Tag: முல்லை அமுதன்

  • மயிலிறகு!

     

    மேசையில்
    கண்டாடிக் குவளையை
    வைத்தேன்..
    முன்னால் இருந்தவள்
    மௌனங்களை
    நிரப்பிக்கொண்டாள்.
    வெற்றுத்தாளை
    விரித்து வைத்தேன்.
    பூக்களை
    வரைந்து வைத்தாள்.
    வாசிக்கவென
    நூலைத் திறந்தேன்..
    மயிலிறகாய் அவள்
    ஏதோ சொன்னாள்.
    வாழ்வைத் தொடங்கலாம்
    என
    நாளிடம் கேட்டேன்..
    அவளின்
    கோபம் தெரிந்தது..
    முகம் பார்க்க
    முடியாத
    தவிப்பில்
    கீழிறங்கிய கண்கள்
    அவளின்
    தாலியில் வந்து
    குத்திட்டு நின்றது.
    முல்லைஅமுதன்
    27/06/2017

    Share
  • யாரோ ஒருத்தி

     

    ஒரு கணப்பொழுதெனினும்
    பயம் பற்றிய சிந்தனை
    வந்து போகவே செய்யும்.
    அர்ச்சகரை முறைத்துப் பார்க்கையில்,
    முகச் சவரம் செய்கையில் அந்தக் கத்திக்கு…
    தொடர்ந்துப் பயணத்தில்
    யாரோ ஒருத்தி
    சிலிர்த்துவிட்டுப் போகையில்…
    நடு வீதியில் மகிழூர்தி
    முரண்டுபிடிக்கையில்…
    கதவு திறந்து
    காலணியைக் கழற்றுகையில்
    அடுக்களையில்
    கோபத்தில்
    பாத்திரத்தை உருட்டும் மனைவியிடம்…
    இன்னும் ..இன்னும்
    பயம் சொல்லி வருவதில்லை..
    பிதாவே!
    உனது பயமும் நாம் அறிவோம்..
    மன்னித்தருள்கிறோம்..
    மறுபிறப்பில்
    என்னைப்போலவே பிறப்பீராக…
    முல்லைஅமுதன்

     

     

    Share
  • விடியலை நோக்கி

    முல்லைஅமுதன்

     

     

    வானத்தை மழைக்காக

    நிமிர்ந்து பார்த்த ஒரு காலத்தில்

    உணவு போட்டது ஒரு விமானம்.

    பிறிதொரு நாளில்

    சுற்றிவளைப்பு நடந்த மாலைப்பொழுதில்

    குண்டு போட்டது.

    நண்பனும் மடிந்தான்.

    விமானம்

    அமைச்சரை,

    நாட்டின் தலைவரை

    அழைத்துவந்த

    விமானம் என

    அவன்

    அடையாளம் காட்டினான்.

    விமானத்தில்

    வந்தவர்கள்

    நின்றவர்களுடன்

    ஊருசனம்

    மடியும் வரை

    நின்றே இருந்தனர்.

    இன்றுவரை

    இனம்

    அழியவிட்ட விமானம்

    மீண்டும் வரலாம்.

    கைகள்-

    துருதுருத்தபடி

    கற்களுடன் காத்தே நிற்கிறது.

     

    Share
  • நூல்

    -முல்லை அமுதன்

    ‘அப்பா!’

    கூப்பிட்ட தொனி கோபமா அல்லது அப்பாவின் இயலாமை மீதான கழிவிரக்கமா?

    மௌனமாகத் திரும்பினேன்.

    விழிகளை அகலத்திறந்து அவளைப் பார்க்கையில்..

    என் கேள்வியின் அர்த்தம் பார்வையில் தெரிந்திருக்கவேண்டும்.

    சொன்னாள்.

    ‘ஏனப்பா..உங்களைப் போல நானும் எழுத வேண்டும்…என்னை என் பாட்டில் விட்டுவிடுங்களேன்’

    அதற்கு..?

    அருகில் வந்து அமர்ந்தேன்.அவள் ஏதோ சொல்ல நினைக்கிறாள்.

     சொல்லட்டுமே. அவளின் குரல் வரட்டுமே.

    எத்தனை நாள் பூட்டிவைத்திருக்கும் கேள்வியும் அது எனில் கேட்டுவிட்டுப்போகட்டுமே.

    உங்கள் விருப்பப்படியே படித்தேன். பட்டமும் பெற்றாயிற்று. உங்கள் விருப்பப்படியே நூல் எழுதியும் தந்தேன். போதுமே…நாம் வாழும் சூழலினைப் பாருங்கள். எப்படி தெளிவாகச் சிந்திக்கிறார்கள்; செயல்படுகிறார்கள். நூலை வாங்க நிறுவனம்..வாசிக்கவென வாசகர்கள்…நாம் காணும் அனைவரின் கைகளைப் பாருங்கள்…ஏதாவது வாங்கி வாசித்தபடியே நிற்கிறார்கள். வயது வித்தியாசம் என்றிலை..மடிக்கணினி, கைத்தொலைபேசி, கைக்கடக்கமான கின்டில் என…அவர்களின் உலகம் தனி.

    நீங்கள் சொல்லும் உங்களின் உலகம் எப்படி என்று சொல்லுங்கள். உங்களைப் பார்க்கவே பரிதாபமாக இருக்கும். நண்பர்களும் சொல்கிறார்கள்…உங்களின் உலகம் வேறு…வாசிக்கும் மக்கள் தொகை குறைவு…அதற்குள் போட்டி..பொறாமை…மற்றவர்களின் வளர்ச்சியில் மூக்கு நுழைத்துத் தட்டிப்பறித்தல் அல்லது இல்லாமல் ஒழித்தல்… ஏனப்பா?

    சரி விடுங்கள்..உங்களுக்கு ஆத்ம திருப்தி என்று தப்பிவிடுகின்றீர்கள். காலம் ஒருநாள் திரும்பும் என்பதும் சரி என்றே வைத்துக்கொள்ளுங்கள். பிறகு நீங்கள் இருப்பீர்களா?

    உங்களின் நூல்கள் அப்படியே அச்சிட்டு வீட்டில் தூங்குகின்றனவே..எனது நூலை வெளியீடு செய்தீர்கள். எத்தனை பேர் வாங்கினார்கள்? உங்கள் மனச்சாட்சியினைத் தொட்டு சொல்லுங்கள். இலவசமாக வாங்கிச் சென்றவர்கள் எத்தனை பேர்! நீங்களே சொல்கிறீர்கள்? இதெல்லாம் கடன் திருப்பிக்கொடுக்கவேண்டும் என்று..பிறகு தேவையா? ஏன் உங்கட சனம் இப்படி?

    நாட்டுக்கு என்றும் தப்பிவிடுகிறீர்கள். எல்லாரும் மறந்திருக்க நீங்கள் மட்டும்…சொல்லுங்கள் அப்பா! எல்லாரும் இப்படித் தப்பிவிடுவதனால் தான் எல்லாமே தோல்வி..தோல்வி மனப்பான்மை  தான் எங்களையும் இப்ப அழிக்கிறது.

    வேண்டாம்..விட்டுவிடுங்கள். போலியாய் வாழ்வதில் பலன் இல்லை. உங்களுக்காவேனும் வாழுங்கள். போலிகளுடன் வாழ்கிறோம் என்பதை உணருங்கள்.

    வாழலாம்..

    மகள் சொல்லிவிட்டுத் திரும்பி பார்க்காமலேயே உள்ளே சென்றாள்.

    எச்சிலை என் முகத்தில் எறிந்து செல்கிறாளா?

    Share
  • காற்றின் அலகுகள்

    முல்லைஅமுதன்

     

    காற்று
    தன் அலகுகளால்
    தலையினை
    துளைத்தபடி
    எதையோ தேடியது.
    கிடைத்ததை சப்பி தின்று
    தூர எறிந்தது.
    அவைகள் சுவரில் ஒட்டிக்கொண்டது
    என் கவிதைகளாய்.
    மீதமிருத்த உடலை
    என்ன செய்யலாம் என்று தீர்மானித்த பொழுதின் முடிவாய்
    கட்டித் தொங்கவிட்டு
    தற்கொலை என்றெழுதியது.
    எனி
    கவிதை எழுதாபொழுதுகள்
    அவர்களுக்காய் விடியும்.

    Share
  • செல்வி கார்த்திகா மகேந்திரனின் நூல் அறிமுகமும் இன்னிசை நிகழ்வும்

    முல்லை அமுதன்

    as1

    “விதந்தகு கோடி இன்னல்
    விளைத்தெனை அழித்திட்டாலும்
    சுதந்திரதேவி! நின்னைத்
    தொழுதிடல் மறக்கிலேனே…”

    என்று பாடிய விடுதலை மகத்துவத்தின் யாசகனான மகாகவிஞன் சுப்ரமணிய பாரதியின் வாழ்க்கைப் பதிவையும், ஏனைய பல இசைமேதைகளின் பதிவுகளையும் கொண்ட ‘Subramanya Bharathi and other legends of Carnatic music’ எனும் நூல் வெளியீடு கடந்த 22.10.2016 சனிக்கிழமை அன்று மண்டபம் நிறைந்த ஆர்வலர்கள் முன்னிலையில் இடையிடையே நூலாசிரியரின் இன்னிசைச் சமர்ப்பணத்துடன் மிக நேர்த்தியாக நடந்தேறியது.

    வரவேற்புரைகளும், மனமார்ந்த வாழ்த்துரைகளும், ஆர்வலர்களின் சிறப்பரைகளும், சிறுவர்களின் கண்ணுக்கினிய நடனங்களுமாக, அவசியமற்ற ஆடம்பரங்கள் இல்லாது தமிழ் மரபுகளுக்கேற்ப ஒழுங்கமைக்கப்பட்டிருந்த இந் நிகழ்வு மனதிற்கு இதமாகவும் எம் இளைய தலைமுறைக்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டாகவும் அமைந்திருந்தது.

    as

    நூலாசிரியர் செல்வி கார்த்திகா மகேந்திரனதும்; பைந்தமிழ்க்காவலரும் கார்த்திகாவின்; தந்தையும், நல்வழிகாட்டியுமான திரு மகேந்திரனதும் நன்றியுரைகளுடன் இந்நிகழ்வு இனிதாக நிறைவு பெற்றது.

    காலத்தின் கோலத்தால் சிதறுண்டு திசைமாறி உருமாறி அடைளாளங்களைத் தொலைத்து விடுவோமோ என்று கலங்கி நிற்கும் வேளையில் இதுபோன்ற ஆக்கங்களும் நிகழ்வுகளும் அகத்தியமாகின்றன.

    நாம் அகதிகளாகப் பிறக்கவில்லை!.
    அருமை பெருமையாக வாழ்ந்தவர்கள்!!.

    எம் மொழியின் ஒப்பற்ற சிறப்புகளையும், எம்மினத்தின் கலை, கலாச்சார, பண்பாட்டு விழுமியங்களையும் அவற்றின் பெருமைகளையும் எம் குழந்தைகளுக்குச் சொல்லித்தரவேண்டும். அவர்கள் நாளை தலை நிமிர்ந்து தமிழராக வாழ நாம் வழிவகுக்க வேண்டும். ஆங்கில மொழியில் இந்நூல் அமைந்திருந்தாலும் எளிய நடையில் அழகாக வடிவமைக்கப்பட்டு வாசகரை வாசிக்கத் தூண்டும் வகையில் அமைந்துள்ளது. பல இளைய தலைமுறையினர் இந்நூலை ஆர்வத்துடன் வாசித்துப் பலனடைவார்கள் என்று நம்புகின்றேன்.

    செல்வி கார்த்திகா இரசாயனத்துறையில் தன் பல்கலைக்கழகப் பட்டப்படிப்பைத் தொடரும் அதேவேளையில் தன் இசைப்பணியை Ilford பகுதியில் சனிக்கிழமைகளில் நடைபெறும் தமிழ்க் கல்விக்கூடத்தில் ஆற்றிவருவது எமக்கு மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் உணர்கின்றோம். செல்வி கார்த்திகாவுக்கும் அவர் பெற்றோருக்கும் எம் கல்விக்கூடத்தின் அனைத்து ஆசிரியர்கள், நிர்வாகிகள், மாணவர்கள், பெற்றோர் சார்பிலும் மனம் நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்;.

    வாழ்த்துவது
    திருமதி சாந்திகுமாரன்.
    (அதிபர்.தமிழ் கல்விக் கூடம் எசெக்ஸ்)

    Share
  • அம்மாவின் கண்கள் ;ஒரு பார்வை

    முல்லை அமுதன்

    342fd350-bbce-4174-bd96-58e46a2514bc

    தமிழின்  வரப்பிரசாதம்  தமிழர்  வாழும்  பரப்பெல்லை  விரிவுபட்டுள்ளது.  இன முரண்பாடு உள்ளக  வெளியக இடப்பெயர்வுகளை  அதிகமான  மக்களை பெயர்த்திருக்கிறது  அல்லது வேரோடு  பிடுங்கி  எறிந்திருக்கிறது. ஆதலினால் மக்களின்  பரப்பளவின்  அதிகமும் அதிகமாக  அவர்களுக்கிடையேயான  மொழி வளம் ஆளுமை கற்றுக்கொள்ளும் வல்லமை கல்வியின்  மேலோங்கிய  பயிற்சி கைகளுக்குள்  உலகையே  கொண்டு வரும்  கணினியியல் நெறிகளின்  கற்கைகள் ஒவ்வொரு வரும்  தங்களின்  திறமைகளை  வெளிக்கொணரும் துணிச்சலையும் கொண்டு வந்துள்ளமை கண்கூடு.

    இங்கு  பன்முக  ஆளுமை மிக்க  படைப்பாளிகளும்  அபரிமிதமாகத்  தங்களை  இனங்காட்டியே வந்துமுள்ளனர்.

    இப்போது நமக்குப் புதிதாய் அறிமுகமாகிறார் திருமதி.வத்சலா ரமேஷ்.

    சொல்வதை சுவை படச் சொல்வதில் தன் கவிதை மூலம் சாத்தியமாக்கியிருக்கிறார்.

    ஒவ்வொரு வார்த்தையையும் ரசித்தபடி எழுதியிருக்கிறார்.வாசகனிடம் அழைத்துச் செல்லும் கவிதைகளுக்குள் நாமும் மூழ்கிப்போவது அதிசயம்தான்.தமிழ் மீதான அளப்பரிய பிரியம் தமிழை அழகாகாவும் எழுத முடிந்திருக்கிறது.

    வாழ்க்கை மீதான நம்பிக்கைகள், விருப்புகள், கனவுகள், தன் மீதான கழிவிரக்கம், தன்னையே உரசிப்பார்க்கும் சமூகவெளி தருகின்ற அனுபவம், தாயின் ஸ்பரிசம், கற்பனை வெளியில் தானே துள்ளி ஓடுகின்ற ஆட்டுக்குட்டி போலவும், பதுமையாய் ஒதுங்கிப்போகிற பெண்ணாய், உறவை, உலகை உற்றுப்பார்க்கிற அனுபவஸ்தியாக படைப்பைத் தந்திருக்கிற வத்சலா அவர்களின் கவிதைகள் ஒரு விசாலமான உலகைத் தரிசிக்க முனைந்து நிற்கின்றன.

    “ஏகாந்த காற்றில்

    பறக்கும்

    பால்யத்தின் நினைவுகள்

    றெக்கை முளைத்த சருகுகளாய்.”

    ஒரு சோறே பதம்பார்க்க உதவுகிறது.

    “ஒரு கோப்பைத் தேநீரை

    என் இதழ் கேட்கும் சூட்டோடு

    சினேகிதமாய் பருகிக் கொண்ருந்தேன்.

    வெளியில் பொழிகிறது மழை

    என் தேநீர்க் கோப்பையை

    நிறைக்கும் வரை”

    உதட்டுக்கும் கோப்பைத் தேநீருக்குமான உறவில்

    தன்னையும் இணைத்துக் கொள்ளும் மழை…சூழலை தன் வயப்படுத்தும் லாவகம் கவிதைக்கும் வலுச் சேர்க்கிறது.

    மனதில் பட்டதை சொல்வதற்கும்,எழுத நினைப்பவற்றை அழகுறச் சொல்வதற்கும் கவிதை கைகொடுக்கும். இங்கும் கவிக்குரல் வத்சலா அவர்களின் கவிதைகள் தெளிவாக வந்து விழுந்திருக்கின்றன.

    அவரின்  குணம்  மென்மையானதுவோ.  கவிதைகளும்   அப்படியே.  ஆக்ரோசம்   எங்கும்  இல்லை.

    ஆனால்   கனவுகள்  நிறையவே  தூவப்பட்டுள்ளன  பூக்களாய்.

    ஒரு படைப்பாளிக்கும் வாசகனுக்குமான இடைவெளி நெருங்கும் போதே படைப்பின் மீதான விருப்பம் மேலிடும். படைப்பாளியை நெருங்கும் தொழில்நுட்பம் எப்போதும் படைப்பாளிக்குத் தெரிந்திருக்கவேண்டும். அதற்காக கைகளுக்கு விலங்கிட்டுக்கொள்வதல்ல.

    முதலில்  வாசகனாக  உணர்ந்து பார்க்க வேண்டும். அவ்வளவே!

    சிலருக்கு அவர்களின் கல்வி கைகொடுக்கும். இன்னும் சிலருக்கு அனுபவம் எழுதுவதற்கு கைலாகு கொடுக்கும். திருமதி.வத்சலாவிற்கு இரண்டுமே துணைபுரிந்திருக்கின்றன.

    ‘என்னைப் பார்த்துப்

    பேசாத

    அவள் இதழ்கள்

    மௌனமாய்!

    அவளின்

    விரிந்த விழிகள்

    பேசின காதலாய்!’

    உணர்வுகள் எழுத்தில் சிறப்பிடம் பெறுகிறது

    ‘’காற்றில் மிதக்கும் இறகு

    பறவையாய்ப் பறக்கும்

    மனசு’

    ‘மெல்ல மெல்ல

    பாதம் பதித்து

    அவள் நடந்தாள்.

    அவள் கொலுசு

    சிணுங்கி இசையெழுப்பியது.

    சத்தமில்லாமல்

    அவள்

    பின்னே சென்றது

    என் மனது’

    …..நான் குடைக்குள்

    நனையாமல் இருக்கிறேன்.

    என்னை

    நனைத்துவிட்டுச் செல்கிறது.

    காதல் மழையாய்

    உன் நினைவுகள்’.

    ஓவியா பதிக்க வெளியீடாக வந்துள்ளதில் மகிழ்ச்சியே.

    அழகியப் பதிப்பு.. கவனமெடுத்து ஒழுங்கமக்கப்பட்டுள்ளன.

    96 பக்கங்களில் எல்லாவற்றையும் சொல்லிவிடத் துடிக்கும் ஆதங்கம் கவிஞனின் ஆரம்ப முயற்சி என்பதின் அளவுகோல்.

    இன்னும் முயன்றிருக்கலாமே என்கிற எதிர்பார்ப்பும் இல்லாமல் இல்லை.

    கவிதைகளுக்கு காதல் துணைபுரிந்திருக்கிறதோ? முதலில் எழுதவரும் அனைவருமே காதலையே கவிவரிகளுக்குள் அடக்கிப்பார்க்கிறார்கள். காதலும் அடங்கிப்போகிறது.

    சப்தமின்றி வார்த்தைகளை கோர்வையாக்கி  வரிகளாக்கி நமக்கு கவிதையாக்கியிருக்கின்றார். வாசிக்கையில் உள்ளுக்குள் வயதையும் மீறி ரசிக்கின்ற அனுபவம் அலாதியானது.

    கவிதை எழுதுதல் என்பது இலகுவானதாகிவிட்டதா என்கிற எண்ணம் எனக்கு உண்டு. முன்பெல்லாம் நமக்குக் கிடைத்த மு.மேத்தா, கண்னதாசன், வாலி என்று விரிவுபட்டு பலரைத் தேடி வாசிக்கும் காலம் ஒன்றிருந்ததே. இப்போது கணினிவயப்பட்ட உலகில் எதுவும் சாத்தியமாகும் என்பது போல கவிதைகளும், கவிதை நூல்களும் வந்துகொண்டிருக்க, பதிப்பகங்களும் பெருக்கமுற்றபடியே வருகின்றமையும் கண்கூடு.

    சிலர் சொல்லலாம் ஆரோக்கியமான சூழல் கவிதையில் காணப்படவில்லை என.. முன்னரும் போஸ்ட்கார்ட் கவிதைகள் வந்த காலமும் உண்டு.பின்னர் ஆரோக்கியான சூழலில் கவிதைகளும்,கவிஞர்களும் உருவாகவில்லையா?

    ஆயிரம் பூக்கள் மலரட்டுமே.

    வெண்பஞ்சு மேகத்தின் வெண்ணெயை..

    உனது உடலெங்கும் பூசி

    நீலவான் கடலின் அலையில்

    அசைந்தும்,மிதந்தும்,குளித்து

    விண்மீன்களில் அத்தனை

    ஒளிவெள்ளத்திலும், மிளிர்வுடன் உருவாகிய

    வெண் தாரகைப் பெண்ணும் நீதானோ?..’

    கொஞ்சம் குளிரை

    அனுப்பிவிடு என்னுயிரே!

    வெய்யில் கேட்கிறது

    வேண்டுமென்று..’

    ‘…

     வலியும் வேதனையுமெனக்கு

    ஓலமிட்டழும் மரம் அறியும்

    மரணத்தை மட்டும்..’ 

    எவை காலம் தொட்டு நிற்கும் என்பதை நிர்ணயிக்கும் என்பதை உணர்ந்து வரவேற்கவும்,வழிவிடவும் வேண்டுமே தவிர புதுவரவுகளுக்கு தடபோடுதல் ஆகாது.

    வத்சலாவின் கவிதைகளும் -எதிர்கால நிஜங்களை கைகளுக்குள் அடைத்துவிடும் தார்ப்பரியத்துடன் தொடரும் என்கிறதே நம்பிக்கை.

    தன் முன்னால் நடப்பவற்றை, சூழலை சாதாரணன் உள்வாங்குகின்ற முறைக்கும் அதையே கவிஞனின் மனதில் ஏற்படுத்திச் செல்கின்ற சலனங்களுக்கும், தாக்கங்களுக்கும்  நிறையவே வித்தியாசம் உண்டு. அதை எழுகின்ற ஒரு படைப்பாளி உள்வாங்கி எழுதுகின்ற உணர்வுக்கும் அதையே வாசிக்கினற வாசகனுக்குமான இடைவெளி அதிகமாகிவிடக்கூடாத எச்சரிக்கை அல்லது பக்குவம்  தேவை. அதனைச் சரிவரச் செய்கிற போது வாசகனை சென்றடையும், சலனத்தை, தாகத்தை ஏற்படுத்தியே தீரும்.

    சிலவற்றை தெரிவு செய்கையில் ஒன்றுக்கொன்று தொடர்பறுந்து நீர்த்துப்போகின்ற அபாயமும் உண்டு.

    வத்சலா ஓரளவு புரிந்துகொண்டுள்ளார். அவரின் கவிதைக்கான பயிற்சி, வாசிப்பு ஆற்றல் இன்னும் விசாலமாகும் பட்சத்தில்

    அம்மாவின் கண்கள் போன்று பல கவிதைகளை தருகின்ற வல்லமையும் பெறுவார்.

    இன்னொன்றையும் கவனமெடுக்கவேண்டும்.

    கவிதைகளில் குற்றம் கண்டுபித்துச் சொல்கின்ற நக்கீரர்கள் அதிகம் வலம் வருகின்ற களத்தில் கவனமாக எதை செவிசாய்க்கவேண்டும், எதை நிராகரிக்கவேண்டும் என்கிற நிதானத்துடன் நகரும் பட்சத்தில் எதிர்காலம் கம்பீரமாக இருக்கும்.

    வாழ்த்துக்களுடன்,

    முல்லைஅமுதன்

    20/06/2016

    Share