Author: மீ. விசுவநாதன்

  • கருணையாலே வெலவேண்டும்!

    கருணையாலே வெலவேண்டும்!

    மீ.விசுவநாதன்

    வந்த பிறவிச் சுவடுக்கு – ஒரு
    வகையில் நன்மை செயவேண்டும்
    எந்த உயிர்க்கும் சுமையாக – நாம்
    இல்லா திருக்க வரம்வேண்டும்

    பூவாய், காயாய்க் கனியாக – நம்
    பூமி மகிழ வரவேண்டும்
    நாவாய் போல அனைவர்க்கும் – துன்ப
    நதியைக் கடக்கத் துணைவேண்டும்

    பறவை, விலங்கு, நீர்நிலைகள் – உயிர்
    பந்த மென்ற உணர்வோடு
    துறவைப் பெற்ற மனம்போலே – நம்
    தூய பணியைச் செயவேண்டும்

    காக்கை, மைனா, குருவிகளின் -மனம்
    கண்டு உணவு தரவேண்டும்
    தீக்கை மாறிக் குளிராக – தொண்டு
    தினமும் செய்யும் குணம்வேண்டும்

    இறைவன் படைத்த உலகத்தை – அன்பு
    ஈர்ப்பி னாலே தொடவேண்டும்
    நிறைவாம் செல்வம் ஆனந்தம் – “நான்”
    நினைவை அழித்துக் கொளவேண்டும்

    முதியோர் இளையோர் குழந்தைகள் – ஒரு
    கூட்டாய் வாழும் நிலைவேண்டும்
    நிதியே அதுதான் என்கின்ற – உண்மை
    நிலையை அறிய அருள்வேண்டும்.

    தர்மத் தராசு முள்ளாக – மனத்
    தரமும் மேன்மை பெறவேண்டும்
    கர்ம வினைகள் பூராவும் – நம்
    கருணை யாலே வெலவேண்டும்!

    Share
  • இதோ இதோ சிவலோகம்

    இதோ இதோ சிவலோகம்

    மீ.விசுவநாதன்

    இதோ இதோ சிவலோகம் – என்
    இதயம் அவனின் பனிமேகம்
    நிதானமாய் ஓங்காரம் – அதில்
    நின்று காண்பேன் சிவரூபம்.

    மின்னலை வீசிடுவான் – கார்
    மேக மாகப் பொழிந்திடுவான்
    என்னிலைத் துடிப்பறிந்து – மன
    இம்சை அலம்பித் துடைத்தெறிவான்

    நந்தியை நகரவைத்து – சிவ
    நடனம் காண அருள்புரிவான்
    புந்தியில் புரியவைத்து – என்
    பொல்லா “நானை” விரட்டிடுவான்.

    Share
  • உதவிக் கரமாய் உருமாறு!

    உதவிக் கரமாய் உருமாறு!

    மீ.விசுவநாதன்

    தட்டித் தட்டிப் பார்க்கின்றான் – மனத்
    தங்கத் தரத்தை அறிகின்றான்
    முட்டி மோதித் தவித்தாலும் – உள்
    முழுதும் அவனே இருக்கின்றான்.

    வேத ஒலியாய் வாழ்கின்றான் – ஒரு
    விதைக்குள் வினையாய்க் கருவானான்
    நோதல் இலாத சுகமுண்டோ – என
    நோன்புப் பலனாய் அணைக்கின்றான்.

    இன்ப துன்பச் சக்கரத்தை – அவன்
    ஏற்றே அளவாய்ச் சுற்றுகிறான்
    வன்மம் அவனுக் கேதுமிலை – நம்
    வழிக்கு அவனே துணையாவான்.

    ஆசைப் பட்டு வருந்தாதே – என
    அன்பாய் அறிந்து சொல்கின்றான்
    பாச வலையில் சிக்காமல் – கருணை
    பழகிக் கொள்ள அருள்கின்றான்.

    உதவிக் கரமாய் உருமாறி – நீ
    உயிர்கள் மகிழப் பழகென்றான்
    எதையும் இறையாய்ப் பார்த்தாலே – என்
    இருப்பை உணர்வாய் எனச்சொன்னான்.

    Share
  • “ஸ்ரீ வாணி பதிகம்”

     

     

    மீ.விசுவநாதன்

     

    ஆயிரங் கோடி அருமைக் கவிகளைத்

    தாயெனும் சாரதை தந்தவள் – தூயவள்

    வாயிலே தாம்பூல மங்கலம் கொண்டவள்;

    சேயிவன் வாக்கிலே தேன்.

     

     

    ஆவெனக் காட்டிட அற்புதத் தீந்தமிழ்ப்

    பூமலர்ப் பாட்டினை புத்தியில் தூமழை

    போலவே கொட்டுவாள் ; பொன்னெனும் நெஞ்சிலே

    காலமாய் வாழுவாள் காத்து.

     

    காத்திடச் செய்திடாள்; கண்ணிலே கண்டவள்

    தோத்திரம் செய்திடத் துன்பமே போக்குவாள்;

    மாத்திரைப் போதிலே மாமன ஆழியின்

    ஆத்திரம் நீக்கிடும் அன்பு.

     

     

    அன்பொளி காட்டியே அத்துணை பேர்க்குமே

    இன்முகங் கொண்டவள் ஏற்றமே பண்ணுவாள் ;

    தன்னுடைப் பிள்ளைகள் தப்பினை விட்டிட

    முன்னமே காத்திடும் முத்து.

     

     

    முத்தவள், பக்தரின் மூலவள், ஏழ்மையை

    மொத்தமாய்த் தீர்ப்பவள்; மூர்த்தனை நித்தமே

    பித்தென எண்ணிடப் பேரொளி யோகியாய்

    சத்தென ஆக்கிடும் தாய்.

     

     

    தாயெனக் கூப்பிடத் தன்னுயிர் வேருடன்

    தாவியே வந்தருள் தந்திடும் – வாவியில்

    தாமரைப் பூக்களாய்த் தன்னெழில் காட்டியே

    காமனை ஓட்டுவாள் காண்.

     

     

    காண்கிற அத்தனை காட்சியும் மாயையாய்க்

    காண்எனக் கற்றிடக் காதலால் கூறுவாள் ;

    பேணுவாள், செல்லமாய்ப் பித்தனே என்றெனை

    மாணுவாள் புண்ணிய மாது.

     

     

    மாதவ ஞானியர் மண்ணிலே தோன்றிட

    மாதவள் சாரதை மாண்புதான் காரணம் ;

    நாதமோ வேதமோ நாவிலே நித்தமும்

    நூதனம் செய்குவாள் நூறு.

     

     

    நூறென வேண்டிட நூபுரம் காட்டுவாள்

    ஆறெனத் துங்கையை அன்பினால் ஏற்றவள்;

    ஊர்சிருங் கேரியில் ஓமென வாழ்பவள்

    பேரவள் வாணிநம் பேறு.

     

     

    பேரவள் சொல்லப் பெரும்பிணி நீங்கிடும்;

    சீரவள் செல்வமா சீர்த்தியை, நேர்மையை

    நெஞ்சிலே வைத்திட நித்திய சோதியாம்

    அஞ்செழுத் தாகிடும் ஆ.

    (ஆ — ஆத்மா)

    Share
  • ஜீவன் முக்த ஜகத்குரு

    மீ.விசுவநாதன்

    உனக்கும் எனக்கும் தெரியுமா? – அந்த
       உயர்ந்த துறவிப் பெருமைகள் ?
    கனக்கும் மனத்து கவலையை – அவர்
       கரைத்து விடுவார் புரியுமா?
    சினத்தை அடக்கி சிவனையே – தவம்
       செய்யும் சிறந்த தவசியாம் !
    தினத்தை அறிந்து உலகினை – நல்ல
       திசைக்குத் திருப்பி விடுவராம்.

    கருங்கற் சிலைக்குள் கடவுளை – நாம்
       காணும் வழியை உரைப்பராம்
    சிருங்க கிரியில் இருப்பினும் – நம்
       சிறிய உளத்தும் நிறைவராம் !
    பெருங்கு ணத்த பிநவரே – எளிய
       சீடர் நமக்கே அருள்வராம்
    நெருங்கி யவரை நினைவிலே – ஒரு
       நிமிடம் இருத்தப் பழகுவோம்.

    (இன்று 06.11.2018 தீபாவளித் திருநாள்.
    ஜகத்குரு அனந்த ஸ்ரீ விபூஷித
    ஸ்ரீ அபிநவ வித்யா தீர்த்தரின் ஜெயந்தி தினம்)

    Share
  • சிவபிரதோஷம்

     

    “ஒரு வேண்டுகோள்”

     

    மீ.விசுவநாதன்

    விபாண்டகமகரிஷி சிவலிங்க வடிவாக

    தீயின் நிறத்து மேனியனே – உமை

    தேவி மனத்து நாயகனே – எம்

    தாயின் குணத்துத் தந்தையனே -உயிர்த்

    தாகம் தணிக்கும் கங்கையனே – மனக்

    காயம் தீர்க்கும் பரம்பொருளே – உன்

    காலைப் பிடித்துக் கேட்கின்றேன் – பலர்

    மாயும் தீய மதப்பித்தை – ஒரு

    மாயம் செய்து திருத்திடுவாய்.

     

    (இன்று (28.01.2018) பிரதோஷம் )

    Share
  • “ஸ்ரீராம தர்ம சரிதம்” (23)

     

    மீ.விசுவநாதன்
    பகுதி: 23

    பாலகாண்டம்

    ஸ்ரீராம-தர்ம-சரிதம்-1

    திரிசங்கு மன்னன்

    சூர்யகுலத் தோன்றலான “திரிசங்கு” மன்னன்

    கொண்டிருக்கும் உடலோடு சொர்க்கத்தைச் சேர

    பாரினிலே ஒருவருமே செய்திடாத வேள்வி

    பண்ணிடவே எண்ணினான்; வசிட்டரிடம் சென்று

    நேர்மைமிகு குருநீங்கள் எனக்குதவ வேண்டும்

    நிலத்தினிலே உமக்கீடு யாருமில்லை என்றான்

    ஊரினிலே இல்லாத பழக்கமெனச் சொல்லி

    உடனேயே அனுப்பிவிட்டார் வசிட்டரெனும் ஞானி.

    வசிட்டரின் பிள்ளைகளைத் “திரிசங்கு” வேண்ட,

    “மகத்தான குருவினது வார்த்தையினைக் கேளா

    விசித்திரனே சண்டாள வேடம்நீ கொள்வாய்

    விரைந்துடனே சென்றிடுவீர்” என்றுரைத்தார்; மன்னன்

    நசித்திருக்கும் மனத்தோடு கௌசிகரைப் பார்த்தான்

    நடந்ததெலாம் சொன்னவுடன், “நானுன்னைக் காப்பேன்

    பசியறியா விண்ணுலக விருப்பமதைத் தீர்ப்பேன்

    பதறாமல் இருங்களென” வேள்விதனைச் செய்தார் !

    திரிசங்கு சொர்க்கம்

    வேள்வித்தீக் குள்ளிருந்து தேவர்கள் வந்து

    விரும்பியதைப் பெற்றனர் ; திரிசங்கு மன்னன்

    கேள்விக்கு விடையாக தேவலோகம் சென்றார் !

    கீழுலகம் செல்லேன்றே தேவர்கள் தள்ள

    தாள்மேலும் தலைகீழு மாகவே வீழ

    தாங்கினார் கௌசிமுனி, தனியாக சொர்க்கம்

    ஆளென்று திரிசங்கு சொர்கத்தைச் செய்தார்

    அதற்கும்தான் தேவர்கள் ஆசிகளும் தந்தார்.

    (தர்ம சரிதம் வளரும்)

    (ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் பாலகாண்டத்தில் 57,58,59,60ம் பகுதி நிறைந்தது)

    Share
  • “ஸ்ரீராம தர்ம சரிதம்” (22)

     

     

    மீ.விசுவநாதன்

     

    பகுதி: 22

    பாலகாண்டம்

    ஸ்ரீராம-தர்ம-சரிதம்-1

    “ஜனகருடன் சந்திப்பு”

    சனகருடை நாட்டிற்குள் சடைமுனியும் சோதரரும்

    தவச்சாலை காணச் சென்றார்

    அனைவருமே கௌசிகரை அன்போடு உபசரித்து

    அவர்களுக்கு இடமும் தந்தார்

    மனமகிழ்ந்து புரோகிதராம் சதானந்தர் சனகரிடம்

    வந்தவர்கள் புகழைச் சொல்ல

    கனகமென ஒளிமுகத்துக் காளையர்கள் பாத்தவர்கள்

    கல்யாண குலத்தைக் கேட்டார் !

    மாமுனியோ இவ்விருவர் மாமன்னன் தசரதரின்

    வரம்பெற்ற பிள்ளை என்றார் !

    காமுகியாம் தாடகையைக் காட்டினிலே வென்றுவந்த

    காலவரம் இவர்கள் என்றார் !

    சேமமுற அகலிகைக்குச் சிறப்பான வாழ்வளித்த

    செங்கதிரோன் இந்த ராமன் !

    நாமுமது வேள்வியுடன் நாள்பட்ட “வில்லையும்”

    நன்றாகக் காண வந்தோம் !

    “விசுவாமித்திரர் வரலாறு”

    அகலிகையின் மகனான “சதானந்தர்” முனிவரது

    அடிபணிந்து அவரின் வாழ்வை

    சுகமாக ராமனுக்குச் சொல்லிடவே ஆரம்பித்தார் !

    “கௌசிகனாம் மன்னன் காட்டில்

    அகத்துள்ளே ஆழ்ந்திருந்த “வசிட்டரது”

    ஆஸ்ரமத்தை வியந்து பார்த்து

    முகத்தினிலே முன்னூறு சூரியனின் ஒளிபெற்ற

    முனிவரடி தொழுது நின்றார் !

    வசிட்டரின் “காமதேனு”

    வசிட்டருமே மன்னரினை வரவேற்று பசரித்தார்

    வயிறார உணவும் தந்தார் !

    பசித்தவர்க்கு உணவளித்த காமதேனு திறம்வியந்து

    பக்குவமாய் அதனைக் கேட்க

    விசித்திரமாய் இருக்குதென வசிட்டரிஷி சொன்னதற்கு

    விசுவாமித் திரரோ கோபச்

    சிசுவாக மாறிவிட்டார்; ரிஷியுடனே

    சினத்தோடு போரும் செய்த்தார் !

    “கெளசிக மன்னன் தோற்றார்”

    போரினிலே வசிட்டர்தான் புகழ்மிக்க வெற்றிகண்டார்!

    புழுங்கினரே விசுவா மித்ரர் !

    நேரிடையாய் மகனுக்கு அரியணையைத் தந்திட்டு

    நிம்மதியாய் தவத்தைச் செய்தார்!

    ஆயிரமாம் ஆண்டுகளாய் ஆழ்ந்திருந்த உள்ளத்தில்

    அரன்தோன்றி அவரை மெச்சி,

    தூயவராம் ராஜரிஷி வேண்டுகையில் ஆயுதங்கள்

    தோன்றுகிற வரத்தைத் தந்தார் !

    மீண்டும்போர் முழக்கமிட்டு வசிட்டரது ஆஸ்ரமத்தை

    விசுவாமித் ரர்தான் தாக்க

    கூண்டோடு அங்கிருந்தோர் ஓடித்தான் ஒளிந்துகொள

    குற்றமிலா பிரும்ம ரிஷியைத்

    தீண்டவந்த அஸ்திரங்கள் தெய்வதண்டம் முன்னாலே

    தீய்ந்துடனே ஓய்ந்து போக

    மூண்டுவிட்ட சண்டையங்கு முடிவுக்கு வந்தாலும்

    முடியாத பகையே மிச்சம்.

     

    (தர்ம சரிதம் வளரும்)

     

    (ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் பாலகாண்டத்தில் 50,51,52,53,54,55,56ம் பகுதி நிறைந்தது)

    Share
  • சிவபிரதோஷம்

    மீ.விசுவநாதன்

     

    “என்னுள் சும்மா இரு”

    images (4)

    பாற்கடலில் வந்ததென்னவோ

    கொஞ்சம் விஷம்தான்

    போதுமே ஒரு துளி

    அந்தத் துளியை

    நீ குடித்து

    உலகைக் காத்தாய் சிவனே

    நீ

    விஷத்தை உண்டு

    அமுதத்தை உலகுக்கு அளித்தவன்

    பொதுவாழ்வில்

    தீமையைத் தான்கொண்டு

    நன்மையை மற்றவர்க்குத் தரவேண்டும்

    அதைச் செய்து காட்டியதால்

    நீ

    மகாதேவனாய்த் துதிக்கப் பட்டாய்

    உன்னை

    என் நெஞ்சில் சுமப்பதால்

    நச்சு எண்ணங்கள் வருவதே இல்லை

    சிவனே

    நீ என்றும் என்னுள் சும்மா இரு.

    (இன்று (14.01.2018) பிரதோஷம் )

    Share
  • “ஸ்ரீராம தர்ம சரிதம்” (21)

     

    மீ.விசுவநாதன்

     

     

    பகுதி: 21

     

    பாலகாண்டம்

    ஸ்ரீராம-தர்ம-சரிதம்

    “மிதிலைக்குப் பயணம்”

    சங்கம உதய காலை

    சரியாய்த் தன்கடன் செய்ய

    மங்கல மூர்த்தி கதிரோன்

    மரங்கள் நதிகள் மீது

    தங்கமாய் ஒளியைப் பரப்பி

    தர்ம ரதத்தில் வந்தான்

    தங்களின் கடமை முடித்து

    தவத்தோன் மிதிலை நடந்தார் !

    ஜனகரின் மிதிலை நகர்க்குச்

    சரியாய்க் கொஞ்சம் முன்னால்

    வனத்தினைக் கண்ட ராமன்

    மனங்கொள் இந்தக் காட்டின்

    வனப்பினைக் காணும் போது

    வாழ்ந்த முனிகள் பேறு

    நினைவிலே வருகு தென்று

    தெளிந்த குருவைப் பார்த்தான் !

    “கௌதம முனிவரின் ஆஸ்ரமம்”

    இத்தனை அழகு கொண்ட

    இந்தக் காட்டில் முன்பு

    முத்தியைக் கொள்ளும் எண்ண

    முனிவர் நற்கௌ தமரே

    பத்தினி அகலி கையைப்

    பக்கம் வைத்தி ருந்தார் !

    சித்தமே குளிரும் வண்ணம்

    சிறப்புடன் வாழ்ந்து வந்தார் !

    “தவத்தின் வலிமையையும், பயமும்”

    வந்தனைக் குரிய முனியின்

    வளர்ந்திடும் தவத்தின் சக்தி

    இந்திரன் மனத்தில் பயத்தை

    எழுப்பி விட்ட தாலே

    அந்தவோர் முனிக்குக் கோபம்

    அலைபோல் பொங்கச் செய்ய

    சிந்தனை செய்த வேளை

    சிறுமை பொங்கி நின்றான்.

    “கௌதமர் போல் வந்த இந்திரன்”

    அகலிகை அழகில் மயங்கி

    அவளின் கணவன் போல

    முகமதை மாயம் செய்து

    மோக முடனே வந்தான்

    அகமதில் அழகா ணவத்தால்

    அவளும் வீழ்ந்து பட்டாள் !

    நகநுனி அழுக்கு அங்கே

    நாவில் நஞ்சு ஆச்சு !

    “முனிவர் தந்த சாபம்”

    முனிவரும் வந்தார் உடனே

    முகத்தில் கோபம் சீற

    “இனிஉன் ஆண்மை நீங்கி

    இன்னல் கொள்வாய்” என்று

    தனியொரு தேவ ராஜன்

    சாபம் கொள்ள வைத்தார் !

    இனிதொரு மனைவி பார்த்து

    இழிவாம் காம இச்சைப்

    பழியிலே வீழ்ந்த நீயோ

    “காற்றை மட்டும் உண்டு

    வழியிலே யார்க்கும் தெரியா

    வகையில் வனத்தில் வாழ்வாய் !

    பழியிலா இராமன் பார்வை

    பட்ட வேளை மற்றோர்

    விழிகளில் தெரிவாய்” என்று

    இமயம் சென்று விட்டார் !

    “அகலிகை சாபம் நீங்கியது”

    இப்படிப் பட்ட காட்டில்

    இராமா உள்ளே வாவா !

    தப்படி வைத்த பெண்ணை

    தயைசெய் தருள்வாய் என்று

    செப்பிய குருவை வணங்கி

    சென்றான் காட்டிற் குள்ளே !

    அப்பிய சாபம் நீங்கி

    அகலி கைத்”தாய்” தெரிந்தாள் !

    “இராமன் அம்மா என்று அழைத்தான்”

    இருகையைக் கூப்பிக் கொண்டு

    இராமன் “அம்மா” என்று

    திருவடி தொழுது நின்றான் !

    தேவர் குலமும் வாழ்த்த

    குருமுனி, இராமன் யார்க்கும்

    பூசை செய்து பணிந்தாள் !

    கருமமே தவமாய் வாழும்

    கௌத மரும்பூ சித்தார் !

    “மிதிலை நகருக்குப் பயணம்”

    முறைப்படி பூசை ஏற்று

    முன்னம் திட்டப் படியே

    கறையிலா சனக மன்னர்

    கனிவாய் ஆளும் நாடாம்

    நிறைமொழி பெரியோ ராலே

    நிறைந்த மிதிலை நோக்கி

    மறைமொழி அறிந்த குருவின்

    வழியில் நடந்தான் இராமன்.

     

    (தர்ம சரிதம் வளரும்)

     

    (ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் பாலகாண்டத்தில் 48,49ம் பகுதி நிறைந்தது)

    Share
  • “ஸ்ரீராம தர்ம சரிதம்” (20)

     
    மீ.விசுவநாதன்

    பகுதி: 20
    பாலகாண்டம்

     
    “அமுதம் தோன்றுதல்”

    ஸ்ரீராம-தர்ம-சரிதம்
    சந்தியா வந்தனம் செய்து
    தன்னுடைய குருமுகத்தை வணங்கி
    வந்துள படகினில் ஏறி
    வடபுறமே சென்றிடுவோம் என்று
    புந்தியில் புனிதராம் இராமன்
    புகன்றவுடன் அனைவருமே சென்றார்
    இந்திர லோகமாய்க் காணும்
    இவ்விடத்தின் பெருமைசொல்வீ ரென்றார் !

    நானறி செய்தியை உனக்கு
    நன்றாகச் சொல்கிறேன்கேள் என்றார் !
    “மானிடப் பிறவியில் மூப்பும்
    மரணமுமே சுற்றிதினம் தாக்கும்
    நாமதை வென்றிட வேண்டும்
    நல்லமுதை உண்டாலே அந்த
    தேவதை நிலைதனைக் கொள்வோம்
    திகட்டாத பேரின்பம் காண்போம் !

    ஆதலால் வாசுகிப் பாம்பை
    ஆற்றலுடைக் கயிறேனவே கொண்டு
    தோதென மந்திர மலையைத்
    தூக்கிவைத்து மத்தெனவே செய்து
    காதலால் பாற்கடல் கடைந்தார்
    கடும்பலத்தோர் அசுரதேவர் சேர்ந்து !
    மாதவ முனியினைப் போன்ற
    மருத்துவ”தன் வந்திரி”யே வந்தார் !

    அப்புவாம் நீர்க்கடல் கடைய
    “அப்சரசாம் அழகிகளும் வந்தார்
    இப்படி அடுத்ததாய் வருணன்
    எழில்மகளாம் வாருணியும் வந்தாள் !
    ஒப்பிலாக் குதிரையாம் அழகு
    உச்சைசிரம், ரத்னமாலை வந்தது !
    அப்படி மீண்டுமே கடைய
    அமுதத்தேன் குடமங்கு வந்தது !

    “திதியின் தவம்”

    அமுதினைக் கொண்டிட சண்டை
    அசுரர்க்கும் தேவர்க்கும் நடக்க
    சமயமாய் விஷ்ணுவே தோன்றி
    சரியான தேவர்க்கே தந்தார்
    தமதுயிர்ப் பிள்ளையர் மாள
    காரணமாம் இந்திரனை வெல்ல
    உமதருள் வேண்டினேன் என்று
    உயிர்க்கணவன் காசியபர் முன்னே

    திதியவள் பணிவுடன் கேட்டாள் !
    வேண்டியதன் வரத்தினையே பெற்று
    புதியதோர் மகன்தனைக் கொள்ள
    புறப்பட்டாள் கடுந்தவமே செய்ய !
    உதவியைச் செய்கிறே னென்று
    ஓடிவந்தான் இந்திரனாம் தேவன் !
    விதிவழி திதியவள் கர்பம்
    விலகிடவே இந்திரனும் செய்தான் !

    “விசால நாடு”

    தவத்தினை செய்துள இடமே
    தர்மவானாம் “அலம்புசனின்” நாடு !
    சகத்திலே நன்மையே செய்யும்
    சக்ரவர்த்தி இஷ்வாகுவின் பிள்ளை !
    இகத்திலே இனியபேர் விசாலன்
    இவனாண்ட தேசமே”வி சாலம்” !
    முகத்திலே ஒளிமிகு “சுமதி”
    முறையுடனே இன்றாளும் ராஜா!

    என்றதோர் முனியவர் வாக்கை
    இன்பமெனவே கொண்டிட்டான் ராமன் !
    கன்றினைக் காத்திடும் பசுவாய்
    கவனமுடன் ஆளுகின்ற “சுமதி”
    நன்றியைக் கூறியே வருக
    ஞானியரே என்றுவர வேற்றார் !
    ஒன்றிய மனத்துடை முனியும்
    ஓரிரவு தங்கிடவும் செய்தார் !

    (தர்ம சரிதம் வளரும்)
    (ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் பாலகாண்டத்தில் 45, 46, 47ம் பகுதி நிறைந்தது)

    Share
  • “அவன், அது , ஆத்மா” (59)

    (ஒரு எளிய மனிதனின் சுயசரிதை)

    (மீ.விசுவநாதன்)

    அத்யாயம்: 57

    கவிமாமணி இலந்தை சு. இராமசாமி

    “பாசம், பரிவு, பதமான நல்லன்பு
    வாசம் புரியும் மனையெதுவோ – நேசமுடன்
    என்றும் இயங்கும் இதயமே அம்மனையாம்
    அன்னதனைக் காத்தல் அறி.”

    இந்தக் கவிதையை எழுதியவருக்கு திருநெல்வேலி மாவட்டத்தில் கயத்தாறு அருகில் இருக்கும் ஒரு கிராமம் இலந்தைதான் பிறந்த ஊர். அவர் கவிமாமணி இலந்தை சு. இராமசாமி அவர்கள். மிகச் சிறந்த கவிஞர். தமிழறிஞர். பேராசிரியர் அ. சீனிவாசராகவனின் மாணாக்கர். பாரதி கலைக்கழகத்தின் மிகச் சிறந்த கவிஞர்களில் இவர் ஒரு ரத்தினம். கவியரங்கங்களில் பங்குபெறும் கவிஞர்களைக் அழைக்கும் போதும், கவிதையைப் படித்த பின்பு அதுபற்றிய தனது கருத்துகளை அந்தக் கவிஞர் தன் கவிதையை எந்த சந்தத்தில் படித்தாரோ அதே சந்தத்தில் மிக அழகாக எழுதி வாழ்த்தும் போதும் அவருக்குள்ள திறமையை அவன் எப்பொழுதும் ஒரு பிரமிப்போடுதான் பார்ப்பான்.

    அவரது தலைமையில் பல கவியரங்குகளில் அவன் பங்கு கொண்டு அவரது பாராட்டையும், திருத்தங்களையும் பெற்றிருக்கிறான். அவற்றுள் அவனுக்கு இன்றும் பசுமையாக நினைவிருப்பது 14.12.1980ம் வருடம் சைதாப்பேட்டையில் கவிமாமணி ஐயாரப்பன் அவர்களின் இல்லத்தில் கவிதாயினி சௌந்தரா கைலாசம் அவர்கள் முன்னிலை வகிக்க இலந்தை இராமசாமி அவர்கள் தலைமையில் நடைபெற்ற கவியரங்கம். “பாபநாசம்” என்ற தலைப்பில் அவன் படித்த கவிதையை வரிக்கு வரி ரசித்துப் பாராட்டினார்.

    தபால் கார்டில் எழுதி வந்த காலம் சென்று முகநூலில் பகிர்ந்து கொள்ளும் காலமிது. மரபுக் கவிதைகளுக்கு என்று “சந்தவசந்தம்” என்ற குழுமத்தைத் துவக்கியவர் இலந்தை சு. இராமசாமி அவர்கள். அதில் பல அறிஞர்கள், கவிஞர் பெருமக்கள் தங்களது படைப்புகளைப் பகிர்ந்து கொண்டு வருகிறார்கள். சுமார் மூன்று வருடங்களுக்கு முன்பு ஒருநாள் கவியோகி வேதம் அவர்கள் அவனைத் தொடர்பு கொண்டு, ” நீ….சந்தவசந்தத்தில் எழுது… அதில் பேராசிரியர் கவிஞர் பசுபதி, அனந்த், சிவசிவா, புலவர் இரா. இராமமூர்த்தி, அ.கி.வ., ஹரிகிருஷ்ணன், கோபால்ஜி, வ.வே.சு., நாகோஜி போன்ற அறிஞர்கள் எழுதுகிறார்கள். உனக்கு அது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். விமர்சனங்கள் வரும். பாராட்டும் வரும். அதனால் உன்னை நீ உயர்த்திக் கொள்ள முடியும். உடனேயே இலந்தை அவர்களைத் தொடர்பு கொண்டு உனது படைப்புகளை அனுப்பிவை” என்று அவனை ஊக்கப் படுத்தினார். அதுமுதல் “சந்தவசந்தத்தில்” அவன் கவிதைகளைப் பகிர்ந்து கொண்டு வருகிறான். சந்தவசந்தத்தில் இணைந்த பிறகுதான் அவனுக்குத் தமிழ் இலக்கணத்தில் கொஞ்சம் உயர முடிந்தது. அதில் தொடர்ந்து எழுதிவரும் புலவர் இராமமூர்த்தி, கவிஞர் சந்தர் சுப்பிரமணியம், ரமணி, விவேக் பாரதி போன்ற வர்களின் நட்பும் அவனுக்குக் கிடைத்தது. “சந்தவசத்தத்தில்” நடைபெறும் கவியரங்கக் கவிதைகள் ஒவ்வொன்றும் ஒரு வகையில் பிரமாதமாக இருக்கும். இலக்கியச் சுவையைச் சுமந்து நமது மனச் சுமையை இறக்கி வைக்க வல்ல அருமையான கவிதைகள் அவை. கவிஞர் ரமணி அவர்களின் இலக்கணப் பகிர்வும், தகவல் பகிர்வும் மெச்சத் தக்கது. இந்த நல்ல குழுமத்தை உருவாக்கிய இலந்தையாரை அவன் மனதார வணங்குகிறான்.

    இலந்தை சு.இராமசாமி அவர்களின் கவிதைத் தொகுப்புகள், அறிவியல் கட்டுரைகள், கதைகள் அனைத்தும் படிக்கப் படிக்க மகிழ்ச்சி தருபவைதான். அவரது “பாரதி அறிவியல்” என்ற கட்டுரைத் தொகுப்பை அவன் அடிக்கடி படிக்கும் பழக்கங் கொண்டிருக்கிறான். இலந்தையார் தன் மனைவிக்கு எழுதிய கவிதைக் கடிதங்களைத் தொகுத்து நூலாக்கி சமீபத்தில் வெளியிட்டார்கள். அது ஒரு தரமான கடித இலக்கிய நூல் என்பது அவனது கணிப்பு. இரண்டு வருடங்களுக்கு முன்பு தில்லை கங்கா நகரில் இருக்கும் அவரது இல்லத்தில் “சந்தவசந்தக் குழுமத்தின்” ஆண்டு விழாக் கூட்டம் நடைபெற்றது. அதில் இலந்தையாரின் துணைவியார் தாயாரின் கனிவோடு அனைவருக்கும் உணவு பரிமாறியதும். தேர்ந்த ரசிகராகக் கவிதைகளை ரசித்து மகிழ்ந்ததும் அவன் மனக்கண்ணின் இருக்கிறது. இலந்தையாரின் மகள் கவிதாவும், மகன் சுந்தரும் நல்ல இலக்கிய தாகம் கொண்டவர்கள் என்பது ஒரு பேறு.

    ” நினைப்பெல்லாம் நற்கவிதை நித்தமும் பொங்கும்
    வினைப்பயனைப் பெற்ற விளைவே – அனைத்தும்
    அளிக்கின்ற “வாராகி” அள்ளிக் கொடுக்கக்
    களிக்கின்ற வேழக் கவி.. என்று அவன் அவருக்காகப் பிரார்த்திக்கிறான்.

    08.12.2017 அவன் மீண்டும் அடுத்தவாரம் வருவான்……….

    Share
  • “ஸ்ரீராம தர்ம சரிதம்” (19)

     
    மீ.விசுவநாதன்
    பகுதி: 19
    பாலகாண்டம்

    ஸ்ரீராம-தர்ம-சரிதம்

    “கங்கையின் கதையும், பகீரத முயற்சியும்”

    சரகனின் பிள்ளை அம்சுமானும் 
    சந்ததி யான திலீபனிடம்
    அரசினைத் தந்து சென்றிட்டான்
    அறத்தினைப் போற்றும் அம்மகனும்
    உரசலே இன்றி ஆண்டாலும்
    உத்தம முன்னோர் நீர்க்கடனை
    விரைவிலே முடிக்க முடியாமல்
    விண்ணக வாழ்வைப் பெற்றிட்டான் ! (1)

    பகீரதனின் தவம்

    திலீபனின் பிள்ளை பகீரதனோ
    திடமுடை உள்ளங் கொண்டவனாய்
    பளீரென வீசும் ஒளிமுகத்தால்
    பக்தியில் தவமே மேற்கொண்டான் !
    பிரும்மனும் நேரில் காட்சிதந்து
    பெரும்புகழ் கங்கை நீர்மண்ணில்
    வருமென வரமும் கொடுத்திட்டார்
    மனத்திலே சிவனைத் துதியென்றார் ! (2)

    காற்றினை உணவாய்க் கொண்டபடி
    கடுந்தவம் செய்த பகீரதனின்
    ஆற்றலை வாழ்த்திப் பரமசிவன்
    அவனது எண்ணம் நிறைவேற
    ஊற்றெனப் பொங்கும் கங்கையினை
    உச்சியில் தாங்கி முடிந்திட்டான் !
    போற்றியே மீண்டும் வேண்டிடவே
    புகழ்மிகு நதியாய் ஓடவிட்டான் (3)

    அப்படி “அலகா நந்தா”வாய்
    அமுதெனப் பாய்ந்து வரவழியை
    தப்படி இன்றி பகீரதனும்
    சரியெனக் காட்டப் பின்தொடர்ந்தாள் !
    இப்படி கங்கை வந்ததனால்
    இவளினை “பாகீ ரதி”யென்பர் !
    குப்புற வீழ்ந்தும் குதித்தெழுந்தும்
    குஷியுடன் பாய்ந்து வரும்போது (4)

    தவசியர் “ஜன்கு” மகரிஷியின்
    தரமிகு யாக சாலையினை
    இவளது தண்ணீர் வேகத்தால்
    இடித்திடச் செய்து போகையிலே
    அவளது செருக்கு நீரதனை
    ஆவென “ஜன்கு” குடித்திட்டார் !
    உளமது இன்பம் கொண்டவரின்
    உயரிய இந்தச் செயல்கண்டு (5)

    தேவரும் ஜன்கு முனிபணிந்து,
    “தேவரீர் கங்கை உம்மகளாய்
    பாவனை செய்து கொள்ளுங்கள்,
    பாவமே தீர்க்கும் அவளைஎங்கள்
    தாகமே தீர்க்கத் தருகவென்றார்”
    தன்னுடை செவிகள் மூலமாக
    வேகமாய் ஜன்கு திறந்துவிட்டார்
    விரைந்தது “ஜான்ஹ வி”நதியாக ! (6)

    “சரக குமாரர்கள் நற்கதி அடைதல்”

    சிவனது தலையில் விழுந்துவந்த
    சிறந்ததோர் கங்கை நதிநீரில்
    பவதொடர் நீங்க நீராடி
    பரமனை அடைந்தோர் பலகோடி !
    உவமையே இல்லா நீரிதனால்
    உயரிய முறையில் தர்ப்பணத்தை
    தவசினால் முடித்த பகீரதனை
    தரணியே நினைத்துத் துதிக்கிறது ! (7)

    இந்தவோர் கதையை இராமனுக்கு
    இனிமையாய்ச் விச்வா மித்ரர்தான்
    சந்தியா கால வேளைவரை
    சரித்திரம் பிசகா தெடுத்துரைத்து,
    “விந்தையே மிகுந்த இக்கதையை
    விரும்பியே கேட்போர் மனங்குளிரும்
    பந்தமோ விலகும் பரமசுக
    பக்தனின் நிலைபோல் இருப்பரென்றார்!” (8)

    (தர்ம சரிதம் வளரும்)
    (ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் பாலகாண்டத்தில் 42, 43, 44ம் பகுதி நிறைந்தது)

     

    Share
  • “ஸ்ரீராம தர்ம சரிதம்” (18)

     
    (மீ.விசுவநாதன்)

    பகுதி: 18
    பாலகாண்டம்
    ஸ்ரீராம-தர்ம-சரிதம்-2-1-1-2-1-1
    “சரகன் வரலாறு”

     

    சூர்ய குலத்து வழியினிலே
    சொல்லும் செயலும் ஒன்றான
    சுத்த அரசன் சரகனென்பான்
    சொந்தப் பிள்ளை வேண்டுமென
    பார்யாள் “சுமதி, கேசினீயை”
    பக்கம் அழைத்து வனம்சென்று
    பக்தி யுடனே தவம்செய்தான்!
    பரிவு கொண்ட முனி”பிருகு”
    கார்யம் அறிந்து சரகனிடம்
    “காதல் மனைவி ஒருத்தியின்
    கனவு பலிக்க ஓர்மகனும்
    களிறு போன்ற பலமுடைய
    பேர்கள் அறுப தாயிரமும்
    பெறுவர் இரண்டாம் மனைவியுமே
    பிள்ளை வம்சம் கொண்டுதர்மப்
    பிடிப்பில் மகிழ்வாய்” என்றுரைத்தார்! (1)

    ஒன்று பெற்றாள் கேசீனி
    உச்சி மோந்து “அசமஞ்சன்”
    உன்பேர் என்று முத்தமிட்டார்
    உவகை கொண்டு சரகனுமே !
    குன்று போலச் சதைப்பிண்டம்
    புவியில் போட்டாள் சுமதியுமே !
    புட்டுக் கொண்டு அதிலிருந்து
    பூவாய் “அறுப தாயிரமாய்”
    நன்றாய் வந்த பிள்ளைகளை
    நறுநெய்க் குடத்தில் வைத்திருந்து
    நன்கு வளர்த்தார் தாதியர்கள் !
    நாளில் பலவான் ஆனார்கள் !
    ஒன்றாய் வந்த அசமஞ்சன்
    ஊரில் கெட்ட பேர்கொண்டான்
    உடனே அரசன் அம்மகனை
    ஊரை விட்டே விரட்டிவிட்டான்! (2)

    அவனின் மகனே “அம்சுமா”னாம்
    அறிவு வீரம் கொண்டவனாம்
    அந்தப் பேரப் பிள்ளையிடம்
    அளவு கடந்த அன்புவைத்து
    அவனைத் தான்செய் வேள்விக்கு
    அசுவம் காக்கும் பொறுப்புதனை
    அரசன் சரகன் கொடுத்திருந்தார்
    அந்த நேரம் பார்த்துத்தான்
    கவன மாக இந்திரனும்
    களவு செய்து குதிரையினை
    காணா இடத்தில் கொண்டுவிட்டான் !
    கவலை கொண்ட சரகனுமே
    தவமாம் வேள்வி நடப்பதற்குத்
    தடையாய்ப் போன அசுவத்தைச்
    சரியாய்க் கண்டு பிடித்திங்கே
    சடுதி வரவே ஆணையிட்டான் ! (3)

    பூமி எங்கும் தேடினார்கள்
    புழுதி பறக்க ஓடினார்கள்
    உள்ள அறுப தாயிரம்பேர்
    ஊரை துவம்சம் செய்தார்கள்
    தாமி ருக்கும் தரையெங்கும்
    சக்தி கொண்ட லைந்தபின்னும்
    சரியாய்க் காண முடியாமல்
    சரகன் முன்னே போனார்கள் !
    “பூமி தன்னைத் தோண்டுங்கள்
    பொல்லா நாகர் உலகத்தில்
    புனித இடபா தாளத்தில்
    ஒன்று விடாமல் தேடுங்கள்
    சாமி நமக்குத் துணையுண்டு
    சத்தாம் செயல் செய்பவர்க்குச்
    சரித்தி ரத்தில் இடமுண்டு”
    தந்தை சொல்லச் சென்றார்கள் ! (4)

    சரகர் மகன்கள் செயல்கண்டு
    சபையைக் கூட்டி தேவர்கள்
    தரையைத் தோண்டும் கொடுமைகளை
    தலைவன் பிரும்மா விடம்சொன்னார் !
    அரண்டு போன முகம்பார்த்து
    “அரியே கபில முனியாக
    அகிலம் முழுதும் காக்கின்றான்
    அவரின் கருணை புவிகாக்கும்
    அரங்கன் அவனைத் துதியுங்கள்
    அடுத்த செயலை அவன்பார்ப்பான்”
    அயனின் இந்த வார்த்தைகளில்
    அமைதி பெற்றார் தேவர்கள்!
    கரத்தில் கொடிய ஆயுதத்தால்
    பள்ளம் தோண்டிப் பூமிக்குள்
    பக்கம் பக்கம் தேடுகையில்
    கண்ணில் பட்டது குதிரைதான் ! (5)

    கபில முனிவர் தவம்செய்யும்
    காட்சி கண்ட புத்திரர்கள்
    கள்வன் இவர்தான் என்றெண்ணி
    கடிந்து கொண்ட வேளையிலே
    அமிலக் கண்கள் முனிதிறக்க
    அங்கே அவர்கள் எரிந்தார்கள் !
    அதுவே சாம்பல் மாலையாச்சு
    அசுவம் தேடிச் சென்றவர்கள்
    சபிக்கப் பட்டு இறந்தகதை
    சரக மன்னன் அறியவில்லை
    தனது பேரன் “அம்சுமானை”
    தகவல் அறிந்து வரச்சொன்னான்!
    தவிக்கும் தாத்தா மனம்தேற்றி
    தடையம் தேடித் புறப்பட்டான்
    கண்டான் சாம்பல் குவியலினை
    கண்டான் யாகக் குதிரையினை ! (6)

    துக்கம் கொண்ட அம்சுமான்தன்
    சோகம் அறிந்த கருடனவன்,
    “சொந்தம் யார்க்கும் நீர்க்கடனை
    துளபம் சேர்த்துச் செய்வதற்கு
    அக்கம் பக்க நீர்வேண்டாம்
    அமுத கங்கைத் தண்ணீரால்
    அர்க்யம் கொடுத்துக் கரையேற்று !
    அந்தச் செயலைச் செய்வதற்குத்
    தக்க தருணம் இதுவென்றான்!”
    சரிதான் என்று குதிரையினை
    சவாரி செய்து அழைத்தபடி
    தாத்தா சரக மன்னனிடம்
    இக்கட் டான நிலைசொன்னான்!
    ஏற்ற மிக்க வேள்வியினை
    வேந்தன் “சரகன்” முடித்தவுடன்
    மேலு லகமும் அடைந்திட்டான்! (7)

    (பாவகை : பன்னிருசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)

    (தர்ம சரிதம் வளரும்)
    (ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் பாலகாண்டத்தில் 38, 39, 40, 41ம் பகுதி நிறைந்தது)

    Share
  • “அவன், அது , ஆத்மா” 56

    (ஒரு எளிய மனிதனின் சுயசரிதை)
    (மீ.விசுவநாதன்)

    அத்யாயம்: 56

    சுவாமி பரமார்த்தானந்தா

    சுவாமி பரமார்த்தானந்தா

    அவனுக்கு மனைவி சீதாலக்ஷ்மிக்கு ஆன்மிகத்தில் நாட்டம் உண்டு. தனது கல்லூரி நாட்களில் கொல்கத்தாவில் சுவாமி சின்மயானந்தர், சுவாமி தயானந்த சரஸ்வதி அவரது சீடர் தர்ஷ சைதன்யா போன்றவர்களின் பகவத்கீதை, உபநிஷத் வகுப்புகளுக்குத் தவறாமல் சென்று பயனுள்ள நல்ல குறிப்புகளைத் தனது புத்தகங்களில் பதிவு செய்து கொள்ளும் பழக்கம் உடையவர். 1985ம் வருடம் திருமணத்திற்குப் பிறகு சென்னையில் அதுபோன்ற வகுப்புகளுக்குப் போக வேண்டும் என்று விரும்பி அவனிடம் கேட்ட பொழுது அவன் அதிலெல்லாம் தனக்கு ஈடுபாடு இல்லை என்று சொல்லி விட்டான். அப்படிச் சொன்னதில் அவனுக்கு மனைவிக்குக் கொஞ்சம் வருத்தம் உண்டு. அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் இருந்து விட்டாள். பிறகு சென்னையில் கீதை வகுப்பு யார் எடுக்கிறார்கள் என்ற தகவலைக் கேட்டு, தனது குரு ஸ்ரீ தர்ஷ சைதன்யா சுவாமிக்குக் கடிதம் எழுத, அவர் சுவாமி தயானந்த சரஸ்வதி அவர்களின் சீடர்தான் சுவாமி பரமார்த்தானந்தா. அவர் சென்னையில் வேதாந்த வகுப்புகள் எடுப்பதாகவும், அது நடைபெறும் இடத்தையும் கடிதம் மூலம் தெரிவித்திருந்தார்.

    அந்த வகுப்புகள் சென்னை பெசன்ட் நகரில் ஒரு விளையாட்டு மைதானத்தில் ஒவ்வொரு சனி, ஞாயிறுகளில் மாலை 6.30 மணி முதல் 8 மணிவரை நடைபெற்று வந்தது. அதன் பிறகு அடையாறில் இருக்கும் வித்யாமந்திர் பள்ளியின் ஆடிட்டோரியத்தில் மாலை ஆறு மணிமுதல் ஏழு மணிவரை நடைபெற்றத் துவங்கி இன்று வரை நடைபெற்று வருகிறது.

    அவனது வீடு அப்பொழுது இந்திராநகர்ப் பகுதியில் இருந்தது. அவனுக்கு மனைவிக்கு சுவாமிஜியின் வகுப்புகளுக்குச் செல்ல வேண்டும் என்று விருப்பம். அவனுக்கோ அதில் நாட்டம் இல்லை. அவனுக்கு மனைவி அவனிடம், “ஒரு நாள் வந்து கீதை வகுப்பைக் கேளுங்கள். பிடித்திருந்தால் வாருங்கள். இல்லையென்றால் உங்களைக் கட்டாயப் படுத்த வில்லை, நான் மாத்திரம் சென்று வருகிறேன். என்னை அந்த வகுப்பு நடக்கும் இடத்திற்குக் கொண்டு விட்டு, அழைத்து வாருங்கள்” என்று சொன்னாள். வேண்டா வெறுப்பாகத்தான் அவன் அன்று கீதை வகுப்புக்குச் சென்றான். சுவாமி பரமார்த்தானந்தாவின் எளிய ஆங்கிலமும், ஒவ்வொரு சுலோகத்தையும் அவர் விளக்கிச் சொல்கிற முறையும் அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது . அதன் பிறகு ஒவ்வொரு வாரமும் மனைவியுடன் கீதை, உபநிஷத் வகுப்புகளுக்குச் செல்லத் துவங்கி, இருபத்தைந்து வருடங்கள் தொடர்ந்து சுவாமிஜியின் உரைகளைக் கேட்டு அவன் பயனடைந்தான். அவனும் குறிப்புகள் எடுத்துக் கொள்வான். அதை உள்வாங்கிக் கொண்டு கவிதைகளும் எழுதி வருவான். இப்பொழுதும் நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் சுவாமிஜியின் வகுப்புகளுக்குச் சென்று வருகிறான்.

    அவனுக்கு ஸ்ரீ ஆதிசங்கரரின் வாழ்க்கையைக் கவிதையாக எழுதவேண்டும் என்ற விருப்பம் இருந்தது. அதை அவன் 10.06.2006 அன்று சுவாமி பரமார்த்தானந்தரிடம் தெரிவித்த பொழுது, சமீபத்தில் (06.05.2006) புதிய பதிப்பாக வெளிவந்திருந்த ஸ்ரீ வித்யாரண்யர் எழுதிய “மாதவீய சங்கர விஜயம்” என்ற புத்தகத்தை அவனிடம் கொடுத்து,” இதை அடிப்படையாக வைத்து எழுதுங்கள்.” என்று ஆசிதந்தார். அவனும் அதை “அம்மன் தரிசனம்” பத்திரிகையில் “ஆதி சங்கர அத்வைத காவியம்” என்று தலைப்பிட்டு ஒரு நெடும் தொடராக எழுதினான். சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடத்தின் வெளியீடாக “காலடி சங்கரரின் கவின்மிகு காவியம்” என்ற தலைப்பில் அந்தப் புத்தகம் ஜகத்குரு ஸ்ரீ சங்கராச்சார்யாள் ஸ்ரீ பாரதீ தீர்த்த மகாஸ்வாமிகளின் முன்னிலையில் தமிழகத்தின் கவர்னரால் 26.10.2012 அன்று சென்னையில் வெளியிடப்பட்டது .

    1999ம் வருடம் செப்டெம்பர் மாதம் சுவாமி பரமார்த்தானந்தா அவர்கள் தனது வகுப்புக்குத் தொடர்ந்து வருகின்ற சுமார் இருநூறு சீடர்களை “ரிஷிகேசத்திற்கு” அழைத்துச் சென்றார்கள். பத்து தினங்கள் அந்த கங்கைக் கரையிலே தங்கி வேதாந்தப் பாடங்களைக் கற்றுக் கொடுத்தார்கள். அவனுக்கும் அதில் கலந்து கொள்ளும் நல்ல வாய்ப்பு அமைந்தது.

    சுவாமி ஓங்காரானந்தா

    சுவாமி ஓங்காரானந்தர்

    ஒவ்வொரு நாளும் காலையில் ஆறரை மணிமுதல் எட்டு மணிவரை உபநிஷத் வகுப்பும், மாலை நான்கு மணிமுதல் ஐந்து மணிவரை பத்ரஹரியின் “நீதி சதகம்” வகுப்பும் சுவாமி பரமார்த்தானந்தா அவர்கள் நடத்துவார்கள். காலை எட்டு மணி முதல் ஒன்பது வரைச் சிற்றுண்டி நேரம். காலை ஒன்பது மணிமுதல் பத்து மணிவரை “சிவமானச பூஜை” விளக்கத்தை ஆஸ்ரமத்தில் இருக்கும் ஒரு சீடர் செய்வார் . காலை பத்து மணி முதல் பன்னிரெண்டு மணிவரை சுவாமி ஓங்காரானந்தா அவர்கள் திருக்குறளில் வேதாந்தம் என்ற தலைப்பில் உரை நிகழத்துவார். மாலை ஆறு மணிக்கு ரிஷிகேசம் ஆஸ்ரமத்தின் அருகிலேயே அழகாக ஓடிக் கொண்டிருக்கும் கங்கைக்கு ஆரத்தி நடைபெறும். சுவாமி பரமார்த்தானந்தரின் முன்னிலையில் சுவாமி ஓங்காரானந்தா அவர்கள் ஆராத்தி பூஜையைச் செய்வார்கள். சீடர்கள் அனைவரும் ஒரு விளக்கை ஏற்றிப் பிரார்த்தனை செய்து கொண்டு கங்கை நீரில் மிதக்க விடுவார்கள். சுவாமிகளுடன் சீடர்களும் கங்கா மாதாவின் சுலோகத்தைச் சொல்வதைக் கேட்டு அவன் மெய்சிலிர்த்துப் போவான்.

    கங்கைக்கு ஆரத்தி முடிந்தவுடன் ஆஸ்ரம வளாகத்தில் இருக்கும் ஸ்ரீ தக்ஷிணா மூர்த்தி ஆலயத்தில் பூஜை நடைபெறும். அங்கு தரிசனம் செய்தவுடன் இரவு ஏழு மணி முதல் எட்டு மணிவரை ஸ்ரீமத் பகவத் கீதை பாடத்தை சுவாமி பாமார்த்தானந்தா அவர்கள் நடத்துவார்கள். இரவு எட்டு மணிமுதல் ஒன்பதுக்குள் இரவு உணவு. அவன் ஒவ்வொரு நாளும் கங்கையில் உற்சாகமாகக் குளிப்பான். முதல் நாள் அவன் அங்கே நீந்தினான். அவன் நீந்துவதை வெகு தொலைவில் இருந்து பார்த்த சுவாமி பரமார்த்தானந்தா அவனை அழைத்து,” இங்கெல்லாம் நீந்தாதீர்கள். எப்பொழுது தண்ணீர் அதிகம் வரும் என்று சொல்ல முடியாது. ஜாக்கிரதையாக இருங்கள் ” என்றார். அதன் பிறகு அவன் அந்தப் படித்துறைப் பகுதியில் குளித்து சந்தியாவந்தனம் செய்து வந்தான். இரவில் சில நண்பர்களுடன் ஆஸ்ரமத்தின் ஒரு மரத்தடியில் அமர்ந்து கொண்டு பாய்ந்து செல்லும் கங்கையின் அழகிலும், ஒலியிலும் மெய்மறந்திருப்பான்.

    சுவாமி ஓங்காரானந்தா அவர்கள் வேதாந்தக் கருத்துகளை திருக்குறள், தாயுமானவர், வள்ளலார், பாரதியார், பட்டினத்தார் பாடல்களுடன் ஒப்பிட்டு நல்ல இலக்கியச் செறிவோடு சொல்வதைக் கேட்டு அவன் மிகவும் ரசிப்பான். அவரது உரையில் நகைச்சுவையும் இருக்கும். அவர் சுவாமி சித்பவானந்தரின் சீடர். சுவாமி பரமார்த்தானந்தரிடம் வேதாந்தப் பாடம் கற்றவர். புதுக்கோட்டையில் இருக்கும் ஸ்ரீ புவனேஸ்வரி பீடத்தின் பீடாதிபதி. தேனியில் ஒரு ஆஸ்ரமம் அமைத்துச் சீடர்களுக்கு வேத்தாந்தப் பாடங்கள் நடத்தி வருகிறார். “வேத நெறி” என்ற புத்தகம் அந்த ஆஸ்ரமத்தின் வெளியீடாக வந்துகொண்டிருக்கிறது. அவர் சென்னைக்கு அடிக்கடி வந்து ஆன்மிக உரைகள் நிகழ்த்தும் பொழுது அவன் தவறாமல் சென்று கேட்பான். 29.10.2017 ஞாயிறு அன்று அச்சிரப்பாக்கம் கிராமத்தின் மிக அருகில் அமைந்திருக்கும் “ஸ்ரீ பால வேத பாட சாலையின்” பத்தாவது ஆண்டு விழாவிற்கு சுவாமி ஓங்காரானந்தா அவர்கள்தான் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, சனாதன தர்மத்தின் சிறப்பைப் பற்றி அருமையான சொற்பொழிவு செய்தார்.

    “வேதம் கற்கும் மாணவர்களைப் பார்த்துப் பெருமைப் படவேண்டும். அவர்களுக்கு ஊக்கம் கொடுக்கும் வகையில் உதவ வேண்டும். வேதம்தான் நம் தேசத்தின் ஆணிவேர். வேதம் கற்றவர்களின் குணமே, இந்த உலகம் முழுவதும் சந்தோஷமாக இருக்க வேண்டும். அனைவரும் மனச்சாந்தியுடன் வாழவேண்டும் என்று பிரார்த்திப்பது மட்டும்தான். பசிக்கு உணவும், படுக்க ஒரு இடமுமே அவனது தேவைகள். அவர்களுக்கு என்றுமே மனத்தில் வறுமை தோன்றாது” என்ற அவரது உரை இன்னும் அவன் செவிகளில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. அந்த நிகழ்ச்சிக்கு அவனும், அவனுக்கு மனைவி சீதாலக்ஷ்மியும் சென்று வந்தார்கள்.

    ஸ்ரீ நாராயணானந்த பாரதீ சுவாமிகள்

    சுவாமி நாராயணானந்த பாரதீ

    ஸ்ரீ நாராயணானந்த பாரதீ சுவாமிகள் சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடத்தின் கிளைமடங்களில் ஒன்றான “நிலமாவு” மடத்தின் பீடாதிபதியாக இருந்தார்கள். அவரது பஜனைப் பாடல்களைக் கேட்டுக் கேட்டே அவன் அவருக்கு அடிமையானான். மதுரமான குரல்வளம் அவருக்கு வரப்பிரசாதமாக அமைந்திருந்தது . இன்றும் நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் அவரது பாடல்களைக் கேட்டு இன்புருவதுண்டு.

    1986ம் வருடம் ஸ்ரீ ஆதிசங்கரரின் ஆயிரத்தி இருநூறாம் ஆண்டு. அது தொடர்பாக சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடத்தின் முப்பத்தைந்தாவது பீடாதிபதியாக இருந்த ஜகத்குரு ஸ்ரீ அபிநவ வித்யா தீர்த்த மகாஸ்வாமிகள் “ஸ்ரீ ஆதிசங்கரர் ரதத்தை” பாரத தேசம் முழுவதும் சுற்றிவர ஆசிதந்தார்கள் . காலடி துவங்கி கேதார்நாத் வரை செல்லும் அந்த “ஸ்ரீ சங்கரர் ரதத்திற்கு”ச் சேவை செய்வதற்காகத் தன்னார்வத் தொண்டர்களை ஏற்பாடு செய்திருந்தார்கள். அதில் வழக்கறிஞர் தியாகராஜன், அவன் உட்படப் பலர் இருந்தார்கள். அவன் 25.12.1986 முதல் 01.01.1987 வரை அந்த ரதத்துடன் தஞ்சாவூர், திருவையாறு, திருச்சி, சிதம்பரம், சுவாமிமலை, கும்பகோணம், பாண்டிச்சேரி, காஞ்சீபுரம், சென்னை போன்ற இடங்களுக்குச் சென்று வந்தான். தஞ்சாவூரில் இருந்து சென்னை வரை அந்த ரதத்தின் கூடவே ஸ்ரீ நாராயணானந்த பாரதீ சுவாமிகளும் வந்தார்கள். ஒவ்வொரு ஊரிலும் சுவாமிகள் ஸ்ரீ சங்கரரின் மேன்மைகளைக் கூறுவார்கள். அந்தப் பயணத்தின் பொழுது அவன் ஒலிபெருக்கியில் ஸ்ரீ சங்கரர் செய்த பணிகளையும், அவரது சிறப்பையும் உரக்கக் கூறி வந்தான். அவனது அந்தத் துடிப்பு சுவாமிகளுக்குப் பிடித்திருந்தது. ஒவ்வொரு ஊரிலும் ஓய்வு நேரத்தில் அவன் எழுதிய கவிதைகளைப் பற்றிக் கேட்டு உற்சாகப் படுத்துவார். சென்னைக்கு வந்ததும் ஸ்ரீ நாராயணானந்த பாரதீ சுவாமிகளைத் தங்கள் இல்லத்திற்கு “பிக்ஷைக்கு” வர வேண்டினான். அவரும் மிகுந்த அன்போடு,”வருகிறேன் விஸ்வநாதா” என்று, அவனது எளிய இல்லத்திற்கு வந்து அனைவரையும் ஆசீர்வதித்தார்.

    அவர் சென்னைக்கு வரும் சமயங்களில் அவன் அவரை சந்தித்து ஆசிபெருவதை வழக்கமாகக் கொண்டிருந்தான். அப்படி ஒரு முறை சந்தித்த பொழுது,” நீ கவிஞன் ..எங்க ஊர்க் கவிஞர் வாலியை உனக்குத் தெரியுமா?” என்றார். அவன் “தெரியும்….பழக்கம் உண்டு” என்றான். “என்னுடைய பூர்வாச்ரம அண்ணாவும், வாலியும் ஸ்ரீரங்கத்து நண்பர்கள். அவரது “சமய புரத்தாளே சமயம் தாளே” என்ற பாட்டை நாங்கள் பாடுவோம்” என்று சொல்லி ,” அவரைப் பார்த்தால் இதைச் சொல்லுங்கள்” என்றார். அவன் அன்று மாலையே கவிஞர் வாலி அவர்களை இல்லத்தில் சந்தித்து விபரங்களைச் சொன்னான். “ஓ…அப்படியா..அவரது பூர்வாச்ரமப் பெயர் பத்ரி. ரொம்ப நல்லாப் பாடுவார். அவரது சகோதரரும் நானும் நண்பர்கள்… ” என்று மகிழ்ச்சியோடு சொன்னார். “”விஸ்வநாதா….அவர நான் பாக்கணும்..எங்க இருக்கார்” என்ற கவிஞர் வாலியிடம்,” தி.நகர் ஸ்ரீ சாரதாம்பாள் கோவில்லதான் இப்ப இருக்கார்” என்றான். மறுநாள் ஸ்ரீ நாராயணானந்த பாரதீ அவர்களை கவிஞர் வாலி சந்தித்து விட்டு வந்தார். இரவில் தொலைபேசியில் என்னை அழைத்து, “விஸ்வநாதா…சுவாமிகளை தரிசனம் செஞ்சுட்டு வந்தேன்…மனம் விட்டு ஊர் நினைவெல்லாம் பேசினோம்” என்றார். அவனுக்கு இதுபோன்ற நல்லோர்களின் தொடர்பு அமைந்ததால் தடம்புரளாமல் வாழ்க்கை வண்டி ஓடிக் கொண்டிருக்கிறது .

    அவன் ஒரு “காபி”ப் பித்தனாக இருந்தான். ஒரு நாளில் ஏழு, எட்டு காபிகள் குடிக்கும் பழக்கம் கொண்டிருந்தான். காலையில் எழுந்து பல்துலக்கியவுடன் காபி வேண்டும். இல்லை என்றால் கோபம் வந்து விடும். அப்படிப் பட்ட அவனுக்கு ஒரு சோதனை வந்தது. இரவில் தஞ்சாவூர் வந்த ஸ்ரீ சங்கரர் ரதம், மறுநாள் காலையில் புறப்பட வேண்டும். அதிகாலையில் ஸ்ரீ கணபதி ஹோமம் துவங்கப் போகிறது. காலை ஐந்து மணி இருக்கும், வக்கீல் தியாகராஜன் அவனிடம் ,”ஏய்…விச்சு …சீக்கிரம் குளிச்சுட்டுவா…ஹோமத்துக்கு ஏற்பாடு பண்ணனும்” என்றார். “காபி” குடிச்சுட்டு குளிக்கறேன் மாமா” என்றான். காபி வர நேரம் ஆகி விட்டது. தியாகராஜன் மாமாவும், இன்னொரு அன்பரும் குளித்துவிட்டு வேலைகளைச் செய்தது கொண்டிருந்தார்கள். அவனுக்கு வெட்கமாக இருந்தது. ” விச்சு …ஏண்டா இப்படி காப்பிக்கு அடிமையா இருக்கே…” என்று தியாகராஜன் மாமா கேட்க,” ஓய் ….இனிமே காபி குடிக்க மாட்டேன்.” என்று குளிக்கச் சென்று விட்டான். குளித்துவிட்டு வரும் பொழுது, மணக்க மணக்க காப்பியை ஒரு வாளி நிறைய ஒருவர் கொண்டு வந்தார். வாசனை இழுக்கத்தான் செய்தது. தியாகராஜ மாமா சிரித்துக் கொண்டே, “இந்தா உன்னோடு காபி..” என்றார். அவன் திடமாக மறுத்து விட்டான். அன்றிலிருந்து அவன் காபி, டீ குடிப்பதில்லை. 01.01.1987 முதல் வண்ண உடை அணிவதையும், தங்க நகைகள் அணிவதையும் விட்டுவிட்டான். வெள்ளை ஆடையைத்தான் விரும்பி அணிவான்.

    சில ஆண்டுகளுக்கு முன்பு அவனது நண்பனின் பெண் குழந்தை நிர்பந்தம் செய்ததால் கொஞ்சம் காப்பி குடித்தான். அதோடு சரி. அவனது மகனும், மகளும் ,”அப்பா எங்களுக்காக இந்த “கலர்” பனியனையாவது போட்டுக்கணும்” என்று அவர்கள் வாங்கித் தந்த கலர் பனியனைப் போட்டுக்கொண்டான். அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ் .

    “வைராக்கியம்” அவனுக்கு எந்த ஜென்மாவிலோ? கிருஷ்ணார்ப்பண மஸ்து.

    17.11.2017 அவன் மீண்டும் அடுத்தவாரம் வருவான்……….

    Share