கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
KRISHNA FOR TODAY….!
——————————————————
தாய்க்குப் பணிந்தன்று தாம்பில் புகுந்துமரம்
சாய்க்க உரலிழுத்த சாகஸா – வாய்க்குள்
மாதா மகிழ மகோன்னதம் காட்டிய
கீதா உபதேசா காப்பு….!
கோலத்தால் காலிட்டு கைகூப்பி கும்பிட்டு
ஞாலத்தை உண்டுமிழ்ந்த நாதனுக்காய் -தாலத்தில்
பக்ஷணத்தை ஏந்திநின்றால் பக்தராதைக்(கு) ஈடாக
தக்ஷிணையாய் கேட்டான் தபஸ்….!
காணவனைக் காற்றில் கலந்துவரும் கீதத்தில்
நானென(து) இல்லாத மோனத்தில் -தேனளவு
பார்க்கும் மலர்வண்டின் போக்கில், இனப்பெருக்கம்
கோர்க்கும் குயுக்தியின் கண்….!
‘’அர்ஜுன விஷாத யோகம்’’….
——————————————————–
எப்போது பார்த்தாலும் பசுவோடு வனவிஹாரியாய் விளையாடும்
இந்தப் பையனால் புரவிகள் பூட்டிய போர்த் தேரை
ஓட்ட முடியுமா….!இது அர்ஜுன சந்தேகம்….!
’’மாடோடு மாடாக மன்னார் குடிமைனர்
கூடோடு(கூட ஓடு) கின்றானே கன்றிருக்கும் -காடதனில்,
சோர்ந்தான் அருச்சுனன், சீராயர் சேய்க்குண்டோ
தேர்க்குதிரை ஓட்டும் திறன்’’….கிரேசி மோகன்….!
அன்பே எதுகையாய் ஆர்வமே மோனையாய்
உன்பால் தளையற்ற உந்துதலால் -வெண்பாக்கள்
பாடி அணுகுகிறேன் வேடிக்கைக்(கு) அல்லகண்ணா
வாடிக்கை யாளனாக(ETERNAL CUSTOMER) வா….!