“ஸ்ரீ வாணி பதிகம்”
மீ.விசுவநாதன்
ஆயிரங் கோடி அருமைக் கவிகளைத்
தாயெனும் சாரதை தந்தவள் – தூயவள்
வாயிலே தாம்பூல மங்கலம் கொண்டவள்;
சேயிவன் வாக்கிலே தேன்.
ஆவெனக் காட்டிட அற்புதத் தீந்தமிழ்ப்
பூமலர்ப் பாட்டினை புத்தியில் தூமழை
போலவே கொட்டுவாள் ; பொன்னெனும் நெஞ்சிலே
காலமாய் வாழுவாள் காத்து.
காத்திடச் செய்திடாள்; கண்ணிலே கண்டவள்
தோத்திரம் செய்திடத் துன்பமே போக்குவாள்;
மாத்திரைப் போதிலே மாமன ஆழியின்
ஆத்திரம் நீக்கிடும் அன்பு.
அன்பொளி காட்டியே அத்துணை பேர்க்குமே
இன்முகங் கொண்டவள் ஏற்றமே பண்ணுவாள் ;
தன்னுடைப் பிள்ளைகள் தப்பினை விட்டிட
முன்னமே காத்திடும் முத்து.
முத்தவள், பக்தரின் மூலவள், ஏழ்மையை
மொத்தமாய்த் தீர்ப்பவள்; மூர்த்தனை நித்தமே
பித்தென எண்ணிடப் பேரொளி யோகியாய்
சத்தென ஆக்கிடும் தாய்.
தாயெனக் கூப்பிடத் தன்னுயிர் வேருடன்
தாவியே வந்தருள் தந்திடும் – வாவியில்
தாமரைப் பூக்களாய்த் தன்னெழில் காட்டியே
காமனை ஓட்டுவாள் காண்.
காண்கிற அத்தனை காட்சியும் மாயையாய்க்
காண்எனக் கற்றிடக் காதலால் கூறுவாள் ;
பேணுவாள், செல்லமாய்ப் பித்தனே என்றெனை
மாணுவாள் புண்ணிய மாது.
மாதவ ஞானியர் மண்ணிலே தோன்றிட
மாதவள் சாரதை மாண்புதான் காரணம் ;
நாதமோ வேதமோ நாவிலே நித்தமும்
நூதனம் செய்குவாள் நூறு.
நூறென வேண்டிட நூபுரம் காட்டுவாள்
ஆறெனத் துங்கையை அன்பினால் ஏற்றவள்;
ஊர்சிருங் கேரியில் ஓமென வாழ்பவள்
பேரவள் வாணிநம் பேறு.
பேரவள் சொல்லப் பெரும்பிணி நீங்கிடும்;
சீரவள் செல்வமா சீர்த்தியை, நேர்மையை
நெஞ்சிலே வைத்திட நித்திய சோதியாம்
அஞ்செழுத் தாகிடும் ஆ.
(ஆ — ஆத்மா)