கனியன்பாலன்

அ.மாமூலனாரும் செருப்பாழிப்போரும் செங்குட்டுவனும்

     .

       தென்னிந்தியக் கல்வெட்டுகள்(South Indian Inscription) என்கிற நூல்  தொகுதிகளை மிகக் கவனமாக தொகுத்தளித்த புகழ் பெற்ற வரலாற்று அறிஞர் உல்ட்ச்(Hultzsch)  என்பவர், முதலாம் கயவாகு மன்னனும், சேரன் செங்குட்டுவனும் ஒரே காலத்தவர் என்கிற கருத்தை ஏற்கவில்லை(1). மேலும் மகாவம்சம் குறிப்பிடும் கயவாகுவின் காலம், அந்தக் கயவாகு சேரன் செங்குட்டுவன் கண்ணகிக்காக நடத்திய விழாவில் கலந்து கொண்டான் என்கிற செய்தி ஆகிய இரண்டுமே அடிப்படை வரலாற்றுச் சான்றுகள் அற்றவை. அவை வரலாற்றுக்கு பொருந்தாதவை. ஆகவே, அவைகளைக் கொண்டு தமிழக வரலாற்றின் காலங்களைக் கணிப்பது முறையான காலக்கணிப்பாக இருக்காது. ஆகவே இந்தியாவின் மேல் அலெக்சாந்தர் படையெடுப்பு நடத்திய காலத்தையும், மாமூலனார் பாடல்களில் குறிப்பிடப்பட்டுள்ள மகதத்தில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களையும், அதன்பின் தமிழகத்தின்மேல் மேற்கொள்ளப்பட்ட மௌரியப் படையெடுப்புக்காலத்தையும், அசோகன் கல்வெட்டையும் கணக்கில்கொண்டு, நமது தமிழக வரலாற்றுக்கான காலம் கணிக்கப்பட்டு உறுதிப்படுத்தப் படவேண்டும்.  இவைகளின் மூலம் மட்டுமே  நமது தமிழக வரலாறு உலக வரலாற்றுக் காலத்தோடு இணைக்கப்பட்டு, ஒரு முறையான, நிலையான, உறுதியான காலவரையறையைக் கொண்ட வரலாறாக ஆகும்.

பழந்தமிழக வரலாற்றில் அசோகன் கல்வெட்டும் சம்பைக் கல்வெட்டும்:

       அதியமான் திருக்கோவிலூர்ப் போரில் மலையமான் காரியை வென்ற போது, பரணர் அதியமானைப் பாடியுள்ளதாக ஔவையார் குறிப்பிடுகிறார். ஆகவே, பரணர் அதியமான் காலத்தவர் ஆகிறார். பரணர் சேரன் செங்குட்டுவனை, 5ஆம் பதிற்றுப்பத்திலும், புறம்-212, 369;  அகம்-376 ஆகிய மூன்று பாடல்களிலும் பாடியுள்ளார். ஆகவே, சேரன் செங்குட்டுவன் பரணர் காலத்தவனாகிறான். இவைகளின் காரணமாக சேரன் செங்குட்டுவன், அதியமான், பரணர் ஆகியோர் சம காலத்தவர் ஆகின்றனர்.

     அதியமானின் சம்பைக் கல்வெட்டில் உள்ள “சதியபுதோ” என்கிற சொல்லும் அசோகர் கல்வெட்டில் உள்ள “சதியபுதோ” என்கிற சொல்லும் ஒரே மாதிரி எழுதப்பட்டு, இரண்டும் அதியமான்களை அவர்களது பரம்பரையைத் தான் குறிப்பிடுகிறது. பண்டைய எழுத்தியல்- கல்வெட்டியல்(palaeography – orthography) படி, அசோகரின் கல்வெட்டில் இருக்கும் எழுத்துக்கள் போன்றே சம்பை கல்வெட்டிலும் இருப்பது என்பது இரண்டும் ஒரே காலத்தைச் சேர்ந்தவை என்பதை உறுதி செய்கிறது.  அசோகர் கல்வெட்டின் காலம் கி.மு.256 ஆகும். ஆகவே சம்பைக் கல்வெட்டின் காலம் தொல்லியல் அறிஞர் நடன காசிநாதன் அவர்களின் கருத்துப்படி கி.மு. 270-230 ஆகும். அதாவது அசோகன் கல்வெட்டுக்குச் சில வருடங்கள் முன்பின் என்பதே அதன் கருத்தாகும்(2). நாம் அதனை கி.மு. 3ஆம் நூற்றாண்டு எனலாம். அசோகன் கல்வெட்டு, சம்பை கல்வெட்டு ஆகியவற்றின் காலம் கி.மு. 3ஆம் நூற்றாண்டு என்பதால் சம்பைக் கல்வெட்டை வெட்டிய அதியமான், அதியமானைப்பாடிய பரணர், பரணர் பாடிய சேரன் செங்குட்டுவன் ஆகிய மூவரின் காலமும் கி.மு. 3ஆம் நூற்றாண்டு என உறுதிப்படுத்தலாம்.

     ‘பழந்தமிழ்ச்சமுதாயமும் வரலாறும்’ என்ற எனது நூலில் அசோகன் கல்வெட்டு, சம்பை கல்வெட்டு ஆகியன போக, புகளூர் கல்வெட்டு; மாமூலனாரின் நந்தர்கள், மௌரியர்கள், சேர, சோழ வேந்தர்கள் குறித்த பாடல்கள்; அதியமான், சேரன் செங்குட்டுவன் குறித்த பரணரின் பாடல்கள்; பாலைபாடிய பெருங்கடுங்கோ, மாமூலனார் ஆகியவர்களின் நன்னன் குறித்த பாடல்கள்; தலைவடிவப் பெருவழுதி நாணயங்கள்; மாக்கோதை, குட்டுவன் கோதை நாணயங்கள்; ஆகியவைகளைக் கொண்டு செங்குட்டுவனின் காலம் கி. மு. 3ஆம் நூற்றாண்டு என்பது பல தளங்களில், பல கோணங்களில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது(3).

மகாவம்ச நூலும் செங்குட்டுவனின் காலமும்:

     வில்கெம் கெய்கர் அவர்களின் மகாவம்ச நூலின்படி புத்தர் இறந்தபின் 248 ஆண்டுகள் கழித்து அசோகர் முடிசூட்டிக்கொண்டார்(4). மகாவம்ச நூலின் ஆண்டுப்பட்டியல் கி.மு. 483இல் இருந்து தொடங்குகிறது. ஆனால் கி.மு. 483 என்பது எந்தவிதத்தில் இந்திய அல்லது உலக வரலாற்றுக் காலவரையரையோடு இணைக்கப்பட்டது என்பதற்கான அடிப்படைச் சான்றுகள் எதுவும் அந்த நூலில் தரப்படவில்லை. அந்த நூல் தந்துள்ள மன்னர்களுடைய ஆட்சி ஆண்டுகளை அடிப்படையாகக் கொண்டுதான் கயவாகுவின் காலம் சொல்லப்பட்டுள்ளது. கி.மு. 483இல் தொடங்கும் பட்டியல் கி.பி. 352இல் முடிகிறது. அநுராதபுரத்தில் கிட்டத்தட்ட சுமார் 835 ஆண்டுகள் ஆட்சி செய்த 61 மன்னர்களை அது குறிப்பிடுகிறது. இந்த ஆண்டுகள் ஆரம்பம் முதல் இடையில் கூட உலக, இந்திய காலவரையரைகளோடு இணைக்கப்படவில்லை-(5).

     புகழ்பெற்ற வரலாற்று ஆசிரியர் வின்சுடன் சுமித் அவர்கள் கி.மு. 483 முதல் கி.பி. 124 வரையான, 607 வருடகால மகாவம்ச நூலின் வரலாற்றை,  அதன் ஆண்டுகளை முழுமையாக நிராகரித்துள்ளார்.  தேவநாம்பியதீச என்கிற மன்னன் சார்ந்த 10 அத்தியாயங்களை “அபத்தங்களால் முடையப்பட்ட வேலைப்பாடு” என்கிறார் அவர்-(6). அதனால்தான் புகழ் பெற்ற வரலாற்று அறிஞர் கூல்ட்ச்(Hultzsch) அவர்கள் சேரன் செங்குட்டுவன், கயவாகுவின் காலத்தைச் சேர்ந்தவன் என்பதை ஏற்றுக்கொள்ளவில்லை. இந்நூல், எந்த வெளிநாடும் செல்லாத புத்தர் மூன்றுமுறை இலங்கை வந்ததாகக் கதை சொல்லுகிறது. தனது 99 சகோதரர்களைக்கொன்றபின் அசோகர் ஆட்சிக்கு வந்தார் என்கிறது-(7). புத்தசமயத்துக்கு மாறுவதற்கு முன் அசோகர் தீயவராக, கொடூரமானவராக இருந்தார் என அந்நூல் சொல்வதற்கு வரலாற்றுச் சான்றுகள் எதுவும் இல்லை என்கிறார் வின்சுடன் சுமித்(8).

     பல அறிஞர்களின் கருத்துப்படி அசோகர் இலங்கை பற்றித் தனது கல்வெட்டில் எதுவும் சொல்லவில்லை. அசோகருக்கு மகிந்த, சங்கமித்ர என்கிற மகனோ, மகளோ இருக்கவில்லை. அவர்கள் இலங்கை போகவும் இல்லை. மகிந்த அவருடைய தம்பி ஆவார். அவர்தான்  தமிழகம் வந்தார். இலங்கை போனார். தமிழ்நாட்டில் இருந்துதான் புத்தமத நிறுவனங்கள் இலங்கைக்குப் பரவின. இவை வின்சுடன் சுமித் அவர்கள் தனது அசோகர் என்கிற நூலில் தரும் தரவுகளாகும்-(9). மகாவம்ச நூல் என்பது பௌத்தமத நம்பிக்கையாளர்கள் ஓதுவதற்கும், நினைவில் வைத்துக் கொள்ளவும், அவர்களுக்கு இன்பமும், பரவசமும் ஊட்டவும் எழுதப்பட்டது என்கிறார் அதனை கி.பி. 6ஆம் நூற்றாண்டு வாக்கில் எழுதிய ‘மகாநாம’ என்கிற புத்த பிக்கு. அந்நூல் புத்த மடாலங்களின் அத்தகதா கதைகளையும், புத்தமத மடாலயங்களுக்கு உதவிய மன்னர்கள், அவர்களின் உதவிகள் பற்றிய தரவுகள்  முதலியனவற்றையும் கொண்ட  கி.பி. 3ஆம் நூற்றாண்டு தீபவம்ச நூலைப் புதுப்பித்து எழுதப்பட்டதாகும்-(10).

         ஆகவே எந்தவித அடிப்படைச் சான்றுகளும் இல்லாத, கி.பி. 6ஆம் நூற்றாண்டு வாக்கில், மதக் காரணங்களுக்காக எழுதப்பட்ட, இலங்கையின் பௌத்தமத நூலான மகாவம்சம், இடைச் செருகல்கள் நிறைந்த சிலப்பதிகாரக் காப்பியப் பதிகம் ஆகியவைகளைக் கொண்டு நிர்ணயிக்கப்பட்ட, சேரன் செங்குட்டுவனின்காலம் கி.பி. 2ஆம் நூற்றாண்டு என்பதைவிட, சங்க இலக்கியங்கள் தரும் அடிப்படைச் சான்றுகளைக் கொண்டும் உலக வரலாற்றுக்காலத்தோடு இணைக்கப்பட்ட, அசோகன் கல்வெட்டு, புகளூர் கல்வெட்டு, சம்பைக் கல்வெட்டு, தலைவடிவப்பெருவழுதி நாணயங்கள், மாக்கோதை, குட்டுவன் கோதை நாணயங்கள் போன்றவைகளின் காலத்தைக் கொண்டும் கணிக்கப்பட்ட சேரன் செங்குட்டுவனின் காலம் கி.மு. 3ஆம் நூற்றாண்டு என்பதே பல கோணங்களிலும் பொருந்திப்போகிறது. இரண்டு காலங்களுக்கும் இடையே கிட்டத்தட்ட 400 ஆண்டுகள் இடைவெளி இருக்கிறது என்பதையும், சங்க இலக்கியம் இயற்கையானது, நம்பத்தகுந்தது என்பதையும், பதிற்றுப்பத்து கூறும் சேர வேந்தர்களும், பிற சங்க இலக்கியங்கள் கூறும் பல தமிழக வேந்தர்களும் வரலாற்றில் இருந்தவர்கள் என்பதையும் அகழாய்வுகளும், கல்வெட்டுகளும், நாணயங்களும் இன்ன பிற தரவுகளும் உறுதி செய்துள்ளன என்பதையும் கருத்தில்கொண்டு சேரன் செங்குட்டுவனின் காலம் கி.மு. 3ஆம் நூற்றாண்டு என்பதே முறையானதாகும்.

மாமூலனாரும் செருப்பாழிப்போரும்:

     சங்ககாலப் புலவர்களும், பாணர்களும் வேந்தன் இருக்குமிடம் சென்று, அவனை நேரடியாகப் புகழ்ந்து பாடி பரிசுகள் பெற்று வருவதே சங்ககால வழக்கமாக இருந்து வந்துள்ளது. இதனால் தங்கள் காலகட்டத்துக்கு முந்தைய புரவலர்களைப் பாடும் பழக்கம் அவர்களிடத்தில் இருக்கவில்லை. புறப் பாடல்களில் மட்டுமின்றி அகப்பாடல்களிலும் இதே நிலை தான் இருந்து வந்துள்ளது. முந்தைய காலகட்டப் புரவலர்களை மட்டுமல்ல, முந்தைய காலகட்ட நிகழ்வுகளையும் அவர்கள் பெரும்பாலும் பாடுவதில்லை. புரவலர்களை நேரடியாக அவர்களின் இடத்திற்கே சென்று சந்தித்து அவர்களிடம் நேரடியாகத் தங்கள் புகழ்ந்துரைகளைப் பாடல்களாகப் பாடிப் பரிசில்பெறுவது என்பது பாணர், புலவர்களின் மிகப் பழமையான, தொன்று தொட்டு இருந்து வருகிற ஒரு மரபாகும். அதனால் தங்கள் காலத்துக்கு  முந்தையவர்களை, இறந்து மறைந்து போன பழைய தலைமுறைப் புரவலர்களை அல்லது தலைவர்களைப் பாடும் பழக்கம் என்பது சங்ககாலப் புலவர்களிடம் இருக்கவில்லை.

        சான்றாகக் கபிலர் பாரியிடமும், ஔவையார் அதியமானிடமும், பரணர் செங்குட்டுவனிடமும், அரிசில்கிழார் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறையிடமும், நக்கீரர் தலையாலங்கானத்து செருவென்ற நெடுஞ்செழியனிடமும் நேரடியாகச் சென்று தான் பாடிப் பரிசில் பெற்றார்கள் என்பதை சங்க இலக்கியங்கள் உறுதிப்படுத்துகின்றன. பொதுவாகச் சங்க காலப் புலவர்கள் பழைய தலைமுறைப் புரவலர்களைப் பாடவில்லை என்பதற்குச் சில சான்றுகளைக் கீழே காண்போம்.

மாமூலனார்:

      மாமூலனார் தனது இளவயதில் உதியஞ் சேரலாதனைப் பாடினார். பின் அவனது மகனான இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனைப் பாடினார். பின், இந்த நெடுஞ்சேரலாதனுடன் போரிட்ட சோழன் முதல் கரிகாலனைப் பாடினார். ஆனால் இவர் சேர வேந்தர்களில் உதியஞ்சேரலாதனுக்கு முந்தைய தலைமுறையைச் சேர்ந்த யாரையும் பாடவில்லை. தனது காலத்திய மகத நாட்டு நந்தர்களின் செல்வ வளம் குறித்துப் பாடியுள்ளார். நந்தர்களுக்குப் பின் மகத ஆட்சிக்கு வந்த மௌரியர்களின் தமிழகப் படையெடுப்பு குறித்துப் பாடியுள்ளார். மாமூலனார் காலத்தில் நடந்த நிகழ்வுகள்தான், இவர் பாடல்களின் பாடுபொருளாக இருந்தன. தனக்கு முந்தைய காலத்தைச் சேர்ந்த பண்டைய நிகழ்வுகள் குறித்து இவர் எதுவும் பாடவில்லை.

பரணர்:

     மாமூலனார் முதியவராக இருந்த போது இளையவராக இருந்த, மிக நீண்ட காலம் வாழ்ந்த பரணர், மிக அதிகமான வரலாற்றுக் குறிப்புகளைத் தந்தவர். இவர் தனது இளவயதில் மாமூலனார் பாடிய முதல் கரிகாலனைப் பாடியுள்ளார். பின் அவனது மகனான உருவப்பஃறேர் இளஞ்சேட் சென்னியைப் பாடியுள்ளார். முதல் கரிகாலனுக்குப் பிந்தைய சேரன் செங்குட்டுவனைப் பாடியுள்ளார். ஆனால் சேரன் செங்குட்டுவனுக்கு முந்தைய மாமூலனரால் பாடப்பட்ட இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனையோ, உதியஞ்சேரலாதனையோ அவர் பாடவில்லை. அதுபோன்றே, முதல் கரிகாலனுக்கு முந்தைய சோழ வேந்தர்களான செருப்பாழி எறிந்த இளஞ்சேட்சென்னியையோ அல்லது பெரும்பூட்சென்னியையோ அவர் பாடவில்லை.

     பாண்டியர்களில் நம்பி நெடுஞ்செழியனையும் அவனுக்குப் பின் வந்த பசும்பொன் பாண்டியனையும் பாடினாரே ஒழிய அவர்களுக்கு முந்தைய  முது குடுமிப் பெருவழுதி மற்றும் கருங்கை ஒள்வாள் பெரும் பெயர் வழுதி போன்ற பாண்டிய வேந்தர்களைப் பரணர் பாடவில்லை. இவர்களைப் போன்று தான் பெரும்பாலான புலவர்கள் தங்கள் கால கட்ட நிகழ்காலப் புரவலர்களை, நிகழ்கால நிகழ்வுகளை மட்டுமே பாடியுள்ளனர். பரணர் தமது காலத்துக்குச் சற்று முன்பு நடந்த மௌரியப் படையெடுப்பு குறித்துக் கூடப் பாடவில்லை. ஆகவே பொதுவாக நிகழ்கால நிகழ்வுகளை, நிகழ்காலப் புரவலர்களை மட்டுமே சங்க காலப் புலவர்கள் பாடி உள்ளார்கள் என்பது வரலாற்றுக்கு மிகப்பெரிய அளவில் துணை செய்கிறது எனலாம். புலவர்கள் மற்றும் புரவலர்களின் காலத்தை உறுதிசெய்வதற்கு இது மிகப்பெரிய உதவியாக இருக்கிறது என்றால் அது மிகையாகாது.

பார்வை:

1.நீலகண்ட சாத்திரி, சோழர்கள், தமிழில் கே.வி. இராமன், புத்தகம்-1, நவம்பர்-2009, பக்: 4, 69.

2.. TAMILS HERITAGE – NATANA KASINATHAN, APRIL-2006, PAGE: 25-30.

3.பழந்தமிழ்ச் சமுதாயமும் வரலாறும், கணியன்பாலன், எதிர்வெளியீடு, சூன்-2016, பக்: 317-329

4.மகாவம்ச-சிங்களர்கதை, வில்கெம் கெய்கர், தமிழில் எசு.பொ. அவர்கள், அக்டோபர்-2009, பக்:36.

5.மகாவம்ச-சிங்களர்கதை, வில்கெம் கெய்கர், தமிழில் எசு.பொ. அவர்கள், அக்டோபர்-2009 பின்னிணைப்பு-அ.

6.மகாவம்ச-சிங்களர்கதை, வில்கெம் கெய்கர், தமிழில் எசு.பொ. அவர்கள், முன்னுரைப்பக்:28, அக்டோபர்-2009.

  1. “ “     பக்:36.

8.வின்சுடன் சுமித், அசோகர், இந்தியாவின் பௌத்தப்பேரரசர், 2009, பக்:21.

  1. “ “       பக்; 38-40.

10.மகாவம்ச-சிங்களர்கதை, வில்கெம் கெய்கர், தமிழில் எசு.பொ. அவர்கள்,  பக்:1; & முன்னுரைப்பக்: 20, 21,   அக்டோபர்-2009.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *