Blog

  • ஆக்கமேதை அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல்: வான ஊர்திக்கு முன்னோடிச் சோதனைகள் -3

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா

     

    ஆக்கமேதை அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல்:

    வான ஊர்திக்கு முன்னோடிச் சோதனைகள் -3

    அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல்

    அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல்
    (1847-1922)
     

    ‘என் அன்புக்குரிய மேபெல்,

    என்னை எழுதுமாறு தூண்டு. என் படைப்புகள் வரவேற்கப்பட்டு வெகுமதி பெறவும், நான் இன்னும் உயிருடன் வாழ்ந்து, சிந்தித்து, ஆக்கவினை களுக்கு ஊக்கமுடன் உழைப்பதை மாந்தருக்கு உணர்விக்கவும் வழி செய்திடு. எனது எண்ணங்கள் நிறைவேற, எனது கனவுகள் மெய்யாக என்னைத் தூண்டு. ஏதோ முதலில் பெல் ஒன்றைக் கண்டுபிடித்தார், இப்போது மேற்கொண்டு படைக்க எதுவுமின்றி சும்மா இருக்கிறார் என்று எனது நண்பர்கள் குறை கூறுவதை என்னால் தாங்கிக் கொள்ள முடியாது ‘.

    அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல் [தன் மனைவி மேபெலுக்கு எழுதிய கடிதம்]

    ‘ஒரு கதவு நமக்கு மூடும் போது, அடுத்த கதவு திறக்கிறது! நீண்ட காலம் மீண்டும், மீண்டும் மூடிய கதவுப் புறத்தை நோக்கியே முன்னேற முயற்சி செய்கிறோம்! நமக்காகப் பின்புறம் கதவு திறந்திருப்பது நமது கண்களுக்குத் தெரிவதில்லை!

    அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல்

    ‘நீ எடுத்துக் கொண்டிருக்கும் கைவச வேலையில் உன் கவனம் முழுவதையும் செலுத்து! பரிதியின் கதிர் ஒளியைக் குவியாடியில் ஒருங்கே குவியச் செய்யா விட்டால், கனல் சக்தியில் எதையும் எரிக்க முடியாது ‘.

    அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல்

    முன்னுரை: ஆயிரத்துக்கும் மேற்பட்ட அற்புதச் சாதனங்களைப் படைத்த அமெரிக்க ஆக்கமேதை தாமல் ஆல்வா எடிஸனை அறிந்து கொண்ட அளவுக்கு, உலக மாந்தர் அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல்லை அறிய மாட்டார்கள்! விந்தை நிகழ்ச்சியாக அவ்விரு மேதைகளும் ஒரே ஆண்டில் அடுத்தடுத்துப் பிறந்தவர்கள்! இருவரும் வட அமெரிக்காவில் தமது வல்லமைகளைக் காட்டி, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அரிய, புதிய படைப்புகளை உருவாக்கி, மனிதர் நாகரீக வாழ்வைச் செழிக்க வைத்தவர் கள்! ரைட் சகோதரர்கள் பறக்கும் ஊர்தியைப் படைப்பதற்குப் பத்து வருடங்களுக்கு முன்பாக, 1877 ஆம் ஆண்டிலேயே பெல் பறக்கும் ஊர்தியை ஆக்குவதில் தீவிரமாக முற்பட்டவர். தொலைபேசி, ஒளிநார்த் தகவல் [Telephone, Photophone] ஆகியவற்றைப் படைத்ததில் காப்புரிமை பெற்ற பெல், அடுத்து மருத்துவத் துறை, இனவிருத்தி, இனவிருத்திச் சீர்பாடு, வான்வீதிப் பறப்பியல், கடற்துறைப் போக்குவரத்து [Medicine, Genetics, Eugenics, Aviation, Marine Navigation] ஆகிய துறைகளில் படைப்புக் கருத்துக்களை வழங்கினார்.

    மேலும் அவரது ஆக்கவினைகள் தொலைக்காட்சி, நாடாப் பதிவுச் சாதனம், பரிதிக் கனல் பயன்பாடு, வாயு வெப்ப ஈர வளப்பாடு, எரிசக்திச் சிக்கனப் பயன்பாடு, கருத்தடை [Television, Tape Recorder, Solar Heat, Air Conditioning, Energy Conservation, Birth Control] ஆகியவற்றின் வளர்ச்சிக்கு உதவியன. 1881 இல் அமெரிக்காவின் 20 ஆவது ஜனாதிபதி ஜேம்ஸ் கார்ஃபீல்டு [James Garfield] துப்பாக்கியால் சுடப் பட்டதும், வயிற்றில் தங்கிய ரவையைக் கண்டுபிடிக்க ஓர் உலோக உளவியைப் [Metal Detector] பெல் தயாரித்தார். இயற்கையாகக் கதிரியக்க முள்ள ரேடியத்தின் [Radioactive Radium] கதிர்வீச்சைப் பயன்படுத்தி, உடலுக்குள் பரவும் புற்றுநோயைக் குணப்படுத்தலாம் என்று புதிய மருத்துவ ஆலோசனையை 1903 ஆம் ஆண்டில் முதன்முதலாக வெளியிட்டவர், பெல்.

    அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல்லின் பிற்கால வாழ்க்கை

    அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல் வாடிப் போகும் வெற்றி மாலைகளைச் சூடிக் கொண்டு மயங்கிக் கிடக்கும் ஒரு மனிதர் அல்லர்! டெலிஃப்போனைக் கண்டுபிடித்தற்குப் பிறகு, பெல் ‘ஒளிநார்ப்பேசி ‘ [Photophone] தயாரிக்க முற்பட்டார். அம்முறையில் பரிதி ஒளிமூலம் வாய்ச் சொற்களை அனுப்பிக் கேட்கும் ஒரு சாதனம் விருத்தியானது. ஒளிநார்த் தகவல் நியதிக்குப் [Fibre Optics Principle] பயன்படும் அப்படைப்பை ஒரு மூலகரமான ஆக்கமாகக் கருதினார், பெல். அந்தச் சாதனம் பூரணமாக வேலை செய்யும் என்று எவரும் நம்பிலர். பரிதி எப்போதும் ஒளியுடன் வானில் தென்படாததால், ‘ஒளிநார்ப்பேசி ‘ நடமுறைக்கு ஒவ்வாத ஒரு படைப்பு என்று பலர் புறக்கணித்தனர்.

    ஒளிநார்ப்பேசி [Photophone] ஒளிக் கற்றை மூலம் வாய்ப் பேச்சை அனுப்பும் முறை. அந்த முறையே இப்போது ஒளிநார்த் தகவல் [Fibre Optics] ஏற்பாட்டில் கையாளப் படுகிறது. அந்த முறையை விருத்தி செய்ய அவருடன் கூட்டாகப் பணி ஆற்றியவர், சார்லஸ் சம்னர் டெயின்டர் [Charles Sumner Tainter]. அதற்குப் பயன்படும் படிகம், ஒளி நுகர்ச்சி உள்ள ஸெலினியப் படிகச் செல் [Light-Sensitive Cells of Crystalline Selenium]. அப்படிகத்தின் சிறப்பான ஒரு பண்பு: ஒளிச்சக்தியின் தீவிரத்துக்கு ஒப்பாக, அதன் மின்தடைத் தலைகீழாக மாறுகிறது [Electrical Resistance varies inversely with the Illumination Intensity]. அதாவது ஒரு பண்டம் இருட்டில் இருந்தால் அதன் ஒளித்தீவிரம் குன்றி, படிக மின்தடை மிகையாகிறது. அப்பண்டம் வெளிச்சத்தில் இருக்கும் போது அதன் ஒளித்தீவிரம் மிகுந்து, படிக மின்தடை குறைவாகிறது. ஒளிநார்ப்பேசியில் இவ்விதம் நிகழ்கிறது: தொலைபேசி அனுப்பி [Transmitter] முன்பாக அதிரும் ஓர் ஆடியை வைத்தோ அல்லது சுற்றும் சுழலியை வைத்தோ குரல் தொனி ஒளியை மாறுபடுத்தும் போது, ஸெலினியப் படிகம் உள்ள ஓர் ஒளிவாங்கியில் [Receiver] அது விழும்படிச் செய்ய வேண்டும். அப்போது குரல் தொனிக்கு ஒப்பாக, ஒளிக்கற்றை மூலம் ஒளியின் தீவிரம் மிகுந்தோ அல்லது குறைந்தோ அனுப்பப் படுகிறது. பெல்லின் ஒளிநார்ப்பேசிக்கு 1881 இல் காப்புரிமை அளிக்கப்பட்டது. 1911 இல் பெல் முதன்முதலாக வட்டச் சுழற்றித் தொலைபேசியைப் [Dial Telephone] படைத்தார்.

    1957 இல் சார்லஸ் டெளனஸ், ஆர்தர் சாவ்லோ ஆகியோர் [Charles Townes & Arthur Schawlow] இருவரும் பெல் ஆய்வுக் கூடத்துக்காக லேஸர் ஒளிச் சாதனத்தை [Laser (Light amplification by Simulated Emission of Radiation)] விருத்தி செய்தனர். 1977 இல் பெல் நிறுவகம் லேஸர் ஒளிபெருக்கியுடன், ஒளிநார்த் தகவல் அனுப்பு [Fibre Optics] முறையைப் பயன்படுத்தி, முதன்முதலாக சிகாகோ நகர்த் வீதிகளில் வாய்ப் பேச்சுகள், வீடியோ சமிக்கைகள், மின்கணனி விளக்கக் குறிப்புகள் ஒளித்தீவிர அதிர்வில் [Phone Calls, Video Signals, Computer Data on Light Pulses] அனுப்பப் பட்டன. அடுத்து பெல் குழுவினர் மெழுகுச் சொற்பதிவுத் தட்டு [Wax Phonograph Record] தயாரிப்பதில் இறங்கினார்கள்.

    1881 இல் அமெரிக்காவின் 20 ஆவது ஜனாதிபதி ஜேம்ஸ் கார்ஃபீல்டு [James Garfield] வாழ்க்கையில் கசப்புள்ள ஓர் வழக்கறிஞரால் சுடப்பட்டு மரணக் காயம் அடைந்தார். அவரது வயிற்றில் தங்கிய ரவையின் இருப்பிடத்தைக் காண ‘உலோக உளவி ‘ [Metal Detector] ஒன்றைப் பெல் கண்டுபிடித்தார். பெல் தயாரித்த அந்த உலோக உளவி ஒரு மின்சாரத் தூண்டு-சமப்பாடுச் சாதனம் [Induction-Balance Electrical Device]. அச்சாதனம் ஜனாதிபதி உடம்பில் ரவையைக் காணத் தவறினும், பின்வந்தவர் அதைச் சீர்ப்படுத்த ஏதுவானது. அடுத்து பெல் அமைத்த ‘தொலை ஒலி உளவி ‘ [Telephonic Probe] வெற்றிகரமாகப் பல்லாண்டுகள் உலோகக் கண்டுபிடிப்பு உளவியாக உபயோகமாகி வந்தது. தொலை ஒலி உளவி தயாரிக்கப் பட்டு 20 ஆண்டு களுக்குப் பிறகு, எக்ஸ்ரே கருவி ஒன்று செம்மை யாக்கப்பட்டு உலோக உளவியாகப் பயன்படுத்தப் பட்டது. பெல்லின் இரண்டாவது புதல்வன் சுவாச உறுப்பு நோயில் இறந்து போனபின், பெல் சூனியக் கவசத்தைக் [Vacuum Jacket] கண்டுபிடித்தார். அதுவே பிற்காலத்தில் செயற்கை முறையில் இயங்கும் உலோகப் புப்புசத்தின் [Iron Lung] முன்னோடி மாதிரி யானது. இயற்கையாகக் கதிரியக்க முள்ள ரேடியத்தைப் [Radioactive Radium] பயன்படுத்தி, உடலுக்குள் பரவும் புற்றுநோயைக் குணப்படுத்தலாம் என்று 1903 ஆம் ஆண்டில் முதன்முதலாக வெளியிட்டவர், பெல்.

    பெல் குடும்பத்தாரின் கோடை வாழ்தளம் கனடாவில் நோவாஸ் கோஷியா மாநிலத்தில், கேப் பிரிடன் தீவில் இருக்கும் பெடாக் சிற்றூர் [Baddack in Cape Breton Island, Nova Scotia, Canada]. பெடாக் சிற்றூர் ஓர் பெரிய ஏரியின் கரையில் அமைந்துள்ளது. பெல்லின் நீண்டகால நீர் சம்பந்தப்பட்ட படைப்புத் திட்டங்கள் அனைத்தும் கனடாவின் பெடாக் ஏரிக் கரையிலே செய்யப்பட்டவை. குறிப்பாக பெல்லின் நீர் ஊர்திகள், வான ஊர்திகள் யாவும் அங்குதான் விருத்தி செய்யப் பட்டன. அடுத்தபடியாக கடல்நீரில் உப்பு நீக்கு முறை [Desalination of Seawater], சூழ்வெளி நீர்ப் பிழிவு முறை [Condensation of Atmospheric Water] ஆகிய இரண்டு முறைகளை நிலைப்படுத்தச் சோதனைகள் புரிந்தார். அமெரிக்காவில் ‘நேஷனல் ஜியோகிராஃபிக் மாத வெளியீடு ‘ [National Geographic Magazine] அமைப்பாளர்களில் ஒருவராகி, அதன் முதல் அதிபராக அவரது மருமகன் டாக்டர் கில்பர்ட் கிரோஸ்வெனர் [Dr. Gilbert Grosvenor] நியமிக்கப் பட்டார். தற்போதைய நேஷனல் ஜியோகிராஃபிக் மாத வெளியீட்டின் மகத்தான அமைப்புக்கு அவரே காரண கர்த்தா!

    ஹெலென் கெல்லருக்கு பலகணி திறந்த பெல்

    யாராவது உங்கள் தொழில் என்ன வென்று பெல்லைக் கேட்டால், ‘ நான் காது கேளாதவரின் ஆசிரியன் ‘ என்பதாக அவரது பதில் இருக்கும்! அமெரிக்க மேதை ஹெலென் கெல்லர் [Helen Keller (1880-1968)] பிறந்து 19 மாதங்கள் கழித்து நோய்வாய்ப் பட்டதில், அவரது பார்வை போனது! காது செவிடானது! அத்துடன் வாயும் ஊமை யானது! மனிதர் வாழத் தேவை யான ஐம்பொறிகளில் மூன்று முக்கியப் பொறிகள் முடங்கிப் போயின. பெல்லின் தந்தையார் கண்களில் ஒளியற்ற, காதுகள் கேளாத, வாய் பேசாத ஹெலென் கெல்லரை ஆறு வயதாகும் போது பெல்லிடம் அழைத்து வந்தார். மற்றோரிடம் தொடர்பு கொள்ள இயலாமல் ஹெலென் குழம்பிப் போய், இரங்கத் தக்க முறையில் ஆரவாரமுடன் காணப்பட்டார். பெல்தான் சிறப்பு மிக்க பயிற்சியாளி அன்னி ஸல்லிவனைக் [Teacher Anne Sullivan] 1887 இல் கண்டுபிடித்து, ஹெலனுக்கு பிரெயில் ஏற்பாடு [Braille System] மூலம் கல்வியும், பிறரிடம் தொடர்பு கொள்ளும் பயிற்சியும் அளித்தவர். ஹெலன் கெல்லருக்குப் பலகணியைத் திறந்து, இருளை விட்டு ஒளி பெறப் பயிற்சி அளித்தவர் பெல்! காது கேட்காத ஊமை ஹெலெனைப் பேச வைத்தவர் பெல்! தனிமையில் தவித்த ஹெலென் கெல்லரை நட்பு உலகுக்கு அழைத்து வந்தவர் பெல்!

    இளமங்கை ஹெலென் கெல்லர் கனடாவில் இருக்கும் பெல்லின் வேனிற் கால மாளிகையான பெயின் பிராஃக்குக்கு [Beinn Bhreagh, Baddack] வருகை தந்து அடிக்கடி பெல் குடும்பத்தாருடன் பழகி வருவது வழக்கம். பெல் பட்டம் அமைத்து பறக்க விட்டுச் சோதிக்கும் சோதனைகளில் ஹெலென் பங்கெடுத்து மகிழ்வதுண்டு. எழுதப் பேச வாசிக்கக் கற்றுக் கொண்டு ஹெலென் கெல்லர் 1904 இல் மாஸ்ஸசுஸெட்ஸ் மாநிலத்தின் கேம்பிரிட்ஜில் உள்ள ராட்கிளிஃப் கல்லூரியில் படித்துச் சிறப்பு மதிப்புடன் பட்டம் பெற்றார். 1902 இல் ஹெலென் கெல்லர் எழுதி வெளியிட்ட சுயவரலாற்று நூலை [The Story of My Life], ‘செவிடருக்குப் பேசச் சொல்லிக் கொடுத்த அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல்லுக்கு ‘ அர்ப்பணம் செய்தார்.

    வான ஊர்தியைப் படைக்கும் முன்னோடி முயற்சிகள்

    தொலைபேசியைக் கண்டுபிடித்து அதனால் கிடைத்த உலகப் புகழோ, பாராட்டுகளோ பெல்லுக்குப் போதிய மனத் திருப்தி அளிக்க வில்லை! திருமணமான காலத்தில் அவருடைய மனைவிக்கு பெல் ஒரு கடிதத்தில் இவ்விதம் எழுதினார்: ‘என் அன்புக்குரிய மேபெல், என்னை எழுதுமாறு தூண்டு. என் படைப்புகள் வரவேற்கப் பட்டு வெகுமதி பெறவும், நான் இன்னும் உயிருடன் வாழ்ந்து, சிந்தித்து, ஆக்கவினைகளுக்கு ஊக்கமுடன் உழைப்பதை மாந்தருக்கு உணர்விக்கவும் வழி செய்திடு. எனது எண்ணங்கள் நிறைவேற, எனது கனவுகள் மெய்யாக என்னைத் தூண்டு. ஏதோ முதலில் பெல் ஒன்றைக் கண்டுபிடித்தார், இப்போது மேற்கொண்டு படைக்க எதுவுமின்றி சும்மா இருக்கிறார் என்று எனது நண்பர்கள் குறை கூறுவதை என்னால் தாங்கிக் கொள்ள முடியாது ‘.

    ரைட் சகோதரர்கள் பறக்கும் ஊர்தியைப் படைப்பதற்குப் பத்து வருடங்களுக்கு முன்பாக, 1877 ஆம் ஆண்டிலேயே பெல் பறக்கும் ஊர்தியை ஆக்குவதில் தீவிரமாக முற்பட்டார். ‘வாயு மண்டல வான் பறப்பு ‘ [Aerial Aviation] என்று தன் கையேட்டில் குறிப்பிட்டு ஒரு சீரற்ற பறக்கும் யந்திர டிசைனை [Crude Design of a Flying Machine] கைப் படத்துடன் காட்டி யிருக்கிறார். பறக்கும் பட்டங்களைக் காற்றை விடக் கனமில்லா யந்திரங்கள் என்று பெல் அழைப்பார்! முதலில் மனிதரற்ற பலவிதப் பட்டங்களைக் காற்றில் பறக்க விட்டு பறப்பியல் நுணுக்கத்தையும் அதன் கட்டுப்பாடுகளையும் நன்கு கற்றுக் கொண்டார்.

    1892 இல் நிபுணர் ஹார்கிரேவ் என்பவர் தயாரித்த பெட்டி வடிவப் பட்டத்தையே [Hargrave ‘s Box Kite] தன் முதல் மாடலாக எடுத்துக் கொண்டார். பெல் குழுவினர் சட்டத்தால் கட்டிய பட்டங்கள் பெரிய நூதன வடிவம் கொண்டவை. 1898 இல் பெல் தயாரித்த 15 அடி நீளம், 11 அடி அகலம், 5 அடி உயரம் கொண்ட ஜம்போ பட்டம் ஏனோ முதலில் பறக்க வில்லை! 1902 இல் பெல் அமைத்தது 64 கூடு இணைந்த நான்முகப் பட்டம் [64 Cell Tetrahedral Kite]. டெட்ராஹீடிரன் என்றால் நான்கு முகச்சம முக்கோணம் அமைந்துள்ள ஒரு முக்கோணப் பிரமிட் [Triangular Pyramid]. நான்கு முகம் உள்ள முக்கோணப் பிரமிட் பட்டம் பன்முகம் கொண்டுள்ளதால், பட்டத்தைக் காற்று தூக்கி விட எளிதாகிறது என்று பெல் சோதனையில் அறிந்து கொண்டார்.

    [தொடரும்]

    ****

    தகவல்:

    1. Alexander Graham Bell, The Life & Times of the Man Who Invented the Telephone By: Grosvener & Wesson (1997)

    2. Working at Inventing, Thomas A. Edison & Menlo Park Experience By: William S. Pretzer (1993)

    3. The History of the Telephone, Electronic Text Center, University of Virginia Library

    4. The New Book of Knowledge By: Grolier Incorporated (1984)

    5. Encyclopaedia of Britannica (1978)

    6. The Children ‘s Encyclopedia of Science (1985)

    7. Science & Technology The Marshall Cavendish Illustrated Encyclopedia (1979)

    8. The Living World of Science in Colour (1966)

    9 Britannica Concise Encyclopedia [2003]

    10 Alexander Graham Bell & the Hydrofoils By: Robert V. Bruce (1973)

    11 திண்ணை விஞ்ஞானக் கட்டுரை: அமெரிக்க ஆக்கமேதை தாமஸ் ஆல்வா எடிஸன் (http://www.thinnai.com/science/sc0302023.html) [மார்ச் 2, 2002]

    12 திண்ணை விஞ்ஞானக் கட்டுரை: மார்க்கோனியின் கம்பியில்லாத் தகவல் தொடர்பு (http://www.thinnai.com/science/sc0203022.html) [பிப்ரவரி 2, 2002]

    13 திண்ணை விஞ்ஞானக் கட்டுரை: ரைட் சகோதரர்கள் விமானக் கண்டுபிடிப்பு (http://www.thinnai.com/science/sc0330021.html) [மார்ச் 30, 2002]

    14 திண்ணை விஞ்ஞானக் கட்டுரை: ரைட் சகோதரர்கள் (நூறாண்டுப் பூர்த்தி விழா) (http://www.thinnai.com/science/sc1218031.html) [டிசம்பர் 18, 2003]

    15 The Penguin Desk Encyclopedia of Science & Mathematics [2000]

    *************

    jayabarat@tnt21.com [S. Jayabarathan (December 6, 2009)]

     

     

     

     

    Share
  • வந்தனை செய்வோம் கந்தனை!

    -மேகலா இராமமூர்த்தி

    கார்த்திகை மாதம் பல்வேறு சிறப்புக்களைத் தன்னகத்தே கொண்டது. மூலமுதற்பொருளாகிய சிவபெருமான் தன் அடிமுடி காணவியலாத திருமாலுக்கும், பிரமனுக்கும் சோதி வடிவாய்த் திருவண்ணாமலையில் காட்சி தந்தது இக்கார்த்திகை மாதப் முழுமதி நாளிலேயே என்கின்றனர் பௌராணிகர்கள். மணிவாசக் பெருமானும் திருவாசகத்தில்,

    அலரவனும் மாலவனும் அறியாமே அழலுருவாய்
    நிலமுதற்கீழ் அண்டமுற நின்றதுதான் என்னேடீ?
    நிலமுதற்கீழ் அண்டமுற நின்றிலனேல் இருவருந்தம்
    சலமுகத்தால் ஆங்காரந் தவிரார்காண் சாழலோ. (திருச்சாழல்: 260) என்று அழலுருவாய் நின்ற அரனின் சிறப்பைப் பேசுகின்றார்.

    muruganசிவனாருக்கு மட்டுமன்று அவர் மகனாருக்கும் உகந்தது இக்கார்த்திகை மாதம். ’மாதங்களில் நான் மார்கழி’ என்றான் கண்ணபெருமான். அதுபோல் மாதங்களில் கார்த்திகையாகத் திகழ்பவன் கண்ணுதலானின் மகனான கந்தன். ஆம்…கார்த்திகை மாதத்தில் வரும் கார்த்திகை நட்சத்திரமும், பூர்ணிமையும் சேர்ந்த நன்னாளில்தான் அழகன்முருகன் சிவபெருமானின் நெற்றிக்கண்ணிலிருந்து புறப்பட்ட ஆறு தீப்பொறிகளிலிருந்து தோன்றினான் என்கின்றன புராணங்கள். அத்தீப்பொறிகள் சரவணப் பொய்கையிலிருந்த ஆறு தாமரை மலர்களில் விழுந்து ஆறு குழந்தைகளானதும், அக்குழந்தைகளைக் கார்த்திகைப் பெண்டிர் அறுவர் அன்போடு வளர்த்ததும் நாமறிந்த செய்திகளே.

    பின்பு, உமையம்மை அந்த ஆறு குழந்தைகளையும் ஆசையோடு அணைக்க, அவை ஒன்றுசேர்ந்து ஒரே குழந்தையாய் உருப்பெற்றன எனவும், அதுகண்ட உமாதேவியார் உவப்போடு அக்குழந்தையை ”(ஸ்)கந்தனே!” என்று அழைத்ததாகவும் புராணச் செய்திகள் தெரிவிக்கின்றன. கந்தன் என்ற பெயருக்கு ’ஒன்றாக இணைந்தவன்’ எனப் பொருள். கார்த்திகைப் பெண்டிரின் அரவணைப்பில் வளர்ந்தமையால் ‘கார்த்திகேயன்’ என்ற பெயராலும் அவன் அழைக்கப்படுகிறான்.

    தேவர்களுக்கும் அவுணர்களுக்கும் நடந்த போரில் தேவர்களின் சார்பாய்ப் போரிட்டு அவர்களைக் காக்கவே முருகனின் திருஅவதாரம் நிகழ்ந்ததாகக் கூறப்படுகின்றது. தேவர்களைக் காக்கப் பிறந்த முருகவேள் பின் மானிடரைக் காக்கும் கடவுளாயும் ஆனான். தமிழ்மக்களின் ‘உள்ளங்கவர் கள்வனான’ அவன், ’தமிழ்க் கடவுள்’ என்ற பெயரானும் குறிக்கப்படுகின்றான். அதனாலன்றோ மலைப் பகுதியைத் தம்மிடமாகக் கொண்ட குறிஞ்சி நிலமக்கள் இக்குமரக் கடவுளைக் குன்றுறை தெய்வமாக்கி அழகுபார்த்தனர்; தம் குலதெய்வமாகக் கொண்டாடினர்.

    இவ்வழகனை, குழகனைச் ’சேயோன்’ என்று விளிக்கின்ற தொல்காப்பியம்,
    ’சேயோன் மேய மைவரை உலகமும்’ (சிவனின் சேயான முருகனைத் தலைவனாகக் கொண்டது மலைநாடு) என்று அவனுடைய மலைநாட்டை வரையறை செய்கின்றது. குன்றுகள் தோறும் இக்குறிஞ்சிக் கோமானே குடிகொண்டிருப்பதை இன்றும் நாம் காணமுடியும்.

    பத்துப்பாட்டு நூல்களில் முதலாவதாக வைத்தெண்ணப்படுகின்ற ’திருமுருகாற்றுப்படை’ முருகனின் சிறப்புக்களையும், அவன் சூரரை வென்ற செய்திகளையும், அவனுடைய அறுபடை வீடுகளையும் விரிவாகப் பேசுகின்றது. இந்நூலில் முருகனின் ஆறுமுகங்களின் இயல்பை விளக்கவந்த நூலாசிரியர் நக்கீரர்,

    முருகனின் ஒருமுகம் பெருமைமிகு இவ்வுலகமானது இருளிலிருந்து விடுபட்டு விளக்கமுறும் வகையில் பல கிரணங்களையும் தோற்றுவித்தது (உலகிற்கு ஒளி தந்தது); ஒருமுகம் தன்மேல் அன்புகொண்ட அடியார்கள் துதிக்க, அதனால் மகிழ்வெய்தி அவர் வேண்டுவனவற்றையெல்லாம் காதலோடு (வரமாய்) அளித்தது; ஒருமுகம் வேதநெறி வழுவாத அந்தணர்கள் செய்யும் யாகங்களுக்குத் தீங்கு நேரலாகாது எனும் நினைவோடிருந்தது; ஒருமுகம் இதுவரை அறிந்துகொள்ள முடியாத வேதங்களிலும் நூல்களிலுமுள்ள நுட்பமான பொருள்களை ஆராய்ந்து முனிவர்களும் மகிழ்ந்து களிக்கும் வகையில் அவற்றை உணர்த்தித் திங்கள்போல் எல்லாத் திசைகளிலும் ஒளியை வழங்கிக் கொண்டிருந்தது; ஒருமுகம் அவுணர்கள்பால் கோபம் கொண்டுக் களவேள்வி வேட்டது (போரில் வெற்றிபெற்று இறந்த உடல்களைப் பேய்களுக்கு உணவாகக் கொடுப்பதே களவேள்வி); ஒரு முகம் குறவர் குலமகளாகிய இளமை பொருந்திய, வல்லிக்கொடி போன்ற இடையினையுடைய வள்ளியுடனே மகிழ்ச்சியோடு பொருந்தியிருந்தது என்கிறார்.

    ”..மா இருள் ஞாலம் மறு இன்றி விளங்க,
    பல்
    கதிர் விரிந்தன்று, ஒரு முகம்; ஒரு முகம்,
    ஆர்வலர்
    ஏத்த, அமர்ந்து இனிது ஒழுகி,
    காதலின்
    உவந்து வரம் கொடுத்தன்றே; ஒரு முகம்
    மந்திர
    விதியின் மரபுளி வழாஅ
    அந்தணர்
    வேள்வி ஓர்க்கும்மே; ஒரு முகம்
    எஞ்சிய
    பொருள்களை ஏமுற நாடி,
    திங்கள்
    போலத் திசை விளக்கும்மே; ஒரு முகம்
    செறுநர்த்
    தேய்த்துச் செல் சமம் முருக்கி,
    கறுவுகொள்
    நெஞ்சமொடு களம் வேட்டன்றே; ஒரு முகம்
    குறவர்
    மட மகள், கொடி போல் நுசுப்பின்
    மடவரல்
    , வள்ளியொடு நகை அமர்ந்தன்றே…” (திருமுருகு: 91-102)

    இப்பாடல் வரிகளின் பிரதிபலிப்பை நாம் அருணகிரிநாதரின் ‘ஏறுமயிலேறி விளையாடும் முகம் ஒன்றே’ பாடலில் கண்டு மகிழலாம்.

    அழகுக்கும் பேரறிவுக்கும் இலக்கணமாய்த் திகழ்கின்ற முருகப் பெருமான் தன் தந்தையும் ஒப்பற்ற பரம்பொருளுமான சிவபெருமானுக்கே பிரணவத்தின் உட்பொருளை உபதேசித்து ’அப்பனுக்கே வேதம் சொன்ன சுப்பன்’ என்று அன்போடு பக்தர்களால் பாராட்டப்படுகின்றான்.

    அடியார்களின் துயர் களைந்து அவர்களை வாழ்விப்பவன் முருகன்; கலியுகத்தின் கண்கண்ட தெய்வமாய்க் கருதப்படுபவனும் அவனே என்பது அருளாளர்களின் நம்பிக்கை. ’சுக்குக்கு மிஞ்சிய மருந்துமில்லை; சுப்பிரமணியனுக்கு மிஞ்சிய தெய்வமுமில்லை’ என்பர் பாமர மக்கள். இதே செய்தியையே ‘ஸ்வாமி என்றால் அது சுப்ரமணியரையே குறிக்கும் என்கிற ’அமரகோசமும்’ (இதுவோர் வடமொழி நிகண்டு) உறுதி செய்கின்றது.

    இப்படிப் பாமரர்கள் முதல் கல்வியில் கரைகண்ட பண்டிதர் ஈறாக அனைவரும் போற்றும் தெய்வம் உமை மைந்தனாகிய முருகவேளே! அவனைத் துதிப்போர்க்கு வல்வினை போம்; துன்பம் போம்; அதுமட்டுமா? எந்த நாளும் ஈரெட்டாய் வாழ்வர் அவன் அடியார்கள் (பதினாறு பேறுகளும் பெற்றுப் பெருவாழ்வு வாழ்வர்) என்கிறது கந்தசஷ்டிக் கவசம்.

    அளவற்ற அருளாளனான அந்தக் கந்தன், ஊமைக் குழந்தையான குமரகுருபரனைப் பார்போற்றும் ஞானக் குழந்தையாய் மாற்றியவன்; உலகப் பற்றுக்களில் மிதமிஞ்சி ஈடுபட்டு ஒழுக்கத்தைத் தவறவிட்டு, தீராத நோயுற்று உயிரை மாய்த்துக்கொள்ளவிருந்த ஒரு மனிதனைப் பின்னாளில் எப்போதும் தன் திருப்புகழையே ஓதிக்கொண்டிருக்கும் ’அருணகிரிநாதராக்கியவன்’.

    கந்தனின் அருள்பெற்றுக் ’கந்தரனுபூதி’ எழுதிய அருணகிரியாரின் பொருள் நிறைந்த அழகிய பாடலொன்று நம் பார்வைக்கு:

    உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
    மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க்
    கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்க்
    குருவாய் வருவாய் அருள்வாய் குகனே. (கந்தரனுபூதி)

    மனிதர்களாகிய நமக்கு குருவாகவும், கதியாகவும், நம் வாழ்விற்கு ஒளியாகவும் விளங்குகின்ற முருகனை, முத்துக் குமரனை, ஆறுருவும் ஓருருவான கந்தனை, இப்புவியில் அவன் அவதரித்த ஒப்பற்ற திருநாளாம் கார்த்திகை நிறைமதி நன்னாளில் மனமுவந்து வந்தனை செய்வோம்; வாழ்வில் வளம் பெறுவோம்!

     

    Share
  • கோவை அ.அய்யாமுத்துவின் “நினைவலைகள்”

    தஞ்சை வெ.கோபாலன்.

    Kovai Khadar Ayyamuthu
    கோவை அ. அய்யாமுத்து

    கோவை அய்யாமுத்து – ஈ.வே.ரா.பெரியாருக்கும் ராஜாஜிக்கும் நெருங்கிய நண்பர். தமிழ்நாட்டில் கதர் இயக்கத்தை முன்னின்று நடத்தியவர். அவரும் அவர் மனைவி கோவிந்தம்மாளும் தேச சுதந்திரத்துக்காக சிறை சென்றவர்கள். காந்திஜியிடமே போய் நேருக்கு நேர் சண்டை போட்டுவிட்டு வந்தவர்.அவர் தன்னுடைய அனுபவங்களை “நினைவலைகள்” எனும் தலைப்பில் ஒரு நூலாக வெளியிட்டிருக்கிறார். அதிலிருந்து ஒரு சிறு பகுதி இதோ:

    (பெரியார் தான் நடத்திய “குடியரசு” பத்திரிகைக்கு கோவை அய்யாமுத்துவை அழைக்கிறார். அதைப் பற்றி தன் நூலில் அய்யாமுத்து எழுதியுள்ள பகுதி)

    ஈ.வெ.இராமசாமி நாயக்கர்
    ஈ.வெ.இராமசாமி நாயக்கர்

    பெரியார் நாயக்கருடன் சில மாதங்கள்

    1929ஆம் ஆண்டில் ஒருநாள் ஈ.வே.ராமசாமிப் பெரியார் என்னைத் தேடிக்கொண்டு புஞ்சை புளியம்பட்டிக்கு வந்து சேர்ந்தார். அவர் ஈரோட்டிலிருந்து “குடியரசு” எனும் வாரப்பத்திரிகை யொன்று வெளியிட்டுக் கொண்டிருந்தார். அதனை 1926ஆம் ஆண்டில் அவர் ஆரம்பித்தார். அதன் ஆரம்ப விழாவை நடத்தியவர் திருப்பாதிரிப்புலியூர் சிவமடத் தலைவராகிய ஞானியார் சுவாமிகள். ஈ.வே.ரா. அதன் ஆசிரியர்.

    ஈரோடு கருங்கல்பாளையம் வ.மு.தங்கப்பெருமாள் பிள்ளையெனும் பழுத்த வைஷ்ணவரும் எம்.ஏ.,பி.எல்., படித்தவருமான அவர் அதன் துணை ஆசிரியராகச் சிலகாலம் இருந்தார். நாயக்கரின் பாஷையும், கொள்கையும் அவருக்குப் பிடிக்காததால் அவர் விலகிக் கொண்டார்.

    “குடியரசு” பத்திரிகைக்கு நான் பிரதி வாரமும் தொடர்ச்சியாகக் கட்டுரைகள் எழுதிக் கொண்டிருந்தேன். சிற்சில சமயம் நான் எழுதாத கட்டுரைகளையும், என் பெயரைப் போட்டு நாயக்கர் பிரசுரித்து விடுவார். நாயக்கர் மேடைகளில் ஏறிச் சரமாரியாகப் பேசுவாரேயொழிய எழுதுவதில் அவர் வல்லவரல்ல. அவர் பேசுவதைப் பிறர் குறிப்பெடுத்து எழுதச் சொல்லி “குடியரசில்” பதிப்பதுதான் அவர் வேலையாக இருந்தது. “குடியரசு”க்குச் சொந்தமான அச்சாபீஸ் ஈரோட்டில் நாயக்கருக்குச் சொந்தமான கட்டடமொன்றில் இருந்தது.

    நாயக்கர் அங்குமிங்குமாகப் போய்க் கொண்டிருந்தபடியால் அவரால் பத்திரிகை காரியாலயத்தில் அமர்ந்திருந்து எதையும் கவனிக்க முடியவில்லை. பொன்னம்பலனார், குருசாமி, ஈஸ்வரன், சிதம்பரனார், லிங்கம், நடராசன், வெங்கடாசலம் போன்ற ‘கெளரவ’த் தொண்டர் களிடம் எதையும் நம்பி ஒப்புவிக்க அவர் மனம் இசையவில்லை. அவரது சாதிக்காரரான கரிவரதசாமி நாயக்கர் என்பவரிடம் “குடியரசு” காரியாலயப் பொறுப்பையும் பணப் பொறுப்பையும் ஒப்புவித்திருந்தார்.

    நாயக்கர் “குடியரசு” காரியாலயத்தின் கணக்கு வழக்கு ஒன்றையும் கவனித்துப் பார்க்க மாட்டார். வாரம் எட்டாயிரம் பிரதிகள் அச்சாகிக் கொண்டிருந்தது. நாயக்கர் ஒரு குத்து மதிப்பாக மாதம் எவ்வளவு ஆதாயம் வரும் என்பதை மனதில் கணக்கிட்டுக் கொண்டு கரிவரதசாமியை மாதாமாதம் பணம் கேட்பார். அவரும் கொடுத்துக் கொண்டிருந்தார். என்னை நாயக்கர் தேடிவந்த சமயம் அந்த வருவாய் நின்று போயிருந்தது.

    “குடியரசு” பத்திரிகை நஷ்டத்தில் வேலை செய்கிறது. அதை என்னால் நீடித்து நடத்த முடியாது. நீங்கள் வந்து அதன் பொறுப்பை ஏற்றுக் கொள்வதாக இருந்தால் அதைத் தொடர்ந்து நடத்துவேன். இல்லையானால், அடுத்த மாசமே அதை நிறுத்திவிடப் போகிறேன். என்ன சொல்கிறீர்கள்? என்றொரு வெடிகுண்டை நாயக்கர் வீசினார். அது என்னைத் தூக்கி வாரிப் போட்டது. …….

    …..”எனது கட்டுரைகள் வாரந்தோறும் “குடியரசு” (ஈ.வே.ரா நடத்தியது) பத்திரிகையில் பிரசுரமாயிற்று. பின்னர் அதனைப் புத்தக ரூபத்தில் காஞ்சிபுரம் குமரன் அச்சகத்தார் வெளியிட்டார்கள். அதைத் தொடர்ந்து “குடியரசு” பதிப்பகம் பல பதிப்புகள் பல்லாயிரக் கணக்கில் அச்சிட்டுப் பிரதியொன்று நான்கணாவுக்கு விற்றுக் கொண்டிருந்தது. எனவே நாயக்கர் (ஈ.வே.ராமசாமி நாயக்கர்) என்னைத் தேடி வந்ததில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.

    “கொஞ்சம் அவகாசம் கொடுங்கள், நான் தீர யோசித்துப் பதில் சொல்கிறேன்” என்றேன்.

    “யோசிப்பதற்கு என்ன இருக்கிறது. நீங்கள் வராவிட்டால் நான் ‘குடியரசு’ப் பதிப்பகத்தை இழுத்துச் சாத்திவிடுவேன். இரண்டிலொன்று பதில் இப்போது சொல்லியாக வேண்டும்” என்றார். நாயக்கருக்கு என் மீது எத்தனை பிரியம்! எத்தனை நம்பிக்கை!!

    “சரி வருகிறேன்! ஆனால் ஒரு நிபந்தனை. ‘குடியரசு’ அச்சகத்தை ஈரோட்டிலிருந்து சென்னைக்கு மாற்றிவிட நீங்கள் சம்மதிக்க வேண்டும். குடியரசின் நிர்வாகத்தில் நீங்கள் தலையிடக் கூடாது. உங்களுக்கு மாதம் ஐநூறு ரூபாய் கொடுத்து வருவேன். நீங்கள் எழுதிக் கொடுப்பதை அப்படியே பிரசுரிப்பேன். நான் மாதம் என் செலவுக்கு அறுபது ரூபாய்க்கு மேல் எடுத்துக் கொள்ள மாட்டேன். எனக்கு இஷ்டமான பேர்களை நான் சேர்த்துக் கொள்வேன். அவர்களுக்கு என் இஷ்டம்போல் பணம் கொடுப்பேன். அதையெல்லாம் நீங்கள் காதில் போட்டுக் கொள்ளக் கூடாது. சென்னைக்கு அச்சாபீசை மாற்றுவதற்கும் அங்கு சென்றபின் ஏற்படும் உடனடிச் செலவுகட்கும் நீங்கள் இரண்டாயிரம் ரூபாய் என்னிடம் முன் பணமாக மொத்தமாகக் கொடுத்துவிட வேண்டும். சம்மதமா?” என்றேன்.

    நாயக்கர் திருதிருவென்று விழித்தார். சென்னைக்குச் சென்றால் தனது கண்காணிப்பே இல்லாது போய்விடுமே என்று மலைத்தார்.

    “உங்கள் கண்காணிப்புக் கூடாதென்பதற்காகத்தான் சென்னைக்கு மாற்ற வேண்டுமென்று சொல்கிறேன்” என்றேன் நான் அழுத்தம் திருத்தமாக.

    “சரி” என்று சம்மதம் கூறிவிட்டு ஈரோடு சென்றார். அவருடன் யார் யார் வந்திருந்தார்களென்று எனக்கு இப்போது நினைவில் இல்லை.

    சர்க்கா சங்கத்திலிருந்து ஆறுமாத காலம் ரஜா எடுத்துக் கொண்டு நானும் என் மனைவியும் புஞ்சை புளியம்பட்டியிலிருந்து ஈரோடு சென்றோம்.

    “குடியரசு” பத்திரிகைக் காரியாலயம் சென்னைக்கு மாற்றப்படுவதாகவும், அதன் முழுப் பொறுப்பும் கோவை அ.அய்யாமுத்து ஏற்றுக் கொண்டுள்ளார் என்றும் எனவே இரண்டு வாரங்கட்கு பத்திரிகை வெளிவராதென்றும் பத்திரிகைகளில் விளம்பரம் செய்துவிட்டு மெஷினரி சாமான்களையெல்லாம் கட்டிப் பந்தோபஸ்தாக ரயிலேற்றிவிட்டு நானும் என் மனைவியும் சென்னைக்குக் கிளம்பினோம்.

    சென்னை பெரும்பூரில் இருந்த எனது பாக்தாத் தோழன் (இளம் வயதில் அய்யாமுத்து ஈராக் பாக்தாதில் இருந்தார்) டி.வி.சிவக்கொழுந்து விட்டில் போய்த் தங்கினேன். சென்னை காஸ்மாபலிடன் கிளபுக்கு அடுத்தாற்போல் வடபுறம் இப்போது ‘பிளாசா’ தியேட்டர் உள்ள காம்பவுண்டில் ஜஸ்டிஸ் கட்சியின் பிரதான காரியாலயம் இருந்தது. அந்த சர் தியாகராயர் மெமோரியல் பில்டிங்ஸ் கட்டடத்தின் ஒரு புறம் “ஜஸ்டிஸ்” எனும் ஆங்கில தினசரி ஏடு சர் ஏ.ராமசாமி முதலியாரை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்தது.

    newspapaerகட்டடத்தின் மறுபுறம் “திராவிடன்” எனும் தமிழ் தினசரி ஜே.எஸ்.கண்ணப்பரை ஆசிரியராகக் கொண்டு வெளியிடப்பட்டது. இதே காம்பவுண்டின் மேல்புறம் சுமார் ஐம்பதடி நீளத்தில் ஒரு குதிரை லாயம் இருந்தது. அதில் “குடியரசு” அச்சகத்தை ஸ்தாபித்துக் கொள்ள திரு ராமசாமி முதலியார் சம்மதம் தந்தார். லாயத்தின் முன்புறத்தில் மூன்றடி உயரச் சுவர் எழுப்பி, அதன் மீது டைமண்ட் வலையடித்துக் கதவு நிலைகள் அமைத்துத் தளம் போட்டு, அச்சு இயந்திரங்களை மாட்டி, பழைய டைப்புகளையெல்லாம் நெல்சன் கம்பெனியில் கொடுத்துப் புதுப்பித்துத் தேவையான தளவாடங்களும் வாங்கி, அச்சகத்தை மாற்றுவதற்குச் சம்பிரதாய உத்தரவுகள் கிடைத்ததும் “குடியரசு” சென்னைப் பதிப்பு வெளிவரச் செய்தேன்.

    கண்ணப்பர் எனக்குப் பேருதவியாக இருந்தார். கோமளேஸ்வரன்பேட்டையில் ஒரு வீட்டின் முன் பாகத்தில் பாதியை மாதம் பதினைந்து ரூபாய் குடிக்கூலிக்குப் பிடித்துக் குடியேறினேன். ஈரோடு கரிவரதசாமியின் மகன் கிருஷ்ணசாமியை காஷியராக நியமித்தேன். உடுமலை வி.ராமசாமி, உதவி ஆசிரியர். அவருக்கு மாதம் நாற்பத்தைந்து ரூபாய் சம்பளம். நாஞ்சில்நாடு பண்டிதர் முத்துச்சாமிப் பிள்ளையை ஆங்கில ஏடுகளையும் புத்தகங்களையும் மொழிபெயர்ப்பாளராகச் சேர்த்துக் கொண்டேன். அவருக்கு என்ன சம்பளம் வேண்டுமென்று கேட்டேன். இரண்டு விரல்களைக் காட்டினார். அவருக்குக் காது கொஞ்சம் மந்தம். மாதம் இருபது ரூபாயா என்றேன். இல்லை! தினம் இரண்டு ரூபாய் வேண்டுமென்றார். சரியென்று வைத்துக் கொண்டேன். உள்ளூரில் விளம்பரங்கள் சேகரிக்க ஒரு ஆளை நியமித்தேன். ப்ரூஃப் ரீடர், ஃபோர்மேன், கம்பாசிடர்கள், காரியாலயப் பையன், மேஜை நாற்காலி, மின் விளக்குகள், மின் விசிறிகள் ஏக தடபுடல்! நாயக்கரின் வயிறு நன்றாய் எரிந்திருக்கும்.

    “ஆனந்தவிகடன்” பத்திரிகையிடமிருந்து விளம்பர பாக்கி நூற்று நாற்பது ரூபாய் வரவேண்டி யிருந்தது. பாக்கிப் பணம் தரும் வரையில் விளம்பரம் போடுவதை நிறுத்தி வைப்பதாகக் கடிதம் எழுதினேன். இன்று கோடி கோடியாய்ப் பணத்தில் புரண்ட ஜெமினி வாசனால் அன்று அத்தொகையைக் கேட்டவுடன் கொடுக்க முடியாத ஒரு நிலை. நாற்பது ரூபாயை — அவருடைய தம்பியென்று நினைக்கிறேன் — ஒருவர் கொண்டு வந்து செலுத்தி விளம்பரத்தை நிறுத்தாது போடுமாறு கேட்டுக் கொண்டார்.

    பத்திரிகை வெளியான அடுத்த மாதம் நாயக்கருக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்தேன். அவருடைய அண்ணன் திரு ஈ.வே.கிருஷ்ணசாமி நாயக்கர் தம் மகன் சம்பத்துக்குத் திருப்பதியில் முடியெடுக்கப் போவதாகவும், அதற்கு ரூபாய் முன்னூறு அனுப்பித் தரும்படியும் நாயக்கருக்குக் கடிதம் எழுதியிருந்தார். நூறு ரூபாய் அனுப்பித் தொலையென்றார் நாயக்கர். அனுப்பி வைத்தேன்.

    newspapaer2அதன் பின்னர் மாதா மாதம் ஐநூறு ரூபாய் நாயக்கருக்குக் கப்பம் கட்டிக் கொண்டிருந்தேன். சென்னை நகரில் “குடியரசு” விற்பனை உயர்ந்தது. வெளியூர் ஆர்டர்களும் பெருகிற்று. மலாய், சிங்கப்பூர், சிலோன் முதலிய நாடுகளிலிருந்து நாடோறும் மணியார்டர்கள் வந்து குவிந்த வண்ணமாய் இருந்தது. ஈரோட்டில் எட்டாயிரம் பிரதிகள் அச்சாகியிருந்த “குடியரசு” சென்னைக்கு மாற்றிய நான்கே மாதங்களில் பதிமூன்றாயிரமாக உயர்ந்தது.

    கோமளேஸ்வரன்பேட்டையில் நான் குடியிருந்த வீட்டுக்கும் குடியரசு காரியாலயத்துக்கும் சுமார் ஒரு மைல் தூரமிருந்தது. காரியாலயத்துக்கும் வீட்டுக்கும் நடந்து சென்றேன். பகல் சாப்பாடு வீட்டிலிருந்து ஒரு டிபன் காரியரில் காரியாலயப் பையன் கொண்டு வந்தான். கண்ணப்பருக்கு ஓட்டல் சாப்பாடு வந்தது. இருவரும் ஒன்றாக உட்கார்ந்து இரண்டு சாப்பாட்டையும் கலந்து சாப்பிட்டோம்.

    நாயக்கர் சென்னைக்கு வந்த போதெல்லாம் யாராவது சாப்பாட்டிற்கு அழைத்தால் அங்கு போவார். இல்லையேல் எங்களுக்கு வரும் சாப்பாட்டில் கலந்து கொள்வார். ஒரு நாள் பகல் “குடியரசு” காரியாலயத்தில் கண்ணப்பரும், நாயக்கரும் சாப்பிட உட்கார்ந்தார்கள். நான் ஏதோ சில அவசரத் தபால்களைக் கவனித்துக் கொண்டிருந்தேன். நாயக்கர் வந்துள்ள செய்தியை ஆபீஸ் பையன் மூலமாகத் தெரிந்து கொண்ட என் மனைவி, எப்போதையும் விடக் கொஞ்சம் விசேஷமாகவும் அதிகமாகவும் சாப்பாடு அனுப்பியிருந்தாள்.

    “அய்யாமுத்து தனது யோக்கியதைக்கு மீறிய சாப்பாடு சாப்பிடுகிறார்” என்று கண்ணப்பரிடம் நாயக்கர் கூறியது என் காதில் விழுந்தது. அப்படியென்றால்…………..?

    எனது சிந்தனை சிறகடித்துப் பறந்தது. என் மேஜை மீதிருந்த சாவிக் கொத்தையெடுத்து நாயக்கர் மீது வீசியெறிந்துவிட்டு, நில்லாமல் சொல்லாமல் வீடு போய்ச் சேர்ந்தேன். வீட்டிலிருந்த சாமான்களையெல்லாம் ‘பாக்’ செய்து கொண்டிருந்தேன். நாயக்கரும் கண்ணப்பரும் வந்தார்கள்.

    “நான் என்ன சொன்னேன்?” விளையாட்டாக ஏதோ சொன்னதற்கு…..” என்றார் நாயக்கர்.

    உங்கள் “குடியரசு’ப் பணத்தில் கறியும், மீனும், முட்டையும் சாப்பிட்டுக் கொண்டிருக்க எனக்குப் பிரியமில்லை. புஞ்சைப்புளியம்பட்டிக்குச் சென்று எப்போதும் போல் கம்பங்கூழ் குடிக்கப் போகிறேன்” என்றேன்.

    ஊருக்குத் திரும்ப வழிச் செலவுக்குக் கண்ணப்பரிடம் இருபத்தைந்து ரூபாய் கடன் கேட்டு வாங்கினேன். சென்னை செண்ட்ரல் ரயில்வே நிலையத்துக்குக் கோவை சி.எஸ்.ரத்தினசபாபதி முதலியாரைக் கூட்டிக் கொண்டு நாயக்கர் ஓடோடியும் வந்தார்.

    எனது ‘சுயமரியாதை’ உணர்ச்சி அவருடன் சேர்ந்து உழைக்க இடந்தரவில்லை. அவருக்குக் ‘குட்பை’ சொல்லிவிட்டு ரயிலேறினேன். பாவம் நாயக்கர்! வாய்க்கொழுப்பு சீலையில் வடிந்த கதைக்கொப்பத் தமது குடியரசுப் பதிப்பகத்தை மீண்டும் ஈரோட்டுக்கு சுமந்து சென்றார்.”

    நன்றி: “எனது நினைவலைகள்” கோவை அ.அய்யாமுத்து. பக்கம் 251 முதல் 260.

     

     

     

     

     

     

    படம் உதவி: http://www.thehindu.com/features/metroplus/society/a-couple-of-patriots/article6317808.ece

    Share
  • காதல் நாற்பது (26)

    துணை தேடும் உள்ளொளி !

     

    மூலம் : எலிஸபெத் பிரௌனிங்

    jay

    தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

    உறு துணை எனக்குத் தேவை என்று
    உள்ளொளி யோடு வாழ்ந்தேன்
    ஆரம்ப காலம் தொட்டே,
    ஆடவர், பெண்டிர் பரிவுக்குப்
    பதிலாக !
    அறிந்து கொள்ள நினையாது
    வெறும் பரிவுள்ள உறவுகளாய்த் தான்
    பார்த்தேன் அவரை எல்லாம்;

    பாடிய அவரது பாட்டுக்கும் மேலாகச்
    சுவைமிகும்
    பண்ணிசை எனக்குக் கேட்குமென
    எண்ணிலேன் ! சட்டெனத்
    தேயும் அவரது பழுப்பு வண்ணம்
    தனிப்பட்ட தில்லை !
    வையகத் தூசிகள் மீதெழும்
    புல்லாங் குழல் ஓசை
    ஊமைத் தனம் வளர்ப்பது !

    மங்கிடும் அவர் விழிக் கவர்ச்சியில்
    மயங்குவேன் மடத்தனமாய் !
    அப்போதவர் போலித் தனத்திடையே
    காட்சி அளித்தாய் நீ என்னை
    ஆட்கொள்ள !

    என்னினிய அன்பனே !
    மின்னிடும் அவர் முன்தோற்றமும்,
    இன்னிசைக் கீதமும்
    உன்னத மகிமையும் சிறப்பாக
    ஒன்று கூடும் உன்னிடம்,
    நதி நீரைச் சிமிழியில் ஊற்றியது போல் !

    எல்லாத் தேவை களிலும் திருப்தி யுற்று
    என் ஆத்மாவும் மீறி யெழும்
    உன்னுறவால் !
    ஏனெனில்
    இறைவனின் கொடைகள்
    தள்ளி விடும்
    மானிடனின் உயர்ந்த கனவுகளை
    நாணிடும் நிலைக்கு !

    ********************

    Poem -26

    Sonnets from the Portuguese

    By: Elizabeth Browning

    I lived with visions for my company
    Instead of men and women, years ago,
    And found them gentle mates, nor thought to know
    A sweeter music than they played to me.
    But soon their trailing purple was not free
    Of this world’s dust, their lutes did silent grow,
    And I myself grew faint and blind below
    Their vanishing eyes. Then THOU didst come–to be,
    Beloved, what they seemed. Their shining fronts,
    Their songs, their splendours (better, yet the same,
    As river-water hallowed into fonts),
    Met in thee, and from out thee overcame
    My soul with satisfaction of all wants
    Because God’s gifts put man’s best dreams to shame.

    **********

    Share
  • மயக்கும் மாலைப் பொழுதே நீ போ.. போ…  – கவிஞர் விந்தன்

    காவிரி மைந்தன்

     vindhan

    நினைக்கும் போதே இனிக்கும் பல்லவி…  கூண்டுக்கிளி திரைப்படத்திற்காக கவிஞர் விந்தன் அவர்கள் எழுதிய இந்தப் பாடல்… இருபெரும் கதாநாயகர்கள் – எம்.ஜி..ஆர்., சிவாஜி இருவருக்குள் எவர் இடம் பெறும் பாடலாய் திரையில் தருவது என்கிற கேள்வி எழவே, தவிர்க்க வேண்டிய பாடலானது. அப்படத்தின் இயக்குனர் டி ஆர். ராமண்ணா அவர்கள் அடுத்து இயக்கிய குலேபகாவலி திரைப்படத்தில் மக்கள் திலகம் எம்.ஜி. ஆர்.  – ஜி. வரலட்சுமி நடிப்பில் இப்பாடலைப் பயன்படுத்தினார்கள் என்பது தகவல்.

    மென்மை மட்டுமே வார்த்தைப் பூக்களாய் விரிந்து கிடக்கும் இப்பாடலில் இனிமை முழுமையாய் பரவிக் கிடைக்கிற அதிசயம் நம்மை இப்பாடலில் அடிமையாக்குகிறது பாருங்கள். குலேபகாவலி திரைப்படத்திற்கு இசை மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி என்றிருந்தாலும் கூண்டுக்கிளி தந்த பாடல் இது என்பதால் இதன் இசை திரையிசைத் திலகம் கே.வி. மகாதேவன் அவர்களையே சாரும்.   குரலில் அமுதம் பொழியும் இரண்டு குயில்கள் ஜிக்கி, ஏ.எம்.ராஜா …

    மகுடியின் முன் நாகங்கள் போல் ..புன்னாகவராளி ராகமோ என்று நம்மை திகைக்க வைக்கும் ஒரு மயக்கத்தை இசை அமைப்பாளர் இப்பாடலில் கையாண்டிருக்கிறார்.  இரவின் மடியில் கேட்க இதைவிட இனிமையான பாடல் எங்கே?

    பார்த்திபன் கனவிற்காக கவிஞர் விந்தன் எழுதிய “இதய வானில் உதய நிலவே எங்கே போகிறாய்” .. அடடா.. இதே போல் இனிமையான கானம் அல்லவா?  பிறகு எப்படி.. இந்தக் கவிஞர் பிரபலம் ஆகவில்லை என்கிற ஏக்கம் பற்றிகொள்கிறது.

    கனிந்த சொற்களின் கவிதை மொழியினை கைவரப் பெற்றவர் இன்னும் இன்னும் பல இனிமையான பாடல்களை எழுதியிருக்கலாமே..

    ஜி. வரலட்சுமி அவர்களின் பேசும் விழிகளும் மக்கள் திலகத்தின் துள்ளல் நடிப்பும் இன்பம் சேர்க்கின்றன.

     kulebagavali

    ஆஆ… ஆஆஆஆஆஆஆ ஆஆஆ..

    மயக்கும் மாலைப் பொழுதே நீ போ போ
    இனிக்கும் இன்ப இரவே நீ வா வா
    இன்னலைத் தீர்க்க வா
    மயக்கும் மாலைப் பொழுதே நீ போ போ
    இனிக்கும் இன்ப இரவே நீ வா வா
    இன்னலைத் தீர்க்க வா

    பன்னீர் தெளிக்க பனி பெய்யுமே
    பசும்புல் படுக்கப் பாய் போடுமே
    பன்னீர் தெளிக்க பனி பெய்யுமே
    பசும்புல் படுக்கப் பாய் போடுமே

    மயக்கும் மாலைப் பொழுதே நீ போ போ
    இனிக்கும் இன்ப இரவே நீ வா வா
    இன்னலைத் தீர்க்க வா

    ஆஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆஆ
    ஆஆஆ ஆஆஆ ஆஆஆஆஆ

    பாலூட்டும் நிலவு தேனூட்டுமே
    பாடும் தென்றல் தாலாடுமே
    பாலூட்டும் நிலவு தேனூட்டுமே
    பாடும் தென்றல் தாலாடுமே
    புன்னை மலர்கள் அன்பினாலே
    புன்னை மலர்கள் அன்பினாலே
    போடும் போர்வை தன்னாலே
    போடும் போர்வை தன்னாலே

    மயக்கும் மாலைப் பொழுதே நீ போ போ
    இனிக்கும் இன்ப இரவே நீ வா வா
    இன்னலைத் தீர்க்க வா

    ஆஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆஆ
    ஆஆஆ ஆஆஆ ஆஆஆஆஆ

    கனியிதழ் காதல் பசி தீர்க்குமே
    காண்போம் பேரின்பமே
    கனியிதழ் காதல் பசி தீர்க்குமே
    காண்போம் பேரின்பமே
    வானிலும் ஏது வாழ்விது போலே
    வசந்தமே இனி எந்நாளும்
    வானிலும் ஏது வாழ்விது போலே
    வசந்தமே இனி எந்நாளும்

    மயக்கும் மாலைப் பொழுதே நீ போ போ
    இனிக்கும் இன்ப இரவே நீ வா வா
    இன்னலைத் தீர்க்க வா
    மயக்கும் மாலைப் பொழுதே நீ போ போ
    இனிக்கும் இன்ப இரவே நீ வா வா
    இன்னலைத் தீர்க்க வா

    ஆஆஆஆ ஆஆஆஆஆஆஆ

    http://www.youtube.com/watch?v=g-MZUdwH9hg

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . . (133)

    சக்தி சக்திதாசன்

    அன்பினியவர்களே !

    அன்பான வணக்கங்கள் !

    வாரங்களா ? நொடிகளா ? என்றே எண்ணமுடியாத வகையில் காலம் காற்றாகப் பறந்தோடிக் கொண்டிருக்கிறது.

    டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் வந்து நிற்கிறோம்.

    சுமார் இரண்டு வாரங்களுக்கு முன்னர் நான் அபிமானம் கொண்டுள்ள எனது அன்பு நண்பர் ” அண்ணன் ” என்று நான் அழைக்கும் ஒருவர் என்னைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நற்செய்தி ஒன்றைத் தந்தார்.

    அவ்வண்ணனை எனக்கு அநேக வருடங்களாகத் தெரியும் நான் லண்டன் வந்த காலங்களில் அறிந்து பழகிய பின்னர் இடையில் சிறிது காலம் நாம் இருவரும் வெவ்வேறு திசைகளில் பயணித்ததினால் தொடர்பிழந்திருந்தோம்.

    சில வருடங்களின் முன்னால் நாம் மீண்டும் பழகுவதற்கான சந்தர்ப்பம் ஏகியது. அவரின் மீது நான் கொண்ட அபிமானம் உயர்ந்ததின் காரணம் அவர் ஈழத்தின் பிரச்சனைகள் காரணமாக அநாதரவாக விடப்பட்ட அனைத்து இனத்தைச் சேர்ந்த சிறுவர்களில் நூறுபேரை அவர்களது ஆரம்பக் கல்வியிலிருந்து பட்டப்படிப்பு முடியும் வரையிலான கல்வி மற்றும் பராமரிப்பை ஏற்றுக்கொள்வதோடு அவர்கள் தங்குவதற்கான அனைத்து வசதி கொண்ட விடுதி நிர்மானிப்புகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டதுவேயாகும்.

    அவரது ஆர்வம், அயராத உழைப்பு, அனாதரவான குழந்தைகளின் மீதான கருணை, ஜாதி, இன, மத பேதங்களைக் கடந்த அன்பு என்பவையேயாகும்.

    சரி இனி அவர் சொன்ன நற்செய்திக்கு வருவோம்.

    “ தம்பி, தேவகோட்டை ராமநாதன் லண்டன் வருகிறார் , இன்று காலையில் தான் தொடர்பு கொண்டார். அவர் எனது முயற்சிகளுக்கு ஆதரவாக ஒரு நிகழ்ச்சியை நடத்தித் தருவதாகக் கூறியுள்ளார் ” என்பதுவே.

    தேவகோட்டை ராமநாதன், அசத்தல் மன்னர்களில் முன்னனியில் நிற்பவர், “அசத்தல் மன்னர்” காமெடி கிங்” என பல பட்டப் பெயர்களை தனதாக்கிக் கொண்டவர். மிகவும் இளைய வயதினிலேயே கலைஞர் கருணாநிதியின் கையினால் பரிசு பெற்றவர். “தமிழ்ப் பேச்சு எங்கள் மூச்சு ” என்னும் நிகழ்ச்சியில் பரிசு பெற்றவர்.

    asak

    ஆமாம் அற்புதமான நகைச்சுவை, ஆன்மீகம், இலக்கியம் என அனைத்துத் துறைகளிலும் கொடி கட்டிப் பறப்பவர். இருபதுகளின் மத்தியில் வாழ்ந்து கொண்டு ஜம்பதுகளுக்கேயுரித்தான அனுபவ முதிர்ச்சி கொண்டோருடன் கலந்துரையாடும் அனுபவத்தைத் தரும் அற்புத ஆற்றல் மிக்க இளம் தலைமுறைக் கலைஞர். சட்ட வல்லுனர்.

    செட்டிநாடு கலைத்தாயின் கருவறை. என் மானசீகக்குரு கவியரசர் கண்ணதாசனை ஈன்றெடுத்த அரும்பெரும் மண். “யாதும் ஊரே யாவரும் கேளீர்” எனும் அற்புத கருத்தை எமக்களித்த கவிஞர் “கணியன் பூங்குன்றன்” அவர்களை ஈன்றெடுத்த அரும்பெரும் மண். அத்தகைய அரும்பெரும் மண்ணில் உதித்த எம் இளங்கலைஞரே ” தேவகோட்டை ராமநாதன்”.

    அதுமட்டுமன்றி என் இனிய நண்பர்களாம் “ரவி தமிழ்வாணன், லேனா தமிழ்வாணன் ” ஆகியோரை ஈன்றெடுத்த அற்புத மண்ணில் பிறந்தவர் என் இனிய தம்பி “தேவகோட்டை இராமநாதன்”.

    இவரை நான் முதன் முதலில் சந்தித்தது 2012ம் ஆண்டேயாகும். இதே ” அண்ணன்” இதே நிதிசேகரிப்புக்காக வைத்த ஒரு நிகழ்விற்காக என் அருமைத்தம்பி சின்னத்திரை புகழ் ” ஷியாம் கணேஷ்” அவர்கள் மூலமாக ப்ரு நகைச்சுவை மாலைக்காக ஏற்பாடு செய்த குழுவில் “ரோபோ சங்கர்” “வடிவேலு பாலாஜி” ஆகியோருக்குத் தலைவராக தம்பி “தேவகோட்டை இராமநாதன்” வந்திருந்த போதே.

    இலண்டன் வந்த தேவகோட்டை இராமநாதன் அவர்களை இங்கு அழைத்திருந்த செட்டிநாட்டைச் சேர்ந்த இரு தம்பிகள் அண்ணாமலை , செந்தில் தியாகராஜன்” ஆகியோர் கடந்த 29ம் திகதி மாலை இலண்டன் சிவன் கோவில் மண்டபத்தில் இலண்டன் ” நகரத்தார் சங்கம்” சார்பில் ஒரு நகைச்சுவை மாலை நடத்தியிருந்தார்கள்.

    செட்டிநாடு தந்த ஒரு இனிய மாது “வள்ளி” என்பவர் இந்நிகழ்ச்சியை மிகவும் அழகாகத் தொகுத்து வழங்கினார். தேவகோட்டை இராமநாதன் அவர்களை அறிமுகம் செய்வதற்காக இலண்டனின் பிரபல்யம் மிக்க “சென்னைத்தோசை” உரிமையாளரும் முன்னால் இலண்டன் தமிழ்ச்சங்க தலைவருமான அசோகன் சின்னப்பன் அவர்கள் மிகவும் நகைச்சுவையாக நகைச்சுவைத் தென்றல் தேவகோட்டை இராமநாதன் அவர்களை அறிமுகப்படுத்தினார்.

    தொடர்ந்து பேசிய தேவகோட்டை இராமநாதன் அனைவரையும் வயிறு குலுங்கச் சிரிக்க வைத்துவிட்டார். அப்பப்பா ! ஒரு இளம் கலைஞருக்குள் இத்தனை சிரிப்பு வெடிகளா ?

    மிகவும் இளம் சிறுமிகள் தொடங்கி பருவக்குமரிகள் வரை அற்புதமான பரதநாட்டியத்தில் எம்மைத் திளைக்க வைத்து விட்டார்கள்.

    இடைவேளை வந்தது. அருமையான உணவு அதுவரை நடந்த நிகழ்ச்சிகள் மனதை நிறைத்ததைப் போல எமது வயிறை நிரப்பியது.

    அதைத்தொடர்ந்து நகைச்சுவைத் தென்றல் தேவகோட்டை இராமநாதன் தலைமையில் மனித வாழ்வை மேம்படுத்துவது பணமா ? குணமா ?எனும் பட்டி மன்றம். ஒரு நகைச்சுவைத் தென்றலின் தலைமையில் நடைபெறும் பட்டிமன்றம் என்றால் சிரிப்புக்கும், சிலேடைக்கும் கேட்கவா வேண்டும் ?

    ஒரு இனிய மாலைப்பொழுதை கழித்த மனநிறைவோடு அடுத்தொரு நகைச்சுவைத் திருவிழாவைக் கண்டுகளிக்கப்போகிறோம் எனும் எதிர்பார்ப்புடன் வீடு திரும்பினோம்.

    ஆமாம் டிசம்பர் 5ம் திகதி இரவு எனது ” அண்ணனின்” ஏற்பாட்டில் அருமைத் தம்பி “தேவகோட்டை இராமநாதன்” அவர்களின் நகைச்சுவைத் திருவிழா நிகழப் போகிறது.

    மீண்டும் வயிறு புண்ணாகப் போகிறதோ ? (சிரிப்பினால்)

    மீண்டும் அடுத்த மடலில்
    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

    http://www.thamilpoonga.com
    http://www.facebook.com/sakthi.sakthithasan

    Share
  • நாகர்கள் 3

    விசாலம்

    “நாகரின் அகாமி பிரிவில் இருக்கும் ஆண்மகனின்  திருமணம் நிச்சயமானவுடன் பெண்வீட்டில் விருந்து தடபுடலாக இருக்குமாம். அன்று மாலை மணமகன் வீட்டிற்கு பெண் செல்வாள். அங்கு படுத்தாலும் தனித்தனியான அறையில் தான் இருப்பார்கள். மூன்று நாட்கள் இது போல் கழியும் மறு நாள் அவர்கள் வயலுக்கு சேர்ந்து போக வேண்டும். இதே போல் ஒரு பத்து நாட்கள் போகும். பின் அவர்களது பூஜாரி அவர்கள் விருப்பத்தைக்கேட்டு அவர்கள் சேர அனுமதிப்பார். ஆனால் எங்களது இன்னொரு பிரிவான ஆவோஸில் இது கொஞ்சம் மாறுபடும். நிச்சயதார்த்தம் பிறகு அவர்கள் இருபது நாட்கள் வியாபாரத்திற்குச் செல்ல வேண்டும். அதில் நிறைய லாபம் கிடைத்தால் திருமணம் நடக்கும். லாப நஷ்டமில்லாமல் இருந்தாலும் பரவாயில்லை. ஆனால் நஷ்டம்  ஆனால் திருமணம் முறிந்து விடும்”

    “அடப்பாவமே. இப்படியும் ஒரு பரீட்சையா?”

    “ஆமாம். ஆனால் ஆரம்பத்திலேயே எங்களுக்கு  பொருட்கள் தயாரித்தல் அதை விற்று சம்பாதித்தல் போன்றவைகள் சொல்லிக்கொடுத்து விடுவதால்  இது போல் பரிக்ஷையை சமாளிக்க முடிகிறது.”

    “காலம் மாறி வருவதால் உங்கள் எண்ணங்களிலும் மாற்றம் தெரிகிறதா?”

    “ஆம் நிறைய. இப்போதெல்லாம் அங்காமி பிரிவுகளில்  காதலிப்பது  சகஜமாகி வருகிறது. பெண்கள் காதலிக்கலாம், பழகலாம்; ஆனால் வரம்புக்கு மீறி போகக்கூடாது. இதற்கென்று காவல் காக்க சிலர் இருப்பார்கள். ஏனென்றால் பெண் திருமணம் போது பெண்ணிற்கு  பணம் சொத்து அதிகமாக வரும். ஆனால் அவள் பெயர் கெட்டுப்போனால் பாதி பணம் கூட வராது. இது போன்ற நிலைமை ஏற்பட்டால் பெண்வீட்டார்  அந்த  தவறுக்கு  அதிக பணம் கொடுக்க வேண்டி வரும்.”

    “உங்களில் சில சிறு வயது பெண்கள் மொட்டை அடித்துக்கொள்ள எதாவது காரணம் உண்டா ரீமா?’

    “ஆம் இருக்கிறது.  பெண்கள் இங்கே நல்ல சிவப்பாக அழகாக இருப்பார்கள். அவர்களது அடர்த்தியான முடி அவரது அழகை மேலும் கூட்டும். அதனால் அவர்களது கல்யாண வயது வரை அவர்களது முடியை எடுத்துவிடுகிறார்கள். இதனால்  ஆண்களுடன் சேரும்  வாய்ப்பு மிகவும் குறைவு என்று  குடும்பத்தார் எண்ணுகின்றனர். கோன்யாக் என்ற பிரிவு மட்டும் இதில் விதிவிலக்கு.  பல சலுகைகள் அவர்களுக்கு உண்டு.  அவர்கள் திருமணம் முன்  காதலும் செய்யலாம். சேர்ந்தும் இருக்கலாம்.”

    “ரொம்ப நன்றி  ரீமா. உன்னிடமிருந்து பல விஷயங்கள் தெரிந்துக்கொண்டேன்.  கலாசாரம் வித்தியாசமானாலும்  எல்லா

     ஜாதிகளிலும் ஒன்று பொதுவாக பார்க்கிறேன் அதுதான் ஆண் ஆதிக்கம். பெண் என்றால் உழைக்க வேண்டும், சுதந்திரத்தை விட்டு

    தன் குடும்பத்திற்காகவே வாழ வேண்டும். தாயாக வேண்டும்.

    பின் குழந்தைகளுக்காகவும் வாழ்ந்து  கடைசியில் மடிய வேண்டும்

    என்ற நிலைமை தான்.”

    “இல்லை மேடம். கொஞ்ச வருடங்களாக எங்கள் ஜாதியிலும் நிறைய மாற்றம் வந்திருக்கிறது. நாகரிகம் வலுத்திருக்கிறது. பெரியவர்களுக்கும் இளைஞர்களுக்கும் இடையே நிறைய இடைவெளி ஏற்பட்டிருக்கிறது . கூட்டுக்குடும்பம் பிரிந்து, தனிக்குடும்பமாக ஆகிவருகிறது. நிறைய பேர் படிக்கவும் ஆரம்பித்திருக்கின்றனர். பேஷனில் ஆர்வம் காட்டுகின்றனர்.”

    “ஆம். நானும் இதைப்பார்த்து வருகிறேன். பொதுவாகவே இந்தக்கால இளைஞர்கள் மனைவிக்கு சம உரிமையும்  கொடுத்து  வீட்டு வேலைகளிலும் உதவுகின்றனர். இது எல்லா நகரங்களிலும்  பார்க்க முடிகிறது. மேலும் பெண்கள் எல்லா துறைகளிலும் மேன்மையாக உழைத்து நல்ல பேர் எடுக்கின்றனர். இதைப்பார்க்க மகிழ்ச்சியாகவே இருக்கிறது. எத்தனைப்பிரிவு இருந்தாலும் கலாச்சாரம் எத்தனை வேறுபட்டாலும் நாம் எல்லோரும் ஒரு தாய்க்கு பிறந்த குழந்தைகள் தான். நாம் பாரத வாசி. நாம் இந்தியன் என்ற உணர்வு வந்தால் நம்  நாடு எங்கேயோ போய்விடும். நன்றி ரீமா.”

    ரீமா கை அசைத்தபடியே விடைப்பெற்றுக்கொண்டாள்.

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . . (133)

    சக்தி சக்திதாசன்

    அன்பினியவர்களே !

    அன்பான வணக்கங்கள் !

    வாரங்களா? நொடிகளா? என்றே எண்ணமுடியாத வகையில் காலம் காற்றாகப் பறந்தோடிக் கொண்டிருக்கிறது.

    டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் வந்து நிற்கிறோம்.

    சுமார் இரண்டு வாரங்களுக்கு முன்னர் நான் அபிமானம் கொண்டுள்ள எனது அன்பு நண்பர், “அண்ணன்” என்று நான் அழைக்கும் ஒருவர் என்னைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நற்செய்தி ஒன்றைத் தந்தார்.

    20141129_221216அவ்வண்ணனை எனக்கு அநேக வருடங்களாகத் தெரியும் நான் லண்டன் வந்த காலங்களில் அறிந்து பழகிய பின்னர் இடையில் சிறிது காலம் நாம் இருவரும் வெவ்வேறு திசைகளில் பயணித்ததினால் தொடர்பிழந்திருந்தோம்.

    சில வருடங்களின் முன்னால் நாம் மீண்டும் பழகுவதற்கான சந்தர்ப்பம் ஏகியது. அவரின் மீது நான் கொண்ட அபிமானம் உயர்ந்ததின் காரணம் அவர் ஈழத்தின் பிரச்சனைகள் காரணமாக அநாதரவாக விடப்பட்ட அனைத்து இனத்தைச் சேர்ந்த சிறுவர்களில் நூறுபேரை அவர்களது ஆரம்பக் கல்வியிலிருந்து பட்டப்படிப்பு முடியும் வரையிலான கல்வி மற்றும் பராமரிப்பை ஏற்ருக்கொள்வதோடு அவர்கள் தங்குவதற்கான அனைத்து வசதி கொண்ட விடுதி நிர்மானிப்புகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டதுவேயாகும்.

    அவராது ஆர்வம், அயராத உழைப்பு, அனாதரவான குழந்தைகளின் மீதான கருணை, ஜாதி, இன, மத பேதங்களைக் கடந்த அன்பு என்பவையேயாகும்.

    சரி இனி அவர் சொன்ன நற்செய்திக்கு வருவோம்.

    “தம்பி, தேவகோட்டை ராமநாதன் லண்டன் வருகிறார் , இன்று காலையில் தான் தொடர்பு கொண்டார். அவர் எனது முயற்சிகளுக்கு ஆதரவாக ஒரு நிகழ்ச்சியை நடத்தித் தருவதாகக் கூறியுள்ளார் ” என்பதுவே.

    தேவகோட்டை ராமநாதன், அசத்தல் மன்னர்களில் முன்னனியில் நிற்பவர், “அசத்தல் மன்னர்” “காமெடி கிங்” என பல பட்டப் பெயர்களை தனதாக்கிக் கொண்டவர். மிகவும் இளைய வயதினிலேயே கலைஞர் கருணாநிதியின் கையினால் பரிசு பெற்றவர். “தமிழ்ப் பேச்சு எங்கள் மூச்சு” என்னும் நிகழ்ச்சியில் பரிசு பெற்றவர்.

    20141129_195119

    ஆமாம் அற்புதமான நகைச்சுவை, ஆன்மீகம், இலக்கியம் என அனைத்துத் துறைகளிலும் கொடி கட்டிப் பறப்பவர். இருபதுகளின் மத்தியில் வாழ்ந்து கொண்டு ஜம்பதுகளுக்கேயுரித்தான அனுபவ முதிர்ச்சி கொண்டோருடன் கலந்துரையாடும் அனுபவத்தைத் தரும் அற்புத ஆற்றல் மிக்க இளம் தலைமுறைக் கலைஞர். சட்ட வல்லுனர்.

    செட்டிநாடு கலைத்தாயின் கருவறை. என் மானசீகக்குரு கலியரசர் கண்ணதாசனை ஈன்றெடுத்த அரும்பெரும் மண். “யாதும் ஊரே யாவரும் கேளீர்” எனும் அற்புத கருத்தை எமக்களித்த கவிஞர் “கணியன் பூங்குன்றன்”அவர்களை ஈன்றெடுத்த அரும்பெரும் மண். அத்தகைய அஎஉம்பெரும் மண்ணில் உதித்த எம் இளங்லைஞரே ” தேவகோட்டை ராமநாதன்”.

    அதுமட்டுமன்றி என் இனிய நண்பர்களாம் “ரவி தமிழ்வாணன், லேனா தமிழ்வாணன் ” ஆகியோரை ஈன்றெடுத்த அற்புத மண்ணில் பிறந்தவர் என் இனிய தம்பி “தேவகோட்டை இராமநாதன்”.

    இவரை நான் முதன் முதலில் சந்தித்தது 2012ம் ஆண்டேயாகும். இதே “அண்ணன்” இதே நிதிசேகரிப்புக்காக வைத்த ஒரு நிகழ்விற்காக என் அருமைத்தம்பி சின்னத்திரை புகழ் ” ஷியாம் கணேஷ்” அவர்கள் மூலமாக ப்ரு நகைச்சுவை மாலைக்காக ஏற்பாடு செய்த குழுவில் “ரோபோ சங்கர்” “வடிவேலு பாலாஜி” ஆகியோருக்கு தலைவராக தம்பி “தேவகோட்டை இராமநாதன்” வந்திருந்த போதே.

    20141127_195127இலண்டன் வந்த தேவகோட்டை இராமநாதன் அவர்4களை இங்கு அழைத்திருந்த செட்டிநாட்டைச் செநெர்ந்த இரு தம்பிகள் அண்ணாமலை ,செந்தில் தியாகராஜன்” ஆகொயோர் கடந்த 29ம் திகதி மாலை இலண்டன் சிவன் கோவில் மண்டபத்தில் இலண்டன் ” நகரத்தார் சங்கம்” சார்பில் ஒரு நகைச்சுவை மாலை நடத்தியிருந்தார்கள்.

    செட்டிநாடு தந்த ஒரு இனிய மாது “வள்ளி” என்பவர் இந்நிகழ்ச்சியை மிகவும் அழகாகத் தொகுத்து வழங்கினார். தேவகோட்டை இராமநாதன் அவர்களை அறிமுகம் செய்வதற்காக இலண்டனின் பிரபல்யம் மிக்க”சென்னைத்தோசை” உரிமையாளரும் முன்னால் இலண்டன் தமிழ்ச்சங்க தலைவருமான அசோகன் சின்னப்பன் அவர்கள் மிகவும் நகைச்சுவையாக நகைச்சுவைத் தென்றல் தேவகோட்டை இராமநாதன் அவர்களை அறிமுகப்படுத்தினார்.

    தொடர்ந்து பேசிய தேவகோட்டை இராமநாதன் அனைவரையும் வயிறுகுலுங்கச் சிரிக்க வைத்துவிட்டார். அப்பப்பா! ஒரு இளம் கலைஞருக்குள் இத்தனை சிரிப்பு வெடிகளா?

    20141129_201441_1

    மிகவும் இளம் சிறுமிகள் தொடங்கி பருவக்குமரிகள் வரை அற்புதமான பரதநாட்டியத்தில் எம்மைத் திளைக்க வைத்து விட்டார்கள்.

    இடைவேளை வந்தது. அருமையான உணவு அதுவரை நடந்த நிகழ்ச்சிகள் மனதை நிறைத்ததைப் போல எமது வயிறை நிரப்பியது.

    அதைத்தொடர்ந்து நகைச்சுவைத் தென்றல் தேவகோட்டை இராமநாதன் தலைமையில் மனித வாழ்வை மேம்படுத்துவது பணமா ? குணமா ?எனும் பட்டி மன்றம். ஒரு நகைச்சுவைத் தென்றலின் தலைமையில் நடைபெறும் பட்டிமன்றம் என்றால் சிரிப்புக்கும், சிலேடைக்கும் கேட்கவா வேண்டும் ?

    ஒரு இனிய மாலைப்பொழுதை கழித்த மனநிறைவோடு அடுத்தொரு நகைச்சுவைத் திருவிழாவைக் கண்டுகளிக்கப்போகிறோம் எனும் எதிர்பார்ப்புடன் வீடு திரும்பினோம்.

    ஆமாம் டிசம்பர் 5ம் திகதி இரவு எனது “அண்ணனின்” ஏற்பாட்டில் அருமைத் தம்பி “தேவகோட்டை இராமநாதன்” அவர்களின் நகைச்சுவைத் திருவிழா நிகழப் போகிறது.

    மீண்டும் வயிறு புண்ணாகப் போகிறதோ ? (சிரிப்பினால்)

    மீண்டும் அடுத்த மடலில்

    அன்புடன்

    சக்தி சக்திதாசன்

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    கிரேசி மோகன்

    crazy
    “பாலா பிஷேகமே பட்டா பிஷேகமாய்
    கோலோ கலமாகக் கொண்டாடும் -மாலோலன்;
    ஆவிந்தன் பாலில் அபிஷேக நீராடி
    கோவிந்தன் கொற்றவைக் கூத்து”….கிரேசி மோகன்….

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 145

    மலர் சபா

     

    மதுரைக் காண்டம் – 03. புறஞ்சேரி இறுத்த காதை

     

    வையை ஆற்றின் காட்சி 

    flowers

    குரவம் வகுளம் கோங்கு வேங்கை
    வெண்கடம்பு சுரபுன்னை மஞ்சாடி மருதமரம்
    சேடல் செருந்தி பவளமல்லிகை செண்பகம் பாதிரி
    இந்த மரங்களின் மலர்கள் நன்கு விரிந்து
    வைகைப் பெண்ணின் பூந்துகிலாய்த் திகழ்ந்தது.

     

    குருக்கத்தி செம்முல்லை கொழுங்கொடி முசுண்டை
    விரிந்த மலர்களையுடைய மோசி மல்லிகை
    வெள்ளை நிறம் கொண்ட நறுந்தாளி
    வெட்பாலை மூங்கில் கொழுங்கொடிப் பகன்றை
    பிடவம் இருவாட்சி
    இந்த மலர்க்கொடிகள் பின்னிப் பிணைந்த கோவை
    வைகைப் பெண்ணுக்கு மேகலையாய்த் திகழ்ந்தது.

     

    அக்கோவையாகிய மேகலை
    எல்லா இடங்களிலும் செறிந்து பரந்து
    கரையென உயர்ந்து நின்ற காட்சி
    வைகைப் பெண்ணின் அல்குல் போல் திகழ்ந்தது.

     

    பரந்து விரிந்த ஆற்றிடைக் குறையின்
    அடிப்பக்கம் அகன்று காணப்பட்டு
    பல்வகை மலர்க்குவியல்களால் உயர்ந்து நின்று
    எதிர் எதிராய் நின்ற மணற்குன்றுகள்
    வைகைப் பெண்ணின் ஒளிபொருந்திய
    இள மார்புகளாய்த் திகழ்ந்தன.

     

    கரையில் நின்ற முருக்க மரங்கள்
    உதிர்த்து நின்ற செம்மலர்கள்
    அவள் வாய் எனத் திகழ்ந்தது.

    அருவி நீரோடு வந்த முல்லைமலர்கள்

    அவள் நகையாகத் திகழ்ந்தது.

     

    குறுக்கும் நெடுக்குமாய் ஓடுகின்ற கயல்மீன்கள்
    அவள் விழிகளாய்த் திகழ்ந்தன.

    விரிகின்ற மலர்கள் ஒருபோதும் நீங்காத கருமணல்
    அவள் கூந்தலாய்த் திகழ்ந்தது.

     

    இவ்வனைத்துச் சிறப்பும் பெற்ற வைகைப்பெண்
    இவ்வுலகில பல பொருட்களை விளைவித்து
    அனைவருக்கும் உணவு படைக்கும் சிறப்புடையவள்.
    புலவர்கள் நாவில் பொருந்தியவள்.
    திருமகளை ஒத்தவள்.
    பருவம் பொய்த்திடாத பாண்டியநாட்டின்
    குலக்கொடியாய்த் திகழ்பவள்.

     

    அந்த வைகைப்பெண்
    கண்ணகிக்கு வரக்கூடிய துன்பங்களை
    முன்னரே உணர்ந்தவள் போல
    தூய்மைவாய்ந்த நறுமண மலர்களைத்
    தன் மீது ஆடையாகப் போர்த்திக்கொண்டு
    தன் கண்களை மறைத்த நீரை
    வெளியே காட்டாமல் உள்ளடக்கி இருந்தாள்.

     

     

    அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 135 – 150

    http://ilakkiyam.com/23-tamil/iyal/sangailakkiyam/pathinenmerkanaku/ettuthogai/pura-nanooru/1135-purancheriyirthakathai–

     

    படத்துக்கு நன்றி:

    http://www.dreamstime.com/stock-images-flowers-floating-water-image

     

     

    Share
  • பாட்டும் நானே… பாவமும் நானே…

    கவிஞர் காவிரிமைந்தன்.

    பாட்டும்திருவிளையாடல் படத்தில் ஒரு அதிசயம் நடந்திருக்கிறது. ஆம்.. நண்பர்களே.. தெய்வங்களைப் பற்றிய படங்கள் வரிசையில் வெளியான படங்கள் பலவும் சுமார் ஐந்தாறு உட்கதைகளைக் கொண்டிருக்கும். அவை ஆண்டவனின் அருளைப் பற்றியும் பக்தனை ஆட்கொண்டதைப்பற்றியும் பேசும். அந்த வகையில் வந்த படம்தான் திருவிளையாடல்! இறையருள் இயக்குனர் ஏ.பி.நாகராஜன் அவர்களின் இயக்கம்… என்பது இறைவனைப் பற்றி படம் எடுக்கவே இந்த உலகில் அவதரித்தாரோ என்று எண்ணும் அளவிற்கு சிறப்பான காட்சிகள்.. கதையமைப்புகள்.. இயக்கம் தந்து பக்திப்படவரிசையில் முன்னணியில் இடம்பெற்றவர்.

    குறிப்பாக பாண்டிய மன்னனின் சபையில் புதிதாக ஒரு இசைக்கலைஞர் தனது திறமைகளை அரங்கேற்ற.. அத்துடன் தனக்கு இணையாக பாடக்கூடியவர்கள் வேறு எவரும் உண்டோ என்று கேட்க.. மதுரைக்கே வந்த சோதனையாக அனைவரும் எண்ணிட.. இறைவன் திருவருளால் அந்த சவால் எப்படி ஏற்கப்பட்டது.. அல்லது என்ன நடந்தது என்கிற கதையைக் காட்சிப்படுத்த நான்கைந்து பாடல்கள் அதற்குள் அடக்கம் என்பதுவே வியப்பின் வியப்பு! ஒரு உட்கதைக்கு ஒரு பாடலே போதுமானதாக இருப்பது வழக்கம்! ஆனால் இந்தப் பகுதிக்கு.. ஒரு நாள் போதுமா.. இசைத்தமிழ் நீ செய்த அருஞ்சாதனை .. பாட்டும் நானே பாவமும் நானே.. பார்த்தா பசுமரம் போன்ற பாடல்களின் அணிவகுப்பு நடந்ததைப் பாருங்கள்..

    இணையதளத்தில் கவிஞர் கா.மு.ஷெரீப் அவர்கள் இயற்றி ஏ.பி.நாகராஜன் அவர்களது நட்பால்.. கவிஞர் கண்ணதாசன் பெயரிலேயே வெளிவந்த பாடலாக பாட்டும் நானே.. பாவமும் நானே.. என்கிற பாடல் பற்றிய தகவல் அறிவேன்.

    அதற்கு முன்னதாகவே.. இந்தப் பாடல் பற்றிய இன்னொரு தகவல் என்னிடமிருந்தும்.. வெளியிட முடியாத நிலையில் இருந்தேன். ஆம்.. கவிஞரின் உதவியாளர் அமரர் இராம.கண்ணப்பன் அவர்கள் வாயிலாக பெறப்பட்ட செய்தியிது. கவியரசு கண்ணதாசன் தமிழ்ச்சங்கம் என்கிற பெயரில் மன்றம் அமைத்த நாள் முதல் கண்ணதாசன் தொடர்பானவர்களை சந்திப்பதும் அவர்களோடு அளாவளாவுவதும் அன்றாட வாழ்க்கையானது. அவ்வழியே.. திரு.இராம.கண்ணப்பன் அவர்களின் இல்லத்திற்கு பலமுறை சென்று அவர்களோடு கவிஞர் தொடர்பான பல செய்திகளை அறிந்திருக்கிறேன். அப்படி பெறப்பட்ட செய்திகளில் ஒன்றுதான் இது. இருந்தும் ஏன்.. இந்தச் செய்தியை நான் பகிர்ந்துகொள்ளவில்லை என்பதை நீங்களே இறுதியில் உணர்வீர்கள். (இப்போதும்கூட நண்பர்களிடையே மட்டுமே பகிர்ந்து கொள்ள விரும்புகிறேனே தவிர.. கருத்து முரண்பாடுகளுக்குள் செல்வதற்காகவோ.. அவர்களுக்கு பதில்தருவதற்காகவோ நான் இதை இவ்விடம் சொல்லவில்லை).

    மறைந்த ஏழிசை வேந்தர் டி.எம்.செளந்திரராஜன் அவர்கள் பற்றி அனேகமான தமிழ்மக்கள் நன்றாக அறிவார்கள். அவர்போல் ஒரு பாடகர் இனி பிறந்து வருவதற்கில்லை. தலைமுறைகள் பல தாண்டி தன் குரலால் தமிழ்மக்கள் நெஞ்சில் நீங்காத இடம்பெற்றவர். ஒரு முறை தனது குரலாலலேதான் .. கண்ணதாசன் போன்றோரெல்லாம் புகழ் பெறுகிறார்கள்.. அவர்கள் எழுதிய வரிகளுக்கெல்லாம் நான் ஜீவன் தந்து பாடுகிறேன்.. அதனால் கவிஞர் புகழ்பெறுகின்றார் என்று பேசிவிட.. இந்தச் செய்தியை கவிஞரிடம் அவருக்கு அருகில் இருந்தோர் சென்று சேர்ப்பிக்க.. கவிஞர்.. அட விடுப்பா.. இதெல்லாம் ஒரு விஷயமா.. பேசிவிட்டுப் போகட்டும் என்றாராம். ஆனாலும் கவிஞரின் அபிமானிகள்.. கவிஞரிடம் இதுபற்றி அடிக்கடி சொல்லிவந்ததன் பலன் கிடைத்தது. ஆம்.. கவிஞர் இதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என்றாலும் பாடல் ஒன்று எழுத வந்தபோது அமைந்த வரியில் இதற்கான பதில் அமைந்துவிட்டது. அப்படி.. தான் எழுதிவிட்டு வெளிவந்தபோது.. அங்கிருந்த நண்பர்களிடம்.. நீங்கள் அடிக்கடி கேட்டுக்கொண்டிருந்தீர்களே.. அதைப் பாட்டில் சிலேடையாக வைத்து எழுதியுள்ளேன் கேளுங்கள் என்று சொல்லிவிட்டுச் காரில் ஏறி சென்றுவிட்டார்.

    “பாட்டும் நானே.. பாவமும் நானே.. பாடும் உன்னை நான் பாட வைத்தேனே.. “ கவிஞரின் சொல்லாட்சியை.. திறனை.. சிலேடை நயத்தை எண்ணி வியப்பதா,. தன் நண்பர்களின் வற்புறுத்தலுக்கு இணங்க பாடல் வழியே பதில் சொல்லி நயத்தைப் பாராட்டுவதா.. என்று தெரியவில்லை. எனவே நம்மைப் பொறுத்தவரை.. இது கண்ணதாசன் பாட்டுத்தான்! இறைவனின் அருள்பெற்ற ஜீவ கவிஞனான கண்ணதாசன் திருவிளையாடல் படத்தில் இடம்பெற்ற அத்தனைப் பாடல்களையும் நவரசங்களின் கலவையாக எழுதிக் குவித்திருக்கிறார். என்றும் அவை நம் இதயங்களை குளிர்விக்கும்.. செவிகளை கெளரவிக்கும்!

    http://www.youtube.com/watch?v=BAVFuEqqV-k

     

     

     

     

     

     

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    கிரேசி மோகன்

    crazy

    “பழுதென்று நம்பிமலைப் பாம்பின்வால் பற்றி,
    கழுதைக்குக் கற்பூரம் காட்டி ,-பொழுதென்றும்
    காலிங்கு கும்பிடுவாய் காசுக்காய்; காப்பென்றும்,
    காளிங்க நர்த்தனக் கால்”….கிரேசி மோகன்….

    Share
  • ஆட்டுக்குட்டிகளின் தேவதை

    எம். ரிஷான் ஷெரீப்

    am

    ஆட்டுக்குட்டியைத் தூக்கித் திரிந்த இடைச்சியின்
    இடர்காலப் பாடல் எங்கும் விரிகிறது
    கோடை காலங்களில் எஞ்சியிருக்கும்
    அம் மலைப் பிரதேசப் பூக்களில் தேனுறிஞ்சும்
    கூர் சொண்டுக் குருவி
    நிலாக் கிரணங்கள் வீழும்
    அவளுக்குப் பிடித்தமான வெளிகளுக்கெல்லாம்
    அப் பாடலைக் காவுகின்றது

    பள்ளத்தாக்கில் ஆடுகளைத் துரத்தியபடி
    தண்ணீர் தேடிச் சென்றவேளை
    சிதைந்தவோர் குளக்கரையைக் கண்டுகொண்டாள்
    வரண்ட பாசிகளோடு வெடித்திருந்த தரையில்
    களைத்துப் போய் பெருவலி தந்த
    கால்களை மடித்து ஓய்வெடுத்தவளோடு
    சேர்ந்து கொண்டதொரு சிவப்பு வால் தும்பி

    வலிய விருட்சங்கள் உதிர்ந்துவிட்டிருந்தன
    விதவிதமாய்க் குரலிட்ட பட்சிகளெல்லாம்
    வேறு தேசங்களுக்குப் பறந்துவிட்டிருந்தன
    புழுதி மண்டிய மேய்ச்சல் நிலத்தில்
    மந்தைகளின் தேவதை
    முடங்கிப் போயிருக்கிறாள்
    உஷ்ணப் பிரம்பினைக் காட்டி
    அவளை மிரட்டி வைத்திருக்கும் வெயில்
    கடல் தாண்டித் தனது யாத்திரையைத் தொடரும்வரை

    பயணப் பாதைகளிலெல்லாம்
    ஆட்டுக்குட்டிகளே நிறைந்திருக்கும்
    இடைச்சியின் கனவில் எப்போதும் வரும்
    பசிய மரங்கள் அடர்ந்திருக்கும் வனமும்
    மீன்கள் துள்ளித் தெளிந்த நீரோடும் நதியும்
    புற்களும் புதர்களுமாய் அடர்ந்த சமவெளியும்
    அவளுக்கு எப்போதும்
    ஆதிக் காலங்களை நினைவுறுத்தும்

    வாடிச் சோர்வுற்ற விழிகளினூடு
    தொலைவில் அவள் கண்டாள்
    யானையாய்க் கறுத்த மேகங்கள்
    வானெங்கும் நகர்வதை

    இனி அவள் எழுவாள்
    எல்லா இடர்களைத் தாண்டியும்
    துயருற்ற அவளது பாடலோடு
    விழித்திருக்கும் இசை
    ஒரு புன்னகையெனத் ததும்பித் ததும்பி மேலெழும்
    ஆக்ரோஷமாக… ஆரவாரமாக…
    ஆட்டுக்குட்டியைப் போலவே துள்ளித் துள்ளி…

    – எம். ரிஷான் ஷெரீப்

    Share
  • கோவை இலக்கியச் சந்திப்பு 48

    சுப்ரபாரதி மணியன்

    அ.முத்துலிங்கம் குறித்த இரு நூல்கள் வெளியீடு

    —————————————-

    30/11/14 ஞாயிறு காலை 10 மணி : நரசிம்ம நாயுடு மேல்நிலைப்பள்ளி, மரக்கடை, கோவையில்

    சுப்ரபாரதிமணியன் தொகுத்த அ.முத்துலிங்கம் குறித்த இரு நூல்கள் வெளியீடு நடைபெற்றது. சுப்ரபாரதிமணியன் 2 நூல்களை வெளியிட ஈரோடு சந்திரு, கோவை நித்திலன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

    சுப்ரபாரதிமணியன் : “ எல்லோருக்கும் இது வாய்க்காது. முத்துலிங்கத்திற்கு கிடைத்திருக்கும் இந்த ரச வாத வித்தை தமிழுக்கு பெரிய கொடை.

    இலங்கைக்காரர் என்றால் ஈழ தேசிய இனச் சிக்கல் சம்பந்தமாக விசயங்கள் இல்லாமல் இருக்க முடியாது. இதில் உள்ள பல கட்டுரைகளில் இலங்கை இனக் கலவரச் சம்பந்தங்கள் உள்ளன.அகதிகளின் அவலம் இருக்கிறது. தனி ஈழம் தாகம் தென்படுகிறது. இவற்றியெல்லாம் ஒரு எழுத்தாளன் பதிவு செய்யும் பக்குவம் தெரிகிறது. அரசியல் சார்ந்தோர் அவற்றை சொல்வதைக் காட்டிலும் எழுத்து ரசனையில் நல்ல பதிவாகி விடுகிறது. வேலை சூழலில் பல துரோகங்கள், சாப்பாடு தூக்கி மனிதர்களுடனான உறவும் சொல்லப்படுகிறது. ஆப்பிரிக்க நியமனம் போது ஒரு சாவோடு அதை எதிர் கொள்ள வேண்டியிருக்கிறது.. நிலத்தில் கிடைக்கும் வைரம் பெண்களின் கண்களில் மின்னுகிறது. மேசன் சங்கத்து அனுபவங்கள் போல நண்பர்களின் கட்டாயத்தால் சில இடங்களில் உறுப்பினராக இருக்க வேண்டியிருக்கிறது. சூடான் விருந்தில் வாயின் உட்சபட்ச பயன்பாடு சொல்லப்படுகிறது. பெசவரின் பூங்கொத்துப் பெண்கள் சுவராஸ்யமானவர்கள். பாக்கிஸ்தானின் ஜகஜாலக்கில்லாடி கள்ளன்கள் கலை உச்சத்தில் இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் இப்போது அமுலில் இருக்கும் மின்வெட்டைக் கவனிக்கிற போது எங்கோ மின் திருட்டு நடந்திருக்கிறது என்பதும் தெரிகிறது. சோமாலியா அனுபவங்கள் பற்றி சொல்லும் போது இந்த மின் திருட்டு பற்றி எழுதுகிறார்.புத்தாண்டு கொண்டாட்டங்கள், குதிரைப்பயணம், சைக்கிள் ஓட்டுதல், விமான நிலையத்தில் செருப்பு கழற்றும் சடங்குகள், முடித்திருத்தும் அனுபவங்கள், ஞாபக மறதி என்று சுவாரஸ்யமான நிறைய விசயங்கள். இவற்றில் நீங்கள் ஏதாவது உண்மையைக் கண்டு பிடித்தால் அதற்கு நான் பொறுப்பாக மாட்டேன். அது தற்செயலானது என்று முத்துலிங்கம் தரும் வாக்குமூலத்தைப் புறம் தள்ளி விட்டு அவரை முன்னிலைப் படுத்திதான் இந்த நாவலைத் தொடர முடிவதற்குக் காரணமாக தன்னிலையாகச் சொல்லப்படுவதை முக்கிய காரணமாகக் கொள்ளலாம். படைப்பாளன் ரொம்பவும் தன்னை மறைத்துக் கொள்ளவும் முடியாது. மறைத்துக் கொண்டாலும் அவன் வெளிப்படும் தருணங்களைச் சுலபமாகக் கண்டு கொள்ளலாம். இதிலும் முத்துலிங்கம் அவர்களைச் சுலபமாகக் கண்டு கொள்ள முடிகிறது. இதில் வருகிற இந்தியப் பெண்களோ, ஆப்பிரிக்கப் பெண்களோ, நைரோபிப் பெண்ணோ அனுதாபத்துடனும் எந்த வகையிலும் கிண்டலுக்கு ஆளாகாமலும் சரியாகவே சித்தரிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் மீதான எள்ளல் தொனி ஒரு பிசகு அதிகமாகிப்போனாலும் கொச்சையாகிவிடும். அது எங்கும் நிகழவில்லை.” பெண் படைக்கப்படுவது ஆயுள் முழுவதும் உறிஞ்சப்படுவதற்கு. அவளுக்கு ஓய்வு நாள் என்பது இன்னும் குறிப்பிடப்படவில்லை” என்று ஒரு இடத்தில் எழுதுகிறார். பல இடங்களில் இது போன்ற சித்தரிப்புகள், வார்த்தைகள் பெண்ணகளை மேன்மைப்படுத்துகின்றன.இப்போது அவரின் உற்சாகமான எழுத்திற்கு இடைஞ்சலாக ஞாபக மறதி வந்திருக்கலாம். முதுமையில் ஒவ்வொவொரு நாளும் உயிர் தப்புவதுதான் நாட்களைக் கடத்துவது என்றாகி விடுவதை இறுதியில் குறிப்பிடுகிறார்.எழுத்தாளர்களுக்கோ, இந்த நாட்களைக் கடத்துவது என்பது இல்லாமல் ஆயுள் போதாமைதான் கணக்கில் வரும். .கலை இலக்கிய விசயங்களில் ஈடுபடுபவர்களுக்கு உடலின் உபாதை மீறி இயங்க இயங்க படைப்பூக்கம் ஒரு உந்து சக்தியாக கூடவே இருந்து கொண்டிருக்கும் என்று தோன்றுகிறது “ என்றார்.

    1. அ.முத்துலிங்கத்தின் மூன்று உலகங்கள் (நற்றிணை பதிப்பகம்,சென்னை ரூ90 ) அ. முத்துலிங்கம் பற்றிய கட்டுரைகள்
    2. தமிழ்மொழிக்கு ஒரு நாடில்லை – அ.முத்துலிங்கம் பேட்டிகள் , கவின்கலை பதிப்பகம் சென்னை ரூ120)
    *********************************************************************************

    1.அ.முத்துலிங்கத்தின் மூன்று உலகங்கள்

    தொகுப்பு: சுப்ரபாரதிமணியன்
    அ.முத்துலிங்கம் பற்றிய கட்டுரைகள் தொகுப்பு
    ( எஸ்.இராமகிருஷ்ணன், சுப்ரபாரதிமணியன்,உமாசக்தி, வெங்கட்சாமிநாதன், ஜெயமோகன், பராசக்தி சுந்தரலிங்கம், தமிழ்மகன், நாஞ்சில்நாடன், பாவண்ணன், மு.இராமநாதன், இல.சைலபதி, மதுமிதா, காயத்ரி சித்தார்த், எஸ். செந்தில்குமார் ஆகியோரின் கட்டுரைகள் ) (ரூ 90,( நற்றிணை பதிப்பகம், சென்னை 28482818, 9486177208 )

    2. தமிழ்மொழிக்கு ஒரு நாடில்லை

    ஜெயமோகன், மதுமிதா, கடற்கரய், காலம், கிருஷ்ணா டாவின்சி,ராம்பிரஷன், மதுரபாரதி ஆகியோர் முத்துலிங்கத்திடம் எடுத்த நேர்காணல்கள்
    (அ.முத்துலிங்கம் பேட்டிகள் , கவின்கலை பதிப்பகம் சென்னை ரூ120)

    Share
  • பாரதி விழா 2014

    ஸ்டாலின் குணசேகரன்

    bhara

    bhara1

    bhara2

    bhara3

     

    bhara4

    bhara5

    bhara6

    bhara7

    Share