
-விசாகை மனோகரன்
ஏங்க, நாளைக்கு எத்தன மணிக்கு ட்ரெயின்
பொறப்படும்?
எத்தன தடவ தான் கேட்ப மாலதி? 6மணிக்கு.
காலேலயா சாயிந்தரமா?
சாயிந்தரம்தான். போதும் நீ உன் அம்மா வீட்டுக்கு
போறதும் போதும், என் உயிர வாங்குறதும் போதும்.
ஏன் சொல்ல மாட்டீங்க? உங்க அம்மா மாதிரி,
எங்க அம்மாவும் மூணு மாசத்துகொருதரம் வந்து,
ஆறு மாசமா தங்கறாங்க? உயிர வாங்கறேனாமே
உயிர. போயி ஒரு மாசம் இருந்தா தெரியும்
சாப்பாட்டுக்கு திண்டாடறது.
சாப்பாட்டுக்கா, நானா, உன்ன விட பிரமாதமா சமைப்பேன் நான், திண்டாடறதாமே திண்டாடறது.
பாக்கலாம் பாக்கலாம், மூணாவது நாளே போன் பண்ணி வான்னு கூப்பிடுங்க, அப்ப சொல்றேன்.
அடுத்த நாள் ட்ரேயின் ஏத்தி விட்டுவிட்டு வீட்டுக்கு வந்தேன். அடுப்பில் பால் காயிச்சியது இருந்தது. காபி டிக்காக்ஷனும் இருந்தது. சூடா ஒரு காபி கலந்து குடித்தேன். ஒன்பது மணிக்கு அவள் செய்து வைத்து விட்டு போயிருந்த சப்பாத்தியும் கறியும் சாப்பிட்டுவிட்டு, தூங்கினேன்.
காலையில் எழுந்து, காபி கலந்து குடித்துவிட்டு, குளித்தேன். டிபன் என்ன பண்ணலாம் யோசித்து, பிரட்டு ஆம்லேட் பண்ணி சாப்பிட்டேன். லஞ்சு வெளியே. வந்து நைட்டுக்கு சமைச்சுக்கலாம்.
சாப்பாட்டுக்கு திண்டாடறதாமே, அதுவும் நான். பிரவீனா கொக்கா?
மனதிற்குள் எண்ணம் ஓட, மத்தியானம் சரவணபவனில் சாப்பிட்டேன். அமிர்தம். வீட்டுக்கு வரும் போது மணி ஆறு. காபி கலந்து குடித்துவிட்டு, கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகி, என்ன சமைக்கலாம்னு யோசித்தேன்.
கிச்சன்ல என்ன காய் இருக்கிறதென்று தேடினேன். உருளைக்கிழங்கும் வெங்காயமும் தான் கிடைத்தது. சரி நாளைக்கு கறிகாய் வாங்கனும்னு மனதிற்குள் சொல்லிக்கிட்டு, சாதம் வடித்து, வெங்காய சாம்பார் வைத்து, உருளை ஃப்ரய் பண்ணினேன். சாப்பிட்டேன். சரவணபவனைவிட அமிர்தம்.
‘சூப்பர் பிரவீன்’. சமையல்னா இதுதான் சமையல். சாப்பாட்டுக்கு திண்டாடறதாமே, அதுவும் நான். பிரவீனா கொக்கா?
அவள் ஊருக்கு போய் நான்கு நாட்கள் ஆகிவிட்டது. அன்றைக்கு சனிக்கிழமை. ஜாலியாக நைட் ஷோ சினிமா போயிவிட்டு வந்து படுத்துவிட்டு, காலையில் எழுந்திரிக்கும் போது மணி பத்து. அடடா பாத்திரமெல்லாம் கழுவாம அப்படியே இருந்திச்சு. வேலக்காரிக்கு போன் பண்ணினேன்.
“சார், நேத்து வந்தேன் வீடு பூட்டியிருந்திச்சு, இப்ப காலேல வந்து பெல் அடிச்சேன் அடிச்சேன் யாரும் திறக்கல. சாயிந்தரம் நான் பேமிலியாட வெளிய போறேன், நாளைக்கு காலையில வரேன்”.
வேலைக்காரியிடம் பேசவா முடியும். எல்லா வேலையும் முடியும் போது மணி ஒன்று. பசி வயிற்றைக் கிள்ளியது. இனிமேல் சமைத்துச் சாப்பிட நேரமில்லை. பக்கத்தில இருக்கிற ஓட்டலுக்கு போய், சிக்கன் பிரியானியும், மட்டன் குருமாவும் சாப்பிட்டேன். சாயிந்தரம் வயிறு கடமுட ஆகி, தொல்லை செய்தது. வலியும் ஆரம்பித்துக் கடைசியில் தாங்க முடியாமல் டாக்டர் கிட்ட ஓடினேன். பிளட் டெஸ்ட், எக்ஸ்ரே, ஸ்க்கேன் எல்லாம் செய்து, புட் பாய்சன்னு சொல்லி, மருந்து மாத்திரை குடுத்தார். மெடிக்கல் ஷாப் பில் நூறு ரூபாய், டாக்டர் பீஸ் 300/=, டெஸ்டிங் பில் 1700/=. இனிமேல் சாப்பாடு வெறும் சாதம் மோர். தண்டம். இந்த மாலதியை யார் ஊருக்குப் போகச் சொன்னது?.
நினைச்சேன் போன் அடிச்சது. அவளே தான்.
என்னங்க எப்படி இருக்கீங்க? போனே பண்ணல.
நான் நல்லாதான் இருக்கேன்.
ஏங்க குரல் ஒரு மாதிரியா இருக்கு, உடம்புக்கு ஒண்ணும் இல்லியே?
அதெல்லாம் ஒண்ணுமில்ல, ஏதோ புட் பாய்சனாம், டாக்டர் மாத்திர கொடுத்தாரு டாக்டர். அவ்வளவுதான்.
என்னங்க ஆச்சு, நான் உடனே புறப்பட்டு வரேங்க.
வேணாம் மாலதி, ஒன்ணுமில்ல, மாத்திர சாப்பிட்டா ஓகேவாயிரும்.
இல்லங்க நான் ஒடனே புறப்படறேன்.
சொன்னா கேட்கமாட்டே, உன் இஷ்டம்.
காலையில் ஆறு மணிக்கெல்லாம் வந்துவிட்டாள்.
என்னங்க இது, ஒரு வாரத்தில இப்படி ஆயிட்டீங்க. இரண்டு நாள் ஆபீஸிக்கு லீவ் போட்டு, ரெஸ்ட் எடுங்க. நான் கஷாயம் வச்சு தரேன். எல்லாம் சரியாயிரும்.
இரண்டு நாட்களில் உடல்நலம் சரியாகி, ஆபிஸ் போக ஆரம்பித்தேன்.
ஒரு வாரம் கழித்து மாலதி, எங்க, என்னமோ ‘நானா, சாப்பாட்டுக்கா, திண்டாடறதா’ அப்படின்னு சொன்னீங்க, அப்பறம் ஏங்க டாக்டருக்கு 2000/= செலவு, உடம்பு பிரச்சினை எல்லாம்?
அது, அது, வந்து ஹோட்டல் சாப்பாடு ஒத்துக்கல அவ்வளவுதான்.
‘என்ன விட நல்லா சமைப்பேன்னுட்டு, ஏங்க ஹோட்டல்ல சாப்பிட்டீங்க’ ?
‘சமைக்கத் தெரியாம எல்லாம் இல்லை. ஏன்னமோ அந்த ஹோட்டல்ல போய் மாட்டிக்கிட்டேன். அடுத்த தரம் பாரு, ஹோட்டல மாத்திரமாட்டேன்’ .
மாலதி !!!!!!!!!!!!!!!!