நான் அறிந்த சிலம்பு! – 97
மலர் சபா
புகார்க்காண்டம் – 10. நாடு காண் காதை
மதுரை செல்லும் வழியின் அருமை பற்றிக் கவுந்தி கூறல்
சோலையும் தோட்டமும் ஆகிய கரை வழி
கவுந்தியடிகள் கூறலானார்:
“கோவலனே!
நாம் செல்ல எண்ணியிருக்கும் வழியில்
துனபங்கள் பல நேரக்கூடும்;
அது பற்றிக் கேட்பாயாக!
வெயிலைக்கூடப் பொறுக்காத
மெல்லியல் கண்ணகி இவள்;
இவளுடன் பூஞ்சோலை வழியில் செல்லலாம்..
என்றாலோ..
அங்கே நிலம் பெருக்கும்படி
பெரியதாய் இருந்த வள்ளிக் கிழங்குகளைத்
தோண்டி எடுத்த குழிகள் தென்படும்;
அக்குழிகளை மூடுவதற்கென்று
செண்பகத் தாதுகளைக் கொண்டு
நிரப்பி வைத்திருப்பர்
வழிப்போக்கர்கள் அறிந்திடாவண்ணம்.
அதையறியாமல் நாம் அவற்றின்மீது
கால்வைக்க நேர்ந்தால்
குழிகளில் இடறி விழ நேரிடும்.
உதிர்ந்த பூக்களால் மூடிய குழிகளைவிட்டு
ஒதுங்கிச் சென்றாலோ
தேனொழுகத் தொங்குகின்ற
முதிர்ந்து பழுத்த பலாப்பழங்கள்
தலையில் வந்து முட்டும்.
மஞ்சள் செடியும் இஞ்சிச் செடியும்
பின்னிப்பிணைந்து கிடக்கின்ற
தோட்டத்துப் பாத்திகளில்
பரந்துகிடக்கும் பலாச்சுளையின் கொட்டைகள்
பரல்கற்கள் போல் காணப்படும்;
நாம் நடக்கையில்
அவை கால்களில் உறுத்தித் துன்பப்படவைக்கும்.”
அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 64- 65
http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram5.html