Tag: பேரா.பீ. பெரியசாமி

  • தற்கால மக்களிடையே நிலவும் சாதி சமயச் சிந்தனை

    -பேரா.பீ. பெரியசாமி

    முன்னுரை

    மனிதன் தன்னை நெறிப்படுத்திக் கொள்வதற்குத் தனக்குத் தானே உருவாக்கிக் கொண்ட அமைப்புதான் மதம்.  தன்னை மீறிய ஒரு சக்தி இந்த உலகை ஆட்டுவிக்கிறது என்று ஆதி மனிதன் கருதினான்.  இதற்குக் கடவுள் என்று பெயரிட்டான்.  நாளடைவில் ஒவ்வொரு செயலுக்கும் ஒவ்வொரு கடவுள் என்று பெயரிட்டான். கடவுளரின் செயல்பாடுகளை வரையறுத்து மதத்தைத் தோற்றுவித்ததான்.  அந்த மதம் சமயம் என்னும் வடிவில் இந்த பூமிப்பந்தை ஆக்கிரமித்த நிகழ்வை உலக வரலாறு வெவ்வேறு கோணங்களில் சித்தரிப்பதன் மூலம் பெற்றது.  அதன் பின்பு சமணம், பௌத்தம், சைவம், வைணவம், சீக்கியம் என்று பல பிரிவுகள் தோன்றின.  மேலை நாட்டு வரவுகளான இஸ்லாமும், கிறித்துவமும் உலகின் பல பிரிவுகளாகத் தோன்றின. இந்தியாவிலும் தமது ஆதிக்கத்தைச் செலுத்தின.  அரசுகளை அரியாசனத்தில் அமர்த்துவதும், அகற்றுவதுமான விந்தைகள் புரியும் ஆற்றலை அவைகள் பெற்றன.  நாடாள்பவன் மன்னனாக இருந்தாலும் அவனையும் சேர்த்தாள்கின்ற சக்தியாக மதங்கள் பவனி வந்தன.

    சாதி மற்றும் சமயம்

    மனிதனை மனிதநேயத்துடன் வாழத் துணைசெய்வது சமயமாகும். சமயங்களனைத்தும் அன்பையும், பொறுமையையும், மன்னிக்கும் மனப்பான்மையையுமே வலியுறுத்துகின்றன. இறைவன் ஒருவனே என்பது அனைத்துச் சமயங்களுக்கும் அடிப்படையான கொள்கையாகும் எனினும் தேவைக்கும் சூழலுக்கும் ஏற்பப் பல சமயங்கள் தோன்றின.  சமண மதம், புத்த மதம், இந்து மதம், இசுலாம் மதம், கிறித்துவ மதம், சீக்கிய மதம் என அவை பலவகைப்பட்டன. வாழ்க்கையை நெறிப்படுத்துவதும் தியாக உணர்வை வளர்ப்பதுமே அவற்றின் உள்ளீடாக விளங்கியது. புத்த சமயம் விளக்கும் இரக்கவுணர்வும் வாழ்விற்கான நன்னெறிகளே. இந்து சமயம் கூறும் அன்புணர்வும், கிறித்துவ சமயம் வலியுறுத்தும் மன்னிக்கும் மனப்பான்மையும், இசுலாம் சமயம் எடுத்துரைக்கும் சகோதரத்துவமும், சமயங்களுடன் சடங்குகள் இணைந்த போதே புதிய சிக்கல்கள் தோன்றின.

    சமயச் சடங்குகளே சமயம் எனும் அளவிற்கு அவை வளர்த்தபோது சமுதாயச் சிக்கல் உருவாகின. சடங்குகளுக்கு எதிராகத் தோன்றிய சமயங்கள் சடங்குகளாலேயே மறைக்கப்பட்டன. பிறப்பு, பருவமடைதல், திருமணம், இறப்பு என அனைத்து நிலைகளிலும் அவற்றின் செல்வாக்கு மிகுந்தது.  சமயத்தைப் பற்றி அம்பேத்கர்,

    பிறப்பு முதல் இறப்பு வரை மத ஆசாரங்களே மனிதனின் வாழ்க்கையில் ஊடுருவி நிற்கின்றன. மத சம்பந்தமில்லாதது என்று கூறுவதற்கு வாழ்க்கையில் எதுவுமே இல்லை” (பெ. தங்கராசு, அண்ணல் அம்பேத்காரின் அரும்பணி ஓர் ஆய்வு, ப – 147.)

    என்கிறார்.  எனினும் ஒருவர் பின்பற்றும் சமயச் சடங்குகளைப் பிறரும் பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தியபோது முரண்பாடுகள் தோன்றின. பிற சமயத்தைப் பின்பற்றுபவர்களை எதிரிகளாக சமயப் போட்டியாளர்களாகக் கருதும் மனப்பான்மை வளர்ந்தது.  இதனால் சமயப் பூசல்களும் சண்டைகளும் உருவாகின. இச்சிக்கல்கள் மனித உணர்ச்சியுடன் தொடர்புடையவையாகவே காணப்படுகின்றன. சமயத்தின் பெயரால் பல சிக்கல்களும் போரட்டங்களும் தோன்றிய போது பெரியார்,

    இன்று மதமானது ஒருவரையொருவர்      ஏய்க்கவே பயன்படுத்தப் பெறுகின்றதே அல்லாமல் தொல்லையில்லாதிருக்க, நிம்மதியான வாழ்வு வாழ உதவுவதாக இல்லை போலி வாழ்க்கைக் காரருக்குத் திரையாகவே மதமும், பக்தியும் உதவுகின்றன” (டாக்டா; ந. சுப்புரெட்டியார், தந்தை பெரியார் சிந்தனைகள், ப – 40.)

    என்று கடிந்து கூறுகிறார்.  மதம் மனித வாழ்க்கையில் ஆழ வேரூன்றி விட்டது.  மதங்களின் தோற்றத்திற்குக் காரணமாய் இருந்தவை அச்சமும் நம்பிக்கையின்மையுமேயாகும். இவற்றின் காரணமாகவே வழிபாடுகள் தோன்றின. தொடக்ககால மனிதன் தன்னைப் பாதுகாத்துக் கொள்ளவும் அச்சத்தின் காரணமாகவும் இயற்கையை வழிபடத் தொடங்கினான்.  நிலம், நீர், தீ, வளி, விசும்பு எனும் ஐந்தும் மனிதனுக்கு வியப்பினையும் ஆர்வத்தினையும் தூண்டியமையால் வழிபாடு அவற்றை அடிப்படையாகக் கொண்டு அமைந்தது. இயற்கை வழிபாடே மனிதனின் முதல் இறை வழிபாடாக இருந்துள்ளது.

    அச்சமும் பதற்றம் கலந்த எதிர்பார்ப்பும் மதத் தோற்றத்திற்குக் காரணம்(க.ப. அறவாணன், தமிழர் தம் இலக்கியம், பண்பாடு, அறிவியல், கல்வி, ப – 40.) என்கிறார் கார்ல் மார்க்சு.  கி.பி. இரண்டாம் நூற்றாண்டிலேயே தமிழகத்தில் ஆரியம், சமணம், பௌத்தம் போன்ற மதங்கள் பரவியிருந்தன.  சங்க காலத்தில் சமயத்தின் பெயரால் பூசல்கள் சிக்கல்களும் காணப்பட்டதற்கான குறிப்புகள் இல்லை.  தொல்காப்பியர் தமிழர் சமயமாகக் குறிப்பிடும் போது,

    மாயோன் மேய காடுறை உலகமும்
    சேயோன் மேய மைவரை உலகமும்
    வேந்தன் மேய தீம்புணல் உலகமும்
    வருணன் மேய பெருமண லுலகமும்” (தொல், பொருள், நூ – 5.) 

    என்று முதற் பொருளான நிலத்தின் அடிப்படையில் தெய்வத்தையும் வாழ்க்கையையும் குறிப்பிட்டுள்ளார்.  எனவே, தமிழரின் தொடக்க கால வழிபாடாக, இறை வழிபாடு, முன்னோர் வழிபாடு, நடுகல் வழிபாடு, சிறு தெய்வ வழிபாடு, பெருந்தெய்வ வழிபாடு போன்றவைச் சிறப்பிடம் பெறுகின்றன.

    கி.பி இரண்டாம் நூற்றாண்டில் தோன்றிய சிலப்பதிகாரமும் சமய ஒற்றுமையையே வலியுறுத்துகின்றது.  இளங்கோ அடிகள் சைவ சமயத்தவர் என்று கூறப்பட்ட போதிலும் சைவ, வைணவ சமயக் கருத்துகள் சிலம்பில் மிகுந்து காணப்படுகின்றன.  கோவலன் அருக சமயத்தவன்; மாதவியும் மணிமேகலையும் பௌத்தத் துறவிகள்.சேரன் செங்குட்டுவன் சிவபக்தன்.  ஆய்ச்சியர் குரவை வைணவ  வழிபாட்டையும், குன்றக் குரவை முருக வழிபாட்டையும் எடுத்துரைக்கின்றன. சிலப்பதிகாரத்தை ஆராய்ந்து நோக்கும்போது அதில் சமயப் பூசல்கள் சிறப்பிடம் பெறவில்லையென்பதும் சமய ஒற்றுமையை நிலை நிறுத்துவதை நோக்கமாகக் கொண்டிருந்தது என்பதும் புலனாகின்றது. எனவே, குறிப்பிட்ட காலம்வரை வெளிவந்த இலக்கியங்கள் அனைத்தும் சமயக் காப்பியம் என்று கருதப்படுகின்ற மணிமேகலை கூட பௌத்த சமயக் கருத்துக்களை விட அறநெறிக் கருத்துக்களுக்கே முக்கியத்துவம் அளித்துள்ளது. சமூகப் புரட்சியைக் காண வேண்டும் எனும் விழைவு மணிமேகலையில் மிகுந்து உள்ளது.  மதுவொழிப்பு, சிறையொழிப்பு, பரத்தையர் ஒழிப்பு, மக்களின் பசிப்பிணி நீக்குதல் போன்றவையே மணிமேகலையில் பெரும்பாலும் வலியுறுத்தப் படுகின்றன.  சைவமும் வைணவமும் மத ஒற்றுமையையே வலியுறுத்துகின்றன.

    இதற்குப் பல நூற்றாண்டுகளுக்குப் பின்னர் இந்தியாவிற்கு வந்த கிறித்துவ சமயமும் பழைய ஏற்பாடு, புதிய ஏற்பாடு எனும் வேதங்களைக் கொண்டு மக்களுக்கு நன்னெறிகளைப் புகட்டியது கிறித்துவ மதத்தை அருட்கொடையாக மக்களுக்குக் கொடுத்த இயேசுபிரானும் தாம் மரிக்கும் முன்பு சீடர்களை நோக்கி மன அமைதியே ஆண்டவனை அடையும் வழி என்று கூறுகிறார். இங்ஙனமே இசுலாம் மதமும் தனது முதன்மை நோக்கமாக அமைதியையும் கீழ்ப்படிதலையும் வலியுறுத்துகின்றது.  உலகில் தோன்றிய  சமயங்களுள் தொன்மை வாய்ந்த மதமாகக் கருதப்படும் சமண மதமும் புத்த மதமும் கூட அன்பையும் சகிப்பு தன்மையையுமே வலியுறுத்துகின்றன. தோன்றிய எல்லாச் சமயங்களும் அன்பையும் அமைதியையுமே வலியுறுத்தியுள்ளன. சமூகத்தில் இதன் விளைவுகளோ முரண்பட்டவையாகக் காணப்படுகின்றன.  மதக் கலவரங்களும் இன மோதல்களும் சமயம் இன்றுவரை மக்களைச் சரியாகச் சென்று அடையவில்லை என்பதை உணர்த்துகின்றன.  தனி மனித வாழ்விலும் சமூக வாழ்விலும் சமயம் இன்றியமையாத ஒன்றாக விளங்கி வருகிறது.

    சமயத்தில் ஏற்பட்ட சிக்கலைத் தீர்க்கப் பிரம்ம சமாஜம், ஆரிய சமாஜம் போன்றவைத் தோன்றின. மிகச் சிறந்த ஞானியாகத் தன்னை வெளிப்படுத்திக் கொண்ட இராமலிங்க அடிகளார் கூட சமயம் என்பது ஆன்ம நேய ஒருமைப்பாடே என்று கூறுகிறார். 

    எல்லா உயிர்களையும் இறைவனுடைய பிள்ளைகளாகவே கருதும் சர்வ சகோதர தத்துவமே ஆன்மநேய ஒழுக்கம்” (இராமலிங்க அடிகளார், வள்ளலாரின் வாயமுதம் – சன்னதி மாத இதழ், ப – 66.)

    என்று இராமலிங்கர் எடுத்துரைக்கிறார். மதம் என்பது ஒழுக்க முறைகளையும் சமூக ஒற்றுமையையும் நிலைநிறுத்தவே தோன்றியது. இலக்கியங்கள் பெரும்பாலானவற்றுள் மதத்தின் செல்வாக்கு மிகுந்திருப்பதைக் காண முடிகிறது.  சாதியும் மதமும் சமூகத்தில் தவிர்க்க இயலா நிலையை அடைந்திருக்கிறமையை அறிய முடிகின்றது.

    சாதி, சமயத் தோற்றத்திற்கானக் காரணங்கள்

    சமூகச் சூழல்களே சாதியும் சமயமும் தோன்றக் காரணமாயின.  தொடக்க கால மக்களின் வாழ்க்கையில் எந்தவிதப் பிரிவுகளும் காணப்படவில்லை. வேளாண்மையும் பொருட்களின் உற்பத்தியும் தொழில்களின் அடிப்படையில் மக்களைப் பாகுபடுத்தின. இதன் காரணமாக மக்கள் நான்கு வருணத்தவராகப் பிரிக்கப்பட்டனர். அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் என்று அவர்கள் வகைப்படுத்தப்பட்டனர். இவற்றுள் வழிபாட்டு உரிமை அந்தணனைச் சென்றடைந்தது, நிர்வாகம் அரசனுக்கும், வணிகம் வணிகனுக்கும், உடல் உழைப்பு வேளாளருக்கும் விதிக்கப்பட்டது.  இதனை மேன்மேலும் உறுதிப்படுத்த யாகங்களும் மந்திரங்களும் துணை புரிந்தன.  இதன்  காரணமாகத் சாதிய அடிப்படையிலான சமுதாயம் உருவாகியது.  சாதிப் பிரிவுகள் படிப்படியாக வளர்ச்சியடைந்தன.  நில உடைமையும் நிலப் பிரபுத்துவமும் இதனை மேலும் வளர்த்தன.  சாதிப் பிரிவினையை நிலைநிறுத்த குலத்தொழில் முறை வலியுறுத்தப்பட்டது.  சாதி வரையறையினைப் பற்றி அம்பேத்கார் குறிப்பிடும் போது,

    சாதி என்பது ஒரு பொதுப்பெயர் கொண்ட குடும்பங்களின் திரட்சியையோ அல்லது அவ்வாறான குடும்பங்களை உள்ளடக்கும் குழுக்களையோ குறிக்கும் இப்பொதுப் பெயரானது ஒரு குறிப்பிட்ட அலுவலைக் குறிப்பதாகவோ ஒரு குறிப்பிட்ட அலுவலலோடு தொடர்புடையதாகவே இருக்கும்.” (அரங்க மு. முருகையன், தமிழர் பண்பாட்டில் சாதியம், ப – 138.)

    என்று கூறுகிறார்.  உடல் உழைப்பில் ஈடுபட்டவன் தாழ்ந்தவனாகக் கருதப்பட்டான். பொருளாதார நிலையிலும் அவனது வாழ்க்கை துன்பத்திற்கு உள்ளாக்கப்பட்டது. செல்வந்தர்களும் செல்வாக்குப் பெற்றவர்களும் உயர்சாதியினராகப் போற்றப்பட்டனர். குறிப்பிட்ட தொழிலைச் செய்தவன் குறிப்பிட்ட சாதிக்கு உரியவனாகக் கருதப்பட்டான்.

    இது மக்களின் மீது வலிந்து திணிக்கப்பட்டதாக உருமாறியது. இவர்கள் கல்வியிலிருந்து வாழ்க்கை உயர் நிலைகளிலிருந்தும் ஒதுக்கப்பட்டனர்.  தீண்டத் தகாதோராக வாழும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.  சாதி பற்றிய ஏ. உல்குரொபர் கருத்தினை அரங்க முருகையன் எடுத்துரைக்கும்போது,

    ஒரு வகுப்பாருக்கும் இன்னொரு வகுப்பாருக்கும் இடையே காணப்படும் சமூக மரியாதையை ஒப்பிடும்போது தோன்றும் உயர்வு, தாழ்வு நிலையே சாதி.”(மேற்படி,ப – 141.)

    என்கிறார். மேலும், ஒரு சாதியானது மற்றொரு சாதியினைச் சடங்குகளின் பெயராலும் கடவுளின் பெயராலும் அடக்கி ஒடுக்கும் நிலையும் உருவாகியது. சாதிப் பிரிவினைகள் பரம்பொருளால் உருவாக்கப்பட்டது என்னும் கருத்து வலியுறுத்தப்பட்டமையால் மக்கள் அதனை எதிர்க்கத் தயங்கினர். சாதிப் பிரிவினைகளும் அவற்றால் ஏற்பட்ட சடங்குகளும் மதமாற்றங்கள் உருவாகக் காரணமாயின.

    இங்ஙனம் தோன்றிய பல்வேறு சமயங்களும் தமக்கென சில வரையறைகளை வைத்துக் கொண்டு மக்களை நல்வழிப்படுத்த முயன்றன.  எனினும் மக்களின் தவறான அணுகுமுறையால் சமுதாயத்தில் மதப் போராட்டங்களே மிகுந்தன. இவற்றை நீக்க காலந்தோறும் பல சமயத் தலைவர்கள் தோன்றிச் சமய ஒற்றுமையை நிலைநாட்ட முயன்றனர். சாதியையும் மதத்தையும் சரியான முறையில் அணுகும்படி வலியுறுத்தினர். மனிதநேயம் மதங்களில் முதல் நோக்கம்  என்று எடுத்துரைத்தனர்.  ஒரு சாராரின் மதப்பற்றும் உணர்வும் இன்னொரு மதத்தவரைப் பாதிக்காமல் இருக்க வேண்டும் என்று உரைத்தனர்.  மதம் எது என்பதை டி.ஆர்.பரமேசுவரன் விளக்கும்போது,

    மதம் பிரதானமாக இரண்டு அம்சங்களைக் கொண்டது; ஒன்று இயற்கையைப் புரிந்துக் கொள்வதற்கான முயற்சிகளில் உருவான நம்பிக்கைகள்; இரண்டு இயற்கையைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளுடன் சம்பந்தப்பட்ட சடங்குகள்.” (பி.ஆர். பரமேஸ்வரன், இந்திய சமுதாயத்தில் சாதி, மதம், ர்க்கம், ப – 48.)

    என்று கூறுகிறார். எனினும், ஒரு சிலரின் தவறான செயல்பாடுகள் மதங்களின் கொள்கைகளைப் பெருமளவு பாதித்தன. மக்களை ஒன்றுபடுத்தும் வலிமைவாய்ந்த சாதனம் மதம் என்பது மாறி, மதவெறியே மதத்தின் கோட்பாடாகியது. இதனால் மதக் கலவரங்களும் போர்களும் மூண்டன.

    முடிவுரை

    சாதி என்பது செய்கின்ற தொழிலால் ஏற்பட்ட ஒன்று. பொருளாதார ஏற்றத் தாழ்வுகள் சமய மாற்றத்திற்குக் காரணமாகின. சாதிப் பிரிவுகள் சமுதாய வளர்ச்சியைத் தடுத்து நிறுத்தின. மரபுப் பிடிக்குள் ஆட்பட்ட முதிய சமுதாயம் சாதீயப் பிரிவுகள் நிலைபெறத் துணைபுரிந்தன. சாதிப் பிரிவுகளே தீண்டாமைக்கு வழிவகுத்தன. மதக் கோட்பாடுகள் மக்களிடையே பிரிவினையை வளர்த்து வருகின்றன.  மனிதநேய உணர்வுகள், ஒவ்வொரு மனிதனுக்கும் வறுமை, உயர்வு, தாழ்வு, அன்பு, பண்பு, அடிமை உணர்வு ஆகிய நிலைகளில் திகழ்கின்றது. தானும் வாழ்ந்து பிறரையும் வாழ வைப்பதே மனிதநேயம் என்பதையும், சாதி, இன ஒடுக்குதல்கள் ஒழிந்து, சமுதாயத்தில் சமத்துவம் நிலவுவதே மத நல்லிணக்கம் என்பதையும் நாம் அனைவரும் உணர வேண்டும்.

    *****

    கட்டுரையாளர் – தமிழ்த்துறைத்தலைவர்
    டி.எல்.ஆர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி
    தத்திரவாடி, விளாப்பாக்கம் – 632501
    வேலூர் மாவட்டம்.

                                                                                     

    Share
  • திறனாய்வாளர்கள் பார்வையில் மெய்ப்பாட்டியல்

    -பேரா.பீ. பெரியசாமி       

    முன்னுரை:

    இன்றைக்குச் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்னதாகச் கருதப்படும் தொல்காப்பியம் மனிதர்களின் மன உணர்ச்சிகளைக் கோட்பாடுகளாக வடித்தெடுக்கும் முயற்சி எடுத்துள்ளது. தொல்காப்பியத்தில் பொருளதிகாரம் இலக்கியப் படைப்பிற்கான உத்திகளையும் கோட்பாடுகளையும் வகுத்துள்ளது. அவற்றுள் மனித மனஉணர்வுகளைப் பேசும் இயலாக மெய்ப்பாட்டியல் உள்ளது. அவற்றைக் குறித்து, திறனாய்வாளர்கள் கூறும் கருத்துக்களைத் திறனாய்வாளர்கள் பார்வையில் மெய்ப்பாட்டியல் எனும் இக்கட்டுரையில் ஆராயப்படுகிறது.

    இந்தியத் திறனாய்வாளர்கள் பார்வையில் மெய்ப்பாட்டியல்

    மெய்யின்கண் தோன்றும் குறிப்புகள் கருத்தில் கொண்டு புலப்படுத்தவல்லன. அக்குறிப்புகள் புறத்தாரால் புலன்களின்வழி அறியப்பட்டு வெளிப்படுகின்றன. அகப்பொருள் புலப்பாட்டு நெறியில் கேட்பவரை உளப்படுத்தி மெய்ப்பாட்டியலை படைத்துள்ளார் தொல்காப்பியர். இதனைக் குறித்து பல்வேறு காலகட்டத்தில் வாழ்ந்த இந்திய ஆய்வாளர்கள் கூறுவது,

    “மெய்ப்பாட்டியல் பழந்தமிழ் மக்களின் உளநூல்”1 என புலவர் குழந்தை எடுத்துரைக்கின்றார். “மெய்ப்பாட்டியலைப் பொதுவாக ‘மெய்ப்பாடு’ என வழங்குவர். ‘மெய்ப்பாட்டியல்’ என்பது, மெய்மை + பாடு+ இயல் என பிரியும். ‘மெய்ம்மை’ என்பது, உண்மை எனவும், ‘பாடு’ என்பது தோற்றம், வெளிப்பாடு எனவும், ‘இயல்’ என்பது இலக்கணம் எனவும் பொருள்படும்.”2 என டாக்டர் இரா. சந்திரசேகரன் கூறுகின்றார். “மெய்ப்பாடு, மெய் + பாடு. மெய் – உடம்பு, படுதல், தோன்றுதல். படு எனும் முதனிலைத் தொழிற்பெயர் ‘பாடு’ என நீண்டு மெய்ப்பாடாயிற்று. இது மெய்யின்கண் படுதல், தோன்றுதல் என்ற பொருள்படும்.”3 எனப் பொருள் கூறுகின்றார். “பேச்சுமொழி தோன்றும் முன்னரே தம் கருத்தைப் பிறருக்கு உணர்த்த மனிதனுக்குப் பயன்பட்டவை மெய்ப்பாடுகளேயாகும்”4 என க. வெள்ளைவாரணன் மெய்ப்பாட்டியலை சைகைமொழியோடு ஒப்பிட்டுக் கூறுகின்றார்.

    “தொல்காப்பியம் பொருளதிகாரத்தில் 244 -ஆவது நூற்பா எட்டு மனஉணர்ச்சிகளைப் பற்றி கூறுகின்றது. அவைகள் உடல்வழியாக வெளிப்படும்போது மெய்ப்பாடுகள் என்று சொல்லப்படுகின்றன. உடலின் புறக்குறிகளால் காண்பவருக்குப் புலனாகும் இந்தத் தன்மைகள் மெய்ப்பாடு எனப்படும். மெய்ப்பாடு என்பது மனத்தில் இருப்பவை உடல் உறுப்புகளின் வழியாக வெளியே தென்படுவதாகும். உள்ளத்தில் தோன்றும் எண்ண அலைகள் வெளியே மெய்ப்பாடாக வருகின்றன.”5 என யோகி மெய்ப்பாட்டை மனஉணர்ச்சிகளோடு ஒப்பிட்டுக் கூறுகின்றார். “செய்யுளில் படைக்கப்படும் தலைவன் தலைவி முதியோர் தம் உணர்ச்சிகளைப் புலப்படுத்தும் பேச்சுக்களையும் மெய்ப்பாடாகத் தொல்காப்பியர் கொண்டார்.”6 என சுந்தரமூர்த்தி கூறுகின்றார்.

    “உள்ளுணர்வுகளின் தொகுதியாகத் தோன்றும் அனுபவங்களின் அடிப்படையில் எழும் முப்பத்திரண்டு உணர்ச்சிகளும் முறையே நான்கு நான்காகத் தொகுத்துக் காணின் எட்டுவகை மெய்ப்பாட்டிற்கும் காரணமாக அமையும்”7 என தா.ஏ, ஞானமூர்த்தி கூறுகின்றார்.  “இலக்கியத்துள் அமையும் உணர்ச்சிகளை, அவை புலனாகும் மெய்ப்பாடுகளை விளக்கும் வகையில் இதனை எடுத்துரைத்தார் தொல்காப்பியர்.”8 என மு.வரதராசனார்; கூறுகின்றார். “மெய்ப்பாடு என்பது வாழ்க்கையிலும் அமைகிறது; நாடகத்திலும் வெளிப்படுகிறது; இலக்கியத்திலும் உணரப்படுகிறது.”9 எனத் தமிழண்ணல் கூறுகின்றார். “மெய்ப்பாடு என்பது உண்மைத் தோற்றம், உண்மை நிகழ்ச்சி, உண்மை நிலை என்றெல்லாம் பொருள் விளக்கம் பெறும். உலகிலுள்ள எந்த ஒன்றிலும் இம்மெய்ப்பாடு காணப்படுதல் இயல்பு. ஆனாலும், மனிதரிடத்திலே சிறந்து காணப்படுகிறது.”10 என்று புலவர் செந்துரை முத்து கூறுகின்றார். “எண்வகை மெய்ப்பாடுகள் அல்லாத பிற மெய்ப்பாடுகள் இலக்கியத்திலும் நாடத்திலும் இடையிடையே வெளிப்படுத்தப்படும். இவை பெரும்பாலும் உலக வாழ்க்கையை ஒட்டி அமைந்த மெய்ப்பாடுகளாகும்.”11 என மு.ஹம்ஸா கூறுகின்றார்.

    இதன்வழி மெய்ப்பாடென்பது இலக்கியத்தில் மட்டுமல்லாது நாடகத்திலும், வாழ்வியலும் காண முடியும். உலகிலுள்ள அனைத்து உயிர்களிடத்தும் மெய்ப்பாடு என்பது இயல்பாய் அமைந்திருக்கக் கூடியது என்பதை அறிய முடிகிறது.

    மேலைநாட்டுத் திறனாய்வாளர்களின் பார்வையில் மெய்ப்பாடுகள்

    “அனுபவத்தின் தன்மையை ஒட்டி உண்மையும் ஆழமும் வாய்ந்த உணர்ச்சிகள் தோன்றுகின்றன. அவ்வுணர்ச்சிகள் உடலின்கண் மாற்றங்களை ஏற்படுத்துகின்றன.”12 என்பது ஐ.ஏ. ரிச்சர்ட்ஸ் அவர் தம் கருத்தாக உள்ளது. “கவிதை நல்கும் உள்ளுணர்வு மறைமுகமானது; இந்த உள்ளுணர்வினால் உடலின்கண் தோன்றும் மாற்றங்களைவிட அக்கவிதையினின்றும் பெறும் உணர்ச்சியினால் ஏற்படும் உடல் மாற்றங்கள் மிகுதியானவை.”13 என வில்லியம் கே. விம்சாட் கூறுகின்றனர். “உறக்க நிலையிலுள்ள உள்ளத்திலிருந்து உடற்கூறு வாயிலாக எழுகின்ற உணர்ச்சிகள் பல திறப்பட்டன. மெய்ப்பாடுகளாகப் புறஉடலில் வெளிப்படுகின்றன.”14 என ஆங்கில அகராதி கூறுகின்றது. “கிரேக்க மெய்ப்பாட்டியல் சிந்தனையும் இந்திய மெய்ப்பாட்டியல் சிந்தனையும் சற்றேறக்குறைய ஒத்துள்ளது. குறிப்பாகத் தமிழ் மெய்ப்பாட்டியல் கோட்பாடுகள் ஒத்துள்ளது எனலாம். தொல்காப்பியரின் மெய்ப்பாட்டுக் கொள்கையும் அரிஸ்டாட்டிலின் கொள்கையும் மிக நெருக்கமான நிலையில் அமைந்து கீழை நாடுகளுக்கும் மேலை நாடுகளுக்கும் இடையே ஒத்த சிந்தனைப் பாலமாக அமைகின்றது என்ற கருத்து சுட்டத் தகுந்தது.”15 என நடராசன் அவர்கள் கூறுகின்றார். இதன்வழி தமிழில் மட்டுமல்லாது மேலைநாடுகளிலும் மெய்பாட்டியல் பற்றிய கோட்பாடுகள் சிறந்து விளங்கியுள்ளன என்பதை அறிய இயலுகின்றது.

    முடிவுரை

    மன உணர்வுகளின் வெளிப்பாடே மெய்ப்பாடாகும். இது தமிழில் தனி இயலாக தொல்காப்பியத்தில் விளக்கப்பட்டுள்ளது. பின்னர் வந்த மேலைநாட்டு இலக்கியவாதிகளும் தங்கள் மொழிகளில் மெய்ப்பாட்டின் வெளிப்பாடு குறித்து பல்வேறு சொற்களில் குறித்துள்ளனர் என்பது இக்கட்டுரையின் முடிபு.

    அடிக்குறிப்புகள்

    1. புலவர் குழந்தை, தொல்காப்பியர் காலத் தமிழர், ப.
    2. டாக்டர் இரா.சந்திரசேகரன், தமிழச்சிற்றிலக்கியங்கள், பக்.66-67.
    3. கண்ணகி கலைவேந்தன் (தொ.ஆ), தொல்காப்பியம் பொருளும் வாழ்வியலும், ப.
    4. க. வெள்ளைவாரணன், தொல்காப்பியச் சிந்தனைகள்,ப.
    5. யோகி, மனதின் இயல்புகள், ப.
    6. Sundaramoorthy, Early literary Theories in Tamil,p.91.
    7. தா.ஏ. ஞானமூர்த்தி, இலக்கியத் திறனாய்வியல், ப.
    8. மு.வரதராசனார், இலக்கியமரபு, ப.
    9. தமிழண்ணல், தொல்காப்பிய இலக்கிய கொள்கைகள், ப.
    10. புலவர் செந்துரை முத்து, மெய்ப்பாடு, ப.
    11. மு.ஹம்ஸா, தொல்காப்பிய பொருளிலக்கணக் கோட்பாடுகள் – 2, ப.
    12. A.Richards, Principles of Literary Criticism, pp.77-78.
    13. William K.Wimsatt Jn. & Cleanth Brooks, Literary Criticism, A Short History, p.290.
    14. Dictionary of Behavioural Science, p.118.
    15. Natarajan, (Essay), Beyond Meaning affective aesthetic of Anandavardhana and I.A.Richards, p.10.

    *****

    கட்டுரையாசிரியர் – தமிழ்த்துறைத்தலைவர்,
    D.L.R. கலை மற்றும் அறிவியல் கல்லூரி,
    வேலூர்.

    Share
  • பெருந்திணைக்குரிய மெய்ப்பாடுகளும் அகநானூறும் – உரையாசிரியர்களின் உரைகளை முன்வைத்து ஓர் ஆய்வு – பகுதி 2

    -பேரா. பீ.பெரியசாமி

     1:1:12. மெய்யே என்றல்

    மெய்யே என்றலென்பது, “உரைத்த மாற்றத்தை மெய்யேயெனக் கூறுதல்” (இளம்., தாசன், மெய்.22)., எனவும், “பொய்யை மெய்யென்று துணிதல்” (பேரா.,மெய்.22). எனவும், “இது முன்னதற்கு மாறாகப் பொய்ப்பினும் தலைவன் சொல் மெய்யெனத் துணியும் தலைவியியல்பு.” (பாரதி.,மெய்.22) எனவும், “தலைவன் தன்னிடம் சொன்ன பொய்யை மெய்யாகக் கருதல். இது பெரும்பாலும் தலைவன் வாயில் வேண்டி நிற்கையில் அவன் சொல்லும் பொய்ம்மொழிகளின் மேல்வரும் மெய்ப்பாடு.” இராசா,மெய்.22) எனவும், “தலைவன் மாட்டுப் பொய்ம்மை நிகழினும் தன் காதன் மிகுதியான் அதனை மெய்ம்மையாகக் கருதிக் கொள்ளுதல்.” (பாலசுந்.,மெய்.22). எனவும் உரையாசிரியர்கள் உரை கொள்வர். முன்னர் தலைவன் கூறும் மெய்ம்மைகளைப் பொய்யெனக் கொண்ட தலைவி. இங்ஙனம் பொய்ம்மையை மெய்யே என்று காதல் மிகுதியால் கொள்ளுதலே மெய்யே என்றலாகும். இதனை விளக்க இளம்பூரணர், குறுந்.121 ஆம் பாடலும்; பாலசுந்தரம், குறுந்.21 ஆம் பாடலும்;  தாசன், குறுந்.121, 21 ஆகிய பாடல்களையும்;  பாரதி, குறுந்.21, 288 ஆகிய பாடல்களும்; மேலும் பேராசிரியர், பாரதி, குழந்தை ஆகியோர்,

    கழங்கா டாயத் தன்றுநம் மருளிய
    பழங்கண்
    ணோட்டமு னலிய
    வழுங்கின
    னல்லனோ வயர்ந்ததன் மணனே.” (அகம்.66)

    எனும் அகப்பாடலையும் எடுத்தாண்டுள்ளனர். இதில், கழங்காடலை ஆடும் நம்மாயத்தார் நடுவே அன்று நமக்கு அருளிய பழங்கண்ணோட்டம் தன்னை வருத்தலால், செய்த தன்மணத்தைச் சிறிது தவிர்த்தானல்லனோ என பொய்யை மெய்யாகக் கொண்டாள் தலைவி. இதனை, “இன்பத்தை வெறுத்தல் என்னுஞ் சூத்திரத்து, ‘மெய்யே யென்றல்’  என்பதற்குப் பொய்யை மெய்யென்று கூறுதல் என்று பொருள்கூறி அது, ‘கழங்கடாயத்து …………………………………………. அயர்ந்தனன் மணனே’; என்பது: தானே தன் மகனை வாயில் கொண்டு புக்கானாயினும், அதனைப் பழங்கண்ணோட்டமும் நலிதரப் பொய்யே புகுந்தானென்று மெய்யாகத் துணிந்து கோடலால் அப்பெயர்த்தாயிற்று என்றார் பேரா.” (ந.மு.வேங்கடசாமி, அகநானூறு, களிற்றியானை நிறை, ப.159) என ந.மு.வேங்கடசாமி தமது அகநானூற்று உரையில் மேற்கோள் காட்டியுள்ளார்.

    1:1:13 ஐயஞ் செய்தல்

    ஐயஞ் செய்தலென்பது, “தலைவன் குறிப்புக் கண்டு ஐயப்படுதல்.” (இளம்., தாசன், மெய்.22). எனவும், “இது, காதல் மிகையாற் கடுக்குமியல்பு.” (பாரதி.,மெய்.22) எனவும், “நம்மை வரையாது விடுவாரோ என வாளாதே ஐயம் செய்தல். வரையாது – மணக்காது. வாளா – சும்மா.” (குழந்தை, மெய்.22). எனவும், “ ‘நம்மை இம்மைப் பிறப்பினுள் துறப்பார் கொல்’ எனத் தலைவி காரணமின்றி ஐயங் கொள்ளுதல்.” (இராசா, மெய்.22).எனவும், “தலைவன் சொல்லையும் செயலையும் ஐயுற்றுக் கருதுதல்” (பாலசுந்.,மெய்.22). எனவும் உரையாசிரியர்கள் உரைகொள்வர். ஐயஞ் செய்தலென்பது தலைவனின் செயலைக் கண்டு அவன் தன்னை மணக்காது போய்விடுவானோ? என ஐயுறுதலாகும். இதனை விளக்க இளம்பூரணர், பாலசுந்தரம், தாசன் ஆகியோர் கலி.4 – ஆம் பாடலையும்; பேராசிரியரும் குழந்தையும், கலி.33 ஆம் பாடலையும்; பாரதி கலி.4, 24 ஆகிய பாடல்களையும் எடுத்தாண்டுள்ளனர். இம்மெய்ப்பாட்டினை விளக்க உரையாசிரியர்கள் அகநானூற்றுப்பாடல் எதையும் எடுத்தாளவில்லை.

    1:1:14. அவன்தமர் உவத்தல்

    அவன்தமர் உவத்தலாவது, “தலைவன் தமரைக் கண்டவழி உவத்தல்.” (இளம்.,மெய்.22). எனவும், “அவன் தமரைக் கண்டு உவந்தது. இது முனிவெனப் படாவோவெனின், அது தலைமகனைப் புலந்தாற்போல்வதோர் முனிவாயினல்லாது பகைப்பட நிகழாக்குறிப்பெனப்படும்; அல்லாக்கால், அது பெண்டண்மையன்றாமாகலின்.” (பேரா.,மெய்.22). எனவும், “தலைவனுடைய தமரான பாணன் முதலியோரைக் கண்டு மகிழ்தல். தமர்-சுற்றம்.” (குழந்தை, மெய்.22). எனவும், “தலைவனைச் சார்ந்தாரைக் கண்டுழியும் அவர் சொற்கேட்டுழியும் உளம் மகிழ்தல். (எ-டு) வந்துழிக் கண்டுகொள்க. அவன் தமரேயன்றி அவன் நாட்டுப்பொருள் முதலியவற்றை உவத்தலையும் இதன்கண் அடக்கிக் கொள்க.” (பாலசுந்.,மெய்.22). எனவும் உரையாசிரியர்கள் உரைகொள்வர். அவன்தமர் உவத்தலென்பது, தலைவனின் உறவினர்களையும் அவன் நாட்டுப் பொருளையும் கண்டவழி மகிழ்தலாகும். இதனை விளக்க இளம்பூரணரும் தாசனும், கலி.83-ஆம் பாடலையும்; பேராசிரியர், குழந்தை, பாலசுந்தரம் ஆகியோர், குறுந்.361 – ஆம் பாடலையும்;  பாரதி கலி.82 ஆம் பாடலையும் எடுத்தாண்டுள்ளனர். இம்மெய்ப்பாட்டினை விளக்க உரையாசிரியர்கள் அகநானூற்றுப் பாடல் எதையும் எடுத்தாளவில்லை.

     1:1:15. அறனழித்துரைத்தல்

    அறனழித்துரைத்தலென்பது, “அறத்தினையழித்துக் கூறுதல்” (இளம்., தாசன், மெய்.22). எனவும், “அறனழிய வெறுப்பது போல வெறுத்துக் கூறல்.” (பாரதி.,மெய்.22) எனவும்,  “பிரிவுத் துன்பத்தான்  உளம்நொந்த தலைவி தலைவன் முதலானோரிடத்து அறமில்லை என வெறுத்துப் பேசுதல்.” (பாலசுந்.,மெய்.22) எனவும் உரையாசிரியர்கள் உரைகொள்வர். இளம்பூரணர், தாசன், இராசா, பாரதி, பாலசுந்தரம் ஆகியோர் இம்மெய்ப்பாட்டினை அறனழித்துரைத்தல் எனவும், பேராசிரியர், குழந்தை ஆகியோர் அறனளித்துரைத்தல் எனவும் பொருள் கொள்வர். அறனளித்துரைத்தலென்பது, “அறக்கிழவனை அன்பு செய்தல்.” (பேரா.,மெய்.22) எனவும், “அறத்தினை அன்பு செய்து பரவுதல். அறன் –ஞாயிறு, திங்கள் முதலியனவும், பல்லி சொல்லல், காக்கை கரைதல் முதலியனவுமாம். தலைவி, ஞாயிறு திங்கள் முதலியனவற்றைத் தலைவன் வரும் வழியை இனிது செய்யும்படி வேண்டுதலும், தனது ஆற்றாமையால் தலைவன் விரைவில் வரவேண்டும், எனப் பல்லியைச் சொல்லும்படியும், காக்கையைக் கரையும்படியும் வேண்டுதலுமாம். அளி- அன்பு. அன்புடன் பரவுதலாம்.” (குழந்தை, மெய்.22). எனவும் உரையாசிரியர்கள் உரை கொள்வர். இங்கு அறனழிந்துரைத்தலென்பது தனது நிலையினை உணராமல் பிரிந்துச் சென்ற தலைவனிடம் அறனில்லை என வெறுத்துக் கூறுதலாகும். இங்கே அறன் அளித்துரைத்தல் என்பது அறத்திற்கு அன்பு செய்தலாகும். இதனை, “அறனளிந் துரைத்தல் எனப் பாடங்கொண்டு அதற்கேற்ப விளக்கந்தருவார் பேரா. அது பொருந்தாமையை ஆங்கு நெஞ்சழிதல் எனப் பின்வருதலான் அறியலாம்.”(பால. பதிப்பு.83. பக்.315) “நெஞ்சு அழிந்த வழியே அறன் அழிந்துரைத்தல் நிகழுமாதலின் அறனளித்துரைத்தல் என்ற பாடமே சிறக்கும் என்று தோன்றுகிறது.” (தி.வெ.கோ. மேலது, xxxi)” (கே.எம். வேங்கடராமையா, தொல்காப்பிய மூலம் பாடவேறுபாடுகள் – ஆழ்நோக்காய்வு, ப.281.) என வேங்கடராமையா கூறியுள்ளார். இவற்றுள் அறனளிந் துரைத்தல்  பொருந்தாமையைப் பேராசிரியரே ஆங்கு நெஞ்சழிதலில் கூறியுள்ளமையின் அறனழிந்துரைத்தலென்பதே இங்குப் பொருந்தும். இதனை விளக்க இளம்பூரணரும் தாசனும் குறள்.1209.ஐயும்; பாரதி, குறுந்.191; 25, 262, ஐங்குறு.385, குறள்.1154, 1209 ஆகியவற்றையும்;  பாலசுந்தரம், கலி.143, 144 குறுந்.262 ஆகிய பாடல்களையும்; பேராசிரியரும் குழந்தையும்,

    பாங்கர்ப் பல்லி படுதொறும் பரவிக்
    கன்றுபுகு
    மாலை நின்றோ ளெய்தி” (அகம்.9)

    எனும் அகப்பாடலை எடுத்தாண்டுள்ளனர். இதில், பக்கத்தே பல்லி சொல்லுந்தோறும் கடவுளை வணங்கி கன்றுகள் மன்றிற்புகும் மாலைக் காலத்தே நின்றோளையடைந்து வணங்கி நின்றோளையெய்தி என்க என்பதில் அறனளித்துரைத்தல் எனும் மெய்ப்பாடு வெளிப்பட்டுள்ளது.

    1:1:16 ஆங்கு நெஞ்சழிதல்

    ஆங்கு நெஞ்சழிதலென்பது, “அறனழிந்துரைக்குமிடத்து நெஞ்சழிந்து கூறுதல்” (இளம்.,மெய்.22) எனவும், “அங்ஙனம் உரைக்குங்கால் நெஞ்சழிந்துரைத்தல்;  எனவே, அறனளிந்துரைத்தல் அழிவின்றொன்றாமென்பது சொல்லினானாம்.” (பேரா.,மெய்.22). எனவும், “சொல்லளவில் அறனழிவது போலக் கூறிய தலைவி பின் அவ்வளவிற்கு உளம் உளைந்து வருந்துதல்” (பாரதி.,மெய்.22) எனவும் உரையாசிரியர்கள் உரை கொள்வர். அறனழிந்து உரைக்கும்போது தன் நெஞ்சினையும் யழித்துக் கூறுதல் ஆங்கு நெஞ்சழிதலெனப்படும். இதனை விளக்க இளம்பூரணரும் தாசனும், குறள்.1295-ஐயும்; பேராசிரியரும் குழந்தையும், கலி.143-ஆம் பாடலையும்; பாரதி, கலி.143, குறுந்.93 ஆகிய பாடல்களையும்;  பாலசுந்தரம், கலி.144, 114 ஆகிய பாடல்களையும் எடுத்தாண்டுள்ளனர். இம்மெய்ப்பாட்டினை விளக்க உரையாசிரியர்கள் அகநானூற்றுப்பாடல் எதையும் எடுத்தாளவில்லை.

    1:1:17 எம்மெய்யாயினும் ஒப்புமை கோடல்

    எம்மெய்யாயினும் ஒப்புமை கோடலென்பது, “யாதானுமோர் உடம்பாயினுந் தன்னோடு ஒப்புமை கோடல் என்றவாறு.” (இளம்.,மெய்.22) எனவும், “யாதானும் ஒரு பொருள் கண்டவிடத்துத் தலைமகனோடொப்புமை கோடல்.” (பேரா.,மெய்.22). எனவும், “இதுகாணும் பொருள் எதுவும் தலைவன் வடிவுவண்ணம் பண்பு வினைகளுள் ஒன்றுக்கு ஒப்பெனக் கருதும் காதலியல்பு.” (பாரதி.,மெய்.22) எனவும் “பிரிவாற்றாது புலந்த தலைவி நெஞ்சழிந்த நிலையில் தான் காணும் பொருள் எல்லாம் தன்னைப் போலத் துன்புறுவதாகக் கருதிக்கோடல். மெய் என்றது பொருளை உருவப்பொருளும் அருவப் பொருளும் அடங்க “எம்மெய்யாயினும்” என்றார்.” (பாலசுந்.,மெய்.22) எனவும் உரையாசிரியர்கள் உரை கொள்வர். எம்மெய்யாயினும் ஒப்புமை கோடலென்பது காதல் மிகுதியால் தான் காணும் பொருட்களிலெல்லாம் தன் காதலரின் ஒப்புமையைத் தேடலாகும். இதனை விளக்க இளம்பூரணரும் தாசனும், குறள்.1222.ஐயும்;  பேராசிரியரும் குழந்தையும் கலி.20ஆம் பாடலையும்; பாரதி, குறள்.1111, 1112, 1116, கம்ப.மிதிலை.செய்.56, 57 ஆகியவற்றையும்; பாலசுந்தரம், கலி.129, 55, குறள்.1116 ஆகியவற்றையும் எடுத்தாண்டுள்ளனர். இம்மெய்ப்பாட்டினை விளக்க உரையாசிரியர்கள் அகநானூற்றுப் பாடல் எதையும் எடுத்தாளவில்லை.

    1:1:18 ஒப்புவழி உவத்தல்

    ஒப்புவழி யுவத்தலென்பது, “தலைமகனோடு ஒக்குமெனப் பிறிதொன்று கண்டவழி யுவத்தல்” (இளம்., தாசன்,மெய்.22). எனவும், “ஒப்புமை யுண்டாகிய வழியே உவமைகொண்டு அதனானே உவகை தோன்றுவது. எனவே, முன்னது ஒப்பின்றி ஒப்புமை கொண்டதாயிற்று;  என்னை? எம்மெய்யாயினு மென்றமையின்.” (பேரா., குழந்தை,மெய்.22). எனவும்,  “இஃது அவ்வாறு ஒப்புமை கண்டவழி மகிழும் காதலியல்பாம்.” (பாரதி., இராசா,மெய்.22). எனவும், “தம் நிலைமைக்கேற்ப ஒப்ப நிற்கும் பொருள் கண்டவழி உவப்புறுதல்” (பாலசுந்.,மெய்.22). எனவும் உரையாசிரியர்கள் உரை கொள்வர். தலைவனோடு ஒப்பன கண்டு மகிழ்தல் ஒப்புவழி உவத்தலாகும். இதனை விளக்கப் பேராசிரியர் கலி.80, 86 ஆகிய பாடல்களையும்;  பாரதி கலி.86 ஆம் பாடலையும்; குழந்தை கலி.80 ஆம் பாடலையும், பாலசுந்தரம் குறுந்.315, 162, கலி.86 ஆகிய பாடல்களையும்; இளம்பூரணர்,

    யாவருங்……………… …………….
    …………. …………………… …………………….
    …………………. ………………………..
    காணுநர் இன்மையிற், செத்தனள் பேணி,” (அகம்.16)

    எனும் அகப்பாடலையும் எடுத்தாண்டுள்ளனர். இதில், யாரும் பார்க்காததை அறிந்து அவன் அருகே சென்று அவனைத் தூக்கித் தன் தலைவன் போன்று இருக்கின்றதை எண்ணி இளமார்பையுடைய பொன் அணிகள் அணிந்த பெண், வருக என் உயிரே என அன்போடு அழைத்து மகிழ்ந்து தூக்கிக் கொஞ்சியதை, நான் பார்த்தேன் என்பதில் தலைமகனோடு ஒப்புடைய மகனைப் பரத்தை கொஞ்சியது வெளிப்பட்டுள்ளமையால், இஃது ஒப்புவழி யுவத்தலாயிற்று.

    1:1:19 உறுபெயர் கேட்டல்

    உறுபெயர் கேட்டலென்பது, “தலைவன் பெயர்கேட்டு மகிழ்தல்” (இளம்.,தாசன்,மெய்.22). எனவும், “தலைமகன் பெரும்புகழ் கேட்டு மகிழ்தல்” (பேரா., குழந்தை, இராசா,மெய்.22). எனவும், “இது தலைவன் பீடார் பெரும்புகழ் பிறர்வாய்க்கேட்டு மகிழ்தல்” (பாரதி.,மெய்.22) எனவும், “தலைவனது பெருமை பற்றிய புகழினைத் தலைவி விரும்பிக் கேட்டல்” (பாலசுந்.,மெய்.22) எனவும் உரையாசிரியர்கள் உரைகொள்வர். தலைமகன் பெயரையும் புகழையும் கேட்டு உவத்தல் உறுபெயர் கேட்டலாகும். இதனை விளக்க, இளம்பூரணரும் தாசனும், குறள்.1199.ஐயும்;  பேராசிரியரும் பாலசுந்தரம், கலி.41, 142 ஆகிய பாடல்களையும்;  பாரதி, குறள்.1199, கலி.142, கம்ப.பால.கார்முகப்.செய். 59, 60, 62 ஆகியவற்றையும்; குழந்தை, கலி.142-ஆம் பாடலையும் எடுத்தாண்டுள்ளனர். இம்மெய்ப்பாட்டினை விளக்க உரையாசிரியர்கள் அகநானூற்றுப்பாடல் எதையும் எடுத்தாளவில்லை.

    1:1:20  கலக்கம்

    கலக்கமென்பது, “மனங்கலங்குதல். மேற் ‘கலங்கி மொழிதல்’ என்பது ஒருகாற் சொல்லின்கண் வந்து பெயர்வது. இது மனங்கலங்கி நிற்கும் நிலை.” (இளம்.,மெய்.22) எனவும், “சொல்லத்தகாதன சொல்லுதல். ‘கலக்கமு நலத்தக நாடி னதுவே’ (270) என்னாது கலக்க மென்பதை வேறுபெயர்த்து வைத்ததென்னையெனின் இக்காலத்து அதனினூங்கு நிகழும் மெய்ப்பாட்டுக் குறிப்புளவல்ல தலைமகட்கென்பது அறிவித்தற்கென்பது. இன்னும் அதனானே தலைமகற்காயின் அதினினூங்கு வருவதோர் கலக்கமும் உளதாமென்றது; அவை, மடலூர்தலே வரைபாய்தலே என்றற்றொடக்கத்தக்கன.” (பேரா.,மெய்.22) எனவும், “நன்றாகத் தகுதிநோக்கி யாராயின் மயக்கமென்பதும் மேலது போலவே காதற்றிணை நிமித்தமாகும் மெய்ப்பாடேயாம் முன் குறித்த 19ஆம் அமையாவழியே, அவற்றினிறுதியில் கலக்கம் எழும் என்னும் அதன் சிறப்பியல் குறித்தற்கு அது இறுதியில் வேறு பிரித்துக் கூறப்பட்டது.” (பாரதி.,மெய்.22) எனவும் “ஆற்றாமையான் மதிதிரிந்து சொல்லுதற்காகாதன சொல்லுதலும் செய்தற்கொவ்வாதன செய்தலுமாம்” (பாலசுந்.,மெய்.22)எனவும், உரையாசிரியர்கள் உரை கொள்வர். காதலர் மனங்கலக்க முறுவதால் செய்யத்தகாதன செய்தலும்; சொல்லுதலும் கலக்கமாகும். இதனை விளக்க இளம்பூரணரும் பேராசிரியரும், கலி.142, 144 ஆகிய பாடல்களையும், பாரதி, குறுந்.152 ஆம் பாடலையும்; குழந்தை, கலி.142, குறுந்.17 ஆகிய பாடல்களையும், பாலசுந்தரமும் இராசாவும் கலி.142ஆம் பாடலையும் எடுத்தாண்டுள்ளனர். இம்மெய்ப்பாட்டினை விளக்க உரையாசிரியர்கள் அகநானூற்றுப் பாடல் எதையும் எடுத்தாளவில்லை.

    1:2  பேராசிரியருரையில் சுட்டப்படும் புறநடைகள்

    சாதல் எல்லையாகக் கூறுதலும் கலக்கத்தின் பாற்படும் இதனை விளக்க பேராசிரியர் குறுந்.17 ஆம் பாடலையும்; தானே துன்புறுமாறு உரைத்தலும் துன்பத்துப் புலம்பலாகும் என்பதனை விளக்க குறுந்.19ஆம் பாடலையும்; முற்காலத்து எதிர்ப்பட்டமை, பிற்காலத்துச் சொல்லுதலும் எதிர்பெய்து பரிதலாகும் என்பதனை விளக்க,

    அந்தீங் கிளவி யாயிழை மடந்தை
    கொடுங்குழைக்
    கமர்த்த நோக்க
    நெடுஞ்சே
    ணாரிடை விலங்கு ஞான்றே” (அகம்.3.)

    எனும் அகப்பாடலையும் எடுத்தாண்டுள்ளார். இதில் அக்கானகத்தைக் கடந்து பொருள்தேட முன்பொரு காலத்தில் சென்றபோது சிவந்த வாயினையும் இனியமொழியையும் அழகிய அணிகலன்களையும் உடைய தலைவியின் பார்வையானது சிந்தையில் தோன்றிக் கானகத்தைக் கடந்து செல்லாதவாறு தடுத்ததன்றோ! ஆதலால் பொருளுக்குப் புரியவேண்டும் என்று கூறும் நெஞ்சே; உன் உண்மை போன்ற பொய்ம் மொழியை நம்பி நான் மீண்டும் சென்றால் முந்தைய துன்பந்தானே வரும். எனவே இத்துன்பம் போக வழியாது? எனத் தன் நெஞ்சிடம் தலைவன் கூறினானெப்பது முன்பு நடந்ததை பின்பு கூறிச் செல்கின்றான் இதுவும் எதிர்பெய்து பரிதலாகும்.

    1:3. முடிவுரை

    1. இன்பத்தை வெறுத்தலென்பதை விளக்க, பேராசிரியர், குழந்தை, பாலசுந்தரம், இராசா ஆகியோர், அகம்.74 ஆம் பாடலை எடுத்தாண்டுள்ளனர். இதில் கண்துயில் மறுத்தல் எனும் மெய்ப்பாடு வெளிப்பட்டுள்ளதே யொழிய, இன்பத்தை வெறுத்தல் என்பது வெளிப்படவில்லை எனவே இஃது பொருந்தாது.
    2. உண்டியிற் குறைதலெனும் மெய்ப்பாட்டினை விளக்க இளம்பூரணரும் தாசனும் அகம்.48 ஆம் பாடலை எடுத்தாண்டுள்ளனர். இதில் “பாலும் உண்ணாள்” என கூறுவதால் பசியட நிற்றலின் பாற்படும். மேலும், பேராசிரியரும் பாலசுந்தரமும் இலக்கண விளக்க பாடல் 527 ஐ எடுத்தாண்டுள்ளனர். இது உணவு உண்ணாமையே உணர்த்துகிறது. எனவே இதுவும் பசியட நிற்றலின் பாற்படும். இங்கு உண்டியிற் குறைதலென்பது சிறிதுண்ணல் எனவே இம்மெய்ப்பாட்டிற்கு இவை பொருந்தாது.
    3. இளம்பூரணர், தாசன், இராசா, பாரதி பாலசுந்தரம் ஆகியோர் அறனழித்துரைத்தல் எனவும், பேராசிரியர், குழந்தை ஆகியோர் அறனளித்துரைத்தல் எனவும் பொருள் கொள்வர். இவற்றுள் அறனளித்துரைத்தல் என்பது பொருந்தாமையை ஆங்கு நெஞ்சழிதல் எனப் பின்வருதலான் அறியலாம்.
    4. சாதல் எல்லையாகக் கூறுதலும் கலக்கத்தின் பாற்படும்; தானே துன்புறுமாறு உரைத்தலும் துன்பத்துப் புலம்பலாகும்; முற்காலத்து எதிர்ப்பட்டமை, பிற்காலத்துச் சொல்லுதலும் எதிர்பெய்து பரிதலாகும்.
    5. இவ்வியலில் கூறப்பட்டுள்ள பெருந்திணைக்குரிய மெய்ப்பாடுகள் இருபதில், இன்பத்தை வெறுத்தல், துன்பத்துப் புலம்பல், ஏதமாய்தல், பசியட நிற்றல், உண்டியிற் குறைதல், கண்துயில் மறுத்தல், கனவொடு மயங்கல், பொய்யாக்கோடல், மெய்யே என்றல், அறனழிந்துரைத்தல், ஒப்புவழி உவத்தல் எனும் பதினோரு மெய்ப்பாடுகளை விளக்க உரையாசிரியர்கள் அகநானூற்றுப்பாடலை மேற்கோளாக எடுத்தாண்டுள்ளனர். ஏனைய ஒன்பது மெய்ப்பாடுகளை விளக்க உரையாசிரியர்கள் அகநானூற்றுப்பாடலை மேற்கோளாக எடுத்தாளவில்லை.

    *****

    கட்டுரையாசிரியர்
    தமிழ்த்துறைத்தலைவர்,
    D.L.R. கலை மற்றும் அறிவியல் கல்லூரி,
    விளாப்பாக்கம், ஆற்காடு.

     

    Share
  • பெருந்திணைக்குரிய மெய்ப்பாடுகளும் அகநானூறும் – உரையாசிரியர்களின் உரைகளை முன்வைத்து ஓர் ஆய்வு – பகுதி 1

    -பேரா. பீ.பெரியசாமி

    1:0 முன்னுரை

    பெருந்திணைக்குரிய மெய்ப்பாடுகளாக, இன்பத்தை வெறுத்தல், துன்பத்துப் புலம்பல், எதிர்பெய்து பரிதல், ஏதம் ஆய்தல், பசியட நிற்றல், பசலை பாய்தல், உண்டியிற் குறைதல், உடம்பு நனி சுருங்கல், கண் துயில் மறுத்தல், கனவொடு மயங்கல், பொய்யாக் கோடல், மெய்யே என்றல், ஐயஞ் செய்தல், அவர் தமர் உவத்தல், அறனழிந்துரைத்தல், ஆங்கு நெஞ்சழிதல், எம்மெய்யாயினும் ஒப்புமை கோடல், ஒப்புவழி உவத்தல், உறுபெயர் கேட்டல், கலக்கம் எனும் இருபதையும் கூறியுள்ளார் தொல்காப்பியர். (தொல்.மெய்.22) இம்மெய்ப்பாட்டினையும் இதனை விளக்க உரையாசிரியர்கள் எடுத்தாண்டுள்ள அகநானூற்றுப் பாடல்களையும் குறித்து இவ்வியல் ஆராயவுள்ளது.

    1:1 பெருந்திணைக்குரிய மெய்ப்பாடுகள் இங்கே தொல்காப்பியர் கூறியுள்ளதன் காரணத்தை,

    “மேல் நடுவ ணைந்திணைப் பகுதியாகிய களவிற்கும் கற்பிற்கு முரிய மெய்ப்பாடு உணர்த்தி, அதன்பின் கைக்கிளைக் குரியவருமாறு உணர்த்தினான். இனி இச்சூத்திரத்தாற் பெருந்திணைக்குரிய மெய்ப்பாடு உணர்த்துதல் நுதலிற்று” இவற்றுள், இன்பத்தை வெறுத்தல் முதலாகச் சொல்லப்பட்ட இருபதும் ஆராயின் நடுவணைந்திணை யல்வழி வரும் என்றவாறு.”  (இளம்.,மெய்.22)

    என இளம்பூரணர் கூறியுள்ளார். முதலில் எண்வகை மெய்ப்பாட்டினைக் கூறிய தொல்காப்பியர் அதனைத் தொடர்ந்து அகத்திற்கும் புறத்திற்குமான மெய்ப்பாடுகளைக் கூறினார். அடுத்ததாக அன்பின் ஐந்திணைக்குரிய மெய்ப்பாடுகளாக ஆறு அவத்தைகளைக் கூறினார். அடுத்து பெருந்திணைக்குரிய இம்மெய்ப்பாடுகளைக் கூறியுள்ளார்.

    1:1:1 இன்பத்தை வெறுத்தல்

    இன்பத்தை வெறுத்தலென்பது, “கோலஞ்செய்தல் முதலியனவற்றை வெறுத்தலும் தென்றலும் நிலவு முதலாயினவற்றை வெறுத்தலும் இவ்வாறு களவின்கண்வரிற் பிறர்க்கும் புலனாம். கற்பின்கண் வரிற் இயல்வழி மங்கல மின்றாம்.” (மேலது) எனவும், “யாழுங் குழலுங் பூவுஞ் சாந்தும் முதலாக இன்பத்திற்கேதுவாகிய பொருள் கண்டவழி அவற்றின்மேல் வெறுப்புத் தோன்றுதல். அவை காமத்திற்கு ஒருவகையான் ஏதுவாகலின் ‘மன்னிய வினைய நிமித்த’ மெனப் படுமாகலான் அவற்றை வெறுத்தல் புணர்ச்சிக் கேதுவாகா தன்றேயாயினும் அதனை ஆராய்ந்துணரின் நிமித்தமென வேண்டுமென்பான் ‘நலத்தக நாடின் அதுவே’ என்றானென்பது.” (பேரா.,மெய்.22) எனவும், “தனிப் படர்மெலியுங் காதலர், கூட்டத்தின் முன்னும் உடனுறைபொழுதும் தமக்கினி தாயவற்றையே பிரிந்து தனித்தவழி வெறுக்குங் குறிப்பு. நிலவு, தென்றல், ஆரம், ஆயம், மாலை, கண்ணி முதலிய இன்பப் பொருள்கள் பிரிவாற்றாக் காதலர்க்குத் துன்பமாதல் இம்மனவியல் பற்றியதாகும்.” (பாரதி.,மெய்.22) எனவும் உரையாசிரியர் உரைகொள்வர். தலைவனோடு சேர்ந்திருக்கும் காலத்தில் இன்பத்தை ஏற்படுத்திய தென்றல், நிலவு முதலியன அவனில்லாத நேரத்தில் காணும்போது துன்பத்தை ஏற்படுத்தும். அதனால் இன்பத்தை ஏற்படுத்தியவற்றை வெறுத்து ஒதுக்குதலே இன்பத்தை வெறுத்தல் எனும் மெய்ப்பாடாகும். இதனை விளக்க இளம்பூரணரும் தாசனும், குறள்.1127-ஐயும்; பாரதி குறள்.396 – ஐயும்; பேராசிரியர், குழந்தை, பாலசுந்தரம், இராசா ஆகியோர்,

    நின்வலித்த மைவென் மன்னோ வல்கற்
    புன்கண்
    மதலையொடு பொருந்திக் கொடுங்கோற்
    கல்லாக்
    கோவல ரூதும்
    வல்வாய்ச்
    சிறுகுழல் வருந்தாக் காலே.” (அகம்.74)

    எனம் அகப்பாடலை எடுத்தாண்டுள்ளனர். இதில், “ஊதிப்பழகாத கோவலர்கள் (சிறுவர்கள்) ஊதுகின்ற வாயையுடைய சிறிய வேய்ங்குழலோசை வருத்தாக்கால் கல்லா  – என்னை வருத்துமென்றறியாத எனினுமாம் என்பதில் கோவலர்கள் ஊதுகின்ற குழலின் ஓசையின் இன்பத்தை வெறுத்து தலைமகன் பிரிவின்கண் தன்நிலையைத் தோழிக்கு தலைவி சொல்லியது. இதில் ‘இன்பத்தை வெறுத்தல்’ எனும் மெய்ப்பாடு வெளிப்பட்டுள்ளது.  இதனை, ‘இன்பத்தை வெறுத்தல்’ என்னுஞ் சூத்திரத்து ‘கல்லாக் கோவல ரூதும், வல்வாய்ச் சிறுகுழல் வருந்தாக் காலே’ என்புழி இன்பத்தை வெறுத்தனளாயினும் புணர்ச்சிக்கு ஏதுவாம் என்பது கருத்து என்றார், பேரா.” (ந.மு.வேங்டசாமி, அகநானூறு, களிற்றியானை நிறை,ப.178) என ந.மு. வேங்கடசாமி கூறியுள்ளார். இது பேராசிரியர் கருத்திற்கு மேலும் வலுசேர்க்கும் விதமாய் உள்ளது. மேலும் பேராசிரியர்,

    “…………………… …………………. எல்லி,
    மனைசேர் பெண்ணை மடிவா யன்றி
    றுணையொன்று
    பிரியினுந் துஞ்சா காணெனக்
    கண்ணிறை
    நீர்கொண்டு சுரக்கு
    மொண்ணுத
    லரிவையா னென்செய்கோ வெனவே” (அகம்.50)

    எனும் அகப்பாடலை எடுத்தாண்டுள்ளார். இதில், இரவில் மனையைச் சேர்ந்த பனையிலுள்ள மடிந்த வாயையுடைய அன்றில் தன் சேவலராகிய ஒன்று பிரியினுந் துயிலாது காண். அங்ஙனமாக நான் பிரிந்து யாது செய்வேனென்று கண்கள் நிறைந்த நீர்கொண்டு (பின் அதனை அழித்து) மறைப்பாளெனத் தோழி பாணனை நோக்கி கூறுகின்றாள். ‘கண்ணிறை நீர்கொண்டு சுரக்கும் ஒண்ணுதல் அரிவையான் என்செய்கோ வெனவே’ என்பதில் கண்துயில் மறுத்தல் எனும் மெய்ப்பாடு வெளிப்பட்டுள்ளதே யொழிய இதில் இன்பத்தை வெறுத்தல் என்பது வெளிப்படவில்லை எனவே இஃது பொருந்தாது.

    “‘இன்பத்தை வெறுத்தல்’ என்னுஞ் சூத்திரத்து, இன்பத்தை வெறுத்தல் என்பது இன்பத்திற் கேதுவாய பொருள் கண்டவழி அவற்றின்மேல் வெறுப்புத் தோன்றுதல் என்று கூறி, அதற்கு ‘எல்லி மனைசேர்….. என் செய்கோ எனவே’ என்னும் பகுதியை எடுத்துக்காட்டினார், பேரா.” (ந.மு.வேங்டசாமி, அகநானூறு, களிற்றியானை நிறை,ப.124) என ந.மு.வேங்டசாமி கூறியுள்ளார். இருப்பினும் இது எவ்வாறு பொருந்தாது என்பது மேலே கூறப்பட்டது.

    1:1:2  துன்பத்துப் புலம்பல்

    துன்பத்துப் புலம்பலென்பது, “துன்பத்தின் கண்ணே புலம்புறுதல்.” (இளம்.,மெய்.22) எனவும், “பிரிவாற்றாது துன்புறுங்காலை அவ்வாற்றாமை தலைமகற்கின்றித் தானே துன்புறு கின்றாளாகச் சொல்லுதல். அவை கூட்டத்தை வெறுத்த குறிப்பாயினும் அக்கூட்டத்திற்கே நிமித்தமாகும் ஆராய்ந்துணரினென்றவாறு.” (பேரா.,மெய்.22) எனவும், “பிரிவாற்றாமையான் படருற்று மெலிந்து வருந்துதல், இதுவும் அழுகைக்குப் பொருளாக வரும்.” (பாலசுந்.,மெய்.22). எனவும் உரையாசிரியர்கள் உரைகொள்வர். தலைமகனின் பிரிவைத் தாங்க இயலாத தலைமகள் அதனை நினைந்து புலம்பல் துன்பத்துப்  புலம்பலெனப்படும். இதனை விளக்க இளம்பூரணரும் தாசனும் குறள்.1162 ஐயும்;  பாரதியும் பாலசுந்தரமும் குறள்.1167 ஐயும்; மேலும், பாரதி குறள்.1162 ஐயும் எடுத்தாண்டுள்ளனர். மேலும் பேராசிரியர், குழந்தை, இராசா ஆகியோர்,

    நின்னுறு விழுமங் களைந்தோ
    டன்னுறு
    விழும நீந்துமோ வெனவே” (அகம்.170)

    எனும் அகப்பாடலை எடுத்தாண்டுள்ளனர். இதில் நினது மிக்க துன்பை நீக்கினோள் தனது மிக்க துன்பத்தை நீக்குவாளோ? எனத் தலைவனிடம் கூறக்கேட்டு நண்டிடம் தலைவி கூறியது. இதில் ‘துன்பத்துப் புலம்பல்’ எனும் மெய்ப்பாடு வெளிப்பட்டுள்ளது இதனைக், “காக்கை பெடையோடு யாமத்து இறாக் கனவும் என்பதால், தலைவி, தலைவனுடன் கூடி, முன்பு பெற்ற இன்பத்தை நினைத்து வருந்துகிறாள் என்னும் பொருள் குறிப்பாகப் புலப்படுகிறது.” (நா.மீனவன், அகநானூறு, மணிமிடை பவளம், ப.113) எனவும், “ ‘இன்பத்தை வெறுத்தல்’  என்னும் சூத்திர உரையினும் இச்செய்யுளைப் பேராசிரியர் காட்டினார்.” (புலியூர்க் கேசிகன், அகநானூறு, மணிமிடை பவளம், ப.109) எனவும், “‘இன்பத்தை வெறுத்தல்’ என்னுஞ் சூத்திரத்து  ‘நின்னுறு விழுமங்களைந்தோள், தன்னுறு விழுமம் நீந்துமோ எனவே’ என்பது துன்பத்துப் புலம்பல் என்னும் மெய்ப்பாடு ஆகுமென்றும் ………………. கூறினார் பேரா” (ந.மு. வேங்கடசாமி நாட்டார், அகநானூறு, மணிமிடை பவளம், ப.101) எனவும் அகநானூற்று உரையாசிரியர்கள் கூறியுள்ளனர். இதன்வழி இவ்வகப்பாடலில் இம்மெய்ப்பாடு பயின்று வந்துள்ளமைப் புலப்படுகிறது.

    1:1:3 எதிர்பெய்து பரிதல்

    எதிர்பெய்து பரிதலென்பது, “தலைமகன் முன்னின்றி அவனின்றாகப் பெய்துகொண்டு வருந்துதல்” (இளம்.,மெய்.22) எனவும், “உருவு வெளிப்பாடு; அது தலைமகனையும் அவன் தேர்முதலாயினவற்றையுந் தன்னெதிர் பெய்து கொண்டு பரிந்து கையறுதல்.” (பேரா.,மெய்.22) எனவும், “உருவெளி கண்டிரங்குதல்” (பாரதி.,மெய்.22) எனவும் உரையாசிரியர்கள் உரைகொள்வர். தலைமகள் காதல் மிகுதியால் தலைமகன் தன்னெதிரே இல்லாத நிலையிலும் எதிரே இருப்பதாகக் கண்டு இரங்குதல் எதிர்பெய்து பரிதலெனப்படும். இதனை விளக்க இளம்பூரணர் குறள்.1123 ஐயும்;  பாரதியும் பாலசுந்தரமும் ஐங்.418 ஐயும்; பேராசிரியர், குழந்தை, இராசா ஆகியோர், குறுந்.301.ஐயும்;  தாசன் குறள்.1126 ஐயும் எடுத்தாண்டுள்ளனர். இம்மெய்ப்பாட்டினை விளக்க உரையாசிரியர்கள் அகநானூற்றுப் பாடல் எதையும் எடுத்தாளவில்லை.

    1:1:4 ஏதம் ஆய்தல்

    ஏதமாய்தலென்பது, “குற்றமாராய்தல்” (இளம்.,மெய்.22) எனவும், “கூட்டத்திற்கு வரும் இடையூறுண்டென்று பலவும் ஆராய்தல். அது நொதுமலர் வரையக் கருதுவர் கொல்லெனவும், பிரிந்தோர் மறந்து இனிவாரார் கொல்லெனவுந் தோன்றும் உள்ள நிகழ்ச்சி” (பேரா.,மெய்.22) எனவும், “கூட்டத்திற்கு இடையூறாம் தீமை பலவும் ஆராய்தலாம் ஆற்றிடைத் தலைவன் ஊற்றினுக் கழுங்கல், பிரிந்தவர் மறந்து துறந்தனர் கொல்லெனத் துயரல், ஏதிலர்வரைவின் தீதினையஞ்சல் போல்பவை யெல்லாம் இதில்பாலடங்கும்.” (பாரதி.,மெய்.22) எனவும் உரையாசிரியர்கள் உரைகொள்வர்.

     ஏதமாய்தலென்பது குறியிடத்தே கூட்டத்திற்கு வரும் தலைவனுக்கு நேரும் இடையூறுகளை ஆராய்தலாகும். இதனை விளக்க இளம்பூரணரும் தாசனும், குறள்.1165 ஐயும்; பாரதி குறுந்.268, 217, 307, கலி.11 ஆகிய பாடல்களையும்; பாலசுந்தரம், குறுந்.307 ஆம் பாடலையும்; பேராசிரியர், குழந்தை, இராசா ஆகியோர்,

    வாரார் கொல்லெனப் பருவருந்
    தாரார்
    மார்பநீ தணந்த ஞான்றே (அகம்.150)

    எனும் அகப்பாடலை எடுத்தாண்டுள்ளனர். இதில், தாரையணிந்த மார்பனே! நீ பிரிந்தகாலை வாரார்கொல் என்று துயருறுவாள் எனக் கூறப்பட்டுள்ளது. இதனை, “ஏதம் ஆய்தல்’  என்னும் மெய்ப்பாட்டிற்கு,  ‘வாரார் கொல் எனப் பருவரும் தாரார் மார்ப நீ தனந்த ஞான்றே’ என்பதை ‘இன்பத்தை வெறுத்தல்’ என்னுஞ் சூத்திரத்துப் பேராசிரியர் காட்டினார்” (புலியூர் கேசிகன், அகநானூறு, மணிமிடை பவளம், பக். 67-68) எனப் புலியூர் கேசிகன் தமது உரையில் இதனை மேற்கோள் காட்டியுள்ளார். மேலும், “ந.மு.வேங்கடசாமி” (ந.மு.வேங்கடசாமி, அகநானூறு, மணிமிடை பவளம், ப. 63), “மா.பரமசிவம்” (மா.பரமசிவம் அகநானூறு, ப. 186) ஆகியோரும் தமது அகநானூற்று உரையில் இதனை மேற்கோள் காட்டியுள்ளனர்.

     1:1:5  பசியட நிற்றல்

    பசியட நிற்றலென்பது, “உண்ணாமை” (இளம்.,மெய்.22) எனவும், “பசிவருத்தவும் அதற்குத் தளராது உணவு மறுத்தல்” (பேரா.,மெய்.22) எனவும், “தனிமை ஆற்றார் ஊண் உவர்த்துப் பிறரை அடும் பசிப்பிணியை அறவே தாம் அடும் ஆற்றல்” (பாரதி.,மெய்.22) எனவும் உரையாசிரியர்கள் உரைகொள்வர். தனக்கு பசி உண்டாகியும் உணவை உண்ணாது தலைவனின் பிரிவை எண்ணி வருந்துதல் பசியட நிற்றலாகும். இதனை விளக்க இளம்பூரணரும் தாசனும். குறள்.1128 ஐயும்; பேராசிரியர், பாரதி, குழந்தை, பாலசுந்தரம் ஆகியோர்,

    அன்னாய் வாழிவேண் டன்னை நின்மகள்
    பாலு
    முண்ணாள் பழங்கண் கொண்டு
    நனிபசந்
    தனளென வினவுதி.” (அகம்.48)

    எனும் அகப்பாடலை எடுத்தாண்டுள்ளனர். இதில், அன்னாய் வாழீ! நான் சொல்வதை விரும்பு. அன்னையாகிய நின்மகள் பாலும் உண்ணுகின்றிலள். துன்பங்கொண்டு மிகவும் நிறம் வேறுபட்டாள், என்று வினவுகின்றாய் என்பதில் பாலும் உண்ணாள் என்பது பசியட நிற்றலை வெளிக்காட்டியது. இதனை, “பாலும் உண்ணாள் என்புழி உம்மை உயர்வு சிறப்பு பாலும் உண்ணாள் எனவே ஏதும் உண்டிலள் என்றாயிற்று. ஈண்டுச் செவிலி கூற்றைத் தோழி கொண்டு கூறிய  ‘பாலும் உண்ணாள் பழங்கண் கொண்டு நனி பசந்தனள்’ என்பது புணர்ச்சிக்கு நிமித்தமாகாதன போன்று காட்டி ஆராய்வார்க்குப் புணர்ச்சி நிமிர்த்தமாகத் தோன்றுகின்ற மெய்ப்பாடுகளாம். இங்ஙனமாதலை – துன்பத்துப் புலம்பல், பசியட நிற்றல், பசலை பாய்தல், என்றோதுவர் ஆசிரியர் தொல்காப்பியனார். இவற்றுள் பசியட நிற்றல் என்னும் ஒரு மெய்ப்பாட்டிற்கே பேராசிரியர் “அன்னாய்………….  வினவுதி” என்னும் இவ்வடிகளை எடுத்துக்காட்டினர்.” (பொ.வே.சோமசுந்தரம், அகநானூறு, பா.48 உரை) என பொ.வே. சோமசுந்தரம் கூறியுள்ளார். மேலும் இதனை, “ந.மு.வேங்கடசாமியும் தமது அகநானூற்று உரையில் எடுத்துக்காட்டியுள்ளார்.” (ந.மு.வேங்கடசாமி நாட்டார், அகநானூறு, களிற்றியானைநிறை, ப.120) எனவே இம்மெய்ப்பாடு இவ்வகநானூற்றுப் பாடலில் வெளிப்பட்டுள்ளது.

    1:1:6 பசலை பாய்தல்

    பசலை பாய்தலென்பது, “பசலை பரத்தல்” (இளம்., (பேரா.,மெய்.22). எனவும், “கூட்டம் பெறாது ஆற்றாத் தலைவியர் காதற் நோயால் தம் மாமைக்கவின் இழந்தெய்தும் நிறவேறுபாடு.” (பாரதி.,மெய்.22) எனவும், “பிரிவாற்றாமையான் மாமைக்கவின் மாறி மேனி பசப்பூர நிற்றல். (பாய்தல்-பரவுதல்) இதுவும் இளிவரலுக்குப் பொருளாக அமையும்.” (பாலசுந்.,மெய்.22). எனவும் உரையாசிரியர்கள் பொருள்கொள்வர். பசியட நின்ற தலைவி உடல் வலியிழந்தமையால் மேனியில் பசலை பரவுதல் பசலை பாய்தலெனப்படும். இதனை விளக்க இளம்பூரணரும் தாசனும், குறள்.1188-ஐயும்; பேராசிரியரும் குழந்தையும், குறுந்.27-ஆம் பாடலையும்; பாரதி, ஐங்.231, குறுந்.27 – ஆகிய பாடல்களையும்;  பாலசுந்தரம், ஐங்.231-ஆம் பாடலையும் எடுத்தாண்டுள்ளனர். இம்மெய்ப்பாட்டினை விளக்க உரையாசிரியர்கள் அகநானூற்றுப்பாடல் எதையும் எடுத்தாளவில்லை. 

     1:1:7. உண்டியிற் குறைதல்

    உண்டியிற் குறைதலென்பது, “உணவு சுருங்குதல்” (இளம்., தாசன், மெய்.22). எனவும், “பசியட நிற்றலேயன்றிச் சிறிது உண்டி யூட்டியவழிப் பண்டுபோலாது கழியவுஞ் சிறிதுண்டல்.” (பேரா.,மெய்.22). எனவும், “உற்றார் ஊட்டும் உணவை மறுப்பிற் கடுப்பரென்றஞ்சித் தன் வெறுப்பை மறைத்துட்கொண்டதுபோற் சிறிது உண்டுவைத்தல், முன் பசியட நிற்றல், தனிப்படர் மெலிவால் பசிப்பிணியுணராத கை கடந்த காதல்நிலை குறிக்கும்; இது, ஆனாக்காதலால் ஊண் ஒல்லாமையால், பண்டையளவினும் உண்டி சுருங்குதலைச்சுட்டும் “தீம்பாலூட்டினும் வேம்பினும் கைக்கும்” (இ.வி.ப.573) எனும் பழைய பாட்டடி இவ்வியல்பை விளக்குவதறிக.” (பாரதி.,மெய்.22) எனவும், “தாயார் பரிந்து உணவு ஊட்டியவழி நனி உண்ணாது கழியவும் குறைத்துண்ணல்” (பாலசுந்.,மெய்.22). எனவும் உரையாசிரியர்கள் உரைகொள்வர். இயல்பாக உணவு உண்ணும் அளவினின்று தன் காதலர் பிரிவால் குறைத்து உண்ணுதல் உண்டியிற் குறைதலாகும். இதனை விளக்க இளம்பூரணரும் தாசனும்,

    பாலு முண்ணாள் பழங்கண் கொண்டு” (அகம்.48)

    எனும் அகப்பாடலை எடுத்தாண்டுள்ளனர். இதில் பாலும் உண்ணாமல் இருக்கிறாள் என்பது எதையும் உண்ண மறுக்கிறாள் என்பதை வெளிக்காட்டுகிறது. இது பசியட நிற்றலின் பாற்படும். இங்கு உண்டியிற் குறைதலென்பது சிறிதுண்ணல் எனவே இம்மெய்ப்பாட்டிற்கு இது பொருந்தாது. மேலும், இம்மெய்ப்பாட்டினை விளக்கப் பேராசிரியர், பாரதி, பாலசுந்தரம் ஆகியோர்,

    தீம்பா லூட்டினும் வேம்பினுங் கைக்கும்
    வாரா
    யெனினு மார்வமொடு நோக்கு
    நின்னிற்
    சிறந்ததொன்  றிலளே
    யென்னினும்
    படாஅ  லென்னிதற் படலே.” (இ.வி.ப.௫௨௭)

    எனும் இலக்கண விளக்கப் பழம்பாடலை எடுத்தாண்டுள்ளனர். இதில், இனிய பாலை ஊட்டினாலும் அதனை வேம்பினைக் காட்டினும் கசப்பு என ஒதுக்குவாள். நீ வாராது போனாலும் உன்னுடைய வருகையை விருப்பத்தோடு நோக்குவாள். என் தலைவி நின்னைக் காட்டினும் சிறந்ததொன்று இல்லையென்பவள். எனது சொல்லினும் அமைகின்றிலள் – இதனைப்படுதலெப்படி? என்பதன்வழி இம்மெய்ப்பாடு வெளிப்படாது நின்றது. இது உணவை வெறுத்தல் என்பதை உணர்த்துதலால் பசியட நிற்றலென்பதின் பாற்படும். இங்கு உண்டியிற் குறைதலென்பது உணவைச் சிறிதளவு உண்ணுதல் இங்கு இப்பழம்பாடல் உணவு உண்ணாமையே உணர்த்துகிறது.

    1:1:8 உடம்பு நனி சுருங்கல்

    உடம்புநனி சுருங்கலென்பது, “உண்ணாமை காரணமாகத் தன்னுடம்பு மிகச் சுருக்கமுறுதல்” (இளம்., தாசன், மெய்.22). எனவும், “அவ்வுண்ணாமை உயிரிற் செல்லாது உடம்பிற் காட்டுதல்.” (பேரா.,மெய்.22). எனவும், “உணவில்லாமையும் தணப்பொல்லாமையும் நலிய உடல் நாளும் மெலிதல்.” (பாரதி.,மெய்.22) எனவும், “பசியட நிற்றலானும் உண்டியிற் குறைதலானும் மேனி மெலிவுறுதல்.” (பாலசுந்.,மெய்.22). எனவும் உரையாசிரியர்கள் உரைகொள்வர். உண்ணாமை காரணமாகவும், சிறிதுண்ணலினாலும் உயிர்போகாது உடம்பு தன்னளவின்றி சுருங்குதல் உடம்புநனி சுருங்கலெனப்படும். இதனை விளக்க இளம்பூரணரும் தாசனும், குறள்.1234-ஐயும்;  பாரதியும் பாலசுந்தரமும் குறுந்.290-ஆம் பாடலையும் எடுத்தாண்டுள்ளனர். இம்மெய்ப்பாட்டை விளக்க உரையாசிரியர்கள் அகநானூற்றுப்பாடல் எதையும் எடுத்தாளவில்லை.

    1:1:9. கண்துயில் மறுத்தல்

    கண்துயில் மறுத்தலென்பது, “உறங்காமை” (இளம்., தாசன், மெய்.22)., எனவும், “இரவும் பகலுந் துஞ்சாமை.” (பேரா., குழந்தை, இராசா, மெய்.22)., எனவும், “இது தண்டாக்காதல் கொண்டார் துயிலாமை” (பாரதி.,மெய்.22) எனவும், “உடம்பு சோர்வுற்ற காலையும் உள்ளம் உறங்க ஒருப்படாமையின் கண்துஞ்சாதிருத்தல்.” (பாலசுந்.,மெய்.22). எனவும் உரையாசிரியர்கள் உரைகொள்வர். கண்துயில் மறுத்தலென்பது தலைவனைக் காணாததால் உண்டியிற் குறைந்து உடம்புநனி சுருங்கிய தலைவி உணவு மறுத்து உறக்கம் பெறாமல் தவித்தலாகும். இதனை விளக்க இளம்பூரணரும் தாசனும், குறள்.1168-ஐயும்; பாலசுந்தரம் குறுந்.6 ஆம் பாடலையும்; பாரதி குறள்.1179, குறுந்.6, 11, 329, 5, 365, கலி.6 ஆகிய பாடல்களையும்; பேராசிரியரும் குழந்தையும்,

    புலர்குர லேனற் புழையுடை யொருசிறை
    மலர்தார்
    மார்ப னின்றோற் கண்டோர்
    பலர்தில்
    வாழி தோழி யவரு
    ளாரிருட்
    கங்கு லணையொடு பொருந்தி
    யோர்யா
    னாகுவ தெவன்கொ
    னீர்வார்
    கண்ணொடு நெகிழ்தோ ளேனே” (அகம்.82)

    எனும் அகப்பாடலை எடுத்தாண்டுள்ளனர். இதில், தோழியே! முற்றிய கதிரையுடைய தினைப்புனத்தின் ஒருபக்கத்தில் நின்றோனாகிய பரந்த தாரையணிந்த மார்பனைக் கண்டோர் பலர்தில். அவருள் ஆரிய இருட் கங்குலிலே படுக்கையொடு பொருந்தி நீர்வடியுங் கண்ணோடு நெகிழ்ந்த தோளையுமுடையேன் யானொருத்தியேயாகுதல் என்னையோ! என்பதில் படுக்கையில் உறங்காது தவிக்கும் தலைவியின் நிலை கூறப்பட்டுள்ளமையின் இது கண்துயில் மறுத்தலானது. மேலும் இதனை,  “ ‘இன்பத்தை வெறுத்தல்’ என்னுஞ் சூத்திரத்து ‘கண்டுயில் மறுத்தலென்பது’ இரவும் பகலுந் துஞ்சாமை; அது ‘புலர்குர லேனல் …… ……… ……………….. நெகிழ்தோளேனே’ எனவரும் எனவும் உரைத்தார் பேரா.” (ந.மு.வேங்கடசாமி, அகநானூறு, களிற்றியானை நிறை, ப.82) என ந.மு.வேங்கடசாமி தமது அகநானூற்று உரையில் மேற்கோள் காட்டியுள்ளார்.

    1:1:10. கனவொடு மயங்கல்

    கனவொடு மயங்கலென்பது, “கனவை நனவென மயங்குதல்” (இளம்., தாசன், மெய்.22)., எனவும், “அரிதினில் துயிலெய்திய வழித் தலைமகனைக் கனவிற்கண்டு பின்னர் அவனன்மையின் மயங்கும் மயக்கம்.” (பேரா., குழந்தை, இராசா, மெய்.22), எனவும், “நயந்தோர் பிரிவால் அயர்ந்தகாதலர் கனவிற்றுணைவரைக் கண்டுகளித்து விழித்தபின் காணாது வெருளுதலாகும்.” (பாரதி.,மெய்.22) எனவும், “தண்ணுணர்வின்றி ஒருகால் துயிலெய்தியவழி நேர்ந்த கனவிடத்துக் காதலனைக் கண்டு களித்து விழித்த விழிக் காணாமையின் கலங்குதல்.” (பாலசுந்.,மெய்.22). எனவும் உரையாசிரியர்கள் உரைகொள்வர். காதலுணர்வு மேலோங்கிய காரணத்தால் கனவில் தலைவனைக் காணும் தலைவி அவனை நேரில் காண்பதாக நினைத்து மயக்கமுறுதல் கனவொடு மயங்கலெனப்படும். இதனை விளக்க இளம்பூரணரும் தாசனும், குறள்.1217-ஐயும்; பேராசிரியர், குழந்தை, பாலசுந்தரம் ஆகியோர், கலி.128-ஆம் பாடலையும்; பாரதி குறுந்.30, குறள்.1213 மற்றும்,

    “……………….. ……………………… ……யாழ, நின்
    கோடேந்து
    புருவமொடு குவவுநுதல் நீவி
    நறுங்கதுப்
    புளரிய நன்னர் அமையத்து
    வறுங்கை
    காட்டிய வாயல் கனவின்
    ஏற்றேக்
    கற்ற உலமரல்” (அகம்.39)

    எனும் அகப்பாடலையும் எடுத்தாண்டுள்ளனர். இதில், நான் உன்னுடைய அழகிய புருவங்களையும் சிறிய நெற்றியையும், நறுமணக் கூந்தலையும் தடவ நினைத்து முயன்றேன். உன்னைத் தழுவுதல் போன்ற என் கையை வெறுங்கை ஆக்கிய பொய்யான அக்கனவை நினைத்து ஏற்பட்ட மனச் சுழற்சியை நீ அறியவில்லை. அதனால் நீ என்னை நினைத்ததும் உண்டோ? என்று ஊடல் கொள்கிறாய்! எனத் தலைவியை நோக்கி தலைவன் கூறுகின்றான். இதில் அவன் கனவை நனவாக மயங்கியமை வெளிப்பட்டுள்ளது.

     1:1:11. பொய்யாக்கோடல்

    பொய்யாக் கோடலென்பது, “தலைவன் கூற்றுத் தன்னைப் பொய்யாகக் கோடல்.” (இளம்., தாசன், குழந்தை, இராசா, மெய்.22). எனவும், “மெய்யைப் பொய்யாக் கோடல்” (பேரா.,மெய்.22). எனவும், “காதல் மிகையால் மெய்யைப் பொய்யாகத் திரித்துக்கோடல்.” (பாரதி.,மெய்.22) எனவும், “தலைவன் தண்ணளி செய்யவும் பிரிவச்சத்தான் அதனைப் பொய்யாகக் கற்பித்துக் கொண்டு இனைதல்” (பாலசுந்.,மெய்.22). எனவும் உரையாசிரியர்கள் உரைகொள்வர். தலைவன் கூறும் கூற்றையும்;  அவன் செய்யும் தண்ணளியையும் பொய்யாகக் கொள்ளுதல் பொய்யாக் கோடலெனப்படும். இதனை விளக்க இளம்பூரணரும் தாசனும், கலி.88 – ஆம் பாடலையும்; பாரதி, குறள்.1311, கலி.88 ஆகிய பாடல்களையும்; குழந்தை கலி.68 ஆம் பாடலையும்;  பாலசுந்தரம் கலி.68, 41 ஆகிய பாடல்களையும்;  பேராசிரியர், கலி.68, 41 ஆகிய பாடல்களும்; மேலும் பேராசிரியரும் இராசாவும்,

    வருது மென்ற நாளும் பொய்த்தன
    வரியே
    ருண்கணீரு நில்லா.” (அகம்.144)

    எனும் அகப்பாடலையும் எடுத்தாண்டுள்ளனர். இதில், தலைவன் வருவேனென்ற நாளும் பொய்த்தன; வரி பொருந்திய மையுண்ட கண்களில் நீரும் நிற்கின்றில எனும் செய்தி கூறப்பட்டுள்ளது. இதில் தலைவன் ஒரு காலத்தைக் குறிப்பிட்டு இக்காலத்தில் நான் திரும்பி வந்துவிடுவேன் எனக்கூறி தலைவியிடம் விடைபெற்று சென்றிருப்பான் அக்காலத்தின் வரவை இயற்கை உணர்த்திய உடனே அவன் வருவேனெனக் கூறிய காலம் வந்துவிட்டது; அவன் வரவில்லையே என அவன் கூறிய கூற்றைப் பொய்யென நினைத்தல் பொய்யாக் கோடல் ஆகும். எனவே இப்பாடலில் பொய்யாக் கோடலென்பது பொருத்தியாளப்பட்டுள்ளது. மேலும், இதனை, “பேரா. ‘பொய்யாக் கோடல்’ என்ற பகுதிக்கு உதாரணமாக “வருதுமென்ற நாளும் பொய்த்தன, வரியே ருண்கணீரு நில்லா” என்பதனைக் காட்டியுள்ளார்.” (மா. பரமசிவம், அகநானூறு, பக்.172-173) என மா.பரமசிவம் தமது உரையில் எடுத்தாண்டுள்ளார். இதனை மேலும், “புலியூர் கேசிகன்” (புலியூர் கேசிகன், அகநானூறு, மணிமிடை பவளம், ப.56,), “ந.மு.வேங்கடசாமி” (ந.மு.வேங்கடசாமி, அகநானூறு, மணிமிடை பவளம், ப.52) ஆகியோரும் தமது உரையில் எடுத்துக்காட்டியுள்ளனர்.

    [தொடரும்…]

    *****

    கட்டுரையாசிரியர்
    தமிழ்த்துறைத்தலைவர்,
    D.L.R. கலை மற்றும் அறிவியல் கல்லூரி,
    விளாப்பாக்கம், ஆற்காடு.

     

     

    Share
  • நான்காமவத்தையும் அகநானூறும் – உரையாசிரியர்களின் உரைகளை முன்வைத்து ஓர் ஆய்வு

    -பேரா. பீ.பெரியசாமி

    1:0. முன்னுரை

    நான்காமவத்தையாவன, பாராட்டெடுத்தல், மடந்தபவுரைத்தல் ஈரமில் கூற்றம், ஏற்றலர் நாணல், கொடுப்பவை கோடல் எனும் நான்குமென தொல்காப்பியர் கூறியுள்ளார். (தொல்.மெய்.16) இதனை விளக்க உரையாசிரியர்களின் உரையும் அகநானூற்றுப் பாடல்களும் குறித்து இப்பகுதி ஆரயவுள்ளது.

    1:1 பாராட்டெடுத்தலும் அகநானூறும்

    பாராட்டெடுத்தலாவது, தலைமகள் நின்றநிலையுங் கூறிய கூற்றையும் தனித்த வழியும் எடுத்துமொழிதல்”. (இளம். மெய்.16) எனவும், புணர்ச்சி நிகழ்ந்த பின்னர்த் தலைமகனை இயற்பட நினைவுங் குறிப்பும்இது பாராட்டென்னாது எடுத்தலென்றதனால் அதனை உள்ளமெடுத்தன் மேற்கொள்க. இது தலைமகற்கும் ஒக்கும்.”( பேரா. மெய்.15) எனவும், புணர்ந்த பின் தலைமக்கள் ஒருவர் மற்றவரின் நல்லியல்பினை வியப்பதாகும்.”( பாரதி. மெய்.16) எனவும், புணர்ச்சி நிகழ்ந்த பின்னர்த் தனது ஆராக்காதலுணர்வு மாறாமை விளங்கத் தலைவியின் நலம் முதலியவற்றையும் தலைவியின் பண்பு முதலியவற்றைப் புனைந்து தனது மீளா வேட்கையைத் தலைவன் விதந்து கூறலின் பாராட்டல் என்னாது பாராட்டு எடுத்தல் என்றார். இஃது இருவர்க்கும் ஒக்குமாயினும், “காமத் திணையிற் கண்ணின்று வழுஉம் நாணு மடணும் பெண்மைய வாகலின் குறிப்பினும் இடத்தினும் அல்லது வேட்கை நெறிப்பட வாரா அவள்வயி னான” (கள.18) என்பது மரபு பற்றிய விதியாகலின் தலைவி பாராட்டுதல் அவள் உள்ளத்தே நிகழுமென அறிக. தலைவன் பாராட்டுதல் வெளிப்படையாக நிகழும் என்க.” (பாலசுந். மெய்.16)எனவும் உரையாசிரியர்கள் உரைகொள்வர்.

    பாராட்டெடுத்தலென்பது, இயற்கைப் புணர்ச்சி நடந்தபின் தலைவனைத் தலைவியும் தலைவியைத் தலைவனும் பாராட்டுதல் இயல்பு. தலைமக்களின் அழகு, அறிவு, செய்கை, இயல்பு என ஒருவருக்கொருவர் பாராட்டிக் கொள்ளுதல் அவர்களின் காதல் பரிமாற்றத்தில் ஒன்று. இது காதல் அன்பைப் புலப்படுத்துவது. இதனை விளக்க பாரதி குறுந்.3, 193, குறள்.1130 ஆகிய பாடல்களையும்;  பாலசுந்தரம், குறுந்.2, 3 ஆகிய பாடல்களையும் எடுத்தாண்டுள்ளனர். இம்மெய்ப்பாட்டினை விளக்க உரையாசிரியர்கள் அகநானூற்றுப் பாடல் எதையும் எடுத்தாளவில்லை. 

    1:2 மடந்தபவுரைத்தலும் அகநானூறும்

    மடந்தபவுரைத்தலென்பது, பெண்டிரது இயல்பாகிய மடப்பங்கெடச் சில கூறுதல். அது தலைமகன் கூற்று நிகழும் வழியதற்கு மாற்றங் கொடுத்தலன்றித் தன் வேட்கை தோன்றக் கூறுஞ் சொல்” (இளம். மெய்.16) எனவும், விளையாடும் பருவத்து நிகழ்ந்த அறிமட நீங்கக் காமப் பொருட்கண்ணே சிறிதளவு தோன்றுதலும்உரைத்த லென்றதனால் அக்காலத்துப் பாங்கிக்குச் சில கூற்றுமொழி கூறவும் பெறுமென்பது கொள்க. அவை மேலை யோத்துக்களுட் கூறப்பட்டன. மடந்தபவுரைத்தற்கு ஏதுவாகிய கருத்து ஈண்டு மெய்ப்பாடெனப்படும்.” (பேரா. மெய்.16) எனவும், பேதைமை யொழியப் பேசுதல் முன் காமஞ்சாலாக் காலமெல்லாம் களவறியாத் தலைவி களவிற் றலைவனை மணந்தபின் முன்னைய குழவி நீர்மை கழிய தேர்ந்துரையாடத் தேறுதலியல்பு. அந்நிலைதான் மடம் தபுதல் (மடம்=கள்ளமற்ற பிள்ளைத் தன்மை. தபுதல் =கெடுதல், நீங்குதல்) அவ்வறிமடநிலையிற் றேர்த் துரையாடலே மடம்தப உரைத்தலெனக் குறிக்கப்பட்டது.” (பாரதி. மெய்.16) எனவும். உரையாசிரியர்கள் உரைகொள்வர்.

    தலைவி புணர்ச்சிக்குமுன் இருந்த நிலையிலிருந்து மாறிப் பேச்சில் ஒரு முதிர்ச்சி வெளிப்படல்; அவளுடைய மடப்பம் கெடச் சிலவற்றை வெளிப்படுத்துதல். அதாவது தன்னுடைய புணர்ச்சி வேட்கையைத் தலைவனிடம் தன் மடங்கெடக் கூறுதலே மடந்தபவுரைத்தலாகும். இதனை விளக்க பாலசுந்தரம், ஐங்.20, 144 ஆகிய பாடல்களை எடுத்தாண்டுள்ளார். இதனை விளக்க உரையாசிரியர்கள் அகநானூற்றுப்பாடல் எதனையும் எடுத்தாளவில்லை. 

    1:3  ஈரமில் கூற்றம் ஏற்றலர் நாணலும் அகநானூறும்

    ஈரமில் கூற்றம் ஏற்றலர் நாணலென்பது, ஊராருஞ் சேரியாருங் கூறும் அருளில்லாத கூற்றைக் கேட்டு அவர் ஆயிற்றென நாணுதல்.”( இளம். மெய்.16) எனவும், அங்ஙனம் அறிமடங்கெடச் சொற்பிறந்தவழி இன்றளவுந் தமராற் கூறப்படாத கடுஞ்சொல் உளவாமன்றே, அவற்றை முனியாது ஏற்றுக்கொண்டு புறத்தார்க்கு இது புலனாங்கொலென்று நாணுதலும்.” (பேரா. மெய்.16) எனவும் உரையாசிரியர்கள் உரைகொள்வர்.

    களவுக்காலத்தின்போது தலைவியின் ஒழுக்கம் குறித்து ஊராரும் சேரியாரும் அருளில்லாத வார்த்தைகளைப் பேசுவதைக் கேட்டு நாணமடையும் தலைவியின் நிலையினை எடுத்துக் கூறுவதே ‘ஈரமில் கூற்றம் ஏற்றலர் நாணல்’. இதனை விளக்க பாரதியும் பாலசுந்தரமும் குறுந்.97ஆம் பாடலையும்;  மேலும், பாலசுந்தரம்,

    கௌவை தூற்றும் வெவ்வாய்ச் சேரி
    அம்பல் மூதூர் அலர்நமக் கொழியச்
    சென்றனர் ஆயினும் செய்வினை யவர்க்கே
    வாய்க்கதில் வாழி தோழி…… ” (அகம்.347)

    எனும் அகப்பாடலை எடுத்தாண்டுள்ளார். இதில், நம் ஊரிலுள்ள கொடிய வாயுடைய பெண்களது பழிச்சொல்லும் நமக்கு உண்டாக்கச் செய்துவிட்டு அவர் நம்மைப் பிரிந்து சென்றார். இருப்பினும் அவர் மேற்கொண்ட செயல் கைகூடுக எனத் தலைவி தோழிக்குச் சொல்லினாள், என்பதில் இம்மெய்ப்பாடு வெளிப்பட்டுள்ளது.

    1:4 கொடுப்பவை கோடலும் அகநானூறும்

    கொடுப்பவை கோடலென்பது, கண்ணியாயினுந் தழையாயினும் பிறவாயினும் தலைமகன் கொடுத்தவற்றைக் கோடல். மனத்தினான் உரிமை பூண்டாலல்லது பிறன்பொருள் வாங்காமையின் இதுவுமோர் மெய்ப்பாடாக தப்பட்டது.”( இளம். மெய்.16)  எனவும், தலைமகனாற் கொடுக்கப்பட்ட தழையுங் கோதையுங் தாரும் கண்ணியுந் தோண் மாலையு முதலாயின கொண்டு கையுறை பாராட்டுதல்” (பேரா. மெய்.16) எனவும் உரையாசிரியர்கள் உரை கொள்வர்.

    கொடுப்பவை கோடலென்பது தலைமகன் தலைமகள்பால் தனக்குள்ள அன்பினைப் காதலினைப் புலப்படுத்தும் நோக்கோடு தலைவிக்குக் கொடுக்கும் கண்ணி, தழை, தார், கோதை முதலியவற்றை மறுக்காமல் ஏற்றுக்கொள்ளுதல். இதனை விளக்க பாரதி, குறுந்.214ஆம் பாடலையும்; பாலசுந்தரம் நற்.80 ஆம் பாடலையும் எடுத்தாண்டுள்ளனர். இம்மெய்ப்பாட்டினை விளக்க உரையாசிரியர்கள் அகநானூற்றுப் பாடலை எடுத்தாளவில்லை. 

    1:5  கையுறை மறுதல்

    நான்காம் அவத்தையினை விளக்கப் பேராசிரியரும் குழந்தையும்,

    ஒருநாள் வந்து பலநாள் வருத்து
    நின்னையே போலுநின் றழையே யென்வயின்
    னிற்பா ராட்டியுஞ் சொற்கொள லின்றியும்
    யாயெதிர் கழறலிற் போலர் நாணியு
    மயல்கூர் மாதர்க்குத் துயர்மருந் தாயினு
    நோய்செய் தன்றாற் றானே
    நீதொடக் கரிதலி னோரிடத் தானே(இ.வி.ப.௫௩௩)

    இது கையுறை மறுத்தது. இதனுள் ‘நிற்பாராட்டி’ என்பது பாராட்டெடுத்தல்,  ‘சொற்கொளலின்றி’ என்பது மடந்தபவுரைத்தல்; என்னை? கொளுத்தக் கொள்ளாதுவிடின் அது மடனாகாமையின்.  ‘யாயெதிர் கழறலிற் பேரலற் நாணி’ என்பது ஈரமில் கூற்ற மேற்றலர் நாணல், ‘துயர்மருந்தாயினும்’  என்பது கொடுப்பவை கோடல். இத்தழை நின்கைப்பட்டவழிக் கரிந்து காட்டி நின்மெய்வெப்பங் கூறுதலின் இதனை அவள் காணின் ஆற்றாளாமெனப் பின்னொடுகாலத்து மறுத்தாளென்பது.”(பேரா. குழந்தை, மெய்.16)

    இதில், ஒருநாள் போலப் பலநாளும் வந்து வருத்தும், நின்னை யொக்கும் நினது தழையும் என்னிடத்து நின்னைப் பாராட்டியும் யான் சொல்லுஞ் சொல்லை ஏற்றுக் கொள்ளாதும் தாய் எதிரே கழறி யுரைத்தலினாலே பெரிய அலருக்கு நாணியும் மயக்கமடைகின்ற மாதினுக்கு அவள் துயரை நீக்கும் மருந்தாயினும்; ஓரிடத்து நீ தொடக்கரிதலினாலே (அவளுக்கு) நோயைச் செய்தற்கேதுவாயது. நோய் செய்தது அதனால் நின்றழையும் நின்னையொக்கும் என முடிக்க என்பதில் கையுறை மறுத்தல் வெளிப்படுள்ளது. 

    1:6. முடிவுரை

    நான்காமவத்தையாவன, பாராட்டெடுத்தல், மடந்தபவுரைத்தல், ஈரமில் கூற்றம் ஏற்றலர் நாணல், கொடுப்பவை கோடல் எனும் நான்குமாகும். இவற்றுள் ஈரமில் கூற்றம் ஏற்றலர் நாணல் என்பதனை விளக்க மட்டும் உரையாசிரியர்கள் அகநானூற்றுப்பாடலை எடுத்தாண்டுள்ளனர். இது சரியாகப் பொருத்தியாளப்பட்டது. ஏனையவற்றை விளக்க உரையாசிரியர்களால் அகநானூற்றுப் பாடல் எடுத்தாளப்படவில்லை.

    *****

    கட்டுரையாசிரியர்,
    தமிழ்த்துறைத்தலைவர்,
    D.L.R. கலை மற்றும் அறிவியல் கல்லூரி
    விளாப்பாக்கம், ஆற்காடு

     

     

    Share
  • தலைமக்கட்கு உரித்தான மெய்ப்பாடுகளும் அகநானூறும் – உரையாசிரியர்களின் உரைகளை முன்வைத்து ஓர் ஆய்வு

    -பேரா. பீ.பெரியசாமி

    1:0. முன்னுரை

    தலைமக்கட்கு உரித்தான, உரித்தாகாத குணங்களைத் தொல்காப்பியர் மெய்ப்பாட்டியலில் கூறியுள்ளார். (தொல்.மெய்.25-26) அவற்றையும் அவற்றை விளக்க உரையாசிரியர்கள் எடுத்தாண்டுள்ள அகநானூற்றுப் பாடல்களையும் குறித்து இவ்வியலில் ஆராயப்படவுள்ளது.

    1:1. தலைமக்கட்குரித்தான குணங்களும் அகநானூறும்

    தலைமக்கட்குரித்தான குணங்களாகத் தொல்காப்பியர், பிறப்பு, குடிமை, ஆண்மை, ஆண்டு, உருவு, நிறுத்த காமவாயில், நிறை, அருள், உணர்வு, திரு என்னும் பத்தையும் கூறியுள்ளார். (தொல்.மெய்.25) அவற்றையும் அவற்றை விளக்க உரையாசிரியர்கள் எடுத்தாண்டுள்ள அகநானூற்றுப் பாடல்களையும் குறித்து இப்பகுதி ஆராயவுள்ளது.

    இவ்விடத்துக் கூறப்படும் மெய்ப்பாடுகளனைத்தும் தலைமக்களிடத்து அமைய வேண்டுமென்பதையும் அவையெல்லாம் எவ்வாறமையும் என்பதையும் பேராசிரியர்,

    ”இவையெல்லாம் இருவர்க்குந் தம்மின் ஒக்கும் பகுதியெனவும் இவைபற்றி மெய்ப்பாடு பிறக்குமெனவுங் கூறியவாறு ‘வகை’ யென்றதனான் ஆண்மைவகை பெண்மை வகையெனவுங், குடிமைவகை யென்பது இருவர்க்கும் இளமைப் பருவத்தே தங்கிய ஒழுக்கமெனவும், பிறப்பினது வகை யென்பது அந்தணர்க்கு நான்கும் அரசர்க்கு மூன்றும் வணிகர்க்கு இரண்டும் வேளாளர்க்கு ஒன்றுமெனவுங் கூறுக. இனி, ‘ஏவன்மரபின் ஏனோர்’ (தொல்.பொருள்.24) பாங்கினும் ‘அடியோர் பாங்கினும் வினைவலர் பாங்கினும்’ (தொல்.பொருள்.23) தம்மின் ஒத்த பிறப்புக் காரணமாக உள்ளத்து வருங் காமக்குறிப்பு முதலாயினவுங் கொள்க. இவ்வெண்ணப்பட்டன ஒத்துவரினன்றி அறிவுடையார்கட் காமக்குறிப்பு நிகழாமையின் இவற்றையும் ஈண்டு மெய்ப்பாடென்றோதினானென்பது, அடியோர் பாங்கினும் வினைவலர் பாங்கினும் வரும் இக்குறிப்பு முதலாயினவற்றை இலேசினாற் கொண்டான்;  அவை பிறழ்ந்து வருமாகலினென்பது” (பேரா.மெய்.25) எனக் கூறியுள்ளார். மேலும் பாரதி,

    ”ஈற்றேகாரம் அசை மற்றைய ஏயும் ஒடுவும் எண்ணிடைச் சொற்கள் முன் களவியலில், ”ஒன்றே வேறே என்றிரு பால்வயின், ஒத்த கிழவனும் கிழத்தியும் காண்ப” எனும் சூத்திரத்தில், தலைக்காட்சியில் முளைத்த காதல் நிலைத்து வளர்தற் கின்றியமையாதது தலைமக்களின் ஒப்பு என வாளா சுட்டியதால், இங்கு அவ்வொப்பின் வகை விரித்து விளக்கப்பட்டது. இது, களவியலிலேனும் அன்றித் தகவுபெற அகப்பகுதியிலேனும் கூறின் அமையும் ஆண்டுக் கூறாமையால் ஒத்தக் காதலை வெளிப்படுத்தும் மெய்ப்பாடுகள் கூறி முடித்து, அவை நிலைத்த மெய்க்காதற்கே யுரியலாதலின், அக்காதல் நிலைக் குரியதென முன்தொகுத்துக் கூறிய ஒப்பு இங்கு வகுத்து விளக்கப்பட்டது இவை தாமே மெய்ப்பாடாகாமை இவற்றின் தன்மையில் தெளியப்படும்” (பாரதி, மெய்.25) எனக் கூறியுள்ளார். களவியலில் காதலர்களின் இயல்பைக் கூறிய தொல்காப்பியர், இவ்விடத்தே அவர்களுக்கான ஒப்புமையை விளக்கியுள்ளார். மேலும் குழந்தை,

    தலைமகனது பிறப்பு முதலாயின தன் பிறப்பு முதலியவற்றோடு ஒத்ததாயின் தலைமகட்குக் காமக்குறிப்புத் தோன்றும். பிறப்பு முதலியன பற்றி மனத்தின்கட் பிறக்கும் தருக்குணர்ச்சி மெய்ப்பாடெனப்படும். இது, தலைமகற்கும் உண்டேனும், ‘ஒப்பினது வகை’  என்றதனால், தலைமகட்கே உரிமை கொள்ளப்படும். ஒருவர்க்குள்ள பிறப்பு முதலியன மற்றவர்க்கும் இருக்கின் அவ்வொப்பினால் இருவர்க்கும் காமக் குறிப்புத் தோன்றுமேனும், தலைமகனே தலைமகளைக் காண்பானாகையால் தலைமகள்பாலே இவ்வொப்புமைக் கேதுவாகிய உள்ள வுணர்ச்சி தோன்றித் தலைமகனைக் காதலிக்க வேண்டுதலின் அவளுக்கே சிறப்புடையன இவையென்பதாம்.  இப்பத்தில் குடிமை, ஆண்டு, உரு, அன்பு, அருள் என்பன இருவரும் எதிர்ப்பட்டதும் ஒத்துப் பார்க்கப்படும் மற்றவை பின்னர் வெளிப்படும். இப்பத்தினுள், உருவும், அவற்றுவழித் தோன்றும் அன்பும் மிகுதியும் ஒத்திருக்க வேண்டும்” (குழந்தை, மெய்.25).

    எனக் குழந்தை கூறியுள்ளார். இவர் கருத்துப்படி இவ்விடத்துக் கூறப்படும் பத்து மெய்ப்பாடுகளும் தலைமகளுக்கு சிறப்புடையதாகும். இது பொருந்தாது ஏனெனில் இது தலைமக்கட்கான ஒப்புமை எனவே இருவர்க்கும் சிறந்தமையாகும்.

    1:1:1. பிறப்பு

    பிறப்பென்பது, “ஒத்த பிறப்பு – குடிமையொடு பிறப்பிடை வேற்றுமை என்னையெனின், பிறப்பென்பது குடிப்பிறத்தல்” (பேரா. மெய்.25) எனவும், “தோன்றிய குடிநிலை” (பாரதி, மெய்.25) எனவும், ”நற்குடிப்பிறத்தல்” (குழந்தை, மெய்.25) எனவும், “குலப்பிறப்பு. அஃதாவது ஒழுக்க நிலையான் அமைந்த அந்தணர் முதலிய நாற்குலம். “நலத்தின்கண் நாரின்மை தோன்றின் அவனைக் குலத்தின்கண் ஐயப்படும்” என்பதனான் ஒழுக்கம், குலம் பற்றி விளக்குதல் புலனாகும்.” (பாலசுந். மெய்.25) எனவும், “அந்தணர், அரசர், வணிகர், வேளாளர், ஆயர், வேட்டுவர், குறவர், நுளையர் என்றார்போல வரும் குலம்” (தாசன், மெய்.25) எனவும், “குடிப்பிறப்பு”” (இராசா, மெய்.25) எனவும் உரையாசிரியர்கள் உரைகொள்வர்.

    பிறப்பென்பது தலைமக்களின் ஒத்த பிறப்பு. இதனை விளக்கப் பேராசிரியர், கலி.39, 94 ஆகிய பாடல்களையும், குழந்தையும் பாலசுந்தரமும், கலி.39 ஆம் பாடலையும் எடுத்தாண்டுள்ளனர். இம்மெய்ப்பாட்டினை விளக்க உரையாசிரியர்கள் அகநானூற்றுப்பாடல் எதையும் எடுத்தாளவில்லை.

    1:1:2. குடிமை

    குடிமையென்பது, “ஒத்த ஒழுக்கம்; அதற்குத்தக்க (குடிபிறத்தல்) ஒழுக்கங் குடிமை எனப்படும்; குடிபிறந்தாரது  தன்மையைக் குடிமையென்றானென்பது; அதனை ஊராண்மையெனவுஞ் சொல்லுப.” (பேரா. மெய்.25) எனவும், “ஒழுக்கநிலை; “ஒழுக்க முடைமை குடிமை” என்பதனாலும், பிறப்பு வேறு கூறுவதாலும், இது குடிமை ஒழுக்கம் குறிக்கும்.” (பாரதி, மெய்.25) எனவும், “பண்பாடு. அதாவது குலனுடையார்க்குரியவை எனச் சான்றோர் வகுத்துக்கொண்ட சால்பு. குலம், குடிமை, என்பன ஒரோவழி ஒத்த பொருளினவாய் வரும் எனினும் இரண்டிற்கும் வேறுபாடு உண்டு என்பதனை இலக்கண வகையான் உணர்த்தற்பொருட்டுக் குலத்தைப் பிறப்பென்று சிறப்பித்தோதினர் என அறிக. குலஒழுக்கம் செயற்பண்பையும் குடிமை என்பது குணப்பண்பையும் குறித்து வருமெனக் கொள்க.” (பாலசுந்., மெய்.25) எனவும், “குலத்தினுள்ளும் சிறப்பாகிய ஒழுக்கம் பற்றிய குடிவரவு.(குடிவரவு குடிமை எனப்படும்).” (தாசன், மெய்.25) எனவும் உரையாசிரியர்கள் உரைகொள்வர்.

    குடிமையென்பது உயர்குடிப் பிறத்தலின் வழி எய்திய ஒழுக்கம். இதனை விளக்க பேராசிரியரும் குழந்தையும் நற்.3 ஆம் பாடலையும், பாலசுந்தரம் நற்.1 ஆம் பாடலையும், தாசன் குறள்.972–ஐயும் எடுத்தாண்டுள்ளனர். இம்மெய்ப்பாட்டினை விளக்க உரையாசிரியர்கள் அகநானூற்றுப்பாடல் எதையும் எடுத்தாளவில்லை.

    1:1:3. ஆண்மை

    ஆண்மையென்பது “ஒத்த ஆண்மை; ஆண்மை புருடர்க்காம் – அஃது ஆள்வினையெனப்படும். இது தலைமகட்கொப்பதன்றாலெனின், குடியாண்மை யென்புழி ஆண்மை யென்பது இருபாற்கும் ஒக்குமாதலின் அமையுமென்பது” (பேரா. மெய்.25) எனவும், “ஆளுந்திறம்; இது காதலர்க் கின்றியமையா ஒப்பு வகையுள் ஒன்றெனப் படுதலின், இருபாலர்க்கும் பொதுவாதல் தேற்றம் மனையாட்டி, அயலில்லாட்டி, பெண்டாட்டி, வினையாட்டி என்பனவற்றாலும் பெண்பாலார்க்கு ஆட்சியுண்மை துணியப்படும்” (பாரதி, மெய்.25) எனவும், “ஆளுமைத்திறன் ஆண்தன்மை வேறு;  ஆளுதல் தன்மை வேறு இதன் முதனிலை உரிச்சொல் ”ஆள்” அதன் முன்னிலை உரிச்சொல் ‘ஆண்’ என்று அறிக. இயற்றலும் ஈட்டலும் தலைவற்கு ஆளுமை. காத்தலும் வகுத்தலும் தலைவிக்கு ஆளுமை. பிறவற்றையும் இவ்வாறே பகுத்துணர்ந்து கொள்க” (பாலசுந்., மெய்.25) எனவும், “ஆண்மைத் தன்மை அஃதாவது ஆள்வினையுடைமையும் வலிபெயராமையும். ‘முட்டின்று முடித்தல்’ என்பதனால் தலைமகள்மாட்டுப் பெண்மையும் கொள்ளப்படும். அது பெண்டிர்க்குரிய நாணம்” (தாசன், மெய்.25) எனவும் உரையாசிரியர்கள் உரைகொள்வர்.

    ஆண்மையென்பது ஆண்களுக்கான ஆள்வினையுடைமையும் பெண்களுக்கான நால்வகை குணங்களும் சிறந்திருத்தலாகும். இதனை விளக்க பாலசுந்தரம் கலி.11 ஆம் பாடலையும், பேராசிரியரும் குழந்தையும்,

    கேள்கே டூன்றவுங் கிளைஞ ராரவுங்
    கேளல்
    கேளிர் கெழீஇயின ரொழுகவு
    மாள்வினைக்
    கெதிரிய வூக்கமொடு புகல்சிறந்து”   (அகம்.93)

    எனும் அகப்பாடலை எடுத்தாண்டுள்ளனர். இதில், தன் சுற்றத்தாரது கேட்டைப் பாதுகாக்கவும் அவர்களுண்ணவும் சுற்றமில்லாத சுற்றத்தாரை (நண்பர்களை) நண்பு செய்து ஒழுகவும் தம் ஆள்வினைக்கு எதிர்ப்பட்ட உள்ளத்தொடு விரும்பி வந்தோமென வினைமுற்றி மீளலுறும் தலைமகன் இடைச்சுரத்துத் தன் நெஞ்சிற்குக் கூறியது. இதனை, “தன் ஆண்டினைக்குத் தக்க, “பெண்மையான் அவள் ஆற்றியிருந்தாள்” என்பதூஉம், கருதிய கருத்தினாற் காமக் குறிப்பும் பிறந்தமை” என்பர் பேராசிரியர்.” (புலியூர்க் கேசிகன், அகநானூறு, களிற்றியானைநிரை, ப.179) என புலியூர்க் கேசிகனும், “பேராசிரியர், ”பிறப்பே குடிமை” என்ற சூத்திரத்து ஆண்மையால் தலைமகனொடு தலைமகள் ஒத்தமைக்குக் ”கேள்கே டூன்றவும் இறைஞர் ஆரவுமட்…… புகல் சிறந்து” என்ற அடிகளைக் காட்டி, இன்ன காரணத்திற் பிரிந்து போந்து வினைமுடிந்தன மாயினும், அவளை முயங்குகம் சென்மோ என்றமையின், தன் ஆள்வினைக்குத் தக்க பெண்மையான் அவள் ஆற்றியிருந்தா ளென்பதூஉம் கருதிய கருதினாற் காமக் குறிப்புப் பிறந்தமையின், அஃது ஆண்மையாயிற்று.” (மா.பரமசிவம், அகநானூறு, ப.9) என மா.பரமசிவனும் கூறியுள்ளனர். இவற்றில் ஆணுக்குரிய வினைமேற் செல்லலும் பெண்மைக்குரிய ஆற்றியிருத்தலும் வெளிப்பட்டுள்ளமையால் ஆண்மையாயிற்று.

    1:1:4. ஆண்டு

    ஆண்டென்பது, “ஒத்த பிராயம்; யாண்டென்பது ஒத்தவாறென்னையெனின், பன்னீர் யாண்டும் பதினாறியாண்டுமே பெண்மையும் ஆண்மையும் பிறக்கும் பருவமென்பது ஒத்தினுள் ஒப்பமுடிந்தமையின் அதுவும் ஒப்பெனவே படும்” (பேரா. மெய்.25) எனவும், “பருவம்; அதாவது வயது” (பாரதி, மெய்.25) எனவும், “காமக் குறிப்புத் தோன்றிய பருவம்” (குழந்தை, மெய்.25) எனவும், “அகவை அஃது ஈண்டுப் பருவத்தை ஆகுபெயரிலக்கணத்தான் உணர்த்தி நின்றது. அஃதாவது தலைவற்குப் பதினாறு ஆண்டும் தலைவிக்குப் பன்னிரண்டாண்டும் நிரம்பி நிற்கும் வரைவிற்குரிய பருவமாம். இங்ஙனம் தலைவன் அகவையிற் காற்கூறு குறைதல் ஒப்புமை யகவை (ஆண்டு) என்றுணர்க. இதனை “மிக்கோனாயினும் கடிவரை யின்றே” எனக் களவியலுள் கூறியுணர்த்தியமை கண்டு கொள்க” (பாலசுந்., மெய்.25) எனவும் உரையாசிரியர்கள் உரைகொள்வர்.

    ஆண்டென்பது திருமணத்திற்குரிய பருவமெய்தும் வயது. இதனை விளக்க பேராசிரியரும் குழந்தையும் கலி.18 ஆம் பாடலையும், பாலசுந்தரம் ஐங்.256 ஆம் பாடலையும் எடுத்தாண்டுள்ளனர். இம்மெய்ப்பாட்டினை விளக்க உரையாசிரியர்கள் அகநானூற்றுப்பாடலை எடுத்தாளவில்லை.

    1:1:5. உருவு

    உருவென்பது, “ஒத்த உருவு…’உருவு நிறுத்த காமவாயி’ லென்பது பெண்மை வடிவும் ஆண்மை வடிவும் பிறழ்ச்சியின்றி அமைந்தவழி அவற்றுமேல் நிகழும் இன்பத்திற்கு வாயிலாகிய அன்பென்றவாறு…….. உருவென்பது குறிப்பின்றாகலின் மெய்ப்பாடா மாறென்னையெனின், அவ்வுருப்பற்றி மனத்தின்கட் பிறப்பதோர் தருக்குண்டன்றே அதனான் அது மெய்ப்பாடெனப்படும்” (பேரா. மெய்.25) எனவும், “வடிவம்; அதாவது “மூப்போ டிளமைமுரணா” வனப்பு” (பாரதி, மெய்.25) எனவும், “உருவும், அன்பும் அதாவது பெண்மை வடிவும், ஆண்மை வரவும் நன்கு அமைந்த வழி அவற்றின்கண் நிகழும் இன்பத்திற்கு அன்பு வாயின் போறலின், அன்பு காமவாயில் எனப்பட்டது. அன்பு, வடிவுபற்றி யல்லது தோன்றாமையின், உருவும் அதன்கட் டோன்றும் அன்பும் என இரண்டாகப் பகுக்கப்பட்டது. உருவின்கண் நிலைபெற்ற காமத்திற்கு வாயில் போன்ற அன்பென்க” (குழந்தை, மெய்.25) எனவும், “வனப்பு அஃதாவது தோற்றமும் எழிலும் ஏற்றமுற விளங்கும் நிலை” (பாலசுந்., மெய்.25) எனவும் உரையாசிரியர்கள் உரைகொள்வர்.

    உருவென்பது காதலுக்குரிய வனப்பும், வடிவும் அன்பும் நிறைவெய்தல். இதனை விளக்க பேராசிரியர், குறள்.632, கலி.108 ஆகிய பாடல்களையும், குழந்தை கலி.108 ஆம் பாடலையும், பாலசுந்தரம் ஐங்.299 ஆம் பாடலையும் எடுத்தாண்டுள்ளனர். இம்மெய்ப்பாட்டினை விளக்க உரையாசிரியர்கள் அகநானூற்றுப்பாடலை எடுத்தாளவில்லை.

    1:1:6 நிறுத்த காமவாயில்

    நிறுத்தகாமவாயிலென்பது, “ஒத்த அன்பு” (பேரா. மெய்.25) எனவும், “நிலைத்த காதல் நிலை” (பாரதி, மெய்.25) எனவும், “நிலைநிறுத்தப்பட்ட புணர்ச்சிக்கு வாயில் அஃதாவது ஒருவர்மாட்டு ஒருவர்க்கு நிகழும் அன்பு” (தாசன், மெய்.25) எனவும் உரையாசிரியர்கள் உரைகொள்வர். நிறுத்தகாமவாயிலென்பது, இருவர்மாட்டும் பயின்று வரும் காமத்திற்கேதுவாகிய அன்பு. இதனை விளக்க பாலசுந்தரம் குறுந்.70 ஆம் படலையும், பேராசிரியரும் குழந்தையும்,

    நின்மக ளுண்கண் பன்மா ணோக்கிச்
    சென்றோன்
    மன்றவக் குன்றுகிழ வோனே
    பகன்மா
    யந்திப் படுசுட ரமையத்
    தவன்மறை
    தேஎ நோக்கி மற்றிவன்
    மகனே
    தோழி யென்றனள்”    (அகம்.48)

    எனும் அகப்பாடலை எடுத்தாண்டுள்ளனர். இதில், நின்மகளது மையுண்ட கண்களைப் பலதரம் மாட்சிமைப்பட நோக்கி அக்குன்று நாட்டுக்குரியோன் சென்றான். பகல் நீங்கும் அந்தியாகிய சுடர்படுகின்ற காலத்து அவன் மறைந்த திக்குநோக்கித் தோழீ! இவன் ஒரு சிறந்த ஆடவனே என வியந்து கூறினாள் என்பதன்வழி இதில் தலைவி தலைவன்மேற் கொண்ட காதல் வெளிப்பட்டுள்ளமையின் நிறுத்தகாம வாயிலாயிற்று.

    1:1:7. நிறை

    நிறையென்பது, “ஒத்த நிறை;  நிறையென்பது மறைபிறரறியாமை (கலி.133) நெஞ்சினை நிறுத்தல்” (பேரா. மெய்.25) எனவும், “சால்பு அடக்கமெனினும் ஒக்கும். அஃதாவது மறை பிறரறியாமல் நெஞ்சினை நிறுத்தல்” (பாலசுந்., மெய்.25) எனவும், “உள்ளத்தை ஒருவழி நிறுத்தும் நிலை” (இராசா, மெய்.25) எனவும் உரையாசிரியர்கள் உரைகொள்வர். நிறையென்பது பிறர் அறிய கூறக்கூடாதவற்றை மறைத்தொழுகுதல். இதனை விளக்க பேராசிரியர் கலி.133, 37 ஆகிய பாடல்களையும், குழந்தை கலி.37 ஆம் பாடலையும், பாலசுந்தரம் குறுந்.9, கலி.47 ஆகிய பாடல்களையும் எடுத்தாண்டுள்ளனர். இம்மெய்ப்பாட்டினை விளக்க உரையாசிரியர்கள் அகநானூற்றுப்பாடலை எடுத்தாளவில்லை.

    1:1:8. அருள்

    அருளென்பது, “எல்லாவுயிர்க்கும் இடுக்கண் செய்யாத அருளுடையராயிருத்தல் அதுவுங் காமத்திற்கு இன்றியமையாததோர் குறிப்பு” (பேரா. மெய்.25) எனவும், “பிறவுயிர்க் குண்டான துன்பங் கண்டிரங்குதல், துன்பஞ் செய்யாமை” (குழந்தை, மெய்.25) எனவும், “ஒருவர் ஒருவரின் குறையினை நிறையாக ஏற்றொழுகும் மனமாட்சி அருளுடைமை என்னும் பொதுக்குணம் ஈண்டுச் சிறப்புப் பொருள் படநின்றது. பொறை வேறு; குறையை நிறையாகக் கொள்ளும் பண்புவேறென அறிக” (பாலசுந்., மெய்.25) எனவும் உரையாசிரியர்கள் உரைகொள்வர்.

    அருளென்பது எல்லாவுயிரிடத்தும் அன்போடு நெருங்குதல். இதனை விளக்க பாலசுந்தரம் கலி.88, குறுந்.196 ஆகிய பாடல்களும், பேராசிரியரும் குழந்தையும்,

    தாதுண் பறவை பேதுற லஞ்சி
    மணிநா
    வார்த்த மாண்வினைத் தேரன்”   (அகம்-4)

    எனும் அகப்பாடலை எடுத்தாண்டுள்ளனர். இதில், தாதை உண்ணுகின்ற பறவை (வண்டு) வருந்துதலுக்கு அஞ்சி மணியின் நாவை ஒலி எழுப்பாவண்ணம் கட்டிய மாட்சிமைப்பட்ட தொழிலமைந்த தேரையுடையவன். என்பதில் தன் தேரின் ஒலி வண்டினையும் துன்புறுத்த கூடாது என்ற உயர்ந்த நோக்குடையவனாக தலைவன் கூறப்படமையான் இஃது அருளானது.

    1:1:9. உணர்வு

    உணர்வென்பது, “ஒத்த அறிவு; …. உணர்வென்பது அறிவுடைமை;  அஃதாவது உலகியலாற் செய்யத்தகுவது அறிதல்” (பேரா. மெய்.25) எனவும், “அறிவு;  உணர்ச்சி எனினும் அமையும்” (பாரதி, மெய்.25) எனவும், “ஒருவர் ஒருவர்தம் உள்ளக் குறிப்பை அறிந்தொழுகும் நுண்ணறிவு” (பாலசுந்., மெய்.25) எனவும், “உணர்வினை மதித்தல்” (இராசா, மெய்.25) எனவும் உரையாசிரியர்கள் உரைகொள்வர்.

    உணர்வென்பது ஒருவர் குறிப்பை மற்றொருவர் அறிந்தொழுகும் அறிவு. இதனை விளக்க பாலசுந்தரம் குறள்.1100 ஐயும், பேராசிரியர், தொல்.பொருள்.259 ஆம் நூற்பாவையும், மேலும் பேராசிரியரும் குழந்தையும்,

    தன்னசை யுள்ளத்து நந்நசை வாய்ப்ப.”    (அகம்.22)

    எனும் அகப்பாடலை எடுத்தாண்டுள்ளனர். இதில், “தனது வேட்கை நிறைந்த உள்ளத்தின்கண் எமது வேட்கையும் வாய்ப்ப என்பது பேராசிரியர் கருத்து. (காவலரறியாமல்) தன்னை நச்சுதலையுடைய உள்ளத்தில் எம்முடை நசை (வேட்கை) வாய்ப்ப என்பது அகநானுற்றுக் குறிப்புரைகாரர் கருத்து.” (கணேசையர், தொல்காப்பியம், பொருளதிகாரம், பேராசிரியர் இரண்டாம் பாகம், ப.க0க) என கணேசையர் கூறியுள்ளார். இது உள்ளத்துணர்வின் பாற்பட்டது.

    1:1:10. திரு

    திருவென்பது, “ஒத்த செல்வம்; திருவென்பது, பொருளுடைமையும் பொருள் கொணர்ந்து துய்த்தலுமின்றி எஞ்ஞான்றுந் திருத்தகவிற்றாகியதோர் உள்ள நிகழ்ச்சி; அது வினையுள்ளுடைமையெனவும் படும்” (பேரா. மெய்.25) எனவும், “செல்வம்; இது பொருள் பற்றியதன்று;  உள்ள மலர்ச்சி; ”செல்வ மென்பது சிந்தையினிறைவே” என்பதனாலும் இப்பொருட்டாதலறிக” (பாரதி, மெய்.25) எனவும், “தெய்வந்தன்மை, அஃதாவது கண்டாராற் போற்றப்பெறும் தெய்வப் பொலிவு. திருத்தகவிற்றாயதோர் உள்ள நிகழ்ச்சி என அவர் கொள்கைக்கேற்பப் பொருள் கூறுவார் பேராசிரியர். அஃது ஒப்புமைப் பண்பாதற்கு ஏலாமையறிக” (பாலசுந்., மெய்.25) எனவும், “நல்லதையே எண்ணும் உளநிலை” (இராசா, மெய்.25) எனவும் உரையாசிரியர்கள் உரைகொள்வர்.

    திருவென்பது நிறைவெய்தும் மனநிகழ்வு. இதனை விளக்கப் பேராசிரியரும் குழந்தையும் கலி.143ஆம் பாடலையும், பாலசுந்தரம் திணைமாலை.71ஆம் பாடலையும் எடுத்தாண்டுள்ளனர். இம்மெய்ப்பாட்டினை விளக்க உரையாசிரியர்கள் அகநானூற்றுப்பாடலை எடுத்தாளவில்லை.

    இதுகாறும் கூறப்பட்ட பத்து மெய்ப்பாடுகளும் தலைமக்கட்குரித்தான ஓப்புமைகளாகும். இதனை,

    “இதுகளவியலுட் கூறப்பட்ட தலைவற்குந் தலைவிக்கும் உளதாகும் ஒப்புப் பாகுபாடு உணர்த்துதல் நுதலிற்று” (இளம்., மெய்.25) என இளம்பூரணரும்,

    “மெய்ப்பாட்டிற்குரிய பொருளாக ஓதப்பெற்ற பொருள் யாவும் பண்பும் செயலுமே ஆதலின் அவற்றிற்கு அடிப்படையாய குடிமையையும் பிறப்பையும் ஒப்பினது வகையுள் தலைமையுடையவை என்பது தோன்ற முதற்கண் வைத்தோதினார் என்க. ‘ஒத்த கிழவனும் கிழத்தியும்’ (கள-2) என்ற ஒப்புமையை விதந்து கூறுகின்றது. ஐந்திணை மருங்கின் காமக் கூட்டமாவது, துணையமை நல்யாழ்த் துணைமை யோரயல்பெனவும் (களவு-1) அத்துணைவராவார் ஒத்த கிழவனும் கிழத்தியுமெனவும் அவர்தாம் ஒன்றியுயர்ந்த பாலதாணையாற் காண்ப. (களவு-2) எனவும், அவருள் தலைமகன் பெருமையும் உரனுமாகிய குணங்களையுடையான் (கள.7) எனவும் தலைவி அச்சமும் மடனும் நாணுமாகிய குணங்களையுடையாள் (களவு-8) எனவும் கூறி அவர்தாம் இருவகைக் கைகோளானும் ஒழுகும். ஒழுக்கமே  ‘மன்னிய வினை’ என்றும் ஆசிரியர் புலப்படுத்திப் புகுமுகம் புரிதல் முதலாகக் கலகம் ஈறாக ஓதப் பெற்றவை களவிற்குரிய நிமித்தமாம் என்றும் முட்டுவயிற்கழறல் முதலிய எட்டும் வரைந்தெய்தும் அழிவில் கூட்டத்திற்குரிய நிமித்தமாம் என்றும் தெய்வமஞ்சல் முதலிய பத்தும் கற்பிற்குரிய பொருள்களாம் என்றும் கூறி அவையும் அவைபோல்வன பிறவுமெல்லாம் எண்வகை மெய்ப்பாட்டிற்குரிய அடிப்படைப் பொருள்களாம் எனவும், இதுகாறும் எடுத்தோதினார் அங்ஙனம் மன்னியவினை பற்றி வரும் பொருள்கள் யாவும் மேற்கூறிய கிழவனும் கிழத்தியும் அத்தகைய சால்புடையராகிய வழியே நிகழுமாதலின் அச்சால்புடைமைக்கு அடிப்படை இவை என்பது விளங்கும். எனவே அகத்திணைக்கண் எண்முறை நிலையாய மெய்ப்பாடுகள் தோன்றுதற்கு அடிப்படைப் பொருள்கள் புகுமுகம் புரிதல் முதலாயவை என்பதும் புகுமுகம் புரிதல் முதலாய பொருள்கள் நிகழ்தற்கு அடிப்படை தலைமக்கட்குரிய குணங்கள் என்பதும் அக்குணங்கள் அமைதற்குரிய அடிப்படை பிறப்பு முதலாய ஒப்புமைகள் என்பதும் தெளிவாம். அவற்றுள் குணங்கள் தலைமக்கட்குரிய இலக்கணமாக நிற்றலின் அவற்றைக் களவியலுள் விதத்து கூறி, பிறப்பு முதலாய இப்பத்தும் தலைமக்கட்குரிய இலக்கணமன்மையான் ஆண்டுக் கூறாமல் மெய்ப்பாட்டுப் பொருள் தோன்றுதற்குக் காரணமாதல் பற்றி ஈண்டு அமைத்தார் என்க” (பாலசுந்., மெய்.25) என பாலசுந்தரமும்,

    “இப்பத்தும் ஒத்த அன்பராய்த் தம்முள் கூடும் தலைவன் – தலைவி ஆகிய இருவர்பாலும் இருக்க வேண்டும் ஒப்புநிலைகளாகும்” (இராசா, மெய்.25)) என இராசாவும் கூறியுள்ளனர்.

    1:2. முடிவுரை

    1. தலைமக்கட்குரித்தானதாகக் கூறப்படும் பத்து மெய்ப்பாடுகளும் குழந்தை கருத்துப்படி தலைமகளுக்கு சிறப்புடையதாகும். இது பொருந்தாது ஏனெனில் இது தலைமக்கட்கான ஒப்புமை எனவே இருவர்க்கும் சிறந்தமையாகும்.
    2. தலைமக்கட்குரிய ஒப்புமைகளாகக் கூறப்படும் பத்துமெய்ப்பாடுகளுள் ஆண்மை, நிறுத்தகாம வாயில், அருள், உணர்வு எனும் நான்கினை மட்டும் விளக்க அகநானூற்றுப் பாடல்கள் எடுத்தாளப்பட்டுள்ளன. மேலும் இவையனைத்தும் உரையாசிரியர்களால் பொருந்த ஆளப்பட்டுள்ளன.

    *****

    கட்டுரையாளர்,
    தமிழ்த்துறைத்தலைவர்,
    D.L.R. கலை மற்றும் அறிவியல் கல்லூரி,
    விளாப்பாக்கம், ஆற்காடு

     

    Share
  • அகநானூற்றில் வரைவுக்கு வழிவகுக்கும் மெய்ப்பாடுகள்

    -பேரா.பீ. பெரியசாமி

    முன்னுரை

    களவுக் காலத்துத் தலைவனோடு ஒருங்கிணைந்து ஒழுகிய தலைவியின் உள்ளத்தில் வரைவு வேட்கை எழுகின்றது.  உள்ளத்து வரைவு வேட்கையை மெய்ப்பாடுகளாகத் தலைவனுக்கு உணர்த்துகின்றாள்.  வரைவு நீட்டிக்கும் தலைவனுக்கு எதிரான குறிப்புகளை உணர்த்தும் வண்ணம் மெய்ப்பாடுகளாக இவை நிகழும்.  இம்மெய்ப்பாடு தலைவனுக்குக் கடமை உணர்வை உணர்த்தும். இது ஆணும், பெண்ணும் காதல் வயப்பட்ட பின்பு ஒருவர் விருப்பத்தை இன்னொருவர் புரிந்து கொள்ளுதல் அவசியம் என்பதை சுட்டிக்காட்டுகின்றது.  இம்மெய்ப்பாடுகளைத் தலைவன் உணர்ந்து வரைவுக்கு முற்பட வேண்டும் என்பதால் இவை தலைவியிடம் நிகழ்கின்றன. இதனை, 

    முட்டுவயிற் கழறல் முனிவுமெய்ந் நிறுத்தல்
    அச்சத்தின்
    அகறல் அவன்புணர்வு மறுத்தல்
    தூதுமுனி வின்மை துஞ்சிச் சேர்தல்
    காதல் கைம்மிகல் கட்டுரை யின்மையென்
    றாயிறு நான்கே அழிவில் கூட்டம்.”(நூ.23) எனத் தொல்காப்பியர் கூறியுள்ளார்.

    முட்டுவயிற்கழறல்

    வரைவு நீட்டிப்பால் உண்டாகும் தடைகளையெல்லாம் வரைவு வேட்கையை உட்கொண்ட தலைவி, தலைவனிடம் கழறுகின்றாள். இதனை, “களவொழுக்கத்திற்கு முட்டுப்பாடுகள் வந்த பொழுது இவ்வாறு இருந்ததெனக் கழறியுரைத்தல் முட்டுவயிற்கழறல் என்னும் மெய்ப்பாடாகும்.” (சங்க இலக்கியத்தில் காதல் மெய்ப்பாடுகள், ப.185.) என்பர்.

    நொச்சி வேலித் தித்தன் உறந்தைக்
    கல்முதிர்
    புறங்காட்டு அன்ன,
    பல்முட் டின்றால் தோழி! நம் களவே.”   (அகம்.122(21-23))

    எனும் அகநானூற்று பாடலில் ‘நம் களவானது தித்தனின் வேலி நிறைந்த, கற்பாறைகள் நிறைந்த, காவல் மிகுந்த உறந்தை எனும் ஊரை அடைவதைப் போன்ற பல்வேறு இடையூறுகளைக் கொண்டது.’ எனுமிடத்தும், 20(11-16), 72(17-22), 112(1-8), 147(1-10), 288(17) எனும் பாடலடிகளும் முட்டுவயின்கழறல் எனும் மெய்ப்பாடு அமைய பெற்றுள்ளன.

    முனிவு மெய்ந்நிறுத்தல்

    திருமணத்தில் நாட்டம் இல்லாமல் காலத்தை நீட்டிக்கும் தலைவனுக்குத் தலைவி தன் உள்ளத்து வெறுப்பை மெய்ப்பாட்டுக் குறிப்பால் உணர்த்துவது இம்மெய்ப்பாடாகும். இதனை உளவியலார், “பிற மனிதர் மேலுள்ள வெறுப்பைத் தன் முகமாய்த் திருப்பிக் கொள்ளல் என்பது தன்முகத் திருப்பம்.” (Elements of Psychopathology, p.87)  என்பர்.

    இன்னுயிர் கழிவது ஆயினும், நின்மகள்
    ஆய் மலர் உண்கண் பசலை,
    காம நோய் எனச் செப்பாதீமே.”(அகம்52(13-15))

    எனும் அகநானூற்று பாடலில் ‘என்னுடைய இனிய உயிரானது என்னை விட்டுப் பிரிவதாக இருந்தாலும், நும் மகளினது  அழகிய மலரினை ஒத்த  மையுண்ட கண்களில்  படர்ந்துள்ள பசலை நோய்க்கு  தலைவன் பால் கொண்ட காமநோயே காரணம் என விளக்க உரையாதே’ எனுமிடத்தும், 50(13-14) எனும் பாலடியும் முனிவு மெய்ந்நிறுத்தல் எனும் மெய்ப்பாடு அமைய பெற்றுள்ளன.

    அச்சத்தின் அகறல்

    தலைவனோடு தாம் கொண்டுள்ள களவொழுக்கம் ஊராருக்கும் ஏனையோருக்கும் தெரிந்து அலராகுமோ? அல்லது இற்செறிக்கப்படுவோமோ? தலைவன் வரும் வழியில் அவனுக்கு ஏதேனும் கொடிய விலங்குகளினாலும் பிறவற்றானும் தீங்கு நேருமோ எனும் அச்சத்தின் காரணமாகவும் தலைவனை விட்டு அகன்றிருத்தல் இம்மெய்ப்பாடாகும். இதனை, “தலைவனின் களவொழுக்கத்தால் தலைவி, ஊரார் அலருக்கு அஞ்சுவதாக் கூறலும், தலைவன் வரும் வழியில் ஏதங்களால் தீங்கு நேருமோ என அஞ்சுவதாகக் கூறலும் அச்சத்தின் அகறல் என்னும் மெய்ப்பாடாகும். தலைவனை வரைந்து கொள்ளத் தூண்டலே இம்மெய்ப்பாட்டின் நோக்கமும் பயனுமாகும்.” (சங்க இலக்கியத்தில் காதல் மெய்ப்பாடுகள், பக்.187-188.) என்பர்.

     “உள்அவன் அறிதல் அஞ்சி உள் இல்,”(அகம்.32(11))

    எனும் அகநானூற்று பாடலில் ‘என் உள்ளத்து நிலையினை அவன் அறிந்துக் கொள்வதை நினைத்து யான் அஞ்சினேன்’ எனுமிடத்தும், 128(1-15), 118(6) எனும் பாலடிகளிலும் அச்சத்தின் அகறல் எனும் மெய்ப்பாடு அமைய பெற்றுள்ளது.

    அவன் புணர்வு மறுத்தல்

    தலைவனும் தலைவியும் தங்கள் களவொழுக்க இன்பத்தை அனுபவிக்கக் கருதி இரவிலும் பகலிலும் கூடுவர். இக்கூட்டத்தினை குறியிடம் என்பர். அவ்வாறு கூடி மகிழ்ந்த தலைவி, தோழியிடம் களவு நீட்டிப்பதைப் பற்றிக் கூறுவாள். அதனை உணர்ந்த தோழி இரவில் வருவானைப் பகலில் வாவென்றும், பகலில் வருவானை இரவில் வாவென்றும் அலைக்கழிப்பாள். சில நேரங்களில் இருகுறியும் மறுத்துரைத்தலும் உண்டு. இதற்குக் காரணம் அவன் விரைவில் தலைவியை வரைந்து கொள்ளல் வேண்டும் என்பதுவே ஆகும். இதனையே தொல்காப்பியர் ‘அவன் புணர்வு மறுத்தல்’ எனும் மெய்ப்பாடாக அமைத்துள்ளார். இது வரைவு வேட்கையின் வெளிப்பாடு.

    நல் வரை நாட! நீ வரின்
    மெல்லியல்
    ஓரும் தான் வாழலளே”   (அகம்.12(13-14))

    எனும் அகநானூற்று பாடலில் ‘நீ இரவுக் குறிக்கண் வருவாயாயின் மெல்லிய தன்மையுடைய இத்தலைவி உயிர் வாழமாட்டாள்’ எனுமிடத்தும், மேலும் 25(12-18), 47(16-19), 58(11-12), 88(7-15), 59(3-9), 92(1-13), 148(11-14), 160(16-19), 182(12-13), 194(16-19), 196(13), 240(9-15), 270(13-16), 308(7-16), 369(10-19) எனும் பாடலடிகளிலும் அவன் புணர்வு மறுத்தல் எனும் மெய்ப்பாடு அமைய பெற்றுள்ளது.

    தூது முனிவின்மை

    திருமணத்தின் மீதான வேட்கை அதிகரிக்கத் தலைவி தன் நிலையைத் தலைவனுக்கு எடுத்துரைக்க நினைந்து மேகம், நிலவு, பறவை, விலங்கு  போல்வனவற்றிடம் என்னை விரைந்து மணந்து கொள்ளுமாறு தலைவனிடம் கூறுங்கள் எனத் தூதுவிடுதல் தூது முனிவின்மை என்னும் மெய்ப்பாடாகும். இம்மெய்ப்பாட்டினை உளவியலார், “மனத்தில் அழுந்திக் கிடக்கும் சிக்கல்களை மறுபடியும் வெளிக்கொணர்ந்து அவற்றை மறுபடியும் நினைவின் மூலமாக அனுபவிக்கும்படி செய்துவிட்டால் அந்தச் சிக்கலினால் ஏற்படும் கோளாறுகள நீங்கிவிடுகின்றன.”; (அடிமனம்,ப.16.) என்றும், “துன்பம் மிக்க நேரங்களில் பேசினால் புரிந்துகொள்ள ஆகாத பொருள்களை விளிக்கவும் செய்கின்றனர். அஃறிணைப் பொருள்களிடமேனும் பேசி வெளிப்படுத்துதலால் உணர்ச்சியின் எழுச்சி அடங்குகின்றது. உள்ளத்தின் அழுத்தம் தளர்கிறது. உள்ளத்தின் செறிவைச் சொற்களில் கூறிச் செயல்படுத்தி விடுவதால் இத்தளர்ச்சி நேர்கின்றது.” (சங்க இலக்கியத்தில் உளவியல், ப.186.) என்றும் கூறுவர். இதனை வ.சுப. மாணிக்கம், “………. இன்ப வெள்ளத்தால் துன்பப் புயலால் நெஞ்சு அலையும்போது, அவற்றைப் பிறரிடம் பேசினால் ஆறுதல் உண்டாகும்.” (தமிழ்க்காதல், ப.53.)   என்பதாலே தலைவி தூதுவிடுகின்றாள் எனக் கூறியுள்ளார். இதனை,

     “தூதும் சென்றன தோளும் செற்றும்”  (அகம்.251.(1))

    எனும் அகநானூற்று பாடலில் ‘நாமும் தலைவர்பால் தூதுவர்களை அனுப்பியுள்ளோம்; செறிவாக அணியப் பெற்ற அணிகள் நெகிழ்ந்து வீழப்பெற்றுத் தலைவனைப் பற்றிய நினைவுத் துன்பத்தால் வருந்தி இருக்கும் நம் நிலையை அவர்களும் எடுத்துக் கூறுவார்கள்’ எனுமிடத்தும், 170(1-8), 244(11), 255(17-19), 333(17-22), 338(15-16) எனும் பாடலடிகளிலும் தூது முனிவின்மை எனும் மெய்ப்பாடு அமைய பெற்றுள்ளது.

    துஞ்சிச் சேர்தல்

    துஞ்சிச் சேர்தல் என்பது மனையகத்துப் பொய்த் துயிலோடு மடிந்து வைகுதல். அஃதாவது, வரைவு நீட்டுந் தலைவன் கூட்டம் மகிழாது தலைவி மனமாய்தல். வேண்டியவாறு  கூட்டம் நிகழப் பெறாமையின் தலைமகனோடு புலந்தாள் மடிந் தொன்றும் என்பதாகும். இதனை, “என்ன செய்வது என்று தெரியாத இயக்கமற்ற நிலையே சோர்வு ஆகும். தீவிரமான துன்பம் வளர்ந்து பாதிக்கப்பட்ட நிலையே உள்ளச் சோர்வு.” (A Study of Psychology, p.49.) என்பர் உளவியலார். மேலும், “வரைவு நீட்டித்து ஒழுகுந் தலைவன் வரவால் தலைவி மகிழாது மனமாழ்கித் தன் உள்ளத்து வருத்தத்தை வெளிப்படுத்துதல் துஞ்சிச் சேர்தல் என்னும் மெய்ப்பாடாகும்.” (சங்க இலக்கியத்தில் காதல் மெய்ப்பாடுகள், ப.194.) என்பர்.

     “துஞ்சு ஊர் யாமத்து முயங்கினள் பெயர் வோய்”  (அகம்.198(11))

    எனும் அகநானூற்று பாடலில் ‘ஊர் உறங்கும் நேரத்தில்  (நள்ளிரவில்) நம்மைத் தழுவி மகிழ்ந்து மீண்டு போயினள்’ எனுமிடத்தும், 26(4-5) எனும் பாடலடியிலும் துஞ்சிச் சேர்தல் எனும் மெய்ப்பாடு அமைய பெற்றுள்ளது.

    காதல் கைம்மிகல்

    தலைவி, தலைவனது வரைவு நீட்டிப்பால் காதல் மிகப் பெற்று உள்ளம் வருந்துவாள்.  தன் காதல் மிகுதியைக் கூறவும் செய்வாள்.  இதுவே காதல் கைம்மிகல் என்னும் மெய்ப்பாடாகும். இதனை, “வலிமை மிகுந்த பாலின உந்தானது (Sex Drive) குலைக்கப்படும் போது மனவெழுச்சி விரிப்புகள் தோன்றுகின்றன. சமூக அங்கீகரிப்புள்ள முறைகளில் இவைகளைச் செலுத்தப் போதுமான மாற்றுவழிகள் இல்லாத நிலையில், இவை ஆளுமையைப் பாதிக்கும்.” (இளையோர் உளவியல், தொகுதி -1, ப.76.) என்பர் உளவியலார். இதனை, மு.பொன்னுசாமி, “பிரிந்த தலைவன் தன்னைத் துறந்துவிட்டான் என்ற நிலையில் தோன்றுவனவே தலைவியின் காம மிக்க கழிபடர் கிளவிகள். இவற்றில் வரைவு நீட்டிப்பால் காதல் கைம்மிகப் பெற்ற தலைவியின் வருத்தம் இழையோடியிருக்கும். காதல் கையிகந்த நிலையில் வரைவு வேட்கையை உட்கொண்டு கூறவும் செய்வாள், கூறாமலே மெய்ப்படு குறிப்புகளால் உணர்த்தி ஒழுகவும் முற்படுவாள்.” (சங்க இலக்கியத்தில் காதல் மெய்ப்பாடுகள், பக்.194-195.) என்பர்.

     “நிறுத்த நில்லா நெஞ்சமொடு  நின்மாட்டு”   (அகம்.2(12))

    எனும் அகநானூற்று பாடலில் ‘இவளும் தடுத்து நிறுத்தவும் அவ்வளவில் நில்லாது ஓடும் நெஞ்சினை உடையவளாய் நின்னிடத்து இத்தகைய காதல் மிகுதியும் உடையவளாயினள்’ எனுமிடத்தும், 266(8-9),128(3-5;14-15), 135(14), 258(14-15), 273(13-14), 276(7-15), 285(12-15), 322(3), 340(1-5), 367(14-16) எனும் பாலடிகளிலும் அவன் காதல் கைம்மிகல் எனும் மெய்ப்பாடு அமைய பெற்றுள்ளது.

    கட்டுரையின்மை

    தனது திருமண ஆசையினை நேரடியாகத் தலைவனிடம் சொல்லும் மரபு அக்காலத்தில் தலைவிக்கு இல்லை. அவ்வாறு இருக்கத் தன்னுடைய அவாவினை தன் உடற்குறிப்பினால் உணர்த்துவது இம்மெய்ப்பாடாகும். இதனை, “சொல்லாகா நிலையில் சொல்லாது நிற்றல் ஒரு மென்மையும் எளிமையுமான துறப்பமைவு நடத்தை” (சங்க இலக்கியத்தில் உளவியல்,ப.65.) என்பர் உளவியலார். இதனை, மு.பொன்னுசாமி, “அச்சம், நாணம், மடம் என்னும் அரும் பண்புகள் காரணமாகத் தலைவி தலைவனிடம் ஒருபோதும் தன் வரைவு வேட்கையினை வாய்விட்டுக் கூறமாட்டாள். களவொழுக்கம் நீட்டிக்கும் தலைவனிடம் உடனுறை வாழ்க்கையை விழையும் தலைவி, “என்னை வரைவுகொள்” என வெளிப்பட உரைக்க மாட்டாள். தலைவி தன் உள்ளக் கருத்தினை உரையாது வரைவு தூண்டல் கட்டுரையின்மை என்னும் மெய்ப்பாடாகும்.” (சங்க இலக்கியத்தில் காதல் மெய்ப்பாடுகள், ப.197.) என கூறியுள்ளார்.

     “நீங்குக என்று யான் யாங்கனம் மொழிகோ!”  (அகம்.90(8))

    எனும் அகநானூற்று பாடலில் ‘இக்களவொழுக்கத்தில் இருந்து நீங்குக என்று யான் எவ்வாறு உரைப்பேன்’ எனுமிடத்து கட்டுரையின்மை எனும் மெய்ப்பாடு அமைய பெற்றுள்ளது.

    முடிவுரை

    வரைவு வேட்கை உணர்ச்சியே இம்மெய்ப்பாடுகள் பிறக்கக் காரணமாகின்றது.  இம்மெய்ப்பாடுகள் தலைவியிடம் தோன்றுகின்றன.  இவை “ஒன்றித் தோன்றும் தோழிமேன” என்பதற்கிணங்கத் தோழியிடமும் நிகழ்கின்றன. வரைவு கடாவும் நோக்கிலேயே இம்மெய்ப்பாடுகள் அமைந்துள்ளன.  தலைவனுக்குக் கடமையுணர்வை உணர்த்தி, மணம் புரிந்து வாழும் உடனுறை இன்ப வாழ்விற்கு இம்மெய்ப்பாடுகள் வழிவகுக்கின்றன. காதல் வயப்பட்ட ஆணும், பெண்ணும் தனித்திருந்த தங்கள் காதலை வெளிப்படுத்துகின்ற தருணத்தில் பெண் தன்னுடைய வேட்கையைத் தன் காதலனிடம் கூறமாட்டாள். காதலியின் அக உணர்வைப் புரிந்துகொண்ட காதலன் அவளிடம் கேட்கும் பொழுதுகூட அதைத் தன்வார்த்தைகளால் கூறாது புதுமண்கலத்தில் ஊற்றப்பட்ட நீரானது புறத்தே கசிவது போல தன் குறிப்பால் வெளிப்படுத்துவாள் என்கின்றார். தனித்திருக்கும் வேளையிலும் தன் புலன்களை அடக்கும் ஆளுமைப் பண்பு கொண்ட அறிவுசால் பெண்ணின் தலைமை இல்லறத்தை இனிது நடத்தும் என்பதை தொல்காப்பியர் புலப்படுத்துகிறார். காதல் வயப்பட்ட பெண் வரம்புக் கடக்காதவளாக இருத்தல் நலம் என்பதையும் சுட்டிக் காட்டுகிறார்.

    *****

    கட்டுரையாளர்,
    தமிழ்த்துறைத்தலைவர்
    D.L.R. கலை மற்றும் அறிவியல் கல்லூரி
    அழைக்க: 9159577065

                                       

     

    Share
  • அகநானூற்றில் அழுகையெனும் மெய்ப்பாடு! (தொல்காப்பிய மெய்ப்பாட்டியலை முன் வைத்து…)

    -பேரா.பீ. பெரியசாமி  

    முன்னுரை

    தொல்காப்பியப் பொருளதிகாரத்தின் ஆறாவது இயலாக மெய்ப்பாட்டியல் அமைந்துள்ளது. இலக்கிய மாந்தர்கள் periyasamiஉள்ள உணர்ச்சியால் தூண்டப்படும்போது எவ்வாறு சொற்படுத்த வேண்டும் என்பதை அறிய மெய்ப்பாட்டியல் துணைபுரியும். மெய்ப்பாட்டியல் என்றால் என்ன என்பது பற்றிய விளக்கப் பொருண்மை நூற்பாவைத் தொல்காப்பியர் அமைக்கவில்லை. மெய்ப்பாட்டியல் அகவொழுக்கத்திலும், புறவொழுக்கத்திலும் புலப்படும் மெய்ப்பாடுகளைக் கூறுகிறது. செய்யுளுக்குரிய உறுப்புகளுள் இன்றியமையாதது மெய்ப்பாடு ஆகும்.  தொல்காப்பியனார் “உணர்ச்சி” என்னாது “மெய்ப்பாடு” எனச் செய்யுள் உறுப்பைக் குறித்ததன் நோக்கம் நுட்பம் வாய்ந்தது.  உணர்ச்சி என்ற சொல்லைத் தொல்காப்பியனார் யாண்டும் குறிக்கவில்லை.  பாடலில் உணர்ச்சியைக் குறித்தால் அதைப் படிப்போர் எளிதில் அறிதல் இயலாது.  ஒருவர் உணர்ச்சியுறுகின்றார் என்றால் அவர் உற்ற உணர்ச்சியை அவரால் மட்டுமே எளிதில் உணரமுடியும்.  காண்போர் அறிய இயலாது.  மெய்ப்பாடுகளால் மட்டுமே உணார்ச்சியை எளிதில் அறிந்துகொள்ள இயலும். அவற்றுள் அழுகை எனும் மெய்ப்பாடு அகநானூற்றில் இடம்பெற்றுள்ளவிதத்தை இக்கட்டுரை ஆராயவுள்ளது.

    அழுகை மெய்ப்பாடு

    மனித மனத்தின் ஆழமான, நீங்காத உணர்வு அழுகை ஆகும். அழுகை பிறர் தன்னை எளியன் ஆக்குதலாற் பிறப்பது. உயிரானும், பொருளானும் இழத்தல், தளர்ச்சி, தன்நிலையிற் தாழ்தல், நல்குரவு என்ற பொருண்மையில் அழுகை எனும் மெய்ப்பாடு தோன்றும். இதனை, நாவலர். பண்டித ந.மு. வேங்கடசாமி நாட்டார் அழுகை மெய்ப்பாட்டைப் பற்றிக் குறிப்பிடுமிடத்து, “அவலச்சுவை என்பது வடமொழியில், “சோகரஸம்” என்று குறிப்பிடப்படும். அவலம் எனினும் அழுகை எனினும் ஒக்கும்” (கட்டுரைத் திரட்டு, ப.107) எனப் பேராசிரியர் வழி நின்று அவலச் சுவைக்கு விளக்கம் தருகின்றார். படிப்பவரது உள்ளத்தை உருக்கும் தன்மையதாய் அமைவது அழுகை எனும் மெய்ப்பாடாகும். இம்மெய்ப்பாடு கேட்போரை எளிதில் ஈர்க்கச் செய்யும் தகுதியுடையது. இதனை, “வாழ்க்கையில் கவலையை வளர்க்கும் துன்பம் கலையுலகில் கவலையைத் தீர்க்கும் மருந்தாக உள்ளது என்னும் அவலம் உள்ளச் சுமையைக் குறைப்பதற்கு உறுதுணையாகிறது” (இலக்கிய ஆராய்ச்சி, ப – 69) என்று  மு. வரதராசனார் கூறுவார்.

    கி. ஈஸ்வரி அவர்கள் அழுகையின் தோற்றுவாயினை, “அவலத்தை இரக்கம், துன்பம் எனப் பகுத்துப் பார்க்கும்போது, இரக்கத்தின் அடிப்படையில் தோன்றுவது ‘அவலம்’ என்றும், துன்பத்தின் அடிப்படையில் தோன்றுவது ‘அழுகை’ என்றும் தெரிகிறது.” (இலக்கிய மணிகள், ப.52) என்கிறார்.  இதனை, “துன்பத்தின் இன்பமே கவிதைக்கும் கற்பார்க்கும் அவைக்கும் ஆதலின், சங்கச் சான்றோர்கள் பாலைத் துறைகளை விரும்பிப் பலர் பாடினர்” (தமிழ்க்காதல், ப – 98) என வ.சு.ப. மாணிக்கம் கூறுவார். அழுகையானது தனிமனித வாழ்வில் ஏற்படுவதுடன் முடிவெடுக்க இயலாத தன்மையும் கொண்டது. அழுகையெனும் மெய்ப்பாடானது இளிவு, இழவு, அசைவு, வறுமை ஆகிய காரணங்களால் பிறக்கும். இதனை தொல்காப்பியர்,

    இழிவே இழவே அசைவே வறுமையென
    விளிவில் கொள்கை அழுகை நான்கே”(நூ.5) என்பார்.

    இவற்றுள், இளிவு, வறுமை என்பது சங்க இலக்கியங்களில் ஓரளவிலேயே சுட்டப்படுகின்றன. வறுமை என்பது களைய வேண்டிய தொன்றே எனச் சங்க இலக்கியங்கள் கூறுகின்றன. இளிவு வரினும் அவை மாறும் தன்மையைக் கொண்டதெனலாம். இதனை, “உணர்ச்சிகள் தோன்றுவதற்குச் சூழலும் மனமும்தான் காரணமாக அமைகின்றன. உயிர்கள் அனைத்தும் இன்புற்றிருக்கவே விழைகின்றன.  இவ்விழைவிற்கு மாறாக எழும் நிகழ்ச்சிகள் அவலத்தைத் தோற்றுவித்தன. அவலத்தை மிகுவிக்கவோ குறைக்கவோ மனநிலையும் சூழலும் காரணமாக அமைகிறது.” (குறுந்தொகையில் அவலச்சுவை, ப.6) என துரைராஜி கூறியுள்ளார்.

    ஆய்வாளர்களின் பார்வையில் அழுகை

    மேலைநாட்டு ஆய்வாளர்கள் அழுகையினை அவலம், டிராஜடி என்பர். இதனை, “துன்ப உணர்வைத் தருகின்ற கருணைரசம், அதன் தன்மையினின்று நீங்கிச் சுவையை ஊட்டுகிறது என்பர் அவிநவகுப்தர். இங்ஙனம் அது சுவையைத் தருவது இலக்கியத்திலும் நாடகத்திலும் எனலாம்.” (Comparative Aesthetics, Vol.I, P.215 ) என்பர்.

    “நிலையற்ற மானிட வாழ்வில் உயர்ந்த நிலையில் அவலத்தைப் பற்றிச் சிந்திக்கையில் மதிப்பிற்குரிய, மிக நெருங்கிய அன்புடையவர் தம் இழப்பும், விபத்துக்கள் ஆகியனவும் அவலமாகும் எனவுரைப்பர்.” (Tragedy and Sanskrit Drama, P – 1) “அறியாமையாலும் ஓரளவு அவலம் ஏற்படுவதுண்டு. சான்றாக ஒரு பித்தனால் அமைதியும் மரியாதைக்குரிய ஒருவன் எதிர்பாராமல் சொல்லப்படுவது அவலத்தை விளைவிப்பதாகும்.” (The Harvest of Tragedy, PP.18-19) “இரண்டாவதாக அவலமாவது நல்வினைப் பயன் தீவினையாக மாறுவதாகும். காண்போரும் இரக்கமும், அச்சமும் மிகுந்த நிலையினை மனதிற் கொண்டே அதனைக் காண்கின்றனர்.” (Principles of Tragedy, p.37)  “அவலத்தைப் படைக்கும் கவிஞன் தனது ஆன்மாவினின்றும் உறும் எல்லா மனிதருக்கும் ஏற்புடையதாக அதனை அமைக்கின்றான். அது மகிழ்ச்சியைத் தரத்தக்கதல்ல எனினும் சிந்திக்க இன்பத்தைத் தருவதாகும்” (The harvest of Tragedy, P – 201)  என்பார்.  ஹேனன் என்பவார், “தவிர்க்க இயலாத வகையில், மிக உயர்ந்த நிலையிலிருந்து மனிதனது வீழ்ச்சியும், இழப்பும் அவலமென்று கூறுவர். அந்நிலை மிகச் சாதாரணமாக ஏற்படுவதன்றென்பர். மேலும், அது ஒருவனுக்கு எளிதாய் ஏற்படுவதில்லை. பிறரால் உண்டாக்கப்படுவதுமில்லை. அது மனிதனுடைய செயல்களினால் தாமே விளைவதாகும்.” (Shakespearean Tragedy, p.6) என்பர்.

    அழுகை என்பது தன்னிலையிலிருந்து தாழ்வதனால் ஏற்படுகின்றது. இது இயல், இசை, நாடகம் எனும் அனைத்திலும் வெளிப்படக் கூடியது. மேலும், மற்றவர்களின் மீது நாம் அன்புகொண்டு பழகும்போது அவர்களை இழக்க நேரிட்டாலோ அல்லது அவர்கள்  இறந்துவிட்டாலோ நம்மிடம் அழுகை எனும் மெய்ப்பாடு இயல்பாகவே வெளிப்படுகின்றது.

    உளவியலார் பார்வையில் அழுகை

    அழுகை ஏற்படுவதற்கான காரணமாக, “ஒருவனுடைய நெருங்கிய தோழன் காட்டிக் கொடுக்கும் போதோ மிகவும் நெருங்கிய ஒருவன் இறக்கும்போதோ ஒருவன் முழுவதும் நிலைகுலைவதைக் காணலாம்.” (Psychology and Effective Behaviour, p.176) என கோலிமேன் கூறியுள்ளார்.

    அழுகை என்னும் சொல்லுக்கு அகராதி விளக்கம்

    மதுரைத் தமிழ்ப் பேரகராதி “அவலத்திற்கு ஓரலங்காரம், அஃது துயரத்  தோன்றக் கூறுவது எனவும் கிலேசம், கேடு, நோய், மிடி, வருத்தம், பயன்படாதொழிவது, பலவீனம், மாயை, வறுமை, துக்கமாய் முடிவது, கவலை எனவும் பொருள் விளக்கம் கூறும்.” (ப.156.) பிங்கலர் “அழுகையைப் பற்றிக் குறிப்பிடுமிடத்துள் கலக்கம், உரோதனம், கலுழ்ச்சி, அரற்றல், இரங்கல், விம்மல், பொருமல், ஏங்கல், இராவனம் ஆகியவற்றை அழுகையின் கூறுகளாகக் கொள்வர். நோய்க்குரிய பல சொற்களில் அவலத்தையும் ஒன்றெனச் சுட்டுகிறது.” (ப.394) “சதுரகராதியில் அவலம் என்ற சொல்லிற்கு, “நோய், வருத்தம்” என்ற பொருள் அமைகிறது.” (ப.13) 

    அகநானூற்றில் அழுகை

    இளிவு

    இளிவு என்பது ‘தாழ்நிலை’. அதாவது, பிறரால் இகழப்பட்டு எளியராகும் தன்மை என்பர். இதனை, “வென்றிகொள் வீரர் ஆர்ப்பினும் பெரிதே”(அகம். 36(23)) எனும் அகநானூற்று பாடலில் தலைவன் பரத்தையர் சேரியில் தங்கியிருந்து ஒருநாள் மீண்டு இல்லம் வந்தான். அப்போது தலைவி அவனிடம் ஊடல் கொண்டு, தன் வெற்றிப்புகழ் எங்கும் பரவுமாறு  பகைவர் படைகளைக் கொன்று களவேள்வி செய்த காலத்துச் செழியன் வெற்றிவீரர்கள் எழுப்பிய ஆரவாரத்தினைக் காட்டிலும், உன் பரத்தைமை பற்றி ஊரார் பேசும் அல் பெரியதாக இருந்தது என தலைவனை இகழ்கிறாள். இதனால் தலைவனின் ‘தாழ்நிலை’ புலப்படுகின்றது. இதன்வழி இளிவு எனும் மெய்ப்பாடு வெளிப்படுகின்றது.  மேலும், 71(13-15), 73(5-8), 146(13), 340, 189(14-15) ஆகிய வரிகள் இளிவு குறித்த அழுகை மெய்ப்பாடு அமைய பெற்றுள்ளன.

    இழவு

    இழவு என்பது ‘இழத்தல். அதாவது தாய், தந்தை முதலாய சுற்றத்தாரையும், இன்பம் விளைவிக்கும் நுகர்ச்சி முதலியவற்றையும் இழத்தல். இதனை,

    மாண்நலம் நுகரும் துணை யுடையோர்க்கே”(அகம். 37 (18)) எனும் அகநானூற்று பாடல், தலைவன் வினைவயின் பிரிந்தான்; சென்றவன் குறித்த பருவத்தில் திரும்ப வரவில்லை. ஆதலால், தலைவி பிரிவாற்றாது வருத்தமுற்றாள்; அதனைக் கண்ட தோழி தலைவன் வருமளவும் ஆற்றியிருத்தலே நன்று என்று வற்புறுத்திய பொழுது தலைவி தன் நெஞ்சிற்கு,  அழகிய இந்த இளவேனில் காலம் மாண்புடைய பெண்மை நலத்தினைத் துய்க்கும் துணையைப் பிரியாதோர்க்கே உரியது; அது கழிந்ததே! நம்முடைய தலைவன் நம்மை மறந்து அங்கே தங்கியிருப்பவர் அல்லர்; ஆயினும், அதனால் நாம் பெற்றது என்ன? இப்பருவத்தில் பிரிந்து வாழ்பவர் ஆற்றியிருத்தல் கூடுமோ? எனக் கூறுகின்றாள். இதில் பருவத்தை (நுகர்ச்சியை) இழந்ததை நினைத்து தலைவி அழுவதினால் இஃது இழவின் பாற்பட்டது. மேலும், 19(9-19), 176(21-26), 73(16 -17), 120 (8-9), 192(12-13), 208(14-16), 338(6-10) ஆகிய பாடல் அடிகள் இழவு குறித்த அழுகைமெய்ப்பாடு அமைய பெற்றுள்ளன. 

    அசைவு

    அசைவு என்பது ‘தன்நிலை தாழ்தல்’. அதாவது, முந்தைய நல்ல நிலைமையிலிருந்து வேறுபட்டு வருந்துதல் அசைவு. இதனை,

    “……………..  ……….. என் உயிர்
    விலங்கு வெங் கடு வளி எடுப்பத்
    துளங்கு மரப் புள்ளின் துறக்கும் பொழுதே?” (அகம். 71(15 -18)) எனும் அகநானூற்று பாடல் தலைவன் பொருள்தேடிப் பிரிந்து சென்றுள்ளான். பிரிவாற்றாது தலைவி வருந்தினாள்; தலைவியை ஆற்றுவிக்கும் தோழி ‘ நீ இவ்வாறு ஆற்றாது வருந்தினால் ஆற்றுவித்தற்கரிய யான் என் கடமையை ஆற்ற இயலாது போகும்; நீ உயிர்விடும் முன்னர் என் உயிர் தானே என் உடம்பை விட்டுப் பிரிந்து போதற்குரிய காலம் வந்து விட்டது என்றே கருதுகிறேன்’ எனத் தோழி தலைவியை நோக்கிக் கூறுகின்றாள். இதில் தன்நிலையான ஆற்றுவித்தல் என்பதிலிருந்து தாழ்ந்து தலைவியின் ஆற்றாமையைக் கருதி தன் உயிரும் போகும் காலம் வந்துவிட்டது என தோழி கூறுவதில் ‘அசைவு’ எனும் மெய்ப்பாடு வெளிப்படுகின்றது. மேலும், 32(11-12), 69(12-20), ,95(3-5), 175(18), 233(1-2), 299 ஆகிய வரிகள் அசைவு குறித்த அழுகைமெய்ப்பாடு அமைய பெற்றுள்ளன. 

    வறுமை

    வறுமை என்பது ‘போகம் துய்க்கப் பெறாமை’. அதாவது இயலாமை. இதனை,
    மென்தோள் பெறநசைஇச் சென்ற என் நெஞ்சே” (அகம்.9(26)) எனும் அகநானூற்று பாடல் வினைமேற் சென்ற தலைவன் வினை முடித்து மீண்டு வரும்போது, விரைந்துச் செல்லும் தேரினை மேலும் விரைவு படுத்துவதற்காகத் ‘தன் நெஞ்சம் தனக்கு முன்பே தன் தலைவிபாற் சென்று விட்டது’ என்று தேர்ப்பாகனிடம், நாணொடு செறிந்த கற்பினையும் ஒளி பொருந்திய நெற்றியினையும் அழகிய இனிய சொல்லினையும் இளமையையும் உடையாளது மெல்லிய தோளை அடைவதற்கு விரும்பி விரைந்து சென்றது என்று கூறுகின்றான். இதிலிருந்து தலைவியைக் காண இயலாத இயலாமையில் தலைவன் இருக்கின்றான் என்பது புலப்படுகின்றது. இதில் வறுமை (தலைவியை அடைய இயலாத நிலை) எனும் மெய்ப்பாடு வந்துள்ளது. மேலும், 19(9-19), 28(14), 123(7), 161(9-14), 164(9), 200(1-3), 337(12) ஆகிய வரிகள் வறுமை குறித்த அழுகைமெய்ப்பாடு அமைய பெற்றுள்ளன. 

    முடிவுரை

    மெய்ப்பாடு என்பது செய்யுள் உறுப்புக்களில் ஒன்று. உள்ளத்து நிகழ்ச்சி புறத்தே வெளிப்படுதல் மெய்ப்பாடு. மெய்ப்பாட்டியல் என்பது உளவியலோடு தொடர்புடையது. மெய்ப்பாடே உலக மக்களின் முதல்மொழி. தொல்காப்பியம் பொதுவான மெய்ப்பாடுகள் எனச் சுட்டிய நகை முதலான எட்டையும் முதலில்வைத்துப் பிறகு அவை தோன்றும் களங்கள் குறித்துப் பேசுகிறது. எட்டு மெய்ப்பாடுகள் ஒவ்வொன்றிற்கும் நான்கு நான்கு உணர்ச்சிகளைக் குறிப்பிடுகின்றார் தொல்காப்பியர்.  நானான்கு எனத் தொல்காப்பியனார் கூறுவது, ஒவ்வொரு மெய்ப்பாடும் நான்கு நான்கு உணர்ச்சிகளால் தோன்றும் என்பதையே; இது முப்பத்து இரண்டாய் விரிகின்றது. மனித மனத்தின் ஆழமான, நீங்காத உணர்வு அழுகை ஆகும். அழுகை பிறர் தன்னை எளியன் ஆக்குதலாற் பிறப்பது. உயிரானும், பொருளானும் இழத்தல், தளர்ச்சி, தன்னிலையிற் தாழ்தல், நல்குரவு ஆகியவற்றால் அழுகை எனும் மெய்ப்பாடு தோன்றுகின்றது.

    *****

    கட்டுரையாசிரியர்
    தமிழ்த்துறைத்தலைவர்
    DLR கலை மற்றும் அறிவியல் கல்லூரி
    விளாப்பாக்கம்

     

    Share