Blog

  • தாயும் குழந்தையும்

    மண்ணுக்கு மரம் பாரமாகுமா, 
    மரத்திற்கு  கிளை பாரமாகுமா, 
    கொடிக்கு  காய் பாரமாகுமா 
    குழந்தை தாய்க்கு பாரமாகுமா 
    பிழைப்பிற்காக குழந்தையை 
    தோளை தூளியாக்கிச் சுமந்து 
    வயிற்று பிழைப்பிற்காக தினம் 
    சுமந்து செல்லும் மலைஜாதிப் 
    பெண்ணே !
    உடலில் வலுவும், நெஞ்சில் துணிவுடன் 
    உழைத்து பிள்ளையை காப்பாற்று 
    கல்வியை புகட்டி, அறிவினை பெருக்கி 
    நல்லறிஞ்சனாய்  வளர்ப்பாயாக 
    இன்று உன் நிழலில் உன் பிள்ளை 
    நாளை அவன் மடியில் உன் தலை 
    அவனே உன்னை தாங்கும்  தூண் !
    என எண்ணி செயலாற்று !

    ரா.பார்த்தசாரதி 

    Share
  • மீன் கொடுத்துப் பெண் தேடுதலும் உணவு ஊட்டுதலும்

    சற்குணா பாக்கியராஜ்

    இனப் பெருக்கக் காலத்தில் பல ஆண் பறவைகள் தங்கள் துணைப் பறவைகளுக்கு உணவு ஊட்டிப் பராமரிப்பதை நம்மில் பலரும் பார்த்திருக்கலாம் அல்லது கேள்விப்பட்டிருக்கலாம். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சங்கக் காலப் புலவர் முக்கல் ஆசான் நல்வெள்ளையார் சிவந்த வாயையுடைய ஆண் கடல் காகம் தன்னுடைய கடுஞ் சூல் பேடைக்காக அயிரை மீனைக் கழியில் தேடுவதைக் கீழ்க் கண்டவாறு வர்ணிக்கிறார்.

    “கடல்அம் காக்கைச் செவ் வாய்ச் சேவல்
    படிவ மகளிர் கொடி கொய்து அழித்த
    பொம்மல் அடும்பின் வெண் மணல் ஒருசிறை கடுஞ் சூல் வதிந்த காமர் பேடைக்கு
    இருஞ் சேற்று அயிரை தேரிய, தெண் கழிப்
    பூஉடைக் குட்டம் துழவும் “
    நற்றிணை 272: 1-6
    .
    பறவையியலை ஆராயும் போது கடல் பறவைகள் இனத்தைச் சார்ந்த ஆலாப் பறவை (டெர்ன் -Tern) இனப் பெருக்கக் காலத்தில் அயிரை போன்ற சிறு மீன் இனங்களைக் கவர்ந்து அடைகாக்கும் தனது பெடைக்கு உணவாகக் கொடுக்கிறது என்பதைப் பல நாடுகளிலுள்ள பறவையியலாளர்கள் நடத்தியுள்ள ஆராய்ச்சிகள் மூலம் தெரிய வருகிறது .

    இனப் பெருக்கக் காலம் நெருங்கும் போது ஆலாப் பறவைகள் தங்கள் சொந்த இருப்பிடங்களுக்குத் திரும்பிச் சென்று காலனிகள் உருவாக்கிய பின் பெண் தேடும் படலத்தைத் தொடங்குகின்றன. ஆண் பறவைகள் மீனைப் பிடித்து அலகில் கெளவிக் கொண்டு பெண் பறவைகள் இருக்கும் இடத்தில் உயர்ந்தும் தாழ்ந்தும் பறந்து சென்று தாங்கள் பிரமச்சாரிகள் என்பதை விளம்பரம் செய்கின்றன. தனக்குப் பிடித்த பெண் பறவையை ஆண் பறவையால் தெரிந்தெடுக்க முடியாது. ஆண் துணையைத் தேடிக் கொண்டிருக்கும் பெண் பறவை மீன் கொண்டு பறக்கும் ஆண் பறவையை விரும்பினால் அதைப் பின் தொடர்ந்து பறக்கும். இந்த நிகழ்ச்சியைப் பறவையியலாளர்கள் “Fish Flight” அல்லது “Fish Offering Ceremony” என்று அழைக்கின்றனர். இந்தச் சடங்கு சில வேறுபாடுகளோடு உலகெங்கிலும் உள்ள எல்லா வகை ஆலாப் பறவைகளிலும் காணப்படுகிறது.

    சில நேரங்களில் ஆண் பறவை, பெண் பறவையின் முன்னால் நின்று தலையையும் நெஞ்சையும் நிமிர்த்திப் பெருமையோடு ராஜ நடை நடந்து தன் பலத்தை வெளிப்படுத்தும். இதனை “Strutting Display” என்பர். ஒரு ஆண் பறவையின் பலம், கொண்டு வரும் மீனின் பருமன், எண்ணிக்கை இவைகளைக் கொண்டு பெண் பறவை, ஆண் பறவையைத் தேர்ந்தெடுக்கும். அதன் பின் பரிசுப் பொருளான மீனைப் பெற்றுக்கொண்டு இணைந்து கூடுகட்டி இனப்பெருக்கம் செய்யும்..

    LittleTerns: Courtship behavior: மீன் கொண்டு பறத்தல், நன்றி படம்: கூகிள்

    இந்த மீன் கொடுக்கும் சடங்கு, பெண் பறவை திடமான ஆண் பறவையைத் தெரிந்தெடுக்கவும் அடுத்த சந்ததி பலமுள்ளதாக வருவதற்கும் அடிகோலாக அமைகிறது.

    ஆலாப் பறவைகள் இணை சேர்ந்த பின் பல நாட்கள் ஆண் பறவை துணைப் பறவைக்கு உணவு கொடுப்பதில்லை. இரண்டு பறவைகளும் சேர்ந்து கூடு கட்ட ஆரம்பித்து பெண் பறவைக்குக் கரு உருவாகும் சமயம் ஆண் பறவை திரும்பவும் உணவு கொடுக்க ஆரம்பிக்கிறது. பெண் பறவை இரை தேடச் செல்லாமல் உணவுக்காக ஆண் துணையைக் கெஞ்சும். பெண் பறவை நிறைச் சூல் நிலையில் இருக்கும் போது ஆண் பறவை சில சமயம் மணிக்கொரு தடவை உணவைக் கொண்டு கொடுக்கிறது.

    “கருவுற்றிருக்கும் சமயம் பெண்பறவையின் எடை அதிகரிப்பதால் பெண் பறவை பறந்து நீரினுள் பாய்ந்து இரை தேட முடியாத நிலையிலுள்ளது, ஆண் பறவை உணவு ஊட்டும் போது இரண்டு பறவைகளிடையே உறவு பலமாகிறது, கரு ஆரோக்கியமாக வளருவதற்கு ஏற்ற சத்தான உணவும் கிடைக்கிறது,” என்று பறவையிலாளர்கள் விவரிக்கின்றனர்

    ( “Courtship and Feeding “ Paul R. Ehrlich, David S. Dobkin, and Darryl Wheye 1988).

    ஆண் ஆலாப் பறவை பாசத்தோடு தன் துணைக்காக இரை தேடுவதைப் புலவர்,
    “பொம்மல் அடும்பின் மணல் ஒரு சிறை,
    கடுஞ் சூல் வதிந்த காமர் பேடைக்கு,
    இருஞ் சேற்று அயிரை தேரிய, தெண் கழிப்
    பூஉடைக் குட்டம் துழவும் ” என்கிறார்.

    மேற் கண்ட சங்கப் பாடலில் புலவர் வர்ணிக்கும் “கடல்அம் காக்கை” கடல் பறவையினத்தைச் சார்ந்த கடல் காகமா (Gull) அல்லது ஆலாப் பறவையா(Tern) என்ற கேள்வி எழலாம்.

    தமிழகத்தில் Gull பறவையை “கடல் காகம்” அல்லது “கடல் புறா” என்றும் ஆலாப் பறவையை “கடல் குருவி” என்றும் சில இடங்களில் அழைக்கின்றனர். இரண்டு பறவைகளும் Laridae குடும்பத்தைச் சார்ந்தவை. இவை நீர்க் கரையோரங்கள் முக்கியமாகக் கடற்கரையைச் சார்ந்த பகுதிகளான கழிகள், சதுப்பு நிலங்கள், வயல் பகுதிகள் அறுவடை செய்யப்பட்ட நிலங்களில் கூட்டமாகவோ தனித்தோ காணப்படுகின்றன.

    கடல் புறா (Gull)

    கடல் புறாக்கள், புறாக்களைப் போலில்லாமல் காகங்களின் பண்புகளையுடையவை. காகங்களைப்போல் உணவைப் பகிர்ந்து கொண்டும் சமயத்திற்கேற்றவாறு கிடைக்கும் உணவையும் கழிவுப் பொருள்களையும் உண்ணத் தயங்காதவை. கடல் புறாக்களை நீர்க்கரைகள் மட்டுமல்லாமல் பூங்கா, புல் வெளிகளிலும் மனிதர்கள் வாழும் பகுதிகளிலும் காணலாம்.
    மேலும் கடல் புறாக்களால் நீரில் வெகு நேரம் மிதக்க முடியும். நீர்க் கரைகளில் அலகாலும் கால்களாலும் துழாவி இரை தேடுபவை. நீரில் மிதக்கும் உணவைப் பறந்து வந்து அலகால் எடுக்க முடியும். ஆனால் நீரில் மூழ்கி இரை தேடுவதில்லை. இவைகளின் அலகுகள் முனையில் வளைந்திருக்கும்.

    கடல் புறா (Gull)..படம்: சற்குணா பாக்கியராஜ்

    குளிர்காலத்தில் தமிழகத்திற்கு வலசை வரும் ஐந்து வகைக் கடல் புறாக்களும் குளிர் காலம் முடிந்ததும் தங்கள் சொந்த நாடுகளுக்குத் திரும்பி விடுகின்றன. தமிழகத்தில் இனப் பெருக்கம் செய்வதில்லை..


    மேலும் ஆண் கடல் புறா இனப் பெருக்கக் காலத்தில் பெண் பறவைக்கு உணவு கொடுக்கும் போது சற்றுச் செரித்த உணவை வெளிக் கொண்டு வந்து (regurgitate) கொடுக்கிறது. மீனைக் கவர்ந்து கொண்டு வந்து கொடுப்பதில்லை.
    ஆலாப் பறவை (Tern)

    இரை தேடும் ஆலாப் பறவை, படம்: சற்குணா பாக்கியராஜ்

    ஆலாப் பறவைகள் நீரில் நெடு நேரம் மிதப்பதில்லை. பாதங்களில் சவ்வுகள் இருப்பினும் நீந்துவதில்லை. இவைகளின் முக்கிய உணவு மீன், இறா, புழு, பூச்சிகளாகும். ஆலாப் பறவைகளின் அலகுகள் நீண்டு கூர்மையாக இருக்கும்.


    இவை இரை தேடுவதற்காக ஆறு, ஏரி, கடல் இவற்றுக்கு மேல் ஒரு கூட்டமாக அல்லது தனித்து வட்டமடித்துப் (hover) பறந்து சென்று கொண்டிருக்கும். இரையைக் கண்டவுடன் செங்குத்தாக நீருக்குள் விழுந்து அடுத்த கணம் அலகில் ஒரு மீனுடன் வெளி வந்து விண்ணில் பறக்கும். ஆலாப் பறவைகள் அலகினாலோ அல்லது கால்களாலோ துழாவி இரை தேடுவதாக அறிவியலில் சான்றுகள் காணப்படவில்லை..

    புலவர் முக்கல் ஆசான் நல்வெள்ளையார் வர்ணித்துள்ள ஆண் கடல் காகம், ஆலாப் பறவையாகத்தான் இருக்க முடியும். கடல் புறாவிற்கும் ஆலாப் பறவைக்கும் பால் வேறுபாடு வெளிப்படையாகத் தெரியாது. ஆனால் கருவுற்றிருக்கும் துணைப் பறவைக்காக மீனைத் தேடிக் கவர்ந்து சென்று உணவூட்டுவது ஆண் ஆலாப் பறவை என்பது உலகம் முழுவதிலும் ஆராய்ச்சியாளர்களால் நிரூபிக்கப்பட்ட உண்மை!!


    “செவ் வாய்” என்று பாடலில் காணப்படுவது பறவையின் அலகா அல்லது வாயின் உள் பகுதியா?
    தமிழ் நாட்டிற்கு வலசை வரும் கிருதா ஆலாப் பறவைக்கும் (Whiskered Tern) சாதா ஆலாப் பறவைக்கும் (Common Tern) காஸ்பியன் ஆலாப் பறவைக்கும் (Caspian Tern) அலகுகள் சிவப்பு நிறம். இந்த ஆலாப் பறவைகள் கூட்டமாகவும் காணப்படும். இவை தமிழகத்தில் இனப் பெருக்கம் செய்வதில்லை.

    “செவ் வாய்” காஸ்பியன் ஆலாப் பறவை,
    காஸ்பியன் ஆலாப் பறவையின் சிவந்த அலகும் வாயின் உள் பகுதியும்.. படம்: “Bird Research Northwest” நன்றி

    காஸ்பியன் “குளிர் காலத்தில் தமிழகத்தில் அதிகமாக் காணப்பட்டாலும் மற்ற காலங்களிலும் இதை ஒரு சில இடங்களில் (உ..ம்: கோடிக்கரை) காணலாம். அருகில் உள்ள இலங்கையில் இப்பறவை இனப் பெருக்கம் செய்வதே இதன் காரணமாக இருக்கலாம்”( Grubh, R.B, 2012).

    பிற ஆலாப் பறவைகளின் அலகுகள் மஞ்சள் அல்லது கறுப்பு நிறமாக இருக்கும்.

     

    இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அறிவியல் வளர்ச்சி இல்லாத காலத்தில் புலவர்கள் தங்களுடைய அன்றாட வாழ்க்கையில் சுற்றுச் சூழ் நிலையை உன்னிப்பாகக் கவனித்து தங்களுடைய பாடல்களில் கருப் பொருள்களாகப் புகுத்தியுள்ளனர் என்பதற்கு இந்தப் பாடலும் ஒரு சான்று.

    References
    Ali, Salim (2002): The Book of Indian Birds Thirteenth Edition, Bombay Natural History Society, Oxford University Press
    Fazili, F. M (2014) Breeding biology of Indian whiskered tern Chlidonias hybrida indica (Stephens) at lake Wular Kashmir, Nature and Science 2014; 12(3)
    Grubh. R (2012): Wetland Birds of Tamil Nadu, Institute for Reservation of Natural Environment
    Lewis T. NOTES ON THE BREEDING-HABITS OF THE LITTLE TERN, British Birds,Vol.XIV: 74-82
    Meng and Melinda Chan in 2005; Little Terns: Courtship behavior – Bird Ecology Study Group www.besgroup.org/2006/07/27/little-terns-courtship-behaviour/Observations were made by. All images by them.
    Paul R. Ehrlich, David S. Dobkin, and Darryl Wheye,1988,”Courtship and Feeding “

    Share
  • சங்கப்பெண் கவிஞர்களின் புறப்பாடல்களில் காணலாகும் உலக வழக்கைத் தழுவிய மெய்ப்பாடுகள்

     

    ப.சூர்யலெக்ஷ்மி,
    பதிவு எண்: 12178
    முனைவர் பட்ட ஆய்வாளர்,
    தமிழ் உயராய்வு மையம்,
    தமிழியல் துறை,
    ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரி,
    திருநெல்வேலி.
    ஆய்வு மையம்: மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்,
    அபிசேகப்பட்டி, திருநெல்வேலி-627012 தமிழ்நாடு, இந்தியா.

    நெறியாளர்: ந.வேலம்மாள், உதவிப் பேராசிரியர்,
    தமிழியல் துறை, ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரி, திருநெல்வேலி-627008

     

     

    முன்னுரை:-

    தொல்காப்பியர் மெய்ப்பாட்டியலில் பொது மெய்ப்பாடு என்பது எண்வகை மெய்ப்பாடு அவை நாடக வழக்கினைச் சார்ந்து வரும். அதில் நானான்கு வகையினைக் கூறி 32 என்பார். அவை அல்லாத அதில் அடங்காத 32 மெய்ப்பாடும் உலக வழக்கினைப் பெரிதும் தழுவிய மெய்ப்பாடு ஆகும். உரையாசிரியரான இளம்பூரணரும் பேராசிரியரும் இந்த 32 மெய்ப்பாடுகளும் அகத்திற்கும் புறத்திற்கும் பொதுவாக நிகழும் என்கிறார். “ச.சோமசுந்தர பாரதியார் இவை மூப்பத்திரண்டும்  எவ்வெட்டாய் முறையே இயற்கைப்புணர்ச்சி, இடந்தலைப்பாடு, பாங்கொடு தழாஅல், தோழியிற்புணர்வு என்ற நான்கு பகுதிகட்கும் தொகுக்கப்பட்டுள்ளன என்றும் இவை அகத்துறைக்கே சிறப்பாக வரும் என்றும் ஏதுக்காட்டி நிறுவுவதுடன் பழைய உரையாசிரியர் இருவர் கொள்கைகளையும் மறுத்துவிடுவர்”. உரையாசிரியர்களின் மாறுபட்ட கருத்தினை நினைவில் கொண்டு சங்கப்பெண் கவிஞர்களின் புறநானூற்றுப் பாடல்களில் உலக வழக்கினைத் தழுவிய மெய்ப்பாட்டினைக் கண்டறிவதே இவ்வாய்வின் நோக்கமாகும்.

    உலகவழக்கினைத் தழுவிய மெய்ப்பாடு:-

    உலக வழக்கைத் தழுவிய மெய்ப்பாடு 32 ஆகும். அவை உடைமை, இன்புறல், நடுவுநிலை, அருளல், தன்மை, அடக்கம், அன்பு, கைம்மிகல், நலிதல், சூழ்ச்சி, வாழ்த்தல், நாணுதல், துஞ்சல், அரற்று, கனவு, முனிதல், நினைதல், வெரூவுதல், மடிமை, கருதல், ஆராய்ச்சி, விரைவு, உயிர்ப்பு, கையாறு, இடுக்கண், பொச்சாப்பு, பொறாமை, வியர்த்தல், ஐயம், மிகை, நடுக்கம் என்பவையாகும்.

    உடைமை:-

    உடைமை என்பது “செல்வம் உரியப்பொருள், அணிகலன், உரியவை” என்று தமிழ் தமிழ் அகராதி பொருள் கூறுகிறது.

    உடைமை என்பதனை “யாதானுமொரு பொருளை உடையனாயினால் வருதலாகும் மனநிகழ்ச்சி என்று இளம்பூரணர் கூறுகிறார். “உடைமை என்பது செல்வம், செல்வநுகர்ச்சியாயின் உவகைப்பொருளாம்; இஃது அன்னதன்றி நுகராதே அச் செல்வந்தன்னை நினைந்து இன்புறுதற்கு ஏதுவாகிய பற்றுள்ளம் என்று பேராசிரியர் கூறுகிறார். உடைமை மெய்ப்பாடு பின்வருமாறு,

    நிலப்பரப்பு நம்முடையது என்று உரிமை உடைய மன்னன் ஆனவன் இறந்து விட்டால் வலிமை உடையவர்களுக்கு நிலமானது உடைமை உடையதாகும் என்ற செய்தி ஔவையின் பாடலில் பின்வருமாறு, “தமவே ஆயினும் தம்மொடு செல்லா, வேற்றோர் ஆயினும் நோற்றோர்க்கு ஒழியும்” (புறம் 367,2-3), பாரிமகளிர் தம்முடைய பறம்பு மலையும் தந்தையும் முன்பு தமக்கு உடமையாக இருந்தமையைப் பாடலில் வெளிப்படுத்தியுள்ளார் “எந்தையும் உடையேம்; எம்குன்றும் பிறர் கொளார்” (புறம் 112, 2).

    நடுவுநிலை:-

    நடுவுநிலை என்பது “நீதி ஒரு பக்கம் சாயாமை” என்று தமிழ்-தமிழ் அகராதி விளக்கம் தருகிறது.

    நடுவுநிலை என்பது “ஒருமருங்கு ஓடாது நிகழும் மனநிகழ்ச்சி” என்று இளம்பூரணர் கூறுகிறார். நடுவுநிலை என்பது “ஒன்பது சுவையுள் ஒன்றென நாடக நிலையுள் வேண்டப்படுஞ் சமநிலை” என்று பேராசிரியர் விளக்கமளிக்கிறார்.

    சோழன் போரவைக் கோப்பெருநற்கிள்ளி ஆமூர் மல்லனோடு மற்போர் புரிந்தான். சிலர் கிள்ளி வெற்றிபெறுவான் என்றனர்; பனை மரத்தின் அடியில் தான்நின்று நடுநிலையோடு அக்காட்சியைக் கண்டதனை நக்கண்ணையார் கூறுவது பின்வருமாறு, “ஆடாடென்ப வொருசா ரோரே, ஆடன்றென்ப வொருசா ரோரே, நல்ல பல்லோ ரிருநன் மொழியே” (புறம் 85, 3-5).

    அருளல்:-

    அருளல் என்பது “ஈதல், அருள்செய்தல், உண்டாக்கல், காத்தல், கற்பித்தல், கொடுத்தல், அசைதல், சொல்லல், விழித்தல், கட்டளையிடல்” என்று தமிழ்-தமிழ் அகராதி பொருள் கூறுகிறது. “அருளாவது எல்லா உயிர்க்கும் அளிசெய்தல்” என்று இளம்பூரணர் கூறுகிறார். பேராசிரியர் அருளென்பது “மக்கள் முதலிய சுற்றத்தாரை அருளுதல்” என்கிறார்.

    குழந்தையின் மழலைச் சொற்கள் தந்தைக்கு அருளுவது போல ஔவைக்கு அதியமான் அருளுகிறான் என்று ஔவை கூறுவது பின்வருமாறு,   “அருள் வந்தனவால், புதல்வர்தம் மழலை, என்வாய்ச் சொல்லும் அன்ன; ஓன்னார்” (புறம் 92, 3-4). அதியமான் பரிசில் தருவது தாழ்ப்பினும் அவன் தருவது தவறாது அருளுடையவன் என்பதனை “கோட்டிடை வைத்த கவளம் போலக் கையகத் ததுவது பொய்யா காதே” (புறம் 101, 7-8). பொகுட்டெழினி துன்ப இருளினைப் போக்கி நிலவு போன்று அருளும் தன்மையுடையவன் என்பதனை “இசைவிளங்கு கவிகை நெடியோய்! திங்கள், நாள்நிறை மதியத்து அனையை; இருள்” (புறம் 102, 6-7). விறலியிடம், ஔவை பரிசிலரைப் பாதுகாக்க அதியமான் உண்கலத்தில் அருளுவான் என்கிறாள். பின்வருமாறு, “மெழுகுமெல் அடையின் கொழுநிணம் பெருப்ப” என்கிறாள். (புறம் 103, 10).

    நாஞ்சில் வள்ளுவன் ஆய் அண்டிரனிடம் விறலியர் சமைக்க அரிசியை ஔவை வேண்ட, அவனோ ஆராயாமல் பெருங்களிறு சுமக்கும் அளவில் உணவினை ஈந்து அருளிய செய்தி பாடலில், “பெருங்களிறு நல்கியோனே யன்ன தோர்” (புறம் 140, 8) காணலாகிறது. அதியமான் இறந்த பின்பு அவன் செய்த அருள் தன்மையினை ஔவை பாடலில் பதிவு செய்துள்ளார் அவை பின்வருமாறு, “சிறிய கட்பெறினே, எமக்கு ஈயும் மன்னே! பெரிய கட்பெறினே, யாம் பாடத் தான் மகிழ்ந்து உண்ணும்; மன்னே! சிறு சோற்றானும் நனிபல் கலத்தன்; மன்னே!” (புறம்235,1-5).

    இழந்த தன் கணவனின் அருள் தன்மையினை அவன் மனைவி எண்ணிப் பார்க்கிறாள். இரவலர்க்கு உணவு வழங்கி அவர்கள் கண்ணீரினைப் போக்கி அருளியமையைப் பாடலில் “இரவலர்த் தடுத்த வாயில் புரவலர் கண்ணீர்த் தடுத்த தண்நறும் பந்தர்” (புறம் 250, 2-3).

    தன்மை:-

    தனிமை என்பது “இயல்பு, குணம், நிலைமை, பெருமை, மெய்மை, அழகு,” என்று தமிழ்-தமிழ் அகராதி பொருள் தருகிறது.

    தன்மை என்பது “சாதியியல்பு” என்று இளம்பூரணர் கூறுகிறார். தன்மையென்பது, சாதித்தன்மை; அவையாவன: “பார்ப்பாராயிற் குந்தி மிதித்துக் குறுநடை கொண்டு வந்து தோன்றலும், அரசராயின் எடுத்த கழுத்தொடும் அடுத்த மார்பொடும் நடந்து சேறலும், இடையராயிற் கோற்கையுங் கொடுமடியுடையும் விளித்த வீளையும் வெண்பல்லுமாகித் தோன்றலுமென் றின்னோரன்ன வழக்குநோக்கிக் கொள்க” என்று பேராசிரியர் கூறுகிறார்.

    மற குலப்பெண் ஒருத்தி மண்ணாசையால் போர் செய்யும் பகைவேந்தர் உருவாக வேண்டும் என்று நடுகல்லைத் தொழுத செய்தி பின்வருமாறு, “ஓ…..வேந்தனொடு, நாடுதரு விழுப்பகை எய்துக எனவே” (புறம் 306, 6-7). மறகுலபெண்ணைப் பற்றி வினவியவனிடம் இவள் தந்தை வயலில் தனியே வென்ற மன்னருக்கு மனம் பேசியுள்ளார் என்கிறார், அள்ளூர் நன்முல்லையார். மறக்குலத்தின்வீரம் பொருந்திய தன்மையைக் காட்டுகிறது பாடலில், “கரந்தைஅம் செறுவின் பெயர்க்கும், பெருந்தகை மன்னர்க்கு வரைந்திருந் தனனே” (புறம் 340, 8-9). என்கிறார். மறக்குலப்பெண் முன்னொரு நாள் தந்தையையும் கணவனையும் போரில் பறிகொடுத்தாள் இருப்பினும் தன் ஒரே மகனான இளைய மகனையும் வெள்ளாடை உடுத்தி வேலைக் கையில் கொடுத்து போருக்கு அனுப்பும் செய்தி பாடலில், “வேல்கைக் கொடுத்து வெளிது விரித்து உடீஇ” (புறம் 279, 8).

    அதியமானைப் பகைத்த மன்னனிடம் அவன் நுண்ணிய பூண் அணிந்த மார்பினை உடையவன் நற்போரினைச் செய்யும் தன்மையன் அதனால் அவனை பகைக்க வேண்டாம் என்று எச்சரிக்கிறாள் பாடலில், “கதிர்விடு நுண்பூண் அம்பகட்டு மார்பின்” (புறம்88, 4).

    ஏறைக்கோன் குறிஞ்சி நிலத்துக் குறுநிலத் தலைவன் இவன் பிறர் வருகை கண்டு நாணமடைபவன். தனக்குரியோர் பிழை செய்யின் அதனைப் பொறுப்பவன். பலியிடத்து வலிமையுடையவன் அரசனிடத்தில் வலிமையுடையவன் இத்தகைய தன்மை வாய்ந்தவை என்று குறமகள் இளவெயினி கூறுவது பின்வருமாறு, “தமர்தற் றப்பி னதுநோன் றல்லும், பிறர்கை யறவு தானா ணுதலும்” (புறம் 157, 1-2).

    அன்பு:-

    அன்பு என்பது “பற்று, ஆசை, தயை, நேசம், கருணை, பிரியம், அருள், பக்தி, சிவம், என்று தமிழ்-தமிழ் அகராதி பொருள் கூறுகிறது. அன்பு என்பது “பயின்றார்மாட்டுக் காதல்” என்று இளம்பூரணர் கருதுகிறார்.

    “பேராசிரியர் அன்பென்பது, “அருட்கு முதலாகி மனத்தில் நிகழும் நேயம், அஃதுடையார்க்குப் பிறர்கண் துன்பங் கண்டவழிக் கண்ணீர் விழுமாதலின் அவ்வருளானே “அன்புடைமை விளங்கும்” என்று விளக்கம் தருகிறார்.

    அதியமான் ஔவையின் மீது பேரன்பு வைத்ததன் காரணமாக அரிய வகை நெல்லிக்கனியைத் தான் உண்ணாது புலவருக்கு ஈந்தமை பாடலில், “சிறியிலை நெல்லித் தீங்கனி குறியாது,.. சாதல் நீங்கஎமக்கு ஈத்தனையே” (புறம் 91, 9,11).

    வாழ்த்தல்:-

    வாழ்த்தல் என்பது “ஆசி கூறு, கடவுள் துதி, மங்களம் பாடுதல்” என்று தமிழ்-தமிழ் அகராதி பொருள் தருகிறது.

    வாழ்த்தல் என்பது “பிறனை வாழ்த்துதல்” என்று இளம்பூரணர் கூறுகிறார். வாழ்த்தல் என்பது “பிறரால் வாழ்த்தப்படுதல், இது பிறவினையன்றோவெனின் ஒருவனை நீடு வாழ்க என்று வாழ்த்தல் பிறவினையாயினும் அவன் வாழ்விக்கப்படுதலின் அவன் அவ்வாறு கூறல் அமையுமென்று” என்று பேராசிரியர் விளக்கம் தருகிறார்.

    ஔவையாருக்கு அதியமான் நெல்லிக்கனி ஈந்தமைக்காக நீலமணி போன்ற கரிய கழுத்தினையுடைய இறைவன் போல் வாழ்க என்று வாழ்த்துவது பின்வருமாறு, “நீல மணிமிடற்கு ஒருவன் போல மன்னுக-பெருமே! நீயே”  (புறம் 91, 6-7). ஔவையாரின் மற்றொரு பாடலில் சேரமான் மாவண்கோவும், பாண்டியன் கானப்பேர் தந்த பெருவழுதியும், சோழன் இராயசூயம் வேட்ட பெருநற்கிள்ளி மூவேந்தர்களும் ஒன்றாக இருக்கும்போது நல் அறத்தினைச் செய்தால் வானத்து விண்மீனைக் காட்டிலும், மழைத்துளிகளைக் காட்டிலும் நெடுநாள் வாழ்க என்று வாழ்த்துவது, “வானத்து வயங்கித் தோன்றும் மீனினும், இம்மெனப் பரந்து இயங்கு மாமழை உறையினும், உயர்ந்துமேந் தோன்றிய பொலிகநும் நாளே” (புறம் 367, 15-18).

    பொகுட்டெழினியிடம் திறை செலுத்தாத பகைமன்னன் நாட்டைக் கழுதையேர் பூட்டி அழித்தாய் நீ வாழ்வாயாக என்று வறியவன் ஒருவன் பாடினான் என்ற செய்தியை ஔவை பாடலில் பின்வருமாறு, “வைகல் உழவ வாழிய பெரிது” கூறுகிறார், (புறாம் 392,11).

    அரற்று:-

    அரற்று என்பது “அழுது புலம்பு, பலவும் சொல்லி அழுது தன் குறை கூறுதல், ஒலி செய்” என்று தமிழ்-தமிழ் அகராதி விளக்கம் தருகிறது.

    அரற்று என்பது “உறக்கத்தின்கண் வரும் வாய்ச்சோர்வு” என்று இளம்பூரணர் கூறுகிறார். அரற்று என்பது “அழுகையின்றிப் பலவுஞ்சொல்லி தன்குறை கூறுதல்” என்று பேராசிரியர் விளக்கம் தருகிறார்.

    போரில் கணவன் மார்பில் விழுப்புண்பட்டுக் கிடந்தான் அவனை எடுத்து உன் தாய் இந்நிலை அறிந்தால் என்ன பாடுபடுவாளோ என்று அரற்றுகிறாள். பின்வருமாறு, “யங்கா குவள்கொ வழியில் டானே”(புறம் 254, 11).

    ஆராய்ச்சி:-

    “ஆராய்ச்சி என்பது துருவிப் பார்த்தால், நுணுகிப் பார்த்தால், புதியன காணல், சோதனை, என்று தமிழ்-தமிழ் அகராதி பொருள் தருகிறது.

    ஆராய்ச்சி என்பது ஒரு பொருளைக் குறித்து அதன் இயல்பு எத்தன்மைத்தென ஆராய்தல்” என்று இளம்பூரணர் கூறுகிறார். ஆராய்ச்சி என்பது ஒரு பொருளை நன்று தீதென்று ஆராய்தல் என்று பேராசிரியர் விளக்கம் தருகிறார்.

    தொண்டைமான் அதியமானிடம் பகை கொண்டான்; போரில் ஈடுபடக் கருதினான். போரின் கொடுமையை அதியமான் எண்ணி ஆராய்ந்து ஔவையைத் தூது அனுப்பியமை பின்வருமாறு, “பகைவர்க் குத்திக் கோடுநுதி சிதைந்து” (புறம் 95, 4). ஔவையின் மற்றுமொரு பாடலில் அதியமானுக்குத் திறை செலுத்தாத மன்னனிடம் திறை செலுத்த மறுப்பின் உங்கள் மனைவி உங்கள் தோளினைப் பிரிவது உறுதி என்று ஆராய்ந்து கூறுவது “குறுந்தொடி மகளிர் தோள்விடல், இறும்பூது அன்று; அஃது அறிந்து ஆடுமினே” (புறம் 97, 24,25).

    அதியமானுக்கும் கோவலூர் மலாடர் கோவிந்தனுக்கும் பகை உண்டாயிற்று. இடையிலுள்ள அதனைக் கண்டு அஞ்சியதனை ஔவை பார்க்கிறார். அதியமானைப் போரில் எதிர்த்து நிற்பவர் யார் போரின் தன்மையை நினைந்து ஆராய்வது பின்வருமாறு, “இறங்குகதிர் அலம்வரு கழனி, பெரும்புனற் படப்பை, அவா அகன் தலைநாடே”  (புறம் 98, 19-20).

    நடுக்கம்:-

    நடுக்கம் என்பது “அச்சம் துன்பம் கிறுகிறுப்பு” என்று தமிழ்-தமிழ் அகராதி விளக்கம் தருகிறது.

    நடுக்கம் என்பது “யாதானும் ஒரு பொருளை இழக்கின்றோமென வரு மனநிகழ்ச்சி என்று இளம்பூரணர் கூறுகிறார். நடுக்கம் என்பது “அன்பும் அச்சமும் முதலியன உடம்பிற் புலப்படுமாற்றான் உள்ளம் நடுங்குதல், புதல்வாக்குப் பிணி இல்வழியும் எவனாங்கொலன்று நடுங்குதல் அன்பான் நடுங்குதலாம்.” என்று பேராசிரியர் கூறுகிறார்.

    நக்கண்ணையார் பெருநற்கிள்ளியை கூடப் பொறாமையால் தாய்க்கும் ஊருக்கும் அஞ்சி நடுங்குவது பாடலில், “தொடிகழித் திடுதல்யான் யாயஞ் சுவலே அடுதோண் முயங்கல் லவைநா ணுவலே” (புறம் 83, 3-4).

    முடிவுரை:-

    புறப்பாடல்களில் உலக வழக்கினைப் பெரிதும் தழுவிய மெய்ப்பாடு உடைமை, நடுவுநிலை, அருளல், தன்மை, வாழ்த்தல், அரற்று, ஆராய்ச்சி, நடுக்கம் என்பதாகும். இவை மனித மனத்தின் உள்ளுணர்வின் புறதோற்றங்களாக வெளிப்படுகின்றன.

    துணைநூற்பட்டியல்:-

    1. ஔவை சு.துரைசாமிப் பிள்ளை (வி.வு), 1977, புறநானூறு (1-200 பாட்டுக்கள்), திருநெல்வேலி, தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிமிடெட், சென்னை -1
    2. ஔவை சு. துரைசாமிப் பிள்ளை (வி.வு) , 1996, புறநானூறு (201-400) திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிமிடெட் சென்னை- 18
    3. சுப்புரெட்டியார். ந2011 தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை; சந்தியா பதிப்பகம் சென்னை-

    அகராதி:-

    1. மு. நிலாமணி (தொ.ஆ) கலா.கே.தாக்கர்(தொ.ஆ), 2005 தமிழ்-தமிழ் அகராதி நல்லற்பதிப்பகம், சென்னை – 600017.
    2. வின்சுலோ.எம், 1984,தமிழ் ஆங்கில அகராதி, ஏசியன் எஜிகேஷனல் சர்வீஸ், நியூ டெல்லி.

    *****

    கட்டுரையாளர் – முனைவர்பட்ட ஆய்வாளர், தமிழ் உயராய்வு மையம், தமிழியல் துறை,
    ராணி அண்ணா அரசு மகளிர்க் கல்லூரி,  (மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்),
    திருநெல்வேலி.

     

     

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

     

    180617 Krishna Philharmonic- 10×14” wm

    ”மல்லாண்டு கண்டது மாவீரன் பட்டம்தான்,
    புள்ளாண்டான் ஹார்மனியை(சுமுகத்தை) பூமிக்கு -சொல்லாண்ட
    கீதை இசைக்கின்றார், கூடாரைக் கொள்ளுமிவர்
    பாதைக் குமார்க்க பந்து”….கிரேசி மோகன்….!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

     

    மூப்பிழைய, மூச்சடைக்க, சாப்பாடே நஞ்சாக
    கூப்பிடாத காலன் கரம்குலுக்க -ஆப்பழியும்(உடல் அழியும்)
    அந்திம நாளேனும் அய்யோ மனமேநீ(கொரில்லா ஸிம்பாலிக் -கேசவ் கரெக்டா….!)
    நந்த குமாரனை நம்பு….கிரேசி மோகன்….!

    Share
  • 2018 ஜூன் 12 இல் அசுரத் தூசிப்புயல் அடித்துச் செவ்வாய்க் கோள் இருண்டு போனது !

     

    செவ்வாய்க் கோளில் அசுரத் தூசிப்புயல்

    ++++++++++++++++++++++++++

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

    1.  https://youtu.be/kmDSUihn-U4
    2. https://youtu.be/gdNqfa0BeGg
    3. https://youtu.be/oU1KwE5G9Y8
    4. https://youtu.be/gjttaWymUZI
    5. https://youtu.be/ExQ2qA_3q8c
    6. https://youtu.be/LilZ51PEu-I

    “நமக்குத் தெரியாமல் ஒளிந்திருக்கும் வானியல் புதிர்களை ஊடுறுவிக் கண்டுபிடிக்கச் செவ்வாய்க் கோள்தான் விண்வெளி விஞ்ஞானிகளுக்கு உதவி புரியக் கூடியது”.

    ஜொஹானஸ் கெப்ளர் [German Astronomer Johannes Kepler]

    2007 மார்ச் 15 ஆம் தேதி செவ்வாய் எக்ஸ்பிரஸ் விண்கப்பலில் [Mars Express Spacecraft] உள்ள இத்தாலி ரேடார்க் கருவி மார்ஸிஸ் [MARSIS] தென் துருவத்தில் அளந்த அகண்ட ஆழமான பனிக்கட்டித் தளம் அமெரிக்காவின் டெக்ஸஸ் மாநிலத்தை விடப் பெரியது!  அதன் இருக்கை முன்பே அறியப்பட்டாலும் அந்த ரேடார் ஆழ்ந்து அளந்து அனுப்பிய பரிமாணப் பரப்பு பிரமிக்க வைக்கிறது!

    ஜெஃப்ரி பிளௌட் நாசா ஜெ.பி.எல் விஞ்ஞானி [Jeffrey Plaut, NASA JPL Investigator]

     

    செவ்வாய்க் கோளில் நாசா விண்ணுளவிகள் அசுரத் தூசிப்புயல் அடிப்பைப் பதிவு செய்தன.

    செந்நிறக்கோள் செவ்வாயைச் சுற்றிவரும் மூன்று நாசாவின் விண்ணுளவிக் காமிராக்களும், மற்றும் நாசாவின் தளவுளவி கியூரியாசிட்டியும் [NASA Curiosity Rover] கேல் ஆழ்குழியில்  [Gale Crater]  பேரளவு தூசி மேவியுள்ளதாய்க் காட்டி இருக்கின்றன.  அசுரத் தூசிப்புயல் அடிப்புகள் செவ்வாய்க் கோளில் அடிக்கடி நிகழும் அதிர்ச்சிகள்.  இவை விண்ணுளவிகளின் தளவுளவிக் கருவிகள் முடங்கிப் பழுதடையச் செய்கின்றன. எதிர்கால விமானிகள் செவ்வாய்க் கோளில் நடமிடும் போது, இந்த அசுரப் புயல்களிலிருந்து தம்மையும், விண்கப்பல்களையும் எப்படிப் பாதுகாத்துக் கொள்வார் என்பது ஒருபெரும் சவாலாக இருக்கப் போகிறது !

    செவ்வாய்க் கோளில் இம்மாதிரி அசுரத் தூசிப்புயல் அடிப்புகள் ஆண்டுக்கு [பூமி ஆண்டு] ஆறு -எட்டு முறை நிகழ்கின்றன. 2007 ஆம் ஆண்டு நேர்ந்த ஓர் அசுரப்புயல் பல வாரங்கள் நீடித்தன. ஏன் பல மாதங்கள் கூட நீடிக்கலாம். 2018 ஜூனில் நிகழ்ந்த பெரும்புயல் 14 மில்லியன் சதுர மைல் பரப்புக்கு [ 35 மில்லியன் சதுர கி.மீ. ]  பாதகம் விளைவித்துள்ளது.  அது ஏறக்குறைய செவ்வாய்த் தளத்தில் கால் பகுதியாகும்.  எல்லா தூசிப்ப்யல் அடிப்புகளும்  செவ்வாய்க் கோள் சூழ்வெளியைப் பாதிப்ப தாகும்.

     ++++++++++++++++++

    fig-1-mars-express.jpg

    (மார்ச் 15, 2007)

    மார்ஸிஸ் ரேடார் கருவி செவ்வாய்க் கோளின் ஆழ்த்தள ஆய்வுக்கு உகந்த ஆற்றல் மிக்கச் சாதனம்;  செவ்வாய்த் துருவப் பிரதேசப் பகுதிகளில் அடுக்கடுக்கான தட்டுகளை ஆராயும் முக்கிய குறிக்கோளை செம்மையாக நிறைவேற்றி வருகிறது. தளத்தட்டுகளின் ஆழத்தையும், தட்டுகளின் வேறுபாட்டுப் பண்பாடுகளையும் தனித்துக் காட்டுவதில் அது பேரளவு வெற்றி அடைந்துள்ளது.

    கியோவன்னி பிக்கார்டி, ரோம் பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் [Gionanni Picardi]

    “ரோவர் தளவூர்திகளின் ஆயுட் காலம் நீடிப்பாகி ஈராண்டுகளாய்ச் செவ்வாய்த் தளத்தை உளவி வருகின்றன. ஒவ்வொரு நாளாய் அவை பூமியிலிருந்து தூண்டப் பட்டு, செப்பணிடப் பட்டு மகத்தான பணிகளைப் புரிந்து வருகின்றன!”

    ஸ்டீவன் ஸ்குயர்ஸ், செவ்வாய்க் குறிப்பணி பிரதம ஆய்வாளி, கார்நெல் பல்கலைக் கழகம்.

    fig-1c-snowfall-on-mars-poles

    செவ்வாய்க்கோள் தென்துருவத்தில் ஆழமான அகண்ட பனித்தளக் கண்டுபிடிப்பு

    செவ்வாய்க் கோளைச் சுற்றிக் கொண்டிருக்கும் விண்வெளிக் கப்பல் செவ்வாய் எக்ஸ்பிரஸ் [Mars Express] 2007 மார்ச் 15 ஆம் நாள் தென் துருவத்தில் ஓர் அகண்ட ஆழமான பனித்தளத்தின் பரிமாணத்தை அளந்து பூமிக்குத் தகவல் அனுப்பி யுள்ளது!  செவ்வாய் எக்ஸ்பிரஸ் விண்கப்பலில் [Mars Express Spacecraft] உள்ள இத்தாலி ரேடார்க் கருவி மார்ஸிஸ் [MARSIS] தென் துருவத்தில் அளந்த அகண்ட ஆழமான பனிக்கட்டித் தளம் அமெரிக்காவின் டெக்ஸஸ் மாநிலத்தை விடப் பெரியது!  அதன் இருக்கை முன்பே அறியப்பட்டாலும் அந்த ரேடார் ஆழ்ந்து அளந்த அனுப்பிய பரிமாணப் பரப்பு பிரமிக்க வைக்கிறது.  அந்தப் பனித்தளம் உறைந்து போன நீர்த்தளம் என்பதும் தெளிவாக இத்தாலிய ரேடார் கருவி மூலம் காணப்பட்டு முடிவு செய்யப் பட்டுள்ளது.  அதன் நீர்க் கொள்ளளவை செவ்வாய்க் கோள் முழுவதும் பரப்பினால் 36 அடி [11 மீடர்] ஆழமுள்ள ஏரியை உண்டாக்கலாம். செவ்வாய் எக்ஸ்பிரஸின் ரேடார் கருவி செவ்வாய்க் கோளைச் சுற்றி வந்து, தென் துருவத்தில் 300 துண்டங்களை நோக்கிப் பனிக்கட்டித் தளங்களை ஆய்ந்து படமெடுத்துப் பரிமாணத்துடன் அனுப்பியுள்ளது. ரேடாரின் கூரிய கதிர்வீச்சுகள் செவ்வாய்த் தளத்தின் கீழ் கூடுமான அளவில் 2.3 மைல் [3.7 கி.மீ] வரை சென்று உறைந்த நீர்க்கட்டியின் ஆழத்தை ஒப்பிய பரிமாண அளவில் கணித்து அனுப்பியுள்ளது.

    செவ்வாய் எக்ஸ்பிரஸின் ரேடார் நுட்பக் கருவியின் பெயர்:  “மார்ஸிஸ்” [MARS Advanced Radar for Subsurface & Ionospheric Sounding (MARSIS)].  தென்துருவத்தை உளவியது போல் அக்கருவி வடதுருவத்தையும் தளப்பனிக் கட்டியை உளவி வருகிறது.  ரோம் பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் கியோவன்னி பிக்கார்டி [Gionanni Picardi] “எங்கள் மார்ஸிஸ் ரேடார் கருவி மிகச் சிறந்த முறையில் தன்பணியைச் செய்து வருகிறது”, என்று பெருமைப்பட்டுக் கொண்டார்.  அவரே ரேடார் ஆழ்த்தள ஆய்வாளர். “மார்ஸிஸ் கருவி செவ்வாய்க் கோளின் ஆழ்த்தள ஆய்வுக்கு உகந்த ஆற்றல் மிக்கச் சாதனம்;  செவ்வாய்த் துருவப் பிரதேசப் பகுதிகளில் அடுக்கடுக்கான தட்டுகளை ஆராயும் முக்கிய குறிக்கோளை செம்மையாக நிறைவேற்றி வருகிறது. தளத்தட்டுகளின் ஆழத்தையும், தட்டுகளின் வேறுபாட்டுப் பண்பாடுகளையும் தனித்துக் காட்டுவதில் வெற்றி அடைந்துள்ளது.  விண்கப்பல் கட்டுப்பாடு அரங்குகளில் உள்ள எங்கள் பதிவுச் சாதனங்களைச் சீராக்கி நுட்பமாக மேலும் சிறந்த தள அடுக்குகளின் தன்மைகளை  விளக்க முடியும்,” என்றும் கூறினார்.

    செவ்வாய்க் கோளின் துருவங்களே நீர்க்கட்டி சேமிப்புகளின் பெருங் களஞ்சியங்களாகக் கருதப்படுகின்றன.  துருவப் பகுதிகளின் நீர்மை சேமிப்பு வரலாற்றை அறிந்தால், செவ்வாய்க் கோளில் உயிரின வளர்ச்சிக்கு ஒரு காலத்தில் வசதியும், சூழ்நிலையும் இருந்தனவா என்பதைத் தெளிவாக ஆராய முடியும்.  நீர்ப்பனிப் பாறைகளும், கார்பன் டையாஸைடு குளிர்க்கட்டிகளும் உள்ள துருவ அடுக்குப் படுகைகள் [Polar Layered Deposits] துருவப் பகுதிகளைத் தாண்டியும், துருவ முனைப் பரப்பின் [Polar Cap] ஆழத்திலும் உள்ளது அறியப் படுகிறது.  ரேடார் எதிரொலிப் பதிவுகள் பாறைப் பகுதிகள் போல் காட்டுவது 90% நீர்த் தன்மையால் என்று கருதப் படுகிறது.  துருவப் பிரதேசங்களில் மிக்க குளிராக இருப்பதால், உருகிப் போன திரவ நீரைக் காண்பது அரிது.

    பனிப் பாறைக்குக் கீழே உள்ள தளத்தையும் அறியும் போது செவ்வாய்க் கோளின் ஆழ்த்தள அமைப்பு தெரிய வருகிறது. “பனிப் பகுதிகளின் அடித்தளத்தைப் பற்றி எங்களால் அறிய முடியவில்லை. பூமியில் உள்ளது போல் பனித்தட்டுகள் அவற்றின் மேல் தட்டுகளால் அழுத்தப் படாமல் உள்ளதை அறிந்தோம்.  செவ்வாய்க் கோளின் அடித்தட்டும், மேற்தட்டும் [Crust & Upper Mantle] பூமியை விடக் மிகக் கடினமாக உள்ளது காணப் படுகிறது.  அதற்குக் காரணம் செவ்வாய்க் கோளின் மையப் பகுதி பூமியை விடக் குளிர்ச்சியாக உள்ளதே!

    ஈசாவின் விண்ணுளவி அனுப்பிய தகவல்

    ஈரோப்பியன் விண்வெளித் துறையகம் [European Space Agency (ESA)] ஜூன் 2, 2003 இல் 150 மில்லியன் ஈரோச் [Euro] செலவில் [133 மில்லியன் US டாலர்] தயாரித்து, 240 மில்லியன் மைல் பயணம் செய்ய அனுப்பியது, செவ்வாய் வேகக்கப்பல் [Mars Express with Beagle-2 Lander]. அது செவ்வாய்ச் சுற்றுச்சிமிழ் [Mars Express Orbiter] ஒன்றையும், தள ஆய்வுச்சிமிழ் பீகிள் [Beagle 2 Lander] ஒன்றையும் சுமந்து கொண்டு, ரஷ்யாவின் சோயஸ்-·பிரிகட் ராக்கெட் [Russian Soyuz-Fregat Rocket] ரஷ்யாவின் பைகோனூர் காஸ்மோடிரோம் [Baikpnur Cosmodrome] ஏவுதளத்திலிருந்து ஏவப்பட்டது.  2003 டிசம்பர் 26 ஆம் தேதி செவ்வாய்க் கோளை 150 மைல் குறு ஆரத்தில் நெருங்கி, ஐரோப்பிய சுற்றுச்சிமிழ் நீள்வட்டத்தில் சுற்றப் போவதாக எதிர்பார்க்கப் பட்டது. சுற்றுச்சிமிழில் செவ்வாயின் சூழ்மண்டலம், கோளின் அமைப்பு, தளவியல் பண்பு, தள உட்பகுதி ஆகியவற்றை ஆராய ஏழு கருவிகள் அமைக்கப் பட்டுள்ளன. ஜெர்மனியின் விரிநோக்கிக் காமிரா [Stereoscopic Camera], பிரான்ஸின் தாதுக்கள் காணும் தளக்கருவி  [Mineralogical Mapper], இத்தாலியின் சூழக உளவு கருவி [Atmospheric Sounder], இத்தாலி & ஜெட் உந்து ஆய்வகம் [JPL California] செய்த ரேடார் உளவி [Radar Probe] அவற்றில் குறிப்பிடத் தக்கவை.

    பீகிள் மிகவும் சிறிய தள உளவி. 1831 இல் உயிரியல் விஞ்ஞான மேதை சார்லஸ் டார்வின் [Charles Darwin], தகவலைத் தேடி பூமியில் தடம்படாத தளத்துக்குச் செல்லப் பயன்படுத்திய கப்பலின் பெயர் பீகிள்-2!  அந்தப் பெயரே ஐரோப்பியத் தள உளவிக்கு வைக்கப்பட்டது!  செவ்வாய்த் தளத்தில் உயிரினங்கள் இருந்தனவா என்று, பீகிள் உளவு செய்யும்.  தளத்தில் நிலை பெற்றபின், பீகிள் விண்வெளிக் கோளில் வாழ்ந்த உயிரினம் [Exobiology], தளவியல் இரசாயன [Geochemistry] ஆய்வுகளைச் செய்யும்.  சுற்றுச்சிமிழ் நான்கு ஆண்டுகள் [2003-2007] தகவல் அனுப்பும் தகுதி வாய்ந்த சாதனங்களைக் கொண்டது.

    இருபத்தியொன்றாம் நூற்றாண்டில் செவ்வாய் நோக்கி விண்கப்பல்கள்

    2001 ஏப்ரல் 7 ஆம் தேதி செவ்வாய் ஆடிஸ்ஸி [2001 Mars Odyssey Voyage] விண்சிமிழைத் தாங்கிச் செல்லும் ராக்கெட் எவ்விதப் பழுதும், தவறும் ஏற்படாமல் பிளாரிடா ஏவுதளத்திலிருந்து கிளம்பியது.  ஆடிஸ்ஸி விண்சிமிழ் 725 கிலோ கிராம் எடையுடன் 7x6x9 கனஅடிப் பெட்டி அளவில் இருந்தது.  சில மாதங்கள் பயணம் செய்து, 2001 அக்டோபர் 24 ஆம் தேதி செவ்வாய்க் கோளை அடைந்து, முதலில் பதினெட்டரை மணிக்கு [18:36 துல்லிய நேரம்] ஒருமுறைச் சுற்றும் நீள்வட்ட வீதியில் சுற்ற ஆரம்பித்தது. பிறகு செவ்வாய்க் கோளின் சூழ்மண்டலத்தில் ஆடிஸ்ஸி விண்கப்பலை வாயுத்தடுப்பு முறையில் [Aerobraking] கையாண்டு, நீள்வட்ட வீதியைச் சுருக்கிச் செவ்வாயின் குறு ஆரத்தை 240 மைலாக விஞ்ஞானிகள் மாற்றினர்.  திட்டமிட்ட குறு ஆரம் 186.5 மைல்!  ஆனால் கிடைத்த குறு ஆரம்: 240 மைலில் 2 மணி நேரத்திற்கு ஒருமுறைச் சுற்றும் வீதி!

    ஆடிஸ்ஸியின் மின்னியல் கருவிகள் சில செவ்வாய்க் கதிர்வீச்சுச் சூழ்நிலையை [Mars Radiation Environment (MARIE)] உளவு செய்யும்.  காமாக் கதிர் ஒளிப்பட்டை மானி [Gamma Ray Spectrometer], நியூட்ரான் ஒளிப்பட்டை மானி [Neutron Spectrometer], ஆகிய இரண்டும் செவ்வாய்த் தளத்தில் நீர்வளம் உள்ளதையும், ஹைடிரஜன் வாயுச் செழிப்பையும் கண்டறியும்.  அதே சமயம் தெளிவாகப் படமெடுக்கும் வெப்ப எழுச்சிப் பிம்ப ஏற்பாடு [Thermal Emission Imaging System (THEMIS)] விரிகோணப் படங்களை எடுத்தனுப்பும்.  செவ்வாய்ச் சூழ்வெளியின் கதிரியக்க வீரியத்தை அளக்கும்.  பின்னால் மனிதர் செவ்வாய்த் தளத்தில் தடம் வைக்க வரும்போது, கதிரியக்கத் தீவிரத்தால் அபாயம் [Radiation Hazard] விளையுமா என்றறிய அந்த அளவுகள் தேவைப்படும்.  மேலும் அதன் கருவிகள் தளவியல் பண்பை [Geology] அறியவும், தாதுக்களை ஆய்வு [Mineralogical Analysis] செய்யவும் பயன்படும்.  2005 அக்டோபர் வரை ஆடிஸ்ஸி விண்வெளிச் சுற்றுச்சிமிழ் தொடர்ந்து செவ்வாய்க் கோளின் தகவல்களை அனுப்பிக் கொண்டிருக்கும் என்று எதிர்பாக்கப் பட்டது.

    துருவப் பனிப் பாறைகள்

    செவ்வாயில் சிறிதளவு நீர் பனிப் பாறைகளாக இறுகிப் போய் உறைந்துள்ளது!  துருவப் பிரதேசங்களில் நிலையாக உறைந்து பனிப் பாறையான படங்களை, மாரினர்-9 எடுத்துக் காட்டியுள்ளது.  வட துருவத்தில் 625 மைல் விட்டமுள்ள பனிப் பாறையும், தென் துருவத்தில் 185 மைல் அகண்ட பனிப் பாறையும் இருப்பதாகக் கணிக்கப் பட்டுள்ளது!  மாரினர்-9 இல் இருந்த உட்செந்நிற கதிரலை மானி [Infrared Radiometer], செவ்வாயின் மத்திம ரேகை [Equator] அருகே பகலில் 17 C உச்ச உஷ்ணம், இரவில் -120 C தணிவு உஷ்ணம் இருப்பதைக் காட்டியது.  கோடை காலங்களில் வட துருவத் தென் துருவத் தளங்களில் குளிர்ந்து பனியான கார்பைன்டையாக்ஸைடு வரட்சிப் பனி [Dry Ice], வெப்பத்தில் உருகி ஆவியாக நீங்குகிறது. அமெரிக்கா அனுப்பிய விண்ணாய்வுக் கருவிகள் [Space Probe Instruments] துருவப் பிரதேசங்களில் எடுத்த உஷ்ண அளவுகள், பனிப் பாறைகளில் இருப்பது பெரும்பான்மையாக நீர்க்கட்டி [Frozen Water] என்று காட்டி யுள்ளன.  கோடை காலத்தில் வடதுருவச் சூழ்வெளியில் நீர்மை ஆவியின் [Water Vapour] அªவுகளை அதிகமாகக் கருவிகள் காட்டி இருப்பது, பனிப் பாறைகளில் இருப்பவை பெரும் நீர்க்கட்டிகள், வரட்சிப்பனி [Dry Ice or Frozen Carbondioxide] இல்லை என்பதை மெய்ப்பிக்கின்றன.

    நீர்மைச் சேமிப்புள்ள துருவ பனிப்பொழிவுகள்

    செவ்வாய்க் கோளின் வடதென் துருவங்களில் நீரும், கார்பன் டையாக்ஸைடும் கட்டிகளாய்த் திரண்டு போன பனித்தொப்பியாய்க் குவிந்துள்ளது!  இரண்டு விதமான பனித்தொப்பிகள் செவ்வாயில் உள்ளன.  ஒன்று காலநிலை ஒட்டிய பனித்திரட்டு, அடுத்தது நிரந்தர அல்லது எஞ்சிடும் பனித்திரட்டு.  காலநிலைப் பனித்திரட்டு என்பது செவ்வாய்க் கோளில் குளிர்கால வேளையில் சேமிப்பாகி, வேனிற்கால வேளையில் உருகி ஆவியாகச் சூழ்வெளியில் போய் விடுவது!  எஞ்சிடும் பனித்திரட்டு என்பது வருடம் முழுவதும் நிரந்தரமாய் துருவங்களில் நிலைத்திருப்பது!

    செவ்வாய்க் கோளின் காலநிலைப் பனித்திரட்டு முழுவதும் சுமார் 1 மீடர் தடிப்பில் காய்ந்த பனித்திணிவு [Dry Ice] வடிவத்தில் படிவது. தென்துருவ காலநிலைப் பனித்திரட்டு உச்சக் குளிர் காலத்தில் சுமார் 4000 கி.மீடர் [2400 மைல்] தூரம் படர்ந்து படிகிறது!  குளிர்காலத்தில் வடதுருவ காலநிலைப் பனித்திரட்டு சுமார் 3000 கி.மீடர் [1800 மைல்] தூரம் பரவிப் படிகிறது!  வேனிற் காலத்தில் வெப்பம் மிகுந்து 120 C [150 Kelvin] உஷ்ணம் ஏறும் போது காலநிலைப் பனித்திரட்டுகள், திரவ இடைநிலைக்கு மாறாமல் திடவ நிலையிலிருந்து நேரே ஆவியாகிச் சென்று சூழ்வெளியில் தப்பிப் போய்விடுகிறது! அவ்விதம் மாறும் சமயங்களில் கார்பன் டையாக்ஸைடு வாயுவின் கொள்ளளவு மிகுதியாகி, செவ்வாய் மண்டல அழுத்தம் 30% மிகையாகிறது!

    ++++++++++++++++++

    தகவல்:

    1. Mars Global Surveyor [Nov 7, 1996], Mars Path Finder [Dec 1996].
    2. Destination to Mars, Space flight Now By: William Harwood [July 8, 2003]
    3. Twin Roving Geologists Bound for Surface of Mars By: William Harwood [May 29, 2003]
    4  Science & Technology: ESA’s Mars Express with Lander Beagle-2  [Aug 26, 2003]
    5. Future Space Missions to Mars By: European Space Agency [ESA]
    6  http://www.thinnai.com/?module=displaystory&story_id=40602101&format=html
    [Author’s Article on Mars Missions]
    7  Spacecraft Blasts off to Gather Mars Data By: Associated Press [Aug 12, 2005]
    8  NASA Facts, Mars Exploration Rover By: NASA & JPL [Sep 2004]
    9  Arctic Microbes Raise Cope for Life on Mars By: Associated Press [Oct 25, 2005]
    10 Mars Reconnaissance Orbiter on the Approach By: JPL [Feb 8, 2006]
    11 Mars South Pole Ice Found to be Deep & Wide -NASA JPL Release [March 15, 2007]

    12. https://photojournal.jpl.nasa.gov/catalog/pia03170  [October 5, 2016]

    13. https://solarsystem.nasa.gov/news/469/10-things-massive-dust-storm-on-mars/  [June 13, 2018]

    14.  https://www.jpl.nasa.gov/news/news.php?feature=7041  [January 23, 2018]

    15.  http://www.astronomy.com/news/2018/01/global-dust-storms-on-mars-may-allow-atmospheric-gas-to-escape  [January 26, 2018]

    16.  https://mars.nasa.gov/news/8350/nasa-encounters-the-perfect-storm-for-science/  [June 13, 2018]

    ******************

    S. Jayabarathan [jayabarathans@gmail.com] June 17, 2018 [R-1]

    Attachments area

    Preview YouTube video Dust Storms May Have Played Role On Atmosphere Loss On Planet Mars

    Preview YouTube video NASA Images Show How Mars Transforms After Dust Storm

    Preview YouTube video Mars dust storm: Two great storms in the last week.

    Preview YouTube video Huge Mars discovery shocks scientists

    Preview YouTube video Mars Ship Confirmed by NASA Rover – & Propeller Found – ArtAlienTV

    Preview YouTube video Escape from Mars! Red-Planet Dust Storms Linked to Atmosphere Loss

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    180618 Yashoda -lr 10×14

     

    ’’திருவடி தீக்‌ஷையை தாயார்க்(கு) அளித்தார்,
    பெருவிரல் சூப்பிய பாலர் -பெருவடிவில்(திருவிக்கிரமனாய்)
    மாவலி உச்சியில் மூன்றென வைத்தவர்
    ’ மா’(தாய்)மாது(யசோதை) சொல்தட்டா மாது(மாதவர்)’’….கிரேசி மோகன்….!

    Share
  • படக்கவிதைப் போட்டி 165-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    சுட்டிக் குழந்தையை முதுகில் கட்டிக்கொண்டிருக்கும் அன்னையைப் படம்பிடித்து வந்திருப்பவர் திரு. அண்ணாகண்ணன். இப்புகைப்படத்தை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து தெரிந்தெடுத்துப் படக்கவிதைப் போட்டிக்கு அளித்திருப்பவர் திருமதி. இராமலக்ஷ்மி. இவர்கள் இருவருக்கும் என் நனிநன்றி!

    முந்தித் தவமிருந்து, தொந்திசரிய முந்நூறு நாள்சுமந்து பெற்ற குழந்தையை, பெற்ற பின்பும் கீழே இறக்காது தூளிகட்டிச் சுமக்கும் தாயன்பின் முன்னே தெய்வமும் மண்டியிடும்!

    தாயும் சேயும் இணைந்து நிற்கும் கண்கொள்ளாக் காட்சியிதனைக் கவிக்கண் கொண்டு நோக்கிக் கருத்தமைந்த பாடல்களைப் பொருத்தமாய்த் தர கவிஞர்களை அன்புபாராட்டி அழைக்கின்றேன்.

    *****

    கங்காருக் குட்டிபோல் தன் குழந்தையை முதுகில்கட்டிச் சுமக்கும் இந்தத் தன்னலமற்ற தாயன்புதான் போரில்லாப் புதிய உலகைப் படைக்கும் என்று பகர்கின்றார் திரு. ஏ. ஆர். முருகன்மயிலம்பாடி.

    வீட்டுமுற்றத்திலே தூளி கட்டி
    ஆட்டிஅழகு பார்க்கும்
    அம்மாமார் பார்த்ததுண்டு..
    மரக்கிளையில் சேலை கட்டி
    மழலை தனைத்தூங்கவைக்கும்
    மாதாக்கள் இங்கு உண்டு
    எட்டி ஓடுகிற கங்காரு – தன்
    குட்டி சுமக்கின்றலாவகம் போல்
    மட்டிலா மகிழ்ச்சி ததும்ப
    சுட்டிக்குழந்தையை முதுகிலே
    கட்டித்தூக்கிச்செல்லும் தாய்!!
    எந்த ஊரோ? ..எந்த நாடோ?
    எங்கேயிருந்தாலும்-அன்பை
    மங்காமல் காப்பாற்றுவதில்
    இங்கு பங்கு இருப்பதாய்
    உலகத்தோர் எல்லோர்க்கும்
    உரக்க உரைப்பதுவாய்
    உயிர்களுக்கு உணர்த்துகிற
    பாங்கினைப்போற்றினால்
    பாருயரும்! பண்புயரும்!!!
    அன்புப் பரிமாற்றம் ஒன்றுதான்
    சண்டையில்லா உலகத்தை
    சாத்தியமாக்கிடும் என்பதுவே
    சத்தியத்திலும் சத்தியம்!!….

    *****
    கட்டிக்கொண்டவன் கள்ளுக்கடையிலேயே காலந்தள்ளுவதால் தான் வேலைசெய்யும் இடத்துக்கும் குழந்தையைத் தோளில் சுமந்துசெல்லும் இந்த அன்னையின் ஒரே ஆசை, ’இந்தக் குழந்தையேனும் உருப்படியாய் வளரவேணும்’ என்பதுதான் என்கிறார் திரு. அ. இராஜகோபாலன்.

    அவசரம்

    கட்டிக்கொண்டவன்
    கவலையற்று,
    வெட்டியாய்க்
    கள்ளுக்கடையில் காலந்தள்ள

    விட்டுச் செல்ல வழியின்றி
    வேலைக்குப் போகும்போதும்
    கூடவே
    கட்டுத் துணியில்
    முதுகில் குழந்தை.

    கைப் பிடித்து நடக்கவே
    இன்னும் காலம் உண்டு.
    அதற்குள்
    காலுக்குச் செருப்பெதற்கு?

    அப்பனைப் போல் ஆகிவிடாமல்
    ஆகாத காலத்துக்கு,
    எனக்கு
    அரை வயிற்றுக்கேனும் கஞ்சி ஊற்ற
    உழைத்துச் சம்பாதிக்க
    உருப்படியாய் வளரவேணும்.
    அவசரமாய்.

    *****

    ”வயிற்றில் சுமந்தது போதாதென்று முதுகிலும் சுமக்கும் அன்னையே! உன்னை இறைவன் படைத்தது பிள்ளைகள் செய்த பேறே!” என்று நெகிழ்கின்றார் திரு. பழ. செல்வமாணிக்கம்.

    சுமை தாங்கி 

    பத்து மாதம் பிள்ளையைச் சுமந்தாய்
    உன் உதிரத்தை உணவாய்த் தந்தாய்!
    கண்ணை இமை காப்பது போல!
    பிள்ளையைக் காத்தாய்!
    பிள்ளையைக் கருவில் சுமந்தாய்!
    கணவனை உள்ளத்தில் சுமந்தாய்!
    குடும்பத்தைத் தோளில் சுமந்தாய்!
    உன் சுகத்தை நினைக்க மறந்தாய்!
    வலியை நெஞ்சில் புதைத்தாய்!
    வயிற்றில் சுமந்தது போதாதென்றா!
    முதுகிலும் நீ சுமந்தாய்!
    சுமப்பதைக்கூட சுகமாய் நினைத்தாயோ!
    சுமப்பதினால் பூமியும் தாயானாள்!
    தாயன்பிற்கு உலகில் ஈடென்பதேது!
    தாயைக் கடவுள் படைத்தது பிள்ளைகள் செய்த பேறு!

     *****

    ”ஐயிரண்டு திங்கள் காத்திருந்து கருவுயிர்த்து, நீராட்டிச் சீராட்டி, கனமென்று கருதாது கணப்பொழுதும் பிரியாது தாய் சுமக்கும் சுகமான சுமைதான் இந்தச் சேய்” என்று அன்னைக்குப் பாராட்டு மடல் வாசிக்கின்றார் திருமிகு. சக்திப்ரபா.

    தாயன்பு

    ஐயிரண்டு திங்கள் காத்திருந்து கருப்பையில்
    பச்சிளம் மேனியை பதவிசாய் மார்பில்
    நீராட்டிச் சீராட்டி மிருதுவாய் முன்னங்கால்களில்
    துணியிலே தூளியிட்டு நெடுந்தூரம் முதுகில்
    மழலை மொழிகேட்டு முத்தமிட்டு மடியில்
    இமைப்பொழுதும் நீங்காத சிந்தனைச் சுவடுகளில்
    உயிருள்ள வரையிலும் உறையும் நினைவுகளில்
    உயிரற்று உதிர்ந்தாலும் தொடரும் உணர்வுகளில்
    புன்னகை விரித்துப் பொழுதெல்லாம் ரசித்து
    கனமென்று சிறு கணம் கூட கருதாமல்
    தாயுள்ளம் தாங்கும் சுமையற்ற சுகங்கள்

    *****

    ”தொட்டில் கட்டி வீட்டில் விட்டால் கவனிக்க ஆளில்லையென்றுத் தோளில் தூளிகட்டிப் பசியாற்றும் அன்புநிறை அன்னையிவள்” என்று வியக்கிறார் திரு. செண்பக ஜெகதீசன்.

    முதுகிலே…

    தொட்டில் கட்டி விட்டுவந்தால்
    தூங்க வில்லை வீட்டினிலே,
    விட்டுப் போன கணவனாலே
    வேலை பார்த்துப் பிழைக்கவேண்டும்,
    எட்டிப் பார்த்துப் பசியாற்ற
    எளிய வழியைத் தாய்கண்டாள்,
    கட்டிச் சுமக்கும் தூளியிலே
    கொண்டாள் பிள்ளையை முதுகினிலே…!

    ***** 

    ”குழந்தை பெற்றும் குடும்பமில்லாத அன்னையிவள்; அதனால் வயிற்றில் சுமந்த மகவை விடாது தோளிலும் சுமந்து உழைக்கிறாள்” என்று வேதனைப்படுகின்றார் பெருவை திரு. பார்த்தசாரதி.

    உழைக்கும் அன்னை..!

    வயிற்றில் சுமந்தது
    ……….வளையும் முதுகில்
    பயிற்சி வேண்டும்
    ……….பணிவாய்ச் சுமக்க
    குழந்தை பெற்றும்
    ……….குடும்பம் இல்லை
    அழுதால் மட்டுமே
    ……….அன்னை வருவாள்
    வியர்வை சிந்தி
    ……….வேலை செய்தும்
    துயரை நீக்கத்
    ……….தூளியே ஆறுதல்
    தாய்ப் பாசம்
    ……….தானாக வருவது
    தாய்மை என்பது
    ……….தரத்தினில் ஒன்றே

    தொட்டிலில் இட்டுக்
    ……….தாலாட்டி அன்னை
    பாட்டு ஒன்றைப்
    ……….பாடவும் முடியா
    கயிற்றுத் தூளியில்
    ……….குழந்தை போட்டால்
    வயிற்றை நிரப்ப
    ……….வழியிலா தாகிடும்
    பெற்ற குழவியால்
    ……….பெருமை உற்றும்
    பற்றுக் கொண்டு
    ……….பகல் முழுதும்
    அன்னை முதுகில்
    ……….அதுவே சுமை
    தன்னைக் காக்க
    ……….தனிமை உழைப்பே

    *****

    ”கொடிக்குக் காய் பாரமில்லை; குழந்தை தாய்க்கு பாரமில்லை! பெற்றெடுத்த மகவைக் கல்விபுகட்டி  நல்லறிஞனாய் வளர்ப்பாய்! நாளை உனக்கிவன் துணையாவான்!” எனத் தன் கவிதையில் நம்பிக்கை விதைக்கின்றார் திரு. ரா. பார்த்தசாரதி.

    தாயும் குழந்தையும்

    மண்ணுக்கு மரம் பாரமாகுமா?
    மரத்திற்கு கிளை பாரமாகுமா?
    கொடிக்குக் காய் பாரமாகுமா?
    குழந்தை தாய்க்கு பாரமாகுமா?
    பிழைப்பிற்காகக் குழந்தையைத்
    தோளை தூளியாக்கிச் சுமந்து
    வயிற்று பிழைப்பிற்காகத் தினம்
    சுமந்து செல்லும் மலைஜாதிப்
    பெண்ணே!

    உடலில் வலுவும், நெஞ்சில் துணிவுடன்
    உழைத்துப் பிள்ளையை காப்பாற்று
    கல்வியை புகட்டி, அறிவினை பெருக்கி
    நல்லறிஞனாய் வளர்ப்பாயாக!

    இன்று உன் நிழலில் உன் பிள்ளை
    நாளை அவன் மடியில் உன் தலை
    அவனே உன்னை தாங்கும் தூண்!
    என எண்ணிச் செயலாற்று!

    *****

    மகவைத் தோளில் சுமந்துநிற்கும் மகத்தான தாய்க்கு ஊக்கத்தையும், உற்சாகத்தையும் தம் நன்மொழிகளில் ஊட்டியிருக்கும் கவிஞர்களைப் பாராட்டி மகிழ்கின்றேன்!

    இவ்வாரத்தின் சிறந்த கவிதை இனி…

    மகிழ்ச்சியாய் வாழக் கற்றுக்கொள்வோம்!

    உலர்ந்த நிலப் பரப்பில்… பொழிந்திட்ட மழையைப் போல…
    அலர்ந்த மலர் ஒன்று… பரப்பிட்ட மணத்தைப் போல…
    வளர்ந்த தரு வொன்று… தந்திட்ட நிழலைப் போல…
    புலர்ந்த பொழு தெனவே… பிறந்த தன் மகவினாலே…
    குளிர்ந்த நில வெனவெ… இருக்கிறது அத்தாயின் முகமும்…!

    மலர் போன்ற பிள்ளைதன்னை… தன் முதுகில் சுமந்துகொண்டு…
    தளர்வறியாச் சூரியன் போன்று… தன் பணியைச் செய்வதுகண்டு…
    சிலரேனும் நினைத் திருப்பர்… சிக்கலான வாழ்க்கை யென்று…
    அளறுவென நினைக்கும் படி… அவனி வாழ்க்கை இருந்தாலும்…
    பலர் போற்ற வாழ்வோரும்… பாரினிலே மெத்த உண்டு…!

    எத்தனை எத்தனை இன்பங்கள்… இறைவன் படைப்பில் இருந்தாலும்…
    அத்தனையும் நமக் கில்லை… என்பது போல் இருந்துவிட்டால்…
    மொத்தமாய்த் துன்பமே மேலோங்கும்… என்பதை நன்கு ணர்ந்து…
    இத்தாயின் உறுதி கண்டு… சளைக்காத வலிமை கண்டு…
    எதற்குமயராத நிலை கொண்டால்… மகிழ்ச்சி நமக்கு உண்டு…!

    ”உலர்ந்த நிலத்தில் பொழிந்த மழையாய், அலர்ந்த மலராய், புலர்ந்த பொழுதாய்த் தன் வாழ்வுக்கு ஒளியூட்ட வந்த மகவால் களிகொண்ட அன்னையிவள் உழைக்கும் உறுதிகொண்டாள்; தன் துன்பத்துக்கு இறுதி கண்டாள். இவள்போல் மனவலிமை கொண்டால் மகிழ்ச்சி நமக்குண்டு!” என்று துன்பவாழ்வை வெல்லும் நல்வழியைச் சொல்லும் இக்கவிதையின் படைப்பாளி திரு. ஆ. செந்தில் குமாரை இவ்வாரத்தின் சிறந்த கவிஞராய் அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

     

     

     

    Share
  • அப்பா (1998)

    நிறுத்திச் சொன்னால் பாசம் தெரியும்
    அழுத்திச் சொன்னால் அர்த்தம் அறியும்
    மெதுவாய்ச் சொன்னால் கடினம் புரியும்
    பணிவாய்ச் சொன்னால் கருணை விரியும்
    கத்திச் சொன்னால் தனிமை தணியும்
    கதறிச் சொன்னால் விலகல் சரியும்
    நீட்டிச் சொன்னால் காரியம் முடியும்
    காட்டிச் சொன்னால் கல்லும் கரையும்
    பாடிச் சொன்னால் அன்பின் குளிர்ச்சி
    வாடிச் சொன்னால் அருளின் வளர்ச்சி
    அணைத்துச் சொன்னால் அதுவே உணர்ச்சி
    அடுக்கிச் சொன்னால் எதுவோ கிளர்ச்சி
    அப்பா என்றால் அப்பாலில்லை
    அப்பாடி எனில் அடிப்பாரில்லை
    அப்பா தெய்வம் இப்பாரிட்டால்
    எப்போதும் பயம் இல்லை இல்லை
    சொல்லிப் பாருங்கள் இதுபோல் இன்று
    பொருளைக் காண்பீர் அனுபவம் கொண்டு.

    Share
  • இரவுக்கு ஆயிரம் கண்கள் – திரை விமர்சனம்

    -விவேக்பாரதி


    “இரவுக்கு ஆயிரம் கண்கள் பகலுக்கு ஒன்றே ஒன்று” என்னும் கவிஞர் கண்ணதாசனின் பிரபல பாடல் வரி ஒன்று படமாகியிருக்கிறது. தனது முதல் படத்தின் முயற்சியில் நல்ல முத்திரையும் முதிர்ச்சியையும் காட்டி இருக்கிறார் இயக்குநர் மு.மாறன் அவர்கள். பிரபல இயக்குநர் கே.வி. ஆனந்த் மற்றும் நடிகர் இயக்குநர் ராகவா லாரன்ஸ் ஆகியோரிடம் உதவி இயக்குநராக இருந்த மு.மாறன் ஒரு நல்ல திரைக்கதையைக் கொண்ட படத்தை இயக்கியிருக்கிறார். இதன் திரைக்கதை அமைப்பு தான் இந்தப் படத்திற்கு பலம் என்று தோன்றுகிறது. இதன் திரைக்கதையைக் குறித்து முதலில் காண்போம். 1950களில் மிகவும் புகழ்பெற்ற ஜப்பானிய இயக்குநர் அக்கிரா குரோசோவாவின் “ரோஷோமான்” என்னும் திரைப்படத்தில் பயன்படுத்தியிருந்த திரைக்கதை உத்தி (ரோஷோமான் தாக்கம்/ Rashomon effect) தான் இத்திரைப்படத்தின் திரைக்கதையை சுவாரஸ்யமாக்கி இருக்கிறது எனலாம்.

    ரோஷோமான் தாக்கம்/Rashomon effect என்பது ஒரே நிகழ்வை ஒவ்வொரு கதாபாத்திரத்தின் பார்வையிலிருந்து பல்வேறு கோணங்களில் பிரித்துக் காட்டக்கூடிய ஓர் உத்தி எனலாம். சாத்தியக் கூறுகள், நோக்கம், சாட்சிகள் போன்றவற்றின் அடிப்படையில் அந்த நிகழ்வானது எந்தக் கதாபாத்திரத்தால் நிகழ்ந்திருக்கக் கூடும் என்னும் சிந்தனைத் தளத்தை இந்த உத்தியின் மூலம் பார்வையாளர்கள் உணரலாம். ரோஷோமான் என்னும் ஜப்பானிய திரைப்படமே இந்த உத்தியை முதலில் திரையில் கையாண்டதால் இதற்கு அதன் பெயரே அமையப் பெற்றது. தமிழ்த் திரையில் பிரபல இயக்குநர் திரு எஸ். பாலசந்தர் அவர்கள் இயக்கி, சிவாஜி கணேசன் நடித்த “அந்த நாள்” என்னும் திரைப்படமே இந்த உத்தியில் தமிழில் வெளியான திரைப்படம். இப்படிப் பட்ட திரைக்கதையைக் கொண்டு பார்வையாளர்களைக் கவர்கிறது “இரவுக்கு ஆயிரம் கண்கள்.”

    ஒரு வாடகை மகிழுந்து ஓட்டுநராக இருக்கும் பரத் (அருள்நிதி), அவரது காதலி சுசீலாவுக்குத் (மஹிமா நம்பியார்) தொல்லை கொடுக்கும் கணேஷை (அஜ்மல் அமீர்) தட்டிக் கேட்கத் துடிக்கிறார்.  தொழிலதிபர் வசந்த் (ஜான் விஜய்), அவரது மனைவி ரூபலாவை (சாயா சிங்) வெறுக்க, ரூபலாவுக்கு அறிமுகமில்லாத தொலைபேசி எண் மூலம் தொடர்பில் வரும் கணேஷ் ரூபலாவை ஏமாற்றித் தவறாகப் படம்பிடித்ததாகத் தற்கொலைக்கு முயற்சி செய்ய, இதற்கும் சேர்த்துப் பழிவாங்க முற்படுகிறார் பரத்.

    முருகேசன் (ஆனந்த்ராஜ்) என்னும் முதியவர் ஆறுதலாகத் துணை தேவை என்று விளம்பரம் கொடுக்க, கணேஷும் அவரை ஏமாற்றத் தன் காதலி அனிதாவுடன் (வித்யா ப்ரதீப்) முருகேசன் வீட்டுக்குச் சென்று பணம் பறித்துத் தப்பித்து விடுகிறான். பணம் போன துக்கத்திலும் கோபத்திலும் கணேஷைப் பழிவாங்க நினைக்கிறார் முருகேசன்.

    பேஸ்புக் மூலம் அறிமுகமாகும் மாயாவுடன் (சுஜா வரூணி) தனிமையில் இருக்க நினைக்கும் நரேன் வைத்தியநாதனும் (ஆடுகளம் நரேன்), கணேஷால் மிரட்டப்பட்டு பணத்தைப் பறிகொடுக்கிறார். மயக்கம் தெளிந்த நரேன் மாயமான மாயாவைத் தேடுகிறார். மாயாவுடன் அவரது மகிழுந்தும் காணாமல் போகிறது. சில நாட்களில் மகிழுந்து கிடைக்கவே, மாயாவையும் கணேஷையும் ஒன்றாகப் பார்க்கும் நரேன், இருவரையும் பழிவாங்க எண்ணுகிறார்.

    இதற்கிடையில் ரூபலாவை வெறுக்கும் வசந்த், அனிதாவுடன் தனிமையில் இருக்கும் காணொலிக் காட்சியைக் காட்டி, வசந்திடம் பணம் பறிக்க முயல்கிறான் கணேஷ். வசந்திடம் ரூபலாவின் படத்தையும் காட்டி கோடிக்கணக்கில் பணம் கேட்கிறான், அவனைக் கொன்றேனும் அந்த ஆவணத்தைக் கைப்பற்றக் கிளம்புகிறார் வசந்த்.

    படத்தின் தொடக்கத்திலேயே ஒரு கொலை நடக்கிறது. அது கணேஷ் வீட்டில் நடக்கிறது? யார் கொலை செய்யப் படுகிறார்? யார் கொலை செய்கிறார்? என்னும் சூழ்ச்சி நிறைந்த முடிச்சுகளைத் திரைக்கதை ஒவ்வொரு கட்டமாக அவிழ்த்து ஆர்வத்தைத் தூண்டுகிறது. இந்த நிகழ்ச்சிகள் அனைத்தையும் எழுத்தாளர் வைஜெயந்தி (லட்சுமி ராமகிருஷ்ணன்)  செய்திகள் மூலம் கவனமாகப் பார்த்துக்கொண்டு தனது அடுத்த கதையாக எழுத நினைக்கிறார். கதையின் திருப்புமுனையை அவர் யூகித்து ஒரு கதை சொல்லி முடிக்க, அடுத்த கணத்தில் அவரும் இறந்து போகிறார். இதுவே இரவுக்கு ஆயிரம் கண்கள் திரைப்படத்தின் கதைக்களம்.

    ஒரு இயக்குநரின் முதல்படம் என்ற அளவில் இதனைப் பார்த்தால் ஆழ்ந்த வேலைப்பாடுகளும், மிகுந்த உழைப்பும் இயல்பாகவே இதில் அவர் செலவிட்டிருக்கிறார் என்று தெரிகிறது. சாம் சீஎஸ் அவர்களின் பின்னணி இசை திரைப்படத்தில் விறுவிறுப்புக்கு மேலும் பலத்தைக் கூட்டி இருக்கிறது. சான் லோகேஷ் அவர்களின் படத்தொகுப்பு விறுவிறுப்பு சேர்த்திருக்கிறது. ஒளிப்பதிவாளர் அரவிந்த் சிங் அவர்களுக்கும் தனிப் பாராட்டு.

    கதையின் போக்கில், முன்னாள் காதலியின் நினைவில் ரூபலாவை வெறுக்கும் வசந்த், அனிதாவின் வலையில் எப்படி விழுகிறார்? எழுத்தாளர் வைஜெயந்தி எதற்காகக் கொல்லப் படுகிறார்? என்ற கேள்விகள் அப்படியே இருக்கின்றன. முருகேசனாக வரும் ஆனந்த் ராஜ் பேசும் வசனங்கள் அனைத்திலும் ஏமாற்றத்தை விட நகைச்சுவை உணர்வே ஓங்கி இருக்கிறது. அதைக் கொஞ்சம் குறைத்திருக்கலாம். அல்லது அவ்வளவு ஏமாந்ததாக உணர்வதைக் காட்டாமல் இருந்திருக்கலாம். இவை சில கேள்விகள். ஆக மொத்தத்தில் இரவுக்கு ஆயிரம் கண்கள் நம் அன்றாட வாழ்வில் எப்போது வேண்டுமானாலும் நிகழக்கூடிய நிகழ்ச்சிகளின் தொகுப்பு.

    Share
  • நித்திரை தொடராமல் கனவில்லை

    தீபா சரவணன்
    உதவிப்பேராசிரியர்
    ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி,
    கோவை.

    நித்திரை தொடராமல் கனவில்லை

    ஒரு வடிவம் உருவகப்படுகிறது. நீட்டிப்பிடித்த கைத்தலங்களின் இரயில். ஓவர் பிரிட்ஜிற்கு நேராக தெற்கிலிருந்து வருகின்ற இரயில். மரணம், ஃபாஸ்பென்டர் கூறியதுபோல தண்மையானதா? என்று இப்போது தெரியும். ’ஆக்ஷன்!’ கைகள் அசைந்தது. கைவரிசை கடக்கத்தான் வேண்டியிருந்தது. கொஞ்சம் கூட ஈடுபாடில்லை. பாதி தூரத்தை அடையும் முன்பு ஷோர்ட் ஃப்ரீஸ் செய்து கடைசி டைட்டில் அதன் மேல் ‘தி என்ட்’. மனதிற்குள் ஒரு மின்வெட்டு பாய்ந்தது.

    எ ஃபிலிம் ஈஸ்…………, எ ஃபிலிம் ஈஸ்………….. எ ஃபிலிம்…………….

    நினைவுகள் அவ்வளவும் அடங்கியது. கண்களை இறுக மூடினான்.மறுபடியும் அதை திறப்பதற்குள் எலக்ட்ரிக் ட்ரெயின் சென்று விட்டிருந்தது. ஏதோ ஒரு பெண் நெருக்கமாகப் பின்னால் நிற்கிறாள். தோள்வரை நீண்ட முடி. கண்ணாடி. நீல நிற ஜீன்ஸும், பிங்க் நிற டாப்பும். மாநிறம். தோளில் பை. கையில் ஆந்த்ரே ஆர்கோவ்ஸ் கியின் நூல். லான்ட்மார்க்கிலிருந்து வாங்கியிருப்பாள் புதியதாக இருந்தது.

    ‘இங்கேயே பாத்தது என்னோட அதிர்ஷ்டம். நான் வீட்டுக்கு வருவதாக இருந்தேன்’ அவள் கூறினாள்.

    “எதுக்கு?” கேட்காமலிருக்க முடியவில்லை. நினைத்திருந்தால் கொஞ்சம்

    மென்மையாக மயமாகக் கேட்டிருக்கலாம். சத்தத்தின் உச்சத்தை அவள் கவனிக்கவில்லை.

    “அறிமுகப்படுத்ததா என் பேரு சோஃபி”. அவள் கைநீட்டினாள். இளமை அவளது விரல் நுனிவரை நிறைந்து நின்றது. அதன் வீர்யம் தெரிய வந்தது.

    “முழுப்பெயர் சோஃபி எஸ்தர் ஆண்ட்ரூஸ்”, என்று கையை விடுவிக்கும் முன்பு கூறினாள்.

    நல்ல பெயர் என்று கூடக் கூறவில்லை. அவள் பாலத்தின் கைச்சுவரில் சாய்ந்து நின்றாள். காற்று வீசியது. முடியைக்கட்டி வைத்திருக்கவில்லை. அவள் முடியொதுக்காமல் எதையோ சாதித்த நினைப்பில், நோர்த் உஸ்மான் ரோட்டில் உள்ள அசோசியேஷன் ஆபீஸிலிருந்து முகவரிதேடி அடைந்ததைப் பற்றி விளக்குவதற்குள், பாலத்தின் வழியாக மூன்று வண்டிகள் கடந்துபோயின. ஓவர் பிரிட்ஜில் எப்போதும் வழக்கம்போல உள்ள கூட்டம்தான். இரயில்வே டிராக்கின் இருபுறத்திலும் வாழ்க்கையின் இரம்பல் ஓசை. நகரச்சுற்றுவட்டாரத்தில் ஆங்காங்கே சின்னச் சின்ன ப்ளெக்ஸ் போர்டுகள். பல காட்சிகள். மங்கிய வெயில், வறண்ட காற்று. இரும்புப் பாதையின் வழிகள் மறுபடியும் நிறைந்தது.

    “சரி……”அறிமுகப்படுத்துவதை அப்படியே முடித்துக் கொள்ளலாம் என நினைத்தேன். ஆனால் அவள் அதற்கு ஒத்துவரவில்லை. அவளிடம் ஒரு சி.டி. இருந்தது. என்ன சி.டி.? அவளே தயாரித்தக் குறும்பட சி.டி. ஓ………. விஷ்வல் கம்யூனிகேஷனில் டிப்ளமோ படித்திருக்கிறாள் நல்லதுதான். அவள் தோள் பைக்குள் கையிட்டு சி.டி.யை வெளியே எடுக்க முயற்சித்தபோது அவசரமாக விலக்கினேன்.

    “வேண்டா, பாக்க நேரமிருக்காது”.

    “இன்னக்கே பாக்கணும்னு இல்ல சார்”

    “நா … கொஞ்சம் பிசி”

    “தெரியும் சார்”. அவள் அதற்குள் சி.டி.யை வெளியிலெடுத்திருந்தாள்.

    “நா எதுக்கு இத பாக்கணும். ஏதாவது ஷோர்ட் ஃபிலிம் பெஸ்டிவெலுக்கு அனுப்ப வேண்டியதுதானே”.

    “அதில்ல சார்”

    “அப்புறம்”

    “அதிகமா யாரிடமும் நா இத காமிக்கல. சாரோட கருத்து என்னான்னு தெரியணும் அதுதா”…

    “என்னோட கருத்திலொண்ணும் பெரிய காரியமில்ல…… போம்மா…”

    மீண்டும் காட்சியில் இரயில் வண்டிகளும், தற்கொலைக்கு முயற்சிப்பவர்களும், காத்துக் கிடக்கும் இரயில் பாலங்களும் வந்தன. அங்கே தூரத்தில் ஏதோ சேரிக்கி அருகில் புகைச்சுருளுகள் உயர்ந்தது. சிதையிலிருந்து வந்ததாக இருக்காது. அப்படி இருந்தாலும் சொல்வதற்கில்லை.

    “சார்………”

    திரும்பிப் பார்த்தேன். சோஃபி எஸ்தர் ஆண்ட்ரூஸ் போகவில்லை. முகத்தில் ஒரு விண்ணப்ப பாவம்.

    “ஒரு ரிக்வஸ்ட் இருக்கு சார். சாவகாசமாக சி.டி.யை பாத்தபின்னர்,

    “நான் அதுக்குத் தகுதியுடையவள்னா மட்டும் போதும்”.

    “புரியல”

    “எனக்கு சாரோட அசிஸ்டென்ட் ஆனா பரவால்லேன்னு இருக்கு. என்னோட பெரிய ஆச சார் அது”

    சத்தமாக சிரித்துவிட்டேன், அப்படி சிரிக்க முடியுமென்று எதிர்பார்க்கவில்லை. அது கட்டுப்பாட்டை மீறி வந்தது. ஒரு திருடன் பயணியின் முன்பு குதித்தது போன்ற சிரிப்பு. அப்பெண்ணின் முகத்தில் ஆச்சர்யம் படர்ந்திருந்தது. கண்களின் பார்வை கூர்மையானது.

    “நா ஒரு படம் எடுத்து வருஷம் ஏழாச்சு, ஒனக்கு அது தெரியாது இல்லயாம்மா…”

    மறுபடியும் சிரிப்பு அடக்க முடியவில்லை. இப்படி சிரிச்சு ரொம்ப காலமாச்சு. நல்ல ஜோக்குகள் சமீபமாக கேட்பதேயில்லை. கொஞ்சம் சிரிப்பதற்காக தொலைக்காட்சி சேனல்களைத் தேடிப்பார்த்தால் அதுவும் எல்லா துக்கமாத்தான் இருக்கும். சோஃபி எஸ்தர் ஆண்ட்ரூஸ். சிரிக்க வைக்கக் கூடிய பெரிய திறனாளி.

    ஒத்துக்காமல் முடியல

    “லுக். ஐ ஆம் சீரியஸ். ஜோக்குக்காக சொல்லல”.அவளின் முகபாவம் மாறியது.

    ”வேறு யாருடனும் வேலைசெய்யவிருப்பமில்லை. காத்திருக்கத் தயார்.”

    “எவ்வளவு நாள்?”

    “எவ்வளவு நாள் வேணும்னாலும். டு பி ப்ராங்க். ஐ ஹேவ் எ டெரிபிள் பேஷன் ஃபோர் யு. சாரோட எல்லா படமும் எனக்குப் பிடிக்கும்.

    “அதெல்லாமே முழுக்க தோல்வியடைந்தவை. அதெல்லா தெரியாது இல்லையா?”

    “தியேட்டர்களில வேண்டிய அளவு ஓடலேங்கறதுக்காக, அதெ அப்படி மதிக்கலாமா?”.

    “என்னமோ……. நா இப்போ அதோட பேருகூட நினைக்கறதில்ல”

    அவற்றில் ஒன்றுகூட மறுபடியும் கண்டெடுக்க முடியாது உயிரற்றவை. இல்லை அதிசயமொன்றும் சம்பவிக்காது.

    “சார் வாக்கிங் வந்தது தானே”?

    “உம்”

    “கொஞ்சநேரம் நானும் கூடவரட்டுமா?”

    ஒரு ஹெலிகாப்டரின் இரம்பல் சத்தம் கேட்டு முகமுயர்த்திய போது ‘லாடோள்ஸ்’ விற்ற ஞாபகம் வந்தது. ஹெலிகாப்டரில் தொங்கிநின்று நகர்வலம் வருகின்ற கிறிஸ்து உருவம் ஃபெல்லினியாவின் மேஜிக். அடுத்த நிமிடத்தில் சோஃபி எஸ்தர் ஆண்ட்ரூஸ் சி.டி. கைமாறினாள். அதுவும் மேஜிக். வானம் இருண்டது. கையில் சிடியுடன் நிற்கும்போதே பச்சைநிற பஸ்ஸில் சோஃபி குதித்து ஏறினாள். பின்னால் திரும்பி கொஞ்சமாக கைஆட்ட மறக்கவில்லை.

    பா…ய்…

    வீட்டின் தனிமைக்குத் திரும்பி வருவோமென்று நினைக்கவில்லை. சாவியெடுத்துக் கதவைத் திறந்தான். மக்கள் ஓடி வந்து கட்டிப்பிடிப்பதற்கோ, அவர்களின் அம்மா காபியும் கொண்டு சமையலறையிலிருந்து வெளியில் வருவதோ எதிர்பார்ப்பதற்கில்லை. குளிர்ந்த வரவேற்பறை, செய்தித்தாள்களும் புத்தகங்களும் ஆங்காங்கே சிதறிக்கிடந்திருந்தது. அவற்றின் காவல்காரன் என்பதுபோல சுவரில் சாப்ளினுடைய சல்யூட் மறுபடியும் பார்க்க முடிந்ததில் சந்தோஷம். கொஞ்சம் பிராண்டி குடிப்பது ஒருவேளை உறங்குவதற்கு உதவும். சியர்ஸ். இனி செய்ய வேண்டிய ஒரு செயல் சோஃபி எஸ்தர் ஆண்ட்ரூஸின் குறும்படம் பார்ப்பது. ’காஸ்பர் தோமஸ் என்ற வயதானவரின் கதை எழுபத்தி நான்கு வயதான அவர் பஸ்ஸை விட்டிறங்கி ஒரு பேகையும் பிடித்துக்கொண்டு கிராமத்தின் மிகப்பழமையான ஆலயத்தை நோக்கி நடந்தார். நிறைய கற்படிகள் ஏறினால்தான் ஆலய முற்றத்தை அடையமுடியும். அவர் தளர்ச்சியுடன் ஒவ்வொரு படியும் ஏறினார். அவர் முகத்தைப் பார்த்தால் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு பாரத்தைத் தன் முதுகில் சுமக்கிறார் எனத்தோன்றும். கடந்தகால வாழ்க்கை வேதனை நிறைந்ததாக இருந்தது என்பதை அவருடைய அங்கங்கள் வெளிப்படுத்தின. தேவாலயக் கட்டடிடத்தின் வெள்ளை நிற முகப்போடு சேர்ந்து மின்னுகின்ற சிலுவை வானம் வரை உயர்ந்து நின்றது. காஸ்பர் தோமஸ், ஃபாதர் ஜோனின் முன்னால் வந்தார்.

    “யாரது? தெரியலையே……………” ஃபாதர் சொன்னார். ஃபாதருக்கு அம்பது வயதுக்கு மேலிருக்கும் மேசைமேல் உள்ள கம்ப்யூட்டரில் ஏதோ வேலை செய்து கொண்டிருந்தார்.

    “என் பேரு காஸ்பர் தோமஸ்”. அவர் தன்னை அறிமுகப்படுத்தினார். ஃபாதர் இதற்கு முன்பு அவரைப் பார்த்ததில்லை. இருவரும் முற்றிலும் பழக்கமில்லாதவர்கள்.

    “நான் உட்காரட்டுமா?” அவர் கேட்டார்

    “ஐ ஆம் ஸோரி. நான் அதெ சொல்ல மறந்திட்டேன்” என்று திடுக்கத்தில் கூறினார் ஃபாதர். அவர் சந்தோஷப்பட்டார்.

    “நான் கொஞ்சகாலம் வெளியிலிருந்தேன். இதே ஊர்க்காரன் தான் நானும். திருமுழுக்கும், கல்யாணமும் இங்கதான் நடந்துச்சு”.

    “பார்க்க முடிந்ததில மனம் நிறைந்த மகிழ்ச்சி. நா இங்க சார்ஜெடுத்து ரொம்பக் காலமாகல” ஃபாதர் ஜோன் கூறினார்.

    “இங்கிருந்து போகும்போது ஜோஸஃப் கிழக்கன் காலேலச்சனாயிருந்தார்.” காஸ்பர் தோமஸ் கூறினார்.

    “அது ரொம்பக்காலமாச்சே” ஃபாதர் கேட்டார்.

    “ஆமா” அவர் கூறினார். இருவரும் நேருக்கு நேராகப் பார்த்துக் கொண்டிருந்தனர். ஜன்னலுக்கு வெளியில் ஜாதி மரத்தின் இலைகள் காற்றில் ஆடின. மரத்திற்கு அப்புறம் பலப்பல செடிகள் கடும்பச்சை நிறத்தில் தளிர்த்திருந்தன.

    “இந்த வரவிற்குக் காரணம் ஏதாவது!…………”

    “உண்டு” அவர் அதைக்கூற கொஞ்ச நேரம் தயங்கினார். சுலபமாக மனம் திறக்கவில்லை.

    நாற்பது ஆண்டுகளாக அவர் சென்னை நகரத்தின் ஒரு மூலையில் பிஸினஸ் செய்து கொண்டிருந்தார். பிஸினஸிலும் வாழ்க்கையிலும் துணையானஹில்டா சில மாதங்களுக்கு முன்பு இறைவனடடி சேர்ந்துவிட்டாள். பிறகு அவருக்குத் தனிமைதான். ஒரு மகள் ஜெர்மனியில் மகன் அமெரிக்காவில் இரண்டாவது மகள் நெதர்லான்டில். அவங்க யாரும் போனதுகப்பறம் வரவேயில்லை. ஹில்டா இறந்தபோது அவர் அவர்களை மிகவும் எதிர்பார்த்தார் ஆனால் அவர்களின் துர்பாக்யம் வரமுடியல ஃபாதர் ஜோன் தனக்குத் அறிமுகமில்லாத ஹில்டாவின் ஆத்மாவிற்கு நித்ய சாந்தி வேண்டினார். காஸ்பர் தோமஸ் கவலையுடன் இருந்தார். சௌன்ட் ட்ராக்கில் கவலையில் ஸ்ருதி அது அப்படியே தொடர்ந்தது.

    கொஞ்சம் கூட பிராண்டி அதற்கிடையிலும் ஸ்க்ரீனிலிருந்து கண்ணெடுக்கவில்லை. காஸ்பர் தோமஸ் தனக்கு வேண்டி ஒரு கல்லறை செய்யச் சொல்லியிருந்தார். கோன்ட்ராக்ட் காரன் நதானியலும் ரெண்டு வேலக்காரர்களும், பார்வையாளராக ஃபாதர் ஜோனும். கல்லறைக் கட்டி முடித்து காஸ்பர் தோமஸ் மரணம் வரும் வரை காத்து மீதி நாட்களை இடவகயில் கழிக்கலாம் என்று தீர்மானித்திருந்தார். ஃபாதர் அவரின் தீர்க்கமான முடிவிற்குக் கீழ்படிந்தார். கல்லறை வேலை தீர்ப்பதற்கும், தொடர்ந்துள்ள வாழ்க்கைக்குமான பணம் போக மீதமிருக்கும் தனது வருவாய் அனைத்தையும் பள்ளிக்கு என வாக்குமூலம் கொடுத்தார். யாரோ மயானம் வழியாக வந்தார். அவர் உற்சாகமாக இருந்தார்.

    “என்னா அதிசயமிது? குஞ்ஞாச்சியா……….. நான் கொச்சும்மன்”

    காஸ்பர் தோமஸ் விழித்தார். குஞ்ஞாச்சி என்பதும் காஸ்பர் தோமஸின் பேர்தான். ஆனால் பல ஆண்டுகளாக அப்பெயரில் யாரும் அவரை அழைத்ததில்லை.

    “கொச்சும்மன்!” அவர் அற்புதப்பட்டார்.

    “ஆமாண்டா உங்கூட ஆத்திலயும் காயல்லயும் மீன்பிடிக்க வர்ற அதே நண்பந்தா. நாம நெறய வராலும், வற்றயும் கரிமீனுமெல்லா புடிச்சத மறந்திட்டியா?.

    கொச்சும்மன் அவசரமாகக் கூறினான். இருவரும் இறுக்கமாகக் கட்டிக்கொண்டனர். விதும்பினர் ஃபாதர் ஜோனும், நதானியலும், வேலைக்காரர்களும் செயலற்று நின்றனர். அவர் சிறு ஆறுகளில் விளையாடும் உயிர்களைப் பற்றியும், சேற்றில் பறந்து இறங்கும் பறவைகளைப் பற்றியும், வாத்தின் சிறகுகளைக் குறித்தும் கூறிக்கொண்டிருந்தனர். காஸ்பர் தோமஸ் என்ற குஞ்ஞாச்சியும், கொச்சும்மனும் இளமை நினைவில் துள்ளிக் கொண்டிருந்தனர். ஆற்றின் ஓரத்தில் நீர்ப்பறவைகள் சத்தமிட்டன. எங்கிருந்தோ ஒரு குக்கூ சத்தம்; மறு குக்கூ சத்தமும் கேட்டது. சேற்று வயலிலிருந்து பறவைகள் பறந்தன. ஆரவாரம் கேட்டு வாத்தின் கால்கள் நகர்ந்தன.

    “குஞ்ஞாச்சி எனக்கு என்னோட மனைவியையும் மக்களயும் பார்க்க வேண்டாமா?”

    “நானும் அதத்தா சொல்ல வந்தே” காஸ்பர் தோமஸ் கூறினார். அவர்கள் கைகள் கோர்த்தனர்.

    “நாங்க போறோம்” கொச்சும்மன் ஃபாதர் ஜோனைப் பார்த்து சொன்னான்.

    ஃபாதர் ஸ்தம்பித்து நின்று கொண்டிருந்தார். அவருடைய காட்சியில் கொச்சும்மனும் காஸ்பர் தோமஸும் சிறுவர்களைப்போல நடந்து அகன்றனர். கொச்சும்மன் சத்தமாகக் கூப்பிடும்போது வீட்டிற்குப் பின்னால் உள்ள கோழிக்கூட்டிற்கருகில் ரஜீனாம்மா மீன் கழுவிக் கொண்டிருந்தாள். கோழிகள் நாலைந்து ரஜீனாம்மாவைச் சுற்றி நின்று கொண்டிருந்தன.

    “இங்க கொஞ்சம் வா என்னோட ரஜீனாம்மா…….” கொச்சம்மன் கத்தினான்.

    ரஜீனாம்மா கத்தியும் மண்சட்டியுமாக எழுந்தாள், சட்டியில் சின்னச்சின்ன மீன்கள்.

    “ரஜீனாம்மா … இது என்னோட சின்ன வயது நண்பன் குஞ்ஞாச்சி. நா சொல்லிருக்கேல்ல உங்கிட்ட ரொம்ப காலத்துக்கப்பறம் நாங்க ரெண்டு பேரும் பாக்கறோம். நா இதக் கொண்டாடுவே. நம்மோட சேவல் வாத்து எங்கே?”.

    கொச்சம்மன் நான்கு புறமும் பார்த்துக்கொண்டு இரைபிடிக்கத் தக்க நேரம் பார்த்து உற்சாகத்தோடு காத்துக் கொண்டிருக்கும் காட்டு விலங்கைப் போல தேடி மறைந்தார்.

    “இங்க உட்காரலாமே. அவர் இப்ப வருவாரு” ரஜீனாம்மா காஸ்பர் தோமஸிடம் கூறினாள்.

    எங்கிருந்தோ வாத்தின் அலறல் கேட்டது. கொச்சம்மனின் வெற்றியும் அதில் கலந்திருந்தது. நீரில் உயிரினங்கள் துடித்தது. கொச்சமனும் காஸ்பர் தோமஸும் ஒரு துணியின் இரண்டு முனையையும் பிடித்து குனிந்து நின்றனர். மீன்குட்டிகள் நிறைய துணியில் வந்தது. சில மீன்கள் ஈரத்தோடு குதித்தன. கொச்சமனும் அவன் நண்பனும் அவற்றை மீண்டும் தண்ணீரிலேயே விடுகின்றனர். இருவரும் ஆழமில்லாத நீர்ப்பரப்பில் தண்ணீரை கைகளால் சிதறிக் கொண்டு ஓடுகின்றனர். அடுத்தக் காட்சி பள்ளியில் வைத்து கொச்சமாவின் மகள் மெட்டீல்டாவின் திருமணச் சடங்கு. காஸ்பர் தோமஸ் மகிழ்ச்சியோடு நிற்கின்ற கொச்சமாவின் தோளில் கை வைத்தார். கொச்சமன் உணர்வுப்பூர்வமாக தனது கையை அக்கைகள் மீது வைத்து அமர்த்தினான். ‘எபனீசர்’ சவப்பெட்டிகளுக்கு நடுவில் காஸ்பர் தோமஸைக் காத்துக்கிடந்தார். சவப்பெட்டிகளிலொன்று சித்திரவேலைகள் முடிந்து ஜொலித்துக் கொண்டிருந்தது. அது காஸ்பர் தோமஸின் அவசியத்திற்கிணங்க எபனீசர் செய்து முடித்த வேலை. நதானியல் வேகவேகமாக நடந்து வந்தான்.

    ‘எடா நீ அந்த வெளிநாட்டுக்காரன எங்கயாவது பாத்தயா?”. அவன் எபனீசரிடம் கேட்டான்.

    “யார அந்த காஸ்பரையா?”

    “அவரையேதா”

    “அது சரி நானினி அவரத் தேடாத இடமில்ல. ஒன்னு பாத்தாலோ மின்னல் போல மறஞ்சிடறாரு………..

    “பிணம் எறக்கி வைக்குமளவுக்கு கல்லறயோட வேல முடிஞ்சு எவ்வளவு நாளாச்சுன்னு தெரியுமா?. கொச்சும்மனைப் பாத்தபின்ன அந்தப் பக்கமே வறல”.

    “அதோ அங்க பாரு” எபனீசர் கை நீட்டினான்.

    நதானியல் அங்கே பார்த்தான். பாதையருகில் ஒரு சைக்கிள் வந்து கொண்டிருந்தது. காஸ்பர் தோமஸ் அதன் பின்சீட்டில் ஒரு பாகமாகத் திரும்பி உட்கார்ந்திருந்தார். கொச்சம்மன் அழுத்தி ஓட்டிக் கொண்டிருந்தார். காஸ்பர் தோமஸின் கையில் கறுப்புநிற கரிமீன்கள் அவை வெயிலேற்று மின்னின.

    “கொஞ்சம் நில்லுங்க” நதானியலும் எபனீசரும் ஒரே குரலில் கூறினர். கொச்சம்மன் சைக்கிளின் வேகத்தை கொஞ்சம் கூட குறைக்கவில்லை.

    “நாங்க கொஞ்சம் வேலயா இருக்கோம்……..” காஸ்பர் தோமஸ் கூறினார். எபனீசர் ஏற்கனவே சொன்னதேதான் நடந்தது. ஒரு மின்னல் போல அவர்கள் மறைந்தனர். மெதுவாக ஸ்கிரீன் இமேஜுகள் இல்லாமல் ஆனது. அதில் ஒரு பெயர் தெளிந்தது.

    “சோஃபி எஸ்தர் ஆன்ட்ரூஸ்”.

    ஃபோனின் மறுமுனையில் அவள்……… நான் உறங்கவில்லையென்றும் நேரம் தவறி தான் அழைத்து தொந்தரவு செய்யவில்லை என்றும் உறுதிப்படுத்திக் கொண்டாள்.

    “படம் பாத்தீங்களான்னு தெரிவதற்காகத்தான்”.

    “ஆமாம் பாத்து இப்பத்தா முடிச்சேன். நல்லா இருக்கு”

    “ரியலி!………….”

    “உம்”

    அவள் குதூகலமடைந்தாள். பெரியநகரத்தின் இரவில் அலையின் அசைவுகள்.

    “நாளைக்கு பார்க்க முடியுமா?………..” சோஃபி கேட்கிறாள்,.

    ” ஏ முடியாது? பார்க்கலாமே”

    “குட் நைட்.”

    “குட் நைட்.”

    பிறகு உறங்க சென்றபோது சோஃபியின் கதாபாத்திரத்தின் முகம் தானாக நினைவுக்கு வந்தது. படத்தில் இல்லாத ஒரு க்ளோஸ்அப். …. ’காஸ்பர் தோமஸ்!’……………. ஏதோ கனவு கண்டு உறக்கத்தில் சிரிக்கிறார்.

    காட்சி மாய்வதில்லை
    ஒரு நிமிடம்
    இரண்டு நிமிடம்
    அவரின் உறக்கம் தொடர்ந்தது
    மூன்று ……
    நாலு ……
    அஞ்சு ……

    Share
  • யார் இட்ட சாபம்.!

    போர்வீரர்களின் மனைவி தான் பாஞ்சாலி
    =====பொதுச்சபையில் பட்ட துன்பம் தெரியாதா..?
    கூர்மதி கொண்டவர் பாண்டவர்! அவர்கள்
    =====கொண்ட துன்பத்திற் கேதேனும் அளவுண்டா.?
    சூர்யகுல அரசன் அரிச்சந்திரன் தன்வாழ்வில்
    =====சுடலையில் பிணமெரித்த நிலை எதனால்..?
    யார் இட்டசாபம் இதற்கெல்லாம் காரணம்?
    =====ஏனிந்தக் கஷ்டம் ? புரிவது மிகக்கடினமே..!

    மார்க் கண்டேயனுக்கு பதினாறில் மரணம்
    =====மரணமில்லாச் சிரஞ்சீவி யானது எதனால்..?
    நேர்வாரிசு இல்லாமல் நானூறு வருடமும்
    =====நகர்ந்ததே மைசூர்மஹா ராஜவம்சம் எப்படி..?
    நீர்மீதில் வாழ்நாளைப் போக்கும் மீனவர்
    =====நித்தம் சோதனையில் நீந்திக்கழிக்கிறார் ஏன்?
    யார் இட்டசாபம் இதற்கெல்லாம் காரணம்?
    =====எவரும் எளிதில் அறியமுடியாத ரகசியமோ..?

    பார்மீதில் மாந்தராய்ப் பிறந்தாலே ஏதோ
    =====பெரியதொரு துன்பத்தி லுழல்வது சகஜமே..!
    ஆர்வலரென தனைச் சொல்லிக் கொள்வார்
    =====ஆதாய மிலாதெதையும் செய்ய நினையார்..!
    ஊர் மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்டவர்
    =====ஊரையே கொள்ளை யடிக்க நினைப்பார்..!
    நேர்மையாக வாழமுடியா நிலை தானின்று
    ======நீரறிவீரோ?ஈதெலாம் யாரிட்ட சாபமென்று..!
    ======================================================

    நன்றி:: தினமணி கவிதைமணி வெளியீடு::21-05-18
    நன்றி:: கூகிள் இமேஜ்

    Share
  • எல்லாப் புகழும் இறைவனுக்கே !


    ம். ஜெயராமசர்மா …. மெல்பேண் …. அவுஸ்திரேலியா

    எல்லாப் புகழும் இறைவனுக்கே
    இயன்றவரை உதவிடுவோம் யாவர்க்குமே
    நல்லவற்றை நினைத்திடுவோம் நாளெல்லாம்
    அல்லவற்றை அகற்றிடுவோம் அனைவருமே
    சொல்லுவதை சுவையாகச் சொல்லிடுவோம்
    சோர்வின்றி நாளெல்லாம் உழைத்திடுவோம்
    கொல்லுகின்ற கொலைவெறியை மறந்திடுவோம்
    குணமதனைச் சொத்தாக்கி உயர்ந்திடுவோம் !

    எல்லையில்லா ஆனந்தம் ஈந்தளிக்கும்
    எல்லையில்லா இறையினைநாம் ஏற்றுநிற்போம்
    வல்லமையின் வடிவான இறையினைநாம்
    வணங்காமல் இருந்துவிடல் முறையேயன்று
    சொல்லளித்துச் சுவையளிக்கும் தூயசக்தி
    துதிப்பார்க்கு காட்சிதரும் பெரியசக்தி
    எல்லையில்லா உலகினையே படைத்தசக்தி
    இறையொன்றே என்றுநாம் நினைப்போமென்றும் !

    நினைப்பார்க்கு இறையாகக் காட்சிதந்து
    வெறுப்பார்க்கு நம்பிக்கை ஊட்டிநின்று
    பொறுப்புடனே வாழ்வதற்கு வழியாய்நிற்கும்
    போற்றுகின்ற பொருளே இறைவடிவமாகும்
    கருத்துடனே நினைவார்க்கு கருணையாகி
    கவலையுடன் இருப்பார்க்கு கையுமாகி
    இருக்கின்ற சக்திதான் இறையென்றெண்ணி
    இருக்கின்றார் இவ்வுலகில் பலருமின்று !

    இறைபற்றிக் கருத்துப்பல இருந்திட்டாலும்
    எல்லோரும் இறைபற்றி எண்ணுகின்றார்
    எதிர்வாதம் இவ்வுலகில் எழுந்திட்டாலும்
    இறைபக்தி அற்றநிலை எங்குமில்லை
    இறையிருக்கு இறையிருக்கு எனும்நினைப்பை
    எவர்வந்து தடுத்தாலும் பலனேயில்லை
    இறையிருந்து நல்லவழி காட்டிநிற்பார்
    இறைதொழுது எல்லோரும் இருப்போம்நாளும் !

    Share
  • வாழ்க்கை!

    -டாக்டர். திரிவேணி சுப்ரமணியம்

    காலத்தின் பேரழைப்பில்
    கட்டுண்டு நிற்கிறேன் நான்
    சுயநம்பிக்கையின்
    சுவடுகள் கூட இல்லாமல்
    எல்லாம் முடிந்தும்
    ஏதோ ஒரு மாய ஈர்ப்பு
    தொக்கி நிற்கிறது
    வாழ்க்கை குறித்த
    ஆர்வத்தையும் நோக்கத்தையும்
    இடைவிடாமல் தந்துகொண்டிருக்கும்
    இந்த வாழ்க்கை எதைத்தான்
    எதிர்பார்க்கிறது என்னிடம்?

     

     

    Share
  • படக்கவிதைப் போட்டி (166)

    பவள சங்கரி

    அன்பிற்கினிய நண்பர்களே!

     

    வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

    நித்தி ஆனந்த் எடுத்த இந்தப்படத்தை திருமதி ராமலஷ்மி ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து போட்டிக்காகத் தேர்ந்தெடுத்து வழங்கியிருக்கிறார்கள். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள், நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (23.06.2018) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

    ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்

    Share