தமிழ்வளர்ச்சித் துறை நடத்திய தமிழ்நாடு பெயர்சூட்டல் பொன்விழாக் கொண்டாட்டத்தில் நிகழ்ந்த கவிதைப் போட்டியில் சென்னை மாவட்டத்தின் அளவில் முதலிடத்தில் தேர்வான என் கவிதை.

தமிழுக்குச் சக்தியுண்டு – அதைத்
   தாரணி கண்டிடும் நாளுமுண்டு!
தமிழுக்குள் பக்தியுண்டு – தம்பி
   தாவிநீ பாடு தமிழிற்சிந்து!

கம்பன் கவிதையைப்போல் – இந்தக்
   காசினி கண்ட கவிகளுண்டோ?
உம்பர் வியந்தகவி – நம
   துள்ளத்தி லூறி யினிக்குங்கவி!

வள்ளுவன் சொன்னதைப்போல் – புவி
   வாழ்க்கைக் குயரிய வேதநெறி
கொள்ளுவ தெந்தமொழி – அன்புக்
   கொள்கை பரப்பும் தமிழையன்றி?

ஓங்கு புகழ்ச்சிலம்பும் – நல்ல
   ஒண்டமிழ்ச் செல்வச் சிந்தாமணியும்
தாங்கும் பெருமையெலாம் – வேற்றுத்
   தன்மை மொழிகள் பெறலெளிதோ?

ஒலியின் குறிப்பளந்தே – வளர்ந்
   தோங்கிய யாப்புக் களஞ்சியம்போல்
கலியில் பிரிதுமுண்டோ? – தமிழ்க்
   கவிதையைப் போற்பிற வெல்லமுண்டோ?

வானக் கருத்துமுதல் – இந்த
   மண்ணகத் துள்ள அணுவரையில்
ஆன தகவலெல்லாம் – நமக்
   கள்ளிக் கொடுத்ததும் ஆன்மசக்தி!

தேர்ந்தவிஞ் ஞானச்சக்தி! – தமிழ்
   தெள்ளமு தான இசையின்சக்தி!
சேர்ந்த பலமொழிக்கும் – எழில்
   சேர்ந்த தமிழ்நம் உரிமைச்சக்தி!

பாரதிர் பாட்டுச்சக்தி! – கொண்ட
   பண்டைய நூல்கள் பழமைச்சக்தி!
வீரத் திருவின்சக்தி! – தமிழ்
   வீரியம் கூட்டிடும் அன்புச்சக்தி!

கட்டுரைப் புதினங்களாய்த் – தமிழ்
   காட்டிடும் சக்தி கருத்துச்சக்தி!
கட்டிடும் நாடகத்தில் – நாம்
   காண்பது நாட்டுக் கலையின்சக்தி!

இந்தப் புவிபிறந்த – சின்ன
   இம்மியைத் தொட்டுப் பிறந்தசக்தி!
செந்தமிழ் தெய்வச்சக்தி – அந்தச்
   சீரினைப் போற்றிட வாழுவமே!!

-விவேக்பாரதி
28.06.2018

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “தமிழின் சக்தி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *