மீ.விசுவநாதன்

மாமழை கொட்டிப்பின் மாமலை மீதிறங்கி
பூநடை ஆறாகிப் போய்கடல் சேர்த்தல்போல்
ஊரெல்லாம் சுற்றியே ஓய்ந்த மனமுள்ளே
ஆரெனத் தேடு(ம்) அதை
(ஒரு எளிய மனிதனின் சுயசரிதை)
மீ.விசுவநாதன்
அத்தியாயம் : இரண்டு
வாழையடி வாழை
“அவனது” அப்பா வழித் தாத்தா அ.(நந்தனாராயாணன்) விஸ்வநாத ஐயர். அவரது மனைவி முத்துலட்சுமி அம்மாள். “முத்தம்மை” என்றுதான் அந்த கிராமத்தில் எல்லோரும் அழைப்பார்கள். மகாலட்சுமி போல இருப்பாள். மிகுந்த தர்ம சிந்தனை உள்ளவர். சித்த வைத்தியம் நன்கு தெரியும். கிராமத்தில் எந்த வீட்டில் நிறை மாத கர்ப்பிணி இருந்தாலும் “முத்தம்மை” கைராசியில் நல்ல குழந்தை பிறக்கும். பார்வையில் கனிவும், பழக்கத்தில் அன்பும் நிறைந்தவள் முத்தம்மை. அவளுக்கு பகையே கிடையாது.
தினமும் அதிகாலையில் தாமிரபரணி நதியில் குளித்து விட்டு, வீட்டிற்கு வந்து புடவை மாற்றிக் கொண்டு, துளசிக்கு தண்ணீர் விட்டு, ரேழியில் உள்ள பூஜை விளக்கை ஏற்றி நமஸ்கரிப்பாள். அதற்குப்பின் வீட்டில் உள்ளவர்களுக்கு காப்பி கொடுத்து விட்டு, கையில் ஒரு ஜாடியில் பாலும், ஒரு கிண்ணத்தில் வெத்தலை பாக்கு பழத்துடனும், ஸ்ரீ ஆதிவராகரை தரிசனம் செய்து விட்டுத்தான் மற்ற வேலைகள். வரும் வழியிலேயே ஒரு சுமங்கலிக்கு அந்த வெத்தலை பாக்குப் பழத்தை கொடுத்துவிட்டு, கையில் வைத்திருக்கும் கொஞ்சம் கற்கண்டுத் துண்டுகளை எதிரில் பார்க்கும் குழந்தைகள் கையில் தருவாள். தெருவில் நிற்கும் பசுவையும் . கன்றையும் பிரதக்ஷிணம் செய்து விட்டுத்தான் வீட்டு வேலைகளைக் கவனிப்பாள். அவன் அந்தப் பாட்டியின் கையைப் பிடித்துக்கொண்டு கோவிலுக்குச் சென்று வரும் பொழுது கற்றுக் கொண்ட பண்புகள் அனந்தம். சொல்ல மறந்தேனே….முத்தம்மைக்குக் கூடப் பிறந்தவர்கள் ஒன்பது பேர்கள். மிஞ்சியது முத்தம்மையைச் சேர்த்து ஐந்து பேர்கள். அந்தில் ஒரு சகோதரனும் உண்டு.
கூட்டுக் குடும்பம்
அவனது தாத்தா விஸ்வநாத ஐயர் , முத்துலட்சுமி தம்பதியருக்கு இரண்டு ஆண் குழந்தைகள். மூத்தவர் மீனாஷிசுந்தரம். அவரை மூக்காண்டி என்றும் கூப்பிடுவார்கள். முதலில் இரண்டு குழந்தைகள் பிறந்து இறந்து போனதால் மூன்றாவது குழந்தை பிறந்தால் மூக்குக் குத்து கின்றோம் என்று வேண்டிக்கொண்டதால் மூக்காண்டி என்ற பெயரும் வந்தது. சுந்தரம் என்றே அழைத்து வந்தனர். இரண்டாவது பிள்ளையின் பெயர் கணபதி சுப்பிரமணியன். இளையவர் என்பதால் “சின்னம்பி” என்ற செல்லப் பெயரால் அழைத்தனர். இளைய குழந்தைக்குப் பெற்றோர்கள் அதிக பாசம் காட்டும் பொழுது மூத்த குழந்தைக்குக் கோபம் வருவது இயல்பு தானே. அப்படிதான் ஒருமுறை மூத்த குழந்தை சுந்தரம் தனது தம்பியைத் தர தர வென்று இழுத்துச் சென்று மரபீரோவின் அடியில் திணித்து விட்ட நிகழ்ச்சியைச் சொல்லி அந்த வீட்டு உறவினர்கள் இப்போதும் சிரிப்பதுண்டு.
விஸ்வநாத ஐயருக்கு இராமலிங்கம் ஐயர், சிவராம கிருஷ்ண ஐயர் என்ற இரண்டு சகோதரர்களும், குப்பம்மாள் , சோமு என்று இரு சகோதரிகளும் இருந்தனர். தம்பி இராமலிங்கத்திற்கு பார்வதி என்ற மனைவியும், அனந்தநாராயணன், குளத்துமணி ( R.H.K ரமணி என்று எண்கணித ஜோதிடப்படி பிற்காலத்தில் மாற்றிக் கொண்டார்) இரண்டு மகன்களும், விசாலாக்ஷி, சகுந்தலா என்ற இரண்டு பெண் குழந்தைகளும் இருந்தனர். கடேசித் தம்பி சிவராம கிருஷ்ண ஐயர் சிலோனில் வேலை செய்து வந்தார். அவரை “கிட்ட சித்தப்பா” என்றுதான் அழைப்பார்கள். அவரது மூத்த தாரம் இறந்து போனதால் அவருக்குப் பிறந்த பெண்குழந்தையான பாலாம்பாளை தனது சகோதரர்கள் பொறுப்பிலேயே விட்டு வைத்திருந்தார். அவர்களும் மிகுந்த அன்போடு வளர்த்து வந்தனர். அழகான அன்பான கூட்டுக் குடும்பம்.
சில வருடங்கள் சென்று தம்பி சிவராம கிருஷ்ணனுக்கு, அவர்கள் வசித்து வந்த அதே வடக்குத் தெருவில் இரண்டு வீடு தள்ளிக் குடியிருந்த நன்கு பழக்கமான குடும்பதில் இருந்து சுப்பலக்ஷ்மி என்ற பெண்ணை இரண்டாவது திருமணம் செய்து வைத்தனர். அவர்களுக்கு இராஜலட்சுமி, சங்கரி என்று இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தனர். அவர்கள் சிலகாலம் சிலோனில் வளர்ந்து கல்லிடைக்குறிசிகுத் திரும்பி வந்தனர்.
கையும் வாயும் சுத்தம்
அவனது தாத்தா விஸ்வநாத ஐயர், “மானாமதுரை , திருநெல்வேலி” போன்ற ஊர்களில் உள்ள சந்திரவிலாஸ் ஹோட்டலில் தினசரி வரவு செலவு கணக்குப் பார்க்கும் வேலை செய்து வந்தார். அவர் கணக்கில் புலி. கையெழுத்தும் முத்தாக இருக்கும். வாரம் ஒருமுறை அவர் கல்லிடைக் குறிச்சிக்கு வந்து செல்வதுண்டு. சந்திர விலாஸ் ஹோட்டல் மேனேஜர் பெயரும் அ. விஸ்வநாத ஐயர் தான். அவரது மனைவி சங்கரம்மாள், முத்தம்மையின் மூத்த சகோதரியின் மூத்த பெண். அதனால் ஒருவகையில் சந்திரவிலாஸ் ஹோட்டல் மேனேஜர் அவனது தாத்தாவுக்கு நெருங்கின உறவுதான். உறவு என்பதால் வேலை செய்யும் இடத்தில் அந்தப் பாசத்தை எல்லாம் காட்டிக் கொள்ள மாட்டார்கள். சரக்கு மாஸ்டர் வரவில்லை என்றால் சந்திரவிலாஸ் ஹோட்டல் மேனேஜர் விஸ்வநாத ஐயரே சமையலும் செய்யத் தொடங்கி விடுவார் என்று அவனது தாத்தா தனது மேனேஜரை மெச்சுவார். அவருடன் தானும் அந்த ஹோட்டலில் சாப்பிட வந்தவர்களுக்கு உணவு பரிமாறியும் எந்த வேலைக்கும் தன்னைத் தயாராக வைத்துக்கொண்டதாகச் சொல்லி மகிழ்வார். அவருக்குக் கையும் வாயும் சுத்தம்.
அந்தச் சந்திரவிலாஸ் ஹோட்டல் மேனேஜர் அ.விஸ்வனாத ஐயர் தான் கல்லிடைகுறிச்சி “திலகர் வித்யாலய உயர் நிலைப் பள்ளிக்கு” நிர்வாகியாகப் பலகாலம் இருந்து அந்தப் பள்ளிக் கூடத்தின் வளர்ச்சிக்குக் காரணமானவர்களில் ஒருவராக இருந்தவர். “விஸ்வநாதையர் சங்கரம்மாள் அறக்கட்டளை” யை ஏற்படுத்தி எத்தனையோ ஏழை மாணவ, மாணவியர்களுக்கு சாதி, மத பேதம் இல்லாமல் புத்தகங்கள், பள்ளிச் சீருடைகள் எல்லாம் சரியான காலத்தில் தேவையான குழந்தைகளுக்கு வழங்கி வந்தார். இப்போது அரசாங்கம் தருகிறது. முன்காலத்தில் அது மிக அவசியமாக இருந்தது. “விஸ்வநாதையர் சங்கரம்மாள்” டிரஸ்ட் மூலம் கிடைத்த புத்தகத்தைப் படித்துத்தான் இன்று நான் இந்த உயர்ந்த நிலையில் இருக்கிறேன் என்று நன்றியோடு சொல்லுகின்ற பழைய மாணவர்கள் பல பேர்களை அவன் பார்த்திருக்கிறான்.
சில வருடங்கள் சென்று அவனது தாத்தா திருநெல்வேலி சந்திரவிலாஸ் ஹோட்டலில் இருந்து செங்கோட்டை ரயில்வே ஸ்டேஷனில் உள்ள சந்திரவிலாஸ் ஹோட்டலுக்கு மாற்றிக் கொண்டு வந்தார். அங்கு வேலை செய்யும் பணியாளர் களிடமும், சாப்பிட வரும் ரயில்வே ஊழியர்களிடமும் மிகுந்த அன்போடு பழகுவார். ஒரு முறை அவன் அவனது தாத்தாவுடன் செங்கோட்டைக்குச் செல்வதற்காக கல்லிடைகுறிச்சி ரயில்வே ஸ்டேஷனில் நுழையும் பொழுதே பிளாட்பாரத்தில் இருந்து வண்டி மெதுவாகப் புறப்பட்டு விட்டது. அவன் கையைப் பிடித்துக் கொண்டு தாத்தா ஓடி வருவதைப் பார்த்து “மெதுவா வாங்க தாத்தா சாமி” என்று கடைசிப் பெட்டியில் இருந்த கார்டு(guard) சுந்தரம் பிள்ளை சிகப்புக் கொடியைக் காட்டி வண்டியை நிறுத்தி தன்னுடைய பெட்டியில் ஏற்றிக் கொண்டு சென்றது அவனுக்கு நன்றாக நினைவில் உள்ளது. ஒருவரிடம் எப்படி நாம் பழக வேண்டும் என்பதைப் பெரியோர்களின் நடத்தையில் இருந்தே தெரிந்து கொள்ள முடியும். அன்பினால் யாரையும் வெல்ல முடியும்.
அவனுக்கு ரயில் என்ஜினும், அதில் இருந்து வெளிவரும் புகையும், அதன் ஒருவித நிலக்கரி வாசனையும் மிகவும் பிடிக்கும். அதை அவனுக்குக் கற்றுத் தந்ததே “செங்கோட்டை” ரயில் நிலையம்தான். அவனது தாத்தா அவனை செங்கோட்டைக்குப் பக்கத்தில் இருக்கும் ஆரியங்காவுக்கு, ஸ்ரீ ஐயப்பனை தரிசனம் செய்துவர ஒருமுறை அழைத்துச் செல்லும் பொழுது, அந்தப் புகை வண்டி ஒரு குகையின் வழியாகச் சென்றது. அப்போது சில நொடிகள் ஒரே இருட்டாக இருக்கும். அவனுக்கு பயம் வரக்கூடாது என்று அவனைத் தன்னோடு சேர்த்துக் கட்டி கொண்டு “இப்ப வந்துரும் பாரு வெளிச்சம்” என்று சொன்னது அவனது காதுகளில் இப்போதும் ஒலிக்கிறது.
இன்றும் திருநெல்வேலி ரயில்வே நிலையத்தில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள நுழைவுப் பகுதிக்குப் பக்கத்தில் முதல் பிளாட்பாரத்தில் உள்ள ஒரு சின்னக் கடையில் “சந்திரவிலாஸ்” சிற்றுண்டி வகைகள் கிடைகின்றது. அங்கு கிடைக்கும் உப்புமா, பூரிக் கிழங்கு , வடை, இட்லி எல்லாமே மிகச் சுவையாக இருக்கும். பூரிக்கிழங்கும், உப்புமாவும் சூப்பராக இருக்கும். ஒரு பொட்டலதின் இன்றைய விலை ரூபாய் இருபது மட்டுமே…. இந்த சந்திரவிலாஸ் சுவையைத் தெரிந்த வாடிக்கையாளர்களான காலையில் இரயில் வண்டி இறங்கிவரும் பயணிகளும், மாலையில் சென்னைக்குச் செல்லும் பயணிகளும் நிச்சயம் இதை ஒருகை பார்க்காமல் இருக்க மாட்டார்கள். அதன் பெரிய கடை மேம்பாலத்திற்குக் கீழே ஸ்ரீ சாலைக்குமரன் கோவிலுக்கு அருகில் இருக்கிறது. அந்த அழகான முருகனை தரிசித்து விட்டு அப்படியே சந்திரவிலாஸில் ஒரு காபி யாவது குடித்துவிட்டு வருகிற வாடிக்கையாளர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். சந்திரவிலாஸ் ஹோட்டலின் முதலாளி வெங்கடாசலம் ஐயரின் (பேரன்) மகன் மணி ஐயரின் இளைய மகன் சேகர் தான் இன்று நிர்வகிக்கிறார் என்று அவன் அப்பா கூறக் கேட்டிருக்கிறான்.
அவன் பிறந்தான்
பெரியவர் பிரும்மஸ்ரீ விஸ்வநாத ஐயரின் மகனாகப் பிறந்த மீனாக்ஷி சுந்தரத்துக்கும், கேரள மாநிலம் திருச்சூர் வெள்ளிநேழியில் பிறந்து வளர்ந்து திருநெல்வேலி ஜில்லாவின் கல்லிடைக்குறிச்சிக்கு வாழ வந்த பிரும்மஸ்ரீ சுப்ரமணிய ஐயர், மரகதம் அம்மாள் தம்பதியரின் இரண்டாவது பெண் இராமலக்ஷ்மிக்கும் பிறந்த சீமந்த புத்திரி ஸ்ரீ பார்வதி என்ற பாலா. அவனுக்கு அக்கா என்று முந்திக் கொண்டாள்.
அந்தக் குழந்தை பிறந்து ஐந்து வருடங்கள் கழித்து மன்மத வருஷம் ஆனி மாதம் 30ம் தேதி வியாழக்கிழமை இரவு ஒரு மணி ஐம்பத்து நாலு நிமிஷத்தில் , பரணி நக்ஷத்திரத்திரம் கூடிய சுப தினத்தில் (14.07.1955) கல்லிடைக்குறிச்சி, டுண்டி விநாயகர் தெருவில் 38ம் எண் இல்லத்தில் அவன் பிறந்தான்.
அவன் பிறந்த செய்தியை அவனது அப்பா, செங்கோட்டையில் இருந்த தனது அப்பாவுக்கு (அ. விஸ்வநாத ஐயர்) ஒரு தபால் கடிதம் மூலமாக இப்படித் தெரிவிக்கிறார்:
” ஸ்ரீமது அப்பா அவர்களுக்கு குழந்தை மீனாக்ஷி சுந்தரம் அநேக கோடி நமஸ்காரம். இவ்விடம் யாவரும் ஷேமம். அவிடம் தங்களுடைய தேக சௌக்கியத்திற்கு எழுதவும். இப்பவும் இன்று இரவு ஒரு மணி ஐம்பது நாலு நிமிஷத்தில் சௌ. ராமாள் பிரசவித்து பிள்ளைக் குழந்தை பெற்றாள். சுகப்பிரசவம். குழந்தையும் தாயாரும் சௌக்கியம். பரணி நக்ஷத்திரம் , கொடி சுற்றிப் பிறந்திருக்கிறது. வாஞ்சி அம்மாஞ்சி, அத்தான் முதலியவர்களிடம் சொல்லவும். அம்மா எல்லாவரும் பார்த்து விட்டு வந்தார்கள். குழந்தை நன்றாக இருக்கிறது. சௌகரியப்பட்டால் குழந்தையைப் பார்த்து விட்டுப் போகவும். வேணும் சுபம். லக்ஷ்மீபதி சகாயம்.
பி.கு. அப்பா வரும்பொழுது முடிந்தால் ஒரு சக்கைப் பழம் வாங்கி வரவும்.
yours affectionately,
V. Meenakshisundaram 15 .07.1955
புண்ணியவாஜனத்தன்று வேத மந்திரங்கள் முழங்க அவனுடைய தகப்பனார் தன்னுடைய மடியில் அவனை வைத்துக் கொண்டு, அவனது வலது காதில்,
“விஸ்வநாதன், விஸ்வநாதன் ,விஸ்வநாதன்,” என்று அவனது தாத்தாவின் பெயரை நாமகரணம் செய்தார்…
பெயரைச் சொல்லிக் கூப்பிடக் “கண்ணன்” என்று வைத்தார்கள்.
“அவனை” இறைவன் படைத்தது தமிழ் செயுமாறோ…அவன் அது ஒன்றும் அறியான் பராபரமே…..
(21.01.2015) அவன் அடுத்த வாரம் வருவான் ……….
படங்களுக்கு நன்றி ; அன்னபூரணி
-மீ.விசுவநாதன்
இருண்ட மனதில் ஒளியானாய்; இயற்கை நியதிப் பொருளானாய்;
உருண்டு புரண்டு அழுதாலும் உயிருள் குளிர்ந்த சுகமானாய்;
சுருண்டு கிடக்கும் பாம்பினையே தொட்டு எழுப்பும் குருவானாய்;
மருண்மா அகந்தை அழிந்திடவே மனதை ஒடுக்கும் சிவமானாய்!
சிறகை விரித்துப் பறக்கின்ற சிந்தை யதனில் கவியானாய்;
பிறவி எடுத்த பயன்சொல்லி பிறர்க்கு தவிடும் கையானாய்;
இறக்கும் வரைக்கும் எளியோனாய் இருந்து பழக வழியானாய்;
மறக்கும் பொருளாய் அமையாமல் மதியை அணிந்த அரனானாய்!
(அறுசீர் விருத்தம் வாய்பாடு: மா, மா, காய் , மா, மா, காய்)
மீ.விசுவநாதன்
தமிழகத்தின் தென்பகுதியில் திருநெல்வேலி மாவட்டத்தில் , தென்பொதிகையின் அடிவாரத்தில் உள்ள ஒரு அழகான கிராமம் கல்லிடைக்குறிச்சி. அது வற்றாத ஜீவ நதி தாமிரபரணியின் செல்லக் குழந்தை . பசுமையான வயல் வெளிகளும், தோட்டங்களும் , தென்னந் தோப்புகளுமானச் செழிப்பான பூமி. பதினெட்டு அக்ரஹாரங்கள். அந்தக் காலத்தில் , அதுதான் 1950களில் அக்ரஹாரம் முழுவதும் பிராமணர்களே குடியிருந்தார்கள். தவிர செட்டிப் பிள்ளைமார் தெரு, முதலிமார் தெரு, பள்ளிவாசல் தெரு, மாதாகோவில் தெரு என்று அனைத்து மக்களும் அன்போடு இன்றும் வாழ்கின்ற ஊர். ஒவ்வொரு தெருவுக்கும் ஒரு கோவிலும் உண்டு. ஸ்ரீ ஆதிவராஹப் பெருமாள் கோவில்தான் மிகப் பழமையானதும் , குபேரனால் பிரதிஷ்டை செய்யப்பட்டதுமான புகழ் மிக்க ஒன்று. தவிர டுண்டிவினயகர், ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி, ஸ்ரீ சிவகாமி அம்பாள் சமேத ஸ்ரீ சிதம்பரேஸ்வரர், ஸ்ரீ முருகன், ஸ்ரீ வாழ உகந்த அம்மன், ஸ்ரீ வடக்கு பார்த்த செல்வி, ஸ்ரீ அகஸ்தியர், ஸ்ரீ குமாரன், ஸ்ரீ அறம்வளர்த்த நாயகி, ஸ்ரீ தர்மசாஸ்தா, ஸ்ரீ காமாக்ஷி, ஸ்ரீ வடிவாம்பிகை உடனுறை ஸ்ரீ மானேந்தியப்பர் , ஸ்ரீ காந்தாரி அம்மன் இவை தவிர சிறு சிறு பிள்ளையார் கோவில்களும் உண்டு. சித்திரை மாத ஸ்ரீ ஆதிவராகர் தேரோட்டம் மிகப் பிரபலம். எந்த ஊரில் இருந்தாலும் இந்தத் தேரோட்டம் பார்ப்பதற்காகவே விடுமுறையில் வந்துவிடுகின்ற என்போன்ற ஊர்ப் பைத்தியங்கள் இன்றும் இருக்கிறார்கள்.
வேதம் நிறைந்த ஊர்
ஒவ்வொரு அக்ரஹாரத்திலும் குறைந்தது இரண்டு தீஷிதர்கள், நான்கு கனபாடிகள், மற்றும் வேதம் கற்ற பண்டிதர்கள் என்று இருந்ததால் இந்த ஊரை வேதக் கல்லிடைக்குறிச்சி என்றும் அழைத்தனர். கார்த்திகை மாத முதல் தேதியில் இருந்து முப்பதாம் தேதி வரையில் கந்தப்பபுரம் தெருவில் உள்ள “ஸ்ரீ முருகன்” கோவிலிலும், ஸ்ரீ வராகபுரம் தெருவின் கடேசியில் உள்ள ஸ்ரீ சாஸ்தா கோவிலில் மார்கழி மாதம் முதல் தேதியில் இருந்து பதினொன்றாம் தேதி வரை பதினோரு தினங்களும் “வாரம்” என்று அழைக்கக் கூடிய வேத பாராயணம் நடக்கும். அதில் வேதத்தில் மிகுந்த பாண்டித்தியம் உள்ள தீஷிதர்கள், கனபாடிகள் மற்றும் பண்டிதர்களும் (சாஸ்திரிகள்) கலந்துகொண்டு தாங்கள் கற்ற வித்தையை மற்றவர்களோடு சுவாமியின் சன்னதியில் பகிர்ந்து கொள்வதைப் பார்க்கக் கண்கள் கோடி போதாது. தவறு இல்லாமல் சொன்ன வேத பண்டிதருக்கு சன்மானமும், கௌர்வமும் கிடைக்கும். இரவில் வந்திருந்த அனைவருக்கும் அன்னதானமும் உண்டு. பொதுவாக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வேதியர்கள் தங்களது வேதக் கல்வியறிவை மேம்படுத்திக் கொள்ளவே விரும்புவர். தாமிரபரணி நதிக்கரையில் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் ஒரு சமஸ்கிருத கல்லூரியும் இருபதாம் நூற்றாண்டின் தொடக்க காலத்தில் வெகு சிறப்பாக நடைபெற்று வந்திருக்கிறது. பின்னாளில் அங்கு காசி விசுவநாதர், விசாலாக்ஷி பூஜையும் , வருடா வருடம் ஐந்து தினங்கள் ஸ்ரீ சங்கர ஜயந்தி உற்சவமும் நடைபெற்று வந்தது. கரந்தையார் பாளைய பிராமண சமூகத்துக்குச் சொந்தமான இந்த இடம் இப்பொழுது பாழ்பட்டுக் கிடக்கிறது. இதன் மேற்குப் புறத்தில், நதிக்குச் செல்லும் பாதையில் நிறைய அதிஷ்டானங்கள் (துறவிகளின் சமாதி) இருப்பதை இப்போதும் காணலாம்.
சங்கீத ரசனைச் சீமை
சங்கீதத்திலும் மிகச் சிறந்த வித்வான்கள் இந்த ஊரில் இருந்தார்கள். அதில் சங்கீத கலாநிதி வேதாந்த பாகவதர் (இவர் ஒரு தேவி உபசகரும் கூட) , அவருடைய சகோதரர் இராமலிங்க பாகவதர் மிக முக்கியமானவர்கள். இவர்களைத் தவிர வி. ராமலிங்க பாகவதர் என்று இன்னொருவரும் வடக்கு ரத வீதியில் வசித்து வந்தார். வேதாந்த பாகவதரின் சீடர்கள்தான் மகாதேவ பாகவதர், கல்கத்தா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர். இவர்களுக்கு சென்னையில் உள்ள மியூசிக் அகாதமி “சங்கீத கலா ஆசார்யா” என்ற விருது கொடுத்துச் சிறப்பித்தது. இவர்களைப் போல ஹரிஹர பாகவதர், எம்.ஆர்.ஆதிவராகன் போன்ற சங்கீத வித்வான்களும் இருந்தனர்.
எம். சங்கரநாராயணன் (அம்பிச்சா..என்று அழைக்கப் படுபவர்) GNB அவர்களுடன் நெருங்கிய தொடர்புடையவர். தஞ்சாவூர் கல்யாணராமன் அவர்களிடமும், TMT அவர்களிடமும் சங்கீதம் கற்றவர். இன்றும் தியாகராஜர் ஆராதனை உற்சவத்தை ஊரில் சிறப்பாக நடத்திக் கொண்டு வருகிறார். அதேபோல சிலேடைப்புலி சுப்பையா பாகவதரும் தெற்கு மாடத் தெருவின் முதல் வீட்டில் குடியிருந்தார். கல்கத்தா கிருஷ்ணமூர்த்தி, கல்கத்தா குருமூர்த்தி ஆகியோர்களிடம் சங்கீதம் கற்ற கல்கத்தா கலா, சித்ரா சகோதரிகளுக்கும் இவ்வூர்தான்.
முதலியப்பபுரம் தெருவில் வசித்து வந்த ஸ்ரீ ஐயாஸ்வாமிகள் பக்தி பஜனையின் மூலமாக ஆன்மிகச் சிந்தனையை மக்களிடம் பரப்பி வந்தார். துவாதசி தோறும் உஞ்சவிருத்தி பஜனை செய்வார். ஒவ்வொரு வருடமும் மாசி மாத சிவராத்திரி அன்று “முருகன்” அகண்ட நாம உத்சவம் நடத்துவார். அதில் பிரபல வித்வான்கள் எல்லாம் வந்து கலந்து கொண்டு பாடுவார்கள். பித்துக்குளி முருகதாஸ் அவர்கள் ஸ்ரீ ஐயாஸ்வாமிகளின் முருகன் அகண்ட நாம நிகழ்ச்சிகளில் விரும்பிக் கலந்துகொண்டு பக்திப் பாடல்களைப் பாடியிருக்கிறார். ஸ்ரீ ஐயாஸ்வாமிகள் ஆடி அம்மாவசை அன்று பாபநாசத்துக்கு மேல் இருக்கக் கூடிய பாணதீர்த்தத்தில் மிகப் பெரிய அளவில் அன்னதானம் செய்வதைக் கடமையாகவே கொண்டிருந்தார்.
வடக்கு மாடத்தெருவில் இருக்கிற பஜனை மடத்தில் நடைபெறும் கோகுலாஷ்டமி உற்சவத்தின் போது மிகப் பிரபலமான தமிழகத்தின் சங்கீத வித்வான்கள் பலர் கச்சேரிகளும், உபந்யாசங்களும் செய்திருக்கிறார்கள். வெங்கட்ராமையர் , பண்ணை சுந்தரம் ஐயர் இருவரும் காலாருமினியம் வாசிப்பதில் சிறந்து விளங்கினர். இருவருமே மிராசுதாரர்களாக இருந்தவர்கள். சங்கீத பிரியர்கள். பஜனை பாடுவதில் சஞ்ஜீவி பாகவதரைப் போலவே நம்பி ஐயங்கார், எம்.ஆர். ராமநாராயணன் போன்றவர்கள் செவிக்கு விருந்து வைத்த செம்மல்கள். பொதுவாகவே இந்த கிராமத்து ஜனங்களுக்கு சங்கீதத்தில் நல்ல ரசனை உண்டு. மாடுகளை மேய்த்துக் கொண்டு போகும் பொன்னன் ,” எலே அங்கன தெக்கநீக்கி மாட்டப் பத்திக்கிட்டு போலே” என்று இழுத்துச் சொல்வதிலும், “கத்தரி, வெண்டை, கரணை, பாவக்காய்” என்று வியாபாரக் குரல் கொடுக்கும் மூக்கனின் குரலிலும் சங்கீதம் இருக்கத்தான் செய்கிறது.
செய்யும் தொழிலே தெய்வம்
அப்பளத் தொழிலில் இருந்து சிமென்ட் உற்பத்தி செய்யும் தொழிலதிபர்கள் வரை இந்த கிராமம் திறமைசாலிகளைப் பெற்றிருந்தது. இந்தியா சிமென்ட் நிறுவனர் எஸ்.என்.என். சங்கரலிங்க ஐயர், ஈசன் நிறுவனத்தின் ஈஸ்வர கிருஷ்ண ஐயர், ராயல் என்பீல்ட் கே.எஸ். சுந்தரம் ஐயர் குறிப்பிடத் தகுந்தவர்கள். பிற்காலத்தில் அவர்களது தலைமுறையில் வந்த இந்தியா சிமென்ட் கே.எஸ்.நாராயணன் (இவர்தான் பின்னாளில் “கெம்பிளாஸ்ட்” நிறுவனத்தை உருவாக்கினார்), என்பீல்ட் எஸ். விஸ்வநாதன், ஈஸ்வர கிருஷ்ண ஐயரின் மகன் ஹரி ஈஸ்வரன், கிருஷ்ணா மைன்ஸ் கே.எஸ்.கிருஷ்ணமூர்த்தி (கிட்டா மணி ஐயர்) என்று தொடர்ந்தது.
“உண்டியல் கடை” என்று வைத்து வட்டிக்குப் பணம் கொடுத்து வந்த செல்வர்களால் சிறப்புப் பெற்றதும் இந்த ஊர்தான்.
அப்பளத் தொழிலில் கொடி கட்டிப் பறந்த அம்மாமி அப்பளம் டெப்போ , கணபதிலிங்கம் அப்பளம் டெப்போ, சந்திரா அப்பளம் டெப்போ, சக்தி அப்பளம் டெப்போ, செல்லவிலாஸ் அப்பளம் டெப்போ, ஆதிவராஹா அப்பளம் டெப்போ, லக்ஷ்மிவிலஸ் அப்பளம் டெப்போ, ஸ்ரீ சீதாராமன் அப்பளம் டெப்போ, காந்திமதி அப்பளம் டெப்போ என்று எங்கு திரும்பினாலும் அப்பளக் கம்பெனிகளே கிராமத்தில் குடிசைத் தொழிலாக நிரம்பி இருந்தது . சுவைக்கும், தரத்திற்கும் பெயர் பெற்று விளங்கியது. “வத்தக் குழம்பும் சுட்ட அப்பளமும்” நினைத்தாலே சுவைக்க வைக்கும் அனுபவத்தை இந்த ஊர் தந்தது. போகப் போக இந்தத் தொழில் நலிவடையத் தொடங்கியது. இப்பொழுது சங்கர் அப்பளம், ஸ்ரீ சீதாராமன் அப்பளம், ஸ்ரீ ஆஞ்சநேயா அப்பளம் என்று ஒரு சில அப்பள டெப்போக்கள்தான் இருக்கின்றன. ஆனாலும் இப்பொழுதும் அரிசி அப்பளம், புழுங்கல் அரிசி முறுக்கு, தட்டை, மாலாடு, முனகரம், சீடை மற்றும் இனிப்பு வகைகளின் தயாரிப்பில் இந்த ஊர் பேர்சொல்லும் பிள்ளையாகவே இருக்கிறது.
இலக்கியச் செல்வங்கள்
சரித்திர ஆராச்சியாளர் நீலகண்ட சாஸ்திரி, சிறுகதை, நாவல் என்று முத்திரை பதித்த “ஆதவன்”, பாரதிக்கு தொண்டு செய்துவரும் பாரதி காவலர் கு. ராமமூர்த்தி, திரைபடத் துறையில் குறிப்பாக “டப்பிங்” தொழிலில் சிறந்து விளங்கி , இராமாயணம், கிருஷ்ணா போன்ற சின்னத்திரை நீண்ட தொடர்கள் மூலம் அனைவருக்கும் தெரிந்த கவிமாமணி கு. தேவநாராயணன் போன்ற இலக்கிய வாதிகளையும் இந்த உலகத்துக்குத் தந்து மகிழ்தது இவ்வூர்.
சிவராத்திரி காலத்தில் தெருவுக்குத் தெரு நாடகம் போடும் குழந்தைகளை ஊக்குவிப்பார்கள் இந்த ஊர் மக்கள். வெங்கடாசலம் ஐயர் கதை, வசனம் , இயக்கத்தில் நடைபெற்ற “ஜெய் பவானி” என்ற நாடகத்தை என் சிறுவயதில் ஸ்ரீ ஆதிவராகப் பெருமாள் கோவிலில் உள்ள தெற்குப் பிராகாரத்தில் வைத்துப் பார்த்தது இன்றும் நினைவில் உள்ளது. அதில் பாரத மாதாவாக நடித்த சி. சங்கரசுப்ரமணினும்(சி.எஸ்.), ஔரங்கசீப்பாக நடித்த சங்கரராம சுப்பிரமணியனும் (இன்றும் அவரை ஔரங்கசீப் மாமா என்றல்தான் தெரியும்.), கையில் தடியுடன் போலீஸ்காரனாக நடித்த பேப்பர் ராமலிங்கம், H.கிருஷ்ணன் அவர்களையும் இன்றும் என் இதயம் நினைத்துக் கொண்டிருக்கிறது. இன்று நாடகத் துறையில் பிரபலமாக விளங்குகின்ற “நாணு” (ச. லெஷ்மி நாராயணன்) வுக்குப் பூர்வீகம் இந்த ஊர்தான்.
தேச விடுதலை, கல்வியில் ஊரின் பங்கு
சுகந்திரப் போராட்ட காலத்தில் தேச விடுதலைக்குப் பாடுபட்ட கோமதி சங்கர தீட்ஷிதர், லக்ஷ்மி அம்மாள், சங்கர ஐயர், ய்க்யேஸ்வர சர்மா , தியாகி சுப்ரமணிய ஐயர் போன்ற தீரர்களையும் பெற்றது இவ்வூர். அவர்களின் முயற்சியாலும் , தர்மசிந்தனையுள்ள ஆர்.எஸ்.ஏ. லக்ஷ்மண ஐயர், எஸ்.எஸ். சங்கர ஐயர், ஏ.விஸ்வநாத ஐயர் போன்றவர்களின் ஆதரவாலும் ஜார்ஜ் நடு நிலைப்பள்ளியைத் துவக்கினர். இந்தப் பள்ளியில்தான் ஏ.என்.சிவராமன் எட்டாண்டு காலம் ஆசிரியர் பணிசெயததாக அவரே தன் கைப்பட அப்பள்ளிக்கு எழுதிய கடித்தத்தில் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் “வித்யா சங்கம்” என்ற அமைப்பையும் துவக்கினர். அதன் பலன் இன்று “திலகர் வித்யாலய உயர் நிலைப் பள்ளி” என்ற பெயருடன் ஏழை எளிய குழந்தைகளுக்கு வரப்பிரசாதமாக இருக்கக்கூடிய மிகப் பெரிய கல்விச் சாலையாக விளங்குகிறது. இந்த ஸ்தாபனம் கே.எஸ். ராமனைத் தலைவராகவும், கே.எஸ். சங்கரசுப்ரமனியனைத் செயலாளராகவும் கொண்டு சிறப்பாக நடந்து வருகிறது. மகாகவி பாரதியின் வாக்குப்படி தெருவுக்கு ஒரு பள்ளியாக ஸ்ரீ லக்ஷ்மீபதி ஆரம்பப் பள்ளி, மகாத்மா காந்தி பள்ளி, லலிதா ஆரம்பப்பள்ளி என்றும் விரிந்து இன்றும் கல்விப் பணியில் சிறந்து நிற்கிறது கல்லிடைக்குறிச்சி.
இப்படி எத்தனையோ சிறப்புகளைக் கொண்டதால்தான் சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடத்தின் 33வது பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ சங்கராச்சார்யாள் ஸ்ரீ சச்சிதானந்தா சிவாபினவ ந்ருசிம்ஹ பாரதீ மகாஸ்வாமிகள் இந்த ஊரைக் கல்யாணபுரி என்று அழைத்தார்கள்.
இத்தகு புகழ் மிக்க ஊரில் தான் “அவனும்” பிறந்தான் …
வாரம் ஒருமுறை தொடர்ந்து வருவான் ……….
படங்கள்: கே.வி.அன்னபூர்ணா
மீ.விசுவநாதன்
கனிவு , பணிவு , கவனச் சிறப்பு ,
பனிபோல் தெளிவாய்ப் பழகு மினிமை ,
உதவும் குணத்தா(ல்) உயர்ந்த பதவி
பதமாய் அமைதல் பலம்.