Tag: மணி ராமலிங்கம்

  • சூரியன் வந்து வாவென்ற போது

    மணி ராமலிங்கம்

    எப்படி அந்த வரி வந்து விழுந்தது என்று தெரியவில்லை. விழுந்த அந்தக் கணமே தளை அறுந்த மகிழ்ச்சி. பிரசவ சந்தோசம். ஓவ்வொரு வரியும் பிரசவம்தான்.

    ஓரிருமுறை தனது வரியை உச்சி  மோர்ந்துவிட்டு, தனது சர்வீஸ் டீமுக்கு அதை தாரை வார்த்துக்கொடுத்துவிட்டு, அப்போது அலுவலகம் விடுத்து இல்லம் ஏகுவான்.

    வீட்டில் வளர்ந்து திளைத்து கிடக்கும் சூயஸ்(நாய் பெயர்) தான் அன்றைக்கு அவனின் துணை. அதற்கு தீனி போட்டு இறுக்கி கட்டிக்கொண்டு படுத்து தூங்க முயற்சிப்பான்.

    ஆனால் அவனுக்கு தெரியும், இன்றைக்கு கிடைத்தது பெரிய வெற்றி. அதற்காக மூளை உழைத்த உழைப்பு கொஞ்ச நஞ்சமல்ல. இப்போதைக்கு தூக்கத்திற்கு சூயஸ் மட்டும் போதாது.

    யாருக்கு போன் செய்யலாம் என்று, நினைத்துக்கொண்டிருக்கும் போதே, தர்த்தி போன் செய்தாள். தர்த்தி – சர்வீஸ் டீம் ஹெட். ரவியின் விளம்பர வரிகளை வாடிக்கையாளர் தலையில் தேய்த்து, சரியென்று சம்மதிக்க வைக்க வேண்டும். [Client Approval]

    போனை கிளிக்க,

    “ என்ன பாஸ்.. வரவா.. ? “ தர்த்தி. குரல் குழைந்தது.

    “ஹீம். யா.. “  வயிற்றுக் கீழே பட்டாம்பூச்சி.

    சின்ன மெளனத்திற்கு பிறகு  சொன்னான் “ யா.. தேங்க்யூ.. செல்லம்.. “

    *

    குளித்து முடிந்து, குடித்த  விஸ்கி சூடாக்கிய மெல்லிய  சூடு – ஏசியின் காற்று காமக்கனலை ஊதிப் பெருக்க முனைந்தது. பட்டணத்தாரின் கோமணம் போல ஜாக்கி அணிந்திருந்தான் ரவி.

    தர்த்தி பேசிக்கொண்டேயிருந்தாள். பேச்சு. பேச்சு. அவள் அப்படித்தான். அலை அலையாய் வார்த்தைகள். அதன் ருசி கூட்டும் வியாஞ்ஞானமாய் உடல் மொழிகள்.

    பேசியபடியே ரவியின் கையை தனது இடது மார்பில் வைத்துக்கொள்ள செய்தாள். அவளுக்கு அது பிடிக்கும்.

    ” யூ நோ ரவி.. நான் அந்த லாஸ்டு ஸ்லைடை பிரசண்டு பண்ணினப்போ .. போர்டு ரூமில் எல்லோரும் க்ளீன் போல்டு.. சேர்மேன். எழுந்து நின்றுவிட்டார்… வெரி எக்சைட்டிங்..”

    ரவிக்கு தர்த்தியின் சந்தோசம் பிடித்திருந்தது. தனது தொழிலின் பிடித்த கணங்கள். வெற்றியை சக அலைவரிசை தோழியோடு பகிர்ந்து கொள்ளுதல்.

    “ கிரிக்கெட் பற்றி இப்படி ஒரு லைன், நியூ அவுட்லுக் வந்ததேயில்லைன்னு.. கஸ்டமர் ஷாக் ஆயிட்டாங்க.. அவங்களோடு புராடாக்டுக்கும் அது அப்படியே ஜிங்க் ஆயிருத்து.. எல்லா மீடியா கவரேஜிம் நமக்குத்தான். ”

    தர்த்தியும் ரொம்பவே எக்சைட்டிங்காக இருந்தாள். குதூகலிக்கும்  குழந்தை. இதயம் நடுவில்  மலரும் அன்பு. உடம்பு மலர்த்தும் காம வாசனை.

    மார்பைச் சுற்றி மெல்லிய வளையமிட்டான். அவனித்து எழுந்த தடமுலைகள் இல்லைதான். ஆயினும் எந்த சிந்தனையுமின்றி சந்தோசமாய் அவன் வட்டமிட்டுக்கொண்டிருந்தான். ரவிக்கு அந்தக் கணம் நிறைவாய் இருந்தது.

    ” எப்படி ரவி.. உனக்குன்னு ஐடியா எப்படி இவ்வளவு சூப்பரா வருது.. “ தலைக்குள் கைவிட்டு அழுத்தி முடி இழுத்தாள். கொஞ்ச முன் குடித்திருந்த விஸ்கியால் பறந்து கொண்டிருந்த ரவியின் தலைக்கு வலி சுகம் கொடுத்தது.

    “ It is not game, it is one more religion “ – தான் எழுதிய அந்த விளம்பர வரியை இன்னொரு முறை உதட்டிற்குள் சொல்லிக்கொண்டான்.

    மிகப்பெரிய சந்தோசங்கள் பொங்கும் போது, நுரை பொங்க கிடைக்கும் மைசூர் கபேயின் அடியில் கசக்கும் டிகாசன் போல கல்யாணமாகாத குறை. அப்போது தான் அந்த கவலைக் குமிழ் உடைந்து ரொம்ப நாளாய் உள்ளிருந்து அரிக்கும் கல்யாணக் கவலை.

    அம்மா சொல்லி சொல்லி பார்த்து, அலுத்து தன் கல்யாணம் பார்க்காமல் செத்தும் போய்விட்டாள். தன் சம்பாத்தியத்தில் பத்தில் ஒரு பங்கு இல்லாவிட்டாலும், தனது தமையன்கள் சென்னையில் ஒண்டிக் குடுத்தினத்தில் இரண்டு குழந்தைகளோடு.

    தான் மட்டும் தனிமரமாய்.

    ஏன் கல்யாணம் ஆகவில்லை, செய்து கொள்ளவில்லை என்று யோசிப்பதை  தவிர்த்தான்.  அந்த எண்ணப்பயணம் எங்கேயும் நிற்பதில்லை. தனது படைப்புகள் கொடுக்கிற ஒருசில மணித்துளிகளின் இன்பத்தை தவிர வேறு எதுவுமே தன்னை பெரிதாய் பாதிப்பதில்லை என்பதை நினைவில் முட்டியது.

    தர்த்தியை இன்று பார்க்க, வித்தியாசமாய் ஒளிர்ந்தாள்.

    தர்த்தி.. எத்தனை உதவியாய் இருக்கிறாள். தான் செய்த எல்லா புராஸக்டுகளிலும் இவள் துணையில்லாமல் செய்திருக்க முடியாது. உடுக்கை இழந்த போதும், இழக்காத போதும் இவள் பலமுறை இடுக்கண் களைந்திருக்கிறாள். இவளின் உதவி திருப்பி கொடுத்து ஈடு செய்ய முடியாதது. அவளின் துணை மகிழ்ச்சி தருவது. அந்த மகிழ்ச்சி வெறும் உடல் சம்பந்தப்பட்டது மட்டுமல்ல என்று இருவருக்கும் தெரியும்.

    இவளுக்கு ஏதாவது செய்ய  வேண்டும்.. அவளை இன்னும் புரிந்து கொண்டு,  அவள் என்ன கேட்டாலும் கொடுத்துவிட வேண்டும். ஹீம்.. ஏதாவது செய்ய வேண்டும். என்ன செய்யலாம் ?

    *

    அறையிலிருந்து வெளியே வந்து  சோம்பல் முறித்தாள். முறிந்தது.

    பாந்திராவின் டிசம்பர் மாதக் கடல் குளிர் காற்று. சில்லிட்ட பால்கனி. இருட்டான பால்கனி. அலைச் சத்தம். கண்ணாடிக்  கதவின் வழியே பார்க்க ரவியின்  ஆழ் தூக்கம்.

    ரவி ரிஸி போல நிச்சலமாய் தூங்கிக்கொண்டிருக்கிறான். இந்த உறவில் ஏதோ ஒரு தேவதை தன்மை கூடுவதுபோல உணர்ந்தாள்.

    சில்லிட்ட பால்கனி சேரில் உட்கார்ந்து காலை கம்பியின் மேல் அகட்டி வைத்துக் கொண்டாள்.

    இளகிய இருட்டு. மணி மூணு, மூணரை இருக்கலாம். இன்னும்  கொஞ்ச நேரத்தில் வெளுக்கும் வானம். எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத காலைச் சூரியனின்  ஆரம்ப கணங்கள். சிறிய வயதிலிருந்தே பிடித்திருக்கும் சூரியப் பயித்தியம். எழும், எரிக்கும், விழும் சூரியனோடான காதல் யுக யுகமாய்.

    ஏதோ கொஞ்ச நாளாய் ரொம்ப  ரொம்ப ரொம்ப ரொம்ப .. மகிழ்ச்சியாய். உள்ளுக்குள், வயிற்றுக்கு மேலே நெஞ்சுக்கு கீழே ஏதோ புள்ளியில் ஏராளமாய் பொங்கும் ஆற்றல். அலை அலையாய் சந்தோசம். எதனால் ?.

    அலுவலக வெற்றியா ?, ரவியினால் உடல் மலர்தலா ? நோ வே. (No way) . அது மட்டுமேயிருக்க முடியாது.

    அலுவலக வெற்றி ஒன்றும்  புதிதல்ல.

    ஆறுமாதத்திற்கு முன்பும் இதே போல இன்ஸீரன்ஸ் நிறுவனத்திற்கான  விளம்பரத்தில் பெரிய வியாபார  வெற்றி.  பெருத்த போராட்டங்களுக்கு இடையே கிடைத்த வெற்றி. அன்றைக்கும் இதே போல தானே அழைத்து, தானே கொடுத்து. இடைவிடாத பேச்சு. உடல், அன்பு பரிமாற்றம்.

    உடல் மலர்தலும் புதிதல்ல. ரவிக்கும் முன்னும் உடல் மலர்ந்திருக்கிறது.

    ஆனால், இப்போது சில காலங்களாய் உடலிலிருந்து எழும் பெரு மகிழ்ச்சி அலை அசாதரணமானது. பொங்கி வழிகிற கருணை. தொடர்ந்து ஊறி பல்கி பெருகி நீரூற்றாய் உடைகிற ஆற்றலை, அந்த புள்ளியை அமைதியாய் பார்த்துக்கொண்டிருந்தாள்.

    அந்த ஆற்றலின் புள்ளி அவளை உடலின் ஆதி மலரலுக்கு கொண்டு சென்றது.

    *

    ”  நான் போகட்டுமா.. ”  கை கூப்பியபடி தனக்கு பிடித்தமான அவன் நின்று கொண்டிருக்கிறான்.  சரியான உயரம், மெல்லியதான வெப்பம், கொஞ்சமான காவிக் கலர் உடை. காற்றில்லாத போதும் பறக்கும் மயிர் கற்றைகள்.

    மந்திரம் உண்மையில் பலித்து  விட்டதா.. விளையாட்டு வினையாகி விட்டதா. ரிஸி உள்ளே தூங்கிக்கொண்டிருந்தார்.

    அவனைப் பார்க்க, பார்க்க பொங்கி வழிகிற ஆர்வம். வழுக்கி விழுகிற இதயம். இவனா ஒளி கொடுப்பவன். உலகமே தூயில் எழுந்தவுடன் துதிக்கப்படுபவன். இவனா என் உள்ளம் கவர்ந்தவன்.

    பிடுங்கித் தின்கிற வெட்கம்  மறைந்து அவனை பார்க்க, உடம்பு மலர பிரயத்தனப்பட்டது. முட்டிக்கொண்டு நின்றன மொட்டுக்களின் முனைகள். மண்ணாலான உடலின் உறுப்புகள் , சுரப்பிகள் வேகமாய் இயங்க  தயாராகின.

    மந்திரப்படி அவ்னோடு சேரவேண்டும். சேர்ந்தால், என்னை உதறும் –  கட்டுகள் நிறைந்த உலகம். என் கர்ப்ப பையை கட்டுப்படுத்தும் ராஜாங்கம், நீதி பரிபாலனம். மண்ணாங்கட்டி.

    தடுத்தது – மனத்திலிருந்து பயக்குமிழி. அதற்குள்ளே சமூகம், ராஜ குலம், கட்டுமானம், திருமணம், நற்பெயர், பெண், கொஞ்சம் உயரத்தில் ஆண், கர்ப்பம், தகப்பன், தாய் எல்லாம் கலந்து கட்டி. காற்றில் மெல்ல பறந்து, கலைந்து வெடிக்க, பயம் தன் மீது ஈரமாய் ஒட்டியது.

    அவன் விழி நோக்கின் பயம் தாண்டத் தூண்டும் மனம். உதவியாய் ம்லரும் உடல். இவன் என் தேர்வல்லவா.. என் தேவனல்லவா. நான் விரும்பிய பிரம்ம புருஸனல்லவா..

    மந்திரம் சொல்லியபின்  கூடாமல் போனால், அவன் உடம்பில் பாதி எரிந்துவிடுமாம். நீங்கள் தவறாக அழைத்துவீட்டீர்கள் போல, பரவாயில்லை. மந்திர சாபத்தை உங்களுக்காக நான் ஏற்றுக் கொள்கிறேன். விரும்பிய போது மறுபடி வருகிறேன் என்று கை கூப்பியப்டி சொல்கிறான்.

    அந்த பணிவை ரசித்து  உடம்பில் சுரப்பிகளின் தாளம். மொட்டுகளின் முனை முறிந்து பெண்மை ததும்பல்.

    “ வேண்டாம்.. இரும்.. “ என்றாள்  கம்பீரமாய்.

    அவன் புரிந்து கொண்டான். மெல்லிய நிலவொளியில் அவனின் கையைப்பிடித்து தோட்டத்திற்கு இட்டுச் சென்றாள்.

    அவளுள் சுருண்டிருந்த பாம்புகள் சடக்கென உள்ளே தீ விழித்து  தலை நோக்கி பாய்ந்தன. பெரு மகிழ்ச்சி அலை. வயிற்றுக்கு மேலே நெஞ்சுக்கு கீழே ஒரு புள்ளியிலிருந்து நீரூற்றாய் எழுகிற ஆனந்தம். ஆதி மலரல்.

    அவன் அவளை மானசீகமாய் நமஸ்கரித்து  பக்கம் நெருங்கினான்.

    *

    சுற்று முற்றும் வானம், இருட்டு. தூரத்தில் அலைச்சத்தம். அவள் பிரஞ்ஞை முழுவதும் வெற்று வெளி.  தனது கால்களை திறந்து வானம் நோக்கி வைத்துக் கொண்டாள்.

    இருட்டு கரைந்து, மெல்லிய  நீலமாகி பின் அவன் ரதத்தோடு வரும் பாதையை யாரும் பார்க்குமுன் தான் பார்த்து நிற்பது.  இந்த வானம் அவளுக்கு பழக்கமான பிடித்த ஓன்று.

    அறைக்குள் பார்க்க, ரவி  இன்னும் தூங்கிக் கொண்டிருக்கிறான். நிசப்தம்.

    தர்த்தி கண்களை மூடிக்கொண்டே யோசிக்க ஆரம்பித்தாள். சில நாட்களாய் சிதைந்த கனவுகள், சில பிம்பங்கள். வேலை அசதியால் இருக்கும் என்று விட்டு விட்டாள். வயிற்றிலிருந்து வருகிற துடிப்பு அல்சரா, இல்லை பிரியட் பிரச்சனையா என்று சந்தேகம். இரண்டும் இல்லை என்று முடிவான பின்பு அதை உற்று நோக்க ஆரம்பித்தாள்.

    உடலும், மனதும் எதற்கோ தான் தயாராகப் போவதை சமிஞ்ஞையிடுவதாக ஒரு எண்ணம் எழுந்தது.

    இப்படியெல்லாம் தான் யோசிப்பதே அவளுக்கு ஆச்சரியம் கலந்த பயம் கொடுத்த்து. வேலை, ஊர் சுற்றல், அடுத்த பதவி, அடுத்த வாடிக்கையாளர், புலன்களால் புது புதிதாய் புலரும் மகிழ்ச்சி என ஓடிக்கொண்டிருக்கும் தான் இப்படி தான் இப்படி யோசிப்பது கொஞ்சநாளில் சரியாகிவிடும் என்று நினைத்துக் கொண்டிருக்கும் போதே, கனவுகள், வேறு சில சமிஞ்ஞைகள் என்று தான் எங்கோ இழுத்துப் போகப்படுவதாய் நினைத்தாள். நினைவுகளை கலைத்தாள்.

    முயக்கம் முடிந்து இலேசான உடம்பு. அகட்டி வைத்துக்கொண்டிருந்த காலின் வழியே நுழைந்து எல்லாயிடமும் குளிர்படுத்தும் காற்று. வயிற்றிலிருந்து மறுபடி பொங்கிச் சீறிடும் ஆற்றல். கண் மூடி அதையே நோக்கிக் கொண்டிருந்தாள்.

    மெல்லியதான கூச்சம் தொடையில். சின்னதாய் நடுக்கம். ஆதிகால கன்னிமையை யாரோ வருட வரப்போவது போல.. நன்றாகவும், கிளர்ச்சியாகவும் இருந்தது. நிறைய யுகங்களுக்கு முன்னான உணர்ச்சியின் எச்சமாய் அது இருந்தது.  தோட்டத்தில் படுத்திருந்தது போல உணர்வு.

    வயிற்றை தானே தடவிக் கொண்டாள். மேடிட்டு மெல்லிய குற்றவுணர்வை அளிக்கு வயிறு இன்று அப்படியில்லாததை உணர்ந்தாள். சூட்டினால் உடல் ஈரம் துப்பியது. அது இன்னும் சூட்டை கொடுத்தது. தயாராகும் உடல்.

    கிளர்ச்சியா.. இது. ஆனால், இன்னொரு புலனால் எழுகிற கிளர்ச்சி அல்ல. இன்று மலர்கிற கிளர்ச்சி, இதுவரை அறியாத புனிதமான உடல் கிளர்ச்சி.

    சேரில் சாய்ந்து மார்பை, உடையை தளர்த்திக் கொண்டாள். கண்களை மூடிக் கொண்டாள். இளம் வெயில் தனது உடம்பில் சகல பாகங்களிலும் பரவுவதாய் உணர்ந்தாள்.

    திடீரென்று, பிரஞ்ஞையின்  அடியாழத்திலிருந்து தான் அறியாத மொழியிலிருந்து சில  வார்த்தைகள். சூர்யம்.. ப்ரமண்யம்  பகு புத்தார.. தனக்கே புரியாத  வார்த்தைகள். அதுவாக உள்ளிருந்து  எழுந்து, ஆகுதியாய் வளர்ந்து, ஆகுதியில் விழுந்து. அதை  மூன்றாமவள் போல தர்த்தி  பார்த்துக்கொண்டேயிருந்தாள்.

    இறுக்கமான உடலில் ஏதோ விசை அழுத்த சுருண்ட தூங்கிக் கொண்டிருந்த பாம்பு மறுபடி எழுந்தது. வாயை திறந்து உணவுக்காக உள்ளே காத்திருக்கத் தொடங்கியது.

    அப்போது தான் அவன் பறந்து வந்து பால்கனிக்குள் ரதத்தில் இறங்கினான். காற்றில்லாத போதும் அலையும் முடிக்கற்றைகள். நமஸ்கரித்து பக்கம் நெருங்கினான்.

    இளஞ் சூடு. இத்தனை காலம், தேங்கியிருந்த யோனியின் யுகக் கசடுகளை நொடியில் சுத்தம் செய்தான்.

    யுக யுகமாய் சூரியனுக்காக காத்திருந்த அந்த யோனியின் இதழ் விரித்து அவளின் கருப்பைக்குள் தன்னிலிருந்து வழித்து எடுத்த சூரிய ஓளி கோப்பையை முழுமையாய், இளம் சூடாய் கவிழ்த்தினான்.  அது அவளின் அகத்தை ஆகர்சித்தது.

    இதற்குத்தானா இவ்வளவும் ?

    *

    உறுதியாய் சொல்லிக் கொண்டாள்.

    அப்போதும் நீயே நான் தேர்ந்தெடுத்த மகன். மண் தேர்ந்தெடுத்த விதை.  நான் விரும்பி, நானே முடிவெடுத்து, என் ஆதி மலரலில் மலர்ந்தவன் நீ. என் முதல் மரம் நீ.

    மற்றவைகளெல்லாம் என் மீது வீசப்பட்டவை தானே. நாட்டுக்காக, போருக்காக என்ற ஏதோ பெயரில்  நான் கட்டாயமாக சுமக்க வைக்கப்பட்டவை.

    இந்த பிறப்பில் நீயும், நானும் நமக்காக மட்டும்.

    எனக்கு – நானாகவே, நான் விரும்பியபடி தாய்மை அடைந்து,  முழுவதுமாய் தாய்மையின் வளர்ச்சியின் ருசி அறிந்து, புழுங்காமல், யாருக்காவுமின்றி எனக்கான கட்டற்ற வாழ்க்கை வேண்டும். பழைய கணக்கின் பள்ளங்களை நிரப்பும் ஆசைகள். கர்மாக்கள்.

    உனக்கு – பிறப்பின் மூலம் தெரிந்து ஒரு முழுமையான வாழ்க்கை வேண்டும். ஒளிவட்டமின்றி, புகழ் புழுக்கமின்றி மெல்லியதாய் தாய் நதியின் பக்கத்திலே ஒடும் ஒரு கிளை நதிபோல.

    வாழ்நாள் முழுவதும் நீ தேடுக்க்கொண்டிருந்தது  உன் முழுமையடையா பெண்மையின் இடப்பாகத்தை தானே.  ஆணின் பெண்மை தேடலின் முதலும், முடிவும் தாயில் தானே புதைந்திருக்கிறது. ஆகவே உனக்கான வாழ்க்கை, தாயோடு மட்டும் தனியாய், தனியனாய். எல்லாமே தாயாய்.

    அள்ளி அள்ளி கொடுத்த நீ அழுது அழுது கேட்ட போதும் கிடைத்தது கொஞ்ச நேர  மடிதானே. அம்பின் வலியோடும், அவமானமாய் பார்க்கிற கண்களை தவிர்த்தும் என் மார்போடிருந்த  ஒரு சில மணித்துகள்களில்  எப்படி முழு வாழ்நாளின் வலியை  கரைப்பது.

    இந்த தடவை இவற்றை கழித்து  விடுவோம். இதிகாசத்தின் கோடிட்டு காலியான இடத்தை நிரப்புவதுதான் இந்த  வாழ்க்கையின் குறிக்கோளோ என்னமோ ?

    ரத்த சீழ் வடிந்த அந்த போர்களத்தில் என் மார்பில் நீ மடிந்த போது உடம்பின் ஆசைகள் உதிர்ந்த ஆன்மாவின் அலறலில்  நாம் வார்த்தைகளின்றி நாம் பேசிக்கொண்டதல்லவா இது.

    கேட்ட்து நீ, நான் மற்றும்  கீழ் வானத்தில் மறைந்து  கொண்டிருந்த உன் அப்பா.

    *

    நன்றாக வெளுத்த விட்ட  வானம். எல்லாம் உணர்ந்து கொண்ட தெளிவான மனம். வயிற்றின் கனம். தானே உணர்ந்து கொண்ட காலச்சக்கரம்.

    What is next, how to execute – யோசித்தாள் தர்த்தி.

    அப்பா பெயரில்லாமல் அவதிப்படாதிருக்க ஒரு பெயர். ரவி. நல்ல பெயர்  தான். ஒரு தொந்திரவு செய்யாத  பெயர் வேண்டும். பொருத்தமாகவும் இருப்பதால் ஒரு சிரிப்பும் வந்தது.

    தூங்கி எழுந்த ரவியைப்  பார்த்து நாம் கல்யாணம் செய்து கொள்ளலாமா என்று கேட்க நினைத்த தர்த்தி,

    “ என் குழந்தைக்கு அப்பாவாகயிருப்பாயா.. “ என்று கேட்டாள்.

    ரவி ஆதுரமாய் அவள் கை கோர்த்துக் கொண்டான்.

    Share
  • மனம் அகண்டம்

    மணி ராமலிங்கம்

    ஏர்போர்டிலிருந்து வரும்போதே  ராஜேஸீக்கு கிறக்கமாகத்தானிருந்தது. கூல் கேப்  (Cool cab) குளிர்காற்று தாண்டி வயிற்றிகுள் இலேசாய் மெல்லிய சூடு பரவிற்று.

    ’காரில் ஏறிவிட்டேன்.. உன் மீது தான் ஏறவேண்டும்..’ – சின்ன குறுஞ்செய்தி அனுப்பினான்.

    ’குதிரை காத்திருக்கிறது. J_ ’ பதில் செய்தி வந்த்து.

    ’ஓட்டி வந்து கொண்டேயிருக்கிறான். ‘ – அடுத்த செய்தி அனுப்பினான். கொஞ்ச நேரம் பதிலேயில்லை.

    ’இன்றைக்கு நீயும் குதிரை ஓட்ட வேண்டும் ..நீ முதலில்.. ‘  இன்னொரு செய்தியும் அனுப்பினான்.

    ‘ ம்ம்.. “ பதில் வந்தது.

    மெல்லிய உணர்வலை தலை உச்சியிலிருந்து  கால் நுனிவரை பாய்ந்து பரவியது. வயிற்றிக்கீழே மெல்ல இளகியிருந்தது. காது மடல்கள் சூடாவது தெரிந்தது.

    தனது அலைபேசியில் தனது மனைவியின் புகைப்படங்களை  பார்வையிட்டான். மற்ற தோழிகளின் படங்கள் புதைந்திருந்த கோப்புகளை அவசர அவசரமாய் தாவிச் சென்றான். ஆன்மீக படங்கள் என்று அதற்கு பெயரிட்டிருந்தான்.

    மனதிற்குள் தனக்கு பிடித்த  மனையாளின் இடுப்பு வளைவு, மேல் தொடை, தொண்டை மச்சம் வந்து போனது. கால்களை இறுக்கிக் கொண்டான். கவனத்தை திசை திருப்பினான். சில்லிட்டு இறுகும் முனைகளை அது தளர்த்தியது. வேக வேகமாய் மூச்சை விட்டுக்கொண்டான்.

    காரோட்டியிடம் பேச ஆரம்பித்தான். ‘ மழை பற்றி, ட்ராபிக் பற்றி, அவனைப் பற்றி என ஏதாவ்து  பேச ஆரம்பித்தான். கவனம் திருப்பினான். வண்டி சாந்தகுரூஸ் ஹைவேஸில் வேகமெடுக்க உடம்பு மெல்ல நிதானித்தது. இடுப்புக் கீழான இறுக்கம் தளர்ந்து, மெல்லிதான உணர்வு. கால் மூட்டிகளில் லேசாய் கணம் உணர்ந்தான்.

    மனம் முயக்கத்திற்கு முன்னான நெகிழ் கணத்தை நோக்கி பயணித்தது. என்ன சொல்வது, எப்படி பேசுவது, ஆரம்ப ஒத்திகைகள் எப்படி செய்வது என யோசிக்க ஆரம்பித்தான். தான் உச்சியடையாமல் அவளை உச்சிக்கு நகர்த்த வேண்டும் என்று இந்த முறையும் அதீத உந்துதல் கொண்டான்.

    இறந்த காலத்தின் முயக்க முன் கணங்கள் எல்லாம் இழுத்து  வந்து அவன் மனம், நிகழ்கால தளத்தில் கடை பரப்பியது. இறந்த காலத்தை கலைத்தான்.

    ப்ளைட் இறங்கி பேசியாயிற்று. இன்னும் வீடு சேர ஒரு மணி நேரமாகும். இந்த காத்திருத்தலை கனிவாக்க வேண்டும். மெல்ல அவளை இளக்க வேண்டும்.

    இது இருவருக்கும் புதிதல்ல. ஓவ்வொரு டூர் முடிந்து வரும்போதும்  இந்த குழையல், பிசையல், இளகல் நடக்கத்தான் செய்கிறது. இந்த முறை பெரிய அலுவலக வெளிநாட்டுப் பயணம். நீண்ட நாட்கள் டூர்.

    அங்கு பழைய தோழிகளை பார்த்தது, உல்லாசமாய் கழித்தது எல்லாம் ஞாபகம் வர, தனது ஐபேட்டை ஆன் செய்தான். புகைப்படங்களை வேகமாய் அலையவிட்டான். பேஸ் புக்கில் நுழைந்து, “ பேக் டூ பெவிலியன் “ என்று தனது ஸ்டேட்டஸ் (Status) குறிப்பிட்டான்.

    சாக்‌ஷீ ஏற்கனவே ஆன் லைனில் இருந்தாள். சாட்டினாள்.

    அதற்குள்ளாகவா ?

    ஆமாம் ?

    வீட்டை அடைந்துவிட்டாயா.. ?

    இல்லை.. ஏர்போர்ட்டிலிருந்து  வீட்டிற்கு.. ஆன் தவே.

    ரொம்ப நாள் கழித்து ஜனகன மணவா.. ???

    ராஜேஸ் பதில் சொல்ல  தயங்கினான். சாக்‌ஷீயிடம்  வாய் கொடுத்தால் மெல்ல சாட்டிலே சூடாக்கிவிடுவாள்.

    ரொம்ப போர் அடிக்கிற தினங்களில், வழமைகள் மனதை மந்தமாக்கும் தினங்களில், சாக்‌ஷீயிடம் பேசுவது நல்லது. மெல்லிதான அசைவ வார்த்தைகளால் சாட்டிலே சூடாக்கிவிடுவாள். ஓவ்வொரு வார்த்தையிலும்  சூசகமான நரம்பு முறுக்கும் சூடு.

    நேர் பேச்சிலும் வார்த்தையில் உடல்மொழியில் நெளியும் நளினம். மெல்லிய ஓவன் சூடு போல, இளக்கமாய் பேசி, சூரியனை உள்ளுக்குள்ளே தகிக்க வைப்பாள். ஆனாலும் எல்லை தாண்ட அநுமதிக்கமாட்டாள். நாசுக்காய் மறுத்துவிடுவாள்.

    “ மனதில் இருக்கிற சந்தோசத்தை எப்போதும் உடல் கொடுப்பதில்லை.. வேண்டாமே.. “

    வேறு எதாவது குறைகளை, வம்புகளை பேசி அதே அளவுக்கு துன்பத்திற்கு  கொண்டு சேர்த்துவிடுவாள்.

    “ இப்போது க்ரவுண்டு  எப்படியிருக்கிறது. ஸ்டெம்பு எதுவுமே இல்லையல்லவா.. கூல்யார் “ என்று இடுப்பில் குத்தும்போதுதான் தெரியும், உடல் சாதாரண நிலைக்கு வந்தடந்ததை உணர முடியும்.

    அவளது வார்த்தை விளையாட்டுகளும், அவள் இணையத்தில் கொடுக்கும் அசைவ ஜோக்குகளும், புதுப்புது ஐகான்களும் (Icon) நகைச்சுவை லிங்குகளும் புது மன்மத ரத்தம் பாய்ச்சும். அதில் அவள் நிபுணி. அதற்காக சில பிரத்யோக வகுப்புகளுக்கு போய் படிக்கவும் செய்தவள்.

    ராஜேஸீன் சாட் மெளனம் அவளுக்கு புரிந்திருக்க வேண்டும்.

    “அதீத சூடு பாலை திரித்துவிடும்..மேட்சு பார்த்தே விக்கெட் இழக்க வேண்டாம் என்று நினைக்கிறாய்.. ஆல் த பெஸ்ட்.. ஆகவே. நான் விடைபெறுகிறேன். ”

    மெல்லியதாய் சிரித்துக் கொண்டான். ’ எம காதகி.. ‘

    பவாய் ஐஐடியை வண்டி கடந்து கொண்டிருந்தது. இன்னும் அரை மணி நேரத்தில் போய்விடலாம்.

    *

    குழந்தைகள் தூஙகியாயிற்று. பெண் மட்டும் ’எப்ப அப்பா வருவார்’ என்று கேட்டுக் கொண்டேயிருந்தாள். பையன் தனது வீடியோ கேம் ஒழுங்காக வந்துவிடுமா என்று கவலைப்பட்டுக் கொண்டிருந்தான்.

    மெல்லிய லாவண்டர் பரவிய  தனது அறை அவளுக்கு மகிழ்ச்சி அளித்தது. அவனுக்கு பிடித்த தனது வெள்ளை நைட்டியை இறுக்கிக் கொண்டாள். மேல் சாலையும் போட்டுக் கொள்ள வேண்டும். அதை தளரவும், நழுவவும் விடும் தருணங்கள் ரொம்ப நுட்பமாக அமைய வேண்டும். கைகளை நெஞ்சோடு நெருக்கி, கொஞ்சம் குனிந்தும் பார்த்துக் கொண்டாள். விழுந்த பள்ளம் திருப்தியாயிருந்தது.

    கறுப்பு மணி கோர்த்த மங்கள் சூத்திரா (தாலி) இல்லாதது ஞாபகம் வந்த்து. அது முக்கியம். தனது ட்ரிஸ்ஸீங் அறையிலிருந்து தேடி எடுத்து அணிந்து கொண்டாள்.

    ராஜேஸீக்கு சில நகைகள் மகிழ்ச்சியளிக்கும். சில சமயம், கொஞ்ச நேரத்து குலவலுக்குப் பிறகு அவனே அதை கழட்ட சொல்லுவான். நகைகளால் மறைந்து இப்போது பளீரிடும் பகுதிகள் அவன் மூக்கின் வெள்ளை நுனியை சிவப்பாக்கும். விழிகள் நிலையாமையால் படபடக்கும்.

    பஞ்சாப் போய்விட்டு வந்த சில நாட்கள், கண்ணாடி வளையல் மட்டும் அணிந்து தன்னிடம் புதைந்த நாட்கள் நினைவுக்கு வந்தது.

    வளையல்கள் எதுவும் கையிலோ, அவன் முதுகிலோ குத்திவிடக் கூடாதென்ற பயம் இருந்தது.  இறுக்கிவைத்திருந்தாலும் அதை தளர்த்தி சத்தம் இடச் செய்வதில் அவனுக்கு ஒரு கிக் இருந்தது. வளையல்களை அவனே அசைத்து சில சமயம் சத்தம் எழுப்பிக்கொண்டான்.

    கல்யாணமாகி, ரொம்ப நாளுக்கு பிறகு தனது ஊரான உடுப்பிக்கு  தனது மனைவியை கூட்டிச் சென்றான். கல்யாண கலாட்டக்கள் ஏற்படுத்திய  வடு, இரு தரப்பு சண்டைகள் எல்லாம் தீர்ந்து ஓரளவு  மன மகிழ்ச்சியான குடும்ப  திருமண நிகழ்வு ஓன்றில்  ஸ்வேதாவும் இணைந்திருந்தாள். எல்லா வேலைகளையும் எடுத்து போட்டுக்கொண்டு செய்த, அவள் மீது கொஞ்சம் மரியாதையும், அன்பும் வந்தது. அந்த விதையின் நுனியில் காமமும் மலர்ந்திருந்தது.

    அந்த காலங்களில் கொஞ்ச  நாள், அவளை வெறுமனே காது தொங்காட்டான் மட்டும் அணியச் சொல்லுவான். உணர்ச்சிகரமான நேரங்களுக்கு முன்னும், பின்னும் அதையும், அதை சார்ந்த காதுப்பகுதியையும்  நிரடிக்கொண்டேயிருப்பான்.

    “ என்ன அம்மா ஞாபகமாக்கும் ‘ என்று ஸ்வேதா விளையாட்டாக  கேட்ட அன்று சடக்கென்று சுருங்கிப்போனான். அதற்குப் பிறகு அவளாக எந்த கேள்வியும் அந்த நேரத்தில் கேட்பதில்லை.

    பேசாமல் இருந்தாலும் சோர்ந்து விடுவான். பாதியில் நிறுத்தி பேசச் சொல்லுவான். பிடித்திருக்கிறதா, போதுமானதாகியிருக்கிறதா, வேறு ஏதாவது வேணுமா எனக் கேட்டுக் கொள்வான். அவனும் பேசுவான். அவன் மனநிலைக்கு ஏற்ப ஆயத்தமாகி, எந்த வார்த்தைகள் கேள்விகள் சுருதி கூட்டுகின்றன என்பதை கவனமாக யோசித்து செயல்பட வேண்டியிருக்கிறது.

    சில நேரங்களில் அவளுக்கு சிந்தனைகள், உணர்வுகள் புகை மூட்டமாகயிருக்கும். தனது நிலையை அவன் ஆர்வமின்மையோடும், மன மேய்தலோடும், திருப்தியின்மையோடும் தொடர்பு கொள்ளக் கூடாது என்பதில் அவள் அதிக கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது. அகத்தின் மொழி உடல்மொழியாய் மாறாதிருக்க பிரயத்தனம் தேவை.

    அத்தகைய கணங்களில், தேவைக்கு மேலே ஒரு கோட்டிங் லிப்ஸ்டிக் அடித்துக்கொள்கிற கல்லூரிப் பெண்ணைப் போல உணர்வாள் ஸ்வேதா.

    இன்றும் பொதுவான கேள்விகள்  மட்டுமே கேட்க வேண்டும். நிலையிழந்து விடக்கூடாது  என்று நினைத்துக் கொண்டாள். முயக்க முன்கணம், அக்கணம், பிற்கணம் எல்லாம் சரியான கலவையாய் அமைவது பிசிறு தட்டாத கச்சேரிபோல.

    படுக்கையில் மனக்குறிப்பை உடல், வாய் மொழியால் உணர்த்துவது இப்போதெல்லாம் ஸ்வேதாவுக்கு பெரும் சவாலாகயிருக்கிறது.

    ஸ்வேதா தனது வழிக்கப்பட்ட கைகளை மறுபடியும் கண்ணாடியில்  பார்த்துக்கொண்டாள். ரொம்ப பிரமாதமாய் இருப்பதாய் மகிழ்ச்சி கொண்டாள். வயிற்றை ஒரு முறை உள்ளிழுத்து பார்த்தாள். இப்படியே எப்போதும் இருந்தால் இன்னும் சந்தோசமாய் இருக்கும் என்று எண்ணிக்கொண்டாள்.

    ராஜேஸ் அவள் வயிற்றை சில  சமயம் அழுத்தி, எப்படி நல்லாயிருக்கு பாரு என்று காண்பித்ததும் உண்டு.

    எவ்வளவு ஜீம் போகியும், ஏதோ காரணங்களால் மடிப்புகள் மறைவேதேயில்லை. இந்த நேரத்தில் அதை ஏன் நினைக்க வேண்டும் என்று அந்த எண்ணத்தை துரத்தினாள்.

    சில நேரங்களில் ராஜேஸ் சொல்லுவான், ‘ வயித்து மடிப்பெல்லாம் நத்திங்யார்.  ஆனா.. நீ ஆக்டிவாயிருக்க பாத்தியா.. அது தான் சந்தோசமாயிருக்கு.. “ என்பான்.

    இன்றைக்கும் கொஞ்சம் ஆக்டிவ்வா  ஏதாவது செய்ய வேண்டும். அவன் எதிர்பார்க்காமல் செய்கிற மெல்லிய விசயங்கள் அவனை மலரச்செய்யும். ரொம்பநாள் முன் கேட்டு இன்னும் நட்த்தப்பெறாமல் இருக்கிற சில விசயங்களையும், அவனை குழந்தை போல உணரச்செய்கிற சில முத்திரைகளையும் செய்யலாம் என எண்ணிக்கொண்டாள்.

    உடம்பு சோர்வாகி, லேசாய் வியர்வை முத்துக்கள் வந்த பின்பும் அவனுக்கு பேசிக்கொண்டேயிருக்க  வேண்டும். பொதுவாய் ஸ்வேதாவிற்கு தூக்கம் பொங்கி வழியும். ஆனால் அவன் மடை திறந்த வெள்ளம் போல பேசிக்கொண்டேயிருப்பான். தனது மனத்தின் வார்த்தைகளின் கடைசி சொட்டு வழிவது வரைக்கும் பேசிக்கொண்டேயிருக்க வேண்டும்.

    ஸ்வேதா தூங்கிப் போய்விட்டாள் என்று தெரிந்தால் அவனுக்கு கோபம் கோபமாய் வரும். பேசாமல் மூஞ்சி தூக்குவான். சமைக்க சொல்லி சாப்பிடாமல் போவான். உடம்பை உடல் குருதி நனைத்த துணியைப் போல ஏளனப் பார்வை விடுவான். அடுத்த நாள் குத்தல் வார்த்தைகளால் வறுத்துவிடுவான். ஒரு சில கண்ணீர் துளிகளை பார்த்தபின்பு தான் நிற்கும். மறுபடி குழைவு, இணைவு. முடிவில் பேச்சு, பேச்சு. பேச்சு.

    தூங்காமல் இருக்க வேண்டும். அவன் பேசுவதை கேட்டுக் கொண்டேயிருக்க  வேண்டும். சின்ன சின்ன  கேள்விகளால் தன் விழிப்போடு, கேட்கிறோம் என்பதை ஸ்வேதா உறுதிப்படுத்திக் கொண்டேயிருக்க வேண்டும்.

    கேள்விகளிலும் கவனம் வேண்டும். மனதிற்குள் உட்கார்ந்து  அரித்துக் கொண்டிருக்கிற  சந்தேக, பயங்களை சுருதி மாத்தி கேள்விகளாக்கும் போது உண்மைக்  கதவுகள் சில சமயம் திறப்பது உண்டு.

    இப்படி யோசித்து, யோசித்து கேள்வி கேட்டு மருகாமல் அவளுக்கும் அமைதியாய் எண்ணங்களற்று தூங்கிப் போதல் பிடிக்கும் தான்.

    முயக்க முற்கணம், அக்கணம்  மற்றும் பிற்கணம் என்று  தனக்குள்ளும் தான் எத்தனை வானவில் மனத்தடங்கள்.

    குரோதம், அடங்காத ஆர்ப்பரித்தன்மை, வன்மம், பிரளயத்தை விழுங்கிவிடுகிற இச்சை அலை, பாறைகள் மோதி சமதளமான அமைதி, வெறுமனே சுத்த ஆகாசம், குழந்தை குதூகலிப்பை பார்த்து மகிழ்ந்து ஊட்டிவிடும் தாயுள்ளம் – என கலைடாஸ்கோப் போல மாறும் மனத்தடங்கள்.

    இப்போது சில நாட்களாய், அக்கணத்திற்குப் பின், தனக்கு பிடித்த, நட்சத்திரங்கள் கடந்து போகிற, மேக மூட்டத்தின் மீது தான் உட்கார்ந்து கொண்டிருக்க, சிந்தனைகளும், வார்த்தைகளுமற்ற ஒரு நிச்சலமான மெளன தளத்தில் வெறுமனே இருக்க அவா.

    ஆனாலும் அதை இழந்து, அதிலிருந்து குதித்து அவனைக் கவனிக்க வேண்டும். கேள்விகள் எழுப்பவேண்டும்.

    ஸ்வேதா சிந்தனை உதறினாள். மறுபடியும் காலை ட்ரெஸ்ஸீங் மேசையின் மீது வைத்து நைட்டியை உயர்த்தி குதிகால் அழகை மறுபடி ரசித்துக்கொண்டாள். தொடை, காலும் சேரும் பின்னங்கால் பகுதி ராஜேஸீக்கு ரொம்பவே பிடிக்கும்.

    ‘ ஏய், இதெல்லாம் இரண்டாவது  இன்னிங்க்ஸீக்கு வெச்சுக்கணும்னு  “ என்று  அவன் கெஞ்சியது ஞாபகம் வந்தது. சொல்லுவானே ஒழிய, ‘ரொம்ப டயர்டா இருக்குப்பா.. தூங்கு ‘ என்று சொல்லி தூங்கிப் போவான்.

    இந்த தடவை பெடி க்யூர் புதிய கடையில். நல்ல வந்திருக்கிறது. கொஞ்சம் காசு அதிகமென்றாலும் நகாசு வேலைகள் சுத்தம்.

    வெறுமனே இயந்திர தடவல்  இல்லாமல் வைசாலி ஸா தனது கரங்களால்  செய்த மஜாஸீம் ரொம்ப  சுகமாத்தானிருந்தது. சில  முக்கியமான முனைகளில் அவள் அழுத்தி தேய்த்த்து வித்தியாசமான அநுபவம் தான்.

    லாவண்டர் வாசனை கொஞ்சம்  அறையில் அதிகமானது போல  தோன்றிற்று. ஜன்னலை திறந்துவிட்டாள். ஏசியை அணைத்தாள். கொஞ்சம்  குளிர், கொஞ்சம் வாசனை. மெல்லிய ஈரப்பதம் தன்னுள், தன்மேல் இருப்பதை உணர்ந்தாள்.

    *

    காலிங்பெல் அடிக்குமுன்னரே கதவை திறந்தது.  அது எதிர்பார்த்தது தான் என்றாலும் ராஜேஸீக்கு கன்னக் குழி விழும் புன்னகையை கொடுத்தது. காரிடரில் ஏற்படுத்திய சத்தம், லிப்டின் அறிவிப்பு தனது வரவை சொல்லியிருக்கலாம். இல்லை வீடியோ டோரில் பார்த்து தெரிந்திருக்கலாம். உணர்ச்சி அலை இரத்தத்தை தலையிலிருந்து கீழ் நோக்கி பயணிக்க செய்தது.

    கண்கள் சிரித்துக்கொண்டன. மெல்லியதாய் அணைத்து வெல்கம் சொன்னாள். பிடித்த டியோடரண்ட். என்றைக்கோ சொன்னதை நினைவு வைத்து.

    ஸ்வேதா லக்கேஜை குனிந்து வாங்கிக் கொண்டாள். ஹாலில் மெல்லிய டிம் லைட் மட்டுமே போட்டிருந்தாள். வெள்ளை நைட்டியை மறுபடியும் தடவி கேட்டான்.

    “குட்டீஸ் தூங்கிடுத்தா.. “

    “ ஹீம்.ம்… சாப்பிடிரூங்களா.. “

    “குளிச்சுட்டு வந்துருவா.. “ போகாமல் அங்கயே நின்றான்.

    “டவல் எடுத்து வைச்சுருக்கேன்…”

    அவளையும் குளிக்க கூப்பிடலாமா  என்று யோசித்தான். அதிகம் காட்டிக் கூடாது என்று ஏதோ  ஒரு தத்துவம் தடுத்தது.

    “ சுமால் பெக்.. அண்ட் சம்திங்  டூ மன்ச்.. இஸ் இனப்..டியர்.. “ குளியலறைக்குள் புகுந்தான்.

    குளிக்கப் போயிருந்தால் நேரமாயிருக்கும். நுணுக்கமாய் பண்ணிய அலங்காரங்களை அவன் ரசிக்க முடியாது போய்விடும். குளியலறை எப்போதும் ராஜேஸ் சொல்வது போல இரண்டாவது  இன்னிங்கிஸ் தான்.

    கிச்சன் டேபிளில் வோட்காவை நிரப்பினாள். லெக் சிக்கனை  லேசாய் ஓவனில் சூடு பண்ணினாள். பதமான சில சைட் டிஸ்கள்.

    பாத்ரூமிலிருந்து அவன் தலை துவட்டிக்கொண்டு க்ரே நைட்டியோடு வந்தான். அவளுக்கு பிடித்த ஓன்று. ஓளிரும் கிரே.

    ஸ்வேதாவின் நண்பி ஸ்ரேயா வீட்டிற்கு ராஜேஸோடு போயிருந்த  போது அவள் ஸ்காட்லாந்து கணவனின்  இத்தாலி ஸ்டைல் துணி அறையை  நண்பிக்கு காட்டினாள். அதிலிருந்த ஒளிரும் க்ரே கலர் நைட்டியும் அவளுக்கு ரொம்ப பிடித்தது. ஸ்ரேயாவுக்கு அவன் இரண்டாவது கணவன். நல்ல கனவான். ஆஜானுபாகுவானவன்.

    ராஜேஸீக்கு ஸ்ரேயாவை ரொம்ப பிடித்ததை ஸ்வேதாவிடம் பகிர்ந்து கொண்டான். ஸ்வேதாவும் தனக்கு அவ்னை பிடித்ததை பகிர்ந்து கொண்டாள். அன்றைக்கு இருவரும் அதீத மகிழ்ச்சியாய் இருந்தார்கள்.

    அந்த சந்தோச ஞாபகத்தை ஸ்வேதா மீட்டு வர க்ளோயிங் க்ரே நைட்டியை ராஜேஸே சில சமயம் அணிந்து கொள்வதுண்டு. மென்மையாய் ஸ்வேதாவும் நான் வெள்ளை நைட்டி போட்டுக்கவா, உனக்கு க்ளோயிங் க்ரே அயர்ன் பண்ணி வைக்கவா என்று கேட்பதும் உண்டு.

    சில சமயம் வேண்டாம் என்று  சொல்லிவிட்டால் சுருக்கென்று மனம் பதைபதைத்து சுருங்கிக் கொள்வதுண்டு.

    பாத்ரூமிலோ, அவன் நைட்டி தேடும் இடத்திலோ அயர்ன் செய்து மடித்துவைத்ததுண்டு. இன்று அவனே அதை அணிந்து வந்தது ஸ்வேதாவுக்கு மெல்லிய ஹார்மோன் கிளர்ச்சியை கிளப்பியது.

    சந்தோசத்தில் அவனிடமிருந்தே கொஞ்சம் வோட்கா உறிஞ்சுக்கொண்டாள். கிறக்கமாய் கண் மூடி மல்லாந்திருந்தான். லெக் பீசை கடிக்கும் முன் அவளைப்பார்த்து புன்னகைத்தபடியே முழுக்க எச்சில் படித்தினான்.

    தான் முதலில் காய்களை  நகர்த்த ஏதோ ஒன்றை தடுப்பதை நிறைய முறை உணர்ந்திருக்கிறாள்.

    அவள் தலைகோதி கேட்டாள். “ ட்ரிப் எப்படி பாஸ் இருந்தது.. எல்லாம் நல்லபடியா முடிஞ்சதா..“

    நிறைய பேசவேண்டும் போல ராஜேஸீக்கு இருந்தது. மெல்லியதாய் பேச ஆரம்பித்தான். கேட்டுக்கொண்டே ஸ்வேதா தனது வெள்ளை நைட்டியின் இறுக்கத்தை தளர்த்தியபடி குனிந்து கேட்டாள்.

    ராஜேஸ் மேலும் பேசினான். சின்னதாய் இன்னொரு பெக் எடுத்துக்கொண்டான். இந்தமுறை பாதியை அவனே அவளுக்கு கொடுத்தான். அவள் லெக்பீசை ஊட்டிவிட்டாள்.

    நைட்டியின் மேல் சால்வையை முழுவதுமாக அவிழ்த்துவிட்டு  டைனிங் டேபிளை சுத்தம் செய்தாள்.

    அவளை அழுத்தி, பிடித்தபடியே ராஜேஸ் எழுந்தான்.

    *

    தூக்கம் வந்து விழித்து,மெல்லியதாய்  ஸ்வேதாவை அவள் தூக்கத்தை  கலைக்கமால் ஒதுக்கினான்.

    அவளுக்கு வெறுமனே – முழுக்க வெறுமனே – கட்டிக்கொண்டு படுப்பது பிடிக்கும். வெகு அரிதாக முயக்கத்திற்கு பின்னான தருணங்களில் மெல்லிதாய் கண்ணீர் தளும்புவதும் உண்டு. சில நாட்களில் அது விசும்பலாகவும் இருப்பது உண்டு.

    முன்னைக்கு இப்போது அது  வெகு அரிதாகவே இருக்கிறது. முன்னெல்லாம்  முயக்கத்திற்குப் பின்னான கண்ணீர் ராஸேஸீக்கும் மிகுந்த இன்பமும், பாதுகாப்பும் கொடுக்கும். அவளின் சந்தோசம் தவிர வேறேன்ன நான் சாதித்துவிடப் போகிறேன் என்கிற நிறைவு அவனை நிறைக்கும்.

    அந்த விசும்பலுக்கு காரணம் தேடத் தொடங்கிய காலத்திற்குப் பிறகு, குழப்பங்களும், நிறைய கேள்விகளும் தான் எஞ்சின. ஸ்வேதாவும் பதில் சொல்லி சலித்து போய்விட்டாள். அதானாலோ என்னவோ, விசும்பல்களை கூட விலக்கிவிட்டாள்.

    அசந்து தூக்கும் அவளை கொஞ்ச  நேரம் பார்த்துக்கொண்டிருந்தான். தனது மகிழ்ச்சி பூரணத்திலிருந்து கொஞ்சம் பூரணத்தை கொண்டே அவளும் செய்யப்பட்டதாக ஒரு  கற்பனை தோன்றிய கணம் ஒரு  தேவதை படுத்திருப்பது போல  தோன்றியது.

    அவளின் விசாலமான கண்களும், சின்னதாய் காதும், வளைந்து  குத்தும் மூக்கும், திறந்த வாயிலிருந்து அமைதியாய்  கைகட்டி நிற்கும் சீர்வரிசை  பற்களும், கலைந்து மணக்கிற  டை செய்யப்பட்ட, ஸ்டெரெயிட்டனிங்  செய்யப்பட்ட முடியும், பளீரிடுகிற தொடையும், குதிகாலும், மார்பும் – மெல்ல ஆசையாய் வலிக்காது காமமின்றி முத்தமிட்டபடி எழுந்து குளியலறைக்கு போனான். பூர்ணமத, பூர்ணமிதம்.

    தண்ணீர் வழிந்து சொட்டுகிற  தனது முழு உடலையும் ஒரு முறை பார்த்துக்கொண்டான். குளியலறையில் ஓவ்வொரு முறையும் தனது முழு உடலையும் பார்க்கும்போது என்ன விதமான அழுத்தம் தோன்றுமோ அதே மன அழுத்தம் அதே கசப்பு இந்த தடவையும்.

    மறுபடி ஷவரில் நின்று கொதிநீரை அதிகப்படுத்தினான். தனது தோல் எரியும் வரை அவன் சூடு நீரை அதிகப்படுத்திக்கொண்டே போனான்.

    பூர்ணத்துவம் வெப்ப காற்றாய் வெளியேறியதா ? உடல் உணர்வு வரவர பூர்ணத்திற்கு கீழேயிருந்த சூன்யத்தின் ஆளுமை பெருக்கம்.

    துவட்டியபோது தோல் எரிந்தது. மெல்ல படுக்கைக்கு வந்த போது, ஸ்வேதா அப்படியே தூங்கிக்கொண்டிருந்தாள். வெள்ளை நைட்டி ஒருபுறம், போர்வை மறுபுறம் என விலகியிருந்தது.

    இந்த முறை உடலை பார்க்க, கசப்பு மறுபடி எழுவது போல உணர்ந்தான். கசப்பு, கசப்பு எதனால், எங்கிருந்து, ஏன் என்று தெரியாத கசப்பு.

    மெல்ல அவள் அருகில் அமர்ந்து, அவளை மறுபடியும் உற்றுப்பார்த்தான். அவளுக்கு போர்வை போர்த்தினான். அவள் அசைவுகள் தனது உடலை தொடாதாவாறு தன்னை குறுக்கி உட்கார்ந்து கொண்டான்.

    தனது இடுப்புக்கு கீழே வேறு போர்வையால் மூடிக்கொண்டான்.

    ஆயாசம், குளியல் தந்த வெது வெதுப்பு, ஏதோவொரு கசப்பு என மனப்பாலைவனத்தில் எண்ணக் கானல் நீர்கள்.

    சில மணித்துளிகளுக்கு முன் அமிர்தத்தை போல் பாசாங்கு காட்டிய அது, அதன் எதிர்முனையில்  இப்போது. அமிர்த்த்தின்  அடியிலே அது இருந்ததா என்ன ? பூர்ணத்தின் அடியிலே சூன்யம், பெளத்தம்.

    தலை உலுக்கி, த்த்துவம்  உதறி, ஏதாவது செய்தால் நல்லது என நினைக்க, ஐபேட்டில் ஆன்மீக கோப்புகளை பாஸ்வோர்டு போட்டு திறந்து தனது தோழிகளின் புகைப்படங்களை மேய ஆரம்பித்தான்.

    சில பட மேய்தல்கள், சில குறுஞ்செய்திகளுக்கு  பதில்கள் என காலம் கடந்த  பிறகு அநிச்சையாய், தனது இடுப்புக்கீழே தடவி விட்டு கொண்டான்.

    கசப்பு குறைந்து, வலியின்றி அமைதியடைந்ததாய் உணர்ந்தான். தூங்கிப் போனான்

    Share
  • கல்

     

    மணி ராமலிங்கம்

    அப்துல் கசாப் இப்படி கொல்லப்பட்டிருக்க கூடாது.

    மீடியாக்கள் மறுபடி பிளிர ஆரம்பித்தன. செய்திகள், விமர்சனங்கள், விவாதங்கள், மக்கள் கணிப்புகள். ட்விட்டர்கள், முகநூல் கருத்துரைகள் என எங்கும் அல்லோகலம்.

    விசாரிப்புக்கோ, அல்லது வேறு எதற்கோ ஆர்தர் ரோடு ஜெயிலிருந்து கொண்டு சொல்லும் போது கல்லெறிந்து கொல்லப்பட்டான் கசாப்.

    இத்தனை செக்யூரிட்டிகளுக்கு  இடையே தூக்கு தண்டனையோ ஏற்போ, நிராகரிப்போ வராத நிலையில் ஆர்தர் ரோட்டிலிருந்து எதற்காக அவன் வெளியே எடுத்துச் செல்லப்பட வேண்டும் ?

    நேரம், இடம், பொருள் தெரிந்து யாரோ ஏவிய கல் ஒன்று நகர்ந்து கொண்டிருந்த கசாப்பின் மீது பட்டு, அவன் தடுக்கி விழுந்தானாம். அவன் தடுக்கி விழுந்த நேரத்திலும் சரமாரியாக கற்கள் உடலின் முக்கியமான உயிர் ஸ்தானங்களில் பட்டு, அந்த அதிர்ச்சியில் உயிர் பிரிந்திருக்கலாம் என்றன செய்திகள்.

    எல்லோர் முன்னாடியும் மைக் நீட்டியது மீடியா.

     “ எல்லோரையும் அவன் இப்படித்தானே கொன்னான்.. அவனுக்கு மட்டுமென்ன ராஜா சாவு “

    “ தூக்கு தண்டனை அறிவிக்கும்  வரைக்கும் காத்திருந்திருக்க  வேண்டும். இது சரியான செயல் அன்று. அண்டை நாடுகளுடன் அமைதியை நிலைநாட்ட விரும்பும் இந்தியாவிற்கு நல்லதன்று “

    “ இது இந்தியாவில்  எழுந்து வரும் ஜனநாயகத்திற்கு எதிராக மறைமுக வேலை செய்யும் மதவாத சக்திகளின் கைவேலை தான் “

    “ இவ்வளவு நாள், நம்மை கொன்று, நம் காசில் உடம்பை வளர்த்த அவனை பகிங்கரமாய்  தூக்கு போட்டிருக்க வேண்டும்.. பரவாயில்லை.. மன்னித்து பக்கத்து நாட்டிடம் ஒப்படைக்காமல், பயந்து போய் பின்லேடனை போல கடலடியில் கரைக்காமல், இந்தியன் ஓருவனாலே கொல்லப்பட்டான் என்ப்து மகிழ்ச்சி தான்.. “

    “ இது உலக அரங்கில் நமது பாதுகாப்பின் நற்பெயருக்கு ஒரு கரும்புள்ளி. நம் நாட்டில் என்றைக்குத்தான் விரைவாய் நீதி கிடைத்திருக்கிறது. நீதி கிடைக்க கொஞ்ச நாள் ஆனால் தான் என்ன தப்பு. அதற்குள் எதற்கு கொல்ல வேண்டும் ? “

     “ கசாப்பின் மரணத்திற்கு பழிக்கு பழி வாங்குவோம் “ தாலிபான்கள்.

    “ அவன் இறந்தான் என்பது ஒரு ஜோடிப்பு “ –

    “ தூக்கு தண்டனை என்பதை நாங்கள் ஏற்றுக் கொள்வதேயில்லை.. அது யாராகயிருந்தாலும் சரி.. விசாரணை முடிந்து தீர்ப்பு வருமுன்னரே இப்படி நடந்திருக்கிற செயல்கள் மிகப் பெரிய சந்தேகத்தை கிளப்புகின்றன.. நாம் கற்காலத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறோமா ? “

    “ அவனின் இறப்பு, கலவரத்தின் போதைய உயிர்களை திருப்பி தராவிட்டாலும், ஒரளவு ஆறுதலையாவது தரும்.. “

    “ நாடாளுமன்றத்தை தாக்கியவர்களையும் இப்படி ஏதாவது கல்போட்டு எறிந்தால் இனிமேல் இந்தியாவினுள் ஊடுருவும் தீவிரவாதிகளுக்கு பயம் வரும்.. “

    ’போலிஸே உள்ளே விசம் வைத்து கொன்றுவிட்டு இப்படி கதை கட்டியிருப்பார்கள். அவனை கொல்லாவிட்டால் நமது அரசியல் தலைவர்களின் பல உட்கதைகள் வெளியே வந்துவிடும் ‘ ஒரு மாநில அரசியல் கட்சியின் வியாஞ்ஞானம்.

    ” இது போல நூதனமான முறையில் பல உலகத்தலைவர்கள், பிரமுகர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். [நூதன முறைகளை, தலைவர்களை ஒரு தாளில் எழுதி கொண்டு வந்து வாசித்து காட்டினார் ] உடல், மன இயக்கம் அறிந்து எந்த கருவி கொண்டும் உடலின் சில பகுதிகளை ஒரே நேரத்தில் தாக்குவதன் மூலம் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி இதயத்தை நிறுத்தலாம். இந்த முறை பயிற்சிகள் இஸ்ரேல், ஜெர்மனி, ஆப்பரிக்கா மற்றும் ஐரோப்பாவின் ஒரு சில பகுதிகளில் மட்டும் இரண்டாம் உலகப் போரின் போது பிரசித்தியாய் இருந்தது ”  ஒய்வுப் பெற்ற க்ரைம் ப்ராஞ்ச் அதிகாரி.

    ”மக்களுக்குத்தான் பாதுகாப்பில்லை, மக்களை சராமாரியாக சுட்டுக்கொன்ற ஒருத்தனை கூடவா நீதிவிசாரணை முடியும் வரை அல்லது தூக்குத் தண்டனை முடியும் வரை காக்க முடியவில்லை “ ஒரு எதிர்கட்சி தாளித்தது.

    மீடியாவில் மறுபடி மக்கள் கோப்ப்பட்டார்கள், தலைவர்கள் துக்கப்பட்டார்கள்.

    *

    அசுரத் தீனி மீடியாவிற்கு எப்போதும் அவசரம். இந்த நான்கு வருடங்களில் கசாப்பை பற்றித் தான் எத்தனை செய்திகள்.

    அவனுக்கு ஜெயிலில் கிடைக்கும் பிரியாணி பற்றியும், வசதிகள் பற்றியும் அவனால் இந்திய அரசாங்கத்திற்கு செலவாகிற சில ஆயிரம் கோடிகள் பற்றியும் எத்தனையோ கதைகள்.

    வழக்கம் போல நம் அரசியல் கட்சிகளுக்கு அவன் ஒரு வரப்பிரசாதமானான். அகிம்சை பஜனையும், அவனை கொன்றால் தான் இந்தியாவின் ஆத்மாவே சாந்தியாகும் என்று இரு நிலைகள். இரு பிரிவினரும் இரத்தம் கொதிக்க வைக்கும் உரையாற்றினர்.

    பேச்சுகள். பேச்சுகள். ஓயாத பேச்சுகள். பெரிய ஊழல், கிரிக்கெட் மேட்சு, தேர்தல் எதுவும் இல்லாத போது கசாப்பே மீடியாக்கள், ரயில், பஸ், அலுவலகம் முழுக்க பேச்சாகயிருந்தான்.

    கசாப் மீடியாவின் டிஆர்பி அட்சய பாத்திரமானான். மீடியாக்கள் யாகத்தில் நெய் வார்த்துக்கொண்டிருந்தன.

    திடீரென்று ஒரு  விமானம் கட்த்தப்பட்டு  கசாப்பை விட்டால்தான் பயணிகள்  விடுவிக்கப் படுவர் என்று  சொல்லப்பட்ட்தாக விசயம் கசிந்த்து. அரசாங்கம் மெளனித்தது.

    ஒரு முறை கசாப்பின்  பிறந்த நாளை பெரும்பாலான  ரயில் பெட்டிகளில் கொண்டாடினோம். அந்த நக்கலான ஜனநாயக எதிர்ப்பை மறுபடியும் மீடியா பேசியது.

    பக்கத்து நாட்டு அதிபர் வந்த போதும், ஐநாவில்  வெளியுறவு அமைச்சர்கள்  கை குலுக்கியபோதும் விசயம் மறுபடி மேலெழுந்து, மறந்து போனது.

    ஒரு மும்பை செய்திப்பத்திரிக்கை பொய்த் துப்பாக்கிகளோடு ரயில் பெட்டிக்குள் போய் சின்ன நாடகம் நடத்தி அதையும்  ‘போலி பாதுகாப்பு’ என்று பிரசங்கப்படுத்தியது. இன்னொரு கசாப் வந்தாலும் இதே கதை தான் மறு ஓளிபரப்பாகும் என்று மீடியாக்கள் இரைந்தன.

    தேசயானையின் செவியில் எறும்புகள் அசைவுகளுக்கு இடமிருக்குமா என்ன ?

    ஆனாலும் மீடியாக்கள்  விடுவதேயில்லை. ஏதாவது ஒரு மீடியா, கசாப்பை உயிர்ப்பித்துக்கொண்டிதானிருந்தன. கசாப் மீடியாவில் வாழ்ந்து கொண்டிருந்தான்.

    இப்போது மறுபடியும் கசாப். இன்னும் கொஞ்சம்  நாட்களுக்கு அவனின் இறப்பு, யாரோ, எங்கிருந்தோ, எப்படியோ நூதனமாய் கல்லால் எறிந்து கொலை செய்யப்பட்டது மீடியாக்களுக்கு முழுச் சாப்பாடு.

    *

    உங்களோடு டிவி பார்த்து கொண்டிருக்கும் நான் ஒரு மும்பைவாலா.

    மும்பை தாக்குதலின்  துர்கணங்களின் போது மெழுகுவர்த்தி  ஏற்ற போகவில்லையென்றாலும், நாள் முழுக்க உட்கார்ந்து  டீவி பார்த்திருக்கிறேன். பயந்து போய் நான் தினமும்  போகின்ற இடமானதால், உணர்ச்சி பொங்க பக்கத்து நாட்டை திட்டியிருக்கிறேன். ஒரு நாளைக்கு சராசரியாய் நாலு மணி நேரம் பயணம். மின்சார ரயில் பெட்டி ஸ்நேகிதர்களோடு இதை விவாதித்திருக்கிறேன்.

    ஒரு அவசர மும்பைவாலா அதற்கு மேல் என்னதான் செய்ய  முடியும்.

    கசாப்பின் தண்டனைக்கு முன்னான இந்த செய்தியையும் வீட்டிக்குள் உட்கார்ந்து பார்த்துக் கொண்டே ரொம்பவே கோப்ப்பட்டேன்.

    ” திஸ் இஸ் பிளடி நாட் குட்..  வாட் த ஹெல் ஹெப்பனிங் இன் திஸ் கண்ட்ரி [ This is bloody not good. What is happening in these country ? ]“

    கசாப் போட்ட ஜனாதிபதி கருணை மனு கிட்டதட்ட நிராகரிக்கப்பட்டு அமுக்கமாய் அவன் பின்லேடன் போல தண்டிக்கப் படுவான் என்று எல்லோரும் நினைத்து கொண்டிருந்த வேளையில் எதற்காகவோ வெளியே எடுத்து செல்லப்படும் வேளையில் தொடர் கல்லெறிதல் ( Continuous stoning ) மூலம் கசாப் கொல்லப்பட்டிருப்பது மகா ஆச்சரியம்தான்.

    இன்னும் நிறைய  நாள் இது பேசப்படும்.  இதை  வைத்து நானும் நாளை மின்சார  ரயிலில் நிறைய பேச வேண்டும். இப்படி பேசுவதற்கும் நான் மீடியாக்களிலிருந்துதான் கருத்துக்களை சாப்பிட வேண்டியிருக்கிறது. அவைகளை சாப்பிட்டு, போகும் ரயில் நேரத்தில் வாந்தியிட்டு, ஏப்பமிட்டு.

    இரண்டு மணி  நேரத்தில் பல கருத்துக்களையும் என் கருத்தாகவே பேசிவிட  என்னால் முடியும். மீடியாக்கள் இல்லாவிட்டால் கருத்தென்பதே இல்லாமலிருக்குமோ ?

    அவன் இறந்தது  சரியா, தவறா, உண்மையா, இல்லையா, – ஆம், இல்லை, சரி,தவறு, என்கிற விவாதங்கள், நூற்றூக் கணக்கான  அநுமானக் கதைகள், ஊகங்கள் இவற்றை நீங்களும் மீடியாவில் படித்திருக்கலாம். பார்த்திருக்கலாம். அவை உங்களுக்கு பிடித்திருக்கலாம். புளித்திருக்கலாம்.

    ஓகே, அதுவல்ல நம் கதை.

    *

    அவன் பெயர் எங்களுக்குத் தெரியாது. அவனை ‘ஏ..அம்பர்நாத்வாலா..’ என்று அழைப்பதே வழக்கம். லவண்டி அம்பர்நாத் வாலா, சாலா அம்பர்நாத் வாலா, சூ.. யா அம்பர்நாத்வாலா, பே.. யா அம்பர்நாத்வாலா என்று பல பெயர்களோடு அந்த கம்பார்ட்மெண்டே அழைக்கும். மரியாதையாய் நாம் அம்பர்நாத்வாலா என்றே அழைக்கலாம்.

    ஒரு நாள் ஏதோச்சையாய்  அந்த கம்பர்மெண்டில் நுழைய  அவனின் வசீகரம் என்னை ஈர்த்தது. கொஞ்சங்கூட முதல் வகுப்பிற்கு பொருந்தாத ஆடையலங்காரம். போஜ்புரி படகதாநாயகன் போல கலர் சட்டைகள். எப்போதும் தப்பாத மெல்லிய அழுக்கு பார்டர். உள்ளே துருத்திவிடப்பட்ட கைக்குட்டையாலான காலர். தெரியவேண்டுமென முனைப்போடு அணியப்பட்ட டாலர், அழுக்கேறிய பேரஸ்லேட், கொஞ்சம் சிவப்பு, நிறைய சிவப்பு என வலக்கை மணிக்கட்டில் கட்டப்பட்ட தாயத்துகள். சட்டைக்கு தவறியும் பொருந்தாத பேண்ட். ஒரு கை மடித்து, இன்னொரு பக்கம் முழுக்க போட்ட பித்தானோட சட்டை.

    எப்போதும் வழிக்கப்படாத முகம். குறைந்த தாடி, மிதமான தாடி, காடு போல தாடி என சீரற்ற முகம். கறைகளின் நடுவே அங்காங்கே பற்கள். எதையாவது மென்று கொண்டிருக்கும், சலிக்காமல் காறித்துப்பும் வாய். சிரித்தால் குழி விழும் கன்னம், தாடிதாண்டி தெரியும். அழுக்காயிருந்தாலும் அவனிடமிருந்து எந்த துர்வாடையும் வந்ததுமில்லை.

    முகம் நிறைய பெரிய  குங்குமப்பொட்டு, சாக்ஸ் போடாத சூ. முதல் வகுப்பிற்கு பொருத்தமில்லாத பாவங்கள். அலங்காரங்கள். அவன் அலுவலகம் அவனுக்கு பாஸ் வழங்கியிருக்கிறதாம்.

    இத்தனை அவலட்சணம் தாண்டியும் அவன் வசீகரம் அந்த பெட்டியில் பிரசித்தம்.

    அவனுக்கான ரசிகர்கள்  எப்போதும் உண்டு. அந்த பெட்டியில் நான் தானே(thane) ஸ்டேசனிலிருந்து மட்டுமே ஏறுவதால் அவனின் ரயிலில் ஆற்றும் லீலைகள் பற்றிய முன் புராணம் அறியும் வாய்ப்பும், அதை உங்களிடம் பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பும் எனக்கில்லை.

    ரசிகர்களில் கூட  அவனோடு முற்றிலும் இயைந்த, கொஞ்சம் இயைந்த மற்றும்  தள்ளியிருந்து ரசிக்கும் கூட்டம் என பிரிவினர் உண்டு. நான் கடைசி ரகம்.

    ஏதோ அலுவலகத்தில் – சாய் கொடுத்து, பேங்கில் செக் போட்டு, வாடிக்கையாளரிடமிருந்து செக் வசூலித்து, மதிய வேளைகளில் மிட் டேவில் பொம்பளை படம் பார்த்து, உள்ளூர் அரசியல் பேசி, ‘போலியே சாப்.. ‘ என சலாம் அடித்து, பொய்ப் பணிவு காட்டி  – அவன் ஆபிஸ் பாயாக, மேனாக இருக்கலாம். வேறெதாவாகவும் இருக்கலாம்.

    ஆனால் இந்த ரயில் பெட்டியில் அவன் அறிவிக்கப்படாத கதாநாயகன். உற்சாக ஊற்று. அவனின் ரிப்ளெக்சனும், சார்ப்னசும் அவனோடு ஓட்டிப் பிறந்த கவச குண்டலங்கள்.

    இத்தகைய பேர்வழிகளோடு எனது அநுபவம் அவ்வளவு நல்லதாக அமையாதலால், நான் தள்ளியிருந்து ரசிக்கும் ரசிகானகவே இருக்க ஆசைப்பட்டேன். எனது ஹிந்தியும், மராத்தியும் சொல்லாமலே என்னை சால மதராசியாகவோ, வோ அண்ணா.. என்றோ காட்டிக் கொடுத்துவிடும்.

    எந்த மண்ணிலும் அந்நியப்படுவது போல அசெளகரியமான விசயம் எதுவுமில்லை.

    *

    கம்பியை பிடித்து வெளியே தொங்கிக்கொண்டே வருவான். எலெக்ட்ரிக்  கம்பிகள் நெருங்குவதை பார்த்து, நான் முதல் முறை பயங்கொண்டேன். “ ஹாய்.. கேட்.. இன் “ பதட்டினேன்.

    அவன் கண்டு கொள்ளவேயில்லை. அது நெருங்க நெருங்க  என்னில் பயம் அதிகரித்து அவனை பிடித்து இழுக்க முயற்சித்தேன். அவன் ஏதோ மலிவான பாலிவுட் பாட்டை சீழ்ட்டியடித்துக் கொண்டே வந்தான்.

    எனது சர்வநாடியும் ஒடுங்கி  பயந்து போன கடைசி, கடைசி  தருணத்தில் சடக்கென உடல் லேசாய் இழுத்துக்கொண்டான். கொஞ்சமான, ரொம்பவே கொஞ்சமான இடைவெளியில் அவன் தப்பினான். ஒரிரூ விநாடிகள் தாமதித்திருந்தாலும் அவன் தலையும், உடலும் பிரிந்திருக்கும்.

    எனது பயம் தெளிந்து பார்க்க, அந்த டப்பா முழுக்க என்னைப் பார்த்து சிரித்தது. அவனோ “ ஹாய்.. கேட்.. இன்.. ஹாய். கேட்.. இன் “ என்று மராட்டி வாடையடிக்க என்னைப் பார்த்து சிரித்துக்கொண்டிருந்தான். கோபமும், ஆச்சரியமும் என்னை மெளனமாக்கின.

    ’சீப். தேர்ட் ரேட்டட் சாப்’  – மனதில் திட்டல். இன்றைக்கு நான் பக்ரா (பலி ஆடு).

    இவ்வாறான நிறைய சாகச லீலைகள்  அவன் செய்வது வழக்கம் என்றும்  ஓவ்வொரு நாளும் ஓவ்வொரு  பக்கராக்கள் என்றும் தெரிந்து கொண்டேன்.

    கொஞ்ச நாளில், என்னை அறியாமலே அவனது சாகச லீலைகளை மீது ஒரு கவனிப்பு வந்ததும் உண்மை தான்.

    *

    எதிர் ட்ராக்கில் நிற்கும் வண்டிகளில் சில நொடிகள்  தாவிப் போய் ஏறிவிட்டு, மறுபடியும் அவனது வண்டிக்குள் புகுந்து விடுதல். இது ஒரு சில  கணங்களுக்குள் நடந்துவிட  வேண்டும். அந்த ஒரு சில  கணங்களுக்குள் எதிர் ட்ராக் வண்டியில் பயணம் செய்யும் நபர்களுக்கு கிசுகிசு மூட்டவோ, காதில் கெட்ட வார்த்தை சொல்லிவிட்டோ, வெறுமனே கத்திவிட்டோ வந்துவிட் வேண்டும்.

    பெரும்பாலும் சிக்னல்களுக்காக  நிற்கும் வண்டிகளில் அவனது  சாகசங்கள் பெரும் சிரிப்பை வரவழைப்பதாயிருக்கும்.

    ராக்கித் தினத்திற்கு முந்திய நாள். எதிர் நின்ற பெண்கள் டப்பாவில் குதித்தான். அங்கிருந்த பெண்களும் கச்சு மூச்சென்று கத்த, ‘க்யா பேன்.. க்யா பேன். “ என்று பேசிப் பேசியே மன்னிப்பு கேட்டபடியே பத்திருபது ராக்கி கட்டி, இருநூறு சம்பாதித்து விட்டான். எங்கள் சகபயணி தேஸ்பாண்டேவோடு போட்ட பந்தயம் என்று பின்பு தெரிந்தது. அழுது கொண்டே தேஸ்பாண்டே முன்னூறு ரூபாய் கொடுத்தார்.

    “ ஏ.. சாலா.. குச்சுபி கரேகாரே.. “ [ இவன் என்ன வேணா செய்வான்யா. ]

    விக்ரோலியில் இரவு ஸிப்டை முடித்துவிட்டு களைத்த முகத்தோடு திரும்பும் பெண்களை கண்டால் அவனுக்கு மிகுந்த குஸியாகிவிடும்.

    “ வேய்கா.. வெல்கம்  மேடம்.. கேன் ஐ ஹால்ப் யூ சார்.. ஐ ஆம்.. மேரினா க்யூர்.. “

    மூன்றாவது ப்ளார்பாரத்தில்  வேகமாய் போகும் ரயிலிலிருந்து  அவன் கொடுக்கும் கத்தல்கள் மொத்த ரயில்நிலையத்தையே லேசாய் அசைக்கும்.

    “ ஓ. மேடம்.. வாட் கேன் ஐ டூ பார் .. யூ “ என்று  ரயிலிருந்து தொங்கிக்கொண்டு அவர்களைப் போலவே மிமிக் செய்யும் அவனை அவர்களில்  சிலருக்கு பிடிக்கலாம். சிலர் வெறுக்கலாம். ஆயினும்  அவன் இருத்தல் அந்த ஸ்டேசனில்  பதிவு செய்யப்படும்.

     

    விக்ரோலி தாண்டி வருகிற நீளமான கோத்ரோஜின் பகுதிகளை அவன் கல்லெறிந்து  கடப்பான். அவன் கல்லெறிதல் போல இதுவரை நான் எங்கும்  பார்த்த்தில்லை. அவனுக்காக  டப்பாவில் அவனது ரசிகப் பெருமக்கள் சின்ன சின்னதான கற்களை அம்பார்நாத்திலிருந்து பொறுக்கி, தோள்பையில் போட்டு கொண்டுவந்திருப்பார்கள்.

    ஏதோ சாப்பாட்டுக்கூடை போல தொங்கும் அந்த கல் பேக் அவனை நோக்கி பிராயணப்படும். ஓற்றைக் கையால் கற்களை எடுத்தல், மறுகையால் அதை தூக்கி எறிதல். தொடர்ந்து செய்தல்.

    அது காண கண்கொள்ள நிகழ்வு. எடுத்தது கண்டிலன். எறிந்தது பார்த்திலன். அவ்வளவு வேகம். துல்லியம்.

    ஒரு சில நாள்களில்  தவளையை குத்தும். மலம் தின்று கொண்டிருந்த காக்கையை விரட்டும். சில நாட்களில் ஓரமாயிருந்த நாயின் பின்பகுதியை கிழிக்கும். இல்லை முன்னேயிருந்த ரயில் கம்பத்தில் பட்டு லேடீஸ் டப்பா மீது பட்டு அங்கிருந்து அய்யோ குய்யோவென சத்தம் வரவைக்கும்.

    தவளைக்கு கண், காக்கைக்கு வயிறு, பன்றிக்கு குதம், பல்லிக்கு  கழுத்து – எங்கு கல் பட்டால் விமோசனம் எளிதாகவும், எந்த சத்தமின்றியும் உறுதிப்படும் என்று அவனுக்கு பழக்கத்தினால் தெரிந்திருந்தது.

    ஒரு சில விலங்குகளுக்கு ஒரு கல் போதாது. தொடர்ந்து நாலைந்து எறிய வேண்டும். எறியும் அவனும், ஓடும் அவைகளும் நகர்ந்து கொண்டேயிருக்கும் போதும், குறிப்பிட்ட விசையோடு எறிதல் முக்கியம்.

    கேரம் போர்டின் காய் போல ஒரு முனைப்பட்டு  மறுமுனையில் ஸ்பின் பெளலிங்  போல திரும்பி அடிக்கும்  என்று வேறு யாராவது சொல்லியிருந்தால் நானும் நம்பியிருக்க மாட்டேன் தான். ஆனால் அவனுக்கோ அத்தகைய அர்ஜீனன் குறி.

    சில சமயம் எறிந்த கல் ஏழு பெட்டிகளை தாண்டி ரயில் முன்னாடி விழுந்திருக்கிறது. ஓவ்வொரு நாளும் சில கற்களாவது  எறிந்து விடவேண்டும். ஹோலியின் போது மற்ற சிறப்பு தினங்களிலும் கற்களோடு மற்ற சில சிறப்பு பொருட்களும் சேர்ந்து எறியப்படலாம்.

    விக்ரோலி தாண்டி வருகிற வித்யவிகாரில் கல்லூரி  கூட்டம். பெரிய பூவில் மொய்க்கிற  ஈக்கள் போல ஜீனியர், சீனியர்  மற்றும் மேனெஜ்மெண்ட் கல்லூரிகளின் ஆண், பெண் மாணவ, மாணவிகளின் கூட்டம்.

    அவனின் பிளிறல்  ஆரம்பமாகும். ஆள் பார்த்து கமெண்டோடு பிளிறுவான்.

    “ ஏய்.. தம்பி.. கவனமாயிருப்பா.. இந்த சிவப்பு சுடிதார். போன  வாரம்.. இன்னொத்துனுக்கு  முக்குல முத்தம் கொடுத்திட்டிருந்தா.. “

    “ என்னம்மா.. நீலக்கலர்  சன்னியா சோலி.. (*) .. ரொம்ப  டல்லாயிருக்க.. அதுவா.. [ மூன்று விரல்களை காட்டுவான்] “

    ரயிலின் சக பயணிகள்  சில நேரம் அவனிடம் சவால்  விடுவதுண்டு. எல்லா சவாலுக்கும் ஏதாவது ஒரு பெட்டிங் இருந்தது.

    “ ஏய்.. சாலா.. காட்கோபர்  ஸ்டேசனுக்கு முன்னாடி.. அந்த ப்ராத்தல் வீடு வர்றதுல்ல.. அதுல யாருக்கும் அடிபடாமா.. சன்னல் வழியா.. இதை தூக்கி போட முடியுமா.. “

    சின்ன கல்லோடு, ஆணுறைத்தாளும்  தரப்பட்டது. நூல், சின்ன கல், அதை சுற்றி தர்மாக்ஸ் பொட்டலம், அதன் மேல் ஆணுறை எல்லாம்  சுற்றப்பட்டு, குறிபார்த்து அடிக்க மிகச் சரியா அது  சன்னலில் அடித்து, அங்கே  சுற்றிக்கொண்டு சத்தம் எழுப்பியது. சத்தம் கேட்டு ஒரு மத்திய வயது பெண்மணி சன்னல் வழியே பார்க்க, ரயில் டப்பாவே ஹோவென கத்திற்று.

    “ யே. லவுண்டி.. நேத்திக்கு நான் யூஸ் பண்ணின பாக்கெட், மறந்துட்டு வந்துட்டேன்.. “ என்று எறியச் சொன்னவன் கத்த, அவள் புடவை தூக்கி கெட்ட வார்த்தை பொழிந்தாள். இடுப்பு முன்னும், பின்னும் ப்யங்கரமாய் ஆட்டியபடியே அவளின் வசவுக்கு எறியச் சொன்னவன் எதிர்ப்பாட்டு பாடினான்.  தன் குறி தப்பாததில் அம்பார்நாத்வாலவுக்கு ரொம்பவே குஸியாகிவிட்டது.

    எறியச் சொன்னவன், அந்த வெள்ளிக்கிழமை செளபாட்டி  ஹோட்டலில் தண்ணி வாங்கிகொடுத்து, கிரிஸ்டல் ஹோட்டலில் ராஜ்மா சாப்பாடு தரவேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.

    பெட்டிங்  இல்லாமல் அவன் சந்தித்த சவாலும்  ஒன்று உண்டு. அது அவனுள் ஏற்படுத்திய அகமாற்றம்  அளவிடமுடியாது.

    *

    ஓருநாள், மஜீத்  ஸ்டேசனுக்கும் விடி ஸ்டேசனுக்கும்  நடுவே இரயில் மெல்ல போய்க்கொண்டிருந்த  போது, ஒரு மத்திய வயது சிறுவன் தனது ட்ரவுசரை அவுத்து, பெண் பெட்டியின் முன்னால் தனது மேல் தோல் சீவப்பட்ட குறியை முன்னும், பின்னும் இழுத்து காட்டினான்.

    எப்போதாவது  இது போல் நடக்கும் செய்கைகள்  பயணிகளுக்கு அதிர்ச்சி  கொடுப்பதில்லை. மூக்கை பொத்திக்கொண்டோ, முகத்தை திருப்பிக்கொண்டோ, மனதை மூடிக்கொண்டோ நடக்க மாநகர ரயில் எல்லோரையும் பழக்கப்படுத்தியிருக்கிறது.

    ஆனாலும் அந்த சிறுவன் அதை தினமும்  செய்தான். தொடர்ந்து செய்தான். ஓவ்வொரு நாளும் கூடும் அடர்த்தியான  வன்மத்தோடு செய்தான். நிறைய பேரின் அதிர்ச்சி, ஆவல், கவனம் அவனுக்கு உற்சாகத்தை கொடுத்ததோ என்னவோ..

    பெண்கள் பெட்டி வரும்போது சிறுவன் கெட்ட வார்த்தைகளை பாலிவுட்டின் கிங்கான்கள் பேசுவது போலான மிமிக் குரலில் பேசிக் காட்டினான்.

    ஒரிரூ நாள் சிரித்தும், பின் சகித்தும் கொண்டிருந்த  கூட்டம் மெல்ல மெல்ல சகிப்புத்தன்மை இழந்தது. இந்த மலிவான செய்கை, பெண்களுக்கு மிகப்பெரிய மன உளச்சலை, வெறுப்பை, கசப்பை ஏற்படுத்தியிருக்கும்.

    மாநகர ரயில்  எப்போதும் வெறும் இரும்பல்ல. அதற்கு மற்றவர்களின் மனச் சங்கடத்தை ஓரளவு கடத்தும் மென் கடத்தியும் கூட. எங்கள் பெட்டிக்கு பக்கத்திலிருந்த  பெண்களின் சங்கடம், மன அவஸ்தை எங்களுக்கு புரிந்தது. சில  பெண்களில் கண் பயம் கூட எனக்குத் தெரிந்தது.

    பாசை கொச்சை, மற்றும் படிப்பின் காரணமாய் எதுவும் பேசமால் இருக்கும்  நான் அன்று, அதுவரைக்கும் இல்லாத வகையில் தன்னிலை இழந்து அவனை நோக்கி, ரயில் சத்தம் நோக்கி கெட்ட வார்த்தையால் திட்டினேன்.

    ~ ஹோய்.. கெட்  இன்.. சாந்தியார். [ அமைதி.. அமைதி..] ~ என்று அம்பர்நாத்வாலா என் தோள் தட்டிச் சொன்னது ஆறுதலாய் இருந்தது.  

    அடுத்த சில நாட்கள் அம்பர்நாத்வாலா அவனை திட்டிப்பார்த்தான். பின்பு கொஞ்சம் கடினமாய திட்டிப் பார்த்தான். சில நாட்களுக்கு மிரட்டிப் பார்த்தான்.

    ஓன்றும் பலனளிக்காது  போகவே, அவனுக்காக சிறப்பான சின்ன கல்லும், அதன் நுனியில் முட்கள் நிறைந்த செடியும் சுற்றப்பட்டு தயாரானது. ஒரு வெள்ளிக்கிழமை சுபதினம் சுருக்கென்று எறியப்பட்ட கல்லின் சத்தம் வீடி வரை கேட்டுக் கொண்டேயிருந்தது. ஒரு அடிப்பட்ட சொறிநாயின் பிளறல் போல இருந்த்து.

    அடுத்த நாட்களில், பெண்கள் டப்பாவிலிருந்து  ஓரிரு மத்திம வயது பெண்கள்  அம்பர்நாத் வாலாவுக்கு நன்றி  சொன்னார்கள்.

    மறுநாள் அவனது ரயில் பயணத்தின் நாமாவளி எந்த குந்தகமும் இல்லாமல் தொடர்ந்தது.

    விக்ரோலியில் கால் செண்டர் கேலி, கல்லெறிந்து  பழகுதல், காட்கோபரில் குஜராத்திகள் பற்றி கேலி, வித்யாவிகாரில் கல்லூரி பெண்களிடம் கேலி, சயானில் ட்ராக்கில் செம்போடு முகம் மூடி உட்கார்ந்திருப்பவர்களை அண்ணா.. என்று அழைத்து கேலி, பின்பு தாதரிலிருந்து மஜ்ஜீத் வரை உள்ளே உட்கார்ந்திருப்பவர்களை, அன்றைய செய்திகள் வைத்து கேலி,  வீடி ஸ்டேசனில் தலைவாரிக்கொண்டு பொட்டு வைத்து பயபக்தியாய் வேகமாய் அலுவலகம் ஏவுதல் –  என்று அவன் வழக்கம் தொடர்ந்தது.

    அவன் எந்த பெட்டிங்கும் இல்லாமல் செய்த  காரியம். மற்றவருக்காக நல்லது செய்கிற காரியத்தினால்  உள்ளத்தில் உடையும் தேன் கூட்டின் சுவையை அவன் உணர்ந்திருக்கலாம். அது எந்த பெட்டிங்கின் மலிவான விலையை விட எவ்வளவு உயர்ந்தது என்று அநுபவித்திருக்கலாம்.

    ஆக, மற்றவர் வந்து சொன்ன அந்த நன்றி – அவனுக்குள்ளே நிறைய மாறுதல்களை விதைத்தது என்றுதான் சொல்ல தோன்றுகிறது.

    *

    இன்னொரு நாள், என்னைப் போலவே, ஒரு புதிய ஆள் ஏறினார். வயது நாற்பத்தைந்து – ஐம்பதிருக்கலாம்.

    வயதை குறைக்கும் இளமையான மெலிந்த கட்டு  உடல். பின்பக்கம் வெட்டிய  முடி, சின்னதாய் ட்ரீம் செய்யப்பட்ட  மீசை. நுனி முறுகியிருந்த்து. சப்பாரி மாதிரியான உடை. விரைப்பாய் ஊன்றி நின்ற  கால். பாலீஸ் செய்யப்பட்ட  ஷூ. வாசலில் நின்றபடியே பயணம் செய்தார்.

    அம்பர்நாத்வாலாவின்  லீலைகள் அவருக்கு பதற்றம்  கொடுத்தன. அவரும் என்னைப் போலவே பதற்றப்பட்டது எனக்கு வேடிக்கை பொருளாயிருந்தது.

    “ உள்ள வாங்க தம்பி  “ என்று அவர் சொல்ல, ஆகா இன்னொரு குருவி சிக்கிருச்சு.. என்று எங்கள் டப்பாவில் சந்தோசம்.

    புதுப் பதற்றங்களை பார்த்து, அம்பர்நாத் வாலாவுக்கு அதிக குஸீயாகும். அதிக குஸீ, அதீத குரங்குச் சேட்டைகள். வித்தைகள். அன்று அதிக பேச்சு, அதிக வித்தைகள். முலூண்டிலிருந்தே அவனது நிகழ்ச்சி ஆரம்பமாயிற்று. பேச்சும்.

    “ லைப்ல பயம் கூடாது சார்.. பம்பேயில.. இருந்துட்டு  பயம்னா.. எத்தனை கிலோ.. “

    “ எல்லோரும் சாகத்தான போறோம்.. என்ன பயம் வேண்டியிருக்கு.. “

    “ சார் நான் வந்தா.. வண்டிக்கே உயிரு சார்.. “ [அமிதாப்பச்சன் குரலில்]

    பேச்சு. சீண்டல்  பேச்சு.. அவரும் ஏதோ சொல்லிக்கொண்டே வந்தார்.

    “ஏன்பா.. இந்த குரங்குத்தனம்.. “ அந்தப் புது ஆள் கேட்டார்.. ஓவ்வொரு முறையும் அவரின் பயமும், குரலில் எதிர்ப்பும் கூடிக்கொண்டே வந்த்து. சில நேரம் கழித்து, எக்கேடு கெட்டு ஓழி என்று மெளனமாய் இருந்தார். அப்போதும் அம்பர்நாத்வாலேவே ஏதாவது பேசி அவரை இழுப்பான்.

    இந்த விளையாட்டு எனக்கு பரிச்சியமானது. என் மீது விளையாடப்பட்டது. அது இன்னொருத்தரின் மீதும் விளையாடப்படும் போது அதன் ஓவ்வொரு அசைவையும் ரசிக்க முடிந்தது.

    “ இது என்ன சார்.. இப்ப பாருங்க.. அங்க என்ன வருது.. “

    எதிர்முனையிலிருந்து இன்னொரு வேக ரயில் வந்து கொண்டிருந்த்து.

    “ ஏ.. ட்ராயின்ரா.. பாஸ்ட் ட்ராயின்ரா.. “ அந்த ஆள் வேக வேகமாய் படபடத்தார்.

    “ அதுனால.. என்ன .. “  சொல்லிக்கொண்டே தொங்கினான். ரொம்பவே தொங்கினான். எங்களை அறியாமல் நாங்கள் எல்லோரும் வாசலிருந்து இன்னும் எங்களை உள்ளே அழுத்திக்கொண்டோம்.

    இன்று அவன் விளையாடுவது நிலையாக நிற்கும் போஸ்ட் கம்பம் இல்லை. இரண்டுமே வேகமாய் நகரும் ஜந்துக்கள். அவன் சமாளித்து விடுவான் என்றாலும், மெலிதான பயத்தோடும், ஆர்வத்தோடும் அந்த கடைசி விநாடிக்காக எதிர்பார்த்துக்கொண்டிருந்தோம்.

    நாங்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தோம் என்பதை அறிந்து அவனின் முகம் அஸ்ட கோணாலாக்கி எங்களை மேலும் குஸிப்படுத்திக்கொண்டிருந்தான்.

    எதிர்வண்டி பக்கத்தில் வர, வர, புது ஆளின் பயம் உச்சத்தை தொட்டது. அவரின் முகம் எனது பழைய முகத்தை எனக்கு ஞாபகப்படுத்தியது.

    பதிவுபோல சடக்கென்று கடைசி விநாடியில் உள்ளே  உடம்பை இழுத்தான். ரொம்ப கீழிறிந்து எழும்பி வந்ததால், உள்ளே வந்துவிட்டாலும் நடுவில் நின்றிருந்த, பிடித்திருந்த கம்பியில் தலை மோதிக்கொள்ள வேண்டியிருந்தது. அந்த அதிர்ச்சியில் அவன் இலேசாய் ஆட, சுற்றியிருந்தவர்கள் பிடித்துக்கொண்டார்கள்.

    சுற்றியிருந்தவர்களுக்குத்தான் அது அதிர்ச்சி.. அவன் ரொம்ப  அமைதியாகத்தானிருந்தான். அதே கேலிகள், அதே வார்த்தைகள்.. நாங்கள் சகஜ நிலைமைக்கு திரும்ப, புது ஆள் பேய் அறைந்தது போலாகிவிட்டார்.

    “ உசுருன்னா, உனக்கு மசுராடா.. “ ரொம்ப நேரம் கழித்து அமைதியாய் கேட்டார்.

    “ யே. பெரிசு.. என்ன பயந்துட்டியா.. இதெல்லாம்  பெரிசேயில்லைப்பா.. “ என்று  மராத்தியில் அவரை ஏளனமாய் பேச ஆரம்பித்தான்.

    அவர் அமைதியானார். வீடி ஸ்டேசன் வரைக்கும்  எதுவும் பேசவில்லை. கொஞ்சம்  கூட்டம் குறைந்து நாங்கள்  எல்லோரும் வீடியில் இறங்கும்போது, அம்பர்நாத்வாலைவை பிடித்து தனது ஸீவை கழட்டி பளீரென்று  அடித்தார்.

    “ உன் உசுரு முக்கியமில்லைன்னா, சூ.. யா, கசாப்பை கொண்ணுட்டு சாகேன்டா.. “ கத்தினார்.

    நாங்கள் விலக்கிவிட்டி, அவரை திட்டி, இவனை சமாதானம் செய்து அனுப்பி வைத்தோம்.

    *

    வெளியூர் பயணம், மாற்றம்  அது, இதுவென சுழன்று, திரும்ப  இப்போதுதான் வரமுடிந்தது. அதே வண்டி. அதே பெட்டி, அதே விவாதம் – ரொம்ப நாள் கழித்து பழைய நண்பர்களை பார்த்து, நிறைய விசயங்களை சுடச்சுட விவாதிக்க, வாழ்க்கை திரும்பிற்று.

    விக்ரோலி வந்த பிறகுதான்  தெரிந்தது, அம்பர்நாத் வாலா ரொம்ப நாளாக அங்கு வரவில்லையென்று.

     

    Share
  • நோ-பால் – No Ball

    மணி ராமலிங்கம்

     

    டிசம்பர் 27ந் தேதி. அந்த மேட்சில்தான் அம்பயர் – ரமணி சரியாக மாட்டிக்கொண்டு மைதானத்திலிருந்து வெளியேற்றப்பட்டான்.

    ரயில்வே அணிக்கு எதிரான மேட்சு அது.

    ஆறு அணிகள் விளையாடும் டோரணமெண்டில், இந்த மேட்சில் ஜெயித்தால் தான் அடுத்த கட்டம். எடுக்க வேண்டியது சொற்ப ரன்கள் என்றாலும் விக்கெட்டுகள் சரிந்தது பயத்தை ஏற்படுத்தியது. குமார் அன்று பந்தால் துவம்சம் செய்து கொண்டிருந்தான்.

    இருக்கிற ஓரே நல்ல விக்கெட் சீனிவாசன் அண்ணா. அவர் நின்று விளையாட வேண்டும். போன ஓவரில் ரன்னராய் வந்த போது கிளவுசை கழட்டினார் அண்ணா. நிறைய வேர்த்திருந்தது. கொஞ்சம் கை நடுக்கமாய் இருந்தது. பயந்திருக்கிறார்.

    பக்கத்து ரன்னரோடு பேசுவது போல சொன்னார் .. “ அடுத்த ஓவர் அவனுக்கு கடைசி பாத்துக்கடே.. நா வெளிய வந்து எல்லாத்தையும் கால்ல தான் வாஙக போறேன்.. நோ பால்ன்னு அழுத்திடுடே. “  ரமணிக்கு  மட்டும் கேட்குமாறு சொல்லிப் போனார்.

    அவுட்டானவுடன் நோபால் கொடுப்பது அம்பயரின் பொறுப்பு. நல்ல பாலை நோபாலாக காட்ட வேண்டும். நோபால் – பேட்ஸீமேனுக்கு புனர்ஜென்மம். இரண்டாம் வாய்ப்பு. அநுபவங்கள் மிகுந்த இரண்டாம் வாய்ப்பு. அடுத்த வாழ்க்கை.

    எதிர்முனையில் சுழலும் காலச்சக்கரம். உடலின் ஓவ்வொரு செல்லும், படிப்பினை கற்று கொண்டு விட்ட பின்பு, வரும் வாரணம் ஆயிரம் பலம்.  நோபால் அவுட்டில் தப்பிக்கிற பேட்ஸ்மேன், வாதம் வந்து பிழைத்த வயோதிகன் போல. அவ்வளவு எளிதாய் அடுத்த முறை சாவதில்லை. இறப்பை கடந்து வந்த முனிவன் மனநிலை.

    முதல் இரண்டு பந்துகள் குமார் வெளியே ஸ்விங் செய்தான். சீனிவாசன் அண்ணா, அதை அப்படியே விட, மூன்றாவது பந்து மிகச் சரியாக உள்ளே திரும்பி வந்த போது அண்ணா அதை சமாளிக்க பிட்சில் இறங்கினான். பந்து கால்வழியாய் நுழைந்து குச்சியை கழட்டியது. அண்ணா இறங்கிய கணமே ரமணிக்குத் தெரிந்தது விக்கெட் வீழப்போகிறதென்று.

    பந்து கால்வழியே நுழைந்த அந்த கணத்தில் கத்தினான்.

    “ நோ-பால் “

    கத்தினதெல்லாம் சரிதான். அந்த பதட்ட்த்தில் ’பொய்த்தடம்’ வைக்க மறந்ததுதான் துரதிர்ஸ்டம்.

    மைதானத்தின் ஓரத்தில் பசியோடு காத்திருந்த சண்டை யட்சி காற்றாய் உள்ளே வந்தது. ரமணிக்கு தன் தவறு புரிந்தது.

    “ யே உளத்துறாண்டா.. “ என்று கத்திய வார்த்தைக்கு பின்னான எதுவும் ரமணிக்கு செவி தாண்டவில்லை. அந்த காட்சிகள் வார்த்தையற்ற பிம்பமாய் கண் முன்னே ஓடிக்கொண்டிருந்தது. அடிவயிற்றில் எதுவோ சுரந்து சுரணையைத் தின்று கொண்டிருந்தது. ஒரு சிலந்தி உடம்பெல்லாம் தவழ்ந்து தனது பிரஞ்ஞையை உறிஞ்சிக்கொண்டிருந்தது போல தோன்றிற்று. தொண்டை கமிறி வரும் கண்ணீரை உள்ளே அனுப்ப வேண்டியிருந்தது. இருந்த இடத்திலே நின்று கொண்டு திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டிருந்தான்.

    “நோ- பால்னா, நோ-பால்தான், சொல்லியாச்சுல்ல.. நோ-பால் தான்.. காட்டெல்லாம் முடியாது.. ஒன்ஸ் டோல்டு நோ-பால்.. தட் இஸ்.. நோ-பால்.. நா பாத்தது.. நான் சொன்னது.. சொன்னது தான்.“ அவன் சொல், மனம், சில இந்திரியங்கள் அவன் முழுக்கட்டுப்பாட்டிலில்லை.

    செந்தில் உள்ளே குதித்து ஓடிவருவது சந்தோசமாய் இருந்தது. சண்டை ஒரு பத்து நிமிடங்கள் நீடித்தது. ரமணி அம்பயராக நிற்க கூடாது என்று சொல்லி வெளியேற்றி விடப்பட்டு அச்சுவை உள்ளே வர இருதரப்பினரும் சம்மதித்தனர்.

    மைதானத்திலிருந்து விளிம்பு வரை நடந்து வந்த போது, உலகத்தின் எந்த சத்தங்களும் மொன்னையாக்கப்பட்டு பெரிய அமைதி நிலவியது. வெளி மட்டுமல்ல, உள்ளுக்குள்ளும் அந்த மாபெரும் அமைதி சத்தம்.

    நோபால் – பிழைத்தலுக்கு பின், அதிகமான அநுபவத்தோடும், காற்றில்லாதவிட்த்தில் வைக்கப்பட்ட தீபம் போலவும் மனம் குவிய நம்பிக்கையோடு வருவதை எதிர்கொள்வது ஆயிரம் யானை பலம். நிகழ்கால அநுபவச் செறிவோடு இறந்தகால நிகழ்வுகளை எதிர்கொள்ளுதல், ஆபிஸில் வேலை பார்ப்பவனுக்கு ஐந்தாம் வகுப்பு தேர்வு போல்தானே.

    சீனி அண்ணாவுக்கு இரண்டாவது வாழ்க்கை. வாரண பலத்தோடு விளையாடினான். சீனி அண்ணா தனி ஆளாய் நின்று விளையாடி அந்த மேட்சு ஜெயித்தான்.

    இருட்டிய பின் வெளிச்சமற்ற அந்த தெருவில் வெற்றிவிழா. ஆட்டுக்கால் சூப்பு குடித்து அணி வெற்றியை கொண்டாடியது. ரமணிக்கு தனியாய் தனது ஈரமற்ற வெதுவெதுப்பான கைகோர்த்து அணைத்து நன்றி சொன்னான் சீனி அண்ணா.

    “ஸ்டார்டிங் ட்ரபிள்மா.. கொஞசம் பதட்டமா இருந்த டயத்தில காப்பாத்தினம்மா.. அந்த நோபால் மட்டும் இல்லைன்னா நம்ம கவிந்துருப்போம். தேங்க்ஸ்ம்மா. ”

    ரமணி அதற்குப் பின் அம்பயரிங்கிற்கும், மறைந்து குடிக்கும் ஆட்டுக்கால் சூப்பிற்கும் போவதேயில்லை. பொய்த்தடம் அவனிடமிருந்து குமாரின் கால்வழியே நுழைந்து கழன்ற குச்சி போல விழுந்து விட்டது.

    *

    ம்பயரிங் காலத்திற்கு முன்பான காலத்தில்,  சண்டையில்லாமல் முடியாத திருநெல்வேலி கல்யாணம் போல, மேட்சில் ஒரு சண்டையாவது  இருக்கும். தெருக் கிரிக்கெட்டுகள் கூட சண்டையோடுதான் நடந்திருக்கின்றன. அல்லது முடிந்திருக்கின்றன. சண்டைகள் அவசியம். கொஞ்சம் கிரிக்கெட். நிறைய சண்டை.

    பின்பு சண்டைகள் குறைய, பெரிய மேட்சுகளில் பேட்டிங் டீமிலிருந்து ஒரு அம்பயர் என்ற வழக்கம். அந்த நபர் எதிர் டீமால் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். சில நபர்களை அம்பயராக்குவதற்கு எந்த டீமும் ஓத்துக் கொள்ளாது.

    அப்படிப்பட்ட ஒரு நபர்தான் எங்கள் அணியின் செந்தில்.

    கிரிக்கெட் ஒரு ஜெண்டில்மேன் கேம் என்பதில் கொஞ்சம் கூட நம்பிக்கையில்லாதவன் செந்தில். எங்களூர் ரயில்வே கிரவுண்டு, மேட்டுப்பாளையம் கிரவுண்டு, எம்ஸ்பி திடல், மேலத்தெரு, வடக்கு மற்றும் தேர்த்தெரு, மொட்டை மாடி, பாப்பாத்தி மைதானம், ஆகியவற்றில் – விளையாடப்படும் கிரிக்கெட் ஜெண்டில்மேன் கேமாக இருக்க முடியாது என்று ஆழமாக எண்ணுபவன். கால்பந்தோ, பம்பரமோ, நொண்டிசிங்கியோ எதுவும் அவன் விளையாடாத வரைக்கும் அது ஜெண்டில்மேன் கேமாகா இருப்பதில் அவனுக்கு எந்தப் பிரச்சனையுமில்லை.

    அம்பயர் பதவியின் பலத்தை அவன் உணர்ந்திருந்தான். உணரவைத்தான். அவனால் எத்தனையோ மேட்சுகளில் எங்களுக்கு ஜெயம்.

    கொட்டை, கொட்டையாய் நடுக்குச்சி கழன்று விழும் எத்தனையோ பந்துகளை கூட அவன் நோபால் கொடுத்திருக்கிறான். எப்போதும் இந்த அழுகூணித்தனம் தேவையில்லை. சில பந்துவீச்சாளர்களிடமிருந்து, சில முக்கியமான விக்கெட்டுகளை மட்டும் காப்பாற்றிவிட்டால் போதும், ஆட்ட்த்தின் போக்கு மாறிவிடும்.

    இடம், பொருள், ஏவல் அறிந்து தனது அம்பயர் அட்டூழியங்களை, சாம, தான பேதமின்றி, தண்டத்தோடு செய்து எங்களது வெற்றிக்கு அருள்பாலித்தான்.

    அவனது கருத்த திருமேனியையும், வாயில் வரும் வண்டை வண்டையான திருவாய் மொழியையும் நம்பியே நாங்கள் நிறைய மேட்சில் ஜெயித்திருக்கிறோம். சில பெட்டிங் மேட்சிலும் பணம் சம்பாதித்திருக்கிறோம். ஆட்டுக்கால் சூப்பு, முட்டை போண்டா, சைவர்களுக்கு மசாலா தோசா, ஒரு படம் என மிக அதிகமான சம்பாத்தியத்தை எங்களுக்கு கொடுத்திருக்கிறது.

    அவனது முடிவை எதிர்த்து கேட்க வருபவர்களிடம் ஒரு கட்டத்திற்கு மேல் செந்தில் சட்டை அவிழ்த்து விட்டான் என்றால் அவ்வளவுதான், எதிர்த்த டீம் நேச நாடுகளுக்கு தூது அனுப்பி தங்களை பாதுகாத்து கொள்ள வேண்டி வரும். அதற்கு மேலும் அதிகமாக பேசுபவர்களை நோக்கி கத்தியபடியே முதலில் ரன்னர் ஸ்டெம்பை பிடுங்குபவன் அவனாகத்தானிருக்கும். அவன் அழிச்சாட்டியத்திற்கு மெல்ல மெல்ல எதிர்ப்பு கிளம்பியது. அவனது அழுகுணி அம்பயரிங்கிற்கு எதிராக மெல்ல புகை கிளம்பியது. நிறைய புகார்கள் வந்தன.

    மற்றவர்களை விட எங்கள் டீமே அவனை கண்டு பயப்பட ஆரம்பித்தது. அவனுக்கு எதிராக சில சமயம் நியாயம் சொல்லி எங்கள் அணியிலேயே நிறைய பேர் மூக்குடைப்பட்டார்கள். விரிவாக சொன்னால், இரண்டு பேருக்கு மூக்கும், ஒருவனுக்கு முதுகில் கீறலும், கபீருக்கு நகமும் பெயர்ந்தது, கொஞ்ச பேருக்கு பரம்பரை திட்டும் விழுந்தது.

    யாராயிருந்தாலும் தன்னைப் பற்றி பேசியவர்களை செந்தில் மைதானத்திற்குள்ளாகவோ, வெளியிலோ – நேரடியாகவோ, மறைமுகமாகவோ தாக்கிக் கொண்டேயிருந்தான்.

    இலட்சுமணன் மைதானத்தில் விளையாடும் போதும் முதல் ஸ்லிப்பிங்கில் நின்றபடி செந்தில் சொன்னது.  ’வெங்காயம் வாடையடிக்குதேடே.. வெங்காய சோப்பு போட்டு குளிப்பாங்களாடா..  வெங்காய நாற வாயோட குத்தம் வேற சொல்லறாங்கப்பா..’ –  இலட்சுமணன் அப்பா வெங்காய தரகு மண்டி வச்சிருந்தார். மறைமுகம்.

    ’என்னடே.. நீ பேர்ல மட்டும் குஞ்சா மணி இல்லடே.. பேருக்கு ஏத்த மாதிரி டாண்டான்னு வத்தி வைக்கேல்ல.. ஊரெல்லாம் போயி செந்தில் கள்ளன்னு மணியடிச்சிட்டு வந்திருக்கியேடே.. சரியான குஞசா மணிதாண்டே.. இன்னும் நிறைய ஆட்டுடே..’ – நேர்முகம். செந்திலுக்கு எதிராக எல்லா அணியிடமும் ஆதரவு திரட்டிக் கொண்டிருந்த குஞ்சா மணி டென்சானாகி அந்த மேட்சில் பதினாலு வொயிடு பால்கள் போட்டான்.

    ‘அறுத்த பயல்கிட்ட என்னடே பேச்சு’ என்று அழூகுணி அம்பயரிங்கின் போது வார்த்தை சொல்லிவிட கிட்டதட்ட மேலைத்தெரு முழுவதும் குவிந்து செந்திலை கும்மத் தயாராகின. மேலைத்தெரு பெரும்பாலும் இஸ்லாமிய நண்பர்கள். எப்படியோ எதோ சொல்லி ச்மாதானமாகி வெளிவந்தாலும் செந்தில் மன்னிப்பு கேட்கவேயில்லை. ’அறுத்த பயன்னு சொன்ன என்னடே தப்பு’ன்னு சண்டையின்போதே ஒரு இருபது தடவை சொல்லிவிட்டான்.

    நிறைய முறை சொல்லிவிட்ட்தாலோ என்னவோ ஒரு கட்ட்த்திற்கு மேல், அவர்களது காதிற்கு அது பழகிப் போய்விட்ட்து. வார்த்தை அதன் அர்த்தம் அறுந்து போய் உருகிப் போயிற்று. ரொம்ப நாளைக்கு அது ’அறுத்த பயக’ டீமாகத்தானிருந்த்து.

    இவ்வாறான நிறைய திருவிளையாடல்களுக்கு பிறகு, எங்களது அணியோடு எந்த அணியும், செந்தில் நடுவராயிருந்தால் விளையாடமாட்டோம் என்று சொல்லுமளவிற்கு வந்தது. எப்படியோ செந்திலை சமாதானம் செய்து அம்பயரிங்கிலிருந்து வெளியேற்றுவதற்குள் நாக்கு வெளியே வந்துவிட்ட்து.

    சதா கொந்தளிப்பும், துடிப்பும் அதனடியில் ஓடும் ஒரு பதைபதைப்புமாய் அவன் உலவிக்கொண்டிருந்தது ஏதோ ஒரு மெகா கூண்டுக்குள் சுடப்பட்ட காயத்தோடு திரியும் கழுகு போலிருந்தது.

    *

    ப்படிப்பட்ட செந்திலின் காலியிடத்தை அச்சு பூர்த்தி செய்ததை இயற்கையின் வரப்பிரசாதமாகத்தான் எங்களின் கிரிக்கெட் புலம் நோக்கியது. மைக்கேல் சார் கொடுத்த வெங்கட்ராகவன் தொப்பியா, சரியாக வராத பேட்டிங்கா, போட்டியற்ற ஒரு நாற்காலியில் தான் பிணைந்ததால் வந்த அதிசயமா.. எதுவோ ஓன்று அவனை ஒரு சுயம்புவான அம்பயராய் பிரகாசிக்க செய்தது.

    அம்பயர் என்பது அற வெளிப்பாடு. எப்போதும் நம்மை பார்க்க்கும் நீதி தேவதை போல. கண்ணைக் கட்டிக்கொண்டு தராசு சுமக்கும் தேவதைக்கும் அம்பயருக்கும் அதிக வித்தியாசமில்லை. ’என்னா சொன்னாலும் பெரிசு ஓழுங்காத்தான் சொல்லும்’ என்று நடந்து போகும் ஒரு பெரியவரின் வெளியை ஊர் எப்படி பார்க்கிறதோ அப்படியானது தான் அம்பயரிங்க். – அச்சு அப்படித்தான் இருந்தான்.

    அச்சுவிடம் ஏதோ எழுத்தில் சொல்ல முடியாத அறம் இருந்தது போல. ஒரு சில நாட்களுக்குப்பின் அவன் தனக்கு இடப்பட்ட கட்டளையாய் அம்பயரிங்கை அரவணைத்துக் கொண்டான். ஏதாவது ஒரு தேவதையோ, யட்சியோ அவன் கனவில் வந்து காதில் சொல்லிவிட்டு போயிருக்கலாம். ‘ நீ அம்பயராக கடவது என்று ‘

    சோதனை, விரிந்த கண், களத்திலிருந்தாலும் விழிப்புடன் இருத்தல், முடிவுகள் தன்னை தொடாத தூரத்தில் செயல், பிரபஞ்ச ஓழுங்கு. அவனே மைதானத்தின், பிரபஞ்சத்தின் மையம். அவனே ஆக்கமும் அழித்தலும்

    அச்சு அவன் ஊரிலிருந்த இறுதி கால கட்டங்களில் ரொம்ப பிசியான அம்பயராகியிருந்தான். எப்போதும் ஹிண்டு பேப்பர் மற்றும் விளையாட்டு பத்திரிக்கைகளின் சில கட்டுரைகளோடு திரிந்தான். சில மேட்சுகளுக்கு முன்னால் இரண்டு டீமையும் கூப்பிட்டு புது ரூல் சொல்லி க்ளாஸ் எடுக்கும் அளவுக்கு அவனது மரியாதை வளர்ந்திருந்தது.

    விடுமுறைக்கு சென்னைக்கு போகும்போதெல்லாம் சேப்பாக்கம் வளாகத்தை பார்த்த கதையை ஓவ்வொரு டீமுக்கும் சொல்லிவருவான். ஸ்கோர் கார்டு புதுமாதிரி என்ன வந்திருக்கிறது என்பதை அவன் தான் எங்களுக்கு எல்லாம் அறிமுகப்படுத்திக் கொண்டிருந்தான்.

    யானை, கடல், ரயில், கல்யாண மாமாவின் கர்ண மோட்சம் போல, அச்சுவின் கிரிக்கெட் கதையும் அலுப்பூட்டாதது. அடிவயிற்றில் அட்ரீனல் சுரக்க வைப்பது. எப்போதும் மனத்துள்ளல் அளிப்பது.  

    *

    ம்பயர் அச்சு அந்த ஊரிலிருந்து மாற்றாலாகி போனது எங்களூர் கிரிக்கெட் புலத்திற்கு ஈடுகட்ட் முடியாத இழப்பு.

    அச்சு போன சில தினங்களுக்கு – கூட்டணி காலத்தில் இடைப்பட்ட பிரதமர்கள் போல கொஞ்ச நாள் அம்பயரிங் செய்தார் நாராயணன். டீம் பெரிசுகள் அண்ணா என்றும், சிறுசுகள் மாம என்றும் அவரை அழைத்தனர்.  அது அவருக்கு முற்பெயர், அதாவது முன்னே சொல்வது, பிற்பெயர் [ பின்னால் சொல்வது]  ’தொடை சொறிஞ்சி  நானா ‘

    ’தொடை சொறிஞ்சி நாராயணன்’ பதவிக்காலம் அவ்வளவு பெரியதாக இல்லை. காதில் மர்பி ட்ரான்ஸ்பார்மரொடு திரியும் நாராயணன், எங்களூர் திவ்ய செளந்திர்ராச பெருமாள் போல அலங்காரமும்,  திரிநேகஸ்வர சிவன்போல தனிவாழ்க்கையும் வாழ்பவர்.

    தெருக்கடைசி திண்ணையில் உட்கார்ந்து வயதான கிழங்களோடு அவர்கள் கூட்ட்த்தில் இளைய பெருமாளாய் வீட்டிருந்து கிரிக்கெட் கேட்பதே (கிரிக்கெட் இல்லாத காலத்தில் ரேடியோ) நாராயணன் நம்பியின் முழுநேர வேலை.

    அரசு ஓய்வுபெற்ற அம்மா, அப்பா. ஊட்டி வளர்த்த பிள்ளைக்கு எப்போதும் ஓய்வு. உட்கார்ந்து திங்க வீடு, இலையில் நிரம்ப விழுமளவிற்கு ஒத்திகை நிலம்.

    வேலைக்கு போவது எவ்வளவு பெரிய பாபம், அதுவும் ஊர் தாண்டி வேலைக்கு போக்க் கூடாதென்று நிறைய சாஸ்திரங்களே சொல்லியிருக்கும்போது அதை உதாசீனப்படுத்துவது ஊருக்கே நல்லதல்ல என்கிற தத்துவத்தை சிரமேற்கொண்டு தன் கால அட்டவணையை தயார்படுத்திக் கொண்டவர்.

    திருப்பள்ளி எழுச்சி, காலைக்கடன்கள் ( நேரமிருந்தால் மட்டும்), காலைச்சாப்பாடு, திண்ணையடைதல், மதியச்சாப்பாடு, திண்ணையடைதல், அங்கயே பொன்னாமாமி கேண்டினிலிருந்து வரும் பஞ்சி மற்றும் சுக்கு காபி, சாயரட்சை கோவில் தரிசனம் (மாமிகளிடம் பேச்சு, குறை தீர்க்கும் படலம்) வீட்டைதல், இரவுச்சாப்பாடு, ரேடியோ கேட்டபடி தூங்கல், வாரமிரு முறை எண்ணெய் தேய்த்து குளித்தல், அதற்கு முன் துரிய ஸ்கலிதம், மாதமிரு முறை சினிமா, எப்போதும் ரேடியோ, அவ்வப்போது ஹிண்டு பேப்பர், எப்போதும் பேசத்தயாராயிருக்கும் கிரிக்கெட்.

    நேரத்தை கொல்வது எவ்வளவு பெரிய வேலை. அதை மிக இலகுவாய், எளிதாய் செய்து கொண்டிருந்த நாராயணன் நம்பியின் அம்ப்யர் காலம் – எங்களூர் கிரிக்கெட்டின் ஒரு கற்காலமாய் போனது துரதிருஸ்டம்தான்.

    தூக்கிக்கட்டிய கைலியோடு, தொடை சொறிஞ்சுகொண்டே நாராயணன் நம்பி செய்யும் அம்பயரிங் ஏன் பிரபலமாகவில்லை என்பது ஆராய்ச்சிக்குரிய விடயம். அவரால் ஒரு முழு மேட்சுக்கு நிற்க முடியாது. அவர் திடீரென்று கிளம்பி விட்டால் இன்னொரு அம்பயர் அமையும் வரை மேட்சு நிற்க வேண்டும். அவரால் பேசாமலும் நிற்க முடியாது.

    ரேடியோ கேட்டு கமெண்ட்ரி சொல்வது போல அவரே பேசிக்கொண்டிருப்பார்.

    அவர் அம்பயரிங் செய்த்தை விட வர்ணனையாளராகவே வாழ்ந்தார். ரேடியோ போல ஏதோ குரல் அவருக்கு கேட்டுக்கொண்டேயிருக்க வேண்டும். இல்லை அவர் பேசிக்கொண்டேயிருக்க வேண்டும். மேட்சு முழுக்க குத்தல் பேச்சு, கமெண்ட்ரி என்று பேசிக்கொண்டேயிருப்பார் நானா.

    ’ஏ சரவணா இந்த ஸ்பீடு போடறதுக்கு ஏண்டா இவ்வளவு தூரம் ஓடி வர்ற.. என் பின்னாடி நின்னே போடேண்டா.. இன்னிக்கு ஆத்தில பொங்கலா.. தூங்கி வழியறயேடா.. ஒரு ஜமக்காளம் போடவா.. ‘

    ‘ ஏலே ரமணி மட்டை போடலாம்.. கட்டை போடலாம்.. டீமுக்கு மொட்டை போடதலா..’

    ‘ கிரிக்கெட் ஆடச் சொன்னா டேன்ஸ் ஆடறயேடா..’ 

    அழகான ஓவல் வடிவத்தில் குவிந்து நல்ல கட்டாந்தரையும், சிலயிடங்களில் உட்கார்ந்து மக்கள் பார்க்கும் வசதியும் கொண்ட ரயில்வே மைதானத்தை லாட்ர்ஸ் மைதானம் என்பார். பச்சை பசேலென தென்னை மரங்களோடு கூடி எப்போதும் காற்று வீசிக் கொண்டிருக்கும் எம்ஸ்பி திடலை சிட்னி மைதானம் என்பார். தொலைக்காட்சிகளில் இப்போதெல்லாம் அதைப் பார்க்கும்போதே நாராயணன் நம்பியின் பெயர் பொருத்தம் மெய்சிலிரிக்க வைக்கிறது.

    சின்ன பசங்களை கண்டால் அவர் பேசும் மொழியே வித்தியாசமடைந்து விடும். பச்சை, பச்சையாய் பேசுவது. ரன்னருக்கு நிற்கிற பையன்களின் அக்கா, தங்கை, அம்மாக்களின் குசலம் விசாரிப்பது, வெள்ளையாய் கொழுக் மொழுக்கென்று நிற்கிற எல்லா பையன்களையும், அளவுக்கதிகமாய் அரவணைத்து ஊக்குவிப்பது போன்ற செயல்களால் ரன்னர்கள் அம்பயரை தாண்டி பாதுகாப்பான தூரத்திலே நிற்க வேண்டியிருந்த்து.

    எல்லாவற்றிற்கும் உச்சமாய் வில்லியம் விளையாட்டாய் கேட்ட கேள்வி வினையாய் முடிந்தது.

    “ஏந் அண்ணாத்த, இப்படி சாரம் போட்டு அவஸ்தைப்படறதுக்கு ஒரு பேண்டு மாட்டலாம்ல.. “

    “ ஆமாண்டே.. பேண்டுக்கு பதிலா ஒரு ஃபாதர் (பாதிரியார்) அங்கி வாங்கி கொடுத்திடுடே.. வாங்கி மாட்டிகிட்டா ஊரு உலகத்துக்கு தெரியுமா, அங்கிகுள்ள கைவிட்டு நோண்டிக்கலாம் பாரு.. இப்படி லோகமே பாக்கற மாதிரி தொடை தடவ வேண்டாம்ல.. “

    ஏற்கனவே தோற்றுப் போகும் நிலையிலிருந்த மேட்டுப்பட்டி அன்பர்கள், இதை சாக்காய் வைத்து துள்ளிக் குதித்து கெட்ட வார்த்தைகள் சொல்லி நானாவின் பரம்பரையையே நாறடித்துவிட்டார்கள். நானாவின் தகப்பனார் விடும் தில தர்ப்பணத்தில் மூன்று தலைமுறைகளும் மூக்கை பிடித்திருக்கும்.

    ”ஏல. நானா.. தா??. “ என்று ஆரம்பிக்கும் அந்த ஸகஸ்ரநாம அர்ச்சனையோடு தொடை சொறிஞ்சு நானாவின் உன்னதமான அம்பயரிங் வாழ்க்கை முடிவுக்கு வந்தது.

    *

    ல்லோராலும் நிராகரிக்கப்பட்ட செந்தில், எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட அச்சு, துரத்தப்பட்ட நானாவிற்கு பின்பு ரமணிக்கு அந்த மூட்கீரிடம் வந்த்து. ஸ்பின்னிற்கு பதிலாக வெயிடாகவும், இரண்டு ரன்களை கப்பையின் வழியே நாலாகவும் மாற்றிக்கொண்டிருந்த ரமணிக்கு அந்த பொறுப்பை கொடுத்து, ஊக்கம் கொடுத்து அவன் பின்னால் செயல்பட்டான் செந்தில்.

    கழுகின் முகமாய் கோழி களத்தில்.

    ரமணிக்கு செந்தில் நிறைய டிப்ஸீகளை சொல்லிக் கொடுத்தான். அம்பயரின் முக்கியமான வேலை –  நல்ல பாலை நோபாலாக்குவது. செந்தில் ரமணிக்கு அதில் குரு தீட்சை அளித்தான்.

    ரயில்வே டீமில் குமார், ரமணன் பந்துகள் அதி பயங்கரமாய் சுழலும். அதை இறங்கி ஆடாவிட்டால் ரொம்ப ஆபத்து. இறங்கி ஆடினாலும் ஸ்டெம்பிங்கோ, எல்பிக்கோ கண்டிப்பான வாய்ப்புகள் உண்டு. மிக கவனமாய் ஆன் – டிரைவ் செய்ய வேண்டிய பந்துகள் அவை. அவன் பந்தின் வேகத்தையும், உயரத்தையும் மாற்றி மாற்றி போடுவான். பில்டர்களையும் லாவாகமாய் நிற்க வைத்து பேட்ஸ்மேன்களை பயமுறுத்தி விடுவான். புதுசாய் வந்த பேட்ஸ்மேன் ஒரு சில பந்துகளை தாக்கு பிடித்தபின்பு தான் ஓரளவு நிம்மதி பெருமூச்சு விடமுடியும்.

    மேலத்தெரு மஜீத்தின் பந்துகள் வெளியே போவது மாதிரி தலை காட்டிவிட்டு, டுபுக்கென பின் காலால் பாயும் நாய் போல ஸ்டெம்பை நோக்கி திரும்பும். கடைசி நிமிட்த்தில் வேகமாய் திரும்பும் பந்துகளை பதட்ட்த்தோடு தொடும் பேட்ஸ்மேனின் ஆயுட்காலம் அங்கே நிற்கிற அப்துலால் முடித்து வைக்கப்படும். விழுந்து, விழுந்து எப்படியாவது கேட்ச் பிடித்து விடுகிற அவனை திட்டுக்கொண்டே வரும் பேட்ஸ்மேன்கள் சொல்வது .. “ சரியான ரப்பர் தா..டே.. அம்மை இவனை குரங்குக்கு பெத்தாளொ.. “

    மேட்டுப்பட்டி கிற்ஸ்டோபரின் புல்டாஸ் பந்தை,  காற்றிலே சுழற்றி வீசப்படும் பந்தை, விக்கெட் கீப்பர் கைக்கு போகும் என்று நினைத்து பேட்ஸ்மேன் அதற்கு ஸ்டைலாய் வழிவிடும் போது, அது ஸ்டெம்பின் பைல்ஸை  கழற்றும். அந்த ஒரு நல்ல ப்ந்துக்காக அவன் நிறைய வொயிட் பால்கள் போடுவான். எந்த பந்து குச்சியை கழற்றும் என தெரியாது.

    இப்படியான நல்ல, அபாயமான பந்தின் தருணங்களில் ’நோ-பால் என்று கத்தியபடி ஒரு தட்த்தை காட்ட வேண்டும். அந்த தட்த்தை அவன் கேட்கும் முன்னரே யாருக்கும் தெரியாமலோ அல்லது அவன் கேட்கும் போது போட்டுக்காட்டியோ உருவாக்கிவிட வேண்டும். சொன்னதை எதாவது சொல்லி சாதித்துவிட வேண்டும். இடம், பொருள், ஏவல் முக்கியம். அந்த ’பொய்த்தடம்’ பற்றி கேள்விகள் சூழ எதிரிகள் வந்தால் உள்ளே குதிப்பான் செந்தில், சூர சம்காரத்திற்காக.

    ரமணியின் பொய்த்தடம் அந்த டிசம்பர் 7ம் தேதி மேட்சில் கழன்று விழுந்தது. அணிக்கு வெற்றிதான். அழிச்சாட்டியம் பண்ணி சாதித்த்திற்கு அணி நண்பர்கள் எல்லோரும் பாராட்ட்த்தான் செய்தார்கள். மதிப்பு கூட்த்தான் செய்த்து.

    சடக்கென்று ஏதோ ஒரு பூதம் தன் மீது ஏறி உட்கார்ந்து அழுத்தியதாய் மனக்கிலேசம்.

    எல்லோரும் தன்னை கையும், களவுமாய் பிடித்த்தால் வந்த அவமானமா. இது எல்லா அணிகளிலும் தெரிந்தே நடக்கிற உளத்தல்தான் எனினும், தன்னை ஏன் அதிகம் பாதித்த்து என்பதை பார்க்க, அதில் தனக்கு முன்பிருந்தே அந்த செயலில் அக ஓட்டுதல் இல்லை என்பது தெரிந்தது.

    ’நாம இல்லைன்னா இன்னொருத்தன் இருந்து இந்த நோபாலை கொடுத்திருப்பான், இதெல்லாம் சகஜம் ‘ என்று எத்தனையோ சாந்தி யஞ்ஞங்கள் செய்தாலும்  – ஓயாத மன அலையின் பேரிரைச்சல்.

    ‘ப்ச. செய்திருக்க வேண்டாம் தானே. வேறு யாரேனும் செய்யட்டுமே உனக்கென்ன.. வெற்றியை விட உனக்கு உன் அகம் முக்கியமல்லவா.. ’  அதே அலைவரிசையில் மனக்குரல் சலிக்காமல் அர்ச்சனை செய்து கொண்டிருந்தது.

    பொய்த்தடம் விழுந்த இட்த்தில் ஒரு பெரிய ஆலமரத்தின் குழி போல தனக்குள் அமைதி ஏற்பட்டிருந்தது. புயலின் மையத்தின் அமைதி போல, பொய்யின் மையத்தில் சுழலில் சுருண்டுவிடுவதுண்டு. ரமணியால் அந்த நோபாலுக்கு பிறகு எங்குமே பொய் சொல்ல முடியவில்லை.

    *

    சீனி அண்ணாவிற்கு நிறைய முடி கொட்டிருந்தது. எந்த உணர்ச்சியையும் மிகைப்படுத்தாத அண்ணா, என்னை சந்தித்ததில் ரொம்பவே மகிழ்ச்சியாகவேயிருந்தான். சொந்த ஊரிலே வாழ்க்கை அமைத்துக் கொண்ட பாக்கியவான்களில் அவனும் ஓருவன்.

    அதுவும் ரயில்வே கிரிக்கெட் மைதானத்திலே. ஆமாம். இப்போது அந்த மைதானத்தின் பெரும்பகுதியில் கான்கீரீட் கட்டிடங்கள் எழுந்து நிற்கின்றன. மெட்ரோ போல் இல்லாமல் வெறும் இரண்டு அடுக்கு கட்டிடங்களாகவே நின்றது கொஞ்சம் ஆசுவாசம். மைதானத்திற்கு பக்கத்திலிருந்த சுடுகாடும் இப்போது ரொம்பவே தள்ளிப்போயிருந்தது. மனித வாழ்க்கை பெருக்கும்போது பிணங்கள் எரிக்கும் நிலங்களின் மதிப்பும் கூட்த்தானே செய்யும்.

    அண்ணாவிற்கு ஏதோ அரசாங்க உத்தியோகம். ஒரு டூவீலர். சூ தேவையில்லாது  செருப்பு மட்டுமே கொண்டு நடத்தி முடித்துவிடுகிற ஒரு சிறு நகர வாழ்க்கை. ஆச்சிக்கு நிறையவே கூன் விழுந்திருந்தது.

    “ என்னது.. ரமாக்குட்டி பிள்ளையா.. பாத்து பல நாளாச்சுதேப்பா.. அம்மை நல்லாயிருக்காளா..“ ஆச்சி கேட்டுக்கொண்டே போனாள். நான் சொல்கிற பதில்கள் எதுவும் தேவையற்ற உலகத்தில் அவளிருந்தாள். அண்ணா அவளுக்கு மிசின் எடுத்து கொடுத்து காதில் வைத்துக் கொள்ள சைகையால் சொன்னான்.

    மறுபடியும் கேட்ட கேள்விகளையே கேட்டு பதில் வாங்கிக்கொண்டாள்.

    “ கல்யாணத்துக்கு கூட பத்திரிக்கை அனுப்பாம பண்ணிட்டேகளேப்பா.. “ குறை பட்டுக்கொண்டாள்.

    ” ஆச்சி.. சொல்ற நிலமையிலே கல்யாணமாகல பாத்துக்க.. வடக்கு பொண்ணு.. அம்மைக்கு முழுசா சம்மதிமில்லைல்லா.. சுருக்கமா.. பண்ணவேண்டி.. அண்ணமாருங்க செஞ்சு வைச்சது.. “

    ”என்னயிருந்தா.. என்னப்பா.. மனுசாளுக்குத்தானப்பா வாக்கபடுதோம்.. சீக்கிரம் குழந்தை ஓண்ண பெத்துக் கொடுப்பா.. உங்கம்மை பாவம்பா.. அதுக்கு பீ, மூத்திரமள்ள முத ஆளா நிப்பாப்பா.. கூறுகெட்ட குப்பச்சி.. வாய்தான் அதுக்கு பெரிசு.. குழந்தையை மடில எறிஞ்சா  சிரிச்சிட்டேல்ல நாங்க அழுவோம்.. “

    அதை சொல்லியபடியே ஆச்சி தனக்குள்ளே அழ் ஆரம்பித்தாள். சத்தம் வராத அழுகை. தாரை தாரையாய் கண்ணீர் வர ஆரம்பித்தது. சீனி அண்ணாவிற்கு ரொம்ப சங்கடமாயிருந்திருக்க வேண்டும்.

    “ யே.. அம்மா.. ரொம்ப நாள் கழிச்சு வந்தவண்ட்டயும் ஒப்பாரி ஆரம்பிசிட்டயா.. “ அவன் இயல்பை மீறிய சத்தம். கத்தல். பதட்டம். இயலாமை.. இருவருக்கும் ரொம்ப நாள் தொடர்ந்து கொண்டிருக்கிற ஆதங்கத்தில், உரையாடலின் தொடர்ச்சியான குரல்.

    சண்டை  யட்சி வீட்டிக்குள்ளே மூலையில் உட்கார்ந்திருப்பது போலயிருந்தது.

    ஆச்சியிடம் சொல்லிவிட்டு வெளியே வந்த போது, அண்ணா மனைவியின் குரல் மேல்மாடியிலிருந்து கேட்டுக்கொண்டிருந்தது. அண்ணா மனைவி மல்லிகா அக்கா டீச்சர். அரசாங்க பள்ளியில் டீச்சர். பெருத்த சரீரம். டியுசன் வகுப்பில் மட்டும் பெருத்த சாரீரம். கண்டிப்பான டீச்சர். இருபது வருட தாம்பத்தியம். மழலை சொல் கேளாத இல்லம். ஆச்சியின் கண்ணீராய்.

    “அண்ணே, அக்காகிட்ட சொல்லியிருங்க.. நான் இன்னிக்கு ராவே கிளம்பறேன்.. சென்னைல செந்தில, அச்சுவா பாத்துட்டு போலாம்னு ஒரு ஐடியா.. இருக்கு.. “

    அண்ணா பேசாமல் கூடவே நடந்து வந்தான். எல்லாயிடமும் கட்டிடங்களான அந்த பகுதியின் நடுவிலும் சின்னதாய் ஒரு கிரவுண்டு இருந்தது. சிறுவர்கள் சைக்கிள் ஓட்டிக்கொண்டு, சின்னதான கிரிக்கெட் விளையாடிக்கொண்டு இருந்தனர்.

    அண்ணா அந்த மைதானத்தின் நடுவில் நின்று மறுபடியும் சுத்தி பார்த்தான். அவன் தன்னை பின் நோக்கி சுழற்றிக் கொள்கிறானா, காலச்சக்கிரத்தில். அந்த இடம் பழைய மைதானத்தின் எந்த இடமாக இருந்திருக்கும் என்று என்னால் கணிக்க முடியவில்லை. அண்ணாவிற்கு அது தெரிந்திருக்கலாம்.

    ரமணியை பார்த்து சிரித்தான். ரமணியும் அவனைப் பார்த்து சிரித்தான். அந்தக் கேள்வி அவனுக்குள்ளே குதித்துக் கொண்டெயிருந்தது. கேட்கலாமா ? கூடாதா ? அவனை அறியாமலே கேள்வி ஒரு இன் – சுவிங்கர் பெளன்சர் போல எழும்பி வந்தது .

    “ ஏண்ணே, என்னன்னே பிரச்சனை ? “

    அண்ணாவிற்கு புரிந்தது. பதில் சொல்ல விருப்பமின்றி தன்னை காலச்சக்கரத்திற்குள் புகுத்திக் கொண்டான் போல. நான் கேட்டிருக்க கூடாதோ ?

    ஒரு சில தப்படிகள் மெளனமாக நகர்ந்தபின், தலையை உயர்த்தி அண்ணா சொன்னான்..

    “  நோ-பால் கொடுக்கறதுக்கு யாருமேயில்லடா.. “

    சொல்லிவிட்டு என் கைகளை இறுக்கி அணைத்து கொண்டார். நான் எதிர்பார்க்காத சிரிப்பை, அவனே இதுவரை சிரிக்காத சிரிப்பை சத்தமிட்டான்.

    கிளவுசில்லாமலே அவன் கை நிறைய வேர்த்திருந்தது.

    புகைப்படத்துக்கு நன்றி:

     http://www.leadersquest.org/cms/wp-content/uploads/Ruralvisit3.jpg#.UG1mHphhwqw

    Share