Blog

  • படக்கவிதைப் போட்டி 167-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    அழகு உடையணிந்து ஆடிமுன் நின்று புன்னகைக்கும் மழலையைத் தன் நிழற்படத்தில் பதிவாக்கியிருப்பவர் திருமதி. பவளசங்கரி அவர்கள். இதனை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து தேர்ந்தெடுத்துப் படக்கவிதைப் போட்டிக்குத் தந்திருப்பவர் திருமதி. இராமலக்ஷ்மி அவர்கள். பெண்மணிகள் இருவரும் என் நன்றிக்கு உரியோர்.

    கவலை வலையில் சிக்கிக்கொள்ளாது, களிப்போடு வாழ்வைக் கழிக்கும் இனிய பருவம் கனிமழலைப் பருவமே. அப்பருவம் கடந்துவிட்டால் வாழ்வின் சுமைகளும் ஆற்றவேண்டிய கடமைகளும் நமை நிம்மதியாய் இமைமூட விடுவதில்லை; சிரித்து மகிழவும் அனுமதிப்பதில்லை. 

    கள்ளமற்ற உள்ளத்தோடு வெள்ளைச் சிரிப்பை உதிர்த்துநிற்கும் இம்மழலையைப் பாட கவிஞர்களை அன்புபாராட்டி அழைக்கின்றேன்!

    *****

    கிள்ளைமொழிகள் பகன்றும், தொல்லையின்றித் திரிந்தும் மகிழ்ந்த அக்காலத்தை – பொற்காலத்தை இந்நிழற்படம் கதைகளாய் நினைவூட்டுவதைத் தன் கவிதையில் காட்சிப்படுத்தியிருக்கின்றார் திரு. ஆ. செந்தில்குமார்.

    நிழற்படம் சொல்லும் கதைகள்…!

    துள்ளித் திரிந்த கதைகளைச் சொல்லும்…
    துடிப்புடன் இருந்த காலத்தைச் சொல்லும்…!
    எள்ளி நகைத்த உலகைச் சொல்லும்…
    ஏதும் அறியா வயதைச் சொல்லும்…!

    வெள்ளி முளைத்தநம் வாழ்வைச் சொல்லும்…
    வெதும்பி வாடிய தருணத்தைச் சொல்லும்…!
    அள்ளித் தந்த கருணையைச் சொல்லும்…
    ஆறுதல் அளித்த நட்பைச் சொல்லும்…!

    கொள்ளை கொண்ட மனதைச் சொல்லும்…
    கொடுத்து வைத்த நிகழ்வைச் சொல்லும்…!
    பிள்ளைப் பருவத்து நினைவைச் சொல்லும்…
    படிப்பை முடித்துப் பறந்ததைச் சொல்லும்…!

    எல்லையே வானமாய் இருந்ததைச் சொல்லும்…
    எதிலும் நிறைவை உணர்ந்ததைச் சொல்லும்…!
    கிள்ளை மொழிகள் பகன்றதைச் சொல்லும்…
    கனவைச் சுமந்த இதயத்தைச் சொல்லும்…!

    தொல்லைகள் இல்லா நிலையைச் சொல்லும்…
    துன்பத்தில் மீண்ட அமைதியைச் சொல்லும்…!
    நல்லவை மனதில் நிலைக்கச் சொல்லும்…
    நிம்மதி அனைத்தையும் நிழலாய்ச் சொல்லும்…!

    *****

    அன்னை செய்த சிங்காரத்தில் சித்திரப் பதுமையாய்க் காட்சியளிக்கும் பெண் குழந்தையையும், அதன் தாயையும் போற்றி விருத்தம் பாடியுள்ளார் பெருவை திரு. பார்த்தசாரதி.

    உன்னைப் பெற்ற அன்னைக்குப் பெருமை..!

    (பெண் குழந்தைக்கு அலங்காரம் செய்து பார்த்த அன்னையைப் புகழும் விதத்தில் ஓர் அறுசீர் விருத்தம்)

    தினமும்தான் உனக்குத் தின்ன
    ……….தின்பண்டம் தந்தாள் அம்மா..!
    கனவில்நீ வருவாய் என்றே
    ……….கனவுலகில் கழிப்பாள் காலம்..!
    சினமில்லா அன்னை உன்னைச்
    ……….சிங்காரம் செய்ய வந்தாள்..!
    மனமார வாழ்த்தும் அன்னை
    ……….மங்கைநீயும் மகிழ வேணும்..!

    கண்ணாடி முன்னே நின்று
    ……….கண்ணழகு..காட்டும் கண்ணே..!
    பெண்களானால் அழகு சேரும்
    ……….பட்டாடை கூட்டும் மேலும்..!
    வண்ணமிகும் அழகு நீலம்
    ……….எண்ணமிகும் அம்மா பார்த்தால்..!
    கண்களையே இமைகள் காக்கும்
    ……….காவலாளி போன்ற அம்மா..!

    *****

    நல்ல கவிதைகளை நயம்பட உரைத்திருக்கும் கவிஞர்களுக்குப் பாராட்டு. (கவிதைகளின் வரத்து இவ்வாரம் குறைந்துபோயிருக்கிறது. வரும் வாரங்களில் மீண்டும் மிகும் என்று நம்புகின்றேன்.)

    இனி இவ்வாரத்தின் சிறந்த கவிதையாய்த் தெரிவாகியிருப்பது…

    பிள்ளையாய்…

    பிள்ளைநிலா கறைபடவில்லை,
    பிள்ளை மனதில்
    மனிதகுல மாசு ஒட்டுவதில்லை..

    பிஞ்சு நெஞ்சில்
    இன்னும்
    வஞ்சம் கலந்திடவில்லை..

    முகம்போல
    அகமும் அழுக்காகவில்லை,
    கண்ணாடியில் தெரியும்
    முக அழகைவிடத்
    தெரியாத
    அக அழகு
    இன்னும்
    அதிகமானது..

    மனிதனே நீயும்
    பிள்ளையாய் இரு-
    உள்ளத்தில்…!

    ”முகம்போலவே அகமும் களங்கமின்றி விளங்கும் இப்பிள்ளைபோல் மனிதர்கள் அனைவரும் வாழ்ந்திருந்தால் இந்த உலகம்தான் எத்துணை அழகாக இருக்கும்!” எனும் நற்சிந்தனையை நம்முள் விதைக்கும் கவிதையைப் படைத்திருக்கும் திரு. செண்பக ஜெகதீசனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞராய் அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

     

     

    Share
  • மரணவாசல் போகின்றார் !

    எம். ஜெயராமசர்மா …. மெல்பேண் …. அவுஸ்திரேலியா

    பணத்தினால் போதை வரும்
    பதவியினால் போதை வரும்
    பட்டம் பல பெற்றாலும்
    போதை தலைக் கேறிவிடும்
    இதனாலே வரும் போதை
    எல்லோர்க்கும் இடைஞ்சல் தரா
    போதை ஊட்டும் பொருளன்றோ
    பொல்லாத விளைவைத் தரும் !

    போதையூட்டும் பல பொருட்கள்
       புதுப் புதிதாய் வருகிறது
    காதலுடன் பலர் வாங்கிக்
       காணுகிறார் இன்ப நிலை
    இன்பமென எண்ணி எண்ணி
       ஏற்றுநிற்கும் பல பொருட்கள்
    துன்பமாய் அமையும் என்று
       துளிகூட அவர் நினையார் !

    போதை தரும் பலவற்றை
       பொழுது போக்காய் பயன்படுத்தி
    பாதை தடுமாறி நின்று
       பலர் வாழ்வை இழந்துவிட்டார்
    சாதனைகள் பல இருக்க
       சன்மார்க்க வழி இருக்க
    போதையினை தலைக் கேற்றி
       பொசுக்குகின்றார் நாளை எல்லாம் !

    போதைப் பொருள் ஏற்பதனால்
       பொறி புலன்கள் தடுமாறும்
    வீதி தனில் செல்கையிலே
       வில்லங்கம் செய்யத் தூண்டும்
    நாடி வரும் நற்குணங்கள்
       நம்மை விட்டே அகன்றுவிடும்
    நமக்கு நாமே புதைகுழியை 
       நாம் வெட்டி நின்றிடுவோம் !

    கொள்ளை அடியென நினைக்கும்
       குணம் அங்கே வந்துநிற்கும்
    கொலை செய்து கற்பழிக்கும்
       குரூரமும் கூட நிற்கும்
    நல்ல வல்ல எக்குணமும்
       நம்மிடத்து வந்து விடா
    பொல்லாத செய் என்றே
       போதை அங்கு வழிநடத்தும் !

    நீதி நேர்மை பார்க்காது
       நெஞ்சு உருக நினைக்காது
    வாதமிடும் போர்க் குணத்தை
       வளர்த்து விடும் போதையது
    புவி மீது வாழ்கின்றார்
       போதைப் பொருள் ஏற்பதனால்
    மதியிழந்து வாழ் விழந்து
       மரண வாசல் போகின்றார் !

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    180621_New Forever- wm-A4

    உண்டில்லை என்றுனை இங்கிரு சாரர்கள்
    விண்டுரைத்த போதும் விசுவமே -கண்டுகொண்டேன்
    மித்யை ஜகத்தென்றும் சத்தியம் நீயென்றும்
    வித்தை பழகும் விதம்….கிரேசி மோகன்….!

    வாவென்றால் வாலிபன், வாக்கில் வயோதிகன்
    ’ஆ’வென்றால் கற்பக அம்மாவாம் -சோவென்று
    மாரியருள் பெய்கின்ற காரிருள் கண்ணனே
    வேறிருள் போக்கும் விளக்கு….கிரேசி மோகன்….!

    Share
  • வாழ்ந்து பார்க்கலாமே 27

    க. பாலசுப்பிரமணியன்

    மாற்றங்களின் வேகங்களும் மனித வாழ்க்கைத் திறன்களும்

    மாற்றங்களின் வேகம் நம்மைத் தடுமாற வைத்துக்கொண்டிருப்பதைக் கண்கூடாகக் காண்கின்றோம். இந்த மாற்றங்கள் நமது வாழ்க்கை முறைகளை மிகவும் பாதிக்கின்றன. மனித மூளையின் சிந்தனைத் திறன்களை போலவே கணினிகள் மூலமாக செயற்கை நுண்ணறிவை (Artificial Intelligence) பதப்படுத்தி அதை எவ்வாறு இயந்திரச் சிந்தனைகளுக்கு பயன்படுத்தலாம் என்பதைப் பற்றிய உலகளாவிய ஆரய்ச்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. இதன் காரணமாக பல வித இயந்திரங்களும் கருவிகளும் செயற்கைச் சிந்தனை மூலம் மனித சிந்தனைகளுக்கு ஓய்வு கொடுப்பது மட்டுமின்றி, பல இடங்களிலும் பல திறன்களும் மனித சிந்தனைகளைத் தேவையற்றதாக ஆகிவிடுகின்றன. இதன் தாக்கத்தின் மூலமாக பல மனிதச் சிந்தனைத் தேவைகளும் அவை சார்ந்த திறன்களும் வாழ்க்கை நடைமுறைகளும் அழிந்து விடும் நிலையில் உள்ளன. இது சமுதாயத்திற்கு நல்லதா தீயதா என்ற விவாத மேடைகள் ஒரு புறம் நடந்து கொண்டிருக்கும் நேரத்தில் இந்த விவாதங்களை அர்த்தமற்றதாக ஆக்கும் வகையில் அந்தக் கருவிகளின் தொழில்நுட்பங்களின் வளர்ச்சியும் தாக்கங்களும் அமைந்து கொண்டிருக்கின்றன.

    உதாரணமாக சில நாட்களுக்கு முன் ஒரு நண்பரிடம் பேசிக்கொண்டிருந்த பொழுது அவர் கூறினார் ”  ஒரு காலத்தில் ஒரு நிறுவனத்தின் இயக்குனராக நான் இருந்த பொழுது எனக்கு உதவி செய்ய ஒரு தனிப்பட்ட உதவியாளர் இருந்தார். இன்று அதுபோன்ற ஒரு உதவியாளருக்குத் தேவையே இல்லை. அதற்க்கு பதிலாக எனது அலைபேசியில் உள்ள கூகுள் உதவியாளர் எனக்குத் தேவையான பல வேலைகளை மிகச் சிறப்பாக நிறைவேற்றுகின்றது “

    “கூகுள், இன்று எனக்கு என்னென்ன வேலைகள் உள்ளன?”

    “கூகுள், இன்று மாலை எனக்கு எந்த விமானத்தை பிடிக்க வேண்டும். எத்தனை மணிக்கு விமான நிலையத்திற்கு எந்த வழியாகச் செல்லவேண்டும்?”

    “கூகிள், சென்னையிலிருந்து கும்பகோணத்திற்குச் செல்லும் பாதைகள் என்ன? அவைகளின் தூரங்கள் எவ்வளவு? அந்த தூரத்தை இந்தப் போக்குவரத்து நெரிசலில் கடக்க எவ்வளவு நேரம் ஆகும்?

    “கூகுள், இன்று சென்னையில் மழை பெய்ய வாய்ப்புள்ளதா? அப்படிப் பெய்தால் எந்த நேரத்தில் மழை வரலாம் ?

    “கூகிள் அடுத்த ஒரு வாரத்திற்கு மதுரையின் வெப்ப நிலை என்ன?”

    இது போன்ற பல கேள்விகளுக்கு பதிலும் அதைத் தொடர்ந்து தேவைப் பட்ட தகவல்களும் கிடைக்கின்றன.

    அது மட்டுமா… உங்களுடைய மருத்துவரிடம் தொலைபேசியில் சந்திப்பதற்கான நேரத்தை கேட்டுவாங்கி அதை உறுதிப்படுத்தும் நுண்ணறிவும் இந்த அலைபேசிக்குள் அடக்கப்பட்டுவிட்டது.

    ஒரு பெண்மணி விளையாட்டாக தன்னிடம் உள்ள கூகுள், உதவியாளரிடம் “கூகிள், வத்தக்குழம்பு வைப்பதற்கான முறை என்ன?” என்று கேட்க சில நொடிகளில் அதைத் தயாரிக்கும் முறைகளை பதிவு செய்து விடுகின்றது.

    செயற்கை நுண்ணறிவின் தாக்கத்தால் நாம் செய்யும் பல வேலைகள் வழிமாறி முறைமாறி புதிதான பரிமாணங்களில் உருவெடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    உதாரணமாக, செயற்கை நுண்ணறிவில் இயங்கும் குளிர்சாதனப் பெட்டிகள், அவைகள் உள்ளே வைக்கப்பட்டுள்ள பொருட்களையும் அவர்களின் தரத்தையும், அவர்களின் வாழ்நாளையும் உங்களுக்கு அவ்வப்போது தெரிவிக்கும் நிலையில் உள்ளன. நாம் ஒரு கடைக்குச் சென்று “எவ்வளவு பால் வாங்க வேண்டும். எவ்வளவு தக்காளி வாங்க வேண்டும்?’ என்று நினைத்தால் உடனே நமது அலைபேசி மூலமாக அதை அந்தக் குளிர் சாதனப் பெட்டியிலிருந்து தகவலாக மட்டுமின்றி அதை கண்கூடாகவும் பார்த்து முடிவு எடுத்துக்  கொள்ளலாம்.

    காலையில் நாம் பல் துலக்கும் பொழுது நமக்கு உதவி செய்து நமது பற்களில்  உள்ளோ வெளியிலோ கறைகள் உள்ளனவா, நாம் எவ்வாறு பல் துலக்கியுள்ளோம் என்பதைத் தெரிந்து கொள்ளும் கருவிகள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன.

    பல விதமான உடல் அறுவை சிகிச்சைகள் மனித இயந்திரங்களின் மூலமாகச் செய்யப்பட்டு வருகின்றன.

    மிசியோ காக்கூ என்ற ஒரு ஆராய்ச்சியாளர் மற்றும் அறிவியல் நிபுணர் தன்னுடைய “மூளையின் சக்தி ” (The Power of Mind) என்ற புத்தகத்தில் மூளையின் வலிமையைப் பற்றியும் செயற்கை நுண்ணறிவும் இயற்கை நுண்ணறிவும் சேர்ந்து செயல்படும் சாத்தியக்கூறுகள் பற்றியும் விளக்கமாக எழுதியுள்ளது வியப்பை மட்டுமின்றி அதிர்ச்சியையும் அளிக்கின்றது. இதனால் நமது வாழ்வு முறைகள் எவ்வாறு மாற்றப்படும் என்பதை நினைத்துப் பார்க்கக் கூட முடியாது.

    இத்தனை மாற்றங்களையும் நாம் ஏற்றுக்கொள்ள முடியுமா அல்லது மறுக்க முடியுமா? இவைகளின் தாக்கங்கள் எத்தனை வேகமா வரும்? தற்போது நடைமுறையில் இருக்கின்ற வாழ்வாதாரங்கள் இடிக்கப்படும் பொழுது எவ்வளவு சீக்கிரத்தில் நாம் புதிய முறைகளோடு இணைந்து வாழ முடியும்? இவையெல்லாம் கேள்விக்குறிகளே !

    ற்றங்களை நாம் சந்தித்துத் தான் ஆகவேண்டும்.

    இந்த மாற்றங்கள் நன்மை பயக்குமா தீமை பயக்குமா, தேவையா அல்லது தேவையில்லையா என்பதைக் காலம் தான் நிர்ணயிக்க வேண்டும்.

    ற்றங்களுக்குத் தக்க முறையில் நம்மை சிறிய அளவிலாவது மாற்றிக்கொள்ள வேண்டிய நிர்பந்தத்தில் இருக்கின்றோம்.

    மாற்றங்கள் சந்தேகங்களை உண்டுபண்ணலாம் மாற்றங்கள் வியப்பை உண்டுபண்ணலாம். மாற்றங்கள் பயத்தையும் பீதியையும் உண்டுபண்ணலாம். மாற்றங்கள் மகிழ்வை உண்டுபண்ணலாம். மாற்றங்கள் இன்னும் பல புதிய சிந்தனைகளை உண்டுபண்ணலாம். அவை தொடர்ந்து கொண்டுதான் இருக்கும்.

    நாம் அவைகளோடு இணைந்து வாழக் கற்றுக்கொள்ள வேண்டும்.

    வாழ்ந்து பார்க்கலாமே !

    (தொடரும் )

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    180701 Yashoda Krishna-A4 -600dpi -lr

    வந்ததும் மண்ணினை வாய்நிறைய உண்டுநீ
    அந்தநாள் அன்னை அனுபவித்த -விந்தையை
    காட்டுவாயா நீயெனக்கு மாட்டிடையா நானுக்கு
    ஊட்டிடுவேன் வெண்ணை உவந்து….கிரேசி மோகன்….!

    Share
  • எல்லாம் பெருத்துப் போச்சு !

     

    மூலம் : பீட்டில்ஸ் பாடகர்

    தமிழ்த் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா

    ++++++++++++++++++

    எல்லாம் பெருத்துப் போச்சு !

    எங்கும் பெருத்துப் போச்சு !

    சுகிக்க முடிய வில்லை என்னால் !

    உன் விழிக்குள் நோக்கி னால்

    என் மீது காதல் தெரியுது.

    நெஞ்சின் ஆழத்தில் தோண்டத் தோண்ட

    நிரம்பத் தகவல் புரியுது !

    செரிக்க முடிய வில்லை என்னால் !

    உன் அங்கம் முழுவதும் மின்னுது

    காந்தக் கவர்ச்சி !

    என்னால் தாங்க முடிய வில்லை

    கவர்ச்சி மிகுந்து போச்சு !

    கால வெள்ளத்தின் ஆற்றோட்டம்

    மேலே தூக்குது நம்மை,

    மீண்டும், மீண்டும்

    பிறக்கும் பிறவி களாய் !

    எங்கு நீ இருந்தால் என்ன ?

    எனக்கு விருப்போ, வெறுப்போ

    எதுவும் இல்லை !

    எல்லாம் பெருத்துப் போச்சு !

    எங்கும் பெருத்துப் போச்சு !

    என்னால்

    அனுபவிக்க முடிய வில்லை !

    உன் அங்கம் முழுவதும் மின்னுது

    காந்தக் கவர்ச்சி !

    இன்புற முடிய வில்லை என்னால் !

    உலகப் பெருவிழா

    ஒரு பிறந்த நாள் தித்திப்பு !

    ஒரு துண்டு மட்டும்

    உனக்காக எடுத்துக் கொள் !

    அதிகம் வேண்டாம் !

    விண்மீன் வெள்ளிக் கதிரொளியில்

    என்னைப் படகில் அனுப்பு !

    சுதந்திரமாய் இருப்பேன்

    நானங்கு !

    எங்கும் நான் நிறைந்துள்ளதாய்

    எடுத்துக் காட்டு !

    ஆனால் மாலைத் தேநீர் அருந்த

    வீட்டுக் கென்னை

    அனுப்பி விடு !

    இப்போது பெருத்துப் போச்சு !

    இங்கே மிகுந்துள்ளது

    பல பேருக்கு !

    சுகிக்க முடிய வில்லை என்னால் !

    கொடுக்கக் கொடுக்க

    குறைவ தில்லை அறிவு !

    நிறையு துனக்கு !

    அதிகமாய்க் கற்கக் கற்க

    அறிவு பெருக வில்லை

    எனக்கு !

    இப்போது தீங்கு பேரளவு

    பெருகிப் போச்சு !

    உலகம் செரிக்க முடியாத

    சீரழிவு

    நிறைந்து போச்சு !

    ++++++++++++++++++

    Share
  • கேசவ் வண்ணம் கிரேசி எண்ணம்

    180630 -Lakshman rekha -Krishnapremi series-lr A4 Canson 300gsm

    (Mind Is A Monkey)
    வாட்டம்ஏன் வானரமே வாத்ஸல்ய வட்டமிட்டார்
    ஆட்டம் முடிய அழித்திடுவார் -காட்டம்ஏன்
    அந்திம நாளேனும் அய்யோ மனமேநீ
    நந்த குமாரனை நம்பு….கிரேசி மோகன்….!

    Share
  • அர்த்தநாரி

    திருவிளையாடல் திரைப்படத்தில் சிவபெருமான் அர்த்தநாரியாகக் காட்சி கொடுக்கும் கதையை நாம் பார்த்திருப்போம். அந்தக் கதையை, காட்சியை ஒரு நெடுங்கவிதையாக எழுதினேன்.

    துள்ளிவரும் தென்றலுடன் தோன்றுகின்ற கயிலையெனும்
    வெள்ளிப் பனிமலையில் மெல்லவந்த காலையது!
    மூன்று விழிகளையும் மூடி அமர்ந்தபடி
    ஆன்ற மௌனத்தில் ஆதிசிவன் வீற்றிருந்தான்!
    பக்கத்தில் தாட்சா யாணிநின்று கைவிரல்கள்
    தொக்கிப் பிசைந்தபடி தூயவனைப் பார்த்திருந்தாள்…
    தியானம் கலைத்த தலைவனவன் தேவியங்கு
    வியாபித்த கோல விசித்திரங்கள் தாங்கண்டு
    “என்ன வேண்டும்? எதற்கிந்த சந்தேகம்?
    சொன்னால் தெளியும் சொல்”லென்றான்! அம்மையுடன்
    “விருத்திப் பணிதான் விஜயத்தோ டேநடக்கத்
    திருத்திய ஓர்யாகம் தெற்கிலெம் தந்தை
    தட்சன இயற்றுகிறார் தாயழைத்தாள் அவ்விடத்தில்
    கிட்ட இருந்து கிடக்கு முதவிபல
    நானங்கு செய்து நலம்கூட்ட வேண்டித்
    தானுங்கள் அனுமதியை நாடி இருக்கின்றேன்!”
    என்றாள் சிவனுடனே எழுந்தான் “பாரம்மா!
    உன்றன் நினைப்பும் உயர்வுதான் என்றாலும்
    என்னை அழைக்காமல் ஏளனமா யெண்ணியவன்
    முன்னந்த வேள்வியினை மூட்டுகிறான் நீசென்றால்
    சொந்த மகளென்று சொல்லா தெனைக்கவிழ்க்கும்
    சிந்தையோ டுன்னைச் சினந்திடுவான் இன்னுமுனை
    ஏசி உரைமொழிவான் ஏங்கி மனஞ்சுளிப்பாய்
    ஆசை விளைக்குமிந்த ஆபத்து வேண்டா”மென்
    றுரைத்தான் எனினும் உலகம்மை மனத்தில்
    நிறைந்திருந்த ஆசை நிறுத்து மளவில்லை!
    “எந்தை எனையென்றும் ஏளனமாய் எண்ணுகிலார்
    பந்தம் உணர்ந்து பரிவோ டணைத்திடுவார்
    என்மனம் அங்கே இருக்க நினைக்கிறது
    சென்று வருகிறேன் சீக்கிரமே நான்வருவேன்”
    என்றுபல கூறி எடுத்த அடியிரண்டில்
    “சென்றால் திரும்பாதே சேராதே நான்சொல்லித்
    தட்டுகின்றாய் அங்கே தரம்குறைந்த சொல்லிலடி
    பட்டுத் திருந்தெ”ன்று பற்றிவரும் கோவத்தோ
    டீசன் மொழிந்தான் ஈஸ்வரியும் முகம்திருப்பி
    யாக சாலைக்குள் அடிவைத்தாள்! அங்கிருந்தோர்
    வேகும் தணலில் வெறுஞ்சுள்ளி இட்டிருந்தார்…

    (வேறு)

    யாவரும் அங்கிருந்தார் – நல்ல
    யாழிசை பாணர்கள் அங்கிருந்தார்
    தேவரும் அங்கிருந்தார் – பெருந்
       தேவியர் யாவரும் அங்கிருந்தார்
    பூவையர் அங்கிருந்தார் – பெறும்
       புண்ணிய வேத முனியிருந்தார்
    காவலர் அங்கிருந்தார் – உடற்
       கட்டுடை ஆண்களும் அங்கிருந்தார்!

    பிரம்மன் அமர்ந்திருந்தான் – மறை
       பிழையறச் சொல்லும் தவமுனிகள்
    அருகில் அமர்ந்திருந்தார் – அந்த
       அரியவன் திருவொடு நின்றிருந்தான்
    பெருகும் நெருப்பினிலே – அக்னி
       பேழை வயிற்றைத் திறந்திருந்தான்!
    குருக்களும் அங்கிருந்தார் – ஒரு
       குணமிலாத் தட்சனும் அங்கிருந்தான்!

    பார்வதி தேவிவந்தாள் – அந்தப்
       பண்பறி யாதவன் இல்லம்வந்தாள்!
    யார்வர வேற்கவந்தாள்? – தனி
       யாளென வேள்விச் சபைக்குவந்தாள்!
    வார்சடை வேதிகளும் – புவி
       வாழ்த்திடும் தேவரும் தெய்வங்களும்
    சீர்கெட்ட தட்சனுந்தான் – அவள்
       செய்கையைக் கண்டு திகைத்துநின்றார்!

    “எங்ஙனம் வந்தாயடி? – விடை
       ஏறு மொருத்தனைக் காதலினால்
    அங்ஙனம் சேர்ந்தவளே – உனை
       ஆரிங் கழைத்தனர்? எங்குவந்தாய்?
    மங்கல வேள்வியிலே – ஏதும்
       மாசியற் றாதொரு மூலைதனில்
    தங்கி உணவுண்டுபோ” – என
       தட்சன் எழுந்து சினந்துரைத்தான்!

    மேலும் மொழிந்திடுவான் – “ஒரு
       மேன்மையி லாதவன் காட்டுப்புலித்
    தோலை உடுத்தியவன் – உடல்
       தோறுமச் சாம்பலைப் பூசுபவன்
    ஆல மருந்தியவன் – வெறும்
       ஆவிக ளோடுகூத் தாடுபவன்
    சீலமிலாச் சிவனை – யான்
       சீர்பெரும் வேள்விக் கழைக்கவில்லை!

    என்ன சினந்தானா? – உள
       வாளியென் றுன்னை விடுத்தானா?
    என்ன கருதிவந்தாய்? – இன்னும்
       என்மக ளென்ற நினைப்புனக்கோ?
    சென்று தொலைந்துவிடு – இல்லை
       சேர்ந்தொரு மூலையில் நின்றுவிடு”
    என்று நகைபுரிந்தான் – சினம்
       ஏற்றிவிட்டான் உமை சீறிவிட்டாள்!

    (வேறு)

    பார்வதி யாளுஞ் சினந்தாள் – உரை
       பேசிய தந்தையை எண்ணிக் கனன்றாள்
    மார்பு துடிக்க இருந்தாள் – அவள்
       மங்கையென் றானதால் கண்ணீர் சொரிந்தாள்!

    நெஞ்சு திகைத்திட லாச்சு – அந்த
       நெருப்பைக் காட்டிலும் சுட்டிடும் பேச்சு
    கொஞ்சமும் எண்ணிட வில்லை – அவள்
       கொள்கை மழுங்கிய தந்தையின் சொல்லை!

    கண்களில் ஜ்வாலை பறக்க – சினம்
       கால்களைத் தூக்கி விசும்பில் நடிக்கப்
    பெண்ணவள் பேசிட வந்தாள் – ஒரு
       பேரடி தன்னைத்தன் சொல்லிடை தந்தாள்!

    “ஞானமி லாச்சிறு தட்சா! – ஒளி
       ஞாயிறும் திங்களும் கண்ணெனக் கொண்ட
    வானவர் கும்பிடும் தேவை – நீ
       வாழ்த்திடா திங்கொரு யாகமும் வைத்தாய்!

    அவரை வணங்குதல் விட்டு – நீ
       ஆயிர மாயிரம் ஏச்சுகள் இட்டுச்
    சிவனை இழிந்துரைக் கின்றாய் – அவர்
       சீதனம் என்னையும் நீசினக் கின்றாய்!

    உன்றன் அழிவிது கண்டாய் – இவ்
       வுயிரற்ற வேள்வி அழிந்திடு” மென்றே
    சொன்னவள் மேலே நடந்தாள் – தன்
       சோகத்தை ஈசனின் முன்னே மொழிந்தாள்!

    (வேறு)

    “சொல்லிய சொல்லைத் தாண்டி
       சோதனை இருக்கும் பக்கம்
    வல்லியே சென்றாய்! பட்ட
       வலியெலாம் உனதே! நீயென்
    இல்லாளு மில்லை சொன்னேன்
       இனிவர வேண்டா போபோ
    சொல்லினை மதிக்கா துற்றால்
       சோகமே வாய்க்கும்” என்றான்!

    கணவனின் பேச்சைக் கேட்டுக்
       கலங்கினள் தேவி! வாட்டம்
    அணங்கவள் நெஞ்சை வாட்ட
       அடுத்தினி மேலும் சொல்வாள்,
    “மணமுடை மலரில் லாமல்
       மாலையின் நாறும் நாறே!
    துணையென நானில் லாநீர்
       தோன்றுதல் கடினம்” என்றாள்

    “சிவனிலை நானில் லாமல்
       சிந்தனை செய்க” வென்றாள்!
    “சிவமின்றி சக்தி இல்லை
       ஜீவனும் இல்லை” என்றான்!
    அவர்களுக் குள்ளே கர்வம்
       அங்குகூத் தாடி நின்றான்
    தவறுகள் ஏச்செல் லாமும்
       சினமென மாறிற் றங்கே!

    இருவரும் சினந்து கொண்டார்
       இமயமே குலுங்கக் கண்டார்!
    ஒருவரை ஒருவர் தாக்கி
       ஆயுதம் விடுக்க லானார்…
    பெருவரை தோளும்! மின்னல்
       பேரிடி இடையும் ஆடப்
    பொருதினார்! சிவனெ ழுந்து
       பொற்புடை நடனஞ் செய்தான்!

    தாண்டவம் ஆட லானான்
       தரணியை ஆட்டி விட்டான்
    ஆண்டவர் யாரும் அஞ்சி
       அவ்விடம் சூழ்ந்து விட்டார்
    மாண்டவர் கூட அஞ்ச
       மண்ணிலே உயிர்கள் அஞ்ச
    வேண்டுவோர் எல்லாம் அஞ்ச
       விரிகதிர் திங்கள் அஞ்ச

    (வேறு)

    வளியஞ்ச ஒளியஞ்ச வானஞ்ச மீனஞ்ச
       வாரிதியும் நிலமுமஞ்ச
    வரையஞ்ச நதியஞ்ச முகிலஞ்ச மரமஞ்ச
       வளமான மலர்களஞ்ச
    துளியஞ்சத் துறும்பஞ்சச் செடியஞ்சக் கொடியஞ்சத்
       தோன்றிடும் நிழலுமஞ்சத்
    துயரஞ்ச மகிழ்வஞ்ச உயிரஞ்ச உணர்வஞ்சத்
       துண்டாகும் துகள்களஞ்ச
    கிளியஞ்ச மயிலஞ்சக் குயிலஞ்ச நரியஞ்சக்
       கழுகுகள் தாமுமஞ்சக்
    கின்னரமும் அஞ்சிடக் கீழுலகும் மேலுலகும்
       கிடந்தஞ்சச் சிவனாடினான்!
    நெளிந்தாடி வளைந்தாடி நெற்றிவிழி திறந்தாடி
       நெருப்போடு சிவனாடினான்!
    நெஞ்சோடு நின்றிட்ட பார்வதியின் மேல்கொண்ட
       நேர்கோபத் தாலாடினான்!

    சிவனாட்டம் பேயாட்டாம் பூதங்கள் சேர்ந்தாடும்
       சினத்தாட்டம் தீயினாட்டம்
    சிவப்பேறி நின்றிட்ட வானத்தின் கோலத்தில்
       சீறிவரும் காற்றினாட்டம்!
    தவநாட்டம் கொண்டவரும் கலைநாட்டம் கொண்டவரும்
       தடுமாறும் ஊழியாட்டம்
    தாயற்ற சிவனாட்டாம் அழிவுக்குக் களியாட்டம்
       தரணிகளும் ஆடுமாட்டம்
    அவனாட்டம் கண்டவர்கள் எப்புறமும் அசையாமல்
       அவ்வாறே நின்றிருந்தார்!
    ஆதிசிவ காமியவள் சோகத்தில் கோபத்தில்
       ஆச்சர்ய மாகிநின்றாள்
    கவிநாட்டும் பார்வதியைக் கண்ணுதலின் தீக்கொண்டு
       கங்குவர பொசுக்கிவிட்டான்!
    கரையற்ற கோபத்தின் உச்சத்தில் ஆதிசிவன்
       கண்ணுதலில் சுட்டுவிட்டான்!
    யாகத்தைப் பொடியாக்க வீரபத்தி ரன்தம்மை
       எம்பிரான் உருவாக்கினான்!
    யாகமது நாசமுற பத்திரனும் வில்விட்ட
    அம்பாய்வி ரைந்துசென்றான்!

    வேகத்தில் வந்தகணை வென்றதைத் தேவர்கள்

       வேந்தனிடம் சொல்லிவைத்தார்
    வெந்துபொடி நீறான அம்மைக்கும் உயிரூட்ட.
       வேண்டியவர் கேட்டுவைத்தார்!
    சோகத்தில் நின்றசிவன் சினம்தீர்ந்து மனம்பூத்துச்
       சொன்னபடி கேட்டுவிட்டான்!
    சொல்கொண்டும் அருளென்னும் சுடர்கொண்டும் உமையம்மை
       ஜோதியுயிர் பெற்றுவிட்டாள்
    தேகத்தில் அவளுக்கும் இடந்தந்த சிவனங்கு
       தெய்வத்தின் தெய்வமானான்
    தெளிவிலும் உறுதியின் களியிலும் சமமென்று
       தானர்த்த நாரியானான்!!

    -07.03.2018

     

    Share
  • படக்கவிதைப் போட்டி (168)

    அன்பிற்கினிய நண்பர்களே!

    கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன், உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

    Photo by Shanthy Mariyappan

    சாந்தி மாரியப்பன் எடுத்த இந்தப்படத்தை திருமதி ராமலஷ்மி, ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து போட்டிக்காகத் தேர்ந்தெடுத்து வழங்கியிருக்கிறார். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள், நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (07.07.2018) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்ந்தெடுப்பார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

    ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வலர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்.

    Share
  • நலம் .. நலமறிய ஆவல் – 114

    நிர்மலா ராகவன்

     

    ஒரு வட்டத்துக்குள்

    சின்னஞ்சிறு குழந்தைகள் சிரித்த முகத்துடன் தென்படுவார்கள். அவர்களைப் பார்த்தாலே நமக்கும் மகிழ்ச்சி பெருகும். அந்த வயதில் மகிழ்ச்சியடைய உணவு, உறக்கம், அன்பு எல்லாமே போதுமானதாக இருக்கிறது. அவர்களுடைய உலகமே அந்தச் சிறிய வட்டத்திற்குள் அடங்கிவிடுகிறது.

    பெரியவர்களானதும் அந்தச் சிரிப்பு மறைந்துவிடுகிறது. நீண்ட காலம் ஒரே நிலையில் இருப்பது ஒருவித பாதுகாப்பு உணர்ச்சியை அளிக்கலாம். ஆனாலும், அந்த வட்டத்திலிருந்து வெளியே வந்தால், என்னென்ன சவால்களைச் சந்திக்க நேரிடுமோ என்று பயந்து, பலரும் மாற்றமில்லாத வாழ்க்கையில் காலத்தைக் கழிக்கிறார்கள்.

    `செக்குமாடு!’ என்று தம்மையே குறைகூறிக்கொண்டாலும், அதை மாற்றி அமைத்துக்கொள்ள இவர்கள் எந்தவித முயற்சியும் எடுப்பதில்லை. அதைவிட்டு வெளியே வரும்போதுதான் தெரியும், அது அப்படி ஒன்றும் நிம்மதியைத் தரவில்லை என்று.

    இவர்களுக்குத் தம்மால் பிறரைப்போல் இருக்க முடியவில்லையே என்ற தாபம் ஏற்படக்கூடும். அதை மறைத்துக்கொண்டு, `எனக்கென்ன! சந்தோஷமாகத்தான் இருக்கிறேன்!’ என்று சப்பைக்கட்டு கட்டுவார்கள். தம்மைவிட உயர்ந்த நிலையில் இருப்பவர்களிடம் ஏதாவது குறை தென்பட்டால், அதைப்பற்றிப் பேசிப் பேசியே தாம் அவர்களைவிட சிறந்துவிட்டதாக நினைப்பதும் உண்டு.

    பொருட்களினால் மகிழ்ச்சியா?

    மகிழ்ச்சி என்பது மனிதருக்கு மனிதர் மாறுபடும்.

    எப்போதோ ஒரு கதையில் படித்தேன், `அவளுக்குத் திருமணமானதும் சோபா, பாங்கில் பணம், வீட்டில் பளிங்கினால் ஆன தரை எல்லாம் இருந்தன. ஆனால் மகிழ்ச்சி இருக்கவில்லை,’ என்று. இவை மட்டும் போதுமா மனமகிழ?

    வெகு சிலர்தான் உயிரற்ற பொருட்களால் மகிழ்ச்சி அடைவார்கள். அதற்காக என்ன வேண்டுமானாலும் செய்வார்கள். எத்தனை கிடைத்தாலும், நிறைவடைவதில்லை. இதுவும் ஒருவித மனநோய்தான். (மலேசியாவின் முன்னாள் பிரதமரின் இல்லங்களில் 12,000 வகையான விலையுயர்ந்த நகைகள் கைப்பற்றப்பட்டுள்ளன!).

    நாம் மகிழ்ச்சியாக இருப்பதற்கு இன்னொரு தடை போட்டி மனப்பான்மை. பிறருடன் தங்களை ஒப்பிட்டுக்கொண்டே இருப்பவர் உயர்வாகவோ, அல்லது தாழ்வாகவோ உணர்வார்.

    கதை

    என் உறவினர் ஒருவர் சில காலம் துபாயில் உத்தியோகம் பார்த்தார். நான் நிரந்தரமாக மலேசியாவில் இருப்பது அவர் கண்களை உறுத்தியது.

    “ஐயே! நீ மலேசியாவில் இருக்கிறாய். அங்கு இந்தியர்கள் வசதி குறைந்தவர்கள். நாங்கள் தினமும் சாயந்திர வேளைகளில் கிளப்பில் கழிப்போம்!” என்றார்.

    “அதனால் என்ன? அங்குள்ளவர்களுக்கு ஏதோ ஒரு வகையில் உதவி செய்வதற்காகத்தான் நான் இருக்கிறேன்,” என்று அலட்சியமாகப் பதிலளித்தபோது எனக்கு அவர் உள்நோக்கு புரியவில்லை.

    பிறருடன் கலந்து பேசியபோது, ஒரு வார்த்தை அடிபட்டது: `போட்டி!’

    அவர் என்னைவிட செல்வந்தராக இருக்கலாம். ஆனால், தான் தான் சந்திக்கும் பலரையும்விட ஏதோ வகையில் உயர்ந்தவன் என்று தனக்குத்தானே உறுதிப்படுத்திக்கொள்ளும் தேவை அவருக்கிருக்கிறது.

    இம்மாதிரி எப்போதும் பலருடனும் போட்டி போட்டுக்கொண்டு, தாம் அமைத்துக்கொண்ட வட்டத்திலேயே சுழலுபவர்களுக்கு மகிழ்ச்சி என்பது அவர்களைப் பார்த்துப் பிறர் பொறாமைப்பட்டால்தான்!

    `உயர் பதவியில் இருக்கிறேன். எல்லாரும் என்னை மதிக்கிறார்கள்!’ என்று பெருமிதம் கொள்பவர்கள் பதவி போனதும், அத்துடன் தம் பெருமையையும் மகிழ்ச்சியையும் இழக்கும் அபாயம் இருக்கிறதே!

    புதிதாக ஆரம்பி

    `இது என்ன வாழ்க்கை! தினமும் காலையில் எழுந்து, சமைத்து, சாப்பிட்டு, தூங்கி என்று ஒரேமாதிரியாக இருக்கிறது!’ என்று சிலர் சலிப்புடன் பேசுவார்கள்.

    செய்த காரியத்தையே செய்துகொண்டு, அதில் வெற்றி கண்டாலும்கூட, புதிதாக எதையாவது புதிதாகக் கற்பது மனத்திற்கு உற்சாகமூட்டும்.

    இலக்கு எதுவுமில்லாது, ஒரு குறுகிய வட்டத்துள் சுழலும் வாழ்க்கையால் அலுப்பு ஏற்பட்டுவிடுகிறது. அதை மாற்றி, மறைந்த உற்சாகத்தை மீண்டும் பெற புதிதாக ஏதாவது செய்ய ஆரம்பிக்க வேண்டியதுதான்.

    `புதிதாக ஆரம்பிப்பதா! அதில் வெற்றி கிடைக்கும் என்பது என்ன நிச்சயம்?’ என்ற அயர்ச்சியை முதலில் வெல்ல வேண்டுவது அவசியம்.

    `என்னால் முடியுமோ?’ என்ற சந்தேகம் எழுந்தால், நம் திறமையை நாமே சந்தேகிப்பது போல் ஆகிவிடும். பலவற்றிலும் துணிந்து ஈடுபட்டால், நமக்கேற்ற ஏதாவது ஒன்று தட்டுப்படாதா! பயந்துகொண்டே இருந்தால், `சமயம் கிடைத்தபோது, அதைச் செய்யாமல் விட்டுவிட்டோமே!’ என்ற குறை எதற்கு?

    சவாலே, சமாளி

    சவால்கள்தாம் நம்மை நல்லவிதமாக மாற்றக்கூடியவை. ஆனால் யார் சவால் விடுகிறார்கள் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

    (இளவயதினர் மகிழ்ச்சியைத் தேடி, மது, போதை என்று நாடுவது அவர்களுக்குத் தக்க இலக்கு இல்லாத காரணத்தால்தான். கூடாத சேர்க்கையால், `உனக்குத் தைரியம் இல்லையே!’ என்று அவர்கள் செய்யும் கேலியைச் சவாலாக எடுத்துக்கொள்வது முட்டாள்தனம். அது அழிவுப் பாதைக்குத்தான் வழி).

    உடற்பயிற்சி, நீச்சல், கடுமையான விளையாட்டு என்று எதை எடுத்துக்கொண்டாலும், உடல்வலியைத் தவிர்க்க முடியாது. ஆரம்பத்தில் மனம் தளர்ந்தாலும், அதையே சவாலாக ஏற்றால், சிறிது நாட்களுக்குப்பின் நல்ல பலன் கிடைக்கும். `நானா சாதித்தேன்!’ என்று பெருமகிழ்வு உண்டாகும்.

    கதை

    பள்ளிக்கூடம் ஏற்பாடு செய்திருந்த நாட்டியப் பட்டறை, அதைத் தொடர்ந்து நாட்டிய வகுப்பு, இரவில் ஒரு சிறந்த நாட்டிய நிகழ்ச்சி என்று ஓய்வில்லாமல் ஒரு நாள் முழுவதும் அலைந்திருந்தாள் அப்பெண். இரவு வெகுநேரம் கழித்துத்தான் வீடு திரும்ப முடிந்தது. `உடலெல்லாம் ஒரே வலி!‘ என்று மறுநாள் காலை படுக்கையிலிருந்து எழுந்திருக்கவே முடியாது முனகினாள்

    `நேற்று ஆடியவர்களுக்குப் பயிற்சி காலத்தில் உடல் வலி இல்லாமல் இருந்திருக்குமா?’ என்று தாய் கேட்டபோது, மேலே எதுவும் பேசாது, நமட்டுச்சிரிப்புடன் எழுந்தாள்.

    கற்பனையும் சிறு வட்டமும்

    கற்பனைத்திறனுக்கு முட்டுக்கட்டையாக இருப்பது இந்த பாதுகாப்பு உணர்வு.

    ஒரு வரி எழுதுவதற்குள், `இப்படி எழுதினால், அம்மா கோபிப்பார்களோ, படிப்பவர்கள் என்னைப்பற்றி என்ன நினைப்பார்கள்?’ என்றெல்லாம் எழுத்தாளர்களுக்கு யோசனை எழுந்தால், எழுத்தில் என்ன சுவை இருக்கும்?

    நாம் எவ்வளவு கவனமாக இருந்தாலும், நம்மைப்பற்றி அவதூறாகப் பேச நான்குபேர் இருக்கத்தான் போகிறார்கள். அவர்கள் வாயை மெல்லவும் ஏதாவது வேண்டாமா, பாவம்! பாதுகாப்பான வட்டத்திலிருந்து வெளியே வந்து, சும்மா எழுதிப்பாருங்கள்!

    ஒரு நாள் காலை கண்விழித்ததும், `இன்று என்ன செய்ய வேண்டும்?’ என்று நிர்ணயித்துக்கொண்டு, இரவு தூங்குமுன் நினைத்ததை ஓரளவாவது நிறைவேற்றிவிட்ட திருப்தி எழுந்தால், மகிழ்ச்சி அடையலாம். சிறுகச் சிறுக நம் வட்டம் பெரிதாக, வெற்றியும் உறுதி.

    வெற்றி என்பது இறுதிக்கட்டம் இல்லை. நம் குறுகிய வட்டத்திலிருந்து வெளியே வரும் முயற்சிதான். அது தொடர்ந்துகொண்டே இருக்க, வட்டமும் பெரிதாகும்.

    தொடருவோம்

    Share
  • “தமிழ்நாடு” பெயர்சூட்டல் 50 ஆவது ஆண்டு பொன்விழாக் கொண்டாட்டம்

    சென்னை மாகாணமாக இருந்த தமிழ்நாட்டிற்குத் “தமிழ்நாடு” என்று அப்போதைய முதல்வர் பேரறிஞர் அண்ணாவால் பெயர் சூட்டப்பட்டு, இந்த ஆண்டோடு 50 ஆண்டுகள் ஆகின்றது. அதற்கான பொன்விழாக் கொண்டாட்டத்தில் இருக்கும் தமிழக அரசின் தமிழ்வளர்ச்சித் துறை நடத்திய மாவட்ட அளவிலான கல்லூரி மாணவர்களுக்கான கட்டுரை/பேச்சு/கவிதைப் போட்டிகள் 29.06.2018 காலை 9.00 மணி முதல் தொடங்கி சென்னை இராணி மேரி கல்லூரியில் சிறப்பாக நடைபெற்றது. சென்னையைச் சேர்ந்த 80க்கும் மெற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்று தம் திறமைகளை வெளிப்படுத்தினர். ஒவ்வொரு போட்டிக்கும் மூன்று பரிசுகள் வீதம் ஒண்பது மாணவர்கள் மாநில அளவிலான போட்டிக்குத் தேர்வாயினர். கவிதைப் போட்டிக்குத் “தமிழின் சக்தி” என்றும், கட்டுரைப் போட்டிக்கு “மொழிப்பற்றெங்கே விழிப்புற்றெழுக” என்றும் தலைப்புகள் கொடுக்கப்பட்டன. பேச்சுப் போட்டிக்கு தமிழ் மொழி வளர்ச்சி குறித்து விதவிதமான தலைப்புகள் அளிக்கப்பட்டன. இராணி மேரி கல்லூரியின் தமிழ்த்துறையுடன் தமிழக தமிழ்வளர்ச்சித் துறையின் சென்னை பிரிவும் சேர்ந்து நிகழ்வை ஒருங்கிணைத்து நடத்தியது. மதியம் 2.00 மணி அளவில் நிறைவு விழாவாக பங்களிப்புச் சான்றிதழ் வழங்கப்பெற்று தமிழ்வளர்ச்சித் துறையின் இயக்குநர் திரு. கோ.விசயராகவன் அவர்கள் பங்கேற்ற மாணவர்களுக்குச் சான்றிதழ் வழங்கியும், பரிசு பெற்ற மாணவர்களை வாழ்த்தியும் சிறப்புரை ஆற்றினார். இதே போட்டி தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் ஒரேநாளில் நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது. 

    படம்: பரிசுபெற்று மாநில அளவிலான போட்டிக்குத் தேர்வாகியிருக்கும் மாணவர்களுடன் தமிழ்வளர்ச்சித் துறையின் இயக்குநர். துணை இயக்குநர், சிறப்பு இயக்குநர் மற்றும் இராணி மேரி கல்லூரியின் தமிழ்த்துறை தலைவர்.

    Share
  • எழுத்து – 7

    வேதா. இலங்காதிலகம். டென்மார்க். 28-6-2018

    புலன்நுகர் எழுத்தெனும் விண்மீன் விதை
    பலன் கருதி விழுந்து முளைத்து
    நிலவாகி ஒளிரும்! எனதென்று மொழிந்தாலும்
    வலங்கொள்ளுதல் உலகிற்காகவே என்பதுண்மை!
    பலமுடை எழுத்துமொரு தீவிரவாதமே! துணிவுச்
    சாராயம் அருந்தியவன் அச்சம் தெரியாமல்
    ஊராண்மை செய்வான்! வாள் வீச்சாகவும்
    தாராட்டும் தென்றலாகவுமவன்; தூரிகை சாமரமாகும்

    பெருந்தெருவோ ஒற்றையடிப்பாதையோ எதுவானாலும் தானே
    உருவாக்கி எழுத்துலா அமைப்பான். மண்ணிலடித்து
    அரூபமாய்ப் பேரலை பிரமாணமிடுதல் போல
    உருவம் தருகிறது மீண்டும் மீண்டுமெழுத்து
    முருகு! மூழ்கும் பரிமாணமல்ல எழுத்து!
    வண்ணத்திப் பூச்சிச் சிதறல், பூவனம்,
    கண்ணிறையும் பெருமரத் தோப்பு, தவழுமலை
    எண்ணிறைந்தவை எழுத்துறங்கும் இரகசியப் பொறிகள்.

    சிற்பக்காடு, மூங்கில் வலயம், மைமல்,
    அற்புதம் சமைக்கும் மழை வானம்,
    பொற்புடை சோலை, மலர் பந்தல்
    உற்சாகம் உற்பத்தியாக்கும் ஆனந்தத் தென்றல்,
    அற்றைப் பொழுது மழைத்தூறலின்
    சொக்கும் மண்ணின் மணம், கடையிடும்
    பூக்கள் அனைத்தும் இதழ்கள் விரித்து
    பாக்கள் உற்பத்திக்கும் ஊற்றுப் புதையல்.

    தூக்கம் விழித்து இயற்கையில் மிதந்து
    பா கட்ட வைக்கும் மனமெனும்
    மொட்டை விரிக்கும் எழுத்தாய் விழுந்திட
    நித்திரை மரமேன் ஏற வேண்டும்!
    பத்துவித பணிகளேன் செய்ய வேண்டும்!
    எழுத்தென எழுதிக் கொண்டேயிருந்தால் என்ன!
    தமிழ் மேகங்கள் பொங்கும் மனவானம்
    வெறுமையின்றி வார்த்தைகள் வெடி கொளுத்தலாமே!

     

    Share
  • பழந்தமிழக வரலாறு – 9

    கனியன்பாலன்

    அ.மாமூலனாரும் செருப்பாழிப்போரும் செங்குட்டுவனும்

         .

           தென்னிந்தியக் கல்வெட்டுகள்(South Indian Inscription) என்கிற நூல்  தொகுதிகளை மிகக் கவனமாக தொகுத்தளித்த புகழ் பெற்ற வரலாற்று அறிஞர் உல்ட்ச்(Hultzsch)  என்பவர், முதலாம் கயவாகு மன்னனும், சேரன் செங்குட்டுவனும் ஒரே காலத்தவர் என்கிற கருத்தை ஏற்கவில்லை(1). மேலும் மகாவம்சம் குறிப்பிடும் கயவாகுவின் காலம், அந்தக் கயவாகு சேரன் செங்குட்டுவன் கண்ணகிக்காக நடத்திய விழாவில் கலந்து கொண்டான் என்கிற செய்தி ஆகிய இரண்டுமே அடிப்படை வரலாற்றுச் சான்றுகள் அற்றவை. அவை வரலாற்றுக்கு பொருந்தாதவை. ஆகவே, அவைகளைக் கொண்டு தமிழக வரலாற்றின் காலங்களைக் கணிப்பது முறையான காலக்கணிப்பாக இருக்காது. ஆகவே இந்தியாவின் மேல் அலெக்சாந்தர் படையெடுப்பு நடத்திய காலத்தையும், மாமூலனார் பாடல்களில் குறிப்பிடப்பட்டுள்ள மகதத்தில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களையும், அதன்பின் தமிழகத்தின்மேல் மேற்கொள்ளப்பட்ட மௌரியப் படையெடுப்புக்காலத்தையும், அசோகன் கல்வெட்டையும் கணக்கில்கொண்டு, நமது தமிழக வரலாற்றுக்கான காலம் கணிக்கப்பட்டு உறுதிப்படுத்தப் படவேண்டும்.  இவைகளின் மூலம் மட்டுமே  நமது தமிழக வரலாறு உலக வரலாற்றுக் காலத்தோடு இணைக்கப்பட்டு, ஒரு முறையான, நிலையான, உறுதியான காலவரையறையைக் கொண்ட வரலாறாக ஆகும்.

    பழந்தமிழக வரலாற்றில் அசோகன் கல்வெட்டும் சம்பைக் கல்வெட்டும்:

           அதியமான் திருக்கோவிலூர்ப் போரில் மலையமான் காரியை வென்ற போது, பரணர் அதியமானைப் பாடியுள்ளதாக ஔவையார் குறிப்பிடுகிறார். ஆகவே, பரணர் அதியமான் காலத்தவர் ஆகிறார். பரணர் சேரன் செங்குட்டுவனை, 5ஆம் பதிற்றுப்பத்திலும், புறம்-212, 369;  அகம்-376 ஆகிய மூன்று பாடல்களிலும் பாடியுள்ளார். ஆகவே, சேரன் செங்குட்டுவன் பரணர் காலத்தவனாகிறான். இவைகளின் காரணமாக சேரன் செங்குட்டுவன், அதியமான், பரணர் ஆகியோர் சம காலத்தவர் ஆகின்றனர்.

         அதியமானின் சம்பைக் கல்வெட்டில் உள்ள “சதியபுதோ” என்கிற சொல்லும் அசோகர் கல்வெட்டில் உள்ள “சதியபுதோ” என்கிற சொல்லும் ஒரே மாதிரி எழுதப்பட்டு, இரண்டும் அதியமான்களை அவர்களது பரம்பரையைத் தான் குறிப்பிடுகிறது. பண்டைய எழுத்தியல்- கல்வெட்டியல்(palaeography – orthography) படி, அசோகரின் கல்வெட்டில் இருக்கும் எழுத்துக்கள் போன்றே சம்பை கல்வெட்டிலும் இருப்பது என்பது இரண்டும் ஒரே காலத்தைச் சேர்ந்தவை என்பதை உறுதி செய்கிறது.  அசோகர் கல்வெட்டின் காலம் கி.மு.256 ஆகும். ஆகவே சம்பைக் கல்வெட்டின் காலம் தொல்லியல் அறிஞர் நடன காசிநாதன் அவர்களின் கருத்துப்படி கி.மு. 270-230 ஆகும். அதாவது அசோகன் கல்வெட்டுக்குச் சில வருடங்கள் முன்பின் என்பதே அதன் கருத்தாகும்(2). நாம் அதனை கி.மு. 3ஆம் நூற்றாண்டு எனலாம். அசோகன் கல்வெட்டு, சம்பை கல்வெட்டு ஆகியவற்றின் காலம் கி.மு. 3ஆம் நூற்றாண்டு என்பதால் சம்பைக் கல்வெட்டை வெட்டிய அதியமான், அதியமானைப்பாடிய பரணர், பரணர் பாடிய சேரன் செங்குட்டுவன் ஆகிய மூவரின் காலமும் கி.மு. 3ஆம் நூற்றாண்டு என உறுதிப்படுத்தலாம்.

         ‘பழந்தமிழ்ச்சமுதாயமும் வரலாறும்’ என்ற எனது நூலில் அசோகன் கல்வெட்டு, சம்பை கல்வெட்டு ஆகியன போக, புகளூர் கல்வெட்டு; மாமூலனாரின் நந்தர்கள், மௌரியர்கள், சேர, சோழ வேந்தர்கள் குறித்த பாடல்கள்; அதியமான், சேரன் செங்குட்டுவன் குறித்த பரணரின் பாடல்கள்; பாலைபாடிய பெருங்கடுங்கோ, மாமூலனார் ஆகியவர்களின் நன்னன் குறித்த பாடல்கள்; தலைவடிவப் பெருவழுதி நாணயங்கள்; மாக்கோதை, குட்டுவன் கோதை நாணயங்கள்; ஆகியவைகளைக் கொண்டு செங்குட்டுவனின் காலம் கி. மு. 3ஆம் நூற்றாண்டு என்பது பல தளங்களில், பல கோணங்களில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது(3).

    மகாவம்ச நூலும் செங்குட்டுவனின் காலமும்:

         வில்கெம் கெய்கர் அவர்களின் மகாவம்ச நூலின்படி புத்தர் இறந்தபின் 248 ஆண்டுகள் கழித்து அசோகர் முடிசூட்டிக்கொண்டார்(4). மகாவம்ச நூலின் ஆண்டுப்பட்டியல் கி.மு. 483இல் இருந்து தொடங்குகிறது. ஆனால் கி.மு. 483 என்பது எந்தவிதத்தில் இந்திய அல்லது உலக வரலாற்றுக் காலவரையரையோடு இணைக்கப்பட்டது என்பதற்கான அடிப்படைச் சான்றுகள் எதுவும் அந்த நூலில் தரப்படவில்லை. அந்த நூல் தந்துள்ள மன்னர்களுடைய ஆட்சி ஆண்டுகளை அடிப்படையாகக் கொண்டுதான் கயவாகுவின் காலம் சொல்லப்பட்டுள்ளது. கி.மு. 483இல் தொடங்கும் பட்டியல் கி.பி. 352இல் முடிகிறது. அநுராதபுரத்தில் கிட்டத்தட்ட சுமார் 835 ஆண்டுகள் ஆட்சி செய்த 61 மன்னர்களை அது குறிப்பிடுகிறது. இந்த ஆண்டுகள் ஆரம்பம் முதல் இடையில் கூட உலக, இந்திய காலவரையரைகளோடு இணைக்கப்படவில்லை-(5).

         புகழ்பெற்ற வரலாற்று ஆசிரியர் வின்சுடன் சுமித் அவர்கள் கி.மு. 483 முதல் கி.பி. 124 வரையான, 607 வருடகால மகாவம்ச நூலின் வரலாற்றை,  அதன் ஆண்டுகளை முழுமையாக நிராகரித்துள்ளார்.  தேவநாம்பியதீச என்கிற மன்னன் சார்ந்த 10 அத்தியாயங்களை “அபத்தங்களால் முடையப்பட்ட வேலைப்பாடு” என்கிறார் அவர்-(6). அதனால்தான் புகழ் பெற்ற வரலாற்று அறிஞர் கூல்ட்ச்(Hultzsch) அவர்கள் சேரன் செங்குட்டுவன், கயவாகுவின் காலத்தைச் சேர்ந்தவன் என்பதை ஏற்றுக்கொள்ளவில்லை. இந்நூல், எந்த வெளிநாடும் செல்லாத புத்தர் மூன்றுமுறை இலங்கை வந்ததாகக் கதை சொல்லுகிறது. தனது 99 சகோதரர்களைக்கொன்றபின் அசோகர் ஆட்சிக்கு வந்தார் என்கிறது-(7). புத்தசமயத்துக்கு மாறுவதற்கு முன் அசோகர் தீயவராக, கொடூரமானவராக இருந்தார் என அந்நூல் சொல்வதற்கு வரலாற்றுச் சான்றுகள் எதுவும் இல்லை என்கிறார் வின்சுடன் சுமித்(8).

         பல அறிஞர்களின் கருத்துப்படி அசோகர் இலங்கை பற்றித் தனது கல்வெட்டில் எதுவும் சொல்லவில்லை. அசோகருக்கு மகிந்த, சங்கமித்ர என்கிற மகனோ, மகளோ இருக்கவில்லை. அவர்கள் இலங்கை போகவும் இல்லை. மகிந்த அவருடைய தம்பி ஆவார். அவர்தான்  தமிழகம் வந்தார். இலங்கை போனார். தமிழ்நாட்டில் இருந்துதான் புத்தமத நிறுவனங்கள் இலங்கைக்குப் பரவின. இவை வின்சுடன் சுமித் அவர்கள் தனது அசோகர் என்கிற நூலில் தரும் தரவுகளாகும்-(9). மகாவம்ச நூல் என்பது பௌத்தமத நம்பிக்கையாளர்கள் ஓதுவதற்கும், நினைவில் வைத்துக் கொள்ளவும், அவர்களுக்கு இன்பமும், பரவசமும் ஊட்டவும் எழுதப்பட்டது என்கிறார் அதனை கி.பி. 6ஆம் நூற்றாண்டு வாக்கில் எழுதிய ‘மகாநாம’ என்கிற புத்த பிக்கு. அந்நூல் புத்த மடாலங்களின் அத்தகதா கதைகளையும், புத்தமத மடாலயங்களுக்கு உதவிய மன்னர்கள், அவர்களின் உதவிகள் பற்றிய தரவுகள்  முதலியனவற்றையும் கொண்ட  கி.பி. 3ஆம் நூற்றாண்டு தீபவம்ச நூலைப் புதுப்பித்து எழுதப்பட்டதாகும்-(10).

             ஆகவே எந்தவித அடிப்படைச் சான்றுகளும் இல்லாத, கி.பி. 6ஆம் நூற்றாண்டு வாக்கில், மதக் காரணங்களுக்காக எழுதப்பட்ட, இலங்கையின் பௌத்தமத நூலான மகாவம்சம், இடைச் செருகல்கள் நிறைந்த சிலப்பதிகாரக் காப்பியப் பதிகம் ஆகியவைகளைக் கொண்டு நிர்ணயிக்கப்பட்ட, சேரன் செங்குட்டுவனின்காலம் கி.பி. 2ஆம் நூற்றாண்டு என்பதைவிட, சங்க இலக்கியங்கள் தரும் அடிப்படைச் சான்றுகளைக் கொண்டும் உலக வரலாற்றுக்காலத்தோடு இணைக்கப்பட்ட, அசோகன் கல்வெட்டு, புகளூர் கல்வெட்டு, சம்பைக் கல்வெட்டு, தலைவடிவப்பெருவழுதி நாணயங்கள், மாக்கோதை, குட்டுவன் கோதை நாணயங்கள் போன்றவைகளின் காலத்தைக் கொண்டும் கணிக்கப்பட்ட சேரன் செங்குட்டுவனின் காலம் கி.மு. 3ஆம் நூற்றாண்டு என்பதே பல கோணங்களிலும் பொருந்திப்போகிறது. இரண்டு காலங்களுக்கும் இடையே கிட்டத்தட்ட 400 ஆண்டுகள் இடைவெளி இருக்கிறது என்பதையும், சங்க இலக்கியம் இயற்கையானது, நம்பத்தகுந்தது என்பதையும், பதிற்றுப்பத்து கூறும் சேர வேந்தர்களும், பிற சங்க இலக்கியங்கள் கூறும் பல தமிழக வேந்தர்களும் வரலாற்றில் இருந்தவர்கள் என்பதையும் அகழாய்வுகளும், கல்வெட்டுகளும், நாணயங்களும் இன்ன பிற தரவுகளும் உறுதி செய்துள்ளன என்பதையும் கருத்தில்கொண்டு சேரன் செங்குட்டுவனின் காலம் கி.மு. 3ஆம் நூற்றாண்டு என்பதே முறையானதாகும்.

    மாமூலனாரும் செருப்பாழிப்போரும்:

         சங்ககாலப் புலவர்களும், பாணர்களும் வேந்தன் இருக்குமிடம் சென்று, அவனை நேரடியாகப் புகழ்ந்து பாடி பரிசுகள் பெற்று வருவதே சங்ககால வழக்கமாக இருந்து வந்துள்ளது. இதனால் தங்கள் காலகட்டத்துக்கு முந்தைய புரவலர்களைப் பாடும் பழக்கம் அவர்களிடத்தில் இருக்கவில்லை. புறப் பாடல்களில் மட்டுமின்றி அகப்பாடல்களிலும் இதே நிலை தான் இருந்து வந்துள்ளது. முந்தைய காலகட்டப் புரவலர்களை மட்டுமல்ல, முந்தைய காலகட்ட நிகழ்வுகளையும் அவர்கள் பெரும்பாலும் பாடுவதில்லை. புரவலர்களை நேரடியாக அவர்களின் இடத்திற்கே சென்று சந்தித்து அவர்களிடம் நேரடியாகத் தங்கள் புகழ்ந்துரைகளைப் பாடல்களாகப் பாடிப் பரிசில்பெறுவது என்பது பாணர், புலவர்களின் மிகப் பழமையான, தொன்று தொட்டு இருந்து வருகிற ஒரு மரபாகும். அதனால் தங்கள் காலத்துக்கு  முந்தையவர்களை, இறந்து மறைந்து போன பழைய தலைமுறைப் புரவலர்களை அல்லது தலைவர்களைப் பாடும் பழக்கம் என்பது சங்ககாலப் புலவர்களிடம் இருக்கவில்லை.

            சான்றாகக் கபிலர் பாரியிடமும், ஔவையார் அதியமானிடமும், பரணர் செங்குட்டுவனிடமும், அரிசில்கிழார் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறையிடமும், நக்கீரர் தலையாலங்கானத்து செருவென்ற நெடுஞ்செழியனிடமும் நேரடியாகச் சென்று தான் பாடிப் பரிசில் பெற்றார்கள் என்பதை சங்க இலக்கியங்கள் உறுதிப்படுத்துகின்றன. பொதுவாகச் சங்க காலப் புலவர்கள் பழைய தலைமுறைப் புரவலர்களைப் பாடவில்லை என்பதற்குச் சில சான்றுகளைக் கீழே காண்போம்.

    மாமூலனார்:

          மாமூலனார் தனது இளவயதில் உதியஞ் சேரலாதனைப் பாடினார். பின் அவனது மகனான இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனைப் பாடினார். பின், இந்த நெடுஞ்சேரலாதனுடன் போரிட்ட சோழன் முதல் கரிகாலனைப் பாடினார். ஆனால் இவர் சேர வேந்தர்களில் உதியஞ்சேரலாதனுக்கு முந்தைய தலைமுறையைச் சேர்ந்த யாரையும் பாடவில்லை. தனது காலத்திய மகத நாட்டு நந்தர்களின் செல்வ வளம் குறித்துப் பாடியுள்ளார். நந்தர்களுக்குப் பின் மகத ஆட்சிக்கு வந்த மௌரியர்களின் தமிழகப் படையெடுப்பு குறித்துப் பாடியுள்ளார். மாமூலனார் காலத்தில் நடந்த நிகழ்வுகள்தான், இவர் பாடல்களின் பாடுபொருளாக இருந்தன. தனக்கு முந்தைய காலத்தைச் சேர்ந்த பண்டைய நிகழ்வுகள் குறித்து இவர் எதுவும் பாடவில்லை.

    பரணர்:

         மாமூலனார் முதியவராக இருந்த போது இளையவராக இருந்த, மிக நீண்ட காலம் வாழ்ந்த பரணர், மிக அதிகமான வரலாற்றுக் குறிப்புகளைத் தந்தவர். இவர் தனது இளவயதில் மாமூலனார் பாடிய முதல் கரிகாலனைப் பாடியுள்ளார். பின் அவனது மகனான உருவப்பஃறேர் இளஞ்சேட் சென்னியைப் பாடியுள்ளார். முதல் கரிகாலனுக்குப் பிந்தைய சேரன் செங்குட்டுவனைப் பாடியுள்ளார். ஆனால் சேரன் செங்குட்டுவனுக்கு முந்தைய மாமூலனரால் பாடப்பட்ட இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனையோ, உதியஞ்சேரலாதனையோ அவர் பாடவில்லை. அதுபோன்றே, முதல் கரிகாலனுக்கு முந்தைய சோழ வேந்தர்களான செருப்பாழி எறிந்த இளஞ்சேட்சென்னியையோ அல்லது பெரும்பூட்சென்னியையோ அவர் பாடவில்லை.

         பாண்டியர்களில் நம்பி நெடுஞ்செழியனையும் அவனுக்குப் பின் வந்த பசும்பொன் பாண்டியனையும் பாடினாரே ஒழிய அவர்களுக்கு முந்தைய  முது குடுமிப் பெருவழுதி மற்றும் கருங்கை ஒள்வாள் பெரும் பெயர் வழுதி போன்ற பாண்டிய வேந்தர்களைப் பரணர் பாடவில்லை. இவர்களைப் போன்று தான் பெரும்பாலான புலவர்கள் தங்கள் கால கட்ட நிகழ்காலப் புரவலர்களை, நிகழ்கால நிகழ்வுகளை மட்டுமே பாடியுள்ளனர். பரணர் தமது காலத்துக்குச் சற்று முன்பு நடந்த மௌரியப் படையெடுப்பு குறித்துக் கூடப் பாடவில்லை. ஆகவே பொதுவாக நிகழ்கால நிகழ்வுகளை, நிகழ்காலப் புரவலர்களை மட்டுமே சங்க காலப் புலவர்கள் பாடி உள்ளார்கள் என்பது வரலாற்றுக்கு மிகப்பெரிய அளவில் துணை செய்கிறது எனலாம். புலவர்கள் மற்றும் புரவலர்களின் காலத்தை உறுதிசெய்வதற்கு இது மிகப்பெரிய உதவியாக இருக்கிறது என்றால் அது மிகையாகாது.

    பார்வை:

    1.நீலகண்ட சாத்திரி, சோழர்கள், தமிழில் கே.வி. இராமன், புத்தகம்-1, நவம்பர்-2009, பக்: 4, 69.

    2.. TAMILS HERITAGE – NATANA KASINATHAN, APRIL-2006, PAGE: 25-30.

    3.பழந்தமிழ்ச் சமுதாயமும் வரலாறும், கணியன்பாலன், எதிர்வெளியீடு, சூன்-2016, பக்: 317-329

    4.மகாவம்ச-சிங்களர்கதை, வில்கெம் கெய்கர், தமிழில் எசு.பொ. அவர்கள், அக்டோபர்-2009, பக்:36.

    5.மகாவம்ச-சிங்களர்கதை, வில்கெம் கெய்கர், தமிழில் எசு.பொ. அவர்கள், அக்டோபர்-2009 பின்னிணைப்பு-அ.

    6.மகாவம்ச-சிங்களர்கதை, வில்கெம் கெய்கர், தமிழில் எசு.பொ. அவர்கள், முன்னுரைப்பக்:28, அக்டோபர்-2009.

    1. “ “     பக்:36.

    8.வின்சுடன் சுமித், அசோகர், இந்தியாவின் பௌத்தப்பேரரசர், 2009, பக்:21.

    1. “ “       பக்; 38-40.

    10.மகாவம்ச-சிங்களர்கதை, வில்கெம் கெய்கர், தமிழில் எசு.பொ. அவர்கள்,  பக்:1; & முன்னுரைப்பக்: 20, 21,   அக்டோபர்-2009.

    Share
  • இருப்பது பேரின்பமன்றோ!


    எம்.ஜெயராமசர்மா ….. மெல்பேண் … அவுஸ்திரேலியா

    பொட்டுவைத்த பூமுகத்தைத் தேடுகிறேன்
    புன்சிரிப்பை மறுபடியும் எண்ணுகிறேன்
    கட்டழகு உடலமைப்பை காணவில்லை
    கையெல்லாம் நடுங்குவதைக் காணுகின்றேன்
    சிரித்துநின்ற செவ்வாயைத் தேடுகிறேன்
    சிவப்புநிறம் கறுப்பாகி நிற்குதங்கே
    என்றாலும் அவளேயென் இணையேயாவாள்
    இருக்கும்வரை அவளைத்தான் சொர்க்கமென்பேன்!

    கருங்கூந்தல் அவளிடத்தில் காணவில்லை
    கண்கூட  ஒளிமங்கி  வெகுநாளாச்சு
    முத்துபோன்ற பல்வரிசை எங்கேபோச்சோ
    மூச்சுவிட  அவளிப்போ முனுகுகின்றாள்
    சுவையாக உணவளித்த அவளின்கைகள்
    சுவைப்பதற்கே முடியாமல் ஆகிப்போச்சு
    அவள்வாயில் ஊட்டிவிடும் ஆசைகொண்டேன்
    அதுவேயென் வாழ்வில் பேரின்பமாச்சு!

    ஓடியாடித்  திருந்தஅவள் ஓய்ந்தேவிட்டாள்
    உதவிக்கு வருவார்கள் யாருமில்லை
    தேடித்தேடி  நான்கண்ட  தேவியிப்போ
    செய்திகேட்கும் செவிப்புலனை இழந்தேவிட்டாள்
    வாடிவிட்ட  நிலையினிலும்  வடிவாயுள்ளாள்
    வயிறார உண்பதற்கு இயலாதுள்ளாள்
    என்றாலும் உணவதனை ஊட்டும்போது
    என்வாழ்வு இனிக்குதென்று எண்ணுகின்றேன்!

    பிள்ளைகளோ  எம்மைவிட்டுப்  பிரிந்தேவிட்டார்
    தொல்லைகளே  என்றுவெண்ணி  தூரவுள்ளார்
    நல்லபிள்ளை என்றேநாம் வளர்த்தேவிட்டோம்
    நட்டத்தை எங்களுக்கே தந்தேவிட்டார்
    அல்லல்தரும் வயோதிபத்தை அடைந்தேவிட்டோம்
    ஆனாலும் அருகருகே இருக்கின்றோமே
    எல்லையிலாத் துன்பமெமை இறுக்கிட்டாலும்
    இணைபிரியா இருப்பது பேரின்பமன்றோ ! 

                    
    Share
  • சொற்களும் நானும்

    முனைவர் வே.சுமதி

    சொற்களில் குவிந்திருக்கின்றன
    ஓராயிரம் பொறாமையின் வன்மம்….
    சொற்களில் மறைக்கப்பட்டிருக்கின்றன
    எண்ணற்ற பாதைகள்….
    சொற்களில் ஊடுருவியிருக்கின்றன
    ஆயிரக்கணக்கான எதிர்பார்ப்புகள்….
    சொற்களில் வரையப்படுகின்றன
    கோடிக்கானக்கான மனிதர்கள்…
    சொற்கள் பிரதிபலிக்கின்றன
    எண்ணற்ற இருப்புகளை…
    சொற்கள் பெருமிதம் கொள்கிறது
    தனக்கான தனிமைகளில்…
    சொற்கள் வாழ்கிறன
    அர்த்தமுள்ள வாழ்க்கையில்….
    யாருமற்ற நேரங்களில்,
    தனக்கான இருப்பைத் தேடியே,
    நிசப்தமாகிறது
    சொற்கள்….

    Share