Tag: வையவன்

  • சக்கரத்தை எடுப்பது ஒரு கணம்

    சக்கரத்தை எடுப்பது ஒரு கணம்

    -வையவன்

    அமுதசுரபி தீபாவளி மலர் 2019 இல் வெளிவந்தது… 

    “ஒரே ஒரு கணம் ..ஒரு கணம் பொறுங்கள். புதைந்திருக்கிற சக்கரத்தைச் சேற்றிலிருந்து எடுத்து விடுகிறேன். பிறகு நம் போர் தொடரட்டும்” கர்ணனது கெஞ்சல் இருவர் காதிலும் விழவில்லை. உத்தரவு வந்தது. வரவேண்டிய இடத்திலிருந்து வந்தது.

    “கொல்”

    வில்லை ஏந்தி நின்ற அர்ஜுனனை ஏவிக் கொண்டிருந்தான் கிருஷ்ணன்

    “நில்”

    திடீரென்று வானம் கறுத்தது. இடி முழக்கம் கேட்டது.

    மண்ணில் புதைந்திருந்த தேர்ச் சக்கரத்தை பிடுங்கி எடுக்கக் குனிந்தபடி வேண்டுகோள் விட்ட கர்ணன் வானத்தை அண்ணாந்து பார்த்தான். தேரில் பூட்டப்பட்டிருந்த குதிரைகள் கால்களை உயர்த்திக் கனைத்ததால் சாரதி இல்லாத தேர், வலமும் இடமும் தள்ளாடி அசைந்தது . தேரோட்டி கைவிட்டுச் சென்று விட்டான். தேரோட்டுவதில் நிகரற்ற சல்லியன் ”நீயே ஓட்டிக்கொண்டு சென்று நீயே மாண்டு போ” என்பது போல் சென்றுவிட்டான்.

    பெருமழை பெய்து குருக்ஷேத்திர பூமியை வெள்ளப் பெருக்கால் மூழ்கடித்து யுத்தத்தை நிறுத்திவிடுமா?

    இல்லை. வானம் பயமுறுத்துகிறது. ஒருக்காலும் மழை பெய்து யுத்தத்தை நிறுத்திவிட முடியாது. அப்படியே மழை பெய்தாலும் கோவர்த்தன கிரியை இடையர்களுக்காக ஒற்றை விரலில் உயர்த்தி நிறுத்திய கிருஷ்ணனா விட்டுவிடுவான்?

    அர்ஜுனனுக்குத் தேரோட்டியாகி, வில்லில் அம்பைப் பூட்டி நிற்கிறவனுக்கு உத்தரவு கொடுப்பவனைத் திரும்பிப் பார்த்தான். அவன் மட்டுமல்ல. குருக்ஷேத்திரத்தில் எல்லாத்தலைகளும் உயர்ந்து வானையே பார்ப்பதை கர்ணன் கண்டான்.

    “நில்”

    பூட்டிய அம்பை கர்ணன் மேல் விடாமல் அர்ஜுனன் ஏதோ ஒரு கட்டளை வந்தது போல் தாமதித்தான்.

    அவனுக்கு நிராயுத பாணியான தன் மீது ஆயுதம் ஏவக் கூடாது என்ற தயக்கம் வந்து விட்டதா?

    இல்லை. இல்லை இந்த யுத்தம் எப்படி முடியும் என்று கர்ணனுக்கு நன்றாகத் தெரியும்.

    கிருஷ்ணன் தேரோட்டியாகச் சம்மதித்தான் என்று கேட்ட பொழுதே கர்ணன் மனதில் குருக்ஷேத்திர யுத்தம் நடந்து முடிந்து விட்டது. ஆனால் தர்மத்திற்குச் சிறிதளவாவது கிருஷ்ணன் மதிப்பு கொடுப்பான் என்று கர்ணன் நினைத்தான்.

    முடிவு என்னவாயினும் தான் சார்ந்திருக்கும் பக்கம் சாய்ந்து விடாமல் தனது பெயருக்குக் களங்கம் வராது நடந்து கொள்வான் என்று உள்ளே ஓர் நினைவிழை ஓடியது.

    நேற்றுப் போரிட்டு மூலையில் முடங்கிய தர்மன் கிளப்பிவிட்ட ரோஷம் கூடவா மறந்திருக்கும்?

    தேரோட்டி சல்லியன் பேச்சைக் கேட்டிருக்க வேண்டுமோ? தேரோட்டுவதில் நிகரற்ற சல்லியனை அவமானப் படுத்தியது குற்றம் தானா?

    தான் நாகாஸ்திரத்தை எடுத்ததுமே சல்லியன் சொன்னது நினைவு வந்தது.

    “கர்ணா! நீ நாகாஸ்திரத்தை எடுத்துவிட்டாய். சரி அஸ்திரம் வீணாகக்கூடாது.அதை அர்ஜுனனின் மார்புக்கு குறி வை” எந்த விதி என்னை வீர தர்மம் குறித்துப் பேச வைத்தது.

    “சல்லியா! மாட்டேன். அர்ஜுனன் ஒரு வீரன். நான் ஒரு வீரன். அதனால் நான் அவன் கழுத்துக்கு குறி வைப்பேன்” நடந்தது மீண்டும் நினைவில் புரண்டது.

    “கர்ணா! நான் சொல்வதைக் கேள். அர்ஜுனனின் மார்புக்கு குறி வை. கழுத்துக்கு வைக்காதே”

    நான் ஏன் எரிச்சலடைந்தேன்? எவர் பேச்சையும் கேட்க விடாது எந்தத்தீ என்னுள் எரிந்து கொண்டே இருக்கிறது!

    “சல்லியா! ஒரு வீரனைப் பற்றி, இன்னொரு வீரனுக்குத்தான் தெரியும். நீ கேவலம் ஒரு தேரோட்டி. நீ எனக்கு அறிவுரை கூறாதே”; என்று சொல்கிறான்.

    தேரோட்டி மகன், தேரோட்டி மகன் என்று பார்ப்பவர்கள் எல்லாம் மனசிற்குள்ளாவது நினைக்க விட்ட அந்தத் தீ மீண்டும் சுடர் விட்டுவிட்டது. பொறிகள் தெறித்து அற்புதமான தேரோட்டியான சல்லியன் மீதும் பட்டு அவனைச் சுட்டுவிட்டன.

    எனினும் மிகுந்த பெருந்தன்மையான சல்லியன் , “கர்ணா! ஒப்புக் கொள்கிறேன்.

    ஒரு வீரனைப் பற்றி, இன்னொரு வீரனுக்குத்தான் தெரியும். மெய்தான். ஒப்புக்கொள்கிறேன். அதுபோல் ஒரு தேரோட்டியைப் பற்றி இன்னொரு தேரோட்டிக்குத்தான் நன்றாய்த் தெரியும். இப்போது கிருஷ்ணன் அர்ஜுனனின் தேரோட்டி. மகா மாயாவி. என்ன சூழ்ச்சி செய்வான் என்று சொல்ல முடியாது. அவன் பொறுப்பிலே இருப்பது அர்ஜுனன். என் பொறுப்பிலே இருப்பது நீ. தயவு செய்து சொல்வதைக் கேள். அர்ஜுனனின் மார்புக்கு குறிவை”

    ஏன் கேட்காமல் போனோம்?

    மீண்டும் நடந்தது நினைவில் வந்தது. அர்ஜுனனின் கழுத்தை நோக்கிக் குறிவைக்கப்பட்ட நாகாஸ்திரம் எப்படி மேலே உயர்ந்து அவன் மகுடத்தைத் தட்டித் தூக்கிக் கொண்டு போயிற்று?

    அஸ்திரம் குறி தப்பிவிட்டதா? இல்லை. தேர் தான் கீழே தாழ்ந்துவிட்டது.

    கிருஷ்ணனின் மாயை. தேரைத் தனது காலால் ஒரு அழுத்து அழுத்தி அவன் செய்த வெற்றிப் புன்னகை மனசில் மின்வெட்டியது . தேர் சில அங்குலம் பூமியில் அழுந்தி விட்டது

    எதிராளியைத் தன்னுடைய திறமையினால் வில்லையும் தேரையும் இழக்கச் செய்துவிட்டு அவனை வீழ்த்தலாம், மாறாக வேண்டுமென்றே வில்லை. கீழே வைத்து விட்டோ அல்லது வேண்டுமென்றே தேரிலிருந்து இறங்கினாலோ தாக்கக்கூடாது. இது யுத்த தர்மம். அப்படியும் தாக்கினால் அது அதர்மம். தாக்குகிறவன் திறமையின்மையை வெளிப்படுத்தும் அதர்மம். அந்த யுத்த தர்மத்தை நினைவூட்டுவோம்

    “கிருஷ்ணா, உனக்கும் எனக்குமிடையே ஒன்றுமில்லை. நீ என் பகைவன் அல்ல. நான் உன் பகைவன் அல்ல. நான் யாரென்று உனக்கு நன்றாய்த் தெரியும், யுத்த பூமியில் உறவுகள் கூறி சமாதானம் கேட்க முடியாது. என்னைப் பெற்றவள் யாரென்றும் உனக்குத் தெரியும். அவள் கேட்டுக்கொண்ட வரம் என்னவென்றும் எல்லாம் அறிந்தவனாக உனக்குத் தெரியும். இது சார்ந்திருக்கும் சார்புகளால் வந்த பகை இது. ஆனால் எல்லோருக்கும் பொதுவாய் ஒன்று உண்டு. யுத்த தர்மம்.அதைமறந்து விடாதே” என்றான் கர்ணன்.

    அவன் மனதில் மரண திகிலின் கருமேகம் சூழ்ந்து வந்தது. சிறிது சிறிதாக நெஞ்சை அடைப்பது போல் அதன் ஆதிக்கம் பெருகியது. அவன் குரல் உடைந்தது. கம்மியது. விம்மல் பிறந்தது.

    “எதைப் பற்றி யார் பேசுவது கர்ணா? “ இந்தக் கேள்வியைக் கேட்டுவிட்டு கிருஷ்ணன் சிரித்தான். அந்தச் சிரிப்பில் காலதேவனின் தீர்ப்புத் தொனி ஒலித்தது.

    அப்போது வானின் கருமேகம் சிறிது சிறிதாகக் கலைந்து சென்றது. அர்ஜுனனின் குறிக்குத் தப்பாத அம்பு கர்ணனின் மார்போடு உறவு கொள்ளத் துடிப்பது போல் வெளிவாங்கிய வெளிச்சத்தில் மின்னியது.

    “கிருஷ்ணா..கிருஷ்ணா” மீண்டும் கர்ணன் கெஞ்சினான்.

    “யுத்தத்தின் தர்மம் ஒன்றே ஒன்றுதான். ஜெயிக்க வேண்டும். ஜெயிப்பவன் தான் இங்கே தலைவன். மற்றவன் கீழ்ப்பட்டவன்” கெஞ்சுகிற கர்ணன்..

    கிருஷ்ணனுக்குப் பரிதாபம் வரவில்லை.

    “அடடே! எங்கே போயிற்று உன் வீரம்?” மார்புக் கவசங்களையும், காது குண்டலங்களையும் கழற்றிக் கொடுத்த உன் தான வீரம் எதற்கு உயிர்ப்பிச்சை கேட்க வேண்டும்? தீரமாக மரணத்தைச் சந்தி. தீமையின் சகதிகளில், தீய உறவுகளின் சேற்றில் நீ ஆரம்பம் முதலே புதையுண்டவன். தேரோட்டியின் மகனாக இருக்க விதிக்கப்பட்டவன். அதிலிருந்து விடுபட்டு.. உன் பொறாமையிலிருந்து, செருக்கிலிருந்து விடுபடு” என்று எத்தனை பேர் உனக்கு புத்தி சொன்னார்கள். அந்தத் தீமைகளின் உறுதிப் பிடிகளில் இருந்து விடுபடமுடியாத உனக்கு உயிர் வாழ ஒரு கணம் வழங்குவது கூட அதர்மம் தான்”

    “கிருஷ்ணா” மீண்டும் கர்ணன் கெஞ்சுகிற குரலில் வேண்டினான்.

    “பாஞ்சாலியைச் சூதாடிகளின் அவைக்கு நிர்வாணமாக இழுத்துவரச் சொல்லி ஏவியவனை நீ தடுக்கவில்லை. ஊக்கப்படுத்தினாய். கர்ணா.. நீ தேரோட்டி மகன் என்று அவளது சுயம்வரத்திலே இகழ்ந்தவள் திரௌபதி. அவள் மீது உனக்கு வஞ்சம். அந்த வஞ்சத்தை மறக்காமல் துரியோதனன் போட்ட ராஜ்ஜிய பிச்சைக்கு யாசகம் போல் ஏற்ற சோற்றுக் கடன் தீர்க்கப் போராட வந்திருக்கிறாய். இப்போது தர்மம் பேசுகிறாய். எது தர்மம் சொல்? கர்ணா”

    கர்ணன் முகம் இருண்டது. பிறவியே மீண்டும் ஈனப்பட்டது போல் கிருஷ்ணனின் சொற்கள் அம்புகளாக மாறி அவன் இதயத்தைத் துளைத்தன.

    “அந்தண வேடமிட்டுப் பரசுராமரிடம் பொய் சொல்லி அஸ்திர வித்தை கற்று சாபத்திற்கு ஆளானாயே, அது தர்மமா? சக்கர வியூகத்திலிருந்து மீளத் தெரியாத பதினாறு வயது பாலகன் அபிமன்யுவைச் சுற்றி வளைத்துக் கைவேறு கால் வேறாக வெட்டிச் சிதைத்தீர்களே அது தர்மமா”

    கிருஷ்ணன் நீதிதேவன் போல் கம்பீரக் குரலில் திருப்பித் திருப்பி நினைவூட்டினான்.

    “கொல்”

    அர்ஜுனனின் அம்பு கர்ணனின் மார்பைத் தொடும் முன் தாய் குந்திக்குக் கொடுத்த வாக்குறுதி நினைவில் எழுந்தது.

    அம்பு கர்ணன் மார்பைத் துளைத்தது.

    “அம்மா “ என்று அவன் அலறி வீழ்ந்தான்.

    எங்கோ தூரத்தில் இருந்த குந்தியின் வயோதிக மார்பில் பால் சுரந்தது.

    கர்ணன் வீழ்ந்தான் என்று குருக்ஷேத்திரத்தில் குரல்கள் ஓங்கி ஒலித்தன.

    “மகனே”; அலறியபடி எல்லோரையும் விலக்கிக் கொண்டு குந்தி ஓடி வந்தாள்.

    Share
  • பாப விமோசனம் – 2

    -வையவன்

    சற்றுத்தொலைவில் சதானந்தன் சரயூ நதியின் அருகில் கண்பார்வை படாத இடத்தில் நின்றான்.

    ஏதோ நிகழ இருக்கிறது. இந்திரன் விசாரிக்கப் படப்போகிறானா? தாய் அகல்யாவா? அந்தக் குற்றவிசாரணைக் கீழ்மையின் கொடுக்குகள் தன்னைத் தீண்டித் தாய்மையின் முறையீடு தனக்குள் எழுந்து  தான் செய்து வரும் தவத்திற்கு இடையூறு நேருமோ என்று  நிற்பது போலிருந்தது அது.

    யுகயுகங்களுக்கும் இனித் தலைநிமிர்வு இல்லை என்று  கூனிவளைந்த இந்திரனின் முதுகெலும்பு ஒப்புதல் சாட்சியம் அளித்தது .

    அகல்யா நிமிர்ந்து  நூறு நூறு அக்கினிப்பிரவேசங்களைக் கடந்து வந்த கற்பின் கனல் சுடர் வீச நின்றாள் .

    அவளது கண்கள் இந்திரனின் குனிந்த தலையை,தொங்கிய தோளை , அவளைத் தீண்டிய அந்தக் கரங்களை, இப்போது துடிக்கும் விரல்களை அவனது உடல் முழுவதும் கௌதம சாபம் வரைந்த ஆயிரம் யோனிக் குறிகளை பச்சாதாபத்தோடு பார்த்தன. தேவராஜனாய் இருந்தும், மண்ணாகப்போகிற  மனிதனுக்குரிய பலவீனம் அவனைப் பற்றிய அந்த இழுக்கிற்கு ஆளாக்கிய இரக்கம் அவளில் மிதந்தது. தான் பொறுப்பில்லை. தனது பேரழகு. காண்கிற எல்லோரையும் அது வசீகரிக்கின்ற காந்தம். இவை தான் காரணம் என்ற விடுபடல் அந்த இரக்கத்தில் வெளிப்பட்டது.

    சீதா அகல்யாவின்  முகத்தில் நிலவிய தேஜசைப் பார்த்தாள் அதனால்   ஈர்க்கப்பட்டாள். அவளையே கண்கொட்டாமல் பார்த்தாள்.

    கௌதமரோ  சாபம் இடுமளவு கொதித்த சினம் சாம்பல்   மேடாகி,  அதை மௌனமாகக் கடந்து வரும் சாம்பசிவம் போன்று உணர்ச்சியற்று நின்றார். இச்சை, மோகம், அழகு தருகின்ற லாகிரியின் அவஸ்தை எல்லாம் கடந்து அவற்றைக்காலில் சுற்றிய பாசியை, லேசாய்  சூலத்தினால் அகற்றி எறியும்  சாந்தம் நிலவியது.

    பட்டாபிஷேகக் கொண்டாட்டங்கள், ஆரவாரங்கள் எல்லாம் தீர்ந்து மழை விட்டுவிட்ட நிம்மதியில், பதிமூன்று  வருஷ கானக அமைதிக்கு மனம் ஏங்கியது. இராமனோடு தனிமை நாடி சரயூ நதிக்கரைக்கு வந்திருந்தாள்.

    கரையோரம் கௌதமர் ஆசிரமம் கண்ணுக்குப் பட இருவரும் சென்றபோது அங்கே மீண்டும் இந்திரன். சேவலாய்க்கூவி பொய்ப்பொழுதை விடியவைத்து, வெளியேறிய கௌதமர் திரும்பியதும் பூனையாய், பதுங்கி ஓடி இப்போது ருசிகண்ட நாயாக வந்திருக்கிறானோ!

    எதிரில் இடுப்பின் மேல் கைவைத்தபடி அகல்யா. தூரத்திலிருந்து  சற்றும் பதறாமல் வரும்  கௌதமர்.

    சீதா முதலில் திகைத்தாள். ஏதோ அசம்பாவிதமோ? அங்கே தான் நிற்கவேண்டுமா? காண விரும்பாமல்   விலகி நடக்க முயன்றாள்.

    “நில்லுங்கள்!” என்று தடுத்தாள் அகல்யா.

    சீதா நின்றாள்.

    “இந்திரன் ஏன் வந்தார்?” சீதா அகல்யாவைக் கேட்டாள். பதிதன் ஆயினும் ஆண். தேவேந்திரன். மரியாதை குறைக்கக்கூடாது.

    ‘அவனையே கேளுங்கள்!’ சொல் இல்லை. முகம் திரும்பி இந்திரனைச் சுட்டும் சைகை.

    “தேவேந்திரா!” சீதை நீதிபதி போல் இன்றி கருணை காட்டும் கனிவோடு கேட்டாள்.

    சற்றே நிமிர்ந்து சீதையைப்  பார்த்த இந்திரன் அதில் நிலவிய மேன்மையைப் பார்த்துச் சட்டென்று குனிந்து அவளது பாதங்களைத் தொடப்போனான் .

    ” நான் மனுஷி. நீங்கள் தேவேந்திரர்.”

    அருகில் வந்த கௌதமர் மார்பில் கைகட்டி நின்றார்.

    எழுந்துகொண்டு  இந்திரன் சொன்னான்.” இல்லை.அன்னையே! எந்தப் பாத தூசுக்கு விமோசன சக்தி உள்ளதோ அவரது பத்தினி தாங்கள்.”

    “இங்கே ஏன் மீண்டும் வந்தீர்கள்? “

    “பாப விமோசனம் கேட்க வந்தேன்.”

    “அகல்யா தேவியிடமா?”

    “ஆம், அன்னையே!”

    “சாபம் கொடுத்தவர் இவர். இவர் இல்லாத சமயத்தில் இங்கு வந்தால்  இவ்வளவும் நடந்த பின் வந்தால் ..அதற்கு என்ன பொருள்?”  கௌதமரைக் காட்டி சீதா கேட்டாள்.

    “சாபத்திற்கு அகல்யா தேவியை ஆளாக்கிய பாவத்திலிருந்து விமோசனம் வேண்ட  வந்தேன் “

    அகல்யாவின் மனசில் சாபவிமோசனம் கிடைத்தபின்பும் பாபக்கறையை  போக விடாத  எத்தனை பார்வைகள் ..அருவருப்பு..ஏளனம்.. இந்திரனை நினைத்துத் தனக்குள் தோன்றும் சபலம் மறைத்த பரிவுகள்.

    ahalya3“இவள் தான் அகல்யா.” தன்னைச் சுட்டிக் காட்டி அடையாளம் சொல்லும் எத்தனை ஆண்கள்  . எத்தனை ப் பெண்கள். ரிஷிபத்தினிகள் முதல் இளவரசிகள் வரை. சாபங்களுக்கு அஞ்சி நரிப்பார்வை பார்க்கிற கோழைகள்.

    “சாபம் கொடுத்தது என்  பலவீனம்.” என்றார் கௌதமர். அவர் குரல் கம்மியிருந்தது.

    சீதா அவரை வியப்போடு பார்த்தார். எதை முன்னிட்டுச் சொல்கிறார்? என்னென்னமோ எண்ணங்கள்  உள்ளத்தில் ஓடினாலும் இதுவாயிருக்குமோ அதுவாயிருக்குமோ என்ற சிந்தனை ஓட்டம் மேலும் அவளைக் கிளறியது.

    அக்கினிப் பிரவேசத்திற்கு முந்திய சீதை அல்ல அவள். இப்போது மிகவும் மாறியிருந்தாள்.

    “என்ன சொல்கிறீர்கள்  மகரிஷி?”

    திடீரென்று ஒரு சலசலப்பு கேட்டது. ஒரு சிறுத்தைப் புலியால் விரட்டப் பட்டு வந்த மான் ஒன்று மனிதத் சூழலைக் கண்டு சற்றே

    மருண்டு ஆசிரம வேலி தாண்டிக் குதித்து திறந்திருந்த குடிசைக் கதவுக்குள் பாய்ந்து நுழைந்தது. 

    “ஐயோ பாவம்” என்று மானைப்பார்த்து  அனுதாபத்தை வாய்விட்டுச் சொன்னாள் சீதை.

    “கொஞ்சம் பொறுங்கள். உள்ளே யாகத்திற்கு உரிய பாலும் தயிரும் வைத்திருக்கிறேன். மான் உருட்டி விடப்போகிறது. ” என்று அனுமதி கேட்டுக்கொண்டு அகல்யா குடிசையை நோக்கிப் போனாள்.

    சீதா அவள் போவதைப்பார்த்துவிட்டு கௌதமர் பக்கம் பார்வையைத் திருப்பினாள்.

    அதில் கௌதமரின் கருத்தறிந்து தேவை உணர்ந்து  அகல்யா பொறுப்புள்ள பத்தினியாக பணியாற்றி வருவதன் அங்கீகாரம் அந்தப்பார்வையில் வெளிப்பட்டது.

    “அகல்யா இல்லையேல் என் தபஸ் இல்லை.” அதற்குப் பதில் போல மெதுவாக தாடியை உருவிக்கொண்டு கௌதமர் சொன்னார்.

    அந்த இருவர் எதிரில் இன்னும் தான் நீசனாக நிற்பதன் சிறுமை இந்திரனின் தலையை  மீண்டும் ஒரு முறை குனிய வைத்தது.

    “சீதா!” கௌதமர் அவளை மெல்லிய குரலில் அழைத்தார். “ராமனைப் பார்க்க வந்த குகன் சரயூவின் இக்கரையில் காத்திருக்கிறான். அங்கே ராமனோடும் குகனோடும் அனுமனும் இருக்கிறான்.அவனும் உன்னைக் காண வேண்டி காத்திருக்கிறான். நாம் போவோமா?”

    “உள்ளே போன அகல்யா வந்து விடட்டுமே!”

    “இல்லை. நாம் போவோம். இந்திரன் அவளிடம் பாபமன்னிப்புக் கேட்க வந்திருக்கிறான். மன்னிப்புக் கேட்பவர், கொடுப்பவர்  இருவருக்குமே வேறு சாட்சிகள் இருப்பது தர்மசங்கடம்”

    ஒருமுறை இந்திரனையும், கதவுக்கு அப்பாலிருந்த அகல்யாவையும் பார்த்துவிட்டுக்  கௌதமரின் கம்பீரமான பெருந்தன்மைக்குக் கட்டுப்பட்டு சீதா அவரைப் பின்தொடர்ந்தாள்.

    அந்த இருவரை ஒன்றாகப் பார்த்ததற்குச் சபித்தவர், இப்போது இருவரையும் தனியே இருக்க விட்டு வரும் கண்ணியம் அவள் நெஞ்சைத் தொடாமலில்லை.

    சற்றுதூரம் வாய்ப்பேச்சின்றி நடந்தவர் ஒரு சலசலப்பு கேட்டு நின்றார்.ஆசிரம எல்லையில் ஒரு கனி மரத்தில் இருந்து ஒரு பழம் விழவும்,அதைக் கவ்விக்கொண்டு ஓட வந்து இரு கீரிகள் ஒன்றை ஒன்று துரத்திவர  , மரத்திலிருந்து பாய்ந்து குதித்தோடி  வந்த ஒரு அணில் அதைக் கவ்வி ஓடியதை, வெறித்துப் பார்த்தபடிக்கு நிற்கிற காட்சியைக் கண்டு கௌதமர் அனுதாபத்தோடு உச்சுக் கொட்டினார்.

    “இப்போது நான் அகல்யாவை உணர்ந்து கொண்டது போல் அப்போது உணர்ந்திருக்கவில்லை. எனக்குள்ளும் பொறுத்துக் கொள்ள வேண்டிய  அளவு போதிய தபோபலம் வளர்ந்திருக்கவில்லை.”

    சீதா அவரது கண்களில் நிலவிய சாந்தத்தை மனசிற்குள் வாங்கிக் கொண்டாள்.

    “சபிக்கும் அளவுக்குஅப்போது நான் பலவீனன். ஒரு ரிஷிபத்தினி  சாபங்களுக்கு அப்பாற்பட்டவள். சந்தேகங்களுக்கு அப்பாற்பட்டவள். என் அறிவீனம் அவள் சபலங்களுக்கும் அப்பாற்பட்டவளாக இருக்கவேண்டும் என்று எதிர்பார்த்தது. என்ன அகந்தை! விளைவு பல ஆண்டுகள் கல்லின் கடினத்தை அவள் சுமந்தது.இந்திரனுக்கு இட்ட சாபத்தால் அவனைக் காண்பவர்கள் எல்லாரையும்  அகல்யாவின் வீழ்ச்சியை நினைக்கச் செய்து விட்டேன்”  

     எதிரில் ஒரு பெரிய பாறை தென்பட்டது.

    “அம்மா சீதா! அங்கு போய் சற்று அமர்ந்து பேசுவோமா?” என்று கேட்டார்.

    “ஆகட்டும் மகரிஷி!”

    இருவரும் எதிரெதிரே பார்த்தபடி அமர்ந்தனர்.

    “என் மனசில் வளர்ந்திருக்கும் புற்றிலிருந்து நான் இன்று வெளிவரவேண்டும் அம்மா சீதா!”

    சீதா புன்னகையோடு அவரை ஒரு குழந்தையைப் பார்ப்பது போல் பார்த்தாள்.

    “அகல்யா  பிரம்மாவின் மகள். அவரது கற்பனையை எல்லாம் குழைத்து இனி இவளுக்கு மேல் ஒன்று இருக்கக் கூடாது என்ற சங்கல்பத்தோடு உருவாக்கிய பேரழகி.தேவாதி தேவர்களையெல்லாம் ஓட்டப்பந்தயம் ஓடவைத்துப் பார்த்தபின் தேர்ந்தெடுத்த முனிவனான எனக்கு பத்தினியாக்கப் பட்டவள்.  முனிவனுக்கு மனைவியாக இருப்பது மட்டுமே போதும் என்று இயற்கையை நிர்ப்பந்திக்க முடியாது. அதுவும் தேவர்களுக்கே தலைவனான இந்திரன் தன்னை இச்சிக்கிறான் என்ற கர்வத்திலிருந்து விடுபட்டு நிற்கவும்  அகல்யா கற்பிக்கப் படவில்லை”

    ஆண் பெண் என்ற பாலின பேதம் கடந்த ஞானியாக எதிர்பாராவிதமாக கௌதமர் வெளிப்படுவதைக் கண்டு சீதா அந்த ஞானசாந்நித்தியத்தில் நிற்கிற அனுபவம் பெற்றாள்.

    “சீதா! உன் வைராக்கியம் பூஜிக்கத் தகுந்தது.அகல்யாவின் பலவீனம் மன்னிக்கத் தகுந்தது.”

    “மகரிஷி ..தாங்கள்..?” சீதா வாசகத்தை முடிக்காமல் இழுத்தாள்.

    “இந்திரன் மன்னிக்கப்படவேண்டியவன்.என்ன செய்கிறோம் என்பதன் கனம் அறியாமல் ஒரு கணத்தில் தவறிழைத்து விட்டான்.பாபம் அவனைச் சாராது .”

    “பின் யாரைச் சாரும்?”

    “அகல்யாவின் சிருஷ்டியை. அதை உருவாக்கிய  சிருஷ்டிகர்த்தாவை.”

    ஒரு கணம் கண் மூடி யோசித்து வானத்தைப்பார்த்தார். பிறகு எதிரிலிருந்த சீதையைப்  பார்த்துவிட்டுத் தொடர்ந்தார்.

    “இல்லை. தெளிவாக யோசித்தால் பிரம்ம தேவர் கூட இதற்குப் பொறுப்பாகமாட்டார். ஒரு பேரழகை தனக்குள் இச்சித்ததால் பிரம்மாவால் அனுக்கிரகிக்கப்பட்ட  வடிவம் அது. நாம் நம்மையே சிருஷ்டித்துக் கொள்கிறோம். அகல்யா அப்படி இச்சித்துப்பெற்ற அனுபவத்தால் தான்  அழகின் பிரமையில் இருந்து இப்போது விடுபட்டிருக்கிறாள்.”

    சீதைக்கு ராவணன் நினைவு வந்தது! எவ்வளவு பெரிய சக்திமான்!எப்பேர்ப்பட்ட வீரன்! கைலயங்கிரியைத் தன் கைகளால் அசைத்துப் பார்த்தவன். எப்படித் தன் அழகில் வீழ்ந்து அழியாத  அவப்பெயருக்கு ஆளானான்? அவன் பாவங்களை இராமபாணம் துருவித் துளைத்தெடுத்து விட்டது. அவன் மன்னிக்கப்பட்டிருப்பானா?

    இருக்காது என்ற எண்ணம் தோன்றியது. அவன் சிந்தையைக் குலைத்த அழகிற்குத் தான் காரணம் என்று நினைவு வந்தது. நடந்தது என்ன? விதி எழுதிய ஒரு பெரிய சோக நாடகமா? திரை விழுந்த பின் உணர்ச்சிகளுக்கு வேலையில்லை.

    சீதை ராவணனை மன்னித்தாள்.

     அவன் பாவங்களை எல்லாம் மன்னித்தாள்.

    பரிபூரணமான சாந்தி அவளுள் பிரவேசித்தது.

    இந்த சாந்தியை அகல்யாவும் அனுபவிக்க வேண்டும் என்று விரும்பினாள்.

    வேறொன்றும் கேளாது “போவோம் மகரிஷி!”என்றாள்.

    இருவரும் சரயூவின் கரை நோக்கி மெதுவாக நடக்கத் தொடங்கினர். 

    (முற்றும்)

     

    Share
  • பாப விமோசனம் – 1

    -வையவன்

    “சாபத்திற்கு விமோசனம் உண்டு. பாபத்திற்கு விமோசனம் உண்டா பகவானே ?”

    மணிநாதம் போல் கேட்ட அந்தக் குரல் தங்கள் தலைவனுடையதோ என்று பிரம்ம லோகத்திற்கு கீழே தாழ்வாக நகர்ந்து சென்ற மேகங்களுக்கு கேட்டன . ஒரு மேகத்திற்குத் துணிச்சல் வந்தது. கூட்டத்தை விட்டு உயர்ந்து ஏறத்தொடங்கியது.

    “ஏய், அத்து மீறிப்போய் சாபத்திற்கு ஆளாகி விடாதே” என்று கீழேயிருந்து ஒரு மேகம் எச்சரித்தது.

    ஆம்! மேகநாதனான இந்திரன் தான்.

    அவன் பார்வையில் படும் முன் மேலேறிப்போன மேகம் வேகமாகக் கீழிறங்கியது.

    “என்ன?”

    “நம் தலைவர் தேவேந்திரர் தான்! ”

    பிரம்மலோகத்தில் ஆழ்ந்த தவத்தில் அமர்ந்திருந்த பகவான் பிரம்மாவின் மனத்தில் சிறு சலனம். இந்திரன் குரலால் ஈர்க்கப்பட்டு நிஷ்டை கலைந்தது.
    மெதுவாக விழிகளைத் திறந்தார்.

    எதிரே இந்திரன் நின்றான்.

    முகத்தில் கருநிழல். தேவேந்திரனுக்குரிய வசீகரக் களை மறைந்து, சோகமும் சுய இரக்கமும் கலந்த மனத்தொய்வின் ரேகைகள்.

    “இப்போது என்ன புதுப்பிரச்சினை இந்திரா?”

    தெளிந்த தடாகத்தின் நிச்சலனமான முகத்தோற்றத்தோடு பிரம்மா கேட்டார்.

    “எப்போதும் உள்ள பிரச்சினை தான் பகவானே!”

    “தங்கள் சிருஷ்டி!”

    “எதைச் சொல்கிறாய்?”

    “என்னையே சொல்கிறேன்!”

    “உனக்கென்ன இப்போது? என் பௌத்திரன் ராவணனைக் கொன்று இந்திரலோகத்தை ஸ்ரீ ராமன் அவனது கொடும் பிடியிலிருந்து விடுதலை செய்து விட்டானே!”

    V0045105 Ahalya leaning on tree. Chromolithograph by R. Varma. Credit: Wellcome Library, London. Wellcome Images images@wellcome.ac.uk http://images.wellcome.ac.uk Ahalya leaning on tree. Chromolithograph by R. Varma. 1896 By: Ravi VarmaPublished: - Copyrighted work available under Creative Commons by-nc 2.0 UK, see http://images.wellcome.ac.uk/indexplus/page/Prices.html

    “ராஜ்ஜியம் மீண்டுவிட்டது. ராவணன் அழிந்து விட்டான். ஸ்ரீ ராமனின் பாத தூளி பட்டுச் சிலையாகக் கிடந்த அகல்யா சாபவிமோசனம் பெற்று மீண்டும் பழைய உடல் பெற்றுக்கொண்டாள். ஆனால் நான்.. நான்?” இந்திரன்
    தனது உடலெங்கும் பரவியிருந்த கண்விழிக்குறிகளைத் தோள் திருப்பியும், இரு முழங்கைகளை நீட்டியும் நீதி கேட்பது போல் காட்டினான்.

    பிரம்ம பகவான் மெதுவாக நெற்றியைத் தேய்த்துக் கொண்டார்.

    “விதைத்தாய்; அறுத்தாய். வினைப்பயனுக்குத் தப்பிக்க முடியாது. அது விதி.”

    இந்திரன் மண்டியிட்டு பிரம்மாவின் பாதங்களைத் தொட்டு வணங்கினான்.

    “படைத்தவர் தாங்கள். அதன் பலாபலன்களுக்கு என்னை ஆளாக்கிவிட்டு வினை என்ற விதியை என் பால் சுமத்தினால் நியாயமாகுமா?”

    “சிருஷ்டிக்கும்போது உருவாகும் என் மனோதர்மமே வினையை உருவாக்கும் விதியாகிறது. அது நீ சுமந்த ஜென்மஜென்மாந்திரச் செயல்களின் தொகுதி. நீ சிருஷ்டிக்கப்படும்போது அவற்றினால் உருவான என் மனச்சலனமே நீ!”

    “ஆனால் அகலியாவைச் சிருஷ்டிக்கும்போது தாங்கள் படைக்கும் பொறுப்பிலிருந்து விலகித் தனி மன எழுச்சியுடன் அவளைச் சிருஷ்டித்தீர்கள். ஒப்பாரும் மிக்காரும் இல்லாத அம்சத்தோடு, தேவர்கள் எல்லாரும் போட்டிபோட்டு ஓடித்தேடிய பேரழகியாக!”

    “உண்மைதான் ”

    பிரம்மா ஒப்புக்கொண்டார்.

    “அந்த அழகு ஒரு தூண்டிலாகி எல்லாரையும் ஈர்த்ததுahalya2 போல் என்னை ஈர்த்தது. என்னை நிலை மறக்கச் செய்தது. அது என் குற்றமல்ல. அவளது அழகின் குற்றம். அதை அவ்வளவு அக்கறையும் ஆர்வமும் காட்டி உருவாக்கிய தங்கள் குற்றம்.”

    “எங்கே போயிற்று உன் தன்னடக்கம்? கட்டுப்பாடு?”

    “என்னைத் தாங்கள் தவ மேன்மையுள்ள துறவியாக சிருஷ்டிக்கவில்லை!”

    “ஆத்மாவின் யாத்திரையில் ஒவ்வொரு பிறவியும் ஒரு சத்திரம். இந்திரனாக நீ பெற்ற அனுபவ வினைத்தொகுதி அடுத்த சத்தியத்திற்கு போகும்போது உதவும்”

    “நான் பாபவிமோசனம் கேட்க வந்தேன். தாங்கள் ஞானோபதேசம் செய்கிறீர்கள்.”

    “நான் சிருஷ்டிகர்த்தா. சிருஷ்டிகளின் வினைக்குப் பொறுப்பேற்பவன் அல்ல.”

    ” அப்போது என் கதி?”

    ” இந்திராணியிடம் மன்னிப்புக் கேட்டாயா?”

    “கேட்டுவிட்டேன்.”

    “என்ன சொன்னாள் ?”

    “தங்களைப் போய்த் தரிசித்து வரச்சொன்னாள் ”

    “சரி. உன்னைப் பாபம் செய்யத் தூண்டியவர் யாரோ,சாபத்திற்கு ஆளாக்கியவர் யாரோ அவர்களிடம் போய் மன்றாடு. கெஞ்சு, கதறி அழு.”

    “இது தான் தங்களது இறுதி முடிவா?”

    “அல்ல. நியதியின் முடிவு”

    இந்திரன் மீண்டும் பிரம்மாவின் தாள்தொட்டுப் பணிந்தான். அவனது அங்கலாய்ப்பிற்கு அவர் சூட்சுமமாக மனமிரங்கி வழி காட்டி விட்டார்.

    ‘போ. முயற்சி செய்!’

    செய்ய வேண்டிய இடத்தையும் சுட்டிக்காட்டிவிட்டார். இந்திரன் போனபின்பு கோடானுகோடி உயிர்கள் தாங்கள் செய்த வினையின் விளைவுக்குத் தன்னைச் சபிக்கிற சாபக்கனல் மீண்டும் ஒரு முறை அவரைத் தீண்ட வந்தது. தன்னைச் சுற்றித் தவக்குளுமையால் அவர் போட்டிருந்த அமிர்த வளையம் அதை அகற்றியது.

    அகல்யாவின் பேரழகை அவர் சிருஷ்டிக்கவில்லை.
    ஜென்ம ஜென்மாந்திரங்களாக அவள் தனக்குத் தானே சேமித்த சௌந்தரியக் கற்பனையின் விளைவு அது.

    ‘இந்திரன்? பாவம்! மீன் சிக்கிக் கொள்வதற்குத் தூண்டில்பொறுப்பாக முடியாது! போகவேண்டிய இடத்திற்குப் போய்ப் புரிந்துகொள்வான்.’

    சிந்தனையிலிருந்து விடுபட்டார். ஒரு பரிவு நெஞ்சை வருடியது. இரண்டு கண்களை வைத்துக்கொண்டு ஒரு அகல்யாவுக்காகப் பட்டபாடே போதாதா? ஆயிரம் கண்களில் எத்தனைப் பெண்ணழகு தட்டுப்பட்டு என்ன பாடு படுத்துமோ!

    இந்திரனது வாகனம் ஐராவதம் பூமியை நோக்கி இறங்கியது. அகல்யாவும் கௌதமரும் சதானந்தனுடன் சரயூவின் கரையில் ஆசிரமம் அமைத்துத் தங்கியிருப்பதாகக் கேள்விப்பட்டான். தண்டகாரண்யம் வெறிச்சோடிப்போயிருக்கும்.

    அயோத்திக்கு ஏன் வந்தார்கள்?

    ஓ! ஸ்ரீ ராமனின் பட்டாபிஷேகம். அயோத்தி மட்டுமல்ல; சகல ரிஷி குலங்களும் கண்களில் கசியும் கண்ணீரோடு, நெஞ்சில் நிறைந்த வேதனையோடு எதிர்பார்த்துக் காத்திருந்த வைபவம்.

    பாத தூளி பட்டு விமோசனம் பெற்ற அகல்யா வராமல் இருப்பாளா?

    அயோத்தியின் அக்கரையில் யார் கண்ணும் படாத இடத்தில் மரங்கள் அடர்ந்த ஒரு சோலையில் ஐராவதத்தை நிறுத்திவிட்டு இந்திரன் கால் நடையாக மானிட வடிவெடுத்து ஓடத்துறைக்கு வந்தான். மானிட வடிவெடுத்தபோது எல்லா மானிட நியதிக்கும் கட்டுப்படுவது முறை. அந்த வடிவில் தானே அகல்யாவைச் சந்திக்கப்போனான்!

    ‘எவ்வளவு காலமாயிற்று சரயூ நதிக்கரைக்கு வந்து! ராம ஜனனத்தின் போதா? விஸ்வாமித்திரர் . ராம லட்சுமணர்களை தவம் காக்கக் கானகத்திற்கு அழைத்துச் சென்ற போதா?’

    சரியாக நினைவு வரவில்லை.

    ஓடக்கரையில் ஓடக்காரன் நின்றிருந்தான்.

    “அக்கரைக்கு.. அயோத்திக்கு..”

    “அயோத்தி என்றால் எந்த இடம்? எந்தக் கரை?”

    ஓடக்காரன் வெருட்டிக் கேட்டான்.

    “கௌதம மகரிஷி ஆசிரமம்”

    “அப்படித் தெளிவாகச் சொல்லவேண்டும். சரயூவின் கரை நெடியது.இரண்டு பணம் ”

    “என்னிடம் பணம் இல்லை. அதற்குப் பதில்..”என்று இந்திரன் சுண்டுவிரல் மோதிரத்தைக் கழற்றப்போனான்.

    தேவேந்திரன் ஏறிஅமர்ந்தும் படகில் பளு இல்லை. தேவனாகையால் காற்றைப் போல் லேசாக இருந்தான் வெற்றுப்படகு போல துடுப்பு போடுவது இலேசாக இருந்தது. இந்திரனை ஏற இறங்கப்பார்த்த ஓடக்காரன் மனசில் ஒரு மரியாதை தோன்றியது.

    “வேண்டாம். வைத்துக்கொள்ளுங்கள். திரும்பி வரும்போது வாங்கி கொள்கிறேன்”

    “ஸ்ரீ ராமச்சந்திரபிரபுவின் பட்டாபிஷேகம் பார்த்தீர்களா?” ஓடக்காரனை இந்திரன் விசாரித்தான்.

    “ஓ! கண்கொள்ளாக் காட்சி. இந்தப் பிறவி செய்த புண்ணியம். இதோ இப்போது தான் ஸ்ரீ ராமச்சந்திரபிரபு எங்கள் தலைவர் குகனை வழியனுப்பப் போய்க்கொண்டிருக்கிறார்.”

    நல்லது. அகல்யாவிடம் விமோசனம் கேட்கப்போகும்போது ராமன் இல்லாதிருப்பது மேல்.
    ஆசிரமக் கரையோரம் ஓடம் நின்றது. இந்திரன் ஓடக்காரனுக்கு நன்றி கூறிவிட்டு இறங்கி ஆசிரம எல்லையில் நுழைந்தான்.

    இந்திரன் ஆசிரமத்திற்குள் பிரவேசித்தபோது கௌதமர் அங்கு இல்லை. ஒரு விசேஷ அதிசயமாக சீதா நின்றிருந்தாள்.

    “நீங்களா ?”அகல்யாவின் குரலில் அச்சமில்லை. அதட்டிக் கேட்கும் கம்பீரம்.

    இந்திரனின் பார்வை முதலில் அன்று இரவு சுவைத்த அந்த அதரங்களில் ஊர்ந்து, உயிரைக் கவர்ந்து இழுத்த விழிகளுக்குத் தாவியது. அகல்யாவின் எழில் முற்றிலும் குன்றிவிடவில்லை. ஆனால் அச்சமூட்டும் ஒரு தீச்சுடராக ஜொலித்தது.

    “எதற்கு வந்தீர்கள்?”

    இந்திரன் தலைகுனிந்து நின்றான்.

    எதிரில் அகல்யா.

    இடப்புறம் சீதா.

    மிக அருகில் யாரோ வரும் மரக்காலடிகளின் ஓசை கேட்டது.

    இந்திரன் திரும்பிப்பார்த்தான்.

    கௌதமர்…வலப்புறத்தில் வந்து நின்றார்!

    (தொடரும்)

    Share
  • வைரமணிக் கதைகள்

    bre

    வாக்கிய அமைப்பில் எளிமையையும் ஏற்படுத்துகிற தாக்கத்தில் இமயத்தையும் தொடுபவர் எழுத்தாளர் வையவன்.வைரமணிக்கதைகள் என்ற பெயரில் வெளிவந்திருக்கும் அவரது 497 பக்க சிறுகதைத்தொகுப்பின் ஒவ்வொரு கதையிலும் புரியும் உண்மை இது . தன்னைச் சுற்றிலும் நடக்கும் நிகழ்வுகள் குறித்த கூர்ந்த கவனிப்பு, இது சரி-இது தவறு என்பது குறித்த தெளிவான நிலைப்பாடு , சிறுகதையின் கட்டமைப்பு எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்த தெளிவான இலக்கியப் புரிதல் , சிறந்த சொல்லாடல் என வையவனின் எழுத்துச் சிறப்பைச் சொல்லிக்கொண்டே போகலாம். தமிழ் இலக்கியத்தின் ஜாம்பவான்களின் ஒருவர் என்று சொல்ல வைக்கும் கதைகளை வழங்கினாலும் மிகுந்த தன்னடக்கத்தை வெளிப்படுத்துபவர்.எழுத்தாளர் வையவன். 58 ஆண்டுகளாக இலக்கியப்பங்காற்றிவரும் வையவனின் செழுமையின் தொகுப்பாகவே இந்த 80 கதைகளின் தொகுப்பு அமைந்துள்ளது. கதை பேசும் இடங்களின் -நபர்களின் சித்தரிப்பு , மனக்கண்ணில் கதையை ஓடவிடும் எழுத்தாளுமை , புத்தகத்தை கீழே வைக்கவிடாத அளவு ஈர்க்கும் கதைகள் என இது ஒரு தவறவிடக்கூடாத தொகுப்பு .

    சிறிய கதைகளில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துபவர் இவர். நல்ல இலக்கியம் கால வித்தியாசமின்றி , தலைமுறைகளைத் தாண்டி வசீகரிக்கும் என்பார்கள். அவ்வாறு ட்விட்டரின் குறள் அளவு கமெண்ட்களின் யுகத்திலும் சிறந்த தாக்கத்தை ஏற்படுத்தும் சிறந்த எழுத்தாளர் வையவன்.

    ———————–

    மதிப்புரை வழங்கியவர் : பெமினா இதழில் எஸ். செந்தில் குமார்

    வெளியிட்டோர்: தாரிணி பதிப்பகம், 4A , ரம்யா பிளாட்ஸ், 32 /79 ,காந்தி நகர் நகர் நான்காவது பிரதான சாலை, அடையாறு, சென்னை-20
    [இந்த மதிப்புரையின் யூட்யூப் வடிவினை[http://vaiyavanvideos.blogspot.in/] காணலாம்]

    Share
  • பயன்மிகு இணையவழிச் சேவைகள் கட்டுரைப் போட்டி முடிவு

    அன்பினிய நண்பர்களே,

    Audacity-image-600x337

    சென்ற மாத (செப்டம்பர், 2015)  பயன்மிகு இணையவழிச் சேவைகள் கட்டுரைப் போட்டியில் திரு சிவானந்தம் கனகராஜ் அவர்களின் இணையவழி குரல் பதிவு மற்றும் ஒலிக் கோப்புகள் உருவாக்கத்திற்கான தளங்கள்  குறித்த கட்டுரை பரிசுக்குரியதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாக நடுவர் திரு ஐயப்பன்  அறிவித்திருக்கிறார். வாழ்த்துகள் நண்பரே.

    தொடர்ந்து போட்டிக்கான ஆக்கப்பூர்வமான கட்டுரைகளை வரவேற்கிறோம். நன்றி.

    Share
  • பொன்னியின் செல்வன் (படக்கதை – 1)

    பொன்னியின் செல்வன்
    மூலக்கதை : கல்கி
    படக்கதை : வையவன்
    ஓவியங்கள் : தமிழ்ச்செல்வன்

    முன்னுரை

    கோடானு கோடி தமிழர்களால் மட்டுமின்றி ரஜினி காந்த் போன்ற தமிழர் அல்லாதவர்களாலும் சுவையோடு வாசிக்கப்பட்ட நாவல் பொன்னியின் செல்வன். மொபைல் கிண்டில் நெட் என அனைத்து தொலைத்தொடர்பு சாதனங்களிலும் பரவலாகப் புகழ்பெற்றுள்ள இந்த நாவல் தமிழில் முதல் முறையாக படக்கதை வடிவம் பெறுகிறது.

    ஏற்கனவே மொழிபெயர்ப்பு, படைப்பு இலக்கியம் அறிவியல் ஆகிய துறைகளில் ஏராளமாக எழுதி அழியாப் புகழ் பெற்றுள்ள ஆசிரியர் சி.ஜெயபாரதன் அவர்களின் சீதாயணம் மற்றும் முக்கோணக் கிளிகள் கதைகளுக்கு வடிவம் தந்து வசனம் எழுதிப் புகழ் பெற்ற எழுத்தாளர் வையவன், பொன்னியின் செல்வன் நாவலுக்கும் வடிவம் தந்து வசனம் எழுத ,அற்புத ஓவியர் தமிழின் கை வண்ணத்தில் இது வெளிவருகிறது.

    கதைப்படி கல்கியின் மொழியில் கதை தொடங்கும்

    ஆதி அந்தமில்லாத கால வெள்ளத்தில் கற்பனை ஓடத்தில் ஏறி நம்முடன் சிறிது நேரம் பிரயாணம் செய்யுமாறு நேயர்களை அழைக்கிறோம். விநாடிக்கு ஒரு நூற்றாண்டு வீதம் எளிதில் கடந்து இன்றைக்குத் தொள்ளாயிரத்து எண்பத்திரண்டு (1950ல் எழுதியது) ஆண்டுகளுக்கு முந்திய காலத்துக்குச் செல்வோமாக.தொண்டை நாட்டுக்கும் சோழ நாட்டுக்கும் இடையில் உள்ள திருமுனைப்பாடி நாட்டின் தென்பகுதியில், தில்லைச் சிற்றம்பலத்துக்கு மேற்கே இரண்டு காததூரத்தில், அலை கடல் போன்ற ஓர் ஏரி விரிந்து பரந்து கிடக்கிறது. அதற்கு வீரநாராயண ஏரி என்று பெயர். அது தெற்கு வடக்கில் ஒன்றரைக் காத நீளமும் கிழக்கு மேற்கில் அரைக் காத அகலமும் உள்ளது. காலப்போக்கில் அதன் பெயர் சிதைந்து இந்நாளில் ‘வீராணத்து ஏரி’ என்ற பெயரால் வழங்கி வருகிறது.புது வெள்ளம் வந்து பாய்ந்து ஏரியில் நீர் நிரம்பித் ததும்பி நிற்கும் ஆடி ஆவணி மாதங்களில் வீரநாராயண ஏரியைப் பார்ப்பவர் எவரும் நம்முடைய பழந்தமிழ் நாட்டு முன்னோர்கள் தங்கள் காலத்தில் சாதித்த அரும்பெரும் காரியங்களைக் குறித்துப் பெருமிதமும் பெரு வியப்பும் கொள்ளாமலிருக்க முடியாது. நம் மூதாதையர்கள் தங்களுடைய நலனுக்கும் தங்கள் காலத்திய மக்களின் நலனுக்கும் உரிய காரியங்களை மட்டுமா செய்தார்கள்? தாய்த் திருநாட்டில் தங்களுக்குப் பிற்காலத்தில் வாழையடி வாழையாக வரப்போகும் ஆயிரங்​ ​கால​ச்​ சந்ததிகளுக்கும் நன்மை பயக்கும் மாபெரும் செயல்களை நிறைவேற்றி விட்டுப் போனார்கள் அல்லவா?

    ஆடித் திங்கள் பதினெட்டாம் நாள் முன் மாலை நேரத்தில் அலை கடல் போல் விரிந்து பரந்திருந்த வீர நாராயண ஏரிக்கரை மீது ஒரு வாலிப வீரன் குதிரை ஏறிப் பிரயாணம் செய்து கொண்டிருந்தான். அவன் தமிழகத்து வீர சரித்திரத்தில் புகழ்பெற்ற வாணர் குலத்தைச் சேர்ந்தவன். வல்லவரையன் வந்தியத்தேவன் என்பது அவன் பெயர். நெடுந்தூரம் பிரயாணம் செய்து அலுத்துக்களைத்திருந்த அவனுடைய குதிரை மெள்ள மெள்ள நடந்து சென்று கொண்டிருந்தது. அதைப் பற்றி அந்த இளம் வீரன் கவலைப்பட​ ​வில்லை. அகண்டமான அவன் வீர நாராயண ஏரியின் தோற்றம் அவன் உள்ளத்தை அவ்வளவாக வசீகரித்திருந்தது.

    கதை இங்கே தொடங்குகிறது. சோழப் பேரரசின் பேராற்றலும் வீரமும் வெளிப்படும் விதத்தில் பிறகு பல அடுக்கடுக்கான நிகழ்ச்சிகள்…

    apon

    apon1

    Share
  • ஐந்து கை ராந்தல் (31)

    வையவன்

    ஒரு மாதம் கழித்து ஒரு ஞாயிற்றுக் கிழமை.

    அனகாபுத்தூரில் திஷ்யா வீட்டுக்கு எதிரில் ஒரு டாக்ஸி நின்றிருந்தது. தெரு வாசற்படியில் ஏகப்பட்ட செருப்புகள் காணப்பட்டன. வீட்டுக்கு வெளியே ஒரு பெயர்ப் பலகை ஆங்கிலத்தில் கொட்டை எழுத்துக்களில் “கங்கோத்ரி பார்ம சூடிகல்ஸ்’ என்று எழுதியிருந்தது.

    அனகாபுத்தூர் வாண்டுப் பையன்கள் குழாம் ஒன்று அந்த டாக்ஸியைச் சுற்றிக் கூடியிருந்தது. ஒரு அம்பாஸிடர் வண்டி.
    திறந்திருந்த கண்ணாடிக் கதவின் வழியாக ஒரு பையன் கையை நீட்டி ஸ்டேரிங் நடுவில் கை விட்டு ஹாரனை அழுத்த முயற்சித்தான். கொஞ்சம் பயம்; கையில் வலு இல்லாமல்அதை அழுத்தினான். ஓசை வரவில்லை.

    “டேய்… நீ நவுர்றா… சொண்டி…” என்று இன்னொரு சிறுவன் அவன் திறமையின்மைக்காக அதட்டினான்.
    “நீ அடிச்சிடுவியா?”
    “அவன் அடிக்கிறானோ… இல்லையோ, நீ நவுரேன்.”

    “இவனாலயும் அடிக்க முடியாது…”
    “அடிச்சுட்டா…இன்னா பெட் கட்டறே?”
    “பெட் கட்டற மூஞ்சியைப் பாரு… எடறா அம்பது பைசா.”

    “பசுபதி… வாங்கிவைடா அந்த அம்பது பைசாவை. நவுருடா நீ” என்று பந்தயத்திற்கு அழைக்கப் பட்டவன் ஹீரோ மாதிரி முன் வந்தான். அம்பாஸிடருக்குள் கை விட்டு ஹார்னை அழுத்தினான். ஒருமுறை இருமுறை மும்முறை விட்டு விட்டு ஹார்னை அழுத்தினான்.
    “பாய்ங்… பாய்ங்… பாய்ங்”
    ‘ஹை ஹை’ என்று கூட்டம் கும்மாளமிட்டது.

    உள்ளேயிருந்து கையில் ஒரு மாதப் பத்திரிகை பிரதியோடு ஓடி வந்தான் சிவா.

    “அஞ்சு நிமிஷம் வண்டியை தன்னை மறந்து விட்டுட்டா போதும்! ஓடி வந்திடுவிங்கடா… யார்ரா அவன் இப்ப ஹார்ன் அடிச்சவன்?” என்று சிவா கேட்டுக் கொண்டே தெருவில் இறங்கினான்.

    அதற்குள் சிறுவர்களின் கூட்டம் மூலைக்கு ஒன்றாகப் பறந்து விட்டிருந்தது.

    பாக்கெட்டில் கையை விட்டு சிவா சாவியைத் தேடினான்.

    கையிலிருந்த மாதப் பத்திரிகையில் பக்க அடையாளமாக வைத்த விரலை எடுத்தான். காரின் பானெட்டின் மீது அந்த மாதப் பத்திரிகையை வைத்து விட்டு கார்க் கதவைத் திறந்தான்.

    கண்ணாடிக் கதவை உயர்த்துவதற்கு வைத்த ‘நாப்’ஐ நன்றாகச் சுழற்றி அதை முழுக்க மூடினான். கதவைப் பூட்டிக் கொண்டிருக்கும் போது எவனோ ஒரு சிறுவன் மாதப் பத்திரிகையின் பெயரை எழுத்துக் கூட்டி தன் படிப்பறிவைச் சோதித்து கொண்டிருந்தான்.

    “மோ…தி…ர…ம்… மோதிரம்.”
    “டேய்… நீ தானே ஹார்ன் அடிச்சவன்?”
    “சார்… நான் இல்லே சார்! நான் பக்கத்து வீடு! அதோ டில்லி கீறான் பாரு சார்… அடுத்த தெருவு பையன்… அவன் தான்… அவன்படா வால் சார்.”

    இவன் என்னமோ மகா உத்தமன் மாதிரி பேசுகிறான் என்று அந்த வயசின் விஷமத்தையெல்லாம் ரசித்துக் கொண்டே “மோதிரம்” பிரதியை எடுத்துக் கொண்டு வீட்டுக்குள் நுழைந்தான்.

    அந்த இதழில் அவன் எழுதிய குறுநாவலும் அவன் பேட்டியும் பிரசுரமாகியிருந்தன. கூடம் முழுவதும் கூட்டம்.

    வெற்றிவேல் ஒரு நாற்காலியில்; பிரீதா ஒரு நாற்காலியில்; புண்ணியகோட்டி பெஞ்சின் மீது; குழந்தைகள் எல்லாம் தரையில். பிரேம் மட்டும் சைக்கிள் சக்கரத்தைச் சுற்றிக் கொண்டிருந்தான்.

    சமையல் அறைக்குள் சிவாவின் அம்மா பஜ்ஜி போட்டுக் கொண்டிருந்தாள். அங்கே ஒரு முறை எட்டிப் பார்ப்பது… ஒரு நடை கூடத்திற்கு வருவது என்று திஷ்யா சுற்றிச் சுற்றித் திரிந்து கொண்டிருந்தாள்.

    “எப்பவோ ஒரு தடவை வர்றீங்க! அதுக்குள்ளே ஒங்களை நல்லா வேலை வாங்கிடறேன் அம்மா” என்று சிவாவின் அம்மாவைப் பார்த்து சொல்லிக் கொண்டிருந்த திஷ்யா, சிவா தெருவிலிருந்து வந்ததைப் பார்த்து மீண்டும் கூடத்திற்கு வந்தாள்.

    அவன் எழுந்து போன நாற்காலி காலியாக இருந்தது. ஆனந்து அந்த நாற்காலியைப் பிடித்து ஏறி உட்கார முயன்றான். சிவா நாற்காலி காலியாகட்டும் என்று நின்றான்.

    “ஆனி…ஆனி” என்று கூப்பிட்டார் புண்ணியகோடி…
    திஷ்யா அதைப் பார்த்து விட்டாள்.

    “ஆனந்து… இந்தா அப்பிச்சி” என்று ஒரு பஜ்ஜியை எடுத்துக் காட்டினாள். ஆனந்து அவளிடம் ஓடினான்.
    சிவா நாற்காலியில் உட்கார்ந்தான்.

    “ம்ம்… நீ அந்த பேட்டியை வாசிப்பா”
    மோதிரம் இலக்கிய மாத இதழுக்குத் தான் அளித்த பேட்டியைத் தானே படித்துக் காட்டத் தொடங்கினான் சிவா.

    கேள்வியை ஒரு தினுசாகவும் அதற்கு நான் அளித்த பதிலை ஒரு தினுசாகவும் மாற்றி மாற்றி தானே இரண்டு நபர்கள் போன்று நாடக பாணியில் படித்துக் காட்டினான் சிவா.

    “இந்தியாவிலேயே பி.டி. டாக்ஸி டிரைவரா இருக்கிற எழுத்தாளர் நீங்க ஒருத்தரா தான் இருக்க முடியும்னு நெனைக்கிறோம்.”

    “அதெப்படி சொல்றது, இந்தியா ரொம்பப் பெரிசு.. ஒரு வேளை மெட்ராஸிலேயே நான் ஒருத்தன் தாண்ணு சொல்லலாம்.”
    “நீங்க அனுபவங்களை அதிகம் சம்பாதிக்கலாம்ணு தான் டாக்ஸி ஓட்டறிங்களா?”

    “இல்லே. தமிழ்நாட்டிலே எழுத்தை மட்டும் நம்பி வாழ முடியாது. நான் சுதந்திரமா எழுத ஆசைப்படறேன். எழுத்தையே முழுக்க நம்பினா வியாபார ரீதியிலே ஏதாவது சீப்பா எழுத நேரிடும், ஸோ… எனக்கு ஜீவனோபயத்துக்கு வசதியா இல்லேண்ணாலும் அடிப்படைத் தேவைகளுக்காவது எனக்கு ஒரு தொழில் வேணும். எனக்கு கார் ஓட்டத் தெரியும்! ஸோ…நான் ஒரு பி.டி. டிரைவர் ஆனேன்.”

    “சுதந்திரமா எழுதறதுண்ணு எதைச் சொல்றீங்க?”

    “சமூகத்திலே நடக்கிற நிகழ்ச்சியைப் பத்தி எனக்குத் தோணியதை நான் சொல்ல விரும்பறேன். அதற்கு எந்த கட்டுப்பாடாவது இருந்தா எனக்குப் பிடிக்கலே. எந்தக் கட்டுப்பாடும் இல்லாமே இந்த சமூகம் இயங்குகிற விதத்தைப் பத்தி ஒரு எழுத்தாளனாக இந்த சமூகத்தின் நலத்தை விரும்பி எழுதுவதைத்தான் என் அளவில் சுதந்திரம்ணு நான் நெனைக்கிறேன்.”

    “வேற ஏதாவது நல்ல வேலை கெடைச்சா டாக்ஸி ஓட்டறதை விட்டுடுவீங்களா?”
    “ஏன்… வேற ஏதாவது வேலை வச்சிருக்கீங்களா?”

    கூடத்தில் உட்கார்ந்திருந்தவர்களில் நாலைந்து பேர் சிரித்தனர். சிவா மட்டும் படித்துக் கொண்டிருந்த ‘மொனாடனி’ அகன்று கூடத்தில் உயிர்க் களை பரவிற்று.

    “டேய்… கிண்டலா பண்றே?” என்று பேட்டியில் சிவா கூறியதில் வெற்றிவேல் குறுக்கிட்டான்.”
    “மீதியைக் கேட்டுட்டு சொல்லேண்டா” என்று சிவா தொடர்ந்தான்.

    “நீங்க ஒரு பி.டி. ஓட்டறதை விட்டுட விரும்புவீர்களாண்ணு கேக்கறோம்!”
    “இல்லை பி.டி. ஓட்டறது நல்ல வேலை இல்லைன்னு யார் சொன்னது?”
    “ஒரு பி.டி. டிரைவருக்கு சமூகத்திலே இருக்கிற அந்தஸ்து வேறே; ஒரு எழுத்தாளருக்கு சமூகத்திலே இருக்கிற மதிப்பு வேறே இல்லையா?”

    “இருக்கலாம்…எனக்குத் தெரியாது! அந்த அளவு அந்தஸ்து பேதம் பார்க்கிற மாதிரி என்னை நான் வேறு படுத்திக்கலே.”
    “உங்கள் அபிப்பிராயத்தை நீங்கள் விளக்க முடியுமா?”

    “நான் இந்த சமூகத்திலே வசிக்கிறேன். என் தொழில் இந்த சமூக நலனை விரும்புவது. இதன் மேம்பாட்டுக்காக என்னால் என்ன முடியுமோ அதை வஞ்சனையில்லாம செய்யறது. நீங்க முன்னே ஒரு கேள்வி கேட்டீங்களே…வேற வேலை இல்லாதலே பி.டி. ஓட்ட வந்தீங்களாண்ணு. அதுக்கு இப்ப விளக்கமா பதில் சொல்றேன். வேலையை… ஐ மீன் வைட் காலர்ட் ஜாப்ஐ தேடிக்கிட்டு நானும் கொஞ்ச நாள் அலைஞ்சேன். எனக்கு ரொம்ப அவமானமா இருந்தது…”

    “வேலை தேடி அலையறது அவமானம்கறீங்களா?”
    “இல்லியா பின்னே?”
    “வேலை இல்லாதவர்கள் வேலை தேட வேண்டியது தானே, அதிலே என்ன அவமானம் இருக்கு?”

    “எதுக்குமே அலைஞ்சா அவமானமா இருக்கு. நான் மனிதன். இந்த கர்வம் இருக்கே, இந்த பெருமிதம் இருக்கே, இந்த விசாலமான இருதய வலிமை இருக்கே இதை, எதைத் தேடி அலைந்தும் நான் இழந்துடத் தயாராயில்லை.”
    “நீங்க ஒரு ‘எக்ஸ்க்ளூஸிவ்’ ஆக இருக்கலாம்.”

    “நான் ஒரு எக்ஸ்க்ளூஸிவ்’ இல்லே. சாதாரண மனிதன்தான். வெள்ளைக் காலர் வேலைதான் வேலை என்று கருதாத தொழிலாளி. இந்தத் தொழில்லே எனக்கு சமூகத்தின் சகல விதமான நாடி ஓட்டங்களும் தெரியுது. நான் பலதரப்பட்டவங்களை சந்திக்கிறேன். பல்வேறு மக்களோட பழகறேன். எனக்கு இந்த சமூகம் எப்படி இயங்குகிறதுண்ணு தெரியுது. அதனால் இந்தத் தொழில் எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு!”

    “நீங்க ஒங்க சொந்த வண்டியை ஓட்டறீங்களா… அல்லது டாக்ஸி கம்பெனியிலே ஒரு நாளைக்கு இவ்வளவு ரூபா கொடுத்துடணும்ணு ஒரு கட்டுப்பாட்டின் கீழே வேலை செய்யறீங்களா?”
    “நான் ஒரு டாக்ஸி கம்பெனியிலே தான் இருக்கேன்.”
    “அப்போ ஒங்களுக்கு எழுத நேரம் கெடைக்காதே!”

    “டாக்ஸி ஓட்டி நெறய சம்பாதிக்கணும்ணு ஆசைப்பட்டா எனக்கு நேரம் கெடைக்காது. எனக்கு அதிக தேவைகள் இல்லே. நான் கல்யாணமாகாதவன். எனக்கு அம்மா மட்டும் தான் இருக்காங்க. எழுதறதுக்கு எப்ப தோணுமோ அப்ப நான் டாக்ஸி ஓட்ட மாட்டேன். நிறுத்திட்டு எழுத ஆரம்பிச்சுடுவேன். சில சமயங்கள்ளே அவசரமான சந்தர்ப்பங்கள் வரும்… பிரசவ கேஸ், ஆக்ஸிடெண்ட் ஆவணங்களை தூக்கிட்டுப் போறதுன்ஙனு சிக்கல் வரும். அப்ப எழுத்தை கொஞ்சம் ஒத்தி வச்சுட்டு சவாரி போவேன். எனக்கு மானத்தோடு உயிர் வாழப் போதுமானது இதுலே கெடைக்குது.”

    “இந்த வேலையை எக்காரணத்தைக் கொண்டும் நீங்க வட விரும்பலியா?”

    “இந்த வேலை எனக்குப் பிடிச்சிருக்கு! இதை விடப் பிடிக்கற வேலை ஏதாவது என் முன் எதிர்ப்பட்டா ஒருக்கால் விட்டுடலாம். வாழ்க்கையில் எது நிரந்தரம்? எந்த வேலையும் நல்ல வேலை தான். ஒரு வக்கீலின் வேலைக்கு, நல்ல முறையில் செருப்புத் தைக்கும் ஒரு செருப்புத் தொழிலாளியின் வேலை இளைத்தது அல்ல என்று நமது தேச பிதா காந்திஜி சொல்லியிருக்காரே! எனக்குத் தெரிஞ்ச வேலை கார் ஓட்டறது. ஓட்டிகிட்டிருகேன். எழுதறது, எழுதிட்டிருக்கேன். தட்ஸ் ஆல்.”

    “நன்றி”
    “வணக்கம். நன்றி”
    “அற்புதமான பேட்டிதாம்பா” என்று புண்ணியகோடி ஒப்புக் கொண்டார்.

    “பிரேம்… சீதா… கொஞ்சம் இப்படி வர்றீங்களா?” என்று திஷ்யா
    மையல் அறையிலிருந்து அழைத்தாள்.

    “எதுக்கு அக்கா?”
    “இந்த பஜ்ஜி பிளேட்களை எல்லாம் எல்லாருக்கும் கொண்டு போய் வைங்க.”
    பஜ்ஜி தட்டுகள் ஒவ்வொன்றாக கூடத்திற்கு வந்தன. எல்லோரும் சாப்பிடத் தொடங்கும் போது சிவா எழுந்தான்.
    “என்ன சிவா!” என்று புண்ணியகோடி கேட்டார்.”

    “கொஞ்சம் மொகம் அலம்பணும் போலேருக்கு!”
    “பொழக்கடையிலே சிமிட்டித் தொட்டிலே தண்ணி இருக்குமே… திஷ்யா” என்று கூப்பிட்டார்.
    “இதோ வந்துட்டேம்பா. தொட்டியிலே தண்ணி ஆய்ட்டிருக்கும்.”

    “சிவா மொகம் அலம்பணுமாம்மா! சோப்… டவல் எல்லாம் கொண்டு போ. தண்ணியை சேந்தி ஊத்திவிட்டு வா!”
    தான் வருவதற்காகக் காத்திருப்பது போல அவர்கள் பஜ்ஜியைத் தொடாமலிருந்தனர்.

    “நீங்க சாப்பிடுங்க!”
    அவன் புழக்கடைக்குப் போனான்.
    சோப்பும் டவலுமாக திஷ்யா பின் தொடர்ந்தாள்.

    டவலை பாத்ரூம் கம்பியின் மீது போட்டு விட்டு அவள் திரும்பும் போது சிவா கையைப் பிடித்தான்.
    “மொகமா அலம்பணும்?… என்று குறும்பாகக் கேட்டாள் திஷ்யா.
    “ராயல்டி?… கங்கோத்ரி பார்மசூட்டிகல்ஸுண்ணு பேர் வச்சதுக்கு!”

    அவளை இழுத்து அணைத்துக் கொண்டான் சிவா. அந்த இடுப்பும் தோளும் மார்பும் விறுவிறுவென்று துடிப்பதை அவன் உணர்ந்தான்.

    சட்டென்று அவள் உதடுகளை நோக்கிக் குனிந்தான். ஒரு நிமிஷத்திலே வாயைத் துடைத்துக் கொண்டு அவனிடமிருந்து விடுபட்டு வாளியை கிணற்றில் இறக்கினாள் திஷ்யா.

    ராட்டினம் கிறீச்சிட்டுக் கொண்டு உருண்டது. தண்ணீர் மட்டத்தை அது தொட்ட ஒலி வந்தது. அப்போது திஷ்யா கேட்டாள்.
    “வெற்றிவேல் எதுக்கு வந்திருக்காரு?”
    “அக்ரிகல்சர் ஆபீஸ்லே ஏதோ தகவல் தேவையாம்! அதுக்கு வந்திருக்கான்”

    “இன்னும் ரெண்டு நாள் இருப்பாரா?…”
    “இல்லே, இன்னிக்கு நைட் மெய்லே பொறப்பட்டுடுவான். ஹி ஈஸ் வெரி பிஸி”
    “ஆமா… பேட்டியிலே தேவைகள் ரொம்பக் குறைவுண்ணு சொல்லியிருந்தீங்களே… கல்யாணமாய்ட்டா என்ன பண்ணுவீங்க?”

    “கல்யாணமானா என்ன பண்றது? ஹனிமூன் போகணும். அப்புறம் கொழந்தை பெத்துக்கணும்.”
    “இந்த கிண்டல் தானே வேண்டாங்கிறது! இது பேட்டியில்லே. நெஜம்மா கேக்கிறேன்”

    “ஆகட்டும்… அப்புறம் பார்ப்போம். அன்றன்றைய பாடும் கவலையும் அன்றன்றைக்குப் போதுமானது. மொதல்லே அம்மாவுக்குக் கூட டாக்ஸி ஓட்டறது பிடிக்கலே. பிரீதா வீட்டிலே சொமையா தங்கியிருக்க வேண்டாமேண்ணு சொன்னதும் ஒப்புக்கிட்டாங்க…”

    “பிரீதா வெற்றிவேலைத் திருமணம் செஞ்சுகிட்டிருந்தா நல்லா இருந்திருக்கும்!”

    “யார் இல்லேண்ணாங்க… ஆனா பிரீதா தயங்குறா! பார்ப்போம்… ஒரு வேளை அவளுக்கும் தாமு ஞாபகம் மாறலாம்.”
    அவள் தண்ணீரை இழுக்கத் தொடங்கினாள்.

    “திஷ்யா… நந்தவனத்திலே என்னை ஒரு தொடர் கதை கேட்டிருக்காங்க?”
    “அப்படியா… சபாஷ்… கங்க்ராசுலேஷன்ஸ்… இதை ஏன் மொதல்லேயே சொல்லலே?”

    “தொடர் கதைக்கு ஒரு தலைப்பு தேடிக்கிட்டிருந்தேன் கெடைச்சப்புறம் சொல்லலாம்ணு. ஜஸ்ட்… இதோ இப்ப தான் ஒன்னை… ஒன்னை பாத்ரூமிலே தொட்டப்போ தான் தலைப்பு கொடைச்சுது!”
    “என்ன தலைப்பு?”

    “இது உதயம் இல்லையோ?”
    “ஆமாம்.. இப்பொழுது உதயமில்லைதான்!”

    “இப்பொழுதுண்ணா… இந்தப் பொழுதுண்ணு சொல்லலாம். எந்தப் பொழுதுக்கும் ஓர் உதயம் உண்டு இல்லியா?”
    “கரெக்ட்”

    வாளிக்கு மாட்டியிருந்த கயிற்றை நீளமாக இழுத்து வந்து சிமிட்டித் தொட்டியில் தண்ணீரை நிரப்பினாள் திஷ்யா.
    அவன் அவள் தண்ணீர்த் தொட்டியிலிருந்து நிமிர்வதை குறுகுறுவென்று பார்த்தான்.
    “ஏய்… என்ன பார்க்கிறே?”

    “இது உதயம் இல்லையோ?”
    “எது?”
    “இது கூடத்தான். அது?”
    “அது அப்புறம்!”
    “எப்புறம்?” என்று கேட்டான்.

    “சீக்கிரமா மொகத்தை அலம்பிட்டு உள்ளே வா.” என்று அவள் கூடத்திற்குள் நுழைந்தாள்.
    * * *

    முற்றும்.

    Share
  • ஐந்து கை ராந்தல் – 30

    வையவன்

    வெற்றிவேல் வரவில்லை. அவன் திருப்பத்தூர் வரை வந்து இருவரையும் ரயில் ஏற்றினான்.
    அம்மாவை சாமான்கள் எல்லாம் மூட்டை கட்டி ஒரேயடியாக எடுத்துப் போகலாம் என்று வற்புறுத்தினான் சிவா.

    “இப்ப வேணாம்! இப்ப வேற ஒரு விஷயத்துக்குப் போறோம். அது நல்லபடியா நடத்துட்டா நாம்பளே வேற வீடு பார்க்க வேண்டியதா இருக்கும். நீயும் நானுமா ஒரு வீட்டைத் தேடுவோம். கெடைச்சப்புறம் சாமான்களை எடுத்துட்டுப் போவோம்.”
    பளிச்சென்று பிசிறு அறுந்த மாதிரி இருந்தது சிவாவுக்கு.

    ரயில்வே ஸ்டேஷனை விட்டு இறங்கியதுமே சென்னை அம்மாவுக்கு பிடிக்கப் போவதில்லை என்று பயந்து கொண்டே வந்தான் சிவா, அவளுக்கு எல்லாம் சகஜமாயிருந்தது.

    “பெரிய ஊருண்ணா கூட்டம் ரொம்ப. நெரிசல் ரொம்ப. இப்படித்தான் இருக்கும்… சுறுசுறுப்பா ஜனங்க ஓடறதும் நடக்கறதும் நல்லாத்தான் இருக்கு.”
    அம்மா அதையும் ரசித்தாள்.

    ராயப்பேட்டையில் பஸ் இறங்கி நடந்தனர். பிரீதா க்வார்ட்டர்ஸில் இருந்தாள்.

    ஒரு சூட்கேஸுடன் மட்டும் வந்து நிற்கும் சிவாவைப் பார்த்துவிட்டு “எவிடயாணு அம்ம?” என்று வெளியே வந்தாள்.
    ஒரு நூல் சேலையில் நெற்றியில் குங்குமம் பளிச்சிட, சிவாவின் அம்மா நான் தான் என்று அச்சடித்து வைத்த மாதிரி ஒரு முகக் களையோடு புன்னகையோடு வந்து நிற்பவளைப் பார்த்ததுமே சட்டென்று ஒட்டிக் கொள்ள வேண்டும் போல் தோன்றியது.

    அவள் அருகில் போய் சிரித்துக் கொண்டே நின்றாள். அம்மாவைத் தொட வேண்டும் போலிருந்தது.
    அவள் கையைப் பிடித்து “அம்மா” என்றாள்.

    பிடித்த கையை அம்மாவும் பற்றிக் கொண்டாள்.

    “நீ தான் பிரீதாவா?”
    அம்மாவுக்கு ஏனோ மனசு சுரந்தது.

    இதென்ன இது! இவ்வளவு பெரிய ஆஸ்பத்திரியில் பெரிய நர்ஸ்.

    யாரோ முன் பின் தெரியாதவள். பேச்சு வேறே. நாடு வேறே. ஜாதி வேறே!
    ஏதோ தெருவில் நடந்து போகிற எவளோ ஒருத்தியைப் பார்த்து முகம் மலரச் சிரித்துக் கொண்டு ஓடி வந்து காலைக் கட்டிக கொள்கிற குழந்தை மாதிரி வந்து கையைப் பிடித்துச் சிரிக்கிறாள்.

    அம்மா சட்டென்று அவள் முகத்தை இரண்டு கைகளாலும் நீவி வழித்து திருஷ்டி முறித்தாள்.
    “இது எந்தினாணு?”
    “கண் திருஷ்டி படக்கூடாது” சிவா விளக்கினான்.

    பிரீதாவுக்குப் புரிந்தது. சிரிப்பு வந்தது. குலுங்கிக் குலுங்கிச் சிரித்தாள். அது அம்மாவைப் புண்படுத்தவில்லை. அவள் அப்படிச் செய்வதற்கு அப்படி என்ன நான் அவ்வளவு அழகா என்ற கேள்வி வந்து இப்படி யாரோ ஒருவர் திருஷ்டி முறிக்கிற சொந்தத்திற்கு வந்து சேர்ந்த பூரிப்பு வந்தது.

    ஏதோ வெகு நாட்களுக்கு முன் விட்டுப் போன- ஜென்மங்களுக்கு முன்னால் பிரிந்து போன உறவெல்லாம் இணைந்த குதூகலம் வந்து அவள் குலுங்கிக் குலுங்கிச் சிரித்தாள்.

    அந்தச் சிரிப்பில் என்ன விடுதலை!
    சிவா ரிஷிகேஷில் பிரீதா பாபா ஓம்கார்நாத்தின் முன்பு அழுததை நினைத்தான். அங்கே பிரீதா அழுது விடுதலையானாள். இன்று அம்மாவிடம் சிரித்து விடுதலையாகிறாள்.

    இரண்டு நாட்களாக பிரீதாவிற்குச் செய்வதற்கு வேலை இல்லாமல் போய் விட்டது.
    எதற்கெடுத்தாலும் அம்மா ஓடி ஓடி முன் வந்தாள். கிராமீயமான எளிமையில் அவள் செய்யும் சிறு பிழைகள் கூட மகிழ்ச்சியாக இருந்தன.

    வந்த முதல் நாளே சிவா அம்மா வந்திருக்கும் காரணத்தைச் சொன்னான். வெற்றிவேலின் உத்தேசத்தைச் சொன்னான்.
    பிரீதா முகம் வாடாமல் எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டாள். பதில் சொல்லவில்லை.

    அன்று மாலை அம்மாவை அழைத்துக் கொண்டு பீச்சுக்குப் போவதாக பிளான். நாலு மணிக்கு உத்தரவு வாங்கிக் கொண்டு வருவதாகச் சொன்ன பிரீதா மூன்று மணிக்கெல்லாம் வந்தாள்.
    “என்ன பிரீதா?” என்று சட்டைக்கு அயர்ன் போட்டுக் கொண்டிருந்த சிவா கேட்டான்.

    “ரேடியாலஜி டிபார்மெண்ட்டுக்கு புதிய கருவிகள் வந்திருக்கு. சி.எம்.சிக்கு நான் டிரெய்னிங் போனேன் இல்லே! அது சம்பந்தமான அபாரடஸ், இப்ப நம்ப ஹாஸ்பிடல்லே ‘இன்ஸ்டல்’ பண்ணப் போறாங்க. ராத்திரி பத்து பதினொண்ணு ஆயிடும். ஐ ஆம் சாரி சிவா. அம்மாவை நீ பீச்சுக்கு அழைச்சுட்டுப் போய்ட்டு வந்துடு.”
    “ஆல்ரைட்” சிவா ஒத்துக் கொண்டான்.

    சொன்னபடியே பிரீதா வீடு திரும்ப பதினொன்று ஆகிவிட்டது. அவளுக்காக டிபன் செய்து பத்திரமாக மூடி வைத்து விட்டுத் தானும் சாப்பிடாமல் காத்திருந்தாள் அம்மா.

    “அம்மா கழிக்கணும். எனிக்கு சமயம் கிட்டான் அல்பம் போகும்”
    “கழிக்கணுமா?”
    “ஓ… சாப்பிடணும். முன்னாடி சாப்பிடணும். வெயிட் பண்ண வேண்டாம்”
    “எனக்கு பசிக்கல்லே கொழந்தே!”
    அம்மா பரிமாறிவிட்டு கூடச் சாப்பிட உட்கார்ந்தாள்.

    அன்றிரவு அம்மா பக்கத்திலேயே கட்டிலை விட்டுக் கீழே தரையில் மெத்தை விரிப்பைப் போட்டுப் படுத்துக் கொண்டாள் பிரீதா.
    இரவு அவள் ஒரு கனவு கண்டாள்.

    அந்தக் கனவில் தாமு அவர்கள் ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆகியிருந்தான். ரேடியாலஜி டிபார்ட்மெண்டில் டாக்டருக்கு உதவியாக அவள் நின்றிருந்தாள்.

    தாமுவை ரேடியாலஜி டிபார்ட்மெண்டுக்குள் கொண்டு வந்தார்கள்! படுக்க வைத்து டாக்டர் பரிசோதிக்கும் போது வெளியே இருந்து ‘பிரீதா பிரீதா’ என்று ஒரு குரல் அழைத்தது. அவள் அதைப் பொருட்படுத்தவில்லை.

    ஒரு குரல் பல குரல்கள் ஆயிற்று. நூறு நூறு குரல்கள் கூப்பிட்டான். அவள் எதையும் பொருட்படுத்தாமல் நின்று கொண்டிருக்கும் போது கூச்சல்கள் அதிகரித்தன.

    அவள் வெளியே ஓடிப் போய் கத்துவது யார் என்று கேட்பதற்காகப் போக நினைக்கிறாள். கால்கள் நகரவில்லை. நகர முடியவில்லையே… ஏன். ஏன்?
    பளிச்சென்று கனவு கலைந்து பிரீதா எழுந்து உட்கார்ந்தாள்.

    “என்னம்மா கனவு கண்டியா?” என்று சிவாவின் தாய் கேட்டபோது, அந்தப் பரிவிலும் பிரியத்திலும் அவளுக்கு வெட்கம் வந்து விட்டது.

    “ஆமாம்மா… ஏதோ கெட்ட கனவு”
    அம்மா திருநீற்றுச் சம்புடம் கொண்டு வந்திருந்தாள் அதிலிருந்து கொஞ்சம் எடுத்து நெற்றியில் இட்டாள்.

    அடுத்த நாள் அம்மாவும் அவளும் கபாலீஸ்வரர் கோயிலுக்குப் போய் வந்தனர். வெகு நேரம் வரை கோயிலுக்குள் நிறைந்து வழிந்த கூட்டத்தை அம்மா ரசித்தாள். அவள் ரசிப்பதை பிரீதா ரசித்தாள்.

    பின்பு இருவரும் மயிலாப்பூர் குளக்கரைக்கு வந்தனர். வரிசை வரிசையாக இறங்கும் அந்த படிக்கட்டைப் பார்த்து, “இங்கே கொஞ்சம் உட்கார்ந்து போகலாமே பிரீதா என்றாள் அம்மா.

    பிரீதாவுக்கு அந்தப் பகுதியில் தான் பல பேருக்கும் முகம் தெரிந்த நர்ஸ் என்று முதலில் ஒரு தயக்கம் வந்தது.
    அவர்கள் என்ன நினைத்துக் கொள்வார்கள் என்பதை விட அம்மா என்ன நினைப்பாள் என்பது முக்கியமாகப் படவே அவளும் இசைந்தாள்.

    சிவாவின் அம்மா என்பதற்கு மேலாக அவளிடம் ஏதோ ஒரு பாந்தப் பிடிப்புத் தன்னை அணைத்து ஆசுவாசப்படுவதை இந்த இரண்டு நாட்களில் அவள் நன்கு அனுபவித்திருந்தாள்.

    மலையாளமும் தமிழும் கலந்த பிரீதாவின் கொச்சை மொழி அம்மாவுக்கு பிடித்துப் போயிற்று.
    உட்கார்ந்து கொஞ்ச நேரம் கழித்து அம்மா ஆரம்பித்தாள்.
    “சிவா சொன்னானாம்மா?”
    “சொல்லுச்சு”
    “நீ எங்கிட்டே சொல்லவே இல்லியே”
    பிரீதா தன் நகப் பூச்சையே மௌனமாகத் திருப்பித் திருப்பிப் பார்த்தாள்.

    “ஒன் மனசை தொறந்து சொல்லும்மா?”
    “………”
    “சிவா மாதிரியே வெற்றிவேலும் நல்லபிள்ளை எதைச் சொன்னாலும் மனசு வருத்தப்படாமே ஏத்துக்குவான்!…”
    பிரீதா கண்ணை உயர்த்த உண்மைப் பாசமும் அக்கறையும் நெகிழ்ந்து பரவிய அம்மாவின் முகத்தைப் பார்த்தாள்.
    “உனக்கு இஷ்டமில்லேண்ணா வேண்டாம்”
    என்ன பதில் சொல்வது என்று பிரீதா யோசித்தாள்.

    “வீட்டிலே பெரியவங்களைக் கேக்கணுமா?”
    நர்ஸ் டிரெயினிங்கில் அவளைச் சேர்த்து விட்டு டேராடூனுக்கு மனைவியை அழைத்துச் சென்ற அண்ணன் ஒருவன் தான் கேட்க உரிமையுள்ள பெரியவன்.

    மற்றவர்கள், மாண்டது போக மீதியிருந்தவர்கள். அபிப்பிராயம் சொல்லி விட்டு வேலையைக் கவனிக்கும் பெரியவர்கள்தான். டேராடூனுக்குப் போனவன் என்னமோ பெரிய ஆபீசராகி பிரான்ஸிலிருந்து வருஷத்துக்கு ஒரு கடிதமும் ஓணத்தன்று ஒரு பரிசும் அனுப்புவதோடு சரி.

    “இப்பவே சொல்லணும்ணு ஒண்ணும் அவசரமில்லே. நாலு நாள்… பத்து நாள். ஒரு மாசம்கூட யோசி… அப்புறமா சொல்லு! ரிஷிகேசத்திலே பாபா ஓம்கார்நாத் ஒன் பொறுப்பை இவனுங்க ரெண்டு பேரு கிட்டேயும் ஒப்படைச்சாராம்.”
    சட்டென்று பிரீதா அம்மாவின் முகத்தை வியப்போடு பார்த்தாள்.

    “என்ன சொன்னாராம்?”
    “ஒங்க ரெண்டு பேர்லே யாராவது அவளை ஏத்துக்கறவன் ஆசிர்வதிக்கப்படுவாண்ணு சொன்னாராம்.”
    பிரீதாவுக்கு மார்பு திரண்டு உடைந்து விடும்போல் விம்மி தொண்டையில் ஒரு துக்கம் மோதியது.

    ஒரு பார்வையில் அவள் மனசு முழுவதையும் புரிந்து கொண்ட பாபாவா இதைச் சொன்னார். அவர் எதை உத்தேசித்து அப்படிச் சொன்னார்?
    அம்மா எதிரில் அழவேண்டாம் என்று அவள் தன் மனசைக் கட்டுப்படுத்திக் கொண்டாள்.

    “சிவா கிட்டே எல்லாம் தெரிஞ்சுக் கிட்டீங்களா அம்மா?”
    “எதைப் பத்தி?”
    “என்னைப் பத்தி!”
    “ஏன் அப்படிக் கேக்கறே?”
    “சிவா எல்லாம் சொல்லிச்சா”
    “சொன்னான்.”

    “தாமுவுக்கும் எனக்கும் இருந்த ஸ்நேஹம்… அதுக்கு முன்னாடி சின்ன வயசிலே பிரபாகர வர்மாவோட இருந்த ஸ்நேஹம்…”
    “எல்லாம் சொன்னான். எனக்கு மட்டுமில்லே. வெற்றிவேலுக்கும் சொன்னான்.”
    “அதுக்கு அப்புறமும் வெற்றிவேலுக்கு என்னைக் கல்யாணம் பண்ணிக்கத் தோணுதாம்மா?”

    “அவனுக்கு மட்டுமில்லேம்மா, எனக்கும் கூடத்தான் ஒன்னைப் பாத்தப்புறம் ரொம்ப பிடிச்சிருக்கு. ஒரு பொம்பளைக்கு இன்னொரு பொண்ணு என்னண்ணு சட்டுனு தெரிஞ்சிடும். எது உத்தமம் எது நீசம்ணு பளிச்சுணு புரிஞ்சிடும்… நா என்ன பண்ணுவேன்? வெற்றிவேல் தான் மொதல்லே ஆசைப்பட்டு சொன்னான்?”
    அவள் புகழ்வதைக் கேட்டு பிரீதாவுக்கு நாணமாயிருந்தது. அந்த புகழ்ச்சி வஞ்சனையில்லாத வெள்ளை மனசிலிருந்து வருவதால் பால் மாதிரி பிரீதாவின் நெஞ்சை நனைத்தது.

    “அம்மா… சிவா எனக்கு சகோதரன். நீ என்டெ அம்மா”
    பிரீதாவுக்கு அம்மா மடியில் படுத்துக் கொள்ள வேண்டும் போலிருந்தது.
    ஓர் அன்னையின் மடி எப்படியிருக்கும்?
    அது குழந்தைப் பருவத்திலேயே தாயை இழந்த பிரீதாவுக்குத் தெரியாது. மடி மீது படுத்துக் கொண்டாள்.

    “எனக்கு வெற்றிவேலைப் பிடிக்காம இல்லேம்மா… அவர் ஒரு ஜென்டில்மேன்”
    “அப்புறம் என்ன…”
    “எனிக்குச் சொல்லத் தெரியலேம்மா…”
    “எப்பவும் தொணை ஒண்ணு தேவை பிரீதா… அது இப்ப தெரியாது… வயது ஆக ஆகத் தெரியும்.”
    “நீ என்னிக்குத் துணையில்லையாம்மா”
    பிரீதாவின் தலைமீது அம்மா கை வைத்தாள். அதை மெதுவாகப் பிடித்து விடுவது போல் நீவிக் கொடுத்தாள்.

    “நான் இருக்கற வரைக்கும் ஒனக்குத் துணை உண்டு. போனப்பறம்?”
    “நீ போகாதேம்மா… சிவா கல்யாணமாய்ப் போகட்டும். நீ வேண்டாம். நீ என்னோட இரும்மா”
    “இருக்கேம்மா… நான் ஒன்னோடவே இருக்கேன்” அம்மா நெடுமூச்செறிந்தாள்.
    பெண் மனசு அவளுக்குப் புரிந்தது.

    அது சீக்கிரம் மாறாது. அங்கே காயங்கள் லேசில் ஆறாது.
    மரம் சாய்ந்து வேரற்றுப் போன பள்ளத்தில் விதை விழுந்து மீண்டும் மழை பொழிந்து ஈரம் இறங்கி செடி எழுப்பும். ‘ஒரு வேளை எழும்பாமலும் போகும்.’
    காத்திருக்க வேண்டியது தான்.
    காத்திருப்பது யார்?
    வெற்றிவேலா?
    அம்மாவின் முகத்தில் படர்ந்த வினாக் குறையைக் கண்டு பிரீதா தொடர்ந்தாள்.

    “நான் என்னம்மா சொல்லட்டும்?”
    “ஒண்ணும் சொல்லாதே. எனக்குப் புரியுது… வெற்றிவேலுக்குப் புரியறாப்பிலே நான் சொல்லிக்கறேன்.”
    அவர்கள் இருவரும் எழுந்தனர்.

    வேடிக்கை பார்த்தவாறே நடந்தே க்வார்ட்டர்ஸுக்கு போய்விடலாம் என்று அம்மா வற்புறுத்தினாள்.
    “அம்மாவுக்கு திஷ்யா தெரியுமா?”
    “திஷ்யாவா… அது யாரு”
    “சிவா ஸ்நேஹிக்கிறவள்.”
    திஷ்யாவைப் பற்றி மெதுவாக சொல்லிக் கொண்டே வந்தாள் பிரீதா. சினிமாவில் நடிக்க மறுத்தவள் என்று சொன்னதுமே அம்மாவுக்கு அவளைப் பளிச்சென்று பிடித்து விட்டது.

    தன் சிவா தப்பு செய்ய மாட்டான் என்ற நம்பிக்கை அவளுக்கு எப்போதும் உண்டு.
    இதெல்லாம் ஏன் இன்னும் என்னிடம் சொல்லவில்லை?
    நேரம் வரும் என்று காத்திருக்கிறானோ? ஒருவேளை நான் சம்மதிக்க மாட்டேன் என்று தயங்குகிறானோ?
    அவள் மனசில் முழுச் சம்மதம் உதயமாகி விட்டது.

    தொடரும்

    Share
  • பயன்மிகு இணையவழிச் சேவைகள் – கட்டுரைப் போட்டி முடிவுகள்

    அன்பினிய நண்பர்களே,

    வணக்கம். சென்ற [ஆகஸ்ட், 2015] மாதத்திற்கான, பயன்மிகு இணையவழிச் சேவைகள்’ கட்டுரைப் போட்டிக்கான, நடுவர் திரு ஐயப்பன் கிருஷ்ணன் அவர்களின் முடிவை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறோம். பரிசு பெற்ற நித்திய லஷ்மிக்கு வாழ்த்துகள். இந்த மாத போட்டிக்குத் தயாராகிவிட்டீர்களா? விரைவில் தங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டுகிறோம். வாழ்த்துகள்.

    Google_Appliance

    ஐயப்பன் கிருஷ்ணன்

    கட்டுரையாளர் தந்திருக்கும் தகவல் மிக முக்கியமானது. தினசரி பயன்பாட்டில் நாம் தவறுதலாக இழக்கும் கோப்புகளைத் திரும்பப் பெற இந்தக் கட்டுரையில் சொல்லப் பட்டிருக்கும் மென்பொருட்கள் உதவும். நல்லதொரு கட்டுரை வழங்கிய எஸ்.நித்திய லக்ஷ்மிக்கு வாழ்த்துகள்.

    Share