Blog

  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    150426 Gajendra and the crocodile – watercolour sketch in 5”x7” (12.5×17.5cms- elephant dung paper) – lr

     

    ”புஜேந்திரர் மல்லில், நிஜேந்திரர் சொல்லில்,
    கஜேந்திரர் கத்த கருட -விஜயேந்த்ரர்,
    அந்தநாள் பார்(உலகம்)மூலம், இந்தநாள் நீர்மூலம்,
    வந்தனன் நந்தன் வளர்ப்பு’’….கிரேசி மோகன்….!

    Share
  • நல்வாழ்வுக்கு வழிகாட்டும் நாலடி – 7

    -மேகலா இராமமூர்த்தி

    மக்கள் வாழ்க்கையானது இன்பமும் துன்பமும் கலந்தது; நன்மையும் தீமையும் நிறைந்தது. எனவே வாழ்க்கையில் எது வந்தாலும் கலங்காது, வாழ்க்கையின் மெய்த்தன்மையை உணர்ந்து வாழ்தலே சிறந்தது.

    நாம் எத்தனையோ பேரை வாழ்வில் சந்திக்கிறோம். ஒவ்வொருவருக்கும் ஒவ்வோர் இயல்பு இருப்பதையும் காண்கின்றோம். சிலரின் பண்புகள் நம்மை அவர்களிடம் நெருங்கச் செய்கின்றன. வேறுசிலரின் பண்புகளோ அவர்களைவிட்டுக் காததூரம் விலகி ஓட வைக்கின்றன.

    சரியோ தவறோ யாருமே அவரவர் இயல்பை மாற்றிக்கொள்ளத் தயாராக இருப்பதில்லை. இதனைச் ’சுவை’யோடு விளக்குகின்றது நாலடியார்.

    தக்காரும் தக்கவ ரல்லாரும் தந்நீர்மை
    எக்காலுங் குன்றல் இலராவர் – அக்காரம்
    யாவரே தின்னினும் கையாதாம் கைக்குமாம்
    தேவரே தின்னினும் வேம்பு. 
    (நாலடி – 112) 

    ”சான்றோரும் சான்றோர் அல்லாதாரும் தத்தம் இயல்புகளிலிருந்து குன்றுதல் இலர்.  கருப்பங்கட்டியை யார் தின்றாலும் கசக்காது; ஆனால் விண்ணாளும் தேவரே தின்றாலும் வேப்பங்காய் கசக்கவே செய்யும்.” இதைத்தான் நாட்டுவழக்கில் ’நாய் வாலை நிமிர்த்த முடியாது’ என்கிறார்களோ?

    அறம் பொருள் இன்பம் என்ற முப்பொருளில் இடையிலுள்ள ’பொருளே’ அறத்துக்கும் இன்பத்துக்கும் ஆதாரமாக இருக்கின்றது என்பது அறிஞர்கள் துணிபு. முனிவர்களே ஆயினும் நாலடியாரின் ஆசிரியர்களும் அதற்கு எதிரானவர்கள் அல்லர்.

    வடுவிலா வையத்து மன்னிய மூன்றில்
    நடுவண தெய்த இருதலையும் எய்தும்
    நடுவண தெய்தாதான் எய்தும் உலைப்பெய்
    தடுவது போலுந் துயர்.  
    (நாலடி – 114)

    ”குற்றமில்லாத உலகத்தில் இன்றியமையாதனவாய்ப் பொருந்திய அறம் பொருள் இன்பம் என்னும் மூன்று உறுதிப் பொருள்களுள், நடுவில் நின்றதான ‘பொருள்’ என்பதை ஒருவன் அடைந்தால், அது காரணமாக, அதன் இருபக்கத்தனவான ‘அறம்’ ‘இன்பம்’ என்னும் இரண்டையும் அவன் அடைவான். அவ்வாறு நடுவில் நின்றதான செல்வப்பொருளை அடையாதவன், கொல்லன் உலையில் இட்டு இரும்பைக் காய்ச்சுவது போலும் வறுமைத் துன்பத்தை அடைந்து நைவான்” என்கிறது மேற்கண்ட நாலடியார் பாடல்.

    ஆம், இல்லானை இல்லாளும் வேண்டாள்; ஈன்றெடுத்த தாயும் வேண்டாளே!

    செந்நாப்போதாரும், இதே கருத்தைச் சுருக்கமாக,

    ”ஒண்பொருள் காழ்ப்ப இயற்றியார்க்கு எண்பொருள்
    ஏனை இரண்டும் ஒருங்கு” (760) என்று கூறிப் போந்தார்.

    உலகத்தாரில் பலர், பணம் புகழ் பதவி இவை வலுத்தோரிடம் பல்லிளிப்பதையும், தமக்கு அவர்களால் ஏதேனும் ஆதாயம் கிடைக்கக்கூடும் எனும் ’குருட்டு’ நம்பிக்கையில் அவர்கள் தம்மை இழிவுபடுத்துவதைச் சகித்துக்கொள்வதையும் காண்கிறோம்.  இது சரியா?

    நாலடியார் சொல்வதைக் கேட்போம்!

    தம்மை இகழ்வாரை தாமவரின் முன்னிகழ்க
    என்னை அவரொடு பட்டது – புன்னை
    விறற்பூங் கமழ்கானல் வீங்குநீர்ச் சேர்ப்ப
    உறற்பால யார்க்கும் உறும். 
    (நாலடி – 117)

    ”அவரவற்குரிய நன்மை தீமைகள் அவரவர்க்கு வந்துசேரும். ஆதலால், புன்னையின் வலிமைவாய்ந்த மலர்மணங் கமழ்கின்ற சோலைகளையுடைய கடற்கரைத் தலைவ! தம்மைப் புறக்கணிப்பவரை அவரினும் முற்படத் தாம் புறக்கணிக்கவேண்டும். அவமானப்பட்டேனும் அவர்களோடு அப்படி என்ன தொடர்பு வேண்டிக்கிடக்கிறது?” என்று கண்டிக்கிறது நாலடியார்.

    நமக்கென்று உள்ளது நமக்குக் கிட்டாமல் போகாது. ’உறற்பால தீண்டா விடுதல் அரிது’ என்ற பிறிதொரு நாலடியார் பாடலை இங்கே நாம் நினையலாம். அதுபோல், என்னதான் ஓடிஓடித் தேடினாலும் நமக்கில்லாத ஒன்று நமக்குக் கிட்டாது. அப்புறம் எதற்குத் தன்மானத்தையும் கண்ணியத்தையும் இழந்து பிறரை நத்திக்கிடப்பது?

    ’எடுத்த காரியம் யாவினும் வெற்றி’ என்று பூரிப்போடு வெற்றிகளையே வாழ்வில் குவிக்கவும், வாழ்வின் ஒவ்வொரு நாளையும் மகிழ்வோடு கழிக்கவுமே சராசரி மனித மனம் அவாவி நிற்கின்றது. ஆனால் உலகின் இயல்பு அவ்வாறிருப்பதில்லை.

    நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் மனிதன் மனிதனாக இருக்கமாட்டான் என்று கருதியோ என்னவோ இயற்கை அவனுக்குத் துன்பப் பாடங்களைப் பாடத்திட்டத்தில் சற்றுக் கூடுதலாக வைத்துத் தக்க அனுபவங்களைப் படிப்பினையாய்த் தருகின்றது.

    யாஅர் உலகத்தோர் சொல்லில்லார்? தேருங்கால்
    யாஅர் உபாயத்தின் வாழாதார்? – யாஅர்
    இடையாக இன்னாத தெய்தாதார்? யாஅர்
    கடைபோகச் செல்வம்உய்த் தார்? 
    (நாலடி – 119)

    ”உலகியலை ஆராய்ந்து பார்த்தால், ஒரு பழிச்சொல்லைக்கூட அடையாதவர் இவ்வுலகில் யார்? ஏதேனும் ஓர் காரணம் பற்றி உலகில் வாழாதார் யார்? வாழ்வின் இடையே இடரும் இடுக்கணும் அடையாதார் யார்? வாழ்வின் இறுதிவரையிற் செல்வத்தை நுகர்ந்தவர் யார்?” என்று கேள்விக்கணைகளைத் தொடுக்கின்றது நாலடியார். இதற்கெல்லாம் ஒரே பதில் “யாருமில்லை!” என்பதுதான்.

    ஆதலால் இன்ப துன்பமும் கலந்து வருவதே உலகியற்கை என்பதை உணர்ந்து, அவற்றுக்கு மனம் கலங்காதிருப்பவனே வாழத்தெரிந்த மனிதன் ஆவான்.

    நமக்கு வாய்க்கும் வாழ்க்கை, ’இன்பமே எந்நாளும் துன்பமில்லை’ என்று மகிழ்ந்துபாடும்படி அமைந்தாலும் சரி, ’துன்பங்களே எமக்குத் தொடர்கதையோ’ என்று வருந்தும்படி இருந்தாலும் சரி… அதற்காக நல்வழியிலிருந்து நீங்கித் தீவினைகள் ஆற்றக்கூடாது; அவ்வாறு செய்தால் அது மேன்மேலும் நமக்குத் துன்பத்தையும் கெடுபலன்களையுமே கொடுக்கும் என்று குறிப்பிடும் நாலடியார், மனிதர்களுக்கு மட்டுமல்லாது பிற உயிர்களான பறவைகளுக்கும் விலங்குகளுக்கும்கூடத் தீங்குசெய்வதோ அவற்றைக் கொல்வதோ மா பாவம் என்கின்றது.

    அக்கேபோல் அங்கை யொழிய விரலழுகித்
    துக்கத் தொழுநோய் எழுபவே – அக்கால்
    அலவனைக் காதலித்துக் கான்முரித்துத் தின்ற
    பழவினை வந்தடைந்தக் கால். 
    (நாலடி – 123)

    ”முற்பிறப்பில் நண்டின் ஊனை விரும்பித் தின்றவனுடைய பழவினை இப்பிறப்பில் வந்தடையும்போது, சங்குமணிபோல வெண்ணிறமாய் உள்ளங்கைகள் மட்டும் இருக்க, ஏனைய விரல்களெல்லாம் அழுகிக் குறைந்து துன்பம்தரும் தொழுநோய் உண்டாகப் பெறுவான் அவன்” என்று எச்சரிக்கின்றது நாலடியார்.

    பிற உயிர்களை வருத்துபவன் அவ்வாறே தானும் துன்புறுவான் என்பதே இதன் வாயிலாய் நாம் பெறும் பாடம்!

    ”பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா
    பிற்பகல் தாமே வரும்”  (319) என்ற வள்ளுவத்தை ஈண்டு உள்ளுவம்; உயிர்க்கொலையைத் தள்ளுவம்!

    சில நேரங்களில் நாம் ’உயர்ந்தவர்’ என்று கருதி ஒருவரிடம் பழகுவோம். நெருங்கிப் பழகியபின்தான் தெரியவரும் அச்சொல்லுக்கு அவர் சிறிதும் அருகதை அற்றவர் என்பது. அப்போது நமக்கு ஏற்படும் அதிர்ச்சியை அழகிய உவமை ஒன்றின்மூலம் விளக்குகின்றது நாலடியார்!

    சான்றோ ரெனமதித்துச் சார்ந்தாய்மன் சார்ந்தாய்க்குச்
    சான்றாண்மை சார்ந்தார்கண் இல்லாயின் சார்ந்தாய்கேள்
    சாந்தகத் துண்டென்று செப்புத் திறந்தொருவன்
    பாம்பகத்துக் கண்ட துடைத்து. 
    (நாலடி – 126)

    ”நீ சிலரைக் குணம் நிறைந்தவர் எனமதித்து மிகுதியும் உறவு கொள்கின்றனை; அவ்வாறு உறவுகொள்ளும் நினக்கு நீ சார்வோரிடத்தில் குணநிறைவு காணப்படாதாயின், ஆராயாமல் உறவுகொள்வோனே, கேட்பாய்! அச்செயல், சந்தனம் உள்ளே இருக்கின்றதென்று கருதிச் சிமிழைத் திறந்த ஒருவன் பாம்பை அதனுள் கண்டாற்போன்ற தன்மையுடையது” என்பது இப்பாடலின் பொருள்.

    மனித இயல்பு விசித்திரமானதுதான்! எவ்வளவு நெருங்கிப் பழகினாலும் சிலரை நம்மால் புரிந்துகொள்ள முடிவதில்லை. தன்னலம் ஒன்றே குறியாய், சூழ்நிலைக்குத் தக்கபடி நிறம் மாறும் அவர்களைத் தெரிந்து தெளிதல் மிகக் கடினம்.

    ”எனைவகையான் தேறியக் கண்ணும் வினைவகையான்
    வேறாகும் மாந்தர் பலர்” (514) என்று அறிவிற் சிறந்த வள்ளுவரே இப்பச்சோந்தி மனிதர்களைப் புரிந்துகொள்ள முடியாமல் உளம் சோர்ந்திருக்கிறார் எனும்போது நாமெல்லாம் எம்மாத்திரம்?

    கூடுமானவரை நன்கு ஆராய்ந்தபின்னரே எவரோடும் நட்புக்கொள்ள வேண்டும். அந்நட்பு, தீ நட்பாகவோ கூடா நட்பாகவோ இருக்குமானால் எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவில் அந்நட்பைக் கொல்லவேண்டும். அதுவே நம்மை நாம் காத்துக்கொள்ளும் நல்வழி!

    [தொடரும்]

    *****

    துணைநூல்கள்:

    1. நாலடியார் மூலமும் உரையும் – திரு. தி. சு. பாலசுந்தரம் பிள்ளை
    2. திருக்குறள் தெளிவுரை – மு. வரதராசனார்

     

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    180622 New Forever lr 10×14 in

    சரணா கதியென்று சார்ந்து கிடப்போர்க்(கு)
    அரணாய் இருக்கும் அரியே -நரனாய்ப்
    பிறந்து வளர்ந்து பிணியென்ற சாக்கில்
    இறந்தில்லை யாவ(து) எதற்கு!….கிரேசி மோகன்….!

    Share
  • பொம்மை

    முனைவர் கி. இராம்கணேஷ்

    என்னால் சொல்ல முடியவில்லை
    எப்பொழுதும் என் அங்கங்களை
    நோட்டமிடும் கழுகுப்பார்வைகள்
    என் அனுமதியில்லாமல் அன்றாடம்
    என்னைத் தீண்டும் கைகள்…
    வீசிய காற்றின் வேகத்தில்
    விலகிய ஆடையில்
    மார் பார்க்கும் பார்வைகள்
    பேசாமல் மௌனியாய்
    ஏதோ ஒரு திசையில்
    பார்த்துக்கெண்டிருக்கிறேன்
    சிலநேரங்களில்
    கோடையில் வீசும் தென்றலாய்
    தொட்டுச் செல்லும் குழந்தைகளின் ஸ்பரிசங்கள்
    இரணமான உடலுக்கு மயிலிறகின் மென்மை
    இப்படித்தான் என் வாழ்க்கை
    சுழன்று கொண்டிருக்கிறது…
    புத்தாடையுடுத்தி புதுப்பொலிவுடன்
    பார்க்க அழகாய்த் தெரிகிறேன்.
    நின்று நின்று கால்களும் நோகின்றன.
    நான் போட்டிருக்கும் ஆடையைப்
    பிடுங்கிச் செல்லத்தான்
    பலரும் போட்டியிடுகிறார்கள்
    பொம்மையாய் இருந்தாலும்
    நானும் பெண்தானே…

    Share
  • சங்ககாலப் போர்வீரர்களின் பண்புகள்

    -முனைவர் திருமதி. வி. அன்னபாக்கியம்

    முன்னுரை

    வீரர்களின் புறவாழ்க்கையில் மிக இன்றியமையாதப் பணி போர் புரிவதாகும். வீரர்கள் போர்த் தொழிலில் விருப்பத்தோடு ஈடுபட்டுள்ளனர். தம் உயிரின் மீது சிறிதும் பற்று இல்லாதவர்களாய் செயல்பட்டுள்ளனர். போர்ப்பறை கேட்டவுடன் வீறுகொண்டு எழும் வீரர்களின் பண்புகளைத் தொல்காப்பியப் புறத்திணையியல் மற்றும் புறநானூற்றுப் பாடல்கள் சிறப்பான முறையில் எடுத்துரைத்துள்ளன.

    போர்வீரர்களின் பண்புகள்

    பழந்தமிழ் மறவர்களின் போர்ப்பண்புகளை அறிந்து கொள்வதற்குப் புறநானூற்றுப் பாடல்கள் பேருதவி புரிகின்றன.

    1. தெய்வங்களை ஒத்த வீரம் உடையவர்கள் (புறம்.14,15,23,56,374)
    2. போர் என்றவுடன் வீரக்கழல் புனைபவர்கள் (புறம்.31)
    3. படைக்கருவிகளை இயக்குவதில் தேர்ச்சி பெற்றவர்கள் (புறம்.72,169,260)
    4. எறிகோலுக்கு அஞ்சாத அரவு போன்றவர்கள் (புறம்.89)
    5. வாள் பாய்ந்ததால் உண்டாகிய தழும்பு பொருந்தியவர்கள் (புறம்.98)
    6. புறமுதுகுகாட்டாத கொள்கை உடையவர்கள் (புறம்.139)
    7. கண்ணுக்கு இன்னார் செவிக்கு இனியர் (புறம்.167)
    8. கொல்லன் உலையில் உள்ள பட்டடைக்கல் போன்ற
    9. வலிமையும்    ஆண்மையும்   உடையவன் (புறம்.170)
    10. பார்ப்பனர்க்குப் பணியும் தன்மை (புறம்.43,170)
    11. புலவர் புகழ்வதை விரும்புதல் (புறம்.282,307)
    12. களிறு எறிந்து பெயர்தலாகிய காளையின் கடமையை நிறைவேற்றுதல்       (புறம்.310)
    13. வஞ்சினம், நெடுமொழி கூறிப் போருக்குச் செல்லுதல் (புறம்.71-73,298,376)

    என்பன போர்வீரர்களின் பண்புகளாகப் புறநானூற்றில் புலவர்களால் பதிவு செய்யப்பட்டுள்ளன. இத்தகைய உயர்ந்த பண்புகளைக் கொண்ட வீரர்கள், போரில் புண்பட்டு வீழ்ந்தபொழுதும், அப்புண்ணினை ஆற்றிக்கொண்டு உயிர்வாழ வேண்டும் என எண்ணாதவராய்ப் போரிலேயே மடிந்து புகழ் எய்தவே விரும்பினர்.

    பகைப்படைக்கு அஞ்சாத நிலை

    போரில் வீரனொருவன் தன்மேல் வந்த யானையைக் கொன்று, தன்னை எதிர்த்து வந்த பகைவரின் வேலை வாங்கி மடித்து, அவர்தம் தலைவனை உயரத் தூக்கி நிலத்தில் மோதியடித்தமையை,

       “பீலிக் கண்ணிப் பெருந்தகை மறவன்
         மேல்வருங் களிற்றொடு வேல்துரந்து இனியே
         தன்னும் துரக்குவன் போலும் – ஒன்னலர்
         எஃகுடை வலத்தர் மாவொடு பரத்தரக்
         கையின் வாங்கி தழீஇ
         மொய்ம்பின் ஊக்கி மெய்க்கொண் டனனே”             (புறம்.274:2-7)

    என உலோச்சனார் பாடியுள்ளார். உயிர் நீங்கிய பகைவன் உடலைப் பற்றிக் கொண்டு, தன்னை எதிர்க்கும் பகைப்படைக்கு அஞ்சாமல் நிற்கின்றான். இவ்வாறு போர்க்களத்தில் வீரர்கள் எதற்கும் அஞ்சாதவர்களாக விளங்கியுள்ளனர்.

    தோழனைக் காக்கும் பொருட்டு போரிடுதல்

    போரில் தன் படைசார்ந்த நண்பன், பகைவரால் சூழப்பட்டிருப்பதை அறிந்த வீரனொருவன், நண்பனைக் காக்கும் பொருட்டு முன்னேறிச் சென்று காக்கும் தன்மையினை,

    “திணிநிலை அலறக் கூழை போழ்ந்துதன்
    வடமாண் எஃகம் கடிமுகத்து ஏந்தி
    ஓம்புமின் ஓம்புமின் இவண்! என ஓம்பாது
    தொடர்கொள் யானையின் குடர்கால் தட்பக்
    கன்று அமர் கறவை மான
    முன்சமத்து எதிர்ந்ததன் தோழற்கு வருமே ”         (புறம்.275:4-9)

    என ஒரூஉத்தனார் புகழ்ந்துள்ளார்.  அதாவது சங்கிலியால்கட்டப் பெற்ற களிற்றின் கால்களைப் போல இறந்த வீரர்களின் குடல்கள் முன்னேறும் வீரர்களின் கால்களைச் சுற்றிக் கொள்கின்றன. பகைவரும் பலர் தடுக்கின்றனர். இதைப் பற்றியெல்லாம் கவலையுறாது கன்றை நோக்கி ஓடும் பசுவைப் போல பகைவரால் சூழப்பட்ட தன் நண்பனைக் காக்க வீரனொருவன் விரைந்து செல்கின்றான்.

    பகைவர் படைக்கு நோய் போன்றவன்

    போரில் வீரனொருவன் பகைவர் படை முழுவதையும் கலக்கிச் சிதறடித்தான். பகைவர் படை உடைந்து கெடுவதற்குரிய நோய் போன்றவனாகச் செயல்பட்டதை,

    “மடப்பால் ஆய்மகள் வள்உகிர்த் தெறித்த
    குடப்பால் சில்உறை போலப்
    படைக்குநோய் எல்லாம் தான்ஆ யினனே ”                 (புறம்.276:4-

    என மதுரைப்பூதன் இளநாகனார் பாடியுள்ளார். குடத்தில் உள்ள பாலின் அளவறிந்து இட்ட உறை அப்பால் முழுவதையும் கலங்கச் செய்வது போல வீரனொருவன் மாற்றார் படை முழுதும் கலங்கும் படியாக அப்படைக்கு பெரும் நோய் போல அச்சத்தையும் துன்பத்தையும் கொடுத்துள்ளான்.

    வாய்ப்புக்காகக் காத்திராமல் போரிடுதல் 

    போரில் ஈடுபட்டுள்ள வீரனொருவன் தான் பகைவரை எதிர்த்துச் செல்லும் முறை வரும்வரை காத்திராமல் மறவுணர்வு மிக்கவனாய் முன்னேறிச் சென்று தன் முன்னே வரும் பகைவரின் பெரும்படையை எதிர்க்கின்றான்.

    ”என்முறை வருக என்னான் கம்மென
    எழுதரு பெரும்படை விலக்கி
    ஆண்டு நிற்கும் ஆண்தகை யன்னே”               (புறம்.292:6-8)

    என நன்னாகனார் நவின்றுள்ளார். இவ்வாறாக வீரர்கள் போரிலே தனக்கான வாய்ப்புகள் வரும் வரை காத்திராமல் தாமே முன்வந்து ஈடுபாட்டோடும் பொறுப்புணர்வோடும் செயல்பட்டுள்ளனர்.

    அரவு உமிழ் மணி அன்ன தன்மை 

    போர்க்களத்தில் இருபக்கத்து வீரர்களும் மிகக் கடுமையாகப் போர்செய்கின்றனர். அப்பொழுது வீரனொருவன் தன் பெயரையும் தன் மன்னன் பெயரையும் சொல்லி, உங்களுள் வாழ்நாள் எல்லை முடிந்தவர் என்னோடு போர் செய வாருங்கள் என்று அழைக்கின்றான். அவன் போர்த்திறமை கண்ட பகைவர் அவனை நெருங்குவதற்கு அஞ்சுகின்றனர். இதனை,

    ”தமர்பிறர் அறியா அமர்மயங்கு அழுவத்து
    இறையும் பெயரும் தோற்றி நுமருள்
    நாள்மறை தபுத்தீர் வம்மின் ஈங்குஎன
    போர்மலைந்து ஒருசிறை நிற்ப யாவரும்
    அரவு உமிழ் மணியின் குறுகார்
    நிரைதார் மார்பின் நின்கேள்வனைப் பிறரே ”          (புறம்.294:4-9)

    என பாம்பு உமிழ்ந்த மணியை நெருங்குவதற்கு எவ்வாறு அஞ்சுவாரோ அவ்வாறே அவ்வீரனை நெருங்குவதற்கும் அஞ்சுகின்ற தன்மையைப் பெருந்தலைச் சாத்தனார் பெருமிதத்தோடு கூறியுள்ளார். இவ்வாறாக  வீரர்கள்  பகைவரும் நெருங்குவதற்கு அஞ்சக்கூடிய தன்மையுடையவர்களாகச் செயல்பட்டுள்ளனர்.

    அண்ணனுக்காகத் தம்பி போர் செய்தல் 

    போர் பல நாட்கள் நடைபெறுவதுண்டு. அந்நிலையில் முந்தைய நாள் நடந்த போரில் தன் அண்ணனைக் கொன்றவனைத் தேடிக்கொண்டு மறுநாள் அவன் தம்பிவருகின்றான். அவ்வீரனின் கண்கள் அகலில் போடப்பெற்ற குன்றி மணியைப் போல சுழன்று நோக்கியது. இதனை,

    ”நெருநல் எல்லைநீ எறிந்தோன் தம்பி
    அகல்பெய் குன்றியின் சுழலும் கண்ணன்
    பேர்ஊர் அட்ட கள்ளிற்கு
    ஓர்இல் கோயின் தேருமால் நின்றே ”                (புறம்.300:3-6)

    என அரிசில்கிழார் தான் கண்டு அதிசயித்த அண்ணன் தம்பி பாசத்தைப் பதிவு செய்துள்ளார். அவன் கண்கள் பெரிய ஊரில் காய்ச்சப் பெற்ற கள்ளைப் பெறுவதற்குத் தன் வீட்டில் புகுந்து ஒரு கலயத்தைத் தேடுபவனைப் போல பகைவனைத் தேடியது. இவ்வாறாக வீரர்கள் பகைவாpன் படைவீரர்களைப் பகைத்து அழித்தாலும் தன் படைவீரர்கள் மீது பாசவுணர்வோடு செயல்பட்டுள்ளனர்.

    பகைத்துப் பார்த்தாரை அழித்தல் 

    போர்க்களத்திலே வீரனொருவன் தன்னைப் பகைத்துப் பார்ப்பவரை எல்லாம் அழிக்கும் காளை போன்றவனாகச் செயல்பட்டுள்ளான். அவன் தன் மறவுணர்வின் மிகுதியால் களத்திலே கொன்று குவித்த களிறுகளின் எண்ணிக்கை மிகப் பலவாகும் என்பதை,

    ”நோக்கினர்ச் செகுக்கும் காளை ஊக்கி,
    வேலின்அட்ட களிறு பெயர்த்து எண்ணின்
    விண்இவர் விசும்பின் மீனும்
    தண்பெயல் உறையும் உறைஆற் றாவே ”               (புறம்.302:8-11)

    என்ற பாடலடிகள் விளக்குகின்றன. இங்குப் புலவர் கற்பனையாக விண்மீன்களையும் மழைத்துளிகளையும் விடக் களிறுகளின் எண்ணிக்கை அதிகமானது என்கின்றார். இவ்வாறாக வீரர்கள் பகைவர்களின் பார்வையைத் தம் உள்ளுணர்வால் அளவிட்டு அவர்களை அழித்துள்ளனர்.

    படையணிகளைப் பிளந்து போரிடுதல் 

    ஒன்றாகச் சேர்ந்திருக்கக் கூடியவற்றில் பிளவு ஏற்பட்டால் அதன் பலம் பாதியாகக் குறைந்துவிடும். இங்கு வீரனொருவன் ஒன்றாகச் சேர்ந்திருக்கும் பகைவரின் படைகளிடையே பிளவை ஏற்படுத்தி பின் அவர்களை அழிக்கின்றான். அவன் போர்க்களத்தில் தன் மறவுணர்வு மேம்பட வெறி கொண்டவனாய்த் தன் கை வேலால் எதிர்ப்பட்டவரின் மார்பைக் குத்திக் கொல்கின்றான். பின்பு கடலைப் பிளந்து கொண்டு செல்லும் படகைப் போல பகைவரின் படையணிகளைப் பிளந்து கொண்டு சென்று அப்பகைவரின் களிறுகளை அழிக்கின்றான். இதனை,

    “எள்ளுநர்ச் செருக்கும் காளை கூர்த்த
    வெந்திறல் எஃகம் நெஞ்சுவடு விளைப்ப
    ஆட்டிக் காணிய வருமே – நெருநை
    உரைசால் சிறப்பின் வேந்தர் முன்னர்க்
    கரைபொரு முந்நீர்த் திமிலின் போழ்ந்து அவர்
    இலங்குமருப்பு யானை எறிந்த எற்கே”              (புறம்.303:3-8)

    என எருமை வெளியனார் எடுத்துரைத்துள்ளார். இவ்வாறாக ஒன்றாக இருந்த பகைவரின் பலத்தை முதலாவது குறைத்து விட்டு பின்பு அவர்களை வெறியுணர்வோடு அழித்துள்ளான்.

    தம்பிக்காகப் போரிடுதல்

    முதல் நாள் போரில் வீரனொருவனின் தம்பி பகைவரால் கொல்லப்படுகின்றான். அதனை அறிந்து அவன் அண்ணன், என் தம்பியைக் கொன்றவனை மறுநாள் போரில் அவன் தம்பியோடு சேர்த்துக் கொல்வேன். அதுவரை சிறிதளவு கூட உண்ணமாட்டேன் என நெடுமொழி கூறுகின்றான். 

    “…….. …………………… நெருநை;
    எம்முன் தப்பியோன் தம்பியொடு, ஓராங்கு
    நாளைச் செய்குவென் அமர்எனக் கூறிப்
    புன்வயிறு அருத்தலும் செல்லான் பன்மான்
    கடவும் என்ப பெரிதே; அதுகேட்டு
    வலம்படு முரசின் வெல்போர் வேந்தன்
    இலங்கும் இரும் பாசறை நடுங்கின்று ”                  (புறம்.304:4-10)

    என ஒற்றறிந்தவன் பகை வீரரிடம் சென்று சொல்ல அப்பகைவர் பாசறையே நடுங்கிற்று. இவ்வாறு வீரர்கள் தம் படைவீரர்கள் மீது உள்ள பாசவுணர்வால் பகைவரின் படைகளே அஞ்சி நடுங்கும்படியாகப் போர் புரிந்துள்ளனர்.

    முடம்பட்ட எருமை போன்று போரிடுதல் 

    உதவுவார் யாரும் இல்லா காட்டித்தே உப்பு வணிகரால் கைவிடப்பட்ட முடமான எருமையானது தன் அருகே கிடைத்த அனைத்தையும் தின்று தீர்ப்பது போல மறவன் ஒருவன் அசையாமல் ஓரிடத்து நின்று தன்னை எதிர்த்து வரும் பகைவர் அனைவர் உயிரையும் கவர்கின்றான். இதனை,

    ”நீரும் புல்லும் ஈயாது உமணர்
    யாரும்இல் ஒருசிறை முடத்தொடு துறந்த
    வாழா வான்பகடு ஏய்ப்பத் தெறுவர்
    பேர்உயிர் கொள்ளும் மாதோ ”          (புறம்.307:7-10)

    என்ற பாடலடிகள் விளக்குகின்றன. இங்கு வீரனொருவனின் போர்க்களச் செயலானது முடம்பட்ட எருமையின் செயலோடு ஒப்பிடுவதன் வாயிலாக பகைவரை அழித்த வீரனின் பெருமை வெளிப்படுகின்றது.

    பகைவரை நடுங்கச் செய்தல்

    வீரனொருவன் போர் செய்வதற்காகப் பாசறையில் வந்து தங்குகின்றான். இவன் நல்ல பாம்பு வாழும் புற்றைப் போலவும், கொல்லேறு திரி தரும் மன்றம் போலவும் வலிமையுடையவனாகக் காணப்படுகின்றான். இம்மறவனின் வருகையறிந்து பகைவர் நடுங்குவதை,

    “நல்அரா உறையும் புற்றம் போலவும்
    கொல்ஏறு திரிதரும் மன்றம் போலவும்
    மாற்றுஅருந் துப்பின் மாற்றோர் பாசறை
    உளன்என வெரூஉம் ”                          (புறம்.309:3-6)

    என கோசிகனார் பாடியுள்ளார். இவ்வாறாகக் கண்டாரைக் கொல்லும் காளை போன்ற தன்மையுடைய, பிறரால் வெல்வதற்கு அரிய வீரர்களின் வருகையை அறிந்து பகைவர்கள் அஞ்சி நடுங்கியுள்ளனர்.

    பகைவர் படைக்குத் தடைக்கல்லாகச் செயல்படுதல் 

    போர்க்களத்தில் தன் மன்னன் பகைவரால் துன்புற்றபோது மறவனொருவன் கொடியை உயர்த்தி, படைத்தலைமையேற்று, கட்டுக்கு அடங்காமல் வரும் பகைவரின் பெரும்படையைத் தடுத்து நிறுத்தும் தடைக்கல்லாகச் செயல்படுகின்றான். இதனை,

    “…………………. ………. கொடிஎடுத்து
    நிறை அழிந்து எழுதரு தானைக்குச்
    சிறையும் தானே – தன்இறைவிழு முறினே ”               (புறம்.314:5-7)

    என ஐயூர் முடவனார் பாடியுள்ளார். இவ்வாறாக வீரர்கள் தம் பகைவர் படைகளின் முன்னேற்றத்திற்குத் தடைகற்களாகச் செயல்பட்டுள்ளனர்.

    ஆழி போன்று செயல்படுதல்

    வீரனொருவன் தன் மன்னன் படையின் முன்பகுதி அழியாமல் இருக்க, பகைப்படையை அழிக்க வாளை ஏந்தி நிற்கின்றான். இம்மறவனே பகைப்படை தன்னைக் கடந்து மேலே செல்லாதவாறு தடுத்து நிறுத்துகின்றான். இதனால் இவன் பெரிய கடலுக்குக் கரை போன்றவன் என்று பாராட்டப்படுகின்றான்.

    “வேந்துடைத் தானை முனைகெட நெரிதர
    ஏந்துவாள் வலத்தன் ஒருவன் ஆகித்
    தன்இறந்து வாராமை விலக்கலின் பெருங்கடற்கு
    ஆழி அனையன் மாதோ”                    (புறம்.330:1-4)

    என்ற பாடலடிகள் வீரர்கள் கடல் போன்ற தன் படைக்குக் கரையாக இருந்து காத்தமையை விளக்குகின்றன.

    இவ்வாறாக அனைத்துப் போர்களிலும் வீரர்கள் அடுத்தவர்களுக்காகக் காத்திருக்காமல் தன்னால் முடிந்த மட்டும் உயிரைப் பணயம் வைத்துப் போரிட்டுள்ளனர்.

    முடிவுரை

    வீரர்கள்  போரின்போது தன் குடும்பத்தைப் பற்றிய எந்த நினைவுகளும் இல்லாமல் முழுமையான பலத்தோடு வலிமை மிக்கவர்களாகவும் சுறுசுறுப்பானவர்களாகவும் வெற்றி ஒன்றையே நோக்கமாகக் கொண்டுச் செயல்பட்டுள்ளனர். பகைவர்களைப் பார்க்கும் போது மறவுணர்வு மேம்பட்டும் தன்படை வீரர்களைப் பார்க்கும் போது பாசவுணர்வு மேம்பட்டும் செயல்பட்டுள்ளனர். வீரர்களின் இப்பண்புகளைப் பல்வேறு உவமைகள் வாயிலாகப் புலவர்கள் பதிவுசெய்துள்ளனர்.

    குறிப்புகள்

    1. தொல்காப்பியம், பொருளதிகாரம், இளம்பூரணர் உரை
    2. புறநானூற்றுப் பாடல்கள், கழக உரை

    *****

    கட்டுரையாளர் – தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர்,
    தி  ஸ்டாண்டர்டு ஃபயர்ஒர்க்ஸ் இராஜரத்தினம் மகளிர் கல்லுாரி,
    சிவகாசி – 626 123.

     

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

     

    180621 Lord of Paradox -watercolour – Arches 10×14” 300 gsm -lr

    முரணெனப் பட்டாலும் மூலமே நின்னை
    வரவழைக்கக் கண்டேன் வழியை -இரணியன்போல்
    இல்லை இறையென்று சொல்லி இரையாக
    மல்லுக்(கு) அழைப்பேன் முனைந்து….கிரேசி மோகன்….!

    Share
  • பழந்தமிழக வரலாறு – 8

    கணியன்பாலன்

                 பண்டைய வடஇந்திய அரசுகள்

         கி.மு. 6ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 3ஆம் நூற்றாண்டு வரையிலான வட இந்தியக் காலகட்டமே சங்ககால வரலாற்றுக் காலகட்டமாகும். பழங்காலத்தமிழக வரலாற்றை முழுமையாகக் கட்டமைக்க, அக்காலகட்ட தக்காண, வடஇந்திய அரசுகளின் வரலாறு குறித்தப் புரிதல் தேவை என்பதால் அவை இங்கு சுருக்கமாகத் தரப்பட்டுள்ளன. கி.மு. 8ஆம், 7ஆம் நூற்றாண்டுகளில் 16 ஜனபதங்கள் எனப்படுகிற 16 நகர்மைய அரசுகள் வட இந்தியாவில் இருந்தன. கி.மு. 6ஆம் நூற்றாண்டு வாக்கில்  அவைகளுக்கிடையே நடந்த போட்டிகளில் மகத அரசு வெற்றி பெற்று ஒரு பேரரசாக வளர்ச்சிபெற்றது. அரியங்கா(கி.மு. 600-413) வம்சத்தைச்சேர்ந்த பிம்பிசாரனும்(கி.மு. 543-493), அவனது மகன் அசாத்சத்ருவும்(கி.மு. 493-461) மகதத்தைப் பேரரசாக ஆக்குகின்றனர். அரியங்கா வம்சத்திற்குப்பின் கி.மு. 413இல் சிசுநாகர் வம்சம்(கி.மு. 413-345) தோன்றுகிறது. அதன் அழிவில் நந்த வம்சம்(கி.மு. 345-323) உருவாகிறது. நந்த வம்சத்தின் மகாபத்ம நந்தன் மகத அரசை இந்தியாவெங்கும் புகழ்பெற்ற ஒரு பேரரசாக ஆக்குகிறான். அதன்பின் அந்த நந்த வம்சத்தின் அழிவில்தான் மௌரிய வம்சம் உருவாகிறது.

         இந்த ஆட்சிமாற்றத்தின் போதுதான் மாமூலனார் என்கிற பெரும் வரலாற்றுப்புலவர் தமிழகத்தில் வாழ்ந்துள்ளார். மௌரிய வம்சம் கி.மு. 323-187 வரை இருந்தது. அலெக்சாந்தர் கி.மு. 327இல் வடஇந்தியா மீது படையெடுக்கிறான். கி.மு. 325இல் வடஇந்தியாவைவிட்டு வெளியேறி கி.மு. 323இல் இறந்து விடுகிறான். அவன் வடஇந்தியாவை விட்டு வெளியேறிய உடன் சந்திரகுப்த மௌரியன் நந்தர்களைத் தாக்கி வென்று கி.மு. 321 வாக்கில் மகத அரசின் அரியனையில் அமருகிறான். 24 ஆண்டுகள் அவன் அரசாள்கிறான். அதன் பின் கி.மு. 297இல் அவனது மகன் பிந்துசாரன் அரசனாகிறான். அவனது ஆட்சிக்காலம் என்பது கி.மு. 297-272 வரையான  25 வருடங்கள் ஆகும். அதன்பின் அவனது மகன் அசோகர் கி.மு. 268இல்தான் முடிசூடுகிறார். அவரது ஆட்சிக்காலம் கி.மு. 268-232 வரையான சுமார் 34 வருடங்கள் ஆகும். அசோகருக்குப்பின் வந்தவர்கள் பலவீனமானவர்களாக இருந்தனர். அதன் கடைசி அரசனை, புசுயமித்திரன் என்கிற பிராமணத்தளபதி  கொன்றுவிட்டு  சுங்க வம்சத்தைத் தொடங்குகிறான். சுங்க வம்சத்தின் காலம் கி.மு. 187-75 ஆகும். அதன்பின் கன்வ வம்சம் கி.மு. 75-30 வரை 45 வருடம் ஆள்கிறது. சுங்கவம்சம், கன்வவம்சம் இரண்டும் பிராமண வம்சங்கள் ஆகும். அதன்பின் மகத அரசு இல்லாதுபோகிறது. மகதத்தைச்சுற்றி பல சிறு சிறு இனக்குழு அரசுகள் தங்களை நிலை நிறுத்திக்கொள்கின்றன.

         மௌரியர்களுக்குப்பின் சுங்க வம்ச ஆட்சிக் காலத்தில் வட மேற்கிலிருந்து கிரேக்கர்கள் மகத அரசைத் தொடர்ந்து தாக்கி வந்தனர். அவர்களுள் மினான்டர்(கி.மு. 150-135) என்பவன் பாடலிபுத்திரம் வரை படையெடுத்து வந்தான் எனப்படுகிறது. இந்தோகிரேக்க மன்னர்களில் இவனே புகழ்பெற்றவன் ஆவான். இந்தோ கிரேக்கர் ஆட்சி நீண்டகாலம் நீடிக்க வில்லை. சைத்தியர்கள் எனப்படும் சாகர்கள் இவர்களை கி.மு. முதல் நூற்றாண்டிலிருந்து வடக்கிலிருந்து தாக்கத் தொடங்கினர். அவர்கள் பெரிய எதிர்ப்புகள் இல்லாமல் இந்தியாவின் பல பகுதிகளை வென்றனர். சாகர்கள்  கிரேக்கர்களைவிட பலபகுதிகளை இந்தியாவில் ஆண்டனர். சாகர்களில் ஐந்து பிரிவினர், ஆப்கானிஸ்தான், தட்சசீலம், மதுரா, மேற்கு இந்தியா, மேல்தக்காணம் ஆகிய ஐந்து இடங்களில் ஆண்டனர். இதே காலகட்டத்திலும் கி.பி. முதல் நூற்றாண்டிலும் பல இனக்குழுக்கள் வடக்கிலிருந்து இந்தியாவைத் தாக்கின. மதுராவைத் தலைநகராகக் கொண்ட சாகர்கள் 200 ஆண்டுகள் ஆண்டனர்.  மேற்கு இந்தியாவில் இருந்த மேற்கு சத்ரப் எனப்படும் சாகர்களின் ஆட்சிதான் கி.பி. 400 வரை நீடித்தது. இவர்களில் புகழ்பெற்றவன் இருத்ரதாமன்(கி.பி. 130-150) ஆவான். அந்நிய அரசனான இவன்தான் முதன் முதலாக சமற்கிருதத்தில் ஒரு நீண்ட கல்வெட்டுப் பொறிப்பை உருவாக்கினான். மேற்கு சத்ரப் அல்லது சாகர்களின் ஆட்சி என்பது கி.பி. 35 முதல் கி.பி. 405 வரை நீடித்தது.

         சாகர்கள் மேற்கு இந்தியாவில் ஆட்சியைத் தொடங்கிய போது குசானர்கள் இந்தியாவின் வடக்கே தங்கள் ஆட்சியைத் தொடங்கினர். அவர்களது ஆட்சி கி.பி. 30 முதல் கி.பி. 230வரை இருந்தது. இதில் புகழ்பெற்றவர் கி.பி. 78இல் ஆட்சியைத் தொடங்கிய கனிசுகர் ஆவார். இவர்தான் கி.பி. 78இல் தொடங்கிய,  சக சகாப்தம் என்பதைத் தொடங்கியவர் ஆவார். இவர் கிழக்கில் பாடலிபுத்திரம் வரை படையெடுத்தார். கனிசுகர் ஆட்சிக்காலம் என்பது கி.பி. 78-101 வரையாகும். சுங்க, கன்வ மகத அரச வம்சங்கள், சாதவாகனர்கள், சாகர்கள், குசானர்கள் ஆகிய ஐந்து அரச வம்சங்கள் தான் இக்காலத்தில் வடக்கிலும் தக்காணத்திலும் ஆண்டவர்கள் ஆவர். சாதவாகனர்கள் குறித்து முன்பே சுருக்கமாகச் சொல்லப்பட்டுள்ளது. சுமார் கி.மு. 230இல் இருந்து கி.பி 220 முடிய 450 வருடம் சாதவாகனர்கள் தக்காணத்தில் ஆண்டனர். இடையே கலிங்கமன்னன் காரவேலன் போன்றவர்கள் ஆண்டனர். இந்தக் காலகட்டத்தில்தான் தமிழ் அரசுகளின் வட படையெடுப்புகள் இருந்தது. ஆகவே வட அரசுகளின் காலத்தை அறிதல் ஒரு தெளிவை வழங்கும்.

                    வட இந்திய அரசுகள்(கால அட்டவணை)

    வம்சம்               அரசன்          காலம்               ஆண்டுகள்

    அரியங்கா வம்சம்                     கி.மு. 600-413         187

    அரியங்கா வம்சம்     பிம்பிசாரன்      கி.மு. 543-493         50

    அரியங்கா வம்சம்     அசாத்சத்ரு      கி.மு. 493-461         32

    சிசுநாகர் வம்சம்                      கி.மு. 413-345         68

    நந்த வம்சம்                          கி.மு. 345-325         20

    கலவரங்களும், குழப்பங்களும்          கி.மு. 325-322         04

    இமயவரம்பனின் வடபடையெடுப்பு       கி.மு 325-323           03*

    மௌரிய வம்சம்                      கி.மு. 322-187         135

    சந்திரகுப்த மௌரியன்                 கி.மு. 321-297         24

    பிந்துசாரன்                           கி.மு. 297-272         25

    மௌரியப்படையின் தோல்வி                கி.மு 297-288          11*

    அசோகர்  ஆட்சிக்காலம்               கி.மு. 268-232         36

    செங்குட்டுவனின் வடபடையெடுப்பு      கி.மு. 232-230           03*

    சாதவாகன வம்சம்                    கி.மு. 230-கி.பி. 220    450

    சாதவாகன வம்சம்    சிமுகா          கி.மு. 230-207         23

    இந்தோகிரேக்கர்       டெமிட்ரியசு-1    கி.மு. 200-180         34

    சுங்க வம்சம்(மகதம்)                  கி.மு. 187-75                112

    கலிங்கம்             காரவேலன்      கி.மு. 180-165         15

    சாதவாகன வம்சம்    சதகர்னி         கி.மு. 180-124         56

    இந்தோகிரேக்கர்       மினான்டர்      கி.மு. 150-135         15

    நலங்கிள்ளியின் உச்சயினி படையெடுப்பு கி.மு.  82-80            03*

    சுங்க வம்சத்தின் இறுதி ஆண்டு        கி.மு.  75               –

    கன்வ வம்சம்(மகதம்)                 கி.மு. 75-30           45

    சாதவாகன வம்சம்    புலுமாயி        கி.மு. 30-6            24

    குசான வம்சம்                        கி.பி. 30-230           200

    மேற்குசத்ரப்,சாகா வம்சம்              கி.பி. 35-405           370

    குசான வம்சம்        கனிஷ்கர்        கி.பி. 78-101           23

    சக சகாப்தம் தொடங்கிய ஆண்டு       கி.பி. 78                –

    சாதவாகன      கௌதமிபுத்ர சதகர்னி கி.பி. 106-130                24

    சாதவாகன      வசிட்திபுத்ர புலுமாயி  கி.பி. 130-160                30

    மேற்கு சத்ரப்         உருத்ரதாமன்    கி.பி. 130-150                20

    சாதவாகன      யாஜன சதகர்னி       கி.பி. 170-199                29

    குறிப்பு: * இக்குறியிட்டவை தமிழகம் சார்ந்த தகவல்கள் ஆகும்.

         “மௌரியர்களுக்குப்பின் வந்த வடஇந்திய அரச வம்சங்களின் காலவரிசை ஒரு பொழுதும் சரியானவாறு வரையறுக்கப்படவில்லை எனவும் கி.மு.327இல் அலெக்சாந்தர் நிகழ்த்திய பஞ்சாப் படையெடுப்புதான் முதன்முதலாக ஒரு வரலாற்றுக் காலத்தை(வடஇந்தியாவுக்கு) உறுதி செய்தது எனவும்” கூறுகிறார் டி.டி. கோசாம்பி(1). “கி.மு. முதல் நூற்றாண்டு முதல் கி.பி. 2ஆம் நூற்றாண்டு வரையிலான இந்திய அரசியல் வரலாறு தங்களுக்குள் சண்டையிட்டுக்கொள்ளும் இனக்குழுக்கள், மன்னர்கள், வீரமிக்க ஆக்ரமிப்பாளர்கள் ஆகியோரைப்பற்றிய ஒரு குழப்பமான சித்திரத்தைதான் அளிக்கின்றன” என்கிறார் டி. என். ஜா(2). ஆகவே கி.மு. 1ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 2ஆம் நூற்றாண்டு வரை வட இந்தியாவில் ஒரு குழப்பமான நிலைதான் இருந்து வந்தது எனலாம்..

    பார்வை & ஆதார நூல்கள்:

    1.பண்டைய இந்தியா, டி.டி. கோசாம்பி, தமிழில் ஆர்.எசு. நாராயணன், NCBH வெளியீடு, செப்டம்பர்-2006. பக்:386; பக்; 286

    2.பண்டைக்கால இந்தியா, டி. என். ஜா, தமிழில் அசோகன் முத்துசாமி, பாரதி புத்தகாலயம், டிசம்பர் 2011, பக்: 150.

    பிறஆதார நூல்கள்: 3.இந்திய வரலாறு ஒரு அறிமுகம், டி.டி. கோசாம்பி அவர்கள், தமிழில் சிங்கராயர், விடியல் பதிப்பகம், அக்டோபர்-2011,.

    4.அசோகர், விசென்ட்.சுமித், தமிழில் சிவமுருகேசன், 2009.

    5.தென் இந்திய வரலாறு, டாக்டர் கே.கே. பிள்ளை, எட்டாம் பதிப்பு-2011.

    6.சாதவாகனர்கள், குசானர்கள், சாகர்கள், மகத அரசுகள், இந்தோ கிரேக்கர்கள், மன்னன் காரவேலன் ஆகியோர் பற்றிய விக்கிபீடியா, இணைய தள தரவுகள்.

    Share
  • மக்கள் சிந்தனைப் பேரவையின் ‘ அறிவியல் மேதை ஜி.டி.நாயுடு விருது ’

    மக்கள் சிந்தனைப் பேரவையின்

    ‘ அறிவியல் மேதை ஜி.டி.நாயுடு விருது ’

    ஈரோடு புத்தகத்திருவிழாவில் வழங்கப்படுகிறது.

    ————————————————————————————————————————————–

     

    மக்கள் சிந்தனைப் பேரவையின் சார்பில் ஆண்டுதோறும் சிறந்த இளம் அறிவியலாளர் ஒருவருக்கு ‘ அறிவியல் மேதை ஜி.டி.நாயுடு விருது ’ வழங்கப்படுகிறது. இவ்விருது பாரட்டு மடல் , தகுதிப்பட்டயம் ஆகியவற்றோடு ரூபாய் ஒரு லட்சம் பரிசுத் தொகையையும் உள்ளடக்கியதாகும்.

    விருதாளர் 40 வயதிற்குட்பட்டவராக இருக்க வேண்டும். புதிய கண்டுபிடிப்புகளுக்கான ஆய்வு முயற்சிகளில் வெற்றிபெற்றவராக விளங்க வேண்டும்.

    தமிழகத்திலுள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளிலுள்ள ஆய்வுக் கூடங்களிலோ அல்லது அங்கிகரிக்கப்பட்ட வேறு ஆய்வுக் கூடங்களிலோ ஆய்வுகள் மேற்கொண்டவராகத் திகழ்வதோடு பெயர் பெற்ற அறிவியல் இதழ்களில் இதுவரை இவரது 10 ஆய்வுக்கட்டுரைகளாவது வெளிவந்திருக்க வேண்டும் .

    இத்தகைய அடிப்படைத் தகுதிகள் உள்ளவர்கள் தனது ஆய்வுகள் குறித்த அனைத்துக் குறிப்புகளையும் அனுப்பி வைப்பதோடு எந்தக் கண்டுபிடிப்புக்கு அவர் விருதுக்குரியவராக விளங்குகிறார் என்பதையும் தனியாகக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும்.

    அறிவியல் துறையில் மிகமுக்கிய ஆளுமைகளாக விளங்குகிற ஐந்து மூத்த அறிவியலாளர்களடங்கிய தேர்வுக்குழுவே விருதாளரைத் தேர்வு செய்யவுள்ளது. இது தமிழகம் தழுவிய விருது என்பதால் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களைச் சேர்ந்த அறிவியல் ஆய்வாளர்களில். எவரும் தங்களது குறிப்புகளை அனுப்பிப் பங்கேற்கலாம்.

    ஆய்வாளர்கள் தங்களது ஆய்வுக் குறிப்புகளையும் ஆய்வு தொடர்புள்ள அனைத்து ஆவணங்களையும் 20.07.2018 ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். ஆகஸ்ட் மாதத்தில் நடைபெறவுள்ள ஈரோடு புத்தகத் திருவிழா மேடையில் இவ்விருதளிப்பு நிகழ்ச்சி நடைபெறும்.

    தொடர்பு முகவரி : மக்கள் சிந்தனைப் பேரவை , A 47 – சம்பத் நகர் , ஈரோடு – 638 011. மின்னஞ்சல் : info@makkalsinthanaiperavai.org

    தொடர்பு எண் : 0424 – 2269186 , 94891 23850

    ————————————————————————–

    Share
  • என்றும் என் இதயத்தில்

     

    இருவருமே இயற்கையாய் உரை யாடுதற்கு
    =====இலகுவாய்த் தண்ட வாளத்தில் நடந்தோம்.!
    வருகின்ற பேராபத்தை உணர வழியில்லை
    =====வந்தவேக மிகுரயிலைக் கவனிக்க வில்லை.!
    ஒருவர் இறக்க ஒருவருயிருக்கு ஊசலாட
    =====உடனொரு மாற்று இருதய சிகிச்சையால்.!
    இருவருயிர் ஓருயிராக இதயம் ஒன்றாகி
    =====என்றும் என்இதயத்தில் நீயே வாழ்கிறாய்.!

    அன்றுபெற்ற இதய தானத்தால் இன்றும்
    =====என்றும் காதலுக்கு மரணம் இல்லையாம்.!
    மென்று விழுங்கினாலும் உண்ட உணவு
    =====மெல்ல இரைப்பை செல்லநீயே காரணம்.!
    நன்றுடன் வாழ்ந்திட நீயளித்த இதயம்
    =====நன்றே இயங்கி ஒன்றானது ஊனுடம்பில்.!
    நன்றி சொல்கிறேன் நல்லுளம் மிக்கவளே
    =====நீ இறந்தாலுமுன் இதயம் இயங்குகிறது.!

    நேற்றிருந்தோர் இன்றிலை எனும் விதியை
    =====நியதியை வென்று விடுமோ மருத்துவம்.!
    மாற்றங்கம் பொருத்து மொரு மகத்தான
    =====மருத்துவத்தால் மறுபடியும் வாழ முடியும்.!
    கூற்றுவனை வெல்லவும் முடியும் மென்கிற
    =====கூற்றை..கொடையுள்ளம் எளிதாய்த் தரும்.!
    ஆற்றவொணாப் பெருந் துயரைக் களைந்து
    =====என்றுமென் இதயத்தில் குடி கொண்டாய்.!

    ===================================================
    நன்றி:: தினமணி கவிதைமணி வெளியீடு:: 27-05-18
    நன்றி:: கூகிள் இமேஜ்

    Share
  • ’’வடபத்ர ஸாயி’’….!

     

    வடபத்ர ஸாயி வடவேங் கடத்தில்
    இடமுற்ற ஏழுகொண்டல் வாடு -படமுற்ற
    பாம்பில் படுத்த பெருமாளே, கண்ணிநுண்
    தாம்புக்(கு)உட் பட்டதாமோ தர்…..கிரேசி மோகன்….!

    Share
  • கனடாவில் விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் வெளியீடு

    கனடாவில் அமைந்துள்ள சுவாமி விபுலாநந்தர் கலை மன்றம் சார்பில் முனைவர் மு. இளங்கோவன் இயக்கிய விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் ஜூன் மாதம் 24 ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு, ஸ்காபுரோ நகரில் அமைந்துள்ள பெரிய சிவன்கோவில் கலாச்சார மண்டபத்தில் வெளியிடவும் திரையிடப்படவும் உள்ளது. சிறப்பு விருந்தினர்களாகப் பேராசிரியர் நரேஷ் தேவதாசனும், மருத்துவர் கயல்விழி தேவதாசனும் கலந்துகொள்கின்றனர்.

     

    விபுலாநந்த அடிகளார் ஆவணப்படத்தின் இயக்குநர் முனைவர் மு.இளங்கோவன் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, தம் ஆவணப்படம் எடுத்த அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ள உள்ளார்.

    பேராசிரியர் சு. பசுபதி அவர்கள் விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் குறித்த மதிப்பீட்டு உரையை வழங்க உள்ளார். கவிஞர் புகாரி ஆவணப்படம் குறித்த தம் எண்ணங்களைக் கவிதை வடிவில் வழங்கிப், பாராட்ட உள்ளார்.

    தேநீர் விருந்துடனும், குழலிசையுடனும் தொடங்கும் இந்த நிகழ்ச்சிக்கு விபுலாநந்தர் கலை மன்றத்தின் தலைவர் வல். க. புருஷோத்தமன் தலைமை தாங்கவும், மன்றத்தின் துணைத்தலைவர் க. குமரகுரு வரவேற்புரை வழங்கவும் உள்ளனர். மன்றத்தின் செயலாளர் நித்தி சிவானந்தராஜா நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க உள்ளார். கனடாவில் வெளிவரும் உதயன் பத்திரிகையின் ஆசிரியர் நாகமணி லோகேந்திரலிங்கம், உள்ளிட்டோர் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்க உள்ளனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் சுவாமி விபுலாநந்தர் கலை மன்றத்தினர் செய்துள்ளனர்.

    தொடர்புக்கு:

    நித்தி சிவானந்த ராஜா – + 416 844 3304

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    180620 New Forever-lr 10×14”

    ஒருவர் படுக்க இருவர் அமர
    வருகை புரிந்தவரால் நிற்க -ஒருயிரவில்
    பொய்கைபேய் பூதத்தார் பின்னிப் பிணைந்திட
    செய்த மழையோன் சரண்….கிரேசி மோகன்….!

    Share
  • எனக்கு அவர் வரமாகும் !

    (எம்.ஜெயராமசர்மா ..மெல்பேண்..அவுஸ்திரேலியா )


    பெற்றெடுத்தாள் அன்னை
    பேணிநின்றார் தந்தை
    கற்பதற்கு கைபிடித்து
    கல்வியிலே ஏணியானார்
    முற்றுமே துறந்தவராய்
    முனிவராய் அவரிருப்பார்
    சற்றுநான் சறுக்கிவிட்டால்
    தான்தாங்க வந்துநிற்பார் !

    எப்பவுமே எனைப்பற்றி
    எண்ணியே இருந்திடுவார்
    தப்பிதங்கள் செய்யாமல்
    தடுப்பதிலே முன்னிற்பார்
    அற்பத் தனங்களை
    அறவே வெறுத்திடுவார்
    அறவழியில் நான்வளர
    அவரேயென் குருவானார் !

    அப்பாவின் வார்த்தைகள்
    அத்தனையும் மந்திரமே
    அவர்செய்யும் அத்தனையும்
    அரணாக அமைகிறதே
    எப்பவுமே இப்பிறப்பில்
    என்தந்தை இறையெனவே
    எண்ணியே தொழுகின்றேன்
    எனக்குஅவர் வரமாகும் !

    Share
  • சொந்த நாட்டுக்கு வா !

    மூலம் : பீட்டில்ஸ் பாடகர்
    தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
    ++++++++++++++++++

     

    தேன்குழலி !  நீ
    வேலை செய்த இனம் !
    வேலை இல்லா திருந்தாய் !
    வட இங்கி லாந்தில் பிறந்தவள் !
    இப்போது நீ ஒளிவீசும்
    தாரகை
    வட அமெரிக்கத் திரைவானில் !
    இப்போது
    உன் செவி கேட்கும்
    என் வார்த்தை இதுதான்:

    தேன்குழலி !
    பித்தனாக் கினாய் நீ என்னை !
    நேசிப்பது நான் உன்னை
    ஆனால்  நானோர்
    சோம்பேறி !
    நீ சொந்த நாட்டுக்கு மீண்டும்
    வர வேண்டும் !
    நிலைமை மோசமாய் உள்ளது
    எனக்கு !
    வா கண்மணி  வா !  வந்திங்கு
    ஹாலிவுட்
    மோகனக் கீதங்கள் பாடு !

    திரைவானில் ஒளிவீசும்
    தாரகை நீ !
    நேரில் உன்னைக் காண
    அஞ்சி
    முறியுதென் முழங்கால் !
    தேன்குழலி !
    என்னைப் பாடு படுத்துகிறாய் !
    அட்லாண்டிக்
    கடல் கடந் தென்னை
    அணைத்திட வா !
    உன் சொந்த நாட்டுக்கு வா !
    காற்றே !
    படகில் தள்ளிச் சென்றாய் அவளை !
    மீண்டும் அப்படகில்
    அவளை
    என்னிடம் கொண்டு வந்து சேர் !

    தேன்குழலி !
    பித்தனாய் ஆக்கி விட்டாய் என்னை !
    நேசிக்கிறேன் உன்னை !
    ஆனால் நானோர்
    சோம்பேறி !
    சொந்த நாட்டுக்கு
    நீதான்
    மீண்டும் வர வேண்டும்
    என் காதலியாய் !

    Share