Blog

  • படமும், பாடலும்!

     

    குறும் பா….!
    ———————

    மூக்கறுந்த சூர்பணகை ரோஷம்
    நாக்கிருந்தும் தடுக்காதோர் மோசம்
    மானானான் மாரீசன்
    மண்ணானான் லங்கேசன்
    காகுத்தன்(ராமர்) கதை இதிகாசம்….கிரேசி மோகன்….!

     

    மாலை மயக்கம்….!
    ———————————

    சூரி நாகம்மாளின் “ஸ்ரீ ரமணாஸ்ரம லேகுலு”….

    “வேந்தன் இராமனே வேதாந்தி உன்னுள்ளே,
    சாந்தியே சீதையாம், சோகவன-மாந்தரே,
    மானார்வம் மாரீசம், நானார்வம் கொள்வோம்நாம்,
    சோணா சலராமன் சொல்”….கிரேசி மோகன்….

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

     

     

    KRISHNA FOR TODAY….!
    ——————————————————

    தாய்க்குப் பணிந்தன்று தாம்பில் புகுந்துமரம்
    சாய்க்க உரலிழுத்த சாகஸா – வாய்க்குள்
    மாதா மகிழ மகோன்னதம் காட்டிய
    கீதா உபதேசா காப்பு….!

    கோலத்தால் காலிட்டு கைகூப்பி கும்பிட்டு
    ஞாலத்தை உண்டுமிழ்ந்த நாதனுக்காய் -தாலத்தில்
    பக்ஷணத்தை ஏந்திநின்றால் பக்தராதைக்(கு) ஈடாக
    தக்ஷிணையாய் கேட்டான் தபஸ்….!

    காணவனைக் காற்றில் கலந்துவரும் கீதத்தில்
    நானென(து) இல்லாத மோனத்தில் -தேனளவு
    பார்க்கும் மலர்வண்டின் போக்கில், இனப்பெருக்கம்
    கோர்க்கும் குயுக்தியின் கண்….!

    ‘’அர்ஜுன விஷாத யோகம்’’….
    ——————————————————–

    எப்போது பார்த்தாலும் பசுவோடு வனவிஹாரியாய் விளையாடும்
    இந்தப் பையனால் புரவிகள் பூட்டிய போர்த் தேரை
    ஓட்ட முடியுமா….!இது அர்ஜுன சந்தேகம்….!

    ’’மாடோடு மாடாக மன்னார் குடிமைனர்
    கூடோடு(கூட ஓடு) கின்றானே கன்றிருக்கும் -காடதனில்,
    சோர்ந்தான் அருச்சுனன், சீராயர் சேய்க்குண்டோ
    தேர்க்குதிரை ஓட்டும் திறன்’’….கிரேசி மோகன்….!

    அன்பே எதுகையாய் ஆர்வமே மோனையாய்
    உன்பால் தளையற்ற உந்துதலால் -வெண்பாக்கள்
    பாடி அணுகுகிறேன் வேடிக்கைக்(கு) அல்லகண்ணா
    வாடிக்கை யாளனாக(ETERNAL CUSTOMER) வா….!

    Share
  • Conceive, Believe and Achieve your Goals

     Muthu G Mudaliar, MS, MBA, RFC

     

    WHAT are your goals for the future. Having a clear vision of a desirable future destination is a must. It also usually includes a time frame in which you are committed to make it real

    When we use our intuition to help ourselves achieve our long-term goals, one of the two things will happen:

    1. We get the results we want and achieve our goal or
    2. We learn the lessons that are required to ultimately reach our goal.

    The important thing to observe here is that you cannot really lo

     

    Clear vision of desirable future will allow your brain to get specific about identifying what stands in the way and forces you to create some higher capability and increase confidence.  It must be something you are very passionate and committed with enough time, efforts and resources.

     

    WHY you want it. You should do enough research to support your goals with lots of reasons.

    The economic failures after 9/11 and 2008 taught most of us that we are not protected by any one career or company. As we watched our friends and parents lose their jobs, we realized that we need to diversify our skill sets, multiple income sources and rely on ourselves.

    Ask yourself the following questions when Conflict begins?

    1. Are you happy with your life the way it is, or do you feel a calling for more control over your personal satisfaction and self-fulfillment?
    2. Would you be willing to trust that what feels intuitively right is really coming from a bigger perspective of who you really are.

     

    We hear success stories of the people who lost their job or wealth and took a chance to start their own company. If you Start your own company, you can control your career and your life. As an entrepreneur you will take steps do something on the side or full time with a big source of inspiration, creativity and liberating feeling. Learning how to listen to your intuition and invest in yourself to learn new knowledge is a must.

    The fear of Disapproval:

    1. One of the most powerful forces that keeps us from acting on what feels right is the fear of disapproval.
    2. If what you felt right were in conflict with getting that approval    we often chose to go for the approval rather than to be punished in some way. 

     

    Ask yourself these questions:

    1. Are you willing to trust and act on what you feel intuitively right and make few more mistakes in the process, if you know you will achieve your goals faster?
    2. How would you approach your life and work differently if you knew you could not lose?

     

    What is required to unlock the power is the right mind set and skills that all emerging entrepreneurs possess. 

    Learning how to listen to your intuition & being able to sense what feels intuitively right can be a  challenge.  

     

    You cannot control what is happening to you, but you will have more control on how to react to face the challenges and win. It requires courage to go from comfort zone into unknown territory. Proper habits and discipline will help you.

     

     

    WHAT you want is clear vision of desirable future will allow your brain to get specific about identifying what stands in the way and forces you to create some higher capability and increase confidence.  It must be something you are very passionate and committed with enough time , efforts.

    HOW to  achieve what you want from your experience and not discouraged by the fear of unknown.                            

    You will discover HOW If you commit enough time, effort and resources. Identify individuals who have already achieved WHAT you want and learn their habits, experience and achievements. You do not have to re-invent the wheels. Please read the books, watch videos from thought leaders like Brian Tracy and watch the Maximum Achievement Movie to Learn the 7 secrets of success.

    In spite of all your well-planned efforts and successful executions, you will face challenges and failures.   Emerging technology, government regulations etc. can cause Major disruptions to your target market. You can not control what is happening to you and your businesses, but you can control how to respond.

    4 PILLARS OF WEALTH: Money, Health, Happiness and Wisdom

    MONEY is something you earn from your profession, your investments and inheritance, It is essential that everyone has sufficient money to provide the food on the table, roof over your head, clothes to cover your body and make a living with a lifestyle you want. Divorces and suicides are common among wealthy. Money is not a requirement to nurture healthy and happy relationships. You also need wisdom to nurture happy relationships and manage money with trusted advisors.

    HEALTH is very important to enjoy wealth. You have to eat right, exercise regularly and have healthy habits. Abusing body with excessive simple pleasures and bad relationships can bring misery, sickness, disabilities and pre-mature death.

    HAPPYNESS can truly achieved only with loving relationship with your kids, spouse, parents and respect from your community of friends you have. Abusing money and authority can bring mistrust and misery.

    WISDOM is the most important pillar and more difficult one to achieve than all other pillars.

    Wisdom is to strike a proper balance in making money, maintain health and nurture relationships.

    Wisdom is to know that we have more control only on our efforts but not  in achieving desired results.

    Wisdom is to capitalize our talents, knowledge and strength to focus our efforts on tasks on hand.

    Wisdom is to know what we can change and what we cannot change given the challenges we face everyday.

    RETIREMENT PLANNING and SAFE-MONEY CONCEPTS.

    Let us take a critical look at the traps of traditional 401K, Pensions and IRA Plans. Traditional retirement plans are subject to ERISA Contribution limits, penalties, restrictions and stock market losses.

    Most persons love instant gratification of saving taxes by tax deferral on contributions today. But you are not saving any taxes and only deferring taxes and tax calculations. It is wise to pay $ 1 taxes today on contributions or seed instead of paying up to $ 10 in taxes on future retirement income or harvest.  Please browse the Website   http://livingbenefitsexperts.com/muthu  and watch videos & testimonials.

    Please click the links below to watch these videos to learn about Retirement and safe money concepts.

    Click the links be;ow ro watch Safe Money Concepts websites
    webprez.com/6913/51 Tax Free Retirement Income
    webprez.com/6913/50 Life Time Tax Strategy
    webprez.com/6913/44 Bank yourself to Wealth
    webprez.com/6913/31 Corporate Benefits for CEO & Key Executives.
    webprez.com/6913/69 Living Trust Benefits

     

    Share
  • படக்கவிதைப் போட்டி 168-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    கரத்தில் நீரெடுத்துச் சிரத்தையொடு வானரத்துக்கு ஊட்டும் மனித மாண்பைப் படமெடுத்து வந்திருப்பவர் திருமதி. சாந்தி மாரியப்பன். ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து இதனைப் படக்கவிதைப் போட்டிக்குத் தெரிவுசெய்து தந்திருப்பவர் திருமதி. இராமலக்ஷ்மி.  இவ்விரு பெண்மணிகளுக்கும் என் நன்றி!

    மன்னுயிர்கள் அனைத்தும் இன்பமாய் வாழ்வதற்கென்றே படைக்கப்பட்டது இப்புவி! இதில் கவிக்குலங்களும் விலக்காமோ? ஆதலால், ஒருவரை ஒருவர் அடுதலும் தொலைதலும் விடுத்து, ஆருயிர்க்கெல்லாம் அன்பு செயல் வேண்டும்!

    இந்நிழற்படத்திற்குப் பொருத்தமாய்க் கவியெழுதக் கவிஞர்கள் எழுக! கவிமழை பொழிக! என வாழ்த்தி அமைகின்றேன்!

    *****

    கானம் அழிந்ததால் அங்கு  மகிழ்வோடு வாழ்ந்த வானரங்கள் உணவுதேடி ஊரைநாடி வருகின்றன; இதனைத் தவிர்க்க, பல்லுயிர் ஓம்பும் பண்புகொண்ட மானுடன், காடுகளை அழியாது காக்கவேண்டும். கானுயிர்களின் வாட்டத்தைப் போக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றார் திரு. ஆ. செந்தில்குமார்.

    பல்லுயிரும் இன்புறத்தக்க பூவுலகம் படைத்திடுவோம்…
    பண்டு ஓர் காலத்தில்… வண்டு உலாவும் சோலையில்…
    கண்டு மாந்தர் மகிழ்ந்திட்டார்… மனிதன் போன்ற குரங்கினை…
    இன்று உள்ள நிலையிலே… கானம் யாவும் அழிந்ததால்…
    உண்டு வயிற்றை நிரப்பவே… அது ஊரைநாடி வருகுதே…!

    வானரத்தைக் கண்டதும்… மனம் மகிழ்ந்திடும் மாந்தரும்…
    மன முவந்து உணவினை… அதற் களித்து களித்திட்டார்…
    அன்பு மிக்க இச்செயல்… அதன் இயல்புகளைக் குலைத்திடும்…
    என்பதை உணர்ந்து நாம்… இயற்கைச் சூழல் பேணுவோம்…!

    மனிதன் என்ற பிறவியே… பரிணாம வளர்ச்சியின் உச்சமாம்…
    ஆன போதும் இவ்வுலகமே… அனைத் துயிர்க்கும் சொந்தமாம்…
    வன உயிரினங்கள் வாழவோர்… உரிய சூழல் செய்குவோம்…
    காணம் போன்று கானத்தைப்… போற்ற நாமும் கற்றிடுவோம்…!

    *****

    ”குரங்கைக் குறைவாய் எண்ணாதே மனிதா! அதற்கு(ம்) உணவளித்து உயர்வாய் இராமனாய்!” என்று தன் கவிவழியாய்ப் புவிக்கு மொழிகின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.

    குறைவில்லை…

    குரங்கி லிருந்து பிறந்ததாகக்
    கூறிக் கொள்ளும் மானிடனே,
    குரங்கைக் குறைவாய் எண்ணாதே
    குட்டியை வயிற்றில் கொள்வதைப்பார்,
    குரங்குச் சேட்டை பண்ணாமல்
    குரங்கைத் துணையாய்க் கொண்டிடவே
    குரங்குப் படைக்கும் உணவளித்துக்
    கொள்வாய் உயர்வு இராமனாகவே…!

    *****

    வானரத்தைப் போற்றித் தேனான பாக்கள் தந்த பாவலர்க்கு என் பாராட்டு!

    இனி இவ்வாரத்தின் சிறந்த கவிதை…

    படைப்பின் அதிசயம்..!

    உலகம் முழுதும் உயிர்கள் படைத்தான்
    உலகில் முதலாம் ஒருவனே இறைவன்.!

    அண்டவுயிர்க் கெல்லாம் அறிவைக் கொடுத்து
    ஆண்டுகள் பலவும் ஆயுளாய்க் கொடுத்தான்.!

    இயற்கை நமக்களித்த இன்ப வாழ்க்கை
    செயற்கை கலந்திடாது செலவழிக்கப் பழகு.!

    எத்தனை உயிர்கள் எண்ணிலா உயிர்கள்
    அத்தனும் கொடுத்தான் ஆசை கொண்டே.!

    அன்புடன் நடக்க அனைத்து உயிரிடம்
    அன்பாய்ப் பழகும் அரிய பிறவியாம்.!

    அதுதான் மனிதப் பிறவி
    இதுவே நமக்கு ஈடிலா அருளே.!

    குரங்கு முதல் குதிரைபோலப் பலவாக
    இரக்கமிகு ஜீவியை இவ்வுலகில் காணலாம்.!

    அப்பன் உதவுவார் அம்மா காப்பாளென…
    எப்பவுமே இவ்வுயிர் என்றும் வாழ்வதில்லை.!

    சனனம் முதற்கொண்டு சாவு வரையில்
    தனக்குதவி தன்கையில் தானென அறியும்.!

    மனிதன் போலிதற்கு மனமாசு இல்லை
    தனித்தன்மை கொண்டு தானாக வாழ்ந்திடும்.!

    விலங்கின வாழ்வை வைத்து மனிதனும்
    உலகில் தெரிந்துலவ எத்துணையோ உளது.!

    பரந்தமனம் படைத்த பகவனுமே
    மரணத்தால் மனத்தை அறிய வைத்தானே.!

    இயற்கை நமக்களித்த இன்பவாழ்வில் செயற்கைக் கலப்பைத் தவிர்த்து, மன மாசில்லாது, தன் கையே தனக்குதவி என வாழ்வும் விலங்குகள்போல் மனிதனும் புனிதனாய் வாழ வேண்டும் எனச் சாற்றியிருக்கும் இக்கவிதையின் ஆசிரியர் பெருவை திரு. பார்த்தசாரதியை இவ்வாரத்தின் சிறந்த கவிஞராய் அறிவித்துப் போற்றுகின்றேன். இக்கவிதையே அல்லாது மந்தியையும் மனிதனின் புந்தியையும் (புத்தி) ஒப்பிட்டும், மந்தியினத்தையும் அதனைத் தோழனாய் ஏற்ற சுந்தர ராமனை ஏத்தியும் மற்றுமிரு வெண்பாக்களை இயற்றியுள்ள அவருடைய கவி ஆர்வத்தையும் பாராட்டுகின்றேன். 

     

     

     

    Share
  • ’’காய நிர்மலேசர்’’….!

    ஆத்தூர் சிவன் கோயில் சொத்து ‘’காய நிர்மலேசர்’’…ஏனோ அருணாசலம் நினைவுக்கு வந்தார்….ஆத்தூர் மோகனுடன்(நிர்வாகி) பேசியபோது சேலத்தை சுற்றியுள்ள பஞ்ச பூத ஸ்தலங்களில் ‘’காய நிர்மலேசர்’’ கோயில் அருணை போன்று அக்கினி ஸ்தலம் என்று குறிப்பிட்டார்…அம்பாள் அகிலாண்ட வல்லி(அருணை உண்ணா முலை அம்மைக்கு சமானம்) சமேத காய நிர்மலேசரைத் துதித்தோம்….!கோயில் குருக்கள் நாடகத்திற்கு வந்து, காய நிமலேசர் ரக்‌ஷையைத் தாமே கட்டிவிட்டு பிரசாதம் கொடுத்தார்….!

    ”காய(மேனி) நிருமலேசா காய மிதைவெங்
    காயம்(உரித்தால் உள்ளே ஒன்றும் இலாது)ஆக் காது கருணைகொள் :-தூயத்தீ-
    ஜோதி வடிவான சம்புவே, சங்கரா
    ஆதிஅகி லாண்டோய் அருள்’’….கிரேசி மோகன்….!

    Share
  • வெல்லும் சொல்!

    பெருவை பார்த்தசாரதி

    வெல்லும் சொல்கொண்ட வார்த்தையை வைத்து
    =====வியக்கின்ற வகையிலே கவிதை புனைபவருளர்.!
    சொல்வீச்சால் பார்வையாளரைச் சொக்க வைத்துச்
    =====சிந்தனையைச் சிறை வைக்கும் சொற்பெருக்கருளர்.!
    இல்பொருளில் எதையோ பேசிநம்மை எழவிடாமல்
    =====இருக்கை யிலமரச்செயும் வித்தை தெரிந்தவருமுளர்.!
    எல்லாமும் அறிந்த எத்தனையோ அறிஞர்களை
    =====ஈந்ததுதான் பெருமையெந்தன் தாய் நாட்டுக்கேயாம்.!

    சொல்லாடல் தெரிந்ததால்தான் இன்றும் கம்பனும்
    =====வள்ளுவனும் இளங்கோவும் வாழ்கிறான் என்றுமே.!
    சொல்லுக்கு வித்தகனாம் மஹாகவி பாரதியும்தன்
    =====சொல்வன்மையால் சுதந்திர தாகமெழச் செய்தான்.!
    நெல்மணிகளைத் தாங்கி நெற்கதிர் தாழ்வதுபோல்
    =====நல்லதைத் தாழ்பணிந்துச் சொன்னாள் ஒளவையும்,!
    நல்லகாலம் பிறப்பதற்கு நாம்வழுவ வேண்டியதை
    =====நாலடியிலடக்கியது நாலடியாரின் வெல்லும் சொல்.!

    வெல்லும் வாள்வீச்சுக்கு இணையாம்..சொல்லுமே
    =====வள்ளுவன் சொல்வன்மை உலகையே யாள்கிறது.!
    வல்லமைச் சொற்றொடரால் எழுந்த காப்பியமே
    =====வலிமை கொண்ட மாபாரதமும் இராமாயணமும்.!
    வில்லாளனின் சரமழைபோல் வெல்லும் சொல்லால்
    =====விழுந்து வாக்கியமாகியது வீழாதின்றும் வாழ்கிறது.!
    சொல்லாட்சி மிக்க தமிழிலக்கியங்கள் தருமின்பம்
    =====சுரங்கம்போல் தோண்டத் தோண்டக் கிடைக்கும்.!
    =============================================
    நன்றி தினமணி கவிதைமணி:: 11=06=2018
    நன்றி:: கூகிள் இமேஜ்

    Share
  • உதவிநிற்கும் என உணர்வோம் !


    (எம் . ஜெயராமசர்மா ….. மெல்பேண் …. அவுஸ்திரேலியா)

    இந்துமதம்  பெளத்தமதம்  இஸ்லாமொடு  கிறீஸ்தவமும்
    வந்திங்கு  பலவற்றை வழங்கியே இருக்கிறது
    சொந்தமெனக் கொண்டும் பலர்சுகம் காணாநிலையினிலே
    வெந்துவெந்து உழலுகிறார் வேதனையால் வாழ்வினிலே
    எந்தமதம் பெரியமதம் எந்தமதம் சிறந்தமதம்
    என்றெண்ணிப் பலபோர்கள் எங்குமே நடக்கிறது 
    வந்தமைந்த மதமுரைத்த மனுநீதி யாவுமிங்கே
    மதம்பிடித்தோர் கைகாலே  மடிந்துகொண்டே போகிறது !

    களவெடுக்கப் பொய்யுரைக்க எம்மதமும் சொன்னதில்லை
    கற்பழிக்கக் கொலைசெய்ய எம்மதமும் விரும்பவில்லை
    போட்டிபோட்டுப் பொருள்பறிக்க எம்மதமும் காட்டவில்லை
    பொறாமைகொண்டு பொசுக்குவென்று எம்மதம் இயம்பவில்லை
    வீட்டுநலன் நாட்டுநலன் விலத்திநிற்க வேண்டுமென்று
    நாட்டிலுள்ள மதமேதும் சொன்னதுண்டா எண்ணிடுவீர்
    காட்டுத்தனம் மிகுந்துநிற்கும் கயமைக்குணம் உடையோரால்
    கண்ணியமாம் மதமனைத்தும் காணாமல் போகிறதே  !

    ஓடுகின்ற உதிரமதில் ஒழுகுகின்ற கண்ணீரில்
    தேடித்தான் பார்த்தாலும் தெரிந்திடுமா வேற்றுமைகள்
    நாடுபல இருந்தாலும் நாகரிகம் பலவிருந்தும்
    வாழுகின்ற மக்களெலாம் மகத்தான உயிர்களன்றோ
    யாதுமே ஊர்களென்றும் யாவருமே கேளிரென்றும்
    தீதகற்றும் உண்மைதனை செவிமடுக்க மறந்தோமே
    வாழுகின்ற வாழ்வுதனை வண்ணமுற வாழ்வதற்கு
    ஓதிநிற்கும் மதமனைத்தும் உதவிநிற்கும் எனவுணர்வோம் ! 

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    180709 Bee of Brindavan A4 Canson 300 gsm lr

     

    உண்டாகி உண்டுமிழுந்து குண்டாகி, வேதக்கற்
    கண்டாகி, வேதாந்த சிண்டாகி -தண்டாகி
    செண்டாகி, முண்டகத்து வண்டாகி ஜீவான்மா
    ரெண்டாகி வந்துபோகும் பண்டு(காலதேசவர்த்தமானம் கடந்த வஸ்து கண்ணனே)….

    வண்டரி(வண்டு அரி) யென்றரி யாமலே வந்திரு
    புண்டரி காட்ஷத்தைப் பார்க்கின்ற -பண்டரி
    விட்டலா செங்கலை விட்டுவா வெவ்வினை
    கொட்டுதே தேளாய்க் கடுத்து….கிரேசி மோகன்….!

    ‘பிருந்தா வனத்து கருந்தா மரை(றை)யே
    பறந்த தினமென்றும் போற்றி -அருந்திட
    மாலை அழைக்கும். மகரந்த பூக்களெலாம்
    வேலை(கடல்) படுத்தவண்டே வா’’….!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    180707 Yashoda Krishna 10×14 (26x36cms) white and white charcoal on black paper (Arches front) lr

    ”கட்டி அணைக்கின்றாள் .கண்ணிநுண் தாம்பாலே
    கட்டிய மாற்றாந்தாய் கண்ணனை: -ஒட்டி
    உறவாடும் கண்ணபிரான் ஓரிரவில் மஞ்ஞை(மயில்)
    இறகுடைய விஷ்ணு இவர்’’…..கிரேசி மோகன்….!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    180708 Vishwaroopa -DWA A4 Canson 300gsm 600dpi lr

    ’’நானளித்த ஞானக்கண் ணால்நன்கு பார்பார்த்தா
    ஊனக்கண் வாய்த்த(து)உன் ஊழ்வினையே -பூனக்கண்
    பொத்தினால் பூலோகம் போகுமோ பார்த்தனே
    இத்தரைபா ரம்நாம் இணைப்பு’’….கிரேசி மோகன்….!

    Share
  • படக்கவிதைப் போட்டி (169)

    பவள சங்கரி

    அன்பிற்கினிய நண்பர்களே!

    வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

    கீதா மதிவாணன் எடுத்த இந்தப்படத்தை திருமதி ராமலஷ்மி ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து போட்டிக்காகத் தேர்ந்தெடுத்து வழங்கியிருக்கிறார்கள். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள், நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (14.06.2018) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

    ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்

    Share
  • நலம் .. நலமறிய ஆவல் – 115

    நிர்மலா ராகவன்

    மென்மை பலகீனமா?

    அந்த வகுப்பில் ஆசிரியரின் குரல் ஓங்கி ஒலித்துக்கொண்டிருந்தது.

    “இவன் கவனிக்காது, தப்பு தப்பாகப் பண்ணுகிறான். அடிக்கலாமா?” என்று அவர் வகுப்பை விளையாட்டாகக் கேட்க, “அடியுங்கள், மாஸ்டர்!” என்று எல்லாக் குரல்களும் ஒருங்கே ஒலித்தன. தன் கையால் மாணவனது பிட்டத்தில் பயிற்சியாளர் ஓங்கித் தட்டுவதுதான் தண்டனை.

    டேக் வான் டோ என்ற கொரியா நாட்டுத் தற்காப்புக்கலை போதிக்கும் அந்த இடத்தில் பன்னிரண்டு வயதுக்குட்பட்ட சிறுவர்களும் சிறுமிகளும் இருந்தார்கள்.

    நாளை அவர்களுக்கும் அடி விழலாம். இருந்தாலும், சகமாணவன் ஒருவன் தண்டனை பெறுவதைப் பார்க்கும்போது ஒருவித உற்சாகம்! `நாம் தப்ப வேண்டும்,’ என்ற முனைப்பும் எழும். இந்த மனப்போக்கைதானே பயிற்சியாளரும் எதிர்பார்த்தார்!

    இப்படிப் பல வருடங்கள் பயின்ற மாணவ மாணவிகளை நான் சந்தித்தபோது, அவர்கள் பிற உயிர்களிடம் மிக அன்பாக இருப்பதையும், சக மனிதர்களிடம் மரியாதையாகப் பழகுவதையும் கவனித்தேன். பிறருடைய உணர்வுகளைப் புரிந்துகொள்கிறார்கள்.

    “உங்களால் எந்தச் சூழ்நிலையிலும் எப்படி இவ்வளவு அமைதியாக, மென்மையாக இருக்க முடிகிறது?” என்று அப்படிப்பட்ட ஓர் இளைஞனிடம் கேட்டேன்.

    “தற்காப்புக்கலை பயின்றால் ஒருவித அமைதி ஏற்பட்டுவிடுகிறது. தியானம் செய்ததுபோல் இருக்கும்,” என்ற பதில் வந்தது.

    இன்னொருவர் கூறினார்: “குருவைப் பொறுத்துத்தான் எங்கள் குணமும் அமைகிறது. எங்களைப் பயில்வித்தவர் நாங்கள் என்ன செய்தாலும் அமைதியை இழக்காதவர். ஆனால், கண்டிப்பானவர். எங்கள் ஆற்றலைத் தவறாகப் பயன்படுத்தக்கூடாது என்று போதித்திருந்தார்”.

    இவர்கள் அதிர்ந்து பேசுவதும் கிடையாது. அளந்துதான் பேசுவார்கள். மொத்தத்தில், அடி, உதை, குத்து என்று வன்முறையில் தேர்ச்சி பெற்றிருந்தாலும், மென்மையானவர்களாக இருந்தார்கள். மென்மையில்தான் வலிமையும் அடங்கியிருக்கிறது என்பதைப் புரிந்துகொண்டிருப்பவர்கள் இவர்கள்.

    பொதுவாகவே, ஆண்கள் வீரமாக இருப்பதாகக் காட்டிக்கொள்வதென்றால், உரக்கப் பேசுவது, எதற்கும் ஆத்திரப்படுவது என்று என்ற எண்ணம்தான் எவருக்கும். அதை நம்பி, இவர்களிடம் மோதும் ஆண்கள் விரைவில் பயந்து விலகிவிடுவார்கள்.

    உன்னிடமே மென்மை காட்டு

    மனிதர்களிடமோ, பூனை, நாய் போன்ற வளர்ப்புப் பிராணிகளிடமோ கருணையும் மென்மையும் காட்டுமுன் நம்மிடமே அப்படி நடந்துகொள்ளவேண்டாமா?

    ஒரு சிறு தவறு செய்துவிட்டாலும், நம்மேலேயே ஆத்திரமோ, எரிச்சலோ வந்தால், மென்மை எங்கிருந்து வரும்? `நம்மால் இயன்றது இவ்வளவுதான்!’ என்று குறைகளுடன் நம்மை ஏற்றால் அமைதி கிடைக்க, முன்னேறுவது எளிது.

    வன்முறை கண்டிப்பின் அடையாளமா?

    நம் அதிகாரத்தின்கீழ் இருக்கும் ஒருவர் ஒரு காரியத்தைச் சிறப்பாகச் செய்ய கண்டிப்பு அவசியம்தான். அத்துடன், மென்மையான, ஊக்குவிக்கும் வார்த்தைகளும் அவசியம்.

    பல பெற்றோர்களும் ஆசிரியர்களும் `கண்டிப்பு’ என்று எண்ணி, சுடுசொற்களாலும், வன்முறையைப் பிரயோகித்தும் சிறுவர்களை முன்னுக்குக் கொண்டுவர முயல்வார்கள். ஏனெனில், வன்முறை எளிது. ஆனால், சிறிய தவற்றுக்கும் பொருத்தமில்லாது, மிகக் கடுமையாகத் தண்டிப்பது எதிர்மறையான விளைவைத்தான் உண்டாக்கும்.

    மைக்கல் ஜாக்சனின் தந்தை அப்படி நடந்துகொண்டதில், சிறு வயதில் அவரைப் பார்த்தவுடனேயே அப்பிரபல பாடகருக்கு வாந்தி வந்துவிடுமாம். தந்தையைக் கண்டாலே பிடிக்காமல் போயிற்று. பெரும் செல்வந்தராக இருந்தும், தன் உயிலில் அப்பாவின் பெயரைச் சேர்க்கவில்லை! அவ்வளவு வெறுப்பு!

    மென்மை பெண்களுக்குத்தானா?

    மென்மையாக இருப்பது `மெல்லியலாள்’ என்று வர்ணிக்கப்படும் பெண்களின் குணமென்று ஆகிவிட்டது. உண்மையில், ஆணோ, பெண்ணோ, குரலை உயர்த்தாது, அமைதியை இழக்காது பேசுவதே வெற்றியை அளிக்கும். அப்போதுதான் பிறர் தவறு செய்தாலும், ஏன் அப்படி நடக்கிறார் என்று புரிந்துகொள்ள முடியும்.

    நான் ஒரு மேற்பயிற்சிக்குச் சென்றிருந்தேன். அது முடியும் தறுவாயில், ஆசிரியை ஒருத்தி என்னிடம், “நீங்கள் soft and gentle,” என்றாள், சற்று பரிதாபப்பட்டவளாய்.

    மென்மையானவர் என்றால் ஏமாந்தவர், பலகீனமானவர் என்றெல்லாம் பலரும் தவறாகப் புரிந்துகொண்டிருக்கிறார்கள். புரியாதவர்களிடம் இதை விளக்கவேண்டிய அவசியமில்லை. நம் சொற்களும் செயல்களும் மென்மையாக இருந்தால், அவை நம் மன உறுதியை, பிரதிபலிக்கின்றன.

    இது புரியாது, என்னிடம் மோதினார்கள் என் மாணவ மாணவிகள்.

    கதை

    அந்த வகுப்பில் இருந்தவர்களுக்குப் பதினாறு வயதுதான். ஆனால் தம்மைவிட மூத்தவர்களிடம் எதிர்த்துப் பேசுவது, எகத்தாளமாகப் பேசுவது என்ற குணம் கொண்டவர்களாக இருந்தார்கள். (இப்படிப்பட்டவர்களை, `பணிப்பெண்களால் வளர்க்கப்பட்ட குழந்தைகள்’ என்போம். பெற்றோரின் சரியான பராமரிப்போ, அன்போ கிடைக்காது, தம்மைப்போன்ற பிறருடன் சேர்ந்துகொண்டு, தமக்கு மேலிருந்தவர்களிடம் மோதுவார்கள்).

    நான் அவர்கள் போக்கைக் கண்டுகொள்ளவில்லை. பாடத்தை மட்டும் நடத்தினேன். மற்ற வகுப்புகளில் செய்ததுபோல் கதைகள், நகைச்சுவை எதுவும் கிடையாது.

    ஒரு நாள் அந்த வகுப்பிற்குள் போனதும், எல்லாரும் பரமசாதுவாக இருந்தார்கள். சற்று அதிர்ந்தாற்போலவும் இருந்தது.

    “என்ன அதிசயம்! இன்று நீங்கள்கூட ஒழுங்காக இருக்கிறீர்களே!” என்று கேட்காமல் இருக்க முடியவில்லை என்னால்.

    எல்லோருடைய தலையும் குனிந்தது. சற்று விழித்தேன் பிறகு அவர்கள் கொட்டம் அடங்கியதன் காரணம் பிடிபட்டது.

    அதற்கு முதலாண்டு நடந்த பள்ளி இறுதிப்பரீட்சையின் முடிவை காட்சிப்பொருளாக வைத்திருந்தார்கள். பௌதிகம், நான் ஒருத்தியே நடத்திய பாடம், அதில் தலைசிறந்ததாக இருந்தது.

    “ஓ! ரிசல்டைப் பார்த்தீர்களா!” என்றேன் கேலியாக.

    தலைகள் இன்னும் குனிந்தன.

    நான் கண்டிப்பாக இருக்கிறேன், நிறைய வேலை வாங்குகிறேன் என்று ஆத்திரப்பட்டவர்களுக்கு இப்போது புரிந்தது – அது அவர்களுடைய நன்மைக்காகத்தான் என்று.

    பெண்ணியம் பேசும் பெண்கள் சண்டை பிடித்தால், ஆண்களுக்குச் சமமான உயர்நிலை அடைந்துவிடலாம் என்று நினைக்கிறார்கள்.

    மனிதர்கள் மட்டுமென்ன, ஒரு நாட்டின் சட்டங்கள் மென்மையாக இருந்தால்கூட பலரும் அவைகளை மதிப்பதில்லை.

    “இவ்வுலகை மாற்ற மூன்று முக்கியமான குணங்கள் உண்மை, பயமின்மை மற்றும் மென்மை”. (மகாத்மா காந்தி)

    அதாவது, உண்மையை உரைக்க தைரியம் வேண்டும். (அப்போது பிறர் நம்மைப் பார்த்து அஞ்சுவார்கள்!) அந்த உண்மையை உரக்கச் சொல்லவேண்டுவது இல்லை.

    பலரும் இப்படி நடக்க அஞ்சுவது ஏன், தெரியுமா?

    அவர்களுடைய பெற்றோர், `உண்மையைச் சொல்லி மாட்டிக்கொள்ளாதே!’ என்று சிறு பிராயத்திலேயே எச்சரித்திருப்பார்கள். ஒரு வேளை, தமது கசப்பான அனுபவங்களால், மாறியிருக்கக்கூடும்.

    பெற்றோர் உண்மையே பேசி நடந்தால் குழந்தைகளும், தம்மையும் அறியாமல், அவர்கள் வழி செல்வார்கள்.

    ஆசிரியர்களும் கண்டிப்புடன் கனிவையும் சேர்த்தால், மாணவர்கள் பயனடைவார்கள். `அந்த ஆசிரியர் இல்லாவிட்டால், நான் உருப்பட்டிருக்கவே மாட்டேன்!’ என்று எக்காலத்திலும் நன்றியுடன் நினைவுகூர்வார்கள்.

    தொடருவோம்

    Share
  • மானிடவியலின் அணுகுமுறையில் சங்க இலக்கியக் குடும்ப நிலை

    -வீ. செல்வராணி

    முன்னுரை 

    மனித இனத்தின் பல்வேறு கூறுகளை விளக்குவது மானிடவியலாகும். அதில் மானிடப் பண்பாட்டை விளக்குவது மானிடவியலின் ஒரு பிரிவாகும். பண்பாட்டு மானிடவியல் என்ற  பிரிவில் மக்களின் குடும்பம் பற்றி அறிந்துகொள்ளும்போது அம்மக்களினுடைய சமுதாயம், கலாசாரம், பண்பாடு, பழக்கவழக்கம், வாழ்க்கைமுறை, வழிபாட்டுமுறை, போன்றவற்றை உணர்ந்துகொள்ள முடிகிறது. இதனால் மனிதப் பரிணாமத்தின் வளர்ச்சியினையும் அறிந்து கொள்ளமுடிகிறது ஆகவே மானிடவியல் குறித்த குடும்ப இயல்புகளை உணர்த்தும் களமாக இவ் ஆய்வுக் கட்டுரை அமைகிறது.

    மானிடவியல் விளக்கம்

    மானிடவியல் என்பது ஒரு முறையான அறிவியல் பார்வையாகும்.  மனிதனைப் பற்றி ஆராயும்  துறையாகச் செயல்படுகிறது. சர் எட்வர்ட் பர்னட் டைலர் கி.பி 1884-ஆம் ஆண்டு ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் மானிடவியல் துறைக்கு வந்தபோதுதான் மானிடவியல் துறையானது முறையான தோற்றத்தைப் பெற்றது. ”மானிடவியல்” என்ற சொல்லாக்கம் ஆங்கிலத்தில் வழங்கப்பெறும் “ANTHROPOLOG” என்னும் சொல்லுக்கு நேரானது என்பர். இச்சொல் “ANTHROPOS” “LOGOS” ஆகிய கிரேக்கச் சொற்களின் மூலங்களைப் பெற்றது. கிரேக்கத்தில் இச்சொற்கள் முறையே “மனிதன் அறிவியல்” என்னும் பொருளுடைய “ANTHROPOLOGIST” என்ற சொல்லை முதன்முதலில் அரிஸ்டாட்டில் பயன்படுத்தினார். மனித சமுதாயத்தின் கடந்தகால மற்றும் நிகழ்கால வாழ்க்கை முறையையும், பழக்கவழக்கம், பண்பாடு, உயிரியல், போன்றவற்றை சமூக அறிவியலின் துணைகொண்டு படித்துணர்ந்து ஆய்வினை மேற்கொள்ளும் துறையே மானிடவியல் (“Anthropology”) எனக் குறிப்பிடுகின்றனர். (பண்பாட்டு மானிடவியல்- ப.17 ) ஆகவே தனி மனிதனோ அல்லது ஒரு சமுதாயமோ எத்தகைய தன்மைகொண்டு திகழ்கிறது என்பதைக் கண்டறிய மானிடவியல் இன்றியமையாததாகக் கருதப்படுகிறது.

    இனத்தோற்றம்

     மானிட சமுதாயம் தோன்றியதற்கான ஆராய்ச்சிகள் பல நிகழ்ந்து கொண்டேயிருக்கிறது. இருப்பினும் முதல் மானிட இனம் இலெமூரியா கண்டத்தில் தோன்றியது என்பது அறிவியிலாளர்கள் கருத்தாகும். இக் கண்டத்தை மனித நாகரிகத்தின் தொட்டில் என்றழைப்பர். தென்கரை வழியாய் ஆப்பிரிக்காவின் கீழ்க்கரை வரைக்கும் பரவியிருந்த ஒரு கண்டமாயிருந்தது. களேற்றர் இப்பழங்கால பெருங்கண்டத்திற்கும் அதில் வந்த குரங்கொத்த உயிரிப் பற்றி இலெமூரியா என்று பெயரிட்டிருக்கின்றார். இக்கண்டம் மாந்தனின் பிறந்தகமாயிருந்திருக்கக் கூடுமாதலின், இதுவே மிக முதன்மையானதாகும் என்று கூறுகின்றார். பாவணர். (தமிழர் வரலாறு ப.6) அக்கண்டம் தமிழ் இலக்கியங்களில் குமரிக்கண்டம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை இளங்கோவடிகள்

    “பஃறுளி யாற்றுடன் பன்மலையடுக்கத்துக்
    குமரிக்கோடுங் கொடுங்கடல் கொள்ள” என்று தாம் இயற்றிய சிலப்பதிகாரத்தில் எடுத்துரைக்கிறார். இதனை ஜான் இங்கிலாந்து என்னும் மேலைநாட்டு அறிஞர் லெமூரியா எனும் குமரிக்கண்டம் ஆப்பிரிக்கக் கண்டத்துடன் இணைந்திருந்தது என்பார். ஆகவே முதல் மானிட இனம் தோன்றிய இடம் குமரிக்கண்டம் என்றும் முதல் மானிட இனம் தமிழ் இனம் என்றும் புலனாகிறது.

    குடும்பம்

    மனித சமுதாயத்தின் மிகத்தொன்மையான அமைப்பாகத் திகழ்வது குடும்பமேயாகும். இது எல்லாச் சமுதாயங்களிலும் எல்லாக் காலங்களிலும் பொதுவாக நிலவி வருகிறது. இன்று நூற்றுக்கணக்கான சமுதாயங்கள் காலங்காலமாகப் பல்வேறு நிறுவனங்களை ஏற்படுத்திக் கொண்டு அதன் அமைப்பாலும் செயலாலும் வேறுபடுகின்றன. ஆனால் அனைத்திலும் குடும்பம் என்னும் நிறுவனமே மிகவும் இன்றியமையாத, அடிப்படை அலகாகச் செயற்படுகின்றது. அவ்வாறே மக்கள் வாழ்நாள் முழுவதும் எண்ணற்ற குழுக்களில் பங்குபெற்று அவர்களின் வாழ்க்கைத் தேவைகளை நிறைவுசெய்து கொண்டாலும் குடும்பம் என்னும் அமைப்பே முதலிடம் பெறுகிறது. (பன்பாட்டு மானிடவியல் ப.350) கூடிவாழ்தல் குடும்பமாகும். இவை மானிட இனத்திற்கு மட்டுமல்லாது அனைத்து உயிர்களுக்கும் பொதுவாகத் திகழ்கிறது.

    குடும்பங்களின் வாழிடங்கள்

    குடும்பம் என்னும் அமைப்பு ஏற்படுவதற்கு அடிப்படை திருமணமேயாகும். குடும்பம், திருமணம், இரண்டும் ஒன்றெயொன்று சார்ந்தே செயல்படுகின்றன. ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்களைப் போல இன்று நாம் வழங்கும் திருமணம், குடும்பம் ஆகிய இரண்டு சொற்களும் புதிய சொல்லாட்சியாகும். பழந்தமிழ் நூல்களான தொல்காப்பியத்திலும், சங்க இலக்கியத்திலும் இச் சொல்லாட்சி இடம் பெற்றதாக தெரியவில்லை. மாறாக, குடிமை, குடி, கூடி போன்ற சொல்லாட்சிகள் இடம்பெறுகின்றன. ஆகவே குடும்பம் என்னும் சொல் பிற்காலத்தில் தான் தோன்றியிருக்க வேண்டும்.

    குடும்பம் என்னும் சொல் முதன்முதலில் திருக்குறளில் தான் நேரடியாகப் பயின்று வருகிறது.

    “இடும்பைக்கே கொள்கலம் கொல்லோ குடும்பத்தைக்
    குற்றம் மறைப்பான் உடம்பு” (குறள்-1029)
    என்ற குறளுக்கு உரைசெய்த டாக்டர் மு.வ அவர்கள், ”தன் குடிக்கு வரக்கூடிய குற்றத்தை வராமல் நீக்க முயல்கின்ற ஒருவனுடைய உடம்பு துன்பத்திற்கே இருப்பிடமானதோ”என்று உரை எழுதுகிறார். வள்ளுவர் பயன்படுத்திய குடும்பம் என்னும் புதிய சொல்லாட்சியைக் குடி என்றே குறிக்கிறார்.

    சங்க இலக்கியத்தில் குடும்பம் என்னும் சொல்லுக்கு, “குடம்பை, குடும்பு, கடும்பு” ஆகிய சொற்கள் இடம்பெறுகின்றன. ”குடும்பை” என்ற சொல் இருபது இடங்களில் பயின்று வருகிறது என்பார் பேராசிரியர் மாதையன். மேலும் ”குடும்பு” என்னும் சொல் கூடிவாழ்தல் என்றும் பொருள்படுகின்றது என்கிறார்.  நற்றிணையில்,

    ”கருங்கலை கடும்பு ஆட்டு வருடையொடு தாவன உகளும்” (நற்-119)

    என்னும் பாடல் மலைஆட்டு இனத்தின் கூட்டு வாழ்வைச் சுட்டுகிறது. குடும்பு என்னும் சொல்லுடன் “அம்” விகுதி சேர்ந்து பொருண்மை விரிவாக்கமாக (SEMANTIC EXTENSION) குடும்பம் எனும் சொல் அமைந்தது. (இலக்கிய மானிடவியல் பக். 348,349)

    தொல்காப்பிய நூற்பாக்களில் இல், மனை, குரம்பை, புலப்பில், முன்றில், குடில், கூரை, வனப்பு, முற்றம், நகர், மாடம் முதலிய சொற்கள் குடும்பங்களின் வாழ்விடத்தில் உள்ள வேறுபாடுகளையும், வகைகளையும் சுட்டுகின்றன. குடும்பம் என்னும் அமைப்பானது ஒர் ஆணும் பெண்ணும் அவர்களுடைய சமுதாய மரபுப்படி மண வாழ்வில் ஈடுபடும் நிலையால் மட்டுமே தோன்ற முடியும். அவ்வாறு இணைந்தால்தான் அச்சமுதாயத்தில் அவர்கள் ஒரு குடும்பமாக ஏற்று கொள்ளப்படுவர். அவ்வாறின்றி ஒரே வீட்டில் ஒர் ஆணும், பெண்ணும் உண்டு மகிழ்ந்து வாழ்ந்தாலும் அவர்களிடையை சமுதாயம் ஏற்றுக் கொள்ளக்கூடிய கணவன்-மனைவி உறவு அமையாதவரை அவர்கள் குடும்பம் என்னும் அமைப்பை ஏற்படுத்தவியலாது. இங்குக் குடும்பம் என்னும் அங்கீகாரம் அந்தந்தச் சமுதாயத்தின் அகவயக்கருத்தாக்கத்தின் (EMIC CONCEPT) மூலமே அளிக்கப்படும். சில பழங்குடிகளில் காதலர்கள் திருமணத்திற்கு முன்னரே தனிக்குடிசையில் ஒன்று சேர்ந்து வாழ அனுமதிக்கப்படுவர். சிலகாலம் கழித்துத்தான் திருமணம் நடைபெறும், ஆயினும் இப்பழங்குடிகள் திருமணத்திற்கு முன்னர் வாழும் நிலையிலிருந்தே குடும்பம் ஏற்பட்டு விடுகிறதென்று எண்ணுகின்றனர். (பண்பாட்டு மானிடவியல்- ப.352) குடியிருப்பைக் குறிக்கும் நகர் என்னும் சொல் சங்க இலக்கியங்களில் பல இடங்களில் பயின்று வருகின்றது. தொல்காப்பியத்தைக்காட்டிலும் சங்க இலக்கியங்களே அக்கால சமுதாயத்தின் எல்லா வகையான உயர்வு, தாழ்வுகளையும் சுட்டிக்காட்டுகின்றன. மேலும் மனைவியகம், கணவனகம், புதிய அகம் பரத்தையர் அகம் போன்ற வகையினங்கள் சங்ககாலத்தில் முக்கியத்துவம் பெற்றிருந்ததை அறிய முடிகிறது. சங்க காலத்தில் பெண் திருமணம் செய்த பின்னரும் தன் இல்லத்திலேயே தொடர்ந்து வாழ்க்கை நடத்தும் “தாயக முறை”(matrilocal) இருந்துள்ளது. ஆண் திருமணத்திற்குப்பின் மனைவியகத்திற்குச் சென்று பெண்ணின் இல்லத்தில் வாழ்ந்திருக்கிறான். இத்தகைய பெண்ணின் இல், ”எம்இல்” என வழங்கப்பட்டிருப்பதைப் பல சங்கப்பாடல்கள் பதிவு செய்துள்ளன. நற்றிணையில்

    ……………..மாதோ எம்இல்
    பொம்மல் ஒதியைத் தன்மொழிக்கொளீஇக்
    கொண்டு உடன் போக வலித்த
    வன்கண் காளையை ஈன்றதாயே   
    ( நற்- பா-293)

    என்றும், குறுந்தொகையில்

    ”எம் இல் அயல தோழி உம்பர்
    மயில் அடி இலைய மாக்குரல் நொச்சி”
    (குறு- பா-138)

    என்றும், கலித்தொகையில்,

    ……………யாம் வாட ஏதிலார்
    தொடியுள்ள வடுக்காட்டி ஈங்கு எம் இல்வருவதை
    (கலி- பா-78)

    விடா அது நீ எம்இல் வந்தாய் அவ்யானை
    கடாஅம் படுமிடத்து ஓம்பு
    (கலி- பா-97)

    என்ற பாடல் வரிகள் மனை வாழ்க்கைக்குப் பின் தங்கும் பெண் இல்லத்தைச் சுட்டுகிறது. ஆனால் தற்போது பெண் இல்லத்தில் தங்குவது என்பது ஆண்மகனுக்கு இழிவாகக்கூடும் என்னும் தவறான பாதைக்குச் சமுதாயம் தள்ளப்பட்டுவிட்டது.

    பெரியாழ்வார் தாம் இயற்றிய திருவாய்மொழியில் பெண் திருமணத்திற்குப் பின்னரும் தன்னுடைய தாயகத்திலேயே தொடர்ந்து வாழ்ந்த முறையைப் பதிவு செய்துள்ளார்.

    பெருப்பெருத்த கண்ணாலங்கள் செய்து
    பேணிநம் மில்லத்துள்ளே
    இருத்துவான் எண்ணி நாமிருக்க   (திருவாய்மொழி 3; 7-10 )

    திருமணத்திற்கு முந்தைய ஆணின் இல் ‘தம்இல்’ என வழங்கப்பட்டிருப்பதையும் காணமுடிகிறது.

    …………அன்னை
    தம்இல் தமது உண்டன்ன சினைதொறும்
    தீம்பழம் தூங்கும் பலவின்
    ஓங்குமலை நாடனை வரும் என்றோளே. 
    ( குறு. பா-83)

    மேற்கூறிய பாடலில் திருமணம் செய்யவரும் ஆணின் இல்லம் ‘தம் இல்’ எனும் தனி வழக்கில் சிறப்பாக எடுத்துரைக்கப்பட்டிள்ளது. சங்க இலக்கியத்தில் பொதியில் எனும் சொல்லையும் காணமுடிகிறது. வெளியூரிலிருந்து வரும் பாணர்கள் பொதியில் தங்கினர். என்ற குறிப்பு புறநானூற்றின் வழி அறிய முடிகிறது.

    முடிவுரை

    மானிடவியல் நோக்கினை சங்க இலக்கியங்களோடு பொருத்திப் பார்ப்பதன் மூலம் ஆய்வு செய்வதற்கான களங்கள் பலவற்றை கொண்டுள்ளதாகத் திகழ்கிறது. மக்களின் பண்பாடு, சமுதாயம், குடும்பம், திருமணம், உறவு முறை போன்றவற்றை ஆராயும்போது அவை முறையாகவும், நெறியாகவும் அமைந்துள்ளது என்பதை நாம்  அறிய முடிகிறது. தற்போது திசைமாறிப் போகும் நம் பண்பாட்டைச் சீர்பெறச் செய்ய மானிடவியல் ஆய்வுகள் மிக இன்றியமையாததாகத் திகழ்கிறது என்பதினைப் புலப்படுத்தும் நோக்கமே இக்கட்டுரையாகும்.

    ஆய்விற்குப் பயன்பட்ட நூல்கள்

    1. பக்தவத்சலபாரதி, பன்பாட்டு மானிடவியல், மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம்.
    2. பக்தவத்சலபாரதி, இலக்கிய மானிடவியல் அடையாளம் பதிப்பு. திருச்சி பதிப்பு 2014
    3. தொல்காப்பியம், கழக வெளியீடு, திருநெல்வேலி.
    4. சங்க இலக்கியம் முழுவதும் நியூசெஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை.
    5. திருக்குறள், வரதராசனார்.மு.வ (உ.ஆ) பாரிநிலையம் சென்னை.

    *****

    கட்டுரையாளர் – முனைவர்பட்ட ஆய்வாளர்,
    அண்ணமாலைப் பல்கலைக் கழகம்,
    அண்ணாமலை நகர்- 608 002.

     

    Share
  • அன்னச் சேவலே! அன்னச் சேவலே!

    -நிலவளம் கு.கதிரவன்

    இன்றைய விஞ்ஞான வளர்ச்சி, தகவல் தொழில்நுட்பப் புரட்சி யுகத்தில் ஒரு நாடு மற்றொரு நாட்டோடு தொடர்பு கொள்ளவும், கருத்துக்களை பரிமாறிக் கொள்ளவும் தூதரை நியமித்து, ஒவ்வொரு நாட்டிலும் தூதரகத்தைத் திறந்து நிர்வகித்து வருகிறது.  ஆக தூது என்பது கால மாற்றங்கள் ஏற்பட்டாலும் அவசியம் என்பதை உணர்ந்துள்ளோம். இதற்கெல்லாம் முன்னோடியாக நமக்கு தூது என்பதை அறிமுகப்படுத்துவது சங்க இலக்கியங்கள் ஆகும்.  பொதுவாக அகத்திணையில் தூது பற்றிய நிகழ்வுகள் அதிகமாக இருக்கும்.  அதே போன்று புறத்திணையிலும் தூதுக் காட்சிகள் காணக் கிடைக்கின்றன.

     சங்க இலக்கியங்களின் தோற்றத்திற்குப் பின்னர் கி.பி.14ஆம் நூற்றாண்டில் தூது நூல் தோன்றியது. தமிழ் மொழியில் தோன்றிய முதல் தூது நூல்  ”நெஞ்சுவிடு தூது”  என்னும் நூலாகும். ”எந்த ஓர் இலக்கியமும் திடீரென்று தோன்றிவிடாது;  ஓர் இலக்கிய வகை தோன்றுவதற்குரிய கூறுகள் அதற்கு முன்னால் உள்ள இலக்கண நூல்களிலும், இலக்கிய நூல்களிலும்  காணப்படும்” என்கிறார் முனைவர். தா. ஈஸ்வரபிள்ளை.  நெஞ்சுவிடு தூது என்ற நூலிற்குப் பிறகு தமிழ்விடு தூது, அன்னம்விடு தூது, மேகம்விடு தூது, பழையதுவிடு தூது, மான்விடு தூது, கிள்ளைவிடு தூது போன்று நூற்றைம்பதற்கும் மேற்பட்ட தூது நூல்கள் தமிழ் இலக்கியத்தில் தோன்றியுள்ளன.

     சங்க இலக்கியங்கள், காப்பிய இலக்கியங்கள், புராணங்கள் போன்றவற்றில் தூது பற்றிய நிகழ்வுகள் ஏராளமாக உள்ளன.  புறநானூற்றில் பிசிராந்தையார் அன்னத்தை தூது விடுவதாக அமைந்த நிகழ்வு, அநேகமாக தூது இலக்கியத்தில்  முதல் பாட்டாக இருக்கும் என்று கூறுகிறார்கள் ஆய்வாளர்கள்.

    தூது செல்வோர் இலக்கணம்:

    தூது  செல்வோரும், தூதைப் பெறுவோரும் ஆணாக இருக்கலாம்.  பெண்ணாக இருக்கலாம். தூது அனுப்புவோர் உயர்திணை மாந்தராகவோ அல்லது ஓர் அஃறிணைப் பொருளிடம் தம் செய்தியாகக் கூறி  அனுப்பலாம்.  சங்க இலக்கியத்தில் அரசனுக்காகப் புலவர்களும், காதலர்களுக்காகத் தோழியும், பறவைகள், மேகங்கள் எனத் தூது சென்றதற்கான காட்சிகள் பல உள்ளன.  தூது செல்பவருக்கு முக்கியமான பண்புகளாக அன்பு, அறிவு, ஆராய்ந்து பேசும் சொல்வன்மை ஆகியவை முக்கியக் கூறுகளாக கூறப்படுகின்றன.  மேலும் தூது செல்வபவருக்குத் துணிவு, துணை, தூய ஒழுக்கம் ஆகிய மூன்றும் அவசியம் என்கிறார் திருவள்ளுவர்.

           ” தூய்மை துணைமை துணிவுடைமை இம்மூன்றின்
            வாய்மை வழியுரைப்பான் பண்பு.”       (தூது: 688)

    புறநானூற்றில் தூது:

     சங்க இலக்கியத்தில் எட்டுத் தொகை நூல்களில் ஒன்றான புறநானூற்றில் தூது பற்றிய பதிவுகள் உள்ளன.  ஈகை, வீரம், புகழ் கொண்டிருந்த  அதியமான் நெடுமான் அஞ்சி மீது தொண்டைமான் பகைகொண்டு படை திரட்டியிருந்தான்.  இதனையறிந்த ஔவையார் போரினை நிறுத்தும் பொருட்டு, தொண்டைமானிடம் தூதாகச் சென்று அறிவுரை சொல்லி போரினை நிறுத்துகிறார்.  அதேபோன்று பிசிராந்தையார் என்னும் புலவர் உறையூர் கோப்பெருஞ்சோழனுக்கு அன்னச் சேவலையே தூதாக விடுகிறார்.  இக்காட்சியை மிகவும் நயம்பட புறநானூறு படம்பிடித்துக் காட்டுகிறது.

    அன்னச் சேவல்! அன்னச் சேவல்!

    தூதில் அன்னப் பறவைக்கு சங்கஇலக்கியங்கள் சிறப்பிடம்  தந்துள்ளன. கலித்தொகை, நெடுநல்வாடை, புறநானூறு, பரிபாடல், கம்பராமாயணம், திவ்யப்பிரபந்தம், பொருநராற்றுப்படை, சீவக சிந்தாமணி போன்ற இலக்கியம் மற்றும் காப்பியங்களில் அன்னத்தைப் பற்றிய குறிப்புகளும், அவை தூது சென்றதற்கான நிகழ்வுகளும் விரிவாக கூறப்பட்டுள்ளன.

     வடமொழியில் ”ஹம்ஸம்” என்றால் அன்னத்தைக் குறிக்கும். ஆண் அன்னம் அன்னச் சேவல் என குறிப்பிடப்படுகிறது. ”சேவலோங்கு உயர்கொடி யோயே” ( பரிபாடல்: 4: 40 ) ஒப்பற்ற உயரப் பறக்கும், உயர்ந்து விளங்கும் கருடச் சேவலை கொடியாக உடையவனே  என பரிபாடல் திருமாலைப் போற்றுகிறது.

           ” மாவிசும்பு ஓழுகு புனல் வறள
            அன்னச் சேவலாய்ச் சிறகர்ப் புலத்தி யோய் ” ( பரி : 3 : 25 – 26 )

    கடும்புயலுடன் கூடிய மழை பொழிந்தபோது திருமால் ஒரு  நெடிய அன்னச் சேவலாக வடிவெடுத்து தனது இரண்டு சிறகுகளையும் விரித்து  இந்த உலகத்தை காத்ததாகவும் பரிபாடல் புகழ்கிறது.

    நான்முக பிரம்மாவின் மனத்தில் தோன்றிய மகன்களான சனகர்,  சனந்தனர், சனாதனர் மற்றும் சனத்குமாரர் ஆகிய நால்வருக்கும், யோகத்தின் சூட்சுமம் மற்றும் அதன் எல்லைகள் குறித்து ஹம்ஸப் பட்சி ( அன்னப் பறவை) வடிவத்தில் உபதேசம் செய்ததாகவும், இதையே ஹம்ஸ கீதை என்று அழைக்கப்படுவதாகவும் கூறுகிறார்கள்.

     ஸ்வாமி நிகமாந்த மஹாதேசிகர் ”ஹம்ஸ ஸந்தேசம்” என்ற 110 ஸ்லோகங்களைக் கொண்ட காவியத்தை எழுதியுள்ளார்.  சீதையின் பிரிவாற்றாமையால்  மிகவும்  துன்பப்பட்ட ராமன், சீதையை மீட்க முடிவுவெடுத்து, அதற்கு முன்னர்த் தான் சீதைக்கு தெரிவிக்க வேண்டிய செய்திகளையும், இலங்கைக்குச் செல்லும் வழியையும் ஓர் அன்னத்திடம் கூறி, தூதாக இலங்கைக்கு அனுப்பி, பின்னர் சீதையை  மீட்டதாக ஹம்ஸ ஸந்தேசம்  கூறுகிறது.

     சேவல் என்பதற்கு ”அழகு பொருந்திய” என்று பொருநராற்றுப்படையும், சீவக சிந்தாமணியும் விளக்கம் அளிக்கிறது.  அதே போல் ”சேவலான்” என்றால் விலங்கு, பறவை  போன்றவற்றால் கேடுவிளையாமல் காப்பவன் என்றும், விளை புனங்களைக் காப்பவன் என்றும் கூறுகிறது.

    அன்னம் என்பது வெண்மை நிறம் உடைய பறவை என்பது மட்டும்தான் என பலரும் அறிவர். ஆனால் ”காரன்ன முண்மையின் வெள்ளன்னம்” கருமை நிறத்திலும் அன்னம் உள்ளதாக நச்சினார்க்கினியர் கூறுவதிலிருந்து நம்மால் அறியமுடிகிறது.

     பாண்டியன் நெடுஞ்செழியன் அவையில், அரண்மனை முற்றத்தில் அன்ன நிற கவரிமா மற்றும் அன்னப்  பறவை துள்ளி விளையாடின என்கிறது நெடுநல்வாடை.

           ” நெடுமயிர் எகினத் தூநிற வேற்றை
             குறுங்கால் அன்னமோ டுகளும் முன்கடை ”   ( நெடு : 91 – 92 )

    பாண்டியன் தனது மரபுக்கு இழுக்கு வருவதாக கருதினால் மயிர் நீப்பின் உயிர் வாழாத கவரிமா போல் உயிர் நீப்பான் என்றும், நீர் நீக்கி பால் உண்ணும் அன்னம்போல் பொய் வழக்கை அறிந்து நீக்கிவிட்டு மெய் வழக்கறிந்து முடிவு கூறுவான்  என்பதை மக்கள் உணர வேண்டும் என்பதற்காக தனது அரண்மனை முற்றத்தில் இடம்பெறச் செய்தான் என்று கூறுகிறார் வித்துவான் வேங்கடராமச் செட்டியார்.

    இத்தகைய சிறப்புகள் பல வாய்ந்த அன்னப் பறவையை பிசிராந்தையார் என்னும் புலவர் கோப்பெருஞ்சோழனிடத்தில் தூதாக அனுப்புகிறார்.

    அன்னச் சேவல்! அன்னச் சேவல்!
    ஆடுகொள் வென்றி அடு போரண்ணல்
    நாடு தலையளிக்கும் ஒண்முகம் போலக்
    கோடு கூடு மதியம் முகிழ்நிலா விளங்கும்
    மையல் மாலை யாம் கையறுபு இனையக்
    குமரியம் பெருந்துறை அயிரை மாந்தி
    வடமலை பெயர்குவையாயின்
    இடையது சோழ நல்நாட்டுப் படினே
    கோழி உயர்நிலை மாடத்துக் குறும்பறை அசைஇ
    வாயில் விடாது கோயில் புக்கு
    எம் பெருங்கோக் கிள்ளி கேட்க
    இரும் பிசிர் ஆந்தை அடியுறை எனினே
    மாண்ட நின் இன்புறு பேடை அணிய,
    நினக்கே தன் நன்புறு நன்கலம் நல்குவன்   ( புறம்: 67 )

    பிசிராந்தையார், கோப்பெருஞ்சோழன் இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டதில்லை. ஆனால் இருவருக்குள்ளும் உறுதியான நட்பு.  சோழனை நேரில் பார்க்க மாட்டோமா என்ற  ஏக்கத்தில் அவனின் புகழ், வலிமை, கொடை, அருள் என்னும் நல்லியல்புகளைச்  சொல்லி அன்னத்தை தூது விடுகிறார்.

    குமரியின் துறையிலிருந்து வட இமயம் வரை பறக்கும் அன்னச் சேவலை அழைத்து, நீ இமயமலை செல்லும்போது இடைவழியில் உறையூரை ஆளும் எனது நண்பன் கோப்பெருஞ்சோழன் என்னும் மன்னன் உள்ளான்.  நீ சென்று அவனை சந்திக்கும்போது, நான் பிசிர் என்னும் ஊரிலிருந்து ஆந்தையாரின் அடியவன் வந்துள்ளேன் என்று கூறினால், அம்மன்னவன் மனம் மிக மகிழ்ந்து உனது பேடைக்குப் பொன்னாலான அணிகலன்களை மிகுதியாக வழங்குவான் எனக் கூறித் தமது நட்பின் நெருக்கத்தை பிசிராந்தையார் இப்பாடல் வழியே நிறுவுகிறார்.

    தொகுப்புரை:

    • சங்க இலக்கியம், காப்பியங்கள், புராணங்களில் தூது செல்வதில் அன்னப்  பறவை முக்கிய இடம் வகிப்பதை அறியமுடிகிறது.
    • நெடுமயிர் எகினத் தூநிற வேற்றை, குறுங்கால் அன்னமோ டுகளும்  முன்கடை, என்ற நெடுநெல் வாடை பாடல் வரிகளில் எகினம் என்பது    கவரிமாவையும், ஏற்றை என்பது ஆண்பாலையும், அன்னம் என்பது      பெண்பாலையும் குறிப்பதால் கவரிமா என்பது ஆண் அன்னத்தை         குறிப்பதாகக் கொள்ளலாம்.
    • மயிர் நீப்பின் உயிர் வாழா கவரிமான் – எனப் பல உரையாசிரியர்கள்    கூறினாலும் கவரிமா என்பதே சரியான உச்சரிப்பாகும்.  மற்றும்    கவரிமானுக்கும், கவரிமாவுக்கும் யாதொரு தொடர்பும் இல்லை என்பதையும்  அறியமுடிகிறது.
    • குளிர் காப்பாம் மயிர் நீங்கினால் உயிரோடு வாழாத கவரிமா என்று  இயற்கைச் சூழலின் தட்பத்தின் விளைவினை அடிப்படையாகக் கொண்டு   இளங்குமரனார் எனும் உரையாசிரியர் கூறுவதைக் கொண்டு, கவரிமா, அன்னம் இரண்டும் குளிர் பிரதேசங்களில் வாழும் ஆண் மற்றும் பெண் பறவைகள் என்பது புலனாகிறது.
    • பிசிராந்தையார் குறிப்பிடும் வடமலை என்பது இமயமலையே ஆகும். சில உரையாசிரியர்கள் வடமலையைத் திருமலையோடு உருவகஞ்  செய்கிறார்கள்.  கவரிமாவும், அன்னமும் குளிர் பிரதேசங்களில் மட்டுமே     வாழும் இயல்புடையது.  வெப்ப காலத்தில் தென் பகுதியை நோக்கி    அவை வரும் இயல்புடையதாக இருக்கலாம்  என்பது இப் பாடல் மூலம்        புலனாகிறது.

    முடிவுரை:

    புறத்திணையில் பெரும்பாலும் பறவைகளையே தூது செல்வதற்காக உருவகப்படுத்துவதை மேற்கண்ட இலக்கியங்கள் வழியே நம்மால் அறிய முடிகிறது.  அதிலும் அன்னப் பறவைக்கு முதன்மையான இடம் இருப்பதையும் உணர முடிகிறது.  காரணம் புகழ்வதைக் காரணமாகக் கொண்டே இத்தகைய  தூது அமைவதாலும், அன்னம் என்பது மிக அழகான வெண்மை நிறத்தோடு அழகிய இறக்கைகளோடும், மிக நளினமான நடையழகையும் கொண்டதால் அன்னம்விடு தூது நம் மனத்தைக் கொள்ளை கொள்கிறது.  உலகில் உள்ள 8650 பறவையினங்களில் 1200 இந்தியாவில் காணலாம்.  ஒரு காலத்தில் பறவைகளுடன் மிகவும் இணக்கமாக இருந்த மனிதன் தற்போது பறவைகளை ஒரு நுகர்வுப் பொருளாகவோ அல்லது அது மனிதனுக்கு தொடர்பில்லாத ஜீவராசியாகவோ பார்க்கத் தொடங்கிவிட்டான் என்பது வருத்தத்திற்குரியதாகும்.  என்றாலும் இலக்கியங்களோடு தொடர்புகொண்ட பறவைகள் மற்றும் ஜீவராசிகளைப் படித்து ரசிப்பதோடு இல்லாமல் நம்மோடு வாழும் பறவையினங்களை போற்றிப் பாதுகாப்பதும் ஒவ்வொருவரின் கடமையாகும்.

    துணை நின்ற நூல்கள்:

    1.புறநானூறு மூலமும், உரையும் – புலியூர்க்கேசிகன் – சாரதா பதிப்பகம்,  சென்னை – 14.

    2.பரிபாடல் (அகமும் புறமும்) மூலமும்  உரையும் – புலியூர்க்கேசிகன் –  சாரதா பதிப்பகம், சென்னை – 14.

    3.ஹம்ஸ ஸந்தேசம் – உரை – ஸ்ரீ நிகமாந்த மகாதேசிகர்.

    4.ஸ்ரீமத் பாகவதம் – அகிலஉலக கிருஷ்ண பக்தி இயக்கம், சென்னை.

    5.சங்கத் தமிழ் ( நெடுநல்வாடை ) – முனைவர் ருக்மணி ராமச்சந்திரன்.

    6.பொருளறம் – புலவர்.கோ.அருளாளன்., – திருவள்ளுவர் பதிப்பகம்,    நல்லாண்பிள்ளைபெற்றாள்.

     

     

     

     

    Share