மீ.விசுவநாதன்

வந்த பிறவிச் சுவடுக்கு – ஒரு
வகையில் நன்மை செயவேண்டும்
எந்த உயிர்க்கும் சுமையாக – நாம்
இல்லா திருக்க வரம்வேண்டும்

பூவாய், காயாய்க் கனியாக – நம்
பூமி மகிழ வரவேண்டும்
நாவாய் போல அனைவர்க்கும் – துன்ப
நதியைக் கடக்கத் துணைவேண்டும்

பறவை, விலங்கு, நீர்நிலைகள் – உயிர்
பந்த மென்ற உணர்வோடு
துறவைப் பெற்ற மனம்போலே – நம்
தூய பணியைச் செயவேண்டும்

காக்கை, மைனா, குருவிகளின் -மனம்
கண்டு உணவு தரவேண்டும்
தீக்கை மாறிக் குளிராக – தொண்டு
தினமும் செய்யும் குணம்வேண்டும்

இறைவன் படைத்த உலகத்தை – அன்பு
ஈர்ப்பி னாலே தொடவேண்டும்
நிறைவாம் செல்வம் ஆனந்தம் – “நான்”
நினைவை அழித்துக் கொளவேண்டும்

முதியோர் இளையோர் குழந்தைகள் – ஒரு
கூட்டாய் வாழும் நிலைவேண்டும்
நிதியே அதுதான் என்கின்ற – உண்மை
நிலையை அறிய அருள்வேண்டும்.

தர்மத் தராசு முள்ளாக – மனத்
தரமும் மேன்மை பெறவேண்டும்
கர்ம வினைகள் பூராவும் – நம்
கருணை யாலே வெலவேண்டும்!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *