Blog

  • விபூதியின் மகிமை!…

    விசாலம்

    சூட்டும் டையும்மாக மிகவும் மிடுக்குடன் ஏரோப்பிளேனில் ஏறினார் கானடா நாட்டைச்சேர்ந்த பெரிய தொழிலதிபதி மிஸ்டர் பாட்டர்ஸன் .தன் தொழில் விஷயமாக இந்தியாவுக்கு பயணம் . இந்தியாவில் டாக்டர் பாலகிருஷ்ணாவை சந்தித்து அவர் அன்புடன் விடுத்த அழைப்பை ஏற்றுக்கொண்டு அவர் இல்லத்திற்கு வருகை தந்தார் .அவரை மிக அன்புடன் தனது வரவேற்பு அறைக்கு டாக்டர் பாலகிருஷ்ணா அழைத்துப் போக மிஸ்டர் பாட்டர்ஸன் பிரமித்தபடியே தன் புருவத்தை மேலே தூக்கியபடி தன்னை மறந்து நின்றார். அந்த அறை முழுவதும் ஒரு விதமான தெய்வீக மணம் வீச ஏதோ ஒரு கோயிலுக்கு நுழைந்த மாதிரியான உணர்வு . விடே கோயில் போல் அலங்கரிக்கப்பட்டிருந்தது உள்ளே ஒரு தனி அறையில் ஒரு அழகிய சிம்மாசனம் இருக்க அதன் மேல்சுவாமியின் அழகிய படம் வைக்கப்பட்டிருந்தது நான் சொல்லும் சுவாமி “பகவான் ஸ்ரீ சத்யசாயிபாபா” அவர்கள் தான் . அவர் தன் இரு கைகளைத் தூக்கியபடி ஆசிகள் வழங்கிக்கொண்டிருந்தார் சுருண்ட முடியுடன் “புஸு புஸு என்ற தலையையும் பார்த்து கானடா அதிபர் வியந்து “இவர் யாரப்பா? என் மனதை அப்படியே அவர் பக்கம் இழுக்கிறார். அந்தப்படத்தைப்பார்த்துக் கொண்டே இருக்கும்படி தோன்றுகிறதே”, இவர் தான் பாபா புட்டப்பர்த்தியில் இருந்து கொண்டு பல நற்காரியங்களைச் செய்து வருகிறார்,அசாத்யமான காரியம் கூட அவரிடம் வர சாத்தியமாகி விடும்.அன்பின் மறு உருவம், சத்ய, தர்ம சாந்தி, பிரேமை என்ற கொள்கையைக் கடைப்பிடித்து வாழ்பவர். பல கோடி மனிதர்களுக்கு வழிக்காட்டியாக இருந்து வருபவர். என்று ஆரம்பித்து அவரது பிறப்பு. அவரது தெய்வீக ஆற்றல். அவரது அன்பு என்று அவரைப்பற்றி மிக ஆர்வமாக கூறி முடித்தார். மிஸ்டர் பாட்டர்ஸன் தன்னை மறந்தார்.

    டாக்டர் பாலகிருஷ்ணா தேங்க் யூ. இந்த மகானின் ஞாபகமாக எனக்கு ஏதாவது கொடுக்கமுடியுமா?” என்னிடம் தற்சமயம் சிறிய படம் ஒன்றுமில்லை. ஆனால் அவரது விபூதியைத் தருகிறேன் ”
    வாட்? வாட் விபூட்டி? வாட் ஈஸ் தாட்? டாக்டரோ பாட்டர் சன்னுக்கு கொடுக்க தகுதியானது விபூதிதான் என்று நினைத்து விபூதி இருக்கும் சிறு பாக்கட்டை அவரிடம் அளித்தார் .அவரும் அதை மெள்ள திறந்து பார்த்தார்.
    வாட் டாக்டர் .? இது என்ன ஆஷ் ? சாம்பலை ஏன் தருகிறாய்? இந்தப்படத்தில் இருப்பவர் பெரிய மகான் என்று சொல்லிவிட்டு சாம்பலை அவர் ஞாபகமாக தருகிறாயே!”
    மை டியர் பிரண்ட்.இது வெறும் சாம்பல் இல்லை. விலை மதிக்க முடியாத தெய்வீக விபூதி .எந்த இடைஞ்சல் வந்தாலும் அதிலிருந்து காப்பாற்றிவிடும் .முழு நம்பிக்கையுடன் இதை வாயில் போட்டுக்கொண்டாலும் ,நெற்றியில் தரித்து பிரார்த்தனை செய்தாலும் அந்த இடைஞ்சல் மறைந்து விடும் “அப்படியா ? இது அத்தனை உசத்தியா ?’என்றபடி தன் கோட்டு பாக்கட்டில் அதை நுழைத்துக்கொண்டார் . இந்தியாவில் வேலை முடித்துக்கொண்டு திரும்பவும் லண்டன் வழியாக நியூயார்க் போக தயாரானார். ஏர்போர்ட்டுக்கு வந்து பிளேனிலும் அமர்ந்தாகிவிட்டது. அவருக்கு கிடைத்த இடமோ பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் நடுவில் அமரும் நிலைமை .நிம்மதியாக சத்தமில்லாமல் சாய்ந்து படுக்கவும் முடியவில்லை.குழந்தைகள் போட்ட கும்மாளத்தில் அவருக்கு இடைஞ்சல் ஏற்பட்டது. பெண்களாலும் பல அசௌகரியங்கள் ஏற்பட்டது. “எப்படாப்பா நல்ல சீட்டில் அமருவோம்” என்று எண்ணும் போது டாக்டர் பாலகிருஷ்ணா கொடுத்த விபூதி பாக்கட் ஞாபகம் வந்தது.அதன் மகிமையைப் பரீட்சித்து பார்க்க நல்ல சமயம் என்று நினைத்து தன் பாக்கட்டிலிருந்து அந்த வீபூதியை எடுத்து ஒரு சிட்டிகை தன் வாயில் போட்டுக்கொண்டார். பின் பிரார்த்தனையும் செய்தார் . “ஓ பாபா நியூயார்க் பயணமாவது எனக்கு நன்றாக அமைய வேண்டும்.வசதியான ஸீட் கிடைக்க வேண்டும். “ஓ சத்ய சாயி பாபா ஹெல்ப் மீ” லண்டனில் பிளேன் வந்து இறங்கியது. அப்போது ஒலிபெருக்கியில் “மிஸ்டர் பாட்டர்ஸன் பிளீஸ் கம் டு த் ஆபீஸ் அண்ட் மீட் அஸ் இமீடியட்லி ” என்ற குரல் கேட்டு வியப்படைந்து அவசர அவசரமாக அங்கு சென்றார். ஒரு பெண்மணி அவரிடம் “இந்தாருங்கள் உங்களுக்கு முதல் வகுப்பில் நியூயார்க் பயணத்திற்கு ஒரு இருக்கை.” என்றபடி ஒரு டிக்கட்டை நீட்டினாள். “தாங்க் யூ “என்றபடி அதிகபடியான தொகையை அடைக்க சில டாலரை நீட்டினார். அதற்கு அங்குள்ள அதிகாரி “நோ நோ நோ” இதற்கு தேவையான அதிக கட்டணம் உங்கள் பெயரில் கட்டப்பட்டு விட்டது என்றார். மிஸ்டர் பாட்டர்ஸன் அப்படியே ஸ்தம்பித்து நின்றார். “பாபா விபூதிக்கு இத்தனை பவரா?பாபாவின் அன்புதான் என்ன! பாபாவின் கருணைதான் என்ன! பல மைல்களுக்கப்பால் இருந்தபடியே என் வேண்டுகோளுக்கு செவி சாய்த்து என் விருப்பத்தை நிறைவேற்றிவிட்டார். கொஞ்சம் நம்பிக்கையுடன் வீபூதி வாயில் போட்டுக்கொண்ட பலன் இது, என்று நெஞ்சம் நெகிழ பலருக்கு இந்தச்சம்பவத்தை எடுத்துக்கூறினார்.

    “பரமம் பவித்ரம் பாபா விபூதிம்
    பரமம் விசித்ரம் லீலா விபூதிம்
    பரமார்த்த இஷ்டார்த்த மோட்ச பிரதாதம்
    பாபா விபூதிம் இதம் ஆஸ்ரயாமி”

    பாபா பஜன் முடிந்தவுடன் இந்த ஸ்லோகத்தைச் சொல்லி பின் விபூதி பிரசாதம் வழங்கப்படும். இந்த விபூதி புனிதமானது.வியாதியைப் போக்க வல்லது. பக்தர்களின் விருப்பத்தை நிறைவேற்றும். பக்தர்கள் அற்புதமான இதை தினமும் பயன்படுத்த வேண்டும்.

    Share
  • நூற்றாண்டு கண்ட பூரணி மறைவு

    ஒரு நூற்றாண்டுக் காலம், நம்முடன் வாழ்ந்து, தமிழ் இலக்கியத்திற்குத் தொடர்ந்து பங்களித்து வந்த கவிதாயினி பூரணி அவர்களின் மறைவுக்கு வல்லமை தன் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது.

    “பூரணி”

    (தோற்றம் 17-10-1913 – மறைவு-17-11-2013)

    3

    கிருஷாங்கினி

    1913ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் ஒன்றாம் தேதி, ஒன்பதாவது குழந்தையாகப் பிறந்தார், சம்பூரணமென்கிற, எழுத்தாளர் பூரணி. அவர்கள் பெற்றோருக்கு மொத்தம் பத்துக் குழந்தைகள். அப்பா ராமசாமி அய்யர், தமிழ்ப் பண்டிதர். பழநியில் 20 ஆண்டுகள் ஆண்கள் பள்ளியைத் தன் சொந்தப் பணத்தில் ஆரம்பித்து நடத்தி வந்தார். பின் சொத்துகள் அழிந்துவிட்ட நிலையில் அந்தப் பள்ளியை அன்னிபெசண்டிடம் ஒப்படைத்துவிட்டார். தாயார் சீதாலட்சுமி அம்மாள். கணவனின் தமிழைக் கேட்டுக் கேட்டுத் தமிழ் செய்யுள்களுக்குப் பொருள் கூறும் அளவுக்குப் புலமை பெற்றவர்.

    ராமசாமி அய்யர் (1864இல் பிறந்தவர் இவர்) எழுதிய தொல்காப்பியத்திற்கான எளிய உரை எங்கள் வீட்டில் 1964 வரை இருந்தது, அப்போது எனக்கு வயது 14, அந்தச் சமயம் நாங்கள் கணியூரில் வசித்து வந்தோம், கையெழுத்துப் பிரதியாக இருந்தது. என் அம்மா சம்பூர்ண அம்மாவுக்கோ அதை நூலாகக் கொண்டுவர விருப்பம். அக்காலங்களில் அது பெரிய விஷயம். தாத்தாவை நான் பார்த்ததில்லை. ஆனாலும் அவரைப் பற்றி நிறையக் கேட்டிருக்கிறேன். ‘மடித்து வைத்த துணி மடி, வீழ்த்துப் போட்ட துணி விழுப்பு’ என்பாராம். கோவில்களுக்கு வேண்டிக்கொள்ளுதல், இறைவனிடம் லஞ்சம் கொடுத்துக் காரியம் சாதித்துக் கொள்ளுதல் போன்றவை தாத்தா காலத்திலிருந்தே எங்கள் வீட்டில் கிடையாது. பூரணி அம்மாவின் கொள்கைகளும் கருத்துகளும் இதை ஒட்டியேதான் இருந்தன.

    1927இல் தனக்குக் கிடைத்த ஓய்வு நேரத்தைத் தமிழில் கவிதை எழுத உபயோகித்தார் அம்மா. நாங்கள் ஒன்பது குழந்தைகள் அம்மாவுக்கு. ஓய்வு நேரம் எப்படிக் கிடைத்ததோ தெரியாது. அப்போது ஆரம்பித்த வாசிப்பும் எழுத்துப் பதிவும் இன்று வரை தொடர்கிறது. 85 ஆண்டுகளாக ஏறக்குறைய எல்லா நிகழ்வுகளையும் தனக்குத் தோன்றிய வடிவில் கவிதையாகவோ, கட்டுரையாகவோ, சிறுகதையாகவோ கண்டவை, கேட்டவை, எனப் பதிவு செய்துள்ளார். நாட்டுப் பற்று, சுதந்திரப் போராட்டம், காந்தி வந்தது, பெண் கல்விக்காக மெனக்கெட்டது, பெண்களுக்காக மாதர் சங்கம் நடத்தியது என்று தொடர்ந்து இயங்கி வந்து கொண்டிருக்கிறார். பாரதி கலைக் கழகத்தில் இணைந்து தன் மகன் கே.வி. ராமசாமியுடன் வீட்டில் கூட்டங்கள் நடத்தியது என, கவிதைப் பரிசு வாங்கியது என நிறைய நிகழ்வுகள். நவீன இலக்கியவாதிகளாக இருக்கும் இன்றைய எழுத்தாளர்கள் பலரையும் அம்மாவுக்குத் தெரியும், அவர்களின் எழுத்துப் பதிவுகளின் கருத்துகளையும் உள்ளடக்கியதாக. நேர்ப் பேச்சும் உண்டு.

    ‘ஸ்பேரோ’ (sparrow) அமைப்புக்காக அம்மாவை ‘அம்பை’ நேர்காணல் செய்ய வந்திருந்தார். ‘அம்பை’ அம்மாவின் பேச்சிலும், எழுத்திலும் ஒரு பொறியைக் கண்டார். தனது நூல், காலச்சுவடு பதிப்பகம் மூலம்தான் முதலில் வர வேண்டும் என்று அம்மா விரும்பினார். ஏற்கனெவே, எஸ்.வி.ராமகிருஷ்ணன் மூலம், சுந்தர ராமசாமியைக் கேட்கச் சொல்லியிருந்தார். ஆனால் அது நடக்கவில்லை. ‘அம்பை’யின் முயற்சியாலும், முன்னுரையாலும், அம்மாவின் முதல் புத்தகம் (அம்பை, அம்மாவின் தன் வரலாறு போடலாம் என்றார். ஆனால் அம்மாவோ தன் கவிதைத் தொகுதி, காலச்சுவடு மூலம் வெளிவர வேண்டுமென்று விரும்பினார்.) அவரது 90ஆவது வயதில் – 2003ஆம் ஆண்டு – “பூரணி கவிதைகள்” நூல், ‘காலச்சுவடு’ வெளியீடாக வந்தது. அம்மாவும் நானும், இன்றுவரை அதை நன்றியுடன் நினைவு கூர்ந்து கொண்டிருக்கிறோம். அந்த நூல், பரவலான கவனத்தையும் அதற்கான பணத்தையும் ‘காலச்சுவடு’ மூலமாக நிறையவே பெற்றுத் தந்தது. (அதுவே ஒரு தவறான புரிதலுக்கும் காரணமாயிற்று மற்ற உறவினருக்கு. இப்படித்தான் நிறையப் பணம் கிடைக்கிறது இலக்கியம் மூலமாக என்ற எண்ணமும் ஏற்பட்டுவிட்டது.) அதற்கு முன்னதாகவே நானும் என் கணவர் நாகராஜனும் அச்சிலும், இண்டெர்நெட் குழுமங்களிலும் அம்மாவின் படைப்புகளைத் தொடர்ந்து வெளியிட்டுக்கொண்டிருந்தோம்.

    “பூரணி நினைவலைகள்” (அவரது தன்வரலாறு), எங்கள் சதுரம் பதிப்பகத்தின் மூலம் கொண்டு வந்தோம். (2005) பின் சில காரணங்களினால், மணிவாசகர் பதிப்பகம் மூலம் அம்மாவின் சிறுகதைத் தொகுப்பு ‘பூரணி சிறுகதைகள்” (2009) என்னும் தலைப்பில் வெளிவந்தது. அம்மா, தன் பாட்டிகளிடம் கேட்ட சிறுவர் கதைகளையும், தான் வடிவமைத்து, தன் குழந்தைகளுக்கும் பெயரர்களுக்கும் சொல்லிய கதைகளையும் இணைத்து என்னிடம் 2008ஆம் (200 பக்கங்களுக்கு) ஆண்டு நோட்டில் எழுதிக் கொடுத்தார். அண்மையில் வசந்தா பதிப்பகம் மூலம் அம்மாவின் “செவிவழிக் கதைகள்” நூல் வெளியாகி உள்ளது. அவர் தனது எல்லாப் படைப்புக்களையும் கால வரிசைப்படி தொகுத்து நோட்டுகளில் பதிவு செய்து வைத்துள்ளார். 1937இல் பழனியிலிருந்து வெளிவந்து கொண்டிருந்த ‘சித்தன்’ இதழ்களிலும், கோவையிலிருந்து வெளிவந்துகொண்டிருந்த ‘பாரத ஜோதி’ இதழ்களிலும் அம்மாவின் சிறுகதைகள் வெளியாகி உள்ளன.

    அக்காலத் திருமணப் பாடல்களைத் தன் சொந்த வடிவத்தில் பாட்டுகளாக இயற்றி, தொடங்கி இருக்கிறார் தன் கவிதை வெளிப்பாட்டை. பின் அதே பாடல்களில் தேசியத்தைக் கருப்பொருளாக்கினார். 1936-38களில் மகளிருக்கு ஹிந்தி சொல்லிக் கொடுத்திருக்கிறார். தொடர்ந்து ஹிந்தியில் படித்துக் கொண்டும் இருந்தார். சில ஆண்டுகளுக்கு முன், வாஜ்பேயின் கவிதைத் தொகுதியை வாங்கிக் கொண்டுவந்து கொடுத்தேன். படித்துவிட்டு, அந்தக் கவிதைகளை மொழிமாற்றம் செய்து கொடுத்தார். வாஜ்பேயின் கவிதைகள் மரபு சார்ந்தவை. எனவே அதை மரபுக் கவிதைகளில்தான் மொழிமாற்றம் செய்ய வேண்டும் என்று அழகாகச் செய்தார். அம்மாவுக்கு மறதி என்பதே கிடையாது. இன்று அவரின் ஒரு நோட்டு தொலைந்துவிட்டது என்று சொன்னால் அந்த நோட்டில் இருந்தவற்றை வரிசை தப்பாது அனைத்துக் கவிதைகளையும் மறுபடியும் எழுதிக் கொடுத்துவிடுவார். அதனால், தன் படைப்புகளில் பத்திரிகை ஆசிரியர்கள் சிறு மாற்றம் செய்திருந்தாலும் உடனே சொல்லிவிடுவார். அந்தச் சொல்லைத் தான் உபயோகித்ததற்கான காரணத்தையும் கூறுவார். ‘சென்னை சங்கமம்’ நிகழ்ச்சி 4இல் தானும் கலந்துகொள்ள ஆசைப்பட்டார். மேடையேறி கவிதையும் வாசித்தார்.

    2004ஆம் ஆண்டு திருப்பூர் சக்தி இலக்கிய விருதும், 2007ஆம் ஆண்டு பொற்றாமரை கலை இலக்கிய ஆய்வரங்கம் ஆண்டுவிழாவில் வழங்கிய தங்கப் பதக்கமும் இலக்கிய சேவைக்கான பாராட்டும் பெற்றார். எழுத்தாளர் ஜ.ரா.சுந்தரேசனின் இலக்கிய கூட்டமான ‘அக்கறை’யிலும் பங்கு பெற்று, பாராட்டையும் பெற்றிருக்கிறார். கணையாழி, புதிய பார்வை, படித்துறை, அணி என்று இலக்கிய இதழ்களில் பலவற்றிலும் இலக்கியப் பங்களிப்பு செய்திருக்கிறார். ‘திண்ணை’ இன்டெர்நெட் இதழ்களிலும் அவரது படைப்புகள் இடம் பெற்றுள்ளன.

    நாட்டுப் பற்றும், காந்தி மீது மரியாதையும் விவேகானந்தர், ராமகிருஷ்ண பரமஹம்சர் போன்றோர் மீது பக்தியும் கொண்டவர். எங்களை விவேகானந்தரின் படத்தின் முன்னால் நின்று ‘பொய் சொல்லவில்லை, நான் சொல்வது உண்மைதான்’ என்று சொல்லச் சொல்லுவார். பொய் சொல்லியிருந்தால் நாங்கள் திரும்பவும் உண்மையை மட்டுமே கூறுவோம். அந்தப் படங்கள் மீது அவ்வளவு பக்தியும் மரியாதையும் எங்களுக்கு உண்டாக்கி இருந்தார்.

    2013 நவம்பர் 17 அன்று அதிகாலை 2 மணி அளவில், நிறைவாழ்வு வாழ்ந்த ‘பூரணி’ என்னும் சம்பூர்ணம் அம்மாள் கயிலாயப் பதவி அடைந்தார்.

    Share
  • ஐயப்பன் வரவுப் பாடல்

    சு.ரவி

    வணக்கம் வாழியநலம்

    ஐயப்பன் பூஜை,பஜனைகளில் விநாயகர் முதல் பலதெய்வங்களின் மீது  இசைப்பாடல்கள் பாடியபின் ஐயப்பனை அழைக்கும் வரவுப் பாடல் பாடுவது மரபு. அம்மரபையொட்டி, எங்கள் குழுவினர் ஒரு வரவுப் பாடலை எழுதுமாறு பணித்தனர்.

    பாடலின் தொகையறா இவ்வாறு ஆரம்பித்தது:

    “புறப்பட்டெழுந்தனன்  புலிவாஹனன் -உடன்

    புறம்பட்டழிந்தன பொய்ம்மை தீமை-நீல

    நிறப்பட்டுடுத்தி…”

    தொகையறா தொடரவில்லை..ஒரு வருடம் ஓடிவிட்டது..

    அடுத்த வருடம், ஒரு அன்பர் வீட்டின் ஐயப்பபூஜை முடிந்து இரவு பத்துமணிக்கு ( ஸ்கூட்டரில்) வீடுதிரும்பும்போது அடையாறு இசைக்கலூரியிலிருந்து இந்திராநகர் செல்வதற்குள் புயல்வேகத்தில் பறப்பட்டெழுந்தனன் புலிவாஹனன்..

    பாடல் இதோ…

    MOHINI BeLuur

    ராகம்: சிவரஞ்சனி

    தொகையறா

    புறப்பட்டெழுந்தனன்  புலிவாஹனன் -உடன்
    புறம்பட்டழிந்தன பொய்ம்மை தீமை-நீல
    நிறப்பட் டுடுத்திக் கரத்திற் சரத்தைத்

    தொடுத்துப் பிடித்துப் புயத்தைச் சிலிர்த்துப்    (புறப்பட்)

    பல்லவி

    வருக வருக மணிகண்டனே1-அருள்

    தருக தருக சிவமைந்தனே!

    இருகரம் குவித்தோம்- முனையுமனம்

    உருகி இங்கழைத்தோம்!                               (வருக)

     

    சரணம்

    அண்டமும் ககன மண்டலங்களுடன்

    எண்திசைகளும் குலுங்க

    சண்ட வெங்கலியும் துண்டுதுண்டுபட

    சங்கதுந்துபிகள் முழங்க

    செண்டை,பஞ்சமுகம்,திண்டிமப்,பறை

    ம்ருதங்கம் ஆர்த்தொலி வழங்க

    தண்டையுணட கழல் தஞ்சம் தஞ்சமெனத்

    தொண்டரண்டிவந் திறைஞ்ச                    (வருக)

     

    வலியகடுத்தையும், சிறியகடுத்தையும்

    வலமிட மாகவர

    புலியும்,சிறுத்தையும், தமதுகுலத்தொடு

    புதர்களினூடு வர

    நிலவை இழுத்திட  கரிகள் உயர்த்திய

    நீண்டதுதிக்கையுடன்

    உலவிவரப் பல மிருகமெழுப்பிய

    உறுமல் ஒலித்துவர                              (வருக)

     

    கணபதி யுடனர வரசனும், முருகனும்

    களிநடனம் புரிய,

    கணபண உரகமொ டழகிய பிறைபுனை

    விரிசடை இறைமகிழ,

    மணமலர் தவழ்குழல் அழ்கிய வடிவினள்

    இதழகளில் நகைமலர,

    கணகணகணவெனக் கடலென அணிவரும்

    கணவொலி கூடிவர                                   (வருக)

     

    அழுதையின் அதிபதி, கரிமலை பகவதி

    ஆடி ஆடுவருக!

    மழுமுனி அருளிய மலைவளர் பதியினை

    ஆளும் ராஜன் வருக்!

    சுழுமுனை வழிவிசை யுடனெழு சுடரென

    ஜோதிரூபன் வருக!

    புழுமுதல் சுரர்வரை உலவிட உயிர்தரும்

    பூதநாதன் வருக!

     

    புரவியேறி வருக!- பூதப்

    படைகள்சூழ வருக!-தங்கச்

    சுரிகை தாங்கி வருக்!- தீபச்

    சுடரில் ஆடி வருக!

     

    வருக வருக மணிகண்டனே -அருள்
    தருக தருக சிவமைந்தனே!
    இருகரம் குவித்தோம்- முனையுமனம்
    உருகி இங்கழைத்தோம்!                               (வருக)

    புறப்பட்டெழுந்தனன்  புலிவாஹனன் -உடன்
    புறம்பட்டழிந்தன பொய்ம்மை தீமை-நீல
    நிறப்பட்டுடுத்திக் கரத்திற்சரத்தைத்
    தொடுத்துப் பிடித்துப் புயத்தைச் சிலிர்த்துப்    (புறப்பட்)

     

    நடைவழி தொடரும்…

    Share
  • இந்த வார வல்லமையாளர்

    வெ.திவாகர் 

    ஆதி காலத்திலிருந்து பார்க்கிறோம்.. பெண்கள் என்றால் பொதுவாக போகப் பொருளாகத்தான் சமூகத்தில் சிற்சில ஆண்களின் கண்களுக்குத் தெரிகின்றார்களோ என்னவோ,. பெண்களின் அழகை வர்ணிப்பதென்றால் போதும்.. இந்தக் கவிஞர்களுக்குக் கற்பனா சக்தி விண்ணைத் தொடும் அளவுக்கு பறக்கும். பூ என்பார்கள், பூவினும் மெல்லிய இதழென்பார்கள்.. மென்மைக்கு மறுபெயரே பெண்மை என்பார்கள்.. ஆனால் பெண்கள் வன்கொடுமை என வரும்போது இவர்கள் வர்ணனைக்கு நேர்மாறாக நடக்கும்போது நல்நெஞ்சம் கொண்டோர் அவர் ஆணாயினும் பெண்ணாயினும் நெஞ்சம் பதறத்தானே செய்வர்.

    பெண்கள் வன்கொடுமை இந்தியாவில் இப்போது அதிகம் நடப்பதாகச் செய்திகள், தொலைக்காட்சிகள் தெரிவித்தாலும் இது உலகம் முழுமைக்கும் ஒரே கதைதான் என்பது நம் பார்வையைச் சற்று அகல விரித்தால் புரியும்.. இதற்கான சமுதாயக் காரணங்களாக ஆண்களின் ஆதிக்கத் தன்மையை அதிகமாகக் காண்பித்தாலும், மனோதத்துவ ரீதியாகப் பார்க்கையில் ஆண்களின் தாழ்வு மனப்பான்மையும் அந்தத் தாழ்வு மனப்பான்மையின் வெளிப்பாடாக அவர்கள் மனத்தில் தோன்றும் வெறித்தனமும், அந்த வெறித்தனத்தின் பயனாக அது பெண்ணின் மீது உடல்ரீதியாகத் துன்புறுத்தும்போது அது வன்கொடுமையாக மாறுகிறது. இயற்கையாகவே பெண்களின் மன உறுதி, ஆண்களை விடச் சற்று பலமானதுதான். ஆனால் வன்கொடுமை என வரும்போது பெண்ணின் மன உறுதி குலைக்கப்படுகிறது என்பது வாஸ்தவம்தானே..

    இந்த வாரம் வல்லமையில் ஒரு கதை படித்தேன். ‘நிமிர்ந்த நினைவு’ (http://www.vallamai.com/?p=39956) கதை இந்த வன்கொடுமையினால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணின் வாழ்க்கைப் போராட்டமும்,  பலம் உடைய அவள் எப்படியெல்லாம் மனோரீதியாக உடல்நீதியாக பாதிக்கப்படுகிறாள் என்பதையும் விவரிப்பது.

    பெண்கள் ஆண்களோடு பிறந்தவர்கள். தாயாய், சகோதரியாய் பிறவியிலிருந்து ஆண்களோடு வாழ்பவர்கள். பின்னர் மகளாக வருபவள். இத்தனை உறவும் ஆண் ஒரு பெண்ணோடு இணைந்துதான் பெறுகிறான் என்றாலும் இந்த தாய் சகோதரி, மகள்,உறவுமுறைகள் அவனுக்கு நேர்மையாகப் புரியவேண்டும். சமுதாயம் சில நல்ல குறிக்கோள்களை ஆண்வர்க்கத்துக்கு அழுத்தமாகத் தெரியப்படுத்தவேண்டும். இதில் முக்கியமானது பெண்ணை வன்கொடுமைக்கு பலியாக்குவதை அடியோடு ஒழித்துத் தடுப்பதே.

    இந்த வகையில் திருமதி நிர்மலா ராகவன் எழுதிய நிமிர்ந்த நினைவு சிறுகதை என்பது, சமுதாயம் மூலமாக உலகுக்குத் தரும் நல்ல குறிக்கோளின் ஒரு பகுதியாகத்தான் எடுத்துக்கொள்ளப்படவேண்டும். பெண் மதிக்கப்படுவதை விட முதலில் அவளுக்கு இழைக்கப்படும் உடல்ரீதியான, மனரீதியான கொடுமைகளைத் தடுக்க முன் வரவேண்டும். இந்தக் கொடுமைகள் தடுக்கப்பட்டாலே பெண் தானாகவே மதிக்கப்படும் நிலை உருவாகிவிடும்.

    நல்லதொரு கதையை வழங்கிய திருமதி நிர்மலா ராகவனை இந்த வார வல்லமையாளராக விருது கொடுத்துக் கௌரவிப்பதில் நாங்கள் மகிழ்ச்சி கொள்கிறோம். அவருக்கு நம் வாழ்த்துகள்.

    கடைசிபாரா: குறட்டையைப் பற்றி திரு. சம்பத் (’வளையம்’ பின்னூட்டம்)

    ஒரு முறை ஹவ்ரா மெயிலில் விசாகப்பட்டிணம் செல்லும் போது சக பயணி ஒருவர் பயங்கரமாகக் குறட்டை விட்டு அடியேனின் தூக்கத்தைக் கலைத்து விட்டார். அடுத்த நாள் காலையில் வண்டி விஜயவாடா சேர்ந்தது. இருவரும் காபியை சுவைத்தவாறு பேச ஆரம்பித்தோம்.

    மெள்ள நான் அவரது முன்னிரவு குறட்டையைப் பற்றி பிரஸ்தாபித்தேன். பொறுமையாக என் புகாரைக் கேட்டபின், “ஐயா, நீங்கள் சொல்கிறீர்கள், நான் சொல்லவில்லை. அதுதான் வித்தியாசம்” என்று ஒரு போடு போட்டார்.

    Share
  • அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் – கடல்வழிப்பயண அருங்காட்சியகம் (2) – 14

    14. அருங்காட்சியகம் ஓர் அறிவுக் அருவூலம் – கடல்வழிப்பயண அருங்காட்சியகம் (2) , மட்ரிட், ஸ்பெயின்

    சுபாஷிணி ட்ரெம்மல்

    மாப்பா முண்டியின் சிறப்புக்களை இத்தொடரின் சென்ற பதிவில் விளக்கினேன். இந்த அருங்காட்சியகத்தின் ஏனைய சிறப்புக்களையும் அறிவது அவசியம் என்பதால் உள்ளே சென்று ஏனைய காட்சிப் பொருட்களையும் காண்போமே.

    அருங்காட்சியகத்தின் உள்ளே காட்சிப்பொருட்கள் 24 வெவ்வேறு அறைகளில், ஆண்டுகளின் அடிப்படையில் பிரித்து வைக்கப்பட்டுள்ளன. 15ம் நூற்றாண்டு தொடக்கமாக இந்தக் காட்சிப்பொருட்களின் கண்காட்சி தொடங்குவதாக அமைந்திருக்கின்றது. முதல் அறையிலேயே அமெரிக்கா வந்த ஐரோப்பிய மாலுமிகள், உள்ளூரில் வாழும் குடிகளைப் பார்க்கும் வகையில் அமைந்த ஒரு காட்சியின் சித்திரம் உள்ளது. இது 18ம் நூற்றாண்டு சித்திரம். அக்காலகட்டத்தில் கடற்போரில் பயன்படுத்தப்பட்ட கருவிகளும், வாட்களும் இதே பகுதியில் உள்ளன. அதனை அடுத்து வருகின்ற அறைகளில் இதே போல ஸ்பெயின் அரசின் முயற்சியில் 15ம் நூற்றாண்டு தொடங்கி வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு இடங்களில் நிகழ்த்தப்பட்ட பற்பல போர்கள் பற்றிய விளக்கங்கள் போர்கருவிகள் ஆகியவற்றை காட்சிப்படுத்தும் தொகுப்புகள் இடம்பெறுகின்றன.

    navalm3

    ஸ்பெயின் கடந்த 600 ஆண்டுகளில் தொடர்ந்து மேற்கொண்ட பல்வேறு கடற்போர்களில் தான் கைப்பற்றிய தீவுகள் பல. ஆப்பிரிக்காவிற்கு வடக்குப் பகுதியில் இருக்கும் கெனரி தீவுகளான லா பல்மா, க்ரான் கனாரியா, லான்ஸ்ரோட்டெ, லா கொமேரா, தெனெரிஃபா, மயோர்க்கா, மெனோர்க்கா, இபீஸா போன்றவற்றின் குறிப்புக்களை உள்ளடக்கிய தகவல்கள் தனித்தனியாக காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. போரை விவரிக்கும் ஓவியங்கள் ஒவ்வொரு பகுதியிலும் அப்போரின் தன்மையை விளக்கும் வகையில் அமைக்கப்பட்டிருக்கின்றன. போர் என்றாலே உயிர்பலி, கொடூரமான தாக்குதல் என்பது ஒரு புறமிருக்க வெற்றி பெற்ற படைகள் தங்கள் கொடிகளை உயர்த்திப் பிடித்துக் கொண்டு பெருமையுடன் நிற்பதும் படைத்தலைவர் தன் வீரம் பொருந்திய முகத்துடன் கம்பீரமாக காட்சியளிப்பதும் போன்ற காட்சிகள் இந்த சித்திரங்களில் இடம் பெற்றிருக்கின்றன. அதே வேளை கடல் பயணம் எளிதானதல்ல என்பதை விளக்கும் சித்திரங்களும், கடலில் கப்பல்கள் தத்தளிக்கும் காட்சிகளும் கூட சித்திரங்களாக வைக்கப்பட்டுள்ளன.

    அருங்காட்சியகத்தின் ஒரு அறை (2013)
    அருங்காட்சியகத்தின் ஒரு அறை (2013)

    ஸ்பெயின் கைப்பற்றிய நாடுகளில் பிலிப்பைன்ஸும் அடங்கும். பெர்டினண்ட் மெக்கேலன் 1521ம் ஆண்டில் பிலிப்பைன்ஸின் Homonhon Islandக்குள் பிரவேசித்து அங்கு ஸ்பெயின் நாட்டின் கொடியை நட்டு வைத்து இப்பகுதி பிலிப்பன்ஸுக்குச் சொந்தமானது என முதன் முதலில் பிரகடனப்படுத்தினார். படிப்படியாக உள்ளூர் குழுக்களின் ஆதரவை பெற்று பின்னர் முழு பிலிப்பினோ தீவுகளையும் ஸ்பெயின் நாட்டின் ஆளுமைக்கு உட்பட்ட நாடாக மாற்றி வெற்றி கண்டார். போர் உருவாகி பின்னர் படிப்படியாக பல உயிர் சேதங்களைச் சந்தித்து பின்னர் முழு தீவுகளும் ஸ்பெயின் ஆளுமைக்கு உள்ளானது. 2 நூற்றாண்டுகளுக்கு மேல் ஸ்பெயினின் ஆதிக்கத்தில் இருந்து பின்னர் இங்கிலாந்து அரசின் காலணித்துவ ஆட்சிக்கு மாறியது பிலிப்பைன்ஸ். இந்த காலத்தில் பிலிப்பைன்ஸில் நிகழ்ந்த ஸ்பேனிஷ் தாக்கத்தை இன்றும் நாம் காண்கின்றோம். அப்போது பரவிய கத்தோலிக்க மதம் இன்றளவும் பிலிப்பன்ஸின் 90% மக்கள் கத்தோலிக்க மதத்தை தழுவியோராக இருப்பதற்குக் காரணமாக உள்ளது. பலருக்குப் பெயர்கள் ஸ்பேனிஷ் மொழியிலேயே அமைந்திருக்கின்றன. உதாரணமாக, மைக்கல், ஹூவான், கார்லோஸ், ஹேஸூஸ், ராஃபாஏல், ஹோஸே என்பவை மிகப் பரவலாகக் காணப்படும் ஆண்களின் பெயர்கள். இவை ஸ்பேனிஷ் மொழி பெயர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த அருங்காட்சியகத்தின் மேலும் ஒரு மாபெரும் சிறப்பு என்னவென்றால் கடந்த 700 ஆண்டுகளில் கடலில் பயனித்த ஏறக்குறைய எல்லா ஸ்பேனிஷ் போர்த்துக்கீஸிய கப்பல்களின் மாடல்களும், ஐரோப்பாவின் வேறு சில நாடுகளுக்குச் சொந்தமான வரலாற்றில் இடம் பெறும் கப்பல்களின் மாடல்களும் இந்த அருங்காட்சியகத்தில் நிறைந்திருக்கின்றன. ஒரு கப்பல் உருவாக்கப்படுவதற்கு முன்னர் பொதுவாக மாடல் கப்பலை உருவாக்குவது வழக்கமாம். இங்கே குவித்து வைக்கப்பட்டிருக்கும் இந்த மாடல்களில் பெரும்பாலானவை அக்கப்பல்கள் உருவாக்கப்படுவதற்கு முன்னர் மாடலாக தயாரிக்கப்பட்டவை. ஏறக்குறை 700லிருந்து 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த கப்பல்களின் மாடல்கள் இங்கு நிறைந்திருப்பது அதிசயத்தைத் தருவதாகத் தான் அமைகின்றது.

    ஒரு கப்பலின் மாடல் (2013)
    ஒரு கப்பலின் மாடல் (2013)

    கப்பல்களின் மாடல்கள் மட்டுமன்று நீர்மூழ்கிக் கப்பல்களின் மாடல்களும் இங்கே நிறைந்திருக்கின்றன. உதாரணமாக ஸ்பேனிஷ் விஞ்ஞானி Isaac Peral உருவாக்கிய நீர்மூழ்கிக் கப்பலின் மாடல் இந்த அருங்காட்சியகத்தில் தான் வீற்றிருக்கின்றது. 1884ம் ஆண்டு உருவாக்கப்பட்ட மாடல் இது. இதுவே முதன் முதல் அதி நவீன கட்டமைப்புடன் உருவாக்கப்பட்ட ஒரு நீர்மூழ்கிக் கப்பல் என்பதும் குறிப்பிடத்தக்க ஒன்றே.

    கடற்போர்களில் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் (2013)
    கடற்போர்களில் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் (2013)

    கடல் பயணங்க்ளின் போது பயன்படுத்தப்பட்ட போர் கருவிகள் அலமாரிகளில் ஆட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. மிகப் பழமையான வேல் போன்ற கூர் ஆயுதங்கள் ஒரு பக்கம். துப்பாக்கி, கேனன், என நவீன போர்க்கருவிகள் ஒரு பக்கம் என போரில் பயன்படுத்தப்பட்ட பல நூறு ஆயுதங்கள் இந்த அருங்காட்சியகத்தில் இடம்பிடித்துள்ளன. மிகச் சுவாரசியமாக 500 ஆண்டுகளின் இடைவெளியில் மாலுமிகள் உடுத்திய ஆடைகளும் சேகரிக்கப்பட்டு இங்கு காட்சிக்கான அலமாரிகளில் வைக்கப்பட்டிருக்கின்றன. இது மட்டுமன்றி தனியாக ஒரு அறை, கப்பலுக்குள் வாசிப்பு அறை எப்படி இருக்குமோ அதையே பிரதிபலிப்பதுபோல உருவாக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளது. வரைபடங்கள், சான்றிதழ்கள், கப்பல்களில் பயன்படுத்தப்பட்ட பல்வேறு கருவிகள், ஆவணங்கள் என அருங்காட்சியகம் முழுதும் நூற்றுக்கணக்கான விலைமதிப்பு கூற முடியாத பல பொருட்களைத் தாங்கி இந்த அருங்காட்சியகம் இருக்கின்றது.

    கடற்பயணத்தில் பயன்படுத்தப்படும் பல்வேறு கருவிகள் (2013)
    கடற்பயணத்தில் பயன்படுத்தப்படும் பல்வேறு கருவிகள் (2013)

    இந்த அருங்காட்சியகத்தின் உள்ளே நுழைந்த உடன் நமக்கு ஏற்படும் வியப்பு ஏனைய அடுத்தடுத்த அறைகளுக்குச் செல்லும் போதும் குறைவதில்லை. ஸ்பெயின் வருபவர்கள், அதிலும் குறிப்பாக மட்ரிட் நகருக்கு வருபவர்கள் கட்டாயம் வந்து பார்த்துச் செல்ல வேண்டிய முக்கிய அருங்காட்சியகம் இது என்பதில் சந்தேகமில்லை.

    கடல்வழிப் பயணங்கள் பற்றி இந்த அருங்காட்சியகத்தில் பார்த்தோம். அடுத்த பதிவில் வேறொரு நாட்டில் மேலும் ஒரு அருங்காட்சியகம் செல்வோமா?

    தொடரும்…!

    Share
  • நான் அறிந்த சிலம்பு! – 97

    மலர் சபா

    புகார்க்காண்டம் – 10. நாடு காண் காதை

     

    மதுரை செல்லும் வழியின் அருமை பற்றிக் கவுந்தி கூறல்
    சோலையும் தோட்டமும் ஆகிய கரை வழி

    கவுந்தியடிகள் கூறலானார்:
    “கோவலனே!
    நாம் செல்ல எண்ணியிருக்கும் வழியில்
    துனபங்கள் பல நேரக்கூடும்;
    அது பற்றிக் கேட்பாயாக!

    வெயிலைக்கூடப் பொறுக்காத
    மெல்லியல் கண்ணகி இவள்;
    இவளுடன் பூஞ்சோலை வழியில் செல்லலாம்..
    என்றாலோ..
    அங்கே நிலம் பெருக்கும்படி
    பெரியதாய் இருந்த வள்ளிக் கிழங்குகளைத்
    தோண்டி எடுத்த குழிகள் தென்படும்;
    அக்குழிகளை மூடுவதற்கென்று
    செண்பகத் தாதுகளைக் கொண்டு
    நிரப்பி வைத்திருப்பர்
    வழிப்போக்கர்கள் அறிந்திடாவண்ணம்.

     

    அதையறியாமல் நாம் அவற்றின்மீது
    கால்வைக்க நேர்ந்தால்
    குழிகளில் இடறி விழ நேரிடும்.
    உதிர்ந்த பூக்களால் மூடிய குழிகளைவிட்டு
    ஒதுங்கிச் சென்றாலோ
    தேனொழுகத் தொங்குகின்ற
    முதிர்ந்து பழுத்த பலாப்பழங்கள்
    தலையில் வந்து முட்டும்.

     

    மஞ்சள் செடியும் இஞ்சிச் செடியும்
    பின்னிப்பிணைந்து கிடக்கின்ற
    தோட்டத்துப் பாத்திகளில்
    பரந்துகிடக்கும் பலாச்சுளையின் கொட்டைகள்
    பரல்கற்கள் போல் காணப்படும்;
    நாம் நடக்கையில்
    அவை கால்களில் உறுத்தித் துன்பப்படவைக்கும்.”

     

    அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 64- 65
    http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram5.html

     

    Share
  • நிலவைக் கண்டால் நீலா

    சு. ​கோதண்டராமன்

    “சுப்பையா, கொண்டைக் கடலை மாலை கட்டி வைச்சிருக்கேன். ஆபீசுக்குப் போகும்போது சிவன் கோவில்லே தட்சிணாமூர்த்திக்குப் போட்டுட்டு வேண்டிக்கிட்டுப் போப்பா” என்றார் தாய்.

    “சரிம்மா” என்றான்.

    “மறந்துடாமல் எடுத்துக்கிட்டுப் போ” என்று வலியுறுத்தினார்.

    அவனா மறப்பான்? இது அவன் தலையாய வேலை ஆயிற்றே!

    எத்தனையோ தெய்வங்களுக்கு எத்தனையோ விதமான மாலைகள் போட்டாகி விட்டது. சிவனுக்கு வில்வ மாலை 25 வாரம். அம்பாளுக்கு ரோஜாப்பூ மாலை 21 வாரம். செவ்வாய்க்கு அரளி மாலை 7 வாரம். துர்க்கைக்கு எலுமி்ச்சை மாலை 36 வாரம். அனுமாருக்கு வெத்திலை மாலை 18 வாரம். ஒரு தடவை சோளிங்கர் போய் நரசிம்ம சுவாமிக்கு ஏலக்காய் மாலை கூடச் சாற்றி வந்தான். அந்த வரிசையில் இப்பொழுது தட்சிணாமூர்த்திக்கு வியாழன் தோறும் கடலை மாலை போட்டுக் கொண்டிருக்கிறான். கடுகு மாலை, மிளகு மாலை, சீரக மாலை தான் பாக்கி. இனி யாராவது புதிய சோதிடர் வந்து அதைப் போடச் சொன்னால் அதற்கும் தயாராகத் தான் இருக்கிறான். இத்தோடு 15 வாரங்கள் ஆகிவிட்டது. இன்னும் 3 வாரங்கள் பாக்கி. அதற்குள் நல்ல சேதி எதாவது வருகிறதா என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறான்.

    எதற்காக? இதெல்லாம் எதற்காக?

    எல்லாம் அவன் திருமணத்திற்காகத் தான். வயது 36 ஆகிவிட்டது. இரண்டு அண்ணன்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு வயது முறையே 40, 38 ஆகிறது. 16 வருஷம் முன்பு பெரிய அண்ணனுக்கு பெண் தேட ஆரம்பித்த பெற்றோர்கள், சின்ன அண்ணனையும், பிறகு இவனையும் அதில் சேர்த்துக் கொண்டிருக்கிறார்கள். விளம்பரம் கொடுக்காத பத்திரிகை இல்லை, பதியாத திருமணத் தகவல் நிலையம் இல்லை. நண்பர்கள், உறவினர்கள் எல்லாரிடமும் சொல்லி வைத்திருக்கிறது. யாருக்கும் திருமணம் ஆகிற வழியைக் காணோம். அண்ணன்கள் இரண்டு பேரும் அலுத்துப் போய், அந்த எண்ணத்தையே கை விட்டு விட்டார்கள்.  இவனுக்கு மட்டும் இன்னமும் நம்பிக்கை இருக்கிறது.

    இருந்தாலும் இந்த சாமி எல்லாம் சுத்த மோசம், ஒரு சாமிக்காவது கொஞ்சம் நன்றி உணர்ச்சி இருக்கணுமே என்று கோபம் வந்தது சுப்பையாவுக்கு. அவன் ஒரு அரசாங்க ஊழியன். மிகவும் நேர்மையானவன். கை நீட்டி லஞ்சம் வாங்கிவி்ட்டால் அந்த வேலையை முடிக்காமல் அன்று வீட்டுக்குப் போக மாட்டான். தன் அளவு நேர்மை இல்லாவிட்டாலும், ஓரிரு மாதம் தாமதமாகவாவது சாமி தன் வேலையை முடித்துக் கொடுத்தால் பரவாயில்லை என்று நினைக்கிறான். இதை வெளியில் சொல்லிக் கொள்ளவும் முடியவில்லை. அவன் பேசுவது எந்த சாமி காதிலாவது விழுந்து, அது அவனுக்குக் கொடுப்பதாக நினைத்துக் கொண்டிருக்கும் அருளைத் தடுத்து நிறுத்திக் கொண்டால் என்ன செய்வது என்று பயமாக வேறு இருக்கிறது.

    லஞ்சம் வாங்கலாமா, தப்பில்லையா?  இந்தக் கேள்வியை வேறு யாரும் கேட்பதற்கு முன் அவனே கேட்டுக் கொள்வான். என்ன செய்வது? சோதிடர்களுக்கும் அவர்கள் சொல்லும் பரிகாரங்களுக்குமே ஒவ்வொரு மாதமும் ஐயாயிரம், பத்தாயிரம் என்று ஆகிறது. இதற்காகத் தான் கை நீட்டித் தொலைக்க வேண்டியிருக்கிறது. எந்த சாமியாவது கருணை காட்டிக் கல்யாணம் செய்து வைத்து விட்டால் அப்புறம் இந்த அதிகப்படி செலவுகளும் இராது, பாவம் செய்ய வேண்டிய அவசியமும் ஏற்படாது என்று அவனே சமாதானப்படுத்திக் கொள்வான்.

    பெரிய பண்டிட் முதல் மரத்தடி சோதிடர் வரை எல்லாரையும் பார்த்தாகி விட்டது. கிளி ஜோஸ்யம், கீரி ஜோஸ்யம், பல்லி ஜோஸ்யம், பாம்பு ஜோஸ்யம் என ஒன்றும் பாக்கி இல்லை.

    ஒரு முறை 5000 ரூபாய் கட்டணம் கட்டி ஐந்து நட்சத்திர ஓட்டலில் முகாம் இட்டிருந்த ஒரு ஆந்திர ஜோஸ்யரிடம் ஜாதகம் பார்த்தான். அவர் இந்த மாதம் குரு பெயர்ந்த உடன் கண்டிப்பாகத் திருமணம் நிச்சயம் ஆகும் என்றார். குருவும் பெயர்ந்தார். அடுத்த ராசிக்குப் போவதற்கும் ஆயத்தம் ஆகிவிட்டார். எந்த சேதியையும் காணோம்.

    அடுத்த தடவை ஒரு மரத்தடி சோதிடர் கண்ணில் தென்பட்டார். நெற்றி நிறைய சந்தனமும், குங்குமமும், கழுத்து நிறைய ருத்ராட்சமும் அவரைப் பார்த்தாலே தெய்வீகமாக இருக்கவே அவரிடம் ஜாதகத்தைக் காண்பித்தான். பழைய சோதிடர் சொன்னது பலிக்கவில்லை என்பதையும் சொன்னான். அவர் நன்றாக ஆராய்ந்து பார்த்துவிட்டு, “எந்த மடையன் சொன்னது குரு பலம் வந்தால் உங்களுக்குக் கல்யாணம் ஆகுமென்று? உங்கள் ஜாதகத்தில் குரு நீசனாகி விட்டான். அவன் எந்த ராசியில் இருந்தாலும் உங்களுக்கு ஒன்று தான். உங்களுக்கு ஏழாம் இடத்திலே புதன் உச்சமாக இருக்கிறான். அதனாலே, புத தசை ஆரம்பிக்கும் போது தான் உங்களுக்குத் திருமண வாய்ப்பு” என்றார்.

    “அது எப்போ ஆரம்பிக்கும்?”

    “இன்னும் மூணு வருஷம் இருக்கு.”

    “மூணு வருஷமா? கொஞ்சம் பார்த்துச் சொல்லுங்க.”

    “இதிலே எல்லாம் பேரம் பண்ண முடியாதுங்க. கிரகங்களுக்குப் பூர்வ பலன் என்று ஒன்று உண்டு. அதாவது முறையான அதிகாரம் வருவதற்கு முன்னதாகவே பலன் கொடுக்க ஆரம்பித்து விடுவார்கள். அதற்கு நீங்கள் புதன் கிழமை தோறும் மஞ்சள் வேட்டியைக் கட்டிக்கொண்டு நவக் கிரகத்தை 9 முறை அங்கப் பிரதட்சிணம் செய்ய வேண்டும்.”

    அப்படியே செய்தான். மூன்று வருஷமும் முடிந்துவிட்டது. பூர்வ பலனும் வரவில்லை, அபர பலனும் வரவில்லை.

    ஒரு முறை பத்திரிகைகளில் மணமகன் தேவை பகுதியை மேய்ந்து கொண்டிருந்தபோது “திருமணத் தடையா? பிரபல நேமாலஜிஸ்ட் நெற்குன்றம் நீலமேகத்தைச் சந்தியுங்கள். எத்தனையோ பேர் பலன் பெற்றுள்ளனர்” என்று ஒரு விளம்பரத்தைப் பார்த்தான். அவரிடம் போனான். நேமாலஜிஸ்ட், நியூமராலஜிஸ்ட், ஜெம்மாலஜில்ட், பொட்டாலஜிஸ்ட் என்று பல பட்டங்கள் அவருடைய பெயருக்குப் பின் இருந்தன.

    “உங்க பேரு?”

    “சுப்பையா”

    “என்ன ஸ்பெல்லிங் போடறீங்க? ”

    “எஸ் யூ பி பி ஏ ஐ ஒய் ஏ.”

    “கூட்டுத் தொகை 2 வருது. உங்க பிறந்த தேதி? ”

    “3-1-1977”

    “கூட்டுத் தொகை 1 வருது. உங்களுக்கு நினைச்ச காரியம் எதுவுமே நடக்காதே. வாழ்க்கையே ரொம்பக் கஷ்டமா இருக்குமே.”

    “ஆமாங்க. 12 வருஷமா முயற்சி பண்ணியும் திருமணம் நடக்கல்லிங்க.”

    “எப்படி நடக்கும்? எப்படி நடக்குங்குறேன்? ”

    “ஏன்? ”

    “பிறந்த தேதிப்படி நம்பர் 1. பேரு பார்த்தா 2 வருது. ஒண்ணாம் நம்பர் கொடுக்க நினைக்கிறதை ரெண்டாம் நம்பர் தடுத்துடுது. பிறந்த தேதியை மாத்த முடியாது. பேரை மாத்தினாத் தான் எதுவும் நல்லது நடக்கும்.”

    “அப்படியா? ”

    “உங்க பேரிலே ரெண்டு பி வருதுல்ல, ஆங்கில ரெண்டாவது எழுத்து பி. அதுக்குப் பதிலா ப்பி, அதாவது 16வது எழுத்து, அதைப் போட்டுங்க. உங்களுக்கு அதிருஷ்டம் கொட்டோ கொட்டுன்னு கொட்டும்.”

    “அப்படியா? ”

    “எஸ் யூ ப்பி ப்பி ஏ ஐ ஒய் ஏ. இதிலே மூணு விசேஷம் இருக்கு. கூட்டுத் தொகை ஒண்ணு வருது. அதனாலே இதுக்கும் தேதிக்கும் இருந்த பகை போயிடுது. ப்பி ப்பி ன்னு வரது நாதஸ்வர ஓசை இல்லியா? மங்கள வாத்யம். கல்யாணம் நிச்சயம். இப்ப பேரிலே வர ப்பையா என்பது சிறு வயதுப் பையனைக் குறிக்கும். அதனாலே நீங்க வயசானது தெரியாம என்னிக்கும் சின்னப் பையனாவே இளமையா இருப்பீங்க.”

    “அப்படியா? ”

    “இந்தப் பேரை தினம் 307 தடவை எழுதிப் பாருங்க அந்த மாதிரி 307 நாள் செய்யணும். அதோட, இந்த நீலக் கல் மோதிரம் தரேன். இது விலை 10,000 ரூபாய் தான். இது உங்க நம்பருக்கு அதிருஷ்டக் கல். அப்புறம் பாருங்க. உங்களைக் கையிலே பிடிக்க முடியாது.”

    மோதிரத்தை வாங்கிக் கொண்டு வந்தான்.

    307 நாளும் ஆயிற்று. கையெழுத்து வேள்வியும் முடிந்தது. ஒண்ணாம் நம்பரின் அதிருஷ்டம் இன்னமும் அவன் ஒண்டிக் கட்டையாகத் தான் இருக்கிறான்.

    “ஏண்டா தம்பி, இந்த நாடி சோதிடம்னு சொல்றாங்களே, அப்படியே பலிக்குதாமே, அதை வேணா ஒரு தடவை பார்த்து விடலாமே” என்றார் அவன் தாய்.

    விசாரித்துக் கொண்டு வைதீஸ்வரன்கோவிலுக்குப் போனான். அங்கே நகர் வலம் வந்த போது இருபது முப்பது இடத்தில் நாடி ஜோதிடம் என்று போர்டுகள் தொங்கின. அதிலே யார் மிகச் சரியாகச் சொல்வார் என்று தெரியவில்லை. சரி, கோவிலுக்குப் போய் சாமியையே கேட்டு விடுவோம் என்று போனான். அங்கே பிரகாரத்தில் நான்கு பேர் பேசிக் கொண்டிருந்தார்கள். அவர்களுடன் பேச்சுக் கொடுத்ததில் வழி புலப்பட்டது.

    “பிருகு நாடி ஜோதிடம் என்று போர்டு போட்டிருப்பது தான் ஒரிஜினல், மற்றதெல்லாம் போலி” என்றார்கள்.

    பிருகு முனிவர் பல லட்சம் வருஷங்களுக்கு முன்னே உலகத்தி்ல் எல்லா நாடுகளிலும் எல்லாக் காலத்திலும் பிறக்கப் போகும் மனிதர்களுடைய ஜாதகத்தை எல்லாம் தனித் தனி ஓலைகளில் எழுதி முத்து என்பவரிடம் கொடுத்தாராம். அவர் நாடி முத்து என்று பெயர் பெற்றார். அவருடைய பரம்பரையினர் எல்லோருமே நாடி முத்து, நாடி ரத்தினம் என்ற பெயரைத் தான் மாற்றி மாற்றி வைத்துக் கொள்வார்களாம்.

    “தற்போது இருப்பவர் பெயர் நாடி முத்து. அவரிடம் இருப்பது தான் பிருகு முனிவர் கையால் எழுதின ஓலைகள். மற்றவர்கள் எல்லாரும் செராக்ஸை வைத்துக் கொண்டு பிழைக்கிறார்கள்” என்றார்கள்.

    நாடி முத்துவை நாடிப் போனான். முன் அறையில் ஒரு வரவேற்பாளர் இருந்தார். “நாடி ஜோஸ்யம் பார்க்க வந்திருக்கிறேன்” என்றான்.

    “உடனே பார்க்க முடியாது. 190 பேர் வெயிட்டிங் லிஸ்டில் இருக்கிறார்கள். ஆயிரம் ரூபாய் கொடுத்தால் 191வது நபராக உங்களைப் பதிவு செய்து கொள்வோம்.”

    பணம் கட்டிவிட்டுக் கேட்டான், “நான் எப்போ வரணும்?”

    “ஒரு நாளைக்கு 12 பேருக்கு மேலே பார்க்கக் கூடாதுன்னு பிருகு முனிவர் சொல்லி இருக்கார். அதனாலே உங்களுக்கு நாளை முதல் 16வது நாள் மாலை 4 மணிக்குத் தான் அப்பாயிண்ட்மெண்ட்” என்றார்.

    அடுத்த 16வது நாள் அலுவலகத்துக்கு விடுப்பு போட்டுவிட்டு நாடிமுத்துவிடம் போனான்.

    போய் உட்கார்ந்ததும் நாடிமுத்து அவன் முகத்தை உற்றுக் கவனித்தார். “நீங்க இந்த நேரத்துக்கு வருவீங்கன்னு பிருகு முனிவர் சொல்லி இருக்கார். அதனாலே நீங்க ஒண்ணும் சொல்ல வேண்டாம். உங்கள் ஜாதகத்தை எடுத்துத் தருகிறேன், பாருங்கள்” என்றார்.

    உள்ளே போய் ஒரு ஓலையை எடுத்து வந்து படிக்கத் தொடங்கினார். ‘பார் பார் முருகனைப் பாரதிவேகமா மயில் மேலே வரார் பார்’ என்றார்.

    “உங்க பேரு முருகனுடைய பேர்களில் ஒன்று தானே?” என்றார்.

    அவன் தந்தை சுப்பிரமணிய பாரதியிடம் பற்றுக் கொண்டவர். அதனால் அவனுக்கு பாரதியின் செல்லப் பெயராகிய சுப்பையா என்ற பெயரை வைத்திருந்தார். இந்த ஜோதிடருக்கு அது தெரிந்திருக்கிறதே, பாரதி பெயரைக் கூடச் சொல்லி விட்டாரே என்று அதிசயித்தான்.  அது மட்டுமல்ல, அவனுடைய தந்தை தாய் பெயரையும் மறைமுகமாகக் குறிப்பிட்டார். பிறந்து மூன்று மாமாங்க காலம் ஆகியும் அவன் கன்னி கழியாமல் இருப்பது பற்றியும் குறிப்பிட்டார். தை மாதம் தாலி கட்டும் வேளை வந்து விட்டது என்றும் கூறினார். மிகுந்த மகிழ்ச்சியோடும் நம்பிக்கையுடனும் வீட்டுக்கு வந்தான்.

    தை வந்து போயிற்று. தாலியைத் தொடும் பாக்கியம் கிட்டவில்லை. பிருகு முனிவரிடம் போய் ஏமாற்றி விட்டீர்களே எனச் சண்டை போட வேண்டும் என்று போனான். விவாகக் காண்டம் பார்க்க வேண்டும் என்று மறுபடியும் ஆயிரம் ரூபாய் வாங்கிக் கொண்டு வெயிட்டிங் லிஸ்டில் வைத்து பத்து நாள் கழித்து வரச் சொன்னார்கள்.

    போனான். நாடி முத்து மீண்டும் அவனுடைய ஓலையை எடுத்து வந்தார். அதை நன்றாக ஊன்றிக் கவனித்து விட்டு, “உங்களுக்கு சர்ப்ப தோஷம் இருக்கிறது, அதைச் சரி செய்யும் வரையில் திருமணம் ஆகாது என்று பிருகு முனிவர் சொல்கிறார்” என்றார்.

    “அதை எப்படிச் சரி செய்வது?”

    “சர்ப்ப யாகம் செய்ய வேண்டும். பத்தாயிரம் ரூபாய் ஆகும்.”

    “சர்ப்ப யாகமா? புராணத்தில் பரீட்சித்து ராஜா தான் எல்லாப் பாம்புகளையும் யாக குண்டத்தில் விழ வைத்து சர்ப்ப யாகம் செய்ததாகச் சொல்வார்கள். அந்த மாதிரிப் பாம்புகளை எல்லாம் பிடித்து ஹோமம் செய்ய வேண்டுமா? இது சாத்தியமா?”

    “கவலைப்படாதீங்க. செய்ய முடியாத பரிகாரம் எல்லாம் பிருகு முனிவர் சொல்ல மாட்டார். மாவால் பாம்பு மாதிரி செய்து ஹோமம் செய்வார்கள். அந்த மந்திரம் தான் முக்கியம்.”

    பத்தாயிரம் கொடுத்தான். மூன்று மணி நேரம் அவனைப் புகையில் திணற விட்டார்கள். ஹோமம் முடிந்த பின், நாடி முத்து அவனைக் கூப்பிட்டு, “ஹோமம் செய்தது மட்டும் போதாது. நீங்கள் ஒரு முறை காளஹஸ்திக்குப் போய் ஒரு இரவு அங்கே கோவிலில் படுத்து வாருங்கள்” என்றார்.

    அதையும் செய்தான். தூங்கும்போது எவரோ அவன் பர்ஸை அடித்துக் கொண்டு போய்விட்டார்கள். நல்ல வேளை. ஏடிஎம் கார்டு தனியாக வேறு இடத்தில் வைத்திருந்ததால் வீடு வந்து சேர முடிந்தது.

    எண்கண் என்ற முருகன் தலத்தில் சாமியார் ஒருவர் குறி சொல்வதாகக் கேள்விப்பட்டு அங்கே போனான். சாமியார் ஆஞ்சநேயர் படத்தின் முன் அவனை உட்கார வைத்தார். படத்தின் அடியில் வைக்கப்பட்டிருந்த ஒரு எலுமிச்சம் பழத்தை எடுத்தார். அதில் ஒரு மைப் பொட்டு வைக்கப்பட்டிருந்தது. அதையே உற்றுப் பார்த்தார்.

    “உங்க பேரு சுப்பையாவா?”

    “ஆமாங்க.”

    “உங்க ஊரு கும்பகோணமா?”

    “ஆமாங்க.”

    “உங்க தெருக் கடைசியிலே ஒரு குளம் இருக்கா?”

    “ஆமாங்க.”

    “உங்க வீட்டுக்கு முன்னாலே ஒரு வேப்ப மரம் இருக்கா?”

    “ஆமாங்க.”

    “வீட்டின் கொல்லையில் ஒரு நெல்லி மரம் ரொம்ப நாளாக் காய்க்காமல் இருக்கா?”

    “ஆமாங்க.”

    நேரில் பார்த்தது போல புட்டுப் புட்டு வைக்கிறாரே என்று வியப்பில் அப்படியே உறைந்து விட்டான்.

    “உங்களுக்குக் கல்யாணம் ஆகல்லைன்னு ரொம்ப நாளா வருத்தமா இருக்கீங்க.”

    “ஆமாங்க.”

    “உங்க அண்ணன்கள் ரெண்டு பேருக்கும் கல்யாணம் ஆகல்லை.”

    “ஆமாங்க.”

    “வீட்டிலே தோஷம் இருக்கு அதனாலே தான் இப்படி எல்லாம் நடக்குது. எலுமிச்சம் பழம் மந்திரிச்சுத் தரேன். அதை ஒரு கயிற்றில் கட்டி வீட்டு வாசலில் தொங்க விடுங்க. ஓரு மாசத்திலே நெல்லியும் காய்க்கும், உங்களுக்கும் திருமணம் ஆகும். கிழக்குத் திசையிலிருந்து ஒரு பெண் வரதா ஆஞ்சநேயர் சொல்றார். உங்களுக்கு வரப் போற மனைவி பேரு நீலான்னும் சொல்றார்.”

    ஒரு வருஷம் ஆகிவி்ட்டது. எலுமிச்சம்பழம் காய்ந்து சுருங்கி வாசலில் தொங்கிக் கொண்டிருக்கிறது. நெல்லியும் காய்க்கவில்லை, நீலாவும் வரவில்லை.

    அண்ணன்மார்களின் கதி தான் தனக்கும் என்ற முடிவுக்கு வந்து விட்டான். ஆனால் அவன் தாய் அவனுக்கு நம்பிக்கை ஊட்டினார், “உனக்குன்னு ஒருத்தி இனிமேலா பிறக்கப் போகிறாள்? எங்கேயோ இருக்கிறாள், வரத் தான் போகிறாள்” என்று.

    அவனும் கிழக்கிலிருந்து வரும் ரயில்கள் பஸ்களில் எல்லாம் நீலா வந்து இறங்குகிறாளா என்று பார்த்துக் கொண்டிருக்கிறான். ஏதேனும் நிழல் அசைந்தால் அது நீலாவாக இருக்கக் கூடுமோ என்று பரபரக்கிறான். நிலவைக் கண்டால் என் நீலாவின் முகம் இப்படித் தான் இருக்குமோ என்று மயங்கி நிற்கிறான்.

    நீங்கள் யாராவது நீலாவைப் பார்த்தால் விரைவில் இந்த மஜ்னுவை வந்து சந்திக்கச் சொல்லி அனுப்புங்கள்.

    Share
  • பட்டியும் விக்ரமாதித்தனும் ஜெயமோகனும்!

    வில்லவன் கோதை

    ஆங்கில எழுத்துருவில் தமிழை எழுதினால் என்ன?

    (நவம்பர் 4 – 2013 தி இந்து நாளிதழில்ஜெயமோகன் எழுப்பிய வினாவின் எதிரொலி)

    இந்த ஜெயமோகனின் அபத்தமான ஆலோசனைகளை தமிழ் இந்து பத்திரிக்கை  பிரசுரித்து  தன்னிடம் திறன் மிக்க ஆசிரியர் குழுவொன்று   தற்போதைக்கு இல்லை என்ற தகவலை பறையடித்து சொல்லியிருக்கவேண்டாம்.

    அவர் எழுப்பிய ஆலோசனை விவாதத்துக்குறிய விஷயமே  அல்ல.  அடிப்படையிலேயே  உதறத்தகுந்தவை.

    எப்போதுமே படைப்பாளிகளைக் காட்டிலும் பதிப்பாளர்கள் அடிப்படையில் புத்திசாலிகளாக இருக்க வேண்டும். கடந்த காலங்களில் அப்படித்தான் இருந்திருக்கிறார்கள். அவர்களைத்தாண்டி எந்த அபத்தங்களும் இப்படி அச்சுக்கு வந்ததில்லை.

    முன்பெல்லாம் பத்திரிக்கை ஆசிரியர்களும் பதிப்பாளர்களும் பிரசுரிக்கப்பெறும் விஷயங்களில் எப்போதும் தரத்தில் சமரசம் செய்து கொண்டதில்லை. ஒன்றிரெண்டு களவாடப்பட்ட படைப்புகள் கூட அன்றைக்கெல்லாம் அத்தனை எளிதாக அச்சுக்கு வந்துவிட முடியாது.

    இன்று நி​லைமை அப்படியில்லை.

    பத்துப் பதினைந்து நூல்கள் எழுதி பதிப்பித்தவர்கள் அனுப்புகிற சரக்குகளை பிரித்துப் பார்க்க   அலுப்புற்று நேராக அச்சுக்கு அனுப்புகிற பத்திரிக்கைகளும்  இருக்கிறது. ஒரு சில நூல்கள் எழுதியதாலேயே அவர்கள் அந்த தகுதியை பெற்றுவிடுகிறார்கள்.

    பிரபலமான எழுத்தாளரின் லாண்டரி கடை கணக்குகள்கூட  அச்சுக்குப்போன கதையை சுஜாதா சொல்லி கேட்டிருக்கலாம்.

    இந்த யோசனைகளை உதிர்த்த ஜெயமோகன்  –

    நிரம்ப உழைப்பவராகவும்  எதையாவது மிகுதியாக வாசிப்பவராகவும் எத்தகைய கருத்துக்களுக்கும் உடனடியாக பதிலளிப்பவராகவும் நட்புக்கினியவராகவும்  நான்  அறிந்திருக்கிறேன்.

    வளைந்து நெளிந்து செல்லும் அருவியைப்போன்ற வேறுபட்ட நடையில் எம் தமிழை கையாளுவதை கண்டிருக்கிறேன்.

    இன்றைக்கு  எழுதுகிற அத்தனை நவீன எழுத்தாளர்களின் ஆரம்பப் பாடசாலையாயிருந்த திராவிட இயக்கங்களை அவர்களைப்போலவே சபிப்பவராகவும்

    சவமேடைகளில்கூட சம்மந்தப்பட்டவரிடம் காணநேர்ந்த குற்றங்குறைகளை கருத்துத் தளங்களில் நின்று துணிவோடு பேசுபவராகவும்  பார்த்திருக்கிறேன்.

    அண்டைமாநிலத்தின் ஓரத்தில் அவர் வாழுகின்ற வாழ்க்கை அவருக்கு பலமாகவும் பலவீனமாகவும் இருப்பதை உணர்ந்திருக்கிறேன். இந்த இரட்டை குடியுரிமை அவர் பேச்சிலும் எழுத்திலும் ஊடுருவிக் கிடப்பது எனக்குத் தெரிகிறது..

    இவருடைய  எழுத்தின் வீச்சுக்கு  நான் நேசிக்கிற தந்தை பெரியாரோ பேரறிஞர் அண்ணாவோ  இன்னும் தேசபிதா காந்தியோ விலக்கில்லை என்பதையும் அறிந்திருக்கிறேன்.

    ஆனால் –

    மேற்கிளையில் அமர்ந்து அடிக்கிளையைக்கூட அவரால் வெட்ட முடியும் என்பதை  இப்போதுதான் பார்க்கிறேன்.

    இப்படியொரு அபத்தமான ஆலோசனைகள் பாரம்பரியமிக்க இந்துவின் பார்வையில் எப்படி நழுவிற்று.

    நினைத்தாலே நன்றாக சிரிக்கலாம் என்று கூடத் தோன்றுகிறது.

    ஒருவர் ஐம்பதுக்கு மேற்பட்ட தமிழ் புத்தகங்களின் படைப்பாளி.

    இன்னொன்று இன்றைய தமிழ் வாசகர்களின் பரவலான எதிர்பார்ப்பைப் பெற்ற பாரம்பரியம்மிக்க தி இந்து  நிறுவனம்.

    இருவருக்குமே ஒருவகையில் செலவுக்கு கைகொடுக்கும் சமாச்சாரம். சோறுபோடும் மொழி என்று சொல்லமாட்டேன்.

    இப்படியொரு கூற்றைக்கூட  விவாதிக்கவேண்டிய கருத்தென்பது எத்தனை அபத்தம்.

    மொழி உயிரென்றால் எழுத்துரு உடலல்லவா. எழுத்துரு இருந்தால்தானே இலக்கியமும் இலக்கணமும்  வரும். இலக்கணமும் இலக்கியமும் இருந்தால்தானே மொழி தொடர்ந்து  வாழும்.

    துருக்கி மொழியும் மலயா மொழியும்  முறையான எழுத்துக்கள் அற்றபோது  கூடுவிட்டு கூடு பாய வேண்டிய கட்டாயத்துக்குள்ளாயிற்று.   துருக்கி மொழியும் மலாய் மொழியும்  எடுத்த நிலைப்பாடு தமிழுக்கு தேவையற்து. உறுப்புக்கள் இல்லாதவனுக்கும்  உறுப்புக்களை இழந்தவனுக்கும் தாமே மாற்று உறுப்புக்கள் பொருத்தப்படுகிறது.

    ஆங்கிலத்தில் இப்போது இருக்கிற எழுத்துருக்கள் ஆங்கிலத்துக்கே சொந்தமற்றபோது அதற்கு மாறச்சொல்வது எத்தனை பேதமைதானே.

    எம்மொழியும் தோன்றாத காலத்தே இலக்கிய இலக்கணங்களோடு வாழ்ந்து ஒவ்வொரு கால கட்டங்களிலும்  தன்னைத் தானே செதுக்கிக்கொண்டு இன்றும் சீரிளமையோடு நிற்கின்ற செம்மொழியல்லவா எம் தமிழ்.

    எம் தமிழோடு கலக்கும் தைரியம் இன்றுவரை வேறெந்த மொழிக்கும் ஏற்பட்டதில்லை.`

    2000 ஆண்டுகளுக்கு மேலாக ஏறக்குறைய சீரான எழுத்துருக்களுடன் எம்மொழியின் கலப்பின்றி  தனித்து நிற்கும் எம்மொழியா கூடுவிட்டு கூடு பாயவேண்டும்?

    ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் சிந்து வெளியில் காணப்பட்ட கல்வெட்டுக்கள் சொன்னதென்ன.,

    அசோகர் காலத்தில் கண்டெடுக்கப்பெற்ற  பிராமி கல்வெட்டுகள்

    அதைத்  தொடர்ந்த பௌத்தர்களின்   தாக்கம்  அத்தனையும் கடந்துதானே எம்தமிழ் வந்திருக்கிறது.

    பிராமி முறையில் காணப்பட்ட எழுத்துருக்கள் தமிழ் ஒலிகளை ஏற்க இயலாமற் போனபோது பிறந்ததுதானே தமிழ் பிராமி.

    அடுத்து

    கல்வெட்டுப்பதிவுகளைத்தாண்டி ஓலைகளில் எழுதப் பட்டபோது தமிழ் வட்டெழுத்து முறைக்கு மாறுகிறது.

    ஏறக்குறைய பதினோராம் நூற்றாண்டுகளில் வட்டெழுத்து முறை முற்றிலுமாக ஒதுக்கப்பெற்று பல்லவர்களால் மேலும் சீரமைக்கப் பெறுகிறது. பல்லவர் காலத்திலேயே இன்றைய தமிழின் நெருங்கிய தோற்றத்தை எம்மொழி பெற்றுவிட்டது எம்மொழிக்கும் கிட்டாத பேரங்கீகாரம் அல்லவா?

    பதினெட்டாம் நூற்றாண்டுகளில் கிறித்துவமத பிரச்சாரத்துக்கு வந்த பெஸ்கி என்ற வீரமாமுனிவர்  அன்னை தமிழுக்கு பொட்டிட்டு (எழுத்துருவுக்கு புள்ளி சேர்த்து  இலக்கணங்கள் தந்து) அணிகலன் படைத்து அணி சேர்க்கிறார்.

    உலகிலேயே எம்மொழிக்குமில்லாத வரலாறு கொண்ட, எம்மொழியிலும் காணக்கிடைக்காத இலக்கணங்களும் இலக்கியங்களும் நிறைந்த தாய்த் தமிழை கற்பதற்கா எம்மக்கள் அல்லலுறுகிறார்கள்?

    இன்றைய குழந்தைகளுக்கு இவை ஒரு பொருட்டே அல்ல. அவர்களின்  விரிந்த  பார்வைக்கு விருந்தளிக்க நவீன யுகத்தின் கதவுகள் திறந்தே கிடக்கின்றன. அதனால் முன்னெப்போதுமில்லாத அளவுக்கு அறிந்து கொள்கிற திறனும் கையாளுகிற நேர்த்தியும் மிகுதியாக நம் குழந்தைகள் பெற்றிருக்கிறார்கள்.

    அவர் சொல்லுவது போல இரண்டு எழுத்துருக்களைக் கற்க அவர்களுக்கு தேவையான இரண்டு மூன்று வருடங்கள்  அவர்கள் கல்வி வாழ்க்கையில் மிக மிகக் குறைவானவையே. நெடுங்காலம் மும்மொழியை கற்ற அனுபவமும் எம் குழந்தைகளுக்குண்டு. இன்றும் வேற்றுமாநிலங்கள் பலவற்றில் மூன்று மொழிக்கு குறைவின்றிதானே கல்வி கற்பிக்கப்படுகிறது.

    மிருகங்களையும் பறவைகளையும் வித்தை என்ற இலக்குக்காக பழக்கியபின்  அவைகள் நிகழ்த்தும் சாகசங்கள் வியக்கத்தக்கவை. பிள்ளைப்பிராயத்தில் பயிற்றுவைத்தால்  குழந்தைகளும்  அப்படித்தான்.

    கற்பதில் சிரமமும் கையாளுவதில் சங்கடங்களும் ஏற்படும்போது மொழியை மேலும் மேலும் சீரமைப்பது காலத்தின் கட்டாயம். அதைத்தான் இதுவரை கண்டிருக்கிறோம். காலப்போக்கில் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கும் அது தவிர்க்க முடியாதவைதான். ஆனால் இலக்கு ஒன்றாகத்தான் இருக்கும்.

    அப்படி வளர்ந்து வளர்ந்துதான் தமிழ்மொழி இப்போது கணினிக்குள்ளே நுழைந்திருக்கிறது.

    பதிமூன்றாண்டுகாலம் ஆங்கிலத்திலேயே தமிழை தான் தட்டச்சு செய்த சாகசத்தை சொல்லும் ஜெயமோகன் ஒன்றை கவனிக்க வேண்டும். அது கணினிக்குள் தமிழ் கால் வைத்த காலம்.

    தட்டச்சே அறியாத நான் இன்று அவர் பேசும் வேகத்தில் தமிழிலேயே தட்டச்சு செய்கிறேன். இதைக்கற்க எனக்கு ஒருநாள்கூட தேவைப்பட்டிருக்கவில்லை.

    ஒருவேளை ஜெயமோகன் கூற்று நிகழ்ந்து விட்டால் குழந்தைகள் அவர் சொல்வதுபோல் வேகமாக வாசிக்கக்கூடும். ஆனால் அவருடைய படைப்புகளையோ  எம் கவிஞர்கள்  உணர்வுகளையோ அவை பிரதிபலிக்கக்கூடும் என்று தோன்றவில்லை. இப்போதே இயல்பாக மொழிமாற்றம் செய்யப்பெற்ற எத்தனையோ இனிய தமிழ் நூல்கள் உயிரின்றி உடலோடு உலாவுவது வெளிப்படை.

    என்னதான் z h போட்டு எழுதினாலும் ழகரத்தை உச்சரித்தறியாதோர் பட்டியலில் நம் இனமும் சேரும்.

    பெரியாரை வெறுப்பவர்கள்கூட மொழிக்கெதிராக முணுமுணுக்கும்போது அவரை சேர்க்கத் தவறுவதில்லை.

    அவர் வாழ்ந்த காலத்தில் அவர் வாழ்வில் முன்னுரிமை கொடுத்தது உயர்வு தாழ்வற்ற சமதர்ம சமுதாயம் படைப்பதற்கே. அவருக்கு மொழி அடுத்தபட்சமாகவே இருந்திருக்கிறது.

    தமிழில் காணப்படுகிற எழுத்துகளின் எண்ணிக்கைய குறைத்து  எம்குழந்தைகளின் சிரமத்தை குறைக்க வேண்டுமென பெரியார் பேசியது உண்மைதான்.

    அதை வலியுறுத்தவே  மொழியின் உடலையே மாற்றிய துருக்கி கமால் பாட்சாவை அவர்தான் நினைவூட்டினார்.

    எழுத்துருவை இழக்கும்போது தமிழின் கதி  –

    எண்ணிப் பார்க்கவே  ஏதோ விபரீதம் புலப்படுகிறது.

    கூடுவிட்டு கூடு பாய்ந்த பட்டி விக்ரமாதித்தன்  கதைகளை படித்தவர்கள் ஜெயமோகனின்  கூடுவிட்டு கூடு பாயும் யோசனைகளில் இருக்கும் விபரீதத்தை  உணரக்கூடும்.

    இந்த ஆலோசனைகள்  அவர்  குறிப்பிட்டதைப்போல அபத்தமாகவும் அதீதமாகவும்தான்  இருக்கிறது. மேலும் யோசிக்க யோசிக்க  அது  நிரூபணமும் ஆகக்கூடும்.

    எல்லா மாற்றங்களும் முதலில் அபத்தமாகத்தான் தோன்றும் என்பதில் நம்பிக்கை கொண்ட ஜெயமோகன் தமிழும் ஆங்கிலத்தை மீறி சகல துறைகளிலும் ஒளிரும் என்பதை  ஏன் ஏற்கக்கூடாது.

    கிளியின் உடலில் கூடு பாய்ந்த விக்ரமாதித்தன்  கிளியாக வாழலாமே தவிர விக்ரமாதித்தனாக முடியாது!

    Share
  • ஓடாதே…

    ரிஷி ரவீந்திரன்

    ”ஓடாதே…”

    அம்மா பயத்துடன் கத்திக்கொண்டிருந்தார்.

    10 வயது துருதுருப்புடன் எப்பொழுதும் நான் ஓடி விளையாடுவதைப் பார்த்து எங்கள் வீட்டில் அனைவருமே “ஓடாதே” என எச்சரிப்பர். இதிலென்ன அதிசயம்…? இது எல்லார் வீட்டிலும் சகஜம்தானே…?

    அடடா… நான் என்னைப் பற்றி உங்களுக்குச் சொல்லவேயில்லையே..! நான்…?

    என் பெயர் சீனிவாசன். என்னை சீனு என்றே செல்லமாக அழைப்பர். நான் என் அண்ணனின் தம்பியா அல்லது மகனா என்று தெரியவில்லை.

    என்ன தலை சுழல்கின்றதா….?

    வெங்கடேஷ் அண்ணாவின் உடலிலிருந்து செல்லினை எடுத்து க்ளோனிங்க் முறையில் உருவாக்கப்பட்ட இந்த உலகின் முதல் க்ளோனிங் குழந்தை.

    உலகமே என்னை உருவாக்கத் தடைசெய்தது… கடவுளுக்கும் இயற்கைக்கும் செய்யும் கொடுமை என எச்சரித்தனர்.

    யார் சொன்னது க்ளோனிங் குழந்தை என்றால் அலட்சியம் செய்து வளர்ப்பார்கள் என்று…? எங்கள் வீட்டிற்கு வந்து பாருங்கள்… என் மீது பொழியும் அன்பு மழைக்கு நான் என்ன தவம் செய்தேனோ…? குறிப்பாக வெங்கடேஷ் அண்ணா என் மீது காட்டும் பரிவும் அன்பும் அபரிமிதமானது. ஒருவேளை அவரது உடலிலிருந்து செல்லெடுத்து நகலெடுக்கப்பட்டதால் என் மீது அபரிமிதமான பாசமோ…? அனைவரும் என்னை ஓடாதே என்று அன்பால் எப்பொழுதும் எச்சரித்துக் கொண்டிருப்பர்.

    ஒரு நாள் ஓடி விளையாடி விட்டு வீட்டிற்கு வந்தேன். அப்பொழுது நான் ஜன்னலில் ஏறி ஹேய் என்று கத்தி ஆர்ப்பாட்டம் பண்ணி பயப்பட வைக்கவேண்டும் என எண்ணி ஜன்னலருகே சென்றேன். அம்மாவும் வெங்கடேஷ் அண்ணாவும் பேசிக்கொண்டிருந்தனர். பேச்சில் என் பெயர் அடிபடவே நான் உன்னிப்பாகக் கவனிக்க ஆரம்பித்தேன்.

    “டேய் வெங்கடேஷ்…. கொஞ்சம் பொறுடா… அவனுக்கு இப்பத்தான் 10 வயசு ஆகுது…. அவனோட உடம்பு நல்லா வளரட்டும்… அப்பொழுது தான் அவனோட உடல் உறுப்புக்கள் நல்ல ஆரோக்யமாக இருக்கும்… இன்னும் ஒரு வருஷத்துக்குள்ள அவனோட இதயத்தை எடுத்து உனக்கு ட்ரான்ஸ்பிளாண்ட் பண்ணிடலாம்… மீதி உறுப்புக்களை நல்ல விலைக்கு வித்துடலாம்…”

    Share
  • சுதந்திரம்!…

    நடராஜன் கல்பட்டு 

     

    அப்பா இப்பொ கல்யாணத்துக்கு என்னப்பா அவசரம்இப்பொதான் எனக்கு பதினாறு வயசாகுது. நான் காலேஜுக்குப் போயி படிச்சு பட்டம் வாங்கணும்பாசங்கீதத்துலெ இன்னும் நெறய கத்துக்க வேண்டியது இருக்குப்பாபல மேடேலெ ஏறிக் கச்சேரி பண்ணணும்பத்து பேரு சொல்லணும், “மீனாட்சி கச்சேரியாமிஸ் பண்ணக் கூடாதுப்பா ன்னுசித்திரம் நெறெய வரையணும்சிறுகதையும் எழுதணும்பா.”

    அவ்வொளோ தானா இன்னும் எதுனா பாக்கி இருக்குதா?”

    தோணுற போது அப்பொப்போ சொல்லறேம்ப்பா.”  சிரித்துக் கொண்டே ஒடுகிறாள் மினாட்சி.

    சுந்தரத்தின் மனம் ஐந்தாண்டுகள் பின்னே செல்கிறதுமனைவி மரணப் படுக்கையில்அவன் கையைப் பிடித்துக் கொண்டு சன்னக் குரலில் கெஞ்சுகிறாள், “நாளெக் கடத்தாமெ என் அண்ணன் மவன் மதியழகன் கையிலெ நம்ம பொண்ணெப் புடிச்சுக் கொடுத்துடுங்கஅதான் அவளுக்கு வாள்க்கெ பூரா காவலா இருக்கும்.”  கண்களைத் துடைத்தபடி, “சரி சரி என்கிறார் அவர்அவளும் கண்களை மூடினாள் நிரந்தரமாய்.

    கொடுத்த வாக்கெக் காப்பாத்த வாணாம் சுந்தரம்அதனால தான் மீனாட்ச்சிவாணாம்பான்னு சொன்னாலும் கேக்காமெ கல்யாண்த்தெ நடத்தி முடித்தார்.

    மீனாட்சி புகுந்த வீடு சென்றடைந்தாள்வீடு சிறிய ஓட்டு வீடுதான்பக்கம் பக்கமாகப் பல வீடுகள் அந்தத் தெருவில்விட்டிலே மதியழகனைத் தவிற வேறு யாரும் கிடையாது  அவன் ஆத்தா போய் இரண்டு வருடங்களுக்குள்ளேயே அப்பனும் போய்விட்டான்கூடப் பிறந்தவர்கள் யாரும் இல்லைதனிக் கட்டை அவன்.

    மதி சுய தொழில் செய்பவன்வீடுகளுக்கு வெள்ளை, பெயின்டு அடிப்பவன்காலை எட்டு மணிக்குக் கிளம்பிப் போனால் இரவு ஒன்பது மணிக்கோ பத்து மணிக்கோதான் திரும்புவான், தனியாக அல்ல உடலுக்குள்ளே சில பாட்டில்கள் சாராயத் தண்ணியோடு.

    மணமாகி ஒரு வாரம் கழிந்ததுவாசலில் வந்த மல்லிகைப்பூவில் இரு முழம் வாங்கி வீட்டில் இருந்த ஒரே சாமி படத்துக்கு ஒரு முழம் வைத்துத் தானும் வைத்துக் கொண்டாள் தலையில் மிச்சத்தை மீனாட்சி,.

    இரவு வந்த மதி கத்தினான் வீட்டிற்குள் காலடி வத்ததும், “என்னடீ இது வீடு பூரா பொண நாத்தம்?”

    மல்லிகெ நல்லா இருந்தீச்சு வாசமா இருக்குமேன்னு நாந்தான் வாங்கினேன்.”

    மல்லிகெயுமாச்சு மண்ணாங் கட்டியு மாச்சு. இதெப் பாகுறப்போல்லாம் எங்க ஆத்தா நெப்புதான் வருதுஅவொ மஞ்சளோடெ போய்ட்டான்னு மல்லிகெப் பூவெ மாலெ மாலெயா வாங்கி சாத்தி இருந்தாங்க. தூக்கி எறிடீ வாசல்லே.”, என்று கத்தினான் மதி எட்டு வீட்டிற்குக் கேட்கும் படியாக.

    கண்களில் இருந்து வழிந்த நீரைத் துடைத்தபடி தலையிலும் படத்திலும் இருந்த மல்லிகைப் பூ சரத்தை எடுத்து வாசலில் வீசினாள் மீனாட்சி.

    வீட்டில் தனிமையில் வாடிய மீனாட்சி தன்னுடன் கொண்டு வந்திருந்த சுருதிப் பெட்டியை வைத்துக் கொண்டு தான் கற்ற சில பாடல்களைப் பாடிக் கொண்டிருப்பாள் தன் பொழுதைப் போக்கிடதான் பாடுவதை சுவர்கள் தான் கேட்டுக் கொண்டிருக்கின்றன என்று எண்ணிவந்த மீனாட்சிக்கு ஒரு அதிர்ச்சி.

    ஒரு நாள் அவள் பாடிக் கொண்டிருந்த போது ஜன்னலருகே ஒரு உருவம் நகர்ந்தது போல் தெரியவே வாசல் கதவைத் திறந்து பார்த்தாள்அங்கு ஒரு பத்து பன்னிரெண்டு வயதுள்ள சிறுவன் நின்று கொண்டிருந்தான்.

    யாரு நீஎதுக்கு எங்க வீட்டு ஜன்னல் கிட்டெ நிக்கிறெ?”

    அக்கா எம் பேரு பாலுபக்கத்து ஊட்டுலெதான் இருக்கேன்எனக்கு பாட்டுன்னா ரொம்பப் புடிக்கும்எங்கெ பாட்டு வந்தாலும் நின்னு கேட்டு கிட்டு இருப்பேன்எங்கூடப் படிக்குற பசங்களெல்லாம் என்னெஹிஸ் மாஸ்டர்ஸ் வாய்ஸ் வந்திடுச்சிடா ம்பாங்கதினோம் நீங்க பாடும் போது வாசல்லெதான் நின்னு கேட்டுகிட்டு இருப்பேன்இன்னிக்கித்தான் இவ்வொளோ நல்லாப் பாடுறாங்களே யாரு பாடுறதுன்னு பாக்கலாம்னு சன்னல் வழியே எட்டிப் பாத்தேன். தப்பு தாங்காநீங்க சின்னஞ்சிறு கிளியேன்னு ஒரு பாட்டு பாடினீங்களே அதெ இன்னோரு வாட்டி பாடுங்க அக்காஅதெக் கேக்குற போதெல்லாம் என் செத்துப் போன அக்கா ஞாபகம் வரும்கண்ணுலெ தண்ணி தானா வரும்ஆனாலும் அந்தப் பாட்டு எனக்கு ரொம்பப் புடிக்கும்.”

    சரி பாடறேன்வா உள்ளெ வந்து ஒக்காரு, என்று சொல்லியபடி சுருதிப் பெட்டியை மீண்டும் இயக்க ஆரம்பித்தாள் மீனாட்சி.

    சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா என்று மீனாட்சி ஆரம்பித்த உடனேயே கண்கள் குளமுடைக்க தலையைத் திருப்பிக்க் கொண்டான் பாலுஅழுவது மீனாட்சிக்குத் தெரியக் கூடாது என்ற எண்ணமோ என்னவோ தெரியவில்லைஅப்படியே திரும்பிய தலையை ஒரு 360 டிகிரி சுற்றி வீட்டின் சுவர்களை ஒரு நோட்டம் விட்டான்ஆங்காங்கே காகிதத்தில் வரைந்து ஒட்டப் பட்ட ஓவியங்கள்ஒன்றை விட ஒன்று அழகு.

    அமுத கானம் வந்து கொண்டிருந்தது மீனாட்சியின் வாயில் இருந்து.

    உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில்

     உதிரம் கொட்டுதடி

    என் கண்ணின் பாவையன்றோ கண்ணம்மா

    என்னுயிர் நின்னதன்றோ?”

    என்று மீனாட்சி பாடியபோது பாலுவின் நெஞ்சில் உதிரம் கொட்டாததுதான் பாக்கிஅவன் கண் முன்னே படுக்கையில் அவன் அக்கா, பேச இயலாத நிலையில்அவன் கைகளை அவளருகே நீட்ட மெல்ல முயற்சி செய்து அவன் கைகளைத் தொட்டாள்இருவர் கண்களிலும் கண்ணீர்அதுதான் அவர்கள் கடைசியாகப் பேசிக் கொண்ட மவுன வார்த்தைகள்.

    பாட்டு முடிந்தது.

    நினைவுகளை மாற்ற எண்ணி, பாலு கேட்டான், “அக்கா இதெல்லாம் நீங்க வரெஞ்சதா?”

    ஆமாம். எனக்குப் போது போகலேன்னா படம் வரைவேன்இல்லேன்னா குட்டி குட்டி கதெய்ங்கெ எழுதுவேன்.”

    கதெ கூட எழுதுவீங்களாபத்திரிகைகள்லெ ஒங்க ஓவியங்களெ, கதெய்ங்களெப் போட்டதுண்டா அக்கா?”

    போடலாந்தான்யாரு அனுப்பறது?”

    அக்கா எங்கிட்டெ குடுங்கக்காநான் நம்மூர்லெ இருக்குற பத்திரிகெ ஆபீசுலெ கொண்டு சேக்குறேன்.”

    ஒரு வாரம் கழிந்ததுஒரு சனிக்கிழமை.

    கையில் ஒரு வாரப் பத்திரிகையை வைத்துக்கொண்டு மூச்சிறைக்க தாழ்ப்பாள் போடாதிருந்த கதவைத் தள்ளிக் கொண்டு உள்ளே வந்த பாலு கத்தினான், “அக்கா ஒங்களோட படமும், கதெயும் இந்த வாரம் வந்துருக்கக்காஎன்று.

    வேலைக்குத் செல்லாமல் வீட்டில் படுத்திருந்த மதி கத்தினான், “எவண்டா அவன் எனக்குப் புதுசா மொளெச்ச மச்சான்நான் ஊட்டுலெ இல்லதபோது ரெண்டு பேருமா கொஞ்சிக் கும்மாளம் அடிக்கிறீங்களா?”

    பேச்சோடு நிற்கவில்லை மதிஎழுந்து பளார் என்று பாலுவின் கன்னத்தில் அறைந்தான்.

    சின்னப் பையனைப் போய்…” சொல்ல வந்ததை பூராவுமாகச் சொல்லி முடிக்க வில்லை அவள்மீனாட்சியின் கன்னத்தில் விழுந்தது அடுத்த அறை.

    என்னடி? சின்னப் பையன் கேக்குதோ ஒனக்குநான் கெளவனாயிட்டேனோ?”

    பாலு ஒன்றும் பேசாது வெளியே சென்றான்மீனாட்சியும் ஒன்றும் பதில் பேசவில்லைகுடிகாரனிடம் நியாயமா பேச முடியும்

     மறு நாள் காலை ஏழு மணிக்கு எழுந்த மதி பல் துலக்கி விட்டுஏய் மீனாச்சி டீ கொண்டாடி நான் வேலெக்கு போவணும் என்றான்ஐந்து நிமிஷம் ஆயிற்றுமீனாட்சியைக் காணோம்.

    சமயல் அறைக்குள் சென்று பார்த்தான்அங்கும் அவளைக் காண வில்லைபக்கத்து வீட்டு வாசலில் நின்று கத்தினான், “ஏய் பாலூ வாடா வெளியே, என்றுபாலுவின் அம்மா வந்து சொன்னாள்பாலு காலெலெயே வெளிலெ கெளம்பிப் போயிட்டானுங்களே.”

    எங்கெ போனான்?”

    சொல்லீட்டு போகலீங்களே.”

    அவங்கூட ஓடிப் போயிருப்பாளோஇருக்காதுஎங்க போயிருக்கப் போறா களுதெஅப்பன் ஊட்டுக்குப் போயிருப்பாராவிக்கு வந்துருவாநாம போவலாம் வேலெக்கு என்று மனதிற்குள் சொல்லியபடி வீட்டைப் பூட்டி சாவியை பக்கத்து வீட்டில் கொடுத்துவிட்டுக் கிளம்பினான்.

    இரவு மதி வீடு திரும்பியபோது வீடு பூட்டியபடி இருந்ததுபக்கத்து வீட்டில் இருந்து சாவியை வாங்கிக் கொண்டு பூட்டை திறந்து ஊள்ளே சென்றான்வயிற்றில் பசி கொல்ல அடுப்பங்கரைக்குச் சென்றால் அங்கு பாத்திரங்கள் எல்லம் கவிழ்த்தபடி இருந்தனகளுதெ வரட்டும்.  “நாளெக்கி அவளுக்கு வெச்சுக்கறேன் கச்சேரி, என்றபடி தரையில் படுத்தான்.

    மறு நாள் காலை வீட்டுக் கதவை யாரோ தட்ட, மதி கதவைத் திறக்க, வாசலில் இரு போலீஸ்காரர்கள்அவர்களில் ஒருவர் கையில் இருந்த கடிதத்தை மதியிடம் நீட்டி, “நேத்து கடற்கரைலெ ரெண்டு பாடி ஒதுங்கீச்சு. ஒண்ணு சுமார் அம்புது வயசு ஆம்பிளெஇன்னோணு பதினாறு, பதினேளு வயசுப் பொண்ணுஅக்கம் பக்கத்துலெ விசாரிச்சதுலெ இந்தப் பொண்ணு இந்த ஊட்டுலெதான் இருந்தீச்சுன்னு சொன்னாங்க. இதெப் படிச்சுப் பாருங்க என்றார்.

    கடிதத்தை வாங்கிப் படித்தான் மதி.

    நான் எண்ணியபடி வாழத்தான் சுதந்திரம் இல்லை எனக்குசாகவுமா இருக்காது அது எனக்குஎன்னை பிறர் கண் படாதபடி வைத்து, விஷமென மனம் நோக வார்த்தைகளைக் கக்கி, உடல் நோக அடித்து வளர்த்த என் புருசனின் கைகளுக்கு காப்புகள்தான் போட வேண்டும்நானும் அப்பாவும் செல்கிறோம் இவ்வுலகை விட்டு. இப்படிக்கு மீனாட்சி.

    கடிதத்தைப் படித்த மதி, “அடிப்பாவீ, இப்படிப் பண்ணீட்டெயெடி என்று கத்தியபடி ஓடப் பார்த்தான்அவனைத் தாவிச்சென்று பிடித்த போலீஸ்காரர், “நான் போடுறேன் காப்பு ஒங்க கைக்கு.பி.கோ. செக்ஷன் 306ன் கீழெ கேசும் ஏற்கெனவே பதிவு பண்ணி வெச்சிருக்காரு இன்ஸ்பெக்டர் ஐயா என்றபடி மதியை போலீச் வண்டியில் ஏற்றினார்.

    தெருக் கோடியில் இருந்த பூங்காவில் வானொலியில் டி.கே. பட்டம்மாள் பாடிய

     ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே

     ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம்

    என்று ஆடுவோமே

    என்ற பாட்டு ஒலித்துக் கொண்டிருந்தது.

    மதியழகன் என்று அழகாகப் பெயர் வைத்தார்களேயொழிய அவன் மதி அழகில்லாமல் போய் விட்டதே என்ன செய்யபெயர்வைக்கும் போது அவன் குணம் எப்படி இருக்கும் என்று தெரியாதே.

    என்று வரும் நாட்டுக்கு உண்மை சுதந்திரம்

     இந்த சாராயக் கடைகள் தானோ நிரந்தரம்

     

    Share
  • ஒளி!…

     சு.கோபாலன்

     

    தேயும் இரவு முடிய அதிகாலை விடியத் தோன்றும் உதய சூரியன் ஒளி

    சாயும் மாலைப் பொழுதில் தேயும் சூரியனின் மங்கும் அஸ்தமன ஒளி

    விண்ணிலே மோதும் கார்மேகங்களின் சினமாய் மின்னிடும் மின்னல் ஒளி

    விண்ணிலே தங்கத் தட்டாய்த் தகதகக்கும் வெண்ணிலாவின்  தண் ஒளி

     

    வான் பரப்பிலே வைரங்களாய் பதிந்து கண் சிமிட்டும் தாரகைகளின் ஒளி

    வான் திரையிலே தோன்றும் எழில் ஓவியம் வானவில்லின் வண்ண ஒளி

    விட்டு விட்டு ஒளிர்விட்டுப் பறக்கும் மின்மினிப் பூச்சிகளின் ‘மினி’ஒளி

    வெயில் பட்டுப் பளபளக்கும் கோவில் கோபுர கலசங்களின் கம்பீர ஒளி

     

    பூசை அறையிலே நெய்த்திரி இட்டு ஏற்றிய குத்து விளக்கின் மங்கள ஒளி

    ஆசைமிக கார்த்திகை தினம் ஏற்றிய அகல் விளக்குகளின் அலங்கார ஒளி

    எண்ணிலா பக்தர்கள் கண்டு வணங்கும் அண்ணாமலை தீப அகண்ட ஒளி

    கண்ணிலே கண்டதும் பக்தர்கள் பரவசப்படும் சபரிமலை மகரவிளக்கு ஒளி

     

    தான் அழிந்தாலும் இறுதி வரை ஒளிதந்து இருள் போக்கும் மெழுகுவர்த்தி

    நாம் எல்லாம் அறிந்து உணர வேண்டிய பாடமாய்த் தரும் தியாக ஒளி

    போர்க்களத்தில் இருட்டிலும் விளக்கேந்தி சலியாது சேவை புரிந்த செவிலி

    பார்போற்றிய ‘விளக்கின் சீமாட்டி’ ப்ளாரன்ஸ் நைட்டிங்கேலின் சேவைஒளி

     

    ஒளிமிக்க வாழ்வு யாவர்க்கும் அருள்மிக்க இறைவன்  அருள்வாராக!

    Share
  • வார ராசி பலன்!…18-11-13 – 24-11-13

    காயத்ரி பாலசுப்ரமணியன்

     

    மேஷம்: வண்டி வாகனங்களை வாங்கி விற்பவர்கள் முறையான வழியைக் கடைப்பிடித்தால், எந்த சிக்கலும் தோன்றா மலிருக்கும். உயர் பதவியில் இருப்பவர்கள் தங்களுடைய கொள்கைகளைக் கட்டிக்காக்க போராட வேண்டியிருக்கும். கூட்டுத் தொழிலில், பங்குதாரர் விலகினாலும், புதியவர் சேர்க்கையால் தொழில் வளம் சீராக இருப்பதால், வியாபாரிகள் தெம்புடன் திக்ழ்வார்கள். பொது வாழ்வில் இருப்போர்கள் வந்து சேரும் பொறுப்பு களை சுமப்பதற்கு அதிக உழைப்பை போட வேண்டியிருக்கும். மாணவர்கள் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களின் சொற்படி நடந்தால், மனக் கவலையின்றி சிறகடித்து பறக்கலாம்.

    ரிஷபம்: இந்த வாரம் கலைஞர்களுக்கு ஏமாற்றமாய் இருந்த விஷயங்கள் சாதகமாய் மாறும் சூழல் உருவாகும். வியாபாரிகள் பண விவகாரங்களில், பங்குதாரர்களுடன் கலந்து பேசி செயல்படுதல் நல்லது. மாணவர்கள் உங்கள் அமைதி, கடும் வார்த்தைகளாலும், அவசர செயல்களாலும் பாதிப்படையாதபடி பார்த்துக் கொள்ளுங்கள். பெண்கள் அலுவலக அளவில் நட்புகளை ஓர் எல்லையோடு நிறுத்திக் கொண்டால்,மன சஞ்சலம் குறைவதோடு அதிக இழப்புகளும் இராது. சுய தொழில் புரிபவர்கள் ஆரம்ப முயற்சிகளில் சுணக்கம் காட்டாமலும் இருந்தால், வெற்றி வரும் வழி, லாபம் இரண்டும் உறுதியாகும்.

    மிதுனம்: மாணவர்கள் செய்ய வேண்டிய காரியங்களை பட்டியலாக்கி வைத்துக் கொண்டால், மறதியால் வரும் சிக்கல்கள் அகலும். கலைஞர்கள் வருமானத்தை அதிகப்படுத்த எடுக்கும் முயற்சிகளுக்கு உறவும், நட்பும் கை கொடுப்பதால், மகிழ்ச்சிக்கு குறைவிராது. இந்த வாரம் கரைந்த சேமிப்பை ஈடுகட்ட எடுக்கும் முயற்சியில் பெண்கள் ஓரளவு வெற்றி காண்பார்கள். சுய தொழில் புரிபவர்கள் உங்களுக்கு உதவக் காத்திருக்கும் நண்பர்களையும், வாய்ப்புக்களையும் நழுவ விடாமல் தக்க சமயத்தில் பயன்படுத்திக் கொண்டால், எதிர்காலம் வளமாய் அமையும்.கடினமான பணிகளில், மூத்த அதிகாரிகளின் ஆலோச னையை பின்பற்றுதல் நலம்.

    கடகம்: பெண்கள் தங்களின் உயர்வான எண்ணங்கள் ஈடேறுவதற்கு ஆரோக்கியம் தடையாக இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். மாணவர்கள் ஈடுபாடோடு எந்த செயலைச் செய்தாலும் அதில் வெற்றி காண முடியும். பிள்ளைகள் பெற்றோர்களின் மனதிற்கேற்ப நடந்து கொள்ள முன்வருவார்கள். நண்பர்கள் பிணக்கை மறந்து இணக்கமாக நடந்து கொள்வர் . பணியில் உள்ள ஒரு சிலருக்கு தேவையில்லாத இடமாற்றம் உண்டாகும். கலைஞர்கள் உங்கள் புகழைக் கண்டு பொறாமைப் படுபவர்களிடம் பக்குவமாக நடந்து கொள்வது அவசியம். மறைமுக எதிரிகளின் தொல்லைகளிலிருந்து விடுபட மன உறுதி தேவைப்படும்.

    சிம்மம்: கல்லூரி மாணவர்கள் தங்களுக்கு கிடைக்கின்ற சலுகையை முறையாகப் பயன்படுத்திக் கொள்வது நல்லது. சரக்கு வினியோகம் செய்பவர்கள் வெறும் வாய் வார்த்தையை நம்பி பொருள் கொடுப்பதைக் குறைத்துக் கொண்டால் நஷ்டம் இராது. பெண்கள் இல்லத்திலும், அலுவலகத்திலும் வீண் பேச்சுக்களைக் குறைத்தால், அமைதிக்கு பங்கம் வராமலி ருக்கும். சுய தொழில் புரிபவர்கள் காலத்தின் மதிப்பும் அருமையும் உணர்ந்து செயல்பட்டால், எடுக்கும் முயற்சிக்கு நல்ல பலனிருக்கும். வியாபாரிகள் சுகமான வாழ்க்கைக்கு ஆசைபட்டாலும்,இந்த வாரம் அங்கும், இங்கும் சுற்றித்திரியும் நிலைதான்.

    கன்னி: முக்கியமான பொறுப்புக்களை வகிப்பவர்கள், சிந்தனையை பணியில் செலுத்தி எச்சரிக்கையுடன் செயல்பட்டால், வரவிருக்கும் பிரச்னைகளைத் தவிர்த்து விடலாம். வெளியூர்ப் பயணங்களால் செலவுகள் கூடினாலும்,வியாபாரிகள் நினைத்த காரியத்தை முடித்து விடுவீர்கள். கவனக் குறை வாகச் செயல்படும் பிள்ளைகளை இதமாகக் கண்டிப்பதே நல்லது. புதிய இடங்களு க்குச் செல்பவர்கள் உடைமைகளை பாதுகாப்பாக வைத்தால், பயணங்கள் இனிமையாக அமையும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருப்பதால் பெண்கள் இல்லத்தை அழகு படுத்தும் பணிகளை விருப்பத்துடன் செய்வார்கள்.

    துலாம்: நாணயத்தின் அடிப்படையில் செயல்பட்டால் எந்த ஒப்பந்தமும் எளிதில் கலைஞர்கள் வசமாகும். பணியில் இருப்பவர்கள் அதிகமாகப் புகழ்பவர்களிடம் எச்சரிக்கையாக இருப் பது நல்லது. பொது வாழ்வில் இருப்பவர்கள் சமயோசி தமாகச் செயல்பட்டால், எதிரிகளின் கரம் மேலோங்காதிருக்கும். குற்றம் சொல்லும் உறவினரின் தேவைகளை பெண்கள் முதலில் பூர்த்தி செய்தால், இல்லம் அமைதியாக இருப்பவும், உறவுகள் வலுவாகவும் திகழும். மாணவர்கள் சாதாரணமாய் சொல்லும் வார்த்தைகளை சண்டைக்குக் காரணமாக்குபவர்களிமிருந்து விலகி இருங்கள். பாதி பிரச்னைகள் தானே குறைந்து விடும்.

    விருச்சிகம்: வாடிக்கையாளர்களின் வரவால், வியாபாரிகள் மகிழ்வர். இந்த வாரம் தந்தை வழி உறவுகளுடன் மோதல், அதிருப்தி அன்று அங்கலாய்த்துக் கொள்ளும் நிலை இருந்தாலும்,பக்குவமாக நடந்து கொள்வது புத்தி சாலித்தனமாகும். கலைஞர்கள் செய்யும் வேலையில் கண்ணும் கருத்தாக இருந்தால், நல்ல பெயரைப் பெற இயலும். பணி சுமை கூடுவதால்,பெண்களுக்கு எரிச்சலும், அசதியும் அவ்வப்போது வந்து போகலாம். பணியில் இருப்பவர்கள், தெரிந்தவர்களுக்கு மட்டும் சில சலுகைகளை அளிப்பது, விதிமுறைகளைத் தளர்த்துவது போன்றவற்றைத் தவிர்த்து விடுங்கள். உங்கள் கௌரவம் குலையாமலிருக்கும்.

    தனுசு: வீடு,மனை விஷயங்கள் உங்களுக்கு சாதகமாய் முடிய, சமாதானமாய் போவது புத்திசாலித் தனமாகும்.மாணவர்கள் எந்தவொரு விஷயத்தையும் விளையாட்டாக எடுத்துக் கொள்ளாமல் கவனத்துடன் இருப்பது அவசி யம். வரவுக்கும் செலவுக்கும் சரியாய் இருப்பதால், வியாபாரிகள் கட்டட விரிவாக்கம் ஆகியவற்றை சற்று ஆறப் போடுவது நல்லது. பெண்கள் உங்களை புகழ்பவர்களை நல்லவர்கள் என்று நம்பி உங்கள் ரகசியங்களை பரிமாறிக் கொள்ள வேண்டாம். உயர்பதவி வகிப்பவர்கள் நிர்வாக விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்துவதுடன் அதனைத் தீர்க்கும் நபரிடம் பொறுப்புக்களை அளிப்பது அவசியம்.

    மகரம்: பங்கு தாரர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்களுடன் வீண் சண்டைகளைத் தவிர்த் தால், வெற்றிக்கான வாய்ப்பு கை நழுவாமல் உங்கள் வசம் இருக்கும். எடுத்தகாரியம் யாவும் நன்கு முடிவதால், பொது வாழ்வில் இருப்பவர்கள் தன்னம்பிக் கையுடன் செயலாற்றுவார்கள். கலைஞர்கள் கடன் தொல்லைகளிலிருந்து பெருமளவு விடுபடுவர். எனினும் எந்த சூழலிலும் சுயதம்பட்டம் அடித்துக் கொள்ளாமலிருப்பது அவசியமாகும். பிள்ளைகள் வெளியில் செலவிடும் நேரம் அதிகமாக இருக்கும் என்பதால், பெற்றோர்கள் அவர்களின் நடவடிக்கையை கவனித்து வருவதோடு இதமாக புத்தி சொல்லித் திருத்தினால், அவர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து செயல்படுவர்.

    கும்பம்: பெண்கள் நினைக்கின்ற விஷயங்களில் வெற்றி பெற உங்கள் வாக்குச் சாதுர்யம் கை கொடுக்கும். மாணவர்கள் சஞ்சலங்கள் வளர இடம் கொடாதாவாறு மனத் திடத்துடன் இருந்தால், மகிழ்வுக்கு குறைவிராது. முதியவர்கள் நோய்களுக்கு நீங்களே மருந்துகளை தேடாமல், தகுந்த மருத்துவரை அணுகுதல் நல்லது. கொடுத்த வாக்கை காப்பாற்றக் கூடிய அளவிற்கு வியாபாரிகளுக்கு மன வலிமையும், உடல் வலிமையும் கூடும். பணியில் இருப்பவர்கள் புதிய ஊழியர்களிடம் உங்கள் வாதத் திறமையை காட்டாமல் எளிய முறையில் பழகி வந்தால், நல்ல நட்பு உருவாகும். சரளமான பணப்புழக்கம் தனித் தெம்பைத் தரும்.

    மீனம்: மாணவர்கள் செய்ய வேண்டிய காரியங்களை பட்டியலாக்கி வைத்துக் கொண்டால், மறதியால் வரும் சிக்கல்கள் அகலும். கலைஞர்கள் வருமானத்தை அதிகப்படுத்த எடுக்கும் முயற்சிகளுக்கு உறவும், நட்பும் கை கொடுப்பதால், மகிழ்ச்சிக்கு குறைவிராது. இந்த வாரம் கரைந்த சேமிப்பை ஈடுகட்ட எடுக்கும் முயற்சியில் பெண்கள் ஓரளவு வெற்றி காண்பார்கள். சுய தொழில் புரிபவர்கள் உங்களுக்கு உதவக் காத்திருக்கும் நண்பர்களையும், வாய்ப்புக்களையும் நழுவ விடாமல் தக்க சமயத்தில் பயன்படுத்திக் கொண்டால், எதிர்காலம் வளமாய் அமையும்.கடினமான பணிகளில், மூத்த அதிகாரிகளின் ஆலோச னையை பின்பற்றுதல் நலம்.

    Share
  • பட்டினத்தடிகளின் பாடல்கள் – 15ம் பகுதி

    தஞ்​சை ​வெ. ​கோபாலன்

    பத்தெட்டாய் ஓரைந்தாய்ப் பதின்மூன்றையும் கடந்த
    ஒத்திட்டு நின்றது ஓர் ஓவியத்தைப் போற்றாமல்
    தெத்திட்டு நின்ற திரிகண்ணிக்கு உள்ளாகி
    வித்திடாய் நெஞ்சே விடவும் அறியாயே. 1.

    ஓ என்றன் மனமே! *முப்பத்தாறு தத்துவங்களையும் (அதாவது பத்து+எட்டு+ஐந்து+பதிமூன்று=முப்பத்திஆறு) கடந்து அதற்கு அப்பால் நின்று கொண்டிருக்கும் ஓவியம் போன்றவனான சிவபெருமானின் அற்புத தரிசனம் கண்டு அப்பரப்பிரம்ம ஸ்வருபத்தில் நிலைத்த இன்பத்தைக் காணாமல், உலகத்தில் சுலபமாகக் கிடைக்ககூடிய அற்ப சுகங்கள் எனும் வலையில் மாட்டிக்கொண்டு சுற்றிச் சுற்றி வந்து உன் புத்தியை அதில் விதைத்துவிட்டு நிற்கிறாயே, அதனின்றும் விலகி வாழ அறிந்து கொள்ளவில்லையே. (*சைவ சித்தாந்தத்தில் முப்பத்தியாறு தத்துவங்கள் சொல்லப்படுகின்றன, அவற்றைப் பற்றிய விவரங்களைச் சைவ சித்தாந்த நூல்களில் காணமுடியும்)

    அஞ்சுடனே ஏழாகி ஐமூன்றும் எட்டும் ஒன்றாய்
    மிஞ்சி யிருந்த விளக்கொளியைப் போற்றாமல்
    பஞ்சிலிடு வன்னியைப் போல் பற்றிப் பிடியாமல்
    நஞ்சுண்ட கெண்டையைப் போல் நான் அலைந்து கெட்டேனே. 2.

    மறுபடி மீண்டும் இங்கும் அதே முப்பத்தாறு தத்துவம் பேசப்படுகிறது. அவை (5+7+(5×3)15+8+1=36) முப்பத்தியாறு தத்துவங்களைத் தாண்டி நிற்கும் அந்த ஜோதிஸ்வரூபனான சிவபெருமானைப் போற்றி வழிபடாமல், பஞ்சில் தீப்பிடித்தது போல சட்டென்று பிடித்துக் கொள்ளாமல், நஞ்சை உண்ட கெண்டை மீனைப் போல அங்குமிங்குமாய் அலைந்து கெட்டேனே.

    ஊனமுடனே அடையும் புழுக்கட்டை*
    மானமுடனே சுமந்து மண்ணுலகில் மாளாமல்
    ஆனதொரு பஞ்சவர்கள் ஆண்டிருந்த தெசம் விட்டுப்
    போனது போலே நாம் போய்ப்பிழைத்தோ மில்லையே. 3.

    இந்த உடல் பூவுலகின் கேடுகளையெல்லாம் செய்து சீர்கெட்டுப் போன கிருமிகள் வாழ்கின்ற கேவலமான வஸ்து. இந்த உடலை வைத்துக் கொண்டு மானம், மரியாதை இவற்றோடு வாழ்ந்து, இப்பூவுலக வாழ்வை முடித்துக் கொண்டு போகும் இடத்துக்குப் புண்ணியத்தைத் தேடாமல், பஞ்ச பாண்டவர்கள் செல்வச் செறுக்கோடு வாழ்ந்திருந்த தேசத்தை விட்டுக் காட்டுக்குப் போய் பிழைத்தது போலே நாமும் கானகம் சென்று அந்த இறைவனை நினைந்து தவம் செய்து வாழ்ந்தோமில்லையே.

    (*புழுக்களுக்கு இரையாவதும், புழுத்துப் போகும் நிலை கொண்டதுமான இந்த உடலைப் பற்றி பலரும் சொல்லிச் சென்றிருக்கிறார்கள். யாக்கை நிலையாமை என்பது தமிழிலக்கியத்தில் பல இடங்களில் சொல்லப்பட்டிருக்கிறது. மணிமேகலை காப்பியத்திலும் கூட “வினையின் வந்தது; வினைக்கு விளைவாயது, புனைவன நீங்கின் புலால் புறத்திடுவது; பற்றின் பற்றிடம், குற்றக் கொள்கலம்; மனித யாக்கை இது” என வரும் வரிகளை நினைவு கூரலாம்.)

    ஊறையிறைக்கின்ற உப்பிருந்த பாண்டத்தை
    நாறாமல் நாறி நழுவும் புழுக்கூட்டை
    வீறாம்புரத்தை விரும்புகின்றது எப்படி என்று
    ஆறாத நாட்டில் அகன்றிருந்தேன் இல்லையே. 4.

    கழிவுகளை உடலினின்றும் வெளியேற்றும் உப்பூரும் பாத்திரமாம் இந்த பூதவுடல் உயிர் உள்ளபோதும் அசுத்தங்களை வைத்துக் கொண்டு நாற்றமெடுக்கிறது, அதுமட்டுமல்லாமல் வண்டுகள் அழியக்கூடியதான கூடுகளைக்கட்டி அதில் புழுவினைக் கொண்டு வைத்துச் சேர்த்து பின்னர் அவை அழிக்கப்படுவதைப் போன்ற உடலை, நான் எனது எனும் அகங்காரமும் ஆணவமும் ஆட்கொண்டிருந்த இந்த உடலைப் போற்றி பாதுகாத்து வந்தது அல்லாமல் இதுபோன்ற கேடுகள் இல்லாத புண்ணித் தலங்களைப் பற்றி அறியாமல் அவற்றிலிருந்து எட்டாத தூரத்தில் இருந்துவிட்டேனே.

    அரிய அரிதேடி அறியா ஒரு முதலைப்
    பரிவுடனே போற்றும் பரஞ்சுடரைப் போற்றாமல்
    கரிய பெருவாழ்வை நம்பிக் காமத்து அழுத்தியே
    அரிவாயில் பட்ட கரியது போலானேனே. 5.

    அடி முடி காண்பதற்காக பிரம்மனும், ஹரியும் மேலும் கீழுமாய்ச் சென்றும் காணமுடியாத ஒப்பிலாத முதல்வனை சதாகாலமும் வழிபடவேண்டிய அந்தப் பெருஞ் சுடராம் சிவபெருமானைப் போற்றி வழிபட்டு வாழாமல், நிலையற்ற இந்த புவிவாழ்வை சதமென்று எண்ணிக் காம உணர்வுகளில் மூழ்கித் திளைத்து சிங்கத்தின் வாயில் அகப்பட்ட யானையைப் போல ஆகிவிட்டேனே.

    தந்திரத்தை உன்னித் தவத்தை மிகநிறுத்தி
    மந்திரத்தை உன்னி மயங்கித் தடுமாறி
    விந்துருகி நாதமாம் மேலொளியைக் காணாமல்
    அந்தரத்தே கோலெறிந்த அந்தகன் போல் ஆனேனே. 6.

    ஆகமங்களை அறிவதால் பலன் இல்லை என்று எண்ணி தவமே மேலென்று அதிலே மனம் செலுத்தி, வேதத்தை சிறப்பென்று ஓதியும் மனம் தெளிவின்றி மயங்கித் தடுமாறி, விந்து நாதத்திற்கு அப்பால் ஓங்கி நிற்கும் பெரும் ஜோதியாம் பரம்பொருளைக் காணாமல், ஆகாயத்தின் வெட்டவெளியில் கோலை எறிந்துவிட்டு அது எங்கு போனது, என்ன ஆனது எப்படிப் பிடிப்பது என்று தெரியாமல் தவித்துத் தடுமாறும் அந்தகனைப் போல ஆகிவிட்டேனே.

    விலையாகிப் பாணனுக்கு வீறடிமைப் பட்டதும் பின்
    சிலையார் கைவேடன் எச்சில் தின்னானைப் போற்றாமல்
    அலைவாய்த் துரும்பது போல் ஆணவத்தினால் அழுங்கி
    உலைவாய் மெழுகது போல் உருகினையே நெஞ்சமே. 7.

    மதுரையம்பதியில் புகழ்பெற்ற பாணனான பாணபத்திரரின் இசைக்கு அடிமையானதும், பின்னர் காளத்தி வேடன் கண்ணப்பன் கொணர்ந்து தந்த எச்சில் பண்டத்தை உண்டவனான சிவபெருமானைப் போற்றி வழிபடாமல், கடல் அலையில் விழுந்த துரும்பினைப் போல் அங்குமிங்குமாய் அலைக்கழித்து நிலை தடுமாறி, ஆணவப் பேய் தலையில் அமர்ந்து கொண்ட நிலையில், நெருப்பினைக் கக்கும் உலையில் விழுந்த மெழுகு உருகுவது போல மனம் உருகித் தவிக்கின்றனையே என் நெஞ்சமே.

    Share
  • சீதாயணம் படக்கதை -7

    சி. ஜெயபாரதன், கனடா

    [சென்ற வாரத் தொடர்ச்சி]

     

    சீதாயணம் படக்கதை

    நாடகம் : சி. ஜெயபாரதன், கனடா

    வடிவமைப்பு : வையவன்

    ஓவியம் : ஓவித்தமிழ்

    +++++++++++++++++++++

    image

     

    [தொடரும்]

    +++++++++++++++

    தகவல்

    1. Bharathiya Vidhya Bhavan Ramayana By C. Rajagopalachari [1958]

    2. Valmiki ’s Ramayana, Dreamland Publications, By: Ved Prakash [2001] and Picture Credit to Kishan Lal Verma

    3. Mahabharatha By: Rosetta William [2000]

    4. The Wonder that was India By: A.L. Basham [1959]

    5. The Ramayana & The Mahabharata By: Romesh C. Dutt [1969]

    6. Ramayana [Torchlight Publishing] By: Krishna Dharma [2004]

    **************

    S. Jayabarathan [jayabarathans@gmail.com ] (October 2, 2013) [R-2]

    http://jayabarathan.wordpress.com/

    Scene -12

    Scene -13

     

    Share
  • ஸ்வாமியே சரணம் ஐயப்பா!

    வணக்கம், வாழியநலம்

    கார்த்திகை முதல்நாள்.

    கோடானுகோடி ஐயப்ப பக்தர்கள் ஐயனின் தரிசனம் விழைந்து
    பரவசத்தோடு துளசிமணிமாலை தரித்து விரதம் தொடங்கும் தினம்!

    இந்நன்னாளில் ஐயப்பன் மீது இயற்றப்பட்ட பஞ்சகமும், ஐயனின் எண்ணெய்வண்ண ஓவியமும் இணைப்பாக..

    Ayiappan Finished Oil on Canvass 2

    அடியொன்றுக்கு ஒற்றெழுத்து நீங்கலாக 21 எழுத்துகள் என்று அமைந்த விருத்தப் பாக்கள்…

    பார்க்க, படிக்க, ரசிக்க..

    நடைவழி தொடரும்…

    சு.ரவி

    ஐயப்பன் பஞ்சகம்

    சீலமுயர் வாழ்வை யொரு யோகமெனவே பயிலும் சாதகர்தமைக்
    காலனொருபோதும் அணுகாதபடி நாளுமவன் காத்தருளுவான்!
    நீலமுகி லாடுமலை சோலைபல சூழுமலை நீலிமலையாம்
    வாலியணுகாதமலை வாழுமிறை பாதமலர் வாழ்த்துமனமே!

    யானெனதிலாத நிலையோடுபல காடுமலை ஏறிவருவார்
    தானவர்தம் காவலென வீடுமனை வாசலவன் காத்தருளுவான்!
    யானைகள் உலாவுமலை, வானரமி லாதமலை யாளுமரசன்
    தேனமர் துழாய் புரளும் தோளழகன் பாதமலர் தேடுமனமே!

    எண்ணிய எலாமருளும் ஏழைபங்காளான் சிவபாலன் இவனை
    நண்ணும் அடியார்களொருபோதும் நலியாதபடி காத்தருளுவான்
    திண்ணிய மரங்கள் உயர் கானகம் அடர்ந்தமலை காந்தமலைமேல்
    விண்ணிலெழு ஜோதிமல ரானபர தேவனை விரும்பு மனமே

    பூரணை மணாளனவன், புஷ்கலையின் காதலனைப் போற்றுமடியார்
    தாரணியில் பேறு,புகழோடு பல காலமுறக் காத்தருளுவான்!
    நாரணியும், ஆறணியும் நாயகனும் கூட உருவாகி மலை மேல்
    பூரண நிலாவென உலாவும் அவன் பொன்னடிகள் எண்ணு மனமே!

    மேதினியில் ஏதிலிகள் தோழனவன் மாமலையைத் தேடுமடியார்
    சோதனையுறாதபடி, சோர்வு தழுவாதபடி காத்தருளுவான்!
    வேதஒலி சூழுமலை,வேடுவரில் யோகியவள் வாழுமலை மேல்
    நாதவடிவானவனை, பூதகண நாயகனை நண்ணு மனமே!

    சு.ரவி

    Share