Blog

  • உயர்ந்து நின்றார் காமராசர் !


    ( எம். ஜெயராமசர்மா…… மெல்பேண் …. அவுஸ்திரேலியா )

    இலக்கியங்கள்  இலக் கணங்கள்
    எதும் அவர் படிக்கவில்லை
    இங்கீலீசு பள்ளிக் கூடம்
    எட்டி அவர் பார்த்ததில்லை
    தலைக் கனத்தை வாழ்நாளில்
    தன தாக்கிக் கொண்டதில்லை
    தமிழ் நாட்டின் தலைமகனாய்
    தாம்  உயர்ந்தார்  காமராசர்  !

    ஏழையென பிறந்த  அவர்
    கோழை என வாழவில்லை
    தோழமையை மனம் இருத்தி
    தோள்  கொடுத்தார் மக்களுக்கு
    ஆழ நிறை அன்புடனே
    அவர் நோக்கு அமைந்ததனால்
    அரசு கட்டில் அமர்ந்தாலும்
    அனைவருக்கும் உதவி நின்றார்  !

    மாடிமனை  வீடு  எலாம்
    வாங்கி அவர் குவித்ததில்லை
    மற்றவர்கள் மனம்  வருந்த
    சொத்தும் அவர் சேர்த்ததில்லை
    கோடிகளில் செல்வம் அதை
    கொள்ளை அவர் கொண்டதில்லை
    கொள்கையுடன் வாழ்ந்து நின்று
    குன்றமென  உயர்ந்து  நின்றார்   !

    அரசியலால்  காசு  தேட
    அவர்  என்றும்  முயன்றதில்லை
    அதிகார  வெறி கொண்டு
    அவர் ஆட்சி செய்ததில்லை
    அனைவரையும் அணைத்து நிற்க
    அவர் மனது விரும்பியதால்
    அவர் ஆண்ட  காலமதை
    அனைவருமே விரும்பி நின்றார்   !

    கல்வி   தேடும்   எழையர்க்கு
    கண் ஆனார்  காமராசர்
    கல்வி கற்கா  தன்னிலையை
    கருத்தில் அவர் இருத்தினரே
    எல்லோரும் கல்வி கற்க
    எண்ணி  அவர் செயற்பட்டார்
    இதனாலே  அவர் என்றும்
    இருந்து விட்டார் உள்ளமெலாம்  !

    படிக்காத  மேதை  எனப்
    பவனி வந்தார்  காமராசர்
    படித்தார்கள் நினைவில் வரா
    பலவற்றை அவர் செய்தார்
    நடித்து அவர் வாழ்ததில்லை
    நாகரிகம் பேணி நின்றார்
    நம் நாட்டில் அவர்போல
    யார் வருவார் நலன்காக்க  !

    அரசியலில் அவர் வாழ்வு
    அப்பழுக்கு அற்ற தென்று
    அரசியலார் சொல்லி நிற்க
    அவர் வாழ்ந்து சென்றுவிட்டார்
    ஊழல் என்னும் பேய்தன்னை
    ஓரங்கட்ட  அவர்  நினைத்தார்
    ஊழல் அற்ற தலைமகனாய்
    உயர்ந்து  நின்றார்  காமராசர்    !

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

     

    180714 Udupi Krishna A4 Canson 300gsm lr

    கோஹம் விசாரித்து, சோஹத்தின் சன்னிதியில்
    நாஹமித் தேஹமில்லை நன்குணர்ந்து -மோஹமாம்
    பிண்ணனியில் மேயும் பசுபாசம் ஓட்டிட
    கண்ணனை நெஞ்சே கருது….கிரேசி மோகன்….!

    Share
  • மிச்சத்தை மீட்போம்

    கச்சத் தீவைக்கைவிட மாட்டோம் கத்தியே
    =====கூச்சல் குழப்பம் விளைவித்தவர் எங்கே.?
    மிச்சமின்றி ஆற்று மணல் அத்தனையும்
    =====மழித்து வழித்ததை மறைத்தவர் எங்கே.?
    இச்சகத்தில் வளமான இயற்கை வளமிருக்கு
    =====இனியும் அழியாமல் இருக்கவே விழித்திரு.!
    மிச்சத்தை இனியும் மீட்க வேண்டுமெனும்
    =====மேலான மனதை இனிமேற் கொள்வாயே.!

    அச்சம் நமைவிட்டு ஆங்கே பலமைல்தூரம்
    =====அகன்று விட்டது என்றுதான் நினைத்தோம்.!
    நச்சுக் கொடிபோன்ற நஞ்சாலை தழைத்ததால்
    =====நன்னீரும் கெட்டது நதிநீரும் விஷமாகியது.!
    இச்சைப் படிநடக்க எவருத்தரவு கொடுத்தார்
    =====இடர் செய்தற்கும் இங்கேயொரு காவலாளி.!
    மிச்சம் இருப்பதை மீட்கப்போய் மறுபடி
    =====மீளாத துயரத்தில் மீண்டும் ஆக்கிடுவாரோ.?

    அச்சமிலை அச்சமிலை என்றே முழங்கினான்
    =====நன்றே மஹாகவி நல்பாரதி அவரைப்போல
    உச்சக் கோஷம் எழுப்பினால் போதுமா
    =====ஊர்மக்கள் குறைகேட்க ஓடிவந்தோர் யாராம்.?
    பச்சாதாபம் வேண்டாம் பரிதாபம் கொளாதீர்
    =====பகல்கொள்ளை பார்த்தால் விட்டு விடாதீர்.!
    நிச்சயம் இழந்ததை நிலையாக மீட்டெடுக்க
    =====நீண்ட போராட்டம் நிலைத்திடுமோ வாழ்விலே.!
    ===========================================
    நன்றி:: தினமணி கவிதைமணி::18-06-18
    நன்றி:: கூகிள் இமேஜ்

    Share
  • நல்வாழ்வுக்கு வழிகாட்டும் நாலடி – 9

    -மேகலா இராமமூர்த்தி

    சவால்கள் நிறைந்த வாழ்வைச் சமூகம் சான்றோர்க்களித்தாலும் அதற்காக அவர்கள் சிந்தை கலங்குவதில்லை; நிலைதாழ்ந்து போவதில்லை. எத்தகு சூழலிலும் நற்குணம் கொண்ட பொற்புடைய மேன்மக்களாகவே வாழ்வர்.

    மேன்மக்களின் இயல்பை இருசுடர்களில் ஒன்றான நிலவோடு ஒப்பிட்டும் வேறுபடுத்தியும் செப்பும் நயமிகு நாலடியார் பாடலொன்று!

    அங்கண் விசும்பின் அகனிலாப் பாரிக்குந்
    திங்களுஞ் சான்றோரும் ஒப்பர்மன் – திங்கள்
    மறுவாற்றும் சான்றோரஃ தாற்றார் தெருமந்து
    தேய்வர் ஒருமா சுறின். 
    (நாலடி – 151)

    அழகிய இடமகன்ற வானத்தில் விரிந்த நிலவொளியைப் பரவச் செய்யும் திங்களும் மேன்மக்களும் தம்மில் ஒத்த பெருமையுடையவர் ஆவர். ஆனால், திங்கள் களங்கத்தைத் தாங்கும்; மேன்மக்கள் தமது ஒழுக்கத்திற் சிறிது கறையுண்டானால் அதனைப் பொறாது உளங்கலங்கி அழிவர்.

    திங்களைப்போல் சான்றோரும் புகழுடையவர் என்று முதலில் ஒத்த தன்மையைக் கூறி, பின்னர்த் திங்கள் களங்கத்தைத் தாங்கும் ஆனால் சான்றோர் அதனைப் பொறார் என்று அவரின் வேறுபட்ட தன்மையையும் விளம்பி நிற்பதால் இப்பாடலை வேற்றுமையணிக்குச் சான்றுகாட்டலாம்.

    மேன்மக்கள் பிறர்க்கு இன்னாசெய எண்ணாத இயல்புடையவர்கள் என்பது வையம் அறிந்ததே. அதனைத் தாண்டியும் செல்லும் அவர்களின் உயர்சிந்தனையின் உன்னதத்தைப் பின்வரும் நாலடியார் நமக்குச் சுட்டுகின்றது.

    புல்லா வெழுத்திற் பொருளில் வறுங்கோட்டி
    கல்லா ஒருவன் உரைப்பவுங் கண்ணோடி
    நல்லார் வருந்தியுங் கேட்பரே மற்றவன்
    பல்லாருள் நாணல் பரிந்து.     
    (நாலடி – 155)
     

    பொருந்தாக் கல்வியையுடைய, மெய்யுணர்வில்லாத வீணோர் அவையில் கல்வியறிவு நிரம்பப்பெறாத ஒருவன் உரையாடவும், அதனைக் கண்ட மேன்மக்கள் அந்தப் பேதையின் உரையை அவையில் பலரும் கேலிசெய்யவும், அதனால் அவன் நாணவும் நேருமே எனும் வருத்தத்தோடும் இரக்கத்தோடும் அதனைத் தாம் கேட்டுக்கொண்டிருப்பராம்.

    பேதை ஒருவனின் பொருளற்ற பேச்சையும் பொருட்படுத்தி அருளோடும் அன்போடும் செவிமடுக்கும் மேன்மக்களின் மாட்சி வியப்பினும் வியப்பே!

    மேன்மக்களாய் வாழ்தற்கு என்னென்ன அடிப்படைப் பண்புகள் அவசியம் என்பதை நமக்கு அறியத்தருகின்றது நாலடி.

    பிறர்மறை யின்கட் செவிடாய்த் திறனறிந்
    தேதிலா ரிற்கட் குருடனாய்த்  தீய
    புறங்கூற்றின் மூகையாய் நிற்பானேல் யாதும்
    அறங்கூற வேண்டா அவற்கு. 
    (நாலடி – 158)

    பிறருடைய மறைந்த/அந்தரங்கக் கருத்துக்களைக் கேட்டலிற் செவிடுடையனாய், அயலார் மனைவியரைக் காமக் கருத்துடன் நோக்குதலிற் குருடனாய், தீயவான புறங்கூற்று மொழிகளைக் கூறுதலில் ஊமையுடையனாய், வாழ்க்கையில் துன்பம் உண்டாகுங் கூறுகள் இவை என்றறிந்து ஒருவன் ஒழுகுவானாயின், அவனுக்குப் பிறர் வேறு யாதும் அறம் அறிவுறுக்கவேண்டா என்பது இச்செய்யுளின் பொருள். 

    தீயதைக் கேட்காதே; தீயதைப் பார்க்காதே; தீயதைப் பேசாதே என்பதைக் காட்ட காந்தியார் வைத்திருந்த மூன்று குரங்குபொம்மைகளை நாம் மேற்கண்ட நாலடியாரின் கருத்துக்களோடு வைத்தெண்ணலாம்.

    வள்ளுவரோ இதனை இரத்தினச் சுருக்கமாக,
    ”மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்” என்றுவிட்டார். மனந்தானே நம்மை மடவராக்கி எல்லாத் தவறுகளுக்கும் உடந்தையாக்குகின்றது? ஆதலால் மனத்தூய்மையே எல்லா நற்செயல்களுக்கும் தாய் என்று கருதலாம்!

    மாந்தர்கள் கைக்கொள்ள வேண்டிய நற்பண்புகளில் ஒன்று, தம்மைவிட அறிவிலும் அனுபவத்திலும் மூத்த பெரியாரை அவமதிக்காது அவர்மாட்டுப் பண்போடும் அன்போடும் நடந்துகொள்வது.

    சிலர், தம் வாழ்வில் நல்லறிவும் புலமையும் உடைய சான்றோரின் நற்றுணை வாய்க்கப்பெற்றும் அவர்களிடம் நல்லனவற்றைக் கற்றுத் தெளிவதில் கவனம் செலுத்தாது கொன்னே நாட்களைக் கழித்துக்கொண்டிருப்பர். அன்னாரின் பேதைமையை என்னென்பது?

    பேதையாரின் இன்னொரு வகையினர் தம்மைப்பற்றிப் பெருமைபேசித் திரிவதிலேயே பொழுதைக் கழிக்கும் வீணராயும் வெற்றராயும் இருப்பர். அவர்களின் புத்திக்கு உரைக்கும்படி நாலடியார் நவிலும் செய்தியைக் கேண்மின்!

    எம்மை யறிந்திலிர் எம்போல்வார் இல்லென்று
    தம்மைத்தாம் கொள்வது கோளன்று – தம்மை
    அரியரா நோக்கி அறனறியுஞ் சான்றோர்
    பெரியராக் கொள்வது கோள். 
    (நாலடி  – 165)
     

    எம் தகுதியை நீவிர் அறிந்திருக்கவில்லை; எம்மைப் போன்ற திறனுடையோர் வையத்தில் யாங்கணுமே பிறக்கவில்லை என்று தம்மைத் தாமே பெருமைப்படுத்திக்கொள்வது சிறவாது; தம்மை அருமையுடையோராய்க் கருதி அறனறியுஞ் சான்றோர் பெரியராய் மதித்துப் போற்றுவதே பெருமையாகும் என்கிறது நாலடியார். 

    ”பணியுமாம் என்றும் பெருமை சிறுமை
    அணியுமாம் தன்னை வியந்து”
    என்று பெருமைப் பண்பையின் பெற்றியையும் சிறுமைப் பண்பின் இயற்கையையும் மன்பதைக்குச் சொன்ன தெய்வப்புலவர், 
    ”வியவற்க எஞ்ஞான்றும் தன்னை” என்று எச்சரித்திருப்பதையும் நாம் சிந்தித்து ஒழுகுதல் சிறப்பு. 

    நம் வாழ்வின் பல தருணங்களில் நாம் சிந்தியாது பலரை நண்பர்களாக்கிக் கொள்கின்றோம். பழகப் பழகத்தான் அவர்களின் அருவருக்கத்தக்க உண்மைத் தோற்றம் வெளிப்படுகின்றது. அதன்பின், அவர்களைவிட்டு விலகிவிடவேண்டும் என எண்ணுகின்றோம். எனினும் பழக்கதோஷம் அவ்வளவு சுலபத்தில் அதனைச் செய்யவிடுவதில்லை. எனவே, ஆராய்ந்து நட்பு கொள்வது அவசியம் என்று அறிவுறுத்துகின்றது நாலடியார்!

    தெரியத் தெரியுந் தெரிவிலார் கண்ணும்
    பிரியப் பெரும்படர்நோய் செய்யும் – பெரிய
    உலவா இருங்கழிச் சேர்ப்ப யார்மாட்டும்
    கலவாமை கோடி யுறும். 
    (நாலடி – 168)
     

    நூற்பொருள்களை விளங்கத் தெளியும் தெளிவில்லாதவரிடத்தும், (பழகியபின்) அவரைப் பிரிய நினைப்பது பெருந்துன்பம் உண்டாக்கும்; ஆகவே, கருநிறமான பெரிய கழிக்கரையை உடையோனே! பெரியோரிடத்தன்றிப் பிறர் யாரிடத்திலும் நேயங் கொள்ளாமை கோடிப்பங்கு நன்மையாகும்.

    ”குடிப்பிறந்து தன்கட் பழிநாணு வானைக்
    கொடுத்தும் கொளல்வேண்டும் நட்பு” என்று நல்ல நட்புக்கு வள்ளுவமும் வழிகாட்டுகின்றது.

    நல்லியல்புடைய பெரியோர்கள் கற்றற்குரிய நூல்களைக் கல்லாமலும், தாமறியாத பொருள்களை அவற்றை அறிந்தோரிடத்துக் கேளாமலும், தம்மால் இயன்ற வகையில் பிறர்க்கு உதவாமலும் வாழும் வாழ்க்கையை ஒருபோதும் விரும்புவதில்லை.

    கல்லாது போகிய நாளும் பெரியவர்கண்
    செல்லாது வைகிய வைகலும் – ஒல்வ
    கொடாஅ தொழிந்த பகலும் உரைப்பின்
    படாஅவாம் பண்புடையார் கண்.  
    (நாலடி – 169)

    எனவே, நல்லனவற்றைக் கற்றலும், சான்றோரிடத்து நற்பொருளைக் கேட்டலும், புன்னெறி தவிர்த்து நன்னெறியில் ஒழுகலும் மனித வாழ்க்கைக்குப் பல்லாற்றானும் பொலிவூட்டும்! புகழ் கூட்டும்!

    [தொடரும்]

    *****

    துணைநூல்கள்:

    1. நாலடியார் மூலமும் உரையும் – திரு. தி. சு. பாலசுந்தரம்   பிள்ளை
    2. திருக்குறள் தெளிவுரை – மு. வரதராசனார்

     

     

    Share
  • வாழ்வியல் தத்துவம்

    பவள சங்கரி


    ஜென் கதைகள் நமக்குப் பல வாழ்வியல் தத்துவங்களை விளங்கச்செய்பவை. நம் புத்தரின் தத்துவங்களே பெரும்பாலும் ஜென் கதைகளாக உருமாறியுள்ளன. போதி மரத்தடிக்குச் சென்றுதான் அந்த ஞானம் பெறவேண்டும் என்பதில்லை .. நல்ல எண்ணங்களை விதைக்க முடிவெடுத்தால் மட்டுமே போதும் .. நன்றி மறப்பது நன்றன்று என்பதை நம் வள்ளுவப் பெருந்தகையும், அப்படி மறப்பவரின் எதிர்காலம் என்னவாகும் என்ற அனுபவப் பாடங்களும் நமக்கு அன்றாடம் கிடைப்பவை! இதற்கு நம் ஜென் துறவியார் சொல்லும் பாடம் இதுதான்!

    இரண்டு இணை பிரியாத உண்மையான நண்பர்கள் இருந்தார்கள். அவ்வளவு நாட்கள் ஒருவருக்கு ஒருவர் உண்மையாகவும், நல்ல நட்பாகவும் அதாவது ஒருவருக்கு ஒரு துன்பம் வந்தால் மற்றவர் அந்தத் துன்பம் தனக்கே வந்ததாக எண்ணி வருந்தும்படி இருந்தார்கள். அவர்கள் இருவரும் இன்ப துன்பங்களில் சமமாகப் பங்கெடுத்துக்கொள்வார்கள். ஒருமுறை ஒரு பாலைவனப் பகுதியில் இருவரும் சேர்ந்து நடந்து சென்று கொண்டிருந்தார்கள். கடுமையாகச் சுடும் மணலின் வேதனையை மறப்பதற்காக இருவரும் பேசியபடியே நடந்து சென்றார்கள்.
    மகிழ்ச்சியாக உரையாடிக் கொண்டிருந்தவர்கள் ஒரு கட்டத்தில் ஒரு விசயம் அவர்களுக்கு இடையில் கருத்து வேறுபாட்டை தோன்றச் செய்துவிட்டது.

    இதுவே வாய்ச் சண்டையாக மாறி, ஒரு கட்டத்தில் ஒருவன் மற்றவனின் கன்னத்தில் ஓங்கி அறைந்துவிட்டான். கடுமையான வெயிலின் தாக்கத்தினால் அடைந்த சோர்வைக்காட்டிலும், அருமை நண்பன் தன் கன்னத்தில் அறைந்த வேதனை அதிகமானது. அறை வாங்கியவன் பெரும் வேதனையில் இருந்தாலும் ஒன்றும் பேசாமல் ஓர் ஓரமாக ஒதுங்கிப்போய் உட்கார்ந்துகொண்டவன், அருகில் இருந்த மணலில் , ‘இன்று என் உயிர் நண்பன் என்னுடைய கன்னத்தில் அறைந்துவிட்டான்’ என்று தன் விரலால் எழுதினான். ஆனால் அவன் என்ன எழுதினான் என்று அடித்தவனுக்குப் புரியவில்லை என்றாலும் இருவரும் எதுவும் பேசாமலேயே பயணத்தைத் தொடர்ந்தார்கள்.

    இருவருக்கும் தாகம் வாட்டியபோது, வழியில் கண்ட ஒரு பாலைவன ஊற்றில் இருந்த நீரை தாகம் தீரும்வரை அள்ளி அள்ளிப் பருகினார்கள்.

    அப்போது கன்னத்தில் அறை வாங்கியவனின் காலை யாரோ திடீரென இழுப்பதுபோல் இருந்தது. அவன் தான் புதைகுழியில் சிக்கிக் கொண்டதை அப்போதுதான் உணருகிறான். அப்போது புதைகுழியில் சிக்கிக்கொண்ட நண்பனை மிகவும் சிரமப்பட்டுக் காப்பாற்றி கரை ஏற்றினான் கன்னத்தில் அறைந்த அந்த நண்பன். ஆபத்தில் இருந்து மீண்டவனோ சற்று தொலைவு சென்று அங்கிருந்த பாறையின் மேல் அமர்ந்தவன், ஒரு கல்லை எடுத்து,
    ‘இன்று என் உயிர் நண்பன் என்னுடைய உயிரைக் காப்பாற்றினான்’ என்று எழுதினான்.
    ”நான் உன்னை அறைந்தபோது மணலில் ஏதோ எழுதிய நீ இப்போது உன்னைக் காப்பாற்றியதை கல்லில் எழுதுகிறாயே. ஏன் இப்படி இவ்வளவு சிரமப்பட்டு கல்லில் எழுதுகிறாய்? என்று கேட்டான்.

    அறை வாங்கிய நண்பனோ, ”ஒருவர் நம்மை ஏற்படுத்தும் காயத்தை மணலில் எழுதி வைத்தால், காலப்போக்கில் மன்னிப்பு எனும் காற்று அந்த எழுத்துகளை அழித்துவிடக்கூடும்; ஆனால், ஒருவர் நமக்குச் செய்யும் நன்மையை சிரமப்பட்டேனும் கல்லில் எழுதி வைத்தால் அது காலம் கடந்து நிற்பதோடு மற்றவருக்கும் பாடமாக அமையும்” என்றான்.

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    180713 – Vraj Diary – Strathmore tinted paper 160gsm 9×12” mixed media (Wa.c pastel and charcoal) wm

    ”மனமந்தி தோழர், மணிகட்டப் பூனை
    இனத்திற்கும் காவல் இவரே, -சினம்கொள்
    ரஜஸ்மாம்ஸை(கம்ஸன்) வெல்ல, ரங்கனின் சத்வ,வ்
    ரஜடயரி தன்னில் ரமிப்பு’’(பாக வதத்தில் அடுத்த வதம் யார்….!டயரி பார்க்கிறார்….!)….கிரேசி மோகன்….!

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . (277)

    சக்தி சக்திதாசன்

     

    அன்பினியவர்களே !

    அன்பான வணக்கங்கள். சிலவார இடைவெளிகள், சில நிகழ்வுகள், சில மகிழ்வானவை வேறு சிலவோ மனதை வருத்துபவை. ஆனால் எதையும் எவராலும் தடுத்து நிறுத்த முடியாது. காலச்சுழற்சியின் இயக்கத்தைத் தடுக்கக்கூடிய வல்லமை யாருக்குத்தான் உண்டு. பலகாலம் பழகிய சிலரின் இழப்பு உள்ளத்தின் ஓரத்தில் உரசத்தான் செய்கிறது. “ கூக்குரல் போட்டு அழுவதனாலே மாண்டவர் மீண்டும் வருவாரா?” என்பது கவியரசரின் யதார்த்தமான வரிகள். “ போனால் போகட்டும் போடா” என்று மனதுக்கு ஆறுதலை ஏற்படுத்தும் வரிகளை முணுமுணுத்துக் கொண்டு இருப்பதைத் தவிர செய்வதற்கு வேறு ஒன்றும் இல்லை.

    சரி இனி இந்த மடலுக்கு வருவோம். இங்கிலாந்தின் நிலப்பரப்பிலும் இத்தகைய பல நிகழ்வுகள் பல முனைகளில் நிகழ்ந்திருக்கின்றன.

    கடந்த மார்ச் மாதம் முன்னாள் மேற்குலக நாடுகளுக்காக உளவு செய்ததிற்காக ரஷ்யாவில் கைது செய்யப்பட்டு பின்னர் உளவாளிகளின் பரிமாற்றத்தின் போது இங்கிலாந்திடம் கையளிக்கப்பட்டு இங்கிலாந்தில் வாழ்ந்து வந்த ரஷ்யப் பிரஜை ஒருவரைச் சந்திக்க அவரது மகள் வந்திருந்த போது, அவர்களிருவரும் மிகப்பயங்கரமான இரசாயன நச்சுப் பொருளினால் தாக்கப்பட்டது பரபரப்பான செய்தியாக வெளிவந்ததை அனைவரும் அறிந்திருக்கலாம். அதைத்தொடர்ந்து அந்த இரசாயனப் பொருளின் ஆரம்பம் ரஷ்யா என்று இங்கிலாந்தினால் குற்றம் சாட்டப்பட்டு இவ்விருநாடுகளுக்கிடையேயும் இருந்த உறவில் பாரிய விரிசல் ஏற்பட்டதையும் அனைவரும் அறிந்திருக்கலாம். அந்த நச்சுப் பொருளினால் தாக்கப்பட்ட இருவரும் இங்கிலாந்து மருத்துவர்களினால் மிகத்தீவிரமான சிகிச்சைகளுக்குள்ளாக்கப்பட்டு காப்பாற்றப்பட்டதும் பழைய செய்தியே. அதன் பக்க விளைவே இப்போதைய பெரிய செய்தியாகி விட்டிருக்கிறது. ஆமாம் அந்த நச்சுப் பதார்த்தத்தின் மிச்சம் மீதி எதேச்சையாக எதுவித அரசியலோ, அன்றி வேறு துறைகளிலோ சம்பந்தப்படாத ஒரு ஜோடியின் கைகளில் எவ்வாறோ தட்டுப்பட்டு அவர்களிருவரும் மிகவும் மோசமான உடல்நிலையில் வைத்தியசாலையில் சில தினங்களுக்கு முன்னர் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் பாதிக்கப்பட்ட பெண் இரு தினங்களுக்கு முன்னால் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளார். இது சர்ச்சையை மீண்டும் கிளப்பியுள்ளதோடு அப்பகுதியில் வாழும் ஏனைய பொதுமக்களை சிறிது அச்சத்துக்குள்ளாக்கி இருக்கிறது.

    அடுத்து இங்கிலாந்து அரசியல் களத்தில் உதைபந்தாக அடிபட்டுக் கொண்டிருக்கும் “ப்ரெக்ஸிட்” இன் அடுத்தகட்ட நகர்வு இங்கிலாந்து அரசுக்கும், பிரதமருக்கும் தலையிடியைக் கொடுத்திருக்கிறது. கால அட்டவணையின் படி 2019ம் ஆண்டு மே மாதம் 29ம் திகதி இங்கிலாந்து ஜரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பினர் அந்தஸ்திலிருந்து உத்தியோகப்பூர்வமாக வெளியேற வேண்டும். ஆனால் அதற்கு முன்னர் அவ்வெளியேற்றத்தின் பின்னால் ஜரோப்பிய ஒன்றியத்துடனான இங்கிலாந்தின் வர்த்தக உறவுகளை நிர்ணயிக்க வேண்டிய தேவையிருக்கிறது. அத்தகைய உடன்பாடு அத்திகதிக்கு முன்னர் ஏற்படுத்தப்படாவிட்டால் இங்கிலாந்தின் பொருளாதாரச் சிக்கல் வலுவடைவதைத் தடுக்க முடியாது. இங்கிலாந்தில் நிலைகொண்டுள்ள பல முன்னணி நிறுவனங்கள், ஸ்தாபனங்கள் தம்மை ஜரோப்பிய ஒன்றியத்துக்குச் சொந்தமான ஒரு நாட்டிற்கு இடம் பெயர்த்து விடும் அபாயமுள்ளது. இத்தகைய இடப்பெயர்வினால் பலர் தமது பணிகளை இழக்கும் நிலை ஏற்படலாம். இத்தகைய ஒரு ஸ்திரமற்ற சூழலினால் இங்கிலாந்தில் பணமுதலீடு செய்ய பல நிறுவனங்கள் தயங்குகின்றன. இது இங்கிலாந்தின் பொருளாதார முன்னேற்றத்தை ஸ்தம்பிக்கச் செய்கிறது. இதனைச் சரிசெய்வதற்காக ஜரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறிய பின்னர் எத்தகையதோர் வர்த்தக உடன்பாட்டை இங்கிலாந்து எதிர்பார்க்கிறது என்பதனை இங்கிலாந்து அரசு முன்வைத்தால் மட்டுமே அதனை ஏற்பதா இல்லையா எனும் நிலையை ஜரோப்பிய ஒன்றியம் எடுக்க முடியும் என்பது ஜரோப்பிய ஒன்றியத்தின் தற்போதைய நிலைப்பாடு. இங்கிலாந்து அரசாங்கம் ஒரு தீர்க்கமான நிலையை எடுக்க முடியாது அதனுள் அமைச்சரவையில் இருந்த கருத்து வேறுபாடு தடையாக இருந்தது. அமைச்சர்கள் தமக்கேற்றவாறு பிரதமரின் நிலைப்பாட்டை விமர்ச்சித்து சமூக ஊடகங்களில் கருத்துக்களைத் தெரிவித்தார்கள். இதனைச் சரிசெய்வதற்காக பிரதமர் கடந்த வெள்ளிக்கிழமை அனைத்து அமைச்சர்களையும் அமைச்சரவை கூட்டத்துக்கு அழைத்து அவர்களது கையடக்கத் தொலைபேசி, மற்றும் சமூக வலைத்தளங்களுக்கு செய்தி அனுப்பக்கூடிய சாதனங்கள் ஒன்றும் இல்லாமல் அமைச்சரவைக்கூட்டத்தை ஒரு அடைக்கப்பட்ட கூட்டமாக நிகழ்த்தினார் என்ற தீர்க்கமான நிலைப்பாட்டிற்கு அனைவரும் வரவேண்டிய கட்டாயத்தை எடுத்துரைத்து தான் முன்மொழியும் நிலைப்பாட்டை விமர்சித்து அதில் சில மாற்றங்களைச் செய்து ஏற்றுக்கொள்ளாதவர்கள் அமைச்சர் பதவியிலிருந்து விலகலாம் எனும் முடிவைத் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து சில முனகல்களுடன் அனைவரும் ஒரு நிலைப்பாட்டை ஆதரித்துள்ளனர். ஆனால் அதைப்பற்றிய விமர்சனங்கள் அமைச்சர்களிடமிருந்து இனி வரக்கூடது அப்படி வந்தால் அவ்வமைச்சர் பதவி நீக்கம் செய்யப்படுவார் என்பது அரசாங்கத்தின் நிலைப்பாடு. இன்றைய செய்திகளின் படி இந்த “ப்ரெக்ஸிட்” பேச்சுக்களுக்கு பொறுப்பாக இருந்த அமைச்சர் டேவிட் டேவிஸ் தனது பதவியைத் தனது துணை அமைச்சருடன் இராஜினாமாச் செய்துள்ளார். இனிவரும் நாட்களில் விளைவுகளை நாம் ஒவ்வொன்றாக நோக்க வேண்டும்.

    சரி இனி இங்கிலாந்தின் சாதனைகளில் ஒன்றைப் பார்ப்போமா ?

    28 வருடங்களின் பின்னால் இங்கிலாந்தின் உதைபந்தாட்ட அணி உலகக் கோப்பைக்கான பந்தயத்தில் அரை இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. இந்த இங்கிலாந்து அணி பல எதிர்பார்ப்புகளுடன் இப்போட்டிக்குள் நுழையவில்லை. மிகவும் இளவயதினரைக் கொண்ட இவ்வணி அனைவரையும் திகைப்பிலாழ்த்தும் வண்ணம் சாதனையை நிலைநாட்டியுள்ளது. இங்கிலாந்தின் பல பொருளாதாரச் சிக்கல்களுக்குள் சிக்கி உழன்று கொண்டிருந்த மக்களுக்கு கொஞ்சம் மகிழ்வைக் கொடுக்கக்கூடிய வகையில் உதைபந்தாட்ட அணி ஒரு மாற்றத்தைக் கொடுத்துள்ளது. இதுவரை நடந்த போட்டிகளில் இதுவே இங்கிலாந்து இக்கிண்ணத்தைத் தட்டிச் செல்வதற்கான ஒரு அருமையான வாய்ப்பு என்று சிலரால் கூறப்படுகிறது. கடைசியாக இங்கிலாந்து உதைபந்தாட்ட உலகக் கிண்ணத்தை வெற்றி கொண்டது 1966ம் ஆண்டு. கடைசியாக இங்கிலாந்து அரை இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது 1990ம் ஆண்டு. சுமார் 28 வருடங்களின் பின்னால் மக்களின் மனதில் மகிழ்ச்சி நம்பிக்கை விதையைத் தூவியிருக்கிறார்கள் உதைப்பந்தாட்ட வீரர்கள். அவர்களது ஆட்டம் மக்கள் மனதின் கனவினை நிறைவேற்றுமா என்பது வரும் புதனன்று மாலையே தெரிய வரும் அதுவரை காத்திருப்போமே !

    மீண்டும் அடுத்த மடலில்

    அன்புடன்

    சக்தி சக்திதாசன்

    http://www.thamilpoonga.com
    http://www.facebook.com/sakthi.sakthithasan

    Share
  • ஆண்டவர்க்கே புரியவில்லை

    ( எம் . ஜெயராமசர்மா ….. மெல்பேண் …. அவுஸ்திரேலியா )

    நிலவினிலே காலை வைத்தான்
    நீள்கடலை சுற்றி வந்தான்
    வளம் கொழிக்க வைப்பதற்கு
    வகுத்து நின்றான் பலவழியை
    அளவில்லா ஆசை கொண்டு
    ஆற்றி நின்றான் ஆராய்ச்சி
    ஆனாலும் அவன் மனமோ
    அமைதி நிலை அடையவில்லை !

    ஆண்டவனைப் பழித்து நின்றான்
    அவதூறாய்ப் பேசி நின்றான்
    அறம்பற்றி நியாயம் பற்றி
    அதிகமாய் கிண்டல் செய்தான்
    இறப்போடு பிறப்பு எல்லாம்
    ஏன் இங்கே வருகுதென
    இன்றுவரை குழப்பி நின்று
    இவன் தெரியா உலைகின்றான் !

    வாதம் பல செய்கின்றான்
    வழக்கு பல காணுகிறான்
    ஆதாயம் தேடித் தேடி
    அறம் தொலைத்து நிற்கின்றான்
    அன்னை தந்தை பாசம்கூட
    அவன் மனதில் காணவில்லை
    அவன் மனமோ என்னாளும்
    அல்லலில் தான் உழல்கிறது !

    ஆண்டவனின் படைப்பு அதனில்
    அவன் படைப்பே உயர்வாகும்
    அவனுக்கே ஆற்றல் பல
    ஆண்டவனே வழங்கி உள்ளான்
    ஆனாலும் அவன் போக்கோ
    ஆண்டவர்க்கே புரிய வில்லை
    அவன் மட்டும் இவ்வுலகில்
    அதையெண்ணா வாழுகிறான் இவ்வுலகில் !

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    180712 -Vatsalya 9×12” Strathmore tinted paper 160gsm mixedmedia -lr

    ”உச்சிமுக ரும்முன் உலகளந்தோன், கோமாதா
    மச்சினர் மாலவர் மாடுதழுவல்: -கொச்சுமவள்
    ராதையின், சக்களத்தி ராப்பகலாய், வாத்ஸல்ய
    போதைக்குப் பட்டமளிப் பு (பட்டாபிஷேகம்)’’….கிரேசி மோகன்….!

    “அந்தணர், மந்திரம், ஆடம் பரமின்றி,
    சந்திர வம்சத்து ஸ்ரீரங்கன்,-நந்தனின்,
    வீட்டுச்சேய் பால்வெளியில், வேந்தனாய் ஆவதைக்,
    காட்டிய கேசவ் கவி”….கிரேசி மோகன்….!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    180711 Yashoda and Putana -mixed media watercolour, pastel, and charcoal – Strathmore 160gsm tinted paper 9”x12”-lr

    பூதனை தான்யசோதை பூமிக்குத் தாய்ப்பாலை
    போதனை செய்யப் பிறந்தபிரான்: -தீதான
    நஞ்சுண்ண பேய்ச்சி நகிலுண்ட கண்ணபிரான்
    அஞ்சலென்று மோக்‌ஷம் அளிப்பு….!

    பல்லில்லா பாலகன் என்றெண்ணி பூதனை
    கொல்லவந்த கண்ணனைக் கண்டதும் -இல்லம்
    புகுந்து முலைதிணித்துப் பார்த்திட வாய்க்குள்
    முகுந்தனுக்கு முப்பத்தி மூணூ(நமக்கெல்லாம் 32)….!

    முலைகனத் தாயை அலைக்கழிய விட்டு
    கொலைகுண பூதனை கொங்கை -மலைசுவைத்தாய்
    அந்நஞ்சைப் பாம்பின்மேல் ஆடி ஜெரித்தவன்பால்
    நன்நெஞ்சே நிற்பாய் நினைந்து….கிரேசி மோகன்….!

    ’’தூங்க வருகவே’’….!
    ———————————————————-

    பூதனை நச்சுப் பாலொடு அவளின்
    வேதனை தீரக் குடித்துக் களைத்தவன்
    சீதரன், கோமளன், ஸ்யாமளன், என்னுளத்
    தீதினை விரட்டித் தூங்க வருகவே….!

    Share
  • கிரேசி மோகனின் “சங்கர லிங்காஷ்டகம்”

     

    பாடல்: கிரேசி மோகனின் “சங்கர லிங்காஷ்டகம்”
    இசை: குரு கல்யாண்

     

    சங்கர லிங்காஷ்டகம்
    —————————-

    சத்சிவ சித் தானந்தன லிங்கம்
    சகுண உபாசக நிர்குண லிங்கம்
    புத்தி அனுக்கிரக பாரதி லிங்கம்
    சத் குரு சங்கர தத்துவ லிங்கம்….(1)

    தொன்மையில் சிவமாய்த் தோன்றிய லிங்கம்
    தென்முகம் நோக்கிய தெய்வத லிங்கம்
    சின்மயமான சிதம்பர லிங்கம்
    சத்குரு சங்கர தத்துவ லிங்கம்….(2)

    ஆழ்நிலை த்யானத் தசலன லிங்கம்
    அண்ட சராசர மாயா லிங்கம்
    ஊழ்நாள் ஊர்த்தவ தாண்டவ லிங்கம்
    சத்குரு சங்கர தத்துவ லிங்கம்….(3)

    முப்புரம் கனலெரி மூட்டிய லிங்கம்
    மன்மத தகன மகாதவ லிங்கம்
    அப்புவிண் வாயுமண் அக்கினி லிங்கம்
    சத்குரு சங்கர தத்துவ லிங்கம்….(4)

    அயனரி அடிமுடி தேடிய லிங்கம்
    அலைகலை தலைமுடி சூடிய லிங்கம்
    நயன நுதலிடை நீறணி லிங்கம்
    சத்குரு சங்கர தத்துவ லிங்கம்….(5)

    ”கனக மகாமழை” காட்டிய லிங்கம்
    குருநெறி ”மனீஷா பஞ்சக” லிங்கம்
    அனுதினம் ”பஜ கோவிந்தன” லிங்கம்
    சத்குரு சங்கர தத்துவ லிங்கம்….(6)

    ஷண்மத ஸ்தாபக சங்கர லிங்கம்
    சத்திய சிவமய சுந்தர லிங்கம்
    உன்னத அத்வை தாம்ருத லிங்கம்
    சத்குரு சங்கர தத்துவ லிங்கம்….(7)

    இகபர சுகமருள் ஈஸ்வர லிங்கம்
    இம்மையில் மறுமையை ஈன்றிடும் லிங்கம்
    பகலென ஒளிர் பரமாத்மக லிங்கம்
    சத்குரு சங்கர தத்துவ லிங்கம்….(8)

    பலஸ்ருதி
    ————-
    ஜயஜய ஹரஹர சங்கர லிங்கம்
    ஜனன மரண நிலைநீக்கிடும் லிங்கம்
    தயவொடு தாயெனத் தேற்றிடும் லிங்கம்
    தந்தை சதாசிவ சங்கர லிங்கம்….

    Share
  • யாழ்ப்பாண நூலகத்துக்குத் தீ வைத்தவர் ஒருவரின் வாக்குமூலம்

     

    – வைத்தியர் ருவண் எம்.ஜயதுங்க

    தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப்

    யாழ்ப்பாண நூலகத்துக்குத் தீ வைத்த நபரொருவர் எனக்களித்த வாக்குமூலத்தை பல வருடங்களுக்குப் பிறகு நான் எழுதுகிறேன். இந்த நிகழ்வு குறித்து நான் தனிப்பட்ட பதிவேதும் எழுதவில்லை. எனினும் 2002 ஆம் ஆண்டு என்னால் எழுதப்பட்ட எனது ‘பிரபாகரன் நிரூபணம் குறித்த மனோவியல் ஆய்வு’ எனும் தொகுப்பில் நான் குறிப்பிட்டிருக்கிறேன்.

    இந்த நபரை, 1994 ஆம் ஆண்டு நான் மாத்தளை வைத்தியசாலையில் கடமையாற்றிய காலத்தில் சந்தித்தேன். அவர் எனது பகுதி நேர நோயாளியாகவிருந்தார். பகுதி நேர நோயாளி என நான் குறிப்பிடுவது ஏனெனில், அவருக்கு ஆரம்பத்திலிருந்து சிகிச்சையளித்த வைத்தியர் நானல்ல. எனினும் அவரது உடல் ரீதியான வியாதிகள் சிலவற்றுக்கு நான் சில வைத்திய அறிவுரைகளைக் கூறியிருந்ததாலும், அவருக்கு சில மருந்துகளை இலவசமாகக் கொடுத்ததாலும் அவர் எனக்கு சினேகமாகியிருந்தார்.

    நான் இங்கு குறிப்பிடப் போவது அந்த நபர் என்னிடம் கூறியதைத்தான். இந்தத் தகவல்கள் உண்மையானவை, பொய்யானவை போன்ற விடயங்களை வாசகர்களின் தீர்மானத்துக்கு விட்டு விடுகிறேன். (ஓய்வுபெற்ற சிரேஷ்ட போலிஸ் பிரதி காவலதிகாரி எட்வட் குணதிலகவால் முன்வைக்கப்பட்ட ‘ஆய்வறிக்கை’யின் பிரகாரம், யாழ்ப்பாண நூலகத்தை எரித்தது விடுதலைப்புலிகள் இயக்கத்தினரது செயல்பாடாகும். அதற்கு சிங்களவர்கள்தான் காரணம் எனக் காட்டி சர்வதேச மக்களின் அனுதாபத்தை வென்றெடுப்பதே அவர்களது நோக்கமாகும்.)

    இந்த வாக்குமூலத்தை அளித்த நபரது உத்தியோகம் என்னவாகவிருந்தது என்பதை நான் கூற மாட்டேன். காரணம் அது சர்ச்சைக்குரியதாகவும், ஈழ ஆதரவாளர்களால் இந்த விடயமும் கூட அவர்களது பிரசார தந்திரமாகப் பாவிக்கப்படக் கூடும் என்பதனாலுமாகும். எவ்வாறாயினும், இந்தச் சம்பவம் நடைபெற்ற போது அவர் வடக்கில்தான் இருந்திருக்கிறார்.

    ஒரு இலட்சத்துக்கும் அதிகமான புத்தகங்களோடு, ஆசியாவிலிருந்த விசாலமான நூலகங்களிலொன்றான யாழ்ப்பாண நூலகத்துக்கு 1981 ஆம் ஆண்டு, மே மாதம் 31 ஆம் திகதி தீ வைக்கப்பட்டது. அந்தக் கால கட்டத்தில் யாழ்ப்பாண அபிவிருத்திக் குழுத் தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருந்ததோடு, கொழும்பிலிருந்து சென்றிருந்த காடையர்கள் யாழ்ப்பாணத்தில் கலவரத்தை ஏற்படுத்தியவாறு இருந்தனர். இந்த நிகழ்வானது இனவாதக் கலவரங்களின் திருப்புமுனையாக அமைந்தது.

    யாழ்ப்பாணத் தமிழர்களின் பெருமைக்குக் கொடுத்த அடியாகத்தான் யாழ்ப்பாண நூலகம் கொளுத்தப்பட்டதென அந்த நபர் கூறுகிறார். இதற்கு சில அரசியல்வாதிகளும் கூட அனுமதியளித்திருக்கின்றனர். அதை நியாயப்படுத்தும் விதமாக, விடுதலைப் புலி இயக்கத் தீவிரவாதிகள் இந் நூலகத்தில் வைத்துத்தான் ஒருவரையொருவர் சந்தித்து தாக்குதல் திட்டங்களைத் தீட்டுவதாகவும், அதனால் அவர்கள் சந்தித்துக் கொள்ளும் இடங்களை அழித்தொழித்து விட வேண்டுமெனவும் உத்தரவிடப்பட்டிருக்கிறது. அத்தோடு தமிழ் ஐக்கிய விடுதலை முன்னணியினரின் இறுதி பிரச்சாரக் கூட்டம் இடம்பெற்ற இடத்தில் கடமையில் ஈடுபட்டிருந்த போலிஸார் இருவரை தீவிரவாதிகள் கொலை செய்திருந்ததால் இந்தக் குழுவினர் அமைதியற்று இருந்திருக்கின்றனர்.

    இந்த நபர் கூறும் விதத்தில், அவரும், அவருடனிருந்த குழுவினரும் முதலில் சாராய போத்தலொன்றில் பெற்றோலும், மணலும் நிரப்பி, புடைவைத் துண்டால் மூடி அதனைக் கொளுத்தி விட்டு நூலகத்தை நோக்கி எறிந்திருக்கின்றனர். அந்த போத்தலுக்குள் சதுர வடிவில் வெட்டப்பட்ட இறப்பர் செருப்பின் துண்டொன்றும் இருந்ததனால் பலமாகத் தீ பற்றிக் கொண்டிருக்கிறது. இதற்கிடையே குழுவிலிருந்த ஒருவர் ‘நெருப்பு நெருப்பு’ எனக் கத்தியிருக்கிறார். அத்தோடு முன்பே திட்டமிட்டிருந்தவாறு ஒரு குழுவினர் தீயை அணைக்க தண்ணீரை எரிவதைப் போல பெற்றோலையும், மண்ணெண்ணையையும் கொண்டிருந்த வாளிகளை தீயின் மீது எறிந்திருக்கின்றனர். அதனால் தீயானது கொழுந்து விட்டெரியத் தொடங்கியிருக்கிறது. நூலகத்திலிருந்த புத்தகங்களிலும் தீப்பிடித்துக் கொண்ட காரணத்தால் சொற்ப நேரத்துக்குள் யாழ்ப்பாண நூலகம் சாம்பலாகி விட்டிருக்கிறது. இருண்ட வானம் சிவந்து போயிருந்தது.

    தீ, அதிக வெப்பத்தையும் கக்கிக் கொண்டிருந்ததனால், தீ வைத்தவர்கள் சற்றுத் தூரமாகச் சென்று இக் காட்சியைக் கண்டு களித்தவாறு மகிழ்ச்சி ஆரவாரம் செய்து கொண்டிருந்திருக்கின்றனர். இதற்கிடையே யாழ்ப்பாணத் தமிழ் மக்கள், நூலகத்துக்கு அருகில் ஓடி வந்து தமது அக ஆன்மா எரிந்து கொண்டிருப்பதையும், அதற்குக் காரணமானவர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் எழுப்புவதையும் கண்டிருக்கிறார்கள். இந்த வாக்குமூலத்தைக் கொடுத்தவர் கூறுவதற்கேற்ப தீ வைப்பதில் பங்குகொண்ட சிலர் சாராய போத்தல்களைக் கையில் வைத்துக் கொண்டு, அவற்றைப் பருகியவாறு இன ரீதியான கோஷங்களை எழுப்பியிருக்கிறார்கள். மது போதையில் விடுதலைப் புலிகள் இயக்கத்தினருக்கு சவால் விடுத்திருக்கின்றனர். பின்னர் போலிஸார் வந்து மிகவும் மென்மையாக அக் காடையர்களை அங்கிருந்து நீங்கிச் செல்லப் பணித்திருக்கின்றனர்.

    மிகவும் அரிய கைப்பிரதிகளைக் கூடக் கொண்டிருந்த யாழ்ப்பாண நூலகம் அழிக்கப்பட்டதைக் குறித்து ‘Cultural Genocide’ அதாவது ‘கலாசார இனப்படுகொலை’ என பேராசிரியர் தயா சோமசுந்தரம் தெரிவித்திருக்கிறார். யாழ்ப்பாண நூலத்தை எரிக்க இராணுவ அதிகாரிகளின் ஒத்துழைப்பு இருந்ததாக நான் நினைக்கவில்லை. காரணம் இராணுவ அதிகாரிகளான ஜெனரல் வஜிர விஜேரத்ன, கர்னல் வைத்தியர் ரஞ்சன செனவிரத்ன போன்ற இராணுவ அதிகாரிகள் கூட யாழ்ப்பாண நூலகத்தின் உறுப்பினர்களாக இருந்ததோடு, அவர்கள் கூட இச் சம்பவத்தை வன்மையாகக் கண்டித்திருக்கிறார்கள். இந்தக் குற்றச் செயலைச் செய்ய காடையர்களைத் தூண்டி விட்ட அரசியல்வாதிகள்தான் இதற்குப் பொறுப்புக் கூற வேண்டும்.

    எவ்வாறாயினும், யாழ்ப்பாண நூலகத்தை எரித்த காடையர் குழுவிலிருந்த இந்த நபர் பின்னர் அதைக் குறித்து வருந்தத் தொடங்கியிருக்கிறார். அவரது ஒரே பிள்ளையும் கூட பதினாறு வயதாகும் முன்பு இறந்து விட்டிருந்தது. அதனால் வாழ்க்கை குறித்து வெறுப்படைந்திருந்த அவர் மதுபானத்திற்கு அடிமையாகியிருந்தார். அவரை நான் இறுதியாக 1995 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் சந்தித்தேன். இப்போது அவர் உயிரோடு இருக்கிறாரா, இல்லையா என்பதை நான் அறியேன்.

    ******

    Font – Unicode

     

    எழுத்தாளர் பற்றிய குறிப்பு 

    வைத்தியர் ருவண் எம்.ஜயதுங்க

    கவிதை, சிறுகதை, கட்டுரைகள் ஆகிய துறைகளில் சிங்களம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் தனது பங்களிப்பை ஆற்றி வரும் திரு. ருவண் எம் ஜயதுங்க, இலங்கை இராணுவத்தின் மன நலப் பிரிவில் மருத்துவராக கடமையாற்றியவர்.  அத்தோடு இலங்கை சுகாதார அமைச்சின் புத்தளம் மாவட்டத்துக்கான மன நல உத்தியோகத்தராகவும் கடமையாற்றியவர்.

    ஜோன் எப். கென்னடி, வேலுப்பிள்ளை பிரபாகரன் போன்ற தலைவர்கள் குறித்தும், மன நல மருத்துவம், சிறுகதைத் தொகுப்புகள்  என சிங்களம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் நாற்பதுக்கும் மேற்பட்ட  நூல்களை எழுதியுள்ள இவர் தற்போது கனடாவில் வசித்து வருகிறார்.

    Share
  • திருமுறுகாற்றுப்படை உரை மரபு (சோமசுந்தரனார்)

    -ஜெ.சுகந்தி

    பழந்தமிழ் இலக்கியங்கள் பதிப்பித்த காலத்திலிருந்து இன்று வரையிலும் அதன் சுவைஅறிந்து உரை கூறும் மரபு இருந்து வருகிறது. இலக்கியங்களின் பொருளினை எளிமையாக்கி மக்களிடம் கொண்டு செல்வதில் உரையாசிரியர்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றனர். தமிழ் இலக்கியங்களுக்கு உரை எழுதும் உரையாசிரியர்கள் தங்களுக்கு என ஒரு மரபை உருவாக்கிக் கொண்டு உரை எழுதுகின்றனர். அவ்வகையில் உரையாசிரியர்களில் சிறப்பிடம் பெறும் சோமசுந்தரனார் உரைஎழுதிய பத்துப்பாட்டு நூல்களில் ஒன்றான திருஏரகத்தில் அமைந்துள்ள உரை  மரபுகளைப் பற்றி இக்கட்டுரை காண்போம்.

    உரை விளக்கம்

    இலக்கியம், இலக்கணம், உரை என்ற மூன்றும் மொழிப்புலத்தை மையமாகக் கொண்டு மூன்று வகைமைப்பட்ட தளங்கள். இவை, தமக்குள் நெருக்கமான உறவுகள் கொண்டவை. ஒன்றனுள் ஒன்று இவை விளக்கம் பெறுபவை. இலக்கியமும் இலக்கணமும் முதன்மையானவை என்றால் அவற்றின் காரியமாகவும் அவற்றின் விளக்கமாகவும் இருப்பவை உரைகள். 

    மேலும், இலக்கிய இலக்கணங்களைச் செழுமைப்படுத்துவதற்கும், அவற்றின் வாசிப்புத் தளத்தைப் பொருளுடையதாகவும் விரிவுடையதாகவும் ஆக்குவதற்கும் உரைகள் உறுதுணை புரிவன. உரைகள் காலத்தின் தேவை. உரைகள் இல்லையெனில் பல தலைமுறைகளைத் தாண்டி வருகின்ற இலக்கிய இலக்கணங்களைப்புரிந்து கொள்வதிலும் விளக்குவதிலும் பெரும் துயரங்களும் தவறுகளும் தடைகளும் ஏற்படக்கூடும். முக்கியமாக இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டுத் தோன்றிய சங்க இலக்கியங்களையும் தொல்காப்பியத்தையும் இந்த உரையாசிரியர்கள் தான் நம்மோடு நெருங்கயிருக்கச் செய்திருக்கிறார்கள். தமிழ் இலக்கிய வரலாற்றில், உரைகள் மிக முக்கியமான இடம் வகிக்கின்றனர். வேறெந்த மொழிகளிலும் இத்தகைய உரைகளையோ, அவற்றின் நீண்ட வரலாற்றையோ, பன்முகப்பட்ட பரிமாணங்களையோ காணமுடியாது. தமிழ் மொழியின் தனிச்சிறப்பியலான பண்பு இதுவாகும்.

    உரை என்பது உரைத்தல் அல்லது சொல்லுதல் என்ற பொருளுடையது. குரு, சீடன், ஆசிரியன், மாணாக்கன் என்ற உறவுமுறையில், ஒருவர் விளக்கிச்சொல்ல பலர் இருந்து கேட்க என்ற முறையில் எழுந்தது உரை கல்வி அல்லது தோரணி இதற்கு உண்டு. ‘கற்றிலனாயினும் கேட்க’ என்ற அடிப்படையிலான ஒரு தேவையையும் முறைமையையும் கொண்டது. விளக்குதல் என்ற பொருண்மையோடு கூடியது உரை ஆகும்.

    சோமசுந்தரனாரின் உரைநெறி

    பத்துப்பாட்டில், ஆறுபடைவீடுகளுள் ஒன்றான திருஏரகத்தில் அமைந்துள்ள உரைநெறிகள் பின்வருமாறு:

    அவை,

    1 சொற்பொருள்

    2 காரணம் காட்டிப் பொருள் கூறுதல்

    3 மேற்கோள் காட்டுதல்

    4 தன் கருத்திற்கு ஒத்த உரையைக் கூறல்

    5 ஒன்றிற்கும் மேற்பட்ட உரைகளைக் கூறல்

    6 இயைபு சுட்டல்

    சொற்பொருள்

    சோமசுந்தரனார் அகலவுரையில் சிற்சில இடங்களில் மட்டும் அருஞ்சொற்பொருள் குறிப்பிட்டுச் செல்கிறார்.

    இருவர்- தாயும் தந்தையும் (திரு.177)

    அறுநான்கிரட்டி- நாற்பத்தெட்டு  (திரு.178)

    ஞாண்- ஈண்டுப்பூணுவம் நூல் என்க  (திரு.183)

    புலர – தம்முடம்பிலிருந்தே புலரும்படி என்க  (திரு.184)

    காழகம்- ஆடை  (திரு.184)

    உடீஇ-உடுத்து (திரு.184)

    தன்-தன்னை (திரு.185)

    ஏரகம்-திருவேரகம் என்னும் ஊர் (திரு.189)

    காரணம் காட்டிப் பொருள் கூறுதல்

    சில சொற்கள் படிமப் பொருளுடையனவாயிருக்கின்றன. சில உட்பொருள் உடையனவாயுள்ளன. அத்தகையவற்றிற்கு இன்ன காரணத்தால் இப்பொருளுடையதாகிறது எனச் சுட்டிச் சொல்லுதல் சோமசுந்தரனார் போன்ற உரையாசிரியர்களிடம் சிறப்பாக காணப்படுகின்றது. இவற்றில், சொல் காரண முறை கூறுதல், தொடர் காரண முறை கூறுதல் போன்ற இருநிலைகள் காணப்படுகின்றன.

    சொல் காரண முறை கூறுதல்

    ‘இருவர்ச் சுட்டிய பல்வேறு தொல்குடி’ (திரு.178)

    தாயும் தந்தையுமாகிய இருவர் குலத்தையும் உலகத்தார் நன்றென்று மதித்த பலவாய் வேறுபட்ட பழைய குடியார் பிறந்த என்றார். இருவர் என்பதனைத் தாயும் தந்தையுமாகிய இருவர் குடியும் உயர்குடி என்று உலகத்தாற் சுட்டிப் புகழப்பட்ட நற்குடிப் பிறப்பினர் என்றவாறு, அந்தணர்க்குரிய நல்லொழுக்கத்தே வழுவாமல் நிற்றற்குத் தலைசிறந்த ஓதுவாவது, உயர்குடிப் பிறப்பேயாகலின் அதனை விதந்தெடுத்தோதினார்.

    மேலும்,

    ‘மூன்று வகைக் குறித்த முத்தீச் செல்வத்து’ (திரு.181)

    நாற்சதுரமும், முச்சதுரமும் வில் வடிவமுமாகிய மூன்று வகையைக்கருதின ஆகவனீயம் தக்கிணாக்கினி காருகபத்தியம் என்னும் மூன்று தீயானுண்டாகிய செல்வத்திணையும் உடைய, என்றார். முத்தீ என்பதற்கு மூன்றாவன ஒன்று வேதத்தை வழங்கவும் ஒன்று தேவர்கட்குத் தக்கிணை கொடுக்கவும், ஒன்று பூலோகத்தை இரட்சை பண்ணவும்; இவ்வாறாய முத்தீ என்பாருமுளர் என்று கூறியுள்ளார்.

    தொடர் காரண முறை கூறுதல்

    ‘இருமூன் றெய்திய இயல்பினின் வழாஅது’ (திரு.177)

    ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல், ஏற்றல் என்னும் ஆறாகிய நன்மை பொருந்திய இலக்கணத்தில் வழுவாமல் நின்று கூறினார். மெய்ந்நூலில் அந்தணர்க்கோதிய இயல்பு ஆறாகலின் ‘இருமூன்று எய்திய இயல்பு’ என்றார். அவை, ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல், ஏற்றல் என்னும் தொடர்களை காரண முறையில் விளக்கம் கூறுகிறார்.

    ‘ஆறினிற் கழிப்பிய அறன்நவில் கொள்கை’ (திரு.180)

    மெய்ந்நூல் கூறும் நெறியானே கழித்த அறத்தை எப்பொழுதும் கூறுகின்ற கோட்பாட்டினையும் என்றார். கழித்தல் அருமை என்பது தோன்றக் கழிப்பி என்றார். உலகில் காம முதலிய நுகர்வார்க்குப் பதினாறாண்டு அகவை முதல் நாற்பத்தெட்டாண்டின் இறுதியாகவுள்ள பருவமே தகுதியான பருவம் ஆதலால், அத்தகைய பருவத்தினும் காம முதலியவற்றில் உளம் போக்காது அடங்கிய அருமை தோன்ற நல்லியாண்டு ஆறினிற் கழிப்பி என்றார்.

    ‘இருபிறப் பாளர் பொழுதறிந்து நூவல’ (திரு.182)

    நூலணிதற்கு முன்னர் ஒரு பிறப்பும் பின்னர் ஒரு பிறப்புமாகிய இருபிறப்புனையுமுடைய அந்தணர் தாங்கள் வழிபடுங்கால மறிந்து வாழ்த்துக் கூறாநிற்படி என்றார். பொழுதறிந்து நுவல என்பதற்கு, ‘உதயகாலத்தும் மத்தியான்ன காலத்தும் அத்தமன காலத்தும் தாபனம், அநுட்டானம் பூசையாகிய மூன்று தொழிலையும் முயன்று செய்ய, என்பாரும் என்று கூறியுள்ளார்.

    ‘ஒன்பது கொண்ட மூன்றுபுரி நுண்ஞான்’ (திரு.183)

    முந்நூல் கொண்டு முப்புரியாக்குதலின் ஒன்பதாகிய நூலைத் தன்னிடத்தே கொண்ட ஒருபுரி மூன்றாகிய நுண்ணிய பூணூலையும் உடையதென்பர். ஒவ்வொரு நூலும் மூன்று புரி உடைத்தாய் மூன்றாகலின் ஒன்பது கொண்ட மூன்று புரி நுண்ஞாண் என்று கூறியுள்ளார்.

    ‘புலராக் காழகம் புலர உடீஇ’ (திரு.184)

    நீராடுங்காற் தோய்க்கப்பட்ட கலிங்கம் உடம்பிலே கிடந்து புலரவுடுத்து என்றார். நீராடிய ஆடை புலராத படியிலிருந்து வழிபடுவோர் என்பார் ‘புலராக் காழகம் புலர உடீஇ’ என்று கூறினார்.

    மேற்கோள்

    பொ.வே. சோமசுந்தரனார் பத்துப்பாட்டு நூற்பாவுக்குத் தாம் கூறும் உரை விளக்கம் ஒவ்வொன்றிற்கும் இயன்ற வரை தமக்கு முன் தோன்றிய நூல்களிலிருந்து மேற்கோள் காட்டிக் கொண்டே செல்கிறார்.

    1 தொல்காப்பிய நூல்களில் புறத்திணை மேற்கோள் காட்டுதல்

    2 எட்டுத்தொகை நூல்களில் பதிற்றுப்பத்து மேற்கோள் காட்டுதல்

    3 பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் திருக்குறள் மேற்கோள் காட்டுதல்

    4 காப்பிய நூல்களில் சிலப்பதிகார மேற்கோள் காட்டுதல்

    போன்றவை சோமசுந்தரனார் மேற்கோள்களாகக் கையாண்டுள்ளார்.

    தன் கருத்திற்கு ஒத்த உரையை கூறல்

    சோமசுந்தரனார் தான் கூறும் கருத்திற்கு மேலும் விளக்கம் தரும் வகையிலும் தன் கருத்திற்கு அரண் செய்யும் வகையிலும் முந்தைய உரைக் கருத்துக்களைத் தருகிறார்.

    ———-பெரிது வந்து
    ஏரகத் துறைதலும் உரியன் அதாஅன்று (திரு.188-189)

    அச்செயற்குப் பெரிதும் மகிழ்ந்து திருவேரகம் என்கின்ற ஊரிலே இத்தலம் உரியன் என்றார்.

    இதனை,

    ‘மலைநாட்டகத் தொரு திருப்பதி’

    என்றார் நச்சினார்க்கினியர்.

    ஒன்றிற்கும் மேற்பட்ட உரைகளை கூறல்

    சோமசுந்தரனாரின் ஒரு நூற்பாவிற்கு இரு மாறுபட்ட கருத்துகளும் இருந்தன. அவற்றையும் உரை விளக்கத்தில் எடுத்துரைக்கின்றார்.

    ‘————– பெரிது வந்து
    ஏரகத் துறைதலும் உரியன் அதாஅன்று'(திரு.188-189)

    அச்செயற்குப் பெரிதும் மகிழ்ந்து திருவேரகம் என்கின்ற ஊரிலே இத்தலம் உரியன் என்றார்.

    இதனை,

    ‘மலைநாட்டகத் தொரு திருப்பதி’

    என்றார் நச்சினார்க்கினியர்.

    சிலப்பதிகார அரும்பத உரையாசிரியர் – வெண்குன்றத்தைச் சுவாமிமலை எனலாம். ஏரகம் மற்றொரு திருப்பதி என்று கருதினாராதல் வேண்டும். அருணகிரியார் – சோழநாட்டிலுள்ள சுவாமிமலை என்னும் தலமே ஏரகம் என்று பொருள் விளக்கம் தருகிறார்.

    இயைபு சுட்டல்

    ஒரு நூற்பாவிற்கும் அடுத்த நூற்பாவிற்கும் இயைபு சுட்டிப் போகும் நயத்தினையும் சோமசுந்தரனார் உரையில் காணலாகும்.

    நூற்பா இயைபு  

    ‘அறுவேறு வகையின் அஞ்சுவர மண்டி
    அவுணர் நல்வல மடங்கைக் கவிழிணர்
    மாழுதல் தடிந்த மறுவில் கொற்றத்து
    யெயா நல்லிசைச் செவ்வேற் சோய்’ (திரு.58-61)

    என்ற தொடரில், சற்று வேறாம் வகையாகவே அச்சந்தோன்ற மிக்குச் சென்று, அவனை யொழிந்த அவுணருடைய நல்ல வெற்றி இல்லையாம்படி, கீழ்நோக்கின் பூங்கொத்துக்களையுடைய மாமரத்தை வெட்டின, குற்றமில்லாத வெற்றியினையும் ஒருவரானும் அளந்தறிய வொண்ணாத நல்ல புகழினையும் செவ்விய வேலையும் உடைய முருகக்கடவுள், என்றார்.

    அஞ்சி ஓடிக் கடல் கலங்கப்புக்க, சூரன்மாலைத் தடிந்த காலை அவன் உடல் அற்று வேறாம் வகை செய்ய மேலும், அவுணர் நல்வலமடங்க மாமரத்தினையும் தடிந்த கொற்றத்தூர் சேய் என்ற சொற் கிடந்தவாறே இயைபு காண்க.

    நூற்பா தொடர் இயைபு 

    ‘அறுநாண் கிரட்டி இளமை நல்லியாண்டு’ (திரு.179)

    இருபத்து நான்கின் இரட்டியாகிய நாற்பத் தெட்டாகிய இளமை மிக்க நன்றாகிய யாண்டுகளை அறுநான் கிரட்டி  – நாற்பத் தெட்டு யாண்டு பிரமசரியங்கழித் தென்பார், ஆறினிற் கழிப்பி இயைபுப்படுத்தி  என்று கூறுகிறார்.

    முடிவுரை

    இலக்கிய இலக்கண உருவாக்கம் சமுதாய உருவாக்க அங்கமாக இருக்கும் நிலையில் குறிப்பிட்ட சமுதாய வளர்ச்சி அதன் இலக்கண இலக்கிய உருவாக்கத்தில் வளர்ச்சியில் மட்டுமே அடங்கிவிடுவதில்லை. இந்த இலக்கண இலக்கியங்கள் எவ்வாறு தொடர்ந்து பேணப்பட்டு வருகின்றன; எவ்வாறு ஆராயப்பட்டு வருகின்றன எவ்வாறு பயன் கொள்ளப்பட்டு வருகின்றன என்பதிலும் சமுதாய வளர்ச்சி அடங்கியுள்ளது. இந்த மரபுப் பேணலின் ஒரு முக்கிய அங்கமாக அமைவனவே உரைகள்.

    பார்வை நூல்:

    பத்துப்பாட்டு – பொ.வே. சோமசுந்தரனார்

    *****

    கட்டுரையாளர் – முழுநேர முனைவர்பட்ட ஆய்வாளர்,
    தமிழ்த்துறை,
    அரசு கலைக்கல்லூரி(தன்னாட்சி),
    சேலம் – 7.

     

     

    Share
  • இலட்சுமியின் மருமகள் புதினத்தில் உத்தி முறைகள்

    -முனைவர் ஆ .உமா

    உலகில் தோன்றும் அனைத்து உயிரினங்களும் தனித்திறமை பெற்றே  விளங்குகின்றன. இதில் தன்னிடமுள்ள தனித்திறனை வெளிப்படுத்துவதில் மனிதனே முன்னோடியாக விளங்குகிறான். சிந்தித்துச் செயல்படுவதில் சிறந்தவனான மனிதன் தன் சிந்தனைகளைப் பலவாறு வெளிப்படுத்துகிறான். ஒரு கவிஞனின் சிந்தனைத் திறனின் வெளிப்படுதான் கவிதை. ஓர் எழுத்தாளனின் கற்பனைத் திறன்தான் கதைகள். நாடகங்கள், கட்டுரைகள், புதினங்கள் ஆகும். ஒரு கதையின் உள்ளடக்கப் பொருளுக்கு அஞ்சி நோக்க வேண்டியவை கதையின் உத்தியும் மொழிநடையும் ஆம். உத்தியினால் ஒரு கதை சிறப்பு நிலையடையும். படைப்பாளர் இலட்சுமி பல உத்தி முறைகளைக் கொண்டு புதினம் படைத்துள்ளார். அதனால் அவரின் மருமகள் என்ற புதினத்தில் காணலாகும் உத்திமுறைகளை எடுத்துக் காட்டுவது இக்கட்டுரையின் நோக்கமாக அமைகிறது.

    உத்தி – விளக்கம்

    படைப்பாளன் தன் படைப்பின் வழியே வெளிக்காட்டும் நுண்ணிய அணுகுமுறையை உத்தி எனலாம். ‘பொதுவாகப் படைப்பாளன் தான் கூறவந்த செய்தியான உள்ளடக்கத்தை வெளிப்படுத்தும் முறையே உத்தி எனலாம்’.1  என்கிறார் டாக்டர் ந. பிச்சமுத்து.

    பாரதியார், தாம் கவிதையில் சொல்ல முடியாத சில செய்திகளை வசன கவிதை வடிவத்திலும், சிந்து, கண்ணி, போன்றவை கூறுவது கூட ஒருவகை உத்தி தான் என்கிறார் அவர்.

    ‘படைப்பாளன் தான் சொல்ல வந்த கருத்துக்களைக் கற்பவர் மனத்தில் எளிதில் பதியச் செய்யவும் விளங்க வைக்கவும் கையாளும் முறைகள் உத்தியாகும்’2 என்று செ. சாரதாம்பாள் கூறியுள்ளார்.

    ‘ஒத்த காட்சி உத்திவகை விரிப்பின் நுதலிய தறிதல் முறையே தொகுத்துக் கூறல் வகுத்து மெய்ந்தளித்தல் மொழிந்த பொருளோ டொன்ற வைத்தல்’3 எனத் தொல்காப்பியர்  உத்தியின் அணுகுமுறையைக் கூறியுள்ளார்.

    மேற்குறிப்பிட்ட விளக்கங்களின் அடிப்படையில் இலட்சுமியின் புதின இலக்கிய உத்திகள் வரையறுக்கப்படுகின்றது.

    பின்னோக்கு அல்லது நினைவுப்பாதை உத்தி

    புதின இலக்கியங்களில் ஏறக்குறைய அனைத்துப் படைப்பாளரும் பயன்படுத்தும் உத்தி இதுவாகும். முன்பு நிகழ்த்தும் நிகழ்வுகளை எண்ணிப் பார்ப்பதே இவ்வுத்தியாகும்.

     ‘சம்பவத் தகவல்களால் கதைப்பின்னல் வளராமல் எண்ணங்கள்நினைவுகள்,கருத்துகள்,உணர்ச்சிகள் இவற்றில் கதை உணர்த்துவதுதான் படைப்பாளர் நினைவுப்பாதை அல்லது பின்னோக்கு உத்தி’4 என்று சி.சு. செல்லப்பா உரைக்கிறார்.

    மருமகள் என்ற புதினத்தில் வரும் சுகந்தி இக்கதையின் தலைவியாவாள். கல்லூரிப் படிப்பை முடித்தவுடன் பெற்றோர் சம்மதத்துடன் மனோகரனைக் கரம் பிடிக்கிறாள். கணவன் தன்மேல் அன்பு காட்டாததை நினைத்து மனம் வருந்துகிறாள். ஒரு கட்டத்தில் ஆணாதிக்கப் போக்கினை நினைத்து மனம் வருந்துகிறாள். மனைவியை விட்டு வேறொரு பெண்ணுடன் தவறான போக்கில் செல்லும் ஆண்களின் தவறொழுக்கத்தினை எவ்வாறு தண்டிப்பார் என்று தன் கல்லூரி பழைய  நினைவுகளை நினைத்து பார்க்கிறார். இதனை,

    ‘ஒரு ஆண் தன் மனைவிக்கு துரோகம் செய்கிறான் என்று வைத்துக் கொள்வோம். அப்போது அந்த பெண் என்ன செய்ய வேண்டும்?

    பழிக்குப் பழி என்று அவளும் அவனுக்குத்  செய்யணும்.  சீ! ரொம்ப மட்டமான புத்தி உனக்கு! ஆண்புத்தி கெட்டுச் சாக்கடையில் விழுந்தால் அவனைப் பழி வாங்க அவன் மனைவியும் அதே தவறை செய்தால் சரியாகி விடுமோ? அவள் தான் தன்னை மாசுபடுத்திக் கொள்வாள்’. என்று பாத்திரம்  நினைவு கூறுவதாக இலட்சுமி அடிகளில் காட்டியுள்ளார்.

    கடித முறை உத்தி

    அந்தக் காலம் முதல் இந்த காலம் வரையில் கடித முறையினைப் படைப்பாசிரியர்கள் பயன்படுத்தி வருகின்றார்கள். இவ்வுத்தியினை இலட்சுமி மிகச் சிறப்பாகவே பயன்படுத்தியுள்ளார். கதை மாந்தர்கள் தங்களுக்குள் பரிமாறிக் கொள்ளும் கடிதங்கள் வாயிலாகப் புலப்படுத்தும் முறையில் மருமகள் என்ற புதினம் அமைக்கப்பட்டுள்ளது.

    மருமகள் என்ற புதினத்தில் வரும் மனோகரன் அலுவல் பணியாக வெளியூருக்குச் செல்கிறான். அப்பணி முடிக்க நாட்கள் ஓடவே கமலாவுக்கு கடிதம் ஒன்றை அனுப்புகிறான்.

    அன்புள்ள அண்ணிக்கு,

    நான் உங்களைப் பற்றியே நினைத்துக் கவலைப்பட்டுக்  கொண்டு இருந்தேன். நான் உங்களுக்கு வாக்களித்தபடி காரியங்களைக் கவனித்துக் கொள்வேன். நீங்கள் வீணாக மனதை அலட்டிக் கொள்ளாமல் தைரியமாக இருக்க வேண்டும் நான் நாளை இரவு விமானத்தில் திரும்பி விடுவேன். மற்றவை நேரில்.’6

    தங்கள் அன்புள்ள மனோகரன்

    ‘இந்த கடிதத்தைப் பற்றி என்ன நினைக்கிறே? உனக்குக்கூட எழுத முடியாதபடி உன் கணவருக்குத் தலைக்கு மேலே அங்கே வேலை. ஆனால் அண்ணிக்கு எழுத முடிகிறது. அவர்களைப் பத்தியே நினைச்சிக்கிட்டிருக்கிறாராமே கன்றாவி’ சொல்லியபடி மறுபடியும் எச்சரிக்கையுடன் கடிதத்தை உறைக்கு முன் வைத்து, நெகிழ்ந்து விட்டிருந்த பசையினால் நன்றாக ஒட்டினாள். பின்னர் அதை மற்ற கடிதங்களுடன் வைத்தாள். இக்கடிதத்தை படித்த சுகந்தி மிகவும் வருந்துகிறார்.

    வருணனை உத்தி

    வீட்டிற்கு புதிதாக வந்த மருமகள் சுகந்தியின் தோற்றத்தை ஆசிரியர் வர்ணிக்கின்றார். கணவனை விட உயரத்தில் சிறிது குறைவாகக் கொடி போன்ற தோற்றத்தில் தங்க நிறத்திலே… மேனியில் துவண்ட அமெரிக்கன் நைலான் புடவையில் கனவு கன்னிபோல பார்க்க வெகு அழகாக இருந்தாள் சுகந்தி என்று கூறுவதிலிருந்து சுகந்தியின் அழகையும் தோற்றப் பொலிவையும் விளக்கியுள்ளார்; பார்ப்பவர்கள் கண்டு வியப்பதாக அவளது அழகு இருக்கிறது.

    ‘எல்லாரைக் காட்டிலும் வீட்டுக்கு வந்திருக்கும் மருமகள் தான் ரொம்ப அழகு. பச்சைக்கிளி போல ஒரு பெண்ணை சின்னய்யா பிடிச்சுட்டாரே!’

    தலைப்பினால் கதையை உணர்த்தும் உத்தி

    கதையானது இவ்வாறு அமைந்திருக்கக் கூடும் என்று தலைப்பை வைத்து ஓரளவு புரிந்து கொள்வதே இவ்வகை உத்தியாகும்.

    ‘கற்றோரது ஆர்வத்தைத் தூண்டுவதற்கும் கதையைப் படிக்கும் விருப்பம் எழுவதற்கும் உதவுகின்ற முதல் கருவி தலைப்புத் தான்”7

    என்பது கலை இலக்கிய ஆய்வும் அணுகுமுறையும் என்ற நூலின் மூலம் தெளிவாகிறது.

    மருமகள் என்ற கதையில் சுகந்தி மூன்றாவது மருமகள் ஆவாள். கமலா, அனு இருவரும் மாறுபட்ட மருமகள் ஆவார்கள். இருப்பினும் கூட்டுக் குடும்பாக வாழ்கின்றனர். பல்வேறு குண நலன்களைக் கொண்ட மூன்று மருமகள்களைக் கொண்ட கூட்டுக் குடும்பத்தில் ஏற்படும் சிக்கல்களையும் அவற்றைப் புதிதாக வந்த மருமகள் சுகந்தி எவ்வாறு சமாளிக்கிறாள் என்பதையும் வெகு சுவையாக  விவரிப்பதாக இக்கதை அமைகிறது.

    பல்வேறுபட்ட பண்பாடுகளும் பழக்க வழக்கங்களும் நிறைந்தது நம் நாடு. அதன் ஒருமைப்பாட்டைக் காக்க ஒவ்வொருவரிடமும் சகிப்புத் தன்மையும் ஒருமைப்பாட்டு உணர்ச்சியும் அவசியம் தேவை. நாடு ஒற்றுமையுடன் இருக்க ஒவ்வொரு வீடும் ஒற்றுமையாக இருப்பது அவசியம் என்பதனை இக்கதையின் வழியே தெளிவாக உய்த்துணர முடிகிறது.

    கதையை நடுவில் தொடரும் உத்தி

    இன்று பல படைப்பாளர்களும் கதையினை நடுவில் இருந்து தொடங்கும் ஓர் உத்தியினைக் கையாண்டு வருகிறார்கள். இவ்வுத்தியினை இலட்சுமி மிக அழகாகவே கையாண்டுள்ளார்.

    மருமகள் என்ற புதினத்தில் கதையானது நடுவில் இருந்து தொடர்கிறது.

    ’வாயிற்படியில் விரிவாகப் பாவப் பட்டிருந்த சிமெண்டுத் தரைமீது செம்மண் கரை கட்டிய பெரிய மாக்கோலம். வாயிற்படி முகப்பில் மாவிலைத் தோரணம் என்ற அலங்காரத்தில் அபிராமி இல்லம். அந்த வீட்டின் மூன்றவாது மருமகளுக்கு வரவேற்புத்  தரத் தயாராகி விட்டிருந்தது’8

    என்று திருமணக் கூட்டத்தினைக் கொண்டு துவங்குகிறார் ஆசிரியர்.

    தொகுப்புரை

    ஒரு மனிதன் தன்னிடம் இருக்கும் திறமைகளை வெளிப்படுத்தும்போது அவரின் வெளிப்பாட்டுத்திறன் வெளியாகிறது. உத்தியின் மூலம் ஆசிரியரின் தனித்திறனை அறிய முடிகிறது.

    அடிக்குறிப்புகள்

    1.ந.பிச்சமுத்து, திறனாய்வும் தமிழ் இலக்கியக் கொள்கைகளும் ப.4.

    2.செ.சாரதாம்பாள், செவ்வியல் ப.71.

    3.தொல்காப்பியர், தொல்காப்பிய நூற்பா எண் – 656.

    4.சி.சு. செல்லப்பா, இலக்கியச் சுவை ப.249.

    5.இலட்சுமி, மருமகள் ப.32-33.

    6.மேலது ப.60.

    7.ஐந்தமிழ் ஆய்வாளர் மன்றம்,கலை இலக்கியம், ஆய்வும் அணுகுமுறையும் ப.99.

    1. இலட்சுமி,ப.1.

    *****

    கட்டுரையாசிரியர் – தமிழ்த்துறை விரிவுரையாளர்,
    அரசு கலைக்கல்லூரி(தன்னாட்சி),
    சேலம் – 7.

     

     

     

     

     

     

     

    Share
  • ஆற்றுப்படைகளில் ஐயப்பன் தொன்மங்கள்

    -த.யசோதா

    ஆற்றுப்படை நூல்கள் அனைத்தும் வறுமையுற்ற, இசைக்கலையில் வல்லமை பெற்ற புலவர்களையும், பக்தர்களையும் வள்ளலிடமும், கடவுளரிடமும் வழிப்படுத்துவதாக இடம்பெற்றுள்ளன. வா.மு.சேதுராமன் அவர்கள் பக்தர்களை ஐயப்பனிடத்தில் ஆற்றுப்படுத்துவதற்காக ‘ஐயப்பன் ஆற்றுப்படை’என்னும் நூலை இயற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆற்றுப்படை நூல்களில் அமைந்துள்ள ஐயப்பன் பற்றிய தொன்மச் செய்திகளை எடுத்துக் கூறுவதாக இச்சிறுபகுதி அமைகிறது.

    ஆற்றுப்படைவிளக்கம்

    ஆற்றுப்படை என்பதற்கு,

    “கூத்தரும் பாணரும் பொருநரும் விறலியும்
    ஆற்றிடைக் காட்சி உறழத் தோன்றிப்
    பெற்ற பெருவளம் பெறார்க்கு அறிவுறீஇச்
    சென்றுபயன் எதிரச் சொன்ன பக்கமும்              [தொல்.பொருள். 88]

    என்னும் பாடாண்திணை நூற்பா மூலம் தொல்காப்பியம் விளக்கம் தந்துள்ளது.

    ஆற்றுப்படைக்கு விளக்கம் தரும் தமிழ் லெக்சிகன் அகராதி,

    பரிசில் பெற்றானொருவன் அது பெறக் கருதியவனை
    ஒரு தலைவனிடத்துச் செலுத்துவதாகப் பாடும்
    பிரபந்தம்             [தமிழ் லெக்சிகன் தொகுதி-I ப-257] என விளக்கம் தந்துள்ளது. 

    தொன்மைவிளக்கம்

    மிகப் பழமையான செய்திகளைத் தொன்மம் என்னும் பெயரில் அழைக்கலாம். இலக்கண நூலான தொல்காப்பியத்தில் செய்யுளின் எண்வகை வனப்புகளுள் தொன்மமும் ஒன்று என்பதனை,

    தொன்மை தானே சொல்லுங் காலை
    உரையொடு புணர்ந்த பழைமை மேற்றே                             [தொல்.பொருள்.நூற்.538] என்னும் நூற்பா தெளிவுப்படுத்துகின்றது.

    தொன்மத்திற்கு விளக்கம் தரும் க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி,

    தொன்மை பெ. (ஆன) காலத்தால் மிகவும் முற்பட்டது,
    பழமை, தொன்மையான மொழி, தொன்மைச் சிறப்பு வாய்ந்த கோட்டை. [க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி 594எனப் பொருள் தந்துள்ளது.

    ஐயப்பன் விளக்கம்

    ஐயன் என்பதன் குறுக்கம் ஐயப்பன் ஆகும். ஐ என்ற ஓரெழுத்துக்கு அழகு, தலைமை என்ற சிறந்த பொருள்கள் உண்டு. அழகிய அப்பன் – தலைமை அப்பன் ஐயப்பன் என்று பொருள் தருகிறது. அரியாகிய திருமாலும், அரனாகிய சிவனும் சேர்ந்து புணர்ந்த காலத்தில் பிறந்தவர் ஐயப்பன் என்று வரலாறு எடுத்துரைக்கின்றது.

    ஐயன்அரசன், அரிகரபுத்திரன், அருகன், அழகுடையவன், ஆசிரியன், உயர்ந்தோன், கடவுள், குரு, சிவன், தந்தை, தமையன், தலைவன், மூத்தோன்.”       [கழகத் தமிழ் அகராதி, 229என்று கழகத்தமிழ் அகராதி விளக்கம் தந்துள்ளது. 

    உடைகள்

    பாரதபூமி ஆன்மிக பூமி என்பதனைப் பறைசாற்றும் விதத்தில் அமைந்த வழிபாட்டு முறைகளுள் ஐயப்பன் வழிபாடும் ஒன்று. ஐயப்பன் வழிபாடு பிறதெய்வ வழிபாடுகளினின்றும் முற்றிலும் வேறுபட்ட வழிபாடாகும்.

    பிறதெய்வங்களை வழிபடத் தனிப்பட்ட விரதம் தேவையில்லை. ஆனால் ஐயப்பனை வழிபடுவதற்குச் சிறப்பான விரதம் அனுஷ்டிக்க வேண்டும் விரதங்கள் அனுஷ்டிப்பதில் எவ்வளவு அக்கறை எடுத்துக் கொள்கிறோமோ அந்த அளவுக்கு இறைவனின் அருள் நமக்குக் கிடைக்கும் என்பதில் ஐயமில்லை. அந்த வகையில் இறைவனை விரதமிருந்து அந்நாளில் எந்தெந்த வண்ணங்களில் ஆடை உடுத்துவது சிறந்தது என்பதை,

    கருமை நீலக் காவி உடைகளில்
    வருநோய் மறந்து வாய்மை நெஞ்சை
    [ஐயப்பன் ஆற்று.பா.வரி.13-14] 

    என்னும் வரிகளில் கறுப்பு அல்லது நீலம் அல்லது சிவப்பு நிற ஆடைகளை ஐயப்பனுக்கு விரதம் இருக்கும் நாள்களில் உடுத்த வேண்டும் என்றும் அவ்வாறு விரதம் இருந்தால் நோய்கள் நம்மைவிட்டு அகலும். மனசாட்சிப்படி உண்மை பேச வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

    பதினெட்டுப் படிகள்

    ஒவ்வோர் ஆண்டும் ஐயப்பன் தலத்திற்குச் செல்லும்போது 18 படிகளில் அவரவர் செல்லும் ஆண்டின் எண்ணிக்கைக்குத் தக்கவாறு படியை முதல் படியிலிருந்து கணக்கிட்டுப் படித்தேங்காய் அடிக்க வேண்டும்.

    பதினெட்டுப் படிகளை பலமுறை ஏறித் தன் மனத்தைப் பக்குவப்படுத்தி ஐயப்பன் அருள் பெற வேண்டும் என்பதை,

    பதினெண் தத்துவன் விதிம கத்துவம்
    மதிநன் மனத்தால் அதிகம் தெரிந்து
    தத்துவப்
    படிகள் தவம்பதி னெட்டை
    உத்தியால்
    பதினெண் உறுமுறை பலமுறை
    ஏறிஏறி
    இவ்வுல(கு) ஆசை
    மாறி மாறி மனத்தைப் பக்குவம்
    ஆக்கி
    வையம் ஆக்கும் அவனருள்
    தேக்கிப் பாயும் சிறகுள ஆறாய்[ஐயப்பன் ஆற்று.பா.வரி.35-42]

    என்னும் வரிகள் விளக்குகின்றன.

    இருமுடியின் மகத்துவம்

    ஐயப்பன் வரலாற்றில் மணிகண்டனின் வளர்ப்புத் தந்தையான அரசன் அவனுக்கு இளவரசனாக முடிசூட்டி வைக்க விரும்பினார். அரசியாருக்கும் அமைச்சர்களுக்கும் இது பிடிக்கவில்லை. எனவே மணிகண்டனை ஒழித்துக்கட்ட முடிவு செய்தனர். அந்தச் சூழ்ச்சியின்படி அரசியார் தனக்குத் தாங்கமுடியாத தலைவலி வந்துவிட்டதென்றும் அதனைப் போக்க வேண்டித் தலைக்குப் புலிப்பால் தடவவேண்டும் என்றும் கூறி, மணிகண்டனை காட்டுக்கு அனுப்பிப் புலிப்பால் கொண்டுவரும்படி கேட்டுக்கொண்டாள்.

    மணிகண்டன் மறுக்கவில்லை. தைரியமாகப் புறப்பட ஆயத்தமானான். ஆனால் மன்னனுக்கு இச்செய்கை மிகுந்த வேதனையைத் தந்தது. இருப்பினும் மணிகண்டனே மனம் விரும்பிப் புறப்பட்டு விட்டமையால் முக்கண் உடைய பரமனே உன்னைக் காத்தருள வேண்டும்என்று ஆசி கூறி, முக்கண்களை உடைய தேங்காயைப் பரம்பொருளாகப் பாவித்து அதில் நெய்நிரப்பி, பூஜைப் பொருள்களையும் சேர்த்து ஒரு முடியாகக் கட்டி, மற்றொரு முடியில் அவனுக்கு வேண்டிய உணவுப் பொருள்களையும் வைத்துக்கட்டி இருமுடி தயாரித்துக் கொடுத்தனுப்பினார் என்று வரலாறு எடுத்துக்கூறியுள்ளது. 

    [மிழலைத் தொண்டன், ஸ்ரீ ஐயப்பன் வரலாறு, வழிபாட்டு முறைகள், ஸ்தோத்திரங்கள், பக்.8]

    மணிகண்டன் இருமுடியைத் தலையில் சுமந்து, கையில் வில்லும் அம்பும் ஏந்தி காட்டுக்குச் சென்றான். இதுவே இருமுடி தோன்றிய வரலாறு. இதனை,

    பாதம் காணப் பயனார் இருமுடி
    வேதச் சுமையை வியந்து பயந்து
    கட்டிட
    வேண்டும்! காணரும் அந்த
    இருபை கொண்ட இருமுடிப் பையோ
    கருப்பைத் தாயின் கர்ப்பப் பைபோல்
    தக்க பெருமைத் தான்கொண்டதுவாம்
    மிக்கோன் சாத்தா விரும்பும் பூசைப்
    பொருளை ஒருபை பொருந்த அதனுள்
    தேங்காய் திறந்திடு சிறுகண் துளையில்
    பாங்காய்ப் பக்குவப் பசுநெய் ஊற்றி
    மாங்காய்ப் பாலுண் மலைமீ திருப்பார்
    ஓங்காரப் பெயர் உவக்க அடைத்து
    கற்பூர நைவேத் தியப்பொருள் அனைத்தும்
    பொற்புடன் இட்டுப் பொறைநிறை கட்டி
    முன்பை இப்பை தன்னை அய்யன்
    ஆன்புக் காக்கி அடுத்த பின்பை
    நடைவழி செல்லும் நமக்கு உரிய
    இடைவழி வேண்டும் ஏற்ற பொருள்களை
    வைத்துக் கட்டி வாய்மை நெஞ்சைப்
    பைத்தலம் மாக்கி பண்டம் தலையின்
    மீதே இருத்தி யாதும் துறந்து
    மாதே வன்தன் மாண்பே உயிராய்” [ஐயப்பன் ஆற்று.பா.வரி.98-119]

    என்னும் வரிகளில் இருமுடியின் மகத்துவத்தைக் கூறியுள்ளார். இருமுடியைக் கருப்பைத் தாயின் கர்ப்பப் பைபோல் பாதுகாக்க வேண்டும். மேலும் ஒருமுடி முக்கண்களையுடைய தேங்காயில் நெய் நிரப்பியும், பூஜைப் பொருட்களையும் சேர்த்து ஒருமுடியாகவும் மற்றொரு முடியில் உணவுப் பொருட்களையும் கொடுத்து அனுப்பியுள்ளனர் என்பதையும் அறியமுடிகின்றது.

    மணிகண்டனின் வீரம்

    தன் தாயின் சூழ்ச்சியால், அரசியார்க்குத் தலைவலி ஏற்பட்டது என்றும், அதற்குப் புலிப்பால் தடவினால் சரியாகும் என கூறியதனால், புலியின் பால் கறந்துவர மணிகண்டனாகிய ஐயப்பன் காட்டுக்குச் சென்றான் என்பதை,

    தாய்தலைக் குத்துநோய் தண்மை தீர்க்கப்
    பாய்புலிப் பாலைப் பரிந்து கறந்து
    கொணரும் வேளைக் கொடைஅருள் அய்யன்
    அளவிலா வீரம் ஆண்மை தெளிந்து” [ஐயப்பன் ஆற்று.பா.வரி.126-128] இவ்வரிகள் புலப்படுத்துகின்றன.

    ஐயப்பன் வேட்டையாடச் சென்ற வழி

    ஐயப்பன் வேட்டையாடச் செல்லும் வழியினையும், வெற்றி பெற்றதையும் பற்றி,

    வரிப்புலி வேட்டை வாகை சூடிய
    புரிகலைச் செல்வன் போன வழியதாம்
    பலப்பல வழிகள் தலந்திகழ் அய்யன்
    செலவுக் குண்டெனின் சிறப்பிவ் வழியே” [ஐயப்பன் ஆற்று.பா.வரி.157-160] இவ்வரிகள் விளக்குகின்றன.

    அரசன் கோயில் கட்டிய இடம்

    சிறுவயதிலிருந்து மணிகண்டனை வளர்த்தது பந்தள நாட்டு அரசன் ராஜசேகரன் என்பவர். அவர் மணிகண்டன் புலியை வீழ்த்தி புலியின் மீது அமர்ந்து வந்த காட்சியைக் கண்டதும் மணிகண்டன் சாதாரணக் குழந்தை அல்லன்; தெய்வக் குழந்தை எனத் தெரிந்தவுடன் உன்னைப் பிரிந்து இருக்க மாட்டேன் என்று கூறி அழத் தொடங்கினார். அவரைச் சமாதானம் செய்து ‘சரம்குத்தி’ என்ற இடத்தில் தனக்கு ஆலயம் கட்டுங்கள் எனக்  கூறினார் என்பதை,

    பாண்டியன் சாத்தா ஆலயம் கட்ட
    வேண்டிப் பெம்மான் வெல்லம் பெடுத்தே
    எய்ய அதுஆல் மரம்போய்க் குத்த
    சரங்குத் தியின்ஆல் தன்னில் முதல்வரு
    கன்னிகள் கையுள சரங்களை விடுத்து
    பொன்னம் பலத்தான் நன்னு பேரருள்” [ஐயப்பன் ஆற்று.பா.வரி.524-529]

    என்னும் வரிகளில் ஐயப்பன் வில் அம்பு எடுத்து எய்ததும் அந்த அம்பு ஓரிடத்தில் சென்று குத்தி நின்றது. அந்த இடத்திற்குப் பெயர் ‘சரங்குத்தி’ என்பதாகும். அங்குக் கோயில் கட்டத் தன் வளர்ப்புத் தந்தை ராஜசேகரனிடம் கூறினார் என்பது புலனாகிறது.

    மேலும் இதனை,

    பாண்டிய அரசன் பந்தள பூபதி
    யாண்டும் அய்யன் தனைத் தொழுதிடவே
    கோயில் அமைத்தே ஆய முறைசெய
    போயின் வழியும் புதுமையிவ் வழியே!” [ஐயப்பன் ஆற்று.பா.வரி.61-64] என்று இவ்வரிகள் விளக்குகின்றன.

    மகிசி வதம் செய்தல்

    “மணிகண்டன் இருமுடியைத் தலையில் சுமந்து, கையில் வில்லும் அம்பும் ஏந்திக் காட்டுக்குச் சென்றான். இதனை அறிந்த தேவர்கள் இதுவே மஹிஷியைக் கொல்லச் சரியான தருணம் என்றறிந்து மணிகண்டனிடம் அவனுடைய அவதார நோக்கத்தை நினைவு கூர்ந்தார்கள்.[மிழலைத் தொண்டன், ஸ்ரீ ஐயப்பன் வரலாறு, வழிபாட்டு முறைகள், ஸ்தோத்திரங்கள், ப.8]என்பதை மிழலைத் தொண்டன் தன் நூலில் குறிப்பிட்டுள்ளார்.

    அதன்படியே மணிகண்டனும் தேவலோகம் சென்ற மஹிஷியைப் போருக்கழைத்து அவளைக் காலால் மிதித்துக் கொன்று தேவர்களைக் காத்தான் என்றும், அவ்வாறு மஹிஷியை வதம் செய்தபோது சிவபெருமான் அந்நிகழ்ச்சியைக் காணவந்தபோது, தன்னுடைய வாகனமாகிய காளையை ஓரிடத்தில் கட்டி விடுகிறார். அவ்விடத்திற்கு ‘காளை கட்டி’ என்று பெயர் வந்தது என்பதனை,

    மகிசி வதத்தின் மகிமை காண
    தகவுறு சிவன்தன் காளை கட்டிய
    இடமே காளை கட்டி என்பதாம்.” [ஐயப்பன் ஆற்று.பா.வரி.203-205] என்று இவ்வரிகள் விளக்குகின்றன. 

    முடிவுகள்

    ஆற்றுப்படை இலக்கியம் சங்ககாலம் முதல் தற்காலம் வரை வளர்ச்சியடைந்து வந்துள்ளது என்பதற்கு ஐயப்பன் ஆற்றுப்படை எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. 

    ஆற்றுப்படை இலக்கியம் தனியோர் இலக்கியமாக வளர்ச்சியடைந்ததற்குச் சிற்றிலக்கியங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

    ஆற்றுப்படைகளில் ஐயப்பன் பற்றிய தொன்மச் செய்திகளான ஐயப்பனின் விரதமுறைகள், உடைகள், ஐயப்பன் வரலாறு, மகிசியை வதம் செய்தல், மணிகண்டனின் வீரம், சரங்குத்தி என்ற இடத்தில் கோயில் அமைந்துள்ளதற்கான காரணம், மற்றும் காளைகட்டி என்னும் பெயரின் காரணம் என்பதை இச்சிறுப்பகுதி எடுத்துரைப்பதாக அமைந்துள்ளது.

    துணை நின்ற நூல்கள்:

    1. தமிழ் லெக்சிகன் அகராதி, தொகுதி-I
    2. கழகத் தமிழ் அகராதி.
    3. தொல்காப்பியம், பொருளதிகாரம், இளம்பூரணர் உரை.
    4. சேதுராமன்.வா.மு., ஐயப்பன் ஆற்றுப்படை.
    5. மிழலைத் தொண்டன், ஸ்ரீ ஐயப்பன் வரலாறு, வழிபாட்டு முறைகள், ஸ்தோத்திரங்கள்.

    *****

    கட்டுரையாளர் – முழுநேர முனைவர்பட்ட ஆய்வாளர்,
    தமிழ்த்துறை,
    அரசு கலைக்கல்லூரி(தன்னாட்சி)
    சேலம் – 7.

     

     

     

    Share