படமும், பாடலும்….!

களைப்போடு வீடணன் கைகால் கழுவுகையில்
மலைக்கோட்டைப் பிள்ளை குறும்பால் -நிலைப்பாடாய்
கொள்ளிடத் தீவில் கிடக்கும் அயோத்தியின்
பள்ளிகொண்ட ரங்கனைப் பாடு….கிரேசி மோகன்….!
திருச்சி என்றால் ‘’ஸ்வாமி ஒங்கரந்தாஜி’’ அடியேன் நினைவுக்கு வருவார்….அவருடைய தாயுமானவர் ப்ரவசனம் கேட்டு அன்று இரவே அடியேன் எழுதியது உங்களது மேலான் பார்வைக்கு….!
தாயுமானவன் திருப்புகழ்
——————————
மகப்பேறு காண மருத்துவச்சி ஆக
அகம்புறம் தாயுமான அன்பே -மிகப்பசியாய்
பிள்ளைக் கறியுண்ட பித்தா உனதுலீலைக்(கு)
எல்லைதனை யாரறிவா ரே….!
நோயுமாவான் சாய்ந்திடும் பாயுமாவான் மாற்றிடும்
மாயமாவான் புத்தொளிர் காயமாவான் -நாயன்மார்
நேயமாவான் நாடாதோர் சீயமாவான் தேற்றிடும்
தாயுமாவான் தந்தை தவித்து….!
வேதங்கள் அர்ச்சிக்கும் பாதாம் புயம்பற்ற
போதா உனக்கில்லை பாழ்மனமே -தீதில்
இராப்பகல் தோறும் இருந்தென்ன கண்டாய்
சிராப்பள்ளி ஈசனைச் சேரு….கிரேசி மோகன்….!
சங்கர சங்கர சம்போ சிவ சங்கர சங்கர சங்கர சம்போ
சாதாரணன் போல வந்தான் -ஏதும்
ஓதாமல் சில நேரம் சும்மா இருந்தான்
வேதா ரண்யம் ஊர் என்றான் -இதில்
சூதில்லை அம்மகாதேவன் தான் என்றான்….(1)….!
உண்டென்று ஒன்றுண்டு கேளாய் -அதை
உண்டு நான் உமிழ்கிறேன் ஒவ்வொரு நாளாய்
விண்டவர் கண்டிலர் கண்டாய் -அதைக்
கண்டு நீ கொண்டாட காட்சிகள் உண்டாய்….(2)….!
பதி பசு பாசங்கள் மூன்றும் -முறையே
விதி மதி வினை என்ற விவகாரமாகும்
நிதி உந்தன் நெஞ்சிலே காண்பாய் -அது
புதிதல்ல மணம்வீசும் பூத்த மலரான்மா….(3)….!
புதிரான பூலோகக் கல்லை -நீ
பொய்யென்றும் மெய்யென்றும் பேரிடத் தொல்லை
அதுவென்றும் இதுவென்றும் இல்லை -சுத்த
அதுவே இதுவாக ஆனந்த எல்லை….(4)….!
பண்டைநாள் வந்ததோர் பூச்சி -அது
பலவாய்ப் பெருகிடப் பாரென்று ஆச்சி
கொண்டதோர் கோலமே காட்சி -அதை
உண்டில்லை கண்டிடும் உறுதி ஆராய்ச்சி….(5)….!
செத்ததோர் பாம்பிந்த தேகம் -சுக
துக்கமிதில் காண்பது செல்லாத லாபம்
அத்தைக்கு மீசைமேல் மோகம் -அத்தை
சித்தப்பன் பார்த்திட சிரைத்திடும் யோகம்….(6)….!
வேடனார் வேடத்தில் இறைவன் -அவனே
விருந்தாகி நீயுண்ண வலைவீசும் இரைவன்
பாடெல்லாம் அவனென்று பறைவாய் -ஜீவ
பாவத்தில் பசுபாசம் மெழுகாகக் கரைவாய்….(7)….!
பார்முதல் பூதம்நீ அல்ல -பஞ்ச
புலன்களை ஆண்டிட முயலாதே வெல்ல
யாரந்த நானென்று உள்ளே -உன்னிப்
பாரவன் ஆன்மனாய் ஆகுவான் மெல்ல….(8)….!
அன்பே சிவமென்ற ஜோதி -அதன்
ஆதார சக்தியே அருளென்ற பாதி
பண்பான பக்தர்கள் மீதி -இந்தப்
பாங்குணர்ந் தோற்க்கில்லை பூலோக வ்யாதி….(9)….!
போக்கத்த சொப்பனம் நனவு -ஆழ்ந்த
தூக்கத்தில் நிற்பவன் யாரென்று வினவு
சாக்கிதால் சஞ்சலம் தீரும் -ரமண
வாக்கிதை மேற்கொள்ள வழிவந்து சேரும்….(10)….!
இறப்பதும் பிறப்பதும் யாரு -இங்கு
இருக்கையில் ஆராய்ந்து யோசித்துப் பாரு
உறக்கமே இறப்பென்ற மாயை -உணர
உறங்காமல் உறங்கிடப் போடான்மப் பாயை….(11)….!
நம்பிக்கை அறிவாக நீளும் -அவ
நம்பிக்கை அறியாமை அதுகுப்பைக் கூளம்
எம்பிக்கை போடட்டும் தாளம் -ஆன்ம
ஏகாந்த வாசியின் ஏற்றமே மூலம்….(12)….!
இல்லாத இகம்சொப்ப னங்கள் -அதில்
இன்பத்தைத் துய்ப்போர்கள் இருள்பெற்ற மாக்கள்
உள்ளது ஓராயி ரங்கள் -உதறி
உணர்ந்திடு உணர்வென்னும் உச்சிப் பனங்கள்….(13)….!
சும்மா இருந்திடல் சுகமே -என்று
சொன்னார்கள் முன்னோர்கள் சிவமாகு அகமே
நம்மால் இயன்றது நகமே -அது
நாளாக நாளாக நம்பிக்கை முகமே….(14)….!
துன்மார்கப் பாதையில் துன்பம் -அந்த
சன்மார்கமே சச்சிதா னந்த இன்பம்
தென்மார்கம் பார்த்திடும் அன்பன் -மவுன
தத்துவம் தோள்கொடுத் தேவுதவும் நண்பன்….(15)….!
ஓயாது துழைத்திடும் பெண்மை -சக்தி
ஓங்கார நாதத்தின் ரீங்காரத் தன்மை
தாயாகி அன்பர்க்கு நன்மை -நல்கும்
தத்துவம் அவளந்த பித்தர்க்கும் அம்மை….(16)….!
போகாத ஊருக்கு போக -இங்கு
சாகாது சாகிறோம் ஜனனித்து நோக
தேகான்ம பாவம் முடிக்க -சிவ
தேசிகன் சரணார விந்தம் பிடிக்க….(17)…..!
செல்லாதா காசிந்த மேனி -இது
இல்லாத போதுமி ருப்பவன் ஞானி
கல்லாலின் கீழுற்ற கோலம் -அது
சொல்லாமல் காட்டிடும் சித்தாந்த ஜாலம்….(18)….!
பல்லாண்டு பல்லாண்டு வாழி -அந்த
பரசிவம் ஒன்றுதான் பவுருஷம் தோழி
உள்ளாண்ட போதவன் போதம் -வெளி
உலகத்தில் விளையாட வேடிக்கை பூதம்….(19)….!
சூலாயுதம் கொண்ட கையை -சக்தி
வேலாயுதன் வந்த விழிகர்ப்பப் பையை
ஆலால கண்டத்து மெய்யை -எண்ண
அதுநெஞ்சில் ஊற்றிடும் ஆனந்த நெய்யை….(20)….!
பொன்னார் மேனியன் இடையில் -வரிப்
புலித்தோல் பூண்டவன் ஏறுவான் விடையில்
உன்னார்வம் அவனெதிர் பார்ப்பான் -கொள்ள
உண்ணா முலையோடு வந்தருள் சேர்ப்பான்….கிரேசி மோகன்….!
சங்கர சங்கர சம்போ சிவ சங்கர சங்கர சங்கர சம்போ….
——————————————————————————-