வேதா. இலங்காதிலகம். டென்மார்க். 28-6-2018

புலன்நுகர் எழுத்தெனும் விண்மீன் விதை
பலன் கருதி விழுந்து முளைத்து
நிலவாகி ஒளிரும்! எனதென்று மொழிந்தாலும்
வலங்கொள்ளுதல் உலகிற்காகவே என்பதுண்மை!
பலமுடை எழுத்துமொரு தீவிரவாதமே! துணிவுச்
சாராயம் அருந்தியவன் அச்சம் தெரியாமல்
ஊராண்மை செய்வான்! வாள் வீச்சாகவும்
தாராட்டும் தென்றலாகவுமவன்; தூரிகை சாமரமாகும்

பெருந்தெருவோ ஒற்றையடிப்பாதையோ எதுவானாலும் தானே
உருவாக்கி எழுத்துலா அமைப்பான். மண்ணிலடித்து
அரூபமாய்ப் பேரலை பிரமாணமிடுதல் போல
உருவம் தருகிறது மீண்டும் மீண்டுமெழுத்து
முருகு! மூழ்கும் பரிமாணமல்ல எழுத்து!
வண்ணத்திப் பூச்சிச் சிதறல், பூவனம்,
கண்ணிறையும் பெருமரத் தோப்பு, தவழுமலை
எண்ணிறைந்தவை எழுத்துறங்கும் இரகசியப் பொறிகள்.

சிற்பக்காடு, மூங்கில் வலயம், மைமல்,
அற்புதம் சமைக்கும் மழை வானம்,
பொற்புடை சோலை, மலர் பந்தல்
உற்சாகம் உற்பத்தியாக்கும் ஆனந்தத் தென்றல்,
அற்றைப் பொழுது மழைத்தூறலின்
சொக்கும் மண்ணின் மணம், கடையிடும்
பூக்கள் அனைத்தும் இதழ்கள் விரித்து
பாக்கள் உற்பத்திக்கும் ஊற்றுப் புதையல்.

தூக்கம் விழித்து இயற்கையில் மிதந்து
பா கட்ட வைக்கும் மனமெனும்
மொட்டை விரிக்கும் எழுத்தாய் விழுந்திட
நித்திரை மரமேன் ஏற வேண்டும்!
பத்துவித பணிகளேன் செய்ய வேண்டும்!
எழுத்தென எழுதிக் கொண்டேயிருந்தால் என்ன!
தமிழ் மேகங்கள் பொங்கும் மனவானம்
வெறுமையின்றி வார்த்தைகள் வெடி கொளுத்தலாமே!

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *