Skip to content

வல்லமை

    • Blog Page
    • Columns
    • Edit UPG Post
    • Home
    • LightBox
    • Login Required
    • Manage Subscriptions
    • Multiple Pages
    • My Gallery
    • Newsletter
    • Photo of the day
    • Pick Your Card
    • Post Image
    • SHORTCODES
    • Sample Page
    • Shop
    • Subscription Settings
    • Tabs and Toggles
    • Test
    • Test2
    • User’s Post Gallery
    • Video and Audio
    • oEmbed URL
    • text and lists
    • இந்த வார வல்லமையாளர்!
    • முகப்பு

Blog

  • கயமனாரின் பாடல்களில் சமூகக் கருத்தாக்கம்

    ப.சூர்யலெக்ஷ்மி,
    பதிவு எண்: 12178
    முனைவர் பட்ட ஆய்வாளர்,
    தமிழ் உயராய்வு மையம்,
    தமிழியல் துறை,
    ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரி,
    திருநெல்வேலி.
    ஆய்வு மையம்: மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்,
    அபிசேகப்பட்டி, திருநெல்வேலி-627012 தமிழ்நாடு, இந்தியா.

    நெறியாளர்: ந.வேலம்மாள், உதவிப் பேராசிரியர்,
    தமிழியல் துறை, ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரி, திருநெல்வேலி-627008

     

    முன்னுரை:-

    சங்கக் கவிஞர்களில் உடன்போக்கினைப் பற்றி மட்டுமே தனது பாடல்களில் மிகுதியாகப் பேசியவர் கயமனார். உடன்போக்கில் தனது மகளைப் பிரிந்த தாயின் பன்முகத் தன்மை வெளிபடுகிறது. மகளைப் பிரிந்த தாயின் துயரம், மகள் சுரத்திடையே சென்றாலும் அவளது கடுமையான பயணம் இனிதாக விளங்கட்டும் என்கிறாள். தன்னைப் போலவே தலைவனின் தாயும் துயரடையட்டும் என்கிறாள். மகளின் வரவுக்காகக் காத்திருக்கும் நிலை, தலைவியை மீட்கச் செல்லும் தாய் இவ்வாறு கயமனாரின் பாடல்களில் தாயின் நிலைப்பாடு குறித்துப் பேசப்படுகின்றது. களவில் தலைவன் தலைவியின் காதல் வாழ்க்கையை முழுமையாகச் சமூகத்தார் ஏற்றுக் கொள்ளவில்லை. திருமணம் செய்து இல்லற வாழ்க்கை நடத்துவதையே சமூகம் ஏற்றுக் கொள்கிறது. கயமனாரின் பாடல்களில் சமூகக் கருத்தாக்கம் எவ்வாறு என்பதனை ஆய்வதே இவ்வாய்வின் நோக்கமாக உள்ளது.

    உடன்போக்கு:-

    உடன்போக்கினைப் பற்றித் தொல்காப்பியர் கூறுவது, ஒரு பெண்ணிற்கு நாணம்தான் சிறந்தது அந்த நாணத்தைவிடக் கற்பு சிறந்தது அதன் விளைவாக உடன்போக்கு நிகழும் என்கிறார்.

    ” உயிரினும் சிறந்தன்று நாணே; நாணினும்
      செயிர்தீர் காட்சிக் கற்புச் சிறந்தன்று எனத்”       (தொல்.பொ.களவியல்.இளம் நூ.111)

    களவினை அறிந்த தமர் காவலில் இருத்த, இற்செறிக்கப்பட்ட தலைவியை உடன்போக்குச் செல்லத் தோழி தூண்டுபவளாகத் திகழ்கிறாள்.

    தாய்மைத்துவம்:-

    தாய்மைக்குரிய உணர்வுக்குவியல்களையும், விளைவுகளையும் ஒன்றாகக் குவித்துப் பார்க்கக்கூடிய ஒரு தளமே தாய்மை என்ற நிறுவன அமைப்பாகும். தாய்மைத்துவப் பண்பமைப்பிலுள்ள அனுபவங்களையும் திறமைகளையும் சமுதாய நோக்கில் நன்முறையில் வலுப்படுத்தவும், வெளிக்கொணரவும் விரும்புகிறது.

    ”ரிச் என்பவர் குடும்பத்தில் பெண்களுக்கு என வரையறுக்கப்பட்ட தீவிர உணர்ச்சிச்சுமைகள் போன்றவை ‘தாய்மை’ என்ற அமைப்பிற்குரிய கூறுகளாகும்” என்கிறார். சமுதாயம் பெண்களுக்கு என்ற கட்டுப்பாட்டை வகுத்துள்ளது. அதில் தாய்மைப்பேறு, குழந்தையைப் பேணிக்காப்பது, வளர்ப்பது, குடும்பம் என்ற அமைப்பில் பெண்களின் தனிப்பட்ட உணர்வுகள் தந்தைவழிச் சமூகத்தால் நசுக்கப்படுகிறது. குழந்தை வளர்ப்பில் தாய்க்கே முதலிடம் கொடுக்கிறது. இப்படிப் பாராட்டிச் சீராட்டி வளர்த்த மகள் காளையுடன் உடன்போக்குச் சென்றுவிட்டதால் தாய்க்கே மிகப் பெரிய இழப்பு நேரிடுகிறது. தாயின் மனநிலையைக் கயமனாரின் 23  பாடல்களில் அகப்பாடல்களில் 21 பாடல்களில் காணமுடிகிறது. புறப்பாடலில் இறந்த மகனைத் தாய் காண நேர்ந்தால் அவள் படப்போகும் துயரத்தினையும் கண்முன்னே காட்டுகிறது.

    காற்சிலம்பு:-

    சங்க காலத் தமிழ்மகளிர், திருமணத்திற்கு முன்பாகச் ‘சிலம்பு கழி நோன்பு’ என்ற சடங்கினைச் செய்வர்; தன் காலில் உள்ள சிலம்பினைக் கழற்றியப் பிறகே திருமணம் செய்விக்கும் வழக்கம் காணப்பட்டது. சங்க இலக்கிய பாடல்களின் வழியே இச்செய்தியானது பதிவாகிறது.

    உடன்போக்குச் செல்ல நினைத்த தலைவி காற்சிலம்பினைக் கழற்ற நினைத்தாள் இதனைக் கண்டால் தோழிமார் நோவார்கள் என்று செல்லாது விடுத்தால் பாடலில் “அரியமை சிலம்பு கழீஇப் பன்மாண், வரிபுனை பந்தோடு வைஇய செல்வோள், இவை காண் தோறு நோவர் மாதோ” (நற் 12, 5-7). சிலம்பு கழி நோன்பினைத் தான் காணாது பிறர் காணுமாறு மகள் சென்றாள் என்று தாய் புலம்புவது பாடலில்

    ” சிலம்பு கழீஇய செல்வம், பிறருணக்
                  கழிந்தஎன் ஆயிழை அடியே” (நற் 279, 10-11)

    சிலம்பினைக் கழற்றி மகள் உடன்போக்குச் சென்றுவிட்டாள். அவள் சென்ற பாலை வழியில் ஆறலை கள்வர் உள்ளார்களே; தலைவன்முன் இவள் செல்வாளோ என்று கவலைகொள்வது பாடலில் ” எவ்வினை செயுங்கொல்? நோகோ யானே? அரிபெய்து பொதிந்த தெரிசிலம்பு கழீஇ” (அகம் 321, 13-15) தலைவி காற்சிலம்புடன் வயலைக் கொடிக்குத் தண்ணீர் ஊற்றுவாள். அவள் இல்லாது உன்னைப் பேணுபவர் யார் என்று நற்றாய் புலம்புகிறாள். பாடலில்

          “பொய்சிலம்பு ஒலிப்பப் பெயர்வனள் வைகலும்,
      யார்மற்றுப் பெறுகுவை அணியை நீயே” (அகம் 383,12-14)

    உடன்போக்கு சென்ற மகளை மீட்க முயலுதல்:-

    செவிலித்தாய் உடன்போகிய மகளைத் தேடிக் கண்டோரை நோக்கி மகளைப் பற்றி வினவுகிறாள். அவளைப் பற்றி கூறினால் விருந்தோம்புவேன் என்கிறாள். பாடலில் “முன்னாள் உம்பர்க் கழிந்த என்மகள் தன்னூர் இடவயின் தொழுவேன் நுண்பல்” (நற் 198, 315) இல் செறிப்பில் வைத்த தன் மகள் காவலையும் கடந்து உடன்போகினாள். ஆநிரைகளைக் கவர்ந்து சென்றவர்கள் பின்தொடர்வதைப் போல் என் மகளையும் மீட்க வந்தேன் என்பது பாடலில்,

    ” இச்சுரம் படர்தந் தோளே, ஆயிடை, அத்தக்
     கள்வர் ஆதொழு அறுத்தென” (அகம்7,13-14)

    மகளை அடித்த தாய்:-

    உடன்போகிய மகளை நினைத்த தாய் இல்செறிப்பில் மகளை அடித்த தன் கையை வெட்டினால்தான் என்ன என்று தன்னையே நொந்து கொள்கிறாள். முதுகு தனக்கு உரியது அல்ல என்று அடிவாங்கிய மகளைப் பாடலில், “எறிகோல் சிதைய நூறவும், சிறுபுறம் எனக்கு உரித்து என்னாள் நின்ற என்” (அகம் 145,20-22)

    தாயின் ஆவேசக் குரல்:-

    தன் மகளை உடன்போக்கு அழைத்துச் சென்ற அக்காளையின் தாயும் பெரிய நடுக்கமுற்று துன்பத்தை அடைவாளாக என்று ஆவேசக் குரலை எழுப்புவது பாடலில்,

    “பொம்மல் ஓதியைத் தன்மொழிக் கொளீஇக்
                  கொண்டுடன் போக வலித்த
                  வன்கண் காளையை ஈன்ற தாயே”     (நற் 293, 7-9).

    தலைவன் தலைவியை உடன்போக்கு அழைத்துச் சென்றமை பொறுக்க முடியாது பொருத்தமற்றத்து என்று தாய் சாடுகிறாள். பின்வருமாறு, “தணிந்த பருவம் செல்லான் படர்தரத்” (அகம் 397,8). உடன்போக்கினைப் பெற்றோரும், சமூகமும் ஏற்றுக்கொள்ளவில்லை என்பது கயமனாரின் பாடல் மூலம் தெளிவாகிறது.

     உடன்போகிய மகள் இனிதாக வாழவேண்டும் என்ற தாயின் மனநிலை வெளிப்படும் பாடல்கள்:-

    உடன்போகிய தன் மகள் இல்லறத்தை இனிதே நடத்தினால் தன் துயரம் நீங்கும் என்பது பாடலில் ” எரிசினந் தணிந்த இலையில் அம்சினை, வரிப்புறப் புறவின் புலம்புகொள் தெள்விரி” (நற் 305,6 ). மகள் உடன் போகிய பாலை நிலமானது சூரிய ஒளி வீசாமல் மரத்தின் நிழல் அடங்கி மழை பெய்து குளிர்ச்சியாக அமையுமாறு இருக்க வேண்டும் என்று சொல்லி எண்ணுவது பாடலில் “ஞாயிறு காயாது மரநிழற் பட்டு, மலைமுதற் சிறுநெறி மணன்மிகத் தாஅய்க்” (குறுந் 378,1-2).

    பாராட்டிச் சீராட்டி வளர்த்த தாய்:-

    உடன்போகிய தன் மகளின் மென்மைத் தன்மையை கண்டு செவிலி இரங்கியது. பாலும் உண்ணாதவள். நீரற்ற நிழல் அடங்கிப்போன சுரத்தில் எவ்வாறு வலியாளானாள் என்கிறாள்? “யாங்குவல் லுநள்கொ றானே யேந்திய” (குறுந் 356,5). பாலை நிலத்தின் கொடுமையை நினைத்த தாய், தன் மகள் பாலும் உண்ணாள், பந்தையும் உருட்டாள் எவ்வாறு சென்று இருப்பாள் என்று செவிலி துயரம் கொள்வது “கழைதிரங் காரிடை யவனொடு செலவே” (குறுந் 396,7). பந்தாடினாலும் கழங்காடினாலும் சோர்வுற்று என்னைக் கட்டிக் கொள்பவள் கடத்தற்கரிய தந்தையின் காவலையும் மீறிக் கொடுமையான பாலையில் அவள் அடிகள் நடந்து சென்றனளே என்கிறாள் பின்வருமாறு, “அருஞ்சுரக் கவலைய அதர்படு மருங்கின்” (அகம் 17,17)

    உடன்போகிய தன் மகள் மீண்டும் இல்லத்திற்கு வருவாளோ என்று ஏங்கி நிற்கும் தாயைக் காண முடிகிறது. மகளுக்கு தலைவாரி முடித்து, இடுப்பிலே தூக்கிச் சுமந்து, புனைவுகள் பல செய்து, பெற்றவள் என்ற உரிமைக்காக மகள் அருள் செய்யாமல் போனாலும் மகளின் வரவை எதிர்நோக்கித் தாய் கண்ணீர் வடிக்கிறாள். தன் இல்லத்திற்கு அழைத்து வருவானோ? அவன் இல்லதிற்கு அழைத்து செல்வானோ? தாய் ஏங்கி நிற்கும் நிலை பாடலில், ” என்மனை முந்துறத் தருமோ? தன்னை உய்க்குமோ? யாதவன் குறிப்பே?” (அகம் 195,17,18).

    தாய் மகளிடம் என் பகுதிக்கு உண், உன் தந்தைப் பகுதிக்கு உண், என்று பாராட்டிச் சீராட்டி வளர்த்த தன் மகள் உடன்போக்கு சென்றமைக்காக தான் வருந்தவில்லை. அவள் பாலை சுரத்தின் கடுமையில் எவ்வாறு நடப்பாள் என்று நினைத்து தாய் வருந்துகிறாள் “மடத்தகை மெலியச் சாஅய், நடக்கும்கொல்? என நோவல்யானே” (அகம் 219, 17-18).

    மகளின் அன்பிற்காக ஏங்கும் தாய்:-

    உடன்போகிய தன் மகள் தன்னை நினைப்பாளோ என்று மகளின் அன்பிற்காக ஏங்கும் தாயைக் காணமுடிகிறது. தன் மகளை ஊரே இழந்துவிட்டது என்கிறாள். “ஊர்இழந் தன்று, தன் வீழ்வுஉறு பொருளே” (அகம் 189,15). தலைவி உடன்போகியபின் அவள் விளையாடிய இடத்தையும் பிறவற்றையும் கண்டு தாய் புலம்புகிறாள். அயலவனின் காதலை நம்பி உடன்போகினாள் என்கிறாள் செவிலித் தாய் பின்வருமாறு, “பெருஞ்சோற்று இல்லத்து ஒருங்கு இவண் இராஅள், ஏதிலாளன் காதல் நம்பித்” (அகம்275,9-10).

    வேற்று மணம் பேசிய பெற்றோரும் உடன்போக்கிற்குத் தூண்டிய தோழியும்:-

    தலைவியின் களவினை அறிந்த பெற்றோர் அவளுக்கு வேற்று வரைவுக்கு ஏற்பாடு செய்தனர். அதனை அறிந்த தோழி அவனோடு உடன்போக்கு செய்ய ஏற்பாடு செய்விக்கிறாள். “வதுவை அமர்ந்தனர் நமரே அதனால்…….” (அகம் 221,3). தலைவியின் களவினை அறிந்த தமர் இற்செறிப்பினை அவளுக்கு மேற்கொண்டனர். தலைவின் துயரத்தினைக் காண முடியாத தோழி உன்னுடைய முலைகள் தலைவனுடன் பொருந்துவதாக அமைக நீ உடன்போக்குச் செல்க என்று துணிகிறாள் பாடலில், “வலியாய் இன்னும் தோய்க நின் முலையே!’ (அகம் 259,18)

    ஆணாதிக்கச் சமுகம்:-

    தலைவனின் பரத்தைமை உறவினைக் கண்டு தலைவி நாணமுற்று பிறரிடம் கூறாமல் கற்பொழுக்கத்திலிருந்து ஒழுகுவாள். அவனை ஏற்பாள் சினம் கொள்ளாமாட்டாள் என்ற கருத்தாக்கத்தினை ஆணாதிக்க சமூகம் உருவாக்குகிறது. பாடலில், ” தண்ணந் துறைவன் கொடுமை, நம்மு னாணிக் கரப்பாடும்மே”(குறுந் 9,7-8).

    மகனைப் பறிகொடுத்தை தாய்:-

    தலைவன் போரில் இறந்து காணப்பட்டான். அவனுடைய மனைவி நேரில் சென்று காண்கிறாள். உன்னுடைய தாய் நிலையினை அறிந்தால் என்ன பாடுபடுவாளோ என்று பலவும் சொல்லி அரற்றுகிறாள். பாடலில் “யாங்கா குவள்கொ லளிய டானே” (புறம் 254,11).

    முடிவுரை:-

    கயமனாரின் பாடல்களில் உடன்போக்கு பற்றியே பெரும்பான்மை காணலாகிறது. தலைவன் தலைவி இணைந்த களவு வாழ்க்கையைச் சமூகம் ஒருபோதும் ஏற்றுக்கொண்டதாகத் தெரியவில்லை. இருப்பினும் பெற்றோர் ஏற்றுக் கொள்ளாத அளவில் உடன்போக்கு நிகழுகின்றது. சங்க காலச் சமூகம் நெறிப்பட்ட சமூகமாக திகழ்கின்றது. பெண் தனது வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்கும் உரிமையைச் சமூகம் அவளுக்கு மறுத்து விடுகிறது. அதனால் உடன்போக்கு நிகழ்வதைக் காவல் நீட்டித்தாலும் அதனால் தடுக்க முடியவில்லை. சமூகத்தின் கட்டை உடைத்துக்கொண்டு பெண் தனக்கான வாழ்க்கைத்துணையுடன் செல்ல முற்படுகிறாள்.

    அடிக்குறிப்புகள்:-

    1. செ. சாராதாம்பாள், பெண்ணிய உளப்பகுப்பாய்வும் பெண் எழுத்தும், ப 70.
    2. மேலது., ப.70

    துணைநூற்பட்டியல்:-

    1. கௌமாரீஸ்வரி.எஸ், 6ஆம் பதிப்பு 2008 தொகாப்பியம் பொருளதிகாரம், (இளம்பூரணர் உரை), சாரதா பதிப்பகம், இராயப் பேட்டை, சென்னை-600014.
    2. சாமிநாதையர், உ.வே, 5ம் பதிப்பு 2000, குறுந்தொகை மூலமும் உரையும், உ,வே சாமிநாதையர் நூல் நிலையம், சென்னை-90.
    3. செ.சாரதம்பாள், பெண்ணிய உளப்பகுப்பாய்வும் பெண் எழுத்தும்,
    4. நாரயணசாமி அ.ஐயர் உரை, 2007 நற்றினை நானூறு, கழ்க வெளியிடு, திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிட், சென்னை-18.
    5. பூலியூர்க்கேசிகன் உரை, முதற்பதிப்பு 2013 அகநானுறு (களிற்றியானை நிரை) முத்தமிழ் பதிப்பகம், சென்னை-6000061.
    6. பூலியூர்க்கேசிகன் உரை, முதற்பதிப்பு 2013 அகநானுறு (மணிமிடைபவளம்) முத்தமிழ் பதிப்பகம், சென்னை-6000061.
    7. பூலியூர்க்கேசிகன் உரை, முதற்பதிப்பு 2013 அகநானுறு (நித்திலைக்கோவை) முத்தமிழ் பதிப்பகம், சென்னை-6000061.

    *****

    கட்டுரையாளர் – முனைவர்பட்ட ஆய்வாளர்,
    தமிழ் உயராய்வு மையம், தமிழியல் துறை,
    ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரி,  (மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்),
    அபிஷேகப்பட்டி,
    திருநெல்வேலி.-627012. தமிழ்நாடு, இந்தியா.

    நெறியாளர் : ந. வேலம்மாள்,
    உதவிப் பேராசிரியர் தமிழியியல் துறை,
    ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரி,
    திருநெல்வேலி-627008

     

     

    Share
    July 18, 2018
  • சங்க இலக்கியங்களில் எதிரொலி

    -செ. முத்துமாரி    

    முன்னுரை

    மாறாத சுவையும் தோய்ந்த இன்பமும் அளவின்றிச் சுரப்பன சங்கப் பாடல்கள். அவை பழந்தமிழர் வாழ்வைப் படம் பிடித்தாற்போல் கண்ணெதிரில் நிறுத்திக்காட்டும் காலக்கண்ணாடியாக அமைந்துள்ளது. உற்றுநோக்கி, அதன் சிறப்பை, ஆற்றலை, நுட்பமான நிகழ்வுகளைத் தம் இலக்கியங்களில் பதிவு செய்தனர். சங்கப் புலவர்களின் கூர்மையான  கவனத்திற்கு உட்பட்டுப் பதிவுசெய்யப்பட்ட ஒலி வகையுள் ஒன்றான எதிரொலிக்கும் மனிதக் குரல்வழி எழும் எதிரொலி பற்றி ஆய்வதாக இக்கட்டுரை அமைகிறது.

    எதிரொலி

    “echo என்ற ஆங்கிலச் சொல்லுக்குத் தமிழில்
    எதிரொலி என்பது பொருளாகும் ஒருவர் எழுப்பும்
    ஒலியை ஒலி அதிர்வினால் மீண்டும் திரும்பக்
    கேட்பதே எதிரொலி ஆகும்” 1

          “எதிரொலி என்ற பொருள் தரும் ‘சிலம்பு’
    என்னும் சொல்லை சங்க இலக்கியங்களில்
    பரவலாகக் காணலாம் எதிரொலி செய்தலால்
    மலைக்குச் சிலம்பு என்ற பெயரும் உண்டு“ 2

    குரல்ஒலி

    குரல்ஒலித் தோற்றுவிப்பன மனிதனின் உடல் உறுப்புகளே; அவற்றைப் பேச்சு உறுப்புகள் அல்லது ஒலிவுறுப்புகள் எனக் குறிப்பிடுவர். உதடு, பல், அண்ணம், உள்நாக்கு, காற்றுக்குழல், குரல்வளை, தொண்டை போன்ற உறுப்புகள் குரல் ஒலியைத் தோற்றுவிக்கின்றன. குரல்ஒலியானது, முணுமுணுப்பு ஒலி, கீச்சுக்குரல் ஒலி, கிசுகிசு ஒலி, பேரொலி என ஒலிக்கும் தன்மையைப் பொறுத்து வகைப்படுத்தப்படுகின்றது.

    குரல் ஒலி மனிதர்கள் பேசும் சுழலமைவைப் பொறுத்து மிகுந்தும் குறுகியும் ஒலிக்கும். மிகுந்து ஒலிக்கும்போது அவ்வொலி  எதிரொலியாகத் திரும்பக் கேட்பதும் உண்டு. இவ்வெதிரொலி பற்றிய சான்றுகளைச் சங்கப் பாடல்களில் காணலாம்.

    சங்க இலக்கியங்களில் எதிரொலி குறித்த செய்திகள் பரவலாக காணப்படுகின்றன. ஆயினும் மனிதக் குரல் ஒலி மூலமாக எழும் எதிரொலிகள் பற்றிய செய்திகள் ஒருசிலவே காணப்படுகின்றன அவை பின்வருமாறு:

    1. அதட்டும் ஒலி
    2. அழைப்பொலி
    3. வாழ்த்தொலி
    4. மலைவாழ் மக்கள் எழுப்பும் குரல் ஒலிகள்
    1. அதட்டும் ஒலி

    பெரியவர்கள் தம்மைவிட வயதில் சிறியவர்களையோ, விலங்குகளையோ, பறவைகளையோ அதட்டித் தாம் கருதியதைச் செய்து முடிப்பது உண்டு. அவ்வாறு அதட்டும் ஓசையானது பேரொலியாக எழும்பி எதிரொலியாகக் கயமனார் என்னும் புலவர் அகநானூற்றில் அழகுற எடுத்தியம்பியுள்ளார்.

    பாலை நிலத்தின் அரிய வழியில் சகடத்தை இழுத்துச் செல்லும்  எருதுகள் அவ்வழியில் போக முடியாமல் இடர்ப்படுகின்றன. அவ்வெருதுகளை உப்புவணிகர் அதட்டி ஓட்டுவதால் அவரது அதட்டும் குரல்வொலியானது மலைப்பகுதிகளில் எதிரொலிக்கின்றது. இதனை,

          “கொடுங் கோல் உமணர், பகடு தெழி தென் விளி
           நெடும் பெருங் குன்றத்து இமிழ் கொள இயம்பும்”(அகம்: 17:13-14) எனும் பாடல்வரிகளால் அறியலாம்.

    1. அழைப்பொலி

    ஒருவர் இன்னொருவரை அழைக்கும்போது அருகில் இருந்தால்  மெதுவாகவும், தொலைவில் இருந்தால் சத்தமாகவும் அழைப்பது வழக்கம். அவ்வாறு  சத்தமாக அழைக்கும்போது இடத்தின் சூழலமைவைப் பொறுத்து அவ்வழைப்போலி எதிரொலியாகக் கேட்பதும் உண்டு. இதனை பரிபாடலில் காணலாம்.

    பேதை பருவத்தில் உள்ள ஓர் இளம்பெண் தன் உறவினரை விட்டுப் பிரிந்ததால் மலைப்பகுதியில்  இட வேறுபாடு  காரணமாக எங்குச் செல்ல வேண்டும் என்பது கூடத் தெரியாமல் திகைக்கிறாள். பின் தன் உறவினரைச் ‘சிறந்தவரே! சிறந்தவரே!’ என்று அழைக்கிறார்.  அங்குள்ள குகைகள் அவள் அழைப்பை ஏற்காமல் விளியின் இசையை மட்டும் ஏற்றுக்கொண்டு எதிரொலிக்கின்றன.  அப்பெண் குகையின் எதிரொலி என்பதறியாமல் உறவினரின் அழைப்பொலி என்று நினைத்துக் கொண்டு திரும்பத் திரும்ப அழைத்துக் கூவுவதை,

            ‘ஏஎ’ ஓஒ’ என விளி ஏற்பிக்க
            ஏஎ’ ஓஒ’  என்று ஏலா அவ் விளி
            அவ் இசை முழை ஏற்று அழைப்ப அழைத்துழிக்
            செல்குவர் ஆங்குத்  தமர்க் காணாமை
            மீட்சியும், கூவுக் கூஉ  மேவும் மடமைத்தே
            வாழ்த்து உவப்பான் குன்றின் வகை’’ (பரி. 19;61-66)

    எனும் பரிபாடல் வரிகளால் அறியலாம்.  இப்பாடல் அவ்விடம் பெண்ணின் வழியாத் துயரத்தை எதிரொலி மூலம் நுட்பமாகப் புலப்படுத்தி நிற்பது படித்து இன்புறத் தக்கதாகும்.

    1. வாழ்த்தொலி:

    ஒருவரைப் பலர்கூடி வாழ்த்தும் பொது மிகுந்த ஆரவாரத்துடன் வாழ்த்தி மகிழ்வது வழக்கம். திருமுருகாற்றுப்படை இத்தகைய வாழ்த்தொலி மூலம் எழும் எதிரொலி குறித்த செய்தியைப்  பதிவு செய்திருப்பது நோக்கத்தக்கது.

    சூரர மகளிர் பலரும் ஒன்று கூடி விளாமரத்தின் தளிரை ஒருவர் மேல் ஒருவர் அத்தளிர் படும்படி விரலால் தெறிக்கச் செய்வர். அத்தளிர்  பட்டவுடன் ‘அசுரர்களை வென்று, அவர்களைக் கொன்றொழித்து அவ்வெற்றி குறித்துத்  தூக்கிய கோழிக் கொடி வாழிய பெரிது’ என்று வாழ்த்திப் பலரும்  ஒன்றாகக்  கூடி ஆடிப்பாடும் ஆரவாரம் மலையெங்கும் எதிரொலிக்கின்றது. இதனை,

          ‘கோழி ஓங்கிய வென்றுஅடு விறற் கொடி
          வாழிய  பெரிது! என்று ஏத்தி  பலர் உடன்
          சீர்திகழ் சிலம்புஅகம்  சிலம்பப் பாடி
          சூரர  மகளிர் ஆடும் சோலை” (தி.மு. 38-41) எனும்  திருமுருகாற்றுப்படையின் பாடல்வரிகள் உணர்த்துகின்றன.

    1. மலைவாழ் மக்கள் எழுப்பும் குரல் ஒலிகள்

    பொதுவாக எதிரொலி மலைப்பகுதிகளில்  அதிகமாக எழுவது உண்டு. விலங்குகளின்  ஓசையும், இடி ஓசையும், மலைகளில் பட்டு எதிரொலிப்பது வழக்கம். அவற்றோடு மலைவாழ் மக்கள் எழுப்பும் குரல் ஒலிகளும் மலைகளில் பட்டு எதிரொலிக்கும் செய்தியைச் சங்க இலக்கியங்களில் ஒன்றான மலைபடுகடாம் மிக நுட்பமாகப் பதிவு செய்துள்ளது வியப்பிற்குரியதாகும்.  மலைபடுகடாம்  மலைவாழ் குறவர்கள் விலங்குகளைப் பிடிக்கும்போது எழுப்பும் ஒலி, தேன் எடுக்கும்  போது எழுப்பும் ஆரவார ஒலி, ஆகியவற்றின் எதிரொலிகளை எடுத்துரைக்கின்றது.

          “விலங்கல், மீமிசைப் பணவைக் கானவர்
           புலம்புக்கு உண்ணும் புரிவளைப் பூசல்”                              (மலைப்படு 298-299) எனும் பூசல் ஒலியும்,

      “கலை கையற்ற  காண்பின் நெடுவரை,
           நிலை பெய்திட்ட மால்பு நெறியாகப்,
           பெரும்பயன் தொகுத்த தேங்கொள் கொள்ளை””

    என்னும் தேன் எடுக்கும்போது எழும் ஒலியும் எதிரொலிகளை ஏற்படுத்துவதை இப்பாடல் வரிகள் எடுத்துரைக்கின்றன.

    மேலும், மலைவாழ் பெண்களின் பாட்டொலி, கிளியோட்டும் ஒலி, சூரர மகளிரின் ஆரவார ஒலி, ஆகியனவும் அவற்றின் பாடலைப் படிப்பவர்க்குப் புதிய அனுபவத்தை ஏற்படுத்துகின்றன.

          ‘கொடுவரி பாய்ந்தெனக்  தொழுநர் மார்பின்
          நெடுவிசி விழுப்புண் தனிமார், காப்பென
          அறல் வாழ் கூந்தற் கொடிச்சியர் மாடல்’                              (மலைபடு: 302-304)

          ‘தினைக்குறு மகளிர் இசைபடு வள்ளையும்’ (மலைபடு:342) எனும் பாட்டொலிகளும்,

          ‘ஒலிகழைத் தட்டை புடைநர் புனந்தொறும்,
          கிளிகடி மகளிர் விளிபடுபூசல்’ (மலைபடு:328-329) எனும் கிளியோட்டும் ஒலியும்,

         ‘அருவிநுகரும் வான் அரமகளிர்
          வருவிசைதவிராது வாங்குபு குடைதொறும்
          தெரிஇமிழ்  கொண்டதும் இயம்போல் இன்னிசை’                                                                                    (மலைபடு:294-296)

    எனும் சூரர மகளிரின் ஆரவார ஒலியும்  மலைப்பகுதிகளில் பட்டு எதிரொலிப்பதை மலைபடுகடாம் அழகுற எடுத்துரைக்கிறது எனலாம்.

    இவ்வொலிகள் தவிர மலைவாழ்மக்கள் எழுப்பும் குரலைக் கூத்தொலியும் (மலைபடு:322), காட்டுப்பசுக்கள் ஒன்றோடு ஓன்று போர் இடுவதைக் கண்டும் குறவர்கள் எழுப்பும் ஆரவார ஒலியும் (மலை 330-333), குறவச் சிறுவர்கள் எழுப்பும் ஓசையும் (மலை 336-339)  எதிரொலிகள் எழுப்புவதை மலைபடுகடாம் நுட்பமாக பாடிக் களிக்கிறது.

    முடிவுரை 

    எதிரொலிகள் அறிவியல் நுட்பம் ஆகும். திரும்பக் கேட்டல் என்பது மனித மனத்திற்கு இன்பம் விளைவிப்பது. மலைப் பகுதிகளே பெரும்பாலும் எதிரொலிகளின் பிறப்பிடமாகும். இக்கட்டுரையில் கூறப்பட்டுள்ள அனைத்தும் குரல் ஒலிகளும் மலைப்பகுதிகளிலேயே பட்டுத் திரும்ப எதிரொலிக்கும் எதிரொலிகளாக அமைத்துள்ளன. பெரும்பாலும் மனித உணர்வுகளும் சூழல் அமைவுகளுமே எதிரொலிக்குக் காரணமாக அமைவதை இக்கட்டுரை உறுதிபடுத்துகிறது எனலாம்.

    அடிக்குறிப்புகள்

    1. English Dictionary oxford P.No.54
      2. ச. பவானந்தம் பிள்ளை, தமிழ்ச் சொல்லகராதி. ப . 207.

    துணைநூற்பட்டியல்

    1.மறைமலை இலக்குவனார், சங்க இலக்கியத்தில் ஒலிச்சூழலமைவு, உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டு கட்டுரை, 2010.

    2.இரா. குணசீலன், பழந்தமிழர் ஒலிச்சூழல், இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்ற பன்னாட்டுக் கருத்தரங்கு கட்டுரை, 2007.

    3.இரா. குணசீலன், சங்க இலக்கியத்தில் ஒலிக்கூறுகள், ஆய்வியல் நிறைஞர் பட்ட ஆய்வேடு, 2003.

    4.மு.பூங்கோதை, மதுரைக்காஞ்சியில் ஒலிச்சூழலமைவு, முத்துக்கமலம், இணைய இலக்கிய இதழ்.

    *****

    கட்டுரையாளர் –     முனைவர்பட்ட ஆய்வாளர்,
    தமிழ் உயராய்வு மையம்,
    ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரி,
    திருநெல்வேலி – 8.

     

    Share
    July 18, 2018
  • வெற்றியும், தோல்வியில் பாடமும்!

    பவள சங்கரி

     

    தலையங்கம்

     

    கால்பந்து விளையாட்டுத் திருவிழா நடந்து முடிந்தது. இருபது ஆண்டுகளுக்குப் பிறகு பிரான்சு இரண்டாவது முறையாக வெற்றி பெற்று உலகக் கோப்பையைப் பெற்றுள்ளது. முதல் முறையாக இரண்டாவது இடத்தை குரோசிய அணி பெற்றுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவிப்போம். அதே நேரத்தில் நடந்தேறிய பல்வேறு மனிதாபிமானமிக்க சிறப்பு நிகழ்வுகளையும் குறிப்பிட வேண்டியுள்ளது.

    பல்வேறு இனம், நாடு என அனைத்து மக்களும் ஒன்றிணைந்து ஒரே அணியில் போட்டியிட்டு பிரான்சு நாட்டிற்கு வெற்றியைத் தேடித் தந்துள்ளனர். நிறம், மதம் என அனைத்தையும் கடந்து வெற்றி என்ற இலக்கை மட்டும் மனதில் கொண்டு தங்கள் நாட்டிற்கு வெற்றியைத் தேடித் தந்துள்ளனர்.
    இந்த கால்பந்துத் திருவிழாவில் பல்வேறு நாட்டு மக்களின் சிறந்த கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் பிரதிபலித்த நிகழ்வுகளும் நடந்துள்ளன. வெற்றி பெற்ற பிரான்சு நாட்டை பாராட்டுவது போன்றே அதைவிட இன்னும் ஒரு பங்கு அதிகமாகத் தோல்வியடைந்த ஒரு அணியையும் பாராட்ட வேண்டுமென்றால் அது ஜப்பான் அணி என்றால் அது மிகையாகாது. ஜப்பானிய அணி தோல்வி அடைந்த பிறகு சில மணித்துளிகளே அந்தத் தோல்வியைத் தாங்காமல் வேதனையில் வெதும்பிக் கொண்டிருந்தனர். அதற்குப் பிறகு அவர்கள் செய்த காரியங்களே உள்ளம் நெகிழச் செய்ததோடு அனைவரின் பாராட்டுதல்களையும், மெய்சிலிர்ப்பையும் பெற வைத்தன. தங்களுடைய தோல்விக்குப் பிறகு தாங்கள் தங்கியிருந்த அறைகள் மற்றும் அதன் கழிவறைகள் அனைத்தையும் ஒவ்வொரு வீரரும் தாமாகவே சுத்தம் செய்து நிர்வாகத்திடம் ஒப்படைத்துள்ளனர். நிர்வாகத்தினர், அவர்கள் இப்படித் தாங்களே சுத்தம் செய்ய வேண்டியதில்லை என்ற நிலையிலும் ஏன் சுத்தம் செய்ய வேண்டும் என்று வினவியபோது, அவர்கள் தாங்கள் வந்தபோது எப்படி அளிக்கப்பட்டதோ அதேபோன்று திரும்ப அளிக்க வேண்டியதுதானே முறை என்று கூறிவிட்டு அதோடு நிற்காமல், தாங்கள் விளையாடிய கால்பந்து அரங்கிற்குள் நுழைந்தனர். அங்கு தங்கள் நாட்டு விளையாட்டு வீரர்களின் தோல்வியைத் தாங்காத இரசிகர்கள் தூக்கி எறிந்த காலி புட்டிகள், மற்ற குப்பைகளை அள்ளிப்போட்டு அந்த அரங்கத்தை சுத்தம் செய்ய ஆரம்பித்தனர். இதைவிட முக்கியமான விசயம் அதைப் பார்த்துக்கொண்டிருந்த ஜப்பானிய இரசிகர்களும் அரங்கிற்குள் நுழைந்து தாங்கள் போட்ட குப்பைகளைத் தாங்களே சுத்தம் செய்ய ஆரம்பித்தனர். இதைக்கண்ட நிர்வாகத்தினர் பல சுனாமிகளையும், எரிமலைச் சீற்றங்களையும், இரண்டாம் உலகப்போரில் அனுகுண்டு பேரழிவுகளையும் சந்தித்த உங்கள் நாடு இன்று உலக அரங்கில் தலை நிமிர்ந்து நிற்பதோடு பொருளாதாரத்தில் வல்லரசாக இருப்பதன் காரணமும் அறிய முடிகின்றது என்று மனம் நெகிழ அவர்களுக்கு வாழ்த்தும் தெரிவித்தனர்.

    இதையெல்லாம் பார்க்கும்போது, நமது நாட்டில், ஒரு நகராட்சித் தேர்தலிலோ, சட்டமன்ற தேர்தலிலோ தோல்வியடைந்தால் அந்தப் பகுதிகளையே இரணகளமாக்கிவிடும் நமது மக்களின் தன்மைகளையும் நினைக்காமல் இருக்க முடியவில்லை …

     

     

    Share
    July 17, 2018
  • படக்கவிதைப் போட்டி 169-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    முக்காடிட்டு முகம் மறைத்தபடி அக்கறையோடு அலைபேசியில் உலவிக்கொண்டிருக்கும் பாவையைத் புகைப்படமெடுத்து வந்திருப்பவர் திருமதி. கீதா மதிவாணன். ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து இப்படத்தைப் படக்கவிதைப் போட்டிக்குத் தேர்வுசெய்து தந்திருப்பவர் திருமதி. இராமலக்ஷ்மி. புகைப்படக் கலைஞருக்கும் அதனைச் சுவைபடத் தேர்ந்தெடுத்த தெரிவாளருக்கும் எம் நன்றி!

    அலைபேசியின் பிடியில் அகிலமே சிக்குண்டிருக்கும் இத்தொழில்நுட்ப யுகத்தில், மெய்ந்நிகர் உலகே மெய்யான உலகாகிப் போனதால், கண்டம் தாண்டி வாழ்வோரே அண்டைவீட்டார் ஆனார்கள்; நாடுகடந்து வாழ்வோரே உளம்நாடு(ம்) நட்பும் ஆனார்கள். வீடுதேடிவந்த உண்மை உறவுகளெல்லாம் காணாமல் போனார்கள்!

    கவிஞர்களே! கண்ணுக்கு விருந்தளிக்கும் இவ் வண்ணப்படத்துக்கு உங்கள் எண்ணங்கள்வழி உயிரூட்டுங்கள்! ஒளி கூட்டுங்கள்!

    *****

    இணைய உலகில் இன்புற்றலைந்து, இச்சைப் பேச்சுக்களில் இதயம் பறிகொடுத்து, அகமும் முகமும் சேர்ந்தழியும் இளைய தலைமுறையினருக்காக இரங்குகின்றார் திருமிகு. கீதமஞ்சரி.

    இன்றைய வாழ்வின் இதம் மறந்து
    நாளைய வாழ்வின் தேடல் மறந்து
    உறக்கம் தவிர்த்து ஊண் மறந்து
    உறவு தவிர்த்து உலகம் மறந்து
    விழிவிலகாது கைக்கருவி பதித்து
    விரல்களால் திரைநகர்த்தி ரசித்து
    இரவும் பகலும் இடையறாது திரிந்து
    இணைய உலாக்களில் இன்புற்றலைந்து
    புனைந்த பெயர்களில் கதைகளில் மகிழ்ந்து
    பூச்சுகளில் மெய்வண்ணம் மறைத்து
    இங்கொரு முகம் அங்கொரு முகம் காட்டி
    இச்சைப்பேச்சுகளில் இதயம் பறிகொடுத்து
    நச்சுநாவின் தீண்டலுக்கு இரையாகி
    நலமழித்து குணமழித்து பொழுதழித்து
    முகமும் சேர்த்தழிக்கும் தலைமுறை முடக்கம்.

    *****

    ”பலனேதுமில்லாப் புலனம் உன்னைப் படுகுழியில் தள்ளும்; கலகங்கள் செய்யும்; உபயோகமில்லா இதனை ஒதுக்குதலே நன்று” என்று இப்பெண்ணுக்குப் பொன்னான கருத்துக்களைப்  புகல்கின்றார் பெருவை திரு. பார்த்தசாரதி.

    புலனத்தால் பயனில்லை

    அலங்காரம் செய்து கொண்டு
    ……….ஆருக்கும் தெரியா வண்ணம்
    புலனத்துள் முகத்தைப் புதைத்துப்
    ……….பொழுதுகளை இழந்த பெண்ணே.!
    சலனமேதும் இல்லா மலேயே
    ……….சத்தமின்றிச் செய்வ தென்ன
    பலனேதும் இல்லாப் புலனம்
    ……….படுகுழியில் தள்ளும் உன்னை.!

    உலகத்தில் எல்லா இடமும்
    ……….ஓரிடத்தை விடாது சுற்றி
    கலகத்தைச் செய்து குழப்பம்
    ……….கண்டபடி உண்டு செய்யும்.!
    இலகுவாக இதிலே இருந்து
    ……….இட்டபடி விலக முடியா
    உலகறிவு பெறவும் இதிலே
    ……….ஒன்றுக்கும் உபயோ கமிலை.!

    இடித்துரைத்தும் கேட்கா வயது
    ……….இந்தநிலை தவிர்க்க வேண்டும்.!
    துடிக்கின்ற இளம் பருவம்
    ……….துள்ளாமல் இருக்க வேண்டும்.!
    படிக்கின்ற வயதில் திருட்டுப்
    ……….புத்திகூட வேணாம் பெண்ணே.!
    படிக்காத பொழுதில் காதல்
    ……….பக்கத்தில் நெருங்க விடாதே.!

    *****

    இந்த மிடுக்கலைப்பேசி, ஒற்றைச் சொடுக்கில் கற்றைத் தகவல்கள் கொட்டும்; கம்பி வடமின்றி மன்பதையைக் கட்டும். இணையத்தொடர்பின்றி அது முடக்கம் கண்டால் மாந்தக்கூட்டமும் வாட்டம் கொண்டிடுதே என்று வியக்கின்றார் திரு. ஆ. செந்தில்குமார்.

    மிடுக்கலைப்பேசியின் மிடுக்கான வளர்ச்சியும்.. மெய்ம்மறக்கும் உலகமும்..

    ஒற்றைச்சொடுக்கில் கற்றைத் தகவல்கள் நம் கண்முன் கொணர்ந்திடுமே…
    சுற்றும் முற்றும் பார்க்காத பயனாளி இதனுள் ஐக்கியமே…

    திரட்டுகள் அனைத்தையும் புரட்டிப் பார்க்க உதவிடும் ஓர் கருவி…
    அறிவை வளர்க்கும் விருப்பத் தேர்வுகள் கொண்டது இக்கருவி…

    தம்படம் எடுத்து தம்பட்டம் அடிக்க வாய்ப்புகள் கொடுத்திடுமே…
    கம்பி வடமின்றி நம்மை இணைக்கும் மாபெரும் தொழில்நுட்பமே…

    தடங்காட்டி அமைப்பு நாட்காட்டி வசதி அனைத்தும் உள்ளடக்கம்…
    தொடுதிரை வடிவில் தொடர்புகள் அனைத்தும் இதனுள் அடக்கம்…

    வெள்ளோட்டம் மூலம் வசதிகள் அனைத்தையும் கற்றுத் தந்திடுமே…
    வேண்டிய செயலியைப் பதிவிறக்கம் செய்து நிறுவிக் கொள்ளலாமே…

    இணையத்தின் வழியே உலகைப் பிணைக்கும் வல்லமை இதற்குண்டு…
    தனதெனக் கொண்ட தக்கதோருலகை அவரவர்க்குத் தந்திடும் ஆற்றலுண்டு…

    பல்லூடகச் செய்திகள் படசெய்திகள் அனைத்தையும் புலனத்தில் பகிரலாமே…
    எல்லை கடந்த வானத்தளவு தகவல்கள் அனைத்தும் சேமித்து வைக்கலாமே…

    இயங்கலை சற்றே முடங்கிப் போனால் உலகு நின்றது போலாகிடுமே…
    இளைஞரின் மனதெல்லாம் முடக்கலையாகி துன்பத்தில் ஆழ்ந்திடுமே…

    படித்தவர் பாமரர் இளையோர் முதியோர் அனைவரும் மயங்கிடுவர்…
    நடுத்தர ஏழை செல்வந்த ரனைவரும் இதை உயர்வாய்க் கருதிடுவர்…

    மூன்றாம் நான்காம் தலைமுறை கடந்து மிடுக்காய் வளர்ந்ததுவே..
    மிடுக்கலைப்பேசியில் கட்டுண்ட உலகம் அதில் மூழ்கிப் போனதுவே…!

    *****

    புகுந்தவீட்டைப் பிறந்தவீடாய் எண்ணி, அங்குள்ள மனிதர்களைத் தன் சுற்றமாய்ப் பேணி, சற்றே இளைப்பாற ஓய்ந்திருக்கும் இக்காரிகைக்கு, அவளுக்கான தருணங்களை அளிப்பதிந்தக் கைப்பேசிதான் என்கிறார் முனைவர் இராஜலட்சுமி இராகுல்.

    எனக்கான தருணங்கள்

    கரம் பிடித்த நிமிடம் முதல்
    உயிரே உன் துணைவி யாக;
    கரு வினிலே சுமக்கா விடினும்
    உன் அன்னையை என் தாயாக;
    கல்வி கேள்வி நல்கா விடினும்
    உன் தந்தையை என் தகப்பனாக;
    ஒரு வயிற்றில் பிறக்கா விடினும்
    உன் சகோதரியை என் தங்கையாக;
    மைத்துனன் கொழுந்தன் மாமன் மாமி
    தமையன் தமைக்கை மற்றும் மருகன்
    என் றுன்னுற வினரனை வரையும்
    யென்னுறவாய் நெஞ்சில் சுமந்து கொண்டு ;
    உன் இல்லத்தில் உன் இடத்தை
    நிரப் பிடும் நற்பணி யேற்றேன் !!!

    என்ன வனே யென்னை யீன்ற
    அன்னை தந்தை இரு வருடன்;
    தன் னலம் சிறிதும் இன்றி
    எம் நன்மை பேணும் தோழியுடன்;
    கன்னம் தொட்டு என்னைக் கொஞ்சும்
    அண்ணன் தம்பி அனைவருடன்;
    ஆசை யுடன் சில நொடிகள்
    உரை யாடக் கூடு மென்னில்….

    நீயாக நான்மாறி நானாற்றும் பணிஓய்ந்து
    அவரவர் தேவைகளை மருமகளாய்ப் பூர்த்திசெய்து
    உறவினர் குழுமியுள்ள உன்னகத்தின் புறம்வந்து
    நானாக நானிருக்கும் எனக்கான தருணங்கள் !!!

    *****

    கைப்பேசியின் மகத்துவத்தை, அதனால் சகத்துக்கு விளையும் ஆபத்துக்களை என்று அதன் இருவேறு பக்கங்களையும் சரியாய் அடையாளப்படுத்தியிருக்கும் கவிஞர்பெருமக்களுக்கு என் பாராட்டுக்கள்!

    அடுத்து வருவது இவ்வாரத்தின் சிறந்த கவிதை…

    ஏந்திழையே! எதனை ஏந்தியபடி அமர்ந்திருக்கிறாய்?
    ஆயிழையே! ஆராய்ச்சி செய்வது எதனை?
    முழுச் சுதந்திரம் கொண்டவளோ, முக்காடிட்டவளோ?
    அத்துணைப் பேர் கையிலும் ஆன்ட்ராய்ட்!
    ஆன்ட்ராய்டோ, ஆப்பிளோ, கையும்,கண்ணும்
    கணினியில், உள்ளங்கையில் உலகு அடக்கினையோ?
    ஓய்வுப்பொழுது ஆய்வுப் பொழுதாய் ஆனதோ??
    வண்ண உடைக்குள் வசீகரம் மறைத்த
    வனிதையே, வானளந்தனையோ, கடல் தாண்டிச்
    சென்ற கணவனுக்குக் கடிதம் எழுதினையோ?
    அன்புள்ள தேவதையே, அகிலம் எட்டிப் பார்!
    வண்ணத்தால் வசீகரித்தாய், எண்ணத்தாலும்
    ஏற்றம் பெற்றிடு, கணக்குச் செய்தனையோ?
    கணக்காய்ச் செய்தனையோ? அன்பு
    பொழிந்தனையோ?ஆன்ட்ராய்டில்
    மொழிந்தனையோ? மாடப்புறாவே,
    மயக்கும் பேரெழிலே, மஞ்சள் வண்ணத்
    தாரகையே, மண்ணுலகிற்கு இறங்கி வா
    பொன்னுலகில் பூத்துக் கிடந்தது போதும்
    என்னுலகு சேர், ஏற்றமாய் வாழ்வோம் வா!

    ”முக்காடிட்டு முகம் மறைத்த பெண்ணே! இந்தக் கைப்பேசி உன் ஓய்வுப் பொழுதை ஆய்வுப்பொழுதாய் மாற்றியதோ? வானை அளக்கலாம்; இதன்மூலம் வம்பும் அளக்கலாம். பொன்னுலகில் பூத்திருக்கும் புதுநிலவே! மண்ணுலகிற்கு இறங்கி வா! ஏற்றத்தோடு வாழ்வோம் வா!” என்று மெய்ந்நிகர் உலகில் சஞ்சரிக்கும் பெண்ணை மெய்யுலகுக்குக் கைநீட்டி அழைக்கும் இக்கவிதையை யாத்த திருமிகு. முருகேஸ்வரி ராஜவேலை இவ்வாரத்தின் சிறந்த கவிஞராய் அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

     

     

    Share
    July 16, 2018
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    180716 Vyasa composes the Mahabharata 9×12 strathmore 160gsm lr

    ’’ஆரணர்(ஆரணம் -வேதம்….வேத வ்யாஸர்) சொன்னது, வாரணர் வாக்கிது,
    நாரணர்பூ பார நிவிருத்தி -பாரதம்:
    வேதர் உரைத்தது, வேழர் வடித்தது
    கீதையாம் பாரதக் குட்டு”(மகாபாரதக் குட்டு-WRITERS BLOCK)….கிரேசி மோகன்….!

    முனிவன் உரைத்த மகாபா ரதத்தை
    பணிவும் குறும்பும் பெருகும் -வினய
    முகத்துடன் மூஷிக வாகனன் தந்த
    நகத்தால் வடித்தல் நயம்….!

    வேறு
    ————
    பொன்மகள் அமர்ந்து பாத பங்கயம் பிடித்திட
    பொன்னிசூழ் அரங்கில் ஆதி சேடனார் படுக்கையில்
    தென்னிலங்கை வென்ற சோர்வில் கண்துயின்றவன் புகழ்
    பண் சிறக்க பாரதம் வடித்த வாரணம் சரண்….கிரேசி மோகன்….!

    Share
    July 16, 2018
  • தமிழின் சக்தி

    தமிழ்வளர்ச்சித் துறை நடத்திய தமிழ்நாடு பெயர்சூட்டல் பொன்விழாக் கொண்டாட்டத்தில் நிகழ்ந்த கவிதைப் போட்டியில் சென்னை மாவட்டத்தின் அளவில் முதலிடத்தில் தேர்வான என் கவிதை.

    தமிழுக்குச் சக்தியுண்டு – அதைத்
       தாரணி கண்டிடும் நாளுமுண்டு!
    தமிழுக்குள் பக்தியுண்டு – தம்பி
       தாவிநீ பாடு தமிழிற்சிந்து!

    கம்பன் கவிதையைப்போல் – இந்தக்
       காசினி கண்ட கவிகளுண்டோ?
    உம்பர் வியந்தகவி – நம
       துள்ளத்தி லூறி யினிக்குங்கவி!

    வள்ளுவன் சொன்னதைப்போல் – புவி
       வாழ்க்கைக் குயரிய வேதநெறி
    கொள்ளுவ தெந்தமொழி – அன்புக்
       கொள்கை பரப்பும் தமிழையன்றி?

    ஓங்கு புகழ்ச்சிலம்பும் – நல்ல
       ஒண்டமிழ்ச் செல்வச் சிந்தாமணியும்
    தாங்கும் பெருமையெலாம் – வேற்றுத்
       தன்மை மொழிகள் பெறலெளிதோ?

    ஒலியின் குறிப்பளந்தே – வளர்ந்
       தோங்கிய யாப்புக் களஞ்சியம்போல்
    கலியில் பிரிதுமுண்டோ? – தமிழ்க்
       கவிதையைப் போற்பிற வெல்லமுண்டோ?

    வானக் கருத்துமுதல் – இந்த
       மண்ணகத் துள்ள அணுவரையில்
    ஆன தகவலெல்லாம் – நமக்
       கள்ளிக் கொடுத்ததும் ஆன்மசக்தி!

    தேர்ந்தவிஞ் ஞானச்சக்தி! – தமிழ்
       தெள்ளமு தான இசையின்சக்தி!
    சேர்ந்த பலமொழிக்கும் – எழில்
       சேர்ந்த தமிழ்நம் உரிமைச்சக்தி!

    பாரதிர் பாட்டுச்சக்தி! – கொண்ட
       பண்டைய நூல்கள் பழமைச்சக்தி!
    வீரத் திருவின்சக்தி! – தமிழ்
       வீரியம் கூட்டிடும் அன்புச்சக்தி!

    கட்டுரைப் புதினங்களாய்த் – தமிழ்
       காட்டிடும் சக்தி கருத்துச்சக்தி!
    கட்டிடும் நாடகத்தில் – நாம்
       காண்பது நாட்டுக் கலையின்சக்தி!

    இந்தப் புவிபிறந்த – சின்ன
       இம்மியைத் தொட்டுப் பிறந்தசக்தி!
    செந்தமிழ் தெய்வச்சக்தி – அந்தச்
       சீரினைப் போற்றிட வாழுவமே!!

    -விவேக்பாரதி
    28.06.2018

    Share
    July 16, 2018
  • 2019 ஆண்டில் பொதுநபர் விண்வெளிப் பயணச் சுற்றுலாவுக்கு முதன்முதல் இரு அமைப்புகள் துவங்கலாம்

    Posted on July 15, 2018

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

    ++++++++++++++++

    https://www.msn.com/sv-se/nyheter/utrikes/tainted-water-exhibition-roves-around-beijing/vi-AAA4gOU

     

    நீல் ஆர்ம்ஸ்டிராங் முதன் முதலில்
    நிலவில் தடம் வைத்தார்.
    பூமியைச் சுற்றி வரும்
    அகில நாட்டு விண்வெளி நிலையத்தில்
    சிலநேரம் தங்கிச்
    சுற்றுலாப் பயணம்  செய்ய
    நிற்கிறார்  வரிசையில்
    புவி மனிதர்  !

    தட்டாம்பூச்சி போல் பறக்குது !
    தரணியில் முதலாய்ப் பறக்குது !
    பரிதியின் சக்தியால் பறக்குது !
    எரிசக்தி இல்லாமல் பறக்குது !
    பகலிலும் இரவிலும் பறக்குது !
    பசுமைப் புரட்சியில் உதித்தது !
    பாதுகாப் பாய்க் கீழ் இறங்குது !
    நாற்பது குதிரைச் சக்தியில்
    நான்கு காற்றாடி உந்துது !
    பனிரெண் டாயிரம் செல்கள்
    பரிதிச் சக்தியை அளிப்பது !
    ஒற்றை விமானி ஓட்டுவது !
    ஒருநாள் பறந்த ஊர்தி
    இருபது நாளினிப் பறக்கும் !
    அட்லாண்டிக் கடலைக் கடக்கும் !
    அகில உலகைச் சுற்றும் !
    நூறாண்டுக்கு முன்னே பறந்த
    ரைட் சகோதரர் ஊர்தி போல்
    வரலாற்று முதன்மை பெறுவது !

    +++++++++++++++

     
     
    2019 ஆண்டில்  விண்வெளிப் பயணத்துக்குப் பொது நபர் சுற்றுலா துவங்கலாம்
    அண்டவெளிச் சுற்றுலாவை முதன்முதல் துவங்க இருபெரும்  தொழிற்துறை நிறுவகங்கள் சோதனைகள் செய்து, 2019 ஆண்டில் நிறைவேற்றத் தயாராக உள்ளன.  ஆனால் எப்போது என்று இன்னும்  தேதி குறிப்பிடப் படவில்லை. வெர்ஜின் கலாக்டிக் [Virgin Galactic] தொழில் நிறுவ அதிபர்,  பிரிட்டீஷ் கோடீஸ்வரர் ரிச்செர்டு பிரான்சன் [Richard Branson] ஒருவர்.  அடுத்தது புளூ ஆரிஜின் [Blue Origin] தொழில் நிறுவ அதிபர், அமேஸான் படைப்பாளி, ஜெஃப்ரி  பிஸோஸ் [Jeffery Bezos] .  இரு நிறுவகங்களும் வெவ்வேறு தொழில்நுட்ப முறைகளைப் பின்பற்றி, யார் முதலில் நிறைவேற்றப் போகிறார் என்று போட்டி போட்டு வருகிறார்.
    வெர்ஜின், புளூ ஆர்ஜின் கைக்கொண்ட முறைகள் இரண்டிலும் பொதுநபர் பூமியைச் சுற்றி வரப் போவதில்லை.  பயணிகள் ஒரு சில் மணிநேரம் விண்வெளி நிலையத்தி தங்கி, புவிக்கு மீளும் போது, சில நிமிடங்கள் பளுவற்ற உணர்ச்சியில் [Moments of Weightlessness] அனுபவம் பெற்று புவியில் வந்து இறங்குவார்.  முந்தைய வாய்ப்பாக 2000 ஆண்டில் விண்வெளி நிலையச் சுற்றுலாப் பயணத்துக்கு மில்லியன் கணக்கான டாலர் தர வேண்டி இருந்தது.  இப்போது சுற்றுலாவுக்கு டிக்கெட் செலவு : 250,000 டாலர் !  மிக மலிவு.  விண்வெளி நிலையம் 250 மைல் [400 கி.மீ] உயரத்தில் பூமியைச் சுற்றி வருகிறது.  தற்போதைய குறிக்கோள் விண்வெளிச் சுற்றுலாப் பயணிகள் சுமார் 62 மைல் [100 கி.மீ.] உயரத்தில் விண்கப்பலில் சுற்றி, பளுவற்ற உணர்வை ஒரு சில மணிகள் அனுபவித்து, பாராசூட்டில் புவிக்கு மீள்வார்.
    வெர்ஜின் விண்கப்பலில் 6 பயணிகளும், 2 விமான இயக்குநரும் செல்வார்.  தனியார் ஜெட் விமானம் போலிருக்கும் அதனை இருபுறமும் ஒரு வாடிக்கை விமானம் தூக்கிச் செல்லும்.  சுற்றுலாப் பயணம் நீடிப்பது 90 – 120 நிமிடம்.  காலிஃபோர்னியா  மொகாவி பாலை வனத்தில் செய்த சோதிப்பில் 21 மைல் உயரத்தில்  விண்கப்பல் பறந்தது.  பிரான்ஸன் கடந்த 2018 மே மாதத்தில் BBC வானொலி நபருக்குக் கூறியது :  இதுவரை 650 நபர் பயணத்துக்குப் பெயர் கொடுத்திருக்கிறார்.  விண்சிமிழைத் துக்கிச் செல்லும் ராக்கெட் உயரம் 60 அடி.  விண்சிமிழ் 66 மைல் உயரத்தைத் தொட்டது. அமெரிக்காவின்  ஸ்பேஸ் எக்ஸ் போயிங் நிறுவகங்கள் 2020 ஆண்டுக்குள் தமது விண்வெளிப் பயணத் திட்டங்களைத் தயார் செய்யும்.
    ++++++++++++++++++++++++++++++++++++++++++++++

    (ஜூலை 8, 2010)


    “மனிதன் இயக்கிய சூரிய சக்தி விமானம் இரவு முழுவதும் பறந்தது இதுவே முதல் முறை.  அந்த நிமித்தமே எங்கள் குறிக்கோள் வெற்றி அடைந்ததை நிரூபித்தது. காலைப் பொழுது புலர்ந்ததும் எதிர்பார்த்தை மீறி, மின்கலன்களில் இன்னும் 3 மணிநேர மின்னாற்றல் சேமிப்பு மிஞ்சி இருந்தது.  ஊர்தி தரையில் வந்திறங்கிய போதே உதய சூரியனிலிருந்து புதிய ஆற்றலைச் சேமிக்க ஆரம்பித்து விட்டது.  அடுத்தோர் இராப் பகல் பயணத்தைத் தொடரும் எங்கள் ஆர்வம் நின்று விடவில்லை. ‘தொடர்ப் பயண நினைப்பிலிருந்தும்’ எங்களை எதுவும் தடுக்க வில்லை.”

    பெர்டிராண்டு பிக்கார்டு (Aviator, Solar Impulse Design Lab)

    “நான் இன்னும் காற்றில் மிதப்பது போல்தான் உணர்கிறேன்.  பூரிப்படைகிறேன் !  (சூரிய ஊர்திப் பறப்பு) ஓர் முக்கியப் படிக்கட்டு !  இப்போது நாங்கள் அதற்கு மேலும் போகலாம்.  நீண்ட காலப் பயணங்களிலும் முற்படலாம்.”

    சுவிஸ் விமானி ஆன்ரே போர்ச்பெர்க் (Swiss Pilot Andre Borschberg)

    “எதிர்பார்த்ததை விடப் பயணத்தில் வெற்றி கிடைத்தது.  நல்ல காலநிலை அமைந்திருப்பதற்கு எங்களுக்கு அதிர்ஷ்டம் தேவைப்பட்டது.  தகுந்த காலநிலை விமானிக்கு அமைந்தது.”

    கிளாடி நிக்கலியர் (Flight Director & Former Space Shuttle Astronaut)


    வரலாற்று முதன்மை பெற்ற மனிதன் இயக்கும் சூரிய ஊர்தி

    2010 ஜூலை 8 ஆம் தேதி முதன்முதல் சுவிஸ் விமானி ஆன்ரே போர்ச்பெர்க் சூரிய சக்தி இயக்கி நான்கு எஞ்சின்கள் உந்தும் வானவூர்தியை 26 மணிநேரங்கள் பகல் இரவாய் ஓட்டிப் பாதுகாப்பாய் ‘பேயெர்ன்’ விமான தளத்தில் (Payerne Airport, Swiss) இறக்கினார். 1903 இல் அமெரிக்காவில் முதன்முதல் ரைட் சகோதரர் தாம் தயாரித்த ஆகாய ஊர்தியில் பறந்தது போல் இதுவும் மனிதன் இயக்கிய முதல் சூரிய ஊர்தியாக வரலாற்றுப் பெருமை பெறுவது.  எரிசக்தி எதுவும் இல்லாமல் இயற்கையான சூரிய சக்தியைப் பயன்படுத்தி மனிதன் ஓட்டிய முதல் வானவூர்தி.  பேயெர்ன் விமானம் தளம் சுவிஸ் நாட்டின் தலைநகரம் பெர்னிலிருந்து (Bern) 50 கி.மீ. (30 மைல்) தூரத்தில் உள்ளது.  ஊர்தியின் இறக்கைகள் மீது அமைத்திருந்த 12,000 பரிதிச் செல்கள் சூரிய சக்தியைச் சுழலும் நான்கு காற்றாடிகளுக்கு அளித்தன.  ஊர்திக்கு உந்து சக்தி கொடுத்து வானத்தில் ஏற்றி இறக்கியவை அந்த நான்கு காற்றாடி மோட்டார்கள்.  ஒவ்வொன்றும் 10 குதிரைச் சக்தி (10 HP – 6 Kw Each) ஆற்றல் கொண்டது.  சூரிய ஒளி மாலை வேளையில் மங்கியதும்  சூரிய மின்கலன்கள் (Solar Cell Batteries) சேமித்திருந்த மின்னாற்றலை வான ஊர்தி பயன்படுத்திக் கொண்டது.  வானில் ஊர்தி பறக்கும் போது அதன் உச்ச உயரம் 8700 மீடர் (28,500 அடி).  வெகு நீளமான இறக்கைகளின் அகலம் : (63 மீடர்) 207 அடி.

    சோதனைப் பயிற்சி முடிந்து விமானம் தளத்தில் இறங்கி அதிர்வோடு நிற்கப் போகும் போது, விமானம் பக்கவாட்டில் சாய்ந்து இறக்கைகள் முறியாமல் தாங்கிக் கொள்ள இருபுறமும் உதவி ஆட்கள் ஓடி வந்தனர்.

    இதற்கு முன்பு நாசா மற்றும் பிரிட்டன், சைனா போன்ற சில நாடுகள் சூரிய சக்தியில் ஓடும் மனிதரில்லா ஊர்திகளை ஏவிப் பயிற்சி சோதனைகள் புரிந்துள்ளன..  இதுவே சூரிய சக்தியில் மனிதன் இயக்கிய வானவூர்தியின் நீண்ட காலப் பயணம், உச்ச உயரப் பதிவுகளாகும்.  நான்கு காற்றாடி மின்சார மோட்டர்களை சுவிஸ் நாட்டின் முன்னாள் ஜெட்விமானப் படையைச் சேர்ந்த ஆன்ரே போர்ச்பெர்க் (Former Fighter Jet Pilot, Andre Borschberg) இயக்கிச் செலுத்திய வானவூர்தி இது.  மேலும் ‘பரிதி உந்துசக்தி படைப்பு நிறுவகம்’ (Solar Impulse Deisgn Group) இடைவிட்டுப் பயணம் செய்த பல்வேறு பயிற்சி சோதனைகளைத்தான் இதுவரை நடத்தி வந்துள்ளது !

    சூரிய உந்துசக்தி நிறுவகத்தை உருவாக்கி வான ஊர்திகளை டிசைன் செய்து சோதனை செய்து வருபவர் இருவர் : விமானி ஆன்ரே போர்ச்பெர்க் & அவரது விமானக் கூட்டாளி பெர்டிராண்டு பிக்கார்டு (Andre Borschberg & Fellow Aviator Bertrand Piccard). “மனிதன் இயக்கிய சூரிய சக்தி விமானம் இரவு முழுவதும் பறந்தது இதுவே முதல் முறை.  அந்த நிமித்தமே எங்கள் குறிக்கோள் வெற்றி அடைந்ததை நிரூபித்தது.  காலைப் பொழுது புலர்ந்ததும் எதிர்பார்த்தை மீறி, மின்கலன்களில் இன்னும் 3 மணிநேர மின்னாற்றல் சேமிப்பு மிஞ்சி இருந்தது.  ஊர்தி தரையில் வந்திறங்கிய போதே உதய சூரியனிலிருந்து புதிய ஆற்றலைச் சேமிக்க ஆரம்பித்து விட்டது.  அடுத்தோர் இராப் பகல் பயணத்தைத் தொடரும் எங்கள் ஆர்வம் நின்று விடவில்லை. ‘தொடர்ப் பயண நினைப்பிலிருந்தும்’ எங்களை எதுவும் தடுக்க வில்லை.” என்று பெர்டிராண்டு பிக்கார்டு (Aviator, Solar Impulse Design Lab) செய்தி நிருபருக்குக் கூறினார் !  அடுத்த குறிக்கோள் 2013 ஆண்டுக்குள் ஆற்றல் மிக்க ஒரு பரிதி சக்தி வானவூர்தியைப் படைத்து உலகத்தை ஒருமுறை சுற்றி வரப் போவதாகக் கூறினார்.

    சூரிய உந்துசக்தி நிறுவகம் தயாரித்த வானவூர்தியின் சாதனைகள்

    சூரிய உந்துசக்தி நிறுவகத்தின் அதிபர் ஆன்ரே போர்ச்பெர்க் (57 வயது) தானே விமானியாக இயக்கி 26 மணிநேரம் தொடர்ந்து ஓட்டிய வானவூர்தி அது !  திட்ட அதிகாரி பெர்டிராண்டு பிக்கார்டு 1999 இல் வாயு பலூன் ஊர்தியில் வெற்றிகரமாய் உலகம் சுற்றி வந்தவர்.  பிக்கார்டின் தந்தையார், பட்டனார் விமானப் பறப்பில் புதிய வரலாற்றைப் படைத்தவர்.  அந்த முன்னோடி மனித வானவூர்தியின் பெயர் : HB-SIA. பயணம் ஆரம்பித்த விமானத்தளம் :  சுவிஸ் நாட்டின் தலைநகர் பெர்னிலிருந்து (Bern) 50 கி.மீ (30 மைல்) தூரத்தில் உள்ளது பயேர்ன் விமானத்தளம் (Payerne Airport).  புறப்பட்ட தேதி : 2010 ஜூலை 7 காலை மணி : 06:51.  கீழிறங்கிய தேதி : 2010 ஜூலை 8 காலை மணி : 09:00.  ஏறிய உச்ச உயரம் : 8700 மீடர் (28540 அடி).  பயணக் காலம் : 26 மணி 9 நிமிடம்.  பயேர்ன் விமானத் தளத்திலிருந்து மேலேறுவதற்கு முன்பு வானவூர்தி 14 மணிநேரம் சூரிய ஒளியில் மின்னாற்றலை முதலில் சேமித்தது.  இது நான்கு காற்றாடி மோட்டர்களை இயக்கவும் இரவில் விமானம் பயணம் செய்யவும் தேவைப் பட்டது.  63 மீடர் (207 அடி) நீளமுள்ள விமானத்தின் இறக்கைகள் (Similar to A340 Airbus Wings Length) 12,000 சூரிய செல்களைத் தாங்கி இருந்தன.  ஒவ்வொன்றும் 10 HP ஆற்றலுள்ள நான்கு மோட்டார்கள் காற்றாடிகளைச் சுற்றி ஊர்திக்கு உந்துசக்தி அளித்தன.

    இரவு விமானத்தைக் கவ்விய போது உச்ச மட்டக் காற்றடிப்பு ஊர்தியை ஆட வைத்து சேமிக்கப்பட்ட மின்னாற்றலை வீணாக்கி விடும் என்றோர் அச்சம் குடிகொண்டது !  ஆனால் அதிட்ட வசமாக அப்படி ஒன்றும் நிகழவில்லை.  சூரிய உந்துசக்தி நிறுவகத்தாரை முழு மூச்சாக ஊக்கிவித்த குறிக்கோள் :  1. பசுமைச் சக்தி மாசற்ற தூய சக்தி.  2. விலைமிக்க ஆயில் எரிசக்தியை விலக்குவது, சேமிப்பது.  3. பரிதியின் இயற்கைச் சக்தியை விமானத் துறை போக்குவரத்துக்குப் பயன்படுத்த முடியும் என்பதை நிரூபித்துக் காட்டுவது !  2013–2014 ஆண்டுக்குள் அடுத்த சவால் சாதனையான அட்லாண்டிக் கடல் கடப்புப் பயணம், உலகச் சுற்றுப் பயணம் ஆகியவற்றில் முற்படுவர் என்று அறியப் படுகிறது.  இந்த சூரிய ஊர்தித் திட்டத்துக்கு நிதி ஒதுக்கு (75 மில்லியன் ஈரோ) 95 மில்லியன் டாலராகும் !  ஊர்தியின் எடை ஒரு ஸ்கூட்டர் அல்லது சிறு காரின் எடை அளவில் (1600 கி.கிராம்) அமைக்கப் பட்டது.

    2007 இல் சுவிஸ் சூரிய உந்துசக்தி நிறுவகப் பொறிநுணுக்கரால் டிசைன் செய்யப்பட்டு பல்வேறு மின்னியல், பொறியியல், விண்வெளி விமானத்துறை நிபுணரால் உருவானது.  12,000 மெலிந்த சூரிய செல்கள் 200 சதுர மீடர் பரப்பளவைக் கொண்டவை.  அவை அனுப்பிய மின்னாற்றலைச் சேமித்த மின்கலன்கள் 400 கி.கிராம் எடையுள்ள லிதியம் – பாலிமர் (Lithium Polymer Batteries) இரசாயனம் கொண்டவை.  ஒவ்வொரு மின்சார மோட்டாரில் (Electric Motor) 10 குதிரைச் சக்தி (6 Kw) ஆற்றல் உண்டானது.  நான்கு மோட்டாரில் சுற்றும் காற்றாடியின் நீளம் : 3.5 மீடர் (12 அடி).  அவை மெதுவாகச் சுற்றின.  ஊர்தியின் நீளம் 72 அடி.  இறக்கையின் அகலம் 208 அடி. உயரம் 21 அடி. இறக்கையின் பரப்பு 2200 சதுர அடி.  மொத்த எடை 1.6 டன்.   தரையிலிருந்து ஏறும் வேகம் 22 mph.  பறக்கும் வேகம் 43 mph.  உச்ச வேகம் 75 mph.   பயண உயரம் 27900 அடி (எவரெஸ்ட் உயரம்). உச்ச உயரம் 39000 அடி.

    சுவிஸ் விமானத் தளத்திலிருந்து விமானக் கட்டுப்பாடு அரங்கத்திலிருந்து இராப் பகலாக விமானிக்கு உதவி செய்து வந்தனர்.  அவரது பணி ஊர்தி நேராக, மட்டமாகச் சீராக மணிக்கு 100 கி.மீ. (மணிக்கு 60 மைல்) வேகத்தை மிஞ்சாமல் பறக்கக் கண்காணித்து வருவது.  உறக்கமின்றி ஓட்டும் விமானியை விழிப்புடனும், கவனிப்புடனும் இருக்கக் கட்டுப்பாட்டு அரங்கிலிருந்து பேசிக் கொண்டிருப்பது.  ஊர்தி பறக்கும் போது 8000 மீடர் (27000 அடி) உயரத்தில் -28 டிகிரி செல்சியஸ் உஷ்ணத்தில் சென்றாலும் பரிதிச் செல்கள் பாதிக்கப் பட வில்லை.

    சூரிய சக்தி வானவூர்தின் முற்கால /எதிர்காலப் பயிற்சிச் சோதனைகள் :

    1.  2007 மே 22 :  பெர்டிராண்டு பிக்கார்டு நான்கு ஆண்டுகள் திட்டமிட்டு “சூரிய உந்துசக்தி” நிறுவகத்தைத் துவங்கி வைக்கிறார்.  அந்தத் திட்டப்படி சூரிய ஊர்தி உலகத்தை ஒருமுறை சுற்றி வருவதற்கு முன்பு அட்லாண்டிக் கடல் அகற்சியை ஒரே பயணத்தில் கடப்பது.

    2. 2009 ஜூன் 26 :  சுவிஸ் வட புறத்தே உள்ள டூபென்டார்ஃபு (Duebendorf) இராணுவ விமானத் தளத்தில் சூரிய சக்தி முன்னோடி ஊர்தி (Prototype Plane) கொண்டாட்ட விழா.

    3. 2010 ஏப்ரல் 7 :  சூரிய உந்துசக்தி நிறுவகம் 1.5 மணி நேரப் பயணச் சோதனை செய்தல்.

    4. 2010 ஜூலை 7 :  சூரிய ஊர்தி பயேர்ன் விமானத்தளத்தில் காலைப் பொழுதில் விமானி ஆன்ரே போர்ச்பெர்க் இயக்கி மேலேறி எங்கும் நிற்காது 26 மணிநேர ஒற்றை இராப் பகல் பயணத்தை ஆரம்பித்து வைத்தது.

    5. 2010 ஜூலை 8 :  சூரிய ஊர்தி 26 மணி நேரப் பயணத்தை முடித்துப் பாதுகாப்பாக பயேர்ன் விமானத் தளத்தில் வந்திறங்குகிறது.  ஏறிய உச்ச உயரம் : கடல் மட்டத்துக்கு மேல் 8564 மீடர் (28540 அடி).

    6. 2011 ஆண்டில் :  இதே மாடல் சூரிய ஊர்தி (HB-SIB) நீண்ட தூர, நீண்ட காலப் பயிற்சியில் பல இராப் பகலாய் ஈடுபடுவது.

    7. 2012 ஆண்டு வரை :  ஊர்தி மாடல் HB-SIB விடப் பெரிய பரிதி ஊர்தியைப் படைத்து
    விமானிக்கு நகரத் தேவையான இடமளித்து நீண்ட காலப் பயணத்துக்குப் புதுமை நுணுக்கங்களைப் புகுத்தி பளு குறைந்த, மெல்லிய சூரிய செல்களால் இயங்கும் திறன் மிக்க பறக்கும் சாதனமாய் அமைப்பது.

    8.  2013 -2014 :  விருத்தியான பெரிய மாடலில் (Large & Improved HB-SIB) அட்லாண்டிக் கடலைக் கடப்பது,  உலகத்தைச் சுற்றி வருவது.


    +++++++++++++++++++++++
    https://youtu.be/bkPJQY7rQWA

    தகவல்:

    Picture Credits : Swiss Solar Impulse Design & Other Web Sites

    1.  BBC News : Solar-powered Plane Lands Safely After 26 Hour Flight (July 8, 2010)

    2.  Swiss Solar Plane Makes History with Round-the-clock (Manned) Flight (July 8, 2010)

    3.  Aerospace – Solar Impulse Plane Packed with Technology (July 8, 2010)

    4.  BBC News – Science & Environment – Zephyr Solar Plane Set for Record Endurance Flight By: Jonathan Amos (July 14, 2010)

    5.  Wikipedia – Electric Aircraft – electric aircraft is an aircraft that runs on electric motors rather than internal combustion engines with electricity  coming from fuel cells, solar cells, ultracapacitors, power beaming and/or batteries.

    6.  http://www.spacedaily.com/reports/Boeing_SpaceX_unlikely_to_make_manned_flights_to_ISS_in_2019_999.html  [July 12, 2018]

    7. https://phys.org/news/2018-07-space-tourist-flights.html  [July 13, 2018]

    8.  http://www.spacedaily.com/reports/First_space_tourist_flights_could_come_in_2019_999.html  [July 13, 2018]

    ******************

    S. Jayabarathan (jayabarathans@gmail.com) [July 15, 2018] [R-1]

    Attachments area
    Preview YouTube video Space Tourism Is Coming: Flights from Virgin Galactic and Blue Origin could Come in 2019

    Space Tourism Is Coming: Flights from Virgin Galactic and Blue Origin could Come in 2019
    ReplyForward

    Share
    July 16, 2018
  • படக்கவிதைப் போட்டி (170)

    பவள சங்கரி

     

    அன்பிற்கினிய நண்பர்களே!

     

    வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

    அனு பாலா எடுத்த இந்தப்படத்தை திருமதி சாந்தி மாரியப்பன் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து போட்டிக்காகத் தேர்ந்தெடுத்து வழங்கியிருக்கிறார்கள். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள், நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (21.06.2018) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

    ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்

    Share
    July 16, 2018
  • பழந்தமிழக வரலாறு – 11

    கணியன்பாலன்

    இ.மாமூலனாரும் செருப்பாழிப்போரும் செங்குட்டுவனும்

    மோகூர்த்தலைவன்:

     

        இறுதியில் மோகூர்த் தலைவனும் அதியன்மரபினரும், திதியனும் எல்லையோர அனைத்துப்பிற தமிழ் அரசுகளும் ஒன்றிணைந்து மோரியர்களைப் போரில் தோற்கடித்துத் தங்களது எல்லையைவிட்டு துரத்திவிடுகின்றனர். மோரியர்படை பின்வாங்கி துளுவநாட்டை அடைந்து பாழிநகரில் நிலைகொள்ளுகிறது. துளுவநாட்டு வெற்றிக்குப்பின் மௌரியரது எல்லைப் பகுதிப் படைத்தலைவர்களே வடுகர்களின் துணையோடு போரிட்டு வந்தனர். ஆனால் அவர்களால் தமிழக எல்லையில் உள்ள குறுநில மன்னர்களை, வேளிர்களை வெல்ல இயலவில்லை. தமிழகத்தின் எல்லையில் மௌரியப்படைகளின் தோல்வி மௌரியப்பேரரசைத் தட்டி எழுப்பியது. மௌரியப்பேரரசின் பெரும்படை திரட்டப்பட்டது. பெரும்போருக்கான ஆயத்தப்பணிகள் நடைபெற்றன. துளுவ நட்டையும், எருமை நாட்டையும் கடந்துவரும் வழிகளிலுள்ள பாறைகளை வெட்டிச் செப்பனிட்டு மௌரியப்பெரும்படை வருவதற்கான பாதைகள் உருவாக்கும் பணி நடைபெற்றது. இந்தப்பெரும்போருக்கான ஆயத்தப்பணிகள் சில ஆண்டுகள் நடைபெற்றதாகத்தெரிகிறது. இப்பாறைகளை வெட்டி பாதைகள் அமைக்கும் பணி குறித்தும் வடுகர்கள் வழிகாட்டியாக இருந்து மௌரியர்களுக்கு உதவியது குறித்தும் மோகூர்த்தலைவன் மேல் பகைகொண்டு மௌரியர் படையெடுத்து வந்தது குறித்தும் மாமூலனாரும், பிற சங்கப்புலவர்களும் தங்கள் பாடல்களில் தெரிவித்துள்ளனர். இந்தப்பெரும்போருக்கான ஆயத்தப்பணிகள் முடிந்தவுடன் மௌரியப் பேரரசின் பெரும்படை துளுவ நாட்டில் வந்து தங்கி தமிழகத்தின் மீது படையெடுக்கத்தயாராகியது.

    சோழர்களின் முதன்மை:

         தமிழகத்துக்கு வந்துள்ள மிகப்பெரிய ஆபத்தை, அப்பொழுது சோழ வேந்தனாக இருந்த சோழன் இளஞ்சேட்சென்னி நன்கு உணர்ந்து கொள்கிறான். எல்லையிலுள்ள படைத்தலைவர்களை, வேளிர்களை, சிற்றரசர்களை மட்டும் இப்பெரும்போருக்கு பொறுப்பாக்குவது பெரும் ஆபத்தில் முடியும் என்றெண்ணி, தமிழர் ஐக்கிய கூட்டணி அரசுகளை ஒன்றுதிரட்டி தனது தலைமையில் பெரும்படையைத் திரட்டுகிறான். இப்போர் தமிழகப்போராக தமிழகக் கூட்டணி அரசுகளின் போராக நடைபெற்ற போதிலும், இப்போரின் வெற்றி, சோழர்களின் வெற்றியாகவே வடவரிடத்திலும், நமது இலக்கியங்களிலும், புராணங்களிலும் பதிவாகி சேர பாண்டியவர்களை விட சோழர்கள் பெரும் புகழடைகின்றனர். அசோகன் கல்வெட்டுகளிலும் அதன் காரணமாகவே பாண்டியர்களைவிட சோழர்கள் முதன்மை பெறுகின்றனர். ஆகவே மௌரியர்களின் தமிழகப் படையெடுப்புக்கும் தமிழரசுகளின் வெற்றிக்கும் அசோகன் கல்வெட்டுகள் ஒருவிதத்தில் மறைமுக சான்றாதாரங்கள் ஆகின்றன எனலாம்.

    வல்லம்போர்:

         தமிழக கூட்டணி அரசுகளுக்கும், மௌரியப் பேரரசுக்குமிடையே பெரும் போர் துவங்கியது. சோழ நாட்டெல்லையிலேயே பல தடவை மௌரியர்கள் தோல்வியுற்றனர். எனினும் தொடர்ந்து புதுப் புதுப் படைகளை போருக்கு அனுப்பினர். மௌரியப் பேரரசின் முழு ஆற்றலும் திரட்டப்பட்டு பெரும்படை கொண்டு தமிழகம் தாக்கப்பட்டது. தமிழகத்தின் வட பகுதி முழுவதும் மௌரியப் பெரும்படையால் தாக்கப்பட்டது. வட ஆர்க்காட்டில் உள்ள வல்லம் என்ற இடத்தில் நடந்த பெரும் போரில், இளஞ்செட்சென்னி மௌரியர்களை பெரும் தோல்வி அடையச் செய்து துரத்தி அடித்தான். வல்லம் போர் குறித்து அகம் 336இல் பாடிய பாவைக் கொட்டிலார் என்கிற பெண்பாற் புலவர், மௌரியர்களை ஆரியர் எனக் குறிப்பிடுகிறார். மௌரியர் தங்களை ஆரியர் என்றே அழைத்துக் கொண்டனர்.  கி.மு.3ஆம் நூற்றாண்டு வாக்கில் எழுதப்பட்ட இப்பாடலில் குடும்ப மகளிர்கள் ‘கள்’ அருந்தி தங்கள் கணவன்மார்களின் பரத்திமை நடத்தை குறித்து வம்பளந்து கொண்டிருப்பது குறித்த குறிப்பு வருகிறது.

    ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்:

         வல்லம் போருக்குப் பின்னரும், மௌரியர்கள் சளைக்காமல் தொடர்ந்து பல தடவை, பெரும் படைகளை அனுப்பிக்கொண்டேயிருந்தனர். ஆனால் போரில் பெரும் இழப்புகள் ஏற்பட்டதே ஒழிய, அவர்களுக்கு வெற்றி கிடைப்பதாகத் தெரியவில்லை. இதுபோன்ற ஒரு நிலையில் தான் பாண்டியர் படைகளுக்குத்தலைமை தாங்கிய, இளைஞனாக இருந்த நெடுஞ்செழியன் மௌரியர்களின்பெரும்படை ஒன்றைத் தோற்கடித்து ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் என பெயர் பெற்றான். முதல் கரிகாலனுக்குச் சம காலத்தவனாகவும், சேரன் செங்குட்டுவனுக்கு முந்தையவனாகவும் அவன் இருந்தான். ‘தமிழகம் ஒன்றாக இருந்து பார்க்கும் வகையில் வட ஆரியப்படையை எதிர்த்து வெற்றி பெற்ற நெடுஞ்செழியன்’  என்கிறது சிலப்பதிகாரம்-(17). ஆகச் சோழன் தலைமையில் பாண்டியர்களும், சேரர்களும் மௌரியப்படையை பலமுறை தோற்கடித்தனர். இறுதியில் தொடர்ந்து பலமுறை நடந்த தோல்விகளால் தாக்குப் பிடிக்க இயலாமல் பெரும் இழப்போடு மௌரியப்படை பாழி நகருக்குப் பின் வாங்கியது.

    செருப்பாழிப் பெரும்போர்:

        இளஞ்சேட் சென்னி போரைத் தொடர்ந்து நடத்தி, பாழி நகர் வரைப் படையெடுத்துச் சென்று, அதனைத் தாக்கி, இறுதியில் பெரும் வெற்றியை தமிழகத்திற்கு வாங்கித் தந்தான். இளஞ்சேட்சென்னியின் பாழி நகர் வெற்றி குறித்து இடையன் சேந்தன் கொற்றனார் என்பவர் அகம் 375இல் பாடியுள்ளார். அதில் மௌரியர்களை அவர் வம்பவடுகர் என்கிறார். தமிழகத்தின் வடக்கே வாழ்பவர்களை வடுகர் என்பது பொது வழக்கு. வடக்கே வாழும் வடுகர்களை அவர் அறிவார். ஆனால் மௌரியர்களை அவர் அறியார். ஆனால் மௌரியர்களும் வடக்கிருந்தே வருகிற புதியவடுகர்கள என்பதால், அவர்களை வம்ப வடுகர் என்கிறார். பாழி நகரில் நடந்த இறுதிப் பெரும் போருக்குப் பின்னர் மௌரியர்கள் தமிழக அரசுகளைப் படை கொண்டு வெற்றிபெற இயலாது என்பதை உணர்ந்துகொண்டு நிரந்தரமாகப் பின் வாங்கினர். தமிழகத்தைக்கைப்பற்றும் முயற்சி கைவிடப்பட்டு தமிழக அரசுகளோடு நட்பு கொண்டனர். கி.மு.297இல் பிந்துசாரரின் காலத்தில் தீவிரப்படுத்தப்பட்ட தக்காணப் படையெடுப்பும், தமிழகப் படையெடுப்பும் கிட்டத்தட்ட 11 ஆண்டுகள் தொடர்ந்து நடந்ததாகக் கொண்டு, பாழி நகரில் நடந்த இவ்விறுதிப்பெரும்போர் கி.மு.288 வாக்கில் முடிந்ததாகக் கணிக்கப் பட்டது. இந்தப் பெரும் போரில் சோழர் பெற்ற பெரும் புகழின் காரணமாகவே, அசோகன் தனது இரு கல்வெட்டுகளிலும் பாண்டியர்களைவிட சோழர்களை முதன்மைப் படுத்தியுள்ளான்.

    மாமூலனாரும் வேந்தர்களின் காலமும்:

         பழமொழி நானூற்றின் ஆசிரியர் மூன்றுரையரையனார், புலவரும் தனது மாமனுமாகிய இரும்பிடர்த் தலையாரிடம் கல்வி கற்று, முதல் கரிகாலன் சிறப்புப் பெற்றான்  எனக் குறிப்பிடுகிறார்(18). முதல் கரிகாலன் சிறுவனாக இருந்த பொழுது அவனைவிட இரு தலைமுறைகள் மூத்த முதியவராக இருந்தவர் அவனது ஆசிரியர் இரும்பிடர்த் தலையார். அன்று அரச குடும்பச் சிறுவர்களுக்கு அறிவும் அனுபவமும் உடைய வயதானவர்களைத்தான் ஆசிரியராக நியமிப்பர். இரும்பிடர்த் தலையார் பாண்டியன் கருங்கை ஒள்வாள் பெரும் பெயர் வழுதியை புறம் 3இல் பாடியுள்ளார். இந்தப் பாண்டியன் பெரும்பெயர் வழுதியை, குடவாயிற் கீரத்தனார் அகம் 315ஆம் பாடலில் பாடியுள்ளார். ஆதலால் குடவாயிற் கீரத்தனாரும் இரும்பிடர்த் தலையாரும் சம காலத்தவர் ஆகின்றனர். இந்த குடவாயிற் கீரத்தனார் அகம் 44ஆம் பாடலில் பெரும்பூட்சென்னி என்கிற சோழ வேந்தனைப் பாடியுள்ளார். குடவாயிற்கீரத்தனாரும், இரும்பிடர்த் தலையாரும் சமகாலத்தவர் என்பதால் குடவாயிற்கீரத்தனாரால் பாடப்பெற்ற சோழன் பெரும்பூட்சென்னியும், பாண்டியன் கருங்கைஒள்வாள் பெரும்பெயர் வழுதியும் சமகாலத்தவர் என்பதோடு முதல்கரிகாலனை விட இருதலைமுறைகள் மூத்தவர்களும் ஆவர். அதாவது முதல்கரிகாலன் மூன்றாம் தலைமுறை எனில், குடவாயிற்கீரத்தனார், இரும்பிடர்த் தலையார், சோழன் பெரும்பூட் சென்னி, பாண்டியன் கருங்கைஒள்வாள் பெரும்பெயர் வழுதி ஆகிய நால்வரும் முதல்கரிகாலனை விட இரு தலைமுறைகள் மூத்த முதல் தலைமுறை எனலாம்(தலைமுறை என்பதை நமது இலக்கியக் கணிப்புப்படி காலகட்டம் எனவும் கருதலாம்).

                மாமூலனார், இரண்டாம் பத்துக்குரிய இமயவரம்பன் நெடுஞ் சேரலாதனையும், அவனது தந்தை உதியன் சேரலாதனையும் பாடியுள்ளார். இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனைப் போரில் வென்ற முதல் கரிகாலனையும் அவர் பாடியுள்ளார். மாமூலனாரை விட இளையவரான பரணர் முதல் கரிகாலனையும், இமயவரம்பன் மகன் சேரன் செங்குட்டுவனையும் பாடியுள்ளார். ஆனால் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனை அவர் பாடவில்லை. ஆகவே முதல் கரிகாலனுடன் போரிட்ட இமயவரம்பன், முதல் கரிகாலனைவிட மூத்தவன் எனவும், இமயவரம்பனின் மகன் சேரன் செங்குட்டுவன் முதல் கரிகாலனைவிட இளையவன் எனவும்  அறியலாம்.

                            பெரும்பூட்சென்னி முதல் தலைமுறை என்பதாலும், முதல் கரிகாலன் மூன்றாம் தலைமுறை என்பதாலும், பெரும்பூட் சென்னியின் மகனும், முதல் கரிகாலனின் தந்தையும் ஆன செருப்பாழி எறிந்த இளஞ்சேட் சென்னி  இரண்டாம் தலைமுறை ஆகிறான். செருப்பாழி எறிந்த இளஞ்சேட் சென்னி  இரண்டாம் தலைமுறை என்பதால் மாமூலனாரும், இமயவரம்பனும் அவர் காலத்தவர் ஆகின்றனர். மௌரியப் படையை கி. மு. 297முதல் கி.மு.288 வரை போராடி வென்ற இளஞ்சேட் சென்னியின் காலத்தவர் மாமூலனார் என்பதால், அவர் இந்தக் காலத்துக்குச் சிலகாலம் முன்பும் சிலகாலம் பின்பும் வாழ்ந்தவர் எனலாம். அதாவது கி.மு. 3ஆம் 4ஆம் நூற்றாண்டு எனலாம்.  முதல் தலைமுறையைச் சேர்ந்த சோழன் பெரும்பூட் சென்னி, உதியன் சேரலாதன் போன்றவர்கள் கி.மு. 4ஆம் நூற்றாண்டு ஆவர். அதே சமயம் இரண்டாம் தலைமுறையைச் சேர்ந்த மாமூலனார் போன்றவர்கள் கி.மு. 3ஆம்,  4ஆம் நூற்றாண்டு ஆவர். முதல் கரிகாலன் போன்ற மூன்றாம் தலைமுறையையும், அவனைவிட இளையவனான சேரன் செங்குட்டுவன் போன்ற நான்காம் தலைமுறையையும் சேர்ந்தவர்களின் காலம் கி.மு. 3ஆம் நூற்றாண்டு எனலாம்.

    மாமூலனாரின் இறுதிக் காலம்:

         செருப்பாழிப்போர் நடைபெற்ற இரண்டு, மூன்று ஆண்டுகளுக்குப் பின், இளஞ்சேட் சென்னியின் புகழ் பரவியதைப் பொறுக்க மாட்டாத சிலர் அவனைச் சூழ்ச்சி செய்து கி.மு. 285 வாக்கில் கொன்று விடுகின்றனர். அதன்பின் அவனது மகன் முதல் கரிகாலன் தனது ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ள நடத்திய போர் தான் முதல் வெண்ணிப்பறந்தலைப் போர் ஆகும். இப்போர் செருப்பாழிப் போருக்குப்பின் ஒருசில வருடங்கள் கழித்து நடந்தது என்பதால் அதன் காலம் கி.மு. 283 எனக்கொள்ளலாம். அதன்பின் ஏழு அல்லது எட்டு வருடங்களுக்குப்பின் கி.மு.275 வாக்கில் முதல் கரிகாலனுக்கும், சேரன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனுக்கும் இடையே நடந்த போர் தான் இரண்டாம் வெண்ணிப் பறந்தலைப் போராகும். இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் இப்போரில் தோல்வியடைந்து, முதுகில் விழுப்புண் பெற்று, நாணி, வடக்கிருந்து உயிர் துறந்து பெரும் புகழடைந்தான். சேரனாடு பெரும் இழப்பைச் சந்தித்தது. முதல் கரிகாலன் தமிழகத்தின் பேரரசனாக உயர்ந்தான். இப்போர் குறித்தும், சேரலாதன் வடக்கிருந்து உயிர் துறந்தது குறித்தும் வெண்ணிக் குயத்தியார் என்ற பெண்பாற் புலவரும், கழார்த் தலையாரும், மாமூலனாரும் பாடியுள்ளனர்-(19).

         கி.மு. 275 வாக்கில் நடைபெற்ற, மூன்றாம் தலைமுறையைச் சார்ந்த முதல் கரிகாலனின் இரண்டாம் வெண்ணிப் பறந்தலைப் போர் குறித்துப் பாடிய பாடலே மாமூலனாரின் இறுதிப்பாடலாகும். ஆகவே மாமூலனாரது இறுதிக்காலம் என்பதை முதல் கரிகாலனின் இரண்டாம் வெண்ணிப் பறந்தலைப் போருக்குப்பின்  5 வருடங்கள் கழித்து கி.மு. 270 வாக்கில் எனக் கொள்ளலாம். மாமூலனாரின் தொடக்க காலம் கி.மு.360 என முன்பே கணிக்கப்பட்டுள்ளது. எனவே மாமூலனார் அவர்கள் வாழ்ந்த காலம் என்பது கிட்டத்தட்ட  கி.மு. 360 முதல் கி.மு. 270 வரையான சுமார் 90 வருடங்கள் எனலாம். கி.மு.4ஆம் நூற்றாண்டின் இடையில் பிறந்த மாமூலனார் தனது இளவயதில் நந்தர்களையும், முதல் தலைமுறையைச் சேர்ந்த  உதியஞ் சேரலாதனையும், கி.மு. 270க்கு முன் தனது இறுதிக் காலத்தில் மூன்றாம் தலைமுறையைச் சேர்ந்த சோழன் முதல் கரிகாலனையும் இடையில் மௌரியர்களையும், இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனையும் பாடியுள்ளார். ஆகவே பல்வேறு தரவுகளையும், ஏரணக்கண்ணோட்டம்-பொதுஅறிவு  அடிப்படையிலும் கணிக்கப்பட்ட காலமே மாமூலனாரின் காலமாகும்.

         புகளூர் கல்வெட்டு, அசோகன் கல்வெட்டுகள், சம்பைக் கல்வெட்டு முதுகுடுமிப் பெருவழுதி நாணயம், மாக்கோதை, குட்டுவன் கோதை  நாணயங்கள், தலைவடிவப் பெருவழுதி நாணயங்கள், மாமூலனாரும் பிற சங்கப் புலவர்களும் நந்தர்கள் குறித்தும், மௌரியர்கள் குறித்தும், பாடிய பாடல்கள், செருப்பாழிப் போர், வல்லம் போர் குறித்தச் சங்கப் புலவர்களின் பாடல்கள், மொழிபெயர் தேயம் எனப்படும் தக்காணப் பகுதி தமிழ் மூவேந்தர்களின் பாதுகாப்பின் கீழ் இருந்து வந்தது என்கிற மாமூலனாரின் குறிப்பு போன்ற சங்க இலக்கியச் சான்றுகள் ஆகிய மேலே தரப்பட்டுள்ள பல்வேறு வரலாற்றுத் தரவுகளின் அடிப்படையில் கணிக்கப்பட்டதுதான் மாமூலனாரின் காலமும்(கி.மு. 360-270), செருப்பாழிப்போரின் காலமும்(கி.மு. 288), சேரன் செங்குட்டுவனின் காலமும்(கி.மு. 3ஆம் நூற்றாண்டு), ஆகும். இக்காலங்கள் பழந்தமிழக வரலாற்றுக்கான ஆண்டுகளையும், காலகட்டங்களையும் கணித்து, அவைகளை உறுதிப்படுத்துவதில் மிகமிக முக்கியப் பங்காற்றியுள்ளன எனலாம்.

    பார்வை:

    17.சிலப்பதிகாரம், மதுரைக்காண்டம், 23-கட்டுரைக்காதை: கட்டுரை வரி; 14, 15.

    18.ஔவை.சு.துரைசாமிபிள்ளை, புறநானூறு-1, ஜூலை-2009, பக்:31.

    19.வெண்ணிக்குயத்தியார் என்ற பெண்பாற் புலவரின் புறநானூற்றுப்பாடல்: 66; கழார்த்தலையார் அவர்களின் புறநானூற்றுப்பாடல்: 65; மாமூலனார் அவர்களின் அகநானூற்றுப்பாடல்: 55.

    Share
    July 16, 2018
  • வாழ்ந்து பார்க்கலாமே 28

    க. பாலசுப்பிரமணியன்

     

    மாற்றங்களை சீரான மனநிலையோடு பார்க்கலாமே!

    மாற்றங்கள் உலகத்தில் புறத்தில் மட்டும் ஏற்படுவதில்லை. நம்முடைய உடலிலும் உள்ளத்திலும் நாம் வாழ்கின்ற வாழ்க்கையிலும் தொடர்ந்து மாற்றங்கள் ஏற்பட்டுக்கொண்டிருக்கின்றன. இந்த மாற்றங்களைப் புரிந்து கொள்ளவும் சமாளிக்கவும் அவைகள் ஏற்படுத்தும் தாக்கங்களை அறிந்து புரிந்து வாழ்க்கையை மேலும் முன்னேற்றப்பாதையில் எடுத்துச் செல்லவும் நாம் அறிந்துகொள்ள வேண்டும்.

    சில ஆண்டுகளுக்கு முன் நடந்த ஒரு நிகழ்ச்சி. ஒரு நிறுவனத்தில் அங்கிருந்த ஊழியர்கள் அனைவருக்குமான ஒரு பயிற்சி முகாம் நடந்து கொண்டிருந்தது. பயிற்சி கொடுத்துக்கொண்டிருந்த சொற்பொழிவாளர் தன்னுடைய உரையில் மிகவும் எளிதான முறையிலும் எல்லோரும் மகிழ்ந்து சிரிக்கும் வகையிலும் பேசிக்கொண்டிருந்தார். அவருடைய பேச்சைக் கண்டு மகிழ்ந்து அந்த அரங்கமே சிரிப்பொலியில் அதிர்ந்து கொண்டிருந்தது. ஆனால் அதில் பங்கேற்ற ஒருவர் மட்டும் எதிலுமே ஈடுபாடுயில்லாதவராய் ஏதோ பறிகொடுத்தவர் போல் அமர்ந்திருந்தார். இதைக் கவனித்த சொற்பொழிவாளர் அவர் அருகில் சென்று எல்லோரும் சிரிக்கும் வகையில் ஒரு கதையைச் சொன்னார். அரங்கமே சிரிப்பொலியில் அதிர்ந்தது. ஆனால் அந்த நபர் மட்டும் எந்தவித உணர்வையும் வெளிக்காட்டாமல் அமர்ந்திருந்தார். சொற்பொழிவாளர் நொந்து போய் ‘ஒருவேளை அவருக்கு காதுகொஞ்சம் மந்தமோ’  என நினைத்தார்.

    அந்த நிகழ்வு முடியும் நேரத்தில் அனைவருக்கும் அந்தப் பயிற்சி முகாம் பற்றிய கருத்துக்களைப் பதிவு செய்ய ஒரு விமர்சனக் குறிப்பேடு கொடுக்கப்பட்டது. அனைவரும் தங்கள் கருத்துக்களை பதிவு செய்தபின் அந்த சொற்பொழிவாளர் அந்த நிறுவனத்தின் மூத்த அதிகாரியின் அறையில் அமர்ந்து அந்தக் குறிப்பேடுகளில் பதிவு செய்யப்பட்ட கருத்துக்களை படித்துக்கொண்டிருந்தார்.

    ஒரு பதிவினைப் பார்த்த அவருக்கு ஆச்சரியமும் அதிர்ச்சியும் ஏற்பட்டது. அந்தப் பதிவு கீழ்கண்டவாறு இருந்தது. ” இந்தப் பயிற்சியின் இடைவேளையில் கொடுக்கப்பட்ட சமோசா மிகச் சிறியதாக இருந்தது. அடுத்த முறை இதில் கவனம் செலுத்தவும்.”

    சொற்பொழிவாளருக்கு மிகுந்த அதிர்ச்சி. அந்த மூத்த அதிகாரியிடம் இதைக் காட்டி “யார் இப்படி எழுதியது?” என்று கேட்க, அவரோ “நீங்கள் கடைசியில் அமர்ந்து சிரிக்காமலேயே ஒருவர் இருந்தார் என்று சொன்னீர்களே அவர்தான்.” என்றார். தொடர்ந்து “அவர் இந்த நிறுவனத்தில் எனக்கு அடுத்தபடியாக உள்ள அதிகாரி. அவர் என்னோடு நான் தற்போது இருக்கும் இந்தப் பதவிக்கு முயற்சி செய்தார். நேர்காணலில் அவருக்குத் தேர்ச்சியாகவில்லை. நான் இந்த நிறுவனத்திற்கு வெளியே இருந்து முயற்சி செய்தவன். எனக்கு இந்தப் பதவி கிடைத்ததிலிருந்து அவருக்கு ஒரு தாழ்வு மனப்பான்மை. நடக்கும் எல்லா நிகழ்வுகளிலும் ஏதாவது தவறான அல்லது ஒத்துப்போகாத கருத்துக்களை பதிவு செய்வதே அவர் வழக்கமாகிவிட்டது. யாரைப் பார்த்தாலும் சிரிக்க மாட்டார். தோல்வி மனப்பான்மை அவரை வாட்டி வதைக்கின்றது. நாங்கள் எவ்வளவோ எடுத்துச் சொல்லி மாற்ற முயற்சித்தோம். முடியவில்லை.”

    பல நேரங்களில் தோல்விகள் நம்முடைய உறவு நிலைகளை மாற்றிவிடுகின்றன. வீடுகளிலும் சரி, வேலை பார்க்கும் இடங்களிலும் சரி எப்பொழுதுமே நாம் நினைத்தது நடக்க வேண்டும் என்று நினைப்பது மிகப் பெரிய முட்டாள்தனம். வெற்றிகளையும் தோல்விகளையும் ஒரே சீராகப் பார்த்து முன்னேறிச் செல்வது வாழ்க்கையின் அமைதிக்கு இன்றியமையாதது.

    தோல்விகளிலிருந்து நாம் பாடங்களைக் கற்றுக்கொள்ளவேண்டும் தவிர, சில சிறிய நிகழ்வுகளால் வாழ்க்கையின் முடிவுக்கே வந்துவிட்டோம் என்ற தவறான எண்ணத்தை வளர்த்துக்கொள்ளக்கூடாது. சில நேரங்களில் நமக்கு ஏற்படும் தோல்விகளில் நாம் நம்மைவிடத் தகுதியில் குறைந்தவரையோ அல்லது நாம் செய்யும் தொழில்களில் சற்றும் அனுபவங்கள் இல்லாதவரிடமோ வேலை பார்க்க நேரிடும். அதனால் நமது திறமைகளோ அல்லது மதிப்போ குறைந்து விட்டது என்ற பொருள் கொள்ளுதல் தவறானது. “இதுவும் கடந்து போகும்” என்ற சிந்தனையை மனதில் கொண்டு தொழிலிலும், உறவுகளிலும், தொடர்புகளிலும் மேல்நோக்கான சிந்தனைகளைக் கொண்டு முன்னேற வேண்டும்.

    பல நேரங்களில் நம் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் தேர்வுகளில் தோல்வியுற்ற மாணவர்களும் எதிர்பார்த்த மதிப்பெண்கள் கிடைக்காத மாணவர்களும் தற்கொலை செய்துகொள்ளும் அளவிற்குச் சென்று விடுகின்றனர். இது மிகவும் துயரமானது மட்டுமல்ல துரதிர்ஷ்டவசமானதும் கூட. சில நிகழ்வுகள் நம்முடைய வாழ்க்கையின் போக்கையும் வளத்தையும் வெற்றியையும் கட்டுப்படுத்துவதில்லை.

    தோல்விகளாலும் வெற்றிகளாலும் ஏற்படும் மாற்றங்களை நாம் ஒரு சீரான மனநிலையுடன் ஏற்றுக்கொள்ளப் பழகிக்கொள்ளவேண்டும். எவ்வாறு தோல்விகள் நம்மை பாதிக்கக்கூடாதோ அதே போல் வெற்றிகளும் நமக்கு தலைகனத்தையும் ஆணவத்தையும் ஏற்படுத்தக்கூடாது. வெற்றிகளின் மகிழ்வை மற்றவர்களோடு பகிர்ந்து செல்லுதல் அவசியம்.

    நாம் பக்குவப்பட்ட மனநிலையுடன் வாழப் பழகிவிட்டால் வெளிப்புற மாற்றங்களும் உள்ளுணர்வுகளில் ஏற்படும் மாற்றங்களும் நம்மை பாதிக்காது. ‘மனத்தளவே வாழ்வு’ என்பதை நாம் புரிந்துகொண்டால் மகிழ்வு என்றும் நிலைத்திருக்கும்.

    சீரான மனநிலையோடு வாழ்ந்து பார்க்கலாமே !

    தொடருவோம்

    Share
    July 16, 2018
  • படமும், பாடலும்….!

     

    திருச்சிராப்பள்ளி மக்கள் பலர் கண்டிராத அழகிய மலைகோட்டை தெப்பக்குளம். நம் அரசர்கள் செதுக்கி வைத்த வரலாற்று பதிவு.

    களைப்போடு வீடணன் கைகால் கழுவுகையில்
    மலைக்கோட்டைப் பிள்ளை குறும்பால் -நிலைப்பாடாய்
    கொள்ளிடத் தீவில் கிடக்கும் அயோத்தியின்
    பள்ளிகொண்ட ரங்கனைப் பாடு….கிரேசி மோகன்….!

    திருச்சி என்றால் ‘’ஸ்வாமி ஒங்கரந்தாஜி’’ அடியேன் நினைவுக்கு வருவார்….அவருடைய தாயுமானவர் ப்ரவசனம் கேட்டு அன்று இரவே அடியேன் எழுதியது உங்களது மேலான் பார்வைக்கு….!

    தாயுமானவன் திருப்புகழ்
    ——————————

    மகப்பேறு காண மருத்துவச்சி ஆக
    அகம்புறம் தாயுமான அன்பே -மிகப்பசியாய்
    பிள்ளைக் கறியுண்ட பித்தா உனதுலீலைக்(கு)
    எல்லைதனை யாரறிவா ரே….!

    நோயுமாவான் சாய்ந்திடும் பாயுமாவான் மாற்றிடும்
    மாயமாவான் புத்தொளிர் காயமாவான் -நாயன்மார்
    நேயமாவான் நாடாதோர் சீயமாவான் தேற்றிடும்
    தாயுமாவான் தந்தை தவித்து….!

    வேதங்கள் அர்ச்சிக்கும் பாதாம் புயம்பற்ற
    போதா உனக்கில்லை பாழ்மனமே -தீதில்
    இராப்பகல் தோறும் இருந்தென்ன கண்டாய்
    சிராப்பள்ளி ஈசனைச் சேரு….கிரேசி மோகன்….!

    சங்கர சங்கர சம்போ சிவ சங்கர சங்கர சங்கர சம்போ

    சாதாரணன் போல வந்தான் -ஏதும்
    ஓதாமல் சில நேரம் சும்மா இருந்தான்
    வேதா ரண்யம் ஊர் என்றான் -இதில்
    சூதில்லை அம்மகாதேவன் தான் என்றான்….(1)….!

     

    உண்டென்று ஒன்றுண்டு கேளாய் -அதை
    உண்டு நான் உமிழ்கிறேன் ஒவ்வொரு நாளாய்
    விண்டவர் கண்டிலர் கண்டாய் -அதைக்
    கண்டு நீ கொண்டாட காட்சிகள் உண்டாய்….(2)….!

    பதி பசு பாசங்கள் மூன்றும் -முறையே
    விதி மதி வினை என்ற விவகாரமாகும்
    நிதி உந்தன் நெஞ்சிலே காண்பாய் -அது
    புதிதல்ல மணம்வீசும் பூத்த மலரான்மா….(3)….!

    புதிரான பூலோகக் கல்லை -நீ
    பொய்யென்றும் மெய்யென்றும் பேரிடத் தொல்லை
    அதுவென்றும் இதுவென்றும் இல்லை -சுத்த
    அதுவே இதுவாக ஆனந்த எல்லை….(4)….!

    பண்டைநாள் வந்ததோர் பூச்சி -அது
    பலவாய்ப் பெருகிடப் பாரென்று ஆச்சி
    கொண்டதோர் கோலமே காட்சி -அதை
    உண்டில்லை கண்டிடும் உறுதி ஆராய்ச்சி….(5)….!

     

    செத்ததோர் பாம்பிந்த தேகம் -சுக
    துக்கமிதில் காண்பது செல்லாத லாபம்
    அத்தைக்கு மீசைமேல் மோகம் -அத்தை
    சித்தப்பன் பார்த்திட சிரைத்திடும் யோகம்….(6)….!

    வேடனார் வேடத்தில் இறைவன் -அவனே
    விருந்தாகி நீயுண்ண வலைவீசும் இரைவன்
    பாடெல்லாம் அவனென்று பறைவாய் -ஜீவ
    பாவத்தில் பசுபாசம் மெழுகாகக் கரைவாய்….(7)….!

     

    பார்முதல் பூதம்நீ அல்ல -பஞ்ச
    புலன்களை ஆண்டிட முயலாதே வெல்ல
    யாரந்த நானென்று உள்ளே -உன்னிப்
    பாரவன் ஆன்மனாய் ஆகுவான் மெல்ல….(8)….!

     

    அன்பே சிவமென்ற ஜோதி -அதன்
    ஆதார சக்தியே அருளென்ற பாதி
    பண்பான பக்தர்கள் மீதி -இந்தப்
    பாங்குணர்ந் தோற்க்கில்லை பூலோக வ்யாதி….(9)….!

    போக்கத்த சொப்பனம் நனவு -ஆழ்ந்த
    தூக்கத்தில் நிற்பவன் யாரென்று வினவு
    சாக்கிதால் சஞ்சலம் தீரும் -ரமண
    வாக்கிதை மேற்கொள்ள வழிவந்து சேரும்….(10)….!

     

    இறப்பதும் பிறப்பதும் யாரு -இங்கு
    இருக்கையில் ஆராய்ந்து யோசித்துப் பாரு
    உறக்கமே இறப்பென்ற மாயை -உணர
    உறங்காமல் உறங்கிடப் போடான்மப் பாயை….(11)….!

    நம்பிக்கை அறிவாக நீளும் -அவ
    நம்பிக்கை அறியாமை அதுகுப்பைக் கூளம்
    எம்பிக்கை போடட்டும் தாளம் -ஆன்ம
    ஏகாந்த வாசியின் ஏற்றமே மூலம்….(12)….!

    இல்லாத இகம்சொப்ப னங்கள் -அதில்
    இன்பத்தைத் துய்ப்போர்கள் இருள்பெற்ற மாக்கள்
    உள்ளது ஓராயி ரங்கள் -உதறி
    உணர்ந்திடு உணர்வென்னும் உச்சிப் பனங்கள்….(13)….!

    சும்மா இருந்திடல் சுகமே -என்று
    சொன்னார்கள் முன்னோர்கள் சிவமாகு அகமே
    நம்மால் இயன்றது நகமே -அது
    நாளாக நாளாக நம்பிக்கை முகமே….(14)….!

    துன்மார்கப் பாதையில் துன்பம் -அந்த
    சன்மார்கமே சச்சிதா னந்த இன்பம்
    தென்மார்கம் பார்த்திடும் அன்பன் -மவுன
    தத்துவம் தோள்கொடுத் தேவுதவும் நண்பன்….(15)….!

    ஓயாது துழைத்திடும் பெண்மை -சக்தி
    ஓங்கார நாதத்தின் ரீங்காரத் தன்மை
    தாயாகி அன்பர்க்கு நன்மை -நல்கும்
    தத்துவம் அவளந்த பித்தர்க்கும் அம்மை….(16)….!

    போகாத ஊருக்கு போக -இங்கு
    சாகாது சாகிறோம் ஜனனித்து நோக
    தேகான்ம பாவம் முடிக்க -சிவ
    தேசிகன் சரணார விந்தம் பிடிக்க….(17)…..!

    செல்லாதா காசிந்த மேனி -இது
    இல்லாத போதுமி ருப்பவன் ஞானி
    கல்லாலின் கீழுற்ற கோலம் -அது
    சொல்லாமல் காட்டிடும் சித்தாந்த ஜாலம்….(18)….!

    பல்லாண்டு பல்லாண்டு வாழி -அந்த
    பரசிவம் ஒன்றுதான் பவுருஷம் தோழி
    உள்ளாண்ட போதவன் போதம் -வெளி
    உலகத்தில் விளையாட வேடிக்கை பூதம்….(19)….!

    சூலாயுதம் கொண்ட கையை -சக்தி
    வேலாயுதன் வந்த விழிகர்ப்பப் பையை
    ஆலால கண்டத்து மெய்யை -எண்ண
    அதுநெஞ்சில் ஊற்றிடும் ஆனந்த நெய்யை….(20)….!

    பொன்னார் மேனியன் இடையில் -வரிப்
    புலித்தோல் பூண்டவன் ஏறுவான் விடையில்
    உன்னார்வம் அவனெதிர் பார்ப்பான் -கொள்ள
    உண்ணா முலையோடு வந்தருள் சேர்ப்பான்….கிரேசி மோகன்….!

    சங்கர சங்கர சம்போ சிவ சங்கர சங்கர சங்கர சம்போ….
    ——————————————————————————-

    Share
    July 16, 2018
  • ஒரு மத நல்லிணக்கக் கூட்டத்தில்  .  .  .   .

    நாகேஸ்வரி அண்ணாமலை

     

    சமீபத்தில் நான் எழுதிய போப் பிரான்சிஸ்: நம்பிக்கையின் புதிய பரிமாணம் என்ற புத்தக அறிமுகம் பற்றிய நிகழ்ச்சியை சென்னையிலும் மதுரையிலும் நடத்தினோம்.  போப்பின் செய்தியை எத்தனை  பேரிடம் கொண்டுசேர்க்க முடியுமோ அத்தனை பேரிடம் கொண்டுசேர்க்க வேண்டும் என்பது எனது ஆசை, குறிக்கோள்.  இதனால்தான் இந்த இரண்டு நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்தோம்.

    மதுரையில் புத்தக அறிமுக நிகழ்ச்சிக்குப் பிறகு பல மதத்தலைவர்கள் கலந்துகொள்ளும் நிகழ்ச்சி ஒன்றிற்கு நண்பர் ஒருவர் ஏற்பாடு செய்திருந்தார்.   போப் பிரான்சிஸின் உயர்ந்த குணங்களை எடுத்துச் சொல்லும் புத்தக அறிமுக நிகழ்ச்சிக்குப் பிறகு இம்மாதிரி ஒரு நிகழ்ச்சி நடப்பது சாலச் சிறந்தது என்று எனக்கும் தோன்றியதால் அந்த நிகழ்ச்சியில் ஆர்வத்தோடு கலந்துகொண்டேன்.  நெறியாளரையும் தலைமை வகித்தவரையும் விடுத்து என்னைச் சேர்த்து ஐந்து கருத்துரையாளர்கள் பங்குகொண்டோம்.  ஐந்து பேரில் ஒருவர் இஸ்லாம் மதத்தைச் சேர்ந்தவர், சமூக செயற்பாட்டாளர்; இன்னொருவர் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர்; இன்னொருவர் புத்த மத ஆய்வாள மாணவர், இந்து மதத்தைச் சேர்ந்தவர்; மற்ற இரண்டு பேரில்  நான் ஒருத்தி; இன்னொருவர் சுவாமி சதா சிவானந்தா, அமைப்பாளர், தமிழ்நாடு துறவியர் பேரவை.  நிகழ்ச்சியின் தலைப்பு ‘மதநல்லிணக்கம்: தடைகளும் விடைகளும்’.  ஒவ்வொருவரும் மத நல்லிணக்கத்திற்காக அவரவர் மத நோக்கிலிருந்து கருத்துக் கூற வேண்டும்.

    என் அருகில் உட்கார்ந்திருந்த சுவாமி சிவானந்தா நான் கையில் வைத்திருந்த போப் பிரான்சிஸ்  புத்தகத்தைப் பார்த்ததும் அவராக நான் கிறிஸ்தவள் என்று அனுமானித்துக்கொண்டார்.  ‘இங்கு இரண்டு கிறிஸ்தவர்கள் இருக்கிறீர்கள்’ என்று என்னிடம் கூறினார்.   நான் உடனே அவரிடம் ‘நான் போப்பைப் பற்றிப் புத்தகம் எழுதினாலும் நான் கிறிஸ்தவள் அல்ல’ என்றேன்.  அதை அவர் கவனித்ததாகத் தெரியவில்லை.  அந்தக் கருத்தரங்கில் கிறிஸ்தவ மதத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்திருப்பதாகவும் இந்து மதத்திற்குத் தேவையான அளவு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை என்றும் முனகிக்கொண்டிருந்தார்.  எல்லோருக்கும் பத்து நிமிடங்கள்தான் உரையாற்றுவதற்குக் கொடுக்கப்பட்டது.  தனக்கும் ஏன் பத்து நிமிடங்கள்தான் கொடுக்கப்பட்டன என்பதை அவர் புரிந்துகொள்ளவேயில்லை.  அவரைப் பொறுத்தவரை முக்கியமான மதமான இந்து மதத்திற்கு இன்னும் அதிக நேரம் கொடுத்திருக்க வேண்டும்.  விவாதத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது எந்த மதம் பெரிது என்பதைக் கண்டுபிடிப்பதற்காக அல்ல, எப்படி மதங்களிடையே நல்லிணக்கத்தைக் கொண்டுவரலாம் என்பதே.

    எல்லாக் கருத்துரையாளர்களும் தங்கள் உரையை முடித்துக்கொண்ட பிறகு இடைவேளை விட்டார்கள்.  அதற்குப் பிறகு கேள்வி பதில் நேரம்.  யார் கேட்ட கேள்விகளுக்கும் அவர் சரியாகப் பதில் சொல்லவில்லை.  வந்திருந்த மாணவர்களில் சிலர் அவரிடம் நிறைய கேள்விகள் கேட்டார்கள்.  ஒன்றுக்கும் அவர் நேரடியாகப் பதில் சொல்லவில்லை.  இந்தியச் சமூகம் மிகவும் சிறந்து விளங்கியதாகவும் அந்நியர்கள் வந்துதான் அதைச் சீர்குலைத்துவிட்டதாகவும் கூறினார்.  என்னால் அதைக் கேட்டுக்கொண்டு சும்மா இருக்க முடியவில்லை.  காலம் காலமாக நம் சமூகத்தில் இருக்கும் ஜாதியத்தைக் கொண்டுவந்தவர்கள் அவர்களா, உடன்கட்டை ஏறுவது போன்ற கொடிய செயல்கள் அவர்கள் வந்தபின்தான் ஏற்பட்டனவா போன்ற கேள்விகளை முன்வைத்தபோது அவர் நேரிடையாக எந்தவித பதிலும் சொல்லவில்லை.  சமூகத்தின் ஒவ்வொரு பிரிவும் அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட தொழிலைச் செய்துவந்தார்கள், அதனால் பிரிவுகளுக்கிடையே எந்தவிதச் சச்சரவும் இல்லாமல் இருந்தது என்றார்.  பிறர் கழிவுகளைச் சுத்தம் செய்வதைச் சிலர் மட்டும்தான் செய்துவந்தார்கள்; அதேபோல் பிறர் அழுக்குத் துணிகளைத் துவைப்பதை ஒரு பிரிவுதான் செய்ய வேண்டும் என்ற அமைப்பு இந்துச் சமூகத்தில்  எப்போது ஏற்பட்டது என்பதற்குச் சரியாக அவர் பதில் சொல்லவில்லை..

    நான் போப்பைப் பற்றிப் புத்தகம் எழுதியது அவர் ஒரு  கத்தோலிக்க மதத்தலைவர் என்பதற்காக அல்ல, அவர் ஒரு மனித நேயர் என்பதற்காகத்தான் என்பதை அவரால் புரிந்துகொள்ள வே முடியவில்லை.  என் உரையில் இந்து மதத்தில் உள்ள பிரிவுகளின் தலைவர்கள் போட்டுக்கொண்ட சண்டைகளால் இந்து மதத்தையே நான் வெறுக்க ஆரம்பித்தேன் என்றும் கோவிலுக்குப் போவதையே தவிர்த்துவிட்டேன் என்றும் கூறியிருந்தேன்.  அதனால் கடைசியில் சுவாமி உங்களுக்கு இந்து மதத்தின்மேல் இவ்வளவு கோபம் இருக்கிறதே என்றார்.  இந்து மதத்தை மட்டுமல்ல, எல்லா மதங்களையும் நான் வெறுக்கிறேன் என்று கூறினேன்.  அதை அவரால் ஜீரணிக்க முடியவில்லை.  மேலும் போப் பிரான்சிஸைப் பற்றி நான் எழுதியது அவர் ஒருகிறிஸ்தவ மதத்தலைவர் என்பதற்காக அல்ல, மதத்திற்கு அப்பாலும் அவருடைய சிந்தனைகள் செல்கின்றன என்பதற்காகத்தான்; உலக அமைதி பற்றியும் சுற்றுப்புறச் சூழ்நிலை பாழ்பட்டுவருவதை எப்படித் தடுத்து நிறுத்தலாம் என்பது பற்றியும் உலகில் வறுமையையும் சமத்துவமின்மையையும் ஒழிப்பது பற்றியும் முதலாளித்துவ பொருளாதாரத்தின் முதலைகளை எப்படி நெறிப்படுத்தலாம் என்பது பற்றியும் சதாசர்வ காலமும் சிந்தித்து வருகிறார்.  இவருடைய இந்த மனித நேய குணங்களால் கவரப்பட்டதால் மட்டுமே அவரைப் பற்றி எழுதினேன் என்பதை அவர் புரிந்துகொள்ளவில்லை, புரிந்துகொள்ள விரும்பவும் இல்லை.

    Share
    July 16, 2018
  • நலம் .. நலமறிய ஆவல் _ 116

    நிர்மலா ராகவன்

    நொண்டிச்சாக்கு ஏன்?

    “நான் ஏன் மற்றவர்களைப்போல இல்லை?”

    “என்னை யாருக்குமே பிடிக்கலே!”

    “எனக்கு அதிர்ஷ்டமே கிடையாது!”

    இப்படிக் கூறுபவர்கள் பலரைப் பார்த்திருக்கிறோம். இந்த மூன்று வாக்கியங்களிலும் நான், என்னை, எனக்கு என்ற வார்த்தைகளுக்குத்தான் முக்கியத்துவம். சுய பரிதாபம் மிகுந்தவர்கள் இவர்கள்.

    ஒருவர் எல்லா சந்தர்ப்பங்களிலும் தன்னைப் பொருத்திக்கொண்டு பார்த்தால் இப்படித்தான் ஆகும். இப்படிப்பட்டவர்களுக்கு அவர்களுடைய பிரச்னைகள்தாம் புரியும். தம் நலன் மட்டுமே அவர்களுக்கு முக்கியம். அவர்களால் பாதிக்கப்படும் பிறருடைய மனப்போக்கைப்பற்றிய கவலை கிடையாது.

    ஒருவர் தம் கண்ணோட்டத்திலிருந்துதான் எதையும் அலசுவதால்தான் இந்தக் கோளாறு எழுகிறது.

    கதை

    ராவ் நன்றாகப் படித்து, பெரிய உத்தியோகத்திலும் இருந்தார். இருந்தாலும், போட்டி மனப்பான்மை அதிகம். பிறரைத் தாழ்த்திப் பேசினால், தான் உயர்ந்துவிட்டதாக எண்ணி அற்ப சந்தோஷம் அடையும் அறிவிலி. யாரைப் பார்த்தாலும், அவர்களுடைய குறை என்று அவர் நினைப்பதைப் பெரிதுபண்ணி, கேலி செய்வார். இதனாலேயே அவருக்கு நெருங்கிய நண்பர்கள் என்று எவரும் இருக்கவில்லை. அவருடைய புத்திசாலித்தனத்தால் ஈர்க்கப்பட்டு சற்று நெருங்குபவர்கள் அவரது ஓயாது குற்றம் கண்டுபிடிக்கும் தன்மையால் விரைவிலேயே விலகிவிடுவார்கள்.

    தவறு தன்மேல்தான் என்று உணராது, `ஏனோ என்னை யாருக்குமே பிடிப்பதில்லை!’ என்று மறுகுவார்.

    புத்திசாலியோ, முட்டாளோ, மனிதராகப் பிறந்த எவரையும் கவலைகள், துன்பங்கள், விட்டு வைப்பதில்லை. ஆனால், என்றோ பட்ட துன்பத்தையும், துயரத்தையும் விடாமல் பிடித்துக்கொண்டிருப்பது அறிவீனம்.

    எனக்கு நன்கு அறிமுகமான ஒரு மாது, பார்ப்பவர்களிடமெல்லாம்,“எனக்கு ஒடம்பே முடியலே!” என்று முகமன் கூறுவதை வழக்கமாகக் கொண்டிருந்தாள். எல்லா பொது நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்வாள். எந்தவித உடற்குறையும் தென்படவில்லை. எல்லாருக்கும் அவளுடைய அந்த வசனம் கேலியாகப் போயிற்று.

    அவள் இறந்தாள் – நாற்பது வருடங்களுக்குப்பின்! அத்தனை காலமும், தனக்காகப் பரிதாபப்பட்டே வாழ்ந்து, மகிழ்ச்சி இல்லாது காலத்தைப் போக்கி இருக்கிறாள்!

    நாம் அனுபவித்த துன்பங்களைப்பற்றியே பேசிக்கொண்டிருந்தால், அதைச் செவிமடுக்க நேர்ந்தவர்கள் முதலில் அனுதாபம் காட்டலாம். அதன்பின், சலிப்படைந்து விலகி விடுவார்கள்.

    நம்மைப் பாதித்தவைகளைப்பற்றியே பேசினாற்போல், வேண்டாத அனுபவங்கள் நீங்கி விடுமா, என்ன?

    கதை

    மூன்று வயதுக் குழந்தை கலா கீழே விழுந்து காலில் சிறு காயம் பட்டுக்கொண்டாள். அம்மா உடனே பிளாஸ்திரி போட்டபோது, அந்த கவனிப்பை `அன்பு’ என்று எண்ணிய வயது அது.

    அன்றையிலிருந்து, அனுதினமும், “இங்கே வலிக்கிறது. பிளாஸ்டர் போடு,” என்று கையையோ, காலையோ காட்டி, நச்சரிக்க ஆரம்பித்தாள். அதற்குத் தேவையே இருக்காது. அது புரிந்து, அவளுடைய தாய், “அதைவிட நல்ல மருந்து ஒண்ணு இருக்கு,” என்று முகத்திற்குப் பூசும் பௌடரை அந்த இடத்தில் தூவ, சிறுமி சமாதானமானாள்.

    உறவினர் இல்லங்களுக்குப் போகையில், “இங்கே வலி. அம்மா பிளாஸ்டர் போட மாட்டேங்கறா!” என்று தன்னிரக்கத்துடன் குற்றம் சாட்ட, அம்மா சிரித்தபடி, “ஒங்க வீட்டில சகல ரோக நிவாரணி இருக்கோ?” என்று கேட்பாள். உறவினர் விழிக்க, “பௌடர்!” என்று சிரிப்பாள் மெல்ல.

    சிறுவர்களாக இருக்கும்போது, பெற்றோர் அளவுக்கு மீறி காட்டும் கரிசனம் பெரியவர்களான பின்னர், பிறரும் தம்மிடம் அப்படியே நடக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்திவிடுகிறது.

    பிறர் நம்மீது காட்டும் பரிதாபம் அன்பல்ல. நோயாலோ, வேறு ஏதாவது இழப்பாலோ பிறர் துயரப்பட்டால்தான் சிலருக்கு அவர்களிடம் அருமையாக நடந்துகொள்ள முடியும்.

    கதை

    சிறு வயதில் அன்பைப் பெறாது, வன்முறை பிரயோகித்த கணவரையும் அடைந்த துர்பாக்கியசாலி நாகலட்சுமி. தான் பெறாததைப் பிறருக்கு கொடுப்பது நடக்கும் காரியமா? அவள் தான் பெற்ற குழந்தைகளிடம் எப்படி அன்பாக இருக்க முடியும்?

    தான் ஏதாவது சொல்லி, அதன்படி குழந்தைகள் நடக்காவிட்டால், `நான் உங்களுக்காக எவ்வளவோ பண்ணி இருக்கிறேன். ஆனால், யார் நான் சொன்னபடி கேட்கிறீர்கள்?’ என்று பெருமூச்சுடன், தன்மேல் பரிதாபம் எழச் செய்து, காரியத்தைச் சாதித்துக்கொள்வாள். அக்குழந்தைகள் நோய்வாய்ப்பட்டால் மட்டும் ஆதரவாக இருப்பாள். அதனால், தாயிடம் ஏதாவது காரியம் ஆக வேண்டுமென்றால், அவர்கள் துன்பப்படுவதுபோல் நடிப்பது வழக்கமாகப் போயிற்று. தம்மையுமறியாது, தாயிடமிருந்தே சுய பரிதாபத்தைக் கற்றார்கள்.

    எனக்குத் தெரிந்த பல முதுமையான பெண்களுக்கு Depression என்கிறார்கள். பிறருடைய மனப்போக்கை இவர்களால் புரிந்துகொள்ள முடியாமல் போனதாலா, இல்லை, தாம் சொல்வதை இளையவர்கள் கேட்க மறுக்கிறார்களே என்ற ஆதங்கமா?

    கதை

    லட்சுமி அம்மாள் தனது எழுபதாவது வயதில் கீழே விழுந்து, சில மாதங்கள் படுக்கையிலேயே கழிக்க நேரிட்டது. அதன்பின் கால் குணமாகி, மருத்துவரும், `நீங்கள் பழையபடி நடமாடலாம்,’ என்று பச்சைக்கொடி காட்டிவிட்டார்.

    ஆனாலும், பத்து வருடங்களுக்கு மேலாக `படுக்கையைவிட்டு எழுந்தால் மீண்டும் கீழே விழுந்துவிடுவேன்,’ என்று பிடிவாதமாக இருக்கிறாள் அந்த அம்மாள், எவ்வளவோ சௌகரியங்கள் செய்துகொடுத்த பின்னரும்.

    இப்படி, தான் மட்டுமே முக்கியம் என்றிருப்பவரால் உடன் இருப்பவர்களுக்கு மிகத்தொல்லைதான். ஆனால், பிறரது உணர்ச்சிகளைப்பற்றிக் கவலைப்படாது, வேண்டாத பயத்துடன் தன்மேலேயே பரிதாபப்பட்டுக்கொண்டு, தன் வாழ்வை நரகமாக்கிக் கொண்டிருப்பவர்களைப்பற்றி என்ன சொல்ல! இப்போக்கினால் நெருங்கிய உறவினர்களை மட்டுமா, நிம்மதியையும் இழக்கும் அபாயம் இருக்கிறதே!

    சிறு வயதில் அன்பு கிடைக்கப் பெறாதவர்கள் தம்மைப்பற்றியே நினைத்துக்கொண்டிருப்பது இயற்கை. இவர்கள் மாற்றங்களை எதிர்கொள்ளப் பயந்தவர்களாக இருக்கலாம்.

    வேறு சிலர், முன்னேற வேண்டும் என்ற முனைப்புடன் குறுக்கு வழியை நாடுவார்கள். இச்சகத்தால் மேலதிகாரியை கைக்குள் போட்டுக்கொள்வார்கள். பிறருக்கு அடிமைபோல் நடந்து, எதிர்பார்த்த அளவு முன்னேற இயலாதுபோக, அதனாலேயே தம்மீது இரக்கம் கொள்வதும் உண்டு.

    பரிதாபத்திற்கு எதிர்மறையான குணம் சுய கௌரவம். இது திமிரோ, கர்வமோ அல்ல. நம்மைப் பிறர் தாழ்த்தும்போது அந்த அவமானத்தைப் பொறுத்துப் போகாத இயல்பு. முன்னேறுவதற்கு இன்றியமையாதது.

    நம் மகிழ்ச்சிக்கோ, முன்னேற்றத்திற்கோ பிறரை எதிர்பார்ப்பது வீண். நம் நலனில் நம்மைவிட யாருக்கு அதிக அக்கறை? அத்துடன், பிறர் அளிக்கும் அறிவுரையும் வழிகாட்டலும் நம் திறமைக்கு ஏற்றதாக இருக்கும் என்பது என்ன நிச்சயம்?

    தன் தோல்விகளுக்கு ஏதாவது நொண்டிச்சாக்கு கூறுவது அற்ப திருப்தியை உண்டாக்குவதால், இவ்வழியை அடிக்கடி கடைப்பிடிக்க வைக்கிறது. ஒரு விதத்தில், இதுவும் போதைதான்.

    `எனக்கு ஊக்கமளித்த பெற்றோர், செல்வச் செழிப்பு இதெல்லாம் அமையவில்லை. அதுதான் முன்னுக்கு வரமுடியவில்லை,’ என்று என்றோ நடந்ததையே நினைத்து மறுகிக்கொண்டிருந்தால், எதிர்காலம் செழிப்பாகிவிட முடியுமா? இது கோழைத்தனமன்றி வேறென்ன?

    நாம் அனைவருமே ஏதாவது தருணத்தில், `எனக்கு ஏன் இப்படியெல்லாம் நடந்துவிட்டது?’ என்று நம்மீதே இரக்கம் பாராட்டுவோம். அப்போது, `வேண்டாம் இந்த சுய பரிதாபம்!’ என்று ஒதுக்கினால், உடனே அடுத்து வரும் சவாலை எதிர்கொள்ள ஆயத்தமாகிவிடுகிறோம். (துணிவு இல்லாவிட்டால், கிடைத்ததை ஏற்கும் மனப்பக்குவத்தையாவது வளர்த்துக்கொள்ளலாம்).

    தொலைகாட்சியில் ஒரு நிகழ்ச்சியில், நாற்பத்திரண்டு வயதான ஒருவர் பங்கேற்றார். ஆறு மாதங்களுக்குமுன்னர், ஸ்ட்ரோக் வந்து, மூளையில் அறுவைச் சிகிச்சை நடந்திருந்தது. பிழைப்பதே சந்தேகம் என்ற நிலை. பிழைத்ததும், `இனி உடற்பயிற்சி செய்யலாம்,’ என்று மருத்துவர்கள் கூற, இடைவிடாத முயற்சி செய்ய ஆரம்பித்தார். அன்றைய நிஞ்சா (NINJA) நிகழ்ச்சியில், நாலடி தாவி, முப்பதடி சறுக்கு மரத்தில் ஏறிக் குதித்து, என்று பார்ப்பவர்களை அதிரவைக்கும் சாதனைகளைச் சில நிமிடங்களிலேயே செய்து முடித்தார். ஆரோக்கியமாக இருந்த எல்லாரையும் வெல்ல அவர் ஒருவரால் மட்டுமே முடிந்தது.

    துணிவுடன் எதையும் எதிர்கொண்டால், `வாழ்க்கை என்பது இவ்வளவுதானா!’ என்ற சிரிப்பு எழும். நம்மைப் பார்த்து நாமே சிரிக்கும் முதிர்ச்சியும் ஏற்படும். மேற்கண்டவர்போல், பிறருக்கு நல்ல உதாரணமாக அமையலாம்.

    தொடருவோம்

    Share
    July 16, 2018
  • புறப்பொருள் வெண்பாமாலை கூறும் போர் முறைகள்

     –முனைவர் அரங்க. மணிமாறன்

    முன்னுரை:

    முன்னைப் பழமைக்கும் பழமையாய்ப் பின்னைப் புதுமைக்கும் புதுமையாய் இலங்குகிறது தமிழ்மொழி. காலந்தோறும் வளரும் புதுமைகளுக்குத் தக்க தன்னைப் புதுப்பித்துக்கொண்டு இளமை குன்றா இயல்பினதாய் விளங்குகின்றது. 

    காலந்தோறும் மலரும் இலக்கியங்களும், தொல்காப்பியம் முதலிய இலக்கண நூல்களும்,  நிகண்டுகளும்  வெளிநாட்டார் இலக்கண  ஆராய்ச்சி  முதலிய நூல்களின் வளத்தோடு வாழும் செம்மொழியாய் வளம் சேர்க்கிறது. 

    அத்தகு தமிழ்மொழி ஐந்திலக்கண வளத்தோடு அசையாக் கோட்டையாக நின்று நிலைக்கிறது. மொழிக்கு இலக்கணம் வகுத்தது மட்டுமின்றி வாழ்க்கைக்கும் இலக்கணம் வகுத்துள்ளனர் தமிழர். அகப்பொருள் காதல் வாழ்விற்கும், புறப்பொருள்  போர், நாகரிக, பண்பாட்டு வாழ்க்கை முறைக்கும் இலக்கணம் வகுக்கின்றன. 

    தொல்காப்பியத்தின் வழிநூலாய்த் தோன்றிய புறப்பொருள் வெண்பா மாலை ஐயனாரிதனார் என்பவரால் வெட்சி முதல் பெருந்திணை ஈறாய்ப் பன்னிரு படலமாய் விரித்துரைக்கப்பட்டுள்ளது. இதில் கூறப்படும் போர்முறைகளை ஆய்வதாய் இக்கட்டுரை அமைகிறது.  

    விரிச்சி (நற்சொல்) கேட்டல்: 

    பகைநாட்டின் மீது போர்த்தொடுப்பதற்கு முன் போர்ச்செயல் வெற்றி பெறுமா? என நற்சொல் கேட்டனர். 

    ‘வேண்டிய பொருளின் விளைவுநன் கறிதற்கு
     ஈண்டிருண் மாலைச் சொல் ஓர்ந்தன்று’.1 

    இன்றும் நம் செயல்கள் வெற்றி பெறுமா என நாம் சகுனம் பார்த்தல், குறிகேட்டல், பல்லியின் (கௌளி) ஒலி திசையறிதல் ஆகிய முறைகளைக் கையாள்வதோடு இதனை ஒப்பிடலாம்.

    மாலை நேரத்தில் ஊரின்புறத்தே திருக்கோவிலில் பலரும் கூடி நற்சொல் கேட்டு நிற்க,  வேட்டுவச்சி குடம் நிறையக் கள் கொண்டுவா என்கிறாள். இது அவர்களுக்கு நல்நிமித்தமாகக் காதில் விழுகிறது. போரில் வென்றால் கள் குடித்து மகிழ்வது வழக்கம். அதுவே நற்சொல்லாகக் கேட்கின்றனர். சில நேரங்களில் எதிர்மறைச் சகுனம் ஏற்படினும் அதனைப் பொய்யாக்கும்படி வெற்றி பெறுதலும் உண்டு. (பிள்ளைப்பெயர்ச்சி).

    ஒற்றாடல் (வேய்):

    ஐந்தாம் படையாகிய ஒற்றர்படையே ஒரு நாட்டின் முக்கிய படையாக அமைகிறது.

    ‘கடாஅ உருவொடு கண்ணஞ்சாது யாண்டும்
    உகாஅமை வல்லதே ஒற்று’2  என்று ஒற்றாடலின் முறைகளைத் திருவள்ளுவர் விளக்குகிறார். 

    பகைநாட்டிற்குள் உயிரைப் பணயம் வைத்து அந்நாட்டின் எல்லை, வழிகள், அரண்அமைப்பு, படைப்பெருக்கம்,  படை நிலைகள்,  சுருக்க வழிகள் ஆகியவற்றை அறிந்து வருவர். பகைவரிடம் அகப்படின் கொலை செய்யப்படுவர். சிலப்பதிகாரத்தில் கோவலன் பகை நாட்டின் ஒற்றனெனக் கருதிக் கொலை செய்யப்படுகிறான். போரின் வெற்றியின் பின் ஒற்றாய்ந்தவர்க்கு அதிகப் பரிசிலைத் தருவதும் இதன் காரணமாகவே ஆகும்.

    ‘வெம்முனைநிலை யுணர்த்தியோர்க்குத்
    தம்மினுமிகச் சிறப்பீந்தன்று’. 3 என இதனைப் புறப்பொருள் வெண்பா மாலை விளக்குகிறது.

    ஆநிரை கவர்தல்:

    ஒரு நாட்டின் மீது போர் செய்ய விரும்பும் அரசன் தன் படைகளை அனுப்பிப் பகை நாட்டின் பசுக்கூட்டங்களை (ஆநிரை) யாரும் அறியாதவாறு கவர்ந்து வரச் செய்வான்.

    ‘வென்றி வேந்தன் பணிப்பவும் பணிப்பின்றியும்
    சென்றி கன்முனை ஆதந்தன்று’ 4 

    பசுக்கள் அந்நாட்டின் செல்வங்கள் ஆகும். இதன் காரணமாகவே திருவள்ளுவரும்

    ‘கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு
    மாடல்ல மற்ற யவை’5 என்கிறார்.

    மாடு ஒரு நாட்டின் செல்வமட்டுமன்று. மானத்தின் அடையாளமாகவும் கருதப்படுகிறது. தனக்குத் தெரியாமல் தன் நாட்டின் பசுக்களைக் கவர்ந்தது போருக்கான அறைகூவலாகவும் அமைகிறது. இதனால் வெகுண்டு போருக்கெழுகின்றனர். எனவே ஆநிரை கவர்தல் போரின் தொடக்கமாக அமைகிறது. 

    படைக்கருவிகளை வழங்குதல்:

    அரசன் தேர்ப்படை, யானைப்படை, குதிரைப்படை, காலாட்படை, தூசிப்படை, கிடுகுப்படை ஆகியவற்றிற்கு அவரவர் கையாள் திறனுக்கேற்ற படைக்கருவிகளை வழங்குவது ’படைவழக்கு’ எனும் துறையில் விளக்கப்பட்டுள்ளது.

    ‘முத்தவிர் பூண் மறவேந்தன்
    ஒத்தவர்க்குப் படைவழங்கின்று’6 என்று இதனைப் புறப்பொருள் வெண்பாமாலை கூறுகிறது.

    வஞ்சினம் கூறுதல்:

    படைக்கருவிகளை அரசனிடமிருந்து பெற்ற படைவீரர்கள் தன் போர் ஆற்றலையும் நாட்டிற்கு ஆற்ற வேண்டிய கடமைகளையும் பகைவரை அழித்துச் சிதறச் செய்யும் திட்டங்களையும் அவ்வாறு பகைவரை வெல்லாவிட்டால் தான் அடையும் இழிநிலையினையும் எடுத்து கூறி வீரமொழி பகர்தல் ‘வஞ்சினம் கூறல்,  நெடுமொழிகூறல்’ என வழங்கப்படுகிறது.

    ‘இன்று பகலோன் இறவாமுன்னர் ஒன்னாரை
    வென்று களங்கொள்ளா வேலுயர்ப்பின் – என்றும்
    அரணவியப் பாயும் அடையார்முன் நிற்பேன்
    முரணவிய முன்முன் மொழிந்து’ 7

    இன்று மாலைக்குள் பகைவரை வெல்வேன். அன்றி அவர்க்கு அடிமையாவேன் என்கிறான்.

    தலையானங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் பகைவரை வெல்லாவிடில் மாங்குடி மருதன் முதலிய புலவர் பெருமக்கள் பாடும் தகுதியை இழக்கக் கடவேனாக என்கிறான்8. 

    பூச்சூடல்:

    போர்ச் செயலின் ஒவ்வொரு நிகழ்விற்கேற்பவும் அதனை உணர்த்தும் வகையில் வெவ்வேறு பூக்களைச் சூடுவர். வெட்சிப்பூ சூடுதல் ஆநிரை கவர்தலைக் குறிக்கிறது. ஆநிரை மீட்கக் கரந்தைப் பூவும், பகைவர்மேல் படையெடுக்க வஞ்சிப்பூவும், பகைவரைத் தடுக்க காஞ்சி, மதில் காக்க நொச்சி,  அதிரப் போர் செய்யும்போது தும்பை, வெற்றி பெற்றோர் வாகைப்பூவையும் அடையாளமாகச் சூடுகின்றனர். 

    பூசையிடுதல்:

    போர்ச்செயல் வெற்றிபெற போர்க்குரிய தெய்வமாகிய காளிக்கு பலியும் பூசையும் செய்து வழிபடுகின்றனர்.

    ‘நீடோளான் வென்றிகொள்கென நிறைமண்டை வலனுயரிக்
    கூடாரைப் புறங்காணுங் கொற்றவை நிலையுரைத்தன்று’ 9

    கலிங்கத்துப் பரணியில் காளியின் செயல்கள் விதந்துரைக்கப்பட்டுள்ளன. போரில் வென்றபிறகு வேலனோடு வெறியாட்டு நிகழ்த்துவதும் உண்டு. 

    படையெழுச்சி:

    போருக்குரிய நாள் குறித்த பின்னர் ஒரு நல்ல நாளில் அரசச் சின்னமான குடையும் போருக்குரிய கருவியான வாள்படையும் புறவீடு விடப்படுகிறது. 

    ‘பெய்தாமஞ் சுரும்பிமிரப் பெரும்புலவர் புகழ்பாடக்
    கொய்தார் மன்னவன் குடைநாட் கொண்டன்று’.(குடைநிலை) 

    ‘செற்றார் மேல் செலவமர்ந்து
    கொற்ற வாள் நாள் கொண்டன்று’10.(வாள் நிலை) 

    போர்புரிதல்:

    பழந்தமிழர் அறத்தோடு கூடிய போர்முறைகளையே கையாண்டனர். பழந்தமிழரின் ஈரம் செறிந்த வீரம் மறம் எனப்பட்டது. தனக்கு நிகரான போர்த் திறனும் படைக்கலப் பயிற்சியும் பெற்றவர்களோடு மட்டுமே போரிடுவர்.

    ஆவும், பார்ப்பனரும், பெண்களையும், பிணியுடையவரும், ஈமக்கடனிருக்கப் புதல்வர் பெறாதவரும் யாம் போரிட இருக்கிறோம். நீங்கள் பாதுகாப்பான பொது மன்றங்களுக்குச் செல்லுங்கள் என்று முரசறைந்து தெரிவித்த பின்னரே ஒத்த வலிமையுடையரோடு போரிடுவர். (புறநானூறு பாடல் 9-நெட்டிமையார்).

    ‘வெட்சியாரைக் கண்ணுற்று வளைஇ
    உட்குவரத் தாக்கி உளர்செருப் புரிந்தன்று’11

    என்று போர் புரிதலை விளக்குகிறார். போரில் படைவிட்டவர், புறமுதுகிட்டவர், தனி நின்றவர் ஆகியோரை தாக்குதலில்லை. தான் தோற்குநிலையறிந்து புண்கிழித்து மாய்தலும் உண்டு. கணவனை அழித்த வேலால் அவன் மனைவியும் மாய்தல் உண்டு (ஆஞ்சிக்காஞ்சி). 

    விழுப்புண் பெறுதல்:

     ‘மண்ணொடு புகழ் நிறீஇப்
     புண்ணொடு தான் வந்தன்று’12

    போரில் பகைவரோடு பொருது மார்பிலும் தோளிலும் முகத்திலும் ஏற்படும் புண்ணை விழுப்புண் என்கிறோம்.

    விசயாலயச் சோழன்   தொண்ணூற்றாறு விழுப்புண்களைப் பெற்றவன் என்பதை மூவருலாவில் ஒட்டக்கூத்தர்,

    ‘சீறும் செருவில் திருமார்பில்
    தொண்ணூறும் ஆறும் படுதழும்பின் ஆகத்தோன்’13 என்று பாடுகிறார். 

    தீயிட்டு எரித்தல்:

    பகை நாட்டைப் போரிட்டு வென்று அந்நாட்டைத் தீயிட்டு எரிக்கின்றனர். பகைவரின் வளத்தை முற்றிலும் அழிக்கும் செயலாகும்.

    ‘நேராதார் வளநாட்டைக்
    கூரெரி கொளீஇயன்று’14

    அந்நாட்டின் செல்வங்களை  முழுவதும் கொள்ளையடித்தலும் உண்டு.

    ‘களமர் கதிர்மணி காலேகம் செம்பொன்
    வளமனை பாழாக வாரி’15  கொள்ளையடிக்கின்றனர்.

    தாம் போரிட்டழித்த நாடு கெடும்படிக் கழுதை ஏறு பூட்டி வெள்வரகு, கொள் விதைப்பர்.

    ‘எண்ணார் பல்லெழில் கழுதையேரு ழுவித்து
    உண்ணா வரகொடு கொள்வித் தின்று’16

    இவ்வாறு பல வகையினும் தாம் போரிட்டு அழித்த நாட்டைச் சீர் கெடும்படிச் செய்தனர். 

    மகள் வேண்டி போர்:

    ‘இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த
    வகுத்தலும் வல்ல தரசு’ 17 என்கிறார் வள்ளுவ பெருந்தகை.

    நாட்டை வளப்படுத்தவும், வறியவர்க்கு ஈயவும், வேண்டிய பொருளுக்காகப் போரிடுதலும் உண்டு. பெண்ணைத் திருமணம் செய்துகொள்வதற்காகப் போரிடுதலும் உண்டு. மகட்பால் காஞ்சி துறை அத்தகையது.

    ஆண்களுக்கு மட்டுமின்றி பெண்களுக்கும் வீரமுண்டு என்பது மூதின்முல்லை. எதிர்த்துப் போர்செய்ய முடியாதவர்கள் திறை தந்து நாட்டினைப் பாதுகாத்தலும் உண்டு. 

    வெற்றிக்கொண்டாட்டம்:

    போரில் கிடைத்த வெற்றியைக் கொண்டாடும் வகையில் கறி உணவும் மொந்தை நிறைந்த கள்ளும் உண்டு மகிழ்ந்தனர் (உண்டாட்டு). புலவர்க்கும் தன்னை நாடிவந்த இரவலர்க்கும் வாரி வழங்கினர். துடி இசைத்த துடியர்க்கு மிகு பொருள் வழங்குதல் உண்டு.

    ‘நீடவும் குறுகவும் நிவப்பவும் தூக்கி
    பாடிய புலவர்க்குப்  பரிசில் நீட்டின்று’18 

    நடுகல்:

    நாட்டைப் பகைவரிடமிருந்து காப்பதற்கான போரில் வீழ்ந்துபட்ட வீரர்களுக்கு யாழைக் கொண்டு இசைத்துப் பாடும் பாணர் கையறவு பாடுதல் உண்டு.

    ‘வெருவரு வாளமர் விளிந்தோற் கண்டு
    கருவி மாக்கள் கையற வுரைத்தன்று’ 19

    ‘மண்மகுளத் துடிகறங்க
    விண்மேயாற்குக் கற்கொண்டன்று’.20

    போரில் மாண்ட வீரர்களுக்கு அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் சிறந்த கல்கொணர்ந்து புனித நீராட்டி அவரது பிணத்தைப் புதைத்த இடத்தில் நடுகல் நட்டு அவரது போர்த்திறத்தையும் புகழினையும் போற்றி நினைவு கூறுவர். இந்நடுகல் வழிபாடு பின்னர் கடவுள் வழிபாடாக மாறியுள்ளது.

    இவ்வாறு சங்ககாலப் போர்முறை நிகழ்வுகள் புறப்பொருள் வெண்பா மாலையில் விவரிக்கப்பட்டமை அறிய முடிகிறது.      

    அடிக்குறிப்புகள்: 

    1.புறப்பொருள் வெண்பா மாலை- (விரிச்சி துறை) ப.8 திருநெல்வேலி தென்னிந்திய சைவசிந்தாந்த நூற்பதிப்புக்கழகம் -சென்னை-18- பதிப்பு 2004.
    2.திருக்குறள்-ஒற்றாடல் குறள்-585-ப.119-தென்றல் நிலையம்-சிதம்பரம்-8வது பதிப்பு-2006.
    3.மேலது புற. வெ.மாலை புலனறிச்சிறப்பு-ப.21.
    4 மேற்குறித்த நூல் வெட்சி ப.5.
    5.திருக்குறள்-கல்வி குறள்-400-ப.81.
    6 புற.வெ.மாலை-படைவழக்கு ப.69.
    7.மேலது வஞ்சினக் காஞ்சி ப.74.
    8.தமிழ் இலக்கிய வரலாறு– டாக்டர் மு.வரதராசனார்-ப.44  புது தில்லி சாகித்திய அக்காதெமி வெளியீடு-1999.
    9 புற.வெ.மாலை-கொற்றவை நிலை ப.44
    10.மேலது குடை நிலை-வாள்நிலை பக்-42 -43.
    11.மேலது போர் மலைதல் ப.29
    12.மேலது புண்ணொடு வருதல் ப.30.
    13.மூவருலா-ஒட்டக்கூத்தர்
    14.புற.வெ.மாலை உழபுல வஞ்சி ப.53.
    15.மேலது மழபுல வஞ்சி  ப.54.
    16.மேலது உழுது வித்திடுதல் ப.122
    17.திருக்குறள் இறைமாட்சி-குறள் 385 ப.79.
    18.புற.வெ.மாலை கொடைவஞ்சி ப.54.
    19.மேலது கையறு நிலை ப.35.
    20.மேலது கற்கோள் நிலை ப.244.

     *****

    கட்டுரையாளர் – முதுகலைத் தமிழாசிரியர்
    அரசு ஆண்கள் மேனிலைப் பள்ளி
    செங்கம்.606701
    பேசி: 99430-67963.

     

        

    Share
    July 16, 2018
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    180715 Goverdhan 9×12 strathmore 160gsm tinted paper -Krishnapremi lr

    குன்று மவர்தான்காண்!! காத்திடும் மந்தியவர்!
    என்றுமவர் ஏரார்ந்த கண்ணியின் -அன்பினைத்
    தட்டாது கட்டுண்ட தாமோ தரனவர்
    கொட்டாயில் ஆவதன் கன்று….கிரேசி மோகன்….

    Share
    July 15, 2018
←Previous Page
1 … 373 374 375 376 377 … 1,141
Next Page→

வல்லமை

  • Blog
  • About
  • FAQs
  • Authors
  • Events
  • Shop
  • Patterns
  • Themes

Twenty Twenty-Five

Designed with WordPress