-மீ.விசுவநாதன்
இருண்ட மனதில் ஒளியானாய்; இயற்கை நியதிப் பொருளானாய்;
உருண்டு புரண்டு அழுதாலும் உயிருள் குளிர்ந்த சுகமானாய்;
சுருண்டு கிடக்கும் பாம்பினையே தொட்டு எழுப்பும் குருவானாய்;
மருண்மா அகந்தை அழிந்திடவே மனதை ஒடுக்கும் சிவமானாய்!
சிறகை விரித்துப் பறக்கின்ற சிந்தை யதனில் கவியானாய்;
பிறவி எடுத்த பயன்சொல்லி பிறர்க்கு தவிடும் கையானாய்;
இறக்கும் வரைக்கும் எளியோனாய் இருந்து பழக வழியானாய்;
மறக்கும் பொருளாய் அமையாமல் மதியை அணிந்த அரனானாய்!
(அறுசீர் விருத்தம் வாய்பாடு: மா, மா, காய் , மா, மா, காய்)

Leave a Reply