங்கப்பூரை சேர்ந்த பத்திரிகையாளர் மற்றும் தமிழ் மொழி ஆர்வலர் திரு. இரமேஷ் சக்ரபாணி அவர்களின் முயற்சியால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

      திறந்த வாசிப்பகத்தினை கீழ்காணும் இணைய பக்கத்தில் காணலாம்.

      http://www.openreadingroom.com/

     

    பிரித்தானிய தமிழ் நூற்சேகரம், தமிழ் மரபு அறக்கட்டளை:

     பிரித்தானிய தமிழ் நூற்சேகரம் என்கிற இத்திட்டம் பிரித்தானிய நூலகங்களும், தமிழ் மரபு அறக்கட்டளை (Tamil Heritage Foundation)

    அமைப்பும் இணைந்து மேற்கொள்ளும் திட்டம் ஆகும். இத்திட்டத்தில் தற்சமயம் பத்து நூல்கள் மட்டுமே கிடைக்கின்றன.இத்திட்டம் இந்திய மின் நூலகம் (Digital Library of India), மதுரை திட்டம் (Project Madurai), Million books project,TADILNET ஆகியோரின் கூட்டு முயற்சியுடன் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

      http://www.tamilheritage.org/uk/bl_thf/bl_thf.html

     தமிழ் மரபு அறக்கட்டளையின் வலைப்பூவில்  பல தமிழ் ஆவணங்கள், அரிய பழைய தமிழ் நூல்களும் தரவிறக்கம் செய்யும் வசதியையும் நமக்கு ஏற்படுத்திக் கொடுத்துள்ளனர்.

    தமிழ் மரபு அறக்கட்டளையின் வலைப்பூவினை கீழ்க்காணும் இணைய முகவரியில்  பார்த்து பயன் பெறலாம்.

    http://tamilheritagefoundation.blogspot.ca/

    தமிழ் மரபு நூலகத்தின் வலைப்பூவினை கீழ்காணும் இணைப்பில் காணலாம்.

    http://thfreferencelibrary.blogspot.ca/

     

    தமிழகம் வலை வழங்கும் தமிழ் மின் நூலகம் :

       தமிழகம் வலை வழங்கும் தமிழ் மின் நூலகத்தில் தமிழகம் வலையின் மின் வெளியீடுகளாக டாக்டர். பி.ஆர். அம்பேத்கரின் நூல்கள், பெரியாரின் நூல்கள், மார்க்ஸிச நூல்கள், பல எழுத்தாளர்களின் நாட்டுடைமையாக்கப்பட்ட  நூல்களும் கிடைக்கின்றன.

    இணையத்தில் இயங்கும் இன்ன பிற தமிழ் எண்ணிம நூலகங்களுக்கான இணைப்புகளும், நூல் விற்பனைத் தளங்கள் மற்றும் நூல் தரவு தளங்களுக்கான இணைப்புகளும் கிடைக்கிறது.

     

    தமிழகம் வலை வழங்கும் நூலகத்திற்கான இணைப்பு இதோ

    http://thamizhagam.net/tamillibrary/tamillibrary.html

     

    இலவச தமிழ் மின்னூல்கள் :

     மின் புத்தகங்களை படிக்க இன்று பல வகையான கருவிகள் கிடைக்கின்றன. அமேசான் (Amazon), பார்ன்ஸ் & நோபிள் (Barnes & Noble), புக்கீன் (Bookeen), எக்டாகோ (Ectaco), கோபோ (Kobo), பாக்கெட் புக் (Pocket Book) போன்ற நிறுவனங்கள் வழங்கும் இக்கருவிகளில் பயன்படுத்த ஏதுவாக மின் புத்தகங்களை வடிவமைத்து வழங்கும் தளம் தான் FTE ( Free Tamil Ebooks).

      பழந்தமிழ் நூல்களை மின்னூலாக்கம் செய்து சேமிக்க பல திட்டங்கள் செயல்படுகின்றன. புதிதாக தற்காலத்தில் எழுதும் எழுத்தாளர்களின் நூல்களை  மின்னூலாக்கம் செய்து அந்நூல்களை Creative Commons உரிமத்துடன் வெளியிடப்படும் போது, அந்த புத்தகத்தை எழுதிய ஆசிரியருக்கான உரிமைகள் பாதுகாக்கப் படுகின்றது. அதே வேளையில், அப்புத்தகங்களை எவர் வேண்டுமானாலும் தரவிறக்கம் செய்து கொள்ளலாம், மற்றவருடன் பகிர்ந்து கொள்ளலாம்.

     இதன் மூலம் புதிதாக வெளியாகும் தமிழ் புத்தகங்களை நாம் எளிதாக பெறலாம்.

     இலவச தமிழ் மின்னூல்களை கீழ்காணும் இணையதளத்தில் பெறலாம்.

     http://freetamilebooks.com/

     

    கூகுள் புத்தகங்கள் : 

    கூகுள் நிறுவனம் வழங்கும் சேவை கூகுள் புக்ஸ் ஆகும். இத்தளத்தில் தமிழ் புத்தகங்களும் கிடைக்கின்றன.  இச்சேவையை கீழ்காணும் தளத்தில் பெறலாம்.

    http://books.google.com/

      கூகுள் புத்தகங்களை தரவிறக்கம் செய்ய விரும்பினால், கீழ்காணும் கூகுள் ப்ளே பக்கத்தில் சென்று தரவிறக்கி, நமது மின்னஞ்சல் சேமிப்பில் சேர்த்து வைத்துக் கொள்ளலாம்.

    https://play.google.com/books

     

    குறிப்பு :

    இக்கட்டுரையில் பயன்படுத்தியுள்ள படங்கள் அனைத்தும் இங்கு குறிப்பிட்டுள்ள இணையதளங்களில் இருந்து எடுக்கப்பட்டவை.

    Share
  • பயன்மிகு இணையவழிச் சேவைகள் கட்டுரைப் போட்டி முடிவு

    அன்பினிய நண்பர்களுக்கு,

    Google_Appliance

    வணக்கம். சென்ற மாதம் (மார்ச் 1, 2015)  ‘பயன்மிகு இணையவழிச் சேவைகள்’ என்ற போட்டியை அறிவித்திருந்தோம். சிறந்த கட்டுரை படைப்பவர்களில் மாதம் ஒருவருக்கு பரிசு வழங்குவதாக அறிவித்திருந்தோம். இந்த முறை திருமிகு பி. தமிழ்முகில் நீலமேகம் எழுதிய ஒரு கட்டுரை மட்டுமே வந்துள்ளது. இப்போட்டியின் நடுவர் திரு ஐயப்பன் அவர்களுக்கு பரிசீலனைக்காக அனுப்பியதில் அவர் இக்கட்டுரை குறித்த தம் கருத்துகளை அளித்திருக்கிறார். திருமிகு தமிழ்முகில் நீலமேகம் அவர்களை இந்த மாத வெற்றியாளராக அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறோம். வருகிற மாதங்களில் இன்னும் பல பயனுள்ள கட்டுரைகள் வரும் என்று நம்புகிறோம்.

    திரு ஐயப்பன் அவர்களின் போட்டி முடிவு

    வணக்கம்

    கட்டுரையாளருக்கு வாழ்த்துகள்.

    இணையத்தில் இன்று பெரும்பாலும் உபயோகத்தில் இருக்கும் பல பயன்பாடுகளில் ஒன்றாக கட்டுரையாளர் வரைபடச் சேவையை தேர்ந்தெடுத்து முத்தான தகவல்களை தந்திருக்கிறார். கூகிள் தொடர்ந்து இந்திய இரயில் தடப் பயணம் குறித்து வரும் செய்திகள் முதற்கொண்டு பல விவரங்களை மிக நேர்த்தியாக, புரியும் வண்ணம் தந்திருப்பது அருமை.

    இணைய பயண்பாடுகளின் ஒரு பகுதியை மட்டும் குறித்து இவர் எழுதி இருப்பது நன்றாக இருந்தாலும் இன்னும் எத்தனையோ விவரங்கள் தமிழில் பதியப் படாமல் இருக்கின்றன. இன்றைய பெரும்பாலான மக்கள் உபயோகிக்கும் தொலைபேசிகள் ஆரம்பித்து வீட்டில் பார்க்கும் தொலை காட்சி வரை இணையத்தின் ஆக்டபஸ் கரங்கள் நீண்டிருக்கின்றன. அவற்றில் நன்மையும் உண்டு தீமையும் உண்டு. அவற்றை நெறிபடுத்தி தேவையான பல விவரங்களை கட்டுரையாளர் தொகுத்து சிறு மின்னூலாக வழங்கினால் பலருக்கும் நல்லதொரு பயனுள்ள ஒன்றாக இருக்கும்.

    இந்தக் கட்டுரையாளரை நான் வெற்றியாளராகத் தேர்ந்தெடுக்கிறேன். மீண்டும் வாழ்த்துகள்.

    அன்புடன்
    ஐயப்பன்

    இந்தப் போட்டி, மார்ச்சு 2015 முதல் பிப்ரவரி 2016 வரை மாதந்தோறும் நடைபெறும். ஒவ்வொரு மாதமும் போட்டிக்கு வரும் கட்டுரைகளில் சிறந்த ஒரு கட்டுரைக்கு ரூ.100 (நூறு ரூபாய்) பரிசாக வழங்கப்படும். ஓராண்டு முடிவில் தேர்வு பெற்ற 12 கட்டுரைகளிலிருந்து ஒரு கட்டுரைக்கு ரூ.1000 (ஆயிரம் ரூபாய்) பரிசு வழங்கப்படும். தேர்வு பெறும் கட்டுரைகள் தொகுக்கப்பெற்று, தாரிணி பதிப்பகத்தின் வாயிலாகப் புத்தகமாக வெளியாகும். அதன் அச்சுப் பிரதி, கட்டுரையாளருக்கு அனுப்பி வைக்கப்படும் என்பதையும் மீண்டும் நினைவூட்டுகிறோம். பயனுள்ள நல்ல கட்டுரைகளை வரவேற்கிறோம் நண்பர்களே. அனுப்ப வேண்டிய முகவரி – vallamaieditor@gmail.com

    Share
  • பயன்மிகு இணையவழிச் சேவைகள் – வரைபடங்கள்

    — பி. தமிழ்முகில் நீலமேகம். 

     

    இணையம் – இன்று பலதரப்பட்ட மனிதர்களால், பலதரப்பட்ட தேவைகளுக்காகப் பயன்படுத்தப் படுகிறது. இணையம் இன்று உலகத்தினை நம் உள்ளங்கைகளுக்குள் கொண்டு வந்து விடுகிறது. நமது அன்றாட வாழ்வில், பலவகையான தேவைகளுக்காக நாம் இணையத்தினை பயன்படுத்துகிறோம். நமது தேவைகளை பூர்த்தி செய்யும் வண்ணம் பல நிறுவனங்கள் செயல் படுகின்றன. அவற்றில் சில நிறுவனங்கள் சேவைக் கட்டணம் வசூலிக்கினறன, சில நிறுவனங்கள் இலவச சேவையாக செய்கின்றன. இக்கட்டுரையில், இலவச வரைபட ( Maps ) உதவிகள் வழங்கும் நிறுவனங்கள் குறித்து காணலாம்.

    முதல் நிறுவனம், நாம் அனைவரும் அறிந்த கூகுள் (Google). இவர்கள் வழங்கும் வரைபட சேவை கூகுள் மேப்ஸ் (Google Maps).
    கூகுள் மேப்ஸ் இணைய தளத்தின் முகவரி : maps.google.com
    கூகுள் வரைபடத்தின் உதவியுடன் நாம் ஓரிடத்திலிருந்து, மற்றோர் இடத்திற்கு செல்வதற்கான வழித்தடங்கள், அவ்விரு இடங்களுக்கும் இடையே உள்ள தூரம், செல்ல ஆகும் காலம் போன்றவற்றை கணக்கிடலாம்.

    நடந்து செல்ல விரும்புவோருக்கு வழித்தட உதவி, செல்ல ஆகும் கால நேரம், அதேபோல், வாகனங்களில் செல்வதானல் ஆகும் கால நேரம் போன்றவற்றை கணித்து தருகிறது. அவ்வழித்தடங்களில் செயல்படும் போக்குவரத்து சேவைகள், நாம் கிளம்பும் இடத்திற்கு அருகில் இருக்கும் பேருந்து நிறுத்தம், அந்த நிறுத்தத்திற்கு பேருந்து வரும் நேரம், அது செல்லும் வழித்தடம், வழித்தடத்தில் இருக்கும் ஏனைய நிறுத்தங்கள், ஒவ்வொரு நிறுத்தத்திற்கும் செல்ல ஆகும் கால அளவு போன்ற விபரங்களையும் கணித்து தருகிறது. எடுத்துக்காட்டாக, சென்னை சென்ட்ரல் இரயில் நிலையத்திலிருந்து, வடபழனி முருகன் கோவிலுக்கு செல்லும் வழித்தட விபரங்கள் கூகுள் வரைபடங்களின் உதவியுடன் கீழ்க்கண்டவாறு:

    map1

    இந்த வரைபடத்தில், இரண்டு வழித்தடங்கள் உள்ளன. இங்கு கொடுக்கப்பட்டிருக்கும் வழித்தட விபரங்கள், போக்குவரத்து நேரமும் நீல நிறத்தில் காட்டப்பட்டிருக்கும் வழித்தடத்திற்கானவை. அதற்குக் கீழே இருக்கும் மற்றோர் வழித்தடம் குறித்த விபரங்கள் அறிய விரும்பினால், அதன் மீது சுட்டியினை வைத்தால், அதன் விபரங்கள் காண்பிக்கப்படும். காரில் செல்ல ஆகும் நேரம் 24 நிமிடங்கள் , கடக்கும் தூரம் 10.1 கி. மீ. பேருந்தில் செல்ல ஆகும் நேரம் 58 நிமிடங்கள், ஒவ்வொரு 10 நிமிடத்திற்கும் ஓர் பேருந்து வசதி உண்டு போன்ற விபரங்களை நமக்கு இந்த வரைபடம் அளிக்கின்றது.

    இது வாகனங்களில் செல்வதானல் உதவும் வழித்தடம்

    map2

    இது பேருந்தில் செல்வதானால் உதவும் வழித்தடம்

    map3
    இந்தப் படம் இரயில் நிலையத்திலிருந்து வடபழனி முருகன் கோயிலுக்கு செல்ல பேருந்து ஏற வேண்டிய நிறுத்தம், பேருந்து அந்த குறிப்பிட்ட நிறுத்தத்திற்கு வரும் நேரம், பேருந்து எண்கள் மற்றும் அவை செல்லும் இடங்களின் விபரம், இடையில் இருக்கும் நிறுத்தங்களின் எண்ணிக்கை, செல்ல ஆகும் கால நேரம், இறங்கும் இடம், இறங்கிய இடத்திலிருந்து நடக்க வேண்டிய தூரம், நடக்க ஆகும் நேரம் போன்ற விபரங்களையும் வழங்குகிறது.மேலும், நாம் தேடும் வழித்தடத்தில் மின் இரயில்      (Electric Trains ) திட்டம் இருப்பின், அது குறித்த விபரங்களையும் வழங்குகிறது.

    கூகுள் வரைபடங்கள் உதவியுடன் கிடைக்கும் இன்ன பிற சேவைகள் :

    குரல் மூலம் வழி நடத்தும் கூகுள் வரைபடங்கள் ( Google Voice Navigation )

    கூகுள் வரைபடங்கள், குரல் மூலம் வழிகாட்டும் வசதியை நமக்கு அளிக்கின்றன. தற்சமயம், இந்த வசதி ஆன்ட்ராய்ட்( Android ) இயக்க அமைப்பில் ( Operating System ) கிடைக்கிறது. இவற்றை, ஆன்ட்ராய்ட் தொலைபேசிகள் ( Android Phones ) மற்றும் ஆன்ட்ராய்ட் வரைவு லக்கமாக்கிகள் ( Android tablets ) ஆகியவற்றில் பயன் படுத்தலாம்.
    தற்சமயம் இந்த வசதி அகமதாபாத், பெங்களூரு, போபால், சண்டிகர், சென்னை, கோயமுத்தூர், டில்லி, ஐதராபாத், இந்தூர், ஜெய்பூர், கொல்கத்தா, மும்பை, மைசூர், நாக்பூர், பூனா, சூரத், திருவனந்தபுரம், வதோதரா, விசாகப்பட்டினம் ஆகிய இந்திய நகரங்களுக்கு கிடைக்கிறது. இந்த வசதி ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் கிடைக்கிறது.

    கூகுள் எர்த் ( Google Earth) மற்றும் கூகுள் வீதி வரைபடங்கள் ( Google Street View maps )

    கூகுள் வீதி வரைபடங்கள் உலகின் தெருக்களை, அவற்றின் அமைப்புகளை அப்படியே காட்டும். நாம் புதிதாக ஓர் இடத்திற்கு / நாட்டிற்கு செல்ல இருக்கிறோம் எனில், அங்கு நாம் செல்லும் இடம் / தெரு / இடத்தின் முகவரி தெரியுமேயானால், வீதி வரைபடங்களின் உதவியுடன், நாம் செல்லவிருக்கும் இடம் நேரில் பார்க்க எப்படி இருக்கிறது, அந்த இடத்திற்கு அருகில் இருக்கும் கடைகள், பல்பொருள் அங்காடிகள், மருத்துவமனைகள், உணவகங்கள் போன்ற அடிப்படை தேவைகள் குறித்தும் அறிந்து கொள்ளலாம்.

    map4
    எடுத்துகாட்டாக, அமெரிகாவின் நியூ ஜெர்சி மாகாணத்தில் உள்ள பிரிட்ஜ்வாட்டர் என்ற இடத்தில் இருக்கும் அருள்மிகு வெங்கடேஸ்வரர் கோயிலின் தோற்றம் கூகுள் வரைபடத்தின் தெருப் பார்வையில் மேற்கண்டவாறு தெரிகிறது.

    map5
    இந்த வரைபடத்தில் கீழே வரைபடத்தின் வலது பக்க ஓரத்தில் சிறியதாக மஞ்சள் நிறத்தில் மனித உருவம் போன்ற குறியீடு உள்ளது. அதன் பெயர் பெக்மேன் (peg man). அக்குறியீட்டினை எடுத்து வந்து வரைபடத்தில் நீல நிற பாதையில் விட்டால், அந்த பாதை உண்மையில் எப்படி இருக்கிறதோ அப்படியே நமக்கு காட்டும். அதுவே கூகுளின் தெருப்பார்வை ஆகும்.

    இது அக்கோயிலின் வெளிப்புறத் தோற்றத்தின் புகைப்படம்

    map6

    (நன்றி, இப்புகைப்படம் yelp.com ல் இருந்து எடுக்கப்பட்டது)

     

    கூகுள் உள்ளரங்க வரைபடங்கள் ( Google Indoor Maps )

    முக்கிய கட்டிடங்களின் உள்ளரங்க வரைபடங்கள் ( Floor Plans ) நமக்கு கூகுள் உள்ளரங்க வரைபடங்களின் உதவியுடன் கிடைக்கிறது. தற்சமயம் இந்தியாவில் இவ்வசதி சில குறிப்பிட்ட வணிக வளாகங்கள் (Malls) , அருங்காட்சியகங்கள் (Museums), விமான நிலையங்கள் (Airports) ஆகியவற்றிற்கு கிடைக்கிறது. இது குறித்த விபரங்கள் நமக்கு கீழ்காணும் இணைய பக்கத்தில் கிடைக்கிறது.
    https://support.google.com/gmm/answer/1685827?hl=en

    ரெயில் ராடார் ( Rail Radar)

    இந்தியன் இரயில்வே நிறுவனத்தார், கூகுள் வரைபடங்களின் உதவியுடன் உருவாக்கிய தகவல் தளம் ரெயில் ராடார். நாம் ஓர் குறிப்பிட்ட இரயில் குறித்த விபரங்களை அறிந்து கொள்ள இந்த தளம் உதவுகிறது. எடுத்துக்காட்டாக, ஒரு இரயில் கிளம்பிய இடம், கிளம்பிய நேரம், அடுத்து வரவிருக்கும் இரயில் நிலையம், இரயில் செல்லும் வழியில் இருக்கும் ஏனைய இரயில் நிலையங்கள், அந்நிலையங்களுக்கு செல்லும் நேரம், அங்கிருந்து கிளம்பும் நேரம் போன்ற விபரங்களை வழங்குகிறது.இந்த வசதி கூகுள் வரைபடங்களின் உதவியுடன் வழங்கப் பட்டு வந்தது. வரைபடத்தில் இரயில் செல்லும் பாதை, தற்சமயம் இரயில் இருக்கும் இடம், சரியான நேரத்தில் இலக்கை சென்றடையுமா அல்லது காலதாமதங்கள் இருக்கக் கூடுமா போன்ற விபரங்களையும் வழங்கியது. ஆனால், தற்சமயம் இந்த சேவை நிறுத்தப்பட்டு விட்டது. வரைபடம் இல்லாது, இரயில் குறித்த விபரங்கள் மட்டும் தற்சமயம் கிடைக்கிறது. இந்த சேவையை கீழ்காணும் இணையதளத்தில் பெறலாம்.
    http://enquiry.indianrail.gov.in/ntes/

    கூகுள் மேப் மேக்கர்
    இந்த சேவையை பயன்படுத்தி, நாமே வரைபடத்தில் புதிதாக விபரங்களை சேர்க்கவோ, ஏற்கனவே இருக்கும் விபரங்களை மாற்றி அமைக்கவோ முடியும்.

    ஒரு பகுதியில் கிடைக்கும் சேவைகள், எடுத்துக்காட்டடாக, உணவகங்கள், பல்பொருள் அங்காடிகள்,பள்ளிகள், மருத்துவமனைகள்/மருத்துவர்கள் குறித்த விபரம், சாலைகள்,ஒரு குறிப்பிட்ட பாதைக்கான பேருந்து அல்லது இரயில் சேவைகள், நகரின் முக்கியமான கட்டிடங்கள், வங்கிகள், வங்கிகளின் தானியங்கி பணம் எடுக்கும் எந்திரங்கள் இருக்கும் இடங்கள் போன்ற விபரங்களை பயனாளர்கள் உள்ளீடு செய்யலாம். அந்த விபரங்களை கூகுள் நிறுவனம் சரி பார்த்து, பின்னர் அவ்விபரங்களை வரைபடங்களில் பயன்பாட்டுக்கு கொண்டு வரும்.
    ww w.google.com/mapmaker மேற்குறிப்பிட்ட அனைத்து சேவைகளும் கூகுள் நிறுவனத்தாரால் வழங்கப்படும் கூகுள் வரைபடங்கள் மூலம் கிடைக்கப் பெறலாம்.

     

    இனி, இலவச வரைபட சேவைகள் வழங்கும் இன்னபிற நிறுவனங்கள் / வலைதளங்கள் குறித்து காணலாம்.
    1. மேப் க்வெஸ்ட் ( Map Quest ) www.mapquest.com
    2. யாகூ மேப்ஸ் ( Yahoo Maps ) https://maps.yahoo.com/
    3. பிங் ( Bing ) ( MSN நிறுவனம் வழங்கும் சேவை) http://www.bing.com/maps/
    4. மேப் மை இந்தியா மேப்ஸ் ( MapmyIndia Maps) http://maps.mapmyindia.com/  – இதில் வழித்தட விபரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
    5. ஹியர் (Here ) (Nokia நிறுவனம் வழங்கும் சேவை) https://www.here.com

    Share
  • பயன்மிகு இணையவழிச் சேவைகள் – கட்டுரைப் போட்டி

    வல்லமையில் பயன்மிகு இணையவழிச் சேவைகள் என்ற தலைப்பிலான புதிய கட்டுரைப் போட்டியை அறிவிப்பதில் மகிழ்கிறோம்.

    இணையம் மிக வேகமாக வளர்ந்து வருகின்றது. இருந்த இடத்திலிருந்தே எதையும் எளிதில், விரைவாக, கூர்மையாகச் செய்து முடிக்க முடிகிறது. கல்வி, தொழில், பொழுதுபோக்கு, தகவல் தொடர்பு… என எண்ணற்ற துறைகளில், வகைகளில் இதன் விரிவையும் ஆழத்தையும் நாம் கண்டு வருகிறோம். கூகுள், யாஹூ போன்ற பெரு நிறுவனத்தினர் முதல் தனி நபர்கள் வரை, புதிய புதிய பயனுள்ள இணையவழிச் சேவைகளை வழங்கி வருகின்றனர். இவற்றைப் பற்றி முழுதும் அறிந்தோர் சிலரே. இன்னும் ஏராளமானோருக்கு இப்படி ஒரு சேவை இருக்கிறது என்பதே தெரிவதில்லை. சேவையைப் பற்றிச் சிறிதளவு தெரிந்தாலும் அதை எப்படிப் பயன்படுத்துவது என்று தெரியவில்லை. எனவே, இத்தகைய பயன்மிகு இணையவழிச் சேவைகளைப் பலரும் அறியும் வகையில் புதிய போட்டியை முன்னெடுக்கிறோம்.

    Google_Appliance

    வாசகர்கள், தங்களுக்கு நன்கு தெரிந்த, பயன் மிகுந்த, நம்பகமான இணையவழிச் சேவைகளை எளிய முறையில் அறிமுகப்படுத்தலாம். ஒரு கட்டுரையில், ஒரு நிறுவனத்தின் ஒரு சேவையையோ அல்லது பல சேவைகளையோ அல்லது பல நிறுவனங்களின் பற்பல சேவைகளையோ குறிப்பிடலாம். ஆனால், எந்தச் சேவையைக் குறிப்பிட்டாலும் அதுகுறித்த முழுமையான செய்திகளையும் அதன் பல்வகைப் பயன்களையும் பயனர் கண்ணோட்டத்தில் அளிக்க வேண்டும்.

    வையவன் படம்இதன்படி, இந்தப் போட்டி, மார்ச்சு 2015 முதல் பிப்ரவரி 2016 வரை மாதந்தோறும் நடைபெறும். ஒவ்வொரு மாதமும் போட்டிக்கு வரும் கட்டுரைகளில் சிறந்த ஒரு கட்டுரைக்கு ரூ.100 (நூறு ரூபாய்) பரிசாக வழங்கப்படும். ஓராண்டு முடிவில் தேர்வு பெற்ற 12 கட்டுரைகளிலிருந்து ஒரு கட்டுரைக்கு ரூ.1000 (ஆயிரம் ரூபாய்) பரிசு வழங்கப்படும். தேர்வு பெறும் கட்டுரைகள் தொகுக்கப்பெற்று, தாரிணி பதிப்பகத்தின் வாயிலாகப் புத்தகமாக வெளியாகும். அதன் அச்சுப் பிரதி, கட்டுரையாளருக்கு அனுப்பி வைக்கப்படும்.

    எழுத்தாளர் வையவன் அவர்கள், இந்தப் போட்டியை முன்மொழிந்ததோடு மட்டுமில்லாமல், இதற்கான பரிசுத் தொகையையும் வழங்க முன்வந்துள்ளார். அவருக்கு வல்லமையின் சார்பில் நன்றிகள்.

    எழுத்தாளரும் இணையத்தில் தோய்ந்தவருமான ஐயப்பன் கிருஷ்ணன், மாதாந்தரப் போட்டிக்கான நடுவராக இருந்து, சிறந்த கட்டுரைகளைத் தேர்ந்தெடுக்க இசைந்துள்ளார். அவருக்கும் எங்கள் நன்றிகள்.

    விதிமுறைகள்

    1. கட்டுரைகளை vallamaieditor@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

    2. பயன்மிகு இணையவழிச் சேவைகள் என்பது கருப்பொருளே. வேறு உகந்த தலைப்புகளில் கட்டுரைகளை அனுப்பலாம். ஆனால், பயன்மிகு இணையவழிச் சேவைகள் – கட்டுரைப் போட்டிக்கு அனுப்பப்படும் கட்டுரை என்பதை மடலில் குறிப்பிட வேண்டும்.

    Iyappan_Krishnan3. மாதத்தின் முதல் தேதியிலிருந்து கடைசித் தேதி வரை வரப்பெறும் கட்டுரைகள், அந்த மாதத்துக்கான போட்டிக்கு ஏற்கப்பெறும். அடுத்த மாதத்தின் முதல் வாரத்தில் முடிவுகள் அறிவிக்கப்பெறும்.

    4. போட்டிக்கு அனுப்பப்பெறும் கட்டுரைகள், வேறு எங்கும் வெளிவராத புதிய படைப்புகளாக இருக்க வேண்டும்.

    5. தேவையான இடங்களில் படங்களையும் சுட்டிகளையும் இணைக்கலாம். காப்புரிமை உள்ள படங்களை இணைக்க வேண்டாம்.

    6. கட்டுரைகள், 1500 வார்த்தைகளுக்குள் இருப்பது நல்லது.

    7. போட்டியில் வெற்றி பெறும் கட்டுரையாளர், இந்தியாவுக்கு வெளியே இருந்தால், தமது இந்திய முகவரியை அளிக்க வேண்டும். யார் பெயருக்குக் காசோலை அனுப்பலாம் என்பதையும் தெரிவிக்க வேண்டும்.

    உங்கள் கட்டுரையின் மூலம், உலகின் ஏதோ ஒரு மூலையில் இருப்பவரும் பயன்பெறக் கூடும். எனவே, நீங்கள் அறிந்த நல்லதொரு புதிய சேவையை அனைவரும் அறியும் வகையில் எழுதுங்கள். பரிசுகளை வெல்லுங்கள்.

    படத்துக்கு நன்றி – விக்கிப்பீடியா

    Share