Author: செ. இரா. செல்வக்குமார்

  • இந்த வார வல்லமையாளர்

    செ. இரா.செல்வக்குமார்

    இந்த வாரத்தின் வல்லமையாளர் அருமையான நற்பணிகள் ஆற்றிவரும் ஓர் இளம் பெண். மிகவும் பயனுடைய கணினி மொழிகள், கணினி நிரல்நுட்பங்கள் பற்றிய ஏழு (7) மிக அருமையான, மின்னூல்களைத் தமிழில் எழுதியுள்ளார் திருவாட்டி நித்தியா துரைசாமி (“நித்யா துரைசாமி”) அவர்கள்

    இதில் இன்னொரு சிறப்பு என்னவென்றால், இந்நூல்கள் அனைத்தையும் இலவசமாக அனைவரும் தரவிறக்கிப் பயன்கொள்ளும்படியாகக் “கிரியேட்டிவ் காமன்சு” (Creative Commons) என்னும் உரிமத்தின் கீழ் வழங்கியிருக்கின்றார். இந்நூல்களை யாரும் திருத்தியோ விரிவாக்கியோ சுருக்கியோ மீண்டும் இதே உரிமத்தின் கீழ் அதன் விதிகளுக்குட்பட வெளியிடலாம். பிறருடன் பகிரலாம். வணிகநோக்கில் ஆசிரியர் பெயருடனும் இதே உரிமத்தின் கீழ் வெளியிடலாம். நித்தியா அவர்களின் நூல்கள் கணியம் வெளியீடுகளாக அவருடைய கணவர் வல்லமையாளர் திரு. த. சீனிவாசன் அவர்கள் நடத்தும் “Free Tamil EBooks” (இலவசத் தமிழ் மின்னூல்கள்) அமைப்பின் வழி வெளியிட்டுள்ளார்கள்.

    திருவாட்டி நித்தியா அவர்கள் எழுதிய நூல்களைக் கீழே பட்டியலில் காணலாம்.


    மேலுள்ள நூல்களைக் கணியம் வலைத்தளத்திலிருந்து பெற்றுக்கொள்ளலாம் (http://www.kaniyam.com/)

    திருவாட்டி நித்தியா சென்னையில் பிறந்தவர். காஞ்சிபுரத்தில் உள்ள சிரீ சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கணினிப் பயன்பாடுகளில் இளங்களைப் பட்டம் (B.C.A) பெற்றார். காகினிசண்டு (Cognizant) நிறுவனத்தில், தரவுக்கிடங்கு செய்தேர்வுத் துறையில் (Datawarehouse Testing) பணிபுரிகிறார். அண்மையில் சிலகாலம் இங்கிலாந்தில் மாஞ்செசுட்டர் (Manchester) நகரத்தில் பணியாற்றிவிட்டு இப்பொழுது தாம்பரத்தில் இருந்து பணியாற்றுகின்றார்.

    இவருக்கு எப்படி இந்த நூலாக்கப்பணிகளுக்கு உந்துதல் ஏற்பட்டது என்று கேட்டபொழுது அவர் கூறியது:

    “எனது உந்துதலுக்கு காரணம் – நான் என்னை மேம்படுத்திக் கொள்வதற்காக எடுக்கும் பல முயற்சிகளில் ஒரு முயற்சியாக முதன் முதலில் ஒரேஒரு கணினி சார்பான நூலை தமிழில் எழுதினேன். அதற்கு மாபெரும் வரவேற்ப்பு கிடைத்தது. பலரும் “உங்களது நூல் பயனுள்ளதாக இருக்கிறது; தமிழில் படிக்கும் போதுதான் எங்களுக்கு முழுதாகப் புரிகிறது” என்று மின்னஞ்சல் அனுப்பினார்கள். அவர்களே நான் தொடர்ந்து பல நூல்களை எழுதுவதற்கு காரணமானவர்கள்.”

    பாரதியாரின் கனவாகிய “தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம் பரவும் வகை செய்தல் வேண்டும். பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ்மொழியில் பெயர்த்தல் வேண்டும்” என்பனவற்றை நிறைவேற்றுவதில் தன்னுடைய பங்களிப்பு இருப்பதை மகிழ்வுடன் கூறுகின்றார்.


    கணினிநுட்பம் பற்றி இதுகாறும் 7 மின்னூல்கள் எழுதிய நூலாசிரியர் நித்தியா துரைசாமி . படம் அவருடைய முகநூலிலிருந்து

    இவர் தன்னுடைய முதல் நூலாகிய

    எளிய தமிழில் MySQL என்னும் நூலை எழுதியதைப் பாராட்டி செல்வா-குமரி அறக்கட்டளை சார்பாக இவருக்கு உருபாய் 5000 பரிசு வழங்கப்பெற்றது. சென்னையில் செப்டம்பர் 30, 2013 இல் நடந்த தமிழ் விக்கிப்பீடியாவின் 10-ஆவது ஆண்டுநிறைவு விழாவில் இவருடைய மற்ற நூலுக்கும் உருபாய் 6500 பரிசு வழங்கப்பெற்று பாராட்டப்பெற்றார்.


    கணினிநுட்பம் பற்றிய மின்னூல்கள் எழுதிய நூலாசிரியர் நித்தியா துரைசாமி அவர்கள் தமிழ் விக்கிப்பீடியாவின் 10-ஆவது ஆண்டுநிறைவு விழாவில் பரிசு பெறுகிறார் . படம் அவருடைய முகநூலிலிருந்து

    திருவாட்டி நித்தியா அவர்களின் எதிர்காலத்திட்டங்கள் குறிக்கோள்கள் பற்றிக் கேட்டபோது, கீழ்க்காணுமாறு கூறினார், “எதிர்காலக் குறிக்கோள் – தமிழில் புத்தகங்களை புதுப்புது தொழில் நுட்பங்களுக்கு ஏற்ப எழுதிக்கொண்டே இருக்க வேண்டும். சிறந்த பேச்சாளராக ஆகவேண்டுமென்ற ஆசையும் உண்டு. எந்தஒரு கால கட்டத்திலும் நான் பார்க்கும் வேலையை விட்டுவிடாமல், அதில் பெரிய மேலாளர் பதவியை அடைய வேண்டும் என்றும் ஆசை. சமீப காலமாக நடனத்தில் ஈடுபாடு வந்துள்ளது. எனவே சிறப்பாக நடனம் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆசையும் வந்துவிட்டது”. இப்படியாகப் பல நல்ல குறிக்கோள்களுடன் அருமையாக உழைத்து வருகின்றார்.

    குறுகிய 3 ஆண்டுகளில் 7 அருமையான கணினிநுட்ப நூல்களை இவர் எழுதியதைப் பாராட்டி திருவாட்டி நித்தியா துரைசாமி (“‘நித்யா துரைசாமி”) அவர்களுக்கு ஆகத்து மாதம் 29 ஆம் நாளுக்கான இந்த வார வல்லமையாளராக அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகின்றோம். கணவர் த. சீனிவாசன் அவர்களும் வல்லமையாளர் ஆகையால் இளம் வல்லமையாளர் குடும்பமாகவே ஆகிவிட்டனர். இவர்களுக்கு வியன் என ஒரு மகன் இருக்கின்றார்.

    .

    [சில வரிகள் சேர்த்துப் புதுப்பிக்கப்பட்ட நாள் செப்டம்பர் 7, 2017]

    Share
  • இந்த வார வல்லமையாளர்

    செ. இரா.செல்வக்குமார்

    இந்த வாரத்தின் வல்லமையாளர் அனைவரும் எதிர்பார்த்திருந்த 2016 இரியோ-தி-செனரோ ஒலிம்பிக்குப் போட்டிகளில் ஒற்றையர் பெண்கள் இறகுப் பந்தாட்டப்போட்டியில் வெள்ளிப் பதக்கம் பெற்ற பு. வே. சிந்து (P.V. Sindhu) அவர்களே

    . அகவை 21 நிரம்பிய, தெலிங்கானா மாநிலத்தைச் சேர்ந்த இவர் இந்தியாவுக்குப் பெருமை சேர்த்துள்ளார். இவரின் தந்தையார் திரு. பு.வே. இரமணா அவர்கள் இந்தியாவின் அருச்சுனா விருதை வென்றவர். சிந்து அவர்களின் தாயார் தந்தையார் ஆகிய இருவருமே புகழ்பெற்ற கைப்பந்தாட்ட விளையாட்டு வீரர்கள். பு. கோபிச்சந்து என்னும் புகழ்பெற்ற இறகுப்பந்தாட்ட வல்லுநர் மேற்பார்வையிலும் பயிற்றுவிப்பிலும் இவர் இறகுப்பந்தாட்டத்தில் மிகுசிறப்பான தேர்ச்சிபெற்றார். 2015 ஆம் ஆண்டில், இவருக்கு அகவை 20 இருக்கும்பொழுதே இந்தியாவின் நான்காவது உயர் விருதாகிய பதுமசிறீ (தாமரைத்திரு) வழங்கப்பட்டது. இவரே இவ்விருதைப் பெற்றவர்களில் அகவை குறைந்தவர்.

    இரியோ ஒலிம்பிக்கில் சிந்து அவர்கள் எசுப்பானியாவைச் சேர்ந்த கரோலினா மரின் மார்ட்டின் (Carolina Marín) என்பாருடன் விளையாண்ட தங்கப்பதக்கப் போட்டியில் வெற்றியடையாததால் வெள்ளிப்பதக்கம் பெற்றார். கரோலினா மரின் 19–21, 21–12, 21–15 என்னும் பெறுமதிப்பீட்டில் சிந்துவை வெற்றிகொண்டார்.


    இறகுப்பந்தாட்ட வீராங்கனை புசர்ல வெங்கட சிந்து.


    இறகுப்பந்தாட்ட வீராங்கானை புசர்ல செங்கட சிந்து நசோமி ஒக்குஃகாரா (Nozomi Okuhara) அவர்களை 21-19, 21-10 என்னும் பெறு மதிப்பீட்டில் வென்றபொழுது. .

    சிந்து அவர்கள் மிகப்பல பன்னாட்டுப் போட்டிகளில் வெற்றியாளாராக ஒளிவீசியிருக்கின்றார். கீழ்க்காணும் 6 வெற்றிகள் குறிப்பிடத்தக்கன


    இறகுப்பந்தாட்ட வீராங்கனை புசர்ல வேங்கட சிந்துவின் பன்னாட்டு வெற்றிகள் (தரவு விக்கிப்பீடியா) .

    மக்கள்தொகையில் 1.293 பில்லியன் பேர்கள் கொண்டு உலகின் இரண்டாவது பெரிய நாடாக இந்தியா இருந்த போதிலும் உலகளாவிய ஒலிம்பிக்குப் போட்டிகளில் இந்தியா அதிக பதக்கங்களை வெல்வதில்லை. 1900 ஆண்டுமுதல் இந்தியா உலக ஒலிம்பிக்குப் போட்டிகளில் கலந்துகொள்கின்றது. 1928-1956 ஆகிய காலப்பகுதியில் இந்தியா வளைதடியாட்டப் போட்டியில் ஆறுமுறை தொடர்ந்து தங்கப்பதக்கம் பெற்றது. அதன்பின் 1964 இலும் 1980 இலுமாக மேலும் இரண்டு தங்கப் பதக்கங்களை வென்றது. 2012 ஆம் ஆண்டு இலண்டன் மாநகரத்தில் நடந்த ஒலிம்பிக்குப் போட்டிகளில் மொத்தம் 6 பதக்கங்களைப் பெற்றதே மிக அதிகமாகப் பெற்ற பதக்கங்கள் ஆகும். இலண்டன் ஒலிம்பிக்குப் போட்டிகளில் உலக நாடுகளின் வரிசையில் இந்தியா 55 ஆவது இடத்தில் நின்றது. இது தவிர சீனாவில் பெய்சிங்கில் நடந்த ஒலிம்பிக்குப் போட்டிகளில் 3 பதக்கங்களை வென்றதுபோக மற்ற ஒலிம்பிக்குப் போட்டிகளில் ஒன்றிரண்டு பதக்கங்களே வென்றுள்ளது. அவற்றிலும் வெண்கலப்பதக்கங்களே அதிகம். 116 ஆண்டுகளில் கலந்துகொண்ட ஒலிம்பிக்குப் போட்டிகளில் இந்தியா மொத்தம் 28 பதக்கங்களே பெற்றுள்ளது (தங்கம் 9, வெள்ளி 7, வெண்கலம் 12). 2016 ஆம் ஆண்டு பிரேசிலில் உள்ள இரியோ-தி-செனரோ நகரில் நடந்த ஒலிம்பிக்குப் போட்டிகளில் இந்தியாவின் பு.வே. சிந்து பெற்ற வெள்ளிப்பதக்கமும், மற்போரில் அரியானா மாநிலத்தைச் சேர்ந்த சாக்சி மாலிக்கு என்னும் வீராங்கனை வென்ற வெண்கலப்பதக்கமும் சேர்ந்து மொத்தம் இரண்டே பதக்கங்கள் பெற்று உலக நாடுகளின் வரிசையில் 67 ஆவதாக நிற்கின்றது. இரியோ ஒலிம்பிக்கில் பதக்கம் பெறாவிட்டாலும், சீர்நடமியப் பயிற்சியில் (gymnastics) தீபா கர்மாக்கர் என்னும் பெண் நான்காவது இடத்தைப் பெற்றதையும் குறிப்பிடவேண்டும். புரொதுனோவா தாண்டல் (Produnova vault) என்னும் கடுமையான குதித்துத்தாண்டலை உலகில் மிகச்சிலரே செய்துள்ளனர். 2016 ஒலிம்பிக்கில் இதனை வெற்றியுடன் செய்துகாட்டியும் நான்காவது இடத்தையே தீபா கர்மாக்கர் பெற்றார். பு.வே. சிந்து, சாக்சி மாலிக்கு, தீபா கர்மாக்கர் ஆகிய மூன்று இளம் பெண்மணிகளும் இந்தியாவுக்குப் பெருமைசேர்த்த ஒலிம்பிக்குத் திறமையாளிகள்.

    2016 இரியோ ஒலிம்பிக்குப் போட்டியில் இறகுப்பந்தாட்டப் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற பு.வே. சிந்து அவர்களைப் பாராட்டி இவ்வார வல்லமையாளராக அறிவித்து வாழ்த்துகின்றோம்.

    Share
  • இந்த வார வல்லமையாளர்

    செ. இரா.செல்வக்குமார்

    இப்பதிவு சூலை 18, திங்கட்கிழமைக்கான வல்லமையாளர் தேர்வுக்குரியது. அக்கிழமையின் வல்லமையாளர் விருதுக்காக, 2016 ஆண்டுக்கான கார்னிகி கார்ப்பொரேசன் கிரேட்டு இம்மிகிரண்டு (பெரும்புகழீட்டிய குடியேறியவர்) விருது பெற்ற திரு. அரி சீனிவாசன் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்

    ஒவ்வொரு ஆண்டும் கார்னிகி நிறுவனத்தார் பெரும்புகழ் ஈட்டிய குடியேறிய அமெரிக்கர்களுக்கு விருதுகள் வழங்குகின்றார்கள். 2016 இல் நான்கு இந்திய கொடிவழி குடியேறிகளுக்கு இவ்விருது வழங்கப்பெற்றது. 30 நாடுகளைச் சேர்ந்த மொத்தம் 42 பேர் இவ்விருதைப் பெற்றார்கள். இந்தியர்களில் கூகுளின் சுந்தர் பிச்சை, பி.பி’.எசு (PBS) என்னும் பொது அலைபரப்பக நிறுவனத்தின் முக்கிய செய்தி நிகழ்ச்சியாகிய நியூசு அவர் (PBS NewsHour) மூத்த செய்தியாளர் அரி சீனிவாசன், அமெரிக்காவின் மெக்கின்சி (McKinsey) கம்பெனியின் தலைவர் விக்கிரம் மல்கோத்திரா, நேசனல் நூல் திறனாய்வு வட்டத்தின் பரிசுபெற்ற நூலாசிரியர் பாரதி முக்கர்ச்சி ஆகியோர் இருந்தனர்[1]. செய்தி ஊடகத்தில் அரி சீனிவாசன் (Hari Sreenivasan) அவர்களின் வளர்ச்சி சிறப்பானது.


    அரி சீனிவாசன் (Hari Sreenivasan) . படம் [3]

    1974 ஆண்டு மும்பையில் பிறந்த அரி சீனிவாசன் அமெரிக்காவுக்கு வருகையில் அவருக்கு அகவை 7. அமெரிக்காவில் மேற்கே உள்ள வாசிங்கடன் மாநிலத்தில் சீயாட்டில் நகரத்தில் நேத்தன் ஃகேல் உயர்நிலைப்பள்ளியில் (Nathan Hale High School) படித்தார். 1995 இல் பியூச்சே சவுண்டு பல்கலைக்கழகத்தில் (University of Puget Sound) மக்கள் செய்தித்தொடர்பியலில் (mass communication) இளங்கலைப் படிப்பை முடித்துவிட்டு, வட கரோலினா மாநிலத்தில் இராலே (Raleigh) என்னும் நகரத்தில் என்.பி’.சி (NBC) -யைச் சேர்ந்த WNCN-TV என்னும் தொலைக்காட்சி நிறுவனத்தில் 1995 இல் முழுநேரப்பணியில் சேர்ந்தார். பின்னர் ஏபி’சி(ABC) செய்தி ஊடகத்திலும் பின்னர் சிபி’எசு (CBS) செய்தியூடக நிறுவனத்திலும் பணியாற்றிய பிறகு 2009 ஆம் ஆண்டு பொது அலைபரப்பக்கத்தில் சிம் இலேரர் நியூசவர் (Jim Lehrer NewsHour) என்னும் புகழ்பெற்ற செய்தி நிகழ்ச்சியில் முதலில் செய்தி தொகுப்பாளராகவும் இணையவழி செய்தி வழங்குபவராகவும் இருந்து பின்னர் மதிப்பு வாய்ந்த மூத்த செய்தியாளராகவும் நிலைத்த செய்திவாசிப்பாளராகவும் உயர்ந்தார். பொது அலைபரப்பகம் (PBS) என்பது விளம்பரங்கள் அதிகம் இல்லாமல், பொதுமக்களும் கொடையாளர்களும் தரும் நன்கொடையையும் இதன் அடிப்படையில் அரசின் உதவியையும் கொண்டு கட்சி சார்புகள், மத, இன சார்புகள் ஏதுமின்றி மிகுசிறப்பாகவும் ஆழமாக அலசியும் நேர்த்தியுடன் அளிக்கும் செய்தியூடகம். பொது அலைபரப்பகத்தின் நடுநிலைமையும் நிகழ்ச்சிகளின் நேர்த்தியும் பெரும்புகழ் பெற்றவை. இந்தியத்தலைமை அமைச்சர் நரேந்திர மோதீ அவர்கள் செப்டம்பர் 28, 2014 அன்று அமெரிக்காவுக்கு வந்தபொழுது அரி சீனிவாசனும் 2014 ஆண்டு அமெரிக்க அழகிபோட்டி வெற்றியாளரான நினா துவுலூரி அவர்களுமாகச் சேர்ந்து மாடிசன் சதுக்கத்தில் நிகழ்ந்த திரு மோதீயின் உரையாற்று நிகழ்ச்சியை நடத்திக்கொடுத்தார்கள்.

    அரி சீனிவாசன் சூலை 2016 இல் கார்னிகி நிறுவனத்தாரின் பெரும்பபுகழ் குடியேறி விருது பெற்றுள்ளார் [1].

    திரு அரி சீனிவாசன் அவர்களைப் பாராட்டி சூலை 18 ஆம் நாள் திங்கட்கிழமை தொடங்கும் கிழமைக்கான வல்லமையாளராக அறிவித்து வாழ்த்துகின்றோம்

    அடிக்குறிப்புகள்

    [1] India Aborad (http://www.indiaabroad-digital.com/indiaabroad/20160708?pm=1&fs=1&pg=3#pg3 )
    [2] English Wikipedia (https://en.wikipedia.org/wiki/Hari_Sreenivasan)
    [3] படம் கூகுள் பக்கம் (https://plus.google.com/u/0/+HariSreenivasan); http://www.pbs.org/newshour/author/hari-sreenivasan/

    Share
  • இந்த வார வல்லமையாளர்

    செ. இரா.செல்வக்குமார்

    இப்பதிவு சூலை 11, திங்கட்கிழமைக்கான வல்லமையாளர் தேர்வுக்குரியது. அக்கிழமையின் வல்லமையாளர் விருதுக்காக, அருமையான அறிவியல்நூல்கள் எழுதியுள்ள முனைவர் செயபாண்டியன் கோட்டாளம் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்

    சூலை 2, 2016 அன்று முனைவர் செயபாண்டியன் கோட்டாளம் அவர்கள் கோட்பாட்டுவேதியியலுக்கான அடிப்படைக்கணிதம் என்னும் 316-பக்க உயர்கணித நூலொன்றை அனைவரும் இலவசமாகத் தரவிறக்கிப் படிக்கும்படி வெளியிட்டுள்ளார் [1].
    இந்நூல் அறிவியல்-கணிதத் துறையின் ஆழங்குன்றாமல் எழுதப்பெற்றிருப்பது பெருஞ்சிறப்பு. இந்நூல் மட்டுமன்றி கடந்த சில ஆண்டுகளில் எட்டு அருமையான நூல்களை இலவசப்பதிப்பாக வெளியிட்டு தமிழுலகுக்கு அருந்தொண்டு ஆற்றியிருக்கின்றார். இவற்றுள் புகழ்பெற்ற ”One Two Three… Infinity: Facts and Speculations of Science” என்னும் தலைப்பில் சியார்ச்சு கேமாவ் (George Gamow) எழுதிய நூலின் தமிழாக்கத்தை ”ஒன்று , இரண்டு, மூன்று, முடிவிலி” என்னும் தலைப்பில் முனைவர் கோட்டாளம் மொழிபெயர்த்துள்ளார். இதேபோல தகுலசு ஆடம்சின் (Douglas Adams) “The Hitchhiker’s Guide to the Galaxy” என்னும் புகழ்பெற்ற நூலையும் தமிழில் ”பால்வீதியின் பயணிகளுக்கான ஒரு வழிகாட்டி” என்னும் தலைப்பில் மொழிபெயர்த்துள்ளார். அறிவியல் துறையில் எழுதுவோர்க்குப்பயன்படும் விதமாக அறிவியல் தொழில்நுட்ப இலக்கியங்களை தமிழாக்குவதற்கான ஒரு கையேடு என்னும் அருமையான நெடிய நூல் ஒன்றையும் எழுதியுள்ளார் [2].

    மகாகவி பாரதியாரின்
    ‘சென்றிடுவீர் எட்டுத் திக்கும் – கலைச்
    செல்வங்கள் யாவுங் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்!’

    என்னும் பொன்மொழிகளைச் செயற்படுத்திவரும் நற்றமிழர் இவர்.


    முனைவர் செயபாண்டியன் கோட்டாளம் . படம் [3]

    முனைவர் கோட்டாளம் அவர்கள் அமெரிக்காவில் மிச்சிகன் மாநிலப் பல்கலைக்கழகத்தில் 1984 ஆம் ஆண்டு முனைவர் பட்டம் பெற்றார். அதற்குமுன்பு சென்னையில் இருக்கும் இந்திய தொழினுட்பக்கழகத்தில் (ஐ.ஐ.டி-சென்னை) முதுநிலை அறிவியல் பட்டமும் சென்னைப் பல்கலைக்கழகத்தில் வேதியியலிலே இளநிலைப் பட்டமும் பெற்றார். இப்பொழுது அறிவியல் இலக்கியங்களைத் தமிழில் ஆக்குவதையும் மொழிபெயர்ப்பதையும் பேரார்வம் காட்டி உழைத்துவரும் இவர் பற்பல அமெரிக்க நிறுவனங்களில் பணியாற்றி பெரிய பொறுப்புகளில் இருந்துள்ளார். கிரே ஆய்வு (Cray Research), இசுட்ரக்சுரல் பயோ இன்ஃபர்மாட்டிக்சு (Structural Bioinformatics), இரியாக்ஃசன் திசைன் (Reaction Design) போன்ற பல நிறுவனங்களில் பணியாற்றியிருக்கின்றார். வேதியியலில் உயர்திறன் கணிமைகளில் இவர் பெரும்வல்லுநர். பெரும் நுண்ணறிவுபெற்ற இவர் தமிழில் நூல்கள் எழுதி தமிழ்ப்பணி ஆற்றுவது பெருமகிழ்ச்சி தருவது. இவர் ஆக்கிய அல்லது மொழிபெயர்த்த நூல்களை மின்வடிவில் யாரும் எளிதாக இலவசமாகத் தரவிறக்கிப் படிக்கும்படி செய்திருப்பதும் இவருடைய தொண்டுள்ளத்தைக் காட்டுகின்றது. இவரெழுதிய நூல்களைத் தரவிறக்கிப் படிக்க கீழ்க்காணும் பக்கத்தை அணுகவும்[4]. முனைவர் கோட்டாளம் அவர்கள் Journal of Chemical Physics, Journal of Statistical Physics, Biopolymers போன்ற அறிவியல் ஆய்விதழ்களில் தன்னுடைய கண்டுபிடிப்புகளை வெளியிட்டுள்ளார். சுபிரிங்கர் ஃபெர்லாகு (Springer Verlag) என்னும் பதிப்பகத்தாரின் நூலில் இவருடைய கட்டுரை ஒன்றும் வெளியாகியுள்ளது. புத்தாக்கப்படைப்புக்கான உரிமமும் பெற்றுள்ளார்.

    முனைவர் கோட்டாளம் அவர்கள் பல ஆண்டுகளாக அமெரிக்காவில் கலிபோர்னியா மாநிலத்தில் வாழ்ந்து வாழ்கின்றார்.

    முனைவர் செயபாண்டியன் கோட்டாளம் அவர்களின் அருமைமிகு அறிவியல் தமிழ்நூல் படைப்புத் தொண்டினைப் பாராட்டி அவரை சூலை 11, திங்கட்கிழமைக்கான வல்லமையாளராக அறிவித்து வாழ்த்துகின்றோம்.

    அடிக்குறிப்புகள்

    [1] https://drive.google.com/file/d/0BzwpbxABzaV5TXU4aVhRMy11SlU/edit
    [2] https://www.facebook.com/kottalam/posts/1247793848565202?pnref=story
    [3] படம்- முனைவர் கோட்டாளம் அவர்களின் முகநூல் (https://www.facebook.com/kottalam?fref=nf)
    [4] https://www.facebook.com/kottalam/posts/1247793848565202?pnref=story

    Share
  • இந்த வார வல்லமையாளர்

    செ. இரா.செல்வக்குமார்

    இப்பதிவு சூலை 4 ஆம் கிழமைக்கான வல்லமையாளர் தேர்வுக்குரியது [1]. அக்கிழமையின் வல்லமையாளர் விருதுக்காக பெட்னா (FeTNA) என்றழைக்கப்படும் வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது

    வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை தொடர்ந்து 29 ஆண்டுகளாக வட அமெரிக்காவில் அருமையான தமிழ்ப்பணி ஆற்றிவரும் ஓர் இலாபநோக்கமற்ற தன்னார்வலர்களால் ஆன குழுமம். ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கான தமிழ்க்குடும்பங்கள் தங்களின் வேலைநேரம் போக மீதிநேரத்தைத் தமிழுக்காக இரவும் பகலுமாக உழைத்து வியப்பூட்டும் ஒரு கலைவிழாவும் ஒன்றுகூடலும் வெற்றிகரமாக நடத்திவருகின்றார்கள். வட அமெரிக்காவில் இருக்கும் ஏறத்தாழ 40 தமிழ்ச்சங்கங்களின் ஒருங்கிணைந்த பேரவை இந்த பெட்னா என்பது.


    ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்காவின் விடுதலை நாளாகிய சூலை 4-ஐ ஒட்டி நான்கு நாள்கள் ஏதேனும் ஓர் அமெரிக்க நகரத்தில் பல்கலைவிழா எடுக்கின்றார்கள். இந்தியாவிலிருந்தோ தமிழர்கள் வாழுமிடங்களிலிருந்தோ தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழறிஞர்களையும் தமிழ்க்கலைஞர்களை வட அமெரிக்காவுக்கு வரவழைத்து பெருமைப் படுத்துகின்றார்கள். வட அமெரிக்காவில் வாழும் குழந்தைகளும் சிறார்களும் இளைஞர்களும் தமிழ்மொழி, தமிழ்க்கலை தமிழிலக்கியம் முதலியவற்றில் ஆழமாக ஆர்வம்பற்றிக்கொள்ளுமாறு மிகச்சிறப்பாக நிகழ்ச்சிகள் அமைத்து பெருவெற்றி கண்டுவருகின்றார்கள். ஒவ்வொரு ஆண்டும் 2000-3000 தமிழர்கள் ஒரு நகரத்தில் கூடி இவ்விழா எடுப்பது என்பது வட அமெரிக்காவில் எளிதன்று. இவ்விழா எடுப்பதை இந்தியத்துணைக்கண்டத்தின் பிறமொழியினத்தாரும் பெருமையுடன் பார்க்குமளவும் சிறப்பு வாய்ந்ததாகவுள்ளது.

    கடந்த சில ஆண்டுகளாக அமெரிக்கத்தமிழர் முன்னோடிகள் (Tamil American Pioneer) விருது என்னும் ஒன்றை நிறுவி, அறிவியல், தொழில்நுட்பம், மருத்துவம் போன்ற பல துறைகளில் பெரும்புகழ் நாட்டிய தமிழர்களைப் பெருமைப்படுத்தி வருகின்றார்கள். ஆர்வர்டு பல்கலைக்கழகத்தில் இருந்து பின்னர் இசுட்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருக்கும் இராசுச் செட்டி அவர்கள், ஐ.இ.இ.இ. (IEEE) -யின் மார்க்கோனி விருதுபெற்ற பேராசிரியர் பால்ராசு அவர்கள், மாந்த உரிமைகள் துறையில் நன்கறியப்பட்ட கனடிய நாடாளுமன்ற உறுப்பினர் கேரி ஆந்தசங்கரி அவர்கள் போன்ற பலரையும் பெருமைப்படுத்துவதைப் பார்க்கும் தமிழிளைஞர்கள் தமிழ்க்குமுகத்தின் மீதும் தமிழர்களின் வெற்றிகளின் மீதும் ஆர்வம் ஏற்பட்டு ஈர்க்கப்படுகின்றார்கள். இளைஞர்களுக்குச் சிறந்த எடுத்துக்காட்டுகளாக இருக்கின்றார்கள்

    ஒவ்வொரு ஆண்டும் தமிழுக்குத் தொண்டாற்றிய சிலரையோ அல்லது முக்கிய நிகழ்ச்சியையோ முதன்மைப்படுத்தி விழா எடுக்கின்றார்கள். சென்ற ஆண்டு வீ.ப.கா. சுந்தரம் அவர்களின் நூற்றாண்டு விழாவாகக் கொண்டாடப்பட்டது. 2014 ஆம் சுந்தரேசனார் நூற்றாண்டு. 2013 ஆம் ஆண்டு தனிநாயகம் அடிகளார், 2012 ஆம் ஆண்டு மு. வரதராசனார் என்றும் அதற்கு முன்னதான ஆண்டுகளில் அறிஞர் அண்ணா, பெரியசாமி தூரன் என பலரின் நினைவை முன்னிறுத்திக் கொண்டாடித் தமிழ்பரப்புகின்றார்கள். 2016 ஆண்டாகிய இவ்வாண்டு நியூ செர்சியில் திரென்றன் (Trenton) நகரில் நடந்த பெட்னா விழாவைத் தனித்தமிழ் நூற்றாண்டு விழாவாகக் கொண்டாடினார்கள்.


    தனித்தமிழ் இயக்க நூற்றாண்டுவிழா . படம் [4]


    மேடையில் இளைஞர்களின் தமிழ்கலை முழக்கம் . படம் [5]

    வருமாண்டு (2017) அமெரிக்காவின் மினெசோட்டா (Minnesota) மாநிலத்தில் 30 ஆம் ஆண்டுவிழாவாகக் கொண்டாடவிருக்கின்றார்கள். 2016 ஆம் ஆண்டு பெட்னாவின் தலைவர் திரு. நாஞ்சில் பீற்றர் அவர்களுக்கும், அவருடைய அருமையான அணியினருக்கும் பாராட்டுகள் [3]. ஆர்வமும் உழைப்பும் மிக்க நற்றமிழர்கள் நல்லணியாக உழைத்து ஒவ்வொரு ஆண்டும் பெருஞ்சிறப்பு மிக்க விழா எடுத்து தமிழ்வளர்ப்பது மட்டுமல்லாமல் தமிழ்ச்சங்களின்வழி தமிழ்க்கல்வி, கலை, தமிழ்க்கலைப் போட்டிகள், கவிதை, இலக்கிய நிகழ்ச்சிகள் என ஆண்டுமுழுவதும் தணியாத ஆர்வ்த்துடன் தமிழ்வளர்க்கின்றார்கள். பெட்னாவின் தமிழ்ப்பணியை விரித்து எழுதினால் நூலாகிவிடும். பெட்னா தமிழ்ப்பணி வரலாற்றுப்புகழ் பெற்றதாகிவிட்டது. பெட்னாவின் நிகழ்ச்சிகளின் படங்கள் பலவற்றையும் இங்கேயும், இங்கேயும் காணலாம்.

    பெட்னாவின் தமிழ்ப்பணியைப் பாராட்டி சூலை 4 ஆம் கிழமையின் வல்லமையாளர் விருது பெறும் நிறுவனமாக அறிவிப்பதில் மகிழ்ச்சி கொள்ளுகின்றோம். பெட்னாவையின் அதை நடத்தும் அனைவரையும் பாராட்டுகின்றோம்.

    அடிக்குறிப்புகள்

    [1] இப்பதிவு சூலை 4 அன்று வரவேண்டியது. சில காரணங்களால் அதனை இன்றுதான் வெளியிட நேர்கின்றது.
    [2] http://www.fetna.org/
    [3] இக்கட்டுரை எழுத நிறைய செய்திகளையும் குறிப்புகளையும் என் வேண்டுதலுக்கு இணங்க நல்கிய, ந்லகுவித்த திரு நாஞ்சில் பீற்றர் அவர்களுக்கும், திருவாளர் தில்லை குமரன், சொக்கலிங்கம், மகேந்திரராசு, பொற்செழியன் இராமசாமி, முத்துசாமி செந்தில்நாதன், திருவாட்டி கீதாஞ்சலி பொன்முடி ஆகியோருக்கும் பிறருக்கும் என் நன்றி.
    [4] படம் தில்லை குமரன் அவர்களின் முகநூல் பக்கம்
    [5] பெட்னா தளம்

    Share
  • இந்த வார வல்லமையாளர்

    செ. இரா.செல்வக்குமார்

    இப்பதிவு சூன் 20 ஆம் கிழமைக்கான வல்லமையாளர் தேர்வுக்குரியது [1]. அக்கிழமையின் வல்லமையாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர் இமய மலையின் எவரெசுட்டு முகட்டின் உச்சியை எட்டிய தமிழகத்தின் முதல் தமிழர் அவில்தார் கே. சிவக்குமார் அவர்கள்


    இமயமலையின் எவரெசுட்டு முகட்டின் உச்சியை எட்டிய முதல் தமிழ்நாட்டுத் தமிழர் அவில்தார் கே. சிவக்குமார் அவர்கள். படம் [2]

    இந்தப் புவி உலக உருண்டையிலேயே ஆகப்பெரிய உயரமான மலை இமயமலையில் உள்ள எவெரெச்சுட்டு முகடே. இதன் உயரம் 8,848 மீட்டர். உலகத்தில் வட அமெரிக்காவிலோ, தென்னமெரிக்காவிலோ ஐரோப்பாவிலோ ஆப்பிரிக்காவிலோ, ஆத்திரேலியாவிலோ 7000 மீட்டர் உயரம் உள்ள மலைகூடக் கிடையாது. ஆசியாவைத் தாண்டி உள்ள உலகில் தென்னமெரிக்காவில் அருச்செண்டீனாவில் உள்ள அக்கான்காகுவா (Aconcagua) மலையே மிக உயரமானது. அதன் உயரம் 6,961 மீட்டர் மட்டுமே. ஆனால் இமயமலைத் தொடரில் 8,000 மீட்டர் உயரத்தை எட்டும் மலைமுகடுகளோ 14 உள்ளன! இமயமலைத்தொடரில் 7000 மீட்டரைத்தொடும் மலைமுகடுகள் 126 உள்ளன. இமயமலை அடுக்குத்தொடர் முழுவதுமே கரடுமுரடான, பனிமூடிய கொடுமுடிகள் நிறைந்தவை. இவற்றில் எவெரெசுட்டு மலையானது உலகின் உச்சி. இம்முகட்டை முதன்முதலாக எட்டியவர்கள் செர்ப்பா என்னும் மக்கள் இனத்தைச் சேர்ந்த தென்சிங்கு நோர்கே (Tenzing Norgay) என்பாரும் நியூசிலாந்தைச் சேர்ந்த எட்மண்டு இல்லரி (Edmund Hillary) என்பாருமே. இவர்கள் 1953 ஆம் ஆண்டு மே மாதம் 29 ஆம் நாள் காலை 11:30 மணிக்கு உச்சியை எட்டி அரியசெயல் செய்து உலகப்புகழீட்டினார்கள்[3]. அதற்குமுன் யாரும் இந்த உச்சியை எட்டவில்லை. 2010 ஆம் ஆண்டுவரை 3,142 பேர் உச்சியை எட்டியிருக்கின்றார்கள் [3]. இந்த எவரெசுட்டு முகட்டைத் தமிழ்நாட்டைச் சேர்ந்த தமிழர் எவரும் அவில்தார் கே. சிவக்குமார் அவர்கள் எட்டும்வரை எட்டவில்லை. ஆனால் மலேசியாவைச் சேர்ந்த தமிழர் மூவர் எட்டியுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மலேசியத் தமிழர்கள் திரு. மகேந்திரன் முனுசாமி (எவரெசுட்டை எட்டியது மே 23, 1997), திரு மோகனதாசு நாகப்பன் ((எவரெசுட்டை எட்டியது மே 23, 1997), திரு தி. இரவீந்திரன் (இவர் வடக்கே இருந்து திபெத்திலிருந்து ஏறிய முதல் ஆசியர்; உச்சியை எட்டியது 2013 இல்) ஆகிய மூவரையும் குறிப்பிடல் வேண்டும் [4]. ஆனாலும் தமிழகத்தைச்சேர்ந்த தமிழர் எவரும் திரு சிவக்குமார் எவெரெசுட்டை எட்டவில்லை.

    எவரெசுட்டு மலையை எட்ட முயன்று 200 உக்கும் மேலானவர் உயிர்துறந்துள்ளார்கள். மலையில் உச்சிப்பகுதிகளில் காற்றின் அழுத்தமும் உயிர்வாழ இன்றியமையாத உயிர்வளி எனப்படும் ஆக்சிசனின் அளவும் மூன்றில் ஒருபங்குதான் இருக்கும். கடல்மட்டத்தில் ஒரு மணித்துளிக்கு 20-30 மூச்சிழுப்புகள் இருக்குமென்றால், மலையின் உயரமான பகுதிகளில் அதே அளவு உயிர்வளியை மூச்சாக உட்கொள்ள ஒரு மணித்துளிக்கு 80-90 முறை மூச்சு இழுத்துவிடவேண்டும். எவெரெசுட்டுக் கொடுமுடியை எட்டி அரிய செயல் நாட்டியிருக்கும் அவில்தார் சிவக்குமார் அவர்களைப் பாராட்டி சூன் 20 ஆம் கிழமையின் வல்லமையாளராக அறிவித்து நம் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

    அடிக்குறிப்புகள்

    [1] இப்பதிவு சூன் 20 அன்று வரவேண்டியது. எதிர்பாராத காரணங்களால் அதனை இன்றுதான் வெளியிட நேர்கின்றது.
    [2] The Hindu, June 13, 2016
    [3] ஆங்கில விக்கிப்பீடியா ‘Mount Everest”
    [4] முகநூலில் ஐயை மணிமேகலை இராசன் அவர்கள் செ.இரா. செல்வக்குமார் பதிவில் கருத்திட்டதைத் தொடர்ந்து திரட்டிய செய்தி. ஆங்கிலவிக்கிப்பீடியா (https://en.wikipedia.org/wiki/M._Magendran ) (http://malaysianindianhistory.blogspot.ca/2013/08/t-ravindran-first-asian-to-conquer.html)

    Share
  • இந்த வார வல்லமையாளர்

    செ. இரா.செல்வக்குமார்

    இந்தக் கிழமையின் வல்லமையாளர் 2013-2014 ஆம் ஆண்டுக்கான தொல்காப்பியர் விருதுபெறும் முதுபெரும் தமிழறிஞர் சோ. ந. கந்தசாமியார் அவர்கள்

    மிகவும் புகழ்பெற்றவர் என்றாலும், இவருடைய பெயர் அண்மையில் அதிகமாக எடுத்துரைக்கப்படாமையால் அதிகம் அறியப்படாத பேரறிஞர். இவர் தமிழ்நாட்டில் அரியலூர் மாவட்டத்திலுள்ள, உடையார்பாளையம் வட்டத்தில் செயங்கொண்ட சோழபுரம் அருகில் உள்ள இலையூர் என்னும் ஊரில் திசம்பர் 15, 1936 இல் பிறந்தார். இவருடைய பெற்றோர் திரு சோ.நடராசனார், திருவாட்டி மீனாம்பாள் அம்மாள் ஆகியோர் ஆவர். கந்தசாமியார் தொடக்கக் கல்வியை இலையூரிலும், உயர்நிலைக் கல்வியை உடையார் பாளையத்திலும் தொடர்ந்தார். அதன்பின் அவர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து அங்கு இளங்கலை பொருளாதாரம் (1958) எம்.லிட்டு (1963), முனைவர்ப்பட்டம் (1971) ஆகியவற்றைப் பெற்றார். மொழியியல் பட்டயம், வடமொழிப் பட்டயம் ஆகியவற்றையும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பெற்றார். இவர் அறிஞர் அ.சிதம்பரநாதன் செட்டியார், தெ.பொ.மீ ஆகியோரின் மேற்பார்வையில் நேரடியாகக் கற்றார் என்பதும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.[1]


    மூதறிஞர் சோ.ந. கந்தசாமியார். படம் [1]

    இவர் தாக்கம் ஏற்படுத்திய பல நூல்களை ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதியுள்ளார். அவற்றுல் சில கீழே பட்டியலிடப்பட்டுள்ளன [1]:

    இலக்கிய நூல்கள்:
    சங்க இலக்கியத்தில் மதுரை
    திருக்குறள் கூறும் உறுதிப்பொருள்
    இலக்கியமும் இலக்கிய வகையும்
    தமிழிலக்கியச் செல்வம் (ஐந்து தொகுதிகள்)
    திருமுறை இலக்கியம்
    திருமுறையில் இலக்கிய வகை
    உலகத் தமிழிலக்கிய வரலாறு(கி.பி.501-கி.பி.900)
    மணிமேகலையின் காலம்
    பரிபாடலின் காலம்
    இலக்கியச்சோலையிலே

    இவை தவிர இவர் எழுதிய திறனாய்வு நூல்கள்:
    Bharathidasan As a Romantic Poet
    Anthology of Book Reviews
    தொல்காப்பியரின் இலக்கியக் கொள்கைகள்

    எழுதிய மொழிபெயர்ப்பு நூல்கள்:
    English Translation of Sundarar Devaram Volume I (patikam 1-50)
    Volume II(patikam 51-100) (Tota 1026 verses)
    Tirumantiram(Total 527 verses)

    இலக்கணம் பற்றிய நூல்கள்:
    தமிழிலக்கணச் செல்வம்(இரு தொகுதிகள்)
    தொல்காப்பியம் – எழுத்ததிகாரத் தெளிவு
    புறத்திணை வாழ்வியல்
    தமிழ் யாப்பியலின் தோற்றமும் வளர்ச்சியும்(மூன்று தொகுதிகள்)
    கலித்தொகை யாப்பியல்

    மொழியியல்:
    A Linguistics Study of Paripatal(M.Lit.Thesis)
    A Linguistics of Manimekalai

    தத்துவம்:
    தமிழும் தத்துவமும்
    தமிழிலக்கியத்தில் பௌத்தம்
    தமிழிலக்கியத்தில் அறிவாராய்ச்சியியல்
    இந்தியத் தத்துவக் களஞ்சியம் (மூன்று தொகுதிகள்)
    பௌத்தம்
    Buddhism As Expounded in Manimekalai(Ph.D. Dissertation)
    Indian Epistemology as Expounded in the Tamil Classics
    Tamil Literature and Indian Philosophy
    The Yoga of Siddha Avvai(Published in Canada)
    Advaitic Works and Thought in Tamil
    The Encounter Between saiva sidhanta and Advaita vedanta

    இவர் தாம் பயின்ற அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பேராசிரியர் பணியில் இருந்தார். பின்னர் மலேசியப் பல்கலைக்கழகத்திலும் (1979-85), தமிழ்ப் பல்கலைக்கழகத்திலும் (1985-1997), சில காலம் சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்திலும் தம் தமிழ்ப்பணியைத் தொடர்ந்தார். பாலிமொழிப் பாடல்கள் பலவற்றை மனப்பாடமாகச் சொல்லும் ஆற்றலுடையவர். கல்வெட்டுகளிலும் நல்ல புலமையுடையவர் [1].

    80 அகவை நிறையவிருக்கும் முதுபெரும் தமிழறிஞர் சோ. ந. கந்தசாமியார் அவர்கள் இந்தியக் குடியரசுத்தலைவரிடமிருந்து புகழ்மிக்க தொல்காப்பியர் விருது பெறவிருக்கின்றார் [2]. இவ்விருதோடு 5 இலட்சம் இந்திய உருபாய் பரிசும் உண்டு. தமிழாசானை வணங்கி இக்கிழமையின் வல்லமையாளராக அறிவிவித்துப் பாராட்டுகின்றோம். .

    அடிக்குறிப்புகள்

    [1] தமிழ் விக்கிப்பீடியாவில் பேராசிரியர் சோ.ந. கந்தசாமியார் அவர்களைப்பற்றிய கட்டுரை ( https://ta.wikipedia.org/s/57x ). முனைவர் மு. இளங்கோவன் அவர்களின் வலைப்பதிவு -http://muelangovan.blogspot.ca/2008/08/15121936.html
    [2] தமிழறிஞர் சோ. ந. கந்தசாமியார் அவர்களுக்குத் தொல்காப்பியர் விருது அறிவிப்பு. இந்து தமிழ் நாளிதழ் சூன் 8, 2016

    Share
  • இந்த வார வல்லமையாளர்

    செ. இரா.செல்வக்குமார்

    இந்தக் கிழமையின் வல்லமையாளர் உருசியத் தமிழறிஞர் பேராசிரியர் அலெக்சாந்தர் துபியன்சுக்கி (Алекса́ндр Миха́йлович Дубя́нский, Alexander Dubyansky) அவர்கள்.

    . இவருடைய 75 ஆவது அகவை ஏப்பிரல் 27 அன்று நிறைவுபெற்றதை ஒட்டி உலக அறிஞர்கள் இவரைப் பெருமைப்படுத்தும்முகமாக, பற்பல ஆய்வுக்கட்டுரைகள் நிறைந்த, தமிழ் தந்த பரிசு என்னும் தலைப்பில் 558 பக்க பாராட்டுமலர் (Festschrift) ஒன்றை வெளியிட்டுள்ளார்கள். இதில் தமிழில் கட்டுரைகள் ஏதுமில்லை எனினும், பெரும்பாலானவை தமிழைப்பற்றி ஆங்கிலத்திலும் உருசிய மொழியிலும் உலக அறிஞர்கள் கட்டுரைகள் எழுதியுள்ளார்கள். பேராசிரியர் சியார்ச்சு ஆர்ட்டு (George Hart), முனைவர் ஏவா வில்டன் (Eva Wilden), முனைவர் இழான் இலூக்கு செவியார் (Jean-Luc Chevellard) போன்ற பலர் கட்டுரைகள் எழுதியுள்ளனர்.


    பேராசிரியர் அலெக்சாந்தர் துபியன்சுக்கி அவர்களைப் பெருமைப்படுத்தும்முகமாக உலக அறிஞர்கள் எழுதிய கட்டுரைகள் அடங்கிய 558 பக்கப் பாராட்டுமலர் (Festschrift)படம்: இழான் இலூக்கு செவியார் (Jean-Luc Chevillard), சி-தமிழ் (CTamil) குழுமத்தில் அறிவிப்பு, மே 17, 2016)

    உலகிலேயே ஆகப்பெரிய நாடு உருசியா (Rassia). இந்த நாட்டில் தமிழ்க்கல்விக்கும் தமிழ்மொழிப் பதிப்புகளுக்கும் நெடிய வரலாறு உண்டு. குறைந்தது 50-60 ஆண்டுகள் வரலாறு உண்டு. முனைவர் மிகெயில் செர்கெயெவிச்சு ஆண்டிரனோவ் (Michail Sergeyevich Andronov Михаил Сергеевич Андронов) அவர்கள் 1960-களில் தமிழ் ஆய்வுக்கும் திராவிடமொழிகள் ஆய்வுக்கும் புகழ்பெற்றார். பலநூல்களும் ஆய்வுக்கட்டுரைகளும் எழுதியுள்ளார். அவரைத்தொடர்ந்து உருசியாவில் தமிழ்மொழியில் நல்ல புலமை பெற்றவர்களில் மாசுக்கோவைச் சேர்ந்த பேராசிரியர் அலெக்சாந்தர் துபியன்சுக்கி குறிப்பிடத்தக்கவர். இவர் தொல்காப்பியத்தைப் பற்றியும் சிலப்பதிகாரத்தைப்பற்றியும் உருசிய மொழியில் கட்டுரைகள் எழுதியுள்ளார் [1]. ஏறத்தாழ 110 ஆய்வுக்கட்டுரைகள் எழுதியுள்ளார் [2] இவர் எழுதியவற்றில் சில நூல்களையும் நெடிய ஆய்வுக்குறுநூல்களையும் (Monographs) குறிப்பிடல் பொருந்தும்:
    ஆய்வுக்குறுநூல்கள்:

  • Dubyansky, AM, Bychihina LV Tamil literature. – Moscow, 1987.
  • Dubyansky, AM ritual and mythological origins drevnetamilskoy lyrics. – M., 1989.
  • The AM Dubianski Ritual and Mythological the Sources of the The Early Tamil Poetry. – Groningen, 2000.
  • ஆய்வுக்கட்டுரைகள்:

  • Dubyansky, AM Tamil Nadu: Skanda-Murugan // Tree of Hinduism. / Ed. ed. J. AP Glushkov . – M., 1999. – P. 313-336.
  • Dubyansky, AM Drevnetamilsky eulogy and genre form attrupadey // In the seven languages ​​of Hindustan. Memory AS Sukhocheva. / Ed. ed. A. A. Suvorov . – M., 2002. – P. 27-43.
  • AM Dubianski Kanci: Theme is a poetical and a Plant // Pandanus 2000. the Natural Symbolism in Indian Literature. – Prague, 2000. – pp. 41-60.
  • AM Dubianski of The uvijai of the Themes and nocci in Tamil classical My Poetry // Pandanus’ 02. of Nature in the Art and Indian literatures. – Prague, 2002. – pp. 15-34.
  • Dubyansky, AM On the subject of so-called impermanence in Tamil poetry (kanchi-tiney) // Alaica: Collection of scientific works of Russian Orientalists, prepared for the 70th anniversary of Professor, Doctor of Historical Sciences LB Alaeva. / Ed. Ed. D. E. Nepomnin . – M., 2004. – P. 140-150.
  • AM Dubianski A theme is of a military Expedition in Cilappatikaram // India in Warsaw. A Volume to commemorate the 50-th Anniversary of the Post-War History of Indological Studies at Warsaw University (2003/2004). Ed. D. Stasik. – Warszawa, 2006. – pp. 227-235.
  • Dubyansky, AM Krishna poem Andal “Tiruppavey» // Smaranam. Memory Oktyabrina Feodorovna Volkova. / Comp. VG Lysenko . – M., 2006. – P. 101-121.
  • AM Dubianski of The Palai – landscape in Tamil poetry // Pandanus’ 07. of Nature in Literature, the Art, Myth and Ritual. – V. 1. Prague, 2007. – pp . 79-92.

  • பேராசிரியர் அலெக்சாந்தர் துபியன்சுக்கியும் எழுத்தாளர் செயகாந்தனும்.- சென்னையில். படம் கே. பிச்சுமணி, இந்து ஆங்கில நாளிதழ், சூன் 22, 2010 (Photo K. Pichumani, The Hindu, June 22, 2010) [1]

    பேராசிரியர் துபியன்சுக்கி ஏப்பிரல் 27, 1941 ஆம் ஆண்டு மாசுக்கோவில் பிறந்தார். இவர் மாசுக்கோ பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருக்கின்றார். இவர் நெதர்லாந்திலும் ஆய்வு செய்திருக்கின்றார். இவர் சரளமாகத் தமிழ்பேசவல்லவர். இவர் இளம் உருசிய தமிழறிஞர்களையும் ஆய்வாளர்களையும் உருவாக்கிவருகின்றார். இவருடைய பணியைப் போற்றி இவருக்குத் தென் ஆசிய கல்விக்கான குமுகத்தின் (The South Asian Studies Association) தலைசிறந்த கல்வியாளர் விருது(Exemplar Academic Awards) 2013 இல் வழங்கப்பெற்றது [3]. அப்பொழுது, இவர் எழுதிய நூல்களில் ஆங்கிலத்திலும் கிடைக்கும் கீழ்க்காணும் நூல்களைச் சுட்டியிருந்தனர்.

  • Ritual and Mythological Background of Ancient Tamil Lyrics (1989)
  • Tamil Literature: an Outline (in cooperation with L. Bychikhinam 1987)
  • Songs on Palm-Leaves. An Anthology of Ancient Tamil Lyrics (1979)
  • Ritual and Mythological Sources of the Early Tamil Poetry (2000)
  • தமிழ்வழங்கும் நிலங்களைத் தாண்டி, தமிழ்பால் ஆர்வம்கொண்டு, தமிழறிஞராக எழுந்து உருசிய நாட்டிலிருந்து தமிழுக்கு அரும்பணியாற்றும் 75 அகவை நிரம்பிய பேராசிரியர் அலெக்சாந்தர் துபியன்சுக்கி அவர்களைப் பாராட்டி வாழ்த்தி அவரை இந்தக் கிழமையின் வல்லமையாளராக அறிவிக்கின்றோம்.

    அடிக்குறிப்புகள்

    [1] இந்து ஆங்கில நாளிதழ, சூன் 22, 2010 (The Hindu, June 22, 2010, http://www.thehindu.com/news/cities/chennai/tamil-has-gravity-of-expression-not-found-in-any-language/article477828.ece )
    [2] உருசிய மொழி விக்கிப்பீடியா (https://ru.wikipedia.org/wiki/Дубянский,_Александр_Михайлович அல்லது http://bit.ly/1TxA9e4 )
    [3] http://sasaonline.net/awards/

    Share
  • இந்த வார வல்லமையாளர்

    செ. இரா.செல்வக்குமார்

    இந்தக் கிழமையின் வல்லமையாளர், தமிழ்க்கணிமை உலகில் தனிச்சிறப்புடன் தமிழுக்குத் தொண்டாற்றிவரும் பேராசிரியர் ஆ.க. இராமகிருட்டிணன் (A.G. Ramakrishnan) அவர்கள்.

    பேராசிரியர் இராமகிருட்டிணன் உத்தமம் (INFITT) என்னும் உலகத் தகவல் தொழினுட்ப மன்றம், 2016 இல் நடத்தவிருக்கும் 15-ஆவது தமிழிணையக் கருத்தரங்கின் தலைவராகப் பொறுப்பேற்றிருக்கின்றார். இது திண்டுக்கல்லில் காந்திகிராமத்தில் இவ்வாண்டு செப்டம்பர் மாதத்தில் நடக்கவிருக்கின்றது [4]. தமிழ்க்கணிமைக்கு சிறப்பான ஆக்கங்கள் செய்துள்ள இவர் இக்கருத்தரங்கிற்குத் தலைவராக இருப்பதைப்பாராட்டியும் இதையொட்டி தமிழர்கள் இவரைப்பற்றி அறிந்துகொள்ளும்பொருட்டும் இவர் இவ்வார வல்லமையாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

    தமிழில் வரிவடிவில் எழுதியுள்ள ஓர் எழுத்துரையைத் தமிழில் ஒலிவடிவப் பேச்சுரையாக கணினிவழி மாற்றும் செயலியை இவர் மிகச்சிறப்பான முறையில் செய்திருக்கின்றார். இதனை செய்துபார்க்கக் கீழ்க்காணும் சுட்டியைச் சொடுக்குங்கள்:

    எழுத்துரையை ஒலிவடிவப் பேச்சுரையாக மாற்றி.

    இதே போல கன்னட எழுத்துரையையும் ஒலியுரையாக மாற்றம் செய்யும் இந்தச் செயலி. பேராசிரியர் இராமகிருட்டிணனின் ஆய்வானது கண்பார்வை இல்லாதவர்களோ கண்பார்வை மங்கியவர்களோ ஓர் எழுத்துரையைக் காதால் எளிதாகக் கேட்டுணரும் வகையில் இருப்பது மிகவும் பயனுடையதாகும். இதே போல ஒருவர் கையால் தமிழிலோ கன்னடத்திலோ எழுதிய உரையைக் கணினி எழுத்துருக்களாக மாற்றவும் ஒரு செயலி செய்திருக்கின்றார். இதனை இந்திய ஒன்றிய அரசு ஏற்றுள்ளதும் குறிப்பிடத்தங்குந்தது [2].

    பேராசிரியர் இராமகிருட்டிணன், சென்னைப் பல்கலைக்கழகத்தில் பொறியியல் இளநிலைப் பட்டத்தை (BE) 1980 இல் பெற்றார். மின்னணுவியல் தொடர்பாடலியல் (communications) துறையில் அவருடைய பட்டம் இருந்தது. இவர் பல்கலைக்கழகத்தின் தேர்வில் வரிசைப்படி எட்டாவது மாணவராகத் தேர்ச்சிபெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் சென்னையில் உள்ள இந்திய தொழினுட்பக் கழகத்தில் (IIT Madras) முதுநிலை தொழினுட்பப் பட்டத்தை (M.Tech) 1982-இலும், அதே நிறுவனத்தில் பொறியியலில் முனைவர்ப்பட்டத்தை (Ph.D) 1989 இலும் பெற்றார். தற்பொழுது இந்திய அறிவியற்கழகத்தில் (Indian Institute of Science) பேராசிரியராகவும் மின்னியல் துறையின் தலைவராகவும் இருக்கின்றார்.

    மொழியியல்சார் கணிமைகள் போக, இவர் மருத்துவத்துறையில் படவுருவ அலசல்கள் செய்வதிலும் சிறப்பான ஆய்வுகள் செய்திருக்கின்றார். குறிப்பாக காந்த ஒத்ததிர்வு படவுரு (Magnetic Resonance Imaging) உருவாக்கும் நுட்பத்தில் புதிய வளர்ச்சிகளுக்கு வழி வகுத்துள்ளார். விரைவாகவும் துல்லியமாகவும் காந்த ஒத்ததிர்வுப்படங்களை உருவாக்க இவை உதவுகின்றன. மருத்துவத்துறையில் இவர் செய்துள்ள ஆய்வுகளைக் கீழ்க்காணும் பக்கத்தில் காணலாம்:

    மருத்துவத்துறையில் செய்துள்ள ஆய்வுகள் [3]


    பேராசிரியர் ஆ.க. இராமகிருட்டிணன், இந்திய அறிவியற்கழகம் (Indian Institute of Science) பெங்களூர் [1]

    பேராசிரியர் இராமகிருட்டிணன் அவர்களின் பொறுப்பில் நடக்கும் மைல் (MILE- Medical Intelligence and Language engineering Lab) (மருத்துவ நுண்ணறிதிறனுக்கும் மொழிசார் பொறியியலுக்குமான ஆய்வகம்) என்னும் ஆய்வகத்தின் வழி இவ்வாய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன [5]. பேராசிரியர் இராமகிருட்டிணன் பல விருதுகளையும் பெருமைகளையும் வென்றவர். 1992 இல் பெற்ற சர் ஆண்டுரு வாட்டு கே யங்கு ஆய்வாளர் விருதையும் (Sir Andrew Watt Kay Young Researcher’s Award), 1985 இல் இந்திய உயிரியமருத்துவத்துறையில் சிறந்த ஆய்வுக்கட்டுரைக்காகப் பெற்ற தங்கம் வாசுதேவன் விருது போன்றவையும், இந்திய உயிரிய மருத்துவப்பொறியியல் குமுகத்தின் (Biomedical Engineering Society) தலைவராக 2002 முதல் 2008 வரை இருந்ததையும் குறிப்பிடவேண்டும். இந்தியாவின் பொறியியலாளர் கழகத்தின் சிறப்பாளராகவும் (Fellow, Institution of Engineers (India)),
    இந்தியாவின் மின்னணுவியல் தொலைதொடர்பியல் பொறியாளர் கழகத்தின் சிறப்பாளராகவும் (Fellow, Institution of Electronics and Telecommunication Engineers, India.) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
    பிறபல குறிப்பிடத்தகுந்த பெருமைகளைக் கீழ்க்காணும் பக்கத்தில் காணலாம் [6].

    தமிழ்க்கணிமை உலகில் பற்பல நல்ல பயனுடைய ஆய்வாக்காங்கள் செய்த, சிறந்த ஆளுமை கொண்ட பேராசிரியர் ஆ.க. இராமகிருட்டிணன் அவர்களைப் பாராட்டி வாழ்த்தி அவரை இந்தக் கிழமையின் வல்லமையாளராக அறிவிக்கின்றோம்.

    அடிக்குறிப்புகள்

    [1] படம்: பேராசிரியர் ஆ.க. இராமகிருட்டிணன் அவர்களின் அலுவலக வலைத்தளம். படத்தை எடுத்தவர் ஏ.வாணி (2007). http://mile.ee.iisc.ernet.in/AGR/index.htm
    [2] http://mile.ee.iisc.ernet.in/mile/OnlineHandWriting_Recognition.html#OHR
    [3] http://mile.ee.iisc.ernet.in/mile/publications/MedicalImageProcessing.html
    [4] http://home.infitt.org/event/15th-tamil-internet-conference/
    [5] http://mile.ee.iisc.ernet.in/mile/
    [6] http://mile.ee.iisc.ernet.in/AGR/profile.htm

    Share
  • இந்த வார வல்லமையாளர்

    செ. இரா.செல்வக்குமார்

    இந்தக் கிழமையின் வல்லமையாளர், தமிழ்விக்கிப்பீடியாவில் சூலை 2004-ஆம் ஆண்டுமுதல் அயராது தனிச்சிறப்புடன் தமிழுக்குத் தொண்டாற்றிவரும் இளைஞர் திரு. சுந்தர் என அழைக்கப்படும் இல. பாலசுந்தரராமன் அவர்கள்.

    இன்று தமிழ் விக்கிப்பீடியா 86,000 கட்டுரைகளைத் தாண்டியுள்ளது என்றால் அதற்கு அருமைமிகு அடித்தளம் நாட்டிய மிகமுக்கியமானவர்களுள் ஒருவர் இவர்.

    ஆங்கிலமொழியின் வளர்ச்சியிலும் ஆங்கிலத்தின் அறிவிலக்கிய வளர்ச்சியிலும் பெரும்பங்காற்றிய படிநிலைகளாகக் கருதப்படுவடுவனவற்றில், பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் மிக முக்கியமானது என்பார்கள். இப்பொழுது நடக்கும் 21 ஆம் நூற்றாண்டில், கடந்த 15 ஆண்டுகளில் ஆங்கிலவிக்கிப்பீடியா என்னும் கலைக்களஞ்சியம், அறிவுப்பரவலாக்கத்தில் மிக முக்கியமான ஒன்று. ஆங்கில விக்கிப்பீடியா 2001 இல் தொடங்கியது. அதுபோலவே 2003 இல் தொடங்கிய தமிழ்விக்கிப்பீடியாவும் தமிழில் நடக்கும் அறிவுப்பரவலாக்கத்தில் மிகமுக்கியமான ஒன்று. இந்த அரிய பணியில் வல்லமையாளர் திரு இ. மயூரநாதனுடன் 2004-இலேயே இணைந்து பணியாற்றத்தொடங்கி இன்றளவும் தொடர்ந்து தொண்டாற்றி வருபவர் சுந்தர். கடந்த 12 ஆண்டுகளாக சுந்தர் தமிழ்விக்கிப்பீடியாவுக்கும் அதன்வழி தமிழுலத்துக்கும் நல்கிய நல்லாக்கங்கள் மிகவும் பாராட்டப்படவேண்டியவை.


    சுந்தர் என அழைக்கப்படும் இல. பாலசுந்தரராமன் [9]

    விக்கிப்பீடியாவின் துணைத்திட்டமான விக்சனரி என்னும் திட்டத்தில் முதன்முதலாக ஏறத்தாழ 100,000 சொற்களும் சொற்பொருள்களையும் தானியங்கிமுறையில் இரவி முதலானோருடன் சேர்ந்து ஏற்றி நிறுவினார் [2]. இன்று தமிழ் விக்சனரியில் 3,50,000 சொற்களுக்கும் மேல் உள்ளன. தமிழிணையக் கல்விக்கழகம் இலட்சக்கணக்கான கலைச்சொற்களையும் நல்கியது இத்திட்டத்தை மேலும் முன்னணிக்குக் கொண்டுவர உதவியது. சுந்தர் தமிழ்விக்கிப்பீடியாவுக்கும் அதன் துணைத்திட்டங்களுக்கும் தொழினுட்ப வசதிகளை நிறைய செய்திருந்தாலும் அவரின் விக்கிப்பீடியாவின் கொள்கை வழிகாட்டல்களும் வழிமுறைகளும் மிகப்பெரிய துணையாக இருந்தது. ஆங்கிலவிக்கிப்பீடியாவிலும் சுந்தர் நிருவாகப் பொறுப்பாளர்களுள் ஒருவராக இருந்ததினால் கொள்கை, வழிமுறைகள் போன்றவற்றில் நல்ல துய்ப்பறிவு இருந்தது தமிழ்விக்கிப்பீடியாவின் சீரான வளர்ச்சிக்கு மிகவும் உறுதுணையாக இருந்தது.

    சுந்தர் விக்கிப்பீடியாவின் விக்கிமேனியா என்னும் கருத்தரங்கில் 2009 இல் தமிழ்விக்கிப்பீடியா பற்றி ஓர் ஆய்வுக்கட்டுரையைப் படித்தார். இதுவே அனைத்துலக அரங்கில் தமிழ்விக்கிப்பிடியாவைப்பற்றிய முதல் ஆய்வுக்கட்டுரை [3].


    விக்கிப்பீடியாவின் நிறுவனர் சிம்போ வேல்சு எனப்படும் சிம்மி வேல்சுடன் (Jimmy Wales) திரு. சுந்தர் [1]

    சுந்தர் தமிழ்விக்கிப்பீடியாவில் எழுதிய கட்டுரைகள் எண்ணிக்கையளவில் 144 என்றாலும் அவற்றில் பலவும் தமிழுலகுக்குப் புதியனவும் ஆழமானவயும் ஆகும். அவர் எழுதிய மௌடம் [4], கேண்டரின் கோணல்கோடு நிறுவல்முறை [5], கிப்பன் பண்டம் [6], தேரி [7] போன்ற பற்பல கட்டுரைகள் தனித்தன்மை வாய்ந்தவை.

    சுந்தர் மிகச்சிறப்பாக யாப்பிலக்கண நெறிமுறைகள் மிகவும் கட்டுக்கோப்பானவை என்றும் அதனால் அவற்றை ஒரு இடம் சாரா இலக்கண முறையில் எழுத முடியும் என்றும் நிறுவியுள்ளார் [8]

    தமிழ்விக்கிப்பீடியாவின் அடித்தளத்தை அமைத்த முதன்மையானவர்களுள் ஒருவர், தனிச்சிறப்பான பங்களிப்புகள் செய்தவர் என்பதோடு இவர் நல்ல தமிழ்ப்பற்றுடையவர், இயற்கைநேயம் மிக்கவர், பறவை பூச்சி, செடிகொடிகள் என்று அனைத்திலும் மிகவும் ஆர்வம்மிக்கவர். மொழியியலிலும் கணிதத்திலும் ஆராக் காதல் கொண்டவர். பெங்களூரில் இந்திய தகவல் தொழினுட்பக் கழகத்தில் (IIIT Banglore) முதுகலைப் பட்டம் பெற்றவர் முகநூல் நிறுவனத்தில் இப்பொழுது பணியாற்றுகின்றார். இதற்குமுன்பு, யாகூ நிறுத்திலும் பணியாற்றியவர். கோரா (Quora) போன்ற தளங்களில் எழுதுபவர். தொழில்முனைவோராகவும் இயங்கி வெற்றிகள் சமைத்தவர்.

    சுந்தர் தன் மனைவி தமிழரசி, மகன் முகில் ஆகியோருடன் சிங்கப்பூரில் வாழ்கின்றார்.


    சுந்தரும் அவருடைய மனைவி தமிழரசி, மகன் முகிலும்.[10]

    தமிழ்விக்கிப்பீடியாவின் அடித்தளத்தை அமைத்ததிலிருந்து பற்பல நல்ல தமிழாக்கங்களைச் செய்த, சிறந்த ஆளுமை கொண்ட பண்பாளர் திரு சுந்தர் அவர்களைப் பாராட்டி வாழ்த்தி அவரை இந்தக் கிழமையின் வல்லமையாளராக அறிவிக்கின்றோம்.

    அடிக்குறிப்புகள்

    [1] படம், தமிழ்விக்கிப்பீடியா, படக்கலைஞர் Kalyan Varma, விக்கிப்பீடியாவில் ஏற்றியவர் நற்கீரன் (Natkeeran).
    [2] விக்சனரி தானியங்கித்திட்டம் [https://ta.wikipedia.org/s/b1r]
    [3] https://wikimania2009.wikimedia.org/wiki/Portal , https://ta.wikipedia.org/s/bs8
    [4] https://ta.wikipedia.org/s/7vu
    [5] https://ta.wikipedia.org/s/p3x
    [6] https://ta.wikipedia.org/s/fxh
    [7] https://ta.wikipedia.org/s/4c1f
    [8] இல.பாலசுந்தரராமன், எஸ்.ஈஷ்வர், சஞ்சீத்குமார் ரவீந்திரநாத்(22-24). “இயல்மொழிப் பகுதிகளுக்கான இடம் சாரா இலக்கணம் – வெண்பா இலக்கணத்திற்கான ஒரு செயலி”. ‘, உத்தமம் (INFITT). 2007-05-16 அன்று அணுகப்பட்டது.. (ஆங்கிலத்தில்); [https://ta.wikipedia.org/s/isx]
    [9] சுந்தரின் முகநூலில் உள்ள படம்.
    [10] சுந்தரின் முகநூலில் உள்ள படம்.

    Share
  • இந்த வார வல்லமையாளர்

    செ. இரா.செல்வக்குமார்

    இந்தக் கிழமையின் வல்லமையாளர், ஒப்பரிய தமிழ்ச்சொல்லாய்வாளர் திரு. ப. அருளி அவர்கள்.

    இவர் உலகத்தொல்காப்பியமன்றத்தின் தொடர்சொற்பொழிவு வரிசையின் 5-ஆவது சொற்பொழிவைப் புதுச்சேரியில் மே மாதம் 4 ஆம் நாள் நல்க இருக்கின்றார். புதுச்சேரியில் வாழ்ந்த பாவேந்தர் பாரதிதாசனின் 125 ஆம் ஆண்டின் பிறந்தநாள் ஏப்பிரல் 29 ஆம் நாள் ஆகையால் அவர் நினைவாகவும் அங்கே வாழும் சொல்லாய்வாளரை இவ்வார வல்லமையாளராகத் தேர்ந்தெடுத்துள்ளோம்.

    திரு அருளி அவர்கள் மொழிஞாயிறு என்று போற்றப்பட்ட தேவநேயப்பாவாணர் அவர்களின் வழி தமிழில் மிகச்சிறப்பாக வேர்ச்சொல் ஆய்வு செய்பவர். புதுச்சேரியில் பிறந்த இவர் வணிகவியல், சட்டவியல் துறைகளில் பட்டம் பெற்றவர். ஆனால் இவருடைய ஒப்பரிய சொல்லாய்வே இவரின் புகழுக்கு அடிப்படை. இவருடைய ஏறத்தாழ 30 நூல்களும், 250 உக்கும் மேலான ஆய்வுக்கட்டுரைகளும் இவருடைய ஆழ் புலமையைப் பறைசாற்றுவன. இவர் ஆக்கிய 1216 பக்க அருங்கலைச்சொல் அகரமுதலியும் (தமிழ்ப் பல்கலைக்கழக வெளியீடு) (2002), நான்கு தொகுதிகளாக வெளிவந்த இவை தமிழல்ல என்னும் அயற்சொல் அகராதியும் குறிப்பிடத்தக்கன. இதே போல தமிழ் சமற்கிருதம் மற்றும் பிற இந்திய மொழிகளின் நிறுவனங்களில் திரு. அருளி அவர் ஆற்றிய மொழியியல் உரைகளின் 5 தொகுதிகளும் மிகுசிறப்பானவை. இவற்றில் இவர் செய்திருக்கும் வேர்ச்சொல் ஆய்வு மறுக்கொணாத நிறுவல் சிறப்பு மிக்கது. 2007 ஆம் ஆண்டு மரம்-செடி-கொடி-வேர் என்னும் தலைப்பில் வெளியிட்ட இரு தொகுதிகளும் தமிழுக்குப் புதிய வரவு. உலக அறிஞர்கள் பலர் இவருடைய ஆய்வையும் அறிவையும் மிகவும் போற்றியுள்ளனர், ஆனால் பரவலாலா இவை அறியப்படாமல் இருக்கின்றன. ‘Colporul: A History of Tamil Dictionaries‘ [2] என்னும் விரிவான 928 பக்க நூலை எழுதிய, இங்கிலாந்தைச் சேர்ந்த, கிரிகோரி சேம்சு (Gregory James) என்பார் இவரைப் போற்றி மடல்கள் வரைந்துள்ளார்[3].


    திரு. ப. அருளி அவர்கள் ”தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் விருந்து தகைமையாளராக 1980 முதல் 1984 வரையிலும் (Honorary – Fellow) ஆய்வறிஞராக 1995 முதல் 2007 வரையிலும் (Scholastic Researcher) பேராசிரியராக 2007 முதல் 2010 வரையும் பணிபுரிந்துள்ளார்”[1].

    1950 ஆம் ஆண்டு பிறந்த திரு அருளி அவர்கள் பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களின் மகள் தேன்மொழி அவர்களை வாழ்க்கைத்துணையாகக் கொண்டவர். இவர்களுக்கு அறிவன், தெள்ளியன் என இரு மகன்கள் உள்ளனர்.


    வேர்ச்சொல் ஆய்வில் பாவாணர்வழி ஆய்வு செய்வதில் தலையாய அறிஞர் இவர் எனில் மிகையாகாது. வேர்ச்சொல்லாய்வில் இவர் உலக அளவில் வெகுவாகப் போற்றப்படவேண்டியவர். தமிழ்ச்சொல்லாய்வாளர் திரு. ப. அருளி அவர்களைப் பாராட்டி வாழ்த்தி அவரை இந்தக் கிழமையின் வல்லமையாளராக அறிவிக்கின்றோம்.

    அடிக்குறிப்புகள்

    [1] ப. அருளி, தமிழ் விக்கிப்பீடியா [ https://ta.wikipedia.org/s/pe4 ], பார்த்த நாள் மே 1, 2016.
    [2] Gregory James, ‘colporul: A History of Tamil Dictionaries‘, Cre-A publication [http://www.crea.in/publicationsdetails.php?id=3&customer=inr&page=4&category= ]
    [3] செ.இரா. செல்வக்குமார், முனைவர் இராமகிருட்டிணன், பாவலர் இராச தியாகராசன், பேரா. தமிழ்ப்பரிதி மாரி ஆகியோர் திரு ப. அருளி அவர்களை 2014 இல் புதுச்சேரியில் சந்தித்தபொழுது நேரில் பார்த்துப் படித்தறிந்தது.

    Share
  • இந்த வார வல்லமையாளர்

    செ. இரா.செல்வக்குமார்

    இந்தக் கிழமையின் வல்லமையாளர், இரண்டு கைகளும் இரண்டு கால்களும் செயற்படாமல் இருந்தும் அருஞ்செயல் புரிந்து பல்லோருக்கும் பேருதவி ஆற்றிவரும் இளம் பெண் பிரீத்தி சீனிவாசன் .

    செல்வி பிரீத்தி சீனிவாசன் துடிப்புமிக்க அறிவான ஒரே மகள் தன் பெற்றோருக்கு. இவருடைய தந்தை ந. சீனிவாசன் கிண்டி பொறியியற் கல்லூரியில் பொறியியல் பட்டம் பெற்று சீமென்சு (Siemens) நிறுவனத்தில் பல்லாண்டுகள் பணியாற்றியவர். சென்னையிலும், இடாய்ச்சுலாந்திலும் (செருமனி), அமெரிக்காவிலும் பணிபுரிந்துள்ளார். தாய் விச’யா அவர்கள் ஓவியக்கலையிலும் சமையற்கலையிலும், இனிதே இல்லறம் நடத்தும் கலையிலும் வல்லவர். செல்வி பிரீத்தியும் செல்லமாக வளர்ந்துவந்தார். படிப்பில் சிறந்து விளங்கியது மட்டுமல்லாமல் ஆங்கிலத்தில் கவிதை எழுதுவதும், ஓவியம் வரைவதும், நீச்சலடிப்பதும், கிரிக்கெட்டு விளையாடுவதும் என்று பல்துறையில் நற்திறன் பெற்றிருந்தார். நீச்சலில் இந்திய நாட்டளவிலான நீச்சல் வீரரராக உயர்ந்தார், தமிழநாட்டு மாநில அணியின் இளைஞர் அணியின் கிரிக்கெட்டு தலைவராகவும் (கேப்டன்) இருந்தார். ஆனால் ஒருநொடியில் தன் இனிய இன்பவாழ்க்கை தலைகீழாக மாறியது.

    சக்கர இருக்கையில் இருக்கும் பிரீத்தியுடன் அவருடைய தாயார் விச’யா சீனிவாசன்.

    ஒருநாள் புதுச்சேரியில் காலில் கடல்நீர் வந்து பாயுமாறு கடற்கரையில் நண்பர்களுடன் நின்றிருந்தார். நீர் பின்வாங்கிப்போகும்பொழுது காலுக்கடியில் இருந்த மணல் அரித்துக்கொண்டுபோக கால்தடுக்கிக் கீழே விழுந்தார். கல்லோ, பாறையோ எதிலும் அடிபடவும் இல்லை. ஒருதுளி இரத்தமும் வெளிப்படவில்லை. ஆனாலும் வியப்பூட்டும் விதமாக கழுத்தருகே எப்படியோ தண்டுவடத்தில் தாக்கம் ஏற்பட்டு கழுத்துக்குக்கீழே உடலியக்கத்தின் செயலிழந்துபோனார். கீழே விழுந்தவரால் எழமுடியவில்லை. இதனை அவர்கூற்றாகவே கூறுவதை இந்த நிகழ்படத்தில் கேட்கலாம். அருகில் இருந்த நண்பர்கள், பிரீத்தியை வெளிக்கொணர்ந்தனர். அப்பொழுது அவருக்கு அகவை 18!! எந்த ஒருவருக்கும் அவர்தம் பெற்றோருக்கும் நம்பவே முடியாத பேரிடியாய் இருந்திருக்கும். பிரீத்தியும், பிரீத்தியின் பெற்றோர்களும், அடுத்தடுத்து என்னென்ன செய்யவேண்டும் என கூர்ந்து சிந்தித்து விடாது முயன்றனர். பிரீத்தியின் அருமைமிகு தந்தை திரு. சீனிவாசனுக்கும் இதயநோய் ஏற்பட்டது. மிகவும் எதிர்பாராமால் ஒருநாள் அவரும் இயற்கை எய்திவிட்டார். வெளியுலகில் அனைத்தையும் செய்து வந்தவர் இவருடைய தந்தையாரே. திடீரென்று அவரும் மறைந்தது பேரதிர்ச்சி.

    பிரீத்தியின் தண்டுவடம் சிதைவுற்றாலும், மிகுந்த உள உறுதியுடனும், சீரிய சிந்தனையின்வழியும் அவர் ஆற்றும் செயல்களே நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன. தன்னைப்போன்ற உடல்நிலையுள்ள பல ஏழைமக்களுக்குப் பெரிய அளவிலே உதவிவருகின்றார். நம்பிக்கை இழந்து தவிக்கும் பலருக்கும் ஆழ்ந்த நம்பிக்கை ஊட்டிவருகின்றார். சோல்ஃபிரீ (Soulfree) என்னும் தொண்டுநிறுவனம் ஒன்றைத் தொடங்கி தண்டுவடம் அடிபடுவதால் ஏற்படும் உடற்குறையால் தவிக்கும் பலருக்குச் சக்கர இருக்கைகள் நல்குவது போன்ற உதவிகள் செய்துவருகின்றார் [2]. தண்டுவடம் அடிபடாமல் காப்பது பற்றியும், அடிபடும் தீவாய்ப்புகள் பற்றியும், உள்ளத்தில் உறுதியுடன் இருக்கவேண்டுவது பற்றியும் கல்விநிறுவனங்கள் முதல் பல நிறுவனங்களுக்குச் சென்று ஊக்கவுரை ஆற்றுகின்றார். சக்கர இருக்கையில் இருந்தாலும், கல்விகற்கவும் பல இடங்களுக்குப் போய்வர இருக்கும் இடையூறுகளைக் களைவது பற்றியும் விழிப்புணர்வு ஊட்டிவருகின்றார். சிதைந்த தண்டுவடம் சிதையாத நம்பிக்கை என்னும் தலைப்பில் இவரைப்பற்றி டாக்டர் விகடனில் ஒரு கட்டுரை பிப்பிரவரி 16, 2015 இல் வெளிவந்தது.

    பிரீத்தியைப் பற்றி டாக்டர் விகடனில் வெளிவந்த கட்டுரை

    பிரீத்தி ஊக்கவுரை நிகழ்த்துதல்

    பீரீத்தி சீனிவாசன் அவர்கள், தன்னுடைய இன்னொரு நேர்காணலில் அவருடைய அருமையான, பெருநம்பிக்கைதரும் கருத்துகளைப் பகிர்ந்துள்ளார். அந்த நேர்காணலை இங்கே காணலாம்.

    பிரீத்தியின் தொண்டுக்காகப் பல நிறுவனங்கள் அவருக்குப் பரிசுகள் வழங்கி ஊக்குவித்திருக்கின்றன. ஃபெமினா பெண்சக்தி விருதுகள் (Femina Penn Shakti awards), இந்திய இரத்தச் சிலுவைச் சங்கம் (Indian Red Cross) போன்ற பல நிறுவனங்கள் பரிசளித்து ஊக்கமளித்துள்ளன. இவர் ஊக்கவுரை நிகழ்த்தச்சென்ற இடங்களில் மாணவர்களும் இளைஞர்களும் மிக ஆழமாக உள்ளுணர்ந்து நெகிழ்ந்திருக்கின்றார்கள். பேச்சாலும் செயலாலும் அரியவிதத்தில் பலருடைய வாழ்வில் ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்திவருகின்றார். கைகால்கள் இயங்காவிடினும், குரல் இருப்பதால், குரலால் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தமுடியும், பெரிய நம்பிக்கையை அளிக்கமுடியும் என உணர்ந்து குரல் வல்லமை (Throat Fort) என்னும் அமைப்பின் வழி விழிப்புணர்வு ஊட்டிவருகின்றார் [3].

    தண்டுவடத்தில் ஏற்படும் பழுதால், உலகெங்கும் பலர் மிகவும் துன்புறுகின்றார்கள். அமெரிக்காவில்மட்டும் 250,000 பேர் முதல் 400,000 பேர்வரை இவ்வுடல் குறைபாட்டுக்கு ஆளாகியுள்ளனர்[4]. ஆண்டுதோறும் 7,800 முதல் 12,500 பேர் வரை இக்கொடுமைக்கு ஆளாகின்றனர். இக்குறைபாட்டுக்கு ஆளாவோருக்கு துணையாக இருக்க அமெரிக்கா போன்ற நாடுகளில் ஆகும் செலவும் ஓராளுக்கு ஏறத்தாழ $1.35 மில்லியல் அமெரிக்கவெள்ளி (இந்திய உருபாய் 8-9 கோடிக்கு மேல்) ஆகும் [4]. இந்தியாவில் இக்குறைபாடுகள் உள்ளவர்களை மதித்து அவர்களிடம் இருக்கும் திறமையைப் பயன்படுத்தி அவர்களுக்கு நல்வாழ்வு அமைத்துத்தரவும் வாழ்க்கையை நடத்தவும் வாய்ப்புகளும் வசதிகளும் செய்துதருவது ஒரு குமுகத்தின் நற்பொறுப்பு. இதனை உணர்ந்து உதவிகள் செய்ய செல்வி பிரீத்தி முனைந்து வருவது மிகவும் பாராட்டத்தகக்து. அவர்களின் முயற்சி பெருவெற்றி அடைய வாழ்த்துகின்றோம்.

    செல்வி பிரீத்தி தன் தாய் தந்தையருடன்.

    வாழ்வில் அரியதொரு எதிர்நீச்சல் போட்டுவரும் செல்வி பிரீத்தியை வாழ்த்தி அவரை இந்தக் கிழமையின் வல்லமையாளராக அறிவிக்கின்றோம்.

    அடிக்குறிப்புகள்

    [1] https://www.youtube.com/watch?v=x4Q1jTkeekg
    [2] http://soulfree.org/
    [3] https://www.facebook.com/ThroatFort
    [4] http://www.makoa.org/nscia/fact02.html , http://www.sci-info-pages.com/facts.html

    Share
  • இந்த வார வல்லமையாளர்

    செ. இரா.செல்வக்குமார்

    இந்தக் கிழமையின் வல்லமையாளர் புகழ்படைத்துவரும் இளம் பொருளாதாரப் பேராசிரியர்.

    முப்பால் எனப்படும் திருக்குறளில் நடுவாக இருப்பது பொருள். தமிழில் பொருள் என்னும் சொல் வியப்புறும் பல ஆழமான பொருள்களைக் கொண்டது. ஒரு சொல்லின் பொருள், வாழ்க்கையின் குறிக்கோள் அல்லது உயர்பயன் என்னும் பொருள், கருத்துவடிவமும் பருவடிவமும் கொண்ட அனைத்துமான பொருள், திருவள்ளுவர் சொல்வாரே பொருளில்லார்க்கு இவ்வுலகில்லை என, அப்படியான பொருள், கடைசியில் இவையனைத்தையும் மீறி கடவுளுக்கே பொருள் என்று ஒரு பெயரும் உண்டு. ”காசேதான் கடவுளடா” என நினைத்துவிட வேண்டாம். சமய இலக்கியங்களிலே வரும் வரிசையாகிய இருள், மருள், தெருள், அருள், பொருள் என்பதில் வரும் கடைசிச்சொல் கடவுளைக் குறிக்கும். ஆனால் மக்களின் இவ்வுலக வாழ்க்கைக்கு அடிமுதன்மையான பொருளாகிய பணம், செல்வம் என்பதை அடிப்படையாகக் கொண்ட துறையே பொருளியல் அல்லது பொருளாதாரம் என்பது.

    ஏப்பிரல் 11, 2016 ஆம் நாள் இசுட்டான்போர்டு பல்கலைக்கழகம் (Stanford University) வெளியிட்ட செய்தியில் [2], பேராசிரியர் இராசு செட்டி அவர்களின் பொருளாதாரக் கொள்கைகளைப்பற்றியும் அமெரிக்காவில் வாழும் மக்களின் வாழிடத்துக்கும், அவர்களின் ஆயுளுக்கும் இடையே உள்ள நெருங்கிய தொடர்புபற்றியும் அவர் வெளிட்ட ஆய்வுக்கட்டுரையைச்சுட்டி [3] புதிய கண்டுபிடிப்பு எனப் பாராட்டியிருக்கின்றார்கள். தற்போதுள்ள நிலையில், அமெரிக்காவைப் பொருத்த அளவிலே (இவ்வாய்வு பிறநாடுகளுக்கும் பொருந்தும் வாய்ப்புள்ளது) சராசரியாக ஒருவருடைய வாணாளை (வாழ்நாளை)த் தீர்மானிப்பது, அவர் எங்கு வாழ்கின்றார், அவருடைய வருமானம் எவ்வளவு என்பதைப் பொருத்தது. பொருளாதார நிலையில் கடைசி 5% இருக்கும் ஒருவர் நியூயார்க்கில் வாழ்ந்தால் அவர் அதே கீழ்நிலை வருமானம் உள்ள, கே’ரி இண்டியானாவில் (Gary, Indiana) வாழும் இன்னொருவரைவிட 5 ஆண்டுகள் அதிகமாக உயிர்வாழ்வார். இவ்வேறுபாடு மிக அதிகமாகக் கருதப்படுகின்றது.

    பொருளாதார நிலையில் கடைசிநிலையில் இருப்பவர்கள் அமெரிக்காவில் எவ்விடத்தில் வாழ்கின்றார்கள் என்பதைப்பொருத்து வாணாள் (வாழ்நாள்) அதிகமாகவோ குறைவாகவோ இருப்பதைக் காட்டும் படம் [4]

    பேராசிரியர் இராசு செட்டி அவர்களின் பொருளாதாரக் கண்டுபிடிப்புகள் அமெரிக்காவுக்குக் கொள்கை வகுக்கப் பயன்படுமென அறிஞர்கள் கருதுகின்றார்கள். அமெரிக்கக் குடியரசுத்தலைவர் பராக்கு ஒபாமா அவர்கள் தன்னுடைய நாட்டுநிலவரத்தைப்பற்றி நிகழ்த்தும் பேருரையில் “State of the Union Address” பேராசிரியர் இராசு செட்டியின் கொள்கைகளைக் குறிப்பிட்டுப் பேசினார்.

    இராசு செட்டி அவர்கள் அமெரிக்காவுக்கு 9 வயதில் தன் பெற்றோர்களுடன் சிறுவனாக வந்தார். தனக்கு அகவை 23 நிறையும்பொழுது உலகப்புகழ்பெற்ற ஆர்வர்டு பல்கலைக்கழகத்தில் (Harvard University) பொருளாதாரத் துறையில் முனைவர்ப் பட்டம் பெற்றார். கி.பி. 1636 ஆம் ஆண்டு தொடங்கிய ஆர்வர்டு பல்கலைக்கழகத்தின் 380 ஆண்டு வரலாற்றிலேயே மிக இளவயதில் நிலைபெற்றப் பேராசிரியர்களுள் (tenured professor) ஒருவராக இவர் தன் 29 ஆவது அகவையில் உயர்ந்தார்.

    பேராசிரியர் இராசு செட்டி (Professor Raj Chetty) [1]

    இவர் தற்பொழுது இசுட்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்துறையில் பேராசிரியாக இருக்கின்றார். 2012 ஆம் ஆண்டு புகழ்பெற்ற மெக்கார்தர் நிறுவனத்தின் சிறப்பாளர் (MacArthur Fellow) ஆனார். இவருடைய ஆய்வுக்காக கட்டுப்பாடுகளற்ற விதமாக $500,000 அமெரிக்க வெள்ளி வழங்கியது [5]. 2013 ஆம் ஆண்டு சான் பே’ட்சு கிளார்க்குப் பதக்கம் (John Bates Clark Medal) இவருக்கு வழங்கப்பட்டது. இதனைக் குட்டி நோபல்பரிசு (Baby Nobel) என்பார்கள். இப்பதக்கத்தை வென்ற பலர் பொருளாதாரத்துக்கான நோபல் பரிசை வென்றுள்ளனர். நியூயார்க்கு தைம்சு நாளிதழ், இப்பதக்கம் பெற்றதைப்பற்றிக் கீழ்க்காணுமாறு குறித்தது [6]:

    “The medal is given by the American Economic Association for achievement by an economist under the age of 40. At 33, Mr. Chetty is one of the youngest winners of the prize. (Paul Samuelson, who went on to win a Nobel, received the award when he was 31 or 32.) Past recipients also include the former Treasury secretary Lawrence Summers, Milton Friedman, and Robert Solow.”

    வட அமெரிக்கத்தமிழ்ச்சங்கம் (FeTNA) 2014 இல் தமிழ் அமெரிக்க முன்னோடிகள் (Tamil American Pioneer Award, TAP award) விருதை அளித்துப் பெருமைப்படுத்தியது. அதனைப் பெற்றுக்கொண்டு, தன் வாழ்க்கையைப்பற்றியும் தன் ஆய்வைப்பற்றியும் உரைநிகழ்த்தினார் [7].

    ஆகத்து 4, 1979 இல் பிறந்து பெரும்புகழ் ஈட்டியிருக்கும் இளம் பேராசிரியர் இராசு செட்டி (Raj Chetty) அவர்களை இந்தவார வல்லமையாளராக அறிவித்துப் பாராட்டி வாழ்த்துகின்றோம்.

    அடிக்குறிப்புகள்:
    [1] படம்- விக்கிப்பீடியா (https://commons.wikimedia.org/wiki/File:Chetty_2012_hi-res-download_2.jpg)
    [2] http://news.stanford.edu/news/2016/april/poverty-chetty-siepr-041116.html
    [3] http://jama.jamanetwork.com/article.aspx?articleid=2513561
    [4] http://www.citylab.com/housing/2016/04/when-youre-poor-where-you-live-determines-how-long-youll-live/477687/
    [5] https://www.macfound.org/search/?q=raj+chetty
    [6] http://economix.blogs.nytimes.com/2013/04/12/raj-chetty-wins-the-john-bates-clark-medal/
    [7] https://www.youtube.com/watch?v=bJvC0Rwwai4 (இராசு செட்டி பேசுவது மணித்துளி 11:52 இல் இருந்து தொடர்கின்றது. அதற்கு முன்பு அவரை அறிமுகப்படுத்துவதை கேட்கலாம்)

    Share
  • இந்த வார வல்லமையாளர்

    செ. இரா.செல்வக்குமார்

    இந்தக் கிழமையின் வல்லமையாளர் 17 வயது நிரம்பிய இளைஞை. அமெரிக்காவில், இல்லினாய் (Illinois) மாநிலத்தில், ஒரு பள்ளி மாணவி. ஐம்பது இலட்சம் உருபாய் ($75,000 அமெரிக்க வெள்ளி) பரிசை வென்றவர்

    இந்தவார வல்லமையாளர் செல்வி. மீனா செகதீசன் (Meena Jagadeesan) என்னும் இளம் மாணவி. இவர் இன்ட்டெல் (Intel) நடத்தும் அறிவியல் திறனாளர் தேடல் போட்டியில் (Intel Science Talent Search) அடிப்படை ஆய்வுப் பிரிவில் இரண்டாவது பரிசை வென்றுள்ளார்.

    Meena_Jagadeesan_Intel

    செல்வி மீனா செகதீசன் 2016 ஆம் ஆண்டு இன்ட்டெல் அறிவியல் திறனாளர் தேடல் போட்டியில்[1]

    2016 ஆண்டில் அமெரிக்காவில் 1750 மேனிலை மாணவர்கள் புகழ்பெற்ற இன்ட்டெல் நிறுவனத்தின் அறிவியல் திறனாளர் தேடல் போட்டியின் பங்குபெற்றனர். அவர்களில் 300 பேர் அரையிறுதி நிலையில் தேர்வானார்கள். இறுதியில் வெறும் 40 பேர் மட்டுமே தேர்வானார்கள். இந்த 40 பேரும் ஒரு மில்லியன் அமெரிக்க வெள்ளி மதிப்புடைய பரிசுகளை வெல்ல வாசிங்கடன் தி.சி-யில் போட்டிப்போட்டனர். தங்களின் புதிய ஆய்வுகளையும் கண்டுபிடிப்புகளையும் காட்சிப்படுத்தினர். அவற்றை மூன்று பிரிவுகளில் தேர்வு செய்தனர். அவையாவன அடிப்படை ஆய்வு (Basic Research), உலக நலம் (Global Good), புதுமையாக்கம் (Innovation). இந்த ஒவ்வொரு பிரிவிலும் முதற்பரிசாகப் பதக்கம் பெறுபவர் $150,000 அமெரிக்க வெள்ளியும், இரண்டாம் பரிசுபெறுபவர் $75,000 அமெரிக்க வெள்ளியும், மூன்றாம் பரிசு பெறுபவர் $35,000 அமெரிக்க வெள்ளியும் பெறுவர். மீதமுள்ள இறுதிநிலையாளர்கள் ஒவ்வொருவரும் $7,500 பெறுவர். இப்போட்டிகள் மிகவும் உயர்தரம் கொண்ட கடுமையான போட்டிகள். 75 ஆண்டுகள் கால வரலாற்றில் இம்முறை முதன்முறையாகப் பெண்கள் ஆண்களைவிட அதிக எண்ணிக்கையில் வெற்றிபெற்றுள்ளனர் [2].

    செல்வி மீனா செகதீசன் அமெரிக்காவில் இல்லினாய் மாநிலத்தில் நேப்பர்வில் என்னும் இடத்தில் வாழ்கின்றார். அங்குள்ள பிலிப்ஃசு எக்சீட்டர் அக்கதெமி (Phillips Exeter Academy) என்னும் கல்வி நிறுவனத்தில் படிக்கின்றார் [3]. இவர் இன்ட்டெல் போட்டியில் தன்னுடைய கணித ஆய்வுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கேட்பதற்கு எளிமையாக இருந்தாலும் ஆழமான கருத்தாகிய சார்பியச் சேர்மங்கள் கோவை பற்றிய ஆய்வில் கணக்கிடுவதில் புதிய தொடர்புகளைக் கண்டுபிடித்துள்ளார். இப்புதிய தொடர்புகள் வரைகோல வகைகளுக்கிடையே உள்ளவை. அவருடைய ஆய்வைச் சுட்டும்பொழுது கீழ்க்காணுமாறு இன்ட்டெல் நிறுவனத்தார் குறிக்கின்றனர்: ”Meena Jagadeesan investigated an object in algebraic combinatorics, or the mathematics of counting, to reveal a novel relationship between classes of graphs.”[2].

    கணிதம், அறிவியல், பொறியியல் தொழினுட்பம் போன்ற துறைகளில் பெண்கள் அண்மையில் முன்னேறி வருகின்றார்கள். இன்னும் முன்னேறவேண்டும் என்னும் கருத்துள்ளது. 1901 ஆம் ஆண்டுமுதல் நோபல் பரிசை வென்றவர்களைக் கணக்கிட்டால் 825 ஆண்களும் 47 பெண்களும் வென்றுள்ளார்கள் [4] இவர்களில் இயற்பியல் வேதியியல், மருத்துவத்துக்குப் பரிசுபெற்ற பெண்கள் குறைவே. பொறியியலிலே 1980-களில் 5.8 % பேர்தான் அமெரிக்காவில் பெண்களாக இருந்தார்கள். இப்பொழுது முன்னேறி 18 முதல் 20 % பேர் பெண்களாக இருக்கின்றார்கள் [5]. அமெரிக்காவில் 2014 ஆம் ஆண்டில் 99,173 பேர் பொறியியலிலே இளங்கலைப் பட்டம் பெற்றனர். இவர்களிலே 19.9 % பேர் பெண்கள். பொறியியல் துறையில் பேராசிரியர்களில் பெண்களாக இருப்பவர்கள் பலநிலைகளில் 10.2 % முதல் 22.8% உள்ளனர் [6]. கணிதத்திலும் பிற அறிவியல் துறைகளிலும் பெண்களின் விகிதம் பற்றிக்கீழ்க்காணும் வலைத்தளம் காட்டுகின்றது [7]. இப்படியான சூழலில் செல்வி மீனா செகதீசன் புகழ்பெற்ற இன்ட்டெல் போட்டியில் கணிதத்தில் ஆய்வு செய்து இரண்டாம் பரிசு பெற்றது மிகவும் போற்றுதலுக்குரியது.

    இதுகாறும் முன்னாள் இன்ட்டெல் அறிவியல் திறனாளர் போட்டியில் வென்றவர்களில், 8 பேர் நோபல் பரிசு பெற்றுள்ளனர், இருவர் கணிதத்தின் மிக உயரிய பரிசாகிய பீல்டுசு பதக்கம் (Fields Medal) பெற்றுள்ளனர், ஐந்துபேர் அமெரிக்காவின் மிக உயரிய தேசிய அறிவியற்பதக்கம் (National Medal of Science) பெற்றுள்ளனர், 12 பேர். மெக்கார்தர் சிறப்பாளர் பெருமைகளையும் (MacArthur Fellowships) பெற்றுள்ளனர், 30 பேர் தேசிய அறிவியல் அக்காதெமி உறுப்பினராகவும், ஐவர் தேசிய பொறியியல் அக்காதெமியின் உறுப்பினராகவும் உயர்ந்திருக்கின்றனர் [8].

    இவார வல்லமையாளரான செல்வி மீனா செகதீசன் அவர்களும் வருங்காலத்தில் இன்னும் பல பெருமைகளைப் பெறுவார் என நம்ப இடமிருக்கின்றது.

    இன்ட்டெல் பரிசு பெற்றவர்கள் அனைவரைப்பற்றியும் வலையிடம் [2] இல் காணலாம். அடிப்படை ஆய்வில் முதல்பரிசு பெற்ற அமொல் பஞ்சாபி (Amol Punjabi), மூன்றாம் பரிசு பெற்ற குனால் சுரோஃபு (Kunal Shroff), உலக நலப்பிரிவில் முதல்பரிசுபெற்ற பெய்கி பிரௌன் (Paige Brown), இரண்டாம் பரிசு பெற்ற மைக்கேல் இழ்சாங்கு (Michael Zhang), மூன்றாம் பரிசுபெற்ற நேத்தன் சார்லசு மார்சல் (Nathan Charles Marshall), புதுமையாக்கம் பிரிவில் முதல்பரிசு பெற்ற மாயா வர்மா (Maya Varma), இரண்டாம் பரிசுபெற்ற மிலிந்து சகோட்டா (Milind Jagota), மூன்றாவது பரிசுபெற்ற காவியா இரவிச்சந்திரன் (Kavya Ravichandran) ஆகியோர் அனைவரும் மிகவும் பாராட்டப்பட வேண்டியவர்கள்.

    செல்வி மீனா செகதீசன் அவர்களை இந்தவார வல்லமையாளராக அறிவித்துப் பாராட்டி வாழ்த்துகின்றோம்.

    அடிக்குறிப்புகள்:
    [1] இன்ட்டெல் அறிவியல் திறனாளர் தேடல் போட்டி 2016 இல் வெற்றியாளர்கள் அறிவிப்புத்தளத்தில் உள்ள படம். http://www.intel.com/content/www/us/en/education/competitions/science-talent-search/winners.html
    [2] இன்ட்டெல் போட்டித்தளம், http://www.intel.com/content/www/us/en/education/competitions/science-talent-search/winners.html (”Of note, this year for the first time in the event’s 75-year history, female finalists outnumbered male finalists by a small margin (21 girls to 19 guys).”)
    [3] https://www.exeter.edu/news_and_events/news_events_18235.aspx
    [4] http://www.telegraph.co.uk/news/worldnews/11922707/Nobel-Prize-winners-How-many-women-have-won-awards.html
    [5] https://www.asme.org/career-education/articles/undergraduate-students/engineering-still-needs-more-women
    [6] http://www.asee.org/papers-and-publications/publications/14_11-47.pdf
    [7] https://www.maa.org/external_archive/columns/launchings/launchings_09_09.html
    [8] https://en.wikipedia.org/wiki/Intel_Science_Talent_Search

    Share
  • இந்த வார வல்லமையாளர்

    செ. இரா.செல்வக்குமார்

    இந்த வார வல்லமையாளர் 2 வயதுக் குழந்தைப் பருவத்திலேயே இசையுலகில் அரிய புகழீட்டியவர்.

    இந்தவார வல்லமையாளர் சித்திரவீணை ந. இரவிக்கிரண் (இரவிகிரண்) அவர்கள் தன் 2-ஆவது அகவையிலேயே [1] இசைத்தேர்ச்சியை இசையறிஞர்கள் முன்னே வியப்பூட்டும் விதமாக வழங்கி, அரிய புகழீட்டியவர். இப்பொழுது தனது 49 ஆம் அகவையில் திருக்குறளின் 1330 குறட்பாக்களுக்கும் இசைவாணர்கள் தேனிசை எனப்போற்றும்படியாக கருநாடக இராகங்களில் இசையமைத்துள்ளார். மொத்தம் 169 இராகங்களில் அரிய தாள அமைப்புகளுடன் அமைத்து அரிய செயல் ஆற்றியிருக்கின்றார். நம்புதற்கு அரியதாய் வெறும் 16 மணிநேரத்திலேயே இதனை அமைத்தார் [2][3]

    சித்திரவீணை இரவிக்கிரண் அவர்கள் பிப்பிரவரி 12, 1967 இல் மைசூரில் பிறந்தார். இவர் 1969 இலேயே இசைமேடையில் தன் இசைப்புலமையை வெளிப்படுத்தியவர். தன்னுடைய முதல் இசைக் கச்சேரியை தன் 5-ஆவது வயதில் நடத்தினார். குழந்தைமேதை எனப்புகழப்பட்டவர். இவருடைய குருவும் தந்தையும் சித்திரவீணைக்கைலைஞர் நரசிம்மன் அவர்கள். இரவிக்கிரணின் பாட்டனார் புகழ்பெற்ற கோட்டுவாத்தியக் கலைஞர் நாராயணர் அவர்கள். திரு. இரவிக்கிரணன் அவர்களை”இந்திய இசையின் மோட்ஃசார்ட்டு” என அமெரிக்காவின் விசுக்காசின் செர்னல் அறிவித்தது (“the Mozart of Indian Music” by the Wisconsin State Journal, USA) [4]

    Ravikiran_Performance_at_Age_2

    1969 இல் இரண்டு அகவையில் இசைமேடையில் குழந்தைமேதை இரவிக்கிரண் [5]

    மிக இளமையான பருவத்திலேயே இந்தியக்குடியரசுத்தலைவரிடம் இருந்து சங்கீத நாடக அக்காதெமிப் பரிசைப் பெற்றார் [6]
    Youngest_to_receive_President_of_India_Award

    குடியரசுத்தலைவர் மேதகு அப்துல் கலாம் அவர்களிடம் இருந்து சங்கீத நாடக அக்காதெமி பரிசைக் கலைஞர் இரவிக்கிரண் அவர்கள் பெறுதல் [5].

    கலைஞர் இரவிக்கிரண் மிகப்பல விருதுகளையும் பெருமைகளையும் பெற்றவர். அரிய கோட்டுவாத்தியத்தை வாசித்து தன் பாட்டனார் வழியில் மீண்டும் இவ்விசைக் கருவியை வழக்கில் நிறுவியவராயினும், தானும் புதிய இசைக்கருவிகளையும் இசைவகைகளையும் தோற்றுவித்தவர்.

    கோட்டுவாத்தியம் என்பது வீணைபோலவே தோற்றமளித்தாலும் விரற்கட்டை அல்லது ”மெட்டுகள்” எனப்படும் தடுப்புகள் இல்லா ஓர் இசைக்கருவி. இசை கமகங்களையும் அலைவுகளையும் ஒரு கட்டைபோன்ற உறுப்பால் நரம்புகள்மீது அல்லது கம்பிகளின் மீது அழுத்தித் தேய்த்து, இழைத்து இசையுருவாக்கப்படும். சித்திரவீணை என்னும் அரிய இசைக்கருவி 21 நரம்புகள் கொணடது. தனது 10 ஆவது வயதிலேயே இந்தச் சித்திரவீணையை வாசிக்கும் கலைஞராக மாறினார். 20 நரம்புகள் அல்லது இழைகள் கொண்ட நவச்சித்திரவீணை என்னும் புதிய கருவியையும் கண்டுபிடித்தார். மெல்ஃகார்மனி (“melharmony”) என்னும் புதிய இசைவடிவத்தை உருவாக்கினார். மேற்கத்திய ஒத்திசையெனப்படும் ”harmony” என்னும் வகையோடு சுரங்களால் ஆன இராகம் போன்ற ”மெலடி” என்பதையும் பிணைத்து மெல்ஃகார்மனி என்னும் இசைவடிவத்தை உருவாக்கினார்.

    இவருக்குத் தமிழ்நாட்டின் கலைமாமணி விருதும், மத்தியப்பிரதேசத்தின் குமார் காந்தர்வ சம்மான் விருதும், இந்தியாவின் உயர்விருதாகிய சங்கீத நாடக அக்காதெமி விருதும் வழங்கப்பட்டன. பிறவிருதுகளின் பட்டியலை விக்கிப்பீடியாவில் காணலாம் [1]. சித்தார் கலைஞர் பண்டிதர் இரவிசங்கர் இவரைப் புகழ்ந்து கூறியபொழுது, ”கடவுளை நம்பாவிட்டால் இரவிக்கிரணைப் பாருங்கள்” (“If you don’t believe in God, look at Ravikiran.”) என்றார் [6].
    Chitravina_Ravikiran_with_Sitar_Maestro_Ravi_Shankar

    சித்தார் கலைஞர் பண்டிதர் இரவிசங்கர் அவர்களுடன் சித்திரவீணைக் கலைஞர் இரவிக்கிரண் [7]

    சித்திரவீணை அல்லது கோட்டுவாத்தியத்தின் படங்களை அடிக்குறிப்பு [8] இல் காட்டப்பட்டுள்ள தொடுப்பில் காணலாம். கீழே உள்ள படம் கோட்டுவாத்தியம் போன்ற விசித்திர வீணை என்னும் கருவியாகும்.

    கோட்டுவாத்தியம்

    கோட்டுவாத்தியம் போன்ற விசித்திரவீணை எனப்படும் கருவி [9]

    16 மணிநேரத்தில் 1330 திருக்குறளுக்கும் 169 இராகங்களில் அரிய தாளத்துடன் இசையமைத்துப் பேரினிய செயலாற்றிய கலைஞர் சித்திரவீணை இரவிக்கிரண் அவர்களை இந்தவார வல்லமையாளராகப் பாராட்டி வாழ்த்துகின்றோம்.

    அடிக்குறிப்புகள்:
    [1] https://en.wikipedia.org/wiki/N._Ravikiran ; தமிழ் விக்கிப்பீடியா ( https://ta.wikipedia.org/s/49q3 )
    [2] https://www.youtube.com/watch?v=FS7T3E6Zzt8
    [3] https://www.youtube.com/channel/UCKXaa7bnupptNV6ZBjlicMw
    [4] http://host.madison.com/news/local/education/local_schools/school-spotlight-mozart-of-indian-music-visits-middleton-cross-plains/article_ccf9e83c-a080-11e2-bb5a-0019bb2963f4.html
    [5] இரவிக்கிரண் அவர்களின் முகநூல் பக்கத்திலிருந்து.
    [6] Page 253 of “Another Garland, Biographies of Carnatic Composers and Musicians” – N Rajagopalan 1992
    [7] Lata Ganapathy’s Facebook wall (விக்கிப்பீடியாவழியாக [1]), ஏப்பிரல் 2011.
    [8] http://instrumundo.blogspot.ca/2012/12/gotuvadyam-chitravina-chitra-veena.html?_sm_au_=iVVkHt1v418sNSsR
    [9] https://en.wikipedia.org/wiki/Gottuvadhyam#/media/File:Ch2.JPG

    Share