Author: செ. இரா. செல்வக்குமார்

  • இந்த வார வல்லமையாளர்

    செ. இரா.செல்வக்குமார்

    இந்தக் கிழமையின் வல்லமையாளர் பிரேசிலில் இரியோ தி செனரோ (Rio de Janeiro) நகரில் தங்கப்பதக்கம் வென்ற சென்னை மாணவி.

    இந்தவார வல்லமையளர்  உலக அளவில் அரிய செயல்  படைத்த ஒரு வியப்பூட்டும் சிறுமி.  இது இனிய செய்தியேயாயினும், இவருடைய செயலைப் புரிந்துகொள்ள சில கசப்பான உண்மைகளை அறிந்தால்தான் வெற்றியின் பின்புலம் தெரியும்.

     தெருவோரக்குழந்தை-Chennai_gir_278389_2784721g

    பிரேசிலில் தங்கப்பதக்கம் வென்ற எப்சியா ((ஃகெப்சிபா, ஹெப்சிபா, Hepsiba)[6] )

    உலகிலுள்ள 2200 மில்லியன் குழந்தைகளில், 1000 மில்லியன் குழந்தைகள் வறுமையில் வாடுகின்றனர் [1]. வளரும்நாடுகளில் 1900 மில்லியன் குழந்தைகள் இருக்கின்றார்கள். ஆனால் அதில் 640 மில்லியன் குழந்தைகள் தாங்கள் இருக்கச் சரியான இடமில்லாமலும், 400 மில்லியன் குழந்தைகளுக்குச் சரியான குடிநீர் இல்லாமலும் இருக்கின்றார்கள் [1][2].  ஆண்டுதோறும் 10.6 மில்லியன் குழந்தைகள் 5 வயது அடையும் முன்பே இறந்துவிடுகின்றார்கள்.

    இந்தக் குழந்தைவறுமை நிலையை நாடுதோறும் அல்லது  உலகத்தின் பகுதிதோறும் அளவிட  குழந்தைகள் வளர்ச்சிச்சுட்டெண் (கு.வ.சு) (Child Development Index, CDI)  என்று ஓர் அளவீட்டை உருவாக்கி அதைப் பயன்படுத்துகின்றனர் [3].  இவ்வெண் குறைவாக இருந்தால் தேவைப்படும் வளர்ச்சி குறைவு என்று பொருள். அதாவது குழந்தை வறுமைநிலை குறைவு.  இவ்வெண் அதிகம் என்றால் வறுமைநிலை அதிகம்.  வளர்ந்தநாடுகளில் இவ்வெண் 2.1, ஆப்பிரிக்காவில் 34.5, இந்தியத்துணைக்கண்டத்தில் 26.4. கிழக்கு ஆசியா 8.5 , உலகத்தின் சராசரி 17.5. [3]

    வறுமையில் வாடும் குழந்தைகளுக்குப் புதுநம்பிக்கைத் தரவும் அவர்களுக்கு உதவவும் அவர்களுக்கென தெருவோரக்குழந்தைகளுக்கென ஒரு புதிய அனைத்துலக விளையாட்டுப் போட்டிகள் இவ்வாண்டு தென்னமெரிக்காவில் உள்ள பிரேசிலில்  நடைபெற்றது.  இதனை  Street Child Games 2016 என அழைக்கின்றார்கள்[5].  இதில் 9 நாடுகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட இளைஞர்கள் மார்ச்சு 14-20, 2016 ஆகிய நாள்களில் ‘’இரியோ’’ என அழைக்கப்படும் இரியோ தி செனரோ  (Rio de Janeiro) நகரில் கூடி போட்டிப்போட்டார்கள். இங்குதான்  2016 ஆம் ஆண்டு ஒலிம்பிக்குப்போட்டிகள் (Rio de Janeiro)நடக்கவிருக்கின்றன.

    இப்போட்டியில் சென்னையைச் சேர்ந்த அகவை 16 நிரம்பிய எப்சிபா (ஃகெப்சிபா, ஹெப்சிபா, Hepsiba) என்னும் சிறுமி 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். இதுமட்டுமல்லாமல் இன்னும் இரண்டு பதக்கங்கள் வென்றுள்ளார்.  இவருக்குக் கருணாலயா என்னும் அமைப்பு உதவி செய்துள்ளது. இவருடைய வாழிடம் முன்பு’’ நேரு உள் விளையாட்டு அரங்கத்துக்கு அருகே இருந்த சாலையோர நடைமேடை, தற்போது சென்னை மாநகராட்சியின் வீடற்றவர்களுக்கான தங்கும் கூடாரம்’’[6]. இவருக்குச் சரியான இருப்பிட முகவரிகூட இல்லாததால் கடவுச்சீட்டு (Passport) வாங்குவதுகூட சிக்கலுடையதாக இருந்தது, பிரேசிலுக்குப் போகவும் பணம் கிடையாது எனினும் கருணாலயாவின் உதவியோடு பிரேசிலுக்குப் போனதுமட்டுமல்லாமல் அங்கே தங்கப்பதக்கத்தையும் ஒரு வெள்ளி, ஒரு வெண்கலப்பதக்கத்தையும் வென்று வந்திருக்கின்றார். பதக்கங்களைவிட அவர் தனக்குக் கிடைத்தப் புதுநட்புகளைப் பற்றிப் பெருமையாகக் கூறுகின்றார்.  எப்சிபா இப்பொழுது தனக்கு பாக்கித்தான், எகிப்து, பிரிட்டன், அர்ச்சென்டினா, பிரேசில் ஆகிய நாடுகளில் நண்பர்கள் உள்ளார்கள். செல்வி எப்சியா அவர்களின் உணர்வுகளை அவர் கூற்றாகவே:

    ” மொதல்ல எனக்கு பிரேசில் போக வாய்ப்பு கிடைக்குமான்னு சந்தேகமா இருந்துச்சு. அங்க போறதுக்கு பணமும் இல்லை. கருணாலயா அமைப்புக்காரங்கதான் உதவி செய்தாங்க. இப்ப டவுட்டன் கவர்மெண்ட் ஸ்கூல்ல [பள்ளியில்] பிளஸ் 1 படிச்சிட்டு இருக்கேன். பிரேசிலில் தெருவோரக் குழந்தைகளுக்கு போட்டி நடக்குதுன்னு எங்களைக் கூட்டிட்டுப் போறதுக்காக டெஸ்ட் மேட்ச்[சு] [தேர்வுப்போட்டி] நடத்துனாங்க. அதுல நான் முதல் ஆளா வந்தேன். ஸ்கூல்ல [பள்ளியில்] நடக்கற போட்டிகள்ல பரிசு வாங்கியிருக்கேன். ஆனா, சர்வதேச அளவுல கலந்துக்குவோம்னு நினைக்கல. சென்னையில இருக்கும்போது காலை சாப்பாடுகிங்கறதே கிடையாது. அம்மா ரொம்ப கஷ்டப்பட்டு பூ விக்கறதால அவங்ககிட்ட எதுவும் கேக்க முடியாது. போட்டிக்குத் தயாராகும்போது முட்டை, சுண்டல்னு நிறைய கொடுத்தாங்க. அதனால நல்லா ஓட முடிஞ்சது. ஜெயிச்சா வாழ்க்கை நல்லா இருக்கும்னு சொன்னாங்க. எப்பவும் போலத்தான் ஓடினேன். நாலு பதக்கம் வாங்குவேன்னு நினைச்சு கூடப் பார்க்கலை சார்…” என்றார் கண்களில் உற்சாகத்தோடு.” [4]

    முதல் முயற்சியே தங்கப்பதக்கத்தை வென்றுள்ளது. செல்வி எப்சியாவுக்கு வல்லமையின் நிறைந்த பாராட்டுகளும் நல்வாழ்த்துகளும். மேன்மேலும் வெற்றிகள் சமைத்து நல்வாழ்வு பெற்று நலமுடன் வாழவும் நல்வாழ்த்துகள்.

    அடிக்குறிப்புகள்:
    [1]  Shah A (2010). Poverty Facts and Stats. Global Issues [ http://www.globalissues.org/article/26/poverty-facts-and-stats ]  .

    [2] விக்கிப்பீடியா, [https://en.wikipedia.org/wiki/Child_poverty ]

    [3] Save the Children (2008). The Child Development Index: Holding governments to account for children’s wellbeing. Save the Children. London, UK.
    [4] ஆனந்தவிகடன் , முகப்புச் செய்தி, ‘’தங்கம் வென்ற ‘தெருவோரத் தங்கம்’…! -பிரேசிலை அதிர வைத்த சென்னை சிறுமி! ‘’ மார்ச்சு 21, 2016
    [5] http://www.streetchildgames.org/ [அணுகியநாள் மார்ச்சு 27, 2016]
    [6] த இந்து, நாளிதழ் [இ]ரம்யா கண்ணன், ‘’ தெருவோர குழந்தைகளுக்கான விளையாட்டுப் போட்டி: பிரேசிலில் முத்திரை பதித்த சென்னை[ச்] சிறுமி’’, மார்ச்சு 22, 2016

    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    செ. இரா.செல்வக்குமார்

    இந்தக்கிழமையின் வல்லமையாளர் புற்றுநோய்க்குப் புதிய மருந்தைக் கண்டுபிடித்துப் பதக்கம் பெற்றவர்

     a2

    முனைவர் வினோது கண்ணப்பன்

    மருத்துவத்தில் நாளும் புதுமைகள் நடக்கின்றன. நோய்களில் மிகவும் கூர்ந்து கவனிக்கப்படும் ஒன்று புற்றுநோய். புற்றுநோயில் பற்பல வகைகள் உள்ளன.  நோயைக் கட்டுப்படுத்தவும் தீர்க்கவும் பற்பல ஆய்வுகள் நடக்கின்றன. அவற்றுள் ஒன்று புதிய கோணத்தில் ஆய்வுசெய்து இங்கிலாந்து ஆய்வாளர்களையும் உலக ஆய்வாளர்களையும்  வெகுவாக ஈர்த்திருக்கின்றது. இதனைச் செய்தவர் வினோது கண்ணப்பன் என்னும் கோயம்புத்தூரைச்சேர்ந்த இளைஞர்.  இவர் இச்செயலைத் தன் ஆய்வணியினருடன் சேர்ந்து செய்திருக்கின்றார். இவருக்கு ஐக்கிய இராச்சியத்தின்  நாடாளுமன்ற அறிவியல் குழு வெள்ளிப்பதக்கம் தந்து பெருமைப்படுத்தியிருக்கின்றது (‘’ Silver Medal from the United Kingdom Parliamentary and Scientific Committee for research work’’)[1].

     a2

    தைம்சு ஆஃபு இந்தியா நாளிதழில் (Times of India) முனைவர் வினோது கண்ணப்பன் பற்றிய செய்தி

    வினோது கண்ணப்பன் கோயம்புத்தூரில் உள்ள பூ.சா.கோ கலை அறிவியல் கல்லூரியில் படித்த மாணவர். இங்கிலாந்தின் நடுமேற்கே உள்ள மேற்கு மிட்லாண்டு வட்டத்தில் (West Midlands county) உள்ள உவுல்வராம்பிட்டன்  பல்கலைக்கழகத்தில் (University of Wolverhampton) சூன் 2015 இல்  இவர் முனைவர்ப்பட்டம் பெற்றுள்ளார்.

    நீடித்த கள்குடிப்பழக்கத்துக்கு வயப்பட்டவர்களுக்கு அதிலிருந்து மீள 1920-களில் கண்டுபிடித்த ஒரு மருந்து தைசல்ஃபிரம் (Disulfiram, டை’சல்ஃபிரம்)  என்னும் வேதிப்பொருள்.  இது ஆன்றாபியூசு அல்லது ஆன்ட்டாபியூசு (Antabus, Antabuse) என்னும் வணிகப்பெயரில் விற்கப்படுகின்றது.   கள்ளை அருந்திய  பிறகு அதிலுள்ள சாராயம் (ஆல்கஃகால் ) அசிட்டால்டிகைடு (acetaldehyde)  என்னும் வேதிப்பொருளாக நம் உடலில் மாறுகின்றது.  இதனால் குடிப்பவர்களுக்கு  மறுநாள் தலைவலி போன்ற ஒவ்வாமையுணர்வுகள்  (‘’hangover’’) எழுகின்றன.  ஆனாலும் இவ்வுணர்வுகள் நீங்கி இயல்புநிலைக்கு வர நம் உடலில்  இயற்கையாகவே சுரக்கும் ஒரு நொதி அல்லது நொதியம் (enzyme) உதவுகின்றது.  இந்த  நொதி  தலைவலி முதலியனவற்றை ஊட்டும் அசிட்டால்டிகைடு என்னும் பொருளைச் சிதைக்கின்றது. இந்த நொதியத்தின் பெயர் அசிட்டாலடிகைடு டி-ஐதரோசெனேசு (Acetaldehyde dehydrogenase) என்பதாகும்.  இந்த நொதியை உருவாக்க நம் உடலில் உள்ள ALDH1A1, ALDH2, என்னும் மரபணுச்சரங்களும் (மரபீனிகளும்) அண்மையில் கண்டுபிடித்த  ALDH1B1 என்னும் மரபீனியும்  இயங்குகின்றன (தொழிற்படுகின்றன). 1920-களில் கண்டுபிடித்த தைசல்ஃபிரம் என்னும் வேதிப்பொருள் என்ன செய்கின்றது என்றால் இந்த நொதி நம் உடலில் உருவாவதைத் தடுக்கின்றது.  எனவே தைசல்ஃபிரம் என்னும் மருந்தின் விளைவால் கள்குடித்த சில மணித்துளிகளிலேயே  தலைவலி போன்ற ஒவ்வாமை உணர்வுகள் வந்துவிடும்.  இந்த உணர்வுளை ஊட்டும் அசிட்டால்டிகைடு உடல் இரத்தத்தில்  இயல்புக்கு மாறாக 5-10 மடங்கு அதிகமாக இருக்கும்.   இதனால் குடிப்பது ஒவ்வாமை உணர்வை ஊட்டி குடிப்பழக்கத்திலிருந்து விடுபட உதவுகின்றது. தைசல்ஃபிரம்,  இந்த நொதி உருவாவதைத் தடுப்பது போலவே புற்றுநோய் உண்டாக்கும் புற்றுக் குருத்தணுக்கள் (cancer stem cells)  உருவாவதையும் தடுக்கவோ அவ்வுயிரணுக்களை அழிக்கவோ பயன்படுத்தமுடியுமா என செய்முறையில் செய்துபார்த்திருக்கின்றார்கள்.

     a2

    ஒரு கிளைக்கு 2  கந்தக அணு என இருகிளைகளாக நான்கு கந்தகவணுக்களோடு அமைந்திருக்கும் தைசல்ஃபிரம் (Disulfiram, டை’சல்ஃபிரம்) (C10H20N2S4) என்னும் மூலக்கூறு அல்லது மூலகம்.[3]

     a2

    தைசல்ஃபிரம் (Disulfiram, டை’சல்ஃபிரம்) என்னும் மூலகத்தின் பந்துக்குச்சி அணுப்படம். மஞ்சள் நிறத்தில் உள்ளவை கந்தக அணுக்கள். நீலம்-நைதரசன், கறுப்பு-கரிமம், வெள்ளை-ஐதரசன். படம் [4]

    பொதுவாக புற்றுநோயைக் கட்டுப்படுத்த, உடலிலுள்ள புற்றுநோயுடைய உயிரணுக்களைக்கொல்ல (cancer cells) கடுமையான நச்சுத்தன்மை கொண்ட வேதிப்பொருள்களை உட்செலுத்தும் கீமோதெரப்பி (chemotherapy) என்னும் மருத்துவம் வழக்கில் உள்ளது. இந்த வேதிமருத்துவத்தின்வழி புற்றுநோய்க் குருத்தணுக்களையும் பெரும்பாலும் கொல்லமுடியும் எனினும் விடுபட்டுப்போகும் சிலவற்றால் மீண்டும் புற்றுநோய் தொடரக்கூடும் வாய்ப்பு உண்டு.  இதற்குமாறாக தைசல்ஃபிரம் மருந்தைப் பயன்படுத்தி குருத்தணுக்கள் உருவாவதையே தடுக்கலாம்.  இப்படிச்செய்யக்கூடும் என்றாலும் இம்மருந்து குருதியில் 2 மணித்துளிகள் மட்டுமே மாறாமல் இருக்கின்றது. இதனை நானோ-தொழினுட்பத்தின்வழி குருதியில் 8 மணிநேரம் வரை இருக்குமாறு புதிய முறையில் கண்டுபிடித்துச் செய்திருக்கின்றார் வினோது கண்ணப்பன்.

     மருத்துவத்துறையில் செய்துகாட்டலுக்கு அடிப்படையான விலங்கினச்சோதனையில் இவ்வகையான தீர்வில்  வெற்றிகண்டு, இப்பொழுது மாந்தர்களுக்குச் செய்முறைச் சோதனையில் உள்ளது.

    தன்னுடைய முனைவர்ப்பட்ட ஆய்வில் இவர் தைசல்ஃபிரம் என்னும் வேதிப்பொருள் எவ்வாறு  கி’ளியோபிளாசிட்டோமா மல்ட்டிஃபோரம் (கி’ளி-பி-ம) (Glioblastoma Multiforme, ”GBM””) எனப்படும் மூளைப்புற்றுநோயில் செயற்படுகின்றது என ஆய்வு செய்திருக்கின்றார் [2].  இந்த ஆய்வில் தைசல்ஃபரம் மருந்தோடு செம்பும் (Cu) கலந்துதந்து கி’ளி-பி-ம (”GBM”) –வின் வேதியெதிர்ப்பை (chemoresistance) மாற்றிக்காட்டியிருக்கின்றார். இந்தச் செப்புக்கலப்புடைய தைசல்ஃபரம்,  கி’ளி-பி-ம புற்றுநோய் உயிரணுக்களை அழிக்கும் தன்மையுடயது என நிறுவினர் [2]. (”In this study, we used Disulfiram (DS), an anti-alcoholism drug, in combination with copper (Cu) to target the hypoxia-NF-B axis and inhibit ALDH activity to reverse chemoresistance in GBM CSCs. We showed that DS/Cu is cytotoxic to GBM cells and completely eradicated the resistant CSC population at low nanomolar levels in vitro. We also demonstrated that DS/Cu effectively inhibited GBM in vivo using newly formulated PLGA-DS nanoparticles.”[2])

    இப்புதிய ஆய்வுக்காகத்தான் இவருக்கு வெள்ளிப்பதக்கத்தை ஐக்கிய இராச்சியத்தின் நாடாளுமன்ற அறிவியல் குழுவே தந்துள்ளது. இப்பரிசுக்குத் தேர்வாகும்முன்  இவர் பிரித்தானிய நாடாளுமன்ற  மக்களவையில் (House of Commons) தன் ஆய்வைப்பற்றி விளக்கவுரையை அறிஞர்கள் முன் ஆற்றினார்.

    கடைசியாக இன்னொன்றையும் சொல்ல வேண்டும். இவருடைய 410 பக்க முனைவர்ப்பட்ட ஆய்வு ஆழுரையில் 3-ஆவது பக்கத்தில் அவருடைய படைப்பைத் தன் தாய்தந்தையருக்குக் காணிக்கையாக்கியிருக்கின்றார். அதில் இரண்டு திருக்குறள்களைத் தமிழிலேயே எழுதியும் இருக்கின்றார்.  இது நடந்திருப்பது இங்கிலாந்தில் என்பதும் குறிப்பிடத்தகுந்தது. இதனைப் படத்தில் பார்க்கவும் .

     a2

    முனைவர் வினோது கண்ணப்பன் அவர்களின் முனைவர்ப்பட்ட ஆய்வு ஆழுரையின் 3-ஆவது பக்கத்தில் இரண்டு திருக்குறளைச் சுட்டி தன் தாய்தந்தையருக்குக் காணிக்கைசெய்த பக்கத்தின் படி.

    முனைவர் வினோது கண்ணப்பன் அவர்களின் அறிவியல் வெற்றியைப் பாராட்டி மேன்மேலும் சிறக்கவேண்டும் என்று வல்லமை வாழ்த்துகின்றது.

    [1] தைம்சு ஆஃபு இந்தியா செய்தி (Times of India), ‘’Coimbatore youth wins accolades in U.K for work on anti-cancer drug’’
    [2] Vinodh Kannappan,  ‘’ Investigation of the anticancer activity and molecular mechanisms of Disulfiram in Glioblastoma Multiforme’’  Ph.D Thesis, June 2015, University of Wolverhampton
    [3] ஆங்கில விக்கிப்பீடியா பக்கம்: https://en.wikipedia.org/wiki/Disulfiram#/media/File:Disulfiram2.svg
    [4] ஆங்கில விக்கிப்பீடியா பக்கம் https://en.wikipedia.org/wiki/Disulfiram#/media/File:Disulfiram_3D_ball.png படம் ஆக்குநர்: பயனர் Jyntoவ்

    Share
  • அயற்சொற்களைத் தமிழ் வழக்கில் எழுதுவோம்

    செ.இரா. செல்வக்குமார்.

     

     அயற்சொற்களைத் தமிழ் வழக்கில் எழுதுவோம்

    வேற்றுமொழிச்சொற்கள் இல்லாமல் எழுதுதல் தனித்தமிழ். ஆனால் அப்படியான தனித்தமிழ் எப்பொழுதும் எங்கும் இருந்ததே கிடையாது, இருக்கவும் முடியாது. ஆனால் எல்லோருக்கும் புரியும்படியாகவும் தமிழ்வேரிலிருந்து கிளைக்கும் நல்ல தமிழ்ச்சொற்களை எடுத்தாண்டு நல்ல இலக்கணத்தைப் பின்பற்றி எழுதலாம் என்பதே குறிக்கோள். தமிழ் மரபுக்கு மீறிவரும்பொழுது ஒலியைத் தோராயமாகக் காட்ட எழுதலாம். கிரந்தம் இல்லாமல் எழுதுவதால் தமிழில் 66+ 13 = 79 எழுத்துகள் குறைவாகப் பயன்படுத்தலாம். எழுத்தைக் குறைப்பது மட்டுமே நோக்கமன்று, வேறுபல சிக்கல்களில் இருந்தும் பிழைக்கலாம். மிஞ்சிப்போனால் ஃக, ஃப, ஃச ஆகிய மூன்று காற்றொலிகளைச் சிறுபான்மையாகப் பயன்படுத்தலாம். இதுவும் கூடவே கூடாது எனச்சொல்வோர் உண்டு. அவர்களின் கூற்றில் நல்லறிவுரையும் உள்ளது. எனவே இயன்ற அளவு இயல்பான தமிழிலேயே எழுதலாம். எளிமையைப் போற்றுவோம் என்பதே குறிக்கோள்.

    எண் அயற்சொல் பொது வழக்கு தமிழ் வழக்கு
    1 Big பிக் பெரிய/பிய்கு [பி’க்’கு’]
    2 Biscuit பிஸ்கேட் பிசுக்கோத்து
    3 Bore போர் (அடிக்கிறது) துளை/ஆழ்துளை/போர்
    4 Bow போ / பவ் வில்/இருகண்ணி முடிச்சு/போவ்
    5 Bra பிரா பிரா/கச்சை
    6 Bread பிரட் பிரெடு
    7 Broadway பிராட்வே பிராடுவே
    8 Chaddi (Hindi word) ஜட்டி சயிட்டி
    9 Charles Darwin சார்லஸ் டார்வின் சார்லசு தார்வின்
    10 Deutschland டாய்ச்லாந்து இடாய்ச்சுலாந்து
    11 Dublin டப்ளின் தபுலின்
    12 Fancy பேன்சி பேன்சி
    13 Germany ஜெர்மனி செருமனி
    14 Great கிரேட் பெரிய/பேரரருமை/கிரேட்டு
    15 Greed கிரீட் பேராசை/கிரீடு
    16 Greet கிரீட் வாழ்த்து/கிரீட்டு
    17 HariKi ஹரிகி அரிகி
    18 Hsuan Tsang யுவான்சுவாங் உவான்சுவாங்கு
    19 Hyundai ஹூண்டாய்/ஹண்டே ஃகூண்டை/குயுண்டை/உயுண்டை/ஃகுயுண்டை
    20 Jam ஜாம் பழக்களி/நெரிதடை/சாம்
    21 Japan ஜப்பான் சப்பான்
    22 Kasthuri கஸ்தூரி கத்தூரி
    23 Kushboo குஷ்பு குட்பு
    24 Laddu லட்டு இலட்டு/உலட்டு
    25 Lakh லட்சம் இலட்சம்
    26 Lead லீடு ஈயம்/முன்செலி/வழிகாட்டி/இலீடு
    27 League லீக் குழு/இலீகு
    28 Leak லீக் கசிவு/இலீக்கு
    29 Load லோடு சுமை/உலோடு
    30 London லண்டன் இலண்டன்
    31 Mississippi மிஸ்ஸிஸிப்பி மிசிசிப்பி
    32 Missouri மிஸ்ஸௌரி மிசௌரி
    33 Pig பிக் பன்றி/பன்னி/பிக்கு
    34 Pour போர் ஊற்று/போர்
    35 Robert Clive ராபர்ட் கிளைவ் இராபர்ட்டு கிளைவ்
    36 Rod ராடு கம்பி/இராடு
    37 Rupa Devi ரூபாதேவி உரூபாதேவி
    38 Rupee ரூபாய் உருபாய்
    39 Russia ரஷ்யா உருசியா
    40 San Francisco ஸான் ஃபிரான்ஸிஸ்கோ சான் பிரான்சிசுக்கோ/சான் பிரான்சிசிக்கோ
    41 Shailaja ஷைலஜா சைலசா
    42 Spa ஸ்பா நலநீர்க்குளி/ இசுப்பா
    43 Stephen Hawking ஸ்டீஃபன் ஹாக்கிங் இசுட்டீபன் ஆக்கிங்கு
    44 Stepney ஸ்டெப்னி வைப்பாழி/தெப்பினி
    45 Store ஸ்டோர் கடை/இசுட்டோர்/சேமி
    46 Story ஸ்டோரி கதை/இசுட்டோரி/அடுக்கு
    47 Street ஸ்டிரீட் தெரு/இசுற்றீட்டு
    48 Sure ஷ்யூர் உறுதி/சுயூர்
    49 Times Now டைம்ஸ் நவ் தைம்சு நவ்
    50 Xuanzang யுவான்சுவாங் சுவான்சுவாங்கு

     

     

     

    Share
  • இந்தவார வல்லமையாளர்!

     

    செ.இரா. செல்வக்குமார்

    சீனிவாசவரதன்

    இந்தக் கிழமையின் வல்லமையாளர் வியப்பூட்டும் ஒரு கணிதவியலாளர்.

    உலகத்திலே பல்லாயிரக்கணக்கான துறைகளும் கலைகளும் உள்ளன. கடந்த 5000-6000 ஆண்டுகளாக மாந்தர்கள் வாழ்வியல் வரலாற்றை ஒருசேர எண்ணிப்பார்த்தால் வியப்பே ஏற்படுகின்றது. என்றாலும், மிகவும் வியப்பூட்டும் வளர்ச்சியானது கடந்த 200-300 ஆண்டுகளில்தான் நிகழ்ந்துள்ளதெனில் அது மிகையாகாது.  அதிலும் குறிப்பாக அறிவியல், கணிதம் ஆகிய அடிப்படைத்துறைகளிலும் அதன் பயன்பாட்டுத்துறைகளாகிய பொறியியல், மருத்துவம் முதலிய துறைகளிலும் கடந்த 70-150 ஆண்டுகளில் ஏற்பட்ட வளர்ச்சிதான் மிகப்பெரியது.  வெறும் 150 ஆண்டுகளுக்கு முன்னால் போனாலே  மாட்டுவண்டிக்காலம்தான்.  மகிழுந்து, தொலைபேசி, வானூர்தி,  தொலைக்காட்சி,  கணினி, இணையம், மரபணுவியல், முதலியவை எதுவும் தோன்றியிருக்கவில்லை அல்லது மிகவும் தொடக்கநிலையிலே இருந்தன.

    இத்தனைக்கும் அடிப்படையான அறிவியல் என்னும் துறையில் உலகத்தில்  பெரிதும் போற்றப்படும்  இந்தியர்கள் ஒருசிலரே. அறிவியலாளர்களில்  இயற்பியல்  நோபல் பரிசு பெற்றவர்களாகிய  உயர்திரு ச.வெ. இராமன் (சர். சி.வி. இராமன்),  உயர்திரு. சுப்பிரமணியன் சந்திரசேகர் (1910 –1995) ஆகியவர்களோடு அண்மையில்  வேதியியல் நோபல் பரிசுபெற்ற  உயர்திரு. வெங்கடராமன் (வெங்கி’’) இராமக்கிருட்டிணன் (பிற. 1952) அவர்களையும் பலரும் அறிந்திருப்பார்கள்.  உயர்திரு. இராமக்கிருட்டிணன் அவர்கள் புகழ்பெற்ற பிரித்தானிய இராயல்  சொசையிட்டி  (Royal Society) என்னும்  வேந்தியக் குமுகத்தின் தலைவராகவும் இருக்கும் பெருமை பெற்றவர்.   ஒப்பரிய கணிதமேதை சீனிவாச இராமானுசன் அவர்களைப் பற்றியும் அறிவோம்.

    நோபல் பரிசு போலவே புகழ்பெற்ற  கணிதத்துறைக்கான பரிசு ஏபல் பரிசு (Abel Prize).  இதனை ஆபல் பரிசு என்றும் அழைப்பர். இப்புகழ்மிகுந்த பரிசைப்பற்றி தமிழுலகில் அவ்வளவாகப் பலரும் அறிந்திருப்பதில்லை. இவ்வுயரிய பரிசைப்  பெற்ற தமிழராகிய பேராசிரியர் சாத்தமங்கலம் .அரங்க ஐயங்கார் சீனிவாச வரதன் (சா. அர. சீனிவாச வரதன், S.R. Srinivasa Varadhan)  (பிறப்பு சனவரி 2, 1940) அவர்களை அறிந்துகொள்வோம். இப்பெரும் புகழாளரே  இந்தவார வல்லமையாளர்.

    பேராசிரியர் சா.அர. சீனிவாச வரதன் அவர்களின் தந்தையார்  திரு. அரங்க ஐயங்கார் சென்னைக்கு அருகே ஏறத்தாழ 30 கி.மீ தொலைவில் உள்ள பொன்னேரி என்னும் ஊரில் உள்ள போர்டு உயர்நிலைப்பள்ளியில் அறிவியல் கற்பிக்கும் பள்ளி ஆசிரியராக இருந்து தலைமை ஆசிரியராக உயர்தவர்.  அங்கே பள்ளியில் படிக்கும்பொழுதே சீனிவாச வரதன் அவர்களுக்குக் கணக்குப்பாடங்களில் மிகுந்த ஆர்வம் ஏற்பட்டுவிட்டது. அதற்குக் காரணம் அங்கு இருந்த கணக்கு ஆசிரியரே.  அவர் ஆர்வம் காட்டிய மாணவர்களைத் தன்வீட்டுக்குக் கிழமை இறுதி நாள்களான சனி ஞாயிறு போன்ற விடுமுறை நாள்களில் அழைப்பார்.  ஆர்வத்தைத்தூண்டும் கணக்குகளை விளையாட்டும் போட்டியும் போல மாணவர்களுக்குக் கொடுப்பார். கணக்குப் போடுவது கூட களிப்பூட்டும் ஒன்றாக இருக்கும் என்பதை சீனிவாச வரதன் அவர்கள்  அப்பொழுதே உணர்ந்தார்.  பள்ளிப்படிப்பை முடித்தவுடன் சென்னையில் (அப்பொழுது மதராசு)  உள்ள மாநிலக்கல்லூரியில் கணிதவியலில் இளநிலை படிப்பை முடித்தார்.  ஓராண்டிலேயே முதுநிலைப் பட்டமும் 1960  இல் பெற்றுவிட்டு,  தன்  அகவை 20 இல் கொல்கத்தாவில் உள்ள புகழ்மிக்க இந்திய புள்ளியியல் கழகத்தில்  (Indian Statistical Institute)  புள்ளியியலிலே மேற்படிப்பு படிக்கப்போனார். புள்ளியியல் படித்தால்  தொழிலகங்களில் நல்ல வேலை கிடைக்கும் என நம்பியிருந்தார்.  புள்ளியியல்வழி தரக்கட்டுப்பாடு (Statistical quality control)  பற்றிப் படித்தால் நல்லது என நினைத்து 6-8 மாதங்கள் படித்தும்பார்த்து அவருக்கு நிறைவு ஏற்படவில்லை.  அப்பொழுது அங்கே இருந்த வரதராசன் பார்த்தசாரதி,  அரங்காராவ்  ஆகியவர்களுடன் சேர்ந்து  கணிதநோக்கில் நிகழ்தகவு (வாய்ப்பியல்) (probability) என்னும் துறையில் புகுந்தார்.  அப்பொழுதிலிருந்து அவருடைய வியப்பூட்டும் வளர்ச்சி தொடங்குகின்றது.

    கொல்கத்தாவின் இந்தியப் புள்ளியியல் கழகத்தில் (இ.பு.க, ISI) இருந்த புகழ்மிக்க கலயம்புடி இராதாகிருட்டிணராவ் (க. இரா. இராவ் C.R. Rao)  அவர்களின் மாணவராக மாறினார்.   உலகப்புகழ்பெற்ற  ஆந்தரே நிக்கொலாவிச்சு கோல்மொகுரோவ் (Andrey Nikolaevich Kolmogorov ) என்னும் உருசிய ஆய்வாளர்  1962 ஆம் ஆண்டு ஒரு மாதம்  இந்தியப் புள்ளியியல் கழகத்துக்கு வருகை தந்திருந்தார்.  சீனிவாச வரதன் அவர்களின் முனைவர்ப்பட்ட ஆய்வுரையை  1962 இலேயே அவரிடம் கொடுத்து  அவரைத் தேர்வாளராக இருக்கச் செய்தார்கள். அவர் சீனிவாச வரதன் அவர்களுடைய ஆய்வுரையை உருசியாவுக்கு எடுத்துப்போய்  அங்கே மாசுக்கோவில் இருந்து கீழ்க்காணுமாறு  வியந்து மடலில் எழுதினார்  [2]

    ‘’ This is not the work of a student, but of a mature master.’’
    (இது ஒரு மாணவரின் ஆய்வன்று, முதிர்ச்சியடைந்த கலைநிறைஞனுடையது)

    தன்னுடைய 23 ஆவது வயதில்  திரு சீனிவாச வரதன் எழுதி கோல்மொகுரோவ் பாராட்டிய முனைவர்ப்பட்ட ஆய்வுரையின் தலைப்பு

    Convolution Properties of Distributions on Topological Groups
    (இடவியல் குழுக்களில் பகிரமைப்புகளின் புணர்த்தொகை)

    தன் 23-ஆவது அகவையிலேயே அமெரிக்காவில் நியூயார்க்குப் பல்கலைக்கழகத்தின்  புகழார்ந்த கூராந்து கணிதவிய அறிவியல் கழகத்தில் (Courant Institute of Mathematical Sciences)  முதுமுனைவராகச் சேர்ந்தார்.  24 ஆவது வயதில்  தன்னைவிட 7 வயது இளைய வசுந்தரா என்பாரை மணந்தார்.   தன் 32-ஆவது அகவையிலேயே நியூயார்க்குப் பல்கலைக்கழகத்தில் முழுநிலைப் பேராசிரியராக உயர்ந்தார்.  இது அரியதோர் உயர்ச்சி. இவருடைய கணிதவியல் கண்டுபிடிப்புகளைப் பொதுமக்கள் புரிந்துகொள்வது கடினம், ஆனால் அவை மிகவும் அடிப்படையானவை அறிவானவை என உணர்ந்த அறிவுலகம் அவருக்குப் பல பரிசுகளைத் தந்து பெருமைப்படுத்தியுள்ளது.   சிலவற்றை மட்டுமே இங்கு குறிப்பிடமுடியும்.

    அமெரிக்க கணிதக்குமுகமான அமெரிக்க மேத்தமேட்டிக்கல் சொசையிட்டியும் ( American Mathematical Soceity) இலண்டனின் வேந்தியக் குமுகமும் (Royal Society of London) சேர்ந்து வழங்கும் சியார்ச்சு தாவீடு பிர்க்காஃபு பரிசை ( George David Birkhoff Prize) 1994 இல் வென்றார்.

    அமெரிக்க மேத்தமேட்டிக்கல் சொசையிட்டி தரும்  இலிராய் பி. இசுட்டீல் பரிசை ( American Mathematical Soceity’s  Leroy P Steele Prize) 1996 இல் வென்றார்.

    சீனிவாச வரதன் அவர்கள் ஆய்வு செய்த இன்னொரு கணிதக் களமான பெரிய விலகுமைகள் (large deviations) என்பதில் இவர் செய்த ஆழ்ந்த ஆய்வுகளுக்காக 2007  ஆம் ஆண்டில் ஏபல் பரிசு வழங்கினார்கள்.  ஏபல் பரிசுக்குழு எழுதிய பரிசுரையில்  அவருடைய 1966 ஆம் ஆண்டு ஆய்வுக்கட்டுரையைக் குறிப்பிட்டுக் கீழ்க்காணுமாறு எழுதினார்கள் [3]

    In his landmark paper ‘Asymptotic probabilities and differential equations’ in 1966 and his surprising solution of the polaron problem of Euclidean quantum field theory in 1969, Varadhan began to shape a general theory of large deviations that was much more than a quantitative improvement of convergence rates. It addresses a fundamental question: what is the qualitative behaviour of a stochastic system if it deviates from the ergodic behaviour predicted by some law of large numbers or if it arises as a small perturbation of a deterministic system? The key to the answer is a powerful variational principle that describes the unexpected behaviour in terms of a new probabilistic model minimizing a suitable entropy distance to the initial probability measure. In a series of joint papers with Monroe D Donsker exploring the hierarchy of large deviations in the context of Markov processes, Varadhan demonstrated the relevance and the power of this new approach. A striking application is their solution of a conjecture of Mark Kac concerning large time asymptotics of a tubular neighbourhood of the Brownian motion path, the so-called ‘Wiener sausage’. Varadhan’s theory of large deviations provides a unifying and efficient method for clarifying a rich variety of phenomena arising in complex stochastic systems, in fields as diverse as quantum field theory, statistical physics, population dynamics, econometrics and finance, and traffic engineering. It has also greatly expanded our ability to use computers to simulate and analyze the occurrence of rare events. Over the last four decades, the theory of large deviations has become a cornerstone of modern probability, both pure and applied.’’

    இவ்வளவு புகழ்மிக்க ஆய்வுகள் செய்துவரும்பொழுதே  இவர் இருமுறை கூராந்து கணிதவிய அறிவியல் கழகத்தின் இயக்குநராகவும் பணிபுரிந்திருக்கின்றார் (1980-84 , 1992-94).

    அமெரிக்காவிலேயே ஆகப்பெரிய பெருமையாகிய தேசிய அறிவியல் பதக்கத்தைNational Medal of Science) அமெரிக்கக் குடியரசுத்தலைவர் பராக்கு ஒபாமா 2010 இல் வழங்கினார்.

    கணிதத்தைத் தவிர இவருக்கு வேறு எதில் ஆர்வம் என்றால் பயணம் செய்வதும் தமிழும் தமிழ் இலக்கியமும் எனக் கூறியுள்ளார். அவர் அமெரிக்கக் கணிதக்குமுகத்துக்கு அளித்த நேர்காணலில் கூறியவற்றை அவர் கூற்றாகவே கேட்கலாம் [2]

    ‘’ I like reading Tamil literature, which I enjoy. Not many people in the world are familiar with Tamil as a language. It is a language which is 2,000 years old, almost as old as Sanskrit. It is perhaps the only language which today is not very different from the way it was 2,000 years ago. So, I can take a book of poetry written 2,000 years ago, and I will still be able to read it. To the extent I can, I do that.’’

    இவருடைய பெருமைமிகு வாழ்க்கையில் பெரும் துன்பகரமான நிகழ்ச்சியும் ஒன்றுள்ளது. இவருக்கு கோபால், அசோக்கு என இரண்டு  மகன்கள். 1969 ஆம் ஆண்டு பிறந்த  மூத்த மகன் கோபால் 2001  ஆண்டு ஆகத்து மாதத்தில் நியூயார்க்கில் கேண்டர் ஃபிட்சுகெரால்டு (Cantor Fitzgerald) என்னும் நிறுவனத்தில் இயக்குநராகச் சேர்ந்தார்.  ஒருமாத காலத்தில் செப்டம்பர் 2001 இல் உலகவணிகக் கோபுரங்களின் மீது வானூர்தி மோதி ஏற்பட்ட கொடுநிகழ்வில் எதிர்பாராது இறந்துபோனார்.

    2008 ஆம் ஆண்டு இந்தியா இவருக்குப் பதும பூசன் விருது வழங்கி பெருமைப்படுத்தியது. அகவை 76 ஆனாலும், இன்றும் ஆழமான ஆய்வுரைகளை எழுதிவெளியிடுகின்றார் [4].

    பேராசிரியர் சீனிவாச வரதன் தன் நண்பர்களால் ‘’ரகு’’ என அழைக்கப்படுகின்றார். அவருடைய நியூயார்க்குப் பல்கலைக்கழகத்தின் இணையப் பக்கத்தில் அவருடைய அண்மைய ஆய்வுக்கட்டுரைகளின் குறிப்புகள் உள்ளன. [4]
    இவ்வார வல்லமையாளரான ஏபல் பரிசாளர்   பதுமபூசன், அமெரிக்கத்தேசிய அறிவியல் பதக்கம் வென்ற பேராசிரியர் சீனிவாச வரதன் அவர்களைப் பாராட்டி மகிழ்கின்றோம்.

    [1] பல குறிப்புகள் இதிலிருந்து பெற்றவை: http://www-groups.dcs.st-and.ac.uk/history/Biographies/Varadhan.html
    [2] M Raussen and C Skau, Interview with Srinivasa Varadhan, Notices Amer. Math. Soc. 55 (2) (2008), 238-246.
    {3] The Abel Prize 2007.
    {4] http://math.nyu.edu/people/profiles/VARADHAN_SRS.html
    [5] படம் பெற்ற இடம் http://www.paulcarlislekettler.net/s-r-srinivasa-varadhan-awarded-national-medal-of-science/varadhan/

    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    செ. இரா.செல்வக்குமார்

     a2

    நோபல்பரிசாளர் பி.வா. ஆண்டர்சன் அவர்களுடன் பேராசிரியர் க.பாசுக்கரன்

    இந்தக் கிழமையின் வல்லமையாளர் வியப்பூட்டும் ஓர் அறிவியலாளர்.

    மிக எளிய குடும்பத்தில் பிறந்து உலகப்புகழ் எட்டியிருக்கும் இவருடைய வியத்தகு வாழ்க்கை நமக்கெல்லாம்  மிகுந்த உள்ளூக்கம் தரக்கூடியது. .

    தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டத்தில் விளாத்திக்குளம்  என ஓர் ஊர் உள்ளது. அதன் அருகே கரிசற்குளம் (கரிசல்குளம்) என்று ஒரு சிற்றூர். அங்கேதான் வாழ்ந்துவந்தனர் இவருடைய குடும்பத்தினர்.   ஒரு சமயம் பெரிய பஞ்சம் ஒன்று ஏற்பட்டதால் இவருடைய தந்தையார்  திரு. கணபதி அவர்கள் குடும்பத்தோடு மதுரையில் குடியேறினார்.  கணபதி அவர்கள் 2-ஆம் வகுப்புவரைதான்  படித்திருக்கின்றார்.  இந்தவார வல்லமையாளரான  பேராசிரியரும் முனைவருமான  க. பாசுக்கரன்  (க’. பா’ஸ்க’’ரன்) அவர்களுடன்  உடன்பிறந்தவர்கள் 7 பேர்.   மொத்தம் 10 பேர் கொண்ட  இவருடைய குடும்பத்தினர்  வெறும் 2-அறை கொண்ட  சிறிய வீட்டில் வசித்தனர். எளிய பொருளாதார வசதி படைத்த இவர் குடும்பத்தில் 8-ஆவது வரை ஒருவர் படித்தால் உடனே வேலைக்குப்போவதே வழக்கம்.  பாசுக்கரன் அவர்கள் 5-ஆவது வகுப்பு படிக்கும்வரை வீட்டில் மின்விளக்கு கிடையாது. மதுரையில் புனிதமேரி பள்ளியில் படித்த இவர் மண்ணெண்ணெய் விளக்கிலும் தெருவிளக்கிலுமே படித்தார்.  ஒவ்வொரு வகுப்பிலும் குறைந்த மதிப்பெண் பெற்று எப்படியோ தேறி வந்தார்.  கணக்குப்போடுவதும்  ஆங்கிலத்திலும் தமிழிலும் பிழையில்லாமல் எழுதுவதும் கடினமாக உணர்ந்தார்.  ஆனாலும் ஆசிரியர்  பாடம் நடத்துவதைக் கூர்ந்து கேட்டு வந்தார்.  பள்ளிப்படிப்பு வரை தமிழ்வழியில் பயின்ற இவர் பி.யூ.சி என்னும் (இன்றைய படிப்பில் பிளசு-2 –வின் இறுதியாண்டு)  படிப்பில்தான் முதன்முதலாக ஆங்கிலவழி படித்தார். முதலில் கடினமாகவே இருந்தது.  பி.யூ.சி-யில் இரண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்று  மதுரை தியாகராசர் கல்லூரியில் இயற்பியல் படிப்பில் இளநிலையில் (B.Sc) சேர்ந்தார்.  ஒருமுறை இவர் 70% மதிப்பெண் பெற்றதைப் பார்த்து, ‘’நீ இன்னமும் நல்ல மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்’’ என்று இவருடைய துறைத்தலைவர் பேராசிரியர் செயராமன் அவர்கள் இவரிடம் கூறினார். அதைக் கேட்டதுமுதல் இவர் பாடத்தில் உற்றுகவனிக்கத் தொடங்கி மிகுந்த அக்கறை எடுத்தார்.  அதன் பயனாய் பட்டப்படிப்பில் முதல்வகுப்பில் முதல் மாணவனாகத் தேர்ச்சிப் பெற்றார்.

    பேராசிரியர் வாட்டர்லூ, கனடாவில்
    பேராசிரியர் வாட்டர்லூ, கனடாவில்

    அதன்பின் ஏறுமுகம்தான்.  அடுத்து அமெரிக்கன் கல்லூரியில் இயற்பியலில் முதுநிலை   பட்டம் பெற்றார்.  பல்கலைக்கழகத்திலேயே முதலிடம் பெற்றார். பெங்களூரில் உள்ள இந்திய அறிவியற்கழகத்தில் (Indian Institute of Science,) சேர்ந்து திண்மநிலை இயற்பியலில் (Solid State Physics) முனைவர்ப்பட்டம் பெற்றார்.  இவர் குடும்பத்தில் பட்டப்படிப்பே படிக்காதவர் நடுவில் இவர் புகழ்மிகு உயர்கல்விக்கழகத்தில்  முனைவர்ப்பட்டம் பெற்றிருக்கின்றார். நோபல் பரிசு பெற்ற அப்துசு சலாம் (Abdus Salam) அவர்கள் இத்தாலி நாட்டின் வடகிழக்கேயுள்ள திரீசித்தே ( Trieste) என்னும் நகரில் 1964 ஆம் ஆண்டு  நிறுவிய அனைத்துலக கொள்கைய  இயற்பியல் நடுவத்தில்  (International Centre for Theoretical Physics (ICTP)) குளிர்கால பயிற்சிப் பட்டறை ஒன்றில் பங்குகொள்ள இவருக்கு அரிய வாய்ப்பு கிட்டியது.  இந்த நிறுவனம் ஐ.சி.டி.பி (ICTP) எனப்பரவலாக அறியப்படுகின்றது.  பிறகு அங்கேயே (ஐ.சி.டி.பி –யில்) வேலையும் கிடைத்தது. இதுவொரு திருப்புமுனை!! அங்கே வந்தார் அமெரிக்காவில் உள்ள பிரின்சிட்டன் பல்கலைக்கழகத்தில் (Princeton University) பேராசிரியராக இருந்த நோபல் பரிசுபெற்ற அறிவியலாளர்   பிலிப்பு வாரன் ஆண்டர்சன் (Philip Warren Anderson) என்பார். இவர் மீகடத்தித்துறை (superconductor) ஆய்வில் மிகுபுகழ் எட்டியவர்.  அவருடன் நடந்த அறிவியல் கருத்துறவாட்டத்தின் பயனாய் அமெரிக்காவில் பிரின்சிட்டன் பல்கலைக்கழகத்திலேயே வருகைதரு பேராசிரியராகச் செல்ல வாய்ப்பு கிட்டியது.  இந்தியாவின் மிக உயர்ந்த அறிவியல் விருதாகிய சாந்தி சொரூப்பு பட்டுநாகர் விருதை (Shanti Swarup Bhatnagar Prize) இவர் 1990 இல் வென்றிருக்கின்றார். அதற்கும் முன்பாக  நோபலியர் அப்துசு சலாம் அவர்களின் ஐ.சி.டி.பி நிறுவனத்தின் முதல் விருதாகிய ஐ.சி.டி.பி பரிசை 1983 இல் வென்றார்.  இப்பரிசு 40 வயதுக்கும் குறைவான  வளரும் நாட்டு அறிவியலாளர் ஒருவருக்கு வழங்கப்பெறும் விருது.  இவர் நோபல் பரிசு பெற்ற ஆண்டர்சன் அவர்களுடன் இணைந்து ஆய்விதழ்களில் ஆய்வுக்கட்டுரைகள் எழுதியுள்ளார்.

    சிலவகைப் பொருள்களில் எதிர்மின்னிகளைத்  (electron) தனித்து இயங்கும் உருப்படிகளாகக் கருதாமல் அவற்றினிடையே வலுவான ஒத்தியங்கும் நுண்பிணைப்பு கொண்ட  ( developed the resonating valence bond theory)  தன்மை உடையதாகக் கருதப்படும் அமைப்புகள் பற்றிய ஆய்வில் பாசுக்கரன் அவர்கள் உலகளவில் முன்னணி ஆய்வாளர் இத்துறையில் இவர் நோபலியர் பி.வா. ஆண்டர்சன் அவர்களுடன் சேர்ந்து கருத்தியக் கொள்கைகளை உருவாக்கியிருக்கின்றார்.  இக்கருத்துகள் உயர்வெப்ப மீகடத்தித்துறையில் (high temperature superconductor) மிகவும் முக்கியமானவை. இவருடைய படைப்புகளுக்காக இவருக்கு நோபல்பரிசு கிடைத்தாலும் கிடைக்கக்கூடும். இவர் கனடாவில் வாட்டர்லூ நகரில் உள்ள புகழ்மிக்க பெரிமீட்டர் கழகம்  (Perimeter Institute) என்னும் கொள்கைய இயற்பியல் (Theoretical Physics) ஆய்வுக்கழகத்தில் வருகைதரு அறிவியலாளராக வந்துபோய்க்கொண்டு இருக்கின்றார்.  இதுமட்டுமல்லாமல் அமெரிக்கா, சப்பான், பிரேசில், பிரித்தானியா, இடாய்ச்சுலாந்து (செருமனி)  போன்ற பலநாடுகளுக்குச் சென்று அறிவியல் ஆய்வுரைகள் வழங்கிவருகின்றார்.   இந்திய அக்காதெமி ஆஃபு சயன்சு, இந்திய நேசனல் சயன்சு அக்காதெமி  போன்ற அமைப்புகள்  இவரை சிறப்பாளராக (Fellow) அறிவித்துப் பெருமைப்படுத்தியுள்ளன. இவர் சென்னையில் இந்திய அறிவியற்கணிதக் கழகத்தில் (The Institure of Mathematical Science) பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்றிருக்கின்றார். இவர் தமிழ்மொழிக்கும் அரிய தொண்டு ஆற்றிவருகின்றார் என்பது சிறப்பாகக் குறிப்பிடத்தகக்து. முழுமை அறிவியல் உதயம் என்னும் இதழில்  ஐன்சுட்டீனின் பொதுச்சார்பியல் கொள்கையின்  (Einstein’s General Theory of Relativity) 100-ஆவது ஆண்டுநிறைவை ஒட்டி விரிவான  பெருங்கட்டுரைத் தொடர் ஒன்றைத் தமிழில் அண்மையில் எழுதியுள்ளார்.  இத்தொடரின் கடைசி கட்டுரை எழுதியவுடன்  தற்செயலாய் இதற்கு முத்தாய்ப்பு வைத்தாற்போல் பொருளீர்ப்பு அலைகளை  (Gravitational waves) பிப்பிரவரி 11, 2016 அன்று  LIGO என்னும் ஆய்வுநிறுவனத்தார் செய்முறையில் கண்டுநிறுவினார்கள்.

    arivial

    தெருவிளக்கில் படித்து  உலக அளவில் அறிவியலாளராக உயர்ந்த, நோபல் பரிசாளருடன் இணைந்து கட்டுரை எழுதிய, பெருமைமிகு விருதுகள்  பலபெற்ற பேராசிரியர் க. பாசுக்கரன் அவர்களை இந்தவார வல்லமையாளாராக அறிவித்து மகிழ்கின்றோம். அவருக்கு நம் பாராட்டுகள்.

    நூற்துணையும் குறிப்புகளும்:
    [1] புதிய தலைமுறை இதழ் (23, ஆகத்து 2010)

    [2] தமிழ்விக்கிப்பீடியா கட்டுரை க. பாசுக்கரன் (https://ta.wikipedia.org/s/2yzm)

    [3] ஆங்கில விக்கிப்பீடியா [https://en.wikipedia.org/wiki/Ganapathy_Baskaran

    [4] முழுமை அறிவியல் உதயம் இதழ்.

    [5] செ.இரா.செல்வக்குமாரிடம் நேரில் தெரிவித்த செய்திகள்.

    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    செ.இரா. செல்வக்குமார்

    இந்த வார வல்லமையாளர் கம்சாயினி குணரத்தினம்

    29-02-2016

    Kamsa

    வல்லமையின் இவ்வார வல்லமையாளராகப் பாராட்டப்பெறுபவர் அகவை 27 நிரம்பிய செல்வி கம்சாயினி குணரத்தினம் (Khamshajiny Gunaratnam) என்னும் தமிழ்ப்பெண்.  இவர் ஐரோப்பாவிலுள்ள நோர்வே நாட்டின் தலைநகரான ஓசுலோ (Oslo) நகரின் துணை நகரமுதல்வர் (Deputy Mayor) பதவியை  அடைத்திருக்கின்றார்.  உலகிலேயே மனிதவளத்தில் முதலிடத்தில் இருக்கும் நோர்வே நாட்டின் தலைநகரமும் அந்நாட்டின் மிக அதிக மக்கள் தொகையும் கொண்ட இந்நகரத்தின் துணை நகரமுதல்வர்  என்பது மிகவும் பெருமைவாய்ந்த பொறுப்பு மிகுந்த பதவி.

    நோர்வே நாட்டின் உழைப்பாளர் கட்சியின் (Labour Party) உறுப்பினரான இவர் முதன்முதலாக  2007 ஆம் ஆண்டில் தன் 19 -ஆவது வயதில் ஓசுலோ மாநகரதின் குழுவில் ஓர் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.  அதன் பின்னர் பல பொறுப்புகளுக்குப் பின் ஓசுலோவின் நகரத் துணைமுதல்வர் பதவியை எட்டினார்.

    ஓசுலோவுக்கு வடமேற்கே உள்ள தைரி ஏரியில் உள்ள அதோயா (Utøya) தீவில்  ஆண்டுதோறும் உழைப்பாளர் கட்சியின் இளைஞர்களுக்கான  முகாம் ஒன்று நடைபெறும்.  2011 ஆம் ஆண்டு நடந்த இந்த முகாமில்  கம்சாயினி குணரத்தினம் அவர்களும் கலந்துகொண்டார். அவ்வாண்டு ஏறத்தாழ 600 இளைஞர்கள் அதில் கலந்துகொண்டனர்.  இந்த முகாமில்  சற்றும் எதிர்பாராமல் ஆந்தேசு பிரெவீக்கு (Anders Breivik ) என்பார் புகுந்து  துப்பாக்கியால் ஒவ்வொருவராகக் குறிவைத்துச் சுட்டு மாபெரும் படுகொலை செய்தார். 69 பேர் உயிரிழந்தனர், 110 பேர் படுகாயம் அடைந்தனர்.  பலர் பாறைகளுக்கு இடுக்கில் மறைந்துகொண்டும், ஏரியில் குதித்தும் உயிர்பிழைக்க முயன்றனர். ஏரியில் குதித்து நீந்தித்தப்பிக்க முயன்றவர்களைக் குறிவைத்துச் சுட்டுக் கொண்டிருந்தபொழுதும், கம்சாயினி குணரத்தினம் துணிவாக விடாமுயற்சியுடன் நீந்தி 500 மீட்டர் தொலைவைக் கடந்து கரையேறி தப்பித்தார். அப்பொழுது அவருக்கு வயது 23. வீரத்துடனும் நல்வாய்ப்பாகவும் இவர் உயிர்தப்பியது வியப்பூட்டுவது.

    கம்சி (Kamzy ) என்னும் பெயரால் தன்னை அழைத்துக்கொள்ளும் இவர் மார்ச்சு மாதம் 27 ஆம் நாள் 1988 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் பிறந்தார். தனக்கு அகவை 3 இருக்கும்பொழுதே நோர்வே நாட்டுக்குத் தன் பெற்றோருடன் குடிபெயர்ந்தார். முதலில் நோர்வே நாட்டில் வடக்கே மீன்பிடித்துறையில் இவரின் பெற்றோர்கள் பணியில் இருந்தார்கள். சில ஆண்டுகள் கழித்து இவருடைய தம்பியோடு இவருடைய பெற்றோர்,  தம் குழந்தைகள் தமிழ் படிக்க வசதியாக இருக்குமென நினைத்து ஓசுலோ நகரத்திற்குக் குடிபெயர்ந்தனர்.  ஓசுலோவின் தமிழ் இளைஞர் நிறுவன  (Tamil Youth Organisation) விழாவொன்றுக்கு வந்திருந்த ஓசுலோ நகர முதல்வர் இரேமந்து யோகான்சன் (Raymond Johansen) அவர்களைச் சந்திக்க  ஒரு வாய்ப்பு கிட்டியது.  அப்பொழுது யோகான்சன் அவர்கள் இவரை பெரிதும் ஊக்கப்படுத்தினார்.  அதன் பின்னர் கம்சி ஓசுலோ பல்கலைக்கழகத்தில் குமுக அமைப்பியல் துறையில் படித்துப் பட்டம் பெற்றார்.  அரசியலில் பங்குபற்றி நற்பணிகள் செய்து, நற்பெயர் ஈட்டி ஐரோப்பாவின் தலைகநகரமொன்றின் நகரத் துணைமுதல்வர் பதவியை இப்பொழுது எட்டியுள்ளார்.

    kam

    கம்சாயினி குணரத்தினம் அவர்களுக்கு வல்லமை குழுவின் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கின்றோம். தன் பதவியில் சிறப்பு எய்தவும்  மேலும் பல உயர்ச்சிகள் எட்டவும்  வாழ்த்துகின்றோம்.

    [1] https://www.facebook.com/khamshajiny/?fref=ts
    {2] https://en.wikipedia.org/wiki/Khamshajiny_Gunaratnam ; https://ta.wikipedia.org/s/4t3j
    {3] http://www.theguardian.com/women-in-leadership/2015/dec/22/my-ambition-is-to-be-a-voice-for-those-who-dont-or-cant-speak-their-mind

    [இந்த வார வல்லமையாளராக தங்கள் கவனத்தைக் கவருபவர் எத்துறையைச் சார்ந்தவராக இருப்பினும் நம் வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், vallamaiselva@gmail.com , vallamaieditor@gmail.com ஆகிய முகவரிகளில்  தங்கள் பரிந்துரைகளை அனுப்பி வைக்கலாம்.  மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]

    _______________________________________________________

    Share