செ. இரா.செல்வக்குமார்

இந்தக் கிழமையின் வல்லமையாளர் 2013-2014 ஆம் ஆண்டுக்கான தொல்காப்பியர் விருதுபெறும் முதுபெரும் தமிழறிஞர் சோ. ந. கந்தசாமியார் அவர்கள்

மிகவும் புகழ்பெற்றவர் என்றாலும், இவருடைய பெயர் அண்மையில் அதிகமாக எடுத்துரைக்கப்படாமையால் அதிகம் அறியப்படாத பேரறிஞர். இவர் தமிழ்நாட்டில் அரியலூர் மாவட்டத்திலுள்ள, உடையார்பாளையம் வட்டத்தில் செயங்கொண்ட சோழபுரம் அருகில் உள்ள இலையூர் என்னும் ஊரில் திசம்பர் 15, 1936 இல் பிறந்தார். இவருடைய பெற்றோர் திரு சோ.நடராசனார், திருவாட்டி மீனாம்பாள் அம்மாள் ஆகியோர் ஆவர். கந்தசாமியார் தொடக்கக் கல்வியை இலையூரிலும், உயர்நிலைக் கல்வியை உடையார் பாளையத்திலும் தொடர்ந்தார். அதன்பின் அவர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து அங்கு இளங்கலை பொருளாதாரம் (1958) எம்.லிட்டு (1963), முனைவர்ப்பட்டம் (1971) ஆகியவற்றைப் பெற்றார். மொழியியல் பட்டயம், வடமொழிப் பட்டயம் ஆகியவற்றையும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பெற்றார். இவர் அறிஞர் அ.சிதம்பரநாதன் செட்டியார், தெ.பொ.மீ ஆகியோரின் மேற்பார்வையில் நேரடியாகக் கற்றார் என்பதும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.[1]


மூதறிஞர் சோ.ந. கந்தசாமியார். படம் [1]

இவர் தாக்கம் ஏற்படுத்திய பல நூல்களை ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதியுள்ளார். அவற்றுல் சில கீழே பட்டியலிடப்பட்டுள்ளன [1]:

இலக்கிய நூல்கள்:
சங்க இலக்கியத்தில் மதுரை
திருக்குறள் கூறும் உறுதிப்பொருள்
இலக்கியமும் இலக்கிய வகையும்
தமிழிலக்கியச் செல்வம் (ஐந்து தொகுதிகள்)
திருமுறை இலக்கியம்
திருமுறையில் இலக்கிய வகை
உலகத் தமிழிலக்கிய வரலாறு(கி.பி.501-கி.பி.900)
மணிமேகலையின் காலம்
பரிபாடலின் காலம்
இலக்கியச்சோலையிலே

இவை தவிர இவர் எழுதிய திறனாய்வு நூல்கள்:
Bharathidasan As a Romantic Poet
Anthology of Book Reviews
தொல்காப்பியரின் இலக்கியக் கொள்கைகள்

எழுதிய மொழிபெயர்ப்பு நூல்கள்:
English Translation of Sundarar Devaram Volume I (patikam 1-50)
Volume II(patikam 51-100) (Tota 1026 verses)
Tirumantiram(Total 527 verses)

இலக்கணம் பற்றிய நூல்கள்:
தமிழிலக்கணச் செல்வம்(இரு தொகுதிகள்)
தொல்காப்பியம் – எழுத்ததிகாரத் தெளிவு
புறத்திணை வாழ்வியல்
தமிழ் யாப்பியலின் தோற்றமும் வளர்ச்சியும்(மூன்று தொகுதிகள்)
கலித்தொகை யாப்பியல்

மொழியியல்:
A Linguistics Study of Paripatal(M.Lit.Thesis)
A Linguistics of Manimekalai

தத்துவம்:
தமிழும் தத்துவமும்
தமிழிலக்கியத்தில் பௌத்தம்
தமிழிலக்கியத்தில் அறிவாராய்ச்சியியல்
இந்தியத் தத்துவக் களஞ்சியம் (மூன்று தொகுதிகள்)
பௌத்தம்
Buddhism As Expounded in Manimekalai(Ph.D. Dissertation)
Indian Epistemology as Expounded in the Tamil Classics
Tamil Literature and Indian Philosophy
The Yoga of Siddha Avvai(Published in Canada)
Advaitic Works and Thought in Tamil
The Encounter Between saiva sidhanta and Advaita vedanta

இவர் தாம் பயின்ற அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பேராசிரியர் பணியில் இருந்தார். பின்னர் மலேசியப் பல்கலைக்கழகத்திலும் (1979-85), தமிழ்ப் பல்கலைக்கழகத்திலும் (1985-1997), சில காலம் சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்திலும் தம் தமிழ்ப்பணியைத் தொடர்ந்தார். பாலிமொழிப் பாடல்கள் பலவற்றை மனப்பாடமாகச் சொல்லும் ஆற்றலுடையவர். கல்வெட்டுகளிலும் நல்ல புலமையுடையவர் [1].

80 அகவை நிறையவிருக்கும் முதுபெரும் தமிழறிஞர் சோ. ந. கந்தசாமியார் அவர்கள் இந்தியக் குடியரசுத்தலைவரிடமிருந்து புகழ்மிக்க தொல்காப்பியர் விருது பெறவிருக்கின்றார் [2]. இவ்விருதோடு 5 இலட்சம் இந்திய உருபாய் பரிசும் உண்டு. தமிழாசானை வணங்கி இக்கிழமையின் வல்லமையாளராக அறிவிவித்துப் பாராட்டுகின்றோம். .

அடிக்குறிப்புகள்

[1] தமிழ் விக்கிப்பீடியாவில் பேராசிரியர் சோ.ந. கந்தசாமியார் அவர்களைப்பற்றிய கட்டுரை ( https://ta.wikipedia.org/s/57x ). முனைவர் மு. இளங்கோவன் அவர்களின் வலைப்பதிவு -http://muelangovan.blogspot.ca/2008/08/15121936.html
[2] தமிழறிஞர் சோ. ந. கந்தசாமியார் அவர்களுக்குத் தொல்காப்பியர் விருது அறிவிப்பு. இந்து தமிழ் நாளிதழ் சூன் 8, 2016

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “இந்த வார வல்லமையாளர்

  1. தமிழாய்ந்த பெருந்தகை, வல்லமையாளர் சோ.ந. கந்தசாமியார் அவர்களின் பணிகளைப் பாராட்டி, வணங்கி, வாழ்த்துகிறேன். இவர் பிறந்த அதே உடையார்பாளையம் வட்டத்தில் அடியேனும் பிறந்ததில் மகிழ்கிறேன்.

  2. வல்லமையாளர் மூதறிஞர் சோ.ந. கந்தசாமியார் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *