படக் கவிதைப் போட்டி – 2
அன்பிற்கினிய நண்பர்களே!
வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்?
ராபின் ராஜ் எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பு ஆசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.
இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (07.03.2015) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை முனைவர் அண்ணாகண்ணன் தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பல முறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்படும் கவிஞர்களுக்கும் உண்டு. 12 மாதமும் தேர்வுபெறும் ஒளிப்படக் கலைஞர் / கவிஞர்களிலிருந்து ஆண்டின் சிறந்த கலைஞரும், கவிஞரும் தேர்வு பெறுவார்கள். ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். இது, கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்கு பெற அழைக்கிறோம்.
வானம் பார்த்த பூமி.
வானம் பார்த்த பூமி, எங்கள்
மானம் காக்க வேண்டும் !
வயலில் வேலைக்(கு) ஆளில்லை, இந்த
வருடம் போதிய மழை யில்லை !
நீரின்றி நடுவதா மாரி யாத்தா ?
ஊரில் உதவிட யாரு மில்லை
பச்சை நாற்றெல் லாம் காய்ந்திடுமோ ?
அச்ச முள்ள வாழ்வில் மிச்ச மில்லை !
பிச்சை எடுக்கவும் இச்சை யில்லை !
நஞ்செய்ப் பயிரெல்லாம் வஞ்சனை யாளர்
தஞ்சமாய்ப் போச்சு ! பஞ்சமாய் ஆச்சு !
உழுதுண்டு வாழும் நாங்கள் தினம்தினம்
அழுதுண்டு சாவோம் ! அரசு உதவுமா ?
சி. ஜெயபாரதன்.
நாற்றாங்கால் மீதமர்ந்து நெல்வயலில் நட்டுவைக்க
நாற்றைப் பிடுங்கும் விவசாயி – ஊற்றெடுக்கும்
நம்பிக்கை கண்களில் மின்னிடப டம்பிடிக்கும்
தம்பியை பார்க்கின்ற காட்சி
படக் கவிதைப் போட்டி
( எம். ஜெயராமசர்மா … மெல்பேண் )
விண்பார்த்து மண்பார்த்து
விதைவிதைத்து நாற்றுநட்டு
விடியுமா எனநினைத்து
வேதனையை மனதில்வைத்து
ஏக்கமுடன் பார்த்துநிற்கும்
ஏழ்மைமுகம் இந்தமுகம் !
உழவன் சேற்றிலே கைவைகாவிட்டால் நாம் சோற்றிலே கை வைக்க முடியுமா!
ஐந்து கட்டுகளை ஒரு கட்டாக்கி நாற்றுக்களை வேறு இடத்தில் நடவு
செய்கின்றான்
பெண்ணும் நாற்றைப் போல்,பிறந்த இடம் விட்டு புகுந்த வீட்டை நாடுகிறாள்
பெண்ணும், நாற்றும் ஒன்றுதான், ஓர் இடம் விட்டு மறு வீடு செல்கிறாள்.
விவசாயத்திற்கு நாற்று முக்கியம். இல்லற வாழ்க்கைக்கு பெண் முக்கியம்.
விவசாயி நாற்றங்காலை நன்கு கவனித்தால்தான் பயிர்கள் வளரும்
பெண் குடும்ப உறவுகளை போற்றினால்தான் குடும்பம் வளரும்.
நற்றங்கலாகிய நங்கை வாழ்க்கை எனும் சேற்றில் துளிர்விட்டு வளருமே !
ரா.பார்த்தசாரதி
படக்கவிதைப்போட்டி
( எம். ஜெயராமசர்மா … மெல்பேண் )
ஏக்கங்கள் இருந்தாலும்
எழுந்திடுவோம் எனுமுணர்வு
நாற்றுநடும் வேளைதனில்
ஊற்றாகி வருகிறது !
படக்கவிதைப்போட்டி
….. எம். ஜெயராமசர்மா … மெல்பேண் …
சென்றமுறை நட்டபயிர்
சீர்குலைஞ்சு போச்சுதென்று
இந்தமுறை நடுவதிலே
எனக்கென்ன குறைஞ்சுபோச்சு !
உழவனாவேன் நான்
***********************
கவிப்பாடும் குயிலில்லை
நான்
காய்ந்தவயிற்றைப்பாடும் காக்கையாவேன் நான்
கவிதை எழுதும் கவிப்புலவன் இல்லை
நான்
கழனியில் களையெடுக்கும் கருப்புஉழவன்
நான்
பண்ணியற்றும் பண்டிதன் இல்லை
நான்
பண்படும் நிலத்தின் பண்பறிந்தவன்
நான்
எதுகை மோனை எதுவென்றறியாதவன்
நான்
ஏர்பிடிக்க காளை எதுவென்றறிந்தவன்
நான்
உயிர்உருக கவிதையிசைக்கும் புதுமைக்கவிஞனில்லை
நான்
பயிர்வளர்த்து உயிர்காக்கும் பழமையுழவனாவேன்
நான்…!
விஜயகுமார் வேல்முருகன்
நன்றி கூலியோ..
நாளெல்லாம் கால் கடுக்க நின்று
வயலில் இறங்கி
முதுகெலும்பு முறிய வளைந்து
குனிந்து நாற்று நட்டு
களை பறித்து
நெல் கதிர் அறுத்து
கட்டுக்களாய் கட்டி தலையில் சுமந்து
நெல் அடிக்கும் இடத்தில் குவித்து
அடிபட்டு கதிரிலிருந்து பிரிந்த நெல்மணிகளை
அள்ளி அளந்து சாக்குப்பையில்
கொட்டி குவித்து மூட்டைகளாக்கி
மூட்டை தனை தைத்து
பாரம் சுமந்து வண்டியில் ஏற்றி
வியாபாரத்திற்கு வழி அனுப்பும்
உழைப்பாளி உழவரின் சொற்ப கூலி பற்றி
பேச நான் வரவில்லை!
உழைத்துக் களைத்த உழைப்பாளி
உழவர்தன் வயிறு நிரப்ப….
கால் கடுக்க வரிசையில் நின்று
மலிவு விலை எனும் பெயரில்
புழு மலிந்து நெளியும்
அரிசிதனை வாங்கி உண்ணும் அவலம்தான்
நாம் உழைப்பிற்குக் காட்டும்
நன்றி கூலியோ!?
யோசிக்க வேண்டிய விஷயம் என
யோசிக்கவே யாசிக்கிறேன்!!
— நாகினி
நீங்க வேண்டும் கீறல்..
உழைத்துக் களைத்து
ஊருக்கே படியளந்து
உலகை உவப்பாக்கும்
உழைப்பாளர் விவசாயி
கடைநிலை ஊழியராய்
கஞ்சிக்கும் விதியத்து
காப்பாற்றும் அன்புக்கரம் இற்று
மண்ணின் ஈரம் வற்றி
கண்ணின் ஈரம் ஆறாகி
வறுமைத் துயரில் நொந்து நூலாகி
வேதனைக் கோடாலியால்
மனம் கீறுபடும் நிலை நீங்கும்
காலம் எக்காலமோ!!
எக்காலத்திற்கும் தேவை
மண்ணுயிர்க்கெல்லாம்
வயிற்றுக்கு உணவு
தந்திடும் விளைநிலங்களில்
முளைக்கலாமோ அடுக்குமாடி கட்டிடம்
பச்சை பயிர் விளைச்ச லெல்லாம்
கட்டுகட்டாய் கட்டுமரமேறுலாமோ..
யோசித்து கொஞ்சம் பாருங்கம்மா
உலக வயிற்றில் பால்வார்க்கும்
சுற்றுச் சூழல் காக்கும்
விளைநிலங்கள்
காய்த்துக் குலுங்கி
பசுமை ஆடை சுற்றிய
மண்ணுலகு மலரும்
காலம் பொற்காலம்தானே!!
— நாகினி
பார்வையின் கோரிக்கை…
மேலே பார்க்க வைத்தீரே
மேன்மை மிக்கப் பெரியோரே,
வேலை செய்து பயிர்வளர்த்தே
வேளை உணவைப் பார்த்திருக்கும்
காலமும் மாற வைத்திடவே
கட்டிடம் வயலில் வளர்த்தீரே,
மேலும் மேலும் அழிக்காமல்
மண்ணைக் காக்க வருவீரே…!
-செண்பக ஜெகதீசன்…
ஒரு பிழை திருத்தம்
பிழைக்கும் தொழிலெல்லாம் பேறாகப் பார்த்தால்
உழைக்கும் தொழிலாம் உழவில் – இழப்புதான் !
வேர்வை தனைச்சிந்தும் வேளாண்மை இல்லையேல்
பார்மீதில் ஏது பயிர் ?
சி. ஜெயபாரதன்
உழுதுண்ணும் தொழில்
உழுதுழைத்து மீள்வதிலே ஊதிய மில்லை !
அழுதுழைத்து ஆழ்கடனில் வீழ்வார் – தொழுதுழைத்துப்
பின்செல்வோர் வேளாண்மை முன்னேறக் கைகொடுத்தால்
தன்னாலே நீங்கும் தடை.
சி. ஜெயபாரதன்
வானுயந்து நிக்குற கட்டடம்
வயலை தான் சூழ்ந்து நிக்குதே !
காணி நிலம் தான் –
இதையும்
கட்டடத்துக்கு காவு குடுத்துட்டா
சாப்பாடு போட நாளைக்கு
சாஃப்ட்வேர் வந்திடுமா ?
சேற்றில் நாளும் நாங்கள்
கால் வைக்கிறோம்
அன்றாடம் சோற்றில் நீங்கள்
கை வைக்கவே !
எத்துனை எத்துனை
வியர்வைத் துளிகளின்
கூட்டுப் பலன் ஓர் நெல்மணி
இது அறிவீரா மக்களே ?
இரத்தத்தை வியர்வையாக்கி
நாளும் உணவளிக்கிறோம்
பட்டினி கிடந்தாயினும்
உலகுக்கு படியளக்கிறோம் !
மண்ணையும் பொன்னாக்கும்
எம் வாழ்வில் – வறுமை
புண்ணாகி புரையோடியதை
அறிவீரோ நீங்கள் ?
நல்ல காலம் வருமென்று
நாளும் தான் காத்திருக்கிறோம்
வந்து சேரும் நன்னாளும் எந்நாளோ ?
அது எம் வாழ்வில் பொன்னாள் ஆகிடாதோ ?
படக்கவிதைப்போட்டி
( எம். ஜெயராமசர்மா …. மெல்பேண் )
நார்நாராய் போனாலும்
நானுழைப்பேன் எனும்நினைப்பால்
ஈரத்துள் இருந்துகொண்டு
எவ்வளவோ எண்ணுகின்றார்
உழைப்பாலே வரும்பயனை
உறுஞ்சுவோர் இருக்கையிலே
படுக்கையிலே நான்படுத்தால்
பார்ப்பவர்யார் எனுமேக்கம் !
மண் ப்ரியன்
——————–
கல் விதைத்து
மனை பிரித்து
கட்டிடம் எழுப்பி
கோடிகள் பார்க்கும் காலத்தில்
நெல் விதைத்து
நீர் வார்த்து
நாற்று வளர்த்து
நலிந்து போகிறான்
என்னுடைய விவசாயி!
மண் காக்கும் இவனுக்கு
பொன் தரவேண்டாம்
மாற்றாக
முப்போகம் தந்துவிடு சாமியே…
மகசூல் தரும்
இவன் நிலத்தை
முற்றாக
மழையின்றி
காயவைத்து
மார் பிளக்க வைக்காதே சாமியே…
ஆண்டவன்
ஆள்பவன்
அதிகாரம் காட்டி
அபகரிக்கும்
உங்களுக்கும் ஒரு கும்பிடு
விளை நிலங்கள்
விட்டுவிடுங்கள் ஆசாமியே…
-அமீர்-
நட்ட பயிர் வளருமோ
நட்டமாகி தளருமோ
வானம் பார்த்து வினவிட
யாரும் கேட்க வில்லையே? ()
சின்னச்சின்ன நாற்றுகள்
சிரிக்கும் பச்சை பார்த்துமோ
கனத்து செல்லும் மேகமே
இரக்கமற்று மறைகிறாய் ?
வானம் பார்த்த கழனியை
வறண்டு போகவிட்டது
யார தந்தப் பொன்னியா – இல்லை
அண்டைப் பன்றியா?()
கிடந்த கிழட்டு எருதுகள்
நடந்து உழுத பரப்பினில்
வரிசை யாக்கி ஊன்றிய
அழகை ரசித்த பின்னரும்
அரசின் சலுகை என்றெனை
அலைய விட்டு கொஞ்சமாய்
கடனைத் தந்த வங்கிகள்
கஞ்சி குடிக்க சொல்லுதே()
ஒட்டி போன வயிறுடன்
ஒடிந்து போன மனதுடன்
வட்டி குட்டி போட்டதால்
வறுமை யான உடையுடன்
வாழ்வ தன்றி சாவதா
வாடும் வீடும் நோவதா
என்று கேட்கும் முன்னரே
இன்று விட்டேன் உழுதலை()
கல்லை வைத்து அடுக்கியே
கட்டிடங்கள் கட்டுவேன்
நெல்லை வைத்து விழுங்கிய
செல்வங்களை கூட்டுவேன்
இல்லை யென்று கூறிய
ஏழை வானம் உன்னிடம்
பல்லை காட்டி பாடுவேன்
பார்த்து நீயும் மெச்சிடு.()
இறங்கிடம்மா மாரியம்மா …
சேற்று மண்ணில் கால் பதித்தேன்>
,
உழுத நிலங்கள் எல்லாம் நீக்கமற எங்கும்>
–
கார்மேகக் கூட்டம்போல்
புனிதா கணேசன்
06.03.2015
இறங்கிடம்மா மாரியம்மா …
சேற்று மண்ணில் கால் பதித்தேன்
சோற்றுப் பானைகள் நிறைந்திடவே
ஏழைக் குடிசையிலும் எண்சாண் வயிற்றினிலும் !
என் களைப்பும் பார்க்காது………
பவ்வியமாய் பருவம் பார்த்து
கலப்பை காளை கொண்டு, ஏர் பூட்டி
உலர் மண்ணை, நீர் பாய்ச்சி உழவு செய்து
உரமிட்டேன் சாணமெனும் பசளையிட்டு……..
உமிசேர் நெல்மணிகள் பூமித்தாய் மடியில்
உழுத நிலங்கள் எல்லாம் நீக்கமற எங்கும்
விதைத்து விட்டிருந்தேன் விருப்புடனே!
பதைத்துக் காத்திருந்தேன் பயிர் உயிர் கொள்ள வென …..
நெல் நாற்றுகளும் செழித்தே நிறைத்தன பசுமை
மெல்லப் பரவி நீண்ட வயல் முழுதும்!!
நாற்றுகள் பெயர்ந்தெடுத்து மீண்டும் பதியிட்டே ன்
சேற்று மண்ணில் கால் பதித்தே .. ஊன்றி வேரூன்ற….
வானம் பார்த்து நின்றேன் .. வளமாய் என்
மனம் குளிர … கார்மேகங்கள் கூட்டியே
மாரியம்மா கருணை காட்டு ..!
வாரி ஒரு மாரி மழை ‘சோ’ என்று பெய்வித்து ..
நட்டு விட்ட நாற்றுகள் யாவும்
மொட்டரும்பி கதிராகி .. நெல்மணிகள்
நிறைந்து கொத்து கொத்தாய் தலை தூக்க -தலை
முறைக்கும் உணவாக …
இரங்கிடம்மா மாரியம்மா …
ஏழை உழவனுக்காய்,
கார்மேகக் கூட்டம்போல்
இறங்கிடம்மா மாரியம்மா !!
புனிதா கணேசன்
06.03.2015
ஊற்றி உயிருடம்பை உண்டாக்கிப் பெண்ணவளை
மாற்றி மணமுடிக்கும் மானுடமே – வேற்றில்லைப்
போற்றப் பிறந்தனரோ பெண்மணியார்? என்றந்த
நாற்றங்கால் காணும் நலம்?
படக்கவிதைப் போட்டி !
( எம். ஜெயராமசர்மா … மெல்பேண் )
பெண்பார்க்க வந்தவீட்டார்
பேசாது போனதாலே
மண்பார்க்கும் மனிதரிப்போ
விண்பார்த்து நிற்கின்றார் !
சென்றமுறை வந்தாரும்
சீக்கிரமாய் சென்றுவிட்டார்
இந்தமுறை சேதிதனை
ஏக்கமுடன் நோக்குகிறார் !
படக்கவிதைப் போட்டி !
( எம். ஜெயராமசர்மா …. மெல்பேண் )
ஐந்துபெண்கள் திருமணத்தை
அறுவடைதான் காக்கவேணும்
இந்தமுறை அறுவடைதான்
எப்படியோ எனுமேக்கம் !
படக் கவிதைப் போட்டி !
( எம். ஜெயராமசர்மா … மெல்பேண் )
ஆட்சிகள் மாறும்
அவர்கையெலாம் நிறையும்
எங்கள் காட்சிகள் மாறுமா
கனவுதான் நிறைவேறுமா !
படக் கவிதைப் போட்டி – 2இன் முடிவுகள் – https://www.vallamai.com/?p=55196