Blog

  • தச மஹாவித்யா யாகம் நடைபெற்றது

    தன்வந்திரி பீடத்தில்

    தச மஹாவித்யா யாகம் நடைபெற்றது.

    வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி இன்று 08.07.2018 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை தச மஹாவித்யா ஜபம் மற்றும் ஹோமம் நடைபெற்றது.

    தசமகா வித்யா தேவியர்கள்:

    பெண்மையின் சக்தியை தாய்மை முதல் சம்ஹாரம் வரை உணர்த்துபவர்கள் இந்த தேவியர்கள். இவர்களே ஸ்ரீசாக்த மார்க்கத்தின் ஆதிதேவியர்கள் ஆவார்கள். மேலும் மஹாவிஷ்ணு எடுத்த பத்து அவதாரங்களின் போது இந்த தேவியர்கள் ஒவ்வொருவரும்தான் ஆதார சக்தியாக இருந்தார்கள் என்று ‘முண்டமாலா தந்திரம்’ என்ற நூல் கூறுகிறது. காளி, தாரா, ஸ்ரீவித்யா, புவனேஸ்வரி, பைரவி, ஸ்ரீ சின்னமஸ்தா, ஸ்ரீ தூமாவதி, ஸ்ரீ பகளாமுகி, ஸ்ரீ ராஜமாதங்கி, ஸ்ரீ கமலாத்மிகா என்ற பத்து தேவியர்கள்தான் தசமகா வித்யா தேவியர் என்று அழைக்கப்படுகின்றனர்.

    பக்தர்கள் இத்தேவியர்களை வழிபட்டு பலனடைய வேண்டி ஒவ்வொரு தேவியருக்கும் தனித்தனியாக பீடம் அமைத்து கலச ஸ்தாபனம் செய்து மேற்கண்ட 10 தேவியர்களுக்கும் 16 வேத விற்பனர்கள் பங்கேற்று 1000 முறை ஜபம் செய்து ஹோமங்கள் நடைபெற்றது. இதில் தச மஹா தேவியர்களுக்குரிய புஷ்பங்கள், பஷங்கள், நிவேதனங்கள், திரவியங்கள் சேர்க்கப்பட்டு மஹாமேரு மற்றும் காயத்ரி தேவிக்கு 10 விதமான அபிஷேக திரவியங்கள் கொண்டு மஹா அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து நவாவர்ண பூஜையும், மஹா தீபாராதனையும் நடைபெற்றது. பங்கேற்ற பக்தர்களுக்கு மஹா பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்ட்து. இதில் வாலாஜாபேட்டை லாவண்யா மருத்துவ மனை நிர்வாகி டாக்டர் தொப்பகவுண்டர், திரு. கோபிநாத் தொப்பகவுண்டர் மற்றும் பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

    இதனை தொடர்ந்து இராகு காலத்தை முன்னிட்டு, இராகு கேது ப்ரீதி ஹோமமும், சர்பசாந்தி ஹோமமும் நடைபெற்றது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

    Share
  • விடை பெறுகிறேன் !

     

     

    மூலம் : பீட்டில்ஸ் பாடகர்

    தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

    ++++++++++++++++++

    தயவு செய்து எழுப்பாதே என்னை,

    நாளைப் பொழுது இரவு வரை !

    தாமதம் செய்யேன் நானினி !

    இன்றிரவு கழிந்து நாளை

    என்றாகும் போது,

    விடைபெற்றுக் கொண்டு நான்

    வெளியேறுவேன் !

    போய் வர்ரேன் ! போய் வர்ரேன்

    கண்மணி !

    உதட்டில் காத்திருக்கும் பாடல்கள்

    உணர்ச்சி ஊட்டு மெனக்கு !

    ஒளிந்திருக்கும் அவை உள்ளத்தில் !

    கையில் கொண்டு வரும் பூங்கொத்தை

    கதவருகில் வைத்துச் செல் !

    காத்திருக்கும் ஒருத்திக்கு அதனை

    விட்டு வைப்பேன் !

    வெகு தூரத்தில் தனித்துப் போன

    என் காதலி பாடிக் கொண்டு

    என்னை அழைக்கிறாள்

    தன்னிடத்துக்கு !

    தனித்துப் போன காதலி

    பாடி என்னை அழைக்கும் போது,

    ஓடிச் செல்ல வேண்டும் நான் !

    போய் வர்ரேன் ! போய் வர்ரேன்

    கண்மணி !

    ++++++++++++++++++++

    Share
  • சூரிய குழுமக் கோள்கள் தோன்றிய பூர்வ காலப் பிரளயத்தில் பூமிபோல் இருமடங்கு பளுவுள்ள அண்டம் மோதியதால் யுரேனஸ் அச்சு பேரளவு சாய்ந்தது

    Posted on July 8, 2018

     

    ++++++++++++++++++

    சூரிய குடும்பக் கட்டுப்பாட்டில்
    சுழல் கோள்கள் தன்னைச்
    சுற்றும் விந்தை யென்ன ?
    சூரியக் கோள் பூமி மட்டும்
    நீர்க் கோளாய் மாறிய மர்மம் என்ன ?
    நீள் வட்ட வீதியில் அண்டங்கள்
    மீள் சுற்றும் நியதி என்ன ?
    பூமியில் மட்டும்
    புல்லும், புழுவும், புறாவும்
    ஆறறிவு மானிடமும்
    மீண்டும் மீண்டும் பிறப்ப  தென்ன ?
    அகக்கோள்கள் பாறையாய், புறக்கோள்கள்
    வாயுப் பந்தாய் பரிதியைச் சுற்றி
    வருவ தென்ன ?
    யுரேனஸ் கோள் அச்சும்
    பேரளவு சாய்ந்து போன தென்ன ?
    காரணம் கோள் மோதலா ?
    வக்கிரமாய்ச் சுழன்று
    சுக்கிரன் மட்டும்
    திக்குமாறிப்
    போன தென்ன ?
    தன்னச்சில் சுழாமல் வெண்ணிலா
    முன்னழகைக் காட்டிப்
    பின்னழகை
    மறைப்ப தென்ன ?

    ++++++++++++++

    பூர்வீகத்தில் புறக்கோள் யுரேனஸை பூதக்கோள் ஒன்று தாக்கிச் சுற்றச்சைப் பேரளவு சாய்த்துவிட்டது.

    4 பில்லியன் ஆண்டுகட்கு முன்பு பூமியைப் போன்று இருமடங்கு பளுவுள்ள பூர்வ அண்டம் ஒன்று மோதி யுரேனஸ் சுற்றச்சு சாய்ந்ததால் துருவப் பகுதிகளில் பெருங்குளிர்ச்சி [ -216 C ( -357 F)] ஏற்படுகிறது என்று புதியதோர் ஆய்வு அறிக்கை 2018 ஜூலை 4 ஆம் தேதி வெளியாகியுள்ளது.    இதை வெளியிட்ட ஆய்வுக் குழுவினர் இங்கிலாந்தின் டுரம் பல்கலைக் கழகத்தின் வானியல் நிபுணர்.  யுரேனஸ் சுற்றச்சின் பேரளவு  சாய்ந்திருப்பதால் அக்கோள் வளர்ச்சி பெரிதளவு பாதிக்கப் பட்டு விட்டது.

    வானியல் குழுவினர் தமது புதிய நுணுக்க கணினியில் போலி நிகழ்வுகளை நிறுவிப் பல்வேறு பளு அண்டங்களை மோத விட்டுப் புறக்கோள் யுரேனஸ் எவ்விதம் விருத்தியாகி வந்துள்ளது என்று ஆய்வு செய்துள்ளார்.  புறக்கோள் யுரேனஸின் அச்சு, மற்ற கோள்கள் போலின்றி, ஏறக்குறைய 90 டிகிரி சாய்ந்து, மட்டமாகி  ஆய்வாளி டாக்டர் ஜேகப் கெகரிஸ் கூறுகிறார்.  50  மேற்பட்ட பளுமோதல் காட்சிகளை கற்பனை செய்து, பேராற்றல் படைத்த கணினி மூலம் போலி இயக்கங்களை உருவாக்கிச் சோதனை கள் நடத்தினோம் என்று ஜேகப் தொடர்கிறார்.   யுரேனஸ் கோள் அச்சு சரிந்து பருவநிலை பேரளவு பாதிக்கப்பட்டாலும், அதன் சூழ்வெளி அமைப்பு [Atmosphere] சிதைவாகவில்லை.

     

    Violant beginning

    +++++++++++++

     

    Oigins of Solar System

     

    எறிகற்கள் [Meteors] தாக்கிக் கோள்கள் உருவாயின என்பது மெய்யான முத்திரை அறிவிப் பில்லை.  அந்த சிறு துணுக்குகள் கோள்களின் வடிவ விளைவால் உண்டான உதிரியே தவிர, அவை கோள்களை உருவாக்கிய செங்கற்கள் [Building Blocks] அல்ல.  தற்போதைய இப்புதிய கோட்பாடு சூரியக் கோள்கள் தோன்றிய தாக  முன்னர் கருதப் பட்ட கொள்கையைத் திருத்தி விடும்.   அதாவது பூர்வீக சூரிய தோற்ற ஏற்பாடு நாம் எதிர்பார்த்ததை விடப் பெரும் மோதல் கொந்தளிப்பில் உண்டானதாகத் தெரிய வருகிறது.

    பிரான்டன் ஜான்சன் [Post doctorate, MIT Dept of Earth]

    யுலிஸிஸ் சூரிய விண்ணுளவியின் கருவிகள் இன்னும் சீராகப் பணியாற்றிச் சூரியப் புயல், அகிலக் கதிர்கள், சக்தி வாய்ந்த துகள்கள், சூரிய காந்த அரங்கம் பற்றிய தகவலைத் தொடர்ந்து அனுப்பி வருகின்றன. . . . ஏவிய நாளிலிருந்து (அக்டோபர் 1990) எந்தக் கருவியும் இதுவரைப் பழுதாகவில்லை !

    ரிச்சர்டு மார்ஸ்டன், யுலிஸிஸ் சூரிய விண்ணுளவித் திட்ட மேற்பார்வை விஞ்ஞானி (European Space Agency)  [ஏப்ரல் 15, 2008]

     

    Meteorite impacts on Planets

    பூர்வச் சூரியக் கோள்கள் தோற்றத்தின் மாறுபட்ட கோட்பாடு

    பூர்வீகச் சூரியக் கோள்கள் தோன்றியதால் உண்டான எச்சத் துணுக்குகளே முரண் கோள்கள் [Asteroids]  என்னும் கோட்பாடு இப்போது [2015 ஜனவரி 15] இயற்கை விஞ்ஞான நூல் வெளியீட்டின் அறிவிப்புப்படி உறுதியாகி வருகிறது.  முரண் கோள்கள்  சூரியக் கோள்களின் உருவாக்கத் தோற்றத்துக்கு  மூலப் பொருட்கள் அல்ல. சூரியக் கோள்கள் தோன்றத் தேவை யான மூலச் செங்கற்கள் [Building Blocks] நாமறிந்த முரண் கோள்கள் அல்ல என்பதே புதிய முடிவு;   அமெரிக்காவின் பர்டே [Purdue] பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர், பிரான்டன் ஜான்சன் கூறுவது,  ” நான்கு பில்லியன் ஆண்டுக்கு முன்பே பூர்வச் சூரியக் கோள் பிறப்புக் கருவில் [Planetary Embryos]  ஆரம்பத்திலே வித்துகள் இருந்தன,” என்று.

    Hypergiant Star with disks of dust.

    முரண் கோள் முறிவுகள் பூமியில் விழும்போது எறிகற்களாய்ச் [Meteorites] சிதறுகின்றன. கடந்த 100 ஆண்டுகளாய் உறைந்த திரவ உருண்டையான கோலிப் பாறைகள்  [Beads like Chondrules]  எறிகற்களில் காணப்பட்டன.  அவை  இருப்பதற்குக் காரணம் தெரியாமல் இதுவரை மர்மமாகவே இருந்தது.  இப்போது விளைவுகளைத் தாக்கல் மாடலில் [Computer Impact Model] இட்டுப் பார்த்தால் செம்மையாகப் பொருந்துகின்றன.

    முடிவுகள் இவைதான் :

    1.  முரண் கோள்கள் [Asteroids] பரிதிக் கோள்கள் உருவாக்கத்தில் விளந்த கிளைப் பொருட்கள்.   அவை கோள்கள் வடிக்கத் தேவையான மூலச் செங்கற்கள் அல்ல.

    2.  உண்டையான கோலிகள் [chondrules] மோதலில் தோன்றிய பளிங்குகளே.  சூரியக் கோள் வடிவாக அவை தேவைப்படா.  அவையும்  கோள்கள் உருவாகத் தேவையான மூலச் செங்கற்கள் அல்ல.

     

    நமது சூரிய மண்டலம் எப்போது தோன்றியது ?

    வானியல் விஞ்ஞானிகளும், பூதளவாதிகளும் (Astronomers & Geologists) பூமியின் வயதைக் கணித்து அதிலிருந்து பரிதி மண்டலத்தின் தோற்ற வயதை அறியப் பல்வேறு முறைகளைக் கையாள்கிறார்.  நாமறிந்த பூமிப் பாறைகளின் கதிரியக்கத் தேய்வு வீதங்களைப் “பாறைக் கதிரளப்புக் காலக் கணிப்பு” மூலம் (Radiometric Dating of Rocks) கணக்கிட்டுச் சூரிய குடும்பம் சுமார் 4.6 பில்லியன் ஆண்டுக்கு முன்பு தோன்றியிருக்கலாம் என்று கருதுகிறார்கள்.  பூமியின் பூர்வீகப் பாறை வயது கதிரியக்கத் தேய்வு வீதக் கணிப்பில் 3.9 பில்லியன் ஆண்டுகள் என்பது தெரிய வருகிறது !  பூதளத் தட்டு நகர்ச்சிகள் (Plate Tectonics) தூண்டி பூமியில் எழும் பூகம்ப எரிமலை நிகழ்ச்சிகளால் பூர்வீகப் பாறைகள் நிலைமாறி அவற்றைக் காண முடியாமல் சிதைத்து விடுகின்றன !

    பூமியின் பூர்வீகப் பாறைகளைத் தவிர விண்வெளிக் கற்கள், எரிகற்கள், நிலவிலிருந்து அல்லது செவ்வாய்க் கோளிலிருந்து வீழும் விண்கற்கள் மிகத் துல்லியமாகப் பரிதி மண்டல வயதுக் காலத்தை நிர்ணயம் செய்ய உதவுகின்றன.  அந்த மாதிரிகளின் கதிரியக்கத் தேய்வு வீதத்தைக் கணித்ததில் அவை 4.6 பில்லியன் ஆண்டு வயதைக் கொண்டவை என்று அறியப்பட்டு, பரிதி மண்டலம் அந்த வயதை ஒட்டி உண்டாகி இருக்க வேண்டும் என்று யூகிக்கப்படுகிறது.

    நமது சூரிய மண்டலம் எப்படி உண்டானது ?

    விஞ்ஞான வரலாற்றில் எத்தனையோ கருத்துக்கள் மாறிப் போனாலும், பரிதி மண்டலம் எப்படி உண்டானது என்னும் கருத்து கடந்த 250 ஆண்டு காலமாக மாறவில்லை.  1755 ஆம் ஆண்டில் ஜெர்மன் வேதாந்தி இம்மானுவெல் கென்ட் (Immanuel Kant) (1724-1804) முதன்முதலில் தனது நிபுளா கோட்பாடைக் (Nebular Hypothesis) கூறினார்:  அதன்படி பேரளவு வாயு முகில் கொண்ட ஆதிச்சூரிய நிபுளா, பரிதி மண்டலத்தின் சூரியனாகவும், மற்ற அண்டக் கோள்களாகவும் உண்டாக மூலாதாரப் பொருளானது !  1796 இல் பிரெஞ்ச வானியல் நிபுணர் பியர் சைமன் லாப்பிலாஸ் (Pierre Simon Laplace) (1749-1827) அதே மாதிரிக் கோட்பாடை எடுத்துக் கூறினார்.  ஆனால் ஆழ்ந்த விண்வெளியை நோக்கி அவரால் அதற்குச் சான்றுகளை எடுத்துக் காட்ட முடியவில்லை !

    இம்மானுவெல் கென்ட் விளக்கிய நிபுளா கோட்பாடில் இருப்பது இதுதான் : பேரளவுக் கொள்ளளவு வாயு நிறையும் தூசி துணுக்குகளும் திணிவு ஈர்ப்பு (Mass Gravity) விசையால் சேர்ந்து சுற்ற ஆரம்பித்தன.  திணிவு நிறை பெருகப் பெருக ஈர்ப்பு சக்தி மிகையாகி வாயுத் திணிவை இறுக்கிச் சுருக்கி (Gravitational Contraction) வாயுக் கோள்களாகவும், திடக்கோள்களாகவும் உருவாயின.

    இப்போது வானியல் விஞ்ஞானிகள் அவற்றை விபரமாகச் சொல்ல முடிகிறது.  அதாவது முதலில் சூரிய மண்டலத்தின் வாயு முகில் மூலக்கூறு (Molecular Gas Cloud) முறிந்த போது அதன் விரிவு 100 AU (Astronomical Unit) [1 AU = Average distance between Sun & Earth (93 மில்லியன் மைல் /150 மில்லியன் கி.மீ.)] ஆகவும், திணிவு நிறை பரிதியைப் போல் 2 அல்லது 3 மடங்கு இருந்ததாகவும் யூகிக்கிறார்கள்.  அத்தகைய வாயு முகில் ஈர்ப்பு முறிவைத் (Cloud’s Gravitational Collapse) தூண்டி விட்டிருப்பது அருகில் இருந்த சூப்பர்நோவாவின் (Supernova) மின்னல் வெடிப்பில் நேர்ந்த அழுத்த அலையாக இருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது.  வாயு முகில் குவிந்து விழுந்த பிறகு பலமுறைகளில் திணிவு சேர்ப்பு விரைவானது.  முகில் திணிவின் உஷ்ணம் அதிகரித்து அது சுழலத் தொடங்கியது.  வாயுப் பிண்டம் தங்கி அது வட்டத் தட்டு வடிவாக மட்டமானது.  மிகையான ஈர்ப்பு சேமிப்புச் சக்தி (Gravitational Potential Energy) வெப்பமாக மாறி வாயு முகில் அடர்த்தி (Density) அதிகமானது.  அதுவே கோள்களின் உட்கரு உலோகமாகப் பின்னால் திரட்சி யானது.

    பரிதியின் அண்டக் கோள்கள் உண்டான தெப்படி ?

    வட்டவியல் திணிவு நெம்பு நிலைப்புப்படி (Conservation of Angular Momentum) வடிவம் சிறுகச் சிறுகச் சுழலும் மட்டமான தட்டின் வேகம் மிகையானது.  மென்மேலும் விழுந்து சேரும் வாயுவும், தூசி துணுக்குகளும் சேர்ந்து கொண்டு முன்னோடிக் கோள் தட்டு (Proto-Planetary Disk) மையம் தடித்து ஓரம் மெலிவாகித் தமிழகத்தின் “ஆப்பம்” போல் (Pancake) உருவாகியது.  நடுவில் மகா ஈர்ப்புச்சக்தி வாய்ந்த உட்கரு எழுவதும் அப்பால் விளிம்பு நோக்கிச் செல்லச்செல்ல வலுகுன்றிய கோள்கள் உருவாவதும் எப்படி என்று விளக்கிச் சொல்லலாம் ?  பேரளவு வாயுப் பிண்டம் செழித்த நிபுளாவைச் சுற்றிலும் அதன் பூத ஈர்ப்பு மண்டலம் காந்த சக்தியால் சூடாக உள்ளது !  அந்த ஈர்ப்பு வாயுத் துணுக்குகளுக்கு சுழற்சியை உண்டாக்கித் தன் பூத ஈர்ப்புக் குழியில் சுற்றத் தூண்டுகிறது.  அவ்விதம் சிறுகச் சிறுக்கச் சேர்ந்துதான் சுழலும் கிருஷ்ணச் சக்கிரம் போல் அசுர வடிவாகி வட அமெரிக்க வேனிற்தள ஹர்ரிக்கேன் (Tropical Hurricanes) சூறாவளிகள் உருவாகின்றன !

    பேரளவு இயக்கம் மையத்தில் உண்டாகி முன்னோடிச் சேய் விண்மீன் (Infant Proto-Star) விரைவாக வாயுத் திணிவைத் திரட்டி சூரியனாகியது.  அதன் பிறகு 50 மில்லியன் ஆண்டுகளாக பரிதி போதுமான வாயு நிறையைச் சுருட்டிப் பூரண எரிநிலை அடைந்து பிணைவு சக்தி தூண்டப் பட்டு சுயவொளி விண்மீனாக மாறியது.  தட்டின் விளிம்புகளில் மேலும் வாயுத் துணுக்குகள் சேமிப்பாகி அங்குமிங்கும் கண்ட இடங்களில் சிறிதும் பெரிதுமாக வாயுவிலும் திடப் பிண்டத்திலும் கோள்கள் உண்டாயின.

    பரிதி வெப்ப அணுக்கரு சக்தியால் தூண்டப் பட்டதும் அது அசுரப் புயலை எழுப்பித் தூசிகளையும் துணுக்குகளையும் தட்டிலிருந்து வெளியேற்றியது.  அப்போது பூத வாயுக் கோள்கள் மென்மேலும் பெருக்க இயலாது போயின.  தட்டில் தங்கிய மீத வாயுக்கள் பேரளவு வெப்பத்தாலும், ஈர்ப்பு விசையாலும் மூலகமாற்றம் நிகழ்ந்து குளிர்ந்து திரண்டு சிலிகேட்களும், உலோகங்களும் (Silicates & Metals) உண்டாயின.  துணுக்குகளும், தூசிப் பனிகளும் மற்ற கோள்களின் முன்னோடிகளைக் கட்டி மென்மேலும் பெருக்க வைத்துப் பேரளவு அண்டங்களாக்கின.

    பரிதி மண்டலத்தின் புறக் கோள்கள் பனி அண்டங்களாய்க் கட்டுமான மாகின.  வாயுக் கோள்களின் உட்கரு அடர்த்தியாகி வாயு முகில்கள் அவற்றை இறுகிப் போர்த்திக் கொண்டன.  புறக்கோள்களைச் சுற்றிலும் பல துணைக்கோள்கள் உண்டாகிச் சுற்றத் தொடங்கின.  வாயு முகில்கள் வீசி எறியப்பட்டு வால்மீன்களாக “ஓர்ட் முகில்” மந்தையில் (Oort Cloud of Comets) சிக்கின.  ஓர் அசுரப் பிண்டம் பூமியை மோதி நிலவு உண்டானது.  செவ்வாய்க் கோளுக்குச் சந்திரன்கள் ஏற்பட்டுச் சுற்ற ஆரம்பித்தன.  இவை அனைத்தும் இம்மானுவெல் கான்ட் 250 ஆண்டுகளுக்கு முன்பு கூறிய நிபுளாக் கோட்பாடைத்தான் முற்றிலும் மெய்ப்பிக்கின்றன.

    பரிதி மண்டலப் படைப்பில் காணும் சில புதிர்கள் !

    அண்டக் கோள்கள் ஏன் பரிதியை ஒரே தளமட்டத்தில் நீள்வட்ட வீதிகளில் சுற்றுகின்றன ?  அவற்றின் சீரொழுக்க இயக்க முறைக்கு என்ன காரணம் உள்ளது ?  அகக்கோள்களும், புறக்கோள்களும் சூரியனை ஏன் எதிர்க் கடிகார முறையில் சுற்றி வருகின்றன ? சூரியனையும் மற்ற கோள்கள் போலின்றித் தன்னச்சில் சுக்கிரன் மட்டும் ஏன் நேர்க் கடிகார வக்கிர திசையில் சுற்றி வருகிறது ? பூமியின் நிலவு தன்னச்சில் சுழாது ஏன் ஒரே முகத்தைக் காட்டிக் கொண்டு புது மாதிரிச் சுற்றி வருகிறது ? தன்னச்சில் கோள்களும் எதிர்க் கடிகாரச் சுழற்சியில் சுழல்வது ஓர் விந்தைதான்.  கோள்களின் துணைக் கோள்களும் எதிர்க் கடிகாரச் சுழற்சியில் சுற்றுவதும் ஒரு விந்தைதான்.  இந்த விந்தைகள் அனைத்தும் நிபுளாக் கோட்பாடு கூறும் “சுழற்தட்டு அமைப்பு” விதியைப் பெரும்பாலும் நிரூபிக்கின்றன.

    யுலிஸிஸ் சூரிய விண்ணுளவியின் பணி தொடர்கிறது !

    ஏப்ரல் 15, 2008 ஆம் தேதி அண்டவெளித் தேடல் விஞ்ஞானிகள் 1990 ஆண்டு முதல் பதினேழு ஆண்டுகளாய்ப் பரிதியைச் சுற்றி ஆராய்ந்து வரும் “யுலிஸிஸ் சூரிய விண்ணுளவியைப்” (Ulysses Solar Probe) பூமி ஆட்சி அரங்கிலிருந்து தளர்த்தி ஓய்வாக இருக்கவிட்டு 2013 ஆண்டில் மீண்டும் ஆய்வு செய்ய மாற்றியுள்ளார் !  அப்போதுதான் மறுபடியும் பரிதியின் அடுத்த உச்சநிலைக் கதிராட்டம் தொடங்கும் !  அதுவரை விண்ணுளவியின் ராக்கெட் உந்தல் எரிசக்தியை வீணாக்காமல் சேமித்து வைத்து சில இயக்கங்களையும் முடக்கி உளவி ஓய்வெடுத்துக் கொள்ள ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது !  பரிதியிலிருந்து 125 மில்லியன் மைல் தூரத்தில் பரிதியை மையமாகக் கொண்டு சுற்றிவரும் நீள் வட்ட வீதியில் (Helio Centric Orbit) உறங்கி வரும் கருவிகளைச் சூரிய கனல் வெப்பமே எழுப்பிவிடும் தகுதி பெற்றது.  இப்போது ஓய்வெடுக்கும் உளவி பரிதியை விட்டு அப்பால் நகன்று 250 மில்லியன் தொலைவை 2010 ஆண்டில் அடைந்து விடும்.

    [தொடரும்]

    தகவல்கள்:

    Picture Credits: NASA, JPL; National Geographic; Time Magazine, Astronomy Magazine.

    1. Our Universe – National Geographic Picture Atlas By: Roy A. Gallant (1986)
    2. 50 Greatest Mysteries of the Universe – How did the Solar System form ? (Aug 21, 2007)
    3. Astronomy Facts File Dictionary (1986)
    4. The Practical Astronomer By Brian Jones & Stephen Edberg (1990)
    5. Sky & Telescope – Why Did Venus Lose Water ? [April 2008]
    6. Cosmos By Carl Sagan (1980)
    7. Dictionary of Science – Webster’s New world [1998]
    8. The Universe Story By : Brian Swimme & Thomas Berry (1992)
    9. Atlas of the Skies – An Astronomy Reference Book (2005)
    10 National Geographic Picture of Our Universe By Roy Gallant: (1986)
    11 Universe Sixth Edition By: Roger Freedman & William Kaufmann III (2002)
    12 Physics for the Rest of Us By : Roger Jones (1992)
    13 National Geographic – Frontiers of Scince – The Family of the Sun (1982)
    14 National Geographic – Living with a Stormy Star – The Sun (July 2004)
    15 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40206291&format=html[சூரியன்]
    16 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40804101&format=html(What will Happen to the Sun ?)
    17 Solar System Formation By Jeff Scott (October 16, 2005)
    18. Spaceflight Now -Breaking News. Controllers Working to Keep “Ulysses Sun Orbiter Alive” By :Stephen Clark (www.spaceflightnow.com/news/n0804/15ulysses) [April 18, 2008]

    19.  http://www.spacedaily.com/reports/A_twist_on_planetary_origins_999.html  [January 15, 2015]

    20. http://www.spacedaily.com/reports/Meteorite_material_born_in_molten_spray_as_embryo_planets_collided_999.html  [January 15, 2015]

    21. https://solarsystem.nasa.gov/planets/uranus/overview/

    22. https://space-facts.com/uranus/

    23. https://theplanets.org/uranus/

    24.  https://en.wikipedia.org/wiki/Uranus  [July 5, 2018]

    ******************

    S. Jayabarathan [jayabarathans@gmail.com] July 8, 2018  [R-1]

    Share
  • பல்கலைக்கழக மானியக் குழுவில் மாற்றம் ?

    பவள சங்கரி

     

    தலையங்கம்

     

    பல்கலைக்கழக மானியக் குழுவிற்குப் பதிலாக இந்திய உயர் கல்வி ஆணையம் அமைப்பதாக இணையதளத்தில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. வரும் 7ம் தேதி வரை பொது மக்கள் தங்கள் கருத்துகளைத் தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த உயர் கல்வி ஆணையமானது நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள் மேம்படுத்துதல் ஆலோசனை வழங்குவது மட்டும் அளிக்கும். நிதியுதவி அளிக்கும் அதிகாரம் எம்.எச்.ஆர்.டி. அமைச்சகத்திடம் வழங்கப்பட்டுவிடும் என்ற கருத்து நிலவி வந்தது. தற்போது நிதியளித்தல் தொடர்பாக எந்தவித முடிவும் எடுக்கப்படவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதுவரை இயங்கி வந்த பல்கலைக்கழக மானியக் குழுவே ஓரளவிற்குச் சிறப்பாகவே செயல்பட்டு வருகிற நிலையில், பல்கலைக்கழக மானியக் குழுவிற்குப் பதிலாக உயர் கல்வி ஆணையத்தின் தேவை என்ன. சிறு குறைகள் ஏதும் இருந்தால் அதை மட்டும் நிவர்த்தி செய்வதை விட்டு அந்த அமைப்பையே மாற்றி அதிகாரமற்ற அமைப்பாக மாற்றுவது எவ்வாறு சரியான முடிவாக இருக்கும். சில முக்கியமானத் திட்டங்கள் செயலாக்கம் செய்தால் மட்டும் நிதியளிக்கப்படும் என்ற கட்டுப்பாடு இருக்கும் வகையில், தேர்தல் ஆணையம் போன்று அரசியல் குறுக்கீடு அற்ற பல்கலைக்கழக மானியக் குழுவே சிறப்பான ஒன்றாக இருக்கும். இல்லையென்றால் ஆட்சியிலிருக்கும் கட்சிகளின் கருத்துகளைப் பிரதிபலிக்கக்கூடிய நிறுவனங்களுக்கும், ஆட்சியாளர்களின் கருத்துகளை ஏற்பவர்களுக்கும் மட்டுமே நிதி சென்றடையும் என்பதே நிதர்சனம்.

    Share
  • பனுவல் வரலாற்றுப் பயணம் – 8

    அன்புள்ள வாசகர்களே,

    தூசி, மாமண்டூர் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்கள் காஞ்சிபுரம் அருகே உள்ளது. தூசி என்றால் குதிரை படை நிறுத்துமிடம் என்பது பொருள். இவ்வூரில் உள்ள மலை அடிவாரத்தில் பல்லவ மன்னன் முதலாம் மகேந்திர வர்மன் கால குடைவரைக் கோயிலும் அவன் பெயரிலேயே அமைக்கப்பட்ட சித்ரமேகத் தடாகம் என்ற மிகப்பெரிய ஏரியும் அமைந்திருக்கின்றன. அக்கோயிலில் உள்ள கல்வெட்டு மிகவும் பெரியது.

    இம்மலைமேல் சமண முனிவர்கள் வாழ்ந்த இயற்கையான குகைத்தலமும் அதில் தமிழ்ப் பிராமி கல்வெட்டும் உள்ளன. இது சங்ககாலத்த்தை சேர்ந்தது. இதையெல்லாம் கண்டு களிக்கவும் கல்வெட்டுகள் கூறும் வரலாற்றுத் தகவல்களை அறிந்து கொள்ளவும் வரலாற்றுப் பயணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    வழி காட்டிகள்:

    முனைவர்.ஆ.பத்மாவதி

    முனைவர்.மாக்சிய காந்தி

    கல்வெட்டு ஆய்வாளர்கள்.

    Call 9789-00-9666 or 044-431-00-442 for booking and more details

    நாள் : JULY 22,2018
    தொடக்கம் : காலை 6:30 மணி – பனுவல் புத்தக விற்பனை நிலையம்
    திரும்புதல் : இரவு 8:00 மணி – பனுவல் புத்தக விற்பனை நிலையம்

    பயணக் கட்டணம் : ரூ1000/-

    காலை உணவு , மதியம் உணவு, தேனீர், நினைவு பரிசு வழங்கப்படும்.

    முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை.

    Contact Address:

    Panuval Bookstore

    112, Thiruvalluvar Salai,

    Thiruvanmiyur. Chennai – 41.

    Ph: 044-431-00-442 | 9789009666

    Share
  • மதுவிலக்கும் மனிதனும்

    மனித சமுதாயம் மாட்சிமை பெற்று விளங்க இலக்கியங்கள் பல தோன்றி நன்னெறி காட்டின. ஒருவனுக்கு ஏற்படுகின்ற தீமையும் நன்மையும் பிறரால் ஏற்படுவது கிடையாது என்னும் கருத்து, ‘தீதும் நன்றும் பிறர்தர வாரா’ முதலிய கூற்றுகளின் வழி உணர்த்தப்பட்டன. தனிமனிதனின் சுய ஒழுக்கமே அவனுடைய சமூகத்தின் உயர்வுக்கும் தாழ்வுக்கும் நிலைக்களனாக அமைகிறது. பேரின்பத்தைத் தேடாமல், சிற்றின்பத்தில் மகிழ்ந்தும், மூழ்கித் திளைத்தும் தங்களைத் தாமே அழித்துக் கொள்ளும் நிலைக்குப் பலர் சென்றனர். இந்நிலையில் தமிழ்மொழியில் இறவாத புகழுடைய பெருநூல்கள் பல தோன்றி தீய வழியில் செல்வோரை விலக்கி நல்வழிகாட்டப் பயன்பட்டன.

    தனிப்பட்ட ஒருவனின் செயல்பாடென்று உலகில் எதுவும் இல்லை. ‘ஒருவரறிந்தது உலகறிந்தது’ என்பர். அதைப்போன்றே ஒருவர் செய்தது உலகம் செய்ததாக அமைந்து விட வாய்ப்புண்டு. நல்லொழுக்கம் இன்றி அறிவை மழுங்கச் செய்து, தன்னையும் தன்னைச் சார்ந்தோரையும் துயரத்தில் வீழ்த்தும் சக்தி மதுவிற்கு உண்டு. மதியை மழுங்கச் செய்யும் மதுவினால் ஏற்படும் தீங்குகளை இலக்கியங்கள் எடுத்துக்காட்டியுள்ளன.

    நுண்மான் நுழைபுலம் கொண்ட சான்றோர் பெருமக்கள் அவ்வப்போது தோன்றி மதுவிற்கு எதிராகப் பரப்புரை மேற்கொண்டனர். சிலருக்குச் சான்றோர் கருத்துகள் தேன் வந்து பாய்ந்தது போலவும் பலருக்குத் தேள் கொட்டியது போலவும் அமைந்தன. உலகப்பொதுமறையாம் திருக்குறளில் கள் எனும் மதுவினால் ஏற்படும் தீங்கினை வள்ளுவப் பெருந்தகை குறிப்பிட்டுள்ளார்.
    ‘துஞ்சினார் செத்தாரின் வேறுஅல்லர் எஞ்ஞான்றும்
    நஞ்சுஉண்பார் கள்உண் பவர்’
    (குறள்-926)
    உறங்குபவர் உயிருடையரவராக இருப்பினும் அறிவும் மனவுணர்வும் அந்நிலையில் இல்லாமையால் இறந்தவராகக் கருதப்படுவர். அதுபோல், கள்ளுண்பவர் இறவாமல் இருப்பினும் அறிவையும் உடல்நலத்தையும் இழந்து கொண்டே இருப்பதால், நாள்தோறும் நஞ்சு உண்பவராகக் கருதப்படுவர். இக்குறளின் வழி உயிரை அணு அணுவாகக் கொல்லும் நஞ்சாக மது விளங்குவது புலனாகிறது.
    சிலப்பதிகாரக்காப்பியத்தில் கோப்பெருந்தேவியின் சிலம்பைக் கோவலன் திருடினான் என்ற பொய்ச்செய்தி பாண்டிய மன்னன் காதில் விழ, ஆராய்ந்தறியாத மன்னன் திருடியவனைக் கொன்று அச்சிலம்பு கொணர்க என உத்தரவிட்டான். சூழ்ச்சி மிகுந்த பொற்கொல்லன், காவலர்களைக் கோவலன் இருந்த இடத்திற்கு அழைத்துச் சென்றான். அப்போது காவலர்கள்,நல்லவனுக்குரிய இலக்கணமுறைமையோடு இவன் காணப்படுகிறான். இவன் கள்வன் அல்லன் என்றனர். கொலை செய்வதில் குறிக்கோள் கொண்டிருந்த கொல்லன் கள்வர் திறன் பற்றிப் பலவாறு கதை கூறினான். இச்சூழலில் கள்ளுண்ட காவலன், தன் வாளால் கோவலன் உடலில் நடுவே வெட்டினான் என்பதை,

    ‘ கல்லாக் களிமகன் ஒருவன் கையில்
    வெள்வாள் எறிந்தனன்! விலங்கு ஊடு அறுத்து’
    – (சிலப்பதிகாரம்-கொலைக்களக்காதை)

    என்ற வரிகள் உணர்த்தியுள்ளன. கள்ளுண்பவன் சிந்தை தெளிவற்றது. சூழ்ச்சிக்கு மதிமயங்கிய கள்ளுண்டவன், கோவலனைக் கொன்றானென்பதை அறிய முடிகிறது.

    காவிரிப்பூம்பட்டினத்தில் ஆதிரை என்ற கற்பரசி வாழ்ந்தாள். அவள் கணவன் சாதுவன் என்பவன் மது முதலிய தீயசெய்கைகளால் பொன்னையும் பொருளையும் இழந்தான். பின்னர் நல்லறிவு பெற்று வணிகம் செய்யக் கருதி கடல் வழிப் பயணம் மேற்கொண்டான். நடுக்கடலில் கப்பல் செல்லும்போது சுழற்காற்றால் கப்பல் சிதைந்தது. சிதைந்ததில் கிடைத்த மரமொன்றை வைத்து ஒரு தீவில் கரையேறினான். அத்தீவானது நரமாமிசம் உண்ணும் நாகர்கள் வாழ்கின்ற பகுதி. சாதுவனைக் கண்ட நாகர்கள் தங்கள் தலைவனிடம் அழைத்துச் சென்றனர். நாகர் மொழியை அறிந்திருந்த சாதுவன் தலைவரிடம் தனக்கேற்பட்ட துன்பத்தை எடுத்துரைத்தான். மனமிரங்கிய தலைவன் சோர்வுற்ற இவனுக்கு வெம்மையான கள்ளும் மாமிசமும் வேண்டிய மட்டும் கொடுங்கள் எனச் சேவகர்களிடம் கூறினான். இதைக் கேட்ட சாதுவன் திடுக்கிட்டு, கொடுமையான சொற்களைக் கேட்டேன். இவை வேண்டேன் என்கிறான்.

    தலைவன், மகிழ்ச்சியைத் தரும் கள் முதலானவற்றை வேண்டாம் எனக் கூறியதற்கான காரணத்தைக் கேட்க சாதுவன் பின்வருமாறு பதிலளித்தான்.
    ‘ மயக்கும் கள்ளும் மன்னுயிர் கோறலும்
    கயக்குஅறு மாக்கள் கடிந்தனர் கேளாய்’
    – (மணிமேகலை- ஆதிரை பிச்சையிட்ட காதை)

    தலைவனே! அறிவு ஒன்றே மானிடப் பிறவியில் நாம் பெற்ற செல்வங்களுள் முதன்மையானது. அவ்வறிவொன்றே விலங்குகளிடமிருந்து மனிதனை வேறுபடுத்திக் காட்டுகிறது. அவ்வறிவால் நன்மை தீமைகளைப் பகுத்து உணர்கிறோம். அறிவே நம்மை உயர்ந்த இடத்திற்குக் கொண்டு செல்லும். மதுவானது அறிவை மயக்கி கீழ்நிலைக்கு நம்மைக் கொண்டு செல்லுமென்று உணர்த்தினான்.

    திருவாங்கூரில் மதுவிலக்குத் தெடங்கியபோது, மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த கவிமணியால் பாடல் பாடப்பட்டது.

    ‘ வள்ளலெங்கள் காந்திமகான் வாக்குப் பலித்ததடா!
    துள்ளுமுன் பேயாட்டம் தொலைந்ததடா!- கள்ளரக்கா!
    வஞ்சிவள நாட்டிலுன் வாழ்வற்றுப் போச்சுதடா!
    நெஞ்சிலுணர்ந் தோடடா! நீ.
    – (மலரும் மாலையும்- மதுவிலக்குப் பாடல்கள்)

    மனிதனின் சிந்தனையை அழிக்கும் கள்ளினை, ‘கள்ளரக்கன்’ எனப் பாடியுள்ள நிலை கள்ளினால் ஏற்பட்ட தீமையைப் பறை சாற்றுகிறது.
    ‘மதுவை ஒழிப்போம் , மதியைப் பெறுவோம்’

    – முனைவர் கி.இராம்கணேஷ்

    Share
  • நல்வாழ்வுக்கு வழிகாட்டும் நாலடி – 8

    -மேகலா இராமமூர்த்தி

    நல்லவற்றைக் கைக்கொண்டும் அல்லவற்றைக் கடிந்தொழுகியும் வாழ்வதற்குக் கேடில் விழுச்செல்வமாம் கல்வி ஒருவர்க்கு அவசியம்.

    முகப்பூச்சும் நகப்பூச்சும் அழகு என்று மகளிரும், பணமும் பகட்டும் அழகென்று ஆடவரும் மருள்வது பொருளற்றது. உண்மையில் கல்வியினாற் கிட்டும் அக அழகே ஒருவர்க்கு உண்மையான அழகாகும்.

    இதனை விளக்கும் நாலடியார் பாடலொன்று…

    குஞ்சி யழகும் கொடுந்தானைக் கோட்டழகும்
    மஞ்சள் அழகும் அழகல்ல – நெஞ்சத்து
    நல்லம்யாம் என்னும் நடுவு நிலைமையால்
    கல்வி அழகே அழகு. 
    (நாலடி – 131)

    மயிர்முடியின் அழகும், வளைத்து உடுக்கப்படும் ஆடையின் கரையழகும், மஞ்சட் பூச்சின் அழகும், மக்கட்கு முடிந்த அழகுகள் அல்ல; நாம் நல்லவராக ஒழுகுகின்றோம் என்று தம் மனம் அறிய உண்மையாக உணரும் ஒழுக்கத்தைப் பயத்தலால் மக்கட்குக் கல்வியழகே உயர்ந்த அழகும் உண்மை அழகுமாம் எனும் நாலடியார் வாக்கு பொருள்பொதிந்த ஒன்றேயல்லவா!

    ”இடைவனப்பும் தோள்வனப்பும் ஈடின் வனப்பும்
    நடைவனப்பு நாணின் வனப்பும் – புடைசால்
    கழுத்தின் வனப்பும் வனப்பல்ல எண்ணோ
    டெழுத்தின் வனப்பே வனப்பு” என்று ஏலாதியும். 

    நுண்மாண் நுழைபுலம் இல்லான் எழில்நலம்
    மண்மாண் புனைபாவை யற்று
    என்று வள்ளுவமும் சொல்லுவதை ஈண்டுப் பொருத்திப் பார்க்கலாம்.

    கரைகாணவியலாக் கல்வியொடு ஒப்பிட்டால் மாந்தரின் வாணாள் அளவில் குறுகியதே; அதிலும் பிணிகள் பலவாயிருக்கின்றன. ஆதலால், நீரை நீக்கிப் பாலைப் பருகும் குருகுபோல் நல்லறிஞர்களும் தக்க நூல்களை ஆராய்ந்தறிந்து கற்பர் என்கிறது நாலடியார்.

    கல்வி கரையில கற்பவர் நாள்சில
    மெல்ல நினைக்கின் பிணிபல – தெள்ளிதின்
    ஆராய்ந் தமைவுடைய கற்பவே நீரொழியப்
    பாலுண் குருகின் தெரிந்து. 
    (நாலடி – 135)
     

    ”கற்க கசடறக் கற்பவை கற்றபின்
    நிற்க அதற்குத் தக என்று” குறளாசான் வலியுறுத்துவதும் இக்கருத்தையே.

    கல்விகற்று அறிஞராகும் வாய்ப்பு எல்லார்க்கும் வாழ்வில் கைகூடும் என்று சொல்லுதற்கில்லை. வறுமை காரணமாகவோ, வேறு காரணங்களாலோ ஒருவரால் கல்விச்சாலைக்குச் சென்று கற்கமுடியாமலும், நல்ல நூல்களைப் படித்தறிய முடியாமலும் போகக்கூடும். அத்தகையோர் நன்கு கற்றறிந்த அறிஞர்களோடு கேண்மைகொண்டு மேன்மையுற வேண்டும் என்று நமக்கு நல்வழி காட்டுகின்றது நாலடி.

    கல்லாரே யாயினும் கற்றாரைச் சேர்ந்தொழுகின்
    நல்லறிவு நாளுந் தலைப்படுவர் – தொல்சிறப்பின்
    ஒண்ணிறப் பாதிரிப்பூச் சேர்தலாற் புத்தோடு
    தண்ணீர்க்குத் தான்பயந் தாங்கு.  
    (நாலடி  – 139)

    இயற்கை மணமும் விளக்கமான நிறமும் அமைந்த பாதிரிமலரைச் சேர்தலால் புதிய மட்பாண்டம் தன்கண் உள்ள தண்ணீர்க்கு அந்த மணத்தைத் தான் தருவதுபோல, தாம் கல்லாதவரேயானாலும் கற்றாரைச் சேர்ந்து பழகினால் பண்பட்ட மெய்யறிவு வரவர உண்டாகப்பெறுவர்.

    ”கற்றில னாயினும் கேட்க அஃதொருவற்கு
    ஒற்கத்தின் ஊற்றாந் துணை”  என்று குறளும் இதனையே ஓங்கி ஒலிக்கின்றது.

    நற்பண்புகளும் ஒழுக்கமும் ஒருவனுக்கு வாய்க்கவேண்டுமானால் அவன் நல்ல குடிப்பிறப்பைக் கொண்டவனாயிருக்க வேண்டும். நற்குடிப்பிறப்பு என்பது இங்கே வருணப் பாகுபாட்டின் அடிப்படையிலான மேலோர் கீழோரைக் குறிப்பதன்று. மாறாக, எந்தச் சாதியில் பிறந்திருந்தாலும், எம் மதத்தைச் சார்ந்திருந்தாலும் நல்லொழுக்கமும் சால்பும் நிறையும் கொண்டோர் உயர்குடிப் பிறந்தோரே ஆவர் என்றறிக.

    பசித்துன்பம் வந்தபோதும் அரிமா புல்லைக் கறிக்காது; அதுபோல் தாம் உடுத்தியிருக்கும் உடை பொலிவிழந்தாலும், உடல் மெலிவடைந்தாலும் நற்குடிப்பிறந்தார் தமக்குரிய ஒழுகலாற்றில் குறைவுபடார் என்பது நாலடியார் நவிலும் உண்மை.

    உடுக்கை உலறி உடம்பழிந்தக் கண்ணுங்
    குடிப்பிறப் பாளர்தங் கொள்கையிற் குன்றார்
    இடுக்கண் தலைவந்தக் கண்ணும் அரிமா
    கொடிப்புற் கறிக்குமோ மற்று. 
    (நாலடி – 141)

    ”பசி பெரிதாயினும் புல்மேயா தாகும் புலி” எனும் பழமொழி நானூற்றுப் பாடலை இங்கே நாம் நினைவுகூரலாம்.

    கொள்கை உறுதிகொண்ட நற்குடிப்பிறந்தோர் தமக்கு இன்மை வந்த காலத்தும் தம்மாலியன்ற நன்மைகளைப் பிறர்க்குச் செய்வதை ஒழியார்.

    வளமான பெரிய வீடு வளங்குறைந்த காலத்தில் கட்டுக்குலைந்து, கறையானால் கவ்வப்பட்டபோதினும், அதில் மழை ஒழுக்கில்லாத பகுதி என்று ஒன்றிருக்கும். அஃதொப்ப, வறுமையினால் மிக்க துன்பத்திற் சிக்கி அலைப்புண்ட காலத்தும், உயர்குடியிற் பிறந்த நல்லோர் தாம் செய்தற்குரிய நற்செயல்களை விடாது செய்துகொண்டேயிருப்பர் என்று நவில்கின்றது நாலடியார்.

    செய்கை யழிந்து சிதல்மண்டிற் றாயினும்
    பொய்யா ஒருசிறை பேரில் உடைத்தாகும்
    எவ்வ முழந்தக் கடைத்துங் குடிப்பிறந்தார்
    செய்வர் செயற்பா லவை. 
    (நாலடி – 147)
     

    ”வழங்குவ துள்வீழ்ந்தக் கண்ணும் பழங்குடிப்
    பண்பில் தலைப்பிரிதல் இன்று” என்று வள்ளுவம் விதந்தோதுவதும் இதனையே அன்றோ?

    மனிதர்களின் பல்வேறு பண்புகளில் ஒன்று அச்சம். அஃது நல்லதா? கெட்டதா? என்று வினவுதிராயின், தீவினையச்சம் நல்லது; நல்லது செய்யவும் அஞ்சுவோமாயின் அஃது தீயது எனலாம்.

    நற்குடிப்பிறந்தார் எதற்கெல்லாம் அஞ்சுவர் என்று ஒரு பட்டியலைத் தருகின்றது நாலடி.

    கல்லாமை அச்சம், கயவர் தொழிலச்சம்
    சொல்லாமை யுள்ளுமோர் சோர்வச்சம் – எல்லாம்
    இரப்பார்க்கொன் றீயாமை அச்சம் மரத்தாரிம்
    மாணாக் குடிப்பிறந் தார்.
    (நாலடி – 145)

    கல்லாததை நினைத்து அச்சம், கயவர் தொழில் செய்ய அச்சம், சொல்லத் தகாதவற்றைச் சொல்லிவிடக் கூடாதே எனும் அச்சம், இரப்பவர்க்கு ஈய இயலாது போய்விடுமோ எனும் அச்சம் இவ்வாறு பல்வேறு அச்சங்களால் சூழப்பட்டிருத்தலால் உயர்குடிப் பிறந்தோர் நடுக்கடலிற் செல்லும் மரக்கலத்தை ஒப்பர் என்கிறது நாலடியார்.

    ஆம்! நல்லவராயும் உயர்ந்த கொள்கை உடையவராயும் வாழ்தல் என்பது அஞ்சத்தக்க அரிதான செயலே. அதில் சிறு தவறு நேர்ந்திடினும் அவர்க்குக் கிடைக்கும் பழியோ பெரிது. மொத்தத்தில் சாமானியரைவிடச் சான்றோரின் வாழ்வு சவால்கள் நிறைந்தது என்றே கூறவேண்டும்.

    [தொடரும்]

    *****

    துணைநூல்கள்:

    1. நாலடியார் மூலமும் உரையும் – திரு. தி. சு. பாலசுந்தரம்   பிள்ளை
    2. திருக்குறள் தெளிவுரை – மு. வரதராசனார்

    3. ஏலாதி – திரு. தி. சு. பாலசுந்தரம் பிள்ளை

     

     

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    180706a Vatsalya A4 lr

    சத்ததின் ஆனந்தம் சித்தின் விளையாட்டு

    அத்தனையும் வாத்ஸல்யம் ஆகப்பார் -புத்தி

    மனமுள்ளம் நெஞ்சென்ற மாயங்கள் நால்வர்

    உனையுண்ணத் தூக்கும் உறவு….கிரேசி மோகன்….!

    Share
  • பழந்தமிழக வரலாறு – 10 ஆ.மாமூலனாரும் செருப்பாழிப்போரும் செங்குட்டுவனும்

    கணியன்பாலன்

    மாமூலனார் பாடல்கள்:

         மாமூலனார், பரணர், கபிலர் ஆகியவர்கள் குறித்து அப்பாதுரையார் தனது தென்னாட்டுப் போர்க்களங்கள் என்ற நூலில், “பரணர் சங்ககாலப் புலவர்களிலேயே மிக முற்பட்டவர், மிக நீண்ட நாள் வாழ்ந்தவர், அவர் முதுமைக்காலத்திலே கபிலர் இளையவராக இருந்தார், மாமூலனாரோ பரணரிலும் பழமையானவர். அவர் மௌரியருக்கு முற்பட்டு கி.மு. 3ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்தவர்” எனக்கூறுகிறார்(11). ஓரளவு பொருத்தமான காலத்தையே அப்பாதுரையார் கூறியுள்ளார் எனலாம். ஆகவே முதலில் ஓரளவு துல்லியமான காலத்தை நிர்ணயிக்கக் கூடிய சாத்தியக்கூறுகள் கொண்ட மாமூலனாரின் ஒருசில சங்கப் பாடல்களைக் காண்போம். இவர் பாடல்கள் மொத்தம் 30 ஆகும். அகநானூற்றில் 27 பாடல்களும், நற்றிணையில் இரு பாடல்களும், குறுந்தொகையில் ஒரு பாடலும் பாடியுள்ளார். புறநானூற்றில் இவர் பாடல் எதுவும் இடம்  பெறவில்லை.

                  மாமூலனார் தனது பாடல் ஒன்றில்(அகம்-265) மகதத்தை ஆண்ட  நந்தர்கள் பெரும் புகழை உடையவர்களாகவும், பெரும் படை உடையவர்களாகவும்  இருந்ததோடு, மிகப் பெரிய அளவிலான செல்வத்தையும் கொண்டிருந்தனர் என்கிறார்.  நந்தர்கள் காலம் கி.மு.4 ஆம் நூற்றாண்டு ஆகும்.  நந்தர்கள் குறித்துப் பேசிய அவர், தனது வேறு இரு சங்கப் பாடல்களில்(அகம்-251, 281),  நந்தர்களுக்குப் பின், மகத ஆட்சிக்கு வந்த  மௌரியர்களின்  தமிழகப் படையெடுப்பு  குறித்து, வடதமிழகம் மௌரியப் படையெடுப்பால் அழிந்து கொண்டிருந்த போது, சிற்றரசர்களான மோகூர் பழையன் போன்ற, தமிழரசுகளின்  எல்லைக் காவல் படைத் தலைவர்கள், அதனைத்தடுத்து நிறுத்தி, மௌரியப்படைக்குப்  பணியாது எதிர்த்து நின்றனர். அதனால் மோகூர் பழையன் போன்ற தமிழக எல்லைக்காவல் படைத் தலைவர்களின் எதிர்ப்பை முறியடித்து வெற்றிபெற,  வடுகர்கள் வழிகாட்ட, வம்ப மோரியர்கள் (மோரியர் என்பது  மௌரியர் என்பதன் பிராகிருதச்  சொல்லாடல் ஆகும்), மேற்குமலைத் தொடர்ச்சியில் உள்ள  பாறைக் குன்றுகளை வெட்டித் தகர்த்து, பாதையமைத்து, பெரும்படை கொண்டு  தமிழகத்தை நோக்கி  படையெடுத்து வந்தனர் என்கிறார் மாமூலனார்.

           அகம் 251ஆம் பாடலில் மாமூலனார், நந்தர்களின் செல்வ வளம் குறித்து, “நந்தன் வெறுக்கை எய்தினும்”(நந்தர்களின் செல்வத்தைப் பெறினும்), எனக் குறிப்பிட்டுவிட்டு,  மௌரியர்களைப் பற்றிய அம்முதல் பாடலில் அவர்களை “வம்பமோரியர்” எனக்குறிப்பிடுகிறார். இப்பாடல் மௌரியர்கள் தமிழகத்தை நோக்கி  படையெடுத்து வந்தபோது பாடிய முதல் பாடல் ஆகும். நந்தர்கள் வீழ்ச்சியடைந்து விட்டார்கள் என்பதை மாமூலனார் முன்பே அறிந்திருப்பார் எனினும், அதற்குப்பின் ஆட்சிக்கு வந்த புதியவர்கள் யார் என்பதை, மௌரியர்கள் தமிழகத்தின் மீது படையெடுத்து வந்தபோது தான் அவர் அறிந்திருப்பார் போல் தெரிகிறது. அதனால் தான் பழையவர்களான நந்தர்களுக்குப் பின் புதிதாக ஆட்சிக்கு வந்தவர்களைக் குறிப்பிடும் போது அவர்களைப் புதியவர்கள் என்கிற பொருளில் வம்பமோரியர் என்கிறார். அதேசமயம் மௌரியர்கள் குறித்த இரண்டாவது  பாடலான அகம் 281ல் வம்ப என்பதை விடுத்து மோரியர் என்றே மாமூலனார் குறிப்பிடுகிறார்.  மாமூலனார் தவிர வேறுசில சங்கப்புலவர்களும், மௌரியர்களின்  தமிழகப் படையெடுப்பு  குறித்துப் பாடியுள்ளனர்.  வேங்கட மலைத் தலைவன் ஆதனுங்கனைப் பாடவந்த  கள்ளில் ஆத்திரையனாரும்(புறம்-175), தனது அகப்பாடலில் காதலன் கடந்து சென்ற பாதை குறித்துப் பாடிய உமட்டூர் கிழார் மகனார் பரங்கொற்றனாரும்(அகம்-69) மௌரியர்களின்  தமிழகப் படையெடுப்பு  குறித்துப் பாடியுள்ளனர்.

    மௌரியர்களின்  தமிழகப் படையெடுப்பு :

           நந்தர்களை அகற்றிய பின், மகதத்தில் ஆட்சி ஏற்ற  மௌரியர்கள் வட இந்தியாவின்  பெரும்பகுதியைக் கைப்பற்றிய பின்  தென் இந்தியா மீது படை எடுத்ததும், இன்றைய கர்நாடகம் வரை  அவர்கள் தங்கள் படையெடுப்பை  நடத்தியதும் குறித்து  வரலாறு பேசுகிறது.  ஆனால் மௌரியர்கள், வடுகர்கள் துணையோடு  தமிழகத்தைத்  தங்கள் பெரும்படை கொண்டு தாக்கினர் என்கிற, மேலே உள்ள சங்கப் பாடல்கள்  தரும்  நிகழ்வுகள் குறித்து வரலாற்றில் செய்திகள் எதுவும் இல்லை. இப்படை எடுப்பு நடந்த காலம் கி.மு. 3ஆம் நூற்றாண்டின் தொடக்கம் ஆகும். மௌரியர்களின் இந்தத் தமிழகப் படையெடுப்பு, சோழன் செருப்பாழி எறிந்த இளஞ்சேட்சென்னி என்பவனின் தலைமையில் தமிழக ஐக்கிய கூட்டணி அரசுகளால் முறியடிக்கப்பட்டது.  இவன் குறித்தும் இப்போர் குறித்தும் ஊன்பொதி பசுங்குடையாரும், இடையன்சேந்தன் கொற்றனாரும், பாவைக் கொட்டிலாரும் பாடியுள்ளனர்-(12).

    கே. ஏ. நீலகண்ட சாத்திரி &  டி.டி. கோசாம்பி:

             மாமூலனாரின் சங்கப்பாடல்கள் குறித்து கே. ஏ. நீலகண்ட சாத்திரி அவர்கள், “மாமூலனார் கூறும் நிகழ்ச்சிகள் அசோகன் ஆட்சிக்கு வருவதற்கு முன்பே நடைபெற்றிருக்கக் கூடும் என்று நாம் கூறலாம்” எனவும் ‘வம்ப’ என்ற சொல்லுக்குரிய ‘புதிய’ என்பதன்படி, “மாமூலனார் தமது பாடலை இயற்றிய காலத்தில் மௌரியர்கள் தென்னாட்டிற்கு வந்தது அண்மையில் நடந்த நிகழ்ச்சியாய் இருந்திருக்கலாம்” எனவும் மாமூலனாரின் கூற்று நம்பத்தகுந்தவை எனவும் குறிப்பிடுகிறார்-(13). வரலாற்று ஆய்வாளர் ஆர். எஸ். சர்மா அவர்கள், “நந்தர்கள் மிகவும் செல்வச் செழிப்பில் செழித்தனர். மிகவும் வலிமை வாய்ந்தவர்களாய் விளங்கினர்” என்கிறார்-(14). இக்கூற்று மாமூலனார் 2300 வருடங்களுக்கு முன்பு கூறியதோடு ஒத்துப்போகிறது.

         மௌரியர்களின் தமிழகப்படையெடுப்பு குறித்து டி.டி. கோசாம்பி அவர்கள், “அசோகரோ, அவரது தந்தையோ போர் நடவடிக்கைகள் எதிலும் ஈடுபடாமலேயே மைசூர் அவர்கள் வசமானது. பண்டைத்தமிழ்க் கவிதை இலக்கியம் குறிப்பிடும் வம்பமோரியர் என்பது, திருப்பித் துரத்தியடிக்கப்படும் முன்போ அல்லது தம் தேர்களால் கடக்க முடியாத ஒரு மலையால் தடுத்து நிறுத்தப்படும் முன்போ உள்ளபடியே மதுரையையே அடைந்திருந்த ஒரு மௌரியப்படையையே குறிப்பிடுவதாகலாம்” என்கிறார்-(15). மேலே தந்த சங்கப்பாடல்கள், மௌரியர்களின் தேர் முதலான பெரும் படையைக் கொண்டு செல்வதற்குத்தான் மலையை வெட்டி மௌரியர்கள் பாதை அமைத்தனர் என்கின்றன. ஆதலால் மௌரியப்படை மலையால் தடுத்து நிறுத்தப்படவில்லை, அவை தமிழர்களால் துரத்தியடிக்கப்பட்டது. ஆதலால், மௌரியர்கள் தமிழகம்வரை படையெடுத்தனர் என்பதையும் ஆனால் அவர்கள் தமிழரசுகளால் துரத்தியடிக்கப்பட்டனர் என்பதையும் டி.டி. கோசாம்பி அவர்களின் மேற்கண்ட சொற்களும் உறுதிப்படுத்துகின்றன.

    மகத அரசில் ஆட்சி மாற்றம்:

         ஆகவே மாமூலனாரின் பாடல்கள் மகதஅரசில் கி.மு. 4ஆம் நூற்றாண்டில் நடந்த ஆட்சி மாற்றங்கள் குறித்தும், நந்தர்களுக்குப் பின்வந்த மௌரியர்களின் தமிழகப் படையெடுப்பு குறித்தும் பேசுகிறது. மாமூலனார் நந்தர்களைப் பற்றி அறிந்திருப்பதும், மௌரியர்களைப் புதியவர்கள் எனக் குறிப்பிடுவதும் அதே காலகட்டத்தில் அவர் வாழ்ந்து வந்தவர் என்பதை உறுதிப்படுத்துகிறது. கே. ஏ. நீலகண்ட சாத்திரி, டி.டி. கோசாம்பி ஆகியவர்களின் கூற்றும் இதனை வலியுறுத்துகிறது. ஆகவே மகத அரசில் நடந்த இந்த ஆட்சி மாற்றங்களின் ஆண்டுகள் மாமூலனாரின் காலத்தை நிர்ணயிக்கப் பயன்படும் எனலாம். கிரேக்க மாவீரன் அலெக்சாண்டர் கி.மு. 327 வாக்கில் இந்தியாவின் மீது படையெடுத்தான். அவன் கி.மு. 325 வாக்கில் இந்தியாவிலிருந்து திரும்பினான். கி.மு. 323இல் பாபிலோனியாவில்  இறந்தான். அதன்பின் சந்தரகுப்த மௌரியன் நந்தர்களின் மகத ஆட்சியை வீழ்த்தி விட்டு கி.மு. 321 வாக்கில் மகத ஆட்சியைக் கைப்பற்றினான். இந்த ஆண்டுகள் ஆதார பூர்வமான உலக வரலாற்றுக்காலத்தோடு இணைக்கப்பட்ட ஆண்டுகள். முறையானதும் சரியானதுமான இந்த ஆண்டுகளைக் கொண்டு தமிழக வரலாற்றுக்காலம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    மாமூலனார் காலம்:

         நந்தர்கள் சுமார் கி.மு. 365 முதல் கி.மு. 321 வரை சுமார் 44 ஆண்டுகள் மட்டுமே ஆண்டனர். அவர்களில் மகாபத்ம நந்தன் இந்தியா முழுவதும் புகழ் பெற்றவனாக இருந்தான். நந்தர்களின் புகழ் இந்தியா முழுவதும் பரவி இருந்த காலத்தில் இயற்றப்பட்டது தான் மாமூலனாரின் அகம் 265ஆம் பாடலாகும். கி.மு. 321இல் நந்தர்கள் வீழ்ச்சி அடைந்தனர்  என்பதால், அவர்களின் புகழும் அத்தோடு வீழ்ச்சி அடைந்தது. நந்தர்களுக்குப்பின் மௌரியர் ஆட்சியேற்ற பின்னரும், அவர்கள் தமிழகத்தின் மீது படையெடுத்து வந்த போதும் மாமூலனார் வாழ்ந்து வந்தவர். ஆகவே நந்தர்கள் வீழ்ச்சியடைவதற்கு முன்னர் சுமார் கி.மு. 330 வாக்கில் தனது இளைய வயதில் மாமூலனார் நந்தர்களைப் புகழ்ந்து பாடிய பாடல்தான் அகம் 265ஆம் பாடலாகும். ஆகவே அப்பாடலைப் பாடியபோது அவரது வயது 30 எனக் கொண்டு, அவர் கி.மு. 360 வாக்கில் பிறந்தார் எனக் கணிக்கப்பட்டது..

    சோழர்களின் முதன்மை:

         மௌரியர்களின் தமிழகப் படையெடுப்பு குறித்த மாமூலனார் குறிப்புகளுக்கு, அசோகன் கல்வெட்டுகளில் ஆதாரங்கள் உள்ளன. கி.மு. 325 முதல் கி.மு. 300 வரையான காலகட்டத்தில், அதாவது கி.மு. 4ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் மெகத்தனிசு, சாணக்கியர் போன்றவர்களால் தமிழக மூவேந்தர்களில் முதன்மையான அரசாகவும் ஒரே அரசாகவும் குறிக்கப்படுவது பாண்டிய அரசு தான். ஆனால் கி.மு. 3ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் பொறிக்கப்பட்ட, அசோகன் கல்வெட்டுகளில் முதன்மை பெற்றிருப்பது சோழ அரசு தான். பாண்டிய அரசு அசோகனின் இரு கல்வெட்டுகளிலும் இரண்டாவது இடத்தில் தான் குறிக்கப்பட்டுள்ளது. அரை நூற்றாண்டுக்குள் மௌரிய அரசியலில் சோழர்கள் முதன்மை பெற்று, பாண்டியர்கள் இரண்டாம் நிலைக்குத் தள்ளப்பட்ட நிகழ்வே மௌரியர்களின் தமிழகப் படையெடுப்புக்கான ஆதாரமாகும். இதனை விரிவாகக் காண்போம்.

    பெரும்தோல்வி:

         சந்திரகுப்த மௌரியரின் ஆட்சிக்காலம் கி.மு. 321 முதல் கி.மு. 297 வரையான 24 வருடங்கள் ஆகும். அவர் மகன் பிந்துசாரரின் ஆட்சிக்காலம் கி.மு. 297 முதல் கி.மு. 272 வரையான 25 வருடங்கள் ஆகும். சந்திரகுப்த மௌரியரின் ஆட்சிக்காலத்திலேயே, கி.மு. 300க்குப்பின் தக்காணத்தைக் கைப்பற்றும் பணி தொடங்கிவிடுகிறது. ஆனால் பிந்துசாரரின் ஆட்சிக்காலத்தில் அதாவது கி.மு. 297க்குப்பிறகு அது தீவிரப்படுத்தப் படுகிறது. இதுகுறித்து கா. அப்பாதுரை அவர்கள் முனைவர் எம். இராசமாணிக்கனார் அவர்கள் சங்கஇலக்கியங்களில் இருந்து திரட்டிய தொகுப்பை அடிப்படையாகக் கொண்டு, ஒரு விரிவான விளக்கத்தை வழங்கியுள்ளார்-(16).

                    தக்காணத்தையும் தமிழகத்தையும் கைப்பற்றும் மௌரியர்களின் படையெடுப்பு கிட்டத்தட்ட கி.மு. 297 முதல் கி.மு. 288 வரையான காலங்களில் மிகத் தீவிரத்தோடும், மௌரியப்பேரரசின் முழு ஆற்றலோடும் நடைபெற்றது. தக்காணத்தின் பலபகுதிகள் பிடிக்கப்பட்டன. ஆனல் தமிழகத்தை பொருத்தவரை அப்படையெடுப்பு ஒரு பெரும் தோல்வியில் முடிந்தது என்பதுதான் வரலாறு. சங்க இலக்கியங்கள் தரும் செய்தியும் அதுவேயாகும். பாரசீகப்பேரரசு கி.மு. 5ஆம் நூற்றாண்டில் கிரேக்க அரசுகளைக் கைப்பற்ற முயன்றபோது அம்முயற்சி பெருந்தோல்வியில் முடிந்தது போன்ற நிலையே மௌரியப்பேரரசின் தமிழகப் படையெடுப்புக்கும் ஏற்பட்டது. பின் பிந்துசாரரின் கடைசி ஆண்டுகளில் தமிழரசுகளோடு நட்புறவு ஏற்படுத்தப்பட்டது.

    மௌரியப் படையெடுப்பு:

         கி.மு. 297 வாக்கில் பிம்பிசாரன் மகத ஆட்சியில் அமர்ந்தவுடன் தக்காணப் படையெடுப்பைத் தீவிரப்படுத்தினான். மௌரியப்படை தக்காணத்தின்மீது படையெடுத்து வந்த போது அவர்களுக்கு வடுகர்கள் துணையாக இருந்து ஆதரவு தந்தனர். மௌரியப்படையில் சேர்ந்துகொண்ட கோசர்களும், வடுகர்களும் தென்பகுதியில் இருந்த அனைத்து அரசுகளோடும் போர் செய்து வென்று வரலாயினர்.  மௌரியர்கள் முதலில் வடுகர்கள் துணைகொண்டு துளுவ நாட்டைத்தாக்கி அதனை ஆண்ட நன்னன் மரபினனை முறியடித்து, அவனது தலைநகர் பாழியைக் கைப்பற்றிக் கொண்டனர். பின் அதனை ஒரு வலிமையான அரணாக மாற்றியமைத்து அங்கிருந்து அவர்கள் அதியமான் மரபினரையும், சோழநாட்டின் எல்லையிலுள்ள அழுந்தூர்வேள் திதியனையும், பாண்டிய நாட்டு எல்லையிலுள்ள மோகூர் பழையனையும் படிப்படியாகத் தாக்கத்தொடங்கினர்.

    சதிய புத்திரர்கள்:

         அதியமான் மரபினர் மௌரியர்களை எதிர்த்து, தொடர்ந்து இறுதிவரை தாக்குதல் நடத்தினர். தமிழகத்தின் வடமேற்குப் பகுதியில் மேற்குக் கடற்கரையில் உள்ள குதிரை மலை முதல் கொங்குநாடு வரை அதியன்கள் மரபினர் ஆண்டு வந்ததால் அவ்வழியே படையெடுத்து வந்த மௌரியப் படைகளை அவர்கள் கடுமையாக  எதிர்த்துப் போரிட்டனர். அதன் காரணமாகவே அசோகரின் கல்வெட்டில் அவர்களுடைய அரசகுடி வடமொழிப்(பிராகிருதம்) பெயரில், சதிய புத்திரர்கள் என மூவேந்தர்களுக்கு இணையாக இடம்பெற்றனர். இந்த அதியன் மரபினரும், சோழ நாட்டெல்லையில் உள்ள அழுந்தூர்வேள் திதியனும், பாண்டிய நாட்டின் எல்லையிலுள்ள மோகூர்ப்பழையனும் மௌரியர்களை எதிர்த்துத் தாக்கி அவர்களைத் தடுத்து நிறுத்தினர்.

    பார்வை:

    11.அப்பாதுரையார், தென்னாட்டுப் போர்க்களங்கள், பக்: 81.

    12.ஊன்பொதி பசுங்குடையார் பாடிய புறநானூற்றுப்பாடல்: 378; இடையன் சேந்தன் கொற்றனார் பாடிய அகநானூற்றுப்பாடல்: 375; பாவைக்கொட்டிலார் பாடிய அகநானூற்றுப்பாடல்: 336.

    13.நீலகண்ட சாத்திரி, சோழர்கள், தமிழில் கே.வி. இராமன், புத்தகம்-1, நவம்பர்-2009, பக்: 28, 37.

    14.பண்டைக்கால இந்திய, ஆர். எஸ். சர்மா, தமிழில் மாஜினி, NCBH  வெளியீடு, ஜூன்-2004, பக்:180.

    1. டி.டி. கோசாம்பி, ‘இந்திய வரலாறு ஓர் அறிமுகம்’ தமிழில் சிங்கராயர், அக்டோபர்- 2011, விடியல் பதிப்பகம், பக்: 271.

    16.தென்னாட்டுப் போர்க்களங்கள், கா. அப்பாதுரை, ஜூலை-2003, பக்: 57-63.

    Share
  • போப் பிரான்சிஸ்: நம்பிக்கையின் புதிய பரிமாணம்- புத்தக அறிமுகம்

    அழைப்பு

    புத்தக அறிமுகம்

    போப் பிரான்சிஸ்: நம்பிக்கையின் புதிய பரிமாணம்

    (அடையாளம் வெளியீடு)

    ஆசிரியர்:
    நாகேஸ்வரி அண்ணாமலை

    நிகழ்ச்சித் தலைமை:
    சமஸ்
    துணை ஆசிரியர், த இந்து (தமிழ்)

    நாள்: ஜூலை 07 (சனிக்கிழமை)
    மாலை 6.00 மணி

    இடம்: பனுவல்
    112, திருவள்ளுவர் சாலை, திருவான்மியூர், சென்னை, 600041
    கைபேசி, வாட்ஸப் 9789009666

    பங்கு பெறுக

    (ஆசிரியரின் பிற நூல்கள்: அமெரிக்காவின் மறுபக்கம், அமெரிக்க அனுபவங்கள், பாலஸ்தீன-இஸ்ரேல்
    போர், ஐந்து தலைமுறை நாடார் பெண்களின் கதை; ஃபேஸ்புக்: https://www.facebook.com/a.nageswari)

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    170704 A tale of two monkeys – ref to Sugreeva and Hanuman -Ramayana A4 watercolour lr

    ‘அங்கதன் கையில் அதுயிது வேண்டி,
    சங்கரனோ(அனுமார் -ருத்திராம்ஸம்) காலில் சரண்புகும்: -இங்கிரெண்டும்
    மந்திதான் ஒன்று மனிதாம்ஸம்(அங்கதன்), மாருதியோ
    அந்தரி பாகன்(பாகமுடைய) அரன்’’….கிரேசி மோகன்….!
    (அல்லது)
    சரண்புகும் அன்பே சிவம்’’….கிரேசி மோகன்….!

    Share
  • 2018 ஜூனில் ஜப்பான் விண்கப்பல் ஹயபுஸா -2 தளவுளவி, உயிர்மூலவி தேட முரண்கோளில் இறங்கப் போகிறது

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

    ++++++++++++++++++

    https://en.wikipedia.org/wiki/162173_Ryugu

    http://www.spacedaily.com/reports/Japan_space_probe_reaches_asteroid_in_search_for_origin_of_life_999.html

    +++++++++++++++++++++

    நிலவினில் முதற்தடம் வைத்து
    நீத்தார் பெருமை யாய்
    நீல்ஸ் ஆர்ம்ஸ் டிராங் !
    செவ்வாய்க் கோள் ஆய்ந்திடத்
    தவ்விய தளவுளவி களை 
    நாசாவும்
    ஈசாவும் கொண்டு இறக்கின !
    வால்மீன் வயிற்றில் அடித்து
    தூசிகளை ஆராய்ந்தார்
    நாசா விஞ்ஞானிகள் !
    விண்வெளியில் வால்மீன் ஒன்றை
    விரட்டிச் சென்று வால் வீசிய
    தூசியைப் பிடித்து வந்தார்
    காசினிக்கு !
    வக்கிரக் கோள் மாதிரி எடுத்து
    வையத்தில் இறக்கிடும்
    இப்போது ஜப்பானின்
    ஹயபூசா முதல் விண்ணுளவி
    அயான் எஞ்சனை இயக்கி
    ஆறு பில்லியன் மைல் கடந்து
    சீராய் மாதிரி கொணரும் !
    ஓர் யுகத்தில் உலவிய
    முரண்கோள் உயிர் மூலவிகள்
    பூர்வத் தடங் காணப் புறப்படும்
    ஆர்வத் தளவுளவி.
    2025 ஆண்டில்
    அமெரிக்க விண்வெளித்  தீரர்
    வக்கிரக் கோளில்
    வைப்பர் தம் கொடி !

    ++++++++++++++++

    ஜப்பான் விண்ணுளவி  ஹயபூஸா -2 முரண்கோள் ரியூகூவைச் சுற்றுகிறது

     

    [This computer graphics image provided by the Japan Aerospace Exploration Agency (JAXA) shows an asteroid and asteroid explorer Hayabusa2. The Japanese space explorer that will try to blow a crater in an asteroid and bring back samples from inside is nearing its destination after a 3 1/2 -year journey. The unmanned Hayabusa2 has arrived at the asteroid Wednesday, June 27, 2018, about 280 million kilometers (170 million miles) from Earth.]

    +++++++++++++++++++

    ஜப்பான் விண்ணுளவி முரண்கோள் ரியூகுவை முற்றுகை இடுகிறது.

    2018 ஜூன் 27 இல் நெடுந்தூரம் பயணம் செய்யும் ஜப்பானின் விண்ணுளவி ஹயபூஸா -2 அடுத்தோர் முரண்கோள் ரியூகூவை [Asteroid Ryugu] 20 கி.மீ.  [12 மைல்] உயரத்தில் வட்டமிட்டு வருகிறது.  முரண்கோள் ரியூகூ  பூமியிலிருந்து சுமார் 300 மில்லியன் கி.மீ. [187 மில்லியன் மைல்] தூரத்தில் உள்ளது.  “மனித இனத்துக்கு இது ஓர் மாபெரும் அண்டவெளிச் சாதனை,” என்று சொல்கிறார் ஜாக்ஸா திட்ட மேலாளர் [(JAXA) Japan Aerospace Exploration Agency]  யூச்சி சூடா [Yuichi Tsuda].  ஐக்கிய நாடுகளின் அகில நாட்டு முரண்கோள் தினமான  [International Asteroid Day] 2018 ஜூன் 30 தேதிக்கு முன்னால் இந்நிகழ்ச்சி நேர்ந்துள்ளது குறிப்பிடத் தக்கது.

    Shoemaker Asteroid

    ஹயபூஸா என்றால் “கழுகு” என்று பொருள்.  குளிர்ச் சாதனப் பெட்டி [Refrigerator] அளவு இருக்கும்.  ஜப்பானின் முதல் கழுகு 2010 இல் உருளைக் கிழங்கு போன்ற, ரியூகூவைச் சிறிய முரண்கோள் ஒன்றைத் தொட்டு மாதிரி மண், பூமிக்குக் கொண்டு வந்தது.  இது இரண்டாவது குழுகு. 2014 டிசம்பரில் ஏவப்பட்டது.  திட்ட நிதி ஒதுக்கு : 274 மில்லியன் டாலர். [2014 நாணய மதிப்பு]. பயணக் காலம் : 1302 நாட்கள். கடக்கும் தூரம் : 3.2 பில்லியன் கி.மீ. [19 பில்லியன் மைல்].  ஹயபூஸா -2 தளவுளவியாக முரண்கோளில் இறங்கி, 18 மாதங்கள் முரண்கோளைச் சோதனை செய்யும்.  அந்த நாட்களில் தகுந்த இடமொன்றைத் தேர்ந்து மண் மாதிரிகளைச் சேமித்துக் கொண்டு அது பூமிக்கு மீளும்.

    Japan’s Hayabusa 2 probe has reached the asteroid Ryugu, thought to contain organic matter from the dawn of the solar system. (Artist rendering courtesy of JAXA)

    ம?ண் மாதிரிகளைத் தோண்டிச் சேமிக்கப் பயன்படும் கருவி யின் பெயர் : தகர்ப்பி  [Impactor].  தகர்ப்பி 2. கி.கி. [4 பவுண்டு] தாமிரச் சுத்தியலால் குத்தித் தோண்டி, தரைக்குக் கீழ் உள்ள மண்னை எடுத்துக் கொள்ளும்.  சூரியக் கதிர் தாக்காத, காற்றோட்டம் மாற்றாத மண்ணைச் சோதிப்புக்கு எடுத்துக் கொண்டு புவிக்கு  மீளு ம்.   அவற்றில் உயிர்மூலவி உள்ளதா என்பது  பூமியில்  ஆராயப்படும்.  பிரபஞ்சத் தோற்றப் பூர்வக் கோளான ரியூகூ முரண்கோளில், ஏதாவது ஆதார அடிப்படை யில்  உள்ளதா என்றும் அறியப்படும்.

     

    ஹயபுஸா -2 தளவுளவி  500 மீடர் அகலமுள்ள முரண்கோளில் 30 செ.மீ. அகலக் குண்டைப் போட்டு, அது வெடித்து ஏற்படும் ஒரு மீடர் குழியில் மண் மாதிரி எடுக்கும்.    அக்குழி மண் மாதிரி சூரியக் கதிரடிப் பெருமளவு  தாக்காமல்  புதைந்து கிடப்பது.   அந்த மாதிரி மண் முரண் கோளின் இரசாயனப் பூர்வ நிலையைக் காட்டும்.   உயிரனப் பூர்வ மூலவிகளை அறிய முரண்கோள் மாதிரியில் அமினோ அமிலம் [Amino Acids]  இருப்பது நிரூபிக்கப் பட வேண்டும்.

    மகடோ  யோஸிகாவா  [ஹயபூஸா -2  ஜப்பான் விண்வெளித் தேடல் குழு]


    “ஜப்பான் முதல் தளவுளவி ஹயபுஸா, புத்தகத்தில் சொல்லி வைத்தபடித் துல்லியமாகத் தென் ஆஸ்திரேலியப் பாலைவனத்தில் வந்திறங்கிப் பயணத்தை முடித்தது. மேலும் தவிர்க்க வேண்டிய தளங்களில் விழாமல் தப்பிக் கொண்டது.  ஜப்பானிய நிபுணர் எங்கு வந்து விண்சிமிழ் விழத் திட்ட மிட்டாரோ அங்கு பாதுகாப்பாய் வந்து இறங்கியது.”

    டக்லஸ் ஜெர்ரி ஊமெரா சோதனை ஆளுநர் (JAXA)

    “முதல் தளவுளவி மீண்டு வருமா என்று விஞ்ஞானிகள் கவலையோடு அச்சத்தில் இருந்த சமயத்தில், விண்சிமிழ் எதிர்பார்த்ததை விட மென்மையாக இறங்கியதைப் பார்த்து நாங்கள் பேருவகை அடைந்தோம்.  நாலாண்டுகள் நீடிக்க அமைக்கப் பட்ட விண்கப்பல் ஏழாண்டுகள் தொடர்ந்து பணிசெய்ய அதன் மின்கலன்கள் (Batteries) சாகாமல் இயங்கியதைக் கண்டு பூரிப்படைந்தோம்.”

    யோஷியூக்கி ஹசேகா (JAXA Associate Executive Director)

    “மீண்ட விண்சிமிழ் பாலை மணலில் இரவு பூராவும் கிடந்தது.  பகலில் விஞ்ஞானிகள் அதைக் கண்டதும் எடுத்துக் கொண்டார்கள்.  அப்பகுதியில் வசித்த பூர்வீகக் குடிவாசிகள் தமது சொந்தமான புனிதத் தெய்வீகத் தளங்களில் விழவில்லை என்று மகிழ்ந்தனர்.  நல்ல வேளை விண்சிமிழ் நொறுங்காது முழுமையாகப் பாலை மணலில் கிடந்தது.

    ஜப்பான் விண்வெளி ஆய்வக (JAXA) அறிவிப்பு

    ஜப்பான் 2014 இல் அனுப்பும் இரண்டாம் விண்கப்பல் ஹயபுஸா -2 முரண்கோளில் உயிரின மூல இரசாயனத்தைத் தேடும்

    முதல் விண்கப்பல் ஹயபுஸாவைச் செம்மைப் படுத்தி ஜப்பான் 2014 ஆண்டில் வக்கிரக் கோள் [Asteroid : 1999 JU3] ஒன்றை நோக்கி அனுப்பி அதன் மண் மாதிரியை எடுத்துப் பூமிக்கு மீளும் அடுத்தோர் அரிய விண்வெளிச் சாதனை புரியத் திட்டமிட்டுள்ளது.   இந்த தளவுளவி 2018 இல் குறிப்பிட்ட வக்கிரக் கோளை நெருங்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.  தளவுளவி அதன் மண் மாதிரியை எடுத்து பூமிக்கு 2020 ஆண்டில் மீளும் என்று திட்ட மிடப் பட்டுள்ளது.   விண்கப்பல் முரண் கோளை நெருங்க 4 ஆண்டுகளும், திரும்பி வர 2 ஆண் டுகளும் நீடிக்கப் பல பில்லியன் தூரப் பயணமும், மெதுவாக இயங்கும் அயான் எஞ்சின்களும் பிரதான காரணங்கள்.   மனிதரற்ற இந்த விண்வெளித் தேடலுக்கு ஆகும் நிதித்தொகை 2 பில்லியன் டாலர்.   ஹயபுஸா -2 மண் மாதிரி எடுக்கப் போகும் முரண்கோள் பெயர் 1999 JU -3.  அதன் அகலம் ஒரு கிலோமீடர் [சுமார் அரை மைல் ]. முரண் கோளில் உயினங்களுக்கு விதையிட்ட ஆர்கானிக் மூலக்கூறுகள் [Organic Molecules] உள்ளனவா என்று மண் மாதிரியில் தேடப்படும்.

    ஹயபுஸா -2 தளவுளவி  500 மீடர் அகலமுள்ள முரண்கோளில் 30 செ.மீ. அகலக் குண்டடைப் போட்டு, அது வெடித்து ஏற்படும் ஒரு மீடர் குழியில் மண் மாதிரி எடுக்கும்.    அக்குழி மண் மாதிரி சூரியக் கதிரடிப் பெருமளவு  தாக்காமல்  தரைக் கடியில் புதைந்து கிடப்பது.

    அந்த மாதிரி மண் முரண் கோளில் உயிரின மூலவி தோன்றக் காரணமான இரசாயனப் பூர்வ நிலையைக் காட்டும்.   உயிரனப் பூர்வ மூலவிகளை அறிய முரண்கோளில் அமினோ அமிலம் [Amino Acids]  இருப்பது நிரூபிக்கப் பட வேண்டும்.

    நாசா ஸ்டார்டஸ்ட் வால்மீன் குறிப்பணி [Stardust Comet Mission] மூலம் வால்மீன் வாலில் [Comet : Wild 2]  அமினோ அமிலங்கள் இருப்பதை மெய்ப்பித்தது.    ஆனால் வெப்பப் படக்காட்சியில் [Thermal Imaging]  கரிக் கலவைகள் [Carbon Compounds] இருப்பதை வானியல் விஞ்ஞானிகள் முன்பே அறிந்தனர்.

    ஹயபுஸா -2  விண்கப்பலில் உள்ள வேறுபாடுகள்

    முதல் ஹயபுஸா விண்கப்பலில் ஒரு தளவுளவி இறங்கியது.  ஆனால் அது நிரம்ப அளவு மாதிரி மண் ஏனோ எடுக்க முடியாமல் போய் திட்டமிட்டவருக்குப் பெருத்த ஏமாற்றத்தைக் கொடுத்தது.  இரண்டாவது விண்கப்பலில் இரட்டைத் தளவுளவிகள் முரண்கோளில் இறங்குவதற்குச் சேர்க்கப் பட்டுள்ளன.  மேலும் முக்கியக் கருவிகள் யாவும் செம்மையாக்கப் பட்டு இரட்டிக்கப் பட்டுள்ளன.    முதல் தளவுளவியை விட மிகையான மண் மாதிரி எடுக்க இரண்டாவது விண்கப்பல் தயார் செய்யப் படுகிறது.  இரண்டாம் விண்கப்பலும் முதல் ஹயபுஸா போல் அயான் எஞ்சினால் இயங்குவது.

    .  

    முதன்முதல் பூமிக்கு ஹயபுஸா -1  கொண்டுவந்த  வக்கிரக்கோள் மாதிரி மண்

    2010 ஜூன் 14 ஆம் தேதி ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் பூமியில் விழுந்த ஒரு விண்சிமிழை (Space Capsule) தேடிக் கண்டுபிடித்து எடுத்தார்கள். அந்தச் சிமிழ் முரண் கோள் (Asteroid) ஒன்றின் மாதிரி மண்ணை எடுத்து வந்திருக்கலாம் என்பது அறிவிக்கப் பட்டிருக்கிறது.  அந்த முரண் கோளின் பெயர் : இடோகாவா (Asteroid # 25143- Itokawa).  அதைப் பாலவனத் தளத்தில் பாதுகாப்பாய் இறங்கிடத் திட்டமிட்ட ‘ஊமெரா இராணுவத் தளத்தில் (Woomera Military Zone) விழ வைத்தது ஜப்பான் அனுப்பிய விண்ணுளவி  ‘ஹயபுஸா” (Hayabusa).  ஜப்பன் மொழியில் ஹயபுஷா என்றால் ‘கழுகு’ என்று அர்த்தம்.  வெப்பக் கவசம் பூண்ட விண்சிமிழ் (Heat-Resistant Capsule) பாராசூட் குடையால் தூக்கி வரப்பட்டு சிதையாமல் இறங்கி விழுந்து கிடப்பதைக் கண்டார்கள். அதே சமயத்தில் சிமிழைச் சற்று முன் இறக்கிய ஹயபுஸா விண்ணுளவி கவசமில்லாமல் சூழ்வெளி வாயு மண்டலத்தில் வரும்போது உராய்வுச் சூட்டில் எரிந்து வானத்தில் சுடர் ஒளி வீசி மறைந்தது !

    “ஜப்பான் விண்ணுளவி, புத்தகத்தில் சொல்லி வைத்தபடித் துல்லியமாகத் தென் ஆஸ்திரேலியப் பாலைவனத்தில் வந்திறங்கிப் பயணத்தை முடித்தது. மேலும் தவிர்க்க வேண்டிய தளங்களில் விழாமல் தப்பிக் கொண்டது.  ஜப்பானிய நிபுணர் எங்கு வந்து விண்சிமிழ் விழத் திட்ட மிட்டாரோ அங்கு பாதுகாப்பாய் வந்து இறங்கியது.” என்று டக்லஸ் ஜெர்ரி ஊமெரா சோதனை ஆளுநர் (JAXA) கூறினார்.

    “விண்ணுளவி மீண்டு வருமா என்று விஞ்ஞானிகள் கவலையோடு அச்சத்தில் இருந்த சமயத்தில், விண்சிமிழ் எதிர்பார்த்ததை விட மென்மையாக இறங்கியதைப் பார்த்து நாங்கள் பேருவகை அடைந்தோம்.  நாலாண்டுகள் நீடிக்க அமைக்கப் பட்ட விண்கப்பல் ஏழாண்டுகள் தொடர்ந்து பணிசெய்ய அதன் மின்கலன்கள் (Batteries) சாகாமல் இயங்கியதைக் கண்டு பூரிப்படைந்தோம்.” என்று யோஷியூக்கி ஹசேகா (JAXA Associate Executive Director) கூறினார்.

    ஜப்பான் ஹயபூஸா விண்ணுளவியை ஏவியதின் நோக்கம்

    ஆறு பில்லியன் மைல்கள் (5 பில்லியன் கி.மீ) சுற்றுப் பயணம் செய்து முதன்முறை ஒரு முரண்கோளைத் தள ஆய்வு செய்து பூமிக்குத் திரும்பி வரலாற்றுப் புகழ் பெற்ற ஜப்பானின் ஹயபுஸா விண்ணுளவி 2003 மே மாதம் 9 இல் எம். வி ராக்கெட் மூலம் (M.V. Rocket) ஜப்பானின் காகோஷிமா (Kagoshima) ஏவுகணை விண்வெளித் தளத்திலிருந்து ஏவப் பட்டது.  உளவிய முரண் கோளின் பெயர் இடோகாவா என்று ஜப்பான் மொழியில் பெயரிடப் பட்டது.  வக்கிரக் கோளின் அளவு : (540 மீடர்X270 மீடர்X210 மீடர்.) (1800′X900′X700′). விண்ணுளவி முரண் கோளை நெருங்கிய நாள் : 2005 செப்டம்பர் மாத நடுவில்.  ஹயபுஸா முரண் கோளின் வடிவம், சுழற்சி, தள அமைப்பு, நிறம், உட்பொருள் கலப்பு, திணிவு (Composition & Density), வரலாறு போன்றவை 2005 நவம்பரில் இறங்கிய போது ஆய்வு செய்யப் பட்டன.  ஆனால் தளத்தில் மண் மாதிரியை உறிஞ்ச முயன்ற போது ஏற்பட்ட ஒரு கருவியின் பிழையால் திட்டமிட்டபடிப் போதிய அளவு மண் மாதிரி சிமிழில் சேமிப்பாக வில்லை என்று அஞ்சப் படுகிறது.  ஓரளவு தூசி மட்டும் உள்ளே இருக்கலாம் என்று எதிர்பார்க்கப் படுகிறது.  சோதனைக்குச் சிமிழைத் திறக்கும் போதுதான் தூசியின் இருப்பு உறுதி செய்யப்படும்.  விண்சிமிழ் ஆஸ்திரேலியப் பாலையில் வந்திறங்கிய தேதி ஜூன் 13, 2010.

    விண்ணுளவி ‘மினர்னா’ வென்னும் (Mini-Lander MINERVA -Micro Nano Experimental Robot Vehicle for Asteroid) ஒரு சிறு தளவுளவியைத் தூக்கிச் சென்றது.  ஆனால் அது முரண் கோளின் தளத்தில் சரியான தருணத்தில் இறங்காமல் போனது அடுத்த தவறு.  இதற்கு முன்பு விண்கப்பல்கள் கலிலியோ, நியர் சூமேக்கர் போன்றவை (Spaceships : Galileo & NEAR Shoemaker) முரண் கோள்களை அண்டினாலும், எவையும் இதுவரை ஹயபுஸா போல் மாதிரி மண்ணை உருவிக் கொண்டு சோதிக்கப் பூமிக்கு மீண்டதில்லை.  2000 இல் நியர் சூமேக்கர் விண்கப்பல் முரண் கோள் 433 ஈராஸில் (Astroid : 433 Eros) கட்டுப்பாடுடன் இறங்கித் தடம் வைத்தது.  ஆனால் தளவுளவியாக அது இயங்கத் தயாரிக்கப் படாததால், அதன் நகர்ச்சி நிறுத்தம் ஆனது.  ஹயபுஸா முரண் கோள் தளத்தைத் தொட்டு மீண்ட முதன்மை விண்வெளிக் கப்பலென்று “கின்னஸ் உலகப் பதிவுகளில்” (Guinness World Record) பெயர் அடைய ஜப்பான் விண்வெளி ஆய்வகம் (JAXA) தீவிரமாய் முனைந்து வருகிறது.


    ஹயபுஸா -1 விண்ணுளவியின் தனிச் சிறப்புக்கள் என்ன ?

    விண்ணுளவி இரண்டு ஆண்டுகளுக்குப் பரிதியின் ஒளியால் இயங்கும் சீனான் வாயு பயன்படும் அயான் எஞ்சின்கள் (Xenon Ion Engine, Powered By Sun) நான்கைப் பயன்படுத்தி நீண்ட தூரம் (சுமார் 6 பில்லியன் மைல்) பயணம் செய்தது.  விண்கப்பல் மெதுவாகச் சென்றாலும் நீண்ட தூரம் உந்திச் செல்ல முடிந்தது.  மிகக் குன்றிய ஈர்ப்பு விசை கொண்ட முரண் கோளை அண்டியதும் ஹயபுஸா அதனைச் சுற்றாமல் பரிதி மையப் பாதையிலே (Heliocentric Orbit) கோள் அருகில் சென்றது.

    மினர்வா என்னும் மிகச் சிறு ‘சுய இயக்கு வாகனத்தைத்’ (Robotic Vehicle) தூக்கிச் சென்றது விண்ணுளவி.  ஆனால் கடைசி நேரத்தில் அது இயங்காமல் போனது விஞ்ஞானிகளுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்தது.  அந்தச் சாதனத்தின் எடை 590 கிராம் (10 செ.மீ. உயரம், 12 செ.மீ. விட்டம்).  சூரிய சக்தியைப் பயன்படுத்திய விண்ணுளவி ஒரு ‘சுழற்சி கன ஆழியின்’ (A Rotating Flywheel) மூலம் முரண் கோளின் மிகச் சிறிய ஈர்ப்பு ஆற்றல் முற்போக்கை ஆதரவாக்கிக் கொண்டு முரண் கோள் மீது குதித்து மிதந்தது.

    2005 நவம்பர் 12 இல் மினர்வா முரண் கோளில் இறங்க பூமியிலிருந்து சமிக்கை அனுப்பப் பட்டு இயக்கப் பட்டது.  ஆனால் அந்த சமிக்கை ஆணை வருவதற்குள் ஹயபுஸா விண்ணுளவியின் ‘உயரமானி’ (Altimeter) முரண் கோளிலிருந்து உயரம் 44 மீடர் (150 அடி) என்று அறிந்து ‘சுய உயரச் சீரமைப்பு’ (Auto Alitude Keeping Sequence) ஏற்பாடு இயங்க ஆரம்பித்தது.  அதாவது மினர்வா வாகனம் சரியான உயரத்தில் இறங்காமல் விண்ணுளவி மேலேறும் தருணத்தில் கீழிறங்கத் துவங்கியது.  ஆதலால் முரண் கோளில் மினி வாகனம் இறங்காமல் விண்வெளியில் தடுமாறி நழுவிப் போனது ! மினர்வா இறக்கம் திட்டப்படி நிகழ்ந்திருந்தால் அதுவே விண்வெளி வரலாற்றின் முரண் கோளில் தாவிய முதல் விண்வெளி விட்டிலாகப் (Space Hopper) பெயர் எடுத்திருக்கும்.

    இதுவரை முரண் கோள் மண் மாதிரிக்கு விஞ்ஞானிகள் எரி விண்பாறை மாதிரியையே (Meteorite Samples) விளக்கத்துக்கு எடுத்துக் கொண்டார்கள்.  அது நியாயமற்ற ஒப்பீடாகும்.  ஹயபுஸா முரண் கோளின் தனிப்பட்ட மாதிரியைச் சோதித்து அந்தப் பழைய பிரச்சனையைத் தீர்த்து வைக்கும்.  முரண் கோள்களும் எரி விண்பாறைகளும் ஒன்றா அல்லது வேறானவையா என்பதைத் தெளிவாக நிர்ணயம் செய்யப் போகிறது என்று ஹயபுஸா திட்ட விஞ்ஞானி ஹஜிமி யானோ (Hajime Yano) சொல்கிறார்.

    ஜப்பான் விண்வெளி ஆய்வகத்துக்கு (JAXA) ஹயபுஸா திட்டம் நுணுக்கப் பொறியியல் துறை வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்திருப்பதாகப் பெருமை கொள்கிறது.  ஸெனான் வாயுவைப் பயன்படுத்தி ஆறு பில்லியன் மைல் நீண்ட பயணத்துக்கு நான்கு அயான் ராக்கெட் எஞ்சின்களை வெற்றிகரமாக இயக்கியது ஒரு தனிச் சிறப்பே.  சுயத் தூண்டு நகர்ச்சி, ஒளித் தூண்டு நகர்ச்சி, ஆழ்வெளித் தகவல் தொடர்பு, ஈர்ப்பாற்றல் சிறுத்த கோள்களுடன் நெருக்க மிதப்பு (Autonomus & Optical Navigation, Deep Space Cumminication & Command, Close Movements on Space Objects with Low Gravity) போன்றவை விருத்திக்கு ஜப்பானின் ஹயபூஸா வெற்றி வழி வகுத்து முன்னோடியாய் நிற்கிறது.

    ஹயபுஸாவில் இயங்கிய நான்கு அயான் ராக்கெட் எஞ்சின்கள்

    தற்போது அயான் ராக்கெட் எஞ்சின்கள் துணைக்கோள் சுற்று வீதிச் சீராக்கத்துக்கும், முரண் கோள்களை நெருங்குவதற்கும் பயன்படுகின்றன !  இன்னும் 30 ஆண்டுகளில் செவ்வாயிக்கு மனிதர் விண்கப்பலில் சென்று வரவும், தங்கும் விடுதிகளை அங்கே அமைக்கவும் தொடர்ந்து உபயோகிக்கப்படும்.  100 ஆண்டுகளில் நாமிருக்கும் இந்த சூரிய மண்டலத்தை விட்டு அடுத்த பரிதி மண்டலத்தின் பூமியைச் சுற்றி வரலாம்.  அங்கே தடம் வைத்திடலாம்.  அதாவது நீடித்த விண்வெளிப் பயணங்களுக்குப் பிளாஸ்மா ராக்கெட் எஞ்சின்கள்தான் இனிப் பயன்படுத்தப்படும் என்று நிச்சயமாக எதிர்பார்க்கலாம்.

    Rocket Engines Type Thrust (Pound Force) Specific Impulse (Seconds) Lifetime Fuel Usage
    Saturn V F-1 (1x) (1960 years) Chemical 1,700,000 298 minutes
    Space Shuttle Main Engine (1x) (1980 years) Chemical 500,000 440 minutes
    NSTAR Ion Engine   (1) Electric 0.02 3300 years
    NEXT  Ion Engine     (2) Electric 0.07 4300 years
    VASIMR® VX-200(New Plasma Rocket)(2005) Electric 1 5000 >years

    ஆயினும் முதலில் பூமியை விட்டுப் பளுக் கப்பல் கிளம்ப பழைய இரசாயன ராக்கெட்டுகள்தான் தேவைப்படும்.  அயான் ராக்கெட் எஞ்சின்களுக்கு ஆரம்பத்தில் புவியீர்ப்பை எதிர்த்து விண்கப்பலைத் தூக்கிச் செல்ல போதிய உந்தாற்றல் இருப்பதில்லை.  கனமான சாதனங்களை, விண்வெளிக் கப்பலை எடுத்துச் செல்லத் தேவையான பேரளவு உந்தாற்றலை இரசாயன ராக்கெட்டுகள் முதல் ஒரு சில நிமிடங்கள் தருவதற்குத் தக்க தகுதி பெற்றவை.  சிறிது நேரம் ராக்கெட்டுக்கு விரைவாக்கம் மிகுதியாக அளிக்க இரசாயன எரிசக்தியே அயான் ராக்கெட்டை ஆற்றலை விடத் தகுதி பெற்றது.  அதற்கு ஏராளமான திரவ எரிசக்தி தேவைப்படுகிறது.  சுற்றுப் பாதையில் ஏவிய விண்கப்பலை நுணுக்கமாகத் திசை திருப்பவும், சீராக செலுத்தவும், நீண்ட காலப் பயணத்துக்கு உந்து சக்தி அளிக்கவும் அயான் எஞ்சின்கள் உபயோகமாகின்றன.

    அயான் ராக்கெட் எஞ்சினில் ஏன் ஸீனான் வாயு பயன்படுகிறது ?

    பேரளவு விரைவாக்கம், நுணுக்கப் பாதைச் சீரமைப்பு, உந்து சக்தி நீடிப்பு அல்லது குறைப்பு போன்ற விண்கப்பல் நகர்ச்சிக்கு தேவையான திறனியக்கம் “தனித்துவ உந்தாற்றல்” (Specific Impulse) என்னும் கால அளவியலில் குறிப்பிடப் படுகிறது.  உதாரணமாக அப்பொல்லோ விண்கப்பலை நிலவுக்குத் தூக்கிச் சென்ற சனி -5 ராக்கெட்டின் தனித்துவ உந்தாற்றல் சுமார் 300 விநாடிகள்.  அது திரவ ஹைடிரஜனை எரி பொருளாகப் பயன்படுத்தி 1,700,000 பவுண்டு உந்து சக்தியை அளித்தது.  விண்வெளி மீள்கப்பல் ராக்கெட்டுகள் (Space Shuttle Rockets) 500,000 பவுண்டு உந்து சக்தியை விண்கப்பலுக்கு அளிக்கின்றன.  அவற்றின் தனித்துவ உந்தாற்றல் : 440 விநாடிகள்.  புதிய அயான் எஞ்சின் ஒன்றின் தனித்துவ உந்தாற்றல் 4300 விநாடிகள்.  அது தரும் உந்து சக்தி 0.07 பவுண்டு.  பிளாஸ்மா ராக்கெட்டின் தனித்துவ உந்தாற்றல் : 5000 விநாடிகள். உந்து சக்தி : 1 பவுண்டு.

    அதிகமான விரைவாக்கம் அளிக்கும் இரசாயன ராக்கெட்டுகள் குன்றிய தனித்துவ உந்தாற்றல் உடையவை.  எதிர்மாறாக பிளாஸ்மா அயான் எஞ்சின்கள் குன்றிய விரைவாக்கம் கொடுத்தும் நீண்ட தனித்துவ உந்தாற்றலும் தருபவை.  ஸீனான் (Xenon Gas) வாயுவைப் பயன்படுத்தி ஓர் அயான் ராக்கெட் எஞ்சினைப் பல்லாண்டு காலம் விண்கப்பலை நுணுக்கமாகச் செலுத்தி வரலாம்.  ஸீனான் வாயுவில் உள்ள நடுநிலை அணுக்களை வெப்ப சக்தியால் நேர்முனை அயனிகளாக மாற்றி (Positive Ions) மின் காந்த சக்தி மூலம் விரைவாக்கம் தரலாம்.  விரைவாக்கம் பெற்ற அயனிகள் ஏவுகணைக்கு எதிர்த் திசையில் உந்துவிசை (Equal but Opposite Reaction) அளிக்கும்.  அதனால்தான் கனமான அணுக்கள் கொண்ட ஸீனான் வாயு பயன்படுத்தப் படுகிறது.  அது ஆர்கான் வாயு போல் எளிதாக அயனிகளாகும் ‘முடத்துவ வாயு’ (Inert Gas & Easily Ionized).

    முரண் கோள் மாதிரி பாதுகாப்பாய் பூமிக்கு மீட்சி !

    ஹயபுஸா விண்ணுளவி பூமிக்கு மாதிரியுடன் மீளுமா என்று ஐயுற்ற போது ஆஸ்திரேலியா வானத்தில் ஒளி விளக்குபோல் மின்னிக் கொண்டு விண்சிமிழ் குடை பிடித்துப் பிரிந்து கீழே இறங்கி பாலை வனத்து மணலில் விழுந்தது.  சுமந்து வந்த விண்ணுளவி வாயு மண்டலத்து உராய்வில் வானிலே சுடர் விட்டு எரிந்து சாம்பலானது.  அகில நாட்டு விஞ்ஞானிகள் குழுவினர் ஒன்று விநாடிக்கு 12 கி.மீ. வீதம் (7 mps) வேகத்தில் இறங்கும் விண்சிமிழ் 39,000 அடி உயரத்திலிருந்து விழுவதை நாசாவின் ஆகாய ஆய்வகத்திலிருந்து (DC-8 Airborne Laboratory) பார்த்தனர்.  விஞ்ஞானிகள் எதிர்பார்த்தவாறு 510 கி.கி. (1120 பவுண்டு) ஹயபுஸாவின் பெரும்பான்மை விண்ணுளவி எரிந்து போனது.  விண்சிமிழ் வந்து இறங்கிய தளம் தென் ஆஸ்திரேலியாவின் ஒதுக்கமான ஊமெரா பகுதி (Woomera Prohibited Area).  விண்சிமிழ் விழுந்த இடத்தைப் புவியிணைப்புச் சுற்றுத் துணைக்கோள் (Geocentric Positioning System -GPS) கண்டுபிடித்ததும் ஹெலிகாப்டரில் ஒரு குழுவினர் அதை எடுத்து வர அனுப்பப்பட்டார்.  முரண் கோளின் மாதிரி சில வாரங்களில் சோதிக்கப் பட்டு விபரங்களை ஜப்பான் விண்வெளி ஆய்வகம் (JAXA) வெளியிடும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

    ((தொடரும்)

    ************************

    தகவல்:

    Picture Credits: NASA, JPL, ESA, JAXA

    1. Mars Exploration Rover Mission [http://marsrovers.jpl.nasa.gov./mission/status.html] (Jan 27, 2006)
    2. Space Today Online – Exploring the Red Planet, Future Mars Probes from Earth
    3 Science & Technology: ESA’s Mars Express with Lander Beagle-2  [Aug 26, 2003]
    4 Future Space Missions to Mars By: European Space Agency [ESA]
    http://www.thinnai.com/science/sc0925031.html [Author’s Article on Mars Missions]
    5 (a) http://www.thinnai.com/?module=displaystory&story_id=41006061&format=html(Plasma Rocket Engines)
    6 Spacecraft Blasts off to Gather Mars Data By: Associated Press [Aug 12, 2005]
    7 NASA Facts, Mars Exploration Rover By: NASA & JPL [Sep 2004]
    8 From Wikipedia : Phobos (Mars Moon) (June 2, 2010)
    9 Daily Galaxy : The Mystery of Mars’ Moon Phobos Deepens By : Casey Kazan via ESA (June 7, 2010)
    10 From Wikipedia : Moons of Mars (June 9, 2010)
    11. Space Probe Enthralls Japan, as it Heads Home By : Sagamihara (AFP) June 8, 2010
    12 Scientific American Hayabusa Spacecraft Headed Back Toward Earth, Perhaps with Asteroid Dust in Hand By : John Matson (June 11, 2010)
    13 Space Flight Now – Japan Spacecraft will Plunge Back to Earth Sunday By : Stephen Clark (June 12, 2010)
    14 Wikipedia : Missio Type Asteroid Sample Returned to Earth (June 13, 2010)
    15 Space Flight Now :  Hayabusa Completes Fiery Return to Earth (June 13, 2010)
    16 Aviation Week – Japan Hayabusu Spacecraft Capsule Successful Landing (June 13, 2010)
    17. Space Daily : Asteroid SampleReturn Capsule Recovered in Outback Australia (June 14, 2010)
    18 Japan Seeks Guiness Record Listing for Space Probe. (June 15, 2010)
    19 http://en.wikipedia.org/wiki/Asteroid  [August 29, 2012]
    20  National Geographic Magazine :  http://science.nationalgeographic.com/science/space/solar-system/asteroids-comets-article/ (Asteroids and Comets)
    21  http://en.wikipedia.org/wiki/(162173)_1999_JU3  [Asteroid : 1999 JU 3]  (August 17, 2012)
    22 http://www.jspec.jaxa.jp/e/activity/hayabusa2.html  [Japan Aerospace Exploration Agency] (Asteroid Explorer Hayabusa -2)
    23 NBC News :  Japan eyes new mission to sample an asteroid  [August 2012]
    24.  Hayabusa -2 Will Seek the Origins of Life in Space [Asteroids] By Wendy Zukerman ( August 18, 2012).

    25. http://www.spacedaily.com/reports/Japan_space_probe_reaches_asteroid_in_search_for_origin_of_life_999.html[June 27, 2018]

    26. http://www.dailymail.co.uk/sciencetech/article-5890193/Japan-space-probe-reaches-asteroid-search-origin-life.html  [June 27, 2018]

    27.  http://global.jaxa.jp/projects/sat/hayabusa2/  [June 25, 2018] 

    28.  https://www.space.com/41052-best-asteroid-encounters-ever.html?utm_source=notification  [June 30, 20118]

    29.  https://en.wikipedia.org/wiki/162173_Ryugu  [June 30, 2018]

    ++++++++++++++++++

    S. Jayabarathan (jayabarathans@gmail.com) (July 1, 2018) [R-1]

    Share
  • கேசவ் வண்ணம் கிரேசி எண்ணம்

    180704 Krishnapremi – (Rajagopala) watercolour A4 lr

    MIND Made மனுஷன்….!(மந்தி)….!
    —————————————————————

    “மனமற்றுப் போனால்தான் மானுடா சாந்தி
    தினமுற்றுப் புள்ளிவை; தெய்வ -குணமுற்றால்
    வைக்கலாம் புள்ளியை , வாழ்வெதிர் பார்க்குமேல்
    பொய்க்கமா போட்டுப் பழக்கு”….கிரேசி மோகன்….!

    ’மாதவர்கைப் பற்றிடும் மந்திமனம் மாறுது
    தீதுபுரி யாது திருடுது-சீதை
    எஜமான்(ராமர்) வருகை எதிர்பார்த்து இருப்பாள்:
    நிஜமான ஊழியனாய் நில்….கிரேசி மோகன்….

    Share
  • நந்திக்கலம்பகத்தில் அறத்தொடுநிற்றல்

    -க.கவின்பிரியா                                     

    முன்னுரை    

    அன்பின் ஐந்திணை சார்ந்த களவுத் துறைகளுள் அறத்தொடு நிற்றல் தனிப்பெருஞ் சிறப்புடையதாகும். கற்புநெறி தவறாது, களவொழுக்கத்தை முறையாகப் பெற்றோரிடம் வெளிப்படுத்துதல் என்பது இத்துறையின் பொருள். தலைவி தலைவனுடனான காதலை, தோழிக்குக் கூறி அறத்தொடு நிற்பாள். பின்னா்த் தோழி தன் வளா்ப்புத் தாயாகிய செவிலிக்கு அறத்தொடு நிற்பாள். செவிலி தலைவியின் தாயான நற்றாய்க்கு அறத்தொடு நிற்பாள். நற்றாய் தலைவியின் தந்தைக்கும், உடன்பிறந்தோர்க்கும்  வெளிப்படையாய்க் கூறாமல் அவா்கள் அறிந்து கொள்ளுமாறு குறிப்பாகப் புலப்படுத்துவாள். இதனை,

    தந்தையும் தன்னையும் முன்னத்தின் உணா்ப” (தொல்.1083) எனத் தொல்காப்பிய நூற்பா குறிப்பிடும். தலைவி, தோழி, செவிலி, நற்றாய் ஆகிய நால்வரும் பெண்பாலார். அவா்கள் ஒருவருக்கொருவா் தம் உள்ளத்து உணா்வுகளை வெளிப்படுத்திக் கொள்வதில் சிக்கல் இல்லை. இருப்பினும் வெளிப்படையாகக் கூறாமல் குறிப்பாக வெளிப்படுத்துவா். தந்தையும் அண்ணனும் நெருங்கிய உறவினரே ஆயினும் அவா்கள் ஆண்பாலார். ஓா் இளம்பெண்ணின் களவொழுக்கத்தினைக் குறிப்பினால் அவா்கள் உணருமாறு செய்தலே நல்லது என்ற நெறி சாலச்சிறந்தது.

    அறத்தொடு நிற்றல்

    தலைவியின் களவொழுக்கம் பற்றி அலா் எழும்போதும், அவளின் உடற்கண் நேரும் மாற்றங்களுக்குக் காரணம் அறியாமல் அன்னை வேலனை வேண்டி வெறியாட்டு நிகழ்த்தும்போதும், இற்செறிப்பு நிகழும்போதும், வேற்றுவரைவுக்கான ஏற்பாடுகள் நிகழும்போதும், தலைவனின் வரைவு மறுக்கப்படும்போதும் தலைவியின் களவொழுக்கத்தினை மறைத்து வைக்காமல் வெளிப்படுத்துவதே அறனெனக் கருதித் தலைவி தோழியிடம் தன்னுடைய காதலை வெளிப்படுத்துவாள். தோழி செவிலியிடம் கூறுவாள். செவிலி நற்றாயிடம் வெளிப்படுத்துவாள். நற்றாய் தலைவியின் தந்தை மற்றும் தமையனுக்கும் வெளிப்படுத்துவாள்

    நந்திக்கலம்பகத்தில் அறத்தொடு நிற்றல்

    அகமும், புறமும் கலந்துவரப் படைக்கப்படும் கலம்பக இலக்கியமாக நந்திக்கலம்பகம் அகப்பொருளும், புறப்பொருளும் கலந்து இலக்கிய இன்பம் தருகின்றது. நந்திக்கலம்பகத்தில் அகத்துறைகளுள் ஒன்றான அறத்தொடு நிற்றல் என்னும் துறையில் மூன்று பாடல்கள் அமைந்தள்ளன. தோழி செவிலிக்கு அறத்தொடு நிற்பதாக இரண்டு பாடல்களும், செவிலி நற்றாய்க்கு அறத்தொடு நிற்பதாக ஒரு பாடலும் அமைந்துள்ளது.

    தோழி அறத்தொடு நிற்றல்

    தலைவி பிறா் அறியாதவாறு தலைவன்பால் காதல்கொண்டு அவனைச் சந்திப்பாள். தன்னுடைய காதல் ஒழுக்கத்தை வெளிப்படையாக வெளிப்படுத்தமாட்டாள். தோழியானவள் தலைவியிடம் காணப்படும் மாற்றங்களை வைத்தே கண்டறிவாள். பிறகு தலைவி தோழியிடம் தன் காதலைப் பற்றிக் கூறுவாள். தலைவி அறத்தொடு நிற்பதாக நந்திக் கலம்பகத்தில் பாடல் இடம்பெறவில்லை.

    தோழி செவிலிக்குத் தலைவியின் களவொழுக்கத்தினைக் கூறுவதாக பின்வரும் பாடல் இடம்பெற்றுள்ளது.

    புனத்து நின்ற வேங்கைமேல் புகைந்தெழுந்த ஆனையின்
    சினத்தை அன்றொழித்தகைச் சிலைக்கை வீரா் தீரமோ
    மனத்துள் நின்ற வெஞ்சினம் மலைத்தல் கண்ட தீா்ந்தமான்
    வனத்தகன்ற தீர்ந்ததோ நந்தி மல்லை ஆா்ப்பதே” (நந்தி.34)

    தலைவி தலைவன் மீது கொண்ட காதலால் உடல் இளைத்து காதல் நோயுற்றாள். இதைக்கண்டு செவிலி தோழியிடம் தலைவியின் நிலை குறித்துக் கேட்கிறாள். வெறியாட்டு நிகழ்த்த எண்ணுகிறாள் செவிலி. தோழிக்கு தலைவியின் நோயின் காரணம் நன்கு தெரிந்திருந்தாலும் அதை எவ்வாறு செவிலியிடம் உரைப்பது? வெளிப்படையாகக் கூறவும் முடியாது. கூறாவிட்டாலும் தலைவியின் நோய் தீராது. கூறினாலும் தலைவியின் தாய் தந்தையரால் தலைவிக்கும், தலைவனுக்கும் ஊறு நோ்ந்தால் என்ன செய்வது? என்று பலவாறு சிந்தித்துக் கொண்டிருக்கும் வேளையில் மாமல்லபுரத்தின் நான்கு பக்கங்களிலும் பேரிரைச்சல் ஒலி வருவதை உணா்ந்து, அந்த இரைச்சலை வைத்தே தலைவியின் களவொழுக்கத்தைச் செவிலிக்கு உணா்த்த முற்படுகிறாள்.

    நாங்கள் தினைப்புனங் காக்கச் சென்றிருந்த வேளையில் அங்கு வேங்கைமரத்தினடியில் பரணமைத்திருந்தோம். அங்கு மதங் கொண்ட யானை ஒன்று பேரிரைச்சல் இட்டுக்கொண்டு எங்களை நோக்கி வந்தது. நாங்கள் அஞ்சி நடுங்கி நின்றோம். அந்த சமயம் முருகனைப் போன்ற இளங்குமரன் வில்லேந்தி யானையை நோக்கி அம்பு எய்தினான். எங்களைப் பார்த்து அஞ்சாதீா்கள் என்று ஆறுதல் மொழி கூறினான். அவனைப் பார்த்த தலைவி வியந்து நின்றாள். அன்று வேங்கை மரத்தை நோக்கி வெகுண்ட யானையை அம்பெய்து வென்ற வீரா் இங்கே வர அவரைக் கண்டு ஊா் மக்கள் இரைச்சலிடுகின்றனரோ? அல்லது நந்திமன்னனின் பட்டத்து யானை கட்டுத்தறியை  முறித்துக் கொண்டு சங்கிலியை உடைத்தெறிந்து ஓடிவிட்டதோ? அதைப்பிடிப்பதற்கு வீரா்கள் இரைச்சலிடுகின்றனரோ? தெரியவில்லையே? எந்தக் காரணத்தினால் ஒலி உண்டாயிற்றோ? என்று இவ்வாறு கூறி தலைவியின் காதலைச் செவிலிக்கு அறத்தொடு நிற்கிறாள்.

    இதே பொருண்மையில், யானையை அம்பெய்து தலைவியைக் காத்ததாகப் பின்வரும் குறிஞ்சிப்பாடலும் உணா்த்துகின்றது.

    ”மையல் வேழம்
    அண்ணல் யானை அணிமுகத்தழுத்தலின்
    புண்ணுமிழ் குருதி முனம்பாய்ந்தழிதரம் ”  (குறிஞ்சி.165-174)

    தலைவியின் காதல் நோய்க்கு நந்திவா்மனே காரணம் எனவும், தலைவியின் நோய்தீர அவனுக்கே மணம் செய்தல் அறமாகும் எனத் தோழி செவிலித்தாய்க்கு அறத்தொடு நிற்பதாக பின்வரும் பாடல் அமைந்துள்ளது.

    ”துயக்குவித்தான் துயில் வாங்குவித்தான் துயில் வித்திவனை
    வயக்குவித்தானுள்ளம் வஞ்சனை யான் மலா்க் காவகத்து
    முயக்குவித்தான் துகில் வாங்குவித்தான் முனம் நின்றிவளை
    மயக்குவித்தான் மானோதயனென்று வட்டிப்பனே”    (நந்தி.63)

    தலைவி உண்ணாமல், உறங்காமல் சோர்வாகக் காணப்படுவதைக் கண்டு செவிலி தோழியிடம் வினவ, நந்திமன்னன் தலைவியின் நெஞ்சில் குடிகொண்டான்; சோர்வை ஏற்படுத்தினான்;  தூக்கத்தை விலக்கினான். பின் தூங்கச்செய்து கனவில் தோன்றி இவளைத் தன் வசமாக்கித் தன் அன்பிற்கு உாியவளாக்கி, மலர்ச்சோலையில் தன்னைத் தழுவுமாறு செய்து அவளது ஆடைகளை நெகிழச் செய்தான். தலைவி உணா்வினை இழந்து மயக்கங்கொள்ளுமாறு செய்தான் என்பதை நான் உறுதியாகக் கூறுவேன். அவனுக்கே தலைவியை மணம் முடித்தல் நலமாகும். இல்லையேல் தலைவி நெடுநாட்கள் உயிர்வாழாள் என்று தோழி செவிலிக்கு அறத்தொடு நிற்கிறாள்.

    இக்கருத்தொடொப்பப் பின்வரும் திருக்கோவையார் பாடல் அமைந்துள்ளது.

    ”சினக்கலியானை கடிந்தார் ஒருவா் செவ்வாய்ப்பசிய
    புனக்கலியும் கடியும் வரைச் சாரற் பொருப்பிடத்தே” (திரு.293) 

    செவிலி நற்றாய்க்கு அறத்தொடு நிற்றல்

    தலைவியின் களவொழுக்கத்தைத் தோழி செவிலிக்குக் கூற, செவிலி நற்றாய்க்கு (தலைவியின் தாய்க்கு) கூறுவதாக நந்திக்கலம்பகத்தில் பின்வரும் பாடல் அமைந்துள்ளது.

    பெண்களில் சிறந்த தாயே! தெள்ளாறு எனும் இடத்தில் பகைவரை வென்று சினம் தணிந்த நந்திவா்மனுக்கே என் புதல்வியாகிய நம் தலைவி தன் வெண்ணிறச் சங்குகளான வளையல்களை இழந்து வெறுங்கையளாய் நின்றாள் என்று செவிலி நற்றாய்க்குக் கூறுவதாகப் பின்வரும் பாடல் அமைந்துள்ளது.

    ”வேண்டார் எண்ணும் வேந்தா் பிராற்கே மெய்யன்பு
    கொண்டாள் நங்காய் அன்றிவள் என்றால் பொல்லாதோ
    மூண்டார் தெள்ளாற் றுள்ளே மூழ்க முனிவாறி
    மீண்டான் நந்திக்கு என்மகள் தோற்கும் வெண்சங்கே” (நந்தி.71)

    பகைவா்கள் நினைந்து அச்சம் கொள்கின்ற நந்திவா்மனிடம் உள்ளன்பு கொண்டிருக்கிறாள் என்று கூறினால் குற்றம் ஆகுமோ? ஆகாது. உண்மையைக் கூறுவது தவறில்லை. ஆதலால் நந்திவா்மனுக்கே விரைவில் தலைவியை மணம் செய்வித்தலே நன்மையாகும் என்று செவிலி நற்றாய்க்கு அறத்தொடு நிற்கிறாள். 

    முடிவுரை

    தலைவியின் காதலை வெளிப்படையாக வெளிப்படுத்தாமல் குறிப்பாக வெளிப்படுத்தும் பண்பு சிறந்ததாகும். தலைவியின் உடல்நிலை மாற்றங்களுக்குத் தலைவனே காரணம் என்பதை அறிந்தும் அது கருப்பொருளோடு குறிப்பாக வெளிப்படுத்தப்படுவதை அறிய முடிகிறது.

    *****

    துணைநூல்:

    நந்திக்கலம்பகம் – மர்ரே எஸ். ராஜம் அவர்கள் 1960-இல் வெளியிட்ட நூலின் மறுபதிப்பு- நியூசெஞ்சுரி புக் ஹவுஸ் பிரைவேட் லிமிடெட்.

    *****

    கட்டுரையாளர் – முழுநேர முனைவா்பட்ட ஆய்வாளா்
    தமிழ்த்துறை,  அரசு கலைக் கல்லூரி (தன்னாட்சி)
    சேலம் -7.
    Cell:9442193166

     

    Share